ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான முறையான பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பு, இந்தியாவும் வங்கதேசமும் மாறிவரும் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால், ஆற்றுப் படுகைகளில் கவனம் செலுத்துவது (basin-centric approach) நீர் ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள், வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றங்களைச் சமாளிக்க எவ்வாறு உதவும்?
2024-ல் ஷேக் ஹசீனா பதவியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், இந்தியா மற்றும் வங்கதேசம் நாடுகள், டிசம்பர் 2026-ல் காலாவதியாக உள்ள கங்கை நீர் ஒப்பந்தத்தைப் (Ganga Water Treaty) புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன.
வரலாற்று ரீதியிலான உறுதிமொழிகளையும், தற்கால நீரியல் யதார்த்தங்களையும், எதிர்கால காலநிலை நிச்சயமற்ற தன்மைகளையும் சமநிலைப்படுத்தும் ஒர் ஒப்பந்தத்தை மறுபேச்சுவார்த்தை மூலம் உருவாக்குவது என்ற ஒரு முக்கியமான பணி இரு நாடுகளுக்கும் உள்ளது. இது நீரைப் பிரித்துக்கொள்வதில் மட்டும் கவனம் செலுத்தாமல், முழு நதிப் படுகையையும் நிர்வகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், ஒரு படுகை சார்ந்த அணுகுமுறை (basin-centric approach), மாறியுள்ள நீரியல், வளர்ச்சி மற்றும் தட்பவெப்பநிலை யதார்த்தங்களைக் கையாள்வதற்கு எவ்வாறு உதவும்? என்பதை ஆராய்வோம். ஆனால், அதற்கு முன், முதலில், கங்கை நீர் ஒப்பந்தம் மற்றும் அதன் முக்கிய விதிகள் பற்றிய ஒரு சுருக்கமான கண்ணோட்டத்தைப் பார்ப்போம்.
இந்தியாவும் வங்கதேசமும் ஒப்பந்தத்தில் எவ்வாறு கையெழுத்திட்டன
கங்கை ஆற்றுப் படுகையில் இந்தியா ஒரு மேல்கரை நாடாக உள்ளது. கங்கை ஆற்றுப் படுகையின் மொத்தப் பரப்பளவு சுமார் 1.08 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இந்தப் படுகைப் பரப்பில் சுமார் 79 சதவீதம் இந்தியாவில் அமைந்துள்ளது. வங்காளதேசத்தில் கங்கை நதி பத்மா என்று அழைக்கப்படுகிறது. வங்காளதேசத்திற்குள் இந்த நதி சுமார் 260 கிலோமீட்டர் தூரம் பாய்கிறது. இது டாக்காவுக்கு மேற்கே சுமார் 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோலந்தாகாட்டில் ஜமுனா (பிரம்மபுத்திரா) நதியுடன் சேர்வதற்கு முன்பு, இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான ஒரு பொதுவான நதியாக அமைகிறது.
இந்தியா-வங்கதேச எல்லையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஃபராக்கா தடுப்பணையை இந்தியா 1975-ல் கட்டியபோது, நீர் பகிர்வு குறித்த கவலைகள் எழுந்தன. கொல்கத்தா துறைமுகத்தின் (தற்போது ஷ்யாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என அழைக்கப்படுகிறது) கப்பல் போக்குவரத்துத் திறனைப் பராமரிப்பதற்காக ஹூக்ளி ஆற்றுக்கு நீரைத் திருப்பிவிடும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்தத் தடுப்பணை, வங்கதேசத்தில் நீர்வரத்தை குறைந்துவிடும் என்ற கவலைகளை எழுப்பியது. இது இரு நாடுகளுக்கும் இடையே நீர் பகிர்வது தொடர்பாக கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தீவிரமடைந்ததால், 1976-ல் இது ஐக்கிய நாடுகள் சபைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இது ஒரு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது.
1977-ல் ஒர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அது ஐந்து ஆண்டு கால அளவில் இருந்தது. அதில் ஒரு முக்கியமான 'உத்தரவாதப் பிரிவு' சேர்க்கப்பட்டிருந்தது. அதன்படி, நீர்வரத்து மிகவும் குறைந்த காலகட்டத்தில் (ஏப்ரல் 21 முதல் மே 31 வரை) நீரின் அளவு 55,000 கன அடிக்குக் கீழே குறைந்தால், சம்பந்தப்பட்டப் 10 நாட்களுக்கு வங்கதேசத்திற்கும் அதன் ஒப்பந்தப்படிக்குரிய நீரின் அளவில் குறைந்தபட்சம் 80 சதவீதம் (சுமார் 27,000 கன அடி) வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்ட்டது.
இந்த ஒப்பந்தம் 1982-ல் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. ஆனால், 'குறைந்தபட்ச உத்தரவாத விதி' என்பது (Minimum Guarantee Clause) நீக்கப்பட்டது. இது 1985-ல் மீண்டும் மூன்று ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கப்பட்டது. மேலும், 1988-ல் ஒப்பந்தம் முடிந்த பிறகு, 1996ஆம் ஆண்டு வரை எந்தக் கொள்கையும் நடைமுறையில் இல்லை.
நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவின் முன்னாள் பிரதமர் எச். டி. தேவகவுடா மற்றும் அப்போதைய வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் டிசம்பர் 12, 1996 அன்று டெல்லியில் கங்கை நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் 30 ஆண்டுகளுக்கானது மற்றும் 2026-ல் காலாவதியாக உள்ளது.
ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளுக்கும் இடையேயான நீர் ஒதுக்கீடு வரலாற்று ரீதியான நீர்ப் பாய்ச்சல் தரவுகளைப் (1949-1988) பயன்படுத்தித் தீர்மானிக்கப்பட வேண்டும். இது ஜனவரி 1 முதல் மே 31 வரையிலான வறண்ட காலப்பகுதியில், 10 நாள் கால இடைவெளிகளில் உள்ள சராசரி நீர்ப் பாய்ச்சலை அடிப்படையாகக் கொண்டது. நீர் பகிர்வு தொடர்பாக ஒப்பந்தம் பின்வரும் ஏற்பாடுகளைச் செய்கிறது:
1. நீரின் அளவு 70,000 கன அடி அல்லது அதற்கு குறைவாக இருந்தால், நீர் 50:50 என்ற விகிதத்தில் பகிர்ந்து அளிக்கப்படும்.
2. நீர்வரத்து 70,000 முதல் 75,000 கன அடிக்குள் இருந்தால், வங்கதேசத்திற்கு 35,000 கனஅடி தண்ணீர் கிடைக்கும்.
3. நீர்வரத்து 75,000 கனஅடி அல்லது அதற்கு மேல் இருந்தால், இந்தியா 40,000 கனஅடிகளைப் பெறும். மீதமுள்ள நீர் வங்கதேசத்திற்குச் செல்லும்.
இந்த ஒப்பந்தத்தின்படி, மார்ச் 11 முதல் மே 11 வரை, மாறி வரும் மூன்று 10 நாள் காலப்பகுதிகளில் இந்தியாவும் வங்கதேசமும் தலா 35,000 கன அடி நீரைப் பெறும். ஏதேனும், ஒரு 10 நாள் காலப்பகுதியில் ஃபராக்காவில் நீரின் ஓட்டம் 50,000 கன அடிக்குக் கீழே குறைந்தால், இரு அரசாங்கங்களும் சமத்துவக் கொள்கைகளைக் (principles of equity) கருத்தில் கொண்டு, அவசர அடிப்படையில் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தும்.
இந்த விதிகள் மற்றும் பேச்சுவார்த்தைகளைச் சிக்கலான சூழ்நிலைகளின்போது செயல்படுத்துவது, இரு நாடுகளுக்கும் இடையேயான ஒரு முறையான அமைப்பு மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த அமைப்பு கூட்டு நதிகள் ஆணையம் என்று அழைக்கப்படுகிறது.
கூட்டு நதிகள் ஆணையம் (Joint Rivers Commission)
1971ஆம் ஆண்டு வங்கதேசம் உருவாக்கப்பட்டு ஒரு வருடம் கழித்து, இந்தியாவும் வங்கதேசமும் இணைந்து 1972ஆம் ஆண்டு கூட்டு நதிகள் ஆணையத்தை (Joint Rivers Commission (JRC)) அமைத்தன. நீர் பகிர்வு, வெள்ளக் கட்டுப்பாடு, மேம்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கைகள் மற்றும் முன்னறிவிப்பு, நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் புயல் எச்சரிக்கைகள் ஆகியவற்றிற்காக பிரிக்கப்பட்ட ஆறுகள் (54 எல்லை தாண்டிய நீரோடைகளை முழுவதுமாக இணைப்பது மற்றும் ஒத்துழைப்பை உறுதி செய்வதற்கும், தகராறுகளைத் தீர்ப்பதற்கும் இருதரப்பு வழிமுறையாக இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மைகளை அதிகப்படுத்துவதற்காக, பகிரப்பட்ட நதிகள் குறித்த கூட்டு ஆய்வு, திட்டமிடல் மற்றும் பரிந்துரைகளுக்கான முதன்மை வழிகாட்டியாக இந்தக் குழு செயல்படுகிறது. 1996-ல் கங்கை நீர் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இரு நாடுகளிலிருந்தும் சம எண்ணிக்கையிலான பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு கூட்டுக் குழுவிடம், ஃபராக்கா மற்றும் ஹார்டிங் பாலத்தில் தினசரி நீர்வரத்தைக் கண்காணித்தல், தரவுகளைப் பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் ஒப்பந்தம் முறையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்தல் போன்ற பிற பணிகள் ஒப்படைக்கப்பட்டன.
ஒப்பந்தத்தைக் கண்காணிப்பதற்காகக் குழு ஆண்டுக்கு மூன்று முறை கூடுகிறது. அதன் 86-வது கூட்டம் கடந்த ஆண்டு மார்ச் 6ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்றது.
சவால்கள் மற்றும் மாறுபட்ட கோரிக்கைகள்
ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான முறையான பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பு, இந்தியா மற்றும் வங்கதேசம் போன்ற இரு நாடுகளும் மாறிவரும் சூழ்நிலைகளைப் பிரதிபலிக்கும் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன. வறண்ட காலங்களில், ஒப்பந்த விதிகளின்படி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்கைத் தங்களுக்கு எப்போதும் கிடைப்பதில்லை என்று வங்கதேசம் அடிக்கடி கூறி வருகிறது.
இந்த நீர் பகிர்வு சூத்திரம் 1949 முதல் 1988 வரையிலான பழைய நீர்ப் பாய்ச்சல் தரவுகளைப் பயன்படுத்துகிறது. இது தற்போதைய நீர் நிலைகளுக்குப் பொருந்தவில்லை. மேலும், இந்த ஒப்பந்தம் குறைந்தபட்ச நீர்ப் பாய்ச்சலுக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. இது ஒரு பலவீனமாகக் கருதப்படுகிறது.
விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் குடிநீருக்காக கங்கை நதியை பெரிதும் சார்ந்திருப்பதால், வங்கதேசம் இப்போது நீண்ட காலத்திற்கு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவும், விரிவான வெள்ளத் தரவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், பிப்ரவரி முதல் மே வரையிலான வறண்ட மாதங்களில் 40,000 கன அடி நீர்வரத்தை உறுதி செய்ய கோரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும், இந்தியா தனது தற்போதைய வளர்ச்சித் தேவைகளான குடிநீர், நீர்ப்பாசனம், தொழில்துறை பயன்பாடு மற்றும் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தின் சீரான செயல்பாடுகள் ஆகியவற்றுடன் ஒத்துப்போகும் வகையில், 10-15ஆண்டுகள் என்ற குறுகிய காலத்திற்கு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க விரும்புகிறது. குறுகிய காலத்திற்கு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது, மாறிவரும் நீர் மட்டங்கள் மற்றும் வளர்ச்சித் தேவைகளுக்கு ஏற்ப இரு நாடுகளும் சிறப்பாகத் தங்களைத் தகவமைத்துக்கொள்ள அனுமதிக்கிறது.
தற்போதைய ஒப்பந்தம் ஒவ்வொரு நாட்டிற்கும் எவ்வளவு நீரின் அளவின் மீது கவனம் செலுத்துகிறது. இப்போது, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் நீரோட்டம், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் சமூக, பொருளாதாரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, முழு நதிப் படுகையையும் நிர்வகிப்பது முக்கியம்.
படுகை சார்ந்த மேலாண்மையின் (basin-centric management) தேவை
தற்போதைய ஒப்பந்தம் ஃபராக்கா அணைக்கட்டுப் பகுதியை மையமாகக் கொண்டுள்ளது. மேலும், ஆற்றுப் படுகையின் மேல்நிலைப் பகுதிகளின் தேவை மற்றும் பயன்பாடு மற்றும் அணைக்கட்டுப் பகுதியில் நீர் கிடைப்பதில் அதன் விளைவைப் போதுமான அளவு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இது ஒப்பந்த உறுதிமொழிகளுக்கும் நீர்நிலை யதார்த்தங்களுக்கும் இடையில் பொருந்தாத தன்மையை உருவாக்குகிறது.
காலநிலை மாற்றம் எல்லைகளைக் கடந்து கங்கை வடிநிலத்தின் நீர்நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பழைய நீரோட்டத் தரவுகள் பருவமழையில் ஏற்படும் மாற்றங்கள், பனிப்பாறைகள் உருகுதல், கடுமையான வெள்ளங்கள் அல்லது நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வீடுகள், விவசாயம் மற்றும் தொழில்துறைக்காக அதிகரித்து வரும் நீர் பயன்பாடு ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.
தென்மேற்கு பருவமழையின் போது படுகை அதிக மழையைப் பெறுகிறது. இது பெரும்பாலும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது. வறண்ட மாதங்களில், நீர்மட்டம் வெகுவாகக் குறைவதால், குடிநீர், விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் ஆற்றுப் போக்குவரத்து ஆகியவை பாதிக்கப்படுகின்றன.
கங்கையின் பல்லுயிர் பெருக்கம் உட்பட, அதன் முழு சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்பும் ஒன்றோடொன்று தொடர்புடையது. ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு (single location approach) பதிலாக, முழு நதிப் படுகையையும் உள்ளடக்கிய ஒரு விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது. இந்த முழுமையான அணுகுமுறை, குறிப்பாக நீர் பற்றாக்குறை காலங்களில், தேவை மற்றும் விநியோகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்க உதவும்.
ஒப்பந்தத்தை புதுப்பிப்பது ஏன் ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது?
எல்லையின் இருபுறமும் கங்கை நதியின் நீரின் தேவை அதிகரித்துள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் மக்கள் தொகை, விவசாயத் தேவைகள், நகரமயமாக்கல் மற்றும் விரைவான தொழில்துறை விரிவாக்கம் ஆகியவற்றிற்கு அதிக நீர் பாதுகாப்பு தேவைப்படுகிறது. அதேபோல், வங்கதேசத்திற்கும் அதன் உணவு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பிற்கு அதிக நீர் தேவைப்படுகிறது.
புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தில், நதி நீரின் நிகழ்நேர ஓட்டங்கள், தரவு வெளிப்படைத்தன்மை மற்றும் பருவநிலை மாற்றங்களைத் சமளிக்கக்கூடிய முன்னெடுப்புகள், வெள்ளம் மற்றும் வறட்சி மேலாண்மை உத்திகளின் அடிப்படையில் அமைந்த ஒரு விரிவான மற்றும் மாறும் எல்லை தாண்டிய நீர் பகிர்வு கட்டமைப்பு சேர்க்கப்பட வேண்டும்.
கங்கை நதியை ஒரு நதியாக மட்டுமல்லாமல், ஒரு முழுமையான சூழலியல் அமைப்பாகக் கருத வேண்டும். இந்த அமைப்பை ஆரோக்கியமாகப் பேணுவது மிகவும் முக்கியம். இந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது, பொதுவான காலநிலை அபாயங்களைக் குறைப்பதற்கும், அதே நேரத்தில் பிராந்திய அளவில் ஒத்துழைப்பின் மூலம் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.