தேசிய மருத்துவ ஆணையம் -ரோஷ்ணி யாதவ்

 தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission (NMC)) என்றால் என்ன?, அதன் முக்கிய செயல்பாடுகள் என்ன?


தற்போதைய செய்தி?


தேசிய மருத்துவ ஆணையம் (NMC), செவ்வாய்க்கிழமை அன்று, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு நிறுவனத்திற்கு (Shri Mata Vaishno Devi Institute of Medical Excellence (SMVDIME)) 2025-26ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான மருத்துவ படிப்பை நடத்துவதற்காக வழங்கப்பட்ட அனுமதி கடிதத்தை, ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் மருத்துவ உபகரணங்கள் உட்பட அதன் உள்கட்டமைப்பில் உள்ள கடுமையான குறைபாடுகள் காரணமாகத் திரும்பப் பெற்றது. இந்தச் சூழலில், தேசிய மருத்துவ ஆணையம் (NMC) பற்றி அறிந்துகொள்வது முக்கியமாகிறது.


முக்கிய அம்சங்கள்:


1. தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility cum Entrance Test (NEET)) தேர்வில் அவர்களின் தகுதியின் அடிப்படையில் 2025-26 கல்வியாண்டிற்கான ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு நிறுவனத்தில் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள், யூனியன் பிரதேசத்திற்குள் உள்ள மற்ற அரசு நிறுவனங்களில் இடமாற்றம் செய்யப்படுவார்கள். அவர்கள் தகுதிவாய்ந்த அதிகாரியால் கூடுதல் இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.


2. விரிவான ஆய்வுக்குப் பிறகு, கடந்த ஆண்டு செப்டம்பரில் மருத்துவ படிப்பைத் தொடங்கவும், 50 மாணவர்களைச் சேர்க்கவும் தேசிய மருத்துவ ஆணையம் அந்தக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது. இந்த 50 இடங்களில், 44 இடங்கள் NEET தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் முஸ்லிம் மாணவர்களால் நிரப்பப்பட்டன.


3. கடந்த வாரம் தேசிய மருத்துவ ஆணைய குழு மருத்துவ நிறுவனத்தில் திடீர் ஆய்வு நடத்தியதைத் தொடர்ந்து அனுமதி திரும்பப் பெறப்பட்டது. மருத்துவப் படிப்பை நடத்துவதற்கு கல்லூரியில் உள்கட்டமைப்பு இல்லை என்ற பல புகார்களுக்குப் பிறகு இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission)


1. தேசிய மருத்துவ ஆணையம், தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் (National Medical Commission Act), 2019 எனப்படும் நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டம் 24.9.2020 தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பின் மூலம்  25.9.2020 அன்று நடைமுறைக்கு வந்தது.


2. இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், 1956-ன் பிரிவு 3A-ன் கீழ் அமைக்கப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக அமைக்கப்பட்ட ஆட்சிக்குழு, பின்னர் கலைக்கப்பட்டது.


3. ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் பின்வரும் நபர்களை ஆணையம் கொண்டுள்ளது:


(அ) ​​ஒரு தலைவர்


(ஆ) முன்னர் பணியாற்றிய  10 அலுவலக உறுப்பினர்கள்  மற்றும்


(இ) 28 பகுதிநேர உறுப்பினர்கள் ஆவார்.


4. தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின்படி, தலைவர் சிறந்த திறன், நிரூபிக்கப்பட்ட நிர்வாகத் திறன் மற்றும் நேர்மை கொண்ட மருத்துவ நிபுணராக இருக்க வேண்டும். ஒரு பல்கலைக்கழகத்திலிருந்தும் மருத்துவ அறிவியலின் ஏதேனும் ஒரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் மருத்துவ அறிவியல் துறையில் 20 ஆண்டுகளுக்குக் குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதில் குறைந்தது 10 ஆண்டுகள் மருத்துவக் கல்வித் துறையில் ஒரு தலைவராக இருக்க வேண்டும்.


5. தேசிய மருத்துவ ஆணையத்தின் நோக்கம்:


(i) தரமான மற்றும் குறைந்த விலையில் மருத்துவக் கல்விக்கான அணுகலை மேம்படுத்த வேண்டும்.


(ii) நாடு முழுவதும் போதுமான அளவு நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


(iii) சமூக சுகாதாரக் கண்ணோட்டத்தை ஊக்குவிக்கும் மற்றும் மருத்துவ நிபுணர்களின் சேவைகளை அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்கக்கூடியதாக மாற்றும் சமமான மற்றும் உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பை ஊக்குவிக்க வேண்டும்.


(iv) சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சிகளைப் பயன்படுத்தவும், புதிய ஆராய்ச்சிகளுக்குப் பங்களிக்க  மருத்துவர்களை  ஊக்குவிக்க வேண்டும்.

 

(v) மருத்துவ நிறுவனங்களைச் சீரான இடைவெளியில் வெளிப்படையாக மதிப்பிடுதல்;


(vi) இந்தியாவிற்கான ஒரு தேசிய மருத்துவப் பதிவேட்டைப் பராமரித்தல்,


(vii) மருத்துவ சேவைகளின் ஒவ்வொரு பகுதியிலும் உயர்ந்த நெறிமுறைத் தரங்களை அனைத்து சூழலிலும் கடைப்பிடிக்க வேண்டும்.


(viii) புகார்களைத் திறம்படக் கையாண்டு தீர்ப்பதற்கு ஒரு வலுவான அமைப்பு நடைமுறையில் இருக்க வேண்டும்.


தேசிய மருத்துவ ஆணையத்தின் செயல்பாடுகள்


1. மருத்துவக் கல்வியில் உயர் தரத்தைப் பாதுகாப்பதற்கான கொள்கைகளை வகுத்தல் மற்றும் இதற்காகத் தேவையான விதிமுறைகளை உருவாக்குதல்,


2. சுகாதாரம் மற்றும் சுகாதார உள்கட்டமைப்புக்கான மனித வளங்கள் உட்பட சுகாதாரத் துறையில் உள்ள தேவைகளை மதிப்பிடுதல் மற்றும் அத்தகைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு திட்டத்தை உருவாக்குதல்,


3. ஆணையம், தன்னாட்சி அதிகாரம் பெற்ற வாரியங்கள் மற்றும் மாநில மருத்துவக் கவுன்சில்கள் ஆகியவை முறையாகச் செயல்படுவதை உறுதி செய்வதற்காக வழிகாட்டுதல்கள், கொள்கைகள் மற்றும் விதிகளை உருவாக்கி, தொடர்புடைய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்,


4. மாநில மருத்துவக் கவுன்சில்கள் திறம்படச் செயல்படுவதை உறுதி செய்வதற்காக, இந்தச் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் உருவாக்கப்பட்ட விதிமுறைகளை அவை பின்பற்றுவதை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்,


5. தன்னாட்சி அதிகாரம் பெற்ற வாரியங்களின் முடிவுகள் தொடர்பாக மேல்முறையீட்டு அதிகார வரம்பைப் பயன்படுத்துதல் மற்றும் பரிந்துரைக்கப்படக்கூடிய பிற அதிகாரங்களைச் செலுத்துதல், பிற பணிகளைச் செய்ய வேண்டும்.


தேசிய சுகாதாரக் குழுக்கள் (National Health Committees)


பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக அவ்வப்போது பல்வேறு நிபுணர் குழுக்கள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களின் அறிக்கைகள் இந்தியாவில் சுகாதாரத் திட்டமிடலுக்கு ஒரு முக்கிய அடிப்படையாக அமைகின்றன.


1. போரே குழு (1946): சுகாதார ஆய்வு மற்றும் மேம்பாட்டுக் குழு 1943ஆம் ஆண்டு Sir Joseph Bhore தலைமையில் அமைக்கப்பட்டது. இது சுகாதாரப் பராமரிப்பில் சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகளை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தியதுடன், இந்தியாவின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக விரிவான பரிந்துரைகளையும் வழங்கியது.


2. முதலியார் குழு (1962): Dr. A.L. Mudaliar தலைமையிலான "சுகாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் குழு" (Health Survey and Planning Committee), போரே குழுவின் அறிக்கைக்குப் பிறகு சுகாதார சேவைகளை மறு ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டது. முதன்மை சுகாதார மையங்கள் (Primary Health Centres (PHCs)) சிறப்பாகச் செயல்படவில்லை என்பதை குழு கண்டறிந்ததுடன், புதிய மையங்களைத் தொடங்குவதற்கு முன்பு ஏற்கனவே உள்ள மையங்களை மேம்படுத்துமாறு பரிந்துரைத்தது.


3. முகர்ஜி குழு (1966): குடும்பக் கட்டுப்பாடு, பெரியம்மை, தொழுநோய், டிரகோமா, தேசிய மலேரியா ஒழிப்புத் திட்டம் (பராமரிப்பு நிலை) போன்ற மக்கள் நலத் திட்டங்களின் பல செயல்பாடுகளை, நிதிப் பற்றாக்குறையின் காரணமாக மாநிலங்களால் சிறப்பாகச் செயல்படுத்த முடியவில்லை. இந்தப் பிரச்சனையை ஆராய்வதற்காக, ஒன்றிய சுகாதாரச் செயலாளர் Mukherjee தலைமையில் மாநில சுகாதாரச் செயலாளர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, வட்டார அளவில் வழங்கப்பட வேண்டிய அடிப்படை சுகாதார சேவைகளை அந்தக் குழு கோடிட்டுக் காட்டியதுடன், அவற்றை ஆதரிப்பதற்காக உயர்நிலை நிர்வாகத்தை மேம்படுத்துமாறு பரிந்துரை செய்தது.


Original Article : National Medical Commission -Roshni Yadav

Share: