அணுசக்தி விவகாரம் முதல் ஹார்முஸ் நீரிணை வரை, அமெரிக்கா-ஈரான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் - பஷீர் அலி அப்பாஸ்

 ஒரு இறுதி உடன்படிக்கையானது ஈரானின் அணுசக்தித் திட்டம் (Nuclear programme) சார்ந்த விஷயங்களை மட்டும் கையாள்வதோடு நின்றுவிடாமல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான எதிர்கால அரசியல் உறவையும் தீர்மானிக்கும். இது ஈரானை மேலும் வலுவான நாடாக மாற்றக்கூடும், இதனால் மேற்கு ஆசியாவில் பெரும் தாக்கங்கள் ஏற்படும்.


ஜூன் மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில், அமெரிக்காவும் ஈரானும் ஓர் இறுதி உடன்படிக்கையை நோக்கிய 60 நாட்களுக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்காக 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.


பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது 2015-ஆம் ஆண்டில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்தைப் போலல்லாமல், இந்த 2026-ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தமானது, ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பரந்த அளவிலான அமெரிக்க-ஈரான் அரசியல் உறவு ஆகிய இரண்டையுமே இறுதி உடன்படிக்கை கையாளும் என்பதைக் காட்டுகிறது. இந்த விதிமுறைகள் ஈரானுக்கு அதிக பொருளாதார நிவாரணங்களையும், அதன் வழக்கமான ராணுவத் திறன்களை வலுப்படுத்துவதற்குத் தேவையான புவிசார் அரசியல் அங்கீகாரத்தையும் வழங்குவதன் மூலம், 1979-ஆம் ஆண்டிற்குப் பிறகு இஸ்லாமியக் குடியரசை எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்ததாக மாற்றக்கூடும். இது மேற்கு ஆசியாவின் அதிகாரச் சமநிலையை கணிசமாக மாற்றியமைக்கலாம்.



இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள், இருதரப்பும் ஏற்றுக்கொண்ட கடமைகள் மற்றும் பல மாத கால மோதல்களுக்குப் பிறகு அவர்களின் தற்போதைய நிலைப்ப்பாட்டைப் பற்றி இது என்ன உணர்த்துகிறது என்பதை தெரிந்துகொள்வோம்.


பிரிவு 1: லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருதல்


இது போரை முடிவுக்குக் கொண்டு வரும் மிக முக்கியமான பிரிவாகும். ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி போர்நிறுத்தத்துடன் ஒப்பிடும்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், லெபனானை அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்தத்துடன் இணைக்கிறது.


இந்த 60 நாட்கள் தற்காலிகக் போர்நிறுத்தக் காலம், லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. போர்நிறுத்த மீறல்களுக்கு ஈரான் அளிக்கும் பதிலடியானது, ஜூன் மாதம் 14-ஆம் தேதி எடுத்த நடவடிக்கைகளைப் பொறுத்து அமையலாம். பெய்ரூட் மீதான இஸ்ரேலின் குண்டுவீச்சுக்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதியளித்திருந்த போதிலும், இஸ்ரேலிய அல்லது அமெரிக்க இலக்குகள் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடங்க வேண்டாம் என்று முடிவு செய்தது. அதற்குப் பதிலாக, ஹார்முஸ் ஜலசந்தியில் விதிக்கப்பட்டிருந்த கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்குவது உள்ளிட்ட அமெரிக்காவின் சலுகைகளை ஈரான் ஏற்றுக்கொண்டது. இது ஈரானின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய மாற்றத்தைக் காட்டக்கூடும்.


பிரிவு 2: உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமை 


இந்த பிரிவின் மிக முக்கியத்துவம் வாய்ந்த அம்சம் என்னவென்றால், ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதற்காக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய காரணத்தை இல்லாமலாக்குகிறது. ஈரானின் அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கு "உதவி வரப்போகிறது" என்று டிரம்ப் கூறிய ஜனவரி மாதம் 13-ஆம் தேதிக்கும், போர் தொடங்கிய பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், அமெரிக்காவின் நியாயப்படுத்துதல் என்பது ஈரானின் ஆட்சி மாற்றம் மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டத்தைத் தடுத்தல் ஆகிய இரண்டிற்கும் இடையே மாறி மாறி நகர்ந்தது. எனவே, அமெரிக்கா தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது குறித்து ஈரானுக்கு நீண்டகாலமாக இருக்கும் கவலைகளுடன் சேர்த்து, இந்த குறிப்பிட்ட பிரிவு தெஹ்ரானுக்கு (Tehran) மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது.

பிரிவு 3: இருதரப்பினரும் ஒப்புக்கொண்டால், இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு முன்னதாக வழங்கப்படும் இந்த 60 நாட்கள் கால அவகாசத்தை மேலும் நீட்டிப்பதற்கு அனுமதிக்கும் ஒரு முக்கியமான விதிமுறை இந்தப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.


பிரிவு 4: அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை நீக்குதல்


ஜூன் மாதம் 16-ஆம் தேதிக்குள், அமெரிக்க கடற்படை தனது கடல்வழி முற்றுகையை பெருமளவிற்கு முடிவுக்குக் கொண்டுவந்திருந்தது. நடைமுறையில், முழுமையாகப் பின்வாங்குவது என்பது ஹார்முஸ் ஜலசந்தியில் எஞ்சியிருக்கும் அமெரிக்காவின் போர்க்கப்பல் குழுக்களை அகற்றுவதைக் குறிக்கும்.


பிரிவு 5: ஹார்முஸ் வழியாகப் போக்குவரத்து


ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி தடையின்றி செல்ல ஈரான் அனுமதிக்கும். இருப்பினும், இந்த ஜலசந்தி பகுதியில் எதிர்கால நிர்வாகத்தை ஈரானும் ஓமனும் இணைந்து தீர்மானிக்க அனுமதிக்கும் நிபந்தனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இந்த ஜலசந்தி பகுதி போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பக்கூடாது என்ற ஈரானின் நீண்டகால நிலைப்பாட்டிற்கு ஆதரவாக அமைகிறது.


மான்ட்ரியக்ஸ் ஒப்பந்தத்தின்கீழ் (Montreux Convention) டார்டனல்ஸ் மற்றும் போஸ்பரஸ் ஜலசந்தி பகுதிகளுக்கு துருக்கி பயன்படுத்துவதைப் போன்ற ஒரு கட்டண முறையை, ஈரானும் ஓமனும் ஒரு கூட்டு கட்டமைப்பை உருவாக்க முடியும். உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20-25% மற்றும் உலகளாவிய எரிவாயு போக்குவரத்தில் 20% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கடந்து செல்வதால், இதன் மூலம் கிடைக்கும் வருடாந்திர வருவாய் 11-13 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

பிரிவு 6: ஈரானின் மறுசீரமைப்பிற்கான 300 பில்லியன் டாலர் திட்டம் 


இந்த மறுசீரமைப்புத் திட்டம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும். மேலும், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து 2015-ஆம் ஆண்டு போடப்பட்ட கூட்டு விரிவான செயல்பாட்டுத் திட்டத்திற்கு (Joint Comprehensive Plan of Action (JCPOA)) வழிவகுத்த முந்தைய அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளில் இருந்து இந்த ஒப்பந்தத்தை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டும் முக்கிய அம்சம் ஆகும்.


இந்த நிதி, ஈரான் உலகளாவிய பொருளாதாரத்துடன் மீண்டும் இணைவதற்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் டொனால்ட் டிரம்ப் மற்றும் வணிக நில முதலீட்டாளரும் மத்திய கிழக்கிற்கான அமெரிக்க சிறப்புத் தூதருமான ஸ்டீவ் விட்காஃப் ஆகியோருடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கான வணிக வாய்ப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.


பிரிவு 7: இறுதி ஒப்பந்தத்தில் தடைகள் நீக்கம் 


இந்தப் பிரிவு ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள எரிசக்தி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறைகளைப் பாதிக்கும் பல்வேறு தடைகளைக் கையாள்வது பற்றிக் கண்டிப்பாக விவாதிக்க வேண்டும். ‘Wall Street Journal’ பத்திரிகையின் மதிப்பீட்டின்படி, இந்தத் தடைகள் நீக்கப்பட்டால் ஈரானின் எண்ணெய் மற்றும் எரிபொருள் ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு சுமார் 60 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.


ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் தொடர்பான தடைகள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் சார்ந்த தடைகள் மற்றும் பிற பொருளாதார தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகிய மூன்று வகையான தடைகளுக்கும் இடையே உள்ள தொடர்பையும் அமெரிக்கா ஆராய்ந்து  தீர்வுகாண வேண்டியிருக்கும்.



பிரிவு 8: ஈரான் அணு ஆயுதங்களை வாங்கவோ அல்லது உருவாக்கவோ கூடாது


ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சி செய்யாது என்ற அதன் உறுதிப்பாட்டை இந்தப் பிரிவு மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த நிலையைத்தான் ஈரான் 2003-ஆம் ஆண்டு முதலே பராமரித்து வருகிறது.


ஜூன் மாதம் 2025-ஆம் ஆண்டில் நடான்ஸ் (Natanz), ஃபர்டோ (Fordow), அராக் (Arak) மற்றும் இஸ்பஹான் (Isfahan) ஆகிய இடங்களில் உள்ள அணுசக்தி தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மூலம், ஈரானின் அணுசக்தி திறனைக் குறைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நோக்கம் ஏற்கனவே பெருமளவில் நிறைவேற்றப்பட்டுவிட்டது.


2013-15-ஆம் ஆண்டின் கூட்டு விரிவான செயல்பாட்டுத் திட்டம் (JCPOA) பேச்சுவார்த்தைகளில் இருந்து தற்போது இருக்கும் ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், ஈரான் இப்போது 60% வரை செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பைக் கொண்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் ஈரானிடம் இது இல்லை. மேலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வேறொரு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. இது அமெரிக்காவின் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து ஏற்பட்டுள்ள ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.


ராஜதந்திர மற்றும் ராணுவ நடவடிக்கைகள் மூலம் ஈரானின் அணுசக்தி திட்டத்தில் அமெரிக்கா ஏற்கனவே பெரிய மாற்றங்களைக் கொண்டுவரக் கட்டாயப்படுத்தியுள்ளதால், இப்போது அனைவரின் கவனமும் 2018-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஈரானில் ஏற்பட்டுள்ள பரந்த மாற்றங்களின் மீது திரும்பும் என்கின்றனர்.


2018-ஆம் ஆண்டில் அமெரிக்காவை கூட்டு விரிவான செயல்பாட்டுத் திட்ட (JCPOA) ஒப்பந்தத்திலிருந்து டொனால்ட் டிரம்ப் விலக்கியதைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தத்தின் காலக்கெடு அக்டோபர் மாதம் 2025-ஆம் ஆண்டில் முடிவடைந்தபோது ஈரான் தனது எஞ்சிய கடப்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவந்தது. மேலும், பிற சர்வதேச கண்காணிப்பு அமைப்புகளிலிருந்தும் படிப்படியாக வெளியேறியது. 2025-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சர்வதேச அணுசக்தி முகமை (International Atomic Energy Agency (IAEA)) ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த தற்போதைய தகவல்களையும் தொடர் கண்காணிப்புத் தரவுகளையும் முற்றிலும் இழந்துவிட்டதாகத் தெரிவித்தது.


பிரிவு 9: இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை தற்போதைய நிலையே நீடித்தல் 


இந்தப்பிரிவு, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் இதுவரை எட்டப்பட்ட முன்னேற்றங்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் உள்ள 14 பிரிவுகளில் ஒன்றுகூட, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (Ballistic missiles) குறித்தோ அல்லது பிராந்தியத்தில் உள்ள அரசு சாரா ஆயுதக் குழுக்களுடன் ஈரானுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்தோ நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளைப் பற்றி குறிப்பிடவில்லை. ஜூலை மாதம் 17-ஆம் தேதி, டொனால்ட் டிரம்ப், ஈரானின் அண்டை நாடுகளிடமும் இது போன்ற ஆயுதங்கள் இருப்பதால், ஈரான் தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திறன்களைத் தொடர்ந்து தன்வசமே வைத்திருக்கலாம் என்று பரிந்துரைத்தார். இது, 2018-ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியபோது கூறிய காரணங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, மற்றொரு குறிப்பிடத்தக்கக் கொள்கை மாற்றத்தைக் காட்டுகிறது.


பிரிவு 10 (தடைகளில் இருந்து தற்காலிக விலக்கு அளிப்பது ) என்பது, பிரிவு 7 (பொருளாதாரத் தடைகளை முற்றிலும் நீக்குவது) முழுமையாகச் செயல்படுத்தப்படும் வரை பயன்படுத்தப்படும் ஒரு தற்காலிக ஏற்பாடாகச் செயல்படுகிறது.


பிரிவு 11: முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை அமெரிக்கா விடுவிக்கிறது 


ஈரான் நாட்டிற்குச் சொந்தமான 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதி மற்றும் சொத்துக்கள் வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 12 பில்லியன் டாலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு, ஈரானின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களின் ஊதியத்தை வழங்குவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று ஈரானிய அதிபர் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். இந்த பணப் பரிமாற்றங்களை எளிதாக்குவதில் கத்தார் (Qatar) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 


ஒப்பந்தத்தின் பிரிவு 12, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிப்பதற்கான ஒரு வழிமுறையை உருவாக்க வழிவகை செய்கிறது. 60 நாட்கள் என்ற கால அவகாசத்தை இருதரப்பும் ஒப்புக்கொண்டு நீட்டிப்பதற்கு அனுமதிக்கும் பிரிவு 3-ஐ செயல்படுத்துவதற்கு இந்தக் கண்காணிப்பு மிகவும் அவசியமானதாகும்.


அணுசக்தி விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்குக் கூடுதல் காலஅவகாசம் தேவைப்படலாம் என்பதால், திறம்பட கண்காணிப்பது மிகவும் இன்றியமையாதது ஆகும். இத்தகைய கால நீட்டிப்பானது, ஈரான் நாடு ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறந்து வைத்திருக்கும் காலத்தையும், அமெரிக்க ராணுவப் படைகள் அங்கிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடுவையும் நீட்டிக்கும். இது ஈரான் தலைநகரான டெஹ்ரானுக்கு (Tehran) உள்நாட்டு அரசியல் அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். எனவே, இந்த 60 நாள் காலஅவகாசம் முழுவதும் இரு தரப்பினரும் தொடர்ந்து பரஸ்பர நம்பிக்கையுடன் செயல்படுவதை உறுதிசெய்ய இந்த கண்காணிப்பு வழிமுறை நிச்சயம் உதவும்.


60 நாட்கள் காலஅவகாசத்தின் போது இருதரப்பினரும் பகிர்ந்து கொள்ள வேண்டிய முன்னுரிமைகளின் வரிசைமுறையை பிரிவு 13 உருவாக்குகிறது.


இறுதியாக, பிரிவு 14 மிகவும் கவனிக்கத்தக்கது; ஏனெனில் இந்த ஒப்பந்தத்திற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் (United Nations Security Council (UNSC)) தீர்மானம் மூலம் ஒப்புதல் பெற வேண்டும் என்று கோருகிறது.              ஐக்கிய நாடுகள் சபையையும், அது அமெரிக்காவின் முடிவெடுக்கும் அதிகாரத்திற்கு விதிக்கும் கட்டுப்பாடுகளையும் டிரம்ப் நிர்வாகம் அடிக்கடி விமர்சித்து வந்த போதிலும், இந்த ஒப்புதலைக் கோருவது குறிப்பிடத்தக்கது.


கூட்டு விரிவான செயல்பாட்டுத் திட்டம் (JCPOA) ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் (United Nations Security Council (UNSC)) தீர்மானம் 2231-ன் மூலம் அங்கீகரிக்கப்பட்டது. மேலும், ஐநா சாசனத்தின் (UN Charter) 25-ஆவது பிரிவின் மூலம் இந்தத் தீர்மானத்தைக் கடைப்பிடிப்பதன் கட்டாயத் தன்மை வலுப்படுத்தப்பட்டது. கொண்டுவரப்படவிருக்கும் புதிய தீர்மானமும் இதே போன்ற ஒரு அணுகுமுறையைப் பின்பற்ற வாய்ப்பிருந்தாலும், அமெரிக்கா 2018-ஆம் ஆண்டில் தன்னிச்சையாக இதிலிருந்து விலகுவதைத் தடுப்பதில் ஐநா பாதுகாப்புச் சபைக்கு இருந்த வரம்புக்குட்பட்ட திறனே வெளிப்பட்டது. இதன் காரணமாக, ஈரான்  இந்த முறை கூடுதல் பாதுகாப்பு உத்தரவாதங்களைக் கோரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Original article : A point-by-point breakdown of US-Iran MoU, from nuclear issue to Strait of Hormuz -Bashir Ali Abbas

Share:

பருவமழையின் தீவிரம் ஏன் குறைந்துவிட்டது? அடுத்தகட்ட மழைப்பொழிவு எப்போது எதிர்பார்க்கப்படுகிறது? - அஞ்சலி மாரார்

 ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, வங்காள விரிகுடா பகுதியைவிட அரபிக்கடல் பகுதியில் வீசும் பருவக்காற்று இந்த ஆண்டு மிகவும் மெதுவாகவே தீவிரமடைவது போல் தெரிகிறது.


தென்மேற்குப் பருவமழை காலம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், அதன் செயல்பாடு இதுவரை இயல்பான அளவைவிடக் குறைவாகவே உள்ளது. ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 17-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், இந்தியா முழுவதும் மழைப்பொழிவின் அளவு சராசரியைவிட 38% குறைவாகவே இருந்தது.


ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பொழியும் தென்மேற்குப் பருவமழை, இந்தியாவின் ஒட்டுமொத்த ஆண்டு மழையளவில் 70%-க்கும் அதிகமான மழையைக் கொண்டுவருகிறது. இந்தப் பருவமழை மே மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அந்தமான் கடல் பகுதியில் தொடங்கி, பொதுவாக            ஜூன் மாதம் 1-ஆம் தேதிக்குள் கேரளா வழியாக இந்தியாவின் முக்கிய நிலப்பகுதிக்குள் நுழைகிறது.


அதன் பிறகு, பருவமழை வெவ்வேறு கட்டங்களாக முன்னேறி, ஜூன் மாத இறுதிக்குள் வட உத்திரப் பிரதேசம், டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளுக்குச் சென்றடைகிறது. மேலும், ஜூலை மாதம் 15-ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் சென்றடைகிறது. இருப்பினும், பருவமழை முன்கூட்டியோ அல்லது சரியான நேரத்திலோ தொடங்குவது என்பது, நல்ல மழையையோ அல்லது நாடு முழுவதும் அது சரியான அளவில் பரவிப் பொழிவதையோ உறுதிப்படுத்துவதில்லை.  அதேபோல, மழை தாமதமாகத் தொடங்கினாலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.


இதுவரை பருவமழையின் முன்னேற்றம் எவ்வாறு உள்ளது?


இந்த ஆண்டு, கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 4-ஆம் தேதி தொடங்கியது, மேலும் அது அடுத்தடுத்து நான்கு நாட்களுக்கு தீவிரம் அடைந்தது. இது கர்நாடகா மற்றும் கோவா உள்ளிட்ட மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு முன்கூட்டியே நகர்ந்தது. ஆனால், வடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த மழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.


கேரளா, தெற்கு கர்நாடகா, தமிழ்நாடு, லட்சத்தீவு மற்றும் வடகிழக்கு இந்தியா முழுவதிலும் ஜூன் மாத தொடக்கத்தில் மழையின் தீவிரம் அதிகரித்தது, ஆனால் அது நீண்ட காலத்திற்கு நீடிக்கவில்லை. தென்மேற்கு இந்தியப் பகுதி ஜூன் மாதம் 10-ஆம் தேதி வரை 8% கூடுதல் மழைப்பொழிவைப் பெற்றுள்ளது.


மஹாராஷ்டிராவில் பருவமழை எப்போது தொடங்கும் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. கடைசியாக ஜூன் மாதம் 8-ஆம் தேதி தெற்கு கொங்கன் (South Konkan) மற்றும் அதனை ஒட்டிய தெற்கு மத்திய மஹாராஷ்டிராவின் சில பகுதிகளில் மட்டுமே பருவமழை தீவிரமடைந்தது.


ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்த ஆண்டு வங்காள விரிகுடா கிளையுடன் ஒப்பிடுகையில், அரபிக்கடல் கிளையின் பருவமழையின் தீவிரம் மிகவும் மெதுவாக உள்ளது. வங்காள விரிகுடா கிளையானது ஜூன் மாதம் 17 நிலவரப்படி கோராபுட் (Koraput), புல்பானி (Phulbani), ராஞ்சி (Ranchi), ஜமுய் (Jamui) மற்றும் முசாபர்பூர் (Muzaffarpur) ஆகிய பகுதிகள் வரை பரவியுள்ளது.


ஜூன் மாதம் 8-ஆம் தேதிக்குப் பிறகு, பருவமழையின் தீவிரம் முக்கியமாகக் கிழக்கு இந்தியப் பகுதிகளை நோக்கியே நீடித்தது. ஜூன் மாதம் 15-ஆம் தேதி, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களின் மீதமுள்ள பகுதிகளுக்கும் பருவமழை தொடர்ந்தது.


மகாராஷ்டிராவில் தென்மேற்குப் பருவமழை ஏன் வேகம் குறைந்துள்ளது?

முதலாவதாக, இந்த பருவமழைக் காலத்தின் தொடக்கத்திலிருந்தே அரபிக்கடலில் இருந்து வீசும் தென்மேற்கு பருவக்காற்று பலவீனமடைந்துள்ளது. இதன் விளைவாக, மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதிகள் மற்றும் அதன் அருகிலுள்ள உள்நாட்டுப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படும் ஈரப்பதத்தின் அளவு குறைந்துள்ளது.


அதேநேரத்தில், வடக்கு மற்றும் வடமேற்கு திசையிலிருந்து வீசும் வறண்ட பலத்த காற்று இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த வறண்ட காற்றானது பலவீனமாக இருக்கும் பருவக்காற்றுக்கு ஒரு தடையாக மாறி, அதைத் தடுக்கிறது. இதுமட்டுமல்லாமல், அரபிக்கடலில் இருந்து பருவக்காற்றை முன்னோக்கித் தள்ளும் வலுவான உந்துதலும் கிடைக்கவில்லை. பொதுவாக, இதுபோன்ற உந்துதல்கள்தான் அதிக ஈரப்பதத்தைக் கொண்டுவந்து, பரவலான மழையைத் தந்து, பருவமழை மேலும் முன்னேறிச் செல்ல உதவுகின்றன.


இரண்டாவதாக, மேற்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு மேலே நிலநடுக்கோட்டைக் கடந்து வீசும் காற்றுகளும் பலவீனமடைந்துள்ளன. இந்தக் காற்றுகளும் ஈரப்பதத்தைக் கடத்துவதற்கும், தென்மேற்குப் பருவமழை நாடு முழுவதும் முன்னேறுவதற்கும் பெரிதும் உதவக்கூடியவை ஆகும்.


மூன்றாவதாக, பருவமழை தொடர்ந்து பெய்வதற்கும் அடுத்தடுத்த இடங்களுக்கு முன்னேறிச் செல்வதற்கும் மற்ற வானிலை அமைப்புகளின் ஆதரவு தேவைப்படுகிறது. அரபிக்கடல் அல்லது வங்காள விரிகுடாவில் உருவாகும் குறைந்த அழுத்தப் பகுதிகள், சூறாவளி சுழற்சிகள் மற்றும் மேற்கு கடற்கரையை ஒட்டி உருவாகும் கடலோரக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் ஆகியவை இதில் அடங்கும். பொதுவாக இந்த வானிலை அமைப்புகள் பருவமழை முன்னேற உதவும், ஆனால் தற்போதைய சூழலில் இவை எதுவும் உருவாகவில்லை.


இறுதியாக, உள்ளூர் வானிலை நிலவரங்களைத் தவிர, தென்மேற்கு பருவமழையானது சாதகமான உலகளாவிய வானிலை வடிவங்களையும் சார்ந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு வானிலை அமைப்புதான் 'மேடன்-ஜூலியன் அலைவு' (Madden–Julian Oscillation (MJO)) ஆகும். இது மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகி கிழக்கு நோக்கி நகரும் ஒரு காற்று மற்றும் மேகங்களின் கூட்டமைப்பாகும். இந்த 'மேடன்-ஜூலியன் அலைவு' (MJO) சாதகமான கட்டத்தில் இருக்கும்போது, அது இந்தியாவில் மழையளவை அதிகரிக்கும். ஆனால், தற்போது இது நமக்குச் சாதகமான கட்டத்தில் இல்லை என்கின்றனர்.



இந்தக் காரணங்கள் அனைத்தும் சேர்ந்து, பருவமழையின் அரபிக்கடல் கிளையின் வேகத்தைக் குறைத்துள்ளன. இதனால் மகாராஷ்டிர மாநிலம் குறிப்பாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பல பகுதிகளில் இயல்பான அளவைவிட 60% முதல் 99% வரையிலும், சில இடங்களில் 99%-க்கும் அதிகமாகவும் மழைக் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


அடுத்ததாகப் பருவமழை எப்போது தீவிரமடைய வாய்ப்புள்ளது?


ஜூன் மாதம் 16-ஆம் தேதி முதல், இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)) மகாராஷ்டிராவில் பருவமழையின் தீவிரம் குறித்த எந்தவொரு புதிய தகவலையும் வெளியிடவில்லை. இது பருவமழை தொடங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை மட்டுமல்லாமல், அது எப்போது அடுத்த கட்டத்திற்கு நகரும் என்ற நிச்சயமற்றத் தன்மையையும் காட்டுகிறது.


ஜூன் மாதம் 17-ஆம் தேதி, மும்பை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD Mumbai) வெளியிட்ட தகவலின்படி, வானிலை மாதிரிகள் ஜூன் மாதம் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் கொங்கன் (Konkan) பிராந்தியத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் காட்டுகின்றன. இருப்பினும், மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் பருவமழையின் தீவிரம் குறித்து எந்தவொரு தகவலையும் வழங்கவில்லை.


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவல்படி, அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்குள் பருவமழையானது தெலுங்கானா, ஒடிசா, ஜார்கண்ட், பீகார் மற்றும் சத்தீஸ்கரின் சில பகுதிகளுக்குள் அடுத்ததாக முன்னேறிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Original article : Why has monsoon progress stalled, and when can rains be expected next? -Anjali Marar

Share:

கட்சியில் இணைதல், சட்டப்படி எப்போது செல்லுபடியாகும்? திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிளவுடன், கட்சி மாற்றத் தடைச் சட்டம் என்ன சொல்கிறது, என்ன விட்டுவிடுகிறது? -அமால் ஷேக்

 திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த சர்ச்சை, இந்திய அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணை (கட்சித் தாவல் தடைச் சட்டம்) இதுவரை தெளிவாகப் பதிலளிக்காத ஒரு கேள்வியை அடிப்படையாகக் கொண்டது.     அதாவது, ஒரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பேர் பிரிந்து செல்லும்போது அங்கு கட்சியின் 'இணைப்பு' நடந்துவிடுகிறதா, அல்லது முதலில் அந்த அரசியல் கட்சியே அதிகாரப்பூர்வமாக மற்றொன்றுடன் இணைய வேண்டுமா?


திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சிக்குள் தற்போது நடந்துவரும் இந்த மோதலில், அக்கட்சியின் 20 அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜூன் மாதம் 14-ஆம் தேதி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவைச் சந்தித்து, தாங்கள் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியுடன் (NCPI) இணைந்துவிட்டதாகக் கூறி உரிமை கோரியுள்ளனர். 


ககோலி கோஷ் தஸ்திதார் மற்றும் சுதீப் பந்தோபாத்யாய் ஆகியோர் தலைமையிலான இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரிபுராவை தளமாகக் கொண்ட அந்தக் கட்சியில் இணைந்துள்ளனர். இந்தக் கட்சி கடந்த 2023-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது இரண்டு தொகுதிகளில் வெறும் 822 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நாடாளுமன்றத்தில் தங்களுக்கு மீதமுள்ள திரிணாமுல் காங்கிரஸ் (TMC) நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தனியாக அமரும் வசதியை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். 


திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோரின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக அந்த அதிருப்தி குழு உரிமை கோருகிறது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் (Anti-defection law) தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தவிர்த்து, அவையில் தங்களின் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச ஆதரவு எண்ணிக்கை இதுவாகும்.


இந்த இணைப்புக் கோரிக்கையைப் பற்றி இறுதி முடிவெடுப்பதற்குமுன், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இருதரப்பு வாதங்களையும் கேட்பார்.            இதற்கு முன்னதாக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி அவருக்கு எழுதிய கடிதத்தில், தங்களது கட்சி, ஒற்றை, பிரிக்க முடியாத அரசியல் கட்சியாகவே நீடிக்கிறது என்றும், கட்சியில் எந்தவொரு அதிகாரப்பூர்வ இணைப்பும் நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.


இந்த சர்ச்சை, இந்திய அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணை (கட்சித் தாவல் தடைச் சட்டம்) இதுவரை தெளிவாகப் பதிலளிக்காத ஒரு கேள்வியை அடிப்படையாகக் கொண்டது. அதாவது, ஒரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பேர் பிரிந்து செல்லும்போது அங்கு கட்சியின் 'இணைப்பு' நடந்துவிடுகிறதா, அல்லது முதலில் அந்த அரசியல் கட்சியே அதிகாரப்பூர்வமாக மற்றொரு கட்சியுடன் இணைய வேண்டுமா?


இதேபோன்ற ஒரு சர்ச்சை சிவ சேனா (உத்தவ் பாலசாஹேப் தாக்கரே)  கட்சிக்குள்ளும் உருவாகி வருகிறது. சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, கட்சியிலிருந்து பிரிந்து சென்ற எந்தவொரு குழுவையும் அங்கீகரிக்கக் கூடாது என்று அக்கட்சி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் 4-வது பத்தி என்பது, வெறும் மூன்றில் இரண்டு பங்கு (2/3) நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மட்டும் குறிக்கவில்லை, மாறாக ஒட்டுமொத்த மூல அரசியல் கட்சியே மற்றொரு கட்சியுடன் இணைவதைத்தான் கட்டாயமாக்குகிறது என்று அக்கட்சியின் தலைவர்கள் வாதிடுகின்றனர். இந்த நிலைப்பாடு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமை எடுத்த முடிவைப் போன்றதே ஆகும்.


கட்சித் தாவல் தடைச் சட்டம் கூறுவது என்ன? 


நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சொந்தக் கட்சியிலிருந்து விலகினாலோ அல்லது கட்சியின் கொறடா உத்தரவை (Party whip) மீறிச் செயல்பட்டாலோ, பத்தாவது அட்டவணையின் 2-ஆவது பத்தியின்படி அவர் பொதுவாகத் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.


இருப்பினும், 4-ஆவது பத்தியானது கட்சிகள் ஒன்றிணைவதற்கு ஒரு விதிவிலக்கை அளிக்கிறது. பத்தி 4(1)-ன்படி, ஒரு மூல அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்காமல் மற்றொரு கட்சியுடன் இணைய அனுமதிக்கிறது. ஆனால், பத்தி 4(2)-ன்படி, சட்டமன்றத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ உள்ள அக்கட்சியின் உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கினர் (2/3) இந்த இணைப்பிற்குச் சம்மதித்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று கூறுகிறது.


இந்த அட்டவணையில் உள்ள இரண்டு சொற்கள் மிகவும் முக்கியமானவை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் "மூல அரசியல் கட்சி" என்பது, அவர்களைத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்திய, இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயான கட்சி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஒரு கட்சியாகும். ஆனால், "சட்டமன்றக் கட்சி" அல்லது "சட்டமன்றக் குழு" என்பது ஒரு குறிப்பிட்ட அவையில் இருக்கும் அந்தக் கட்சியின் உறுப்பினர்களை மட்டுமே கொண்ட ஒரு சிறிய குழுவாகும்.


மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்தவுடன், கட்சி இணைப்பில் இணையும் உறுப்பினர்கள் மற்றும் அந்த இணைப்பை நிராகரித்துவிட்டுத் தனிக் குழுவாகத் தொடரும் உறுப்பினர்கள் ஆகிய இருதரப்பினருமே தகுதி நீக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.


1985-ஆம் ஆண்டின் 10-வதுஅட்டவணையில் (கட்சித்தாவல் தடைச் சட்டம்), பத்தி 3-ன்கீழ் கட்சிகள் பிரிவதற்கு மிக எளிமையான விதிமுறை இருந்தது. ஒரு சட்டமன்ற அல்லது நாடாளுமன்றக் கட்சியின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பிரிந்து சென்றால், அது "கட்சிப் பிளவு" எனக் கருதப்பட்டு அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இருப்பினும், இந்த விதிமுறை பெருமளவில் கட்சித்தாவலை ஊக்குவிக்கப் பயன்படுத்தப்பட்டதால், 2003-ஆம் ஆண்டின் 91-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் (91st Amendment Act, 2003) இந்த விதியை நீக்கியதுடன், தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கையை மூன்றில் இரண்டு பங்காக உயர்த்தியது. எனவே, தகுதி நீக்கத்தைத் தவிர்ப்பதற்கு இப்போது பத்தி 4-ன்கீழ் நடக்கும் கட்சி இணைப்புகள் மட்டுமே ஒரே வழியாகும்.


ஒரே சட்டப்பிரிவை வெவ்வேறு விதமாகப் புரிந்துகொள்ளுதல்


திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்தாவது அட்டவணையின் 4-வது சட்டப்பிரிவை தங்களின் ஒரே தகுதித்தேர்வாகக் காட்டுகின்றனர். அதாவது, மூன்றில் இரண்டு பங்கு என்ற எல்லையைக் கடந்துவிட்டால், கட்சி இணைப்பு உறுதியாகிவிடுகிறது என்பது அவர்களின் வாதம் ஆகும். ஆனால், கட்சியின் தலைவரான மமதா பானர்ஜியின் கடிதம், இந்த வாதம் முற்றிலும் தவறானது என்று வாதிட்டது.


இந்த விஷயத்தில்  திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேறொரு கட்சியுடன் உண்மையில் இணைந்திருக்க வேண்டும், மற்றும் சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருக்க வேண்டும் ஆகிய இரண்டு நிபந்தனைகளை பத்தாவது அட்டவணையின் 4-வது பத்தி வரையறுக்கிறது என்றும், இதில் இரண்டாவதாகக் கூறப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மட்டும் பெற்றிருப்பது தனியாக எந்தப் பயனும் தராது என்றும் வாதிட்டது.


அவரது கடிதத்தில், கட்சியின் கொறடா (Whip) மற்றும் கட்சியின் தலைவர் ஆகியோர் கட்சி அமைப்பால் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள். அவையில் எந்தக் குழுவிடம் அதிக உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அது முடிவு செய்யப்படுவதில்லை என்று கூடுதல் தகவல் சேர்க்கப்பட்டுள்ளது. பிரிந்து சென்ற எந்தவொரு குழுவும் தங்களுக்குப் போட்டியாக ஒரு கொறடாவை நியமிக்கவோ அல்லது தங்களுக்குத் தனி அங்கீகாரம் கோரவோ முடியாது. அப்படிச் செய்தால் அது அவர்களையே தகுதி நீக்கம் செய்ய வழிவகுக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


இந்த விவகாரம் இந்தியாவின் நீதிமன்றங்கள் மற்றும் அவைத் தலைவர்களிடையே பல ஆண்டுகளாகக் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்திப் பிரித்து வைத்துள்ளது. இந்தத் தற்கருத்து வேறுபாட்டிற்குக் காரணமே பத்தாவது அட்டவணைதான் (கட்சித் தாவல் தடைச் சட்டம்). ஏனெனில், இது ஒரு "அரசியல் கட்சி" மற்றும் ஒரு "சட்டமன்ற/நாடாளுமன்றக் கட்சி" ஆகிய இரண்டையும் ஒன்றோடொன்று தொடர்புடைய, ஆனால் தனித்தனியான அமைப்புகளாகக் கருதுகிறது.


கட்சிகள் இணைவதற்கான விதிவிலக்கின்படி, மிக முக்கியமான கேள்வி என்னவென்றால்: உண்மையான மூல அரசியல் கட்சி முழுமையாக மற்றொன்றுடன் இணைந்துவிட்டது என்பதற்கான ஆதாரம் தேவையா, அல்லது அவையிலுள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு மட்டுமே இந்த விதிவிலக்கைப் பெற போதுமானதா என்பதுதான்.


சிவசேனா கட்சி உடைந்தது குறித்து (சுபாஷ் தேசாய் வழக்கு)                   2023-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அவையில் இருக்கும் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவிற்கு கொறடா (Whip) மற்றும் தலைவரை நியமிக்கும் அதிகாரம் இல்லை, மாறாக ஒட்டுமொத்த மூல அரசியல் கட்சிக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்தது.




இருப்பினும், அதிருப்தி குழுவினர் கோவா நீதிமன்ற முன்னுதாரணத்தை நம்பியிருக்கின்றனர். கிரிஷ் சோடன்கர் vs  அவைத் தலைவர் (Girish Chodankar vs Speaker), கோவா மாநில சட்டப்பேரவை (2022) என்ற வழக்கில், கோவா சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களாக இருந்த 10 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்), 2019-ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் (BJP) இணைந்தனர்.


மக்களவைத் தலைவர் அவர்களுக்கு எதிரான தகுதிநீக்க மனுவை நிராகரித்தார், மேலும் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் கோவா அமர்வும் அந்த முடிவை உறுதி செய்தது. சட்டமன்றக் கட்சிக்குள் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே, அது மூல அரசியல்  கட்சி வேறொரு கட்சியுடன் இணைந்ததாகக் கருதப்படும் என்றும், அவைக்கு வெளியே உள்ள காங்கிரஸ் கட்சி அமைப்பு பாஜகவுடன் இணைந்ததற்கான தனியான ஆதாரம் எதுவும் தேவையில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.


மமதா பானர்ஜியின் கடிதம் கோவா நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றி நேரடியாக எதுவும் பேசவில்லை. அதற்குப் பதிலாக, சிவசேனா (Shiv Sena) கட்சிக்குள் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே இடையே ஏற்பட்ட பிளவிலிருந்து உருவான 'சுபாஷ் தேசாய்' வழக்கில், உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பின் கொள்கைகளையே நம்பியிருக்கிறது.


அந்த வழக்கு ஒரு கட்சி இணைப்பைப் பற்றியது அல்ல. இங்கு, ஷிண்டே தரப்பினர் தங்களை மற்றொரு கட்சியுடன் இணைந்த அமைப்பாகக் காட்டாமல், தங்களது தரப்புதான் உண்மையான சிவசேனா என்று உரிமை கோரினர்.      ஆனால், உச்சநீதிமன்ற அமர்வு, "ஒரு சட்டமன்ற/நாடாளுமன்றக் கட்சி, அதை உருவாக்கிய மூல அரசியல் கட்சியிடமிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ள முடியாது. கொறடா (Whip) மற்றும் தலைவரை நியமிக்கும் அதிகாரம் கட்சி நிறுவனத்திற்கே உரியது, மாறாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் இடையில் யாருக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்பதைப் பொறுத்தது அல்ல என்றும், இந்தக் கேள்வி வெறும் எண்களை மட்டும் மையமாகக் கொண்ட விளையாட்டு அல்ல, அதையும் தாண்டிய ஒன்று  எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் வெறும் பெரும்பான்மையின் பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு, ஒரு கட்சி இணைப்பு நடந்துவிட்டதாகத் தன்னிச்சையாக அறிவிக்க முடியாது என்று வாதிடுவதற்கு பானர்ஜியின் கடிதம் அதே  வாதத்தைப் பயன்படுத்துகிறது.


ஆனால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால் கட்சி இணைப்பு செல்லுபடியாகும் என்ற வாதம், ஏற்கனவே ஒரு உயர்நீதிமன்றத்தால் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, அது நடைமுறையிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஆம் ஆத்மி கட்சியின் (AAP) 10 மாநிலங்களவை உறுப்பினர்களில் 7 பேர், இதே மூன்றில் இரண்டு பங்கு விதியைப் பயன்படுத்தி தாங்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்துவிட்டதாக அறிவித்தனர். அவர்களுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி (AAP), மாநிலங்களவைத் தலைவரிடம் தகுதி நீக்க மனுவைத் தாக்கல் செய்தது. ஆனால், சில நாட்களிலேயே, மாநிலங்களவைத் தலைவர் அந்த இணைப்பை ஏற்றுக்கொண்டார், மேலும் அந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும் (MPs) முறைப்படி பாரதிய ஜனதா கட்சியில் (BJP) இணைந்தனர். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் 4-வது பத்தி தொடர்பான மாறுபட்ட கருத்துக்கள் எவ்வாறு பரிசீலிக்கப்பட்டன என்பது குறித்த விரிவான விளக்க ஆணை எதுவும் இதுவரை பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை.


அவைத் தலைவரின் பங்கு 


வரலாற்றுச் சிறப்புமிக்க கீஹோட்டோ ஹொல்லோஹன் vs சாகில்ஹு (Kihoto Hollohan vs Zachillhu - 1992) வழக்குத் தீர்ப்பு, பத்தாவது அட்டவணையின் (கட்சித் தாவல் தடைச் சட்டம்) செல்லுபடியாகும் தன்மையை உறுதி செய்தது. மேலும், மக்கள் பிரதிநிதிகளைத் தகுதி நீக்கம் செய்யும் வழக்குகளை விசாரித்து முடிவெடுக்கும் போது, அவைத் தலைவர் நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத்தின் சாதாரண சலுகைகளைப் பயன்படுத்தும் ஒரு உறுப்பினராகச் செயல்படாமல், ஒரு நீதிமன்றத் தீர்ப்பாயம் போலச் செயல்படுகிறார் என்றும் அந்தத் தீர்ப்பு கூறியது.


இது  அவைத் தலைவரின் முடிவுகளை நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்ய அனுமதிக்கிறது. இருப்பினும், இந்தத் தீர்ப்பானது, நீதிமன்றங்களின் இத்தகைய மறுபரிசீலனை அதிகாரத்தை, அதிகார வரம்பு மீறல், இயற்கை நீதிக்கான கோட்பாடுகளை மீறுதல் அல்லது சட்டப் பிழைகள் போன்ற குறிப்பிட்ட காரணங்கள் உள்ள வழக்குகளுக்கு மட்டுமே என்று வரம்பிற்குள் கொண்டு வந்தது. மேலும், அவைத் தலைவர் ஒரு இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பாக நீதிமன்றங்களின் தலையீட்டை தடுத்தது.


Original article : When is a party merger valid? With TMC split, here is what the defection law says — and omits -Amaal Sheikh

Share:

QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பற்றி… - பிரியா குமாரி சுக்லா

 QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் - தரவரிசை என்ன சொல்கிறது?


தற்போதைய நிகழ்வு : தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை 2027-ல் இந்திய நிறுவனங்களிலேயே ஐஐடி-டெல்லி முதலிடம் பிடித்துள்ளது. இது உலக அளவில் ஐந்து இடங்கள் முன்னேறி 118-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு இந்திய நிறுவனம் எட்டிய மிக உயர்ந்த தரவரிசை இதுவாகும் (முன்னதாக ஐஐடி-மும்பை 2025-ம் ஆண்டு தரவரிசையில் இந்த மைல்கல்லை எட்டியிருந்தது).


QS World University Rankings என்பது உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல். QS என்பது Quacquarelli Symonds என்ற பிரிட்டிஷ் நிறுவனத்தின் சுருக்கம். இந்த நிறுவனம் 1990-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலக அளவில் பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தி வரும் மிக முக்கியமான மூன்று நிறுவனங்களில் ஒன்று QS ஆகும்.




முக்கிய அம்சங்கள் :


முன்பு இந்திய நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஐஐடி-மும்பை, 129-வது இடத்திலிருந்து 134-வது இடத்திற்குச் சரிந்துள்ளது. முந்தைய ஆண்டிலும் இது 11 இடங்கள் சரிவைச் சந்தித்திருந்தது. உலக அளவில், மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (Massachusetts Institute of Technology(MIT)) தொடர்ந்து 15-வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் (Stanford University), இம்பீரியல் கல்லூரி இலண்டன் (Imperial College London), ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் (University of Oxford) மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (Harvard University) ஆகியவை உள்ளன.


இந்தியாவின் முதல் 10 இடங்களுக்கான பட்டியலில் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (IITs) தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஐஐடி-டெல்லி மற்றும் ஐஐடி-மும்பை தவிர, உலக அளவில் முதல் 200 இடங்களுக்குள் இடம்பெற்ற மற்றொரு இந்திய நிறுவனம் ஐஐடி-சென்னை (IIT-Madras) மட்டுமே (இது கடந்த ஆண்டு 180-வது இடத்திலிருந்து 170-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது).


இந்தியாவின் முதல் 10 நிறுவனங்களின் பட்டியலில் உள்ள மற்ற நிறுவனங்கள்,


  •    ஐஐடி-கரக்பூர் (205)

  •    ஐஐடி-கான்பூர்  (221)

  •    இந்திய அறிவியல் நிறுவனம் (IISc), பெங்களூரு (221)

  •    டெல்லி பல்கலைக்கழகம் (322)

  •    ஐஐடி-ரூர்க்கே (335)

  •    ஐஐடி-கவுகாத்தி (349)


இவற்றில், இந்திய அறிவியல் நிறுவனம் பெங்களூரு (IISc Bangalore) மற்றும் ஐஐடி-கவுகாத்தி ஆகியவை கடந்த ஆண்டை விடத் தரவரிசையில் சரிவைச் சந்தித்துள்ளன.


உண்மையில், இந்திய அறிவியல் நிறுவனத்தின் (IISc) தரவரிசை கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது. 2023-ல் 155-வது இடத்தைப் பிடித்திருந்த இந்நிறுவனம், அதே ஆண்டில் மிக உயர்ந்த தரவரிசையைப் பெற்ற இந்திய நிறுவனமாகத் திகழ்ந்தது. கடந்த ஆண்டு இதன் தரவரிசை 219-ஆகவும், இந்த ஆண்டு 221 என்ற நிலைக்கு சரிந்துள்ளது. 'ஆசிரியருக்கான மேற்கோள்கள்' (citations per faculty) குறியீட்டில் 99.9 என்ற அதிகபட்ச மதிப்பெண்ணைப் பெற்றிருந்தாலும், 'வேலையளிப்போர் மத்தியில் நற்பெயர்' (48.8) மற்றும் 'வேலைவாய்ப்பு முடிவுகள்' (22.6) ஆகிய அளவுகோல்களில் இதன் செயல்பாடு குறைவாகவே உள்ளது. இந்த அளவுகோல்களில்தான் ஐஐடி-டெல்லி மற்றும் ஐஐடி-மும்பை ஆகியவை இந்த முதன்மையான ஆராய்ச்சி நிறுவனத்தை விடச் சிறப்பாகச் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களைத் தவிர, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனமான 'சூலினி பயோடெக்னாலஜி மற்றும் மேனேஜ்மென்ட் சயின்சஸ் பல்கலைக்கழகம்' (Shoolini University of Biotechnology and Management Sciences), கடந்த ஆண்டு 503-வது இடத்தில் இருந்த நிலையில், தற்போது 452-வது இடத்தைப் பிடித்து இந்தியாவின் முதல் 10 இடங்களுக்குள் (இந்தப் பட்டியலில் இடம்பெற்ற இந்திய நிறுவனங்களின் வரிசையில்) வந்துள்ளது.


உங்களுக்குத் தெரியுமா? 


விக்கிபீடியாவின் தகவலின்படி, 'QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை' (QS World University Rankings) என்பது உயர்கல்வித் துறை சார்ந்த தரவுப் பகுப்பாய்வு நிறுவனமான 'குவாக்வாரெல்லி சைமண்ட்ஸ்' (Quacquarelli Symonds) மூலம் தொகுக்கப்படும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான ஒப்பீட்டுத் தரவரிசைப் பட்டியலாகும்.


QS தரவரிசையின் சமீபத்திய பதிப்பில் 52 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இது கடந்த ஆண்டு இருந்த 54-லிருந்து குறைவான எண்ணிக்கையாகும். இத்தரவரிசையில் இடம்பெற்றுள்ள மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், அமெரிக்கா (184), இங்கிலாந்து (93), சீனா (85) மற்றும் ஜெர்மனி (60) ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா ஐந்தாவது இடத்தில் (52) உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இத்தரவரிசையில் இடம்பெறும் இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை 271% அதிகரித்துள்ளது. அதாவது 2015-ல் 11-ஆக இருந்த நிறுவனங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 52-ஆக உயர்ந்துள்ளது. உலகளவில், இந்த ஆண்டுக்கான தரவரிசையில் 1,500-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.


ஐஐடி-களைத் தவிர்த்துப் பார்க்கையில், இந்தியக் கல்வி நிறுவனங்களிலேயே வேலூர் தொழில்நுட்பக் கழகம் (VIT) மிகப்பெரிய முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் 94 இடங்கள் முன்னேறி உலகளவில் 597-வது இடத்தைப் பிடித்துள்ளது. BITS பிலானி (BITS Pilani) 93 இடங்கள் முன்னேறி 575-வது இடத்தையும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா (Jamia Millia Islamia) 75-க்கும் மேற்பட்ட இடங்கள் முன்னேறி 686-வது இடத்தையும் பிடித்து, இந்தியாவின் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்துள்ளன.


இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) ஏன் இந்தியாவுக்கு இராஜதந்திரரீதியாக முக்கியமாகக் கருதப்படுகிறது?


தற்போதைய நிகழ்வு என்ன? : ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் புதன்கிழமையன்று, இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாகத் தெரிவித்தார்.


முக்கிய அம்சங்கள் :


மற்றொரு நிகழ்வாக, ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஜெர்மனிக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.


ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் 'X' தளத்தில் பதிவிட்டதாவது, "அன்புள்ள நரேந்திரமோடி அவர்களே, இவ்வளவு விரைவில் மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. மிக முக்கியமான வர்த்தக ஒப்பந்தத்தை நாங்கள் நிறைவு செய்துள்ள நிலையில், எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வேகமாகச் செயல்பட்டு வருகிறோம். இந்த ஆண்டின் இறுதிக்குள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (Free Trade Agreement) கையெழுத்திடுவோம். அத்துடன் முதலீட்டு ஒப்பந்தம் தொடர்பான பணிகளையும் விரைவுபடுத்துவோம்."


"தங்கள் பாதுகாப்பு மற்றும் தற்காப்புத் துறையிலான ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவோம்," என்று கூறிய அவர், 'இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை' (India-Middle East-Europe Corridor (IMEC)) முன்னெடுப்பதன் மூலம் சிறந்த இணைப்பு வசதியை உருவாக்க ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் இணைந்து செயல்படும் என்றும் தெரிவித்தார்.


வெளியுறவு அமைச்சகத்தின் தகவலின்படி, ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன் பிரதமர் மோடி புதன்கிழமையன்று இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். அப்போது, ​​ஜனவரி 2026-ல் இந்தியாவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 16-வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டை அவர்கள் நினைவு கூர்ந்தனர். அதன்பிறகு இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை தலைவர்கள் வரவேற்றனர்.


பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட அவர்கள், "மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை வரவேற்றனர். அத்தகைய உலகளாவிய ஒழுங்கு அமைதி, நிலைத்தன்மை, வளம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையிலான, உறுதியான மற்றும் பலமுனை உலக ஒழுங்கை உருவாக்குவதில் தங்கள் கூட்டு அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினர்," என்று தெரிவிக்கப்பட்டது.


ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸுடனான சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இருநாட்டு தலைவர்கள் ஆய்வு செய்ததாகத் தெரிவித்தது. மேலும், அதிபரின் இந்தியப் பயணம் மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்த (FTA) பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தது ஆகியவற்றின் மூலம் இந்தியா-ஜெர்மனி இடையிலான 'இராஜதாந்திரக் கூட்டாண்மையில்' (Strategic Partnership) ஏற்பட்டுள்ள புதிய உத்வேகம் குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.



இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஜெர்மனியில் நடைபெறவுள்ள 8-வது இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையிலான ஆலோசனைக் கூட்டத்திற்கு (Inter-Governmental Consultations (IGC)) பிரதமர் மோடியை அதிபர் மெர்ஸ் அழைப்பு விடுத்தார்.


உங்களுக்குத் தெரியுமா? 


இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்று 2007-ல் தொடங்கப்பட்டது. அக்டோபர் 2013-க்குள், இந்தியாவும் பிரஸ்ஸல்ஸும் சுங்க வரிகள் மற்றும் சேவைகள் தொடர்பான சலுகை முன்மொழிவுகளைப் பரிமாறிக் கொண்டன. மேலும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) மிகச் சிக்கலான 'சந்தை அணுகல்' (market-access) தொடர்பான ஒப்பந்தத்தின் பொதுவான கட்டமைப்பை வரையறுப்பதில் அவர்கள் கவனம் செலுத்தினர்.


அக்காலத்தில், கார்கள் மற்றும் கார் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரிகள் இந்தியாவிற்கு அரசியல்ரீதியாக மிகவும் உணர்வுப்பூர்வமான விவகாரமாக இருந்தன. இந்த ஒப்பந்தத்தின் இறுதி உடன்படிக்கைக்கான (landing-zone) பேச்சுவார்த்தைகள் தொடங்கிய நேரத்தில், இந்தியாவில் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. அதேவேளையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு அரசியல்ரீதியான சவால்களை எதிர்கொண்டிருந்தது.


2024-ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜவுளி மற்றும் ஆடை இறக்குமதியில் இந்தியாவின் பங்கு சுமார் 5% ஆக இருந்தது. 2024-ல் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஜவுளி மற்றும் ஆடைகளை அதிகளவில் ஏற்றுமதி செய்த நாடுகளில் சீனா (28%), வங்கதேசம் (22%), துருக்கி (11%), வியட்நாம் (6%) ஆகியவை முன்னணியில் இருந்தன. அதைத் தொடர்ந்து இந்தியாவும் இடம்பெற்றிருந்தது. மேலும், வங்கதேசம், வியட்நாம் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) அல்லது மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்கான (Least Developed Countries (LDCs)) சலுகைகள் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் (EU) சுங்கவரி இல்லா அணுகலைப் (zero-duty access) பெற்றுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான இந்தியாவின் சராசரி சுங்கவரி தற்போது சுமார் 10 முதல் 12% ஆக உள்ளது. ஆனால், இந்தியப் பொருட்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் சராசரி சுங்கவரி மிகக் குறைவாக, சுமார் 3-4% மட்டுமே உள்ளது.


குறிப்பிடத்தக்க வகையில், வர்த்தக ஒப்பந்தம் இல்லாமலேயே, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 75%-க்கும் அதிகமானவை 1%-க்கும் குறைவான சுங்க வரியையே எதிர்கொள்கின்றன. ஐரோப்பியப் பொருட்களுக்கான தனது அதிகப்படியான சுங்கவரிகளைக் குறைப்பதன் மூலம் இந்தியா வழங்க வேண்டிய சலுகைகளுடன் ஒப்பிடுகையில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும்கூட, இந்த இந்தியப் பொருட்களில் பெரும்பாலானவை குறிப்பிடத்தக்க சந்தை வாய்ப்பைப் பெறாமல் போகலாம்.


இந்தியாவைப் பொறுத்தவரை, வாகனங்கள் மற்றும் ஐரோப்பாவில் தயாரிக்கப்படும் ஒயின் (wines) மற்றும் மதுபானங்கள் (spirits) ஆகியவை முக்கியப் பகுதிகளாக இருந்தன. மிகவும் உணர்திறன் வாய்ந்த பொருட்களான விவசாயம் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவை நீண்ட காலமாக ஒப்பந்த முன்னேற்றத்தைத் தடுத்து வந்ததால், அவை இப்போதைய பேச்சுவார்த்தையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த முறை ஒப்பந்தம் முறியக் காரணமாக இருந்த வாகனத் துறையைப் பொறுத்தவரை, இரு தரப்பினரும் "பரஸ்பர நிரப்புத்தன்மை" (complementary factors) கொண்ட அம்சங்களை முன்னிலைப்படுத்தியுள்ளனர். அதாவது, சிறிய மற்றும் மலிவான கார்களைத் தயாரிப்பதில் இந்தியாவும், பெரிய வாகனங்களைத் தயாரிப்பதில் ஐரோப்பாவும் வலுவாக உள்ளன. எனவே, வாகன இறக்குமதிகள் மீது விலை சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் 10 ஆண்டுகளில் படிப்படியாகச் சுங்கவரியைக் குறைக்கும் நடைமுறை ஆகியவை அமல்படுத்தப்படவுள்ளன. பொதுவாக, வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது, ​​தனது மிகப்பெரிய உள்நாட்டுச் சந்தையை ஒரு முக்கிய பேரம் பேசும் காரணியாகவே இந்தியா பயன்படுத்துகிறது.


Original article : QS World University Rankings, Free Trade Agreement -Priya Kumari Shukla

Share:

இந்தியாவில் அரசின் கட்டுப்பாட்டை வடிவமைத்த முதல் அரசியலமைப்புத் திருத்தத்தை மறுபரிசீலனை செய்தல் - திரிபுர்தமன் சிங்

 முதல் அரசியலமைப்புத் திருத்தத்தின் விளைவுகள் எவ்வகையிலும் பாதிப்பற்றவையாக இருக்கவில்லை. இது இந்திய தாராளவாத (liberalism) சிந்தனை உருவெடுத்துக்கொண்டிருந்த சக்திகள் மீது ஒரு கடுமையான தாக்குதலை நடத்தியது. அத்துடன் தேசத்துரோகச் சட்டம் உள்ளிட்ட அடக்குமுறை மற்றும் கட்டாயப்படுத்துதல் சார்ந்த சட்டங்களின் பரந்த தொகுப்பிற்குத் தேவையான அரசியலமைப்புரீதியான அடித்தளத்தை இது உருவாக்கியது.


இராஜேந்திர பிரசாத் முதல் சட்டத் திருத்தத்திற்குத் தயக்கத்துடன் ஒப்புதல் அளித்து, 2026 ஜூன் 18-ம் தேதியுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இது இந்தியாவின் அரசியலமைப்பு கட்டமைப்பில் ஒரு "பெரும் மாற்றத்தை" (seismic shift) ஏற்படுத்தியது. இந்த மாற்றத்தின் தாக்கம் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததென்றால், நாட்டின் முன்னணி சட்ட அறிஞரான உபேந்திர பக்ஷி இதன் விளைவை "இரண்டாவது அரசியலமைப்பு" என்று வர்ணித்தார். 1951-ல் நடந்த அந்த மோசமான நிகழ்வுகளை இன்று வெகு சிலரே நினைவுகூர்கின்றனர். இருப்பினும், அந்தத் தருணம் இன்றும் இந்தியாவின் அரசியல் அமைப்பை வடிவமைத்து வருகிறது. மேலும், அது நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு ஒழுங்கின் மீது ஆழமான மற்றும் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.


ஜனவரி 26, 1950 அன்று, ஜனநாயக அரசாங்கத்திற்கான உலகின் மிகச்சிறந்த பரிசோதனை என்று ஆக்ஸ்போர்டு அறிஞர் கென்னத் வீர் (Kenneth Wheare) வர்ணித்த இந்தியக் குடியரசு, பெரும் வரவேற்புடன் தொடங்கி வைக்கப்பட்டது. பலர் இதனை ஒரு சாத்தியமற்ற விஷயமாகவே கருதினர். இந்தியா பரிசீலித்து வந்த குடியரசு முறை ஐரோப்பியக் கருத்து என்று கூறி, கிளமென்ட் அட்லி கூட ஜவஹர்லால் நேருவை இதிலிருந்து விலகி இருக்குமாறு எச்சரித்திருந்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தின் முக்கிய அமைப்பாக இந்தியாவின் புதிய அரசியலமைப்புச் சட்டம் திகழ்ந்தது. "எங்கும் காணமுடியாத மிக விரிவான அடிப்படை உரிமைகள் ஆவணம்" (the most detailed document of fundamental rights found anywhere) என்று 'நியூயார்க் டைம்ஸ்' இதழ் பாராட்டிய இந்த ஆவணம், காலனித்துவ கடந்த காலத்தை இந்தியா பின்னுக்குத் தள்ளுவதன் அடையாளமாக இந்த அரசியலமைப்பு பரவலாகக் கருதப்பட்டது. அதேவேளையில், தாராளவாத மற்றும் ஜனநாயக எதிர்காலத்தை நோக்கிய ஒரு முக்கிய அடியாகவும் இது பார்க்கப்பட்டது.


ஆனால், மக்கள் கற்பனை செய்தவாறு அமையாத ஒரு எதிர்காலமாக இருந்தது. 1951-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே, தனது சமூகக் கொள்கைகளைச் செயல்படுத்துவதில் அரசியலமைப்புச் சட்டமே முக்கிய தடையாகவும், முன்னேற்றத்திற்கு அரசியலமைப்பு ஒரு தடையாக இருப்பதாகவும் அறிவித்தது. மேலும் நேரு கூறியது போல, அந்த "மகத்தான அரசியலமைப்பு", "வழக்கறிஞர்களால் கடத்தப்பட்டு அபகரிக்கப்பட்டிருந்தது" என்று குறிப்பிட்டார். இத்தகைய சூழல் எவ்வாறு உருவானது? பேச்சுரிமை, பாகுபாடின்றி நடத்தப்படுவதற்கான உரிமை மற்றும் சொத்துரிமை ஆகிய மூன்று முக்கிய அடிப்படை உரிமைகள் தொடர்பாக நடைபெற்ற மூன்று முக்கிய சட்டப் போராட்டங்களே நேருவின் இந்த மதிப்பீட்டை வடிவமைத்தன. கிழக்கு வங்காளத்திலிருந்து வந்த அகதிகளின் அவலநிலை குறித்த அரசின் அலட்சியப் போக்கை கடுமையாக விமர்சித்த 'ஆர்கனைசர்' (Organiser) என்ற இதழ் மற்றும் கம்யூனிஸ்ட் கைதிகள் மீதான கொடூரமான நடத்தையைச் சாடிய இடதுசாரி வார இதழான 'கிராஸ் ரோட்ஸ்' (Cross Roads) ஆகியவற்றின் மீது தணிக்கை விதிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இருப்பினும், உச்சநீதிமன்றம் இந்தத் தணிக்கை நடவடிக்கைகளை ரத்து செய்ததுடன், அவற்றை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட சட்டங்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என்றும் அது அறிவித்தது. சர்தார் படேல் குறிப்பிட்டது போல, பத்திரிகைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பயன்படுத்திய சட்டங்களின் அடிப்படையையே இந்தத் தீர்ப்பு தகர்த்தெறிந்தது. மதராஸில் (சென்னை), சாதி மற்றும் சமூகத்தின் அடிப்படையில் கடுமையான இடஒதுக்கீடு முறையை அமல்படுத்திய கொள்கையை செம்பகம் துரைராஜன் என்ற பெண் எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார். கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு மதம், இனம் மற்றும் சாதி ஆகியவை அடிப்படையாக இருக்க முடியாது என்றும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டைத் தாண்டிய பிற இடஒதுக்கீடுகள் பாகுபாட்டிலிருந்து விடுபடுவதற்கான உரிமையை மீறுவதாகும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இறுதித் தாக்குதல், 1951 மார்ச் மாதம் பாட்னா உயர்நீதிமன்றம் பீகார் நிலச் சீர்திருத்தச் சட்டத்தை (Bihar Land Reform Act) அரசியலமைப்புக்கு முரணானது என்று அறிவித்ததன் மூலம் நிகழ்ந்தது. சுவாரஸ்யமாக, சொத்துரிமையின் காரணமாகவே அந்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று பலர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், சமத்துவத்திற்கான உரிமையே அந்தச் சட்டத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. நிலத்தின் அளவு அதிகரிக்கும்போது அதற்கான இழப்பீட்டு விகிதம் குறையும் வகையில் நிர்ணயிக்கப்பட்ட 'படிநிலை இழப்பீட்டு முறை'யே (sliding scale of compensation) இதற்குக் காரணமாக இருந்தது.


ஒட்டுமொத்தமாக, இந்த மூன்று நீதிமன்றத் தீர்ப்புகளும் கருத்துப் பரவலைத் தணிக்கை செய்யவும் கட்டுப்படுத்தவும் அரசுக்கு இருந்த அதிகாரத்தை வெகுவாகப் குறைத்தன. அவை, அரசின் நம்பகத்தன்மையைக் குறைத்ததுடன், அதன் சமூக நலத் திட்டங்களையும் குழப்பத்தில் ஆழ்த்தின. நேருவைப் பொறுத்தவரை, இத்தகைய விவகாரங்களில் நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க முன்வந்தது என்பதே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயலாக இருந்தது. மக்களின் விருப்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது தனது அரசுதான் என்றும், ஆனால் அரசியலமைப்பு அதற்குத் தடையாக இருப்பதாகவும் அவர் வாதிட்டார். இதன் விளைவாகவே 'முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்' (First Amendment)கொண்டுவரப்பட்டது.


இது சொத்துரிமையை பலவீனப்படுத்தியது. மேலும், "பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின்" சமூக மேம்பாட்டை முன்னெடுப்பதற்காக, பாகுபாட்டிற்கு எதிரான உரிமையை அரசு புறக்கணிக்கவும் இது வழிவகுத்தது. நிலச் சீர்திருத்தச் சட்டங்களைப் பாதுகாக்கும் நோக்கில், இது 'ஒன்பதாவது அட்டவணையை' (Ninth Schedule) உருவாக்கியது. அடிப்படை உரிமைகளை மீறினாலும்கூட, நீதிமன்ற மறுஆய்வுக்கு உட்படாத வகையில் சட்டங்களை இதில் சேர்க்க முடிந்தது. சட்ட நிபுணர் ஏ.ஜி. நூரானி இதனை "வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு அருவருப்பான செயல்" என்று வர்ணித்தார். மிக முக்கியமாக, பேச்சுரிமையைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய காரணங்களையும் இது அறிமுகப்படுத்தியது. பொது ஒழுங்கு, குற்றங்களைத் தூண்டுதல், வெளிநாடுகளுடனான உறவுகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு நலன்கள் ஆகியவை இதில் அடங்கும்.


முதல் சட்டத் திருத்தத்தின் விளைவுகள் பாதிப்பற்றவையாக இருக்கவில்லை. இது இந்திய தாராளவாதத்தின் (liberalism) வளர்ந்து வந்த சக்திகளுக்குப் பெரும் தாக்கத்தைக் கொடுத்தது. தேசத்துரோகக் குற்றம் உள்ளிட்ட அடக்குமுறை மற்றும் கட்டாயப்படுத்தும் சட்டங்களின் பரந்த தொகுப்பிற்குத் தேவையான அரசியலமைப்புரீதியான கட்டமைப்பை இது உருவாக்கியது. மேலும், பாதகமான நீதிமன்றத் தீர்ப்புகளை முறியடிக்க அரசியலமைப்பை முன்தேதியிட்டு (retrospectively) திருத்தும் மோசமான முன்னுதாரணத்தையும் இது ஏற்படுத்தியது. ஜனநாயக மரபுகள் மீதான அலட்சியமான அணுகுமுறை, எதிர்காலத்திலான மிக மோசமான செயல்களுக்கு ஒரு பாதையை அமைத்துக் கொடுத்தது. அரசியலமைப்பு ஒழுங்குமுறைக்கு மேலாக அரசியல் அதிகாரம் நிலைநிறுத்தப்பட்டது. இதன் விளைவாக, அசல் அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக வேரூன்றுவதற்கு முன்பே ஜனநாயக நெறிமுறைகள் பலவீனமடையத் தொடங்கின.


குடிமை உரிமைகள் மீதான அலட்சியம், அரசின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல், மற்றும் பொது விமர்சனங்களை "போலிச் செய்தி" அல்லது "நாசவேலை நடவடிக்கைகள்" என்று முத்திரை குத்தித் தவிர்த்தல் ஆகியவை இச்சூழலில் காணக்கூடிய அம்சங்களாகும். நாடாளுமன்றத்தில் பெரும் பெரும்பான்மை கொண்ட ஒரு அரசால், எதிர்க்கட்சிகள் மற்றும் குடிமைச் சமூகத்தின் ஆட்சேபனைகளைப் புறக்கணிக்க முடியும். அது தனது சொந்த செயல்திட்டத்தையும் கட்சி சித்தாந்தத்தையும் அடிப்படை உரிமைகளுக்கு மேலாக முன்னிறுத்த முடியும். மேலும், அரசியலமைப்பு நெறிமுறைகளை விடச் சட்டமன்றத்தின் விருப்பங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அது வாதிடலாம். தற்கால உலகத்துடனான இந்த ஒற்றுமைகள் வெறும் மொழிசார்ந்த ஒற்றுமைகள் மட்டுமல்ல, அவை வலுவான ஒப்புமைகளையும் பிரதிபலிக்கின்றன. இருப்பினும், இதன் 75-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதிலோ அல்லது இந்திய ஜனநாயகத்தின் மீது இது ஏற்படுத்தியுள்ள நீண்டகாலத் தாக்கத்தை மறுபரிசீலனை செய்வதிலோ பெரிய ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. இதைத் தொடக்கத்தில் ஆதரித்தவர்கள், இது உருவாக்க உதவிய சட்டக் கட்டமைப்பின் விளைவுகளை இப்போது எதிர்கொள்கின்றனர். ஒரு காலத்தில் இதன் முக்கிய இலக்குகளாக இருந்த இதன் ஆரம்பகால எதிர்ப்பாளர்கள், இப்போது ஆளும் அதிகார அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளனர். இருப்பினும், நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், அந்தத் திருத்த மசோதாவை எதிர்த்து முன்னின்று போராடியவரும், எதிர்காலத்திற்கு ஒரு கட்டுப்பாடற்ற கருவியாக இது மாறக்கூடும் என்பதை முன்கூட்டியே உணர்ந்தவருமான சியாமா பிரசாத் முகர்ஜி அரசுக்கு விடுத்த எச்சரிக்கையை நினைவில் கொள்வது அவசியம். "ஒருவேளை நீங்கள் என்றென்றும், அடுத்த தலைமுறையிலும், இன்னும் பிறக்காத தலைமுறைகளிலும்கூட ஆட்சியில் தொடரலாம், அது முற்றிலும் சாத்தியமே. ஆனால், வேறொரு கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வது? அப்போது நீங்கள் எத்தகைய முன்னுதாரணத்தை விட்டுச் செல்கிறீர்கள்?"


கட்டுரையாளர் ஜெனீவாவில் உள்ள 'கிராஜுவேட் இன்ஸ்டிடியூட்' (Graduate Institute)-ல் 'அம்பிசியோன் ஃபெலோ' (Ambizione Fellow) ஆக உள்ளார்.

Original article : Revisiting the First Amendment, which created the architecture of state control in India -Tripurdaman Singh

Share:

முக்கியத்துவம் பெற்றுள்ள தார்: இந்தியச் சாலைக் கட்டமைப்புகளுக்குப் பின்னால் உள்ள ‘கருப்புத் தங்கம்’ குறித்து… -ரோஷ்னி யாதவ்

 சாலை அமைக்கும் துறையில் 'கருப்புத் தங்கம்' 'black gold' என்று அழைக்கப்படும் தார், நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமப்புறச் சாலைகளுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். தார் என்றால் என்ன, அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் சூழல், இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு முயற்சிகளை எவ்வாறு பாதிக்கிறது? இது குறித்த முழுமையான தகவல்கள் இங்கே உள்ளன.


தற்போதைய செய்தி :


மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல், சாலை உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் முயற்சி கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. சாலை கட்டுமானத்திற்கு முக்கியமான தார், எண்ணெய் மற்றும் எரிவாயுவைப் போலவே இந்த மோதலில் சிக்கியுள்ளது. இந்தியா தார் தேவையில்   30 முதல் 40 சதவீதம் வரை இறக்குமதியைச் சார்ந்துள்ளது.


இந்தச் சூழலில், தார் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். இந்தியா எவ்வாறு இறக்குமதியைச் சார்ந்துள்ளது? இறக்குமதிச் சார்பைக் குறைக்க ஏதேனும் வழி உள்ளதா?


முக்கிய அம்சங்கள்:


1. தார் என்பது மிகவும் பிசுபிசுப்பான தன்மை கொண்ட, கருமையான, கார்பன் டைசல்பைடில் முழுமையாகக் கரையக்கூடிய மற்றும்  அதிக அடர்த்தியான பாலிசைக்ளிக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்களால் ஆன கரிம திரவங்களின் ஒரு கலவையாகும்.


2. கச்சா எண்ணெயிலிருந்து பெறப்படும் தார், சாலை பணிகளில் பிணைப்புப் பொருளாக (Binder) பயன்படுத்தப்படுகிறது. இது மணல், சரளைக்கல் மற்றும் நொறுக்கப்பட்ட கல் போன்ற பொருட்களை ஒன்றாகப் பிணைத்து, நிலக்கீலை (asphalt) உருவாக்குகிறது. நீர் செல்லாத, ஒட்டும் தன்மை கொண்ட மற்றும் நெகிழ்வுத்தன்மை போன்ற பண்புகளைக் கொண்டிருப்பதால், சாலைகள் அதிக போக்குவரத்து சுமையையும் பல்வேறு காலநிலை மாற்றங்களையும் தாங்கக்கூடியவையாக இருக்கின்றன. எனவே, தார் சாலை பணிகளில் 'கருப்புத் தங்கம்' என்று அழைக்கப்படுகிறது.


3. இந்தியாவில் உள்ள தார் சாலைகளில் ஏறக்குறைய 85 சதவீதம் நெகிழ்வுத் தன்மை கொண்டவை. இதன் காரணமாக, தார் தொடர்பான துறையில், ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


தார் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?


1. கச்சா எண்ணெய் என்பது அடிப்படையில் மீத்தேன், ஈத்தேன் மற்றும் புரோப்பேன் போன்ற ஹைட்ரோகார்பன்களின் ஒரு இயற்கையான கலவையாகும். கச்சா எண்ணெயிலிருந்து பயன்படுத்தக்கூடிய பொருட்களைப் பிரித்தெடுப்பதற்காக, அது வெவ்வேறு வெப்பநிலைகளில் சூடுபடுத்தப்படுகிறது.


2. ஒரு சுத்திகரிப்பு நிலையத்தில், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு, பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல், ஜெட் எரிபொருள் மற்றும் அதுபோன்ற பொருட்களைப் பிரிப்பதற்காக, கச்சா எண்ணெய் முதலில் 350-400°C வெப்பநிலைக்குச் சூடுபடுத்தப்படுகிறது. இந்தச் செயல்முறைக்குப் பிறகு, வடிகலனின் அடிப்பகுதியில் அதிக அளவு தேவையற்ற பொருகள் சேகரிக்கின்றன. இது வளிமண்டலக் கசடு (atmospheric residue) என்று அழைக்கப்படுகிறது.


3. சுத்திகரிப்பு ஆலைகளின் புகைப்படங்களில் அடிக்கடி காணப்படும் பிரம்மாண்டமான உயரமான கோபுரம் தான் வடித்தல் நெடுவரிசை ஆகும். அதே நேரத்தில் அதைச் சுற்றியுள்ள பெரிய உருளை வடிவத் தொட்டிகள் வடித்தலுக்குப் பிறகான பொருட்களைச் சேமித்து வைக்கின்றன. மீதமுள்ள பொருள் பின்னர் ஒரு வெற்றிட வடித்தல் அலகுக்கு அனுப்பப்படுகிறது. அங்கு அழுத்தம் வளிமண்டல அழுத்தத்தை விட மிகவும் குறைவாகக் குறைக்கப்படுகிறது. இதனால் அதிக அடர்த்தி கொண்ட ஹைட்ரோகார்பன்கள் (வெற்றிட எரிவாயு எண்ணெய்கள்) குறைந்த வெப்பநிலையிலேயே ஆவியாக மாறுகிறது.


4. கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும் சூழ்நிலைகளில், மீதமிருக்கும் பொருள் மேலும் 380-425°C வெப்பநிலைக்குச் சூடுபடுத்தப்பட்டு, கனமான வெற்றிட வாயு எண்ணெய்கள் அகற்றப்படுகின்றன. மீதமிருப்பது தேவையற்ற வெற்றிட கழிவுகள் (vacuum residue) ஆகும். இது தார் என்றும் அழைக்கப்படுகிறது. இது  கலக்கப்பட்டு, சாலை அமைக்கும் பிட்டுமென்களான VG-10, VG-30, VG-40 போன்ற வெவ்வேறு பிசுபிசுத்தன்மை  குறிப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சரிசெய்யப்படுகிறது.


5. பகுப்பாய்வாளர்களின் கூற்றுப்படி, ஒரு டன் கச்சா எண்ணெயிலிருந்து 3-8% (30-80 கிலோ) தார் கிடைக்கிறது. இது கச்சா எண்ணெயின் வகையைப் பொறுத்து மாறுபடும். இலகுரக கச்சா எண்ணெய் (Light crude) அதிக பெட்ரோல் மற்றும் டீசலைத் தருகிறது. ஆனால், மிகக் குறைந்த அளவே தாரை தருகிறது. கனரக கச்சா எண்ணெய் அதிக அளவு தேவையற்ற வெற்றிட கழிவுகளில் இருந்து (vacuum residue) உருவாக்குகிறது. இதிலிருந்து அதிக தார் கிடைக்கிறது. இதனை எளிதாக இறைத்து வெளியேற்றும் நிலையில் (pumpable) வைத்திருப்பதற்காக, 150-170°C வெப்பநிலையில் ஒரு தொட்டியில் சேமித்து வைக்கப்படுகிறது.


இந்தியா தார் இறக்குமதியை எந்த அளவிற்குச் சார்ந்துள்ளது?


1. இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 90 லட்சம் டன் தார் தேவைப்படுகிறது. இதில், 54 லட்சம் டன் இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களின் மூலம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.


2. இந்தப் பற்றாக்குறை மேற்கு ஆசியாவிலிருந்து செய்யப்படும் இறக்குமதிகள் மூலம் சரிசெய்யப்படுகிறது. இந்தியாவின் 99%க்கும் மேற்பட்ட தார் இறக்குமதிகள் ஈராக், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், ஓமன் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளிலிருந்து வருகின்றன.



3. முக்கியமாக, இந்தியா எப்போதுமே இறக்குமதியை இந்த அளவிற்கு சார்ந்து  இருக்கவில்லை. விரைவுச்சாலைகள் மற்றும் பொருளாதார வழித்தடங்கள் வழியாக சாலை இணைப்பை மேம்படுத்துவதற்கான பாரத்மாலா மற்றும் பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் (Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)) போன்ற திட்டங்கள் மூலம், கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட  பெரிய சாலைத் திட்டங்களால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.


4. தேசிய நெடுஞ்சாலைகள் 2014-ல் 91,287 கி.மீ.-ஆக இருந்த நிலையில், தற்போது 1.47 லட்சம் கி.மீ.-ஆக 61% அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் விரைவுச்சாலைகளின் நீளம் 93 கி.மீ. இலிருந்து 3,052 கி.மீ.-ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், உள்நாட்டு தார் உற்பத்தி இந்த வேகத்திற்கு இணையாக இல்லை. இறக்குமதி இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. மேலும், நுகர்வு ஏறக்குறைய 50% உயர்ந்துள்ளது.


5. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் (Ministry of Petroleum and Natural Gas (MoPNG)) பெட்ரோலியத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவிடம் உள்ள தரவுகளின்படி, தார் இறக்குமதி 2001-02-ஆம் ஆண்டில்  9,000 டன்களாகத் தொடங்கியது. 2013-14-ஆம் ஆண்டில், முந்தைய ஆண்டின் இறக்குமதி அளவின் இருமடங்கிற்கும் அதிகமாகும். பின்னர், 2014–15-ஆம் ஆண்டில் இந்த அளவு மீண்டும் இருமடங்காக உயர்ந்து 5.17 லட்சம் டன்னாக அடைந்தது. அதன் பின்னரும் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது.


மேற்கு ஆசிய மோதல் பிட்டுமென் மற்றும் பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் (Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)) எவ்வாறு பாதிக்கிறது?


1. 2026–27-ஆம் நிதியாண்டில் 10,000 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், கிராமப்புற உள்கட்டமைப்புக்கான ஒரு முக்கியத் திட்டமான பிரதான் மந்திரி பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் மூன்றாம் கட்டத்தின்கீழ், 17,365 கி.மீ நீளமுள்ள சாலைகளை அமைக்கும் பணிகள் இன்னும்  உள்ளன.


2. போருக்குப் பிறகு தார் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. சாலை கட்டுமான நிறுவனங்களும் ஒப்பந்தக்காரர்களும், குறைந்த விநியோகம் மற்றும் அதிகரித்து வரும் விலைகள் குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highway Authority of India (NHAI)) மற்றும் மாநில சாலை முகமைகளிடம் கவலைகளை எழுப்பியுள்ளனர்.


3. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் (Ministry of Petroleum and Natural Gas (MoPNG)) தரவுகளின்படி, இந்தியா ஏப்ரல் 2026-ல் 2.36 லட்சம் டன் பிடுமனை இறக்குமதி செய்துள்ளது. இது ஏப்ரல் 2025-ல் இறக்குமதி செய்யப்பட்ட 2.97 லட்சம் டன்கள் மற்றும் ஏப்ரல் 2024-ல் இறக்குமதி செய்யப்பட்ட 2.74 லட்சம் டன்களுடன் ஒப்பிடுகையில் அதிகமான அளவாகும்.


மாற்று வழியாக உயிரி-தார் (Bio-bitumen)


1. உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட தேக்கநிலை மற்றும் அதிகரித்து வரும் இறக்குமதிகளை குறைக்கும் வகையில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSIR) கீழ் செயல்படும் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (Central Road Research Institute (CRRI)) மற்றும் டேராடூனில் அமைந்துள்ள இந்திய பெட்ரோலிய நிறுவனம் (Indian Institute of Petroleum (IIP)) இணைந்து,   வைக்கோல் பயன்படுத்தி உயிரி எண்ணெய் (Bio-oil) தயாரிக்கும் உயிரியல் பிடுமன் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன. இந்த முறையில் வைக்கோலில் இருந்து உயிரி-எண்ணெய் பெறப்பட்டு, அது தாருடன் கலக்கப்பட்டு உயிரி-தார் தயாரிக்கப்படுகிறது.


2. இந்தத் தொழில்நுட்பம் ஜனவரி 6 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. சாலை கட்டுமானத்தில் உயிரி-தாரின் தேவையை மதிப்பிடுவதற்காக, இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் மூன்று சோதனைப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.


3. இறக்குமதிகளை குறைக்கும் வகையில், பயிர்க்கழிவு எரிப்பு ஒரு காரணமாக விளங்கும் வட இந்தியாவில் குளிர்கால மாசுபாட்டைச் குறைப்பதற்கு  அரசாங்கம் இதை இரட்டைத் தீர்வாக முன்வைக்கிறது. மேலும், 15% உயிரி-தார் கலப்பதன் மூலம் 4,500 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி சேமிக்கப்படும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.


Original article : Bitumen in Spotlight: Why ‘Black Gold’ behind India’s roads is making headlines?. -Roshni Yadav

Share: