ஒரு இறுதி உடன்படிக்கையானது ஈரானின் அணுசக்தித் திட்டம் (Nuclear programme) சார்ந்த விஷயங்களை மட்டும் கையாள்வதோடு நின்றுவிடாமல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான எதிர்கால அரசியல் உறவையும் தீர்மானிக்கும். இது ஈரானை மேலும் வலுவான நாடாக மாற்றக்கூடும், இதனால் மேற்கு ஆசியாவில் பெரும் தாக்கங்கள் ஏற்படும்.
ஜூன் மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில், அமெரிக்காவும் ஈரானும் ஓர் இறுதி உடன்படிக்கையை நோக்கிய 60 நாட்களுக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்காக 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது 2015-ஆம் ஆண்டில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்தைப் போலல்லாமல், இந்த 2026-ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தமானது, ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பரந்த அளவிலான அமெரிக்க-ஈரான் அரசியல் உறவு ஆகிய இரண்டையுமே இறுதி உடன்படிக்கை கையாளும் என்பதைக் காட்டுகிறது. இந்த விதிமுறைகள் ஈரானுக்கு அதிக பொருளாதார நிவாரணங்களையும், அதன் வழக்கமான ராணுவத் திறன்களை வலுப்படுத்துவதற்குத் தேவையான புவிசார் அரசியல் அங்கீகாரத்தையும் வழங்குவதன் மூலம், 1979-ஆம் ஆண்டிற்குப் பிறகு இஸ்லாமியக் குடியரசை எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்ததாக மாற்றக்கூடும். இது மேற்கு ஆசியாவின் அதிகாரச் சமநிலையை கணிசமாக மாற்றியமைக்கலாம்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள், இருதரப்பும் ஏற்றுக்கொண்ட கடமைகள் மற்றும் பல மாத கால மோதல்களுக்குப் பிறகு அவர்களின் தற்போதைய நிலைப்ப்பாட்டைப் பற்றி இது என்ன உணர்த்துகிறது என்பதை தெரிந்துகொள்வோம்.
பிரிவு 1: லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருதல்
இது போரை முடிவுக்குக் கொண்டு வரும் மிக முக்கியமான பிரிவாகும். ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி போர்நிறுத்தத்துடன் ஒப்பிடும்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், லெபனானை அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்தத்துடன் இணைக்கிறது.
இந்த 60 நாட்கள் தற்காலிகக் போர்நிறுத்தக் காலம், லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. போர்நிறுத்த மீறல்களுக்கு ஈரான் அளிக்கும் பதிலடியானது, ஜூன் மாதம் 14-ஆம் தேதி எடுத்த நடவடிக்கைகளைப் பொறுத்து அமையலாம். பெய்ரூட் மீதான இஸ்ரேலின் குண்டுவீச்சுக்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதியளித்திருந்த போதிலும், இஸ்ரேலிய அல்லது அமெரிக்க இலக்குகள் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடங்க வேண்டாம் என்று முடிவு செய்தது. அதற்குப் பதிலாக, ஹார்முஸ் ஜலசந்தியில் விதிக்கப்பட்டிருந்த கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்குவது உள்ளிட்ட அமெரிக்காவின் சலுகைகளை ஈரான் ஏற்றுக்கொண்டது. இது ஈரானின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய மாற்றத்தைக் காட்டக்கூடும்.
பிரிவு 2: உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமை
இந்த பிரிவின் மிக முக்கியத்துவம் வாய்ந்த அம்சம் என்னவென்றால், ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதற்காக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய காரணத்தை இல்லாமலாக்குகிறது. ஈரானின் அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கு "உதவி வரப்போகிறது" என்று டிரம்ப் கூறிய ஜனவரி மாதம் 13-ஆம் தேதிக்கும், போர் தொடங்கிய பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், அமெரிக்காவின் நியாயப்படுத்துதல் என்பது ஈரானின் ஆட்சி மாற்றம் மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டத்தைத் தடுத்தல் ஆகிய இரண்டிற்கும் இடையே மாறி மாறி நகர்ந்தது. எனவே, அமெரிக்கா தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது குறித்து ஈரானுக்கு நீண்டகாலமாக இருக்கும் கவலைகளுடன் சேர்த்து, இந்த குறிப்பிட்ட பிரிவு தெஹ்ரானுக்கு (Tehran) மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது.
பிரிவு 3: இருதரப்பினரும் ஒப்புக்கொண்டால், இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு முன்னதாக வழங்கப்படும் இந்த 60 நாட்கள் கால அவகாசத்தை மேலும் நீட்டிப்பதற்கு அனுமதிக்கும் ஒரு முக்கியமான விதிமுறை இந்தப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரிவு 4: அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை நீக்குதல்
ஜூன் மாதம் 16-ஆம் தேதிக்குள், அமெரிக்க கடற்படை தனது கடல்வழி முற்றுகையை பெருமளவிற்கு முடிவுக்குக் கொண்டுவந்திருந்தது. நடைமுறையில், முழுமையாகப் பின்வாங்குவது என்பது ஹார்முஸ் ஜலசந்தியில் எஞ்சியிருக்கும் அமெரிக்காவின் போர்க்கப்பல் குழுக்களை அகற்றுவதைக் குறிக்கும்.
பிரிவு 5: ஹார்முஸ் வழியாகப் போக்குவரத்து
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி தடையின்றி செல்ல ஈரான் அனுமதிக்கும். இருப்பினும், இந்த ஜலசந்தி பகுதியில் எதிர்கால நிர்வாகத்தை ஈரானும் ஓமனும் இணைந்து தீர்மானிக்க அனுமதிக்கும் நிபந்தனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இந்த ஜலசந்தி பகுதி போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பக்கூடாது என்ற ஈரானின் நீண்டகால நிலைப்பாட்டிற்கு ஆதரவாக அமைகிறது.
மான்ட்ரியக்ஸ் ஒப்பந்தத்தின்கீழ் (Montreux Convention) டார்டனல்ஸ் மற்றும் போஸ்பரஸ் ஜலசந்தி பகுதிகளுக்கு துருக்கி பயன்படுத்துவதைப் போன்ற ஒரு கட்டண முறையை, ஈரானும் ஓமனும் ஒரு கூட்டு கட்டமைப்பை உருவாக்க முடியும். உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20-25% மற்றும் உலகளாவிய எரிவாயு போக்குவரத்தில் 20% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கடந்து செல்வதால், இதன் மூலம் கிடைக்கும் வருடாந்திர வருவாய் 11-13 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பிரிவு 6: ஈரானின் மறுசீரமைப்பிற்கான 300 பில்லியன் டாலர் திட்டம்
இந்த மறுசீரமைப்புத் திட்டம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும். மேலும், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து 2015-ஆம் ஆண்டு போடப்பட்ட கூட்டு விரிவான செயல்பாட்டுத் திட்டத்திற்கு (Joint Comprehensive Plan of Action (JCPOA)) வழிவகுத்த முந்தைய அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளில் இருந்து இந்த ஒப்பந்தத்தை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டும் முக்கிய அம்சம் ஆகும்.
இந்த நிதி, ஈரான் உலகளாவிய பொருளாதாரத்துடன் மீண்டும் இணைவதற்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் டொனால்ட் டிரம்ப் மற்றும் வணிக நில முதலீட்டாளரும் மத்திய கிழக்கிற்கான அமெரிக்க சிறப்புத் தூதருமான ஸ்டீவ் விட்காஃப் ஆகியோருடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கான வணிக வாய்ப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
பிரிவு 7: இறுதி ஒப்பந்தத்தில் தடைகள் நீக்கம்
இந்தப் பிரிவு ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள எரிசக்தி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறைகளைப் பாதிக்கும் பல்வேறு தடைகளைக் கையாள்வது பற்றிக் கண்டிப்பாக விவாதிக்க வேண்டும். ‘Wall Street Journal’ பத்திரிகையின் மதிப்பீட்டின்படி, இந்தத் தடைகள் நீக்கப்பட்டால் ஈரானின் எண்ணெய் மற்றும் எரிபொருள் ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு சுமார் 60 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் தொடர்பான தடைகள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் சார்ந்த தடைகள் மற்றும் பிற பொருளாதார தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகிய மூன்று வகையான தடைகளுக்கும் இடையே உள்ள தொடர்பையும் அமெரிக்கா ஆராய்ந்து தீர்வுகாண வேண்டியிருக்கும்.
பிரிவு 8: ஈரான் அணு ஆயுதங்களை வாங்கவோ அல்லது உருவாக்கவோ கூடாது
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சி செய்யாது என்ற அதன் உறுதிப்பாட்டை இந்தப் பிரிவு மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த நிலையைத்தான் ஈரான் 2003-ஆம் ஆண்டு முதலே பராமரித்து வருகிறது.
ஜூன் மாதம் 2025-ஆம் ஆண்டில் நடான்ஸ் (Natanz), ஃபர்டோ (Fordow), அராக் (Arak) மற்றும் இஸ்பஹான் (Isfahan) ஆகிய இடங்களில் உள்ள அணுசக்தி தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மூலம், ஈரானின் அணுசக்தி திறனைக் குறைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நோக்கம் ஏற்கனவே பெருமளவில் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
2013-15-ஆம் ஆண்டின் கூட்டு விரிவான செயல்பாட்டுத் திட்டம் (JCPOA) பேச்சுவார்த்தைகளில் இருந்து தற்போது இருக்கும் ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், ஈரான் இப்போது 60% வரை செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பைக் கொண்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் ஈரானிடம் இது இல்லை. மேலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வேறொரு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. இது அமெரிக்காவின் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து ஏற்பட்டுள்ள ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
ராஜதந்திர மற்றும் ராணுவ நடவடிக்கைகள் மூலம் ஈரானின் அணுசக்தி திட்டத்தில் அமெரிக்கா ஏற்கனவே பெரிய மாற்றங்களைக் கொண்டுவரக் கட்டாயப்படுத்தியுள்ளதால், இப்போது அனைவரின் கவனமும் 2018-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஈரானில் ஏற்பட்டுள்ள பரந்த மாற்றங்களின் மீது திரும்பும் என்கின்றனர்.
2018-ஆம் ஆண்டில் அமெரிக்காவை கூட்டு விரிவான செயல்பாட்டுத் திட்ட (JCPOA) ஒப்பந்தத்திலிருந்து டொனால்ட் டிரம்ப் விலக்கியதைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தத்தின் காலக்கெடு அக்டோபர் மாதம் 2025-ஆம் ஆண்டில் முடிவடைந்தபோது ஈரான் தனது எஞ்சிய கடப்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவந்தது. மேலும், பிற சர்வதேச கண்காணிப்பு அமைப்புகளிலிருந்தும் படிப்படியாக வெளியேறியது. 2025-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சர்வதேச அணுசக்தி முகமை (International Atomic Energy Agency (IAEA)) ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த தற்போதைய தகவல்களையும் தொடர் கண்காணிப்புத் தரவுகளையும் முற்றிலும் இழந்துவிட்டதாகத் தெரிவித்தது.
பிரிவு 9: இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை தற்போதைய நிலையே நீடித்தல்
இந்தப்பிரிவு, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் இதுவரை எட்டப்பட்ட முன்னேற்றங்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் உள்ள 14 பிரிவுகளில் ஒன்றுகூட, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (Ballistic missiles) குறித்தோ அல்லது பிராந்தியத்தில் உள்ள அரசு சாரா ஆயுதக் குழுக்களுடன் ஈரானுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்தோ நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளைப் பற்றி குறிப்பிடவில்லை. ஜூலை மாதம் 17-ஆம் தேதி, டொனால்ட் டிரம்ப், ஈரானின் அண்டை நாடுகளிடமும் இது போன்ற ஆயுதங்கள் இருப்பதால், ஈரான் தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திறன்களைத் தொடர்ந்து தன்வசமே வைத்திருக்கலாம் என்று பரிந்துரைத்தார். இது, 2018-ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியபோது கூறிய காரணங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, மற்றொரு குறிப்பிடத்தக்கக் கொள்கை மாற்றத்தைக் காட்டுகிறது.
பிரிவு 10 (தடைகளில் இருந்து தற்காலிக விலக்கு அளிப்பது ) என்பது, பிரிவு 7 (பொருளாதாரத் தடைகளை முற்றிலும் நீக்குவது) முழுமையாகச் செயல்படுத்தப்படும் வரை பயன்படுத்தப்படும் ஒரு தற்காலிக ஏற்பாடாகச் செயல்படுகிறது.
பிரிவு 11: முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை அமெரிக்கா விடுவிக்கிறது
ஈரான் நாட்டிற்குச் சொந்தமான 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதி மற்றும் சொத்துக்கள் வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 12 பில்லியன் டாலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு, ஈரானின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களின் ஊதியத்தை வழங்குவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று ஈரானிய அதிபர் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். இந்த பணப் பரிமாற்றங்களை எளிதாக்குவதில் கத்தார் (Qatar) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஒப்பந்தத்தின் பிரிவு 12, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிப்பதற்கான ஒரு வழிமுறையை உருவாக்க வழிவகை செய்கிறது. 60 நாட்கள் என்ற கால அவகாசத்தை இருதரப்பும் ஒப்புக்கொண்டு நீட்டிப்பதற்கு அனுமதிக்கும் பிரிவு 3-ஐ செயல்படுத்துவதற்கு இந்தக் கண்காணிப்பு மிகவும் அவசியமானதாகும்.
அணுசக்தி விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்குக் கூடுதல் காலஅவகாசம் தேவைப்படலாம் என்பதால், திறம்பட கண்காணிப்பது மிகவும் இன்றியமையாதது ஆகும். இத்தகைய கால நீட்டிப்பானது, ஈரான் நாடு ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறந்து வைத்திருக்கும் காலத்தையும், அமெரிக்க ராணுவப் படைகள் அங்கிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடுவையும் நீட்டிக்கும். இது ஈரான் தலைநகரான டெஹ்ரானுக்கு (Tehran) உள்நாட்டு அரசியல் அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். எனவே, இந்த 60 நாள் காலஅவகாசம் முழுவதும் இரு தரப்பினரும் தொடர்ந்து பரஸ்பர நம்பிக்கையுடன் செயல்படுவதை உறுதிசெய்ய இந்த கண்காணிப்பு வழிமுறை நிச்சயம் உதவும்.
60 நாட்கள் காலஅவகாசத்தின் போது இருதரப்பினரும் பகிர்ந்து கொள்ள வேண்டிய முன்னுரிமைகளின் வரிசைமுறையை பிரிவு 13 உருவாக்குகிறது.
இறுதியாக, பிரிவு 14 மிகவும் கவனிக்கத்தக்கது; ஏனெனில் இந்த ஒப்பந்தத்திற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் (United Nations Security Council (UNSC)) தீர்மானம் மூலம் ஒப்புதல் பெற வேண்டும் என்று கோருகிறது. ஐக்கிய நாடுகள் சபையையும், அது அமெரிக்காவின் முடிவெடுக்கும் அதிகாரத்திற்கு விதிக்கும் கட்டுப்பாடுகளையும் டிரம்ப் நிர்வாகம் அடிக்கடி விமர்சித்து வந்த போதிலும், இந்த ஒப்புதலைக் கோருவது குறிப்பிடத்தக்கது.
கூட்டு விரிவான செயல்பாட்டுத் திட்டம் (JCPOA) ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் (United Nations Security Council (UNSC)) தீர்மானம் 2231-ன் மூலம் அங்கீகரிக்கப்பட்டது. மேலும், ஐநா சாசனத்தின் (UN Charter) 25-ஆவது பிரிவின் மூலம் இந்தத் தீர்மானத்தைக் கடைப்பிடிப்பதன் கட்டாயத் தன்மை வலுப்படுத்தப்பட்டது. கொண்டுவரப்படவிருக்கும் புதிய தீர்மானமும் இதே போன்ற ஒரு அணுகுமுறையைப் பின்பற்ற வாய்ப்பிருந்தாலும், அமெரிக்கா 2018-ஆம் ஆண்டில் தன்னிச்சையாக இதிலிருந்து விலகுவதைத் தடுப்பதில் ஐநா பாதுகாப்புச் சபைக்கு இருந்த வரம்புக்குட்பட்ட திறனே வெளிப்பட்டது. இதன் காரணமாக, ஈரான் இந்த முறை கூடுதல் பாதுகாப்பு உத்தரவாதங்களைக் கோரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Original article : A point-by-point breakdown of US-Iran MoU, from nuclear issue to Strait of Hormuz -Bashir Ali Abbas