இந்தியாவின் கூட்டாட்சி சவால்கள், மற்றும் அனைத்துத் தரப்பினரிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதே முன்னேறுவதற்கான வழி. -தேவேஷ் கபூர், அர்விந்த் சுப்ரமணியன்

இந்தத் தீவிரமான சவால்களை எதிர்கொள்ள, அதிக அதிகாரம் கொண்ட ஒன்றிய அரசு, விரிவான கலந்தாலோசனை, ஒத்துழைப்பு, சமரசம் மற்றும் சுயக்கட்டுப்பாடு போன்ற ஜனநாயக வழிமுறைகளின் மூலம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.


கூட்டாட்சித் தத்துவம் (Federalism) குறித்த விவாதங்களைப் பற்றிய இரண்டு கட்டுரைகளில் இது முதலாவது கட்டுரையாகும். இது எங்களின் சமீபத்திய புத்தகமான 'A Sixth of Humanity: Independent India’s Development Odyssey' (குறிப்பாக அத்தியாயங்கள் 14 மற்றும் 15) என்பதை அடிப்படையாகக் கொண்டது.


சமீபத்தில் தோற்கடிக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா (Constitutional Amendment Bill) பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சுதந்திரம் பெற்றது முதலே கூட்டாட்சித் தத்துவத்தின் வளர்ச்சியில் இத்தகைய கருத்து வேறுபாடுகள் எப்போதும் ஒரு பகுதியாகவே இருந்துள்ளன. ஏனெனில், கூட்டாட்சி என்பது தேசக் கட்டமைப்பிற்கான ஒரு முக்கியக் கருவியாக இருந்து வருகிறது. தேசப் பிரிவினையின் பெரும் பாதிப்பிற்குப் பிறகு அரசியலமைப்பில் மத்திய அதிகாரக் குவிப்பை நோக்கி நகர்ந்தது, நிதி ஆதாரங்களை செங்குத்தாகவும் (Vertical) கிடைமட்டமாகவும் (Horizontal) பகிர்வது குறித்த தொடர்ச்சியான விவாதங்கள், திட்டக் குழுவின் மத்திய அதிகாரக் குவிப்புத் தாக்கம், மாநில அரசுகளைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்த அரசியலமைப்புப் பிரிவு-356 (Article 356)-ஐத் தவறாகப் பயன்படுத்தியது, ஆளுநர்களின் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகள், மொழி சர்ச்சைகள், தொகுதி மறுவரையறை மற்றும் நாடாளுமன்றத்தில் இடங்களைப் பகிர்ந்தளிப்பது போன்ற பல சிக்கல்கள் இதில் அடங்கும். எனவே, இந்தியாவில் கூட்டாட்சி என்பது எப்போதும் ஒரு நிலையானதாக இல்லாமல், தொடர்ந்து மாறிவரும் ஒரு செயல்முறையாகவே இருந்து வருகிறது.


இந்தியாவின் 75 ஆண்டுகால வளர்ச்சிப் பயணத்தைப் பிரதிபலிக்கும் எங்களின் சமீபத்திய புத்தகமான 'A Sixth of Humanity: Independent India’s Development Odyssey', இந்தச் சிக்கல்களில் சிலவற்றை விரிவாக எடுத்துரைக்கிறது. இது தற்போதைய இரண்டு உடனடி சவால்களை விளக்குகிறது, அதற்கான இரண்டு ஆழமான காரணங்களைக் கண்டறிகிறது. மேலும், இந்தியாவின் அரசியல்வாதிகளுக்கு உண்மையை வெளிப்படுத்தும் வகையிலும் படிப்பினையாகவும் இருக்கும் ஒரு சுவாரசியமான நிகழ்வோடு நிறைவடைகிறது.


அடுத்தடுத்த சவால்கள் 1. அதிகரித்து வரும் ஜனநாயக 'பற்றாக்குறை' 


ஜனநாயக நாடுகளில், சமமான குடியுரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் வாக்கிற்கும் சமமான மதிப்பு இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. மக்கள்தொகை அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும்போது, அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதிசெய்ய, மாநிலங்களுக்கு இடையேயும் மற்றும் மாநிலங்களுக்குள்ளும் தொகுதி இடங்களின் ஒதுக்கீடு வழக்கமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். மக்கள்தொகை மெதுவாக வளரும் மாநிலங்கள், வேகமாக வளரும் மாநிலங்கள் மற்றும் வெவ்வேறு விகிதங்களில் வளரும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையே சமநிலையைப் பேணுவது இதில் அடங்கும். இருப்பினும், இந்த கோட்பாடுகளைச் செயல்படுத்த நடைமுறை அரசியல் விவேகமும் அவசியமாகிறது.


இந்திய அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் மூலம் 1976 மற்றும் 2002-ஆம் ஆண்டுகளில், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான தொகுதி பிரதிநிதித்துவம், 2026-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடத்தப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு வரை மாற்றக்கூடாது என முடக்கப்பட்டது. இதன் காரணமாக, "ஜனநாயகக் குறைபாடு" (Democratic deficit)  அதாவது ஒரு மாநிலத்தின் மக்கள்தொகை பங்கிற்கும், அதற்கான நாடாளுமன்ற தொகுதி இடங்களின் பங்கிற்கும் இடையே உள்ள இடைவெளி — காலப்போக்கில் அதிகரித்துள்ளது. வரைபடம்-1 (Figure 1) காட்டுவது போல, 2024-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது, புதிய மக்கள்தொகை மதிப்பீடுகளின் அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டிருந்தால், நான்கு தென்மாநிலங்கள் (ஆந்திரப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா) 23 இடங்களை இழந்திருக்கும். அதேநேரத்தில் நான்கு வடமாநிலங்கள் (பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம்) கூடுதலாக 31 இடங்களைப் பெற்றிருக்கும்.


வரைபடம் 1 (Figure 1) காட்டுவது என்னவென்றால், தென் மாநிலங்களுக்கும் (மற்றும் ஓரளவிற்கு கிழக்கு மாநிலங்களுக்கும்) மற்றும் இந்தி பேசும் வடமாநிலங்களின் மையப்பகுதிக்கும் இடையேயான பிரச்சினை மிகவும் தீவிரமாக உள்ளது. ஏனெனில், இந்தப் பிராந்தியங்களில் பிறப்பு விகிதம் (Fertility rates) முற்றிலும் மாறுபட்ட நிலைகளில் மாறியுள்ளது. தென்னிந்திய மாநிலங்களும் மேற்குவங்க மாநிலமும் தங்களின் பிறப்பு விகிதத்தை "மாற்று நிலை அளவிற்கும்" அல்லது அதற்குக் கீழும் கொண்டு வந்து நிலைநிறுத்தியுள்ளன. இதன் காரணமாக, மேற்கு மற்றும் வடஇந்தியப் பகுதிகளின் மக்கள்தொகை பங்கு நிலையாக உள்ளது.  ஆனால், தென் மாநிலங்களின் மக்கள்தொகை பங்கு குறைந்துள்ளது மற்றும் இந்தி பேசும் மாநிலங்களின் மக்கள்தொகை பங்கு கணிசமாக அதிகரித்துள்ளது.


அடுத்தடுத்த சவால்கள் 2. அதிகரித்து வரும் நிதிப் பகிர்வு 


ஒரு கூட்டாட்சி முறையில், வரி வருவாயானது மாநிலங்களின் பொருளாதார அளவு மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் சேகரிக்கப்பட்டு அவற்றுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படுகிறது. ஆனால் நடைமுறையில், இதை முழுமையாகச் செய்ய முடியாது என்பதால், சில மறுபகிர்வு நடவடிக்கைகள் அவசியமாகின்றன. ஏழை மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்குவது, அனைத்து குடிமக்களுக்கும் பொதுச் சேவைகள் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதோடு, தேசிய ஒற்றுமையையும் பலப்படுத்துகிறது. இருப்பினும், இந்த மறுபகிர்வு வரம்பில்லாமல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போனால், அது நிதி வழங்கும் மாநிலங்களிடையே அதிருப்தியையும் மனக்கசப்பையும் உருவாக்கக்கூடும் என்கின்றனர்.


வரைபடம் 2 (Figure 2), ஒரு மாநிலம் வரியாக எவ்வளவு பங்களிக்கிறது மற்றும் நிதி ஆணையப் பகிர்வு மூலம் அதற்கு எவ்வளவு நிதி திரும்பக் கிடைக்கிறது என்பதற்கு இடையிலான இடைவெளியைக் காட்டுகிறது. இந்த அளவீடு (Index) 1-க்கு மேல் இருந்தால், அந்த மாநிலம் தனது பங்களிப்பைவிட அதிக நிதியைப் பெறுகிறது என்றும், 1-க்குக் குறைவாக இருந்தால், அது வழங்கும் பங்களிப்பைவிடக் குறைவான நிதியையே பெறுகிறது என்று கணக்கிடப்படும். 1960-களின் தொடக்கத்தில் இந்த இடைவெளி மிகவும் குறைவாகவே இருந்தது. உதாரணமாக, இந்தி பேசும் மாநிலங்கள் தங்கள் பொருளாதார பங்களிப்பைவிட சுமார் 20% கூடுதல் வளங்களைப் பெற்றன. அதேநேரத்தில் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் தங்களின் பங்களிப்பைவிட சுமார் 20% குறைவாகவே பெற்றன.


ஆனால், மாநிலங்களுக்கு இடையே உள்ள சமமற்ற பொருளாதார வளர்ச்சி மற்றும் ஏழை மாநிலங்களுக்கு ஆதரவான தீவிர மறுபகிர்வுக் கொள்கைகள் காரணமாக, 2023-ஆம் ஆண்டிற்குள் இந்தி பேசும் மாநிலங்கள் தங்கள் பொருளாதார பங்களிப்போடு ஒப்பிடும்போது 90% கூடுதல் நிதியைப் பெற்றன. இதற்கு நேர்மாறாக, தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் முறையே தங்களது வரிப் பங்களிப்பைவிட 44% மற்றும் 58% குறைவான நிதியையே பெற்றன. நிதி வழங்கும் கொடையாளி மாநிலங்களுக்கும் (Donor states), நிதியைப் பெறும் பயனாளி மாநிலங்களுக்கும் (Beneficiary states) இடையிலான இந்த இடைவெளி கடந்த அறுபது ஆண்டுகளில், குறிப்பாக 2000-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகக் கடுமையாக அதிகரித்துள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன.


ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். தற்போது மிக அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலங்கள் தென்னிந்திய மாநிலங்கள் அல்ல, மாறாக குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் ஆகும். அதே நேரத்தில், ஒடிசா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் இந்த நிதிப் பகிர்வின் மூலம் அதிகப் பலன்களைப் பெறும் முக்கியப் பயனாளி மாநிலங்களாக உள்ளன.


அதிகரித்து வரும் ஜனநாயக சமநிலையின்மை மற்றும் உயர்ந்து வரும் நிதிப்பகிர்வுகள் ஆகியவை ஆழமான சில பிரச்சனைகளின் வெளிப்பாடுகள் மட்டுமே ஆகும். இதற்குப் பின்னணியில் இரண்டு முக்கிய அடிப்படைக் காரணங்கள் உள்ளன.


ஆழ்ந்த காரணம் 1. மாறுபட்ட செயல்திறன்


கூட்டாட்சி முறை குறித்த விவாதங்களில் நீண்டகாலமாகப் பாதிப்பை ஏற்படுத்தி வரும் மிக முக்கியமான அடிப்படைப் பிரச்சனை என்னவென்றால், மாநிலங்களின் பிறப்பு விகிதம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் காணப்படக்கூடிய வேறுபாடுகள் ஆகும் (பொருளாதார வேறுபாடுகள் வரைபடம் 3-ல் காட்டப்பட்டுள்ளன).


1980-ஆம் ஆண்டு முதல், தெற்கு மற்றும் மேற்கு இந்திய மாநிலங்கள் மற்றும் ஹரியானாவில், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமானது (Per capita GDP - இது மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு குறியீடாகும்) சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நிகராக மிக வேகமாக வளர்ந்து வந்துள்ளது. இதன் மூலம் இந்த மாநிலங்கள், இந்தி பேசும் வடமாநிலங்கள் மற்றும் மேற்குவங்கத்தைவிடப் பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளன. இத்தகைய பொருளாதார மற்றும் மக்கள்தொகை இடைவெளிகளைச் கையாள்வது எந்தவொரு கூட்டாட்சி முறைக்கும் ஒரு மிகப்பெரிய சிக்கலாகும். ஏனெனில், இதில் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் பொருளாதார மறுபகிர்வு போன்ற முக்கியமான விஷயங்கள் அடங்கியுள்ளன, இவற்றை எளிதில் சமரசம் செய்துவிட முடியாது. மேலும், சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் தங்களின் அதிகப்படியான பங்களிப்பிற்காகத் (மக்கள்தொகை கட்டுப்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியில்) தண்டிக்கப்படுவதாகவும், அதே வேளையில் சரியாகச் செயல்படாத மாநிலங்கள் தங்களின் குறைவான செயல்பாட்டிற்காகப் பரிசளிக்கப்படுவதாகவும் (வரைபடம் 2-ல் காட்டப்பட்டுள்ளது போல) ஒரு கருத்து நிலவுவது இந்தச் சிக்கலை இன்னும் அதிகப்படுத்துகிறது.


ஆழ்ந்த காரணம் 2. ஜனநாயக உணர்வு சீர்குலைதல்


நிதிசார் கூட்டாட்சியை மேலும் மோசமாக்கும் முக்கியப் பிரச்சனை, இந்திய அரசியலில் அதிகரித்துவரும் பிளவுகள் ஆகும். பணமதிப்பிழப்பு, வேளாண் சட்டங்கள் (Farm laws), மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 (Citizenship Amendment Act -2019) ஆகியவற்றில் தொடங்கி, இந்திய தண்டனைச் சட்டத்திற்கு (Indian Penal Code (IPC)) மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita (BNS)) கொண்டு வரப்பட்டது வரை, மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (Special Intensive Revision (SIR))) தேர்தல் மாற்றங்கள், சமீபத்திய அரசியலமைப்பு திருத்த மசோதா (Constitutional Amendment Bill) என அனைத்திலும் ஆளும் கட்சி பெரும்பாலும் தன்னிச்சையாகவே செயல்பட்டுள்ளது. பரந்த அளவிலான விவாதங்கள், சமரசம், அனைவரையும் அரவணைத்துச் செல்லுதல் மற்றும் சுயகட்டுப்பாடு போன்ற ஜனநாயக நடைமுறைகளுக்கு மிகக் குறைந்த அளவே மதிப்பளிக்கப்பட்டுள்ளது.


அரசியலை வெறும் தேர்தல் போட்டியாகப் பார்ப்பதற்குப் பதிலாக, எதிரிகளை வீழ்த்துவதற்கான ஒரு போராகக் கருதும் போக்கு தற்போது பெருகி வருகிறது.     தேசக் கட்டமைப்பின் அடிப்படையாக விளங்கும் 'கூட்டுறவு கூட்டாட்சி' (Cooperative federalism), தற்போது மோதல்களும் எதிர்ப்புகளும் நிறைந்த ஒரு 'முரண்பாட்டு கூட்டாட்சியாக' மாறி வருகிறது. இது காஷ்மீர், லடாக், மணிப்பூர், தென்னிந்தியா மற்றும் மதரீதியிலான சிறுபான்மையினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பு என்னவென்றால், தேசக் கட்டமைப்பிற்கு மிகவும் அவசியமான ஒரு சக்தியாக விளங்கும் 'நம்பிக்கை' பலவீனமடைந்துள்ளதுதான். இந்த நம்பிக்கை இழப்பு குடிமக்களுக்கு இடையேயும், குடிமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையேயும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயும் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயும்கூட ஏற்பட்டுள்ளது.


ஜனநாயக உணர்வு என்றால் என்ன? கடந்த 2018-ஆம் ஆண்டு, கேரள நிதியமைச்சர் டி.எம். தாமஸ் ஐசக் அவர்கள், சூதாட்ட வரி விதிப்பு குறித்த பொதுவான முடிவிற்கு தான் ஒருவரே எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி, சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் (Goods and Services Tax Council (GST Council)) கூட்டத்திலிருந்து நாகரீகமாக வெளியேற முன்வந்தார். ஒன்றிய அரசும் 28 மாநிலங்களும் அந்த முடிவை ஆதரித்ததாலும், எதிர்க்கட்சி ஆளும் ஒரே ஒரு மாநிலம் (கேரளா) மட்டுமே அதை எதிர்த்ததாலும், அந்தக் குழு கூட்டத்தைத் தடையின்றி எளிதாகத் தொடர்ந்திருக்க முடியும். (இருப்பினும், ஒரு தனி மாநிலத்தின் குரலையும் மதிக்க வேண்டும் என்ற ஜனநாயகப் பண்பின் காரணமாக அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது).


மாறாக, அப்போதைய ஒன்றிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள், கேரள நிதியமைச்சர் மீண்டும் வருவதற்குப் பல சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டார். அதோடு, மற்ற 28 மாநில நிதி அமைச்சர்களுக்கு இடையே ஒரு சமநிலையை மிகவும் கவனமாகக் கையாண்டு, அவரது நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டார். இதன் காரணமாகக் கேரளா இந்தத் திட்டத்தில் இணைய ஒப்புக்கொண்டது. இதன் மூலம் அனைவரின் ஒருமித்த கருத்து நிலைநாட்டப்பட்டது, இந்தியாவும் இந்த முயற்சியில் வெற்றியடைந்தது.


இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தில் எழுந்துள்ள கடுமையான சிக்கல்களை எதிர்கொள்வதற்காக - புதிய ஒப்பந்தங்கள், பெரிய அளவிலான சமரசங்கள், சிக்கலான வாக்குப்பதிவு முறைகள் மற்றும் திருத்தப்பட்ட நிதிப் பகிர்வு ஏற்பாடுகள் போன்ற பல தீர்வுகள் சமீபகாலங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே செயல்பாட்டுத் திறனில் வேறுபாடுகள் நீடிக்கும் பட்சத்தில், கூடுதல் அதிகாரம் கொண்ட ஒன்றிய அரசாங்கத்திடமிருந்து ஒரு அடிப்படையான ஜனநாயக அணுகுமுறை ஏற்படாதவரை எந்தவொரு தீர்வும் பலன் தராது. இத்தகைய ஜனநாயக அணுகுமுறை இருந்தால் மட்டுமே எவ்வளவு பெரிய சிக்கல்களையும் தீர்க்க முடியும். அது இல்லையென்றால், சிறிய பிரச்சனைகள்கூட பெரிய நெருக்கடிகளாக உருவெடுக்கக்கூடும் என்கின்றனர். ஒரு ஜனநாயக அணுகுமுறை மட்டுமே, அதிகாரம் படைத்த ஒரு அரசாங்கம் தன்னிச்சையாகவும் அடக்குமுறையுடனும் நடந்துகொள்வதைத் தடுக்கிறது.



தேவேஷ் கபூர், ஒரு அரசியல் விஞ்ஞானி ஆவார். இவர் Washington DC (District of Columbia) நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட சர்வதேச ஆய்வுகள் பள்ளியில், தெற்காசிய ஆய்வுகளுக்கான ‘Starr Foundation’ பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.


அரவிந்த் சுப்ரமணியன், ஒரு இந்தியப் பொருளாதார அறிஞர் மற்றும் இந்திய அரசாங்கத்தின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் (2014-18) ஆவார். இவர் தற்போது வாஷிங்டன் டிசி-யில் உள்ள பீட்டர்சன் சர்வதேச பொருளாதார நிறுவனத்தில் மூத்த ஆய்வாளராகப் பணியாற்றுகிறார்.


Original Link: India’s federalism challenges, and how consensus building is the way forward.


Share:

ஒன்றிய அரசு மற்றும் பிறருக்கு எதிரான மோஹித் மினரல்ஸ் நிறுவன இயக்குநர் வழக்கில், இந்தியாவின் ‘கூட்டாட்சித் தத்துவம்’ குறித்து இந்திய உச்சநீதிமன்றம் கூறியது என்ன? - பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள்:


• இந்தியப் பிரிவினையின் துயரங்களுக்குப் பிறகு நமது அரசியலமைப்பை வடிவமைக்கும்போது ஒன்றிய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டதில் தொடங்கி; நிதிப்பகிர்வில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான செங்குத்து மற்றும் கிடைமட்டப் பகிர்வு குறித்த முடிவில்லாத விவாதங்கள்; திட்டக் குழுவின் மூலம் நிகழ்ந்த அதிகாரக் குவிப்பு; அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356-ஐத் தவறாகப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது; ஆளுநர்களின் ஒருதலைபட்சமான செயல்பாடுகள்; மொழிச் சிக்கல்கள்; தொகுதி மறுவரையறை மற்றும் நாடாளுமன்றத்தில் மாநிலங்களுக்கான இடங்களைப் பகிர்ந்தளிப்பது எனப் பல விஷயங்களை எதிர்கொண்ட இந்தியக் கூட்டாட்சித் தத்துவம் என்பது காலம் மற்றும் சூழலுக்கு ஏற்ப தொடர்ந்து மாறிவரும் மற்றும் பரிணமித்து வரும் ஒரு செயல்முறையாகவே இருந்து வருகிறதே தவிர, அது ஒருபோதும் மாற்ற முடியாத ஒன்றாகக் கல்லில் எழுதப்படவில்லை.


• ஜனநாயக நாடுகளில், சமமான குடியுரிமை (Equal citizenship) என்பது ஒவ்வொரு குடிமகனின் வாக்கிற்கும் சமமான மதிப்பு இருக்க வேண்டும் என்று கோருகிறது. மக்கள்தொகை மாறும்போது, இந்தச் சமத்துவத்தை உறுதி செய்வதற்காக, மாநிலங்களுக்கு இடையேயும் (மெதுவாக மக்கள்தொகை வளரும் மாநிலங்கள் மற்றும் வேகமாக மக்கள்தொகை வளரும் மாநிலங்கள் இடையே) மற்றும் மாநிலங்களுக்குள்ளும் (மெதுவாக மக்கள்தொகை வளரும் கிராமப்புறங்கள் மற்றும் வேகமாக மக்கள்தொகை வளரும் நகர்ப்புறங்கள் இடையே) குறிப்பிட்ட கால இடைவெளியில் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைப்பது அவசியமாகிறது. ஆனால், இத்தகைய கோட்பாடுகளை வெறும் தத்துவங்களாக மட்டும் பார்க்காமல், அரசியல் விவேகத்தின் நடைமுறை உண்மைகளுக்கேற்ப அவற்றை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.


உங்களுக்குத் தெரியுமா?


• தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (National Council of Educational Research and Training (NCERT)) பாடப்புத்தகங்களின்படி, கூட்டாட்சி (Federalism) என்பது ஒரு நாட்டின் ஒன்றிய அதிகார அமைப்பிற்கும் (ஒன்றிய அரசு), அதன் பல்வேறு உறுப்பு அமைப்பிற்கும் (மாநில அரசுகள்) இடையே அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படும் ஓர் அரசாங்க முறையாகும். பொதுவாக, கூட்டாட்சி முறையில் இரண்டு அடுக்கு அரசாங்கங்கள் இருக்கும். ஒன்று, ஒட்டுமொத்த நாட்டிற்குமான அரசாங்கம் (ஒன்றிய அரசு); இது பொதுவாகப் பொதுவான தேசிய நலன் சார்ந்த சில குறிப்பிட்ட துறைகளுக்குப் பொறுப்பாகச் செயல்படும். மற்றொன்று, மாகாணங்கள் அல்லது மாநிலங்களின் அளவில் உள்ள அரசாங்கங்கள் (மாநில அரசுகள்); இவை தங்களின் மாநில அன்றாட நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்கின்றன. இந்த இரண்டு அடுக்கு அரசாங்கங்களும் மற்றொன்றைச் சார்ந்து இருக்காமல், தங்களுக்குரிய அதிகாரங்களைத் தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் பயன்படுத்துகின்றன.








Original Link: What Supreme Court of India said on Federalism in India in Union of India and Anr versus M/s Mohit Minerals Through Director case? 


Share:

குடியுரிமை (திருத்த) விதிகள், 2026 என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள்:


• திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க அரசிதழ் அறிவிப்பில், மத்திய உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs (MHA)), 1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு-18-ன்கீழ் உருவாக்கப்பட்ட 'குடியுரிமை (திருத்த) விதிகள், 2026' (Citizenship Amendment Rules, 2026), 2009-ஆம் ஆண்டு விதிகளின் அட்டவணை (IC)-ல் ஒரு புதிய பத்தியைச் சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அந்தப் புதிய விதியான பத்தி (iiiA)-ன்படி, விண்ணப்பதாரர்கள் தங்களுக்குப் அண்டை நாடுகள் மூன்றில் ஏதேனும் ஒன்றால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அல்லது காலாவதியான கடவுச்சீட்டு (Passport) உள்ளதா என்பதைக் குறிப்பிட வேண்டும். அத்தகைய கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்கள், அதன் எண், வழங்கப்பட்ட தேதி, இடம் மற்றும் காலாவதியாகும் தேதி போன்ற விவரங்களை வழங்க வேண்டும். மேலும், தங்களுக்கு இந்தியக் குடியுரிமைக்கான ஒப்புதல் கிடைத்த 15 நாட்களுக்குள், சம்பந்தப்பட்ட அஞ்சல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் அல்லது அஞ்சல்துறை கண்காணிப்பாளரிடம் அந்த கடவுச்சீட்டை ஒப்படைக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.



உங்களுக்குத் தெரியுமா?


• அரசாங்க அறிவிப்பின்படி, இந்த புதிய விதிகள் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்படும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்றும் குடியுரிமை தொடர்பான வழக்குகளில், சரிபார்ப்பு மற்றும் ஆவணப் பராமரிப்பை மேம்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு நிர்வாகரீதியான தெளிவுபடுத்தல் மட்டுமே இந்தத் திருத்தம் என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


• இந்த மாத தொடக்கத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் 'குடியுரிமை (திருத்த) விதிகள், 2026'-ஐ அறிவித்தது. இது மின்னணு இந்திய வெளிநாட்டு குடிமக்கள் (electronic Overseas Citizen of India (e-OCI)) அட்டைகள், முழுமையான இணையவழி விண்ணப்ப முறை மற்றும் சிறுவர்களுக்கான இருநாட்டு கடவுச்சீட்டுகள் (Dual passports) மீதான கடுமையான விதிகளை அறிமுகப்படுத்துகிறது. இணையவழி விண்ணப்பங்கள், மின்னணு ஆவணங்கள் மற்றும் ஒப்புகைகளைக் கட்டாயமாக்குவதன் மூலம் முழுமையான மின்னணு இந்திய வெளிநாட்டு குடிமக்கள் (OCI) அமைப்பை இந்த விதிகள் உருவாக்குவதோடு, மீண்டும் மீண்டும் காகிதங்களில் செய்யப்படும் எழுத்துப் பணிகளைக் குறைப்பதாக மத்திய உள்துறை அமைச்சக (MHA) அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான காகிதமில்லா அடையாள அமைப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன், நேரடியாக வழங்கப்படும் அட்டைகளுடன் சேர்த்து மின்னணு இந்திய வெளிநாட்டு குடிமக்கள் (e-OCI) அட்டைகளை வழங்குவதற்கும் ஒரு புதிய விதிமுறை அனுமதிக்கிறது. மேலும், எதிர்காலத்தில் தானியங்கிப் பதிவிற்கு வசதியாக, அதிவேக குடிவரவுத் திட்டங்களுடன் இணைக்க விண்ணப்பதாரர்கள் தங்களின் உயிரியல் அடையாளத் தரவுகளைப் (Biometric) பகிரவும் சம்மதிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.


Original Link: What is Citizenship (Amendment) Rules, 2026?


Share:

மே-ஜூன் மாதங்களில் தீவிரமாகும் எல் நினோ இந்தியாவை எவ்வாறு பாதிக்கக்கூடும்? -அபினவ் ராய்

நமது நாடு வேளாண்மை, நீர் வளங்கள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நிலைத்தன்மையில் தென்மேற்குப் பருவமழையை சார்ந்திருக்கும் சூழலில், எல் நினோவின் வேகமான வளர்ச்சி எது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்?


வட, மத்திய மற்றும் கிழக்கு இந்தியா முழுவதும் கடுமையான வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)) தொடர்ந்து எச்சரித்துவரும் நிலையில், ஒரு புதிய மேற்கத்திய இடையூறு (Western Disturbance) வரும் நாட்களில் நிலைமையை தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது.


அமெரிக்காவைச் சேர்ந்த எல் நினோ தெற்கு அலைவு (El Niño Southern Oscillation (ENSO)), மே 11 அன்று வெளியிட்ட தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக (National Oceanic and Atmospheric Administration (NOAA)) அறிக்கையில், இந்த ஆண்டு மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் ஒரு எல் நினோ உருவாகி, ஆண்டு இறுதி வரை நீடிப்பதற்கு வலுவான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இது 2026-27 குளிர்காலத்தில் வட அரைக்கோளத்தைப் பாதிக்கும். மேலும், இந்தியா உள்ளிட்ட வெப்பமண்டல நாடுகளில் (tropical countries) அதிக தாக்கங்களை ஏற்படுத்தும்.


இந்தச் சூழலில், வரவிருக்கும் பருவமழைக்காலத்தில், 87 செ.மீ. அளவிலான நீண்டகால சராசரியில் (1971-2020) 92 சதவீத அளவுக்கே மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்றும், மழைப்பொழிவு இயல்பை விடக் குறைவாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் மாதத்தில் கணித்திருந்தது. 2015-16-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடந்த 'சூப்பர் எல் நினோ' (Super El Niño) நிகழ்வின்போது, ​​இந்தியா தனது நீண்டகால சராசரி மழைப்பொழிவில் 86 சதவீதத்தை மட்டுமே  பெற்றிருந்தது.


எல் நினோ நிகழ்வு என்றால் என்ன, மேலும் அது உலகம் முழுவதிலும் மற்றும் இந்தியாவிலும் வானிலைகளை எவ்வாறு பாதிக்கிறது?

எல் நினோ-தெற்கு அலைவு(El Niño-Southern Oscillation) என்றால் என்ன?


கடல் மேற்பரப்பு வெப்பநிலை (Sea surface temperature (SST)) மற்றும் வளிமண்டல அழுத்தம் போன்றவையே உலகளாவிய கடல் நீரோட்டங்களை பாதிக்கும் இரண்டு முக்கிய காரணிகளாகும். எல் நினோ தெற்கு அலைவு (ENSO) என்பது, பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள பசிபிக் பெருங்கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் காற்று அழுத்தத்தில் ஏற்படும் ஒரு காலமுறை சார்ந்த கடல்-வளிமண்டல மாறுபாடாகும்.


பண்டைய பவள எலும்புக்கூடுகளின் வேதியியல் கலவையானது, கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எல் நினோ தெற்கு அலைவு நிகழ்ந்து வருவதை வெளிக் காட்டுகிறது. இது மூன்று முக்கிய கட்டங்களைக் கொண்டுள்ளது: அவை வெப்பமான அல்லது எல் நினோ, குளிர்ந்த அல்லது லா நினோ, மற்றும் நடுநிலை ஆகும். 


சாதாரண சூழ்நிலைகளில் அல்லது நடுநிலைக் கட்டத்தின்போது, ​​வர்த்தகக் காற்றுகள் (trade winds) என அறியப்படும் ஒரு அமைப்பில், வர்த்தகக் காற்றுகள் பூமத்திய ரேகையில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசுகின்றன. பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதி (தென் அமெரிக்காவிற்கு அருகில் உள்ள பகுதி) மேற்குப் பகுதியை (இந்தோனேசியாவிற்கு அருகில் உள்ள பகுதி) விட குளிர்ச்சியாக உள்ளது.

வர்த்தகக் காற்றுகள் வெப்பமான மேற்பரப்பு நீரை ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவை நோக்கித் தள்ளுவதால், மேற்கு பசிபிக் பகுதி வெப்பமாகிறது. வெப்பமான நீர் மேற்கு நோக்கி நகர்வதால், ஆழ்கடலில் இருந்து வரும் குளிர் நிறைந்த நீர் தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைக்கு அருகில் மேற்பரப்புக்கு உயர்கிறது. இந்த செயல்முறை மேல்நோக்கி எழுதல் (upwelling) என்று அழைக்கப்படுகிறது. இந்த குளிர்ச்சியடைந்த நிறைந்த நீர், அந்தப் பகுதியில் மீன்வளத்தைப் பாதுகாக்க உதவுகிறது.


மேற்கு பசிபிக் பகுதியில் நிலவும் வெப்பமான குறைந்த காற்றழுத்த நிலைமைகள், தென் அரைக்கோளத்தில் உள்ள வடக்கு ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் நியூ கினியா ஆகிய பகுதிகளில் டிசம்பர் மாதத்தில் அதிகமான மழையைக் (abundant rainfall) கொண்டு  வந்தன.


எல் நினோ என்றால் என்ன, அது எவ்வாறு உருவாகிறது?


‘எல் நினோ’ என்ற சொல் முதன்முதலில் 1600-களில் தென் அமெரிக்க மீனவர்களால் பயன்படுத்தப்பட்டது. இது ஸ்பானிய மொழியிலிருந்து வந்தது, மேலும் இதன் நேரடிப் பொருள் கிறிஸ்து குழந்தை அல்லது சிறுவன் என்பதாகும். ஏனெனில் இந்த நிகழ்வு பொதுவாக கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி உச்சத்தை அடைகிறது. எனவே, மீனவர்கள் பயன்படுத்திய முழுப் பெயர் ‘கிறிஸ்துமஸ் குழந்தை’ (El Niño de Navidad) என்பதாகும்.


எல் நினோ பொதுவாக மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படுகிறது. இது உலகளாவிய வானிலை மற்றும் மழைப்பொழிவு முறைகள், கடல் நிலைமைகள் மற்றும் மீன்வளத்தைப் பாதிக்கிறது. ஒரு எல் நினோ பொதுவாக 12-18 மாதங்கள் நீடிக்கும் மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தின் ஏற்படும் பருவக்காற்றுகளை எல் நினோ பலவீனப்படுத்துகிறது.


வர்த்தகக் காற்றுகளின் திசை மாற்றம் அல்லது பலவீனம் காரணமாக எல் நினோ ஏற்படுகிறது. இது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளில் வெப்ப நீர் அதிகம் குவிவதற்கு வழிவகுக்கிறது. வலுவான மற்றும் பலவீனமான வர்த்தகக் காற்றுகள், வெப்பமண்டல பசிபிக் பகுதியின் வளிமண்டலத்தில் ஏற்படும் அழுத்தச் சரிவின் (ஒரு குறிப்பிட்ட தூரத்தில் காற்றின் அழுத்தம் மாறும் விகிதம்) மாற்றங்களுடன் தொடர்புடையவையாகும். இந்த இடையூறு கடல் மேற்பரப்பு வெப்பநிலை (SST), வளிமண்டல சுழற்சி மற்றும் வானிலை முறைகளைப் பாதிக்கிறது.


எல் நினோ நிகழ்வுகளின் போது, ​​மத்திய பசிபிக்கில் குறைந்த காற்றழுத்த மண்டலம் கிழக்கு நோக்கி நகர்கிறது. மேலும், மேற்கு பசிபிக் ஒரு பலவீனமான உயர் காற்றழுத்த மண்டலத்தையும் வறட்சி போன்ற நிலைமைகளையும் எதிர்கொள்கிறது. காற்றழுத்த அமைப்பில் ஏற்படும் இந்த மாற்றம் தெற்கு அலைவு(Southern Oscillation) என அழைக்கப்படுகிறது.


 எல் நினோ தெற்கு அலைவு  (El Niño Southern Oscillation (ENSO)) நிலைமைகளைக் கண்காணித்தல்


ENSO நிலைமைகளைக் கண்காணிப்பது, பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடல் முழுவதும் உள்ள கடல் மேற்பரப்பு வெப்பநிலையின் சராசரி நிலைகளில் ஏற்படும் மாற்றங்களில் கவனம் செலுத்துகிறது. தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration (NOAA)) இந்த வெப்பநிலை முரண்பாடுகளைப் பல்வேறு குறியீடுகள் மூலம் கண்காணிக்கிறது.


1. பெருங்கடல் நினோ குறியீடு (Oceanic Niño Index (ONI)) – இது பசிபிக் பெருங்கடலில் நினோ 3.4 (5°வ–5°தெ, 120°மே-170°மே தீர்க்கரேகை) என அறியப்படும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் உள்ள மூன்றாண்டு கால முழுமையான சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை முரண்பாட்டை அளவிடுகிறது.


குறைந்தது ஐந்து தொடர்ச்சியான, ஒன்றன் மேல் ஒன்றாக ஏற்படும் மூன்று மாத காலங்களுக்கு நீடிக்கும், +0.5°C அல்லது அதற்கு மேற்பட்ட கடல் மேற்பரப்பு வெப்பநிலை மாறுபாடுகள் ENSO வெப்ப நிலை (எல் நினோ) என அறிவிக்கப்படுகின்றன. அதேசமயம் -0.5°C அல்லது அதற்குக் குறைவான மாறுபாடுகள் ENSO குளிர் நிலை (லா நினோ) என அழைக்கப்படுகின்றன.


2. தெற்கு அலைவுக் குறியீடு (Southern Oscillation Index (SOI)) – இது தஹிதி (பிரெஞ்சு பாலினேசியா) மற்றும் டார்வின் (ஆஸ்திரேலியா) ஆகியவற்றுக்கு இடையேயான கடல் மட்ட  வேறுபாடுகளை அளவிடுகிறது. அதிக தெற்கு அலைவுக் குறியீடு வலுவான வர்த்தகக் காற்றுகளையும் லா நினோ நிலைமைகளையும் குறிக்கிறது.  அதேசமயம் குறைந்த தெற்கு அலைவுக் குறியீடு பலவீனமான வர்த்தகக் காற்றுகள் மற்றும் எல் நினோ நிலைமைகளுடன் தொடர்புடையது.


3. சார்பு பெருங்கடல் நினோ குறியீடு (Relative Oceanic Niño Index (RONI)) – இது ஒரு மேம்பட்ட ENSO அளவீடு ஆகும். இது, உலகளாவிய பெருங்கடல் வெப்பமயமாதலுக்கு ஏற்ப சரிசெய்து, நினோ 3.4 வெப்பநிலை மதிப்புகளை அனைத்து வெப்பமண்டலப் பெருங்கடல்களின் வெப்பநிலையுடன் ஒரே நேரத்தில் ஒப்பிடுகிறது. உலகம் வெப்பமடையும்போது ஒரு உயர் அடிப்படை அளவைக் கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலம் முன்னறிவிப்பை மேம்படுத்துவதே RONI-யின் நோக்கமாகும்.


ஒப்பீட்டு பெருங்கடல் எல் நினோ குறியீட்டின்  வலிமை நிகழ்வுகளின் அடிப்படையில், எல் நினோவை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:


– பலவீனமான  எல் நினோ (0.5°C முதல் 1°C)-யில் வரை ஏற்படும்.


– மிதமான எல் நினோ  (1°C முதல் 1.5°C)-யில் ஏற்படும்.


– அதிக வெப்பமுடைய எல் நினோ (1.5°C முதல் 2°C)-யில்   ஏற்படும்.


– மிகவும் வலிமையான எல் நினோ (≥ 2°C)-யில்  ஏற்படும்.


குறிப்பாக, 'சூப்பர் எல் நினோ’ என்பது அதிகாரப்பூர்வமான அறிவியல் சொல் அல்ல; இது  நடைமுறையில் பயன்படுத்தபடாத சொல் ஆகும். மிகவும் வலுவான எல் நினோ நிகழ்வைக் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை அது போன்ற வலுவான எல் நினோ நிகழ்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், ‘மிகவும் வலுவான எல் நினோ நிகழ்வுகள், கட்டாயமாகத் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று உறுதிகூற முடியாது. அவை குறிப்பிட்ட சில தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை மட்டுமே அதிகரிக்கக்கூடும்’ என்று NOAA எச்சரித்துள்ளது.




எல் நினோ-தெற்கு அலைவு (El Niño-Southern Oscillation)  நிகழ்வுகளின் தாக்கம்


எல் நினோ-தெற்கு அலைவு நிகழ்வுகளின் தாக்கத்தை உலகளவில் காண முடிந்தாலும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல நாடுகளில் இதன் தாக்கம் மிகவும் அதிகமாக உணரப்படுகிறது. இந்தத் தாக்கங்கள் நாடுகளுக்கு இடையே  மாறுபடலாம்.


எல் நினோ நிலைமைகள் பொதுவாக தெற்கு ஆப்பிரிக்கா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் வடக்கு பிரேசில் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையைக் கொண்டு வருகின்றன. இதற்கு மாறாக, எல் நினோ மத்திய அமெரிக்கா, வடக்கு பெரு, ஈக்வடார் மற்றும் தென் அமெரிக்காவின் வடக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் கனமழையையும், கிழக்கு-மத்திய பசிபிக் தீவுகள் மற்றும் பூமத்திய ரேகை கிழக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் ஈரப்பதமான  வானிலையையும் கொண்டு வருகிகிறது.


எல் நினோ ஆண்டுகளில் பெரும்பாலும் சராசரியை விட அதிக வெப்பநிலை நிலவும். உதாரணமாக, 2023-24ல் ஏற்பட்ட வலுவான எல் நினோ நிகழ்வின் காரணமாக, 2024-ஆம் ஆண்டு  வரலாற்றில்  இல்லாத அளவுக்கு வெப்பமான ஆண்டாக அமைந்தது. இந்த நிலைமைகள் கடும் வெப்பம், வறட்சி, காட்டுத்தீ மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை போன்ற சூழல்களை  அதிகமாக ஏற்படுதும். மேலும், இவை பூச்சிகளால் பரவும் நோய்களின் பரவல் (vector-borne diseases) முறைகளையும் மாற்றக்கூடும்.


இந்தியாவில் ஏற்படவிருக்கும் தாக்கங்கள்


வேளாண்மை, நீர் வளங்கள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நிலைத்தன்மைக்காக தென்மேற்குப் பருவமழையை இந்தியா சார்ந்திருப்பதால், எல் நினோவின் தாக்கம் இந்தியாவிற்கு அதிக தாக்கத்தை ஏற்படுதும். வரலாற்றுரீதியாக, எல் நினோ ஆண்டுகளில் குறைந்தது பாதி, பருவமழை வறட்சியுடன் (நீண்டகால சராசரியிலிருந்து -10% க்கும் குறைவான அளவில்) பொழிந்துள்ளது. 1950-ஆம் ஆண்டு முதல், 16 எல் நினோ ஆண்டுகளில், 7 ஆண்டுகளில் இந்தியா இயல்பை விடக் குறைவான பருவமழை பொழிவு ஏற்பட்டுள்ளது.


இந்த ஆண்டு இயல்பை விடக் குறைவான பருவமழை பெய்யும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு, பயிர் விளைச்சலையும் வேளாண் உற்பத்தித்திறனையும் அதிககமாகப் பாதிக்கக்கூடும். இது போன்ற ஒரு சூழல் உணவுப் பற்றாக்குறை, பணவீக்கம் மற்றும் கிராமப்புற வருமானச் சரிவை ஏற்படுத்தி, பொருளாதாரச் சிக்கல்களை மோசமாக்கும்.


குறைந்த மழைப்பொழிவு, நீண்ட வறண்ட காலங்கள், வறட்சி மற்றும் அதிக வெப்பநிலை ஆகியவை கிடைக்கக்கூடிய நீர் வளங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இந்த சூழல் காட்டுத் தீ மற்றும் வெப்ப அலைகள் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கலாம். இந்தக் காலநிலை மாற்றங்கள் சுகாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.


மேலும், மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி மற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக எரிசக்தி மற்றும் உர விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகள், குறைவான பருவமழை ஆண்டின் தாக்கத்தை  மோசமாக்கக்கூடும்.


ஆரம்பகால கணிப்புகள் (early forecasts) ஏன் முக்கியம்


எல் நினோ-தெற்கு அலைவு ஒரு இயற்கை நிகழ்வு, அதைத் தடுக்க முடியாது. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் அதன் தாக்கத்தைக் குறைக்க முடியும். மேம்பட்ட கண்காணிப்புத் திறன்கள், எல் நினோ நிகழ்வுகளின் தொடக்கம், தீவிரம் மற்றும் கால அளவைக் கணிப்பதற்கான நிலைமைகளை மேம்படுத்தியுள்ளன.


இதுபோன்ற முன்னறிவிப்புகள், ஏற்படக்கூடிய சேதங்களைக் குறைப்பதற்காக, பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்துதல், நீர் சேமிப்பை ஊக்குவித்தல் மற்றும் வேளாண் நடைமுறைகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க தேவையான கால அவகாசத்தை வழங்குகின்றன.


குறிப்பாக, மழைப்பொழிவு பற்றாக்குறை உள்ள மாவட்டங்களில், வறட்சியைத் தாங்கக்கூடிய காரிஃப் பயிர் இரகங்களை ஊக்குவிப்பதும், விதைப்பு காலங்களை மாற்றி அமைப்பதும், விளைச்சல் குறையும் பட்சத்தில் விவசாயிகளுக்கான வருமான இழப்பைக் குறைக்க உதவக்கூடும்.

காலம் கடந்து போவதற்குள், மாநிலங்களும் தங்களின் வறட்சி மற்றும் வெப்பத் தடுப்பு நடவடிக்கைத் திட்டங்களைத் தயாரித்து, நிலத்தடி நீர் மறு அலைவுமற்றும் நீர் சேமிப்பு முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். முன்கூட்டிய கணிப்புகளின்படி நாம் செயல்பட்டால் மட்டுமே, அவை நமக்கு தேவையான அளவு  பயனளிக்கும்.

Original Link: How El Niño development during May-June is likely to affect India.


Share:

சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் பெண்கள் ஏன் முக்கியப் பங்குதாரர்களாகத் திகழ்கிறார்கள்? -ரித்விகா பட்கிரி

சில நாட்களுக்கு முன்னர், ஆறு பெண் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2026-ஆம் ஆண்டிற்கான 'கோல்ட்மேன் சுற்றுச்சூழல் விருதை' (Goldman Environmental Award) பெற்றனர். உலகம் முழுவதிலும், குறிப்பாக  நமது நாட்டில் நடைபெறும் அடித்தள அளவிலான சுற்றுச்சூழல் இயக்கங்களில் பெண்களின் பங்கை இது எவ்வாறு முன்னிலைப்படுத்துகிறது?  


இங்கிலாந்தில் எண்ணெய் துளையிடுதலுக்கு எதிரான பிரச்சாரம், நைஜீரியாவில் மனித நடவடிக்கைகளால் ஏற்படும் காட்டுத்தீயிலிருந்து அழிவு நிலையில் உள்ள வௌவால்களை பாதுகாக்கும் முயற்சிகள், இந்தியாவில் நடைபெறும் பல்வேறு சுற்றுச்சூழல் போராட்டங்கள் ஆகியவை, சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் அதை மீண்டும் உருவாக்குவதிலும் பெண்கள் வகிக்கும் முக்கியப் பங்கினை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.


சில நாட்களுக்கு முன்னர், ஆறு பெண் ஆர்வலர்கள் 2026-ஆம் ஆண்டிற்கான கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றனர். 1989-ல்  உருவாக்கப்பட்ட, பசுமை நோபல் பரிசு என்றும் அழைக்கப்படும் இந்த விருதை வென்ற ஆறு பேரும், பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி, பல்வேறு வகையான பிரச்சாரங்களை மேற்கொண்டு, காலநிலை செயல்பாட்டில் தங்குளுக்கான ஒரு தனித்துவமான வரலாற்றைக் கொண்டுள்ளனர்.







சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் பெண்கள் முன்னணியில் இருந்து வந்திருந்தாலும், இதற்குப் பெண்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவுகள் குறித்த புரிதலும் முக்கியமானதாகிறது.



ஆறு பெண்களுக்கு 'பசுமை நோபல்' (Green Nobel) விருது




'பசுமை நோபல்' பரிசு வென்ற ஆறு வெற்றியாளர்கள்:


1. நைஜீரியாவின் வெப்பமண்டல சூழலியல் நிபுணரும், இயற்கை பாதுகாவலருமான இரோரோ தான்ஷி.


2.  தென் கொரியாவைச் சேர்ந்த காலநிலை மாற்ற செயற்பாட்டாளர் போரிம் கிம். 


3. பிரிட்டிஷ் காலநிலைச் செயற்பாட்டாளர் சாரா ஃபின்ச்,


4. அமெரிக்கப் பூர்வகுடி காலநிலைச் செயற்பாட்டாளர் அலன்னா அக்காக் ஹர்லி, 


5. கொலம்பிய இளைஞர் காலநிலைச் செயற்பாட்டாளர் யுவெலிஸ் மொராலஸ் பிளாங்கோ, 


6. சுரங்கத் தொழிலால் ஏற்படும் பாதிப்புகளை முடிவுக்குக் கொண்டுவரப் போராடிய பப்புவா நியூ கினிய அரசியல்வாதி தியோனிலா ரோகா மாட்போப் ஆவார்.


இந்த வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் காலநிலை ஆர்வலர் (climate activism)  என்ற தனித்துவமான ஒரு கதை உண்டு. உதாரணமாக, பிரிட்டிஷ் காலநிலை ஆர்வலரான சாரா ஃபின்ச், இங்கிலாந்தில் எண்ணெய் துளையிடுதலுக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தார். அதன் விளைவாக, துளையிடுவதாலும் எரிபொருளை எரிப்பதாலும் ஏற்படும் அனைத்து உமிழ்வுகளையும் கருத்தில் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.


நைஜீரியாவைச் சேர்ந்த வெப்பமண்டல சூழலியலாளரும் இயற்கை ஆர்வலருமான இரோரோ தன்ஷி, மனிதர்களால் ஏற்ப்படும் காட்டுத்தீயிலிருந்து அழிந்துவரும் வௌவால்களைப் பாதுகாப்பதற்காக, மக்களின் பங்களிப்புடன் (community-led campaign) ஒரு வெற்றிகரமான பிரச்சாரத்தைத் தொடங்கினார். இருப்பினும், இந்தக் கதைகளை முக்கியமானவையாக ஆக்குவது, உள்ளூர் சுற்றுச்சூழல் கவலைகளை எவ்வாறு பரந்த உலகளாவிய விளைவுகளுடன் இணைக்கின்றன என்பதுதான்.


உள்ளூர் காலநிலை இயக்கங்கள் 


உள்ளூர் காலநிலை இயக்கங்கள், சமீப காலங்களில் உலகின் வடக்கு மற்றும் தெற்கு நாடுகளிலும் அரசியல் மற்றும் வளர்ச்சி மாதிரிகளின் ஒரு முக்கியப் பகுதியாக இருந்து வருகின்றன. பெரிய அளவிலான உலகளாவிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற இயக்கங்கள் முறையான அமைப்புகள், முறைசாரா குழுக்கள் மற்றும் தனிநபர்களின் ஒரு பன்முகத்தன்மை கொண்ட வலையமைப்பாக இருக்கும் அதே வேளையில், உள்ளூர் இயக்கங்கள் பெரும்பாலும் சுற்றுச்சூழல் பாதிப்பின் உடனடி நேரடி அனுபவங்களிலிருந்தே உருவாகின்றன.


உதாரணமாக, உலகின் வடக்கு பகுதியில் உள்ள இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்தை விரிவுபடுத்தும் திட்டம், பல்வேறு கவலைகளை எழுப்பியது. குறிப்பாக, விமானப் போக்குவரத்தால் ஏற்படும் கார்பன் உமிழ்வுகள் அதிகரித்து, அந்த விமான நிலையம் நாட்டிலேயே மிக அதிக பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் விமான நிலையமாக மாறியிருக்கும். இதன் விளைவாக, தேசிய அமைப்புகளும், உள்ளூர் சமூகக் குழுக்களும் ஒன்றிணைந்து, விமான நிலைய விரிவாக்கத்திற்கான அனுமதியை எதிர்த்துப் போராடின.

உலகின் தென் பகுதியில், விளிம்பு நிலையில் உள்ள மக்கள் இயக்கங்கள் எவ்வாறு பரந்த அளவிலான ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்கின்றன என்பதற்குச் சிலி நாடு ஒரு சிறந்த உதாரணமாக இருந்து வருகிறது. நீரை ஒரு தனியார்மயமாக்கப்பட்ட பண்டமாகச் சிலியின் அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கிறது. ஆறுகளும் நீர்வளம் தொடர்பான உரிமைகளும் தனியார் ஏலதாரர்களுக்கு ஏலத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, நீர் நெருக்கடிகள் ஏற்பட்டதுடன், மனித வாழ்வின் அடிப்படைத் தேவையான தண்ணீரின் சமமற்ற  முறையில் வழங்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும், நாட்டின் முதன்மையான  வேளாண்ப் பயிரான அவகாடோவிற்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. இது நீர்வளப் பங்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, சிலியில் உள்ள  விளிம்பு நிலை இயக்கங்கள் உழவர்கள், தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.


இந்தியாவின் முக்கிய அடித்தள இயக்கங்கள் 


இந்தியாவில், சுற்றுச்சூழல் நலன்களுக்கான முக்கிய அடித்தள மற்றும் பிராந்திய இயக்கங்கள் பின்வருமாறு:


பிஷ்ணோய் இயக்கம் – ராஜஸ்தானில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கேஜர்லி கிராமத்தில் கேஜ்ரி மரங்களை வெட்டுவதற்கு எதிராக பிஷ்ணோய் சமூகத்தால் தலைமையேற்று நடத்தப்பட்ட இயக்கம். கேஜர்லி கிராமத்தைச் சேர்ந்த அம்ரிதா தேவி பிஷ்ணோய் மற்றும் அவரது மூன்று மகள்கள், பிஷ்ணோய் சமூகத்தின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களுடன், மரங்களை அணைத்தபடியே கொல்லப்பட்டனர். இந்தத் தியாகம் பின்னர் 1970களில் சிப்கோ இயக்கத்திற்கு உத்வேகம் அளித்தது.


சிப்கோ இயக்கம் –இந்த இயக்கம் 1973-ஆம் ஆண்டில், உத்தரப்பிரதேசத்தின் சமோலி மாவட்டத்தில் (தற்போது உத்தரகாண்ட்) மரங்களை வெட்டுவதற்கு எதிராகவும் சூழலியல் சமநிலையைப்  பாதுகாப்பதற்காகவும் ஒரு பெண்கள் இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கும்  வகையில், கிராம மக்கள் மரங்களைக் கட்டிப்பிடித்து அவற்றைச் சூழ்ந்துகொண்டதால், இந்த இயக்கத்திற்கு 'சிப்கோ' (Chipko) அல்லது 'அணைத்தல் / தழுவுதல்' (embrace) எனும் பெயர் ஏற்பட்டது.


அப்பிகோ இயக்கம் – உள்ளூர் மொழியில் ‘அணைத்தல்’ என்ற அப்பிகோ இயக்கம் என்பது, கர்நாடகாவில் நிலவிய ஒற்றைப் பயிர் சாகுபடி முறைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதற்காக சிப்கோ இயக்கத்தால் உத்வேகம் பெற்ற ஒரு முறையாகும். ஒரே வகை மரங்களை பெரிய பரப்பளவில் வளர்ப்பதற்கு எதிராக மக்கள் மரங்களை கட்டிப்பிடித்து போராட்டம் நடத்தினர்.


அமைதிப் பள்ளத்தாக்கு இயக்கம் 1977-ஆம் ஆண்டு, கேரள அரசு, அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா வழியாக பாயும் குந்தி ஆற்றின்மீது நீர்மின் திட்டம் அமைக்கத் திட்டமிட்டது. இதற்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஒரு பெரிய சமூக இயக்கத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தின் விளைவாக அமைதிப் பள்ளத்தாக்கின் பசுமை நிறைந்த மழைக்காடு (evergreen rainforest) பாதுகாக்கப்பட்டது.


நர்மதா பச்சாவ் அந்தோலன் (Narmada Bachao Andolan) இயக்கம்– இந்த இயக்கம் 1985-ஆம் ஆண்டு நர்மதை ஆறு மீது மிகப்பெரிய அணைகள் கட்டுவதற்கு எதிராக தொடங்கப்பட்டது. பின்னர், அணைத் திட்டங்களால் இடம்பெயர்க்கப்படும் மக்களின் மறுவாழ்வு உரிமைக்காகவும் போராடியது. வளர்ச்சி திட்டங்கள் வெவ்வேறு சமூகங்களுக்கு வெவ்வேறு வகைகளில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை இந்த இயக்கம் வலியுறுத்தியது.


1970-களின் பெண்கள் இயக்கங்கள், தலித் இயக்கங்கள், பழங்குடியினர் இயக்கங்கள், உழவர்கள் இயக்கங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை எதிர்க்கும் சுற்றுச்சூழல் நடவடிக்கைக் குழுக்கள் ஆகியவை அத்தகைய “புதிய சமூக இயக்கங்களுக்கு” ​​எடுத்துக்காட்டுகளாகும்.


இந்தச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு இயக்கங்களில் பெண்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். சிப்கோ இயக்கம் முதல் மேற்கு இமயமலைப் பகுதிகளில் பெண்கள் மேற்கொண்ட நீரூற்றுப் புனரமைப்புத் பங்கேறப்பு வரை, பெண்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே ஒரு சிறப்பு உறவு உண்டு என்பதை வலியுறுத்தும் ஒரு கதை உருவாகியுள்ளது. இதன் பின்னணியில், பெண்களும் இயற்கையும் ஒரே மாதிரியான அடக்கு முறைகளை எதிர்கொள்கின்றன என்ற  தொடர்பை விளக்கும் சிந்தனை வடிவமாக சுற்றுச்சூழல் பெண்ணியம் (Ecofeminism) உருவெடுத்தது..


பெண்களும் இயற்கையும்


1970-களின் முற்பகுதியில், சமகாலப் பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் இயக்கங்களில் ஏற்பட்ட ஒரு முக்கிய எழுச்சியுடன் இணைந்து தோன்றிய சூழலியல் பெண்ணியம், இயற்கை வளங்கள் மற்றும் பெண்களின் சுரண்டல் மீது தனது கவனத்தை செலுத்தியது. பெண்கள் 'இயற்கைக்கு' நெருக்கமானவர்கள் என்றும், ஆண்கள் 'பண்பாட்டிற்கு' நெருக்கமானவர்கள் என்றும்  கூறுகிறது. இயற்கையின் ஆதிக்கமும் பெண்களின் ஆதிக்கமும் ஒன்றாகவே நிகழ்கின்றன.


பெண்ணிய இயக்கமும் சுற்றுச்சூழல் இயக்கமும் சமத்துவமான மற்றும் படிநிலை அற்ற அமைப்புகளின் மீதான அர்ப்பணிப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த இரண்டு இயக்கங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சூழலியல் பெண்ணியவாதிகள் வாதிடுகின்றனர்.


இந்தியச் சூழலில், சூழலியல் பெண்ணியம் என்பது, பெண்களுக்கும் இயற்கைக்கும் எதிரான வன்முறை என்பது பொருளாதாரரீதியாகப் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறிவரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் வந்தனா சிவாவின் கருத்துக்களுடன் வலுவாகத் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற இந்தியாவில் உள்ள பெண்கள், நீர், உணவு, விறகு போன்றவற்றைச் சேகரிப்பதன் மூலம் இயற்கையிலிருந்து எவ்வாறு தங்கள் வாழ்வாதாரத்தைப் பெறுகிறார்கள் என்பதை உதாரணமாகக் கொண்டு, இயற்கையின் அழிவு என்பது பெண்களின் வாழ்வாதார ஆதாரங்களின் அழிவைக் குறிக்கிறது என்று அவர் விளக்குகிறார்.


இருப்பினும், பெண்ணிய பொருளாதார நிபுணரான பீனா அகர்வால், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பற்றிய இந்த அணுகுமுறையை விமர்சித்துள்ளார். சூழலியல் பெண்ணியவாதிகள் (Ecofeminists) வடமேற்கு இந்திய பெண்களின் அனுபவங்களை, வளர்ந்து வரும் நாடுகளில் வாழும் அனைத்து கிராமப்புற பெண்களின் அனுபவங்களாக இணைத்துப்பார்ப்பதாக அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார்.

சாதி மற்றும் வர்க்கம் போன்ற சமூக அடையாளங்களும் பெண்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவைத் தீர்மானிக்கின்றன என்று அவர் அவர் விளக்கியுள்ளார். எனவே, சுற்றுச்சூழலுடனான மனித உறவுகள் எவ்வாறு பொருளாதாரம் தொடர்பான உண்மைகளில் வேரூன்றியுள்ளன என்பதை விளக்க, அகர்வால் அதற்கு மாற்றாக “பெண்ணியச் சூழலியல்” (feminist environmentalism) எனும் சொல்லை முன்மொழிகிறார்.


சுற்றுச்சூழல் சீரழிவின் தாக்கம்


காலநிலை மாற்றத்தை ஒரு அரசியல் பிரச்சினையாகக் கருதி பெண்கள் அதிக அக்கறை வெளிப்படுத்துகிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு ஒரு பகுதி காரணம், காலநிலை மாற்றம் பல்வேறு விளிம்புநிலை சமூகங்களைச் சமமற்ற விகிதத்தில் பாதிப்பதே ஆகும். சுற்றுச்சூழல் சீரழிவு பெண்களைப் பாதிக்கும் ஆறு முக்கிய வழிகளை அகர்வால் குறிப்பிட்டார்: அவை நேரம், வருமானம், ஊட்டச்சத்து, உடல்நலம், சமூக வாழ்வாதார வலைப்பின்னல்கள் மற்றும் பழங்குடி அறிவு ஆகும்.


சுற்றுச்சூழல் சீரழிவு பெண்களின் உழைப்புச் சுமையை அதிகரிக்கிறது. உதாரணமாக, வங்கதேசத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீரழிவு, வளப் பற்றாக்குறை மற்றும் ஆண்களின் இடம்பெயர்வு ஆகியவை சேர்ந்து, பெண்கள் எரிபொருள் சேகரித்தல், தண்ணீர் எடுத்தல் மற்றும் பிற பராமரிப்புப் பணிகளில் செலவிடும் நேரத்தை அதிகரிக்கின்றன என்பதைக் காட்டுகிறது. இது பெண்கள் வேளாண் உற்பத்தியில் குறைந்த நேரத்தைச் செலவிட வழிவகுத்து. அதன் மூலம் குடும்ப வருமானத்தைக் குறைக்கக்கூடும்.


சுற்றுச்சூழல் சீரழிவு பெண்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து உட்கொள்ளலிலும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. காடுகள் மற்றும் கிராமப் பொது நிலங்களின் சரிவு, ஏழைக் குடும்பங்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய வளங்கள் கிடைப்பதையும் குறைக்கிறது. கிராமப்புறப் பெண்களும் குழந்தைகளும் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, குடும்பத்திற்குள் உணவு மற்றும் பிற வளங்கள் சமமாகப் பகிரப்படாததால், அவர்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலை  மோசமடைகிறது.

சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் பெண்களின் பங்கை வலுப்படுத்துதல்


வளரும் நாடுகளில் கடன் சுமை அதிகரிக்கும்போது பெண்களே அதிகமாக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்று சமீபத்திய ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு ஒன்று மேலும் கண்டறிந்துள்ளது. கடன் நெருக்கடியின் விளைவாக அரசாங்கங்கள் பொதுச் செலவினங்களைக் குறைக்கும்போது, ​​கல்வி மற்றும் பராமரிப்பு போன்ற துறைகளில் அதிக எண்ணிக்கையில் உள்ள பெண்கள்    வேலைகளை இழக்கிறார்கள். வளரும் நாடுகள் இன்று எதிர்கொள்ளும் காலநிலை தொடர்பான கடன் சுமைகளுக்கும் இது பொருந்தும். இந்தச்சுமைகள் பெண்களைக் கடுமையான வறுமை நிலைக்குள் தள்ளுவதுடன், அவர்களது ஊதியமற்ற பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளின் அளவும் அதிகரிக்க வழிவகுக்கிறது.


ஆகவே, பெண்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவு எவ்வாறு உருவாகிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமானதாகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பால் பெண்கள் சமமற்ற வழிகளில் பாதிக்கப்படுவதாலும், அவர்களின் வாழ்வியல் சூழல்களும், அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்களில்  முன்னணிப் பங்களிப்பாளர்களாக உருவெடுக்கின்றனர்.


 சுற்றுச்சூழல் நிர்வாகம் மற்றும் நிலைத்தன்மையில் பெண்கள் முக்கியப் பங்குதாரர்களாக உள்ளனர். எனவே, அவர்களின் நிலம் மற்றும் சொத்துரிமைகளை வலுப்படுத்துவதும், தூய்மையான ஆற்றல், நீர், சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய வாழ்வாதாரங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதும், உள்ளூர் நிர்வாகத்தில் முடிவெடுக்கும் நிறுவனங்களில் அவர்களின் தீவிரப் பங்கேற்பை உறுதி செய்வதும்  முக்கியமானதாகிறது.



Original Link: Why women are key stakeholders in environmental governance.


Share:

இந்தியாவின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பது எப்படி புத்தாக்கம் மற்றும் வளர்ச்சியைத் தொடங்கி வைக்கும்? -தேவேஷ் கபூர், அர்விந்த் சுப்ரமணியன்

இந்தியக் கூட்டாட்சி குறித்த விவாதங்கள் இனி மத்திய-மாநிலங்களுக்கு இடையிலான உறவுகளில் மட்டும் கவனம் செலுத்த முடியாது. நகரங்களுக்கு அதிகாரம் அளிப்பதும், அவற்றின் நிர்வாகத்தை மேலும் பொறுப்புள்ளதாக்குவதும் இந்த விவாதங்களில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.


காரணங்கள் எதுவாக இருந்தாலும், நமது உள்ளாட்சி அமைப்புகள், பொதுவாக, வெற்றிக்கும் செயல்திறனுக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்வதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை...” இது ஒரு சமகாலப் புலம்பல் அல்ல, மாறாக 1925-ல் அலகாபாத் நகராட்சியின் தலைவரான ஜவஹர்லால் நேருவால் வெளிப்படுத்தப்பட்ட ஒன்றாகும். நூறு ஆண்டுகள் கடந்தும், பெரிய அளவில் எதுவும் மாறவில்லை.


கூட்டாட்சி விவாதங்களில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை உள்ளடக்கிய மூன்றாம் அடுக்கு அரசாங்கம் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை. ஏனெனில், அந்த விவாதங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. உள்ளாட்சி அமைப்புகள், இந்தியக் கூட்டாட்சியின் புறக்கணிக்கப்பட்ட மாற்றாந்தாய் பிள்ளையைப் போல நடத்தப்படுகின்றன. இதற்கு நேர் மேலே இருந்து இதைக் கட்டுப்படுத்தும் இரண்டாம் அடுக்கான மாநில அரசுகளே கட்டுப்படுத்தும் மாற்றாந்தாய்ப் பிள்ளையாகும்.


மாநில அரசுகளைச் சார்ந்திருத்தல்


நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், பணியாளர் நியமனம், நிதி மற்றும் பொதுச் செலவினங்களில், நகர்ப்புற மூன்றாம் அடுக்கு மக்கள் மோசமாகப் புறக்கணிக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது.



அரசியல் அமைப்புகளில் முற்றிலும் மாறுபட்ட நாடுகளான அமெரிக்காவிலும் சீனாவிலும், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அரசு ஊழியர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுகின்றனர். இந்தியாவில், 10 சதவீதத்திற்கும் சற்று அதிகமான அரசு ஊழியர்கள் மட்டுமே உள்ளாட்சி அளவில் பணியாற்றுகின்றனர் என்பதை விளக்கப்படம்-1 குறிப்பிடுகிறது. இதன் விளைவாக, அமெரிக்காவில் பெரும்பாலான பொதுச் சேவைகள் மூன்றாம் அடுக்கால் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் மிகக் குறைவான சேவைகளே அவ்வாறு வழங்கப்படுகின்றன.



அடுத்து, நிதியைக் கருத்தில் கொள்வோம். திறமையான செயல்பாட்டிற்கு, பணியாளர்களுடன் சேர்த்து, சுயமாக உருவாக்கப்படும் வளங்களும் மிக முக்கியமானவை. மற்ற இரண்டு அடுக்கு அமைப்புகளுடன் ஒப்பிடும்போது, ​​நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் (ULBs) செயல்திறன் எவ்வளவு மோசமாக இருந்துள்ளது என்பதை விளக்கப்படம்-2 விளக்குகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள், கடந்த அறுபது ஆண்டுகளில், சேவைகளை வழங்குவதற்காக மத்திய அரசு தானே உருவாக்கும் வளங்களை முறையே 2 மற்றும் 2.5 மடங்கு அதிகரிக்க முடிந்துள்ளது.


இதற்கு மாறாக, வரி வருவாயில் நகர்ப்புற மூன்றாம் அடுக்கின் பங்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.3 சதவீதம் என்ற அளவில் தேக்கமடைந்துள்ளது. இதன் விளைவாக, மூன்றாம் அடுக்கின் செலவினங்கள் மிகக் குறைவாக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவு) உள்ளன. மேலும், மாநில அரசுகளும், மத்திய அரசும் முறையே சுமார் 15 மற்றும் 20 மடங்கு அதிகமாகச் செலவிடுகின்றன. குறைந்த அளவிலான சொந்த வரி வருவாய் என்பது, மிகச் சிறிய அளவிலான செலவினங்களுக்கும்கூட வெளி ஆதாரங்கள் மூலமே நிதியளிக்கப்படுகிறது என்பதாகும். இது, மூன்றாம் அடுக்கிற்கு இருக்கக்கூடிய எந்தவொரு செயல்பாட்டுத் திறனையும் செயலிழக்கச் செய்து, மாநில அரசுகளைச் சார்ந்திருக்கும் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.



விரைவான நகரமயமாக்கல் மற்றும் 1993-ல் நடைமுறைக்கு வந்த, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கிய 73-வது மற்றும் 74-வது அரசியலமைப்புத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டதைக் கருத்தில் கொள்ளும்போது, ​​இது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாகும்.





நிலத்தை பணமாக்குதல் 


மூன்றாம் அடுக்கு அரசாங்கத்தின் பலவீனங்கள், நிலம் தொடர்பான ஒரு ஆழமான பிரச்சனையுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சனையின் ஒரு அறிகுறியை சீனாவையும் இந்தியாவையும் ஒப்பிடுவதன் மூலம் காணலாம். நிலம் பற்றாக்குறையாக உள்ள நாடுகளில், வேகமான பொருளாதார வளர்ச்சி பொதுவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (GDP) ஒப்பிடும்போது நிலம் மற்றும் சொத்து விலைகள் வேகமாக உயரக் காரணமாகிறது. இது சீனாவிலும் இந்தியாவிலும் நிகழ்ந்தது. இதன் காரணமாக, நிலம் அரசாங்க வருவாய்க்கு ஒரு வலுவான மற்றும் வளர்ந்துவரும் ஆதாரமாக மாறக்கூடும்.



ஆனால், விளக்கப்படம்-3 காட்டுவது போல, இரு நாடுகளிலும் ஏற்பட்ட விரைவான பொருளாதார வளர்ச்சிக் காலத்தில், சீனா, உயர்ந்துவரும் நில மதிப்புகளை அரசாங்க வருவாயாக மாற்ற முடிந்தது. அது நிலத்திற்கு வரி விதிப்பதை விட, அதை விற்பதன் மூலம் அதிகப் பணம் ஈட்டியது. முரண்பாடாக, ஒரு கம்யூனிஸ்ட் நாடு இந்த வருவாயின் ஒரு பகுதியைக் கைப்பற்றுவதற்காக நிலத்தைத் தனியார்மயமாக்கியது. சீனாவின் நில வருவாய், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவாக இருந்து, அதன் உச்சக்கட்டத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்தது.


இதற்கு மாறாக, இந்தியாவின் நில வருவாய் அதன் வளர்ச்சிக் காலம் முழுவதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1% என்ற அளவில் கிட்டத்தட்ட மாற்றமின்றி இருந்தது. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்வதற்கான மற்றொரு வழி, 1999-ல் செலவழிக்கக் கிடைத்த ஒவ்வொரு நகர்ப்புறக் குடியிருப்புவாசியிடமிருந்தும் சீன அரசாங்கம் பெற்ற நில வருவாய், இந்தியாவை விட சுமார் 15 மடங்கு அதிகமாக இருந்தது. 2020-ல், அதன் உச்சக்கட்டத்தில், இந்த மடங்கு 225 ஆக அதிகரித்தது. சீனாவின் வேகமான வளர்ச்சியும், உயர்ந்துவரும் நில மதிப்புகளைப் பொது வருவாயாக மாற்றும் அதன் சிறந்த திறனும், அரசாங்க வருவாயைப் பெருமளவில் விரிவுபடுத்தின. இருப்பினும், இந்தியா உயர்ந்து வரும் நில மதிப்புகளால் மிகக் குறைவாகவே பயனடைந்தது.


நிலத்திலிருந்து வருவாய் ஈட்ட முடியாததற்கு சோசலிச சித்தாந்தமும் சுயநலக் குழுக்களும் ஒருங்கே காரணமாக இருந்தன. இரண்டாம் நிலை அரசாங்கம் அதிகக் கட்டுப்பாடுகளை விதித்ததாலும், மூன்றாம் நிலை அரசாங்கம் பலவீனமாக இருந்ததாலும் இந்தப் பிரச்சினை மேலும் மோசமடைந்தது. சோசலிசம், 1976-ம் ஆண்டின் நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்டம் (Urban Land Ceiling Act) போன்ற தவறான சட்டங்களுக்கு உத்வேகம் அளித்தது. அச்சட்டம், மிகக் குறைந்த உபரி நிலமே அடையாளம் காணப்பட்டு, பொது நோக்கங்களுக்காக அரசால் குறைந்த அளவு நிலம் கையகப்படுத்தப்பட்டு, நிலத்தைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்தது.


அப்படியிருந்தும், பல அரசு நிறுவனங்களான முடக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள், துறைமுகங்கள், பாதுகாப்புத் துறை, அரசால் நிர்வகிக்கப்படும் கோயில்கள் ஆகியவை ஒருபோதும் பணமாக்கப்படாத, காலியாக உள்ள அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களைக் கொண்டிருந்தன. சீனாவுக்கு இருந்ததைப் போன்ற நிலத்தின் மீதான ஏகபோகம் இந்திய அரசுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. இதன் காரணமாக, சீனாவின் உள்ளாட்சி அமைப்புகள் விற்ற அளவுக்கு இந்தியாவால் ஒருபோதும் நிலத்தை விற்க முடியவில்லை. இருப்பினும், இந்தியா அவ்வாறு செய்ய தீவிரமாக முயற்சி கூட செய்யவில்லை. பற்றாக்குறை வாடகைத் தேடலை ஊக்குவிக்கிறது. ஆனால், இந்தச் சட்டங்களின் (நிலப் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் மற்றும் கட்டிடத் துணை விதிகளுடன் சேர்த்து) மிக மோசமான விளைவு, நிலம் மற்றும் வாடகைச் சந்தைகளில் ஏற்பட்ட கடுமையான சிதைவுகளே ஆகும். இதுவே ‘கருப்புப் பணத்தின்’ (black money) முக்கிய உந்து சக்தியாக விளங்கியது. இந்தியாவில் மனை வணிகத் (ரியல் எஸ்டேட்) துறையைப் போல வேறு எந்தத் துறையும் கருப்புப் பணத்தால் இவ்வளவு கடுமையாகப் பாதிக்கப்படவில்லை.


இதன் விளைவாக, இந்தியாவில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (Urban Local Bodies (ULB)) ஒரு குறைந்த சமநிலை அரசியல் பொருளாதார அமைப்பில் சிக்கியுள்ளன. மத்திய மற்றும் மாநில அரசுகள் என உயர்மட்ட அரசாங்கங்கள், கீழ் அதன் நிலைகளைக் கட்டுப்படுத்தவும் செல்வாக்கு செலுத்தவும் தங்கள் நிதி அதிகாரங்களைப் பயன்படுத்துகின்றன. அதேநேரத்தில், உள்ளாட்சி அமைப்புகள் தங்களைச் சுற்றியுள்ள குடிமக்களுக்கு நேரடியாக வரி விதிக்க இயலாமலும் விரும்பாமலும் இருக்கின்றன. இது வளங்களின் நாள்பட்ட பற்றாக்குறையையும், உயர் அரசாங்கங்களை அதிக அளவில் சார்ந்திருக்கும் நிலையையும் உருவாக்குகிறது. இது உள்ளாட்சி அமைப்புகளின் தன்னாட்சியை கடுமையாகக் கட்டுப்படுத்தும் ஒரு அரசியல் மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டுக் கருவியாக மாநிலங்களால் செயல்படுகிறது.


இந்தப் பிரச்சினை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு (ULBs) குறிப்பாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசுகள் நியமனங்களைக் கடுமையாகக் கட்டுப்படுத்துவதே அவற்றின் பலவீனமான நிர்வாகத் திறனுக்கு ஒரு பகுதிக் காரணமாகும். நகராட்சி ஆணையர்களையும் அவர்களின் மூத்த நிர்வாகக் குழுக்களையும் நியமிப்பதற்கோ அல்லது நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் தங்கள் ஊழியர்களை ஒழுங்குபடுத்துவதற்கோ நகர அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. சில செயல்பாடுகள் அதிகாரப்பூர்வமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றப்பட்டாலும், பணியாளர்கள் தொடர்ந்து மாநில அரசுகளுக்குப் பொறுப்புடையவர்களாகவே உள்ளனர்.


இதற்கு ஒரு தீர்வு உள்ளதா?


கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் மாநிலங்கள் மற்றும் நகரங்களுடன் நிதியுதவியை இணைத்த ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு இயக்கம் (Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)) மற்றும் அதன் தொடர்ச்சியான அடல் புத்துயிர்ப்பு மற்றும் நகர்ப்புற உருமாற்ற இயக்கம் (Atal Mission for Rejuvenation and Urban Transformation (AMRUT)) போன்ற நகர்ப்புற மேம்பாட்டுக்கான மத்திய அரசின் திட்டங்கள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு (ULBs) அதிக நிதி ஆதாரங்கள் கிடைத்தன. சமீபத்திய ஆண்டுகளில், அடுத்தடுத்து வந்த நிதி ஆணையங்களும் இந்த மூன்றாம் அடுக்குக்கு அதிக வளங்களை ஒதுக்கியுள்ளன.


இருப்பினும், இந்த கூடுதல் வளங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உண்மையில் தேவைப்படும் நிதியில் ஒரு சிறிய பகுதியாக மட்டுமே உள்ளன. மிக முக்கியமாக, மத்திய அரசின் திட்டங்கள் என்பவை குடிமக்களின் குறைந்த பங்களிப்புடன் மேலிருந்துகீழ் திணிக்கப்படும் முயற்சிகளாக உள்ளன. மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் பலவீனமான நிர்வாக மற்றும் தொழில்நுட்பத் திறன், மற்றும் மாநில அரசுகளின் மேலாதிக்கப் பங்கு போன்ற கட்டுப்படுத்தும் தடைகளை அவற்றால் தீர்க்க முடியவில்லை. உண்மை என்னவென்றால், மத்தியில் அதீத அதிகாரக் குவிப்பால் சில சமயங்களில் பாதிக்கப்படும் மாநில அரசுகளே, தங்களின் மூன்றாம் அடுக்குக்கு எதிராகக் குற்றவாளிகளாக இருக்கின்றன. பொருளாதார நிபுணர் ராஜா செல்லையா பிரபலமாகக் கூறியது போல, அனைவரும் அதிகாரப் பரவலாக்கத்தை விரும்புகிறார்கள். ஆனால், அது உயர் மட்டத்திற்கு மட்டுமே.


இந்தியா மேலும் நகரமயமாகிவரும் வேளையில், அதன் நகரங்களில் உள்ள பிரச்சனைகள், புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் ஒரு முக்கிய தடையாக இருக்கின்றன. சீனாவின் வளர்ச்சியை அதிகரிப்பதில் தொழில்துறைக் கொள்கைகளின் பங்கு குறித்த விவாதங்கள், சீனாவில் பெரும்பாலான தொழில்துறைக் கொள்கைகள் தேசிய அல்லது மாகாணத் தலைநகரங்களில் உள்ள அதிகாரிகளால் அல்லாமல், அதன் நகரங்களாலேயே வகுக்கப்பட்டுச் செயல்படுத்தப்படுகின்றன என்ற உண்மையை மறைக்கின்றன. சீனாவில் நகரங்களுக்கு இடையேயான கடுமையான போட்டியானது, நிறுவனங்களுக்கு இடையேயான கடுமையான போட்டியை வலுப்படுத்தி, அந்நாட்டின் அசாதாரணமான ஆற்றலுக்கு உந்துதலாக அமைகிறது.





இந்தியாவில், போட்டியின்மை வளர்ச்சிக்கு ஒரு தடையாகச் செயல்படுகிறது, இருப்பினும் சில மாற்றங்கள் மெதுவாகத் தொடங்குகின்றன. புது தில்லி அபாயகரமான அளவில் மாசுபடுவதாலும், பெங்களூரு கடுமையான நெரிசலுக்கு உள்ளாவதாலும், மக்களும் முதலீட்டாளர்களும் வாழ்வதற்கும் முதலீடு செய்வதற்கும் மற்ற இடங்களைத் தேடத் தொடங்குவார்கள். புவனேஸ்வர், கோயம்புத்தூர், இந்தூர், கொச்சி, மொஹாலி, சூரத் போன்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களின் வளர்ச்சி ஊக்கமளிப்பதாக இருந்தாலும், இந்த நகரங்களுக்கு வலுவான ஆதரவு தேவை.


போட்டி கூட்டாட்சி முறையால் மட்டுமல்லாமல், போட்டி நிறைந்த துணைக் கூட்டாட்சி முறைகளாலும் கட்டவிழ்த்து விடப்படும் இயக்கத்தின், மாற்றத்திற்கான ஒரு நம்பிக்கைக்குரிய சக்தியாக உருவெடுக்கக்கூடும். நகர்ப்புற மக்கள்தொகையின் அதிகரித்து வரும் முக்கியத்துவமும் மற்றொரு உந்து சக்தியாக உருவாகலாம். இது புதிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் வெளிப்படும் அதே வேளையில், அதன் விளைவாக ஏற்படும் மாநிலங்களுக்கு இடையேயான தொகுதி வரையறையானது நகர்ப்புற வாக்காளர்களுக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கும்.


எவ்வாறாயினும், இந்தியக் கூட்டாட்சி குறித்த விவாதங்கள் இனி மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான உறவுகளில் மட்டும் கவனம் செலுத்த முடியாது. இந்த விவாதங்களில், நகரங்களுக்கு அதிகாரம் அளிப்பதன் அவசியத்தையும், நகர நிர்வாகத்தை மேலும் பொறுப்புணர்வுச் செய்வதையும் உள்ளடக்க வேண்டும். பல பத்தாண்டுகளாக டெல்லி ஒரு திறந்தவெளி விஷவாயு அறையாகவே இருந்துவருவது. கூட்டாட்சி குறித்த விவாதங்களில் நகரங்கள் இடம்பெறவில்லை என்பதற்கான ஓர் நினைவூட்டலாகவும் குற்றச்சாட்டாகவும் விளங்குகிறது.


கூட்டாட்சி முறை குறித்த விவாதத்தைச் சார்ந்த இரண்டு கட்டுரைகளில் இது இரண்டாவது ஆகும். இது, ஆசிரியர்களின் சமீபத்திய நூலான ‘மனிதகுலத்தின் ஆறில் ஒரு பங்கு: சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிப் பயணம்’ (A Sixth of Humanity: Independent India’s Development Odyssey) என்ற நூலையும், குறிப்பாக அதன் பதினான்காம் அத்தியாயத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதன் முதல் பகுதியை குறிப்பிடுகிறது.


தேவேஷ் கபூர் ஒரு அரசியல் அறிவியலாளர் ஆவார். வாஷிங்டன் டி.சி.-யில் அமைந்துள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட சர்வதேச ஆய்வுகள் பள்ளியில், இவர் தெற்காசிய ஆய்வுகளுக்கான 'ஸ்டார் அறக்கட்டளைப் பேராசிரியராக'ப் பணியாற்றுகிறார்.


அரவிந்த் சுப்பிரமணியன் ஓர் இந்தியப் பொருளாதார அறிவியலாளர் ஆவார். இவர் 2014 முதல் 2018 வரை இந்திய அரசாங்கத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றினார். தற்போது, ​​வாஷிங்டன் டி.சி.-யில் உள்ள 'பீட்டர்சன் சர்வதேசப் பொருளாதார நிறுவனத்தில்' இவர் ஒரு மூத்த ஆய்வாளராக உள்ளார்.


Original Link: How empowering India’s local governments can kickstart innovation and growth.

Share: