பெண்களை மையமாகக் கொண்ட பணப் பரிமாற்றங்களின் அதிகரிப்பு ஒரே நேரத்தில் இரண்டு உண்மைகளை வெளிப்படுத்துகிறது. பெண்கள் இறுதியாக நலத்திட்ட கொள்கையின் முக்கிய அங்கமாக இருந்து வருகின்றனர். மேலும், நிதி நெருக்கடியில் இருக்கும்போதுகூட மாநிலங்கள் அவற்றை தருவதாக உறுதியளிக்கின்றன. இருப்பினும், அத்தகைய உறுதிமொழிகள் விரிவடையும் போது, ஒரு கேள்வி எழுகிறது. எதிர்கால முதலீடுகளுக்குத் தேவையான நிதியைப் பயன்படுத்தாமல் நலத்திட்டங்கள் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருக்கமுடியுமா?
மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில், ஆளும் கட்சியின் மூன்று கூட்டணிக் கட்சிகளான பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை அரசாங்கத்தின் பிரபலமான முதன்மைத் திட்டமான முதலமைச்சரின் மஜ்ஹி லட்கி பஹின் யோஜனாவுக்குப் (Mukhyamantri Majhi Ladki Bahin Yojana) பெருமை தேடி கொள்கின்றனர்.
பெண் வாக்காளர்கள் ஏறக்குறைய 50 சதவீத வாக்கு வங்கியைக் கொண்ட ஒரு மாநிலத்தில், அவர்களைக் கவரும் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாக பயனுள்ளதாக இருக்கிறது. இந்த முறை ஒரு பெரிய நடைமுறைப் போக்கின் ஒரு பகுதியாகும், இது சமீபத்தில் பீகாரில் காணப்பட்டது. அங்கு முதல்வர் நிதிஷ் குமார் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சரின் மகிளா ரோஜ்கர் யோஜனா (Mukhyamantri Mahila Rojgar Yojana (MMRY)) திட்டத்தை அறிவித்தார்.
பெண்களை மையமாகக் கொண்ட பணப் பரிமாற்றங்களின் அதிகரிப்பு இரண்டு உண்மைகளை வெளிக்காட்டுகிறது: பெண்கள் நலக் கொள்கைகளின் முக்கிய நபர்களாக மாறிவிட்டனர். மேலும் நிதி நெருக்கடியில் இருந்தாலும் மாநிலங்கள் தேவையான நிதியை அளிப்பதாக உறுதியளிக்கின்றன. அதே நேரத்தில், இத்தகைய நலத்திட்டங்கள், குறிப்பாக விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு நேரடி பரிமாற்றங்கள், பெரும்பாலும் நிதி சார்ந்த சிக்கலைக் குறைத்து, நீண்டகால வளர்ச்சியில் முதலீடு செய்யும் திறனை நீட்டிக்கின்றன.
இந்த உறுதிமொழிகள் விரிவடையும்போது, ஒரு கேள்வி எழுகிறது: நாளைய முதலீடுகளுக்குத் தேவையான நிதி இடத்தைக் கட்டுப்படுத்தாமல் நலத்திட்டங்கள் தொடர்ந்து வளர முடியுமா? ஆராய்வோம்.
இந்தியா எவ்வாறு ஒரு கலப்பின நலத்திட்ட அரசை உருவாக்கியது
கடந்த பத்தாண்டுகளில், நியாய விலைக் கடைகள் மற்றும் பொதுப்பணிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு நலத்திட்ட அமைப்பிலிருந்து, டிஜிட்டல் பரிமாற்றங்கள் மற்றும் பெண்களை மையமாகக் கொண்ட வருமான ஆதரவு மூலம் வரையறுக்கப்பட்ட ஒரு அமைப்பிற்கு இந்தியா நகர்ந்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு, பல மாநிலங்கள் முன்பைவிட மிகப் பெரிய அளவில் பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணத்தை அனுப்பத் தொடங்கியபோது, இந்த மாற்றம் மிகவும் கவனிக்கத்தக்கதாக மாறியது.
இதனால், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் நலத்திட்ட அமைப்பு நீண்ட தூரம் வந்துவிட்டது. அப்போது, அரசாங்கம் பட்டினியை (hunger) எதிர்த்துப் போராடுவதிலும் அடிப்படை பொருளாதார பாதுகாப்பை (economic security) வழங்குவதிலும் கவனம் செலுத்தியது. அரசியலமைப்பின் வழிகாட்டுதல் கோட்பாடுகள் (Directive Principles) - சமத்துவமின்மையைக் குறைத்தல் பிரிவு 38 மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் பிரிவு 41 - உணவு விநியோகம், பொதுப்பணிகள் மற்றும் மானிய விலையில் வழங்கப்படும் சேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நலத்திட்ட மாதிரியை வடிவமைத்தன. பற்றாக்குறை மற்றும் பலவீனமான சந்தைகளை எதிர்கொள்ளும் ஒரு நாட்டில், பொது விநியோக முறை (Public Distribution System (PDS)), நில சீர்திருத்தங்கள் மற்றும் ஆரம்பகால வேலைவாய்ப்பு திட்டங்கள் முக்கியக் கருவிகளாக மாறின.
காலப்போக்கில், பொதுநலத் திட்டங்கள் இரண்டு முக்கிய வழிகளில் வளர்ந்தது. முதலில், அத்தியாவசியப் பொருட்களைப் பொருள் பரிமாற்றங்கள் வழங்கின: அவை பொது விநியோக முறை மூலம் மானிய விலையில் தானியங்கள், பிரதம மந்திரி போஷன் சக்தி நிர்மான் (Pradhan Mantri Poshan Shakti Nirman (PM-POSHAN)) திட்டத்தின் கீழ் சமைத்த உணவு, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana (PMAY)) மூலம் வீட்டுவசதி மற்றும் பிரதம மந்திரி போஷன் சக்தி நிர்மான் திட்டத்தின்கீழ் ஊட்டச்சத்து கருவிகள் ஆகும். வீட்டு வருமானம் குறைந்தபோது, இந்தத் திட்டங்கள் குடும்பங்களுக்கு அடிப்படை ஆதரவை வழங்கின.
பின்னர் பணப் பரிமாற்றங்கள் வந்தன. ஆதார், ஜன்-தன் மற்றும் நேரடி பணப் பரிமாற்றத்தால் சாத்தியமானது. இந்தத் திட்டங்கள் மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணத்தை அனுப்புகின்றன, அவர்கள் தேவைக்கேற்ப
அதைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன. உதாரணமாக, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN)) விவசாயிகளுக்கு வருமான ஆதரவை வழங்குகிறது; முதியோர், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியங்கள் நேரடி வங்கி பரிமாற்றம் (Direct Benefit Transfer) மூலமாக வழங்கப்படுகின்றன.
இந்த இரண்டு வடிவங்களும் – நிதி மற்றும் பொருள் உதவி – சேர்ந்து ஒரு கலப்பு நல அரசை (Hybrid Welfare State) உருவாக்கியுள்ளன. இது நேரடியாக ஒவ்வொரு குடும்பத்தோடும் இணைக்கப்பட்டுள்ளது. சில நிதி மற்றும் பொருள் சார்ந்த திட்டங்களை ஆராய்வோம்.
ஒதுக்கீடு, விநியோகம், நிலைப்படுத்தல்
ஒவ்வொரு நலத்திட்ட அமைப்பின் மையக் கருத்தும் எளிமையானது: அனைவரும் கண்ணியத்துடன் வாழ சமூகம் அதன் வளங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். பொருளாதார நிபுணர் Richard A Musgrave’s-ன் பொது நிதிக் கோட்பாடு, அவரது “Theory of Public Finance” (1959) என்ற புத்தகத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இது அரசின் மூன்று அடிப்படைக் கடமைகள் மூலம் இதை விளக்குகிறது: அவை,
ஒதுக்கீடு (Allocation) – அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல்.
விநியோகம் (Distribution) – உதவி தேவைப்படுபவர்களுக்கு தேவையான ஆதரவு அளித்தல்.
நிலைப்படுத்துதல் (Stabilisation) – கடினமான காலங்களில் வாழ்க்கையை நிலையாக வைத்திருத்தல் போன்றவையாகும்.
இந்தக் கடமைகள் இந்தியாவின் பொதுநலத் திட்டங்களில் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன, அவை:
பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana (PMGKAY))
கொரோனா தொற்றுக் காலத்தில் இந்தத்திட்டம் தொடங்கப்பட்டது. மிகக் கடினமான காலத்திலும் ஏழை எளிய மக்களுக்கு உணவு கிடைக்கச் செய்யும் நோக்கத்தில் செயல்படுத்தப்படுகிறது.
பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மாண் (Pradhan Mantri Poshan Shakti Nirman (PM POSHAN))
2021-ல் மதிய உணவுத் திட்டமாகத் தொடங்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பால்வகுப்பு (pre-primary) முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சமைத்த மதிய உணவு வழங்குகிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
சக்ஷம் ஆங்கன்வாடி மற்றும் போஷன் (Saksham Anganwadi and POSHAN) 2.0
குழந்தைகள், பருவ வயது பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டக்குறைபாட்டைப் போக்க ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து ஆதரவுத் திட்டமாக செயல்பட்டு வருகிறது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமீன் & நகர்ப்புறம் (Pradhan Mantri Awas Yojana-Gramin and Pradhan Mantri Awas Yojana-Urban (PMAY-G/U))
“அனைவருக்கும் வீடு” என்ற நோக்கத்துடன், ஊரக மற்றும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு சொந்த வீடு கிடைக்கச் செய்யும் திட்டமாகும்.
தீன்தயாள் அந்த்யோதய யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (Deendayal Antyodaya Yojana – National Rural Livelihood Mission (DAY-NRLM)
ஏழைக் குடும்பங்கள் சுயதொழில் அல்லது திறமையான வேலைகள் மூலம் வாழ்க்கையை நடத்த உதவும் ஒரு திட்டமாக இந்தத்திட்டம் உள்ளது. ஏழை குடும்பங்களை சுய உதவிக் குழுக்களாக (Self Help Groups (SHGs)) ஒருங்கிணைத்து, கற்றல்-சம்பாதித்தல்-சேமித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
பிரதான் மந்திரி உஜ்வலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana (PMUY))
இது புகை சூழ்ந்த சமையலறைகளில் வேலை செய்வதிலிருந்தும், விறகு சேகரிக்க நீண்டதூரம் நடந்து செல்வதிலிருந்தும் பெண்களைக் காப்பாற்றுகிறது.
இந்த திட்டங்கள் அனைத்திற்கும் 3.4 லட்சம் கோடி ரூபாயைக் கடக்கின்றன. இது மத்திய பட்ஜெட்டில் 7 சதவீதமாகும். மேலும், மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையை மிகவும் பாதுகாப்பானதாக ஆக்குகிறது.
பணப் பரிமாற்றத்தின் (Cash Transfer) தாக்கம்: எண்ணிக்கை மட்டுமே முழுக் கதையைச் சொல்லுமா?
நலத்திட்டங்களில் பணப் பரிமாற்றங்கள் கூடுதல் ஆதரவை வழங்குகின்றன. பணப் பரிமாற்றத் திட்டங்களின் சில எடுத்துக்காட்டுகள்:
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi scheme (PM-KISAN)) என்பது விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் உரங்கள் போன்ற விவசாயச் செலவுகளை ஈடுகட்ட பணத்தை வழங்கும் ஒன்றிய அரசால் நிதியளிக்கப்பட்ட ஒரு அரசாங்கத் திட்டமாகும். இது விவசாயிகள் கடனில் இருந்து விடுபட்டு, அவர்களின் நிலத்தை உற்பத்தித் திறன் மிக்கதாக வைத்திருக்க உதவுகிறது.
தேசிய சமூக உதவித் திட்டம் (National Social Assistance Programme (NSAP))
இது முதியவர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. இது அவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகளுக்கு ஒரு சிறிய ஆனால் நிலையான வருமானத்தை அளிக்கிறது.
73,000 கோடி மதிப்புடைய இந்தப் பணத் திட்டங்கள் பட்ஜெட்டில் 1.5 சதவீதமாகும். மொத்தத்தில், இந்த ஒன்றிய அரசின் பணமும், நலத்திட்டங்களுக்கான பொருட்களும் 3.85 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளன, இது அரசாங்க செலவினங்களில் ஏறக்குறைய 8.5 சதவீதமாகும்.
அவற்றின் உண்மையான தாக்கம் எண்ணிக்கையில் அல்ல, மாறாக அன்றாட தருணங்களில் உணரப்படுகிறது: நன்றாக சாப்பிடும் குழந்தை, சுத்தமான காற்றை சுவாசிக்கும் தாய், கடனைத் தவிர்க்கும் விவசாயி, பாதுகாப்பாக உணரும் குடும்பம் - இது Musgrave’s-ன் கருத்தின் எளிய உண்மையைக் காட்டுகிறது: பொது நிதி என்பது பணத்தைப் பற்றியது மட்டுமல்ல, மக்களுக்கு பாதுகாப்பு, தேர்வுகள் மற்றும் நம்பிக்கையை வழங்குவது பற்றியதாகும்.
பெண்களை மையமாகக் கொண்ட பணப் பரிமாற்றங்களின் புதிய அலை
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட குடும்பங்களுக்கு அளிக்கப்படும் ஆதரவு ஒரு குடும்பத்தையே மாற்றி அமைக்கும் என்பதை உணர்ந்த பிறகு, மாநில அரசுகள் பெண்களுக்கான மிகவும் நேரடியான உதவிகளை சோதனை முயற்சியாகத் தொடங்கின. பெண்களுக்கான புதிய அலை பணப் பரிமாற்றத் திட்டங்கள் 2020-ல் தொடங்கின. அசாம் மாநிலம் “ஒருனோடோய்'” (Orunodoi) என்ற முதல் பெரிய அளவிலான, அனைவரையும் உள்ளடக்கிய (universal-style) பெண்களுக்கான பண உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 2021-ல் மேற்கு வங்கம் “லக்ஷ்மீர் பண்டார்” (Lakshmir Bhandar) திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, அந்த யோசனை பரவலாகப் பரவி மிகவும் பிரபலமடைந்தது.
இன்று, 13 மாநிலங்கள் பெண்களின் கைகளில் நேரடியாக பணத்தை வழங்கும் பணப் பரிமாற்றத் திட்டங்களை செயல்படுத்துகின்றன. பீகார் ஒரு முறை 10,000 உதவியை வழங்கும் அதே வேளையில், மீதமுள்ள 12 மாநிலங்கள் மாதமாதம் பணத்தை வழங்குகின்றன. இந்த உறுதிமொழிகள் அனைத்தும் சேர்ந்து 2025-26ஆம் ஆண்டில் 1.75 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 0.5 சதவீதமாகும். இது இனி ஒரு சிறிய நலத்திட்டம் மட்டுமல்ல; மாநிலங்கள் தங்கள் வரவு செலவுத் திட்டங்களை எவ்வாறு திட்டமிடுகின்றன என்பதில் இது ஒரு பெரிய மாற்றத்தைக் காட்டுகிறது.
எண்ணிக்கைகள் தெளிவாகப் பேசுகின்றன. மகாராஷ்டிரா (36,000 கோடி), கர்நாடகா (28,608 கோடி), மேற்கு வங்கம் (26,700 கோடி) மற்றும் மத்தியப் பிரதேசம் (18,669 கோடி) ஆகியவை இப்போது நீர்ப்பாசனம், ஊரக சாலைகள் அல்லது முக்கிய பொது சுகாதார அமைப்புகளைவிட பெண்களின் இடமாற்றங்களுக்கு அதிகமாக செலவிடுகின்றன. ஜார்க்கண்ட் 13,363 கோடி, தமிழ்நாடு 13,807 கோடி, ஒடிசா 10,145 கோடி மற்றும் பீகார் 7,500 கோடியை அதன் ஒரு முறை மானியத்தின்மூலம் செலவிடுகிறது. பொது நலத்திட்டங்கள் அத்தகைய அளவை அடையும்போது, அது மாநிலக் கொள்கையின் வரையறுக்கும் அம்சமாக மாறும்.
ஆனால், அளவும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்தத் திட்டங்கள் சேர்க்கப்பட்டவுடன் இந்த 13 மாநிலங்களில் ஆறு மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. மாநிலக் கடன் ஏற்கனவே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27.5 சதவீதத்தை நெருங்கி வருவதால், இந்த மாதாந்திர பணபரிமாற்றங்கள் மற்ற முதலீடுகளுக்கான நிதியைக் கட்டுப்படுத்துகின்றன மற்றும் நீண்டகால வளர்ச்சியை கடினமாக்குகின்றன.
அரசியல் பொருளாதாரப் பொறியா?
நலத்திட்டச் செலவுகள் ஒரு வரவு-செலவுத் திட்டத்துடன் முடிவடைவதில்லை. உணவுப் பாதுகாப்பு, ஓய்வூதியம், ஊட்டச்சத்து மற்றும் பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கான பண ஆதரவு போன்ற உறுதிமொழிகள் ஒவ்வொரு ஆண்டும் திரும்ப வருகின்றன. அவை வளரும்போது, முதலீடுகள் நாளை கட்டமைக்கத் தேவையான இடத்தில் படிப்படியாக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4%-ஆக வைத்திருக்க, அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் அதிக வருவாயைச் சேகரிக்க, அதிக கடன் வாங்க அல்லது முதலீடுகளைக் குறைக்க முடிவு செய்ய வேண்டும். இந்தத் தேர்வுகள் எதுவும் செலவுகள் இல்லாமல் வருவதில்லை.
ஆனால் இந்த பதற்றம் வெறும் எண்கணிதம் மட்டுமல்ல. இது அரசியல் சார்ந்ததும் கூட. நலத்திட்டங்கள், குறிப்பாக விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு நேரடி பணப்பரிமாற்றங்கள், உடனடி மற்றும் வெளிப்படையான ஆதாயங்களை உருவாக்குகின்றன. அவற்றின் பலன்கள் விரைவாக வந்து சேரும். மேலும், மக்களால் நேரடியாக உணரப்படுகின்றன. இது அவர்களை தேர்தல்ரீதியாக பிரபலமாக்குகிறது.
இதற்கு நேர்மாறாக, நீர்ப்பாசன அமைப்புகள், மருத்துவமனைகள் அல்லது டிஜிட்டல் உள்கட்டமைப்பு போன்ற மூலதனத் திட்டங்கள் பலனைத் தர பல ஆண்டுகள் ஆகும். அவற்றின் பலன்கள் நீண்டகால அடிப்படையில் அமைந்திருக்கும், பெரும்பாலும் உடனடியாகத் தெரிவதில்லை. இதன் காரணமாக, வரவு-செலவுத் திட்டமிடல் குறைவாக இருந்தாலும், அரசியல்வாதிகள் நலத்திட்டங்களை விரிவுபடுத்த விரும்புகிறார்கள். அதே, நேரத்தில் முக்கியமான நீண்டகால முதலீடுகள் பெரும்பாலும் தாமதமாகின்றன.
இது பொருளாதார வல்லுநர்கள் அரசியல் பொருளாதார பொறி (political economy trap) என்று அழைப்பதை உருவாக்குகிறது: பொதுநலத் திட்டங்களுக்கான செலவினங்கள் ஒட்டும் தன்மையுடையதாகவும், குறைக்க கடினமாகவும் மாறும், முதலீடு நெகிழ்வானதாகவும், குறைக்க எளிதானதாகவும் மாறும், மேலும் பற்றாக்குறைகளை நிர்வகிப்பது படிப்படியாக கடினமாகிவிடும். பொதுநலத் திட்டங்களுக்கான செலவினங்களைக் குறைப்பது உடனடி பொதுமக்களின் எதிர்வினைக்கு வழிவகுக்கும் என்ற உண்மையால் இந்தப் பொறி வலுப்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் மூலதனச் செலவினங்களைக் குறைப்பது குறைவாகவே தெரியும் மற்றும் அரசியல் ரீதியாக பாதுகாப்பானது. இருப்பினும், தற்போதைய நலத்திட்டங்களுக்கு அதிகமாகச் செலவிடுவது, நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் முதலீடு செய்யும் அரசாங்கத்தின் திறனைப் பலவீனப்படுத்தும்.
இந்த பதற்றத்தை நிர்வகிப்பதற்கு வரவு-செலவுத் திட்ட கணக்கீட்டுத் தாள்கள்/விரிதாள்களைவிட (sheets/spreadsheets) அதிகமாக தேவைப்படுகிறது. இதற்கு வெளிப்படையான கணக்கியல், நம்பகமான நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை நெறிமுறை மற்றும் குறுகிய கால அழுத்தங்கள் அதிகரிக்கும் போதும் மூலதன முதலீட்டைப் பாதுகாப்பதற்கான நீண்டகால அர்ப்பணிப்பு ஆகியவை தேவைப்படுகின்றன. பொது நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிக்கு இடையே தேர்வு செய்வது சவாலாக இல்லை. மாறாக இரண்டையும் ஒன்றாக வைத்திருப்பது தான்- நாளையை பொழுதை சார்ந்திருக்கும் நிதி மற்றும் பொருளாதாரத் திறனை பலவீனப்படுத்தாமல் இன்றைய அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
பொது நலத்திட்டங்கள்-முதலீட்டு சிக்கலை எவ்வாறு தீர்க்க முடியும்?
மக்களை நிகழ்காலத்தில் பாதுகாப்பது மற்றும் அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சூழ்நிலையில் முதலீடு செய்வது ஆகிய இரண்டு பொறுப்புகளை மாநிலங்கள் ஒரே நேரத்தில் கையாளும்போது, பொது நலத்திட்டங்கள்-முதலீட்டு குழப்பம் சமாளிக்க கூடியதாக மாறுகிறது. சுகாதாரம், கல்வி மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான செலவினங்களைப் பாதுகாத்தால், ஒரு மாநிலம் வலுவான நலத்திட்டங்களையும் அதே நேரத்தில் வலுவான முதலீடுகளையும் கொண்டிருக்க முடியும் என்பதை தமிழ்நாடு அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டுகிறது.
தொழில்நுட்பம், திறன்கள் மற்றும் தொழில்துறை மூலம் உறுதியான வளர்ச்சி அடித்தளத்தை உருவாக்குவது, பொதுநலத் திட்டத்தை மேலும் நிலையானதாக மாற்றுகிறது என்பதை கர்நாடகா அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில், இது போன்ற செயல்முறைகள் அதிகரித்து வரும் நிதி அழுத்தத்தைக் குறைக்கிறது. உள்கட்டமைப்பு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (Micro, Small, and Medium Enterprises (MSME)) ஒன்றிய அரசால் முதலீட்டு இயந்திரம் வேகமாக செயல்படும், அடிப்படை வரி விரிவடைகிறது மற்றும் நலத்திட்டங்களுக்கு குறைவாக இருப்பதற்குப் பதிலாக அதிக பணம் கிடைக்கிறது என்பதை குஜராத் மாநிலம் நமக்கு நினைவூட்டுகிறது.
மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை, படிப்பினை தெளிவாக உள்ளது: சமநிலையைக் கண்டறிவதுதான் முன்னேற ஒரே வழியாகும். பொதுநலத்திட்டங்கள் இப்போது மக்களை ஆதரிக்க வேண்டும். அதேநேரத்தில் முதலீடுகள் எதிர்காலத்தைப் பாதுகாக்கின்றன. ஆனால், பல மாநிலங்கள் தங்கள் நலத்திட்டச் செலவுகள் ஒன்றிய அரசிடமிருந்து பெறும் நிதியைவிட வேகமாக வளர்ந்து வருவதால் சிரமப்படுகின்றன. இந்த சூழ்நிலையில், ஒன்றிய அரசு ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.
ஒன்றிய அரசு நீண்டகால முதலீடுகளைப் பாதுகாக்க வேண்டும். மாநிலங்களுக்கு எதிர்பார்க்கக்கூடிய பரிமாற்றங்களை உறுதி செய்யவும், சரக்கு மற்றும் சேவை வரி வருவாயை வலுப்படுத்தவும், நீண்டகால வளர்ச்சியின் செலவில் பொதுநலத்திட்டங்களின் விரிவாக்கம் வராமல் பார்த்துக் கொள்ளவும் ஒன்றிய அரசு தேவை என்று வாதிடலாம். நிதி ரீதியாக வலுவாக உள்ள ஒன்றிய அரசு மாநிலங்கள் தங்கள் வரவு-செலவுத் திட்டங்களை பொறுப்புடன் நிர்வகிக்க உதவுகிறது. இந்தியாவின் பொதுநலத்திட்டங்களின் எதிர்காலம், கவனமாக திட்டமிடுவதோடு பராமரிப்பையும் சமநிலைப்படுத்துவதையும், வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில் பாதுகாப்பை வழங்குவதையும் சார்ந்துள்ளது.
Original link:
Do cash and kind transfer schemes create welfare-investment dilemma?