கலவையான பொருளாதாரக் கண்ணோட்டம். -சச்சின் குப்தா

வளர்ச்சி வலுவாக உள்ளது. ஆனால், உலகளாவிய பின்னடைவுகள் கவலைக்குரியதாக இருக்கின்றன.


2026-ஆம் ஆண்டிற்குள் இந்தியா அடிெயடுத்து வைக்கும்போது, அதன் பொருளாதார சூழல்கள் மிகவும் சாதகமாகத் தெரிகிறது. பொருளாதார வளர்ச்சி வலுவாக உள்ளது; நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2026-ஆம் நிதியாண்டில் 7 சதவீதத்திற்கு அதிகமாகவும், 2027-ஆம் நிதியாண்டில் சுமார் 6.5 முதல் 7 சதவீதம் வரையிலும் வளர்ச்சியடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் பெரும்பாலும் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் வட்டி விகிதங்கள் சீராக இருபபதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், வங்கிகளின் வாராக்கடன் குறைந்துள்ளதாலும் நிறுவனங்களின் கடன் தரம் உயர்ந்துள்ளதாலும், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு வங்கித்துறையானது தற்போது மிகச்சிறந்த நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 


தொடர்ந்து குறைந்துவரும் நிதிப்பற்றாக்குறை, நிலையான பொதுக் கடன் சூழல், அரசியல் தொடர்ச்சி மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களில் கூடுதல் கவனம் ஆகியவற்றுடன், ஒட்டுமொத்த நிலைமை மிகவும் ஊக்கமளிப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 


இருப்பினும், கவனிக்கப்பட வேண்டிய புதிய சவால்கள் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.


இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக மட்டுமல்லாமல், மற்ற முக்கிய நாடுகளின் பண மதிப்புகளுக்கு எதிராகவும் பலவீனமடைந்து வருவது கவலையளிப்பதாகக் கூறுகின்றனர். கடந்த ஓராண்டில், பிரிட்டிஷ் பவுண்ட் மற்றும் யூரோவிற்கு எதிராக இந்தியா ரூபாயின் மதிப்பு 15%-க்கும் மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (Current Account Deficit) கட்டுக்குள் இருந்தபோதிலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது, ரூபாய் மீதான அழுத்தம் வர்த்தக சமநிலையின்மையால் (Trade Imbalance) ஏற்படவில்லை என்பதையும் மாறாக மூலதன வெளியேற்றத்தால் (Capital Flows) ஏற்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.


வீழ்ச்சியடைந்துவரும் அந்நிய நேரடி முதலீடு


வெளிநாட்டு முதலீட்டுப் போக்குகள் கவலையளிக்கும் வகையில் உள்ளன. 2025-ஆம் ஆண்டில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (Foreign Portfolio Investors (FPI)) சுமார் $18 பில்லியன் நிதியைத் திரும்பப் பெற்றுள்ளனர். நேரடி வெளிநாட்டு முதலீடும் (Foreign Direct Investment (FDI)) கடந்த நான்கு ஆண்டுகளில் கடுமையாகக் குறைந்துள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன. அதன்படி, 2022-ஆம் நிதியாண்டில்  $44 பில்லியனாக இருந்தது என்றும் நிதியாண்டு 2023-ஆம் நிதியாண்டில் $28 பில்லியனாகவும், 2024-ஆம் நிதியாண்டில் $10 பில்லியனாகவும், 2025-ஆம் நிதியாண்டில் வெறும் $0.5 பில்லியனாகவும் சரிந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். 


இந்த வீழ்ச்சி தற்காலிகமானதா அல்லது ஏதோ ஒரு ஆழமான கட்டமைப்பு பிரச்சனையை குறிக்கிறதா என்பதுதான் தற்போது முக்கியப் பிரச்சனையாகக் பார்க்கப்படுகிறது. 


இது ஒரு தற்காலிக மாற்றம் அல்ல, மாறாக ஒரு அடிப்படை மாற்றம் என்று பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. உலகளவில், நீண்டகால முதலீடுகள் வளர்ந்த நாடுகளை நோக்கி, குறிப்பாக அமெரிக்காவை நோக்கி அதிக அளவில் செல்கின்றன. புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் சொந்த நாட்டிலேயே தொழில்களை அமைத்தல் (reshoring) போன்ற காரணங்களால், ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் இப்போது தங்கள் நாட்டுக்குள்ளேயே முதலீடு செய்வதில் அதிக கவனம் செலுத்துகின்றன. இந்தியாவைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு இது ஒரு சவாலான சூழலாகும். ஏனெனில், உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கும் பெருமளவிலான வெளிநாட்டு முதலீடுகள் தேவைப்படும் வேளையில், உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதில் தற்போது கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. 


அதே நேரத்தில், உலகளாவிய வர்த்தக சூழல் மோசமடைந்து வருகிறது. கடந்த ஆண்டு நிலவிய வரி விதிப்புப் போர் (Tariff war), தற்போது ‘பொருளாதார தேசியம்’ (Economic nationalism) என்ற நிலைக்கு மாறியுள்ளது. சுமார் ஒரு ஆண்டிற்கு முன்பு வரை, இந்தியா அமெரிக்காவுடன் சாதகமான வர்த்தக ஒப்பந்தத்தைப் பெறும் என்றும், ‘சீனா+1’ (China+1) உத்தியால் அதிக பயனடைய வாய்ப்புள்ளதாகவும்  நம்பிக்கை தெரிவித்தனர். இருந்தபோதிலும், 2026-ஆம் ஆண்டிற்குள் இந்த நம்பிக்கை குறைந்துவிட்டது. ஏற்றுமதி பங்கைப் பெறுவதற்குப் பதிலாக, வர்த்தகத் தடைகள் அதிகரிப்பதாலும் மற்றும் விநியோகச் சங்கிலிகள் அந்தந்த  நாடுகளின் பிராந்திய பகுதிகளுக்குள் அதிக கவனம் செலுத்துவதாலும், தற்போது இந்தியா தனது போட்டித்திறனை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.


உள்நாட்டு வணிகப் பாதுகாப்பு


உள்நாட்டு ரீதியாக, கொள்கை நடவடிக்கைகள் 'பாதுகாப்புவாதத்தை' (protectionism) நோக்கி நகர்வதைக் காட்டுகின்றன. இரும்பு மற்றும் ரசாயனம் போன்ற துறைகளின் மீது விதிக்கப்படும் அதிக இறக்குமதி வரிகள், மலிவான சீன இறக்குமதியிலிருந்து இந்திய உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் குறுகிய காலத்தில் உள்ளூர் தொழில்களுக்கு உதவினாலும், அவை இந்தியாவின் போட்டித்தன்மையைக் குறைத்து, உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியாவின் பங்கைக் குறைக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. இந்தியா கையெழுத்திட்டு வரும் பல இலவச தடையற்ற ஒப்பந்தங்களின் (Free Trade Agreement (FTAs)) பலன்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. 


இந்தியா உலக நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்குப் பதிலாக, தனிமைப்பட்டுப் போவதை நோக்கிய ஒரு சுயசார்பு கொள்கையை நோக்கி நகர்கிறதோ என்பதே பெரிய கவலையாக உள்ளது. வலுவான ஏற்றுமதி உத்திகள் மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கான வாய்ப்புகள் இல்லாமல் 'ஆத்மநிர்பார்' (சுயசார்பு) போன்ற கொள்கைகள் பின்பற்றப்பட்டால், அது வெளிநாடுகளைப் புறக்கணித்து உள்நாட்டு உற்பத்தி மாற்றும் சிறிய அளவிலான வளர்ச்சியை மட்டுமே உள்ளடக்கிய ஒரு கொள்கையாக மாறிவிடும் என்று எச்சரிக்கின்றனர். வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளைத் தவிர்ப்பதன் மூலம் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் வெற்றி பெறுவதில்லை என்றும் மாறாக, அவற்றைப் பயன்படுத்தித் தங்கள் உள்நாட்டுத் திறன்களைக் கட்டமைத்து விரிவுபடுத்துவதன் மூலமே வெற்றி பெறுகின்றன என்பதைப் பொருளாதார வரலாறு காட்டுகிறது.


இந்தியாவின் வளர்ச்சி என்பது அதன் வலுவான உள்நாட்டுக் கட்டமைப்புகளை மட்டும் சார்ந்திருக்கவில்லை, மாறாக,  நீண்டகால முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் உலகளாவிய முதலீட்டு சந்தைகளில் போட்டித்தன்மையை அதிகரிப்பது ஆகியவற்றையும் சார்ந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் தற்போது வலுவாக இருந்தாலும், குறைவான மூலதன வரத்து, ரூபாய் மதிப்பின் மீதான அழுத்தம் மற்றும் அதிகரித்து வரும் வர்த்தகத் தடைகள் போன்ற எச்சரிக்கை அறிகுறிகள், நமது பொருளாதார உத்திகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.


எழுத்தாளர் CareEdge Ratings அமைப்பின் தலைமை மதிப்பீட்டு அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார்.


 Original Article :  Mixed economic outlook. -Sachin Gupta

Share:

உத்தரவாதம் அளிப்பவர் என்பவர் யார்? -ரோஷ்னி யாதவ், குஷ்பூ குமாரி

இவ்வாறு செய்வதன் மூலம், விளம்பரத்திற்கும் பரிவர்த்தனைப் பொறுப்பிற்கும் இடையே ஒரு எல்லையை வகுப்பது குறித்த நுகர்வோர் சட்டத்தில் அடிக்கடி எழும் ஒரு கவலையை நீதிமன்றம் கையாண்டது.


இந்த உத்தரவு, மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு எதிரான புகார்களிலிருந்து எழுந்த ஒரு பிரச்சனை தொடர்பானது. அதில், கடன் வாங்கியவர்கள், விளம்பரப்படுத்தப்பட்டதைவிட அதிக வட்டி விகிதம் வசூலிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினர்.


இந்த விவகாரம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இரண்டு கடன் வாங்கியவர்கள் பெற்ற தங்கக் கடன்கள் தொடர்பானது. ஆரம்பத்தில், அவர்கள் கத்தோலிக்க சிரியன் வங்கியில் 15% வட்டிக்குத் தங்க நகைகளை அடமானம் வைத்திருந்தனர். பின்னர் 2018-ல், ஒரு வங்கி மேலாளர் குறைந்த வட்டி விகிதத்தை வழங்குவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, மணப்புரம் ஃபைனான்ஸ் அந்தக் கடன்களை ஏற்றுக்கொண்டது.


கடன் வாங்கியவர்கள், அப்போது அந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருந்த மோகன்லால் இடம்பெற்ற ஒரு விளம்பரத்தால் தாங்கள் ஈர்க்கப்பட்டதாகக் கூறினர்.


இருப்பினும், கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தி, அடகு வைத்த தங்கத்தை மீட்க முயன்றபோது, ​​மணப்புரம் நிறுவனம் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்ததைவிட அதிக வட்டி விகிதத்தைக் வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.


பின்னர், அவர்கள் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைக் கூறி, செலுத்தப்பட்ட கூடுதல் வட்டித் தொகையைத் திரும்பப் பெறுமாறும், ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரியும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகினர்.


நிறுவனம் மற்றும் அதன் மேலாளருடன் சேர்த்து, மோகன்லால் விளம்பரங்களில் நடித்ததன் காரணமாக மட்டுமே அவர் 2-வது பிரதிவாதியாகப் சேர்க்கப்பட்டார்.


ஒரு பொருளின் விளம்பரத் தூதராக இருப்பதாலேயே தன்னை ஒரு சேவை வழங்குநராகக் கருத முடியாது என்று மோகன்லால் வாதிட்டார். ஆனால், மாவட்ட ஆணையம் 2019-ஆம் ஆண்டு  நுகர்வோர் பாதுகாப்புச் (Consumer Protection Act) சட்டத்தில் உள்ள 'ஆதரவு தெரிவித்தல்’ (endorsement) என்பதற்கான வரையறையைப் பயன்படுத்தி, இந்த வாதத்தை ஏற்க மறுத்ததுடன், விசாரணையைத் தொடரலாம் என்றும் கூறியது.


நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 2(18), ‘ஆதரவு தெரிவித்தல்’ (endorsement) என்பதை விரிவாக வரையறுக்கிறது. இது, ஒரு விளம்பரத்தில் இடம்பெறும் நபரின் கருத்து அல்லது அனுபவத்தையே அந்த விளம்பரம் பிரதிபலிக்கிறது என்று நுகர்வோர் நம்பும்படி செய்யக்கூடிய செய்திகள் அல்லது சித்தரிப்புகளையும் தனக்குள் கொண்டுள்ளது. பிரிவு 2(47) ‘நியாயமற்ற வர்த்தக நடைமுறை’ (unfair trade practice) என்பதற்கு ஒரு பரந்த வரையறையை வழங்குகிறது. இதில் விலை அல்லது தரம் குறித்த தவறான சித்தரிப்புகளும் அடங்கும்.


'உத்தரவாதம் அளிப்பவர்' (endorser) என்ற சொல், தவறான அல்லது திசைதிருப்பும் விளம்பரங்களைக் கையாளும் பிரிவு 21-ல் மட்டுமே வெளிப்படையாகக் காணப்படுகிறது. மேலும், அது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்கு அதிகாரங்களை வழங்குகிறது. பிரிவு 21, உற்பத்தியாளர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் ஆகிய இருவருக்கும் அபராதம் விதிக்கவும், விளம்பர ஒப்பந்தங்களுக்கு தற்காலிகத் தடை விதிக்கவும் அனுமதிக்கிறது.


— அதே நேரத்தில், பிரிவு 21(5), "தன்னால் விளம்பரப்படுத்தப்படும் தயாரிப்பு அல்லது சேவை தொடர்பான விளம்பரத்தில் கூறப்பட்ட உரிமைகோரல்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க உரிய முயற்சியை மேற்கொண்ட" விளம்பரதாரர்களைப் பாதுகாக்கிறது.


இருப்பினும், நுகர்வோர் ஆணையங்களில் சேவை குறைபாடு அல்லது நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் தொடர்பான நுகர்வோர் தகராறுகள் வரும்போது, ​​அந்தச் சட்டம் விளம்பரதாரர்களைப் பற்றி மேலும் குறிப்பிடவில்லை. அது தற்செயலாக நடந்ததல்ல என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.


மத்திய நுகர்வோர் பாதுகாப்பு (Central Consumer Protection Authority) ஆணையத்தால் வெளியிடப்பட்ட தவறான விளம்பரங்கள் தொடர்பான 2022-ஆம் ஆண்டு வழிகாட்டுதல்களின் அடிப்படையிலான வாதங்களையும் நீதிமன்றம் பரிசீலித்தது. இந்த வழிகாட்டுதல்கள் ‘உத்தரவாதம் அளிப்பவர்’ (endorser) என்பதை வரையறுத்து, உரிய விடாமுயற்சியைக் கோரினாலும், நீதிமன்றம் அவற்றை பிரிவு 21-ன் சட்டக் கட்டமைப்புக்குள் செயல்படுவதாகவே கருதியது. மாறாக, அனைத்து வகையான நுகர்வோர் தகராறுகளுக்கும் ஆதரவளிப்பவர்களைப் பொறுப்பாக்குவதில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.


நடிகருக்கும் கடன் வாங்கியவர்களின் பரிவர்த்தனைக்கும் இடையே ஏதேனும் நேரடித் தொடர்பு குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைப் பார்ப்பதற்காக நீதிமன்றம் அந்தப் புகாரை பரிசீலனை செய்தது. அதில் மோகன்லால் பற்றிய இரண்டு குறிப்புகளை மட்டுமே நீதிமன்றம் கண்டறிந்தது: ஒன்று, அவர் அந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதர் என்று குறிப்பிடுவது; மற்றொன்று, அவரை வைத்து வெளிவந்த விளம்பரங்களில் வாக்குறுதியளிக்கப்பட்டபடியே வட்டி விகிதம் இருக்கும் என்று நிறுவனத்தின் மேலாளர் கடன் வாங்கியவர்களுக்கு உறுதியளித்தார் என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.


இந்த வழக்கில் தொடர்புடைய நிகழ்வுகளின் ஒரு பகுதியாக விளம்பரங்கள் இருந்தாலும், விளம்பரப்படுத்தப்பட்டபடி சேவை வழங்குநர் சேவையை வழங்கத் தவறும்போது தான் நியாயமற்ற வர்த்தக நடைமுறை தொடர்பான பிரச்சனை எழுகிறது என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


வழக்கு ஆவணங்களின்படி, அந்தத் தோல்விக்கு நிறுவனம் மட்டுமே பொறுப்பு, விளம்பரதாரர் பொறுப்பு அல்ல என்ற தெரியவந்துள்ளது. சேவைக் குறைபாடு அல்லது நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்கான பொறுப்பை, அவர் அந்த நிறுவன விளம்பரப்படுத்தினார் என்ற ஒரே காரணத்திற்காக, விளம்பரதாரர்மீது குற்றம் சுமத்த முடியாது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.


உங்களுக்குத் தெரியுமா?


மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (Central Consumer Protection Authority (CCPA)) இந்தியாவின் உச்சபட்ச நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பாகும். இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் பிரிவு 10(1)-ன் கீழ் உருவாக்கப்பட்டது மற்றும் 2020-ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது.


இது நுகர்வோர் உரிமைகள் மீறல், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், மற்றும் ஒரு பிரிவினராக நுகர்வோரின் நலன்களுக்கும் பொதுமக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் தவறான அல்லது திசைதிருப்பும் விளம்பரங்கள் தொடர்பான விவகாரங்களைக் கட்டுப்படுத்தும் பணியைக் கொண்டுள்ளது.


2019-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் (Consumer Protection Act) சட்டம், 1986-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மாற்றி அமைத்தது. இந்தச் சட்டம், ஒரு பொருள் அல்லது சேவையின் தரம் அல்லது அளவு குறித்து தவறான தகவல்களை வழங்குதல் மற்றும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் போன்ற குற்றங்களை அங்கீகரிக்கிறது. மேலும், பொருட்கள் மற்றும் சேவைகள் "ஆபத்தானவை, தீங்கு விளைவிப்பவை அல்லது பாதுகாப்பற்றவை" என்று கண்டறியப்பட்டால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் சட்டம் சுட்டிக்காட்டுகிறது.


 Original Article : Who is a endorser? -Roshni Yadav , Khushboo Kumari

Share:

இந்தியா உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மென்னீர் அணு உலைகளை (LWR) அணுசக்தித் துறையின் முன்னுரிமையாகக் கருதுவது ஏன்? -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி :


இந்தியா அணுசக்தித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கத் தொடங்கி, உலகளாவிய ஏற்றுமதி சந்தையில் நுழையத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மென்னீர் அணு  உலை (Light Water Reactor (LWR)) ஒன்றை விரைவாக உருவாக்குவது முக்கியமானதாக இருக்கும் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அறிந்துள்ளது. அணுசக்தித் துறை 900 மெகாவாட் மின்சக்தி உற்பத்தித் திறன் கொண்ட மென்னீர் அணு உலை திட்டத்தின் பணிகளை விரைவுபடுத்துவதில் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கான வடிவமைப்புப் பணிகள் 2015-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டன.


நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட, இந்தியாவின் மாற்றத்திற்கான அணுசக்தியை நிலையான முறையில் பயன்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India (SHANTI)) சட்டம், 2025-க்கும் இதுவே முக்கியக் காரணியாக அமைகிறது. கூடங்குளத்தில் ரஷ்யாவால் கட்டப்பட்ட ஆலைகளைப் போலவே, இறக்குமதி செய்யப்பட்ட மென்னீர் அணு உலை (LWR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியா மேலும் பல அணுமின் திட்டங்களை அமைப்பதை இந்தச் சட்டம் சாத்தியமாக்குகிறது.


முக்கிய அம்சங்கள்:


1. உலகளாவிய அணுசக்தி திட்டத்தின் முக்கிய அங்கமாக மென்னீர் அணு உலைகள் அமைகின்றன. இவை இலகுவான நீர், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பயன்படுத்துகின்றன. மேலும், எளிமையான வடிவமைப்பு, குறைந்த கட்டுமான செலவு, அளவிலான சிக்கனங்கள் மற்றும் அதிக வெப்ப திறன் போன்றவற்றைக் கொண்டுள்ளன.


2. தற்போது உலகின் சிவில் அணு உலை திறனில் 85%-க்கும் மேற்பட்டவை மென்னீர் அணு உலைகள் ஆகும். இந்தப் போக்குக்கு குறைந்தது மூன்று காரணங்கள் உள்ளன:


(i) மென்னீர் அணு உலைகள் (LWRs) கனநீர் உலைகளைவிட எளிமையான வடிவமைப்பைக் கொண்டுள்ளன. அவை குளிரூட்டலுக்கும் வினையைக் கட்டுப்படுத்துவதற்கும் சாதாரண நீரைப் பயன்படுத்துகின்றன. இது அவற்றின் தொழில்நுட்பத்தை, வழக்கமான நீர் அமைப்புகளைச் சார்ந்து இயங்கும் பொதுவான நிலக்கரி அல்லது எரிவாயு மின் நிலையங்களின் தொழில்நுட்பத்திற்கு ஏற்றதாக இருக்கிறது.


(ii) நிறுவப்பட்ட அணுசக்தித் திறனில் பெரும்பாலானவை மென்னீர் அணு உலைகள் வகையைச் சேர்ந்த உலைகளாக இருப்பதாலும் அவற்றின் உற்பத்திச் சிக்கனத்தின் காரணமாகக் குறைந்த கட்டுமானச் செலவுகளைக் கொண்டுள்ளன. இந்த உலைகள் அதிக வெப்பத் திறன் கொண்டவையாகக் கருதப்படுகின்றன.


(iii) மென்னீர் அணு உலைகள் சாதாரண நீரைப் பயன்படுத்தினாலும், அவற்றுக்கு எரிபொருளாக செறிவூட்டப்பட்ட யுரேனியம் (enriched uranium) தேவைப்படுகிறது. மேற்கத்திய உலகின் பெரும்பகுதியில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பெறுவது ஒரு தடையாக இல்லாததால், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் மென்னீர் அணு உலைகளை (LWRs) பரவலாகப் பயன்படுத்துகின்றன. அவை இப்போது பெரும்பாலான சர்வதேச உலைத் தொகுப்புகளின் (international reactor fleets) முதுகெலும்பாக விளங்குகின்றன.


மென்னீர் அணு உலை (light water reactor) ஏன் முக்கியமானது?


1. ஏற்கனவே உள்ள அழுத்தப்பட்ட கனநீர் (pressurised heavy water reactors (PHWR)) உலைகளுடன், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மென்னீர் அணு உலையையும் உருவாக்குவது, அணுசக்தி தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யும்போது வெளிநாட்டு விநியோகஸ்தர்களுடன் சிறந்த ஒப்பந்தங்களை மேற்கொள்ள இந்தியாவுக்கு உதவும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.


2. முக்கியமாக, சர்வதேச உலை சந்தையில் மென்னீர் அணு உலைகளே அதிக அளவில் உள்ளன. இந்திய நிறுவனங்களை உலகளாவிய விநியோகச் சங்கிலியில் சேர்க்கப்படாமல், அணுசக்தி தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்வதில் வெற்றி பெறுவது கடினமானதாக இருக்கும்.


3. மற்ற உலை வகைகளில் இந்தியா தனது முக்கிய பலங்களைத் தக்க வைத்துக் கொண்டாலும், ஆதிக்கம் செலுத்தும் உலகளாவிய மென்னீர் அணு உலை சூழலமைப்பைப் பயன்படுத்திக்கொள்ள, சாந்தி சட்டத்தால் கொண்டுவரப்பட்ட சட்ட மாற்றங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.


4. குறிப்பாக, இந்தியாவின் சிவில் அணுசக்தித் திட்டம், 220 மெகாவாட் அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் முதல் புதிய 700 மெகாவாட் அலகுகள் வரை கனநீர் உலைகளைத் தயாரிப்பதில் அதிக நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது. அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் (Pressurised Heavy Water Reactors (PHWRs)) கனநீர் மற்றும் இயற்கை யுரேனியத்தைப் பயன்படுத்துகின்றன. மேலும், இவற்றை உருவாக்குவதில் இந்தியா அதிக நிபுணத்துவம் பெற்றுள்ளது. இருப்பினும், அவை இப்போது உலக அணுசக்தி சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் மென்னீர் அணு உலைகளால் (light water reactors (LWRs)) படிப்படியாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டு வருகின்றன.


இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தித் திட்டம்


1. இந்தியாவின் அணுசக்திப் பயணம், சுதந்திரம் பெற்ற சிறிது காலத்திலேயே, 1948-ஆம் ஆண்டில் அணுசக்தி ஆணையம் உருவாக்கப்பட்டதன் மூலம் தொடங்கியது. 1956-ஆம் ஆண்டில், ஆசியாவின் முதல் ஆராய்ச்சி உலை, அப்சரா, த்ரோம்பேயில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (Bhabha Atomic Research Centre (BARC)) உருவாக்கப்பட்டது.


2. ஜப்பானுக்குப் பிறகு, சீனாவுக்கு அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு முன்பே, 1969-ல் தாராப்பூரில் அணுமின் நிலையத்தை அமைத்த 2-வது ஆசிய நாடு இந்தியா ஆகும். மேலும், 1950 மற்றும் 1960களில் தனது மேற்கத்திய நட்பு நாடுகளின் உதவியுடன் ஒரு ஈர்க்கக்கூடிய அணுசக்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தையும் இந்தியா உருவாக்கியது.


3. எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அணுசக்தியின் மூன்று கட்டத் திட்டத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு, இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் ஹோமி ஜே பாபா மற்றும் வேக ஈனுலைகளின் (fast breeder reactors (FBRs)) தேவையை உணர்ந்த டாக்டர் விக்ரம் சாராபாய் ஆகியோருக்கு இந்தியா கடன்பட்டுள்ளது. ஏனெனில், இந்த உலைகள் வளமான isotope-களைப் பிளவுபடக்கூடிய பொருட்களாக மாற்றுவதன் மூலம், அவை பயன்படுத்துவதைவிட அதிக அணு எரிபொருளை உற்பத்தி செய்கின்றன.


நிலை கட்டம்: அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் (Pressurised Heavy Water Reactors (PHWRs)) மின்சாரம் தயாரிக்க இயற்கை யுரேனியம் அடிப்படையிலான எரிபொருட்களைப் பயன்படுத்துகின்றன. அதே நேரத்தில், அவை பிளவுபடக்கூடிய புளூட்டோனியத்தையும் (Pu239) உற்பத்தி செய்கின்றன. இது பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசுழற்சி செய்வதன் மூலம் பிரித்தெடுக்கப்படலாம். இது கனநீரை (டியூட்டீரியம் ஆக்சைடு) குளிரூட்டியாகவும் வினைப்படுத்தியாகவும் பயன்படுத்துகிறது. இந்தத் திட்டம், இறக்குமதி செய்யப்பட்ட மென்னீர் அணு உலைகளின் கட்டுமானத்தால் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

Knowledge Nugget: India flags the Indigenous Light Water Reactor (LWR) as nuclear priority. But why?

நிலை 2: இது கல்பாக்கத்தில் உள்ளதைப் போன்ற வேக ஈனுலைகளை (Fast Breeder Reactors (FBRs)) நிறுவுவதையும், புளூட்டோனியம் அடிப்படையிலான எரிபொருட்களைப் பயன்படுத்தி அணுசக்தித் திறனை அதிகரிப்பதையும், வளமான தோரியத்தை பிளவுபடக்கூடிய யுரேனியம் (U233) ஆக மாற்றுவதையும் நோக்ககமாக கொண்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசுழற்சி செய்வது, புளூட்டோனியம் இருப்பை திறமையாகப் பயன்படுத்துவதற்கு மிகவும் முக்கியமான நடவடிக்கையாக இருக்கும்.


நிலை 3: மூன்றாவது கட்டம் தோரியம்-யுரேனியம்-233 சுழற்சியை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது கட்டத்தில் உருவாக்கப்படும் யுரேனியம்-233, மூன்றாவது கட்டத்தில் உள்ள மேம்பட்ட உலைகளுக்கு எரிபொருளாகப் பயன்பட்டு, இந்தியாவின் நீண்டகால எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும். இதற்காக மேம்பட்ட கனநீர் உலை (Advanced Heavy Water Reactor (AHWR)) முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது, ​​உருகிய உப்பு உலைகளைப் பயன்படுத்துவதும் ஒரு  வழியாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.


2025ஆம் ஆண்டு  சாந்தி சட்டம் (SHANTI ACT) என்றால் என்ன?


1. டிசம்பர் மாத தொடக்கத்தில், நாடாளுமன்றம் இந்தியாவை மாற்றுவதற்கான நிலையான அணுசக்தி பயன்பாடு மற்றும் முன்னேற்றம் (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India (SHANTI) Act) சட்டம், 2025-ஐ நிறைவேற்றியது. இது வரும் ஆண்டுகளில் இந்தியாவின் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும் அணுசக்தித் துறை எதிர்காலத்தில் எவ்வாறு நிர்வகிக்கப்படும் என்பதில் ஒரு பெரிய மாற்றத்தைக் காட்டியது.


2. இந்தச் சட்டம் உலகளாவிய அணுசக்தி வர்த்தக விதிமுறைகளுக்கு ஏற்ற ஒரு முயற்சியாகும். இது 1962-ஆம் ஆண்டின் அணுசக்திச் (Atomic Energy Act) சட்டம் மற்றும் 2010-ஆம் ஆண்டின் அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்புச் (Civil Liability for Nuclear Damage Act) சட்டம் ஆகியவற்றை ஒரே சட்டத்தின் கீழ் கொண்டுவருகிறது.


3. புதிய சட்டம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இரண்டும் அணுமின் நிலையங்களைக் கட்டவும், அணு எரிபொருள், தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் கனிமப் பொருட்களைக் கொண்டு செல்வது, சேமிப்பது, இறக்குமதி செய்வது மற்றும் ஏற்றுமதி செய்வது போன்ற பணிகளைக் மேற்கொள்ளவும் அனுமதிக்கிறது. இதுவரை, இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு (public sector) மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.


\Original Article : India flags the Indigenous Light Water Reactor (LWR) as nuclear priority. But why? -Roshni Yadav

Share:

இந்தியா தனது டிஜிட்டல் மோசடி தடுப்புத் திறனை எவ்வாறு பலப்படுத்துகிறது? -ஷாம்னா தச்சம் போயில்

இணையவழிக் குற்றங்கள் நடந்த பிறகு அவற்றிற்குப் பதில் அளிப்பதைக் காட்டிலும், வலிமையான கட்டமைப்பு வசதிகள் மூலம் அக்குற்றங்கள் நடக்காமல் முன்கூட்டியே தடுக்கும் முறைக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இருப்பினும், 'டிஜிட்டல் அரெஸ்ட்' (Digital Arrest) மோசடிகளை முழுமையாகத் தடுக்க மேம்பட்ட தொழில்நுட்பம், கடுமையான விதிமுறைகள் மற்றும் பொதுமக்களின் அதிகப்படியான நம்பிக்கை ஆகியவை அவசியமாகும். டிஜிட்டல் மோசடிகளுக்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? மேலும் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்?

சமீப நாட்களில், 'டிஜிட்டல் அரெஸ்ட்' (Digital Arrest) மோசடியில் 70 வயது மூதாட்டி ஒருவர் ₹6.9 கோடி ரூபாயை இழந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல், டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் ஒரு முதிய தம்பதியினரிடம் இதேபோன்ற மோசடி மூலம் சுமார் ₹14.85 கோடி ரூபாய் திருடப்பட்டுள்ளது. இந்தத் திருடப்பட்ட பணத்தை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மூன்று முக்கிய வங்கிக் கணக்குகளை டெல்லி போலீசார் கண்டறிந்துள்ளனர். மேலும், இது தொடர்பாகக் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இந்தச் சம்பவங்கள் நாடு முழுவதும் இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருவதைப் பிரதிபலிக்கின்றன. இந்தியாவில் 2024-ஆம் ஆண்டில் மட்டும், பதிவு செய்யப்பட்ட 1,23,672 புகார்களின் அடிப்படையில், சுமார் ₹22,842 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது 2023-ஆம் ஆண்டில் ஏற்பட்ட ₹7,465.18 கோடி இழப்பை விட 206% அதிகம் ஆகும். மேலும், 2022-ஆம் ஆண்டில் இந்த இழப்பு ₹2,306 கோடிக்கும் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. 


டிஜிட்டல் கைது மோசடி என்பது, மோசடி செய்பவர்கள் தங்களை மத்திய புலனாய்வு அமைப்பு (Central Bureau of Investigation), அமலாக்கத்துறை (Enforcement Directorate (ED)) அல்லது காவல்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு, காணொளி அழைப்பின் (Video Call) மூலமாக பொது மக்களைத் தொடர்புகொள்கிறார்கள். பின்னர், போதைப்பொருள் கடத்தல், கள்ளப்பணப் பரிமாற்றம் (Money Laundering) அல்லது பயங்கரவாதம் போன்ற கடுமையான குற்றங்களில் அவர்கள் ஈடுப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்கள்.


பாதிக்கப்பட்டவர்களின் ஆதார் விவரங்கள், வங்கி கணக்குகள் அல்லது கூரியர் பார்சல்கள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவை என்று கூறி, மோசடியாளர்கள் அவர்களை மணிக்கணக்காக அல்லது பல நாட்களுக்கு காணொளி அழைப்பில் (Video Call) வைத்திருந்து, "டிஜிட்டல் கைது" (Digital Custody) என்ற போலிச் சிறையில் அடைக்கிறார்கள். கைது செய்யப்படுவீர்கள், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது பொதுவெளியில் அவமானப்படுத்தப்படுவீர்கள் என்று மிரட்டி, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெருந்தொகையைத் திருடுகிறார்கள். இந்த மோசடிகள் பார்ப்பதற்கு அப்படியே உண்மையான அரசு நடைமுறைகள் போலவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் போலி அடையாள அட்டைகள், வழக்கு எண்கள், ஆணைகள், மாற்றப்பட்ட தொலைபேசி எண்கள் மற்றும் டீப்ஃபேக் (Deepfake) வீடியோக்களைப் பயன்படுத்துகின்றனர். வேலைக்குச் செல்வோர், ஓய்வு பெற்றவர்கள், மாணவர்கள் எனப் பலரையும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரையும் அவர்கள் குறிவைக்கின்றனர்.


"டிஜிட்டல் கைது" என்பதன் வரையறையில் உள்ள தெளிவின்மை


‘டிஜிட்டல் கைது’ (Digital arrest) என்பது எந்தவொரு சட்டத்திலும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. ஆன்லைன் மோசடிகள் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (Information Technology Act) 2000-ன் கீழும், திட்டமிடப்பட்ட குற்றங்கள் பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita (BNS)) 2023-ன் கீழும் கொண்டு வரப்பட்டாலும், இந்த இரண்டு சட்டங்களுமே ‘இணையவழி குற்றம்’ (cybercrime) என்பதைத் தெளிவாக வரையறுக்கவில்லை. இது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது.


பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)), 2023-ன் பிரிவு 63-ன்கீழ், நீதிமன்ற அழைப்பாணைகளை  மின்னணு முறையில்  அனுப்ப முடியும். ஆனால், அவை குறியாக்கம் செய்யப்பட்டிருக்க (Encrypted) வேண்டும் மற்றும் நீதிமன்றத்தின் முத்திரை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் கையொப்பத்தைக் கொண்டிருக்க வேண்டும். இது நடைமுறைகளை விரைவுபடுத்தினாலும், கைது நடவடிக்கைகளின்போது குற்றம்சாட்டபட்ட நபர் நேரில் காவலில் எடுக்கப்பட வேண்டும் என்றும், கைது செய்யும் அதிகாரி முறையான அடையாள அட்டையைக் காட்ட வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட அந்த நேரத்திலேயே 'கைது குறிப்பாணை' (Arrest Memo) தயார் செய்யப்பட வேண்டும் என்றும் பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டப்பிரிவில்  தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


பிரிவு 35(3)-ன்படி, பிரிவு 35(1)-ன்கீழ் ஒருவரைக் கைது செய்வதற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாதபோது, காவல்துறை அந்த நபரை உடனடியாகக் கைது செய்வதற்குப் பதிலாக, விசாரணைக்கு வருமாறு ஒரு அறிவிப்பை (Notice) வழங்கலாம். இது ஒரு புலன் விசாரணைக்கு உட்பட்ட குற்றத்தில் (Cognisable offence) தொடர்புடையதாகக் கருதப்படும் நபர்களுக்குப் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


இருப்பினும், 'டிஜிட்டல் கைது' மோசடிகளை கையாள்வதற்கு இந்திய சட்டம் அமலாக்க முகமைகளுக்குப் பல வழிகளை வழங்குகிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act), அனுமதியின்றி ஒருவரின் தகவல்களை அணுகுவது, அடையாளத் திருட்டு மற்றும் ஆன்லைன் மோசடிகளை குற்றமாக அறிவிக்கிறது. ஏமாற்றுதல், மிரட்டல், பணம் பறித்தல், ஆள்மாறாட்டம் மற்றும் குற்றச்சதி தொடர்பான பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகளையும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்துடன் சேர்த்து பயன்படுத்த வழிவகை செய்கிறது. 


2023-ஆம் ஆண்டின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம், தனிநபர் தரவைப் பயன்படுத்துவதற்கு முன் சம்பந்தப்பட்டவரின் அனுமதியைப் பெறுவதைக் கட்டாயமாக்குகிறது. மேலும், தேவைக்கு அதிகமான தரவுகளைச் சேகரிப்பதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தரவு பாதுகாப்பை (Data Privacy) இந்தச் சட்டம் பலப்படுத்துகிறது. இதற்கான நடைமுறை அமைப்புகள் இன்னும் முழுமையாக உருவாக்கப்பட்டு வரும் நிலையிலும், தனிநபர் தரவைத் தவறாகப் பயன்படுத்துவதோ அல்லது தகவல்கள் கசிவதோ தெளிவான சட்ட மீறலாக வரையறுக்கப்படுகிறது.


இணையவழி மோசடிகளை எதிர்கொள்ள இந்தியா ஒரு பல அடுக்கு அமைப்பை (multi-layered system) உருவாக்கியுள்ளது. இந்திய இணையவழி குற்ற ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre (I4C)), மாநில இணைய காவல் நிலையங்கள், தேசிய இணையவழி குற்றப் புகாரளிப்பு தளம், 1930 உதவி எண் மற்றும் குடிமக்கள் நிதி இணையவழி மோசடி புகாரளிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு ஆகியவை இணைந்து, மோசடிகளை விரைவாகக் கண்டறிந்து பணத்தை முடக்க ஒரு தேசிய அளவிலான பொறிமுறையாகச் செயல்படுகின்றன.


எனவே, டிஜிட்டல் கைது (Digital Arrest) மோசடிகள் தொடர்ந்து நடைபெறுவதற்குக் காரணம் வலுவான சட்டங்கள் இல்லாதது அல்ல; மாறாக, செயல்படும் திறன், ஒருங்கிணைப்பு மற்றும் அமைப்பின் வடிவமைப்பில் உள்ள குறைபாடுகளே ஆகும். குடிமக்களிடையே டிஜிட்டல் விழிப்புணர்வு சீராக இல்லாதது, மாநிலங்களுக்கு இடையே காவல்துறைத் திறனில் உள்ள வேறுபாடுகள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கும் அமலாக்க அமைப்புகளுக்கும் இடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லாதது போன்ற காரணங்களே இந்தப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கின்றன. 


பல அடுக்கு பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குதல்


இந்திய இணையவழி குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C), மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் ஒரு அலுவலகமாகும். இது நாடு முழுவதும் பதிவாகும் இணையக் குற்றப் புகார்களுக்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்கிறது. 2024-ஆம் ஆண்டில் மட்டும், 'டிஜிட்டல் கைது' (Digital Arrest) மோசடிகளுடன் தொடர்புடைய 1,700-க்கும் மேற்பட்ட ஸ்கைப் (Skype) அழைப்பெண்கள், 59,000 வாட்ஸ்அப் கணக்குகள், 6.69 லட்சம் சிம் கார்டுகள் மற்றும் 1.32 லட்சம் சர்வதேச கைபேசி சாதன அடையாள எண்களை (International Mobile Equipment Identity (IMEI)) எண்களை இந்த மையம் முடக்கியுள்ளது.


இந்திய மொபைல் எண்களைக் காட்டி ஏமாற்றும் சர்வதேச அழைப்புகளை (Spoofed calls) கண்டறிந்து முடக்குவதற்கான அமைப்புகளை மத்திய அரசும், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் ஏற்படுத்தியுள்ளன. குடிமக்கள் நிதி சார்ந்த சைபர் மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பு (Citizen Financial Cyber Fraud Reporting and Management System) இதுவரை ₹3,431 கோடிக்கும் அதிகமான மோசடிகளைத் தடுத்துள்ளது.


இந்த நடவடிக்கைகள் செய்தித்தாள் விளம்பரங்கள், டெல்லி மெட்ரோ அறிவிப்புகள், சமூக ஊடகப் பிரபலங்கள் (influencers), பிரசார் பாரதி நிகழ்ச்சிகள், அகில இந்திய வானொலி ஒலிபரப்புகள் மற்றும் ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் உள்ள டிஜிட்டல் திரைகள் மூலமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்களாகக் கொண்டு செல்லப்படுகின்றன. டிஜிட்டல் கைதுக்கு (digital arrest) வழிவகுக்கும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகளுக்குப் பதிலளிப்பதற்கு முன், மக்கள் "நிறுத்துங்கள், சிந்தியுங்கள், பிறகு செயல்படுங்கள்" (Stop, Think, and Act) என்று அறிவுறுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் "மன் கி பாத்" (Mann ki Baat) நிகழ்ச்சியைப் பயன்படுத்தியுள்ளார்.


கூடுதலாக, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு குறுஞ்செய்திகள் (SMS) மூலம் வரும் ஒரு முறை பயன்படும் கடவுச்சொல் (OTP) முறையைத் தாண்டி அடுத்த கட்டத்திற்குச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஜூலை மாதம் 2024-ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இதற்கு மாற்றான அங்கீகார முறைகளைப் பரிந்துரைக்கும் ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டது. மேலும், அதன் கண்டுபிடிப்பு மையம் (Innovation Hub), பணப்பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து போலி கணக்குகளைக் கண்டறிய MuleHunter.AI என்ற செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கியுள்ளது.


டிஜிட்டல் கைது மோசடி பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைக்கிறது


இந்தியாவின் வேகமான டிஜிட்டல் மயமாக்கல், லட்சக்கணக்கான மக்கள், பல்வேறு சேவைகளை எளிதாகப் பெறுவதற்கு வழிவகுத்துள்ளது. இருப்பினும், இது எதிர்பாராதவிதமாக "இணையவழி  மோசடி பெரும்பரவல்" (cyber fraud epidemic) என்று அழைக்கப்படும் ஒரு நிலைக்கு வழிவகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது டிஜிட்டல் அமைப்புகளின்மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வலுவிழக்கச் செய்துள்ளது. குறிப்பாக, "டிஜிட்டல் கைது" (Digital Arrest) போன்ற மோசடிகள் உடனடி பண இழப்பை ஏற்படுத்துவதோடு, காலப்போக்கில் இந்தியாவின் டிஜிட்டல் சூழல் மீதான நம்பிக்கையையும் சிதைக்கின்றன.


பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கடுமையான நிதி இழப்புகளைச் சந்திக்கின்றனர். இது சில நேரங்களில் அவர்களது குடும்பங்களைக் கடன் சுமைக்குள் தள்ளுகிறது. மேலும், பலர் பயம், அவமானம் மற்றும் குழப்பம் போன்ற நீண்டகால மனரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். சில பாதிக்கப்பட்டவர்கள் இக்குற்றத்தைப் புகாரளிக்கத் தயங்குவதாலோ அல்லது தவிர்ப்பதாலோ, மோசடி செய்பவர்கள் திருடப்பட்டப் பணத்தை வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மிக விரைவாக மாற்றிவிடுவதாகக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.


மேலும், இந்த மோசடிகள், குறிப்பாக நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் இருக்கும் டிஜிட்டல் அறிவுப் பற்றாக்குறையை வெளிப்படுத்துகின்றன. வேகமான டிஜிட்டல் மாற்றங்களுக்கு நமது சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பதையே இந்த மோசடிகள் காட்டுகின்றன. மேலும், உண்மையான அரசு உத்தரவுகளுக்கும் போலியான அறிவிப்புகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை எப்படிக் கண்டறிவது என்பதில், முதியவர்கள் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாத மக்களிடையே இந்தச் சம்பவங்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.


உச்சநீதிமன்றத்தின் போலி முத்திரைகளுடன் கூடிய தவறான நீதிமன்ற உத்தரவுகள் பரப்பப்பட்டது குறித்து நீதிமன்றம் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளது. அதாவது, இத்தகைய டிஜிட்டல் கைது மோசடிகள், நீதித்துறை அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் அடித்தளத்தையே சிதைக்கின்றன' என்று நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.


டிஜிட்டல் முறையில் நடக்கும் போலி கைதுகள் பற்றி உச்சநீதிமன்றம் கவனித்துள்ளது


உச்சநீதிமன்றம் ரிசர்வ் வங்கியிடம், சந்தேகத்திற்குரிய வங்கி கணக்குகளைக் கண்டறியவும், குற்றத்தின் மூலம் ஈட்டப்பட்ட பணத்தை முடக்கவும், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) அல்லது இயந்திரக் கற்றல் (Machine Learning) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியுமா என்று கண்டறிய உதவுமாறு கேட்டுக்கொண்டது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, 'டிஜிட்டல் கைது' (Digital Arrest) தொடர்பான விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) அவசர கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும், டிஜிட்டல் கைது மோசடிகள் தொடர்பான வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பு முதலில் விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


இந்த மோசடிகளில் போலி வங்கிக் கணக்குகள் (mule accounts) முக்கியப் பங்கு வகிப்பதால், குறிப்பாக டிஜிட்டல் கைது மோசடிகளுக்காக வங்கிக் கணக்குகள் தொடங்கப்படும்போது, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளை ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரிக்க மத்திய புலனாய்வு அமைப்புக்கு (CBI) சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


வெளிநாட்டு வரி ஏய்ப்பு மையங்களில் (offshore tax havens) இருந்து செயல்படும் இணைய குற்றவாளிகளைக் கண்டறிய, பன்னாட்டு காவல்துறை (Interpol) உதவியை நாடுமாறு உச்சநீதிமன்றம் மத்திய புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிட்டது. முறையான சோதனைகள் இன்றி ஒரே நபருக்குப் பல சிம்கார்டுகளை வழங்குவதை நிறுத்துவதன் மூலம் தொலைத்தொடர்பு விதிமுறைகளை வலுப்படுத்துமாறு நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டது. கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாப்பதில் ஏற்படும் தாமதங்களுக்கும், இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையங்களை விரைவாக உருவாக்குவதற்கும் மாநிலங்களே நேரடிப் பொறுப்பேற்கும் ஒரு வலுவான அமைப்பை உருவாக்க இந்த முறை உதவுகிறது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 


இந்த நீதிமன்ற நடவடிக்கைகள் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டவை என்பதோடு, காவல்துறை வெறும் புகார்களுக்குப் பதிலளிப்பதைத் தாண்டி, குற்றங்கள் நடக்கும் முன்பே தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதைக் காட்டுகின்றன. இருப்பினும், இத்தகைய மோசடிகளை முழுமையாக ஒழிக்கத் தொழில்நுட்பம், நெறிமுறைகள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 'டிஜிட்டல் கைது' மோசடிகள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மின்-ஆளுமை (e-governance) மீதான குடிமக்களின் நம்பிக்கையை அச்சுறுத்துகின்றன. இந்தச் இணையவழிக் குற்றங்களுக்கு எதிரானப் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தால், இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பை வலுவான சட்ட அடித்தளங்களுடன் மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

 

உலகளாவிய  திட்டங்களின் மூலம் கிடைத்த பாடங்கள்


இணையவழி குற்றங்கள் நாடுகளின் எல்லைகளைத் தாண்டி நடப்பதால், அவற்றைக் கட்டுப்படுத்த வலுவான மற்றும் தீவிரமான உலகளாவிய ஒத்துழைப்பு அவசியமாகும். 2001-ஆம் ஆண்டின் ஐரோப்பியக் கூட்டமைப்பின் புடாபெஸ்ட் ஒப்பந்தம் (Budapest Convention) இதற்கான முக்கிய சர்வதேச சட்டக் கட்டமைப்பாக உள்ளது. அதேபோல், இணைய குற்றங்களை எதிர்கொள்வதற்கான முக்கியமான உலகளாவிய முயற்சியாக ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தமும் (UN Convention) விளங்குகிறது.


பன்னாட்டுக் காவல்துறை (INTERPOL) மற்றும் ஐரோப்பிய ஒன்றிய காவல்துறை (Europol) போன்ற நீண்டகாலமாகச் செயல்படும் அமைப்புகள், கூட்டு விசாரணைகள் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகின்றன. இதற்கு உதாரணமாக, ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட 'ஆபரேஷன் செரெங்கெட்டி' (Operation Serengeti) மற்றும் இங்கிலாந்து நாட்டில் 'லேப்-ஹோஸ்ட்' (LabHost) முடக்கப்பட்டதை சுட்டிக்காட்டுகின்றனர். 


ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU), டிஜிட்டல் சேவைகள் சட்டம் (Digital Services Act) பெரிய ஆன்லைன் நிறுவனங்களுக்கு சில முக்கியக் கடமைகளை விதித்துள்ளது. இதன்படி, அந்த நிறுவனங்கள் சட்டவிரோதமான பதிவுகளைப் புகாரளிக்க வேண்டும், வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும், வரக்கூடிய அபாயங்களைக் கணித்துச் செயல்பட வேண்டும் மற்றும் தணிக்கைகளுக்கு (Audits) உட்பட வேண்டும் என்பன போன்ற அம்சங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த அணுகுமுறை, இணையதளங்களை ஒரு பொறுப்புள்ள அமைப்பாகக் கருதுகிறது. குறிப்பாக, ஏமாற்றும் விளம்பரங்கள், டீப்ஃபேக் (Deepfake) அழைப்புகள் மற்றும் மோசடி செயலிகள் போன்ற அதிக ஆபத்துள்ள விஷயங்களில் இந்த நிறுவனங்களுக்கு அதிகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


அதேபோல், ஐரோப்பிய ஒன்றியத்தின் பணப்பரிமாற்றச் சேவை சீர்திருத்தங்கள், இப்போது வங்கிகள் மற்றும் இடைத்தரகர்கள்மீது கூடுதல் பொறுப்பை சுமத்துகின்றன. சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றங்களை அவர்கள் முடக்க வேண்டும். மேலும், பாதுகாப்பு அமைப்புகள் தோல்வியடையும்போது நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இது, தவறுகளுக்குப் பயனாளர்களைக் குற்றம்சாட்டுவதற்குப் பதிலாக, சேவை வழங்கும் நிறுவனங்களையே பொறுப்பாக்கும் ஒரு நியாயமான மாற்றத்தைக் குறிக்கிறது. டிஜிட்டல் மோசடிகளுக்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியாவும் இத்தகைய மாற்றங்களைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

 Original Article : How India strengthens its digital-fraud resilience?. -Shamna Thacham Poyil

Share:

அமெரிக்காவின் கிரீன்லாந்து உரிமைகோரல் NATO, ரஷ்யா மற்றும் கனடாவுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? -அனில் சசி

 நேட்டோ அமைப்பு நிலைகுலைகிறது


இத்தகைய நடவடிக்கையினால் முதலில் பாதிக்கப்படக்கூடிய முக்கிய அமைப்பு வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) (North Atlantic Treaty Organisation (NATO)) ஆகும். பனிப்போரின் போது சோவியத் ஒன்றியத்திடமிருந்து ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக, 1949-ஆம் ஆண்டில் 12 நாடுகளால் நேட்டோ என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது இதில் 32 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் முக்கிய கொள்கை என்னவென்றால், இதில் உள்ள ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது அனைத்து நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும். இது நேட்டோ ஒப்பந்தத்தின் பிரிவு 5-ல் (Article 5) தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


நேட்டோ அமைப்பின் பிரிவு 5-ஆனது (உறுப்பு நாடுகளுக்கான பாதுகாப்பு விதி) இதுவரை ஒரே ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவிற்கு ஆதரவு அளிக்க இந்த விதியானது பயன்படுத்தப்பட்டது. கிரீன்லாந்தை நிர்வகிக்கும் நாடான டென்மார்க், இந்த விதியைப் பயன்படுத்த முதன்முதலில் முன்வந்த நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பின்னர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளுடன் இணைந்து டென்மார்க் வீரர்கள் போரிட்டனர். அங்கு அந்த நாட்டு வீரர்கள் 43 பேர் கொல்லப்பட்டனர். நேட்டோ உறுப்பு நாடுகளுடன் ஒப்பிடுகையில், மக்கள்தொகை அடிப்படையில் பார்க்கும் இது மிகப்பெரிய உயிரிழப்பாகக் கருதப்படுகிறது.


அமெரிக்கா கிரீன்லாந்திற்கு எதிராக இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால், அது நேட்டோ (NATO) அமைப்பையே அழித்துவிடும் என்கின்றனர். நேட்டோ ஒப்பந்தத்தின் பிரிவு 5 (Article 5), அந்த அமைப்பிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஒரு நாடு, மற்றொரு உறுப்பு நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் ஒரு சூழலை அந்த நாடுகள் எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை அப்படி நடந்தால், தாங்கள் 'பிரிவு 5'-ஐப் பயன்படுத்துவோம் என்று டென்மார்க் அரசு கூறியுள்ளது. ஆனால், அதற்குப் பிறகான விளைவுகள் குறித்து பலரும் எச்சரிக்கின்றனர். 


இதில் மற்றொரு முரண்பாடு என்னவென்றால், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்துக்கள் அமெரிக்காவின் எதிரிகளான ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் சாதகமாக அமைகின்றன. சோவியத் ஒன்றியத்தின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவே நேட்டோ (NATO) அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த அமைப்பிற்குள் தற்போது ஏற்படும் உட்பூசல்கள், ரஷ்யாவிற்கும், அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதினுக்கும் மட்டுமே சாதகமாக அமையும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். 


நேட்டோ (NATO) அமைப்பை பலவீனப்படுத்தும் அல்லது உக்ரைன் போரில் நேட்டோ நாடுகளின் ஆதிக்கத்தை திசைதிருப்பும் எந்தவொரு செயலையும் புதின் ஆதரிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், தற்போது ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவின் ஆதிக்கத்தைக் குறைக்கவே கிரீன்லாந்து திட்டம் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ரஷ்யாவைத் தடுக்க மிகச்சிறந்த வழி உக்ரைன் போரில் புதினைத் தோற்கடிப்பதுதான் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, இப்போது கிரீன்லாந்து விவகாரத்தில் கவனம் செலுத்துவது அர்த்தமற்றது என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர்.


நேட்டோ (NATO) அமைப்பின் பலம் என்பது அதன் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் ஒவ்வொரு நாட்டின் இறையாண்மைக்கும் அளிக்கப்படும் மரியாதையைப் பொறுத்தே அமைகிறது என்று அமெரிக்க செனட் வெளியுறவு உறவுக் குழுவின் முக்கிய உறுப்பினரான ஜீன் ஷாஹீன் (Jeanne Shaheen) கூறினார். ஜனவரி மாதம் 13-ஆம் தேதி ஜீன் ஷாஹீனும் லிசா முர்கோவ்ஸ்கியும் (Lisa Murkowski) இணைந்து 'நேட்டோ ஒற்றுமைப் பாதுகாப்புச் சட்டத்தை' (NATO Unity Protection Act) அறிமுகப்படுத்தியபோது இந்த அறிக்கையை வெளியிட்டனர். நேட்டோ உறுப்பு நாடுகளின் பகுதிகளை முற்றுகையிடவோ, ஆக்கிரமிக்கவோ அல்லது இணைத்துக்கொள்ளவோ அமெரிக்க பாதுகாப்புத் துறை அல்லது வெளியுறவுத் துறை நிதியைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.


மூன்றாவதாக, 1951-ஆம் ஆண்டில் கிரீன்லாந்துடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் உட்பட, அமெரிக்காவிற்குத் தேவையான அனைத்தும் ஏற்கனவே அமெரிக்கா வசம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா ஒரு காலகட்டத்தில் கிரீன்லாந்தில் 17 ராணுவத் தளங்களை இயக்கி வந்தது. ஆனால், பின்னர் 16 தளங்கள் இனி தேவையில்லை என்று அமெரிக்கா அரசாங்கம் முடிவு செய்தது. ஆனால், தற்போதும் கூட அமெரிக்க அரசாங்கம் விரும்பினால், இந்தத் தளங்களை உடனடியாக மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர முடியும் என்றும் எச்சரிக்கின்றனர்.


நேட்டோ (NATO) அமைப்பின் கடற்படை வலிமையை எதிர்கொள்வதற்காக, ஆர்க்டிக் பகுதியில் சீனாவும் ரஷ்யாவும் தங்களது ஆதிக்கத்தை அதிகரித்து வருகின்றன என்று டிரம்ப் கூறுவது ஏற்கத்தக்கது என்றாலும் அந்தப் பகுதிகள் குறித்த அவரது கணிப்பு தவறு என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். அவர்களின் கவனம் கிரீன்லாந்து பகுதிகளின் மீது இல்லை என்றும் மாறாக அலாஸ்காவை (Alaska) சுற்றியுள்ள கடல் பகுதிகளில்தான் அந்நாடுகளின் கவனம் உள்ளது என்றும் குறிப்பிடுகின்றனர். 


ஆர்க்டிக் கடற்பகுதியில் சீனாவும் ரஷ்யாவும் மிக நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாக, பாதுகாப்புத்துறை துணைச் செயலாளர் கேத்லீன் ஹிக்ஸ் ஜூலை மாதம் 2024-ஆம் ஆண்டில் தெரிவித்தார். ரஷ்யாவின் ஆர்க்டிக் எரிசக்தி திட்டங்களுக்கு சீனா பெருமளவில் நிதியுதவி அளிக்கிறது என்றும் அலாஸ்கா கடற்கரை பகுதிகளில் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வது உட்பட இரு நாடுகளும் தங்களது ராணுவ ஒத்துழைப்பை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 


பனிப்போர் காலத்தின் போது ஆர்க்டிக் பகுதியில் அமைக்கப்பட்ட அமெரிக்காவின் பெரும்பாலான உள்கட்டமைப்புகள், தற்போது உறைந்த நிலப்பரப்புகள் உருகுவதாலும் கடற்கரை அரிப்பினாலும் சிதைந்து வருவதாக அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் (Pentagon) வெளியிட்ட (2024 Arctic Strategy) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கும், அலாஸ்காவைச் சுற்றியுள்ள பகுதிகளே அதிக பாதிப்புக்கு உள்ளவதாகக் கூறப்பட்டுள்ளது.


ஆதரவாளர்கள்


கிரீன்லாந்தை கைப்பற்ற ட்ரம்ப்பின் திட்டம் என்ன? இராணுவரீதியாக அதைக் கைப்பற்றும் வாய்ப்பு நிராகரிக்கப்படவில்லை என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவது குறித்து ஐரோப்பிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார். இருப்பினும், கிரீன்லாந்தை விற்பதற்கு விருப்பமில்லை என்பதை டென்மார்க் அரசு தெளிவாகத் தெரிவித்துவிட்டது. இந்தப் பிரச்சனை டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் பகுதியிலும் (Copenhagen), கிரீன்லாந்து தலைநகர் நூக் (Nuuk) பகுதியிலும் மிகுந்த அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரீன்லாந்து தொடர்பான வணிக ரீதியான ஒப்பந்தத்தை டென்மார்க் அரசு பரிசீலித்தால்கூட, அந்நாட்டு அரசாங்கத்தின் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


டிரம்பிற்கு நெருக்கமான பல்வேறு குழுக்களிடமிருந்து கிரீன்லாந்து பகுதியைக் கைப்பற்றுவதற்கான அழுத்தம் வருவதாகத் தெரிகிறது. பேபால் (PayPal) மற்றும் பாலந்திர் (Palantir) நிறுவனங்களின் நிறுவனரும், டிரம்பின் நண்பருமான பீட்டர் தியல், கிரீன்லாந்து போன்ற ஒரு இடத்தில் நாடுகளுக்கு அப்பாற்பட்ட, கட்டுப்பாடுகளற்ற ஒரு புதிய குடியேற்றத்தை உருவாக்குவது பற்றி விவாதித்துள்ளார். எலான் மஸ்க், கிரீன்லாந்தின் பனிக்கட்டிகளுக்கு அடியில் இருக்கும் அரிய மண் தாதுக்கள் (rare earth minerals) மீது ஆர்வம் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. எஸ்டீ லாடர் (Estée Lauder) நிறுவனத்தின் தலைவரும், டிரம்பின் நம்பிக்கைக்குரியவருமான அமெரிக்கப் பணக்காரர் ரொனால்ட் லாடர், கிரீன்லாந்து குறித்த யோசனையை டிரம்பிடம் முதலில் கூறியவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். டிரம்ப் இந்த விவகாரத்தை ஒரு வணிகநில மேம்பாட்டுத்  திட்டமாகக் கருதுகிறார் என்றும் இது அவரின் வழக்கமான நடைமுறை என்றும் கூறுகின்றனர்.


கிரீன்லாந்து பகுதியானது வேறொரு நாட்டினால் ஆக்கிரமிக்கப்படுகிற சூழலில் அதிகம் பதிப்படையும் நாடு கனடாவாகத்தான் இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். ஏனென்றால், வட அமெரிக்க நாடான கனடா அனைத்து பக்கங்களிலிருந்தும் மற்ற நாடுகளால் சூழப்பட்டு நெருக்கடிக்கு உள்ளாகிவிடும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், கனடா நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அணு ஆயுதங்கள் அவசியமா என்பது குறித்த விவாதம் அந்நாட்டில் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். 


மாறிவரும் இந்தச் சூழ்நிலையில், அணு ஆயுதங்களுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை கனடா மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம் என்று கனடா நாட்டின் ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிபுணர்கள் கூறியுள்ளனர். தேசிய பாதுகாப்பு குறித்து கனடா நாட்டு மக்கள் கேள்விகளை கேட்கத் தொடங்க வேண்டும் என்று ராயல் டேனிஷ் பாதுகாப்பு கல்லூரியின் (Royal Danish Defence College) இராணுவ செயல்பாட்டு உதவிப் பேராசிரியரான ஜீன்-பிரான்சுவா பெலஞ்சர் கடந்த ஆண்டு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து இப்போது கனடாவில் அதிக ஆதரவைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கின்றனர். 


நேட்டோ (NATO) அமைப்பின் கூட்டமைப்பு நாடுகள் மீதான எந்த ஒரு நடவடிக்கைகளும், ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் பெரிய அளவிலான அணு ஆயுத தயாரிப்புக்கு வழிவகுக்கும் என்றும் அதைத் தொடர்ந்து தென் கொரியாவும் ஜப்பானும் அதே நடவடிக்கைகளை பின்பற்றலாம் என்றும் எச்சரிக்கின்றனர். இது அனைத்து நாடுகளுக்கிடையேயான அணு ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.


Original Article : What America’s Greenland claim could mean for NATO, Russia, and Canada?

-Anil Sasi  

Share:

டைகர் குளோபல் வழக்கு : ஒப்பந்த சலுகைகளையும் வரி நிலுவைகளையும் உச்ச நீதிமன்றம் எவ்வாறு வேறுபடுத்தியது? -அமால் ஷேக்

முதலீட்டு அமைப்பு வணிக ரீதியான பொருளைக் கொண்டிருக்கவில்லை என்றும், இந்தியா-மொரிஷியஸ் ஒப்பந்தம் அல்லது அதன் பழைய ஒப்பந்த விதிகளின் கீழ் (grandfathering) பாதுகாப்பைக் கோர முடியாது என்றும் நீதிமன்ற அமர்வு கூறியது.


கடந்த வாரம், ஜனவரி 15 அன்று, உச்சநீதிமன்றம், ஃபிளிப்கார்ட்டில் (Flipkart) இருந்து வெளியேறியதன் மூலம் டைகர் குளோபல் (Tiger Global) நிறுவனத்திற்கு மூலதன ஆதாயங்களுக்கான வரி விலக்கு அளிக்க மறுத்தது. ஒப்பந்தப் பலன்கள் தானாகவே கிடைத்துவிடாது என்றும், முதலீட்டு அமைப்பு பெரும்பாலும் காகித அளவில் மட்டுமே இருந்தால், அனைத்து ஆவணங்களும் சரியான வரிசையில் இருப்பதாகத் தோன்றினாலும் இது நிகழலாம்.


டைகர் குளோபலுக்கு ஆதரவாக முன்னர் தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை நீதிபதி ஜே பி பர்திவாலா மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு ரத்து செய்தது. முதலீட்டு அமைப்பு வணிகரீதியான பொருளைக் கொண்டிருக்கவில்லை என்றும், இந்தியா-மொரிஷியஸ் ஒப்பந்தம் அல்லது அதன் பழைய ஒப்பந்த விதிகளின் கீழ் பாதுகாப்பைக் கோர முடியாது என்றும் நீதிமன்ற அமர்வு கூறியது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களுக்கு சொந்தமாக எந்தவொரு உண்மையான வணிக நடவடிக்கையையும் மேற்கொள்ளாவிட்டால், சிக்கலான கடல்சார் கட்டமைப்புகளை நம்பியிருக்க முடியாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


2018-ம் ஆண்டு வால்மார்ட் (Walmart’s) மின்-வணிக நிறுவனத்தை (e-commerce company) கையகப்படுத்துவதன் ஒரு பகுதியாக, டைகர் குளோபல் தனது பிளிப்கார்ட் (Flipkart) பங்குகளை விற்றதில் இருந்து இந்த வழக்கு எழுந்தது. மொரீஷியஸ் வழித்தடம் முக்கியமாக வரிகளைத் தவிர்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதாக வரி அதிகாரிகள் வாதிட்டாலும், ஒப்பந்தத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட முறையான வரித் திட்டமிடல் என்று டைகர் குளோபல் கூறியது.


வழக்கின் பின்னணி


இந்த தகராறு, டைகர் குளோபல் ஃப்ளிப்கார்ட்டில் தனது முதலீட்டை எவ்வாறு கட்டமைத்தது மற்றும் அதன் இறுதி வெளியேற்றம் எப்படி இருந்தது என்பதிலிருந்து தொடங்குகிறது. மொரிஷியஸில் இணைக்கப்பட்ட மூன்று நிறுவனங்கள்—டைகர் குளோபல் இன்டர்நேஷனல் II, III மற்றும் IV ஹோல்டிங்ஸ்—முதலீட்டு வாகனங்களாக அமைக்கப்பட்டன மற்றும் மொரிஷியஸ் அதிகாரிகளால் வழங்கப்பட்ட செல்லுபடியான வரி வசிப்பிடச் சான்றிதழ்களை (Tax Residency Certificates) வைத்திருந்தன. இந்த நிறுவனங்கள் சிங்கப்பூரில் இணைக்கப்பட்ட ஃப்ளிப்கார்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பங்குகளை வைத்திருந்தன; ஆனால் அந்த நிறுவனத்தின் பெரும்பாலான மதிப்பு இந்தியாவில் அதன் செயல்பாடுகளிலிருந்து பெறப்பட்டது.


2018-ம் ஆண்டில், வால்மார்ட் ஃபிளிப்கார்ட்டின் அதிகபட்ச பங்குகளை வாங்கியபோது, ​​மொரீஷியஸ் நிறுவனங்கள் உலகளாவிய பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் நிறுவனத்தில் தங்கள் பங்குகளை விற்றன. விற்பனையை முடிப்பதற்கு முன்பு, வரிக் குறைப்பு இல்லாமல் பரிவர்த்தனையைத் தொடர அனுமதிக்கும் சான்றிதழ்களுக்காக இந்திய வரி அதிகாரிகளிடம் விண்ணப்பித்தனர். அந்த நிறுவனங்கள் மொரீஷியஸிலிருந்து உண்மையிலேயே கட்டுப்படுத்தப்படவில்லை என்று வாதிட்டு, வரித் துறை அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.


பின்னர் நிறுவனங்கள் முன்கூட்டிய தீர்ப்புகளுக்கான ஆணையத்தை (Authority for Advance Rulings (AAR)) அணுகின. ஆனால், அது அந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டது. முதல் பார்வையிலேயே, அந்தப் பரிவர்த்தனை வரியைத் தவிர்ப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டதாகத் தெரிகிறது என்று அது கூறியது. டெல்லி உயர் நீதிமன்றம் (DHC) இந்த முடிவை ரத்து செய்தது. அந்த நிறுவனங்கள் வெறும் "கைப்பாவைகள்" (puppets) அல்ல. ஏனெனில், அவற்றின் இயக்குநர்கள் குழுக்கள் சுதந்திரமாக முடிவெடுத்தன. ஒரு செல்லுபடியாகும் வரி வசிப்பிடச் சான்றிதழ் (valid Tax Residency Certificate) என்பது வசிப்பிடம் மற்றும் உண்மையான உரிமைக்கான வலுவான சான்றாகும். இது மோசடிக்கான தெளிவான மற்றும் வலுவான ஆதாரம் இல்லாமல் வரி அதிகாரிகள் அதை புறக்கணிக்க முடியாது என்று அது கூறியது. பின்னர் வரித்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.


கேள்விக்குரிய சட்டம்


இந்த சர்ச்சையின் மையத்தில் இருப்பது, இந்திய வரி அதிகாரிகள் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை ஆய்வு செய்வதில் எந்த அளவிற்குச் செல்ல முடியும் என்பதுதான். இந்தப் பரிவர்த்தனைகள் ஒப்பந்தத் தேவைகளுக்கு முறையாக இணங்கினாலும், வரி ஏய்ப்பு செய்வதற்காகவே கட்டமைக்கப்பட்டுள்ளன என்று குற்றம் சாட்டப்படுகிறது.


வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 9(1)(i)-ன்படி, வருமானம் எப்போது இந்தியாவில் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் என்பதை விளக்குகிறது. இந்தியாவில் அமைந்துள்ள ஒரு மூலதனச் சொத்தை மாற்றுவதன் மூலம் வருமானம் ஈட்டப்பட்டால், அது இந்தியாவில் ஈட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் பங்குகளும் அத்தகைய மூலதனச் சொத்தாகக் கருதப்படலாம். அந்தப் பங்குகள் தங்களின் மதிப்பில் பெரும்பகுதியை இந்தியாவில் அமைந்துள்ள சொத்துக்களிலிருந்து பெற்றால் இது பொருந்தும்.


இந்த உள்நாட்டு சட்டக் கட்டமைப்பு, இந்தியா-மொரிஷியஸ் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் உட்பட இந்தியாவின் வரி ஒப்பந்தங்களுடன் இணைந்து செயல்படுகிறது. சட்டத்தின் பிரிவு 90(2), ஒரு வரி செலுத்துபவர் தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஒப்பந்தத்தை நம்பியிருக்க அனுமதிக்கிறது.


இருப்பினும், நாடாளுமன்றம் இந்தப் பாதுகாப்பை வெளிப்படையாகக் கட்டுப்படுத்தியுள்ளது. பிரிவு 90(2A), பொது வரி தவிர்ப்புத் தடுப்பு விதி பயன்படுத்தப்படும் இடங்களில் ஒப்பந்த நன்மைகள் பொருந்தாது என்று வழங்குகிறது. இது தவறான பயன்பாடு செய்யக்கூடிய ஏற்பாடுகளுக்கு ஒப்பந்தப் பாதுகாப்பு நீட்டிக்கப்படாது என்பதை தெளிவுபடுத்துகிறது.


ஒரு முக்கிய ஏற்பாடாக வடிவமைக்கப்பட்ட பொதுத் தவிர்ப்பு எதிர்ப்பு விதி (General Anti-Avoidance Rule(GAAR)), ஒரு ஏற்பாட்டின் "முக்கிய நோக்கம் வரிச் சலுகையைப் பெறுவதாகும்" மற்றும் உண்மையான வணிக நடவடிக்கையும் இல்லாதபோதும் வரி அதிகாரிகள் வரிச் சலுகைகளை மறுக்க அனுமதிக்கிறது. இது வரி அதிகாரிகள் கடந்தகால ஆவண அடிப்படையிலான ஏற்பாடுகளைப் பார்க்கவும், "ஊடுருவிப் பார்க்கக்கூடிய நிறுவனங்கள்" அல்லது இடைத்தரகு நிறுவனங்களைப் புறக்கணிக்கவும், பரிவர்த்தனை எவ்வாறு முறையாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைவிட என்ன மேற்கொள்ளப்படுகிறது என்பதன் அடிப்படையில் வரி விதிக்கவும் அனுமதிக்கிறது.


நீதிமன்றத்தின் வாதம்


ஆரம்பத்தில், பரிவர்த்தனையில் முறையான ஆவணங்கள் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட படிகளுக்கு மட்டும் அது தன்னை கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது. அதற்குப் பதிலாக, நீதிமன்றம் "முழுமையாகப் பார்க்கும்" அணுகுமுறை என்று அழைத்த ஒன்றை ஏற்றுக்கொண்டது. இதன்கீழ், முதலீட்டுக் கட்டமைப்பு எவ்வாறு அமைக்கப்பட்டது, கட்டுப்படுத்தப்பட்டது மற்றும் பயன்படுத்தப்பட்டது என்பது உட்பட, வரி அதிகாரிகளும் நீதிமன்றங்களும் ஒரு பரிவர்த்தனையை ஒட்டுமொத்தமாக ஆராய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.


அடிப்படை கட்டமைப்பின் வடிவமைப்பு மற்றும் நோக்கத்தை புறக்கணித்து, பங்குகளின் விற்பனையை தனிமைப்படுத்தும் "பகுப்பாய்வு அணுகுமுறை" போதுமானதல்ல என்று நீதிமன்றம் கூறியது. டைகர் குளோபல் அனைத்து முறையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் பின்பற்றினதா என்பது முக்கியப் பிரச்சினை அல்ல. மாறாக அந்த நடவடிக்கைகள் ஒப்பந்தத்தின் உண்மையான சாரம்சத்தைப் பிரதிபலிக்கின்றனவா என்பதுதான் தீர்ப்பின் மீதமுள்ள பகுதிக்கு இந்த கட்டமைப்பு வடிவத்தை அமைத்தது.


நீதிமன்றம், முன்கூட்டியே தீர்ப்பளிக்கும் ஆணையத்தின் (AAR) அதிகாரங்களை ஆய்வு செய்தது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 245R(2), "முதன்மையாக வருமான வரியைத் தவிர்ப்பதற்கான" பரிவர்த்தனையுடன் தொடர்புடையதாக இருந்தால், முன்கூட்டியே தீர்ப்பளிக்கும் ஆணையம் (AAR) விண்ணப்பத்தை ஏற்க மறுக்க அனுமதிக்கிறது. முன்கூட்டியே தீர்ப்பளிக்கும் ஆணையத்திற்கு (AAR) முன் இருந்த ஆவணம், வரியைத் தவிர்ப்பதற்காக ஒரு பரிவர்த்தனை கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை நியாயமாகக் குறிப்பிட்டால், AAR விண்ணப்பத்தை நிராகரிக்க உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் கூறியது. அவ்வாறு செய்வதன் மூலம் AAR அதன் அதிகார வரம்பை மீறவில்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இந்தத் தீர்ப்பின் மையக்கருத்து, நீதிமன்றம் எவ்வாறு வடிவத்தைவிட சாராம்சத்திற்கே முக்கியத்துவம் என்ற கொள்கையைப் பயன்படுத்தியதுதான். இந்தக் கொள்கை ஒரு பரிவர்த்தனையின் உண்மையான தன்மையைப் பார்க்கிறது. அந்த அமைப்பு உண்மையான வணிகச் செயல்பாட்டைப் பிரதிபலிக்கிறதா என்றும் அந்த அமைப்பு முக்கியமாக காகிதத்தில் மட்டுமே உள்ளதா என்றும் அது கேட்கிறது. டைகர் குளோபல் முதலீடு செய்த மொரீஷியஸ் நிறுவனங்கள் உண்மையான வணிகப் பொருளைக் கொண்டிருந்தனவா அல்லது அவை வெறும் "வெளிப்படையான நிறுவனங்கள்" அல்லது "வெறும் இடைத்தரகர்களாக இருந்தனவா" என்பதை நீதிமன்றம் ஆராய வேண்டியிருந்தது. இதை முடிவு செய்ய, நீதிமன்றம் "தலை மற்றும் மூளை" (head and brain) சோதனையைப் பயன்படுத்தியது.


இந்தச் சோதனை, உண்மையான கட்டுப்பாடு மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகள் எங்கு நடைபெறுகின்றன என்பதை ஆராய்கிறது. முக்கிய நிதி முடிவுகளில் யாருக்கு அதிகாரம் உள்ளது, வங்கிக் கணக்குகளை யார் இயக்க முடியும், மொரீஷியஸ் நிறுவனங்களின் வாரியங்கள் சுதந்திரமாக செயல்பட்டனவா என்பதை தலைமை மற்றும் மூளை சோதனை ஆராய்கிறது.


ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் உள்ள பரிவர்த்தனைகளுக்கு, முடிவெடுக்கும் அதிகாரம் மொரீஷியஸ் இயக்குநர்களிடம் அல்ல, அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தனிநபரிடமே உள்ளது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. மொரீஷியஸில் உள்ள எந்தவொரு உள்ளூர் நபருக்கும் பெரிய தொகைகளுக்கான காசோலைகளில் கையெழுத்திட அதிகாரம் இல்லை என்றும் அது குறிப்பிட்டது. இந்த அடிப்படையில்தான் நீதிமன்றம் அந்த நிறுவனங்களை சுதந்திரமான கட்டுப்பாடு இல்லாத "வெளிப்படையான நிறுவனங்கள்" (see-through entities) என்று விவரித்தது. அந்த நிறுவனங்களுக்கு ஃபிளிப்கார்ட் தவிர வேறு எந்த முதலீடுகளும் இல்லை என்றும், "இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் (Double Taxation Avoidance Agreement (DTAA)) கீழ் நன்மைகளைப் பெறுவதே முதன்மை நோக்கத்துடன்" அமைக்கப்பட்டன என்றும் அது கவனித்தது. உண்மையான வணிகப் பொருள் இல்லாததுதான், இறுதியில் மொரீஷியஸ் நிறுவனங்களை முதலீட்டு வாகனங்கள் அல்லாமல் வெறும் வழித்தடங்களாகக் கருத நீதிமன்றம் வழிவகுத்தது.


இந்தப் பின்னணியில், நீதிமன்றம் வரி வசிப்பிடச் சான்றிதழை (Tax Residency Certificate (TRC)) நோக்கித் திரும்பியது. பல ஆண்டுகளாக, மொரீஷியஸ் அதிகாரிகளால் வழங்கப்பட்ட வரி வசிப்பிடச் சான்றிதழ் (TRC), இந்திய வரி உரிமைகோரல்களுக்கு எதிராக ஒரு வலுவான கேடயமாக கருதப்பட்டது. முந்தைய மத்திய நேரடி வரி வாரிய சுற்றறிக்கைகள் வரி வசிப்பிடச் சான்றிதழை (TRC) குடியிருப்பு மற்றும் பயனாளி உரிமைக்கான "போதுமான சான்று" என்று விவரித்துள்ளன.


இது சரிதான் என்றாலும், வருமான வரிச் சட்டத்தில் திருத்தங்கள் மற்றும் பொதுத் தவிர்ப்பு எதிர்ப்பு விதி (GAAR) அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சட்ட நிலைமை மாறிவிட்டது என்று உச்சநீதிமன்றம் கூறியது. வரி வசிப்பிடச் சான்றிதழ் (TRC) இப்போது ஒரு "தகுதி நிபந்தனை" மட்டுமே என்றும், வசிப்பிடத்திற்கான உறுதியான ஆதாரம் அல்ல என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. வரி வசிப்பிடச் சான்றிதழ் (TRC) ஒப்பந்த கட்டமைப்பிற்குள் ""நுழைவதற்கான ஒரு நுழைவுச்சீட்டு" என்று அது விவரித்தது.


வரி ஏய்ப்புக்கான ஒரு கருவியாக அந்த நிறுவனம் இடைநிறுத்தப்பட்டதாகக் கூற போதுமான ஆதாரம் இருக்கும் பட்சத்தில், சட்டப்பூர்வ அதிகாரிகளுக்கு வரி வசிப்பிடச் சான்றிதழை (TRC) தாண்டிச் சென்று ஆராய உரிமை உண்டு. "இடைநிறுத்தப்பட்ட நிறுவனம் வரி ஏய்ப்பதற்கான ஒரு கருவி என்று நிறுவப்பட்டால், வெறும் வரி வசிப்பிடச் சான்றிதழை வைத்திருப்பது மட்டுமே ஒரு விசாரணையைத் தடுக்காது," என்று நீதிமன்றம் கூறியது.


உள்நாட்டு வரி ஏய்ப்புத் தடுப்புச் சோதனைக்கு வரி ஒப்பந்தங்கள் ஒரு முழுமையான தடையாகும் என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. வரி ஒப்பந்தங்கள் வரிவிதிப்பு உரிமைகளை பகிர்ந்தளிக்கின்றன. ஆனால், ஒரு நாடு தனது வரி இறையாண்மையை விட்டுக்கொடுக்கிறது என்று அர்த்தமல்ல என்று நீதிமன்றம் கூறியது. அரசியலமைப்பின் பிரிவு 265-ன் கீழ் வழங்கப்பட்டுள்ளபடி, அதன் பிராந்தியத்துடன் தொடர்புடைய வருமானத்திற்கு வரி விதிக்க மாநிலத்திற்கு உள்ளார்ந்த அதிகாரம் உள்ளது.


இதே கருத்தை ஒப்புக்கொண்ட நீதிபதி பர்திவாலா, வரி இறையாண்மையை ஒரு "பொன் விதி" (golden rule) என்று விவரித்தார். சிக்கலான நிதிக் கட்டமைப்புகள் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் வரி துஷ்பிரயோகம் "ஒரு தேசத்தை பலவீனப்படுத்துகிறது" என்று எச்சரித்தார். துஷ்பிரயோக தடுப்புச் சட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், "எந்தவொரு கருணையும் வரி இறையாண்மையை சமரசம் செய்வதற்கான மற்றொரு வடிவமாகும்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.


பொதுத் தவிர்ப்பு எதிர்ப்பு விதி (GAAR) வழக்கில், டைகர் குளோபல் நிறுவனம் தனது முதலீடு ஏப்ரல் 2017-க்கு முன்பு செய்யப்பட்டதாகவும், எனவே இந்தியா மொரீஷியஸுடனான வரி ஒப்பந்தத்தை திருத்தியபோது அறிமுகப்படுத்தப்பட்ட பழைய சட்டப் பாதுகாப்பு விதிகளால் பாதுகாக்கப்படுவதாக அது வாதிட்டது. பொதுத் தவிர்ப்பு எதிர்ப்பு விதி (GAAR) "முதலீடுகளுக்கு" (investments) மட்டுமல்ல "ஏற்பாடுகளுக்கும்" (arrangements) பொருந்தும் என்றும், GAAR நடைமுறைக்கு வந்த பிறகு வரிச் சலுகை எழுந்தது என்றும் வருவாய்த்துறை எதிர்த்தது.


வருமான வரி விதிகளின் விதி 10U(2)-ஐ குறிப்பிட்டபடி, வருமான வரி விதிகளின் விதி 10U(2)-ஐ குறிப்பிட்டு, முதலீடு ஏப்ரல் 2017-க்கு முந்தையதாக இருந்தாலும், வரிச் சலுகை பின்னர் பெறப்பட்டிருந்தால் கூட, பொதுத் தவிர்ப்பு எதிர்ப்பு விதியை (GAAR) ஏற்பாடுகளுக்குப் பயன்படுத்த அனுமதிக்கிறது. இந்த விஷயத்தில், பங்குகளின் விற்பனை 2018-ல் நடந்ததால், உணமையான முதலீட்டின் நேரம் வரி ஏய்ப்பு தடுப்பு ஆய்வுக்கு தடையாக இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அது ஒரு போலியானது என்று கண்டறியப்பட்டவுடன், "அந்த ஏற்பாட்டின் கால அளவு பொருத்தமற்றது" என்று அது கூறியது.


வரி திட்டமிடலுக்கும் வரி தவிர்ப்புக்கும் இடையிலான வேறுபாட்டை எவ்வாறு வரையறுத்தது என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. வரி திட்டமிடல் "சட்டத்தின் கட்டமைப்பின்" செயல்பட்டால் அது சட்டபூர்வமானதாக இருக்கலாம். ஆனால், ஒரு கட்டமைப்பு வரிப் பொறுப்பைத் தவிர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட "போலி வழிமுறைகள்", "சந்தேகத்திற்குரிய முறைகள்" அல்லது "தந்திரங்களை" உள்ளடக்கியிருந்தால், அது அனுமதிக்க முடியாததாகிவிடும்.


இந்த வழக்கில், வணிகரீதியான சாராம்சம் இல்லாமை, ஒப்பந்த அதிகார வரம்பிற்கு வெளியே கட்டுப்பாடு குவிந்து கிடப்பது மற்றும் ஒப்பந்த சலுகைகளைப் பெறுவதற்கான முக்கிய நோக்கம் ஆகியவை ஆகும். இந்தக் காரணங்களால், அந்த ஏற்பாடு வரியைத் தவிர்ப்புக்காக வடிவமைக்கப்பட்டது என்ற முடிவுக்கு நீதிமன்றம் இட்டுச் சென்றது. அந்த முடிவுக்கு வந்தவுடன், ஒப்பந்தப் பாதுகாப்பு மறைந்துவிட்டது. ஒரு செயல்முறை போலியானது எனக் கண்டறியப்பட்டவுடன், "அது இனி ஏற்றுக்கொள்ளக்கூடிய வரித் திட்டமிடலாக இருக்காது. மேலும், அது அனுமதிக்கப்படாத வரித் தவிர்ப்பு அல்லது வரி ஏய்ப்பாக ஆகிவிடுகிறது” என்று அது கூறியது.


 Original Article : Tiger Global case: How Supreme Court drew a line between treaty benefits and tax dues? -Amaal Sheikh

Share: