நுகர்வோர் விலைக் குறியீட்டில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு, தற்கால பணவீக்க புள்ளிவிவரங்களை உருவாக்கும்

 புதிய தொடர், நேரடி கடைகளில் இருந்து மட்டுமல்லாமல், இணையவழி தளங்களிலிருந்தும் விலை விவரங்களைச் சேகரிக்கும்.


அதிகாரப்பூர்வ நுகர்வோர் விலைக் குறியீட்டு (Consumer Price Index (CPI)) பணவீக்க புள்ளிவிவரங்கள் யதார்த்தத்திலிருந்து விலகி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கான ஒரு முக்கியக் காரணம், 2011-12-ஆம் ஆண்டின் காலாவதியான அடிப்படை ஆண்டாகும். இது நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பொருட்களின் தொகுப்பும் தற்போதைய குடும்பச் செலவின முறைகளுக்கும் இடையே ஒரு தொடர்பின்மையை ஏற்படுத்துகிறது. தற்போது ஒரு நிபுணர் குழு, இந்தத் தொகுப்பை முழுமையாக மாற்றி அமைப்பதற்கான விரிவான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இந்தக் குழு, ஆதாரங்கள், தரவு சேகரிப்பு மற்றும் அளவீட்டு முறைகளிலும் மிகவும் தேவையான புதுப்பிப்புகளைப் பரிந்துரைத்துள்ளது. இவை, குடும்பங்களின் உண்மையான வாழ்க்கையை நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) சிறப்பாகப் பிரதிபலிக்க வழிவகுக்கும். மேலும், இவை சிறந்த மற்றும் மிகவும் பயனுள்ள கொள்கை உருவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


சமீபத்திய குடும்ப நுகர்வுச் செலவு கணக்கெடுப்பு (HCES) தரவைப் பயன்படுத்தி நுகர்வோர் விலைக் குறியீட்டை (CPI) திருத்துவது உடனடி விளைவு, அதில் உள்ள உணவுப் பொருட்களின் ஒட்டுமொத்த தரம் குறைவதும், சேவைகளின் பங்களிப்பு அதிகரிப்பதும் ஆகும். SBI ஆராய்ச்சி நிறுவனம், நுகர்வோர் விலைக் குறியீட்டில் (CPI) உணவுப் பொருட்களின் தரம் 45 சதவீதத்திற்கும் மேலிருந்து 37 சதவீதத்திற்கும் குறைவாகவும், ஆடை மற்றும் காலணிகளின் தரம் 6.5 சதவீதத்திலிருந்து 6.3 சதவீதமாகவும் குறையும் என்று மதிப்பிட்டுள்ளது. வீட்டுவசதி, நீர் மற்றும் பயன்பாடுகளின் தரம் 16.9 சதவீதத்திலிருந்து 17.7 சதவீதமாக அதிகரிக்கும். அதேபோல், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பின் நிலை 8.6 சதவீதத்திலிருந்து 12.4 சதவீதமாகக் கணிசமாக உயரும் மற்றும் பொழுதுபோக்கின் தரமும் 1.7 சதவீதத்திலிருந்து 4.9 சதவீதமாக அதிகரிக்கும். இருப்பினும், சமீபத்திய குடும்ப நுகர்வுச் செலவு கணக்கெடுப்பு (HCES), சுகாதாரம் (தரம் 5.9 முதல் 6.1 சதவீதம் வரை அதிகரித்துள்ளது) மற்றும் கல்வி (தரம் 4.5 முதல் 3.3 சதவீதம் வரை குறைந்துள்ளது) மீதான செலவினங்களை துல்லியமாகப் பதிவு செய்துள்ளதா என்பது ஒரு கேள்வியாகவே உள்ளது. உணவுப் பொருட்களுக்குக் குறைந்த தரம் வழங்குவது மாதாந்திர நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) பதிவுகளில் உள்ள ஏற்ற இறக்கங்களைக் குறைக்கும். அதேநேரத்தில், சேவைகளின் அதிகப் பங்களிப்பு அதிக பணவீக்க அளவீடுகளுக்கு வழிவகுக்கும்.


பல வழிமுறை மாற்றங்கள் பரந்த அளவிலான தரவுகளுக்கு வழிவகுக்கும். புதிய நுகர்வோர் விலைக் குறியீடு (CPI), இன்று மிகவும் பிரபலமான சந்தைகள் மற்றும் கடைகளைக் கண்டறியும் ஒரு புதிய கணக்கெடுப்பின் அடிப்படையில் இருக்கும். இதற்கான மாதிரி அளவு 288 பொருட்களுக்குப் பதிலாக 358 பொருட்களை உள்ளடக்கும். மேலும், விலை தரவுகள் இதுவரை இருந்த 1,181 மற்றும் 1,114 சந்தைகளுக்குப் பதிலாக 1,465 கிராமப்புற சந்தைகள் மற்றும் 1,395 நகர்ப்புற சந்தைகளிலிருந்து தொகுக்கப்படும். பேனா மற்றும் காகிதத்தைப் பயன்படுத்தி தரவுகளை நேரடியாகச் (Manual collection) சேகரித்து பதிவு செய்வதற்குப் பதிலாக, டேப்லெட் உதவியுடன் நேர்காணல்கள் (tablet-assisted interviews) மேற்கொள்ளப்படும். பொருட்களின் வகைப்பாடு உலகளாவிய தரங்களுக்கு ஏற்ப ஒத்திசைக்கப்படும். தற்போதைய நுகர்வோர் விலைக் குறியீட்டில் (CPI) உள்ள ஒரு முக்கியக் குறைபாடு, வீட்டு வாடகை குறித்த முழுமையற்ற தரவுகளாகும். தற்போது, ​​வாடகைத் தரவுகள் நகர்ப்புற மையங்களிலிருந்து மட்டுமே சேகரிக்கப்படுகின்றன. புதிய தொடரில், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் இருந்து வாடகைத் தரவு சேகரிக்கப்படும். விரைவான மின்னணு தழுவலுடன், இணையவழி தளங்கள் இப்போது வணிகப் பழக்கத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். புதிய தொடர், நேரடிக் கடைகளில் இருந்து மட்டுமல்லாமல், ஆன்லைன் தளங்களிலிருந்தும் விலை தரவுகளைச் சேகரிக்கும். OTT ஸ்ட்ரீமிங் தளங்கள் மற்றும் பிராட்பேண்ட் கட்டணங்கள் போன்ற முக்கிய சேவைகளின் விலைகள் நுகர்வோர் விலைக் குறியீட்டிற்காக சேகரிக்கப்படும்.


தங்கம் மற்றும் வெள்ளி நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) மிகவும் சர்ச்சைக்குரிய கூறுகளில் ஒன்றாக இருந்து வருகின்றன. புதிய தொடர் சில குறிப்பிட்ட தரப்படுத்தப்பட்ட நகைகளை வரையறுப்பதன் மூலம் அவற்றின் விலைகள் பதிவு செய்யப்படும் முறையைத் தரப்படுத்த ஒரு முயற்சி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தங்கம் மற்றும் வெள்ளி நுகர்வோர் விலைக் குறியீட்டில் சேர்க்கப்பட வேண்டுமா என்பதே இன்னும் விவாதத்திற்குரிய விஷயமாகும். அவை வழக்கமான நுகர்வுப் பொருட்களைவிட சொத்துக்களாகவே பெரும்பாலும் கருதப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக, இந்த வழிகளில் நுகர்வோர் விலைக் குறியீட்டை (CPI) மாற்றியமைப்பது அதிகாரப்பூர்வ பணவீக்க புள்ளிவிவரங்களுக்கு அதிக நிலைத்தன்மை மற்றும் கணிக்கக்கூடிய தன்மையாக மாற்றக்கூடும். இதன் விளைவாக, இது சிறந்த பணவியல் கொள்கை உருவாக்கத்திற்கும், ஊழியர்களுக்கு மிகவும் யதார்த்தமான அகவிலைப்படி திருத்தங்களுக்கும் உதவும்.       


Share:

நிதி ஒழுங்குமுறை உறுதியான அடித்தளத்தில் உள்ளதா? -சங்கல்ப பட்டாச்சார்ஜி, அமரேந்து நந்தி

 மனித மூலதனத்தில் முதலீட்டை ஒத்திவைப்பதன் மூலம் ஒருங்கிணைப்பை அடைய நிதிநிலை அறிக்கை முயல்கிறது. இந்த அணுகுமுறை, நீடித்த நிதி நிலைத்தன்மை சார்ந்த வளர்ச்சியின் அடிப்படையையே பலவீனப்படுத்துகிறது.


நிதி ஒருங்கிணைப்பு (Fiscal consolidation) என்பது பேரியல் பொருளாதாரக் கொள்கையின் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு இலக்காகும். குறிப்பாக, உயர்ந்த பொதுக் கடன் (public debt) மற்றும் அதிகரித்த உலகளாவிய நிச்சயமற்ற தன்மை (global uncertainty) கொண்ட சூழலில் இது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு நம்பகமான நிதி ஒருங்கிணைப்பு நிலை எதிர்பார்ப்புகளை வலுப்படுத்துவதன் மூலமும் கடன் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதன் மூலமும் பேரியல் பொருளாதார நிலைத்தன்மையை வலுப்படுத்த முடியும். நிதிநிலை அறிக்கை 2026 இந்த நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.3 சதவீத நிதிப்பற்றாக்குறை, பொது மூலதனச் செலவினங்களுக்கு நிலையான உறுதிப்பாடு மற்றும் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 55.6 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் பெருந்தொற்று ஆண்டுகளின் அசாதாரண விரிவாக்கத்திற்குப் பிறகு நிதிச் சுதந்திரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் ஒரு முயற்சியைக் காட்டுகின்றன.


இந்த நிதி ஒருங்கிணைப்புத் திட்டம் இறுதியில் பயனுள்ளதாக நிரூபிக்கப்படுமா என்பது வெறும் இலக்கங்களை அடைவதை மட்டும் சார்ந்தது அல்ல. நிதி சரிசெய்தலின் அமைப்பு, அது நிதியளிக்கப்படும் விதம் மற்றும் காலப்போக்கில் அது எவ்வளவு நீடித்ததாக அமைகிறது என்பதையும் சார்ந்துள்ளது. தற்போதைய ஆதாரங்களின்படி, 2026 நிதிநிலை அறிக்கை தலைப்புச் செய்திகளில் உள்ள புள்ளிவிவரங்கள் குறிப்பிடுவதைவிட மிகவும் அடித்தளத்தை நம்பியிருப்பதாகத் தெரிகிறது.


முதலாவதாக, 2027 நிதியாண்டில் அரசாங்கத்தின் நிதி விவரங்களைப் கவனித்தால், வருவாய் வரவுகள் தோராயமாக ₹35.33 லட்சம் கோடியாக நிதிநிலை அறிக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில், வருவாய் செலவினம் சுமார் ₹41.25 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட ₹5.92 லட்சம் கோடி (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1.5 சதவீதம்) வருவாய் பற்றாக்குறையைக் குறிக்கிறது. எனவே, அரசாங்கக் கடனில் கணிசமான பங்கு, சொத்து உருவாக்கத்திற்குப் பதிலாக, வழக்கமான நுகர்வுக்கு குறிப்பாக சம்பளம், ஓய்வூதியங்கள் மற்றும் மானியங்களுக்கு நிதியளிப்பதற்காகவே தொடர்கிறது என்பதை இது குறிக்கிறது. மூலதனச் செலவு ₹12.22 லட்சம் கோடியாக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 3.1 சதவீதம் ஆகும். இருப்பினும், இந்த மூலதனச் செலவின் ஒரு பகுதியும் கடன்கள் மூலமாகவே நிதியளிக்கப்படுகிறது. ஏனெனில், மொத்த செலவினங்களை ஈடுகட்ட வருவாய்கள் போதுமானதாக இல்லை. இதன் விளைவாக, அதிகாரப்பூர்வ நிதிப்பற்றாக்குறை, கடன் வாங்குதலின் உண்மையான அளவைக் குறைத்துக் காட்டுகிறது. உற்பத்தியற்ற செலவினங்களுக்கு ஆதரவளிக்க எவ்வளவு கடன் பயன்படுத்தப்படுகிறது என்பதை இது வெளிப்படையாக காட்டவில்லை.


இரண்டாவதாக, கடந்தகாலக் கடனின் சுமையால் நிதி ஒருங்கிணைப்பு கடினமாகி வருகிறது. 2027 நிதியாண்டில், வட்டி செலுத்துதல்கள் ₹14.03 லட்சம் கோடியாக நிதிநிலை அறிக்கை ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இது மத்திய செலவினத்தில் கிட்டத்தட்ட 26.3 சதவீதம் மற்றும் வருவாய் வரவுகளில் சுமார் 40 சதவீதத்தை உள்வாங்குகிறது. இதன் பொருள், அரசாங்க வருவாயில் ஒரு பெரிய பங்கு ஏற்கனவே கடன் சேவைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதாகும். வட்டிப் பொறுப்புகளைச் சந்திக்க வருவாய்கள் மட்டும் போதுமானதாக இல்லாததால், செலவினக் கட்டமைப்பு அல்லது வருவாய் தளத்தை மறுசீரமைப்பதன் மூலம் அல்லாமல், விருப்பப்படி செலவினங்களை குறைப்பதன் மூலம் சரிசெய்தல் நிகழ வாய்ப்புள்ளது.


ஒருங்கிணைப்பின் தரம்


மூன்றாவதாக, வருவாய்களின் அமைப்பு நிதி ஒருங்கிணைப்பின் தரத்தை மேலும் கட்டுப்படுத்துகிறது. மொத்த வரிவசூல் சுமார் ₹44 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநிலங்களுக்கு சட்டப்பூர்வமாகப் பிரித்துக் கொடுத்தபிறகு, நிகர வரி வருவாய் சுமார் ₹28.7 லட்சம் கோடியாகக் குறைகிறது. இந்த நிகர வரி வருவாய்கள் மொத்த வருவாய் வரவுகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமாகும். பயனுள்ள வரித் தளம் குறுகியதாகவே உள்ளது. வரிவசூல் தனிநபர் வருமான வரி மற்றும் ஜிஎஸ்டியில் குவிந்துள்ளது. இதனால், வருவாய்களைப் பொருளாதாரச் சுழற்சிகளுக்கு எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக ஆக்குகிறது. வரி அல்லாத வருவாய்கள் சுமார் ₹6.7 லட்சம் கோடி என வரவு செலவுத் திட்டத்தில் மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த வருவாய் வரவுகளில் தோராயமாக 19 சதவீதமாகும். இந்த வருவாய்கள் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் ஈவுத்தொகை மற்றும் லாபங்களிலிருந்து அதிகரித்து வருகின்றன. இது நிச்சயமற்ற மற்றும் தற்செயலான வருவாய் வரவுகளை அதிகளவில் சார்ந்திருக்கும் நிலையைச் சுட்டிக்காட்டுகிறது.


நான்காவதாக, இந்திய ரிசர்வ் வங்கியின் உபரி பரிமாற்றங்களை அதிகரித்து வருவது இந்த பாதிப்பை எடுத்துக்காட்டுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், அரசாங்கம் ரிசர்வ் வங்கியிடமிருந்து அசாதாரணமான பெரிய அளவிலான பரிமாற்றங்களைப் பெற்றுள்ளது. இதில் 2025 நிதியாண்டில் ஈவுத்தொகையாக ₹2.69 லட்சம் கோடி அடங்கும். இத்தகைய பரிமாற்றங்கள் வருவாய் பற்றாக்குறையைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளன. அவை அரசாங்கத்தின் கடன் வாங்குவதைக் கட்டுப்படுத்தவும் உதவியுள்ளன. இத்தகைய பரிமாற்றங்கள் நிறுவனரீதியாக சட்டபூர்வமானவை என்றாலும், அவை இயல்பாகவே நிதிச் சந்தை நிலைமைகள் மற்றும் மத்திய வங்கியின் இருப்புநிலைக் குறிப்பையும் சார்ந்துள்ளது. இந்த எதிர்பாராத வருமானங்களை ஏறக்குறைய நிரந்தர வருவாய் ஆதாரங்களாகக் கருதுவது அடிப்படை நிதி பலவீனங்களை மறைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது மற்றும் நிதித் திட்டமிடலில் இருப்புநிலைக் குறிப்பைச் சார்ந்திருக்கும் ஒரு தன்மையையும் அறிமுகப்படுத்துகிறது.


பொது மூலதனச் செலவு இந்த கட்டுப்பாடுகளுக்கு ஈடுசெய்யும் வளர்ச்சியாக இருக்க வேண்டும். மேலும், இது நிதிநிலை அறிக்கையின் பொருளாதார விவரிப்பின் மையப் பகுதியாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு பங்காக, மூலதனச் செலவுகள் முழுமையான வகையில் கணிசமாக அதிகரித்திருந்தாலும், அவை 2026 நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளிலிருந்து மாறாமல் 3.1 சதவீதமாக பரவலாக நிலையாகவே உள்ளன. வேலையின்மை மற்றும் பலவீனமான தனியார் முதலீடு ஆகியவற்றால் குறிக்கப்பட்ட ஒரு பொருளாதாரத்தில், பொது மூலதனத்திலிருந்து வளர்ச்சி நிலைகள் காலவரையின்றி உயரும் என்று கருதமுடியாது. குறிப்பாக, துணைபுரியும் நிறுவன சீர்திருத்தங்கள் மற்றும் நம்பகமான தேவை விரிவாக்கம் இல்லாத நிலையில் இது குறிப்பாக உண்மை.


மனித மேம்பாடு


ஐந்தாவது, மனித மேம்பாட்டைப் பார்க்கும்போது சமரசங்கள் இன்னும் தெளிவாகின்றன. 2027 நிதியாண்டில் சுகாதாரத்திற்கான மத்திய செலவினம் தோராயமாக ₹1.06 லட்சம் கோடி (அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.27 சதவீதம்) என நிதிநிலை அறிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில செலவினங்களைச் சேர்த்த பிறகும், மொத்த பொது சுகாதாரச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இது தேசிய சுகாதாரக் கொள்கையால் நிர்ணயிக்கப்பட்ட 2.5 சதவீத இலக்கை விட மிகக் குறைவு. கல்விக்கான மத்திய செலவினம் சுமார் ₹1.39 லட்சம் கோடி (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.35 சதவீதம்) ஆகும். அதேநேரத்தில் ஒருங்கிணைந்த பொதுச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 முதல் 4.6 சதவீதமாக உள்ளது. இது தேசிய கல்விக் கொள்கையில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட 6 சதவீத இலக்குக்குக் கணிசமாகக் குறைவாகவே உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நுகர்வோர் பணவீக்கம் 4.5-5 சதவீதமாகக் குறைந்திருப்பதால், பெயரளவிலான அதிகரிப்புகள் செலவினங்களை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, உண்மையான செலவின நிலைகளைப் பாதுகாப்பதற்கு மட்டுமே உதவுகின்றன. இதன் விளைவாக, மனித மூலதனத்தில் செய்யப்படும் முதலீடுகளை ஒத்திவைப்பதன் மூலம் நிதி நிலைத்தன்மை அடையப்படுகிறது; இது, நீடித்த நிதி நிலைத்தன்மைக்கு அடிப்படையாக இருக்கும் வளர்ச்சியின் அடித்தளத்தையே பலவீனப்படுத்துகிறது.


எனவே, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு எதிரான கடன் விகிதம் 55.6 சதவீதமாகக் குறையும் என்ற கணிப்பு, நிதி நிலைத்தன்மைக்குத் தேவையான ஆனால் போதுமானதல்லாத ஒரு நிபந்தனையாகவே பார்க்கப்பட வேண்டும். கடன் அளவுகள் நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதை மட்டும் சார்ந்தது அல்ல. அவை நிதி கொள்கை ஆதரிக்கும் பொருளாதார வளர்ச்சியின் தரத்தையும் சார்ந்துள்ளன. சமூகச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், தற்காலிக வருவாய்களைச் சார்ந்திருப்பதன் மூலமும் செய்யப்படும் நிதி ஒருங்கிணைப்பு, குறுகியகாலத்தில் விகிதங்களை நிலைப்படுத்தலாம். ஆனால், மனித மூலதனம் மற்றும் வருவாய் ஈட்டும் திறனில் வலுவான முதலீடுகள் இல்லாமல், அது எந்த வளர்ச்சி மந்தநிலைகளிலிருந்து தன்னைப் பாதுகாக்க முயல்கிறதோ, அதே மந்தநிலைகளுக்கு ஆளாக நேரிடும்.


கட்டுரையை எழுதியவர்கள் ஐஐஎம் ராஞ்சியில் உள்ள பொருளாதாரம் மற்றும் பொதுக் கொள்கைத் துறையின் ஆசிரிய உறுப்பினர்கள் ஆவர்.





Share:

ஊழல் தடுப்புச் சட்டத்தின், முன் அனுமதி விதிப் பிரிவு குறித்த உச்சநீதிமன்றத்தின் மாறுபட்ட தீர்ப்பு, சட்டத்தின் ஆட்சி (rule of law) குறித்த விவாதத்தை ஏன் எழுப்புகிறது? -திலீப் பி சந்திரன்

 கடந்த மாதம், உச்சநீதிமன்றம் ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் பிரிவு 17A-ன் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மை குறித்து ஒரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இப்பிரிவு, அரசு ஊழியர்கள் தங்கள் அதிகாரப்பூர்வப் பணிகள் மற்றும் கடமைகளைச் செய்யும்போது அவர்களை விசாரிப்பதற்குத் தகுந்த அதிகாரியிடம் முன் அனுமதி பெறுவதை கட்டாயமாக்குகிறது. முன் அனுமதி தேவைப்படுவது சட்டத்தின் ஆட்சி மற்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமத்துவம் குறித்த கேள்விகளை எவ்வாறு எழுப்புகிறது? விளக்கப்படங்கள் முக்கியப் பிரச்சினைகளை விரைவாகவும் எளிமையாகவும் விளக்குகின்றன.


ஊழல் தடுப்புச் சட்டம், 1988 (Prevention of Corruption Act(PCA))-ன் பிரிவு 17A, அதன் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில் உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த மாதம் ஒரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதைத் தொடர்ந்து கவனத்திற்கு உள்ளானது.


நீதிபதி கே. வி. விஸ்வநாதன் அந்த விதியை உறுதி செய்தார். மேலும், அரசு ஊழியர்களை 'இந்தியாவின் எஃகுச் சட்டம்' (Steel Frame of India) என்று சர்தார் வல்லபாய் படேல் குறிப்பிட்டதை அவர் மேற்கோள் காட்டினார். பாதுகாப்புக்கான அடிப்படை உறுதிமொழி இல்லாமல், "அரசு ஊழியர்கள் பாதுகாப்பாக நடந்துகொள்ளும் மனப்பான்மையை மேற்கொள்வார்கள்" என்பதை அவர் வலியுறுத்தினார். மறுபுறம், நீதிபதி பி.வி.நாகரத்னா அந்த விதியை அரசியலமைப்பிற்கு முரணானது என்று கூறி முழுவதுமாக ரத்து செய்தார்.


ஊழல் தடுப்பு (திருத்தச்) சட்டம்-2018 மூலம் சேர்க்கப்பட்ட பிரிவு 17A, "ஒரு அரசு ஊழியர் தனது அதிகாரப்பூர்வப் பணிகள் அல்லது கடமைகளைச் செய்யும்போது செய்த பரிந்துரை அல்லது எடுத்த முடிவு தொடர்பானதாகக் கூறப்படும் எந்தவொரு குற்றத்திற்கும், மத்திய அல்லது மாநில அரசின் முன் அனுமதி இல்லாமல், எந்தவொரு காவல் அதிகாரியும் விசாரணை அல்லது புலன்விசாரணை நடத்தக்கூடாது" என்று கூறுகிறது.


நீதிபதி நாகரத்னா மற்றும் நீதிபதி விஸ்வநாதன் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு, குறிப்பாக பிரிவு 17A நேர்மையான பொது அதிகாரிகளைத் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கிறதா அல்லது ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் பொறுப்புணர்விலிருந்து தப்பிக்க உதவுகிறதா என்பது குறித்த கருத்து வேறுபாடு நிலவுகிறது. எனவே, இந்த மாறுபட்ட தீர்ப்பு, ஜனநாயக ஆட்சியில் பொறுப்புக்கூறலுக்கும் நிர்வாகத் திறனுக்கும் இடையே உள்ள ஒரு சிக்கலான முரண்பாட்டைப் பிரதிபலிப்பதாகப் பரவலாகக் கருதப்படுகிறது. இது பின்வரும் சில அடிப்படைக் கேள்விகள் குறித்த விசாரணைக்கும் வழிவகுத்துள்ளது:


  • நிர்வாகச் சட்டம் என்பது சட்டத்தின் ஆட்சி என்ற கருத்துடன் அடிப்படையில் முரண்படுகிறதா?


  • கொள்கை முடக்கம் மற்றும் முடிவெடுப்பதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பது, ஒரு சிறந்த ஊழல் தடுப்புச் சட்டம் எந்தெந்த வழிகளில் அரசு ஊழியர்களின் அதிகபட்ச பொறுப்புணர்வை உறுதிசெய்து ஊக்குவிக்க முடியும்?


பிரிட்டிஷ் அரசியலமைப்பு கோட்பாட்டாளர் ஏ.வி. டைசி மற்றும் பிரெஞ்சு சட்ட வல்லுநர் மாரிஸ் ஹாரியோ போன்ற புகழ்பெற்ற அறிஞர்கள் இத்தகைய கேள்விகளை எவ்வாறு அணுகியுள்ளனர் என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.


ஊழலைப் பாதுகாக்கிறதா அல்லது நேர்மையானவர்களைப் பாதுகாக்கிறதா?


நீதிபதி நாகரத்னா பிரிவு 17A-ஐ அரசியலமைப்பிற்கு முரணானது மற்றும் அரசியலமைப்பின் 14-வது பிரிவை மீறுவது என்று கூறி ரத்து செய்தார். முன் அனுமதி தேவை (grant prior sanction) என்ற நிபந்தனை ஊழல் செய்யும் அதிகாரிகள் மீதான சரியான நேரத்திலான விசாரணையைத் தடுக்கும் என்று அவர் கவலை தெரிவித்தார். மேலும், ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கும் அனுமதி வழங்கும் அதிகாரத்திற்கும் இடையே ஒரு நிறுவனரீதியான தொடர்பு ஏற்படுவதற்கான அபாயத்தையும் அவர் குறிப்பிட்டார்.


மறுபுறம், நீதிபதி விஸ்வநாதன், முன் அனுமதி வழங்கும் அதிகாரம் அரசாங்கத்தைத் தவிர ஒரு சுதந்திரமான அதிகாரத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், பிரிவு 17A அரசியலமைப்புரீதியாகச் செல்லுபடியாகும் என்று உறுதிசெய்தார். பாதுகாப்பு இல்லாத நிலையில், நேர்மையான அரசு ஊழியர்கள் தேவையற்ற புகார்களை எதிர்கொள்வார்கள் என்று அவர் வாதிட்டார். இதற்கு மாறாக, நீதிபதி நாகரத்னா பிரிவு 17A-ஐ சட்டத்தின் ஆட்சிக்கு ஒரு தடையாகச் செயல்படுகிறது என்று அவர் கூறினார்.


நேர்மையான அதிகாரிகளைத் துன்புறுத்தலிலிருந்து பாதுகாக்க சட்டப்பூர்வப் பாதுகாப்புகள் தேவை என்று அடிக்கடி வாதிடப்படுகிறது. இத்தகைய துன்புறுத்தல் தேவையற்ற விசாரணைகள் மூலம் ஏற்படலாம். இந்த விசாரணைகள், அதிகாரப்பூர்வ கடமைகளைச் செய்யும்போது செய்யப்படும் உண்மையான தவறுகள் தொடர்பானவையாக இருக்கலாம். இந்தச் சட்டம் நேர்மையான அதிகாரிகளைப் பாதுகாக்கவும், நன்னம்பிக்கையின் அடிப்படையிலான முடிவெடுப்பதை ஊக்குவிக்கவும், அதன்மூலம் அரசு ஊழியர்களின் மன உறுதியைப் பாதுகாக்கவும் முயல்கிறது.


மறுபுறம், இந்தச் சட்டப் பிரிவை சவால் செய்பவர்கள், அது அரசியலமைப்பிற்கு முரணானது மற்றும் தீய நோக்கமுடையது என்று வாதிடுகின்றனர். இந்தச் சட்டம் ஊழல் குறித்த விரைவான விசாரணையைத் தடுக்கிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஏனெனில், இது விசாரணைக்கு முந்தைய முயற்சிகளைத் தடுக்கிறது. மேலும், ஆரம்பகட்டத்திலேயே போதுமான ஆதாரங்களைத் திரட்டுவதையும் இது கடினமாக்குகிறது. இந்த மாறுபட்ட தீர்ப்பு, இந்த வழக்கை இந்தியத் தலைமை நீதிபதியால் அமைக்கப்படவிருக்கும் ஒரு பெரிய அமர்வுக்குப் பரிந்துரைக்க வழிவகுத்தாலும், இந்த விவகாரம் உடனடி சட்டப் பிரச்சினைக்கு அப்பாற்பட்ட சில அடிப்படைக் கருத்தாக்கங்களை பொது நிர்வாகத்தில் தூண்டியுள்ளது.


புகழ்பெற்ற பிரிட்டிஷ் அரசியலமைப்பு கோட்பாட்டாளர் ஏ.வி. டைசி, தனது 'அரசியலமைப்புச் சட்டம்-1885' (The Law of the Constitution) என்ற நூலில், சட்டத்தின் ஆட்சி மற்றும் நிர்வாகச் சட்டம் ஆகிய கொள்கைகளுக்கு இடையிலான முரண்பட்ட உறவை ஆராய்ந்தார். ஆங்கிலேய சட்டத்தின் ஆட்சியுடன் ஒப்பிடுகையில், பிரெஞ்சு நிர்வாகச் சட்டம் (droit administratif) மீதான அவரது விமர்சனம், அரசாங்க அதிகாரிகள் தனிப்பட்ட குடிமக்களை விட சிறப்பு உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்கிறார்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையிலான கவலையில் வேரூன்றியிருந்தது.


சாதாரண குடிமக்களுடன் ஒப்பிடும்போது அரசாங்க அதிகாரிகளுக்கு சிறப்பு உரிமைகளும் சலுகைகளும் இருப்பதாக நிர்வாகச் சட்டம் கருதுகிறது என்ற கவலையின் அடிப்படையிலேயே அவரது விமர்சனம் அமைந்தது. டைசியின் கூற்றுப்படி, இந்தச் சலுகைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பரந்த தன்னிச்சையான அதிகாரங்களிலிருந்து வந்தன. இந்த அதிகாரங்கள் சாதாரண நீதிமன்றங்களால் மேற்பார்வையிடப்பட வேண்டியவை அல்ல.


ஊழல் தடுப்புச் சட்டம் நேரடியாக நிர்வாகச் சட்டத்தின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், அரசாங்கத்தின் முன் அனுமதி தேவைப்படுவது போன்ற சில விதிகள், அதை நிர்வாகச் சட்டத்தை நிர்வகிக்கும் கொள்கைகளின் பக்கம் சாய்க்கின்றன. சட்டத்தின் ஆட்சிக்கு ஒரு தடையாக பிரிவு 17A மீதான எதிர்ப்பு, ஒரு நடைமுறை சார்ந்தது மட்டுமல்லாமல், அந்தப் பிரிவு அதிகாரிகளுக்குப் பாகுபாடான அணுகுமுறைக் கொண்டுவரும் ஒரு வேறுபட்ட சூழலிலிருந்தும் எழுகிறது.


நீதிபதி நாகரத்னா, "முன் அனுமதி பாதுகாப்பு அனைத்து வகை அரசு ஊழியர்களையும் பெயரளவிற்கு உள்ளடக்கியதாகத் தோன்றினாலும், அது தங்கள் அதிகாரப்பூர்வ கடமைகளைச் செய்யும்போது முடிவுகளை எடுக்கும் மற்றும் பரிந்துரைகளை வழங்கும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே நீட்டிக்கப்படுகிறது" என்று கூறினார். இந்த விதி அரசியலமைப்பின் 14-வது பிரிவின்கீழ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.


இதேபோன்ற ஒரு கவலை 2014-ல் சுப்ரமணியன் சுவாமி vs சிபிஐ வழக்கில் (Subramanian Swamy vs CBI) உச்சநீதிமன்றத்தால் ஆராயப்பட்டது. அதில், உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கிய டெல்லி சிறப்பு காவல் ஸ்தாபனச் சட்டத்தின் பிரிவு 6A, அரசியலமைப்பின் 14-வது பிரிவை மீறுவதாகக் கூறி ரத்து செய்யப்பட்டது. 


இந்திய அரசியலமைப்பின் 14-வது பிரிவின் கீழ் உள்ள சட்டத்தின் ஆட்சி மற்றும் சட்டத்தின் முன் சமத்துவம் ஆகிய கொள்கைகளை, அதிகாரத்துவ வர்க்கத்தினர் சட்டரீதியான ஆய்வுக்கு அப்பாற்பட்டு வைக்கப்பட்டால், இந்த கொள்கைகளை நிலைநிறுத்த முடியாது என்று அடிக்கடி வாதிடப்படுகிறது. இதற்கு மாறாக, நீதித்துறையின் உறுப்பினர்கள் ஏற்கனவே இதேபோன்ற பாதுகாப்புகளை அனுபவித்து வருவதைச் சுட்டிக்காட்டி, விசாரணைக்கு முந்தைய அனுமதிகள் சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானவை அல்ல என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் வாதிட்டது. இருப்பினும், நீதித்துறைக்கான பாதுகாப்பு, அதன் சுதந்திரத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு தனித்துவமான அரசியலமைப்புத் தர்க்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. இது நீதிபதிகளைப் பொறுப்புக்கூறலிலிருந்து பாதுகாப்பதற்காக அல்ல.


சட்டத்தின் முன் சமத்துவத்தின் வரம்புகள்


நிர்வாகச் சட்டம் (administrative law) என்ற கருத்து, சரியாகப் புரிந்துகொள்ளப்படும்போது, ​​இயல்பாகவே சட்டத்தின் ஆட்சி என்ற கொள்கையுடன் முரண்படுவதில்லை. மேலும், அரசு ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான சில பாதுகாப்பு விதிகள், நேர்மையான முடிவெடுப்பிலிருந்து தவறுகள் எழும்போது, அதற்கான பொறுப்புகள் தனிப்பட்ட அதிகாரிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பகிரப்பட வேண்டும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் பெரும்பாலும் நியாயப்படுத்தப்படுகின்றன. இந்தக் கருத்து பிரெஞ்சு சட்ட வல்லுநர் மாரிஸ் ஹௌரியோவின் அவதானிப்பில் பிரதிபலிக்கிறது.


இங்கிலாந்து அல்லது அமெரிக்கா போன்ற சில நாடுகள் அரசின் பொறுப்பை அதன் ஊழியர் மீது பொறுப்பைச் சுமத்துவதன் மூலம் எல்லா முயற்சிகளும் செய்யப்படுகின்றன. வேறு சில நாடுகளில் அணுகுமுறை வித்தியாசமாக உள்ளது. இந்த நாடுகளில், பொறுப்பை அரசு மீதே சுமத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இது அரசு ஊழியரைப் பாதுகாக்கிறது. அது அவரைப் பொறுப்பிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், அரசுப் பணிகளைச் செய்யும்போது ஏற்படும் தவறுகளின் வேதனையான விளைவுகளிலிருந்தும் அவரைக் காப்பாற்றுகிறது.


இருப்பினும், இத்தகைய சமரசம் சட்டத்தின் ஆட்சியின் பலவீனமாகக் கருதப்படக்கூடாது. ஒவ்வொரு விதமான வேறுபட்ட அணுகுமுறையும் சட்டத்தின் முன் சமத்துவத்திற்கு எதிரானது அல்ல. நேர்மையான அதிகாரிகளைப் பாதுகாப்பது, ஊழல் எதிர்ப்பு வழிமுறைகளை பலவீனப்படுத்துவதன் விலையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமா என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது.


பொறுப்புணர்வுக்கும், நிர்வாகத் திறனுக்கும் இடையே சமநிலை ஏற்படுத்துதல்


மத்திய அரசு, நிர்வாகத் திறனுக்கும் பொறுப்புணர்வுக்கும் இடையே ஒரு கவனமான சமநிலையை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என்ற அடிப்படையில் பிரிவு 17A-ஐ நியாயப்படுத்தியது. ஒரு ஆதாரமற்ற புகார், எந்த அதிகாரிக்கு எதிராக விசாரணை தொடங்கப்படுகிறதோ அந்த அதிகாரியின் மன உறுதியை மட்டும் பாதிப்பதில்லை. அது சம்பந்தப்பட்ட துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நிறுவன நம்பிக்கையையும் பலவீனப்படுத்தக்கூடும். எனவே, பொறுப்புணர்வு என்ற கருத்தை தனிப்பட்ட அதிகாரிகளுடன் மட்டும் தொடர்புடைய ஒரு குறுகிய பிரச்சினையாகப் பார்க்காமல், அதன் நிறுவனங்கள் மீதான அதன் பரந்த தாக்கத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


ஆகவே, நிர்வாகத் திறனுக்கு முன்னுரிமை அளிப்பது என்பது, நிர்வாகத்தில் ஏற்படும் தாமதத்தைவிட ஊழலைத் தேர்ந்தெடுப்பதற்குச் சமமானதல்ல. மத்திய அரசு வாதிட்டது போல, பிரிவு 17A-இன் நோக்கம், நேர்மையான தவறுகளுக்காக வழக்குத் தொடரப்படும் என்ற அச்சத்தால் அரசு ஊழியர்கள் இடர் தவிர்ப்பு மனப்பான்மை கொண்டு, முடிவெடுப்பதில் ஒரு மந்தநிலை உருவாகும் சூழலைத் தடுப்பதாக இருக்கலாம்.


ஆதாரமற்ற புகார்கள் குறித்த எந்த அச்சுறுத்தலும் இல்லாமல், அச்சமின்றிச் செயல்படுவதற்கான சுதந்திரம், திறமையான நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு அவசியமானது. ஒரு சிறந்த ஊழல் தடுப்பு கட்டமைப்பு, ஊழல் மற்றும் கொள்கை முடக்கம் ஆகிய இரண்டையும் கையாள்வதன் மூலமும், நேர்மையான அதிகாரிகள் பாதுகாக்கப்படுவதையும், ஊழல் செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் கொண்டுவரப்படுவதையும் உறுதி செய்வதன் மூலமும் ஒரு இரட்டைத் தீர்வாகச் செயல்பட முடியும்.


கொள்கை முடக்கம்


இந்தியாவில் உள்ள அரசு அதிகாரிகள் பெரும்பாலும் 'பாதுகாப்பாக நடந்துகொள்ளும்’ அணுகுமுறையைக் கொண்டுள்ளனர். இந்த அணுகுமுறை, தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. அரசு ஊழியர்கள் தங்கள் நேர்மை சாதாரணமாகவோ அல்லது நியாயமற்ற முறையிலோ கேள்விக்குள்ளாக்கப்படலாம் என்ற அச்சுறுத்தலுக்கு எதிராக, தங்கள் நற்பெயரைக் கவனமாகக் கட்டியெழுப்பிப் பாதுகாக்க முனைகின்றனர். நேர்மையான அதிகாரிகள்கூட, ஆதாரமற்ற புகார்களிலிருந்து பாதுகாக்கப்படாதபோது, ​​சரியான நேரத்தில் முடிவெடுப்பதைவிட தனிப்பட்ட பாதுகாப்புக்கும் நற்பெயருக்கும் முன்னுரிமை அளிக்கின்றனர். இத்தகைய சூழல் நிறுவன மந்தநிலையை வளர்க்கக்கூடும், இது தேவையற்ற நடைமுறைச் சிக்கல்களுக்கும் நிர்வாகத் தாமதத்திற்கும் வழிவகுக்கும்.


அதிக பொறுப்புகளை வகிக்கும் பொது ஊழியர்கள் பரந்த அளவிலான தன்னிச்சையான மற்றும் கொள்கை வகுக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக, அவர்கள் ஆதாரமற்ற அல்லது உள்நோக்கம் கொண்ட புகார்களுக்கு அதிகம் ஆளாகிறார்கள். அவர்களின் பணிகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த அதிகாரிகளுக்கு நியாயமாகவே வலுவான நடைமுறைப் பாதுகாப்புத் தேவைகள் தேவைப்படலாம். கொள்கை முடக்கத்தைத் தவிர்ப்பதற்கு, ஒரு அரசு ஊழியர், தான் எடுக்கும் முடிவுகள் தேவையற்ற மற்றும் ஆதாரமற்ற புகார்களுக்கு ஆளாகாது என்ற உறுதியான உத்தரவாதத்தைப் பெற வேண்டும். அதிகப்படியான வெளி அழுத்தங்கள் இல்லாமல், அதிகாரத்துவத்தை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பது ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியின் உணர்வுக்கு எதிரானது அல்ல.


இருப்பினும், அரசு ஊழியர்களின், குறிப்பாக விருப்ப அதிகாரங்களையும் கொள்கை உருவாக்கும் அதிகாரங்களையும் பயன்படுத்தும் அதிகாரிகளின் சுதந்திரமான செயல்பாடு, விசாரணைகளிலிருந்து விகிதாசாரமற்ற பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்காது. எனவே, ஆதாரமற்ற புகார்கள் குறித்த அச்சத்திலிருந்து பாதுகாப்புக்கான நடவடிக்கைகள், சட்டத்தின் ஆட்சியின் உணர்வில் சமரசம் செய்யாமல், அவர்கள் முடிவெடுப்பதில் எதிர்கொள்ளும் அபாயங்களுக்கு விகிதாசாரமாக இருக்க வேண்டும். ஒரு சிறந்த ஊழல் எதிர்ப்பு கட்டமைப்பு, பொறுப்புணர்வு, நிர்வாகத் திறன் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு நெறிமுறைச் சமநிலையை ஏற்படுத்த வேண்டும்.





Share:

வெறுப்புப் பேச்சு அரசியலமைப்பு சட்டத்தை சோதித்து வருகிறது. இந்தியாவிற்கு தெளிவான விதிகள் தேவை, உரத்த சொற்கள் அல்ல. -அடீல் அகமது

 பொது விவாதங்களில் பிளவுபடுத்தும், வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள் அதிகரித்து வரும் நிலையில், உச்சநீதிமன்றம் அரசியலமைப்புச் நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டிய ஒரு தருணத்தில் உள்ளது. சுதந்திரமான கருத்துரிமையை கண்ணியம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துடன் சமநிலைப்படுத்த வேண்டும்.


இந்திய அரசியலமைப்புச் சட்டம் பேச்சுரிமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அதே நேரத்தில் அது கண்ணியம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தையும் உறுதி செய்கிறது. இந்த உரிமைகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது, ​​அவற்றைச் சமரசம் செய்யும் பணி வெறும் சொல்லாக அல்லாமல், சட்டத்தின் மூலமே சாத்தியமாகிறது. இன்று, வெறுப்புப் பேச்சு (hate speech) என்பது அந்த அரசியலமைப்புச் சமநிலைக்கு ஏற்படும் மிக முக்கியமான சவால்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக, பொதுப் பதவிகளில் அதிகாரிகளிடமிருந்து வெளிவரும் கடுமையான, பிளவுபடுத்தும் பேச்சு அரிதான ஒன்றாக இல்லாமல், அன்றாட நிகழ்வாகிவிட்டது. மத, மொழி அல்லது பிராந்தியக் குழுக்களைத் தாக்கும் கருத்துக்கள் பெரும்பாலும் "அரசியல் பேச்சு," "கடுமையான உண்மைகள்" அல்லது "கலாச்சார வெளிப்பாடு" என்று கூறி நியாயப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், அவற்றின் ஒட்டுமொத்த விளைவு சீரழிவை ஏற்படுத்தும்: அவை பாரபட்சத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கின்றன, சமூகப் பிளவுகளை ஆழப்படுத்துகின்றன மற்றும் புறக்கணிப்பை படிப்படியாக இயல்பாக்குகின்றன.


வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை எவ்வாறு வலுப்படுத்தலாம் என்பது குறித்துப் பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றமன்றத்திடம் இப்போது கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தருணம், முன்னொரு காலத்திய ஒரு முக்கிய அரசியலமைப்புத் திருப்புமுனையை நினைவூட்டுகிறது. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் குறித்த சட்டம் இல்லாத நிலையில், நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் வரை, நீதிமன்றமே தலையிட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க விஷாகா தீர்ப்பின் (Vishaka judgment) மூலம் கட்டாய வழிகாட்டுதல்களை வகுத்தது. வெறுப்புப் பேச்சு இன்று அதே போன்ற ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது.


ஒரு பிளவுப்பட்ட சட்ட பதில்


இந்தியாவில் வெறுப்புப் பேச்சு தொடர்பான சட்டங்கள் இல்லை. வகுப்புவாத அல்லது எரிச்சலூட்டும் பேச்சைக் கையாளும் விதிகள் தண்டனைச் சட்டம், தேர்தல் சட்டம், ஊடக விதிமுறைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகளில் பிளவுப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு வரம்புகள், நடைமுறைகள் மற்றும் அமலாக்க வழிமுறைகளுடன் செயல்படுகின்றன. இதன் விளைவாக நியாயமற்ற சட்ட அமலாக்கம், நீண்ட சட்டப் போராட்டங்கள் மற்றும் எந்த ஒரு தண்டனை இல்லாத நிலையும் ஏற்படுகிறது.


உச்சநீதிமன்றமே இந்த வரம்புகளை ஒப்புக்கொண்டுள்ளது. பிரவாசி பலை சங்கதன் வழக்கில், தற்போதுள்ள சட்டங்கள் வெறுப்புப் பேச்சை வரையறுத்துத் தண்டிப்பதை கடினமாக்குகின்றன என்று உச்சநீதிமன்றம் கூறியது. அமீஷ் தேவ்கன் வழக்கில், 'வன்முறையைத் தூண்டுவது' தண்டனைக்குரியது (incitement to violence) என்றாலும், கண்ணியம் மற்றும் சமூக சமத்துவத்திற்கு ஏற்படும் பாதிப்பும் முக்கியமானது. பேசுபவர் செல்வாக்கு மிக்கவராக இருக்கும்போது சட்டம்  பொருந்தும் என்று அது குறிப்பிட்டது.


இருப்பினும், சட்டத்தை செயல்படுத்துவதில் இன்னும் சீரற்றத் தன்மை நிலவுகிறது. உடனடி வன்முறையைத் தூண்டாத தீங்கு விளைவிக்கும் பேச்சுகளைக் கையாள்வதில் குற்றவியல் சட்டம் மெதுவாகவோ அல்லது கடுமையாகவோ இருக்கிறது. ஆனால், சட்டங்களை மிகவும் பரந்த அளவில் உருவாக்குவது மக்களின் சுதந்திரமான பேச்சுரிமையையும் தடுக்கக்கூடும். இந்தியாவுக்குக் கடுமையான சட்டங்கள் மட்டுமல்லாமல், தீங்கு வெறுப்புப் பேச்சுகளைக் கையாள்வதற்கான புத்திசாலித்தனமான வழிகளும் தேவைப்படுகின்றன.


நோக்கம் மட்டுமே ஒரே அளவுகோல் அல்ல என்பதற்கான காரணம்


வன்முறையை நேரடியாகத் தூண்டும் பேச்சு மட்டுமே ஒழுங்குமுறைக்கு தகுதியானது என்பது பொது விவாதத்தில் தொடர்ந்து நிலவும் ஒரு கட்டுக்கதை உள்ளது. இந்தக் கருத்து தற்போது ஏற்றுக்கொள்ள முடியாததாகி வருகிறது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (International Covenant on Civil and Political Rights) உள்ளிட்ட சர்வதேச மனித உரிமைகள் சட்டம், பாகுபாடு அல்லது விரோதத்திற்கு வழிவகுக்கும் வெறுப்பை ஆதரிப்பது தீங்கு விளைவிக்கும் என்பதை அங்கீகரிக்கிறது. உடனடி வன்முறை இல்லாவிட்டாலும், வெறுப்புப் பேச்சு சமூகங்களை சீர்குலைக்கிறது. ஜனநாயக பங்கேற்பை அரிக்கிறது மற்றும் பொது விவாதத்தை சீர்குலைக்கிறது என்பதை கனேடிய மற்றும் ஐரோப்பிய நீதிமன்றங்கள் பல்வேறு காலங்களில் ஒப்புக் கொண்டுள்ளன.


இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்த யோசனையை ஆதரிக்கிறது. அரசியலமைப்பின் 19(2) பிரிவின்கீழ் பேச்சுரிமை மீதான வரம்புகள் வன்முறையை மட்டுமல்லாமல், பொது ஒழுங்கு, கண்ணியம் மற்றும் ஒழுக்கத்தையும் (public order, decency and morality) உள்ளடக்கியுள்ளன. கண்ணியத்தைப் (Dignity) பாதுகாப்பது ஒரு முக்கியமான அரசியலமைப்பு மதிப்பு (constitutional value) என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


கடுமையான தண்டனை அல்ல, படிப்படியான நடவடிக்கை


ஒற்றைப் பரிமாண குற்றவியல் மாதிரியிலிருந்து விலகி, படிப்படியான நடவடிக்கைக்கான ஒரு கட்டமைப்புக்கு மாறுவதில்தான் நிரந்தர தீர்வு உள்ளது.


தீங்கு விளைவிக்கும் அனைத்துப் பேச்சுகளுக்கும் வழக்குத் தொடரத் தேவையில்லை. முதல் முறை அல்லது குறைந்த தீவிரத்தன்மை கொண்ட சம்பவங்களை நிர்வாக நடவடிக்கைகளின் மூலம் கையாள முடியும்: முறையான எச்சரிக்கைகள், ஆலோசனை வழங்குதல் அல்லது கட்டாய உணர்திறன் பயிற்சி - அரசு அதிகாரிகளுக்கு தேவைப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் தண்டனைக்குரியவை அல்ல, மாறாகத் திருத்தம் செய்யக்கூடியவை. மேலும், நிலைமை மோசமடைவதைத் தடுக்கின்றன.


தீங்கு தொடரும்போது, ​​குடிமை  சட்டத் தீர்வுகள் உதவக்கூடும். துல்லியமாக வடிவமைக்கப்பட்ட தடை உத்தரவுகள் மீண்டும் மீண்டும் நிகழாமல் தடுக்கலாம். வெறுப்புப் பேச்சு வெளியான அதே தளத்தில் வழங்கப்படும் பொது மன்னிப்புகள் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்தை மீட்டெடுக்கலாம். சமூக நிதிகளுக்கு வழங்கப்படும் அபராதங்கள் அல்லது இழப்பீடுகள், வெறுப்புப் பேச்சு ஒரு தனி நபரை மட்டுமல்லாமல் முழு சமூகத்தையும் பாதிக்கிறது என்பதை அங்கீகரிக்கின்றன.


குற்றவியல் தண்டனைகள் (Criminal sanctions) நடைமுறையில் இருக்க வேண்டும். ஆனால், அதுவே கடைசி வழியாக இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் செய்யப்படும் அல்லது தீவிரமான வெறுப்புப் பேச்சுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்லது அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்களால் செய்யப்படும்போது, ​​கடுமையான தண்டனைகள் தேவைப்படுகின்றன. பொது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது பொறுப்பை மேலும் தீவிரப்படுத்துகிறது. அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள சகோதரத்துவத்தைச் சீர்குலைப்பவர்கள், தங்கள் பேச்சு வன்முறையைத் தூண்டவில்லை என்பதற்காக மட்டும் பொறுப்பிலிருந்து தப்பிவிட முடியாது.


தேர்தல் பொறுப்புக்கூறல் முக்கியமானது.


தேர்தல் காலங்களில் வெறுப்புப் பேச்சு மிகவும் ஆபத்தானது. பிளவுபடுத்துதல் (Polarization) ஒரு பிரச்சார உத்தியாக மாறுகிறது. மேலும், சமூகங்கள் வாக்கு வங்கிகளாகவோ அல்லது இலக்குகளாகவோ கருதப்படுகின்றன. தேர்தல் சட்டங்கள் ஊழலைக் கையாளுகின்றன வெறுப்புப் பேச்சு ஒரு தீவிரமான வரம்பை எட்டாதவரை, அதை ஒரு கடுமையான தேர்தல் குற்றமாகக் கருதுவதில்லை.


வெறுப்புப் பேச்சை தகுதி நீக்கத்திற்கான ஒரு காரணமாக வெளிப்படையாக அங்கீகரிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தைத் (Representation of the People Act) திருத்துவது ஒரு தெளிவான செய்தியாக இருக்கும். ஆரோக்கியமான ஜனநாயகம் சமூகத்தைப் பிளவுபடுத்துவதன் அடிப்படையில் அமைய முடியாது. சமூகங்களைத் தாக்கி வாக்குகளைப் பெற முயற்சிப்பது அரசியலமைப்பு விழுமியங்களுக்கு எதிரானது.




நீதிமன்றங்களுக்கு அப்பாற்பட்ட அமைப்புகள்


நீதிமன்றங்களால் மட்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. தடுப்பு, கண்காணிப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் அமைப்பு ரீதியான வழிமுறைகள் இந்தியாவுக்குத் தேவை. ஒரு சுதந்திரமான தேசிய அமைப்பு வெறுப்புப் பேச்சுப் போக்குகளை ஆவணப்படுத்தலாம், ஆலோசனைகளை வழங்கலாம் மற்றும் தரவுகளின் மூலம் நீதிமன்றங்களுக்கு உதவலாம். உள்ளூர் அளவில், சமூக நல்லிணக்கக் குழுக்கள் பதட்டங்கள் மோதலாக மாறுவதற்கு முன்பே அவற்றைத் தணிக்க முடியும்.


ஊடகங்களுக்கும் ஒரு பொறுப்பு உண்டு. பரபரப்பான தலைப்புகளும், சரிபார்க்கப்படாத வகுப்புவாதக் கதைகளும் பாதிப்பை அதிகரிக்கின்றன. பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் பொறுப்பான பத்திரிகைச் செய்திகளை உறுதிசெய்ய, தணிக்கை அல்லாத, கட்டுப்படுத்தும் தொழில்முறை வழிகாட்டுதல்கள் மிகவும் முக்கியமானவை.


நீதித்துறை வழிகாட்டுதல்கள் ஏன் நியாயமானவை


கொள்கை சார்ந்த விவாகரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று சிலர் கூறலாம். ஆனால், அரசியலமைப்பு வரலாறு வேறுவிதமாகக் கூறுகிறது. விசாகா, பிரகாஷ் சிங் மற்றும் பிற வழக்குகளில், அடிப்படை உரிமைகள் ஆபத்தில் இருந்த இடங்களில் உச்சநீதிமன்றம் தலையிட்டுள்ளது. மேலும், சட்டமன்ற அமைதி நிலவியது. சரத்துகள் 141 மற்றும் 142 போன்ற சட்டப்பிரிவுகள், நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் வரை, நிரந்தரமாக அல்லாமல், முழுமையான நீதியை வழங்குவதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் (Court to do complete justice — not permanently) அளிக்கின்றன.


வெறுப்புப் பேச்சு இன்று சமத்துவம், கண்ணியம் மற்றும் சகோதரத்துவத்திற்கு முறையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அவ்வப்போது மட்டும் சட்டத்தை அமல்படுத்துவது, தீங்கு விளைவிக்கும் நடத்தையை இயல்பானதாகத் தோன்றும் வகையில் செய்துவிடும்.


ஒரு அரசியலமைப்புத் தருணம் (constitutional moment)


இந்தியா ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளது. பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமா என்பது கேள்வி அல்ல அது கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும். வெறுப்புணர்வு கட்டுப்படுத்தப்படாமல் விடப்படும்போது, ​​சுதந்திரமும் கண்ணியமும் எப்படி பாதுக்கப்படும்  என்ற கேள்வி எழுகிறது.

தெளிவான விதிகள், நிதானமான பதில்கள் மற்றும் வலுவான நிறுவனப் பொறுப்புக்கூறல் ஆகியவை பேச்சு சுதந்திரத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்க முடியும். அரசியலமைப்புச் சட்டம் அதையேதான் கோருகிறது.


கட்டுரையாளர் இந்திய உச்சநீதிமன்றத்தின் பதிவுபெற்ற வழக்கறிஞர் ஆவார்.




Share:

முக்கியமான கனிமங்கள் தொடர்பாக 2026-ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் என்னென்ன? -குஷ்பூ குமாரி, ரோஷ்னி யாதவ்

 இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள் வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இந்த வர்த்தக ஒப்பந்தத்தை வரவேற்ற அவர்கள், இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற இச்சந்திப்புகளில் 'எரிசக்தி பாதுகாப்பு' (Energy Security) குறித்து முக்கியமாக விவாதித்தனர்.


முக்கிய அம்சங்கள்:


— இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஆகிய இருவரது பேச்சுவார்த்தைகள் குறித்த சமூக ஊடகப் பதிவுகளில், 'எரிசக்தி' விவகாரம் முக்கியமாக இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக தனது தேவையைப் பூர்த்தி செய்ய அமெரிக்கா மற்றும் வெனிசுலா நாடுகளின் உதவியை நாடும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள சூழலில், இந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுகிறது.


— கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அறிவிப்பு குறித்து இந்தியா அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், அமெரிக்கா 25% இறக்குமதி வரி விதித்ததில் இருந்து, ரஷ்யாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவு குறைந்து வருகிறது.


— செயலாளர் ரூபியோ மற்றும் அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் தங்களது சந்திப்பின் முடிவில், 'குவாட்' (Quad) கூட்டமைப்பு மூலம் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடிவெடுத்துள்ளனர். வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியம், இரு நாடுகளின் பொதுவான நலன்களை மேம்படுத்துவதற்கு மிக முக்கியமானது என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர் என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு நடைபெறவிருந்த குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டை, இந்த ஆண்டு இந்தியா நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


— அன்று மாலை, முக்கியமான கனிமங்கள் தொடர்பான அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய ஜெய்சங்கர், ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அல்லது ஒரு சில நிறுவனங்களிடமோ மட்டும் அதிக அளவில் வளங்கள் குவிந்து கிடப்பதால் ஏற்படும் சிக்கல்களையும், முறையான சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் கனிம விநியோகச் சங்கிலியில் உள்ள இடர்பாடுகளைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். 


— தேசிய முக்கியமான கனிமங்கள் திட்டம் (National Critical Minerals Mission), அரிய பூமி கனிமங்களுக்கான வழித்தடங்கள் (Rare Earth Corridors) மற்றும் பொறுப்பான வணிகம் போன்ற முன்னெடுப்புகளின் மூலம், இந்தியா தனது மீள்திறனை மேம்படுத்த மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பற்றி அவர் 'X' தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், முக்கியமான கனிமங்கள் தொடர்பான வளங்களுக்கான புவிஅரசியல் ஈடுபாட்டு அமைப்பு (Forum on Resource Geostrategic Engagement (FORGE)) சார்ந்த முயற்சிக்கு இந்தியாவின் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.


உங்களுக்குத் தெரியுமா?


— நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது 2026-27 மத்திய நிதிநிலை அறிக்கை உரையில், இந்தியாவின் கடலோர மாநிலங்களான ஒடிசா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் அரிய மண் கனிமங்களுக்கான பிரத்யேக வழித்தடங்களை (Dedicated Rare Earth Corridors) அமைக்க முன்மொழிந்துள்ளார்.


— சின்டர்டு அரிய மண் நிரந்தர காந்தங்களின் (Sintered Rare Earth Permanent Magnets) உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட திட்டத்திற்கு ஏற்பவே இந்த முன்மொழிவு அமைந்துள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.


— சின்டர்டு அரிய பூமி நிரந்தர காந்தங்களின் (Sintered Rare Earth Permanent Magnets) தயாரிப்பை ஊக்குவிக்கும் திட்டத்தின்கீழ், ஆண்டுக்கு மொத்தம் 6,000 மெட்ரிக் டன் உற்பத்தித் திறனை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்தப் பணியானது, போட்டி ஏலத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து நிறுவனங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு நிறுவனம் ஆண்டுக்கு 1,200 மெட்ரிக் டன் வரை உற்பத்தி செய்ய அரசாங்கத்தின் அனுமதியைப் பெறும் என்றும் தெரிவித்துள்ளனர். 


— இந்தியா தனது தேசிய முக்கிய கனிமங்கள் திட்டத்தை (National Critical Mineral Mission (NCMM)) கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. 2024-25-ஆம் ஆண்டு முதல் 2030-31-ஆம் ஆண்டு வரையிலான ஏழு ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்காக ₹16,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய கனிமங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும், மேம்பட்ட தொழில்நுட்பம், முறையான ஒழுங்குமுறை மற்றும் நிதி வசதி மூலம் கனிமங்களை ஆய்வு செய்தல், அகழ்ந்தெடுத்தல், சுத்திகரிப்பு செய்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல் போன்ற ஒட்டுமொத்த மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.




Share:

அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான ‘நியூ ஸ்டார்ட்’ (New START) ஒப்பந்தத்தின் காலக்கெடு முடிந்துவிட்டது. -ரோஷ்னி யாதவ்

 அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் தங்களின் போர்த்திறன் சார்ந்த அணு ஆயுதங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றை ஏவும் கருவிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட 'புதிய உத்திமுறைஆயுதக் குறைப்பு ஒப்பந்தம்' (New Strategic Arms Reduction Treaty (New START)) தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடைமுறையில் இருந்த கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் இதுவே ஆகும். இந்தச் சூழ்நிலையில், இந்த ஒப்பந்தத்தைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகிறது.




முக்கிய அம்சங்கள்:


1. START என்பது 'உத்திமுறை ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தின்' (Strategic Arms Reduction Treaty (START-I)) சுருக்கமாகும். இது 1991-ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் அப்போதைய சோவியத் ஒன்றியத்திற்கும் (United States of Soviet Russia (USSR)) இடையே கையெழுத்தானது. பின்னர், 1994-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. 


2. இரு நாடுகளும் வைத்திருக்க வேண்டிய அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை 6,000-ஆகவும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் (Intercontinental Ballistic Missiles (ICBMs)) எண்ணிக்கையை 1,600-ஆகவும் கட்டுப்படுத்திய ஸ்டார்ட்-I (START-I) ஒப்பந்தம் 2009-ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. இதற்குப் பிறகு, முதலில் உத்திமுறை தாக்குதல் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தமும் (Strategic Offensive Reductions Treaty (SORT)) (மாஸ்கோ ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது), அதன் பின்னர் ‘New START’ ஒப்பந்தமும் நடைமுறைக்கு வந்தன.


3. அதிகாரப்பூர்வமாக 'உத்திமுறைத் தாக்குதல் ஆயுதங்களைக் குறைப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான ஒப்பந்தம்' என்று அழைக்கப்படும் நியூ ஸ்டார்ட் (New START) ஒப்பந்தம், பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி, 2011-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இது கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுதங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.


4. இரு நாடுகளும் பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி, 2018-ஆம் ஆண்டுக்குள், முக்கிய போர் ஆயுதங்களைக் குறைப்பதற்கான ஒப்பந்தக் கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. மேலும், அந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் வரை அந்தக் கட்டுப்பாட்டு எல்லைக்குள்ளேயே செயல்படவும் ஒப்புக்கொண்டன. பின்னர், அமெரிக்காவும் ரஷ்யக் கூட்டமைப்பும் பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு வரை இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க ஒப்புக்கொண்டன. 


5. அமெரிக்க வெளியுறவுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள நியூ ஸ்டார்ட் (New START) ஒப்பந்தப் பக்கத்தின்படி, அமெரிக்காவும் ரஷ்யாவும் பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி, 2018-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் அந்த ஒப்பந்தத்தின் முக்கியக் கட்டுப்பாடுகள் பின்வருமாறு:


* கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (Intercontinental Ballistic Missiles (ICBMs)), நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் (submarine-launched ballistic missiles (SLBMs)) மற்றும் அணுஆயுதங்களைச் சுமந்து செல்லும் கனரகப் போர் விமானங்கள் என மொத்தம் 700 தயார் நிலையில் இருக்கலாம். 

* தயார் நிலையில் உள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBMs), நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் (SLBMs) மற்றும் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய கனரக போர் விமானங்கள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 1,550-ஆக இருக்க வேண்டும். (இதில் ஒவ்வொரு கனரக போர் விமானமும் ஒரு அணு ஆயுதமாகவே கணக்கிடப்படும்).


* அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய நிலையில் தயார் நிலையில் உள்ள மற்றும் தயார் நிலையில் இல்லாத 800 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுதளங்கள் (ICBM launchers), நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை ஏவுதளங்கள் (SLBM launchers) மற்றும் கனரக போர் விமானங்கள் ஆகியன இருக்கலாம் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


6. குறிப்பாக, இந்த ஒப்பந்தம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. மிக சமீபத்தில் 2023-ஆம் ஆண்டில், உக்ரைன் போருக்கு மத்தியில் 'நியூ ஸ்டார்ட்' (New START) ஒப்பந்தத்தின்கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வுப் பணிகளை ரஷ்யா நிறுத்தி வைத்தது, மேலும், கடந்த செப்டம்பர் மாதம், இந்த ஒப்பந்தத்தை ஓராண்டு காலத்திற்குத்  நீட்டிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்மொழிந்தார்.


7. "உக்ரைன் போரினால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால், 'நியூ ஸ்டார்ட்' (New START) ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்த மாஸ்கோ மற்றும் வாஷிங்டன் இடையேயான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கவில்லை என்கின்றனர். 



அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம்


1. 1968-ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டு, 1970-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த இந்த சர்வதேச ஒப்பந்தமானது, அணு ஆயுதங்கள் மற்றும் அதன் தொழில்நுட்பங்கள் பரவுவதைத் தடுப்பதையும், அணுசக்தியை சரியான முறையில் பயன்படுத்துவதில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், அணு ஆயுதக் குறைப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


2. இந்த ஒப்பந்தத்தின்படி, ஜனவரி மாதம் 1-ஆம் தேதி, 1967-ஆம் ஆண்டுக்கு முன்பாகவே அணு ஆயுதத்தையோ அல்லது அணு ஆயுதக் கருவிகளைத் தயாரித்து, அதனை வெடித்துச் சோதித்த ஒரு நாடுதான்' அணுசக்தி நாடாக (Nuclear State) வரையறுக்கப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் (தற்போதைய ரஷ்யா) மற்றும் சீனா ஆகியவையே அணு சக்தி நாடுகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. 


3. இந்த ஒப்பந்தத்தில் இதுவரை 191 நாடுகள் இணைந்துள்ளன. இந்தியா 1974-ஆம் ஆண்டில் தனது முதல் அணு ஆயுத சோதனையை நடத்தியது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை. மாறாக, அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதில் 'அனைவருக்கும் சமமான விதிமுறை' இருக்க வேண்டும் என்ற கொள்கையையே இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களுக்கு மட்டும் சலுகைகளை வழங்குவதாலும், அவர்களுக்குச் சாதகமாக ஒரு குறிப்பிட்ட தேதியை காலக்கெடுவாக நிர்ணயித்திருப்பதாலும், இந்த ஒப்பந்தம் ஒரு 'பாரபட்சமான'  ஒப்பந்தம் என்று விமர்சிக்கப்படுகிறது.




Share: