சதித் திட்டத்தை திட்டமிட்ட “முக்கிய சதிகாரர்கள்” (masterminds) மற்றும் அதற்கு உதவி செய்த “வசதி செய்தவர்கள்” (facilitators) என இருவரையும் வேறுபடுத்தி, குற்றம் சாட்டப்பட்டவர்களின் பங்களிப்பு அளவுக்கு ஏற்ப வித்தியாசமான தண்டனைக் கட்டமைப்பை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ளது.
2020-ஆம் ஆண்டு டெல்லி கலவர சதி வழக்கில் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் கடந்த திங்கள் கிழமையன்று பிணை வழங்க மறுத்தது. ஆனால், மற்ற ஐந்து பேருக்கு — குல்பிஷா ஃபாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான், மற்றும் ஷதாப் அகமது ஆகியோருக்கு பிணை வழங்கியது.
சதித்திட்டத்தை 'திட்டமிட்டவர்களையும்' அதை 'வசதி செய்தவர்களையும்' தெளிவாகப் பிரிக்கும் வகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெவ்வேறு பங்குகளை வகித்தனர் என்று நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு தெரிவித்தது.
இந்த அளவிலான ஒரு சதித்திட்டத்தில், "கருத்தியல் உந்துசக்தியாக" கருதப்படுபவர்களையும், வெறும் உத்தரவுகளை நிறைவேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களையும் சமமாக நடத்த முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பதவிகளின் படிநிலையில்
தனிநபர் மீதான குற்றத்தின் மதிப்பீடு என்பதே இந்தத் தீர்ப்பின் மையக் கவனம் ஆகும். உச்சநீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பங்களிப்பு பரவலாக வேறுபடுகிறது என்பதையும், கூறப்பட்ட சதித்திட்டத்தில் ஒரு தெளிவான படிநிலை (அதிகார அடுக்கு) இருப்பதையும் சுட்டிக்காட்டியது.
நீதிமன்றம், காலித் மற்றும் இமாமைப் பற்றி கூறியதாவது, அரசு தரப்பு சமர்ப்பித்த ஆதாரங்கள், இவர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (Citizenship (Amendment) Act (CAA)) எதிரான போராட்டங்களைத் திட்டமிடுதல், வழிநடத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகித்ததாகக் காட்டுகின்றன. டெல்லியின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் சாலைத் தடைகள் (சக்கா ஜாம்) ஏற்படுத்தும் திட்டத்தை உருவாக்கிய 'கருத்தியல் உந்துசக்திகளும்' 'சூத்திரதாரிகளும்' இவர்களே என்று திட்டவட்டமாகக் கூறுகிறது. இவர்கள் போராட்டங்களில் மையமான தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்ததாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.
மாறாக, பிணை வழங்கப்பட்ட ஐந்து குற்றவாளிகளும் “உள்ளூர் அளவில் உதவிகள் செய்தவர்கள்” அல்லது “சம்பவ இடத்திலேயே செயல்படுத்துபவர்கள்” என்று விவரிக்கப்பட்டனர். அவர்களின் பங்களிப்புகள் “துணை நிலையிலானவை” என்று கூறப்பட்டன. ஏனெனில், அவர்கள் உயர் மட்டங்களில் இருந்து வந்த அறிவுறுத்தல்களின்படியே செயல்பட்டனர். விசாரணை முடிந்து, வழக்கும் தாமதமாகி வரும் நிலையில், இந்த சிறிய அளவில் பங்கேற்றவர்களை காலவரையின்றி காவலில் வைத்திருப்பது, சட்டத்துக்கு முரணான விகிதாசாரமற்ற செயல் என்று நீதிமன்றம் கருதியது.
'பயங்கரவாதச் செயல்' என்பதன் வரையறை குறித்து
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (Unlawful Activities (Prevention) Act (UAPA)) பிரிவு 15-ன்கீழ் ஒரு "பயங்கரவாத செயல்" எவ்வாறு வரையறுக்கப்படுகிறது என்பது தீர்ப்பில் உள்ள ஒரு முக்கியப் பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் போராட்டங்களையும் சாலை மறியல்களையும் மட்டுமே நடத்தியதாகவும், அது பயங்கரவாதம் இல்லை, அரசுக்கு எதிரான அரசியல் கருத்து வெளிப்பாடு மட்டுமே என்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்கவில்லை. பிரிவு 15-ன் பயங்கரவாத வரையறை, குண்டு அல்லது துப்பாக்கி போன்ற ஆயுதங்களை மட்டும் உள்ளடக்கியது அல்ல என்று தீர்ப்பளித்தது. இந்தியாவின் பொருளாதார பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் அல்லது அத்தியாவசிய சேவைகளைத் தடுக்கும் வேறு எந்த வகையான செயல்களையும் இந்தச் சட்டப்பிரிவு உள்ளடக்கியதாக நீதிமன்றம் விளக்கியது.
முக்கியச் சாலைகளைத் தொடர்ந்து மறித்து, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெருமளவில் பாதிப்பது அமைதியான போராட்டங்கள் அல்ல; மாறாக, இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் திட்டமிட்ட செயல்கள் என்ற அரசு தரப்புவாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மேலும், இதுபோன்ற சாலை மறிப்புகள் பொது அமைதியைக் குலைக்கும் நோக்கத்துடனும், 2020–ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகை போன்ற முக்கிய சர்வதேச நிகழ்வுகளைக் குறிவைத்து நிகழும்போது, அவை முதல் பார்வையிலேயே ஒரு பயங்கரவாதச் செயலாகக் கருதப்படலாம் என்றும் நீதிமன்றம் கூறியது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act (UAPA)) சில விதிகளின் பரந்த நோக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மனுத் தாக்கல் செய்த பல குடிமைச் சமூக ஆர்வலர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களில் காலித்தும் ஒருவர் ஆவார். அதன் முக்கிய அம்சங்களில் ஒன்று, பிரிவு 15-ன்கீழ் உள்ள “வேறு ஏதேனும் வழிகள் மூலம்” (by any other means) என்ற சொற்றொடரை எவ்வாறு விளக்குவது என்பதாகும். இருப்பினும், 2024-ஆம் ஆண்டில், மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்திற்குப் பதிலாக ஒரு உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகு, அந்த மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. அதன்பிறகு, மனுதாரர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினர், அங்கு வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. சட்டப்பிரிவு 15-ன் நோக்கம் குறித்து தெளிவான தீர்ப்பு கிடைத்திருந்தால், அது காலித்துக்குப் பயனளித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த விளக்கம் பிணை வழங்குவதில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) பிரிவு 43D(5)-ன் கீழ், நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் "மேலோட்டமாக உண்மை" என்று கண்டறிந்தால், ஜாமீன் வழங்க முடியாது. காலித் மற்றும் இமாம் ஆகியோரின் வழக்குகளில், சாட்சிகளின் வாக்குமூலங்கள், வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் கூட்டங்களின் பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சதித்திட்டத்திற்கான ஒரு ஆரம்ப நிலையிலான வழக்கை நிலைநாட்டுவதற்குப் போதுமானதாக உள்ளன என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் விளைவாக, பிணை வழங்குவதற்கான சட்டத்தடை அவர்களுக்கு முழுமையாகப் பொருந்தியதாகக் கூறப்படுகிறது.
நீண்டகால சிறைத் தண்டனை குறித்து
அனைத்து மேல்முறையீட்டாளர்களும் (appellants) தாங்கள் மிக நீண்டகாலமாகவே காவலில் இருப்பதாக வாதிட்டனர். அவர்கள் 2020-ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கிறார்கள். மேலும், வழக்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் நிலையைத் தவிர்த்து வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவான விசாரணைக்கு வாய்ப்பு இல்லாதபோது, அரசியலமைப்பு நீதிமன்றங்கள் (constitutional courts) சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் தடையையும்மீறி, சட்டப்பிரிவு 21-ன்கீழ் (Article 21) உள்ள வாழ்வு மற்றும் சுதந்திரத்திற்கான உரிமையைப் (right to life and liberty) பாதுகாப்பதற்காக பிணை வழங்க முடியும் என்று கூறிய ஒன்றிய அரசு vs கே.ஏ. நஜீப் வழக்கில் (Union of India v. K.A. Najeeb) உச்சநீதிமன்றம் அளித்த 2021-ஆம் ஆண்டு தீர்ப்பை அவர்கள் மேற்கோள் காட்டினர்.
ஆனாலும், திங்கட்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் K.A. நஜீப் வழக்கில் தெளிவாகக் கூறியது: வழக்குத் தாமதம் மட்டுமே பிணை கொடுக்க வேண்டிய ஒரு தானியங்கி விதியை உருவாக்காது. தாமதம் என்பது சட்டக் கட்டுப்பாடுகளைத் தானாக நீக்கும் “துருப்புச்சீட்டு” அல்ல; அது வழக்கை இன்னும் கவனமாகவும் நெருக்கமாகவும் நீதிமன்றம் ஆய்வு செய்யத் தூண்டும் ஒரு காரணி மட்டுமே என்றும் நீதிமன்றம் விளக்கியது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் 835 சாட்சிகள் அடங்கிய அதிக அளவிலான ஆதாரங்கள் மற்றும் எதிர்தரப்பினரால் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகள் காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டதாகவும், எனவே, இதற்கு முழுவதும் வழக்குத் தொடுக்கும் தரப்பை மட்டும் குறைகூற முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, வழக்கு தாமதமானது என்ற வாதத்தை, குற்றத்தின் தீவிரத்தன்மை மற்றும் அதில் குற்றம் சாட்டப்பட்டவரின் பங்கு ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இந்த வழக்கில், முக்கிய குற்றவாளிகள் என்று கூறப்படும் காலித் மற்றும் இமாம் ஆகியோரின் குற்றத்தின் தீவிரத்தன்மை மற்றும் சதித்திட்டத்தில் அவர்களின் முக்கியப் பங்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஜாமீன் வழங்குவதற்கான சட்டத்தடை என்பது வழக்கில் ஏற்பட்ட தாமதத்தை விட மிகவும் முக்கியமானது என்று நீதிமன்றம் கூறியது.
இருப்பினும், தளவாட உதவிகள் அல்லது உள்ளூர் மக்களைத் திரட்டுவது போன்ற பணிகளுக்கு மட்டுமே உதவியாக இருந்தவர்களுக்கு, அவர்களின் தொடர்ச்சியான தடுப்புக் காவல் தண்டனைக்குரியதாகிவிட்டது என்று நீதிமன்றம் கூறியது. ஏனெனில், அவர்களால் வழக்கை எந்தவிதத்திலும் தன்னிச்சையாகப் பாதிக்கக்கூடிய திறன் அவர்களுக்கு இல்லை என்பதால், அவர்களுக்குச் பிணை அளிப்பதற்குச் சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பிணை வழங்கப்பட்ட ஐந்து குற்றவாளிகள் குறித்து
ஃபாத்திமாவைப் பொறுத்தவரை, அவர் சீலம்பூர் போராட்டத் தளத்தில் ஒரு உள்ளூர் அமைப்பாளராகக் கருதப்படுகிறார். ஆனால், அவரது பங்கு வெறும் அறிவுறுத்தல்களைச் செயல்படுத்துவதாக மட்டுமே இருந்தது என்றும், முக்கிய முடிவுகளை எடுப்பதில் அவர் ஈடுபடவில்லை என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. நீதிமன்றம் 'சமத்துவக் கொள்கையையும்' பயன்படுத்தியது. அதாவது, அதே போன்ற நிலையில் இருந்த இணை-குற்றவாளிகளான நடாஷா நர்வால் மற்றும் தேவாங்கனா கலிதா ஆகியோருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது என்பதையும் சுட்டிக்காட்டியது.
ஹைதரைப் பொறுத்தவரை, போராட்டத் தளங்களையும் நிதியையும் நிர்வகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால், இந்தச் சதித்திட்டத்தில் அவரது பங்கு மற்றவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே இருந்தது என்றும், சூழ்நிலைக்கு ஏற்ப அவர் செயல்பட்டார் என்றும், அவராகவே எடுத்த முடிவல்ல என்றும் கண்டறியப்பட்டது.
ரஹ்மானின் வழக்கில், அவர் ஜாமியா மில்லியா இஸ்லாமியா முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவராக நிதி மற்றும் உள்ளூர் அளவிலான ஆதரவை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால், பெரிய சதியில் அவருக்குச் சுதந்திரமான முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை என்பதால் பிணை வழங்கப்பட்டது.
சாந்த் பாக் பகுதியில் உள்ளூர் செயல்பாடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட கான் என்பவர், தீர்ப்பில் “முக்கிய செயல்பாட்டு பொறுப்பு” (Operational Role) உள்ளவர் என்று குறிப்பிடப்பட்டார்.
அஹமது என்பவர், தீர்ப்பில், சொந்த அதிகாரம் இல்லாமல் “நடைமுறை செயல்படுத்தும் நிலையில்” பணியாற்றியவர் என்று விவரிக்கப்பட்டார்.
அடுத்து என்ன?
ஐந்து குற்றவாளிகளுக்கு இடைக்கால பிணை வழங்கிய உச்சநீதிமன்றம், சாட்சிகளைப் பாதிக்காமல் அல்லது ஆதாரங்களை அழிக்காமல் இருக்க கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. அவர்கள் ஒவ்வொருவரும் ₹2 லட்சம் மதிப்பிலான தனிப்பட்ட பிணைப் பத்திரமும், இரு உள்ளூர் ஜாமீன்தாரர்களும் வழங்க வேண்டும்; மேலும், டெல்லி தேசிய தலைநகர் பகுதிக்குள் தங்கியிருக்க வேண்டும் என்கிற பல நிபந்தனைகளை விதித்துள்ளது .
அவர்கள் தங்கள் கடவுச்சீட்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்றும், வாரத்திற்கு இரண்டு முறை டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அறிக்கை செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு பற்றி பொதுவெளியில் அறிக்கைகள் வெளியிடுவதற்கோ அல்லது சாட்சிகளைத் தொடர்பு கொள்வதற்கோ நீதிமன்றம் அவர்களுக்குத் தடை விதித்தது.
காலீத் மற்றும் இமாம் ஆகியோரின் வழக்கில், விசாரணையின் மெதுவான வேகத்தைப் பற்றி நீதிமன்றம் கவலை தெரிவித்ததோடு, விசாரணை நீதிமன்றம் விரைவாக வழக்கை நடத்தும்படி உத்தரவிட்டது. மேலும், வழக்கின் அரசுத் தரப்பு 'பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின்' விசாரணை முடிந்த பிறகு அல்லது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு வருடம் கழித்து, இவை இரண்டில் எது முதலில் வருகிறதோ, அப்போது அவர்கள் மீண்டும் பிணை கோர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.