காந்தியும் அம்பேத்கரும் ஏன் முரண்பட்டனர்? : தனித் தொகுதிகள், இந்து மதம் முதல் நீதி பற்றிய கருத்து வரை. -நிகிதா மோஹ்தா

  1931-ம் ஆண்டு, மகாத்மா காந்தி, காங்கிரஸைப் பற்றிய விமர்சனங்கள் குறித்து பி. ஆர். அம்பேத்கரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு அம்பேத்கரின் பதில், இருவருக்கும் இடையிலான பல கருத்து வேறுபாடுகளின் முக்கியத்துவத்தை வெளிப்ப்படுத்தியது.


மகாத்மா காந்தி இறந்து எழுபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகும், அவரது மிக வலிமையான எதிரியான பி.ஆர். அம்பேத்கருடனான அவரது உறவு குறித்து உலகம் தொடர்ந்து விவாதித்து வருகிறது. காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையிலான உறவு என்பது இரண்டு தனிநபர்களுக்கிடையேயான ஒரு தத்துவார்த்த கருத்து வேறுபாடு மட்டுமல்ல. இது இந்தியச் சமூகம் குறித்த முரண்பட்ட கண்ணோட்டங்களுக்கு இடையேயான ஒரு வலுவான மோதலைப் பிரதிபலித்தது. அருந்ததி ராய் தனது 'தி டாக்டர் அண்ட் தி செயிண்ட்: சாதி, இனம் மற்றும் சாதி ஒழிப்பு-2017' (The Doctor and the Saint: Caste, Race, and Annihilation of Caste) நூலில் குறிப்பிட்டது போல், அவர்கள் ஒவ்வொருவரும் முற்றிலும் மாறுபட்ட நலக் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். அவர்களது போராட்டம் இந்தியாவின் தேசிய இயக்கத்தின் மையத்தில் அரங்கேறியது.


சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்த அவர்களின் வேறுபாடுகள் சுதந்திர இந்தியாவின் அடித்தளங்களை வடிவமைத்தன. மேலும், இந்த வேறுபாடுகள் இன்றும் நாடாளுமன்றத்தின் அவையில் எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன.


அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து


1931-ம் ஆண்டு இரண்டாவது வட்டமேசை மாநாட்டிற்கு சில வாரங்களுக்கு முன்பு, மகாத்மா காந்தியும் பி.ஆர். அம்பேத்கரும் முதன்முறையாக மும்பையில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது, ​​காங்கிரஸ் மீதான அம்பேத்கர் முன்வைத்த விமர்சனங்கள் குறித்து காந்தி கேள்வி எழுப்பினார். இந்த விமர்சனத்தை அவர் தேசத்தின் மீதான தாக்குதலாகவே பார்த்தார். அம்பேத்கர் இதை வன்மையாக மறுத்ததுடன், தனக்குத் தாய்நாடு என்று எதுவும் இல்லை என்று பதிலளித்தார். மேலும், தங்கள் நிலையை உண்மையாகப் புரிந்துகொண்ட எந்தத் தீண்டத்தகாதவரும் இந்த நாட்டை நினைத்துப் பெருமைப்பட மாட்டார் என்றும் கூறினார்.


இது லண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அவர்களின் நிலைப்பாடுகளுக்கு இடையிலான பதற்றம் பகிரங்கமானது. அங்கு காந்தி குறிப்பிட்டதாவது, "நான் தீண்டத்தகாத மக்களின் பரந்த பெரும்பான்மையினரைத் தானே பிரதிநிதித்துவப்படுத்துவதாக” காந்தி அறிவித்தார். இந்த அறிவிப்பு அவர்களுக்கு இடையேயான முதல் முக்கியப் பொது மோதலாக அமைந்தது.


இருப்பினும், ஒடுக்கப்பட்ட வகுப்பினரைப் பற்றிய நீதிக்கான கேள்விகளை, அந்தச் சமூகத்தைச் சாராதவர்கள் எவராலும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்பது அம்பேத்கரின் கருத்தாகும். ஒரே சமூக அடையாளத்தைப் பகிர்ந்துகொள்பவர்களால் மட்டுமே அவர்களுக்காக உண்மையாகப் பேச முடியும் என்று அவர் வாதிட்டார். இருப்பினும், காந்தி இந்த முன்மொழிவை உறுதியாக நிராகரித்தார். தனி வாக்காளர் தொகுதிகள் (separate electorate) இந்து சமூகத்தை உடைத்து, தீண்டத்தகாதவர்களை மேலும் தனிமைப்படுத்தும் என்று அவர் நம்பினார். "தீண்டாமை வாழ்வதைவிட இந்து மதம் இறந்துவிடுவதை நான் விரும்புகிறேன்" என்று அவர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.


1932-ம் ஆண்டில், பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்ட், வகுப்புவாதப் பிரச்சினை குறித்த அரசாங்கத்தின் முடிவை அறிவித்தார். அந்த முடிவு தீண்டத்தகாதவர்களுக்கு 20 ஆண்டுகளுக்குத் தனித் தொகுதியை வழங்கியது. அந்த நேரத்தில், பூனாவில் உள்ள எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த காந்தி, தனி வாக்காளர் தொகுதிகளுக்கான ஏற்பாடு திரும்பப் பெறப்படாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று அறிவித்தார்.


மதம் குறித்து 


காந்தி ஒரு தீவிர இந்து பக்தர். சமூக சீர்திருத்தத்திற்கான ஒரு தார்மீக வழிகாட்டியாக அவர் மதத்தைப் பார்த்தார். இந்து மதம் சீர்திருத்தத்திற்கும் மறுவிளக்கத்திற்கும் உட்பட்டது என்று அவர் நம்பினார். இந்த நம்பிக்கை பகவத் கீதை குறித்த அவரது வாசிப்பில் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. பிந்து பூரி தனது 'அடையாளம், சமூகம் மற்றும் நீதி குறித்த அம்பேத்கர்-காந்தி விவாதம்-2022' (The Ambedkar-Gandhi Debate on Identity, Community and Justice) என்ற நூலில் குறிப்பிடுவதுபோல, 1930-களில் இந்தியா, காந்தியைப் பொறுத்தவரை, யாகம் (தியாகம்) என்பது நெருப்பில் சடங்கு ரீதியான காணிக்கைகளைச் செலுத்துவது அல்ல. மாறாக, அது ஒருவரிடமிருந்து மிகவும் விலகி இருப்பவர்களுக்குத் தன்னலமற்ற சேவை செய்வதைக் குறித்தது. இந்த வகையான மறுவிளக்கத்தின் மூலம், சமூக சீர்திருத்தம் சாத்தியம் என்று காந்தி நம்பினார். மேலும், அத்தகைய சீர்திருத்தம் மதத்தைத் துறக்காமலேயே நிகழ முடியும் என்றும் அவர் நம்பினார்.


இதற்கு நேர்மாறாக, அம்பேத்கர் இந்து மதத்தை சீர்திருத்த முடியாத ஒன்றாகக் கருதினார். 1935-ம் ஆண்டிலேயே, "நான் ஒரு இந்துவாகப் பிறந்தேன், ஆனால் ஒரு இந்துவாக இறக்க மாட்டேன்" (I was born a Hindu but I will not die a Hindu) என்று கூறி அவர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். அவர் மேலும் வாதிட்டதாவது, "நீங்கள் சாஸ்திரங்களை மட்டும் நிராகரிக்கக்கூடாது, புத்தர் மற்றும் நானக் குறிப்பிட்டது போல் அவற்றின் அதிகாரத்தையும் மறுக்க வேண்டும். இந்துக்களிடம் உண்மையைச் சொல்லும் துணிச்சல் மக்களுக்கு இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த மதம் தான் சாதி புனிதமானது என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.


இந்து மதத்தின் மீது ஆழ்ந்த ஏமாற்றம் கொண்டிருந்தபோதிலும், அம்பேத்கர் ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொண்டார். ஆன்மீகப் பிணைப்பிற்கான மனிதத் தேவையை அவர் அங்கீகரித்தார். சட்ட உரிமைகளோ அல்லது அரசியலமைப்பு உத்தரவாதங்களோ மட்டும் அந்த ஏக்கத்தைப் பூர்த்தி செய்ய முடியாது. இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் உட்பட கிட்டத்தட்ட இருபதாண்டுகளாக நீடித்த ஆய்வுக்குப் பிறகு, 1956-ல் அவர் பௌத்த மதத்திற்கு மாறினார். அவர் தனது சொந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பௌத்த மதத்தைத் தழுவினார்.


நீதி பற்றி


காந்தி சட்டம் பயின்றிருந்தாலும், பிரிட்டிஷ் சட்ட அமைப்பைப் பற்றி அறிந்திருந்தாலும், சட்டத்தின் ஆட்சி மட்டுமே நீதியை உறுதிப்படுத்த முடியும் என்று அவர் நினைக்கவில்லை.அவர் மூன்றாம் தரப்பு நீதியை எதிர்த்தார். மேலும், சுருக்கமான சட்ட சமத்துவத்தை அறுதி சமத்துவத்தின் சமத்துவம் (samata), சமபாவனை (samabhava) மற்றும் சமநோக்கு (samadarshita) எனும் இலட்சியத்தால் மாற்றினார். இந்திய நெறிமுறை மரபிலிருந்தும், தர்மத்தின் வரலாற்று அர்த்தத்திலிருந்தும் எடுத்துக்கொண்டு, “நீதி நிலைத்திருக்க முடியும் ஒரே வழி, அது சமமான மனப்பான்மையிலும் (equi-mindedness), ஒடுக்கப்பட்டவராக இருந்தாலும் சரி, ஒடுக்குபவராக இருந்தாலும் சரி, "மற்றவரை" மதித்தலிலும் வேரூன்றியிருக்க வேண்டும் என்பதேயாகும்” என்று காந்தி வாதிட்டார்.


இருப்பினும், அவர் அமைப்புகளை முழுமையாக நிராகரிக்கவில்லை. பிந்து பூரி குறிப்பிடுவது போல, காந்தி ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் நீதியை அடைய முடியும் என்று நம்பினார். இந்த அணுகுமுறை, ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு சட்டமன்றங்களில் பிரதிநிதித்துவம் போன்ற நிலைகளை உள்ளடக்கியிருந்தது. இது அடக்குமுறையாளரின் மனமாற்றத்தின் மூலம் தனிநபர்களின் மாற்றத்தையும் உள்ளடக்கியிருந்தது.


மறுபுறம், அம்பேத்கர் நீதியை முதன்மையாக சட்டங்கள், உரிமைகள் மற்றும் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும் அநீதியைத் திருத்தவும் கூடிய அரசியலமைப்பு பாதுகாப்புகள் மூலம் அணுகினார். நீதி என்பது தார்மீக உணர்வுகள் அல்லது தனிப்பட்ட மனசாட்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.


Original Article : Why Gandhi and Ambedkar clashed: From separate electorates to Hinduism to concept of justice?. -Nikita Mohta

Share:

சட்டம் பெண்களுக்குத் துணை நிற்கத் தவறும்போது, ​​வன்முறை அந்த இடத்தை நிரப்புகிறது. -டெரெக் ஓ'பிரையன்

  சட்டத்தில் சம்மதம் என்பது நிபந்தனைக்குட்பட்டதாக இருக்கும் வரை, அரசியலமைப்புச் சட்டம் உறுதியளிக்கும் கண்ணியம், சமத்துவம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் குறித்த வாக்குறுதிக்கு நேரெதிராக, பெண்களுக்கான நீதி யதார்த்தத்தில் நிபந்தனைக்குட்பட்டதாகவே இருக்கும்.


மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்தபோது, பல ​​உடல் மற்றும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் செய்திகளில் வெளிவந்தன. இது பல பத்தாண்டுகளுக்குப் பிறகும் அதன் விளைவுகளை அனுபவிக்கக்கூடிய ஒரு உச்சகட்ட கொடுமையை மணிப்பூர் கண்டது. இந்த மாத தொடக்கத்தில், இனக்கலவரத்தின் போது கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 20 வயதுப் பெண் ஒருவர் தனது காயங்களால் உயிரிழந்தார். இது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய நிகழ்வாகும். டெல்லியில் உள்ள அரசியலமைப்பு சபையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி பேசும்போது, ​​"அவளுக்கு யாராலும் நீதி வழங்க முடியவில்லை" என்று கூறினார். இது மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு நீதி என்பது எப்படி இருக்கும்? முக்கிய சட்டங்களில் உள்ள இடைவெளிகள் பெண்களின் சம்மதத்தை எவ்வாறு தொடர்ந்து பலவீனப்படுத்துகின்றன? என்பதைப் பற்றி ஒரு ஆய்வு.


திருமணப் பாலியல் வன்முறை விதிவிலக்கு


1860-ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு, பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 63-ல் தக்கவைக்கப்பட்டுள்ள இந்தச் சட்டம், ஒரு ஆண் தனது மனைவியுடன் அவரது சம்மதமின்றி மேற்கொள்ளும் பாலியல் உறவை வன்முறையின் வரையறையிலிருந்து தொடர்ந்து விலக்கப்பட்டுள்ளது.


இந்த விதிவிலக்கு திருமணத்திற்குள் பெண்களின் சம்மதத்தை முழுமையாக மறுக்கிறது. ஒரு கணவனுக்கு தன் மனைவி மீது நிரந்தரமான மற்றும் நிபந்தனையற்ற பாலியல் அணுகுமுறை உண்டு என்று இது கருதுகிறது. 2005-ம் ஆண்டு குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் பெண்கள் சிவில் நிவாரணங்களைத் தேட முடிந்தாலும், வன்முறைக்கான குற்றவியல் நிவாரணத்தை சட்டம் அவர்களுக்கு மறுக்கிறது. இது திருமண நிலையை உடல் ஒருமைப்பாட்டைவிட மேலானது என்ற ஒரு படிநிலையை நிலைநிறுத்துகிறது. 1971-ம் ஆண்டின் 42-வது சட்ட ஆணைய அறிக்கை திருமண வன்முறையை குற்றமாக்கப் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரை இருந்தபோதிலும், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) அந்த விதிவிலக்கைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளது.


மாறுபட்ட திருமண வயதுகள்


குழந்தைத் திருமணத் தடைச் சட்டம்-2006 மற்றும் அது தொடர்பான சட்டங்களின்கீழ், பெண்களுக்கான குறைந்தபட்ச திருமணவயது 18 ஆண்டுகளாகவும், ஆண்களுக்கு 21 ஆண்டுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேறுபாட்டிற்கு எந்த அறிவியல் பூர்வமான நியாயமும் இல்லை. முன்கூட்டிய திருமணத்தைத் தடுப்பதே அல்லது முதிர்ச்சியை உறுதி செய்வதே நோக்கமாக இருந்தால், அதேவயது அனைத்துப் பாலினத்தவருக்கும் பொருந்த வேண்டும். பெண்களைப் பாதுகாப்பதே நோக்கமாக இருந்தால், அவர்களுக்குக் குறைந்த திருமண வயதை நிர்ணயிப்பது அந்த இலக்கிற்கு எதிராகவே செயல்படுகிறது. இது தம்பதியினரிடையே வயது வித்தியாசத்தை சட்டப்பூர்வமாக்குகிறது. மேலும், இது பெண்களின் சார்புநிலையை வலுப்படுத்துவதுடன், அவர்களின் கல்விக்கான வாய்ப்புகளையும் கட்டுப்படுத்துகிறது. திருமணத்தின் தொடக்கத்திலேயே சமத்துவமின்மையை நிறுவனமயமாக்கும் ஒரு சட்டம், கண்ணியம், சமத்துவம் அல்லது அர்த்தமுள்ள சம்மதத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது.


மணஉறவு உரிமை மீட்டெடுப்பு (Restitution of Conjugal Rights)


மணஉறவு உரிமைகளை மீட்டெடுத்தல் (Restitution of Conjugal Rights (RCR)) என்பது, ஒரு துணைவர் "நியாயமான காரணம்" எதையும் நிரூபிக்காமல் திருமணத்திலிருந்து விலகியிருந்தால், மற்ற துணைவர் அவரை மீண்டும் தங்களுடன் சேர்ந்து வாழும்படி கட்டாயப்படுத்த அனுமதிக்கிறது. இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு-9 மற்றும் சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவு 22-ன் கீழ் குறியிடப்பட்டுள்ள இந்தத் தீர்வு, திருமணத்தில் சேர்ந்து வாழ்வதை சம்மதத்தின் அடிப்படையிலான ஒன்றாகக் கருதாமல், ஒரு சட்டப்பூர்வ கடமையாகக் கருதுகிறது.


திருமணத்திலிருந்து விலகிய துணைவர் மீது சட்டம் ஆதாரத்தைச் சமர்ப்பிக்கும் சுமையைச் சுமத்துகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்தத் துணைவர் ஒரு பெண்ணாகவே இருக்கிறார். அவர் ஏன் விலகினார் என்பதை விளக்க வேண்டும் மற்றும் நியாயப்படுத்த வேண்டும். அவரது முடிவு உணர்ச்சிரீதியான துன்புறுத்தல், உளவியல் ரீதியான பாதிப்பு அல்லது பாலியல் வன்முறை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருந்தாலும் இது தேவைப்படுகிறது. திருமண வன்கொடுமை குற்றமாக்கப்படாத நிலையில், மணஉறவு உரிமைகளை மீட்டெடுத்தல் (RCR) பெண்களை உடல் ஒருமைப்பாடு மற்றும் கண்ணியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சூழ்நிலைகளுக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்தக்கூடும். சம்மதத்தைவிட திருமணத்தைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், இந்தச் சட்டம் வாழ்வுரிமை, தனியுரிமை, உடல் தன்னாட்சி மற்றும் சமத்துவத்திற்கான உரிமைகளுடன் முரண்படுகிறது. அதே நேரத்தில், பெண்களும் சிறுமிகளும் தெளிவாக சம்மதம் தெரிவிக்கும் சூழ்நிலைகளும் உள்ளன. அந்தச் சந்தர்ப்பங்களில், சட்டம் அந்த சம்மதத்தை அங்கீகரிக்க மறுக்கிறது.


சம்மதத்துடன் கூடிய சிறார் உறவுகளைக் குற்றமாக்குதல்


2012-ம் ஆண்டின் போக்சோ சட்டத்தின் கீழ், பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களுக்குச் சம்மதம் இல்லை என்பதற்கான ஆதாரம் தேவையில்லை. 18 வயதுக்குட்பட்ட ஒருவர் பாலியல் செயலில் ஈடுபட்டால், சம்மதம் என்பது பொருத்தமற்றதாகிவிடுகிறது என்பதை இது குறிக்கிறது. போக்சோ வழக்குகளில் பெரும் பகுதியினர் பதின்ம வயதினரிடையே உள்ள காதல் உறவுகளிலிருந்து எழுகின்றன. இந்த வழக்குகள் பெரும்பாலும் இளம் பெண்களின் தேர்வுகளைக் கட்டுப்படுத்த விரும்பும் குடும்பங்களால் பதிவு செய்யப்படுகின்றன. குறிப்பாக, சாதி கடந்த, மதம் கடந்த அல்லது சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத உறவுகளின்போது இது நிகழ்கிறது. சட்டம் சுரண்டலையும் இருதரப்பு சம்மதத்துடனான நெருக்கத்தையும் வேறுபடுத்திப் பார்க்காததால், அது பதின்ம வயதினரின் தன்னுரிமையை பலவீனப்படுத்துகிறது. அதேநேரத்தில், இது பாலியல் அத்துமீறலுக்கு எதிரான பாதுகாப்பை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்துவதில்லை.


திருமண உறுதிமொழி


பாரதிய நியாய சன்ஹிதா, 2023-ன் பிரிவு 69, திருமணத்தைப் பற்றிய ஒரு தவறான வாக்குறுதியின் மூலம் பெறப்படும் பாலியல் உறவை ஒரு குற்றமாக ஆக்குகிறது. இந்தச் சட்டம், பெண்களின் பாலியல் சம்மதம் திருமண எதிர்பார்ப்பைச் சார்ந்தது என்ற அனுமானத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதன் மூலம், இரு தரப்பினரும் தாமாக முன்வந்து உறவில் ஈடுபட்டிருந்தாலும், சம்மதத்துடன் கூடிய திருமணமற்ற உறவுகள் ஏமாற்றுதல் அல்லது பாதிக்கப்பட்ட நிலைக்கான நிகழ்வுகளாக மறுவிளக்கம் செய்யப்படுகின்றன. உண்மையான வாழ்க்கையில், உறவுகளில் உள்ள நோக்கங்கள் காலப்போக்கில் மாறக்கூடும். இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலைகளை மதிப்பிடுவதற்கு சட்டம் தெளிவான தரநிலைகளை வழங்கவில்லை. இந்தத் தெளிவின்மை முரண்பாடான அமலாக்கத்திற்கு வழிவகுக்கும். இது தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும் வழிவகுக்கும். சட்டத்தில் சம்மதம் நிபந்தனைக்குட்பட்டதாக இருக்கும் வரை, பெண்களுக்கு நீதி என்பது உண்மையில் நிபந்தனைக்குட்பட்டதாகவே இருக்கும். இது, அரசியலமைப்பின் கண்ணியம், சமத்துவம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் குறித்த வாக்குறுதிக்கு நேரடியான முரணாக அமைகிறது.


எழுத்தாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவர் ஆவார். ஆராய்ச்சி உரிமை: சாஹத் மங்தானி.


Original Article : When the law fails women, violence fills the gap. -Derek O’Brien

Share:

திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026, இந்தியாவில் அதிகரித்துவரும் கழிவுப் பிரச்சனையை எவ்வாறு கையாள முற்படுகின்றன? -நிகில் கானேகர்

இந்தியா அதிகரித்துவரும் திடக்கழிவு மேலாண்மை (solid waste management) நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 620 லட்சம் டன்களுக்கும் அதிகமான கழிவுகள் இந்தியாவில் உருவாகின்றன. அதிகரித்துவரும் இந்த நெருக்கடியைச் சமாளிக்க, ஒன்றிய அரசு ஒரு சுழற்சிப் பொருளாதாரத்தை நோக்கி நகர விரும்புகிறது.


ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமைபுதிய திடக்கழிவு மேலாண்மை (SWM) விதிகள், 2026-ஐ அறிவித்தது. இது 2016-ஆம் ஆண்டின் திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்குப் பதிலாக ஏப்ரல் 1, 2026 முதல் புதிய விதிகள் அமலுக்கு வரும்.


புதிய ஒழுங்குமுறை நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளால் குப்பை மேலாண்மைக்கான கட்டமைப்பை மாற்றியமைக்கிறது. மேலும், பெரிய குப்பைக் கிடங்குகள் மற்றும் குப்பை கொட்டும் இடங்களை நம்புவதற்குப் பதிலாக, குறைப்பு, மறுபயன்பாடு மற்றும் மூலத்திலேயே செயலாக்கத்தை ஊக்குவிக்கிறது.





புதிய விதிகள் ஏன் அறிமுகப்படுத்தப்பட்டன? அவை 2016-ஆம் ஆண்டின் திடக்கழிவு மேலாண்மை விதிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?


10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2000-ஆம் ஆண்டின் நகராட்சி திடக்கழிவு விதிகளை மாற்றியமைத்தன. இது தொடக்கத்திலியே பிரித்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி, வீடு வீடாக சேகரித்தல் மற்றும் குப்பை கிடங்குகளில் நகராட்சி கழிவுகளை அறிவியல் பூர்வமாக அகற்றுதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.


இந்தக் கொள்கைகளைத் தக்க வைத்துக் கொள்ளும் அதே வேளையில், 2026 விதிகள் மொத்தக் கழிவுகளை உருவாக்குபவர்களின் பொறுப்புகளை அதிகரிப்பதில் உறுதியாகக் கவனம் செலுத்துகின்றன. குப்பைக் கிடங்குகளுக்கு கழிவுகளை அனுப்புவதையும் மோசமான முறையில் பிரிப்பதையும் ஊக்கப்படுத்துகின்றன. மேலும் "வட்டப் பொருளாதாரத்தை" (circular economy) ஊக்குவிக்கின்றன.


இந்தியா ஒரு பெரிய திடக்கழிவு மேலாண்மை நெருக்கடியை எதிர்கொள்கிறது. இது ஒவ்வொரு ஆண்டும் 620 லட்சம் டன்களுக்கும் அதிகமான கழிவுகளை உருவாக்குகிறது. ஒவ்வொரு நாளும், இது சுமார் 1.85 லட்சம் டன் கழிவுகளை உருவாக்குகிறது. இதில், 1.79 லட்சம் டன் சேகரிக்கப்படுகிறது. 1.14 லட்சம் டன் பதப்படுத்தப்படுகிறது அல்லது சுத்திகரிக்கப்படுகிறது. மேலும், 39,629 டன் குப்பை நிரப்பப்படுகிறது என்று ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 2023-24-ஆம் ஆண்டு தரவுகள் தெரிவிக்கின்றன. அதிகரித்துவரும் இந்த நெருக்கடியைச் சமாளிக்க, பின்வரும் முக்கிய மாற்றங்களைப் பயன்படுத்தி, ஒரு வட்டப் பொருளாதாரத்தை நோக்கி நகர ஒன்றிய அரசு விரும்புகிறது.


01. நான்கு வழிப் பிரிப்பு மற்றும் கழிவுப் படிநிலை


இதற்காக, கழிவுகளை சிறப்பாக நிர்வகிக்க அரசாங்கம் ஒரு "கழிவு படிநிலையை" அறிமுகப்படுத்தியது. தடுப்பு, குறைப்பு, மறுபயன்பாடு, மறுசுழற்சி, மீட்பு மற்றும் அகற்றல் ஆகியவற்றை கடைசி விருப்பமாக மட்டுமே முன்னுரிமை அளித்தது. இது "நான்கு வழி" கழிவு பிரிப்பு முறையையும் வரையறுத்தது. இந்த வகைப்படுத்தும் அமைப்பு, 'உலர்ந்த கழிவுகள்-ஈரமான கழிவுகள்' (dry-waste-wet-waste) அமைப்புடன் சுகாதாரக் கழிவுகள் மற்றும் சிறப்புப் பராமரிப்புக் கழிவுகளையும் சேர்ப்பதன் மூலம் அதை விரிவுபடுத்துகிறது.


சுகாதாரக் கழிவுகளில் சுகாதாரத் துணிகள், குருதிப் போக்கு அடைப்பான்கள் மற்றும் ஆணுறை போன்றவை அடங்கும். சிசிறப்பு கவனம் தேவைப்படும் கழிவு வகையில் மருந்துகள் (medicines), வண்ணப்பூச்சு குடுவைகள் (paint cans), மின்விளக்குகள்  (bulbs and tube lights) போன்ற பொருட்கள் அடங்கும்.  


  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், பொதுக் கழிப்பறைகளில் மக்கும் குப்பைகளுக்குப் பச்சை நிறத் தொட்டிகளையும், மக்காத குப்பைகளுக்கு நீல நிறத் தொட்டிகளையும், தேவைப்பட்டால் சுகாதாரக் கழிவுகளுக்கு சிவப்பு நிறத் தொட்டிகளையும் வைக்க வேண்டும்.


02. மொத்த உற்பத்தியாளர்கள்


அதிக அளவில் கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்கள் என்பவை பின்வரும் நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்யும் பெரிய நிறுவனங்களாகும். 20,000 சதுர மீட்டருக்கும் அதிகமான தரைப்பரப்பைக் கொண்ட கட்டிடங்கள். ஒரு நாளைக்கு 40,000 லிட்டருக்கும் அதிகமான நீர் பயன்பாடு. ஒரு நாளைக்கு 100 கிலோகிராமுக்கும் அதிகமான கழிவு உற்பத்தி. இது கடுமையான விதிகளைப் பின்பற்றுவதற்காக, அதிக அளவில் கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்களைக் கண்டறிய உதவுகிறது.


இதில் குடியிருப்பு சங்கங்கள், வணிக வளாகங்கள், கல்லூரிகள், உணவகங்கள் மற்றும் பெரிய நகரக் குடியிருப்புகள் ஆகியவை அடங்கும். இந்த விதிமுறை  ஒன்றிய மற்றும் மாநில அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு சங்கங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் விடுதிகள் உள்ளிட்டவற்றுக்குப் பொருந்தும். மேலும், 5,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட அனைத்து மூடிய குடியிருப்பு வளாகங்கள் மற்றும் நிறுவனங்கள், அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவை கழிவுகளை அதன் மூலத்திலேயே பிரிப்பதை உறுதிசெய்து, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை ஒரு வருடத்திற்குள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.


03. மாசுபடுத்துபவர் பணம் செலுத்தும் கொள்கை


புதிய விதிகள், ஒன்றிய அரசின் இணையதளத்தில் பதிவு செய்யாதது, தவறான அறிக்கை அளிப்பது, ஆவணங்களைத் தவறாக உருவாக்குவது அல்லது முறையற்ற கழிவு மேலாண்மை போன்ற மீறல்களுக்காக நிறுவனங்கள் மீது சுற்றுச்சூழல் இழப்பீட்டு அபராதங்கள் (environmental compensation) விதிக்கப்படும். இது, குப்பைக் கிடங்கு கட்டணங்களை உயர்த்துவதன் மூலம், பிரிக்கப்படாத கழிவுகளைக் கொட்டுவதைத் தடுக்கிறது. இதனால் கலப்புக் கழிவுகளை அகற்றும் செலவு குறைகிறது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த விவகாரம் குறித்து வழிகாட்டுதல்களைத் தயாரிக்கும்.


04. கண்காணிப்பு அமைப்பு


புதிய விதிகள் அனைத்து திடக்கழிவு பங்குதாரர்களையும்  முழு  சுழற்சியையும் கண்காணிக்க ஒரு ஒன்றிய அரசின் தரவுத்தளத்தை உருவாக்குகின்றன. மொத்த உற்பத்தியாளர்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கழிவு பதப்படுத்துதல் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள், கழிவு சேகரிப்பாளர்கள், அகற்றல் மற்றும் பதப்படுத்தும் வசதிகள் மற்றும் ரயில்வே, விமான நிலையங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் போன்ற பெரிய அதிகாரிகள் அனைவரும் இந்த தரவுத் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.


வீட்டு வசதி சங்கங்கள் உட்பட மொத்தக் கழிவு உற்பத்தியாளர்களை இது எவ்வாறு பாதிக்கிறது?


மின்னணு பொருட்கள் மற்றும் நெகிழிப் பொருட்களின் உற்பத்தியாளர்களுக்கு  நடைமுறையில் உள்ள நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பைப் போலவே, மொத்தக் கழிவு உற்பத்தியாளர்களும் நீட்டிக்கப்பட்ட பொறுப்பை எதிர்கொள்ள நேரிடும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மார்ச் 2027-க்குள் புதிய விதிகளின் துணை விதிகளை இயற்றியவுடன் இந்தக் கடமைகள் பொருந்தும்.


மொத்த கழிவு உற்பத்தியாளர்கள் இப்போது சான்றிதழ் அடிப்படையிலான இணக்கத்தின் மூலம் பொறுப்பேற்கப்படுவார்கள். இதன் விளைவாக, குடியிருப்பு சங்கங்கள், கல்லூரிகள், பெரிய நகரக் குடியிருப்புகள் போன்றவை, கட்டாயக் கழிவுக் கணக்கீட்டைச் சமர்ப்பிக்க மையப்படுத்தப்பட்ட இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் கழிவுகளை 'நான்கு வழி' வகைப்பாட்டு முறையின்கீழ் பிரித்து, வளாகத்திலேயே உரம் தயாரித்தல் அல்லது மாற்று வழிகள் மூலம் மக்கும் கழிவுகளை மூலத்திலேயே பதப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இருப்பினும், அவர்களால் அவ்வாறு செய்ய முடியாவிட்டால், இணக்கத்திற்கான ஆதாரத்தைக் காட்ட உள்ளாட்சி அமைப்புகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கழிவு பதப்படுத்தும் வசதிகளிடமிருந்து சான்றிதழ்களைப் பெறலாம்.


இந்த அறிக்கைகளில் உருவாகும் கழிவுகளின் அளவு, பெறப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் விதிகளுக்கு இணங்கத் தவறுதல் குறித்து விவரிக்கும் வருடாந்திர வருமான வரி அறிக்கைகளை ஜூன் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதனால், குடியிருப்பு சங்கங்கள், ஈரமான கழிவுகளை உரமாக்குதல் மற்றும் கழிவுகளைப் பிரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் அல்லது உள்ளூர் அமைப்புகள் அல்லது செயலாக்க வசதிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். இது குப்பைக் கிடங்குகளின் சுமையைக் குறைப்பதே இதன் நோக்கம் ஆகும்.


இது குப்பைக் கிடங்குகளுக்கு என்ன அர்த்தம்?


இந்திய நகரங்கள் பல ஆண்டுகளாக கலப்பு கழிவுகளை பெற்று, சுற்றியுள்ள சுற்றுச்சூழலை மாசுபடுத்தி மாசுபடுத்தும் குப்பைக் கிடங்குகளுக்குப் பெயர் பெற்றவை. புதிய விதிகள் குப்பைக் கிடங்குகளை குப்பைகளை அகற்றுவதற்கான கடைசி நிறுத்தமாகவும், பயன்படுத்த முடியாத, மறுசுழற்சி செய்ய முடியாத மற்றும் ஆற்றல் மூலம் மீட்டெடுக்க முடியாத கழிவுகளுக்கு மட்டுமே இடமாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் அக்டோபர் 31, 2026-க்குள் பழைய குப்பைக் கிடங்குகள் மற்றும் குப்பைக் கொட்டும் தளங்களை வரைபடமாக்க வேண்டும். உயிரி மறுசீரமைப்பு மற்றும் உயிரி சுரங்கம் மூலம் குப்பை மலைகளைக் குறைக்க அவர்கள் காலக்கெடுவுக்குள் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும். உயிரி மறுசீரமைப்பில், கழிவுகளையும் அதன் வாசனையையும் குறைக்க பாக்டீரியா மற்றும் நுண்ணுயிரிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதேநேரத்தில் உயிரி சுரங்கத்தில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மீட்டெடுக்கப்படுகின்றன.


மேலும், புதிய விதிகளின்படி, 1500 கிலோ கலோரிகள் அல்லது அதற்கு மேற்பட்ட வெப்ப ஆற்றல் மதிப்புள்ள (Calorific value) கழிவுகளை, கழிவுகளிலிருந்து பெறப்படும் எரிபொருள் மூலம் ஆற்றல் உற்பத்தி செய்யவோ அல்லது சிமென்ட் மற்றும் அனல் மின் நிலையங்களில் இணை செயலாக்கத்திற்காகவோ பயன்படுத்த வேண்டும். வெப்ப ஆற்றல் மதிப்பு (Calorific value) என்பது நெகிழிக் கழிவுகள், விவசாய எச்சங்கள் மற்றும் சமையலறை கழிவுகள் போன்ற எரிபொருளால் வழங்கப்படும் வெப்ப ஆற்றலைக் குறிக்கிறது. திட எரிபொருளை குப்பையிலிருந்து பெறப்பட்ட எரிபொருளால் மாற்ற தொழிற்சாலைகளுக்கு இலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இது பல்வேறு கழிவு வகைகளிலிருந்து பெறப்படுகிறது. ஆரம்பத்தில், தொழில்கள் தங்கள் எரிபொருள் தேவைகளில் 6%-க்கு இதை பயன்படுத்த வேண்டும். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த பங்கு 15%-ஆக அதிகரிக்க வேண்டும்.


  Original Article : How Solid Waste Management Rules 2026 seek to tackle India’s burgeoning waste problem?. -Nikhil Ghanekar

Share:

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் - அரசியலமைப்பு கூறுவது என்ன? -குஷ்பூ குமாரி

பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்குகிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் உரை தொடர்பான அரசியலமைப்பு விதிகள் மற்றும் வரலாற்றுப் பின்னணி என்ன?


தற்போதைய செய்தி:


2026-27-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதன்கிழமை (ஜனவரி 28) நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். சமூக நீதி, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் வளர்ந்த இந்தியாவுக்கான மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வை குறித்து விரிவாக பேசினார்.


கடந்த வாரம், தமிழ்நாடு ஆளுநர் R. N. ரவி தனது வழக்கமான தொடக்க உரையை வழங்குவதைத் தவிர்த்துவிட்டு, பல பிரச்சினைகளை மேற்கோள் காட்டி மாநில சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தார். கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டும் மாநில அமைச்சரவை தயாரித்த தனது வழக்கமான உரையின் சில வரிகளை மட்டும் படித்துவிட்டு மாநில சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.


நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மற்றும் சட்டமன்றத்தில் ஆளுநர் உரை தொடர்பான அரசியலமைப்பு விதிகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. அரசியலமைப்பு சட்டம், அவையிலோ அல்லது நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திலோ உரையாற்றும் அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்குகிறது. அரசியலமைப்புச் சட்டபிரிவு 87, குடியரசுத்தலைவர் கூட்டுக் கூட்டத்தில் (joint sitting) உரையாற்றும் இரண்டு சிறப்பு நிகழ்வுகளை விளக்குகிறது.  முதலாவதாக, பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய சட்டமன்றத்தின் தொடக்கக் கூட்டத்தொடரில் உரையாற்றுவது. இரண்டாவதாக, ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் உரையாற்றுவது ஆகும்.


2. அரசியலமைப்பு சட்டப் பிரிவு 176-ன் கீழ் ஆளுநரின் உரை மாநில அளவில் இதே முறையில் செயல்படுகிறது. பிரிவு 176(1) "சட்டமன்றத்திற்கான ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பிறகும் முதல் கூட்டத்தொடரின்" தொடக்கத்திலும், ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்திலும் ஆளுநர் அவையில் உரையாற்ற வேண்டும் என்று கூறுகிறது.


3. அரசியலமைப்பு சட்டப் பிரிவு 176(2)-ன்படி, மாநில சட்டசபை உரையை விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும். இந்த உரை, மாநில சட்டமன்றம் ஏன் கூட்டப்பட்டுள்ளது என்பதை விளக்குகிறது. மேலும், முன்மொழியப்பட்ட சட்டங்கள் மற்றும் நிதித் தேவைகள் உட்பட, இந்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் திட்டங்களையும் இந்த உரை எடுத்துரைக்கிறது.


4. குடியரசுத் தலைவரின் உரையைத் தொடர்ந்து வரும் நாட்களில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு தீர்மானம் இரு அவைகளிலும் கொண்டு வரப்படுகிறது. இரு அவைகளிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சி குறித்து விவாதம் நடத்துவதற்கான ஒரு வாய்ப்பை இந்த உரை வழங்குகிறது. பிரதமர் இரு அவைகளிலும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளிப்பார், மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு பிரதமர் பதிலளிப்பார். பின்னர், இந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்தில் திருத்தங்களை முன்மொழிவதன் மூலம் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளலாம்.


5. குடியரசுத் தலைவரோ அல்லது ஆளுநரோ சட்டமன்றத்தில் உரையாற்றும் அரசியலமைப்புச் சட்டக் கடமையாக சட்டமன்றத்தில் உரையாற்ற வேண்டும். அவர்கள் அதை மறுக்க முடியாது. ஆனால், அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட உரையின் மூலப் படியிலிருந்து அவர்கள் விலகிச் செல்லும் சூழ்நிலைகள் ஏற்படலாம். இதுவரை, குடியரசுத் தலைவர் அவ்வாறு செய்த நிகழ்வுகள் எதுவும் இல்லை.


6. ஆளுநரின் உரை என்பது தனிப்பட்ட விருப்பத்தின் ஒரு பகுதி அல்ல. அது இல்லாமல், சட்டமன்றம் தனது தொடக்க அமர்வை சட்டப்பூர்வமாகத் தொடங்க முடியாது. இந்தத் தேவை பூர்த்தி செய்யப்படும் வரை, புதிய அல்லது தற்போதைய அமர்வுகள் தொடங்கவே முடியாது.


நீதிமன்றங்கள் என்ன தீர்ப்பளித்துள்ளன?


7. ஆளுநரின் உரை கட்டாயமானது என்பதை நீதிமன்றங்கள் வலியுறுத்தியுள்ள போதிலும், சட்டமன்றங்கள் எப்போதும் அரசியலமைப்பு சட்டத்தை முறையாக பின்பற்றியதில்லை என்பதையும் நீதிமன்றங்கள் அங்கீகரித்துள்ளன. ஆளுநரின் உரை இல்லாததற்கும், அந்த உரை நிகழ்த்தப்படும்போது ஏற்படும் இடையூறுகளுக்கும் இடையே பல்வேறு நீதித்துறைத் தீர்ப்புகளும் ஒரு வேறுபாட்டைக் காட்டியுள்ளன.


8. 1952-ஆம் ஆண்டில், ஒரிசா உயர்நீதிமன்றம் பிரிவு 176-ஐ எதிர்த்து ஒரு ஆரம்பகால சவாலை எதிர்கொண்டது. அதில் உறுப்பினர்கள் பதவியேற்றதால் "அமர்வின் தொடக்கத்தில்" ஆளுநரின் உரை வழங்கப்படவில்லை என்று மனுதாரர் வாதிட்டார். சட்டமன்றம் எதற்காகக் கூட்டப்படுகிறது என்பதை ஆளுநர் விளக்கும் வரை, சட்டமன்றம் தனது பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது. இது, எந்தவொரு அலுவல் நடவடிக்கையும் தொடங்குவதற்கு முன்பு, ஆளுநரின் உரையை ஒரு கட்டாய அரசியலமைப்புச் செயல்முறையாக ஆக்குகிறது.


9. 1965-ஆம் ஆண்டு, ஆளுநர் உரையைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை அடுத்து, மேற்கு வங்க சட்டமன்ற நடவடிக்கைகள் செல்லாது என்பதை முடிவு செய்ய கல்கத்தா உயர் நீதிமன்றத்தை வலியுறுத்தும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், சபாநாயகர் அங்கீகரிக்கப்பட்ட உரையை சபையில் சமர்ப்பித்தார்.


10. அரசியலமைப்புத் தேவை அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட்டதாகக் கூறி, நீதிமன்றம் அந்த அமர்வை உறுதி செய்தது. முழு உரையையும் வாய்மொழியாக வழங்காதது, நடவடிக்கைகளை சட்டவிரோதமாக்காது என்றும், அது ஒரு செயல்முறை குறைபாடே தவிர, ஒரு தீவிர மீறல் அல்ல என்று நீதிமன்றம் விரிவாக  விளக்கியது.


வரலாற்று பின்னணி


1. ஐக்கிய ராஜ்ஜியத்தில், 16-ஆம் நூற்றாண்டு முதல் மன்னர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றி வருகின்றனர். அமெரிக்காவில்,  அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் 1790-ல் முதன்முறையாக காங்கிரசில் உரையாற்றினார்.


2. இந்தியாவில், குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் நடைமுறை, 1919-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தில் (Government of India Act) இருந்து தொடங்குகிறது. இந்தச் சட்டம் கவர்னர் ஜெனரலுக்குச் சட்டமன்றத்திலும் மாநில அவையிலும் உரையாற்றும் உரிமையை வழங்கியது.


3. சட்டத்தில் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவதற்கான ஏற்பாடு இல்லை என்றாலும், கவர்னர் ஜெனரல் பல சூழ்நிலைகளில் சட்டமன்றம் மற்றும் கவுன்சில் ஆகிய இரண்டிலும் ஒன்றாக உரையாற்றினார். 1947 முதல் 1950 வரை நாடாளுமன்றத்தில் அவர் எந்த உரையும் ஆற்றவில்லை. மேலும், அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் ஜனவரி 31, 1950 அன்று முதன்முறையாக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களிடையே உரையாற்றினார்.


4. முன்னர், சட்டமன்றங்கள் ஆண்டுக்கு பலமுறை கூடி, பெரும்பாலும் நீண்ட காலங்களுக்குச் செயல்பட்டன. ஒவ்வொரு கூட்டத்தொடரின் தொடக்கத்திலும் ஒரு உரை நிகழ்த்தப்பட வேண்டும் என்ற விதி இருந்ததால், ஒரு இடைவேளைக்குப் பிறகு அவை மீண்டும் கூடும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய உரை தேவையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.


5. இது 1951-ஆம் ஆண்டு அரசியலமைப்பு (முதல் திருத்தம்) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டது. இது ஒவ்வொரு ஆண்டும் முதல் அமர்வுக்கும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு முதல் அமர்வுக்கும் மட்டுமே உரையின் தேவையை குறைத்தது. இந்த மாற்றம் நிச்சயமற்ற தன்மையை நீக்குவதற்காகவே என்று பி.ஆர். அம்பேத்கர் விளக்கினார்.


2026-27 பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரையிலிருந்து முக்கியப் பகுதிகள்


1. நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர், முக்கிய மாநிலத் தேர்தல்களுக்குச் சில மாதங்களுக்கு முன்பு ஆற்றிய உரையில், வரலாற்றுச் சின்னங்களையும் பிராந்தியப் பெருமையையும் குறிப்பிட்டு, பெரிய அளவிலான பொருளாதாரச் சீர்திருத்தங்கள், கிராமப்புற வேலைவாய்ப்பு, தேசியப் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் போன்றவற்றை மையமாகக் கொண்டு அரசாங்கத்தின் செயல்திட்டத்தை வகுத்தார்.


2. இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் கையெழுத்தான பின்னணியில், அவர் இந்தியாவை ஒரு நிலைப்படுத்தும் சக்தியாக முன்னிறுத்தினார். "இந்தியா உலகில் ஒரு பாலத்தின் பாத்திரத்தை வகிக்கிறது" என்றும், "மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகள்கூட முக்கியமான விவகாரங்களில் இந்தியாவின் மீது தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன" என்றும் அவர் கூறினார்.


3. குடியரசுத் தலைவர் தனது உரையை ஒரு தனித்துவமான கலாச்சார மற்றும் வரலாற்றுப் பார்வையுடன் தொடங்கினார். பல்வேறு பிராந்தியங்களில் செல்வாக்கு செலுத்தும் ஆளுமைகளை அவர் குறிப்பிட்டார். அவரது உரையில் பங்கிம் சந்திர சட்டோபாத்யாய், பிர்சா முண்டா மற்றும் பூபன் ஹசாரிகா போன்றவர்களை பற்றி குறிப்பிட்டார். தமிழ் கவிஞரும் ஞானியுமான திருவள்ளுவரின் மேற்கோளும், கேரள சீர்திருத்தவாதியான ஸ்ரீ நாராயண குருவின் செய்தியும் குடியரசுத் தலைவரால் மேற்கோள் காட்டப்பட்டன.


4. தேசியப் பாதுகாப்பு ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை எடுத்துரைக்கும்போது, ​​'Operation Sindoor' பற்றிய குறிப்புகள் இடம்பெற்றன.


5. பெண்கள் அதிகாரம் பெறுவது வளர்ச்சி மாதிரிக்கு முக்கியமானது என்று விவரிக்கப்பட்டது. 10 கோடி பெண்கள் சுயஉதவிக் குழுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும், 'லட்ச ரூபாய் வருமானம் ஈட்டும் சகோதரிகளின்’ (Lakhpati Didi) எண்ணிக்கை இரண்டு கோடியைத் தாண்டிவிட்டது என்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். வேளாண்மையில் 'நமோ ட்ரோன் தீதி' முன்முயற்சியை  எடுத்துரைத்தார். மேலும், 'ஆரோக்கியமான பெண், வலுவான குடும்ப இயக்கம்'  (Swasth Nari, Sashakt Parivar) பிரச்சாரத்தின் கீழ் 'ஏழு கோடி பெண்களுக்கு' சுகாதாரப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று குடியரசுத் தலைவர் கூறினார்.


  Original Article : Ahead of budget session, President addresses Parliament — What does Constitution say? -Khushboo Kumari

Share:

ஒன்றிய அரசின் சுகாதாரச் செலவு அதிகரித்துள்ளதா? -இந்திரனில்

  ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) சுகாதார மற்றும் குடும்ப நலனுக்காக ஒதுக்கப்படும் நிதி 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டு முதல் அதிகரித்துள்ளது. இதற்கு மாறாக, பெருந்தொற்று காலத்தில் மிதமாக அதிகரித்த ஒன்றிய அரசின் சுகாதாரச் செலவினம், பெருந்தொற்றுக்குப் பிறகு குறைந்துள்ளது.


2017-ஆம் ஆண்டு தேசிய சுகாதாரக் கொள்கை (National Health Policy (NHP)), இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.15 சதவீதமாக இருந்த அரசாங்கத்தின் சுகாதாரச் செலவினத்தை 2025-ஆம் ஆண்டுக்குள் 2.5 சதவீதமாக உயர்த்துவதாக உறுதியளித்தது. கடந்த பத்தாண்டுகளில் ஒன்றிய அரசின் சுகாதார நிதிநிலை அறிக்கை எதிரிபார்த்த அளவு வளர்ச்சி அடையாததால், இந்த இலக்கு இன்னும் எட்டப்படாமல் உள்ளது. மொத்த பொதுச் செலவினத்தில் ஒன்றிய அரசின் பங்கு 40%-ஆக இருக்க வேண்டும் என்று தேசிய சுகாதாரக் கொள்கை முன்மொழிந்தது. ஒன்றிய அரசின் செலவினம் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.29% என்ற நிலையிலிருந்து 1%-ஆக அதிகரிக்க வேண்டும் — இதற்கு ஒதுக்கீடுகளைக் குறைந்தது மூன்று மடங்காக அதிகரிக்க வேண்டியது முக்கியமானதாகிறது.


பொது சுகாதாரத்திற்கான குறைந்த செலவு


பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் சுகாதாரத்திற்கான பொதுச் செலவினம் பல ஆண்டுகளாக குறைவாகவே உள்ளது. உதாரணமாக, 2021-ல் பூட்டானின் தனிநபர் (per capita) சுகாதாரச் செலவு இந்தியாவின் செலவை விட 2.5 மடங்கு அதிகமாக இருந்தது. அதே சமயம் இலங்கையின் செலவு மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. மற்ற அனைத்து BRICS நாடுகளும் இந்தியாவைவிட தனிநபர் சுகாதாரத்திற்காக 14 முதல் 15 மடங்கு அதிகமாகச் செலவிட்டன. இதேபோல், தாய்லாந்து மற்றும் மலேசியாவும் இந்தியாவைவிட தனிநபர் சுகாதாரத்திற்காக குறைந்தபட்சம் 10 மடங்கு அதிகமாகச் செலவிடுகின்றன.


கோவிட் தொற்று ஆண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாக சுகாதாரத்திற்கான பொதுச் செலவு ஓரளவு அதிகரித்துள்ளது. பொதுச் செலவின் பெரும்பகுதி ஒன்றிய அரசை விட மாநிலங்களால் ஏற்பட்டது. கோவிட் தொற்றுக்குப் பிறகும் மாநிலங்கள் இத்தகைய அதிகரிப்பைத் தக்கவைத்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்கான ஒதுக்கீடுகள் 2017-18-ஆம் ஆண்டில் 0.67%-லிருந்து 2025-26 பட்ஜெட் செலவினம் (BE) விளக்கப்படம் 1-ன் படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.1%-ஆக அதிகரித்துள்ளன. இதேபோல், இந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்த மாநில பட்ஜெட்டுகளில் சுகாதார செலவினத்திற்கான பங்கு 5%-லிருந்து 5.6%-ஆக அதிகரித்துள்ளது.


இதற்கு நேர்மாறாக, தொற்றுநோய் காலத்தில் மிதமாக அதிகரித்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக ஒன்றிய அரசின் சுகாதாரத்திற்கான செலவு, தொற்றுநோய்க்குப் பிறகு குறைந்துள்ளது. விலைவாசி உயர்வின் விளைவைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், 2025-26 பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கான ஒன்றிய அரசின் ஒதுக்கீடு, 2020-21-ல் உண்மையில் செலவிடப்பட்டதைவிட 4.7% குறைவாக இருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு பங்காக, மத்திய அரசின் சுகாதாரச் செலவு 2020-21-ஆம் ஆண்டில் 0.37 சதவீதத்திலிருந்து 2025-26-ஆம் ஆண்டில் 0.29 சதவீதமாகக் குறைந்துள்ளது. கோவிட் பெருந்தொற்றின்போது சுகாதாரத் துறைக்கு வழங்கப்பட்ட மிதமான முன்னுரிமைகூட, உடனடி அவசரநிலை முடிந்த பிறகு குறைக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. இந்தக் காலகட்டத்தில், ஒன்றிய அரசின் மொத்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறையின் பங்கு 2.26%-லிருந்து 2.05%-ஆக குறைந்துள்ளது.


மேல் வரி (Cess)பற்றி 



2018-2019-ஆம் ஆண்டில், சுகாதாரம் மற்றும் கல்வி வரி (Health and Education Cess (HEC)) ஒருவரின் மொத்த வரி விதிக்கக்கூடிய வருமானத்தில் 4%-ஆக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மேல்வரி, சுகாதாரத்திற்கான தற்போதைய அரசாங்க செலவினங்களை விரிவுபடுத்தவும், ஏழை மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள குடும்பங்களின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ளவும் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், சுகாதார மற்றும் கல்வி வரியாக (HEC) ஆண்டுதோறும் வசூலிக்கப்படும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய், சுகாதார வரவுசெலவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படாமல், அதற்குப் பதிலாக வரி வருவாயை ஈடுசெய்யப் (tax resources) பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, 2023-24 நிதியாண்டில் சுகாதாரம் மற்றும் கல்வி வரி மூலம் வசூலிக்கப்பட்ட தொகை ரூ.71,180 கோடி ஆகும். இதில் நான்கில் ஒரு பங்கு சுகாதாரத் துறைக்குச் சென்றது, இது சுமார் ரூ.17,795 கோடி ஆகும். இந்த வரித் தொகையைத் தவிர்த்துப் பார்த்தால், 2020-21 மற்றும் 2023-24 ஆண்டுகளுக்கு இடையில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு உண்மையான மதிப்பில் 22.5% குறைந்துள்ளது என்பதை நாம் கவனிக்கிறோம். வரைபடம் 2 இதை தெளிவாக காட்டுகிறது.


குறைக்கப்பட்ட திட்டங்கள்


2014-15 ஆம் ஆண்டில், ஒன்றிய அரசின் சுகாதாரச் செலவினங்களில் 75.9% தேசிய சுகாதார இயக்கம் போன்ற திட்டங்கள் மூலம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. காலப்போக்கில், இது தொடர்ந்து குறைந்து 2024-25-ஆம் ஆண்டில் 43%-ஐ எட்டியது. இது அடிப்படை சுகாதார சேவைகளைப் பராமரிக்க போதுமானதாக இல்லை. இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு சுகாதாரப் பராமரிப்பு வழங்குவதற்கான முக்கிய செலவுகளை மாநில அரசுகள் ஏற்கின்றன என்பதையும், அவை ஒன்றிய அரசால் போதுமான அளவு வளப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சுகாதார துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் மாநிலங்களின் அதிகார வரம்பிற்குள் வந்தாலும், இந்தப் போக்கு சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் ஒன்றிய அரசிடமே உள்ளதாக காட்டுகின்றன.


எந்த சுகாதாரத் திட்டங்கள் நிதி ஒதுக்கீட்டை இழந்தன. எந்தத் திட்டங்கள் அதிக நிதியைப் பெற்றன என்பதை ஆராய்வதன் மூலம், சுகாதாரத் துறையில் ஒன்றிய அரசின் உண்மையான முன்னுரிமைகளை கண்டறியலாம். தேசிய சுகாதார இயக்கம், பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா போன்ற பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் மற்றும் சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் திட்டங்கள், கடினமான காலங்களில் சிறப்பாகச் செயல்பட்டபோதிலும், கடுமையான நிதி இழப்புகளைச் சந்தித்துள்ளன.


2005-ல் தொடங்கப்பட்ட தேசிய சுகாதார இயக்கம் (National Health Mission (NHM)), ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக ஒன்றிய அரசால் தொடங்கப்பட்ட ஒரு முக்கியத் திட்டமாகும். இருந்தபோதிலும், கடந்த ஏழு ஆண்டுகளில், இந்த திட்டத்திற்கான செலவினம் குறைந்துள்ளது. 2014-15 மற்றும் 2018-19 நிதியாண்டுகளுக்கு இடையில், 2017-18 நிதியாண்டில் ஏற்பட்ட திடீர் உயர்வால், தேசிய சுகாதார இயக்கத்திற்கான செலவினம் சராசரியாக 7.4% வளர்ச்சி கண்டது. இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணி (National Democratic Alliance) அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில், தேசிய சுகாதார இயக்கத்திற்கான செலவினம் சராசரியாக 5.5% குறைந்துள்ளது.

இந்திரனில் ஹரியானாவில் உள்ள ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் அரசாங்கம் மற்றும் பொதுக் கொள்கைப் பள்ளியில் சுகாதாரப் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார்.


Original Article : Has health spending by the Centre increased? -Indranil

Share:

சல்மான் கான் 'ஆளுமை உரிமை' வழக்கு என்பது என்ன? -விராக் குப்தா

  தற்போது நடந்து வரும் இந்த வழக்கு, இந்தியாவில் ஒரு முக்கியமான சட்டப் போராட்டத்தின் மீது கவனத்தை ஈர்த்துள்ளது. இது தனிமனித உரிமைகளுக்கும் குறிப்பாக பிரபலங்களின் அந்தரங்க மற்றும் அடையாள உரிமைகள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலாகப் பார்க்கப்படுகிறது. 


சீனாவைச் சேர்ந்த ஒரு செயற்கை நுண்ணறிவு குரல் உருவாக்கத் தளம் (AI voice generation platform), நடிகர் சல்மான் கானின் ஆளுமை உரிமைகளுக்கு (personality rights) வழங்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி நீதிமன்றத்தை நாடியது. இது தொடர்பாக, ஜனவரி மாதம் 21-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு அழைப்பாணை அனுப்பியது. இந்த வழக்கின் முக்கிய விசாரணை ஜனவரி மாதம் 23-ஆம் தேதி இணைப் பதிவாளரால் (Joint Registrar) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதேசமயம் சீன செயலியின் மனு மீதான விசாரணை பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.


ஜான் டோ என்பவர் யார்?


இந்த வழக்கில் ஆப்பிள், கூகுள், மெட்டாவின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், X (ட்விட்டர்), அமேசான் இந்தியா மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற இணைய வணிக நிறுவனங்களின் தளங்கள் மற்றும் டெலிகிராம் போன்ற இடைத்தரக நிறுவனங்கள் உட்பட மொத்தம் 28 பிரதிவாதிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராகவும் ('ஜான் டோ' அல்லது 'அசோக் குமார்' எனப் பெயரிடப்பட்ட பிரதிவாதி எண் 1) தடை உத்தரவு கோரி சல்மான் கான் மனு தாக்கல் செய்துள்ளார். பிரதிவாதிகளை அடையாளம் காண முடியாத சூழலில், நீதிமன்றங்கள் ஒருதலைப்பட்சமாக (Ex-parte) உத்தரவு பிறப்பிக்க இந்த நடைமுறை வழிவகை செய்கிறது.


பின்னர், சீன செயற்கை நுண்ணறிவு தளமானது 35-வது பிரதிவாதியாகச் சேர்க்கப்பட்டது. ஆனால், இணைப் பதிவாளரின் (நீதித்துறை) உத்தரவு இன்னும் வராததால், அது இன்னும் அதிகாரப்பூர்வமாக வழக்கில் இணைக்கப்படவில்லை என்கின்றனர். 


ஆளுமை உரிமைகள் எவ்வாறு செயல்படுகின்றன?


கே.எஸ். புட்டசாமி vs இந்திய ஒன்றியம் (2017) (K.S. Puttaswamy v. Union of India (2017))  வழக்கில், இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின்கீழ் 'ஆளுமை உரிமை'  என்பது ஒரு அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதிலிருந்து, ஒரு நபரின் அடையாளத்தை அவருடைய அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்துவது, அந்த நபரின் வாழ்வுரிமையை மீறுவதாகும் என நீதிமன்றங்கள் கருதுகின்றன. 'ஆளுமை உரிமைகள்' (Personality rights) ஒரு நபரின் அடையாளத்திற்கு இருக்கும் வணிக மதிப்பைப் பாதுகாக்கின்றன. இவை, குறிப்பாகப் பொதுவாழ்வில் உள்ள பிரபலங்களுக்கு மிகவும் அவசியமானவையாகக் கருதப்படுகிறது. மேலும், இவை சட்டப்பூர்வமான அறிவுசார் சொத்துரிமைகளிலிருந்து (Intellectual Property Rights) மாறுபட்டவை என்கின்றனர். 


2025-ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் பச்சன் தொடர்பான ஒரு வழக்கில், ஒரு பிரபலத்தின் அடையாளத்தை அனுமதியின்றி பயன்படுத்துவது வணிகரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது. தவறான ஆள்மாறாட்டம் செய்தல், இணையதளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் மூலமாக ஒருவரின் பெயர் அல்லது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துதல், மற்றும் தவறாகத் திருத்தப்பட்ட அல்லது ஆபாசமான உள்ளடக்கங்களை உருவாக்குதல் போன்ற செயல்களை நீதிமன்றங்கள் தடுத்து நிறுத்தியுள்ளன. 


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1)(g), குடிமக்கள் தங்களுக்கு விருப்பமான தொழில் அல்லது வணிகத்தைச் செய்ய உரிமை வழங்கினாலும், அந்த உரிமையின் மீது நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்க முடியும். கலை வெளிப்பாடுகள் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தாத வரையிலும் அல்லது அது ஒரு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் போலத் தோன்றாத வரையிலும், நீதிமன்றங்கள் அத்தகைய கலை சுதந்திரத்தைப் பாதுகாத்துள்ளன. இருப்பினும், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நீதிமன்றங்களில் சட்டப்பிரிவு 19-ன்கீழ் பாதுகாப்பு கோர முடியாது என்றும் தெளிவுபடுத்துகின்றனர். 


சீன செயலிகள் தொடர்பான விவகாரம் என்ன?


தரவு பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக, கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய அரசு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (Information Technology Act (IT Act)) பிரிவு 69A-ன்கீழ் 200-க்கும் மேற்பட்ட சீன செயலிகளைத் தடை செய்தது. 'டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் 2023' நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அந்தச் சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்கின்றனர். இதனால் விதிகளில் இடைவெளிகள் உள்ளன, குறிப்பாக 'செயற்கை நுண்ணறிவு' தொழில்நுட்பத்திற்கு முறையான விதிகள் இன்னும் வரையறுக்கப்படவில்லை. டிஜிட்டல் சமத்துவத்திற்கு (Digital Equality) குரல் வழியில் இயங்கும் செயற்கை நுண்ணறிவு (Voice-based AI) மிகவும் முக்கியமானது என்றும், இது இந்தியாவிற்கு மற்றுமொரு ஒருங்கிணைந்த கட்டண இடைமுக பணப் பரிவர்த்தனை முறை (Unified Payments Interface (UPI)) போன்ற ஒரு புரட்சிகரமான மாற்றமாக இருக்கும் என்றும் நந்தன் நீலேகனி கூறியுள்ளார். மேலும், சீன செயலிகளைப் புறக்கணிப்பது, செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் தரவுகளை பயன்படுத்தும் முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கின்றனர். 


பிரபலங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கான கட்டணங்கள் என்ன?


தனிநபர் ஆளுமை உரிமை (Personality Rights) தொடர்பான வழக்குகள் பொதுவாக 'வணிக நீதிமன்றங்கள் சட்டம் 2015'-ன்கீழ் தாக்கல் செய்யப்படுகின்றன. ஏனெனில், பிரபலங்கள் தங்கள் அடையாளத்தின் மீது பொதுவாக அறிவுசார் சொத்துரிமைகளை (IP Rights) கொண்டிருப்பதில்லை. நீதிமன்றங்கள் பெரும்பாலும் முன்கூட்டியே கட்டணம் செலுத்தத் தேவையில்லாமல் தற்காலிகத் தடைகளை  வழங்குகின்றன, மேலும் நடைமுறை விதிகளின்கீழ் கால அவகாசத்தையும் நீட்டிக்கின்றன. இருப்பினும், சம்பந்தப்பட்ட நபர்களின் பிராண்ட் (Brand) மதிப்பு மிக அதிகமாக இருப்பதால், நீதிமன்றத்தின் இந்த அணுகுமுறை விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. இதேபோன்ற ஒழுங்குமுறை கவலைகள் ஐரோப்பிய ஒன்றியத்திலும் எழுந்துள்ளன; குறிப்பாக எலான் மஸ்க்கின் 'Grok' போன்ற செயற்கை நுண்ணறிவு (Generative AI) அமைப்புகள் தொடர்பாக இந்த விவாதங்கள் எழுந்துள்ளன.


இந்தியாவில், 2021-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப விதிகள் (IT Rules, 2021) தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை நீக்க வழிகாட்டுகின்றன. இருப்பினும், இந்த விதிகளின் மூலம் முழுமையான தீர்வு கிடைக்காததால், பல பிரபலங்கள் நேரடியாக உயர்நீதிமன்றங்களை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிரபலங்கள் முதல் சாமானிய குடிமக்கள் வரை அனைவரையும் இணையதள ஆள்மாறாட்டத்தில் (Digital Impersonation) இருந்து பாதுகாப்பது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. 


விராக் குப்தா, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆவார்.


Original Article : What is the Salman Khan personality rights case? -Virag Gupta

Share:

கார்பன் உமிழ்வு குறைப்பு முதல் முன்னுரிமையாக இருக்கக் கூடாது -ஜேக்கப் பி கோஷி

 முந்தைய பொருளாதார ஆய்வறிக்கைகளில், உணவு உற்பத்திக்கும் வாழ்வாதாரத்திற்கும் உலகளாவிய அச்சுறுத்தல் என்று காலநிலை மாற்றமானது விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா போன்ற வளரும் நாடுகள் நிலக்கரி மற்றும் பெட்ரோல் பயன்பாட்டிலிருந்து வெளியேறி, மற்ற எரிசக்திக்கு மாறுவதற்கு உலக நாடுகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் பல்வேறு காலகட்டங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


2025-26-ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வு அறிக்கை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த அத்தியாயத்தில் ஒரு முக்கியமான கருத்தைக் குறிப்பிட்டுள்ளது. காலநிலை மாற்றம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும், அது மனித நாகரிகத்தையே அழித்துவிடும் அளவிற்கு இருக்காது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் வகையிலான திடீர் கட்டுப்பாடுகளை விதிப்பதைவிட, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சரியான திட்டங்களில் முதலீடு செய்வதே கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான வலுவான மற்றும் நிலையான வழியாக இருக்கும் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


முந்தைய ஆய்வறிக்கைகளில், பருவநிலை மாற்றம் என்பது உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு உலகளாவிய அபாயம் என்று 'பொருளாதார ஆய்வு அறிக்கை' குறிப்பிட்டிருந்தது. மேலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் வளர்ச்சித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நிலக்கரி மற்றும் பெட்ரோல் போன்ற எரிபொருட்களின் பயன்பாடுகளைக் குறைக்க வளர்ந்த நாடுகள் உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது. இருப்பினும், தற்போதைய புதிய அறிக்கை, பருவநிலை மாற்றத்தைத் தடுக்க கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதைவிட, அதன் பாதிப்புகளுக்கு ஏற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்வதற்கே முதலிடம் கொடுக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது. சர்வதேச பருவநிலை பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் நிலைப்பாட்டை இந்த அறிக்கை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. 


கடந்த ஆண்டில், உலகளாவிய எரிசக்தி சார்ந்த கார்பன் வெளியேற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக அறிக்கை கூறுகிறது.


அரசிடம் இருக்கும் குறைவான நிதியை, குறுகிய கால காலநிலை இலக்குகளை அடைவதற்காக மட்டும் சுகாதாரம், விவசாயம் மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற துறைகளிலிருந்து எடுத்து செலவிடக்கூடாது என்று இந்த ஆவணம் குறிப்பிடுகிறது. பொருளாதார வளர்ச்சியும் செழிப்பும் தான் ஒரு சமூகத்தை வலிமையுள்ளதாகவும், பாதிப்புகளைத் தாங்கும் திறன் கொண்டதாகவும் மாற்றுகிறது. எனவே, வளர்ச்சி என்பது காலநிலை நடவடிக்கைகளுக்குப் போட்டியாக இருக்காமல், அதற்குத் துணையாக இருக்க வேண்டும். உண்மையில், ஒரு நாட்டின் வளர்ச்சியே மக்கள் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக்கொள்ள  பெரிதும் உதவுகிறது.


இந்தியாவின் மிகப்பெரிய காலநிலை மாற்ற இடைவெளிக்கு மொழியே தடையாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர். 


காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் முன்னோடியாகக் கருதப்படும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டு நடந்த சில நிகழ்வுகளை இந்த ஆய்வு அறிக்கை எச்சரிக்கையாகச் சுட்டிக்காட்டுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலுக்கு (Renewable energy) மிக வேகமாக மாறுவதில் உள்ள அபாயங்களை இந்த அறிக்கை விளக்குகிறது. உதாரணமாக, சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்தில் சிறந்து விளங்கும் நெதர்லாந்து நாட்டில், இந்த மின்உற்பத்தி மிக வேகமாக விரிவடைந்ததால் அங்கிருக்கும் மின் விநியோகக் கட்டமைப்பு பாதிப்படைந்ததாகக் கூறப்படுகிறது பழைய காலத்து மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட அந்தக் கட்டமைப்பு, புதிய வேகத்திற்கு ஏற்ப இயங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் விளைவாக மின் தட்டுப்பாடு, தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு தருவதில் தாமதம் மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் மின்சாரத்தைக் குறைத்துப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனை கொள்கை சார்ந்தது அல்ல என்றும் மாறாகக் கட்டமைப்பு வசதிகள்  சார்ந்தது என்று இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.


காலநிலை மாற்றமும் காலநிலை நீதியும்: பொருளாதார வளர்ச்சியையும் பசுமை மாற்றத்தையும் சமநிலைப்படுத்த இந்தியாவின் முயற்சிகள்.


ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு ஸ்பெயினில் ஏற்பட்ட பெரிய மின்சாரக் கட்டமைப்பு தோல்விக்கு, அதிகப்படியான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி  உற்பத்தியின்போது ஏற்பட்ட நிலைத்தன்மையற்ற தன்மையும், மாறிவரும் தேவைக்கேற்ப மாற்றி அமைக்கப்படாத  மின் விநியோக முறையுமே காரணமாகக் கூறப்படுகிறது. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலுக்கு எதிரான விமர்சனம் அல்ல என்றும் மாறாக, போதிய பாதுகாப்பு வசதிகள், மாற்று ஏற்பாடுகள் மற்றும் நிறுவன ரீதியான மேலாண்மைத் திறன் இல்லாமல், மிக வேகமாகக் சிக்கலான அமைப்புகளைப் புகுத்துவது, அந்தத் திட்டத்தை வெற்றிகரமானதாக ஆக்குவதற்குப் பதில் பலவீனமானதாக மாற்றிவிடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. 


மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில்கேட்ஸ், கடந்த ஆண்டு பருவநிலை மாற்றம் குறித்து தனது கருத்தை மாற்றிக்கொண்டதை இந்த ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது என்பது மனிதர்களின் துயரங்களை அதிகப்படுத்தும் வகையில் அமையக்கூடாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பாரிஸ் ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட 1.5°C அல்லது 2°C இலக்குகளைப் போலன்றி, உலகம் 3°C வெப்பமடைந்தாலும்கூட மனிதர்கள் வாழக்கூடிய ஒன்றாகவே இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


போதிய நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி இல்லாமல், இந்தியாவின் காலநிலை மாற்ற இலக்குகளை (குறிப்பாக கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது) அதிகரிப்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது மற்றும் அது நியாயமானதும் அல்ல என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. பெட்ரோல், நிலக்கரி போன்ற எரிபொருட்களிலிருந்து சுமூகமாக மாறுவதற்கு, அணுசக்தி போன்ற நம்பகமான மாற்று எரிசக்தி ஆதாரங்கள் சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும். அத்துடன், கார்பன் வெளியேற்றம் எப்போது உச்சத்தைத் தொட்டு குறையத் தொடங்கும் என்பதற்கான தெளிவான திட்டமும் அவசியமாகிறது. 


அடுத்த பத்தாண்டுகளை இந்தியா வெறும் 'காலநிலை மாற்றக் கொள்கை' சார்ந்த விஷயமாக மட்டும் பார்க்கக்கூடாது என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதற்குப் பதிலாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நிறுவனங்களின் தயார்நிலை ஆகியவற்றோடு இணைந்து செயல்படும் வகையிலான ஒரு பரந்த 'எரிசக்தி வியூகமாக' (Energy Strategy) இதனைத் திட்டமிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. 


இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பும், சிறந்த வணிக நடைமுறைகளும் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. இதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் 'கவனமான மாற்றங்கள்' முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, இடர்-சார்ந்த ஒழுங்குமுறைகள் (Risk-based regulation), சந்தை சார்ந்த கருவிகள், டிஜிட்டல் வழி இணக்க முறைகள் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலான நிர்வாகம் ஆகியவை சூழலியல் பாதுகாப்பிற்கும் வணிக வளர்ச்சிக்கும் இடையே ஒரு பாலமாக அமைகின்றன.


 Original Article : Cutting carbon emissions should not be top priority -Jacob P Koshy

Share: