சட்ட மற்றும் நீதித்துறைத் திறன்களை வலுப்படுத்துதல் -சி ராஜ் குமார்

 பொருளாதார மற்றும் ஒழுங்குமுறை விஷயங்கள் தொடர்பான அதிகரித்துவரும் சிக்கலான வழக்குகளைக் கையாள நீதிபதிகள் நன்கு தகுதி பெற்றிருக்க வேண்டும்.


அரசாங்கத்தின் ஆண்டு இறுதிப் பொருளாதார ஆய்வறிக்கை, ஜப்பானை முந்தி உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளதாக அறிவித்தது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏற்கனவே சுமார் $4.18 டிரில்லியன் (€3.55 டிரில்லியன்)-ஐ எட்டியுள்ளது என்றும், 2030-ம் ஆண்டுக்குள் $7.3 டிரில்லியனை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஒரு பெரிய பங்கை வகிக்க இலக்கு வைத்துள்ள நிலையில், சட்ட மற்றும் நீதித்துறைத் திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துவது முக்கியம். இது இந்தியாவின் பொருளாதார நிர்வாகத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும்.


1991-ம் ஆண்டு இந்தியா தனது பொருளாதாரத்தைத் திறந்து, தனியார் துறைக்கு ஒரு பெரிய பங்கை அனுமதித்தது. கடந்த இருபது ஆண்டுகளில், இது இந்தியாவின் பெருநிறுவன மற்றும் வணிகத் துறையை பெரிதும் மாற்றியுள்ளது. பொருளாதார நிர்வாகம் தொடர்பான சட்டங்களுக்கு ஒரு வலுவான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


1991-க்கு முந்தைய பொருளாதார மாதிரியானது, சிக்கலான வணிக பரிவர்த்தனைகளைவிட, பெரும்பாலும் குடிமை, குற்றவியல், நிலம் மற்றும் குடும்பம் தொடர்பான சட்ட தகராறுகளை நீதிமன்றங்கள் கையாளும் அடிப்படையில் அமைந்தது. இருப்பினும், 1991 பொருளாதார சீர்திருத்தங்கள் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடு (FDI), உள்கட்டமைப்பு திட்டங்கள், தனியார் மூலதனம், பெருநிறுவன மறுசீரமைப்பு, வங்கி மற்றும் நிதித்துறை பிரச்சினைகள் மற்றும் சமீபத்தில், மின்னணு பொருளாதாரத்தின் பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுத்தன.


நீதித்துறை திறன் மேம்பாடு


நீதித்துறையின் அனைத்து நிலைகளிலும் 4.78 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதை நாம் அறிந்திருந்தாலும், அரசு நிறுவனங்கள் அனைத்து வழக்குகளிலும் கிட்டத்தட்ட 50 சதவீதத்தில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க பகுதி வரி, ஒழுங்குமுறை, உள்கட்டமைப்பு மற்றும் ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களுடன் தொடர்புடையது.


இதில் குறிப்பிடும்படியாக, இந்த பரந்த தரவுத் தொகுப்பிற்குள், குடிமை/வணிக வழக்குகள் குறிப்பிடத்தக்கவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வழக்குகளில், ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடிமை வழக்குகள், அவற்றில் 57 சதவீதத்திற்கும் அதிகமானவை ஒரு வருடத்திற்கும் மேலாக நிலுவையில் இருப்பதால், பெருநிறுவன மற்றும் வணிக நிச்சயமற்ற தன்மை மேலும் அதிகரிக்கிறது.


வணிக வழக்குகள் அதிகமானதன் காரணமாக நிறுவன எதிர்பார்ப்புகளும் கணிசமாக எழுந்துள்ளன. எடுத்துக்காட்டாக, ஐபிசி (IBC) தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேலும், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (National Company Law Tribunal (NCLT)) மட்டும் மார்ச் 31, 2025 நிலவரப்படி 14,961-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. உண்மை என்னவென்றால், நீதித்துறை இன்னும் 20-ம் நூற்றாண்டின் தகராறு தீர்வு மாதிரியின் (dispute resolution model) கட்டமைப்பின் மூலம் கட்டமைப்புரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 21-ம் நூற்றாண்டின் வணிக சவால்களைக் கையாள முயற்சிக்கிறது.


உலக வங்கியின் 2020-ம் ஆண்டுக்கான வணிகம் செய்தல் குறிகாட்டிகள், உயர்மட்ட கொள்கை தலையீடுகள் மூலம், இந்தியா தனது ஒட்டுமொத்த தரவரிசையை கணிசமாக மேம்படுத்த முடியும் என்பதைக் காட்டியது. 2014-ல் 142-வது இடத்தில் இருந்த இந்தியா, 2020-ல் வணிகம் செய்வதற்கான எளிமைத் தரவரிசையில் 63-வது இடத்திற்கு முன்னேறியது.


இருப்பினும், ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதில் இந்தியா இன்னும் மோசமாக 163-வது இடத்தில் இருப்பதால், சட்ட மற்றும் நீதித்துறை திறன்மேம்பாடு ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கிறது. சராசரியாக, ஒரு நிறுவனம் முதல்நிலை நீதிமன்றத்தில் ஒரு வழக்கமான வணிகத் தகராறைத் தீர்க்க கிட்டத்தட்ட 1,500 நாட்கள் எடுத்துக் கொண்டால், அது இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்திற்கு நல்ல சூழ்நிலை அல்ல. உலக வங்கியின் வழிமுறை நேரம், செலவு மற்றும் நீதித்துறை செயல்முறையின் தரத்தை மையமாகக் கொண்டது.


நீதிபதிகளுக்கு பயிற்சி அளித்தல்


நீதிபதிகளுக்கு நீதித்துறைப் பணியின் ஐந்து முக்கிய துறைகளில் கவனம் செலுத்திய மற்றும் கட்டமைக்கப்பட்ட பயிற்சி தேவை. இதில் நீண்டகாலத் திறன் மேம்பாடு மற்றும் கல்வி ஆகியவை அடங்கும்.


நிறுவன நிர்வாகம் மற்றும் நிறுவன சட்டம் : சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG), பங்குதாரர் செயல்பாடு மற்றும் மின்னணு நிறுவன நிர்வாகம் போன்ற புதிய மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளைத் தவிர, வாரிய கட்டமைப்புகள், நம்பிக்கைக்குரிய கடமைகள், தொடர்புடைய கட்சி பரிவர்த்தனைகள், பங்குதாரர் ஒப்பந்தங்கள், கையகப்படுத்தல் ஒப்பந்தங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தும் பயிற்சி தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. கல்வியாளர்கள், சட்ட நிறுவன கூட்டமைப்புகள் மற்றும் தொழில்துறை ஒழுங்குமுறை அதிகாரிகளின் ஈடுபாட்டின் மூலம் மாநில மற்றும் தேசிய நீதித்துறை நிறுவனங்களுக்குள் திறனை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.


வணிக ஒப்பந்தங்கள் மற்றும் சிக்கலான பரிவர்த்தனைகள் : இன்றைய நீதிபதிகள் உள்கட்டமைப்பு ஒப்பந்தங்கள், பொது-தனியார் கூட்டமைப்பு (PPPs) மாதிரிகள், M&A கட்டமைப்புகள், திட்ட நிதி மற்றும் கட்டுமான ஒப்பந்தங்கள் பற்றிய புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் பெரும்பாலும் இந்த விஷயங்களில் இருந்து எழும் சர்ச்சைகளைக் கையாளுகிறார்கள். இந்திய நீதிமன்றங்களில் தீர்ப்பளிக்கப்படக்கூடிய உள்நாட்டு, சர்வதேச மற்றும் எல்லைதாண்டிய தகராறுகளைச் சமாளிக்க, ஒப்பந்த இடர் ஒதுக்கீடு, இழப்பீடுகள், உத்தரவாதங்கள் மற்றும் நிதி உடன்படிக்கைகளைப் புரிந்துகொள்வதன் அடிப்படையில் இருக்கும் அறிவை கணிசமாக அதிகரிக்க வேண்டும். துபாய் சர்வதேச நிதி மையம் (Dubai International Financial Centre (DIFC)) வணிக மற்றும் பெருநிறுவன கட்டமைப்புகள் குறித்து நிதி ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் இணைந்து நீதிபதிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு சிறந்த உதாரணத்தை வழங்குகிறது.


நிதி, வங்கி, காப்பீடு மற்றும் திவால் சட்டம் : நமது நீதிபதிகள் புதிய திவால்நிலை கட்டமைப்புகள், மறுசீரமைப்பு கொள்கைகள் மற்றும் மதிப்பீட்டு முறைகள் பற்றிய புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டும். சட்டம் மற்றும் பொருளாதார பகுப்பாய்விற்கான பயிற்சி மற்றும் திறன்மேம்பாடு நீதிபதிகளுக்கு மிகவும் அவசியம். எடுத்துக்காட்டாக, அமெரிக்க திவால்நிலை நீதிமன்றங்கள் கூட்டாட்சி நீதித்துறை மையத்தால் நிதியளிக்கப்படும் சிறப்பு வருடாந்திர நீதித்துறை கல்வித் திட்டங்களை நடத்துகின்றன.


போட்டிச் சட்டம் மற்றும் சந்தைப் பொருளாதாரம் : இந்தியப் போட்டி ஆணையத்தின் துறையின் இந்த விஷயங்களில் புதிய அளவிலான நிபுணத்துவத்தை உருவாக்கியுள்ள நிலையில், முக்கிய நீதித்துறை செயல்பாட்டிற்கு சந்தை வரையறை, ஆதிக்க மதிப்பீடு மற்றும் பொருளாதார கருவிகள் பற்றிய அடிப்படை அறிவு மற்றும் புரிதல் தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய ஒன்றிய நீதிபதிகள் தொழில்துறை பொருளாதாரம் மற்றும் சந்தை பகுப்பாய்வில் ஐரோப்பிய நீதித்துறை பயிற்சி வலையமைப்பால் பயிற்சி பெறுகின்றனர்.


தொழில்நுட்பம், மின்னணு பொருளாதாரம் மற்றும் தரவு நிர்வாகம் : சட்டத் துறையில் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான சிக்கல்கள் விரைவாக முக்கியமானதாகி வருகின்றன. அவற்றைக் கையாள நீதிபதிகள் சிறப்பாகத் தயாராக இருக்க வேண்டும். தகவல் தொழில் நுட்பம் (IT) ஒப்பந்தங்கள், அறிவுசார் சொத்துரிமை (IP) ஒப்பந்தங்கள், நிதி தொழிழ்நுட்பம் (fintech), கிரிப்டோ-வளங்கள் (crypto-assets) ஆகியவற்றைப் புரிந்துகொள்வது மற்றும் குற்றவியல் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) நிர்வாகத்தின் இடைநிலை அம்சங்களைப் பாராட்டுவது அவசியமாகிவிட்டது. சிங்கப்பூர் மற்றும் எஸ்டோனியாவில் உள்ள நீதிமன்றங்கள் அல்காரிதமிக் பொறுப்புணர்வு மற்றும் ஒப்பந்தச் சட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த கட்டமைக்கப்பட்ட பயிற்சியை உருவாக்கியுள்ளன.


தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கு நிலுவைகளைக் குறைப்பது தனது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதை அடைவதற்கு, இந்திய நீதிமன்றங்கள் பெருநிறுவன, வர்த்தக மற்றும் பொருளாதார வழக்குகளைக் கையாளும் விதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


எழுத்தாளர் ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் நிறுவன துணைவேந்தர் ஆவார்

                     

Original Article : Building legal and judicial capacity.  -C Raj Kumar 


Share:

மாதவ் காட்கிலின் முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைகள் அறிக்கை மற்றும் அது எதிர்கொண்ட எதிர்ப்பு குறித்து… -நிகில் கனேகர்

அறிக்கையின் நிலைமை எப்படி இருந்தபோதிலும், பலவீனமான மேற்குத் தொடர்ச்சி மலைகளைக் கட்டுப்பாடற்ற வளர்ச்சியிலிருந்து பாதுகாப்பதை காட்கில் தொடர்ந்து உறுதியாக ஆதரித்தார். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சுற்றுச்சூழல் பேரழிவுகள் ஏற்படும்போதெல்லாம், இன்றுவரை இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன.


புகழ்பெற்ற சூழலியல் நிபுணர் மாதவ் காட்கில், வயது 83, புதன்கிழமை இரவு புனேவில் உடல்நலக் குறைவால் காலமானார்.


ஒரு சூழலியலாளராக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாழ்க்கையில், மேற்குத் தொடர்ச்சி மலை நிபுணர்கள் சூழலியல் குழுவின் (Western Ghats Ecology Expert Panel (WGEEP)) தலைவராக அவரது முக்கியப் பணி தனித்து நிற்கிறது. இருப்பினும், அந்த அறிக்கை பின்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது.


அந்த நிராகரிப்பு இருந்தபோதிலும், காட்கில் அந்தக் கொள்கையைக் கைவிடவில்லை. அவர் அந்தப் பலவீனமான மலைச் சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்காகத் தொடர்ந்து வாதிட்டார். அந்த அறிக்கையின் பரிந்துரைகள் இன்றும் மேற்கோள் காட்டப்படுகின்றன. குறிப்பாக, அந்தப் பகுதியில் நிலச்சரிவுகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் பேரிடர்கள் ஏற்படும்போது அவை குறிப்பிடப்படுகின்றன.


மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கான ஒரு பரிந்துரை


மேற்குத் தொடர்ச்சி மலைகள் தீபகற்ப இந்தியாவின் நீர்க் கோபுரம் (water tower of peninsular India) என்று அழைக்கப்படுகின்றன. இதில், காவிரி, கோதாவரி, கிருஷ்ணா, பெரியார் மற்றும் நேத்ராவதி பல முக்கிய ஆறுகள் இங்குதான் உற்பத்தியாகின்றன. இந்த மலைத்தொடர் குஜராத்திலிருந்து கேரளா மற்றும் தமிழ்நாடு வரை பரவியுள்ளது. இது உலகளவில் ஒரு பல்லுயிர் பெருக்க மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இங்கு அதிக அளவில் தனிச்சிறப்பு வாய்ந்த உயிரினங்கள் காணப்படுகின்றன. இதன் பொருள், சில மரங்களும் விலங்குகளும் இந்தச் சூழல் மண்டலத்தில் மட்டுமே காணப்படுகின்றன என்பதாகும்.


மார்ச் 2010-ல், பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் உணர்திறன் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம், அதன் சிக்கலான புவியியல் மற்றும் காலநிலை மாற்ற அச்சுறுத்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலை நிபுணர்கள் சூழலியல் குழு (WGEEP) உருவாக்கப்பட்டது.


2014-ம் ஆண்டு எகனாமிக் அன்ட் பொலிடிகல் வீக்லி இதழில் (Economic and Political Weekly) வெளியான ஒரு கட்டுரையில், 2010-ம் ஆண்டு நீலகிரியில் நடைபெற்ற மேற்குத் தொடர்ச்சி மலைகளைக் காப்பாற்றுங்கள் (Save Western Ghats movement) இயக்கத்தின் கூட்டமே இந்தக் குழுவை அமைப்பதற்கான தூண்டுதலாக அமைந்தது என்று காட்கில் குறிப்பிட்டிருந்தார். “மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அதில் கலந்துகொண்டு விவாதங்களில் பங்கேற்றார். இது மேற்குத் தொடர்ச்சி மலை நிபுணர்கள் சூழலியல் குழு (WGEEP) அமைப்பதில் உச்சத்தை எட்டியது” என்று காட்கில் குறிப்பிட்டார்.


மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பணியானது, மலைத்தொடரின் சூழலியலை மதிப்பிடுதல், அதன் சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த பகுதிகளை வரையறுத்தல் மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த மண்டலங்களை பரிந்துரைத்தல் ஆகும். நிலையான வளர்ச்சிக்கான நிர்வாக அதிகாரத்திற்கான வழிமுறைகளை வகுத்தல் உட்பட, பாதுகாப்பு மற்றும் புத்துணர்ச்சி குறித்த பரிந்துரைகளையும் இது வழங்கியது.


காட்கில் குழு பரிந்துரைத்தது என்ன?


மாதவ் காட்கில் களத்தில் விரிவான ஆலோசனைகளை நடத்திய பிறகு, அவர் உள்ளூர் சமூகங்களுடனும் பொதுப் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடினார். இந்த ஆலோசனைகளைத் தொடர்ந்து, அக்குழு மேற்குத் தொடர்ச்சி மலையின் முழுமையான 1,29,037 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதியாக (Ecologically Sensitive Area (ESA)) அறிவித்தது. இந்த பகுதியை மூன்று நிலைகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்டதாக அக்குழு பிரித்தது. இவை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களாக (Ecologically Sensitive Zones (ESZ)) வகைப்படுத்தப்பட்டன.


அதன்படி, ஒவ்வொரு துறைக்கும் விரிவான வழிகாட்டுதல்கள் முன்மொழியப்பட்டன. மண்டலங்கள் முழுவதும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பயிரிடுவதற்கான தடை, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அல்லது புதிய மலை தலங்களை (new hill stations) உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும். புதிய சுரங்க உரிமங்கள் எதுவும் வழங்கப்படக்கூடாது என்றும், ESZ-1 மற்றும் ESZ-2-ல் ஐந்து ஆண்டுகளுக்குள் இருக்கும் சுரங்கங்களை படிப்படியாக அகற்ற வேண்டும் என்றும் இந்தக் குழு கூறியது. ESZ-1 பகுதி குவாரிகளுக்கு புதிய உரிமங்கள் வழங்கப்படாது. புதிய இரயில் பாதைகளோ அல்லது முக்கிய சாலைகளோ அமைக்கப்படக்கூடாது என்றும் அந்தக் குழு மேலும் முன்மொழிந்தது. ESZ-1 மற்றும் ESZ-2 மண்டலங்களில் அத்தகைய திட்டங்கள் மிகவும் அவசியமானதாக இருக்கும்போது மட்டுமே விதிவிலக்குகள் அனுமதிக்கப்பட்டன.


சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அதிகாரசபையான 24 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் ஆணையத்தை (Western Ghats Ecology Authority (WGEA)) உருவாக்கவும் அது பரிந்துரைத்தது. சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதிகளின் (ESZ) பாதுகாப்பை மேற்பார்வையிட, இந்த ஆணையம் ஒரு உச்சபட்ச, பல-மாநில ஆணையமாக கருதப்பட்டது. குஜராத், கோவா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய ஆறு மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த மாநிலங்களில் உள்ள அனைத்து ESZ-களையும் பாதிக்கும் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல், நிர்வகித்தல் மற்றும் திட்டமிடுதல் ஆகியவற்றிற்கான இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது.


இந்த ஆணையத்தில் துறைசார் வல்லுநர்கள், வள வல்லுநர்கள் மற்றும் நோடல் அமைச்சகங்களின் உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று முன்மொழியப்பட்டது.


காட்கில் குழு அறிக்கைக்கான அரசியல் எதிர்ப்பு


ஆரம்பகால அறிக்கை மார்ச் 2011-ல் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், இறுதிப் பதிப்பு ஆகஸ்ட் 2011-ல் சமர்ப்பிக்கப்பட்டது. ஜூலை 2011-ல் ரமேஷுக்குப் பிறகு ஜெயந்தி நடராஜனின்கீழ், அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஆனால், பின்னர் கருத்துகளைப் பெற மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டது என்று காட்கில் பொருளாதார மற்றும் அரசியல் வாரஇதழில் (EPW) குறிப்பிட்டார்.


இந்த அறிக்கையே உள்ளடக்கிய மேம்பாட்டிற்கான ஒரு வாதத்தை முன்வைத்ததாகவும், "விலக்கு அடிப்படையிலான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு" (exclusionary development and conservation) என்பதற்குப் பதிலாக, அனைத்து கிராம சபைகளுக்கும் (அனைத்து வயது வந்த குடியிருப்பாளர்களையும் உள்ளடக்கிய கிராம அமைப்புகள்) அதை எடுத்துச் செல்லுமாறு அவர்கள் பரிந்துரைத்ததாகவும் காட்கில் எழுதினார்.


அந்த நேரத்தில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த அறிக்கையை பொதுவெளியில் வெளியிடாமல் வைத்திருக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்தனர். மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கோரிக்கைகளை தாக்கல் செய்தனர். மேல்முறையீடுகளுக்குப் பிறகு, தலைமை தகவல் ஆணையர் ஏப்ரல் 2012-ல் அதை வெளியிட உத்தரவிட்டார். இருப்பினும், இது தொடர்பாக சுற்றுச்சூழல் அமைச்சகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இறுதியில் இந்த அறிக்கையை மே 2012-ல் பொதுமக்களுக்கு வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்த அறிக்கை, குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா அரசாங்கங்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது. ஒரு விரிவான அதிகாரசபையை உருவாக்குவதற்கான பரிந்துரையை மகாராஷ்டிரா எதிர்த்தது. அத்தகைய அமைப்பு ஏற்கனவே உள்ள அரசு நிறுவனங்களுக்கு இணையாகச் செயல்படும் என்று அது வாதிட்டது. புதிய நீர்மின் திட்டங்களுக்கான தடைக்கு பல மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்தன.


இந்த அறிக்கையை எதிர்த்து கேரளா, இடுக்கி மற்றும் வயநாடு மாவட்டங்களில் பெரிய நிலப்பரப்புகள் சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதியாக (ESA) வரையறுக்கப்பட்டால், அந்தப் பகுதிகள் பணப்பயிர்களுக்கு (cash crops) தாயகமாக இருப்பதால், அந்தப் பகுதிகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று கூறியது. கேரளாவின் அப்போதைய நிதியமைச்சர் கே.எம். மணி, விவசாயம் மற்றும் மனித நடவடிக்கைகள் சாத்தியமற்றதாகிவிடும் என்று கூறினார். கேரளாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபை இந்தக் கவலைகளுக்கு ஆதரவளித்தது. இந்த அறிக்கை பொருளாதார இழப்புக்கு வழிவகுக்கும் என்ற கூற்றுகளை அது எதிரொலித்தது.


கஸ்தூரிரங்கன் குழு


அறிக்கைக்கு எழுந்த எதிர்ப்பின் காரணமாக, சுற்றுச்சூழல் அமைச்சகம் விண்வெளி விஞ்ஞானி கே. கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒரு உயர்மட்ட பணிக்குழுவை (High-Level Working Group (HLWG)) அமைத்தது. அதன் பணி "மேற்குத் தொடர்ச்சி மலை நிபுணர்கள் சூழலியல் குழு அறிக்கையை முழுமையான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட முறையில் ஆய்வு செய்வது" ஆகும்.


அதைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டின் உயர்மட்ட பணிக்குழு (HLWG) அறிக்கை, மலைத்தொடரின் 56,825 சதுர கி.மீ. பகுதியை சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் மிக்கதாக வரையறுக்க முன்மொழிந்தது. காட்கில் குழுவைப் போலவே, மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், சுரங்கம், புதிய அனல்மின் நிலையங்கள் மற்றும் பெரிய நகரங்கள் ஆகியவற்றில் சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதிகளைக் (ESA) கட்டுப்படுத்தவும் இது அழைப்பு விடுத்தது. முந்தைய குழுவைப் போலன்றி, கஸ்தூரிரங்கன் குழு சில கிராமங்களை சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதிகளாக (ESA) அடையாளம் கண்டு, மாநிலங்கள் முழுவதும் அத்தகைய கிராமங்களின் பட்டியலை வெளியிட்டது.


இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு இதுவரை ஆறு முறை சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதிகளை வரையறுப்பதற்கான வரைவு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சமீபத்திய வரைவு ஆகஸ்ட் 2024-ல் வெளியிடப்பட்டது. இருப்பினும், மத்திய அரசும் மாநில அரசுகளும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் இன்னும் ஒருமித்த கருத்தை எட்டவில்லை. எந்தெந்தப் பகுதிகளை சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதிகள் பிரிவில் சேர்க்க வேண்டும் என்பதில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு நீடிக்கிறது. இதன் விளைவாக, அந்த அறிவிப்பு இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது. இதற்கிடையில், முன்னாள் வனத்துறை தலைமை இயக்குநர் சஞ்சய் குமார் தலைமையிலான ஒரு நிபுணர் குழு, இந்த விவகாரத்தை இறுதி செய்வதற்காக மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

Original Article :   Recalling Madhav Gadgil’s seminal Western Ghats report, and opposition to it. -Nikhil Ghanekar


Share:

2027ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் புதிதாக என்ன இருக்கிறது? -குஷ்பூ குமாரி, ரோஷ்னி யாதவ்

தற்போதைய செய்தி: 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பான 16வது கணக்கெடுப்பிற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கும் விதமாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை வீடுகளைப் பட்டியலிடும் பணி (house-listing operations) நடைபெறும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


முக்கிய அம்சங்கள்:


இந்தியாவின் தலைமைப்பதிவாளர் அலுவலகம் (Registrar General of India (RGI)) வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒவ்வொரு மாநிலமும் மற்றும் யூனியன் பிரதேசமும் இந்தக் காலக்கெடுவிற்குள் 30 நாட்கள் கொண்ட ஒரு காலவரம்பில் இந்தச் செயல்முறையை மேற்கொள்ளும்.


 முந்தைய மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில், இந்த அறிவிப்பு, வீடு வீடாகச் சென்று பட்டியலிடுவதற்கு முந்தைய 15 நாட்களுக்கு சுய கணக்கெடுப்பை முறையாக வழங்குகிறது. இது கணக்கெடுப்பாளர் வருகை தருவதற்கு முன்பு வீடுகள் டிஜிட்டல் முறையில் விவரங்களைச் சமர்ப்பிக்க அனுமதிக்கிறது.


1948-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 மற்றும் 17A-ன் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான களத்தை அமைத்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாத அறிவிப்பை மீறுகிறது.


அரசாங்கத்தால் முன்னர் கோடிட்டுக் காட்டப்பட்டபடி, 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். 2026-ல் வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு, அதைத் தொடர்ந்து 2027-ஆம்  ஆண்டின் தொடக்கத்தில் மக்கள்தொகைக் கணக்கீடு நடைபெறும். மக்கள்தொகைக் கணக்கீட்டிற்கான குறிப்புத் தேதி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மார்ச் 1, 2027 ஆகவும், லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற பனி சூழ்ந்த மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு அக்டோபர் 1, 2026 ஆகவும் இருக்கும்.


  பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினரைத் தவிர, 1931-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடத்தப்படும், முதல் நாடு முழுவதும் நடத்தப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு இது என்பதால், இந்தக் கணக்கெடுப்பு கூடுதல் அரசியல் மற்றும் நிர்வாக முக்கியத்துவத்தைப் பெறுகிறது. மேலும், அரசியலமைப்புரீதியான தடை நீக்கப்பட்ட பிறகு, எதிர்காலத்தில் தேர்தல் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கு இது அடிப்படையாக அமையும்.


வீடுகளைப் பட்டியலிடும் கட்டத்தில் (house-listing phase), வீடுகளின் நிலைமைகள் மற்றும் வீட்டு வசதிகள் குறித்த தரவுகளைச் சேகரிப்பதற்காக, நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்டிடம் குறித்தும் வீடு வீடாகச் சென்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும். கணக்கெடுப்பாளர்கள் கட்டிடத்தின் பயன்பாடு, கட்டுமானப் பொருள், அறைகளின் எண்ணிக்கை, உரிமை நிலை, நீர், மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதி, சமையல் எரிபொருள் மற்றும் தொலைபேசிகள், வாகனங்கள், தொலைக்காட்சிகள் போன்ற சொத்துக்களின் உரிமை போன்ற விவரங்களைப் பதிவு செய்வார்கள்.


2027-ஆம் ஆண்டு  மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான, வீட்டுப் பட்டியல் அட்டவணையில் 34 நெடுவரிசைகள் இடம்பெறும். வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் புதிய கேள்விகள் இதில் இடம்பெறும். இணையம் கிடைப்பது, மொபைல் போன்கள் மற்றும் திறன்பேசிகளின் உரிமை, குடியிருப்புக்குள் குடிநீர் அணுகல், எரிவாயு இணைப்பு வகை, வகை வாரியாக வாகன உரிமை மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பின்தொடர்வுகளுக்கான அலைபேசி எண் ஆகியவை இதில் இடம்பெறவுள்ளது. குடும்பம் எந்த வகையான தானிய உணவைச் சாப்பிடுகிறது என்று ஒரு புதிய கேள்வி கேட்கப்பட உள்ளது


2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக (India’s first digital census) இருக்கும். காகித அடிப்படையிலான அட்டவணைகள் ஒரு காப்புப் பிரதியாகப் பராமரிக்கப்பட்டாலும், டிஜிட்டல் தரவு சேகரிப்புக்கு வழங்கப்படும் அதிக ஊதியத்தின் உதவியுடன், முழுமையான டிஜிட்டல் கணக்கெடுப்பு (universal digital enumeration) நடைபெறும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.


புதன்கிழமை அறிவிக்கப்பட்ட சுய-கணக்கெடுப்பு விருப்பம் இந்த மாற்றத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும். இணைய வழியில் சுய-கணக்கெடுப்பை நிறைவு செய்யும் குடும்பங்களுக்கு ஒரு தனித்துவமான அடையாள எண் (unique ID) வழங்கப்படும். சரிபார்ப்பின்போது இந்த எண்ணை கணக்கெடுப்பாளரிடம் காண்பிப்பதன் மூலம், வீட்டு வருகைகளின்போது செலவிடப்படும் நேரம் கணிசமாக குறையும்.


இந்த மாற்றத்திற்காக, உள்ளமைக்கப்பட்ட சரிபார்ப்பு வசதிகளுடன் கூடிய அலைபேசி செயலிகள், வீடுகளின் புவியிடக்குறித்தல், குறைந்த இணைய இணைப்பு உள்ள பகுதிகளுக்கு நேரடி தரவு சேகரிப்பு மற்றும் மேகக் கணினி அடிப்படையிலான பதிவேற்றங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் அடிப்படைக் கட்டமைப்பை இந்தியாவின் தலைமைப் பதிவாளர் அலுவலகம் ஏற்கனவே உருவாக்கிவிட்டது. ஒரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு, அதிகாரிகள் பிழைகளை ஏறக்குறைய நிகழ்நேரத்தில் மேற்பார்வையிடவும் சரிசெய்யவும் உதவும்.


2026-ஆம் ஆண்டில் வீடுகளைப் பட்டியலிடும் கட்டத்தைத் தொடர்ந்து, வயது, கல்வி, தொழில், மதம், சாதி, இடம்பெயர்வு மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற தனிநபர் அளவிலான தரவுகளை உள்ளடக்கிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, 2027-ஆம் ஆண்டு பிப்ரவரியில் 20-21 நாட்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணக்கெடுப்பு முடிந்த 10 நாட்களுக்குள் தற்காலிக மக்கள்தொகை மொத்த விவரங்கள் வெளியாகும் என்றும், இறுதித் தரவுகள் அடுத்த ஆறு மாதங்களில் படிப்படியாக வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


இந்தியாவில் ஒரே நேரத்தில் நடத்தப்படாத முதல் நாடு தழுவிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 1872ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள தனிநபர்கள் கணக்கிடப்பட்டனர். இருப்பினும், இது ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை உள்ளடக்கவில்லை.


இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (first synchronous census) 1881-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அது டபிள்யூ. சி. புளோடன் (W.C. Plowden) என்பவரால் நடத்தப்பட்டது.


2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, ஒட்டுமொத்தமாக 16வது பத்தாண்டு கணக்கெடுப்பாகவும், சுதந்திரத்திற்குப் பிறகு 8-வது கணக்கெடுப்பாகவும் இருக்கும்.


2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மார்ச் 1, 2011 நிலவரப்படி நாட்டின் மக்கள்தொகை 1.21 பில்லியனாக இருந்தது. இந்த ஆண்டு இது 1.41 பில்லியனாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2027-ஆம் ஆண்டில் கணிக்கப்பட்ட மக்கள்தொகை 143.6 கோடியாக இருக்கும் நிலையில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் செலவு ஒரு நபருக்கு தோராயமாக ரூ.101.8 ஆக இருக்கும்.

 Original Article :  What’s new in Census 2027? -Khushboo Kumari , Roshni Yadav

Share:

கேரளாவின் முதல் சர்வதேச மசாலா வழித்தடங்கள் மாநாடு மற்றும் கருப்பு மிளகு. -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி :

 

 முதன்முறையாக நடைபெற்ற சர்வதேச மசாலா வழித்தட மாநாட்டின் (International Spice Routes Conference) முதல் பதிப்பில், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பங்கேற்பாளர்களும், 22 நாடுகளிலிருந்து 38 பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இவர்கள், கேரளாவை உலகளாவிய சந்திப்பின் ஒரு மையமாக மாற்றிய ஒரு பழங்காலப் பாதை குறித்த தங்கள் ஆராய்ச்சிகளையும் கதைகளையும் பகிர்ந்துகொள்வதற்காக ஒன்றுகூடினர்.


கேரள அரசாங்கத்தின் முசிறிஸ் பாரம்பரியத் திட்டத்தால் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 வரை ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, மசாலா வழித்தட பிராந்தியங்களின் ஆழமான பன்முகப் பண்பாட்டு உணர்வை எடுத்துரைத்ததுடன், இந்த பகிரப்பட்ட வரலாறுகள் நமது சமகால உலகத்தை எவ்வாறு தொடர்ந்து வடிவமைக்கின்றன என்பதையும் ஆராய்ந்தது.


முக்கிய அம்சங்கள்:


1. தொடக்க அமர்வில், மிளகு பல்வேறு புவியியல் பகுதிகளில் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தைப் பற்றிப் பேசிய வரலாற்றாசிரியர் பியுஸ் (Pius) மலேக்கண்டத்தில், மிளகு வர்த்தகத்தில் பங்கேற்ற வர்த்தகர்களும் வணிக இடைத்தரகர்களும் எவ்வாறு அதனுடன் பிரிக்க முடியாத வகையில் இணைந்த ஒரு அடையாளத்தைப் பெறத் தொடங்கினார்கள் என்பதை விரிவாக விளக்கினார்.


2. இது ஜெர்மனி மற்றும் ஹங்கேரியில் அவர்களுக்கு Pfeffer (மிளகு) என்ற குடும்பப் பெயரைப் பெற்றுத் தந்தது என்று அவர் கூறினார். இதேபோல், போர்ச்சுகலில் சிலவற்றுக்கு 'Pimenta' என்ற பெயர் வழங்கப்பட்டது. இது வெளிப்படையாகவே, மிளகு வர்த்தகத்துடனான அவர்களின் தொடர்பைக் குறிக்கும் ஒரு அடையாளமாக இருந்தது.


கருப்பு மிளகு: மசாலாப் பொருட்களின் ராஜா


3. பேரரசுகளைத் தோற்றுவிப்பதிலும், படையெடுப்புகளைத் அதிகரிப்பதிலும், கண்டுபிடிப்புகளுக்கு சக்தியாக இருப்பதிலும், நாம் இன்று காணும் உலகை வடிவமைப்பதில் மிளகு ஒரு முக்கியப் பங்கு வகித்துள்ளது. ஒரு காலத்தில் உலகின் மசாலா வர்த்தகத்தில் 80 சதவீதத்திற்கும் மேலாகப் பங்களித்த, இந்த ‘மசாலாப் பொருட்களின் ராஜா’ தான், கிழக்கு நாடுகள் காலனிமயமாக்கப்பட்டதற்கான முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம்.



4. கருப்பு மிளகு, இன்றைய கேரளா மாநிலத்தின் பெரும்பகுதியைக் கொண்ட மலபார் கடற்கரைப் பகுதியைத் தாயகமாகக் கொண்டது. 1322-ஆம் ஆண்டில், போர்டெனோனின் ஓடோரிக் தென்மேற்கு இந்தியாவிற்குப் பயணம் செய்து, மலபார் பிராந்தியத்தின் "மிளகு, நமது நாட்டில் தானியம் போல ஏராளமாக உள்ளது" (pepper is as abundant as grain in our land) என்று எழுதினார்.


5. பண்டைய இந்தியாவில் கி.மு. 2000-ஆம் ஆண்டிலேயே மக்கள் மிளகைப் பயன்படுத்தியதற்கான தொல்பொருள் சான்றுகள் உள்ளன. இந்த மசாலாப் பொருள் ஆசியாவின் பிற பகுதிகளுக்கும் வட ஆப்பிரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்தியத் துணைக்கண்டத்திற்கு வெளியே மிளகு பயன்படுத்தப்பட்டதற்கான ஆரம்பகால சான்று எகிப்திலிருந்து கிடைக்கிறது. கி.மு.1213-ஆம் ஆண்டைச் சேர்ந்த மாமன்னர் ராம்செஸின் பதப்படுத்தப்பட்ட சடலத்தின் நாசித் துவாரங்களில் மிளகு மணிகள் இருந்தன.


6. கி.பி.70-ல், மத்தியதரைக் கடல் பகுதிக்குச் செல்லும் ஒரு பெயர் தெரியாத வணிகரின் வழிகாட்டியான 'Periplus Maris Erythraei' என்ற நூல், ரோம் மற்றும் பண்டைய இந்தியத் துறைமுகமான முசிறி போன்றவற்றுக்கு இடையேயான வர்த்தகம் குறித்த தகவல்களைப் பதிவு செய்தது. மிளகு ரோமானியர்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தது. வரலாற்றாசிரியரான மார்கஸ் கேவியஸ் அபிசியஸ், ரோமானிய சமையல் குறிப்புகளில் 80 சதவீதம் மிளகைக் கொண்டிருந்ததாக மதிப்பிட்டார்.


மசாலாப் பொருட்களின் மீதான இந்த மோகம் பொருளாதாரரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பிளினி தனது 'இயற்கை வரலாறு' நூலில், "இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ரோமானியப் பேரரசைச் சுரண்டாமல் இருப்பதில்லை" என்று எழுதியுள்ளார்.


7. பெரியார் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்திருந்த முசிறி துறைமுக நகரம், தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் ஒரு முக்கிய வர்த்தக மையமாகத் திகழ்ந்தது. அது மிளகு, மணிகள் மற்றும் பட்டு ஆகியவற்றை ஏற்றுமதி செய்ததுடன், தங்க நாணயங்கள் மற்றும் தானியங்களை இறக்குமதி செய்தது. அது எப்படி நடந்தது என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. காலப்போக்கில் முசிறி நகரம் மறைந்து போனது. ஆனால், அதன் வழியாக வர்த்தகக் காற்றுடன் வீசிவந்த பல தாக்கங்கள் நீடித்தன.


8. ரோமானியப் பேரரசு வீழ்ச்சியடைந்த பிறகு, அவர்கள் கைவிட்ட மசாலா வழித்தடங்ளை மற்ற குழுக்கள் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கின. குறிப்பாக, அரேபியர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சக்தியாக மாறினர். அவர்கள் இந்த வர்த்தகத்தில் இடைத்தரகர்களாகவும் முக்கிய வசதியாளர்களாகவும் செயல்பட்டு, மசாலாப் பொருட்களை உற்பத்தி செய்யும் பகுதிகளை, குறிப்பாக இந்தியாவை, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நுகர்வோருடன் இணைத்தனர். மத்திய காலப்பகுதியில், மசாலாப் பொருட்கள் மிகவும் விலை உயர்ந்தவையாகவும் அதிக தேவை கொண்டதாகவும் இருந்தன. எனவே, அனைத்து கடல்வழி வல்லரசுகளும் அந்த வர்த்தகத்தில் ஒரு பங்கைப் பெற விரும்பின. உதாரணமாக, ஜெனோவா 14-ஆம் நூற்றாண்டுக்குள் ஒரு பிரபலமான வர்த்தக மையமாக மாறியது. மேலும், அதன் துறைமுகங்களுக்கு வரும் பொருட்களின் மதிப்பில் 40% மிளகாகவே இருந்தது.


9. 1511-ஆம் ஆண்டிற்குள், போர்த்துகீசியர்கள் மலபாரில் இருந்து நடைபெறும் மசாலாப் பொருள்களின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தினர். 1500 மற்றும் 1600-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலிருந்து 2 மில்லியன் கிலோ மசாலாப் பொருட்களைக் கொண்டு வந்தனர். போர்ச்சுகலுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பயணம் ஆபத்தானதாக இருந்தது. 30 சதவீதக் கப்பல்கள் மீண்டும் இந்தியாவிற்கு வரவில்லை.


10. ஆசியாவின் கடற்கரைப் பகுதிகளில் நடந்த மிளகு வர்த்தகம், இஸ்லாம் மதம் கிழக்கு நோக்கி, கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து சீனாவின் தெற்குக் கடற்கரை வரை பரவியது. அது இஸ்லாமியக் கருத்துக்களை மட்டுமல்லாமல், அரபு மொழி, ஷரியா நீதிமன்றங்கள் மற்றும் தனித்துவமான வணிக பழக்கவழக்கங்களையும் கொண்டு வந்தது.


உலக மசாலா அமைப்பு (World Spice Organisation (WSO))


1. உலக மசாலா அமைப்பு (WSO) என்பது மசாலாத் துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களையும் - விவசாயிகள், பதப்படுத்துபவர்கள், கல்வியாளர்கள் மற்றும் இறுதி பயனர்கள் - ஒன்றிணைக்கும் ஒரு கூட்டுத் தளமாகும். நிலையான வளர்ச்சியை நோக்கி இணைந்து செயல்படுவதே இதன் நோக்கமாகும்.


2. மசாலாப் பொருள் தொழிலை மிகவும் பாதுகாப்பானதாகவும், நீடித்த நிலையானதாகவும் மாற்றுவதற்காக இந்த அமைப்பு 2011-ல் நிறுவப்பட்டது. காலப்போக்கில், உலக மசாலா அமைப்பு நிலைத்தன்மை, பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.


3. நவம்பர் 2025-ல், உலக மசாலா அமைப்பு ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூரில், “முன்னோக்கிய மசாலாப் பாதை: பாதுகாப்பான, நீடித்த மற்றும் விரிவாக்கக்கூடியது” என்ற கருப்பொருளின்கீழ் 4-வது தேசிய மசாலா மாநாட்டை (National Spice Conference (NSC)) ஏற்பாடு செய்தது. இந்த மாநாட்டில் தேசிய நீடித்த மசாலாப் பொருட்கள் திட்டம் (National Sustainable Spice Program (NSSP)) குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


4. தேசிய நீடித்த மசாலாப் பொருட்கள் திட்டம் (National Sustainable Spice Program (NSSP)) என்பது நிலையான மற்றும் உணவுப் பாதுகாப்புடன் கூடிய சாகுபடி மாதிரிகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட உலக மசாலா அமைப்பின் ஒரு முதன்மைத் திட்டமாகும். இது இந்தியாவில் மசாலாப் பொருட்கள் துறையில் உள்ள சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பங்குதாரர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கிறது. இந்தத் தளம் உலக மசாலா அமைப்பால், இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம், GIZ, IDH-நிலையான வர்த்தக முன்முயற்சி மற்றும் மழைக்காடு கூட்டணி ஆகியவற்றுடன் இணைந்து நிறுவப்பட்டது.

Original Article : Kerala’s first International Spice Routes Conference and Black Pepper.

-Khushboo Kumari


Share:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) மறுசீரமைப்பு, அதில் உள்ள குறைகளை நீக்கி, மாறிவரும் காலத்திற்கு ஏற்ப செயல்படுகிறது. -சௌமியா காந்தி கோஷ்

புதிய சட்டம், கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 125 நாட்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் இலக்கை அடைய முயற்சிக்கிறது. தற்போதுள்ள 100 நாட்கள் வேலை திட்டத்துடன் ஒப்பிடும்போது, எதிர்காலத்தில் விருப்பமுள்ள குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும் வேலை நாட்களின் எண்ணிக்கையை இது படிப்படியாக அதிகரிக்கும் என்கின்றனர்.


முந்தைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)), விக்சித் பாரத் 2047 (Viksit Bharat 2047) திட்ட இலக்குடன் இணைக்கும் வகையில், வளர்ச்சியடைந்த பாரதம் – ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி இயக்கம் (கிராமப்புறம்) (Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin)) (VB-G RAM G)) மூலம் மேற்கொள்ளப்பட்ட பெரிய சீரமைப்பு நடவடிக்கையானது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. மிகவும் பரபரப்பான சூழலில், ஆதரவு தரவுகள் இல்லாத உணர்ச்சிபூர்வமான எதிர்வினைகள் காரணமாக, இந்த புதிய சட்டத்தின் விதிகளை உண்மை அடிப்படையிலும் ஒப்பீட்டுரீதியிலும் ஆராய்வது அவசியமாகிறது.


முதலாவதாக, புதிய சட்டம் கிராமப்புற குடும்பங்களுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது முன்னர் இருந்த 100 நாட்கள் வரம்பைவிட, விருப்பமுள்ள குடும்பங்களுக்கான வேலை நாட்களை படிப்படியாக அதிகரிக்கும். இருபது ஆண்டுகள் கடந்த பிறகும், சுமார் 7.5–8 சதவிகித குடும்பங்கள் மட்டுமே 100 நாட்கள் வேலையை நிறைவு செய்துள்ளன. மேலும், ஒரு குடும்பத்திற்கான சராசரி வேலை நாட்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட தேக்கமடைந்துள்ளது (2021–25 நிதியாண்டில் 50.4 நாட்கள், 2007–13-ஆம் நிதியாண்டில் 45.9 நாட்களுடன் ஒப்பிடுகையில்). எனவே, இந்த மாற்றம் மிகவும் அவசியமாகிறது. 2025-ஆம் நிதியாண்டில், சுமார் 5 கோடி குடும்பங்கள் என்ற அளவில் கோவிட் பெருந்தொற்றுக்கு  முந்தைய சராசரி எண்ணிக்கைக்கு அருகில், 5.78 கோடி குடும்பங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் (MGNREGA) பயனடைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன


இரண்டாவதாக, ஒரு மத்தியத் துறை திட்டத்திலிருந்து (90:10 என்ற விகிதம்) மத்திய நிதியுதவித் திட்டமாக (60:40 என்ற விகிதம்) மாறியதன் காரணமாக மாநிலங்கள் மீது அதிக நிதிச்சுமை ஏற்படும் என்ற அச்சத்தால் இந்த நடவடிக்கை ஆதரிக்கப்படவில்லை. கடந்த 19 ஆண்டுகளில் (2006-07 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரை), மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக (MGNREGA) ரூ. 9.95 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 80 சதவீதம் (ரூ. 7.8 லட்சம் கோடி) 2014-15-ஆம் நிதியாண்டு முதல் 2024-25-ஆம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளது. 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை ஒதுக்கீடு ரூ. 86,000 கோடி ஆகும். இது 2006-07-ஆம் நிதியாண்டில் இருந்த ரூ. 11,300 கோடியுடன் ஒப்பிடுகையில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்ச தொகையாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், 2014-15 மற்றும் 2024-25-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், இறுதி ஒதுக்கீடுகள் நிதிநிலை மதிப்பீடுகளைவிட ரூ.1.6 லட்சம் கோடி அதிகமாக இருந்தன. இதற்கு மாறாக, 2014-15-ஆம் ஆண்டுக்கு முந்தைய காலத்தில் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் வழக்கமாக நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டதைவிட குறைவாகவே இருந்தன. ஒன்றிய அரசின் பங்கு 2026-27-ஆம்  நிதியாண்டுக்குள் சுமார் ரூ. 95,692 கோடியாக அதிகரிக்கக்கூடும் என்கின்றனர். தனித்தனியாகப் பார்த்தால், மாநிலங்களின் கடன் வாங்கும் வரம்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) 3 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, கூடுதலாகக் கடன் வாங்குவதற்கு வாய்ப்பில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


மூன்றாவதாக, அதிக உழைப்பு தேவைப்படும் வேலைகளுக்குப் போதுமான ஊதியத்தை உறுதி செய்வதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGA) மோசமாகச் செயல்பட்டுள்ளது. ஏனெனில், ஊதியமானது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப அதிகரிக்கவில்லை. ஒரு நாளின் சராசரி ஊதியம், 2007–2012-ஆம் நிதியாண்டுகளில் சுமார் ₹88 ஆக இருந்தது, அது இப்போது சுமார் ₹267 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், உண்மையான மதிப்பில் ஊதியமானது, 2008–2012-ஆம் நிதியாண்டுகளுடன் ஒப்பிடும்போது, 2025 நிதியாண்டில் வெறும் 10 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இது, குறைந்த மற்றும் நிலையான பணவீக்கத்தால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒன்றிய அரசால் நிதியுதவி அளிக்கப்படும் ஒரு திட்டமாக இருப்பதால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமானது தொழிலாளர்களுக்கு சிறந்த இழப்பீட்டை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொடர்ந்து குறைந்த பணவீக்கம் இருப்பது, மக்களின் தேவைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் உண்மையான ஊதிய வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். இச்சட்டம், முன்னர் இருந்த தகுதியிழப்பு விதிகளை நீக்கியுள்ளது. இதனால், தகுதியுள்ள தொழிலாளர்கள் யாரும் விலக்கப்படாமல் இருக்க, வரவிருக்கும் வேலைகள் குறித்து மாநிலங்கள் இப்போது முன்கூட்டியே அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


நான்காவதாக, தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லாத வேலைகள் மூலம் கிராமப்புறங்களில் வருமானம் ஈட்டுவதிலேயே கவனம் செலுத்துகிறது. இந்த குறுகியகால அணுகுமுறை, உற்பத்தி செய்யும் சொத்துக்களை (நீடித்த பயனுள்ள வளங்களை) உருவாக்காத திட்டங்களை அதிகம் ஊக்குவித்தது. அதன் விளைவாக, 2021 முதல் 2025-ஆம் நிதியாண்டுகளில், மாநிலங்கள் கோரிய வேலை நாட்களுக்கும் உண்மையில் வழங்கப்பட்ட வேலை நாட்களுக்கும் இடையே சராசரியாக 13.3% வித்தியாசம் இருந்ததாகக் கூறப்படுகிறது.


இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, சுமார் 9.6 கோடி கிராமப்புறச் சொத்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 84 சதவிகிதம் கடந்த பத்தாண்டுகளில் (2014-15 முதல் 2024-25 நிதியாண்டு வரை) கட்டப்பட்டவை ஆகும். மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் முக்கியக் கவனம், நீர் பாதுகாப்பு, கிராமப்புற உள்கட்டமைப்பு, வாழ்வாதாரத்திற்கான உள்கட்டமைப்பு மற்றும் காலநிலை எதிர்ப்புத்திறன் ஆகியவற்றின்மீது உள்ளது. மேலும், இது வளர்ச்சியடைந்த இந்தியா தேசிய கிராமப்புற உள்கட்டமைப்பு தொகுப்பின்கீழ் (Viksit Bharat National Rural Infrastructure Stack) சொத்துக்களைத் திரட்டுதல் (aggregation) மற்றும் புவி-குறியிடுதல் (geo-tagging) மற்றும் பிரதமரின் கதி சக்தி (PM Gati Shakti) போன்ற பிற அமைப்புகளுடன் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றைச் செய்வதன் மூலம் பலன்களை அதிகப்படுத்த முடியும் என்கின்றனர். உதாரணமாக, தானியங்களைச் சேமித்து வைக்கும் கிடங்குகள் (godowns) பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட சாலைகளின் தொகுதிகளுக்கு அருகில் திட்டமிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்படுவதால், பெரிய அளவிலான சந்தை அணுகலை சாத்தியமாக்கும் என்கின்றனர்.


ஐந்தாவது, தேவை அடிப்படையிலான அமைப்பிலிருந்து (demand-driven system) நெறிமுறை நிதி முறைக்கு (normative funding) மாறுவது, உள்ளூர் தேவைகள் மற்றும் நிலைமைகளின் அடிப்படையில் மாநிலம் சார்ந்த நிதிஒதுக்கீட்டிற்கு வழிவகுக்கும் என்கின்றனர். இந்த அணுகுமுறை, மானியங்களில் ஏற்படும் ஆண்டுக்கு ஆண்டு ஏற்ற இறக்கங்களைக் குறைக்கும், முதன்மைப் பகுதிகளைக் கண்டறியும் மற்றும் மாநிலங்களுக்கிடையே சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஆணையத்தின் வரிப் பகிர்வுக்கு ஏற்றதாக முன்மொழியப்பட்ட இந்த மாதிரி, சமபங்கு (எடுத்துக்காட்டாக, கிராமப் பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை) மற்றும் செயல்திறன் குறிப்பாக, பெண்களின் பங்கேற்பு ஆகியவற்றைச் சமநிலைப்படுத்துகிறது. இத்தகைய ஒன்றிய உதவி அமைப்பால் பெரும்பாலான மாநிலங்கள் பயனடையும் என்றும் தெரிவிக்கின்றனர்.


ஆறாவதாக, 73-வது அரசியலமைப்புத் திருத்தம், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்படுத்தவும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மூலம் கிராமப்புற சுயாட்சியை அறிமுகப்படுத்தியது. பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள், கிராமப் பஞ்சாயத்துகளை, உள்ளூர் தேவைகளைக் கண்டறிந்து, நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், விக்சித் பாரத் (வளர்ந்த இந்தியா) திட்டத்தின் நோக்கம் தொலைநோக்குப் பார்வையில் தீவிரமாக ஊக்குவிக்கின்றன. அதே நேரத்தில், புதிய திறன்கள், டிஜிட்டல் விழிப்புணர்வு மற்றும் மேம்படுத்தப்பட்ட இணைப்பு வசதிகளுக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளவும் வலியுறுத்துகின்றன.


ஏழாவதாக, கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற வறுமை பெரிதும் குறைந்துவிட்டதால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான செலவு இப்போது வறுமைக் கோட்டுக்கான மொத்த செலவில் வெறும் 10% மட்டுமே உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இது கிராமப்புறங்களில் வருமானங்கள் பெரிதும் பல்வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. ஆகவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை இனி கிராமப்புறங்களில் நிலவும் வறுமையுடன் மட்டும் தொடர்புபடுத்துவது பொருத்தமற்றதாகிவிட்டதாகத் தெரிவிக்கின்றனர்.


வளர்ச்சியடைந்த பாரதம் – ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதித் திட்டம் (கிராமப்புறம்) (Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin)) (VB-G RAM G))ஸஎன்பது, நல்லெண்ணத்துடன் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டத்தை, மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப தொடர்ந்து பொருத்தமாக வைத்திருக்க எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கையாகும். இது, பொறுப்புடைமை, கடமை உணர்வு, வெளிப்படைத்தன்மை, வளங்களைப் பங்கிடுதல், மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றை மேம்படுத்துகிறது. இதன் மூலம் இது மிகவும் நலிவடைந்த  பிரிவினருக்கும் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கிறது. சமூக-பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் ஆற்றல் இந்தத் திட்டத்திற்கு உள்ளது. இந்த துணிச்சலான சிந்தனை, புறக்கணிக்கப்படுவதற்குப் பதிலாக, ஆதரிக்கப்பட வேண்டும். ஏனெனில், இதைச் செயல்படுத்த வேண்டிய நேரம் உண்மையிலேயே வந்துவிட்டதாகக் கூறுகின்றனர்.


எழுத்தாளர், 16-வது நிதிக் குழுவின் உறுப்பினர், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (Prime Minister's Economic Advisory Council (PMEAC)) உறுப்பினர், மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் குழும தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆவார்.

 Original Article : MGNREGA overhaul plugs gaps, keeps up with changing times. -Soumya Kanti Ghosh

Share:

டெல்லி சுல்தானகத்தின் வரலாறு என்ன? -குஷ்பு குமாரி மற்றும் ரோஷ்னி யாதவ்

பழைய டெல்லியில் உள்ள துர்க்மேன் வாயில் பகுதியில் கடந்த சில நாட்களாக டெல்லி மாநகராட்சி (Municipal Corporation of Delhi (MCD))) மேற்கொண்ட இடிப்பு நடவடிக்கை வன்முறையாக மாறியதை அடுத்து, அங்குள்ள மக்கள்மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி அவர்களை கலைத்தனர்.


முக்கிய அம்சங்கள்:


— முகலாய பேரரசர் ஷா ஜஹான் தனது புதிய தலைநகரை ஷாஜஹானாபாத் (இன்றைய பழைய டெல்லி) என்று உருவாக்கியபோது, 17-ஆம் நூற்றாண்டில் அவரது ஆட்சியில் துர்க்மன் கேட் கட்டப்பட்டது. ஆனால், இந்த இடத்தின் வரலாறு முகலாய காலத்துக்கு முன்பே தொடங்குகிறது. அது டெல்லியில் சூஃபி மதத்தின் முக்கியமான மையமாக இருந்த காலத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.


— வரலாற்றாசிரியர் ஸ்வப்னா லிடில் (Swapna Liddle)  தனது 'சந்தினி சௌக்: டெல்லியின் முகலாய நகரம்' ((Chandni Chowk: The Mughal City of Delhi) (2017) நூலில் கூறியது போல, ஷாஜஹானாபாத் வெறும் காலி நிலத்தில் கட்டப்படவில்லை என்றும் மாறாக, ஏற்கனவே இருந்த குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சாலைகளை அதன் நகர அமைப்பில் இணைத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 


— 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த ஒரு நேர்காணலில், வடமேற்கில் உள்ள ஃபதேபுரி மஸ்ஜித் (Fatepuri Masjid) முதல் துர்க்மன் வாயில் வரை செல்லும் சாலை, ஷா ஜஹான் தனது தலைநகரை நிறுவியபோது, ஏற்கெனவே இருந்த முக்கியமான ஒரு பிரதான சாலையாகும், அதன் இருபுறமும் பழமையான பல கட்டிடங்கள் இருந்தன என்று லிடில் விளக்கினார்.


— “இந்தச் சாலை அருகேதான் சூஃபி துறவி ஷா துர்க்மான் பயாபானி வாழ்ந்தார்; அவரது உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.” அவரது தர்கா (சமாதி) ஹவுஸ் காஸிக்குச் செல்லும் சாலையில் உள்ளது. அந்தத் தர்காவுக்கு மிக அருகிலேயே, 13-ஆம் நூற்றாண்டில் டெல்லி சுல்தானகத்தை ஆண்ட முதல் மற்றும் ஒரே பெண் ஆட்சியாளரான ரஸியா சுல்தானின் கல்லறை இருக்கிறது என்றும்  அந்தகக் கல்லறை மிகவும் பாரம்பரியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


— கலகம், காலனித்துவ ஆட்சி மற்றும் பிரிவினையின் எழுச்சிகளில் இருந்து இந்த நுழைவாயில் சேதம் எதுவும் இன்றி தப்பியது. 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பிறகு, பிரிட்டிஷ் அதிகாரிகள், மதில்சூழ்ந்த நகரத்தைத் தானே அடைத்துக்கொள்வதைத் தடுக்க, நுழைவாயிலின் இருபுறமும் இருந்த நகரச் சுவரின் சில பகுதிகளை இடித்துத் தள்ளினர் என்றும் குறிப்பிடப்படுகிறது.


— அவசரநிலையின்போது (Emergency) துர்க்மான் வாயிலில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி அறியப்பட்ட பெரும்பாலான தகவல்கள் நினைவுக் குறிப்புகள், விசாரணைப் பதிவுகள், பத்திரிகைத் துறை ஆய்வுகள் மற்றும் பிற்கால வாய்வழி வரலாறுகள் ஆகியவற்றிலிருந்து தெரிய வருகின்றன.


— 1970-களின் நடுப்பகுதியில், சஞ்சய் காந்தி டெல்லி நகரத்தை “அழகாக்கும்” என்ற பெயரில் சர்ச்சைக்குரிய திட்டத்தை செயல்படுத்தினார். அதனால், துர்க்மன் வாயில் திடீரென அரசியல் முக்கியத்துவம் பெற்றது. இந்த திட்டம் நகர்ப்புற சேரிகளையும் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளையும் அகற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இது, நகர்ப்புற ஏழைகளை அதிகமாக பாதித்த கடுமையான குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்குப் பிறகு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


— அந்தக் காலத்திய தகவல்கள் மற்றும் பிற்கால சாட்சியங்களின்படி, துர்க்மன் வாயிலைச் சுற்றியுள்ள சேரி பகுதிகளையும் கட்டிடங்களையும் இடிப்பதற்குச் சிறிது காலத்திலேயே விரைந்து ஒரு முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


— ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி, 1976-ஆம் ஆண்டு கட்டிடங்களை அகற்றும் பணிக்காக முதல் புல்டோசர் கொண்டுவரப்பட்டது. வெளிப்புற குடிசைகளை இடிக்கும் ஆரம்ப நடவடிக்கைகள் சிறிய எதிர்ப்பை சந்தித்தன. இருப்பினும், விரைவில், ஜமா மசூதிக்கு அருகிலுள்ள துஜானா ஹவுஸில் இரண்டு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் ஒரு குடும்பக் கட்டுப்பாடு மருத்துவமனை திறக்கப்பட்டது என்கின்றனர்.


— இடிப்புப் பணிகள் மேலும் பத்து நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்தன. பத்திரிகையாளர்களான ஜான் தயாள் மற்றும் அஜோய் போஸ் ஆகியோர், For Reasons of State: Delhi under Emergency (2018) என்ற நூலில் “புல்டோசர்கள் ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி வரை, அதாவது துர்க்மான் கேட்டில் உயிரின் அனைத்து அறிகுறிகளையும், மரணத்தின் அனைத்து அறிகுறிகளையும் அழிக்கும் வரை, இரவு பகலாக வேலை செய்தன.” என்று வெளிப்படையாகக் கூறப்பட்டிருந்தது. அதன் பிந்தைய ஆராய்ச்சிகளும், உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் சுமார் 400 பேர் வரை இறந்திருக்கலாம் என்றும், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றன.


— துர்க்மான் வாயில் சம்பவங்கள், அவசரநிலை (Emergency) காலத்தின்போது நடந்த அத்துமீறல்களை விசாரிக்க 1977-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஷா கமிஷனால் (Shah Commission) ஆராயப்பட்டன. அதன் கண்டுபிடிப்புகள் இருந்தபோதிலும், எந்தவிதமான வழக்கும் தொடரப்படவில்லை. மேலும், டெல்லியின் நவீன வரலாற்றில் நடந்த இந்த மிகவும் இருண்ட அத்தியாயங்களுக்காக எந்தவொரு மூத்த அதிகாரியும் தண்டிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. 


உங்களுக்குத் தெரியுமா?


—டெல்லி சுல்தானகம் என்பது மம்லுக், கில்ஜி, துக்ளக், சயீத், இறுதியாக லோடி வம்சம் உள்ளிட்ட பல வம்சங்களின் தொடர்ச்சியாகும். “இந்தோ-இஸ்லாமிய” கட்டிடக்கலை என்று அழைப்பதன் வளர்ச்சி இங்கிருந்துதான் குதுப் மினார் மற்றும் சிரி கோட்டை போன்ற புகழ்பெற்ற கட்டமைப்புகளுடன் தொடங்கியதாக வரலாற்றறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.


— குதுப் மினாரின் கட்டுமானப் பணியானது ஐபக்கின் காலத்தில் தொடங்கி, இல்துமிஷால் கட்டிமுடிக்கப்பட்டது. அதே சமயம், ஆப்கானிஸ்தானில் நிலவிய  மங்கோலியர்களின் தொடர் தாக்குதலில் இருந்து தப்பித்த மக்களுக்கு, அடைக்கலம் கொடுக்க அலாவுதீன் கில்ஜியால் சிரி கோட்டை கட்டப்பட்டது. மேலும், துக்ளக்குகள் துக்ளகாபாத், ஜஹபனா மற்றும் ஃபெரோசாபாத் போன்ற பல நகரங்களையும் கட்டினர்.


— பின்னர் 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட லோடி கல்லறைகளுடன் கூடிய லோடி தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. இது இன்றும் கலாச்சார நடவடிக்கைகளின் மையமாகக் கூறப்படுகிறது. 1398-ஆம் ஆண்டில், மத்திய ஆசியப் படையெடுப்பாளரான தைமூர் (Timur), டெல்லி மீது படையெடுத்து, பெரும் அழிவையும் படுகொலையையும் ஏற்படுத்தினார். இது “டெல்லியின் சூறையாடல்” என்று அழைக்கப்படுகிறது. இதன்பிறகு, மங்கோலியர்களிடமும் தைமூரிடமும் வம்சாவழி உரிமை கோரிய முகலாயர்கள் வரும்வரை டெல்லி தன் பழைய பெருமையை இழந்திருந்ததாகத் தெரிவிக்கின்றனர்.


— 16-ஆம் நூற்றாண்டில் வந்த முகலாயர்கள், டெல்லி சுல்தான்களைப் போலன்றி, ஆரம்பத்தில் டெல்லியைவிட ஆக்ராவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். இருப்பினும், 16-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஷேர் ஷா சூரி ஹுமாயூனை தோற்கடித்து (இது முகலாய ஆட்சியை தற்காலிகமாகத் தடை செய்தது) புராணா கிலா என்று அழைக்கப்படும் பழைய கோட்டையைக் கட்டினார் என்று வரலாற்றறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.


— 1638-ஆம் ஆண்டில், ஷாஜஹான் முகலாய தலைநகரை ஆக்ராவில் இருந்து மீண்டும் டெல்லிக்கு மாற்றினார். இதுவே இன்று "பழைய டெல்லி" (Old Delhi) அல்லது ஷாஜஹானாபாத் என்று அழைக்கப்படுகிறது. செங்கோட்டை (Red Fort) மற்றும் ஜாமா மஸ்ஜித் (Jama Masjid) போன்ற சின்னச் சின்ன கட்டமைப்புகள் இதன் சிறப்பம்சங்களாகக் கருதப்படுகிறது.

 Original Article : What is the history of Delhi Sultanate? -Khushboo Kumari and Roshni Yadav

Share: