விவசாய வருமானம் மற்றும் நிலைத்தன்மை மீது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
கடந்த 75 ஆண்டுகளில், இந்திய வேளாண்மை, நாட்டின் வரலாற்றிலேயே மாபெரும் மாற்றக் கதைகளில் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்றபோது, உணவுப் பற்றாக்குறை ஒரு கடுமையாக இருந்ததுடன், லட்சக்கணக்கான மக்களுக்கு உணவளிப்பது அன்றாட சவாலாக இருந்தது. தொலைநோக்குப் பார்வை கொண்ட வேளாண் ஆராய்ச்சியின் ஆதரவுடன், இந்திய விவசாயிகளின் பெரும் மனவுறுதியே நாட்டைப் பசியிலிருந்து காப்பாற்றியது.
இன்று, 2047-ம் ஆண்டிற்குள் 'வளர்ந்த இந்தியா' (Viksit Bharat) என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி இந்தியா முன்னேறிச் செல்லும் வேளையில், பாதுகாப்பு, தொழில், உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள் என ஒவ்வொரு துறையும் அந்த இலக்கிற்காகத் தயாராகி வருகிறது. ஒரு புதிய நூற்றாண்டின் சவாலை எதிர்கொள்ளும் அளவிற்கு வேளாண் ஆராய்ச்சி மீண்டும் எழுச்சி பெற முடியுமா என்பதே நம் முன் உள்ள கேள்வியாக உள்ளது.
வேளாண்மை இப்போது இரண்டு முக்கிய சவால்களை எதிர்கொள்கிறது. அது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். அதேநேரத்தில், பாதுகாப்பான உணவு உற்பத்தி மற்றும் மண், சுற்றுச்சூழல் நலப் பாதுகாப்பின் மூலம் நிலைத்தன்மையையும் உறுதி செய்ய வேண்டும். 1960ஆம் ஆண்டுகளில், வேளாண் ஆராய்ச்சி மூலம் இந்தியா உணவுப் பாதுகாப்பை அடைய உதவியது.
2016-ம் ஆண்டளவில், ஊட்டச்சத்துப் பாதுகாப்பின் மீது கவனம் திரும்பியது. கடந்த பல பத்தாண்டுகளில், உணவு தானிய உற்பத்தியை விட பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்தியா பற்றாக்குறை என்னும் நிலையிலிருந்து போதுமான உற்பத்திக்கும், பல பயிர்களில் உபரி உற்பத்திக்கும் முன்னேறியுள்ளது. அரிசி உற்பத்தி தேவையை விட கிட்டத்தட்ட 20 சதவீதமும், கோதுமை 7 சதவீதமும், மக்காச்சோளம் 15 சதவீதமும் அதிகமாக உள்ளன. விவசாயிகள் வணிகப் பயிர்கள் மற்றும் மதிப்புக்கூட்டலை நோக்கி அதிகளவில் கவனம் செலுத்துகின்றனர். இது தன்னிறைவு விவசாயத்திலிருந்து ஒரு தொழிலாக விவசாயத்தை நோக்கிய தெளிவான மாற்றத்தைக் காட்டுகிறது.
விவசாயியை மையமாகக் கொண்டது
இருப்பினும், வேளாண் ஆராய்ச்சி குறித்த கருத்தாக்கம் இப்போது தேசத்தை மையமாகக் கொண்டிருப்பதிலிருந்து, உண்மையாகவே விவசாயியை மையமாகக் கொண்டதாக மாற வேண்டும். பசுமைப் புரட்சியின் போது, தேசிய உணவுப் பாதுகாப்பே முதன்மை நோக்கமாக இருந்தது. மேலும், அதன் பலன்கள் பெரும்பாலும் சில வட மாநிலங்களில் மட்டுமே குவிந்திருந்தன. இன்று, இந்திய வேளாண்மையின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் அகில பாரத அளவிலான ஆராய்ச்சி தேவைப்படுகிறது. உண்மையான விவசாயிகளை மையமாகக் கொண்ட ஆராய்ச்சிக்கு, மதிப்பை உருவாக்குபவர்களுக்கும் அதைப் பெறுபவர்களுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு அவசியமாகும்.
இதற்கு ஒரு சிறந்த உதாரணம் குண்டூர் நகரமாகும். அந்தநேரத்தில், நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் காய்கறிகளுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தலைவராகப் பணியாற்றியபோது, சீனா மற்றும் கொரியாவில் உள்ள முறைகளைப் போலவே, இயந்திரமயமாக்கலுக்காக ஒரே அறுவடை மிளகாய் இரகங்களை உருவாக்கும் ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. குண்டூரில் நடந்த ஒரு விவசாயிகள் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. அப்போது ஒரு சிறு விவசாயி எழுந்து நின்று, பயிர் சாகுபடிக் காலத்தில் இப்பகுதி அடிக்கடி புயல்களை எதிர்கொள்வதாக விளக்கினார்.
வானிலை பாதகமாக அமைந்தாலும், மூன்று பயிர்களைப் பயிரிடும் விவசாயிகளுக்கு அவற்றில் குறைந்தது ஒன்றிலிருந்தாவது நல்ல விளைச்சலைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். ஒரே ஒரு பயிரை மட்டும் பயிரிடுவது இடரை அதிகரிக்கிறது. இந்த எளிய நடவடிக்கை, தேவையற்ற ஆராய்ச்சிச் செலவுகளைத் தவிர்த்ததுடன், ஒரு முக்கியமான உண்மையையும் உணர்த்தியது: புதிய சிந்தனைகள் என்பவை தொழில்நுட்பத்தால் எதையெல்லாம் செய்ய முடியும் என்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், விவசாயிகளின் உண்மையான தேவைகளின் மீதே கவனம் செலுத்த வேண்டும்.
தொழில்நுட்ப இடையூறுகள்
தொழில்நுட்பம் வியக்கத்தக்க வேகத்தில் வளர்ந்து வருகிறது. நவீன தொழில்நுட்பங்கள் பண்புகளை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் வேளாண்மையில், இந்தப் பண்புகள் உயிரினப் பாகுபாடற்றவை. இதன் பொருள், அவற்றை வெவ்வேறு பயிர்களில் பயன்படுத்தலாம். மரபுசார் இனப்பெருக்கத்திலிருந்து மூலக்கூறு இனப்பெருக்கம், இப்போது முன்கணிப்பு அல்லது தரவு சார்ந்த இனப்பெருக்கம் என வேளாண் அறிவியல் வியத்தகு முறையில் உருமாறியுள்ளது. பாரம்பரிய இனப்பெருக்க முறையின் காரணமாகவே பசுமைப் புரட்சி நிகழ்ந்தது. பின்னர், மூலக்கூறு இனப்பெருக்கம் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை மேம்படுத்த உதவியது. இன்று, பல முன்னணி காய்கறிக் கலப்பினங்கள் மேம்பட்ட மரபணுவியல் நுட்பங்களிலிருந்து வருகின்றன. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மற்றும் மரபணு திருத்தம் போன்ற தொழில்நுட்பங்கள் நம்பிக்கையளிக்கின்றன. இருப்பினும், எந்தவொரு தொழில்நுட்பமும் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் செயல்படுவதில்லை. ஒவ்வொரு தொழில்நுட்பத்திற்கும் அதன் சொந்த பலங்கள் மற்றும் வரம்புகளும் உள்ளன. பருத்தியில், விவசாயிகள் மரபணு மாற்றப்பட்ட பண்புகளை ஏற்றுக்கொண்டனர். ஏனெனில், அந்தப் பண்புகள் அவர்களுக்கு மதிப்பைக் கொடுத்தன. மற்ற பயிர்களில், இதே போன்ற அணுகுமுறைகள் விவசாயிகளின் தேவைகளுடன் ஒத்துப்போகாதபோது தோல்வியடைந்தன. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் மாறாமல் உள்ளது. பண்புகள் வேளாண் மட்டத்தில் உறுதியான பலன்களை உருவாக்க வேண்டும்.
அறிவியல் அணுகுமுறை ஒரு பெரிய அளவில் மாறியுள்ளது. கடந்த காலத்தில், மரபுசார் பயிர் வளர்ப்பு, பயிர்களில் வேறுபாடுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது. பின்னர் விஞ்ஞானிகள் காலப்போக்கில் படிப்படியாகப் பயனுள்ள பண்புகளைத் தேர்ந்தெடுத்தனர். நவீன அறிவியல் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட பண்பை அடையாளம் கண்டு, பின்னர் அதைத் துல்லியமாக ஒருங்கிணைப்பதில் தொடங்குகிறது. இந்த மாற்றம் புதிய திறன்கள், மேம்பட்ட ஆய்வகங்கள் மற்றும் உள்கட்டமைப்பின் தொடர்ந்து மேம்படுத்தல் ஆகியவற்றைக் கோருகிறது. வசதிகள் மிக விரைவாகப் பழைமையாகிவிடக்கூடும். மேலும், ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். திறமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு, வேளாண் ஆராய்ச்சி மைய-கிளை மாதிரிகளைப் பின்பற்ற வேண்டும். இதில், மையப்படுத்தப்பட்ட உயர்தர உள்கட்டமைப்பு, பரவலாக்கப்பட்ட கள அளவிலான செயலாக்கத்திற்கு ஆதரவளிக்கிறது.
வேளாண்மையும் நிலையான வேளாண்மையில் அதிக கவனம் செலுத்துகிறது. இன்றைய விவசாயிகள் இரசாயன, மீளுருவாக்க, அங்கக விவசாயம் மற்றும் இயற்கை விவசாய அணுகுமுறைகள் உள்ளிட்ட பல்வேறு முறைகளைப் பின்பற்றுகிறார்கள். இவை அனைத்தும் வெவ்வேறு வழிகளில் பாதுகாப்பான மற்றும் நிலையான உணவு உற்பத்திக்கு பங்களிக்கின்றன. நாம் தாவரங்களுக்கு உணவளிப்பது மட்டுமல்லாமல், மண் சூழல் அமைப்பையும் வளர்க்கிறோம் என்பதை உணர்ந்து, மண் பரிசோதனை என்ற கருத்து மண் நலவாழ்வு என்ற பரந்த கருத்தாக வளர்ந்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான தேசிய முயற்சிகள், விவசாயம் விளைச்சலை மையமாகக் கொண்ட சிந்தனையிலிருந்து, உற்பத்தியை மட்டும் கருத்தில் கொள்ளாமல் ஒரு அலகு பரப்பிற்கான வருமானத்தை வலியுறுத்தும் நிலைத்தன்மை அடிப்படையிலான விவசாயத்திற்கு மாற்றியுள்ளன.
குழுப்பணி
வேளாண்மை ஆராய்ச்சி மிகவும் கூட்டுப்பணியாக மாறியுள்ளது. 1960ஆம் ஆண்டுகளில், தலைசிறந்த தனிப்பட்ட விஞ்ஞானிகள் இத்துறையை வடிவமைத்தனர். இன்று, புத்தாக்கம் என்பது குழுப்பணியைச் சார்ந்துள்ளது. ஒரு பயிர் வளர்ப்பாளர், மரபணுவியல், சிறந்த கண்டுபிடிப்பு, மரபுப்பொருள் மேலாண்மை, புறத்தோற்றவியல், தரவுப் பகுப்பாய்வு, விரைவுப் பயிர் வளர்ப்பு மற்றும் இரட்டை ஒருமடியத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் உள்ள வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். பயிர் வளர்ப்பாளர் இனி ஒரு தனி நபராக இல்லாமல், களத்திற்குத் தீர்வுகளை வழங்கும் ஒரு பன்முகத் துறைக் குழுவின் அங்கமாக இருக்கிறார்கள். நிறுவனங்கள், ஒருங்கிணைந்த தலைமையின் வழிகாட்டுதலுடன், திட்டப்பணி முறையில் பொதுவான இலக்குகளை நோக்கிச் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
வளர்ந்த இந்தியா (Viksit Bharat) திட்டத்தை எதிர்நோக்கிப் பார்க்கையில், எதிர்கால சவால்களை முன்கூட்டியே கணிக்கும் பரந்த தேசியக் கருப்பொருள்களை மையமாகக் கொண்டு வேளாண் ஆராய்ச்சி தன்னை மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக (ICAR) நிறுவனங்கள், மாநில வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த பரந்த அடிப்படையிலான கருப்பொருள்களில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். காலநிலை மாற்றம், grafting & shuttle breeding போன்ற புதுமைகளின் மூலம் வெப்பத்தைத் தாங்கும் இரகங்களையும் வலுவான வேர் அமைப்புகளையும் கோருகிறது. அழுத்த மேலாண்மையானது உயிரியல் மற்றும் உயிரற்ற அழுத்தங்கள் இரண்டையும் கருத்தில் கொள்ள வேண்டும். வள மேலாண்மைக்கு, சிறு வேளாண்மைகளுக்கு ஏற்ற இயந்திரமயமாக்கல், திறமையான நீர் மற்றும் ஊட்டச்சத்து பயன்பாடு, உயிரியல் உள்ளீடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் அறிவார்ந்த பயன்பாடு ஆகியவை தேவைப்படுகின்றன. விநியோகச் சங்கிலி மாற்றமானது, வேளாண் வாயிலில் மதிப்புக் கூட்டல், தர மேலாண்மை, ஏற்றுமதி தயார்நிலை மற்றும் சந்தை நுண்ணறிவு ஆகியவற்றைச் சாத்தியமாக்க வேண்டும். கடந்த கால விகிதங்களும் முடிவுகளும் தற்போதைய யதார்த்தங்களை வரையறுக்க முடியாது.
உலகளாவிய போட்டி இந்த அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. துருக்கி பல நாட்கள் எடுத்துக்கொண்டு ஐரோப்பா முழுவதும் காய்கறிகளைக் கொண்டு செல்கிறது. சீனா ஹைனான் தீவில் காய்கறிகளைப் பயிரிட்டு தொலைதூர நகரங்களுக்கு வழங்குகிறது. சூரிய ஒளிபடும் பசுமைக் குடில்கள், நெகிழிப் பந்தல்கள் மற்றும் காய்கறிகளில் ஒட்டுக்கட்டுதல் தொழில்நுட்பங்கள் ஆகியவை சீனாவில் சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நேரடியாக மேம்படுத்துகின்றன. இந்தியா, பெரிய வேளாண்மைகளுக்கு மட்டுமே பொருத்தமான மாதிரிகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, சிறு விவசாயிகளை வலுப்படுத்தி தனக்கென ஒரு தனிப் பாதையை வகுக்க வேண்டும்.
மைய ஆராய்ச்சி தொடர்பான தலைப்புகளை வரையறுப்பது, தேசிய நிதிநிலை அறிக்கைத் திட்ட செயல்முறையைப் போலவே கடுமையானதாகவும், கலந்தாலோசனை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். மாநில மற்றும் மத்திய அளவிலான கலந்தாய்வுகளில் விவசாயிகள், வேளாண் அறிவியல் மையங்கள், மாநில வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைகள், அரசு சாரா நிறுவனங்கள், மற்றும் பொது, தனியார் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியன பங்கேற்க வேண்டும். பிரச்சனைகள் தீவிரமடைவதற்கு முன்பே அவற்றை ஆராய்ச்சி முன்கூட்டியே கணிக்க வேண்டும். இதன்மூலம், சரியான நேரத்தில் தீர்வுகள் விவசாயிகளைச் சென்றடைவதை உறுதிசெய்ய முடியும்.
புதிய பணி முறைகள் செலவுத் திறன், மீள்திறன், சுறுசுறுப்பு மற்றும் விரைவான தொழில்நுட்ப ஏற்புத்திறன் ஆகியவற்றைக் கொண்டுவர முடியும். உள்கட்டமைப்பை சிறந்த மற்றும் திறமையான முறையில் பயன்படுத்த முடியும். இதன் விளைவாக, முடிவுகள் களத்தில் உள்ள விவசாயிகளை விரைவாகச் சென்றடையும். இறுதியில், தேசிய இலட்சியங்களுடன் இணைந்த, உண்மையான விவசாயிகளை மையமாகக் கொண்ட ஒரு ஆராய்ச்சி அமைப்பை உருவாக்குவதே இதன் இலக்காகும்.
இந்தியா 2047-ஐ நோக்கி முன்னேறிச் செல்லும் வேளையில், வேளாண்மை மீண்டும் ஒரு திருப்புமுனையில் உள்ளது. நிதியுதவியை விட, வியூகம், நோக்கத்தின் தெளிவு மற்றும் அசைக்க முடியாத உறுதி ஆகியவையே இந்தப் பயணத்தை வடிவமைக்கும். எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, வேளாண் ஆராய்ச்சி இந்தியாவின் உணவு எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவியது. வரும் பத்தாண்டுகளில், அது இந்தியாவின் செழிப்பைப் பாதுகாக்க உதவும்.
சதீஷ் ஹெக்டே கட்டுரையாளர் மற்றும் ஒர் ஓய்வுபெற்ற வேளாண் விஞ்ஞானி ஆவர்.
Original article : Reorienting farm research. -Satish Hegde