Showing posts with label DPDP act. Show all posts
Showing posts with label DPDP act. Show all posts

ஒரு நபரின் மரணத்திற்குப் பிறகு அவருடைய டிஜிட்டல் தரவுகள் யாருக்குச் சொந்தம்? -அமால் ஷேக்

டிஜிட்டல் சொத்துக்களின் புதிய எல்லையை நிர்வகிக்க, நீதிமன்றங்கள் வாரிசுரிமைச் சட்டங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. சமீபத்தில் ஒரு நீதிமன்றம், ஒருவரின் மனைவியும் மகளும் அவரது இணையத் தரவுகளை அணுக அனுமதித்ததற்கான காரணம் இதோ.


இந்த மாதத் தொடக்கத்தில், காந்திநகரில் உள்ள ஒரு உரிமையியல் நீதிமன்றம், iCloud கணக்கில் சேமிக்கப்பட்ட டிஜிட்டல் தரவுகளை 'சொத்து' என்றும், இறந்த ஒருவரின் சொத்துக்களின் ஒரு பகுதி என்றும் அங்கீகரித்தது.


இறந்தவரின் குடும்பத்தினரால், அவரது ஐபோனையும் அதனுடன் இணைக்கப்பட்ட iCloud கணக்கையும் அணுக இயலாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, இவ்வழக்கு  தொடரப்பட்டது. புகைப்படங்கள், காணொளிகள், ஆவணங்கள், குரல் குறிப்புகள் மற்றும் தொடர்புப் பட்டியல்கள் உள்ளிட்ட, தங்களுக்கு உணர்ச்சிபூர்வமான, மனரீதியான மற்றும் நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்த மதிப்புமிக்க தனிப்பட்ட தரவுகள் அதில்  இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

தனியுரிமை தொடர்பான சிக்கல்களைக் கையாளும் அதே வேளையில், டிஜிட்டல் சொத்துக்களின் புதிய எல்லையை நிர்வகிப்பதற்காக நீதிமன்றங்கள் வாரிசுரிமைச் சட்டங்களைப் பயன்படுத்தும் ஒரு பெரிய மாற்றத்தின் ஒரு பகுதியாக இதுபோன்ற வழக்குகள்  அதிகமாகி  வருகின்றன.


வழக்கு


அந்த நபரின் கைபேசியை அணுகுவதற்காக, அவரது குடும்பத்தினர் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டனர். 'டிஜிட்டல் மரபு' (Digital Legacy) குறித்த உட்பிரிவு ஒன்றைக் கொண்டுள்ள தனது சேவை விதிமுறைகளின்கீழ்,  ‘Cloud’ சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை மீட்டெடுக்கத் தங்களால் உதவ இயலும் என்று அந்நிறுவனம் அவர்களிடம் தெரிவித்தது.


ஆனால், இறந்தவரின் சார்பாகச் செயல்பட அதிகாரம் பெற்ற ஒரு சட்டப் பிரதிநிதியை, “குறிப்பிட்ட  நிபந்தனைகளைக் கொண்ட நீதிமன்ற உத்தரவு” ஒன்று முறையாக நியமித்தால் மட்டுமே இதை மேற்கொள்ள முடியும்.


இறந்தவரின் மனைவியும் மகளும், ஒருவர் உயில் ஏதும் எழுதாமல் இறக்கும்போது நீதிமன்றம் வழங்கும் ‘நிர்வாக உரிமைக் கடிதத்தை’ கோரி, 1925-ஆம் ஆண்டின் இந்திய வாரிசுரிமைச் (Indian Succession Act) சட்டத்தின்கீழ் நீதிமன்றத்தை அணுகினர். நீதிபதி ஹிமான்ஷு சௌத்ரி இந்த மனுவை ஏற்றுக்கொண்டு, மகளை அவரது சொத்துக்களின் நிர்வாகியாக நியமித்ததுடன், தரவுகளை மீட்டெடுப்பதில் தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமான அளவிற்கு உதவுமாறு ‘Apple’ நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.


சொத்தாகக் கருதப்படும் டிஜிட்டல் தகவல்


டிஜிட்டல் வாரிசுரிமையை நிர்வகிக்கும் ஒரு சிறப்புச் சட்டம் இல்லாவிட்டாலும், டிஜிட்டல் தரவைச் சொத்தாக அங்கீகரிக்கும் அளவுக்குச் சட்டம் போதுமான வரையறைகளைக் கொண்டுள்ளது என்று வாரிசுகள் வாதிட்டனர். நீதிமன்றம் அந்த வாதத்தில் நியாயம் இருப்பதாகக் கண்டறிந்து, இறந்தவரின் ‘Apple  Cloud’ கணக்கில் சேமிக்கப்பட்ட டிஜிட்டல் தரவு, இறந்தவரின் சொத்துக்களின் ஒரு பகுதியாக அமையும் ஒரு மதிப்புமிக்க டிஜிட்டல் சொத்தாகும் என்று கூறியது.

அதனை பெறுவதற்காக, ஏற்கனவே உள்ள சட்டங்கள் "அசையும் சொத்து" (Movable Property) என்பதை எவ்வாறு வரையறுக்கின்றன என்பதை அந்த குடும்பத்தினர் நம்பியிருந்தனர்.  மேலும், அந்தச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் தங்களையும் அதற்குள் சேர்த்துக் கொள்ள அனுமதிப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.


பொதுப் பிரிவுகள் சட்டம், அசையும் சொத்து என்பதை "அசையாச் சொத்து தவிர, அனைத்து வகையான சொத்துக்களும்" என வரையறுக்கிறது. இதேபோல், 2023-ஆம் ஆண்டின் பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita (BNS)) சட்டமும், அதே போன்று நிலம் மற்றும் அதனுடன் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ள பொருட்களைத் தவிர மற்ற அனைத்தையும் விலக்குகிறது. பணமோசடித் தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)) ஒரு படி மேலே சென்று, 'சொத்து'   என்பதன் வரையறைக்குள்  கண்ணுக்குப் புலப்படாத  சொத்துக்களையும் வரையறைக்குள் கொண்டுவருகிறது.


இந்தச் சட்டங்கள் எதுவும் 'iCloud' கணக்குகளை மனதில் வைத்து எழுதப்பட்டவை அல்ல; இருப்பினும், நீதிமன்றம் அவற்றின் வரையறைகள் இந்த iCloud கணக்குகளையும் உள்ளடக்கும் அளவுக்குப் பரந்ததாக இருப்பதைக் கண்டறிந்தது. மேலும், வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Act) பிரிவு 2-47A -ன்கீழ் கிரிப்டோகரன்சிகள் (Cryptocurrencies) மற்றும் விற்பனை செய்ய முடியாத பிரத்யேக டிஜிட்டல் சொத்துக்கள் (Non-Fungible Tokens (NFT)) போன்றவற்றை 'மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளாக' (Virtual Digital Assets) ஏற்கனவே வரி விதிப்புக்கு உட்படுத்துவதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதன் மூலம், பாதுகாப்பிற்குரிய ஒரு 'சொத்தாக' டிஜிட்டல் பொருட்களைச் சட்டம் அமைதியாக அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளது என்று நீதிமன்றம் விளக்கம் அளித்தது.


இந்த விதிகள், சொத்துரிமையின் கருத்தியல் எல்லைக்குள் டிஜிட்டல் தரவை உள்ளடக்கும் அளவுக்குப் போதுமானவை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.





தனியுரிமைக் கோணம்


டிஜிட்டல் வாரிசுரிமையில் மற்றொரு பக்கமும் உள்ளது. இணைய கணக்குகளில் பெரும்பாலும் தனிப்பட்ட உரையாடல்கள், அந்தரங்கக் குறிப்புகள் மற்றும் ஒரு நபர் தனது குடும்பத்தினருடன் கூட பகிர்ந்து கொள்ள விரும்பாத அவரது வாழ்க்கையின் சில பகுதிகள் இருக்கலாம். எனவே, இத்தகைய கணக்குகளை பாரம்பரியமாக வரும் சொத்தாகக் கருதுவது, ஒரு நபரின் மரணத்திற்குப் பிறகான அவரது அந்தரங்க உரிமை மற்றும் கண்ணியத்துடன் முரண்படலாம்.


எனவே, இங்குள்ள பிரச்சினை, டிஜிட்டல் சொத்துக்களை யார் வாரிசாகப் பெறுகிறார்கள் என்பது மட்டுமல்ல. மாறாக, இறந்த  ஒருவரின் தனிப்பட்ட டிஜிட்டல் வாழ்வை அணுகும் உரிமை எந்த அளவிற்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். தனியுரிமை என்பது ஒரு அடிப்படை உரிமைதான் என்றபோதிலும், "அது ஒரு தனிநபருடனேயே பிறந்து, அந்தத் தனிநபருடனேயே முடிவுக்கு வரும், இயல்பாகவே தனிப்பட்ட தன்மையைக் கொண்ட ஒரு உரிமையாகும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


ஒரு நபரின் தனிப்பட்ட உரிமை அல்லது சட்ட நடவடிக்கை அந்த நபருடனேயே இறந்துவிடுகிறது (Actio personalis moritur cum persona) என்ற சட்டக் கோட்பாட்டைப் பயன்படுத்தி, மரணமடைந்த நபரின் அந்தரங்க உரிமை தொடர்பாக எந்தவொரு கோரிக்கையையும் தொடர முடியாது என்றும், அவரது டிஜிட்டல் சொத்துக்களை நிர்வகிப்பதில் இருந்து சட்டபூர்வமான வாரிசுகளைத் தடுக்க முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


2023-ஆம் ஆண்டின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் (Digital Personal Data Protection Act) ஒருவர் இறந்த பிறகு அவரது தரவு உரிமைகளைப் பயன்படுத்த ஒருவரை நியமிக்க (nominate) வழிவகை செய்கிறது. ஆனால், அவ்வாறு எந்த ஒரு நபரும்  நியமிக்கப்படாவிட்டால் என்ன செய்வது என்பது பற்றி சட்டம் எதையும் குறிப்பிடவில்லை. அந்த சட்ட இடைவெளியில், இந்த உரிமைகள் சட்டப்பூர்வ வாரிசுகளுக்குச் செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, அந்த கைபேசி சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளைத் தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமான அளவிற்கு மீட்டெடுக்க வாரிசுகளுக்கு உதவுமாறு ‘Apple’ நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


டிஜிட்டல் சொத்துக்கள் மீதான சட்டக் கோட்பாடு


கடந்த ஆண்டு, ரிதிகுமாரி vs  ஜான்மாய் லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் (Rhutikumari v. Zanmai Labs Pvt. Ltd.) வழக்கில், கிரிப்டோகரன்சி என்பது உடைமை மற்றும் நன்மை அளிக்கும் வகையில் அனுபவிக்கக்கூடிய ஒரு சொத்து என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


230 மில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்திய இணையவழித் தாக்குதலைத் தொடர்ந்து, WazirX தளத்தில் இருந்த கிரிப்டோ கையிருப்புகள் முடக்கப்பட்ட பிறகு அந்த வழக்கு தொடரப்பட்டது. முக்கியமான உரிமைகள் விரிவாக சொத்துகளை வரையறுக்கும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளை நீதிபதி  ஆய்வு செய்தார். உதாரணமாக, அஹமது ஜி.எச். ஆரிஃப் vs  CWT (1969) (GH Ariff v CWT (1969)) என்ற வழக்கில் நீதிமன்றம், ஒரு நபர் தெளிவாக வைத்திருக்கும் அல்லது அனுபவிக்கக்கூடிய எல்லா சாத்தியமான நிபந்தனைங்களையும் மற்றும் ஜிலுபாய் நன்பாய் கச்சார் vs  குஜராத் மாநிலம் (1995) (Jilubhai Nanbhai Khachar v State of Gujarat (1995)) வழக்கில் கூறியபடி, சட்டத்தால் உத்தரவிடபடும் மற்றும் பாதுகாக்கப்பட கூடிய உரிமைகளின் தொகுப்பாக... பரிமாற்றமுடைய மதிப்பு கொண்டுள்ளவையோ அல்லது செல்வம், சொத்து அல்லது மரியாதையை உருவாக்குகின்றவையோ அனைத்தும்" சொத்துதான் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.


அந்த வாதத்தைப் பயன்படுத்திய மதராஸ் உயர்நீதிமன்றம், “பயனர் செய்யும் முதலீடு கிரிப்டோகரன்சியாக (Crypto currency) மாற்றப்படுகிறது. இதனைச் சேமித்து வைக்கவோ, வர்த்தகம் செய்யவோ மற்றும் விற்கவோ முடியும். கிரிப்டோகரன்சி என்பது ஒரு மெய்நிகர் டிஜிட்டல் சொத்தாகக் (Virtual Digital Asset (VDA)) கருதப்படுகிறது. மேலும், இது 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு-2(47A)-ன்கீழ் நிர்வகிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டது.



காந்திநகர் வழக்கு மிகவும் சாதாரணமானது. ஏனெனில், அது ஒவ்வொரு நாளும் உருவாக்கப்பட்டு சாதனங்களில் சேமிக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள், கிளவுட் காப்புப்பிரதிகள் (Cloud backups) மற்றும் தரவுகள் சம்பந்தப்பட்டது. டிஜிட்டல் சொத்துக்கள் என்ற  வரையறையின்கீழ் நிதி சார்ந்த கருவிகளிலிருந்து தனிப்பட்ட தரவுகளுக்கு மாறும் இந்த மாற்றம் முக்கியத்துவம்  பெற்றது.  ஏனெனில், அதிகரித்து வரும் டிஜிட்டல் சார்பு நிலைக்கு ஏற்ப இந்தியாவின் சட்டங்கள் மேம்படுத்தப்படவில்லை.


தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 (IT Act, 2000) என்பது  இணைய குற்றங்கள் மற்றும் அங்கீகாரமற்ற அணுகல்களை மட்டுமே கையாள்கிறது, ஆனால் டிஜிட்டல் கணக்குகள் மீதான வாரிசுரிமையை உருவாக்கவில்லை. இந்திய வாரிசுரிமைச் சட்டம் (Indian Succession Act) என்பது இணையம் உருவாவதற்கு முன்பே இயற்றப்பட்ட ஒன்றாகும். டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் (DPDP Act) ஒரு நபர் இறந்த பிறகு அவரது தரவு உரிமைகளைப் பயன்படுத்த மற்றொருவரை நியமிக்கும் யோசனையை அறிமுகப்படுத்தினாலும், அது டிஜிட்டல் வாரிசுரிமையை முழுமையாக முறைப்படுத்தவில்லை.


ஜெர்மனி வழக்கு


காந்திநகர் நீதிமன்றத்தின் முன் வந்துள்ள இந்தச் சட்டப்பூர்வமான கேள்வி, இதற்கு முன்பு ஜெர்மனியின் மிக உயர்ந்த நீதிமன்றத்தாலும்விசாரிக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டில், பெர்லினில் இரயில் மோதியதில் 15 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வதற்காகவும், இந்தச் சம்பவம் தொடர்பாக எழுந்த சட்டப்பூர்வமான கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதற்காகவும், அவரது பெற்றோர் மகளின் முகநூல் கணக்கை அணுக அனுமதி கோரினர். ஆனால், ‘Facebook’ நிறுவனம் பயனரின் தனிப்பட்ட ரகசியம் மற்றும் பாதுகாப்பைக் காரணம் காட்டி அனுமதி மறுத்தது.


இந்த வழக்கு இறுதியாக ஜெர்மன் கூட்டாட்சி உச்சநீதிமன்றத்தை (German Federal Court of Justice) எட்டியது. அந்த நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியது. அதன்படி, ஒரு நபர் இறந்த பிறகு அவரது தனிப்பட்ட நாட்குறிப்புகள் அல்லது தனிப்பட்ட கடிதங்கள் எவ்வாறு அவரது வாரிசுகளுக்குச் சொந்தமாகிறதோ, அதே உலகளாவிய வாரிசுரிமைக் கொள்கையின்கீழ் (Universal succession), இறந்த பயனரின் முகநூல் கணக்கு ஒப்பந்தமும் அவரது வாரிசுகளுக்கே சேரும் என்று தீர்ப்பளித்தது. வாரிசுகள் சட்டப்பூர்வமாக இறந்த நபரின் இடத்திற்கு வந்துவிடுவதால், அவர்கள் ரகசியத்தன்மை பாதுகாப்புச் சட்டங்களால் தடுக்கப்படும் "மூன்றாம் தரப்பினர்" அல்ல என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், உலகிலேயே மிகக் கடுமையான டிஜிட்டல் தனியுரிமைச் சட்டங்களில் ஒன்றான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (General Data Protection Regulation (GDPR)), இறந்த நபர்களுக்குப் பொருந்தாது என்பதால், ஐரோப்பிய ஒன்றியத் தரவுப் பாதுகாப்புச் சட்டம் இத்தகைய அனுமதியைத் தடுக்கவில்லை என்றும் நீதிமன்றம் கண்டறிந்தது.


இதன் விளைவாக, பெற்றோரிடம் அந்த முகநூல் கணக்கின் முழுமையான அணுகலை வழங்குமாறு ‘Facebook’ நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. பின்னர் வழங்கப்பட்ட மற்றொரு தீர்ப்பில், வாரிசுகள் அந்தக் கணக்கை அணுகி அதிலுள்ள விவரங்களைப் படிக்கலாமே தவிர, இறந்த நபர் உயிரோடு இருப்பது போல அதை அவர்களாகத் தொடர்ந்து இயக்கக் கூடாது என்று தெளிவுபடுத்தப்பட்டது.


Original Link: Who owns a person’s digital data after their death?


Share:

தகவல் தொழில்நுட்ப விதிகள் குறித்த வரைவுத் திருத்தங்கள் ஆரோக்கியமான போட்டிக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. -மேக்னா பால் மற்றும் அவ்னீத் ஓபராய்

 டிஜிட்டல் உலகம் தற்போது ஒரு இக்கட்டான நிலையில் உள்ளது: அதன் பரந்த தாக்கங்களைக் கருத்தில் கொள்ளாமல், அடிக்கடி மாற்றப்படும் விதிமுறைகளைக் கொண்டு மட்டும் இதை நிர்வகித்துவிட முடியாது என்கின்றனர். எனவே, முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள், டிஜிட்டல் நிர்வாகத்தின் சிக்கலான தன்மைகளை மிகவும் அவசரமாகவும், அதே சமயம் தீவிரமாகவும் ஆராய்ந்து தீர்வு காண வேண்டும்.


மார்ச் மாதம் 30-ஆம் தேதி அன்று, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology (MeitY)) தகவல் தொழில்நுட்ப விதிகளில் (Information Technology Rules) புதிய வரைவுத் திருத்தங்களை வெளியிட்டது. இதன் மூலம், டிஜிட்டல் இடைநிலை தளங்கள் (digital intermediary platforms) அவ்வப்போது அமைச்சகம் வெளியிடும் விளக்கங்கள் அல்லது ஆலோசனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, புதிய தொழில்நுட்பங்களால் பெரிய பாதிப்புகள் ஏற்படும் காலங்களில் இந்த 'ஆலோசனைகள்' ஒரு புதிய நிர்வாகக் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றன. 


உதாரணமாக, 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் ‘Deepfakes’ மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) தொடர்பான சிக்கல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இத்தகைய ஆலோசனைகள் பெரும்பாலும் ஒரு பிரச்சனை நடந்த பிறகு அதற்கு எதிர்வினையாக உருவாக்கப்படுவதால், அவை முறையான ஒழுங்குமுறைக்குப் பதிலாக விரைவான அமலாக்கத்திலேயே கவனம் செலுத்துகின்றன. உதாரணமாக, மார்ச் மாதம் 2024-ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஆலோசனை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு உரிம முறையைப் (Licensing system) பரிந்துரைத்தது; இது நாட்டின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சியையே முடக்கும் அபாயத்தைக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.


சட்டப்பூர்வமான விதிகள் மற்றும் சட்டங்களைப் போலன்றி, ஆலோசனைக் குறிப்புகள் பொதுவாக முன்கூட்டியே கலந்தாலோசித்தல், தெளிவான வரையறை மற்றும் குறிப்பிட்ட காலக்கெடு போன்ற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதில்லை. இதனால் இவற்றை மிக விரைவாக வெளியிட முடிகிறது. வேகமாக மாறிவரும் டிஜிட்டல் சூழலில் இத்தகைய கருவிகள் பயனுள்ளதாகத் தெரிந்தாலும், அவை வணிக நிறுவனங்களுக்கு ஒருவித நிச்சயமற்ற நிலையை உருவாக்குகின்றன. இதன் காரணமாக, நிறுவனங்கள் வரவிருக்கும் ஒழுங்குமுறை மாற்றங்களைக் கணிப்பதிலும், இணக்கத் தேவைகளைப் புரிந்து கொள்வதிலும், முதலீடுகளைத் திட்டமிடுவதிலும் சிக்கல்களைச் சந்திக்கின்றன. ஒட்டுமொத்தமாக, நிர்வாகத்திற்கு இது போன்ற ஆலோசனைக் குறிப்புகளை மட்டுமே நம்பியிருப்பது ஒழுங்குமுறை ரீதியான குழப்பங்களுக்கு வழிவகுப்பதோடு, கடுமையான பொருளாதார சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.


பொருளாதார ஆய்வுகளின்படி, இணையதள விதிமுறைகளில் நிலவும் தெளிவற்ற தன்மை, செயல்பாட்டுத் திறனைக் குறைப்பதோடு பணப்பரிமாற்றச் செலவுகளையும் அதிகரித்து ஒருவிதத் தடையை உருவாக்குகிறது. இந்தத் தாக்கம் டிஜிட்டல் சந்தையோடு மட்டும் நின்றுவிடாமல், அதோடு நெருங்கிய தொடர்புடைய  உலகப் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏனெனில், உலகளாவிய பல வணிகங்கள் இன்று தங்கள் பொருட்களை இணையதளம் வாயிலாகவே விற்பனை செய்கின்றன.


 ‘Boston Consulting Group’ நிறுவனத்தின் 2023-ஆம் ஆண்டு அறிக்கைப்படி, சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமான டிஜிட்டல் படைப்பாளிகள் (Digital creators), ஆண்டுதோறும் 350 முதல் 400 பில்லியன் டாலர் மதிப்பிலான வீட்டு உபயோகச் செலவுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இது 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலரை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


 மேலும், ‘Esya Centre’ நடத்திய ஆய்வின்படி, இந்தியாவின் பெரும்பாலான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSMEs), உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் வருவாயைப் பெருக்கவும் நிர்ணயிக்கப்பட்ட டிஜிட்டல் விளம்பரங்களையே (Targeted digital advertising) பெரிதும் நம்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


தகவல் தொழில்நுட்ப விதிகளில் (Information Technology Rules (IT Rules)) கொண்டுவரப்பட உள்ள வரைவுத் திருத்தங்கள், இணைய நிர்வாகத்தில் ஒரு தற்காலிகமான மற்றும் நிச்சயமற்ற முறையை அறிமுகப்படுத்துகின்றன. மேலும், இவற்றின் பரந்த பொருளாதாரத் தாக்கம் குறித்து முழுமையாக ஆலோசிக்கப்படவில்லை என்பதையே இது உணர்த்துகிறது. டிஜிட்டல் மற்றும் நேரடிப் பொருளாதாரத்திற்கு இடையே உள்ள தொடர்பைப் புறக்கணிப்பது, டிஜிட்டல் சந்தைகளையும் தாண்டி ஒழுங்குமுறைப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைச் சான்றுகள் காட்டுகின்றன. ‘Esya Centre’ ஆய்வின்படி, தரவு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பாரம்பரியத் துறைகள் ஆகிய இரண்டிலுமே கணக்கெடுக்கப்பட்ட 85% நிறுவனங்கள், டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023 (Digital Personal Data Protection Act, 2023 (DPDP Act)) ஆகியவற்றில் உள்ள இடைவெளிகளால் ஏற்படும் இணக்கச் செலவுகள் தங்கள் வருவாயைப் பெருமளவில் பாதிக்கும் என்றும் தெரிவிக்கின்றன. மற்றொரு ஆய்வு, குழந்தைகளை இலக்காகக் கொண்ட விளம்பரங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், பொம்மைகள் மற்றும் பொழுதுபோக்குத் தயாரிப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்குப் பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும்  என்றும் கண்டறிந்துள்ளது.


தகவல் தொழில்நுட்ப வரைவு விதிகளின் திருத்தங்களில் முன்மொழியப்பட்டுள்ள நிர்வாக முறை, வெறும் ஆலோசனைகள் வழங்குவது போல் காட்டப்பட்டாலும், நடைமுறையில் அது நேரடி உத்தரவு பிறப்பிக்கும் ஆட்சியைப் போலவே செயல்படக்கூடும் என்கின்றனர். இம்முறையில், குறிப்பிட்ட சம்பவங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, எந்தவொரு முன் அறிவிப்புமின்றி மிக விரைவாக ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இத்தகைய நிச்சயமற்ற சூழல், சந்தை நிலவரங்களைக் கண்டறியவும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் டிஜிட்டல் தளங்களைச் சார்ந்திருக்கும் வணிகங்களுக்குப் பெரும் சிக்கல்களை உருவாக்கும் என்கின்றனர். மேலும், பரிவர்த்தனைச் செலவுகள் அதிகரிப்பது இணையவழி சந்தைப்படுத்தல் செலவையும் உயர்த்தும் என்றும் கூறப்படுகிறது. காலப்போக்கில், இது முதலீட்டையும் உற்பத்தியையும் குறைப்பதோடு, ஒழுங்குமுறை சார்ந்த இடர்பாடுகளைத் துல்லியமாகக் கணிக்க முடியாத சிறு நிறுவனங்கள், சந்தையை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.


பரந்த அளவிலான தாக்கங்களைக் கருத்தில் கொள்ளாமல், அடிக்கடி மாற்றப்படும் விதிமுறைகளால் டிஜிட்டல் உலகத்தை ஒருபோதும் திறம்பட நிர்வகிக்க முடியாது. டிஜிட்டல் சந்தைகளின் தொழில்நுட்பத் தன்மை, அதன் வேகமான மாற்றம் மற்றும் அவை சாதாரண சந்தைகளுடன் கொண்டுள்ள தொடர்பு போன்ற டிஜிட்டல் நிர்வாகத்தின் சிக்கல்களை முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த காரணிகளைப் புறக்கணிப்பது நாட்டின் வளர்ச்சியைப் பாதிப்பதோடு, ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மையை ஒட்டுமொத்த பொருளாதாரச் சிக்கலாக மாற்றக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். 


மேக்னா பால் என்பவர் இயக்குநராகவும், ஓபராய் என்பவர் புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட ‘Esya Centre’ என்ற சிந்தனைக் குழுவில் ஆராய்ச்சி உதவியாளராகவும் பணியாற்றுகின்றனர்.


Original article : Draft amendments to IT Rules threaten healthy competition. -Meghna Bal and Avneet Oberoi

Share:

இந்தியா குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டை எவ்வாறு ஒழுங்குபடுத்த முயற்சிக்கிறது? இடைவெளிகள் ஏன் தொடர்கின்றன? -சௌம்யரேந்திர பாரிக்

இந்தியாவில், குழந்தைகள் இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்காக பல்வேறு சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் சமூக ஊடகத் தளங்களின் நடவடிக்கைகள் உள்ளன. ஆனால், இந்த விதிகள் சரியாக செயல்படுத்தப்படாதது மற்றும் குழந்தைகள் தங்களின் வயதை எளிதாக தவறாக பதிவு செய்ய முடிவது போன்ற காரணங்களால் இன்னும் சவால்கள் தொடர்கின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.


குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்தும் — தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களுக்கு ஆளாகுதல், இணையவழித் தூண்டுதல்கள் மற்றும் இணையக் குற்றங்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய ஆபத்துகள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களைப் பாதுகாப்பதற்காக இந்தியா பல்வேறு சட்டங்கள், ஒழுங்குமுறை கட்டமைப்புகள் மற்றும் சமூக ஊடகத் தளங்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றை பயன்படுத்தி குழந்தைகளை பாதுகாக்க முயற்சித்து வருகிறது.


ஆனால், அமலாக்க மற்றும் தொழில்நுட்ப இடைவெளிகள் மற்றும் குழந்தைகள் தங்கள் வயதை வயதை எளிதாக தவறாக பதிவு செய்வது போன்றவை இந்த பாதுகாப்புகளின் செயல்திறனுக்கு தொடர்ந்து சவால்களை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.


இதற்கிடையில், இந்த தளங்களுக்கான குழந்தைகளின் அணுகலை ஒழுங்குபடுத்துவதற்கான தரப்படுத்தப்பட்ட அணுகுமுறையை  ஒன்றிய  அரசு பரிசீலித்து வருவதாக அறியப்படுகிறது.


தற்போது, குழந்தைகளை இணையத்தில் பாதுகாப்பதற்காக இந்தியா பல நிலைகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குழந்தைகளின் தரவைச் செயலாக்குவதற்கு பெற்றோரின் ஒப்புதலை கட்டாயமாக்கும் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம், 2023 (Digital Personal Data Protection Act, 2023) தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (Protection of Children from Sexual Offences (POCSO)) சட்டம் போன்ற சட்டங்களின்கீழ் குற்றவியல் விதிகள், அத்துடன் வயது வரம்பு, பெற்றோர் கட்டுப்பாடுகள் மற்றும் குழந்தைகளை மையமாகக் கொண்ட உள்ளடக்க சுற்றுச்சூழல் அமைப்புகள் போன்ற தள அளவிலான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


இணையதளத்தில் குழந்தைகளுக்கான ஆபத்துகள்


இணையதளத்தில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், அவர்களின் மனநலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய தீங்கான உள்ளடக்கங்களை சந்திக்கும் அபாயம் உள்ளது. இதனால் கவலை (anxiety) மற்றும் தனிமைப்படுதல் (alienation) போன்ற பிரச்சினைகள் உருவாகலாம். இணையதளத்தில் குழந்தைகள் தவறான நோக்கங்களுக்காகப் பழக்குவது ஒரு ஆபத்தை ஏற்படுத்தும்.

தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (National Crime Records Bureau (NCRB)) தரவுகள், இளம் பயனர்களிடையே இணைய பயன்பாடு தொடர்ந்து விரிவடைந்து வரும் நிலையில், 2021 மற்றும் 2022-க்கு இடையில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றம் 32% அதிகரித்துள்ளதாகக் காட்டுகிறது.


கடந்த ஆண்டு நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கை, 2023-ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் சராசரியாக 1.5 மணிநேரம் இணையதளத்தில் கல்வி வீடியோக்கள் மற்றும் விளையாட்டுகளை பார்த்ததாக கூறியுள்ளது. 6 முதல் 10 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள், விளையாட்டு மற்றும் வீடியோக்கள் போன்ற சேவைகளைப் பயன்படுத்தி 2.5 மணிநேரம் இணையதளத்தில் செலவிட்டனர். 11-15 வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் இணையதளத்தில்  செலவிட்டாலும், 16-18 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள், இணையதளத்தில் மன்றங்கள் மற்றும் வணிகத்தில் தினமும் ஆறு மணிநேரம் வரை செலவிட்டனர்.


இணையதளத்தில் செயல்படும் குழந்தைகளுக்கான இந்தியாவின் ஒழுங்குமுறை கட்டமைப்பு


இந்தியா ஒழுங்குமுறை நடவடிக்கைகள், சுய ஒழுங்குமுறை குறியீடுகள் மற்றும் கல்வி முயற்சிகளின் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இருப்பினும் விமர்சகர்கள் அமலாக்கம் தளர்வாக இருக்கலாம் என்று வாதிடுகின்றனர்.


டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம், 2023-ன் கீழ், 18 குழந்தைகளின் தரவை சேகரிக்கும் நிறுவனங்கள், அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அனுமதியை பெறவேண்டும். மேலும் குழந்தைகளின் நடத்தைப் பற்றிய கண்காணிப்பு அல்லது அவர்களுக்கு குறிவைத்த விளம்பரங்களை வழங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், பலர் குழந்தைகள் தங்களது வயதை தவறாகக் குறிப்பிடுவதன் மூலம் இந்த கட்டுப்பாடுகளை எளிதில் தவிர்க்கலாம் என்று நம்பப்படுகிறது.


நவம்பர் 2025-ல் இந்திய ஆளுகை மற்றும் கொள்கைத் திட்டம் என்ற சிந்தனைக் குழு தயாரித்த அறிக்கையின்படி, 2000-ஆம் ஆண்டு  தகவல் தொழில்நுட்பச் சட்டம், குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான பொருட்களை உருவாக்குவதை குற்றமாக்கும் விதிகளைக் கொண்டுள்ளது. தொழில்நுட்பச் சட்டம் மற்றும் 2012-ஆம் ஆண்டு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (Protection of Children from Sexual Offences (POCSO)) சட்டம் இணையதளத்தில் பாலியல் சுரண்டல் மற்றும் சீர்ப்படுத்தலை வகைப்படுத்தி தண்டனை பெற்று தருகிறது. பாரதிய நியாய சன்ஹிதா, 2023, குழந்தைகளுக்கு எதிரான டிஜிட்டல் குற்றங்கள், மனிதக் கடத்தல் மற்றும் தொல்லை போன்றவற்றுக்கும் பொறுப்பை விரிவுபடுத்துகிறது. சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015, குழந்தைகள் சுரண்டலுக்கான எதிராக இணையதளத்தில் உதவிகளை வழங்குகிறது. 


இருப்பினும், டிஜிட்டல் ஃபொரென்சிக் திறன் குறைவு, சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கான பயிற்சி குறைவு, மற்றும் சிறப்பு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டம் நீதிமன்றங்களின் நடைமுறையில் உள்ள ஒற்றுமையின்மை போன்ற காரணங்கள் குற்றங்களை சரியாக விசாரித்து தண்டனை வழங்குவதில் தடையாக உள்ளன என்று அறிக்கை குறிப்பிட்டது.


தகவல் தொழில்நுட்பம் (இடைத்தரகர் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைக் குறியீடு) விதிகள், 2021-ன் கீழ், Netflix, Disney+ Hotstar, Apple TV போன்ற தளங்கள் தாங்கள் வழங்கும் உள்ளடக்கத்தை வயது அடிப்படையில் ஐந்து வகைகளாகப் பிரிக்க வேண்டும். U சான்றிதழ் அனைவருக்கும் ஏற்றது என்றும், U/A 7+, U/A 13+, U/A 16+ மற்றும் A  சான்றிதழ் பெரியவர்களுக்கு மட்டும் ஏற்றது என்றும் U/A 13+ அல்லது அதற்கு மேற்பட்ட வகையின் கீழ் வகைப்படுத்தப்பட்ட உள்ளடக்கத்திற்குப் 'பெற்றோர் கட்டுப்பாடுகளையும்' (parental locks), 'A' என வகைப்படுத்தப்பட்ட உள்ளடக்கத்திற்கு நம்பகமான வயது சரிபார்ப்பு வழிமுறைகளையும் இத்தளங்கள் கட்டாயமாகச் செயல்படுத்த வேண்டும்.

கல்வி அமைச்சகம் (MoE), ஜூலை 14, 2020 அன்று PRAGYATA வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியது. இது மாணவர்களின் பாதுகாப்பையும் கல்வி நலனையும் உறுதிப்படுத்தும் வகையில், வயதிற்கு ஏற்ப திரை நேரம் (screen time) வரம்புகளை பரிந்துரைக்கிறது.


சில சமூக ஊடகத் தளங்கள் ஏற்கனவே வயது வரம்புகளைக் கொண்டுள்ளன


இந்தியாவில், எந்தவொரு Google கணக்கை உருவாக்கி நிர்வகிக்கும் குறைந்தபட்ச வயது 13 ஆகும். எடுத்துக்காட்டாக, மின்னஞ்சலில், பெற்றோர்கள் 13 வயதுக்குட்பட்ட தங்கள் குழந்தைக்கு 'Family Link' மூலம் ஒரு கணக்கை உருவாக்கலாம். இது Chrome, Play, YouTube மற்றும் Search போன்ற Google சேவைகளில் பெற்றோர் கட்டுப்பாடுகளை அமைக்க அனுமதிக்கும் ஒரு கருவியாகும். Family Link பெற்றோரை பொருத்தமற்ற தளங்களைத் தடுக்கலாம், புதிய செயலிகளை (apps) பதிவிறக்கம் செய்ய பெற்றோர் அனுமதி அவசியமாக்கலாம், பல்வேறு அனுமதிகளை (permissions) நிர்வகிக்கலாம். குழந்தை 13 வயதை அடைந்தபோது, கணக்கை “புதுப்பிப்பு” செய்யுமாறு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். அதன் பிறகு, பயனர் தங்களது கணக்கை தாமாகவே நிர்வகிக்க முடியும். இருப்பினும், பெற்றோர் கண்காணிப்பு (supervision) நிறுத்தப்பட்டால் அதற்கான அறிவிப்பு பெற்றோருக்கு தொடர்ந்து செல்லும்.


Meta நிறுவனத்திற்குச் சொந்தமான Instagram என்ற சமூக ஊடக செயலியில், இளம் வயதினர் அதிகமாகப் பயன்படுத்துவதால் “இளம்பருவக் கணக்குகள்” என்ற பாதுகாப்பு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்புகளுக்காக இந்த அம்சம் அனைத்து இளம் வயதினர்களின் கணக்குகளையும் தானாகவே வகைப்படுத்துகிறது. மேலும், 16 வயதுக்குட்பட்ட பயனர்கள் எந்தவொரு உள்ளடக்க அமைப்புகளையும் குறைவான கண்டிப்பானதாக மாற்ற பெற்றோரின் அனுமதி தேவைப்படும்.


தொழில்நுட்ப நிறுவனங்கள் குழந்தைகளுக்காக தனிப்பட்ட தளங்களையும் உருவாக்கியுள்ளன. உதாரணமாக YouTube Kids, இது YouTube-ன் ஒரு தனிப்பட்ட பதிப்பாகும். இதில் குழந்தைகள் “பாதுகாப்பான சூழலில்” (contained environment) உள்ளடக்கங்களை பார்க்க முடியும். மேலும் பெற்றோர் தங்கள் குழந்தையின் வயதைத் தேர்வு செய்து, அவர்களுக்கு காட்டப்படும் உள்ளடக்கத்தின் வகையை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.


எனினும், இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக நம்பகமானவை அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு, United States Congress முன்பு Meta நிறுவனத்திற்கு எதிராக சாட்சியம் அளித்த ஒரு முன்னாள் மூத்த பொறியாளர் தலைமையில் நடைபெற்ற ஆய்வில், Instagram குழந்தைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்டதாக விளம்பரப்படுத்தப்பட்ட புதிய பாதுகாப்பு கருவிகளில் இரண்டு-மூன்றாம் பங்கு (64%) பயனற்றதாக இருந்தது என்று கண்டறியப்பட்டது. இதற்குப் பதிலளித்த Meta நிறுவனங்கள், அந்த அறிக்கை தங்களின் முயற்சிகளை “தவறாக விளக்கியுள்ளது” என்று தெரிவித்தது.


Original Link: How India is trying to regulate children’s social media use — and why gaps remain.


Share: