ஒரு நபரின் மரணத்திற்குப் பிறகு அவருடைய டிஜிட்டல் தரவுகள் யாருக்குச் சொந்தம்? -அமால் ஷேக்

டிஜிட்டல் சொத்துக்களின் புதிய எல்லையை நிர்வகிக்க, நீதிமன்றங்கள் வாரிசுரிமைச் சட்டங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. சமீபத்தில் ஒரு நீதிமன்றம், ஒருவரின் மனைவியும் மகளும் அவரது இணையத் தரவுகளை அணுக அனுமதித்ததற்கான காரணம் இதோ.


இந்த மாதத் தொடக்கத்தில், காந்திநகரில் உள்ள ஒரு உரிமையியல் நீதிமன்றம், iCloud கணக்கில் சேமிக்கப்பட்ட டிஜிட்டல் தரவுகளை 'சொத்து' என்றும், இறந்த ஒருவரின் சொத்துக்களின் ஒரு பகுதி என்றும் அங்கீகரித்தது.


இறந்தவரின் குடும்பத்தினரால், அவரது ஐபோனையும் அதனுடன் இணைக்கப்பட்ட iCloud கணக்கையும் அணுக இயலாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, இவ்வழக்கு  தொடரப்பட்டது. புகைப்படங்கள், காணொளிகள், ஆவணங்கள், குரல் குறிப்புகள் மற்றும் தொடர்புப் பட்டியல்கள் உள்ளிட்ட, தங்களுக்கு உணர்ச்சிபூர்வமான, மனரீதியான மற்றும் நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்த மதிப்புமிக்க தனிப்பட்ட தரவுகள் அதில்  இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

தனியுரிமை தொடர்பான சிக்கல்களைக் கையாளும் அதே வேளையில், டிஜிட்டல் சொத்துக்களின் புதிய எல்லையை நிர்வகிப்பதற்காக நீதிமன்றங்கள் வாரிசுரிமைச் சட்டங்களைப் பயன்படுத்தும் ஒரு பெரிய மாற்றத்தின் ஒரு பகுதியாக இதுபோன்ற வழக்குகள்  அதிகமாகி  வருகின்றன.


வழக்கு


அந்த நபரின் கைபேசியை அணுகுவதற்காக, அவரது குடும்பத்தினர் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டனர். 'டிஜிட்டல் மரபு' (Digital Legacy) குறித்த உட்பிரிவு ஒன்றைக் கொண்டுள்ள தனது சேவை விதிமுறைகளின்கீழ்,  ‘Cloud’ சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை மீட்டெடுக்கத் தங்களால் உதவ இயலும் என்று அந்நிறுவனம் அவர்களிடம் தெரிவித்தது.


ஆனால், இறந்தவரின் சார்பாகச் செயல்பட அதிகாரம் பெற்ற ஒரு சட்டப் பிரதிநிதியை, “குறிப்பிட்ட  நிபந்தனைகளைக் கொண்ட நீதிமன்ற உத்தரவு” ஒன்று முறையாக நியமித்தால் மட்டுமே இதை மேற்கொள்ள முடியும்.


இறந்தவரின் மனைவியும் மகளும், ஒருவர் உயில் ஏதும் எழுதாமல் இறக்கும்போது நீதிமன்றம் வழங்கும் ‘நிர்வாக உரிமைக் கடிதத்தை’ கோரி, 1925-ஆம் ஆண்டின் இந்திய வாரிசுரிமைச் (Indian Succession Act) சட்டத்தின்கீழ் நீதிமன்றத்தை அணுகினர். நீதிபதி ஹிமான்ஷு சௌத்ரி இந்த மனுவை ஏற்றுக்கொண்டு, மகளை அவரது சொத்துக்களின் நிர்வாகியாக நியமித்ததுடன், தரவுகளை மீட்டெடுப்பதில் தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமான அளவிற்கு உதவுமாறு ‘Apple’ நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.


சொத்தாகக் கருதப்படும் டிஜிட்டல் தகவல்


டிஜிட்டல் வாரிசுரிமையை நிர்வகிக்கும் ஒரு சிறப்புச் சட்டம் இல்லாவிட்டாலும், டிஜிட்டல் தரவைச் சொத்தாக அங்கீகரிக்கும் அளவுக்குச் சட்டம் போதுமான வரையறைகளைக் கொண்டுள்ளது என்று வாரிசுகள் வாதிட்டனர். நீதிமன்றம் அந்த வாதத்தில் நியாயம் இருப்பதாகக் கண்டறிந்து, இறந்தவரின் ‘Apple  Cloud’ கணக்கில் சேமிக்கப்பட்ட டிஜிட்டல் தரவு, இறந்தவரின் சொத்துக்களின் ஒரு பகுதியாக அமையும் ஒரு மதிப்புமிக்க டிஜிட்டல் சொத்தாகும் என்று கூறியது.

அதனை பெறுவதற்காக, ஏற்கனவே உள்ள சட்டங்கள் "அசையும் சொத்து" (Movable Property) என்பதை எவ்வாறு வரையறுக்கின்றன என்பதை அந்த குடும்பத்தினர் நம்பியிருந்தனர்.  மேலும், அந்தச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் தங்களையும் அதற்குள் சேர்த்துக் கொள்ள அனுமதிப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.


பொதுப் பிரிவுகள் சட்டம், அசையும் சொத்து என்பதை "அசையாச் சொத்து தவிர, அனைத்து வகையான சொத்துக்களும்" என வரையறுக்கிறது. இதேபோல், 2023-ஆம் ஆண்டின் பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita (BNS)) சட்டமும், அதே போன்று நிலம் மற்றும் அதனுடன் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ள பொருட்களைத் தவிர மற்ற அனைத்தையும் விலக்குகிறது. பணமோசடித் தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)) ஒரு படி மேலே சென்று, 'சொத்து'   என்பதன் வரையறைக்குள்  கண்ணுக்குப் புலப்படாத  சொத்துக்களையும் வரையறைக்குள் கொண்டுவருகிறது.


இந்தச் சட்டங்கள் எதுவும் 'iCloud' கணக்குகளை மனதில் வைத்து எழுதப்பட்டவை அல்ல; இருப்பினும், நீதிமன்றம் அவற்றின் வரையறைகள் இந்த iCloud கணக்குகளையும் உள்ளடக்கும் அளவுக்குப் பரந்ததாக இருப்பதைக் கண்டறிந்தது. மேலும், வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Act) பிரிவு 2-47A -ன்கீழ் கிரிப்டோகரன்சிகள் (Cryptocurrencies) மற்றும் விற்பனை செய்ய முடியாத பிரத்யேக டிஜிட்டல் சொத்துக்கள் (Non-Fungible Tokens (NFT)) போன்றவற்றை 'மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளாக' (Virtual Digital Assets) ஏற்கனவே வரி விதிப்புக்கு உட்படுத்துவதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதன் மூலம், பாதுகாப்பிற்குரிய ஒரு 'சொத்தாக' டிஜிட்டல் பொருட்களைச் சட்டம் அமைதியாக அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளது என்று நீதிமன்றம் விளக்கம் அளித்தது.


இந்த விதிகள், சொத்துரிமையின் கருத்தியல் எல்லைக்குள் டிஜிட்டல் தரவை உள்ளடக்கும் அளவுக்குப் போதுமானவை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.





தனியுரிமைக் கோணம்


டிஜிட்டல் வாரிசுரிமையில் மற்றொரு பக்கமும் உள்ளது. இணைய கணக்குகளில் பெரும்பாலும் தனிப்பட்ட உரையாடல்கள், அந்தரங்கக் குறிப்புகள் மற்றும் ஒரு நபர் தனது குடும்பத்தினருடன் கூட பகிர்ந்து கொள்ள விரும்பாத அவரது வாழ்க்கையின் சில பகுதிகள் இருக்கலாம். எனவே, இத்தகைய கணக்குகளை பாரம்பரியமாக வரும் சொத்தாகக் கருதுவது, ஒரு நபரின் மரணத்திற்குப் பிறகான அவரது அந்தரங்க உரிமை மற்றும் கண்ணியத்துடன் முரண்படலாம்.


எனவே, இங்குள்ள பிரச்சினை, டிஜிட்டல் சொத்துக்களை யார் வாரிசாகப் பெறுகிறார்கள் என்பது மட்டுமல்ல. மாறாக, இறந்த  ஒருவரின் தனிப்பட்ட டிஜிட்டல் வாழ்வை அணுகும் உரிமை எந்த அளவிற்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். தனியுரிமை என்பது ஒரு அடிப்படை உரிமைதான் என்றபோதிலும், "அது ஒரு தனிநபருடனேயே பிறந்து, அந்தத் தனிநபருடனேயே முடிவுக்கு வரும், இயல்பாகவே தனிப்பட்ட தன்மையைக் கொண்ட ஒரு உரிமையாகும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


ஒரு நபரின் தனிப்பட்ட உரிமை அல்லது சட்ட நடவடிக்கை அந்த நபருடனேயே இறந்துவிடுகிறது (Actio personalis moritur cum persona) என்ற சட்டக் கோட்பாட்டைப் பயன்படுத்தி, மரணமடைந்த நபரின் அந்தரங்க உரிமை தொடர்பாக எந்தவொரு கோரிக்கையையும் தொடர முடியாது என்றும், அவரது டிஜிட்டல் சொத்துக்களை நிர்வகிப்பதில் இருந்து சட்டபூர்வமான வாரிசுகளைத் தடுக்க முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


2023-ஆம் ஆண்டின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் (Digital Personal Data Protection Act) ஒருவர் இறந்த பிறகு அவரது தரவு உரிமைகளைப் பயன்படுத்த ஒருவரை நியமிக்க (nominate) வழிவகை செய்கிறது. ஆனால், அவ்வாறு எந்த ஒரு நபரும்  நியமிக்கப்படாவிட்டால் என்ன செய்வது என்பது பற்றி சட்டம் எதையும் குறிப்பிடவில்லை. அந்த சட்ட இடைவெளியில், இந்த உரிமைகள் சட்டப்பூர்வ வாரிசுகளுக்குச் செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, அந்த கைபேசி சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளைத் தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமான அளவிற்கு மீட்டெடுக்க வாரிசுகளுக்கு உதவுமாறு ‘Apple’ நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


டிஜிட்டல் சொத்துக்கள் மீதான சட்டக் கோட்பாடு


கடந்த ஆண்டு, ரிதிகுமாரி vs  ஜான்மாய் லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் (Rhutikumari v. Zanmai Labs Pvt. Ltd.) வழக்கில், கிரிப்டோகரன்சி என்பது உடைமை மற்றும் நன்மை அளிக்கும் வகையில் அனுபவிக்கக்கூடிய ஒரு சொத்து என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


230 மில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்திய இணையவழித் தாக்குதலைத் தொடர்ந்து, WazirX தளத்தில் இருந்த கிரிப்டோ கையிருப்புகள் முடக்கப்பட்ட பிறகு அந்த வழக்கு தொடரப்பட்டது. முக்கியமான உரிமைகள் விரிவாக சொத்துகளை வரையறுக்கும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளை நீதிபதி  ஆய்வு செய்தார். உதாரணமாக, அஹமது ஜி.எச். ஆரிஃப் vs  CWT (1969) (GH Ariff v CWT (1969)) என்ற வழக்கில் நீதிமன்றம், ஒரு நபர் தெளிவாக வைத்திருக்கும் அல்லது அனுபவிக்கக்கூடிய எல்லா சாத்தியமான நிபந்தனைங்களையும் மற்றும் ஜிலுபாய் நன்பாய் கச்சார் vs  குஜராத் மாநிலம் (1995) (Jilubhai Nanbhai Khachar v State of Gujarat (1995)) வழக்கில் கூறியபடி, சட்டத்தால் உத்தரவிடபடும் மற்றும் பாதுகாக்கப்பட கூடிய உரிமைகளின் தொகுப்பாக... பரிமாற்றமுடைய மதிப்பு கொண்டுள்ளவையோ அல்லது செல்வம், சொத்து அல்லது மரியாதையை உருவாக்குகின்றவையோ அனைத்தும்" சொத்துதான் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.


அந்த வாதத்தைப் பயன்படுத்திய மதராஸ் உயர்நீதிமன்றம், “பயனர் செய்யும் முதலீடு கிரிப்டோகரன்சியாக (Crypto currency) மாற்றப்படுகிறது. இதனைச் சேமித்து வைக்கவோ, வர்த்தகம் செய்யவோ மற்றும் விற்கவோ முடியும். கிரிப்டோகரன்சி என்பது ஒரு மெய்நிகர் டிஜிட்டல் சொத்தாகக் (Virtual Digital Asset (VDA)) கருதப்படுகிறது. மேலும், இது 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு-2(47A)-ன்கீழ் நிர்வகிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டது.



காந்திநகர் வழக்கு மிகவும் சாதாரணமானது. ஏனெனில், அது ஒவ்வொரு நாளும் உருவாக்கப்பட்டு சாதனங்களில் சேமிக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள், கிளவுட் காப்புப்பிரதிகள் (Cloud backups) மற்றும் தரவுகள் சம்பந்தப்பட்டது. டிஜிட்டல் சொத்துக்கள் என்ற  வரையறையின்கீழ் நிதி சார்ந்த கருவிகளிலிருந்து தனிப்பட்ட தரவுகளுக்கு மாறும் இந்த மாற்றம் முக்கியத்துவம்  பெற்றது.  ஏனெனில், அதிகரித்து வரும் டிஜிட்டல் சார்பு நிலைக்கு ஏற்ப இந்தியாவின் சட்டங்கள் மேம்படுத்தப்படவில்லை.


தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 (IT Act, 2000) என்பது  இணைய குற்றங்கள் மற்றும் அங்கீகாரமற்ற அணுகல்களை மட்டுமே கையாள்கிறது, ஆனால் டிஜிட்டல் கணக்குகள் மீதான வாரிசுரிமையை உருவாக்கவில்லை. இந்திய வாரிசுரிமைச் சட்டம் (Indian Succession Act) என்பது இணையம் உருவாவதற்கு முன்பே இயற்றப்பட்ட ஒன்றாகும். டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் (DPDP Act) ஒரு நபர் இறந்த பிறகு அவரது தரவு உரிமைகளைப் பயன்படுத்த மற்றொருவரை நியமிக்கும் யோசனையை அறிமுகப்படுத்தினாலும், அது டிஜிட்டல் வாரிசுரிமையை முழுமையாக முறைப்படுத்தவில்லை.


ஜெர்மனி வழக்கு


காந்திநகர் நீதிமன்றத்தின் முன் வந்துள்ள இந்தச் சட்டப்பூர்வமான கேள்வி, இதற்கு முன்பு ஜெர்மனியின் மிக உயர்ந்த நீதிமன்றத்தாலும்விசாரிக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டில், பெர்லினில் இரயில் மோதியதில் 15 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வதற்காகவும், இந்தச் சம்பவம் தொடர்பாக எழுந்த சட்டப்பூர்வமான கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதற்காகவும், அவரது பெற்றோர் மகளின் முகநூல் கணக்கை அணுக அனுமதி கோரினர். ஆனால், ‘Facebook’ நிறுவனம் பயனரின் தனிப்பட்ட ரகசியம் மற்றும் பாதுகாப்பைக் காரணம் காட்டி அனுமதி மறுத்தது.


இந்த வழக்கு இறுதியாக ஜெர்மன் கூட்டாட்சி உச்சநீதிமன்றத்தை (German Federal Court of Justice) எட்டியது. அந்த நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியது. அதன்படி, ஒரு நபர் இறந்த பிறகு அவரது தனிப்பட்ட நாட்குறிப்புகள் அல்லது தனிப்பட்ட கடிதங்கள் எவ்வாறு அவரது வாரிசுகளுக்குச் சொந்தமாகிறதோ, அதே உலகளாவிய வாரிசுரிமைக் கொள்கையின்கீழ் (Universal succession), இறந்த பயனரின் முகநூல் கணக்கு ஒப்பந்தமும் அவரது வாரிசுகளுக்கே சேரும் என்று தீர்ப்பளித்தது. வாரிசுகள் சட்டப்பூர்வமாக இறந்த நபரின் இடத்திற்கு வந்துவிடுவதால், அவர்கள் ரகசியத்தன்மை பாதுகாப்புச் சட்டங்களால் தடுக்கப்படும் "மூன்றாம் தரப்பினர்" அல்ல என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், உலகிலேயே மிகக் கடுமையான டிஜிட்டல் தனியுரிமைச் சட்டங்களில் ஒன்றான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (General Data Protection Regulation (GDPR)), இறந்த நபர்களுக்குப் பொருந்தாது என்பதால், ஐரோப்பிய ஒன்றியத் தரவுப் பாதுகாப்புச் சட்டம் இத்தகைய அனுமதியைத் தடுக்கவில்லை என்றும் நீதிமன்றம் கண்டறிந்தது.


இதன் விளைவாக, பெற்றோரிடம் அந்த முகநூல் கணக்கின் முழுமையான அணுகலை வழங்குமாறு ‘Facebook’ நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. பின்னர் வழங்கப்பட்ட மற்றொரு தீர்ப்பில், வாரிசுகள் அந்தக் கணக்கை அணுகி அதிலுள்ள விவரங்களைப் படிக்கலாமே தவிர, இறந்த நபர் உயிரோடு இருப்பது போல அதை அவர்களாகத் தொடர்ந்து இயக்கக் கூடாது என்று தெளிவுபடுத்தப்பட்டது.


Original Link: Who owns a person’s digital data after their death?


Share: