ஆரோக்கியமான சூழலுக்கான அரசியலமைப்பு உரிமை பறிக்கப்பட்டபோது நாம் என்ன செய்து கொண்டிருந்தோம் என்று எதிர்கால சந்ததியினர் திரும்பிப் பார்த்துக் கேட்க வாய்ப்புள்ளது.
தேசிய தலைநகரின் காற்று அபாயகரமான அளவில் மாசுபட்டுள்ளது. இது மக்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதிக்கிறது. உலகில் மிகவும் மாசுபட்ட 100 நகரங்களில், 83 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. டெல்லியில் உள்ள குழந்தைகள் 10 வயதிற்கு முன்பே நுரையீரல் திறனை இழக்கின்றனர். மேலும் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள விவசாயிகள் ஒவ்வொரு குளிர்காலத்திலும் புற்றுநோயை உண்டாக்கும் துகள்களை சுவாசிக்கின்றனர். இளம் குழந்தைகள் உட்பட மூச்சுத் திணறல் உள்ள நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றனர். சுற்றுச்சூழல் விதிகள் அத்தியாவசியமானவை என்பதை உணர்ந்தும் அவற்றை புறக்கணிப்பது மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கையை ஒரு பயங்கரக் கனவாக மாற்றுகிறது என்று கூறுகின்றனர்.
இப்போதைய சூழலில் உச்சநீதிமன்றம் “பின்தேதியிட்ட” சுற்றுச்சூழல் அனுமதியை ஏற்றுக்கொண்ட தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. அரசுகள் மக்கள் போராட்டத்தை அடக்கியபோது கடைசி நம்பிக்கையாக இருந்த நீதிமன்றமே இப்படி தீர்ப்பு சொன்னது பலரையும் ஏமாற்றம் அடைய வைத்துள்ளது. இந்தியாவின் சுற்றுச்சூழல் சட்ட வரலாற்றில் இவ்வளவு குழப்பத்தை ஏற்படுத்திய தீர்ப்புகள் மிகவும் குறைவு என்று தெரிவிக்கின்றனர்.
இந்தத் தீர்ப்புக்கு முன்னர், மே மாதம் 16-ஆம் தேதியன்று, வனசக்தி vs இந்திய ஒன்றியம் வழக்கில், பின் தேதியிட்ட சுற்றுச்சூழல் அனுமதிச்சான்றுகள் சட்டவிரோதமானவை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. பின்னர், இந்திய மனை வணிக நிறுவனங்கள் கூட்டமைப்பு (Confederation of Real Estate Developers of India) அந்த முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு அளித்திருந்தது. மேலும் நவம்பர் மாதம் 18-ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அதைத் தள்ளுபடி செய்தது. முன்னோக்குச் சுற்றுச்சூழல் அனுமதிச் சான்றுகளை வழங்கலாம் என்று தீர்ப்பளித்தது. ஆனால், தற்போதுள்ள விதிமுறைகளின் கீழ் "அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு" மட்டுமே வழங்க முடியும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீர்ப்பு வெறும் நடைமுறைக் குறைபாட்டின் வழியை மட்டும் திறக்கவில்லை. இது, பல ஆண்டு காலமாக மிகுந்த சிரமத்துடன் கட்டப்பட்ட சுற்றுச்சூழல் நிர்வாக அமைப்பையே அச்சுறுத்துகிறது. உலகின் மோசமான மாசுபாடு குறியீடுகளுடன் போராடும் ஒரு நாட்டில், குழந்தைகள் விஷத்தை சுவாசிக்கும், நச்சு நுரையால் மூடப்பட்ட ஆறுகள் உயிருக்காகப் போராடும் நிலையில், இந்தத் தீர்ப்பு பிரச்சினையை முற்றிலும் மோசமாக்கிவிடும் ஆபத்து இருக்கிறது என்று எச்சரிக்கின்றனர்.
சுற்றுச்சூழல் அனுமதி என்பது வெறும் வழக்கமான நடைமுறை அல்ல. அது சுத்தமான காற்று, நீர் மற்றும் ஆரோக்கியமான சூழலுக்கான உரிமையை உள்ளடக்கிய, வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியலமைப்புச் சட்டம் 21-ன் கீழ் உள்ள ஒரு அரசியலமைப்பு உரிமை ஆகும். இதன் முக்கிய நோக்கம் தடுப்பு ஆகும். அதாவது, மாசுபாடு ஏற்பட்ட பிறகு சேதத்தைச் சரிசெய்வதைவிட, அது நடப்பதற்கு முன்பே நிறுத்துவது நல்லது என்பதை முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்கின்றனர். மக்கள் ஏற்கனவே நச்சுக் காற்றை சுவாசிக்கும் நிலைக்கு ஆளான பிறகு நம்மால் அதனை ஒழுங்குபடுத்த முடியாது. மேலும், மாசுபடுத்துபவர்கள் முதலில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்புகளைச் செய்துவிட்டு, பிறகு மன்னிப்புக் கேட்க அனுமதிக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்துகின்றனர்.
இந்தத் தீர்ப்பு, சுற்றுச்சூழல் சட்டங்களைப் புறக்கணித்து, விதிகளை மீறி, நிரந்தரமான சேதத்தை ஏற்படுத்தியவர்களுக்கும்கூட பாதுகாப்பை அளிக்கிறது. இது தவறான செயல்களை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றி, சட்டத்தை மீறுபவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போலாகிறது. இதன்மூலம், சட்டத்தைப் பின்பற்றுவது ஒரு விருப்பத் தேர்வு என்றும், சட்டத்தை மீறுவது லாபகரமானது என்று நேர்மையான மக்களுக்கு, இந்தத் தீர்ப்பு ஒரு எச்சரிக்கையை தெரிவிப்பதாக அமைகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில், நமது சுற்றுச்சூழல் சட்டங்கள் சீராக பலவீனப்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் இந்தச் சட்டங்களை வெளிப்படையாக பெரிய தடைகளாகவே கருதுகிறது. ஆனால், நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கும்போது இந்தச் சூழலை கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இங்கே ஐந்து உதாரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன: இதில் முதலாவதும் மிகவும் அறியப்பட்டதும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பு 2020 (மற்றும் 2021 அலுவலக குறிப்பாணை) ஆகும். இந்த அறிவிப்பானது, பிறகு சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறுவதை ஒரு வழக்கமான நடைமுறையாக மாற்ற முயன்றது. இது, முன் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்த தொழில்கள், பிறகு ஒரு சிறிய அபராதத்துடன் ஒப்புதல் பெற அனுமதிக்கிறது என்கின்றனர். இது தொழிற்சாலைகள் இணக்க அறிக்கை சமர்ப்பிக்கும் காலத்தைக் குறைத்தது, பொதுமக்களின் கருத்துக் கேட்பை வரம்பாக்கியது, (Environmental Impact Assessment (EIA)) (சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு) தேவையில்லாத தொழில்களின் எண்ணிக்கையை அதிகமாக்கியது என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர். உச்சநீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு, பெரிதும் விமர்சிக்கப்படும் இந்த சுற்றுச்சூழல்-விரோத சட்டத்துக்கு ஆதரவாகவே அமைந்திருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.
இரண்டாவதாக, காடு (பாதுகாப்பு) சட்டத்தில் (Forest (Conservation) Act (FCA)) செய்யப்பட்ட திருத்தங்கள், "வன நிலம்" என்றால் என்ன என்பதை மறுவரையறை செய்து, முன்னர் நீதித்துறை விளக்கத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட காட்டு நிலங்களை திறம்பட விலக்கின. வரலாற்று சிறப்புமிக்க டி.என். கோதவர்மன் திருமுல்பாட் vs இந்திய ஒன்றியம் (1996) மூலம் ஒரு காலத்தில் பாதுகாக்கப்பட்ட பெரிய பகுதிகள் திடீரென வரையறைக்கு உள்ளாக இல்லாத நிலை ஏற்பட்டது. இந்தத் திருத்தம், காடுகள் நிறைந்த பகுதிகளில், குறிப்பாக வடகிழக்கு மற்றும் பழங்குடிப் பகுதிகளில், முந்தைய பாதுகாப்புகளைத் தவிர்ப்பதற்கு ராஜதந்திர ரீதியிலான நேரியல் திட்டங்களை, அதாவது சாலைகள், ரயில்வே மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்புகளை அனுமதித்தது. மேலும், இது கடுமையான நெறிமுறைகளுக்கு உட்படுத்தப்படாமல் காடுகள் ஆக்கிரமிப்புக்கான பல வழிகளைத் திறந்துள்ளது என்றும் எச்சரிக்கின்றனர்.
மூன்றாவதாக, பல ஆண்டுகளாக, நிலக்கரிச் சுரங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் குறிப்பிட்ட கட்டுமானப் பிரிவுகள் உட்பட முக்கியமான துறைகளுக்கு விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன அல்லது குறைந்த ஒழுங்குமுறைக் குழுக்களில் வைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, “B2” வகைகளின்கீழ் வகைப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) தேவையில்லை என்றும் பொது விசாரணை தேவையில்லை என்றும் மிகக் குறைந்த சுற்றுச்சூழல் மேற்பார்வை மட்டுமே போதுமானது என்றும் அங்கீகரிக்கப்படுவது பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துமென்று தெரிவிக்கின்றனர். இது பல சுரங்கம் மற்றும் தொழிற்சாலை வேலைகளில் மிக முக்கியமான பாதுகாப்பு விஷயமான “பொது ஆலோசனை” என்ற மிக முக்கியமான பாதுகாப்பு விதியை மீறச் சாதகமாக அமைகிறது என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
நான்காவதாக, 2018-ஆம் ஆண்டு கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பு (Coastal Regulation Zone (CRZ))-2018 கடற்கரையோரப் பாதுகாப்பை மிகவும் பலவீனப்படுத்தியது. இதனால், கடற்கரைக்கு மிக அருகில் கட்டிடங்கள் கட்ட அனுமதி கிடைத்தது, உணர்திறன் மிக்க கடலோரப் பகுதிகளை சுற்றுலா திட்டங்களுக்கு அளித்தது, வியாபார நோக்கில் கட்டுவதற்கான கட்டுப்பாடுகளை
தளர்த்தியது போன்றவை பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. இந்தியக் கடற்கரைகள் ஏற்கனவே மண் அரிப்பு, கடல் மட்டம் உயர்வு, புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றன. காலநிலை மாற்ற ஆபத்து இன்னும் அதிகரித்து வரும் இந்நேரத்தில், இந்த புதிய விதிகள் கடற்கரையைப் பாதுகாப்பதற்குப் பதில், தனியார் நிறுவனங்கள் அதன் வளங்களைச் சுரண்டிக்கொள்ள எளிதாக வழிவகுத்தன.
ஐந்தாவது, சுற்றுச்சூழல் மற்றும் வன ஒப்புதல்கள் இப்போது திட்டங்களுக்கு வெறும் ரப்பர் ஸ்டாம்ப் போடும் குழுக்களால் மிக விரைவாக வழங்கப்படுகின்றன. இந்தக் குழுக்கள் பெரும்பாலும் இணையம் வழியாகச் சந்தித்து, பல திட்டங்களை ஒரே நேரத்தில் மதிப்பாய்வு செய்து, கள ஆய்வு மிகக் குறைவாகவே செய்து ஒப்புதல் அளிக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளில், 95 சதவீதத்துக்கும் அதிகமான திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது ஒரு பெரிய பாதுகாப்பு அமைப்பை வெறும் ஒப்புதல் செயல்முறையாக மாற்றியுள்ளது. முன்னர் சமூகங்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அனுமதித்த பொது விசாரணைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் முடிவுகளில் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்க வாய்ப்பில்லாமல் பாதிப்படைகின்றனர்.
இது போன்ற திட்டங்கள் ஏற்கனவே தொடங்கியபிறகு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது சட்டவிரோதமானது என்றும், பிற்போக்கு அனுமதிகளைத் (post-facto clearances) தடை செய்வதாக முந்தைய தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. மேலும், 2021-ஆம் ஆண்டு அலுவலக குறிப்பு (Office Memorandum) போன்ற விதிகள், மாசுபாடு இல்லாத சூழலில் வாழ மக்களுக்கு உள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் (Article 21) கீழ் உள்ள அடிப்படை உரிமையை மீறுகின்றன என்று அத்தீர்ப்பில் முன்பே தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆரோக்கியமான சூழலுக்கான அரசியலமைப்பு உரிமை பறிக்கப்பட்டபோது நாம் என்ன செய்து கொண்டிருந்தோம் என்று எதிர்கால சந்ததியினர் திரும்பிப் பார்த்துக் கேட்க வாய்ப்புள்ளது.
எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்.