ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி 21 சர்வதேச தாய்மொழி தினமாக (International Mother Tongue Day) அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் நூற்றுக்கணக்கான தாய்மொழிகள் பேசப்படும் இந்த நாட்டிற்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இருப்பினும், 2025-ஆம் ஆண்டில், இந்த நாள் கொண்டாட்டத்தோடு மட்டுமல்லாமல், போராட்டத்தோடும் குறிக்கப்பட்டது. டெல்லியின் ஜந்தர் மந்தரில், டாக்டர் சந்தோஷ் படேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குழு, இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் போஜ்புரியை (Bhojpuri) சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். பல நாடுகளில் மில்லியன் கணக்கான மக்களால் பேசப்படும் போஜ்புரி, மொரிஷியஸ் மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளிலும் அரசியலமைப்பு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், இந்த போராட்டம் ஒரு கடுமையான உண்மையை வெளிப்படுத்தியது: இந்தியாவில், போஜ்புரி இன்னும் அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை.
ஜந்தர் மந்தர் இடம் ஆர்ப்பாட்டங்களுக்கு புதியதல்ல. 8-வது அட்டவணையில் தங்கள் மொழிகளுக்கு முறையான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று வாதிடும் சமூகங்களால் இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய சட்டப் பள்ளியின் சட்டப் பேராசிரியை ஐஸ்வர்யா பிர்லா, IndianExpress.com உடனான மின்னஞ்சல் நேர்காணலில் விளக்குவது போல்: “இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணை இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளைப் பட்டியலிடுகிறது. இந்த மொழிகள், அவரது கூற்றுப்படி, குறியீட்டு அங்கீகாரம், நிறுவன ஆதரவு, சமூக அங்கீகாரம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் மற்றவர்களை விட அதிகமாக பயனடைகின்றன. 2024 வரை, அட்டவணையின் கீழ் 22 மொழிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், ஆரம்பத்தில், 8-வது அட்டவணை 14 மொழிகளை உள்ளடக்கி இருந்தது. அசாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, மலையாளம், மராத்தி, ஒரியா (2011-ல் ஒடியா என மறுபெயரிடப்பட்டது), பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகும். 1927-ஆம் ஆண்டிலேயே துணைக் கண்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட மொழியியல் வகைகளை பட்டியலிட்ட ஜார்ஜ் ஏ கிரியர்சன் தனது இந்திய மொழியியல் ஆய்வில் அடையாளம் காணப்பட்ட நூற்றுக்கணக்கான மொழிகளிலிருந்து இந்த 14 மொழிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
எட்டாவது அட்டவணையில் தங்கள் மொழியைச் சேர்க்க சமூகங்களுக்குள் ஏன் இவ்வளவு ஆர்வம் இருக்கிறது? பட்டியலில் இடம்பெறும் மொழிகளுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் என்ன வழங்குகிறது?. மாறாக அங்கீகரிக்கப்படாத மொழிகள் எதை இழக்கின்றன?
இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணை
8-வது அட்டவணை இந்தியை வளப்படுத்த உதவும் மொழிகளின் பட்டியலாக உருவாக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினரான M சத்தியநாராயணா, ஜவஹர்லால் நேருவின் ஒப்புதலுடன், அட்டவணையில் சேர்ப்பதற்கான 12 மொழிகளின் பட்டியலை ஆரம்பத்தில் தொகுத்தார் என்று பிர்லா விளக்குகிறார். இந்தியாவின் இந்திய-இஸ்லாமிய பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் அதன் பங்கை எடுத்துக்காட்டி, நேரு உருது மொழியைப் பட்டியலில் சேர்த்தார்.
கூடுதலாக, ஒரு குறிப்பிடத்தக்க தேசியவாதியும் அரசியலமைப்பு சபை உறுப்பினருமான கே.எம். முன்ஷி, இந்திய துணைக்கண்டம் முழுவதும் சமஸ்கிருதத்தின் நீடித்த நாகரிக முக்கியத்துவத்தையும் பல முக்கிய இந்திய மொழிகளில் அதன் செல்வாக்கையும் மேற்கோள் காட்டி, சமஸ்கிருதத்தைச் சேர்ப்பதற்காக வாதிட்டார்.
காலப்போக்கில், அட்டவணையானது 14 மொழிகளைத் தாண்டி போடோ, டோக்ரி, கொங்கனி, மைதிலி, மணிப்பூரி, நேபாளி, சந்தாலி மற்றும் சிந்தி ஆகியவற்றை உள்ளடக்கியதாக விரிவடைந்து, மொத்த எண்ணிக்கையை 22- ஆக உயர்ந்தது.
1967ஆம் ஆண்டு 21-வது திருத்தச் சட்டத்தின் (21st Amendment Act) மூலம் சிந்தி சேர்க்கப்பட்டது.
கொங்கனி, மணிப்பூரி மற்றும் நேபாளி ஆகியவை 1992ஆம் ஆண்டு 71வது திருத்தச் சட்டம் (71st Amendment Act) மூலம் சேர்க்கப்பட்டன.
போடோ, டோக்ரி, மைதிலி மற்றும் சந்தாலி ஆகியவை 2003ஆம் ஆண்டு 92வது திருத்தச் சட்டத்தின் (92nd Amendment Act) மூலம் சேர்க்கப்பட்டன.
அரசியலமைப்பு எட்டாவது அட்டவணையில் பிராந்திய மொழிகளை இரண்டு முக்கிய காரணங்களுக்காக உள்ளடக்கியது:
1. இந்த மொழிகளைப் பேசும் மக்களுடன் ஒரு குழுவை அமைத்து, இந்தி எவ்வாறு அதிகாரப்பூர்வ மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை மறுபரிசீலனை செய்வது.
2. இந்த மொழிகளிலிருந்து வரும் சொற்கள் மற்றும் கருத்துக்களைப் பயன்படுத்தி இந்தி வளர உதவுவது.
எட்டாவது அட்டவணையைச் சேர்ப்பதற்கான காரணம், காலனித்துவ ஆட்சிக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் மற்றும் 1800ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பிராந்திய மொழி இயக்கங்களின் எழுச்சியுடன் தொடர்புடையது என்று பிர்லா கூறுகிறார்.
8-வது அட்டவணைக்கு மொழிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றன
இந்தியன் மொழியியலாளர் பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தி, இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணைக்கு சிறப்பு குறிப்புடன் அதிகாரப்பூர்வ மொழிக் கொள்கைகள் (Official Language Policies with Special Reference to the Eighth Schedule of the Constitution of India) என்ற தனது கட்டுரையில் கூறுகையில், அரசியலமைப்பு நிர்ணய சபை 8-வது அட்டவணையில் மொழிகளைச் சேர்ப்பதற்கு எந்த முறையான அளவுகோல்களையும் நிர்ணயிக்கவில்லை.
மாறாக, பிர்லா குறிப்பிடுவது போல், அவர்களின் விவாதங்கள் மூன்று மைய மொழியியல் பிரச்சினைகளில் கவனம் செலுத்தினர். அவை:
1. இந்தி அல்லது இந்துஸ்தானி அலுவல் மொழியாக இருக்க வேண்டுமா? மேலும், அந்த முடிவை எவ்வாறு ஆதரிப்பது.
2. 1965ஆம் ஆண்டில் முடிவடைந்த 15 ஆண்டு காலத்திற்குப் பிறகு ஆங்கிலத்தை அலுவல் மொழியாகப் பயன்படுத்துவதை நிறுத்தும் திட்டம்.
3. அரசியலமைப்பின் மூலம் இந்தியாவின் பல பிராந்திய மற்றும் சிறுபான்மை மொழிகளை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் ஆதரிப்பது போன்றவை இதில் அடங்கும்.
இருப்பினும், எட்டாவது அட்டவணையில் சில மொழிகளைச் சேர்க்கும் முடிவு சில முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டது என்று கிருஷ்ணமூர்த்தி விளக்கினார்: இந்த மொழிக்கு வலுவான இலக்கிய வரலாறு மற்றும் எழுத்து வடிவம் இருந்தது. குறிப்பிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் இதைப் பேசினர். சிந்தி மற்றும் நேபாளி போன்ற அரசியல் காரணங்களுக்காக சில மொழிகள் சேர்க்கப்பட்டன. கொங்கணி மற்றும் மணிப்பூரி போன்ற புதிய மாநிலங்களில் அவை அதிகாரப்பூர்வ மொழிகளாக மாறியதால் மற்றவை சேர்க்கப்பட்டன.
எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள பிற மொழிகளிலிருந்து அம்சங்களை எடுத்துக்கொண்டு இந்தி தேசிய மொழியாக வடிவமைக்கப்படுகிறது என்று பேராசிரியரும் மொழியியலாளருமான டி.பி. பட்டநாயக் கூறுகிறார்.
சுவாரஸ்யமாக, இந்தியாவில் ஆங்கிலம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், அது 8-வது அட்டவணையில் ஒருபோதும் சேர்க்கப்படவில்லை. அதைச் சேர்க்கும் திட்டம் 1959ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது. ஆனால், ஜவஹர்லால் நேரு அதை கடுமையாக எதிர்த்தார். பிரிட்டிஷ் காலனித்துவ ஆதிக்கத்துடன் தொடர்புடைய தேசியவாத உணர்வுகள் காரணமாக ஆங்கிலம் வேண்டுமென்றே அட்டவணையில் இருந்து விலக்கப்பட்டதாக பிர்லா வலியுறுத்துகிறார்.
பிர்லாவின் கூற்றுப்படி, 8-வது அட்டவணையில் எந்த மொழிகளைச் சேர்க்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் போது, அந்த மொழியை அரசு, தகவல் தொடர்பு, கல்வி, கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்குப் பயன்படுத்தலாமா என்பது ஒரு முக்கிய விதி என்று பிர்லா விளக்கினார். இதன் காரணமாக, பல பழங்குடி மொழிகள் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு போதுமான அளவு வளர்ச்சியடையாததால், முதலில் அவை சேர்க்கப்படவில்லை.
மொழிகளைச் சேர்ப்பதற்கான தெளிவான விதிகளை அமைப்பதற்கான முந்தைய குழுக்களின் பணிகளை பிர்லா விளக்குகிறார். அசோக் பஹ்வா குழு (1996) கீழ்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் ஒரு மொழியை எட்டாவது அட்டவணையில் சேர்க்கலாம் என்று பரிந்துரைத்தது. அவை:
- இது குறைந்தபட்சம் ஒரு மாநிலத்தில் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தல்.
- ஒரு மாநிலத்தின் மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் பேச்சு மொழியாகப் பயன்படுத்துதல்.
- இது ஒரு தனித்துவமான மொழியாக இருத்தல்.
- இது சாகித்ய அகாடமியால் அங்கீகரிக்கப்படுதல்..
- இது ஒரு தெளிவான மற்றும் வளர்ந்த இலக்கிய மரபைக் கொண்டிருத்தல்.
போன்றவை 8வது அட்டவனையில் ஒரு புதிய மொழியை சேர்க்க பரிந்துரைத்தது.
பின்னர், (சிதகாந்த் மோஹபாத்ரா குழு, 2003) குறிப்பிட்ட அளவுகோல்களைச் சேர்த்தது. ஒரு மொழி எட்டாம் அட்டவணையில் இடம்பெற கணிசமான மக்கள்தொகையால் பேசப்படுவதற்கு, கடந்த 30 ஆண்டுகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவின் அடிப்படையில் குறைந்தபட்சம் 5 மில்லியன் பேசுபவர்கள் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. அந்த மொழி குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளி வரை, விரும்பத்தக்க முறையில் பல்கலைக்கழக அளவு வரை கல்வி கற்பிக்கும் ஊடகமாகவும் செயல்பட வேண்டும். அதோடு, அதன் எழுத்துமுறை உள்நாட்டு எழுத்துமுறை, ஆதிக்கம் செலுத்தும் பிராந்திய மொழியிலிருந்து பெறப்பட்டது‘ அல்லது தேவநாகரி எழுத்துமுறையைப் பயன்படுத்துவது மற்றும் குறைந்தபட்சம் 50 ஆண்டுகளாக நிலைபெற்ற பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டும். சாகித்ய அகாடமி (Sahitya Akademi) அந்த மொழியில் இலக்கிய நடவடிக்கைகளை தீவிரமாக ஆதரிக்க வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது.
இந்த முயற்சிகள் இருந்தாலும், எந்த அதிகாரப்பூர்வ தரநிலையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பிர்லா எழுதுவது போல, "இந்த தருணத்தில் சேர்ப்பதற்கான நிலையான அளவுகோல் எதுவும் இல்லை. உள்துறை அமைச்சகம் இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது: சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களால் மொழிகளும் பேச்சு வழக்குகளும் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே, அவற்றைப் பிரித்தறிய நிலையான விதிகளை அமைப்பது அல்லது இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் எவற்றைச் சேர்க்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது கடினம்.
8-வது அட்டவணையில் பிற மொழிகளைச் சேர்ப்பதற்கான உணர்வுகள் மற்றும் தேவைகள் குறித்து அரசாங்கம் விழிப்புடன் உள்ளது. மேலும், இந்த உணர்வுகளையும், பேச்சுவழக்குகளை மொழியில் பரிணமிப்பது, ஒரு மொழியின் பரவலான பயன்பாடு போன்ற பிற பரிசீலனைகளையும் மனதில் கொண்டு கோரிக்கைகளை ஆராயும்" என்று அமைச்சகம் மேலும் கூறுகிறது.
உணரப்பட்ட நன்மைகள்
8-வது அட்டவணையில் பட்டியலிடப்படுவதால் உணரப்படும் நன்மைகள் அடையாள ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் உள்ளன. 1950ஆம் ஆண்டு முதல் 8-வது அட்டவணை செயல்பாடு குறித்த தனது கண்டறிதல்களிலிருந்து, கிருஷ்ணமூர்த்தி பல உறுதியான நன்மைகளை வெளிக்கொணர்கிறார். எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகள் நாடாளுமன்றத்தில் எந்த உறுப்பினராலும் பேசப்பட்டால் மொழிபெயர்ப்பு சேவைகளுக்குத் தகுதியுடையவை என்றும், அவை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (Union Public Service Commission (UPSC)) தேர்வுகளில் இந்திய மொழித் தாளில் விருப்பங்களாக சேர்க்கப்பட்டுள்ளன என்றும், ஒன்றிய அரசிடமிருந்து வளர்ச்சி நிதியைப் பெறுகின்றன என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஏனெனில், மொழி பொதுப்பட்டியலில் (Concurrent List.) உள்ளது. கூடுதலாக, வெகுஜன ஊடகங்கள் அட்டவணையிடப்பட்ட மொழிகளில் உள்ளடக்கத்தை ஒளிபரப்புவதை எளிதாக்குகின்றன. இது அவற்றின் பொது தோற்றத்தையும் அணுகல் தன்மையையும் மேலும் வலுப்படுத்துகிறது.
இருப்பினும், சில அறிஞர்கள் மிகவும் விமர்சன பார்வையை வழங்குகின்றனர். இந்திய மொழியியலாளர்கள் ஆர் எஸ் குப்தா மற்றும் அன்விதா அப்பி, அவர்களின் கட்டுரையான “8-வது அட்டவணை: ஒரு விமர்சன அறிமுகம்” (The Eighth Schedule: A Critical Introduction) என்பதில், அட்டவணையில் இருப்பதன் மூலம் பெறப்படும் உறுதியான நன்மைகள் ஒப்பீட்டளவில் வரையறுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று வாதிடுகின்றனர். அவற்றை "குறைவான - வளர்ச்சிக்கான மானியங்களாக இங்கும் அங்கும் சில மில்லியன் ரூபாய்கள்" (“marginal—a few million rupees here and there by way of grants of development.”) என்று விவரிக்கின்றனர். இருப்பினும், அவர்கள் மறைமுக மற்றும் அடையாள நன்மைகளை வலியுறுத்துகின்றனர். 8-வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு மொழி மாநில மொழியாகவும் கல்வி மற்றும் தேர்வு ஊடகமாகவும் பயன்படுத்தப்படுவதற்கான மிகவும் தகுதியானது என்று குறிப்பிடுகின்றனர். இத்தகைய உள்ளடக்கம், உண்மையான அதிகாரத்தையும் கௌரவத்தையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல் அதிகாரம் மற்றும் கௌரவத்தின் தோற்றத்தையும் உருவாக்குகிறது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
இந்தச் சூழலில், பிர்லா குறிப்பிடுவது என்னவென்றால், 8-வது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும் என்ற அழைப்புகள் பெரும்பாலும் புதிதாக முன்மொழியப்பட்ட மொழிகள் போதுமான வளர்ச்சியைக் காட்டுகின்றன மற்றும் கணிசமான பேசுபவர்களைக் கொண்டுள்ளதால், முன்னர் பட்டியலிடப்பட்ட மொழிகளுக்கு வழங்கப்பட்ட அதே அங்கீகாரம் மற்றும் நன்மைகளை நியாயப்படுத்துவதில் வேரூன்றியுள்ளன என்கிறார். "இந்த கோரிக்கைகள் முக்கியமாக பிராந்திய மொழி அடையாளம் அரசியல் அடையாளமாக செயல்படுகிறது என்ற யோசனையிலிருந்து வருகின்றன. இது மொழி, பிராந்தியம் மற்றும் கலாச்சாரத்தை வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இணைக்கிறது," என்று அவர் கூறுகிறார்.
குறிப்பாக, சாகித்ய அகாடமி (Sahitya Akademi), அரசு ஆதரவுடன் கூடிய ஒரு தன்னாட்சி அமைப்பு, 1950ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் முதல் 14 அட்டவணை மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் இலக்கியத்தை ஊக்குவிக்க நிறுவப்பட்டது. காலப்போக்கில், பல கூடுதல் இலக்கிய மொழிகள் அகாடமியின் கீழ் கொண்டு வரப்பட்டன. அத்தகைய அங்கீகாரம் ஒரு மொழி 8-வது அட்டவணையில் சேர்க்கப்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், அட்டவணையில் உள்ள மொழிகள் அதிகாரம் பெற்றாலும், பட்டியலிடப்படாத மொழிகள் மேலும் ஒதுக்கப்படுகின்றன என்று குப்தா மற்றும் அப்பி எச்சரிக்கின்றனர். தற்போது, அட்டவணையில் உள்ள 22 மொழிகள், "அதிகாரம், அங்கீகாரம் மற்றும் மதிப்பைப் பெற்றுள்ளன. அதே, சமயம் மற்றவை “கிளைமொழிகள்” (‘dialects,’), “சிறு மொழிகள்” (‘minor languages,’) மற்றும் “பழங்குடி மொழி” (‘tribal language.’”) போன்ற பெயர்களின் சுமையின் கீழ் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன என்று அவர்கள் வாதிடுகின்றனர். மேலும், அவர்கள் மொழி விவகாரத்தின் அரசியல்மயமாக்கலை 8-வது அட்டவணையின் நேரடி விளைவாக அடையாளம் காண்கின்றனர்.
8-வது அட்டவணை 1,600-க்கும் மேற்பட்ட பிற மொழிகளை ஆதிக்கம் செலுத்தும், முக்கிய மொழிகளை பாதிக்கும் என்று வாதிடுகின்றனர். பல அறிஞர்கள் இந்தக் கவலையை எதிரொலிக்கின்றனர். பரந்த ஒருங்கிணைப்பு நோக்கம் பாராட்டத்தக்கதாகத் தோன்றினாலும், குப்தாவும் அப்பியும் அட்டவணையை "8-வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழிகளான சிறிய மொழிககளை விழுங்குவதற்கான ஒரு சாதனம்" என்று விவரிக்கின்றனர்.
8-வது அட்டவணையில் சில மொழிகளை குறிப்பாக, பழங்குடி மொழிகளை சேர்க்காதது கடுமையான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிர்லா சுட்டிக்காட்டுகிறார். இந்த மொழிகள் பெரும்பாலும் தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்வதில்லை. எனவே, அரசாங்கத்திடமிருந்து உதவி அல்லது ஆதரவைப் பெறுவதில்லை. எந்த மொழிகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன அல்லது புறக்கணிக்கப்படுகின்றன என்பதை பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் எவ்வளவு ஆழமாக பாதிக்கின்றன என்பதை இது காட்டுகிறது என்று அவர் கூறுகிறார். ஒரு மொழி சேர்க்கப்படாதபோது, மக்கள் பெரும்பாலும் தங்கள் கலாச்சாரம், உரிமைகள் மற்றும் அடையாளம் புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறார்கள் என்று பிர்லா மேலும் கூறுகிறார்.
மேலும், அவர் "8-வது அட்டவணையில் சேர்த்தல் மற்றும் அதிகாரப்பூர்வமாக்குதல் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஒரு சூழலை உருவாக்குகிறதா?" என்ற கேள்வியை எழுப்புகிறார்.
8-வது அட்டவணை தொடர்பற்றதா?
பிர்லாவின் கூற்றுப்படி, இந்தியாவின் ஜனநாயக மற்றும் பன்முகத்தன்மை கொண்ட மதிப்புகளை ஆட்சியில் வைத்திருப்பது மற்றும் மக்களின் மொழி உரிமைகளைப் பாதுகாப்பது ஆகிய இரண்டு இலக்குகளை சமரசம் செய்யும் முயற்சியாகக் காணலாம்.. வெவ்வேறு சமூகங்கள் அதை வித்தியாசமாகப் பார்க்கக்கூடும் என்பதால், அட்டவணை உண்மையிலேயே அதன் நோக்கத்தை அடைந்துவிட்டதா என்று சொல்வது கடினம் என்று அவர் கருதுகிறார். இருப்பினும், அவை பெரும்பாலும் குறியீட்டு அல்லது அரசியல் ரீதியாக இருந்தாலும் கூட, அது சேர்க்கப்படுவது சில நன்மைகளைத் தருகிறது என்பதையும் அவர் ஒப்புக்கொள்கிறார்.
இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியை வலுப்படுத்த 8-வது அட்டவணை முக்கியமாக உதவுகிறது என்று பிர்லா கூறுகிறார். இந்த யோசனை அரசியலமைப்பிலிருந்து, குறிப்பாக பிரிவுகள் 344(1) மற்றும் 351-லிருந்து வருகிறது. அலுவல் மொழிகளைக் கவனிக்க நாடாளுமன்றத்தில் ஒரு குழுவை பிரிவு 344(1) அமைக்கிறது. அதிகாரப்பூர்வ அரசாங்கப் பணிகளுக்கு இந்தி மெதுவாக அதிகமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அது கூறுகிறது.
காலப்போக்கில், 8-வது அட்டவணை ஒரு வகையான மொழி தரவரிசை முறையை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பில் முதலாவதாக ஆங்கிலம் இருப்பதாகவும், மற்ற அனைத்து மொழிகளை விடவும் இது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவதால் அது “மிகை மொழி” (‘supra-language’) என்று அழைக்கப்படுகிறது என்றும் அறிஞர்கள் நம்புகிறார்கள். இந்தி மொழி மற்ற திட்டமிடப்பட்ட மொழிகளை விட உயர்ந்தது. இந்த பிராந்திய மொழிகள் அடுத்ததாக வருகின்றன. ஒவ்வொன்றும் அதன் சொந்த செல்வாக்குப் பகுதியைக் கொண்டுள்ளன. கீழே அட்டவணையில் பட்டியலிடப்படாத மொழிகள் உள்ளன. சில நேரங்களில் “Infra-ES languages” என்று அழைக்கப்படுகின்றன. மேலும், அவை சாகித்ய அகாடமி போன்ற குழுக்களால் கூட அங்கீகரிக்கப்படாமல் இருக்கலாம்.
Infra-ES languages என்பது 8-வது அட்டவணையில் (Eighth Schedule) சேர்க்கப்படாத மொழிகளை குறிக்கின்றது. இவை பொதுவாக அதிகாரபூர்வமாக அறியப்படாத அல்லது 8-வது அட்டவணையில் உள்ள மொழிகளுக்கு கீழேயுள்ள நிலையில் இருக்கும் மொழிகள் ஆகும். |
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொழியியலாளர் ஆயிஷா கித்வாய் கூறுகையில், இந்தியை ஆதரிப்பதற்காக உருவாக்கப்பட்ட 8-வது அட்டவணை இப்போது பெரியதாகிவிட்டது. அவரது நண்பர் ஹனி பாபு இதை "சதுர்வர்ண அமைப்பு" என்று அழைக்கிறார். பழைய சாதி அமைப்பைப் போன்ற நான்கு நிலை வகைப்பாடாகும். இதில் சமஸ்கிருதம், இந்தி, திட்டமிடப்பட்ட மொழிகள் மற்றும் திட்டமிடப்படாத மொழிகள் அடங்கும். இந்த அமைப்பு மொழிகளுக்கு இடையே போட்டியை உருவாக்கி நாட்டில் கடுமையான மொழி சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
சமஸ்கிருதம், இந்தி, திட்டமிடப்பட்ட மொழிகள் மற்றும் திட்டமிடப்படாத மொழிகள் என நான்கு அடுக்கு மொழிகள் உள்ளன என்று பாபு விளக்குகிறார். இந்த அமைப்பு மொழிகளுக்கு இடையே போட்டியை உருவாக்கி இந்தியாவில் பன்மொழித் தன்மையை படிநிலைப்படுத்தியுள்ளது என்று அவர் வாதிடுகிறார். உதாரணமாக, வளமான இலக்கிய மரபுகளைக் கொண்ட ராஜஸ்தானி, பிரஜ் மற்றும் அவதி போன்ற மொழிகள் இந்தியின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. அதே, நேரத்தில் கொங்கனி 8-வது அட்டவணையில் மராத்தியிலிருந்து ஒரு தனி மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த படிநிலை கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று கித்வாய் நம்புகிறார். மொத்தம் 38 மொழிகள் 8-வது அட்டவணையில் சேர்க்கப்படுவதற்காகக் காத்திருக்கின்றன. ஏனெனில், பட்டியலிடப்படுவது பள்ளிகளில் அங்கீகாரத்தையும் கற்பித்தலையும் உறுதி செய்கிறது.
ஆதரவு இல்லாதது, 8-வது அட்டவணையில் பட்டியலிடப்படாத மொழிகள் மறைந்து போகக்கூடும் என்ற அச்சமும் உள்ளது. இந்தியாவின் அழிந்து வரும் மொழிகளில் பெரும்பாலானவை வடகிழக்கு மற்றும் பழங்குடிப் பகுதிகளில் உள்ள சிறிய சமூகங்களில் பேசப்படுகின்றன. மேலும், பல அரசியலமைப்பு அல்லது மாநில அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்படவில்லை.
இருப்பினும், அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கூட உயிர்வாழ்வதற்கு உத்தரவாதம் அளிக்காது என்று பிர்லா எச்சரிக்கிறார். மணிப்பூரி மற்றும் போடோ போன்ற மொழிகள் 8-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டிருந்தாலும், மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பிற மொழிகள் இன்னும் ஆபத்தில் உள்ளன. மொழிகளைப் பாதுகாக்க அரசாங்க அங்கீகாரம் மட்டும் போதாது என்று பிர்லா வலியுறுத்துகிறார். மொழி உயிர்வாழ்வைப் பாதிக்கும் ஆழமான அரசியல் மற்றும் சமூக காரணிகளை இது நிவர்த்தி செய்ய வேண்டும்.
Original article: