உயிரிமருந்து சக்தி (Biopharma Shakti) திட்டம் : நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ₹10,000 கோடி உயிரி மருந்துத் திட்டத்தின் முக்கியத்துவம் என்ன? -ஜே. மங்கையர்க்கரசி

 நோய்களின் தன்மைகள் மாறிவரும் நிலையில், உயிரி மருந்துகள் (biologics), நிகர் உயிரிமருந்துகள் (biosimilars) மற்றும் ஒழுங்குமுறைத் தரங்களை மேம்படுத்துவதில் இந்த புதிய திட்டம் கவனம் செலுத்துகிறது.


இந்தியாவில் நாள்பட்ட நோய்களின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், அரசாங்கம் உயிரி மருந்துகளின் மேம்பாட்டில் தனது அதிக கவனத்தைத் திருப்பி வருகிறது. சமீபத்தில் நிறைவடைந்த நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ₹10,000 கோடி ஒதுக்கீட்டில் 'உயிரிமருந்து சக்தி திட்டம்' (Biopharma Shakthi) என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். இந்தியாவை ஒரு உலகளாவிய உயிரிமருந்து உற்பத்தி மையமாக உருவாக்குவதே இதன் நோக்கம் என்று நிதியமைச்சர் கூறினார்.


"இந்தியாவின் நோய்த் தாக்கமானது நீரிழிவு (diabetes), புற்றுநோய் (cancer) மற்றும் தன்னுடல் தாக்கக் கோளாறுகள் (autoimmune disorders) போன்ற தொற்றா நோய்களை நோக்கி மாறி வருவதாகக் காணப்படுகிறது. மலிவு விலையில் நீண்ட ஆயுளுக்கும் வாழ்க்கைத் தரத்திற்கும் உயிரி மருந்துகள் முக்கியம்," என்று நிதியமைச்சர் அறிவித்தார். மேலும், இந்த புதிய திட்டம் உயிரி மருந்துகளின் உள்நாட்டு உற்பத்திக்கு ஒரு சூழல் அமைப்பை உருவாக்க உதவும் என்றும் அவர் கூறினார்.


உயிரிமருந்து சக்தி திட்டம் (Biopharma Shakthi) என்றால் என்ன?


நிதியமைச்சர் அடுத்த 5 ஆண்டுகளில் ₹10,000 கோடி ஒதுக்கீட்டில் உயிரிமருந்து சக்தி (Biopharma Shakthi) திட்டமானது அறிவு, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் மூலம் சுகாதார மேம்பாட்டிற்கான உத்தியான திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.


இந்தத் திட்டத்தின் அம்சங்கள் என்ன?


உயிரிமருந்து சக்தி திட்டமானது உயிரி மருந்துகள் மற்றும் நிகர் உயிரிமருந்துகளின் உள்நாட்டு உற்பத்திக்கு ஒரு சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்மொழிவில், மூன்று புதிய தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை (National Institutes of Pharmaceutical Education and Research (NIPER)) உருவாக்குதல் மற்றும் தற்போதுள்ள 7 நிறுவனங்களை மேம்படுத்துதல் மூலம் உயிரி மருந்து சார்ந்த வலையமைப்பை உருவாக்குவதும் அடங்கும். இது இந்தியாவில் 1000-க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற மருத்துவப் பரிசோதனை மையங்களின் வலையமைப்பை உருவாக்கும். இந்த முன்மொழிவில், பிரத்யேக அறிவியல் ஆய்வுக் குழு மற்றும் நிபுணர்கள் மூலம் உலகத் தரநிலைகள் மற்றும் ஒப்புதல் காலக்கெடுவை பூர்த்தி செய்ய மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பை (Central Drugs Standard Control Organisation (CDSCO)) வலுப்படுத்துவதும் அடங்கும்.


உயிரிமருந்து சக்தி என்றால் என்ன?


உயிரிமருந்து அல்லது உயிரி மருந்துகள் (biopharmaceuticals) என்பது, மருந்துகளை வேதியியல் முறையில் தயாரிப்பதற்குப் பதிலாக, நுண்ணுயிரிகள் அல்லது பிற உயிருள்ள உயிரியல் அமைப்புகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் மருந்துகளைக் குறிக்கிறது. இவை மனித அல்லது விலங்கு செல்கள், பாக்டீரியா, பூஞ்சைகள் அல்லது சிகிச்சை அளிக்கும் பொருட்களை வளர்க்க அல்லது உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் ஒத்த உயிரியல் தளங்களில் இருந்து பெறப்படலாம். இவை உயிரியல் செயல்முறைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால், இந்த மருந்துகள் பெரும்பாலும் மிகவும் சிக்கலானவை மற்றும் வழக்கமான மருந்துப் பொருட்களைவிட நோய்களை மிகவும் துல்லியமாகக் குறிவைத்துத் தாக்கும் திறன் கொண்டவை.


தடுப்பூசிகள், எதிர்ப்பணு சிகிச்சைகள், இன்சுலின், மரபணு மற்றும் செல் சிகிச்சைகள், நிகர் உயிரிமருந்துகள் ஆகியவை உயிரி மருந்துகளுக்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும். தடுப்பூசிகள் மற்றும் புற்றுநோய் சிகிச்சைகள் முதல் நாள்பட்ட மற்றும் அரியவகை நோய்களுக்கான சிகிச்சைகள் வரை, உயிரிமருந்துப் பொருட்கள் நவீன சுகாதாரப் பராமரிப்பில் இன்றியமையாதவையாக மாறியுள்ளன.


உயிரிமருந்துத் துறையில் உள்ள மற்ற இதே போன்ற அரசு முன்முயற்சிகள் யாவை?


இந்தியா தனது உயிரிமருந்துச் சூழல் அமைப்பை வலுப்படுத்த கடந்த பத்தாண்டுகளில் பல முன்முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. 2017-ல் ₹1,500 கோடி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்ட தேசிய உயிரிமருந்துத் திட்டம் (National Biopharma Mission (NBM)), தடுப்பூசிகள், உயிரிசிகிச்சைகள், நோயறிதல் கருவிகள் மற்றும் மருத்துவ சாதனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. அதேநேரத்தில், தொழில்-கல்வி நிறுவன ஒத்துழைப்பை ஊக்குவிப்பது மற்றும் மலிவுத்தன்மையை மேம்படுத்துவது ஆகியவற்றையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு உலக வங்கி நிதியுதவி அளித்ததுடன், உயிரிதொழில்நுட்பத் துறையின் (Department of Biotechnology (DBT)) கீழ் உள்ள உயிரிதொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி மன்றத்தால் (Biotechnology Industry Research Assistance Council (BIRAC)) இது செயல்படுத்தப்பட்டது.


உயிரிதொழில்நுட்பத் துறையின் கீழ் 2012-ல் நிறுவப்பட்ட உயிரிதொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி மன்றம் (BIRAC), புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட மானியங்கள், அடைகாப்பு மையங்கள் (incubation centres) மற்றும் வழிகாட்டுதல் திட்டங்கள் மூலம் ஆரம்பக்கட்ட கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவளிக்கிறது. முக்கியத் திட்டங்களில் உயிரிதொழில்நுட்பத் தொடக்கநிலை மானியம் (ஆரம்பக்கட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க 18 மாதங்களுக்கு ₹50 லட்சம் வரை), SEED நிதி (கருத்துச் சான்று நிலை புத்தொழில் நிறுவனங்களுக்கு ₹30 லட்சம் பங்கு மூலதன ஆதரவு), LEAP நிதி (வணிகமயமாக்கலுக்குத் தயாராக உள்ள கண்டுபிடிப்புகளுக்கு ₹100 லட்சம் பங்கு மூலதன ஆதரவு), அம்ரித் பெரும் சவால் (இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் கவனம் செலுத்தி, செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், தொலைமருத்துவம் மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பங்களில் மின்னணு சுகாதார தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவளித்தல்) ஆகியவை அடங்கும்.


உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த, மருந்துப் பொருட்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (Production Linked Incentive (PLI)), மருந்துத் தொழிலை வலுப்படுத்தும் திட்டம் (Strengthening of Pharmaceutical Industry (SPI)) மற்றும் மொத்த மருந்துப் பூங்காக்கள் (Bulk Drug Parks) போன்ற திட்டங்கள் இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பதிலும் உற்பத்தி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகின்றன.


சமீபத்திய முன்முயற்சிகளில், மருந்து கண்டுபிடிப்பு, நிகர் உயிரிமருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கு ஆதரவளிக்கும் 2023-ல் அறிமுகப்படுத்தப்பட்ட PRIP திட்டம், மற்றும் உயிரி உற்பத்தி, தொழில்முனைவு மற்றும் உயிரிதொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் BioE3 கொள்கையுடன் கூடிய Bio-RIDE திட்டம் ஆகியவை அடங்கும்.


Original article : Biopharma Shakti explained: What the Budget’s ₹10,000-crore bio bet means -J Mangaiyarkarasi

Share:

பழங்கால இந்திய வரலாற்றில் பொது நிதி (Public finance) மற்றும் வரிகள் (taxes). -வேலே சிங்

 சிந்து சமவெளி நாகரிகத் தளங்களில் கிரேக்க-ரோமானிய வர்த்தகத்திலிருந்து பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது, வர்த்தக ஒப்பந்தங்கள் நவீன காலத்தின் உருவாக்கம் அல்ல என்பதைக் காட்டுகிறது.


மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வர்த்தகமும் வணிகமும் நாகரிகங்களின் உயிர்நாடியாக இருந்து வருகின்றன. மெசபடோமியா, எகிப்து, சீனா மற்றும் இந்தியா முழுவதும் இருந்த மிகப் பெரிய மற்றும் பழமையான சமூகங்கள் முன்னேறுவதற்கு உதவிய இயக்க அமைப்புகளில், வர்த்தகர்கள் பேரரசுகள் செயல்படுவதற்கும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கும் தேவையான ஒரு மசகு எண்ணெய் போல செயல்பட்டனர். சிந்து சமவெளி நாகரிகத் தளங்களில் கிரேக்க-ரோமானிய வர்த்தகத்திலிருந்து பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதும், மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் பிற இடங்களில் உள்ள சந்தைகள் மற்றும் வீடுகளில் இந்திய கலைப்பொருட்கள் இருப்பதும், வர்த்தக ஒப்பந்தங்கள் நவீன காலத்தின் உருவாக்கம் அல்ல என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், வர்த்தகம் ஒரு தொடர்ச்சியான நடைமுறையாக இருந்தாலும், இன்று நாம் அறிந்தபடி நிதிநிலை அறிக்கைத் திட்டங்களின் ஒரு அங்கமாக இருந்தாலும், 19-ம் நூற்றாண்டுக்கு முன்பு நவீன நிதிநிலை அறிக்கைத் திட்டம் போன்ற எதுவும் இருந்ததில்லை. குறைந்தபட்சம் இந்தியாவில், 1860-ம் ஆண்டில் ஜேம்ஸ் வில்சன் காலனித்துவ அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை சமர்ப்பிக்கும் வரை அது இருந்ததில்லை.


நிதிநிலை அறிக்கைத் திட்டங்களுக்குப் பெயரிடுதல்


ஒரு நிதிநிலை அறிக்கைத் திட்டத்தின் பட்ஜெட் (Budget) என்ற சொல்லானது, பல்ஜ்(bulge) அல்லது ஒரு பை(bag) என்ற சொல்லிலிருந்து வந்தது. இந்தச் சொல், எந்த நவீன அர்த்தத்திலும் உருவாக்கப்படவில்லை. இது பிரெஞ்சு வார்த்தையான 'பௌஜ்' (bouge) என்பதிலிருந்து வந்தது. அது லத்தீன் வார்த்தையான 'புல்கா' (bulga) என்பதிலிருந்து பெறப்பட்டது. அதுவே, செல்டிக் மொழியின் 'போல்க்' (bolg) என்பதிலிருந்து கடன் வாங்கப்பட்டது. இதன் பொருள், இந்த எல்லா வார்த்தைகளின் அர்த்தமும் ஒரு பை (bag) அல்லது மூட்டை (sack) என்பதாகும். இதே மூலச்சொல் 'பல்ஜ்' என்ற சொல்லுக்கும் வழிவகுத்தது மற்றும் 'பெல்லி' (வயிறு) உடன் நெருங்கிய தொடர்புடையது. இந்த எல்லா வார்த்தைகளும் உள்ளடக்கங்களை வைத்திருக்கும் அல்லது முழுவதும் நிரப்பும் என்ற ஒன்றைக் குறிக்கின்றன.


'பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை)' என்ற சொல் முதன்முதலில் 1733-ல் பயன்படுத்தப்பட்டது. அப்போது பிரிட்டிஷ் பிரதமர் ராபர்ட் வால்போல் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்தபோது அது பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், அடுத்த சுமார் 100 ஆண்டுகளுக்கு, நிதிநிலை அறிக்கைத் திட்டம் முக்கியமாக வருமான வரி அறிக்கையை மட்டுமே கொண்டிருந்தது. பிரெஞ்சு தளபதி நெப்போலியன் போனபார்ட் (1769-1821), நவீன நிதி அமைப்பு மற்றும் ஒரு மையப்படுத்தப்பட்ட பணவியல் அதிகாரத்தை உருவாக்குவதிலும் அவர் ஒரு பங்கு வகித்தார்.


இருப்பினும்கூட, ஜனநாயகங்கள் தோன்றுவதற்கு முன்பு, அது முடியாட்சியாக இருந்தாலும் சரி அல்லது சிலவர் ஆட்சியாக இருந்தாலும் சரி, மற்ற வகை ஆட்சிகளுக்கும் செலவினங்கள் மற்றும் வருமானங்களைக் கணக்கிடும் ஒரு அமைப்பு இருந்தது. பல்வேறு வகையான வரிகள் மற்றும் சுங்க வரிகள் மூலம் அரசுக்கு வருமானம் ஈட்டப்பட்டது. இந்த நிலை வருமானம் கருவூலத்தை நல்ல நிலையில் வைத்திருக்க உதவியது. 



பண்டைய இந்தியாவில் நிதிநிலை அறிக்கைத் திட்டம்


அர்த்தசாஸ்திரத்தின்படி (கி.மு.300 - கி.பி.300) வரி அடிப்படையிலான வருவாயின் முக்கியப் பிரிவுகளாக நில வருவாய் (வனப் பொருட்கள் மற்றும் தோட்டக்கலை உட்பட), சுங்க வரிகள், விற்பனை வரி, பல்வேறு வகையான சொத்து வரிகள், பலவிதமான குற்றங்களுக்கான அபராதங்கள் மற்றும் தண்டனைகள், வணிக நிறுவனங்களில் இருந்து வரும் லாபம் மற்றும் சுரங்கங்கள் மற்றும் பிற தொழில்களில் உள்ள அரசு ஏகபோகங்களிலிருந்து வரும் வருமானம் ஆகியவை ஈட்டப்பட்டது.


இருப்பினும், மன்னரும் அவரது அமைச்சர்களும் இராச்சியத்தின் அல்லது பேரரசின் நிதி ஆரோக்கியத்தை எவ்வாறு நிர்வகித்தார்கள் என்பது குறித்து அரசவைக்குள் ஒரு உள்-பொறுப்புணர்வு இருந்தது. உதாரணமாக, பௌத்த நூலான மகாவம்சம் மற்றும் விசாகதத்தரின் முத்ராராக்ஷசம் போன்ற இலக்கியப் படைப்புகளிலிருந்து பல குறிப்புகள் உள்ளன. இவை, தன நந்தனின் கொடுங்கோல் ஆட்சியை விவரிக்கின்றன. இந்தத் தவறான ஆட்சியே பிராமண ஆசிரியரான சாணக்கியருக்கு ஒரு கிளர்ச்சியைத் தூண்டி, சந்திரகுப்த மௌரியரை மகதத்தின் மன்னராக அரியணையில் அமர்த்தத் தேவையான சூழ்நிலைகளை வழங்கியது. தன நந்தன் தனது பேராசைக்காக அறியப்பட்டவன். மேலும், வரம்பு மீறியதாகக் கருதப்பட்ட ஆடம்பரமான நடத்தைக்காகவும் அவன் அறியப்பட்டான்.


ஆனால், கி.பி. 150-ம் ஆண்டில் மேற்கு சத்ரப மன்னன் முதலாம் ருத்ரதாமனின் கீழ் பொதுப்பணி மேம்பாட்டிற்கான நிதி நடத்தை குறித்து நாம் மிகவும் உறுதியான ஆதாரங்களைக் கொண்டுள்ளோம். குஜராத்தில் உள்ள இன்றைய ஜூனாகத்தில் இருக்கும் சுதர்சன ஏரியில், ஒரு அசாதாரணமான கல்வெட்டு உள்ளது. இந்தக் கல்வெட்டு, மனிதனால் உருவாக்கப்பட்ட அந்த ஏரியின் உருவாக்கம், பராமரிப்பு மற்றும் வீழ்ச்சி ஆகியவற்றை 500 ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்திற்குப் பதிவு செய்கிறது. இந்த ஏரி முதலில் மௌரியர் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் வந்த நூற்றாண்டுகளில் பயன்பாடின்றிப் போனது. முதலாம் ருத்ரதாமனின் ஆட்சிக்காலத்தில் அது கணிசமாகப் புதுப்பிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டு, பொதுப்பணிகளின் தொடர்ச்சியைப் பதிவு செய்கிறது என்பதற்காக மட்டுமல்லாமல், நிதிக் கண்ணோட்டத்தில் இருந்தும் முக்கியமானது. ஏனெனில், வழக்கமாகப் புதிய வரிகளை விதிப்பதன் மூலம் அல்லாமல், மன்னரின் சொந்த வருவாயிலிருந்தே ஏரி சீரமைக்கப்பட்டது என்பதை இது தெளிவாகக் கூறுகிறது. அந்தக் கல்வெட்டில் மேலும் குறிப்பிடுவதாவது, “மகாசத்ரப ருத்ரதாமன், தனது மதப் புண்ணியத்தையும் புகழையும் பெருக்கிக் கொள்ளும் பொருட்டு, நகர மற்றும் கிராமப்புற மக்களை வரிகள், கட்டாய உழைப்பு மற்றும் பிற வகையான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்காமல், தனது சொந்த கருவூலத்திலிருந்து பெரும் தொகையைச் செலவிட்டு, அதிக காலம் எடுக்காமல், அணையைக் குறுக்களவிலும் நீளத்திலும் மூன்று மடங்கு பலப்படுத்தினார். அவர் ஏரியின் அனைத்து கரைகளையும் பலப்படுத்தினார். இதன் விளைவாக, ஏரி பார்ப்பதற்கு இன்னும் அழகாக மாறியது.


துருஷ்க-தண்டம் : ககதவாலர்களால் விதிக்கப்பட்ட ஒரு மர்மமான வரி


மனுஸ்மிருதி (Manusmriti), யாக்ஞவல்கியஸ்மிருதி (Yajnavalkyasmriti) போன்ற தர்மசாஸ்திரங்கள், ஒரு இராஜ்ஜிய அரசின் செயல்பாடுகளுக்கு வருவாயை ஈட்டுவதற்கான ஒரு வழியாக வரிவிதிப்பை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி விரிவாகப் பேசுகின்றன. குறிப்பாக வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் மீதான வரி விகிதங்கள் தன்னிச்சையாக இல்லாமல், உண்மையான வருமானம் குறித்த துல்லியமான தரவுகளின் அடிப்படையில், ஒரு அறிவியல் பூர்வமான அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் அவை அறிவுறுத்துகின்றன.


பொதுப்பணிகள் அல்லது போர்ப் பிரச்சாரங்கள் மற்றும் அரசின் பிற ஒத்த தேவைகள் போன்ற சிறப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வரிகளை உயர்த்துவதையும் அவை அங்கீகரிக்கின்றன. இந்த சாஸ்திர அங்கீகாரம், 18-19-ஆம் நூற்றாண்டு போன்ற சமீப காலங்கள்வரைகூட, தற்காலிக மற்றும் ஒடுக்குமுறை காரணங்களுக்காக வரிகள் உயர்த்தப்படுவதற்கு வழிவகுத்தது. உதாரணமாக, 19-20-ஆம் நூற்றாண்டின் அவத் பகுதியில், பல நிலப்பிரபுக்கள் சட்டவிரோதமான காணிக்கைகள் மற்றும் ஏற்கனவே இருந்த வரிகளால் திருப்தி அடையவில்லை.  புதிய கார்கள், யானைகள், குதிரைகள் மற்றும் கிராமபோன்கள் வாங்குவது போன்ற பெயர்களில் கூடுதல் வரிகளை அடிக்கடி கோரினர். இதன் விளைவாக, விவசாயிகள் தாலுக்தார்களின் ஆசைகளை நிறைவேற்றும் வெறும் கருவிகளாகச் சுருக்கப்பட்டனர். இந்த நிலப்பிரபுக்கள் புனித நாட்கள் மற்றும் பண்டிகைகளின் பெயரிலும் வரிகளை வசூலித்தனர். ஒரு நிலப்பிரபு தனது தோட்டங்களைச் சுற்றிப் பார்க்கும்போது தூசி நிறைந்த சாலைகளில் பயணிக்க நேர்ந்ததற்காக 'தூசி வரி' (dust tax) வசூலித்த ஒரு நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது!


இது கன்னோஜ்-காசியின் ஒப்பீட்டளவில் குறுகியகாலம் ஆட்சி செய்த ககதவால வம்சத்தால் (கி.பி. 1080கள்-1220) 11-ம் நூற்றாண்டில் விதிக்கப்பட்ட ஒரு மர்மமான தண்டனை வரியாகும். அவர்களின் மன்னர்களுக்குச் சொந்தமான பல கல்வெட்டுகள், துருஷ்க-தண்டத்தை (Turushka-danda) ஒரு வரி வடிவமாகக் குறிப்பிடுகின்றன. அந்தக் கல்வெட்டுகளே பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடிகளைப் பதிவு செய்வதற்காக நிலத்தை வழங்கின. இந்த அறிவிப்புகளின் ஒரு பகுதியாக, அறிஞர்களைத் தொடர்ந்து குழப்பிவரும் இந்த வரியை அந்தக் கல்வெட்டுகள் பதிவு செய்கின்றன. இது கஸ்னவித் தாக்குதல்களிலிருந்து (Ghaznavid raids) இராச்சியத்தையும் அதன் முக்கிய நகரங்களையும் பாதுகாக்க ஒரு படையைத் திரட்டுவதற்காக விதிக்கப்பட்ட ஒரு வரி வடிவமா, அல்லது கஸ்னவித் படைகளுடனான போர்களில் பிடிக்கப்பட்ட கைதிகள்மீது விதிக்கப்பட்ட ஒரு தண்டனை வரியா? இதன் சரியான தன்மை குறித்து வரலாற்றாசிரியர்களும் அறிஞர்களும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பதால், இது இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. சிலர் இது ஒரு நறுமண நாணல் மீதான வரி என்றுகூட பரிந்துரைக்கின்றனர்! இருப்பினும், இந்த வரியைக் குறிப்பிடும் கடைசியாகப் பதிவுசெய்யப்பட்ட கல்வெட்டு, இந்த வம்சத்தின் முந்தைய ஆட்சியாளரான ஜெயச்சந்திர ககதவாலாவின் ஆட்சியின் போது கி.பி. 1168-ஆம் ஆண்டைச் சேர்ந்தது.


ஹிஸ்டோரிசிட்டி (HistoriCity) என்பது எழுத்தாளர் வலய் சிங் எழுதும் ஒரு பத்தியாகும். இது ஒரு நகரத்தின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு, புராணம் மற்றும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளுக்குச் சென்று, செய்திகளில் இடம்பெறும் ஒரு நகரத்தின் கதையை விவரிக்கிறது.


Original article : Public finance and taxes in early Indian history. -Valay Singh

Share:

மேகாலயாவில் 27 பேர் உயிரிழப்பு: எலிவளைச் சுரங்கத் தொழில் என்றால் என்ன? தடை இருந்தபோதிலும் அது தொடர்வது ஏன்?

 எலி வளைச் சுரங்கத் தொழில் (Rat-hole mining) என்பது குறுகிய, கிடைமட்ட நிலக்கரிப் படிவங்களிலிருந்து நிலக்கரியை வெட்டி எடுக்கும் ஒரு முறையாகும். இது தொழிலாளர்களுக்குப் பல பாதுகாப்பு அபாயங்களைக் கொண்டது. தடை இருந்தபோதிலும், இது இந்தியா முழுவதும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.


மேகாலயாவின் தாங்சோ பகுதியில் உள்ள ஒரு சட்டவிரோத எலி வளைச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து, சனிக்கிழமை நிலவரப்படி 27 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளுக்கு எதிராக அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.


தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டபடி, வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த வெடிவிபத்தைத் தொடர்ந்தே கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சுரங்கப் பாதைகளுக்குள் எத்தனை தொழிலாளர்கள் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மேலும், அப்பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


எலி வளைச் சுரங்கத் தொழில் என்பது, சுரங்கங்களில் உள்ள குறுகிய, சுரங்கப்பாதை போன்ற துளைகளுக்குள் தொழிலாளர்கள் ஊர்ந்து செல்வதால் அந்தப் பெயரைப் பெறுகிறது. இந்த நடைமுறை குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துகிறது. 2014-ல் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal (NGT)) இதைத் தடை செய்தும், ஒரு வருடம் கழித்து அந்தத் தடையை மீண்டும் உறுதிப்படுத்திய போதிலும், இந்த வேலை தொடர்கிறது. உண்மையில், 2023-ல் உத்தரகாண்டில் இடிந்து விழுந்த சில்கியாரா-பர்கோட் (Silkyara-Barkot tunnel) சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க, எலி வளைத் தொழிலாளர்களே பணியமர்த்தப்பட்டனர்.


எலி வளைச் சுரங்கத் தொழில் (rat-hole mining) என்றால் என்ன?


எலி வளைச் சுரங்கம் என்பது குறுகிய, கிடைமட்ட நிலக்கரிப் படிவங்களிலிருந்து நிலக்கரியைப் பிரித்தெடுக்கும் ஒரு முறையாகும். வடகிழக்கு இந்தியாவில் மிகப்பெரிய நிலக்கரி இருப்புக்களைக் கொண்ட மேகாலயாவில் இந்த முறை பரவலாகப் பின்பற்றப்படுகிறது. 'எலி வளை' என்ற சொல், நிலத்தில் தோண்டப்படும் குறுகிய குழிகளைக் குறிக்கிறது. இந்தக் குழிகள் பொதுவாக ஒரு நபர் உள்ளே இறங்கி நிலக்கரியை எடுப்பதற்குப் போதுமான அகலம் கொண்டதாக இருக்கும்.


குழிகள் தோண்டப்பட்டவுடன், சுரங்கத் தொழிலாளர்கள் கயிறுகள் அல்லது மூங்கில் ஏணிகளைப் பயன்படுத்தி நிலக்கரிகளை எடுக்க கீழே இறங்குகின்றனர். பின்னர், மண்வெட்டி, கடப்பாரை மற்றும் கூடைகள் போன்ற பழமையான கருவிகளைப் பயன்படுத்தி நிலக்கரிகள் கையால் வெட்டி எடுக்கப்படுகிறது.


ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகத்தின் (North Eastern Hill University (NEHU)) சுற்றுச்சூழல் ஆய்வுகள் பேராசிரியர் ஓ.பி. சிங், எலி வளைச் சுரங்க முறை பரவலாக இரண்டு வகைப்படும் என்று முன்னதாக The Indian Express நாளிதழிடம் தெரிவித்தார். பக்கவாட்டு சுரங்க முறையில், மலைச் சரிவுகளில் குறுகிய சுரங்கங்கள் தோண்டப்பட்டு, தொழிலாளர்கள் நிலக்கரிப் படுக்கையைக் கண்டுபிடிக்கும் வரை உள்ளே செல்கின்றனர். மேகாலயாவின் மலைப்பகுதிகளில் உள்ள நிலக்கரிப் படிவம் மிகவும் மெல்லியதாக உள்ளது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது 2 மீட்டருக்கும் குறைவாகவே இருக்கிறது என்று அவர் கூறினார்.


மற்றொரு வகை எலி வளைச் சுரங்க முறையான பெட்டி வடிவ தோண்டுதல் (box-cutting) முறையில், 10 முதல் 100 சதுர மீட்டர் வரை பரப்பளவு கொண்ட ஒரு செவ்வகத் திறப்பு (vertical pit is dug) உருவாக்கப்பட்டு, அதன் வழியாக 100 முதல் 400 அடி ஆழத்திற்கு ஒரு செங்குத்துக் குழி தோண்டப்படுகிறது. நிலக்கரிப் படுக்கை கண்டுபிடிக்கப்பட்டதும், எலி வளை அளவுள்ள சுரங்கங்கள் கிடைமட்டமாகத் தோண்டப்படுகின்றன. அதன் வழியாகத் தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுக்கின்றனர்.


ஜார்க்கண்டில் உள்ள எலி வளைச் சுரங்கத் தொழிலாளி பர்சதி லோதி, சில்கியாராவில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம், தான் டெல்லி மற்றும் அகமதாபாத்தில் 10 ஆண்டுகளாக இந்த வேலையில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார். நாங்கள் பயப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. இது 800 மி.மீ அகலமுள்ள குழாய், 600 மி.மீ அளவுள்ள துளைகளிலேயே வேலை செய்திருக்கிறோம் என்று அவர் கூறினார்.


எலி வளைச் சுரங்கம் தோண்டுவது சட்டவிரோதமானதா?


தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) 2014-ல் இந்த நடைமுறைக்குத் தடை விதித்து, 2015-லும் அந்தத் தடையைத் தொடர்ந்தது. அது, “எலி வளைச் சுரங்கத்தின் காரணமாக, மழைக்காலத்தில் சுரங்கப் பகுதிகளில் வெள்ளம் புகுந்து, ஊழியர்கள்/தொழிலாளர்கள் உட்பட பல தனிநபர்கள் உயிரிழந்த பல வழக்குகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டது.


குறிப்பாக, இந்த உத்தரவு மேகாலயா தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்டது. அங்கு நிலக்கரிச் சுரங்கத்தில் இது ஒரு பரவலான நடைமுறையாக இருந்தது. பின்னர் மாநில அரசு இந்த உத்தரவை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. எலி வளைச் சுரங்கச் சம்பவங்கள் குறித்த மத்திய தரவுத்தளம் எதுவும் இல்லாத நிலையில், மேகாலயா காவல்துறைப் பதிவுகளின்படி, ஏப்ரல் 2014 மற்றும் நவம்பர் 2018-க்கு இடையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறியதால் காரணமாக 477 சம்பவங்கள் நடந்துள்ளன.


எலி வளைச் சுரங்கம் பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளின் காரணமாக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்தச் சுரங்கங்கள் ஒழுங்குபடுத்தப்படாதவை; முறையான காற்றோட்டம், கட்டமைப்பு ஆதரவு அல்லது தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் இதில் இல்லை. மேலும், இந்தச் சுரங்க செயல்முறை நிலச் சீரழிவு, காடழிப்பு மற்றும் நீர் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடும்.


பல உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டபோதிலும், அத்தகைய நடைமுறைகளைக் கட்டுப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ அதிகாரிகள் சில முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், இந்த வேலைகள் தொடர்கின்றன. தாங்சோ சம்பவத்திற்கு முன்பு, ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு எலி வளைச் சுரங்கத்தில் பல தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். சுரங்கத்தில் வெள்ளம் ஏற்பட்டதால் ஒன்பது தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 2018-ஆம் ஆண்டிலும், மேகாலயாவில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் இரண்டு வாரங்களாகச் சிக்கிக்கொண்ட 15 எலி வளைச் சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர்.


இந்தச் சுரங்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு என்ன காரணம்? உள்ளூர் மக்களுக்குப் பொருளாதார வாய்ப்புகள் இல்லாததே ஒரு முக்கிய காரணியாகும். இது அவர்களை இதுபோன்ற வேலைகளைச் செய்யத் தூண்டுகிறது. அசாம் சம்பவத்திற்குப் பிறகு 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஒரு தலையங்கத்தில் எழுதியது போல, "வடகிழக்கு மாநிலங்களில், நிலக்கரிப் படிவங்கள் மெல்லியதாக இருப்பதாலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) மற்றும் பிற அரசுத் திட்டங்களைவிட எலி வளைச் சுரங்கத் தொழில் அதிக ஊதியத்தை வழங்குவதாலும், இந்த சட்டவிரோத செயல்பாடு தங்குதடையின்றி நடைபெறுகிறது. அதிகாரத்தின் கூட்டணி இதைப் புறக்கணிக்கும்போது இது போன்ற சம்பவங்கள் நிகழ்கிறது."


"தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எழுத்துப்பூர்வமாகவும், உண்மையான நோக்கத்துடனும் செயல்படுத்துவதற்கு, இந்தப் பிரச்சனையை அங்கீகரிப்பதும், அதைத் தீர்ப்பதற்கான அரசியல் நடவடிக்கைகளும் தேவைப்படுகிறது" என்று குறிப்பிட்டது.


Original article : 27 die in Meghalaya: What is rat-hole mining, why it continues despite ban

Share:

பிரதமர் அலுவலகம், PM CARES மற்றும் இரண்டு பிற நிதிகள் குறித்த கேள்விகள் மக்களவையில் அனுமதிக்கப்படாது என்று கூறுகிறது: அதற்காக கூறப்பட்ட காரணங்கள் -அசத் ரஹ்மான்

 பிரதமரின் நிவாரண நிதி மற்றும் வேறு இரண்டு நிதிகள் தொடர்பான கேள்விகளும் விவகாரங்களும் மக்களவையின் செயல்முறை மற்றும் நடத்தை விதிகள்கீழ் விவாதிக்க அனுமதிக்கப்படாது என்று பிரதமர் அலுவலகம் மக்களவை செயலகத்திடம் தெரிவித்துள்ளது. அதற்கான காரணம் இங்கே.


பிரதமரின் நிவாரண நிதி (PM Cares), பிரதமரின் தேசிய நிவாரண நிதி (Prime Minister’s National Relief Fund (PMNRF)) மற்றும் தேசிய பாதுகாப்பு நிதி (National Defence Fund (NDF)) தொடர்பான நாடாளுமன்றக் கேள்விகளும் விவகாரங்களும், மக்களவையின் அலுவல் நடத்தை தொடர்பான (conduct of business in Lok Sabha) விதிகளின்கீழ் அனுமதிக்கப்படாது என்று பிரதமர் அலுவலகம் மக்களவைச் செயலகத்திடம் தெரிவித்துள்ளது என The Indian Express நாளிதழ் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது.


ஜனவரி 30 அன்று, மக்களவை நடைமுறை மற்றும் நடத்தை விதிகள் 41(2)(viii) மற்றும் 41(2)(xvii) ஆகியவற்றின் கீழ், அந்த மூன்று நிதிகள் தொடர்பான கேள்விகளும் விவகாரங்களும் விவாதிக்க அனுமதிக்கப்படாது என்று பிரதமர் அலுவலகம் மக்களவைச் செயலகத்திடம் தெரிவித்ததாகத் தெரிய வந்துள்ளது.


பிரதமரின் தேசிய நிவாரண நிதி (Prime Minister’s National Relief Fund (PMNRF)) மற்றும் மற்ற இரண்டு நிதிகள் என்றால் என்ன?


கோவிட்-19 நோய்த்தொற்று பரவலைத் தொடர்ந்து, பிரதமரின் தேசிய நிவாரண நிதி மார்ச் 27, 2020 அன்று அமைக்கப்பட்டது. "கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டதைப் போன்ற எந்தவொரு அவசர அல்லது நெருக்கடி நிலையையும் எதிர்கொள்வதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்ட ஒரு பிரத்யேக நிதியின் தேவை கருதி, 'பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி (Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund (PM CARES Fund)) என்ற பெயரில் ஒரு பொது அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது என்று PMCares நிதியின் அதிகாரப்பூர்வ இணையதளம் கூறுகிறது.


இந்த நிதி ஒரு பொது தொண்டு அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டதுடன், அதன் அறக்கட்டளைப் பத்திரம் 2020-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி புது டெல்லியில் 1908-ஆம் ஆண்டு பதிவுச் (Registration Act) சட்டத்தின்கீழ் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது.


பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கடைசியாக வெளியிடப்பட்ட 2022-23-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுக் கணக்கு அறிக்கையின்படி, மார்ச் 2023 இறுதி நிலவரப்படி மொத்த இருப்பு ரூ. 6,283.7 கோடியாக இருந்தது.


பிரதமர் அலுவலகத்தின் ஜனவரி 30, 2026 தேதியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற இரண்டு நிதிகளும் பிரதமர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. 


பிரதமரின் தேசிய நிவாரண நிதி (Prime Minister’s National Relief Fund (PMNRF)) ஜனவரி 1948-ல் பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவுவதற்காகப் பொதுமக்களின் பங்களிப்புகளுடன் நிறுவப்பட்டது. இதன் நிதி ஆதாரங்கள் தற்போது வெள்ளம், புயல் மற்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், விபத்துகள் மற்றும் கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உடனடி உதவி வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.


தேசிய பாதுகாப்பு நிதி (National Defence Fund (NDF)) என்பது ஆயுதப் படைகள் மற்றும் துணை ராணுவப் படைகளின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிதியானது, அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, பிரதமரைத் தலைவராகவும், பாதுகாப்பு, நிதி மற்றும் உள்துறை அமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு செயற்குழுவால் கையாளப்படுகிறது.


கடந்த காலத்தில் பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி (Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund (PM CARES Fund)) குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?


ஜனவரி 2023-ல், PM CARES நிதி ஒரு பொது தொண்டு அறக்கட்டளையாக அமைக்கப்பட்டுள்ளது என்றும், அது அரசியலமைப்பின் கீழோ அல்லது நாடாளுமன்றம் அல்லது மாநிலத்தால் இயற்றப்பட்ட எந்தவொரு சட்டத்தின் கீழோ உருவாக்கப்படவில்லை என்று ஒன்றிய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்த நிதியின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, அரசியலமைப்பின் 12-வது பிரிவின் கீழ் அந்த நிதியை ஒரு 'அரசு அமைப்பு' (state) என அறிவிக்கக் கோரிய ஒரு மனு மீதான விசாரணையின்போது ஒன்றிய அரசு இந்தத் தகவலைத் தெரிவித்தது.


ஒன்றிய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில், அந்த அறக்கட்டளை எந்தவொரு அரசாங்கத்தாலோ அல்லது அரசாங்கத்தின் எந்தவொரு அமைப்பாலோ சொந்தமாகவோ அல்லது கட்டுப்படுத்தப்படுவதற்கோ  அமைக்கப்படவில்லை என்றும், பொதுப் பதவிகளை வகிப்பவர்களைக் கொண்ட அறங்காவலர் குழுவின் அமைப்பு (board of trustees) என்பது நிர்வாக வசதிக்காக மட்டுமே அமைக்கப்படுகிறது என்றும் கூறியிருந்தது.


மேலும், அந்த அறக்கட்டளை சட்டம் அல்லது அரசியலமைப்பின்கீழ் உருவாக்கப்படாததால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளின்கீழ் PM CARES நிதி ஒரு பொது அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்க முடியாது என்றும் அந்தப் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.


PM CARES நிதி குறித்த உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புகள் என்ன?


ஆகஸ்ட் 18, 2020 அன்று, உச்ச நீதிமன்றம், PM CARES நிதியிலிருந்து தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு (National Disaster Response Fund (NDRF)) நிதியை மாற்றுமாறு உத்தரவிட மறுத்துவிட்டது. ஏனெனில், அவை "வெவ்வேறு நோக்கங்களையும் குறிக்கோள்களையும் கொண்ட முற்றிலும் இரண்டு வேறுபட்ட நிதிகள்" என்றும், அத்தகைய ஒரு உத்தரவுக்கு "எந்த ஒரு முகாந்திரமும் இல்லை" என்றும் நீதிமன்றம் கூறியது.


தேசிய பேரிடர் நிவாரண நிதியை இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (Comptroller & Auditor General of India (CAG)) தணிக்கை செய்வதற்கு வழிகாட்டுதல்கள் வழிவகை செய்கின்றன. ஆனால், PM CARES நிதி ஒரு பொது அறக்கட்டளை என்பதால், அத்தகைய தணிக்கைக்கு "எந்த ஒரு முகாந்திரமும் இல்லை" என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.


பொது நல வழக்கு மையம் (Centre for Public Interest Litigation (CPIL)) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த ஒரு நீதிப்பேராணை மனுவை (writ petition) தள்ளுபடி செய்த நீதிமன்றம், “PM CARES நிதியில் திரட்டப்பட்ட நிதிகள் முற்றிலும் வேறுபட்ட நிதிகள் ஆகும். அவை ஒரு பொது தொண்டு அறக்கட்டளையின் நிதிகள் மட்டுமே. எனவே, அந்த நிதிகளை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு (NDRF) மாற்றுமாறு எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியிருந்தது.


அந்த மூன்று நிதிகள் குறித்த கேள்விகளையும் விவாதங்களையும் அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமர் அலுவலகம் ஏன் மக்களவைச் செயலகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது?


மக்களவையில் கேள்விகளும் விவகாரங்களும் அனுமதிக்கப்படாததற்கான பிரதமரின் அலுவலகம் அளித்த காரணம், இந்த நிதிகளின் மூலதனம் இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து (Consolidated Fund of India) எந்தவொரு ஒதுக்கீட்டிலிருந்தும் அல்லாமல், முற்றிலும் பொதுமக்களின் பங்களிப்பால் உருவாக்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது. இந்த விளக்கம், ஒன்றிய அரசு இதற்கு முன்னர் நீதிமன்றங்களில் தெரிவித்த விளக்கத்தைப் போன்றே உள்ளது.


கேள்விகளை அனுமதிக்க வேண்டாம் என்று மக்களவைச் செயலகத்திடம் கேட்கும்போது, ​​பிரதமர் அலுவலகம் எந்த விதிகளை மேற்கோள் காட்டியது?


பிரதமர் அலுவலகம் மக்களவைச் செயலகத்திடம், அந்த மூன்று நிதிகள் தொடர்பான கேள்விகளும் விவகாரங்களும், மக்களவையின் நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகள் 41(2)(viii) மற்றும் 41(2)(xvii) ஆகியவற்றின் கீழ் விவாதம் நடத்த அனுமதி வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.


மக்களவையில் கேள்விகள் கேட்பதற்கான உரிமையை நிர்வகிக்கும் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளின்கீழ், விதி 41(2) (viii), “முக்கியாக இந்திய அரசாங்கத்தின் பொறுப்பில் இல்லாத ஒரு விவகாரம் தொடர்பாக இருக்கக்கூடாது” என்று கூறுகிறது. விதி 41(2) (xvii) “முக்கியாக இந்திய அரசாங்கத்திற்குப் பொறுப்பில்லாத அமைப்புகள் அல்லது நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விவகாரங்களை பற்றி கேள்வி எழுப்பக்கூடாது” என்று கூறுகிறது.


Original article : PMO says no question on PM CARES, two other funds admissible in Lok Sabha: Reasons it gave. -Asad Rehman

Share:

வெளிநாட்டு விவாகரத்து நடைமுறைகளை இந்திய நீதிமன்றங்கள் தடுத்து நிறுத்த முடியுமா? உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு மனு இந்த முக்கியமான கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. -அமால் ஷேக்

 ஒரு சட்டத் திட்டத்தின்கீழ் நடந்த திருமணம், தம்பதியினருடன் சேர்ந்து மற்றொரு நாட்டிற்குச் செல்லும்போது இது போன்ற சிக்கல்கள் வெளிப்படுகின்றன. வெளிநாட்டில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பு அந்த நாட்டில் திருமண நிலையைத் தீர்மானிக்கலாம்; ஆனால் அது இந்தியாவில் அங்கீகரிக்கப்படுமா என்பது, அந்தத் திருமணத்தைக் கட்டுப்படுத்தும் சட்டம் மற்றும் அந்தத் தீர்ப்பை வழங்கிய வெளிநாட்டு நீதிமன்றத்தின் அதிகாரம் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும் என்கின்றனர். 


அமெரிக்காவின் ரோட் தீவில் (Rhode Island) தொடங்கப்பட்ட விவாகரத்து நடைமுறைகளை நிறுத்தக் கோரி ஒரு பெண் உச்சநீதிமன்றத்தில் பேராணை மனு (Writ Petition) தாக்கல் செய்துள்ளார். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் திருமணங்களில் இந்த வழக்கு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. ஒரு திருமணம் இந்திய கிறிஸ்தவ சட்டத்தின்கீழ் நடந்திருந்தால், கணவன் அல்லது மனைவி வெளிநாட்டில் விவாகரத்து கோருவதை இந்திய நீதிமன்றத்தால் தடுக்க முடியுமா என்கிற முக்கியச் சிக்கல் எழுந்துள்ளது.


அவர் மனுவில், அந்தப் பெண் இந்த நடவடிக்கையை “கடுமையான சர்வதேச திருமண துன்புறுத்தல், மன்றத் தேர்வு (forum shopping), கட்டாயப்படுத்தும் வெளிநாட்டு விவாகரத்து நடவடிக்கைகள் மற்றும் ஒரு இந்தியப் பெண்ணின் அடிப்படை உரிமைகளை மீறுதல்” என்று குறிப்பிடுகிறார்.


இந்தத் திருமணம் இந்தியக் கிறிஸ்தவ முறைப்படி நடத்தப்பட்டு, பின்னர் தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் 2009-ன்கீழ் (Tamil Nadu Registration of Marriages Act, 2009) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இன்னும் இந்தியாவிலேயே வசிப்பதாகவும், இந்தத் திருமணம் இந்திய விவாகரத்துச் சட்டம் 1869-ன்கீழ் வருவதாகவும் அந்தப் பெண் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


இந்த மனுவின்படி, மனைவியின் சம்மதம் இல்லாமலும், அந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு அவர் உட்படாத நிலையிலும், கணவர் அக்டோபர் மாதம்  2025-ஆம் ஆண்டில் விவாகரத்து நடைமுறைகளைத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 


வெளிநாட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை "அதிகார வரம்பற்றது, ஒடுக்குமுறை நிறைந்தது மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது" என்று அந்தப் பெண் விவரிக்கிறார். மேலும், அந்த நடவடிக்கைகள் தன்னை "மிரட்டிப் பணம் பறிக்கவும், கட்டாயப்படுத்தவும் மற்றும் பொருளாதாரரீதியாகத் துன்புறுத்தவும்" பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


இந்திய சட்டத்தின்படி வெளிநாட்டு நீதிமன்றங்களுக்கு இந்த விவகாரத்தில் அதிகார வரம்பு இல்லை என்றும், தனக்கு அங்கு தீர்வு கிடைக்காது என்றும், இந்த வழக்கிற்கான அடிப்படை இந்தியாவிலேயே தொடர்வதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


இத்தகைய சூழல்கள், ஒரு சட்ட முறைமையின்கீழ் நடந்த திருமணம், பின்னாளில் தம்பதியினர் வேறொரு நாட்டில் குடிபெயர்ந்து வாழும்போது உருவாகின்றன. வெளிநாட்டில் பெறப்பட்ட விவாகரத்து அந்த நாட்டில் திருமண நிலையை முடிவு செய்யலாம், ஆனால் இந்தியாவில் அதன் அங்கீகாரம் என்பது அந்த திருமணத்திற்கு பொருந்தும் சட்டம் மற்றும் அந்த வெளிநாட்டு நீதிமன்றத்திற்கு உரிய அதிகாரம் இருந்ததா என்பதைப் பொறுத்தே அமையும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. 


ஒய். நரசிம்ம ராவ் vs ஒய். வெங்கட லட்சுமி (1991) (Y. Narasimha Rao vs Y. Venkata Lakshmi (1991)) என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் இது குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளது. திருமணத் தகராறுகளைத் தீர்க்கும் அதிகாரம், சம்பந்தப்பட்ட நபர்களின் தனிநபர் சட்டம் மற்றும் அவர்கள் வசிக்கும் இடத்தின்  அடிப்படையில் அமைந்த நீதிமன்றங்களுக்கே உண்டு என்று நீதிமன்றம் கூறியுள்ளது.


வெளிநாட்டில் விவாகரத்து கோருவது இந்திய திருமணச் சட்டத்தைப் புறக்கணிக்கும் ஒரு முயற்சியாகும் என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


வெளிநாட்டு நீதிமன்றத் தீர்ப்புகளை அங்கீகரிப்பதைக் கட்டுப்படுத்தும் விதிகள் யாவை?


இந்தியாவில் வெளிநாட்டுத் தீர்ப்புகளை அமல்படுத்துவது உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. சட்டப்பிரிவு 13-ன்படி, ஒரு வெளிநாட்டுத் தீர்ப்பு, அந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லாதபோதோ, இந்தியச் சட்டத்தை மீறும் வகையிலோ அல்லது மோசடி மூலம் பெறப்பட்டிருந்தாலோ, அது இறுதியானதாகக் கருதப்படாது. சட்டப்பிரிவு 14-ன்படி, ஒரு வெளிநாட்டுத் தீர்ப்பை வழங்கிய நீதிமன்றத்திற்கு உரிய அதிகாரம் இருந்ததாகவே இந்திய நீதிமன்றங்கள் கருதும்; ஆனால், அதற்கு எதிரான ஆதாரங்கள் இருந்தால் அதை மாற்றியமைக்கலாம். சட்டப்பிரிவு 44A-ன்படி, இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளின் தீர்ப்புகளை இந்தியாவில் அமல்படுத்த முடியும் என்றும் ஆனால், அத்தீர்ப்புகள் சட்டப்பிரிவு 13-ல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்றும் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.


கிறிஸ்தவ திருமணங்களைப் பொறுத்தவரை, சட்டமானது திருமணச் சடங்கு மற்றும் திருமண ரத்து ஆகிய இரண்டையும் தனித்தனியாகப் பிரிக்கிறது. இந்தச் சட்டப்பிரிவு 88-ன் படி, தம்பதியரில் யாரேனும் ஒருவருடைய தனிப்பட்ட மதம் சார்ந்த சட்டம் ஒரு திருமணத்தைத் தடை செய்தால், இந்தச் சட்டத்திலுள்ள எந்த ஒரு விதியும் அந்தத் திருமணத்தைச் செல்லுபடியாக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றனர். 


இதன் பொருள் என்னவென்றால், திருமண நிலையைவிட தனிநபர் சட்டத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஒரு திருமணம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை அந்தந்த சட்டப்பிரிவுகள் தீர்மானிக்கின்றன. ஆனால், அந்தத் திருமணத்தை எந்த அடிப்படையில் ரத்து செய்யலாம் அல்லது விவாகரத்து வழங்கலாம் என்பதை விவாகரத்துச் சட்டம் (Divorce Act) தீர்மானிக்கிறது.


இந்திய நீதிமன்றங்களும் வெளிநாட்டு நடவடிக்கைகளும்


இந்திய நீதிமன்றங்கள், "வழக்குத் தொடர்வதைத் தடுக்கும் தடை உத்தரவுகள்" (Anti-suit injunctions) எனப்படும் உத்தரவுகள் மூலம், வெளிநாட்டு நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகளை நிறுத்தி வைக்க அதிகாரம் கொண்டுள்ளன. குறிப்பாக, திருமணங்கள் இந்தியத் தனிநபர் சட்டத்தின்கீழ் வரும்போது, கணவன் அல்லது மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் வெளிநாட்டு நீதிமன்றத்தை நாடினால், அதைத் தடுக்க இத்தகைய உத்தரவுகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.


மோடி என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் vs டபிள்யூஎஸ்ஜி கிரிக்கெட் (Modi Entertainment Network vs WSG Cricket) வழக்கில் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் விதிகளை வகுத்துள்ளது. அத்தகைய நிவாரணம் (தடை ஆணை) நீதிமன்றத்தின் விருப்பத்திற்குட்பட்டது என்றும், அதை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு தரப்பினரைத் தடுப்பதற்கு முன், அந்த நபர் தனது அதிகார வரம்பிற்குள் உட்பட்டிருப்பதை நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும். மேலும், இந்தத் தடையை விதிக்க மறுத்தால் அது நீதிக்குக் கேடு விளைவிக்கும் என்பதையும் நீதிமன்றம் கவனிக்க வேண்டும். நீதிமன்றங்கள் 'Comity' எனப்படும் சர்வதேச நீதிமன்றங்களுக்கு இடையிலான பரஸ்பர மரியாதையையும் கருத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், வெளிநாட்டு வழக்கு ஒருவரைத் துன்புறுத்தும் விதமாகவோ அல்லது தேவையற்றதாகவோ இருந்தால், இந்திய நீதிமன்றங்கள் தலையிடலாம் என்றும் கூறப்படுகிறது. 


இந்தக் கருத்தை விவேக் ராய் குப்தா vs நியதி குப்தா (Vivek Rai Gupta v. Niyati Gupta) என்ற வழக்கில் நீதிமன்றம் விளக்கிக் கூறியது. உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடையாக அந்த வழக்கை மேற்கொண்டு தொடர வேண்டாம் என்று உத்தரவிட்டிருந்த போதிலும், மனைவி அமெரிக்காவின் ஓஹியோ (Ohio) நீதிமன்றத்தில் விவாகரத்து மற்றும் பராமரிப்புத் தொகைப் பெற்றுக்கொண்டார். இதனை வேண்டுமென்றே செய்யப்பட்ட நீதிமன்ற உத்தரவு மீறல் என்று குறிப்பிட்ட இந்திய நீதிமன்றம், அந்த வெளிநாட்டுத் தீர்ப்பை இந்தியாவில் அமல்படுத்த அனைத்து இந்திய நீதிமன்றங்களுக்கும் தடை விதித்தது. இது வெளிநாட்டில் வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யவில்லை; ஆனால், அந்த உத்தரவின் மூலம் இந்தியாவில் உள்ள சட்டப்பூர்வ உரிமைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை உறுதி செய்தது.


ஒரு வெளிநாட்டு நீதிமன்றத் தீர்ப்பு இந்தியாவில் அமல்படுத்தப்படும்போது, அதனால் பாதிக்கப்படும் தரப்பினர் அதை எதிர்க்கும் உரிமையைப் பெற்றுள்ளனர். இந்திய நீதிமன்றம் ஏற்கனவே தடையுத்தரவு பிறப்பித்த பிறகு அந்த வெளிநாட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால், அது ‘இந்தியாவில் செல்லாது’ என்று அந்த நபர் வாதிடலாம் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அத்தகைய சூழலில், அந்த ஆட்சேபனையை ஆய்வு செய்து, ஏற்கனவே உள்ள தடையுத்தரவின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு சட்டப்படி முடிவெடுப்பது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் கடமையாகக் கருதப்படுகிறது. 


இருப்பினும், இந்த அதிகாரத்திற்கு சில எல்லைகள் உள்ளன. ஒரு தீர்ப்பு எந்த நாட்டில் வழங்கப்பட்டதோ, அந்த நாட்டில் அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதையோ அல்லது அங்குள்ள சொத்துக்கள் விற்கப்படுவதைத் தடுப்பதையோ இந்திய நீதிமன்றங்களால் கட்டுப்படுத்த முடியாது. இந்திய நீதிமன்றங்களின் அதிகாரம் அந்த நபர் மீதானது மட்டுமே. எனவே, இந்திய நீதிமன்றத்தின் உத்தரவை மீறி வெளிநாட்டில் ஒரு தீர்ப்பு பெறப்பட்டிருந்தால், அந்தத் தீர்ப்பின் மூலம் கிடைக்கும் பலன்களை அந்த நபர் இந்தியாவில் அனுபவிப்பதை மட்டுமே இந்திய நீதிமன்றங்களால் தடுக்க முடியும் என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர். 


இத்தகைய வெளிநாட்டுத் தீர்ப்புகளை அங்கீகரிக்க அல்லது நடைமுறைப்படுத்த மறுப்பது, நேர்மை மற்றும் நீதியின் அடிப்படையிலானது. இந்திய நீதிமன்றத்தின் தடையுத்தரவை மதிக்காமல், வேறொரு நாட்டில் நிவாரணம் பெறுபவர், இந்திய நீதிமன்றங்களின் உதவியை நாடும் உரிமையை இழக்கக்கூடும் என்று நீதிமன்றங்கள் கூறியுள்ளன. எனவே, ஒரு வெளிநாட்டுத் தீர்ப்பு அந்த நாட்டில் செல்லுபடியாகும் என்றாலும் அது இந்திய நீதிமன்றத்தின் உத்தரவை மீறிப் பெறப்பட்டிருந்தால், இந்தியாவில் அதை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது. 


Original article : Can Indian courts stop divorce proceedings abroad? A plea in top court raises a recurring question. -Amaal Sheikh

Share:

குனால் கம்ரா, சஹ்யோக் வலைதளம் (Sahyog Portal) மற்றும் திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக ஏன் மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகினார்? - ஓம்கார் கோகலே

 சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல், ஆயிரக்கணக்கான மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளுக்கு சமூக வலைதளப் பதிவுகளை நீக்கும் மற்றும் முடக்கும் அதிகாரத்தை ‘சஹ்யோக் வலைதளம்’ சட்டவிரோதமாக வழங்கியுள்ளதாக மனுதாரர்கள் குணால் கம்ரா மற்றும் ஹரேஷ் ஜக்தியானி குற்றம் சாட்டியுள்ளனர்.


கடந்த வெள்ளிக்கிழமையன்று, நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா மற்றும் மூத்த வழக்கறிஞர் ஹரேஷ் ஜக்டியானி ஆகியோர் மும்பைவ உயர்நீதிமன்றத்தை அணுகினர். இந்தியாவின் விரிவடைந்து வரும் இணைய தணிக்கை முறையில்  ஒரு முக்கிய கருவியாக மாறியுள்ள, சர்ச்சைக்குரிய 'சஹ்யோக் வலைதளத்தை' எதிர்த்து அவர்கள் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர்.


சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் பிற இணையதள இடைத்தரகர்கள், அத்தகைய தவறான தகவல்களை 36 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் தகவல் தொழில்நுட்ப விதிகளின் திருத்தத்தையும் அவர்கள் எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.


உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கை மார்ச் மாதம் 16-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. 


சஹ்யோக் வலைத்தளம் எவ்வாறு செயல்படுகிறது, திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகள் எதை வலியுறுத்துகின்றன, மற்றும் இவை இரண்டிற்கும் எதிராக எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் என்ன என்று விவரிக்கப்பட்டுள்ளது. 



சஹ்யோக் வலைத்தளம்  என்றால் என்ன?


மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து உருவாக்கிய சஹ்யோக் வலைத்தளம், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன்கீழ் (Information Technology (IT Act, 2000)) இணையதளங்களில் உள்ள "ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை" விரைவாக முடக்குவதற்காக 2024-ஆம் ஆண்டில்  தொடங்கப்பட்டது.


இந்த வலைத்தளம், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து இடைநிலை அமைப்புகளையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம், சட்டவிரோதமான இணையதளத் தகவல்கள்மீது விரைவாகவும் தானியங்கி முறையிலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்கின்றனர். 


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (Right To Information Act (RTI)) தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பெற்ற தரவுகளின்படி, அக்டோபர் மாதம் 2024-ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதம் 2025-ஆம் ஆண்டு வரை வாட்ஸ்அப், பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 19 இணையதள நிறுவனங்களுக்கு, இந்த வலைத்தளம் மூலமாக 2,300-க்கும் மேற்பட்ட தடுப்பு உத்தரவுகள் அனுப்பப்பட்டுள்ளதாகத்  தெரியவந்துள்ளது.


சுமார் 118-க்கும் மேற்பட்ட இடைநிலை அமைப்புகள் 'சஹ்யோக்' வலைத்தள அமைப்பில் இணைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், அரசாங்கத்தின் உள்ளடக்க நீக்க உத்தரவுகளை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் அதிகளவிலான இணையதளங்கள்/தளங்கள் இருப்பது தெரியவருகிறது. இந்த முடக்க உத்தரவுகள் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அமைப்புகளால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.


சஹ்யோக் வலைத்தளம் சட்டச் சிக்கல்களைச் சந்திப்பது இது முதல் முறையல்ல என்றும் கூறப்படுகிறது. 


முன்பு டிவிட்டர் (Twitter) என்று அழைக்கப்பட்ட எக்ஸ் (X) சமூக ஊடகத் தளம், அந்த வலைத்தளத்திற்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகியது. செப்டம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில், நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு அந்த இணையதளத்தின் செல்லுபடியாகும் தன்மையை உறுதி செய்தது. தற்போது  எக்ஸ் (X) நிறுவனத்தின் மேல்முறையீடு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


சர்ச்சைக்குரிய திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதி


கடந்த அக்டோபர் மாதம் 2025-ஆம் ஆண்டில், மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப (IT) விதிகளின் விதி 3(1)(d)-ஐத் திருத்தியது. இதன்படி, சட்டவிரோதமான செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் தகவல்களைப் பற்றி 'உண்மையான அறிவுறுத்தல்' (Actual Knowledge) கிடைத்த 36 மணி நேரத்திற்குள், இடைநிலை நிறுவனங்கள் அந்தத் தகவல்களை நீக்க வேண்டும் அல்லது அதற்கான அணுகலைத் தடுக்க வேண்டும் என்று விதிகளைத் திருத்தி வெளியிட்டது.


"உண்மையான அறிவுறுத்தல்" என்பது நீதிமன்ற உத்தரவுகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட மூத்த அதிகாரிகளிடமிருந்துவரும் எழுத்துப்பூர்வமான அறிவிப்புகள் மூலம் கிடைப்பதாகும். அந்த அறிவிப்புகளில் சட்டபூர்வமான அடிப்படை, சம்பந்தப்பட்ட சட்டம், சட்டவிரோதச் செயலின் தன்மை மற்றும் அந்தத் தகவலின் துல்லியமான இணைய முகவரி (URL அல்லது அடையாளம்) ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. 


திருத்தப்பட்ட விதியானது கடந்த நவம்பர் மாதம் 15-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. சட்டவிரோதமான உள்ளடக்கங்களை இடைநிலை அமைப்புகள் வெளிப்படையான, முறையான மற்றும் பொறுப்பான முறையில் நீக்குவதை உறுதிசெய்ய, கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்த்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


சவால்களும் ஆட்சேபனைகளும்


மனுதாரர்களான கம்ரா மற்றும் ஜக்தியானி, சஹ்யோக் வலைத்தளத்தின் செயல்பாடு சட்டவிரோதமானது என்று குற்றம் சாட்டியுள்ளனர். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் (IT Act) விதிமுறைகளை பின்பற்றாமல், மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் ஆயிரக்கணக்கானோருக்கு, இணையதளப் பக்கங்களை உடனடியாக முடக்க அல்லது நீக்க இந்த வலைத்தளம் அதிகாரம் அளிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 


திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, சம்பந்தப்பட்ட உள்ளடக்கப் படைப்பாளர்களுக்கு (content creators) எந்தவித முன்னறிவிப்போ அல்லது விளக்கமளிக்கும் வாய்ப்போ வழங்காமல், நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் உத்தரவின் மூலம் இணையதளத்தில் பகிரப்பட்ட தகவல்களை ஒருதலைப்பட்சமாக நீக்கவோ அல்லது முடக்கவோ இந்த வலைத்தளம் வழிவகுக்கிறது. 


அவர்களின் கருத்துப்படி, இந்த விதிகள் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69A மற்றும் 2009-ஆம் ஆண்டின் தடுப்பு விதிகளுக்கு இணையாக ஒரு உள்ளடக்கத்தை அகற்றும் முறையை உருவாக்குகின்றன. ஆனால், இதில் பாதுகாப்பு வழிமுறைகள் ஏதும் இல்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 


நீதிமன்ற முறையீடுகளுக்கு உட்படுத்தப்பட்ட முடிவுகள் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு  19(1)(g) வழங்கும் உரிமைகளான, எந்தவொரு தொழிலையும் செய்வதற்கோ அல்லது எந்தவொரு தொழில், வர்த்தகம் அல்லது வணிகத்தை மேற்கொள்வதற்கோ உள்ள உரிமையையும் மற்றும் 14-வது சட்டப்பிரிவின்கீழ் வழங்கப்படும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற அடிப்படை உரிமைகளை மீறுகின்றன என்று மனுதாரர்கள் தெரிவித்தனர்.


அரசு அதிகாரிகளுக்கு இத்தகைய அதிகாரங்களை வழங்குவது, அரசியலமைப்புச் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தாண்டி, பேச்சுரிமையின் மீது இந்திய அரசியலமைப்பிற்கு முரணான மற்றும் நியாயமற்ற கட்டுப்பாட்டை உருவாக்குகிறது என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.


தகவல் தொழில்நுட்ப விதி 3(1)(d) மற்றும் சஹ்யோக் வலைத்தளம் ஆகியவை, இணையத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் எப்போது வேண்டுமானாலும் தன்னிச்சையாக நீக்கக்கூடிய அபாயத்தை உருவாக்குகின்றன. இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக முறையிட எந்த வழிமுறைகளும் தெளிவுபடுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், இது ஆயிரக்கணக்கான மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளுக்கு இணையத் தகவல்களின் மீது கட்டுப்பாடற்ற அதிகாரத்தை வழங்குகிறது. இது ஜனநாயகத்திற்கும், குடிமக்களின் தகவல் அறியும் உரிமைக்கும் தீங்கு விளைவிப்பதாக அந்த மனுக்கள் தெரிவிக்கின்றன.


மனுதாரர்களின் கோரிக்கைகள் 


இணையதள பக்கங்களை முடக்குவதற்கான தடுப்பு உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரத்தை திருத்தப்பட்ட விதியானது 3(1)(d) வழங்கவில்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கேட்டுக்கொண்டனர்.


கம்ரா மற்றும் ஜக்தியானி ஆகியோரின் தனித்தனி மனுக்களில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79(3)(b) தகவல்களைத் தடுக்கும் உத்தரவுகளைப் பிறப்பிக்க அதிகாரம் வழங்கவில்லை என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

சஹ்யோக் வலைத்தளத்தை உடனடியாக முடக்கி, நீக்க வேண்டும் என்று நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர். இந்த வழக்கு இறுதி முடிவுக்கு வரும் வரை, அந்த வலைத்தளத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


இந்த மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில், திருத்தப்பட்ட விதி 3(1)(d)-ஐ அதிகாரிகள் செயல்படுத்துவதைத் தடுக்கவும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) பிரிவு 69A-ன்கீழ் தேவைப்படும் நடைமுறை இல்லாமல் எந்த அரசு அதிகாரியும் தகவல் முடக்கம் அல்லது நீக்க உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது என்ற உத்தரவையும் மனுதாரர்கள் இடைக்கால நிவாரணமாகக் கோரியுள்ளனர்.


Original article : Why Kunal Kamra approached Bombay HC against Sahyog Portal, amended IT Rules?. -Omkar Gokhale

Share:

ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள பல்வேறு நுகர்வோர் பாதுகாப்பு சீர்திருத்தங்கள் யாவை? -குஷ்பூ குமாரி

 சிறிய மதிப்புள்ள மோசடி பரிவர்த்தனைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு ஒரு வழக்கிற்கு 25,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்க இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India (RBI)) பரிந்துரைத்துள்ளது.


முக்கிய  அம்சங்கள்:


— சுமார் 65 சதவீத மோசடிகள் 50,000 ரூபாய்க்கும் குறைவான தொகையிலேயே நடக்கின்றன. வாடிக்கையாளர்கள் தவறுதலாகத் தங்கள் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை (One-Time Password (OTP)) பகிர்ந்திருந்தாலும்கூட, மோசடி வழக்குகளில் அவர்களுக்கான பணத்தைப் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. 


— சிறு மதிப்புள்ள மோசடி பரிவர்த்தனைகளால் ஏற்படும் இழப்புக்கு வாடிக்கையாளர்களுக்கு 25,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்குவதற்கான ஒரு கட்டமைப்பை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.


— இத்தகைய மோசடிகளால் ஏற்படும் பண இழப்பிற்கு, ஒரு வாடிக்கையாளர் தனது வாழ்நாளில் ஒருமுறை இந்த சலுகையைப் பயன்படுத்த முடியும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை (OTP) பகிர்ந்திருந்தாலும் இழப்பீட்டைப் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களின் கருத்துகளைப் பெற ஒரு அறிக்கையை  ரிசர்வ் வங்கி வெளியிடும் என்று ஆளுநர் கூறினார்.


— மோசடி வழக்குகளில் ஒரு வாடிக்கையாளர் பணத்தைப் பெற தகுதியுடையவர் ஆவார் என்றும் இழப்புத் தொகையில் 70 சதவீதத்தை ரிசர்வ் வங்கி  ஈடுசெய்யும் என்றும், மீதமுள்ள 30 சதவீதம் வாடிக்கையாளர் மற்றும் வங்கிக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.


— வைப்புத்தொகை கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியிலிருந்து (Deposit Education and Awareness Fund (DEAF)) கிடைக்கும் உபரி வருமானத்தில் இருந்து இந்தத் தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியிடம் வைப்புத்தொகை கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி (Deposit Education and Awareness Fund) உள்ளதாகவும், இதில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகளும் அடங்கும் என்கின்றனர். எனவே, குறிப்பிட்ட காலத்தில் போதுமான உபரி வருமானம் (Surplus Income) சேர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதை ரிசர்வ் வங்கியால் இந்த இழப்பீடு தொகையை வழங்குவதற்கு பயன்படுத்த முடியும் என்று ரிசர்வ் வங்கி  துணை ஆளுநர் சுவாமிநாதன் ஜே தெரிவித்தார்.


— வாடிக்கையாளர்களின் நலனை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பொதுமக்களின் ஆலோசனைக்காக மூன்று தனித்தனி வரைவு வழிகாட்டுதல்களை வெளியிடப்போவதாக ரிசர்வ் வங்கி (RBI) கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதில் முதல் வழிகாட்டுதல், நிதிச் சேவைகள் மற்றும் திட்டங்களைத் தவறான முறையில் விற்பனை செய்வதைத் (Mis-selling) தடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்டது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இன்னும் வெளிப்படையாகவும், பொறுப்புடனும் நடந்துகொள்வதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகக் கருதப்படுகிறது. 


— இரண்டாவது அம்சம், கடன் வசூலிக்கும் முறைகளில் கவனம் செலுத்தும். குறிப்பாக, கடன் வாங்கியவர்களைத் துன்புறுத்துவதைத் தவிர்க்கவும், நியாயமற்ற முறையில் நடத்துவதைத் தடுக்கவும், கடன் வசூல் முகவர்களின் (Recovery Agents) நடத்தை மற்றும் செயல்பாடுகள் குறித்து இது அமையும் என்று கூறப்பட்டுள்ளது. மூன்றாவது அம்சம், வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் நடக்கும் அங்கீகரிக்கப்படாத மின்னணு வங்கிப் பரிமாற்றங்களின்போது (Unauthorized Electronic Transactions), அந்த இழப்பிற்கு வாடிக்கையாளர் எந்த அளவிற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதற்கான வரம்புகளைக் குறித்தது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


— டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் அறிக்கையை மத்திய வங்கி வெளியிட உள்ளது. இதில், பணத்தை அனுப்பியவுடன் உடனடியாக வங்கிக் கணக்கில்  வரவு வைக்காமல், சரிபார்ப்பிற்காகச் சிறிது நேரம் கழித்து வரவு வைக்கும் முறை (Lagged Credits) மற்றும் டிஜிட்டல் மோசடிகளால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மூத்த குடிமக்கள் போன்ற குறிப்பிட்ட பயனர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு அங்கீகார முறைகளைக் கொண்டு வருவது போன்ற திட்டங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 


உங்களுக்குத் தெரியுமா?


— அனைத்து இணையவழி குற்றப் புகார்களுக்குமான ஒரு விரிவான தேசிய அளவிலான நடவடிக்கையை ஒருங்கிணைப்பதற்காக, உள்துறை அமைச்சகத்தின்கீழ் (Ministry of Home Affairs) ஒரு இணைக்கப்பட்ட அலுவலகமாக இந்திய இணையவழி குற்ற ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre (I4C)) நிறுவப்பட்டுள்ளது. டிஜிட்டல் கைது புகார்கள் தொடர்பாக, 2024 ஆம் ஆண்டில் மட்டும் 1,700-க்கும் மேற்பட்ட ஸ்கைப் ஐடிக்கள் (Skype IDs), 59,000 வாட்ஸ்அப் கணக்குகள், 6.69 லட்சம் சிம் (Subscriber Identity Module (SIM)) கார்டுகள் மற்றும் 1,32,000 மொபைல் அடையாள எண்களை (IMEIs) இந்தப் பாதுகாப்பு மையம் முடக்கியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. 


—  இந்திய மொபைல் எண்களைக் காட்டும் சர்வதேச ஏமாற்று அழைப்புகளை அடையாளம் கண்டு தடுப்பதற்கான அமைப்புகளை மத்திய அரசு மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் உருவாக்கியுள்ளனர். குடிமக்கள் நிதி இணையவழி மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பு (Citizen Financial Cyber Fraud Reporting and Management System) மோசடி முயற்சிகளில் இருந்து ₹3,431 கோடிக்கும் அதிகமான மோசடிகளைத் தடுத்து நிறுத்தியுள்ளது.


— இருப்பினும், இந்தியாவின் வேகமான டிஜிட்டல் வளர்ச்சி கோடிக்கணக்கான மக்களுக்குச் சேவைகளை எளிதாகக் கிடைக்கச் செய்ததோடு மட்டுமல்லாமல், 'இணையவழி மோசடி பரவல்' (cyber fraud epidemic) உருவாவதற்கும் காரணமாகியுள்ளது. இது டிஜிட்டல் முறைகளின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் குறைத்துள்ளது. குறிப்பாக, 'டிஜிட்டல் கைது' (Digital Arrest) போன்ற மோசடிகள் உடனடியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், காலப்போக்கில் இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு மீதான நம்பிக்கையையும் மெல்ல மெல்லச் சிதைக்கின்றன.


— பாதிக்கப்பட்டவர்கள் திடீரென கடுமையான நிதி இழப்புகளுக்கு ஆளாகிறார்கள். இது சில குடும்பங்களைக் கடனில் தள்ளுவதுடன், பயம், அவமானம் மற்றும் குழப்பம் போன்ற நீடித்த உளவியல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்ட பலர் இந்தக் குற்றத்தைப் புகாரளிக்கத் தாமதிக்கின்றனர் அல்லது தவிர்க்கின்றனர், இது மோசடி செய்பவர்கள் திருடப்பட்ட பணத்தைப் பல வங்கிக் கணக்குகளின் வழியாக விரைவாக மாற்ற வழிவகுப்பதாகவும் தெரிவிக்கின்றனர். 


— மேலும், இந்த மோசடிகள், குறிப்பாக புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் டிஜிட்டல் அறிவு மிகவும் குறைவாக இருப்பதை வெளிப்படுத்துகின்றன. வேகமான டிஜிட்டல் மாற்றத்திற்கு நம் சமூகம் இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை என்பதையே இது வெளிக்காட்டுகிறது. அரசின் உண்மையான அறிவிப்புகள் எவை, போலி உத்தரவுகள் எவை என்பதைப் பிரித்தறிய முடியாமல், குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாத மக்களிடையே இது போன்ற சம்பவங்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.


Original article : What are the various consumer protection reforms introduced by the RBI? -Khushboo Kumari

Share: