CSPOC 2024 மாநாட்டில், ஒரு முக்கிய கேள்வி : நாடாளுமன்றங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியுமா? -மோகன் குமார்

28-வது காமன்வெல்த் சபாநாயகர்கள் (Commonwealth Speakers) மாநாட்டை இந்தியா நடத்துகையில், உலகளாவிய நாடாளுமன்றத் தலைவர்கள் செயற்கை நுண்ணறிவு, சமூக ஊடகங்கள் மற்றும் ஜனநாயக நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான புதிய வழிகள் குறித்து விவாதிக்கின்றனர்.


இன்றைய ஜனநாயகங்கள் ஒரு கடினமான காலகட்டத்தை எதிர்கொள்கின்றன என்பதை அறிவுள்ள நிபுணர்கள் மற்றும் சாதாரண மக்கள் இருவரும் பொதுவாக ஒப்புக்கொள்கிறார்கள். உலகின் பிரச்சினைகள் ஏராளமாகவும் அச்சுறுத்தலாகவும் தோன்றும் நேரத்தில், ஜனநாயக நாடுகளுக்கு இடையே உலகளாவிய நாடாளுமன்ற ஒத்துழைப்பு சிறப்பாக இருக்க முடியும் என்பதிலிருந்தும் இந்த சவால் மேலும் தீவிரமடைகிறது. இந்தச் சூழலில்தான், ஜனவரி 14 முதல் 16 வரை புதுதில்லியில் காமன்வெல்த் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள் மாநாட்டை (Conference of Speakers and Presiding Officers of the Commonwealth (CSPOC)) நடத்த இந்திய நாடாளுமன்றத்திற்கு வாய்ப்பு பெறும். உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 53 காமன்வெல்த் நாடுகள் மற்றும் 14 தன்னாட்சி நாடாளுமன்றங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு இந்தியாவின் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமை தாங்குவார். சர்வதேச மாநாட்டை ஜனவரி 15-ம் தேதி இந்தியப் பிரதமர் தொடங்கி வைப்பார்.


இந்த மாநாடு பெரும்பாலும் காமன்வெல்த் உறுப்பினர்களுக்கானது. ஆனால் அது விவாதிக்கவிருக்கும் நாடாளுமன்றப் பிரச்சினைகள் காமன்வெல்த் நாடுகளுக்கு அப்பாற்பட்ட முக்கியத்துவம் வாய்ந்தவை. வலுவான ஜனநாயக நிறுவனங்களைப் பராமரிப்பதில் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளின் பங்கு நாடாளுமன்றங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு சமூக ஊடகங்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான அதன் தாக்கம் மற்றும் வாக்களிப்பதற்கு அப்பாற்பட்ட குடிமக்களின் பங்கேற்பு பற்றிய பொது புரிதலை மேம்படுத்துவதற்கான புதுமையான உத்திகள் ஆகியவை இதில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.


காமன்வெல்த் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள் மாநாடு (CSPOC) 1969-ம் ஆண்டு அப்போதைய கனடா பொது சபையின் (Canadian House of Commons) சபாநாயகரால் நிறுவப்பட்டது. அதன் தொடக்கத்திலிருந்து, அதன் அனைத்து நடவடிக்கைகளுக்கும் செயலக ஆதரவை வழங்கியது கனடா என்பதை நினைவுகூரத்தக்கது. காமன்வெல்த் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள் மாநாடு (CSPOC) என்பது காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்துடன் முறையான இணைப்பு இல்லாத ஒரு தன்னாட்சி நிறுவனம் என்பதைக் குறிப்பிடுகிறது. இருப்பினும் இரண்டு அமைப்புகளுக்கும் ஒரே உறுப்பினர்கள் உள்ளனர். இந்த மாநாட்டிற்கு குறிப்பிட்ட இலக்குகள் உள்ளன. அவை, நாடாளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் தரப்பில் பாரபட்சமற்ற தன்மை மற்றும் நியாயத்தை ஊக்குவித்தல், நாடாளுமன்ற ஜனநாயகம் அதன் பல்வேறு வடிவங்களில் பற்றிய அறிவு மற்றும் புரிதலை ஊக்குவித்தல் மற்றும் நாடாளுமன்ற நிறுவனங்களை மேம்படுத்துவது போன்றவை உள்ளன.


புதுதில்லியில் நடைபெறும் மாநாட்டில், நாடாளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு, சமூக ஊடகங்கள் மற்றும் அதன் தாக்கம், நாடாளுமன்றத்தைப் பற்றிய பொதுமக்களின் புரிதலை மேம்படுத்துவதற்கான புதுமையான உத்திகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகிய நான்கு பயிலரங்குகள் நடைபெறும். செயற்கை நுண்ணறிவு குறித்த முதல் பயிலரங்கு எந்தவொரு நவீன நாடாளுமன்றத்திற்கும் பொருத்தமானது. முக்கியமான பிரச்சினைகள் குறித்த விவாதத்தை ஒரு இயந்திரத்தனமான நடைமுறையாகக் குறைப்பதைவிட, சிக்கல்களை நன்கு புரிந்துகொள்ள செயற்கை நுண்ணறிவு (AI) உதவுகிறது என்பதை உறுதி செய்வதே சவாலாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு செயற்கை நுண்ணறிவில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றால், ஆரம்பத்தில் இது எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும் அதை ஊக்குவிக்க வேண்டும். உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு மாத நடுப்பகுதியில் புதுதில்லியில் நடைபெறவிருப்பதால், இந்தப் பிரச்சினை குறித்த விவாதமும் ஒரு சரியான நேரத்தில் எழுந்துள்ளது. அர்த்தமுள்ள விவாதத்தை செயல்படுத்த முக்கியமான தரவு மற்றும் புள்ளிவிவரங்களை வழங்குவதில் செயற்கை நுண்ணறிவு (AI) பயனுள்ளதாக இருக்கும். எனவே, நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் இதை ஒரு நேர்மறையான கருவியாகப் பார்க்க வேண்டும்.


சமூக ஊடகங்கள் மற்றும் அதன் தாக்கம் குறித்த இரண்டாவது பயிலரங்கு ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. இப்போதெல்லாம் ஒரு சுறுசுறுப்பான நாடாளுமன்ற உறுப்பினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதை கற்பனை செய்வது கடினம். குறிப்பாக, பெரும்பாலான மக்கள் இளைஞர்கள் இருக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், சமூக ஊடகங்களைத் தவிர்ப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இந்தியப் பிரதமரே சமூக ஊடகங்களை மிகவும் ஆர்வத்துடன் பயன்படுத்துபவர் மற்றும் உலகின் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்டவர்களில் ஒருவராக இருக்கிறார். இந்தப் பயிலரங்கில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களில் உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் ட்ரோல்களின் பயன்பாடுகூட அடங்கும். முக்கிய விஷயம் என்னவென்றால், சமூக ஊடகங்களைத் தவிர்ப்பது சாத்தியமில்லை. எனவே அதைப் புரிந்துகொண்டு பொறுப்புடன் பயன்படுத்துவதே சிறந்தது.


மூன்றாவது பயிலரங்கம், நாடாளுமன்ற செயல்முறை குறித்த பொதுமக்களின் புரிதலை மேம்படுத்த புதுமையான உத்திகளைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்தப் பயிலரங்கத்தின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்தி மதிப்பிடுவது கடினம். நாடாளுமன்றம் உண்மையில் எந்தவொரு நவீன ஜனநாயகத்தின் கோவிலாக இருக்குமானால், விழிப்புணர்வு, கல்வி மற்றும் பரப்புரையின் மூலம் பொதுமக்களின் புரிதலை மேம்படுத்துவது மிக முக்கியமானதாகிறது. இதற்காக, காட்சி-செவிவழி சாதனங்கள் (audio-visual aids), பொதுமக்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரடியாகப் பார்க்க அனுமதித்தல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போலி நாடாளுமன்றங்கள் போன்ற பல்வேறு புதுமையான உத்திகளைப் பயன்படுத்தலாம். மக்களின் முழு ஆதரவும் இருந்தால் மட்டுமே ஒரு ஜனநாயகம் செழிக்க முடியும். மேலும், நாடாளுமன்றங்களைப் பற்றிய பொதுமக்களின் புரிதலால் மட்டுமே இதை உறுதி செய்ய முடியும்.


கடைசிப் பயிலரங்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் கவனம் செலுத்துகிறது. இந்தப் பயிலரங்கு, பயங்கரவாத அச்சுறுத்தல்கள், பாதுகாப்பு உள்கட்டமைப்பு, சைபர் அச்சுறுத்தல்கள், வசதிகள், படிகள் மற்றும் சலுகைகள் ஆகியவற்றைப் பற்றிப் பார்க்க வேண்டும். சிறப்பு முழுமையான அமர்வில் விவாதிக்கப்படும் மிக முக்கியமான தலைப்பு, வலுவான ஜனநாயக நிறுவனங்களைப் பராமரிப்பதில் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளும் அனைத்து உறுப்பினர்களின் பங்கேற்பை உறுதி செய்கிறார்கள். அவை முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரந்த பங்கேற்பு, நியாயம் மற்றும் பாரபட்சமற்றத் தன்மை மற்றும் அவையில் ஒழுங்கை உறுதி செய்வதில் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்பது சொல்லத் தேவையில்லை. இது சில நேரங்களில் ஒரு சவாலான பணியாக இருக்கலாம். இந்த அமர்வு காமன்வெல்த் பிரதிநிதிகளுக்கு இந்த முக்கியமான தலைப்பில் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கிறது.


முடிவில், 28-வது காமன்வெல்த் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள் மாநாடு (CSPOC), காமன்வெல்த்தை சேர்ந்த சுமார் 53 நாடுகளில் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய வழிமுறைகளைப் பின்பற்றுவதைப் பார்க்கவும் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை வழங்கும்.


கட்டுரையாளர் பிரான்சுக்கான முன்னாள் இந்தியத் தூதர் மற்றும் தற்போது ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் தலைவர் மற்றும் பேராசிரியராக உள்ளார்.                

                 

Original Article : At CSPOC 2024, a crucial question: Can parliaments restore faith in democracy? -Mohan Kumar

Share:

அமெரிக்க-இந்தியா குடிமை அணுசக்தி ஒத்துழைப்பிற்கு சாந்தி சட்டத்தின் (SHANTI Act) முக்கியத்துவம் என்ன? -குஷ்பு குமாரி, ரோஷ்னி யாதவ்

இரு நாடுகளுக்கும் இடையேயான பதட்டமான உறவுகளைச் சரிசெய்யும் முயற்சியில், இந்தியாவில் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்ட செர்ஜியோ கோர் ஒரு சமரசமான நிலைப்பாட்டை எடுத்த ஒரு நாள் கழித்து, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான மார்கோ ரூபியோ செவ்வாயன்று தொலைபேசியில் பேசி இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகள், முக்கியமான கனிமங்கள், பாதுகாப்பு, அணுசக்தி ஒத்துழைப்பு, எரிசக்தி மற்றும் அஅடுத்த மாதம் நடைபெற வாய்ப்புள்ள ஒரு சந்திப்பு குறித்து விவாதித்தனர்.


முக்கிய அம்சங்கள் :


வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் முக்கியமானவை என்றாலும், முக்கியமான கனிமங்கள், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் அணுசக்தி ஒத்துழைப்பு போன்ற பிற துறைகளின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அமெரிக்கா (வாஷிங்டன்) மற்றும் இந்தியா (டெல்லி) இரண்டிற்கும், இந்த பிரச்சினைகள் ஒரு வலுவான கூட்டமைப்புக்கு மிகவும் முக்கியமானவை.


ரூபியோவும் ஜெய்சங்கரும் இருநாடு தரப்பு வருகையின்போது சந்திப்பார்களா அல்லது அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு (AI) இம்பாக்ட் உச்சிமாநாடு (AI Impact Summit) உட்பட பலதரப்பு நிகழ்வின்போது சந்திப்பார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. விவாதங்களுக்குப் பிறகு, ஜெய்சங்கர் இதை ஒரு "நல்ல உரையாடல்" என்று குறிப்பிட்டார். அதேநேரத்தில், கோர் அதை "நேர்மறையான அழைப்பு" என்று விவரித்தார்.


சமீபத்தில் இயற்றப்பட்ட n-அணுசக்திச் சட்டம் (n-energy law) குறித்துக் குறிப்பிட்ட அவர், "இந்தியாவை மாற்றியமைப்பதற்கான அணுசக்தியை நிலையான முறையில் பயன்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் மசோதாவை இயற்றியதற்காகச் செயலாளர் இந்தியாவைப் பாராட்டினார். இந்த முக்கிய முன்னேற்றத்தைப் பயன்படுத்தி, அமெரிக்க-இந்தியா குடிமை அணுசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்தவும், அமெரிக்க நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், பகிரப்பட்ட எரிசக்திப் பாதுகாப்பு இலக்குகளை முன்னெடுத்துச் செல்லவும், முக்கியமான கனிம விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாக்கவும் அவர் ஆர்வம் தெரிவித்தார்." என்றார்.


திங்களன்று, அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட செர்ஜியோ கோர், செவ்வாய்க்கிழமை வர்த்தக பேச்சுவார்த்தையாளர்கள் பேசுவார்கள் என்றும், அமெரிக்கா தலைமையிலான இராஜதந்திர ரீதியில் முயற்சியான பாக்ஸ் சிலிக்காவிற்கு (Pax Silica) இந்தியா அழைக்கப்படும் என்றும் கூறினார்.


ரூபியோ-ஜெய்சங்கர் உரையாடல் ஒரு நாள் கழித்து நடந்தது. மேலும், பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள் செர்ஜியோ கோர் கூறியதைப் போலவே இருந்தன. பல மாத பதட்டத்திற்குப் பிறகு இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இரு தரப்பினரும் தயாராக இருந்ததை இது காட்டியது.


அக்டோபர் 2025-ல், கோலாலம்பூரில் நடந்த ஆசியான் மற்றும் கிழக்கு ஆசியத் தலைவர்கள் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்கியதற்கு 25 சதவீத அபராதம், நெருக்கமான அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகள் மற்றும் கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதாக டிரம்ப் தொடர்ந்து கூறியது உள்ளிட்ட 50 சதவீத வரிகளைத் தொடர்ந்து ஏற்பட்ட இருநாடுகளின் மத்தியில், ஜெய்சங்கர் ரூபியோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.


மேலும், நவம்பர் 2025-ல், கனடாவில் நடந்த G7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக இரு அமைச்சர்களும் சந்தித்தனர். அவர்களின் பேச்சுவார்த்தைகள் வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகள்மீது கவனம் செலுத்தின. உக்ரைன் மோதல், மத்திய கிழக்கு நிலைமை மற்றும் இந்தோ-பசிபிக் பற்றிய கருத்துக்களையும் அவர்கள் பரிமாறிக் கொண்டனர்.


இந்த முறை, தொலைபேசி அழைப்பிற்குப் பிறகு வந்த செய்தி, வர்த்தக ஒப்பந்தம் இன்னும் முடிவடையாத நேரத்தில், இருநாடுகளின் உறவைப் பாதிக்கும் இருதரப்பு பிரச்சினைகள் குறித்து அவர்கள் பேசியது தெளிவாகிறது. செப்டம்பர் 2025 முதல் இந்தியா தனது ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துள்ளது. இது அமெரிக்கா 25 சதவீத தண்டனை வரிகளை நீக்க வேண்டும் என்று வாஷிங்டனுக்கு ஒரு சிக்னலாகப் பார்க்கப்படுகிறது.


25 சதவீத வரித் தள்ளுபடியை ரத்து செய்வது, இரு தரப்பினரும் மீதமுள்ள 25 சதவீதத்திற்கான வரியைக் குறைப்பதற்காக வர்த்தக ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், உறவில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.


ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடனான எந்தவொரு வர்த்தகத்திற்கும் 25 சதவீத வரியை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.


வெள்ளை மாளிகையின் கொள்கை குறித்த அதிகாரப்பூர்வ ஆவணங்கள் தனது இணையதளத்தில் வெளியிடவில்லை அல்லது டிரம்ப் வரிகளை விதிக்கப் பயன்படுத்தும் சட்டப்பூர்வ அதிகாரம் பற்றிய தகவலோ அல்லது அவை ஈரானின் அனைத்து வர்த்தக நட்பு நாடுகளையும் இலக்காகக் கொண்டதா என்பது பற்றிய தகவலோ இல்லை.


இந்த புதிய வரிகள் முதன்மையாக ஈரானின் மிகப்பெரிய வர்த்தக நட்பு நாடான சீனாவை பாதிக்கக்கூடும் என்றாலும், இந்தியாவும் ஈரானுடன் நீண்டகால வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது மற்றும் ஈரானின் துறைமுக உள்கட்டமைப்பில் கணிசமான முதலீட்டைக் கொண்டுள்ளது. இருப்பினும், அணுசக்தித் திட்டம் காரணமாக ஈரானின் மீதான தடைகள் ஏற்கனவே பல ஆண்டுகளாக இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை பலவீனப்படுத்தியுள்ளன.


ஏற்கனவே 50 சதவீத அமெரிக்க வரிவிதிப்புகளை எதிர்கொள்ளும் இந்தியா, இதனால் அதிகம் பாதிக்கப்படப் போவதில்லை என்ற கருத்து நிலவுகிறது. சீனா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஈரானுடனான இந்தியாவின் வர்த்தகம் சிறியது. இது 2024-25-ல் $1.6 பில்லியனாக இருந்தது. மேலும் 2025-26-ல் $1.2 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் 50 வர்த்தக நட்பு நாடுகளில் ஈரான் இடம்பெறவில்லை.


உங்களுக்குத் தெரியுமா? 


பாக்ஸ் சிலிக்கா (Pax Silica) என்பது செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் அமெரிக்கா தலைமையிலான ஒரு முயற்சியாகும். இது முக்கிய தொழில்நுட்பங்கள் பாதுகாப்பானவை, நம்பகமானவை மற்றும் விரோத நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக "நட்பு மற்றும் நம்பகமான" நாடுகளை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த முயற்சி முக்கியமான கனிமங்கள் மற்றும் எரிசக்தி உள்ளீடுகள் முதல் மேம்பட்ட உற்பத்தி மற்றும் குறைமின்கடத்திகள் (semiconductors) வரை பாதுகாப்பான விநியோகச் சங்கிலியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியில் இந்தியா சேர்க்கப்படவில்லை.


 Original Article : What is the significance of the SHANTI Act for US-India civil nuclear cooperation? -Khushboo Kumari , Roshni Yadav

Share:

வரதட்சணையை முடிவுக்குக் கொண்டுவர ஏன் சட்டங்கள் மட்டும் போதாது, சமூக மற்றும் தலைமுறை மாற்றங்களும் தேவைப்படுகிறது? -ரிதுபர்ண பட்கிரி

வரதட்சணை என்பது தானாக முன்வந்து வழங்கப்படும் பரிசாக இருந்து கட்டாயக் கோரிக்கையாக மாறி, பெரும்பாலும் மணமகளின் குடும்பத்தின்மீது நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. இருப்பினும், சில முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன. கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும், இந்த நடைமுறை ஏன் தொடர்கிறது?, இதற்கு சமூக அங்கீகாரத்தை எது அளிக்கிறது? இதை எவ்வாறு முழுமையாக ஒழிப்பது? முக்கியமான நுண்ணறிவுகளுக்குத் தகவல் வரைபடங்களைப் பார்க்கவும்.

வரதட்சணை தொடர்பான குற்றச் செயல்களைத் தடுப்பதற்குப் பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், "நிதர்சனமான உண்மை என்னவென்றால், வரதட்சணை என்பது நாட்டின் பரந்த பிரிவுகளில் வலுவாக வேரூன்றிய சமூகத் தீமையாகத் தொடர்கிறது" என்று குறிப்பிட்டது.


கடந்த ஆண்டு ஜன்ஷ்ருதி (மக்கள் குரல்) vs இந்திய ஒன்றியம் மற்றும் பிறர் வழக்கில், இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code (IPC)) பிரிவு 498A (ஒரு கணவன் அல்லது அவனது உறவினர்கள் ஒரு பெண்ணிடம் காட்டும் கொடுமை பற்றிக் குறிப்பிடுகிறது) அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என்பதை சவால் செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் இந்தக் கருத்தை வெளியிட்டது.


இருப்பினும் முக்கியமான கேள்விகள் எழுப்பியுள்ளன. கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும், வரதட்சணை நடைமுறை ஏன் தொடர்கிறது?, சமூகரீதியாக அதை நியாயப்படுத்துவது எது?, இதை எவ்வாறு முழுமையாக ஒழிப்பது?


தன்னார்வப் பரிசுகளாக வரதட்சணை


மணப்பெண்ணின் திருமணத்தின்போது மணமகள் குடும்பத்தினரால் வழங்கப்படும் ஒரு தன்னார்வ பரிசாக இருந்த வரதட்சணையானது எவ்வாறு வழக்கமான நடைமுறையாக மாறியது என்பதை நிபுணர்கள் விளக்குகின்றன. இந்த வழக்கம் பெரும்பாலும் வட இந்தியாவில் உயர் சாதியினரிடையே மட்டுமே காணப்பட்டது. வரதட்சணையானது பெரும்பாலும் கன்னியாதானம் (மகளைத் தானமாக வழங்கும் சடங்கு) என்ற வழக்கத்துடன் தொடர்புடைய ஸ்திரீதனத்தின் (இறப்பிற்கு முந்தைய பரம்பரைச் சொத்து) ஒரு பகுதியாகக் கருதப்பட்டது. இந்து குடும்பங்களில், ஒரு மகளுக்கு அவளது பெற்றோர் குடும்பச் சொத்தில் பங்கு இல்லை என்பதை குறிப்பிடுகிறது.


பவுலின் கோலிண்டாவின் "பெண் ஒரு காணிக்கையாக, பெண் ஒரு மலராக: வட மற்றும் தென்னிந்தியாவில் திருமணங்களில் "பெண்" பற்றிய பிம்பங்கள்-1984" (Woman as Tribute, Woman as Flower: Images of “Woman” in Weddings in North and South India) என்ற ஆய்வு, திருமணத்திற்குப் பிறகு, மகளுடனான பிறப்பு உறவுகள் அவளுடைய குடும்பத்தினரால் எவ்வாறு விலக்கி வைக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. இந்த சூழலில், வரதட்சணை என்பது மகளின் திருமணத்திற்கு முந்தைய அல்லது திருமணத்தின் போது எதிர்பார்க்கப்படும் பரம்பரை சொத்தாக வழங்கப்பட்டது. பாரம்பரியமாக, வரதட்சணை என்பது ஆடைகள், நகைகள் மற்றும் சமையலறை உபகரணங்கள், தளபாடங்கள் போன்ற வீட்டுப் பொருட்களைக் கொண்டிருந்தது.


காலப்போக்கில், இந்த நடைமுறை இந்தியா முழுவதும் பரவியது. 1974-ம் ஆண்டில், இந்தியாவில் பெண்களின் நிலை குறித்த குழு (Committee on the Status of Women in India (CSWI)) மற்றும் நாடாளுமன்ற கூட்டுத் தேர்வுக் குழு (Parliamentary Joint Select Committee) ஆகியவை வரதட்சணை அனைத்து சாதிகள், சமூகங்கள், மதங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கும் பரவியிருப்பதைக் கண்டறிந்தன. இந்தப் பழக்கம் விரிவடைந்தபோது, ​​விலையுயர்ந்த பொருட்களும் பணமும் வரதட்சணையின் ஒரு வழக்கமான பகுதியாக மாறியது. பல சமூகங்களில், மணமகனின் தொழில் மற்றும் சமூக அந்தஸ்தால் தீர்மானிக்கப்படும் அவரது 'சந்தை மதிப்பு'டனும் இணைக்கப்பட்டது.


அது எப்படி ஒரு கட்டாயக் கோரிக்கையாக மாறியது?


அனைத்து சமூகங்களிலும் வரதட்சணையை சமூகரீதியாக ஏற்றுக்கொள்ளும் தன்மை, 2003-ம் ஆண்டு அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் (All India Democratic Women’s Association (AIDWA)) அறிக்கையில் மேலும் எடுத்துரைக்கப்பட்டது. இந்த அறிக்கை இந்திய திருமணங்களை ஆடம்பரமான நிகழ்வுகளாக விவரித்தது. திருமண விழாக்களின் மாறிவரும் நுகர்வோர் தன்மையின் ஒருங்கிணைந்த பகுதியாக பணமும் பரிசுகளும் உள்ளன. இதனால், வரதட்சணை என்பது தன்னார்வ பரிசாக இல்லாமல், கட்டாயக் கோரிக்கையாக மாறியுள்ளது.


இந்தக் கட்டாயக் கோரிக்கை பெரும்பாலும் மணப்பெண்ணின் குடும்பத்தின் மீது ஒரு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, இந்த அழுத்தம் சில சமயங்களில் சமூக விதிமுறைகள் மற்றும் போட்டி மனப்பான்மையிலான சமூக ஒப்பீடு (சமூகத்தில் உள்ள மற்ற குடும்பங்கள் தங்கள் மருமகன்களுக்கு என்ன கொடுத்தார்களோ, அதைப் போலவே தாங்களும் கொடுக்க வேண்டும்) ஆகியவற்றால் ஏற்படுகிறது.


மேலும், பரிசுகள் வழங்கும் வழக்கம் திருமணத்துடன் முடிவடைவதில்லை. இது கர்ப்பம், பிரசவம், பண்டிகைகள் போன்ற சடங்குகள் மூலம் தொடர்கிறது. இது இரு குடும்பங்களுக்கிடையேயான சமூக உறவுகளைப் பேணுவதற்கான ஒரு வழியாக வெளித்தோற்றத்தில் காணப்படுகிறது. ஆனால் நடைமுறையில், இது பெரும்பாலும் பெண்கள் பிறந்த குடும்பத்திற்கு எதிராகவே உள்ளது.


இந்த தொடர்ச்சியான நிதிச் சுமை, கருக்கொலை மற்றும் சிசுக்கொலை போன்ற பிற சமூக தீமைகளுடனும், மகள்களை சமூக மற்றும் பொருளாதாரச் சுமைகளாகக் கருதும் பார்வையையும் வலுப்படுத்துகிறது. இதன் விளைவாக, வரதட்சணை ஒரு அவசர சட்ட மற்றும் சமூகப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது.

சட்ட மற்றும் சமூக தலையீடுகள்


வரதட்சணை நடைமுறையை நிவர்த்தி செய்ய பல சட்ட தலையீடுகள் செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக, வரதட்சணை தடைச் சட்டம்-1961 (Dowry Prohibition Act), பிரிவு-3 மற்றும் பிர்வு-4 ஆனது இந்தியா முழுவதும் வரதட்சணை கோருதல், வாங்குதல் மற்றும் கொடுப்பதை குற்றமாக பார்க்கிறது. மேலும், இந்தச் சட்டத்தின் பிரிவு-2 வரதட்சணையை "நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொடுக்கப்பட்ட அல்லது கொடுக்க ஒப்புக் கொள்ளப்பட்ட எந்தவொரு சொத்து அல்லது மதிப்புமிக்க பாதுகாப்பையும், அ) ஒரு திருமணத்திற்கு ஒரு தரப்பினரால் மற்றொரு தரப்பினருக்கு கொடுப்பது, அல்லது ஆ) ஒரு திருமணத்திற்கு இரு தரப்பினரின் பெற்றோராலோ அல்லது வேறு எந்த நபராலோகூட கொடுப்பது, வரதட்சணை திருமணத்தில் ஈடுபடும் இருவரில் ஒருவருக்கோ அல்லது வேறு எந்த நபருக்கோ கொடுப்பது" என்று வரையறுக்கிறது.


வரதட்சணை என்பது ஒரு மரபுரிமை வடிவமாகக் கருதப்பட்டாலும், அது பெண்களின் கட்டுப்பாட்டில் அரிதாகவே உள்ளது, அதற்குப் பதிலாக ஆண்களின் குடும்பங்களின் சொத்தாக மாறுகிறது. எனவே, வரதட்சணைக்கு எதிரான வாதம் இந்திய பெண்ணிய இயக்கத்தின் ஒரு முக்கியப் பகுதியாக இருந்து வருகிறது. 1972-ஆம் ஆண்டு ஷஹாதா இயக்கம் மற்றும் 1975-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பெண்கள் முற்போக்கு அமைப்பின் போராட்டங்கள் வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தன.


1970-களில், டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் வங்காளத்தில் வரதட்சணைக்கு எதிராக வலுவான அணிதிரட்டல் நடைபெற்றது. இது புதிதாகத் திருமணமான பெண்கள் தீக்காயங்களால் இறக்கும் வழக்குகளில் ஏற்பட்ட கவலைக்கிடமான அதிகரிப்புடன் தொடர்புடையதாக இருந்தது. ஆனால், அவற்றில் பல எரிவாயு கசிவு, மண்ணெண்ணெய் தீ அல்லது தற்கொலையால் ஏற்படும் விபத்துகள் என்று முத்திரை குத்தப்பட்டன.


‘பெண்கள் எரிப்பதற்காக அல்ல’


1970-களின் பிற்பகுதியில், 21 வயது மணப்பெண் ஹர்தீப் கவுர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டது. டெல்லியை வரதட்சணைக்கு எதிரான போராட்டங்களின் முக்கிய மையமாக மாற்றியது. மேலும், வரதட்சணை பற்றிய புரிதலை தனிப்பட்ட, குடும்ப விஷயத்திலிருந்து பொது மற்றும் அரசியல் பிரச்சினையாக மாற்றுவதில் இது ஒரு முக்கியப் பங்கு வகித்தது.


வரதட்சணை எதிர்ப்புப் போராட்டங்கள், "தனிப்பட்டரீதியிலான அரசியல்" என்ற முழக்கத்தை மையமாகக் கொண்ட பெண்ணியத்தின் இரண்டாவது அலையின் ஒரு பகுதியாக இருந்தன. குறிப்பாக, "பெண்கள் எரிப்பதற்காக அல்ல" என்ற முழக்கம் ஒரு சக்திவாய்ந்த போராட்டக் குரலாக மாறியது. இது ரஜினி பல்ரிவாலாவின் Women Are Not For Burning: The Anti-Dowry Movement in Delhi என்ற நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.


இதற்கு பதிலளிக்கும் விதமாக, வரதட்சணை தடைச் சட்டம்-1961, ஆனது 1984 மற்றும் 1986-ம் ஆண்டுகளில் திருத்தப்பட்டது. வரதட்சணை கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் ஆன தண்டனை கடுமையாக்கப்பட்டது. அதில் இப்போது குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை சேர்க்கப்பட்டது. இது ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். வரதட்சணைத் தடை (மணமகன் மற்றும் மணமகளுக்கு வழங்கப்படும் பரிசுகளின் பட்டியலைப் பராமரித்தல்) விதிகள், 1985-ம் (Dowry Prohibition (Maintenance of List of Presents to the Bride and Bridegroom) Rules) அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த விதிகள் திருமணத்தின்போது பரிமாறப்பட்ட பரிசுகளின் எழுத்துப்பூர்வ பட்டியலைக் கட்டாயமாக்கின.


குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவர் மீது மாறுகிறது


வேறு சட்ட விதிகளும் உள்ளன. 1983-ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498A இன் கீழ் ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது புகார்தாரர் திருமணமானவராக இருந்து அவரது கணவர் அல்லது அவரது கணவரின் உறவினரால் கொடுமைக்கு ஆளான வழக்குகளையும் உள்ளடக்கும். இது குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக கைது மற்றும் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்க உதவியது.


1986-ம் ஆண்டில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304B வரதட்சணை மரணம் (dowry death) என்ற கருத்தை அறிமுகப்படுத்தியது. இந்த விதியின் கீழ், ஒரு பெண்ணின் மரணம் "திருமணமான ஏழு ஆண்டுகளுக்குள் ஏதேனும் தீக்காயங்கள் அல்லது உடல் காயத்தால் ஏற்பட்டாலோ அல்லது சாதாரண சூழ்நிலைகளைத் தவிர வேறு விதமாக நிகழ்ந்தாலோ, அவள் இறப்பதற்கு சற்று முன்பு அவள் கணவர் அல்லது அவரது கணவரின் உறவினர்களால் வரதட்சணை கோரிக்கைக்காகவோ அல்லது அது தொடர்பாகவோ கொடுமை அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் காட்டப்பட்டால், அத்தகைய மரணம் 'வரதட்சணை மரணம்' என்று அழைக்கப்படும். மேலும், அத்தகைய கணவர் அல்லது உறவினர் அந்த பெண்ணுடைய மரணத்திற்குக் காரணமாகக் கருதப்படுவார்."


1986-ம் ஆண்டு பிரிவு 113B-ஐச் சேர்ப்பதன் மூலம் இந்திய சாட்சியச் சட்டம்-1872 (Indian Evidence Act) திருத்தப்பட்டது. இது வரதட்சணை மரண வழக்குகளில் ஆதாரத்தின் சுமையை குற்றம் சாட்டப்பட்டவர் மீது மாற்றுகிறது. இத்தகைய வழக்குகளில் தங்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் (Protection of Women from Domestic Violence Act (PWDVA)), 2005, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களுக்கு மேலும் பாதுகாப்பை வழங்குகிறது. இந்த சட்ட தலையீடுகள் வரதட்சணை தொடர்பான அடையாள அங்கீகாரத்திலிருந்து குற்றவியல் மற்றும் குடிமை பொறுப்புணர்வு கவனத்தை மாற்றுகின்றன.


இந்த வழக்கம் ஏன் தொடர்கிறது?


ஆனால், இவ்வளவு கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும், வரதட்சணை வழக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (National Crime Records Bureau (NCRB)) படி, 2018 மற்றும் 2022-க்கு இடையில் இந்தியாவில் 34,000-க்கும் மேற்பட்ட வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான வரதட்சணை தொடர்பான துன்புறுத்தல் வழக்குகளும் பதிவாகின்றன.


வரதட்சணை பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை மற்றும் நுட்பமான குறிப்புகளின் அடிப்படையில் சமூக வலைப்பின்னல்களுக்குள் நடைபெறுகின்றன. எனவே, ஒவ்வொரு கோரிக்கையும் எழுத்துப்பூர்வமாக ஆவணப்படுத்தப்படுவதில்லை. எனவே, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக்கூடிய ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன. மேலும், பெரும்பாலான வழக்குகள் காவல்துறையினரால் தள்ளுபடி செய்யப்படுகின்றன. வரதட்சணை வழக்குகளைப் புகாரளிக்க குடும்பங்களும் தயங்குகின்றன. பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகள் பற்றி கூட தெரியாது.


பரிசுகளை கலாச்சார ரீதியாக இயல்பாக்குவது வரதட்சணையை எளிதாக்க உதவுகிறது. சில மணப்பெண்களின் குடும்பங்கள் வரதட்சணையை தங்கள் செல்வத்தையும் சமூக அந்தஸ்தையும் வெளிப்படுத்தும் ஒரு வழியாகக் கருதுகின்றன. அதேநேரத்தில், மணமகன் தரப்பிலிருந்து வரும் கோரிக்கைகள் பெரும்பாலும் அவர்களின் தொழில் மற்றும் சமூக அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்டவை.


ஆண்கள் பெண்களைவிட உயர்ந்தவர்கள் என்ற நம்பிக்கை பெரும்பாலும் வரதட்சணைப் பழக்கத்திற்கு பங்களிப்பதாகக் கருதப்படுகிறது. பெண்களுக்கு நிதி சுதந்திரம் இல்லாதபோது இந்த நம்பிக்கை வலுவாக இருக்கிறது. லீலா டுபே போன்ற நிபுணர்களால் விளக்கப்பட்டபடி, இத்தகைய ஆணாதிக்க மதிப்புகள் இந்திய உறவுமுறை அமைப்பின் ஒரு பகுதியாகும். இதை, பெண்கள் மற்றும் உறவுமுறை: தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பாலினம் குறித்த ஒப்பீட்டு பார்வைகள்-1997 என்ற நூலில் குறிப்பிட்டுள்ளது.


நவீன திருமணச் சந்தையில் பெண்களை குறைத்து மதிப்பிடுவதில் வரதட்சணையின் சமூக நியாயத்தன்மை வேரூன்றியுள்ளது. கௌரவ் சிப்லுங்கர் மற்றும் ஜெஃப்ரி வீவர் ஆகியோரின் 2023-ம் ஆண்டு ஆய்வு "இந்தியாவில் திருமணச் சந்தைகள் மற்றும் வரதட்சணையின் எழுச்சி" (Marriage Markets and the Rise of Dowry in India), வரதட்சணைப் பழக்கத்தைத் தக்கவைப்பதில் நவீனமயமாக்கல் எவ்வாறு உதவியுள்ளது என்பதைக் காட்டுகிறது.


ஆண்கள் உயர்பதவிகளில் இருக்கும்போது, பெண்களின் குடும்பங்கள் 'நவீன' மற்றும் 'நல்ல தகுதி வாய்ந்த' ஆண்களுடன் இணையாக பொருந்துவதாக வரதட்சணை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். திருமண சந்தை ஆண்களையும் பெண்களையும் சமமற்றவர்களாகவே பார்க்கிறது. எனவே, சட்டத்திற்கும் சமூக விழுமியங்களுக்கும் இடையில் நிலவும் கலாச்சார பின்னடைவு காரணமாக, சட்ட தலையீடுகள் இருந்தபோதிலும் வரதட்சணை தொடர்ந்து நீடிக்கிறது.


ஒருங்கிணைந்த முயற்சிகளின் தேவை


சுருக்கமாக, வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வின் கவனம் ஆண்கள், குறிப்பாக இளைஞர்கள் மீது திரும்ப வேண்டும் என்று தோன்றுகிறது. வரதட்சணை ஒரு குற்றம் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதைப் பற்றிய பொது விவாதம் அதிகமாக இருக்க வேண்டும். வரதட்சணை இல்லாத திருமணங்களை பொதுமக்கள் அங்கீகரித்து கொண்டாடுவது சரியான திசையின் ஒரு படியாக இருக்கலாம்.


வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த, பாடத்திட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளாலும் வெற்றிகரமான வரதட்சணை எதிர்ப்பு பிரச்சாரங்களை ஒருங்கிணைக்க முடியும். உதாரணமாக, பிரேக்த்ரூவின் ‘பெல் பஜாவோ’ பிரச்சாரம், குடும்ப வன்முறைக்கு எதிரான வாசிப்புப் பொருட்களைக் கொண்ட ஒரு பரப்புரைக் கருவித் தொகுப்பை உருவாக்கியது. இதில் வரதட்சணை தொடர்பான துன்புறுத்தல்களும் அடங்கும். அத்தகைய உள்ளடக்கம் உள்ளூர் அமைப்புகள் மற்றும் குழுக்களால் வட்டார மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டால், அது அதிக புழக்கத்திற்கு வழிவகுக்கும்.


வரதட்சணை முறை ஒரு தீய பழக்கம் என்றும், அது அவசரமாக ஒழிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியதுடன், சட்டமன்றம், சட்ட அமலாக்கம், நீதித்துறை, குடிமை சமூக அமைப்புகள் போன்ற "சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஒருங்கிணைந்த முயற்சிகளின்" அவசியத்தையும் எடுத்துக்காட்டியது. ஏனெனில், இது "விரைவான மாற்றத்திற்குரிய விஷயம்" அல்ல என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


பெண்களுக்கு அவர்களின் சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். சட்டம் ஒரு கருவியாக இருந்து உதவ முடியும். இருப்பினும், உண்மையான மாற்றம் சமூக இயல்புடையதாக இருக்க வேண்டும். அது தலைமுறை தலைமுறையாகவும் நிகழ வேண்டும்.


 Original Article : To eradicate dowry, why changes have to be social and generational, not just legal. -Rituparna Patgiri

Share:

டெல்லியில் BS-VI அல்லாத வாகனங்களுக்கு நுழைவு அனுமதி இல்லை. -குஷ்பூ குமாரி

 டெல்லி, வெளியிலிருந்து வரும் BS-VI அல்லாத வாகனங்களுக்குத் தடை விதித்துள்ளது. ஆனால், BS விதிமுறைகள் என்றால் என்ன? BS-VI விதிமுறைகள் வாகனங்களின் புகையை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன?


தற்போதைய செய்தி:


கடந்த மாதம், டெல்லி அரசு, டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட BS-VI அல்லாத தனியார் வாகனங்கள் தலைநகருக்குள் நுழைவதற்குத் தடை விதித்தது. மேலும், நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள், தங்கள் வாகனங்களுக்குச் செல்லுபடியாகும் மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (Pollution Under Control Certificate (PUCC)) வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கும் என்றும் அறிவித்தது. சமீபத்திய தரவுகளின்படி, BS, BS-I மற்றும் BS-II தரநிலைகளுக்கு முந்தைய 41.1 லட்சம் பழைய இருசக்கர வாகனங்களும், BS-III தரத்திலான 25.4 லட்சம் கார்கள் மற்றும் பிற வாகனங்களும் உள்ளன.


முக்கிய அம்சங்கள்:


1. பாரத் ஸ்டேஜ் உமிழ்வு விதிமுறைகள் என்பது மோட்டார் வாகனங்களிலிருந்து வரும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான இந்தியாவின் தரநிலைகள் ஆகும். அவை கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரோகார்பன்கள், நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் துகள்கள் போன்ற மாசுபடுத்திகளின் வெளியேற்ற உமிழ்வுகளுக்கு சட்ட வரம்புகளை நிர்ணயிக்கின்றன. அடுத்தடுத்த ஒவ்வொரு BS தரநிலையும் இந்த வரம்புகளை மேலும் கடுமையாக்குகிறது. இது வாகன உற்பத்தியாளர்களை தூய்மையான இன்ஜின்கள், மேம்படுத்தப்பட்ட புகை வெளியேற்ற அமைப்புகள் மற்றும் தூய்மையான எரிபொருளைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது.


2. இந்தியா முதன்முதலில் 1991ஆம் ஆண்டில்  மாசு உமிழ்வு விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. 1996ஆம் ஆண்டில் அவற்றை மேலும் கடுமையாக்கியது. அப்போது பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள், வெளியேறும் புகையின் உமிழ்வைக் குறைக்க, வினையூக்கி மாற்றிகள் (catalytic converters) போன்ற தொழில்நுட்ப மேம்பாடுகளைப் உருவாக்க சூழல் ஏற்பட்டது. சுற்றுச்சூழலை மையமாகக் கொண்ட எரிபொருள் தரநிலைகள் ஏப்ரல் 1996-ல் அறிவிக்கப்பட்டன. அவை 2000ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டு, BIS 2000 விதிகளில் சேர்க்கப்பட்டன.


3. ஏப்ரல் 1999-ல் உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு பாரத் ஸ்டேஜ்-I (BIS 2000) மற்றும் பாரத் ஸ்டேஜ்-II விதிமுறைகளை அறிவித்தது. BS-IIதரநிலை டெல்லி மற்றும் மற்ற பெருநகரங்களுக்கும் பொருந்தும்; BS-I தரநிலை இந்தியாவின் மற்ற பகுதிகளுக்குப் பொருந்தும்.


4. ஏப்ரல் 2005 முதல், 2003-ஆம் ஆண்டின் ஆட்டோ எரிபொருள் கொள்கையின்படி, முறையே 13 முக்கிய நகரங்களுக்கும், நாட்டின் பிற பகுதிகளுக்கும் BS-III மற்றும் BS-II எரிபொருள் தர விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. ஏப்ரல் 2010 முதல், 13 முக்கிய நகரங்களிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் BS-IV மற்றும் BS-III விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.


5. 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் BS IV விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. 2016ஆம் ஆண்டில், நாடு BS-V விதிமுறைகளை முற்றிலுமாகத் நீக்கப்பட்டு, 2020ஆம் ஆண்டுக்குள் BS-VI விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது.


6. இந்த விதிமுறைகளின் கீழ் கட்டுப்படுத்தப்படும் முக்கிய உமிழ்வுகள் கார்பன் மோனாக்சைடு உமிழ்வுகள் மற்றும் ஹைட்ரோகார்பன் உமிழ்வு வரம்புகள் ஆகும். நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் துகள் பொருட்கள் ஆகியவையும் குறிப்பிடத்தக்க அளவீடுகளாகும். மேலும், தரநிலைகளின் ஒவ்வொரு படிநிலை உயர்வுக்கும், மேம்படுத்தப்பட்ட தரத்திலான எரிபொருள் தேவைப்படுகிறது. BS-IV வாகனங்கள் இயங்குவதற்கு, BS-IV தர எரிபொருள் தேவைப்படுகிறது.


7. BS-IV-க்கு முந்தைய வாகனங்களில் வெளியேறும் புகையைச் சுத்திகரிக்க போதுமான அமைப்புகள் இல்லை. அதே சமயம், BS-IV வாகனங்கள் தீங்கு விளைவிக்கும் துகள்களை ஓரளவு மட்டுமே குறைக்கும் எளிய வினையூக்கிகளைப் பயன்படுத்துகின்றன.


8. BS-IV மற்றும் BS-VI ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடு, எரிபொருளில் உள்ள கந்தகத்தின் அளவில்தான் உள்ளது. BS-VI எரிபொருள், கந்தகத்தின் அளவை ஒரு மில்லியனுக்கு 50 பாகங்களிலிருந்து (parts per million (ppm)) 10 பாகங்களாகக் குறைத்து, 80% வரை குறைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


9. BS-VI விதிமுறைகளின்கீழ், டீசல் துகள் வடிகட்டிகள் (diesel particulate filters (DPFs)) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வினையூக்கி ஒடுக்கம் (selective catalytic reduction (SCR)) அலகுகள் போன்ற முழுமையான நவீன புகைபோக்கிப் பிந்தைய சுத்திகரிப்பு அமைப்புகள் (வாகனத்தின் புகைபோக்கியில் பொருத்தப்பட்ட தொழில்நுட்பங்கள்) கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் வெளியேற்றுக் குழாயில் வடிகட்டிகள் மற்றும் இரசாயன உலைகள் போலச் செயல்பட்டு, தீங்கு விளைவிக்கும் வாயுக்களையும் துகள்களையும் காற்றில் கலப்பதற்கு முன்பு சிதைக்கின்றன.


10. உதாரணமாக, வினையூக்கி மாற்றிகள் (catalytic converters) கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் போன்ற நச்சு வாயுக்களை கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன் மற்றும் நீராவி போன்ற குறைந்த தீங்கு விளைவிக்கும் பொருட்களாக மாற்றுகின்றன. அதே நேரத்தில், டீசல் துகள் வடிகட்டிகள் டீசல் என்ஜின்களால் வெளியேற்றப்படும் நுண்ணிய புகைத்துகள்களை இயற்பியல் ரீதியாகப் பிடித்து, துகள் மாசுபடுத்திகளின் வெளியேற்றத்தை 90%-க்கும் மேலாகக் குறைக்கின்றன. இந்த செயல்முறையின் மூலம் BS-VI வாகனங்கள் துகள் மாசுபடுத்தி வெளியேற்றங்களையும், மற்ற உமிழ்வுகளையும் கணிசமாகக் குறைக்க முடியும்.


11. டெல்லியில் நிலவி வரும் தொடர்ச்சியான காற்று மாசுபாடு பிரச்சனை காரணமாக, நாட்டின் மற்ற பகுதிகளை விட முன்னதாகவே கடுமையான உமிழ்வு விதிமுறைகள் வரலாற்று ரீதியாக அமல்படுத்தப்பட்டுள்ளன. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், BS-II விதிமுறைகள் 2001-ஆம் ஆண்டிலும், BS-III விதிமுறைகள் 2005-ஆம் ஆண்டிலும், BS-IV விதிமுறைகள் 2010-ஆம் ஆண்டிலும் தலைநகரில் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை அனைத்தும் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தப்பட்டததாக கூறுகிறது


காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (Commission for Air Quality Management (CAQM))


1. இந்த ஆணையம், 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி நடைமுறைக்கு வந்த காற்று தர மேலாண்மை ஆணைய சட்டம், 2021-ன் கீழ் அமைக்கப்பட்டது.


2. காற்றின் தரக் கண்காணிப்பு அமைப்பு, டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்றின் தரக் குறியீட்டைச் சுற்றியுள்ள பிரச்சனைகள் மற்றும் தொடர்புடைய விவகாரங்களை சிறப்பாக ஒருங்கிணைப்பது, ஆராய்ச்சி செய்வது, அடையாளம் காண்பது மற்றும் தீர்ப்பது ஆகியவற்றுடன் பணிபுரிகிறது. பிராந்தியத்தில் காற்றின் தரத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவும், வழிமுறைகளை வழங்கவும், புகார்களை விசாரிக்கவும் ஆணையம் அதிகாரம் கொண்டுள்ளது.


3. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசுக்கட்டுப்பாடு துறையில் குறைந்தது 15 ஆண்டுகள் அனுபவம் அல்லது குறைந்தது 25 ஆண்டுகள் நிர்வாக அனுபவம் கொண்ட ஒரு முழுநேரத் தலைவர் ஆணையத்திற்கு கண்டிப்பாக இருக்க வேண்டும்.


Original Article : No entry for Non-BS-VI vehicles in Delhi. -Khushboo Kumari

Share:

லோக்பால் அமைப்பின் பொறுப்பு என்ன? -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி: ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் (Prevention of Corruption Act (PCA)) பிரிவு 17A-ன் அரசியலமைப்புச் சட்டத்தன்மைக்கு சவால் விடுத்த மனு மீது, உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு செவ்வாய்க்கிழமை அன்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.


முக்கிய அம்சங்கள்:


2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விதி, அரசு ஊழியர் ஒருவர் தனது கடமைகளை நிறைவேற்றும்போது எடுக்கப்பட்ட பரிந்துரைகள் அல்லது முடிவுகள் தொடர்பான குற்றங்களுக்காக எந்தவொரு விசாரணையையும் நடத்துவதற்கு முன்பு காவல்துறை அதிகாரிகள் அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று குறிப்பிடுகிறது.


மனுதாரரான பொதுநல வழக்கு மையம், இந்தச் சட்டம் ஊழல் அதிகாரிகளுக்கு ஒரு 'கேடயமாக' (shield) செயல்படுகிறது என்றும், இது அவர்களுக்கு எதிரான விசாரணைகளைத் தடுக்கிறது என்றும் கூறியது.


நீதிபதி கே. வி. விஸ்வநாதன், லோக்பால் மூலம் ஒரு சுதந்திரமான பரிசீலனை வழிமுறையைச் சேர்ப்பதன் மூலம் அந்த விதியை உறுதிப்படுத்தினார். இருந்தபோதிலும், நீதிபதி பி. வி. நாகரத்னா, அந்த விதியை அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறி முழுமையாக ரத்து செய்தார். மாறுபட்ட தீர்ப்புகளின் காரணமாக, இந்த வழக்கு ஒரு முதன்மை அமர்வை அமைப்பதற்காக இந்தியத் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.


நிர்வாகச் சட்டத்தில் உள்ள ஒரு தொடர்ச்சியான சவாலை இந்தத் தீர்ப்பு கவனத்திற்குக் கொண்டுவருகிறது. நேர்மையான அதிகாரிகளைத் துன்புறுத்தலிலிருந்து பாதுகாக்கும் அதே வேளையில், ஊழல் குறித்து விசாரணை நடத்த முகமைகளை எவ்வாறு அனுமதிப்பது என்பதே இந்த சட்டத்தின் மிகப் பெரிய சவாலாக உள்ளது.


பிரிவு 17A-ன் தற்போதைய செயல்பாட்டில் உள்ள ஒரு பெரும் குறைபாட்டை நீதிபதி விஸ்வநாதன் சுட்டிக்காட்டினார். ஒப்புதல் அளிக்கும் அல்லது மறுக்கும் அதிகாரம் அரசாங்கத்திடம் உள்ளது. இது, ஊழல் விசாரணைகளுக்குத் தேவையான சுதந்திரம் என்ற கோட்பாட்டை மீறுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.


சட்டத்தை அரசியலமைப்புக்கு முரணானது என்ற நிலையிலிருந்து காப்பாற்ற, அவர் ஒரு ‘ஆக்கப்பூர்வமான அணுகுமுறையைக்’ கையாண்டார். முன் அனுமதி பெறுவதற்கான நிபந்தனை செல்லுபடியாகும் என்றாலும், அந்த முடிவு முழுவதுமாக அரசாங்கத்திடம் மட்டுமே இருக்கக்கூடாது என்று நீதிபதி விஸ்வநாதன் தீர்ப்பளித்தார். மாறாக, புகார்களை அரசாங்கம் மட்டும் விசாரிக்காமல், தேசிய அளவில் லோக்பால் மற்றும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா போன்ற ஒரு சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.


 இதற்கு மாறாக, நீதிபதி நாகரத்னா, பிரிவு 17A ஊழல் தடுப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கு எதிரானது (contrary to the object and purpose) என்று கூறினார். இது விசாரணைகளைத் தடுத்து, நேர்மையான அதிகாரிகளுக்குப் பதிலாக ஊழல் அதிகாரிகளையே பாதுகாக்கிறது என்று தனது கருத்தை தெரிவித்தார்.


விசாரணைகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் அரசாங்கம் நேர்மையாகச் செயல்பட முடியும் என்ற கருத்தை நீதிபதி நாகரத்னா விமர்சித்தார். குறிப்பாக, உயர் அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கும்போது, ​​ஒரு கீழ்நிலை அதிகாரியால் பாரபட்சமின்றி செயல்பட முடியாது என்பதால், அதில் பாரபட்சம் அல்லது முரண்பாடுகள் ஏற்படக்கூடும் என்று நீதிபதி நாகரத்னா கூறினார்.


உங்களுக்குத் தெரியுமா?


லோக்பால் என்பது இந்தியாவில் ஒரு தன்னிச்சையான ஊழல் எதிர்ப்பு (anti-corruption authority) அமைப்பாகும். இது பொதுநலனைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், ஒன்றிய அரசில் பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரிக்கவும் உருவாக்கப்பட்டது.


இது 2010ஆம் ஆண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலைமையிலான ஜன் லோக்பால் இயக்கத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டம், 2013-ன் கீழ் நிறுவப்பட்டது. இந்தியா தனது முதல் லோக்பால் அமைப்பை 2019ஆம் ஆண்டில் பெற்றது.


2013ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ், லோக்பால் ஒரு தலைவரையும் 8 உறுப்பினர்களுக்கு குறையாமல் உறுப்பினர்களையும் கொண்டிருக்க வேண்டும். அவர்களில் 50% நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களாக இருக்க வேண்டும். லோக்பாலின் உறுப்பினர்களில் 50%-க்கும் குறையாமல் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் ஆகியோரைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.


பிரதமர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் ஒன்றிய  அரசின் A, B, C மற்றும் D பிரிவு ஊழியர்கள் வரை பரந்த அளவிலான அரசு ஊழியர்கள் லோக்பாலின் அதிகார வரம்பிற்குள் வருகின்றனர். லோக்பாலின் உறுப்பினர்களே கூட 'அரசு ஊழியர்' (public servant) என்ற வரையறைக்குள் இடம் பெற்றிருப்பார்கள்.


— பிரதமர் மீதான குற்றச்சாட்டுகள் எழுந்தால், அதில் சில நிபந்தனைகள் உள்ளன. வெளிநாட்டு உறவுகள், பாதுகாப்பு, பொது ஒழுங்கு, அணுசக்தி அல்லது விண்வெளி தொடர்பான புகார்களாக இருந்தால், லோக்பால் அமைப்பால் பிரதமருக்கு எதிரான புகார்களை விசாரிக்க முடியாது.


மேலும், இதுபோன்ற புகார்களை விசாரிக்க வேண்டுமானால், முழு லோக்பால் அமர்வும் ஒப்புக்கொண்டு, குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அதற்கு அங்கீகாரம் அளித்தால் மட்டுமே விசாரணை மேற்கொள்ள முடியும்.


Original Article : What is the role of Lokpal? -Kushboo Kumari

Share:

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விழா.. -குஷ்பூ குமாரி

 தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு விழா என்றால் என்ன? இந்தியாவில் உள்ள மற்ற விலங்குகள் சார்ந்த விழாக்கள் யாவை? விலங்குகளுக்கு எதிரான கொடுமையைத் தடுத்தல் சட்டம் (Prevention of Cruelty to Animals (PCA) Act) என்றால் என்ன?


தற்போதைய செய்தி :


சமீபத்தில், அவனியாபுரத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழாவை நடத்த கிராமக் குழுவுக்கு அனுமதி மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த நிகழ்வை நடத்தும் பொறுப்பு தமிழ்நாடு அரசிடம் இருப்பதாக குறிப்பிட்டது.


மதுரை மாவட்டம் அவனியாபுரம் கிராமத்தில் விழாவை நடத்த அனுமதி வழங்கவும், காவல்துறை தேவையான பாதுகாப்பை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி P. முருகன் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் G. ஜெயச்சந்திரன் மற்றும் K. K. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.


முக்கிய அம்சங்கள்:


1. ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல் என்றும் அழைக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் ஒரு பாரம்பரிய காளை அடக்கும் விளையாட்டு (bull-taming sport) ஆகும். பொங்கல் பண்டிகை இயற்கை மற்றும் செழிப்பான அறுவடைக்கு நன்றி தெரிவிப்பதற்காக கொண்டாடப்படுகிறது. இதில் கால்நடை வழிபாடு (cattle-worship) ஒரு பகுதியாகும்.


2. தமிழக அரசின் வலைத்தளத்தின்படி, ஜல்லிக்கட்டு கி.மு. 400 மற்றும் 100-க்கு இடைப்பட்ட காலத்தில் தொடங்கியது என்றும், இந்தியாவில் உள்ள ஆயர்கள் என்ற இனக்குழுவினரால் இது விளையாடப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெயர் ஜல்லி (வெள்ளி மற்றும் தங்க நாணயங்கள்) மற்றும் கட்டு (கட்டப்பட்டது) ஆகிய இரண்டு வார்த்தைகளிலிருந்து வந்தது.


3. இந்தத் திருவிழாவில், ஒரு காளை கூட்டத்திற்குள் அவிழ்த்து விடப்படுகிறது. அதை அடக்கும் நபருக்கு, அதன் கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் நாணயங்கள் பரிசாகக் கிடைக்கும். பங்கேற்பாளர்கள் காளையைக் கட்டுப்படுத்த அதன் திமிலைப்பிடிக்க முயற்சிப்பார்கள், சில சமயங்களில் அவர்கள் காளையுடன் ஓடுவார்கள்.


4. புலிகுளம் மற்றும் காங்கேயம் என்பது இந்த விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் காளைகளின் இனமாகும். இந்த விழா மாநிலத்தின் கலாச்சார சுற்றுலாவின் முக்கியப் பகுதியாகும். இதில் வாடி மஞ்சுவிரட்டு, வேலிவிரட்டு, வடம் மஞ்சுவிரட்டு உள்ளிட்ட பல்வேறு வகைகள் உள்ளன.


5. ஜல்லிக்கட்டு, வேளாண் சமூகத்தினர் தங்கள் தூய்மையான இன நாட்டு காளைகளைப் பாதுகாக்கும் பாரம்பரிய முறையாகக் கருதப்படுகிறது. கால்நடைகள் இனப்பெருக்கம் பெரும்பாலும் செயற்கை முறையில் நடைபெறும் இக்காலத்தில், பாதுகாப்பாளர்களும் உழவர்களும் வாதிடுவது என்னவென்றால், ஜல்லிக்கட்டு என்பது இந்த ஆண் விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு வழியாகும் — இல்லையெனில் அவை உழவுக்கு பயன்படுத்தப்படாவிட்டால் இறைச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதாகும்.


கம்பாலா  விழா (Kambala festival)


1. இது கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில், குறிப்பாக துளு மொழி பேசுபவர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் கடைப்பிடிக்கப்படும் ஒரு நாட்டுப்புற விளையாட்டாகும். இது பல குடும்பங்களுக்கு, குறிப்பாக கடலோரப் பகுதிகளில் உள்ள பன்ட் சமூகத்தினருக்கு, இது ஒரு பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. கம்பாலா போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற நம்பிக்கையில், அவர்கள் ஆண்டு முழுவதும் எருமை ஜோடிகளைப் பராமரிக்கின்றனர்.


2. சுற்றுலா அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, சிலர் கம்பாலா திருவிழா, சிவபெருமானின் ஒரு வடிவமான ஸ்ரீ கத்ரி மஞ்சுநாதரை, செழிப்பான அறுவடைக்காக நினைவுகூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது என்று கருதுகின்றனர். மற்றவர்கள் இந்த நிகழ்வு கர்நாடகாவில் உள்ள உழவர்களால் தொடங்கப்பட்டது என்று கூறுகின்றனர். எருமைகளுக்குப் பயிற்சி அளித்து, அவற்றை போரில் பயன்படுத்த முடியுமா என்பதைப் பார்ப்பதற்காகவே ஹொய்சால மன்னர்கள் இந்த பந்தய வழக்கத்தைத் தொடங்கினார்கள் என்று நம்பப்படுகிறது..


3. கம்பாலாவில் நான்கு முக்கிய வகைகள் உள்ளன. நெகிலு (கலப்பை) எனப்படும் முதல் வகையில், எருமைகளில் கட்டப்பட்ட இலகுவான கலப்பைகளைப் பயன்படுத்திப் போட்டி நடத்தப்படுகிறது. இது ஆரம்ப நிலை விலங்குகளுக்காக வடிவமைக்கப்பட்டது.


4. இரண்டாவது வகை ஹக்கா (கயிறு) ஆகும். இதில் எருமைகள் ஒரு கயிற்றால் ஒன்றாகக் கட்டப்பட்டு, பந்தய வீரர்களால் ஓட்டப்படுகின்றன. மூன்றாவது வகையான அடடா ஹலகேயில், பந்தய வீரர்கள் எருமைகள் இழுக்கும் ஒரு பலகையின் மீது நிற்கிறார்கள். இவ்வாறு, ஜாக்கிகள் விலங்குகளுக்குப் பின்னால் ஓடும் ஹக்கா மற்றும் நெகிலு போன்ற போட்டிகளைப் போல் இல்லாமல், இதில் எருமைகள் ஜாக்கிகளை இழுத்துச் செல்கின்றன.


5. கேனே ஹலேஜ் என்பது நான்காவது வகையாகும். இதில் மரப்பலகை ஒன்று எருமைகளுடன் கட்டப்பட்டிருக்கும். வீரர்கள் நிற்கும் அந்தப் பலகையில் இரண்டு துளைகள் இருக்கும்; சேற்றுப் பாதையில் அது செல்லும்போது அந்தத் துளைகள் வழியாகத் தண்ணீர் வெளியேறும். தண்ணீர் எவ்வளவு உயரத்திற்குத் தெறிக்கிறது என்பதைப் பொறுத்தே போட்டியின் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுகிறார்.


மரமடி (Maramadi)


கேரள சுற்றுலாத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, கலப்பூட்டு அல்லது போத்தோட்டம் என்றும் அழைக்கப்படும் மரமடி என்பது, அறுவடை காலத்திற்குப் பிறகு கேரளாவில் உள்ள ஊரக பகுதிகளில் நடத்தப்படும் ஒரு காளைப் பந்தயம் ஆகும். இந்த விழாவில், புதிதாக உழப்பட்ட பரந்த நெல் வயல்கள் பந்தயத்திற்கான 'விளையாட்டுத் திடலாக' அமைகின்றன. பத்தனம்திட்டா மாவட்டம் ஆனந்தபள்ளி பகுதியில் ஓணம் பண்டிகையின்போது மிகவும் பிரசித்தி பெற்ற மரமடி பந்தயம் நடைபெறுகிறது.


பைல்கடா ஷரியாத் (Bailgada Sharyat)


சுற்றுலா அமைச்சகத்தின் கூற்றுப்படி, மகாராஷ்டிராவின் காளை வண்டிப் பந்தயம் ‘பைல்காடா ஷர்யத்’ (Bailgada Sharyat) என்று அழைக்கப்படுகிறது. இது கொங்கண், மேற்கு மகாராஷ்டிரா மற்றும் மராத்வாடா விவசாயிகளின் 450 ஆண்டு பழமையான பாரம்பரிய போட்டியாகும். இந்த பந்தயத்தில், நான்கு வேகமான காளைகள் ஒரு வண்டியை 350 முதல் 450 அடி தூரத்திற்கு இழுத்துச் செல்கின்றன. மேலும், எந்த அணி வேகமாகச் செல்கிறதோ அதுவே வெற்றி பெறும்.


விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் (Prevention of Cruelty to Animals (PCA) Act)


1. விலங்குகளுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் (PCA Act) விலங்குகளுக்கு இழைக்கப்படும் கொடுமையை வரையறுக்கிறது. இதில், விலங்குகளின்மீது அதிக சுமை ஏற்றுவது அல்லது அதிக வேலை வாங்குவது, அதற்கு உணவு, தண்ணீர் மற்றும் தங்குமிடம் வழங்காமல் இருப்பது, ஒரு விலங்கைக் காயப்படுத்துவது அல்லது கொல்வது போன்ற செயல்களாக கருதப்படும்.


2. இந்தச் சட்டம் தண்டனையை பின்வருமாறு விதிக்கிறது: முதல் குற்றத்திற்கு, 10 ரூபாய்க்குக் குறையாத, 50 ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடியதுமான அபராதம் விதிக்கப்படும். மேலும், முந்தைய குற்றம் நிகழ்ந்த மூன்று ஆண்டுகளுக்குள் செய்யப்படும் இரண்டாவது அல்லது அடுத்தடுத்த குற்றங்களுக்கு, 25 ரூபாய்க்குக் குறையாததும், 100 வரை நீட்டிக்கப்படக்கூடியதுமான அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.


3. ஜல்லிக்கட்டு, கம்பாலா மற்றும் அதுபோன்ற விலங்குத் திருவிழாக்கள் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன. ஏனெனில், இந்த விளையாட்டுகள் கொடூரமானவையாகவும் ஆபத்தானவையாகவும் இருக்கலாம் என்றும், சில சமயங்களில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் காயங்களையோ அல்லது உயிரிழப்புகளையோ ஏற்படுத்தக்கூடும் என்றும் விலங்குநல அமைப்புகளும் நீதிமன்றங்களும் கவலை தெரிவிக்கின்றன.


4. 2023-ஆம் ஆண்டில், ஜல்லிக்கட்டு, கம்பாலா மற்றும் மாட்டு வண்டிப் பந்தயங்கள் போன்ற காளைகளை அடக்கும் விளையாட்டுகள் தொடர அனுமதிக்கும் வகையில், 1960-ஆம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்புச் (Prevention of Cruelty to Animals (PCA) Act)) சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.


Original Article : Jallikattu festival begins in Tamil Nadu. -Khushboo Kumari

Share: