நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index) என்றால் என்ன? இது மொத்த விலைக் குறியீட்டிலிருந்து (Wholesale Price Index(WPI)) எவ்வாறு வேறுபடுகிறது? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பணவீக்கத் தொடரில், நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (SonyLIV), யூடியூப் பிரீமியம் (YouTube Premium) மற்றும் ஜீ5 (ZEE5) போன்ற பிரபலமான இணைய ஒளிபரப்பு சேவைகளின் (online streaming services) சந்தாக் கட்டண மாற்றங்களும் சேர்க்கப்படும். இந்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட நுகர்வோர் விலைக் குறியீட்டை விரிவாகப் புதுப்பிப்பதற்கான நிபுணர் குழுவின் அறிக்கையின்படி, இது இந்தத் தளங்களின் பரவலான பயன்பாட்டைப் பிரதிபலிக்கிறது.


ஸ்ட்ரீமிங் சந்தாக் கட்டணங்கள் இந்தியா முழுவதும் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருப்பதால், ஒரே ஒரு அகில இந்தியக் குறியீடு உருவாக்கப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராகப் பயன்படுத்தப்படும்.


இந்தியாவின் மிக முக்கியமான பேரியல் பொருளாதாரக் குறியீடான நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பணவீக்கத்தின் நவீனமயமாக்கலானது, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் (MoSPI) மேற்கொள்ளப்படும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் பெரிய அளவிலான சீரமைப்பின் ஒரு பகுதியாகும்.


2023-24-ஆம் ஆண்டின் குடும்ப நுகர்வுச் செலவின ஆய்வின் (Household Consumption Expenditure Survey (HCES)) நுகர்வு முறைகளின் முடிவுகளின் அடிப்படையில், விலைகளுக்கான அடிப்படை ஆண்டாக 2024-ஐக் கொண்ட புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பணவீக்கத் தொடரின் முதல் அறிக்கையானது, ஜனவரி மாதத்திற்கான தரவுகளுடன் பிப்ரவரி 12 அன்று வெளியிடப்படும். அதன்பிறகு, பிப்ரவரி 27 அன்று, புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தித் தொடர்  2022-23-ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டும், முக்கிய விரிவான வழிமுறை மாற்றங்களுடனும் அக்டோபர்-டிசம்பர் 2025-ம் ஆண்டுக்கான தரவுகளுடனும், 2025-26-ஆம் ஆண்டுக்கான இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டுடனும் வெளியிடப்படும். பின்னர், மே மாதத்தில், திருத்தப்பட்ட தொழில்துறை உற்பத்தி குறியீடு (Index of Industrial Production), 2022-23-ஆம் ஆண்டை புதிய அடிப்படை ஆண்டாகக் கொண்டு வெளியிடப்படும்.


2011-12-ஆம் ஆண்டு நுகர்வோர் செலவின ஆய்வின் அடிப்படையில் 299 பொருட்களிலிருந்து தற்போது, புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பட்டியல் 358-ஆக பொருட்கள் மற்றும் சேவைகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. 


இந்தியாவின் சில்லறைப் பணவீக்கத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் மற்ற சில புதிய பொருட்கள் மற்றும் சேவைகளில் குழாய் வழி இயற்கை எரிவாயு, மின்காந்த அடுப்புகள், அலங்கார விளக்குகள், ஓவியங்கள், தெளிப்பான்கள், மசாஜ் கருவிகள், டேப்லெட்டுகள், பென்-டிரைவ்கள் மற்றும் வெளிப்புற ஹார்ட் டிஸ்க்குகள், செல்லப்பிராணிகள் மற்றும் செல்லப்பிராணிப் பொருட்கள், சிகை நிறமிகள் மற்றும் குழந்தைப் பராமரிப்பாளர்கள் ஆகியவை அடங்கும். அக்டோபரில் சில்லறைப் பணவீக்கம் 0.25% என்ற சாதனை குறைந்த அளவிற்குச் சரிந்திருந்தாலும், டிசம்பரில் அது 1.33%-ஆக மீண்டும் உயர்ந்துள்ளது. 


இந்தியன் எக்ஸ்பிரஸ் வியாழக்கிழமை அன்று வெளியிட்ட செய்தியின்படி, புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பட்டியல், ஒட்டுமொத்தமாக, 2011-12-ஆம் ஆண்டு பட்டியலைவிட சேவைகளில் அதிக கவனம் செலுத்துகிறது. உணவு மற்றும் பானங்களின் பங்கு 45.86%-லிருந்து 36.75%-ஆகக் குறைந்துள்ளது. இது ஜெர்மானிய புள்ளியியல் நிபுணரும் பொருளாதார வல்லுநருமான எர்ன்ஸ்ட் ஏங்கெல் என்பவரின் பெயரால் அழைக்கப்படும் ஏங்கெல் விதியுடன் (Engel’s Law) ஒத்துப்போகிறது. ஒரு குடும்பத்தின் வருமானம் அதிகரிக்கும்போது, ​​அது உணவுக்காகச் செலவிடும் பங்கு குறைகிறது என்று அந்த விதி கூறுகிறது.


புதிய பொருட்கள் மற்றும் சேவைகள் சேர்க்கப்பட்டதைத் தவிர, ஒலி மற்றும் ஒளிப் பதிவுகள், டேப் ரெக்கார்டர்கள் மற்றும் விசிடிகள் போன்ற பயன்படுத்தப்படாத சில பொருட்கள் புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.


உங்களுக்குத் தெரியுமா? :


நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டு பணவீக்க விகிதங்கள், ஆண்டுக்கு ஆண்டு கணக்கிடப்படும் மொத்த விலைக் குறியீடு (wholesale price index (WPI)) அடிப்படையிலான பணவீக்க விகிதம் மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு (consumer price index (CPI)) அடிப்படையிலான பணவீக்க விகிதம் ஆகும்.


முதலாவது மொத்த விலை பணவீக்க விகிதம் (WPI) என்றும், இரண்டாவது சில்லறை விலை பணவீக்க விகிதம் (retail inflation rate) என்றும் அழைக்கப்படுகிறது. மொத்த விலைக் குறியீடு (WPI) மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) ஆகிய இரண்டும் விலைக் குறியீடுகள் ஆகும். இதன் பொருள், இவை பொருட்கள் மற்றும் சேவைகளின் இரண்டு வெவ்வேறு பட்டியலில் அடங்கும். இந்த இரண்டு வகையான நுகர்வோருக்கும் எது பொருத்தமானது என்பதன் அடிப்படையில், அரசாங்கம் வெவ்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வெவ்வேறு பங்குகளை ஒதுக்குகிறது.


நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) அடிப்படையிலான பணவீக்கத் தரவுகள் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தாலும் (MoSPI), மொத்த விலைக் குறியீடு (WPI) அடிப்படையிலான பணவீக்கத் தரவுகள் தொழில் மற்றும் உள் வர்த்தக மேம்பாட்டுத் துறையாலும் (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) தொகுக்கப்படுகின்றன.


கவனிக்கவேண்டிய ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், மொத்த விலைக் குறியீடு (WPI) சேவைகளின் விலை மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. உதாரணமாக, முடிதிருத்தம் அல்லது வங்கி பரிவர்த்தனை ஆகும். ஆனால் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) கணக்கில் எடுத்துக்கொள்கிறது. போக்குவரத்து, கல்வி, பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை, தனிப்பட்ட பராமரிப்பு போன்ற சேவைகளின் விலை கணிசமாக அதிகரித்தால், சில்லறை பணவீக்கம் உயரும். ஆனால், மொத்த விலை பணவீக்கத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது.  




Share:

டெல்லி உயர்நீதிமன்றம் அரசுக்கு கேட்பாணை அனுப்பியுள்ளது : உறைந்த கரு தானம் குறித்த விதிகள் மற்றும் அவை ஏன் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன? -அமால் ஷேக்

 ஒரு ஐவிஎஃப் நிபுணரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது., சட்டம் ஏன் சில மரபணு அல்லாத பெற்றோர் முறைகளை அனுமதித்து மற்றவற்றைத் தடுக்கிறது என்று கேள்வி எழுப்புகிறது. அதன் விவரங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன.


IVF (In Vitro Fertilization) என்பது ஒரு உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் (ART) ஆகும், இதில் முட்டைகள் உடலுக்குள் அல்லாமல் ஆய்வகத்தில் விந்தணுக்களால் கருவுறுகின்றன.


டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த வாரம் ஒரு பொதுநல மனு மீது நோட்டீஸ் அனுப்பியது. அந்த மனு, தம்பதிகள் இரு தரப்பிலும் சம்மதம் தெரிவித்தாலும்கூட, தானம் செய்வதற்குப் பதிலாக, கருவுறக்கூடிய உறைந்த கருக்களை அழிக்க வேண்டும் என்று சட்டம் கட்டாயப்படுத்த முடியுமா என்று கேள்வி எழுப்புகிறது.


பயன்படுத்தப்படாத உறைந்த கருக்களை கருவுறாத் தன்மை கொண்ட தம்பதிகளுக்கு (infertile couples) "தன்னலமற்ற, தன்னார்வ, சம்மதத்தின் அடிப்படையிலான தானம்" (altruistic, voluntary, consent-based donation) செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள "முழுமையான தடையை" எதிர்த்து, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப (ஒழுங்குமுறை) சட்டம்-2021 (provisions of the Assisted Reproductive Technology (Regulation) Act) மற்றும் அதன் விதிகளின் சில பிரிவுகளுக்கு சவால் விடுகிறது. இந்த விதிகள், தானம் செய்யப்பட்ட விந்து மற்றும் முட்டைகளைப் பயன்படுத்தி கருக்களை உருவாக்க அனுமதிக்கின்றன. ஆனால், பயன்படுத்தப்படாத உறைந்த கருக்களை மற்றொரு தம்பதியினரின் இனப்பெருக்கப் பயன்பாட்டிற்காக தானம் செய்வதைத் தடை செய்கின்றன.


இந்தச் சட்டத்தின் கீழ், அத்தகைய கருக்கள் 10 ஆண்டுகள் வரை சேமித்து வைக்கப்படலாம் மற்றும் அவை "அழிய அனுமதிக்கப்பட வேண்டும்" (allowed to perish) அல்லது ஆராய்ச்சிக்கு தானம் செய்யப்பட (be donated for research) வேண்டும். இந்த மனு இதை "செயல்பாட்டில் உள்ள கருக்களை பகுத்தறிவற்ற முறையில் அழித்தல்" என்று விவரிக்கிறது. மேலும், விருப்பமுள்ள தம்பதிகள் கருக்களைப் பெற தயாராக இருக்கும்போது, ​​கருக்களை அழியும்படி கட்டாயப்படுத்துவது நெறிமுறைக்கு முரணானது என்று அது வாதிடுகிறது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரர் உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் (ஒழுங்குமுறை) சட்டத்தின் (ART) பிரிவு 28-இன் நோக்கத்தை விரிவுபடுத்தக் கோருகிறார் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. அந்தப் பிரிவு கருக்களைச் சேமித்தல் மற்றும் கையாளுவதை நிர்வகிக்கிறது. மேலும், மத்திய அரசிடம் இருந்து ஒரு பதிலை அமர்வு கோரியது.


இந்த மனுவை ஐவிஎஃப் நிபுணர் டாக்டர் அனிருத்தா நாராயண் மல்பாணி தாக்கல் செய்துள்ளதாவது, சட்டமானது ஏன் சில மரபணு அல்லாத பெற்றோர்களை அனுமதித்து மற்றவற்றைத் தடுக்கிறது என்று கேள்வி எழுப்புகிறது. "நீங்கள் ஒரு சில குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை மட்டும் அனுமதிக்கிறீர்கள், ஆனால் மற்றொரு தொழில்நுட்பத்தை அனுமதிப்பதில்லை," என்று மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனேகா குருசுவாமி நீதிமன்றத்தில் வாதிட்டார். இந்தச் சூழ்நிலையை அவர் ஒரு சாத்தியமான சட்டமியற்றும் குறைபாடு என்று விவரித்தார்.


உறைந்த கருக்கள் விசயத்தில் சட்டம் அனுமதிப்பது என்ன?


2021-ல் இயற்றப்பட்ட உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் (ஒழுங்குமுறை) சட்டம் (ART), ஒழுங்குபடுத்தப்பட்ட நிபந்தனைகளின் கீழ் விந்து மற்றும் முட்டைகளின் தன்னலமற்ற தானத்தை அனுமதிக்கிறது. இது தானம் செய்பவரின் உதவியுடன் செய்யப்படும் ஐவிஎஃப் முறையையும் அனுமதிக்கிறது. இதில் "இரட்டை-தானம் ஐவிஎஃப்" (double-donor IVF) முறையும் அடங்கும். இதில், தானம் செய்யப்பட்ட விந்து மற்றும் தானம் செய்யப்பட்ட முட்டைகளிலிருந்து ஒரு கரு உருவாக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட தம்பதியினருக்கு மாற்றப்படுகிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில், குழந்தைக்கு பெற்றோர் இருவருடனும் மரபணு ரீதியான தொடர்பு இருக்காது என்று சட்டம் இந்த நிலையைத் தெளிவாக ஏற்றுக்கொள்கிறது.


இருப்பினும், மீதமுள்ள உறைந்த கருக்களை தானமாக வழங்குவதை சட்டம் அனுமதிப்பதில்லை. ஐவிஎஃப் சுழற்சிகளின் வெற்றி விகிதங்களை மேம்படுத்துவதற்காகப் பல கருக்கள் உருவாக்கப்படுவதால், இந்தக் கருக்கள் உருவாகின்றன. இருப்பினும், இவை அனைத்தும் கருப்பையில் பதிய வைக்கப்படுவதில்லை. பல தம்பதிகள் பின்னர் தாங்கள் மற்றொரு கர்ப்பம் விரும்பவில்லை என்று முடிவு செய்கிறார்கள். ஆனால், அவர்களின் கருக்கள் உறைநிலையில் பாதுகாக்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் இந்தக் கருக்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதில் சட்டம் கட்டுப்பாடுகளை விதிக்கிறது.


தடை எவ்வாறு செயல்படுகிறது?


"கருத் தத்தெடுப்பு" (embryo adoption) என்பதற்கு வெளிப்படையான தடை எதுவும் இல்லை. இந்தக் கட்டுப்பாடு முக்கியமாகப் பல விதிகளை ஒருங்கிணைந்து படிப்பதன் மூலம் உருவாகிறது. மருத்துவமனைகள் பயன்படுத்தப்படாத கருக்களை உண்மையான தம்பதிகளுக்காக மட்டுமே பாதுகாக்க வேண்டும். மேலும், அவற்றை வேறு எந்த நபருக்கும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு தம்பதி தங்கள் சொந்த கருக்களை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஒழுங்குமுறையின் அனுமதியுடன் மாற்றுவதைத் தவிர, கருக்களை மற்ற தரப்பினருக்கு மாற்றுவது தடைசெய்யப்பட்டுள்ளது.


பிரிவு 28(2) மேலும் சேமிப்புக் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்துகிறது. இந்தக் காலத்திற்குப் பிறகு, கருக்கள் சம்மதத்திற்கு உட்பட்டு, "அழிய அனுமதிக்கப்பட வேண்டும்" அல்லது பதிவுசெய்யப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு தானம் செய்யப்பட வேண்டும். இனப்பெருக்கப் பயன்பாட்டிற்காக கருக்களை மற்றொரு தம்பதியினருக்கு தானம் செய்யவோ அல்லது தத்தெடுக்கவோ சட்டம் எந்த ஒரு வழிமுறையையும் வழங்கவில்லை.


விதிகளின் கீழ் உள்ள சம்மதப் படிவங்கள் இந்த அமைப்பையே பிரதிபலிக்கின்றன. இறப்பு அல்லது பிரிவினை போன்ற சூழ்நிலைகளில் கருக்களுக்கு என்ன நடக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுமாறு தம்பதியினர் தீர்மானிக்கக் கேட்கப்படுகிறார்கள். இருப்பினும், கருக்களை மற்றொரு தம்பதியினருக்கு தானம் செய்வது ஒரு விருப்பமாக வழங்கப்படவில்லை.


புதிய மற்றும் உறைந்த கருக்கள்


மனுவில் எழுப்பப்பட்ட ஒரு முக்கியப் பிரச்சினை, புதிய தானமளிக்கப்பட்ட கருக்களுக்கும் உறைந்த கருக்களுக்கும் இடையே சட்டமானது சில வேறுபாடான நிலையைக் காட்டுகிறது. தானமளிக்கப்பட்ட விந்து மற்றும் தானமளிக்கப்பட்ட முட்டைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதிய கருக்கள் ஒரு தம்பதிக்கு மாற்றப்படலாம். உறைந்த கருக்கள், உறைநிலை நீக்கப்பட்டவுடன், உயிரியல் ரீதியாக புதிய கருக்களைப் போலவே இருக்கும் மற்றும் ஐவிஎஃப் சிகிச்சையிலும் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகின்றன.


இருந்தபோதிலும், உறைந்த கருக்கள் இனப்பெருக்க நோக்கங்களுக்காக மாற்ற முடியாதவையாகக் கருதப்படுகின்றன. இந்த மனு இதை ஒரு "இரட்டை நிலைப்பாடு" (double standard) என்று விவரிக்கிறது. கருக்கள் புதிதாக உருவாக்கப்படும்போது மரபணுரீதியான சீரற்றத் தன்மை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், கருக்கள் ஏற்கனவே இருந்து உறைநிலையில் வைக்கப்படும்போது, ​​அதே கொள்கையை அது நிராகரிக்கிறது என்றும் அந்த மனு தெரிவிக்கிறது.


அரசியலமைப்புச் சவால்


இந்த மனு அரசியலமைப்பின் 14 மற்றும் 21-வது பிரிவுகளின் கீழ் இந்தச் சட்டத்தை சவால் செய்கிறது. சமத்துவத்தைப் பொறுத்தவரை, புதிய தானமளிக்கப்பட்ட கருக்களைப் பெறும் தம்பதிகளுக்கும், உறைந்த கருக்களை நாடும் தம்பதிகளுக்கும் இடையே இந்தச் சட்டம் ஒரு "தன்னிச்சையான மற்றும் அரசியலமைப்புரீதியாக ஏற்க முடியாத பாகுபாட்டை" உருவாக்குகிறது என்று அது வாதிடுகிறது. இரண்டு சந்தர்ப்பங்களிலும், குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே மரபணு ரீதியான தொடர்பு இல்லை. மனுவின்படி, இந்த வகைப்பாட்டிற்கு ஒரு "புலப்படும் வேறுபாடு" (intelligible differentia) இல்லை. அதாவது, ஒரு வகை ஏன் அனுமதிக்கப்படுகிறது, மற்றொன்று ஏன் தடை செய்யப்படுகிறது என்பதை விளக்குவதற்கு ஒரு தெளிவான பகுத்தறிவு அடிப்படை இல்லை. மேலும், இது சட்டத்தின் நோக்கத்துடன் எந்தப் பகுத்தறிவுத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. இதன் மூலம், தெளிவான அடிப்படை இருக்கும் இடங்களில் மட்டுமே பாகுபாடு காட்ட அனுமதிக்கும் அரசியலமைப்பின் 14-வது பிரிவின்கீழ் உள்ள சமத்துவச் சோதனையில் இது தோல்வியடைகிறது.


தனிநபர் சுதந்திரத்தைப் பொறுத்தவரை, இந்த மனு இனப்பெருக்கத் தேர்வை வாழ்வுரிமை, கண்ணியம் மற்றும் தனியுரிமை ஆகியவற்றுக்குள் இணைக்கிறது. உதவி இனப்பெருக்கத் தொழில்நுட்பம் (ART) மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதா, எப்படிப் பெற்றுக்கொள்வது என்பது பற்றிய முடிவுகள், தனிப்பட்ட சுயாட்சிக்குள் அடங்கும் என்று அது வாதிடுகிறது. மருத்துவரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு விருப்பமாக கரு தானத்தை மறுப்பதன் மூலம், அரசு இனப்பெருக்கத் தேர்வில் "தேவையற்ற தலையீட்டை" ஏற்படுத்துகிறது.


இந்த வழக்கில் தொடர்ந்துவரும் ஒரு கருப்பொருள், கருக்களை அழிக்குமாறு சட்டம் விதிக்கும் கட்டாயமாகும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, கருக்கள் உண்மையான தம்பதியினரால் பயன்படுத்தப்படாவிட்டால், அவை "அழிய அனுமதிக்கப்பட வேண்டும்". கருக்களை அழியும்படி கட்டாயப்படுத்துவதும், அதேநேரத்தில் விருப்பம் தெரிவித்த பெறுநர்களுக்கு அவற்றை மாற்றுவதைத் தடுப்பதும் ஒரு "சட்டமன்ற முரண்பாட்டிற்கு" வழிவகுக்கிறது என்று மனு வாதிடுகிறது.


இந்த வழக்கு ஏன் முக்கியமானது?


இந்தியாவில் சுமார் 27 முதல் 30 மில்லியன் தம்பதிகள் கருவுறாத் தன்மையில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐவிஎஃப் சிகிச்சை செலவு மிக்கது மற்றும் பெரும்பாலும் பலமுறை செய்ய வேண்டியிருக்கும். பாரம்பரிய தத்தெடுப்பு முறையில் நீண்ட காத்திருப்புக் காலங்கள் உள்ளன. கரு தானம் சில தம்பதிகளுக்கு ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட விருப்பத்தை வழங்கக்கூடும் என்றும், மற்ற வழிகள் இல்லாத இடங்களில் கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்கு இது வழிவகுக்கும் என்றும் மனு குறிப்பிடுகிறது. அந்த மனு அணுகல் தொடர்பான கவலைகளையும் சுட்டிக்காட்டுகிறது. போதுமான வசதி படைத்த தம்பதிகள் வெளிநாடுகளில் கரு தானம் பெறலாம். அத்தகைய வசதி இல்லாத தம்பதிகளால் அவ்வாறு செய்ய முடியாது. இதன் விளைவாக, இனப்பெருக்கத் தேர்வை திறம்பட ஒரு வசதிபடைத்தவருக்கு சார்ந்ததாகிவிடுகிறது என்று குறிப்பிடுகிறது.




Share:

பொருளாதார ஆய்வறிக்கை இந்தியாவின் ’ஆற்றல் இடைவெளியை’ (Power Gap) சுட்டிக்காட்டுகிறது. இதன் பொருள் என்ன? -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய நிகழ்வு :


சமீபத்தில் வெளியிடப்பட்ட 2025-26-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, இந்தியா எவ்வாறு புவிசார் அரசியல் மற்றும் ஒரு இராஜதந்திரரீதியில் ஆற்றல் இடைவெளியை எதிர்கொள்கிறது என்பதையும், அதன் முழு உத்தித் திறனுக்கும் குறைவாகச் செயல்படுகிறது என்பதையும் விரிவாகப் புரிந்துகொள்ள, ஆற்றல் இடைவெளி குறியீட்டிலிருந்து தரவுகளை மேற்கோள் காட்டியுள்ளது. இந்தச் சூழலில், ஆற்றல் இடைவெளி குறியீடு (Power Gap Index) பற்றி விரிவாக அறிந்துகொள்வது மிக முக்கியமாகிறது.


பொருளாதார ஆய்வறிக்கை 2025-26-ஆம் அண்டுக்கான, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லோவி நிறுவனத்தின் (Lowy Institute) ஆற்றல் இடைவெளி குறியீடு (Power Gap Index), இந்தியா தனது முழு உத்திக்கான திறனுக்கும் குறைவாகச் செயல்படுவதாகக் கூறுகிறது. ரஷ்யா மற்றும் வட கொரியாவைத் தவிர்த்து, ஆசியாவிலேயே மிகக் குறைந்த அளவாக, இந்தியாவின் ஆற்றல் இடைவெளி மதிப்பெண் 4.0-ஆக உள்ளது. 


முக்கிய அம்சங்கள் :


1. ஆற்றல் இடைவெளிக் குறியீடு (Power Gap Index) என்பது, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லோவி நிறுவனத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆசிய ஆற்றல் குறியீட்டிலிருந்து (Asia Power Index) பெறப்பட்ட ஒரு இரண்டாம் நிலை பகுப்பாய்வு ஆகும்.


2. ஆசிய ஆற்றல் குறியீடானது, 30 ஆற்றல் அளவீடுகள், 30 கருப்பொருள் துணை அளவீடுகள் மற்றும் 131 குறிகாட்டிகளைக் கொண்டுள்ளது. இந்த குறியீடு, 8 கருப்பொருள் அளவீடுகளில் சராசரி எடையைப் பயன்படுத்தி 27 நாடுகளின் விரிவான ஆற்றலை மதிப்பிடுகிறது.


3. இந்த 8 ஆற்றல் அளவீடுகளில், நாடுகள் என்னென்ன கொண்டுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளும் நான்கு வள அடிப்படையிலான அளவீடுகளும், தங்கள் நாடுகள் தன்னிடம் உள்ளவற்றைக் கொண்டு என்ன செய்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ளும் நான்கு செல்வாக்கு அடிப்படையிலான அளவீடுகளும் அடங்கும்.


4. வள அடிப்படையிலான அளவீடுகள்


(i) பொருளாதாரத் திறன் : வழக்கமான இராணுவ வலிமை, பாதுகாப்புச் செலவினம், ஆயுதப் படைகள் மற்றும் அமைப்பு, ஆயுதங்கள் மற்றும் தளங்கள், தனித்துவமான திறன்கள் மற்றும் ஆசிய இராணுவ நிலைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அளவிடப்படுகிறது.


(ii) இராணுவத் திறன் : மரபுவழி இராணுவ வலிமை; பாதுகாப்புச் செலவினம், ஆயுதப் படைகள் மற்றும் அமைப்பு, ஆயுதங்கள் மற்றும் தளங்கள், தனித்துவமான திறன்கள் மற்றும் ஆசிய இராணுவ நிலைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அளவிடப்படுகிறது.


(iii) மீள்தன்மை : நாட்டின் நிலைத்தன்மைக்கு ஏற்படும் உண்மையான அல்லது சாத்தியமான வெளிப்புற அச்சுறுத்தல்களைத் தடுக்கும் திறன், உள்நாட்டின் நிறுவன நிலைத்தன்மை, வளப் பாதுகாப்பு, புவிசார் பொருளாதாரப் பாதுகாப்பு, புவிசார் அரசியல் பாதுகாப்பு மற்றும் அணுசக்தி தடுப்புத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அளவிடப்படுகிறது.


(iv) எதிர்கால வளங்கள் : எதிர்கால வளங்கள் மற்றும் திறன் அடிப்படையில் கணிக்கப்பட்ட விநியோகம், இது இன்றைய ஆற்றல் பற்றிய கண்ணோட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 2035-ம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் பரந்த வளங்கள், அத்துடன் 2050-ம் ஆண்டிற்கான உழைக்கும் வயது மக்கள்தொகை கணிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அளவிடப்படுகிறது.


5. செல்வாக்கு அடிப்படையிலான அளவீடுகள்


(i) பொருளாதார உறவுகள் : பொருளாதார சார்புநிலைகள் மூலம் செல்வாக்கையும் அழுத்தத்தையும் செலுத்தும் திறன், வர்த்தக உறவுகள், முதலீட்டுத் தொடர்புகள் மற்றும் பொருளாதார இராஜதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் அளவிடப்படுகிறது. 


(ii) பாதுகாப்பு வலையமைப்புகள் : தன்னாட்சி இராணுவத் திறனில் ஆற்றலை அதிகப்படுத்தும் பாதுகாப்பு கூட்டாண்மைகள், கூட்டணிகள், பிராந்திய பாதுகாப்பு இராஜதந்திரம் மற்றும் ஆயுதப் பரிமாற்றங்கள் ஆகியவற்றின் மதிப்பீடுகள் மூலம் அளவிடப்படுகிறது.


(iii) இராஜதந்திர செல்வாக்கு : இது ஒரு நாடு அல்லது பிராந்தியத்தின் வெளிநாட்டு உறவுகளின் வலிமையையும் பரவலையும் காட்டுகிறது. இது உலக விவகாரங்களில் அதன் நிலையைப் பிரதிபலிக்கிறது. இது இராஜதந்திர வலைப்பின்னல்கள், பலதரப்பு நிறுவனங்கள் மற்றும் கூட்டமைப்புகளில் பங்கேற்பு, மற்றும் ஒட்டுமொத்த வெளியுறவுக் கொள்கை மற்றும் இராஜதந்திர லட்சியம் ஆகியவற்றின் அடிப்படையில் அளவிடப்படுகிறது.


(iv) கலாச்சார செல்வாக்கு : இது கலாச்சார ஈர்ப்பு மற்றும் தொடர்பு மூலம் சர்வதேச பொதுக் கருத்தை வடிவமைக்கும் திறன், இது கலாச்சாரப் பரவல், தகவல் பரிமாற்றங்கள் மற்றும் மக்கள் பரிமாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அளவிடப்படுகிறது.


6. இந்தக் குறியீட்டின் நோக்கங்களுக்காக, ஆற்றல் என்பது மற்ற நாடுகள், அரசுசாரா அமைப்புகள் மற்றும் சர்வதேச நிகழ்வுகளின் போக்கை வழிநடத்த அல்லது செல்வாக்கு செலுத்த ஒரு நாட்டின் திறன் என வரையறுக்கப்படுகிறது. சுருக்கமாக, நாடுகள் தங்கள் வெளிப்புறச் சூழலை வடிவமைக்கவும் அதற்குப் பதிலளிக்கவும் உள்ள திறனை அளவிடுவதே இந்தக் குறியீட்டின் நோக்கமாகும்.


7. வளங்களுக்கும் செல்வாக்கிற்கும் இடையிலான இடைவெளியின் அடிப்படையில், ஆற்றல் இடைவெளி என்பது ஆசிய ஆற்றல் குறிட்டின் ஒரு இரண்டாம் நிலைப் பகுப்பாய்வை வழங்குகிறது. நாடுகள் தரவரிசையில் எந்த இடத்தில் இருந்தாலும், அவை சிறப்பாகச் செயல்படுபவையாகவோ அல்லது திறனுக்குக் குறைவாகச் செயல்படுபவையாகவோ இருக்கலாம்.


8. தங்கள் வளங்களுடன் ஒப்பிடும்போது ஆசியாவில் அதிக செல்வாக்கு செலுத்தும் நாடுகள் நேர்மறையான ஆற்றல் இடைவெளியைக் கொண்டுள்ளன. மாறாக, தங்கள் வளங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த செல்வாக்கைச் செலுத்தும் நாடுகள் எதிர்மறையான ஆற்றல் இடைவெளியைப் பதிவு செய்கின்றன.

ஆற்றல் இடைவெளி குறியீட்டின் முக்கிய அம்சங்கள்


1. இந்தியா தனது முழு உத்திக்கானத் திறனுக்கும் குறைவாகவே செயல்படுகிறது என்று இந்தக் குறியீடு குறிப்பிடுகிறது. ரஷ்யா மற்றும் வட கொரியாவைத் தவிர்த்து, இந்தியாவின் ஆற்றல் இடைவெளி மதிப்பெண் 4.0 ஆகும். இது ஆசியாவிலேயே மிகக் குறைவானது.


2. ஜப்பானின் 11.3 என்ற ஆற்றல் இடைவெளி மதிப்பெண், அது ஒரு மிகச்சிறந்த "திறன்மிகு ஆற்றல்" (smart power) என்பதை வெளிப்படுத்துகிறது. இது வரையறுக்கப்பட்ட வளங்களை திறமையாகப் பயன்படுத்தி, பிராந்தியத்தில் பரந்த அடிப்படையிலான இராஜதந்திர, பொருளாதார மற்றும் கலாச்சார செல்வாக்கைச் செலுத்துகிறது.

Knowledge Nugget: What Power Gap Index tells about India’s strategic potential?

3. வட கொரியா தனது அதிகாரத்தை முக்கியமாக அதன் இராணுவ வளங்கள் மற்றும் அணு ஆயுதத் திறனிலிருந்து பெறுகிறது. இருப்பினும், அந்த நாட்டின் இராஜதந்திர மற்றும் பொருளாதாரத் தனிமைப்படுத்தல் அதன் பிராந்திய செல்வாக்கைக் கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக, அதன் ஆற்றல் இடைவெளி மதிப்பெண் 8.2 ஆக உள்ளது.

Knowledge Nugget: What Power Gap Index tells about India’s strategic potential?

4. வளரும் நாடுகள் பெரும்பாலும் செல்வாக்குக் குறைபாடுகளைப் பதிவு செய்கின்றன — இது அவற்றின் உணரப்படாத சக்தித் திறனையும், வெளிநாடுகளில் தங்கள் சக்தியை வெளிப்படுத்தும் திறனில் உள்ள உள் தடைகளையும் பிரதிபலிக்கிறது.

உலகளாவிய மென்ஆற்றல் குறியீடு-2026 (Global Soft Power Index)

1. உலகம் தொடர்ச்சியான பொருளாதார நிச்சயமற்ற தன்மையும் புவிசார் அரசியல் பதட்டங்களும் பொதுமக்களின் நம்பிக்கைக் குறைவுக்கும், நாடுகளின் நடத்தை மீதான அதிகரித்த கண்காணிப்புக்கும் வழிவகுத்துள்ளன. இதன் விளைவாக, தேசிய நிறுவன அடையாளம் பற்றிய கருத்துக்கள் பலவீனமடைந்து, 55 அளவுகோல்களின் அடிப்படையில் 193 ஐ.நா உறுப்பு நாடுகளுக்குத் தரவரிசை அளிக்கும் 'நிறுவன அடையாள நிதி உலகளாவிய மென் ஆற்றல் குறியீடு-2026'-ல் (Brand Finance Global Soft Power Index) குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.

2. இந்த அறிக்கை மென் ஆற்றலை, "வற்புறுத்தலின்றி, ஈர்ப்பு மற்றும் சமாதானப்படுத்துதல் மூலம் சர்வதேச அரங்கில் விருப்பங்களையும் நடத்தைகளையும் வடிவமைக்கும் ஒரு தேசத்தின் திறன்" என்று வரையறுக்கிறது.

3. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 4.6 புள்ளிகள் சரிவைச் சந்தித்த ஒரே நாடு அமெரிக்கா என்ற போதிலும், அது 100-க்கு 74.9 மதிப்பெண்களுடன் முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்று அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

4. சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு தனது மென்ஆற்றல் மதிப்பெண்ணில் (soft power score) அதிகரிப்பைப் பதிவு செய்த ஒரே நாடு இதுவாகும். இந்த நாடு 0.7 புள்ளிகள் அதிகரித்து 73.5-ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவுடனான இடைவெளியை 1.5 புள்ளிகளுக்கும் குறைவாகக் குறைத்து, 35 தேசிய பிராண்ட் பண்புகளில் 19-ல் உயர் தரவரிசையில் உள்ளது.

5. இந்தியா 48.0 புள்ளிகளுடன் 32-வது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டை விட இரண்டு இடங்கள் சரிந்து, 1.8 புள்ளிகள் குறைந்துள்ளது.


Share:

நாடாளுமன்றத்தில் அமளி: ராகுல் காந்தி வாசித்த புத்தகம், ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை?

 ராணுவ தளபதி ஜெனரல் நரவணேவின் புத்தகம் எதைப் பற்றியது? மூத்த அரசு மற்றும் பாதுகாப்புத் துறை அலுவர்களால் எழுதப்படும் புத்தகங்களுக்கு என்ன விதிகள் பொருந்தும்? 


திங்கட்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் M. M. நரவணே (ஓய்வு) எழுதிய வெளியிடப்படாத நினைவுக் குறிப்பு நூலிலிருந்து மேற்கோள் காட்டியதே இதற்கு முக்கிய காரணமாகும். அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள், வெளியிடப்படாத புத்தகத்திலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாசித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


அந்தப் புத்தகம் எதைப் பற்றியது, அதன் வெளியீடு ஏன் இரண்டு ஆண்டுகளாகத் தாமதமாகி வருகிறது? மூத்த அரசு மற்றும் பாதுகாப்புத் துறை அலுவர்களால் எழுதப்பட்ட புத்தகங்களை நிர்வகிக்கும் விதிகள் என்ன? 


ஜெனரல் நரவணேயின் புத்தகம் எதைப் பற்றியது?


‘Four Stars of Destiny’ என்ற தலைப்பில் உள்ள அந்தப் புத்தகம், முதலில் ஜனவரி 2024-ல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. டிசம்பர் 2023-ல், PTI செய்தி நிறுவனம் அதிலிருந்து சில பகுதிகளை வெளியிட்டது. அதன் பிறகு, ராணுவம் அந்தப் புத்தகத்தை மறுஆய்வு செய்யத் தொடங்கியது.


அந்தப் பகுதிகள், 2020-ல் கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைப் பதற்றத்தால் ஏற்பட்ட நெருக்கடிக்கு இந்திய அரசு அளித்த பதில் குறித்தும், 2023-ல் தொடங்கப்பட்ட முப்படைகளுக்கான அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்த விவாதங்கள் குறித்து இதுவரை தெரியாத விவரங்களை வெளிக்கொண்டு வந்தன.


அந்தப் புத்தகம் ஏன் ராணுவத்தால் மறுஆய்வு செய்யப்படுகிறது?


1954-ஆம் ஆண்டு ராணுவ விதிகளின் பிரிவு 21-ன் கீழ், பணியில் உள்ள வீரர்கள் "எந்தவொரு அரசியல் கேள்வி அல்லது சேவை சார்ந்த விவகாரம் அல்லது எந்தவொரு சேவைத் தகவலையும் கொண்ட எந்தவொரு விவகாரத்தையும் எந்த வடிவத்திலும் வெளியிடவோ அல்லது நேரடியாகவோ மறைமுகமாகவோ பத்திரிகைகளுக்குத் தெரிவிக்கவோ" அனுமதிக்கப்படுவதில்லை என்று தெளிவாக கூறுகிறது.


மேலும், "ஒன்றிய அரசின் முன் அனுமதி இல்லாமல், அத்தகைய கேள்வி அல்லது விவகாரம் அல்லது அத்தகைய தகவல்களைக் கொண்ட எந்தவொரு புத்தகம் அல்லது கடிதம் அல்லது கட்டுரை அல்லது பிற ஆவணத்தை வெளியிடவோ அல்லது வெளியிடச் செய்யவோ" தடை விதிக்கப்பட்டுள்ளது.


பணியில் உள்ள அலுவர்கள், முன் அனுமதி இல்லாமல் அரசியல் கேள்வி தொடர்பான ஒரு விவகாரம் அல்லது சேவை சார்ந்த விவகாரம் அல்லது எந்தவொரு சேவை விவகாரம் குறித்த தகவல்கள் அல்லது கருத்துக்களைக் கொண்ட ஒரு விரிவுரை அல்லது வானொலி உரை நிகழ்த்தவோ முடியாது.


இந்த விதிகள், ‘சேவைத் தகவல்’ மற்றும் ‘சேவைப் பொருள்’ என்பவை, “ஒன்றிய அரசின் படைகள், பாதுகாப்பு அல்லது வெளி உறவுகள் தொடர்பான தகவல்கள் அல்லது விவகாரங்களை உள்ளடக்கியது” என்று விளக்குகின்றன.

இந்த விதிகள் ஜெனரல் நரவணே போன்ற ஓய்வுபெற்ற அதிகாரிக்கும் பொருந்துமா?


ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஒரு புத்தகத்தை வெளியிடும்போது பின்பற்ற வேண்டிய செயல்முறை குறித்து இந்த விதிகள் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.


ஆயுதப்படை வீரர்களால் வெளியிடப்படும் புத்தகங்களுக்கான மறு ஆய்வு செயல்முறையானது, பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் (Department of Personnel and Training (DoPT)) ஜூன் 2021-ல் திருத்தப்பட்ட மத்திய குடிமைப் பணிகள் ஓய்வூதிய விதிகள் (Central Civil Services (Pension) Rules), 1972-லிருந்து பெறப்படலாம் என்று சில அதிகாரிகள் முன்னதாக Indian Express-யிடம் தெரிவித்தனர்.

இந்த விதிகள் ஆயுதப்படைகளின் வரம்பிற்குள் வராத போதிலும் இந்த நிலை உள்ளது.


திருத்தப்பட்ட விதிகளின்படி, உளவுத்துறை அல்லது பாதுகாப்பு தொடர்பான அமைப்புகளில் பணியாற்றிய ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ஓய்வுக்குப் பிறகு முன் அனுமதி இல்லாமல் ஆயுதப்படை தொடர்பான எந்த ஒரு தகவலையும் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இராணுவம் சாராத ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு புத்தகம் வெளியிட அரசாங்கத்தின் அனுமதி தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதற்கு முன்பும் மற்ற இராணுவ அதிகாரிகள் புத்தகங்கள் எழுதியுள்ளார்களா?


ஆம், கடந்த காலத்தில் பணியில் இருக்கும் மற்றும் ஓய்வுபெற்ற பல இராணுவ அதிகாரிகள் பல்வேறு இராணுவம் தொடர்பான தலைப்புகளில் புத்தகங்களை எழுதியுள்ளனர்.


முன்னாள் ராணுவத் தளபதிகளால் எழுதப்பட்ட புத்தகங்களில், ஓய்வு பெற்ற ஜெனரல் வி.பி. மாலிக் எழுதிய 'Kargil: From Surprise To Victory' மற்றும் ஓய்வு பெற்ற ஜெனரல் வி.கே. சிங் எழுதிய 'Courage and Conviction: An Autobiography' ஆகியவை அடங்கும்.


முன்னாள் தலைமை ஜெனரல் கே. சுந்தர்ஜி, "Blind Men of Hindoostan: Indo-Pak Nuclear War and Of Some Consequence: A Soldier Remembers" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.



Share:

தேசிய பொதுச் சொத்தாக சதுப்பு நிலங்கள் -சௌமியா சுவாமிநாதன், ரூபேஷ் கே. போமியா

 திட்டங்களிலிருந்து திட்டத் தொகுப்புகளுக்கும், அழகுபடுத்துவதிலிருந்து சுற்றுச்சூழல் செயல்பாட்டிற்கும் கவனத்தை மாற்றுவதும், நீர்ப்பிடிப்புப் பகுதி அளவிலான நிர்வாகத்தை (watershed-scale governance) உறுதி செய்ய வேண்டும்.


2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி, உலகம் சதுப்பு நிலங்களும் பாரம்பரிய அறிவும்: கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடுதல் (‘Wetlands and traditional knowledge: Celebrating cultural heritage) என்ற கருப்பொருளின் கீழ் உலக ஈரநிலங்கள் தினம் அனுசரிக்கப்படட்து. இந்தியாவில், இந்தக் கருப்பொருள் முக்கியமானதாகத் தோன்றுகிறது. சுற்றுச்சூழல் அமைப்புகளை இயல்பாகவே பாதுகாக்கும் நடைமுறைகளைப் பின்பற்றி, ஈரநிலங்களின் மூலம் தங்களை நிலைநிறுத்திக்கொண்ட சமூகங்களின் ஒரு வளமையான வரலாறு இங்கு உள்ளது.


தமிழ்நாட்டின் சதுப்பு நிலங்களில் உள்ள பாரம்பரிய நடைமுறைகள், பழங்கால நீர் மேலாண்மை மற்றும் சமூக வாழ்வாதாரங்களைச் சுற்றி அமைந்துள்ளன. மனிதனால் உருவாக்கப்பட்ட குளங்கள், நெல் மற்றும் பிற பயிர்களுக்காக தொடர் பாசன வலையமைப்புகளை உருவாக்குகின்றன. கேரளாவின் வயநாட்டில், 200 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட 'kenis' எனப்படும் ஆழமற்ற கிணறுகள், குடிநீர், சடங்குகள் மற்றும் திருவிழாக்களுக்கு தேவையான ஆதரவை வழங்கின. அதே சமயம், ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளத்தில் உள்ள சதுப்பு நிலங்கள் பாரம்பரிய மீன்பிடி முறைகளைத் தக்கவைக்கின்றன. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இது போன்ற ஒரு எடுத்துக்காட்டு உள்ளது. அங்கு சமூகங்கள் பல தலைமுறைகளாக சதுப்பு நிலங்களைச் சுற்றி செழித்து வளர்ந்துள்ளன. அவை சூழலியல், பொருளாதாரம், வாழ்விடம் மற்றும் பாரம்பரியம் போன்றவற்றிக்கு முக்கியமானவை. மேலும், இந்த இடங்கள் சமூகநலத்திற்கு முக்கியமானதாக இருந்து வருகின்றன.


ஆனால் நாம் நேர்மையாக இருக்க வேண்டும். சதுப்பு நிலங்களின் நன்மைகளும் சேவைகளும் ஏராளமாக இருந்தாலும், அவை நிலம், நீர் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் சந்திப்பில் அமைந்திருப்பதால், சதுப்பு நிலங்கள் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகவே இருந்து வருகின்றன.


கொள்கை பின்னணி, உள்நாட்டு சவால்கள்


கொள்கை மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகள் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் சட்டங்களுக்குக் குறைவில்லை. சீரான, உயர்தரமான செயலாக்கமே அங்கு இல்லை. 2017-ஆம் ஆண்டின் சதுப்புநிலங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை (The Wetlands (Conservation and Management) Rules) விதிகள், சதுப்புநிலங்களைக் கண்டறிவதற்கும், அறிவிக்கை செய்வதற்கும், பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகளின் மூலம் அவற்றை நிர்வகிப்பதற்கும் ஒரு கட்டமைப்பை வழங்குகின்றன. இருப்பினும், கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் சதுப்புநிலங்களில் ஏறக்குறைய 40% அழிந்துவிட்டன. மேலும், மீதமுள்ளவற்றில் 50% சுற்றுச்சூழல் பாதிப்பின் அறிகுறிகளைக் காட்டுகின்றன.


தேசிய நீரியல் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தின் (National Plan for Conservation of Aquatic Ecosystems (NPCA)) கீழ் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள், கட்டமைக்கப்பட்ட திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் விளைவு சார்ந்த மேலாண்மையை வலியுறுத்துகின்றன. கடலோர ஒழுங்குமுறை மண்டல (Coastal Regulation Zone (CRZ)) கட்டமைப்பு, கடலோர சதுப்புநிலங்களின் சூழலியல் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் ராம்சார் தள அந்தஸ்து அங்கீகாரம் அங்கீகாரத்தையும் பொறுப்பையும் வழங்குகிறது. இந்தியாவில் உள்ள 98 ராம்சர் தளங்கள் வெறும் அடையாளங்கள் மட்டுமல்ல. அவை செயல்பாட்டை ஊக்குவிக்கும் உறுதிமொழிகளாகும்.


இந்த கருவிகள் நன்னீர், கடலோர, நகர்ப்புற, இயற்கை, கரையோர மற்றும் உயரமான சதுப்புநிலங்களை கொண்டுள்ளது. இருந்து இது வரைபடமிடுவதில் தொடங்கி, அறிவிப்பு மற்றும் மேம்பட்ட பாதுகாப்பிற்கு வழிவகுக்கும். தேவைப்படும் இடங்களில் மறுசீரமைப்பை செயல்படுத்தும் மற்றும் தகவமைப்பு மேலாண்மை (adaptive management) மூலம் தொடர்ந்து கண்காணிக்கும் ஒற்றை செயல்பாட்டுத் தளமாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.


தள அடிப்படையிலான சதுப்புநில பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள் மூலம், M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை போன்ற நிறுவனங்கள் மாநில அரசுகள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் இணைந்து சதுப்புநில வரைபடம், பங்கேற்பு மேலாண்மை திட்டமிடல் மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த பாதுகாப்பிற்கு ஆதரவளிக்கின்றன.


சதுப்புநிலங்கள் "பல்வேறு பயன்பாடுகளை" (multiple-use) கொண்ட அமைப்புகளாகும். அவை அவற்றை மதிப்புமிக்கதாகவும், பாதிக்கப்படக்கூடியதாகவும் ஆக்குகின்றன. அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில், ஆக்கிரமிப்பு மற்றும் நிலத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக  சதுப்புநிலங்களில் 40% ஏற்கனவே அழிக்கப்பட்டு, அவற்றிற்குப் பதிலாக உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட் மற்றும் சாலை வலைப்பின்னல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சதுப்புநிலங்கள் இன்னும் இருந்தாலும், அவற்றைச் சுற்றியுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகள், காரணமாக நிரந்தரமாக மாற்றப்படுகின்றன. மேலும், பழைய நில அளவை வரைபடங்கள் தற்போதைய கள யதார்த்தங்களுடன் அரிதாகவே பொருந்துகின்றன.


சதுப்புநிலங்கள் நேரம் மற்றும் நீரின் ஓட்டத்தை நம்பியுள்ளன. அணைகள், கரைகள், கால்வாய் அமைத்தல், மணல் சுரங்கம் மற்றும் நிலத்தடி நீர் அதிகமாக பிரித்தெடுப்பது இந்த ஓட்டத்தில் பாதிப்பை உருவாக்கி, அவற்றின் இயற்கை பண்புகளை அரிக்கிறது. ஆற்றங்கரையோர சதுப்புநிலங்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு நிலங்கள் குறிப்பாக அதிக பாதிப்பை சந்தித்து கூடியவை. ஏனெனில், அவை செயலில் உள்ள நதி இடமாக இல்லாமல் உதிரி நிலமாக கருதப்படுகின்றன. நகர்ப்புற சதுப்புநிலங்கள் வெள்ளம், மழைநீர் மற்றும் கழிவுநீரைக் கையாளும் அதே வேளையில், தூய்மையாகவும் பல்லுயிர் வளம் நிறைந்ததாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் அவற்றைச் சுற்றி எந்த சட்டப் பாதுகாப்பும் இல்லாததால் இது நிகழ்கிறது.


சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், தொழில்துறை கழிவுகள், வேளாண் கழிவுகள் மற்றும் திடக்கழிவுகள் சதுப்புநிலங்களுக்குள் செல்லும்போது அதிகரித்துவரும் மாசுபாடு நீர்நிலைகளில் பாசிபடிதலுக்கு வழிவகுக்கிறது. ஒரு சதுப்புநிலம் குப்பைகளைக் கொட்டும் இடமாக மாறும்போது, ​​அதன் பல்லுயிர்ப் பெருக்கம் அழிந்துவிடுகிறது. வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் மற்றும் நீரைச் சுத்திகரிக்கும் அதன் திறனும் இல்லாமல் போகிறது. கடலோரப் பகுதிகளில், கடல் மட்ட உயர்வு, புயல்கள் மற்றும் கடற்கரை மாற்றங்கள் ஆகியவை துறைமுகங்கள், சுற்றுலா, மீன் வளர்ப்பு மற்றும் குடியிருப்பு வளர்ச்சி போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. சதுப்புநிலக் காடுகளும், கடற்காயல்களும் (lagoons)இரண்டு வகையான சிக்கலை எதிர்கொள்கின்றன. நிலப்பரப்பில் நடைபெறும் வளர்ச்சி மற்றும் கடலில் இருந்து உயரும் கடல் மட்டம் ஆகிய இருபுறங்களிலிருந்தும் சதுப்புநிலங்களும் காயல்களும் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்கின்றன. இதனால் அவை இடம்பெயர்வதற்கு மிகக் குறைந்த இடமே உள்ளன.


கடைசியாக, ஒரு பெரிய சவால் திறன் கட்டுப்பாடுகள் ஆகும். மாநில சதுப்புநில அதிகாரிகள் பெரும்பாலும் பணியாளர்கள் இடைவெளி, நிதி இடைவெளி மற்றும் போட்டி ஆணைகளால் நீட்டிக்கப்படுகிறார்கள். நீரியல், சூழலியல், புவியியல் தகவல் அமைப்பு, சட்ட அமலாக்கம் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் ஏற்படும் பயிற்சி இடைவெளிகள் பெரும்பாலும் பலவீனமான மேலாண்மைத் திட்டங்கள், பலவீனமான செயல்படுத்தல் மற்றும் மதிப்புமிக்க சதுப்புநிலங்களின் தொடர்ச்சியான சீரழிவுக்கு வழிவகுக்கிறது.


நடைமுறை மற்றும் சூழல் சார்ந்த அணுகுமுறைகள்


"திட்டங்கள்" என்பதிலிருந்து திட்டங்களுக்கும், "அழகுபடுத்துதல்" என்பதிலிருந்து சுற்றுச்சூழல் செயல்பாட்டிற்கும், "துறை குழிகள்" (departmental silos) என்பதிலிருந்து நீர்நிலை அளவிலான நிர்வாகத்திற்கும் மாற வேண்டிய அவசரத் தேவை உள்ளது. ஒருங்கிணைந்த, திறமையாகக் கண்காணிக்கப்படும் அணுகுமுறைகள் மூலம், இந்த சிக்கலை நாம் தீர்க்கலாம்.


சிக்கலைத் தீர்ப்பதற்கு சில யோசனைகள் 


முதலாவதாக, சதுப்புநில எல்லைகளை அறிவிப்பதும் பாதுகாப்பதும் ஆகும். 2017-ஆம் ஆண்டு விதிகள், அறிவிப்பு மற்றும் எல்லை நிர்ணயம் போன்றவற்றின் காரணமாக விதிகள் வலிமையாக உள்ளன. இவை பொது மக்கள் பயன்படுத்தக்கூடிய வரைபடங்கள், குறை தீர்க்கும் வழிமுறைகள் மற்றும் சர்ச்சைகள் ஏற்பட வாய்ப்புள்ள சமூகங்களுடன் பங்கேற்பு அடிப்படையிலான கள ஆய்வு ஆகியவற்றுடன் இணைக்கப்பட வேண்டும்.


இரண்டாவதாக, கழிவுநீர் சதுப்புநிலங்களில் கலப்பதற்கு முன்பு அவை சுத்திகரிக்கபட வேண்டும். நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள சதுப்புநிலங்களுக்கு, ஒரு முக்கிய நடவடிக்கை சுத்திகரிக்கப்பட்ட நீர்வரத்துகளை உறுதி செய்வதாகும். சதுப்புநிலங்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மாற்றாக இருக்க முடியாது. சாத்தியமான இடங்களில், செயற்கையாக உருவாக்கப்பட்ட சதுப்புநிலங்கள் சுத்திகரிப்புக்குத் துணையாக அமையும். ஆனால், அதற்கு மாற்றாக அமையாது.


மூன்றாவதாக, சதுப்புநிலத்தின் நீர்ப்பிடிப்பு மற்றும் நீர்நிலை இணைப்பைப் பாதுகாக்க வேண்டும். சதுப்புநிலங்கள் ஒரு படுகை அல்லது நீர்ப்பிடிப்பு அமைப்பின் ஒரு பகுதியாக நிர்வகிக்கப்பட வேண்டும். வழித்தடங்களை மீட்டமைத்தல், சாலைகள் மற்றும் கரைகளில் அடைப்புகளைத் தடுத்தல், திடக்கழிவு கொட்டுதலை நிறுத்துதல் மற்றும் நீர்களை மாற்றும் பிரித்தெடுப்பை ஒழுங்குபடுத்த வேண்டும்.


நான்காவதாக, கடலோர மற்றும் கரையோர சதுப்புநிலங்களை பேரிடர் அபாயக் குறைப்புக்கு மையமாக மாற்ற வேண்டும். சதுப்புநிலங்கள், சேற்றுப் படுகைகள், வெள்ளப்பெருக்குகள் மற்றும் நகர்ப்புற சதுப்புநிலங்கள் ஆகியவை இயற்கை சார்ந்த உள்கட்டமைப்பு ஆகும். திட்டமிடும் அதிகாரிகள் அவற்றை ஆபத்தானவையாகக் கருத வேண்டும். அவை, "சாம்பல்" (grey) உள்கட்டமைப்பைப் போலவே முதலீட்டிற்கு தகுதியானவை. கடலோர ஒழுங்குமுறை மண்டல (Coastal Regulation Zone (CRZ)) அமலாக்கம், கடலோரத்தில் வசித்து வரும் மக்களை ஆதரிக்கும் வாழ்வாதார உணர்திறன் அணுகுமுறைகளுடன் இணைக்கப்பட வேண்டும். அதே, நேரத்தில் சுற்றுச்சூழல் தடைசெய்யப்பட்ட பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும்.


ஐந்தாவது, திறன்கள் மற்றும் நிறுவனங்களை உருவாக்க வேண்டும். நீரியல், மறுசீரமைப்பு சூழலியல், தொலைநிலை உணர்திறன் (Remote Sensing) மற்றும் புவியியல் தகவல் அமைப்பு (GIS), சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் சமூகம் தலைமையிலான நிர்வாகம் ஆகியவற்றில் அங்கீகாரம் பெற்ற பயிற்சியுடன் சதுப்புநில மேலாளர்களுக்கான தேசிய திறன் திட்டத்தை (national capacity mission (NPCA)) தொடங்க வேண்டும். NPCA முதலீடுகள் முறையான திறன் மேம்பாடு மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு நேரடி வாழ்வாதார நன்மைகள் உட்பட அளவிடக்கூடிய செயல்திறன் குறிகாட்டிகளுடன் இணைந்தால் அவை தேவையான மாற்றத்தை ஏற்படுத்தும்.


இதில் ஏற்கனவே முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளால் சதுப்புநிலங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. மேலும், இது வலுப்படுத்தப்பட வேண்டும். செயற்கைக்கோள் தொலை உணர்வு, ட்ரோன்கள் மற்றும் காலத்தொடர் பகுப்பாய்வு மூலம் ஆக்கிரமிப்பு, வெள்ளப்பெருக்கு மற்றும் தாவர மாற்றங்களைக் கண்காணிக்க, மேம்பட்ட வரைபடமிடல் மற்றும் கண்காணிப்பு இப்போது சாத்தியமாகியுள்ளது.


புதுப்பிக்கப்பட்ட தேசிய திறன் திட்ட வழிகாட்டுதல்கள், விளைவு சார்ந்த வடிவமைப்பிற்காக அறிவியல் அடிப்படையிலான, கண்காணிக்கக்கூடிய மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்துகின்றன. அதே, நேரத்தில் தெளிவான எல்லைகள் மற்றும் விவேகமான பயன்பாடு குறித்த ராம்சார் மாநாட்டின் கவனம், சமூகப் பங்களிப்பின் மூலம் இந்தியாவின் தேவைகளுடன் ஒத்துப்போகிறது.


2026-ஆம் ஆண்டு உலக சதுப்புநில தினத்தின் கருப்பொருள், பாரம்பரிய அறிவை ஒரு சான்றாக தீவிரமாக எடுத்துக்கொண்டால், அது சதுப்பு நிலங்களை மீட்டெடுப்பதையும் பாதுகாப்பதையும் மேம்படுத்தும் என்பதை வலியுறுத்துகிறது.


அறிவியலையும் கொள்கையையும் ஒன்றிணைப்போம்


2026-ஆம் ஆண்டு உலக சதுப்புநிலங்கள் தினம் முடிந்திருக்கலாம். ஆனால், நாம் ஒரு சமூக ஒப்பந்தம் செய்துகொள்வோம். அரசாங்கங்கள் அறிவிக்க வேண்டும், அமல்படுத்த வேண்டும், நிதியளிக்க வேண்டும் மற்றும் ஒருங்கிணைக்க வேண்டும்; நகரங்கள் சதுப்புநிலங்களை தரிசு நிலங்களாகக் கருதுவதை நிறுத்த வேண்டும்; தொழில்துறைகள் மாசுபாட்டை தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும்; ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் அடுத்த தலைமுறை சதுப்புநில மேலாளர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்; மேலும் குடிமக்கள் உள்ளூர் ஏரிகள், குளங்கள், வெள்ளச் சமவெளிகள், சதுப்புநிலங்கள் மற்றும் நீரூற்றுகளைப் பொதுவான பாரம்பரியமாகப் பாதுகாக்க வேண்டும்.


நாம் அறிவியலைக் கொள்கையுடனும், கொள்கையை மக்களுடனும் ஒன்றிணைத்து, நவீன கருவிகள் மற்றும் பாரம்பரிய அறிவு ஆகிய இரண்டிலிருந்தும் வலிமை பெற்றால், சதுப்புநிலங்களை அருங்காட்சியகப் பொருட்களைப் போல அல்லாமல், செழிப்பான, செயல்படும் சுற்றுச்சூழல் அமைப்புகளாக மீட்டெடுக்க முடியும். இந்தியாவின் நீரின் எதிர்காலமும், இந்தியாவின் மீள்திறனின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியும் சதுப்புநிலத்தைச் சார்ந்தே உள்ளது.


டாக்டர். சௌமியா சுவாமிநாதன், M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (M.S. Swaminathan Research Foundation (MSSRF)) தலைவராக உள்ளார். ரூபேஷ் K. போமியா, M.S.. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (M.S. Swaminathan Research Foundation (MSSRF)) சதுப்பு நிலங்கள் பிரிவின் இயக்குநராக உள்ளார்.



Share:

ஓர் எச்சரிக்கையான அழுத்தம் : 16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து…

 அமைப்பு ரீதியான மாற்றம் மட்டுமே நிதிசார் கூட்டாட்சியில் சமநிலையை மீண்டும் நிலைநிறுத்த முடியும்.


ஞாயிற்றுக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட 16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையில், மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கினை 41 சாதவீதமாகவே நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் இதனை 50 சதவீதமாக உயர்த்தக் கோரிய போதிலும், 2026-31-ஆம் காலகட்டத்திற்கு அதே 41 சதவீத அளவிலேயே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (Goods அந்த Service Tax (GST)) முறையினால் மாநிலங்களின் நிதிநிலை நெருக்கடியில் இருப்பதாகவும், அவர்களின் பொறுப்புகளுக்கும் வருவாய்க்கும் இடையே இடைவெளி அதிகரிப்பதால் சந்தைக் கடன்களைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. சில மாநிலங்கள் அடுத்த ஆண்டுக்கான நிதிப் பகிர்வை விமர்சித்தாலும், மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை வரவேற்றுள்ளன. முக்கியமாக, இதற்கு முன் இருந்த 'வரி வசூல் முயற்சி' (Tax effort) என்ற அளவுகோலுக்குப் பதிலாக, 'மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பு' (Contribution to GDP) என்ற புதிய அளவுகோலை ஆணையம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முக்கியத்துவத்தை 2.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்தியுள்ளது. உற்பத்தித் திறனுடனும் திறமையாகவும் செயல்படும் மாநிலங்களுக்கு வெகுமதி அளிப்பதையும், சிறந்த நிர்வாகத்தையும் நிதிப் பகிர்வையும் இணைப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


16-வது நிதி ஆணையத்தின் மூலம் மாநிலங்களுக்குக் கிடைக்கும் பலன்கள் வேண்டுமென்றே ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வைக்கப்பட்டுள்ளன. நிதிப் பகிர்வில் செய்யப்படும் மாற்றங்கள் 'படிப்படியாக' இருக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது. அப்போதுதான் ஒன்றிய அரசை அதிகம் நம்பியிருக்கும் மாநிலங்களுக்கு  திடீர் நிதி நெருக்கடி ஏற்படாது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கான முக்கியத்துவம் (Demographic performance) இப்போது குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது மக்கள் தொகை வளர்ச்சியின் உச்சத்தில் இருப்பதால், மக்கள் தொகை உயர்வைக் காரணமாக வைத்து மாநிலங்களைத் தண்டிப்பது சரியாக இருக்காது எனக் கருதப்பட்டு, மக்கள் தொகை எண்ணிக்கையிலான முக்கியத்துவம் சற்றே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா போன்ற தொழில்மயமான மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வில் மிகச் சிறிய அளவிலான முன்னேற்றமே கிடைத்துள்ளது. இந்த நிதானமான அணுகுமுறை புரிந்துகொள்ளத்தக்கது என்றாலும், இது நிதி ஆணையத்தின் தயக்கத்தையே இது காட்டுகிறது. மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை 2031-ஆம் ஆண்டுக்குள் 45 சதவீதமாகப் படிப்படியாக உயர்த்தியிருந்தால், அது அவர்களுக்கு அதிக நிதி சுதந்திரத்தை அளித்திருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், செஸ் (Cess) மற்றும் கூடுதல் வரிகள் (Surcharge) மூலம் ஒன்றிய அரசு பெறும் வருமானம் மாநிலங்களுக்குப் பகிரப்படுவதில்லை என்பதை 16-வது நிதி ஆணையமானது குறிப்பிட்டாலும், அவற்றை நிதிப் பகிர்வுப் பட்டியலில் சேர்க்கப் பரிந்துரைக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். 2025-26-ஆம் ஆண்டு முதல் 2026-27-ஆம் ஆண்டு வரை மாநிலங்களுக்கான மொத்த நிதிப் பகிர்வு 12.2 சதவீதம் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் ₹1.2 லட்சம் கோடி (சுமார் 42 சதவீதம் ) ஒன்றிய அரசு நிதி வழங்கும் திட்டங்களின்கீழ் (Centrally Sponsored Schemes) வருவதால், மாநிலங்கள் தங்களின் சொந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதைவிட, ஒன்றிய அரசின் முன்னுரிமைகளைச் செயல்படுத்தும் அமைப்புகளாகவே நீடிக்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், மாநிலங்களின் நிதி நெருக்கடியை 16-வது நிதி ஆணையமானது அங்கீகரித்தாலும், ஒரு சமமான நிதி மேலாண்மைக்குத் தேவையான கட்டமைப்பு மாற்றங்களைப் பரிந்துரைக்கத் தவறிவிட்டதாகக் குறிப்பிடுகின்றனர்.




Share: