ஏழைகளுக்கு ஆதரவான மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் தங்கள் வெளிச்சத்தை இழந்து வருகின்றன. -இந்திரனில் டி

 பல முக்கிய திட்டங்களுக்கு செலவிடப்பட்ட பணம் நிதிநிலை அறிக்கை ஒதுக்கீட்டை விட குறைவாக உள்ளது. இந்தப் பற்றாக்குறை பொருளாதார வளர்ச்சி மற்றும் பொது நலன் இரண்டையும் பாதிக்கும்.


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தனியார் நுகர்வு மற்றும் முதலீட்டால் இயக்கப்படுகிறது. இருப்பினும், தேவைப்படும்போது பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கு அரசாங்க செலவினம் அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளது.


விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் அரசாங்க செலவினம் முக்கிய பங்கு வகிக்கிறது. காலநிலை காரணிகளுடன், தொழில்நுட்ப இடைவெளிகள் மற்றும் கட்டமைப்பு சிக்கல்களுடனும் போராடுகின்றன.


பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா (Pradhan Mantri Krishi Sinchai Yojana (PMKSY)) மற்றும் அதன் நீர்நிலை மேம்பாட்டு கூறு ஆகிய இரண்டு முக்கிய மத்திய திட்டங்களுக்கான செலவு 2025–26 ஆம் ஆண்டில் நிதிநிலை அறிக்கை ஒதுக்கீட்டைவிட கணிசமான அளவில் செலவு 22.86 சதவீதமாக குறைவாக இருந்தது. மேலும், நீர்நிலை மேம்பாட்டு கூறுக்கு இது 40.12 சதவீதம் குறைவாக இருந்தது.


மேலும், 2025-26 உடன் ஒப்பிடும்போது 2026-27-ஆம் ஆண்டில் நிதிநிலை அறிக்கையில்ல் ஒதுக்கப்பட்ட தொகை 20.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.


வேளாண் உற்பத்தித்திறன் குறைவதற்கு ஒரு முக்கிய காரணம் யூரியாவின் அதிகப்படியான பயன்பாடு ஆகும். நைட்ரஜன் (N):பாஸ்பரஸ் (P):பொட்டாசியம் (K) ஆகியவற்றிற்கான வேளாண் அளவுகோல் 4:2:1 ஆகும். இருப்பினும், இந்த சமநிலை காலப்போக்கில் இது 2009-10-ல் 4:3.2:1 ஆக இருந்து 2023-24-ல் 9:4.1:1 ஆக மோசமடைந்துள்ளது. இது அடுத்த நிதியாண்டில் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட யூரியா மானியத்தை 1.76 சதவீதம் குறைக்க அரசாங்கத்தைத் தூண்டியிருக்கலாம்.


அதேநேரத்தில், தற்போதைய நிதியாண்டில் மானியத்தில் 6.37 சதவீதம் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும் ஏழைகளுக்கும் பரந்த தாக்கங்களை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு (நீர்ப்பாசனம் மற்றும் நீர்நிலைகள்) குறைவாக செலவிடப்பட்டதால் இது கவலை அளிக்கிறது. இதற்கு நேர்மாறாக, மானியத் திட்டங்களுக்கு அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. இந்த மானியங்கள் பெரும்பாலும் சிறு மற்றும் குறு விவசாயிகளைவிட பெரிய விவசாயிகளுக்கு பயனளிப்பதாக விமர்சிக்கப்படுகின்றன.


இதேபோல், வருமான ஆதரவுத் திட்டமான பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி, முழு நிதிநிலை அறிக்கை தொகையையும் செலவிடுவதன் மூலம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்படுவது இந்த முழுமையான பயன்பாட்டை அடைய உதவியிருக்கலாம். இருப்பினும், அத்தகைய பணப் பரிமாற்றம் மற்றும் மானியத் திட்டங்களின் வெற்றி நீர்ப்பாசனத் திட்டங்களின் மோசமான செயல்திறனை ஈடுசெய்யாது. பணப் பரிமாற்றங்கள் அல்லது மானியங்களை சீராக செயல்படுத்துவதற்கும் பொது சொத்து உருவாக்கும் திட்டங்களின் பலவீனமான செயல்திறனுக்கும் இடையிலான வேறுபாடு செயல்படுத்தலில் திறமையின்மையைக் குறிக்கிறது.


மத்திய அரசு அழுத்தம்


மாநில அரசுகளால் பொருத்தமான மானியங்களை வழங்க முடியாவிட்டால், மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கி நிதிக் கட்டமைப்பை மாற்ற வேண்டும். நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகையைவிட குறைவாகச் செலவிடுவதும் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை இலக்குகளை அடைய உதவியது.


சுய உதவிக் குழு (SHG)-வங்கி கடன் இணைப்புக்கு (bank credit linkage) நிதியளித்து வாழ்வாதார நடவடிக்கைகளை உருவாக்கும் திட்டமான தீனதயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தில் (National Rural Livelihood Mission (DAY-NRLM)) 15.81 சதவீதம் குறைவாக செலவிடப்பட்டுள்ளது. இத்தகைய குறைவாக செலவிடுவது கிராமப்புற ஏழைகளின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறனை நேரடியாக பாதிக்கிறது. இது பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான நிதி அணுகலைக் கட்டுப்படுத்துகிறது. சுய உதவிக் குழுக்களிலிருந்து தொழில்முனைவோராக மாறுவதை ஊக்குவிக்கும் வகையில், 2026-27 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட SHE-Marts முன்முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால், மிகவும் அடிப்படையான திட்டமான தீனதயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம் (DAY-NRLM), குறைவான செயல்திறன் கொண்டதாகத் தெரிகிறது.


கிராமப்புற ஏழைகளிடையே கடன் தேவை குறைவாக இருப்பது இந்த நிலைமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இது ஒரு சாத்தியமான தேவைக் கட்டுப்பாட்டைக் குறிக்கிறது. இந்த நிதியாண்டில், வேளாண் அல்லாத துறையில் நுண் நிறுவனங்களை அமைப்பதற்கான வங்கி நிதியுதவி மானியத்தை ஆதரிப்பதற்காக தொடங்கப்பட்ட பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் 13.71 சதவீதம் குறைவாக செலவிடப்பட்டுள்ளது.


கல்வி மற்றும் பொது சுகாதாரத் துறைகளில் திட்டங்களில் மிகப்பெரிய அளவில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. நிதியாண்டு 26-ல் பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மானில் (Pradhan Mantri Poshan Shakti Nirman) 15.20 சதவீதம் குறைவாக செலவிடப்பட்டுள்ளது.


இந்தத் திட்டத்திற்கு 2026-27 நிதிநிலை அறிக்கையில் ஒரு சிறிய அதிகரிப்பு மட்டுமே உள்ளது. இது பணவீக்கத்தின் விளைவுகளிலிருந்து இந்தத் திட்டத்தைப் பாதுகாக்கவில்லை.


புதிய எய்ம்ஸ் நிறுவனங்களை (AIIMS institutions) நிறுவுவதற்கும், தற்போதுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளை நவீனமயமாக்குவதற்கும், இதனால் சுகாதார சேவைகளில் பிராந்திய ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கும் 2006-ல் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனாவில் (Pradhan Mantri Swasthya Suraksha Yojana) நிதிநிலை அறிக்கை ஒதுக்கீட்டைக் குறைப்பதை நியாயப்படுத்துவதும் கடினம்.


எந்தவொரு உயர் மதிப்புள்ள திட்டத்தையும் போலவே சமூக உள்கட்டமைப்பு முக்கியமானது. ஜல் ஜீவன் மிஷனில் (தேசிய கிராமப்புற குடிநீர் திட்டம்-National Rural Drinking Water Mission) குறைவாக செலவிடப்பட்டது தற்போதைய நிதியாண்டில் 74.63 சதவீதம் ஆகும்.


நடப்பு நிதியாண்டில் தூய்மை இந்தியா திட்டத்தில் (Swachh Bharat Mission) கிராமப்புறங்களில் 16.57 சதவீதமும், நகர்ப்புறங்களில் 60 சதவீதமும் குறைவாக செலவிட்டுள்ளது. பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனாவில் 42.11 சதவீத குறைவாக செலவிடப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டில் எந்த அதிகரிப்பும் இல்லை. இது நிதியாண்டில் ஒரு உண்மையான கால குறைப்பைக் குறிக்கிறது.


மாநிலங்களால் பொருத்தமான மானியங்களை வழங்க முடியவில்லை என்றும், இதுவே மோசமான செயல்பாட்டிற்குக் காரணம் என்றும் சிலர் வாதிடுகின்றனர்.  அப்படியானால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act) மற்றும் துடிப்பான கிராமங்கள் திட்டம் - கிராம கௌரவத் திட்டம் (Vibrant Villages Programme - Gram Gaurav) போன்ற பொது வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கான நிதிநிலை அறிக்கை ஒதுக்கீட்டில் 46.15 சதவீத அதிகரிப்பு அர்த்தமற்றதாகிவிடும். ஏனென்றால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தில் (MGNREGA) 25 சதவீதத்திலிருந்து MGNREGA-க்கு மாற்றாக வரும் ‘வளர்ச்சியடைந்த இந்தியா - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத திட்டம் - கிராமப்புறத்தில் (VB-G RAM G) மாநிலங்களின் பங்கு 40 சதவீதமாக அதிகரித்துள்ளது.


வேலையின்மை அதிகரிப்பு பொருளாதாரத்தில் தேவையைக் குறைக்கும். இது பொருளாதார வளர்ச்சியைக் குறைக்கும். மோசமான செயல்திறன் பலவீனமான நிர்வாகத்தால் ஏற்பட்டால், அரசாங்கத்தின் நோக்கம் நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த சீர்திருத்தங்கள் கவனம் செலுத்தப்பட்டு காலக்கெடுவுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். நிதிப் பற்றாக்குறை பிரச்சினை என்றால், மத்திய அரசு வருவாய் வசூலை அதிகரிக்க வேண்டும். அதிக வளங்களை திரட்ட வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த சூழ்நிலையில், செல்வ வரியை அறிமுகப்படுத்த இந்த நேரம் பொருத்தமானது. இது மிகவும் நெறிமுறையான மற்றும் நியாயமான சமூகத்தை உருவாக்க உதவும்.


எழுத்தாளர் ஒரு பேராசிரியர் மற்றும் IRMA "திரிபுவன்" சஹ்காரி பல்கலைக்கழகத்தில் ஆக்சிஸ் வங்கியின் தலைவராக உள்ளார்.          

Original article : Pro-poor, capacity building schemes losing sheen. -Indranil De

Share:

மேற்கு வங்க சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மற்ற மாநிலங்களிலிருந்து எவ்வாறு வேறுபட்டது?, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு இதன் தாக்கம் என்ன? -தாமினி நாத்

 செயல்முறையிலிருந்து இறுதி முடிவு வரை, மேற்கு வங்காளத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தம் எவ்வாறு வேறுபட்டது மற்றும் அது ஏன் சர்ச்சையை உருவாக்கியது என்பதற்கான ஒரு பார்வை குறித்து கீழே குறிப்பிட்டுள்ளது.


வங்காள சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செய்திகள்: மேற்கு வங்காளத்தில் நான்கு மாதகால சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) பிறகு, பிப்ரவரி 28 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது, ​​மாநிலத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 8% அல்லது சுமார் 61 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகக் காட்டுகிறது. இருப்பினும், இந்த இறுதி வாக்காளர் பட்டியலானது இறுதியானது அல்ல என்பதையும் அது குறிப்பிட்ட்டிருந்தது.


உண்மையில், மாநிலத்தில் 61.06 லட்சம் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை பட்டியலில் கண்டனர். ஆனால் அவர்களின் பெயர்கள் "தீர்ப்புக்கு உட்பட்டவை" என்று குறிக்கப்பட்டன. இதன் பொருள், அவர்களின் பெயர்கள் இன்னும் பட்டியலில் இருந்தன, ஆனால் அவர்களின் நிலை முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட நீதித்துறை அதிகாரிகள் தங்கள் வழக்குகளை மதிப்பாய்வு செய்து, அடுத்தடுத்த துணைப் பட்டியல்களில் அவர்களை வாக்காளர் பட்டியலில் வைத்திருக்க முடிவு செய்யும் வரை, வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் அவர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த முடியாது.


சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) போது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தகுதியற்றவர்களாகக் கண்டறியப்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். இதன் விளைவாக, அவர்கள் வாக்களிக்கும் உரிமையை இழப்பார்கள். தேர்தல் ஆணையம் இதுவரை சிறப்பு தீவிர திருத்தத்தை(SIR) முடித்த 9 மாநிலங்கள் மற்றும் 3 ஒன்றியப் பிரதேசங்களில் இந்த நிலைமை ஏற்படவில்லை.


மேற்கு வங்காளத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தம் எவ்வாறு வேறுபட்டது மற்றும் நாட்டின் பிற மாநிலங்களுக்கு இதன் பொருள் என்ன என்பதைக் கீழே குறிப்பிட்டுள்ளது.


கடந்த ஆண்டு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட சிறப்பு தீவிர திருத்த (SIR) செயல்முறை என்ன?


ஜூன் 24, 2025 அன்று, நாட்டின் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்துவதற்கான திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த 20 ஆண்டுகளாக, தேர்தல் ஆணையம் ஆண்டுதோறும் அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கும் முன்பும் புதிதாகத் தகுதியுள்ள வாக்காளர்களைச் சேர்ப்பதன் மூலமும், இறந்த மற்றும் பிற தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவதன் மூலமும் வாக்காளர் பட்டியலைப் புதுப்பித்து வருகிறது.


இருப்பினும், ஜூன் 24-ம் தேதி வெளியான சிறப்பு தீவிர திருத்த (SIR) உத்தரவு, முந்தைய திருத்தங்களிலிருந்து வேறுபட்டு ஒரு புதிய செயல்முறையை அறிமுகப்படுத்தியது. இந்தப் புதிய செயல்முறையின் கீழ், வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நபரும் ஒரு மாதக் கணக்கெடுப்பு நிலையில், தங்கள் உள்ளூர் வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடம் (Booth Level Officer (BLO)) அல்லது இணையவழியில் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.


2000-களின் முற்பகுதியில் மாநிலங்கள் முழுவதும் நடந்த கடைசி தீவிர திருத்தத்திற்குப் பிறகு சேர்க்கப்பட்ட அனைவரும், தங்கள் குடியுரிமையை நிரூபிப்பது உட்பட, தங்கள் தகுதியை நிறுவ தேர்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்ட 11 ஆவணங்களின் பட்டியலிலிருந்து ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த செயல்முறை முதன்முதலில் பீகாரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. ஏனெனில், இந்த ஆண்டு இறுதியில் மாநிலம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருந்தது.


அக்டோபர் 27, 2025 அன்று, ஒன்பது மாநிலங்களில் (சத்தீஸ்கர், இராஜஸ்தான், கோவா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, குஜராத், மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப் பிரதேசம்) மற்றும் மூன்று ஒன்றியப் பிரதேசங்களில் (அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி) சிறப்பு தீவிர திருத்தத்திற்கான (SIR) மாற்றியமைக்கப்பட்ட செயல்முறையை தேர்தல் ஆணையம் அறிவித்தது. உத்தரபிரதேசத்தில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நீட்டிக்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 22 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களுக்கான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும்.


அக்டோபரில் அறிவிக்கப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) இரண்டாம் நிலை கட்டத்திற்கு, தேர்தல் ஆணையம் வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை சிறிது மாற்றியுள்ளது. இப்போது, ​​அனைத்து வாக்காளர்களும் எந்தவொரு மாநிலத்திலோ அல்லது ஒன்றியப் பிரதேசத்திலோ கடைசி தீவிர திருத்தத்தின் வாக்காளர் பட்டியலுடன் தங்களை "இணைக்க" (map) வேண்டியிருந்தது. வாக்காளர்கள் அந்த முந்தைய பட்டியலில் உள்ள தங்கள் சொந்தப் பெயர் மூலமாகவோ அல்லது அந்தப் பட்டியலில் பட்டியலிடப்பட்ட உறவினரின் பெயர் மூலமாகவோ தங்களை இணைத்துக் கொள்ளலாம். அவர்கள் அல்லது ஒரு உறவினர் பதிவு செய்யப்பட்ட வரிசை எண் உள்ளிட்ட விவரங்களை வழங்க முடியாத அனைவருக்கும், பின்னர் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டு, அவர்களின் தகுதியை உறுதிப்படுத்த ஆவணங்களை வழங்குமாறு கேட்கப்படும்.


மேற்கு வங்காளத்தில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) எவ்வாறு வேறுபட்டது?


9 மாநிலங்களிலும் 3 ஒன்றியப் பிரதேசங்களிலும் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறை ஒரே மாதிரியாகத் தொடங்கியது. ஒரு மாத கணக்கெடுப்பு நிலையானது நவம்பர் 4, 2025 அன்று தொடங்கியது. அக்டோபர் 27-ம் தேதிக்குள் பதிவுசெய்யப்பட்ட அனைவருக்கும் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை முதலில் விநியோகிக்க வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLO) வீடு வீடாகச் செல்ல வேண்டியிருந்தது. பின்னர் அவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று நிரப்பப்பட்ட படிவங்களை சேகரிக்க வேண்டும். பின்னர், அவர்கள் பிரத்யேக வாக்குச்சாவடி நிலை அதிகாரி (BLO) செயலியைப் பயன்படுத்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) மையப்படுத்தப்பட்ட ECINET தரவுத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


ஒரு படிவங்களை திருப்பி அனுப்பப்படாதவர்கள் அல்லது வாக்குச்சாவடி நிலை அதிகாரியால் (BLO) இறந்துவிட்டதாகக் கண்டறியப்பட்டவர்கள், மாற்றப்பட்டவர்கள்/இல்லாதவர்கள் அல்லது வேறு இடங்களில் சேர்க்கப்பட்டவர்கள் என அனைவரும் அவ்வாறு குறிக்கப்பட்டு, டிசம்பரில் வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். மேற்கு வங்காளத்தைப் பொறுத்தவரை, இந்த எண்ணிக்கை 58 லட்சமாக இருந்தது. இதனால், வாக்காளர்களின் எண்ணிக்கை 7.66 கோடியிலிருந்து 7.08 கோடியாகக் குறைந்தது.


மேற்கு வங்காளத்தில் இந்த செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் பெயர் தெரியாத நிலையில் குறிப்பிட்டதாவது, இந்தக் கணக்கெடுப்பு நிலையில் படிவங்களுடன் எந்த ஆவணங்களையும் சேகரிக்க வேண்டாம் என்று வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLO) தெளிவாக அறிவுறுத்தப்பட்டதாக அவர்கள் கூறினர். வாக்காளர்கள் தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியுடன் மட்டுமே கணக்கெடுப்பு படிவத்தில் தங்களை "இணைக்க" வேண்டும் என்றும் அவர்களிடம் கூறப்பட்டது.


மற்ற மாநிலங்களில் நிலைமை இப்படி இல்லை. உதாரணமாக, உத்திர பிரதேசத்தில், வாக்காளர்களுக்கு விசாரணைக்கான அறிவிப்பு வழங்கப்பட்டால், ஆதாரமாக பதிவேற்றுவதற்காக, முதல் கட்டத்திலேயே வாக்காளர்களிடமிருந்து வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLO) ஆவணங்களைச் சேகரித்தனர். கடந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடத்தப்பட்ட பீகாரில், முந்தைய பட்டியலில் இருந்த மாமாக்கள் மற்றும் அத்தைகள் உட்பட எந்த வயது வந்த உறவினருடனும் வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தனர்.


அக்டோபரில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) இரண்டாம் கட்டத்தை அறிவிக்கும் போது, ​​தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வாக்காளர்கள் எந்த வயது வந்த உறவினருடனும் தங்களை இணைக்கலாம் என்று கூறியிருந்தார். கணக்கெடுப்பு படிவம் ஒரு "உறவினரின்" விவரங்களையும் கேட்டது. இதில் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிக்கு மட்டும் இந்த விதிமுறை கட்டுப்படுத்தப்படவில்லை.


டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வரைவுப் பட்டியல்கள் மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்கள் முழுவதும் வெளியிடப்பட்ட பிறகு, வாக்காளர் பட்டியலைப் பராமரிப்பதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் கொண்ட வாக்காளர் பதிவு அதிகாரிகள் (Electoral Registration Officers (EROs)), "இணைக்கப்படாத" (unmapped) வாக்காளர்களுக்கு அறிவிப்புகளை வழங்கவும், விசாரணைகளை நடத்தவும், ஆவணங்களை சேகரிக்கவும், ஒவ்வொரு வழக்கிலும் நியாயமான உத்தரவுகளை பிறப்பிக்கவும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.


பெயர்களில் எழுத்துப்பிழை முரண்பாடுகள், ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருப்பதாகக் காட்டப்பட்ட நிகழ்வுகளும், குறிப்படப்பட்ட ஒரு வாக்காளருக்கும் அவரது பெற்றோருக்கும் இடையிலான வயது இடைவெளி 15 வயதுக்குக் குறைவாகவோ அல்லது 50 வயதுக்கு மேலாக இருப்பது உள்ளிட்ட "தர்க்கரீதியான முரண்பாடுகளை" (logical discrepancies) குறிக்க தேர்தல் ஆணையம் அதன் மையப்படுத்தப்பட்ட மென்பொருளை ERONET தரவுத்தளம் மூலம் பயன்படுத்தியது. இதுபோன்ற அனைத்து நிகழ்வுகளிலும், தேர்தல் ஆணையம் அறிவிப்புகளை வெளியிட்டது. சம்பந்தப்பட்டவர்கள் விசாரணைகளுக்காக தேர்தல் பதிவு அதிகாரிகள் (Electoral Registration Officers (ERO)) முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.


மேற்கு வங்காளத்தில் செயல்முறை மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபட்டது. வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டு அறிவிப்பு காலம் தொடங்கிய மூன்று நாட்களுக்குப் பிறகு, விசாரணை நிலையில் தேர்தல் பதிவு அதிகாரிகள் (ERO) மற்றும் உதவி தேர்தல் பதிவு அதிகாரிகளைக் கண்காணிக்க "நுண் பார்வையாளர்களை" (micro-observers) நியமித்து டிசம்பர் 19, 2025 அன்று தேர்தல் ஆணையம் மேற்கு வங்காள தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியது.


பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பணிபுரியும் மத்திய அரசு பணியாளர்களான மொத்தம் 8,100 நுண் பார்வையாளர்கள், விசாரணைகளின் போது வாக்காளர்களால் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களைச் சரிபார்க்க நியமிக்கப்பட்டனர். வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக நுண் பார்வையாளர்களை நியமிப்பது தேர்தல் ஆணையத்திற்கு முதன்முறையாக மட்டுமல்லாமல், மேற்கு வங்காளத்தில் மட்டுமே ஆணையம் அவ்வாறு செய்தது.


இதன் விளைவாக, மேற்கு வங்காளத்திற்கு எதிரான தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாகவும், சட்டப்பூர்வ அதிகாரமான தேர்தல் பதிவு அதிகாரிகளின் (ERO) பணியில் குறுக்கிடுவதாகவும் மாநில ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1951 இன் (Representation of the People Act) படி, ஒரு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் சேர்க்க மற்றும் நீக்க தேர்தல் பதிவு அதிகாரிகளால் (ERO) தான் முடியும். தேர்தல் பதிவு அதிகாரிகள் (ERO) பொதுவாக துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் பதவியில் உள்ள ஒரு மாநில அரசு பணியாளராக இருப்பார். அவர் மாநில அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படுகிறார்.


தனது பங்கிற்கு, மேற்கு வங்காள அரசு தேர்தல் பதிவு அதிகாரிகளாக (ERO) நியமிக்க போதுமான எண்ணிக்கையிலான துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் (SDM) தரவரிசை அதிகாரிகளை வழங்கத் தவறிவிட்டதாகவும், இதனால் நுண் பார்வையாளர்களை நியமித்ததாகவும் தேர்தல் ஆணையம் கூறியது.


மேற்கு வங்காளத்தில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள், ஆளும் கட்சியின் உத்தரவின் பேரில் தேர்தல் பதிவு அதிகாரிகள் (ERO) செயல்படுவதால் நுண் பார்வையாளர்களை நியமிக்க வேண்டிய அவசியம் உணரப்படுவதாகக் கூறினர். தகுதியற்ற வாக்காளர்களை வாக்காளர் பதிவு அதிகாரிகள் நீக்கவில்லை என்றும், போலி ஆவணங்கள் உட்பட அனைத்து வகையான ஆவணங்களையும் ஆதாரமாக பதிவேற்றுகிறார்கள் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.


விசாரணைகளுக்கான கடைசி தேதி, பிப்ரவரி 14 நெருங்கி வருவதால், தேர்தல் பதிவு அதிகாரிகள் (ERO) மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு இடையே மோதல் தீவிரமடைந்தது. இதற்கான காலக்கெடு நெருங்க வரும்போது பதட்டங்கள் மேலும் அதிகரித்தன. தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறையின் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்த்து தொடரப்பட்ட பல மனுக்களை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், மாநில அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையிலான "நம்பிக்கை பற்றாக்குறையை" (trust deficit) குறிப்பிட்டது. பிப்ரவரி 20 அன்று, முழுமையான நீதிக்காக ஒரு ஆணை அல்லது உத்தரவை பிறப்பிக்கும் அரசியலமைப்பின் பிரிவு 142 அதிகாரத்தைப் பயன்படுத்தி, நிலுவையில் உள்ள வழக்குகளை முடிவு செய்ய நீதித்துறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவும் மேற்கு வங்காளத்திற்கு மட்டுமே பொருந்தும்.


பிப்ரவரி 28 அன்று இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டபோது "தீர்ப்புக்கு உட்பட்டது" (under adjudication) என்று வைக்கப்பட்ட 60.06 லட்சம் வழக்குகள் இவை. சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் தகுதி குறித்து நீதித்துறை அதிகாரி முடிவு செய்யும் போது, ​​துணைப் பட்டியல்கள் வெளியிடப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தப் பட்டியல்கள் இறுதிப் பட்டியலின் ஒரு பகுதியாகக் கருதப்படும். ஆனால், தீர்ப்பு வழங்குவதற்கும் சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் அறிவிக்கப்படுவதற்கும் நீதிமன்றம் எந்த காலக்கெடுவையும் விதிக்காததால், சரியான நேரத்தில் அனுமதி பெறாதவர்கள் இந்த வாக்கெடுப்புகளில் வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும்.


நாட்டின் பிற மாநிலங்களுக்கு இதன் பொருள் என்ன?


வாக்காளர்களின் தகுதியை தீர்மானிக்க நுண் பார்வையாளர்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளை நியமிப்பது, 1950-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் (RP) வழங்கப்பட்டுள்ள தேர்தல் பதிவு அதிகாரிகளின் (ERO) அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்துள்ளது என்பதை மேற்கு வங்காளத்தில் உள்ள தேர்தல் ஆணையம் (EC) அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள். இருப்பினும், மாநில அரசு தேர்தல் ஆணையத்துடன் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். உதாரணமாக, தவறு செய்யும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLO) மற்றும் தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அதிகாரத்துவம் விரும்பவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.


மார்ச் 1 அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் (TMC) தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, மாநிலத்தை நியாயமற்ற முறையில் குறிவைப்பதாக தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகக் கண்டித்தார். விசாரணைகள் முடிந்ததும் தேர்தல் பதிவு அதிகாரிகள் (ERO) மற்றும் உதவி தேர்தல் பதிவு அதிகாரிகளிடம் (AEROs) 14 லட்சம் வழக்குகள் மட்டுமே நிலுவையில் இருந்தன. ஆனால், இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டபோது 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்ப்பின்கீழ் வைக்கப்பட்டன என்று குறிப்பிட்டார். இந்த 60 லட்சம் பெயர்களில், தீர்ப்பின்கீழ் உள்ள அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் அதிக சிறுபான்மை மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இந்த மாவட்டங்களில் முர்ஷிதாபாத் மாவட்டம், மால்டா மாவட்டம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் ஆகியவை அடங்கும். இந்த செயல்முறையை பானர்ஜி கேள்வி எழுப்பினார். எந்த வாக்காளர்கள் தீர்ப்பின்கீழ் வைக்கப்படுவார்கள் என்று யார் முடிவு செய்தார்கள் என்று அவர் கேட்டார்.


Original article : How West Bengal SIR played out differently from other states, what it means for rest of country?. -Damini Nath

Share:

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் 100 GWe மின் உற்பத்தித் திறனை அடைய தோரியம் (Thorium) எவ்வாறு உதவும்? -அனில் ககோட்கர்

 உலகின் மிகப்பெரிய தோரியம் இருப்புக்களை இந்தியா கொண்டுள்ளது. மேலும், தோரியம் பயன்பாடு எரிசக்தி சுதந்திரத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அணு பெருக்கத்தின் அபாயத்தையும் கிட்டத்தட்ட முற்றிலுமாக நீக்குகிறது.


இந்தியாவின் அணுசக்தித் திட்டத்திற்கு சாந்தி சட்டம்-2025 (SHANTI Act) ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இது அணுசக்தியை பொது மற்றும் தனியார் துறைகளுக்கு அனுமதிக்கிறது. இதில் கல்வி மற்றும் தொழில்துறையும் அடங்கும். இது பொதுவாக, இந்தியாவின் அணுசக்தித் தேவைகள் மற்றும் வாய்ப்புகளுக்கு பதிலளிக்கக்கூடிய ஒரு பரந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகிறது. மேலும், பங்குதாரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும், இந்தச் சட்டம் ஒரு செயல்படுத்தும் சக்தியாக இருந்தாலும், ஏகபோகக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்ட ஒரு உகந்த ஒழுங்குமுறை கட்டமைப்பானது, நமது வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்கு சமமான அளவில் அவசியம்.


தற்போது, ​​இந்தியாவின் அணுசக்தி திறனின் வளர்ச்சி பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட யுரேனியத்தை பெரிதும் சார்ந்துள்ளது. உள்நாட்டு யுரேனியம் தாதுக்கள் தரம் குறைவாகவும் மற்றும் பிரித்தெடுப்பதற்கு விலை அதிகமாகவும் உள்ளது. இருப்பினும், உள்நாட்டு மூல வளங்களைப் பயன்படுத்துவது உலகளாவிய விநியோக பற்றாக்குறையிலிருந்து சில பாதுகாப்பை வழங்குகிறது. அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ‘2047-ம் ஆண்டுக்குள் 100 GWe’ (100 GWe by 2047) அணுசக்தித் திட்டத்தில் பெரும்பாலும் வெப்ப உலைகள் (thermal reactors) உள்ளன. இந்த உலைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 18,000 முதல் 20,000 டன்கள் வெட்டியெடுக்கப்பட்ட யுரேனியம் தேவைப்படும். இந்தத் தொகை உலகின் தற்போதைய ஆண்டு யுரேனியம் உற்பத்தியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகும்.


இந்தியா 100 GWe இலக்கை அடையும் நேரத்தில், உலகளாவிய அணுசக்தி உற்பத்தி திறன் இன்று சுமார் 380 GWe இலிருந்து சுமார் 1,400 GWe-ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவில், சுமார் 8 மில்லியன் டன்கள் கொண்ட அறியப்பட்ட உலகளாவிய யுரேனிய வளங்கள், கடற்படையை ஒரே நேரத்தில் முப்பதாண்டுகளுக்கு மட்டுமே தக்கவைக்க முடியும்.


இது இரண்டு தெளிவான முடிவுகளுக்கு வழிவகுக்கிறது. முதலாவதாக, யுரேனியத்தை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் முறையில் பயன்படுத்துவது நீண்ட காலத்திற்கு நிலையானது அல்ல. இரண்டாவதாக, உலகளாவிய யுரேனிய விநியோகத்தில் இந்தியா தனது பங்கைப் பெறுவது மிகவும் கடினமாகிவிடும்.



மாற்றாக தோரியம் மறுசுழற்சி


அணுசக்தி திறன் (Nuclear power capacity) 2047-க்குப் பிறகும் விரிவடைய வேண்டியிருக்கும். இதனால், எரிசக்தியின் தேவை நிரந்தரமானது. மேலும், இணைவு ஆற்றல் (fusion energy) தேவையான அளவை அடையும் வரை, அணுக்கரு பிளவு (Nuclear fission) அதன் பங்கை வகிக்க வேண்டும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் முறையில் யுரேனியத்தின் வரம்புகளுக்கு முக்கியத் தீர்வு அணு எரிபொருள் மறுசுழற்சி (nuclear fuel recycling) ஆகும். இதை மறுசுழற்சி செய்வது அணுசக்தி எரிபொருளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஆற்றலை 50 முதல் 100 மடங்கு அதிகரிக்கலாம். இருப்பினும், பிரான்ஸ், இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற சில குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளைத் தவிர, பெரும்பாலான நாடுகள் மறுசுழற்சியை ஏற்கவில்லை. ஏனெனில், அணுக்கரு பிளவுப் பொருள் ஆயுதங்களுக்காகத் திருப்பிவிடப்பட்டு அணு பெருக்கத்திற்கு வழிவகுக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.


தோரியம் மறுசுழற்சிக்கு மாறுவது இந்த சூழ்நிலையை மாற்றும். இந்தியா உலகின் மிகப்பெரிய தோரியம் இருப்புகளைக் கொண்டுள்ளது. மேலும், தோரியத்தின் பயன்பாடு எரிசக்தி சுதந்திரத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அணுசக்தி பெருக்க அபாயத்தையும் கிட்டத்தட்ட குறைக்கிறது. எனவே, தோரியத்தைப் பயன்படுத்துவதில் மீதமுள்ள சவால்களை விரைவாக தீர்க்க, ஒரு பெரிய மற்றும் பலதரப்பட்ட முயற்சி தேவைப்படும். இது புதுமைக்கான பெரிய வாய்ப்பையும் வழங்கும்.


வேக ஈனு அணுக்கரு உலைகள் (Fast Breeder Reactor(FBR)) மற்றும் உயர்-மதிப்பீடு குறைந்த-செறிவூட்டப்பட்ட யுரேனியங்கள் (High-Assay Low-Enriched Uranium(HALEU)) பாதைகளாக


இந்தியாவின் மூன்று-நிலை அணுசக்தித் திட்டம் அதன் தோரியம் வளங்களைப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், வேக ஈனு அணுக்கரு உலைகள் (FBR) வெப்ப உலைகளுக்குப் பிறகு வரும் கட்டமைப்பை உருவாக்குகின்றன. இதில், முதல் 500 MWe முன்மாதிரி வேக ஈனு அணுக்கரு உலைகள் (FBR) கிட்டத்தட்ட தயாராக உள்ளது. இதற்குப் பிறகு, விரைவான திறன் வளர்ச்சியை ஆதரிக்கத் தேவையான குறுகிய இரட்டிப்பு நேரங்களை அடைய, இதன் தொடர்புடைய எரிபொருள் மறுசுழற்சி தொழில்நுட்பத்துடன் கூடிய உலோக எரிபொருள் வேக ஈனு அணுக்கரு உலைகளும் (FBR) உருவாக்கப்பட வேண்டும். பொருளாதார தேவைக்கேற்ப வேக ஈனு அணுக்கரு உலை திறன் (fast reactor capacity) விரிவடையும் கட்டமைப்பு, யதார்த்தமாக, இன்னும் முப்பதாண்டுகளாக உள்ளது.


வேக ஈனு அணுக்கரு உலைகளின் (FBR) முக்கிய நோக்கம் தோரியத்தை பெரிய அளவில் கதிர்வீச்சு செய்து மூன்றாம் கட்டத்திற்குத் தேவையான யுரேனியம்-233-ஐ உற்பத்தி செய்வதாகும். இருப்பினும், இந்த நிலை தாமதமாகிவிட்டது. அதேநேரத்தில், 100 GWe பணி முன்னேறி வருவதுடன், இது பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட யுரேனியத்தையே சார்ந்துள்ளது. இதன் விளைவாக, அழுத்தப்பட்ட கன நீர் உலைகளின் (Pressurised Heavy Water Reactors (PHWR)) திறன் முந்தைய இலக்கான 10 GWe-ஐவிட மிக அதிகமாக விரிவடைந்து வருகிறது. இந்த சூழ்நிலை ஒரு முக்கியமான வாய்ப்பை உருவாக்குகிறது. அழுத்தப்பட்ட கன நீர் உலைகளில் (PHWR) தோரியத்தை கதிர்வீச்சு செய்வது யுரேனியம்-233 உற்பத்தியை மேம்படுத்தலாம் மற்றும் மூன்றாம் நிலை தோரியம் உருகிய உப்பு உலை (Thorium Molten Salt Reactor (TMSR)) அடிப்படையிலான சிறிய மட்டு உலைகளின் (SMR) பயன்பாட்டை தீவிரப்படுத்தலாம். அவ்வாறு செய்வது இழந்த நேரத்தை மீட்டெடுக்கும் மற்றும் முதல் மற்றும் இரண்டாம் நிலைகளுக்கு இடையில் அணுசக்தி வளர்ச்சியில் தவிர்க்க முடியாத மந்தநிலையை இது குறைக்கலாம்.


உண்மையில், பெரிய அளவிலான தோரியம் கதிர்வீச்சை, அழுத்தப்பட்ட கன நீர் உலைகளில் (PHWR), தோரியத்தை உயர்-மதிப்பீட்டு குறைந்த-செறிவூட்டப்பட்ட யுரேனியத்துடன் (HALEU) எரிபொருளாகப் பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மாற்றங்கள் இல்லாமல் மேற்கொள்ளப்படலாம். இந்த அணுகுமுறை பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் மேலே குறிப்பிட்டுள்ளபடி, அணுசக்தி பெருக்க எதிர்ப்பு ஆகியவற்றில் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. மிக முக்கியமாக, மிதமான நீர் உலைகளுடன் (light water reactors) ஒப்பிடக்கூடிய எரிப்பு அளவை அனுமதிக்கிறது. இது கணிசமாகக் குறைந்த செலவழித்த எரிபொருள் மற்றும் குறைந்த பின்-இறுதி செலவுகளுக்கு வழிவகுக்கிறது.


அத்தகைய உயர்-மதிப்பீட்டு குறைந்த-செறிவூட்டப்பட்ட யுரேனியம் (HALEU)-தோரியம் எரிபொருளை தகுதிப்படுத்துவதற்கு உண்மையான அழுத்தப்பட்ட கன நீர் உலைகளில் (PHWR) துரிதப்படுத்தப்பட்ட கதிர்வீச்சு சோதனை மற்றும் செயல்விளக்கம் தேவைப்படுகிறது. இந்தியாவில் தற்போது துரிதப்படுத்தப்பட்ட கதிர்வீச்சு சோதனைக்கான வசதிகள் இல்லை. இருப்பினும், இந்த நோக்கத்திற்காக அதன் தற்போதைய சர்வதேச ஒத்துழைப்பு ஒப்பந்தங்களைப் பயன்படுத்தலாம். இந்த ஏற்பாடுகள் உண்மையான கூட்டாண்மைகளாக செயல்பட வேண்டும். அவை எளிய விற்பனையாளர்–வாங்குபவர் உறவுகளுக்கு இடையில் கட்டுப்படுத்தப்படக்கூடாது. எரிபொருள் விநியோகத்தில், இந்தியா ஏற்கனவே இயற்கை மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இறக்குமதி செய்கிறது. உயர்-மதிப்பீட்டு குறைந்த-செறிவூட்டப்பட்ட யுரேனியம் (HALEU) விநியோகச் சங்கிலி உலகெங்கிலும் உள்ள பல அடுத்த தலைமுறை அணுக்கரு உலைத் திட்டங்களின் தேவையால் இயக்கப்படுகிறது. இது வேகமாக உருவாகி வருகிறது.


தோரியம் உருகிய உப்பு உலையுடன் (TMSR), நேரடி வெப்ப வேதியியல் வழிகள் மூலம் குறைந்த விலை பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட சிறிய மட்டு உலைகளும் (SMR) உருவாக்கப்பட வேண்டும். இந்த இரண்டு அமைப்புகளும், உலோக எரிபொருளால் இயங்கும் வேகமான உலைகள், ஒரு பொதுவான பின்-இறுதி தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். இந்த தொழில்நுட்பம் பைரோகெமிக்கல் அணு மறுசுழற்சி செயல்முறை (pyrochemical nuclear recycling process) என்று அழைக்கப்படுகிறது. கதிரியக்க HALEU–தோரியம் எரிபொருளையும் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி மறுசுழற்சி செய்யலாம். இந்த தொழில்நுட்பங்களை உருவாக்குவது கடினம். இருப்பினும், வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சியால் அவற்றை அடைய முடியும். சீனா ஏற்கனவே முன்னிலை வகித்துள்ளது. 2025–26 நிதிநிலை அறிக்கையில் சிறப்பிக்கப்பட்டுள்ளபடி, சிறிய மட்டு உலைகள் (SMR) மேம்பாட்டிற்கான இந்தியாவின் முன்னுரிமை கவனம் இதுவாக இருக்க வேண்டும்.


சாந்தி சட்டத்தில் (SHANTI Act) எதிர்பார்க்கப்படும் பரந்த சுற்றுச்சூழல் அமைப்பு விரைவில் வடிவம் பெறும் என்றும், இந்தியாவின் எரிசக்தி சுதந்திரத்திற்கான முயற்சிகள் தகுதியான வேகத்தைப் பெறும் என்று நம்பப்படுகிறது.


அனில் ககோட்கர் அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர். அவர் இப்போது ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் வேந்தராக உள்ளார். அவர் ராஜீவ் காந்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.


Original article : How thorium can power India’s 100 GWe by 2047 mission?. -Anil Kakodkar

Share:

இந்திய நகரங்களின் அமைதியான விடுதலை. -ஸ்ரீகாந்த் விஸ்வநாதன்

 நவீன உலகில் எந்த நாடும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இல்லாமல், உயர் பொருளாதார வளர்ச்சி, பெரிய அளவிலான வறுமை ஒழிப்பு மற்றும் உயிர்வாழும் தன்மையை அடைந்ததில்லை.


 ஒன்றிய நிதி குழுக்கள் இந்திய நகரங்களுக்கு மெதுவாக நிதியை விடுவித்து கொண்டிருக்கலாம்.  ஏனெனில், நிதி நிலை அறிக்கை அமர்வு அதன் வேலையை மறைக்கிறது. இந்த குழு ஒன்றிய அரசின் அனைத்து வருமானங்களை கணக்கில் கொண்டு பரிந்துரைகளை வழங்குகிறது. அவை ஐந்து ஆண்டுகள் செய்யல்பாட்டில் இருக்கின்றன மற்றும் அனைத்து அமைப்புகளின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. இருப்பினும், எதிர்க்கட்சிகளிடமிருந்து அரசியல் வதந்திகள் வரும்போதுதான் அதன் பணிகள் பொது விவாதத்திற்கு வருகின்றன.


16-வது நிதிக் குழு இரண்டு வழிகளில் நகரங்களுக்கு மெதுவாக நிதியை விடுவித்துள்ளது. இந்தியாவின் நகரங்கள், மிக நீண்டகாலமாக ஒன்றிய மற்றும் மாநில 16-வது நிதிக் குழு நகரங்களை இரண்டு வழிகளில் விடுவித்துள்ளது. இந்தியாவின் நகரங்கள், நீண்டகாலமாக ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களை நம்பியுள்ளன. அவை, அளவு மற்றும் நேரத்தில் கணிக்க முடியாதவை. நீர் அல்லது சுகாதாரம் போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டுமே அவை கிடைக்கின்றன. மாநில நிதிக் குழுவின் (State Finance Commission (SFC)) மானியங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (urban local governments (ULGs)) ஊழியர்களின் சம்பளம் மற்றும் பிற செயல்பாட்டுச் செலவுகளைச் செலுத்த உதவுகின்றன. மேலும், ஒன்றிய நிதி குழுவின் (Union Finance Commission (UFC)) மானியங்கள் உள்கட்டமைப்பிற்கான நிதியின் ஒரே கணிக்கக்கூடிய ஆதாரமாகச் செயல்படுகின்றன.


2014-15 முதல் 2025-26 வரை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் மூலம் நிர்வகிக்கப்படும் நகர்ப்புற ஒன்றிய அரசின் நிதியுதவி திட்டங்கள் மூலம் (மாநிலங்கள் மற்றும்) நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்த ஒதுக்கீடு ரூ. 3.12 லட்சம் கோடியாக இருந்தது. இந்த செலவினத்தில் 90 சதவீதம் 2016-17 முதல் 2023-24 வரை இருந்தது. அப்போது 8 ஆண்டுகளில் ஏழு ஆண்டுகள் CSS ஒதுக்கீடு FC ஒதுக்கீட்டைவிட 15 முதல் 400 சதவீதம் வரை அதிகமாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், நகரங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியுதவி திட்டங்கள் கணிசமாகக் குறைந்துள்ளது; எனவே, நிதிக்குழு ஒதுக்கீடுகள் அதிகமாக உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றிய அரசின் நிதியுதவி திட்டங்கள் மானியங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில் 16-வது நிதிக் குழு தங்கள் மானியங்களை உயர்த்தியுள்ளது. அவற்றின் ஒதுக்கீடு 15-வது நிதிக் குழு ஒதுக்கியதைவிட 2.3 மடங்கு அதிகமானதாகும்.


அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த அளவிலான நிதியை ஒன்றிய அரசு வழங்குமா என்பது தெளிவாக தெரியவில்லை. நகர்ப்புற உள்கட்டமைப்புக்கான அதன் உறுதிப்பாட்டை ஒன்றிய அரசு மீண்டும் வலியுறுத்துவதுபோல் தெரிகிறது. நிதி நிலை அறிக்கை உரைகள் நகர்ப்புற எதிர்காலத்தைப் பற்றிப் பேசுகின்றன. ஆனால், நிதியை பற்றி பேசவில்லை. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் நிதிநிலை அறிக்கை, 2017-19-ஆம் ஆண்டில் 1.9 சதவீதமாக இருந்தது 1 சதவீதத்திற்கு அருகில் குறைந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மாநிலப்  பட்டியலில் இருப்பதால் இதை சரியான நடவடிக்கையாக கருதலாம். நிதிரீதியாகக் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், ஒன்றிய அரசு அதன் எல்லைக்குள் உள்ள பட்டியல்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


16-வது ஒன்றிய நிதிக் குழு, 15-வது நிதிக் குழு வழங்கிய அடிப்படை நிதி உதவிகளுக்கான நிபந்தனைகளைத் தொடர்கிறது. அதில் ஒரு நிபந்தனை, மாநில நிதி குழுக்கள் சரியான நேரத்தில் அமைக்கப்பட்டு, அவற்றின் செயல் நடைமுறை அறிக்கைகள் (Action Taken Reports), அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் மாநில சட்டமன்றங்களில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULGs) தங்களது நிதி உதவிகளில் மிகவும் நம்பிக்கை வைக்கின்றன. தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில், மாநில நிதி குழுவின் நிதி உதவிகள் ஒவ்வொரு நபருக்கும் கணக்கில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு நிதிக்கு 3–4 மடங்கு அதிகமாக இருந்தது. இருப்பினும், மாநிலங்கள் அவற்றை சரியான நேரத்தில் அல்லது நம்பகமான மற்றும் தற்சார்பான தலைமையுடன் அமைப்பதில்லை அல்லது போதுமான பணியாளர்களை நியமிப்பதில்லை அல்லது நியாயமான பதவிக்காலத்தை வழங்குவதில்லை. முக்கியமான பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளும் அளவு குறைவாகவே உள்ளது. 15-வது நிதி குழு மாநில சட்டமன்றங்களில் மாநில நிதிக் குழுக்களின் பரிந்துரைகளை பரிசீலிப்பதில் சரியான அமைப்பு மற்றும் பொறுப்புணர்வை கட்டாயப்படுத்தியது. இது குழுவின்   வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. மாநில நிதிக் குழுக்களை சீர்திருத்துவதில் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தாலும், 16-வது நிதிக் குழு இதை தொடரும் என்று தெளிவாகக் கூறியுள்ளது.


இந்தியாவின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை அரசாங்கத்தின் விருப்புரிமை மற்றும் சார்புநிலையின் பிடியிலிருந்து விடுவிப்பது, வளர்ந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்துவதற்கு இது முக்கியமான நடவடிக்கையாகும். நவீன உலகில் எந்த நாடும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இல்லாமல், உயர் பொருளாதார வளர்ச்சி, பெரிய அளவிலான வறுமை ஒழிப்பு மற்றும் உயிர்வாழும் தன்மையை அடைந்ததில்லை.


எழுத்தாளர் தலைமை நிர்வாக அதிகாரி, ஜனகிரஹா.


Original article : The quiet liberation of Indian cities. -Srikanth Viswanathan

Share:

மக்களவை சபாநாயகர் சிறப்புரிமைக் குழுவிற்கு உறுப்பினர்களை பரிந்துரை செய்கிறார் -மானஸ் ஸ்ரீவஸ்தவா

 தற்போதைய செய்தி


18-வது மக்களவை அமைக்கப்பட்டு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா செவ்வாயன்று சிறப்புரிமைக் குழுவிற்கு 15 உறுப்பினர்களை பரிந்துரை செய்தார். இந்தக் குழு சபை மற்றும் அதன் உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல் வழக்குகளை ஆராயும். பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் இந்தக் குழு செயல்படும்.


முக்கிய அம்சங்கள்: நாடாளுமன்ற சிறப்புரிமை, சிறப்புரிமை மீறல் மற்றும் சிறப்புரிமைக் குழுக்கள் பற்றி…


நாடாளுமன்ற சிறப்புரிமை (Parliamentary privilege) என்பது நாடாளுமன்றம் ஒரு அமைப்பாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தனிப்பட்ட திறனில் அனுபவிக்கும் உரிமைகள் மற்றும் விதிவிலக்குகளைக் குறிக்கிறது. சிறப்புரிமை இல்லாமல் அரசியலமைப்பால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை நிறைவேற்ற முடியாது.


அரசியலமைப்பு சட்டத்தின் படி, நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரங்கள், சலுகைகள் மற்றும் விதிவிலக்குகள் நாடாளுமன்றத்தால் வரையறுக்கப்பட வேண்டும்.


இந்திய அரசியலமைப்பின்படி, பிரிவுகள் 105 மற்றும் 122 நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைகளைக் (privileges of Parliament) பற்றி குறிப்பிடுகினற்ன. அதே, நேரத்தில் பிரிவுகள் 194 மற்றும் 212 மாநில அரசாங்கங்களின் சலுகைகளைப் பற்றி குறிப்பிடுகிறது.


அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 105-ன் படி, நாடாளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் இருக்க வேண்டும். நாடாளுமன்றத்திலோ அல்லது குழுவிலும் ஒரு உறுப்பினர் கூறிய எந்தக் கருத்துக்கும் அல்லது அவர் அளித்த வாக்கு தொடர்பாக, அந்த உறுப்பினருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு அல்லது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது.


அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 122-ன் படி: நாடாளுமன்றத்தில் நடந்த எந்த நடவடிக்கையையும், நடைமுறை தவறு நடந்தது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது.


பிரிவு 194 மற்றும் பிரிவு 212 ஆகியவை மாநில சட்டமன்றம் (state legislature) தொடர்புடைய பிரிவுகளாகும்.


சிறப்புரிமை மீறல் (breach of privilege) என்பது நாடாளுமன்றத்திற்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ வழங்கப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் உரிமைகளை மீறும் செயலாகும். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றம் அல்லது அதன் குழுக்கள் குறித்து குறை கூறுவதும் அல்லது அவற்றின் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கும் எந்த ஒரு செயலாக இருந்தாலும், அது சிறப்புரிமை மீறல் ஆக கருதப்படலாம். சிறப்புரிமை மீறலில், செய்தித்தாள்/பத்திரிகை/தொலைக்காட்சி நேர்காணல்கள் அல்லது பொது உரைகளில் வெளியிடப்பட்ட செய்திகள், தலையங்கங்கள் அல்லது அறிக்கைகளை வெளியிடுவதும் அடங்கும்.


சிறப்புரிமைக் குழு: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சில உரிமைகள், சலுகைகள் மற்றும் விதிவிலக்குகளை மீறுவது தொடர்பான அனைத்து கேள்விகளையும் இந்தக்  குழு ஆராய்கிறது. இது ஒரு நிலைக்குழு (Standing Committee) ஆகும். இது சபை மற்றும் அதன் உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறும் வழக்குகளை ஆராய்ந்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ள  பரிந்துரை செய்கிறது. மக்களவை குழுவில் 15 உறுப்பினர்கள் உள்ளனர். அதேநேரத்தில் மாநிலங்களவை குழுவில் 10 உறுப்பினர்கள் உள்ளனர்.


சிறப்புரிமை குழு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள்: குழுவின் பணி, அத்தகைய வழக்குகளை ஆராய்ந்து தேவை என்று கருதக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதாகும். குழு தனது ஆய்வை முடித்த பிறகு ஒரு அறிக்கையை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும். குழு அதற்கான எந்த நேரத்தையும் நிர்ணயிக்கவில்லை என்றால், குழுவைப் பற்றி குறிப்பிடப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


அறிக்கையை பரிசீலிப்பதற்காக ஒரு தீர்மானம் (motion) நிறைவேற்றப்பட வேண்டும். அதில் திருத்தங்களை பரிந்துரை செய்யலாம். தலைவர் அல்லது குழுவின் எந்த உறுப்பினரும் அல்லது வேறு எந்த உறுப்பினரும், அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை சபை ஏற்கலாம் அல்லது ஏற்காமல் இருக்கலாம் அல்லது திருத்தங்களுடன் ஏற்கலாம் என்று முன்மொழியலாம்.


அதிக எண்ணிக்கையிலான தீர்மானங்கள் நிராகரிக்கப்படுகின்றன. ஒரு சில சூழல்களில் மட்டுமே தண்டனை நடவடிக்கை பரிந்துரைக்கப்படுகிறது.


மிக முக்கியமான வழக்கு 1978-ல் சிக்மகளூரில் இருந்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திரா காந்தி அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட வழக்காகும். அவசரநிலையின் போது நடந்த அத்துமீறல்களை விசாரித்த நீதிபதி ஷா  குழு தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து, அப்போதைய உள்துறை அமைச்சர் சரண் சிங், அவருக்கு எதிராக சிறப்புரிமை மீறல் தீர்மானத்தை முன்மொழிந்தார்.


முக்கியத் தீர்மானம் (Substantive Motion)


எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் "அனைத்து நெறிமுறையற்ற நடத்தைகளையும் ஆராய விசாரணையைத்" தொடங்கிய பின்னர், அவரை மக்களவையில் இருந்து "உடனடியாக வெளியேற்ற" கோரி பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் துபே கொண்டு வந்த முக்கிய தீர்மானத்தை சிறப்புரிமைக் குழு விசாரிக்க வாய்ப்பில்லை என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. மார்ச் 9-ஆம் தேதி தொடங்கும் நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டத்தின்போது சபாநாயகர் துபேயின் தீர்மானத்தை எடுத்துக் கொண்டால், மக்களவை அதை நேரடியாக விவாதிக்கும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.


முக்கிய தீர்மானம் என்பது சட்டமன்றத்தில் விவாதம் மற்றும் முடிவு ஏற்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். "சட்டப்பூர்வ தீர்மானம் என்பது சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டு, சபையின் முடிவை வெளிப்படுத்தும் வகையில் வரைவு செய்யப்பட்ட ஒரு தனி அதிகாரம் கொண்ட தன்னிச்சையான முன்மொழிவாகும் என்று எம்.என்.கவுல் மற்றும் எஸ்.எல். ஷக்தர் ஆகியோர் தங்கள் அதிகாரப்பூர்வ புத்தகமான நாடாளுமன்ற நடைமுறை மற்றும் நடைமுறைகளில் கூறுகின்றனர். இது பல்வேறு வகையான சடப்பூர்வ தீர்மானங்களை விரிவாக விளக்குகிறது.


"சபநாயகர் மற்றும் துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானங்கள், குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விவகாரத்தில் ஒத்திவைப்பு தீர்மானங்கள், பொதுநலன் சார்ந்த விவகாரத்தில் விவாதத்தை எழுப்புவதற்கான தீர்மானங்கள், அமைச்சர்கள் குழுவின் மீதான நம்பிக்கை/நம்பிக்கையில்லா தீர்மானங்கள், சபாநாயகர்/துணை சபாநாயகரை நீக்குவதற்கான தீர்மானம், ஒரு உறுப்பினரின் பதவி காலியாக உள்ளதாக அறிவிக்கும் தீர்மானம் மற்றும் சபையால் விடுப்பு ஏற்றுக்கொள்ளப்படாத இடங்களில், மக்களவையில் கொண்டு வரப்படும் சடப்பூர்வ தீர்மானங்களுக்கு எடுத்துக்காட்டுகள்" என்று அவர்கள் எழுதுகிறார்கள்.


முக்கியத் தீர்மானங்கள் சபையின் முடிவை வெளிப்படுத்தும் வகையில் வாக்கெடுப்புக்கு விடப்படுகின்றன.


உயர் அதிகாரத்தில் உள்ள நபர்களின் நடத்தை ஒரு சடப்பூர்வ தீர்மானத்தில் மட்டுமே விவாதிக்க முடியும் என்று எம்.என்.கவுல் மற்றும் எஸ்.எல். ஷக்தர்  போன்றோர் கருத்து தெரிவித்துள்ளனர். குடியரசுத்தலைவரை பதவிநீக்கம் செய்வதற்கான குறிப்பிட்ட நடைமுறையை அரசியலமைப்பு வகுக்கிறது. மேலும், உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி, இந்திய தலைமை தணிக்கையாளர் மற்றும் தணிக்கையாளர் அல்லது தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்வதற்காக நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையும் குடியரசுத்தலைவரூக்கு உரையொன்றை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல், துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவர், மக்களவை சபாநாயகர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை தீர்மானங்கள் மூலம் பதவி நீக்கம் செய்வதற்கான பிரிவுகள் அரசியலமைப்பில் உள்ளன.


முக்கியத் தீர்மானம் (Substantive Motion) முன்வைக்கும்போது, முன் அறிவிப்பு (notice) கொடுக்கப்பட வேண்டும். அந்த அறிவிப்பை வழங்கிய உறுப்பினரால் மட்டுமே அது முன்வைக்கப்படலாம். ஒரு அமைச்சரின் பெயரில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதை மற்றொரு அமைச்சர் முன்மொழியலாம் என்ற ஒரு விதிவிலக்கு உள்ளது. ஆனால், அதை முன்மொழிபவர் மற்ற அமைச்சரின் சார்பாக தான் முன்மொழிகிறேன் என்பதைக் குறிப்பிட வேண்டும்.


இந்த வழக்கில், துபே ஒரு அமைச்சர் அல்ல என்பதால், தலைவர் அனுமதிக்கும்போது அவர் அதை முன்மொழிய வேண்டும். முக்கியமாக, சபாநாயகர் அல்லது துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானங்கள் மற்றும் குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தவிர, எந்தவொரு நிலையான தீர்மானமும் வழிமொழியப்பட வேண்டிய அவசியமில்லை.


Original article : Lok Sabha Speaker nominates members to Privilege Committee: -Manas Srivastava

Share:

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் உள்ள நிபுணத்துவ இடைவெளியைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழல் நிர்வாகத்தை மிகவும் சிக்கலானதாக மாற்றியுள்ளது. இன்றைய சூழலில் ஒரு திறமையான கண்காணிப்பு அமைப்பு என்பது, வரப்போகும் அபாயங்களைக் கண்டறிவதிலும், அதற்கேற்ப தகவமைப்புத் திட்டங்களை உருவாக்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும்.


இந்தியாவில் சுற்றுச்சூழல் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக, சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரு துறைகளிலும் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு அமைப்பை உருவாக்கும் நோக்கில் 2010-ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal (NGT)) சட்டம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், பத்து ஆண்டுகளுக்கும் மேலான அதன் செயல்பாடுகள் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளன. மணல் கொள்ளை மற்றும் நதிநீர் மாசுபாடு தொடர்பான வழக்குகளில், இந்தத் தீர்ப்பாயம் அறிவியல் பூர்வமான தரநிலைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, அவற்றை நடைமுறைப்படுத்த விரைவாகவும் செயல்பட்டது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இந்தத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகளும் தொழில்நுட்பத் தரவுகளின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. ஆனாலும், அவை முறையாக அமல்படுத்தப்படாததால் அவற்றின் தாக்கம் குறைந்து போனது. அதே வேளையில், உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் பல முடிவுகள் சுற்றுச்சூழல் நலன்களைக் கருத்தில் கொள்ளவில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். 2020-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ஐந்தில் நான்கு வழக்குகளில் இத்தீர்ப்பாயம் திட்ட மேம்பாட்டாளர்களுக்கு சாதகமாகவே தீர்ப்பளித்துள்ளதாகச் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இவை தகுதியின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்ட முடிவுகள் என்று அரசாங்கம் கூறினாலும், 2016-ஆம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்ட 13 நிபுணத்துவ உறுப்பினர்களில் ஒன்பது பேர் ஏற்கனவே சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் உயர் பதவிகளில் இருந்தவர்கள் என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. இது அரசாங்கத்தின் முக்கிய முடிவுகளையே மறுஆய்வு செய்யும் ஒரு அமைப்பில், 'நலன் சார்ந்த முரண்பாடுகள்' மற்றும் நிறுவன மாண்பு குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது.


வளர்ச்சித் திட்டங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளான மக்கள் இடப்பெயர்வு, மாசுபாடு, நிலத்தடி நீர் குறைதல், பல்லுயிர் பெருக்கத்திற்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் மோசமான கழிவு மேலாண்மை போன்றவற்றை வெறும் சட்டரீதியான விளக்கங்களால் மட்டுமே தீர்த்துவிட முடியாது; இதற்குப் தனித்துவமான நிபுணத்துவ அறிவு அவசியமாகும். இதற்காகவே, தேசிய பசுமைத் தீர்ப்பாய (National Green Tribunal (NGT)) சட்டத்தின்படி, இத்தீர்ப்பாயத்தில் 10 முதல் 20 வரையிலான நீதித்துறை உறுப்பினர்களும், அதே எண்ணிக்கையிலான நிபுணத்துவ உறுப்பினர்களும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இருப்பினும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (NGT) நிபுணர் பணியிடங்கள் அரிதாகவே நிரப்பப்படுவதால், சட்டம் எதிர்பார்த்த தொழில்நுட்ப நிபுணத்துவம் இல்லாமலேயே அதன் அமர்வுகள் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இத்தீர்ப்பாயத்தின் பெரும்பாலான நிபுணர்கள் இந்திய வனப்பாதுகாப்பு பணியிலிருந்து (Indian Forest Service (IFS)) வந்தவர்களாவர் முன்னாள் நிர்வாகிகளின் அனுபவம் பயனுள்ளதாக இருந்தாலும், இன்றைய சிக்கலான சுற்றுச்சூழல் சிக்கல்களைத் தீர்க்க விஞ்ஞானிகள், பொருளாதார வல்லுநர்கள், பொறியாளர்கள், நகரத் திட்டமிடுபவர்கள் மற்றும் சட்ட அறிஞர்களின் பங்களிப்பும் மிக அவசியமாகும். இத்தகைய பல்வகைப்பட்ட நிபுணத்துவக் குறைபாடு, தீர்ப்புகள் சீரற்று வழங்கப்படுவதற்கும், அறிவியல்ரீதியான வாதங்களைச் சுதந்திரமாக ஆய்வு செய்யும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) திறன் குறித்து சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 


பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழ்நிலை நிர்வாகத்தை முன்பைவிட மிகவும் சிக்கலானதாக மாற்றியுள்ளது. இன்றைய சூழலில், ஒரு திறமையான கண்காணிப்பு அமைப்பு என்பது அபாயங்களைக் துல்லியமாகக் கணிப்பதிலும், அதற்கு ஏற்ற தகவமைப்புத் திட்டங்களைத் தீட்டுவதிலும் திறன் கொண்டதாக இருக்க  வேண்டும். எனவே, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தொழில்நுட்பத் திறனை வலுப்படுத்துவது என்பது வெறும் காலிப் பணியிடங்களை நிரப்புவதுடன் முடிந்துவிடாது என்றும் அதற்குப் பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பும் அவசியம் என்கின்றனர். இந்த நாளிதழின் புலனாய்வு அறிக்கை, இக்குறைகளை நிவர்த்திசெய்து தீர்ப்பாயத்தைச் சீரமைப்பதற்கான ஒரு விழிப்புணர்வாக அமைய வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Original article : Mind the expertise gap in NGT.

Share:

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் முன்னிலையில் இருந்தாலும், தற்போது புதிய வகை சவால்களை எதிர்கொண்டு வருகிறது. -ரம்யா கண்ணன்

 தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை அடைந்துள்ள வெற்றிகளுக்கான முக்கிய காரணம், அதன் வலுவான பொது சுகாதாரக் கட்டமைப்பாகும். அதாவது, மாநிலம் முழுவதும் பரவலாகவும் நேர்த்தியாகவும் கட்டமைக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் ஒருங்கிணைந்த வலைப்பின்னலே இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.


வரலாற்றுரீதியாகவும், நடைமுறை அனுபவங்களின் அடிப்படையிலும் இந்தியாவின் சுகாதாரத் துறையில் மிகச்சிறந்த செயல்பாட்டைக் கொண்டுள்ள மாநிலங்களில் தமிழகம் ஒன்றாகத் திகழ்கிறது. குறிப்பாக வளர்ச்சி தரவரிசையில் கேரளாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மக்களின் பணம் செலுத்தும் திறனைப் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் தரமான மற்றும் மேம்பட்ட சிகிச்சைகளை வழங்கும் வலுவான பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளும் தமிழ்நாட்டில்  உள்ளது. இதனுடன், பல்வேறு தரம் மற்றும் கட்டண முறைகளில் செயல்படும் மிகப்பெரிய தனியார் மருத்துவக் கட்டமைப்பும் இணைந்து செயல்படுவதால், தமிழகத்தின் சுகாதாரக் குறியீடுகள் தேசிய சராசரியைவிடப் பல மடங்கு மேம்பட்டும், பல நேரங்களில் அதைவிட மிக உயர்வாகவும் காணப்படுகின்றன.


இந்தச் சுகாதாரத் தரவுகள் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பின்படி (Health Management Information System (HMIS)), தமிழ்நாட்டின் குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate (IMR)) 2020-ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 13-ஆக இருந்தது, 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 8.2-ஆகக் குறைந்துள்ளது. தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-5 (National Family Health Survey-5 - NFHS-5) தரவுகளின்படி, ஒரு ஆண்டில் 1,000 பேருக்கு நிகழும் நேரடிப் பிறப்புகளின் எண்ணிக்கையைக் குறிக்கக்கூடிய மாநிலத்தின் தோராயமான பிறப்பு விகிதம் (Crude Birth Rate) 14.2 ஆகும். இது தேசிய அளவிலான 19.7-ஐ விடக் குறைவாகும். அத்துடன், மக்கள்தொகையைப் பராமரிக்கத் தேவையான 2.1 என்ற மாற்று நிலையைவிட மிகக் குறைவாக, தமிழ்நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate) 1.4–1.5 ஆக உள்ளது. இவை அனைத்தும் தமிழ்நாடு மக்கள் தொகை மாற்றத்தின் தொடக்க நிலையில் இருக்கும் ஒரு முதிர்ந்த சமூகம் என்பதைக் காட்டினாலும், வருங்காலத்தில் இது சில சவால்களை உருவாக்கக்கூடும் என்கின்றனர். மேலும், தேசிய அளவிலான 94.5% என்ற விகிதத்துடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் 100% பிரசவங்கள் மருத்துவமனைகளிலேயே நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


2021–2023-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மகப்பேறு இறப்பு விகிதம் (Maternal Mortality Rate (MMR)) குறித்த சிறப்பு அறிக்கையின்படி, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் (தலா 30 இறப்புகள்) ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக, 1,00,000 பிறப்புகளுக்கு 35 மகப்பேறு இறப்புகள் என்ற கணக்கில் தமிழ்நாடு தற்போது இரண்டாவது மிகக்குறைந்த இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. தேசிய குடும்பநல ஆய்வின் (National Family Health Survey (NFHS-5)) தரவுகளின்படி, தமிழ்நாட்டின் பிறந்த குழந்தை இறப்பு விகிதமானது (Neonatal Mortality Rate) 2005-ஆம் ஆண்டில் 26.2-ஆக இருந்து, 2018-ஆம் ஆண்டில் 10-ஆகக் குறைந்துள்ளது. அதேபோல், கருவிலேயே இறந்து பிறக்கும் குழந்தைகளின் விகிதமும் (Stillbirth rate) 2018-ஆம் ஆண்டில் 4-ஆகக் குறைந்து நாட்டின் மிகக்குறைந்த விகிதங்களில் ஒன்றாக உள்ளது. மேலும், டிப்தீரியா (தொண்டை அடைப்பான்), டெட்டனஸ் (ரணஜன்னி), மற்றும் பெர்டுசிஸ் (கக்குவான் இருமல்) ஆகியவற்றுக்கான தடுப்பூசி, போலியோ மற்றும் காசநோய்க்கான (Bacillus Calmette-Guérin (BCG)) போன்ற முக்கிய தடுப்பூசி செலுத்துதலில் தமிழ்நாடு தொடர்ந்து 90% முதல் 95% வரை உயர் இலக்கை அடைந்து சாதனை படைத்து வருகிறது. இதுதவிர, 2008-ஆம் ஆண்டு முதல் உடல் உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சையிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது.


தாய் மற்றும் சேய் நலத்துறையில் (Maternal and Child Health (MCH)), தமிழ்நாடு தற்போது ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது என்பதை தரவுகள் மிகத்தெளிவாக உணர்த்துகின்றன; இந்த மகத்தான சாதனை எவ்வாறு சாத்தியமானது?




பொது சுகாதாரத்தில் கவனம் செலுத்துதல்


தமிழகத்தின் சுகாதாரத் துறையின் வெற்றிக்கு முக்கியக் காரணம், மாநிலம் முழுவதும் பரவியுள்ள வலிமையான பொது சுகாதார அமைப்பாகும். இது ஆரம்ப சுகாதார நிலையங்களின் (PHC) விரிவான வலையமைப்பைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பிற்குத் தாராளமாகப் பங்காற்றும் சமூகச் சுகாதாரப் பணியாளர்கள், தாங்கள் பணியாற்றும் பகுதிகளில் முதல்நிலை சிகிச்சை அளித்தல், நோய்த்தடுப்பு ஊசிகளை உறுதி செய்தல் மற்றும் நோய்த் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற முக்கியப் பணிகளைச் செய்கின்றனர். இந்த முறையானது, மாநிலத்தின் பொதுச் சுகாதாரத் இயக்குநரகத்தின்கீழ் (Directorate of Public Health (DPH)) இயங்கும் பயிற்சி பெற்ற நிபுணர்களைக் கொண்ட ஒரு பிரத்யேக பொதுச் சுகாதாரப் பிரிவால் மேலும் வலுப்படுத்தப்படுகிறது. அடிமட்ட அளவிலான இந்த வலையமைப்பு, தாலுகா மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டு, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை உயர்தர சிகிச்சை சேவைகளை மக்களுக்கு வழங்குகிறது.


1939-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பொது சுகாதாரச் சட்டம் (Public Health Act (PHA)) என்பது ஒட்டுமொத்த பொது சுகாதாரக் கட்டமைப்பும் உருவாக்கப்பட்டுள்ள ஒரு வலுவான அடித்தளமாகும் என்று 'உடல்நல உரிமை ஆதாரக் கூட்டமைப்பு' (Right to Health Resources Collective) இணையதள உரையாடலில் பொது சுகாதார நிபுணர் டி. சுந்தரராமன் தெரிவித்துள்ளார். இந்தச் சட்டம் தொடக்கத்தில் தற்போதைய தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கேரளாவின் மலபார் பகுதி உள்ளிட்ட ஒட்டுமொத்த மதராஸ் மாகாணத்தையும்  உள்ளடக்கியதாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சுதந்திரத்திற்குப் பிறகு, இது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டமாக (Tamil Nadu Public Health Act (TNPHA)) தொடர்ந்து நீடித்தது என்றும் இந்தியாவில் தற்சமயம் ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் மட்டுமே இத்தகைய பிரத்யேக பொது சுகாதாரச் சட்டத்தைக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அவை அனைத்துமே தமிழ்நாடு மாதிரியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவைதான் என்று பேராசிரியர் சுந்தரராமன் தெரிவித்துள்ளார்.


பொது சுகாதாரச் சட்டம் என்பது ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் அடிப்படை உரிமைகளை அடைவதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும். இருப்பினும், இது முழுமையாகச் செயல்பட வேண்டுமானால், பொதுமக்களுக்கான தகவல் அறியும் உரிமை மற்றும் குறைதீர்க்கும் அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று பேராசிரியர் சுந்தரராமன் தெரிவித்தார். இது குறித்து விரிவாக விளக்கிய ஓய்வுபெற்ற பொது சுகாதாரத் துணை இயக்குனர் கே. மதிவாணன், இந்தச் சட்டம் முக்கியமாகத் தூய்மை மற்றும் நோய்த் தடுப்பு ஆகிய இரண்டு துறைகளை உள்ளடக்கியது என்றும், அதனுடன் கூடுதல் கவனமாகத் தாய்-சேய் நலன் மேம்பாட்டிலும் கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார். 


ஆர். பார்த்தசாரதி மற்றும் எஸ்.பி. சின்ஹா ஆகியோர் 2016-ஆம் ஆண்டில் இந்திய சமூக மருத்துவ இதழில் (Indian Journal of Community Medicine) எழுதிய “சிறந்த சுகாதார வழங்கல் முறையை நோக்கி: தமிழ்நாடு மாதிரி” என்ற கட்டுரையில், தமிழ்நாடு 1980-களுக்குப் பிறகே உண்மையான முற்போக்கான பாதையில் பயணிக்கத் தொடங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. 1980-களின் இறுதியிலும் 1990-களிலும், மாநிலத்தின் சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, 5-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்நோக்கு பணியாளர்கள் திட்டத்தை தமிழக அரசு தீவிரமாகச் செயல்படுத்தியது. இத்திட்டம் ஒவ்வொரு 5,000 கிராமப்புற மக்களுக்கும் ஒரு பல்நோக்கு சுகாதாரப் பணியாளரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. தமிழ்நாட்டில் இப்பணியாளர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் (Village Health Nurses (VHNs)) என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் முக்கியப் பணி, வீடுகளுக்குத் தவறாமல் சென்று மகப்பேறு மற்றும் குழந்தை நலச் சேவைகளை வழங்குவதும், மகப்பேறு கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி குறித்த ஆலோசனைகளை வழங்குவதும் ஆகும். மேலும், தங்கள் பகுதிகளில் உள்ள அனைத்து கர்ப்பிணிப் பெண்களையும் பதிவு செய்து கண்காணிப்பதோடு, அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுடன் இணைந்து இவர்கள் பணியாற்றினர். ஆயிரக்கணக்கான கிராம சுகாதார செவிலியர்கள் (VHNs) பயிற்சி அளிக்கப்பட்டு கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்தப்பட்டனர். இவர்களின் அர்ப்பணிப்புமிக்க செயல்பாட்டினால் பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய பராமரிப்பு, மருத்துவமனை பிரசவங்கள் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த, தடுப்பூசியுடன் கூடிய வலுவான தாய்-சேய் நலத் திட்டம் எவ்வளவு அவசியம் என்பதை தெளிவுபடுத்துகிறது.


டிஜிட்டல் அமைப்புகள் மற்றும் கண்காணிப்பு


தமிழ்நாட்டில் ஏற்கனவே பொது சுகாதாரச் சட்டத்தின்கீழ் பல அடுக்கு கண்காணிப்பு முறை நடைமுறையில் இருந்தபோதிலும், 2004-ஆம் ஆண்டு உலக வங்கியின் ஆதரவுடன் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தை (Integrated Disease Surveillance Programme (IDSP)) ஏற்றுக்கொண்டதன் மூலம் மாநிலம் தனது கண்காணிப்பு அமைப்பை மேலும் வலுப்படுத்தியது. தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டத்துடன் (TNHSP) இணைந்து செயல்படுத்தப்பட்ட இந்த முயற்சி, டிஜிட்டல் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு (Health Management Information System (HMIS)) மற்றும் இ-ஹெல்த் (e-health) மீதான வளர்ந்துவரும் நம்பிக்கையை வெளிப்படுத்தியதோடு, கொள்ளை நோய்களைக் கண்காணிப்பதற்கான ஒரு ஒருங்கிணைந்த அமைப்பை நோக்கிய மாற்றத்தையும் குறித்தது. கடந்த இருபது ஆண்டுகளாக, இந்த அமைப்பு புதிய தொற்றுநோய்களையும், நோய்ப் பரவலின் ஆரம்ப அறிகுறிகளையும் கண்டறிந்து, மேற்கொண்டு பரவாமல் தடுக்க சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க உதவும் ஒரு முன்னணி பாதுகாப்பு அரணாகச் செயல்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு தொலைதூர மருத்துவச் சேவையை முன்கூட்டியே நடைமுறைப்படுத்திய மாநிலங்களில் ஒன்றாகும். நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் கிராமப்புறங்களுக்குச் சிறப்பு மருத்துவச் சிகிச்சைகளைக் கொண்டு சென்றதோடு, நகர்ப்புற நிபுணர்கள் கிராமப்புற நோயாளிகளுக்குத் திரையின் வழியே ஆலோசனை வழங்கவும் இது வழிவகை செய்தது. இன்று, தமிழ்நாட்டின் இந்த பொது சுகாதார மாதிரி, மற்ற பல மாநிலங்கள் பின்பற்ற முயற்சிக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.


மையப்படுத்தப்பட்ட மருந்து கொள்முதல்


தமிழ்நாட்டின் மேம்பட்ட சுகாதாரக் கட்டமைப்பிற்கு மற்றொரு வலுவான சான்று, தரமான மருந்துகளைக் கொள்முதல் செய்து விநியோகிப்பதில் மாநிலம் கொண்டுள்ள நீண்டகால அர்ப்பணிப்பாகும். அரசு சுகாதார நிலையங்கள் அனைத்திற்கும் கட்டுப்படியாகக்கூடிய விலையில் தரமான மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் கிடைப்பதை முறைப்படுத்த, 1995-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (Tamil Nadu Medical Services Corporation (TNMSC)) இயங்கி வருகிறது. தரமான மருத்துவப் பொருட்கள் அனைத்து நிறுவனங்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்யவும், செலவுகளைக் குறைக்கவும், செயற்கையான மருந்துத் தட்டுப்பாடுகளைத் தவிர்க்கவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. குறிப்பாக, 2023-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மத்திய காசநோய் பிரிவு மருந்துகளை வழங்கத் தவறியதால் நாடு முழுவதும் காசநோய் (TB) மற்றும் மருந்துகளுக்குக் கட்டுப்படாத காசநோய்க்கான (Drug-resistant TB) முக்கிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) விரைவாகச் செயல்பட்டு உள்நாட்டிலேயே மருந்துகளைக் கொள்முதல் செய்தது; இதன் மூலம் மற்ற மாநிலங்கள் எதிர்கொண்ட கடுமையான சூழல் தமிழ்நாட்டில் தவிர்க்கப்பட்டது.


தொற்று அல்லாத நோய்கள்


சமீபத்திய ஆண்டுகளில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் போன்ற தொற்றா நோய்கள் (Non-Communicable Diseases (NCDs)) அதிகரித்து வருவதாலும், அவற்றால் ஏற்படும் இறப்புகள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், ஒரு முறையான கட்டமைக்கப்பட்ட தீர்வின் அவசியத்தை தமிழக அரசு உணர்ந்துள்ளது. இதற்காக 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின்கீழ், பயிற்சி பெற்ற மருத்துவக் குழுக்கள் நேரடியாக வீடுகளுக்கேச் சென்று ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைப் பரிசோதிப்பதுடன், குறிப்பிட்ட வயதினருக்குப் புற்றுநோய் பரிசோதனைகளையும் மேற்கொள்கின்றனர். மேலும், நடமாட முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு வலி நிவாரணச் சிகிச்சை, பிசியோதெரபி மற்றும் மருந்துப் பொருட்களை வீட்டிலேயே வழங்குகின்றனர். டிஜிட்டல் முறையிலான 'மக்கள் நல்வாழ்வுப் பதிவேட்டுடன்' (Population Health Registry) இணைக்கப்பட்டுள்ள இந்த இல்லம் தேடி வரும் மருத்துவ முறை, நோய்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம், மருத்துவமனைகளின் சுமையைக் குறைப்பதோடு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் தீவிரப் பாதிப்புகளையும் தடுக்கும் நோக்கத்தில் செயல்படுத்தப்படுகிறது. 




நிதி மேலாண்மை முறை


தமிழகத்தின் சுகாதாரச் சேவைகள் மற்றும் அவற்றிற்கான நிதி உதவி குறித்துப் பேசுவது இந்தச் சூழலில் மிகவும் அவசியமானது. இதன் ஒரு முக்கியப் பகுதியாக, 2000-ஆம் ஆண்டில் 'கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' எனத் தொடங்கப்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (Chief Minister’s Comprehensive Health Insurance Scheme (CMCHIS)) விளங்குகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடுமையான நோய்களுக்கு ரூ. 1 லட்சம் வரையிலான இலவச சிகிச்சையை வழங்குவதே இதன் தொடக்ககால நோக்கமாக இருந்தது. இன்று, இத்திட்டம் தேசிய காப்பீட்டுத் திட்டங்களுடன் இணைக்கப்பட்டு, முன்பைவிட மிகவும் மேம்பட்ட ஒரு திட்டமாக உருவெடுத்துள்ளது. இதில் பல்வேறு மருத்துவ முறைகள், பரிசோதனைகள், புற்றுநோய் சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கான வாழ்நாள் நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான செலவுகள் எனப் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் பல குடும்பங்களுக்கு, சாதாரண நிலையில் கட்டுப்படியாகாத அறுவை சிகிச்சைகளையும் மருத்துவ வசதிகளையும் பெறுவதற்கு இந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட (CMCHIS) அட்டை பெரும் உதவியாக உள்ளது. இருப்பினும், தனியார் மருத்துவமனைகள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் சிகிச்சைக்கான தொகுப்பு கட்டணங்கள் குறித்துப் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். எனவே, அரசு இத்திட்டத்தின்மீது தற்போது செலுத்திவரும் கவனத்தைவிடக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.


முதல்வர் மருந்தகம் (Muthalvar Marunthagam) என்பது மானிய விலையில் மருந்துகளை வழங்கும் ஒரு மருந்தகக் கூட்டமைப்பாகும். சமீபத்திய ஆய்வுகளின்படி, அனைத்து வருமானப் பிரிவினரும் இதனைச் சிறப்பாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகள், மத்திய அரசின் ஜன் அவ்ஷதி (Jan Aushadhi) மருந்தகங்களைவிடக் குறைவான விலையில் கிடைப்பதாகக் கூறப்படுகிறது, இருப்பினும் ஜன் அவ்ஷதி கடைகளில் அதிகப்படியான மருந்து வகைகள் கிடைக்கின்றன. இந்தத் திட்டம், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (Tamil Nadu Medical Services Corporation (TNMSC)) மற்றும் தனியார் மருந்தகங்கள் இணைந்து செயல்படும் ஒரு பொது-தனியார் கூட்டாண்மை (public–private partnership (PPP)) முறையில் இயங்குகிறது. அதேபோல, தமிழக அரசின் இலவசச் சேவையான 108 அவசர ஊர்தி சேவை, தற்பொழுது பெரும்பாலான மக்களின் முதல் தேர்வாக மாறியுள்ளது. இந்த மருத்துவ வசதியானது மாநிலம் முழுவதும் பரவலாகக் கிடைப்பதுடன், அவசர மருத்துவக் காலங்களில் விரைவான சிகிச்சையைப் பெறவும் வழிவகுக்கிறது.


நலன் மற்றும் நல்வாழ்வு


தமிழ்நாட்டின் சுகாதாரக் குறியீடுகள் மேம்பட்டதற்கு வெறும் மருத்துவத் திட்டங்கள் மட்டுமே காரணமல்ல என்றும் சமூக நலத்திட்டங்கள் மூலம் ஒரு சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற திராவிட இயக்க அர்ப்பணிப்பும் மிக முக்கியப் பங்கு வகித்ததாகவும் கூறப்படுகிறது. விமர்சகர்கள் பெரும்பாலும் இத்தகைய நலத்திட்டங்களை வெறும் கவர்ச்சிகரமான "பண உதவி" திட்டங்கள் என்று ஒதுக்கித் தள்ளினாலும், உண்மையில் இவை தனிநபர்களுக்குப் பெரும் பலனைத் தந்து நீண்டகால நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு ஒரு முக்கிய உதாரணம், காமராஜரால் தொடங்கப்பட்டு, பின்னர் எம். ஜி. இராமச்சந்திரன் மற்றும் ஜெ. ஜெயலலிதா உள்ளிட்ட பல முதலமைச்சர்களால் விரிவுபடுத்தி முன்னுரிமை அளிக்கப்பட்ட மதிய உணவுத் திட்டமாகும். 2022-ஆம் ஆண்டில், மு. க. ஸ்டாலின் அவர்கள் 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை' அறிமுகப்படுத்தி, குழந்தைப் பருவ வளர்ச்சியில் அடுத்தகட்ட முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். மற்றொரு முக்கியமான திட்டம் 'முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம்' (Muthulakshmi Reddy Maternity Assistance Scheme (MRMBS)) ஆகும். இத்திட்டத்தின்கீழ் பொருளாதாரத்தில் நலிவடைந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு 18,000 ரூபாய் தவணை முறையில் வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவியானது முறையான பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனைகள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடுதல் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், 'குழந்தை திருமணத் தடுப்புத் திட்டம்' (Child Marriage Prevention Programme (CMPP)) வெற்றிகரமாகச் செயல்படுவதால், இளம் பெண்களுக்கு நேரிடக்கூடிய கட்டாயத் திருமணங்கள் தடுக்கப்பட்டு, அவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டின் சுகாதார முன்னேற்றங்களில் சிறந்த அரசியல் அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் தனித்துக் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று எனவும் தமிழ்நாட்டைச் சிறந்த முறையில் வழிநடத்திய அந்த வலுவான அரசியல் உறுதி மட்டும் இல்லையென்றால், இன்று மாநிலம் அடைந்துள்ள இத்தகைய சிறப்பான சுகாதார விளைவுகளைப் பெற்றிருக்கவோ அல்லது அவற்றைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளவோ முடிந்திருக்காது என்றும் பார்த்தசாரதி மற்றும் சின்ஹா ஆகியோர் தெரிவித்துள்ளனர். 


வளர்ந்துவரும் தனியார் துறை பராமரிப்புச் சேவைகள் 


தனியார் சுகாதாரத்துறையின் வளர்ச்சியானது சில வழிகளில் அரசால் ஊக்குவிக்கப்பட்டது. இதற்கு ஒரு முக்கிய உதாரணமாக, நாட்டின் முதல் பெருநிறுவன மருத்துவமனையான அப்பல்லோ மருத்துவமனை (Apollo Hospitals) திகழ்ந்தது. 1990-களின் தொடக்கத்தில் ஏற்பட்ட பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு, பல தனியார் நிறுவனங்கள் மருத்துவத் துறையில் தடம் பதித்தன. காலப்போக்கில், மேம்பட்ட நோய் கண்டறியும் வசதிகள், நவீன உபகரணங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் சிறந்த மருத்துவ நிபுணர்களைக் கொண்ட உயர்தர தனியார் மருத்துவமனைகள் நிறுவப்பட்டன. இது தமிழகத்திற்குப் பெரும் நன்மைகளைத் தந்ததுடன், சென்னையை இந்தியாவின் மருத்துவ சுற்றுலாத் தலைநகராக (Medical Tourism Capital of India) மாற்றவும் உறுதுணையாக இருந்தது என்கின்றனர்.


தனியார்துறை மருத்துவமனைகளின் வருகையால் சேவைகள் மேம்பட்டாலும், இதில் அதிக செலவு என்ற ஒரு பின்னடைவு உள்ளது. தனியார் துறை சுகாதாரப் பராமரிப்பு இயல்பாகவே அதிக செலவுமிக்கது. தற்போது மருத்துவச் சேவைகள் முன்னெப்போதையும் விட அதிகமாகவும், 24 மணி நேரமும் கிடைக்கின்ற போதிலும், மக்கள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து செலவு செய்யும் நிலை பெருமளவில் அதிகரித்துள்ளது. நாட்டில் ஆயுள் காப்பீடு (Life Insurance) பரவலாக அறியப்பட்டிருப்பதைப் போல, மருத்துவக் காப்பீடு இன்னும் மக்களிடையே முழுமையான வரவேற்பைப் பெறவில்லை. ஒவ்வொரு தனிநபரும் மருத்துவ அவசர காலங்களுக்காகக் காப்பீடு செய்திருப்பதை உறுதிசெய்ய அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதே நேரத்தில், காப்பீட்டுத் திட்டங்கள் அனைவரும் ஏற்கும் வகையில் மலிவான விலையில் கிடைப்பதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. 



எதிர்கால சவால்கள்


இன்று சுகாதாரத் துறையில் தமிழ்நாடு சந்தித்து வரும் கடுமையான சிக்கல்களில் ஒன்று, அதன் சுகாதாரச் சேவைகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையாகும். கடந்த சில ஆண்டுகளில், மாநிலத்தின் சுகாதாரக் உள்கட்டமைப்பு கணிசமாக விரிவடைந்து, 2,336 ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHC), 8,713 துணை சுகாதார நிலையங்கள் (Health Sub-Centres (HSC)), 372 அரசு மருத்துவமனைகள் மற்றும் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 11,000-க்கும் மேற்பட்ட அரசு சுகாதார வசதிகளைக் கொண்டுள்ளது. பொதுமக்கள் எளிதாக மருத்துவ வசதிகளைப் பெறும் வகையில் புதிய பன்நோக்கு மற்றும் சிறப்பு மருத்துவமனைகளும், பல சுகாதாரத் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், உள்கட்டமைப்பை மேம்படுத்திய அதே வேகத்தில் புதிய பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் அரசு கவனம் செலுத்தியதா என்ற கேள்வி எழுகிறது. காலிப் பணியிடங்களே இல்லாத நிலையை (Zero Vacancies) உருவாக்குவதே நோக்கம் என்று தற்போதைய சுகாதார அமைச்சகம் கூறினாலும், தற்போதைய நிலைமை அதற்கு நேர்மாறாகவே உள்ளது. சிறந்த ஊதியம் மற்றும் முறையான வேலை நேரத்திற்கான கோரிக்கைகள் ஒருபுறம் இருக்க, நிலவும் பணியாளர் பற்றாக்குறையானது மாநிலத்தின் சுகாதார அமைப்பின் உறுதித்தன்மைக்கே ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.


மாநில திட்டக் குழுவின் (State Planning Commission) உறுப்பினரான ஜே. அமலோற்பவநாதன், நடைமுறையில் உள்ள பல்வேறு திட்டங்களுக்கு இடையிலும் நான்கு முக்கியமான மற்றும் அவசரமான பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, வளரிளம் பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களிடையே தொடர்ந்து காணப்படும் இரத்த சோகை (Anaemia) பாதிப்பு, மற்றும் குழந்தைகளிடையே நிலவும் குள்ளத்தன்மை (Stunting) மற்றும் உடல் மெலிவு (Wasting) ஆகிய சத்துணவு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். 


தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-5 (National Family Health Survey-5 (NFHS-5)) தரவுகளின்படி, தமிழ்நாட்டில் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையில் மாறுபட்ட போக்குகள் காணப்படுகின்றன. குழந்தைகளின் வளர்ச்சி குன்றுதல் (Stunting) குறைந்துவரும் வேளையில், உடல் மெலிவு (Wasting) மற்றும் தீவிர உடல் மெலிவு போன்றவை இன்னும் அதிக அளவிலேயே நீடிக்கின்றன. குறைந்த சமூக-பொருளாதார நிலை, பாலினம், தாய்ப்பால் புகட்டுவதில் ஏற்படும் தாமதம் மற்றும் பெற்றோரின் கல்வி அறிவு போன்ற காரணிகள் இதற்கு முக்கியக் காரணமாக அமைகின்றன. 2019 மற்றும் 2021 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ஐந்து வயதிற்குட்பட்ட 7,60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உடல் மெலிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் அதிக பாதிப்புள்ள பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.


மருத்துவர் அமலோற்பவநாதன், பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கம் மற்றும் பதின்ம வயது கர்ப்பங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநிலத்தின் சுகாதார வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைக்க வேண்டுமானால், அரசு இந்தத் தீவிரமான பிரச்சினைகளை உடனடியாகக் கண்டறிந்து அதற்குரிய தீர்வுகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


தொற்றுநோயல்லாத நோய்கள், சமூக ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கக்கூடும் என்பதால், அவை வருங்காலத்தில் மாநிலத்திற்குப் பெரும் சவாலாக அமையும் என்று எச்சரிக்கின்றனர். இதனை எதிர்கொள்ளச் சிறந்த வழி தடுப்பு முறைகளில் தீவிர கவனம் செலுத்துவதாகும். அதாவது, கருவிலேயே தொடங்கும் 'தொடக்கநிலைத் தடுப்பு' (Primordial) மற்றும் நோய் வராமல் தடுக்கும் 'முதன்மை நிலைத் தடுப்பு' (Primary) முறைகளில் தொடங்கி, நோயைக் கண்டறிந்து குணப்படுத்தும் 'இரண்டாம் நிலைத் தடுப்பு' (Secondary) வரை செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. மேலும், ஏற்கனவே பாதிப்பு உள்ளவர்கள் தீவிரமான சிக்கல்களுக்கு ஆளாகாமல் தடுக்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதும் அவசியமாகிறது. 


தமிழ்நாடு தனது மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப (Demographic changes), புதிய தொழில் திறன்களை வளர்ப்பதன் மூலமும், முதியோர்களின் தேவைகளில் கவனம் செலுத்துவதன் மூலமும் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது தமிழகம் இளைஞர் சக்தியால் பயனடைந்தாலும், எதிர்காலத்தில் முதியோர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். எனவே, முதியோர்களுக்குத் தேவையான உடல், மன மற்றும் உணர்வுப்பூர்வமான பராமரிப்பை வழங்கும் வகையில் சுகாதாரத் திட்டங்களை அரசு வடிவமைக்க வேண்டும். அதேவேளையில், அவர்கள் பொருளாதாரரீதியாகச் சுதந்திரமாக வாழ்வதற்கு உதவும் வகையில் பிரத்யேகத் திட்டங்களையும் உருவாக்கிச் செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது.


தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையிலான இடைவெளி மற்ற மாநிலங்களைவிடக் குறைவாக இருந்தபோதிலும், மாநிலம் முழுவதும் சுகாதாரச் சேவைகள் கிடைப்பதை தமிழ்நாடு அரசு மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். நகர்ப்புறங்களில் உள்ள உயர்நிலைச் சிகிச்சை மையங்கள் மக்கள் கூட்டத்தால் நெரிசலாகக் காணப்படுகின்றன; அதே வேளையில், பல புறநகர் அல்லது ஆரம்பச் சுகாதார மையங்களில் நோயறிதல் கருவிகள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் போதிய அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளனர்.


மேலும், தற்போது நடைபெற்று வரும் விவாதங்கள் இதற்கு முன்பு கவனிக்கப்படாமல் விடப்பட்ட பல முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளன. குறிப்பாக, சுகாதாரத்துறையில் முடிவெடுக்கும் அதிகாரம் என்பது முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது ஒரே இடத்தில் அல்லது மையப்படுத்தப்பட்ட அமைப்பின்கீழ் கொண்டு வரப்படுகிறதா? அவ்வாறு அதிகாரம் மையப்படுத்தப்பட்டால், ஒரு மாநிலத்தில் அவசர கால நெருக்கடிகள் ஏற்படும்போது, அவை தீவிரமடைவதற்கு முன்பே அந்த மாநில அரசு விரைந்து செயல்பட்டு அதற்கு எதிர்வினையாற்றும் திறனை இது குறைத்துவிடுமா? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. 


தமிழ்நாட்டின் தற்போதைய சவாலானது, வலுவான ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறந்த தாய்-சேய் நலம், புதுமையான மருத்துவச் சேவைகள் மற்றும் சமூக அக்கறையுள்ள வளர்ச்சி ஆகியவற்றில் தான் அடைந்துள்ள முன்னேற்றத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதாகும். அதே வேளையில், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சேவையின் தரத்தில் அதிக முதலீடு செய்வதுடன், பொறுப்புணர்வையும் உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு குடிமகனும் எளிதில் அணுகக்கூடிய வகையில் இந்தச் சுகாதாரக் கட்டமைப்பைத் துரிதமாகச் செயல்படுத்துவதே மாநிலத்தின் முதன்மை நோக்கமாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். 


இந்தக் கட்டுரை தி இந்து மின் புத்தகத்தின் ஒரு பகுதியாகும். தமிழ்நாட்டின் முன்னேற்றம்: சமூக சமத்துவத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சி.


Original article : Ahead in health, but a new set of challenges awaits Tamil Nadu -Ramya Kannan

Share: