பிரிக்ஸ் 2026 தொலைநோக்கு : நீர் பாதுகாப்பை உறுதிசெய்யப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல். -எஸ்.கே.சர்க்கார், அஜய் மல்ஹோத்ரா, கே.கே.சர்மா

 காற்றிலிருந்து குடிநீரை உருவாக்கும் இந்தியாவின் வளிமண்டல நீர் உற்பத்தி (Atmospheric Water Generator (AWG)) தொழில்நுட்பம், குடிநீர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான ஒரு நடைமுறைத் தீர்வாகும்.


வலுவான உலகளாவிய நிச்சயமற்றத் தன்மை நிலவிய ஒரு காலகட்டத்தில், இந்தியா 2026 ஜனவரி 1 அன்று பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றது. புவிசார் அரசியல் பிளவு, பருவநிலை சீர்குலைவு, மற்றும் அத்தியாவசிய வளங்களைப் பெறுவதில் அதிகரித்துவரும் சமத்துவமின்மை ஆகியவற்றால் சர்வதேச அமைப்பு பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, உலக தென்பகுதி நாடுகளுக்கு இந்த அழுத்தங்கள் வெறும் கோட்பாட்டுரீதியானவை அல்ல. அவை அன்றாடம் தண்ணீர்ப் பற்றாக்குறை, உணவு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பின்மை, மற்றும் பருவநிலையால் ஏற்படும் இடப்பெயர்வு ஆகியவற்றின் அடிப்படையில் வெளிப்படுகின்றன.


2009-ல் நான்கு நாடுகளின் மன்றமாகத் தொடங்கி, 2010-ல் தென்னாப்பிரிக்காவையும் உள்ளடக்கி விரிவடைந்த பிரிக்ஸ் அமைப்பு, உலகப் பொருளாதார நிர்வாகத்தில் தங்களின் குரலையும் செயல்திறனையும் அதிகரிக்க விரும்பும் வளரும் நாடுகளுக்கான ஒரு முக்கியத் தளமாகத் தொடர்ந்து பரிணமித்து வருகிறது.


சமீபத்திய விரிவாக்கத்துடன், பிரிக்ஸ் அமைப்பு இப்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா ஆகிய 10 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து உலகின் மக்கள்தொகையில் ஏறக்குறைய 45 சதவீதத்தையும், வாங்கும் சக்தி சமநிலை (purchasing power parity) அடிப்படையில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கையும், பூமியின் நிலப்பரப்பில் சுமார் 35 சதவீதத்தையும் கொண்டுள்ளன. இந்த அளவு பிரிக்ஸ் அமைப்புக்கு பொருளாதார முக்கியத்துவத்தை மட்டுமல்லாமல், வளர்ச்சிக்குத் தேவையான விளைவுகளை வழங்குவதற்கான பொறுப்பையும் அளிக்கிறது.


2026-ம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பிற்காக இந்தியா அறிவித்துள்ள 'மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு' (Building for Resilience, Innovation, Cooperation, and Sustainability (B.R.I.C.S.)) என்ற கருப்பொருள், இந்த எதிர்பார்ப்புகளைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. இது, வெறும் அறிவிப்பு சார்ந்த பலதரப்புவாதத்தைக் கடந்து, பல்வேறு புவியியல் பகுதிகளில் உள்ள பொதுவான சவால்களை எதிர்கொள்ளும் நடைமுறை சார்ந்த, மனிதனை மையமாகக் கொண்ட தீர்வுகளை நோக்கி நகரும் நோக்கத்தை உணர்த்துகிறது. அத்தகைய சவால்களில், நீர்ப் பிரச்சினையைவிட உலகளாவிய அல்லது அவசரமான சவால் வேறெதுவும் இல்லை.





பிரிக்ஸ் மற்றும் நீர் பற்றாக்குறை


பிரிக்ஸ் நாடுகள் அனைத்திலும் நீர் பற்றாக்குறை பல்வேறு வடிவங்களில் காணப்படுகிறது. அமேசான் படுகையில் (Amazon basin) ஏற்படும் காடழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவின் விளைவுகளை பிரேசில் எதிர்கொள்கிறது. தென்னாப்பிரிக்கா தொடர்ச்சியான வறட்சி மற்றும் நகர்ப்புற நீர் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. விவசாயம், தொழில் மற்றும் விரைவான நகரமயமாக்கல் ஆகியவற்றால் உந்தப்பட்டு, இந்தியாவும் சீனாவும் அபாயகரமான விகிதத்தில் நிலத்தடி நீர் குறைந்து வருவதைக் காண்கின்றன. ரஷ்யா, பரந்த நன்னீர் வளங்களைக் கொண்டிருந்த போதிலும், அதன் பரந்த நிலப்பரப்பு முழுவதும் பழைய உள்கட்டமைப்பு மற்றும் பருவகால நீர் கிடைப்பதில் உள்ள சிக்கல்களையும் அது எதிர்கொள்கிறது.


பிரிக்ஸ் அமைப்பின் புதிய உறுப்பு நாடுகளும் இதேபோன்ற கடுமையான அழுத்தங்களை எதிர்கொள்கின்றன. எத்தியோப்பியாவின் வளர்ச்சித் திட்டங்கள் நைல் நதிப் படுகையில் உள்ள நீர்ப் பிரச்சினைகளுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. அந்த நதியைப் பகிர்ந்து கொள்ளும் மற்ற நாடுகளுடன் அது எல்லை கடந்த நீர் தொடர்பான பதற்றங்களில் ஈடுபட்டுள்ளது. ஈரான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள், அதிகப்படியான நீர் எடுப்பு, பருவநிலை மாற்றம் மற்றும் மக்கள்தொகை அழுத்தம் ஆகியவற்றால் நன்னீர் இருப்பு குறைந்து வருவதைச் சந்தித்து வருகின்றன. தொழில்நுட்பத்தில் முன்னேறியிருந்த போதிலும், ஐக்கிய அரபு அமீரகம் உலகின் மிகவும் நீர் பற்றாக்குறை உள்ள நாடுகளில் ஒன்றாகத் தொடர்கிறது. இந்தோனேசியா, கடலோர நன்னீர் இருப்புகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கடல் மட்ட உயர்வை எதிர்கொள்கிறது.


இந்தச் சவால்கள் சூழலுக்கு ஏற்ப வேறுபட்டாலும், அவற்றுக்கிடையே ஒரு பொதுவான அம்சம் உள்ளது. அவை, காலநிலை மாற்றம் நீர்ப் பாதுகாப்பின்மையை தீவிரப்படுத்துகிறது. அதேசமயம் பாரம்பரியமான, மையப்படுத்தப்பட்ட நீர் தீர்வுகள் போதுமானதாக இல்லை என்பது மேலும் நிரூபணமாகி வருகிறது. பெரிய அணைகள், நீண்ட குழாய்கள் மற்றும் நிலத்தடி நீரைச் சார்ந்த அமைப்புகள் அதிக மூலதனம் தேவைப்படுபவையாகவும், செயல்படுத்துவதற்கு மெதுவாகவும், சில சமயங்களில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துபவையாகவும் உள்ளன. உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, பரவலாக்கப்பட்ட, தகவமைத்துக் கொள்ளக்கூடிய மற்றும் பருவநிலைக்கேற்ற தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு புதிய முன்மாதிரி தேவைப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், இந்தியா முன்னிலை வகிப்பதற்கு வலுவான வாய்ப்பு உள்ளது.


நீர் பற்றாக்குறைக்கான நடைமுறைத் தீர்வுகள்


இந்தியாவின் வளர்ச்சி மாதிரியானது சிக்கனமான புத்தாக்கத்திற்கே முக்கியத்துவம் அளித்துள்ளது. அதாவது, விரிவாக்கக்கூடிய, கட்டுப்படியாகக்கூடிய மற்றும் வளங்கள் பற்றாக்குறையுள்ள சூழல்களுக்கு ஏற்ற தீர்வுகளே ஆகும். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு மற்றும் குறைந்த செலவிலான சுகாதாரப் புத்தாக்கங்கள் ஆகியவை ஏற்கனவே இந்தியாவின் உலகளாவிய வளர்ச்சிக் கதையின் ஒரு பகுதியாகிவிட்டன. நீர் புத்தாக்கம் (Water innovation) இனி அடுத்த முக்கியக் கவனமாக மாற வேண்டும்.


அத்தகைய ஒரு தீர்வுதான் இந்தியாவில் உருவாக்கப்பட்ட வளிமண்டல நீர் உற்பத்தி (Atmospheric Water Generator (AWG)) தொழில்நுட்பம் ஆகும். வளிமண்டல நீர் உற்பத்தி (AWG) சுற்றுப்புறக் காற்றில் இருந்து ஈரப்பதத்தைப் பிரித்தெடுத்து, அதைத் தூய்மையான, கனிமங்கள் கலந்த குடிநீராக மாற்றுகின்றன. மிக முக்கியமாக, இவற்றுக்கு நிலத்தடி நீர் எடுப்பதோ, மேற்பரப்பு நீர் ஆதாரமோ, அல்லது குழாய் விநியோகமோ தேவையில்லை. இவை மின் கட்டமைப்பு மின்சாரம் அல்லது சூரிய ஆற்றலில் இயங்கக்கூடியவை என்பதால், நகர்ப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகள் ஆகிய இரண்டிற்கும் ஏற்றவையாக இருக்கின்றன.


காலநிலை மாற்றம் மழைப்பொழிவு முறைகளை மாற்றி, நீர்ப்படுகைகள் எனப்படும் நிலத்தடி நீர் இருப்புகளுக்கும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்தச் சூழ்நிலையில், காற்றிலிருந்து குடிநீரை உருவாக்கும் செயல்முறை ஏற்கனவே நடைமுறையில் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.





வளிமண்டல நீர் உற்பத்தி (AWG) தொழில்நுட்பம் பிரிக்ஸ் அமைப்புடன் ஒத்துப்போகிறது


வளிமண்டல நீர் உற்பத்தி (AWG) தொழில்நுட்பமானது, இந்தியாவின் பிரிக்ஸ் 2026 கருப்பொருள் மற்றும் தொலைநோக்குப் பார்வையின் நான்கு தூண்களுடனும் நெருக்கமாக ஒத்துப்போகிறது. அவை,


மீள்திறன் (Resilience) : பரவலாக்கப்பட்ட நீர் உற்பத்தி, எளிதில் பாதிக்கப்படக்கூடிய விநியோகச் சங்கிலிகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம் மீள்திறனை மேம்படுத்துகிறது. நீர் உற்பத்தி நிலையங்களானது வறட்சி, வெள்ளம் மற்றும் பேரிடர்களின் போது செயல்பட்டு, அவசரகாலச் சூழ்நிலைகளில் நம்பகமான குடிநீரை வழங்க முடியும். நீர் கிடைப்பது வாழ்வா சாவா என்ற விஷயமாக இருக்கக்கூடிய கிராமப்புற சுகாதார மையங்கள், பேரிடர் நிவாரண முகாம்கள், எல்லைச் சாவடிகள் மற்றும் அமைதி காக்கும் பணியிடங்களில் இவை குறிப்பாகப் பயனுள்ளதாக இருக்கின்றன.


புத்தாக்கம் (Innovation) : இந்தியாவில் உருவாக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் வளிமண்டல நீர் உற்பத்தி (AWG), உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த உள்நாட்டுப் புத்தாக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. இந்தத் தொழில்நுட்பம் ஏற்கனவே பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாட்டின் (COP28) போன்ற சர்வதேச காலநிலை மன்றங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நிலையான வளர்ச்சியை மையமாகக் கொண்ட உலகளாவிய கல்வி முயற்சிகளாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மற்றும் இந்தியத் தர நிர்ணய அமைப்புகளின் சான்றிதழ், இதன் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்துகிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் சூரிய ஆற்றலால் இயங்கும் வகைகள், இவற்றை பூஜ்ஜிய-உமிழ்வு நீர் ஆதாரங்களாக மாற்றுகின்றன. இவை தொலைதூரப் பகுதிகள், சூழலியல்ரீதியாக உணர்திறன் மிக்க பிராந்தியங்கள் மற்றும் மின்சார வசதியற்ற சமூகங்களுக்கு மிகவும் பொருத்தமானவை.


ஒத்துழைப்பு (Cooperation) : நீர் நீண்டகாலமாக ஒத்துழைப்பின் ஆதாரமாகவும், அதே சமயம் முரண்பாடுகளின் ஆதாரமாகவும் இருந்து வருகிறது. இந்தியா தனது வளர்ச்சிக் கூட்டாண்மைக் கருவித்தொகுப்பின் ஒரு பகுதியாக வளிமண்டல நீர் ஜெனரேட்டரை (AWG) நிலைநிறுத்துவதன் மூலம், பரந்த காலநிலை தழுவல் முயற்சிகளுக்குத் துணைபுரியும் ஒரு சர்ச்சையற்ற, மனிதாபிமானத் தீர்வை இந்தியாவால் வழங்க முடியும். இத்தகைய அமைப்புகள் ஏற்கனவே சர்வதேச மனிதாபிமான அமைப்புகளால் சாதகமாக மதிப்பிடப்பட்டு, ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காகவும் பரிசீலிக்கப்பட்டுள்ளன.


பிரிக்ஸ் கட்டமைப்பின்கீழ், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா முழுவதும் செயல்படுத்தப்படும் கூட்டு முன்னோடித் திட்டங்களை புதிய மேம்பாட்டு வங்கியின் ஆதரவுடன், தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு (South-South cooperation) எவ்வாறு உறுதியான பலன்களை அளிக்க முடியும் என்பதை நிரூபிக்கக்கூடும்.


நிலைத்தன்மை (Sustainability) : நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆறுகளையோ நிலத்தடி நீர் மட்டங்களையோ குறைப்பதில்லை. புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, அவை மிகக் குறைந்த சுற்றுச்சூழல் பாதிப்புடன் செயல்படுகின்றன. சூழலியல்ரீதியாக, அவை நீர் பயன்பாட்டைப் பிரித்தெடுக்கும் முறைகளிலிருந்து விலக்கி, மீளுருவாக்கத் தழுவலை நோக்கி நகர்த்துகின்றன.


பிரிக்ஸ் அமைப்பை மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் உருவாக்குதல்


இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைப் பதவி, கண்ணுக்குத் தெரியும், அளவிடக்கூடிய மற்றும் மக்களை மையமாகக் கொண்ட தீர்வுகளை முன்னிலைப்படுத்த ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது. வளிமண்டல நீர் உற்பத்தி (AWG) தொழில்நுட்பம் பெரிய அளவிலான நீர் உள்கட்டமைப்பிற்கு மாற்றாக அமையாது, அவ்வாறு செய்வதற்காக உருவாக்கப்படவில்லை. இருப்பினும், ஒரு துணைத் தீர்வாக, குறிப்பாக நெருக்கடியான அல்லது தொலைதூரச் சூழல்களில் குடிநீரைப் பெறுவதற்கு இது மிகவும் பொருந்தும். அத்தகைய இடங்களில், இது உடனடித் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். சமூகங்களுக்குப் பரவலாக்கப்பட்ட முறையில் அதிகாரம் அளிப்பதிலும் அதன் மதிப்பு அடங்கியுள்ளது.


பிரிக்ஸ் அமைப்பின் கீழ் நீர் புத்தாக்கத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது, உலகளாவிய சவால்களுக்குத் தங்களின் யதார்த்தங்களுக்கு ஏற்றவாறு தீர்வுகளை உருவாக்கும் திறன் தெற்குப் பிராந்தியத்திற்கு உண்டு என்ற ஒரு வலிமையான செய்தியை அனுப்பும். காலநிலை தாக்கங்கள் தீவிரமடைந்து, நீர்ப் பாதுகாப்பின்மை வலுவடையும் நிலையில், புத்தாக்கம் தேவையா என்பதல்ல கேள்வி. மாறாக, அதை பெரிய அளவிலும் வேகமாகவும் செயல்படுத்த முடியுமா என்பதேயாகும்.


இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவம் ஒரு சரியான தளத்தை வழங்குகிறது. காற்றில் இருந்து நீர் பெறும் தொழில்நுட்பங்கள் அத்தகைய ஒரு கருவியாக அமைகின்றன. தொலைநோக்குப் பார்வை செயலாக்கத்துடன் இணைந்தால், மக்களின் மிக அடிப்படையான தேவைகளில் ஒன்றான, மிகவும் தேவைப்படும் இடங்களில் தூய்மையான, பாதுகாப்பான நீரைப் பெறுவதை உறுதிசெய்வதற்காக, ஒத்துழைப்பு, புதுமை மற்றும் நிலைத்தன்மை ஆகியவை எவ்வாறு ஒன்றிணைய முடியும் என்பதை நிரூபித்ததற்காகவும் பிரிக்ஸ் 2026 நினைவுகூரப்படலாம்.


சர்க்கார், TERI-யின் மூத்த ஆலோசகர் மற்றும் நீர்வளம் மற்றும் பணியாளர் தொழில்நுட்பத் துறையின் முன்னாள் செயலாளர். மல்ஹோத்ரா, TERI-யின் மூத்த ஆலோசகர் மற்றும் ரஷ்யாவிற்கான முன்னாள் தூதர். சர்மா, கடற்படை வீரர், TERI-யின் அறிவுசார் கூட்டாளர் மற்றும் மைத்ரி அக்வாடெக்கின் செயல் துணைத் தலைவராகவும் (EVP) பொறுப்பு வகிக்கிறார்.     

Original article : BRICS 2026 Vision: Using innovative technology for water security. -SK Sarkar, Ajai Malhotra, KK Sharma

Share:

பிராந்திய மற்றும் உலகளாவிய சூழ்நிலைகள் இந்தியாவின் பாதுகாப்புச் செலவினங்களை எவ்வாறு பாதிக்கின்றன? -கே எம் சீத்தி

 


இந்தியாவின் பாதுகாப்பு இறக்குமதிகள் அதிகமாக இருந்தாலும், படிப்படியாக உள்நாட்டு உற்பத்தியை நோக்கி ஒரு மாற்றம் ஏற்பட்டு வருவதாக சமீபத்திய சிப்ரி தரவுகள் (SIPRI data) குறிப்பிடுகின்றன. டெல்லியின் பாதுகாப்பு வியூகம், உடனடிப் பாதுகாப்புத் தேவைகளைத் தற்சார்பு எனும் நீண்டகால இலக்குகளுடன் எவ்வாறு ஒருங்கிணைக்கிறது?


இந்தியாவின் பாதுகாப்பு உத்தியானது, உலகளாவிய மோதல்கள் மற்றும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களால் மட்டுமல்லாமல், பிராந்திய யதார்த்தங்கள் மற்றும் கட்டமைப்பு காரணிகளாலும் வடிவமைக்கப்படுகிறது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (Stockholm International Peace Research Institute (SIPRI)) சமீபத்திய தரவுகளின்படி, இந்தியா இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதியாளராக உள்ளது. இருப்பினும், படிப்படியாக உள்நாட்டு உற்பத்தியை நோக்கி மாறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்த நிலைமை இந்தியாவின் பாதுகாப்பு வியூகம் குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. மிக வேகமாக விரிவாக்கம் செய்யாமல், படைகளைத் தடுக்கும் திறனை வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளதா? பாதுகாப்பு இறக்குமதிகள் மீதான சார்பைக் குறைக்க இந்தியா எவ்வாறு திட்டமிடுகிறது?


அதிகரித்துவரும் உலகளாவிய மோதல்களின் காலகட்டத்தில் இந்தியாவின் பாதுகாப்பு உத்தி


உலகளாவிய மோதல்கள் கடுமையாக அதிகரித்துவரும் நேரத்தில் சிப்ரியின் (SIPRI) சமீபத்திய அறிக்கை வெளியாகியுள்ளது. இதில், உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நீடித்துவரும் மோதல்களும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் போட்டியும், உலகளாவிய இராணுவச் செலவினங்களை 2024-ம் ஆண்டில் சுமார் 2.7 டிரில்லியன் டாலராக உயர்த்தியுள்ளன. இது பல பத்தாண்டுகளில் இல்லாத மிக அதிகபட்ச அதிகரிப்பாகும்.


உலக வடக்குப் பகுதி மற்றும் உலகத் தெற்குப் பகுதியைச் சேர்ந்த பல நாடுகள், தங்கள் படைகளை விரிவுபடுத்தி, மேம்பட்ட ஆயுதங்களில் முதலீடு செய்து, அணு ஆயுதக் கிடங்குகளை நவீனமயமாக்கி வருகின்றன. இருப்பினும், பிராந்திய மற்றும் உலகளாவிய அழுத்தங்கள் இந்தியாவின் தேர்வுகள் மற்றும் உத்திகளைப் பாதித்தாலும், இந்தியாவின் பாதுகாப்புத் துறையும் இந்தப் பரந்த போக்கையே பிரதிபலிக்கிறது.


2020-24 காலகட்டத்தில் உலகளாவிய ஆயுத இறக்குமதியில் 8.3 சதவீதப் பங்கைக் கொண்டு, இந்தியாவை இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதியாளராக சிப்ரி (SIPRI) தரவரிசைப்படுத்தியுள்ளது. இந்தியா பாதுகாப்பிற்காக 86.1 பில்லியன் டாலர் பாதுகாப்புச் செலவினம், அதனை உலக அளவில் முதல் ஐந்து பாதுகாப்பு செலவின நாடுகளில் ஒன்றாக ஆக்குகிறது. ஆனால், அதைவிட முக்கியமாக, சீனாவின் மிகப் பெரிய செலவினத்துடன் ஒப்பிடுகையில், இது ஒரு தீவிரமான விரிவாக்கமல்ல, மாறாக ஒரு சீரான விரிவாக்கத்தையே எடுத்துக்காட்டுகிறது.


இதை ஒப்பிடுகையில், சீனா இந்தியாவின் அளவை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாக, சுமார் 314 பில்லியன் டாலர்களைச் செலவிட்டது. அதேசமயம், பாகிஸ்தான் செலவிட்ட சுமார் 10.2 பில்லியன் டாலர்கள், முழுமையான அளவில் மிகவும் குறைவாக இருந்தாலும், பிராந்திய சமநிலையைப் பொறுத்தவரை இது இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் புள்ளிவிவரங்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒரு புலப்படும் இடைவெளியையும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு கணிசமான இடைவெளியையும் காட்டுகின்றன.


விரைவான விரிவாக்கம் இல்லாமல் தடுப்பு சக்தியை வலுப்படுத்துதல்


அணு ஆயுதத் துறையில், இந்தியாவிடம் சுமார் 180 அணு ஆயுதங்கள் இருப்பதாக சிப்ரி (SIPRI) மதிப்பிடுகிறது. இந்த எண்ணிக்கை, சுமார் 170 ஆயுதங்களைக் கொண்ட பாகிஸ்தானின் எண்ணிக்கையைவிட சற்றே அதிகம். அதேநேரத்தில், சீனாவின் ஆயுதக் கிடங்கு சுமார் 600 ஆயுதங்களாக வேகமாக வளர்ந்துள்ளது. சீனாவின் இந்த விரிவாக்கம் ஆசியாவில் இராஜதந்திர அழுத்தத்தை அதிகரித்துள்ளது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்தியா தனது நம்பகமான தடுப்புச் சக்தியை, குறிப்பாக நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் வளர்ந்துவரும் கடல்சார் அணுசக்தித் திறன் மூலம் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.


பாதுகாப்புத் துறையின் நிலைமை, பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கூடிய ஒரு சீரான நவீனமயமாக்கல் உத்தியைக் காட்டுகிறது. இந்தியா தரை, வான் மற்றும் கடல் ஆகிய துறைகளில் தனது திறன்களை சீராக அதிகரித்து வருவதுடன், இணையம் மற்றும் விண்வெளித் துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. இராணுவச் செலவினங்கள் படிப்படியாக உயர்ந்திருந்தாலும், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1.9–2 சதவீதமாகவே நீடிக்கிறது. இது, கிடைக்கக்கூடிய நிதி ஆதாரங்களில் வரம்புகள் இருப்பதைக் காட்டுகிறது. முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் இறக்குமதிகள் சிறிதளவு குறைந்துள்ளதாக சிப்ரி (SIPRI) தரவுகள் வெளிப்படுத்துகின்றன. இது, இந்தியா தனது உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தியை விரிவுபடுத்த முயற்சிக்கிறது என்பதை உணர்த்துகிறது.


எனவே, இந்தியாவின் பாதுகாப்பு உத்தியானது ஒரு கடினமான சமநிலைப்படுத்தும் முயற்சியைப் பிரதிபலிக்கிறது. சீனாவின் எழுச்சி மற்றும் சீனாவுடன் பாகிஸ்தான் கொண்டுள்ள கூட்டணி ஆகியவற்றால் நிர்ணயிக்கப்பட்ட, சவாலான பாதுகாப்புச் சூழலுக்கு அது பதிலளிக்கிறது. டெல்லி, விரைவான விரிவாக்கம் இல்லாமல் தனது தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துகிறது. அது உள்நாட்டு திறனை வளர்த்துக் கொள்ளும் அதேவேளையில், முக்கிய அமைப்புகளையும் இறக்குமதி செய்கிறது.



இறக்குமதிகளைப் பன்முகப்படுத்துதல்


காலப்போக்கில் இதன் போக்கு மாறியிருந்தாலும், வெளிநாட்டு ஆயுதங்களைச் சார்ந்திருப்பது இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஒரு பெரும் சவாலாகவே நீடிக்கிறது. உள்நாட்டு உற்பத்தி விரிவடைந்து வரும் நிலையிலும், முக்கிய ஆயுதத் தளங்களுக்கு இந்தியா தொடர்ந்து இறக்குமதியையே சார்ந்துள்ளது என்று சிப்ரி (SIPRI) தரவுகள் காட்டுகின்றன.


கடந்த பத்தாண்டுகளில் விநியோக நாடுகளின் பட்டியல் மாறியுள்ளது. ரஷ்யா இந்தியாவின் மிகப்பெரிய விநியோக நாடாக நீடித்தாலும், அதன் பங்கு பல ஆண்டுகளாகக் குறைந்துள்ளது. 2010-களின் முற்பகுதியில் சுமார் 60-70 சதவீதமாக இருந்த பங்கு, 2020-24-ல் சுமார் 36-38 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதற்கிடையில், பிரான்ஸ் ஒரு முக்கிய கூட்டணி நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் தற்போது சுமார் 29 முதல் 33 சதவீதம் வரை பிரான்ஸின் பங்காக உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு இறக்குமதிகளில் அமெரிக்கா சுமார் 13 சதவீதத்தையும், இஸ்ரேல் சுமார் 9-10 சதவீதத்தையும் கொண்டுள்ளன.


இந்தியா தனது பாதுகாப்பு இறக்குமதி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்த முயன்று வருகிறது என்பதை இப்புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. ஏதேனும் ஒரே ஒரு விநியோக நாட்டினைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான முயற்சிகளை நாடு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாகப் பழைய தலைமுறை அமைப்புகள் மற்றும் ஏவுகணைத் தளங்களில், ரஷ்யா இன்றும் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பான ஒத்துழைப்பின் மூலம் பிரான்ஸ் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடல்சார் கண்காணிப்பு மற்றும் மேம்பட்ட விமானவியல் அமைப்புகள் ஆகியவற்றில் அமெரிக்கா இந்தியாவிற்குத் துணை நிற்கிறது. இஸ்ரேல் ஆளில்லா விமானங்கள் (Drones), உணர்திறன் கருவிகள் (Sensors) மற்றும் துல்லியத் தொழில்நுட்பங்களை வழங்குகிறது.


உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி


இறக்குமதிகளின் போக்கு, இந்தியாவின் முன்னுரிமைகளையும் வெளிப்படுத்துகிறது. சிப்ரி (SIPRI) தரவுகளின்படி, இறக்குமதிகளில் விமானங்கள் சுமார் 29 சதவீதமாகவும், ஏவுகணைகள் சுமார் 23 சதவீதமாகவும், கவச வாகனங்கள் சுமார் 14 சதவீதமாகவும், கடற்படைத் தளங்கள் சுமார் 13 சதவீதமாகவும் உள்ளன. இது வான்வழி ஆற்றல், துல்லியமான தாக்குதல் மற்றும் கடல்சார் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுவதை உணர்த்துகிறது.


கடந்த ஐந்தாண்டு காலத்துடன் ஒப்பிடும்போது இறக்குமதி அளவுகள் சுமார் 4-9 சதவீதம் குறைந்துள்ளன. தன்னிறைவு இந்தியா (Atmanirbharta) போன்ற கொள்கைகளின்கீழ் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியே இதற்குக் காரணம் என சிப்ரி குறிப்பிடுகிறது. அதேசமயம், இயந்திரங்கள் (engines), மேம்பட்ட மின்னணுவியல் (advanced electronics) மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் (air defence systems) போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகளில் இந்தச் சார்புநிலை தொடர்கிறது.


இந்தியாவும் பிராந்தியப் பாதுகாப்புச் சூழலைக் கண்காணித்து வருகிறது. பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதிகள் அதிகரித்துள்ளன. அதன் ஆயுதத் தேவையில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை சீனா வழங்குகிறது. பெய்ஜிங் பெருமளவில் தன்னிறைவு பெற்றிருப்பதுடன், ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் தனது இராஜதந்திர நிலையை வலுப்படுத்துகிறது. இத்தகைய சூழலில், இந்தியா ஒரு சங்கடமான இடைப்பட்ட நிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது. அதாவது, அது இனிமேல் ஒரேயொரு விநியோக நாட்டை மட்டுமே பெரிதும் சார்ந்திருக்கும் நிலையில் இல்லை. இருப்பினும், முழுமையான தன்னிறைவை அடைவதிலிருந்து அது இன்னும் வெகு தொலைவிலேயே உள்ளது.


பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு நிலைமைகள்


பிராந்திய பாதுகாப்பு நிலைமைகளும் புவிசார் அரசியல் பதட்டங்களும் இந்தியாவின் பாதுகாப்பு இறக்குமதிகளைப் பாதிக்கின்றன என்பதை இந்த முன்னேற்றங்கள் காட்டுகின்றன. பாதுகாப்பு அபாயங்கள் அதிகமாகவும், அடிக்கடி நிகழும்போதும் இராணுவத் தேவை அதிகரிக்கிறது என்பதை சிப்ரி (SIPRI) தரவுகளும் பிராந்தியப் போக்குகளும் தெளிவுபடுத்துகின்றன.


மிக முக்கியமான காரணி சீனா ஆகும். சீனா பாதுகாப்பிற்காக 300 பில்லியன் டாலருக்கும் அதிகமான பாதுகாப்புச் செலவினம், விரைவான நவீனமயமாக்கல், கடற்படை இருப்பை விரிவுபடுத்துதல் மற்றும் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control) நெடுகிலும் உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவை இந்தியா மீது தொடர்ச்சியான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.


பாகிஸ்தான் மற்றொரு காரணியாகும். பாகிஸ்தானின் செலவினங்கள் மிகவும் குறைவாக இருந்தாலும், அதன் இராணுவ நவீனமயமாக்கலுக்கு சீனா ஆதரவளித்துள்ளது. பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதிகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், சீனத் தளங்கள் மீதான அதன் சார்புநிலை வளர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ஒருவித இராஜதந்திர ஒருங்கிணைப்பை உருவாக்கியுள்ளதாகவும் சிப்ரி (SIPRI) தரவுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.


உலகளாவிய போக்குகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 2021 மற்றும் 2025-க்கு இடையில் உலகளாவிய ஆயுதப் பரிமாற்றங்கள் 9.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக சிப்ரி (SIPRI) அறிக்கை கூறுகிறது. இது பல நாடுகள் அதிக இராணுவமயமாக்கலை நோக்கி நகர்வதைக் காட்டுகிறது. மேற்கு ஆசியா மற்றும் உக்ரைனில் தொடரும் மோதல்களால் விநியோகச் சங்கிலிகள் மேலும் இறுக்கமாகியுள்ளன. ஆளில்லா விமானங்கள் (Drones), ஏவுகணைகள் மற்றும் இணையத் திறன்களில் தொழில்நுட்பப் போட்டிகள் வேகமெடுத்து வருகின்றன. இத்தகைய சூழலில், நாடுகள் காத்திருப்பதைவிட, தங்கள் இராணுவத் திறன்களை முன்கூட்டியே பாதுகாத்துக் கொள்ளவே விரும்புகின்றன.


இந்தியாவிற்கான கொள்முதல் தேவைகள்


இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த அழுத்தங்கள் அவசரமான பாதுகாப்பு கொள்முதல் தேவைகளை உருவாக்குகின்றன. ரஃபேல் விமானங்கள், எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகள், ஆளில்லா விமானங்கள் (Drones) மற்றும் கண்காணிப்புத் தளங்கள் போன்ற அமைப்புகள் உடனடி இடைவெளிகளை நிரப்புகின்றன. உள்நாட்டு உற்பத்தியால் இந்தத் தேவைகளை எப்போதும் சரியான நேரத்தில் பூர்த்திசெய்ய முடியாது. தற்போதைக்கு, இறக்குமதிகள் தற்போதைய தேவைகளுக்கும் எதிர்காலத் திறனுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுகின்றன.


இந்தத் தேவைக்குப் பின்னால் ஒரு கட்டமைப்புரீதியான காரணமும் உள்ளது. அதற்கு நீண்ட நில எல்லைகளும் குறிப்பிடத்தக்க கடல்சார் நலன்கள் என இந்தியா இருமுனைப் பாதுகாப்புச் சவாலை எதிர்கொள்கிறது. இதற்கு ஒரேநேரத்தில் பல களங்களில் தயார்நிலை தேவைப்படுகிறது. எனவே, ஆயுதங்களுக்கான தேவை ஒரு சேவைக்கோ அல்லது ஒரு களத்திற்கோ மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை. அது வான் பாதுகாப்பு, கடற்படை விரிவாக்கம், தரைவழிப் போக்குவரத்து மற்றும் புதிய களங்கள் எனப் பலவற்றையும் உள்ளடக்கியுள்ளது.


இந்தச் சூழ்நிலையில், இந்தியாவின் இறக்குமதிகள் அவசரம், அளவு மற்றும் தொழில்நுட்பத் தேவைகளால் வடிவமைக்கப்படுகின்றன. அவை வெளிநாட்டு அமைப்புகளுக்கான ஒரு எளிய விருப்பத்தைக் காட்டிலும், மாறிவரும் பாதுகாப்புச் சூழலுக்கான ஒரு பதிலையே சுட்டிக்காட்டுகின்றன.


தற்சார்பு, பல்வகைப்படுத்தல் மற்றும் தொலைநோக்குப் பார்வை-2047


இந்தியாவின் பாதுகாப்பு இறக்குமதிகள் அதிகமாக இருந்தாலும், படிப்படியாக உள்நாட்டு உற்பத்தியை நோக்கி ஒரு மாற்றம் ஏற்பட்டு வருவதாக சிப்ரி (SIPRI) தரவுகள் குறிப்பிட்டன. டெல்லியின் பாதுகாப்பு உத்தியானது, உடனடிப் பாதுகாப்புத் தேவைகளைத் தற்சார்பு என்ற நீண்டகால இலக்குகளுடன் இணைக்கிறது. இது பல்வகைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு தொலைநோக்குப் பார்வை 2047 போன்ற அதன் உத்திகளில் தெளிவாகத் தெரிகிறது.


பல்வகைப்படுத்தல், விநியோக நாடுகளைப் பல்வகைப்படுத்துவது, ஒரே ஒரு விநியோக நாட்டைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது மட்டுமல்லாமல், உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நடந்த போருடன் தொடர்புடைய விநியோகத் தடைகள் போன்ற உலகளாவிய மோதல்களால் எழும் அபாயங்களை நிர்வகிக்கவும் உதவுகிறது.


பாதுகாப்பு தொலைநோக்கு-2047 இந்தக் கட்டமைப்பு, பல்துறை சார்ந்த, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஒரு இராணுவத்தை உருவாக்குவதற்கான திட்டத்தை கோடிட்டுக் காட்டுகிறது. இது தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பு, செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா விமானங்கள் (Drones), இணையத் திறன்கள் மற்றும் விண்வெளி சார்ந்த அமைப்புகளின் பயன்பாட்டை வலியுறுத்துகிறது. மேலும், இது ஒரு வலுவான உள்நாட்டுத் தொழில்துறையை உருவாக்கும் நோக்கில், பாதுகாப்பு உற்பத்தியைப் பொருளாதார இலக்குகளுடன் இணைக்கிறது.


உடனடித் தேவைகளே இன்னும் முடிவுகளைத் தொடர்ந்து பாதிக்கின்றன என்பது தெளிவாகிறது. கூடுதலாக ஐந்து எஸ்-400 நீண்டதூர தரை-வான் ஏவுகணை அமைப்புகளைக் கொள்முதல் செய்ய சமீபத்தில் வழங்கப்பட்ட ஒப்புதல், இந்த அவசரத் தன்மையைப் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்கள் இன்னும் வளர்ந்துவரும் நிலையில், இத்தகைய கொள்முதல்கள் தற்போதைய அபாயங்களைக் கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.


எனவே, சிப்ரி (SIPRI) 2025-ல் இந்தியாவின் பாதுகாப்புத் துறையானது, நாடு ஒரு மாற்றத்தின் காலகட்டத்தைக் கடந்து செல்கிறது என்பதைக் காட்டுகிறது. அது தனது விநியோக நாடுகளைப் பன்முகப்படுத்தி, உள்நாட்டுத் தொழில்துறையை உருவாக்கி, புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்துவருகிறது. வரும் ஆண்டுகளிலும் இந்தப் போக்கு தொடரும் என்று சிப்ரியின் (SIPRI) தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இறக்குமதிகள், குறிப்பாக உயர்தர மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கு இந்த அமைப்பின் ஒரு பகுதியாகவே நீடிக்கும். உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அந்த வளர்ச்சி படிப்படியாகவும் சீராகவும் இருக்கும். இறுதியில், இந்தியா தனது இலக்குகளுக்கும் உண்மையான உற்பத்தித் திறனுக்கும் இடையிலான இடைவெளியை எவ்வளவு வேகமாக நிரப்புகிறது என்பதைப் பொறுத்தே இதன் விளைவு அமையும்.


Original article : https://indianexpress.com/article/upsc-current-affairs/upsc-essentials/how-regional-and-global-scenario-shapes-indias-defence-spending-10611868/

Share:

சீர்மரபினர் (denotified tribes) என்போர் யார்? - பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய நிகழ்வு :


யோகேந்திர யாதவ் குறிப்பிட்டதாவது, அரசாங்கங்களையும் கட்சிகளையும் கடந்து, இந்திய அரசு இந்த சமூகங்களை அங்கீகரிக்க பிடிவாதமாக மறுத்து வருகிறது. அவர்களில் சிலர் பட்டியல் சாதியினர், சிலர் பட்டியல் பழங்குடியினர், சிலர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனப் பட்டியலிடப்பட்டுள்ளனர், மேலும் பலர் எங்கும் குறிப்பிடப்படவில்லை.


முக்கிய அம்சங்கள் :


சுதந்திர இந்தியாவின் முதல் முழுமையான “சாதி கணக்கெடுப்பு”, அதை மிகவும் தேவைப்படும் ஒரு பிரிவினரான அறிவிக்கப்படாத பழங்குடியினர் (Denotified Tribes), நாடோடிப் பழங்குடியினர் (Nomadic Tribes) மற்றும் பகுதி நாடோடி சமூகத்தினரை (semi-nomadic communities (DNT/NT)) கைவிடுமா? இதுவரை, இதற்கான அறிகுறிகள் ஊக்கமளிப்பதாக இல்லை. 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்குப் பொறுப்பான இந்திய தலைமைப் பதிவாளர் (Registrar General of India), இது குறித்து மௌனம் காத்து வருகிறார்.


சமீபத்தில், இந்தச் சமூகங்களைச் சேர்ந்த முன்னணி ஆர்வலர்கள், தங்களைச் சாதிக் கணக்கெடுப்பில் சேர்க்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தித் தாக்கல் செய்த கடைசிநேர முயற்சியான மனுவை, தேவையற்றதாகவும் உணர்வற்றதாகவும் கருதப்பட்ட கருத்துக்களுடன் உச்சநீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது.


இந்த சமூகங்கள் பொதுவில் பெரும்பாலும் புலப்படாததாகவே உள்ளன. ஒரு படித்த இந்தியர், “தலித்துகள்” என்பதைச் சற்று கவலை நிறைந்து தங்களை அடையாளம் காணத் தொடங்கியுள்ளார். காடுகளில் வசிக்கும் “பழங்குடியினர்” பற்றிய தெளிவற்ற, சில சமயங்களில் தவறான கருத்தும் அவரிடம் இருக்கலாம். ஆனால், “சீர்மரபினர்” (Denotified Tribe) என்பதன் பொருள் என்னவென்றோ அல்லது நாடோடி சமூகங்கள் யார் என்றோ அவருக்குத் துளியும் தெரியாது.


“வெறுக்கப்பட்டவர்கள், அவமானப்படுத்தப்பட்டவர்கள், படுகொலை செய்யப்பட்டவர்கள்” (Hated, Humiliated, Butchered) என்பது இன்றைய இந்தியாவில் DNT/NT சமூகங்கள் குறித்த மகாசுவேதா தேவியின் ஒரு கட்டுரையின் தலைப்பாகும். இத்தலைப்பு இன்றைய இந்தியாவில் அவர்களின் நிலையைத் தெளிவாக விவரிக்கிறது. ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் LGBTQ மக்கள் அனுபவிக்கும் அனைத்து இன்னல்களையும் எதிர்கொள்ளும் ஒரு சமூகத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அதுதான் DNT/NT சமூகங்களின் யதார்த்தம்.


நாடோடி சமூகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதில், பெரும்பாலான கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்களை ட கணேஷ் தேவி அதிகப் பங்காற்றியுள்ளார். அவர்களின் மறைநிலை நிறுவனங்களிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். இதன் காரணமாக, அறிவிக்கப்படாத மற்றும் நாடோடி சமூக அமைப்புகள் மற்றும் தலைவர்களின் கோரிக்கைகள் மூன்று 'C'க்களுடன் தொடங்குகின்றன. அவை அறிதல் (Cognisance), வகைப்படுத்துதல் (categorisation), மற்றும் கணக்கிடுதல் (counting) ஆகும்.


மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ரெங்கே ஆணையத்தின் (Renke Commission) 2008-ம் ஆண்டு அறிக்கை, இந்தச் சமூகங்களின் எதிர்கொள்ளும் அவலநிலையைப் பதிவுசெய்ததுடன், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இக்குழுக்களின் பட்டியலை விரிவுபடுத்தி, DNT/NT சமூகங்களுக்கான முதல் மக்கள்தொகை மதிப்பீட்டை (10.74 கோடி) வழங்கியது.


சீர்மரபினர், நாடோடி மற்றும் பகுதி நாடோடிப் பழங்குடியினருக்கான தேசிய ஆணையமான இடேட் ஆணையத்தின் (Idate Commission) மிகச் சமீபத்திய 2017 அறிக்கை, ஏற்கனவே உள்ள பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) பட்டியல்களில் இருந்து 1,200 சமூகங்களை அடையாளம் கண்டதோடு, வகைப்படுத்தப்படாத 269 சமூகங்களையும் பட்டியலிட்டு, இந்த விஷயத்தில் ஒரு படி முன்னேறியுள்ளது.


வகைப்படுத்தப்படாத இந்தக் குழுக்கள் குறித்த தகவல் இடைவெளி, 2023-ம் ஆண்டில் இந்திய மானிடவியல் ஆய்வு நிறுவனம் (Anthropological Survey of India) மற்றும் பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்களால் நிரப்பப்பட்டது. அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், சீர்மரபினர் மற்றும் நாடோடிப் பழங்குடியினர் (DNT/NT) முறையாக வகைப்படுத்தப்பட்டு கணக்கிடப்பட வேண்டும் என்று இடேட் ஆணையம் (Idate Commission) திட்டவட்டமாகப் பரிந்துரைத்திருந்தது.


உங்களுக்குத் தெரியுமா?


சீர்மரபினர் பழங்குடியினர் (DNT) என்பவர்கள், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், 1871-ம் ஆண்டின் 'குற்றப் பழங்குடியினர் சட்டம்' (Criminal Tribes Act) தொடங்கி இயற்றப்பட்ட தொடர் சட்டங்களின் கீழ், 'பிறப்பாலேயே குற்றவாளிகள்' (born criminal) என்று 'அறிவிக்கை' செய்யப்பட்ட சமூகங்களாவர். நாடோடி மற்றும் பகுதி-நாடோடி சமூகங்கள் என்பவை, ஒரே இடத்தில் நிரந்தரமாக வசிக்காமல், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குத் தொடர்ந்து இடம்பெயர்ந்து செல்லும் சமூகங்களாக வரையறுக்கப்படுகின்றன.


சீர்மரபினர், நாடோடி மற்றும் பகுதி-நாடோடிப் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் (National Commission for De-notified, Nomadic and Semi-Nomadic Tribes (NCDNT)) ஒன்று, அப்போதைய அரசால் 2006-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பாலகிருஷ்ணா சித்ராம் ரென்கே என்பவரின் தலைமையில் செயல்பட்ட இந்த ஆணையம், ஜூன் 2008-ல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், "பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினரைப் போலன்றி, இந்தப் பழங்குடியினர் ஏனோ நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் கவனத்திலிருந்து தவறிவிட்டனர். அதன் விளைவாக, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அரசியலமைப்புரீதியான ஆதரவு அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டது என்பது ஒரு விசித்திரமான முரண்நகை (ironic) ஆகும்," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


2001-ம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்தப் பழங்குடியினரின் மக்கள்தொகையை சுமார் 10.74 கோடி என்று ரென்கே ஆணையம் மதிப்பிட்டது. மாநில வாரியான பட்டியலைத் தயாரிப்பதற்காக, பிப்ரவரி 2014-ல் அமைக்கப்பட்ட புதிய ஆணையம், ஜனவரி 8, 2018-ல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில், 1,262 சமூகங்கள் சீர்மரபினர், நாடோடி மற்றும் பகுதி-நாடோடிப் பிரிவுகளைச் சார்ந்தவையாக அடையாளம் காணப்பட்டன.


Original article : Who are the denotified tribes? -Priya Kumari Shukla

Share:

சமீபத்திய திவால் மற்றும் நொடிப்புநிலைச் சட்ட (திருத்த) மசோதா, 2025-ல் என்னென்ன திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• விவாதத்திற்குப் பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  இந்தச்சட்டம்   கடன் மீட்பு வழிமுறையாகச் செயல்படுவதற்காக மட்டுமல்லாமல், வணிக நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு கட்டமைப்பாகச் செயல்படுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.


• இந்த மசோதாவில் மொத்தம் 12 திருத்தங்கள் இடம்பெற்றுள்ளதாகவும்;  அதில் 11 திருத்தங்கள் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டவை என்றும், ஒரு திருத்தம் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.


• கடந்த 10 ஆண்டுகளில், திவால் மற்றும் திவால் குறியீடு (திருத்த) மசோதா (Insolvency and Bankruptcy Code) நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கிய   காரணியாக இருந்துள்ளதாக  நிதியமைச்சர் குறிப்பிட்டார். நாட்டின் வங்கித் துறையின் ஒட்டுமொத்த  பாதுகாப்பை  மேம்படுத்துவதில், திவால் மற்றும் திவால் குறியீடு ஒரு மிக முக்கிய காரணியாகத் திகழ்ந்துள்ளது என்று அவர் கூறினார்.


உங்களுக்குத் தெரியுமா:


• 2016-ஆம் ஆண்டு திவால் மற்றும் நொடிப்புநிலைச் சட்டம், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடையே ஏற்படும் திவால்நிலையைத் தீர்ப்பதற்கு ஒரு காலவரையறைக்குட்பட்ட செயல்முறையை வழங்குகிறது என்று PRS சட்டமன்ற ஆராய்ச்சி நிறுவனம் தனது சட்ட ஆய்வில் தெரிவித்துள்ளது. இந்தத் திருத்த மசோதா, இதுவரை சட்டம் எதிர்கொண்டு வந்த நடைமுறைத் தாமதங்களைக்  குறைப்பதை  நோக்கமாகக் கொண்டுள்ளது.


• இந்த மசோதா, கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது மற்றும் அவற்றின் மதிப்பைத் தீர்மானிப்பது போன்ற அலுவலரின் அதிகாரங்களை நீக்குகிறது. இது, அலுவலரை நியமிக்கவும் அல்லது நீக்கவும், கலைப்புச் செயல்முறையைக் கண்காணிக்கவும் கூடிய அதிகாரத்தை 'கடனளிப்போர் குழுவிடம்' (committee of creditors (CoC)) வழங்குகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிதி நிறுவனங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே திவால் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு அனுமதிக்கும் வகையில், 'கடனளித்தோரால் தொடங்கப்படும் திவால் தீர்வுச் செயல்முறை' (Creditor-Initiated Insolvency Resolution Process (CIIRP)) ஒன்றையும் இது நிறுவுகிறது.


• திருத்த மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய மாற்றங்களில் ஒன்று, ஒரு நிதிசார் கடனாளியால் தாக்கல் செய்யப்படும் திவால் மனுவானது, கடனை செலுத்த தவறிவிட்டார் என நிரூபிக்கப்பட்டிருந்தாலும், நடைமுறை விதிமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தாலும், வல்லுநருக்கு எதிராக எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கைகளும் நிலுவையில் இல்லாவிட்டாலும் "கட்டாயமாக" ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதாகும். இதன் பொருள், இப்படிப்பட்ட விண்ணப்பங்களை கூடுதல் காரணங்களின் அடிப்படையில் நிராகரிக்கும் வாய்ப்பு இனி இருக்காது. மேலும், ஒரு திவால் மனுவைப் பரிசீலிப்பதற்கான ஒரே உண்மையான அடிப்படையாக 'கடன்தவறியமை' மட்டுமே அமையும்.


• மேலும், நிதி நிறுவனங்களின் பதிவுகள், கடனாளியின் தவறுக்கான போதுமான மற்றும் உறுதியான ஆதாரமாகக் கருதப்பட வேண்டும் என்பதையும் இந்த மசோதா தெளிவுபடுத்துகிறது.


Original article : What amendments are done in the recent Insolvency and Bankruptcy Code (Amendment) Bill, 2025? -Priya Kumari Shukla

Share:

வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2026 முன்மொழிவது என்ன? அது ஏன் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது? -தாமினி நாத்

 முன்மொழியப்பட்ட இந்தத் மசோதா, அந்நிய பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா (Foreign Contribution (Regulation) Amendment (FCRA)) சான்றிதழ் ரத்து செய்யப்பட்டாலோ, ஒப்படைக்கப்பட்டாலோ அல்லது நிறுத்தப்பட்டாலோ, நிதி மற்றும் சொத்துக்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரியை நியமிக்கும் அதிகாரத்தை, ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது.


மார்ச் 25 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026, ஒன்றிய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான பேசுபொருளாக மாறியுள்ளது.


கேரளாவில், ஆளும் இடது ஜனநாயக முன்னணியும் காங்கிரஸும், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் சிறுபான்மை சமூகங்களின் நிறுவனங்களைக் குறிவைக்கும் என்று குற்றம் சாட்டியுள்ளன. ஏப்ரல் 9 அன்று நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, இந்த மசோதா தொடர்பாக இரண்டு கட்சிகளும் பாஜகவைக் கடுமையாக விமர்சித்துள்ளன.


வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா (FCRA) என்றால் என்ன?


இந்த மசோதா, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அவர்களால், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா, 2010-ஆம் ஆண்டு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (FCRA) என்ற சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய முயற்சிக்கிறது. மசோதாவிற்கான நோக்கங்கள் மற்றும் காரணங்கள் குறித்த அறிக்கையில், FCRA 2011 மே 1-ஆம் தேதி நடைமுறைக்கு வந்ததாக உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு நன்கொடைகளையும் விருந்தோம்பலையும் ஏற்றுக்கொள்வதையும் பயன்படுத்துவதையும் இந்தச் சட்டம் ஒழுங்குபடுத்துகிறது. இதன் நோக்கம், வெளிநாட்டு நிதி வரவுகள் நாட்டின் நலன், பொது ஒழுங்கு அல்லது தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தாதவாறு இருப்பதை உறுதி செய்வதாகும்.


இந்தச் சட்டம் 2016, 2018 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் மூன்று முறை திருத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தச் சட்டத்தின்கீழ் 16,000 சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சங்கங்கள் ஆண்டுதோறும் ரூ.22,000 கோடி பெறுகின்றன என்று அமைச்சர் கூறினார்.


திருத்தம் என்றால் என்ன?


இந்தத் திருத்தத்தின் முக்கியத்துவத்தை விளக்கிய அமித்ஷா, ஒரு சங்கத்தின் FCRA பதிவு ரத்து செய்யப்படும், ஒப்படைக்கப்படும் அல்லது வேறுவிதமாக நிறுத்தப்படும் சூழல்களில், சில சட்ட குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


FCRA சான்றிதழ் ரத்து செய்யப்படும்போதோ அல்லது காலாவதியாகும்போதோ, வெளிநாட்டுப் பங்களிப்புகள் மற்றும் சொத்துகளை மேற்பார்வையிட்டு நிர்வகிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட அதிகார அமைப்பை உருவாக்குவதன் மூலம்,  இது போன்ற  நிலமைகளுக்கு ஒரு விரிவான கட்டமைப்பு ஒன்றை வழங்க இந்தத் திருத்தம் முயல்கிறது. FCRA சான்றிதழ் ரத்து செய்யப்படும்போதோ, திரும்ப ஒப்படைக்கப்படும்போதோ அல்லது காலாவதியாகும்போதோ, அந்த நிதி மற்றும் சொத்துகளைக் கட்டுப்படுத்தும் குறிப்பிட்ட அதிகார அமைப்பை நியமிப்பதற்கான அதிகாரத்தை இந்தத் திருத்தம்  ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது.


திருத்தத்தின் பிரிவு 16A (7), ஒரு வழிபாட்டுத் தலத்தைப் பொறுத்தவரை,  அந்தச் சொத்தின் மேலாண்மை அல்லது செயல்பாட்டை, பரிந்துரைக்கப்படக்கூடிய வகையில் ஒரு நபரிடம் ஒப்படைக்க, நியமிக்கப்பட்ட அதிகார அமைப்புக்கு அதிகாரம் உண்டு என்று கூறுகிறது. அத்தகைய வழிபாட்டுத் தலத்தின் மதச்சார்புத் தன்மை  பாதுக்காக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் திருத்தம் குறிப்பிடுகிறது.


மசோதாவை அறிமுகப்படுத்தி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுபினர்களின் ஆட்சேபனைகளுக்குப் பதிலளித்தபோது, ​​இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில், ஒரு அமைப்பு தனது சான்றிதழை மீண்டும் பெற்றபிறகு, அதன் சொத்துக்களைத் திருப்பித் தரும் செயல்முறைக்கு இந்த மசோதா வழிவகை செய்துள்ளது என்று கூறினார். வெளிநாட்டு நிதியுதவியின் பயன்பாட்டை வெளிப்படையானதாக (foreign funding transparent) மாற்றுவதே இந்த மசோதாவின் நோக்கம் என்றும் அவர் கூறினார். அரசியலமைப்பு, சட்டங்கள் மற்றும் தேசிய நலனுக்கு எதிராகச் செயல்படும் எந்த ஒரு நபரையும் மோடி அரசு ஆதரிக்காது. தீய எண்ணம் கொண்டவர்களுக்கும், வெளிநாட்டு நிதியுதவியைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கும் இந்த மசோதா ஆபத்தானது என்று நித்யானந்த் ராய் கூறினார்.


இது ஏன் ஒரு சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது?


கிறிஸ்தவ சிறுபான்மை நிறுவனங்களைக் குறிவைக்க இந்த மசோதா பயன்படுத்தப்படலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இந்த மசோதாவைத் திரும்பப் பெறுமாறு கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு திங்களன்று கடிதம் எழுதினார்.


குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பித்தல் விண்ணப்பம் பரிசீலிக்கப்படாவிட்டாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ, FCRA சான்றிதழை ரத்து செய்ய இந்த மசோதா வழிவகுக்கும் என்றும், இதனால் சொத்துக்கள் நியமிக்கப்பட்ட அதிகார அமைப்பின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும் என்ற   கவலையே இந்த மசோதாவை எதிர்ப்பதற்கு முக்கியக் காரணியாக உள்ளது. தொழில்நுட்ப அல்லது நடைமுறைத் தாமதங்கள் ஏற்பட்டால், பதிவை ரத்து செய்ய முடியும் என்றும், அதன் விளைவாக அந்த நிறுவனத்தின் சொத்துக்களை ஒன்றிய அரசு கையகப்படுத்த நேரிடும் என்றும் அவர் கூறினார். இது மத நிறுவனங்களிடையே கவலைகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


திங்களன்று கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், இந்த மசோதா தொடர்பாக அரசை கடுமையாக சாடினார். இந்த மசோதா ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பயனளிக்கும் என்றும், அதே சமயம் "தொண்டு மற்றும் பிற சமூகநல அமைப்புகள்" ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்று விடும் என்று கூறினார்.


எதிர்க்கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக இருக்கும்போது, ​​"FCRA திருத்தங்களை வலுக்கட்டாயமாக நிறைவேற்ற பாஜக திட்டமிடுவதாக" செவ்வாய்க்கிழமை மாலை காங்கிரஸ் குற்றம் சாட்டியது.


இது வெளிப்படையாகவே அரசியலமைப்புக்கு முரணான சட்டம் ஆகும். இது தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் சமூக அமைப்புகளையும், குறிப்பாக சிறுபான்மை சமூகங்களால் நடத்தப்படும் நிறுவனங்களையும் அழித்துவிடும். இந்தக் கொடூரமான மசோதாவின் மூலம் நேர்மையான தொண்டு நிறுவனங்களை பாஜக மிரட்டுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுபினர்கள் புதன்கிழமை டெல்லிக்கு வந்து நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.


Original article : What FCRA Amendment Bill 2026 proposes, why it has sparked a row in Kerala?. -Damini Nath

Share:

PM-KUSUM திட்டம் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது. -குஷ்பூ குமாரி

 மின்கல ஆற்றல் சேமிப்பு ஏற்பாடுகள் முதல், முன்மொழியப்பட்ட சீரமைக்கப்பட்ட PM-KUSUM திட்டத்தின் 'வேளாண்-சூரிய மின்சக்தி கூறு வரை — PM-KUSUM திட்டத்தின் முக்கியக் கூறுகளை  தெரிந்துகொள்ளுங்கள்.


தற்போதைய செய்தி :


 ஒன்றிய  அரசு தனது முக்கிய திட்டமான பிரதம மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான்  மகாபியான் (Pradhan Mantri Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan (PM-KUSUM)) திட்டத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட (revamped) திட்டத்தில், மின்கலம் சேமிப்பு (battery energy storage) என்ற புதிய அம்சத்தை சேர்ப்பது பற்றி ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது என்று The Indian Express செய்தி வெளியிட்டுள்ளது.


முக்கிய  அம்சங்கள்:


1. 2019-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம்,  ஊரக பகுதிகளில் சிறிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட சூரிய மின் நிலையங்கள், தனியாக  இயங்கி வரும்  சூரிய சக்தி பம்புகள் (standalone solar pumps) ஆகியவற்றை நிறுவுவதையும், ஏற்கனவே உள்ள மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட பம்புகளைச் சூரிய ஆற்றலாக மாற்றுவதையும் ஊக்குவிக்கிறது.


காலநிலை இலக்குகள்


கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட இந்தியாவின்  3-வது 'தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளின்' (nationally-determined contribution (NDCs)) படி, 2035-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த மின் உற்பத்தித் திறனில் குறைந்தது 60 சதவீதம் புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதாக இந்தியா உறுதியளித்துள்ளது. மேலும், 26-வது கால நிலை மாநாட்டில், 2030-ஆம் ஆண்டிற்குள் 500 GW அளவிலான புதைபடிவமற்ற எரிசக்தித் திறனை அடைய வேண்டும் என்ற இலக்கை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. பிரதம மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான்  மகாபியான் திட்டம் இந்தியாவின் பசுமை ஆற்றல் மாற்றம் (clean energy transition) மற்றும் அதன் இலக்குகளை அடைவதில் ஒரு முக்கிய தூணாக தொடர்ந்து  செயல்ப்பட்டு  வருகிறது.


2.  இந்தத் திட்டம்,  உழவர்கள் தங்கள் சொந்தத் தேவைகளுக்குச் சூரிய சக்தியைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சில சமயங்களில், உபரி மின்சாரத்தை விற்பதன் மூலம் வருமானம் ஈட்டவும் அனுமதிக்கிறது. இந்தத் திட்டம் வழங்கும் இரண்டு நன்மைகள் மின்சார அணுகல் (energy access) மற்றும் வருமான உருவாக்கம் (income generation) ஆகும். இதுபோன்ற நடவடிக்கைகள் முந்தைய   வேளாண் மின்சார திட்டங்களிலிருந்து இதை தனித்தும்  மிக்கதாக  காட்டுகின்றன.


3. வேளாண் துறையில் சூரிய ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தி, மார்ச் 2026-க்குள் 34,800 மெகாவாட் சூரிய ஆற்றல் திறனைச்   மேம்படுத்துவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டிருந்தது. பிப்ரவரி 2026 நிலவரப்படி, இந்தத் திட்டத்தின்கீழ் மொத்தம் 12,164 மெகாவாட் திறன்  உருவாக்கப்பட்டுள்ளது. இது மூன்று கூறுகளைக் கொண்டிருந்தது: அவை,


கூறு அ: பரவலாக்கப்பட்ட சூரிய மின் நிலையங்களை அமைத்தல்,


கூறு ஆ: மின்சாரம் இல்லாத பகுதிகளில் தனியாக இயங்கும் சூரிய ஆற்றல் இணைப்புகளை உருவாக்குதல்,


கூறு இ: சூரிய ஆற்றலால் இயங்கும் மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட உழவர்களுக்கான  குழாய்கள் உருவாக்குதல்  ஆகும்.

4. கூறு இ-ன் கீழ், தனிப்பட்ட அலகுகளை சூரிய ஆற்றல்மயமாக்கல் (Individual Pump Solarisation (IPS)) மற்றும் முழு வேளாண் மின் தொடர் அளவிலான சூரிய ஆற்றல்மயமாக்கல் (Feeder-Level Solarisation (FLS)) ஆகிய இரண்டையும் ஒன்றிய அரசு ஆதரிக்கிறது. மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட உழவர்களுக்கானப் பம்புகளைக் கொண்ட உழவர்கள் தங்களின் தனிப்பட்ட அலகுகளைச் சூரியசக்தியால் இயங்க வழிவகை செய்யும் அதே வேளையில், முழு வேளாண் மின் தொடர் அளவிலான சூரிய ஆற்றல்மயமாக்கல் (FLS) முறையின் மூலம், ஒவ்வொரு பம்பையும் தனித்தனியாக மாற்றுவதற்குப் பதிலாக, அனைத்து  வேளாண் மின்விநியோக அலகுகளை மாநிலங்களே ஒரேநேரத்தில் சூரிய ஆற்றல்மயமாக்க முடியும்.


5. நாடாளுமன்றத்தில் மின்சார அமைச்சகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (Ministry of Power and the Ministry of New and Renewable Energy (MNRE) வழங்கிய தரவுகளின்படி, கூறு அ-ன் கீழ் 839.4 மெகாவாட் திறன் நிறுவப்பட்டுள்ளது. கூறு ஆ-ன் கீழ், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தனித்த வேளாண் பம்புகள் நிறுவப்பட்டுள்ளன. கூறு இ-ன் கீழ், 12,787-க்கும் மேற்பட்ட பம்புகள் தனிப்பட்ட அலகுகளை சூரிய ஆற்றல்மயமாக்கல் (Individual Pump Solarisation (IPS)) மூலம் சூரிய ஆற்றலாக மாற்றப்பட்டுள்ளன. அதே, நேரத்தில் முழு வேளாண் மின் தொடர் அளவிலான சூரிய ஆற்றல்மயமாக்கல் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட குழாய் இணைப்புகளை கொண்டுள்ளது. இதன் மொத்த நிறுவப்பட்ட திறன் 6,636.9 மெகாவாட் ஆகும்.


பிரதம மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான் மகாபியான் (Pradhan Mantri Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan (PM-KUSUM)) திட்டத்தின் நோக்கம்


டீசல் மற்றும் ஒழுங்கற்ற மின் கட்டமைப்பு ஆற்றலைச் சார்ந்திருப்பதைக் குறைத்து,   உழவர்களின்  பாசனத்திற்கு நம்பகமான மின்சாரம் கிடைக்கும்.


சூரிய மின் உற்பத்தி, அதிக மின்சாரத்தை விற்பனை செய்தல் மற்றும் நிலம் வாடகைக்கு விடுதல் மூலம் உழவர்களுக்கு கூடுதல் வருமானத்தை கிடைக்க செய்யும்.  


 டீசல் பயன்பாட்டைக் குறைத்து, பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கை நிறைவேற்றுவதன் மூலம் தூய்மையான ஆற்றலை நோக்கி நகர வேண்டும். இது வேளாண்மையிலிருந்து வெளியாகும் கரியமில வாயு (CO2) வெளியேற்றத்தைக் குறைக்க வழிவகுக்கிறது. 3-வது தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளின்படி (NDCs), 2005-ஆம் ஆண்டின் அடிப்படை அளவிலிருந்து 2035-ஆம் ஆண்டிற்குள் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வெளியேற்ற  அளவை (ஒரு யூனிட் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான வெளியேற்றம்) குறைந்தபட்சம் 47 சதவீதம் குறைப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.


 மின் விநியோக நிறுவனங்களின் (Distribution Company) நிதி நிலையை மேம்படுத்துவதன் மூலம், மாநிலங்கள் மீதான உழவர்களின்  மின்சார மானியச் சுமையைக் குறைக்க வேண்டும். வேளாண் மின் உற்பத்தி சார்ந்த மானியம் மாநிலக் கருவூலத்திற்கு (State’s exchequer) சுமையாக அமைந்துள்ளது.


டீசல் பயன்பாட்டை குறைப்பதன் மூலம், பெட்ரோலியப் பொருட்கள் சார்ந்த இறக்குமதிச் செலவைக் குறைத்தது.


புதிய  மின்கலன் சேமிப்பு ஏற்பாடுகளுக்கான காரணம்


வேளாண்மைக்கான மின்சார தேவைகள் காலை நேரத்தில் அதிகரித்து, பகல் முழுவதும் நிலையாக இருந்து, சூரியன் மறைந்த பிறகு குறைகிறது. இதற்கு மாறாக, சூரிய மின் உற்பத்தி பகல் முழுவதும் படிப்படியாக அதிகரித்து, நண்பகலில் உச்சத்தை அடைந்து, அதன் பிறகு படிப்படியாகக் குறைகிறது. இந்தச் சீரற்றத் தன்மை காரணமாக, மின்விநியோகம் மற்றும் மின்கட்டமைப்பு மேலாண்மையில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.


முன்மொழியப்பட்ட மின்கலன் சேமிப்புக் கூறு, அதிகபட்ச தேவை உள்ள நேரங்களில் உற்பத்தி செய்யப்படும் உபரி சூரிய மின்சாரத்தைச் சேமித்து, தேவை நீடித்தாலும் உற்பத்தி குறையும் சமயங்களில் அதை வழங்குவதன் மூலம் இந்த இடைவெளியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் வடிவமைப்பு குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.


வேளாண்-சூரிய ஒளி கூறு (Agri-PV component)


4-வது தேசிய வேளாண்-புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநாட்டில் உரையாற்றிய  ஒன்றிய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, பயிர்களுடன் சேர்த்து சூரிய மின் தகடுகளை அமைக்கும் முறையை ஊக்குவிக்கும் வகையில், PM-KUSUM 2.0 திட்டத்தில் 10 ஜிகாவாட் பிரத்யேக வேளாண்-சூரிய ஆற்றல் மின்சக்திப் பிரிவை அரசு சேர்க்கக்கூடும் என்று தெரிவித்தார்.


வேளாண் ஒளிமின்னழுத்தவியல் (Agriphotovoltaics) என்பது, சோலார் மின்சாரம் உற்பத்தி மற்றும் வேளாண் செயல்பாடுகளை ஒரே இடத்தில் இணைக்கும் முறையாகும்.  உழவர்களின்  நிலத்தை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யலாம் மற்றும் உழவுப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளலாம். இதன் மூலம், இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் பகிர்ந்தளிக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கான புதிய மாதிரி உருவாகிறது.


புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை அடைவதற்கான முக்கியத் திட்டங்கள்


பிரதம மந்திரி சூர்யா கர்: இலவச மின்சாரத் திட்டம் (Muft Bijli Yojana): பிப்ரவரி 2024-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 1 கோடி வீடுகளில் கூரைமேல் சூரிய மின்சக்திப் பலகைகளை (rooftop solar panels) நிறுவுவதையும், மாதம் ஒன்றுக்கு 300 அலகுகள் வரை இலவச மின்சாரத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் கணிசமான மானியங்களை வழங்குகிறது: 2 kW வரையிலான திறனுக்கு ஒரு kW-க்கு ₹30,000; 3 kW வரையிலான கூடுதல் திறனுக்கு ஒரு kW-க்கு ₹18,000 ஆகும். மேலும் வழங்கப்படும் மொத்த மானியம் அதிகபட்சமாக ₹78,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2026- ஆம் ஆண்டு மார்ச் மாத  நிலவரப்படி, இந்தத் திட்டத்தின்கீழ் வீடுகளின் கூரைமேல் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவியதன் மூலம் 31 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் ஏற்கனவே பயனடைந்துள்ளன. இது குடும்பங்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தைத் தாங்களே உற்பத்தி செய்துகொள்ளவும், மின்சாரக் கட்டணங்களைக் குறைவாக செலுத்தவும்  வழிவகுத்துள்ளது.


பிரதம மந்திரி ஜன்மான் திட்டத்தின் கீழ் புதிய சூரிய சக்தித் திட்டம் (PVTG குடியிருப்புகள்/கிராமங்களுக்கு): பிரதம மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (Pradhan Mantri Janjati Adivasi Nyaya Maha Abhiyan (PM JANMAN))  9 துறை அமைச்சகங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களுக்கான (PVTGs) 11 முக்கியத் தலையீடுகளில் கவனம் செலுத்துகிறது. இந்தத் தலையீடுகளில் ஒன்று, புதிய சூரிய மின்சக்தித் திட்டம் (PVTG குடியிருப்புகள்/கிராமங்களுக்கானது) ஆகும். மின் கட்டமைப்பு சார்ந்த மின் விநியோகம் தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரரீதியாகச் சாத்தியமற்ற பகுதிகளில், மின் கட்டமைப்பு  இல்லாத  சூரிய மின்சக்தி அமைப்புகளை வழங்குவதன் மூலம், மின்வசதி இல்லாத ஒரு லட்சம் பழங்குடியினர் குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.


சூரிய மின் பூங்காக்கள் மற்றும் வேகமாக  வளர்ந்து வரும் சூரிய மின் நிலையங்களின் மேம்பாடு: இந்தத் திட்டம் டிசம்பர் 2014-ல் தொடங்கப்பட்டது. இந்தத் சூரிய மின்சக்தித் திட்ட உருவாக்குநர்கள் தங்கள் திட்டங்களை விரைவாக அமைப்பதற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி, சூரிய ஆற்றல் திட்டங்களின் விரைவான வளர்ச்சிக்காக, "மின்பரிமாற்ற உள்கட்டமைப்பு, சாலை, நீர், வடிகால், தகவல் தொடர்பு வலையமைப்பு போன்றவற்றை அனைத்து சட்டப்பூர்வ அனுமதிகளுடன்" நிறுவுவதற்கு  உதவியாக இருந்து வருகிறது.

Original article : PM-KUSUM revamp on the cards. -Khushboo Kumari

Share: