பாதுகாப்பில்லாத அங்கீகாரம் : இந்தியாவின் பாகுபாடு-எதிர்ப்பு (anti-discrimination) தர்க்கத்திலுள்ள குறைபாடு. -சுமித் பௌத்

சாதி மற்றும் பாலினச் சட்டங்கள் குறித்த சமீபத்திய விவாதங்கள் ஒரு பொதுவான சிக்கலை வெளிப்படுத்துகின்றன. இதில் இந்தியச் சட்டம், பொருத்தமற்ற நேரங்களில்கூட அடையாளத்தை அங்கீகரிக்கிறது. அதேநேரத்தில், பாகுபாடு மிகவும் தீவிரமாக இருக்கும் இடங்களில் அதைப் புறக்கணிக்கிறது.


திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தில் (Transgender Persons (Protection of Rights) Act) செய்யப்பட்ட திருத்தங்கள், தலித் கிறிஸ்தவர்கள் பட்டியல் சாதி (Scheduled Caste (SC)) தகுதிலிருந்து தொடர்ந்து விலக்கப்படுவது மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பாகுபாடு எதிர்ப்பு விதிமுறைகள் (anti-discrimination regulations) ஆகியவை தொடர்பான சமீபத்திய சர்ச்சைகள் மிகவும் மாறுபட்ட பிரச்சினைகள் குறித்து விவாதத்தைத் தூண்டியுள்ளது. இருப்பினும், இந்த சட்டமானது பாகுபாட்டை எவ்வாறு வரையறுக்கிறது என்ற ஒரு பொதுவான சிக்கலால் அவை அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த எல்லாத் துறைகளிலும், சட்டக் கட்டமைப்புகள், பாதுகாக்கப்பட்ட குழுவின் உறுப்பினராக யார் தகுதி பெறுகிறார் என்பதைத் தீர்மானிப்பதில் அதிகக் கவனம் செலுத்துகின்றன. ஆனால், ஒருவரின் அடையாளத்தை அங்கீகரிப்பது என்பது பாகுபாட்டின் யதார்த்தத்துடன் எப்போதும் பொருந்துவதில்லை என்பதால், அடையாளத்தின் மீதான இந்தக் கவனம், விலக்கப்படுவோமோ என்ற அச்சம் முதல் தவறாகப் பயன்படுத்தப்படுவோமோ என்ற கவலைகள் வரை பலவிதமான சங்கடங்களை அடிக்கடி ஏற்படுத்துகிறது.


பாகுபாடு (Discrimination) அங்கீகரிக்கப்படாமல் தொடரும்போது


முதலில், அரசியலமைப்பு (பட்டியல் சாதியினர்) ஆணை-1950 (Constitution (Scheduled Castes) Order) மீதான விவாதத்தைக் கருத்தில் கொள்வோம். இந்தச் சட்டம் பட்டியல் சாதி (SC) அந்தஸ்தை குறிப்பிட்ட மதப் பிரிவுகளுடன் இணைக்கிறது. இதன் காரணமாக தலித் கிறிஸ்தவர்களும் தலித் முஸ்லிம்களும் பட்டியல் சாதி அந்தஸ்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இது வெறும் இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல. இது, 1989-ம் ஆண்டின் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் (Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act) கீழ் சட்டரீதியான நிவாரணங்களைப் பெறுவதற்கான வாய்ப்பையும் தீர்மானிக்கிறது. இருப்பினும், ஒருவர் மதம் மாறினாலும் சாதி அடிப்படையிலான பாகுபாடு முடிவுக்கு வருவதில்லை என்பதைப் பலர் ஏற்றுக்கொள்கிறார்கள். சட்டம் அவர்களைப் பாதுகாக்கப்பட்ட பிரிவின் உறுப்பினர்களாக அங்கீகரிப்பதை நிறுத்தினாலும், தனிநபர்கள் அதே சமூகக் களங்கத்தையும் வன்முறையையும் தொடர்ந்து எதிர்கொள்ள நேரிடலாம். இந்தச் சூழ்நிலையில், பாகுபாடு தொடர்கிறது. ஆனால், பாதுகாப்பு மறைந்துவிடுகிறது.


அடையாளம் (Identity) முக்கியப் பிரச்சினையாக மாறும்போது


பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) முன்மொழியப்பட்ட பாகுபாடு எதிர்ப்பு விதிமுறைகளின் மீதான விவாதத்தில் ஒரு மாறுபட்ட கவலை தோன்றுகிறது. குறிப்பிட்ட அடையாளப் பிரிவுகளின் மூலம் பாகுபாட்டை வரையறுப்பது, தவறான அல்லது மிகைப்படுத்தப்பட்ட புகார்களுக்கு வழிவகுக்கும் என்று சில விமர்சகர்கள் கவலைப்படுகிறார்கள். இத்தகைய அச்சங்கள் அனுபவப்பூர்வமாக நியாயப்படுத்தப்பட்டவையா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அடையாளம் எவ்வாறு செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படுகிறது என்பது குறித்த ஒரு நீடித்த கவலையை அவை பிரதிபலிக்கின்றன. ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவரா என்பதில் சட்டம் முக்கியமாகக் கவனம் செலுத்தினால், தகராறுகளின் தன்மை மாறக்கூடும். இதில் வழக்குகள் உண்மையில் என்ன நடந்தது என்பதில் குறைவாகவே கவனம் செலுத்தக்கூடும். மாறாக, இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதிலும் அதிகக் கவனம் செலுத்தக்கூடும்.


திருநங்கைகள் மீதான சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மீதான விவாதங்களிலும் இதே போன்ற கவலைகள் எழுகின்றன. இங்கு, அடையாளம் அங்கீகரிக்கப்படும் நிபந்தனைகளே முக்கியப் பிரச்சினையாக உள்ளது. யார் திருநங்கையாகக் கருதப்படுகிறார்கள்? என்பதை வரையறுக்க அல்லது ஒழுங்குபடுத்த முற்படும் விதிகள், திருநங்கைகளுக்குள்ளேயே கவலையை உருவாக்கியுள்ளன. இதில் பலர் தவறாக வகைப்படுத்தப்படலாம் அல்லது குற்றவாளியாக்கப்படலாம் போன்ற அச்சங்களுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். மீண்டும் ஒருமுறை, அடையாளமானது (identity) முக்கியப் பிரச்சினையாக அமைகிறது. இம்முறை அரசின் அங்கீகாரம் என்ற வடிவில் சர்ச்சைக்குரிய களமாக மாறுகிறது.


அடையாள அடிப்படையிலான கட்டமைப்புகளின் வரம்புகள்


இந்த எடுத்துக்காட்டுகளை நாம் ஒன்றாகப் பார்க்கும்போது, ஒரு தெளிவான போக்கு புலப்படுகிறது. சில சமயங்களில், அடையாளப் பிரிவுகள் (identity categories) மிகவும் குறுகியவையாக இருப்பதால், பாகுபாட்டை எதிர்கொள்ளும் மக்களைப் புறக்கணித்துவிடுகின்றன. மற்ற சமயங்களில், அவை மிகவும் விரிவானவையாகவோ அல்லது மிகவும் தளர்வாக வரையறுக்கப்பட்டவையாகவோ கருதப்படுவதால், தவறான பயன்பாடு குறித்த கவலைகள் எழுகின்றன. முதலில், இந்தப் பிரச்சினைகள் ஒன்றுக்கொன்று எதிரானவையாகத் தோன்றலாம். இருப்பினும், அவை ஒரே மூலக் காரணத்திலிருந்துதான் உருவாகின்றன. பாகுபாட்டை வரையறுப்பதற்கான முக்கிய வழியாக அடையாளத்தின் மீது அதிகப்படியான சார்புநிலை உள்ளது.


இந்தச் சார்புநிலை ஒரு கட்டமைப்புப் பொருத்தமின்மையை உருவாக்குகிறது. அடையாளப் பிரிவுகள் பொதுவாக எளிமைப்படுத்தப்படுகின்றன. அவை அரசுக்குப் புரியக்கூடியதாகவும், சரிபார்க்கக்கூடியதாகவும், காலப்போக்கில் ஒப்பீட்டளவில் நிலையானதாகவும் இருக்க வேண்டும். ஆனால், பாகுபாடு என்பது பெரும்பாலும் மிகவும் சிக்கலானதாகும். அது, முறையான பிரிவுகளுடன் எப்போதும் நேர்த்தியாகப் பொருந்தாத சமூக நடைமுறைகள், கண்ணோட்டங்கள் மற்றும் சூழல்களால் வடிவமைக்கப்பட்டதாகவும் இருக்கிறது. சட்டம், நிஜ வாழ்க்கை அனுபவங்களை முன்வரையறுக்கப்பட்ட அடையாளங்களுக்குள் பொருத்த வலியுறுத்தும்போது, ​​அது உண்மையான வழக்குகளை விலக்குவதற்கும், சேர்க்கப்பட்ட வழக்குகள்மீது சந்தேகத்தை உருவாக்குவதற்கும் வழிவகுக்கிறது.


அடையாளத்திலிருந்து காரண காரியத்திற்கு


மற்ற நாடுகளைப் பார்ப்பது இந்தப் பிரச்சினையை நாம் நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது. 1964-ம் ஆண்டின் குடிமை உரிமைகள் சட்டத்தின் (Civil Rights Act) கீழ், இனம், பாலினம் மற்றும் மதம் போன்ற பாதுகாக்கப்பட்ட பண்புகளை மையமாகக் கொண்டு பாகுபாடு எதிர்ப்புச் சட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவரா என்பது மட்டும் இதன் முதன்மைக் கேள்வி அல்ல. மாறாக, அந்தப் பண்பின் காரணமாக அந்த நபர் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டாரா என்பதே உண்மையான கேள்வி. உதாரணமாக, போஸ்டாக் vs கிளேட்டன் கவுண்டி வழக்கில் (Bostock vs Clayton County), பாலியல் நாட்டம் அல்லது பாலின அடையாளத்தின் அடிப்படையிலான பாகுபாடு என்பது ஒரு வகையான பாலினப் பாகுபாடு என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏனெனில், ஒரு தனிநபரின் பாலினம் 'இல்லாமல்' அத்தகைய நடத்தை நிகழ்ந்திருக்காது என்று நீதிமன்றம் விளக்கியது. இங்கு இதற்கான முக்கியத்துவமானது காரண காரியத் தொடர்பிற்கே அளிக்கப்படுகிறது.


இதன் பொருள் அடையாளம் முக்கியத்துவம் இழந்துவிடுகிறது என்பதல்ல. பாதுகாக்கப்பட்ட பண்புகள், வரலாற்றுரீதியாக வேரூன்றிய பின்தங்கிய நிலையின் அடையாளங்களாக இன்னமும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் அவை, ஒரு வலுவான நுழைவாயிலாகச் செயல்படுவதில்லை. சட்டத்தின், அடையாளத்தைச் சரிபார்ப்பதிலிருந்து, அந்த அடையாளத்திற்கும், கோரப்படும் பாதிப்பிற்கும் இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை இது ஆராய்கிறது.


இந்தியச் சட்டத்தில் இதுபோன்ற ஒரு மாற்றம் எளிதானதாக இருக்காது. பல சிக்கல்கள் இன்னும் நீடிக்கும். ஆதார நிரூபணச் சிக்கல்கள், நிர்வாகச் சாத்தியக்கூறுகளில் உள்ள வரம்புகள் மற்றும் நிறுவனத் திறனில் உள்ள இடைவெளிகள் ஆகியவை இதில் அடங்கும். இந்த மாற்றம் தவறான பயன்பாடு குறித்த கவலைகளையும் நீக்காது. ஆனால், முன்வரையறுக்கப்பட்ட பிரிவுகளுக்குள் பொருந்தும் இடங்களில் மட்டும் அல்லாமல், தீங்கு எங்கு நிகழ்ந்தாலும் அதனைக் கையாள்வதேயான பாகுபாடு எதிர்ப்பு கட்டமைப்புகளை அவற்றின் அடிப்படை நோக்கத்துடன் மீண்டும் சீரமைக்க இது உதவும்.


சாதி, பாலின அடையாளம் மற்றும் நிறுவன ஒழுங்குமுறை குறித்த தொடர்ச்சியான சர்ச்சைகள், தற்போதைய அணுகுமுறை அழுத்தத்தில் இருப்பதைக் காட்டுகின்றன. பாதுகாக்கப்பட்ட குழுவின் உறுப்பினராக யார் கருதப்படுகிறார் என்பதைத் தீர்மானிப்பதில் சட்டம் முக்கியமாகக் கவனம் செலுத்தும் வரை, அது பாகுபாட்டின் உண்மையான அனுபவங்களை தொடர்ச்சியாகப் பதிலளிக்கத் தவறிவிடும். மேலும் ஒருங்கிணைந்த ஒரு கட்டமைப்பு, ஒரு மாறுபட்ட கேள்வியுடன் தொடங்க வேண்டும். ஒரு நபர் யார் என்பது மட்டுமல்ல, அவருக்கு நேர்ந்தது அதன் காரணமாக நிகழ்ந்ததா என்றும் கேட்க வேண்டும்.


அந்த மாற்றம் நிகழும் வரை, பாகுபாடு எதிர்ப்புச் சட்டம் தீங்கைத் தவறாகப் புரிந்துகொள்வதைத் தொடரும். இதன் பொருள், முக்கியத்துவம் இல்லாத இடங்களில் அடையாளத்தைக் கண்டு, உண்மையான பாகுபாட்டைப் புறக்கணிக்கும்.


சுமித் பௌத், ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியர் ஆவார்.


Original Link: Recognition without protection: The flaw in India’s anti-discrimination logic.


Share: