குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கும் முறை, மாறிவரும் சூழலைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். -மோஹித் ஷர்மா

வட்டிச் செலவுகளைக் கணக்கிடும் முறையை மேம்படுத்துவதும், உள்ளீடு பொருட்களின் மாறிவரும் விலைகளைச் சரியாகக் கணக்கில் கொள்வதும், வேளாண் தொழிலாளர்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் பயிரிட ஊக்குவிக்க உதவும்.


இந்தியாவின் குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price (MSP)) முறையானது, பயிர் சாகுபடிக்கு ஆகும் செலவை மதிப்பிடுவதன் அடிப்படையில் அமைந்துள்ளது. இது முக்கியமாக மத்திய வேளாண் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பொருளாதார மற்றும் புள்ளிவிவர இயக்குநரகம் (Directorate of Economics and Statistics) நடத்தும் பயிர் சாகுபடி செலவை ஆய்வு செய்வதற்கான விரிவான திட்டத்தை (Comprehensive Scheme for Studying Cost of Cultivation) அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.


இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகால மாதிரி ஆய்வு முறையைப் (Three-year sampling method) பின்பற்றுகிறது. இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சில கிராமங்கள் மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகின்றன, அதன் பிறகு அந்த இடத்திற்குப் பதிலாக வேறு கிராமங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இந்த ஆய்வு முறை அறிவியல் ரீதியாகத் துல்லியமானதாகக் கருதப்பட்டாலும், இந்திய வேளாண் துறையில் கடந்த காலங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ள சூழலில், இந்த பழைய நடைமுறை மட்டும் காலத்திற்கு ஏற்ப மாற்றப்படாமலேயே தொடர்வதாகக் கூறப்படுகிறது.


குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) நிர்ணயிப்பதில் உள்ள ஒரு முக்கியமான சிக்கல் என்னவென்றால், அதற்கான முடிவுகள் பெரும்பாலும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் பழமையான செலவுத் தரவுகளின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன. உதாரணமாக, 2021–22-ஆம் ஆண்டில் உலகளவில் உரங்களின் விலை உயர்ந்தது, டீசல் விலையும் அதிகரித்தது, மேலும் தொழிலாளர்களுக்கான கூலியும் ஓரளவிற்கு அதிகரித்தது. உள்ளீடு பொருட்களின் விலையில் திடீர் ஏற்றம் ஏற்படும் காலங்களில் இந்த முறை துல்லியமாக இருப்பதில்லை என்கின்றனர். மேலும், வேளாண் தொழிலாளர்களின் உண்மையான சாகுபடி செலவிற்கும், அரசு கணக்கிடும் செலவிற்கும் இடையே இடைவெளிகள் இருப்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. பயிர் சாகுபடிச் செலவுகள் துல்லியமாக அளவிடப்பட்டால், நிர்ணயிக்கப்பட்ட லாப வரம்பைத் தக்கவைக்க பல பயிர்களுக்கான ஆதரவு விலை தற்போது இருப்பதைவிட 20-30% அதிகமாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.


வேளாண் துறை இயந்திரமயமாக்கலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் ஒரு நுட்பமான இடைவெளி உருவாகி வருகிறது. தற்போதைய முறையில், ஒரு வேளாண் தொழிலாளர் சொந்தமாக வைத்துள்ள இயந்திரங்களுக்கான செலவு (தேய்மானம் மற்றும் வட்டி மூலம் கணக்கிடப்படுகிறது) மற்றும் அவர் வாடகைக்கு எடுத்த இயந்திர சேவைகளுக்கான செலவு (நேரடிச் செலவுகளில் சேர்க்கப்படுகிறது) எனத் தனித்தனியாகப் பிரிக்கப்படுகிறது. இது ஒரே செலவை இருமுறை கணக்கிடுவதைத் தவிர்க்க உதவுகிறது. வேளாண்துறை இயந்திரமயமாக்கலுக்கான துணைத் திட்டத்தின்கீழ் (Sub-Mission on Agricultural Mechanization (SMAM)), 2014-15-ஆம் ஆண்டு முதல் 2024-25-ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மாநிலங்களுக்கு 8,565 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.9 மில்லியனுக்கும் அதிகமான இயந்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன மற்றும் ஆயிரக்கணக்கான அரசு வாடகை மையங்கள் (Custom Hiring Centres) அமைக்கப்பட்டுள்ளன. அரசின் இந்த அதீத கவனமும், வாடகை மையங்களின் வேகமான வளர்ச்சியும் குறிப்பாகச் சிறு மற்றும் குறு விவசாயிகள் இயந்திரங்களைப் பயன்படுத்தும் முறையை மாற்றியுள்ளன. இருப்பினும், தற்போது புழக்கத்தில் உள்ள மூன்று ஆண்டுகால மாதிரி ஆய்வுமுறை இன்னும் பழைய முறைகளையே பிரதிபலிக்கக்கூடும், அதாவது இயந்திரங்களைச் சொந்தமாக வைத்திருப்பதே பொதுவான விஷயமாக இருந்த காலத்தின் தரவுகளையே காட்ட வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.


பல்வேறு காரணிகள்


ஆய்வு முறைகளில் உள்ள இத்தகைய குறைபாடுகள் செலவினங்களை மதிப்பிடுவதன் துல்லியத்தைப் பாதிக்கின்றன. இருப்பினும், பயிர் சாகுபடி முறைகள் போன்ற பெரிய அளவிலான முடிவுகளை மட்டுமே இவை தீர்மானிப்பதில்லை. பல்வேறு மாநிலங்களில் இருந்து கிடைக்கும் தரவுகளின்படி, பயிர் சாகுபடியில் மாற்றங்களைக் கொண்டு வருவது என்பது வெறும் சாகுபடி செலவு மதிப்பீடுகளைச் சார்ந்தது அல்ல. மாறாக, விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்யும் உறுதி, பாசன வசதி, உள்ளீடு பொருள் மானியங்கள் (Input subsidies) மற்றும் சந்தை வாய்ப்புகள் போன்ற காரணிகளையே அதிகம் சார்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வலுவான சந்தை அமைப்புகள் இருப்பதால், அங்கு பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்திப் பங்கு அதிகமாக உள்ளது. ஆனால், இதற்கு நேர்மாறாக பஞ்சாப் மாநிலத்தில் இன்னும் நெல்-கோதுமை பயிரிடும் முறையே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.


இந்த வேறுபாடு ஒரு முக்கியமான விஷயத்தை உணர்த்துகிறது: நடைமுறையில், குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) என்பது உற்பத்திச் செலவை அடிப்படையாகக் கொண்ட ஒரு விலை சமிக்ஞையாகச் செயல்படுவதைவிட, அரசாங்கத்தின் கொள்முதல் உத்தரவாதமாகவே அதிகம் பார்க்கப்படுகிறது. பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டாலும், போதிய அளவில் அரசு கொள்முதல் செய்யாதது வேளாண் தொழிலாளர்களின் பயிர் தேர்வு முடிவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மேலும், பல பகுதிகளில் பல பயிர்களின் சந்தை விலை, அரசாங்கம் நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக் குறைவாகவே இருப்பதை தரவுகள் காட்டுகின்றன.


எனவே, குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) முடிவுகளில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன. முதலாவதாக, சந்தை நிலைத்தன்மையுடன் இருக்கும் காலங்களில், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் உண்மையான உற்பத்திச் செலவுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைவாகவே இருக்கும், இதனால் இந்தத் திட்டம், திட்டமிட்டபடி சரியாகச் செயல்படுகிறது. இரண்டாவதாக, உள்ளீடு பொருட்களின் (உரம், விதைகள் போன்றவை) விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்போது, உற்பத்திச் செலவைக் கணக்கிடுவதில் ஏற்படும் தாமதங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையின் லாப வரம்பைக் குறைக்கக்கூடும். இதன் காரணமாக, ஆதரவு விலை உயர்த்தப்பட்டாலும் வேளாண் தொழிலாளர்களின் உண்மையான லாபம் குறைகிறது. இந்தியாவில் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) குறித்த விவாதம் பெரும்பாலும் விலை தொடர்பான பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மையில் இது செலவினங்களைக் கணக்கிடும் முறை மற்றும் அதன் பலன்கள் வேளாண் தொழிலாளர்களைச் சென்றடைவதில் உள்ள சிக்கலாகப் பார்க்கப்படுகிறது.


கணக்கிடப்பட்ட சீர்திருத்தம்


இந்தப் பிரச்சனைகளைச் சரிசெய்ய கவனமான சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. வட்டி விகிதங்களைக் கணக்கிடும் முறையை மேம்படுத்துவது மற்றும் எரிபொருள், உரங்கள் போன்ற மாறும் செலவுகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவு மாற்றங்களை அனுமதிப்பது ஆகியவற்றை முதலில் பயிர் பல்வகைப்படுத்தல் தேவைப்படும் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களில் சோதனை செய்து பார்க்கலாம். பின்னர், தரவு சேகரிப்பு மற்றும் மண்டல வாரியான விரிவாக்கத்தை படிப்படியாக மேம்படுத்துவதோடு, இந்த மாற்றங்களை அனைத்து குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) பயிர்களுக்கும் விரிவுபடுத்தலாம். அரசின் கொள்கைகளை அதிக நம்பகத்தன்மையுடனும் துல்லியமாகவும் மாற்றுவதால் கிடைக்கும் பலன்களுடன் ஒப்பிடுகையில், இதற்காக அரசுக்கு ஏற்படும் செலவு மிகவும் குறைவாகவே இருக்கும் என்கின்றனர்.


இந்தியாவின் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) முறை உணவுப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. இருப்பினும், முந்தைய காலக்கட்டத்தின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த முறை, வேளாண் துறை மாறிவரும் இன்றைய சூழலில் காலாவதியான ஒன்றாக மாறும் அபாயத்தில் உள்ளது. தற்போதுள்ள நடைமுறைகளைச் சிதைக்காமல், சாகுபடிச் செலவு மதிப்பீட்டை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, படிப்படியாகவும் திட்டமிட்டபடியும் இந்த முறையைப் புதுப்பிப்பது அதன் நம்பகத்தன்மையையும் செயல்திறனையும் அதிகரிக்கும். சாகுபடிச் செலவு மதிப்பீடுகள் உண்மையான கள நிலவரங்களோடு ஒத்துப்போகும்போது, குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) என்பது வெறும் பாதுகாப்பு அம்சமாக மட்டுமல்லாமல், நீண்டகால வேளாண் துறை வளர்ச்சிக்கான ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மோஹித் ஷர்மா, பீகார் மாநிலம் சமஸ்திபூர் பூசாவில் உள்ள, டாக்டர் ராஜேந்திர பிரசாத் மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தில், வேளாண் வணிகத் துறையின் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

 

Original article : MSP methodology should reflect changing reality. -Mohit Sharma

Share:

இந்தியாவின் மூலதனக் கணக்கு மீதான அதீத ஈடுபாடு - டி.சி.ஏ. ஸ்ரீனிவாச ராகவன்

 இந்தியா தனது நடப்புக் கணக்கை வலுப்படுத்த முயற்சி செய்யவில்லை.  அதே நேரத்தில், மூலதனப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்துள்ளன.


1950-களின் நடுப்பகுதியிலிருந்து, இந்திய அரசாங்கங்கள் மூலதனக் கணக்கில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அதே வேளையில் நடப்புக் கணக்கை பெரும்பாலும் புறக்கணித்தே வந்துள்ளன. கடந்த ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவிலான மூலதன வரத்து இருந்ததாக சுட்டிக்காட்டிய முதன்மை பொருளாதார ஆலோசகரின் அறிக்கை இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது.


அதிகப்படியான வெளிநாட்டு முதலீடுகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் நன்மையைத் தருகின்றன. இருப்பினும், இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: நம் நாட்டின் தற்போதைய நடப்புக் கணக்கு நிலவரம் குறித்து ஒரு தலைமைப் பொருளாதார ஆலோசகர் கடைசியாக எப்போது தீவிரமாக விவாதித்தார்?


இருப்பினும், நடப்புக் கணக்கு என்பது ஒரு நாட்டின் வர்த்தக சமநிலை (ஏற்றுமதி மற்றும் இறக்குமதி), வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் மற்றும் பணப் பரிமாற்றங்களை உள்ளடக்கியது. அதாவது, ஒரு நாடு, பிற நாடுகளிடமிருந்து ஈட்டும் ஒட்டுமொத்த வருமானத்தைக் குறிக்கிறது. மறுபுறம், மூலதனக் கணக்கு என்பது நாட்டிற்குள் பணப் புழக்கத்தைக் கண்காணிக்கிறது. இது அந்த நாட்டின் பொருளாதாரத்தின்மீது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.


உண்மையில், தலைமைப் பொருளாதார ஆலோசகர்கள் நடப்புக் கணக்கு குறித்து அரிதாகவே கவனம் செலுத்தியுள்ளனர். இது ஆச்சரியமான விஷயமாகும்; ஏனெனில், ஒரு நாடு ஏற்றுமதி செய்வதைவிட அதிகமாக இறக்குமதி செய்யும் போது ஏற்படும் இடைவெளியை ஈடுகட்டும் ஒரு சமநிலைப்படுத்தும் காரணியாகவே மூலதனக் கணக்கு செலுத்துதல், சமநிலையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.


1947-ஆம் ஆண்டிற்கு முன்பு, மூலதனக் கணக்கு என்பது ஒரு பெரிய விஷயமாகக் கருதப்படவில்லை. ஏனெனில், அப்போது இந்தியாவின் பொருளாதாரம் ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட பொருளாதாரத்துடனும், அதன் மூலம் உலகப் பொருளாதாரத்துடனும் முழுமையாக இணைக்கப்பட்டிருந்தது. அக்காலத்தில் மூலதனப் புழக்கம் மிகவும் வலுவாக இருந்தது. தங்களுக்குத் தேவையான அல்லது விருப்பமான முதலீடுகளைப் பெறுவதை ஆங்கிலேயர்கள் உறுதி செய்ததால், இந்தியா முழுமையான மூலதன மாற்றத்தக்கத் தன்மையை கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.


இருப்பினும், நடப்புக் கணக்கு நிலவரம் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியது. அவர்கள் தங்கள் சொந்த நலன்களுக்கு ஏற்ப அவ்வப்போது மாற்று விகிதத்தை (Exchange rate) மாற்றியமைத்துக் கொண்டே இருந்தனர். 1890-களின் தொடக்கத்திலிருந்து, இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவுக்குப் பெரும் சிக்கல்களை உருவாக்கின. மேலும், இது குறித்துப் பல விவாதங்களும் அப்போது நடைபெற்றன.


1955-ஆம் ஆண்டிற்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. அரசாங்கங்கள் நடப்புக் கணக்கைவிட மூலதனக் கணக்கின் மீது அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கின. மூலதனக் கணக்கில் ஏற்படும் மாற்றங்கள் நடப்புக் கணக்கின் விளைவாகவே ஏற்படுகின்றன. இதற்கு முக்கியக் காரணம், ஒரு நாடு தனது வருவாய் மூலம் எவற்றைப் பெற முடியவில்லையோ, அவற்றைப் பெறுவதற்கு மற்றவர்களிடம் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதே ஆகும்.


ஏன் மூலதனக் கணக்கு முக்கியமானது?


இதற்குப் பல காரணங்கள் இருந்தன. அவற்றில் மிக முக்கியமானது, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் (Second Five Year Plan) மற்றும் பி. சி. மகாலனோபிஸ் அவர்கள் குறிப்பிட்ட அதிகப்படியான அந்நியச் செலாவணித் தேவைகளுடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டம் அதிக முதலீடு தேவைப்படும் ஒன்றாக இருந்ததால், உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 2%-க்கும் அதிகமாக இருந்தபோதிலும், தேவையான நிதியானது ஏற்றுமதி வருவாய் மூலம் கிடைப்பதற்குப் பதிலாக, வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் மானியங்கள் மூலமாகவே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


இருந்தபோதிலும், அதிக முதலீடு தேவைப்படும் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தியதால், அதிக தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் ஏற்றுமதித் துறைகளில் முதலீடு குறைந்தது. இதன் விளைவாக, சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா தனக்கிருந்த சாதகமான சூழலை இழந்தது. எலி ஹெக்ஷர் (Eli Heckscher) மற்றும் பெர்டில் ஓலின் (Bertil Ohlin) போன்ற பொருளாதார வல்லுநர்கள் இந்தப் போக்கை கடுமையாக விமர்சித்திருப்பார்கள்.


மற்றொரு காரணம் நிர்வாகரீதியானது: நிதியமைச்சகம் மூலதனக் கணக்கை கவனித்துக்கொண்டது, அதேசமயம் அப்போதைய வெளிநாட்டு வர்த்தக அமைச்சகம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை நிர்வகித்ததால், அது நடப்புக் கணக்கை நிர்வகித்தது.


அரசாங்கத்தில் இருந்த அதிகாரப் படிநிலையின்படி, நிதி அமைச்சகமும் அதன் மூலதனக் கணக்குமே முதன்மையான இடத்தைப் பெறுகின்றன. இந்த நடைமுறை 1950-களின் இடைப்பகுதியிலிருந்து இன்று வரை மாறாமல் அப்படியே தொடர்கிறது. இதனால், வர்த்தக அமைச்சகம் தனது கடன் மற்றும் அந்நியச் செலாவணி விகிதக் கொள்கைகளுக்காக நிதி அமைச்சகத்தின் முடிவுகளையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


அரசாங்கங்கள் கடனாளிகளாகத் தெரிவதைத் தவிர்க்க வேண்டும் என்ற அரசியல் அழுத்தமும் இதற்கு ஒரு காரணமாக இருந்தது. ஒரு விவசாயி கடனில் மூழ்கியிருப்பது போல, ஒரு நாடே கடனில் மூழ்கியிருப்பதாகக் கருதப்பட்டது.


பாகிஸ்தான் பலமுறை சர்வதேச நாணய நிதியத்தை (International Monetary Fund (IMF)) நாடியுள்ள நிலையில், ஒரு நாடு பொருளாதார ரீதியாக வலுவாக இருக்கிறது என்கிற பிம்பம் எப்போதும் உண்மையாக இருப்பதில்லை என்பதை அதன் நிலைமை காட்டுகிறது. இருப்பினும், இந்தியா இத்தகைய சூழலைத் தவிர்க்க முயன்றபோது, இந்திய அரசியல்வாதிகள் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்கத் தவறிவிட்டனர். அதாவது, ஒரு நாடு போதுமான வருவாயை ஈட்டினால், அது கடன் வாங்கவேண்டிய அவசியம் இருக்காது என்பதே ஆகும். இதன் விளைவாக, அவர்கள் நாட்டின் நடப்புக் கணக்கு நிலவரத்தைக் கவனத்தில் கொள்ளாமல் புறக்கணித்தனர். மேலும், இந்தியாவில் கடன் பற்றிய பயம் காரணமாக முதலீட்டு வரத்து பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது.


விளைவுகள்


வெளிப்புறத் துறையை (external sector) நிர்வகிக்கும் இந்த அணுகுமுறை இரண்டு முக்கிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. முதலாவதாக, உள்நாட்டுச் சேமிப்பு போதுமானதாக இல்லாதபோதும், வெளிநாட்டுச் சேமிப்பை முறையாகப் பயன்படுத்த அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இது நடப்புக் கணக்கு பற்றாக்குறையைச் சரிசெய்யாததுடன், மூலதனப் பற்றாக்குறைக்கும் வழிவகுத்துள்ளது. மேலும், கடனை ஒரு எதிர்மறையான விஷயமாகப் பார்க்கும் போக்கு, பொருளாதார வளர்ச்சியின் வேகத்தையும் குறைத்துள்ளது.


இரண்டாவதாக, இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவது, மூலதனத்தின் திறமையான பயன்பாட்டைக் குறைத்துள்ளது. இறக்குமதி வரிகள் மூலம் பாதுகாக்கப்படும் தொழில்களில் செய்யப்படும் முதலீடுகள், திறமையாகச் செயல்பட வேண்டும் என்கிற கட்டாயத்தை இழக்கின்றன. இதன் தாக்கம் தொழிலாளர் சந்தையிலும் எதிரொலிக்கிறது. அதாவது, சாதாரணச் சூழலில் இருக்க வேண்டியதைவிட, இத்தகைய சூழலில் தொழிலாளர்களின் ஊதியம் அதிகமாக உயர்கிறது.


இது போன்ற இன்னும் பல தவறுகள் இருந்தாலும், முதன்மையான கருத்து தெளிவாக உள்ளது. மூலதனக் கணக்கில் மட்டும் கவனம் செலுத்தி, நடப்புக் கணக்கை அலட்சியப்படுத்தியதன் மூலம் ஒரு பெரிய தவறு இழைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார அணுகுமுறையை மாற்றினால் மட்டுமே இந்தத் தவறைச் சரிசெய்ய முடியும் என்று கூறப்படுகிறது.


Original article : India’s capital account obsession. -TCA Srinivasa Raghavan

Share:

அடிக்கடி நிகழும் போரின் விளைவுகளைத் தணித்தல் -ப. சிதம்பரம்

 நிலைமை 'அனைத்தும் சாதாரணமாக உள்ளது' என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) போரினால் ஏற்படும் செலவுகள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருப்பதாகத் தெரிகிறது.


ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போர் வெகு தொலைவில் இல்லை. அது இந்தியத் துணைக்கண்டத்திற்கு மிக அருகிலுள்ள மேற்கு ஆசியாவில் நடந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான இந்தியர்கள் அங்கு வசித்து வேலை செய்து வருகின்றனர். பல இந்திய ஷியா முஸ்லிம்கள் ஈரான் மக்களுடன் வலுவான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஈரானுடன் தங்களுக்கு நீண்டகால வரலாற்றுத் தொடர்பு இருப்பதாகவும், சாபஹார் (Chabahar) துறைமுக மேம்பாடு போன்ற வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் இருப்பதாகவும் இந்தியா நீண்டகாலமாகக் கூறி வருகிறது. இருப்பினும், பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கத்தின்கீழ் இந்த உறவுகள் பலவீனமடைந்துள்ளன. இதற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான நெருக்கமான உறவு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.


இனிமேல் தேவையில்லை


கடந்த காலங்களில், ஏதேனும் மோதல்கள் ஏற்பட்டால் இருநாடுகளுக்கும் இடையே அமைதியை நிலைநாட்டக்கூடிய மிகச் சிறந்த நாடாக இந்தியா கருதப்பட்டது. ஆனால், இந்த முறை, பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளும் இந்தியாவை பெரும்பாலும் பொருட்படுத்தவில்லை. ஈரான் மட்டுமே அவ்வப்போது இந்தியாவிற்குத் தகவல்களைத் தெரிவித்து வந்தது. இஸ்ரேலை விமர்சிக்கும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது ஆதரவை இந்தியா காட்டியது. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டணி இந்தியாவை ஒதுக்கி வைத்துவிட்டு, அதற்குப் பதிலாக சமரச பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் நாடாக பாகிஸ்தானை  ஈடுபடுத்தியுள்ளது.


மேற்காசியப் போர் இந்தியாவின் மீது பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதை இனி மறுக்க முடியாது. இந்தப் போர் பல நாடுகளின் பொருளாதாரத்தைச் சிதைத்துள்ளது, குறிப்பாக உலகளாவிய வர்த்தகம், விநியோகச் சங்கிலிகள் மற்றும் கடல்வழிப் பாதைகளைச் சார்ந்துள்ள நாடுகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் பொருளாதாரக் குறியீடுகள் எவ்வாறு உள்ளன என்பதைப் பற்றி விரிவாக ஆராய்வோம்.


அமெரிக்க அதிபர் டிரம்பின் மிகைப்படுத்தப்பட்ட பேச்சுகளைப் பற்றி உலகம் நன்கு அறியும். ஈரானின் விமானப்படை மற்றும் கடற்படை அழிக்கப்பட்டுவிட்டன என்றோ, ஈரானிடம் ராணுவ பலம் எதுவுமே இல்லை என்றோ, அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்றோ அவர் கூறியபோது பலரும் அதை நம்பவில்லை. அதுமட்டுமன்றி, ஈரான் அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது அல்லது போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்ற அவரது அறிவிப்புகளையும் மக்கள் ஏற்கவில்லை. அடிக்கடி போரை நிறுத்துவதும், மீண்டும் தொடங்குவதும், இடைநிறுத்தி விடுவதுமாக, டிரம்ப் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஆனால், மறுபுறம் இஸ்ரேல், ஈரான் மற்றும் லெபனான்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் அதற்குப் பதிலடி கொடுத்து வருகிறது. உண்மையில், பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி தொடங்கிய அந்தப் போர் ஒருபோதும் முழுமையாக நிறுத்தப்படவில்லை.


எதுவும் இயல்பாக இல்லை


"எல்லாம் சாதாரணமாக இருக்கிறது" என்று அரசாங்கம் கூறினாலும், போரினால் ஏற்படும் செலவுகள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிக விழிப்புணர்வுடன் இருப்பதாகத் தெரிகிறது. ஏப்ரல் மாத அறிக்கையில், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள அழுத்தம், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களால் அதிகரித்து வரும் பணவீக்கம், கடன் பத்திரங்களின் வட்டி விகித உயர்வு, இறக்குமதி மந்தநிலை மற்றும் நிலையற்ற வெளிநாட்டு முதலீடுகள் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இந்த மோதல் நீடித்தாலோ அல்லது விநியோகச் சங்கிலி விரைவில் சீரமைக்கப்படாவிட்டாலோ, அது உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல் காரணங்களுக்காக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாமல் வைத்திருப்பதைத் தவிர, அரசாங்கம் பெரிதாக எதையும் செய்யவில்லை. நிகழ்வுகளைக் கவனித்துக்கொண்டு, அவை இந்தியப் பொருளாதாரத்தைப் பாதிக்காது என்று அரசாங்கம் நம்புவது போலத் தெரிகிறது.


இந்திய மக்கள் எதையும் தாங்கும் மனவலிமையும் பொறுமையும் கொண்டவர்கள், ஆனால் அவர்கள் அரசாங்கத்திடமிருந்து மிகக் குறைந்த அளவிலான ஆதரவையே எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் தங்கள் வேலைகளையும் வருமானத்தையும் பாதுகாக்கப் போராடி வருகின்றனர். சமையல் எரிவாயுவின் (LPG) விலை உயர்வு மற்றும் சீரற்ற விநியோகம் காரணமாக, பல வீடுகளிலும் உணவகங்களிலும் மீண்டும் விறகுகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். குடும்பங்கள் தங்களின் செலவுகளைக் குறைத்துக்கொண்டு, சேமிப்புப் பணத்தைப் பயன்படுத்தி வருகின்றன. வெளியில் பார்ப்பதற்கு நிலைமை சீராகத் தெரிந்தாலும், கிராமப்புறங்களில் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுவது தெளிவாகத் தெரிகிறது. அதேவேளையில், பிரதமர் நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், செப்டம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கான பிரச்சாரங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மே மாதம் 5-ஆம் தேதிக்குப் பிறகு, மீண்டும் ஆட்சி நிர்வாகப் பணிகளுக்குத் பிரதமர் திரும்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அரசாங்கம் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும்


மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்களின் வருமானத்தை உயர்த்தவும் அரசாங்கத்தால் இன்னும் கூடுதலான நடவடிக்கைகளை எடுக்க முடியும்:


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின்கீழ் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) வழங்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள ஊதியத்தை அரசு வழங்க முடியும். மேலும், தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டதிலிருந்து முடங்கிக் கிடக்கும் வேலைத் திட்டங்களை இதன் மூலம் மீண்டும் தொடங்க முடியும்.


கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தை (Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)) விரைவுபடுத்த முடியும். அதன்படி, 2026–27-ஆம் நிதியாண்டிற்காக ஒதுக்கப்பட்ட 19,000 கோடி ரூபாய் நிதியை 6–8 மாதங்களுக்குள்ளேயே செலவிட முடியும் (2025–26 நிதியாண்டில் பயன்படுத்தப்படாமல் மீதமிருந்த 6,871 கோடி ரூபாய் போலல்லாமல்). மேலும், தேவைப்பட்டால் இத்திட்டத்திற்கு கூடுதல் நிதியையும் ஒதுக்கீடு செய்ய முடியும்.


2025–26 ஆம் நிதியாண்டில், ஒன்றிய அரசின் குடிநீர் திட்டமான ஜல் ஜீவன் திட்டத்திற்கு (Jal Jeevan Mission (JJM)) 67,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இருப்பினும், திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி 17,000 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2026–27-ஆம் நிதியாண்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 67,670 கோடி ரூபாய் நிதிஒதுக்கீட்டுத் தொகையை முன்கூட்டியே செலவிட முடியும் என்பதால், அந்த நிதியை மாநிலங்களுக்கு விரைவாக விடுவிக்க வேண்டும்.


கொரோனா (COVID-19) பெருந்தொற்று காலத்தில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளைப் போலல்லாமல், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (Micro, Small and Medium Enterprises (MSMEs)) கடன் வழங்குவதால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட அரசாங்கம் நிதி ஒதுக்க வேண்டும். மேலும், வங்கிகள் விரைவாகக் கடன் வழங்குவதை உறுதி செய்யவும், நலிவடைந்துவரும் இத்துறையை மீட்டெடுக்கவும் அரசு தெளிவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


பொதுச் சொத்துக்களுக்கான முதலீடு, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் தனிநபர் வருமானத்தை அதிகரித்தல் போன்றவை, மேற்காசிய நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படும் பாதிப்புகளைக் கையாள்வதற்கு ஒரு சிறந்த வழியாகும். எதுவுமே செய்யாமல் இருப்பதைவிட, இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


Original article : Mitigating costs of start-stop war. -P Chidambaram

Share:

1993-ல் கட்சித் தாவல் வழக்குகளில் சபாநாயகரின் பங்கு எப்போது சோதிக்கப்பட்டது? -சக்ஷு ராய்

 1993 மார்ச் மாதம், இந்தியாவின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற ஒரே மாதத்திலேயே, நீதிபதி எம்.என். வெங்கடாசலையா ஒரு அரசியலமைப்பு நெருக்கடியைச் சந்தித்தார். மணிப்பூர் சட்டமன்ற சபாநாயகரான டாக்டர் எச்.போரோபாபு சிங், உச்சநீதிமன்றத்தின் முன் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், சபாநாயகர் நீதிமன்றத்தின் முன் ஆஜராகத் தொடர்ந்து மறுத்து வந்தார். இதன் விளைவாக, உச்சநீதிமன்றத்திற்கும் சபாநாயகருக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது.


இதேபோன்ற ஒரு நிகழ்வு, முன்னதாக 1964-ல் நீதித்துறைக்கும் உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது, ​​அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கைது செய்யுமாறு சட்டமன்றம் உத்தரவிட்டிருந்தது. சபாநாயகர் தொடர்ந்து நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் கண்ணியத்தையும் மீறி நடந்தால் என்ன செய்வது என்று நீதிபதி வெங்கடாச்சலையா யோசித்திருக்க வேண்டும். 1993-ம் ஆண்டு ஏற்பட்ட இந்த நெருக்கடியானது, மணிப்பூரில் ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறியது (கட்சித் தாவல்) தொடர்பான ஒரு வழக்கிலிருந்து உருவானதாகும்.


கட்சித் தாவல் தடைச் சட்டம் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியைச் (AAP) சேர்ந்த ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் பாஜகவுடன் இணைய விரும்புவதாக மாநிலங்களவைத் தலைவரிடம் தெரிவித்துள்ளனர். மாநிலங்களவைச் செயலகம், இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் கட்சி இணைப்புகளை நாடாளுமன்ற இணையதளத்தில் புதுப்பித்து, தற்போது அவர்களை பாஜக உறுப்பினர்களாகப் பட்டியலிட்டுள்ளது. மே 4, திங்கட்கிழமை அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள அசாம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களில் ஏதேனும் தொங்கு சபைகள் ஏற்பட்டால், இந்த கட்சித் தாவல் சட்டம் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடும்.


நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்குத் தங்கள் விசுவாசத்தை மாற்றுவதைத் தடுப்பதற்காக, நாடாளுமன்றம் அரசியலமைப்பில் 10-வது அட்டவணையை (கட்சித் தாவல் தடைச் சட்டம் எனப் பரவலாக அறியப்படுகிறது) சேர்த்தது. கட்சித் தாவல் வழக்குகளை சட்டமன்றத்தின் அவைத் தலைவர்களே முடிவு செய்வார்கள் என்றும், அவர்களின் முடிவுகளே இறுதியானவை என்றும் குறிப்பிடுகிறது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்/சட்டமன்ற உறுப்பினர் கட்சித் தாவியுள்ளார் என்று சபாநாயகர் முடிவு செய்தால், அந்த உறுப்பினர் சட்டமன்றத்தில் தனது பதவியை இழப்பார். 1985-ல் நாடாளுமன்றம் இந்தச் சட்டத்தை இயற்றியபோது, ​​இந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதையும் அது தடை செய்தது.


அரசியலமைப்புத் திருத்தம் குறித்த விவாதத்தின்போது, ​​கட்சித் தாவல் வழக்குகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை அவைத் தலைவர்களுக்கு வழங்குவதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்தனர். மக்களவை உறுப்பினர் எஸ்.ஜெய்பால் ரெட்டி, பெரும்பான்மையினரே சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதால், அவர் ஆளும் கட்சி மற்றும் அதன் தலைமையின் கட்டுப்பாட்டில் இருப்பார் என்று வாதிட்டு, இந்த ஏற்பாட்டை எதிர்த்தார். மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் மது தண்டவதே, இந்த அதிகாரம் சபாநாயகரைத் தேவையற்ற சர்ச்சைகளில் சிக்க வைக்கும் என்று கவலை தெரிவித்தார்.


அரசாங்கங்களை அமைக்கும் மற்றும் கலைக்கும் அதிகாரம் சபாநாயகர்களுக்கு அதிகரித்து வருவதால், அரசியல் சார்பற்றதாகக் கருதப்படும் அந்தப் பதவி பெரும் அரசியல் அழுத்தத்திற்கு உள்ளானது. உதாரணமாக, ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ​​வாக்கெடுப்பு நடந்துகொண்டிருந்தபோதே, ஒரு சபாநாயகர் அவையில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்தார்.



மற்றொரு நிகழ்வில், ஒரு சபாநாயகர் சில சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்தார். பின்னர் அவரே பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பின் வந்த அடுத்த சபாநாயகர், முந்தைய சபாநாயகரின் அந்தத் தகுதிநீக்க முடிவை ரத்து செய்தார். கட்சித் தாவிய சட்டமன்ற உறுப்பினர்களால் ஒரு அரசாங்கம் கவிழ்ந்த பிறகு, மற்றொரு சபாநாயகர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்னும் ஒரு நிகழ்வில், ஒரு சபாநாயகர் சில சட்டமன்ற உறுப்பினர்களை ஒரு நாளில் தகுதிநீக்கம் செய்தார், மறுநாளே அவர்களை மீண்டும் பதவியில் அமர்த்தினார்.


1991-ம் ஆண்டு ஜூலை மாதம், மணிப்பூர் சட்டமன்ற சபாநாயகரான டாக்டர் சிங், கட்சித் தாவல் காரணமாக ஏழு காங்கிரஸ் (ஐ) சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்தார். கட்சித் தாவல் வழக்குகளில் கோவா, குஜராத், மணிப்பூர், மேகாலயா, மத்தியப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து சட்டமன்ற சபாநாயகர்கள் எடுத்த முடிவுகளுடன் சேர்த்து, இவருடைய முடிவும் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் (இது கிஹோட்டோ ஹொல்லோஹன் வழக்கு என அறியப்படுகிறது) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


நீதிபதி வெங்கடாசலையா இடம்பெற்றிருந்த இந்த அமர்வு, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மையை ஆய்வு செய்தது. இந்தச் சட்டம் செல்லுபடியாகும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தபோதிலும், சபாநாயகரின் முடிவுகள் மீதான நீதித்துறை மறுஆய்வைக் கட்டுப்படுத்திய விதியை ரத்து செய்தது. 1991 நவம்பரில், ஏழு சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்த மணிப்பூர் சபாநாயகரின் முடிவையும் நீதிமன்றம் ரத்து செய்தது.


உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதை சபாநாயகர் எதிர்த்தார். சட்டமன்றச் செயலாளர் நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த முயன்றபோது, ​​சபாநாயகர் அவரைப் பதவியிலிருந்து நீக்கினார். இந்தச் செயலாளர் தாக்கல் செய்த ஒரு வழக்கில், உச்சநீதிமன்றம் டாக்டர் எச்.போரோபாபு சிங்கை பலமுறை ஆஜராகுமாறு கேட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவுகளிலிருந்து தனக்கு அரசியலமைப்புரீதியான விலக்குரிமை இருப்பதாகக் கூறி சபாநாயகர் மறுத்துவிட்டார். டாக்டர் எச்.போரோபாபு சிங்கை சபாநாயகராக அல்ல, மாறாக சட்டமன்றத்தின் நிர்வாகத் தலைவராக ஆஜராகுமாறு உத்தரவிடுவதாக நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


சபாநாயகர் உச்சநீதிமன்றத்தில் ஆஜராக மறுத்த நிலையில், ஓராண்டு காலம் முழுமையாகக் கடந்து சென்றது. பின்னர், 1993 பிப்ரவரியில், சபாநாயகரின் வருகையை உறுதி செய்வதற்காக, “குறைந்தபட்ச பலத்தைப்” பயன்படுத்துவது உட்பட, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.


பின்னர், சபாநாயகரை டெல்லிக்கு அழைத்து வருவதற்காக மத்திய அரசு மணிப்பூருக்கு ஒரு எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force(BSF)) விமானத்தை அனுப்பியது.


சபாநாயகர் நீதிமன்றத்தின் முன் ஆஜராக வேண்டியிருந்த அந்த நாள், அரசாங்கத்திற்கு மிகவும் பதற்றமான ஒரு தருணமாக அமைந்தது. சட்டத்துறை இணை அமைச்சர் எச். ஆர். பரத்வாஜ், “சபாநாயகரின் கண்ணியம் மற்றும் நீதிமன்றத்தின் கண்ணியம் குறித்து அரசாங்கம் மிகவும் அக்கறை கொண்டுள்ளது. மேலும், இந்த இரு நிறுவனங்களுக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது, ​​அது ஒட்டுமொத்த தேசத்திற்கும் கவலையளிக்கும் ஒரு விஷயமாகும்,” என்று குறிப்பிட்டார்.


மணிப்பூர் சபாநாயகர் டாக்டர் எச்.போரோபாபு சிங், பிற்பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றத்திற்கு வந்தார். நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜரானதன் மூலம், ஒரு அரசியலமைப்பு நெருக்கடி தவிர்க்கப்பட்டது. நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளையும் தாம் முழுமையாகப் பின்பற்றியதாகக் குறிப்பிட்டு, அவர் ஒரு பிரமாணப் பத்திரத்தைச் சமர்ப்பித்தார். மேலும், நீதிமன்றம் அவருக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட்டது. நீதிமன்றம், சட்டமன்றம் மற்றும் அரசாங்கம் இந்த குறிப்பிட்ட நெருக்கடியைத் தவிர்க்க முடிந்தது. ஆனால், முப்பதாண்டுகளுக்குப் பிறகும், கட்சித் தாவல் தடைச் சட்டம், தலைமை நீதிபதிகளின் நற்பெயருக்குத் தொடர்ந்து களங்கத்தை ஏற்படுத்தி வருவதோடு, அவர்களை நீதிமன்றங்களுடன் முரண்படும் சூழலுக்கும் தொடர்ந்து தள்ளி வருகிறது.


Original article : When Speaker’s role in defection cases was tested in 1993?. -Chakshu Roy

Share: