அடிக்கடி நிகழும் போரின் விளைவுகளைத் தணித்தல் -ப. சிதம்பரம்

 நிலைமை 'அனைத்தும் சாதாரணமாக உள்ளது' என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) போரினால் ஏற்படும் செலவுகள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருப்பதாகத் தெரிகிறது.


ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போர் வெகு தொலைவில் இல்லை. அது இந்தியத் துணைக்கண்டத்திற்கு மிக அருகிலுள்ள மேற்கு ஆசியாவில் நடந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான இந்தியர்கள் அங்கு வசித்து வேலை செய்து வருகின்றனர். பல இந்திய ஷியா முஸ்லிம்கள் ஈரான் மக்களுடன் வலுவான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஈரானுடன் தங்களுக்கு நீண்டகால வரலாற்றுத் தொடர்பு இருப்பதாகவும், சாபஹார் (Chabahar) துறைமுக மேம்பாடு போன்ற வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் இருப்பதாகவும் இந்தியா நீண்டகாலமாகக் கூறி வருகிறது. இருப்பினும், பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கத்தின்கீழ் இந்த உறவுகள் பலவீனமடைந்துள்ளன. இதற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான நெருக்கமான உறவு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.


இனிமேல் தேவையில்லை


கடந்த காலங்களில், ஏதேனும் மோதல்கள் ஏற்பட்டால் இருநாடுகளுக்கும் இடையே அமைதியை நிலைநாட்டக்கூடிய மிகச் சிறந்த நாடாக இந்தியா கருதப்பட்டது. ஆனால், இந்த முறை, பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளும் இந்தியாவை பெரும்பாலும் பொருட்படுத்தவில்லை. ஈரான் மட்டுமே அவ்வப்போது இந்தியாவிற்குத் தகவல்களைத் தெரிவித்து வந்தது. இஸ்ரேலை விமர்சிக்கும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது ஆதரவை இந்தியா காட்டியது. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டணி இந்தியாவை ஒதுக்கி வைத்துவிட்டு, அதற்குப் பதிலாக சமரச பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் நாடாக பாகிஸ்தானை  ஈடுபடுத்தியுள்ளது.


மேற்காசியப் போர் இந்தியாவின் மீது பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதை இனி மறுக்க முடியாது. இந்தப் போர் பல நாடுகளின் பொருளாதாரத்தைச் சிதைத்துள்ளது, குறிப்பாக உலகளாவிய வர்த்தகம், விநியோகச் சங்கிலிகள் மற்றும் கடல்வழிப் பாதைகளைச் சார்ந்துள்ள நாடுகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் பொருளாதாரக் குறியீடுகள் எவ்வாறு உள்ளன என்பதைப் பற்றி விரிவாக ஆராய்வோம்.


அமெரிக்க அதிபர் டிரம்பின் மிகைப்படுத்தப்பட்ட பேச்சுகளைப் பற்றி உலகம் நன்கு அறியும். ஈரானின் விமானப்படை மற்றும் கடற்படை அழிக்கப்பட்டுவிட்டன என்றோ, ஈரானிடம் ராணுவ பலம் எதுவுமே இல்லை என்றோ, அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்றோ அவர் கூறியபோது பலரும் அதை நம்பவில்லை. அதுமட்டுமன்றி, ஈரான் அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது அல்லது போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்ற அவரது அறிவிப்புகளையும் மக்கள் ஏற்கவில்லை. அடிக்கடி போரை நிறுத்துவதும், மீண்டும் தொடங்குவதும், இடைநிறுத்தி விடுவதுமாக, டிரம்ப் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஆனால், மறுபுறம் இஸ்ரேல், ஈரான் மற்றும் லெபனான்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் அதற்குப் பதிலடி கொடுத்து வருகிறது. உண்மையில், பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி தொடங்கிய அந்தப் போர் ஒருபோதும் முழுமையாக நிறுத்தப்படவில்லை.


எதுவும் இயல்பாக இல்லை


"எல்லாம் சாதாரணமாக இருக்கிறது" என்று அரசாங்கம் கூறினாலும், போரினால் ஏற்படும் செலவுகள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிக விழிப்புணர்வுடன் இருப்பதாகத் தெரிகிறது. ஏப்ரல் மாத அறிக்கையில், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள அழுத்தம், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களால் அதிகரித்து வரும் பணவீக்கம், கடன் பத்திரங்களின் வட்டி விகித உயர்வு, இறக்குமதி மந்தநிலை மற்றும் நிலையற்ற வெளிநாட்டு முதலீடுகள் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இந்த மோதல் நீடித்தாலோ அல்லது விநியோகச் சங்கிலி விரைவில் சீரமைக்கப்படாவிட்டாலோ, அது உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல் காரணங்களுக்காக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாமல் வைத்திருப்பதைத் தவிர, அரசாங்கம் பெரிதாக எதையும் செய்யவில்லை. நிகழ்வுகளைக் கவனித்துக்கொண்டு, அவை இந்தியப் பொருளாதாரத்தைப் பாதிக்காது என்று அரசாங்கம் நம்புவது போலத் தெரிகிறது.


இந்திய மக்கள் எதையும் தாங்கும் மனவலிமையும் பொறுமையும் கொண்டவர்கள், ஆனால் அவர்கள் அரசாங்கத்திடமிருந்து மிகக் குறைந்த அளவிலான ஆதரவையே எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் தங்கள் வேலைகளையும் வருமானத்தையும் பாதுகாக்கப் போராடி வருகின்றனர். சமையல் எரிவாயுவின் (LPG) விலை உயர்வு மற்றும் சீரற்ற விநியோகம் காரணமாக, பல வீடுகளிலும் உணவகங்களிலும் மீண்டும் விறகுகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். குடும்பங்கள் தங்களின் செலவுகளைக் குறைத்துக்கொண்டு, சேமிப்புப் பணத்தைப் பயன்படுத்தி வருகின்றன. வெளியில் பார்ப்பதற்கு நிலைமை சீராகத் தெரிந்தாலும், கிராமப்புறங்களில் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுவது தெளிவாகத் தெரிகிறது. அதேவேளையில், பிரதமர் நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், செப்டம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கான பிரச்சாரங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மே மாதம் 5-ஆம் தேதிக்குப் பிறகு, மீண்டும் ஆட்சி நிர்வாகப் பணிகளுக்குத் பிரதமர் திரும்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அரசாங்கம் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும்


மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்களின் வருமானத்தை உயர்த்தவும் அரசாங்கத்தால் இன்னும் கூடுதலான நடவடிக்கைகளை எடுக்க முடியும்:


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின்கீழ் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) வழங்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள ஊதியத்தை அரசு வழங்க முடியும். மேலும், தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டதிலிருந்து முடங்கிக் கிடக்கும் வேலைத் திட்டங்களை இதன் மூலம் மீண்டும் தொடங்க முடியும்.


கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தை (Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)) விரைவுபடுத்த முடியும். அதன்படி, 2026–27-ஆம் நிதியாண்டிற்காக ஒதுக்கப்பட்ட 19,000 கோடி ரூபாய் நிதியை 6–8 மாதங்களுக்குள்ளேயே செலவிட முடியும் (2025–26 நிதியாண்டில் பயன்படுத்தப்படாமல் மீதமிருந்த 6,871 கோடி ரூபாய் போலல்லாமல்). மேலும், தேவைப்பட்டால் இத்திட்டத்திற்கு கூடுதல் நிதியையும் ஒதுக்கீடு செய்ய முடியும்.


2025–26 ஆம் நிதியாண்டில், ஒன்றிய அரசின் குடிநீர் திட்டமான ஜல் ஜீவன் திட்டத்திற்கு (Jal Jeevan Mission (JJM)) 67,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இருப்பினும், திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி 17,000 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2026–27-ஆம் நிதியாண்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 67,670 கோடி ரூபாய் நிதிஒதுக்கீட்டுத் தொகையை முன்கூட்டியே செலவிட முடியும் என்பதால், அந்த நிதியை மாநிலங்களுக்கு விரைவாக விடுவிக்க வேண்டும்.


கொரோனா (COVID-19) பெருந்தொற்று காலத்தில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளைப் போலல்லாமல், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (Micro, Small and Medium Enterprises (MSMEs)) கடன் வழங்குவதால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட அரசாங்கம் நிதி ஒதுக்க வேண்டும். மேலும், வங்கிகள் விரைவாகக் கடன் வழங்குவதை உறுதி செய்யவும், நலிவடைந்துவரும் இத்துறையை மீட்டெடுக்கவும் அரசு தெளிவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


பொதுச் சொத்துக்களுக்கான முதலீடு, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் தனிநபர் வருமானத்தை அதிகரித்தல் போன்றவை, மேற்காசிய நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படும் பாதிப்புகளைக் கையாள்வதற்கு ஒரு சிறந்த வழியாகும். எதுவுமே செய்யாமல் இருப்பதைவிட, இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


Original article : Mitigating costs of start-stop war. -P Chidambaram

Share: