குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கும் முறை, மாறிவரும் சூழலைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். -மோஹித் ஷர்மா

வட்டிச் செலவுகளைக் கணக்கிடும் முறையை மேம்படுத்துவதும், உள்ளீடு பொருட்களின் மாறிவரும் விலைகளைச் சரியாகக் கணக்கில் கொள்வதும், வேளாண் தொழிலாளர்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் பயிரிட ஊக்குவிக்க உதவும்.


இந்தியாவின் குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price (MSP)) முறையானது, பயிர் சாகுபடிக்கு ஆகும் செலவை மதிப்பிடுவதன் அடிப்படையில் அமைந்துள்ளது. இது முக்கியமாக மத்திய வேளாண் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பொருளாதார மற்றும் புள்ளிவிவர இயக்குநரகம் (Directorate of Economics and Statistics) நடத்தும் பயிர் சாகுபடி செலவை ஆய்வு செய்வதற்கான விரிவான திட்டத்தை (Comprehensive Scheme for Studying Cost of Cultivation) அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.


இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகால மாதிரி ஆய்வு முறையைப் (Three-year sampling method) பின்பற்றுகிறது. இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சில கிராமங்கள் மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகின்றன, அதன் பிறகு அந்த இடத்திற்குப் பதிலாக வேறு கிராமங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இந்த ஆய்வு முறை அறிவியல் ரீதியாகத் துல்லியமானதாகக் கருதப்பட்டாலும், இந்திய வேளாண் துறையில் கடந்த காலங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ள சூழலில், இந்த பழைய நடைமுறை மட்டும் காலத்திற்கு ஏற்ப மாற்றப்படாமலேயே தொடர்வதாகக் கூறப்படுகிறது.


குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) நிர்ணயிப்பதில் உள்ள ஒரு முக்கியமான சிக்கல் என்னவென்றால், அதற்கான முடிவுகள் பெரும்பாலும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் பழமையான செலவுத் தரவுகளின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன. உதாரணமாக, 2021–22-ஆம் ஆண்டில் உலகளவில் உரங்களின் விலை உயர்ந்தது, டீசல் விலையும் அதிகரித்தது, மேலும் தொழிலாளர்களுக்கான கூலியும் ஓரளவிற்கு அதிகரித்தது. உள்ளீடு பொருட்களின் விலையில் திடீர் ஏற்றம் ஏற்படும் காலங்களில் இந்த முறை துல்லியமாக இருப்பதில்லை என்கின்றனர். மேலும், வேளாண் தொழிலாளர்களின் உண்மையான சாகுபடி செலவிற்கும், அரசு கணக்கிடும் செலவிற்கும் இடையே இடைவெளிகள் இருப்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. பயிர் சாகுபடிச் செலவுகள் துல்லியமாக அளவிடப்பட்டால், நிர்ணயிக்கப்பட்ட லாப வரம்பைத் தக்கவைக்க பல பயிர்களுக்கான ஆதரவு விலை தற்போது இருப்பதைவிட 20-30% அதிகமாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.


வேளாண் துறை இயந்திரமயமாக்கலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் ஒரு நுட்பமான இடைவெளி உருவாகி வருகிறது. தற்போதைய முறையில், ஒரு வேளாண் தொழிலாளர் சொந்தமாக வைத்துள்ள இயந்திரங்களுக்கான செலவு (தேய்மானம் மற்றும் வட்டி மூலம் கணக்கிடப்படுகிறது) மற்றும் அவர் வாடகைக்கு எடுத்த இயந்திர சேவைகளுக்கான செலவு (நேரடிச் செலவுகளில் சேர்க்கப்படுகிறது) எனத் தனித்தனியாகப் பிரிக்கப்படுகிறது. இது ஒரே செலவை இருமுறை கணக்கிடுவதைத் தவிர்க்க உதவுகிறது. வேளாண்துறை இயந்திரமயமாக்கலுக்கான துணைத் திட்டத்தின்கீழ் (Sub-Mission on Agricultural Mechanization (SMAM)), 2014-15-ஆம் ஆண்டு முதல் 2024-25-ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மாநிலங்களுக்கு 8,565 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.9 மில்லியனுக்கும் அதிகமான இயந்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன மற்றும் ஆயிரக்கணக்கான அரசு வாடகை மையங்கள் (Custom Hiring Centres) அமைக்கப்பட்டுள்ளன. அரசின் இந்த அதீத கவனமும், வாடகை மையங்களின் வேகமான வளர்ச்சியும் குறிப்பாகச் சிறு மற்றும் குறு விவசாயிகள் இயந்திரங்களைப் பயன்படுத்தும் முறையை மாற்றியுள்ளன. இருப்பினும், தற்போது புழக்கத்தில் உள்ள மூன்று ஆண்டுகால மாதிரி ஆய்வுமுறை இன்னும் பழைய முறைகளையே பிரதிபலிக்கக்கூடும், அதாவது இயந்திரங்களைச் சொந்தமாக வைத்திருப்பதே பொதுவான விஷயமாக இருந்த காலத்தின் தரவுகளையே காட்ட வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.


பல்வேறு காரணிகள்


ஆய்வு முறைகளில் உள்ள இத்தகைய குறைபாடுகள் செலவினங்களை மதிப்பிடுவதன் துல்லியத்தைப் பாதிக்கின்றன. இருப்பினும், பயிர் சாகுபடி முறைகள் போன்ற பெரிய அளவிலான முடிவுகளை மட்டுமே இவை தீர்மானிப்பதில்லை. பல்வேறு மாநிலங்களில் இருந்து கிடைக்கும் தரவுகளின்படி, பயிர் சாகுபடியில் மாற்றங்களைக் கொண்டு வருவது என்பது வெறும் சாகுபடி செலவு மதிப்பீடுகளைச் சார்ந்தது அல்ல. மாறாக, விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்யும் உறுதி, பாசன வசதி, உள்ளீடு பொருள் மானியங்கள் (Input subsidies) மற்றும் சந்தை வாய்ப்புகள் போன்ற காரணிகளையே அதிகம் சார்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வலுவான சந்தை அமைப்புகள் இருப்பதால், அங்கு பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்திப் பங்கு அதிகமாக உள்ளது. ஆனால், இதற்கு நேர்மாறாக பஞ்சாப் மாநிலத்தில் இன்னும் நெல்-கோதுமை பயிரிடும் முறையே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.


இந்த வேறுபாடு ஒரு முக்கியமான விஷயத்தை உணர்த்துகிறது: நடைமுறையில், குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) என்பது உற்பத்திச் செலவை அடிப்படையாகக் கொண்ட ஒரு விலை சமிக்ஞையாகச் செயல்படுவதைவிட, அரசாங்கத்தின் கொள்முதல் உத்தரவாதமாகவே அதிகம் பார்க்கப்படுகிறது. பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டாலும், போதிய அளவில் அரசு கொள்முதல் செய்யாதது வேளாண் தொழிலாளர்களின் பயிர் தேர்வு முடிவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மேலும், பல பகுதிகளில் பல பயிர்களின் சந்தை விலை, அரசாங்கம் நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக் குறைவாகவே இருப்பதை தரவுகள் காட்டுகின்றன.


எனவே, குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) முடிவுகளில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன. முதலாவதாக, சந்தை நிலைத்தன்மையுடன் இருக்கும் காலங்களில், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் உண்மையான உற்பத்திச் செலவுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைவாகவே இருக்கும், இதனால் இந்தத் திட்டம், திட்டமிட்டபடி சரியாகச் செயல்படுகிறது. இரண்டாவதாக, உள்ளீடு பொருட்களின் (உரம், விதைகள் போன்றவை) விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்போது, உற்பத்திச் செலவைக் கணக்கிடுவதில் ஏற்படும் தாமதங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையின் லாப வரம்பைக் குறைக்கக்கூடும். இதன் காரணமாக, ஆதரவு விலை உயர்த்தப்பட்டாலும் வேளாண் தொழிலாளர்களின் உண்மையான லாபம் குறைகிறது. இந்தியாவில் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) குறித்த விவாதம் பெரும்பாலும் விலை தொடர்பான பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மையில் இது செலவினங்களைக் கணக்கிடும் முறை மற்றும் அதன் பலன்கள் வேளாண் தொழிலாளர்களைச் சென்றடைவதில் உள்ள சிக்கலாகப் பார்க்கப்படுகிறது.


கணக்கிடப்பட்ட சீர்திருத்தம்


இந்தப் பிரச்சனைகளைச் சரிசெய்ய கவனமான சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. வட்டி விகிதங்களைக் கணக்கிடும் முறையை மேம்படுத்துவது மற்றும் எரிபொருள், உரங்கள் போன்ற மாறும் செலவுகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவு மாற்றங்களை அனுமதிப்பது ஆகியவற்றை முதலில் பயிர் பல்வகைப்படுத்தல் தேவைப்படும் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களில் சோதனை செய்து பார்க்கலாம். பின்னர், தரவு சேகரிப்பு மற்றும் மண்டல வாரியான விரிவாக்கத்தை படிப்படியாக மேம்படுத்துவதோடு, இந்த மாற்றங்களை அனைத்து குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) பயிர்களுக்கும் விரிவுபடுத்தலாம். அரசின் கொள்கைகளை அதிக நம்பகத்தன்மையுடனும் துல்லியமாகவும் மாற்றுவதால் கிடைக்கும் பலன்களுடன் ஒப்பிடுகையில், இதற்காக அரசுக்கு ஏற்படும் செலவு மிகவும் குறைவாகவே இருக்கும் என்கின்றனர்.


இந்தியாவின் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) முறை உணவுப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. இருப்பினும், முந்தைய காலக்கட்டத்தின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த முறை, வேளாண் துறை மாறிவரும் இன்றைய சூழலில் காலாவதியான ஒன்றாக மாறும் அபாயத்தில் உள்ளது. தற்போதுள்ள நடைமுறைகளைச் சிதைக்காமல், சாகுபடிச் செலவு மதிப்பீட்டை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, படிப்படியாகவும் திட்டமிட்டபடியும் இந்த முறையைப் புதுப்பிப்பது அதன் நம்பகத்தன்மையையும் செயல்திறனையும் அதிகரிக்கும். சாகுபடிச் செலவு மதிப்பீடுகள் உண்மையான கள நிலவரங்களோடு ஒத்துப்போகும்போது, குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) என்பது வெறும் பாதுகாப்பு அம்சமாக மட்டுமல்லாமல், நீண்டகால வேளாண் துறை வளர்ச்சிக்கான ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மோஹித் ஷர்மா, பீகார் மாநிலம் சமஸ்திபூர் பூசாவில் உள்ள, டாக்டர் ராஜேந்திர பிரசாத் மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தில், வேளாண் வணிகத் துறையின் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

 

Original article : MSP methodology should reflect changing reality. -Mohit Sharma

Share: