ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்ட இடையூறுகளுக்குப் பிறகு, ஆசிய நாடுகள் தங்களின் எரிசக்தி பாதுகாப்பிற்காக ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும். -விக்ரம் எஸ் மேத்தா

 ஆசியாவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்காக ஓர் அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சியை இந்தியா முன்னெடுக்க வேண்டும். அந்த அமைப்பு மூன்று முக்கிய இலக்குகளைக் கொண்டிருக்க வேண்டும்.

சர்வதேச எரிசக்தி முகமையின் (International Energy Agency (IEA)) தலைவர் பாத்திஹ் பிரோல், உலகம் தற்போது இதுவரை கண்டிராத மிகப்பெரிய எரிசக்தி பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக சமீபத்தில் எச்சரித்துள்ளார். இது யோம் கிப்பூர் போர், ஈரானிய புரட்சி மற்றும் ரஷ்யா-உக்ரைன் மோதல் ஆகியவற்றின் கூட்டு விளைவுகளைவிட மோசமானது என்று குறிப்பிட்டுள்ளார். 1973-ஆம் ஆண்டு நடைபெற்ற போருக்குப் பிறகுதான் சர்வதேச எரிசக்தி முகமை உருவாக்கப்பட்டது. அந்தப் போர், எண்ணெய் விலையை கடுமையாக உயர்த்தியதுடன் உலகளாவிய பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலடியாக, எண்ணெய் விநியோகத் தடைகளையும், அரபு பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பின் (Organisation of Arab Petroleum Exporting Countries (OAPEC)) ஆதிக்கத்தையும் எதிர்கொள்வதற்கான ஒரு அமைப்பை உருவாக்க, 1974-ஆம் ஆண்டில் ஹென்றி கிஸிஞ்சர் மேற்கத்திய நாட்டுத் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டினார். இதன் விளைவாகவே சர்வதேச எரிசக்தி முகமை (IEA) உருவானதாகக் கூறப்படுகிறது.

ஐம்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மூடப்பட்டதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் ஆசிய நாடுகளை ஒன்றிணைத்து ஒரு வலுவான அமைப்பை இந்தியா உருவாக்க  வேண்டும். இந்த அமைப்பு மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும்: முதலாவதாக, ஆசிய கடல்வழிப் பாதை வழியாக உறுப்பு நாடுகளின் கப்பல்கள் தடையின்றி பயணிக்கும் உரிமையைப் பாதுகாப்பது; இரண்டாவதாக, உறுப்பு நாடுகளின் கூட்டு கொள்முதல் வலிமையைப் பயன்படுத்தி, மத்திய கிழக்கு ஏற்றுமதியாளர்களின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தைக் குறைப்பது; மூன்றாவதாக, உறுப்பு நாடுகளின் பகிரப்பட்ட தொழில்நுட்ப, நிதி மற்றும் மனித வளங்களைப் பயன்படுத்தி பசுமை ஆற்றல் மாற்றத்தை விரைவுபடுத்துவது. இந்த அமைப்பிற்கு, ஆசிய எரிசக்தி ஒத்துழைப்புக் கழகம் Asian Energy Collaborative Compact (AECC)) என்று பெயரிடலாம் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பது, எரிசக்தி இறக்குமதியைச் சார்ந்திருக்கும் ஆசிய நாடுகளுக்கு இரண்டு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது கடுமையான எரிசக்தி தட்டுப்பாட்டை உருவாக்கியதுடன், கடல்வழிப் போக்குவரத்து நெரிசல் புள்ளிகளை மட்டுமே நம்பியிருப்பதிலுள்ள அபாயத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது. ஏறத்தாழ 1.3 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் இந்த கடல்வழிப் பாதையில் சிக்கியுள்ளன. இதில் சுமார் 85% ஆசிய சந்தைகளுக்காகக் கொண்டு வரப்பட்டவை ஆகும். இதன் விளைவாக, பல ஆசிய நாடுகள் எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. பிலிப்பைன்ஸ் நாடு 'தேசிய எரிசக்தி அவசரநிலையை' பிரகடனப்படுத்தியுள்ளது, ஜப்பான் தனது படகு மற்றும் பேருந்து சேவைகளைக் குறைத்துள்ளது, மற்றும் இந்தியா வணிகரீதியான பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது. சீனா தனது உள்நாட்டு பயன்பாட்டைக் குறைத்துள்ளது, இருப்பினும் ரஷ்யாவிலிருந்து வரும் விநியோகம் மற்றும் அதன் எண்ணெய் இருப்பு காரணமாக அந்நாட்டின் பாதிப்பு ஓரளவுக்குக் குறைந்துள்ளது.


இந்தக் கடல்வழிப் பாதை முடக்கம், மற்ற முக்கிய கடல்வழிப் பாதைகள் மூலமாகத் தங்களுக்கு எவ்வளவு ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்பதை உலக நாடுகள் உணர்ந்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மட்டுமின்றி, எரிசக்தி விநியோகங்கள் மலாக்கா ஜலசந்தி (Strait of Malacca) மற்றும் கிழக்கே உள்ள தைவான் ஜலசந்தி (Taiwan Strait) மற்றும் தென் சீனக் கடல் (South China Sea) வழியாகவும் செல்ல வேண்டியுள்ளது. சர்வதேச கடல் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கையின்கீழ் (United Nations Convention on the Law of the Sea (UNCLOS)), சர்வதேச எல்லைக்குட்பட்ட இந்த நீர்வழிப் பாதைகளில் அனைத்துக் கப்பல்களுக்கும் "தடையற்ற மற்றும் அமைதியான முறையில் கடந்து செல்லும் உரிமை" உண்டு. ஈரானின் இந்த நடவடிக்கை, அந்த உரிமையை மீறியுள்ளதுடன், ஒரு முக்கியமான கவலையையும் எழுப்பியுள்ளது: மற்ற முக்கிய பாதைகளும் இதேபோல் முடக்கப்பட்டால் என்ன நடக்கும்? உதாரணமாக, கிழக்கு ஆசியாவின் கடல்வழி வர்த்தகத்தில் 60% பங்கைக் கொண்டுள்ள மலாக்கா ஜலசந்தி பாதிக்கப்பட்டால் அல்லது தைவான் ஜலசந்தி மற்றும் தென் சீனக் கடலில் போக்குவரத்து விதிமுறைகள் அல்லது சுங்கக் கட்டணங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டால் என்ன நடக்கும்? இத்தகைய அபாயங்களைத் தவிர்க்க, நிலத்தின் வழியாகவோ அல்லது கடலுக்கு அடியிலோ குழாய்கள் அமைப்பது போன்ற மாற்று விநியோகப் பாதைகளை ஆராய வேண்டிய அவசியத்தை இந்தச் சூழல் ஏற்படுத்துகிறது.

அரசியல் அமைப்புகள், வளர்ச்சி நிலைகளில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், பெரும்பாலான ஆசிய நாடுகள் இத்தகைய பொதுவான கவலைகளைக் கொண்டுள்ளன. எனவே, இவை குறித்து அனைவரும் ஒன்றிணைந்து விவாதிக்க வேண்டும். ஆசிய எரிசக்தி ஒத்துழைப்புக் கழகம் (AECC) இத்தகைய விவாதங்களை நடத்துவதற்கான ஒரு சிறந்த தளமாகச் செயல்பட முடியும் என்கின்றனர்.

முன்பு, ஆசிய நாடுகள் கச்சா எண்ணெய்க்கு வழங்கும் கூடுதல் விலை ‘North Sea benchmark’ எனப்படும் உலகளாவிய விலையைவிட ஆசிய நாடுகள் கூடுதலாகச் செலுத்தும் தொகை)  ஒரு பேரலுக்கு சுமார் 3 முதல் 6 டாலர் வரை இருந்தது. இது "ஆசிய பிரீமியம்" (Asian Premium) என்று அழைக்கப்படுகிறது. ஆனால், குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடங்கிய பிறகு, இந்த விலை ஒரு பேரலுக்கு 60 டாலராக உயர்ந்தது. தற்போது இந்த விலை சற்று குறைந்திருந்தாலும், ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: இந்த விலையேற்றம் குறைந்த விநியோகம் மற்றும் நிலையான தேவை காரணமாக மட்டுமே ஏற்பட்டதா? அல்லது ஆசிய நாடுகள் தங்களின் கூட்டுப் பேச்சுவார்த்தை சக்தியை சரியாகப் பயன்படுத்தாததால் ஏற்பட்டதா?

ஜனவரி மாதம் 1974-ஆம் ஆண்டில், ஹென்றி கிசிஞ்சர் என்பவர் அரபு பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பிற்கு (OAPEC) எதிராகப் போராட மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைத்தார். அதேபோன்று, ஒரு ஒப்பீட்டளவிலான இலக்கை அடைய ஆசிய எரிசக்தி ஒத்துழைப்புக் கழகம் (AECC) உருவாக்கப்பட வேண்டும். இந்த அமைப்பு நாடுகள் சுதந்திரமாக வர்த்தகம் செய்ய அனுமதிக்கும் அமைப்புகளை உருவாக்க வேண்டும்; அதே நேரத்தில், சிறந்த விநியோக நிபந்தனைகள், குறைந்த சரக்கு போக்குவரத்து மற்றும் காப்பீட்டுச் செலவுகளுக்காக உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தவும் உதவ வேண்டும். மேலும், விநியோகத் தடைகள், உள்கட்டமைப்பு சிக்கல்கள் மற்றும் புவிசார் அரசியல் முன்னேற்றங்கள் குறித்த உடனுக்குடனான தகவல்களை ஆசிய எரிசக்தி ஒத்துழைப்புக் கழகம் (AECC) வழங்க வேண்டும். தற்போது, இந்தப் பணியைச் சர்வதேச எரிசக்தி முகமை (International Energy Agency (IEA)) செய்து வருகிறது, ஆனால் ஆசியாவுக்கு என்று ஒரு சிறப்பு முகமை தேவைப்படுகிறது. ஏனெனில், சர்வதேச எரிசக்தி முகமை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்போடு (Organization for Economic Co-operation and Development (OECD)) தொடர்பு கொண்டிருப்பதால் மேற்கத்திய நாடுகளுக்குச் சார்பாகச் செயல்படும் போக்கைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பிலிருந்து (OPEC) வெளியேறியிருப்பது, வளைகுடா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் கருத்து வேறுபாடுகளையும், உலகளாவிய எண்ணெய் சந்தையின் நிலையற்ற தன்மையையும் காட்டுகிறது. இது ஆசிய நாடுகள் பெட்ரோலிய எரிபொருட்களிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டுக்கு மாற வேண்டியதன் அவசியத்தை அதிகப்படுத்தியுள்ளது. பெரும்பாலான ஆசிய நாடுகள் ஏற்கனவே பசுமை ஆற்றல் திட்டங்களைக் கொண்டுள்ளன, சில நாடுகள் இதில் நல்ல முன்னேற்றத்தையும் அடைந்துள்ளன. இருப்பினும், எந்தவொரு நாடும் இதுவரை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைத் தனது முதன்மை ஆற்றல் மூலமாக மாற்றவில்லை. எனவே, இந்த மாற்றத்தை எவ்வாறு விரைவுபடுத்துவது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது. இது முதலில் நடைமுறைக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றினாலும், ஆசிய நாடுகள் தங்களிடம் உள்ள தொழில்நுட்பம், நிதி, இயற்கை வளங்கள் மற்றும் திறமையான பணியாளர்கள் போன்ற பலத்தைப் பயன்படுத்தி, பசுமை ஆற்றல் மாற்றத்தில் பொதுவான இலக்குகளை நோக்கி ஒன்றிணைந்து செயல்படலாம். சர்வதேச எரிசக்தி முகமை (IEA) நாடுகளைப் போலன்றி, ஆசிய நாடுகளிடையே பொதுவான அரசியல் அமைப்போ அல்லது கொள்கையோ இல்லாததால் இந்த யோசனை கடினமாகத் தோன்றலாம். இருப்பினும், கார்பன் உமிழ்வைக் குறைத்தல் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகிய பொதுவான இலக்குகளை கொண்டுள்ளன. எனவே, ஒரு எரிசக்தி ஆராய்ச்சி அமைப்பாக, ஆசிய எரிசக்தி ஒத்துழைப்பு மையம் (AECC) உறுப்பு நாடுகள் எவ்வாறு தங்களின் பலத்தை ஒருங்கிணைத்து, அனைவருக்கும் பயனளிக்கும் பசுமை விளைவுகளை அடையலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.


விக்ரம் எஸ் மேத்தா, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி மைய (CSEP) ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவராகவும் மற்றும் சிறந்த ஆய்வாளராகவும் பணியாற்றி வருகிறார்.


Original article : After the Hormuz disruption, Asia should build an energy security alliance

Share:

'சப்கா பீமா சப்கி ரக்ஷா' (காப்பீட்டுச் சட்டத் திருத்தம்) சட்டத்தின் முக்கிய அம்சங்கள் யாவை? -குஷ்பூ குமாரி

 இந்தியாவில் காப்பீட்டுத் துறையில் 100% நேரடி வெளிநாட்டு முதலீட்டை (Foreign Direct Investment (FDI)) 'தானியங்கி முறை' மூலம் ஒன்றிய அரசு சனிக்கிழமை அனுமதித்தது. இதன்மூலம் அதிகப்படியான உலகளாவிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முடியும். மேலும், இந்தியாவில் காப்பீட்டுத் தொழிலை நடத்த இனி இந்தியக் கூட்டு நிறுவனப் பங்குதாரர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் நீக்கப்பட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


— அரசாணை அறிவிப்பின்படி, இந்தியக் காப்பீட்டு நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மேற்கொள்ளும் மொத்த முதலீடு, அந்த நிறுவனத்தின் செலுத்தப்பட்ட மூலதனத்தில் 100% வரை அனுமதிக்கப்படுகிறது. இது தானியங்கி வழிமுறையின்கீழ் அனுமதிக்கப்பட்டாலும், இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Insurance Regulatory and Development Authority of India (IRDAI)) ஒப்புதல் மற்றும் சரிபார்ப்புக்கு உட்பட்டது.


— இருப்பினும், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (Life Insurance Corporation of India (LIC)) வெளிநாட்டு முதலீடு 'தானியங்கி வழிமுறை' மூலம் 20% என்ற அளவிலேயே கட்டுப்படுத்தப்படும்; இது மற்ற துறைகளிலிருந்து மாறுபட்டு ஒரு தனித்துவமான விதிமுறையின்கீழ் நிர்வகிக்கப்படும்.


— இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (LIC) மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு முதலீடுகள், ஆயுள் காப்பீட்டுக் கழகச் சட்டம் 1956-ன்படி (Life Insurance Corporation Act, 1956) அமைந்திருக்க வேண்டும் என்று இந்த அறிவிப்பு கூறுகிறது. மேலும், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகச் சட்டத்தின் பிரிவு 43-ன்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காப்பீட்டுச் சட்டம் 1938-ன் தொடர்புடைய விதிகளுக்கும் இந்த முதலீடுகள் உட்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.


— இந்தக் கொள்கை மாற்றம், 'சப்கா பீமா சப்கா ரக்ஷா' (காப்பீட்டுச் சட்டத் திருத்தம்) சட்டம் 2025-க்கு ஏற்ப, வெளிநாட்டு முதலீட்டு விதிகளைக் கொண்டு வருகிறது. இந்தப் புதிய சட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. ஆனால், பிரிவு 25 (Section 25) மட்டும் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.


— ஒழுங்குமுறை மற்றும் உள்நாட்டுக் கட்டுப்பாட்டைப் பராமரிப்பதற்காக, வெளிநாட்டு முதலீடு கொண்ட காப்பீட்டு நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஒரு இந்தியக் குடியுரிமை பெற்றவரைத் தலைவராக (Chairperson), நிர்வாக இயக்குநராக (Managing Director) அல்லது முதன்மைச் செயல் அதிகாரியாக (CEO) நியமிக்க வேண்டும்.


— வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்குதாரர் உரிமையை (Foreign shareholding) அதிகரிக்கும்போது, அது இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India (RBI)) அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின்கீழ் (Foreign Exchange Management Act (FEMA) நிர்ணயிக்கப்பட்ட விலை நிர்ணய விதிகளைப் பின்பற்றியே அமைய வேண்டும்.


— இந்தியா ஏற்கனவே 2020-ஆம் ஆண்டில் காப்பீட்டு இடைத்தரகர் நிறுவனங்களில் 100% நேரடி வெளிநாட்டு முதலீட்டை (FDI) அனுமதித்துள்ளது.  மேலும், 2022-ஆம் ஆண்டில் இந்திய ஆயுள் காப்பீடுக் கழக நிறுவனத்தில் 20% நேரடி வெளிநாட்டு முதலீட்டை அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து, ஓய்வூதியத் துறையிலும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. காப்பீட்டுத் துறையைப் போலவே, ஓய்வூதியத் துறையிலும் நேரடி வெளிநாட்டு முதலீட்டு வரம்பு 100%-ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.


—  சமீபத்தில், ஜெர்மனியைச் சேர்ந்த அலியான்ஸ் குழுமம் (Allianz Group), ‘Jio Financial Services’ நிறுவனத்துடன் 50:50 என்ற விகிதத்தில் ஒரு கூட்டு முயற்சியைத் தொடங்கி இந்திய சந்தையில் மீண்டும் நுழைவதாக அறிவித்துள்ளது. இந்த கூட்டணியின் மூலம் பொதுக் காப்பீடு (General Insurance) மற்றும் மருத்துவக் காப்பீடு (Health Insurance) சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளனர். மேலும், இதே போன்றதொரு கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் ஆயுள் காப்பீடு துறையிலும் தடம்பதிக்க முடிவு செய்துள்ளனர்.


உங்களுக்குத் தெரியுமா?


— காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டு (FDI) வரம்பை 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்துவதற்கான 'சப்கா பீமா சப்கி ரக்ஷா' (காப்பீட்டுச் சட்டத் திருத்தம்) மசோதா, 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், இதற்கு முந்தைய 74 சதவீத முதலீட்டு வரம்பைக் கூட நிறுவனங்கள் முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, இந்தியாவில் உள்ள 19 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் மட்டுமே அந்த 74 சதவீத வரம்பை எட்டியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


Original article : What are the major features of the Sabka Bima Sabki Raksha (Amendment of Insurance laws) Act?

Share:

குடிமக்களுக்கான புதிய அவசரகால செய்தி அனுப்பும் முறையை இந்தியா சோதிக்கிறது : அலைபேசி தொலைதொடர்பு (cell broadcast) எவ்வாறு செயல்படுகிறது?, அதன் முக்கியத்துவம் என்ன? -பாஸ்கர் சர்மா

 தற்போது, ​​அரசாங்கம் ஏற்கனவே குறுஞ்செய்தி (SMS) மூலம் பேரிடர் எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இருப்பினும், பலரால் தவறவிடப்படக்கூடிய குறுஞ்செய்தி எச்சரிக்கைகளைப் போலல்லாமல், சனிக்கிழமையன்று பயன்படுத்தப்பட்ட அலைபேசி தொலைதொடர்புத் தொழில்நுட்பத்தைப் புறக்கணிக்கவே முடியாது.


சேச்செட் அவசர எச்சரிக்கை அமைப்பு (SACHET emergency alert system) : சனிக்கிழமை காலை சுமார் 11.40 மணியளவில், இந்தியா முழுவதும் பல திறன்பேசிகளில் (smartphones) திடீரென ஒரு கடுமையான பீப் ஒலி எழுந்து அதிர்வுறத் தொடங்கியது. ‘மிகவும் கடுமையான எச்சரிக்கை’ என்ற தலைப்புடன் ஆங்கிலம், இந்தி மற்றும் பிற மொழிகளில் ஒரு பாப்-அப் செய்தி (pop-up message) அலைபேசி திரைகளில் தோன்றியது.


இந்த திடீர் அதிர்வுகளையும் ஒலியையும் கண்டு பலர் திகைத்திருக்கலாம் என்றாலும், இது அடிப்படையில் இயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர்களின் போது மக்களை எச்சரிப்பதற்காக, அலைபேசி தொலைதொடர்பு (cell broadcast) எனப்படும் ஒரு தீவிர ஒலிபரப்பு அமைப்பின் அகில இந்திய அளவிலான சோதனையாகும்.


தற்போது, ​​அரசாங்கம் ஏற்கனவே குறுஞ்செய்தி (SMS) மூலம் பேரிடர் எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், பலரால் தவறவிடப்படக்கூடிய குறுஞ்செய்தி எச்சரிக்கைகளைப் போலல்லாமல், சனிக்கிழமையன்று பயன்படுத்தப்பட்ட அலைபேசி தொலைதொடர்பு தொழில்நுட்பத்தை எவராலும் புறக்கணிக்க இயலாது.



இத்தொழில்நுட்பம், சுனாமி எச்சரிக்கைகளை விடுத்த ஜப்பான் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களைப் பிரதிபலிக்கிறது.


இந்தியாவில் சில காலமாக இத்தொழில்நுட்பத்தைச் சோதித்து வந்தாலும், இவ்வளவு பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.


அலைபேசி தொலைதொடர்பு (cell broadcast) தொழில்நுட்பம் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? மற்றும் ஒரு நாட்டிற்கு இத்தகைய எச்சரிக்கை அமைப்பு இருப்பது ஏன் மிகவும் இன்றியமையாதது என்பதைப் பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.


அலைபேசி தொலைதொடர்பு (cell broadcast) தொழில்நுட்பம் என்றால் என்ன?


அலைபேசி தொலைதொடர்பு (cell broadcast) என்பது, வரையறுக்கப்பட்ட ஒரு புவியியல் எல்லைக்குள் அமைந்துள்ள பல அலைபேசிகளுக்கு ஒரே நேரத்தில் குறுஞ்செய்திகளை அனுப்ப உதவும் ஒரு தொழில்நுட்பமாகும்.


ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அமைப்பான சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (International Telecommunication Union(ITU)) கூற்றுப்படி, இந்த அமைப்பு ஒரே நேரத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான சாதனங்களுக்குச் செய்திகளை அனுப்ப முடியும் அல்லது ஒரு சிறிய பகுதியை மட்டுமே பாதித்தால், அந்த குறிப்பிட்ட இடத்தில் உள்ள கைபேசிகளுக்கு மட்டுமே செய்தியை அனுப்ப முடியும். இந்த அமைப்பு எந்தவொரு வலையமைப்பு நெரிசலையும் மீறிச் செயல்படுவதால், செய்திகள் உடனடியாக அனுப்பப்படுகின்றன.


இந்த அமைப்பு 1990-களின் முற்பகுதியில், ஐரோப்பா முழுவதிலுமுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் உபகரண உற்பத்தியாளர்களின் உள்ளீடுகளுடன், ஐரோப்பிய தொலைத்தொடர்பு தரநிர்ணய நிறுவனத்தால் (European Telecommunications Standards Institute) உருவாக்கப்பட்டது.




இம்முறை முதன்முதலில் 1997-ல் பாரிஸில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் பல நாடுகளால் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் உள்ள மக்களுக்கு இயற்கை பேரழிவுகள் (சுனாமிகள், நிலநடுக்கங்கள் மற்றும் மின்னல் தாக்குதல்கள்) அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள் (எரிவாயு கசிவுகள் அல்லது இரசாயன அபாயங்கள் போன்றவை) குறித்து ஒரே நேரத்தில் எச்சரிக்கை விடுப்பதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது.


இந்தத் தொழில்நுட்பம் ஒரு சர்வதேச சிறந்த நடைமுறையாகக் கருதப்படுகிறது. மேலும், தற்போது 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அவசரகால எச்சரிக்கை தகவல் தொடர்பு அமைப்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த எச்சரிக்கைகள், பயனரின் மொழி போன்ற குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கக்கூடியவையாகவும் உள்ளன.


அலைபேசி தொலைதொடர்பு (cell broadcast) எவ்வாறு செயல்படுகிறது?


சாதாரண வலையமைப்பு செயல்பாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகளாவிய அமைப்பான ஜிஎஸ்எம் அசோசியேஷனின் (GSM Association) கூற்றுப்படி, அன்றாட வலையமைப்பு செயல்பாட்டின் ஒரு பகுதியாக, அலைபேசி கோபுரங்கள் (cell towers) தங்கள் எல்லைக்குள் உள்ள தொலைபேசிகளுடன் தொடர்பு கொண்டு, அவை இணைக்கப்பட்டுள்ள வலையமைப்பு போன்ற தகவல்களை வழங்குகின்றன.


இந்தத் தகவல் பொதுவாகப் பயனருக்குத் தெரியாது. வலையமைப்பு அது செயல்பட வேண்டிய விதத்தில் செயல்பட உதவுவதே இதன் ஒரே நோக்கமாகும்.


அலைபேசி கோபுரங்களிலிருந்து கைபேசிகளுக்குத் தகவல்களை அனுப்புவதும், அதனைச் சாத்தியமாக்கும் தொழில்நுட்பமும், பரவலாக அலைபேசி தொலைதொடர்பு என்று அழைக்கப்படுகின்றன எனத் தொழில்துறை அமைப்பு கூறுகிறது.


எனவே, அலைபேசி கோபுரங்களுக்கும் தொலைபேசிகளுக்கும் இடையிலான இந்த ஒருவழித் தொடர்பு முறையை அரசாங்க அதிகாரிகள் அவசரகால எச்சரிக்கைகளை விடுக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த அமைப்பு, தனித்தனியாக குறுஞ் செய்திகளை அனுப்புவதற்குப் பதிலாக, ஒரு அலைபேசி வலையமைப்பு கோபுரத்திலிருந்து அந்தக் கோபுரத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து தொலைபேசிகளுக்கும் ஒரே நேரத்தில் ஒரு செய்தியை அனுப்புவதன் மூலம் செயல்படுகிறது.


இது ஒரு குறுஞ்செய்தியிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?


ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும் (one-to-one) ஒரு வழிமுறையாகச் செயல்படும் குறுஞ்செய்திக்கு மாறாக, 'அலைபேசி தொலைதொடர்பு' (Cell Broadcast - CB) என்பது ஒரு செய்தியைப் பலருக்கு ஒரே நேரத்தில் அனுப்பும் (one-to-many) ஒரு தொழில்நுட்பமாகும். இதன் பொருள் என்னவென்றால், ஒரேயொரு செய்தியைச் சில வினாடிகளுக்குள் லட்சக்கணக்கான சாதனங்களுக்கு அனுப்ப முடியும்.


சந்தாதாரரின் இருப்பிடத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட அலைபேசி கோபுர தளங்கள் வழியாக செய்தி உள்ளடக்கத்தை விநியோகிப்பதன் மூலம் அலைபேசி தொலைதொடர்பு (CB) செயல்படுகிறது. குறுஞ்செய்தியைப் போலல்லாமல், ஒரு செய்தியை அனுப்ப அலைபேசி தொலைதொடர்புக்கு (CB) தொலைபேசி எண் தேவையில்லை என்று GSM அமைப்பு கூறுகிறது.


எனவே, அவர்களின் சாதனங்களைப் பதிவு செய்யவோ அல்லது கண்காணிக்கவோ தேவையின்றி, குறிப்பிட்ட இடங்களுக்கு அவசரகால எச்சரிக்கைகளை அனுப்ப இது அனுமதிக்கிறது.


மேலும், இந்த அமைப்பு குறுஞ்செய்தியை (SMS) விட அதிக தனியுரிமை கொண்டது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பார்வையாளர்கள், பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட, எச்சரிக்கைகளைப் பெறலாம். இந்த அமைப்பு பன்மொழி வசதி கொண்டதாக இருந்தால், அவர்கள் தங்களது சொந்த மொழியில்கூட எச்சரிக்கைகளைப் பெறுவார்கள்" என்று அது கூறுகிறது.


மேலும், இது ஒரு குறுஞ்செய்தியைவிட மிகவும் எளிதில் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக உள்ளது.



எந்தெந்த நாடுகள் இந்த அமைப்பைச் செயல்படுத்தியுள்ளன?


உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் தற்போது, ​​பேரிடர்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து குடிமக்களை எச்சரிப்பதற்காக, அலைபேசி தொலைதொடர்பு அடிப்படையிலான அவசரகால எச்சரிக்கை அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன.


2007-ல் இந்த முறையை ஏற்றுக்கொண்ட முதல் நாடுகளில் ஜப்பானும் ஒன்றாகும். அதன் ஜே-அலர்ட் (J-Alert) அமைப்பு, நிலநடுக்கங்கள், சுனாமிகள், எரிமலை வெடிப்புகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் போன்ற அச்சுறுத்தல்கள் குறித்த உடனடி அவசரகாலத் தகவல்களை சைரன்கள் (sirens) மூலம் அனுப்புகிறது. 1995-ல் கிட்டத்தட்ட 6,500 பேரைக் கொன்ற பேரழிவுகரமான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு நகரமான கோபேயில் (Kobe) இது சோதனை செய்யப்பட்டது என்று பிசிஜி ஆதரவு பெற்ற இலாப நோக்கற்ற அமைப்பான 'சென்டர் ஃபார் பப்ளிக் இம்பாக்ட்' (Centre for Public Impact) கூறுகிறது.


பின்னர் பல நாடுகள் இதேபோன்ற அமைப்புகளை அறிமுகப்படுத்தின. அமெரிக்கா 2012-ல் தனது கம்பியில்லா அவசரகால எச்சரிக்கை (Wireless Emergency Alerts (WEA)) அமைப்பை அறிமுகப்படுத்தியது. ஐரோப்பா முழுவதும், குறிப்பாக 2018-ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் உத்தரவு, உறுப்பு நாடுகள் 2022-க்குள் அலைபேசி தொலைதொடர்பு தொழிநுட்பத்தைப் (cell broadcast technology) பயன்படுத்தி பொது எச்சரிக்கை அமைப்புகளைச் செயல்படுத்த வேண்டும் என்று கட்டளையிட்டபிறகு, உலகளாவிய நாடுகள் EU-அலர்ட் (EU-Alert) கட்டமைப்பின்கீழ் இதேபோன்ற அமைப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளன.


ஆசியாவில், ஜப்பானைத் தவிர, தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளும் கடந்த பத்தாண்டுகளில் நாடு தழுவிய எச்சரிக்கை அமைப்புகளைச் செயல்படுத்தியுள்ளன. கனடா, நியூசிலாந்து மற்றும் சிலி உள்ளிட்ட பிற நாடுகள், காட்டுத்தீ, நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற அபாயங்களுக்கு ஏற்றவாறு, இதேபோன்ற தொலைதொடர்பு அடிப்படையிலான எச்சரிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.



இந்த அமைப்பின் நன்மைகள் என்னென்ன?


சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) கூற்றுப்படி, அலைபேசி தொலைதொடர்பு தொழில்நுட்பம் எந்தவொரு தனிப்பட்ட தரவையும் பயன்படுத்துவதில்லை. பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்கள் அல்லது இருப்பிடத் தரவைப் பகிர வேண்டிய அவசியமின்றி, அலைபேசிகளால் செய்திகளைப் பெறமுடியும்.


இதற்கு எந்த செயலியோ அல்லது சந்தாவோ தேவையில்லை. அலைபேசி இயக்கப்பட்டிருப்பதும், இதுபோன்ற செய்திகளை ஏற்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதும் மட்டுமே இதற்கான ஒரே தேவையாகும் (அமைப்புகள் → பாதுகாப்பு மற்றும் அவசரநிலை → கம்பியில்லா அவசர எச்சரிக்கைகள் → சோதனை எச்சரிக்கைகள்).


ஒரு குறுஞ்செய்தியைப் போலல்லாமல், அதன் தனித்துவமான எச்சரிக்கை ஒலிகள் மற்றும் அதிர்வு முறையையும் காரணமாக இது மிகவும் எளிதில் கவனத்தை ஈர்க்கிறது. இதனால், இரைச்சல் மிகுந்த சூழல்களிலும்கூட மக்களின் கவனத்தை ஈர்க்க முடியும்.


பயனர் அதைப் படித்து, ‘சரி’ (OK) பொத்தானை அழுத்தும் வரை, இந்த பாப்-அப் செய்தி திரையில் நிலைத்திருக்கும்.


இந்த எச்சரிக்கை, அழைப்புகள் உட்பட, ஒரு கைபேசியில் நடந்துகொண்டிருக்கும் அனைத்து செயல்பாடுகளையும் மீறிச் செயல்படக்கூடியது. சாதனம் அமைதி பயன்முறையில் (silent mode) அல்லது தொந்தரவு செய்யாதே பயன்முறையில் (Do-Not-Disturb mode) இருக்கும்போதும் இது வழங்கப்படலாம்.


இந்தக் காரணத்திற்காக, இது மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல்களிலேயே இது பயன்படுத்தப்படும். இவ்வெச்சரிக்கைகளை அனுப்புவதற்கான குறிப்பிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், ஏதேனும் ஒரு பேரிடரால் யாருடைய உயிருக்கோ அல்லது உடைமைக்கோ ஆபத்து உள்ளதோ, அவர்களுக்கு மட்டுமே இது வழங்கப்படும். ஒரு பொதுவான ஆலோசனை அல்லது எச்சரிக்கையை வழங்குவதற்கு இது பயன்படுத்தப்படாது. பெரும் நிலநடுக்கங்கள், பனிப்பாறை ஏரி உடைப்புகள், நிலச்சரிவு, திடீர் வெள்ளம் அல்லது அணை உடைப்புகள் போன்ற சூழ்நிலைகளில் எச்சரிக்கை அனுப்ப வேண்டியிருக்கலாம்.


இந்தியாவின் நிலை என்ன?


தற்போது, ​​இந்தியா தனது 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் அனைத்திலும் செயல்பாட்டில் உள்ள குறுஞ்செய்தி அடிப்படையிலான எச்சரிக்கை அமைப்பைப் பயன்படுத்தி வருகிறது.


இந்திய அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த அமைப்பு பேரிடர் மேலாண்மை அதிகாரிகளால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், இயற்கை பேரிடர்கள், வானிலை எச்சரிக்கைகள் மற்றும் புயல் நிகழ்வுகளின் போது, ​​19-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 134 பில்லியனுக்கும் அதிகமான குறுஞ்செய்தி (SMS) எச்சரிக்கைகள் பரப்பப்பட்டுள்ளன.


மேலும், அலைபேசி தொலைதொடர்பு தொழில்நுட்பமானது கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வருகிறது. இது அவசர மற்றும் பேரிடர் சூழ்நிலைகளில் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க ஒரு பயனுள்ள கருவியாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்பு குறைந்த அளவிலான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இதுவே முதல் பெரிய சோதனையாகும்.


தொலைத்தொடர்புத் துறையின் (DoT) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் (Centre for Development of Telematics (C-DOT)), இந்தியாவில் இந்த தீவிர தொலைதொடர்பு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.


இந்த அமைப்பு நாடு முழுவதும் முழுமையாக எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்த தெளிவான தகவல் இன்னும் இல்லை.


உங்கள் அலைபேசிகளில் எச்சரிக்கைச் செய்தி வந்தால், பதற்றமடைய வேண்டாம். சனிக்கிழமையன்று சோதனை முடிந்த பிறகு, தொலைத்தொடர்புத் துறை (DoT) வெளியிட்ட அறிவிப்பில்: “பேரிடர்களின்போது சரியான நேரத்தில் துல்லியமான தகவல்களைப் பெறுவதற்காக, இது அவசரகால எச்சரிக்கை அமைப்பைச் (Emergency Alert System) சோதிக்கும் ஒரு பகுதியாகும். சோதனையின் போது, ​​இந்தச் செய்தி மீண்டும் மீண்டும் தோன்றக்கூடும். அதைப் புறக்கணிக்கவும்; நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை.”


இது ஏன் முக்கியமானது?


காலநிலை தொடர்பான பேரழிவுகள் அடிக்கடி மற்றும் கடுமையாக நிகழ்ந்து வருவதால், உயிர்வாழ்வதற்கு அலைபேசி தொலைதொடர்பு போன்ற தொழில்நுட்பங்கள் மிகவும் முக்கியமானதாகின்றன.


குறிப்பாக இந்தியாவில், திடீர் வெள்ளம், கடும் வெப்பநிலை மற்றும் புயல்கள் போன்ற இயற்கை பேரழிவுகள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.


சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) கூற்றுப்படி, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு ஏற்ப சமூகங்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ள இத்தகைய அமைப்புகள் பெரும் பங்காற்ற முடியும். அலைபேசி தொலைதொடர்பு போன்ற தொழில்நுட்பங்கள், "ஆபத்தில் உள்ள மக்களுக்கு முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்புகளை வழங்குவதற்கான முக்கியக் கூறுகள்" என்று அது கூறுகிறது.


சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) செயல்படுத்த உதவும் ஐ.நா-வின் “அனைவருக்கும் முன்கூட்டிய எச்சரிக்கைகள்” முன்முயற்சியின் கீழ், வெள்ளம், புயல் அல்லது வெப்ப அலைகள் போன்ற பேரிடர்களின் போது மக்கள் சரியான நேரத்தில், துல்லியமான எச்சரிக்கைகளைப் பெறுவதை உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய கருவியாக அலைபேசி தொலைதொடர்பு கருதப்படுகிறது. இதனால் இது காலநிலை தழுவலின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது.


பொது எச்சரிக்கைகளுக்கு அலைபேசி தொலைதொடர்பு பயன்பாட்டைக் கட்டாயமாக்குவதற்கான ஒரு ஒழுங்குமுறை அணுகுமுறையைப் பரிசீலிக்குமாறு நாடுகளை ஊக்குவிப்பதாக சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) கூறுகிறது.


Original article : India tests new emergency messaging system for citizens: How cell broadcast works, why it matters?

Share:

நீரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 21 பொருளாதாரக் குற்றவாளிகள்: தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி (Fugitive Economic Offender) என்றால் என்ன? -மனஸ் ஸ்ரீவஸ்தவா

 தற்போதைய செய்தி


அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate (ED)) தனது ஆண்டு அறிக்கையின் படி, கடந்த 7 ஆண்டுகளில் தொழிலதிபர்கள் நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா, இங்கிலாந்தைச் சேர்ந்த ஆயுத ஆலோசகர் சஞ்சய் பண்டாரி, மற்றும் தாவூத் இப்ராஹிமின் உதவியாளரான மறைந்த இக்பால் மிர்ச்சியின் மனைவி ஹஜ்ரா இக்பால் மேமன் உட்பட 21 பேரைத் தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளிகளாக (fugitive economic offenders (FEOs)) அறிவித்துள்ளது.


இருப்பினும், வைர வியாபாரி மெஹுல் சோக்சி, இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மற்றும் மகாதேவ் செயலியின் விளம்பரதாரர்களான சௌரப் சந்திரகர், ரவி உப்பல் ஆகியோரைத் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின் (Fugitive Economic Offenders Act (FEOA)) கீழ் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகளாக அறிவிக்கும் முடிவுகள் நீதிமன்றங்களில் இன்னும் பரிசீலனையில் உள்ளன என்று அந்த அறிக்கை  கூறியது.


வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஒன்றிய முகமையின் வருடாந்திர அறிக்கையானது, இதுவரை தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின் கீழ், 54 நபர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 21 பேர் 'வெளிநாட்டுத் தப்பியோடிய குற்றவாளிகள்' (FEOs) என அறிவிக்கப்பட்டு, ரூ. 2,178.34 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறது.


இந்த 21 பேரில், ஒன்பது நபர்கள் 2025-26-ஆம் ஆண்டிலேயே வெளிநாட்டு தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளிகளாக (FEOs) அறிவிக்கப்பட்டனர் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.


அறிக்கையின்படி, 2024-25 மற்றும் 2025-26 இரண்டு நிதியாண்டுகளில், பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின்கீழ் அமலாக்க இயக்குநரகத்தின் செயல்திறன் கணிசமான சொத்து மீட்பையும், தப்பிச் சென்ற குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பையும் காட்டுகிறது. வழக்குகளைத் தவிர்க்க இந்தியாவை விட்டு தப்பிச் செல்லும் நபர்களுக்கு எதிராக விரைவாக நடவடிக்கை எடுக்க அமலாக்க இயக்குநரகம் உறுதியாக செயல்படுகிறது என்பதைக் இது காட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது.


பண்டாரியை வழக்கை உதாரணமாகக் காட்டி, தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின்கீழ், 2019 டிசம்பர் 13 அன்று அளித்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து, கடந்த ஆண்டில் ஒரு சிறப்பு நீதிமன்றம் (PMLA) அவரை வெளிநாட்டுக்குத் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என அறிவித்ததாகக் குறிப்பிட்டது.


இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஆயுத வியாபாரியான பண்டாரி, 2016-ஆம் ஆண்டு வருமான வரி சோதனைகளுக்குப் பிறகு லண்டனுக்குத் தப்பிச் சென்றார். அவர் 2016-ல் நேபாளம் வழியாக இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றார். மேலும், 2017-ஆம் ஆண்டு அக்டோபரில் அவருக்கு எதிராக இன்டர்போல் ரெட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.

விசாரணையில், கணக்கில் காட்டப்படாத ரூ.655 கோடி வெளிநாட்டு வருமானமும், ரூ.100 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு சொத்துக்களும் தெரியவந்துள்ளன. 2009 முதல் 2016 வரை, அவர் வெளிநாட்டு போலி நிறுவனக் கணக்குகளில் பெரும் தொகையை வைப்புச் செய்துள்ளார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்தில் உள்ள சொத்துக்களில் முதலீடு செய்துள்ளார். அமலாக்கத்துறை 2020-ல் அவருக்கு எதிராக ஒரு குற்றவியல் புகாரையும், 2023-ல் ஒரு துணை குற்றவியல் புகாரையும் தாக்கல் செய்தது. தற்போது அமலாக்கத்துறை, ரவுஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்யக் கோரியுள்ளது  என்று அந்த அறிக்கை தெரிவித்தது.


இந்தச் சூழலில், தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தை (FEOA) மீண்டும் ஆராய்வோம்.


முக்கிய அம்சங்கள்:


தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி  (fugitive economic offenders (FEOs)) என்பவர் யார்?


தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி (FEO) என்பவர், இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு நீதிமன்றத்தால், அட்டவணைப்படுத்தப்பட்ட குற்றம் அல்லது குற்றங்கள் தொடர்பாக, ரூ. 100 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட மொத்த மதிப்புடைய வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, குற்றவியல் நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக இந்தியாவை விட்டு வெளியேறியவரோ அல்லது வெளிநாட்டில் இருந்துகொண்டே குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள இந்தியாவுக்குத் திரும்ப மறுப்பவரோ தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளி ஆவார்.


அந்த அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள சில முக்கியக் குற்றங்கள் பின்வருமாறு: அவை (i) அரசு முத்திரைகள் அல்லது நாணயங்களை போலியாக அச்சிடுதல், (ii) காசோலைகள் வங்கியில் நிராகரிக்கப்படுதல் (Cheque dishonour), (iii) பணமோசடி (Money laundering) மற்றும் (iv) கடனாளிகளை ஏமாற்றும் வகையிலான பரிவர்த்தனைகள் ஆகும்.


விண்ணப்பிப்பதற்கான நடைமுறை என்ன?


2002-ஆம் ஆண்டின் பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்ட இயக்குநர் அல்லது துணை இயக்குநர், அந்தச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, ஒருவரை தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்க  கோரிக்கை வைக்கலாம்.


விண்ணப்பத்தில் என்ன இருக்கும்?


(அ) ​​ஒரு தனிநபர் தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளி என்று நம்புவதற்கான காரணங்கள், அவை,


(ஆ) அவர் இருக்கும் இடம் குறித்த ஏதேனும் தகவல்,


(இ) பறிமுதல் செய்யப்படும் குற்றச்செயல் மூலம் கிடைத்த வருமானம் என நம்பப்படும் சொத்துக்களின் பட்டியல்,


(ஈ) பறிமுதல் செய்யக் கோரப்படும் பினாமி சொத்துக்கள் அல்லது வெளிநாட்டு சொத்துக்களின் பட்டியல்,


(இ) இந்தச் சொத்துக்களில் ஆர்வம் கொண்ட நபர்களின் பட்டியல் ஆகும்.



மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன?


ஒரு விண்ணப்பத்தைப் பெற்றவுடன், சிறப்பு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபருக்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆஜராகுமாறு ஓர் அறிவிப்பை அனுப்புகிறது.


ஒருவர் ஆஜராகத் தவறினால், அவர் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார்.


இயக்குநர் அல்லது துணை இயக்குநர், சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியுடன் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒரு சொத்தையும் ஜப்தி செய்யலாம்.


சிறப்பு நீதிமன்றத்தில் 30 நாட்களுக்குள் விண்ணப்பம் தாக்கல் செய்யும் பட்சத்தில், அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி எந்தவொரு சொத்தையும் தற்காலிகமாகப் பறிமுதல் செய்யலாம். சிறப்பு நீதிமன்றத்தால் நீட்டிக்கப்படாவிட்டால், இந்தப் பறிமுதல் 180 நாட்களுக்குத் தொடரும்.


விண்ணப்பத்தை விசாரித்த பிறகு, சிறப்பு நீதிமன்றம் ஒரு தனிநபரைத் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என்று அறிவிக்கலாம்.


எது போன்ற சொத்துக்களைப் பறிமுதல் செய்யலாம்?


(அ) குற்றச்செயல் மூலம் கிடைத்த சொத்துக்கள்,


(ஆ) இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள பினாமி சொத்துக்கள், மற்றும்


(இ) இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள வேறு ஏதேனும் ஒரு  சொத்தாகும்.




வேறு என்ன?


— தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒரு நபர், எந்தவொரு உரிமையியல் வழக்கையும் தாக்கல் செய்வதிலிருந்தோ அல்லது அதில் வாதாடுவதிலிருந்தோ எந்தவொரு உரிமையியல் நீதிமன்றமோ அல்லது நீதிமன்றம் தீர்ப்பாயமோ தடை செய்வதை இந்தச் சட்டம் தடை செய்கிறது.


—  அந்த நபர் பெரும்பான்மைப் பங்குதாரராகவோ, நிறுவனராகவோ, அல்லது ஒரு முக்கிய நிர்வாகப் பொறுப்பாளராகவோ (நிர்வாக இயக்குநர் அல்லது தலைமைச் செயல் அதிகாரி போன்ற) இருக்கும் எந்தவொரு நிறுவனம் அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மையும் உரிமையியல் வழக்குகளைத் தாக்கல் செய்வதிலிருந்தோ அல்லது அதில் வாதாடுவதிலிருந்தோ தடுக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


— ஒரு தனிநபர் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என்ற நம்பிக்கையின் பேரில் ஒரு இடத்திற்குள் நுழைவது, ஒரு கட்டிடத்தைச் சோதனையிட உத்தரவிடுவது அல்லது ஆவணங்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிடுவது உள்ளிட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்குரிய அதிகாரங்கள் இயக்குநர் அல்லது துணை இயக்குநருக்கு உண்டு.


— சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.


அமலாக்க இயக்குநரகம் (Directorate of Enforcement (ED))


அமலாக்க இயக்குநரகம் 1956-ல் நிறுவப்பட்டு, அந்நியச் செலாவணி மேலாண்மை மற்றும் பணமோசடி தடுப்பு (foreign exchange management and anti–money laundering) தொடர்பான சட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பையும் கொண்டுள்ளது


பல ஆண்டுகளாக, அமலாக்க இயக்குநரகம் இந்தியாவின் பொருளாதார, சட்ட மற்றும் ஒழுங்குமுறைச் சூழலுக்கு ஏற்ப சீராகப் பரிணமித்து, அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தின் (FERA)). நிர்வாகத்திலிருந்து அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்திற்கு (Foreign Exchange Management Act (FEMA)) மாறியுள்ளது.


இன்று இது பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) மற்றும் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் (FEOA) ஆகியவற்றை அமல்படுத்துவதில் முன்னணியில் உள்ளது.


1999-ஆம் ஆண்டின் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (Foreign Exchange Management Act (FEMA)), அந்நியச் செலாவணிப் பரிவர்த்தனைகள், எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஒழுங்குபடுத்தும்  ஒரு முக்கிய இந்தியச் சட்டமாகும். வெளிநாட்டு வர்த்தகத்தை எளிதாக்கவும், அந்நியச் செலாவணிச் சந்தையை நிர்வகிக்கவும் இயற்றப்பட்ட இந்தச்சட்டம், கட்டுப்பாடான அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்திற்குப் (FERA) பதிலாக, மீறல்களைக் குற்றமாக்குவதிலிருந்து பண அபராதங்களை விதிக்கும் ஒரு தாராளமயமான கட்டமைப்பைக் கொண்டுவந்தது.


2002-ஆம் ஆண்டின் பணமோசடித் தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)), பணமோசடியைத் தடுக்கவும், பயங்கரவாத நிதியுதவியை எதிர்த்துப் போராடவும், குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் இயற்றப்பட்ட ஒரு இந்தியச் சட்டமாகும். ஜூலை 1, 2005 முதல் அமலில் உள்ள இந்தச்சட்டம், அமலாக்க இயக்குநரகத்திற்கு விசாரணை நடத்தவும், சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும், சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்யவும் அதிகாரம் அளிக்கிறது. 3 முதல் 7 ஆண்டுகள் வரையிலான கடுமையான சிறைத் தண்டனைகளை விதிக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன. சில குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை நீட்டிக்கப்படலாம்.


Original article : Nirav Modi, Vijay Mallya among 21 FEOs: What is a Fugitive Economic Offender?

Share:

அரசாங்கம் மற்றும் இணையத் தணிக்கை குறித்து…

 இணையதளத் தணிக்கை என்பது சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்கும் அடிப்படை உரிமைக்கு ஒரு அச்சுறுத்தலாகும்.

சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இணையதளப் பேச்சுகளைத் தணிக்கை செய்ய, ஒன்றிய அரசு தனது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவது இந்திய ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. ஏற்கெனவே அரசியலமைப்புரீதியாக வலுவற்ற நிலையில் உள்ள 2021-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப விதிகளில் (IT Rules, 2021) திருத்தங்களை மேற்கொண்டு, மெட்டா (Meta) மற்றும் X போன்ற நிறுவனங்களுக்கு அரசு கடும் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதன்படி, வெறும் மூன்று மணி நேரத்திற்குள் சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் பதிவுகளை நீக்கவேண்டும்; இல்லையெனில், அந்த நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்பை இழக்க நேரிடும் என்பதோடு, அவர்களின் ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் ஆளாக நேரிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் தவறான உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, தங்களுக்குப் பிடிக்காத கருத்துகளை அரசு ஒடுக்கி வருகிறது. இது சாமானிய மக்களின் குரலாக விளங்கும் இணையதளத்தின் அடிப்படை நோக்கத்தையே சிதைக்கிறது. ஒரு சுதந்திரமான மற்றும் ஜனநாயக சமூகத்தில், தனித்துவமான மற்றும் வலிமையான கருத்து வெளிப்பாடுகள் மிகவும் அவசியமானவை. ஆனால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act, 2000) 69A மற்றும் 79(3)(b) ஆகிய பிரிவுகளைப் பயன்படுத்தி, கணக்குகளையும் பதிவுகளையும் ஒட்டுமொத்தமாக முடக்குவது ஆளுங்கட்சிக்கே சாதகமாக முடிகிறது. இது படைப்பாளர்களின் வாழ்வாதாரத்தையும், மக்களின் தகவல் அறியும் உரிமையையும் பாதிக்கிறது. பெரும்பாலும் எதிர்க்கட்சிகளின் கணக்குகள் முழுமையாக நீக்கப்படுகின்றன. எவ்வித தார்மீக முறையும் இன்றி கட்டமைக்கப்பட்டுள்ள இந்தத் தணிக்கை முறையினால், ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் குரல்கள் ஒடுக்கப்படுவது அதிகரித்துள்ளது. தணிக்கை செய்யப்பட்ட சில பதிவுகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டாலும், அதற்கு அந்தப் படைப்பாளர்கள் தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அரசு தனது தணிக்கை நடவடிக்கைகள் குறித்த எந்தத் தரவுகளையும் வெளியிடாமல், மிகுந்த ரகசியத்தோடு இணையதள உரையாடல்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது.


நாடு முழுவதும் உள்ள காவல்துறையினருக்கு 'சஹ்யோக்' (Sahyog) இணையதளத்தை அணுக அனுமதி அளித்திருப்பதன் மூலம், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79(3)(b)-ன்கீழ் விடுக்கப்படும் கோரிக்கைகள் சட்ட வரம்புகளை மீறி பயன்படுத்தப்படுகின்றன. இது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் அனுமதிக்கப்படாத ஒரு தணிக்கை கருவியாக மாறியுள்ளது. இணையத்தில் உள்ள சட்டவிரோதத் தகவல்கள் குறித்த "உண்மையான அறிவு" (Actual knowledge) எது என்பது பற்றி 'ஸ்ரேயா சிங்கால் vs இந்திய யூனியன்' (Shreya Singhal vs Union of India) வழக்கில் வழங்கப்பட்ட தெளிவான தீர்ப்பு இங்கே புறக்கணிக்கப்பட்டுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த முக்கியமான முன்மாதிரித் தீர்ப்பைக் கவனிக்கத் தவறியுள்ளது. அதேசமயம், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதன் மூலம் அரசு இத்தகைய அதிகாரங்களை முறைப்படி தனக்குத்தானே வழங்கிக் கொள்ளவும் இல்லை. சமூக ஊடகத் தளங்கள் இணையதளப் பேச்சுரிமையின் மீதான இந்த ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டன. அதற்குப் பதிலாக, பதிவுகளை நீக்கும் கோரிக்கைகளுக்குத் தானாகவே இணங்கிச் செல்வதையே அவை எளிதாகக் கருதுகின்றன. 'X' தளம் மட்டும் 'சஹ்யோக்' (Sahyog) இணையதளத்தை இன்னும் எதிர்த்து வருகிறது. ஆனால், கர்நாடக மற்றும் டெல்லி உயர்நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளால் அந்த நிறுவனத்திற்கும் அழுத்தம் அதிகரித்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் ஏற்கனவே இந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி வருவதால், எதிர்கால அரசாங்கங்களும் இந்த தணிக்கை முறையை மேற்கொள்ளும் என்பதை அரசியல் தலைவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.


Original article : ​Tackling takedowns: On the government and online censorship

Share:

மருத்துவர்களின் முடிவு : சட்டப்பூர்வ கருக்கலைப்பு குறித்து . . .

 கருக்கலைப்பு செய்வதற்கான முடிவுகள், சரியான மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும்.


சுதந்திரத்துடன் சேர்த்து பெரும் பொறுப்பும் வருகிறது. எந்தவொரு சுதந்திரத்தின் விளைவாக எடுக்கப்படும் முடிவுகளும், அதன் பின்விளைவுகள் குறித்த நியாயமான விழிப்புணர்வின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும். பெண்களுக்கு இனப்பெருக்க சுயாட்சியை வழங்குவது போல் தோன்றினாலும், உச்சநீதிமன்றம் இதுபோன்ற சூழ்நிலைகளில் முறையான மருத்துவப் பரிசோதனையின் முக்கியத்துவத்தைக் குறைத்திருக்கலாம். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளின் விஷயத்தில், விரும்பத்தகாத கர்ப்பங்களை மருத்துவரீதியாகக் கலைப்பதற்கான கால வரம்பை நீக்குவதற்காக, கருக்கலைப்புச் சட்டத்தைத் திருத்துமாறு நீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது. இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, பாலியல் வன்கொடுமையிலிருந்து மீண்ட 15 வயது சிறுமி, 30-வது வாரத்தில் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதித்த முந்தைய நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மனுவை விசாரிக்க மறுத்தபோது இந்தக் கருத்தைத் தெரிவித்தது. சீராய்வு மேல்முறையீட்டில் (curative appeal) இருந்த இந்த வழக்கின் உண்மையான தீர்ப்பில், ஒரு பெண்ணின் இனப்பெருக்க சுயாட்சி உரிமையைப் (woman’s right to reproductive autonomy) பாதுகாப்பதற்காக, சட்டவிரோதமான கர்ப்பத்தைத் தொடர சிறுமிக்கு உள்ள உரிமை கருத்தில் கொள்ளப்படவேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர். நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்தச் சிறுமி கர்ப்பத்தைத் தொடரத் தெளிவான மற்றும் தொடர்ச்சியான விருப்பமின்மையை வெளிப்படுத்தியிருந்ததைக் குறிப்பிட்டிருந்தது. ஒரு பெண், அதிலும் குறிப்பாக ஒரு சிறுமி, கர்ப்பத்தைத் தொடர விரும்பவில்லை என்றால், அவரை அவ்வாறு செய்ய நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது என்று அவர்கள் கூறினர். சட்டப்பூர்வமான வழிகள் மறுக்கப்பட்டால், பெண்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து போலி மருத்துவர்களிடம் செல்லும் அபாயகரமான பாதையைத் தேர்ந்தெடுக்கக்கூடும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இருப்பினும், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (All India Institute of Medical Sciences) வழக்கறிஞர், அதே பாதுகாப்பு அம்சத்தைக் காரணம் காட்டி, கருக்கலைப்பு மற்றும் சீராய்வு மனுவை வன்மையாக எதிர்த்தார். வழக்கறிஞரின் கூற்றுப்படி, 30 வாரங்கள் போன்ற முற்றிய நிலையில் கர்ப்பத்தைக் கலைப்பது, இளம் வயது தாயின் உடல்நலத்தைப் கடுமையாகப் பாதிக்கக்கூடும். தற்போது, இந்தியச் சட்டம் 24 வாரக் கர்ப்பம் வரை கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கிறது.


முழு வாதமும் கர்ப்பகால வயதைச் சார்ந்துள்ளது. கர்ப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை கர்ப்பகால வயது காட்டுகிறது. ஒரு கருக்கலைப்பைப் பாதுகாப்பாகச் செய்ய முடியுமா என்பதைத் தீர்மானிப்பதில் இது மிகவும் முக்கியமானது. கருக்கலைப்பைச் சட்டப்பூர்வமாக்கிய பெரும்பாலான நாடுகள், பாதுகாப்பான கருக்கலைப்புக்கான காலத்தை 24 வாரக் கர்ப்பத்திற்குள் கட்டுப்படுத்துகின்றன. இதற்குக் காரணம், அதற்குப் பிறகு தாயின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் எதிர்மறையான விளைவுகளே ஆகும். ஆனால், சட்டப்பூர்வ கருக்கலைப்புக்கு அடிப்படையானது, அபாயங்களை மருத்துவரீதியாக மதிப்பீடு செய்வதாகும். ஒரு குழந்தையோ அல்லது அவரது பெற்றோரோ, தங்களின் சாதாரண அறிவைக் கொண்டு, அத்தகைய அபாயத்தைப் பற்றி ஆராய்ந்து மதிப்பீடு செய்ய முடியுமா? ஒரு சிறுமி, கட்டாயக் கர்ப்பத்திலிருந்து விடுபடத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தும்போது, ​​அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் அவருக்குப் பாதுகாப்பான வழிகளை வழங்குவது அவரது பெற்றோரின் மற்றும் அமைப்பின் கடமையாகும். இந்தக் கட்டத்தில், போதிய தகவலின்றி எடுக்கப்படும் ஒரு முடிவு, அவரது உடல் தனிபட்ட உரிமையை அனுமதிக்கும் அதேவேளையில், அவரது ஆரோக்கியத்தையோ அல்லது உயிரையோ பாதித்தால், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.


Original article : ​Doctors decide: On legal abortion

Share:

இந்தியாவின் கார்பன் நிதியை நாட்டிற்குள்ளேயே தக்கவைத்தல். - ஆர்ச்சி பார்னெல்

 ஐரோப்பா கார்பன் விதிமுறைகளை வகுக்கும்போது, ​​இந்தியா விலை ஏற்றுக்கொள்ளும் நாடாக மட்டும் இருந்து விடக் கூடாது


2026-ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று, ஐரோப்பிய ஒன்றியம் (EU) அறிமுகப்படுத்திய கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) அமலுக்கு வந்தது. தற்போது  செயல்முறை முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இதை ஐரோப்பா “நியாயமான நடத்துதல்” (fairness) என்று அழைக்கிறது: ஐரோப்பிய உற்பத்தியாளர்கள் கார்பன் விலை ஒன்றைச் செலுத்துகின்றனர். எனவே, இறக்குமதிப் பொருட்களும் அந்தவிலையைச் செலுத்த வேண்டும். காகிதத்தில் இது சமமாகத் தோன்றினாலும், நடைமுறையில் இந்தியாவுக்கு நியாயமான போட்டிக்கான வாய்ப்பு பகுதியளவு மட்டுமே திறந்துள்ளது.


ஐரோப்பிய எஃகு, அலுமினியம் மற்றும் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் அதிக கரியமில வாயு நீக்க மானியங்களையும், மானியத்துடன் கூடிய பொது நிதியையும் பெற்று மகிழ்கின்றனர். மேலும், அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உமிழ்வு வர்த்தக அமைப்பின்கீழ் இலவசங்களையும் தொடர்ந்து பெற்று வருகின்றனர். இந்த அமைப்பு 2026 முதல் 2034 வரை படிப்படியாக நீக்கப்படவுள்ளது. இதனால், கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் நிலையிலும்கூட, அவர்களின் உண்மையான கரியமில வாயு செலவுகள் குறைகின்றன. இதற்கு மாறாக, இந்திய ஏற்றுமதியாளர்கள் அதற்கு இணையான அரசு ஆதரவு ஏதுமின்றி, கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) கட்டணங்களின் முழு சுமையையும் எதிர்கொள்ள வேண்டியுள்ள சூழல் ஏற்பட்டுள்ளது.


இந்த போக்கு, உள்நாட்டு உற்பத்தியாளர்களை நியாயமான போட்டியிலிருந்து பாதுகாக்க உள்நாட்டுக் கட்டணங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சுங்கவரிகள் மற்றும் வர்த்தகம் மீதான பொது ஒப்பந்தத்தின் (General Agreement on Tariffs and Trade (GATT)) மூன்றாம் பிரிவின் நோக்கத்திற்கு ஏற்றதாக உள்ளது.

ஆழமான பிரச்சினை என்னவென்றால்


ஜனவரி 27, 2026 அன்று பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த புதிய இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement (FTA)), கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) என்பதிலிருந்து இந்தியாவிற்கு எந்த விலக்கையும் வழங்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது: எந்த நாட்டிற்கும் நாடு சார்ந்த நெகிழ்வுத்தன்மை இல்லை. இருப்பினும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கார்பன் எல்லை நடவடிக்கைகள் மீதான இணைப்பு 14-A, கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை குறித்து ஒரு முறையான தொழில்நுட்ப உரையாடலை உருவாக்குகிறது. இதில், இந்தியாவில் செலுத்தப்படும் பயனுள்ள கார்பன் விலையை ஐரோப்பிய ஒன்றிய எல்லையில் எவ்வாறு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்பதையும் உள்ளடக்கியுள்ளது. மேலும், “மிகவும் விருப்பமான நாடு” (Most-Favoured-Nation) என்ற உறுதிமொழியும் இந்த செயல்முறையில் உள்ளது. பிற நாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து தளர்வும் இந்தியாவுக்கும் தானாகவே வழங்கப்படும். இது போன்ற குறுகிய கால  நடவடிக்கை அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.


காலநிலை நீதி மற்றும் இறையாண்மை என்பதே ஆழமான பிரச்சினையாகும். கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)), ஐரோப்பாவின் கரியமில நீக்கச் (decarbonisation) சுமையின் ஒரு பகுதியை வளரும் நாடுகளின் ஏற்றுமதியாளர்கள் மீது சுமத்துகிறது. அதே, சமயம் அதன் விளைவாகக் கிடைக்கும் வருவாயை ஐரோப்பியர்களிடமே வழங்குகிறது. தனது ஏற்றுமதிகளின் மீதான கரியமில விலையை நிர்ணயிக்கவோ அல்லது அதனுடன் தொடர்புடைய வருவாயை வழிநடத்தவோ முடியாத ஒரு நாடு, பசுமை மாற்றத்தில் விதிகளை உருவாக்குபவராக இல்லாமல், விதிகளைப் பின்பற்றுபவராக மாறும் அபாயத்தை எதிர்கொள்கிறது.


இந்தியா பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கவில்லை. 2023-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட கார்பன் கடன் வர்த்தகத் திட்டம் (Carbon Credit Trading Scheme (CCTS)), வர்த்தகம் செய்யக்கூடிய சான்றிதழ்கள் மூலம் ஒரு உள்நாட்டு கார்பன் விலையை உருவாக்குகிறது. காலப்போக்கில், எஃகு உட்பட முக்கிய தொழில்துறை துறைகளையும் அது உள்ளடகியுள்ளது. CBAM ஒழுங்குமுறையின் பிரிவு 9-ன் கீழ், ஐரோப்பிய இறக்குமதியாளர்கள், ஒரு தயாரிப்பு அதன் சொந்த நாட்டில் ஏற்கனவே கார்பன் விலை செலுத்தியிருந்தால், ஐரோப்பிய இறக்குமதியாளர்கள் தங்கள் கட்டணங்களைக் குறைத்துக்கொள்ளலாம். இதுவே, இந்தியாவின் கார்பன் விலையை CBAM கட்டணத்திற்கு எதிராக இருக்கும் சட்டமாகும். இந்தக் கொள்கையும், அதை செயல்படுத்தும் சட்ட முறையும் சரியாக உள்ளன.


பிரிவு 9-இன் கீழ் கார்பன் கடன் வர்த்தகத் திட்டத்தை (Carbon Credit Trading Scheme (CCTS)), கணக்கில் எடுத்துக்கொள்வது சட்டரீதியாகவும் சுற்றுச்சூழலிற்கு ஏற்றதாகவும் இருக்கும். கார்பன் கடன் வர்த்தகத் திட்டம் (CCTS) என்பது ஒழுங்குமுறை தரச் சந்தையாகும். தொழிற்சாலைகள் தங்களின் அளவிடப்பட்ட உமிழ்வுகளுக்கு ஏற்ப கார்பன் தொடர்பான கடன்களை வைத்திருக்க வேண்டும்.  மேலும், இது ஒரு டன்னுக்கு ரூபாய் மதிப்பில் கணக்கிடப்படுகிறது. இந்த பயனுள்ள கார்பன் விலையை கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறைகளுக்கு (CBAM)   எதிராக கணக்கில் எடுத்துக்கொள்வது வலுவான கண்காணிப்பு, வெளிப்படையான மாற்று விகிதக் கணக்கீடு மற்றும் ஏற்றுமதி சலுகைகள் மூலம் சுமை நீக்கப்படாததற்கான உறுதிப்பாடுகள் ஆகியவற்றுடன் இரு முறை செலுத்தபடும் கட்டணத்தைத் தவிர்க்க உதவும். அதேநேரத்தில், CBAM-ன் முக்கிய நோக்கமான சமமான போட்டி சூழலை உருவாக்குவதையும் இது  பாதுகாக்கும்.


ஒரு எதிர் சரிசெய்தலாக


இந்தியாவின் அடுத்த நகர்வு ஒரு எதிர் நடவடிக்கையாக இருக்க வேண்டும்: இந்திய எல்லை சரிசெய்தல் செயல்முறை (India Border Adjustment Mechanism (IBAM)) கார்பன் கடன் வர்த்தகத் திட்டத்தை ஒரு தவிர்க்க முடியாத வெளிப்புற நடவடிக்கையாக ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, CBAM-ன் கீழ் வரும் ஏற்றுமதிகள் மீது இந்தியா தனது சொந்த கார்பன் அடிப்படையிலான கட்டணத்தை விதிக்கும் செயல்முறையாகும். ஏற்றுமதி செய்யப்படும் இடத்திலேயே கட்டணம்  வசூலிக்கப்படும். ஆனால், இந்திய எல்லை சரிசெய்தல் செயல்முறை  ஒருதலைபட்சமாக அறிவிக்கப்படவோ கூடாது. இது இணைப்பு 14-A மூலமாக மட்டுமே உருவாக்கப்பட வேண்டும். அப்படி செய்தால், அதன் வடிவமைப்பு முன்கூட்டியே “மூல நாட்டில் செலுத்தப்பட்ட கார்பன் விலை” என CBAM இணைப்பு 9-ன் நோக்கத்திற்கு ஏற்ப அங்கீகரிக்கப்படும். கார்பன் கடன் வர்த்தகத் திட்ட(Carbon Credit Trading Scheme (CCTS)), கொடுப்பனவுகள் மற்றும் இந்திய எல்லை சரிசெய்தல் செயல்முறை கட்டணங்கள் எவ்வாறு வரவு வைக்கப்படும் என்பதை இணைப்பு 14-A-ஐப் பயன்படுத்தி இந்தியா கவனமாக வரிசைப்படுத்தினால், இந்திய ஏற்றுமதியாளர்கள் CBAM மட்டும் விதிக்கும் ஒட்டுமொத்த கார்பன் செலவைவிட அதிகமான செலவை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படாது. அவர்கள் ஐரோப்பாவில் மறைமுகமாக செலுத்தும் வரியை, உள்நாட்டு வரிகள் மூலம் வெளிப்படையாகச் செலுத்துவார்கள். இது ஐரோப்பிய ஒன்றிய எல்லையில் முழுமையாக ஈடுசெய்யப்படும்.  இதனால், ஏற்றுமதியாளர்களின் மொத்த கார்பன் சுமை CBAM செயல்முறை  என்ற அளவிற்குள்  கட்டுப்படுத்தப்படும்.


இந்திய எல்லை சரிசெய்தல் செயல்முறையை (India Border Adjustment Mechanism (IBAM)) ஒரு ஆக்கப்பூர்வமான சலுகையாக மாற்றுங்கள்.


முக்கியமான வேறுபாடு பணம் எங்கு செல்கிறது என்பதில் உள்ளது. இந்திய எல்லை சரிசெய்தல் செயல்முறையை மூலம் வரும் வருமானங்கள் இந்தியாவிலேயே இந்தியாவிற்குள் இருக்கும். சேகரிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும், சரிபார்க்கக்கூடிய பசுமைத் திட்டங்களுக்காக மட்டுமே வெளிப்படையாக நிர்வகிக்கப்படும் ஒரு பிரத்யேக நிதியில் ஒதுக்கப்பட வேண்டும். ஊது உலைகளை நவீனமயமாக்குதல் (modernising blast furnaces), குறைந்த கார்பன் மின்சாரத்தை விரிவுபடுத்துதல், ஹைட்ரஜன் மற்றும் உலோகக் கழிவு அடிப்படையிலான எஃகு உற்பத்தியைப் அதிகரித்தால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவளித்தல் போன்ற அனைத்துத் திட்டங்களும் கடுமையான, அளவிடக்கூடிய, அறிக்கையிடக்கூடிய மற்றும் சரிபார்க்கக்கூடிய தரநிலைகளுக்கு ஏற்ப, தன்னிச்சையாகத் தணிக்கை செய்யப்பட்டு, பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும்.


இவ்வாறு பார்க்கும்போது, கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை ஒரு தடையாக அல்ல, மாறாக அது ஒரு பயனுள்ள முன்மொழிவாகும். கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) என்பது வருவாயைப் பாதுகாப்பதைவிட, கார்பன் கசிவைத் தடுப்பதைப் பற்றியது என்பதில் ஐரோப்பிய ஒன்றியம் உண்மையாக இருந்தால், அது பிரிவு 9-ன் கீழ் நம்பகமான இந்திய கார்பன் விலை நிர்ணயத்தை அங்கீகரித்து, அந்த கட்டணங்களை உண்மையான சரிசெய்தல்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனால், ஐரோப்பிய நுகர்வோர் இன்னும் கார்பன் விலை கொண்ட பொருட்களைப் பெறுவார்கள். இந்திய உற்பத்தியாளர்கள் கூடுதல்  கார்பன் செலவைச் சந்திக்க வேண்டியதில்லை.


முக்கியமாக, இந்தியா தனது கார்பன் வருவாயைத் தக்கவைத்துக்கொண்டு, குறைந்தபட்சம் பகுதியளவிலாது தனது சொந்த நிபந்தனைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஒரு 'பசுமை மாற்றத்திற்கு' நிதியளிக்க வரும் வருவாயைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


இந்தியா, “IBAM மூலம் CBAM-ஐ எதிர்கொள்ள வேண்டும். சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் இணைப்பு 14-A மற்றும் CBAM-ன் பிரிவு 9 ஆகியவற்றை  குறிப்புகளாக மட்டும் கருதாமல், கார்பன் விலை நிர்ணயம் நடைமுறை உலகத்துடன் தீவிரமாக பயன்படுத்தபடும் அதே வேளையில், கார்பன் சார்ந்த நிதியை நாட்டிற்குள்ளேயே தக்கவைத்துக்கொள்வதற்கான அளவுகோலாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


ஆர்ச்சி பார்னெல், ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகச் சட்டப் பள்ளியின் சட்டப் பேராசிரியராக உள்ளார்.


Original article : Keeping India’s carbon money at home.

Share:

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (Organisation of the Petroleum Exporting Countries (OPEC)) என்றால் என்ன? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


ஐக்கிய அரபு அமீரகத்தின் முடிவும், அதன் விளைவாக பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பிற்குள் (OPEC) ஏற்படும் கட்டமைப்புரீதியான பலவீனமும், நீண்டகால அடிப்படையில் எண்ணெய் விலைகள் குறைவதற்கான அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், குறுகிய காலத்தில், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்ந்து முடக்கப்பட்டிருக்கும் வரை, எண்ணெய் விலையில் எவ்விதத் தாக்கமும் இருக்காது என்று நிபுணர்களும் ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.


எண்ணெய் விலைகள் குறைவாக இருக்கும் சூழலிலும்கூட, முடிந்தவரை அதிக அளவு எண்ணெயை உற்பத்தி செய்ய ஐக்கிய அரபு அமீரகம் விரும்புவது தெளிவாகிறது. எண்ணெய் விலைகளைத் தீர்மானிப்பதற்காக, பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பின்  (OPEC) நடைமுறைத் தலைவரான சவுதி அரேபியாவால் பல ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வந்த 'உற்பத்தி ஒதுக்கீட்டு முறை'யிலிருந்து இது ஒரு விலகலாக அமையும்.


உங்களுக்குத் தெரியுமா?


செப்டம்பர் 1960-ல் ஈராக்கின் பாக்தாத் நகரில் நடைபெற்ற மாநாட்டில் நிறுவப்பட்ட பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (OPEC), தொடக்கத்தில் ஈரான், குவைத், ஈராக், சவுதி அரேபியா மற்றும் வெனிசுலா ஆகிய ஐந்து உறுப்பு நாடுகளால் உருவாக்கப்பட்டது. OPEC உருவாவதற்கு முன்பு, மேற்கத்திய பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களே (பெரும்பாலும் 'ஏழு சகோதரிகள்' என அழைக்கப்பட்டவை) எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு வழங்கப்படும் விலையை பெரும்பாலும் தீர்மானித்து வந்தன. இந்த ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையிலும், உறுப்பு நாடுகளுக்கு நிலையான வருவாய் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் அவற்றின் பெட்ரோலியக் கொள்கைகளை ஒருங்கிணைப்பதற்காகவும் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (OPEC) உருவாக்கப்பட்டது.


அரபு-இஸ்ரேல் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவளித்த காரணத்தினால், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளின் மீது பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு  (OPEC) எண்ணெய் தடை விதிப்பதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1967-ல், ஐக்கிய அரபு அமீரகம் இக்கூட்டமைப்பில் முறையாக இணைந்தது. அக்காலகட்டத்தில் எண்ணெய் விலைகள் கிட்டத்தட்ட நான்கு மடங்காக உயர்ந்ததன் விளைவாக, அல்ஜீரியா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளைச் சேர்த்து தனது உறுப்பு நாடுகளையும் அது விரிவுபடுத்தியது. பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு  (OPEC) படிப்படியாகப் புவிசார் அரசியல்ரீதியான செல்வாக்கையும் பெற்றது. இது 2025-ம் ஆண்டில், OPEC-இன் நான்காவது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்ந்தது. இக்கூட்டமைப்பின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 11 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை அது கொண்டிருந்தது. பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பிற்குள்  (OPEC) சவுதி அரேபியா, ஈராக் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு அடுத்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் இருந்தது.


பரந்த அளவிலான 'OPEC+' கூட்டமைப்பு 2016-ல் உருவாக்கப்பட்டது. இதில் ரஷ்யாவின் தலைமையில் OPEC அல்லாத 10 முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகள் அடங்கும். அமெரிக்காவின் ஷேல் எண்ணெய் (shale oil) உற்பத்தி பெருமளவில் அதிகரித்ததற்குப் பதிலளிக்கும் விதமாக உருவாக்கப்பட்ட OPEC+, உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை உற்பத்தி செய்தது.


OPEC மற்றும் அதன் நீட்சியாக OPEC+ கூட்டமைப்பும், எண்ணெய் விநியோக மேலாண்மையில் தங்களுக்குள்ள செல்வாக்கின் மூலம் தங்கள் அதிகாரத்தைப் பெறுகின்றன. உற்பத்தி வரம்புகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், ஒவ்வொரு உறுப்பு நாட்டிற்கும் கடுமையான உற்பத்தி ஒதுக்கீடுகளை நிர்ணயிப்பதன் மூலமும் எண்ணெய் விலைகளை நிர்வகிக்க OPEC முயற்சிக்கிறது. உலகளாவிய தேவை குறையும் காலங்களில் சந்தையை அதிகப்படியான விநியோகத்திலிருந்து பாதுகாப்பதற்காகவே இந்த உற்பத்தி ஒதுக்கீட்டு முறை வடிவமைக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா தலைமையிலான குழு கூறுகிறது.        

                         


Original article : What is the Organisation of the Petroleum Exporting Countries (OPEC)?

Share:

வெப்ப அலை நெருக்கடிக்கு வெறும் கொள்கைகள் மட்டும் போதாது, ஒரு தொலைநோக்குப் பார்வை தேவை. -ரோஹித் பகா

 தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA), நிவாரண நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, வெப்பத் தணிப்பு மற்றும் மீள்திறனுக்கான முதலீடுகளை ஆதரிக்கும் விரிவான கட்டமைப்புகளை உருவாக்குவதில் முன்னணியில் இருக்க வேண்டும்.


குறிப்பாக, 2026-ம் ஆண்டின் கோடைக்காலம் தீவிரமாக இருக்கக்கூடும் என்றும், நாட்டின் பல பகுதிகளில் இயல்பை விட அதிகமான வெப்ப அலைகளைக் கொண்ட நாட்கள் நிகழ வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department) எச்சரித்துள்ளது. இதில் வெப்ப அலைகளானவை, புயல்கள் அல்லது திடீர் வெள்ளம் போன்ற பேரிடர்களிலிருந்து வேறுபட்டு, மெதுவாக உருவாகி, அவை பெரும்பாலும் நாட்கள் அல்லது வாரங்களில் படிப்படியாக தீவிரமடைகின்றன. இதன் காரணமாக, அவசரகால மீட்பு நடவடிக்கைகளை மட்டுமல்லாமல், தொடர்ச்சியான திட்டமிடல் தேவைப்படுகிறது.


இதை உணர்ந்து, பல இந்திய நகரங்கள், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் வெப்பச் செயல் திட்டங்களை (Heat Action Plans (HAP)) உருவாக்கியுள்ளன. இந்தத் திட்டங்கள், முன்னறிவிப்பு அமைப்புகள், பொதுமக்களுக்கான ஆலோசனைகள் மற்றும் அவசரகால நடவடிக்கைகள் மூலம் அரசுத் துறைகளுக்கு இடையே நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல நகரங்களில், வெப்பம் சார்ந்த உயிரிழப்புகளையும் நோய்களையும் குறைப்பதற்கு இத்திட்டங்கள் பெரிதும் உதவியுள்ளன.


இருப்பினும், வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியா இப்போது குறுகிய கால நடவடிக்கைகளைக் கடந்து, நகரங்களை நிலையான முறையில் குளிர்விப்பதற்கான நீண்டகால உத்திகளில் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். இந்தச் சூழலில், தேசிய அளவில் அறிவிக்கப்பட்ட பேரிடர்களின் பட்டியலில் வெப்ப அலைகளையும் சேர்க்க வேண்டும் என்ற 16-வது நிதி ஆணையத்தின் சமீபத்திய பரிந்துரை ஒரு திருப்புமுனையாக அமையக்கூடும். இப்பரிந்துரையை அளிப்பதன் மூலம், காலநிலை மாற்றம் இந்தியாவின் பேரிடர்ச் சூழலை அடிப்படையிலேயே மாற்றியமைத்துவிட்டது என்பதை ஆணையம் அங்கீகரிக்கிறது.


இந்த மறுவகைப்பாடு, மாநிலங்களுக்குக் கிடைக்கும் நிதி மற்றும் நிறுவனரீதியான ஆதரவை மாற்றியமைக்கிறது. இதுவரை, மாநிலங்கள் வெப்ப அலைகள் உட்பட உள்ளூர் பேரிடர்களை, மாநிலம் சார்ந்த பேரிடர்களாக அறிவித்திருந்தால், அவற்றுக்கு உடனடி நிவாரணம் வழங்கத் தங்கள் மாநிலப் பேரிடர் மீட்பு நிதியில் (State Disaster Response Fund (SDRF)) 10 சதவீதம் வரை பயன்படுத்த முடிந்தது. பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வெப்ப அலைகளைச் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், மாநிலங்கள் இப்போது தங்கள் மாநிலப் பேரிடர் இடர் மேலாண்மை நிதிகள் (State Disaster Risk Management Funds (SDRMF)) மட்டுமின்றி, பரந்த அளவிலான தேசியப் பேரிடர் இடர் மேலாண்மை நிதியிலிருந்தும் ஆதரவைப் பெற முடியும். இது நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மட்டுமல்லாமல், நீண்ட கால மீள்திறன் மற்றும் பேரிடர் தணிப்பு முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்கும் நிதிச் சாத்தியக்கூறுகளை விரிவுபடுத்துகிறது.


புதிய வகைப்பாடு நிதி ஆதாரங்களைத் திறந்தாலும், தற்போதைய கொள்கைக் கட்டமைப்பு வரையறுக்கப்பட்டதாகவே உள்ளது. இங்குதான் உண்மையான சவால் உள்ளது. பெரும்பாலான வெப்பச் செயல் திட்டங்கள், எச்சரிக்கைகள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் அவசரகால நடவடிக்கைகள் போன்ற குறுகிய கால நடவடிக்கைகளிலேயே தொடர்ந்து முதன்மையாகக் கவனம் செலுத்துகின்றன. மோசமான நகர்ப்புற வடிவமைப்பு, வெப்பத்தை உறிஞ்சும் கட்டுமானப் பொருட்கள், குறைந்து வரும் பசுமைப் பரப்பு, திறனற்ற குளிரூட்டும் அமைப்புகள் மற்றும் வெப்ப வசதிக்கான சமமற்ற அணுகல் போன்ற வெப்ப பாதிப்புக்கான கட்டமைப்பு சார்ந்த காரணிகளைக் கையாள்வதில் அவை சிறிதளவே பங்களிக்கின்றன.


கிடைக்கக்கூடிய நிதிகளைத் திறம்படப் பயன்படுத்த, இந்தியா தனது கொள்கைக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் மற்றும் நீண்டகால வெப்ப மீள்திறன் உத்திகள் குறித்து நகரங்களுக்கும் மாநிலங்களுக்கும் தெளிவான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம், நிவாரணப் பணிகளுக்கு அப்பாற்பட்டு, காலநிலைக்கேற்ற திட்டமிடல், நகர்ப்புற பசுமை மற்றும் நீல உள்கட்டமைப்புகளின் விரிவாக்கம், மேம்படுத்தப்பட்ட கட்டிட வடிவமைப்பு, உள்கட்டமைப்பு மீள்திறன் மற்றும் நீடித்த குளிரூட்டும் தீர்வுகள் போன்ற வெப்பத் தணிப்பு மற்றும் மீள்திறன் முதலீடுகளை ஆதரிக்கும் விரிவான கட்டமைப்புகளின் உருவாக்கத்திற்குத் தலைமை தாங்க வேண்டும்.


உள்ளாட்சி அமைப்புகள், காலப்போக்கில் வெப்பம் சார்ந்த இடர்களைக் குறைக்கும் திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்த உதவும் நிறுவனத் திறனை வளர்த்தெடுப்பதும் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நிதி ஆதாரங்கள் திறம்படப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனங்களுக்கு இடையிலான வலுவான ஒருங்கிணைப்பும், நகரங்களுக்கான மேம்பட்ட தொழில்நுட்ப ஆதரவும் மிக முக்கியமானவையாக அமையும்.


நிதி ஆதாரங்கள் தற்போது இருப்பு உள்ளன. இந்தியாவுக்கு அடுத்ததாகத் தேவைப்படுவது, வெப்பம் தணிந்த, பாதுகாப்பான மற்றும் அதிக மீள்திறன் கொண்ட நகரங்களை உருவாக்கும் ஒரு கொள்கை சார்ந்த தொலைநோக்குப் பார்வையே ஆகும்.


கட்டுரையாளர், iFOREST-இன் திட்ட உதவியாளர் ஆவர்.     

Original article : Heatwave crisis needs a vision, not just policy.

Share: