குடிமக்களுக்கான புதிய அவசரகால செய்தி அனுப்பும் முறையை இந்தியா சோதிக்கிறது : அலைபேசி தொலைதொடர்பு (cell broadcast) எவ்வாறு செயல்படுகிறது?, அதன் முக்கியத்துவம் என்ன? -பாஸ்கர் சர்மா

 தற்போது, ​​அரசாங்கம் ஏற்கனவே குறுஞ்செய்தி (SMS) மூலம் பேரிடர் எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இருப்பினும், பலரால் தவறவிடப்படக்கூடிய குறுஞ்செய்தி எச்சரிக்கைகளைப் போலல்லாமல், சனிக்கிழமையன்று பயன்படுத்தப்பட்ட அலைபேசி தொலைதொடர்புத் தொழில்நுட்பத்தைப் புறக்கணிக்கவே முடியாது.


சேச்செட் அவசர எச்சரிக்கை அமைப்பு (SACHET emergency alert system) : சனிக்கிழமை காலை சுமார் 11.40 மணியளவில், இந்தியா முழுவதும் பல திறன்பேசிகளில் (smartphones) திடீரென ஒரு கடுமையான பீப் ஒலி எழுந்து அதிர்வுறத் தொடங்கியது. ‘மிகவும் கடுமையான எச்சரிக்கை’ என்ற தலைப்புடன் ஆங்கிலம், இந்தி மற்றும் பிற மொழிகளில் ஒரு பாப்-அப் செய்தி (pop-up message) அலைபேசி திரைகளில் தோன்றியது.


இந்த திடீர் அதிர்வுகளையும் ஒலியையும் கண்டு பலர் திகைத்திருக்கலாம் என்றாலும், இது அடிப்படையில் இயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர்களின் போது மக்களை எச்சரிப்பதற்காக, அலைபேசி தொலைதொடர்பு (cell broadcast) எனப்படும் ஒரு தீவிர ஒலிபரப்பு அமைப்பின் அகில இந்திய அளவிலான சோதனையாகும்.


தற்போது, ​​அரசாங்கம் ஏற்கனவே குறுஞ்செய்தி (SMS) மூலம் பேரிடர் எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், பலரால் தவறவிடப்படக்கூடிய குறுஞ்செய்தி எச்சரிக்கைகளைப் போலல்லாமல், சனிக்கிழமையன்று பயன்படுத்தப்பட்ட அலைபேசி தொலைதொடர்பு தொழில்நுட்பத்தை எவராலும் புறக்கணிக்க இயலாது.



இத்தொழில்நுட்பம், சுனாமி எச்சரிக்கைகளை விடுத்த ஜப்பான் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களைப் பிரதிபலிக்கிறது.


இந்தியாவில் சில காலமாக இத்தொழில்நுட்பத்தைச் சோதித்து வந்தாலும், இவ்வளவு பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.


அலைபேசி தொலைதொடர்பு (cell broadcast) தொழில்நுட்பம் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? மற்றும் ஒரு நாட்டிற்கு இத்தகைய எச்சரிக்கை அமைப்பு இருப்பது ஏன் மிகவும் இன்றியமையாதது என்பதைப் பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.


அலைபேசி தொலைதொடர்பு (cell broadcast) தொழில்நுட்பம் என்றால் என்ன?


அலைபேசி தொலைதொடர்பு (cell broadcast) என்பது, வரையறுக்கப்பட்ட ஒரு புவியியல் எல்லைக்குள் அமைந்துள்ள பல அலைபேசிகளுக்கு ஒரே நேரத்தில் குறுஞ்செய்திகளை அனுப்ப உதவும் ஒரு தொழில்நுட்பமாகும்.


ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அமைப்பான சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (International Telecommunication Union(ITU)) கூற்றுப்படி, இந்த அமைப்பு ஒரே நேரத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான சாதனங்களுக்குச் செய்திகளை அனுப்ப முடியும் அல்லது ஒரு சிறிய பகுதியை மட்டுமே பாதித்தால், அந்த குறிப்பிட்ட இடத்தில் உள்ள கைபேசிகளுக்கு மட்டுமே செய்தியை அனுப்ப முடியும். இந்த அமைப்பு எந்தவொரு வலையமைப்பு நெரிசலையும் மீறிச் செயல்படுவதால், செய்திகள் உடனடியாக அனுப்பப்படுகின்றன.


இந்த அமைப்பு 1990-களின் முற்பகுதியில், ஐரோப்பா முழுவதிலுமுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் உபகரண உற்பத்தியாளர்களின் உள்ளீடுகளுடன், ஐரோப்பிய தொலைத்தொடர்பு தரநிர்ணய நிறுவனத்தால் (European Telecommunications Standards Institute) உருவாக்கப்பட்டது.




இம்முறை முதன்முதலில் 1997-ல் பாரிஸில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் பல நாடுகளால் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் உள்ள மக்களுக்கு இயற்கை பேரழிவுகள் (சுனாமிகள், நிலநடுக்கங்கள் மற்றும் மின்னல் தாக்குதல்கள்) அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள் (எரிவாயு கசிவுகள் அல்லது இரசாயன அபாயங்கள் போன்றவை) குறித்து ஒரே நேரத்தில் எச்சரிக்கை விடுப்பதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது.


இந்தத் தொழில்நுட்பம் ஒரு சர்வதேச சிறந்த நடைமுறையாகக் கருதப்படுகிறது. மேலும், தற்போது 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அவசரகால எச்சரிக்கை தகவல் தொடர்பு அமைப்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த எச்சரிக்கைகள், பயனரின் மொழி போன்ற குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கக்கூடியவையாகவும் உள்ளன.


அலைபேசி தொலைதொடர்பு (cell broadcast) எவ்வாறு செயல்படுகிறது?


சாதாரண வலையமைப்பு செயல்பாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகளாவிய அமைப்பான ஜிஎஸ்எம் அசோசியேஷனின் (GSM Association) கூற்றுப்படி, அன்றாட வலையமைப்பு செயல்பாட்டின் ஒரு பகுதியாக, அலைபேசி கோபுரங்கள் (cell towers) தங்கள் எல்லைக்குள் உள்ள தொலைபேசிகளுடன் தொடர்பு கொண்டு, அவை இணைக்கப்பட்டுள்ள வலையமைப்பு போன்ற தகவல்களை வழங்குகின்றன.


இந்தத் தகவல் பொதுவாகப் பயனருக்குத் தெரியாது. வலையமைப்பு அது செயல்பட வேண்டிய விதத்தில் செயல்பட உதவுவதே இதன் ஒரே நோக்கமாகும்.


அலைபேசி கோபுரங்களிலிருந்து கைபேசிகளுக்குத் தகவல்களை அனுப்புவதும், அதனைச் சாத்தியமாக்கும் தொழில்நுட்பமும், பரவலாக அலைபேசி தொலைதொடர்பு என்று அழைக்கப்படுகின்றன எனத் தொழில்துறை அமைப்பு கூறுகிறது.


எனவே, அலைபேசி கோபுரங்களுக்கும் தொலைபேசிகளுக்கும் இடையிலான இந்த ஒருவழித் தொடர்பு முறையை அரசாங்க அதிகாரிகள் அவசரகால எச்சரிக்கைகளை விடுக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த அமைப்பு, தனித்தனியாக குறுஞ் செய்திகளை அனுப்புவதற்குப் பதிலாக, ஒரு அலைபேசி வலையமைப்பு கோபுரத்திலிருந்து அந்தக் கோபுரத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து தொலைபேசிகளுக்கும் ஒரே நேரத்தில் ஒரு செய்தியை அனுப்புவதன் மூலம் செயல்படுகிறது.


இது ஒரு குறுஞ்செய்தியிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?


ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும் (one-to-one) ஒரு வழிமுறையாகச் செயல்படும் குறுஞ்செய்திக்கு மாறாக, 'அலைபேசி தொலைதொடர்பு' (Cell Broadcast - CB) என்பது ஒரு செய்தியைப் பலருக்கு ஒரே நேரத்தில் அனுப்பும் (one-to-many) ஒரு தொழில்நுட்பமாகும். இதன் பொருள் என்னவென்றால், ஒரேயொரு செய்தியைச் சில வினாடிகளுக்குள் லட்சக்கணக்கான சாதனங்களுக்கு அனுப்ப முடியும்.


சந்தாதாரரின் இருப்பிடத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட அலைபேசி கோபுர தளங்கள் வழியாக செய்தி உள்ளடக்கத்தை விநியோகிப்பதன் மூலம் அலைபேசி தொலைதொடர்பு (CB) செயல்படுகிறது. குறுஞ்செய்தியைப் போலல்லாமல், ஒரு செய்தியை அனுப்ப அலைபேசி தொலைதொடர்புக்கு (CB) தொலைபேசி எண் தேவையில்லை என்று GSM அமைப்பு கூறுகிறது.


எனவே, அவர்களின் சாதனங்களைப் பதிவு செய்யவோ அல்லது கண்காணிக்கவோ தேவையின்றி, குறிப்பிட்ட இடங்களுக்கு அவசரகால எச்சரிக்கைகளை அனுப்ப இது அனுமதிக்கிறது.


மேலும், இந்த அமைப்பு குறுஞ்செய்தியை (SMS) விட அதிக தனியுரிமை கொண்டது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பார்வையாளர்கள், பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட, எச்சரிக்கைகளைப் பெறலாம். இந்த அமைப்பு பன்மொழி வசதி கொண்டதாக இருந்தால், அவர்கள் தங்களது சொந்த மொழியில்கூட எச்சரிக்கைகளைப் பெறுவார்கள்" என்று அது கூறுகிறது.


மேலும், இது ஒரு குறுஞ்செய்தியைவிட மிகவும் எளிதில் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக உள்ளது.



எந்தெந்த நாடுகள் இந்த அமைப்பைச் செயல்படுத்தியுள்ளன?


உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் தற்போது, ​​பேரிடர்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து குடிமக்களை எச்சரிப்பதற்காக, அலைபேசி தொலைதொடர்பு அடிப்படையிலான அவசரகால எச்சரிக்கை அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன.


2007-ல் இந்த முறையை ஏற்றுக்கொண்ட முதல் நாடுகளில் ஜப்பானும் ஒன்றாகும். அதன் ஜே-அலர்ட் (J-Alert) அமைப்பு, நிலநடுக்கங்கள், சுனாமிகள், எரிமலை வெடிப்புகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் போன்ற அச்சுறுத்தல்கள் குறித்த உடனடி அவசரகாலத் தகவல்களை சைரன்கள் (sirens) மூலம் அனுப்புகிறது. 1995-ல் கிட்டத்தட்ட 6,500 பேரைக் கொன்ற பேரழிவுகரமான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு நகரமான கோபேயில் (Kobe) இது சோதனை செய்யப்பட்டது என்று பிசிஜி ஆதரவு பெற்ற இலாப நோக்கற்ற அமைப்பான 'சென்டர் ஃபார் பப்ளிக் இம்பாக்ட்' (Centre for Public Impact) கூறுகிறது.


பின்னர் பல நாடுகள் இதேபோன்ற அமைப்புகளை அறிமுகப்படுத்தின. அமெரிக்கா 2012-ல் தனது கம்பியில்லா அவசரகால எச்சரிக்கை (Wireless Emergency Alerts (WEA)) அமைப்பை அறிமுகப்படுத்தியது. ஐரோப்பா முழுவதும், குறிப்பாக 2018-ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் உத்தரவு, உறுப்பு நாடுகள் 2022-க்குள் அலைபேசி தொலைதொடர்பு தொழிநுட்பத்தைப் (cell broadcast technology) பயன்படுத்தி பொது எச்சரிக்கை அமைப்புகளைச் செயல்படுத்த வேண்டும் என்று கட்டளையிட்டபிறகு, உலகளாவிய நாடுகள் EU-அலர்ட் (EU-Alert) கட்டமைப்பின்கீழ் இதேபோன்ற அமைப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளன.


ஆசியாவில், ஜப்பானைத் தவிர, தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளும் கடந்த பத்தாண்டுகளில் நாடு தழுவிய எச்சரிக்கை அமைப்புகளைச் செயல்படுத்தியுள்ளன. கனடா, நியூசிலாந்து மற்றும் சிலி உள்ளிட்ட பிற நாடுகள், காட்டுத்தீ, நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற அபாயங்களுக்கு ஏற்றவாறு, இதேபோன்ற தொலைதொடர்பு அடிப்படையிலான எச்சரிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.



இந்த அமைப்பின் நன்மைகள் என்னென்ன?


சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) கூற்றுப்படி, அலைபேசி தொலைதொடர்பு தொழில்நுட்பம் எந்தவொரு தனிப்பட்ட தரவையும் பயன்படுத்துவதில்லை. பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்கள் அல்லது இருப்பிடத் தரவைப் பகிர வேண்டிய அவசியமின்றி, அலைபேசிகளால் செய்திகளைப் பெறமுடியும்.


இதற்கு எந்த செயலியோ அல்லது சந்தாவோ தேவையில்லை. அலைபேசி இயக்கப்பட்டிருப்பதும், இதுபோன்ற செய்திகளை ஏற்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதும் மட்டுமே இதற்கான ஒரே தேவையாகும் (அமைப்புகள் → பாதுகாப்பு மற்றும் அவசரநிலை → கம்பியில்லா அவசர எச்சரிக்கைகள் → சோதனை எச்சரிக்கைகள்).


ஒரு குறுஞ்செய்தியைப் போலல்லாமல், அதன் தனித்துவமான எச்சரிக்கை ஒலிகள் மற்றும் அதிர்வு முறையையும் காரணமாக இது மிகவும் எளிதில் கவனத்தை ஈர்க்கிறது. இதனால், இரைச்சல் மிகுந்த சூழல்களிலும்கூட மக்களின் கவனத்தை ஈர்க்க முடியும்.


பயனர் அதைப் படித்து, ‘சரி’ (OK) பொத்தானை அழுத்தும் வரை, இந்த பாப்-அப் செய்தி திரையில் நிலைத்திருக்கும்.


இந்த எச்சரிக்கை, அழைப்புகள் உட்பட, ஒரு கைபேசியில் நடந்துகொண்டிருக்கும் அனைத்து செயல்பாடுகளையும் மீறிச் செயல்படக்கூடியது. சாதனம் அமைதி பயன்முறையில் (silent mode) அல்லது தொந்தரவு செய்யாதே பயன்முறையில் (Do-Not-Disturb mode) இருக்கும்போதும் இது வழங்கப்படலாம்.


இந்தக் காரணத்திற்காக, இது மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல்களிலேயே இது பயன்படுத்தப்படும். இவ்வெச்சரிக்கைகளை அனுப்புவதற்கான குறிப்பிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், ஏதேனும் ஒரு பேரிடரால் யாருடைய உயிருக்கோ அல்லது உடைமைக்கோ ஆபத்து உள்ளதோ, அவர்களுக்கு மட்டுமே இது வழங்கப்படும். ஒரு பொதுவான ஆலோசனை அல்லது எச்சரிக்கையை வழங்குவதற்கு இது பயன்படுத்தப்படாது. பெரும் நிலநடுக்கங்கள், பனிப்பாறை ஏரி உடைப்புகள், நிலச்சரிவு, திடீர் வெள்ளம் அல்லது அணை உடைப்புகள் போன்ற சூழ்நிலைகளில் எச்சரிக்கை அனுப்ப வேண்டியிருக்கலாம்.


இந்தியாவின் நிலை என்ன?


தற்போது, ​​இந்தியா தனது 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் அனைத்திலும் செயல்பாட்டில் உள்ள குறுஞ்செய்தி அடிப்படையிலான எச்சரிக்கை அமைப்பைப் பயன்படுத்தி வருகிறது.


இந்திய அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த அமைப்பு பேரிடர் மேலாண்மை அதிகாரிகளால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், இயற்கை பேரிடர்கள், வானிலை எச்சரிக்கைகள் மற்றும் புயல் நிகழ்வுகளின் போது, ​​19-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 134 பில்லியனுக்கும் அதிகமான குறுஞ்செய்தி (SMS) எச்சரிக்கைகள் பரப்பப்பட்டுள்ளன.


மேலும், அலைபேசி தொலைதொடர்பு தொழில்நுட்பமானது கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வருகிறது. இது அவசர மற்றும் பேரிடர் சூழ்நிலைகளில் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க ஒரு பயனுள்ள கருவியாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்பு குறைந்த அளவிலான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இதுவே முதல் பெரிய சோதனையாகும்.


தொலைத்தொடர்புத் துறையின் (DoT) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் (Centre for Development of Telematics (C-DOT)), இந்தியாவில் இந்த தீவிர தொலைதொடர்பு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.


இந்த அமைப்பு நாடு முழுவதும் முழுமையாக எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்த தெளிவான தகவல் இன்னும் இல்லை.


உங்கள் அலைபேசிகளில் எச்சரிக்கைச் செய்தி வந்தால், பதற்றமடைய வேண்டாம். சனிக்கிழமையன்று சோதனை முடிந்த பிறகு, தொலைத்தொடர்புத் துறை (DoT) வெளியிட்ட அறிவிப்பில்: “பேரிடர்களின்போது சரியான நேரத்தில் துல்லியமான தகவல்களைப் பெறுவதற்காக, இது அவசரகால எச்சரிக்கை அமைப்பைச் (Emergency Alert System) சோதிக்கும் ஒரு பகுதியாகும். சோதனையின் போது, ​​இந்தச் செய்தி மீண்டும் மீண்டும் தோன்றக்கூடும். அதைப் புறக்கணிக்கவும்; நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை.”


இது ஏன் முக்கியமானது?


காலநிலை தொடர்பான பேரழிவுகள் அடிக்கடி மற்றும் கடுமையாக நிகழ்ந்து வருவதால், உயிர்வாழ்வதற்கு அலைபேசி தொலைதொடர்பு போன்ற தொழில்நுட்பங்கள் மிகவும் முக்கியமானதாகின்றன.


குறிப்பாக இந்தியாவில், திடீர் வெள்ளம், கடும் வெப்பநிலை மற்றும் புயல்கள் போன்ற இயற்கை பேரழிவுகள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.


சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) கூற்றுப்படி, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு ஏற்ப சமூகங்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ள இத்தகைய அமைப்புகள் பெரும் பங்காற்ற முடியும். அலைபேசி தொலைதொடர்பு போன்ற தொழில்நுட்பங்கள், "ஆபத்தில் உள்ள மக்களுக்கு முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்புகளை வழங்குவதற்கான முக்கியக் கூறுகள்" என்று அது கூறுகிறது.


சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) செயல்படுத்த உதவும் ஐ.நா-வின் “அனைவருக்கும் முன்கூட்டிய எச்சரிக்கைகள்” முன்முயற்சியின் கீழ், வெள்ளம், புயல் அல்லது வெப்ப அலைகள் போன்ற பேரிடர்களின் போது மக்கள் சரியான நேரத்தில், துல்லியமான எச்சரிக்கைகளைப் பெறுவதை உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய கருவியாக அலைபேசி தொலைதொடர்பு கருதப்படுகிறது. இதனால் இது காலநிலை தழுவலின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது.


பொது எச்சரிக்கைகளுக்கு அலைபேசி தொலைதொடர்பு பயன்பாட்டைக் கட்டாயமாக்குவதற்கான ஒரு ஒழுங்குமுறை அணுகுமுறையைப் பரிசீலிக்குமாறு நாடுகளை ஊக்குவிப்பதாக சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) கூறுகிறது.


Original article : India tests new emergency messaging system for citizens: How cell broadcast works, why it matters?

Share: