இந்தியாவில் உள்ள முக்கியமான புலிகள் காப்பகங்கள் யாவை? -ரோஷ்னி யாதவ்

 நான்கு வயதுடைய பெண் புலி ஒன்று, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சத்தீஸ்கரின் உதந்தி-சீதாநதி புலிகள் காப்பகத்திற்குள் (Udanti-Sitanadi Tiger Reserve (USTR)) நுழைந்து, கடும் கோடைக்காலத்திலும் அங்கேயே தங்கியுள்ளது.              கடந்த முப்பது ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை முற்றிலுமாக மறைந்து போன அந்தப் புலிகள் காப்பகத்திற்கு, இந்த ஒரு புலியின் வருகை இப்போது புதிய நம்பிக்கையைத் தந்துள்ளதாக வனத்துறையினர் கருதுகின்றனர்.


முக்கிய அம்சங்கள்:


— வனவிலங்குகளுக்குத் தேவையான தண்ணீரும் இரையும் தட்டுப்பாடாக இருக்கும் மிகக் கடுமையான கோடைக்காலத்திலும், அந்தப் பெண் புலி இந்தச் சரணாலயத்திலேயே தங்கியிருப்பது வனத்துறை அதிகாரிகளுக்கு ஒரு நல்ல அறிகுறியாகத் தெரிகிறது. அதாவது, இந்தப் பகுதி மீண்டும் புலிகள் தங்களது இனத்தைப் பெருக்குவதற்கு ஏற்ற ஒரு பாதுகாப்பான வாழ்விடமாக மாறி வருவதை இது காட்டுகிறது என்று கருதுகிறார்கள்.


—  சத்தீஸ்கர் மாநிலத்தின் மற்றொரு பகுதியில் நிகழ்ந்த ஒரு வெற்றிக் கதைதான் இந்த நம்பிக்கைக்கு ஒரு முக்கியக் காரணமாகும். அச்சனக்மார் புலிகள் காப்பகத்தில் (Achanakmar Tiger Reserve), 'ஜும்ரி' என்று பெயரிடப்பட்ட ஒரு பெண் புலி, பல ஆண்டுகளாகக் குறைந்து வந்த புலிகளின் எண்ணிக்கையை மீண்டும் உயர்த்துவதில் முக்கியப் பங்கு வகித்தது. அந்தப் புலியின் வருகையும், அதைத் தொடர்ந்து நடந்த இனப்பெருக்கமும் அந்தப் பகுதியில் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவின. இது அந்த மாநிலத்தில் புலிகளைப் பாதுகாப்பவர்களுக்கு       ஒரு சிறந்த உதாரணமாக அமைந்தது. ஆனால், உதந்தி-சீதாநதி (Udanti-Sitanadi) பகுதியின் வரலாறு இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும், பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கிறது.



— 1998-ஆம் ஆண்டில், அப்போதைய உதந்தி வனவிலங்கு சரணாலயத்தில் 18 புலிகள் இருந்தன. ஆனால், 2006-ஆம் ஆண்டிற்குள் அந்த எண்ணிக்கை வெறும் மூன்றாகக் குறைந்தது. அதே காலகட்டத்தில், சத்தீஸ்கரின் மாநில விலங்கான காட்டு எருமைகளின் எண்ணிக்கை சுமார் 80-லிருந்து ஏழாகச் சரிந்தது. இன்று, அந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஒரே ஒரு காட்டு எருமை மட்டுமே உயிருடன் மிஞ்சியுள்ளது.


UPSC Key: PM Modi’s France visit, Brain-eating amoeba and Assam-Nagaland pact

— இந்த எண்ணிக்கை சரிவானது புலிகள் மற்றும் எருமைகளுடன் (Wild buffalo) மட்டும் நின்றுவிடவில்லை. சிறுத்தைகள் (Panthers), இந்தியக் காட்டெருமைகள் (Gaur), கடமான் (Sambar), நீலான் அல்லது நில்காய் (Nilgai), புள்ளிமான்கள் மற்றும் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கையும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தன.


— 2009-ஆம் ஆண்டில், சுமார் 1,842.54 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள உதந்தி (Udanti) மற்றும் சீதாநதி (Sitanadi) சரணாலயங்களை மாநில அரசு ஒன்றாக இணைத்து, அவற்றை ஒரு புலிகள் காப்பகமாக (Tiger Reserve) அறிவித்தது. அப்போது புலிகளின் எண்ணிக்கை தற்காலிகமாக எட்டாக உயர்ந்தது, ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்டகாலம் நீடிக்கவில்லை.               2023-ஆம் ஆண்டிற்குள், அந்தப் பகுதியில் நிரந்தரமாக வாழும் புலிகள் என்று எதுவுமே இல்லாமல் போனது. அந்தப் பகுதி தற்போது ஒரு காட்டில் இருந்து மற்றொரு காட்டிற்கு இடம்பெயரும் விலங்குகள் கடந்து செல்லும் ஒரு பாதையாக மட்டுமே எஞ்சியுள்ளது.





— இத்தகைய சூழலில் , கடந்த ஜனவரி மாதம் ஒரு பெண் புலி வந்திருப்பது ஒரு அரிய மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. அந்தப் புலியின் அடையாளங்கள், இந்திய வனவிலங்கு நிறுவனம் (Wildlife Institute of India) அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ள எந்தப் புலியுடனும் ஒத்துப்போகவில்லை. இதனால், வனத்துறை அதிகாரிகள் அதற்கு "பஹேலி" (Paheli - புதிரானவள்) என்று பெயரிட்டுள்ளனர்.


— எதிர்காலத்தில் மற்ற இடங்களிலிருந்து புலிகளைக் கொண்டு வந்து விடுவதற்காக (Translocation), இந்த வனப்பகுதியில் வாழ்விட மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வனவிலங்குகளுக்குத் தடையின்றித் தண்ணீர் கிடைப்பதற்காக 500 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் புல்வெளிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன, மேலும் நீர்நிலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.


— அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்திலிருந்து ஒரு ஆண் புலி மற்றும் இரண்டு பெண் புலிகளைக் கொண்டுவர தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் (National Tiger Conservation Authority (NTCA)) அனுமதி அளித்துள்ளது.              இதைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் புலிகளுக்கான வேட்டை விலங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்தப் சரணாலயத்தை மீண்டும் புத்துயிர் பெறச் செய்ய தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) விதித்த முக்கிய நிபந்தனைகளில் இதுவும் ஒன்றாகும்.


— புலிகளின் எண்ணிக்கையை மீட்பதோடு மட்டுமல்லாமல், காட்டு எருமைகளின் (Wild buffalo) எண்ணிக்கையை அதிகரிக்கவும் அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக அசாம் (Assam) மாநிலத்திலிருந்து மூன்று பெண் காட்டு எருமைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவை விரைவில் வனப்பகுதிக்குள் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


— இந்தியாவில் உள்ள புலிகள் காப்பகம் (Tiger Reserve) என்பது புலிகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாப்பதற்காக 'புலிகள் திட்டம்' (Project Tiger) என்ற முயற்சியின்கீழ் உருவாக்கப்பட்ட ஒரு குறிப்பிட்டப் பகுதியாகும்.              புலிகளின் எண்ணிக்கையைப் பாதுகாக்கவும், பல்லுயிர் பெருக்கத்தைப் பராமரிக்கவும் மற்றும் இயற்கையின் சமநிலையை மீட்டெடுக்கவும் அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளில் இந்தக் காப்பகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.


— தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) என்பது மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின்கீழ் இயங்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது 1972-ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின்கீழ், புலிகள் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.


— சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (International Union for Conservation of Nature (IUCN)) வகைப்பாட்டின்படி, புலிகள் அழிந்துவரும் இனம் (Endangered) எனப் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும், இவை இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-ன் அட்டவணை I-ன்கீழ் மிக உயரிய பாதுகாப்பைப் பெற்றுள்ளன.


original article : What are the major tiger reserves in India? -Roshni Yadav

Share:

சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் இந்தியாவால் குளிரூட்டும் வசதிகளைப் பயன்படுத்த முடியுமா? இதற்கு நிலைத்தன்மை ஏன் மிக அவசியம் என்பது குறித்து நிபுணர்கள் விளக்குகிறார்கள். -பிரஞ்சலி சௌத்ரி மற்றும் நிமிஷ் சிங்

 மக்களுக்குக் குளிரூட்டும் வசதிகள் தேவையா இல்லையா? என்பதல்ல கேள்வி, மாறாக மின்சாரத் தட்டுப்பாடு, காற்று மாசுபாடு மற்றும் நச்சு வாயு வெளியேற்றம் போன்ற பாதிப்புகளை மேலும் அதிகரிக்காமல் இந்தியாவால் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமா என்பதுதான் தற்போதைய கேள்வி ஆகும்.


கடுமையான வெப்பம் என்பது இப்போது வெறும் பருவகால பாதிப்பு மட்டுமல்ல; அது பொது சுகாதாரம், உழைப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றிற்கு ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது. வெப்ப அலைகளின்போது, குளிர்ச்சியான சூழல் கிடைப்பதைப் பொறுத்தே மக்கள் நிம்மதியாக உறங்க முடியுமா, வேலை செய்ய முடியுமா, படிக்க முடியுமா, நோயிலிருந்து மீள முடியுமா அல்லது வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்க முடியுமா என்பது தீர்மானிக்கப்படுகிறது. இது குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், வெளியில் வேலை செய்பவர்கள், நாள்பட்ட நோயாளிகள் மற்றும் காற்றோட்டம் இல்லாத வீடுகளில் வசிப்பவர்களுக்கு மிகவும் அவசியமானதாகிறது.


கோடைக்காலம் வழக்கத்தைவிட முன்னதாகவே தொடங்குவதோடு, நீண்டநாட்களுக்கு நீடித்து, மிகக் கடுமையானதாகவும் மாறி வருவதால், இந்தியாவில்  குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. இப்போது கேள்வி என்னவென்றால், மக்களுக்குக் குளிரூட்டும் வசதி தேவைப்படுகிறதா என்பது அல்ல; மாறாக, மின்சாரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தாமலும், காற்று மாசுபாடு மற்றும் நச்சு வாயு வெளியேற்றத்தை அதிகரிக்காமலும் இந்தியாவால் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யமுடியுமா என்பதுதான் தற்போதைய கேள்வியாகும்.




இந்தியாவின் மின்சாரத் தேவை குறித்த எதிர்காலக் கணிப்பு 


இந்தக் கோடைகாலத்தில் இந்தியாவின் உச்சபட்ச மின்சாரத் தேவை ஏற்கனவே சாதனை அளவை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதியன்று 252.07 ஜிகாவாட்டாக (GW) இருந்த மின்சாரத் தேவை, மே மாதம் 21-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு 270.8 ஜிகாவாட்டாக (GW) உயர்ந்துள்ளது. இந்த உயர்வுக்குக் கடுமையான வெயிலும், குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததே முக்கியக் காரணமாகும்.


மேலும் பல குடும்பங்கள் குளிரூட்டிகளை (Air conditioners (ACs)) வாங்கத் தொடங்குவதாலும், வெப்ப அலைகள் அடிக்கடி மற்றும் தீவிரமாக வீசுவதாலும், மின்சாரத் தேவை இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மின்சாரக் கட்டமைப்பில் ஏற்கனவே அழுத்தம் அதிகமாக இருக்கும் வெப்பமான மாலை நேரங்களில், இந்த குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடே உச்சபட்ச மின்தேவை அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக மாற வாய்ப்புள்ளது.


குளிர்ச்சி முரண்பாடு


ஆபத்தான வெப்ப அலையிலிருந்து மக்களைப் பாதுகாக்க இந்தியாவிற்கு அதிக குளிரூட்டும் வசதிகள் தேவைப்படுகின்றன. ஆனால், நாம் பயன்படுத்தும் வழக்கமான குளிர்ச்சி முறைகளே இந்த வெப்பப் பிரச்சினையை மேலும் மோசமாக்கக்கூடும் என்கின்றனர். குளிர்சாதன உபகரணங்கள் மின்சாரத் தேவையை அதிகரிக்கின்றன. இந்த மின்சாரம் பெரும்பாலும் நிலக்கரி போன்ற பெட்ரோலிய எரிபொருட்களிலிருந்து தயாரிக்கப்படுவதால், இது வளிமண்டலத்தில் கார்பன் (CO2) உமிழ்வை மேலும் அதிகரிக்கிறது.


மேலும், குளிர்விக்கும் அமைப்புகள் ஹைட்ரோபுளோரோகார்பன்கள் (Hydrofluorocarbons (HFCs)) போன்ற குளிரூட்டிகளைப் (Refrigerants) பயன்படுத்துகின்றன. இவை குளிரூட்டும் சாதனங்கள் (ACs), குளிர்சாதனப் பெட்டிகள், குளிர்சாதனக் கிடங்குகள் மற்றும் இதர குளிர்விக்கும் அமைப்புகளில் பயன்படுத்தப்படும் வாயுக்கள் ஆகும். ஓசோன் படலத்தைப் பாதிக்கும் பழைய வேதிப்பொருட்களுக்கு மாற்றாக இவை கொண்டுவரப்பட்டன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை மிக அதிக புவிய வெப்பமயமாதல் திறனைக் (Global Warming Potential (GWP)) கொண்டுள்ளன. இவை கார்பன்-டை-ஆக்சைடைவிட பல மடங்கு அதிக வெப்பத்தைத் தக்கவைத்து, வீரியமிக்க பசுமைக்குடில் வாயுக்களாகச் செயல்படுகின்றன. இவை குளிரூட்டும் சாதனங்களைப் பயன்படுத்தும் போதோ, பழுதுபார்க்கும் போதோ காற்றில் கசிந்தால், புவி வெப்பமடைவதை கணிசமாக அதிகரிக்கும் என்கின்றனர்.


மான்ட்ரியல் உடன்படிக்கைக்கான கிகாலி திருத்தத்தின்படி (Kigali Amendment to the Montreal Protocol), இந்தியா தனது ஹைட்ரோபுளோரோகார்பன் (HFC) வெளியேற்ற அளவை 2028-ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட அளவில் நிலைநிறுத்தி, பின்னர் 2047-ஆம் ஆண்டிற்குள் படிப்படியாகக் குறைக்கும். இந்தியாவின் குளிரூட்டும் சாதனங்களுக்கான தேவை மிக வேகமாக அதிகரித்துவரும் இதேவேளையில், இந்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டுமானால் குறைந்த புவி வெப்பமயமாதல் திறன் (Low-GWP) கொண்ட குளிரூட்டிகள், திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பயன்படுத்திய குளிரூட்டிகளைப் பாதுகாப்பாகச் சேகரித்து, மறுசுழற்சி செய்து, அழிப்பதற்கான கட்டமைப்புகள் தேவைப்படுகிறது.


எனவே, மக்களை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் அதே அமைப்புகள்தான், கடுமையான வெப்பம் உருவாவதற்கான சூழ்நிலைக்கும் காரணமாக அமைகின்றன. இதுதான் இந்தியாவின் "குளிர்ச்சி முரண்பாடு" (Cooling paradox) ஆகும். இதற்காகக் குளிர்சாதனப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. மாறாக, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்கும், அதிக ஆற்றல் திறன் கொண்ட மற்றும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய குளிர்சாதனப் பயன்பாட்டின் அவசியத்தை வலியுறுத்துகிறது.


இந்தியாவின் குளிர்விப்புச் செயல் திட்டம்


2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய குளிர்விப்புச் செயல் திட்டம் (India Cooling Action Plan (ICAP)), குளிரூட்டும் வசதிகளை அனைவருக்கும் விரிவுபடுத்துவதையும், அதேசமயம் 2037-38-ஆம் ஆண்டிற்குள் குளிர்விப்புத் தேவையை 20-25% ஆகவும், குளிரூட்டும் வாயுக்களின் தேவையை 25-30%-ஆகவும் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கட்டிடங்கள், குளிர்சாதனச் சங்கிலிகள், போக்குவரத்து, வேளாண்மை, சுகாதாரம் மற்றும் தொழில்துறை எனப் பொருளாதாரம் முழுவதையும் உள்ளடக்கிய ஒரு முக்கியப் பிரச்சினையாகக் குளிரூட்டும் வசதியை அணுகுவதே இந்தத் திட்டத்தின் பலமாகக் கருதப்படுகிறது.


இருப்பினும், இதைச் செயல்படுத்துவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. மின்சாதனங்களின் திறன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற குளிரூட்டிகளைப் பயன்படுத்துவது ஆகிய இரண்டும் பெரும்பாலும் தனித்தனியாகவே கவனிக்கப்படுகின்றன. கட்டிட வடிவமைப்பு, மின்சாதனத் திறன், குளிரூட்டித் தேர்வு, மின்கட்டமைப்புத் திட்டம் மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்கான அணுகல் ஆகியவற்றை இணைக்கும் ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறைதான் இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது.


திறன்மிக்க குளிரூட்டிகள் (ACs), குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் விசிறிகள் மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்து, வீட்டு மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க உதவும். கடுமையான தரநிலைகளை வகுப்பதும், திறன்மிக்க சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதும் அவசியமாகிறது. ஏனெனில், குறைந்த திறன் கொண்ட குளிரூட்டும் சாதனங்கள் பல ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்கக்கூடும் என்பதால் இது மிக முக்கியமானது.


ஆனால், குளிரூட்டும் சாதனங்களின் திறன் மட்டும் போதாது. கட்டிடங்கள் வெப்பத்தைத் தடுத்து வைத்திருந்தாலும், வீதிகளில் நிழல் இல்லாவிட்டாலும், வீடுகளில் காற்றோட்டம் குறைவாக இருந்தாலும் குளிர்விப்புத் தேவை அதிகமாகவே இருக்கும். நிலையான குளிர்விப்பு என்பது சாதனத்தை இயக்குவதற்கு முன்பே தொடங்க வேண்டும். சிறந்த கட்டிட வடிவமைப்பு, குளிர்ச்சியான கூரைகள், நிழல், நல்ல காற்றோட்டம், வெப்பத்தைப் பிரதிபலிக்கும் கட்டுமானப் பொருட்கள் போன்ற இயற்கையான குளிர்விப்பு முறைகள், இயந்திரங்கள் மூலம் குளிர்விக்கும் தேவையை பெருமளவு குறைக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.


நிலையான குளிர்விப்பு முறை 


சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்பன் உமிழ்வை அதிகரிக்காமல், குளிரூட்டும் வசதிகளை அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கக் கூடிய இந்தியா ஒரு பல அடுக்கு அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்:


தேவையைத் தொடக்கத்திலேயே குறைத்தல்: சிறந்த நகரத் திட்டமிடல் மற்றும் கட்டிட வடிவமைப்பு ஆகியவை - குறிப்பாகப் பொது வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், அங்கன்வாடிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் - வெறும் கட்டிடப் பாதுகாப்பை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், உட்புற வெப்பத்தைக் குறைத்து இயல்பான குளிர்ச்சியைத் தருவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.


திறமையான குளிர்ச்சியூட்டலை முதன்மையாக்குதல்: குளிரூட்டும் சாதனங்கள் (ACs), மின்விசிறிகள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளுக்கான ஆற்றல் திறன் தரநிலைகளைத் தொடர்ந்து உயர்த்த வேண்டும். அதேநேரத்தில், அதிக ஆற்றல் திறன் கொண்ட இந்தத் தயாரிப்புகள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கும், சிறு வணிகங்களுக்கும் மலிவான விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும்.


குளிரூட்டிகளின் மாற்றத்தை வேகப்படுத்துதல்: புவி வெப்பமடைதலைக் குறைவாகக் காட்டும் R-290, R-32, அம்மோனியா மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு (CO2) போன்ற மாற்று குளிரூட்டிகளைத் தொழில்நுட்பரீதியாக சாத்தியமான இடங்களில் பயன்படுத்த வேண்டும். இதற்குத் தொழில்முனைவோர் ஆதரவு, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான பயிற்சி மற்றும் இந்தத் திரவங்களைச் சேகரித்து மீண்டும் பயன்படுத்தும் அமைப்புகள் தேவைப்படுகிறது.


மின்சாரத் துறை திட்டமிடலுடன் குளிரூட்டல் அமைப்புகளை இணைத்தல்: மின்கலன் சேமிப்பு, தேவைக்கேற்ப மின்சாரப் பயன்பாட்டை மாற்றுதல், நேரத்திற்கு ஏற்ற மின்சாரக் கட்டணம் மற்றும் நவீன குளிரூட்டிகள் மூலம் மின்சாரத் தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் குளிரூட்டும் சுமையைக் குறைக்க முடியும். இது மின்சாரக் கட்டமைப்பின் அழுத்தத்தைக் குறைப்பதோடு, புதிய நிலக்கரி மின்உற்பத்தி நிலையங்களின் தேவையையும் குறைக்கும் என்கின்றனர்.


இந்தியா, குளிர்ச்சியூட்டும் தேவையைத் தனது காலநிலை, ஆற்றல் மற்றும் பொதுச் சுகாதாரக் கொள்கையின் ஒரு முக்கியப் பகுதியாகக் கருத வேண்டும். அதாவது, இந்தியக் குளிரூட்டல் செயல் திட்டத்தை (ICAP) அளவிடக்கூடிய இலக்குகளுடன் செயல்படுத்துவது, உபகரணங்களின் ஆற்றல் திறனை அதிகரிப்பது, குறைந்த புவிவெப்பமயமாக்கல் குளிரூட்டும் சாதனங்களுக்கு மாறுவதை வேகப்படுத்துவது, இயற்கை வழி குளிர்ச்சியூட்டலில் முதலீடு செய்வது மற்றும் அதிகரித்து வரும் குளிரூட்டும் தேவைக்கேற்ப மின்சாரக் கட்டமைப்பைத் தயார்படுத்துவது ஆகியவற்றைக் குறிக்கிறது.


இதன் நோக்கம் குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாட்டைக் குறைப்பது அல்ல. வெப்பம் அதிகரித்துவரும் இந்தியாவில், மக்களுக்கு வெப்பத்திலிருந்து கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும். எனவே, நமது நோக்கம் புத்திசாலித்தனமான குளிர்ச்சியூட்டலாக (Smarter cooling) இருக்க வேண்டும்: தூய்மையான, திறமையான, மலிவான மற்றும் கட்டிடங்கள், நகரங்கள் மற்றும் மின்சார அமைப்புடன் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.


இந்தியாவின் இந்த சவாலே ஒரு சிறந்த வாய்ப்பாகும். இதைச் சரியாகத் திட்டமிட்டால், மக்களைக் கடுமையான வெப்பத்திலிருந்து பாதுகாக்கலாம், மின்சாரக் கட்டமைப்பின் அழுத்தத்தைக் குறைக்கலாம், ஹைட்ரோபுளோரோகார்பன் (HFC) உமிழ்வைக் குறைக்கலாம், காற்றின் தரத்தை மேம்படுத்தலாம், மேலும் வெப்பமான எதிர்காலத்திற்கு ஏற்ற ஒரு 'குளிர்ச்சியூட்டும் பொருளாதாரத்தை' (Cooling economy) உருவாக்கலாம்.


பிரஞ்சலி சௌத்ரி, ‘Gateway Research Foundation’ நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சி மற்றும் கொள்கை இணை ஆய்வாளராக உள்ளார். இவர் நிலையான குளிர்ச்சி முறைகள், கழிவு மேலாண்மை மற்றும் மாநில அளவிலான கார்பன்-டை-ஆக்சைடு அல்லாத மாசுக்களின் மதிப்பீடு ஆகிய துறைகளில் பணியாற்றி வருகிறார்.


நிமிஷ் சிங், ‘Gateway Research Foundation’ நிறுவனத்தில் அறிவியல் பிரிவின் இயக்குநராக உள்ளார். இவர் காற்றின் தரம், உமிழ்வுப் பட்டியல்கள், வளிமண்டல மாதிரி ஆய்வுகள் மற்றும் குறுகிய காலம் வளிமண்டலத்தில் தங்கும் காலநிலை மாசுபடுத்திகளைக் குறைத்தல் ஆகிய துறைகளில் பணியாற்றி வருகிறார்.

original article : Can India cool down without heating up? Experts Explain why sustainability is key. -Pranjali Chowdhary and Nimish Singh

Share:

பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணம்: இந்தியா-பிரான்ஸ் இடையிலான உறவில், நம்பிக்கை எவ்வாறு அடித்தளமாக அமைந்தது? -சுபஜித் ராய்

 உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலில் நிலையற்றத் தன்மை நிலவிவரும் இந்த நேரத்தில், பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே உள்ள கூட்டணி, ஒரு நிலையான மற்றும் உறுதியான உறவுக்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.


பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் ஜி7 (G7) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்த வார இறுதியில் பிரான்ஸ் செல்கிறார். அவர் ஜூன் மாதம் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நீஸ் (Nice) நகரிலும், ஜூன் மாதம்         16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் உச்சிமாநாட்டிற்காக எவியன் (Evian) நகரிலும், ஜூன் மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் பாரிஸ் (Paris) நகருக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளார்.


2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு மேற்கொள்ளும் ஏழாவது அதிகாரப்பூர்வ பயணம் ஆகும். கடந்த பிப்ரவரி மாதம் 17-19 தேதிகளில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியாவிற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து இப்பயணம் அமைகிறது. அந்த வருகையின் போதுதான் இருநாடுகளின் இருதரப்பு உறவு "சிறப்பு உலகளாவிய உத்திசார் கூட்டாண்மை" (Special Global Strategic Partnership) என்ற அடுத்த கட்டத்திற்கு உயர்த்தப்பட்டது. ஐரோப்பாவில் இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் விருப்பத்திற்குரிய கூட்டமைப்பு நாடுகளில் ஒன்றாக பிரான்ஸ் விளங்குகிறது. தன்னாட்சி மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்த உறவு, கடந்த பல ஆண்டுகளாக ஒரு வெற்றிகரமாக தொடர்கிறது.

தற்போது மேற்கொள்ளவிருக்கும் இந்தப் பயணம், இந்தியாவிற்கும் பாரிஸுக்கும் இடையே உள்ள நீடித்த மற்றும் பலமான உறவிற்கு ஒரு சான்றாகும்.


இந்த இருதரப்பு பயணத்தின் மூலம் நாம் என்ன எதிர்பார்க்கலாம்?


இந்த இருதரப்பு சந்திப்பின் முக்கிய நோக்கம் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்ததாகவே இருக்கும்.


நீஸ் நகரில், அதிபர் மேக்ரானுடன் இணைந்து பிரதமர் மோடி ‘Bharat Innovates’ நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார். இது இந்தியா, பிரான்ஸ் மற்றும் உலகெங்கிலும் உள்ள முன்னணி புத்தொழில் நிறுவனங்களை (Startups) ஒரே மேடையில் இணைக்கும் ஒரு நிகழ்வாகும். 'இந்தியா-பிரான்ஸ் கண்டுபிடிப்புகளுக்கான ஆண்டு' (India-France Year of Innovation) கொண்டாடப்படும் வேளையில் நடைபெறும் இந்த நிகழ்வில், 120-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகளின் முக்கிய தொழிலதிபர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், இருநாட்டு உறவுகள் "சிறப்பு உலகளாவிய உத்திசார் கூட்டாண்மை" நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு, அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி நீஸ் நகரில் நடத்தும் முதல் இருதரப்பு உச்சிமாநாடு இதுவாகும்.


ஜூன் மாதம் 18-ஆம் தேதி பாரிஸில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் இணைந்து, ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்பம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் (Startup) மாநாடான 'VivaTech Summit' பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார். இந்த ஆண்டு ‘VivaTech’ மாநாட்டிலேயே மிகப்பெரிய அரங்காக இந்தியாவின் அரங்கு அமையவுள்ளது.


…மற்றும் ஜி7 உச்சிமாநாடு


மேற்கு ஆசியப் பகுதியில் நிலவும் மோதல்கள், இந்தியாவிற்கும் உலகிற்கும் ஒரு பெரிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அப்பகுதியில் வாழும் இந்தியர்களின் உயிர்களுக்கும் ஆபத்தை விளைவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் சென்ற கப்பல்கள் மீது சமீபத்தில் அமெரிக்கா (US) நடத்திய தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஜி7 (G7) உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதால், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைப் பாதித்துள்ள இந்த விவகாரம் குறித்த தனது கவலைகளை அவரிடம் நேரடியாகத் தெரிவிப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.


இந்தச் சூழ்நிலையில், பிரான்ஸும் ஐரோப்பாவும் இந்தியாவின் முக்கியமான கூட்டமைப்பு நாடுகளாக இருக்கும்; ஏனெனில் போர் தொடர்வது யாருடைய நலனுக்கும் ஏற்றதல்ல என்ற பொதுவான புரிதல் அவர்களிடம் உள்ளது.


வரலாற்றால் பிணைக்கப்பட்ட உறவுகள்...


இந்திய-பிரான்ஸ் உறவுகளின் நீடித்த வலிமையைப் புரிந்துகொள்ள, புகழ்பெற்ற பிரெஞ்சு அரசியல்வாதியான ஜாக் சிராக் என்பவரை உதாரணமாகப் பார்க்கலாம். 1976-ஆம் ஆண்டில், பிரதமர் இந்திரா காந்தியின் அவசரநிலை பிரகடனத்தால் இந்தியா உலகளாவிய விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தபோது, அப்போதைய பிரெஞ்சு பிரதமரான அவர் இந்தியாவின் குடியரசு தின விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்ள சம்மதித்தார்.


அதற்கடுத்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இம்முறை பிரான்ஸ் அதிபராக அவர் மீண்டும் குடியரசு தின முதன்மை விருந்தினராக இந்தியா வந்து, இந்தியாவுடனான 'உத்திசார் கூட்டாண்மையை' (Strategic Partnership) தொடங்கி வைத்தார். இந்த உத்திசார் கூட்டாண்மை என்பது எந்தவொரு மேற்கத்திய நாட்டுடனும் இந்தியா மேற்கொண்ட முதல் கூட்டாண்மையாகும்; அதேபோல் பிரான்ஸ் ஒரு மேற்கத்திய அல்லாத நாட்டுடன் மேற்கொண்ட முதல் கூட்டாண்மையும் ஆகும்.





சில மாதங்களுக்குப் பிறகு, மே மாதத்தில், இந்தியா பொக்ரான்-II (Pokhran-II) அணு ஆயுதச் சோதனைகளை நடத்தியது. மேற்கத்திய நாடுகள் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்து, பொருளாதாரத் தடைகளையும் விதித்தன.                ஆனால், பிரான்ஸ் அவ்வாறு எந்தவிதப் பொருளாதார நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.


இந்த அரசுமுறைப் பயணங்கள், பிரான்ஸ் நாடு தனது ராஜதந்திர உறவுகளின் நுணுக்கமான மற்றும் உணர்திறன் மிக்கத் தன்மைகளை எவ்வளவு நடைமுறைக்கு ஏற்றதாகவும் தொலைநோக்குப் பார்வையுடனும் கையாண்டது என்பதற்கான ஒரு சான்றாகும். இருநாடுகளுக்கும் இடையே புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மைக்கு (Innovation and tech partnership) வழிவகுத்த மிக வலுவான பிணைப்பு எதுவென்றால், அது இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் "உத்திசார் நம்பிக்கை" (Strategic trust) ஆகும்.


… மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில்


இருநாடுகளுக்கும் இடையேயான அரசியல் புரிதல் மிகவும் முக்கியமானது, அது இருநாட்டு மிக உயர்மட்டத் தலைவர்களிடமும் தெளிவாகத் தெரிகிறது. தலைவர்கள் மட்டத்திலான இந்தத் தீவிர நம்பிக்கைக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் டிசம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டில் நடந்தது. ஜனவரி மாதம் 2024-ஆம் ஆண்டு குடியரசுதின விழாவிற்கான அழைப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மறுத்ததைத் தொடர்ந்து, இந்தியா கடைசி நிமிடத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனைத் தொடர்புகொண்டது. பிரான்சுக்கான இந்தியத் தூதர் நேரடியாக 'பிரான்ஸ் அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை' (Élysée Palace) அணுகியபோது, இந்தியாவின் இரண்டாவது தேர்வு (Second choice) என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், இந்தியாவின் நீடித்த உறவுக்காக மேக்ரோன் உடனடியாக வர ஒப்புக்கொண்டார்.


இதற்குப் பிரதிபலனாக, இந்தியப் பிரதமர் 2025-ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) மாநாட்டில் முதன்மைத் தலைவராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.


ஜூன் மாதம் 16-17 ஆகிய தேதிகளில் ஏவியன் (Evian) நகரில் நடைபெறவுள்ள ஜி7 (G7) உச்சிமாநாட்டிற்கு இந்தியா மீண்டும் அழைக்கப்பட்டிருப்பது, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆழமான நம்பிக்கையை மீண்டும் வெளிப்படுத்துகிறது. ‘வளரும் நாடுகள்’ (Global South) என்று அழைக்கப்படும் நாடுகளின் முன்னணி குரலாகவும், உலகளாவிய சவால்களைத் தீர்ப்பதில் ஒரு முக்கிய நாடாகவும் இந்தியா திகழ்வதையே இந்த அழைப்பு பிரதிபலிக்கிறது என்று பிரான்ஸ் நம்புகிறது.


உண்மையில் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், 2003-ஆம் ஆண்டுதான் முதன்முதலில் பிரான்ஸ் நாடு இந்தியாவை ஜி8 (G8) உச்சிமாநாட்டிற்கு அழைத்தது (2014-ஆம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யா இணைத்துக்கொண்ட பிறகு, அந்த நாடு நீக்கப்பட்டது, இதனால் ஜி8 அமைப்பு மீண்டும் ஜி7 ஆனது). அப்போது பிரான்ஸ் அதிபர் சிராக் விடுத்த அழைப்பை ஏற்று, அப்போதைய இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.


மீண்டும் 2019-ஆம் ஆண்டில் பிரான்ஸ் விடுத்த அழைப்பின் பேரில், அந்நாட்டின் பியாரிட்ஸ் (Biarritz) நகரில் நடந்த ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி முதன்முறையாகக் கலந்துகொண்டார். அன்றிலிருந்து இந்தியா தொடர்ந்து இந்த மாநாடுகளில் பங்கேற்று வருகிறது. இது ஜி7 உச்சிமாநாட்டில் இந்தியாவின் 13-வது பங்கேற்பாகும், மேலும் பிரதமர் மோடி தொடர்ச்சியாகக் கலந்துகொள்ளும் 7-வது மாநாடு இதுவாகும்.


பரந்த அளவிலான கூட்டமைப்புகள் 


உலகம் கணிக்க முடியாததாகவும், ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாகவும் மாறியுள்ள இந்தச் சூழ்நிலையில், 'நம்பிக்கை' என்பது ஒரு அரிய பொருளாகிவிட்டது. இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளைப் பொறுத்தவரை, பல ஆண்டு கால உத்திசார் கூட்டாண்மை (Strategic partnership) மூலம் கட்டியெழுப்பப்பட்ட பரஸ்பர நம்பிக்கை, தற்போது பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் விண்வெளி போன்ற மிக முக்கியமான துறைகளில் முதிர்ச்சியடைந்துள்ளது.



பாதுகாப்புத் துறை: இந்திய-பிரெஞ்சு பாதுகாப்புத் துறை கூட்டாண்மை மிகவும் ஆழமானது ஆகும். இது போர் விமானங்கள், கடற்படை போர்க்கப்பல்கள் முதல் ஹெலிகாப்டர் மற்றும் ஏவுகணைகள் வரை அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கியது. இந்த ஒத்துழைப்பிற்கு மிகச் சிறந்த உதாரணங்கள்: ரஃபேல் போர் விமானங்கள் (Rafale aircraft), ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் (Scorpene submarines) மற்றும் சக்தி ஹெலிகாப்டர் இயந்திரங்கள் (Shakti helicopter engines) ஆகும்.


விண்வெளித் துறை: இந்தத் துறையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் (Indian Space Research Organisation (ISRO)) பிரெஞ்சு தேசிய விண்வெளி முகமைக்கும் (Centre National d'Études Spatiales (CNES)) இடையே            60 ஆண்டுகள் நீண்டகால வரலாற்று ஒத்துழைப்பு உள்ளது.                              கூட்டு செயற்கைக்கோள் ஏவுதல்கள், 'Megha-Tropiques' மற்றும் 'SARAL’ (Satellite with ARgos and ALtiKa) போன்ற செயற்கைக்கோள் தயாரிப்புகள் மற்றும் இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத் திட்டமான 'ககன்யான்' (Gaganyaan) திட்டத்தில் இணைந்து பணியாற்றுவது ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும். இவை தவிர, 'த்ரிஷ்ணா' (TRISHNA) என்ற மற்றொரு செயற்கைக்கோள் திட்டத்திலும் இருநாடுகளும் இணைந்து செயல்பட ஆலோசித்து வருகின்றன.


‘Megha-Tropiques’ மற்றும் ‘SARAL’ இரண்டும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) மற்றும் பிரான்ஸின் தேசிய விண்வெளி முகமைக்கும் இடையிலான கூட்டு திட்டங்களின்கீழ் உருவாக்கப்பட்ட விண்கலங்கள் ஆகும். இரண்டும் பூமியின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை ஆராய்ச்சிக்கு பங்களிக்கின்றன.


அணுசக்தி: இந்தியாவில் அணுசக்தியை மாற்றியமைப்பதற்கான சாந்தி சட்டம் (நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாட்டுச் சட்டம்) (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India Act (SHANTI Act)) நிறைவேற்றப்பட்டதன் மூலம், இந்திய மற்றும் பிரெஞ்சு தொழில்துறைகளுக்கு இடையே ஒத்துழைப்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளது. சிறிய மட்டு அணு உலைகள் / மேம்பட்ட மட்டு அணு உலைகள் (Small Modular Reactors / Advanced Modular Reactors (SMRs/AMRs)) தயாரிப்பு குறித்து, இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் பிப்ரவரி மாதம் 2025-ஆம் ஆண்டில் கூட்டு ஒத்துழைப்புக்கான பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளன.


தொழில்நுட்பம்: தொழில்நுட்பக் கூட்டாண்மை என்பது மிக உயர்ந்த பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது. இது குறித்து இந்திய தூதர் ஒருவர் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில், யாராவது தங்களுக்குத் தெரியாத ஒரு அந்நியரிடமோ அல்லது தாங்கள் முழுமையாக நம்பாத ஒரு நபரிடமோ தங்களுடைய மொபைல் போனை ஒருபோதும் தரமாட்டார்கள் அல்லவா? அதே போன்றதுதான் இந்த அதிநவீன தொழில்நுட்பக் கூட்டாண்மையும். இதற்கு சம்பந்தப்பட்ட நாடுகள், அங்குள்ள அரசாங்க அமைப்புகள் மற்றும் தலைவர்களுக்கு இடையே மிக உயர்ந்த அளவிலான நம்பிக்கையும் உறுதிப்பாடும் தேவைப்படுகிறது. இந்த ஒரு சிறந்த புரிதலால்தான் இந்திய-பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்பக் கூட்டாண்மை இன்று இந்தளவிற்கு முதிர்ச்சியடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.


original article : PM Modi’s France visit: How trust has underpinned India-France ties. -Shubhajit Roy

Share:

பவளப்பாறைகள் (corals) ஏன் இடமாற்றம் செய்யப்படுகின்றன? பவளப் பாறைகளும் அவற்றின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளுதல். -குஷ்பூ குமாரி

 இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (Zoological Survey of India (ZSI)), நிக்கோபார் மேற்கு கடற்கரையில் பவளப்பாறை இடமாற்றத்திற்காக நான்கு இடங்களை அடையாளம் கண்டுள்ளது.  பவளப்பாறைகள் இடமாற்றம் என்றால் என்ன, பவளப்பாறைகள் ஏன் பூமியின் மிகவும் மதிப்புமிக்க சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாக விளங்குகின்றன?


தற்போதைய செய்தி :


கிரேட் நிக்கோபார் தீவு (Great Nicobar Island (GNI)) மெகா திட்டத்தின் ஒரு பகுதியாக கலாதியா விரிகுடாவில் (Galathea Bay) முன்மொழியப்பட்டுள்ள சரக்கு பரிமாற்றத் துறைமுகத் திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்த பகுதியில் உள்ள பவளப்பாறைகள் மற்றும் ராட்சத சிப்பிகள் (giant clams) வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளதாக இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம் (Zoological Survey of India (ZSI)) தெரிவித்துள்ளது.


இருப்பினும், பவளப்பாறை இடமாற்றம் (coral translocation) என்றால் என்ன? பவளப்பாறைகள் ஏன் பூமியின் மிகவும் மதிப்புமிக்க சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன? இந்த கிரேட் நிக்கோபார் தீவு (Great Nicobar Island (GNI)) மெகா திட்டம் என்றால் என்ன?

முக்கிய அம்சங்கள்:


1. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 4-வது கூட்டத்தின் போது, ​​பல்லுயிர்ச் சூழல் தொடர்பான விவகாரங்களைச் செயல்படுத்தும் பணிகளைக் கண்காணிக்கும் குழுவிடம் இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (ZSI) ​​இந்தத் தகவலைத் தெரிவித்தது. இந்தக் கூட்டத்தின் குறிப்புகளை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக் கழகம் (Andaman and Nicobar Island Integrated Development Corporation Ltd (ANIIDCO)) ஜூன் 10 அன்றே பொது வெளியில் வெளியிட்டது.


2. கிரேட் நிக்கோபார் தீவுகளின் மேற்குப் பகுதியில் பவளப்பாறைகள் மற்றும் ராட்சத சிப்பிகளை (Giant Clams) இடமாற்றம் செய்வதற்கான நான்கு புதிய இடங்களை இந்திய விலங்கியல் ஆய்வு மையம் அடையாளம் கண்டுள்ளது. மேலும், திட்டப் பணிகள் தொடங்குவதற்கு முன்னதாக, சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance (EC)) மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல (Coastal Regulation Zone (CRZ)) அனுமதி நிபந்தனைகளின்படி, திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதியிலிருந்து இவற்றை இடமாற்றம் செய்யும் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.







3. சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கான நிபந்தனைகளுக்கு ஏற்ப,  சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக, மூன்று தன்னிச்சையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அவை பின்வருமாறு:


(அ) பல்லுயிர் பெருக்கம் (Biodiversity) தொடர்பான விவகாரங்களை மேற்பார்வையிடும் குழு,


(ஆ) மாசுபாடு (Pollution) தொடர்பான விவகாரங்களை கண்காணித்து மேற்பார்வையிடும் குழு,


(இ) ஷோம்ப்பென் (Shompen) மற்றும் நிகோபாரி (Nicobarese) பழங்குடியின மக்களின் நலன் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளை மேற்பார்வையிடும் குழுக்களாகும்.


4. நிக்கோபார் மெகாபோட் (Nicobar Megapode), லெதர்-பேக் கடல் ஆமைகள், உவர்நீர் முதலைகள், நிக்கோபார் மக்காக் குரங்குகள், ராபர் நண்டுகள், பவளப்பாறை இடமாற்றம் மற்றும் நிக்கோபார்த் தீவில் மட்டுமே காணப்படும் பிற பறவைகள் ஆகியவற்றின்மீது இத்திட்டம் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திட்டங்களை மேற்பார்வையிடும் பொறுப்பு, பல்லுயிர் பெருக்கம் தொடர்பான இந்தக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இனங்கள்

பாதுகாப்பு நிலை

நிக்கோபார் மெகாபோட் (Megapodius nicobariensis))

நிக்கோபார் தீவுகளில் மட்டுமே காணப்படும் (Endemic) பறவை இனமாகும்.

பொதுவாக, இது “வெப்பமானிப் பறவை” (thermometer bird) என்று அழைக்கப்படுகிறது

இந்த பறவை இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature (IUCN))  அழிந்து வரக்கூடிய   பறவை  என்ற  பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

தோல்முதுகு கடலாமைகள் (Dermochelys coriacea)

இந்த பறவை இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature (IUCN))  அழிந்து வரக்கூடிய   இனம்  என்ற  பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அழிந்துவரும் நிலையில் உள்ள காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் குறித்த உடன்படிக்கையின் பின் இணைப்பு I-ல் இடம் பெற்றுள்ளது.

கலத்தியா வளைகுடா, தோல்முதுகு கடல் ஆமைகளுக்கு உலகளவில் முட்டையிடும் மிக முக்கியமான தளங்களில் ஒன்றாகும்.

பெரிய நிக்கோபார் பாம்பு கழுகு

(Spilornis klossi)

உலகின் மிகச் சிறிய கழுகு இனமாகக் கருதப்படுகிறது.

250-க்கும் குறைவான முதிர்ந்த (mature) பறவைகள் மட்டுமே உள்ளன.

இந்த பறவை இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature (IUCN))  அழிந்து வரக்கூடிய பறவை என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

நிக்கோபார் நீண்ட வால் ‘மக்காக்’ குரங்கு

இந்த பறவை இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தின்  அழிந்து வரக்கூடிய   இனம்  என்ற  பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அழிந்துவரும் நிலையில் உள்ள காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் குறித்த உடன்படிக்கையின் பின் இணைப்பு II-ல் இடம் பெற்றுள்ளது.

வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-ன் அட்டவணை I-ல் இடம் பெற்றுள்ளது.

நிக்கோபார் கிளி

(Psittacula caniceps)

இந்த பறவை இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature (IUCN))  அழிந்து வரக்கூடிய   பறவை  என்ற  பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தின் பட்டியலில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலையை நெருங்கும் இனமாகும்.

நிக்கோபார் ஸ்காப்ஸ்-ஆந்தை (இன்னொன்று)

அழிந்துவரும் நிலையில் உள்ள காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் குறித்த உடன்படிக்கையின் பின் இணைப்பு II-ல் இடம் பெற்றுள்ளது.

இந்த பறவை இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தின் அழிந்து வரக்கூடிய   பறவை என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளது.


பவளப்பாறைகள் இடமாற்றம் (coral translocation) பற்றி அறிந்துகொள்வதற்கு முன், பவளப்பாறைகள் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம்.


5. பவளப்பாறைகள் என்பது 'நிடாரியா' (Cnidaria) தொகுதியைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். அவை நிடேரியா எனப்படும் நூற்றுக்கணக்கான முதல் ஆயிரக்கணக்கான உயிரினங்களைக் கொண்டுள்ளன. பாலிப்கள் (polyp) ஒவ்வொன்றும் சில மில்லிமீட்டர் விட்டம் மட்டுமே கொண்டுள்ளது. ஒவ்வொரு பாலிப் (Polyp) உயிரினத்திற்கும் பிளாங்க்டன் மற்றும் சிறிய மீன்கள் போன்ற உணவுகளைப் பிடிப்பதற்கான கொட்டும் தன்மையுள்ள தொடுவிழிகள் (stinging tentacles) உள்ளன. இது, பவளம் என அங்கீகரிக்கப்பட்ட 'காலனி' என்று அழைக்கப்படும், மரபணுரீதியாக ஒத்த நூற்றுக்கணக்கான முதல் ஆயிரக்கணக்கான பாலிப்புகள் கொண்ட குழுக்களாக வாழ்கின்றன.



6. பவளப்பாறைகள் கடின அல்லது மென்மையான பவளப்பாறைகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. பவளப்பாறைகளின் சிற்பிகள் கடின பவளங்கள் ஆகும். அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் சிக்கலான மூன்று பரிமாண கட்டமைப்புகளை உருவாக்குகின்றன.


7. பவளப்பாறையின் அடிப்பகுதியில், calicle எனப்படும் கடினமான, பாதுகாப்பு அளிக்கும் சுண்ணாம்புக்கல் எலும்புக்கூடு உள்ளது. இதுவே பவளப்பாறைகளின் கட்டமைப்பை உருவாக்குகிறது. கடலுக்கு அடியில்  உள்ள ஒரு பாறையில் ஒரு பாலிப் தன்னை இணைத்துக்கொண்டு, பின்னர் பிரிந்து சென்று ஆயிரக்கணக்கான பிரதிகளை (clones) உருவாக்கும்போது பாறைகள் உருவாக்குகின்றன. பாலிப்பின் கூடுகள் (calicles) ஒன்றுடன் ஒன்று இணைந்து, தனியாகச் செயல்படும் ஒரு கூட்டமைப்பை உருவாக்குகின்றன.


8. பவளப்பாறைகளின் வண்ணமயமான தோற்றத்திற்குக் காரணம், பவள செல்களுக்குள் வாழும் மஞ்சள்-பழுப்பு நிறப் பாசி (Zooxanthellae) எனப்படும் நுண்ணிய பாசிகளே ஆகும். இந்தப் பாசிகள் ஒளிச்சேர்க்கை செய்து, பவளப்பாறைகளுக்கு முக்கியமான உணவையும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டு சேர்க்கின்றன.

பவளப் பாறைகளின் முக்கியத்துவம் என்ன?

  • பவளப் பாறைகள் பெரிய புயல்கள் மற்றும் வெள்ளங்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றன. பவளப் பாறைகள், தாழ்வான முகடு கொண்ட அலைத்தடுப்புகள் போலச் செயல்பட்டு, 97% அலை ஆற்றலை உள்வாங்கிக்கொள்கின்றன.


  • கடலுக்கு அடியில் உயிரினங்கள் வாழும் நகரங்களாக பவளப் பாறைகள் விளங்குகின்றன. ஒரே ஒரு பவளப்பாறை ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடம், உணவு மற்றும் இனப்பெருக்கத் தளமாக உள்ளது.


  • கடலுக்கும் கடற்கரைக்கும் இடையில் ‘அலைத் தடுப்புகளாக’ (wave breaks) செயல்பட்டு, கடல் அரிப்பின் தாக்கத்தைக் குறைக்கின்றன.


  • ஒவ்வொரு ஆண்டும்   $3375 பில்லியன்  மதிப்புள்ள வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்கிறது.


  • சில மருந்துகளுக்கான புதிய மூலப்பொருள் ஆதாரம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய உள்ளனர். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை மெதுவாக்கும் என்று நம்பப்படும் எலியூதெரோபின் (Eleutherobin), ஒரு பொதுவான வகை மென்மையான பவளப் பாறையில் காணப்படுகிறது.


  • "கடலின் மழைக்காடுகள்" (rainforests of the sea) என்று அழைக்கப்படும் பவளப் பாறைகள், பூமியில் 45 கோடி ஆண்டுகளாக இருந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவின் பெரும் பவளப்பாறைத் தொடர், 2,028 கிலோமீட்டர் நீளத்திற்குப் பரந்து, உலகின் மிகப்பெரிய பவளப்பாறைத் தொடராகும்.


இந்தியாவில், 1972-ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் (Wildlife Protection Act (WPA)) அட்டவணை I-ன் கீழ், புலி அல்லது யானையைப் போலவே பவளப்பாறைகளும் பாதுகாக்கப்படுகின்றன.


பவளப் பாறைகள் எவ்வாறு இடமாற்றம் செய்யப்படுகின்றன?


1. இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (Zoological Survey of India (ZSI)), பவளப்பாறை இடமாற்றத்தைக் கண்காணித்து வருகிறது. பவளப்பாறை மீட்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கட்ச் வளைகுடா பகுதியில் 16,000-க்கும் மேற்பட்ட பவளங்கள் வெற்றிகரமாக புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டன. 2017-ஆம் ஆண்டு முதல் அந்தமான் தீவுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு திட்டத்தில், ரீஃப்வாட்ச் கடல்சார் பாதுகாப்பு (ReefWatch Marine Conservation) அமைப்பு, மொத்தம் 20 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஒன்பது செயற்கை கட்டமைப்புகளில் பவளப்பாறைகள் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.


2. சிந்துதுர்க்கில் மூன்றாண்டு காலம் நடைபெற்ற ஒரு திட்டத்தில், பவளப் பாறைகள் வளர்க்கப்பட்டன. இதற்காக, பவளப்பாறைத் துண்டுகள் சேகரிக்கப்பட்டு நைலான் நூல்கள் மூலம் கான்கிரீட் சட்டங்களில் இணைக்கப்பட்டன. பின்னர், அவை பவளப்பாறைகளின் வளர்ச்சிக்கு ஏற்ற ஆழத்தில் கடலில் வைக்கப்பட்டன.


3. பவளப்பாறைகள் அதிக ஆண்டுகள் இருக்க வேண்டுமானால், ஆழம், நீரோட்டம், ஒளி அளவு மற்றும் அழுத்தம் போன்ற சூழலியல் பண்புகளுக்கு ஏற்ப  அவற்றை இடமாற்றம் செய்வது முக்கியமான நடவடிக்கை என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்.


கிரேட் நிக்கோபார் தீவு (Great Nicobar Island (GNI)) மெகா திட்டம்


1. பிப்ரவரி 2026-ல், அரசின் ரூ. 81,000 கோடி மதிப்பிலான 'கிரேட் நிக்கோபார்'   மெகா உள்கட்டமைப்புத் திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal (NGT)) அனுமதி அளித்தது. இந்தத்திட்டத்தின் "ராஜதந்திர முக்கியத்துவத்தை" சுட்டிக்காட்டிய தீர்ப்பாயம், இதன் சுற்றுச்சூழல் அனுமதியில் "போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள்" இடம்பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டியது.

2. கிரேட் நிக்கோபார் தீவு 910 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்தியாவின் தென்கோடி இடமான இந்திரா முனை இங்கு அமைந்துள்ளது.


3. தீவில் ஒரு பொருளாதார மற்றும் பாதுகாப்பு மையத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்த நோக்கம் நான்கு புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது:


பாதுகாப்பு வசதிகளை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த நகரம் ((Integrated township)


ஒரு சரக்கு மாற்றுத் துறைமுகம்,


ஒரு குடிமை  மற்றும் இராணுவ விமான நிலையம்,


450- மெகாவோல்ட்-ஆம்பியர் (MegaVolt-Ampere (MVA)) திறன் கொண்ட எரிவாயு மற்றும் சூரிய சக்தி அடிப்படையிலான ஆலை போன்றகைளாகும்.


4. தொடக்கத்தில் நிதி ஆயோக்கால் முன்னெடுக்கப்பட்ட இந்தத்திட்டத்தை, தற்போது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக் கழகம் (Andaman and Nicobar Island Integrated Development Corp Ltd (ANIIDCO)) செயல்படுத்தும் முகமையாக உள்ளது.


5. இந்தத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்தப் பரப்பளவில், 149 சதுர கிலோமீட்டர் ஒருங்கிணைந்த நகரத்திற்கும், 8.45 சதுர கிலோமீட்டர் புதிய விமான நிலையத்திற்கும், 7.66 சதுர கிலோமீட்டர் துறைமுகத்திற்கும் மற்றும் 0.39 சதுர கிலோமீட்டர் மின் உற்பத்தி நிலையத்திற்கும் பயன்படுத்தப்படும். இந்த ஒருங்கிணைந்த நகரத்தில் குடியிருப்பு, வணிகம், சுற்றுலா, தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளும் இருக்கும்.




6. சரக்கு மாற்று துறைமுகமானது (transshipment port), கிரேட் நிக்கோபாரின் தென்முனையில் உள்ள கலாத்தியா வளைகுடாவில் அமையவுள்ளது. இது தோல்முதுகு ஆமைகளின் முட்டையிடும் இடங்கள் அமைந்துள்ள மற்றும் கலாத்தியா ஆறு கடலில் கலக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.


original article : Why are corals being moved? Understanding coral reefs and their importance. -Khushboo Kumari

Share:

பாதுகாப்பு அமைச்சகத்தின் சீதாபூர் சூரிய ஆற்றல் திட்டம் (Sitapur Solar Project) குறித்து… -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய நிகழ்வு :


உத்தரப் பிரதேசத்தின் சீதாபூரில் 250 மெகாவாட் (MW) சூரிய மின்சக்தித் திட்டத்தை (Solar Power Project) அமைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இச்சூழலில், சீதாபூர் சூரிய ஆற்றல் திட்டம் ஏன் தனித்துவமானது? என்பதையும், பல்வேறு ஆற்றல் சேமிப்புத் தொழில்நுட்பங்கள் குறித்தும் புரிந்துகொள்வது அவசியமாகும்.


முக்கிய அம்சங்கள் :


1. இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படாத ஆயிரக்கணக்கான ஏக்கர் பாதுகாப்புத் துறை நிலங்களைப் பசுமை ஆற்றல் முயற்சிகளுக்குப் பயன்படுத்தும் திட்டங்களின் ஒரு பகுதியாக, உத்தரப் பிரதேசத்தின் சீதாபூரில் 'மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு' (Battery Energy Storage System (BESS)) வசதியுடன் கூடிய 250 மெகாவாட் சூரிய ஆற்றல் திட்டத்தை நிறுவ பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.


2. “பாதுகாப்புத் துறை அமைச்சகத்தால் (MoD) மேற்கொள்ளப்படும் இத்தகைய முதல் திட்டம் இதுவாகும். இதில், பாதுகாப்புத் துறை நிலத்தில் ஒருங்கிணைந்த மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) ஆதரவுடன் கூடிய ஒரு பெரிய அளவிலான சூரிய மின் உற்பத்தி நிலையம் உருவாக்கப்படுகிறது,” என்று அமைச்சகத்தின் அறிக்கை குறிப்பிட்டது.


3. இத்திட்டம், பாதுகாப்புப் படைகளுக்கான நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவது மட்டுமின்றி, இத்திட்டம் பாதுகாப்பு நிறுவனங்களுக்கான மரபுசார் மின்கட்டமைப்பு மின்சாரத்தைக் (grid power) கொள்முதல் செய்வதில் ஏற்படும் செலவினங்களைக் கணிசமாகக் குறைக்கும் என்றும், அதன் விளைவாக இத்திட்டம் அதன் முழுச் செயல்பாட்டுக் காலத்திலும் அரசாங்கத்திற்குப் பெருமளவிலான சேமிப்பை ஈட்டித் தரும் என்று கருதப்படுகிறது.


4. “பாதுகாப்புத் துறையின் ஒருங்கிணைந்த தலைமையகம் (இராணுவம்) மற்றும் பாதுகாப்புத் துறை நிலங்கள் இயக்குநரகம் (Directorate General Defence Estates (DGDE)) ஆகியவற்றுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சகம் கூறியதுடன், இத்திட்டம் தேசியப் பாதுகாப்பு, எரிசக்திப் பாதுகாப்பு, தொழில்நுட்பப் புத்தாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை ஒரே முயற்சியில் இத்திட்டம் ஒருங்கிணைக்கிறது என்றும் அது மேலும் தெரிவித்தது.


5. சீதாபூரில் உள்ள சூரிய மின்சக்தித் திட்டம் (solar power project), பாதுகாப்புத் துறை நிலத்தில் நிறுவப்பட்ட நாட்டின் மிக முக்கியமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களில் ஒன்றாக உருவெடுக்கும் என்றும், பாதுகாப்புத் துறையில் எதிர்கால சூரிய ஆற்றல் மற்றும் சேமிப்புத் திட்டங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.


ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பங்கள்


சீதாபூரில் அங்கீகரிக்கப்பட்ட 250 மெகாவாட் சூரிய மின்சக்தித் திட்டத்தில் ஒரு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (battery energy storage system) உள்ளதால், அது என்ன? என்பதைப் புரிந்துகொள்வதும், மற்ற ஆற்றல் சேமிப்புத் தொழில்நுட்பங்களைப் பற்றியும் அறிந்துகொள்வதும் முக்கியம். இது தொடர்பாக கீழே குறிப்பிட்டுள்ளது.





1. ஆற்றல் சேமிப்பு (Energy storage) என்பது, மின் உற்பத்தி அதிகமாக இருக்கும்போது உபரியான புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைச் சேமித்து, தேவை அதிகரித்து மின் உற்பத்தி குறைவாக இருக்கும் சமயங்களில் சேமிக்கப்பட்ட மின்சாரத்தை பின்னர் வெளியிடுகின்றன.


2. குறிப்பிடும்படியாக, ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (energy storage systems), சூரிய மற்றும் காற்று போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை, சேமிக்கக்கூடிய கட்டமைப்புகளுக்கு மாற்றுகின்றன. பின்னர், தேவை ஏற்படும்போது, ​​அவற்றை மீண்டும் மின்சாரமாக மாற்றுகின்றன.


3. உலகளவில் பல்வேறு ஆற்றல் சேமிப்புத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள், நீரேற்று நீர்மின் சேமிப்பு (Pumped Hydro Storage (PHS)) மற்றும் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems (BESS)) தற்போது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.


(i) நீரேற்று நீர் சேமிப்பு (Pumped Hydro Storage (PHS)) : நீரேற்று நீர் சேமிப்பு (PHS) அமைப்பானது, உபரி மின்சாரத்தைப் பயன்படுத்தி, கீழ்மட்ட நீர்த்தேக்கத்திலிருந்து மேல்மட்ட நீர்த்தேக்கத்திற்குத் தண்ணீரை இறைக்கிறது. மின்சாரத் தேவை உச்சத்தை அடையும்போது, சேமிக்கப்பட்ட நீர் கீழ்நோக்கி வெளியிடப்படுகிறது. நீர் விசையாழிகள் வழியாகப் பாயும்போது, அது மின்சாரத்தை உருவாக்குகிறது.


(ii) மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems (BESS)) :  மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) தொழில்நுட்பமானது, மின்சாரத்தை வேதியியல் முறையில் சேமித்து, தேவைப்படும்போது அதை வெளியேற்றுகிறது. லித்தியம்-அயன் மின்கலங்கள் (Lithium-ion batteries), குறிப்பாக லித்தியம் இரும்பு பாஸ்பேட் (lithium iron phosphate (LFP)) மின்கலங்கள், அவற்றின் குறைந்துவரும் செலவுகள், அதிக செயல்திறன் மற்றும் நீண்ட செயல்பாட்டுக் காலம் ஆகியவற்றின் காரணமாக, தற்போது மின்கட்டமைப்பு அளவிலான சேமிப்பிற்கான முதன்மைத் தொழில்நுட்பமாக விளங்குகின்றன.



4. நீரேற்று நீர் சேமிப்பு (PHS) மற்றும் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பைத் (BESS) தவிர, உலகளவில் சிறிய அளவிலான பல ஆற்றல் சேமிப்புத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை,


(i) குவிக்கும் சூரிய-வெப்ப சேமிப்பு அமைப்புகள் (Concentrating solar-thermal storage systems) : இந்தத் தொழில்நுட்பம், சூரிய ஒளியைப் பிடித்து ஒரு ஏற்பியின் (receiver) மீது குவிக்கும் கண்ணாடிகளைப் பயன்படுத்துகிறது. ஏற்பி சூடாகும் போது, ​​உருகிய உப்பு போன்ற பொருட்கள் வெப்பத்தைச் சேமிப்பதற்காக ஏற்பிக்குள் சுற்றோட்டம் செய்யப்படுகின்றன. சேமிக்கப்பட்ட இந்த வெப்பம் பின்னர் நீராவியை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படலாம். இந்த நீராவி ஒரு விசையாழியில் இயந்திர ஆற்றலாக மாற்றப்பட்டு, அது மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஒரு மின்னாக்கியை இயக்குகிறது.


(ii) அழுத்தப்பட்ட-காற்று ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Compressed-air energy storage systems) : இந்த அமைப்புகள் அதிகப்படியான மின்சாரத்தைப் பயன்படுத்தி காற்றை அழுத்துகின்றன. இதில் அழுத்தப்பட்ட காற்று நிலத்தடி குகைகள் அல்லது சேமிப்புத் தொட்டிகளில் சேமிக்கப்படுகிறது. மின்சாரத் தேவை அதிகரிக்கும்போது, ​​அழுத்தப்பட்ட காற்று வெளியிடப்பட்டு விசையாழிகளை இயக்கி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.


(iii) சுழல்சக்கர ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Flywheel energy storage systems) : இந்த அமைப்புகள் மின்சாரத்தைச் சுழற்சி ஆற்றல் வடிவில் சேமிக்கின்றன. அவை மின்கட்டமைப்பில் ஏறக்குறைய உடனடியாக மின்சாரத்தைச் செலுத்தக்கூடியவை என்பதால், மின்கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பராமரிப்பதற்கும் குறுகியகால ஏற்ற இறக்கங்களை நிர்வகிப்பதற்கும் அவை குறிப்பாகப் பயனுள்ளதாக இருக்கின்றன.


(iv) புவியீர்ப்பு ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Gravity energy storage systems) : கனமான எடைகளை அதிக உயரங்களுக்குத் தூக்குவதற்கு மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. மின்சாரம் தேவைப்படும்போது, ​​அந்த எடைகள் கீழே இறக்கப்பட்டு, மின்னாக்கிகள் மூலம் புவியீர்ப்பு ஆற்றல் மீண்டும் மின்சாரமாக மாற்றப்படுகிறது.


இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சூரிய மின்கலங்களைப் (Solar Cells) பயன்படுத்துவது குறித்த புதிய கட்டாயம்


1. மத்திய அரசின் உத்தரவின்படி, ஜூன் 1 முதல் வீட்டு உபயோக, வணிக மற்றும் தொழில்துறை சூரிய ஆற்றல் திட்டங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சூரிய மின்கலன்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.


2. சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் கூறுகளான மின்கலன்கள், மின்சாரத்தை உற்பத்தி செய்யப் பயன்படும் சூரிய தகடுகளாலான சூரியத் தொகுதிகளின் அடிப்படைக் கட்டுமான அலகுகளாகும்.


3. சூரிய மின்கலங்களை உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யும் ஆணையானது, இறக்குமதியைச் சார்ந்திருக்கும் இந்தியாவின் நிலையைக் குறைப்பதையும், உள்நாட்டு சூரிய ஆற்றல் உற்பத்திச் சூழலமைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


original article : Why Defence Ministry’s Sitapur Solar Project is making headlines?. -Roshni Yadav

Share: