டெல்லியின் ஆடம்பர குடியிருப்புப் பகுதி குழாய்களில் கழிவுநீர்: நகர்ப்புற குடிநீர் விநியோகக் கட்டமைப்பு எவ்வாறு தோல்வியடைகிறது மற்றும் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்? -அர்கஜா சிங்

 இதற்கு முன்பு, இந்தூரில் (Indore) அசுத்தமான குழாய் நீரால் 10 பேர் உயிரிழந்தனர். சிறந்த பொறியியல் நடைமுறைகளுக்கும் கள யதார்த்தங்களுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளிதான் இப்பிரச்சனையின் ஒரு பகுதி என்று நிபுணர் ஒருவர் விளக்குகிறார்.


தெற்கு டெல்லியின் வசதி படைத்தவர்கள் வாழும் பகுதியான குல்மோஹர் பூங்காவில் (Gulmohar Park), கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக குடிநீர் குழாய்கள் மூலம் கழிவுநீர் கலந்த தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் கட்டுரை எழுதப்படும் நேரம் வரை, மாசடைந்த நீர் எந்தப் பகுதியில் இருந்து குழாய்க்குள் நுழைகிறது என்பதை டெல்லி குடிநீர் வாரியத்தால் (Delhi Jal Board (DJB)) இன்னும் திட்டவட்டமாகக் கண்டறிய முடியவில்லை. இந்த துர்நாற்றமடித்த நீரால் பல குடியிருப்பாளர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்,   மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளுக்கு தண்ணீர் லாரிகளையும் (Water tankers) மற்றும் பாட்டில் தண்ணீரையும் பயன்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற சம்பவங்கள் இந்தூர், காந்திநகர், புனே, நொய்டா, குர்கான் மற்றும் பெங்களூரு போன்ற பிற நகரங்களிலும் நடந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. சமீபத்தில் இந்தூரில் நடந்த சம்பவத்தில், நீர் மாசுபட்டதால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. இது இந்தத் தீவிரப் பிரச்சனை குறித்து நாடு தழுவிய கவனத்தை ஈர்த்துள்ளது.


குடிநீருடன் கழிவுநீர் கலப்பதற்குப் பல முறையான அமைப்புக் காரணங்கள் உள்ளன. பொறியியல்ரீதியாகக் கூறினால், குடிநீர் குழாய்களில் எப்போதும் மாசு ஏற்படுவதற்கான சில அபாயங்கள் இருக்கவே செய்கின்றன. குழாய்களில் ஏற்படும் மிகச்சிறிய கசிவுகள் அல்லது துளைகள் வழியாகக் கூட கழிவுநீர் உள்ளே நுழைந்துவிட முடியும். குறிப்பாக, நீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, குழாய்களுக்குள் இருக்கும் நீரின் அழுத்தம் குறையும் போது குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலக்கும் அபாயம் அதிகமாக உள்ளது.


குடிநீர் குழாய்கள் மிகவும் பழமையாகி, துருப்பிடித்துப் போகும் போதும், ஏதேனும் கட்டுமானப் பணிகளின் போது அவை சேதமடையும் போதும், அல்லது அவற்றைச் சுற்றி கழிவுநீரும் இதர அசுத்தங்களும் தேங்கி நிற்கும் போதும் இப்பிரச்சனை இன்னும் மோசமாகிறது.


இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய இரண்டு முக்கியமான கொள்கை முடிவுகள் உள்ளன. முதலாவதாக, குடிநீர் மாசடைவதற்கான அபாயம் எப்போதும் இருக்கவே செய்கிறது. இதை நம்மால் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் மட்டுமே முடியுமே தவிர, முற்றிலும் இல்லாமல் செய்ய முடியாது. இரண்டாவதாக, கழிவுநீர் குழாய்களும் குடிநீர் குழாய்களும் மிக அருகருகே இருப்பதால்தான் இந்த நீர் மாசுபடுதல் ஏற்படுகிறது. எனவே, இந்த ஆபத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், குடிநீர் விநியோகக் கட்டமைப்பு மற்றும் கழிவுநீர் மேலாண்மை அமைப்பு ஆகிய இரண்டு விஷயங்களிலுமே சமமாக கவனம் செலுத்த வேண்டும்.


குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை


குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளில் உள்ளூர் அளவில் பல தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவை எப்போதும் சரியான பொறியியல் தரநிலைகளைப் பின்பற்றி அமைப்பதில்லை. தினமும் சில மணிநேரங்கள் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதால், மற்ற நேரங்களில் குழாய்கள் காலியாகவே இருக்கின்றன. இதனால், குழாய்களுக்குள் கழிவுநீர் எளிதாக நுழைந்து விடுகிறது.


பொறியாளர்கள் 24 மணி நேரத் தண்ணீர் விநியோக முறையே சிறந்தது எனக் கருதுகின்றனர். ஏனெனில், அப்படிச் செய்யும்போது குழாய்களுக்குள் எப்போதும் அழுத்தம் இருக்கும். இதனால் வெளிப்புற அசுத்தங்கள் உள்ளே நுழைவது தடுக்கப்படும். இருப்பினும், இந்த முறைக்கு அதிக தண்ணீரும், விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதியும் தேவைப்படும்.


மேலும், தரைக்கு அடியில் இருக்கும் குழாய்கள் மற்றும் விநியோக அமைப்புகளின் துல்லியமான நிலைமை என்னவென்று முழுமையாகத் தெரிவதில்லை. சில மாதிரித் திட்டங்களைத் தவிர, இந்திய நகரங்களில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளின் முழுமையான டிஜிட்டல் வரைபடங்கள் இல்லை. அந்தந்தப் பகுதிகளில் வேலை செய்யும் உள்ளூர் களப் பணியாளர்கள், தங்களின் அனுபவத்தின் மூலம் அந்த அமைப்புகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை அறிந்திருக்கலாம். ஆனால், உள்ளூர் அளவில் இருக்கும் ஆபத்துகள் பற்றிய அவர்களின் இந்த அனுபவ அறிவு, அதிகாரப்பூர்வ திட்டமிடலிலோ அல்லது அரசு முடிவெடுக்கும் செயல்முறைகளிலோ சரியாகச் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை.


கழிவுநீர் மேலாண்மை (Sewage management) என்பது இன்னும் சிக்கலான ஒன்றாகும். மேலும், இது ஒரு பகுதியாக அரசு அமைப்புகளின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு வெளியேயும் உள்ளது. வசதி படைத்தவர்கள் வாழும் பகுதிகளில்கூட, கழிவுநீர் பாதைகளில் அடைப்பு ஏற்படும்போதோ அல்லது கழிவுநீர் பாதைகளே இல்லாதபோதோ, அவை மழைநீர் வடிகால்களிலும் மற்றும் இயற்கை நீர்நிலைகளிலும் திருப்பிவிடப்படுகின்றன. நகர்ப்புற மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு முறையான கழிவுநீர் கட்டமைப்பு வசதிகள் இல்லை.       அதற்குப் பதிலாக அவர்கள் கழிவுநீர்த் தொட்டிகளையும் மற்றும் கழிவுக்குழிகளையும் நம்பியிருக்கிறார்கள். இவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீரை முறையாக அகற்றுவதற்கு நடைமுறையில் வேறு வழிகள் இல்லாததால், அவை திறந்தவெளி வடிகால்களிலும் நீர்நிலைகளிலும் வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை.


குடிசைப் பகுதிகள், அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள் மற்றும் நகர்ப்புறக் கிராமங்கள் ஆகியவை இந்தப் பிரச்சனைக்கு மேலும் பல சிக்கலான சவால்களைக் கொண்டுவருகின்றன. முதலாவதாக, சட்டரீதியான விதிகள் நகர்ப்புற அரசு அமைப்புகள் இப்பகுதிகளுக்கு முழுமையான குடிநீர் மற்றும் கழிவுநீர் சேவைகளை வழங்குவதைத் தடுக்கின்றன (இப்படியான சட்டவிரோத குடியிருப்புகள் பெருகுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த விதிகள் உள்ளன). இரண்டாவதாக, இந்த இடங்களின் குறுகலான, வளைந்து நெளிந்த மற்றும் சமமற்ற தெருக்களின் அமைப்பால் அங்கு உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது மிகவும் கடினமாக உள்ளது.


பல நகரங்களில், ஒரே ஒரு பிரச்சனையின் வெவ்வேறு பகுதிகளைக் கையாள்வதற்கு அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் பொறுப்பாக உள்ளன. உதாரணமாக டெல்லியில், டெல்லி குடிநீர் வாரியத்தின் (DJB) உள்கட்டமைப்பு வசதிகளோடு, மாநகராட்சி, பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனத் துறை மற்றும் டெல்லி மேம்பாட்டு ஆணையம் ஆகிய அமைப்புகளும் இணைந்து செயல்படுகின்றன. ஆனால், களத்தில் இவர்களுக்கு இடையே ஒருங்கிணைந்து செயல்படும் திறன் மிகவும் குறைவாகவே உள்ளது.


நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மையில் உள்ள நிறுவனக் குறைபாடுகள் மற்றும் சவால்கள்


தேசிய சுற்றுச்சூழல் சட்டங்கள், பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற்றம் ஆகியவற்றிற்கான தரநிலைகளை வகுத்துள்ளன. ஆனால், இந்தச் சேவைகளை மக்களுக்குச் சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளில் பெரிய இடைவெளிகள் உள்ளன.


பாதுகாப்பான குடிநீர் பெறுவதற்கான உரிமை, இந்திய அரசியலமைப்பின்கீழ் "வாழ்வுரிமை" (Right to life) என்பதோடு பரவலாக இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த உரிமை மக்களுக்கு எப்படிக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்பதற்கான தெளிவான விதிகள் ஏதும் இல்லை.


கழிவுநீர் வெளியேற்றத் தரநிலைகள் என்பவை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் (Sewage Treatment Plants (STP)) இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியேறும் இடத்தில் மட்டுமே பொருந்தும். இந்தக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களைச் சென்றடைவதற்கு முன்பு, அது எப்படி மேலாண்மை செய்யப்பட வேண்டும் என்பதை இந்த விதிகள் விளக்குவதில்லை. மேலும், பொதுவான கழிவுநீர் குழாய் இணைப்புகளுடன் இணைக்கப்படாத கழிவுநீர் அமைப்புகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த விதிகளும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.




குடிநீரின் தரம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புக்கான தரநிலைகளை நிர்ணயிக்கும் சுற்றுச்சூழல் சட்டங்களுக்கும் (Environmental laws), நகர அமைப்புகளின் சேவை மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை வழிநடத்தும் நிறுவன விதிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகிறது.


இந்த நிறுவனக் கட்டமைப்பானது இந்தியாவில் இன்னும் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை. அரசு நிறுவனங்கள் பல வழிகாட்டுதல்களையும் தரநிலைகளையும் வெளியிட்டிருந்தாலும், அவை சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தக் கூடியவை அல்ல. மேலும், அவை பெரும்பாலும் கள நிலவரங்களைப் பிரதிபலிப்பதில்லை. நாட்டின் நிலைமைகள் ஒவ்வொரு நகரத்திற்கும், ஏன் ஒரே நகரத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கும் மாறுபடுவதால், அனைத்து இடங்களுக்கும் ஒரே மாதிரியான விதியைப் பயன்படுத்துவது பலனளிக்காது என்றும் தெரிவிக்கின்றனர்.


தண்ணீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மைச் சேவைகளை டெல்லி குடிநீர் வாரியம் (DJB) போன்ற ஒரு சட்டப்பூர்வ அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டுமா, அல்லது பிரஹன்மும்பை மாநகராட்சி (Brihanmumbai Municipal Corporation (BMC)) போன்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டுமா என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. பெரிய அளவில் உள்கட்டமைப்பு பணிகளைச் செய்யும்போது செலவுகளைக் குறைக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்களின் தலையீடு இல்லாமல் திட்டங்களைப் பாதுகாக்கவும் 1970 மற்றும் 1980-களில் பல பெரிய நகரங்களில் இத்தகைய சட்டப்பூர்வ குடிநீர் வாரியங்கள் அமைக்கப்பட்டன. இதற்கு முதன்முதலாக 1964-ஆம் ஆண்டில் பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (Bengaluru Water Supply and Sewerage Board (BWSSB)) நிறுவப்பட்டது.


ஒரு குறிப்பிட்ட நிர்வாக அமைப்பு மற்றொன்றைவிட சிறந்ததாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மும்பை அல்லது கொல்கத்தாவின் நகராட்சி குடிநீர் விநியோக ஏற்பாடுகள், பெங்களூரு அல்லது சென்னையின் குடிநீர் வாரியங்கள் வழங்கும் சேவையைவிட சிறந்ததாகவோ அல்லது மோசமானதாகவோ இருக்க வேண்டியதில்லை. இதற்கான முடிவுகள் பெரும்பாலும் அந்த அமைப்பின் செயல்பாட்டு கலாச்சாரம் மற்றும் அதன் நிர்வாக மற்றும் அரசியல் தலைமையின் தரத்தைப் பொறுத்தே அமைகின்றன. நடைமுறையில், உள்ளூர் அதிகார அமைப்புகளின் முயற்சிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் ஆதரவை வழங்குவதில் மாநில அரசாங்கங்களுக்கும் முக்கியப் பங்கு உள்ளது.


அடுத்தகட்ட நடவடிக்கை


பாதுகாப்பான குடிநீரை வழங்குவது என்பது வெறும் ஒரேயொரு திட்டத்தாலோ அல்லது அரசாங்க விதிகளாலோ மட்டும் சாத்தியமாகிவிடாது. அதற்குப் பதிலாக, அரசாங்கத்தின் விதிகளுடனும் திட்டங்களுடனும் சேர்த்து, பொது நிர்வாக அமைப்புகளையும் மேம்படுத்தும் ஒரு முறையான அணுகுமுறை தேவைப்படுகிறது. நமது நகரங்களில் இருக்கும் தற்போதைய நிலைமைக்கும், சிறந்த பொறியியல் நடைமுறைகளுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு எது மிக முக்கியமோ, அதற்கு முன்னுரிமை அளித்துச் செயல்படும் ஒரு நீண்டகாலத் திட்டத்தின் மூலமாக மட்டுமே இந்த இடைவெளியைக் குறைக்க முடியும்.


மேலும், பாதுகாப்பான குடிநீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்கள், இந்தச் சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும். நீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை ஆகியவை பிரம்மாண்டமான உள்கட்டமைப்புகளையும், அந்தந்தப் பகுதியின் சிக்கலான உள்ளூர் சூழ்நிலைகளையும் சார்ந்தது என்பதால், இந்த அமைப்புகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதோ அல்லது முழுக்க முழுக்க ஒரேயொரு அமைப்பை மட்டுமே நம்பியிருப்பதோ சாத்தியமற்றது ஆகும்.


தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள், டிஜிட்டல் கண்காணிப்பு, நீரின் தரத்தைக் கண்காணிக்கும் அமைப்புகள் மற்றும் பொது-தனியார் கூட்டாண்மை (Public-Private Partnerships) ஆகியவை அனைத்தும் இதற்கு உதவக்கூடும். ஆனால், இவை வலுவான பொது நிர்வாகம், அதிகாரம் மற்றும் அரசின் நேரடிக் கண்காணிப்பு இருக்கும்போது மட்டுமே முழுமையாகச் செயல்படும் என்கின்றனர்.



நீர் மற்றும் கழிவுநீர் உள்கட்டமைப்பை நிர்வகிப்பதற்கு, அரசு அதிகாரிகள் நேரடியாகக் களத்திற்குச் செல்ல வேண்டும். இந்த உள்கட்டமைப்புகள் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் குறுகிய தெருக்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வது அவசியமாகும். நிறுவன சீர்திருத்தங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளின் முக்கிய நோக்கம் என்னவென்றால், உள்ளூர் அளவில் மக்கள், அரசு மற்றும் இந்த உள்கட்டமைப்புகளுக்கு இடையே உள்ள தொடர்பை வலுப்படுத்துவதாகவும் முறைப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.


மேலும், நீர் மாசுபடுவதற்கான ஆபத்தை எப்போதும் முழுமையாக நீக்க முடியாது என்பதால், வரவிருக்கும் அபாயங்களை முன்கூட்டியே கணித்து, அவற்றை விரைவாகக் கண்டறிந்து, உடனடியாகவும் திறம்படவும் செயல்படக்கூடிய அமைப்புகளை உருவாக்குவதுதான் நாம் எதிர்கொள்ளும் உண்மையான சவாலாகும்.


அர்கஜா சிங், புது டெல்லியில் உள்ள Centre for Policy Research (CPR) அமைப்பில் ஓர் ஆய்வாளர் ஆவார்.


Original article : Posh Delhi colony gets sewage in taps: How urban water systems fail, what needs to change. -Arkaja Singh

Share:

மிக நீளமான இழை பருத்தி என்பது என்ன? -அசோக் குலாட்டி, ஆயுஷி குப்தா, ரித்திகா ஜுனேஜா

 முக்கிய அம்சங்கள்:


• ஏப்ரல் மாதம் 2026-ஆம் ஆண்டில், பருத்தி உற்பத்தித் திறனுக்கான தேசிய இயக்கத்திற்கு (Mission for Cotton Productivity) 5,659 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம் 2026–27-ஆம் ஆண்டு முதல் 2030–31-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்குச் செயல்படுத்தப்படவுள்ளது. 2025-26-ஆம் ஆண்டுடன் முடிவடைந்த கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி பருத்திப் பஞ்சு உற்பத்தித் திறனான ஒரு ஹெக்டேருக்கு 441-கிலோ என்பதை, 2031-ஆம் ஆண்டிற்குள் ஒரு ஹெக்டேருக்கு 755-கிலோவாக உயர்த்துவதே இத்திட்டத்தின் முக்கிய இலக்காகும். இந்த இயக்கம் வெற்றிபெறுமா என்பதை மதிப்பிட, பருத்தித் துறையில் இந்தியாவின் கடந்தகால செயல்பாடுகளையும், தற்போதைய பருத்தித் துறை எதிர்கொண்டு வரும் நெருக்கடியின் தீவிரத்தையும் கவனிப்பது அவசியமாகும்.


• 2002-ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் (Genetic Engineering Appraisal Committee (GEAC)) ஒப்புதலைப் பெற்ற பிறகு, ஒருவகை மரபணு மாற்றப்பட்ட பருத்தி வகையான ‘மரபணு மாற்ற பருத்தி’ (Bacillus thuringiensis cotton (Bt Cotton)) ரகங்களின் வணிகரீதியான சாகுபடிக்கு அனுமதி அளித்தார். அப்போது அவர், உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) என்பது அடுத்த பெரிய புரட்சியாக இருக்கும் என்றும், இது சாமானிய மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார். இதில் இந்தியா பின்தங்கிவிடக் கூடாது என்றும், நாடு முழுவதும் உயிரித் தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதன் மூலம் இத்துறையில் இந்தியா ஒரு முன்னோடியாக உருவெடுப்பதை இலக்காகக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


• இந்த விஷயத்தில் இந்தியா பின்தங்கிவிடவில்லை. உண்மையில், ஏறக்குறைய ஒரு 10 ஆண்டுகள் இந்தத் துறையில் முன்னணியில் இருந்தது. பருத்திப்புழுக்களின் (Bollworm) தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்காக, 'cry1Ac' மரபணுவைக் கொண்ட முதல் மரபணு மாற்ற பருத்தி (Bt Cotton) கலப்பின ரகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2006-ஆம் ஆண்டில்,            மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (GEAC), இரண்டு மரபணுக்களைக் கொண்ட இரண்டாம் தலைமுறை கலப்பின ரகமான 'போல்கார்ட் II' (Bollgard II) என்ற பருத்திக்கு ஒப்புதல் அளித்தது. இதன் தாக்கம் மிகத் தெளிவாகத் தெரிந்தது: இந்தியாவின் பருத்தி உற்பத்தி 2002–03-ஆம் ஆண்டில் 13.6 மில்லியன் மூட்டைகளாக (Bales) இருந்தது, 2013–14-ஆம் ஆண்டில் 39.8 மில்லியன் மூட்டைகளாக உயர்ந்தது. இது 193 சதவீதம் அளவிற்கான பிரம்மாண்ட வளர்ச்சியாகும்.


உங்களுக்குத் தெரியுமா?


• பருத்தி என்பது வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் வளரக்கூடிய ஒரு மிதமான வறட்சியான சூழலையும் தாங்கி வளரக்கூடிய ஒரு தாவரமாகும் (Semi-xerophyte). வயல்வெளிகளில் விதைகள் நன்றாக முளைப்பதற்கு குறைந்தபட்சம் 15°C வெப்பநிலை தேவைப்படுகிறது.


• பருத்திச் செடியின் இலை மற்றும் தண்டு வளர்ச்சிக்கு உகந்த வெப்பநிலை 21°C முதல் 27°C ஆகும். பருத்தியால் 43°C வரையிலான அதிக வெப்பநிலையைத் தாங்கி வளர முடியும். ஆனால், வெப்பநிலை 21°C-க்குக்கீழ் குறையும்போது அதன் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. செடியில் காய் வைக்கும் பருவத்தில் (Fruiting period), பகலில் இதமான வெப்பமும், இரவில் குளிர்ச்சியான சூழலும், அதேபோல பகல் மற்றும் இரவுநேர வெப்பநிலைக்கு இடையே அதிக வித்தியாசம் இருப்பதும் பருத்திக்காய்கள் மற்றும் பஞ்சு நார்த்தன்மை நன்றாக வளர்ச்சி அடைய உதவுகின்றன.


• பருத்தி சாகுபடிக்கு நல்ல வடிகால் வசதியுள்ள பல்வேறு வகையான மண் வகைகள் ஏற்றவை ஆகும். பருத்திச் செடியானது மண்ணில் உள்ள உவர்ப்புத் தன்மையை ஓரளவிற்குத் தாங்கும் திறன்கொண்டது. ஆனால், நீர் தேங்குவதை தாங்காது, அது செடியின் வளர்ச்சியைப் பாதிக்கும். இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண்ணும் (Alluvial soils), மத்தியப் பகுதியில் உள்ள கருப்பு களிமண் வகைகளும் (Black clayey soils), மற்றும் தெற்குப் பகுதியில் உள்ள கருப்பு மண் மற்றும் கலவையான கருப்பு-சிவப்பு மண் வகைகளும் பருத்தி உற்பத்திக்கு மிகவும் ஏற்றவை ஆகும்.


• இந்திய ஜவுளி அமைச்சகத்தின் (Ministry of Textiles) தரவுகளின்படி, இந்தியாவில் பருத்தி விளையும் ஒன்பது முக்கிய மாநிலங்கள் உள்ளன. இவை மூன்று வெவ்வேறு வேளாண்-சுற்றுச்சூழல் மண்டலங்களாகப் (Agro-ecological zones) பிரிக்கப்பட்டுள்ளன:


(i) வடக்கு மண்டலம் – பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான்


(ii) மத்திய மண்டலம் – குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் 


(iii) தெற்கு மண்டலம் – தெலங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா


• ஜவுளி அமைச்சகத்தின் தகவல்படி, பருத்தியின் நான்கு முக்கிய வகைகளையும் பயிரிடும் ஒரே நாடு இந்தியாதான். அவை: ஜி. அர்போரியம் (G. Arboreum) மற்றும் ஜி. ஹெர்பேசியம் (G. Herbaceum) (ஆசியப் பருத்தி),                              ஜி. பார்படென்ஸ் (G. Barbadense) (எகிப்தியப் பருத்தி) மற்றும் ஜி. ஹிர்சூட்டம் (G. Hirsutum) (அமெரிக்க பருத்தி).


• ஒரு காலத்தில் "வெள்ளை தங்கம்" என்று போற்றப்பட்டதும், இந்தியாவின் ஜவுளிப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்வதுமான பருத்தித் தொழில், தற்போது பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. பருத்தி பயிரிடப்படும் நிலப்பரப்பு குறைந்தது, சீரற்ற மழைப்பொழிவு மற்றும் கடுமையான வெப்பநிலை போன்ற காரணங்களால் பருத்தி உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருகிறது.


Original article : What is extra-long staple (ELS) cotton? -Ashok Gulati, Ayushi Gupta, Ritika Juneja

Share:

சட்டப்பூர்வமாக, திருமணம் குறித்த ஒரு புதிய விளக்கத்தை எழுத வேண்டியது அவசியமாகிறது.

 நீதிமன்றம் மிகச் சரியாகக் கூறியது போல், பிரிந்து வாழும் ஒரு தம்பதியரின் வழக்கு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குள் வரவில்லை என்பதற்காக, அவர்களின் மனவேதனையை மேலும் நீட்டிப்பது என்பது,"காகிதத்தில் மட்டுமே நீடிக்கும் ஒரு திருமண பந்தத்திற்கு" அவர்களைக் கட்டாயப்படுத்துவதற்குச் சமமாகும்.


"ஏற்கனவே உடைந்து போய், நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கும் ஒரு திருமண வாழ்க்கையை" கட்டாயப்படுத்தித் தொடரச் செய்வது தம்பதியருக்கும் நல்லது அல்ல, சமுதாயத்திற்கும் நல்லது அல்ல என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்து, மிக அழுத்தமான மற்றும் கசப்பான சட்ட நடைமுறைகளில் ஒன்றை எளிதாக்குவதை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும். கடந்த 15 ஆண்டுகளாகத் தனித்தனியாக வாழ்ந்து வரும் ஒரு தம்பதியின் விவாகரத்து வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இவ்வளவு நீண்ட பிரிவிற்குப் பிறகு அவர்களை மீண்டும் ஒன்றாக வாழச் சொல்வது "இருதரப்பினருக்கும் தீங்கிழைப்பதற்குச் சமம்" என்று கூறியுள்ளது. இந்த விவகாரத்தை நீதிமன்றம் இந்தக் கோணத்தில் அணுகியதன் மூலம், திருமண முறிவுகளைக் கையாளும்போது இன்னும் நடைமுறைக்கு ஏற்ற மற்றும் மனிதாபிமானத்துடன்கூடிய அணுகுமுறை தேவை என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.


தற்போது விவாகரத்து பெறுவதற்கு சட்டம் இரண்டு வழிகளை வழங்குகிறது.  இருதரப்பு சம்மதத்துடன் பெறுவது (Mutual consent) மற்றும் ஒருதரப்பு எதிர்ப்புடன் நீதிமன்றப் போராட்டம் மூலம் பெறுவது (Contested divorce). இருப்பினும், இந்திய உச்சநீதிமன்றம் அவ்வப்போது தனது சிறப்பு அதிகாரமான 'அரசியலமைப்புச் சட்டம் பிரிவு-142(1)'-ஐப் பயன்படுத்தி, "மீட்டெடுக்க முடியாத திருமண முறிவு" (Irretrievable Breakdown of Marriage) என்ற கருத்தாக்கத்தை அங்கீகரிப்பதன் மூலம் விவாகரத்து வழங்குவதற்கான எல்லையை விரிவுபடுத்தியுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு, 'நவீன் கோலி vs நீலு கோலி' (Naveen Kohli vs Neelu Kohli) வழக்கின் தீர்ப்பின்போது, இந்த "மீட்டெடுக்க முடியாத திருமண முறிவை" ஒரு முறையான விவாகரத்துக்கான காரணமாகச் சேர்ப்பதற்கு ஏதுவாக, 1955-ஆம் ஆண்டின் 'இந்து திருமணச் சட்டத்தில்' (Hindu Marriage Act, 1955)) திருத்தம் செய்வதை தீவிரமாகப் பரிசீலிக்குமாறு அரசாங்கத்தை நீதிமன்றம் வலியுறுத்தியது. நீதிமன்றத்தின் இந்தக் கவலை நியாயமானதுதான். ஏனென்றால், பல ஆண்டுகள் நீடிக்கும் நீண்ட சட்டப் போராட்டங்கள் சம்பந்தப்பட்டவர்களின் மன, உடல் மற்றும் உணர்வுப்பூர்வமான ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும். அதோடு, இது மிகப்பெரிய நிதிச்சுமையையும் ஏற்படுத்தும். பிரிந்து வாழும் தம்பதியரின் நிலைமை தற்போதைய சட்ட விதிகளுக்குள் பொருந்தவில்லை என்பதற்காகவே, அவர்களின் மனவேதனையை மேலும் நீட்டிப்பது என்பது, "காகிதத்தில் மட்டுமே நீடிக்கும் ஒரு திருமண பந்தத்திற்கு" அவர்களைக் கட்டாயப்படுத்துவதற்குச் சமம் என்றும் கூறப்பட்டுள்ளது.


இந்தத் தீர்ப்பு, திருமணச் சட்டங்களில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டிய காலம் எப்போதோ கடந்துவிட்டது என்பதை அரசாங்கத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் நினைவூட்டும் ஒன்றாக அமைந்துள்ளது. சட்ட ஆணையம் தனது 2009-ஆம் ஆண்டு அறிக்கையில், திருமணம் மீட்டெடுக்க முடியாத அளவுக்கு முறிந்துபோவதை (Irretrievable Breakdown of Marriage) விவாகரத்துக்கான ஒரு காரணமாகச் சேர்க்க பரிந்துரைத்தது. அதைத் தொடர்ந்து, 2010 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளின் திருமணச் சட்டங்கள் (திருத்த மசோதாக்கள்) (Marriage Laws (Amendment) Bills) மூலமாக சட்டச் சீர்திருத்தத்திற்கான இரண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த இரண்டு மசோதாக்களுமே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் காலாவதியாகிவிட்டன. அதேநேரத்தில், பெண்கள் பெரும்பாலும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய நிலையிலிருந்தே விவாகரத்து நடைமுறைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, ஆணாதிக்கச் சமூகம் சார்ந்த இத்தகைய உண்மை நிலைகளைச்         சட்டச் சீர்திருத்தங்கள் அலட்சியப்படுத்திவிடக் கூடாது. விவாகரத்தின்போது பெண்களின் நலன்களைப் பாதுகாப்பது, குறிப்பாக சொத்துரிமை, குழந்தைப் பாதுகாப்பு, ஜீவனாம்சம் மற்றும் குடியிருப்பு உரிமை ஆகிய கேள்விகளில் அவர்களின் உரிமைகளை உறுதிசெய்வது மிகமிக முக்கியமானதாகும். சட்டச் சீர்திருத்தம் என்பது தேவையானதுதான், ஆனால் அதுவே பெண்களுக்கு எதிரான சமத்துவமின்மையைத் தொடரச் செய்யும் மற்றொரு கருவியாக மாறிவிடக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.


Original article : In law, need to write a new marriage story

Share:

மின்சார மானியங்கள் வீட்டு சூரிய ஆற்றல் பயன்பாட்டை மந்தப்படுத்துகின்றன. அதற்கான ஒரு தீர்வு: மானியங்களை இன்னும் அதிகமாக்குதல் - அமிதாப் சின்ஹா

 இந்தியாவின் தூய எரிசக்தி மாற்றத்திற்கு, வீடுகள் மற்றும் உழவர்கள் உள்ளூரிலேயே மின்சாரம் தயாரிப்பதை ஊக்குவிப்பது ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். ஆனால், அதிக ஆரம்பக் காலச் செலவுகள் மற்றும் மலிவான கட்டமைப்பு மின்சாரம் (grid power) ஆகியவை பரவலாக்கப்பட்ட சூரிய மின்சக்தி பயன்பாட்டை மெதுவாக்கியுள்ளன.


இந்தியா கடந்த சில  ஆண்டுகளில் தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை வேகமாக அதிகரித்து வருகிறது.


இந்த வளர்ச்சிக்கு சூரிய ஆற்றலே முக்கியமானதாக இருந்துள்ளது. இது தற்போது இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின்சாரத் திறனில் ஏறக் குறைய 30%-ஆக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு 50 ஜிகாவாட்டிற்கும் (gigawatts (GW)) அதிகமான சூரிய மின்சார உற்பத்தித் திறனை புதிதாக சேர்த்துள்ளது. மேலும், 2025-ஆம் ஆண்டில் சீனாவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக அளவு புதிய சூரிய மின்சாரத் திறனைச் சேர்த்த நாடாக இந்தியா இருந்தது.


தூய்மையான எரிசக்தி நோக்கிய இந்த மாற்றத்தை விரைவுபடுத்துவதற்காக, சூரிய மின் உற்பத்தியைப் பரவலாக்கும் இரண்டு முக்கியத் திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. அவை, வீடுகளையும் உழவர்களையும் உள்ளூரிலேயே மின்சாரம் உற்பத்தி செய்ய ஊக்குவிப்பதகும்.


பிரதம மந்திரி சூர்யாகர் (Suryaghar Yojana) யோஜனா, ஒரு கோடி வீடுகளில் கூரை மேல் சூரிய மின்சக்தி அலகுகளை நிறுவுவதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்தத்திட்டம் ஒவ்வொரு பயனாளிக்கும் மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரத்தையும், உபகரணங்களுக்கான பண மானியத்தையும் வழங்குகிறது.


பிரதம மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தன் மகாபியான் ((Pradhan Mantri Kisan Urja Suraksha Evam Utthan Mahabhiyan (PM-KUSUM)) திட்டமானது, உழவர்களின் பயன்படுத்தப்படாத நிலங்களில் சிறிய சூரிய மின் நிலையங்களை அமைக்கவும் அல்லது பாசனத் தேவைகளுக்காக மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட அல்லது தனியாக இருக்கும் சூரிய சக்தி மூலம் இயங்கும் நீர் இறைப்பான்களை (solar water pumps) நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உழவர்கள் தங்கள் நிலத்தில் உற்பத்தி செய்யப்படும் சூரிய மின்சாரத்தை விற்பதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டலாம் அல்லது பாரம்பரிய நீர் இறைப்பான்களுக்கான டீசல் அல்லது மின்சாரக் கட்டணங்களைச் சேமிக்கலாம்.


 95,000 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த நிதி ஒதுக்கீட்டின்கீழ் செயல்படுத்தப்படும் இந்த இரண்டு திட்டங்களும் வெற்றிகளைக் கண்டிருந்தாலும், இதுவரை அவற்றின் முழுத் திறனைவிடக் குறைவாகவே செயல்பட்டுள்ளன. அது ஏன் நிகழ்கிறது? நாங்கள் விளக்குகிறோம்.


சீரற்ற முன்னேற்றம்


நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் 40 ஜிகாவாட் என்ற இலக்கிற்கு எதிராக, பிரதம மந்திரி சூர்யாகர் யோஜனா மற்றும் பிரதம மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தன் மகாபியான் திட்டங்கள் ஒன்றிணைந்து 13 ஜிகாவாட் பரவலாக்கப்பட்ட சூரிய மின்சக்தியை நிறுவியுள்ளன.


2019-ல் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தன் மகாபியான் (PM-KUSUM) திட்டம், 2022-க்குள் தனது இலக்குகளை அடைந்திருக்க வேண்டும். ஆனால், பெருந்தொற்று காரணமாக, அது இந்த நிதியாண்டின் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது.


இந்தத்திட்டத்தின் மிகவும் முக்கியமான அம்சம், உழவர்கள் தங்களது தனித்த, மின்சார இணைப்பு இல்லாத சூரிய ஆற்றல் நீர் இறைப்பிகளை அமைப்பதற்கு அளிக்கப்பட்ட ஊக்கத்தொகையாகும். 14 லட்சம் என்ற இலக்கிற்கு எதிராக, 10.9 லட்சத்திற்கும் அதிகமான புதிய சூரிய சக்தி மூலம் இயங்கும் நீர் இறைப்பிகள் (solar water pumps) நிறுவப்பட்டுள்ளதாக அரசாங்கப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.


ஆனால், வெவ்வேறு மாநிலங்களில் இந்தத் திட்டங்களின் சீரற்ற முன்னேற்றம் பல்வேறு உண்மைகளை வெளிக் கொண்டு வருகிறது. இந்த இரண்டு திட்டங்களும் சில மாநிலங்களில் மிகச் சிறப்பாகவும், மற்ற மாநிலங்களில் மிகவும் மோசமாகவும் செயல்பட்டுள்ளன.


தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் அல்லது ஆற்றல் வசதி குறைவாக உள்ள பீகார் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பிரதம மந்திரி சூர்யாகர் (Suryaghar Yojana) யோஜனா கூரை வழி சூரியசக்தித் திட்டத்தை ஏற்றுக்கொள்வதில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் கணிசமாக அதிக விகிதத்தைப் பதிவு செய்துள்ளன.


இந்தத்திட்டத்தின் கீழ், சிறப்பாகச் செயல்படும் குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் ராஜஸ்தான் போன்ற ஐந்து மாநிலங்கள், இதுவரை நிறுவப்பட்டுள்ள 33 லட்சம் மேற்கூரை சூரியசக்தி அமைப்புகளில் ஏறக்குறைய 70 சதவீதத்தைக் கொண்டுள்ளன.


இலவச மின்சாரம் திட்டத்தை மக்கள் ஏற்றுக்கொள்வதைத் தடுக்கிறது.


சில பெரிய மாநிலங்களில் இந்தத் திட்டங்கள் குறைவாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு மின்சார மானியங்களே முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். பல மாநில அரசுகள், வீட்டு உபயோக மற்றும் வேளாண் நுகர்வோருக்கு இலவச மின்சாரத்தையோ அல்லது அதிக மானிய விலையிலான மின்சாரத்தையோ வழங்குகின்றன.


மின்சாரம் ஏற்கனவே இலவசமாகவோ அல்லது அதிக அளவில் மானியமாகவோ வழங்கப்படும்போது, ​​ஒப்பீட்டளவில் இலவசமான சூரிய மின்சக்தியைப் பெறுவதற்காக, அதை நிறுவுவதற்கான ஆரம்பகட்ட செலவுகளைச் செய்ய மக்களுக்கு எந்த ஊக்கமும் வழங்கப்படுவதில்லை. இது பிரதம மந்திரி சூர்யாகர் கூரைத் திட்டத்திற்கு மட்டுமல்ல, உழவுப் பணிகளில் ஈடுபட்டுள்ள  நுகர்வோரை இலக்காகக் கொண்ட பிரதம மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தன் மகாபியான் (PM-KUSUM) திட்டத்திற்கும் பொருந்தும்.


பஞ்சாப் மாநிலத்தை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்வோம். மாநிலம் ஏற்கனவே ஒவ்வொரு மாதமும் வீட்டு உபயோக நுகர்வோருக்கு 300 யூனிட் இலவச மின்சாரத்தையும் அனைத்து வேளாண் ஆழ்துளைக் கிணறுகளுக்கும் முற்றிலும் இலவச மின்சாரத்தையும் வழங்குகிறது.


கடந்த ஆண்டு மின்சார மானியக் கட்டணங்களுக்காக ரூ. 20,000 கோடிக்கு மேல் செலவிட்ட பஞ்சாபில், இரண்டு சூரியசக்தித் திட்டங்களையும் ஏற்றுக்கொள்வோரின் விகிதம் குறைவாகவே உள்ளது.




தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் டெல்லியில் பிரதம மந்திரி சூர்யாகர் (Suryaghar Yojana)  திட்டத்தின்கீழ், மின்சார பயன்பாடு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதற்கு, இந்த மாநிலங்களின் மானியக் கட்டமைப்பும் ஒரு முக்கியக் காரணியாகும். கடந்த ஆண்டு, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிற்கான மின்சார மானியச் செலவுகள் முறையே ரூ. 27,000 கோடியாகவும், ரூ. 15,700 கோடியாகவும் இருந்தன. மறுபுறம், குஜராத், கேரளா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், குறிப்பாக அதிக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு, மின்சாரக் கட்டணங்கள் அதிகமாக உள்ளன.


இந்த இரண்டு திட்டங்களின் முன்னேற்றம் குறித்த சமீபத்திய அறிக்கையில், நாடாளுமன்றத்தின் மதிப்பீட்டுக் குழு இந்தப் பிரச்சினையைச் சுட்டிக்காட்டியது. சில மாநிலங்களில் பிரதமர் சூர்யாகர் திட்டம் குறைவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான காரணங்களை அந்தக்குழு  தெரிந்து கொள்ள முற்பட்டபோது, ​​ஏற்கனவே இலவச மின்சாரம் வழங்கப்படுவதே அதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்று என்று புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தெரிவித்தது.


பல மாநிலங்களில் வீட்டு உபயோக நுகர்வோருக்கான மின்சாரக் கட்டணம் பூஜ்ஜியத்திற்கு அருகில் இருப்பதாலும், சில சமயங்களில் பூஜ்ஜியமாகவே இருப்பதாலும், கூரைமேல் சூரிய மின்சார அமைப்பை (Rooftop Solar System) நிறுவுவது தங்களுக்கு நிதிரீதியாக லாபகரமாக இல்லை என்று பலரும் நினைக்கிறார்கள் என்று அமைச்சகம் கூறியது.


உபகரணங்களின் ஆரம்பக்கட்ட செலவு சில லட்சம் ரூபாயாக இருக்கலாம். அதனை 300 யூனிட் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், உற்பத்தி செய்யப்படும் உபரி மின்சாரத்தை விற்பனை செய்வதன் மூலமும் மட்டுமே காலப்போக்கில் நிதியை ஈடுகட்ட முடியும்.


கூடுதல் மானியங்கள்


முரண்பாடாக, இந்தத் தடைக்கான பதில் மேலும் மானியங்களாகவே அமைந்துள்ளன. உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள், தங்கள் வீட்டு உபயோக மற்றும் உழவுப் பணிகளை செய்யும் நுகர்வோருக்கு அதிக மானிய விலையில் மின்சாரத்தை வழங்குகின்றன. இந்தத்திட்டங்களின்கீழ் ஏற்கனவே கிடைக்கும் சலுகைகளுக்கு அதிகமாக, கூடுதல் நிதிச் சலுகைகளை வழங்குவதன் மூலம், நுகர்வோர் உபகரணங்களை எளிதாக பெற்று சூரிய மின்சக்திக்கு மாறுவதற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்தி, இந்த மாநிலங்கள் பிரதம மந்திரி சூர்யாகர் யோஜனா மற்றும் பிரதம மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தன் மகாபியான் திட்டங்களில் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன.


மின்சார மானியங்கள் ஏற்படுத்தும் முடிவில்லாத தொடர் செலவினங்களுக்கு மாறாக, இந்தக் கூடுதல் சலுகைகள் அரசுக்கு ஒரு முறை மட்டுமே செலவு ஏற்படும் என்பதால் இது இன்னமும்  பயனுள்ளதாகவே இருக்கிறது.


உண்மையில், மதிப்பீட்டுக் குழு அது போன்ற நடவடிக்கைகளை ஆதரிப்பது போல் தோன்றியது. இரண்டு திட்டங்களிலும் நுகர்வோர் முன்பணத்தைச் செலுத்துவதையும், அதன் பலன்களைப் பெறுவதையும் எளிதாக்கும் வழிகளை அரசாங்கம் ஆராய வேண்டும் என்று மதிப்பீட்டுக் குழுபரிந்துரைத்தது.


வெப்பம் சார்ந்த தொடர்பு


இந்தியாவின் தூய எரிசக்தி மாற்றத்திற்கான பரந்த திட்டத்தில், பரவலாக்கப்பட்ட சூரிய மின்சார உற்பத்தி ஒரு முக்கியப் பகுதியாக உள்ளது. வரும் ஆண்டுகளில் மின்சாரத் தேவை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிக அளவில் சூரிய மின் பூங்காக்களை அமைப்பதற்கான நிலம் கிடைப்பது ஏற்கனவே ஒரு சவாலான பிரச்சினையாக மாறியுள்ளது. எந்த ஒரு சூழலிலும், மின் தொகுப்பிலிருந்து (grid) பெறப்படும் மின்சாரத்திற்கும், சூரிய ஆற்றல் மூலம் பெறப்பட்டதாக இருந்தாலும் நுகர்வோருக்கு மானியம் வேண்டும்.


இது  அரசியல் ரீதியான ஒரு பிரச்சினையாகும். மானியங்கள் நாளுக்கு நாள் பொருளாதாரரீதியாக வழங்க முடியாத அளவுக்கு சுமையாக மாறி வந்தாலும், எந்த அரசாங்கமும் அவற்றை எளிதாக  திரும்பப் பெற முடியாது. மதிப்பிட்டுக் குழுவின் (Estimates Committee) அறிக்கையின்படி, பிரதம மந்திரி சூர்ய கர் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டால், மின்சாரச் செலவில் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு ரூ.75,000 கோடி வரை சேமிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது


அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை, சூரிய ஆற்றல் மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை மேலும் விரிவுபடுத்துவதன் மூலமே பூர்த்தி செய்ய முடியும். தற்போது, நாட்டில் மின்சார உற்பத்தியில் 2-வது பெரிய ஆதாரமாக இருந்த நீர்மின் சக்தியை பின்னுக்கு தள்ளி, சூரிய ஆற்றல் அந்த இடத்தைப் பெறத் தயாராக உள்ளது. பாரம்பரியமாக, கோடை காலத்தில் ஏற்படும் கூடுதல் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய நீர்மின்சாரமே முக்கிய ஆதாரமாக இருந்து வந்தது. நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களை நிரப்புவதில் பருவமழை  முக்கிய காரணியாக அமைகிறது.


இருப்பினும், அதிக அளவிலான நீர்மின் உற்பத்தித் திறன் தற்போது தேக்கமடைந்துள்ளது. மின்சாரத் தேவை மிகவும் உயர்ந்துவிட்டதால், அதை நீர்மின்சக்தியால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியாது. இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், பகல் நேரங்களில் ஏற்பட்ட  உச்சபட்ச தேவைகள் பெரும்பாலும் சூரிய சக்தி மூலமே நிர்வகிக்கப்பட்டன.


மழைப்பொழிவு குறைவாகவும், வெப்பநிலை மிக அதிகமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மின்சாரத் தேவையும் மிகவும் அதிகமாக இருக்கும் தற்போதைய ஆண்டைப் போன்ற ஒரு வருடத்தில், பரவலாக்கப்பட்ட சூரிய ஆற்றல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆண்டு ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. இது போன்ற சூழ்நிலைகள் இயல்பானதாக மாறி வருகின்றன. பரவலாக்கப்பட்ட சூரிய ஆற்றல் இவற்றின் தாக்கத்தைக் குறைக்க உதவக்கூடும்.


Original article : Power subsidies are slowing household solar adoption. A solution: More subsidies. -Amitabh Sinha

Share:

அந்தமான் வடிநிலப் பகுதியில் கண்டறியப்பட்ட இயற்கை எரிவாயு ஏன் தலைப்புச் செய்தியாகியுள்ளது? - ரோஷ்னி யாதவ்

 அந்தமான் தீவு ஏன் இந்தியாவின் அடுத்த ஹைட்ரோகார்பன் களமாகப் பார்க்கப்படுகிறது? இந்தத் தீவு ஏன் இவ்வளவு நம்பிக்கைக்குரியதாகக் கருதப்படுகிறது? சமீபத்திய கண்டுபிடிப்பின் பின்னணியில் உள்ள புவியியல், புவிநிலவியல் மற்றும் ராஜதந்திர முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை இங்கே.


தற்போதைய செய்தி :


அரசுக்குச் சொந்தமான இந்தியா ஆயில் நிறுவனம் (Oil India Ltd (OIL)), அந்தமான் கடலில் தனது இரண்டாவது புதிய இயற்கை எரிவாயுவைக் கண்டுபிடித்துள்ளது. இந்தக்கண்டுபிடிப்பு, இந்தப்பகுதி வரும் ஆண்டுகளில் ஒரு முக்கிய ஹைட்ரோகார்பன் உற்பத்தி மண்டலமாக உருவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இந்தச் சூழலில், இந்தக் புதிய கண்டுபிடிப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து நாம் தெரிந்துகொள்வோம்.

முக்கிய அம்சங்கள்:


1. சில நாட்களுக்கு முன்னர், அந்தமான் தீவுகளின் கிழக்குக் கடற்கரையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், 355 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள விஜயபுரம்-3 ஆய்வு கிணற்றில் மேற்கொள்ளப்பட்டது என்று   ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெள்ளிக்கிழமை அன்று அறிவித்தார்.


2. செப்டம்பர் 2025-ல் விஜயபுரம்-2 கிணற்றில் OIL நிறுவனம் முன்னதாக எரிவாயுவைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. இதன் மூலம், இந்தத் பகுதியில் அடையாளம் காணப்பட்ட 2-வது எரிவாயு வளம் கொண்ட கிணறு இதுவாகும்.


3. அந்தமானில் நடைபெற்றுவரும் ஆய்வுத் திட்டத்தின்கீழ் இதுவரை தோண்டப்பட்ட மூன்று ஆய்வு கிணறுகளில் இரண்டு கிணறுகளில் ஹைட்ரோகார்பன்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது அந்தப்பகுதியில் ஆய்வுக்கான வாய்ப்புகளை  மேம்படுத்தியுள்ளதாகவும் எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.


4. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மற்றொரு ஊக்கமளிக்கும் படியாக இதைக் குறிப்பிட்ட ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தக் கண்டுபிடிப்பு கடலோர ஆய்வு முயற்சிகளின் மூலம் ஏற்படும் வெற்றியைக் காட்டுகிறது என்று கூறினார். X தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், இயோசீன் பாறை அடுக்கில் 1,900 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட சோதனையில், தொடர்ச்சியான எரிப்பு நடவடிக்கைகள் மூலம் இயற்கை எரிவாயு இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார்.



5. 1,900 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட உற்பத்திச் சோதனைகள் சாதகமான முடிவுகளைக் காட்டியதாக எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது. துளையிட்ட (perforation) பிறகு, கிணற்றில் அழுத்தம் வேகமாக அதிகரித்து, இயற்கை எரிவாயு (gas) உற்பத்தி தொடங்கியது. இது அந்த நீர்த்தேக்கப் பாறை (reservoir) நல்ல உற்பத்தித் திறனும் நல்ல பண்புகளையும் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.


6. அடுத்தடுத்து நிகழும் இது போன்ற கண்டுபிடிப்புகள், இந்தியாவின் கடல்சார்  எரிவாயுத் துறைக்கு, குறிப்பாக இதுவரை அதிகம் ஆராயப்படாத அந்தமான் பகுதிக்கு ஒரு முக்கிய சாதனையாகக் கருதப்படுகின்றன. 


7. விஜயபுரம்-3 பகுதியில் கண்டறியப்பட்ட இந்த வளம், அங்கு செயல்படும் ஒரு பெட்ரோலிய அமைப்பு இருப்பதற்கான கூடுதல் சான்றை அளிப்பதாகவும், அந்தப்பகுதியில் ஹைட்ரோகார்பன் இருப்பதைக் காட்டலாம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


8.மூன்று ஆய்வுக்கிணறுகளில் இருந்து இரண்டு எரிவாயுக் கண்டுபிடிப்புகள் கிடைத்துள்ளதால், அந்தமான் கடலோரப் பகுதியானது, எதிர்கால எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளுக்கான இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய பகுதிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.


9. குறிப்பாக, நாட்டின் நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பிற்குப்  முக்கியத்துவம் அளிக்கவும், இறக்குமதிக்காக பிற நாடுகளை சார்ந்திருப்பதைக் குறைக்கவும், அந்தமான்-நிக்கோபார் தீவில் உள்ள கச்சா எண்ணெய் மற்றும் ஹைட்ரோகார்பன் இருப்புகளைக் கண்டறிந்து ஆய்வுசெய்ய அரசாங்கம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


10. ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உரிமக் கொள்கை (Hydrocarbon Exploration and Licensing Policy (HELP)) அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்தமான்-நிக்கோபார் தீவில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்விற்காக அரசாங்கம் நான்கு பகுதிகளை ஒதுக்கியது இது தோராயமாக 23,261 சதுர கிலோமீட்டர்  பரப்பளவைக் கொண்டுள்ளது.


புவியியல் இருப்பிடம்


1. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், 150 கி.மீ அகலமுள்ள பத்தாவது அட்சரேகை கால்வாய்' (Ten Degree Channel) வடக்கே அந்தமான் தீவுகள் மற்றும் தெற்கே நிக்கோபார் தீவுகள் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட 836 தீவுகளின் ஒரு தொகுப்பாகும்.


2. அந்தமான்-நிக்கோபார் தீவானது வங்காள-அரக்கான் படிவு (Bengal-Arakan sedimentary system) அமைப்பின் ஒரு பகுதியாக அமைகிறது. இந்திய மற்றும் பர்மியத் தட்டுகளுக்கு இடையேயான எல்லையில் அமைந்துள்ள அதன் புவிமேலோட்டு அமைப்பானது, ஹைட்ரோகார்பன் தொகுப்பிற்கு ஏற்ற அடுக்கு முறைகளை உருவாக்கியுள்ளது.


3. மியான்மர் மற்றும் வடக்கு சுமாத்திராவில் ஏற்கனவே கண்டறியப்பட்ட பெட்ரோலிய அமைப்புகளுக்கு அருகில் இருப்பதால், இந்த தீவில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கக்கூடிய வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கின்றன.

4. இந்தோனேசியாவின் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் கண்டறியப்பட்ட புதிய எரிவாயு கண்டுபிடிப்புகளால், அந்தப்பகுதியில் உள்ள புவியியல் தொடர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அந்தமான்-நிகோபார் தீவின் மீது உலக நாடுகளின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

சமுத்திர மந்தன் (Samudra Manthan Mission) பணி மற்றும் ஆழ்கடல் பணி (Deep Ocean Mission)


1. 2025-ஆம் ஆண்டு சமுத்திர மந்தன் திட்டம் அல்லது தேசிய ஆழ்கடல் ஆய்வுத் திட்டம், சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது.


2. உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், நாட்டின் பல பில்லியன் டாலர் இறக்குமதிச் செலவைக் குறைப்பதற்கும், கடலுக்கு அடியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளைக் கண்டறிவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.


3. இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டின் ஹைட்ரோகார்பன்  வளங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்தும் வகையில், பல ஆழ்கடல்   ஆய்வுக் கிணறுகள் தோண்டத் திட்டமிடப்பட்டுள்ளன.





ஆழ்கடல் திட்டம்  (Deep Ocean Mission)


1. ஆழ்கடலில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற வளங்களை ஆராய்வதற்கும், அவற்றை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்குமான தொழில்நுட்பங்களை உருவாக்கும் நோக்கத்துடன், புவி அறிவியல் அமைச்சகம் (Ministry of Earth Sciences (MoES)) செப்டம்பர் 2021-ல் 'ஆழ்கடல் திட்டத்தை' (Deep Ocean Mission) தொடங்கியது.


2. ஆழ்கடல் திட்டம் பின்வரும் ஆறு கூறுகளைக் கொண்டுள்ளது: அவை,


(i) ஆழ்கடல் சுரங்கத் தொழில்நுட்பம், கடலுக்கு அடியில் பயணம் செய்யக் கூடிய  வாகனங்கள், ரோபோடிக்ஸ் மற்றும் மனிதர்கள் பயணம் செய்யக்கூடிய நீர்மூழ்கிக் கலன் (Crewed Submersible) ஆகியவற்றை உருவாக்குதல்.


(ii) காலநிலை மாறுபாடுகளை கண்காணித்து, எதிர்கால காலநிலை தொடர்பான மாற்றங்களை முன்னறிவிக்கும் கடல் காலநிலை மாற்ற ஆலோசனை சேவையை (Ocean Climate Change Advisory Service) உருவாக்குதல்.


(iii) ஆழ்கடலில் உள்ள பல்லுயிர்களை ஆராய்வதற்கும் பாதுகாப்பதற்கும் தொழில்நுட்பப் புதுமைகளைத் தேடுதல்.


(iv) ஆழ்கடலில் உள்ள கனிம வளங்களை கண்டறிய கடலுக்கு அடியில் ஆய்வுகளை நடத்தப்படுகின்றன. குறிப்பாக, நிக்கல், கோபால்ட் மற்றும் அரிய பூமித் தனிமங்கள் போன்ற மதிப்புமிக்க உலோகங்களைக் கொண்டுள்ள இரும்பு மற்றும் மாங்கனீசு ஹைட்ராக்சைடு அடுக்குகளால் ஆன பாலிமெட்டாலிக் முடிச்சுகளைக் (polymetallic nodules) கண்டறிவதே இந்த திட்டத்தின்  நோக்கமாகும்.


(v) கடலில் இருந்து ஆற்றலையும் நன்னீரையும் பெறுவதற்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல்.


(vi) கடல் உயிரியல் மற்றும் பொறியியல் துறைகளில் திறன்களை மேம்படுத்துவதற்காக ஒரு மேம்பட்ட கடல்சார் ஆராய்ச்சி நிலையத்தை நிறுவுதல் போன்ற பணிகளாகும்.


Original article : Why is natural gas discovery in Andaman basin making headlines? -Roshni Yadav

Share:

அந்நியச் செலாவணி வரவுகளை அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கி ஒரு ‘'மோசமான' யோசனைக்கு மீண்டும் திரும்புவது ஏன்? -சித்தார்த் உபாசனி

 2013-ல் கடைசியாகச் செயல்படுத்தப்பட்ட, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான (வங்கி) அந்நியச் செலாவணி மாற்றுத் திட்டம் (Foreign Currency Non-Resident (Bank), or FCNR(B)), இந்த முறை இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பதற்கு மிகவும் செலவு மிக்கதாக இருக்கும் என்று பரவலாகக் கருதப்பட்டது. இருப்பினும், இதன் பின்னணியில் உள்ள நோக்கம் ஒன்றுதான். அதாவது, இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் அதன் செலவுகளைவிட அதிகமாகவே கருதப்படுகின்றன.


ஆகஸ்ட் 2016-ல், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநராகத் தனது பதவிக்காலம் முடிவடைவதற்குச் சற்று முன்பு பேசிய ரகுராம் ராஜன், அமெரிக்க மத்திய வங்கி (US Federal Reserve) தனது பணவியல் கொள்கையை (monetary policy) கடினமாக்கக்கூடும் என்ற ஊகங்களால் ஏற்பட்ட சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், ஆகஸ்ட்-செப்டம்பர் 2013-ல் வெளிநாட்டுப் பணத்தை ஈர்ப்பதற்காக அதிகாரிகள் பல யோசனைகளைப் பரிசீலித்து வந்ததாகக் கூறினார். "இருப்பினும், அவற்றில் ஒன்று எனக்கு முற்றிலும் முட்டாள்தனமானதாகத் தோன்றியது. அதைச் செய்வது மிகவும் மோசமான செயல் என்று நான் கருதினேன்.


அவர் குறிப்பிட்ட அந்த முன்மொழிவு, வங்கிகளின் வெளிநாட்டு நாணய வெளிநாடு வாழ் (வங்கி) வைப்புத்தொகைகளுக்கான (FCNR(B)) மாற்றுத் திட்டமாகும். இவை வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் மற்றும் வெளிநாட்டு இந்தியக் குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்ட நிலையான கால வைப்புத்தொகைகள் ஆகும். இவ்வகை வைப்புத்தொகைகள், கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வெளிநாட்டு வருமானத்தை தடையின்றி மாற்றத்தக்க அந்நியச் செலாவணிகளாகவே வைத்திருக்க அனுமதிக்கின்றன. அந்த நிதியை வைப்புத்தொகையாகச் செலுத்துவதற்கு முன், அவற்றை இந்திய ரூபாயாக மாற்ற வேண்டிய அவசியமில்லை.



இத்திட்டத்தின் கீழ், FCNR(B) வைப்புத்தொகைகள் மூலம் திரட்டப்பட்ட அந்நிய நிதியின் மீது வங்கிகளுக்கு 3.5% மானியம் வழங்கப்பட்டது. இது வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்குக் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்க வங்கிகளுக்கு உதவியது. இத்திட்டம் இறுதியில் பெரும் வெற்றியைப் பெற்றது. இதன் விளைவாக 26 பில்லியன் டாலர் நிதி வரவு ஏற்பட்டதுடன், ரூபாய் மற்றும் இந்தியா மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் உதவியது.


ஆனால், இந்தத் திட்டம் வெற்றிபெறுமா என்பது குறித்து ஆரம்பத்தில் தெளிவு இருக்கவில்லை. உண்மையில், ரகுராம் ராஜன் இத்திட்டத்தை "முட்டாள்தனமானது" மற்றும் "மோசமானது" என்று நினைத்தது மட்டுமல்லாமல், இந்த வைப்புத்தொகைகளால் ஏற்படும் மாற்று விகித அபாயத்திற்கு (exchange-rate risk) இந்திய ரிசர்வ் வங்கியை பணம் செலுத்த வைப்பதற்கான வங்கியாளர்களின் ஒரு புத்திசாலித்தனமான யோசனை என்றும் கருதினார். அவரது சந்தேகம் எந்த அளவுக்கு வலுவாக இருந்ததென்றால், செப்டம்பர் 4, 2013 அன்று பதவியிலிருந்து விலகவிருந்த அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் டி. சுப்பாராவிடம், அந்த 'ஸ்வாப்' (swap) திட்டத்தை அறிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.


"நான் பொறுப்பேற்கவிருந்த அந்த நாளன்று காலை, டாக்டர் சுப்பாராவிடம் சென்று, 'இத்திட்டத்தை நீங்களே அறிவிக்க விரும்புகிறீர்களா?' என்று கேட்டேன். அப்போது அவர் பெருந்தன்மையுடன், 'வேண்டாம், நீங்களே அதைச் செய்யுங்கள்' என்று கூறினார். ஆனால், உண்மையில் நான் உருவாக்காத அல்லது ஆரம்பத்தில் பெரிதாக நம்பிக்கை வைக்காத அந்த யோசனைக்கான பெருமை இப்போது எனக்குக் கிடைத்துள்ளது," என்று ராஜன் ஆகஸ்ட் 2016-ல் கூறினார்.


அப்படியென்றால், அரசு ஏன் இப்போது இத்திட்டத்தை மீண்டும் கொண்டுவர பரிசீலிக்கிறது? மேலும், நாட்டின் 'செலுத்து சமநிலை' (balance of payments) மீது இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? 


அந்நிய முதலீட்டு வரத்து


இப்போது, ​​ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப் பிறகு, வெளிநாட்டு நாணய வெளிநாடு வாழ் (வங்கி) வைப்புத்தொகைகளுக்கான (FCNR(B)) மாற்றுத் திட்டம் மீண்டும் வந்துள்ளது. அரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors’ (FII)) மேற்கொள்ளும் முதலீடுகள் மீதான மூலதன ஆதாய வரி (அதாவது, அத்தகைய நிதிச் சொத்துக்களை விற்கும்போதோ அல்லது திரும்பப் பெறும்போதோ வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ஈட்டும் லாபத்தின் மீது விதிக்கப்படும் வரி) மற்றும் 'வித்ஹோல்டிங் டாக்ஸ்' (வருமானம் ஈட்டப்படும் இடத்திலேயே நேரடியாகப் பிடிக்கப்படும் வருமான வரியின் முன்பணம்) ஆகியவை நீக்கப்பட்டது அதிக கவனத்தை ஈர்த்திருந்தாலும், அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் முக்கியப் பங்காற்றப்போவது இந்த மாற்று திட்டம்தான் (swap scheme).


"2013-ம் ஆண்டில் இதே திட்டம் சுமார் 26 பில்லியன் டாலர் முதலீட்டைத் திரட்டியது. இது அந்த நிதியாண்டின் (FY14) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.4 சதவீதமாகும். இம்முறையும் இதே அளவிலான முதலீடு திரட்டப்படலாம் என்றும், அது சுமார் 50 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும் என்றும் நாங்கள் கருதுகிறோம்," என்று ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் பிரைமரி டீல்டர்ஷிப் (ICICI Securities Primary Dealership) நிறுவனத்தின் பொருளாதார நிபுணர்கள் குழு (ஏ. பிரசன்னா தலைமையில்) ஜூன் 7 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியிட்ட குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், அரசாங்கம் மற்றும் ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை அறிவித்த அனைத்து நடவடிக்கைகளின் மூலமாகவும் அடுத்த 12 முதல் 24 மாதங்களுக்குள் சுமார் 100 பில்லியன் டாலர் முதலீடு உள்ளே வரும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


இம்முறை வெளிநாட்டு நாணய வெளிநாடுவாழ் (வங்கி) வைப்புத்தொகைகளுக்கான (FCNR(B)) மாற்றுத் திட்டம் இன்னும் அதிக ஆற்றல் வாய்ந்ததாக உள்ளது. 2013-ல், ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு 3.5 சதவீத மானியத்தை வழங்கியது. ஆனால் இப்போது, ​​செப்டம்பர் 30-ம் தேதி வரை திரட்டப்படும் 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான புதிய வைப்புத்தொகைகள் மீதான நாணய மாற்று விகித அபாயத்தை (exchange rate risk) அது முழுமையாக ஏற்றுக்கொள்கிறது.


"தற்போதைய FCNR(B) வட்டி விகிதம் சுமார் 3.35% (3 ஆண்டுகள்) ஆகும். தற்போது ஹெட்ஜிங் (hedging) செலவு அல்லது 'ஃபார்வர்ட் பிரீமியம்' (forward premium) சுமார் 3.5% ஆக உள்ளது. 3 ஆண்டு வைப்புத்தொகைக்கான தற்போதைய வங்கி அறிவிக்கும் வட்டி விகிதம் (card rate) 6.5% ஆகும். எனவே, வங்கிகளால் 5.5% மற்றும் அதற்கு மேற்பட்ட வரம்பில் கவர்ச்சிகரமான FCNR(B) வட்டி விகிதங்களை வழங்க முடியும். ஒப்பீட்டளவில் பார்த்தால், இதேபோன்ற முதிர்வு காலம் கொண்ட அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் (U.S. Treasury securities) தற்போது சுமார் 4 சதவீத வருவாயை அளிக்கின்றன. வருடாந்திர ஹெட்ஜிங் செலவு சுமார் 2.5 சதவீதம் என்று வைத்துக்கொண்டால், ஐந்து ஆண்டுகளில் மொத்தச் செலவு சுமார் 12.5 சதவீதமாக இருக்கும். அதாவது, திரட்டப்படும் ஒவ்வொரு 1 பில்லியன் டாலருக்கும், சுமார் 125 மில்லியன் டாலர் மறைமுகச் செலவு (embedded cost) ஏற்படுகிறது," என்று பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவின் குழுமத் தலைமைப் பொருளாதார ஆலோசகர் சௌம்யா காந்தி கோஷ் வெள்ளிக்கிழமையன்று கூறினார்.


'ஹெட்ஜிங் செலவு' (cost of hedging) என்பது நாணய மதிப்பு ஏற்ற இறக்கங்கள் போன்ற பாதகமான சந்தை அபாயங்களிலிருந்து ஒரு முதலீட்டைப் பாதுகாப்பதற்கான செலவாகும். இந்தச் செலவு 'ஃபார்வர்ட் பிரீமியம்' (forward premium) மூலம் தீர்மானிக்கப்படுகிறது. அந்நியச் செலாவணி சந்தைகளில், தற்போதைய விலையைவிட எதிர்காலத் தேதிக்கான அந்நிய நாணயத்தை வாங்குவதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதே இதன் அடிப்படையாகும்.


இம்முறை கணிக்கப்பட்டுள்ள இந்த 125 மில்லியன் டாலர் செலவுதான், 2013-ம் ஆண்டில் ரகுராம் ராஜன் மற்றும் ரிசர்வ் வங்கியின் சிந்தனையை மாற்றியமைத்தது. அதிக அளவு நிதி உள்ளே வந்தால் மட்டுமே ரிசர்வ் வங்கிக்கு இடர்க்காப்பு (hedging) செலவு அதிகமாகும். ஆனால், அதிக அளவு நிதி உள்ளே வரும்போது, ​​ரூபாய் மதிப்பு வலுவடையும் (அதாவது மதிப்பு உயரும்). மேலும், வலுவான ரூபாய் மதிப்பானது இந்திய ரிசர்வ் வங்கியின் 'ஹெட்ஜிங்' (hedging) எனப்படும் அந்நியச் செலாவணி இடர் மேலாண்மைக் செலவைக் குறைப்பது மட்டுமல்லாமல், இந்தியாவின் இறக்குமதிச் செலவையும் குறைக்கும்.

"ரூபாயின் மதிப்பு தற்போதுள்ளதைவிட சுமார் 3-4 ரூபாய் குறைவாக மதிப்பிடப்பட்டிருப்பதாகக் கொண்டு, அதை 400 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதியுடன் பெருக்கிப் பாருங்கள். நாணயத்தின் மதிப்பை நிலைப்படுத்தினாலே, ஆண்டுக்கு 1.6 டிரில்லியன் ரூபாய் வரை சேமிக்க முடியும்," என்று ராஜன் குறிப்பிட்டிருந்தார்.


செலுத்துச் சமநிலை (Balance of Payments)


2025-26-ஆம் ஆண்டில் இந்தியாவின் இறக்குமதிச் செலவு 775 பில்லியன் டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், வலுவான ரூபாயால் ஏற்படும் சேமிப்பு இப்போது இன்னும் அதிகமாக இருக்கும்.


அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் 2013-ல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விஞ்சும் வகையிலான ஒரு "செலுத்துச் சமநிலை (BoP) தொகுப்புத் திட்டத்தை" அறிவித்துள்ளன. இது சந்தையின் எதிர்பார்ப்புகளை வெகுவாக மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது. எந்தளவுக்கு என்றால், முன்பு சுமார் 60 பில்லியன் டாலர் அல்லது அதற்கும் அதிகமான பற்றாக்குறை இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், இப்போது இந்தியா உபரி அல்லது பூஜ்ஜியத்திற்கு நெருக்கமான செலுத்து சமநிலையை எட்டும் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.


"நடப்புக் கணக்கு பற்றாக்குறை (current account deficit) அழுத்தங்களுக்கு மத்தியில் மூலதனக் கணக்கு உபரி குறைந்ததால் ஏற்பட்ட பெரும் செலுத்துச் சமநிலை பற்றாக்குறையைச் சரிசெய்யும் நோக்கிலேயே ரூபாயைக் காப்பதற்கான இந்த வலுவான கொள்கை நடவடிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு முன்பு, 2027 நிதியாண்டில் இப்பற்றாக்குறை சுமார் 70 பில்லியன் டாலர் வரை இருக்கும் என்று நாங்கள் மதிப்பிட்டிருந்தோம்," என்று நோமுரா (Nomura) ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளது.


Original article : Why RBI is returning to a ‘terrible’ idea to boost foreign inflows? -Siddharth Upasani

Share:

ஓமன் விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) : இந்தியாவின் ஏற்றுமதிக்கு ஒரு புதிய வாய்ப்பு - ஆனந்த் கோயங்கா

 இந்த ஒப்பந்தம் ஏற்றுமதி, சேவைகள், முதலீடு மற்றும் தொழில்முறை சார்ந்த மனிதவளப் பரிமாற்றம் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.


இந்தியாவும் ஓமனும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான வணிக மற்றும் கடல்சார் தொடர்புகளைக் கொண்ட, மிக நீண்டகால வர்த்தக உறவைக் கொண்டுள்ளன. நறுமணப் பொருட்கள் (spices), ஜவுளி (textiles) மற்றும் நறுமணப் பிசின் (frankincense) ஆகியவற்றின் வர்த்தகம் முதல் மக்களுக்கிடையிலான நீடித்த உறவுகள் வரை, வர்த்தகம் இந்த நட்புறவின் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. ஜூன் 1, 2026 அன்று நடைமுறைக்கு வந்த இந்தியா-ஓமன் விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA), எதிர்காலத்திற்கான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுவாக்குவதற்கான நவீனக் கட்டமைப்பை வழங்குவதன் மூலம், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உறவை உறுதிப்படுத்துவதுடன், அதனை மேலும் வலுப்படுத்துகிறது.


ஓமனுக்கான முக்கிய விநியோக நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2023-24 நிதியாண்டில் 8.94 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் 11.18 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது இரு பொருளாதாரங்களுக்கும் இடையே வளர்ந்து வரும் பரஸ்பரத் தேவைகள் மற்றும் வாய்ப்புகளைப் பிரதிபலிக்கிறது.


இந்தியாவின் வர்த்தக உறவுகளின் விரிவாக்கம்


இந்தியா தனது வர்த்தகக் கூட்டாண்மைகளைத் தீவிரமாகப் பன்முகப்படுத்தி, உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் (global value chains) வலுவாக இணைந்து வரும் சூழலில் இந்த விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கம், ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடனான ஒப்பந்தங்களைத் தொடர்ந்து, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் இராஜதந்திர நலன்களுக்கு மிக முக்கியமான ஒரு பிராந்தியத்தில் இந்தியாவின் இருப்பை ஓமன் உடனான இந்த விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) மேலும் வலுப்படுத்துகிறது.


இந்த விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் வாய்ப்புகளை வழங்குகிறது. ஓமன் தனது வரி விதிப்புப் பிரிவுகளில் 98.08 சதவீதத்திற்கு வரி விலக்கு அளித்துள்ளது. இது இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பில் 99.38 சதவீதத்தை உள்ளடக்கியது. இந்த ஒப்பந்தத்திற்கு முன்பு, 'மிகவும் விரும்பப்படும் நாடு' (Most Favoured Nation) என்ற நடைமுறையின்கீழ் இந்தியாவின் ஏற்றுமதியில் 15.33 சதவீதம் மட்டுமே ஓமனுக்கு வரி இல்லாமல் சென்றடைந்தது. எனவே, பல்வேறு துறைகளில் உடனடிப் போட்டித்தன்மையை அதிகரிக்க இந்த விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) உதவுகிறது. ஜவுளி மற்றும் ஆடைத் துறையைப் பொறுத்தவரை, ஓமனின் நெய்யப்பட்ட ஆடை (woven apparel) இறக்குமதியில் 43 சதவீதத்தையும், பின்னலாடை (knitted apparel) இறக்குமதியில் 31 சதவீதத்தையும் இந்தியா ஏற்கனவே தன்வசம் கொண்டுள்ளது. தற்போதுள்ள 5 சதவீத வரி நீக்கப்படுவது, இச்சந்தையில் மற்றொரு முக்கிய விநியோக நாடாகத் திகழும் சீனாவுக்கு எதிராக இந்திய உற்பத்தியாளர்களின் போட்டித்தன்மையை வலுப்படுத்தும். வேதிப்பொருட்களைப் பொறுத்தவரை, ஓமானின் கனிம வேதிப்பொருள் (inorganic chemical) இறக்குமதியில் இந்தியா ஏற்கனவே சுமார் 39% பங்களிப்பை வழங்கி, சந்தையில் முன்னணி வகிக்கிறது. சுங்கவரி இல்லாத வர்த்தக அனுமதி இந்த நிலையை மேலும் வலுப்படுத்தும்.


அதேபோல, பொறியியல் சார்ந்த பொருட்களும் இதன் மூலம் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓமன் ஆண்டுதோறும் 3.7 பில்லியன் டாலருக்கும் அதிகமான இயந்திரங்களையும், 3.3 பில்லியன் டாலர் மதிப்பிலான வாகனங்களையும் இறக்குமதி செய்கிறது. இதில் இந்தியாவின் சந்தைப் பங்கு முறையே 5% மற்றும் 2% மட்டுமே உள்ளது. விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தின் (CEPA) கீழ் வழங்கப்படும் முன்னுரிமைச் சந்தை அணுகல், இந்திய பொறியியல் பொருட்களின் ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்கவும், ஓமனின் உள்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் தொழில்துறை ஆகிய துறைகளில் இந்தியாவின் இருப்பை வலுப்படுத்தவும் உதவும்.


சுமார் 10% சந்தைப் பங்கைக் கொண்டுள்ள மருந்துத் துறையைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் சுங்கவரி குறைப்பில் மட்டுமல்ல, மாறாக ஒழுங்குமுறை நடைமுறைகளை எளிதாக்குவதிலும் உள்ளது. முன்னணி சர்வதேச ஒழுங்குமுறை அமைப்புகளால் (leading international regulators) ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு ஓமனில் விரைவான ஒப்புதல்கள் வழங்கப்படும். இந்த விதிமுறை இணக்கத்திற்கான செலவுகளைக் குறைப்பதோடு, நிறுவனங்கள் சந்தையில் விரைவாக நுழையவும் உதவும் ஓமானின் மருந்துச் சந்தை தொடர்ந்து விரிவடைந்து வருவதால், இந்திய நிறுவனங்கள் அதில் பெரிய பங்கை ஈட்டுவதற்குச் சாதகமான நிலையில் இருக்கும். இறைச்சி, முட்டை, தேன், வெண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற பொருட்களுக்கு வழங்கப்படும் வரிவிலக்கு அணுகல், இந்தியாவின் ஏற்கனவே வலுவான நிலையை மேலும் உறுதிப்படுத்தும். அதேவேளையில், பால் பொருட்கள், தானியங்கள், சமையல் எண்ணெய்கள் மற்றும் பல்வேறு விவசாயப் பொருட்கள் போன்ற உணர்திறன் மிக்க துறைகள் சுங்கவரிச் சலுகைகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், உள்நாட்டு உற்பத்தியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.


நடைமுறைகளைச் சீரமைத்தல்


வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான பல முக்கிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் ஏற்றுமதி ஆய்வு மன்றம் (Export Inspection Council (EIC)) வழங்கும் சான்றிதழ்களை ஓமன் ஏற்றுக்கொள்வதன் மூலம், தேவையற்ற கூடுதல் சோதனைகள் மற்றும் ஆய்வுகள் தவிர்க்கப்படும். அதேவேளையில், இந்தியாவின், தேசிய இயற்கை உற்பத்தித் திட்டம் (NPOP) மற்றும் ஹலால் சான்றிதழ் அமைப்புகளும் (halal certification system) அங்கீகரிக்கப்படும். சுகாதாரம் மற்றும் தாவர சுகாதாரம் (sanitary and phytosanitary (SPS)) மற்றும் வர்த்தகத்திற்கான தொழில்நுட்பத் தடைகள் (technical barriers to trade (TBT)) தொடர்பான பிரத்யேக விதிகளின் ஒழுங்குமுறை வெளிப்படைத்தன்மையையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தும். மேலும், எளிதில் கெட்டுப்போகும் பொருட்களுக்கான விரைவான நடைமுறைகள் உட்பட, சுங்க அனுமதி செயல்முறைகள் சீரமைக்கப்படுவதால், செலவுகள் குறைவதோடு ஏற்றுமதித் திறனும் அதிகரிக்கும்.


விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தின் (CEPA) மற்றொரு தொலைநோக்கு அம்சம், சேவைகள் மற்றும் தொழில்முறை நிபுணர்களின் நடமாட்டம் ஆகியவற்றின் மீது அது செலுத்தும் தீவிர கவனமாகும். 2024-ல் இருதரப்பு சேவை வர்த்தகம் 863 மில்லியன் டாலராக இருந்தது. இதில், இந்தியா சுமார் 447 மில்லியன் டாலர் அளவிலான வர்த்தக உபரியைப் பதிவு செய்தது. இருப்பினும், ஓமனின் உலகளாவிய சேவை இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 5%-க்கும் சற்று அதிகமாகவே உள்ளது. இது வளர்ச்சிக்கான கணிசமான வாய்ப்புகள் இன்னும் பயன்படுத்தப்படாமல் இருப்பதைக் காட்டுகிறது.


கணக்கியல், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி மற்றும் ஆலோசனை போன்ற துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் தொடர்பான கட்டாய உறுதிப்பாடுகளை ஓமன் ஏற்றுக்கொண்டுள்ளது. நிறுவனங்களுக்குள் பணியாளர்களை இடமாற்றம் செய்வதற்கான ஒதுக்கீடுகளையும் ஓமன் அதிகரித்துள்ளது. இது இந்தியத் தொழில்முறை நிபுணர்கள் மற்றும் சிறப்புத் திறன் கொண்டவர்கள் அங்குச் சென்று பணியாற்றுவதை எளிதாக்கும். ஆயுஷ் (AYUSH) மற்றும் பாரம்பரிய மருத்துவம் தொடர்பான விதிகள், வளைகுடா பிராந்தியத்தில் இந்திய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுச் சேவைகளுக்கான வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன.


இராஜதந்திர அமைவிடத்தின் சாதகமான அம்சம்


வர்த்தகப் புள்ளிவிவரங்களைத் தாண்டி, இந்த விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) ஒரு பெரிய இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. வளைகுடாப் பகுதி, இந்தியப் பெருங்கடல் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகியவற்றை இணைக்கும் சந்திப்பில் ஓமன் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. சோஹார்(Sohar), டுகம் (Duqm)மற்றும் சலாலா (Salalah) ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்கள் முக்கிய தளவாட மற்றும் தொழில்துறை மையங்களாக உருவெடுத்து வருகின்றன. இந்திய வணிகங்களைப் பொறுத்தவரை, ஓமன் ஒரு சந்தையாக மட்டுமல்லாமல், பரந்த வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (Gulf Cooperation Council (GCC)) பிராந்தியத்திற்கும் கிழக்கு ஆப்பிரிக்கப் பொருளாதாரங்களுக்கும் ஒரு நுழைவாயிலாகவும் செயல்பட முடியும்.


இந்தியாவின் வர்த்தகக் கொள்கையானது, வெறும் வரி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இருந்து மாறி, பொருட்கள், சேவைகள், முதலீடு, நிபுணர் நடமாட்டம் மற்றும் ஒழுங்குமுறை ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான பொருளாதாரக் கூட்டாண்மைகளை நோக்கி வளர்ந்துள்ளதை இந்தியா-ஓமன் விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) மீண்டும் நிரூபிக்கிறது. இதன் பலன்கள் தமிழ்நாட்டின் ஜவுளித் தொகுப்புகள் மற்றும் குஜராத்தின் ரத்தினம் மற்றும் ஆபரணத் தொழில் முதல் மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாபின் பொறியியல் மையங்கள் வரையிலும், தெலுங்கானாவின் மருந்து உற்பத்தியாளர்கள் முதல் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவின் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் வரையிலும் பரவியிருக்கும்.




இப்போதுள்ள உண்மையான சவால், இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதும் அதைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வதுமே ஆகும். வணிக நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் உருவாகும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தமானது (CEPA) இந்தியாவின் ஏற்றுமதி வரம்பை கணிசமாக விரிவுபடுத்தவும், வளைகுடா நாடுகளுடனான பொருளாதார ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், அத்துடன் உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்த உற்பத்தி மற்றும் சேவை மையமாகத் திகழும் இந்தியாவின் பரந்த லட்சியத்திற்கு ஆதரவளிக்கவும் உதவும். இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் ஓமன் சந்தையை மட்டுமல்லாமல், வளைகுடா மற்றும் அதற்கும் அப்பால் உள்ள பகுதிகளுக்கான ஒரு பரந்த நுழைவாயிலையும் திறந்துவிடுகிறது.


அனந்த் கோயங்கா, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) தலைவராவார்.


Original article : The Oman CEPA, a new gateway for India’s exports -Anant Goenka

Share: