BRICS கூட்டமைப்பு நாடுகள் உணவுப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். -ஜெயா ஜும்ரானி மற்றும் ஷிவ் குமார்

இந்தக் கூட்டமைப்பு வெறும் கலோரி நிறைந்த உணவுகளை வழங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல், அனைவருக்கும் பல்வேறு வகையான சத்துமிக்க உணவுகள் எளிதாகவும் நியாயமான முறையிலும் கிடைப்பதை உறுதிசெய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.


இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் (Brazil, Russia, India, China, South Africa (BRICS)) அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் இந்த நேரத்தில்,      இந்தக் கூட்டமைப்பு ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. மேற்கத்திய அமைப்புகளுக்கு வெறும் ஒரு பொருளாதார மாற்றாக மட்டும் இல்லாமல், பிரிக்ஸ் அமைப்பை இன்னும் மக்கள் நலன் சார்ந்த ஒரு கூட்டமைப்பாக மாற்றுவதை இந்தியாவின் "மனிதநேயத்திற்கு முதலிடம்" (Humanity First) என்ற அணுகுமுறை நோக்கமாகக் கொண்டுள்ளது.


அதன் விரிவாக்கத்திற்குப் பிறகு, பிரிக்ஸ் அமைப்பு தனது புவியியல் எல்லை, மக்கள்தொகை மற்றும் வேளாண் திறனைப் பெருமளவில் அதிகரித்துள்ளது.     இதன் உறுப்பு நாடுகள் உலக மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மேலும், இவற்றில் அதிக வேளாண் உற்பத்தித் திறன் கொண்ட பிராந்தியங்களும், அதேநேரத்தில் உணவுப் பாதுகாப்பற்ற, உணவுப் பற்றாக்குறை உள்ள பொருளாதாரங்களும் அடங்கியுள்ளன.


உலகளாவிய வேளாண் உற்பத்தியில் பிரிக்ஸ் நாடுகள் பெரும் பங்கைக் கொண்டிருந்தாலும், உலகின் பசியால் வாடும் மக்கள்தொகையிலும் அவை கணிசமான பங்கைக் கொண்டுள்ளன. இந்த சமமற்ற நிலையை மாற்றுவதற்கு கடுமையான கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.




வெவ்வேறு நாடுகளை உற்று நோக்கும்போது இந்த முரண்பாடு இன்னும் தெளிவாகப் புரிகிறது. பிரேசில் (Brazil) உலக அளவில் வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடுகளில் ஒன்றாகும், இருப்பினும் அங்குள்ள மில்லியன் கணக்கான மக்கள் இன்னமும் பட்டினியை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு உணவுக் பற்றாக்குறை காரணம் அல்ல; மாறாக வருமான சமத்துவமின்மை, நிலையற்ற சமூக நலத்திட்ட உதவிகள் மற்றும் ஒட்டுமொத்த வேளாண் வணிகத்துறையின் கட்டமைப்பு ஆகியவை ஏழை மக்கள் நாட்டின் உணவு உபரியின் பலனைப் பெறுவதைத் தடுக்கின்றன.


இந்தச் சிக்கலுக்கு இந்தியாவும் ஒரு முக்கிய உதாரணத்தையும், யதார்த்தமான ஒரு பிரதிபலிப்பையும் வழங்குகிறது. இந்தியா ஒரு நிகர உணவு ஏற்றுமதி நாடாகவும் (Net food exporter), பஞ்சத்தை முழுமையாக வென்ற நாடாகவும் இருந்தாலும், அது இன்னும் ஊட்டச்சத்து நெருக்கடியை எதிர்கொண்டே வருகிறது.                      இந்தியா போதுமான அளவு உணவை உற்பத்தி செய்து, ஒவ்வொரு மாதமும் பொது விநியோகத் திட்டம் (Public Distribution System (PDS)) மூலம் 80 கோடி மக்களுக்கு வழங்கி வந்தாலும், பலரது உணவுமுறைகள் அதிக கலோரிகளையும், மிகக் குறைந்த அளவிலான புரதம் மற்றும் அத்தியாவசிய நுண் ஊட்டச்சத்துக்களையுமே கொண்டுள்ளன. ஐந்து வயதிற்குட்பட்ட மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் வளர்ச்சி குன்றி இருக்கும் நிலையில், போதுமான கலோரிகள் கிடைப்பது என்பது சரியான ஊட்டச்சத்து கிடைத்துவிட்டது என்று அர்த்தமாகாது என்பதை இந்தியா உணர்த்துகிறது.


உணவுப் பற்றாக்குறை அதிகம் உள்ள நாடான எத்தியோப்பியா, இந்தப் பட்டியலின் மிகக் கடைசியில் இருக்கிறது.


தெற்கத்திய நாடுகளுக்கு இடையேயான கூட்டுறவைப் பற்றிப் பேசினாலும், பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பிடம் உணவுப் பாதுகாப்பிற்கான வலுவான பொதுவான கட்டமைப்பு எதுவும் இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பொது வேளாண் கொள்கை அல்லது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் (Association of Southeast Asian Nations (ASEAN)) அவசரகால உணவு இருப்புத் திட்டம் போன்ற முறையான அமைப்புகள் ஏதுமின்றி, பிரிக்ஸ் நாடுகள் பெரும்பாலும் இருதரப்பு ஒப்பந்தங்கள் (Bilateral agreements) மூலமாகவே செயல்படுகின்றன. ‘New Development Bank’ (பிரிக்ஸ் நாடுகளால் தொடங்கப்பட்ட புதிய வளர்ச்சி வங்கி) உள்கட்டமைப்பு வசதிகளில் பெருமளவில் முதலீடு செய்திருந்தாலும், ஊரகப்புற உணவு முறைகள் மற்றும் அவற்றுக்கான மீள்திறனை பெருமளவில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. இந்த பிரிக்ஸ் நாடுகளால் தொடங்கப்பட்ட புதிய வளர்ச்சி வங்கி (New Development Bank), போதிய நிதி மற்றும் தெளிவான இலக்குகளுடன் கூடிய பிரத்யேக உணவு முறைத் திட்டம் ஒன்றை உருவாக்கும் வரை, இந்த வாய்ப்பு முழுமையாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கும். இவற்றுடன், ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளும் தொடர்ந்து பல சிக்கல்களை உருவாக்கி வருகின்றன. உதாரணமாக, 2023-ஆம் ஆண்டில் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்த தடையும், ரஷ்யா-உக்ரைன் போரும் பொருளாதாரரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய சந்தைகளில் கடுமையான விலை உயர்வை ஏற்படுத்தின.


இந்த அரசியல் மற்றும் பொருளாதாரக் குறைபாடுகளுக்கு இடையில்,           நாம் பெரும்பாலும் கவனிக்கத் தவறும் ஒரு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு நெருக்கடி உள்ளது. பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் உணவு ஒத்துழைப்புக் கட்டமைப்பு முக்கியமாக 'கலோரி விநியோகத்தை' (Calorie supply) மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இதனால் உணவு கிடைப்பது, விலை நிலைத்தன்மை மற்றும் விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த அணுகுமுறை ஊட்டச்சத்து சார்ந்த முழுப்பிரச்சனையையும் தீர்க்காது. ஏனெனில், பிரிக்ஸ் நாடுகள் தற்போது ஒரே நேரத்தில் மூன்று விதமான ஊட்டச்சத்து குறைபாடு சார்ந்த சிக்கல்களை எதிர்கொள்கின்றன: அவை போதிய ஊட்டச்சத்தின்மை, பரவலான நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் (வைட்டமின் மற்றும் தாதுக்கள் குறைபாடு) மற்றும் வேகமாக அதிகரித்துவரும் உடல் பருமன் மற்றும் இதர தொற்றா நோய்கள் ஆகியனவாகும். 

                 

இந்தக் குறைபாடுகளால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்தியா, எத்தியோப்பியா மற்றும் சீனாவின் கிராமப்புறப் பகுதிகளில் பெண்களிடம் காணப்படும் அதிக அளவிலான இரத்த சோகை, தலைமுறை தலைமுறையாகக் குழந்தைகளின் போதிய வளர்ச்சியின்மை மற்றும் பலவீனமான அறிவாற்றல் வளர்ச்சி போன்ற மோசமான சூழற்சிக் குறைபாடுகளுக்கு காரணமாக அமைகிறது.




உத்திசார் கொள்கை மாற்றங்கள்


பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் எந்தவொரு தீவிரமான திட்டமும், வெறும் போதுமான உணவை வழங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல்,                பெண்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதிலும், அனைவருக்கும் ஆரோக்கியமான மற்றும் பலவகைப்பட்ட உணவுகள் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.


இந்தியா பிரிக்ஸ் கூட்டமைப்பிற்குத் தலைமை தாங்கும்போது சில முக்கியமான கொள்கை மாற்றங்களை ஊக்குவிக்க முடியும். முதலாவதாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் சிறந்த ஊட்டச்சத்து ஆகியவை பிரிக்ஸ் நாடுகளின் அதிகாரப்பூர்வ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக மாற வேண்டும். இதற்கு குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு மற்றும் இரத்தசோகை ஆகியவற்றைத் தடுப்பதற்கான தெளிவான இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். குறைந்தபட்ச சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்க வேண்டும், உணவு ஏற்றுமதி தடைகளைத் தவிர்க்க வேண்டும் மற்றும் அவசரகால உணவு இருப்புகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.


இரண்டாவதாக, பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பில் உள்ள நாடுகள் தங்களுக்குள் வேளாண் துறைசார்அறிவு மற்றும் தொழில்நுட்பங்களை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்வதை ஊக்குவிக்க வேண்டும். இதில் சீனாவின் துல்லியப் பண்ணை முறைகள் (Precision farming), இந்தியாவின் பெரிய அளவிலான பொது விநியோகத் திட்டம் (PDS) சார்ந்த அனுபவங்கள், சிறு வேளாண் தொழிலாளர்களுக்கான பிரேசிலின் ஆதரவுத் திட்டங்கள் மற்றும் பாலைவன வேளாண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் (United Arab Emirates (UAE)) நவீன கண்டுபிடிப்புகள் ஆகியவை அடங்கும்.


மூன்றாவதாக, பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் வேளாண் கொள்கைகளில் சிறு வேளாண் தொழிலாளர்களுக்கும் பெண் உற்பத்தியாளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஏற்றுமதியை மட்டுமே மையமாகக் கொண்ட கொள்கைகளில் இருந்து மாறுபட, நில உரிமைகளில் சீர்திருத்தங்கள், பெண்களுக்கு அதிக சொத்துரிமை மற்றும் கடன் வசதிகள், மற்றும் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகமானது பெரிய வேளாண் நிறுவனங்களுக்கு மட்டுமின்றி வேளாண் தொழிலை நம்பியுள்ள குடும்பங்களுக்குப் பயனளிப்பதை உறுதி செய்ய வேண்டும். இறுதியில், பிரிக்ஸ் கூட்டமைப்பு அமெரிக்க டாலருக்கு சவால் விடுகிறதா அல்லது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் (United Nations Security Council (UNSC)) சீர்திருத்தங்களைக் கொண்டு வருகிறதா என்பதை வைத்து மதிப்பிடப்பட மாட்டாது.  மாறாக, அது பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் வாழ்வாதார நிலைகளையும் மேம்படுத்துகிறதா என்பதை வைத்தே மதிப்பிடப்படும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.


ஜெயா ஜும்ரானி மற்றும் ஷிவ் குமார், புது டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICAR) தேசிய வேளாண் பொருளாதார மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIAP) மூத்த விஞ்ஞானி மற்றும் (பொறுப்பு) இயக்குநர் ஆவர்.

 

Original article : BRICS needs to prioritise food security. -Jaya Jumrani and Shiv Kumar

Share:

நிலையான வேளாண்மையில் கவனம் செலுத்துவதற்கு இதுவே சரியான தருணம். -ஏ அமரேந்தர் ரெட்டி மற்றும் துளசி லிங்கரெட்டி

 இந்த ஆண்டு குறைவான பருவமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, பயிர் காப்பீடு மற்றும் சிறந்த போக்குவரத்து மற்றும் சேமிப்பு வசதிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமாகும்.



இந்திய வேளாண்மை, காலநிலைக்கேற்ற நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இருப்பினும், பருவமழையை மட்டுமே பெரிதும் நம்பியே இருக்கிறது. ஏனெனில், பயிரிடப்படும் நிலங்களில் பெரும்பாலான நிலங்கள் மழைப்பொழிவை மட்டுமே நம்பியிருக்கும் நிலங்களாக (Rainfed) உள்ளன. மேலும், அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் அடிக்கடி ஏற்படும் தீவிர வானிலை மாற்றங்கள், பயிர் விளைச்சலையும் வேளாண் தொழிலாளர்களின் வருமானத்தையும் கடுமையாகப் பாதித்து வருகின்றன. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையத்தின் (Centre for Science and Environment (CSE)) அறிக்கையின்படி, இந்தியாவில் தீவிர வானிலை நிலவிய நாட்களின் எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டில் 292 நாட்களிலிருந்து 295 நாட்களாக அதிகரித்தது. மேலும், 2025-ஆம் ஆண்டில் இது 331 நாட்களாக மேலும் உயர்ந்தது. இந்தச் சூழ்நிலையில், தற்போதைய 2026-ஆம் ஆண்டிற்கான மழைப்பொழிவு, நீண்டகால சராசரியில் (Long-Period Average (LPA)) 90 சதவீதமாக, வழக்கத்தைவிடக் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய காலநிலை மாற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய ஒரு வலுவான வேளாண் உற்பத்தி முறையை உருவாக்குவது அவசியமாகிறது.


1960-களிலிருந்து, வேளாண் ஆதரவுக் கொள்கைகள் முக்கியமாக நெல், கோதுமை மற்றும் கரும்பு போன்ற அதிக அளவில் தண்ணீர், உரம் தேவைப்படும் பயிர்களின் சாகுபடியையே ஊக்குவித்து வந்துள்ளன. இதற்கு அரசின் உறுதி அளிக்கப்பட்ட கொள்முதல் மற்றும் இலவச மின்சாரம் போன்ற மானியங்கள் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. உதாரணமாக, வழக்கத்தைவிடக் குறைவான மழைப்பொழிவு இருக்கும் என்ற வானிலை முன்னறிவிப்பு மற்றும் தற்போதைய உர விநியோகத் தட்டுப்பாடுகளுக்கு இடையிலும், 2026-ஆம் ஆண்டின் குறுவை (Kharif) பருவத்திற்கான நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price (MSP)) சுமார் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.                   பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) உயர்வு நெல்லைவிட அதிகமாக இருந்தபோதிலும், அரசிடம் இவற்றின் கொள்முதல் குறைவாக இருப்பதாலும், மகசூல் குறைவாக இருப்பதாலும், வேளாண் தொழிலாளர்கள் நெல் சாகுபடியில் இருந்து மற்ற பயிர்களுக்கு மாறுவதற்குத் தயங்குகின்றனர். எனவே, இயற்கை வளங்கள் அழிவதற்குக் காரணமான இந்தக் கொள்கை சமநிலையின்மைகளை உடனடியாகச் சரிசெய்து, இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பயிர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆதரவுக் கொள்கைகளை மறுவடிவமைப்பு செய்யவேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது.


மற்றொரு முக்கியமான முன்னுரிமை என்னவென்றால், வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பயனுள்ள தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம் பயிர் விளைச்சலை அதிகரிப்பதாகும். பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற குறைந்த தண்ணீர் தேவைப்படும் பயிர்களின் விளைச்சல் பல ஆண்டுகளாக ஒரே அளவிலேயே உள்ளது. இது வேளாண் தொழிலாளர்களுக்கு அவற்றை வளர்ப்பதில் உள்ள ஆர்வத்தைக் குறைக்கிறது. இவற்றின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக, பூச்சிகள், நோய்கள் அல்லது வறட்சி, வெப்பம் போன்ற பாதிப்புகளைத் தாங்கி வளரக்கூடிய 2,661 புதிய பயிர் வகைகள் 2014 மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கு இடையில் வெளியிடப்பட்டதாக இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Council of Agricultural Research (ICAR)) தெரிவித்துள்ளது. மாறிவரும் காலநிலை மற்றும் வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.


நிதி உதவியை அதிகரித்தல் 


பயிர் விளைச்சலை அதிகரிக்கவும், காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் புதிய ரகப் பயிர்களை உருவாக்கவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வேளாண் முறைகளை மேம்படுத்தவும், இந்தத் நவீனக் கண்டுபிடிப்புகள் ஆய்வகங்களிலிருந்து வேளாண் நிலங்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான நிதியுதவியை அதிகரிக்க வேண்டும். அரசாங்க நிதியுதவியுடன் சேர்த்து, தனியார் நிறுவனங்கள், குறிப்பாக உணவு மற்றும் வேளாண் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தங்களின் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு போன்ற முயற்சிகள் மூலம் வேளாண் ஆராய்ச்சிக்கு ஆதரவளிக்க அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்.


வேளாண் துறையை பாதிப்புகளைத் தாங்கி மீளும்திறன் கொண்டதாக  மாற்றுவதற்கு, மேம்பட்ட வானிலை முன்னறிவிப்பு அமைப்புகளுடன் கூடிய நிகழ்நேரப் பயிர் ஆலோசனைகள் இன்றியமையாதவை ஆகும். வானிலை மற்றும் பருவமழைப் பொழிவு ஆகியவை கணிக்க முடியாததாக மாறி வருவதால், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான வானிலை மாதிரி அமைப்புகள் வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கவும், வேளாண் தொழிலாளர்களுக்குச் சரியான நேரத்தில் தகுந்த ஆலோசனைகளை வழங்கவும் உதவும். வேளாண் தொழிலாளர்களின் வருமானத்தைப் பாதுகாப்பதற்கான மற்றொரு முக்கியமான கருவி, பயிர்க் காப்பீடு ஆகும். 2016-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY)), 2018-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் 25 முதல் 31 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பை உள்ளடக்கி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், இந்தியாவின் மொத்தப் பயிர் சாகுபடி பரப்பளவு சுமார் 220 மில்லியன் ஹெக்டேராக இருப்பதால், இதுபோன்ற காப்பீட்டுத் திட்டங்களின் வரம்பை இன்னும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.


வேளாண் தொழிலாளர்கள் தங்களின் விளைபொருட்களுக்கு நல்ல விலையைப் பெறுவதற்காக, அவர்களை நேரடியாக நுகர்வோர் மற்றும் சந்தைகளுடன் (Value chains) இணைப்பது மற்றொரு முக்கியமான உத்தியாகும்.   இது பற்றி பரவலாகப் பேசப்பட்டாலும் இதுவரை குறைந்த அளவே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தித் துறையினருக்குக் கிடைக்கும் ஆதரவைப் போலவே, தற்போது வேகமாக வளர்ந்து வரும் மின்-வணிகம் (e-commerce), கிடங்கு வசதிகள் மற்றும் பொருட்களைக் கொண்டு சேர்க்கும் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த இணைப்பை மேலும் வலுப்படுத்த முடியும். வேளாண் சில்லறை வர்த்தகத்தில் உள்ள பெரிய நிறுவனங்களும் வேளாண் தொழிலாளர்களுக்குப் போக்குவரத்து மற்றும் சேமிப்பு ஆதரவையும் சந்தை வாய்ப்புகளையும் வழங்குவதன் மூலம் உதவ முடியும். இயற்கை வேளாண் விளைப் பொருட்களின் மதிப்புத் தொடர்கள் பெற்று வரும் தொடர் வெற்றி, வேளாண் தொழிலாளர்களை நேரடியாகச் சந்தைகளுடன் ஒருங்கிணைப்பது சாத்தியமானது மற்றும் பயனுள்ளது என்பதை நிரூபிக்கிறது.


எனவே, அதிகரித்து வரும் மக்கள்தொகையின் உணவு மற்றும் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இயற்கை வளங்களைத் திறம்படவும், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு வலுவான, மீள்திறன் கொண்ட வேளாண் அமைப்பை உருவாக்குவது மிகவும் அவசியமாகிறது.



ரெட்டி, ராய்பூரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின்-தேசிய உயிரியல் அழுத்த மேலாண்மை நிறுவனத்தில் கொள்கை ஆதரவு ஆராய்ச்சிக்கான இணை இயக்குநராக உள்ளார். லிங்காரெட்டி, மும்பையில் உள்ள நிலையான நிதி மற்றும் வேளாண் துறையின் மூத்த பொருளாதார நிபுணராக உள்ளார்.


Original article : Right time to focus on sustainable agriculture. -A Amarender Reddy and Tulsi Lingareddy

Share:

உலகளாவிய காலநிலை மாற்றக் குறியீடுகள் திட்டம் என்பது என்ன? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• 2025-ஆம் ஆண்டில், புவி வெப்பமயமாதலுக்கு மனித நடவடிக்கைகளின் பங்களிப்பு வரலாற்றிலேயே மிக அதிகமாக இருந்திருக்கலாம். இருப்பினும், இயற்கையான காலநிலை மாற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு மாறுபடுகின்றன. 2025-ஆம் ஆண்டு ஒரு 'லா நினா' (La Niña) ஆண்டாகும். இந்த நேரத்தில் தென்அமெரிக்காவின் மேற்கு கடற்கரைக்கு அருகிலுள்ள பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடல் (Equatorial Pacific Ocean) வழக்கத்தைவிட குளிர்ச்சியாக இருந்தது.        'லா நினா' பொதுவாக பூமிக்கு ஒரு குளிர்ச்சியான விளைவை ஏற்படுத்துவதால், மனிதர்களால் ஏற்படும் வெப்பமயமாதல் மோசமான அளவை எட்டிய போதிலும், 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளைவிட 2025-ஆம் ஆண்டு ஏன் சற்று குறைவான வெப்ப அளவு பதிவாகி இருந்தது என்பதை விளக்கக்கூடும்.


• ஜெர்மனியில் தற்போது நடைபெற்றுவரும் காலநிலை மாநாட்டில், 2035-ஆம் ஆண்டிற்குள் ஒட்டுமொத்த உலகளாவிய ஆற்றல் நுகர்வில் (Final energy consumption) மின்சாரத்தின் பங்கு குறைந்தது 35%-ஆக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்ற உலகளாவிய அர்ப்பணிப்புக்கான ஒரு முன்மொழிவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, உலகளாவிய ஆற்றல் பயன்பாட்டில் மின்சாரத்தின் பங்கு சுமார் 20%-ஆக மட்டுமே உள்ளது. நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் போன்ற பெட்ரோலிய எரிபொருட்களிலிருந்து மாறுவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.


• பசுமை இல்ல வாயுக்களின் அதிக அளவிலான வெளியேற்றத்தின் காரணமாக, மனித நடவடிக்கைகளால் ஏற்படும் புவி வெப்பமயமாதலானது             10 ஆண்டுகளுக்கு சுமார் 0.27°C என்ற வீதத்தில் அதிகரித்து வருவதாக உலகளாவிய காலநிலை மாற்றக் குறியீடுகள் (Indicators of Global Climate Change (IGCC)) ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும், 2025-ஆம் ஆண்டில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் 56.8 பில்லியன் டன்களாக உயர்ந்து, வரலாற்றிலேயே மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


• ஜெர்மனியின் பான் (Bonn) நகரில் ஆண்டுதோறும் நடைபெறும், ஆண்டின் இடைக்காலக் காலநிலை பேச்சுவார்த்தையின்போது இந்த உலகளாவிய காலநிலை மாற்றக் குறியீடுகள் (IGCC) ஆய்வு அறிக்கை வெளியிடப்படுகிறது. கடந்த ஆண்டு 2015-ஆம் ஆண்டின் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து (Paris Agreement) அமெரிக்கா விலகியதை அடுத்து, காலநிலை மாற்றத்திற்கான உலகளாவிய நடவடிக்கைகளில் பெரிய பின்னடைவு ஏற்பட்டது. தற்போதைய இந்த விவாதங்கள், அந்த நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன. ஏனெனில், பசுமை இல்ல வாயு உமிழ்வை பெருமளவில் குறைக்க வேண்டிய அவசரத் தேவைக்கு ஏற்ப, உலக நாடுகளின் முயற்சிகள் போதுமானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.


• உலகளாவிய வெப்பநிலை மிக வேகமாக உயர்ந்து வருவது குறித்து உலகளாவிய காலநிலை மாற்றக் குறியீடுகள் (IGCC) ஆய்வின் முடிவுகள் மற்றொரு எச்சரிக்கையை விடுத்துள்ளன. கடந்த மாதம், உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization (WMO)) வெளியிட்ட ஆய்வில், 2024-ஆம் ஆண்டைப் போலவே, 2026 மற்றும் 2030-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் குறைந்தது ஒரு ஆண்டாவது 1.5°C என்ற உலக வெப்பநிலை உயர்வின் வரம்பைத் தாண்டுவதற்கு 91%-வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஐந்தாண்டு காலத்தின் சராசரி வெப்பநிலை, 1850-1900 காலகட்டத்தின் அடிப்படை வெப்பநிலையோடு ஒப்பிடும்போது 1.5°C-க்கு மேல் நீடிப்பதற்கு 75% வாய்ப்பு உள்ளதாகவும் இந்த ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


• உலகளாவிய காலநிலை மாற்றக் குறியீடுகள் (IGCC) திட்டமானது, காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையேயான குழுவின் மதிப்பீடுகளின் அடிப்படையில், முக்கிய காலநிலை குறியீடுகள் குறித்த வருடாந்திரப் புதுப்பிப்புகளை வழங்குகிறது. இத்திட்டம் காலநிலை மாற்றத்தில் மனித நடவடிக்கைகளின் தாக்கம், புவி வெப்பமயமாதல் விகிதம் மற்றும் மீதமுள்ள உமிழ்வு வரம்பு (carbon budget) ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்கிறது. இதன் மூலம் பெரிய அறிவியல் அறிக்கைகளுக்கு இடையே ஏற்படும் கால இடைவெளியை நிரப்ப உதவுகிறது.


• முதன்முதலில் 2023-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட உலகளாவிய காலநிலை மாற்றக் குறியீடுகள் (IGCC) ஆய்வு என்பது, தன்னிச்சையான சர்வதேச காலநிலை விஞ்ஞானிகள் குழுவின் ஒரு கூட்டு முயற்சியாகும். இக்குழுவில், காலநிலை மாற்றம் குறித்த தங்களின் குறிப்பிட்ட கால இடைவெளியிலான அறிக்கைகளுக்காக மிகவும் அதிகாரப்பூர்வமான அமைப்பாகக் கருதப்படும், காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையேயான குழுவில் பங்களித்த பல வல்லுநர்களும் இடம்பெற்றுள்ளனர்.


• உலகளாவிய காலநிலை மாற்றாக குறியீட்டு (IGCC) அமைப்பின் சமீபத்திய ஆய்வின்படி, 1850-1900 காலகட்டத்தின் அடிப்படை வெப்பநிலையுடன் ஒப்பிடும்போது, 2025-ஆம் ஆண்டில் உலகளாவிய சராசரி வெப்பநிலை சுமார் 1.39°C அதிகமாக இருந்தது. இந்த மொத்த வெப்ப உயர்வில், 1.37°C உயர்விற்கு மனிதர்களின் செயல்பாடுகளே, முக்கியமாக பசுமை இல்ல வாயு உமிழ்வுதான் காரணம் என்றும், மீதமுள்ள உயர்வு காலநிலை அமைப்புகளில் ஏற்படும் இயற்கையான மாற்றங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


• நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய 'Earth System Science Data' என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட இந்த உலகளாவிய காலநிலை மாற்றக் குறியீட்டு (IGCC) ஆய்வு, உலக வானிலை அமைப்பின் (WMO) முந்தைய கணிப்பை உறுதிப்படுத்துகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்ட தகவலில், 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு, 2025-ஆம் ஆண்டு வரலாற்றிலேயே மூன்றாவது மிக வெப்ப அளவு பதிவான ஆண்டாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறியிருந்தது. மேலும், 2025-ஆம் ஆண்டில் உலகளாவிய சராசரி வெப்பநிலை 1850-1900 காலகட்டத்தைவிட 1.44°C அதிகமாக இருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டிருந்தது.



• வரலாற்றிலேயே மிக அதிக வெப்பம் பதிவான ஆண்டான, 2024-ஆம் ஆண்டில், வெப்பநிலை 1850-1900-ஆம் ஆண்டுகளின் சராசரியைவிட சுமார் 1.55°C அதிகமாக இருந்தது. உலகளாவிய காலநிலை மாற்றக் குறியீடுகள் (IGCC) ஆய்வின்படி, இந்த வெப்ப உயர்வில் சுமார் 1.36°C அளவிற்கு மனிதர்களின் செயல்பாடுகளே காரணமாக இருந்துள்ளன. மீதமுள்ள வெப்ப உயர்வு இயற்கை மாற்றங்களால் ஏற்பட்டது. அதேபோல 2023-ஆம் ஆண்டில், உலகளாவிய வெப்பநிலை 1850-1900-ஆம் ஆண்டுகளின் சராசரியைவிட சுமார் 1.45°C அதிகமாக இருந்தது. இதில் மனித செயல்பாடுகளின் பங்களிப்பு சுமார் 1.31°C ஆகும்.


Original article : What is the Indicators of Global Climate Change (IGCC) project? -Priya Kumari Shukla

Share:

50 ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில், அவசரநிலைக்கு வழிவகுத்த, இந்திராகாந்திக்கு எதிரான அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை நினைவுகூர்தல். -நிகிதா மோத்தா

 ஜூன் 12 அன்று காலை, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 15-வது அறையில், நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா ​​பிரதமர் இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவித்தார். இந்தத் தீர்ப்பு பல்வேறு அரசியல் நிகழ்வுகளுக்கு முக்கிய புள்ளியாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் காரணமாக, ஜூன் 25  இரவு அவசரநிலையை  இந்திரா காந்தி அறிவித்தார்.


1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நள்ளிரவில், பிரதமர் இந்திரா காந்தியின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் காரணம் காட்டி, அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினார். ஆனால், வரலாற்றாசிரியர்கள் இதற்கான முக்கியக் காரணியாக அமைந்தது, 1971-ஆம் ஆண்டு தேர்தலில் இந்திராகாந்தி ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டிய ஒரு மனுவை உறுதிசெய்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஜூன் 12-ஆம் தேதி தீர்ப்புதான் என்கின்றனர்.


அந்தத் தீர்ப்பையும், இந்திரா காந்திக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும், நெருக்கடி நிலையை பற்றியும் நாம்  தெரிந்து கொள்வோம்.

பிரபலமான ‘தேர்தல் வழக்கு’


1971-ஆம் ஆண்டு ரேபரேலி நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தியிடம் தோல்வியடைந்த சோசலிசத் தலைவர் ராஜ் நாராயண், அவரது வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தபோது, ​​அலகாபாத் உயர்நீதிமன்றம் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட ஒரு சட்டப் போராட்டத்திற்கான களமாக மாறியது. 'தேர்தல் வழக்கு' என்று அறியப்பட்ட அந்த மனுவில், பிரதமர் ஊழல் முறைகள் மூலமாகவும், குறிப்பாக தேர்தல் பிரச்சாரச் செலவுகளுக்கான சட்ட வரம்பை மீறியதன் மூலமாகவும், தனது பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க அரசு அதிகாரிகளையும் அரசு இயந்திரத்தையும் பயன்படுத்தியதன் மூலமாகவும் தனது வெற்றியைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.


நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா ​​முன்னிலையில் வாதங்களும் எதிர்வாதங்களும் முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு 1973 மற்றும் 1974 முழுவதும்  நடைபெற்றது.


1975-ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று, நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை இந்திரா காந்தி பெற்றார். அவர் தனது தேர்தல் பிரச்சாரம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக, சாட்சிக் கூண்டில் ஐந்து மணிநேரம் செலவிட்டார். தீர்ப்பு ஜூன் மாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தனது ‘இந்தியா ஆஃப்டர் காந்தி’ (2008) என்ற தனது நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ஜூன் 12-ஆம் தேதி காலை,  இந்திரா காந்தியின் தந்தையும் தாத்தாவும் வழக்கறிஞர்களாகப் பணியாற்றிய நீதிமன்றத்தின் அறை எண் 15-ல், நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ராஜ் நாராயண் தாக்கல் செய்திருந்த வழக்கில் தனது தீர்ப்பை வாசித்தார்.


நீதிபதி சின்ஹா, இந்திராகாந்திக்கு எதிரான 14 குற்றச்சாட்டுகளில் 12-ஐத் தள்ளுபடி செய்தார். இருப்பினும், தனது 238 பக்க தீர்ப்பில், அவர் இரண்டு குற்றச்சாட்டுகளை உறுதி செய்தார்.


முதலில், இந்திரா காந்தியின் முன்னாள் தனிச் செயலாளரான யஷ்பால் கபூர், அரசுப் பணியிலிருந்து முறைப்படி விலகுவதற்கு முன்பே அவரது தேர்தல் முகவராகச் செயல்படத் தொடங்கிவிட்டார் என்று நீதிபதி சின்ஹாநீதிபதி சின்ஹா தீர்ப்பளித்தார்.


இரண்டாவதாக, உத்தரப் பிரதேச அரசாங்க அதிகாரிகள், தேர்தல் கூட்டங்களுக்கான வசதிகளைத் தயார் செய்து, மின்சார ஏற்பாடு செய்தல் மற்றும் அவர் வாக்காளர்களிடம் உரையாற்றுவதற்கான மேடையை அமைத்தல் உள்ளிட்டவற்றின் மூலம் அவரது பிரச்சாரத்திற்கு உதவியிருந்ததை நீதிபதி சின்ஹா கண்டறிந்தார்.


இந்தக் காரணங்களின் அடிப்படையில், சின்ஹா ​​காந்தியின் 1971-ஆம் ஆண்டு தேர்தலைச் செல்லாததாக அறிவித்து, ஆறு ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்தார். இருப்பினும், இந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவருக்கு 20  நாட்கள் அவகாசம் வழங்கினார்.


ஜூன் 12 தீர்ப்புக்கான எதிர்வினைகள்


அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அடுத்த நாள், எதிர்க்கட்சித் தலைவர்கள், தாங்கள் "ஊழல்வாதி" என்று அழைத்த பிரதமரை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரி, ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இருப்பினும், இந்திரா காந்தியின் ஆதரவாளர்கள் இந்தப் பிரச்சாரத்தை முறியடிக்க விரைந்து செயல்பட்டனர். ஜூன் 13 அன்றே, ஹரியானா முதலமைச்சர் பன்சிலால், காங்கிரஸ் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று, இந்திரா காந்திக்குத் தங்கள் விசுவாசத்தைப்  வெளிப்படுத்தத் தொடங்கினார். பிரதமரின் இல்லத்திற்கு வெளியே இருந்த சாலைகள் அவரது விசுவாசிகளால் நிரம்பி வழிந்தன. அவர்கள் அவருக்கு ஆதரவாக முழக்கமிட்டதோடு, நீதிபதி சின்ஹாவின் உருவ பொம்மைகளையும் எரித்தனர் என்று குஹா குறிப்பிடுகிறார். 


தன்னைப் பதவியிலிருந்து நீக்குவதற்காக வெளிநாட்டு சக்திகள் தனது உள்நாட்டு எதிரிகளுடன் சதி செய்வதாகக் குற்றம் சாட்டி, இந்திரா காந்தி கூட்டத்தினரிடையே உரையாற்ற வெளியே வந்தார். தனது எதிரிகளிடம் "தாராளமாகப் பணம் இருக்கிறது" என்று இந்திராகாந்தி கூறினார். ஒவ்வொரு நாளும் இந்திராகாந்தியின் இல்லத்திற்கு வெளியே பல ஆதரவாளர்கள் கூடினர். அவரும் அவர்களிடம் பேசுவதற்காக வெளியே வந்தார்.


ஜூன் 20 அன்று, இந்திரா காந்தி டெல்லியின் போட் கிளப் புல்வெளியில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் உரையாற்றினார். தனது மகன்கள் மற்றும் மருமகள் சோனியா காந்தியுடன் இருந்த அவர், நேரு-காந்தி குடும்பத்தின் பொதுச் சேவைப் பாரம்பரியத்தை நினைவுபடுத்தி, "தனது இறுதி மூச்சு உள்ள வரை" தேசத்திற்கு சேவை செய்வதாக உறுதியளித்தார்.


உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?


ஜூன் 23 அன்று, காந்தியின் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது. மறுநாள், நீதிபதி வி. ஆர். கிருஷ்ண ஐயர் அலகாபாத் தீர்ப்புக்கு நிபந்தனைத் தடை விதித்தார். பிரதமர் தொடர்ந்து நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ளலாம். ஆனால், உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வும் அவரது மேல்முறையீட்டை முடிவு செய்யும் வரை அவரால் வாக்களிக்கவோ அல்லது சம்பளம் பெறவோ முடியாது என்று கூறியது.


இருப்பினும், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டிய விதிமீறல்கள் தொடர்புடைய சட்டத்தின்கீழ் பட்டியலிடப்பட்டுள்ள "மிகவும் தீவிரமான தேர்தல் முறைகேடுகள்" அல்ல என்பதால், அந்தத் தீர்ப்பு இறுதியில் வலுவற்றதாக அமையக்கூடும் என்று சின்ஹா ​​குறிப்பிட்டார்.




இந்த நிலையில், இந்திரா காந்தி தற்காலிகமாகப் பதவி விலகி, வழக்கிற்கு இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை ஜக்ஜீவன் ராம் போன்ற ஒரு மூத்த நபர் இடைக்காலப் பிரதமராகப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று சிலர் அறிவுறுத்தினர்.


ஆனால் இது தற்காலிகமானது என்று அவர் நம்பவில்லை என்று வரலாற்றாசிரியர் கியான் பிரகாஷ் தனது 2019-ஆம் ஆண்டு அவசரநிலைக் காலக் குறிப்புகள் (Emergency Chronicles) என்ற நூலில் சுட்டிக்காட்டியுள்ளார். "தனக்கு எதிராக ஒரு சதித்திட்டம் தீட்டப்படுவதாக அவர் உறுதியாக நம்பினார். சிலியின் சால்வடார் அலெண்டேவுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பைச் சுட்டிக்காட்டி, அவர் அமெரிக்காவின் முக்கிய உளவு நிறுவனமான CIA மற்றும் ரிச்சர்ட் நிக்சன் மீது தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினர். 


அவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்களில் அவரது மகன் சஞ்சய் காந்தி, மேற்கு வங்க முதல்வர் சித்தார்த்த சங்கர் ராய், ஹரியானா முதல்வர் பன்சிலால், பல காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோர் அடங்குவர்.


அடுத்தநாள் ஜூன் 25 எதிர்க்கட்சியினர் டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் ஒரு மாபெரும் பேரணியை நடத்தினர். அரசாங்கத்திற்கு எதிரான இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய ஜெயப்பிரகாஷ் நாராயண், பிரதமர் பதவி விலக வலியுறுத்தி ஜூன் 29-ஆம் தேதி முதல் ஒருவார காலப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தார்.


அவசரநிலை பிரகடனம்

இதற்கிடையில், நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்ற பிறகு, அவசரநிலைப் பிரகடனத்தைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் வேகமாக மேற்கொண்டாதாக பிரகாஷ் எழுதியுள்ளார். 


ஜூன் 25 அன்று, உள்நாட்டு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தும் அவசரச் சட்டத்தை வரைவதற்கு ரே உதவினார். அந்தச் சட்டம் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டபோது, ​​அவர் உடனடியாக அதில் கையெழுத்திட்டார். அன்றிரவு, டெல்லி முழுவதும் உள்ள செய்தித்தாள் அலுவலகங்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், ஜூன் 26 அன்று காலைப் பதிப்புகள் வெளிவரவில்லை.


மறுநாள், அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, மக்கள் உரிமைகள் முடக்கப்பட்டிருப்பதாக அரசு கட்டுப்பாட்டில் உள்ள வானொலி நாட்டுக்கு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, காவல்துறைப் பிரிவுகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக விரைந்து செயல்பட்டு, ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் மற்றும் பலரைக் கைது செய்தன.


உச்சநீதிமன்றம் அலகாபாத் தீர்ப்பை ரத்து செய்யும் என்று பெரும்பாலான வழக்கறிஞர்கள் நம்பினர். இருப்பினும், டெல்லியைச் சேர்ந்த ஒரு மதிப்புமிக்க சட்ட அறிஞர் கூறியதுபோல், பிரதமர் மேல்முறையீடு என்ற நீதிமன்றத்தின் வழிமுறைகளைத் கண்டுகொள்ளாமல், அதற்கு பதிலாக அவசரநிலை (Emergency) என்ற அசாதாரணமான, ஜனநாயகத்திற்கு முரணான மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுத்தார்’ என்று குஹா  குறிப்பிடுகிறார்.


Original article : Over 5 decades on, recalling Allahabad HC verdict against Indira that paved way for Emergency. -Nikita Mohta

Share:

டெல்லியை, உலகின் மிக அதிக பறவை வகைகளைக் கொண்ட தலைநகரங்களில் ஒன்றாக மாற்றுவது எது? - ரோஷ்னி யாதவ்

 உலகத் தலைநகரங்களிலேயே பறவை இனங்களின் பன்முகத்தன்மையில் நைரோபிக்கு அடுத்தபடியாக டெல்லி ஏன் இரண்டாம் இடத்தில் உள்ளது? 471 வகையான பறவை இனங்களுக்கு ஒரு பெருநகரம் எவ்வாறு புகலிடமாக அமைகிறது? இந்தப் பல்லுயிர் வளம் அதிகமாக உள்ள பகுதியை எது வடிவமைக்கிறது? இது குறித்த முழுமையான தகவல்கள் இங்கே உள்ளன.


தற்போதைய செய்தி


ஜூன் 5 அன்று வெளியிடப்பட்ட டெல்லி பறவைகள் வரைபடத் தொகுப்பு, முதன்முறையாக நகரம் முழுவதும் உள்ள பறவை இனங்களின் பரவல் மற்றும் எண்ணிக்கையை வரைபடமாக்கியுள்ளதாகக் கூறுகிறது. மேலும், இது "பறவைகளின் பன்முகத்தன்மையில் உலகின் தேசியத் தலைநகரங்களுள் நைரோபிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில்" டெல்லியை நிலைநிறுத்தியுள்ளது. இந்தச்சூழலில், டெல்லி பறவை வரைபடத் தொகுப்பு மற்றும் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட புல்வெளிப் பறவைகள் (grassland bird census) கணக்கெடுப்பு ஆகியவற்றின் முக்கிய முடிவுகளைப் பற்றி அறிந்துகொள்வோம்.

முக்கிய அமங்கள்:


1. பறவை ஆர்வலர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வனத்துறை ஊழியர்கள் மற்றும் குடிமக்கள் தன்னார்வலர்களின் பங்கேற்புடன், டெல்லி வனத்துறை, 'இந்திய பறவைகள் கணக்கெடுப்பு' (Bird Count India), 'இயற்கைக்கான உலகளாவிய நிதியம்' (World Wide Fund for Nature (WWF)) இந்தியா மற்றும் பிற கூட்டு  அமைப்புகள் இணைந்து இந்த வரைபடத் தொகுப்பை உருவாக்கின.


2. வரைபடத் தொகுப்பின்படி, 1975-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் பதிவு செய்யப்படாத 22 இனங்களைத் தவிர்த்து, “டெல்லி பறவைகள் பட்டியல் தற்போது 471 இனங்களைக் கொண்டுள்ளது.


3. ஆரவல்லி மலைத்தொடரின் வடக்கு விளிம்புப் பகுதியில், மேற்கு இமயமலைக்கு  அருகில் இடம் பெற்று இருப்பது, யமுனா மற்றும் சாஹிபி வெள்ளச் சமவெளிகள் மற்றும் ஆர்க்டிக்கிலிருந்து இந்தியப் பெருங்கடல் வரை நீண்டுள்ள ஒரு முக்கியப் பறவைகள் வலசைப் பாதையான மத்திய ஆசியப் பறவைப் பாதைக்கு (Central Asian Flyway (CAF)) அருகே அமைந்திருப்பது, இந்நகரின் தனித்துவமான புவியியல் சூழலே, இங்குள்ள பறவை இனங்களின் பன்முகத்தன்மைக்கு முதன்மைக் காரணமாக இருக்கலாம் என்று வரைபடத் தொகுப்பு குறிப்பிடுகிறது.


4. இந்த வரைபடத் தொகுப்பு  தனது மாதிரி வடிவமைப்பில் டெல்லியின் பரப்பளவில் 11 சதவீதத்தை  கொண்டுள்ளது. ஜனவரி 2025-ல் தொடங்கப்பட்ட இந்தக் கணக்கெடுப்பு, குளிர்காலம் மற்றும் கோடைக்காலம் போன்ற ஆண்டுக்கு இருமுறை மேற்கொள்ளப்பட்டு, குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடைபெறும்.


5. முதல் ஆண்டில், நகரம் முழுவதும் 221 இனங்கள் பதிவு செய்யப்பட்டன; இதில் குளிர்காலத்தில் 200 இனங்களும், கோடையில் 152 இனங்களும் அடங்கும். இவற்றில், 126 இனங்கள் உள்ளூர் பகுதிகளில் நிரந்தரமாக வாழும் இனங்களாகவும், 81 இனங்கள் குளிர்கால வலசைப் பறவைகளாகவும், 14 இனங்கள் கோடைகால வலசைப் பறவைகளாகவும் இருந்தன. பதிவு செய்யப்பட்ட பறவைக் கூட்டத்தில் ஏறக்குறைய பாதி, 108 இனங்கள் அல்லது 48.87 சதவீதம், முதுகெலும்பற்ற உயிரினங்களை உண்ணும் பறவைகளாக இருந்தன. தாவரம் மற்றும் விதைகளை உண்பவை 37 இனங்களையும், அனைத்துண்ணிகள் (omnivores) 34 இனங்களையும், முதுகெலும்புள்ள உயிரினங்கள் மற்றும் அழுகிய உடல்களை உண்பவை 33 இனங்களையும், பழம் மற்றும் பூந்தேனை உண்பவை ஒன்பது இனங்களையும் கொண்டிருந்தன.


6. இந்த வரைபடத் தொகுப்பு, மேலும் 18 உள்ளூர்-பூர்வ (எண்டெமிக்) பறவை இனங்களையும் பதிவு செய்கிறது; அதாவது, ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் மட்டுமே காணப்படும் இனங்கள். மேலும், இது பல பாதிக்கப்படக்கூடிய பறவை இனங்களையும் பட்டியலிடுகிறது. அவற்றில், ஆபத்தான நிலையில் உள்ள (Endangered) எகிப்திய கழுகு (Egyptian Vulture) மற்றும் கருப்பு வயிற்று ஆற்றுப் புறா (Black-bellied Tern), பாதிக்கப்படக்கூடிய (Vulnerable) ஆற்றுப் புறா (River Tern) மற்றும் பொதுவான போச்சார்ட் வாத்து (Common Pochard), மேலும் அச்சுறுத்தலுக்கு நெருக்கமான (Near Threatened) கருப்பு வால் கோட்விட் (Black-tailed Godwit), பெருஞ்சிவப்பு வாத்து (Ferruginous Duck), வர்ண நாரை (Painted Stork), கருந்தலை ஐபிஸ் (Black-headed Ibis) மற்றும் கிழக்கு டார்டர் (Oriental Darter) ஆகிய இனங்களை பட்டியலிடுகிறது.




7. இந்த வரைபடத் தொகுப்புடன் தொடர்புடைய வல்லுநர்கள், டெல்லியின் பறவைப் பன்முகத்தன்மைக்கு, டெல்லி ஒரு சூழலியல் சந்திப்பில் அமைந்துள்ளதே காரணம் என்று கூறுகின்றனர்: ரிட்ஜ் மலைத்தொடர் ஆரவல்லி நிலப்பரப்பைத் தலைநகருக்குள் கொண்டுவருகிறது. அதே நேரத்தில், யமுனை நதிப்படுகை மற்றும் அதனுடன் தொடர்புடைய சதுப்பு நிலங்கள், நீர்ப்பறவைகளுக்கும் வலசைப் பறவைகளுக்கும் புகலிடம் அளிக்கின்றன.


8. அதே சமயம், மேற்கு இமயமலைக்கு அருகில் இருக்கும் நகரம் அமைந்திருப்பது பருவகால இடப்பெயர்வுக்கு வழிவகுக்கிறது. டெல்லியை வரைபடத் தொகுப்பு குறிப்பிடுகிறது. மத்திய ஆசிய பறவைகள் வலசைப் பாதையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால், இது "மத்திய ஆசியா மற்றும் ஆர்க்டிக் போன்ற தொலைதூரப் பகுதிகளிலிருந்து வரும் உயிரினங்களுக்கு ஒரு பருவகால புகலிடமாக" அமைகிறது.


9. இதற்கிடையில், இந்த வரைபடத் தொகுப்பு , டெல்லியை “வரலாறு, புவியியல் மற்றும் பல்லுயிர் வளத்தின் சங்கமப் புள்ளி” என்று விவரிக்கிறது. உலகின் மிக அதிக மக்கள்தொகைக் கொண்ட நகரப் பகுதிகளில் ஒன்றாக இருந்தாலும், டெல்லியில் இத்தகைய பன்முக உயிரியல் மற்றும் இயற்கை வளங்கள் இன்னும் நிலைத்திருப்பதாக அது குறிப்பிடுகிறது. மேலும், "டெல்லிப்பகுதியைத் பாதுகாக்கும் பசுமையான மற்றும் நீல நிறப் பகுதிகளைப்" பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது. குறிப்பாக, யமுனை ஆற்றின் தாழ்வான நிலப்பகுதிகள், பாதுகாப்பு மற்றும் வாழ்விட மறுசீரமைப்பிற்கான ஒரு முக்கிய சூழல் மண்டலமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

முதல் புல்வெளிப் பறவைகள் கணக்கெடுப்பு


1. கடந்த ஆண்டு மே மாதம், கசிரங்கா தேசியப் பூங்காவில் உள்ள புல்வெளிப் பறவைகளின் எண்ணிக்கையைப் பதிவு செய்வதற்காக, வனத்துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் இயற்கை பாதுகாவலர்களை கொண்ட குழு ஒன்று ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டது. அதன் பின்னர், “முதல் புல்வெளி பறவைகள் கணக்கெடுப்பு அசாமின் கசிரங்கா தேசியப் பூங்காவில் நடத்தப்பட்டது.



2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature (IUCN)) சிவப்புப் பட்டியலின்படி, புல்வெளிப் பறவைகள் கணக்கெடுப்பில் மொத்தம் 43 புல்வெளிப் பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், அதிகரித்து வரும் நிலையில் உள்ள 1 இனமும், அதிகரித்து வரும் நிலையில் உள்ள 2 இனங்களும், பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள 6 இனங்களும் அடங்கும்.


காசிரங்கா தேசியப் பூங்கா ஏன் புகழ் பெற்றது?


42,996 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட கசிரங்கா தேசியப் பூங்கா, அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கின் வெள்ளச் சமவெளியில் உள்ள, சிக்கல் இல்லாத மற்றும் பிரதிநிதித்துவமான மிகப்பெரிய பகுதியாகும். இது 1985-ல் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உலக பாரம்பரிய தளமாகும். இது இங்குள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்காகப் புகழ்பெற்றது. கசிரங்கா தேசியப் பூங்கா, 446 பட்டாம்பூச்சி இனங்களுடன் இந்தியாவின் 2-வது பெரிய பட்டாம்பூச்சி வாழ்விடமாகத் திகழ்கிறது.


3. கணக்கெடுப்பில் ஒரு புதிய வழிமுறை பயன்படுத்தப்பட்டது. கசிரங்கா தேசியப் பூங்கா இயக்குநர் டாக்டர் சோனாலி கோஷின் கூற்றுப்படி, இதன் செயலற்ற ஒலிப்பதிவு அடிப்படையிலான கண்காணிப்பு முறை பயன்படுத்தப்பட்டதே இந்தக் கணக்கெடுப்பின் முக்கிய சிறப்பம்சமாகும்.


4. உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளான அல்லது பிரம்மபுத்திரா வெள்ளச் சமவெளிகளுக்கு மட்டுமே உரிய 10 உயிரினங்களுக்கு இந்தக் கணக்கெடுப்பு முன்னுரிமை அளித்தது:


இனங்கள்

அறிவியல் பெயர்

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க சிவப்புப் பட்டியல் நிலை

வங்காள அரிவாள்மூக்குக் கொக்கு

ஹௌபரோப்சிஸ் பெங்காலென்சிஸ்

அதிக ஆபத்தான நிலை

சதுப்பு நில பிராங்கோலின்

ஆர்டிகோர்னிஸ் குலாரிஸ்

அச்சுறுத்தலுக்கு அருகிலுள்ள நிலை

இந்திய புல் பறவை

கிராமினிகோலா பெங்காலென்சிஸ்

அச்சுறுத்தலுக்கு அருகிலுள்ள நிலை

பின் தூக்கணாங்குருவி

ப்ளோசியஸ் மெகர்ஹிஞ்சஸ்

ஆபத்தான நிலை

சதுப்பு நிலப் புல் பாப்லர்

லாடிசில்லா சினராசென்ஸ்

ஆபத்தான நிலை

ஜெர்டனின் பாப்லர்

கிரிசோமா ஆல்டிரோஸ்ட்ரிஸ்

பாதிக்கப்படக்கூடிய நிலை

மெல்லிய அலகு பாப்லர்

ஆர்க்யா லாங்கிரோஸ்ட்ரிஸ்

பாதிக்கப்படக்கூடிய நிலை

கருப்பு-மார்பு கிளிமூக்குக் குருவி

பாரடாக்ஸோர்னிஸ் ஃபிளாவிரோஸ்ட்ரிஸ்

பாதிக்கப்படக்கூடிய நிலை

மார்ஷ் பாப்லர்

பெல்லோர்னியம் சதுப்பு நிலம்

பாதிக்கப்படக்கூடிய நிலை

முள்முடிப் புல்சிட்டு

ஸ்கோனிகோலா ஸ்ட்ரியேட்டஸ்

பாதிக்கப்படக்கூடிய நிலை


5. பிரம்மபுத்திரா வெள்ளப்பரப்பிற்கு மட்டுமே சொந்தமான, அழிவின் அபாயத்தில் உள்ள பின் தூக்கணாங்குருவி (Finn’s Weaver) பறவையின் இனப்பெருக்கக் கூட்டத்தை கண்டறியப்பட்டுள்ளதால், தேசியப் பூங்கா அதிகாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Original article : What makes Delhi one of the world’s most bird-diverse capitals? -Roshni Yadav

Share:

தொகுதி மறுவரையறைக்காக இடங்களை இலக்கு சார்ந்த முறையில் பிரிக்குமாறு EAC-PM பரிந்துரைத்துள்ளது. அனைத்துப் பெரிய மாநிலங்களிலும் இடங்களின் எண்ணிக்கையை 50% உயர்த்த அனுமதிக்கும் மாதிரியை இது முன்வைக்கிறது. - வர்கீஸ் கே. ஜார்ஜ், அபினய் லக்ஷ்மண்

 

EAC-PM : Economic Advisory Council to the Prime Minister - பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு


வாக்காளர் பங்கேற்பு, தொகுதியின் அளவு மற்றும் ஒவ்வொரு தொகுதியின் ஐந்து முக்கியக் கட்டமைப்பு அம்சங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான 'புள்ளிவிவரத் தொடர்பை' (statistical relationship) மதிப்பிடுவதற்காக, 2009 முதல் 2024 வரையிலான மக்களவைத் தேர்தல் தரவுகளைத் தொகுத்ததாக ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. இந்த மாதிரியின் அடிப்படையில், மக்களவை இடங்களின் எண்ணிக்கை 824-ஆக அதிகரிக்கிறது. இது, கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களைக் (Delimitation-related Bills)  கொண்டுவந்து, அவற்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத் தவறியபோது முன்மொழிந்த திட்டத்துடன் இந்த மதிப்பீடு பெருமளவில் ஒத்துப்போகிறது.


மக்கள்தொகை பரவலை மட்டும் கணக்கில் கொள்ளாமல், மறுபகிர்வு செய்வதற்குப் பல காரணிகளைக் கொண்ட அளவுகோல்களின் அடிப்படையில், இந்தியாவின் அடுத்தகட்ட நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையின்போது,  தொகுதிக்கான இடங்களை "குறிப்பிட்ட இலக்குகளின் அடிப்படையில்" (targeted) பிரிக்குமாறு பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. அதேவேளையில், அனைத்து பெரிய மாநிலங்களுக்கும் தற்போது கொண்டுள்ள மக்களவை இடங்களின் எண்ணிக்கையை இது மாற்றமின்றி அப்படியே தக்கவைக்கிறது.



இந்த அளவுகோல்களின் அடிப்படையில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) உருவாக்கிய மாதிரியின்படி, உதாரணமாக, கேரளாவின் மக்களவை இடங்கள் 20-லிருந்து 30-ஆகவும், தமிழ்நாட்டின் இடங்கள் 39-லிருந்து 59-ஆகவும், உத்தரப் பிரதேசத்தின் இடங்கள் 80-லிருந்து 120-ஆகவும் உயர்கின்றன. இந்த மதிப்பீடுகள், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களை (Delimitation-related Bills) மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தியபோது முன்வைத்த திட்டத்துடன் பெருமளவில் ஒத்திருக்கின்றன.


பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (EAC-PM) மாதிரியில் இந்த அளவுகோல்களைப் பயன்படுத்தியதன் மூலம், மிசோரம், புதுச்சேரி, சிக்கிம், லடாக், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், நாகாலாந்து, சண்டிகர் மற்றும் லட்சத்தீவு போன்ற சிறிய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் மக்களவை இடங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றும் தெரியவந்துள்ளது.


தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், மொத்தம் 170 தொகுதிகளைப் பிரிக்குமாறு பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (EAC-PM) மாதிரி பரிந்துரைக்கிறது. இவற்றில், 59 தொகுதிகளை இரண்டு பகுதிகளாகவும், மற்ற 111 தொகுதிகளை மூன்று பகுதிகளாகவும் பிரிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


800-க்கும் மேற்பட்ட இடங்களைக் கொண்ட மக்களவை


இந்த மாதிரியின்படி, மக்களவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கை 824-ஆக உயரும். இந்தக் குழுவின் (Council) கணிப்பின்படி, தென்னிந்திய மாநிலங்களின் (தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு) மக்களவை இடங்களின் மொத்தப் பங்கு தற்போதுள்ள 23.7%-லிருந்து 23.6%-ஆக மாறும். அதேவேளையில், அதிக மக்கள்தொகை கொண்ட ஆறு வட மாநிலங்களின் (ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், பீகார் மற்றும் மகாராஷ்டிரா) பங்கு, தற்போதுள்ள 45.6%-லிருந்து 45.2%-ஆக அமையும் என்று இந்தக் குழு மாதிரி (model) தெரிவிக்கிறது.



மாநிலங்களுக்கிடையிலான தற்போதைய தொகுதி இடப்பகிர்வு 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஏற்பாடு 1976-ல் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் முடக்கப்பட்டது (மாற்றப்படாமல் அப்படியே வைக்கப்பட்டது).


அடுத்த தொகுதி மறுவரையறை நடவடிக்கை மிக முக்கியமானது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) குறிப்பிடுகிறது. ஏனெனில், 1971-க்குப் பிறகு மாநில வாரியான இடங்களின் எண்ணிக்கையை மாற்றுவதற்கு இதுவே முதல் வாய்ப்பாக அமையும். இருப்பினும், மாநிலங்களுக்கான இடங்களின் தற்போதைய விகிதாச்சாரத்தை பெரும்பாலும் அப்படியே தக்கவைப்பதற்கான கொள்கை குறித்து இந்தக் குழு விரிவாகக் கருத்து தெரிவிக்கவில்லை. மாறாக, மாநில வாரியான இடங்களின் எண்ணிக்கையை 50% வரை அதிகரிக்கும் அம்சத்தை "மதிக்கும்" வகையிலேயே தங்கள் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளதாக மட்டுமே அது கூறுகிறது.


பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) உறுப்பினரான ஷாமிகா ரவி மற்றும் இந்தியப் புள்ளிவிவர நிறுவனத்தைச் (Indian Statistical Institute) சேர்ந்த முதித் கபூர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்த ஆய்வறிக்கை, பின்வரும் கேள்விகளுக்கு விடை காண்பதே தங்கள் முக்கிய நோக்கம் என்று கூறுகிறது. அவை, "எந்தெந்தத் தொகுதிகள் பிரிக்கப்பட வேண்டும்?, அவை எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும்? மற்றும் எந்த அளவுகோலின் அடிப்படையில் அவை பிரிக்கப்பட வேண்டும்?" என்பனவாகும்.


இதன் ஒரு பகுதியாக, 2009 முதல் 2024 வரையிலான மக்களவைத்  தேர்தல்களுக்கான தரவுத்தொகுப்புகளைக் கொண்டு, வாக்காளர் பங்கேற்பு, தொகுதிகளின் அளவீடு மற்றும் தொகுதியின் ஐந்து முக்கியக் கூறுகள் (நகர்ப்புற மக்கள்தொகை விகிதம், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் பங்கு, மொழிசார்ந்த முக்கியத்துவம் மற்றும் மொழிசார் பன்முகத்தன்மை) ஆகியவற்றுக்கு இடையேயான "புள்ளிவிவரரீதியான தொடர்பை" மதிப்பிட்டதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) தெரிவித்துள்ளது.



இந்த மதிப்பீடு செய்யப்பட்ட புள்ளிவிவரத் தொடர்பைப் பயன்படுத்தி, "மிகப்பெரிய மற்றும் வாக்காளர் பங்கேற்பு விகிதத்தில் அதிக மாற்றங்களை வெளிப்படுத்தும் தொகுதிகளை இரண்டு அல்லது மூன்று பகுதிகளாகப் பிரிப்பதன் மூலம், வாக்காளர் பங்கேற்பை அதிகபட்சமாக்கும் தொகுதி மறுவரையறைத் திட்டம்" ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.


தொகுதிகளைப் பிரிப்பதற்கான அளவுகோல்கள்


இந்த ஆய்வறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், தொகுதிகளைப் பிரிப்பதற்கு "ஒரே மாதிரியான அளவுகோலுக்கு" (uniform criterion) பதிலாக "குறிப்பிட்ட இலக்கு சார்ந்த அளவுகோலை" (targeted criterion) பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) பரிந்துரைக்கிறது. மேலும், "2027-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு அமைக்கப்படவுள்ள தொகுதி மறுவரையறை ஆணையம் (Delimitation Commission), தொகுதிகளைப் பிரிப்பதற்குத் தொகுதி அளவை மட்டுமே அடிப்படையாகக் கருதாமல், அந்தத் தொகுதியின் மக்கள்தொகை மற்றும் மொழிசார் அம்சங்களின் கூட்டுப் பின்னணியைக் கருத்தில் கொள்ள வேண்டும்" என்றும் அது வலியுறுத்துகிறது.


அடுத்தகட்ட தொகுதி மறுவரையறைப் பணியை, "வாக்குச்சாவடிகளைச் சீரமைக்கும் புதிய நடைமுறையுடன்" (fresh booth rationalising cycle) இணைந்து மேற்கொள்ளுமாறு இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் புள்ளியியல் அமைச்சகத்திற்கு அக்குழு பரிந்துரைத்தது. அத்துடன், "2027 மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவுகள் மற்றும் பாலின வாரியான வாக்காளர் புள்ளிவிவரங்கள்" ஆகியவை திட்டமிட்டபடி வெளியிடப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.


தொகுதிகள் பிரிக்கப்பட்ட பிறகும் நகர்ப்புறங்களில் பெண்களின் வாக்காளர் பங்கேற்பு விகிதத்தில் ஒரு இடைவெளி நீடித்திருப்பதை அந்த ஆய்வறிக்கையின் மாதிரி கணக்கீடுகள் (model calculations) காட்டுவதாக அது மேலும் குறிப்பிட்டது. எனவே, பெண்களுக்கென பிரத்யேக வாக்குச்சாவடிகளை அமைத்தல், நகர்ப்புறங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஏற்ற வகையில் மாலை நேரங்களில் வாக்களிக்க வாய்ப்பளித்தல், வாக்குச்சாவடிகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பெண்களைக் குறிவைத்து வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கும் சிறப்பு முகாம்களை நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கிய வகையில் தொகுதி மறுவரையறையைத் திட்டமிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு அது பரிந்துரைத்தது.


6 முக்கியக் கண்டுபிடிப்புகள்


தங்கள் ஆய்வறிக்கை மற்றும் கொள்கை விளக்கக் குறிப்பில், ரவி மற்றும் கபூர் ஆகியோர் தங்கள் மறுஆய்வை ஆறு முக்கியக் கண்டுபிடிப்புகளாகப் பகுத்து விளக்கியுள்ளனர். இவை, பல்வேறு காரணிகளுக்கும் தொகுதி வாரியான வாக்காளர் பங்கேற்புக்கும் இடையிலான தொடர்பை விவரிக்கின்றன. ஒரு முக்கியக் கண்டுபிடிப்பாக, அவர்கள் முன்மொழிந்த மாதிரியானது, அடுத்த பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் வாக்காளர் பங்கேற்பு விகிதத்தில் ஒட்டுமொத்தமாக 2.3 சதவீதப் புள்ளிகள் வரை அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும், வாக்காளர் பங்கேற்பில் ஏற்படும் மாற்றம் என்பது எந்தப் புள்ளிவிவர மாதிரியைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே அமையும் என்று அவர்கள்ள் ஒரு நிபந்தனையுடன் இதைக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், வாக்காளர் தொகுதியின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பு மாறாமல் அதன் அளவு குறைக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதை ஆராயும் வகையிலேயே இந்த மாதிரி வடிவமைக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்தனர்.


2009 மற்றும் 2024-க்கு இடைப்பட்ட காலத்தில், மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய தொகுதிகளுக்கும் இடையிலான வாக்காளர் பங்கேற்பு விகித வேறுபாடு பாதியாகக் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. "2024-ல் பெரிய தொகுதிகளை விடச் சிறிய தொகுதிகளில் வாக்காளர் பங்கேற்பு அதிகமாக இருப்பதற்கு, அவை சிறியதாக இருப்பது மட்டுமே காரணமல்ல. மாறாக, அதிகப் பழங்குடியினர் (ST) எண்ணிக்கை, குறைந்த நகர்ப்புற மக்கள்தொகை மற்றும் மிதமான மொழிசார்ந்த முக்கியத்துவம் போன்ற வாக்காளர் பங்கேற்புக்குச் சாதகமான சமூகக் கட்டமைப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதே அதற்குக் காரணமாகும்" என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.




மேலும், ஒரு தொகுதியின் ஐந்து "கட்டமைப்பு அம்சங்கள்" (compositional features) மற்றும் அவற்றுக்கும் தொகுதியின் அளவு மற்றும் வாக்காளர் பங்கேற்புக்கும் இடையிலான தொடர்புகளை ஆராய்ந்ததில், காலப்போக்கில் இவை ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகவோ இல்லை என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது. அதோடு, பெண்களின் வாக்களிப்பு விகிதத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான கட்டமைப்புப் பண்பு, நகர்ப்புற வாக்காளர்களின் விகிதமே என்பதையும் இந்த ஆய்வு கண்டறிந்தது. "இன்று, தொகுதி அளவைப் பொருட்படுத்தாமல், முழுமையான நகர்ப்புறத் தொகுதிகளில் வசிக்கும் பெண்கள், கிராமப்புறத் தொகுதிகளில் வசிக்கும் பெண்களைவிட சுமார் 5 சதவீதப் புள்ளிகள் குறைவான விகிதத்திலேயே வாக்களிக்கின்றனர் என்று அது குறிப்பிட்டது. அதேவேளையில், ஆண்களைப் பொறுத்தவரை இந்த இடைவெளி சுமார் 2 சதவீதப் புள்ளிகளாகவே உள்ளது."


தங்கள் ஆய்வு மற்றும் முடிவுகள் குறித்த பிற குறிப்புகளில், இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்ட மக்கள்தொகை மற்றும் மொழிசார் தரவுகள் 2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டவை என்றும், எதிர்காலத்தில் மிகவும் நம்பகமான மறுமதிப்பீட்டிற்கு 2027-ம் ஆண்டு கணக்கெடுப்புத் தரவுகளைக் கொண்டு இவை புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) தெரிவித்துள்ளது.


Original article : EAC-PM recommends targeted splitting of seats for delimitation, shows model allowing 50% rise for all large States. -Varghese K. George, Abhinay Lakshman

Share: