2026-ம் ஆண்டின் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த (Foreign Contribution (Regulation) Amendment Bill) மசோதாவானது, சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரங்கள் இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் சார்ந்திருக்கும் நல சேவைகளைச் சீர்குலைக்கக் கூடும் என்ற கவலைகளை எழுப்புகிறது.
2026 மார்ச் 25 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட, வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா-2026 (Foreign Contribution (Regulation) Amendment Bill), ஒரு வழக்கமான ஒழுங்குமுறை நடவடிக்கை மட்டுமல்ல. இது அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையாக இது முன்வைக்கப்பட்டாலும், இது நிர்வாக அதிகாரத்தை கணிசமாக அதிகரிக்கிறது. வெளிநாட்டு நிதியுதவியை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டமாக முன்வைத்த, வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தை (FCRA), அரசு சாரா நிறுவனங்கள் (NGOs), அறக்கட்டளைகள் மற்றும் கல்வி, மத நிறுவனங்கள் மீது அரசின் விரிவான கட்டுப்பாட்டை அனுமதிக்கும் சட்டமாக இது மாற்றுகிறது.
கண்காணிப்பிலிருந்து வரம்பு மீறிய அதிகாரம் வரை
ஏற்கனவே நடைமுறையில் இருந்த வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) நடைமுறை, எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் சிவில் சமூகத்தை ஒழுங்குபடுத்தும் மிகக் கடுமையான அமைப்புகளில் ஒன்றாக இருந்தது. 2020-ம் ஆண்டின் திருத்தங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன. இதில், அனைத்து வெளிநாட்டு நிதிப் பங்களிப்புகளும் புதுதில்லியில் உள்ள ஒரே ஒரு வங்கிக் கிளை (பாரத ஸ்டேட் வங்கி) வழியாகவே செல்ல வேண்டும் என்று கட்டாயமாக்குதல், நிர்வாகச் செலவின வரம்புகளை 50%-இலிருந்து 20%-ஆகக் குறைத்தல், சிறிய அமைப்புகளுக்கு நிதியை மறு-மானியமாக (sub-granting) வழங்குவதைத் தடை செய்தல் மற்றும் அமைப்புகளை இடைநீக்கம் செய்யும் அதிகாரங்களை விரிவுபடுத்துதல் ஆகியவை இவற்றில் அடங்கும். இந்த நடவடிக்கைகள் மட்டுமே ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை, குறிப்பாக விளிம்புநிலைக் குழுக்களுக்குச் (marginalised communities) சேவை செய்யும் சிறிய மதச்சார்புடைய மற்றும் தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.
2026-ம் ஆண்டு மசோதா இன்னும் ஒரு படிநிலைகள் முன்னே செல்கிறது. இது ஒரு புதிய அத்தியாயம் IIIA-ஐ அறிமுகப்படுத்தி (முந்தைய பிரிவு 15-ஐ நீக்கி), தற்போதுள்ள சொத்து மேலாண்மை விதிகளை மாற்றுவதன் மூலம், இழப்பீடு அல்லது நிர்வாக உரிமைகளை வழங்காமல் நிறுவனங்களின் சொத்துக்களையும் உடைமைகளையும் தடையின்றி அரசுக்கு வழங்குவதற்கான ஒரு கட்டமைப்பை இது உருவாக்குகிறது. இதில் மிகவும் கவலைக்குரிய அம்சம், முன்மொழியப்பட்ட பிரிவு 14B ஆகும். இந்தப் பரிவு வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டப் (FCRA) பதிவின் தானியங்கி "நிறுத்தத்தை" அறிமுகப்படுத்துகிறது. ஒரு நிறுவனத்தின் புதுப்பித்தல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும், சரியான நேரத்தில் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கத் தவறினாலும், ஒரு புதுப்பித்தல் விண்ணப்பம் நிலுவையில் இருந்தாலும்கூட, அந்த நிறுவனம் தனது பதிவை இழக்க நேரிடலாம். இதன் பொருள், நிரூபிக்கப்பட்ட முறைகேடுகளுக்குப் பதிலாக, நடைமுறைத் தாமதங்கள் மூலம் நிறுவனங்களை முடக்கி, உரிய சட்ட நடைமுறையை பலவீனப்படுத்தி, நிர்வாகத்தின் தன்னிச்சையான அதிகாரத்தை அதிகரிக்கிறது.
புதிய அத்தியாயம் IIIA-இன் கீழ் உள்ள பிரிவு 16A தான் மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அதன்படி, ஒரு வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டப் (FCRA) பதிவு ரத்து செய்யப்படும்போதோ, ஒப்படைக்கப்படும்போதோ, அல்லது நிறுத்தப்பட்டதாகக் கருதப்படும்போதோ, அனைத்து வெளிநாட்டு நிதிப் பங்களிப்புகளும் மற்றும் அவற்றிலிருந்து பெறப்பட்ட சொத்துக்களும், முன் நீதிமன்ற மறுஆய்வு அல்லது சுதந்திரமான தீர்ப்பு இல்லாமலேயே, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு அதிகார அமைப்பிடம் தானாகவே "தற்காலிகமாக ஒப்படைக்கப்படும்". இதன் பொருள், ஒரு எளிய நிர்வாக முடிவு, நிறுவனங்களின் நிதி மற்றும் சொத்துக்கள் மீதான கட்டுப்பாட்டைப் பறித்துவிடும் என்பதாகும்.
பிரிவு-14-ன் கீழ் ரத்துசெய்தல் என்பது “பொது நலன்” போன்ற பரந்த மற்றும் அகநிலை சார்ந்த காரணங்களின் அடிப்படையில் அமையக்கூடும் என்பதால், சிறிய, நடைமுறை சார்ந்த அல்லது சர்ச்சைக்குரிய விதிமீறல்களுக்காகக் கூட நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களின் மீதான கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் உள்ளது. பிரிவு 14-ன் கீழ் இரத்துசெய்வது, பிரிவு 16A-ன் பயன்பாட்டைத் தூண்டுவதால், நடைமுறை சார்ந்த, சிறிய அல்லது சர்ச்சைக்குரிய விதிமீறல்களுக்காகக் கூட நிறுவனங்கள் சொத்துக்களை இழக்கும் அபாயம் உள்ளது. பின்னர், நியமிக்கப்பட்ட அதிகார அமைப்பானது இந்தச் சொத்துக்களை நிர்வகிக்க, மாற்ற அல்லது அப்புறப்படுத்த அதிகாரம் பெறும். மேலும், விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் இந்திய ஒருங்கிணைந்த நிதிக்கு வரவு வைக்கப்படும்.
இந்த விதிமுறை குறிப்பாக விரிவானது. ஏனெனில், இது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிதியளிக்கப்பட்ட சொத்துக்களை உள்ளடக்கி, பல பத்தாண்டுகளாகக் கட்டப்பட்ட பள்ளிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், மத நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தேவாலயங்கள், மசூதிகள், கோயில்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களை அரசாங்கக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரக்கூடும்.
நியமிக்கப்பட்ட அதிகார அமைப்புக்குள் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அசாதாரணமானவை. அது சொத்துக்களைக் கட்டுப்பாட்டில் எடுக்கவும், நிறுவனங்களை நிர்வகிக்கவும், நிதிகளை மேற்பார்வையிடவும் மற்றும் தெளிவற்ற முறையில் வரையறுக்கப்பட்ட "பொது நலன்" என்ற அடிப்படையில் செயல்பாடுகளை மாற்றியமைக்கவும் முடியும். இது நிர்வாகத்திற்கு பரந்த அளவிலான தன்னிச்சையான அதிகாரத்தை வழங்குகிறது. ஒரு நிறுவனம், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தனது பதிவை மீட்டெடுக்கவோ அல்லது மறுபதிவு செய்யவோ தவறினால், அந்த அதிகாரம் நிரந்தரமாகிவிடும். அதன் பிறகு, அந்த அதிகார அமைப்பு சொத்துக்களை மாற்றவோ அல்லது விற்கவோ செய்யலாம். அதன் மூலம் கிடைக்கும் வருமானம் இந்திய ஒருங்கிணைந்த நிதியில் (Consolidated Fund of India) வரவு வைக்கப்படும். இது சட்டப்பூர்வ செயல்முறைகள் மூலம் நிர்வாகம் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வழிவகுக்கிறது.
இது நிறுவனங்களின் இருப்பிற்கு மட்டுமல்லாமல், சமூகங்கள் சார்ந்திருக்கும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டச் (FCRA) சொத்துக்களில் நிலம், கட்டிடங்கள், வாகனங்கள், உபகரணங்கள் மற்றும் செலவிடப்படாத நிதிகள் ஆகியவை அடங்கும். இதன் விளைவாக, நிறுவனங்கள் திறம்பட மூடப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுவதற்கான உண்மையான சாத்தியக்கூறு உள்ளது.
வெளிநாட்டு நிதிப் பங்களிப்பாளர்கள், விளிம்புநிலை சமூகங்களுக்கு உதவுவதற்கும், கல்வியை மேம்படுத்துவதற்கும், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் மற்றும் பிற பொதுநல இலக்குகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் இந்தியத் தொண்டு நிறுவனங்களுக்கு முக்கியமாக ஆதரவளிக்கின்றனர். இந்தப் பங்களிப்புகள், நிறுவனங்கள் உறுதியான சமூகப் பலன்களை வழங்குவதற்கு உதவுகின்றன.
பலவீனமான அல்லது சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அத்தகைய நிதிகளைப் பறிமுதல் செய்து ஒருங்கிணைந்த நிதிக்கு மாற்றுவது, இந்த நிதிப் பங்களிப்புகள் வழங்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்கிறது. எனவே, புதிய விதிகள் இந்திய நிறுவனங்களை அரசின் பறிமுதல் என்ற தொடர்ச்சியான அபாயத்திற்கு உள்ளாக்குகின்றன. இது பங்களிப்பாகப் பெறப்பட்ட நிதிகளையும், அந்த நிதிகளால் உருவாக்கப்பட்ட அல்லது ஆதரிக்கப்பட்ட சொத்துக்களையும் அபாயத்தில் ஆழ்த்துகிறது.
இந்தக் கட்டமைப்பு, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட “நியமிக்கப்பட்ட அதிகார அமைப்பிடம்” (Designated Authority) சொத்துக்களை “தற்காலிகமாக ஒப்படைப்பதற்கும்” “நிரந்தரமாக ஒப்படைப்பதற்கும்” விரிவான நடைமுறைகளையும் அறிமுகப்படுத்துகிறது.
இந்தத் திருத்தங்கள், இடைநீக்கம் மற்றும் விசாரணைக் காலங்களில் நிர்வாகக் கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்துகின்றன. திருத்தப்பட்ட பிரிவு-13, நிறுவனங்கள் முன் அனுமதி பெறாமல் இடைநீக்கக் காலத்தில் தங்கள் சொத்துக்களை நிர்வகிப்பதைத் தடை செய்கிறது. அவற்றின் செயல்பாடுகளைத் திறம்பட முடக்குகிறது. திருத்தப்பட்ட பிரிவு 43, வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) விதிமீறல்களை எந்தவொரு மாநில நிறுவனமும் விசாரிப்பதற்கு முன்பு மத்திய அரசின் ஒப்புதல் தேவை என்று கோருவதன் மூலம் அமலாக்கத்தை மையப்படுத்துகிறது. கூடுதலாக, "முக்கியப் பொறுப்பாளர்கள்" என்பதற்கான விரிவான வரையறைகள் மற்றும் பதவியில் இருப்பவர்களுக்கான அதிகரித்த தனிப்பட்ட பொறுப்பு ஆகியவற்றுடன் இணைந்த இந்த மசோதா, குடிமைச் சமூகப் பங்கேற்பைத் தடுக்கக்கூடிய ஒரு அச்சச் சூழலை உருவாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட பொறுப்புணர்வு
2026-ம் ஆண்டு மசோதாவானது, தற்போது செயலிழந்த அல்லது இயங்காத நிறுவனங்களின் சொத்துக்களைக் கையாள்வது தொடர்பான பிரிவு 22-ஐ ரத்து செய்யப் பரிந்துரைக்கிறது. மேலும், இந்தச் சட்டத்தில் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) உரிமங்கள், அனுமதிகள், பதிவுகள் மற்றும் புதுப்பித்தல்களை அங்கீகரிப்பதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ தெளிவான காலக்கெடு இல்லாததால், நிச்சயமற்ற தன்மையும் தாமதங்களும் ஏற்படுகின்றன. இது வெளிநாட்டு நிதியைச் சார்ந்திருக்கும் திட்டங்களைத் தடுப்பதோடு,, விளிம்புநிலைச் சமூகங்களை அதிக அளவில் பாதிக்கக்கூடும்.
பெரும்பாலும், தேசியப் பாதுகாப்பு காரணங்களுக்காக உரிமம் ரத்து செய்யப்படுவதற்கான காரணங்கள் பொதுவெளியில் வெளியிடப்படுவதில்லை. இதன் விளைவாக, நிறுவனங்கள் இத்தகைய முடிவுகளை எதிர்த்துப் போராடுவது கடினமாகிறது. நடைமுறைச் சார்ந்த குறைபாடுகள் காரணமாகவும் உரிமங்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது இடைநிறுத்தப்படலாம். இது, சமூகங்களுக்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் மூடப்படுவதற்கு வழிவகுக்கலாம்.
சிறுபான்மை சமூகங்கள், குறிப்பாக கிறிஸ்தவர்கள் மீதான தாக்கம் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. கிறிஸ்தவ அமைப்புகள் ஆயிரக்கணக்கான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், பழங்குடியினர் நல அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகளை நடத்துகின்றன. இவற்றில் பல, தேவாலயங்கள், புலம்பெயர் குழுக்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புகளிடமிருந்து தொடர்ச்சியான நிதியுதவியைப் பெறுகின்றன. கேரளா, தமிழ்நாடு, நாகாலாந்து, மிசோரம் மற்றும் மேகாலயாவில் இதுபோன்ற பல நிறுவனங்கள் உள்ளன. சிறுபான்மையினர் நடத்தும் அறக்கட்டளைகள் பெரும்பாலும் பெரும்பான்மையினருக்கே பயனளிக்கின்றன என்பது ஒரு உண்மையாகும். பிரிவு 16A-இன் கீழ், இவற்றின் பதிவு காலாவதியானாலோ, புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டாலோ, இந்நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அபாயம் உள்ளது. நீண்டகாலமாக இயங்கிவரும் கான்வென்ட் பள்ளிகள், கல்லூரிகள், அறக்கட்டளை மருத்துவமனைகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள் போன்ற நிறுவனங்கள், நடைமுறை விதிகளைப் பின்பற்றாத காரணத்தால் மட்டுமே அரசாங்கக் கட்டுப்பாட்டின்கீழ் வரும் அபாயத்தை எதிர்கொள்கின்றன. ஆனால், அரசாங்கம் ஒன்றன்பின் ஒன்றாக நிறுவனங்களைத் திட்டமிட்டுக் குறிவைக்கிறது என்பதும், 2014 மற்றும் 2026-க்கு இடையில், சுமார் 22,000 வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) உரிமங்கள் எந்தவொரு சரியான அல்லது நம்பகமான காரணங்களும் இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். அரசாங்கம் சிறுபான்மையினரின் சொத்துக்களைக் குறிவைப்பதாகத் தெரிகிறது. ஆனால், உண்மையில் அது பெரும்பான்மையினருக்கே நன்மை அளிக்கிறது என்று கவலையுடன் கூறலாம்.
வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) உரிமங்கள் ரத்து செய்யப்படுவது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் குழந்தைகள் பாதுகாப்பு, தடுப்பூசி செலுத்துதல், பச்சிளம் குழந்தைகள் நலம், ஊட்டச்சத்து, மழலையர் கல்வி, பெற்றோரின் பங்களிப்பு, இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் அரசுத் திட்டங்களுக்கான அணுகல் ஆகியவற்றில் நடைபெற்று வரும் முயற்சிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இத்துறை பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% மற்றும் ரத்து செய்யப்பட்ட உரிமங்களால் ஒவ்வொரு நிறுவனத்திலும் ஏறத்தாழ நான்கு லட்சம் முதல் எட்டு லட்சம் வரையிலான தனிநபர்கள் அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை இழக்க நேரிடுகிறது.
2014-ம் ஆண்டு புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் அறிக்கையின்படி, குடிமைச் சமூக அமைப்புகள் பொதுத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையை விட, 27 லட்சம் வேலைவாய்ப்புகளையும் 34 லட்சம் முழுநேரத் தன்னார்வலர்களையும் உருவாக்குகின்றன. 515 தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் (NGOs) நடத்தப்பட்ட ஒரு தனி கணக்கெடுப்பில், அவற்றில் 47% நிறுவனங்கள் தாங்கள் செயல்படும் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் வேலைவாய்ப்பின் முக்கிய ஆதாரமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தங்கள் நிறுவனங்களின் இருப்பை மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான மக்கள் சார்ந்திருக்கும் உள்கட்டமைப்பு மற்றும் சமூக வளங்களையும் அச்சுறுத்துகின்றன. நிலம், சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் பயன்படுத்தப்படாத நிதிகள் போன்ற சொத்துக்கள் பல நிறுவனங்கள் முழுமையாக மூடப்படுவதற்கு வழிவகுக்கக்கூடும்.
அரசியலமைப்பு உரிமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன
இந்த மசோதா சிவில் சமூகம் மற்றும் சிறுபான்மையினர் சார்ந்த அமைப்புகளுக்குக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள "பொது நலன்" (public interest) என்ற வரையறையானது, சிறுபான்மையினர் உரிமைகள், பழங்குடியினர் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித உரிமைகள் அல்லது மக்கள் நலன்சார்ந்த பணிகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம். இதன் விளைவாக, நிதிப் பங்களிப்பாளர்கள், அறங்காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அத்தகைய அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதைத் தடுத்து, ஒருவித அச்சமூட்டும் தாக்கம் ஏற்படக்கூடும்.
இந்த மசோதா, சட்டப்பிரிவுகள் 14, 19(1)(c), 25, 26, 29, 30 மற்றும் 300A ஆகியவற்றின் கீழ் அரசியலமைப்புரீதியான கவலைகளையும் எழுப்புகிறது. நிர்வாகத் துறைக்கு (அரசுக்கு) விரிவான அதிகாரங்களைக் குவிப்பதன் மூலம், இது சங்கம் அமைப்பதற்கான சுதந்திரம், மத மற்றும் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி உரிமை மற்றும் சொத்துரிமைகளைச் சீர்குலைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
வெளிநாட்டு நிதிப் பங்களிப்புகள் மீதான எந்தவொரு ஒழுங்குமுறையும், முறையான சட்ட நடைமுறைகள், சுதந்திரமான மேற்பார்வை மற்றும் அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்களுடன் இணைந்திருக்க வேண்டும். அத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல், இந்த மசோதா நவீன இந்தியாவில் குடிமைச் சமூகத்தைப் பாதிக்கும் மிகவும் அடக்குமுறைச் சட்டங்களில் ஒன்றாக மாறும் அபாயம் உள்ளது.
பி. வில்சன், நாடாளுமன்ற உறுப்பினராகவும் (மாநிலங்களவை), இந்திய உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார்.
Original article : FCRA Bill — expanding state control over civil society. -P. Wilson