NCERT பாடப்புத்தகங்களில் இருந்து நீதித்துறை ஊழல் குறித்த குறிப்புகளை நீக்குவது, உண்மையான பிரச்சினைக்கு தீர்வாக அமையுமா? -உம்மர் ஜமால்

 நீதித்துறையின் மாண்பைப் பாதுகாப்பதும், கல்வி நிறுவனங்கள் சந்திக்கும் சவால்களைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிப்பதும் ஒன்றிற்கு ஒன்று எதிரான குறிக்கோள்கள் அல்ல. ஒரு முதிர்ச்சியடைந்த ஜனநாயகம் தனது நிறுவனங்கள்மீது மரியாதையையும், அதே நேரத்தில் அவற்றை விமர்சனரீதியாக ஆய்வு செய்யும் துணிச்சலையும் கொண்டிருக்க வேண்டும்.


எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வழக்கமான மாற்றம், எதிர்பாராத விதமாக இந்திய நீதித்துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு  (National Council of Educational Research and Training (NCERT)) வெளியிட்டுள்ள புதிய பாடப்புத்தகத்தில் “நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. இது நீதித்துறையின் செயல்பாடுகள் மற்றும் அது எதிர்கொள்ளும் சவால்களை ஆராய்கிறது. குறிப்பாக, தேங்கிக் கிடக்கும் வழக்குகள், நீதிபதிகளின் பற்றாக்குறை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற சிக்கல்கள் இதில் விவாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு உச்சநீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, இது நீதித்துறையின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சி என்றும் கூறியுள்ளது.


இந்த அத்தியாயம் நீதிமன்றக் கட்டமைப்புகளை விளக்குவதுடன் நின்றுகொள்ளாமல், திறமையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற உண்மையானப் பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டியது. இதன் சொல்லாடல்கள் நீதித்துறையில் முறையான பலவீனங்கள் இருப்பதை உணர்த்தியதால், உச்சநீதிமன்றம் இதனை ஏற்க முடியாத ஒன்றாகக் கருதியது. பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி, இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த பாடப்புத்தகத்தை விமர்சித்ததுடன், நீதித்துறை ஊழல் குறித்த அந்தப் பகுதியை "நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ஆழமாக வேரூன்றிய, நன்கு திட்டமிடப்பட்ட முயற்சி" என்று குறிப்பிட்டது.


நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில் அமைந்த அந்தப் பாடப்புத்தகக் கருத்துக்கள், நீதித்துறையை இரத்தக் காயம் அடையச் செய்த துப்பாக்கிக் குண்டு போன்றது என்றும், இத்தகையக் கூற்றுக்களை இளம் மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது பெரும் ஆபத்தானது என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பாடப்புத்தகத்திற்குத் தடை விதித்த நீதிமன்றம், அதன் அச்சு மற்றும் மின்னணுப் பிரதிகளைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. மேலும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை ஏன் தொடங்கக்கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) இயக்குநர் மற்றும் பள்ளி கல்வித்துறைச் செயலாளருக்கு நீதிமன்றம் அறிவிப்பாணை அனுப்பியுள்ளது.


உச்சநீதிமன்றம் நீதித்துறை மீதான நியாயமான விமர்சனங்களை எதிர்க்கவில்லை என்றும், அதேவேளையில் எளிதில் எதையும் நம்பக்கூடிய மாணவர்களிடம் தவறான அல்லது அவதூறான தகவல்கள் உண்மைகளாக முன்வைக்கப்படுவது குறித்தே கவலை கொள்வதாகவும் தெளிவுபடுத்தியது. இந்த விவகாரத்தில், இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தலைமையிலான அரசுத் தரப்பு மன்னிப்பு கோரியதுடன், சம்பந்தப்பட்ட பாடப்பகுதியை உருவாக்கியவர்கள் இனி இதுபோன்ற பணிகளில் ஈடுபடமாட்டார்கள் என்று உறுதியளித்தது. இருப்பினும், அரசாங்கத்தின் இந்த அதிகாரப்பூர்வ பதில் உண்மையான வருத்தத்தைவிட தற்காப்பு மனப்பான்மையையே வெளிப்படுத்துவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீவிரமான எதிர்வினை, குறிப்பாகத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் அவர்களின் கருத்துக்கள், குருட்டுத்தனமான ஆதரவோ அல்லது முற்றிலுமான நிராகரிப்போ இன்றி ஆழமான பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை ஆகும். நீதிமன்றம் தனது நிறுவனத்தின் மாண்பைக் காக்க முயற்சிப்பது ஒருபுறம் நியாயமானதாகத் தெரிந்தாலும், பாடப்புத்தகத்திற்கு முழுமையான தடை விதிப்பது, பிரதிகளின் பறிமுதல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவது போன்ற அதன் அதிரடிச் செயல்கள், அந்தப் பிரச்சனைக்கு இணையாக எடுக்கப்பட்ட ஒரு சரியான அளவிலான நடவடிக்கைதானா?  என்கிற கவலையை எழுப்புகிறது.


ஒரு உண்மை மிகத் தெளிவாக உள்ளது: பாடப்புத்தகங்களிலிருந்து நீதித்துறை ஊழல் தொடர்பான குறிப்புகளை நீக்குவதால், நீதித்துறையில் உள்ள ஊழல் ஒழிந்துவிடாது. பல ஆண்டுகளாக ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகள் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், மௌனமாக இருப்பதன்மூலம் மட்டும் ஒரு பிரச்சனையை மறைத்துவிடவோ அல்லது இல்லாமலோ செய்துவிட முடியாது.


2025-ஆம் ஆண்டில், யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் அதிகாரப்பூர்வ கணக்கில் வராத பணம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், உயர்மட்டங்களில் உள்ள பொறுப்புக்கூறல் குறித்த தீவிர கவலைகளை எழுப்பியது. அதேபோல், 2024-ஆம் ஆண்டின் இறுதியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு மாவட்ட நீதிபதி பிணை வழங்குவதற்காக 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்பட்டு அவர் மீது முதல் தகவல் அறிக்கை (First Information Report (FIR)) பதிவு செய்யப்பட்டதும் கீழ்நிலை நீதித்துறையில் நிலவும் முறைகேடுகளைக் காட்டுகிறது. இத்தகைய நிகழ்வுகள், பள்ளிப் பாடப்புத்தகங்களில் இவை எவ்வாறு சித்தரிக்கப்பட்டாலும், நிறுவனரீதியான ஊழல் சிக்கல்கள் இன்னும் தொடர்வதையே காட்டுகின்றன. இவ்வாறான உண்மைகளை மாணவர்களிடமிருந்து மறைப்பது சமூகப் பொறுப்பு சார்ந்த கல்வியை வலுவிழக்கச் செய்வதோடு, அதிகாரத்தைக் கேள்விகேட்கும் திறனற்ற குடிமக்களை உருவாக்கக்கூடும் என்றும் தெரிவிக்கின்றனர்.


ஒரு குடிமகனின் சமூகப் பொறுப்புகள் சார்ந்த பயிற்சி என்பது அரசு நிறுவனங்களை விமர்சனங்களில் இருந்து பாதுகாப்பதாக இருக்கக்கூடாது. மாறாக, பொது அமைப்புகளின் பலம் மற்றும் பலவீனம் ஆகிய இரண்டையும் மாணவர்கள் புரிந்து கொள்ள உதவுவதே அதன் உண்மையான நோக்கமாகும். ஒரு ஜனநாயக நாட்டில், எந்தவொரு நிறுவனமும் ஆய்வுக்கு அப்பாற்பட்டது அல்ல என்றும் பொதுமக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க வெளிப்படைத்தன்மையும் சீர்திருத்தமும் அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். சங்கடமான உண்மைகளை மறைப்பது தற்காலிகமாக விமர்சனங்களைக் குறைக்கலாம், ஆனால் அது நிலையான நம்பிக்கையை உருவாக்காது. வெளிப்படைத்தன்மை மற்றும் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் நடவடிக்கைகளின் மூலமே ஒரு அமைப்பின் மீதான நம்பிக்கை வளருமே தவிர, உண்மைகளைத் தவிர்ப்பதன் மூலம் அல்ல என்றும் தெளிவுபடுத்துகின்றனர். 


அதே நேரத்தில், நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நீதித்துறைக்கும் நிர்வாகத்துறைக்கும் இடையே தொடர்ந்து வரும் மோதல்களின் பின்னணியில் தலைமை நீதிபதியின் இந்த எதிர்வினையைப் புரிந்து கொள்ள வேண்டும். 2015-ஆம் ஆண்டில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை (National Judicial Appointments Commission (NJAC)) உச்சநீதிமன்றம் ரத்து செய்து, கொலிஜியம் முறையின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. அன்றிலிருந்து, நீதிபதிகள் நியமன செயல்முறை என்பது நீதித்துறைக்கும் அரசுக்கும் இடையே ஒரு தீராதப் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, கொலிஜியம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், காலதாமதம் ஏற்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதே வேளையில், நீதிபதிகள் நியமனத்தில் அரசின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.


இந்தச் சூழலில், பாடப்புத்தக சர்ச்சை என்பது நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் படிப்படியாகக் குறைத்து, நீதிபதிகள் நியமன முறையை மாற்றக் கோரும் ஒரு பெரிய போக்கின் பகுதியாக நீதிமன்றத்திற்குத் தோன்றியிருக்கலாம் என்றும் இந்தக் கண்ணோட்டம் நீதிமன்றத்தின் கடும் எதிர்வினைக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், இந்தச் சூழலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது. பாடப்புத்தகத்தின் நடை, தொனி அல்லது துல்லியம் தொடர்பான பிரச்சனைகளை, அந்த அத்தியாயத்தைத் தடை செய்வதற்குப் பதிலாக, திருத்தங்கள் மற்றும் தெளிவுபடுத்துதல்கள் மூலமாகவே சரிசெய்திருக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. 


நீதித்துறையின் மாண்பைப் பாதுகாப்பதும், கல்வி நிறுவனங்கள் சந்திக்கும் சவால்களைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிப்பதும் ஒன்றிற்கு ஒன்று எதிரான குறிக்கோள்கள் அல்ல. ஒரு முதிர்ச்சியடைந்த ஜனநாயகம் தனது நிறுவனங்கள் மீது மரியாதையையும், அதே நேரத்தில் அவற்றை விமர்சனரீதியாக ஆய்வு செய்யும் துணிச்சலையும் கொண்டிருக்க வேண்டும். ஊழல், நிர்வாகத் திறன் குறைபாடு மற்றும் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் குறித்து மாணவர்களின் வயதுக்கேற்ற புரிதலுடன் கலந்துரையாடுவது ஜனநாயகத்தை ஒருபோதும் பலவீனப்படுத்தாது என்றும் மாறாக, இது அதிகாரத்தில் இருப்பவர்களின் பொறுப்புணர்வை ஊக்குவித்து ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் என்கின்றனர். 


அதேநேரத்தில், நீதித்துறை மீதான விமர்சனங்கள் உண்மைகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்பதோடு, அவை பொறுப்புணர்வுடன் முன்வைக்கப்பட வேண்டும். இத்தகைய ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் நிறுவனத்தின் அதிகாரத்தை பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக அதனை மேலும் வலுப்படுத்துகின்றன. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) வெளியிட்ட பாடப்புத்தகத்தின் அத்தியாயத்தைத் தடை செய்வது உடனடி விமர்சனங்களைத் தடுத்து நிறுத்தலாமே தவிர, அந்தப் பாடம் எழுப்பிய ஆழமான பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது என்கின்றனர். கடினமான உண்மைகளை மறைப்பதன் மூலம் அல்லாமல், அவற்றை முறையான விவாதம் மற்றும் சீர்திருத்த மனப்பான்மையுடன் எதிர்கொள்வதன் மூலமே ஜனநாயகம் நிலைத்துநிற்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 


உம்மர் ஜமால், காஷ்மீரைச் சேர்ந்த ஒரு கட்டுரையாளர் ஆவார். அவர் தற்போது ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் நீதித்துறை எழுத்தராகவும் மற்றும் ஆராய்ச்சி உதவியாளராகவும் பணியாற்றி வருகிறார்.


Original article : Will purging reference to judicial corruption from NCERT textbooks solve the real problem? -Ummar Jamal

Share:

மும்பை உயர்நீதிமன்றத்தின் கட்டணம் செலுத்துதல் தொடர்பான தீர்ப்பு, கல்வி உரிமை உத்தரவாதம் மற்றும் அதன் நோக்கத்தை எவ்வாறு வலியுறுத்துகிறது? -அமால் ஷேக்

 இந்த உத்தரவு, பள்ளிக் கல்வியின் தொடர்ச்சியிலிருந்து நிலுவைத் தொகையை வசூலிப்பதில் உள்ள சிக்கலைப் பிரிக்கிறது. பள்ளிகள் சட்டத்தின்படி கட்டணங்களை வசூலிக்க முடியும். இருப்பினும், ஒரு குழந்தையை தொடக்கக் கல்வியிலிருந்து நீக்கி கட்டாயப்படுத்த முடியாது.


கடந்த வாரம், மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு தீர்ப்பளித்ததாவது, கட்டணம் செலுத்தாததற்காக 13 வயது மாணவனை வெளியேற்ற முடியாது என்று நீதிமன்றம் கூறியது. அந்தக் குழந்தை கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் வரும் வயதுக்குட்பட்டவர் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ராஜ் வகோட் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, 7-ம் வகுப்பு மாணவர் ரூ.23,900 கட்டணம் செலுத்தத் தவறியதால், தனியார் பள்ளி வழங்கிய மாற்றுச் சான்றிதழை (transfer certificate (TC)) ரத்து செய்தது. மாணவனை உடனடியாக மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கல்வி உரிமை மாநில பள்ளி கட்டண ஒழுங்குமுறைச் சட்டங்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பது குறித்து இந்தத் தீர்ப்பு முக்கியமானதாக அமைகிறது. இது தொடர்பான சட்டங்கள் கீழே குறிப்பிட்டுள்ளன, 


கேள்விக்குரிய சட்டங்கள்


சட்டக் கட்டமைப்பு (legal framework) இரண்டு சட்டங்கள் மற்றும் ஒரு அரசியலமைப்பு விதியை அடிப்படையாகக் கொண்டது.


அரசியலமைப்பின் பிரிவு 21-A, 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உறுதி செய்கிறது. இந்த உத்தரவாதம், குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 (Right of Children to Free and Compulsory Education Act (RTE)) மூலம் நிறைவேற்றப்படுகிறது.


இந்தச் சட்டத்தின் பிரிவு 3(1) இந்த வயதிற்குட்பட்ட ஒவ்வொரு குழந்தையும் "அவரது தொடக்கக் கல்வியை முடிக்கும்வரை அருகிலுள்ள பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமையைப் பெற வேண்டும்" என்று வழங்குகிறது.


சட்டத்தின் பிரிவு 16, மேலும் "ஒரு பள்ளியில் சேர்க்கப்படும் எந்தவொரு குழந்தையும் தொடக்கக் கல்வி முடியும் வரை எந்த வகுப்பிலும் தடுத்து வைக்கப்படவோ (held back) அல்லது பள்ளியிலிருந்து வெளியேற்றப்படவோ (expelled from school) கூடாது" என்று கூறுகிறது.


தனித்தனியாக, மகாராஷ்டிரா கல்வி நிறுவனங்கள் (கட்டண ஒழுங்குமுறை) சட்டம்-2011, (Maharashtra Education Institutions (Regulation of Fee) Act) தனியார் உதவி பெறாத பள்ளிகள் எவ்வாறு கட்டணத்தை வசூலிக்கலாம் என்பதை நிர்வகிக்கிறது. வசூலிக்கப்படாத கட்டணங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்ட மத்திய விதி பிரிவு 3A ஆகும். இந்தப் பிரிவு பின்னர் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. பள்ளிகளில் தாமதமாக கட்டணம் செலுத்துவதற்கு அல்லது கட்டணம் செலுத்தாததற்கு அபராத வட்டி வசூலிக்கவும் அனுமதிக்கிறது.

நீதிமன்றத்தின் முன் இருந்த முக்கியக் கேள்வி என்னவென்றால், நிதி அபராதம் விதிக்கும் இந்த அதிகாரத்தை ஒரு பள்ளி ஒரு மாணவனை நீக்குவதற்கு ஒரு காரணமாகக் கருதப்படுமா என்பதுதான்.

நீதிமன்றத்தின் முன் உள்ள சர்ச்சை


மாணவி 2023-2024-ஆம் ஆண்டில் ஃபாதர் ஆக்னஸ் பள்ளியில் (Father Agnes School) 6-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டு 2024-2025-ஆம் ஆண்டில் 7-ம் வகுப்பிற்கு மாற்றப்பட்டார்.

இந்த நேரத்தில், அவரது தந்தை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதில், பள்ளியானது "குழந்தைகளை லாபம் ஈட்டுவதிலும் சுரண்டுவதிலும் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, தன்னிச்சையாக கட்டணங்களை நிர்ணயிப்பதன் மூலமும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) புத்தகங்களைப் பயன்படுத்துவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.


இந்தக் குற்றச்சாட்டுகளை பள்ளி மறுத்தது. தந்தை "அரசியல் ஆதாயம்" தேட முயற்சிப்பதாகவும், அவர் பொய்யான புகார்களைப் பதிவு செய்ததாகவும் கூறியது. மேலும் "தனது மகளுடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்வதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்" என்றும் பள்ளி தரப்பில் வாதிட்டது. கூடுதலாக, 6 மற்றும் 7-ம் வகுப்புகளுக்கான கட்டணம் ரூ.23,900 செலுத்தப்படவில்லை என்றும் பள்ளி கூறியது.


மார்ச் 2025-ல், பள்ளி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. நிலுவையில் உள்ள கட்டணங்கள் மூன்று நாட்களுக்குள் செலுத்தப்படாவிட்டால், மாற்றுச் சான்றிதழ் (transfer certificate (TC)) வழங்கப்படும் என்று அது கூறியது. பின்னர், மாற்றுச் சான்றிதழ் (TC) வழங்கப்பட்டது.


கட்டணம் செலுத்த முயன்றதாக தந்தை கூறினார். இருப்பினும், பள்ளி வளாகத்திற்குள் நுழைய தனக்கு தவறுதலாக, வலுக்கட்டாயமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.


பள்ளி இரண்டு முக்கிய வாதங்களை முன்வைத்தது. அது சி.பி.எஸ்.இ உடன் இணைக்கப்பட்ட ஒரு உதவி பெறாத சிறுபான்மை நிறுவனம் என்பதால் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) அதற்குப் பொருந்தாது. மேலும், கட்டண ஒழுங்குமுறைச் சட்டம் பணம் செலுத்தாததற்கான மீட்பு நடவடிக்கைகளை அனுமதித்தது.

நீதிமன்றம் சட்டத்தை எவ்வாறு விளக்கியது?


இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் (RTE) சட்டத்தின் பொருந்தக்கூடிய தன்மை குறித்து, சி.பி.எஸ்.இ (CBSE) உடன் இணைக்கப்பட்ட ஒரு உதவி பெறாத சிறுபான்மை நிறுவனமாக, அது சட்டத்தின் கட்டமைப்பிற்கு வெளியே உள்ளது என்று பள்ளி வாதிட்டது. உச்சநீதிமன்ற முந்தைய தீர்ப்புகளை நம்பி, சிறுபான்மை உதவி பெறாத நிறுவனங்கள் நிர்வாக சுயாட்சியைத் தக்கவைத்துக்கொள்கின்றன என்றும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் (RTE) சட்ட ஆட்சியின்கீழ் செயல்பட கட்டாயப்படுத்த முடியாது என்றும் அது சமர்ப்பித்தது.


பள்ளியின் சொந்த ஒழுங்குமுறை பதிவுகளை சரிபார்த்து உயர்நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை ஆய்வு செய்தது.


2007-ம் ஆண்டில், மகாராஷ்டிரா அரசு தடையில்லாச் சான்றிதழை (No Objection Certificate) வழங்கியது என்பதை நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்தச் சான்றிதழ் பள்ளியை சி.பி.எஸ்.இ பிரிவை நடத்த அனுமதித்ததுடன், அது ஒரு நிபந்தனையுடன் வந்தது. மகாராஷ்டிரா அரசு நிர்ணயித்த விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பள்ளி பின்பற்ற வேண்டும். அது "2009-ம் ஆண்டின் சட்டத்தின் விதிகள் பொருந்தும்" என்பதைக் குறிக்கும் ஏப்ரல் 2022 ஒப்புதல் கடிதத்தையும் ஆய்வு செய்தது.


2022-ம் ஆண்டு ஒப்புதல் "கட்டாயத்தின் கீழ்" பெறப்பட்டது என்று பள்ளி வாதிட்டது. எந்தவொரு சட்ட நடவடிக்கையிலும் பள்ளி இந்த ஒப்புதலை சவால் செய்யவில்லை என்று நீதிமன்றம் பதிவு செய்தது. இரண்டு தகவல்தொடர்புகளையும் ஒன்றாகப் படித்த நீதிமன்ற அமர்வு, நிர்வாகம் இணைப்புச் சலுகையின் பலனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரத்தில், அதனுடன் வரும் பொறுப்புகளை நிராகரிக்கமுடியாது என்றும் அது கூறியது.

இந்த நிலைப்பாட்டை "நியாயமற்றத் தன்மை மற்றும் தன்னிச்சையான நடவடிக்கையின் ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு" என்று கூறி, நிர்வாகம், ஒரே நேரத்தில் "இரண்டு முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுக்க முடியாது" என்று அது கூறியது.


இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் (RTE) சட்டம் பொருந்தும் என்று கருதப்பட்டவுடன், பிரிவு 16 தீர்க்கமானதாக மாறியது. மாணவருக்கு 13 வயதால், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் (RTE) சட்டப் பிரிவின்கீழ் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமல்ல, 6 முதல் 14 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்தப் பாதுகாப்பு வயதை அடிப்படையாகக் கொண்டது.


கட்டண வசூல் தொடர்பாக, மகாராஷ்டிரா கல்வி நிறுவனங்கள் (கட்டண ஒழுங்குமுறை) சட்டம்-2011-ன் (Maharashtra Educational Institutions (Regulation of Fee) Act) பிரிவு 3A நிதி அபராதங்களை அனுமதிக்கிறது என்று நீதிமன்றம் கூறியது. இது வெளியேற்றத்தை அனுமதிக்காது.


இந்த உத்தரவு இரண்டு பிரச்சினைகளை தெளிவாகப் பிரிக்கிறது. ஒன்று செலுத்தப்படாத கட்டணங்களை (unpaid fees) வசூலிப்பது. மற்றொன்று பள்ளிப்படிப்பைத் தொடர குழந்தையின் உரிமை (child’s right to continue schooling) ஆகும். பள்ளிகள் சட்டத்தின்படி கட்டணங்களை வசூலிக்கலாம். இருப்பினும், கட்டணத்தை அமல்படுத்துவதற்காக ஒரு குழந்தையை தொடக்கக் கல்வியிலிருந்து அவர்கள் நீக்க முடியாது.


Original article : How Bombay HC ruling on fee payment highlights Right to Education guarantee, its scope?. -Amaal Sheikh

Share:

காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப நீர் நிர்வாகத்தை சரிசெய்வது ஏன் அவசியமாகிவிட்டது? -அபினவ் ராய்

 விரைவான நகரமயமாக்கல், இருக்கும் நீர்நிலைகளை ஆக்கிரமித்தல், கடுமையான வெப்பம் மற்றும் நீர்ப்பற்றாக்குறை ஆகியவை இந்தியாவில் ஆண்டுதோறும் ஏற்படும் ஒரு தொடர்ச்சியான நெருக்கடியாக மாறியுள்ளன. சில நகரங்கள் 'பூஜ்ஜிய நாள்' (‘Day Zero) போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றன. நீர் தொடர்பான அபாயங்களை நிவர்த்திசெய்ய நீர் நிர்வாகத்தை எவ்வாறு காலநிலைக்கு ஏற்றவாறு மாற்ற முடியும்?


பூமியில் வாழ்வதற்கு நீர் முக்கியமானது. மேலும், பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீரைப் பெறுவது ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட மனித உரிமையாகும். ஆனால், உலகெங்கிலும் உள்ள நீர் வளங்கள் அதிகரித்துவரும் தேவை, சீரழிவு நீர் தரம் மற்றும் கிடைக்கக்கூடிய வளங்கள் குறைந்து வருவதால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அழுத்தத்தில் உள்ளன.

இந்த சூழலில், காலநிலையின் தேவைகளுக்கேற்ப நீர் நிர்வாகத்தை சரிசெய்வது முக்கியமானதாகிவிட்டது. இந்தியாவில், நீர் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான சமீபத்திய நடவடிக்கைகளில் சில, நீர் விநியோகப் பிரச்சினையைத் தீர்க்க செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதும், படிக்கிணறுகள் (stepwells) போன்ற பாரம்பரிய அமைப்புகளுக்குப் புதுப்பிக்கப்பட்ட கவனம் செலுத்துவதும் அடங்கும்.


ஐக்கிய நாடுகள் சபையின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பல்கலைக்கழக நிறுவனம் (United Nations University Institute for Water, Environment and Health (UNU-INWEH)) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் மூலம் இத்தகைய முயற்சிகளின் அவசரத்தன்மை அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. இது தற்போதைய உலகளாவிய நிலையை 'நீர் திவால்நிலை' (Water Bankruptcy) என்று அழைத்தது. இது ஒரு தனித்துவமான நெருக்கடிக்குப் பிந்தைய நிலை, இதில் 'நீர் அழுத்தம்' மற்றும் 'நீர் நெருக்கடி' என்ற சொற்கள் போதுமானதாக இருக்காது. ஏனெனில், பல படுகைகளில் இருந்து நீர் எடுப்பது அவற்றின் புதுப்பிக்கத்தக்க நிரப்புதல் அளவை விட அதிகமாக உள்ளது.


நீர் நெருக்கடி மற்றும் உணவுப் பாதுகாப்பு


பூமியில் கிடைக்கும் மொத்த நீரில் 0.5 சதவீதம் மட்டுமே எளிதில் கிடைக்கக்கூடிய மற்றும் பயன்படுத்தக்கூடிய நன்னீர் ஆகும். இந்த நீரில் 70 சதவீதம் வேளாண்மைக்கு பயன்படுத்துகிறது. அதைத் தொடர்ந்து தொழில்துறை பயன்பாடு மற்றும் உள்நாட்டு நுகர்விற்கு பயன்படுத்துகிறது. இருப்பினும், கடந்த 20- ஆண்டுகளாக, விரைவான நகரமயமாக்கல் மற்றும் நகரங்களின் விரிவாக்கம் காரணமாக உள்நாட்டு நீர் தேவை அதிகரித்து வருகிறது.


உலக மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதிப் பேர் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒரு மாத நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும், அவர்களில் பாதி பேர் 'மிகவும் அதிகமாக' நீர் அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். கடந்த 50 ஆண்டுகளில், உலகம் 410 மில்லியன் ஹெக்டேர் இயற்கை ஈரநிலங்களை (ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த பரப்பளவிற்கு சமமான அளவு) இழந்துள்ளது. மற்றும் $5.1 டிரில்லியன்களுக்கு மதிப்புள்ள சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை இழந்துள்ளது.

உலக உணவு உற்பத்தி செய்யும் பகுதிகளில் பாதிக்கும் மேற்பட்டவை மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் வளங்கள் குறைந்து வருவதைக் காண்கின்றன. இது மண்ணின் ஈரப்பதத்தைத் தக்கவைத்தல், உப்புத்தன்மை, பாலைவனமாக்கல் மற்றும் மிகவும் முக்கியமான வேளாண் நிலங்களின் ஒட்டுமொத்த சீரழிவுக்கு வழிவகுத்தது. இது உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு விளைவுகளை ஏற்படுத்துகிறது. நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவது பல பகுதிகளில் நிலச்சரிவை ஏற்படுத்துகிறது. இது உலக நிலப்பரப்பில் ஏறக்குறைய 5% பாதிக்கிறது.


வாழ்வாதாரம், சுகாதாரம் ஆகியவற்றில் பாதிப்பு


தற்போது, 2 பில்லியன் மக்கள் தங்கள் குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் நீர் மின்சார உற்பத்தித் தேவைகளுக்கு மலைப் பனிப்பாறைகள் மற்றும் பருவகால பனி உருகலை நம்பியுள்ளனர். உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization (WMO)) கடந்த 50 ஆண்டுகளில் மிகப்பெரிய பனிப்பாறை உருகுதல், 600 ஜிகாடன் தண்ணீரை உற்பத்தி செய்வதாக அறிவித்துள்ளது. இந்த அதிகரித்த கிரையோஸ்பெரிக் இழப்பு கடல்மட்ட உயர்வுக்கு ஒரு முக்கியக் காரணியாகும். இது காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழுவின் (Intergovernmental Panel on Climate Change (IPCC)) கூற்றுப்படி, 1900-ஐ விட 20 செ.மீ அதிகமான அளவாகும்.


காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன மற்றும் கடுமையானதாகி வருகின்றன. 2000-ஆம் ஆண்டு முதல், ஆசியாவில் வெள்ளம் தொடர்பான இறப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளன. அதே, நேரத்தில் ஆப்பிரிக்காவில் வறட்சி தொடர்பான இறப்புகள் அதிகம் பதிவாகியுள்ளன. கூடுதலாக, நீர் தொடர்பான பிரச்சினைகள் சமூக-பொருளாதார வளர்ச்சி மற்றும் பாலின சமத்துவத்திற்கு முக்கியக் காரணிகளாக  உள்ளன. ஏனெனில், நீர் அணுகல் வாழ்வாதாரம், சுகாதாரம் மற்றும் பல சமூகங்களில் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளை பாதிக்கிறது.


உலகளாவிய நீர்வள பாதுகாப்பு முயற்சிகளை விரைவுபடுத்த, ஐக்கிய நாடுகள் 2018–2028-ஆம் ஆண்டு  காலத்தை “தொழில்நுட்ப வளர்ச்சிக்கான நீர்” (Water for Sustainable Development) என்ற சர்வதேச செயல்பாட்டு ஆண்டுகளாக அறிவித்தது.


இந்தியாவின் மேற்பரப்பு நீர் நிலை


மேற்பரப்பு நீரின் அளவு மழைப்பொழிவு, ஆவியாதல் மற்றும் நிலத்தடி நீர் கசிவு ஆகியவற்றின் செயல்முறைகளைப் பொறுத்து இருக்கும். தற்காலிக மாறுபாடு மற்றும் மழைப்பொழிவின் சீரற்ற இடம்சார்ந்த விநியோகம் வெள்ளம் அல்லது வறட்சி போன்ற சூழல்களை ஏற்படுத்துகிறது. எனவே, ஒரு குறிப்பிட்ட புவியியலில் மேற்பரப்பு நீர் கிடைப்பது மழைப்பொழிவு அதிர்வெண் மற்றும் தீவிரம், சேமிப்பு திறன் (குளங்கள், ஏரிகள், ஈரநிலங்கள் மற்றும் செயற்கை நீர்த்தேக்கங்கள்), சராசரி வெப்பநிலை மற்றும் ஆவியாதல் விகிதம், மண்ணின் ஊடுருவல், நிலத்தின் ஓடுபாதை பண்புகள் போன்றவற்றைப் பொறுத்து இருக்கும்.


இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான நீர், சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்ரா ஆகிய மூன்று எல்லை தாண்டிய, இமயமலை கிளை நதிகளிலிருந்து வருகிறது. மத்திய நீர் ஆணையம் 38 ஆண்டுகளில் (1985-2023 வரை) சராசரி நீர் இருப்பு 2116 பில்லியன் கன மீட்டர்கள் (Billion Cubic Meters (BCM)) ஆக மதிப்பிட்டுள்ளது. இதில் பிரம்மபுத்திரா (592.32 BCM), கங்கை (581.75 BCM) மற்றும் கோதாவரி படுகைகள் (129.17 BCM) முறையே அதிக நீரை வழங்குகின்றன.


2023-ஆம் ஆண்டு ஜல் சக்தி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இந்தியாவின் முதல் நீர்நிலைகள் கணக்கெடுப்பில் மொத்தம் 24,24,540 நீர்நிலைகள் உள்ளன. அவற்றில் 97.1 சதவீதம் கிராமப்புறங்களில் உள்ளன. இருப்பினும், 3.1 சதவீத நீர்நிலைகள் மட்டுமே 5 ஹெக்டேருக்கு மேல் நீர் பரவல் பரப்பளவைக் கொண்டுள்ளன. மேலும், 12.7 சதவீத நீர்நிலைகள் மட்டுமே 10,000 கன மீட்டருக்கு மேல் சேமிப்புத் திறனைக் கொண்டுள்ளன.


மேற்கு வங்கம் குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் எண்ணிக்கையில் முன்னணியில் இருப்பதைக் காட்டுகிறது. அதே நேரத்தில் ஆந்திரப் பிரதேசம் அதிக எண்ணிக்கையிலான குளங்களைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஏரிகள் உள்ளன மற்றும் மகாராஷ்டிரா நீர்ப் பாதுகாப்பு திட்டங்களில் முன்னணியில் உள்ளது.


பால்கன்மார்க் குறியீட்டின்படி, ஒரு பகுதியில் ஆண்டுக்கு நபருக்கு கிடைக்கும் புதுப்பிக்கத்தக்க நீர் 1700 m3-க்கு குறைவாக இருந்தால் அதனை ‘நீர் அழுத்தம்’ (water stress) என சுட்டிக்காட்டுகிறது. மேலும் அது 1000 ம³க்குக் கீழே இறங்கினால் நாள்பட்ட “நீர் பற்றாக்குறை” (chronic water scarcity)  என்ற நிலை உருவாகும்.


நிதி ஆயோகத்தின் ஒரு அறிக்கையின் படி, 2050 ஆம் ஆண்டுக்கு இந்தியாவின் நபருக்கு நீர் அளவு 1140 ம³ ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 8.2 கோடி மக்கள் நபருக்கு 1000 ம³ அல்லது அதற்கு குறைவான நீர் கிடைக்கும் நிலையை எதிர்கொள்கின்றனர், இது குறிப்பாக இந்தியாவின் நகரங்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.


'பூஜ்ஜிய நாள்' போன்ற சூழ்நிலையை எதிர்கொள்ளும் நகரங்கள்


திட்டமிடப்படாத விரைவான நகரமயமாக்கல், ஏற்கனவே உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்தல், கடுமையான வெப்பம் மற்றும் நீர் பற்றாக்குறை ஆகியவை தொடர்ச்சியான நெருக்கடியாக மாறியுள்ளன. 2018-ஆம் ஆண்டு ஷிம்லா, 2019-ஆம் ஆண்டு சென்னை மற்றும் 2024-ஆம் ஆண்டு பெங்களுரு  போன்ற நகரங்கள் ‘பூஜ்ஜிய நாள்' போன்ற நிலைகளை எதிர்கொண்டன.


சென்னை 2019-ல் கடுமையான நீர் நெருக்கடியை எதிர்கொண்டது. அந்த ஆண்டு, நகரத்தில் 200 நாட்கள் மழை பெய்யவில்லை. நகரத்தின் தேவைகளில் 60 சதவீதத்தை பூர்த்தி செய்த நான்கு முக்கிய நீர்த்தேக்கங்களான செங்குன்றம், சோழவரம், பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஆகியவை அவற்றின்  கொள்ளளவில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தன.


பல ஆண்டுகளாக, சென்னை மற்றும் அருகே உள்ள மாவட்டமான  காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஏரிகளின் மாவட்டங்கள் அழைக்கப்பட்டவை,  இருந்த மொத்தம் 6,000 ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் 2104 காணாமல் போயுள்ளன.


டெல்லியும் நீர் தொடர்பான பல்வேறு ஆனால் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. நகரத்தில் ஒரு நாளைக்கு 344 மில்லியன் கேலன்கள் (million gallons a day (mgd)) தேவை-விநியோக இடைவெளி உள்ளது. நகரத்தின் தண்ணீரில் பாதி வருவாய் அல்லாத நீர் non-revenue water (NRW)), கசிவுகள், சட்டவிரோத இணைப்புகள், பழைய உள்கட்டமைப்பு, மோசமான பராமரிப்பு, திறன் கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் வீடுகளுக்கு கிடைக்காது.


இந்தியாவின் மேற்பரப்பு நீரில் 70 சதவீதம் மாசுபட்டுள்ளது. இருப்பினும், நீர் மறுசுழற்சி செய்யக்கூடிய வளமாகும். மேலும், முறையான சுத்திகரிப்புக்குப் பிறகு நீரை  மீண்டும் பயன்படுத்தலாம்.


ஒருங்கிணைந்த உலகளாவிய மற்றும் தேசிய பதிலுக்கான தேவை


உலகளாவிய நீர் நிர்வாகம் நீர், சுகாதாரம் மற்றும் சுகாதாரம் (water, sanitation and hygiene (WASH)) ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. நிலையான வளர்ச்சி இலக்கு 6, 2030-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வது (safe drinking water and sanitation for all) பற்றியும் பேசுகிறது. ஆனால், உலகளாவிய விவாதங்களின் நோக்கத்தை விரிவுபடுத்தி நிலத்தடி நீர் குறைவு, நீர் தரச் சீரழிவு, சுற்றுச்சூழல் சரிவு, அதிகப்படியான வேளாண் பயன்பாடு, பாலைவனமாக்கல் மற்றும் எல்லை தாண்டிய பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


தெற்காசிய நீர் அரசியலில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள், யர்லுங் சாங்போ (பிரம்மபுத்திராவின்) நதியில் பெரிய அணை மற்றும் கங்கா நீர் உடன்படிக்கை இந்த ஆண்டில் காலாவதியாகும் நிகழ்வுகள், பாதிப்பை ஏற்படுத்தும். ஐக்கிய அரபு  அமீரகம் மற்றும் செனகல் இணைந்து நடத்தும் வரவிருக்கும் ஐ.நா. நீர் மாநாடு 2026, 'பன்முக செயல்முறைகளில் நீர்' (Water in Multilateral Processes) மற்றும் 'ஒத்துழைப்புக்கான நீர்' (Water for Cooperation) ஆகியவற்றை விவாதிப்பதற்கான முக்கியமான கருப்பொருளாக முன்மொழிந்துள்ளது.


தேசிய அளவில், ஒருங்கிணைந்த மாநிலங்களுக்கு இடையேயான நீர் மேலாண்மை, தரவு வெளிப்படைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை  கண்காணித்தல் உள்ளிட்ட காலநிலை-எதிர்ப்பு நீர் நிர்வாக அணுகுமுறையின் தேவை உள்ளது. இந்திய நகரங்களுக்கு கடற்பாசி-நகர உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம் நீர் தொடர்பான நிதிநிலை அறிக்கை தேவைப்படுகிறது. இதில் அதிக பசுமையான இடங்கள், நீரை ஊடுருவச் செய்யும் கட்டிடங்கள், மழைநீர் சேமிப்பு வசதிகள் மற்றும் அவற்றின் நீர்நிலைகளை மறுசுழற்சி செய்தல் ஆகியவை அடங்கும். மாறிவரும் காலநிலையின் தேவைகளுக்கு ஏற்ப நீர் நிர்வாகத்தை சரிசெய்வது இந்தியாவிற்கும் உலகிற்கும் நீர் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும்.


Original article : Why adjusting water governance to climate change has become imperative. -Abhinav Rai

Share:

இந்தியாவும் கனடாவும் யுரேனிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன : யுரேனியம் குறித்து ஒரு பார்வை -ரோஷ்னி யாதவ்

 தற்போதை நிகழ்வு :


இந்தியாவும் கனடாவும் 2.6 பில்லியன் டாலர் யுரேனியம் ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. மேலும், சிறிய மட்டு அணு உலைகள் (small modular nuclear reactors) மற்றும் மேம்பட்ட உலைகளை (advanced reactors) உருவாக்குவதில் பணியாற்றும் என்று இருநாடுகளின் தரப்பிலும் திங்களன்று கனடாவின் பிரதமர் மார்க் கார்னியின் இந்தியாவுக்கு முதல் பயணத்தின்போது தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, "சிவில் அணுசக்தியில், நீண்டகால யுரேனிய விநியோகத்திற்கான ஒரு முக்கிய ஒப்பந்தத்தை நாங்கள் முடித்துள்ளோம்" என்று கூறினார். இந்த சூழலில், யுரேனியம் மற்றும் அது எவ்வாறு செறிவூட்டப்படுகிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம்.


முக்கிய அம்சங்கள் :


இந்தியாவின் அணுசக்தி இலக்குகளை ஆதரிப்பதற்கும், சுத்தமான, நம்பகமான அடிப்படை சுமை-எரிசக்தியை (base-load power) நோக்கி செயல்படுவதற்கும் இந்திய அரசாங்கமும், கனடாவின் கேம்கோவும் யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்று கார்னி கூறினார்.


யுரேனியம்  (Uranium)


1. யுரேனியம் என்பது இயற்கையாக நிகழும் கதிரியக்க தனிமம் ஆகும். இது அணு எண் 92-ஐக் கொண்டுள்ளது மற்றும் கால அட்டவணையில் உள்ள வேதியியல் சின்னமான U உடன் ஒத்திருக்கிறது.


2. யுரேனியம் "ஆக்டினைடுகள்" (actinides) எனப்படும் சிறப்பு தனிமக் குழுவிற்கு சொந்தமானது. இந்த தனிமங்கள் வரலாற்றில் ஒப்பீட்டளவில் தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டன.


3. யுரேனியம் "கதிரியக்கத்தன்மை கொண்டது". இதன்பொருள், அது காலப்போக்கில் சிதைவடைந்து அதன் செயல்பாட்டில் ஆற்றலை வெளியிடுகிறது. இந்த சிறப்பு பண்புகள் காரணமாக, யுரேனியம் அணு உலைகளில் முக்கிய எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


            பூமியில் உள்ள பெரும்பாலான அணுக்கள் அவற்றின் கருக்களில் (nuclei) உள்ள நியூட்ரான்கள் மற்றும் புரோட்டான்களின் சமநிலையான கலவை காரணமாக நிலைத்தன்மை நிலவுகிறது. இருப்பினும், சில நிலையற்ற அணுக்களில், புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையின் கலவை, கருவை (nuclei) ஒன்றாகப் பிடித்துக் கொள்ள அனுமதிக்காது. அத்தகைய அணுக்கள் கதிரியக்கத்தன்மை கொண்டவை என்று அறியப்படுகின்றன. மேலும், அவை இரண்டு இலகுவான தனிமங்களாக உடைந்து அல்லது பிளவுபட முனைகின்றன. இதுவே பெரும்பாலான அணு ஆயுதங்கள் மற்றும் அணு ஆற்றலின் அடித்தளமாக அமைகிறது.


4. யுரேனியம் பூமியின் மேலோட்டத்தில் மிகவும் பொதுவான தனிமங்களில் ஒன்றாகும். இது தங்கத்தைவிட சுமார் 500 மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது. சர்வதேச அணுசக்தி அமைப்பின் (International Atomic Energy Agency) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, இது மிகவும் அரியவகைத் தனிமமாகத் தோன்றினாலும், சிறிய அளவிலான யுரேனியம் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. இது பாறைகள், மண், நீர் மற்றும் நமது உடல்களில்கூட உள்ளது. கடலில் அதிக அளவில் நீர்த்த யுரேனியமும் உள்ளது. உண்மையில், இது சுமார் நான்கு பில்லியன் டன் அதிக நீர்த்த யுரேனியத்தைக் கொண்டுள்ளது.


5. குறிப்பிடத்தக்க வகையில், யுரேனியம் வெவ்வேறு வடிவங்களில் உள்ளது. அவை, நிறை மற்றும் இயற்பியல் பண்புகளில் வேறுபடுகின்றன. இருப்பினும், அவை ஒரே வேதியியல் பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த வெவ்வேறு வடிவங்கள் ஐசோடோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. யுரேனியத்தின் மூன்று இயற்கையான ஐசோடோப்புகள் உள்ளன. அவை யுரேனியம்-234 (U-234), யுரேனியம்-235 (U-235), மற்றும் யுரேனியம்-238 (U-238) ஆகும்.


Knowledge Nugget: India and Canada sign Uranium pact: What all you must know about Uranium

யுரேனியம் செறிவூட்டல் (Uranium Enrichment)

1. யுரேனியம்-235 பொதுவாகப் பயன்படுத்தப்படும் அணு எரிபொருளாகும். இருப்பினும், இயற்கை யுரேனியம் பொதுவாக U-235-ல் 0.72 சதவீதம் மட்டுமே கொண்டுள்ளது மற்றும் பெரும்பாலான உலைகளுக்கு அவற்றின் எரிபொருளில் இந்த ஐசோடோப்பின் அதிக செறிவு தேவைப்படுகிறது. எனவே, செறிவூட்டல் (enrichment) எனப்படும் ஒரு செயல்முறை மூலம் U-235 செறிவு செயற்கையாக அதிகரிக்கப்படுகிறது.

2. செறிவூட்டல் என்பது யுரேனியம்-235 கருவை (nucleus) நியூட்ரான்களால் தாக்குவதை உள்ளடக்குகிறது. கருவானது உடனடியாக ஒரு கூடுதல் நியூட்ரானை உறிஞ்சி அதன் விளைவாக நிலையற்றதாகிறது. மேலும், உடனடியாக இரண்டு இலகுவான அணுக்களாகவும், சில கூடுதல் நியூட்ரான்களை வெளியிடுகிறது. இந்த செயல்முறை அணு ஆற்றல் (atomic energy) எனப்படும் ஒன்றை வெளியிடுகிறது.

3. ஒரு யுரேனியம்-235 அணு பிளவுக்கு உட்படும்போது, ​​அது சராசரியாக சுமார் 2 முதல் 3 புதிய நியூட்ரான்களை உருவாக்குகிறது. இந்த புதிய நியூட்ரான்கள் பின்னர் மற்ற U-235 அணுக்களால் உறிஞ்சப்பட்டால், அது அதிவேகமாக வளரும் சங்கிலி எதிர்வினையை உருவாக்குகிறது. சங்கிலி வினையின் ஒவ்வொரு புதிய தலைமுறையிலும், சம்பந்தப்பட்ட அணுக்களின் எண்ணிக்கை இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரிக்கும்.

4. வெளியிடப்பட்ட அனைத்து நியூட்ரான்களும் மேலும் பிளவை ஏற்படுத்துவதில்லை என்றாலும், ஒவ்வொரு பிளவு நிகழ்வும் ஒன்றுக்கு மேற்பட்ட கூடுதல் பிளவை ஏற்படுத்தினால், சங்கிலி வினை தொடர்ந்து வளர்கிறது. அது வளரும்போது, ​​அது மிகப் பெரிய அளவிலான ஆற்றலை வெளியிடுகிறது.

5. இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியத்தில் சுமார் 99.3% ஐசோடோப்பு U-238 ஆகும். U-238 பிளவுபடுத்தக்கூடியது அல்ல. இதன் பொருள், இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியத்தை ஒரு ஆயுதத்திலோ அல்லது அணு மின் நிலையங்களிலோ பயன்படுத்த முடியாது.Knowledge Nugget: India and Canada sign Uranium pact: What all you must know about Uranium


6. எனவே, யுரேனியம்-235 இன் செறிவை அதிகரிப்பதற்காக யுரேனியம் தாது செறிவூட்டப்படுகிறது. பெரும்பாலான அணு மின் நிலையங்கள் ஒரு நிலையான சங்கிலி எதிர்வினையைத் தக்கவைக்க 3-4% யுரேனியம்-235 செறிவூட்டலைக் கோருகின்றன. மாறாக, பிளவு அணு குண்டுகளுக்கு சுமார் 90% U-235 வரை செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவைப்படுகிறது.

7. இது மிகவும் சிக்கலான சில உபகரணங்களைப் பயன்படுத்தி குறிப்பிட்ட செறிவூட்டல் வசதிகளில் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், அணு மின் உற்பத்திக்கு எரிபொருளை செறிவூட்டத் தேவையான உபகரணங்கள், ஒரு வெடிகுண்டுக்கு அதை செறிவூட்டத் தேவையான உபகரணங்களைப் போலவே உள்ளன. இந்த சிரமம் உலகளாவிய அணு பரவல் தடையை செயல்படுத்துவதில் பெரும் சவால்களில் ஒன்றாகும்.

மறுசுழற்சி செய்யப்பட்ட யுரேனியம் (Reprocessed uranium (RepU))


        அணு எரிபொருளை சிறப்பு மறுசுழற்சி ஆலைகளில் மீண்டும் பதப்படுத்தலாம். அதிலிருந்து மீட்கப்பட்ட யுரேனியம் மறுசுழற்சி செய்யப்பட்ட யுரேனியம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு புதிய வகை எரிபொருளாக மீண்டும் பயன்படுத்தப்படலாம்.


சிறிய மட்டு உலை (Small modular ‌reactors (SMR))

1. சிறிய மட்டு உலைகள் (SMR) அடிப்படையில் மேம்பட்ட சிறிய அணு உலைகள் ஆகும். அவை, ஒவ்வொரு யூனிட்டும் 30 MWe முதல் 300 MWe (மெகாவாட் மின்சாரம்) வரை மின் திறன் கொண்டது. இதற்கு நேர்மாறாக, தற்போது இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நிறுவப்பட்டுள்ள வழக்கமான அணு உலைகள் பொதுவாக 500 MW மின்சாரம் அல்லது அதற்கு மேற்பட்ட மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.

2. சிறிய மட்டு உலைகளின் (SMR) ஒப்பீட்டளவில் எளிமையான மற்றும் மட்டு வடிவமைப்பைக் கொண்டுள்ளன. அவற்றின் கூறுகளை ஒரு தொழிற்சாலையில் தயாரித்து இணைக்கலாம். பொதுவாக செயல்பாட்டில் உள்ள உலைகள் போல திட்ட இடத்தில் அவற்றை முழுமையாகக் கட்டமைக்க வேண்டிய அவசியமில்லை. இது ஒட்டுமொத்த செலவுகளைக் குறைக்கிறது. இது வெவ்வேறு இடங்களில் நெகிழ்வான பயன்பாட்டையும் அனுமதிக்கிறது. இந்த நன்மைகள் காரணமாக, சமீபத்திய ஆண்டுகளில் சிறிய மட்டு உலைகள் (SMR) மிகவும் விருப்பமானதாக மாறிவிட்டன.


Original article : India and Canada sign Uranium pact: What you must know about uranium?. -Roshni Yadav

Share:

இந்தியாவின் முனைவர் பட்டக் கல்வித் திட்டங்களை ஏன் மாற்றி அமைக்க வேண்டும்? -பிஜு தர்மபாலன்

 இந்தியா தற்போது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது; இவற்றைத் தரமான முனைவர் பட்ட (PhD) ஆராய்ச்சிகளின் மூலம் தீர்க்க முடியும். பொது சுகாதாரம், விவசாயம், நிலைத்தன்மை, டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் கல்வி எனப் பல துறைகளில் இந்தச் சிக்கல்கள் நீடிக்கின்றன. ஆனால், நம்மிடம் தற்போது இருக்கும் கல்வி முறைகள், மக்களின் அடிப்படைத் தேவைகளை மையமாகக் கொண்ட இத்தகைய ஆய்வுகளுக்குப் போதிய ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்குகின்றனவா என்பதே இங்குள்ள முக்கியக் கேள்வியாக உள்ளது.


சீனா சமீபத்தில் தனது முதல் "செயல்முறை முனைவர் பட்டங்களை" (Practical PhDs) வழங்கியிருப்பதாக அறிவித்துள்ளது. அதாவது, பாரம்பரியமான ஆராய்ச்சி கட்டுரைகளுக்குப் பதிலாக, நடைமுறை உலகில் பயன்படுத்தக்கூடிய நேரடித் தயாரிப்புகளை உருவாக்கியதற்காக இந்த பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு, இந்தியாவில் முனைவர் பட்டக் கல்வியின் பொருத்தம், அதன் கட்டமைப்பு மற்றும் கலாச்சாரம் குறித்து நீண்டகாலமாக நிலுவையில் இருந்த ஒரு முக்கியமான விவாதத்தை எழுப்பியுள்ளது. சீனாவின் இந்தப் புதிய முறையில், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் நீண்ட ஆய்வேடுகள் அல்லது ஆய்விதழ் வெளியீடுகளின் எண்ணிக்கையை வைத்து மதிப்பிடப்படாமல், அவர்கள் உருவாக்கிய செயல்படும் முன்மாதிரிகள் மற்றும் நடைமுறை வாழ்க்கைப் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகிறது. 

இந்த மாற்றமானது, நடைமுறைச் சாத்தியமான கண்டுபிடிப்புகளையும் கல்விசார் எழுத்துகளுக்கு இணையானதாகக் கருதுகிறது. மேலும், ஒரு முனைவர் பட்டம் (PhD) என்பது நீண்ட ஆய்வறிக்கைகளையும், பல ஆய்வுக் கட்டுரைகளையும் மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்ற நீண்டகால நம்பிக்கையை இது கேள்விக்குள்ளாக்குகிறது. ஒரு முனைவர் பட்டத்தை ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கையை வைத்து மதிப்பிட வேண்டுமா அல்லது அந்த ஆராய்ச்சியின் சமூகத் தாக்கம் மற்றும் நடைமுறைப் பயன்பாட்டை வைத்து மதிப்பிட வேண்டுமா என்பதை இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்கின்றனர். 


கல்விசார் குறைபாடு


இந்தியாவில் ஆராய்ச்சிசெய்ய விரும்பும் மாணவர்களுக்கு உள்ள ஒரு மிகப்பெரிய சவால், முனைவர் பட்டப் (PhD) படிப்பை முடிக்க நீண்டகாலம் எடுத்துக்கொள்வதாகும். பல பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இதை முடிக்க மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவும், சில சமயங்களில் எட்டு ஆண்டுகள் வரையிலும்கூட ஆகிறது. இந்தத் தாமதத்திற்குப் பல காரணங்கள் இருந்தாலும், பெரும்பாலானவை ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதில் (Publishing) ஏற்படும் சிரமங்களோடு தொடர்புடையவை. பல துறைகளில், ஒரு மாணவரின் முன்னேற்றமானது அவருடைய தனித்துவமான சிந்தனைகளின் ஆழத்தை வைத்து மதிப்பிடப்படுவதில்லை. மாறாக, குறிப்பிட்ட தரவுத்தளங்களில் பட்டியலிடப்பட்ட ஆய்விதழ்களின் எண்ணிக்கை மற்றும் அந்த ஆய்விதழ்களின் புகழை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இத்தகைய அணுகுமுறை, ஆராய்ச்சியின் தரம் மற்றும் அதன் பொருத்தப்பாடு ஆகியவற்றிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. 


கல்விசார் மேன்மையை நிலைநாட்டுவதில் ஆய்வறிக்கைகளை வெளியிடுவது ஒரு முக்கிய அங்கமாக இருந்தாலும், ஒரு பட்டத்தைப் பெறுவதற்காகப் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட இதழ்களில் ஆய்வுகளை வெளியிட வேண்டும் என்பதில் தற்போது காட்டப்படும் அதீத ஆர்வம், ஆழமற்ற மேலோட்டமான ஆராய்ச்சிகளுக்கே வழிவகுக்கிறது. இத்தகைய அணுகுமுறையால் ஒரு குறிப்பிட்ட துறையின் அறிவுத்தளம் விரிவடைவதோ அல்லது நடைமுறை உலகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைப்பதோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை ஏதேனும் ஒரு இதழில் (journal) வெளியிட்டே தீரவேண்டும் என்ற கட்டாயம், அவர்களுக்குப் பெரும் மனஅழுத்தத்தை உருவாக்குகிறது. இது தரம் குறைந்த அல்லது போலி இதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுவது போன்ற நெறிமுறையற்றச் செயல்களில் அவர்கள் அறியாமலேயே ஈடுபடுவதற்கான சூழல் அமைந்துவிடுகிறது.


அறிஞர்களின் அவலநிலை


பல ஆய்வகங்களில், முனைவர் பட்ட (PhD) ஆராய்ச்சியாளர்கள் வெறும் தொழிலாளர்களைப் போல நடத்தப்படுவதோடு, அவர்களின் உழைப்பை மேற்பார்வையாளர்கள் மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர். ஏற்கனவே பயிற்சி பெற்ற மாணவர்களைத் தக்கவைத்துக்கொண்டு, அவர்களின் உழைப்பிலிருந்து ஆதாயம் அடைவதற்காக, 'ஆய்வுக் கட்டுரை வெளியீடு' என்ற பெயரில் மாணவர்கள் ஆய்வகத்தில் தங்கும் காலத்தை மேற்பார்வையாளர்கள் திட்டமிட்டே நீட்டிக்கின்றனர். மேலும், தங்கள் ஆய்வகத்தின் செயல்பாடுகளைத் தொடர, மாணவர்களுக்குச் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகும் என்ற வாக்குறுதிகளை அளிக்கின்றனர். ஆனால் உண்மையில், இத்தகைய வெளியீடுகள் மாணவர்களின் எதிர்காலத்தைவிட, மேற்பார்வையாளர்களின் பணி மதிப்பீட்டிற்கும் பதவி உயர்விற்குமே அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.


கட்டணம் பெற்றுக்கொண்டு விரைவாக ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் தரமற்ற இதழ்களால் இந்தப் பிரச்சனை மேலும் மோசமடைகிறது. ஆய்வு மாணவர்களுக்கு இருக்கும் 'கட்டுரை வெளியிட வேண்டும்' என்ற நெருக்கடியைப் பயன்படுத்திக்கொள்ளும் இத்தகைய இதழ்கள், கல்வி நேர்மையைக் குலைக்கும் குறுக்குவழிகளை உருவாக்குகின்றன. தற்போதைய சூழலில், இந்தியக் கல்வி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட இதழ்களில் கட்டுரைகளை வெளியிடவேண்டும் என்று கட்டாயப்படுத்தினாலும், அத்தகைய இதழ்களின் தரமும் நம்பகத்தன்மையும் பெருமளவில் வேறுபடுகின்றன. மேலும், இந்த அங்கீகாரமே இன்று ஒரு வணிகமாக மாறிவிட்டது. இதன் விளைவாக, பெரும்பாலான முனைவர் பட்ட ஆய்வுகள் அறிவியல்ரீதியான தரத்தையோ அல்லது சமூகத்திற்கான பங்களிப்பையோ வழங்குவதற்குப் பதிலாக, வெறும் நிர்வாக நடைமுறைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.


ஆய்வேடுகளை சமர்ப்பிப்பதில் உள்ள தடைகள்


பல பல்கலைக்கழகங்களில், முனைவர் பட்ட (PhD) ஆய்வறிக்கைகள் அவற்றின் பக்கங்களின் எண்ணிக்கையை வைத்தே மதிப்பிடப்படுகின்றன, இதனால் அவை பெரும்பாலும் 200 பக்கங்களுக்கும் மேலாக அமைகின்றன. பக்கங்கள் அதிகரிக்க அதிகரிக்க ஆய்வின் தரம் உயரும் என்ற தவறான நம்பிக்கை பரவலாக உள்ளது. ஆனால், நோபல் பரிசு பெற்ற பல ஆராய்ச்சிக் கட்டுரைகள்கூட ஒருசில பக்கங்களிலேயே மிகச் சிறப்பாக விளக்கப்பட்டிருப்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. ஒரு சிறந்த ஆராய்ச்சியைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் விளக்கிவிட முடியும் எனும்போது, பக்கங்களின் எண்ணிக்கைக்காக அதனை வீணாக நீட்டிப்பது முற்றிலும் தேவையற்ற ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 


நீண்ட அளவிலான ஆய்வேடுகளை உருவாக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால், ஆய்வாளர்கள் நீண்ட முன்னுரைகள் மற்றும் விரிவான இலக்கிய ஆய்வுகளுக்காகத் தேவையற்ற நேரத்தைச் செலவிடுகின்றனர். இதனால், தற்போது உலகெங்கிலும் உள்ள பல முன்னணிப் பல்கலைக்கழகங்கள், ஆய்வுக் கட்டுரையின் அளவைவிட அதன் தனித்துவமான பங்களிப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சுருக்கமான ஆய்வேடுகளைத் தாக்கல் செய்யும் முறைக்கு மாறி வருகின்றன.


இந்தியாவின் முனைவர் பட்ட (PhD) கல்வி முறையில் உள்ள ஒரு முக்கியமான கட்டமைப்புப் பிரச்சனை என்னவென்றால், பழமைவாத ஆய்வேடு சமர்ப்பிப்பு முறை மற்றும் நீண்டகால நிர்வாக நடைமுறைகளே ஆகும். மாணவர்கள் தங்களது ஆராய்ச்சியை முடித்த பிறகும், ஆய்வேட்டைச் சமர்ப்பிப்பதிலும், அதன் மதிப்பீட்டு முடிவுகளுக்காகக் காத்திருப்பதிலும், இறுதியாக வாய்மொழித் தேர்வை (Viva-voce) முடிப்பதிலும் பெரும் காலதாமதத்தை எதிர்கொள்கின்றனர். மாணவரின் ஆராய்ச்சித் திறன் அல்லது அந்த ஆய்வின் முக்கியத்துவம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், இந்தத் தேவையற்ற நிர்வாகத் தாமதங்கள் ஒரு முனைவர் பட்டப் படிப்பின் இறுதிக்கட்டத்தை பல மாதங்கள், சில நேரங்களில் பல ஆண்டுகள் வரை நீட்டித்துவிடுகின்றன.


சமூகத்திற்குப் பயனளிக்கக்கூடிய புதிய தொழில்நுட்பங்கள் அல்லது சிகிச்சை முறைகள் போன்ற ஆக்கபூர்வமான கருத்துக்களை உருவாக்கும் சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கு, நீண்டகால ஆய்வுக் காலதாமதங்கள் அவர்களது முனைவர் பட்ட ஆய்வின் அடிப்படை நோக்கத்தையே சிதைத்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. 


முனைவர் பட்ட ஆய்வின் முக்கியத்துவம்


இந்தியாவின் தற்போதைய முனைவர் பட்ட (PhD) ஆய்வு முறை மீதான ஒரு முக்கிய விமர்சனம் என்னவென்றால், மேற்கொள்ளப்படும் பல ஆய்வுகள் சமூகத்திற்குப் பெரிய அளவில் பயன்படுவதில்லை என்பதாகும். பல ஆய்வேடுகள் வெறும் கல்வித்துறை ஆவணக் காப்பகங்களோடு முடங்கிவிடுகின்றனவே தவிர, அவை பொதுக் கொள்கை உருவாக்கம், வணிகரீதியிலான கண்டுபிடிப்புகள் அல்லது சமூக ஆரோக்கிய மேம்பாடு போன்றவற்றிற்கு அரிதாகவே பங்களிக்கின்றன. குறிப்பாக, பல பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வேடுகள் முறையான பயன்பாடின்றி வெறும் அறைகளிலும், கவனிக்கப்படாத இடங்களிலும் தேங்கிக் கிடக்கின்றன.


ஒரு முனைவர் பட்டப் படிப்பு (PhD) என்பது தனிமைப்படுத்தப்பட்ட வெறும் அறிவுசார் பயிற்சியாக மட்டும் இருந்துவிடாமல், ஆழமான ஆராய்ச்சியை நடைமுறை உலகத் தாக்கத்தோடு இணைப்பதாக இருக்க வேண்டும். சீனாவின் நடைமுறைசார் முனைவர்பட்ட மாதிரியானது, முனைவர் பட்ட ஆய்வுகளை நடைமுறை உலகப் பயன்பாடுகள் மற்றும் தொழில்துறைத் தேவைகளோடு இணைப்பதன் மூலம் இக்குறையை நிவர்த்தி செய்கிறது. மேலும், இந்த ஆய்வுகள் கல்வியாளர்கள் மற்றும் தொழில்முறை வல்லுநர்கள் அடங்கிய குழுக்களால் மதிப்பீடு செய்யப்படுகின்றன.


பொது சுகாதாரம், விவசாயம், நிலைத்தன்மை, டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் கல்வி உள்ளிட்ட இந்தியாவின் நடைமுறைச் சவால்களுக்கு வலுவான முனைவர் பட்ட (PhD) ஆராய்ச்சிகள் பெரும் தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இருப்பினும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான இத்தகைய ஆராய்ச்சிகளுக்கு நமது தற்போதைய கல்விமுறை போதிய ஆதரவையும் வசதிகளையும் வழங்குகிறதா என்பதே தற்போது எழுந்துள்ள முக்கியமான கேள்வியாகும்.


இந்தியப் பல்கலைக்கழகங்கள் இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப முனைவர் பட்ட (PhD) கல்வியை மறுபரிசீலனை செய்து சீரமைக்க வேண்டியது அவசியமாகும். டிஜிட்டல் யுகத்தில், வெறும் பாரம்பரியத்திற்காக மட்டும் பல ஆண்டுகளை முனைவர் பட்டத்திற்காகச் செலவிடுவது தற்போதைய சூழலுக்குப் பொருந்தாது என்கின்றனர். ஆய்வேடுகளின் கட்டமைப்பும் அதன் மதிப்பீடும், எத்தனை ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன என்பதைவிட, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சமூகப் பயன்பாடு ஆகியவற்றிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டும். முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரிப்பது நாட்டிற்குப் பயன் தந்துவிடாது என்றும் தேசத்தைக் கட்டமைப்பதற்கும், மனிதகுலத்தின் நலனுக்கும் பங்களிக்கக்கூடிய உயர்தரமான ஆராய்ச்சிகளே இன்றைய இந்தியாவிற்கு தேவையானதாகக் கருதப்படுகிறது. 


பிஜு தர்மபாலன், பெங்களூருவின் கார்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் கல்வி விவகாரங்களுக்கான தலைவராகவும், பெங்களூருவின் தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தின் துணை ஆசிரிய உறுப்பினராகவும் உள்ளார்.


Original article : Why India needs to radically think its doctoral education programmes -Biju Dharmapalan

Share:

இந்தியாவிற்கு கட்டாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தகவல் வெளிப்பாட்டுத் தரநிலை தேவை. -வருண் அகர்வால், ஆதித்ய சின்ஹா

 ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளை முறையாகத் திட்டமிட்டு அறிக்கை சமர்ப்பிப்பதன் மூலம், செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும், கூடுதல் நிதி உதவி கிடைக்கும் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் சிறப்பான முறையில் அமையும் என்கின்றனர். 


ஜார்ஜ் அகர்லோஃப் (George Akerlof) 1970-ஆம் ஆண்டில் வெளியிட்ட 'The Market for Lemons’ என்ற ஆய்வறிக்கை, ஒரு சந்தையில் வாங்குபவர்களால் தரமான பொருட்களையும் தரம் குறைந்த பொருட்களையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாதபோது, அவர்கள் எல்லா பொருட்களுக்கும் குறைவான விலையையே நிர்ணயிப்பார்கள் என்றும், இதனால் தரமான பொருட்கள் சந்தையைவிட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்றும் விளக்குகிறது. இதே வாதம் இன்றைய நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் பொருந்தும்; இந்தியாவில் பெருநிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.23% என்ற அளவிலேயே முடங்கிக்கிடக்கின்றது. இது உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது.  நிறுவனங்கள் நஷ்டத்திற்கு அஞ்சுகின்றன என்பதைத் தாண்டி, மூலதனச் சந்தைகள் புதுமைகளை (Innovation) சரியாக மதிப்பீடு செய்வதற்குத் தேவையான போதிய தகவல்கள் இல்லாதது மற்றொரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ஒரு புதிய கண்டுபிடிப்பு வெளிப்படையாகத் தெரியாதபோது, அதன் மதிப்பு குறைவாகக் கணக்கிடப்படுகிறது. அவ்வாறு மதிப்பு குறையும்போது அத்தகைய கண்டுபிடிப்புகள் உருவாவதும் குறைகிறது. மேலும், சரியான வெளிப்படைத்தன்மை இல்லாதபோது, தரம் குறைந்த, போலியான அல்லது வெறும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட 'புதுமை' திட்டங்களை அடையாளம் கண்டு நீக்குவதும் கடினமாகிறது.



வளர்ச்சியை ஊக்குவித்தல்


பிரவுன் மற்றும் மார்டின்சன் (2018) மேற்கொண்ட ஆய்வின்படி, ஒரு நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் தரம் மேம்படும்போது, அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) செலவினம் கணிசமாக அதிகரிக்கிறது; இது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development (OECD)) நாடுகளின் சராசரியில் 6% முதல் 12% வரையிலும், சர்வதேச அளவிலான பெரிய நிறுவனங்களில் 3% முதல் 14% வரையிலும் உயர்கிறது. இந்த தாக்கம் குறிப்பாகப் பங்குச் சந்தை முதலீடுகளைச் சார்ந்து இயங்கும் மற்றும் கண்டுபிடிப்புகளை முதன்மையாகக் கொண்ட துறைகளில் மிக வலுவாகக் காணப்படுகிறது. மிக முக்கியமாக, இதே காலகட்டத்தில் கட்டிடங்கள் அல்லது இயந்திரங்கள் போன்ற சொத்துக்களின் மீதான முதலீடு அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், வெளிப்படைத்தன்மையானது முதலீடுகளைப் பாதுகாப்பான சொத்துக்களை நோக்கி  நகர்த்தாமல், அதிக அபாயம் மற்றும் நிச்சயமற்றத் தன்மை கொண்ட புதுமையான கண்டுபிடிப்புகளை நோக்கியே வழிநடத்துகிறது என்பதை இந்த ஆய்வு தெளிவுபடுத்துகிறது.


சீனாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இதற்கு வலுவான சான்றுகளை வழங்குகின்றன. ஷாங்காய் பங்குச் சந்தையில் கட்டாயமாக்கப்பட்ட நிதி வெளிப்படைத்தன்மை, குறிப்பாக அரசு சாரா நிறுவனங்கள், உயர்தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் நிதி நெருக்கடியில் உள்ள நிறுவனங்களிடையே அதிக அளவிலான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது (Liu, Ye & Liu, 2023). இருப்பினும், மருந்துத் தயாரிப்பு போன்ற துறைகளில் இதில் ஒரு முக்கியமான அம்சம் கவனிக்கப்பட வேண்டும். நிறுவனங்கள் தங்களின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி விரிவாக வெளிப்படுத்தும்போது, அவை ஒட்டுமொத்தத் துறைக்குமான சமிக்ஞைகளாக அமைகின்றன. தங்களின் போட்டியாளர்களின் திட்டத்தரம், காலக்கெடு மற்றும் ஒருவருக்கொருவர் சார்ந்திருக்கும் திட்டங்களைக் கவனித்த பிறகு, நிறுவனங்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை மாற்றியமைத்துக் கொள்கின்றன. இதன்விளைவாக, நிதி வசதி குறைந்த அல்லது பலவீனமான நிறுவனங்கள் தங்களின் திட்டங்கள் தரம் குறைந்தவை என்பதை உணர்ந்து, அவற்றை நிறுத்திவிடுகிறன அல்லது குறைத்துக் கொள்கின்றன. இது "தொகுப்புத் தூய்மையாக்கலுக்கு" (Portfolio purification) வழிவகுக்கிறது. அதாவது, தரம் குறைந்த அல்லது அதிக ஆபத்துள்ள திட்டங்கள் முன்கூட்டியே கைவிடப்பட்டு, மூலதனமானது வலுவான அறிவியல் திட்டங்களுக்காகச் செலவிடப்படுகிறது. இதனால் பாதுகாப்பு மேம்பட்டாலும், கற்றல் விளைவுகள்  போட்டி அழுத்தத்தைவிட வலுவாக இருப்பதால், அதிக ஆபத்து நிறைந்த நீண்டகாலத் திட்டங்கள் குறைகிறது. இருந்தபோதிலும், இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவதன் அவசியத்தைக் குறைத்துவிடாது. ஏனெனில், வெளிப்படைத்தன்மை என்பது கண்டுபிடிப்புகளைச் சிறந்த வாய்ப்புகளை நோக்கி நகர்த்தவும், முதலீட்டுத் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.


கொள்கை வரைவு 


இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சூழல் தற்பொழுது வெளிப்படையான தகவல்கள் கிடைப்பதைத் தடுக்கும் வகையில் உள்ளது. இந்தத் தகவல் இடைவெளியைச் சரிசெய்ய, இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (Securities and Exchange Board of India (SEBI)) பட்டியலிடல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள் (Listing Obligations and Disclosure Requirements (LODR) Regulations, 2015)) விதிகள் 2015-ன்கீழ், ஒரு 'கட்டாய ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வெளிப்படுத்தல் தரநிலையானது முன்மொழியப்படுகிறது. இந்த முன்மொழிவு, நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை ஆராய்ச்சிக்காகச் செலவிட வேண்டும் என்றோ அல்லது குறிப்பிட்ட தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும் என்றோ கட்டாயப்படுத்தவில்லை. மாறாக, பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஐந்து முக்கிய அம்சங்களில் தங்களின் கண்டுபிடிப்புத் தரவை வெளிப்படுத்த வேண்டும்: முதலீட்டாளர்கள் உண்மையான ஆராய்ச்சிச் செலவுகளைப் புரிந்துகொள்ள ஏதுவாகப் பிரிவு வாரியான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவுகள்; அறிவுசார் சொத்துரிமையை மதிப்பிட காப்புரிமை (Patent) நடவடிக்கைகள்; தொழில்நுட்பத் திறன் வலிமையைக் காட்ட பணியாளர்களின் விவரம்; திட்டங்களின் முதிர்ச்சியை விளக்கத் தொழில்நுட்பத் தயார்நிலை (Technology Readiness Level (TRL)); மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தயாரிப்புகள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் ஆகியவை ஆகும். இத்தகைய வெளிப்படைத்தன்மை பல நாடுகளில் நடைமுறையில் இருந்தாலும் இந்தியாவில் இல்லை, இதனால் முதலீட்டாளர்களுக்குப் போதிய தரவுகள் கிடைப்பதில்லை. முக்கியமாக, இந்த முன்மொழிவு நிறுவனங்களின் ரகசியத் தகவல்களைக் கோரும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்கின்றனர். 

முழுமையாகச் செயல்படுத்துவதற்கு முன்னதாக, வாரியம் இந்தத் தகவல்களை வெளிப்படுத்துமாறு கோர வேண்டும்.


இந்த நடைமுறையை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு முன்பாகவே, இதற்கான விவரங்களைத் தாக்கல் செய்வதை வாரியம் கட்டாயமாக்க வேண்டும். நிறுவனங்கள் இப்புதிய முறைக்குப் பழக்கப்படவும், தரவுகளின் துல்லியத்தை மேம்படுத்தவும் உதவும் வகையில், முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இந்தத் தகவல்களை வெளியிடுவதைத் தன்னார்வ அடிப்படையில் அனுமதிக்கலாம். இந்த இடைக்கால மாற்றுக் காலத்திற்குப் பிறகு, இந்த விவரங்களைத் தாக்கல் செய்வது அதிகாரப்பூர்வமாகக் கட்டாயமாக்கப்பட  வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். 


ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தரநிலையை ஏற்றுக்கொள்வதற்கு ஐந்து முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக, ஒரு கட்டமைக்கப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தும் முறை, நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையே உள்ள தகவல் இடைவெளியைக் குறைக்கிறது. எளிமையாகச் சொன்னால், உண்மையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கும், அவ்வாறு செய்யாத நிறுவனங்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை முதலீட்டாளர்களால் அடையாளம் காண முடியாதபோது, அவர்கள் எல்லா நிறுவனங்களையும் ஒரே மாதிரியான சராசரி நிறுவனங்களாகவே கருதுகின்றனர். இத்தகைய தவறான விலை மதிப்பீடு, சந்தை தங்கள் முயற்சியை அங்கீகரிக்காது என்ற எண்ணத்தை நிறுவனங்களுக்குள் ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன.


இரண்டாவதாக, நிறுவனங்கள் தங்களைப் பற்றிய தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிப்பது, அவை திரட்டும் மூலதனத்திற்கான செலவைக் குறைக்க உதவுகிறது. ஒரு நிறுவனம் தனது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்போது, பெரிய முதலீட்டாளர்கள் அதிக நம்பிக்கையைப் பெறுகிறார்கள். இதனால் அந்த நிறுவனப் பங்குகளின் விலை நிலைத்தன்மையுடன் இருப்பதோடு, குறைந்த வட்டியிலோ அல்லது செலவிலோ நிதி திரட்டவும் முடிகிறது. குறிப்பாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வடிவமைப்பு அல்லது காப்புரிமை (Patents) போன்ற கண்ணுக்குத் தெரியாத சொத்துகளை (Intangible assets) அதிகம் நம்பியிருக்கும் நிறுவனங்களுக்கு இந்த வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியமாகிறது. 

சந்தை ஒழுக்க மேம்பாட்டிற்கான ஊக்கம்


மூன்றாவதாக, வெளிப்படைத்தன்மை என்பது சந்தை ஒழுக்கத்தை (Market discipline) மேம்படுத்துகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவுகள், காப்புரிமைகளின் எண்ணிக்கை அல்லது திட்டங்களின் முன்னேற்றம் போன்ற விவரங்கள் முதலீட்டாளர்களுக்குத் தெரியவரும்போது, சாதாரண செயல்பாடுகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தங்கள் பங்குதாரர்கள், நிர்வாகக் குழுக்கள் மற்றும் போட்டியாளர்களிடமிருந்து சிறப்பாகச் செயல்படவேண்டிய அழுத்தத்தை உணர்கின்றன. தென்கொரியா, சர்வதேச நிதி அறிக்கையிடல் (Korean International Financial Reporting Standard (K-IFRS)) தரநிலைகளின்கீழ் கண்ணுக்குத் தெரியாத சொத்துகள் தொடர்பான விவரங்களை வெளியிடுவதைக் கட்டாயமாக்கிய பிறகு இது தெளிவாகத் தெரிந்தது. தங்கள் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் புள்ளிவிவரங்கள் பொதுவெளியில் வெளியாகும் என்பதை அறிந்தவுடன், பல நிறுவனங்கள் தங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவினங்களை அதிகரித்தன.


நான்காவதாக, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்த தகவல்களை வெளிப்படையாக வெளியிடுவது, அந்த கண்டுபிடிப்புச் செயல்பாடுகளை அதிக உற்பத்தித்திறன் கொண்டதாகவும் திறமையாகவும் மாற்றுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின் (OECD) 2021-ஆம் ஆண்டு 'கண்ணுக்குத் தெரியாத சொத்துக்கள்' (Intangibles) குறித்த அறிக்கை கூறுவது என்னவென்றால், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாய் அல்லது டாலருக்கும், கண்டுபிடிப்புகளை முறையாகப் பதிவு செய்யும் நாடுகள் அதிக காப்புரிமைகளையும் சிறந்த வணிகரீதியான பலன்களையும் பெறுகின்றன. இது ஏன் நிகழ்கிறது என்றால், வெளிப்படைத்தன்மை இருக்கும்போது ஆராய்ச்சி நிதியானது மிகவும் திறம்பட சரியான திட்டங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.


ஐந்தாவதாக, கட்டாயத் தகவல் வெளிப்படுத்துதல் (Mandatory disclosure) சந்தையின் இயல்பான போக்கைச் சிதைப்பதில்லை. இது நிறுவனங்களை அதிகப்படியாகச் செலவு செய்ய வற்புறுத்துவதில்லை, அரசாங்கத்திற்கு நிதிச்சுமையை ஏற்படுத்துவதில்லை, மேலும் எந்தவொரு குறிப்பிட்ட துறைக்கும் சாதகமாகச் செயல்படுவதில்லை. நிறுவனங்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் மாற்றங்களை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதில் முழு சுதந்திரத்துடன் செயல்படலாம் என்றும் இந்த முறை, சந்தையில் துல்லியமான தகவல்கள் கிடைப்பதை மட்டுமே உறுதி செய்கிறது. அதன் அடிப்படையில் எந்த நிறுவனத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் அல்லது எதனைத் தவிர்க்க வேண்டும் என்பதை அரசாங்கத்திற்குப் பதிலாக முதலீட்டாளர்களே தீர்மானிக்கின்றனர்.


கண்ணுக்குத் தெரியாத குறைகளை (Invisible lemons) தானாகவே நிறைகளாகவோ அல்லது லாபமாகவோ சந்தைகளால் மாற்றிவிட முடியாது. எனவே, இந்தியா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் மிகத் தெளிவாகக் கவனம் செலுத்த வேண்டும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் பெரிதும் உதவும் என்கின்றனர். 


வருண் அகர்வால், FAST-India மற்றும் Change Engine ஆகிய அமைப்புகளின் இணை நிறுவனர் ஆவார். ஆதித்யா சின்ஹா, பெருநிதியியல் (Macroeconomics) மற்றும் புவிசார் அரசியல் விவகாரங்கள் குறித்து எழுதுபவர் ஆவார்.


Original article : India’s need for a mandatory R&D disclosure standard -Varun Aggarwal, Aditya Sinha

Share: