தமிழ்நாட்டின் சர்ச்சைக்குரிய ஆளுநர்களின் வரலாறு 1950-களைச் சேர்ந்த ஸ்ரீ பிரகாசா-வில் இருந்து தொடங்குகிறது -டி. ராமகிருஷ்ணன்

 சி. ராஜகோபாலாச்சாரி மீண்டும் முதல்வராகப் பதவியேற்பது பற்றிய பேச்சு பரவத் தொடங்கியபோது, ​​அவரது நெருங்கிய நண்பரையும் பிரபல தமிழ் பத்திரிகையாளருமான 'கல்கி' ஆர். கிருஷ்ணமூர்த்தி தனது தமிழ் வார இதழில் அதை, ரமண மகரிஷி திருவண்ணாமலை நகராட்சியின் தலைவராகப் பொறுப்பு ஏற்பது போல ஒப்பிட்டார்.


ஆளுநர்களின் பங்கு மற்றும் நடவடிக்கைகள், குறிப்பாக பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் அவர்களின் செயல்பாடு நாட்டில் மீண்டும் அரசியல் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான  ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த உயர்மட்டக் குழு, ஆளுநர்கள் நிர்வாகத் துறைகளில் ஒன்றிய அரசின் அத்துமீறலுக்கான கருவிகளாக இருந்துவிடாமல் பார்த்துக் கொள்வதற்கான வழிகளைப் பரிந்துரைத்தது.


ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே பிரச்சனைகள் தொடர்ந்துவரும் நிலையில் இந்தக் குழுவின் பரிந்துரைகள் வந்துள்ளன. இருப்பினும், 1952 முதல் ஆளுநர்களின் சர்ச்சைக்குரிய செயல்பாடுகள் தமிழ்நாட்டிற்கு புதிதல்ல. அப்போதைய ஆளுநர் ஸ்ரீ பிரகாசா, ஒரு தீவிர காங்கிரஸ் கொள்கை கொண்டவர், அப்போது அவர் செய்த செயல், தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்ததைவிட அதிர்ச்சியூட்டும் வகையில் வந்தது. தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டமன்றத்திற்கு வழிவகுத்தது.


இலக்கியம், அறிவியல், கலை, கூட்டுறவு இயக்கம் மற்றும் சமூக சேவை போன்ற துறைகளில் சிறப்பு அறிவு அல்லது நடைமுறை அனுபவம் உள்ள நபர்களை நியமிக்க அனுமதிக்கும் அரசியலமைப்பு விதியின்கீழ், தீவிர அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற சி. ராஜகோபாலாச்சாரியை சட்டமன்றத்திற்கு அவர் பரிந்துரை செய்தார். முகமது உஸ்மான், வி. பாஷ்யம் ஐயங்கார் மற்றும் ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் ஆகிய மூவரும் பரிந்துரைக்கப்பட்டனர்.


உண்மையில், இந்தியாவின் ஒரே தலைமை ஆளுநராக இருந்த ராஜாஜியை முதலமைச்சராக கொண்டுவர காங்கிரஸ் கட்சி பல வாரங்கள் முயற்சி செய்தது. ஆனால், சி.ராஜகோபாலாச்சாரி மீண்டும் முதலமைச்சராக வருவார் என்ற பேச்சு வந்தபோது, ‘கல்கி’ ஆர். கிருஷ்ணமூர்த்தி தனது வார இதழில் அதை, ரமண மகரிஷி திருவண்ணாமலை நகராட்சித்தலைவராகப் பொறுப்பு ஏற்பது போல ஒப்பிட்டார் என்று ராஜ்மோகன் காந்தியின் வாழ்க்கை வரலாறு ‘Rajaji: A Life’  குறிப்பிடுகிறது.


எதிர்பார்த்தபடி, சி. ராஜகோபாலாச்சாரியின் நியமனம் மட்டும் ஒரு அரசியல் விவாதத்தை கிளப்பியது. ஏனெனில், அவர் பின்னர் ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய மாநிலத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போதும் சரி, இப்போதும் சரி, சி.ராஜகோபாலாச்சாரியின் இலக்கிய நிபுணத்துவம் அல்லது அவரது இலக்கியப் புலமை மற்றும் அவரது நியமனத்தை யாரும் கேள்வி எழுப்பவில்லை. ஆனால், மக்களின் எதிர்மறை தீர்ப்புக்குப் பிறகு இடைக்காலமாக பதவியில் இருக்கும் அமைச்சரவை, சட்டமன்றத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப ஆளுநரிடம் பரிந்துரை செய்யலாமா,  அதுபோன்ற பரிந்துரையை ஆளுநர் ஏற்கலாமா என்பதே தொடர்ந்து விவாதிக்கப்படும்   கேள்வியாக உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party of India (CPI)) மூத்த மார்க்சிஸ்ட் தலைவர் பி. ராமமூர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆளுநரின் முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். மேலும், இந்த நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் தனது வாதத்தை முன் வைத்தார். இது ஒரு "தவறான நடவடிக்கை" (malafide exercise) என்றும், அலுவலகத்தின் அதிகாரங்களை "தவறானவை" என்றும் கூறினார். இருப்பினும், நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.


உண்மையில், பிரதமர் ஜவஹர்லால் நேரு, இமாச்சலப் பிரதேசத்தின் மஷோப்ராவில் ஓய்வு பெற்றபோது, ​​ஏப்ரல் 3, 1952 அன்று ஒரு கடிதம் மூலம் தனது நண்பரும் ஆளுநருமான ஸ்ரீ பிரகாசாவின் நடவடிக்கைக்கு தனது மறுப்பைத் தெரிவித்ததாக nehruarchive.in என்ற தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்த முன்னேற்றங்கள், குறிப்பாக நீங்கள் ராஜாஜியை சட்டமேலவைக்கு பரிந்துரைத்தது எனக்கு திருப்தியளிக்கவில்லை” என்று நேரு மார்ச் 31 அன்று ஆளுநருக்கு எழுதிய கடிதத்திற்கும், மாநில அரசியல் முன்னேற்றங்கள் குறித்த தந்திக்கும் பதிலளிக்கும் விதமாக எழுதினார். இருப்பினும், நான்கு நாட்களுக்குப் பிறகு, பிரதமர் சி.ராஜகோபாலாச்சாரிக்கு உதவத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் தலைமைத்துவப் பிரச்சினையில் அவரது அணுகுமுறையையும் விளக்கினார். "மெட்ராஸில் நிகழ்வுகள் வேகமாக நடக்கத் தொடங்கின. இங்கு நான் மிகவும் உதவியற்றவனாக உணர்ந்தேன். இங்கிருந்து எங்கள் தரப்பில் இருந்து எந்த தலையீடும் உதவாது என்பதை நான் உணர்ந்தேன். மேலும், இந்த விவகாரத்தை நீங்களும் மற்றவர்களும் மெட்ராஸிலேயே முடிவு செய்ய வேண்டும். இயற்கையாகவே, இந்த நிலையில் இந்த பொறுப்பை ஏற்கும்படி உங்களை வற்புறுத்த நான் தயங்கினேன். மறுபுறம், ஏதாவது ஒரு வழியை கண்டுபிடிக்க நாங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் வெற்றிபெறவில்லை" என்று ராஜாஜிக்கு எழுதிய கடிதத்தில் நேரு குறிப்பிட்டார்.


சுதந்திரத்திற்குப் பிறகு, 1946-ல் அதிகப் பெரும்பான்மையைப் பெற்ற காங்கிரஸ், தனி பெரும்பான்மை பெற முடியவில்லை. 375 உறுப்பினர்களைக் கொண்ட சபையில், அந்தக் கட்சி 152 இடங்களை மட்டுமே பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் தமிழ் பேசும் பகுதிகள் 96 இடங்களைப் பெற்றன. அந்தத் தேர்தல் முடிவின் முக்கிய அம்சம், முதலமைச்சர் பி. எஸ். குமாரசுவாமி ராஜாவும், அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பல உறுப்பினர்கள் தோல்வியடைந்தனர். 1952 தேர்தல், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சந்தித்த தோல்விக்கு முன்னோடியாக இருந்தது. அரிசி பற்றாக்குறை பிரச்சினை அப்போது ஆட்சியில் இருந்த அரசுக்கு எதிராக வாக்காளர்களின் மனதை மாற்ற முக்கியக் காரணமாக இருந்தது.


ராஜகோபாலாச்சாரி தலைமையிலான அமைச்சரவையில் நிதி மற்றும் உணவு அமைச்சராக ஆன சி. சுப்பிரமணியம், தனது நினைவுக் குறிப்புகளான “Hand of Destiny தொகுதி 1-ல்”, அரிசி விநியோகத்தில் பொது விநியோக கொள்கையைப் பின்பற்றியதற்காக காங்கிரஸ் கட்சித் தேர்தலில் "அதிக விலை" கொடுக்க வேண்டியிருந்தது என்று கூறினார். 1952-ஆம் ஆண்டு  ஜனவரி–மார்ச் மாதங்களில் தி இந்து இதழில் வெளியான செய்திகள் ஆய்வு செய்தால், சில இடங்களில் மக்களின் தீர்ப்பை காங்கிரஸை மறுத்ததாக சுட்டிக்காட்டியது.


1952-ஆம் ஆண்டு ஜனவரி–பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில், இரண்டாம் இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) 62 தொகுதிகளை வென்றது. கிஸான் மஜ்டோர் பிரஜா கட்சி (Kisan Mazdoor Praja Party (KMPP)) 35 தொகுதிகளை வென்றது. தமிழ்நாடு தொழிலாளிகள் கட்சி (Tamil Nadu Toilers’ Party (TNTP)) 19 தொகுதிகளை வென்றது. கிரிஷிகர் லோக் கட்சி (Krishikar Lok Party (KLP)) 15 தொகுதிகளை வென்றது. சோஷலிஸ்ட் கட்சி 13 தொகுதிகளை வென்றது. காமன்வீல் கட்சி 6 தொகுதிகளை வென்றது. மதராஸ் மாநில முஸ்லிம் லீக் 5, ஃபார்வர்ட் பிளாக் (மார்க்சிஸ்ட்) 3 தொகுதிகளை வென்றது. நிர்ணயப்பட்ட சாதிகள் சங்கம் (SCF) 2 தொகுதிகளை வென்றது. நீதிக் கட்சி 1 தொகுதி வென்றது. 62 சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.


பிளவுபட்ட தேர்தல் முடிவுகளின் காரணமாக, ஆளுநர், காங்கிரஸ் தொகுதியில் பெரும்பான்மை இல்லாத போதிலும், மார்ச் 31, 1952 அன்று காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் தலைவரான சி. ராஜகோபாலாச்சாரியை ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்தார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் மற்றும் கிஸான் மஜ்டோர் பிரஜா கட்சித் தலைமையிலான டி. பிரகாசம், 166 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று அரசை அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பெற்றார். TNTP, KLP, ஃபார்வர்ட் பிளாக் மற்றும் காமன்வீல் கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலானோரும், 37 சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவையும் சேர்த்து, பிரகாசம் ஐக்கிய ஜனநாயக முன்னணி (United Democratic Front) என்ற கூட்டணியை உருவாக்கினார். ஆனால், ஆளுநர் காங்கிரஸ்  தலைவர் பிரகாசத்தின் வாதத்தை ஏற்காமல், ராஜகோபாலாச்சாரியை முதலமைச்சராக நியமித்தார். ராஜாஜி அமைச்சரவையில் காமன்வெல் கட்சியின் தலைவர் எம்.ஏ. மாணிக்கவேலு நாயக்கர் எதிர்பாராத விதமாக சேர்க்கப்பட்டார். மே மாத தொடக்கத்தில் சட்டமன்றம் அமைக்கப்பட்ட நேரத்தில், காங்கிரஸின் பலம் 165-ஆக உயர்ந்தது.


பின்னர், சட்டமன்றத் தேர்தலுக்கான மாதிரி நடத்தை விதிகள்  அறிமுகபடுத்தபட்ட பிறகு, பதவியிலுள்ள அரசு எந்தவொரு கொள்கை முடிவையும் எடுக்கக் கூடாது என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டது. அவசர நிலை காரணமாக ஏதேனும் முடிவு எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டால், அப்போது தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறவேண்டும். அந்த வகையில், இந்த நடைமுறையை உருவாக்கிய பெருமை  தமிழ்நாட்டையே சாரும்.


Original article : Tamil Nadu’s saga of controversial Governors begins with Sri Prakasa of the 1950s. -T. Ramakrishnan

Share: