செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய கவலைகள், தன்னிறைவு இந்தியாவிற்கு (Atmanirbhar India) ஒரு நன்மையாக மாறக்கூடும் -அசோக் குலாட்டி

 ஒவ்வொரு புதிய தொழில்நுட்பமும் பழையதை அழித்து, பெரிய இடையூறுகளை உருவாக்குகிறது. அதேநேரத்தில், இது செயல்திறன் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.


செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் (AI Impact Summit) கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தின் "ரோபோடாக்" (robodog) பிழை அல்லது சில தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞர்களின் "சட்டை அணியாத" (shirtless) ஆர்ப்பாட்டம் இருந்தபோதிலும், இளம் இந்தியர்களிடையே செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்த மாநாடு வெற்றிகரமாக இருந்தது. 91 நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் உலகளாவிய நன்மைக்காக செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதற்கான டெல்லி பிரகடனமான சர்வஜன ஹிதாயா மற்றும் சர்வஜன சுகாயா (அனைவருக்கும் நலன் மற்றும் அனைவருக்கும் மகிழ்ச்சி) ஆகியவற்றை அங்கீகரித்திருப்பது அதன் வெற்றியைப் பறைசாற்றுகிறது.


மூன்று அடிப்படை கேள்விகள் மிகுந்த ஆர்வத்துடனும் அக்கறையுடனும் விவாதிக்கப்பட்டன. முதல் கேள்வி, செயற்கை நுண்ணறிவு (AI) விரைவான வளர்ச்சிக்கு வழிவகுக்குமா? இரண்டாவது, செயற்கை நுண்ணறிவு (AI) அதிக வேலைகளை உருவாக்குமா அல்லது வேலைகளை பறிக்குமா? மூன்றாவது கேள்வி செயற்கை நுண்ணறிவின் (AI) நன்மைகள் மக்களிடையே சமமாகப் பகிரப்படுமா? என்பதுதான்.


முதல் கேள்விக்கான பெரும்பாலான பதில்கள் நேர்மறையானவை. இது ஒட்டுமொத்த வளர்ச்சியை தீவிரப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அறிவு, செயல்திறன் மற்றும் வளர்ச்சியில் மனிதகுலம் முன்னேறக்கூடும் என்று பலர் நம்புகிறார்கள். இதை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அவர்கள் பார்க்கிறார்கள். இது ஒரு ஹாக்கி-ஸ்டிக் தருணம் போன்றது. அங்கு வளர்ச்சி திடீரென்று கடுமையாக உயர்கிறது. அடுத்த பத்தாண்டுகளில், செயற்கை நுண்ணறிவில் (AI) திடீர் வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இது கிட்டத்தட்ட அனைத்து துறைகளின் செயல்பாட்டையும் சீர்குலைக்கும். ஜோசப் ஷூம்பீட்டரின் (1942) படைப்புகளின் அடிப்படையில் இதை "படைப்பு அழிவு செயல்முறை" (process of creative destruction) என்று விவரிக்கலாம். வழக்கம்போல் வணிக முறையில் தொடர்பவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் விடப்படுவதற்கான அபாயம் உள்ளது. மிக விரைவில், இன்று இணையம் பயன்படுத்தப்படுவதைப் போலவே உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்படும். இது உற்பத்தித்திறனை அதிகரிக்கும் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும்.


ஆனால், செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய மிகப்பெரிய விவாதம், "படைப்பு அழிவு செயல்முறை" (process of creative destruction) மிகப்பெரிய வேலை இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதுதான். பலர் இந்த விஷயத்தில் உடன்படவில்லை. சர்வதேச நாணய நிதிய (IMF) நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா வேலை இழப்புகளின் அபாயத்தை எடுத்துரைத்து, வேலை சந்தையில் செயற்கை நுண்ணறிவு (AI) வருகையை சுனாமியுடன் ஒப்பிட்டுள்ளார். வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் 40 சதவீத வேலைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், முன்னேறிய பொருளாதாரங்களில் இந்த எண்ணிக்கை 60 சதவீதத்தை தொடக்கூடும் என்று அவர் மதிப்பிடுகிறார். இது கவலையளிக்கிறது. ஆனால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, செயற்கை நுண்ணறிவை (AI) அறிமுகப்படுத்துவதால் இந்தியத் துறையில் வேலை இழப்புகள் ஏற்படாது என்று கூறியுள்ளார். 1980-களின் பிற்பகுதியில், அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கணினிகளை அறிமுகப்படுத்தியபோது இந்தியாவில் இதேபோன்ற அச்சங்கள் வெளிப்படுத்தப்பட்டன என்பது எனது கருத்து. வங்கிகள், இரயில்வே மற்றும் பல துறைகளில் உள்ள ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும் என்று அஞ்சி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் கணினிகளை அறிமுகப்படுத்துவதை எதிர்த்தனர். இன்று கணினிகளைப் பயன்படுத்தாமல் வங்கிகள் இயங்குவதை நினைத்துப் பார்ப்பதுகூட கடினம். இங்குதான் ஜோசப் ஷூம்பீட்டரின் "படைப்பு அழிவு செயல்முறை" (process of creative destruction) பற்றிய யோசனை ஏன் முக்கியமானது என்பதை இந்த உதாரணம் காட்டுகிறது. ஒவ்வொரு புதிய தொழில்நுட்பமும் பழையதை அழித்து, மிகப்பெரிய இடையூறுகளை உருவாக்குகிறது. ஆனால், அதிக செயல்திறன் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கிறது. இதன் விளைவாக, பொருளாதாரம் வளரும்போது, ​​புதிய வேலைகள் உருவாக்கப்படுகின்றன. இந்த வேலைகளுக்கு அதிக திறன்கள் தேவை. அவை பொதுவாக சிறந்த ஊதியத்தை வழங்குகின்றன. பெரும்பாலான மக்கள் நீண்ட காலத்திற்கு பயனடைகிறார்கள். இருப்பினும், சிலர், குறிப்பாக குறுகியகாலத்தில், இழக்கிறார்கள். அவர்களின் திறன்களை மேம்படுத்த வழிகளைக் கண்டறிய வேண்டும் அல்லது இழக்க நேரிடும் மக்களின் வலியைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அடுத்த கேள்வி சமத்துவம். யார் ஆதாயம் அடைவார்கள்?, யார் இழப்பார்கள்? என்று நாம் கேட்க வேண்டும். ஆரம்பத்தில் தொடங்குபவர்கள் முதலில் ஆதாயம் அடைவார்கள். மேலும், இது குறுகியகாலத்தில் சமத்துவமின்மையை அதிகரிக்கக்கூடும். செயற்கை நுண்ணறிவை (AI) உருவாக்குவதற்கும் அதன் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் தேவையான பெரிய முதலீடுகளை மிகச் சில நாடுகளால் மட்டுமே வாங்க முடியும் என்பதாலும் இது ஏற்படலாம். ஆனால் பல தொழில்நுட்பங்களைப் போலவே, மலிவான விருப்பங்கள் விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், அவற்றின் பயன்பாடு அதிவேகமாக விரிவடைந்து, பெரும்பாலான மக்களுக்கு பயனளிக்கும். உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகள் வாங்கக்கூடிய மற்றும் பெரிய அளவில் பயன்படுத்தக்கூடிய குறைந்த விலை தீர்வுகளை உருவாக்குவதில் இந்தியாவுக்கு வலுவான நன்மை உண்டு. கோவிட் தொற்றுநோய் காலத்தில் தடுப்பூசிகள், ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தின் (UPI) புதுமையான தொழில்நுட்பம் அல்லது சந்திரனின் தென் துருவத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) சந்திரயான்-3 தரையிறங்குவது என எதுவாக இருந்தாலும், தொழில்நுட்பத்திலிருந்து அதிகபட்சமாகப் பெறும் திறனை இந்தியா நிரூபித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவிற்குப் பிறகு, செயற்கை நுண்ணறிவில் (AI) மூன்றாவது உலகளாவிய சக்தியாக இது உருவாகலாம் மற்றும் உலகளாவிய நன்மைக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.


பெரிய அளவில் செயற்கை நுண்ணறிவை (AI) உருவாக்குவதற்கு பெரிய முதலீடுகள் தேவை என்பதில் சந்தேகமில்லை. மேலும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் இதில் ஈடுபடுவதாக உறுதியளித்துள்ளனர். பொதுவான பார்வையில், அமெரிக்கா மற்றும் சீனாவைவிட இந்தியா குறைந்தது ஐந்து ஆண்டுகள் பின்தங்கியுள்ளது. இந்த இரண்டு நாடுகளும் ஏற்கனவே மனித உருவ ரோபோக்களில் செயற்கை நுண்ணறிவை (AI) உருவாக்க போட்டியிடுகின்றன. இந்தியா அவர்களைப் பிடித்து இந்தப் பந்தயத்தில் இணைந்து வழிநடத்துமா? இன்று அதை ஒருவர் உறுதிப்படுத்த முடியாது. ஆனால் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு (AI Impact Summit) நிச்சயமாக நிறைய ஆர்வத்தையும் தீவிர விவாதத்தையும் உருவாக்கியது. மேலும், இது முதலீட்டுத் திட்டங்களைத் திருத்துவதற்கும் வழிவகுத்தது. இப்போது ஒரு சாதகமான கொள்கை சூழலை உருவாக்க இதுவே சரியான நேரம். ஒழுங்குமுறை சிக்கல்கள், தரவு உரிமை மற்றும் சமபங்குகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால், இந்தியா சீன அல்லது அமெரிக்க செயற்கை நுண்ணறிவின் (AI) வெறும் பயனராகவே இருக்க விடப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அது அதன் சொந்த மாதிரிகள், அதன் சொந்த பயன்பாடுகளை இலக்காகக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அது இந்த துணிச்சலான புதிய செயற்கை நுண்ணறிவு (AI) உலகில் "ஆத்மநிர்பர்" (தன்னிறைவு) என்று கூறமுடியும்.


பாஸ்டன் ஆலோசனைக் குழு (BCG) தயாரித்து ஆர்.சந்திரசேகரின் மேற்பார்வையில் புரோசஸ்-ஆல் (Prosus) ஆதரிக்கப்படும் "அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு" (AI for All) என்ற அறிக்கையை வெளியிட்டதற்காக செயற்கை நுண்ணறிவு (AI) உச்சிமாநாட்டின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் சிங்கிற்கு நன்றி சொல்ல வேண்டும். வேளாண் துறையின் இணைத் தலைவராக இருக்கும் நிலை எனக்குக் கிடைத்தது. இதனால், ஒரு முக்கியமான கேள்வியை எழுப்ப முயன்றது. இந்திய விவசாயிகளும் நாட்டின் விவசாயமும் செயற்கை நுண்ணறிவிலிருந்து (AI) என்ன பெறுவார்கள்? இந்தியாவின் 46 சதவீத பணியாளர்களை விவசாயம் பயன்படுத்துவதால், செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடுகள் அதிக உழைப்பை இடமாற்றம் செய்யும் என்ற கவலை எப்போதும் உள்ளது. இந்தியாவின் வேளாண் உணவுமுறையில் செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதை மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளது. உற்பத்திக் கட்டத்தில் துல்லியமான விவசாயத்தில் மட்டுமல்ல, தளவாடங்கள்/சந்தைப்படுத்தல்/செயலாக்க நிலையிலும்கூட பயன்படுத்தப்படும். ஏற்கனவே, பல தனியார் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துகின்றன. மேலும், அரசாங்கம் வேளாண் அடுக்ககத்தையும் (AgriStack) உருவாக்கி வருகிறது, அங்கு அது பயன்படுத்தப்படும். வேளாண்மையில் ஒரு புதிய சகாப்தத்தின் விடியல் நெருங்கிவிட்டது.




AgriStack : வேளாண் அடுக்ககம் (AgriStack) என்பது நிலம், பயிர் மற்றும் உழவர்கள் விவரங்களை இணைத்து மின்னணுமயமாக்கும் இந்திய அரசின் திட்டமாகும். ஏப்ரல் 1, 2023 முதல் செயல்படுத்தப்படும் இத்திட்டம், விவசாயிகளுக்கு தனி அடையாள எண் (Farmer ID) வழங்கி, கடன், மானியம் மற்றும் காப்பீடு போன்ற அரசு சேவைகளை எளிதாகப் பெறவும், புவிசார் குறியீடு மூலம் பயிர் சாகுபடி விவரங்களை கண்காணிக்கவும் உதவுகிறது.


எழுத்தாளர் சர்வதேச பொருளாதார உறவுகள் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலில் (ICRIER) ஒரு புகழ்பெற்ற பேராசிரியர்.


Original article : AI anxiety can turn into an advantage for Atmanirbhar India. -Ashok Gulati

Share: