புதிய நடைமுறை: தேசிய கணக்குத் தரவுகளின் புதிய வரிசை குறித்து…

 நிதி இலக்குகள் இனி மிகவும் துல்லியமான தரவுகளின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும்.


இந்தியாவின் முக்கியப் பொருளாதாரப் புள்ளிவிவரங்களில் ஒன்றாக 'புதிய தேசிய கணக்குத் தரவுகள்' (New National Accounts Data) வெளியிடப்பட்டிருப்பது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. இது கொள்கைரீதியாகக் கூடுதல் கவனம் தேவைப்படும் துறைகளையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)) மற்றும் மொத்த மதிப்பு கூட்டப்பட்ட (Gross Value Added (GVA)) கணக்கீட்டிற்கான அடிப்படை ஆண்டு (Base Year), நீண்ட காலத்திற்குப் பிறகு 2011–12-ஆம் ஆண்டிலிருந்து 2022–23-ஆம் ஆண்டாக மாற்றப்பட்டுள்ளது. அடிப்படை ஆண்டை மாற்றுவதுடன் மட்டுமல்லாமல், மதிப்பீடுகளை இன்னும் துல்லியமாக்க புதிய வழிமுறைகளும் தரவு ஆதாரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக, இடைநிலை மற்றும் இறுதிப் பொருட்களின் பணவீக்கத்தைத் தனித்தனியாகச் சரிசெய்யும் 'இரட்டை விலைக்குறைப்பு முறை' (Double-deflator) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல துறைகளில் செயல்படும் நிறுவனங்களின் உற்பத்தியை அந்தந்தத் துறைகளுக்கு ஏற்பப் பிரித்து வழங்குவதன் மூலம் துறை வாரியான தரவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. முந்தைய முறையைப் போல உத்தேசக் கணக்கீடுகளை நம்பியிருக்காமல், இனி ஒருங்கிணைக்கப்படாத தொழில் நிறுவனங்களின் ஆண்டு ஆய்வு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) மற்றும் காலமுறை தொழிலாளர் வள ஆய்வு (Periodic Labour Force Survey (PLFS)) போன்ற ஆய்வுகள் மூலம் குடும்பங்களின் வருவாய் மற்றும் வேலைவாய்ப்புத் தரவுகள் ஆண்டுதோறும் சேகரிக்கப்படும். முக்கியமாக, நுகர்வோர் பற்றிய விரிவான தகவல்களைத் தரும் சரக்கு மற்றும் சேவை வரித் (GST) தரவுகளும் இதில் பயன்படுத்தப்படும். இதன் மூலம், இதுவரை துல்லியமாகக் கணக்கிட சிரமமாக இருந்த வேளாண்மை மற்றும் முறைசாராத் துறைகளின் நிலையை மிகச் சரியாகக் கணிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, இந்த மாற்றங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதன் உண்மையான அளவை உலகிற்குத் துல்லியமாகக் காட்டும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


புதிய தரவு வரிசையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி  2025–26-ஆம் நிதியாண்டில் 7.6% வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது பழைய கணக்கீட்டு முறையின் 7.4% கணிப்பைவிட சற்றே அதிகம் என்கின்றனர். இந்த வளர்ச்சி விகிதம் ஊக்கமளிப்பதாக இருந்தாலும், பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த அளவு முந்தைய மதிப்பீடுகளைவிடக் குறைவாகவே உள்ளது. புதிய வரிசையின்படி 2025–26-ஆம் நிதியாண்டில் பொருளாதாரத்தின் மதிப்பு ₹345.47 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பழைய மதிப்பீட்டைவிட சுமார் 3.3% குறைவாகும். மேலும் 2023–24 மற்றும் 2024–25-ஆம் ஆண்டுகளுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தித் தரவுகளும் தலா 3.8% குறைக்கப்பட்டுள்ளன. இதனுடன் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியும் சேர்ந்து கொண்டதால், இந்தியாவின் பொருளாதார மதிப்பு தற்போது சுமார் 3.8 டிரில்லியன் டாலராக உள்ளது. இது நாம் இலக்கு வைத்துள்ள 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை இன்னும் தள்ளிப்போடுகிறது. மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு குறையும்போது நிதிப்பற்றாக்குறை மற்றும் கடன் இலக்குகளை எட்டுவதும் ஒன்றிய அரசுக்கு கடினமாகிறது. ஏனெனில் இவை பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Nominal GDP) சதவீதமாகவே கணக்கிடப்படுகின்றன. இருப்பினும், காலாவதியான தரவுகளைப் பயன்படுத்துவதைவிட, துல்லியமான தரவுகளின் அடிப்படையில் இலக்குகளை மாற்றியமைப்பதே சிறந்த வழியாக இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.


Original article : ​New reality: On new series of national accounts data.

Share: