ஜல் ஜீவன் திட்டம் பற்றி… -ரோஷ்னி யாதவ்

முக்கிய அம்சங்கள்:


ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம், ஜல் ஜீவன் திட்டத்திற்கு 2028 வரை மொத்தம் ரூ.8.70 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என்றும் இந்தத் தொகையில், ஒன்றிய அரசின் செலவுத்தொகை தற்போது ரூ.3.59 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் 2019-ல் ஒதுக்கப்பட்ட ரூ.2.08 லட்சம் கோடியும் அடங்கும் என்று கூறினார்.


பின்னர், X சமூக ஊடகத்தில், பிரதமர் நரேந்திர மோடி, இந்த முடிவு கிராமப்புறத்தில் உள்ள வீடுகளுக்கு நிலையான மற்றும் நம்பகமான குடிநீர் வழங்கும் முக்கியமான நடவடிக்கை என்று தெரிவித்தார். மேலும், இது அமைப்புகள் உருவாக்குவதில் மட்டும் அல்லாமல், மக்களுக்கு நேரடியாக சேவை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது என்றும் கூறினார். இந்த நடவடிக்கை நீர் பாதுகாப்பை மேம்படுத்தி, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கிராமப்புற மக்களை குறிப்பாக பெண்களை வலுப்படுத்தும் என்றும் அவர் பதிவிட்டார்.



அதிகாரப்பூர்வ அறிக்கை, "மூலத்திலிருந்து குழாய் வரை" விநியோக முறையை டிஜிட்டல் முறையில் வரைபடமாக்க "நீர் வளம் மிக்க இந்தியா" (Sujalam Bharat) என்ற சீரான தேசிய டிஜிட்டல் கட்டமைப்பு அமைக்கப்படும் என்றும், இரண்டாம் கட்டத்தில், கட்டமைப்பு சீர்திருத்தங்களை உறுதி செய்வதற்காக மூன்று மாதங்களுக்குள் மாநிலங்களுடன் தனித்தனி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. 


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது, ​​"மேம்பட்ட மொத்த செலவினத்துடன்" இந்த திட்டத்தை 2028 வரை நீட்டிப்பதாக அறிவித்த ஒரு வருடத்திற்குப் பிறகு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


இருப்பினும், இந்த தொகை, ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு பொறுப்பான முதன்மை அமைச்சகமான ஜல் சக்தி அமைச்சகத்தால் ஆரம்பத்தில் அளிக்கப்பட்ட  தொகையைவிட குறைவானதாகும்.


ஆகஸ்ட் 2019-ல் தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் திட்டம், ஆரம்பத்தில் 2024-ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் குடிநீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.


புதிய டிஜிட்டல் கட்டமைப்பின்கீழ், "ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தனித்துவமான நீர் இணைப்பு / சேவை பகுதி அடையாள அட்டை” என்ற தனித்துவமான அடையாள எண் வழங்கப்படும். இதன் மூலம் குடிநீர் விநியோக அமைப்பு நீரின் மூலத்திலிருந்து குழாய்வரை முழுமையாக டிஜிட்டல் முறையில் வரைபடமாக பதிவு செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.


"வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதிசெய்வதற்காக", கிராம பஞ்சாயத்துகள் மற்றும் கிராம நீர் மற்றும் சுகாதாரக் குழுக்கள் திட்டங்களை தொடங்குவதிலும் அதிகாரப்பூர்வமாக ஒப்படைப்பதிலும் பங்கேற்பார்கள். மாநில அரசு கிராமத்தில் தேவையான திட்டம் மற்றும் பராமரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தியதை உறுதிசெய்த பிறகே, கிராம பஞ்சாயத்து அந்த கிராமத்தில் பணிகள் முடிந்ததாக சான்றளித்து, “அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் திட்டம்” (‘Har Ghar Jal) என்ற நிலையை அறிவிக்க முடியும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தெரியுமா?


இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையில் உள்ள 17-வது பிரிவு, மாநிலப் பட்டியல் (பட்டியல் II), "நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் கால்வாய்கள், வடிகால் மற்றும் கரைகள், நீர் சேமிப்பு மற்றும் நீர் மின்சாரம் ஆகியவை பட்டியல் I-ன் கீழ் 56-வது பிரிவின் விதிகளுக்கு உட்பட்டவை" என்று கூறுகிறது. இதன் பொருள், ஒரு மாநிலத்தின் எல்லைக்குள் நீர்ப்பாசனம், நீர்ப்பகிர்வு, கால்வாய்கள் மற்றும் அணைகள் போன்ற நீர் தொடர்பான விவகாரங்களில் சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே உள்ளது என்பதாகும்.


Original Link: about the Jal Jeevan Mission


Share:

தண்டி யாத்திரை: காந்தி ஏன் உப்பைத் தேர்ந்தெடுத்தார், அது இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை எவ்வாறு மாற்றியது? -ரோஷ்னி யாதவ்

தற்போதைய செய்தி


குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி வரை மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உப்பு யாத்திரை அல்லது தண்டி யாத்திரையின் 96-வது ஆண்டு நிறைவை மார்ச் 12-ஆம் தேதி குறிக்கிறது. இந்தச் சூழலில், தண்டி யாத்திரை மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி தெரிந்து  கொள்வோம்.


முக்கிய  அம்சங்கள்:


1. மார்ச் 12 முதல் ஏப்ரல் 5, 1930 வரை நடைபெற்ற 24 நாட்கள் நடைப்பயணம் ஆங்கிலேயரின் உப்பு விலை கட்டுப்பாடுக்கு  எதிரான வரி எதிர்ப்பு பிரச்சாரமாகும். காந்தியின் அகிம்சை அல்லது சத்தியாக்கிரகக் கொள்கையின் அடிப்படையில், இந்த நடைப்பயணம், ஒத்துழையாமை இயக்கத்தின் (civil disobedience) தொடக்கத்தைக் குறித்தது.


2. 1920-களின் முற்பகுதியில் உருவான ஒத்துழையாமை இயக்கத்திற்குப் பிறகு ஆங்கிலேய அரசுக்கு எதிரான மிக முக்கியமான ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கமாக தண்டி யாத்திரை இருந்தது. தேசிய, சர்வதேச ஊடகங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தாலும், தண்டி யாத்திரை இந்திய சுதந்திர இயக்கத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.


காந்தி ஏன் 'உப்பை' தேர்ந்தெடுத்தார்?


1882-ஆம் ஆண்டின் உப்பு சட்டம் மூலம் ஆங்கிலேய அரசு இந்தியாவில் உப்பு தயாரிப்பு மற்றும் விற்பனைமீது  முழுமையான அடிப்படை உரிமையை பெற்றது. இந்தியாவின் கடற்கரைகளில் உப்பு தாராளமாகக் கிடைத்தாலும், இந்தியர்கள் உப்பை ஆங்கிலேயர்களிடமிருந்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காந்தி, உள்நாட்டு ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்குவதற்கு ஏற்ற ஒரு பொருள்  உப்பாக இருக்கும் என்று உப்பை தேர்ந்தெடுத்தார். மார்ச் 8 அன்று அகமதாபாத்தில் ஒரு பெரிய கூட்டத்தில் உரையாற்றிய காந்தி, உப்புச் சட்டங்களை மீறுவதற்கான (break the salt laws) தனது முடிவை அறிவித்தார்.


உப்பு சத்தியாக்கிரகத்திலிருந்து (Salt Satyagraha) நாடு முழுவதும் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம் (Civil Disobedience Movement) வரை


1. 1930 ஏப்ரல் 6 அன்று, காந்தி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கடல்நீரிலிருந்து உப்பு தயாரித்து உப்பு சட்டத்தை மீறினார். அப்போது அவர் Free Press செய்தியாளரிடம், “இதன் மூலம் நான் ஆங்கிலேய அரசின் அடித்தளத்தையே அசைத்து பார்த்திருக்கிறேன்” என்று கூறினார்.


2. இதன்மூலம், இந்த இயக்கம் நாடு முழுவதும் பரவியது. 60,000 பேர் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. Gandhi Smriti, வலைத்தளம், ஜவஹர்லால், மகாதேவ் தேசாய் மற்றும் காந்தியின் மகன் தேவதாஸ் ஆகியோர் முதலில் சிறைக்கு அனுப்பப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. ஆங்கிலேய அரசாங்கம் இந்திய தேசிய காங்கிரஸை சட்டவிரோதமானது என்று அறிவித்தது. தாராசனாவில் உள்ள அரசாங்க உப்பு ஆலைகளை சோதனை செய்யப் போவதாக காந்தி மாகாண ஆளுநரிடம் தெரிவித்தார். அவர் சோதனை செய்வதற்கு முன்பு, கைது செய்யப்பட்டு ஏர்வாடா மத்திய  சிறைக்கு அனுப்பப்பட்டார்.

3. காந்தி கைது செய்யப்பட்ட பிறகு, அப்பாஸ் தியாப்ஜி, தாராசனாவிற்கு நடைபயணம் மேற்கொண்டார். ஆனால், அவரும் கைது செய்யப்பட்டார். பேரணியை வழிநடத்திய அப்பாஸ் தியாப்ஜிக்குப் பிறகு சரோஜினி நாயுடு நடைபயணத்தை வழிநடத்தினர். அவர் துறையினரின் தாக்குதலை எதிர்கொண்டார்.


4. இந்தியாவின் பிற பகுதிகளிலும் இதேபோன்ற செயல்கள் நடந்தன. பல ஆங்கிலேய சட்டங்கள் மீறப்பட்டன, வெளிநாட்டு துணி மற்றும் மதுபானங்களை புறக்கணித்தன. உப்பு சத்தியாக்கிரகமாகத் தொடங்கிய போராட்டம் வேகமாக மக்கள் சத்தியாக்கிரகமாக (mass satyagraha) வளர்ந்தது. உதாரணமாக, வங்கத்தில், சதீஷ் சந்திர தாஸ்குப்தா தலைமையிலான தன்னார்வலர்கள் சோதேபூர் ஆசிரமத்திலிருந்து மஹிஸ்பதன் கிராமத்திற்கு உப்பு தயாரிக்க நடந்து சென்றனர். பம்பாயில் உள்ள கே.எஃப். நாரிமன் தலைமையில் மற்றொரு குழுவினர் ஹாஜி அலி பாயிண்டிற்குச் சென்று அருகிலுள்ள பூங்காவில் உப்பு தயாரித்தனர்.


5. ரையத்துவாரி பகுதிகளில் சௌகிதாரி (கிராம காவலர்) வரிக்கு எதிரான போராட்டமும், அதோடு வாடகை செலுத்தா முறையும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. மத்திய மாகாணங்கள், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் காவல்துறையினருடன் பல வன்முறை மோதல்களும், பழங்குடியினரின் வனப் பகுதிகள்  மீதும் படையெடுப்புகள்  நடந்தன.


6. வடமேற்கு எல்லை பகுதியில் (North-West Frontier Province (NWFP)), எல்லை காந்தி (Frontier Gandhi) என்று பிரபலமாக அறியப்படும் கான் அப்துல் கஃபார் கான், குதாய் கித்மத்கர்கள் (Red Shirts) என்று அழைக்கப்படும் அறப்போர் தன்னார்வல  தொண்டர் படையை (non-violent volunteers) உருவாக்கினார். அவர்கள் இயக்கத்தில் தீவிரப் பங்கு வகித்தனர். தன்னார்வலர்களால் அந்த நகரத்தைக் கைப்பற்ற முடிந்தது. இருப்பினும், ஆங்கிலேயர்களால் வேகமாக அந்த நகரத்தை மீண்டும் ஆக்கிரமிக்க முடிந்தது. அகிம்சை முறையில் போராட்டம் நடத்தும் அறப்போர் தன்னார்வல  தொண்டர்படைமீது கடுமையான தாக்குதலை  நடத்தியது.


7. சி. ராஜகோபாலாச்சாரி தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்தை வழிநடத்தினார். ஏப்ரல் 1930-ல் உப்புச் சட்டத்தை மீறுவதற்காக திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை கடற்கரையில் உள்ள வேதாரண்யம் வரை ஒரு பேரணியை நடத்த முடிவுசெய்தார். இதைத் தொடர்ந்து வெளிநாட்டுத் துணிக்கடைகளில் மறியல் போராட்டம் மற்றும் மது பானத்திற்கு எதிரான எதிர்ப்புப் பிரச்சாரம் (anti-liquor campaign) நடைபெற்றது.

8. மலபாரில், நாயர் காங்கிரஸ் தலைவர் கேளப்பன் தலைமையில் உப்பு சத்தியாகிரகப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல், ஒரிசாவில், கோபபந்து சவுத்ரி தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்பட்டது. பீகாரில், ராம் பிரிக்ஷா பெனிபுரி, பேராசிரியர் அப்துல் பாரி மற்றும் ஆச்சார்யா கிருபளானி போன்ற தலைவர்கள் இந்த இயக்கத்திற்கு தலைமை தாங்கினர்.


9. சிட்டகாங்கில், சுர்ஜயா சென் தலைமையிலான புரட்சியாளர்களின் குழு ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியது. அவர்கள் உள்ளூர் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றினர். மேலும், 'சுதந்திர குடியரசு இராணுவம்' (Independent Republican Army) என்ற பெயரில் ஒரு பொது அறிவிப்பு  (Proclamation) வெளியிடப்பட்டது. மேலும், ஜலாலாபாத் மலையில் ஒரு கடுமையான போரை நடத்தினார். பல புரட்சியாளர்கள் இந்த  போரில் கொல்லப்பட்டனர்.


காந்தி-இர்வின் ஒப்பந்தம் என்றால் என்ன?


1. காந்தி ஜனவரி 31, 1930 அன்று இர்வினுக்கு 11 அம்ச இறுதி எச்சரிக்கையை அனுப்பினார். 11 அம்ச கோரிக்கைகள்: முழுமையான மதுவிலக்கு, பரிமாற்ற விகிதத்தைக் குறைத்தல், நில வருவாயை 50% குறைத்தல், உப்பு வரியை ரத்து செய்தல், இராணுவச் செலவினங்களைக் குறைத்தல், உயர்ந்த பதவியிலுள்ள அரசு அதிகாரிகளின் சம்பளங்களை குறைத்தல், வெளிநாட்டுத் துணிகளுக்கான பாதுகாப்பு வரி (Protective Tariff) விதித்தல், கடலோரப் போக்குவரத்து முன்பதிவு மசோதாவை (Coastal Traffic Reservation Bill) நிறைவேற்றுதல், கொலைக் குற்றத்திற்காகக் தண்டிக்கப்பட்டவர்களைத் தவிர அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தல், குற்றப் புலனாய்வுத் துறையை (Criminal Investigation Department (C.I.D)) ஒழித்தல் மற்றும் தற்காப்புக்காக துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்கான உரிமங்களை வழங்குதல் போன்றவைகளாகும்.


2. கோரிக்கைகளை நிறைவேற்ற இர்வின் விருப்பம் காட்டாதபோது, ​​காந்தி தனது வரலாற்றுச் சிறப்புமிக்க உப்பு யாத்திரையான தண்டியை தொடங்கினார். ஜனவரி 25, 1931 அன்று, மாகாண ஆளுநர் இர்வின் காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்களை நிபந்தனையின்றி விடுவிப்பதாக அறிவித்தார்.


3. மார்ச் 5, 1931 அன்று, காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது. இது டெல்லி ஒப்பந்தம் (Delhi Pact) என்றும் அழைக்கப்பட்டது. இதன் மூலம் வன்முறையில் ஈடுபட்டதாகத் தண்டனை பெறாத அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். அபராதங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன, பறிமுதல் செய்யப்பட்ட நிலங்கள் திரும்ப வழங்கப்பட்டன. பணியில் இருந்து ராஜினாமா செய்த அரசு ஊழியர்கள் கருணையுடன் நடத்தப்பட்டனர். காங்கிரஸ், ஒத்துழையாமை இயக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, அந்த ஆண்டின் பிற்பகுதியில் இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் (Second Round Table Conference) பங்கேற்க ஒப்புக்கொண்டது.


காந்திய தத்துவம் (Gandhian Philosophy) என்றால் என்ன?


இவரைப் போன்ற ஒரு மனிதர், இரத்தமும் சதையுமாக இந்த பூமியில் இருந்தார் என்பதை வருங்கால சந்ததியினர் நம்பமாட்டார்கள் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார்.


ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் இந்த கூற்று மகாத்மா காந்தி மற்றும் அவரது தத்துவத்தின் முக்கியத்துவதை காட்டுகிறது.  ஐன்ஸ்டீன் காந்தியின் தத்துவங்ககளால் ஆழமாக ஈர்க்கப்பட்டார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தனது காலத்தில் இருந்த அரசியல்வாதிகளில் அதிக அறிவை பெற்றவராக இருக்கிறார் (enlightened of all the politicians of his time) என்று காந்தியை அழைத்தார். 


1. அகிம்சை : மகாத்மா காந்தி உலகம் முழுவதும் அகிம்சையின் தூதராக அறியப்படுகிறார். காந்தியின் கருத்துப்படி, அகிம்சை என்பது மனிதன் உருவாக்கிய மிகப் பெரிய அழிவுக் ஆயுதங்களைக் காட்டிலும் வலிமையானதாகும். "சமூக அல்லது அரசியல் மாற்றத்தை அடைவதற்காக உடல்ரீதியான வன்முறையைப் பயன்படுத்துவதை நிராகரிப்பதாக ஐக்கியநாடுகள் சபை இந்த சொல்லை விளக்கியுள்ளது.


2. சத்தியாக்கிரகம் (Satyagraha): காந்தியின் சத்தியாக்கிரகம் அல்லது உண்மை-சக்தி, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை ஊக்கப்படுத்தியுள்ளது. சத்தியாகிரகம் என்பது தவறுகளுக்கும் அநீதிக்கும் அகிம்சை முறையில் எதிர்த்து, உண்மையை உறுதியாக பாதுகாப்பது என்பதைக் குறிக்கிறது. சத்தியாகிரகத்தின் அடிப்படை ஆன்மீக சக்தியை உண்மை மற்றும் அகிம்சையிலிருந்து பெறுகிறது.

3. தன்னிறைவு (Swadeshi): தன்னிறைவு என்பது காந்திய தத்துவத்தின் ஒரு முக்கிய கொள்கையாகும். இந்தியா தன்னிறைவு பெற்ற நாடக மாறுவதையும், இந்திய பணம் பிரிட்டனுக்கு மீண்டும் அனுப்பப்படுவதைத் தடுக்க மகாத்மா காந்தி விரும்பினார்.


4. சர்வோதயா: சர்வோதயா என்ற கருத்து காந்தி அவர்களின் தத்துவத்தில் ஒரு முக்கியமான பகுதியாகும். சர்வோதயா என்பது இரண்டு சொற்களைக் கொண்ட சமஸ்கிருத சொல்லாகும்:  இதில் “சர்வா” என்பது அனைவரும் என்றும், “உதயா” என்பது உயர்வு என்ற இரண்டு சொற்கள் ஒன்றிணைக்கபட்டுள்ளன. இதன் பொருள் “அனைவரின் உயர்வு”, “அனைவரின் நலன்”, அல்லது “அனைவரின் முன்னேற்றம்” என்பதாகும். இந்த சொல்லை முதன்முதலில் காந்தி 1908-ஆம் ஆண்டு ஜான் ரஸ்கின் எழுதிய அரசியல் பொருளாதாரம் குறித்த "கடைசி வரை" (Unto This Last) என்ற துண்டுப்பிரசுரத்தின் மொழிபெயர்ப்பாக உருவாக்கினார்.


5. சுயராஜ்ஜியம் (Swaraj) மற்றும் கிராம சுயராஜ்ஜியம்: 'பயமின்றி வாழ முடியும்' என்பதை மகாத்மா காந்தி தனது ஹிந்த் ஸ்வராஜ் நூலில் சுவராஜ் என்று விளக்குகிறார். கிராம சுயராஜ்ஜியம் என்பது இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் மகாத்மா காந்தி முன்வைத்த கிராம முன்னற்றத்திற்கான கருத்தாகும். இதில் சமூகத்தின் முழுமையான வளர்ச்சியை (holistic development of society) நோக்கமாக கொண்டு, பொருளாதார அமைப்பில் தனி நபர்களை முக்கிய இடத்தில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.


Original Link: Dandi March: Why Gandhi chose salt and how it changed India’s Freedom Struggle.


Share:

இந்தியாவிற்கான இறையாண்மை செயற்கை நுண்ணறிவு (AI) ஏன் 'கணக்கீட்டுப் பிரிவினைக்கு' எதிரான ஒரு உத்திமுறை பாதுகாப்பாக (strategic hedge) இருக்கிறது? -கண்ணன் கே



பெரும்பாலும் கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகுகளில் (ஜிபியு) அளவிடப்படும் கணக்கீட்டு சக்தி, செயற்கை நுண்ணறிவின் (AI) யுகத்தில் தொழில்நுட்ப இறையாண்மைக்கு அடித்தளமாக மாறியுள்ளது. செயற்கை நுண்ணறிவில் (AI) ஆதிக்கம் செலுத்தும் நாடுகளால் உருவாக்கப்பட்ட 'கணக்கீட்டுப் பிரிவினை'யைத் (compute divide) தவிர்க்க இறையாண்மை செயற்கை நுண்ணறிவு (AI) இந்தியாவுக்கு எவ்வாறு உதவும்?


இன்று, செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு நாட்டின் வலிமைக்கும் எதிர்காலத்திற்கும் அடித்தளமாக மாறியுள்ளது. குறிப்பாக, பொருளாதார உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காகச் செயல்படுவதற்கும், நிர்வாக அமைப்புகள் மற்றும் இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கும், சிக்கலான சமூக சவால்களைத் தீர்ப்பதற்கும் அதன் திறன் உதவுகிறது.


இந்தியாவில் சமீபத்தில் முடிவடைந்த இந்தியா செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டில் (India AI Impact Summit), மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உலகின் செயற்கை நுண்ணறிவு (AI) தலைவர்களுடன் போட்டியிட 2 லட்சம் கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகுகள் (ஜிபியு) என்ற நீண்டகால இலக்கோடு, அதன் தற்போதைய 38,000-யூனிட் GPU தொகுப்புகளில் 20,000 கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகுகளை (ஜிபியு) சேர்க்கும் இந்தியாவின் திட்டத்தை அறிவித்தார்.


இது பெரும்பாலும் கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகுகளில் (ஜிபியு) அளவிடப்படும் கணக்கீட்டு சக்தி, செயற்கை நுண்ணறிவின் (AI) யுகத்தில் தொழில்நுட்ப இறையாண்மைக்கு அடித்தளமாக மாறியுள்ளது என்பதைக் குறிக்கிறது. ஆனால் கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகுகள் (ஜிபியு) என்றால் என்ன?, அது எப்படி வேலை செய்கிறது? செயற்கை நுண்ணறிவின் (AI) வருகையுடன் அது எவ்வாறு ஒரு முக்கியமான இராஜதந்திர வளமாக உருவாகியுள்ளது? பெரிய மொழி மாதிரிகள் (LLM) மற்றும் பிற செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளால் இயக்கப்படும் எதிர்காலத்தில் அதன் நிலையைப் பாதுகாக்க இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் என்ன? இதைப் பற்றி கீழே குறிப்பிட்டுள்ளது.


கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகுகள் (ஜிபியு) : கேமிங் வன்பொருளிலிருந்து ஒரு முக்கிய செயற்கை நுண்ணறிவு (AI) முன்நிபந்தனை வரை


கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகுகள் (ஜிபியு) என்பது 'பெரிய இணையான தன்மைக்காக' வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு செயலியாகும். இது ஒரு வகையான பயன்பாட்டு-குறிப்பிட்ட ஒருங்கிணைந்த சுற்று (application-specific integrated circuit (ASIC)) ஆகும். இது தொடர்ச்சியாக அல்லாமல் ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கான கணக்கீடுகளை செயலாக்க முடியும்.


கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகுகளின் (ஜிபியு) இந்த சிறப்பியல்பு கேமிங்கில் அதன் தோற்றத்தைக் கண்டறியலாம். அங்கு மில்லியன் கணக்கான படப்புள்ளிகளை (pixels) பிரபலம் செய்வதற்கு பெரிய அளவிலான ஒரே நேரத்தில் செயலாக்கம் தேவைப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, மைய செயலாக்க அலகு (Central Processing Unit(CPU)) என்பது அதிவேக வரிசைமுறை தர்க்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பொது-நோக்க செயலியாகும். இது நவீன அமைப்புகளில், CPU மற்றும் GPU அலகுகளும் இணைந்து செயல்படுகின்றன. CPU சிக்கலான அமைப்பு தர்க்கத்தை நிர்வகிக்கிறது மற்றும் பின்னர் அது GPU-க்கு தொடர்ந்து நிகழும் மற்றும் தரவு-தீவிரமான பணிகளை ஒதுக்குகிறது.


நவீன செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகள், குறிப்பாக பெரிய மொழி மாதிரிகள் (LLM), செயற்கை நுண்ணறிவு (AI) நரம்பியல் வலையமைப்புகளின் அடித்தளத்தை உருவாக்கும் மேட்ரிக்ஸ் பெருக்கங்களை மேற்கொள்ள கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகுகளின் (ஜிபியு) பரந்த இணையான தன்மையை நம்பியுள்ளன. பொதுவாக மைய செயலாக்க அலகுகளுக்கு (CPU) சாத்தியமில்லாத அளவில் கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகுகள் (ஜிபியு) இந்தக் கணக்கீடுகளை இணையாகச் செயல்படுத்த முடியும் என்பதால், அவை இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளைப் பயிற்றுவிப்பதற்கும் இயக்குவதற்கும் இன்றியமையாததாகிவிட்டன.


கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகுகள் (ஜிபியு) மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) புவிசார் அரசியல்


செயற்கை நுண்ணறிவு (AI) காலகட்டத்தில், கணக்கீட்டு வலிமை ஒரு நாட்டின் திறன் மற்றும் எதிர்கால ஆற்றலின் முக்கிய அளவீடாக மாறியுள்ளது. இது ஒரு புதிய புவிசார் அரசியல் படிநிலையை உருவாக்கியுள்ளது. இதில் கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகுகள் (ஜிபியு) குறைக்கடத்திகளில் பயன்படுத்தப்படும் உயர்நிலை சிலிக்கானை அணுகுவது, ஆற்றல் வளங்களை அணுகுவது போலவே முக்கியமானது.


தற்போது, கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகு (ஜிபியு) துறை மிகவும் அதிகரித்துள்ளது. இது அனைத்து உயர்நிலை கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகுகளில் (ஜிபியு) 90 சதவீதத்திற்கும் அதிகமானவை அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான Nvidia-வால் வடிவமைக்கப்பட்டு, கிட்டத்தட்ட முழுமையாக தைவானில் உள்ள தலைமை நிறுவனத்தில் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) காலகட்டத்தில் கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகுகள் (ஜிபியு) மீது Nvidia-வின் ஆதிக்கம், சந்தை மூலதனத்தால் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மாற்றியுள்ளது. இதன் பொருள் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) சுற்றுச்சூழல் அமைப்பு உற்பத்தியில் ஏற்படும் எந்தவொரு இடையூறுகளுக்கும் அல்லது அமெரிக்கா அல்லது தைவானின் எந்தவொரு கொள்கை மாற்றத்திற்கும் பாதிக்கப்படக்கூடியது.


ஏற்கனவே, கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகளின் (ஜிபியு) வளர்ந்துவரும் உத்திமுறை மதிப்பு 'குறைமின்கடத்தி போர்களுக்கு' (chip wars) வழிவகுத்துள்ளது. சீனா மற்றும் பிற போட்டியாளர்கள் சமமான செயற்கை நுண்ணறிவு (AI) திறனை அடைவதைத் தடுக்க அமெரிக்கா மேம்பட்ட கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகளின் (ஜிபியு) ஏற்றுமதியில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகள் இப்போது இறையாண்மை கொண்ட செயற்கை நுண்ணறிவை (AI) உருவாக்குவதன் மூலம் இந்த ஆதிக்கத்தை எதிர்கொள்ள முயற்சிக்கின்றன. இது அதன் சொந்த தரவு, தொழில்நுட்பம் மற்றும் பணியாளர்களைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவை (AI) உருவாக்கும் திறன் ஆகும்.


இறையாண்மை கொண்ட செயற்கை நுண்ணறிவை (AI) உருவாக்குவது ஒரு நாட்டின் நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார மாதிரிகள் முழுமையாக அதன் தனிப்பட்ட அதிகார வரம்பிற்குள் இருப்பதை உறுதி செய்யும். மேலும் இந்தியாவைப் பொறுத்தவரை, இறையாண்மை கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) என்பது ஒரு தொழில்நுட்ப மற்றும் பொருளாதார இலக்கு மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவை (AI) ஆதிக்கம் செலுத்தும் நாடுகளால் உருவாக்கப்பட்ட 'கணக்கீட்டுப் பிளவுக்கு' எதிரான ஒரு உத்திக்கான காப்பீடாக (strategic hedge) உள்ளது.


இந்தியா செயற்கை நுண்ணறிவு (AI) திட்டத்தின் முக்கிய தூண்கள்


நாட்டின் ஒட்டுமொத்த செயற்கை நுண்ணறிவு (AI) சுற்றுச்சூழல் அமைப்பானது இந்தியா செயற்கை நுண்ணறிவு (AI) திட்டத்தை தொடங்கியது. இது "இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை (AI) உருவாக்குதல்" மற்றும் "இந்தியாவிற்கு செயற்கை நுண்ணறிவை (AI) வேலை செய்ய வைத்தல்" என்ற தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படுகிறது.


மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சுதந்திரமான வணிகப் பிரிவான இந்தியா செயற்கை நுண்ணறிவால் (AI) இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தியா செயற்கை நுண்ணறிவு(AI) திட்டம் அதன் ஏழு தூண் அணுகுமுறை மூலம் புதுமை, தொடக்கநிலை ஆதரவு, அதிகரித்த தரவு அணுகல் மற்றும் பொது நலனுக்காக செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாட்டை இலக்காகக் கொண்டுள்ளது:


இந்தியா செயற்கை நுண்ணறிவு (AI) கணக்கீட்டுத் தூண் : இது தொடக்கநிலை நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.65 என்ற அதிக மானிய விலையில் உயர்நிலை கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகளை (ஜிபியு) வழங்குகிறது. இது சிறிய அளவிலான கண்டுபிடிப்பாளர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளைப் பயிற்றுவிக்க அனுமதிக்கிறது.


இந்தியா செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டு மேம்பாட்டு முயற்சி : பல்வேறு துறைகளில் இந்தியா சார்ந்த சவால்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடுகளின் வளர்ச்சியை ஆதரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


AIKosh தரவுத்தொகுப்பு தளம் : இது செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்கான பெரிய தரவுத்தொகுப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தயாரிப்பவர்கள் புதிதாக தொகுதிகளை உருவாக்குவதற்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவு (AI) தீர்வுகளில் கவனம் செலுத்த உதவும் வகையில் அரசு மற்றும் அரசு சாரா மூலங்களிலிருந்து தரவை ஒருங்கிணைக்கிறது.


செயற்கை நுண்ணறிவு (AI) அறக்கட்டளை மாதிரிகள் : இந்திய மொழிகள் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி இந்திய பெரிய மொழி மாதிரிகளின் (LLMs) வளர்ச்சியை ஆதரிக்கிறது. இதன் மூலம் உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவில் (AI) இறையாண்மை திறன் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை உறுதி செய்கிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட சர்வம் செயற்கை நுண்ணறிவு (AI), இந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு புத்தொழில் நிறுவனங்களில் ஒன்றாகும்.


இந்தியா செயற்கை நுண்ணறிவு (AI) எதிர்காலத் திறன்கள்: இந்த தூண் (pillar) இந்தியர்களை அவர்களின் கல்விப் பயணத்தின் பல்வேறு கட்டங்களில் – இளங்கலை மாணவர்கள் முதல் முனைவர் பட்ட மாணவர்கள் வரை – ஆதரவளித்து AI திறன் கொண்ட தொழில்முறை நிபுணர்களை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதிலுமுள்ள கல்வி நிறுவனங்களில் AI மற்றும் தரவு ஆய்வகங்களை (AI and data labs) உருவாக்குவதற்கும் வழிவகை செய்கிறது.


இந்தியா செயற்கை நுண்ணறிவு (AI) புத்தொழில் நிறுவன நிதி : இது மார்ச் 2025-ல் தொடங்கப்பட்ட இந்தியா செயற்கை நுண்ணறிவு (AI) புத்தொழில் நிறுவன குளோபல் திட்டத்தின்கீழ் செயற்கை நுண்ணறிவு (AI) புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கிறது.


பாதுகாப்பான மற்றும் நம்பகமான செயற்கை நுண்ணறிவு (AI) : இது பொறுப்பான செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்றுக்கொளவதை உறுதி செய்கிறது. இது இயந்திர கற்றல் இல்லாதது, செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் சார்புகள் குறைப்பு, தனியுரிமையைப் பாதுகாக்கும் இயந்திர கற்றல் (ML), செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் விளக்கக்கூடிய தன்மை, தணிக்கை மற்றும் நிர்வாக சோதனை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.


மேலும், L&T-Nvidia கூட்டமைப்பு போன்ற கூட்டாண்மைகள் மூலம் பெரிய தரவு மையங்களை உருவாக்குவதில் இந்தியா முதலீடு செய்கிறது. இறையாண்மை செயற்கை நுண்ணறிவை (AI) உறுதிசெய்ய உலகளாவிய நிபுணத்துவத்தைப் பயன்படுத்துகிறது.


இறையாண்மை கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் முக்கிய சவால்கள்


இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான பாதையில் பல தடைகளை எதிர்கொள்கிறது. பெரிய கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகு (ஜிபியு) தொகுப்புகள் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் தடயத்தைக் கொண்டுள்ளன. லட்சக்கணக்கான கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகளை (ஜிபியு) அளவிடுவது பல பயன்பாடுகளுக்கு, குறிப்பாக மின்சாரம் மற்றும் தண்ணீருக்கு அதிக தேவையை உருவாக்கும். உயர்நிலை கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகுகளின் (ஜிபியு) ஒரு வரிசை 100kW-க்கும் அதிகமாக பயன்படுத்துகிறது. இது சுமார் 80 முதல் 100 இந்திய வீடுகளின் உச்சபட்ச மின்சார தேவைக்கு சமம். இது தரவு மையங்களை வைத்திருக்கும் நகரங்களின் கட்டங்களில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், தரவு மையங்கள் பல கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகு (ஜிபியு) வரிசைகளைக் கொண்டுள்ளன.


தரவு மையங்களுக்கு குளிர்விக்க அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. குறிப்பாக, ஆவியாதல் குளிரூட்டும் முறைகளைப் பயன்படுத்தும் மையங்களுக்கு இது உதவுகிறது. இந்தியா போன்ற நீர் நெருக்கடி உள்ள நாட்டில், இது கவலைகளை எழுப்பியுள்ளது. அதேநேரத்தில், ஒரு இறையாண்மை கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பை உருவாக்குவதற்கு நீண்டகாலங்களுடன் கூடிய பெரிய, பல ஆண்டு முதலீடுகள் தேவைப்படும்.


செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளின் பயிற்சிக்கும் உயர்தர தரவுத்தொகுப்புகள் தேவை. இந்தியாவில் அதிக அளவு தரவு இருந்தாலும், தரவு சேகரிப்பு மற்றும் செயலாக்கத்தின் கட்டமைக்கப்படாத தன்மை மற்றும் இந்திய பயனர்களின் தரவின் கணிசமான பகுதி வெளிநாட்டு சேவையகங்களில் செயலாக்கப்படுவது ஆகியவை மற்றொரு முக்கிய சவாலை முன்வைக்கின்றன.


மேலும், இறையாண்மை செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளை உருவாக்குவதற்கு, இந்த மாதிரிகளை புதிதாக உருவாக்கும் திறன் கொண்ட சிறப்பு செயற்கை நுண்ணறிவு (AI) நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். இத்தகைய உயர் மதிப்புள்ள நிபுணர்கள் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க ஊதிய இடைவெளிகள் மற்றும் சிறந்த ஆராய்ச்சி மானியங்கள் காரணமாக அமெரிக்கா அல்லது ஐரோப்பாவிற்கு இடம்பெயர்கின்றனர். இந்த மூளை வடிகால் (Brain drain) மற்றொரு முக்கியமான தடையாகும்.


இந்தியாவின் எதிர்காலத்தை மேம்படுத்த AI உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல்


கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகுகளில் (ஜிபியு) பயன்படுத்தப்படும் சிலிக்கான் குறைமின்கடத்திகள் முதல் தேசிய மின்சார கட்டநிலையம் வரை முழு சங்கிலியிலும் தன்னிறைவை உறுதிசெய்ய ஒரு முழுமையான குறைமின்கடத்தி முதல் மின்கட்டநிலையம் வரை சுற்றுச்சூழல் அமைப்பை (chip-to-grid ecosystem) இறையாண்மை செயற்கை நுண்ணறிவு மூலம் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு, இந்த சங்கிலியின் அனைத்து நிலைகளிலும் ஒரே நேரத்தில் முதலீடுகள் தாமதங்கள் மற்றும் தடைகளைத் தடுக்க உதவும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் 24 மணி நேரமும் செயல்படும் தரவு மையங்கள் இந்தியாவிற்குத் தேவை. உகந்த மின் பயன்பாட்டு செயல்திறன் (Power Usage Effectiveness (PUE)) கொண்ட தரவு மையங்களுக்கு வரி விடுமுறைகளை (tax holidays) நீட்டிப்பதற்கான சமீபத்திய ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை நடவடிக்கை சரியான பாதையில் நகர்கிறது.


குளிரூட்டும் தொழில்நுட்பத்தின் உள்நாட்டு உற்பத்தியில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த தொழில்நுட்பம் மிகக் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி தரவு மையங்களை குளிர்விக்க வேண்டும். கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகுகள் (GBU) தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை (AI) பெருமளவில் தேர்ச்சி பெறும் திறன் கொண்ட பணியாளர்களைப் பயிற்றுவித்து தக்கவைத்துக்கொள்வதற்கு நிலையான முயற்சிகள் தேவைப்படும்.


மிக முக்கியமாக, உள்நாட்டு கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகு (ஜிபியு) உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய சிலிக்கான் குறைமின்கடத்தி தொழில்நுட்பம் Nvidia மற்றும் அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க உதவும். இந்திய மொழிகளுக்கு உகந்ததாக கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகுகளின் (ஜிபியு) வடிவமைப்பு மற்றும் உள்நாட்டு அறிவுசார் சொத்துரிமை (IP) உருவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்திய குறைமின்கடத்தி திட்டம்-2.0 (India Semiconductor Mission (ISM)), திறம்பட செயல்படுத்தப்பட்டால், நாட்டிற்கு பெரும் நன்மைகளைத் தரும்.


இறுதியில், நீண்ட காலத்திற்கு சுமார் இரண்டு லட்சம் அலகுகளின் கிராபிக்ஸ் செயல்பாட்டு அலகு (ஜிபியு) திறனை உருவாக்குவதற்கான இந்தியாவின் தேடல் வன்பொருளைச் சேகரிப்பது மட்டுமல்ல, அதன் எதிர்காலத்தை ஆற்றுவதற்காக நாட்டின் செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதும் ஆகும்.

கண்ணன் கே, ஹைதராபாத்தில் உள்ள பொருளாதார மற்றும் சமூக ஆய்வு மையத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.



Original Link: Why sovereign AI for India is a strategic hedge against a ‘compute divide’?


Share:

இந்திய தேர்தல் ஆணையத்துடன் தொடர்புடைய அரசியலமைப்பு விதிகள் யாவை? -ரோஷ்னி யாதவ்


தற்போதைய நிகழ்வு : தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை "பாரபட்சமான நடத்தை" (biased conduct) என்று குறிப்பிட்டு பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் இந்த வாரம் செயல்பட்டு வருகின்றன. இதில், தலைமை தேர்தல் ஆணையரை நீக்குவதற்கான நடைமுறை ஒரு நீதிபதியை நீக்குவதற்குப் பயன்படுத்தப்படும் நடைமுறையைப் போலவே இருக்கும்.


முக்கிய அம்சங்கள் :


பதவிநீக்க தீர்மானத்தை திரிணாமுல் காங்கிரஸால் முன்மொழியப்பட்ட வரைவானது, நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தேவையான எண்ணிக்கையிலான கையொப்பங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆதாரங்களின்படி, இதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய காரணங்களில் ஒன்று, தலைமை தேர்தல் ஆணையரின் "முற்றிலும் ஒருதலைப்பட்சமான நடத்தை" ஆகும்.


வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) போது தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தை குறிவைத்ததாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதில் மேற்கு வங்கத்தில் மட்டுமே சட்டப்பூர்வ அதிகாரத்தால் எடுக்கப்பட்ட முடிவுகளை மதிப்பாய்வு செய்ய நுண்பார்வையாளர்களை (micro-observers) நியமித்தது.


அரசியலமைப்பின் பிரிவு 324(5), உச்சநீதிமன்ற நீதிபதியைப் போலவே அதே முறையிலும் அதே அடிப்படையிலும்தான், தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியில் இருந்து நீக்கமுடியும் என்று கூறுகிறது. மேலும், தலைமைத் தேர்தல் ஆணையரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே தேர்தல் ஆணையர்களை நீக்க முடியும் என்றும் அது குறிப்பிடுகிறது.


இந்த செயல்முறை இந்த விஷயத்தில் “நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டத்தின் விதிகளுக்கும் உட்பட்டது” என்றும் பிரிவு கூறுகிறது. அதைத் தொடர்ந்து, டிசம்பர் 2023-ல், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023-ஐ (Chief Election Commissioner and Other Election Commissioners (Appointment, Conditions of Service and Term of Office) Act) நாடாளுமன்றம் நிறைவேற்றியது. மேலும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 11, ராஜினாமா மற்றும் பதவிநீக்க செயல்முறையை விளக்குகிறது. இது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அதே நடைமுறையைப் பின்பற்றுகிறது.


“தலைமைத் தேர்தல் ஆணையர், உச்சநீதிமன்ற நீதிபதியாக, அதேவழியில் மற்றும் அதே காரணங்களுக்காகத் தவிர, அவரது பதவியில் இருந்து நீக்கப்படக்கூடாது” என்று அது கூறுகிறது.


உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்குவதற்கான செயல்முறை அரசியலமைப்பின் பிரிவு 124 மற்றும் நீதிபதிகள் (விசாரணை) சட்டம்-1968-ன் (Judges (Inquiry) Act) படி உள்ளது. அரசியலமைப்புப் பிரிவு 124(4) பதவி நீக்க செயல்முறையை விளக்குகிறது. ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியை குடியரசுத் தலைவரின் உத்தரவின் மூலம் மட்டுமே நீக்கமுடியும் என்று அது கூறுகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரு உரையை நிறைவேற்றிய பின்னரே குடியரசுத் தலைவர் இந்த உத்தரவைப் பிறப்பிக்க முடியும். இந்த உரையை ஒவ்வொரு அவையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையினரும் ஆதரிக்க வேண்டும். இது தற்போதுள்ள மற்றும் வாக்களிக்கும் உறுப்பினர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினராலும் ஆதரிக்கப்பட வேண்டும். இரு அவைகளும் ஒரே அமர்வில் அதை நிறைவேற்ற வேண்டும். நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது இயலாமையின் அடிப்படையில் மட்டுமே நீக்கம் செய்ய முடியும்.


அடுத்த பிரிவு, அத்தகைய உரையை வழங்குவதற்கான நடைமுறையை ஒழுங்குபடுத்தும் ஒரு சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றலாம், விசாரணை மற்றும் ஒரு நீதிபதியின் “தவறான நடத்தை அல்லது இயலாமை”க்கான ஆதாரத்தை முன்வைக்கலாம்.


நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தின் (Judges (Inquiry) Act) பிரிவு 3-ன் படி, ஒரு நீதிபதியை நீக்குவதற்கான குடியரசுத் தலைவரிடம் உரையை வழங்குவதற்கான ஒரு தீர்மானத்தில் மக்களவையில் அது கொண்டு வரப்பட்டால் குறைந்தது 100 உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களவையில் 50 உறுப்பினர்கள் கையொப்பமிட வேண்டும்.


மக்களவைத் தலைவர் அல்லது மாநிலங்களவை அல்லது மாநிலங்களவைத் தலைவர் இந்த தீர்மானத்தை ஏற்கவோ அல்லது மறுக்கவோ முடிவு செய்யலாம். இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், சபாநாயகர் அல்லது மாநிலங்களவைத் தலைவர் விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். இந்தக் குழுவின் உறுப்பினர்களில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் மற்றும் ஒரு புகழ்பெற்ற நீதிபதி ஆகியோர் இருக்க வேண்டும்.


இந்தக் குழுவின் அறிக்கை பின்னர் சபாநாயகர் அல்லது மாநிலங்களவைத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நீதிபதி தவறான நடத்தை அல்லது இயலாமையால் பாதிக்கப்பட்டதாக குழு கண்டறிந்தால், அந்த தீர்மானம் நிலுவையில் உள்ள மக்களவை அல்லது மாநிலங்ககளால் எடுத்துக்கொள்ளப்படும் என்று சட்டம் கூறுகிறது. இந்த தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டால், நீதிபதியை நீக்கக் கோரும் கோரிக்கை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும்.


உங்களுக்குத் தெரியுமா? 


இந்திய அரசியலமைப்பின் பகுதி XV தேர்தல்களைப் பற்றி பேசுகிறது. தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கவும், ஆணையத்தின் சாத்தியமான தன்மைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய நுண்ணறிவை வழங்கவும் இது பின்வரும் அரசியலமைப்புப் பிரிவு 324 முதல் 329 வரை கொண்டுள்ளது.


பிரிவு 324: நாடாளுமன்றம் மற்றும் ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்றத்திற்கும் அனைத்து தேர்தல்களுக்கும், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல்களுக்கும் வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதை மேற்பார்வை செய்தல், வழிநடத்துதல் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரத்தை வழங்குகிறது.


பிரிவு 325: மதம், இனம், சாதி, பாலினம் அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் எந்தவொரு தனிநபரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்கப்படக்கூடாது.


பிரிவு 326: மக்கள்சபைக்கும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் தேர்தல்களுக்கு வயது வந்தோர் வாக்குரிமை அடிப்படையாக இருக்கும்.


பிரிவு 327: இந்த அரசியலமைப்பின் விதிகளின்படி, நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் அவ்வப்போது சட்டங்களை இயற்றலாம்.


பிரிவு 328: ஒரு மாநிலத்தின் சட்டமன்றம் அவ்வப்போது சட்டத்தால், அவை அல்லது மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் தொடர்பான அல்லது அதன் தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் கையாள முடியும்.


பிரிவு 329: இது தேர்தல் தொடர்பான பிரச்சினைகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதை இந்தப் பிரிவு தடை செய்கிறது.


Original Link: What are the constitutional provisions related to the Election Commission of India?


Share:

மேற்காசிய நெருக்கடிக்கு மத்தியில் ஒன்றிய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் என்றால் என்ன?



பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் (Ministry of Petroleum and Natural Gas) இந்த உத்தரவானது, இயற்கை எரிவாயுவைப் பெறுவதற்கான நான்கு முன்னுரிமைப் பிரிவுகளை அடையாளம் காண்கிறது. இது கடந்த ஆறு மாதங்களில் அந்தந்தப் பிரிவுகள் பயன்படுத்திய சராசரி எரிவாயு அளவின் அடிப்படையிலும், தற்போதைய எரிவாயு இருப்பைப் பொறுத்தும்  தீர்மானிக்கப்படுகிறது.


மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக எரிபொருள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாலும், நாட்டின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) இருப்பு குறைவாக உள்ளதாலும், இந்த எரிபொருளை நம்பியிருக்கும் "முன்னுரிமை துறைகளுக்கு"  இயற்கை எரிவாயுவை வழங்குவதற்காக, அரசாங்கம் கடந்த திங்கள் கிழமையன்று அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தைப் (Essential Commodities Act (ECA) பயன்படுத்தியது.


பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 2026 இயற்கை எரிவாயு (வழங்கல் ஒழுங்குமுறை) ஆணையின்படி (2026 Natural Gas (Supply Regulation) Order), லட்சக்கணக்கான நுகர்வோரைப் பாதிக்கும் துறைகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கலில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் மற்ற துறைகளுக்கு வழங்கும் முன்பாக, வீடுகளுக்கான குழாய் வழி இயற்கை எரிவாயு (piped natural gas (PNG)), வாகனங்களுக்கான அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (compressed natural gas (CNG)) மற்றும் சமையல் எரிவாயு (LPG) உற்பத்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 




இந்தியா தனது தினசரி இயற்கை எரிவாயுத் தேவையை (சுமார் 190 மில்லியன் கன மீட்டர்) பூர்த்தி செய்ய, அதில் பாதியளவை திரவ இயற்கை எரிவாயுவாக (Liquified Natural Gas (LNG)) இறக்குமதி செய்கிறது. இந்த இறக்குமதியில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மேற்கு ஆசிய நாடுகளிலிருந்தே வருகின்றன. அதேபோல், இந்தியாவின் சமையல் எரிவாயு (LPG) தேவையில் 60 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் சுமார் 80 சதவீத விநியோகம் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகவே இந்தியாவிற்கு வந்தடைகிறது.


அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் என்றால் என்ன?


பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சில குறிப்பிட்ட பொருட்களின் உற்பத்தி, விநியோகம், வழங்கல் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக 1955-ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் (Essential Commodities Act, 1955) இயற்றப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விநியோகமானது பதுக்கல் அல்லது கள்ளச்சந்தை காரணமாகத் தடைப்பட்டால், அது மக்களின் இயல்பான அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதால் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.


அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின்படி (Essential Commodities Act), கால்நடைத் தீவனம், நிலக்கரி மற்றும் அதன் வழிப்பொருட்கள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் அதன் சாதனங்கள், பருத்தி மற்றும் கம்பளி துணிகள், 1940-ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட்ட மருந்துகள், உணவுப் பொருட்கள், இரும்பு மற்றும் எஃகு மற்றும் அவற்றின் தயாரிப்புகள், கச்சா பருத்தி, கச்சா சணல் மற்றும் மத்திய அரசு அறிவிக்கை மூலம் சேர்க்கும் இதர பொருட்கள் ஆகியவை அத்தியாவசியப் பொருட்களாகக் கருதப்படுகின்றன. கொரொனா (COVID-19) பெருந்தொற்று காலத்தில், 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முகக்கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை (Hand Sanitisers) ஒன்றிய அரசு தற்காலிகமாக இந்தப் பட்டியலில் சேர்த்தது, பின்னர் ஜூலை மாதத்தில் அவற்றை நீக்கியது குறிப்பிடத்தக்கது.


அசல் சட்டத்தின்கீழ், "அத்தியாவசியப் பண்டம்" என வகைப்படுத்தப்பட்ட எந்தவொரு பொருளுக்கும் (packaged product), குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. 


ஜூன் மாதம் 2020-ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, சில பொருட்களை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலிலிருந்து நீக்கியது. இதன் பொருள் என்னவென்றால், போர், பஞ்சம், அதீத விலை உயர்வு அல்லது கடுமையான இயற்கை பேரிடர் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே அரசு அவற்றின் விநியோகத்தையும் விலையையும் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர். தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய் வித்துக்கள் மற்றும் சமையல் எண்ணெய்கள் போன்ற உணவுப் பொருட்கள் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பொருட்களில் அடங்கும். இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளில் மட்டுமே, தனிநபர்கள் அல்லது வணிகர்கள் இந்தப் பொருட்களை எவ்வளவு இருப்பு வைக்கலாம் என்பதற்கான வரம்புகளையும் அரசாங்கத்தால் நிர்ணயிக்க முடியும் என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர். 


திருத்தப்பட்ட சட்டத்தின்படி, தோட்டக்கலைப் பயிர்களின் சில்லறை விற்பனை விலை 100% உயர்ந்தாலோ அல்லது நீண்டநாள் சேமிக்கக்கூடிய வேளாண் உணவுப் பொருட்களின் விலை 50% உயர்ந்தாலோ மட்டுமே அந்தச் சட்டத்தைப் பயன்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், உள்நாட்டு பொது விநியோகத் திட்டத்திற்காக (Public Distribution System) இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களுக்கு இந்த வரம்புகள் பொருந்தாது என்றும் தெரிவிக்கின்றனர். 


தற்போதைய உத்தரவு எதை வலியுறுத்துகிறது 


பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இந்த உத்தரவானது, இயற்கை எரிவாயுவைப் பெறுவதற்கான நான்கு முன்னுரிமைப் பிரிவுகளை அடையாளம் காண்கிறது. இது கடந்த ஆறுமாதங்களில் அந்தந்தப் பிரிவுகள் பயன்படுத்திய சராசரி எரிவாயு அளவின் அடிப்படையிலும், தற்போதைய எரிவாயு இருப்பைப் பொறுத்தும்  தீர்மானிக்கப்படுகிறது.


வீட்டு உபயோகத்திற்கான குழாய் வழி இயற்கை எரிவாயு (Domestic Piped Natural Gas (PNG)) பயன்பாட்டிற்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு, கடந்த ஆறு மாதங்களில் அவர்கள் பயன்படுத்திய சராசரி எரிவாயு அளவில் 100% முழுமையாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் போக்குவரத்துத் துறையில் பயன்படுத்தப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG), திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) தயாரிக்கப் பயன்படும் இயற்கை எரிவாயு மற்றும் அத்தியாவசிய குழாய் வழி செயல்பாடுகளுக்குத் தேவையான எரிவாயு ஆகியவையும் அடங்கும்.



இரண்டாவது முன்னுரிமை உரத் தொழிற்சாலைகளுக்கு (Fertiliser plants) வழங்கப்படுகிறது. இவை கடந்த ஆறு மாதங்களில் தாங்கள் பயன்படுத்திய சராசரி எரிவாயு அளவில் 70 சதவீதத்தைப் பெறும் என்றும் இந்த உத்தரவின்படி, ஒதுக்கப்பட்ட எரிவாயுவை அத்தொழிற்சாலைகள் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை உறுதிப்படுத்தும் சான்றிதழை ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மூலமாக பெட்ரோலியத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவிடம் (Petroleum Planning and Analysis Cell (PPAC)) அவை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 



மூன்றாவது பிரிவில் தேயிலை தொழிற்சாலைகள், உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் தேசிய எரிவாயுக் கட்டமைப்பு (National Gas Grid) மூலம் விநியோகம் பெறும் இதர தொழில்முறை நுகர்வோர் ஆகியோர் அடங்குவர். இவர்களுக்கு அவர்களின் ஆறுமாத கால சராசரி பயன்பாட்டில் 80% எரிவாயு வழங்கப்படும் என்றும் நான்காவது பிரிவில் நகர எரிவாயு விநியோக நிறுவனங்களுடன் (City Gas Distribution Companies) இணைக்கப்பட்டுள்ள வணிக மற்றும் தொழில்முறை நுகர்வோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கும் அவர்களின் ஆறுமாத கால சராசரி பயன்பாட்டில் 80% அளவு எரிவாயு விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தற்போதைய புவிசார் அரசியல் இடையூறுகள் மற்றும் விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக, உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு (LPG) உற்பத்தியை அதிகரிக்குமாறு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (Ministry of Petroleum and Natural Gas (MoPNG)) கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், சமையல் எரிவாயுவை பதுக்குவதைத் தடுப்பதற்காக, ஒரு எரிவாயு உருளை முன்பதிவு செய்ததிலிருந்து அடுத்த பதிவிற்கு இடையே 25 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற புதிய நடைமுறையையும் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.


மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசியமான வீட்டு உபயோகம் அல்லாத துறைகளுக்கு, இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர, உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற தொழிற்சாலைகளின் எரிவாயு தேவைகள் குறித்த கோரிக்கைகளை ஆய்வு செய்ய, பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களைச் சேர்ந்த மூன்று நிர்வாக இயக்குநர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைச்சகம் அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Original Link: What is the Essential Commodities Act, invoked by the Centre amidst the West Asian crisis?


Share:

அரசு 2026-27 முதல் SC, OBC, DNT மாணவர்களுக்கான பள்ளிப் படிப்புக்குப் பிந்தைய உதவித்தொகை திட்டத்திற்கான குடும்ப வருமான வரம்பை உயர்த்த திட்டமிட்டுள்ளது. -அபினய் லக்ஷ்மண்


சமூக நீதி மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகங்களால் நடத்தப்படும் உதவித்தொகை திட்டங்களில் பரவலான மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. பட்டியல் வகுப்பினர் (SC) மாணவர்களுக்கான வெளிநாட்டு உதவித்தொகை திட்டத்திற்கு டாக்டர் அம்பேத்கரின் பெயரை சூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.


2026-27 நிதியாண்டு முதல் பட்டியல் வகுப்பினர் (Scheduled Castes (SC)), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Classes (OBC)), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Extremely Backward Classes (EBC)) மற்றும் சீர்மரபினர் (Denotified), நாடோடி (Nomadic) மற்றும் பகுதியளவு-நாடோடி பழங்குடியினருக்கான (Semi-Nomadic Tribes (DNT)) பட்டப் படிப்புக்குப் பிந்தைய உதவித்தொகை திட்டங்களுக்கான (post-matric scholarship schemes) ஆண்டு குடும்ப வருமான தகுதி அளவுகோல்களை ₹2.5 லட்சத்திலிருந்து ₹4.5 லட்சமாக உயர்த்த மத்திய சமூகநீதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.


துறைரீதியாக தொடர்புடைய சட்டமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ள அரசாங்கம், SC, ST, OBC மற்றும் DNT சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக சமூகநீதி மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகங்களால் நிர்வகிக்கப்படும் பல்வேறு உதவித்தொகை திட்டங்களுக்கு பரவலான திருத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.


பட்டியல் பழங்குடி மாணவர்களுக்கான பட்டப் படிப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய உதவித்தொகைகளுக்கான பெற்றோரின் வருமான வரம்பை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.




மேலும், பட்டியல் வகுப்பினர் (SC) மாணவர்களுக்கான தேசிய வெளிநாட்டு உதவித்தொகை (National Overseas Scholarship (NOS)) திட்டத்தை "பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் வெளிநாட்டு உதவித்தொகை திட்டம்" (Baba Saheb Dr.Bhim Rao Ambedkar Overseas Scholarship Scheme) என்று மறுபெயரிடவும், இந்தத் திட்டத்தின்கீழ் கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கையை 125-லிருந்து 250-ஆக அதிகரிக்கவும், பராமரிப்பு கொடுப்பனளவை 25% அதிகரிக்கவும், சுகாதாரத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இடமளிக்க ஒரு புதிய வகையை அறிமுகப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.


பட்டியல் பழங்குடியினர் (ST) மாணவர்களுக்கான இதேபோன்ற தேசிய வெளிநாட்டு உதவித்தொகை (NOS) திட்டமும் திருத்தப்பட்டு வருவதாகவும், இதில் கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கையை 20-லிருந்து 50-ஆக அதிகரிக்கவும், நிதி உதவியை $15,400-லிருந்து $19,250-ஆக உயர்த்தவும் ஒரு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பழங்குடியினர் விவகார அமைச்சகம் சட்டமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளது.


இதனுடன் கூடுதலாக, பட்டியல் வகுப்பினர் (SC) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான (OBC) இலவச பயிற்சித் திட்டம் போன்ற திட்டங்களில் சில மாற்றங்களை அரசாங்கம் முன்மொழிகிறது. இதில் பரிந்துரைத்த இடங்களின் எண்ணிக்கை மற்றும் உதவித்தொகையின் அளவை இரட்டிப்பாக்குவதும், மாநில பல்கலைக்கழகங்களையும் பயிற்சி வழங்க அனுமதிப்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். மேலும், பன்னிரெண்டாம் வகுப்புக்கு அப்பால் உள்ள பட்டியல் வகுப்பினர் (SC) மாணவர்களுக்கான உயர் வகுப்பு உதவித்தொகைகள், நிலையான எண்ணிக்கையிலான இடங்களைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, "நிறைவு சார்ந்த" (saturation-based) திட்டமாக மாற்றப்பட முன்மொழியப்பட்டுள்ளது.


கூடுதலாக, "SC, ST, OBC, EBC மற்றும் DNT-களுக்காகவும், பொதுப் பிரிவு மாணவர்களுக்காகவும் கூடுதலாக மத்திய பல்கலைக்கழகங்களில் அதிக திறன் கொண்ட விடுதிகளை" கட்டுவதற்காக, "சாம்ராஸ்" (SAMRAS) என்ற புதிய திட்டத்தைத் தொடங்குவதற்கான திட்டமும் தயாரிக்கப்பட்டு வருகிறது.



பட்டியல் வகுப்பினர்களுக்கான (SC) பள்ளிப்படிப்புக்கு பிந்தைய உதவித்தொகைக்கு முன்மொழியப்பட்ட மாற்றங்களில் உதவித்தொகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நிதிநிலை அறிக்கை ஒதுக்கீட்டில் 1% ஒதுக்குவதற்கான திட்டமும் அடங்கும்.


அடுத்த நிதிச் சுழற்சியில் (2026-27 முதல் 2030-31 வரை) திட்டங்களில் ஏற்படும் இந்த மாற்றங்கள், அந்தந்த அமைச்சகங்களால் செலவு நிதிக் குழுவிடம் முன்மொழியப்படுகின்றன. இது அடுத்த நிதிச் சுழற்சி தொடங்குவதற்கு முன்பு அவற்றை மதிப்பாய்வு செய்து சரியான நேரத்தில் முடிவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டங்களில் மாற்றங்களுக்கான திட்டங்கள், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பான துறை சார்ந்த நிலைக்குழுவுடனான அதன் தொடர்புகளின் போது அரசாங்கம் இந்த திட்டங்களை வெளிப்படுத்தியது.


இந்தக் குழு கடந்த ஆண்டு பல உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான உச்சவரம்பு தகுதிக்கான அளவுகோல்களை அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. மேலும், இந்தத் திட்டங்களின்கீழ் இடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது. புதன்கிழமை, சமூக நீதி மற்றும் பழங்குடி விவகார அமைச்சகங்களுக்கு இந்தக் குழுவால் தாக்கல் செய்யப்பட்ட மானியக் கோரிக்கை குறித்த அறிக்கைகளில், உதவித்தொகை, பயிற்சி மற்றும் விடுதித் திட்டங்களில் மாற்றங்களுக்கான முன்மொழிவுகள் குறித்து அரசாங்கம் சமர்ப்பித்த பதில்களை கவனத்தில் கொண்டது.


ஒத்திசைவு இல்லாமை


சமூக நீதி அமைச்சகத்தின் செலவினம் நிதியாண்டின் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளை பூர்த்தி செய்யவில்லை என்று சட்டமன்றக் குழு கவலை தெரிவித்தது. 2024-25 நிதியாண்டில் பட்டியல் வகுப்பினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பிரிவுகளுக்கான கணிசமான அளவு நிதி அமைச்சகத்தால் ஒப்படைக்கப்பட்டது என்பதையும் அது சுட்டிக்காட்டியது. இருப்பினும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் இந்த நிதி குறைவாகப் பயன்படுத்தப்பட்டது என்று குழு முடிவு செய்தது.


புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளில் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட சட்டமன்றக் குழுவிடம் சமர்ப்பிப்புகளில், OBC, EBC மற்றும் DNT-களுக்கான பள்ளிப் படிப்பிற்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ், பட்டம் மற்றும் முதுகலை நிலைகளுக்கு (₹20,000 முதல் ₹25,000 வரை), பட்டங்கள், டிப்ளோமாக்கள் மற்றும் சான்றிதழ்களுக்கான தொழில்முறை படிப்புகளுக்கு (₹13,000 முதல் ₹15,000 வரை) மற்றும் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு நிலைகளுக்கு (₹5,000 முதல் ₹7,000 வரை) ஆண்டுதோறும் உதவித்தொகை உயர்த்தப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


கூடுதலாக, இந்தத் திட்டத்தின் கீழ், XI மற்றும் XII வகுப்புகளில் தொடரப்படும் தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் படிப்புகளுக்கு ஆண்டுக்கு ₹2,000 கூடுதலாக வழங்கப்படும்.


மேலும், பட்டியல் வகுப்பினர் (SC) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான (OBC) இலவச பயிற்சி திட்டத்தின் கீழ், 3,500 இடங்களை 7,000 இடங்களாக அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிகிறது. இந்த புதிய மொத்த இடங்களில், மத்திய பல்கலைக்கழகங்களுக்கு 3,000 இடங்களையும், மாநில பல்கலைக்கழகங்களுக்கு 2,000 இடங்களையும் ஒதுக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கூடுதலாக, "மாணவர்களை மையமாகக் கொண்ட பயன்முறையை" (student-centric mode) அறிமுகப்படுத்தவும் திட்டங்கள் உள்ளன. மீதமுள்ள 2,000 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், இதன் கீழ் மாணவர்கள் தங்கள் விருப்பப்படி பயிற்சி மையங்களில் படிக்கலாம். 


சமூகநீதி அமைச்சகத்திற்கான மானியங்களுக்கான கோரிக்கை குறித்த அறிக்கையில், கழிவுநீர் மற்றும் செப்டிக் தொட்டிகளை ஆபத்தான முறையில் சுத்தம் செய்வதால் ஏற்படும் இறப்புகளை நிவர்த்தி செய்வதற்கான நமஸ்தே (NAMASTE) திட்டத்திற்கு கூடுதல் ஒதுக்கீடுகள் தேவை என்று சட்டமன்றக் குழு குறிப்பிட்டது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST சட்டம்) முப்பதாண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்தபோதிலும், "ஏழு மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் மட்டுமே சிறப்பு காவல் நிலையங்கள் உள்ளன" என்பது "அதிர்ச்சியை" வெளிப்படுத்துகிறது.


அடுத்த நிதி சுழற்சிக்காக செலவு நிதிக் குழுவிற்கு (Expenditure Finance Committee (EFC)) அனுப்பப்பட்ட திட்டங்களில், இந்தச் சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் வழங்கப்படும் நிவாரணத் தொகைகளை அதிகரிக்கவும், சிறப்பு காவல் நிலையங்களை அமைப்பதற்காக மாநிலங்களுக்கு அனுப்பப்படும் நிதியைத் திரட்டவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சட்டமன்றக்குழு கூறுகிறது.


Original Link: Government plans to raise income limit for post-matric scholarship for SCs, OBCs, DNTs from 2026-27 onwards


Share: