இயற்கை சார்ந்த தீர்வுகள் எவ்வாறு வேளாண்மையை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் அதிகத்திறன் கொண்டதாக மாற்றக்கூடும். -அபினவ் ராய்

 காலநிலை மாற்றத்தால் உருவாகும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், இயற்கை சார்ந்த தீர்வுகள் மற்றும் காலநிலைத் தாங்குதிறன் கொண்ட வேளாண்மை ஆகியவை, வேளாண் அமைப்புகளின் மீள்திறனை மேம்படுத்தும் நிலைத்தன்மை கொண்ட அணுகுமுறைகளாக உருவெடுத்துள்ளன. காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக இந்தியா தொடங்கியுள்ள முக்கிய முன்னெடுப்புகள் யாவை? இது போன்ற நடவடிக்கைகள் எவ்வாறு காலநிலை மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக்கொள்ளும் திறனை வலுப்படுத்துவதோடு, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன?


அதிகரித்து வரும் வெப்பநிலை, சீரற்ற பருவமழை மற்றும் அடிக்கடி ஏற்படும் தீவிர வானிலை நிகழ்வுகள் ஆகியவற்றின் காரணமாக பருவநிலை மாற்றத்தின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், வேளாண்த்துறை இரண்டு வகையான சவாலை எதிர்கொள்கிறது. முதலாவதாக, அறுவடைத்திட்டங்கள் மற்றும் பயிர் விளைச்சலைப் பாதிப்பதன் மூலம், பருவநிலை மாற்றத்தின் தாக்கத்திற்கு வேளாண்மை மிகவும் உணர்திறன் கொண்டதாக உள்ளது. இரண்டாவதாக, பசுமை இல்ல வாயு வெளியேற்றம், பயிர் கழிவுகளை எரித்தல் மற்றும் வனப்பகுதிகளை அழித்தல்  ஆகியவற்றின் மூலம் வேளாண் துறையே பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணியாக இருந்து வருகிறது.


இந்த சவால்களை எதிர்கொள்ள, இயற்கை சார்ந்த தீர்வுகள் (Nature-based Solutions (NbS)) மற்றும் காலநிலை மாற்றத்தைத்தாங்கும் வேளாண்மை (Climate Resilient Agriculture (CRA)) ஆகியவை, வேளாண் அமைப்புகளின் மீள்திறனை மேம்படுத்தி, எதிர்கால சந்ததியினரின் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதிசெய்யவும், மண் மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவும் ஒரு நிலையான அணுகுமுறையாக உருவெடுத்துள்ளன.


காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய  வேளாண்மையை உருவாக்குதல்


காலநிலை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு, ஒளிச்சேர்க்கை (Photosynthesis) செயல்முறையைப் பாதிப்பதன் மூலமும், பூச்சிகளின் பரவல் மற்றும் எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமும், பயிர்களின் செயல்திறனை குறைக்கக்கூடும். உரப்பயன்பாட்டுத்திறன் (Fertiliser Use Efficiency (FUE)), மண் வளம் மற்றும் பயிர் மகசூல் போன்றவற்றையும் பாதிக்கிறது.


அதிக வெப்பநிலை மற்றும் கார்பன்-டை-ஆக்சைடின் (CO₂) அதிகரிப்பது, தாவர வளர்ச்சியைப் பாதிக்கலாம், பூச்சிகளின் பரவல் மற்றும் வாழ்க்கைச் சுழற்சிகளை விரிவுபடுத்தலாம், ஊட்டச்சத்துக்களை விளைச்சலாக மாற்றும் தாவரங்களின் திறனைக் குறைக்கலாம். மேலும், மண்ணின் ஈரப்பதத் தன்மை மற்றும் ஊட்டச்சத்து சமநிலையின்மையை மோசமாக்கலாம்.


காலநிலை தொடர்பான இது போன்ற அபாயங்களைக் குறைப்பதற்கு, காலநிலையைத் தாங்கக்கூடிய வேளாண் நடைமுறைகள் தேவைப்படுகின்றன. காலநிலையைத் தாங்கக்கூடிய வேளாண்மை (Climate-resilient agriculture) நடைமுறை என்பது, மாறிவரும் காலநிலை நிலைகளுக்கு ஏற்ப வேளாண் அமைப்பைத் தகவமைத்துக்கொள்ளவும், காலநிலையால்  ஏற்ப்படும் சிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவும் வேளாண் நடைமுறைகளைக் குறிக்கிறது.


இந்த நடைமுறைகள், தேவையான பயிர்கள் மற்றும் பருவநிலைக்கு ஏற்ற வகைகளைத் தேர்வு செய்தல், விதைப்புக்காலம் மற்றும் பயிர்க்கால அளவை மாற்றியமைத்தல், சரியான நடவு முறைகளைக் கையாளுதல், வேளாண் காடு வளர்ப்பு, ஆக்சிஜன் குறைவாக உள்ள சூழலில் உயிரிக் கழிவுகளை வெப்பப்படுத்தி தயாரிக்கப்படும் கார்பன் நிறைந்த கரிமப் பொருள் (biochar) பயன்பாடு, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் திறமையான பயன்பாடு, அதனுடன் மேம்படுத்தப்பட்ட நீர் மற்றும் மண் மேலாண்மை போன்ற நடவடிக்கைகள் அடங்கும்.


மேலும், பருவநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடிய வேளாண்மையானது, குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் மாநிலங்கள் போன்ற சமூக அமைப்புகளின் மீள்திறனையும், அரசு மற்றும் அமைப்புகளால் வழங்கப்படும் தொழில்நுட்ப அறிவு மற்றும் சேவைகளைப்பயன்படுத்திக்கொள்ளும்  திறனும் இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.


மேலும், காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய வேளாண்மையை ஆதரிக்கும் பல்வேறு அணுகுமுறைகளில், காலநிலை தகவமைப்பு, காலநிலை மாற்றத்தணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு மீட்டமைப்பு ஆகியவற்றை ஒரே நேரத்தில் கையாள்வதற்கான ஒரு முக்கிய உத்தியாக இயற்கை சார்ந்த தீர்வுகள் (nature-based solutions) உருவெடுத்துள்ளன.


காலநிலை மற்றும் உணவுப் பாதுகாப்பிற்காக இயற்கையைப் பயன்படுத்துதல்


வேளாண்மையில் இயற்கை சார்ந்த தீர்வுகள் என்பது பல்வேறு   நடைமுறைகளை  கொண்டுள்ளது. இவற்றின் மூன்று முக்கிய நோக்கங்கள்: காலநிலை மாற்றத்திற்குத் தகவமைத்து, உணவு உற்பத்தியைத் தாங்கும் திறனுடன் மேம்படுத்துதல், காலநிலை மாற்றத்தைத் தணித்தல் மற்றும் இயற்கை வளங்களையும் பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாத்து மேம்படுத்துதல் ஆகும். இயற்கை சார்ந்த தீர்வுகளுக்கான எடுத்துக்காட்டுகளில், மீளுருவாக்கம் மற்றும் பாதுகாப்பு வேளாண்மை, குறைந்த உழவு அல்லது உழவு பணிகள் இல்லாத சாகுபடி மற்றும் வேளாண் வனவியல் முறைகள் (Agroforestry), ஆக்சிஜன் குறைவாக உள்ள சூழலில் உயிரிக் கழிவுகளை வெப்பப்படுத்தி தயாரிக்கப்படும் கார்பன் நிறைந்த கரிமப் பொருள் (biochar) போன்ற நடைமுறைகள் உள்ளன

பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் சமர்ப்பிக்கப்பட்ட, குறைந்தபட்சம் 102 நாடுகளின் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளின் (Nationally Determined Contributions (NDCs)) உமிழ்வுக்குறைப்புத் திட்டங்களில், இயற்கை சார்ந்த தீர்வுகள் தற்போது ஒரு முக்கியப்பகுதியாக உள்ளன. 2030-ஆம் ஆண்டிற்குள் உலக வெப்பநிலை உயர்வை 2°C-க்குக் கீழ் குறைக்கத் தேவையான, செலவு குறைந்த காலநிலையில் 37 சதவீதத்தை இயற்கை சார்ந்த தீர்வுகள் வழங்கக்கூடும் என்று Proceedings of the National Academy of Sciences இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.


இதனால், காலநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய உணவுப்பாதுகாப்பு ஆகிய ஒன்றோடொன்று இணைந்த சவால்களை எதிர்கொள்ள முற்படும் உத்திகளில், இயற்கை சார்ந்த தீர்வுகள் ஒரு முக்கியமான ஒன்றாக உருவாகின்றன.


காலநிலை மாற்றம் மற்றும் உணவுப்பாதுகாப்பு


உலக மக்கள் தொகை அதிகரித்து வருவதால், 2050-ஆம் ஆண்டிற்குள் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதலாக 60 சதவீத உணவு தேவைப்படும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பின்தங்கிய மற்றும் வளர்ந்துவரும் நாடுகள் அல்லது பிராந்தியங்கள் காலநிலை மாற்றத்தால் அதிக அளவில் பாதிப்பை எதிர்கொள்ளும் சூழல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உதாரணமாக, ஆசிய-பசிபிக் பிராந்தியமானது அதிக மக்கள்தொகை கொண்ட மற்றும் முக்கிய உணவு உற்பத்தி செய்யும் ஒரு பகுதியாகும். இந்த பிராந்தியத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் (220 கோடி பேர்) தங்கள் வாழ்வாதாரத்திற்காக வேளாண்மையே நம்பியுள்ளனர். வெப்பநிலை உயர்வு இதே வேகத்தில் தொடர்ந்தால், 2100-ஆம் ஆண்டிற்குள் தென்கிழக்கு ஆசியா தனது பயிர் உற்பத்தியில் 50 சதவீதத்தை இழக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


அதேபோல், தெற்கு ஐரோப்பாவில் மக்காச்சோளம் மற்றும் கோதுமை விளைச்சல் 2050-ஆம் ஆண்டிற்குள் 49 சதவீதம் வரை குறையக்கூடும். அதே, நேரத்தில் சகாராவுக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்காவில் பயிர் விளைச்சல் 2050-ஆம் ஆண்டிற்குள் 5 முதல் 17 சதவீதம் வரை குறையக்கூடும்.


எனவே, நாடுகள் இயற்கை சார்ந்த தீர்வுகளையும், காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய வேளாண்மை  தீர்வுகளையும் அதிகளவில் செயல்படுத்தி வருகின்றன. ஐரோப்பா, ஐரோப்பிய பசுமை ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவமைப்பு உத்தி, தேசிய தகவமைப்பு திட்டங்கள் மற்றும் பல்வேறு கார்பன் அகற்றும் கொள்கைகள் உள்ளிட்ட கொள்கைகளின் மூலம், பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய வேளாண் நடைமுறைகளைச் செயல்படுத்தி வருகிறது.


அதேபோல், சீனா 2014 முதல் 2019 வரை உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பு Global Environment Facility (GEF) மற்றும் உலக வங்கியின் ஆதரவுடன் காலநிலைக்கேற்ற முக்கியப்பயிர் உற்பத்தித்திட்டத்தை (Climate-Smart Staple Crops Production Project (CSSCP)) வெற்றிகரமாகச் செயல்படுத்தியது.


காலநிலை மாற்றத்தால் இந்திய வேளாண்மை எதிர்கொள்ளும் பாதிப்புகள்


வேளாண்மைத்துறை இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியத் தூணாக இருந்து வருகிறது. வேளாண்மைத்துறை நாட்டின்  58% மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய காரணியாக இருப்பதுடன், 46.1% வேளாண் பணிகளை செய்துவரும் தொழிலாளர் படைக்கு வேலைவாய்ப்பையும் வழங்குகிறது. மேலும், நாட்டின் மொத்த மதிப்புக் கூட்டலில் (Gross Value Added  (GVA)) வேளாண்மைத் துறையின் பங்கு 18% ஆகும்.


இருப்பினும், கட்டமைப்பு சார்ந்த சில காரணிகளாலும், வானிலை மற்றும் காலநிலையை அதிகமாகச் சார்ந்திருப்பதாலும், இந்திய வேளாண்மை காலநிலை மாற்றத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, சிறிய மற்றும் சிதறிக் காணப்படும் நில உடைமைகள் இந்தப் பாதிப்பை அதிகரிக்கின்றன. இந்தியாவில் சராசரி நில உடைமை அளவு 1.08 ஹெக்டேர் மட்டுமே. மேலும், 89.4% குறு மற்றும் சிறு உழவர்கள் 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தையே வைத்துள்ளனர்.


மேலும், இந்தியா வேளாண்மை 60 சதவீதம் பருவமழையைச் சார்ந்ததுள்ளது. இது மொத்த உணவு உற்பத்தியில் 40 சதவீதப் பங்களிக்கிறது. எனவே, வானிலை நிகழ்வுகளை அதிகமாகச் சார்ந்திருப்பதால், காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படும் துறைகளில் வேளாண்மை ஒன்றாக உள்ளது.


புவி அறிவியல் அமைச்சகம் (Ministry of Earth Sciences) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 1950-களிலிருந்து இந்தியாவில் சராசரி வெப்பநிலை உயர்வு, பருவமழை அளவு குறைவு, தீவிர வெப்பநிலை மற்றும் அதிக மழை தரும் நிகழ்வுகளின் அதிகரிப்பு, வறட்சி, கடல்மட்ட உயர்வு மற்றும் கடுமையான புயல்களின் தீவிரம் அதிகரித்துள்ளது. இவ்வாறு மாறிவரும் காலநிலைச் சூழலில், ஆக்சிஜன் குறைவாக உள்ள சூழலில் உயிரிக் கழிவுகளை வெப்பப்படுத்தி தயாரிக்கப்படும் கார்பன் நிறைந்த கரிமப் பொருள் (biochar) ஒரு நம்பிக்கைக்குரிய இயற்கை சார்ந்த தீர்வாக கருதப்படுகிறது.


காலநிலை மாற்றத் தணிப்பு உத்தியாக ஆக்சிஜன் குறைவாக உள்ள சூழலில் உயிரிக் கழிவுகளை வெப்பப்படுத்தி தயாரிக்கப்படும் கார்பன் நிறைந்த கரிமப் பொருளை (biochar) பயன்படுத்துவதற்கான வாதம்


இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றம் (Indian Council of Agricultural Research (ICAR)) கூற்றுப்படி, பயோசார் என்பது பயிர் எச்சங்கள், மரக்கழிவுகள் போன்ற கரிமப் பொருட்களை ஆக்சிஜன் இல்லாத சூழலில், 300–500 டிகிரி செல்சியஸ் கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையில் மெதுவாக வெப்பப்படுத்தும் (Slow Pyrolysis) முறையில் உருவாகும் கருக்கிய உயிரித்திரள் (Charred Biomass) ஆகும்.


இந்தியாவில் ஆண்டுதோறும் 350 மில்லியன் டன் வேளாண் கழிவுகள் உருவாகின்றன. இவற்றை முறையாகப் பயன்படுத்தினால், ஊட்டச்சத்து நிறைந்த இயற்கை உரங்களைத் தயாரிக்கவும், ஆண்டுக்கு 18,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் முடியும்.


ஆக்சிஜன் குறைவாக உள்ள சூழலில் உயிரிக் கழிவுகளை வெப்பப்படுத்தி தயாரிக்கப்படும் கார்பன் நிறைந்த கரிமப் பொருளில் அதிக அளவு கார்பன் இருப்பதால், அதை வேளாண்மையில் பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் வளத்தை அதிகரிக்கவும், மண்ணில் உள்ள நீரைத் தக்கவைக்கும் திறனை மேம்படுத்தவும், ஊட்டச்சத்து பயன்பாட்டுத்திறனை அதிகரிக்கவும், கார்பன் சேமிப்பை (Carbon Sequestration) அதிகரிக்க மற்றும் காலநிலை மாற்றத்தைத் குறைக்க முடியும்.


மேலும், பயிர்க் கழிவுகளை திறந்தவெளியில் எரிப்பதைவிட, ஆக்சிஜன் குறைவாக உள்ள சூழலில் உயிரிக் கழிவுகளை வெப்பப்படுத்தி தயாரிக்கப்படும் கார்பன் நிறைந்த கரிமப் பொருளின் (biochar) மூலம் தயாரிப்பது மிகவும் பயனுள்ள மற்றும் நிலைத்தன்மை கொண்ட மாற்று முறையாகும். இது காற்று மாசுபாடு, காற்றின் நச்சுத்தன்மை மற்றும் துகள்மாசு வெளியேற்றத்தைக் குறைக்க உதவுகிறது.   டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, பயோசார் இந்திய மண்ணில் சராசரியாக 376.11 மெகா டன் CO₂-சமமான கார்பனை சேமிக்கக்கூடியது. இதன் மூலம் வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் ஏற்படும் பசுங்குடில் வாயு உமிழ்வில் 41–63% வரை குறைப்பு ஏற்படுத்த முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இது போன்ற காலநிலைத் தாங்குதிறன் கொண்ட மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த வேளாண் நடைமுறைகளை ஊக்குவிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த அரசு, வேளாண்த் துறையில் தகவமைப்பு (Adaptation) மற்றும் தணிப்பு (Mitigation) நடவடிக்கைகளை வலுப்படுத்த பல்வேறு கொள்கைரீதியான முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.


காலநிலைத் தாங்குதிறன் கொண்ட வேளாண்மைக்கான இந்தியாவின் கொள்கை நடவடிக்கைகள்


2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய காலநிலை மாற்ற செயல் திட்டம் (National Action Plan on Climate Change (NAPCC)), இந்தியாவின் காலநிலை மாற்றக் கொள்கைகளுக்கான விரிவான மற்றும் ஒருங்கிணைந்த கட்டமைப்பை வழங்குகிறது.


தேசிய காலநிலை மாற்ற செயல் திட்டத்தின்கீழ், 2014–15-ஆம் ஆண்டில் தேசிய நிலைத்த வேளாண்மை இயக்கம் (National Mission for Sustainable Agriculture  (NMSA)) தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம், மண் வளத்தை மேம்படுத்துதல், நீரை திறமையாகப் பயன்படுத்துதல் மற்றும் நிலைத்தன்மை கொண்ட வேளாண் நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் காலநிலைத் தாங்குதிறன் கொண்ட வேளாண்மையை ஊக்குவிப்பதாகும்.


இந்த திட்டத்தின்கீழ் ஒரு சொட்டு அதிக பயிர், மானாவாரி பகுதி வளர்ச்சி, மண் ஆரோக்கியம் மற்றும் கருவுறுதல் திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுக்கான திட்டம் (Mission for Integrated Development of Horticulture (MIDH)), வேளாண் காடுகள் மற்றும் தேசிய மூங்கில் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


மேலும், 2014-ஆம் ஆண்டு தேசிய வேளாண் வனவியல் கொள்கையை (National Agroforestry Policy) ஏற்றுக்கொண்ட முதல் நாடு இந்தியா ஆகும். இதைத்தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டு தேசிய இயற்கை வேளாண்மை திட்டம் (National Mission on Natural Farming) தொடங்கப்பட்டது.


2011-ஆம் ஆண்டு, வேளாண்மை மற்றும் உழவர்கள் நல அமைச்சகம், தேசிய காலநிலைத் தாங்குதிறன் கொண்ட வேளாண் புதுமைகள் திட்டத்தை (National Innovations in Climate Resilient Agriculture (NICRA)) என்ற முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத்திட்டம் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் (Indian Council of Agricultural Research (ICAR)) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


சமீபத்தில், தேசிய காலநிலைத் தாங்குதிறன் கொண்ட வேளாண் புதுமைகள் திட்டதிட்டத்தை மேற்கொண்ட 651 வேளாண் மாவட்டங்களின் காலநிலை பாதிப்பு மதிப்பீட்டில், 310 மாவட்டங்கள் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 109 மாவட்டங்கள் "மிக அதிக பாதிப்புக்குள்ளானவை" (Very High Vulnerability) என்றும், 201 மாவட்டங்கள் "அதிக பாதிப்புக்குள்ளானவை" (Highly Vulnerable) என்றும் வகைப்படுத்தப்பட்டன. இதன் அடிப்படையில், அனைத்து 651 வேளாண் மாவட்டங்களுக்கும் மாவட்ட வேளாண் அவசரகாலத்திட்டங்கள் (District Agriculture Contingency Plans (DACPs)) அரசால் தயாரிக்கப்பட்டுள்ளன.


NICRA-வின் கணிப்பின்படி, 2050-ஆம் ஆண்டுக்குள் மழை சார்ந்த நெல் மகசூல் 20%, கோதுமை மகசூல் 19.3%, கரீப் மக்காச்சோள மகசூல் 18% வரை குறையக்கூடும். அதேவேளையில், 2030-ஆம் ஆண்டுக்குள் சோயாபீன் மகசூல் 3% முதல் 10% வரை அதிகரிக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


2014 முதல் 2024 வரை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (Indian Council of Agricultural Research  (ICAR))  மொத்தம் 2,900 புதிய பயிர் ரகங்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் 2,661 ரகங்கள், பூச்சிகள் மற்றும் நோய்கள் போன்ற உயிரியல் அழுத்தங்கள் (Biotic Stresses) மற்றும் நீர், வெப்பநிலை, ஈரப்பதம், மண் போன்ற உயிரற்ற அழுத்தங்கள் (Abiotic Stresses) ஆகியவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைத் தாங்கும் திறன் கொண்டவையாகும்.


சவால்கள் மற்றும் முன்னேற்றப்பாதை


இருப்பினும், அரசின் கொள்கை நோக்கங்களை களத்தில் (On-ground) திறம்பட நடைமுறைப்படுத்துவது இன்னும் சவாலாகவே உள்ளது.


காலநிலையைத்தாங்கும் பயிர் ரகங்கள், மரபணுத் திருத்தம் செய்யப்பட்ட பயிர்கள் (Genome-edited Crops), உயிர் உரங்கள் (Biofertilisers), உயிர் பூச்சிக்கொல்லிகள் (Biopesticides) மற்றும் நீர் சிக்கனமான தொழில்நுட்பங்கள்   போன்ற மேம்படுதப்பட்ட கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் உள்ள குறைந்த விழிப்புணர்வு, கடன் வசதிக்கான அணுகல் குறைவு, தரமான பொருட்கள் கிடைக்காத சூழல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் ஆரம்ப கால முதலீட்டுச் செலவுகள் தடையாக உள்ளன.


இந்தக்கட்டுப்பாடுகள் குறிப்பாக குறு மற்றும் சிறு உழவர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றன. எனவே, அவர்களின் வேளாண் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் திறன்களை மேம்படுத்த அரசு நிதி ஆதரவு மற்றும் ஆரம்பகட்ட வழிகாட்டுதல் (Hand-holding Support) வழங்குவது மிகவும் முக்கியமான நடவடிக்கையாகும்.


எனவே, இயற்கை சார்ந்த தீர்வுகள் மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய வேளாண் முறைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது என்பது, காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்துப் பங்குதாரர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், மேம்பட்ட வேளாண் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் அவர்களுக்கு நம்பிக்கையை அளிப்பதிலும் இருந்து தொடங்குகிறது.


இதற்கு உழவர்கள், அரசு, ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளுக்கு இடையே கூட்டு முயற்சி தேவைப்படுகிறது. இது போன்ற முயற்சிகள் இந்தியாவின் 140 கோடி மக்களுக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யவும், உழவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும், காலநிலை மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளும் திறனை வலுப்படுத்தவும், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் உதவும்.


Original articles: How nature-based solutions can make agriculture more resilient to climate change. -Abhinav Rai

Share:

விஜய் அரசின் முதல் வரவு-செலவு அறிக்கை : தமிழ்நாட்டின் மிகப்பெரிய நிதிச் சவாலாக கடன் ஏன் உள்ளது? -உதித் மிஸ்ரா

 தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தனது வரவு-செலவு அறிக்கை உரையில், முந்தைய அரசுகள் தங்கள் வருவாயைவிட மிக அதிகமாகச் செலவிட்டதாகவும், அதன் விளைவாக, தாங்கள் நிலையான முறையில் திருப்பிச் செலுத்தக்கூடிய அளவைவிட மிக அதிகமான தொகையைக் கடனாகப் பெற்றதாகவும் குறிப்பிட்டார்.


முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதல் வரவு-செலவு அறிக்கையை தமிழ்நாட்டின் நிதியமைச்சர் என். மேரி வில்சன் புதன்கிழமை தாக்கல் செய்தார்.


நிதியமைச்சர், 2036-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தின் அளவை $1.5 டிரில்லியன் ஆக உயர்த்துவதாக உறுதியளித்தார். தற்போதைய நிலையில், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (gross state domestic product (GSDP)) அந்நிய செலாவணி விகிதத்தைப் பொறுத்து $350 பில்லியன் முதல் $400 பில்லியன் வரை உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தின் அளவை மூன்று மடங்கிற்கும் மேலாக உயர்த்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.


மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களுடன் சேர்ந்து, தமிழ்நாடும் நீண்டகாலமாக இந்தியாவின்  வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அனைத்து இந்திய மாநிலங்களிலும் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி சிறிதளவு வளர்ந்த போதிலும், மாநிலத்தின் நிலைமை மோசமடைந்துள்ளது.


முக்கிய சவால்


தனது நிதிநிலை அறிக்கை உரையில், கடந்தகால அரசுகள் தாங்கள் ஈட்டிய வருவாயை விடப்  அதிகமாகச் செலவு செய்துள்ளன என்றும்,  நிலையான முறையில் திருப்பிச் செலுத்தும் திறனைவிட அதிகமாகக் கடன் வாங்கியுள்ளன என்றும் வில்சன் தெளிவுபடுத்தினார்.


மாநிலத்தின் நிதி நிலைமை பற்றாக்குறையில் உள்ளது. கடன் சுமை, போதிய வருவாய் இல்லாத நிலை மற்றும் நிதி இழப்பு போன்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட ஒரு கருவூலமே எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இருப்பினும், நிதி நிர்வாகத்தை மீண்டும் நிதிசார்  முன்னேற்றமான பாதைக்குக் கொண்டுவர குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்று நிதியமைச்சர் கூறினார்.


கீழே உள்ள இரண்டு வரைபடங்கள், தமிழ்நாடு எதிர்கொள்ளும் நிதிச் சவாலின் ஒரு கண்ணோட்டத்தை வழங்குகின்றன.


வரைபடம் 1-ல், தமிழ்நாடு மற்றும் அதற்கு ஒப்பிடத்தக்க பொருளாதார அளவைக்கொண்ட சில மாநிலங்களின் மொத்த அரசுக் கடன், மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை சதவீதம் உள்ளது என்பதை காட்டுகிறது. இந்த விகிதம் கடந்த காலத்தில் பெரிதாக அதிகரிக்கவில்லை என்றாலும், பொருளாதார அளவைக்கொண்ட பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டின் கடன்-மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி  (Debt-to-GSDP) விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருப்பதே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.


இதற்குக் காரணம், மாநிலத்தன் வருவாய்க்கும் செலவினங்களுக்கும் இடையிலான இடைவெளியை ஈடுசெய்யத் மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிக அளவில் கடன் வாங்கி வருவதே ஆகும். அதிக அளவிலான கடன் சுமை இருப்பதன் விளைவாக, மாநிலம் தனது வருவாயை அதிகரிக்கும் திறனை மேம்படுத்திக்கொள்ளாத பட்சத்தில், காலப்போக்கில் வட்டிச் சுமை  அதிகரித்துக்கொண்டே செல்கிறது.


இதைத்தான் வரைபடம் 2 காட்டுகிறது. தமிழ்நாட்டில், கடந்தகாலக் கடனுக்கான வட்டியை மட்டும் செலுத்துவதற்காகச் செலவிடப்படும் பணத்தின் சதவீதம் சீராக அதிகரித்து வருகிறது.


கடனுக்கான வட்டியைத் திருப்பிச் செலுத்துவதற்கே அரசின் வருவாயில் அதிகப் பணம் செலவிடப்படுவதால் ஏற்படும் உடனடி விளைவு, ஏழைகளுக்கு நிவாரணம் வழங்குதல் போன்ற நலத் திட்டங்களுக்காக அரசு ஒதுக்கக்கூடிய நிதி குறைந்து விடுகிறது அல்லது மூலதனச் செலவுகளுக்காக (Capital Expenditure) சாலைகள், துறைமுகங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காகச் செய்யப்படும் முதலீடுகளுக்காகவும் அரசிடம் குறைவான நிதியே மீதமிருக்கும். இது போன்ற உள்கட்டமைப்பு சொத்துகளே மாநிலத்தின் பொருளாதாரத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் முக்கிய முதலீடுகளாகும்.


கடந்த மாதம் தமிழ்நாடு அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் (White Paper), அதிகரித்து வரும் வட்டிச் செலவுகள் மாநிலத்தின் நிதி நிலையை மிகக்கடுமையான கட்டத்திற்கு தள்ளியுள்ளது  என்பதை விளக்கியது.

அதிகரித்துவரும் வட்டிச்செலவுகளே கடன் வாங்க வேண்டிய சூழலை உருவாக்குகின்றன. ஏனெனில், வட்டித் தொகையைச் செலுத்துவதற்கு அரசுக்கு நிதி தேவைப்படுகிறது. வருவாய் வரவுகள் (Revenue Receipts) போதுமானதாக இல்லாவிட்டால், அந்த பற்றாக்குறையை ஈடுசெய்ய அரசு மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுவே 'கடன்–வட்டி சுழற்சி' (Debt-Interest Spiral) என்று அழைக்கப்படுகிறது. தற்போது தமிழ்நாடு இந்தச்சுழற்சியின் ஆரம்ப நிலையிலேயே நுழைந்து கொண்டிருக்கிறது என்று வெள்ளை அறிக்கை குறிப்பிட்டது.


வரவு-செலவு அறிக்கையின் குறிப்பிடுகள் 


நிதிநிலை தொடர்பான கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு செலவுகளைக்குறைப்பதன் மூலம் கடன் வாங்குவதைக் குறைக்கவும், அதேவேளையில் வருவாயை அதிகரிப்பதற்கான வழிகளைக் கண்டறியும் நிலை ஏற்பட்டுள்ளது.


அரசு ஏற்கனவே  15,000 கோடி ரூபாய் திரட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும், புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் உயர்மட்ட 'வருவாய் அதிகரிப்பு குழு' (Revenue Augmentation Committee) அமைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.


2025-26 ஆம் ஆண்டில் 28%-ஆக இருந்த கடன்-மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி விகிதமானது, 2027-28-ஆம் ஆண்டில் 26.57% ஆகவும், 2028-29-ஆம் ஆண்டில் 26.10%-ஆகவும் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் உறுதியளித்தார்.


Original articles: First Vijay government budget: Why debt is Tamil Nadu’s biggest fiscal challenge. -Udit Misra

Share:

இந்தியாவில் சுமார் 56% வாகனங்களுக்குக் காப்பீடு இல்லை : 'கட்டாய' வாகனக் காப்பீடு (Mandatory Motor Insurance) குறித்து உச்சநீதிமன்றம் கூறியது என்ன? - வினீத் பல்லா

 மூன்றாம் தரப்பு மோட்டார் வாகனக் காப்பீட்டை (third-party motor insurance) கட்டாயமாக்கும் 'மோட்டார் வாகனச் சட்டம், 1988'-ன் (Motor Vehicles Act) பிரிவு 146-ஐ முறையாகப் பின்பற்றாதது, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நீண்ட சட்டப் போராட்டங்களுக்குள் தள்ளுகிறது என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.


இந்தியச் சாலைகளில் காப்பீடு இல்லாமல் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுக் கோரும் நடைமுறையைச் சீரமைக்கவும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) பல முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது. டிசம்பர் 2024-ல் வெளியான நிதி விவகாரங்களுக்கான நிலைக்குழுவின் (Standing Committee on Finance) அறிக்கையின்படி, "இந்தியச் சாலைகளில் இயங்கும் சுமார் 56% வாகனங்கள் (அதாவது 16.54 கோடி வாகனங்கள்) காப்பீடு இல்லாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது" என்று குறிப்பிட்ட நீதிமன்றம், போக்குவரத்து அமலாக்க நடவடிக்கைகளில் வாகனக் காப்பீட்டுத் தகவல்களைத் தொழில்நுட்பரீதியாக ஒருங்கிணைக்க வேண்டும் என்றும், குடிமக்களுக்கு வாகனக் காப்பீடு விற்பனை செய்யப்படும் முறையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


மூன்றாம் தரப்பு மோட்டார் வாகனக் காப்பீட்டை (third-party motor insurance) கட்டாயமாக்கும் 'மோட்டார் வாகனச் சட்டம், 1988'-ன் பிரிவு 146-ஐ முறையாகப் பின்பற்றாதது, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நீண்ட சட்டப் போராட்டங்களுக்குள் தள்ளுகிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. மூன்றாம் தரப்பு வாகனக் காப்பீடு என்பது, விபத்தின்போது மற்றவர்களுக்கு ஏற்படும் காயம், உயிரிழப்பு அல்லது சொத்துச் சேதம் ஆகியவற்றிற்கான வாகன உரிமையாளரின் நிதிப் பொறுப்பை ஈடுசெய்கிறது. அதேவேளையில், உரிமையாளரின் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதத்தை இது உள்ளடக்காது.


"கட்டாயக் காப்பீட்டு முறையின் நோக்கம்... சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமல்ல, அவர்கள் நீண்ட சட்டப் போராட்டங்களில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதும் ஆகும்," என்று நீதிபதி சஞ்சய் கரோல் மற்றும் நீதிபதி பி.கே. மிஷ்ரா ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வின் சார்பில் எழுதப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வாகனங்களுக்குக் காப்பீடு இருப்பதன் முக்கியத்துவத்தை நீதிமன்றம் வலியுறுத்தியதுடன், வாகனங்களுக்குக் காப்பீடு இல்லாதபோது, ​​பாதிக்கப்பட்டவர்களோ அல்லது அவர்களது குடும்பத்தினரோ நியாயமான காலத்திற்குள் போதுமான இழப்பீட்டைப் பெறுவதற்கான வழிமுறைகள் இல்லாமல் போகின்றன என்று அது கூறியது. "விபத்தில் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தாலோ அல்லது நிரந்தர ஊனத்திற்கு ஆளானாலோ, அக்குடும்பத்தின் மீதான நிதிச் சுமை கணிசமாக அதிகரிப்பதால், அவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் இன்னும் தீவிரமானதாக அமைகிறது."


"இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக நான்கு லட்சத்திற்கும் அதிகமான சாலை விபத்துகள் நிகழ்கின்றன" என்றும், அவற்றில் 22% விபத்துகளில் காப்பீடு இல்லாத வாகனங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்றும் அரசுத் தரவுகளை மேற்கோள் காட்டி நீதிமன்றம் குறிப்பிட்டது.



கட்டாய உத்தரவுகள்


இச்சட்டத்தின்கீழ் உள்ள விதிமுறைகளைச் சிறப்பாக அமல்படுத்துவதை உறுதிசெய்ய, நீதிமன்றம் பல கட்டாய உத்தரவுகளைப் பிறப்பித்தது. மாநிலக் காவல் துறையினருக்கு, இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களின் இணையவழித் தரவுத்தளமான மத்திய 'வாகன்' (VAHAN) இணையதளம் மற்றும் காப்பீட்டுத் தகவல் பணியகத்துடன் (Insurance Information Bureau) இணைக்கப்பட்ட கையடக்கக் கருவிகள் அல்லது பதிவிறக்கம் செய்யக்கூடிய செயலிகள் வழங்கப்பட வேண்டும். இது, "வாகனங்களின் நிகழ்நேரக் காப்பீட்டு நிலையை அதிகாரிகள் கண்காணிக்கவும், விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கவும்" உதவும் என்று நீதிமன்றம் கூறியது.


மேலும், காப்பீடு செய்யப்படாத வாகனங்களுக்குத் தானியங்கி மின்னணு அபராதங்களை வழங்குவதற்காக, நெடுஞ்சாலைகளில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள தானியங்கி வாகனப் பதிவு எண் அங்கீகாரக் கேமராக்களை, காப்பீட்டுத் தரவுத்தளங்கள் மற்றும் 'வாகன்' இணையதளத்தின் தரவுகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அந்த அமர்வு உத்தரவிட்டது.


புதிய வாகனங்களுக்கான மூன்றாம் தரப்பு வாகனக் காப்பீட்டு (third-party insurance) கட்டாயக் கால அளவையும் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவு கார்களுக்கு மூன்று ஆண்டுகளையும், இருசக்கர வாகனங்களுக்கு ஐந்து ஆண்டுகளையும் நிர்ணயித்திருந்த நிலையில், புதிய கார்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கும், புதிய இருசக்கர வாகனங்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கும் மூன்றாம் தரப்பு காப்பீடு வாங்கப்பட வேண்டும் என்று தற்போது அந்த அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான தேவையான வழிகாட்டுதல்களை உடனடியாக வெளியிடுமாறு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கு (Insurance Regulatory and Development Authority of India (IRDAI)) அறிவுறுத்தப்பட்டுள்ளது.


நுகர்வோர் தெளிவான முடிவுகளை எடுப்பதற்கு உதவும் வகையில், தனியார் வாகனக் காப்பீட்டிற்கு நான்கு அடுக்குகள் கொண்ட சீரான கட்டமைப்பை நீதிமன்றம் கட்டாயமாக்கியுள்ளது. இதில் அடிப்படை கட்டாய மூன்றாம் தரப்பு வாகனக் காப்பீடு, வாகனத்தில் பயணிப்பவர்கள் அல்லது பின் இருக்கை பயணிகளுக்கான விருப்பத் தேர்வு பாதுகாப்பு (optional cover), தனிநபர் விபத்து பாதுகாப்பு மற்றும் வாகனத்தின் சொந்த சேதத்திற்கான பாதுகாப்பு (own-damage cover) ஆகியவை அடங்கும். காப்பீட்டு நிறுவனங்கள் இனி காப்பீட்டை வாங்கும் நேரத்தில் "வாடிக்கையாளர் விருப்பத் தேர்வு படிவம்" (customer option form) மற்றும் "நுகர்வோர்-நட்பு வாடிக்கையாளர் தகவல் தாள்" (consumer-friendly customer information sheet) ஆகியவற்றை வழங்க வேண்டும்.


விபத்து இழப்பீடு கோரிக்கைகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களான 'மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயங்களில்' (Motor Accident Claims Tribunals) நிலுவையில் உள்ள பழைய விபத்து வழக்குகள் குறித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 2022 அல்லது அதற்கு முந்தைய காலத்திலிருந்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர, விரிவான விபத்து அறிக்கைகளை "உடனடியாக தாக்கல் செய்யவும்", சாட்சிகளை ஆஜர்படுத்த உதவவும் மாநில காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


முன்மொழியப்பட்ட முன்னோடித் திட்டங்கள்


இந்தக் கட்டாய வழிகாட்டுதல்களுடன் சேர்த்து, உச்சநீதிமன்றம் இரண்டு முன்னோடித் திட்டங்களையும் முன்மொழிந்தது.


முதலாவதாக, வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை செல்லுபடியாகும் காப்பீட்டு நிலையுடன் (valid insurance status) இணைக்கும் வகையிலான ஒரு முன்னோடித் திட்டத்தை உருவாக்குவது குறித்து ஆலோசிக்குமாறு காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்திடம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இந்த முன்மொழியப்பட்ட அமைப்பின்கீழ், செல்லுபடியாகும் காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு "பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் மறுக்கப்படும்", இத்தகைய நடவடிக்கை காப்பீடு பெறுவதை ஊக்குவிக்கும் ஒரு வலுவான காரணியாக அமையும் என்று நீதிமன்றம் கருதுகிறது.




இரண்டாவதாக, குடிமக்கள் தாங்கள் பயணிக்கும் வாகனத்தின் காப்பீட்டு நிலையைச் சரிபார்க்க அனுமதிக்கும் ஒரு முன்னோடித் திட்டத்தை நீதிமன்றம் பரிந்துரைத்தது. இது "காப்பீடு இல்லாத வாகனங்கள் குறித்த தகவல்களை உடனடியாகத் தெரிவிக்க உதவும்".


இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தை அடைந்தது எப்படி?


இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட வழக்கு, 1996-ம் ஆண்டு நடந்த ஒரு சாலை விபத்து தொடர்பான தகராறிலிருந்து உருவானது. டி. ராமு (T Ramu) என்பவர் மாருதி 800 காரில் தனது கிராமத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, ​​கவனக்குறைவாக ஓட்டப்பட்ட லாரி ஒன்று அவரது காரின் பின்புறத்தில் மோதியதில் அவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தனர். 2009-ம் ஆண்டில், கார் உரிமையாளரின் தனிப்பட்ட ஆபத்துக்கான பாதுகாப்பிற்கு கூடுதல் சந்தா (காப்பீட்டுக் கட்டணம்) எதுவும் செலுத்தப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி, தீர்ப்பாயம் இழப்பீடு வழங்க மறுத்துவிட்டது. அந்தக் குடும்பம் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது, அது 2024-ல் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தது. அந்த வாகனத்தில், உரிமையாளர் பயணியாகப் பயணம் செய்வதையும் உள்ளடக்கிய ஒரு "விரிவான காப்பீட்டுத் திட்டம்" (comprehensive insurance policy) இருந்ததைக் குறிப்பிட்ட உயர்நீதிமன்றம், ரூ.10,00,500 இழப்பீடு வழங்கியது. காப்பீட்டு நிறுவனம் இதை உச்சநீதிமன்றத்தில் எதிர்த்து மேல்முறையீடு செய்தது.


இந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், "மோட்டார் வாகன விபத்து கோரிக்கைகள் தொடர்பான விஷயங்களில், நீதிமன்றங்கள் மிக நுட்பமான அணுகுமுறையைக் கையாளக்கூடாது" என்று செவ்வாயன்று தீர்ப்பளித்து, காப்பீட்டு நிறுவனத்தின் பொறுப்பை உறுதி செய்தது.


Original articles: Nearly 56% of Indian vehicles uninsured: What SC said about ‘mandatory’ motor insurance - Vineet Bhalla

Share:

பெரிய சில்லறை விற்பனையாளர்களுக்கான, UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு ஏன் கட்டணம் விதிக்கப்படலாம்? - சித்தார்த் உபாசனி

 

UPI (Unified Payments Interface) என்பது ஒருமித்த செலுத்துகை இடைமுகம் அல்லது ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் ஆகும். இது வங்கிக் கணக்குகளுக்கு இடையே உடனடியாகப் பணத்தை அனுப்பவும் பெறவும் உதவும் ஒரு நவீன டிஜிட்டல் தொழில்நுட்பமாகும்.


ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) வாயிலாகச் செய்யப்படும் பணப் பரிமாற்றங்கள் உண்மையில் இலவசமானவை அல்ல. பல ஆண்டுகளாக இதற்கான செலவுகளை வங்கிகள் (banks), கட்டணச் சேவை வழங்குநர்கள் (payment service providers) மற்றும் அரசாங்கமே (government) ஏற்று வந்துள்ளன. நாடாளுமன்றத்தில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதா, நிதித் துறையைச் சேர்ந்த இந்த நிறுவனங்கள் யுபிஐ (UPI) மற்றும் ரூபே பற்று அட்டை (RuPay Debit Card) பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும்.


இந்தியாவில் பொருட்களை வாங்கும்போதோ அல்லது சேவைகளைப் பெறும்போதோ அதற்கான கட்டணத்தைச் செலுத்துவது முன்பைவிட எளிதாகவும் மலிவாகவும் மாறியுள்ளது. ஆனால், அந்தப் பணம் செலுத்தும் முறைக்கான செலவு என்பது ஒருபோதும் இலவசமாக இருந்ததில்லை.


உதாரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி பணத்தாள்களை (currency notes) அச்சிட ஆண்டுதோறும் சுமார் ரூ. 5,000 கோடியைச் செலவிடுகிறது. அதேபோல, கட்டணம் செலுத்தும் அட்டைகளுக்கான (payment cards) செலவுகளை அவற்றை வழங்கும் நிறுவனங்களே ஏற்கின்றன. பின்னர், அந்தச் செலவு பயனர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகள், பற்று அட்டைகளின் (Debit Card) வருடாந்திர பராமரிப்புக்காக 2021-22-ல் ரூ. 3,905 கோடியை வசூலித்த நிலையில், 2025-26-ல் அந்தத் தொகை ரூ. 7,564 கோடியாக அதிகரித்துள்ளது.


யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான செலவுகளையும் வங்கிகள் மற்றும் பிற நிதிச் சேவை நிறுவனங்களே ஏற்கின்றன. ஆண்டுதோறும் ரூ. 20,000 கோடி வரைகூட இருக்கக்கூடிய இந்தச் செலவுக்கான ஈடுபாட்டைப் பெற பல ஆண்டுகளாக முயன்று வந்த நிலையில், இறுதியாக அவர்களின் கோரிக்கை நிறைவேறக்கூடும்.


செவ்வாய்க்கிழமையன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 'வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா-2026' ஐ (The Taxation and Other Laws (Amendment) Bill) அறிமுகப்படுத்தினார். 'பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம்-2007' இல் (Payment and Settlement Systems Act) முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள், யுபிஐ (UPI) மற்றும் ரூபே பற்று அட்டை (RuPay Debit Card) பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்க வங்கிகள் மற்றும் கட்டணச் சேவை வழங்குநர்களை அனுமதிக்கக்கூடும்.


சாத்தியமான யுபிஐ கட்டணங்கள்


குறிப்பிடத்தக்க வகையில், அனைத்து யுபிஐ (UPI) மற்றும் ரூபே பற்று அட்டை (RuPay Debit Card) பரிவர்த்தனைகளுக்கும் 'வணிகர் தள்ளுபடி விகிதம்' (Merchant Discount Rate (MDR)) விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. பரிவர்த்தனை செயலாக்கம், தீர்வு மற்றும் உள்கட்டமைப்புச் செலவுகளை ஈடுகட்ட உதவும் வகையில், பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தும் வங்கிகளால் வணிகர்களிடம் இந்த வணிகர் தள்ளுபடி விகிதக் (MDR) கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


"பெரிய வணிகர்களுக்கு, குறிப்பாக ஆண்டுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் மொத்த வருவாய் (turnover) கொண்டவர்களுக்கு, யுபிஐ பரிவர்த்தனைகள் மீது 0.3-0.6% வணிகர் தள்ளுபடி விகிதத்தை (MDR) பரிசீலிப்பது ஒரு நியாயமான அணுகுமுறையாக இருக்கும்" என்று நிதித் தொழில்நுட்ப (fintech) உள்கட்டமைப்பு தளமான 'Decentro'-வின் கூட்டணிகள் மற்றும் கூட்டாண்மைப் பிரிவு துணைத் தலைவர் ஸ்ரீதர் குண்டுகு கூறினார்.


மேலும் குண்டுகுவின் கூற்றுப்படி, யுபிஐ பரிவர்த்தனைகள் மீதான 0.3-0.6% வணிகர் தள்ளுபடி விகிதமானது (MDR), "மதிப்பிடப்பட்ட ஒட்டுமொத்தச் செயல்பாட்டுச் செலவுடன் (ecosystem cost) ஏறக்குறைய ஒத்துப்போகிறது". அதனால், இது லாபத்தை ஈட்டுவதற்குப் பதிலாக செலவுகளை மீட்டெடுக்க மட்டுமே உதவும்.


வங்கி தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நிறுவனமான ஸீட்டாவின் (Zeta) வாடிக்கையாளர் வெற்றி, உத்தி மற்றும் வளர்ச்சிப் பிரிவின் மூத்த துணைத் தலைவரான மெஹுல் மிஸ்ட்ரி போன்ற மற்ற நிறுவனர்கள், வேறுபட்ட புள்ளிவிவரங்களைக் கொண்டுள்ளனர். மிஸ்ட்ரியின் கூற்றுப்படி, தற்போதைய விவாதங்கள் யுபிஐ (UPI) கட்டணங்களுக்கு 0.05-0.07% என்ற குறைந்தளவிலான வணிகர் தள்ளுபடி விகிதத்தைச் (MDR) சுட்டிக்காட்டுகின்றன. இருப்பினும், இது ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ரூ. 1 கோடி முதல் 1.5 கோடி வரை மொத்த விற்பனை (turnover) செய்யும் வணிகர்களுக்கானது, ரூ. 50 கோடிக்கு அல்ல, இது ஒரு சிறிய கட்டணம் என்றாலும், வணிகர் மொத்த விற்பனை (turnover) வரம்பு குறைவாக உள்ளது.


இப்புள்ளிவிவரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், பற்று அட்டைகளுக்கு 1-3% வணிகர் தள்ளுபடி விகிதமும் (MDR), பற்று அட்டைகளுக்கு பரிவர்த்தனை மதிப்பில் 0.9% வரையும் விதிக்கப்படுகிறது. இந்த முரண்பாட்டையும் சரிசெய்ய வேண்டும்.


"அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற பெரிய வணிகர்கள் ஏற்கனவே விசா/மாஸ்டர்கார்டு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) செலுத்துகின்றனர். அதே வணிகர்களுக்கான காலவரையற்ற யுபிஐ விலக்கு என்பது, அதில் அதிக அளவில் பரிவர்த்தனை செய்யும் வணிகர்களுக்குப் பதிலாக வங்கிகள் மற்றும் கட்டணச் சேவை வழங்குநர்களால் (Payment Service Provider (PSP)) நிதியளிக்கப்படும், ஒரே வழித்தடத்திற்கான ஒரு கட்டமைப்பு மானியமாகும்," என்று டெசென்ட்ரோவின் குண்டுகு கூறினார்.


முக்கியமாக, யுபிஐ (UPI) மற்றும் ரூபே பற்று அட்டை (RuPay Debit Card) கட்டணங்கள் மீதான வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) என்பது ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே விதிக்கப்படலாம். இது ஒரு முக்கியமான அம்சம். ஏனெனில், 2025-26-ஆம் ஆண்டில், தனிநபரிலிருந்து வணிகருக்கு (P2M) மேற்கொள்ளப்பட்ட யுபிஐ கட்டணங்களில் 4% மட்டுமே ரூ. 2,000-க்கும் அதிகமாக இருந்தன. ஆனால், இந்த 4% பரிவர்த்தனைகள் மொத்த யுபிஐ கட்டண மதிப்பில் மூன்றில் இரண்டு பங்கை வகித்தன.


2025-26 ஆம் ஆண்டில், ரூ. 314 லட்சம் கோடி மதிப்பிலான 24,000 கோடிக்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, பெரும்பான்மையான யுபிஐ கட்டணங்கள் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும்.


தற்போது, ​​'ரூபே பற்று அட்டைகள் (RuPay Debit Card) மற்றும் குறைந்த மதிப்புள்ள BHIM-UPI பரிவர்த்தனைகளை (P2M) ஊக்குவிப்பதற்கான ஊக்கத்தொகைத் திட்டம்' மூலம், சிறிய வணிகர்களுக்குச் செய்யப்படும் ரூ. 2,000 வரையிலான கட்டணங்களுக்கு மட்டுமே அரசு மானியம் வழங்கி வருகிறது. வழங்கப்படும் ஊக்கத்தொகை பரிவர்த்தனை மதிப்பில் 0.15% வரை மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. இது வங்கிகள், கட்டணச் சேவை வழங்குநர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு செயலி (app) வழங்குநர்கள் இடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ரூ. 20,000 கோடி இடைவெளி


இந்தக் கட்டணங்கள் எந்தெந்த உள்கட்டமைப்புச் செலவுகளை ஈடுகட்டப் பயன்படுகின்றன?


மொபைல் செயலி, அதை உருவாக்குதல் மற்றும் அதற்கான வாடிக்கையாளர் சேவை ஆகியவை இதில் அடங்கும்.  மற்றொரு செலவு பயனர்களுக்கான வாடிக்கையாளர் ஆதரவு சேவையாகும். இதில் பரிவர்த்தனைகளை அங்கீகரித்தல், கணக்குச் சரிபார்ப்பு (reconciliation) மற்றும் தீர்வு காணுதல் (settlement) ஆகியவை அடங்கும். பிற செலவுகளைப் புரிந்துகொள்வது எளிது. அதாவது, இணையப் பாதுகாப்பு (cybersecurity), வாடிக்கையாளர் விவரச் சரிபார்ப்பு (KYC) நடைமுறைகள், கிளவுட் சேமிப்பு (cloud storage), பேரிடர் மீட்பு அமைப்பு (disaster recovery systems), மோசடி கண்டறிதல், தகராறு தீர்வு, தொடர்ச்சியான வலைப்பின்னல் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை அறிக்கையிடல் போன்றவை இதில் அடங்கும்.


இதற்கெல்லாம் கட்டணச் சேவைத் துறை (payments industry) எவ்வளவு செலவிடுகிறது? இது குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லையென்றாலும், Zeta நிறுவனத்தைச் சேர்ந்த மிஸ்ட்ரி (Mistry), யுபிஐ (UPI) மற்றும் ரூபே பற்று அட்டை (RuPay Debit Card) உள்கட்டமைப்பை இயக்குவதற்கான ஆண்டுச் செலவு "குறைந்தது ரூ. 10,000 கோடியாக இருக்கலாம்" என்று துறைசார் மதிப்பீடுகள் தெரிவிப்பதாகக் கூறினார்.


மிஸ்ட்ரியின் இந்த மதிப்பீடு ஒரு குறைவான மதிப்பீடாக (conservative estimate) இருக்கலாம்.


நிதி விவகாரங்களுக்கான நிலைக்குழுவின் (Standing Committee on Finance) மார்ச் மாத அறிக்கையின்படி, 2021-22 முதல் 2024-25 வரையிலான காலத்தில் மேற்கூறிய அரசு ஊக்கத்தொகைத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட மானியமானது, "டிஜிட்டல் கட்டணச் சேவைத் துறைக்கு ஏற்பட்ட செலவில் 11% மட்டுமே" ஆகும். குறிப்பிட்ட நான்கு ஆண்டுகளில் ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.8,730 கோடியை வழங்கியது. இத்தொகை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைத் துறைக்கு ஏற்பட்ட செலவில் 11% மட்டுமே என்றால், மொத்த ஆண்டுச் செலவு ரூ.20,000 கோடிக்கும் சற்று குறைவாகவே இருக்கும்.

இந்தக் கட்டணத்தை யார் செலுத்துவது?


பெரிய அளவிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்பட்டால், மக்களின் பணப்பரிவர்த்தனை முறைகள் மாறுமா? வணிகர்கள் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) சுமையை வாடிக்கையாளர்கள்மீது சுமத்தினால், கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் முறையை மாற்றிக்கொள்ளக்கூடும் என்று தோன்றுகிறது.


'லோக்கல் சர்க்கிள்ஸ்' (LocalCircles) நடத்திய 20,000-க்கும் மேற்பட்டோருடனான கருத்துக்கணிப்பின்படி, பெரிய வணிகர்களிடம் ரூ. 3,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்பட்டால், 12% பேர் மட்டுமே தொடர்ந்து யுபிஐ-ஐப் பயன்படுத்துவதாகக் கூறினர். ரூ. 3,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வணிகர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பரிவர்த்தனைக் கட்டணத்தை வசூலித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ​​இந்த விகிதம் மேலும் குறைந்து 2%-ஆக இருந்தது.


புதன்கிழமையன்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியது போல, அதற்கான செலவை யாராவது ஒருவர்தான் ஏற்க வேண்டும். "இறுதியில், ஏதோ ஒரு வகையில் நுகர்வோர் தான் அதற்கான கட்டணத்தைச் செலுத்துகிறார்கள். அது அதே நுகர்வோராக இல்லாமல் பரந்த பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம், அதனால் அது நேரடியாகத் தெரிவதில்லை... எப்படியாயினும், அந்தச் செலவு ஏற்கனவே மாற்றப்படுகிறது. அது 'பயன்படுத்துபவரே கட்டணம் செலுத்தும்' (user-pays) கொள்கையின் அடிப்படையில் நேரடியாக இல்லாமல் இருக்கலாம்."


Original articles: Why UPI payments to large retailers could attract a fee? -Siddharth Upasani

Share:

இந்தியாவில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். - ஹரித் கே. சதுர்வேதி

 இந்தியாவில், அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் அளவுக்கு அறிகுறிகள் தீவிரமடைந்த பின்னரே புற்றுநோய் பெரும்பாலும் கண்டறியப்படுகிறது. அந்த நிலையை அடையும்போது, ​​நோயை முழுமையாகக் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் தவறவிடப்படுகின்றன.


இந்தியா முழுவதும் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையங்கள் (oncology clinics) தினமும் ஒரு வேதனையான யதார்த்தத்தை எதிர்கொள்கின்றன. 70%-க்கும் அதிகமான நோயாளிகள் புற்றுநோய் முற்றிய நிலையிலேயே மருத்துவமனைக்கு வருகின்றனர். இந்நிலைகளில் சிகிச்சை மிகவும் சிக்கலானதாகவும், அதிக செலவு பிடிப்பதாகவும், அதே சமயம் நோயைக் குணப்படுத்துவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவும் உள்ளது. கடந்த இருபதாண்டுகளாக, உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை மையங்களை உருவாக்குவதிலும், நவீன அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் முறையான மருத்துவ சிகிச்சைகளை (systemic treatments) விரிவுபடுத்துவதிலும் இந்தியா கணிசமான முதலீடுகளைச் செய்துள்ளது. இருப்பினும், பெரும்பாலான நோயாளிகள் மிகத் தாமதமாகவே வருவதால், இந்த முன்னேற்றங்களால் முழுமையான பலனைப் பெற முடிவதில்லை.


இந்தச் சவாலுக்கான தீர்வு, நோயின் ஆரம்ப கட்டத்திலேயே (முன்கூட்டியே) கவனம் செலுத்துவதில் உள்ளது.


இந்தியாவில், அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் அளவுக்கு அறிகுறிகள் தீவிரமடைந்த பின்னரே புற்றுநோய் பெரும்பாலும் கண்டறியப்படுகிறது. அந்த நிலையை அடையும்போது, ​​நோயை முழுமையாகக் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் தவறவிடப்படுகின்றன. இதன் தாக்கம் உடல்நலம் சார்ந்த விஷயங்களைத் தாண்டிச் செல்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் நான்கில் மூன்று பங்கிற்கும் அதிகமானோர், அதிகப்படியான மருத்துவச் செலவுகளை எதிர்கொள்கின்றனர். எனவே, நோயைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதம் என்பது ஒரு மருத்துவப் பிரச்சனை மட்டுமல்ல, அது பல குடும்பங்களை வறுமைக்கும் தள்ளுகிறது.


மேலும், ஜப்பானில் நுரையீரல் புற்றுநோய்க்கான சாத்தியம், பொதுவாக ஐந்து ஆண்டுகள் உயிர்வாழும் விகிதம் சுமார் 33%-ஆக உள்ள நிலையில், இந்தியாவில் அது வெறும் 4% மட்டுமே உள்ளது. பொதுவாகக் காணப்படும் பிற புற்றுநோய் வகைகளிலும் இதே போன்ற வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்த இடைவெளிகளுக்குச் சிகிச்சையின் தரத்தில் உள்ள வேறுபாடுகள் மட்டுமே காரணமல்ல; நோயாளிகள் எந்த நிலையில் மருத்துவச் சிகிச்சையை நாடுகிறார்கள் என்பதும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, பல சந்தர்ப்பங்களில், நோயாளிகளுக்கு மிகத் தாமதமாகவே நோயைக் கண்டறியப்படுவது அனைத்து வகையிலும் மோசமான விளைவையே ஏற்படுத்துகிறது.


அடிப்படை மாற்றத்தின் தேவை


இந்தியாவில் புற்றுநோய் தொடர்பான சவால்களின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2024-ம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 15.6 லட்சம் (1.56 மில்லியன்) புதிய புற்றுநோய் பாதிப்புகளும், 8,74,000-க்கும் மேற்பட்ட புற்றுநோய் மரணங்களும் பதிவாகியுள்ளன. புற்றுநோய் வருவதற்கான வாழ்நாள் ஆபத்து தேசிய அளவில் சுமார் 11% ஆகவும், சில வடகிழக்கு மாநிலங்களில் 20%-க்கு அதிகமாகவும் உள்ளது. இந்தியாவில், மக்கள்தொகையின் முதுமை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக, இந்தியாவின் தேசிய புற்றுநோய் தடுப்பு உத்தியில் அடிப்படை மாற்றம் ஏற்படாத வரை, இந்தப் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும்.


இதற்கான முதல் படி, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை அவ்வப்போது நடத்தப்படும் விழிப்புணர்வு பிரச்சாரங்களாக மட்டும் பார்க்காமல், வாழ்நாள் முழுவதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பொது சுகாதார நடவடிக்கையாக மறுவரையறை செய்வதாகும். ஏறக்குறைய பாதி அளவு புற்றுநோய் பாதிப்புகளைத் தடுக்க முடியும். இருப்பினும், பெரியவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் போதிய பலனைத் தருவதில்லை. ஏனெனில், வாழ்க்கை முறை சார்ந்த பழக்கவழக்கங்கள் மிக இளம் வயதிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றன. ஒருமுறை பழக்கவழக்கங்கள் ஆழமாகப் பதிந்துவிட்டால், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் அவற்றைச் சரிசெய்வது மிகவும் கடினம். எனவே, சுகாதாரக் கல்வி பள்ளிகளிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். அங்கு கணிதம் அல்லது சமூக அறிவியல் போன்ற முக்கியப் பாடங்களுக்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவம் 'வாழ்க்கைத் திறன்களுக்கும்' (life skills) அளிக்கப்பட வேண்டும். இத்தகைய வாழ்க்கைத் திறன்கள் புற்றுநோயைத் தடுப்பது மட்டுமின்றி, இதயம், நரம்பு மண்டலம், இரத்த நாளங்கள் மற்றும் குடல் சார்ந்த நோய்கள் போன்ற பிற முக்கிய உடல்நலப் பிரச்சினைகளைத் தடுப்பதற்கும் உதவும். இக்கல்வியானது உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த நலம், போதைப் பழக்கங்கள், உணவுமுறை, தடுப்பூசிகள், நிதிசார் அறிவு மற்றும் குடும்பம், சமூகம் மற்றும் நாட்டின் மீதான பொறுப்புகள் என அனைத்து அம்சங்களையும் முழுமையாக உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.


இரண்டாவது படி, புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதை உறுதிசெயவதாகும். மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் தொடர்ச்சியான அறிகுறிகளுக்கு மருத்துவப் பரிசோதனை தேவை என்ற பொது விழிப்புணர்வு, நோயறிதலில் ஏற்படும் தாமதங்களைக் கணிசமாகக் குறைக்கும். இருப்பினும், அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வு மட்டும் போதுமானதல்ல. அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே புற்றுநோயைக் கண்டறிவதற்கான நமது மிக சக்திவாய்ந்த கருவியாகப் பரிசோதனையே விளங்குகிறது. சமீப காலம் வரை, ஒழுங்கமைக்கப்பட்ட பரிசோதனையானது பெரும்பாலும் கருப்பை வாய் (cervical), மார்பகம் (breast) மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் (prostate cancer) போன்ற புற்றுநோய்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது. அறிவியல் முன்னேற்றங்கள் தற்போது புற்றுநோய் பரிசோதனையின் வரம்பை விரிவுபடுத்துகின்றன. இரத்த அடிப்படையிலான பல்வகை புற்றுநோய் ஆரம்பநிலைக் கண்டறிதல் (Multi-Cancer Early Detection (MCED)) சோதனைகள், ஒரே ஒரு இரத்த மாதிரியின் மூலம் பெருங்குடல், நுரையீரல், கல்லீரல், கணையம், கருப்பை, இரைப்பை, உணவுக்குழாய், மார்பகம், புரோஸ்டேட் மற்றும் சிறுநீர்ப்பைப் புற்றுநோய்கள் உட்பட பல வீரியம் மிக்க கட்டிகளிலிருந்து வரும் உயிரியல் சார்ந்த குறியீடுகளைக் கண்டறியும் திறனைக் கொண்டுள்ளன.




இந்தத் தொழில்நுட்பங்கள் மக்கள் மத்தியில் பரவலாகச் செயல்படுத்துவதற்கு இன்னும் கவனமான மதிப்பீடு தேவைப்பட்டாலும், அவை புற்றுநோய் ஆராய்ச்சியில் மிகவும் நம்பிக்கைக்குரிய எல்லைகளில் ஒன்றாக விளங்குகின்றன. மேலும், இவை இந்தியாவில் ஒருமுகப்படுத்தப்பட்ட அங்கீகாரத்திற்குத் தகுதியானவை.


இந்தியாவுக்கான எதிர்காலத் திட்டம்


இந்தியா தனது சொந்த சுகாதாரத் தேவைகளுக்கும் யதார்த்தங்களுக்கும் ஏற்ற தீர்வுகளை உருவாக்க வேண்டும். மிகப்பெரிய புவியியல் மற்றும் சமூகப் பொருளாதாரப் பன்முகத்தன்மை கொண்ட 1.4 பில்லியன் மக்கள் வசிக்கும் ஒரு நாட்டிற்கு, ஒரே ஒரு மையப்படுத்தப்பட்ட பரிசோதனைத் திட்டத்தால் திறம்பட சேவை செய்ய முடியாது. மாறாக, சமூக சுகாதாரப் பணியாளர்கள், டிஜிட்டல் இடர் மதிப்பீடு, செயற்கை நுண்ணறிவு, மொபைல் நோயறிதல் சேவைகள் மற்றும் முதன்மை சிகிச்சையை புற்றுநோய் மையங்களுடன் இணைக்கும் வலுவான பரிந்துரை வழிமுறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு கட்டமைப்புச் சார்ந்த பரிசோதனை மாதிரி நமக்குத் தேவை.


ஊக்கமளிக்கும் விதமாக, முக்கியமான அடித்தளங்கள் ஏற்கனவே இடப்பட்டு வருகின்றன. 20,000-க்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகளின் விவரங்களைக் கொண்ட ஒரு பெரிய இமேஜிங் பயோபேங்கின் (large imaging biobank) வளர்ச்சிக்கு நிதி-ஆயோக் ஆதரவளிக்கிறது. இத்தகைய தரவுத் தொகுப்புகள், சந்தேகத்திற்கிடமான கட்டிகளைக் கண்டறிவதிலும், சிறப்பு நிபுணர் மதிப்பீடு தேவைப்படும் நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிப்பதிலும் களப்பணியில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவக்கூடிய செயற்கை நுண்ணறிவு கருவிகளின் வளர்ச்சியை விரைவுபடுத்தும்.


தேசிய சுகாதார ஆராய்ச்சிக் கொள்கை-2026-ன் (National Health Research Policy) வரைவு, இந்த மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்தியாவின் சுகாதாரச் சுமைக்கு அதிகம் பங்களிக்கும் நோய்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், அளவிடக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதன் மூலமும், இந்தக் கொள்கையானது வெளியீடுகளை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சியில் இருந்து செயலாக்க அறிவியலை நோக்கிய ஒரு வரவேற்கத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. இந்த அணுகுமுறை, மலிவு விலை பரிசோதனைத் தொழில்நுட்பங்கள், இடர் முன்கணிப்பு மாதிரிகள், டிஜிட்டல் சுகாதாரத் தளங்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு சுகாதார அமைப்புகளில் புற்றுநோயைக் கண்டறிவதை மேம்படுத்தும் செயலாக்க ஆராய்ச்சி ஆகியவற்றில் புதுமைகளை ஊக்குவிக்க வேண்டும்.


புற்றுநோய் சிகிச்சையின் முன்னேற்றத்தை, நோயின் முற்றிய நிலைகளில் வழங்கப்படும் சிகிச்சைகளின் நுட்பத்தை மட்டும் கொண்டு இந்தியா அளவிடக்கூடாது. முற்றிய நிலையை அடைவதற்கு முன்பே கண்டறியப்படும் புற்றுநோய்களின் எண்ணிக்கையே வெற்றியின் உண்மையான அளவுகோலாகும். மேலும் அந்த வெற்றிக்கு, அரசு நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சமூக சுகாதார வழங்குநர்கள் ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைந்த கூட்டாண்மை தேவைப்படும்.


டாக்டர் ஹரித் கே. சதுர்வேதி, அப்பல்லோ ஆன்காலஜி நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மருத்துவத் தலைவர் ஆவார்.


Original articles: India’s cancer focus must shift to early detection -Harit K. Chaturvedi

Share: