சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (Environmental Impact Assessment (EIA)) கட்டமைப்பு ஏன் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது? சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்பாட்டில் உள்ள முக்கிய நிலைகள் எவை? வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, 2020 (Draft EIA Notification, 2020) தொடர்ச்சியாகச் சர்ச்சைக்குரியதாகவே நீடிப்பது ஏன்? மேலும், இந்தியாவின் சுற்றுச்சூழல் அனுமதி முறையை உச்சநீதிமன்றம் எவ்வாறு ஒழுங்குபடுத்தியுள்ளது?
கடந்த புதன்கிழமை ஜூலை மாதம் 29-ஆம் தேதி, சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் ஏற்கனவே கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவிட்ட திட்டங்களுக்கு, பின்னாள்களில் அனுமதி பெற வாய்ப்பளித்த ஒன்றிய அரசின் 2021-ஆம் ஆண்டின் அலுவலகக் குறிப்பாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்தத் தீர்ப்பின் மூலம், சுற்றுச்சூழல் விவாதங்களுக்கு அப்பாற்பட்டு, விதிமீறல் திட்டங்களுக்குத் தன்னிச்சையாகவும் தடையின்றியும் பின் தேதியிட்டு (Retrospective approval) அனுமதி வழங்கும் நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும், சட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட சூழல்களில் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பை நீதிமன்றம் வழங்குகிறது. இதன் மூலம், நிர்வாகத்தின் அதிகார எல்லைகள் மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களின்கீழ் விதிமீறல்களை ஒழுங்குபடுத்துவதற்கான வரம்புகள் ஆகிய இரண்டையும் தெளிவுபடுத்தி, ஒரு சமநிலையான அணுகுமுறையை உச்சநீதிமன்றம் மேற்கொண்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
1. சுற்றுச்சூழல் அனுமதிச் சான்றிதழ்களைப் பெறாமல் தொடங்கப்பட்ட திட்டங்களுக்குப் பின்னர் ஒப்புதல் அளிக்கும் 'பின்தேதியிட்ட சுற்றுச்சூழல் அனுமதிகளை' (Ex-post facto Environmental Clearances) ஒரு வெறும் அலுவலகக் குறிப்பாணை மூலம் கொண்டுவர முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், விதிவிலக்கான சூழல்களிலிலும் மற்றும் பொது நலன் கருதியும், அரசு தனது சட்டப்பூர்வமான அதிகாரங்களைப் பயன்படுத்தி ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் இத்தகைய வழிமுறையை வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டது. இந்த அலுவலகக் குறிப்பாணையானது, விதிகளின் மீறல்களைத் தொடர்ந்து அனுமதிக்கும் ஒரு நிரந்தர அமைப்பை உருவாக்கியுள்ளதாக நீதிமன்றம் கருதியது. ஆனால், மார்ச் மாதம் 2017-ஆம் ஆண்டின் அறிக்கையானது ஆறு மாத காலத்திற்கு மட்டுமேயான ஒருமுறைப் பொது மன்னிப்பை வழங்கியதால், அதை நீதிமன்றம் ரத்து செய்யவில்லை.
2. பின்தேதியிட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு 'எந்த வடிவத்திலும் அல்லது முறையிலும்' முற்றிலும் தடை விதித்திருந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து இந்தத் தீர்ப்பு மாறுபட்டுள்ளது. அதற்குப் பதிலாக, தவிர்க்க முடியாத பொதுநலன் கருதி நியாயப்படுத்தப்பட்டால், மிகக் குறுகிய அளவில் வடிவமைக்கப்பட்ட ஒருமுறைக்கான மன்னிப்புத் திட்டத்தை அனுமதிக்கலாம் என்று இத்தீர்ப்பு கூறியுள்ளது. வனசக்தி எதிர். இந்திய ஒன்றியம் (Vanashakti vs Union of India) வழக்கில்தான், முந்தைய சுற்றுச்சூழல் அனுமதி அளிப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறி, மார்ச் மாதம் 2017-ஆம் ஆண்டு அறிக்கை மற்றும் ஜூலை மாதம் 2021-ஆம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணை ஆகிய இரண்டையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தது."
3. 2017- ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருமுறை பொது மன்னிப்புத் திட்டம் (One-time amnesty scheme) ஏற்கனவே தனது நோக்கத்தை நிறைவேற்றிவிட்டது என்றும், அதை எதிர்காலத்தில் நடக்கும் விதிமீறல்களை முறைப்படுத்துவதற்குப் பயன்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொது நலனைக் கருத்தில் கொண்டு நியாயப்படுத்தப்படும் வரம்பிற்குட்பட்ட ஒரு குறிப்பிட்ட சட்டப்பூர்வ மன்னிப்புத் திட்டத்திற்கும், சுற்றுச்சூழல் விதிமீறல்களை வழக்கமாக முறைப்படுத்த அனுமதிக்கும் தொடர்ச்சியான நிர்வாக முறைக்கும் இடையே உள்ள தெளிவான வேறுபாட்டைப் பிந்தையத் தீர்ப்பு தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்றால் என்ன?
4. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்பது, ஒரு திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கு முன்பாக, அத்திட்டத்தால் ஏற்படக்கூடிய சாதகமான மற்றும் பாதகமான சுற்றுச்சூழல் விளைவுகளை சீரான முறையில் மதிப்பீடு செய்யும் ஒரு நடைமுறையாகும். இதன் முக்கிய நோக்கம், வளர்ச்சித் திட்டங்களால் சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் மீது ஏற்படும் தாக்கங்களை முன்கூட்டியே கணித்து மதிப்பீடு செய்வதாகும்.
5. இது, ஒரு முன்மொழியப்பட்ட திட்டத்தைப் பற்றிய விரிவான பகுப்பாய்வை வழங்கி, முடிவெடுப்பவர்கள் சரியான தேர்வுகளைச் செய்ய உதவுகிறது. சாத்தியமான எதிர்மறையான தாக்கங்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து, அவற்றுக்கு ஏற்ற மாற்று வழிகளையும், பாதிப்புகளைக் குறைக்கும் நடவடிக்கைகளையும் பரிந்துரைப்பதன் மூலம் இது நிலையான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. மேலும், பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் மூலம் மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் பொதுமக்கள் இத்திட்டம் குறித்துத் தங்களின் கவலைகளையும் கருத்துகளையும் தெரிவிக்க முடிகிறது.
இந்தியாவில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறை காலப்போக்கில் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது?
6. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்பது முதன்முதலில் 1969-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் இந்த நடைமுறை 1978–79-ஆம் ஆண்டில் ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்களின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுடன் தொடங்கியது. தொடக்கத்தில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையானது அணைகள் மற்றும் மின் திட்டங்கள் போன்ற பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால், பின்னர் இது தொழிற்சாலைகள், சுரங்கத் திட்டங்கள் மற்றும் நகரப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
7. சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986-ன்கீழ், பெரிய திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறை கட்டாயமாக்கப்பட்டது. 1994-ஆம் ஆண்டில், இந்தியா தனது முதல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டது. இதன் மூலம் இயற்கை வளங்களைப் பயன்படுத்தும், மாசுபடுத்தும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டப்பூர்வ கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அன்றைய காலகட்டம் முதலே, வளர்ச்சித் திட்டங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறை மூலமாக முன்கூட்டிய சுற்றுச்சூழல் அனுமதியைத் கட்டாயம் பெறவேண்டிய நிலை உருவானது.
8. 1994-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்புக்குப் பதிலாக, 2006-ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர், 2006-ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளை உள்ளடக்கி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையை மேலும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் விரைவானதாகவும் மாற்றுவதற்காக 2020-ஆம் ஆண்டில் அரசு மற்றொரு வரைவுத் திட்டத்தை தயாரித்தது.
எந்தெந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தேவைப்படுகிறது?
9. 2006-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளின் அடிப்படையில், வளர்ச்சித் திட்டங்களை 'பிரிவு A' மற்றும் 'பிரிவு B' என இரண்டு வகைகளாகப் பிரிக்கிறது. 'பிரிவு A' திட்டங்கள், நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், ஒன்றிய அரசிடமிருந்து முந்தைய சுற்றுச்சூழல் அனுமதியை கட்டாயம் பெறவேண்டும்.
10. பிரிவு B திட்டங்களுக்கும் இவற்றுக்கும் முந்தைய சுற்றுச்சூழல் அனுமதி தேவைப்படுகிறது. ஆனால், மாநில/யூனியன் பிரதேச நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் (State/UT Expert Appraisal Committee (SEAC)) பரிந்துரையின் அடிப்படையில், மாநில/யூனியன் பிரதேச சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (State/Union Territory Environment Impact Assessment Authority (SEIAA)) இதற்கான அனுமதியை வழங்கும். 'பிரிவு B' திட்டங்கள் மேலும் 'B1' மற்றும் 'B2' என இரு துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
11. 'பிரிவு B1' திட்டங்களுக்கு முழுமையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தேவைப்படுகிறது. ஆனால், 'பிரிவு B2' திட்டங்களுக்கு இந்த அறிக்கை தேவையில்லை. எனவே, 'பிரிவு A' மற்றும் 'பிரிவு B1' திட்டங்கள் முழுமையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்படுகின்றன, அதேசமயம் 'பிரிவு B2' திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, 2020 என்றால் என்ன?
12. வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, 2020, சுற்றுச்சூழல் அனுமதி பெறும் செயல்முறையை நவீனமாகவும் திறம்பட செயல்படுவதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, 2006-ஆம் ஆண்டின் அறிக்கைக்குப் பதிலாக கொண்டுவரப்பட்டது. இருப்பினும், இது சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பலவீனப்படுத்துவதோடு, பொதுமக்களின் பங்களிப்பையும் குறைக்கிறது என்று பலர் கருதுவதால் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
13. இந்த வரைவறிக்கையில் மிகவும் விவாதிக்கப்பட்ட மாற்றங்களில் ஒன்று, பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டங்களுக்கான காலஅவகாசத்தை 30 நாட்களில் இருந்து 20 நாட்களாகக் குறைப்பதாகும். சிறந்த தொழில்நுட்பம் மற்றும் குறைக்கப்பட்ட அதிகாரத்துவ தாமதங்கள் காரணமாக இது சாத்தியமானது என்று சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் கூறுகிறது. ஆனால், திட்டங்களைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கும், ஆலோசனைகளில் பங்கேற்பதற்கும் இது மக்களுக்குக் குறைந்த நேரத்தையே வழங்குகிறது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
14. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, நீர்மின் திட்டம், பாசனம் மற்றும் உற்பத்தித் துறை சார்ந்த பல திட்டங்களை ‘B2’ பிரிவின்கீழ் கொண்டு வருவதன் மூலம், அவற்றைப் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் இருந்து விலக்க இந்த வரைவு முன்மொழிகிறது. இத்தகைய திட்டங்கள் சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், இந்த அறிவிப்பு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
15. மற்றொரு சர்ச்சைக்குரிய கருத்து என்னவென்றால், 'பின்தேதியிட்ட சுற்றுச்சூழல் அனுமதி' (Post-facto environmental clearance) ஆகும். அதாவது, முன்பே சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு, பின்னர் அனுமதி பெற இந்த முறை வழிவகுக்கிறது. இது கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அலெம்பிக் பார்மாசூட்டிகல்ஸ் எதிர் ரோஹித் பிரஜாபதி (Alembic Pharmaceuticals vs Rohit Prajapati 2020) வழக்கில், "பின்தேதியிட்ட தேதியில் வழங்கப்படும் சுற்றுச்சூழல் அனுமதிகள் சட்டப்படி செல்லாது என்றும் அத்தகைய அனுமதிகள் ரத்து செய்யப்பட்டதாகவே கருதப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
16. மேலும், சுற்றுச்சூழல் விதிமீறல்கள் அல்லது விதிகளைப் பின்பற்றாத நடைமுறைகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க இந்த வரைவு அனுமதிப்பதில்லை. இதனால், இத்தகைய விதிமீறல்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் முழுப்பொறுப்பும் அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. இது வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புக்கூறலையும் குறைக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. எனவே, இந்த 2020-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிப்பானது சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பலவீனப்படுத்துகிறது, பொதுமக்களின் பங்களிப்பைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தொடர்பான காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லாததால், சர்வதேச சுற்றுச்சூழல் ஒப்பந்தங்களின்கீழ் இந்தியா ஏற்றுக்கொண்ட உறுதிமொழிகளுக்கு முழுமையாக ஆதரவளிக்கவில்லை என்ற கவலைகள் எழுந்துள்ளன.
17. இருப்பினும், இந்த அறிக்கையில் சில சாதகமான அம்சங்களும் உள்ளன. இது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறைகளை எளிமையாக்கி, திட்டங்களுக்கான தேவையில்லாத காலதாமதங்களையும் நிர்வாகப் பணிச்சுமைகளையும் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இந்தச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (Sustainable Development Goals (SDGs)) ஒருங்கிணைக்கவும் முயற்சிக்கிறது. குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் போன்ற குறைந்த அபாயமுள்ள திட்டங்களுக்கு விரைவாக சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்குவதற்கான இதன் விதிகள், 'வளர்ந்த இந்தியா' (Viksit Bharat) என்ற இந்தியாவின் இலக்கிற்கு உதவக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
18. டிஜிட்டல் தளங்களின் பயன்பாடு வெளிப்படைத்தன்மை, பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களின் கண்காணிப்பு ஆகியவற்றை மேம்படுத்தும். சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்ட பின்னரும்கூட, சுற்றுச்சூழல் விதிகள் சரியாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய 'அனுமதிக்குப் பிந்தைய கண்காணிப்பு மற்றும் இணக்க விதிகள்' (Post-clearance monitoring and compliance) உதவுகின்றன. மேலும், இந்த வரைவுத் திட்டம் திட்டங்களின் வகை மற்றும் அமைவிடத்திற்கு ஏற்ப சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு தேவைகளில் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இது அனுமதி வழங்கும் செயல்முறையை மேலும் திறம்படச் செய்கிறது.
நீதித்துறையின் பார்வையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு
1. இந்திய உச்சநீதிமன்றம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுச் செயல்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பல முக்கியக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. 1997-ஆம் ஆண்டின் டி.என். கோதாவர்மன் திருமுல்பாத் எதிர் இந்திய அரசு (TN Godavarman Thirumulpad v Union of India) வழக்கில், நீதிமன்றமானது, திட்டங்களைத் தொடங்குவதற்கு முன்பாக, குறிப்பாக வனப்பகுதிகளில் 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு' மற்றும் 'சுற்றுச்சூழல் அனுமதி' ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தியதன் மூலம், தூய்மையான சுற்றுச்சூழலைப் பெறுவதற்கான உரிமையை அங்கீகரித்தது.
2. கங்கை நதி மாசு வழக்கு என்று பரவலாக அறியப்படும் 1996-ஆம் ஆண்டின் எம்.சி. மேத்தா எதிர். இந்திய ஒன்றிய அரசு வழக்கில் (MC Mehta vs Union of India), ஒவ்வொரு குடிமகனுக்கும் தூய்மையான சுற்றுச்சூழலைப் பெறுவதற்கான உரிமை உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. மேலும், தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களால் ஏற்படும் மாசுகளில் இருந்து நதிகளைக் காப்பாற்றவும், நீர்நிலைகளைப் பாதிக்கும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும், அதனைச் செயல்படுத்துவதற்கு முன் கட்டாயமாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
3. காமன் காஸ் (Common Cause) எதிர். இந்திய அரசு (2017) வழக்கில் (Common Cause vs Union of India), சுற்றுச்சூழல் அனுமதி தேவைப்படும் சுரங்கப் பணிகளை, முன்அனுமதி பெறாமல் தொடங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையானது ஒரு தடுப்பு நடவடிக்கையாகும். மீட்க முடியாத சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் முன்னரே அதன் விளைவுகளை மதிப்பிடுவதே இதன் நோக்கமாகும் என்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
4. அலெம்பிக் பார்மாசூட்டிகல்ஸ் எதிர். ரோஹித் பிரஜாபதி (2020) வழக்கு (Alembic Pharmaceuticals vs Rohit Prajapati) தீர்ப்பில், திட்டங்களைத் தொடங்கிய பிறகு பெறப்படும் பின்தேதியிட்ட சுற்றுச்சூழல் அனுமதி என்பது சுற்றுச்சூழல் சட்டங்களின் அடிப்படைத் தத்துவங்களுக்கு முரணானது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. முதலில் திட்டப் பணிகளைத் தொடங்கிவிட்டு, பிறகு ஒப்புதல் பெறலாம் என்ற இந்த அணுகுமுறை, சுற்றுச்சூழல் பாதிப்புகளை முன்கூட்டியே தடுத்துப் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை கோட்பாட்டை (Precautionary Principle) பலவீனப்படுத்துகிறது என்று நீதிமன்றம் கவலை தெரிவித்தது.
5. இருப்பினும், பஹ்வா பிளாஸ்டிக்ஸ் எதிர். தஸ்தக் (2022) வழக்கின் (Pahwa Plastics vs Dastak) தீர்ப்பில், உச்சநீதிமன்றம் ஒரு நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையை மேற்கொண்டது. அதாவது, குறிப்பாக சட்ட நடைமுறைகளில் தெளிவின்மை இருக்கும்போதும், சுற்றுப்புறச் சூழல் விதிகளைப் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் நிலவும்போதும், ஒரு தொழிற்சாலையை உடனடியாக மூடுவது மட்டுமே அதற்குரிய சரியான தீர்வாகிவிடாது என்று குறிப்பிட்டது. உடனடியாக மூடுவதைவிட, முறையான ஒழுங்குமுறை மற்றும் சுற்றுச்சூழல் சீரமைப்பு நடவடிக்கைகளே சில சூழல்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குச் சிறந்த முறையில் வழிவகுக்கும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Original Link : Why is Environmental Impact Assessment back in the spotlight? -Raveena Baneta