இந்தியாவில் நெகிழிப் பணத்தாள்களை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி (RBI) ஏன் திட்டமிடுகிறது? இந்த நெகிழிப் பணத்தாள்களின் நன்மைகள் என்னென்ன? எந்தெந்த நாடுகள் ஏற்கனவே இவற்றைப் பயன்படுத்துகின்றன, மேலும் இந்த மாற்றத்தை மேற்கொள்ளும்போது இந்தியா எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் என்ன?
ஏன் செய்திகளில் இடம்பெற்றது?
2027–28-ஆம் நிதியாண்டின் தொடக்கத்தில் நெகிழிப் பணத்தாள்களை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. ஆரம்பத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் ஆகிய குறைந்த மதிப்புடைய நெகிழிப் பணத்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தச் சூழலில், நெகிழிப் பணத்தாள்களை அறிமுகப்படுத்துவதன் நோக்கம் மற்றும் நன்மைகள் குறித்து அறிந்துகொள்வோம்:
முக்கிய அம்சங்கள்:
1. நெகிழிப் பணத்தாள்கள் இரண்டு முக்கிய நோக்கங்களுக்காகப் பயன்படுகின்றன. முதலாவதாக, அவை பணத்தாள்களின் நீண்டகாலப் பயன்பாட்டை அதிகரிக்கின்றன. குறிப்பாக, கைமாறிக்கொண்டே இருக்கும் குறைந்த மதிப்பிலான பணத்தாள்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நெகிழிப் பணத்தாள்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், சாதாரண காகித பணத்தாள்களைவிட இதன் உழைக்கும் தன்மை சுமார் 2 முதல் 4 மடங்கு அதிகம் என்று மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
2. இரண்டாவது நோக்கம், நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ரிசர்வ் வங்கியின் திறனை அதிகரிப்பதாகும். இந்தப் புதிய நெகிழிப் பணத்தாள்களைப் புழக்கத்திற்கு விடுவதற்கு முன்பாக, அவற்றின் நீடித்து உழைக்கும் திறன் மற்றும் இந்தியச் சூழலுக்கு ஏற்றதாக இருக்குமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
3. இந்தத் திட்டம் தொடக்கத்தில் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளில் அதிக கவனம் செலுத்தும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், இந்த நோட்டுகள் மக்களிடையே அடிக்கடி கைமாறுவதால் மிக விரைவாகச் சேதமடைகின்றன.
4. ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் நெகிழிப் பணத்தாள்களின் சோதனையில், 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான தாள்கள் தலா 100 கோடி எண்ணிக்கையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன் மொத்த மதிப்பு 3,000 கோடி ரூபாயாகும். இதற்காக, ரிசர்வ் வங்கியின்கீழ் இயங்கும் 'Bharatiya Reserve Bank Note Mudran Private Limited' நிறுவனம், 3.4 கோடி நெகிழித் தாள்களைக் (polymer sheets) கொள்முதல் செய்வதற்காகக் கடந்த மாதம் சர்வதேச அளவிலான ஒப்பந்தப்புள்ளியைக் கோரியுள்ளது.
நெகிழிப் பணத்தாள்கள் எந்தெந்த நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன?
5. 1988-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நெகிழிப் பணத்தாள்கள் (Polymer Banknotes), தற்போது 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், இவை சாதாரண காகிதப் பணத்தாள்களைவிட பயன்பாட்டுக்கு ஏற்றவை என்றும் பரவலாகக் கருதப்படுகிறது.
6. வளர்ந்த நாடுகளில், இங்கிலாந்து, கனடா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் நெகிழிப் பணத்தாள்களைப் பயன்படுத்துகின்றன. தாய்லாந்து, வியட்நாம், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் நெகிழிப் பணத்தாள்களைப் பயன்படுத்துகின்றன. இருப்பினும், நெகிழிப் பணத்தாள்களுடன், காகிதப் பணத்தாள்களும் பயன்படுத்தப்படுகின்றன.
நெகிழிப் பணத்தாள்களைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
7. காகிதப் பணத்தாள்களைவிட நெகிழிப் பணத்தாள்களின் மிகப்பெரிய நன்மையே அவை மிக நீண்டகாலம் உழைக்கக்கூடியவை என்பதுதான். பணத்தின் மதிப்பை பொறுத்து, காகிதப் பணத்தாள்களைவிட நெகிழிப் பணத்தாள்கள் இரண்டு முதல் ஆறு மடங்கு வரை அதிக காலம் பயன்பாட்டில் இருக்கும். சிறிய மதிப்புடைய பணத்தாள்களை அடிக்கடி பயன்படுத்தப்படுவதால் அவை விரைவில் சேதமடைகின்றன. எனவே, நெகிழிப் பணத்தாள்களின் நீண்டகாலப் பயன்பாடே பெரும்பாலான நன்மைகளுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது.
8. முதலாவதாக, நெகிழிப் பணத்தாள்கள் நீண்டகாலம் உழைப்பதால், காலப்போக்கில் குறைந்த எண்ணிக்கையிலான பணத்தாள்களைத் தயாரித்தால் போதுமானது. இரண்டாவதாக, ஒரு நெகிழிப் பணத்தாளைத் தயாரிப்பதற்கான செலவு காகிதப் பணத்தாளைத் தயாரிப்பதற்கான செலவைவிட அதிகமாக இருந்தாலும், குறைந்த எண்ணிக்கையில் தயாரிப்பது அதன் உற்பத்தி, விநியோகம் மற்றும் பழைய தாள்களை அழித்தல் ஆகியவற்றுக்கான ஒட்டுமொத்தச் செலவுகளைக் குறைக்கிறது. மேலும், இத்தகைய செலவுகளைக் குறைப்பது சுற்றுச்சூழலுக்கும் பெரும் நன்மையை அளிக்கிறது.
9. கடந்த ஆகஸ்ட் மாதம் 2013-ஆம் ஆண்டில், பருத்தியால் செய்யப்பட்ட மற்றும் நெகிழிப் பணத்தாள்களின் முழு ஆயுட்கால கார்பன் பாதிப்பு (carbon footprint) குறித்து ஆய்வு செய்ய ‘The Energy and Resources Institute’ (TERI) அமைப்பைக் கேட்டுக்கொண்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்த 'ஆயுட்கால தாக்க மதிப்பீட்டு' (Life Cycle Impact Assessment) ஆய்வின் முடிவில், பருத்தித் தாள்களுக்குப் பதிலாக நெகிழித் தாள்களைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் நன்மைகளைத் தரும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
10. இந்திய ரிசர்வ் வங்கி, நெகிழிப் பணத்தாள்கள் மற்றும் அவற்றின் உற்பத்தி கழிவுகளை மறுசுழற்சி செய்து உரம் தயாரிக்கும் தொட்டிகள், குழாய் இணைப்பு உபகரணங்கள், மற்றும் பிற வீட்டு உபயோக மற்றும் தொழில்முறைப் பொருட்களாக மாற்ற முடியும் என்று கூறியுள்ளது. நெகிழி என்பது புதுப்பிக்க முடியாத ஒரு இயற்கை வளத்திலிருந்து தயாரிக்கப்பட்டாலும், அதை மீண்டும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தக்கூடிய தன்மை கொண்டிருப்பதால், அதனை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வெவ்வேறு வடிவங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியும் என்கின்றனர்.
11. இதில் பாதுகாப்பு சார்ந்த நன்மைகளும் உள்ளன. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளில் பாதிக்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு பணத்தாள்கள் தயாரிப்பதற்கான தாள்களை விநியோகிக்கும் 'De La Rue' என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் கூற்றுப்படி, பெரும்பாலான போலி நோட்டுகள் காகிதத்தாலேயே தயாரிக்கப்படுவதால், நெகிழித் தாள்கள் (polymer) அதிகப் பாதுகாப்பானவை ஆகும். எனவே, நெகிழிப் பணத்தாள்களைப் பயன்படுத்தும் நாடுகளில் போலி பணத்தாள்களின் புழக்கம் குறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், இதில் உள்ள சிக்கல் என்ன?
12. நெகிழிப் பணத்தாள்களால் பல நன்மைகள் இருந்தாலும், ஒரு முக்கிய கவலை நீடிக்கவே செய்கிறது: இந்த பணத்தாள்களை அச்சிடத் தேவையான சிறப்பு நெகிழித் தாள்களை (special sheets) இந்தியா வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.
13. இலங்கையின் ஒப்பந்தப்புள்ளி நிபந்தனையில், ஏலதாரர்கள் பாகிஸ்தான் அல்லது சீனாவில் செய்யும் செயல்பாடுகள் இந்தியச் செயல்பாடுகளிலிருந்து முறையாகத் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் (suitably firewalled) என்றும், அந்த நாடுகளிலிருந்து எந்தவொரு மூலப்பொருட்களும் பெறப்படக் கூடாது என்றும், அந்நாடுகளில் பணிபுரிந்த, வசித்த அல்லது பூர்வீகத்தைக் கொண்ட ஊழியர்கள் எவரும் இந்தியத் திட்டத்தில் ஈடுபடக் கூடாது என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் அதிகாரப்பூர்வப் பணத்தை அச்சடிப்பதற்கு ஒரு வெளிநாட்டு நிறுவனத்தைச் சார்ந்திருப்பது, மேலும் பாதுகாப்புக் குறைபாட்டையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
14. எனவே, நெகிழிப் பணத்தாள்களின் பயன்பாட்டிற்கு மாறுவதற்கான நடவடிக்கைகள், இரண்டு காரணங்களுக்காகப் படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டும், அவை: முதலாவதாக, தற்போதைய பணப்புழக்க அமைப்பில் ஏற்கனவே பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது; இரண்டாவதாக, நெகிழிப் பணத்தாள்களுக்கு மாறுவதற்கு மேலும் கூடுதல் முதலீடு தேவைப்படும்.
சட்டமுறைச் செலாவணி என்றால் என்ன?
1. சட்டமுறைச் செலாவணி என்பது ஒரு கடனைத் திரும்பச் செலுத்த அல்லது ஒரு நிதிப் பொறுப்பை நிறைவு செய்யச் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நாணயம் அல்லது பணத்தாளைக் குறிக்கிறது.
2. 2011-ஆம் ஆண்டின் நாணயச் சட்டத்தின் (Coinage Act, 2011) பிரிவு 6-ன்கீழ் இந்திய அரசால் வெளியிடப்படும் நாணயங்கள், கட்டணங்கள் மற்றும் பரிவர்த்தனைகளுக்குச் செல்லும் செல்லுபடியாகும் செலாவணியாகக் (Legal Tender) கருதப்படுகின்றன. இருப்பினும், அந்த நாணயம் சேதமடைந்ததாகவோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட வரம்பைவிட அதிகளவில் எடை குறைந்ததாகவோ இருக்கக்கூடாது.
3. ஒரு ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புடைய நாணயங்களை ஒரு பரிவர்த்தனையில் அதிகபட்சமாக 1,000 ரூபாய் வரை மட்டுமே செல்லுபடியாகும் பணமாக செலுத்த முடியும். அதேபோல, 50 பைசா நாணயத்தை அதிகபட்சமாக 10 ரூபாய் வரை மட்டுமே செலுத்த பயன்படுத்த முடியும். இந்த வரம்புகளுக்கு அதிகமாக செலுத்தப்படும் நாணயங்களை ஏற்றுக்கொள்ளுமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. இருப்பினும், ஒருவர் தனது சொந்த விருப்பத்தின்பேரில் இந்த வரம்புகளுக்கு மேலாகவும் நாணயங்களை ஏற்றுக்கொள்ளலாம்.
4. இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ஒவ்வொரு பணத்தாளும், புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்பட்டதைத் தவிர, இந்தியா முழுவதும் செல்லுபடியாகும் சட்டப்பூர்வப் பணமாகும். அந்தத் தாளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை வரை அதை எந்தவொரு பணப்பரிவர்த்தனைக்கும் பயன்படுத்தலாம். மேலும், 1934-ஆம் ஆண்டின் ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் பிரிவு 26(2)-க்கு உட்பட்டு, இதற்கான முழு உத்தரவாதத்தையும் ஒன்றிய அரசு வழங்குகிறது. இதுதவிர, இந்திய அரசால் நேரடியாக வெளியிடப்படும் 1 ரூபாய் நோட்டுகளும் சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும் பணமாகும்.
5. இந்தியாவில் தற்போது 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் ஆகிய மதிப்புகளில் பணத்தாள்கள் வெளியிடப்படுகின்றன. இவை இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுவதால், இவை வங்கிப் பணத்தாள்கள் (Bank notes) என்று அழைக்கப்படுகின்றன.
6. 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் பணத்தாள்களின் ஆயுட்காலத்தோடு ஒப்பிடும்போது, அவற்றை அச்சடிப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஆகும் செலவு மிகவும் அதிகமாக இருந்ததால், அவை நிறுத்தப்பட்டு நாணயங்களாக மாற்றப்பட்டுள்ளன. இருப்பினும், முன்பு அச்சிடப்பட்ட பழைய 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் இருக்கலாம்; மேலும் அவை சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும்.
ரூபாய் தாள்களும் நாணயங்களும் எங்கு தயாரிக்கப்படுகின்றன?
7. பணத்தாள்கள் நான்கு அச்சகங்களில் அச்சிடப்படுகின்றன. அவற்றில் இரண்டு அச்சகங்கள் இந்திய அரசின்கீழ் இயங்கும் ‘Security Printing and Minting Corporation of India Limited’ (SPMCIL) நிறுவனத்தின் மூலமாகவும், மற்ற இரண்டு அச்சகங்கள் ரிசர்வ் வங்கியின் துணையமைப்பான ‘Bharatiya Reserve Bank Note Mudran Private Limited’ (BRBNMPL) மூலமாகவும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
8. ‘Security Printing and Minting Corporation of India Limited’ நிறுவனத்தின் பணத்தாள் அச்சகங்கள் நாசிக் (மேற்கு இந்தியா) மற்றும் தேவாஸ் (மத்திய இந்தியா) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. ‘Bharatiya Reserve Bank Note Mudran Private Limited’ நிறுவனத்தின் இரண்டு அச்சகங்கள் மைசூர் (தெற்கு இந்தியா) மற்றும் சல்பானி (கிழக்கு இந்தியா) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
9. ‘Security Printing and Minting Corporation of India Limited’ நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு நாணய அச்சகங்களில் நாணயங்கள் அச்சிடப்படுகின்றன. அந்த அச்சகங்கள் மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் நொய்டா ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 38-வது பிரிவின்படி, இந்த நாணயங்கள் இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக மட்டுமே புழக்கத்திற்கு வெளியிடப்படுகின்றன.
Original articles: RBI to introduce Polymer banknotes: What are ‘Plastic’ notes and why do they matter? -Roshni Yadav