மிகப்பெரிய பெருநிறுவனங்களும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) நிலைத்தன்மை மாற்றமும் -ஸ்ரீலட்சுமி ஹரிஹரன் மற்றும் முகுந்த் கோவிந்த் ராஜன்

 பெருநிறுவனங்களின் ஆதரவுடன் கூடிய பசுமை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME) உத்தரவாதத் திட்டமானது, இந்தியாவின் காலநிலை இலக்குகளை அடைவதில் பெரும் பங்கு வகிக்கும்.


2005-ம் ஆண்டு நிலைகளைவிட 47 சதவீதம் குறைவாக கார்பன் உமிழ்வு அடர்த்தியைக் குறைப்பதற்கான இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு (Nationally Determined Contribution (NDC)), பெருநிறுவனங்களின் நிர்வாகக் குழு அறைகளுக்குள் (boardrooms) மட்டும் இருந்து சாதித்துவிட முடியாது.


இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) சூழலமைப்பு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் மையமாகத் திகழ்கிறது. 74 மில்லியனுக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) கூட்டாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்திற்கும் மேல் பங்களிக்கின்றன. மேலும், இந்த குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களே (MSME) ஏறக்குறைய 10-15 சதவீத தொழிற்சாலைக் கழிவு வெளியேற்றத்திற்கும், 25 சதவீத தொழிற்சாலை எரிசக்தி நுகர்விற்கும் காரணமாக உள்ளன. 2030-ம் ஆண்டுக்குள் இவற்றின் எரிசக்தி தேவைகள் 50 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், எந்தவொரு தேசிய காலநிலை மற்றும் நிலைத்தன்மை சார்ந்த எந்தவொரு தேசிய உத்தியிலும் இவை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறுகின்றன.


இருப்பினும், அவற்றின் முக்கியப் பங்கு இருந்தபோதிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) பசுமை நிதியில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பெறுகின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் யதார்த்தங்களுக்கு ஏற்ற நிதிக் கட்டமைப்புகள் இல்லாததில்தான் உண்மையான சவால் அடங்கியுள்ளது. நிச்சயமற்ற வருமானத்தை திருப்பிச் செலுத்தும் காலக்கெடு, வரையறுக்கப்பட்ட பிணையம் மற்றும் குறைவான கடன் வரலாறு போன்ற காரணங்களால், பல கடன் வழங்குநர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் மற்றும் அவற்றால் செய்யப்படும் நிலைத்தன்மை சார்ந்த முதலீடுகளை மிகவும் அபாயகரமானதாகக் கருதுகின்றனர்.


இதன் விளைவாக, தொழில்துறை கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் பொருளாதாரத்தைப் பசுமையாக்குவதற்கும் மிகப்பெரிய வாய்ப்புகளில் ஒன்றாக விளங்கும் இத்துறை, பசுமை நிதியுதவியால் மிகக் குறைவாகவே பயனடைகிறது. பெருநிறுவன ஆதரவுடனான பசுமை உத்தரவாதக் கருவி போன்ற ஒரு எளிய ஆனால் சக்திவாய்ந்த நிதிப் புத்தாக்கம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) நிலைத்தன்மை மாற்றத்திற்குத் தேவையான மூலதனத்தைத் திரட்ட உதவக்கூடும்.


கட்டமைப்பு நிதியளிப்பு


இந்தியாவின் தொழில்துறை அமைப்பில் ஏற்கனவே ஒரு கட்டமைப்புரீதியான நிலை உள்ளது. பெருநிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன (MSME) விநியோகர்களைப் பெரிதும் சார்ந்துள்ளன. இந்த தொடர்புகள், மூலதனத்தைத் திரட்டுவதற்குப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய இயல்பான நிதி இணைப்புகளை உருவாக்குகின்றன.


வாகனத் துறையை (automotive sector) உதாரணமாக எடுத்துக்கொள்வோம். டாடா மோட்டார்ஸ் மற்றும் மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள், தங்களின் விநியோகர்களின் விரிவான வலையமைப்புகளைச் சார்ந்துள்ளன. இந்த அசல் உபகரண உற்பத்தியாளர்கள் (original equipment manufacturers (OEM)), அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் பட்டியலில் தொடர்ந்து நீடிப்பதற்காக, தங்களின் விநியோகர்கள் மூலம் தங்கள் செயல்முறைகளை நவீனமயமாக்கவும், உலைகளை மின்மயமாக்கவும், மேலும் அதிக ஆற்றல் திறன் கொண்ட தொழில்நுட்பங்களைப் பின்பற்ற தூண்டுவதற்கு, நீண்டகால ஒப்பந்தங்களையும் பணம் செலுத்தும் வரலாறுகளையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


நுகர்வோர் பொருட்கள் துறையிலும் இதே போன்ற ஒரு சூழல் நிலவுகிறது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் (Hindustan Unilever) மற்றும் ஐடிசி (ITC) போன்ற நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான தொகுப்பு உற்பத்தியாளர்கள் (packaging manufacturers) மற்றும் வேளாண் பதப்படுத்தும் நிலையங்களிடமிருந்து (agri-processing units) பொருட்களைப் பெறுகின்றன. தங்களின் பெருநிறுவன நிலைத்தன்மை உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு, இந்த விநியோகர்களை மறுசுழற்சி செய்யப்பட்ட தொகுப்பு, சூரிய ஆற்றலால் இயங்கும் செயல்பாடுகள் அல்லது தூய்மையான பதப்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கு மாற்றுவது அவசியமாகும்.


ஆயிரக்கணக்கான சிறிய தளவாட நிறுவனங்கள் மற்றும் விநியோக உரிமைகளைச் சார்ந்திருக்கும் அமேசான் (Amazon), ஸோமேட்டோ (Zomato) மற்றும் பிளிங்கிட் (Blinkit) போன்ற மின்வணிக மற்றும் விரைவு வணிகத் தளங்களுக்கான வாகனக் குழும மின்மயமாக்கல், மற்றுமொரு வாய்ப்பை வழங்குகிறது.


இந்த எல்லாச் சூழ்நிலைகளிலும், உச்சத்தில் உள்ள பெரிய நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் இல்லாத மூன்று சொத்துக்களைக் கொண்டுள்ளன. அவை : ஓரளவு வலுவான கடன் தகுதி, விநியோகர்களின் செயல்திறன் குறித்த விரிவான செயல்பாட்டுத் தரவுகள், மற்றும் விநியோகர்கள் போட்டித்தன்மையுடன் இருப்பதையும், தரம் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு இணங்குவதையும் உறுதி செய்வதில் உள்ள நேரடி வணிக ஆர்வம்.



பசுமை ஆதரவு உத்தரவாதம்


இந்த விநியோகச் சங்கிலி உறவுகள், பெருநிறுவன ஆதரவுடனான பசுமை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான உத்தரவாத வசதி (guarantee facility) என்ற ஒரு புதிய நிதியளிப்புக் கருவிக்கு அடித்தளமாக அமையலாம்.


இத்தகைய கட்டமைப்பின்கீழ், ஒரு பெரிய நிறுவனம், தனது விநியோகர்களுக்கு வழங்கும் நிலைத்தன்மைக் கடன்களுக்கு முதல் இழப்பு அல்லது பகுதி கடன் உத்தரவாதமாகச் செயல்படும் வகையில், கடன் தொகையில் சுமார் 1-2 சதவிகிதத்தை உள்ளடக்கிய ஒரு சிறிய உத்தரவாத இருப்பை நிறுவுகிறது. வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) அல்லது வளர்ச்சி நிதி நிறுவனங்கள், தகுதியான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) விநியோகர்களுக்கு பசுமைக் கடன்களை வழங்கலாம். அதன் மூலம் கிடைக்கும் வருமானம், கூரை மேல் சூரிய மின்சக்தி அமைப்புகள், ஆற்றல் திறன் கொண்ட இயந்திர மேம்பாடுகள், மின்சார வாகனக் குழும மாற்றங்கள், நீர் மறுசுழற்சி அமைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் அது போன்ற சரிபார்க்கப்பட்ட நிலைத்தன்மை முதலீடுகளுக்காக ஒதுக்கப்படுகிறது. கடனைத் திருப்பிச் செலுத்தும் முறையானது, முக்கிய நிறுவனத்திடமிருந்து பெறப்படும் எதிர்கால கொள்முதல் ஆணைகள் அல்லது வர்த்தகக் கடன்களுக்கு (Trade Receivables) எதிராக கட்டமைக்கப்படலாம். இது கடன் தவறும் அபாயத்தை (Risk of Default) கணிசமாகக் குறைக்கிறது.


இத்தகைய ஒரு அமைப்பை வடிவமைப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் பல வழிகள் உள்ளன. மேலும், அத்தகைய திட்டத்தின் அம்சங்கள், இந்திய ரிசர்வ் வங்கி ஊக்குவிக்கும் 'வர்த்தகக் கடன் தள்ளுபடி அமைப்பில்' (Trade Receivables Discounting System (TReDS)) ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.


உதாரணமாக, ஒரு பெருநிறுவனமும், பாரத ஸ்டேட் வங்கி (SBI), HDFC வங்கி அல்லது ICICI வங்கி போன்ற அதன் வங்கியாளரும், வரையறுக்கப்பட்ட விநியோகர்களை உள்ளடக்கிய விநியோகச் சங்கிலிக் கடன் வசதிக்காக ஒரு இருதரப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ளலாம். மற்றொரு வழி, அந்தப் பெருநிறுவனம், விநியோகர் வலையமைப்பு முழுவதும் ஏற்படும் உமிழ்வுக் குறைப்புகளுடன் இணைக்கப்பட்ட வட்டி விகிதங்களுடன், நிலைத்தன்மையுடன் தொடர்புடைய விநியோகச் சங்கிலிப் பத்திரத்தை வெளியிடலாம். கலப்பு நிதிக் கட்டமைப்புகளையும் உருவாக்கலாம். இதில் இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கி (Small Industries Development Bank of India (SIDBI)) அல்லது தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (National Bank for Agriculture and Rural Development(Nabard)) போன்ற வளர்ச்சி நிதி நிறுவனங்கள், வணிகக் கடன் வழங்குநர்களுடன் இணைந்து பங்கேற்று, மூலதனத்தின் பல அடுக்குகளில் இடர்பாடுகளைப் பரப்புகின்றன.


மிதமான அணுகுமுறைகூட கணிசமான மூலதனத்தை ஈட்டித் தரும். நிலைத்தன்மை முதலீடுகளுக்காக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) தலா சுமார் ₹1.5 கோடி தேவை என்று வைத்துக்கொண்டால், 500 முக்கிய விநியோகர்களைக் கொண்ட ஒரு பெருநிறுவனம், உத்தரவாத கையிருப்பு நிதிக்காக அதிகபட்சம் ₹15 கோடி மட்டுமே செலவழித்து, ₹750 கோடி மதிப்பிலான கடன் நிதியை உருவாக்க முடியும்.


நற்பண்புச் சுழற்சி


இந்த வகையான நிதி மாதிரி முழு சூழல் அமைப்புக்கும் பயனளிக்கும்.


குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, இது கட்டுப்படியான குறைந்த விலையில் நீண்டகால மூலதனத்தைப் பெறுவதற்கான வழியைத் திறக்கும். பெருநிறுவனங்களைப் பொறுத்தவரை, அவற்றின் நிலைத்தன்மை நடைமுறைகளுக்கு மாற விநியோகர்களுக்கு ஆதரவளிப்பது, சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக (ESG) செயல்திறன் அளவீடுகளை மேம்படுத்தும், அபாயத்தைக் குறைக்கும், உலகளாவிய முதலீட்டாளர்களிடம் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் மற்றும் விநியோகச் சங்கிலியின் மீள்திறனை வலுப்படுத்தும். குறிப்பாக, பெருநிறுவனங்கள் சமூகப் பொறுப்புள்ள பங்களிப்பாளர்கள் என்ற தங்கள் பிம்பத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும்.


நிறுவனங்களின் உத்தரவாதங்கள் மற்றும் நிலையான விநியோகர்களுடனான உறவுகள் காரணமாக, வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கணிசமாகக் குறைக்கப்பட்ட கடன் சார்ந்த இடர்பாடுகளுடன், ஒரு புதிய, விரிவாக்கக்கூடிய கடன் வழங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.


நிலையான வளர்ச்சியை நோக்கிய மாற்றத்தில் இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை ஒரு பிரச்சனையல்ல. அதுவே ஒரு சிறந்த வாய்ப்பாகும். பெருநிறுவனங்களின் ஆதரவுடனான பசுமை உத்தரவாத ஆவணங்கள், காலநிலை இலட்சியத்திற்கும் தொழில்துறை யதார்த்தத்திற்கும் இடையே ஒரு பாலமாக அமையக்கூடும். இதன் மூலம், இன்றே செயல்படுத்தக்கூடிய ஒரு எளிய, குறைந்த கடன் இடர்பாடுகொண்ட நிதிப் புதுமையின் வழியாகப் பெரும் மூலதனத்தைத் திரட்டமுடியும்.


ஹரிஹரன் ஈக்யூப் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்; ராஜன் அந்நிறுவனத்தின் தலைவர்.                

Original article : Large corporates and the sustainability transition of MSMEs -Sreelakshmi Hariharan and Mukund Govind Rajan

Share:

கிகாலி திருத்தம் என்பது என்ன? - பிரியா குமாரி சுக்லா

 புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான ஹைட்ரோபுளோரோகார்பன் (Hydrofluorocarbons (HFCs)) உற்பத்தியைப் படிப்படியாகக் குறைப்பதற்கான சர்வதேச ஒப்பந்தங்களுக்கு ஏற்ப, இந்திய அரசு ஒரு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, 2027-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்குப் பிறகு, புதியதாகவோ அல்லது கூடுதலாகவோ ஹைட்ரோபுளோரோகார்பன் (HFC) உற்பத்தியைத் தொடங்குவதற்கான 'சுற்றுச்சூழல் அனுமதிகளை' வழங்க வேண்டாம் என்று அனைத்து மாநில மற்றும் ஒன்றிய அரசு அதிகாரிகளுக்கும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


• விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவுக்கு முன்னதாக விண்ணப்பிப்பவர்கள், தங்களுடைய தொழிற்சாலை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்து, டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி, 2027-ஆம் ஆண்டு அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ உற்பத்தியைத் தொடங்கிவிடும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் ஒரு உறுதிமொழிப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


• இது தொடர்பாக, சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இந்த வழிகாட்டுதல் மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையங்களுக்கும் (State Level Environment Impact Assessment Authorities (SEIAA)) மற்றும் ஒன்றிய அளவிலான நிபுணர் மதிப்பீட்டுக் குழுக்களுக்கும் (Expert Appraisal Committees (EAC)) அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


• ஒன்றிய அமைச்சகத்தின் குறிப்பாணைப்படி, ஓசோன் படலத்தைச் சிதைக்கும் பொருட்கள் தொடர்பான (Ozone Depleting Substances Rules, 2000) 2000-ஆம் ஆண்டு விதிகளில் திருத்தம் செய்வது போன்ற முறையான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மூலம், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாயுக்களைக் குறைக்கும் இலக்குகள் செயல்படுத்தப்படும் என்கின்றனர். இது கிகாலி திருத்தத்தின்கீழ் (Kigali Amendment) உள்ள ஹைட்ரோபுளோரோகார்பன் (HFC) குறைப்பு கால அட்டவணைக்கு ஏற்ப அமையும் என்றும் கூறப்படுகிறது. மேலும், ஜனவரி மாதம் 1-ஆம் தேதி, 2028 என்ற 'கட்டுப்பாட்டுத் தேதிக்கு' பிறகு, கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடுகளுக்காக ஹைட்ரோபுளோரோகார்பன் உற்பத்தித் திறனைப் புதிதாக உருவாக்குவதையோ அல்லது விரிவாக்கம் செய்வதையோ தடை செய்யவும், ஹைட்ரோபுளோரோகார்பன் உற்பத்தியை அனுமதிப்பதற்கான ஒரு பொருத்தமான கட்டமைப்பை உருவாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


• 1989-ஆம் ஆண்டின் மான்ட்ரியல் ஒப்பந்தம் (Montreal Protocol) என்பது வளிமண்டலத்தின் மேல் பகுதியில் உள்ள ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. இது ஆரம்பத்தில் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகக் கருதப்படவில்லை. குளிரூட்டும் வசதி மற்றும் குளிர்சாதனப் பெட்டி (Refrigeration) தொழிற்சாலைகளில் முன்பெல்லாம் பயன்படுத்தப்பட்டு வந்த குளோரோபுளோரோ கார்பன்கள் (Chlorofluorocarbons (CFCs)) உள்ளிட்ட சில வேதிப்பொருட்கள், வளிமண்டலத்தின் மேலடுக்கில் உள்ள ஓசோன் படலத்தைச் சேதப்படுத்துவது கண்டறியப்பட்டது. (அதனைத் தடுக்கவே இந்த ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது).


• மான்ட்ரியல் ஒப்பந்தம், குளோரோபுளோரோகார்பன்கள் (CFCs) மற்றும் ஓசோன் படலத்தைச் சிதைக்கும் பிற வேதிப்பொருட்களை முழுமையாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ஆணையிட்டது. கடந்த முப்பது ஆண்டுகளில் இந்த இலக்கை அந்த ஒப்பந்தம் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.


• குளோரோபுளோரோகார்பன்கள் (CFCs) படிப்படியாகப் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டன. முதலில் சில இடங்களில் அவற்றுக்குப் பதிலாக ஹைட்ரோ-குளோரோ-புளோரோ-கார்பன்கள் (Hydrochlorofluorocarbons (HCFCs)) பயன்படுத்தப்பட்டன; இறுதியில் ஓசோன் படலத்திற்கு மிகக்குறைந்த பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் ஹைட்ரோ-புளோரோ-கார்பன்கள் (HFCs - Hydrofluorocarbons) பயன்பாட்டிற்கு வந்தன. இந்த ஹைட்ரோ-புளோரோ-கார்பன்களிலிருந்து  ஹைட்ரோபுளோரோகார்பன்  (HFCs) பயன்பாட்டிற்கு  மாறும் செயல்முறை, குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளில் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.


• இந்தியா 1989-ஆம் ஆண்டின் மான்ட்ரியல் ஒப்பந்தத்தில் (Montreal Protocol) ஒரு அங்கமாக உள்ளது. இந்த ஒப்பந்தம், குளோரோபுளோரோ கார்பன்களின் (CFCs) பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைத்து, 2010-ஆம் ஆண்டிற்குள் முழுமையாகத் தடை செய்வதன் மூலம் ஓசோன் படலம் பாதிக்கப்படுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டது. மேலும், 2021-ஆம் ஆண்டில் இந்தியா கிகாலி திருத்தத்திற்கும் (Kigali Amendment) ஒப்புதல் அளித்தது. இது 2016-ஆம் ஆண்டு ருவாண்டாவின் கிகாலி நகரில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குளோரோபுளோரோ கார்பன் (CFC) வாயுக்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டுவரும் ஹைட்ரோபுளோரோ கார்பன்களின் (HFCs) பயன்பாட்டையும் படிப்படியாகக் குறைப்பதை இந்தத் திருத்தம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


• ஜனவரி மாதம் 1-ஆம் தேதி, 2028-ஆம் ஆண்டு முதல் ஹைட்ரோபுளோரோகார்பன் (HFCs) பயன்பாட்டைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில், 2032-ஆம் ஆண்டிற்குள் 10 சதவீதமும், 2047-ஆம் ஆண்டிற்குள் 85 சதவீதம் வரையிலும் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2028-ஆம் ஆண்டு முதல் இந்தத் தயாரிப்புக் கட்டுப்பாடு அமலுக்கு வருவதால், சர்வதேச வாக்குறுதிகளை நிறைவேற்ற ஹைட்ரோபுளோரோகார்பன் (HFC) உற்பத்தியைக் கட்டுப்படுத்தி படிப்படியாகக் குறைக்கும் ஒரு வலுவான கட்டமைப்பு அவசியம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி, 2027-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய ஹைட்ரோபுளோரோகார்பன் (HFC) உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்படாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.


Original article : What was the Kigali Amendment? -Priya Kumari Shukla

Share:

இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றமில்லாமல் 5.25% என்ற அளவிலேயே ஏன் வைத்துள்ளது? - பிரியா குமாரி சுக்லா

 இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பணவியல் கொள்கைக் குழு (Monetary Policy Committee (MPC)), கடந்த புதன்கிழமை அன்று தனது முக்கிய வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை எவ்வித மாற்றமும் இன்றி 5.25 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.


முக்கிய அம்சங்கள்:


• மேற்கு ஆசியா போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார அபாயங்கள், விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டிலுமே நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவும் ஈரானும் இரண்டு வார கால போர்நிறுத்தத்திற்குச் சம்மதித்த போதிலும், இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, மிகவும் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளபட்ட நடவடிக்கை என்பதை உணர்த்துகிறது.


• ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், தற்போதைய போர்நிறுத்த நடவடிக்கை பணவியல் கொள்கை முடிவில் (Monetary Policy Decision) ஓரளவிற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்றும், அதன் முழுமையான தாக்கம் குறித்துப் பின்னரே தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார்.


• ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடியதைத் தொடர்ந்து, இந்தப் போரினால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததுடன் எரிசக்தி விநியோகமும் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக, உற்பத்திச் செலவுகள் அதிகரித்தன, விநியோகச் சங்கிலியில் நெருக்கடி ஏற்பட்டது மற்றும் பல்வேறு தொழில்துறைகளில் மூலப்பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.


• ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டிருந்தாலும், வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகளின் நிலை குறித்து இன்னும் சிக்கல்கள் நீடிப்பதாகக் கூறப்படுகிறது.


• இந்திய ரிசர்வ் வங்கி (RBI), தனது பொருளாதார வளர்ச்சி மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பான கணிப்புகளில் பயன்படுத்திய சில முன்முடிவுகளை தற்போது மாற்றியமைத்துள்ளது.


• பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் கடன் வாங்கியவர்களுக்கு, வட்டி விகிதத்தை 5.25 சதவீதம் என்ற அளவிலேயே வைத்திருப்பது ஒரு ஆதரவை வழங்குகிறது. இந்திய ரிசர்வ் வங்கி, தனது ரெப்போ விகிதத்தை (Repo Rate) மாற்றாமல் அப்படியே வைத்திருக்கும்போது, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் பொதுவாகக் குறுகியகாலத்திற்கு அதிகரிக்க வாய்ப்பில்லை என்கின்றனர். இதன் விளைவாக, வீடு, வாகனம், தனிநபர் தேவைகள் மற்றும் சிறு முதல் பெரு நிறுவனங்கள் வரை வாங்கிய கடன்களுக்கான மாதாந்திரத் தவணை தொகையில் மாற்றமிருக்காது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். அதேபோல், வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ள சேமிப்புத் தொகைகளுக்கான வட்டி விகிதங்களும் தற்போதைக்கு மாறாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





உங்களுக்குத் தெரியுமா?


• பணவியல் கொள்கை (Monetary Policy) என்பது முக்கியமாக ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பணப்புழக்கம் மற்றும் அதன் வட்டி விகிதங்கள் ஆகியவற்றை நிர்வகிப்பதாகும். இந்திய ரிசர்வ் வங்கியின்கீழ் இயங்கும் பணவியல் கொள்கைக் குழு (MPC) இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடி நாட்டின் பொருளாதார நிலையை ஆய்வு செய்கிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், பணவீக்கத்தை ஒரு நிலையான அளவில் வைத்திருக்கவும், இந்த அமைப்பு 'ரெப்போ விகிதத்தை' (Repo Rate) மாற்றியமைக்கலாம். 'ரெப்போ விகிதம்' என்பது வணிக வங்கிகளுக்குத் தேவைப்படும் கடனுக்காக ரிசர்வ் வங்கி வசூலிக்கும் வட்டி விகிதம் ஆகும்.


• ரெப்போ விகிதம்: ரெப்போ விகிதம் என்பது பணப்புழக்கச் சீரமைப்பு வசதியின்கீழ் (Liquidity Adjustment Facility (LAF)), அரசு மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்டப் பத்திரங்களை அடமானமாகப் பெற்றுக்கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும்.


• விளிம்புநிலை நிரந்தர வசதி விகிதம்: வங்கிகள் தங்களின் பண நெருக்கடியைச் சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து (RBI) ஒரே இரவில் அவசரமாகக் கடன் பெறும் வசதியாகும். வங்கிகள் தங்களிடம் உள்ள சட்டப்பூர்வ பணப்புழக்க விகித (Statutory Liquidity Ratio (SLR)) இருப்பில் ஒரு பகுதியை (2% வரை) பிணையாக வைத்து இந்தத் தொகையைப் பெறலாம் என்கின்றனர். இது வங்கி அமைப்பில் எதிர்பாராத பணத் தட்டுப்பாடு ஏற்படும்போது ஒரு பாதுகாப்பு அம்சமாகச் செயல்படுகிறது. இந்த விளிம்புநிலை நிரந்தர வசதி வட்டி விகிதமானது, வழக்கமான ரெப்போ (Repo) விகிதத்தைவிட 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25%) கூடுதலாக, அதாவது ஒரு அபராத வட்டியாகவே நிர்ணயிக்கப்படுகிறது.


• தலைகீழ் ரெப்போ விகிதம்: வங்கிகளிடம் இருக்கும் உபரி பணத்தை (Liquidity) இந்திய ரிசர்வ் வங்கி பெற்றுக்கொள்ளும்போது, அதற்குப் பதிலாக வங்கிகளுக்கு வழங்கும் வட்டி விகிதம் ஆகும். இதற்கு ஈடாக, தகுதியுள்ள அரசுப் பத்திரங்கள் பிணையாகப் பயன்படுத்தப்படுகின்றன. நிலையான வைப்பு வசதி (Standing Deposit Facility) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த நிலையான வட்டி விகிதத்திலான 'தலைகீழ் ரெப்போ' நடவடிக்கைகள், ரிசர்வ் வங்கியின் விருப்பப்படி, தேவைப்படும் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டுமே நடத்தப்படும் என்கின்றனர்.


Original article : Why RBI Monetary Policy Committee (MPC) left the repo rate, unchanged at 5.25%? -Priya Kumari Shukla

Share: