இந்த ஆண்டு, நமது நாட்டில் உள்ள நான்கு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்தத்தேர்தல்கள் 824 தொகுதிகளில் நடைபெறவுள்ள நிலையில், ஏறத்தாழ 174 மில்லியன் தகுதிபெற்ற வாக்காளர்கள் இந்த ஜனநாயகச் செயல்முறையில் பங்கேற்க உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றைப் பாதித்து வருகிறது. உலக வங்கியின் மதிப்பீடு, 2030-ஆம் ஆண்டிற்குள், இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆண்டுதோறும் கடும் வெப்பநிலையை எதிர்கொள்வார்கள் என்றும், வெப்பம் சார்ந்த அழுத்தத்தினால் ஏற்படும் உற்பத்தித்திறன் குறைவின் காரணமாக, 3 கோடி மக்கள் தங்கள் வேலைவாய்ப்புகளை இழப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.
பொது சுகாதாரக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இந்த ஆண்டின் கோடைக்காலம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது. ஏனெனில், ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுடன் இது ஒத்துப்போகிறது. இந்த ஆண்டு, இந்தியாவின் நான்கு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. தேர்தல் 824 தொகுதிகளில் நடைபெற உள்ளது. 174 மில்லியன் தகுதிவாய்ந்த வாக்காளர்கள் இந்த ஜனநாயகச் செயல்முறையில் பங்கேற்க உள்ளனர். இந்த கோடைகாலத்தில் நாட்டின் பல பகுதிகளில் சராசரிக்கும் அதிகமான வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கோடைகாலத்தின் உச்சத்தில், கடும் வெப்பம் நிலவும் வேளையில் தேர்தல்கள் நடைபெறுவதால், வெப்ப அலைகளால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கணித்துத் குறைப்பது முக்கியமான நடவடிக்கையாகும். சமூக அளவிலான தயார்நிலையை தாண்டி, வெளிப்புற நிகழ்வுகளின்போது பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். இதை அடைவதற்கு, பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் சமூகத்தின் மீள்திறனை வலுப்படுத்தவும் உறுதியான மற்றும் கூட்டு முயற்சிகள் தேவைப்படுகின்றன.
சமூக விழிப்புணர்வு, வெப்பம் மற்றும் சுகாதாரம் குறித்த முக்கிய தகவல் தொடர்பு உத்திகள், திறமையான முன்னறிவிப்பு அமைப்புகள், சமூகத்தின் முன்னெடுப்பில் அமையும் தயார்நிலைகள் மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட இலக்கு சார்ந்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் ஆகியவை, மக்களிடையே வெப்பம் சார்ந்த நோய்களின் சுமையைக் குறைப்பதற்கான பயனுள்ள உத்திகளில் ஒன்றாகும்.
இந்தத் தேர்தல்கள், பசிபிக் பெருங்கடல் வெப்பமாதலால் நாட்டில் அதிக வெப்பமும் வறட்சியும் ஏற்படுத்தும் எல் நினோ (El Niño) நிலையிலிருந்து, வானிலை மாறுபாடுகளை (வெப்ப நிலை மாற்றங்கள் உட்பட) பாதிக்கக்கூடிய லா நினா (La Niña) நிலைக்கு மாறும் காலத்துடன் நடைபெறுகின்றன. தேர்தல் நாட்களில், அதிகமான மக்கள் நெரிசலும் போதுமான தங்கும் வசதிகள் இல்லாததாலும் அதிக வெப்பம் சார்ந்த உடல்நல பிரச்சினைகளை தீவிரப்படுத்தக்கூடும்.
கடந்த ஆண்டு கோடைகாலத்தில் ஏற்பட்ட கடும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு — பகல் நேரங்களில் நிலவிய அதிகபட்ச வெப்பம் (34 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை) மற்றும் அதிக ஈரப்பதம் ஆகிய இரு காரணங்களாலும் பலர் உயிரிழந்த நிலையில் — முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமான ஒன்றாகும். ஏப்ரல் 2023-ல், நவி மும்பையில் நடைபெற்ற ஒரு திறந்தவெளிப் பொதுக்கூட்டத்தில், கடும் வெப்பத்தின் காரணமாக 14 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைகிறது. பாதுகாப்பு நெறிமுறைகளைச் செயல்படுத்தத் தவறினால், அது பொதுமக்களிடையே கடுமையான உடல்நலப் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அல்லது பரவலான நோய்களையும் ஏற்படுத்தக்கூடும்.
எனவே, தேர்தல் தொடர்பான செயல்பாடுகள் குறிப்பாகப் பிரச்சாரங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் ஆகியவை வெப்பத்தின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டு நடத்தப்பட வேண்டும். வெப்பத்தின் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், சமூக அளவில் தயார்நிலையை வளர்ப்பதன் மூலமும், உடல்நலம் சார்ந்த பாதிப்புகளை உடனடியாகத் தெரிவிப்பதை ஊக்குவிப்பதன் மூலமும், வெப்ப அலைகளால் ஏற்படும் கடுமையான உடல்நலப் பாதிப்புகளைப் பெருமளவு குறைக்க இயலும்.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வழங்கிய பருவகால முன்னறிவிப்புகளின் அடிப்படையில், இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல்கள் தொடங்குவதற்கு வெகு முன்னரே வெப்ப அலை தொடர்பான ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) வெளியிட்ட வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு, வெப்பப் பாதுகாப்பு தொடர்பாகப் பின்பற்ற மற்றும் தவிர்க்க வேண்டியவை குறித்த விரிவான பட்டியலைத் தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. தேர்தல் காலத்தில் வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பரவலாகச் சென்றடைவது முக்கியமான ஒரு நடவடிக்கையாகும்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைத் தாண்டி, இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் தனிநபர்களும் பொறுப்பு உணர்வோடு செயல்பட வேண்டும். இதுபோன்ற கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது, போதுமான அளவு தண்ணீர் மற்றும் ஒரு குடையை உடன் எடுத்துச் செல்வதும், நீண்டநேரம் திறந்தவெளியில் இருப்பதைத் தவிர்ப்பதும் முக்கியமான நடவடிக்கையாகும். அரசியல் பிரச்சாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்துவது தொடர்பான கூடுதல் விதிமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள், பேரணிகள் மற்றும் வாக்குப்பதிவுச் செயல்முறை முழுவதும் தனிநபர்கள் உடல்நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமான ஒரு நடவடிக்கையாகும்.
தினசரி அடிப்படையில் எளிய, லேசான உணவுகளை உட்கொள்வது முக்கியமானதாகும். இதுபோன்ற உணவுகளும் பானங்களும் உடலின் ஆற்றல் அளவுகளுக்கு ஏற்ற நிலையில் பராமரிக்கவும், நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுக்கவும் உதவுகின்றன. துரித உணவுகள் (Junk food) மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவற்றைச் செரிமானம் செய்ய உடல் அதிக அளவு நீரைச் செலவிட வேண்டியிருக்கும் என்பதோடு, செரிமானமாவதற்கும் அதிக நேரத்தை எடுத்து கொள்ளும். காரமான உணவுகளை உட்கொள்வதும் உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்து, வெப்ப உணர்வை ஏற்படுத்தக்கூடும்.
பெரிய அளவிலான கூட்டங்கள், அரசியல் பேரணிகள் அல்லது தேர்தல் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கும்போது, பொதுமக்கள் மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். அகலமான விளிம்புகளைக் கொண்ட தொப்பிகள் அல்லது குல்லாய்கள் மற்றும் கண்ணாடிகளை அணிந்துகொள்வதும் நல்லது. தலைச்சுற்றல், உடல் பலவீனம், பதற்றம், அதீத தாகம் அல்லது தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ உதவியைப் பெறவேண்டும். உடனடியாக ஒரு குளிர்ந்த சூழலுக்குச் செல்வதும், உடலின் வெப்பநிலையைச் சோதித்துக்கொள்வதும் மிக முக்கியமான நடவடிக்கைகளாகும். பொதுமக்கள் வெப்பத்தில் நீண்டநேரம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, நாளின் அதிகபட்ச வெப்பம் நிலவும் நேரங்களில், அதிகப்படியான வியர்வை, தலைச்சுற்றல் அல்லது குமட்டல் போன்ற நீர்ச்சத்து குறைபாடு அல்லது வெப்பச் சோர்வின் அறிகுறிகளை புறக்கணிக்கக் கூடாது.
சமூக அடிப்படையிலான தன்னார்வ அமைப்புகள் (NGOs), குறிப்பாக முதியவர்கள், இளைஞர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வெப்பத்துடன் தொடர்புடைய நோய்களை அடையாளம் காணுதல், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முதலுதவி முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தேர்தல் காலத்தில் கோடிக்கணக்கான இந்தியர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்காக, ஆபத்தான அளவில் அதிகரித்துள்ள வெப்பநிலையைத் தாங்கிக்கொள்ள வேண்டிய சூழல் நிலவும்போது பொதுமக்களின் உடல்நலத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். வெப்பம் சார்ந்த நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு, பரந்த அளவிலான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும், சமூகம் சார்ந்த முன்னெச்சரிக்கை மற்றும் தயார்நிலையுடன் இருக்க வேண்டும்.
இது போன்ற நடவடிக்கைகள் வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஆகிய இரு தரப்பினரின் நலன்களையும் பாதுகாப்பதோடு, காலநிலை மாற்றத்தின் காரணமாக நாடு முழுவதும் அதிகரித்துவரும், வெப்பம் சார்ந்த தீவிர ஆபத்துகளின் மீதும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமையும். தீவிர வானிலைச் சூழல்களுக்கு இடையிலும் இந்திய மக்கள் தேர்தல் காலத்தைக் கடந்து செல்லும் இது போன்ற சூழலில், ஒவ்வொரு தனிநபரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
கட்டுரையாளர் ஒரு சுகாதாரக் கொள்கை நிபுணர்.
Original article : We need a ‘heat code of conduct’ to protect voters and election officials. -Mahaveer Golechha