வேளாண் பொருட்களின் விலை ஏற்ற இறக்கம் இந்தியாவில் பான உற்பத்தியை (beverage manufacturing) எவ்வாறு மாற்றுகிறது? - பரிதோஷ் லதானி

 ஒழுக்கமான இடர் மேலாண்மை, நெகிழ்வான திட்டமிடல் மற்றும் இராஜதந்திரரீதியில் பல்வகைப்படுத்தல் ஆகியவை இனி தற்காப்பு நடவடிக்கைகள் அல்ல, அவை போட்டித்தன்மையை நிலைநிறுத்துவதற்கு முக்கிய மையமாக உள்ளன.


கடந்த ஒன்பது மாதங்களாக அனைவரும் 'புதிய உலகளாவிய ஒழுங்கு' (new world order) பற்றி கேள்விகள் கேட்டு வருகின்றனர். கடந்த மாதம் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் கனடாவைச் சேர்ந்த மார்க் கார்னி இந்த உலகளாவிய கவலையைப் பற்றிப் பேசினார். சார்லஸ் டார்வின் மற்றும் 18-ம் லூயிஸ் ஆகியோரின் கருத்துக்களின் கலவைக்கு உலகம் திரும்புவதாக அவர் கூறினார்.


தகுதியானவர்கள் மட்டுமே உயிர்வாழும் என்று டார்வின் கூறியிருந்தார். மக்கள் ஒற்றுமையாக இருக்காவிட்டால், அவர்கள் தனித்தனியாக தோல்வியடைவார்கள் என்று 18-ம் லூயிஸ் கூறியிருந்தார்.


இரண்டு கருத்தையும் ஒன்றாக இணைத்து, விதி அடிப்படையிலான உலகளாவிய ஒழுங்கு இப்போது பலவீனமடைந்து வருவதாக அவர் கூறினார். இனிமேல் உலகம் தகுதியானவர்களின் உயிர்வாழ்வு என்ற சூழ்நிலையை நோக்கி நகர்ந்து வருவதாக கார்னி கூறினார். நடுத்தர சக்தி நாடுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். வலுவான சக்திகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


பெரிய பிரபஞ்ச கேள்விகளுக்கு ஒரு தெளிவான நன்மை உண்டு. பெரிய பிரபஞ்ச வழிகளில் தவிர அவற்றுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை. இது நிறைய பேருக்கு ஒரு பெரிய உத்வேகத்தை அளிக்கிறது.


ஆனால் யாரும் கேட்காத ஒரு முக்கியமான கேள்வி என்னவென்றால், 75 ஆண்டுகளாக பொருளாதாரம் மிகவும் விரும்பப்படும் கல்வித் துறையாக இருந்து வருகிறது. இது உலகளாவிய சிந்தனை மற்றும் கொள்கையை வழிநடத்தியுள்ளது. இது ஷோலேயில் கப்பரின் பிரபலமான வரியைப் போல ஒரு கூர்மையான கேள்வியை எழுப்புகிறது: "இப்போது உங்களுக்கு என்ன நடக்கும் (ab tera kya hoga, Kaliye)?"


கேள்வி முக்கியமானது, ஏனென்றால் பதில் உலக ஒழுங்கின் அடித்தளத்தை பொருளாதாரமாக நீங்கள் கருதுகிறீர்களா அல்லது அதற்கு நேர்மாறாக, அதாவது பொருளாதாரத்தை உலக ஒழுங்கின் விளைவாகக் கருதுகிறீர்களா என்பதைப் பொறுத்தது. இது ஒரு உன்னதமான கோழி-முட்டை சிக்கலை உருவாக்குகிறது.


இரண்டு எதிரெதிர் அனுமானங்கள்


இவை அனைத்தும் என்ன அனுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதைப் பொறுத்தது. ஒன்று உலக ஒழுங்கு மாறாது என்று கருதுவது, மற்றொன்று பொருளாதாரம் மாறாது என்று கருதுவது. உங்கள் அரசியலைப் பொறுத்து நீங்கள் உங்கள் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.


முதல் அனுமானம் என்பது ஒட்டுமொத்த உலக அமைப்பும் அப்படியே இருக்கும் என்பதாகும். காலப்போக்கில் ஆதிக்க சக்திகள் மட்டுமே மாறுகின்றன. முன்பு பிரிட்டன் ஆதிக்கம் செலுத்தியது. இப்போது அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது. எதிர்காலத்தில், அது வேறு ஏதாவது நாடாக இருக்கலாம். அது இந்தியாவாகவும் இருக்கலாம்.


இரண்டாவது அனுமானம் முற்றிலும் மார்க்சிய சிந்தனையிலிருந்து வருகிறது. இது "அடிப்படை மற்றும் மேல்கட்டமைப்பு" என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. உலக ஒழுங்கு முக்கியமாக பொருளாதார மற்றும் வணிகக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டது என்று இந்தக் கருத்து கூறுகிறது.


முதல் கருத்தை ஆதரிக்கும் பொருளாதார வல்லுநர்கள் தாராளவாதமும் ஜனநாயகமும், இலாபத்தை அநீதியானதாகக் கருதும் மிக அதிக ஒழுங்குமுறை கொண்ட முதலாளித்துவத்துடன் இணைந்து வரும்போது, சமூக ரீதியில் சிறந்த பலன்களை அளிக்கின்றன என்று கூறுகின்றனர். ஆனால் மார்க்சியக் கருத்தை ஆதரிப்பவர்கள், பொருளாதாரத்திற்கு ஒரேயொரு இலக்கு மட்டுமே இருக்க வேண்டும், அது கட்டுப்பாடற்ற இலாப அதிகரிப்பு என்கின்றனர்.


பொதுவுடைமையான சீனா, முழுமையாக லாபத்தில் கவனம் செலுத்துவதையும், முதலாளித்துவமான ஐரோப்பா, லாபத்தைத் தவிர மற்ற அனைத்திலும் கவனம் செலுத்துவதையும் நீங்கள் காணும் வரை இது எதிர்மறையாகத் தெரிகிறது. மீண்டும், மக்கள் எந்த அணுகுமுறையை விரும்புகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கலாம்.


இந்த பெரிய சூழலில், பொருளாதாரம் யாருக்கு சேவை செய்கிறது என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது அரசாங்கத்திற்கு சேவை செய்கிறதா அல்லது சந்தைக்கு சேவை செய்கிறதா என்பதை அது தீர்மானிக்க வேண்டும். 1945-க்குப் பிறகு மேற்கத்திய பொருளாதாரம் சந்தைகளைப் பற்றி மட்டுமே பேசியது. இந்தியாவில் பொருளாதாரம் படித்த இந்தியர்களுக்கு, கோட்பாட்டில் கற்றுக்கொண்டது உண்மையில் அவர்கள் பார்த்ததிலிருந்து மிகவும் வித்தியாசமானது. மேற்கத்திய பொருளாதாரமும் இந்திய பொருளாதாரமும் முற்றிலும் எதிர்மாறாகத் தோன்றின.


உலகம் முழுவதும் இப்போது இந்த வேறுபாட்டை எதிர்கொள்கிறது. சந்தைப் பொருளாதாரத்தின் அறிவுசார் ஒப்புதல் மேற்கத்தியமற்ற பொருளாதாரங்களுக்கு நகர்ந்துள்ளது. அதே நேரத்தில், பல மேற்கத்திய பொருளாதார வல்லுநர்கள் சந்தை அல்லாத கருத்துக்களை நோக்கி நகர்ந்துள்ளனர். இந்தக் கருத்துக்கள் அரசுக்கு ஒரு பெரிய பங்கை ஆதரிக்கின்றன. கடந்த 25 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிகளில் இந்தப் போக்கு காணப்படுகிறது. இது அரசாங்கக் கொள்கைகளில் மட்டும் காணப்படவில்லை.


எளிமையான சொற்களில், மேற்கத்திய நாடுகள் இடதுபுறம் அதிகமாக நகர்ந்துள்ளன. உலகின் பிற பகுதிகள் வலதுபுறம் அதிகமாக நகர்ந்துள்ளன. எதிர்பார்க்கக்கூடிய விளைவு என்னவென்றால், மேற்கத்திய நாடுகள் அதன் பொருளாதார ஆதிக்கத்தில் சிலவற்றை இழந்துவிட்டன. இதற்கிடையில், பிற பகுதிகள் பலம் பெற்றுள்ளன. மேற்கத்திய நாடுகளில், சமத்துவம்தான் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பல இடங்களில், செயல்திறனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.


பொருளாதாரத்தின் குழப்பம்


இந்த சூழ்நிலையில், பொருளாதார வல்லுநர்கள் ஒரு முக்கியக் கேள்வியை எதிர்கொள்கின்றனர். அவர்கள் செயல்முறைகளில் கவனம் செலுத்த வேண்டுமா அல்லது விளைவுகளில் கவனம் செலுத்த வேண்டுமா? பொருளாதாரம் மீண்டும் எவ்வாறு பயனுள்ளதாக மாறும் என்பதையும் அவர்கள் கேட்க வேண்டும்.


'பெரிய தரவு' என்று அழைக்கப்படுவது பொருளாதார வல்லுநர்களின் கவனத்தை ஈர்க்கும் வரை, அவர்கள் பெரும்பாலும் செயல்முறைகளில் கவனம் செலுத்தி வந்தனர். அடிப்படையில், ஒரு பொருளாதாரம் சூழ்நிலை A-லிருந்து சூழ்நிலை B-க்கு எவ்வாறு நகர்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் முயன்றனர். இது நுகர்வோர், நிறுவனங்கள், சந்தைகள் மற்றும் அரசாங்கங்களின் நடத்தை பற்றிய ஊகங்களை உள்ளடக்கியது. அமர்த்தியா சென் ஒருமுறை குறிப்பிட்டது போல், இந்தப் பணியின் பெரும்பகுதி புதிர்களைத் தீர்ப்பது போன்றது.


இவை அனைத்தும், பகுத்தறிவு விதிகளின் தொகுப்பு, உலகளாவிய ஒழுங்கு பொருளாதார செயல்பாட்டை ஆதரிக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் அமைந்தன. இப்போது, ​​இந்த அமைப்பு சிதைந்துவிட்டதால், எதிர்காலத்தில் பொருளாதாரத்தை எது இயக்கும்?


தரவு மற்றும் வழிமுறைமயமாக்கலின் கலவையில் பதில் இருக்கலாம். ஒரு சில பொருளாதார வல்லுநர்கள் ஏற்கனவே செயல்முறைகளைப் பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு விளைவுகளை அடைவதற்கான பாதையில் செல்லத் தொடங்கியுள்ளனர். ஒருவேளை பொருளாதாரம் புதிர்களைத் தீர்ப்பது பற்றியதாக இருக்காது. மேலும் மனிதர்களைவிட இயந்திரங்களால் உருவாக்கப்பட்ட விதிகளால் விரும்பத்தக்க விளைவுகளைப் பெறுவது பற்றியதாக மாறும். இயந்திரங்கள் மனிதர்களைவிட வடிவங்களைக் கண்டறிவதில் எண்ணற்றளவில் சிறந்தவை என்பதால், அது ஏற்கனவே சிறந்த முடிவுகளைத் தருகிறது.


மற்றொரு சிக்கல் என்னவென்றால், பொருளாதாரம் சமநிலை மற்றும் நிலையான அமைப்புகள் என்ற கருத்தில் அதிகமாக கவனம் செலுத்தியது. ஆனால், அதற்கு நிலையான விதிகள் மற்றும் குறைந்த நிச்சயமற்ற தன்மை தேவை. இவை இரண்டும் இப்போது நிலையானதாகவோ, சாத்தியமாகவோ தெரியவில்லை. எனவே பொருளாதாரத்தின் மற்றொரு முக்கிய அடிப்படை, சமநிலையின் மீதான நம்பிக்கை மற்றும் அதை அடைவதற்கான முயற்சி.


பாக்ஸ் பிரிட்டானிக்கா (Pax Britannica) உருவான 1815 முதல், உலகிற்கு இது முற்றிலும் புதிய சூழ்நிலை ஆகும். அதற்கு முன்பு பொருளாதாரம் ஒரு முழுமையான கல்வி நோக்கமாக இல்லை. எதிர்காலத்தில், அது மீண்டும் ஒரு முழுமையான கல்வித் துறையாக இருப்பதை நிறுத்தக்கூடும்.


original article : How agri-commodity price volatility is transforming beverage manufacturing in India?. -Paritosh Ladhani

Share:

சர்வதேச விண்வெளி நிலையத்தின் புகைப்படங்களை எடுக்கும் இந்திய செயற்கைக்கோள் ஏன் ஒரு தொழில்நுட்ப சாதனையாகக் கருதப்படுகிறது? -ரிது சர்மா

 விண்வெளியில் புகைப்படம் எடுப்பதில் சிரமங்கள் எழுகின்றன. இந்த சவால்களை சமாளிப்பது வலுவான தொழில்நுட்ப திறன்களைக் காட்டுகிறது. மேலும், இந்த திறன்களை கண்காணிப்பு மற்றும் பிற விண்வெளி பாதுகாப்பு பணிகளுக்கும் பயன்படுத்தலாம்.


இந்த மாத தொடக்கத்தில், அகமதாபாத்தை தளமாகக் கொண்ட விண்வெளி புதிய தொழில்துறை நிறுவனமான அஜிஸ்டா ஸ்பேஸ், அதன் செயற்கைக்கோள்-சுற்றுப்பாதையில், அஜிஸ்டா ஃபர்ஸ்ட் ரன்னர் (Azista First Runner (AFR), சர்வதேச விண்வெளி நிலையத்தின் (International Space Station (ISS)) உயர் தெளிவுத்திறன் படங்களை ஏறக்குறைய 300 கிமீ தூரத்தில் இருந்து படம்பிடித்தது.


இந்தியாவின் நவீன விண்வெளிப் பாதுகாப்பு - ஆப்டிகல் விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு (Space Situational Awareness (SSA)) முக்கியமான களத்தில் இந்தியாவின் நுழைவாக இந்த வளர்ச்சி அறிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பயன்பாடுகளுக்கு எலக்ட்ரோ-ஆப்டிகல் சேவைகளை வழங்கும் இந்தியாவில் தனியார் மூலம் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ஆகும். இது ஜூன் 2023-ல் எலோன் மஸ்க்கின் SpaceX-க்குச் சொந்தமான 9 ராக்கெட்டில் ஏவப்பட்டது.


இந்தியாவின் பெரிய தொழில்நுட்ப திறன்களுக்கு AFR-ன் புகைப்படங்கள் ஏன் முக்கியம் என்பதை  இங்கே தெரிந்து கொள்ளலாம்.


சர்வதேச விண்வெளி நிலையத்தின் International Space Station (ISS)) படம்பிடித்தல்


விண்வெளியில் புகைப்படங்களை எடுப்பதில் வெளிப்படையான சிரமங்கள் எழுகின்றன. கடந்து செல்லும் பொருட்களின் அதிக வேகம், கேமராக்கள் பூமியிலிருந்து ஏவப்படுவதை உறுதி செய்தல், வெளிச்சத்தில் உள்ள வேறுபாடுகள் போன்ற  சிரமங்கள் எழுகின்றன.


நாடுகளுக்கு இடையே ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான தளமாக சர்வதேச விண்வெளி நிலையம் செயல்படுகிறது. இது பூமியை சராசரியாக 400 கிமீ உயரத்தில் சுற்றி வருகிறது மற்றும் வினாடிக்கு 7.6 கிமீ வேகத்தில் பயணிக்கிறது. அதே நேரத்தில் அஜிஸ்டா ஃபர்ஸ்ட் ரன்னர் (AFR) வினாடிக்கு 7 கிமீ வேகத்தில் வேறுபட்ட சுற்றுப்பாதையில் நகர்கிறது. தெளிவான மற்றும் பயன்படுத்தக்கூடிய படத்தைப் பெற, பொருளின் பாதையை சரியாகக் கணிப்பது, அதை துல்லியமாகக் கண்காணித்து சுட்டிக்காட்டுவது, சூரிய ஒளிக்கு ஏற்ப சரிசெய்வது, படத்தை நிலையாக வைத்திருப்பது மற்றும் படத்தைப் பிடித்த பிறகு மேம்பட்ட செயலாக்க முறைகளைப் பயன்படுத்துவது முக்கியம்.


அஜிஸ்டா ஃபர்ஸ்ட் ரன்னர் (AFR) 2.2 மீட்டர் தெளிவுத்திறனில் சர்வதேச விண்வெளி நிலையத்தை படம்பிடித்தது. மேலும், சுமைகள் இன்னும் சிறந்த படங்களை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அதன் பின்னால் உள்ள நிறுவனம் கூறுகிறது. Azista Space-ன் இயக்குனர் சுனில் இந்தூர்தி, இந்த செயல்விளக்கம் மூன்று முக்கிய SSA திறன்களைக் காட்டுகிறது என்று கூறினார்: அதன் படி, சுற்றுப்பாதையில் ஒரு பொருளைக் கண்டறிதல், அதன் இயக்கத்தைத் துல்லியமாகக் கண்காணித்தல் மற்றும் அதை பார்வைக்கு ஆய்வு செய்து அடையாளம் காண்பதன் மூலம் வகைப்படுத்தலாம். மூன்றாவது கூறு, குணாதிசயம், ஆப்டிகல் SSA ராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் பெறும்" என்று அவர் கூறினார்.


விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு தேவை


விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு (Space Situational Awareness (SSA)) என்பது பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள மற்றும் அதைச் சுற்றியுள்ள பொருட்களின் நடத்தை பற்றிய அறிவைக் குறிக்கிறது. இதில் செயலில் உள்ள செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளியில் உள்ள பொருட்கள் அடங்கும்.


நவீன விண்வெளி பாதுகாப்பு என்பது மோதல்களைத் தடுப்பது மட்டுமல்ல. இது விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வது பற்றியது. ஒரு செயற்கைக்கோள் நிலையானதா அல்லது சரிகிறதா? அது புதிய இணைப்புகளைப் பயன்படுத்தியுள்ளதா? அது எதிர்பாராத விதமாக பிரச்னை கூறியதாக உள்ளதா? அது அருகில் செயல்பாடுகளை நடத்துகிறதா? வடிவங்களை பகுப்பாய்வு செய்யவும், நோக்குநிலையைக் கண்டறியவும், சிக்கல்களைக் கண்டறியவும் ஆப்டிகல்  சுமைகள் உதவுகின்றன என்று இந்தூர்டி கூறினார். இது விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வை வெறும் கவனிப்பதிலிருந்து தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கு மாற்றுகிறது.


விண்வெளியை " போட்டியிடும் களம்" என்று அழைத்த இந்துர்டி, உள்நாட்டு ஆப்டிகல் விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு திறன் ராஜதந்திர சார்புநிலையைக் குறைத்து "இறையாண்மை சார்ந்த முடிவெடுப்பதை" அதிகரிக்கிறது என்று வாதிட்டார். ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்காவை அவர் சுட்டிக்காட்டினார். அவை டாக்கிங் விண்கலம் போன்ற சந்திப்பு மற்றும் அருகாமை செயல்பாடுகள் (Rendezvous and Proximity Operations (RPO)) திறன்களைக் காட்டியுள்ளன. இத்தகைய பணிகளில் நிபுணத்துவம் விண்வெளி சொத்துக்களைப் பாதுகாக்கவும் நிலைநிறுத்தவும் உதவுகிறது என்று இந்துர்டி கூறுகிறார். மேலும், இது "தொடர்ச்சியான கண்காணிப்பு, விரைவான ஒழுங்கின்மை கண்டறிதல் மற்றும் சுயாதீன சரிபார்ப்பு ஆகியவற்றைக் கோருகிறது. வெளிநாட்டு கண்காணிப்பு வலையமைப்புகளை மட்டும் நம்பி இருக்காது என்று  கூறுகிறார்.


விண்வெளி குப்பைகள் அல்லது செயற்கைக்கோள்களைக் கண்காணிப்பது போன்ற பூமி அல்லாத படத்தை எடுத்தல் (Non-Earth Imaging (NEI)) பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட அதிக திறன் கொண்ட-துல்லிய ஆப்டிகல் சுமைகளை - ஏவுகலங்கள் மூலம் விண்வெளிக்கு கொண்டு செல்லப்படும் கருவிகளைப் - பயன்படுத்தி விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு பணிகளுக்கு உதவ இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேர அஜிஸ்டா திட்டமிட்டுள்ளது.


கூடுதலாக, இது பல பாதுகாப்பு, பொதுமக்கள் மற்றும் வணிக ரீதியான தாக்கங்களைக் கொண்டுள்ளது. "Starlink நிறுவனம் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமானது மற்றும் OneWeb  போன்ற மெகா-விண்மீன் கூட்டங்களால், மோதல் அபாயங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், சுற்றுப்பாதை நெரிசல் அதிகரித்து வருகிறது. காப்பீட்டு சந்தைகள் சிறந்த கண்காணிப்பைக் கோருகின்றன. ஆபரேட்டர்களுக்கு சரிபார்ப்பு சேவைகள் தேவைப்படுகின்றன. இங்கே, விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு திறன்கள் விண்வெளி போக்குவரத்து மேலாண்மை, மோதல் தவிர்ப்பு, குப்பைகள் கண்காணிப்பு, காப்பீட்டு ஆபத்து மாதிரி மற்றும் செயற்கைக்கோள் சுகாதார சரிபார்ப்பை ஆதரிக்கின்றன என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.


ISRO-SAC வழிகாட்டுதல்


கடந்த மாதம், அகமதாபாத் அருகே உள்ள சனந்தில் இந்தியாவின் முதல் தனியார் துறை எலக்ட்ரோ-ஆப்டிகல் சுமை தாங்கும் தொழிற்சாலைக்கு அசிஸ்டா ஸ்பேஸ் அடிக்கல் நாட்டியது. இந்த வசதியை அமைப்பதற்காக குஜராத் அரசாங்கத்துடன் ரூ.500 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் நிறுவனம் கையெழுத்திட்டது. அங்கு சுமைகள் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, ஒன்று சேர்க்கப்பட்டு, உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சோதிக்கப்படும்.


அஜிஸ்டாவின் நிர்வாக இயக்குநர் M. ஸ்ரீனிவாஸ் ரெட்டி கூறுகையில், சனந்த் வசதி உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆப்டிகல் பேலோடுகளை உருவாக்கும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் 30 உயர் தெளிவுத்திறன் கொண்ட இமேஜிங் பேலோடுகளை (imaging payloads) உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கும் என்றும் கூறினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அதன் விண்வெளி பயன்பாட்டு மையத்தின் நிபுணர்கள் நிறுவனம் தொடக்கத்திலிருந்தே அதன் திறன்களை வளர்த்துக் கொள்ள உதவியதாகவும் அவர் கூறினார்.


2027-ஆம் ஆண்டுக்குள், ஒரு முழு நாட்டிற்கான படமாக்கலை ஒரே சுற்றுப்பாதையில் நடத்தக்கூடிய வகையில், அதன் திறன்களை மேம்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், ஆப்டிகல் சுமை 500 கிமீ அகலத்தைக் கொண்டிருக்கும்.


கடந்த ஏப்ரல் மாதம், உள்நாட்டு விண்வெளி தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதற்காக IN-SPACE, ISRO மற்றும் விண்வெளித் துறையுடன் இணைந்து செயல்பட குஜராத் அதன் விண்வெளி தொழில்நுட்பக் கொள்கை 2025-2030-ஐ அறிவித்தது.


குஜராத் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அர்ஜுன் மோத்வாடியா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம், இந்தக் கொள்கை ரூ.5 கோடி வரையிலான செயற்கைக்கோள் ஏவுதலுக்கு 25% மானியம் வழங்குகிறது. மேலும், இந்திய காப்புரிமை தாக்கல்களுக்கு (ரூ. 50 லட்சம் வரை) 30% திருப்பிச் செலுத்தும் சலுகை வழங்கப்படலாம் என்று கூறினார்.


original article : Why is an Indian satellite capturing photos of the ISS being seen as a technical milestone? -Ritu Sharma

Share:

கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தம்: புதிய வங்கதேச அரசாங்கத்தின் முன்னுரிமைகள் பட்டியலில் மறு பேச்சுவார்த்தை உடன்படிக்கை ஏன் முதலிடத்தில் உள்ளது? -அபினவ் சக்ரவர்த்தி

 இரு நாடுகளும் 1996 ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன. ஒப்பந்தம் டிசம்பர் 2026-ல் புதுப்பிக்கப்பட உள்ளது. ஒரு புதிய ஒப்பந்தம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர, அதிகரித்துவரும் மக்கள்தொகையின் எதிர்காலத் தேவைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


கடந்த வாரம் வங்கதேச நாட்டில் நடந்த  பொதுத் தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளில் கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது அடங்கும் என்றும், ஒப்பந்தம் டிசம்பர் 2026-ல் காலாவதியாகும் என்று தகவல்கள் வெளியாகின.


BNP தலைவரின்  உதவியாளரான ஹுமாயூன் கபீர், வரவிருக்கும் அரசாங்கம் "வங்கதேசத்தின் நலன்களை" மனதில் வைத்து கொண்டு செயல்படும் என்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.


இந்த ஒப்பந்தம் எவ்வாறு உருவானது. அதன் விதிகள் என்ன, இரு நாடுகளும் ஒப்பந்த விதிமுறைகளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதில் ஏன் ஆர்வமாக உள்ளன?


முரண்பாடுகளிலிருந்து நட்பு வரை


1950-களில், கிழக்கு பாகிஸ்தானுடனான எல்லையிலிருந்து 18 கி.மீ தொலைவில், மேற்கு வங்கத்தில் உள்ள ஃபராக்கா என்ற இடத்தில் தடுப்பணை கட்ட இந்தியா முன்மொழிந்தபோது, ​​கங்கை நீரைப் பகிர்ந்து கொள்வதில் பதட்டங்கள் தொடங்கின. கட்டுமானப் பணிகள் 1961-ல் தொடங்கி 1975-ல் நிறைவடைந்த பிறகு, ஃபராக்காவின் தடுப்பணை கங்கையிலிருந்து ஹூக்ளி நதிக்குத் திருப்பிவிடத் தொடங்கியது. கொல்கத்தா துறைமுகத்தைச் சுற்றியுள்ள சேற்றை வெளியேற்றி கப்பல்கள் செல்வதற்காக வைத்திருந்தது.


கட்டுமானப் பணிகளின்போது, ​​ஏற்பட்ட முரண்பாடுகளை தொடர்ந்தது, 1976-ஆம் ஆண்டு சுதந்திர வங்கதேசத்தில் அவாமி லீக் சட்டமன்ற உறுப்பினரான மௌலானா பாஷானி, இந்தியாவின் நீர் கொள்கைகளுக்கு எதிராக "ஃபரக்கா நீண்ட பேரணியை வழிநடத்தியபோது முரண்பாடு உச்சத்தை எட்டியது. வங்கதேசத்தில் கங்கையின் முக்கிய கிளை நதியான பத்மா நதியை வறண்டு பாலைவனமாக்குவதற்கு இது காரணமாக அமைந்தது என்று வாதிட்டு, தடுப்பணையை இடிக்க வேண்டும் என்று மௌலானா பாஷானி கோரினார்.


அடுத்த பத்தாண்டுகளில் 1977, 1982 மற்றும் 1985-ஆம் ஆண்டுகளில் இரு நாடுகளும் தற்காலிக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட போதிலும், எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை.


இறுதியாக, டிசம்பர் 1996-ல், பிரதமர்கள் எச்.டி. தேவ கவுடா மற்றும் ஷேக் ஹசீனா தலைமையில் இரு நாடுகளும் கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஜனவரி முதல் மே வரையிலான வருடாந்திர வறண்ட காலங்களில் கங்கை நீர் ஓட்டங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான 30 ஆண்டு கட்டமைப்பை இது அமைத்தது மற்றும் ஒப்பந்தத்தை கண்காணித்து செயல்படுத்த ஒரு கூட்டுக் குழுவை அமைத்தது.


ஒப்பந்தத்தின் விதிமுறைகள் என்ன?


அந்த நேரத்தில் இருதரப்பு ராஜதந்திர உறவில் ஒருசாதனையாக பார்க்கப்பட்ட இந்த ஒப்பந்தம், 1949 மற்றும் 1988-க்கு இடையிலான 10 நாட்களில் சராசரி தரவுகளின் அடிப்படையில், ஓட்டங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான மூன்று அடுக்கு அமைப்பை உருவாக்கியது. நீர் ஓட்டம் 70,000 கன அடி (வினாடிக்கு கன அடி) அல்லது அதற்குக் கீழே குறைந்தால், நாடுகள் அதை சமமாகப் பகிர்ந்து கொள்கின்றன. நீர் ஓட்டம் 70,000 முதல் 75,000 கன அடி வரை இருந்தால், வங்கதேசம் 35,000 கன அடியைப் பெறுகிறது. மீதமுள்ள நீரை இந்தியா தக்க வைத்துக் கொள்கிறது. 75,000 கன அடி அல்லது அதற்கு மேல் எட்டினால், இந்தியா 40,000 கன அடியைப் பெறுகிறது. மீதமுள்ள நீரை வங்கதேசம் பெறுகிறது.


மேற்கூறிய விதிமுறைகள் கூடுதல் விதிக்கு உட்பட்டவை: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 11 முதல் மே 10 வரை, இரு நாடுகளும் மாறி மாறி மூன்று 10 நாட்களில் 35,000 கனஅடி நீரைப் பெறும்.


குறைந்தபட்ச உத்தரவாதப் பிரிவு இல்லாவிட்டாலும், ஒப்பந்தத்தில் ஒரு அவசரகால ஏற்பாடு உள்ளது: பிரிவு II(iii) "ஃபராக்காவில் 10 நாட்களுக்குள் நீர் ஓட்டம் 50,000 கன அடிக்குக் கீழே குறைந்தால், இரு அரசாங்கங்களும் அவசர அடிப்படையில் சரிசெய்தல்களைச் செய்ய உடனடி ஆலோசனைகளை நடத்தும், சமத்துவம், நியாயமான செயல்முறை மற்றும் இரு தரப்பினருக்கும் தீங்கு விளைவிக்காத கொள்கைகளைப் பின்பற்றும்" என்று கூறுகிறது.


பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, இரு அரசாங்கங்களின் சம பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு கூட்டுக் குழு முதலில் இந்தப் பிரச்சினையைக் கையாண்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாவிட்டால், அது கூட்டு நதிகள் ஆணையத்திற்கு (Joint Rivers Commission (JRC)) எடுத்துச் செல்லப்படும் என்று இரு அரசாங்களும் கூறின. 54 பகிரப்பட்ட நதிகளின் நீர் பகிர்வைப் பற்றி விவாதித்து நிர்வகிக்க இரு நாடுகளும் 1972-ஆம் ஆண்டில் கூட்டு நதிகள் ஆணையத்தை உருவாக்கின.  இருந்தபோதிலும், கங்கை நதி மட்டுமே முறையான ஒப்பந்தத்தின் கீழ் உள்ளது.


அடுத்து என்ன நடக்கும்?


பல ஆண்டுகளாக, இந்த ஒப்பந்தம் இரு நாடுகளிலும் அதிகரித்துவரும் மக்கள்தொகையின் எதிர்காலத் தேவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாததால், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர மற்ற காரணங்களுக்காக  விமர்சிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் 30 ஆண்டு காலத்தின் முடிவில் பரஸ்பர ஒப்புதலின் மூலம் புதுப்பிக்க வழிவகுத்தாலும், ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய இரு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.


மார்ச் 11 முதல் மே 10 வரையிலான காலகட்டத்தில் இந்தியா அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடுதலாக 30,000 முதல் 35,000 கனஅடி தண்ணீரைக் கோருவதாகவும், புதிய ஒப்பந்தம் ஒப்பீட்டளவில் குறுகியதாக, 10 முதல் 15 ஆண்டுகள் வரை இருக்கலாம் என்றும் மே 2025-ல் வெளியான ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கூட்டு நதிகள் ஆணைய கூட்டத்தின் போது, ​​வங்கதேசம் பிப்ரவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் 40,000 கனஅடி ஒப்பந்தத்தில்  உறுதியளிக்கப்பட்டப்படி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், நீண்ட ஒப்பந்த புதுப்பித்தல் காலம் மற்றும் மேம்பட்ட வெள்ள தரவு பகிர்வைத் தவிர கேட்டதாக செப்டம்பர் 2025 PTI அறிக்கை தெரிவித்துள்ளது.


ஆகஸ்ட் 2024-ல் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உள்நாட்டு அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே பதட்டங்கள் வெடித்ததன் பின்னணியில் இவை அனைத்தும் நடந்துள்ளன. இந்தியாவுடன் நட்பு பாராட்டி வந்த பிரதமர் ஷேக் ஹசீனா, அன்றிலிருந்து புதுடெல்லியில் வசித்து வருகிறார். மேலும், வங்கதேசம் அவரை நாடு கடத்துமாறு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த நவம்பரில், வங்கதேசத்தில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக அவரை குற்றவாளி எனக் கண்டறிந்து மரண தண்டனை விதித்தது. ஹசீனா இந்தத் தீர்ப்பை "ஒருசார்புடையது மற்றும் அரசியல் ரீதியிலானது" என்று அழைத்தார்.


ஏப்ரல் 2025-ல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுடனான 1960 சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த இந்தியாவின் முடிவு வங்கதேச நாட்டிற்கும் விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.


மற்றொரு காரணி மேற்கு வங்க மாநில அரசின் நிலைப்பாடு ஆகும். கடந்த ஆண்டு, ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இருப்பதாக ஒன்றிய அரசு கூறியது. ஆனால், 2011-ஆம் ஆண்டில், இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் ஒரு முக்கிய நதியான டீஸ்டாவின் நீர் பகிர்வு குறித்த ஒரு முக்கிய ஒப்பந்தம், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டது.


தாகாவைத் தளமாகக் கொண்ட பேராசிரியர் எஸ்.கே. தவ்பிக் எம். ஹக் அவர்களால் எழுதப்பட்ட ஒரு கட்டுரை, 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது. இதில் “நியாயமான பகிர்வுடன் சுற்றுச்சூழல் தாங்குநிலையை சமநிலைப்படுத்துவதன்” தேவையை வலியுறுத்தியதுடன், மறுபேச்சுவார்த்தைக்குட்படுத்தப்படும் ஒப்பந்தத்தில் “தரவு சார்ந்த நுண்ணறிவுகளால் வழிநடத்தப்படும் முனைப்பான வெள்ள மேலாண்மையை” இணைத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டது.2025 டிசம்பர் மாதத்தில், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட கல்வியாளர் அமித் ரஞ்சன் அவர்கள், பங்களாதேஷ் நாளிதழான தி டெய்லி ஸ்டார் இதழில் எழுதியதாவது: ஒப்பந்தத்தின் எதிர்காலம் இறுதியில் இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகளின் போக்குடன் தொடர்புடையது என்பதாகும். இது “இரு நாடுகளும் ஆக்கபூர்வமாக ஈடுபடுவதற்கான விருப்பம், கேட்டல், புரிந்துகொள்ளல் மற்றும் ஒருவருக்கொருவர் உண்மையான கவலைகளைத் தீர்க்க முயற்சிப்பது” ஆகியவற்றைப் பெரிதும் சார்ந்துள்ளது.


original article : Ganga Water Sharing Treaty: Why renegotiating pact tops new Bangladesh government’s list of priorities. -Abhinav Chakraborty

Share:

மாநிலங்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme) நிலைத்திருக்க முடியாதது; நிதி ஆதாரத்துடன் கூடிய ஓய்வூதியக் கணக்கு முறை அவசியமானது: PFRDA தலைவர் சிவசுப்ரமணியன் ராமன். -ஹிதேஷ் வியாஸ்

 சத்தீஸ்கர் மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme (OPS)) மீண்டும் தொடங்கிய பிறகு, தற்போது மீண்டும் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கே (National Pension Scheme (NPS)) மாறியுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவதாக அறிவித்த பஞ்சாப் மாநிலம், இன்னும் புதிய ஓய்வூதியத் திட்டத்திலேயே பங்களிப்பைத் தொடர்கிறது என்று ராமன் கூறினார்.


மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) வழங்கலாம், ஆனால் அவை தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Pension Fund Regulatory and Development Authority (PFRDA)) தலைவர் சிவசுப்ரமணியன் ராமன் கூறுகிறார். பழைய ஓய்வூதியத் திட்டம் எந்தவொரு மாநில அரசுக்கும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும் இந்தத் திட்டம் தொடர்ந்து நீடிக்க முடியாதது என்பதையும் தரவுகள் காட்டுகின்றன.


பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அறிவித்துவிட்டு, அதனால் எனக்கு எந்தச் சுமையும் ஏற்படாது என்று என்னால் நினைத்துக்கொள்ள முடியாது என்று அவர் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார். சத்தீஸ்கர் மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடங்கிய பிறகு, இப்போது மீண்டும் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கே (NPS) மாறிவிட்டது என்று அவர் குறிப்பிட்டார். அதேபோல், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்புவதாக அறிவித்த பஞ்சாப் மாநிலம், இன்னும் தேசிய ஓய்வூதியத் திட்டத்திலேயே (NPS) பங்களிப்பு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தான் இதற்கு முன்பு இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (Securities and Exchange Board of India (SEBI)) செயல் இயக்குநராகவும், இந்தியச் சிறுதொழில் மேம்பாட்டு வங்கியில் (Small Industries Development Bank of India (SIDBI)) தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராகவும் பணியாற்றியதை ராமன் சுட்டிக்காட்டியுள்ளார். 


தேசிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் அடல் ஓய்வூதியத் திட்டங்களின் (Atal Pension Yojana (APY)) தற்போதைய சந்தாதாரர்கள் எண்ணிக்கை மற்றும் அவற்றின்கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு (Assets Under Management (AUM)) எவ்வளவு? மார்ச் மாதம் 31-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள், இந்தச் சொத்து மதிப்பு எந்த அளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?


பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு  கணக்கின்படி, ஓய்வூதிய நிதியத்தின்கீழ் நிர்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பு (AUM) சுமார் ₹17 லட்சம் கோடி ஆகும். இது முந்தைய ஆண்டை விட 20% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த மொத்தத் தொகையில், அடல் ஓய்வூதியத் திட்டத்தின் (APY) பங்கு மிகக் குறைவுதான் (சுமார் ₹1,300 கோடி). ஆனால், சந்தாதாரர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது: மொத்தச் சந்தாதாரர்கள்: சுமார் 9 கோடி பேர். அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இருப்பவர்கள்: 7 கோடி பேர்,  தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இருப்பவர்கள்: 2 கோடி பேர் என்று கூறப்படுகிறது. நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பை (AUM) துல்லியமாகக் கணிப்பது கடினம் என்பதால், நாம் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு ஓய்வூதியக் கணக்கு இருக்க வேண்டும் என்பதே முக்கிய இலக்காகப் பார்க்கப்படுகிறது. இது ஒரு மிகப்பெரிய சவாலான இலக்கு என்றாலும், இப்படி ஒரு இலக்கை நிர்ணயிப்பதன் மூலமே அதை அடைய முடியும். இதற்காக, அமைப்பு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன: விவசாயத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSMEs), சுய உதவிக்குழுக்கள் (SHGs), டிஜிட்டல் தள பணியாளர்கள் (Platform workers), வழக்கமான பெருநிறுவன ஓய்வூதியப் பிரிவு ஆகியனவாகும். 


இளம் தனியார் துறை ஊழியர்களைக் கவரும் வகையில், தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) வரிச் சலுகைகள், பணப்புழக்கம் அல்லது திட்டத்தின் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றில் என்னென்ன மாற்றங்கள்/சீர்திருத்தங்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன?


எங்களிடம் தயாரிப்புகளை மாற்றியமைக்கும் சிறந்த வசதி உள்ளது. சமீபத்திய சீர்திருத்தங்கள், அடுத்த மாற்றங்களைச் செய்வதற்கு முன்னதாகச் சில காலம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்கிடையில், நாங்கள் புதிய தயாரிப்புகளைச் சோதித்து வருகிறோம். நாங்கள் 'வாத்சல்யா' (Vatsalya) திட்டத்தில் மாற்றங்களைச் செய்துள்ளோம், மேலும் 'என்.பி.எஸ் ஸ்வஸ்தியா' (NPS Swasthya) ஓய்வூதியத் திட்டத்தை ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்துகிறோம். ஓய்வூதியத் தொகுப்பிலிருந்து கிடைக்கும் வருவாயை மேம்படுத்துவது குறித்து ஒரு குழு ஆய்வு செய்து வருகிறது. மேலும், தற்போதைய 'ஆண்டுத்தொகை' (Annuity) திட்டங்களின் விலை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து மக்கள் அதிருப்தியில் உள்ளதால், அவற்றுக்குப் போட்டியாக வெளிப்படையான ஓய்வூதியப் பணப்பட்டுவாடா விருப்பங்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்.


சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (OPS) மீண்டும் திரும்ப விரும்புகின்றன. தேசிய ஓய்வூதியத் திட்டத்துடன் (NPS) ஒப்பிடும்போது, இதன் நீண்டகால நிதி நிலைத்தன்மையை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) எவ்வாறு கருதுகிறது?


புள்ளிவிவரங்கள் தெளிவாக உள்ளன: பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) எந்தவொரு மாநில அரசுக்கும் நீண்ட காலத்திற்குச் சாத்தியமானது அல்ல. இதில் எப்போதும் ஒரு நிதிச் சுமை உண்டு என்கின்றனர். மாநிலங்கள் கடந்த 15 ஆண்டுகளாக ஏற்கனவே தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) பங்களித்து வருகின்றன, ஆனால் இப்போது மீண்டும் பழைய திட்டத்திற்கு (OPS) மாற விரும்புகின்றன. அவர்களுக்கு அவ்வாறு செய்ய உரிமை உண்டு, ஆனால் அவர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பை நிறுத்தக்கூடாது. தேசிய ஓய்வூதியத் திட்டம் என்பது ஒரு 'நிதி சார்ந்த அமைப்பு', இதில் ஒவ்வொரு ஓய்வூதியத்திற்கும் எனத் தனிப்பட்ட நிதி ஒதுக்கப்பட்டிருக்கும் என்கின்றனர். ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசின் பொது நிதிஒதுக்கீட்டில் இருந்து நேரடியாகச் செலுத்தப்படுகிறது. மாநிலங்கள் விரும்பினால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை  வழங்கலாம், ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஒரு நிதி சார்ந்த கணக்காகத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். தேவைப்பட்டால் நிதிஒதுக்கீட்டில் இருந்து கூடுதல் நிதியுதவியைச் சேர்த்துக்கொள்ளலாம். ஒரு பாதுகாப்பான ஓய்வூதிய முறைக்கு 'நிதி ஆதார அமைப்பு' (Funded Pension System) என்பது மிகவும் அவசியமானது என்றும் அதைத் தவிர்க்க முடியாதது என்றும் தெளிவுபடுத்துகின்றனர். 


மாநிலங்கள் நீங்கள் சொல்வதைக் கேட்கின்றனவா?


பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எங்கள் தரப்பு நியாயங்களை மிகத் தெளிவாகக் கடிதங்கள் மூலம் தெரிவித்துள்ளோம். அவர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் தொடர்ந்து பங்களிக்க விரும்பலாம், அதே சமயம், பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் ஒரு வாய்ப்பாக வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்றும் கூறியுள்ளார். 


பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் தொடங்கிய மாநிலங்கள், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) நிறுத்திவிட்டனவா?


சத்தீஸ்கர் மாநிலம் மீண்டும் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்பிவிட்டது. பஞ்சாப் மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் மீது ஆர்வம் காட்டினாலும், இன்னும் தேசிய ஓய்வூதியத் திட்டத்திலேயே பங்களித்து வருவதாகக் கூறியுள்ளார். 


பயன்படுத்துபவர்களுக்கு எளிமையாக இருக்கும் வகையில், NPS (தேசிய ஓய்வூதியத் திட்டம்), அடல் ஓய்வூதியத் திட்டம் மற்றும் இதர திட்டங்களை ஒன்றிணைத்துச் செயல்படுத்துவது குறித்து பொருளாதார ஆய்வு 2025–26 குறிப்பிட்டுள்ளது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன, இதற்கான பணிகள் ஏதேனும் நடக்கிறதா?


அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகிய இரண்டிற்கும் இடையே நேரடித் தொடர்பு ஏதுமில்லை. மக்கள் இந்த இரண்டு கணக்குகளையும் எளிதாக வைத்திருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். அடல் ஓய்வூதியத் திட்டமானது அரசாங்கத்தால் உறுதி அளிக்கப்பட்ட நிலையான வருமானத்தை வழங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார். 


2016-ஆம் ஆண்டு முதல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (Employees’ Provident Fund (EPF)) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகியவற்றுக்கு இடையே மாறிக் கொள்ளும் வசதி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. சட்டம் யாரையும் கட்டாயமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேரச் சொல்வதில்லை; மக்கள் நீண்டகாலப் பழக்கம் காரணமாகவே அதில் முதலீடு செய்கிறார்கள். வரி இல்லாத சிறந்த லாபத்தைத் தருவதால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியானது ஒரு வலிமையான திட்டமாக உள்ளது. நாம் இந்த இரண்டு திட்டங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி, மக்கள் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவர்களிடமே விட்டுவிட வேண்டும். ஒவ்வொருவருக்கும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் ஆர்வம் இருக்காது என்பதால், சந்தையில் வெவ்வேறு விதமான சேமிப்புத் திட்டங்கள் இருப்பது அவசியம் என்றும் கூறியுள்ளார். 


கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டிற்கான (நிதியாண்டு 26) ஓய்வூதிய நிதி முதலீடுகள் கடன் மற்றும் பங்குகளில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளன என்ற விவரங்களைத் தர முடியுமா?


பிப்ரவரி 1, 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, மொத்த முதலீடுகள் ரூ. 11.36 லட்சம் கோடியை எட்டியுள்ளன. இது மார்ச் மாதம் 31-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டைவிட 17 சதவீதம் அதிகம் என்றும் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 21 சதவீத வளர்ச்சியடைந்துள்ளதாகவும்  கூறியுள்ளார். 



ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (Unified Pension Scheme) எத்தனை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன?


மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா உட்பட எட்டு மாநிலங்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை  (Unified Pension Scheme (UPS)) அறிமுகப்படுத்தியுள்ளன.


விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில்துறையினருடன் இணைந்து, அந்தத் துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய வசதி கிடைப்பதை அதிகரிக்க ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) பணியாற்றி வருகிறது. இதில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது?


வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் (Farmer Producer Organization (FPOs)), சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) மற்றும் டிஜிட்டல் தள பணியாளர்கள் (Platform Workers) ஆகியோரிடையே ஓய்வூதியத் திட்டத்தை விரிவுபடுத்த ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. செப்டம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில், மத்திய பெரு நிறுவன விவகார அமைச்சகத்தில் பதிவுசெய்யப்பட்ட வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள், ஓய்வூதிய முகவர்களாகச் செயல்படவும், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) மக்கள் சேர உதவவும் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு, வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் புதிய தேசிய ஓய்வூதியச் சந்தாதாரர்களைச் சேர்க்கும் சேவை மையங்களுக்கு, ஒரு சந்தாதாரருக்கு ₹100 வரை ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. ஊரகப் பகுதிகளில் கடைக்கோடி மக்களையும் சென்றடைவதையும், வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளைப் பயன்படுத்தி வேளாண் தொழிலாளர்கள் மற்றும் அது சார்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய வசதியைக் கொண்டு சேர்ப்பதையும் இந்த நடவடிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.


original article : Old Pension Scheme unsustainable for states; concept of funded pension account essential: PFRDA Chairperson Sivasubramanian Ramann -Hitesh Vyas

Share:

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள் என்னென்ன? -ரோஷ்னி யாதவ்

 இந்தியாவின் மின்சார உற்பத்தி 2070-ஆம் ஆண்டிற்குள் நிலக்கரியைச் சார்ந்திருக்காமல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (சூரிய ஒளி, காற்று போன்றவை) மூலம் பெருமளவு மாற்றமடையும் என அரசின் கொள்கை அமைப்பான நிதி ஆயோக் (NITI Aayog) ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளது. இருப்பினும், சில 'கட்டமைப்புச் சிக்கல்கள்' காரணமாக, இதுவரை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் கிடைக்கும் உண்மையான மின்சார உற்பத்திக் குறைவாகவே உள்ளது என்பதையும் அந்த அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


— இந்தியாவின் மின்சாரத் துறையில் நிலக்கரியானது, நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் சுமார் 74 சதவீதம் பங்களிப்பதோடு, நம்பகமான மற்றும் குறைந்த செலவிலான அடிப்படை மின்சார ஆதாரமாகவும் விளங்குகிறது.


— இருப்பினும், ‘விக்சித் பாரத் மற்றும் நிகர பூஜ்ஜியத்தை நோக்கிய சூழல்’ (Scenarios Towards Viksit Bharat and Net Zero) என்ற தலைப்பிலான நிதி ஆயோக் அமைப்பின் ஆய்வின்படி, இந்தியா தனது தூய்மையான எரிசக்தி மாற்றத்தை துரிதப்படுத்துவதால், மின்சார உற்பத்தித் துறையில் நிலக்கரியின் பயன்பாடு படிப்படியாக குறையக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.


— தற்போதைய கொள்கை சூழலின்படி (Current Policy Scenario), இப்போதுள்ள நடைமுறைகளே தொடரும் பட்சத்தில், மின்சார உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் (Renewable Energy) பங்கு 2024-25-ஆம் ஆண்டில் உள்ள 20 சதவீதத்திலிருந்து உயர்ந்து, 2070-ஆம் ஆண்டிற்குள் 80 சதவீதத்திற்கும்  அதிகமாக அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. 


— இந்தச் சூழலில், மின் உற்பத்தியில் நிலக்கரியின் பங்கு 2070-ஆம் ஆண்டிற்குள் 6 சதவீதம்  முதல் 10 சதவீதம் வரை வெகுவாகக் குறையக்கூடும் என்கின்றனர். இந்தியாவின் 2070 'நிகர பூஜ்ஜிய' (Net Zero) இலக்கை நோக்கிய மிகத் தீவிரமான திட்டத்தின்கீழ், நிலக்கரி மூலமான மின்உற்பத்தி முற்றிலுமாக தேவையில்லாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 


— நிலக்கரியின் பயன்பாடு குறையும்போது, அணுசக்தியின் பங்களிப்பு படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போதைய கொள்கை சூழலின் (CPS) கீழ், இப்போது சுமார் 3 சதவீதமாக இருக்கும் அணுசக்தியின் பங்கு 2070-ஆம் ஆண்டிற்குள் 5-8 சதவீதமாக உயரும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இது நிலக்கரி அடிப்படையிலான மின்சாரத்திற்கு மாற்றாகவும், கார்பன் வெளியேற்றம் இல்லாத அடிப்படை மின்சாரத்தை வழங்குவதிலும் அணுசக்தியின் வளர்ந்துவரும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.


— கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் மூன்று மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் 2014-ஆம் ஆண்டில்  76.38 ஜிகாவாட் (GW) அளவாக இருந்தது, டிசம்பர் மாதம்  2025-ஆம் ஆண்டுக்குள் 258 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 


— இந்தியாவின் மொத்த மின் உற்பத்தித் திறனான 513 ஜிகாவாட்டில் (GW), நிலக்கரி போன்ற படிம எரிபொருள்கள் 48 சதவீதம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் 50 சதவீதம், மற்றும் அணுசக்தி 1.7 சதவீதப் பங்களிப்பை வழங்குகின்றன. மொத்த உற்பத்தித் திறனில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கு, 2014-15 ஆம் ஆண்டில் இருந்த 29 சதவீதத்திலிருந்து, 2025 டிசம்பர் மாதத்திற்குள் 50 சதவீதமாகக் கணிசமாக உயர்ந்துள்ளது.


— இருப்பினும், மின் உற்பத்தித்திறன் இவ்வளவு வேகமாக அதிகரித்த போதிலும், உண்மையான மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின்) பங்கு குறைவாகவே உள்ளது. இது 2013-14-ஆம் ஆண்டில் 19.6 சதவீதத்திலிருந்து, 2024-25-ஆம் ஆண்டில் 22 சதவீதமாக மட்டுமே உயர்ந்துள்ளது.


— சூரியசக்தி மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை கையாளுவதில் உள்ள கட்டமைப்புச் சவால்களே இந்த இடைவெளிக்கு முக்கியக் காரணம் என்று அந்த ஆய்வு கூறுகிறது.


— இந்த எரிசக்தி ஆதாரங்கள் பொதுவாகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, அவற்றின் முழுத் திறனைவிடக் குறைவான உற்பத்தியையே தருகின்றன. மேலும், இவை சீரற்ற உற்பத்தி, மாறுபடும் தன்மையால் ஏற்படும் மின்தடை, மின்விநியோகக் கட்டமைப்பு வரம்புகள், குறைந்த நெகிழ்வுத்தன்மை மற்றும் விநியோகச் சிக்கல்களால் பாதிக்கப்படுகின்றன.


— புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சீராகக் கிடைக்காததால், அது நாள் முழுவதும் தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, மின் விநியோகத்தை சீராக வைத்திருக்கவும், வேகமாக அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும், நிலக்கரி மூலமான மின் உற்பத்தி இன்னும் அவசியமாக உள்ளது.


— இந்தியாவின் எதிர்கால மின்சாரத் திட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி  முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நிலையில், நீண்டகால அடிப்படையில் அணுசக்தி ஒரு முக்கியமான ஆதரவாக இருக்கும் என்றும், அது மின் விநியோகத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் அணுசக்தி உற்பத்தித் திறன் 2025-ல் உள்ள 8.18 GW-லிருந்து, 2070-ஆம் ஆண்டிற்குள் 90 முதல் 135 ஜிகாவாட் (GW) வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய அளவைவிட சுமார் 10 முதல் 15 மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது. 


— தூய்மை எரிசக்திக்கு (Clean Energy) முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், குறுகிய மற்றும் நடுத்தர காலத்திற்கு நிலக்கரி தொடர்ந்து அவசியமான ஒன்றாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. ஏனெனில், பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்குத் தேவையான ‘நீண்டகால சேமிப்பு வசதிகள்’ (Long-duration storage) இன்னும் அதிக செலவுமிக்கதாகவும், பரவலாகப் பயன்பாட்டுக்கு வராமலும் உள்ளன. அதேசமயம், அணுசக்தித் திட்டங்களுக்கு அதிக முதலீடும், நீண்டகால கட்டுமான காலமும் தேவைப்படுகின்றன.


— தற்போதைய கொள்கை சூழலின்படி (CPS), நிலக்கரி மின் உற்பத்தித் திறன் 2025-ஆம் ஆண்டில் 268 ஜிகாவாட்டிலிருந்து உயர்ந்து, 2050-ஆம் ஆண்டிற்குள் 450–470 ஜிகாவாட் GW என்ற உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நிகர பூஜ்ஜிய உமிழ்வு (Net Zero) சூழலில், 2045-ஆம் ஆண்டிலேயே சுமார் 420–435 ஜிகாவாட் (GW) என்ற அளவில் உச்சமடைந்து, அதன் பிறகு மின் சேமிப்பு மற்றும் தூய்மையான எரிசக்தி மாற்றுகள் அதிக போட்டித்தன்மை கொண்டதாக மாறுவதால் படிப்படியாக குறையக்கூடும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. 


— காலப்போக்கில், புதிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் குறைய வாய்ப்புள்ளது. மேலும், தற்போதுள்ள சில நிலையங்கள் தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தப்படும் ஒரு கூடுதல் மின் உற்பத்தி ஆதாரமாக, குறைந்த அளவிலேயே இயக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


original article : What are the major initiatives taken by India in the direction of renewable energy? -Roshni Yadav

Share:

செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் குறித்த உச்சிமாநாடு இன்று தொடங்குகிறது: நடைமுறை தீர்வுகளே பேசுபொருள். -சௌம்யரேந்திர பாரிக்

 முதன்முறையாக 'உலகளாவிய தெற்கு' (Global South) எனப்படும் வளரும் நாடுகளில் நடைபெறும் இந்த உச்சிமாநாடு, பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி  முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் அதிகாரப்பூர்வமான தொடக்க விழாவை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். 


திங்கட்கிழமை முதல், புது  டெல்லியில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் குறித்த உச்சிமாநாடு (AI Impact Summit 2026) நடைபெற உள்ளது. இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய விவாதங்களின் மையப்புள்ளியாக இந்தியா மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடைமுறைக்கு சாத்தியமான செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை உருவாக்கும் தனது திறனை வெளிப்படுத்தவும், வளர்ந்து வரும் நாடுகள் (Global South) அமைப்பின் முக்கிய குரலாக தன்னை நிலைநிறுத்தவும், உலகளாவிய தொழில்நுட்பத் தலைமையை கைப்பற்றவும் இந்தியா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 


முதன்முறையாக வளர்ந்துவரும் நாடுகளின் கூட்டமைப்பில் (Global South) நடைபெறும் இந்த உச்சிமாநாடு, பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் அதிகாரப்பூர்வத் தொடக்க விழாவை பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. 


திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு, பாரத் மண்டபத்தில் நடைபெறும் 'இந்தியா செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த கண்காட்சி 2026' (India AI Impact Expo 2026) நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தேசிய அளவில் செயற்கை நுண்ணறிவின் (AI) செயல்பாடுகளை விளக்கும் வகையில் இந்தக் கண்காட்சி அமையும் என்றும்; இங்கு அரசின் கொள்கைகள் செயல்பாட்டுடன் இணைவதையும், புத்தாக்கங்கள் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைவதையும், தொழில்நுட்பம் நாட்டின் குடிமக்களுக்குப் பயன்படுவதையும் காண முடியும் என்று பிரதமர் அலுவலகம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த உச்சிமாநாடு, செயற்கை நுண்ணறிவு மேலாண்மை மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த உலகளாவிய விவாதத்தின் சமீபத்திய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இது கடந்த நவம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டில்  இங்கிலாந்தின் பிளெட்ச்லி பூங்காவில் (Bletchley Park) நடைபெற்ற 'செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு உச்சிமாநாட்டிலிருந்து' தொடங்கியது. அங்கு 28 நாடுகள் செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு அபாயங்களைக் கண்டறிய 'பிளெட்ச்லி பிரகடனத்தில்' (Bletchley Declaration) கையெழுத்திட்டன. கடந்த மே மாதம் 2024-ஆம் ஆண்டில் நடைபெற்ற சியோல் உச்சிமாநாடு (Seoul Summit), பாதுகாப்போடு சேர்த்து கண்டுபிடிப்புகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. மேலும், பிப்ரவரி மாதம் 2025-ஆம் ஆண்டில் நடந்த பாரிஸ் செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாடு (AI Action Summit), நடைமுறை பயன்பாடு மற்றும் பொருளாதார வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தது. அதே சமயம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களுக்குக் குறைந்த அளவே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்கின்றனர். 


இந்தியாவின் அணுகுமுறை சற்று வித்தியாசமானது. முந்தைய உச்சிமாநாடுகள் பெரிய அளவிலான அபாயங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து கவனம் செலுத்திய நிலையில், புது தில்லி தற்போது "மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம்" (People, Planet, and Progress) ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறது என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன் கூறுகிறார். இந்தியாவின் நோக்கம் நடைமுறை உலகப் பிரச்சனைகளுக்கு செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை உருவாக்குவதாகும். இது ஒரு செயற்கை நுண்ணறிவு வல்லரசாக உருவெடுக்கும் மற்றும் வளர்ந்துவரும் நாடுகளின் (Global South) கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் திட்டத்தைப் பிரதிபலிக்கிறது.


இந்த உச்சிமாநாடு உலகம் முழுவதும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், செயற்கை நுண்ணறிவு (AI) நீண்டகாலமாக நிலைநாட்டப்பட்ட பொருளாதாரக் காரணிகளை மாற்றக்கூடும் என்ற கவலைகள் உள்ளன. உலகத் தலைவர்களும் நிறுவனத் தலைவர்களும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான தங்களின் திட்டங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 


அரசாங்கங்கள், தொழில்முறைத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் இதில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் இதில் பங்கேற்க உள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக பிரான்ஸ், பிரேசில், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்க வாய்ப்புள்ளது.


45-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அமைச்சர் குழுவினர் இதில் பங்கேற்க உள்ளனர். சீனாவுக்கு இந்தியா அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, சீனப் பிரதிநிதிகள் குழு இதில் பங்கேற்க உள்ளது.


கூகுள் (Google), ஓப்பன் ஏஐ (OpenAI), ஆந்த்ரோபிக் (Anthropic), மைக்ரோசாப்ட் (Microsoft), அடோப் (Adobe) மற்றும் குவால்காம் (Qualcomm) போன்ற உலகின் முன்னணி மற்றும் இந்திய நிறுவனங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தலைமைச் செயல் அதிகாரிகள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதப் பிரதமர் இவர்களுக்கு இரவு விருந்து அளிப்பதோடு, ஒரு வட்டமேசை மாநாட்டிலும் உரையாற்றுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.


இந்தியா செயற்கை நுண்ணறிவுத் (IndiaAI Mission) திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் சிங் கூறுகையில், இந்த உச்சிமாநாட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்று செயற்கை நுண்ணறிவை (AI) அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கச் செய்வதுதானென்றும் அத்துடன், இந்தியப் பொறியாளர்கள் உள்நாட்டிலேயே உருவாக்கி வரும் சுகாதாரம், விவசாயம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவின் நடைமுறைத் தீர்வுகளைக் காட்சிப்படுத்துவதும் இதன் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். 


தற்போது நாம் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு (AI), ஒரு சில நாடுகளால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் பெரும்பான்மையான நாடுகள் வெறும் பயனாளர்களாக மட்டுமே இருக்கின்றன. இந்தத் தரவுத் தொகுப்புகள் அனைவரையும் உள்ளடக்கியதாக இல்லாவிட்டால், அதன் முடிவுகளில் ஒருதலைப்பட்சமான போக்கு  நிலவுவதாகவும்  சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தரவுத் தொகுப்புகள், கணினித் திறன், மாதிரிகள், வழிமுறைகள் மற்றும் செயலிகள் போன்ற செயற்கை நுண்ணறிவு வளங்களை அனைவருக்கும் பொதுவானதாக மாற்றுவது இந்த உச்சிமாநாட்டின் முக்கிய கருப்பொருளாக இருக்கும் என்று சிங், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் குறிப்பிட்டுள்ளார்.


வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் பிரதிநிதிகள் இணைந்து வழிநடத்தும் ஏழு கருப்பொருள் பணிக்குழுக்கள் (Thematic working groups), உறுதியான முடிவுகளை முன்வைக்கும். இதில் செயற்கை நுண்ணறிவு பொதுமை முன்முயற்சி (AI Commons), நம்பகமான செயற்கை நுண்ணறிவு கருவிகள், பகிரப்பட்ட கணினி உள்கட்டமைப்பு மற்றும் துறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளின் தொகுப்புகள் ஆகியவற்றுக்கான முன்மொழிவுகள் ஆகியன ஆகும்.


உலக அளவில் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும் ஒரு சூழலில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது. செயற்கை நுண்ணறிவின் (AI) வேகமான வளர்ச்சி, எதிர்கால வேலைவாய்ப்புகள் மற்றும் தற்போதுள்ள பணிகளில் அதன் தாக்கம் குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய அங்கமாக விளங்கும் தகவல் தொழில்நுட்பத் துறை, தற்போது ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கிறது. ஏனெனில், செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டால்  அத்துறையின் சில சேவைகள் தேவையற்றதாக மாறக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். அதோடு, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அதிகப்படியான மின்சாரம் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துவது குறித்தும் சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


அடுத்த ஐந்து நாட்களில் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில், தற்போதுள்ள சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில் ஒரு திட்டவரைவை உருவாக்குவதற்காக 500-க்கும் மேற்பட்ட அமர்வுகள் நடைபெறவுள்ளன. இதில் செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு, மேலாண்மை, நெறிமுறை சார்ந்த பயன்பாடு மற்றும் தரவுப் பாதுகாப்பு போன்ற தலைப்புகள் விவாதிக்கப்படும். மேலும், முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்காக உள்ளூர் தொழில்நுட்ப மாதிரிகளை உருவாக்குவது உட்பட, இந்தியாவின் சுயசார்பு செயற்கை நுண்ணறிவுத் திட்டம் (Sovereign AI) குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளை செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு பாதிக்கிறது, எதிர்கால வேலைகளுக்குத் தேவையான புதிய திறன்கள் எவை, மற்றும் விவசாயிகளுக்கும், சிறு வணிகர்களுக்கும், தனிநபர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உதவியாக இருக்கும் என்பது குறித்த விரிவான விவாதங்களும் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


சில நிறுவனங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு  மொழி மாதிரிகளை (Language Models) அறிமுகப்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. பெரிய மற்றும் சிறிய மொழி மாதிரிகளை உருவாக்குவதற்காக அங்கீகரிக்கப்பட்ட 12 திட்டங்களில், சில அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் Sarvam AI மற்றும் Bharatgen ஆகியவற்றின் சுயசார்பு செயற்கை நுண்ணறிவுத் திட்ட' மாதிரிகளும் இடம்பெறும் என்கின்றனர். மேலும், கணினி வன்பொருள் (Hardware) தொடர்பான அறிவிப்புகள், குறிப்பாக இந்தியாவின் தரவு மைய திறனை விரிவாக்கும் திட்டங்கள் குறித்தும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 


original article : AI summit begins today, real-world solutions on table -Soumyarendra Barik

Share: