கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தம்: புதிய வங்கதேச அரசாங்கத்தின் முன்னுரிமைகள் பட்டியலில் மறு பேச்சுவார்த்தை உடன்படிக்கை ஏன் முதலிடத்தில் உள்ளது? -அபினவ் சக்ரவர்த்தி

 இரு நாடுகளும் 1996 ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன. ஒப்பந்தம் டிசம்பர் 2026-ல் புதுப்பிக்கப்பட உள்ளது. ஒரு புதிய ஒப்பந்தம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர, அதிகரித்துவரும் மக்கள்தொகையின் எதிர்காலத் தேவைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


கடந்த வாரம் வங்கதேச நாட்டில் நடந்த  பொதுத் தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளில் கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது அடங்கும் என்றும், ஒப்பந்தம் டிசம்பர் 2026-ல் காலாவதியாகும் என்று தகவல்கள் வெளியாகின.


BNP தலைவரின்  உதவியாளரான ஹுமாயூன் கபீர், வரவிருக்கும் அரசாங்கம் "வங்கதேசத்தின் நலன்களை" மனதில் வைத்து கொண்டு செயல்படும் என்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.


இந்த ஒப்பந்தம் எவ்வாறு உருவானது. அதன் விதிகள் என்ன, இரு நாடுகளும் ஒப்பந்த விதிமுறைகளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதில் ஏன் ஆர்வமாக உள்ளன?


முரண்பாடுகளிலிருந்து நட்பு வரை


1950-களில், கிழக்கு பாகிஸ்தானுடனான எல்லையிலிருந்து 18 கி.மீ தொலைவில், மேற்கு வங்கத்தில் உள்ள ஃபராக்கா என்ற இடத்தில் தடுப்பணை கட்ட இந்தியா முன்மொழிந்தபோது, ​​கங்கை நீரைப் பகிர்ந்து கொள்வதில் பதட்டங்கள் தொடங்கின. கட்டுமானப் பணிகள் 1961-ல் தொடங்கி 1975-ல் நிறைவடைந்த பிறகு, ஃபராக்காவின் தடுப்பணை கங்கையிலிருந்து ஹூக்ளி நதிக்குத் திருப்பிவிடத் தொடங்கியது. கொல்கத்தா துறைமுகத்தைச் சுற்றியுள்ள சேற்றை வெளியேற்றி கப்பல்கள் செல்வதற்காக வைத்திருந்தது.


கட்டுமானப் பணிகளின்போது, ​​ஏற்பட்ட முரண்பாடுகளை தொடர்ந்தது, 1976-ஆம் ஆண்டு சுதந்திர வங்கதேசத்தில் அவாமி லீக் சட்டமன்ற உறுப்பினரான மௌலானா பாஷானி, இந்தியாவின் நீர் கொள்கைகளுக்கு எதிராக "ஃபரக்கா நீண்ட பேரணியை வழிநடத்தியபோது முரண்பாடு உச்சத்தை எட்டியது. வங்கதேசத்தில் கங்கையின் முக்கிய கிளை நதியான பத்மா நதியை வறண்டு பாலைவனமாக்குவதற்கு இது காரணமாக அமைந்தது என்று வாதிட்டு, தடுப்பணையை இடிக்க வேண்டும் என்று மௌலானா பாஷானி கோரினார்.


அடுத்த பத்தாண்டுகளில் 1977, 1982 மற்றும் 1985-ஆம் ஆண்டுகளில் இரு நாடுகளும் தற்காலிக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட போதிலும், எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை.


இறுதியாக, டிசம்பர் 1996-ல், பிரதமர்கள் எச்.டி. தேவ கவுடா மற்றும் ஷேக் ஹசீனா தலைமையில் இரு நாடுகளும் கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஜனவரி முதல் மே வரையிலான வருடாந்திர வறண்ட காலங்களில் கங்கை நீர் ஓட்டங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான 30 ஆண்டு கட்டமைப்பை இது அமைத்தது மற்றும் ஒப்பந்தத்தை கண்காணித்து செயல்படுத்த ஒரு கூட்டுக் குழுவை அமைத்தது.


ஒப்பந்தத்தின் விதிமுறைகள் என்ன?


அந்த நேரத்தில் இருதரப்பு ராஜதந்திர உறவில் ஒருசாதனையாக பார்க்கப்பட்ட இந்த ஒப்பந்தம், 1949 மற்றும் 1988-க்கு இடையிலான 10 நாட்களில் சராசரி தரவுகளின் அடிப்படையில், ஓட்டங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான மூன்று அடுக்கு அமைப்பை உருவாக்கியது. நீர் ஓட்டம் 70,000 கன அடி (வினாடிக்கு கன அடி) அல்லது அதற்குக் கீழே குறைந்தால், நாடுகள் அதை சமமாகப் பகிர்ந்து கொள்கின்றன. நீர் ஓட்டம் 70,000 முதல் 75,000 கன அடி வரை இருந்தால், வங்கதேசம் 35,000 கன அடியைப் பெறுகிறது. மீதமுள்ள நீரை இந்தியா தக்க வைத்துக் கொள்கிறது. 75,000 கன அடி அல்லது அதற்கு மேல் எட்டினால், இந்தியா 40,000 கன அடியைப் பெறுகிறது. மீதமுள்ள நீரை வங்கதேசம் பெறுகிறது.


மேற்கூறிய விதிமுறைகள் கூடுதல் விதிக்கு உட்பட்டவை: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 11 முதல் மே 10 வரை, இரு நாடுகளும் மாறி மாறி மூன்று 10 நாட்களில் 35,000 கனஅடி நீரைப் பெறும்.


குறைந்தபட்ச உத்தரவாதப் பிரிவு இல்லாவிட்டாலும், ஒப்பந்தத்தில் ஒரு அவசரகால ஏற்பாடு உள்ளது: பிரிவு II(iii) "ஃபராக்காவில் 10 நாட்களுக்குள் நீர் ஓட்டம் 50,000 கன அடிக்குக் கீழே குறைந்தால், இரு அரசாங்கங்களும் அவசர அடிப்படையில் சரிசெய்தல்களைச் செய்ய உடனடி ஆலோசனைகளை நடத்தும், சமத்துவம், நியாயமான செயல்முறை மற்றும் இரு தரப்பினருக்கும் தீங்கு விளைவிக்காத கொள்கைகளைப் பின்பற்றும்" என்று கூறுகிறது.


பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, இரு அரசாங்கங்களின் சம பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு கூட்டுக் குழு முதலில் இந்தப் பிரச்சினையைக் கையாண்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாவிட்டால், அது கூட்டு நதிகள் ஆணையத்திற்கு (Joint Rivers Commission (JRC)) எடுத்துச் செல்லப்படும் என்று இரு அரசாங்களும் கூறின. 54 பகிரப்பட்ட நதிகளின் நீர் பகிர்வைப் பற்றி விவாதித்து நிர்வகிக்க இரு நாடுகளும் 1972-ஆம் ஆண்டில் கூட்டு நதிகள் ஆணையத்தை உருவாக்கின.  இருந்தபோதிலும், கங்கை நதி மட்டுமே முறையான ஒப்பந்தத்தின் கீழ் உள்ளது.


அடுத்து என்ன நடக்கும்?


பல ஆண்டுகளாக, இந்த ஒப்பந்தம் இரு நாடுகளிலும் அதிகரித்துவரும் மக்கள்தொகையின் எதிர்காலத் தேவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாததால், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர மற்ற காரணங்களுக்காக  விமர்சிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் 30 ஆண்டு காலத்தின் முடிவில் பரஸ்பர ஒப்புதலின் மூலம் புதுப்பிக்க வழிவகுத்தாலும், ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய இரு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.


மார்ச் 11 முதல் மே 10 வரையிலான காலகட்டத்தில் இந்தியா அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடுதலாக 30,000 முதல் 35,000 கனஅடி தண்ணீரைக் கோருவதாகவும், புதிய ஒப்பந்தம் ஒப்பீட்டளவில் குறுகியதாக, 10 முதல் 15 ஆண்டுகள் வரை இருக்கலாம் என்றும் மே 2025-ல் வெளியான ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கூட்டு நதிகள் ஆணைய கூட்டத்தின் போது, ​​வங்கதேசம் பிப்ரவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் 40,000 கனஅடி ஒப்பந்தத்தில்  உறுதியளிக்கப்பட்டப்படி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், நீண்ட ஒப்பந்த புதுப்பித்தல் காலம் மற்றும் மேம்பட்ட வெள்ள தரவு பகிர்வைத் தவிர கேட்டதாக செப்டம்பர் 2025 PTI அறிக்கை தெரிவித்துள்ளது.


ஆகஸ்ட் 2024-ல் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உள்நாட்டு அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே பதட்டங்கள் வெடித்ததன் பின்னணியில் இவை அனைத்தும் நடந்துள்ளன. இந்தியாவுடன் நட்பு பாராட்டி வந்த பிரதமர் ஷேக் ஹசீனா, அன்றிலிருந்து புதுடெல்லியில் வசித்து வருகிறார். மேலும், வங்கதேசம் அவரை நாடு கடத்துமாறு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த நவம்பரில், வங்கதேசத்தில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக அவரை குற்றவாளி எனக் கண்டறிந்து மரண தண்டனை விதித்தது. ஹசீனா இந்தத் தீர்ப்பை "ஒருசார்புடையது மற்றும் அரசியல் ரீதியிலானது" என்று அழைத்தார்.


ஏப்ரல் 2025-ல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுடனான 1960 சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த இந்தியாவின் முடிவு வங்கதேச நாட்டிற்கும் விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.


மற்றொரு காரணி மேற்கு வங்க மாநில அரசின் நிலைப்பாடு ஆகும். கடந்த ஆண்டு, ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இருப்பதாக ஒன்றிய அரசு கூறியது. ஆனால், 2011-ஆம் ஆண்டில், இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் ஒரு முக்கிய நதியான டீஸ்டாவின் நீர் பகிர்வு குறித்த ஒரு முக்கிய ஒப்பந்தம், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டது.


தாகாவைத் தளமாகக் கொண்ட பேராசிரியர் எஸ்.கே. தவ்பிக் எம். ஹக் அவர்களால் எழுதப்பட்ட ஒரு கட்டுரை, 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது. இதில் “நியாயமான பகிர்வுடன் சுற்றுச்சூழல் தாங்குநிலையை சமநிலைப்படுத்துவதன்” தேவையை வலியுறுத்தியதுடன், மறுபேச்சுவார்த்தைக்குட்படுத்தப்படும் ஒப்பந்தத்தில் “தரவு சார்ந்த நுண்ணறிவுகளால் வழிநடத்தப்படும் முனைப்பான வெள்ள மேலாண்மையை” இணைத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டது.2025 டிசம்பர் மாதத்தில், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட கல்வியாளர் அமித் ரஞ்சன் அவர்கள், பங்களாதேஷ் நாளிதழான தி டெய்லி ஸ்டார் இதழில் எழுதியதாவது: ஒப்பந்தத்தின் எதிர்காலம் இறுதியில் இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகளின் போக்குடன் தொடர்புடையது என்பதாகும். இது “இரு நாடுகளும் ஆக்கபூர்வமாக ஈடுபடுவதற்கான விருப்பம், கேட்டல், புரிந்துகொள்ளல் மற்றும் ஒருவருக்கொருவர் உண்மையான கவலைகளைத் தீர்க்க முயற்சிப்பது” ஆகியவற்றைப் பெரிதும் சார்ந்துள்ளது.


original article : Ganga Water Sharing Treaty: Why renegotiating pact tops new Bangladesh government’s list of priorities. -Abhinav Chakraborty

Share: