கருணைக்கொலை என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

கருணைக்கொலை என்றால் என்ன?

-குஷ்பூ குமாரி


முக்கிய அம்சங்கள்:


நீதிபதிகள் ஜே. பி. பர்திவாலா மற்றும் கே. வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, அந்த அறிக்கையை டிசம்பர் 17ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், அடுத்த விசாரணையை டிசம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். நீதிபதி பர்திவாலா, நாம் இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை இந்த நிலையில் வாழ அனுமதிக்க முடியாது என்று கூறினார்.


2018ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு செயலற்ற கருணைக்கொலைக்கு (passive euthanasia) அனுமதி அளித்ததுடன், உயில் சாசனத்தை பாதுகாப்பாகச் செயல்படுத்துவதற்கான விதிகளையும் வகுத்தது. ஜனவரி 2023ஆம் ஆண்டில், நீதிமன்றம் அந்த உத்தரவை மேலும் செயல்படுத்தக்கூடியதாகவும், கடுமை குறைந்ததாகவும் மாற்றியமைத்தது.


நவம்பர் 26 அன்று, ஹரீஷ் ரானாவை பரிசோதிப்பதற்காக ஒரு முதன்மை மருத்துவக் குழுவை அமைக்குமாறு நொய்டா மாவட்ட மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது, ஹரீஷின் தந்தை அசோக் ரானா தனது மகனின் மருத்துவ சிகிச்சையை நிறுத்துமாறு விடுத்த கோரிக்கை குறித்து நீதிமன்றம் முடிவெடுக்க உதவும்.


பஞ்சாப் பல்கலைக்கழக மாணவரான ஹரிஷ், 2013ஆம் ஆண்டு தனது விடுதியின் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். அன்று முதல், அவர் முற்றிலும் படுக்கையிலேயே முடங்கிக் கிடப்பதுடன், உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் வாழ்ந்து வருகிறார்.


கடந்த சில ஆண்டுகளில், ஹரீஷுக்கு செயலற்ற கருணைக் கொலைக்கு அனுமதி கோரி அவரது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தை அணுகுவது இது இரண்டாவது முறையாகும்.


உங்களுக்குத் தெரியுமா:


கருணைக்கொலை (Euthanasia) என்பது ஒரு நபர் பொதுவாக தாங்க முடியாத வலி அல்லது குணப்படுத்த முடியாத நோயிலிருந்து விடுபடுவதற்காக, வேண்டுமென்றே தனது வாழ்க்கையை முடித்துக்கொள்வதாகும். ஒரு மருத்துவரால் மட்டுமே செய்யக்கூடிய கருணைக்கொலை செய்ய வேண்டும். மேலும், இது 'செய்யப்படக்கூடிய' (active) அல்லது 'செயலற்ற' (passive) முறையாக இருக்கலாம்.


செய்யப்படக்கூடிய கருணைக் கொலை (Active euthanasia) என்பது, ஒருவருக்கு மரணத்தை விளைவிக்கும் ஊசியைச் செலுத்துவது போல, ஒருவரின் மரணத்தை நேரடியாக ஏற்படுத்துவதாகும். செயலற்ற கருணைக் கொலை (Passive euthanasia) என்பது, குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை உயிருடன் வைத்திருக்கும் சிகிச்சை அல்லது உயிர் ஆதரவை நிறுத்துவதாகும்.


2018ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான 'செயலற்ற கருணைக் கொலையின்’ சட்டப்பூர்வத் தன்மையை அங்கீகரித்தது. மேலும், 'கௌரவத்துடன் இறப்பதற்கான உரிமை' (right to die with dignity) என்பது இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் உள்ள வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாகும் என்றும் தீர்ப்பளித்தது.


கண்ணியத்துடன் இறக்கும் உரிமையை நிலைநாட்டுவதற்காக, உச்ச நீதிமன்றம் தனது 2018ஆம் ஆண்டுத் தீர்ப்பில், முன்கூட்டிய மருத்துவ வழிகாட்டுதல்கள் அல்லது உயில் ஆவணங்களை உருவாக்குவதற்கான ஒரு செயல்முறையை வகுத்தது. இருப்பினும், அந்தச் செயல்முறை சிக்கலானதாக இருந்ததால், நீதிமன்றம் தனது 2023ஆம் ஆண்டுத் தீர்ப்பில் இந்த முறையை எளிமைப்படுத்தியது.


ஒருவரின் சொத்துக்கள் எவ்வாறு பகிரப்பட வேண்டும் என்பதை விளக்கும் உயில் போல, உயிருள்ளபோதே எழுதப்படும் உயில் என்பது, 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராகவும், முடிவெடுக்கும் திறன் கொண்டவராகவும் இருக்கும் ஒருவரால் எழுதப்படும் ஒரு ஆவணமாகும். பிற்காலத்தில் தம்மால் சுயமாக முடிவெடுக்கும் திறனை இழந்துவிட்டால், தமக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதை அது குறிப்பிடுகிறது.


அந்த ஆவணத்தில் குறைந்தபட்சம் இரண்டு நம்பகமான மாற்று முடிவெடுப்பவர்களின் (surrogate decision-makers) பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் குடும்ப உறுப்பினர்கள், அண்டை வீட்டார் அல்லது நம்பகமான வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த நபருக்கு முடிவெடுக்கும் திறன் இல்லாதபோது, ​​நம்பகமான மாற்று நபர்கள் முடிவுகளை எடுக்க முன்வருவார்கள்.

Original link:

What is euthanasia?


Share:

பஞ்சாயத்துக்களால் ஏன் வருவாயை அதிகரிக்க முடியவில்லை? -சுஷில் குமார் லோஹானி ஆகங்க்ஷா ஷ்ரவன்

மாநிலங்களில் உள்ள கட்டமைப்பு மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பான சிக்கல்கள், சொத்து வரி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான பயனர் கட்டணங்களை விரிவுபடுத்துவதைத் தடுக்கின்றன.


1993ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட 73வது அரசியலமைப்புத் திருத்தம், இந்தியாவின் ஊரக பகுதிகளில் கூட்டாட்சி (federalism) முறையை மாற்றியமைத்தது. இது பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் (Panchayati Raj Institutions (PRIs)) தங்கள் பகுதிகளில் சொந்தமாக வரிகள், கட்டணங்கள் மற்றும் பயனர் கட்டணங்களை வசூலிக்க அதிகாரம் அளித்தது. இது அரசாங்க மானியங்களுக்கான (grants-in-aid) அவற்றின் சார்புநிலையைக் குறைக்கிறது. அந்தந்த மாநில பஞ்சாயத்து ராஜ் சட்டங்கள், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு, குறிப்பாக கிராம பஞ்சாயத்துகளுக்கு, பல வரிகளை (சொத்து வரி, பொழுதுபோக்கு வரி, வாகன வரி உட்பட) விதிப்பதற்கும், நீர் மற்றும் சுகாதார சேவைகளுக்கான பயனர் கட்டணங்களை வசூலிப்பதற்கும், மேலும் பொதுச் சொத்து வளங்களிலிருந்து (Common Property Resources (CPRs)) வருவாய் ஈட்டுவதற்கும் அதிகாரம் அளிக்கின்றன.


பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு, நிதி அதிகாரங்கள் இருந்தாலும், தங்களுக்குத் தேவையான நிதியைத் தாங்களாகவே திரட்டுவதில் (own source revenue (OSR)) பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றன. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் நிதிநிலை குறித்த ரிசர்வ் வங்கியின் அறிக்கை, அவற்றின் சொந்த வருவாய் மிகக் குறைவாக இருப்பதைக் காட்டுகிறது; பெரும்பாலான மாநிலங்கள் முக்கியமாக சொத்து வரிகளைச் சார்ந்தே உள்ளன. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் தங்களின் சொந்த வருவாயை அதிகரிப்பதற்குத் தடையாக இருக்கும் கட்டமைப்பு மற்றும் நடைமுறைச் சிக்கல்களை சமீபத்திய NIPFP ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.


நாடு முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துக்களால் வசூலிக்கப்படும் சொந்த வருவாயில் கிட்டத்தட்ட 40 சதவீதம் சொத்து வரியாக உள்ளது. இருப்பினும், உலக வங்கியின்படி, இந்தியாவின் சொத்து வரி வருவாய், பொருளாதாரத்தின் அளவோடு ஒப்பிடும்போது இன்னும் மிகக் குறைவாகவே உள்ளது; இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.2 சதவீதமாக இருக்கிறது. இந்த குறைந்த நிலைக்குக் கட்டமைப்புச் சிக்கல்களும், சில மாநிலங்களில் முறையான அதிகாரமின்மையுமே காரணமாகும். உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில், கிராம பஞ்சாயத்துக்கள் இன்னும் சொத்து வரி வசூலிக்க அனுமதிக்கப்படவில்லை. மற்ற மாநிலங்களில், சொத்து வரையறைகள், மதிப்பீட்டு முறைகள், வரி விகிதங்களைத் திருத்துதல் மற்றும் மாநில அரசாங்கங்களிடமிருந்து போதிய ஆதரவின்மை ஆகியவற்றில் குழப்பங்கள் நிலவுகின்றன. மேலும், சொத்துரிமை தொடர்பான சர்ச்சைகள் வரி வசூலைக் குறைக்கின்றன, குறிப்பாக சர்ச்சைக்குரிய நிலத்தில் அமைந்துள்ள வணிகக் கட்டிடங்களின் விஷயத்தில் இது அதிகமாகக் காணப்படுகிறது.


தெளிவான வழிகாட்டுதல்கள்


மாறாக, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் தங்களின் சொத்து வரி வசூலை மேம்படுத்தியுள்ளன. இதற்குக் காரணம், அந்த மாநிலங்கள் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்து, மாநில அரசாங்கத்திடமிருந்து முறையான வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்கியதே ஆகும். போதுமான பணியாளர்களோ அல்லது தொழில்நுட்பத் திறன்களோ இல்லாத கிராம பஞ்சாயத்துகளுக்கு, மாநிலங்கள் வீட்டின் அளவின் அடிப்படையில் எளிய, ஒரே சீரான சொத்து வரி விகிதங்களை நிர்ணயிக்கலாம். இது குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட அளவிலான வரி வசூலை உறுதிசெய்ய உதவும். போதுமான பயிற்சி பெற்ற பணியாளர்களைக் கொண்ட கிராம பஞ்சாயத்துகள், சிறப்பாகச் செயல்படும் இந்த மாநிலங்கள் பயன்படுத்தும் விதிகள் மற்றும் திருத்தங்களைப் பின்பற்ற வேண்டும்.


குடிநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை (solid waste management (SWM)) போன்ற அடிப்படை சேவைகளைப் பயன்படுத்துபவர்களிடமிருந்து கட்டணங்களை வசூலிக்கும் அதிகாரம் கிராம பஞ்சாயத்துகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஜல் ஜீவன் திட்டம், கிராமப்புற குடிநீர் வழங்கல் துறை, பொது சுகாதாரப் பொறியியல் துறை போன்ற ஒன்றிய மற்றும் மாநிலத் திட்டங்களின் கீழ் உள்ள தனித்தனி முகமைகள் இந்தச் சேவைகளைக் கையாண்டு வருகின்றன. வழிகாட்டுதல்களின்படி, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தேவையான அமைப்புகளைக் கட்டி முடித்தவுடன், அந்த அமைப்புகளின் நீண்டகாலச் செயலாக்கம், மேலாண்மை, இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகள் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதுவரையிலும் இது நடக்கவில்லை. கிராம பஞ்சாயத்துகள் பயனர் கட்டணத்தை வசூலிப்பதை இது தடுக்கிறது.


இருப்பினும், NIPFP நடத்திய கள ஆய்வுகளில், சில மாநிலங்களில் நீர் வழங்கல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை அமைப்புகள் பஞ்சாயத்து ராஜ் அமைப்புக்கு வெளியே, பயனர் சங்கங்கள் அல்லது சுய உதவிக் குழுக்கள் (self-help groups (SHGs).) மூலம் முறைசாரா முறையில் பராமரிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. இந்த அமைப்புகளை சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைப்பது, அவற்றின் முறையான செயல்பாடு மற்றும் பராமரிப்பை எளிதாக்குவது மட்டுமல்லாமல், கிராம பஞ்சாயத்துகளுக்கு வருவாய் ஈட்டவும் உதவும்.


கிராம பஞ்சாயத்துகளுக்கு வருவாய்க்கான மற்றொரு முக்கிய ஆதாரம் வணிக நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் உரிமக் கட்டணங்களாகும். இருப்பினும், எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது கிராம பஞ்சாயத்துகளுக்கு தெளிவாக தெரியவில்லை. தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால், அவர்கள் இந்தக் கட்டணங்களை வசூலிக்கும் பொறுப்பை மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைக்கின்றனர். இது வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது. கிராம பஞ்சாயத்துகள் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து வணிகங்களின் முழுமையான பட்டியலைத் தயாரித்து, ஆண்டு வருமானம், லாபம் மற்றும் இருப்பிடம் போன்ற காரணிகளின் அடிப்படையில் கட்டணங்களைக் கணக்கிட வேண்டும்.


கடைசிப் பிரச்சினை, சிறிய வனப்பகுதிகள், மேய்ச்சல் நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்ற சமூகத்திற்குச் சொந்தமான வளங்கள் (Common Property Resources (CPRs)) பற்றியது. இவற்றிலிருந்து வருமானம் ஈட்ட கிராம பஞ்சாயத்துகள் ஊக்குவிக்கப்படுகின்றன. ஆனால், இவற்றில் பல வனத்துறை போன்ற பிற துறைகளாலும் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த வளங்களின் அதிகாரப்பூர்வக் கட்டுப்பாட்டை கிராம பஞ்சாயத்துகளிடம் ஒப்படைப்பது, அவற்றின் திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், கிராம பஞ்சாயத்துகளின் நிதி ஆதாரங்களையும் அதிகரிக்கும்.


சுய வருவாய் ஆதாரங்களின் (own source revenue (OSR)) திறனை மேம்படுத்துவதற்காக, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் (Ministry of Panchayati Raj (MoPR)), அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு பயிற்சித் தொகுப்பை பஞ்சாயத்து ராஜ் நிறுவன அதிகாரிகளுக்காக அறிமுகப்படுத்தியது. மேலும், மாநிலங்கள் பஞ்சாயத்துகளின் சுய வருவாய் ஆதார மேலாண்மையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்காக, 'Samartha' என்ற டிஜிட்டல் தளத்தையும் உருவாக்கியுள்ளனர். இந்த முயற்சிகள் அதிக வருமானம் ஈட்டும் அல்லது நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம பஞ்சாயத்துக்களை இலக்காகக் கொண்டுள்ளன; இதன் மூலம் அவை தொடர்ச்சியான பொருளாதாரப் பலன்களுக்காக லாபகரமான திட்டங்களை உருவாக்க உதவுகின்றன.


லோஹானி பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகவும், ஷ்ரவன் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றுகின்றனர்.

Original link:

Why panchayats aren’t able to boost revenues 


Share:

அணுசக்தியை விரிவுபடுத்துவதற்கான முக்கிய திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது: நம்பகமான ஆற்றல், சிறிய மட்டு உலைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு இது ஏன் முக்கியமானது? -அனில் சசி

இந்தச் சட்டத் திருத்தங்கள், கையெழுத்திடப்பட்டு ஏறக்குறைய 20ஆண்டுகளை கடந்த பிறகு, இந்திய-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தின் வணிக ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள உதவும் ஒரு சீர்திருத்த முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.


நாட்டின் அணுசக்தித் துறையை நிர்வகிக்கும் சில முக்கிய சட்டங்களை சீரமைப்பதற்காகத் தயாரிக்கப்பட்டு வரும் முக்கியத் திருத்தங்களில் ஒன்றான 2025ஆம் ஆண்டு அணுசக்தி மசோதாவிற்கு (Atomic Energy Bill) ஒன்றிய அரசு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று அமைச்சரவை அளித்த இந்த ஒப்புதல், நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரின் கடைசி வாரத்தில் சட்டத் திருத்தங்களை தாக்கல் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தத் திருத்தங்கள், இந்தியாவில் அணுமின் நிலையச் செயல்பாடுகளில் தனியார் நிறுவனங்கள் நுழைவதற்கு வழிவகுக்கும் வகையில், 1962 ஆம் ஆண்டு அணுசக்திச் சட்டத்தில் (Atomic Energy Act) மாற்றங்களைச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


இதன் விளைவாக, வரவிருக்கும் அணுமின் திட்டங்களில் தனியார் நிறுவனங்கள் 49% வரை பங்குகளை வைத்திருக்க முடியும். இந்த நடவடிக்கை, உலகளாவிய நிதி நிறுவனங்களுடன் இணைந்து வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தத் திட்டங்களில் பங்கு முதலீடு செய்வதற்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, அணுசக்தித் துறை இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட துறைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.


இந்தச் சட்டத் திருத்தங்கள், கையெழுத்திடப்பட்டு ஏறக்குறைய 20ஆண்டுகளை கடந்த பிறகு, இந்திய-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தின் வணிக ஆற்றலைப் பயன்படுத்த உதவும் ஒரு சீர்திருத்த முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. புது டெல்லி இந்த நடவடிக்கையை அமெரிக்கா உடனான ஒரு பரந்த வர்த்தகம் மற்றும் முதலீட்டு முயற்சியின் ஒரு பகுதியாக சேர்க்க விரும்புகிறது. இது தற்போது பேச்சுவார்த்தையில் உள்ள ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கக்கூடும்.


அணுசக்தியை விரிவுபடுத்துதல்


அங்கீகரிக்கப்பட்ட அணுசக்தி மசோதா (2025) இந்தியாவின் மாற்றத்திற்கான அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாடு (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India (SHANTI)) மசோதா, இந்தியாவின் தற்போதைய 8 ஜிகாவாட்டிற்கும் குறைவான நிறுவப்பட்ட அணுசக்தித் திறனிலிருந்து, 2047ஆம் ஆண்டிற்குள் படிப்படியாக 100 ஜிகாவாட் மின்சார அணுசக்தித் திறனைச் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில் வந்துள்ளது. அமெரிக்கா 100 ஜிகாவாட் என்ற அதிகபட்ச செயல்பாட்டு அணுசக்தித் திறனைக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து பிரான்ஸ் (65 ஜிகாவாட்) மற்றும் சீனாவில்  (58 ஜிகாவாட்) உள்ளன.


அணுசக்தித் திறனை அதிகரிப்பதற்காக, இந்திய அரசாங்கம் 20,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் சிறிய மட்டு உலைகளின் (Small Modular Reactors (SMR)) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ஒரு அணுசக்தி இயக்கத்தை அமைப்பதாகவும் அறிவித்திருந்தது. 2033ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட குறைந்தது 5 சிறிய மட்டு உலைகளைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. தனியார் பங்கேற்பைத் தவிர, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட சட்டத் திருத்தங்கள், அணு கனிமங்களை ஆய்வு செய்தல், எரிபொருள் தயாரிப்பு, உபகரண உற்பத்தி மற்றும் ஆலை செயல்பாடுகளின் அம்சங்கள் போன்ற முக்கிய அணுசக்தி நடவடிக்கைகளை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சிறிய மட்டு உலைகளின் மேம்பாடு போன்ற சிவில் பயன்பாட்டிற்கான அணுசக்தி தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் தனியார் துறையை ஈடுபடுத்தும்.


இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதற்கு முன்பு, ஒரு மூத்த அரசு அதிகாரி Indian Express நாளிதழிடம், அணுசக்தி ஒத்துழைப்புகளுக்காக இந்தியா வெளிநாடுகளை நாடும் இந்த நடவடிக்கை இரண்டு தெளிவான கொள்கைகளால் வெளிப்படுகிறது என்று குறிப்பிட்டார்: அதன் படி, நிலக்கரிக்கு மாற்றாகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உள்ள இடைவெளிகளை குறைப்பதற்காகவும் நம்பகமான எரிசக்தி ஆதாரங்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. மேலும், அணுசக்தி ஒத்துழைப்புகளுக்கான வெளிநாட்டுத் தொடர்புகள், தொழில்நுட்பத் தேவையை விட மூலதனத் தேவையின் காரணமாகவே அதிகம் தேவைப்படுகின்றன.


இந்தியாவின் தற்போதைய அணுசக்தி தொழில்நுட்பம்  அழுத்தப்பட்ட கனநீர் உலை (Pressurised Heavy Water Reactor (PHWR)) தொழில்நுட்பம்  சில விரிவாக்கச் சிக்கல்களைக் கொண்டுள்ளது என்ற புரிதல் இருந்தபோதிலும் இது நிகழ்கிறது. மேற்கு ஆசிய நாடுகளின் இறையாண்மை நிதிகள் உட்பட வெளிநாட்டு நிதிகள், இந்தியாவின் அணுசக்தித் திறனை அதிகரிப்பதற்கான இலக்குகளுக்குப் பகுதி நிதியுதவி அளிப்பதற்கும், சிறிய மட்டு உலைகளின் உற்பத்தி மதிப்புச் சங்கிலியில் நுழைவதற்கும் ஆரம்பக்கட்ட ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார். எதிர்காலத்தில் அணுசக்தியை குறைந்த விலையிலும் போட்டித்தன்மையுடனும் வைத்திருக்க, சிறிய மட்டு அணு உலைகள் (SMRs) ஒரு முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகின்றன.


ஒருமித்த அரசியல் கருத்தை உருவாக்குவதற்கான அடிப்படைப் பணிகள் நேரம் எடுத்தன. அதன் விளைவாக இந்தத் திருத்தங்கள் முந்தைய இலக்கான மழைக்காலக் கூட்டத்தொடரிலிருந்து குளிர்காலக் கூட்டத்தொடருக்குத் தள்ளி வைக்கப்பட்டன. எதிர்பார்க்கப்படும் மற்றொரு திருத்தம், இந்தியாவின் அணுசக்திப் பொறுப்புச் சட்டமான 'அணுசக்தி சேதங்களுக்கான சிவில் பொறுப்புச் சட்டம், 2010' ஆம் ஆண்டில் (Civil Liability for Nuclear Damage Act (CLNDA)) உள்ள விதிகளைத் தளர்த்துவதாகும். இந்தச் சட்டம், அணுசக்தி விபத்தால் ஏற்படும் சேதங்களுக்குப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஒரு வழிமுறையை உருவாக்குவதையும், பொறுப்பை ஒதுக்குவதையும், இழப்பீட்டிற்கான நடைமுறைகளைக் குறிப்பிடுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் மற்றும் பிரெஞ்சு அணுசக்தி நிறுவனமான EDF (முன்னர் அரேவா) போன்ற வெளிநாட்டு உபகரண விற்பனையாளர்களால் இது ஒரு தடையாகக் குறிப்பிடப்பட்டது. இந்தச் சட்டம், 'இயக்குநரின் இழப்பீடு கோரும் உரிமை' எனப்படும் ஒரு விதிமுறையின் மூலம், அணுமின் நிலைய இயக்குநர்களின் பொறுப்பை விநியோகஸ்தர்கள் மீது சுமத்த அனுமதிக்கிறது. ஒரு அணுமின் நிலையத்தின் இயக்குநர் பொதுவாக அரசுக்குச் சொந்தமான இந்திய அணுசக்தி கழகம் (Nuclear Power Corp of India Ltd (NPCIL)) போன்ற ஒரு நிறுவனமாக இருக்கும். அதே சமயம், விநியோகஸ்தர்களில் வெளிநாட்டு உலை தயாரிப்பாளர்களும், L&T அல்லது Walchandnagar இண்டஸ்ட்ரீஸ் போன்ற உள்நாட்டு உபகரண விநியோகஸ்தர்களும் அடங்குவர். ஒரு அணுமின் திட்டத்தின் அணு உலை மற்றும் வழக்கமான பாகங்கள் இரண்டிலும் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு விற்பனையாளர்கள், அணு விபத்து ஏற்பட்டால் எதிர்காலத்தில் பொறுப்புகளை ஏற்க நேரிடும் என்ற அச்சத்தின் காரணமாக, இந்தியாவின் அணுசக்தித் துறையில் முதலீடு செய்வதில் உள்ள கவலைகளுக்கு, இயக்குநர்களின் 'இழப்பீடு கோரும் உரிமை' (right of recourse) என்ற இந்த குறிப்பிட்ட விதியை ஒரு காரணமாகக் குறிப்பிட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் பொறுப்புகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் பாதுகாப்புக்காக அரசு ஆதரவு நிதியை உருவாக்குவது போன்றவை முக்கியமான தீர்வுகளாக இருக்கும்.


புதிய திருத்தங்கள், இரண்டு உள்நாட்டுச் சட்டங்களையும் உலகளாவிய சட்ட விதிகளுடன் சீரமைத்து, முதலீட்டாளர்களின் நீண்டகால கவலைகளைத் தீர்த்து, இந்தியாவின் சிவில் அணுசக்தித் துறையைத் விரிவுப்படுத்துவதற்கான களத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

அடிப்படை சுமை தொடர்பான கவலைகள்


கடந்த பத்தாண்டுகளில், இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாட்டை வேகமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த வளர்ச்சி மின் கட்டமைப்பு மேலாளர்களுக்குச் சில சவால்களை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றல் சேமிப்பு அமைப்புகளின் வளர்ச்சியை விட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் விரிவாக்கம் வேகமாக நிகழ்ந்துள்ளதால், மின் கட்டமைப்பு அதிக நிலையற்றதாக மாறி வருகிறது. சூரியன் பிரகாசிக்காதபோதும் அல்லது காற்று வீசாதபோதும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படாததால், பசுமை ஆற்றல் வானிலை நிலைகளைச் சார்ந்துள்ளது என்பதே இதற்கு முக்கியக் காரணம்.


கோடை மாதங்களில் மாலை நேரங்களில், சூரிய மின் உற்பத்தி குறையும்போதும், தேவை அதிகமாக இருக்கும் போதும், மின்கட்டமைப்புக்கு முக்கியமான அடிப்படை மின் ஆதரவை வழங்கும் அனல் மின் உற்பத்தியைக் குறைப்பது இந்தச் சிக்கலை தீவிரப்படுத்துகிறது.


இது மின் கட்டமைப்பு மேலாளர்களுக்கு ஒரு கடினமான சூழ்நிலையை உருவாக்குகிறது. அவர்களுக்கு அடிப்படை மின் சுமைத் திறன் விரைவாக அதிகரிக்க வேண்டியுள்ளது. நிலக்கரி ஒரு பொருத்தமான தேர்வு இல்லாததால், அணுசக்தி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது என்று அந்த அரசு அதிகாரி கூறினார். சூரிய மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் எல்லா நேரங்களிலும் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில்லை. இதற்கு மாறாக, அனல் மின் நிலையங்கள் மற்றும் அணுமின் நிலையங்கள் போன்ற அடிப்படை மின் சுமை ஆதாரங்கள், குறைந்தபட்ச மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகத் தொடர்ச்சியாக இயங்குகின்றன.


சிறிய மட்டு உலைகளில் ஏற்பட்ட முன்னேற்றம்


சிவில் அணுசக்தித் துறையில், புது டெல்லி இப்போது சிறிய மட்டு உலைகளை (SMRs) ஒரு நம்பிக்கைக்குரிய தொழில்நுட்பமாக முன்னிறுத்தி வருகிறது. இந்த மேம்பட்ட அணு உலைகள், பெரும்பாலான பாரம்பரிய அணுமின் நிலையங்களின் உற்பத்தித் திறனில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கொண்டிருந்தாலும், அதிக அளவு குறைந்த கார்பன் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியவை. தொழில்துறை கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதில் இது உதவும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்தத் தொழில்நுட்பத்தைப் பரப்புவதில் இந்தியா ஒரு தலைமைப் பாத்திரத்தை வகிக்கும் என்ற நாட்டின் திறனைத் தீவிரமாக முன்னிறுத்தி வருகிறது. இவை அடிப்படைச் சுமை மின்சாரத்தை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, தரவு மையங்கள் போன்ற குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு இது அவசியமாகிறது. இது மின் கட்டமைப்பு இயக்குநர்களுக்கு ஓரளவிற்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கும். குறிப்பாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை மின் கட்டமைப்புடன் இணைக்க வேண்டிய கட்டாயம், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியின் நிலையற்ற தன்மையை சமநிலைப்படுத்த, அதிக அடிப்படை மின்சார உற்பத்தியை இணைக்க வேண்டிய சவாலையும் கொண்டுவருகிறது. இந்த விவகாரத்தில் அனல் மின் உற்பத்தி முக்கியமாகக் கருதப்பட்டாலும், அணுசக்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த, கார்பன் உமிழ்வற்ற அடிப்படை மின்சார உற்பத்தித் தேர்வை வழங்குகிறது.


இந்தியாவின் அணுசக்தித் திட்டம் சிறிய வகை அணு உலைகளை உருவாக்கும் அனுபவத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும், இது முக்கியமாக கனநீரையும் இயற்கை யுரேனியத்தையும் பயன்படுத்தும் அழுத்தப்பட்ட கனநீர் உலை (Pressurised Heavy Water Reactor (PHWR))  தொழில்நுட்பத்தை சார்ந்துள்ளது. இந்தத் தொழில்நுட்பம் இப்போது உலகளாவிய போக்குகளுடன் ஒத்துப் போகாத ஒன்றாக மாறி வருகிறது. உலகெங்கிலும், அழுத்தப்பட்ட நீர் உலைகள் (PWRs) என்றும் அழைக்கப்படும் இலகு நீர் உலைகளே (light water reactors (LWRs)) மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வகையாகும். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் இலகு நீர் உலைகள் (LWR) தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளன. இந்த உலைகள், அணு உலையை குளிர்விப்பதற்கும் நியூட்ரான்களின் வேகத்தைக் குறைப்பதற்கும் கனநீருக்குப் பதிலாக சாதாரண நீரைப் பயன்படுத்துகின்றன.


குஜராத், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய ஆறு மாநிலங்களில் சுமார் 16 இடங்கள் தற்காலிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த சிறிய மட்டு அணு உலைகள் (BSMR) NPCIL-இன் மேற்பார்வையின் கீழ் கட்டப்பட்டு இயக்கப்படும். இந்த அரசுக்குச் சொந்தமான நிறுவனம், செயல்பாடுகள் மற்றும் சொத்துக்களின் மீதான உரிமையைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஏலதாரர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தைத் தங்களின் சொந்தப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமையைப் பெறுவார்கள்.


விரிவான விதிமுறைகளின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஏலதாரர் அனைத்து மூலதனச் செலவுகள் உட்பட, திட்டத்திற்கு முழுமையாக நிதியளிக்க வேண்டும். திட்டத்திற்கு முந்தைய பணிகள் முதல் இறுதிப் பயன்பாட்டு நீக்கம் வரை, திட்டத்தின் முழு ஆயுட்காலத்திலும் NPCIL மேற்கொள்ளும் ஒவ்வொரு செலவிற்கும் அவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டும். இதற்குப் பதிலாக, பெட்ரோ கெமிக்கல் ஆலைகள், சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், சிமென்ட் தொழிற்சாலைகள் மற்றும் எஃகு ஆலைகள் போன்ற பெரிய தொழில்துறை அலகுகளை நடத்தும் தனியார் நிறுவனங்கள், தங்களின் சொந்தப் பயன்பாட்டிற்காக நீண்ட கால மற்றும் நம்பகமான மின்சார விநியோகத்தைப் பெறும்.


மேலும், NPCIL-இன் முன்மொழிவில் உள்ள உரிமை, கட்டணங்கள் மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்கள் குறித்து சில ஏலதாரர்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சிக்கல்கள் திட்டங்களின் நீண்ட கால நிதி நிலைத்தன்மையை பாதிக்கக்கூடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.


இந்திய அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் பாபா அணு ஆராய்ச்சி மையம் மூலம் இந்தியா குறைந்தபட்சம் மூன்று சிறிய மட்டு அணு உலை (SMR) முன்மாதிரிகளை உருவாக்கி வருகிறது. இந்த முன்மாதிரிகள் பரவலாக மூன்று அணு உலை வகைகளின் கீழ் வருகின்றன. அவற்றில் 200 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட பாரத் சிறிய மட்டு அணு உலை, 220 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட பாரத் சிறிய அணு உலை மற்றும் 55 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு சிறிய மட்டு அணு உலை ஆகியவை அடங்கும்.


இவற்றில், பாரத் சிறிய அணு உலை அழுத்தப்பட்ட கனநீர் அணு உலை (pressurised heavy water reactor (PHWR)) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு மாறாக, பாரத் சிறிய மட்டு அணு உலை மற்றும் 55 மெகாவாட் சிறிய மட்டு அணு உலை ஆகியவை இலகு நீர் அணு உலைகளாகத் திட்டமிடப்பட்டுள்ளன. தற்போது, ​​ரஷ்யா கூடங்குளத்தில் இலகு நீர் அணு உலை அடிப்படையிலான அணுசக்தித் திட்டங்களை உருவாக்கி வருகிறது; அவற்றில் சில ஏற்கனவே மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்கட்டமைப்புக்கு வழங்கி வருகின்றன. இந்தியாவில் NPCIL-ஆல் இயக்கப்படும் பெரும்பாலான அணுசக்தி அலகுகள் அழுத்தப்பட்ட கனநீர் (PHWR) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை.


இந்த சிறிய மட்டு உலைகளுக்கான கருத்தியல் மற்றும் விரிவான வடிவமைப்புகள் மேம்பட்ட நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தங்களிடம் உள்ள உள்நாட்டு நிபுணத்துவம் மற்றும் உருவாக்கப்பட்டு வரும் தொழில்நுட்பங்களின் அடிப்படையில், இந்த நிலையில் எந்தவொரு வெளிநாட்டு ஒத்துழைப்பும் திட்டமிடப்படவில்லை என்று அணுசக்தித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தொழில்நுட்பத்தை நிரூபிக்கும் வகையில், SMR-55 மற்றும் BSMR 200 MWe ஆகியவற்றின் முன்னோடி அலகுகளை அணுசக்தித் துறையின் தளங்களில் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த செயல் விளக்க உலைகள், திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட 60 முதல் 72 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Original lnik:

Cabinet clears key amendment to open up n-power: Why this is vital for govt’s baseload energy, SMR and reforms push.


Share:

சுதந்திரப் போராட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸின் பங்கு என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


— 1946ஆம் ஆண்டில், இடைக்கால அரசாங்கத்தின் தலைவரையும், பின்னர் முதல் பிரதமரையும் தீர்மானிக்கக்கூடிய காங்கிரஸ் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுத்தபோது, ​​பெரும்பாலான மாநில காங்கிரஸ் பிரிவுகள் சர்தார் வல்லபாய் படேலுக்கு ஆதரவளித்தன என்று அமித்ஷா கூறினார். இருப்பினும், அதற்குப் பதிலாக ஜவஹர்லால் நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முடிவை அமித்ஷா "வாக்குத் திருட்டு" என்று வர்ணித்தார்.


இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்துகொண்டிருந்த நிலையில், அதிகாரப் பரிமாற்றம் குறித்து இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் வேகம் பெற்றன. இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சி உட்கட்சித் தேர்தல்களை நடத்த முடிவு செய்தது. இது ஆறு ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஒரு வழக்கமான வருடாந்திர நிகழ்வாகும்.


ஆனால், 1946-ஆம் ஆண்டில் நிலைமை வேறுபட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தி, அவர் விரைவில் சுதந்திரமடையவிருக்கும் நிர்வாகத்தின் செயல் தலைவராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


— தேர்தலுக்கான மூன்று அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் படேல், நேரு மற்றும் ஆச்சார்ய ஜே.பி. கிருபளானி ஆவார். அப்போதைய தலைவராக இருந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் பதவியில் தொடர விரும்பினார். மேலும், பல மாகாணக் குழுக்கள் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பெயரைப் பரிந்துரைத்தன.


இருப்பினும், வாக்கெடுப்புக்குச் சில நாட்களுக்கு முன்பு, கிருபளானியும் பட்டேலும் தாங்கள் போட்டியிலிருந்து விலக இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் தெரிவித்தனர். இதனால் நேரு மட்டுமே ஒரே வேட்பாளராக இருந்தார்.


இருப்பினும், இந்த விலகல்களுக்குப் பின்னணியில் இருந்த கதை மிகவும் சிக்கலானது. ராஜ்மோகன் காந்தி தனது 'படேல்: ஒரு வாழ்க்கை' (Patel: A Life) என்ற நூலில் பதிவு செய்துள்ளபடி, ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் காந்தி தனது விருப்பம் நேரு தான் என்பதை தனிப்பட்ட முறையில் தெளிவுபடுத்தியிருந்தார். ஆசாத் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படக்கூடும் என்று ஒரு செய்தித்தாள் குறிப்பிட்டபோது, ​​காந்தி மௌலானாவுக்குக் கடிதம் எழுதி, அவர் மற்றொரு முறை பதவியில் நீடிப்பதில் தனக்கிருந்த கவலைகளைத் தெரிவித்தார்.


காந்தியின் விருப்பங்களைப் பின்பற்றும் விதமாக, கிருபளானி ஒரு செயற்குழுக் கூட்டத்தில் நேருவின் பெயரைப் பரிந்துரைத்தார். படேல் உட்பட அனைத்து உறுப்பினர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டனர். பின்னர், கிருபளானி தனது சொந்தப் பெயரைப் போட்டியிலிருந்து விலக்கிக்கொண்டதுடன், படேலுக்காக ஒரு விலகல் கடிதத்தை எழுதினார்.


படேல் அந்த குறிப்பை காந்தியிடம் காட்டினார். காந்திக்குத் தெளிவான விருப்பம் இருந்தபோதிலும், எந்த மாகாணக் குழுவும் நேருவை ஆதரிக்காததால், அவர் பதவி விலக ஒரு வாய்ப்பை நேருவுக்கு வழங்கினார். நேரு அப்போது அமைதியாக இருந்தார்; அந்த அமைதி, இரண்டாவது முறை பதவி ஏற்பதில் உள்ள விருப்பமின்மையாகப் புரிந்துகொள்ளப்பட்டது. பின்னர் காந்தி, விலகல் கடிதத்தில் கையெழுத்திடுமாறு படேலிடம் கேட்டுக்கொண்டார். அவரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கையெழுத்திட்டார்.


— நேரு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு மாதம் கழித்து, இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு மாகாண ஆளுநர் நேருவை அழைத்தார். நேருவின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் Michael Brecher : காந்தி தலையிடாமல் இருந்திருந்தால், படேல் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்திருப்பார் என்று குறிப்பிட்டுள்ளார். சர்தார் படேலுக்கு கிடைக்க வேண்டிய உயர் பதவி பறிக்கப்பட்டது என்றும், அது தன்னை மிகவும் பாதித்ததாக Michael Breche கூறினார்.


ஒரு வருடத்திற்குப் பிறகு, காந்தி தனது நிலைப்பாட்டைப் வெளிப்படையாக அனைவருக்கும் விளக்கினார். ஆங்கிலேயர்களிடமிருந்து பொறுப்பு கைமாற்றப்படும் இந்த நேரத்தில், ஜவஹர்லாலுக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிக்க முடியாது என்று காந்தி கூறினார். Harrow மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் படித்தவரும், வழக்கறிஞருமான நேரு, ஆங்கிலேய தலைமைத்துவத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மிகவும் பொருத்தமானவர் என்று காந்தி நம்பினார்.


உங்களுக்குத் தெரியுமா:


 1942ஆம் ஆண்டில் கிரிப்ஸ் தூதுக்குழு தொடங்கி, காலனித்துவ அதிகாரிகள் இந்தியாவில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.


1946ஆம் ஆண்டில், ஆங்கிலேய பிரதமர் Clement Attlee அனுப்பிய கேபினட் தூதுக் குழுவின் திட்டங்களின்படி அரசியலமைப்புச் சபைக்கான தேர்தல்கள் நடைபெற்றன. நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சபையில் பெரும்பான்மை பெற்றது. முஸ்லிம் லீக் தனது முஸ்லிம் வாக்காளர்களிடையே ஆதரவை வலுப்படுத்தியது.


 மாகாண ஆளுநர் Wavell பின்னர் இந்திய பிரதிநிதிகளை இடைக்கால அரசாங்கத்தில் சேர அழைப்பு விடுத்தார்.


1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின் கீழ் ஒரு கூட்டாட்சி முறை திட்டமிடப்பட்டது. இருப்பினும், இந்தியாவின் சுதேச அரசுகள் இதை எதிர்த்ததால், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, இடைக்கால அரசாங்கம் முந்தைய 1919ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின்படியே தொடர்ந்து செயல்பட்டது.


1946ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி, காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தை அமைத்தது. பின்னர், செப்டம்பர் 23ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் குழு, காங்கிரஸ் செயற்குழு எடுத்த முடிவை அங்கீகரித்தது.


— 1946ஆம் ஆண்டு அக்டோபர் பிறகு அமைச்சரவை பின்வருமாறு இருந்தது:


  • நிர்வாக குழுவின் துணைத் தலைவர், வெளியுறவு மற்றும் காமன்வெல்த் உறவுகள்: ஜவாஹர்லால் நேரு


  • உள்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்பு: வல்லபாய் படேல்


  • விவசாயம் மற்றும் உணவு: ராஜேந்திர பிரசாத்


  •  கல்வி மற்றும் கலைகள்: சி. ராஜகோபாலாச்சாரி


  •  பாதுகாப்பு: பால்தேவ் சிங்


  • தொழிலாளர்: ஜக்ஜீவன் ராம்


  •  ரயில்வே மற்றும் போக்குவரத்து: அசஃப் அலி


  •  பணிகள், சுரங்கங்கள் மற்றும் மின்சாரம்: சி.எச். பாபா ஆவார்.

Original link:

What is the role of the Indian National Congress in the freedom movement?


Share:

நுபி லான்: இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு புதிய மணிப்பூருக்கான அடித்தளத்தை அமைத்த ‘பெண்களின் போர்’. -அர்ஜுன் சென்குப்தா

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெள்ளிக்கிழமை அன்று மணிப்பூரில் உள்ள இம்பாலுக்குச் சென்று, 86வது நூபி லான் தினத்தைக் குறிக்கும் விதமாக நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார்.


மெய்தெய் மொழியில் "பெண்களின் போர்" என்று பொருள்படும் நூபி லான் (Nupi Lan), பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராகப் பெண்களால் முன்னெடுக்கப்பட்ட இரண்டு இயக்கங்களைக் குறிக்கிறது. ஒன்று 1908-ஆம் ஆண்டிலும் மற்றொன்று 1939-ஆம் ஆண்டிலும் நடந்தது. இந்தச் சொல் இரண்டு எழுச்சிகளையும் உள்ளடக்கிய போதிலும், இரண்டாவது இயக்கம் தொடங்கிய நாளான டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி அன்று நூபி லான் தினம் அனுசரிக்கப்படுகிறது.


இரண்டாவது நூபி லான், பிரிட்டிஷ் ஆட்சியின் போது மகாராஜாவின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மார்வாரி வர்த்தகர்களின் சுரண்டல் ஆகியவற்றுக்கு எதிராக மணிப்பூரிப் பெண்களின் போராட்டமாகத் தொடங்கியது. காலப்போக்கில், இது மணிப்பூரில் அரசியலமைப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களைக் கோரும் ஒரு பரந்த இயக்கமாக வளர்ந்தது.


வரலாற்றாசிரியர் சணமணி யம்பம் (Sanamani Yambem) 1976ஆம் ஆண்டில் Economic and Political Weekly இதழில் எழுதிய ஒரு கட்டுரையில், இந்த இயக்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு புதிய மணிப்பூர் உருவாவதற்கான அடித்தளத்தை அமைக்க உதவியது என்று குறிப்பிட்டார்.


கீழே கொடுக்கப்பட்டுள்ளது இரண்டாவது நூபி லானின் சுருக்கமான வரலாறு ஆகும்.


மணிப்பூரிகள், மார்வாடிகள் மற்றும் அரிசி அரசியல்


மணிப்பூரி மக்கள் அரிசியை அதிகம் விரும்பி உண்பவர்களாக இருந்தாலும், வளமான இம்பால் பள்ளத்தாக்கு மட்டுமே நெல் பயிரிட ஏற்றதாக இருந்தது. காலனித்துவ காலத்திற்கு முன்னர் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. ஏனெனில், மணிப்பூரில் உற்பத்தி செய்யப்பட்ட பெரும்பாலான அரிசி உள்ளூரிலேயே பயன்படுத்தப்பட்டது.


1891-ஆம் ஆண்டில் பிரிட்டிஷார் அந்த ராஜ்யத்தைக் கைப்பற்றிய பிறகு, அதிக அளவிலான அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. இது பெரும்பாலும் அந்தப் பள்ளத்தாக்கில் பற்றாக்குறையையும் விலை உயர்வையும் ஏற்படுத்தியது. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், மாட்டு வண்டிகளுக்குப் பதிலாக மோட்டார் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டபோது ஏற்றுமதி மேலும் அதிகரித்தது. இந்த அதிகரித்து வந்த தேவை முக்கியமாக பிரிட்டிஷ் நிர்வாகத்திடமிருந்தும், வடகிழக்கு எல்லையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ராணுவத்திடமிருந்தும் வந்தது.


இந்த வணிகத்தில் பெரும்பாலானவை, பிரிட்டிஷாருடன் வந்த மார்வாரி வணிகர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. 1930ஆம் ஆண்டுகளில், ஏற்றுமதி செய்யப்படும் அரிசிக்கான வண்டி வரியில் (Cart Tax) அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது. மேலும், அவர்கள் விவசாயிகளிடமிருந்து மகாராஜாவுக்குச் செலுத்தியதைவிட மிக அதிக விகிதத்தில் வரிகளை வசூலித்தனர். இது அரிசி ஏற்றுமதிக்கு எதிரான எதிர்ப்பு வலுவடைய வழிவகுத்தது.


யம்பெம், தான் எழுதிய  ‘Nupi Lan: Manipur Womens Agitation, 1939’ என்ற நூலில் குறிப்பிட்டது போல, 1921 மற்றும் 1939-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அரிசி சாகுபடி பரப்பு வெறும் 18,838 ஏக்கர் மட்டுமே அதிகரித்தது. அதேசமயம், அரிசி ஏற்றுமதி 2,92,174 மவுண்டுகளாக (சுமார் 37 கிலோ) உயர்ந்தது. இது 1938-ஆம் ஆண்டில் 3,72,174 மவுண்டுகள் என்ற மிக அதிகபட்ச அளவை எட்டியது என்கின்றனர். 


மோசமான அறுவடை & பரிதாபமற்ற முடியாட்சி 


1939-ஆம் ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் பெய்த அதிகப்படியான மழையானது மணிப்பூரின் ஆரம்பகால நெல் பயிரை மோசமாக சேதப்படுத்தியது, அதே சமயம் நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட ஆலங்கட்டி மழையானது பிந்தைய பயிரை அழித்தது. முந்தைய ஆண்டு சாதனை அளவிலான ஏற்றுமதி காரணமாக, எந்தவிதமான சேமிப்பு இருப்பும் (buffer stock) இல்லாததால், இந்த மாநிலத்தின் பயன்பாட்டுக்கு எதுவும் இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. 


மகாராஜாவின் நிர்வாகத்தில் இருந்த பல அதிகாரிகள் அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்க விரும்பினாலும், இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பிறகு வடகிழக்கில் இருந்த பிரிட்டிஷ் இந்தியப் படைகளுக்கு உணவு தேவைப்பட்டதால், பிரிட்டிஷ் அரசியல் முகவர் இந்த நடவடிக்கையை எதிர்த்தார். மார்வாரி வணிகர்கள் மற்றும் பிரிட்டிஷ் முகவரின் அழுத்தத்தின்கீழ், மகாராஜா சூராசந்திர சிங் (Churachandra Singh) அந்த முடிவுவை ஏற்றுக்கொண்டார். ஒரு குறுகிய 40 நாள் தடைக்குப் பிறகு, நவம்பர் மாதம் 21-ஆம் தேதி அரிசி ஏற்றுமதி மீண்டும் தொடங்கியது.


மகாராஜாவின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மார்வாரி வணிகர்களின் தடையற்ற சுரண்டல் ஆகியவற்றின் மீது ஏற்கனவே கோபத்தில் இருந்த மக்களிடையே, இந்த முடிவு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பற்றாக்குறை நிலைமையானது முழுவதும் பரவி, அரிசி விலை உயர்ந்ததால், பள்ளத்தாக்கில்  பஞ்சம் போன்ற நிலைமைகள் உருவாயின. இது ஒரு பெரிய அளவிலான மக்கள் எழுச்சிக்கு காரணமாக அமைந்தது என்கின்றனர்.


பெண்களால் வழிநடத்தப்பட்ட ஒரு மக்கள் இயக்கம்


மணிப்பூரின் வேளாண் பொருளாதாரத்தில், குறிப்பாக உள்ளூர் சந்தைகளில் அரிசி மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்வதன் மூலம், பெண்கள் எப்போதும் வணிகத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். அரிசி பற்றாக்குறையாகி, இருப்பில் இருந்த இருப்புக்கள் "வெளியாட்களால்" வாங்கப்பட்டபோது, பெண்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.


டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி, சுமார் 50 முதல் 60 பெண் வர்த்தகர்கள் இம்பாலின் வரலாற்றுச் சிறப்புமிக்க க்வைராம்பந்த் பஜார் (Khwairamband Bazar) (தற்போது இமா சந்தை அல்லது "தாய்மார்களின் சந்தை" என்று அறியப்படுகிறது) பகுதிக்குச் சென்றனர். ஆனால், அங்கு வாங்குவதற்கோ அல்லது விற்பதற்கோ அரிசி இல்லை என்பதைக் கண்டறிந்தனர். அவர்கள் அடுத்த நாள் ஒரு போராட்டத்தைத் தொடங்க முடிவு செய்தனர். மேலும், இந்தச் செய்தி வேகமாகப் பரவியது.


டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி, ஆயிரக்கணக்கான பெண்கள் நிர்வாக அலுவலகத்திற்கு அருகில் கூடி, அரிசி ஏற்றுமதிக்கு உடனடியாகத் தடை விதிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் பிரிட்டிஷ் அதிகாரி டி. ஏ. ஷார்ப் மற்றும் பிற அதிகாரிகளைத் தந்தி அலுவலகத்தில் பிணை வைத்தனர்.


நிர்வாகம் வன்முறையைக் கையாளத் தீர்மானித்தது. சிறைபிடிக்கப்பட்ட அதிகாரிகளை விடுவிக்க அசாம் ரைபிள்ஸ் படையின் ஒரு குழு அனுப்பப்பட்டது. ஆனால் இது, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை மேலும் தீவிரமானவர்களாக மட்டுமே மாற்றியது. பெண் போராட்டக்காரர்களுக்கும் பிரிட்டிஷ் படைவீரர்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்தபோது, “வந்தே மாதரம்” என்ற கோஷங்கள் ஒலித்தன.


டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், நூபி லான் (Nupi Lan) மணிப்பூரி சமூகத்தில் ஒரு வலுவான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பெண்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக க்வைராம்பந்த் பஜாரை (Khwairamband Bazar) புறக்கணித்தனர். மேலும், சுரண்டல் மிகுந்த மார்வாரி வணிகர்களுக்கு எதிராகப் போராடுவதில் தங்கள் கவனத்தைத் திருப்பினர். முந்தைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட நிர்வாகம், பெண்கள் தலைமையிலான போராட்டங்களைக் கையாள்வதில் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட்டது.


அக்காலத்திய அரசியல் முகவராக இருந்த கிறிஸ்டோபர் கிம்சன் (Christopher Gimson) என்பவர், பொருளாதார நெருக்கடி அல்லது அரசியல் குழப்பம் ஆகியவை மீண்டும் ஒருமுறை மணிப்பூரிப் பெண்களை வேறு வகையான போராட்ட வடிவங்களைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது என்றும், அவர்கள் முன்னரும் அவ்வாறு செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.


புதிய மணிப்பூருக்கான அடித்தளத்தை அமைத்தல்


1891-ஆம் ஆண்டு முதல், மகாராஜா மீது பெரும் ஆதிக்கம் செலுத்திய ஒரு அரசியல் முகவர் மூலம் ஆங்கிலேயர்கள் மணிப்பூரை ஆட்சி செய்தனர். மக்கள் இந்த அமைப்பை வெறுக்கத் தொடங்கினர்: இது 1938 ஆம் ஆண்டு முதல் நிர்வாக மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கான வளர்ந்து வரும் இயக்கத்திற்கு வழிவகுத்தது.


இருப்பினும், நூபி லான் (Nupi Lan) இயக்கமே நிலைமையை உச்சத்திற்குக் கொண்டு சென்றது: ஆரம்பத்தில் அரிசி ஏற்றுமதியை முடிவுக்குக் கொண்டு வரக்கோரி போராட்டக்காரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்; பின்னர், நிர்வாக அமைப்பை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் என்ற இலட்சியக் கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.


1941-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஜப்பானியப் படையெடுப்பு அச்சுறுத்தல், பெண்கள் இயக்கம் உட்பட மற்ற அனைத்துப் பிரச்சினைகளையும் பின்னுக்குத் தள்ளியது. இருப்பினும், போருக்குப் பிந்தைய மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய ஒரு புதிய மணிப்பூருக்கான அடித்தளம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டது. யம்பேம் குறிப்பிட்டது போல, இந்த மாற்ற காலகட்டத்திற்குத் தலைமை தாங்கியவர்கள் மணிப்பூரின் பெண்களே ஆவர்.

Original link:

Nupi Lan: The ‘Women’s War’ that laid ground for a new Manipur after World War II


Share: