சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கு சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் (BLO) முக்கியத்துவம் குறித்து . . . -திலீப் பி சந்திரன்

வாக்காளர் பட்டியல்களின் தற்போதைய சிறப்புத் தீவிரத் திருத்தம் (Special Intensive Revision (SIR)) மற்றும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து மக்களவையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், சிறப்புத் திருத்தத்திற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆணையை மற்றும் இந்தியாவின் தேர்தல் அமைப்பில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் (BLO) பங்கையும் பற்றி தெரிந்து கொள்வோம்.


அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவிருக்கும் பல மாநிலங்களில் தற்போதைய சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும் நேரத்தைக் கேள்விக்குள்ளாக்கியதுடன், இலவசங்கள், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு உள்ள பாதுகாப்பு மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officers (BLO)) மீதான அழுத்தம் ஆகியவை தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த தீவிரமான மக்களவை விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்ட முக்கியப் பிரச்சினைகளாகும்.


சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) நடவடிக்கையின் நோக்கம் வாக்காளர்களை 'நீக்குவது' மற்றும் 'அவர்களை உறுதிப்படுத்தாமல் இருப்பது' என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர். இதற்குப் பதிலளித்த ஆளும் தரப்பு, தேர்தல்களை நியாயமாக நடத்துவதற்காக வாக்காளர் பட்டியல்களைத் தூய்மைப்படுத்த இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு (ECI) அரசியலமைப்புச் சட்டத்தின்படி அதிகாரம் உள்ளது என்று கூறி, இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது.


சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கு சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) ஏன் முக்கியமானது என்பதைப் பார்ப்போம். வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவதற்கான அதிகாரத்தை இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவையும் நாம் ஆராய்வோம். மிக முக்கியமாக, வாக்காளர் பட்டியல்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்வதில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வகிக்கும் முக்கியப் பங்கையும் நாம் காண்போம்.


சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறதா?


இந்தியத் தேர்தல் ஆணையம், நகல் மற்றும் சட்டவிரோத வாக்காளர் பதிவுகளை நீக்குவதற்காக சிறப்புத் தீவிரத் திருத்தத்தை மேற்கொள்கிறது. இந்த ஆண்டு நவம்பரில் பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பு இந்த நடவடிக்கை முதன்முதலில் செய்யப்பட்டது. இப்போது, ​​ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் தொடங்கி, இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது.


அரசியலமைப்பின் 324(1)-வது பிரிவு, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு (ECI) வாக்காளர் பட்டியல் தயாரிப்பைக் கண்காணிக்கும், வழிநடத்தும் மற்றும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை வழங்குகிறது. குறிப்பாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1950-ன் (Representation of the People Act) பிரிவு 21(2) ஆனது, "தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும், பதிவுசெய்யப்பட்ட காரணங்களுக்காக, எந்தவொரு தொகுதிக்கும் அல்லது அதன் பகுதிக்கும், அது பொருத்தமானதாகக் கருதும் விதத்தில், வாக்காளர் பட்டியலின் சிறப்புத் திருத்தத்திற்கு உத்தரவிடலாம்" என்று கூறுகிறது.


மக்களவை விவாதத்தின்போது, ​​ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பினரும் நியாயமான தேர்தல்களுக்குத் துல்லியமான வாக்காளர் பட்டியல்கள் அவசியம் என்பதை ஒப்புக்கொண்டனர். இருப்பினும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டதன் பின்னணியில் உள்ள நோக்கங்கள் மற்றும் அது செயல்படுத்தப்பட்டவிதம் குறித்து அவர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.


இருப்பினும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வாக்காளர் பட்டியலில் இருந்து ஊடுருவல்காரர்களைக் கண்டறிந்து அகற்றுவதே சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் நோக்கம் என்று கூறினார். அரசாங்கத்தின் அணுகுமுறையை அவர் ‘கண்டறிதல் (Detect), நீக்குதல் (Delete) மற்றும் நாடு கடத்துதல் (Deport)’ என்ற DDD விதிமுறைகள் மூலம் விளக்கினார்.


அதன்பின்னர், சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) குறித்த விவாதம் தேர்தல் சீர்திருத்தங்கள், இந்தியத் தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் அனுபவிக்கும் முழுமையான சட்ட விலக்கு, வாக்குச்சாவடிகளின் சிசிடிவி காட்சிகளுக்கான அணுகல், தேர்தல் ஆணையத்தின் ஒட்டுமொத்த பொறுப்புணர்வு, வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டமைப்பு போன்ற பரந்த விவாதமாக விரிவடைந்தது.


அடிப்படை நிலை ஈடுபாட்டின் மூலம் வாக்காளர் பட்டியல்களை வலுப்படுத்துதல்


மேலும், சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்காக நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து செய்திகள் வந்துள்ளன. இறந்தவர்களின் உறவினர்கள், நிர்ணயிக்கப்பட்ட மற்றும் சமாளிக்க முடியாத காலக்கெடுவிற்குள் தரவு சேகரிப்பு மற்றும் அதை மின்னணுமயமாக்கும் பணிகளை முடிக்க, உயர் அதிகாரிகள் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLO) மீது அழுத்தம் கொடுத்ததாகவும், இது கடுமையான பணிச்சுமை அழுத்தத்திற்கு வழிவகுத்ததாகவும் கூறினர்.


இந்தத் துயரச் சம்பவங்கள் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து பரவலான விவாதங்களைத் தூண்டின. வாக்காளர் பட்டியல் எவ்வாறு தூய்மைப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது என்பது குறித்தும் அவை பொதுமக்களிடையே கவலைகளை எழுப்பின. இந்த நிகழ்வுகள் நீதித்துறை ஆய்விற்கும் வழிவகுத்தன. உச்சநீதிமன்றம் தலையிட்டபிறகு, இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI), நடைபெற்றுவரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் வாக்காளர்கள் கணக்கெடுப்புப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து, வாக்காளர் பட்டியல் வெளியீட்டுத் தேதியை அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.


இந்தச் சம்பவம், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கான ஒரு அத்தியாவசிய முன்நிபந்தனையான வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையைப் பேணுவதன் அடிப்படை முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் பிரிவு 13B, ஒவ்வொரு தொகுதிக்குமான தேர்தல் பதிவு அதிகாரிக்கு (Electoral Registration Officer (ERO)) வாக்காளர் பட்டியலைத் தயாரித்து திருத்துவதற்கான அதிகாரத்தை வழங்குகிறது. இந்தச் செயல்பாட்டைச் செய்யும்போது, ​​தேர்தல் பதிவு அதிகாரி, வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதற்கும் திருத்துவதற்கும் தகுதியான நபர்களைப் பணியமர்த்தலாம். இந்தச் சட்டப்பூர்வ ஏற்பாடு வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளை (BLO) நியமிக்க வழிவகுக்கிறது.


ஒரு வாக்குச்சாவடி நிலை அதிகாரி (BLO) உள்ளூர் மட்டத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) பிரதிநிதியாகச் செயல்படுகிறார். மேலும், வாக்காளர் பட்டியல் குறித்த நம்பகமான களத் தகவல்களைச் சேகரிப்பதற்குப் பொறுப்பானவர் ஆவர். உள்ளூர் வாக்காளர்களுடன் நன்கு அறிமுகமான வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLO), வாக்காளர் பதிவு, திருத்தம் மற்றும் சரிபார்ப்பு போன்ற விஷயங்களில் வாக்காளர்களுக்கு அவர்களின் வீட்டுவாசலிலேயே வழிகாட்டிகளாகச் செயல்படுகின்றனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் பகுதியை கவனமாகப் படிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் அடிக்கடி களத்திற்குச் சென்று உள்ளூர் வாக்காளர்களுடன் உரையாட வேண்டும்.


சிறப்புத் தீவிரத் திருத்தம் மற்றும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளின் (BLO) முக்கியத்துவம்


வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் திருத்துவதில் உதவுவதைத் தவிர, வாக்காளர் சீட்டுகளை விநியோகித்தல், வாக்குச்சாவடிகளில் உதவி வழங்குதல், தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பயன்பாடுகளைப் பிரபலப்படுத்துதல், தகுதியுள்ள வாக்காளர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டு விருப்பம் குறித்துத் தெரிவித்தல் மற்றும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் திட்டங்களை வாக்காளர்களின் வீட்டு வாசலில் விளம்பரப்படுத்துதல் போன்ற பிற கடமைகளும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு (BLO) ஒதுக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளின் (BLO) மற்ற முக்கிய செயல்பாடுகள் பின்வருமாறு,


  • உண்மையில் இல்லாத அல்லது சட்டவிரோதமான வாக்காளர்களைக் கண்டறிதல்


  • வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதில் அல்லது நீக்குவதில் உள்ள பிழைகளைச் சரிபார்த்தல்


  • தேர்தல் பதிவு அதிகாரிக்கு (Electoral Registration Officer (ERO)) அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்


  • வாக்காளர்களிடமிருந்து கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைப் பெறுதல்


  • முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு (Systematic Voters’ Education and Electoral Participation (SVEEP)) திட்டத்தின் ஒரு பகுதியாக வாக்காளர் கல்வியை வழங்குதல்


வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் (Booth Level Agents (BLA)) ஒருங்கிணைத்தல்


வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLO) முழுநேரத் தேர்தல் அதிகாரிகள் இல்லாவிட்டாலும், அவர்கள் வாக்காளர் பட்டியலைத் தொடர்ந்து திருத்துவதிலும், சரிபார்ப்பதிலும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இதன் மூலம், வாக்காளர் பட்டியல் பிழையின்றிப் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருப்பதை உறுதி செய்கின்றனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் (SIR) போது, ​​வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளின் (BLO) இந்தப் பங்கு குறிப்பாகத் தெளிவாகத் தெரிகிறது. வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையை ஆரம்பத்திலேயே உறுதி செய்வதன் மூலம், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முழு தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மைக்கு நேரடியாக பங்களிக்கின்றனர்.


சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கு வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஏன் அவசியமானவர்கள்?


தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அட்டவணைக்கு முன்பே தேர்தல் செயல்முறை தொடங்குகிறது. தேவைப்படும்போது தொகுதிகளை மறுவரையறை செய்தல், வாக்காளர் பட்டியல்களைத் தவறாமல் புதுப்பித்தல் மற்றும் திருத்துதல் ஆகியவை இந்தத் தயாரிப்புகளில் அடங்கும். உண்மையான வாக்குப்பதிவு செயல்முறையானது, தேர்தல் ஆணையம் பெரும்பாலும் ஒரு செய்தியாளர் சந்திப்பின் மூலம் தேர்தல் அட்டவணையை அறிவிப்பதில் தொடங்குகிறது, இது உடனடியாக நடத்தை விதிகளை (model code of conduct (MCC)) அமலுக்குக் கொண்டுவருகிறது.


அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டவுடன், வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தேர்தல் அதிகாரிடம் சமர்ப்பிக்கலாம். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களைச் சரிபார்க்கும் பொறுப்பும் அவரிடமே உள்ளது. வேட்பாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் எழுத்துப்பூர்வ அறிவிப்பைச் சமர்ப்பித்து தங்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறவும் அனுமதிக்கப்படுகிறார்கள். போட்டியிடும் வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்ய கணிசமான நேரம் வழங்கப்படுகிறது. பிரச்சாரத்தின்போது, ​​அவர்கள் தேர்தல் நடத்தை விதிகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.


வாக்குப்பதிவு முடிந்ததும், தேர்தல் அதிகாரிகளின் மேற்பார்வையின்கீழ் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் அதிகாரிகள் முடிவுகளை அறிவித்து, வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. ஏதேனும் சர்ச்சைகள் ஏற்பட்டால், வேட்பாளர்கள் தேர்தல் மனுவைத் தாக்கல் செய்வதன் மூலம் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தை அணுகலாம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, ஊழல் நடைமுறைகள், தேர்தல் குற்றங்கள் மற்றும் தேர்தல் மனுக்கள் மூலம் கிடைக்கும் தீர்வுகள் ஆகியவற்றை நிர்வகிக்கும் ஒரு விரிவான கட்டமைப்பையும் வழங்குகிறது.

தேர்தல் செயல்முறையின் ஒவ்வொரு கட்டமும் அரசியலமைப்பு உணர்வு, கொள்கைகள் மற்றும் சட்டப்பூர்வ விதிகளின்படி நடத்தப்படுவதை உறுதிசெய்வதில் கள அளவிலான அதிகாரிகள் மற்றும் பரந்த நிர்வாக அமைப்பு ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்வதற்கு, தேர்தலுக்கான தயாரிப்புப் பணிகள் வாக்குப்பதிவைப் போலவே முக்கியம். எனவே, தேர்தல்களை குறிப்பிட்டகால இடைவெளியில் நடைபெறும் நிகழ்வுகளாக மட்டும் பார்க்க முடியாது. அவை பல அடுக்கு நடைமுறைகளை உள்ளடக்கிய ஒரு தொடர்ச்சியான நிர்வாக மற்றும் நிறுவனச் செயல்முறையைக் குறிக்கின்றன. இதற்குத் தொடர்ச்சியான கவனமும் ஒருங்கிணைந்த நிர்வாக முயற்சிகளும் தேவைப்படுகின்றன. தேர்தல் அமைப்பின் அடிமட்ட அளவில் பணியாற்றும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLO), வாக்காளர் பட்டியல்களின் துல்லியத்தை உறுதி செய்வதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இதன் மூலம், அவர்கள் இந்தியாவின் தேர்தல் அமைப்பின் ஒருமைப்பாட்டிற்கு ஆதரவளிக்கும் அடிப்படைத் தூண்களில் ஒன்றாகத் திகழ்கின்றனர்.


திலீப் பி சந்திரன், கேரளாவின் சாலக்குடியில் உள்ள பி எம் அரசு கல்லூரியின் அரசியல் அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராக உள்ளார்.

Original link:

Significance of SIR and BLOs for free and fair elections


Share:

வல்லபாய் படேலின் நினைவு நாள் : அவர் எப்படி 'சர்தார்' ஆனார்?, பள்ளியில் அவர் ஏற்பாடு செய்த 'புறக்கணிப்பு', மற்றும் பல குறித்து… -யாஷி

சர்தார் வல்லபாய் படேல் நினைவு நாள் : ஆரம்பத்திலிருந்தே, சர்தார் படேல் தனது அரசியல் வாழ்க்கையை வரையறுக்கும் குணங்களைக் காட்டினார். இரும்பு போன்ற மன உறுதி, கொள்கைகளின் மீது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, மற்றும் விதிவிலக்கான அமைப்புத் திறன்களையும் பெற்றிருந்தார். இதை விளக்கும் மூன்று சம்பவங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினம் : டிசம்பர் 15 சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினமாகும். நவீன இந்தியாவை வடிவமைப்பதில் தீர்க்கமான பங்கு வகித்த தலைவர் அவர்.


பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டபடி, படேல் “நாட்டை ஒரே நூலில் இணைப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். பிளவுபடாத மற்றும் வலிமையான பாரதத்தை உருவாக்குவதில் அவர் ஆற்றிய நிகரற்ற பங்களிப்பை நன்றியுள்ள தேசம் ஒருபோதும் மறக்காது.”


சுதந்திரத்திற்குப் பிறகு சுதேச மாகாணங்களை இந்தியாவுடன் இணைப்பதில் சர்தார் வல்லபாய் படேலின் பங்கு நன்கு அறியப்பட்டிருந்தாலும், அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில் பரவலாக அறியப்படாத பல ஊக்கமளிக்கும் சம்பவங்கள் உள்ளன. தனது வாழ்க்கையின் சிறு வயதிலிருந்தே, ஒரு மாணவராகவும் பின்னர் ஒரு வழக்கறிஞராகவும், சர்தார் படேல் பிற்காலத்தில் அவரது அரசியல் வாழ்க்கையை வடிவமைத்த குணங்களை வெளிப்படுத்தினார். இரும்பு போன்ற மன உறுதி, கொள்கைகளின் மீது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, மற்றும் நிகரற்ற அமைப்புத் திறன்களையும் பெற்றிருந்தார்.


சுதந்திரப் போராட்டத்தின் மற்ற இரண்டு மாபெரும் தலைவர்களான மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவைப் போலல்லாமல், சர்தார் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஏராளமான சொற்பொழிவுகளையும், கடிதங்களையும் விட்டுச் செல்லவில்லை. அவரது செயல்களின் மூலமாகவே படேலைப் பற்றிய தெளிவான சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. மேலும், அவரது வாழ்க்கையிலிருந்து வரும் பின்வரும் மூன்று நிகழ்வுகள் அவரது மிக முக்கியமான குணங்களில் சிலவற்றை எடுத்துக்காட்டுகின்றன.


வல்லபாய் படேல் எப்படி 'சர்தார்' பட்டத்தைப் பெற்றார்?


1926-ல், குஜராத்தின் பர்தோலி பகுதியில் சில ஆண்டுகளாகப் பயிர் விளைச்சல் குறைவாக இருந்தபோதிலும், பிரிட்டிஷ் அரசாங்கம் வரிகளை உயர்த்தியது. விவசாயிகள் வரிகளைச் செலுத்த மறுத்து ஒரு சத்தியாகிரகத்தைத் திட்டமிட்டனர். இந்த இயக்கத்திற்குப் படேல் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அவர் அப்பகுதியை துணைப் பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் தன்னார்வலர்களை நியமித்து, அதைத் திறமையாக ஏற்பாடு செய்தார். பிரிட்டிஷார் போராட்டக்காரர்களை ஒடுக்கி, அவர்களின் சொத்துக்களை ஏலம் விட முயன்றபோது, ​​ஏலத்தில் பங்கேற்க மிகச் சிலரே வந்தனர்.


இறுதியில், வரிகள் குறைக்கப்பட்டன. படேலின் தலைமைத்துவமும் அமைப்புத் திறன்களும் பெரிதும் பாராட்டப்பட்டன. மேலும், அவருக்கு 'சர்தார்' (Sardar) என்ற பட்டம் வழங்கப்பட்டது. பெரும்பாலான குறிப்புகள் மகாத்மா காந்திதான் அவரை முதலில் சர்தார் என்று அழைத்தார் என்று கூறினாலும், மற்றவர்கள் வழக்கறிஞர் கே.எஃப். நரிமானுக்கு அந்தப் பெருமையைக் கொடுக்கிறார்கள். 



சர்தார் படேல் குறித்த டைம் இதழின் அட்டைப்படம்


ஜனவரி 1947-ல், டைம் இதழ் சர்தார் படேலை தனது அட்டைப்படத்தில் வெளியிட்டது. அந்தக் கட்டுரையின் தலைப்பு எளிமையாக, “தலைவர்” (The Boss) என்று இருந்தது.


இந்தக் கட்டுரை மெலும் குறிப்பிட்டதாவது, “படேலுக்குத் தன்னை ஒரு துறவி என்றோ, சிறந்த பேச்சாளர் என்றோ, அல்லது ஒரு மதவெறியர் என்றோ காட்டிக்கொள்ளும் பாசாங்கு இல்லை என்று கூறியது. அமெரிக்கச் சொற்களில் சொல்வதானால், அவர் ஒரு அரசியல் தலைவர் (Political Boss) ஆவார். செல்வந்தர்களான இந்து மற்றும் பார்சி தொழிலதிபர்கள் (சர்தார் படேலின் மகனின் முதலாளியான சி.எச். பாபா, அப்போதுதான் பணிகள், சுரங்கங்கள் மற்றும் மின்சாரத் துறை அமைச்சராகப் பதவியேற்றவர் போன்றோர்) பெரும் தேர்தல் நிதித் தொகையை அவர் கைகளில் வழங்கினர். அவர்களின் பணம், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மற்றும் தொடர்ச்சியான முயற்சியைப் பயன்படுத்தி, படேல் இந்தியாவின் அனைத்து சிக்கல்களையும் பாதிக்கும் ஒரு அமைப்பை உருவாக்கினார். ஒவ்வொரு போராட்டத்திலும் அவரது நோக்கம் ஒன்றாகவே இருந்தது. அவை ”இந்தியாவுக்கான அதிகாரம்” ஆகும்.


படேல் முதன்முதலில் ஏற்பாடு செய்த இயக்கம் ஒரு மாணவர் கிளர்ச்சி (student revolt) என்றும் டைம் கட்டுரை குறிப்பிட்டது. பென்சில்கள் மற்றும் காகிதங்களில் நியாயமற்ற முறையில் லாபம் ஈட்டியதாக அவர் குற்றம் சாட்டிய ஒரு ஆசிரியரை அவர் எதிர்த்தார்.


வரலாற்றாசிரியர் ராஜ்மோகன் காந்தி இதைத் தனது ”படேல்: ஒரு வாழ்க்கை” (Patel: A Life) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் படேலின் பள்ளி நாட்களில், வல்லபாய் ஒரு மாணவர் புறக்கணிப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்த பிறகு, மற்றொரு ஆசிரியர் நோட்டுப் புத்தகங்களையும் பென்சில்களையும் சட்டவிரோதமாக விற்பதை நிறுத்த வேண்டியிருந்தது என்று அவர் கூறுகிறார்.


அவர் தனக்குப் பதிலாகத் தன் சகோதரரை இங்கிலாந்துக்கு அனுப்பியது எப்போது?


இளைஞராக இருந்தபோது, ​​வல்லபாய் சட்டம் படிப்பதற்காக இங்கிலாந்து செல்ல வேண்டும் என்று கனவு கண்டார். அவர் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கியபோது, ​​இந்தக் கனவை அடைவதற்காகத் தன்னால் முடிந்த ஒவ்வொரு பைசாவையும் சேமித்தார். இருப்பினும், கடைசி நேரத்தில், அவருடைய அனைத்து ஆவணங்களும் தயாராக இருந்தபோது, ​​அவரும் ஒரு வழக்கறிஞராக இருந்ததும், அவருடைய பெயரின் முதல் எழுத்துக்களும் VJ படேல் என்று இருந்தவருமான அவருடைய மூத்த சகோதரர் வித்தல்பாய், தானே வெளிநாடு செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார். தயக்கமின்றி, வல்லபாய் தன் மூத்த சகோதரரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். மேலும், அவர் படிக்கும்போது அவருடைய செலவுகளையும் தானே ஏற்றுக்கொள்வது என்று முடிவு செய்தார்.


இந்தச் சம்பவம் குறித்து வல்லபாய் 1921-ல் குறிப்பிட்டதாவது, “என் மூத்த சகோதரர் என்னிடம், “முதலில் நான் இங்கிலாந்து போகிறேன். நான் திரும்பி வந்த பிறகு, உனக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆனால் நீ சென்ற பிறகு என்னால் செல்ல முடியாது’ என்றார்.” வல்லபாய் தனது சகோதரர் முடிவெடுக்கப் பதினைந்து நாட்கள் அவகாசம் கொடுத்தார். பதினைந்தாவது நாளில், அவரது சகோதரர் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார்.


அந்தப் பதினைந்து நாட்கள் வித்தல்பாய் தனது இறுதி முடிவை எடுப்பதற்காக வழங்கப்பட்டது. காந்தி தனது புத்தகத்தில், வித்தல்பாய் இங்கிலாந்து சென்ற பிறகு, “வழக்கமான 36 மாதங்களுக்குப் பதிலாக 30 மாதங்களில் தனது படிப்பை முடித்தார். இறுதித் தேர்வில், அவர் முதல் வகுப்பில் முதல் இடத்தைப் பிடித்து, ஆறு மாத காலச் சலுகையுடன் 50 பவுண்டுகள் பரிசையும் வென்றார்” என்று எழுதுகிறார்.

Original link:

On Vallabhbhai Patel’s death anniversary: how he became ‘Sardar’, the ‘boycott’ he organised in school, and more


Share:

விபி-ஜி ராம் ஜி மசோதா மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை (MGNREGA) அழித்து, கிராமப்புற இந்தியாவின் வேலை செய்யும் உரிமையை பலவீனப்படுத்துகிறது -நிகில் டே மற்றும் அருணா ராய்

இந்த மசோதா முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தில் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) பல சிக்கல்கள் இருந்தபோதிலும், அது கிராமப்புற இந்தியாவிற்குச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளது. மேலும், பொருளாதார நெருக்கடி காலங்களில் இந்தியாவிற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்துள்ளது. இது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGA) தற்போதைய கட்டமைப்புக்குள்ளேயே பல மேம்பாடுகளைச் செய்திருக்க முடியும்.


டிசம்பர் 15 அன்று, எந்தவொரு முன் ஆலோசனைமின்றி, மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை (MGNREGA) ரத்து செய்து, அதற்குப் பதிலாக வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத் திட்டம் (கிராமப்புறம்) — விபி-ஜி ராம் ஜி மசோதா-2025-ஐ (Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin), or the VB-G RAM G Bill) அறிமுகப்படுத்த திட்டமிட்டது. உண்மையில், இந்த மசோதா இரண்டு தனித்தனி சட்டங்களாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், MGNREGA மற்றும் விபி-ஜி ராம் ஜி திட்டம் ஆகியவை அவற்றின் நோக்கம் மற்றும் குறிக்கோளின் அடிப்படையில் வேறுபட்டவை.


இந்த மசோதா, மக்கள் வேலை செய்யும் அனுமதிக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGA) அடிப்படை உரிமையை நீக்குகிறது. உண்மையில், இந்த மசோதாவில் வேலை செய்வதற்கான உரிமை என்ற அம்சமே இல்லை. இந்த மசோதாவின் நோக்கம் மற்றும் காரணங்கள், "திறனற்ற உடல் உழைப்பு வேலைகளைச் செய்ய முன்வரும் வயது வந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும் ஒவ்வொரு நிதியாண்டிலும் 125 நாட்கள் ஊதிய வேலைவாய்ப்பிற்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்குவதன் மூலம், வளர்ந்த இந்தியா @2047 (Viksit Bharat @2047) என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு இணையாக ஒரு கிராமப்புற மேம்பாட்டுக் கட்டமைப்பை நிறுவுவதற்கான ஒரு மசோதா" என்று கூறப்பட்டிருந்தாலும், இது உண்மைக்குப் புறம்பானது.


இருப்பினும், ஜி ராம் ஜி மசோதா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் வழங்கிய முக்கிய உத்தரவாதங்களை பலவீனப்படுத்துகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) மத்திய அரசால் நிதியளிக்கப்படும், தேவைக்கேற்ப செயல்படுத்தப்படும் வேலைவாய்ப்புத் திட்டமாகும். இது இந்தியாவின் ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும் 100 நாட்கள் வேலைக்கு உத்தரவாதம் அளித்தது. இந்த மசோதா MGNREGA மற்றும் அதன் சட்டப்பூர்வ உத்தரவாதங்களை ரத்து செய்து, அதற்குப் பதிலாக எந்த உத்தரவாதங்களையும் வழங்காத ஒரு மத்திய அரசுத் திட்டத்தைக் கொண்டுவருகிறது. இது உண்மையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) முந்தைய காலத்தில் கட்டமைக்கப்பட்ட திட்டமான,  ஜவஹர் ரோஜ்கார் யோஜனா (Jawahar Rozgar Yojana(JRY)) மற்றும் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (Employment Assurance Scheme) போன்ற திட்டங்கள் கிராமப்புற வேலைவாய்ப்பு "உறுதி" என்ற பெயரை மட்டுமே கொண்டிருந்தன. மேலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 10 நாட்களுக்கும் குறைவான வேலைவாய்ப்பையே வழங்கின.

முன்மொழியப்பட்ட சட்டத்தில் உள்ள நான்கு பிரிவுகளே, சட்டப்பூர்வ உத்தரவாதம் என்று கூறப்படுவது எவ்வளவு தவறாக வழிநடத்துகிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. இந்த மசோதாவின் முக்கிய சட்டப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகளை ஆராய்ந்து, அவற்றின் உண்மையானத் தாக்கங்களைப் புரிந்துகொள்வது அவசியம். 


முதலாவதாக, மசோதாவின் பிரிவு 4(5) குறிப்பிடுவதாவது, “மத்திய அரசால் பரிந்துரைக்கப்படக்கூடிய புறநிலை அளவுகோல்களின் அடிப்படையில், ஒவ்வொரு நிதியாண்டுக்கும் மாநில வாரியான திட்ட ஒதுக்கீட்டை மத்திய அரசு நிர்ணயிக்கும்.” இது சட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு 100 நாட்கள் வேலைக்கு உத்தரவாதம் அளித்த, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGA) என்பது அடிமட்டத்திலிருந்து தொடங்கப்பட்ட, தேவை அடிப்படையிலான வேலைவாய்ப்புத் திட்டமாக இருந்தது. இந்த அணுகுமுறை இப்போது ஒதுக்கீட்டின் அடிப்படையிலான திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசும் அதன் அதிகாரத்துவ அமைப்பும், ஒதுக்கீட்டின் அளவை மாற்றுவதற்கும் நிர்ணயிப்பதற்கும் முழு சுதந்திரம் பெற்றுள்ளன. அதற்கான விதிமுறைகளும் காரணங்களும் உண்மையில் மத்திய அரசாலேயே பரிந்துரைக்கப்படுகின்றன.


இரண்டாவதாக, இந்த மசோதாவின் பிரிவு 5 (1) கிராமப்புற இந்தியா முழுவதும் வேலை செய்வதற்கான உலகளாவிய உரிமை என்ற கருத்தை தகர்க்கிறது. இந்த மசோதா குறிப்பிட்டதாவது, “வேறுவிதமாக வழங்கப்பட்டாலன்றி, மத்திய அரசால் அறிவிக்கப்படக்கூடிய மாநிலத்தில் உள்ள கிராமப்புறப் பகுதிகளில், திறனற்ற உடல் உழைப்பு வேலை செய்ய (unskilled manual work) முன்வரும் வயது வந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும், இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட திட்டத்தின்படி, ஒரு நிதியாண்டில் 125 நாட்களுக்குக் குறையாத உத்தரவாத வேலைவாய்ப்பை மாநில அரசு வழங்கும்.” இதன் மூலம், இந்தத் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்படும் நாட்டின் சில பகுதிகளில் மட்டுமே செயல்படுத்தப்படும் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அந்தப் பகுதிகளில்கூட, மத்திய அரசின் விதிமுறைகளின்படி 125 நாட்கள் வேலை வழங்குவதற்கு மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, உத்தரவாதமளிக்கப்பட்ட வேலை நாட்களை 100-லிருந்து 125 நாட்களாக அதிகரிப்பது என்பது ஒரு வெற்று வாக்குறுதியாகும். ஏனெனில், வேலைக்கான தேவையைப் பூர்த்தி செய்யத் தவறிய நிதி ஒதுக்கீடுகளால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் நிதி நெருக்கடிக்கு உள்ளானது. இதன் விளைவாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தாலேயேகூட ஒரு வருடத்திற்கு சுமார் 50-55 நாட்கள் வேலைவாய்ப்பை மட்டுமே வழங்க முடிந்தது.


மூன்றாவதாக, கிராமப்புற வேலையின்மை மற்றும் துயரத்தைக் குறைக்கும் பொருட்டு, மாநிலங்கள் ஒரு வேலைவாய்ப்புத் திட்டத்தை நடத்துவதற்குத் தங்களின் சொந்த வளங்களைப் பயன்படுத்தி, மிகவும் பரவலான மற்றும் வலுவான ஒரு வேலைவாய்ப்புத் திட்டத்தை நடத்த முடிவு செய்தால், மாநிலங்களால் செலவிடப்படும் எந்தவொரு பணமும் மத்திய அரசால் தீர்மானிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும். பிரிவு 4(6) குறிப்பிடுவதாவது, “ஒரு மாநிலம் தனது அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டிற்கு அப்பால் செய்யும் எந்தவொரு செலவும் மாநில அரசாங்கத்தால் ஏற்கப்பட வேண்டும் என்றும், இது மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட முறை மற்றும் நடைமுறையின்படி செய்யப்பட வேண்டும் என்றும் அது கூறுகிறது”.


புதிய சட்டத்தின் கீழ் உள்ள திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாததாக மாற்றக்கூடிய ஒரு நான்காவது அம்சம், பிரிவு 22 (2)-இல் உள்ளது. அது, “இது, மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையேயான நிதிப் பகிர்வு முறை 60:40 ஆக இருக்கும்” என்று கூறுகிறது. இது வடகிழக்கு மாநிலங்கள், மலை மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு இந்த விகிதம் 90:10 ஆக இருக்கும் என்று குறிப்பிடுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGA) பிரிவு 22-ன் கீழ், மத்திய அரசு தொழிலாளர் செலவில் 100 சதவீதமும் (இதன் மூலம் ஒரு தேசிய வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை உறுதி செய்தது) மற்றும் மூலப்பொருட்களுக்கான செலவில் 75 சதவீதமும் வழங்கியது. இதன் விளைவாக, மொத்தச் செலவில் மத்திய அரசின் பங்கு குறைந்தபட்சம் 90 சதவீதமாக இருந்தது. மேலும், நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டால், வேலையின்மை நிலைகள் மற்றும் நிதிப் பற்றாக்குறையால் ஊதியப் பணம் வழங்குவதில் தாமதம் ஏற்படும்போது, ​​அதற்கான இழப்பீட்டிற்கும் மத்திய அரசே பொறுப்பாக இருந்தது. புதிய ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ், அனைத்துக் கட்டுப்பாடுகளும் மத்திய அரசிடம் இருக்கும் ஒரு திட்டத்திற்கு நிதியளிக்க 40 சதவீதத்தை வழங்க மாநிலங்கள் விரும்புமா என்பது மிகவும் சந்தேகத்திற்குரியது. எல்லா சாத்தியக்கூறுகளின்படியும், இந்த மசோதாவின் நோக்கம் மற்றும் காரணங்களில் கூறப்பட்டுள்ளபடி, "வளமிக்க மற்றும் மீள்திறன் கொண்ட கிராமப்புற இந்தியாவிற்கான அதிகாரம், வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் முழுமையான செயலாக்கம்" ஆகியவற்றை நோக்கிய வேலைவாய்ப்பு உத்தரவாதங்கள் மக்களை ஈர்க்காமலும், போதுமான மத்திய நிதி இல்லாததாலும் இத்திட்டம் ஒரு தோல்வியடைந்த திட்டமாகிவிடும்.


இந்த மசோதா முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டும். கிராமப்புற மக்களுக்கு இதை மிகவும் கவர்ச்சிகரமானதாகவோ அல்லது பயனுள்ளதாக்குவதற்கோ இதில் "சீர்திருத்தம்" என்ற பெயரில் எதுவும் வழங்காது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பல சிக்கல்கள் இருந்தன. இருப்பினும், இந்த சிக்கல்களில் பெரும்பாலானவை மோசமான செயல்படுத்தலால் ஏற்படுகின்றன. இந்த சிக்கல்கள் இருந்தபோதிலும், MGNREGA கிராமப்புற இந்தியாவுக்கு நன்றாக சேவை செய்துள்ளது. மேலும், பொருளாதார நெருக்கடி காலங்களில் இந்தியாவிற்கு மிகவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளது. காலநிலை நெருக்கடியை நிவர்த்தி செய்யவும், சிறந்த நீர் மற்றும் வள மேலாண்மைக்கும் இந்தியாவிற்கு உதவவும், அதன் தற்போதுள்ள கட்டமைப்புக்குள்ளேயே பலவற்றை வலுப்படுத்தியிருக்க முடியும். 


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) என்பது, 'ஒவ்வொரு கைக்கும் வேலை கொடுங்கள், ஒவ்வொரு வேலைக்கு முழு ஊதியம் கொடுங்கள்' என்ற பிரபலமான முழக்கத்துடன் கொண்டுவரப்பட்ட ஒரு மக்கள் சட்டம் ஆகும். இது 100 நாட்களுக்கும் மேலான வேலைக்கான உரிமைகளை வழங்கியது, கிராமப்புற நிர்வாகத்தை சீர்திருத்த உதவியது. மேலும், மக்கள் தங்கள் வேலைக்கான உரிமையைப் போராடிப் பெறுவதற்கு அதிகாரம் அளிக்கும் குறைந்தது 10 உரிமைகளை வழங்கியது. திட்டச் செயலாக்கத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் சமூகத் தணிக்கைகள் தொடர்பான விதிகளைத் தவிர, இந்தச் சட்டம் MGNREGA-வின் பெரும்பாலான உரிமைகளை பலவீனப்படுத்துகிறது. இதில் பரவலாக்கப்பட்ட திட்டமிடல் நீர்த்துப்போகச் செய்யப்படுவதும் அடங்கும். குறிப்பிடும்படி, நோக்கங்கள் மற்றும் காரணங்களிலும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இலக்குகளை ஜி ராம் ஜி மூலம் ஒருபோதும் அடைய முடியாது. உண்மையில், அந்த நோக்கங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டுமானால், இந்த மசோதா திரும்பப் பெறப்பட வேண்டும். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) மேம்படுத்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்துடன் 125 நாட்களாக உயர்த்தப்பட வேண்டும். அப்போதுதான், ஒவ்வொரு இந்தியனின் மிகவும் நியாயமான கோரிக்கையான, “ஒவ்வொரு கையும் வேலை பெறுவது, மற்றும் அனைத்து வேலையும் நியாயமான கூலி பெறுவது” என்ற இலக்கை நாம் நெருங்க முடியும். எந்தவொரு மசோதாவும் அந்த லட்சியத்தை அடக்கிவிட முடியாது என்பதை அரசியல் அமைப்பு இதை அங்கீகரிக்க வேண்டும்.


2005-ம் ஆண்டில், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருமித்த ஆதரவால், "வேலைவாய்ப்பு உத்தரவாதம் வாழ்க - ரோஜ்கார் உத்தரவாதம் ஜிந்தாபாத்" என்ற முழக்கங்களுக்கு மத்தியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட (MGNREGA) சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பதை ஆளும் கட்சிக்கு நினைவூட்டுவது பொருத்தமானது. இந்தச் சட்டத்தை இரகசியமாக ரத்து செய்ய பாஜக மேற்கொள்ளும் முயற்சி, உழைப்பின் கண்ணியத்திற்குச் செய்யப்படும் துரோகம் மட்டுமல்ல, ஜனநாயக ஒருமித்த கருத்தை உருவாக்கும் அடிப்படைக் கொள்கைகளையும் இது பலவீனப்படுத்துகிறது.


கட்டுரையாளர்கள் சமூக ஆர்வலர்கள். அவர்கள் மஸ்தூர் கிசான் சக்தி சங்கத்தின் (MKSS) நிறுவன உறுப்பினர்கள் ஆவர்.

Original link:


VB-G RAM G Bill annihilates MGNREGA and undermines rural India’s right to work


Share:

பிரதம மந்திரி பேராசிரியர் திட்டம் -ரோஷ்ணி யாதவ்

தற்போதைய செய்தி?


புனேவில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Agharkar Research Institute (ARI)) முன்னாள் இயக்குநரும், IIT பம்பாயில் புகழ்பெற்ற வருகைப் பேராசிரியருமான புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் கிஷோர் எம் பக்னிகர், இந்திய அரசின் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (Anusandhan National Research Foundation (ANRF)) நிறுவிய பிரதமர் பேராசிரியர் திட்டத்தின் முதல் பயனாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டாக்டர் பக்னிகர் புனேயில் உள்ள COEP தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்குப் பணியாற்றுவார். இந்தச் சூழலில், பிரதம மந்திரி பேராசிரியர் பதவி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம், மேலும் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் பிற திட்டங்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. பிரதம மந்திரி பேராசிரியர் திட்டம் (Prime Minister Professorship) என்பது ஒரு புதிய தேசிய முன்னெடுப்புத் திட்டமாகும். இது வலுவான கற்பித்தல் அடித்தளங்களைக் கொண்ட, ஆனால் நீடித்த ஆராய்ச்சித் தலைமை தேவைப்படும் பல்கலைக்கழகங்களில், அதிக அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளை நியமிப்பதன் மூலம் இந்தியாவின் ஆராய்ச்சிச் சூழலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


2. பிரதம மந்திரி பேராசிரியர் திட்டம், மாதம் ஒன்றுக்கு ரூ. 2,50,000/- தொகையாக உதவித்தொகை வழங்கும், அதனுடன் ஆண்டொன்றுக்கு ரூ. 24,00,000/- ஆய்வு மானியமும், ஆண்டொன்றுக்கு ரூ. 1,00,000/- மேல்நிதி செலவும் ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.


3. பாரம்பரிய உதவித்தொகைத் திட்டங்கள் தனிப்பட்ட ஆராய்ச்சியை முதன்மையாக ஆதரிப்பதற்குப் பதிலாக, பிரதம மந்திரி பேராசிரியர் திட்டத்தின் மூலம் சாதனை படைத்த மற்றும் ஓய்வு பெற்றிருந்தாலும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானிகள், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள், வலுவான ஆராய்ச்சி சூழல் இல்லாத பல்கலைக்கழகங்களுக்குள் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறார்கள்.


4. இந்த நியமனங்கள் நிறுவனத்திற்கு முழு நேர இடமாற்றத்தையும் ஐந்து ஆண்டுகள் வரை உறுதிப்பாட்டையும் உள்ளடக்கியது. பேராசிரியர் பாக்னிகர் இந்த தேசிய முன்னெடுப்பின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் நியமிக்கப்பட்ட 21 பேராசிரியர்களில் ஒருவராவார்.


5. டாக்டர் பக்னிகர் நுண்ணுயிரியல் மற்றும் நானோ தொழில்நுட்பத்தில் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அனைவராலும் அறியப்படுகிறார். குறிப்பாக, சுற்றுச்சூழல் உயிரி தொழில்நுட்பம், நானோ பொருட்கள் மற்றும் மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார். நீண்ட மற்றும் புகழ்பெற்ற வாழ்க்கையில், அவர் அடிப்படை அறிவியலை தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைத்து, இளம் விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டுவதிலும் ஆராய்ச்சிக் குழுக்களை உருவாக்குவதில் டாக்டர் பக்னிகர் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.


6. குறிப்பிடத்தக்க வகையில், இந்தியாவின் உயர்கல்வி ஆராய்ச்சி நிலப்பரப்பில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதில் பிரதம மந்திரி பேராசிரியர் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு சிறிய எண்ணிக்கையிலான உயரடுக்கு நிறுவனங்களைத் தாண்டி, உயர்தர ஆராய்ச்சியை பரவலாக அணுகக்கூடியதாக மாற்ற முடியும்.


பிரதம மந்திரி பேராசிரியர் திட்ட பதவிக்கான தகுதி அளவுகோல்கள்


1. புகழ்பெற்ற இந்திய நிறுவனங்கள், ஆராய்ச்சி ஆய்வகங்கள் அல்லது தனியார் நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற்ற அல்லது ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அல்லது விஞ்ஞானிகளாக இருக்க வேண்டும்.


2. வெளிநாட்டு விஞ்ஞானிகள் அதாவது, வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI), இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டு நபர்கள் (Non-Resident Indians (NRIs)), மற்றும் இந்தியாவின் வெளிநாட்டு குடிமக்களாக (Overseas Citizens of India (OCIs)) இருக்க வேண்டும்.


3. தொழில்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் அல்லது ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தில் சிறப்பான சாதனை படைத்த அனுபவமிக்க செயல்முறைப் பேராசிரியர்களாக இருக்க வேண்டும்.


4. விண்ணப்பதாரர்கள் வலுவான ஆராய்ச்சிச் சான்றுகளைக் கொண்டிருக்க வேண்டும், ஆராய்ச்சி மற்றும் புதுமை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும். மேலும், ஆராய்ச்சி மற்றும் புதுமை இன்னும் ஆரம்ப நிலையில் இருக்கும் தகுதியான நிறுவனங்களில் ஆசிரியர்களுக்கு வழிகாட்டுவதற்கான வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும்.


5. ஓய்வுபெற்ற அல்லது பணிநிறைவு பெற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் அல்லது விஞ்ஞானிகள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 55 வயதுடைய தொழில்துறை மற்றும் சர்வதேச மூத்த வல்லுநர்கள் விண்ணப்பிக்கலாம்.


அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (Anusandhan National Research Foundation (ANRF))


1. கணித அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பூமி அறிவியல், சுகாதாரம் மற்றும் வேளாண்மை, மனிதநேயம் மற்றும் சமூக அறிவியலின் ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்ப’ இடைமுகங்கள் உள்ளிட்ட இயற்கை அறிவியல் துறைகளில் ஆராய்ச்சி, புதுமை மற்றும் தொழில்முனைவோருக்கான உயர்மட்ட உத்திகளை வழங்குவதற்காக அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை சட்டம், 2023 மூலம் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.


2. இந்தியாவின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள் முழுவதும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கும் ஆராய்ச்சி மற்றும் புதுமை கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.


3. தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளின்படி, நாட்டில் அறிவியல் ஆராய்ச்சிக்கு உயர்மட்ட ராஜதந்திர வழிகாட்டுதலை வழங்குவதற்கான ஒரு அமைப்பாக அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) செயல்படுகிறது. அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையானது தொழில் துறை, கல்வித்துறை, மற்றும் அரசுத் துறைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்புகளை உருவாக்குகிறது.


பிற அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (Anusandhan National Research Foundation (ANRF)) திட்டங்கள்


1. உயர் தாக்கப் பகுதிகளில் முன்னேற்றத்திற்கான (Mission for Advancement in High-Impact Areas (MAHA)) திட்டம்: உயர் தாக்கப் பகுதிகளில் முன்னேற்றத்திற்கான திட்டத்தின்கீழ், அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனம் இலக்கு அடிப்படையிலான, தீர்வு நோக்கிய ஆராய்ச்சியை ஊக்குவிக்கிறது.


— அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை உயர் தாக்கப் பகுதிகளில் முன்னேற்ற திட்டத்தின்கீழ் புதிய முதன்மை முயற்சி அறிவியல் மற்றும் பொறியியலுக்கான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence for Science & Engineering (AI-SE)) ஆகும். இது மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology (MeitY)) மற்றும் அறிவியல் துறைகளுடன் இணைந்து தொடங்கப்பட்டது.


2. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை குறிகாட்டிகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கான சிறப்பு மையம் (Centre of Excellence for Science, Technology and Innovation Indicators and Analytics (COE-STIIA)): நாடு ஒரு வளர்ந்த, அறிவு சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி முன்னேறும்போது, ​​அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை (Science, Technology and Innovation (STI)) ஆகியவற்றின் நம்பகமான, சரியான நேரத்திலான, நுணுக்கமான குறிகாட்டிகள் மற்றும் அவற்றின் சூழல் சார்ந்த பகுப்பாய்வு ஆகியவை, பல நிலைகளிலும் துறைகளிலும் கொள்கை உருவாக்கம், ராஜதந்திரத் திட்டமிடல் மற்றும் திறமையான நிர்வாகத்திற்கு ஒரு உத்தி முக்கியமானதாகுகிறது. இந்தச் சூழலில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் குறிகாட்டிகளுக்கான நிறுவன வழிமுறையை ஒரு முழுமையான அமைப்புடன் வலுப்படுத்தும் நோக்குடன், அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஆனது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் குறிகாட்டிகள் மற்றும் பகுப்பாய்வுக்கான ஒரு சிறப்பு மையத்தை (COE-STIIA) நிறுவத் திட்டமிட்டுள்ளது.


— இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை (Science, Technology and Innovation (STI)) குறிகாட்டிகளின் தரம், சூழல் பொருத்தம் மற்றும் பொருந்தக்கூடிய தன்மையை மேம்படுத்துதல், அவற்றின் பகுப்பாய்வு, விளக்கங்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் தகவல் மற்றும் நுண்ணறிவுகளைப் பரப்புதல், அத்துடன் சர்வதேச குறியீடுகளில் இந்தியாவை திறம்பட நிலைநிறுத்த உலகளாவிய குறிகாட்டி கட்டமைப்புகளுடன் சீரமைப்பை வளர்ப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.


3. MAHA-MedTech நோக்கம்: இது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் Gates அறக்கட்டளையுடன் இணைந்து அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை எடுத்த ஒரு முன்முயற்சி திட்டமாகும்.


உயர்தரமான, மலிவு விலையிலான மற்றும் புதுமையான மருத்துவத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதையும் விற்பனை செய்வதையும் ஆதரிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கூடுதலாக, சுயசார்பை மேம்படுத்துவதற்கும், இந்திய மக்களுக்காக (குறைந்த வளங்களைக் கொண்ட சூழல்களுக்கு) ஏற்றவாறு மாற்றியமைப்பதற்கும், அதிக முக்கியத்துவம் வாய்ந்த, அதிக செலவுள்ள, இறக்குமதி செய்யப்படும் மருத்துவத் தொழில்நுட்பங்களின் உள்நாட்டு மேம்பாட்டை வளர்ப்பதற்கான முயற்சிகள் இந்த திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

Original link:

Prime Minister Professorship.


Share:

“சஹ்யோக் (Sahyog)” இணையதளம் என்றால் என்ன? அதன் நோக்கம் என்ன? -ரோஷ்னி யாதவ்

முக்கிய அம்சங்கள்:


இந்தக் காலகட்டத்தில், சஹயோக் செயல்படத் தொடங்கிய பிறகு வந்த முதல் ஆண்டாகும். முதல் முறையாக, இந்த சர்ச்சைக்குரிய இணையதளம் இந்தியாவின் வளர்ந்து ரும் இணையத் தணிக்கை அமைப்பில் ஒரு முக்கிய கருவியாக விரைவாக மாறியுள்ளது என்பதை எண்ணிக்கை காட்டுகிறது. இந்த உத்தரவுகள், இணையத்தில் ஆட்சேபனைக்குரிய அல்லது சட்டவிரோதமான பதிவுகள் அல்லது முழு கணக்குகள் உட்பட, பரந்த அளவிலான இணைய இணைப்புகளை உள்ளடக்கியுள்ளன.


Sahyog இணையதளத்திற்குப் பொறுப்பான உள்துறை அமைச்சகத்தின் இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தால் (Indian Cybercrime Coordination Centre (I4C)) பகிரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத் தரவுகளின்படி, மெட்டா நிறுவனத்தின் இணைய சேவைகளான வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை, ஓராண்டு காலத்தில் அனுப்பப்பட்ட மொத்த 2,312 முடக்க உத்தரவுகளில் 78 சதவீதத்திற்கும் அதிகமானவற்றைப் பெற்றுள்ளன.


வாட்ஸ்அப் அதிகபட்சமாக 1,392 முடக்க உத்தரவுகளைப் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் 255 உத்தரவுகளையும், இன்ஸ்டாகிராம் 169 உத்தரவுகளையும் பெற்றுள்ளன. மொத்தத்தில், இந்த தளங்கள் 1,816 முடக்க உத்தரவுகளைப் பெற்றுள்ளன.


118-க்கும் மேற்பட்ட இணையத் தளங்கள் சஹயோக் திட்டத்தில் இணைந்துள்ளதாக இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், அதிக எண்ணிக்கையிலான தளங்கள் உள்ளடக்கத்தை நீக்குவது தொடர்பான அரசாங்க உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. இந்தத் தடுப்பு உத்தரவுகள் ஒன்றிய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகளிடமிருந்து வந்தன.

— அறிவிப்புகள் வடிவில் வெளியிடப்படும் இந்த முடக்க உத்தரவுகள், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் பிரிவு 79(3)(b)-ன் கீழ் அனுப்பப்படுகின்றன. இந்தப் பிரிவின்கீழ், இணையத் தளங்கள் அரசாங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்ட உள்ளடக்கத்திற்கான அணுகலைத் தடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அவை தங்களின் சட்டப் பாதுகாப்பை இழக்க நேரிடும். இந்தச் சட்டப் பாதுகாப்பு அம்சங்கள், பயனர்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை வழங்குவதிலிருந்து சமூக ஊடக தளங்களுக்கு சட்டப்பூர்வ விலக்கு அளிக்கின்றன.


— இந்த உத்தரவுகள் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69(A)-ன் கீழ் வருவதில்லை. இந்த பிரிவு பொதுவாக இணையத் தள தணிக்கை உத்தரவுகளை வழங்கப் பயன்படுத்தப்பட்டாலும், இது தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான குற்றங்களுக்கு மட்டுமே வரம்பிடப்பட்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?

— Sahyog இணையதளம் அக்டோபர் 2024-ல், அரசு முகமைகள் பிரிவு 79(3)(b)-ன் கீழ் முடக்க உத்தரவுகளை வழங்குவதற்கான ஒற்றைச் சாளர தளமாகச் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. இந்தத் தளம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, அத்தகைய உத்தரவுகளை முகமைகள் மின்னஞ்சல் வழியாக தனிப்பட்ட இணையத் தளங்களுக்கு நேரடியாக அனுப்ப வேண்டியிருந்தது. 


— இந்த ஆண்டின் தொடக்கத்தில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79(3)(b)-ன் கீழ் அனுப்பப்பட்ட முடக்க உத்தரவுகளுக்கு எதிராக “X” நிறுவனம் அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்தது. ஒன்றிய அரசு ஒரு 'இணையான' உள்ளடக்கத் தடுப்பு முறையை நிறுவ முயற்சிப்பதாக வாதிட்டதுடன், Sahyog தளத்தை ஒரு "தணிக்கை இணையதளம்" என்றும் குறிப்பிட்டிருந்தது. செப்டம்பரில், இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஒன்றிய அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து “X”  நிறுவனம் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.


— அக்டோபரில், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பிரிவு 79(3)(b)-ன் கீழ் முடக்க உத்தரவுகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் மட்டுமே பிறப்பிக்க முடியும் என்று குறிப்பிடும் வகையில் தகவல் தொழில்நுட்ப விதிகளைத் திருத்தியதுடன், மாதாந்திர ஆய்வுகள் போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்களையும் உருவாக்கியது.


Original link:

Share:

நீதிமன்றங்கள் பேச்சுரிமையைக் கட்டுப்படுத்தாமல், பாதுகாக்க வேண்டும். -காளீஸ்வரம் ராஜ் மற்றும் துளசி கே.ராஜ்

பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியையும், அது உச்சநீதிமன்றத்திலிருந்தே வந்தாலும் கூட கவனமாக ஆராய வேண்டும்.


எந்தவொரு ஜனநாயகத்திற்கும் பேச்சு சுதந்திரம் மிக முக்கியமானது. பேச்சுரிமைக்கு எதிரான தாக்குதல்கள் பொதுவாக அரசு அல்லது சட்டமன்றத்திடமிருந்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், ரன்வீர் அல்லாபாடியா vs இந்திய ஒன்றியம் உள்ளிட்ட வழக்குகளில் இந்திய உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகள், பேச்சு சுதந்திரத்திற்கு ஆபத்து நீதிமன்றத்திலிருந்தும் வரலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் 27-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு, இணையதள உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்த சுய-ஒழுங்குமுறை அமைப்புகள் போதாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடுநிலையான, தன்னாட்சி கொண்ட அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. மேலும், அரசு வரைவு ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


தற்போதுள்ள சட்டங்களும் விதிமுறைகளும்


இந்தியாவில் ஏற்கனவே உள்ள சட்டங்கள் பல வகையான பேச்சுகளை ஒழுங்குபடுத்துகின்றன. ஆபாச உள்ளடக்கத்தை தண்டிப்பதற்கு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 மற்றும் பாரதிய குற்றவியல் சன்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita (BNS)) பிரிவுகள் 294, 295, 296 ஆகியவை உள்ளன. இணையம் தொடர்பான குற்றங்களுக்கு: பிரிவு 66: ஹேக்கிங் போன்ற கணினிக் குற்றங்களைத் தடுக்கிறது. பிரிவு 66E: மற்றவர்களின் தனிப்பட்ட புகைப்படங்களை அனுமதியின்றி வெளியிடுவதைத் தடுக்கிறது. பிரிவு 66F: இணையப் பயங்கரவாதத்தைத் தண்டிக்கிறது. மேலும், 2021-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகள் (இடைத்தரகர் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள்) இணையதளங்களுக்கு விதிகளை வகுத்துள்ளன, ஆனால் அவை மிகக் கடுமையானவை என்று விமர்சனம் உள்ளது.


இந்த விதிகளுக்கு ஏற்கனவே ஒன்றிய அரசின் மேற்பார்வை அமைப்பு உள்ளது. இது முன்கூட்டியே உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதியையும் (prior restraint) கொண்டுள்ளது. உதாரணமாக, விதிகளின் பிற்சேர்க்கையில் உள்ள பிரிவு II(c)-ன்படி, எந்தவொரு இன அல்லது மதக் குழுவின் செயல்கள், நம்பிக்கைகள், நடைமுறைகள் அல்லது கருத்துகள் பற்றி பதிப்பாளர்கள் “தகுந்த எச்சரிக்கை மற்றும் விவேகத்துடன்” செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும், இந்த விதிகள் இருந்தாலும், பேச்சு சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்தும் எந்த முயற்சியையும் — குறிப்பாக நீதிமன்றம் அதை முன்மொழிந்தாலும் — மிகவும் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. 


முக்கிய கவலை வழக்கின் வகை தொடர்பானது. ஆபாசமான அல்லது தகாதப் பதிவுகளை இணையதளங்களில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. அவர்கள் தங்களுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரியிருந்தனர். இந்த வழக்கின் நோக்கம் இணையதளப் பதிவுகளை முறைமைப்படுத்துவதாக இல்லை என்று கூறப்படுகிறது. 


இருப்பினும், கடந்த மார்ச் மாதம் 3-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு நடந்த முந்தைய விசாரணையில், “நமது சமூகத்தின் அறியப்பட்ட தார்மீக தரங்களுக்கு

எதிரான” ஒளிபரப்பைத் தடுக்க என்ன ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தேவை என்பதை ஆராய்வதற்காக வழக்கின் நோக்கத்தை விரிவுபடுத்துவதாக நீதிமன்றம் கூறியது. இந்த விரிவாக்கம் ஆரம்பத்தில் சிக்கலான ஒன்று என்றும்  உள்ளடக்கம் மற்றும் ஒழுங்குமுறை தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பது பொதுவாக சட்டமன்றத்தின் பணி என்று தெரிவித்துள்ளது. “அதிகாரப் பிரிவினைக்கான கோட்பாட்டை மதிக்க வேண்டும்; நீதிமன்றங்கள் எவ்வளவு விரும்பினாலும் தீர்க்க முடியாத பல சிக்கல்கள் நாட்டில் உள்ளன என்பதை உணர வேண்டும்.” என்று 2008-ஆம் ஆண்டு காமன் காஸ் vs இந்திய ஒன்றியம் வழக்கில், நீதிமன்றம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றம் இந்தப் பணியை ஏற்கும்போது, இணைய ஊடக ஒழுங்குமுறையில் தொழில்நுட்ப நிபுணத்துவம் உள்ளிட்ட இயல்பான நிறுவன வரம்புகளால் அது கட்டுப்படுத்தப்படுகிறது. அதே வரம்புகளால் நீதிமன்றத்தின் விதிமுறை முயற்சிகளும் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 


இரண்டாவது சிக்கல், கட்டுப்பாடு மற்றும் சட்டவிரோதத் தடை ஆகியவற்றுக்கிடையிலான நுண்ணிய வேறுபாட்டைச் சார்ந்தது என்கின்றனர். சஹாரா இந்தியா வணிகநில விற்பனை கூட்டமைப்பு லிட். மற்றும் பிறர் vs இந்திய பங்குச் சந்தை மற்றும் முதலீட்டு வாரியம் (2012) (Sahara India Real Estate Corp. Ltd.& Ors. vs Securities & Exch. Board Of India & Anr., (2012)) வழக்கில், ஊடக உள்ளடக்கக் கட்டுப்பாடு தேவையா என்பதை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விரிவாக ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. 


அரசியலமைப்பிலுள்ள ஒரு கட்டமைப்பு


அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 19(2), நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநில பாதுகாப்பு, பொது ஒழுங்கு, மானநஷ்டம் போன்றவற்றை பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்தக்கூடிய காரணங்களாகப் பட்டியலிடுகிறது. 2023-ஆம் ஆண்டு கௌஷல் கிஷோர் வழக்கில், உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு தெளிவாகத் தீர்ப்பளித்தது: சட்டப்பிரிவு 19(2)-ல் குறிப்பிடப்பட்டுள்ள இந்தக் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட வேறு எந்தக் கட்டுப்பாடுகளையும் பேச்சு சுதந்திரத்தின்மீது விதிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தப் பட்டியல் முழுமையானது என்றும் மற்ற அடிப்படை உரிமைகளை மேற்கோள் காட்டியோ அல்லது உரிமைகளுக்கு இடையே முரண்பாடு

உள்ளது என்று கூறியோ கூடுதல் கட்டுப்பாடுகளை நியாயப்படுத்த முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


முந்தைய வழக்குகளில் நீதிமன்றம் பரந்த அளவிலான தடைகளை விதிப்பதைத் தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, ஆதர்ஷ் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் vs இந்திய யூனியன் (2018) வழக்கில், ஒரு வழக்கறிஞர் திரைப்படத்திற்குமுன் பொறுப்புத் தவிர்ப்பு அறிவிப்பு (disclaimer) சேர்க்க வேண்டுமென பரிந்துரைத்தபோது, நீதிமன்றம் அதை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. 


இந்த முடிவை நீதிமன்றம் எடுக்கக் கூடாது; தணிக்கை வாரியம்தான் எடுக்க வேண்டும். அதுவும் திரைப்படத் தயாரிப்பாளர் அல்லது இயக்குநரிடம் கேட்ட பிறகே தீர்மானிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


நீதிமன்றம் அரசியலமைப்பின் நடுவராகச் செயல்பட்டு, சட்டங்கள் அரசியலமைப்புக்கு உகந்தவையா என்பதைத் தீர்மானிக்கிறது. அரசியலமைப்புச் சபை விவாதங்களின்போது, பண்டிட் தாக்கூர் தாஸ் பார்கவா அவர்கள், குடிமக்களின் சுதந்திரத்தின்மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் நியாயமானவையா என்பதைத் தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் உச்சநீதிமன்றத்திடமே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தக் கொள்கை அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 19-ல் பிரதிபலிக்கிறது. எனவே, அரசியலமைப்பின்படி, நீதிமன்றங்கள் சட்டங்களை மட்டும் உருவாக்காமல், குடிமக்களின் அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் அவசியமானவையா, நியாயமானவையா என்பதையும் ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது என்று கூறப்படுகிறது. 


வெளிநாட்டில் வழக்கு


நீதிமன்றத்திடம் உணர்ச்சிகரமான ஒரு துறையில் மிகக் கடுமையான சட்டங்களைக் கொண்டுவரக் கோருவது, முன்தணிக்கை அல்லது சட்டரீதியான ஊடகத் தடை உத்தரவுகளுக்கு வழிவகுக்கும் ஆபத்து உள்ளது. பெரும்பாலான முக்கிய ஜனநாயக நாடுகள் இதற்கு எதிர்மாறாக, ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை அகற்றுவதிலும், அகற்ற உத்தரவுகளை மீறுபவர்களுக்குத் தண்டனை விதிப்பதிலும் கவனம் செலுத்துகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டம் (2022) உள்ளடக்கத்தை நீக்குவதற்கான நடைமுறைகளை வகுத்துள்ளது. ஜெர்மனியின் இணையதள ஒழுங்குமுறை அமலாக்கச் சட்டம் (2017) பேச்சுச் சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், பாதிப்புகளை ஏற்படுத்தும் உள்ளடக்கத்துக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்க உறுதியளிக்கிறது. ஐக்கிய இராச்சியத்தின் இணைய பாதுகாப்புச் சட்டம் (2023) பாதிப்புகளை ஏற்படுத்தும் உள்ளடக்கத்தை நீக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் மீறல்களுக்கு அபராதம் விதிக்கிறது. ஆஸ்திரேலியாவின் இணைய பாதுகாப்புச் சட்டம் (2021) விதிகளை மீறுபவர்களுக்குத் தண்டனை விதிக்கிறது.


    இதற்கு நேர் எதிராக, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இணைய உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள், கண்காணிப்பு மற்றும் முன்தணிக்கை ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன. ஆனால் எதிர்பாராதவிதமாக, சில ஜனநாயக நாடுகள் சர்வாதிகாரத்தை நோக்கி நகரும்போது இதே முறையைப் பின்பற்றுகின்றன. டேவிட் லாண்டோ மற்றும் ரோசாலிண்ட் டிக்சன் சொன்னது போல: “சர்வாதிகார ஆட்சிக்கு செல்ல விரும்புபவர்கள் சிலசமயம் நீதிமன்றங்களைக் கைப்பற்றி, ஜனநாயகத்தை அழிக்கும் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக அவற்றை தவறாகப் பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள்.”


நீதிமன்றம் இணைய உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை மீண்டும் மீண்டும் கோரும்போது, அதற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்போது, அது குடிமக்களின் சுதந்திரம் குறித்து தீவிரமான கவலைகளை எழுப்புகிறது. எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தணிக்கைக்கு ஆளானபோது பொருத்தமாகச் சொன்னது போல, "பேச்சு சுதந்திரம் தான் எல்லாம்; அதுவே வாழ்க்கை."


காளீஸ்வரம் ராஜ், இந்திய உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர். துளசி கே. ராஜ்,இந்திய உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர்.

 Original link:

Courts must protect, not regulate free speech 


Share: