இந்தியாவின் ரயில் போக்குவரத்தில் 41%-ஐ ஏழு வழித்தடங்கள் கையாளுகின்றன: ரயில்வே அவற்றை எவ்வாறு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது? -தீரஜ் மிஸ்ரா

 பெரும்பாலான பிரிவுகளில் ரயில்கள் கொள்ளளவைவிட அதிகமாக இயங்கும் வழித்தடங்களால் உயர்நிலைப் பாதை வலையமைப்பு உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் அத்தகைய வழித்தடங்கள் எவை, அவற்றைக் குறைக்க என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன?


மும்பை புறநகர் வழித்தடத்தின் முக்கிய விரிவாக்கமான மகாராஷ்டிராவில் உள்ள 32 கி.மீ பத்லாப்பூர்-கர்ஜத் பிரிவில் 3-வது மற்றும் 4-வது வழித்தடத்தை கட்டமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது மும்பை புறநகர் வழித்தடத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இது புறநகர் ரயில் திறனை அதிகரிக்கும். இந்தப் பிரிவு 1,238 கி.மீ நீளமுள்ள மும்பை-சென்னை உயர் அடர்த்தி வலையமைப்பில் ஒரு முக்கிய இணைப்பாகும். இது புனே, சோலாப்பூர், குண்டக்கல் மற்றும் அரக்கோணம் வழியாக மும்பையை சென்னையுடன் இணைக்கும் இந்திய ரயில்வேயின் மிகவும் பரபரப்பான பாதைகளில் இதுவும் ஒன்றாகும்.


ஏழு உயர்நிலைப் பாதை வலையமைப்பு (High Density Network (HDN)) அல்லது வழித்தடங்களிலும் கூட்டத்தைக் குறைப்பதற்கான இந்திய ரயில்வேயின் நீண்டகால முயற்சியின் ஒரு பகுதியாக, அமைச்சரவை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இவை மொத்த வலையமைப்பில் சுமார் 16% ஆகும். ஆனால், மொத்த ரயில் போக்குவரத்தில் 41 சதவீதத்தை கையாள்கிறது. இது அதிக அடர்த்தி கொண்ட இந்திய ரயில்வேயின் அடித்தளமாக உள்ளது. அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தேவைகளுடன், அதிக அடர்த்தி கொண்ட வலையமைப்பை சிறப்பாக நிர்வகிப்பது முக்கியம்.


வழித்தடங்கள்


ஏழு உயர்நிலைப் பாதை வலையமைப்பு அல்லது HDN என்பது பயணிகள்-சரக்கு வழித்தடங்களால் உருவாக்கப்படுகிறது. அங்கு பெரும்பாலான பிரிவுகளில் ரயில்கள் கொள்ளளவைவிட அதிகமாக இயங்குகின்றன. இது நெரிசல், பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களால் ஏற்படும் தாமதம் மற்றும் வலையமைப்பின் செயல்திறனை பாதிக்கிறது. இந்திய ரயில்வேயின் மொத்த 69,181 வழித்தட-கிமீ வலையமைப்பில், அதிக அடர்த்தி கொண்ட வலையமைப்பு 11,051 வழித்தட-கிமீ அல்லது மொத்தத்தில் 15.97 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இந்த பரபரப்பான வழித்தடங்கள் வெவ்வேறு கிலோமீட்டர் வரம்புகளைக் கொண்ட 237 பிரிவுகளாக மேலும் பிரிக்கப்பட்டுள்ளன.


          


"சரியான திறன் பயன்பாட்டிற்கு" (right capacity utilisation) ஒரு உலகளாவிய அளவுகோல் இல்லை என்றாலும், ரயில்களின் ஓட்டத்தை தடையின்றி வைத்திருக்க ஒரு ரயில் வலையமைப்பு அதன் மொத்த திறனில் 70-80 சதவீதத்தில் செயல்பட வேண்டும் என்று கருதப்படுகிறது.


ரயில்வே வாரியத்தின் திட்டமிடல் இயக்குநரகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, உயர்நிலைப் பாதை வலையமைப்பு (HDN) மொத்தப் பாதையில் 4.60 சதவீதம் மட்டுமே 80 சதவீதத்திற்கும் குறைவாகவே இயங்குகிறது. HDN-ன் 18.89 சதவீத திறன் பயன்பாடு (line-capacity utilisation) 80-100 சதவீதமாகவும், வலையமைப்பின் பயன்பாட்டில் 32.75 சதவீதம் 100-120 சதவீதமாகவும், 29.53 சதவீத வழித்தடம் 120-150 சதவீத பயன்பாட்டைக் கொண்டுள்ளது. மேலும், 14.11 சதவீத வலையமைப்பு 150 சதவீதத்திற்கும் அதிகமாக செயல்படுகிறது.


இந்த அறிக்கை, வழித்தடத்தில் உள்ள 237 பிரிவுகளில், 24 பிரிவுகள் (10%) மட்டுமே அவற்றின் திறனில் 80%-க்கும் குறைவாகவே பயன்படுத்துகின்றன என்பதைக் காட்டுகிறது. 41 பிரிவுகள் 80-100%-க்கும், 81 பிரிவுகள் 100-120%-க்கும், 58 பிரிவுகள் 120-150%-க்கும், 33 பிரிவுகள் அவற்றின் திறனில் 150%-க்கும் அதிகமாகப் பயன்படுத்துகின்றன.


எடுத்துக்காட்டாக, பத்லாப்பூர்-கர்ஜத்துக்குப் பிறகு வரும் மும்பை-சென்னை உயர்நிலைப் பாதையில் 28 கி.மீ. கர்ஜத்-லோனாவாலா பிரிவில், அதிகபட்ச கொள்ளளவு 40 ரயில்கள் என்றாலும், தினமும் சுமார் 67 ரயில்கள் இரண்டு வழித்தடங்களிலும் இயக்கப்படுகின்றன. இதன் விளைவாக திறன் பயன்பாடு 167 சதவீதமாக உயர்ந்தது.


இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த திறன் பயன்பாட்டுடன் ஒப்பிடும்போது உயர்நிலைப் பாதை வலையமைப்பின் இந்த புள்ளிவிவரங்கள் மிக அதிகம். 2051-ஆம் ஆண்டு வரையிலான ரயில்வேயின் திட்டமிடலை கோடிட்டுக் காட்டும் தொலைநோக்கு ஆவணமான தேசிய ரயில் திட்டத்தின்படி, மொத்த வலையமைப்பில் 45 சதவீதத்தில் இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை 70 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. 29 சதவீதம் 70-100 சதவீதத்திற்கும் இடையில் இயங்குகிறது. 25 சதவீதம் வலையமைப்பு 100-150 சதவீதத்திற்கும் இடையில் இயங்குகிறது. மேலும், ஒரு சதவீத வலையமைப்பு அதன் திறனைவிட 1.5 மடங்கு அதிகமாக அல்லது 150 சதவீதத்திற்கும் அதிகமாக ரயில்களை இயக்குகிறது.


உயர்நிலைப் பாதை வலையமைப்பின் பாதுகாப்பு


உயர்நிலைப் பாதை வலையமைப்பு நாட்டின் நான்கு பக்கங்களையும் உள்ளடக்கியது. ஏழு உயர்நிலைப் பாதை வலையமைப்புகள்: டன்குனி, அசன்சோல், தன்பாத், பிரயாக்ராஜ் மற்றும் கான்பூர் சென்ட்ரல் வழியாக 1,422-கிமீ ஹவுரா-டெல்லி; 2,039-கிமீ ஹவுரா-மும்பை வழியாக காரக்பூர், டாடாநகர், ஜார்சுகுடா, பிலாஸ்பூர், நாக்பூர், பூசாவல் மற்றும் இகத்புரி; சூரத், கோத்ரா, ரத்லாம், நாக்டா, சவாய் மாதோபூர் மற்றும் மதுரா வழியாக 1322-கிமீ மும்பை-டெல்லி; மொராதாபாத், ரோஜா, கோண்டா, கோரக்பூர், கதிஹார், நியூ ஜல்பைகுரி மற்றும் ரங்கியா வழியாக 1,876-கிமீ டெல்லி - கவுகாத்தி; மதுரா, ஜான்சி, பினா, போபால், நாக்பூர், பல்ஹர்ஷா மற்றும் விஜயவாடா வழியாக 2,037-கிமீ டெல்லி-சென்னை; பத்ரக், விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா வழியாக 1,117-கிமீ ஹவுரா-சென்னை; மற்றும் மும்பை-சென்னை வழித்தடமாகும்.


ஹவுரா-டெல்லி வழித்தடத்தில் அல்லது உயர்நிலைப் பாதை வலையமைப்பு  1-ல், 31.34 கிமீ அல்லது இரண்டு பிரிவுகளுக்கு மட்டுமே திறன் பயன்பாடு 80 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாக அறிக்கை காட்டுகிறது. இதேபோல், தங்க நாற்கர (Golden Diagonal) ரயில்பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் HDN 2 அல்லது ஹவுரா (கொல்கத்தா)-மும்பை வழித்தடத்தில், 85.2 கிமீ பாதை மொத்த ரயில் திறனில் 80 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.  

  

தங்க நாற்கரப் பாதையின் ஒரு பகுதியான உயர்நிலைப் பாதை வலையமைப்பு 3 அல்லது டெல்லி-மும்பை வழித்தடம், எந்தவொரு பாதைக்கும் 150 சதவீதத்திற்கும் அதிகமான வழித்தட திறன் பயன்பாட்டைக் கொண்டிராத இரண்டு உயர்நிலைப் பாதை வலையமைப்புகளில் ஒன்றாகும். மொத்தம் 1224-கிமீ பாதை 80 சதவீதத்திற்கும் அதிகமான திறன் பயன்பாட்டுடன் நிறைவடைந்தது. மும்பைக்கு அருகிலுள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகம் (Jawaharlal Nehru Port (JNPT)) முதல் உத்தரபிரதேசத்தின் தாத்ரி வரையிலான மேற்கத்திய அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடம் (Western Dedicated Freight Corridor (WDFC)) சரக்கு ரயில்களைக் கையாள உயர்நிலைப் பாதை வலையமைப்பு 3 வழியாக செல்கிறது.


உயர்நிலைப் பாதை வலையமைப்பு 4 அல்லது டெல்லி-குவஹாத்தி வழித்தடம் டெல்லியை வடகிழக்கு மாநிலங்களுடன் மூன்று பெருநகர நகரங்கள் வழியாக இணைக்கிறது. பயணிகளுடன், இந்த பாதை சரக்குகளுக்கான அதிக தேவையையும் காண்கிறது. இந்த வழித்தடத்தில் 96 சதவீத வழித்தட கிமீ பாதை 80 சதவீதத்திற்கும் அதிகமான வழித்தட திறன் பயன்பாட்டைக் கொண்டுள்ளது.


இதேபோல், உயர்நிலைப் பாதை வலையமைப்பு 5 அல்லது டெல்லி-சென்னை வழித்தடத்தில் கிட்டத்தட்ட 52 சதவீதமும், உயர்நிலைப் பாதை வலையமைப்பு 6 அல்லது ஹவுரா-சென்னை வழித்தடத்தில் 50 சதவீதமும், பாதை திறன் பயன்பாட்டில் 120-150 சதவீதத்துடன் நிறைவுற்றதாக உள்ளது. உயர்நிலைப் பாதை வலையமைப்பு 7 அல்லது மும்பை-சென்னை வழித்தடத்தில், 90 சதவீத ரயில்கள் அதன் மொத்த திறனில் 80-120 சதவீதம் வரை இயக்குகின்றன.


ரயில் கூட்டத்தை குறைக்கும் முயற்சிகள் (Decongestion efforts)


தற்போதைய உள்கட்டமைப்பு வசதிகளுடன், உயர்நிலைப் பாதை வலையமைப்பில் நெரிசல் மிகவும் அதிகரிக்கும் என்று தேசிய ரயில் திட்டம் மதிப்பிட்டுள்ளது. இதனால், 2051-ஆம் ஆண்டுக்குள் எந்தப் பிரிவுகளும் 100 சதவீதத்திற்கும் குறைவான திறன் பயன்பாட்டுடன் இயங்காது என்றும், 92 சதவீத வலையமைப்புகள் 150 சதவீதத்திற்கும் அதிகமான திறன் பயன்பாட்டில் இயங்காது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.


எதிர்காலத்தில், 2031-ஆம் ஆண்டுக்குள், மொத்த உயர்நிலைப் பாதை வலையமைப்பில் 50 சதவீதம் 150 சதவீதத்திற்கும் அதிகமான நெரிசலுடனும், 39 சதவீதம் 100-150 சதவீத திறனுடனும், 9 சதவீதம் அதன் திறனில் 70-100 சதவீதத்துடனும் இயங்கும் என்று ஆவணம் காட்டுகிறது.


பல நடவடிக்கைகள் ரயில்கள் சீராக இயங்க உதவுகின்றன. ஆனால், ஒரு நடைபாதையில் கூட்டத்தைக் குறைப்பதற்கான மிக முக்கியமான வழி தண்டவாளங்களை விரிவுபடுத்துவதாகும். இரட்டிப்பாக்குதல், மூன்றுமடங்கு, நான்கு மடங்காக அல்லது ஐந்து அல்லது ஆறு தண்டவாளங்களை உருவாக்குவது போன்ற கூடுதல் பாதைகளைச் சேர்ப்பதாகும்.


ரயில்வே அமைச்சகம் அதன் இரட்டிப்பாக்கத் திட்டங்களின் கீழ் பாதை விரிவாக்கத் திட்டங்களை எடுத்து வருகிறது. 2021-22ஆம் ஆண்டில் மொத்தம் 1,983 கி.மீ., 2022-23ஆம் ஆண்டில் 3,185.5 கி.மீ., 2023-24ஆம் ஆண்டில் 2,244 கி.மீ., மற்றும் 2024-25ஆம் ஆண்டில் 2,900 கி.மீ.க்கு மேல் இதுபோன்ற திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக தரவு காட்டுகிறது.


இதனுடன், நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் (dedicated freight corridors (DFCs)) முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ள மற்றும் மேற்கு பகுதியில் உள்ள பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் 96.4% நிறைவடைந்துள்ளன. இந்த இரண்டு பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் உயர்நிலைப் பாதை வலையமைப்பிலிருந்து சில சரக்குப் போக்குவரத்தை நகர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பயணிகள் ரயில்களுக்கு அதிக இடம் கிடைக்கும்.


ரயில்வே வாரியத்தின் தரவுகளின்படி, உயர்நிலைப் பாதை வலையமைப்பின் 11,051 கி.மீ நீளத்தில், 250 கி.மீ. ஒற்றை பாதை, 8,113 கி.மீ. இரட்டை பாதை, 2,040 கி.மீ. மூன்று பாதை, 625 கி.மீ. நான்கு பாதை மற்றும் 23 கி.மீ. பென்டா/ஹெக்ஸா பாதைகள் உள்ளன. இந்த வழித்தடத்தின் 250 கி.மீ.க்கும் அதிகமான பகுதி இன்னும் ஒற்றைப் பாதையாக உள்ள வகைகளில் உயர்நிலைப் பாதை வலையமைப்பின் 4-ல்  மட்டுமே உள்ளன. உயர்நிலைப் பாதை வலையமைப்பு 1, உயர்நிலைப் பாதை வலையமைப்பு 3 மற்றும் உயர்நிலைப் பாதை வலையமைப்பு 5 ஆகியவை மட்டுமே penta/hexa  பாதைகளைக் கொண்டுள்ளன. 212 கி.மீ நீளமான நான்கு மடங்கு பாதை உயர்நிலைப் பாதை வலையமைப்பு 2-ல் உள்ளது, அதைத் தொடர்ந்து உயர்நிலைப் பாதை வலையமைப்பு 1-ல் 187 கி.மீ மற்றும் உயர்நிலைப் பாதை வலையமைப்பு 3-ல் 126 கி.மீ. உள்ளன.


தேசிய ரயில் திட்டத்தின்படி, உயர்நிலைப் பாதை வலையமைப்பு 1 மற்றும் உயர்நிலைப் பாதை வலையமைப்பு 4 ஆகியவை முழு நீளத்திற்கும் மூன்று பாதையாக மேம்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதேபோல், எதிர்காலத்தில் பயணிகள் மற்றும் சரக்குத் தேவையை பூர்த்திசெய்ய உயர்நிலைப் பாதை வலையமைப்பு 2, உயர்நிலைப் பாதை வலையமைப்பு 3, உயர்நிலைப் பாதை வலையமைப்பு 6 மற்றும் உயர்நிலைப் பாதை வலையமைப்பு 7 ஆகியவற்றை முழு நீளத்திற்கும் மூன்று அல்லது நான்கு பாதைகளாக மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது.


original link:

Seven corridors handle 41% of India’s rail traffic: How Railways plans to expand them.


Share:

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 80-ல் இருந்து 90-ஆக மாறிய பயணம் : வர்த்தகம், அந்நிய நேரடி முதலீடு, மற்றும் ரிசர்வ் வங்கியின் பங்கு குறித்து… -சித்தார்த் உபாசனி

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 80-ஐக் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது மீண்டும் மற்றொரு முக்கிய அளவை எட்டியுள்ளது.


அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இந்த வாரம் 90-ஐ தொட்டது பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், இந்த மாற்றத்தின் பின்னணியில் உள்ள காரணிகள் நீண்ட காலமாக உருவாகி வருகின்றன. உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் வர்த்தக நிச்சயமற்ற தன்மையுடன், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அந்நிய செலாவணி சந்தையில் பெருமளவில் தலையிட்டது. இப்போது அந்தத் தலையீட்டைக் குறைத்ததால் ரூபாய்  மதிப்பு வேகமாகக் குறைந்தது என்கின்றனர்


உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்ட விநியோகச் சங்கிலித் தடங்கல்கள் காரணமாக, கடந்த ஜூலை மாதம் 2022-ஆம் ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு முதன்முதலில் 80-ஐத் தாண்டிய பிறகு, இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து பலவீனமடைந்து. மூன்றரை ஆண்டுகளில் 90-ஐ எட்டியுள்ளது.  இதே காலகட்டத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ((Current Account Deficit (CAD)) 2022 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இருந்த $31 பில்லியனில் இருந்து பெரிதும் குறைந்தது; சில காலாண்டுகளில் உபரியாகவும் (Surplus) மாறியது. ஆனாலும் ரூபாயின் மதிப்பீடு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே இருக்கிறது.

இந்தியா நாட்டின் நடப்புக் கணக்கு இருப்பு முக்கியமாக அதன் சரக்குகள் வர்த்தகப் பற்றாக்குறையால் (goods trade deficit) தீர்மானிக்கப்படுகிறது — இது இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்குச் செலுத்தும் தொகைக்கும், ஏற்றுமதியிலிருந்து ஈட்டும் வருவாய்க்கும் இடையேயான வித்தியாசமாகும். வரைபடம் காட்டுவதுபோல, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை சரக்குகள் வர்த்தகப் பற்றாக்குறையை மிக நெருக்கமாகப் பின்பற்றுகிறது. இவற்றுக்கு இடையேயான வித்தியாசம், இந்தியாவின் சேவைகளில் உள்ள உபரி (surplus in services) மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வீட்டிற்கு அனுப்பும் பணத்திலிருந்து (remittances) வருகிறது. ஆனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை மற்றும் வர்த்தக முன்னேற்றங்கள் ரூபாயின் தற்போதைய பலவீனத்திற்குப் பின்னால் இருக்காது என்று இருப்பினும், பேங்க் ஆஃப் அமெரிக்கா (Bank of America (BofA)) உலகளாவிய ஆராய்ச்சி அமைப்பு இந்தியா மற்றும் ஆசியான் பொருளாதார ஆய்வின் தலைவரான ராகுல் பஜோரியா, இந்தக் குறைபாடுகள் ரூபாயின் சமீபத்திய பலவீனத்திற்கு முக்கியக் காரணமாக இருக்காது என்று கூறுகிறார்.


பஜோரியா, கடந்த புதன்கிழமை அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் குறிப்பிட்டதாவது, இந்தியா தற்போது மூலதனத்தின் வெளிப்பாடு காரணமாக ஏற்பட்ட பலவீனத்தை முக்கியமாகச் சந்தித்து வருகிறது என்றும் இதற்குப் பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகள், இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் முடிவடையாமல் இருப்பது மற்றும் இது போன்ற காரணிகள் முக்கியக் காரணங்கள் என்றும் அவர் கூறினார்.


மூலதனப் பாய்ச்சல் உண்மையில் ஒரு சிக்கல்தான் : அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் (Foreign Portfolio Investors (FPIs)) 2025-ஆம் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து சுமார் 18 பில்லியன் டாலர்களை வெளியே எடுத்துள்ளனர். பங்கு அல்லாத அந்நிய நேரடி முதலீடுகளின் வரவு நேர்மறையாக இருந்தாலும், அவை அதில் பாதியளவு மட்டுமே உள்ளன என்றும் கூறப்படுகிறது. 



தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் இந்த வாரம் கூறியது போல, அந்நிய நேரடி முதலீட்டு (Foreign Direct Investment (FDI)) நிலைமை நிறைய மாறிவிட்டது.


வளர்ந்த நாடுகளில் அதிக வட்டி விகிதங்கள் இந்தியா போன்ற வளரும் சந்தைகளிலிருந்து முதலீட்டாளர்களை ஈர்க்கின்றன. மேலும், உலகளவில் உள்ளூர் உற்பத்தியை அதிகமாக்க வேண்டும் என்ற உந்துதலும் அந்நிய நேரடி முதலீட்டைக் குறைத்துள்ளது. அதே சமயம், விநியோகச் சங்கிலிகள் அதிகமாக உள்ளூர்மயமாக்கப்படுவதால், இந்திய நிறுவனங்களே இப்போது வெளிநாடுகளில் அதிக முதலீடு செய்கின்றன. ஏனெனில், வெளிநாடுகளில் பொருள்களை விற்க ஏற்றுமதி மட்டும் போதாது; அந்தச் சந்தையிலேயே உற்பத்தித் தளம் வேண்டும் என்கிற நிலை வந்துவிட்டது.



இந்த விளக்கப்படம் காட்டுவது போல, இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் முந்தைய வெளிநாட்டு முதலீடுகளைத் திரும்பப் பெறுதல் ஆகியவை 2023 முதல் வேகமாக உயர்ந்து, 2025-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 60 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளன. இது 2024-ஆம் ஆண்டின் 80 பில்லியன் டாலர்களை எட்டுவதற்கான பாதையில் உள்ளது, இதன் விளைவாக நிகர வெளிநாட்டு நேரடி முதலீடு உள்வருகை (net FDI inflow) கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலருக்கும் குறைவாக உள்ளது.


வெளிநாட்டவர்களின் பணத்தை மீண்டும் எடுத்துச் செல்வதையும் (foreign repatriations) மற்றும் இந்தியர்களின் வெளிநாட்டு முதலீடுகளையும் (Indian overseas investments) கழித்த பின்னரே நிகர அந்நிய நேரடி முதலீடு (Net FDI) கணக்கிடப்படுகிறது.


இந்த அனைத்து காரணிகளும் ரூபாயின் மதிப்பை குறைக்க அழுத்தம் கொடுக்கின்றன. இந்த வீழ்ச்சி மிகவும் வேகமாக இருப்பதாக ரிசர்வ் வங்கி (RBI) கருதினால், அது அந்நியச் செலாவணியை விற்று அதாவது அதன் விநியோகத்தை அதிகரித்து ரூபாயை வாங்குவதன் (தேவையை உயர்த்துவதன்) மூலம் பரிவர்த்தனை வீதத்தை நிலையாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. 2024-25 நிதியாண்டில், குறிப்பாக டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரான தேர்தலுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கி சுமார் 400 பில்லியன் டாலர் வரை விற்றுவிட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.


இருப்பினும், 2025-26 நிதியாண்டில் ரிசர்வ் வங்கியின் தலையீடு பெரிதும் குறைந்துவிட்டது. சஞ்சய் மல்ஹோத்ரா ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு இது தெளிவாகத் தெரிகிறது. மேலும், நிதியாண்டின் முதல்பாதியில் மொத்த அடிப்படையில் வெறும் 44 பில்லியன் டாலராகவே உள்ளது. இது ரூபாயின் மதிப்பு இழப்பை ரிசர்வ் வங்கி அதிக அளவில் பொறுத்துக்கொள்ளத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுகிறது என்று IDFC First வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் கவுரா சென் குப்தா கூறுகிறார். இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் 2026-ஆம் ஆண்டுக்குள் வந்தாலும், ரூபாயின் மதிப்பு செப்டம்பர் மாதம் 2026-ஆம் ஆண்டுக்குள் ஒரு டாலருக்கு 91 ரூபாய் வரை உயரும் என்று கவுரா சென் குப்தா எதிர்பார்க்கிறார்.

மத்திய வங்கியின் தலையீடு வெளிநாட்டு நாணயத்தை நேரடியாக விற்பனை செய்வதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அது, முன்னோக்குச் சந்தையில் (forwards market) டாலர்களை விற்பனை செய்வதன் மூலமும் ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர். இன்று விற்பதால் ஏற்படும் அதே விளைவை இது பரிவர்த்தனை விகிதத்தில் (exchange rate) ஏற்படுத்தும், ஆனால் அதன் தீர்வு ஒரு பிந்தைய, முன்னரே தீர்மானிக்கப்பட்ட தேதியில் நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது. இது மிகவும் பயனுள்ளது, ஏனெனில் இப்போதே டாலர்களை விற்பது ரூபாய் விநியோகத்தைக் குறைத்து வட்டி விகிதங்களை உயர்த்தும், இது ரிசர்வ் வங்கியின் தற்போதைய வட்டிவிகிதக் குறைப்பிற்கு முரணாக இருக்கும். முன்னோக்கு விற்பனைகள் (Forward sales) தற்போதைய ரூபாய் விநியோகத்தை பாதிக்காததால் இந்தச்  சிக்கலைத் தவிர்க்கின்றன.

"முன்னோக்குச் சந்தை" ("Forward market") என்பது எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு பொருளை அல்லது நிதிக் கருவியை வாங்க அல்லது விற்க முன்கூட்டியே விலை நிர்ணயம் செய்யப்படும் ஒரு முறைசாரா பங்குச் சந்தைக்கு வெளியே நடைபெறும் வர்த்தக (over-the-counter) சந்தையாகும்.




அக்டோபர் மாத இறுதியில், ரிசர்வ் வங்கியின் (RBI) நிகர முன்னோக்கு நிலை (net forward position) 60 பில்லியன் டாலருக்கும் அதிகமாக எதிர்மறையாக இருந்தது. இந்த டாலர்கள் அடுத்த ஒரு மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் ரிசர்வ் வங்கியால் விற்கப்பட வேண்டும். இந்த முன்னோக்கு விற்பனைகளை ஈடுசெய்வதற்காக, நவம்பர் மாத இறுதியில் ரிசர்வ் வங்கியின் வெளிநாட்டு செலாவணி இருப்பில் (forex reserves) இருந்த 688 பில்லியன் டாலரில் இருந்து இந்த எதிர்மறைத் தொகையைக் கழிக்கலாம். 64 பில்லியன் டாலர் நிகர ஃபார்வர்ட் நிலையை நீக்கியபிறகு, உண்மையான அந்நியச் செலாவணி கையிருப்பு தோராயமாக 600 பில்லியன் டாலராக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

original link:

Rupee’s journey from 80 per dollar to 90 in 5 charts: on the role of trade, FDI, and RBI



Share:

பலதரப்புவாதம் (multilateralism) என்றால் என்ன? -ஆஷியா பர்வீன்

பலதரப்புவாதம் (multilateralism) என்றால் என்ன?

-ஆஷியா பர்வீன்


உலக ஒருங்கிணைப்பு வளர்ந்து வருவதால், வர்த்தகம், காலநிலை மாற்றம், மோதல்கள் மற்றும் இடம்பெயர்வு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க நாடுகள் சர்வதேச அமைப்புகளை அதிகளவில் நம்பியுள்ளன. ஆனால், பலதரப்புவாதம் என்றால் என்ன? அது ஏன் இன்று ஒரு திருப்புமுனையில் இருப்பதாகத் தோன்றுகிறது?

இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற G20 உச்சி மாநாடு, பலதரப்பு ஒத்துழைப்புக்குக் கிடைத்த அரிய வெற்றியாகப் பரவலாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் புறக்கணிப்பு மற்றும் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், G20 தலைவர்கள் உச்சி மாநாட்டு அறிவிப்பை அங்கீகரித்தனர்.


ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் எச்சரிக்கைகள் மற்றும் G20-ன் எதிர்காலம் பற்றிய சந்தேகங்களுக்கு மத்தியிலும் செய்யப்பட்ட இந்த அறிவிப்பு, பலதரப்புவாதத்தின் (multilateralism) யோசனையை எவ்வாறு ஆதரிக்கிறது? மேலும், பலதரப்புவாதம் என்றால் என்ன, அது இருதரப்புவாதம் (bilateralism) மற்றும் ஒருதரப்புவாதத்திலிருந்து (unilateralism) எவ்வாறு வேறுபடுகிறது?


பலதரப்புவாதம் என்றால் என்ன?


சர்வதேச உறவுகளில், பலதரப்புவாதமானது பல நாடுகள் மத்தியில் ஒத்துழைப்பைக் குறிக்கிறது. இந்த எண்ணம் முதலாம் உலகப் போருக்குப் பிறகு பிரபலமடைந்தது. பின்னர், 1920-ஆம் ஆண்டில் சமூக நாடுகள் அமைப்பும் (League of Nations - 1920) 1945-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பும் (United Nations - 1945) உருவாக வழிவகுத்தது என்கின்றனர்


பலதரப்புவாதம் என்பது தாராளவாத சர்வதேச ஒழுங்கின் (Liberal International Order) ஒரு முக்கியப் பகுதியாகும். இது ஜனநாயகம், திறந்த சந்தை அமைப்புகள், மற்றும் பகிரப்பட்ட விதிகள் போன்ற மதிப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. இது சர்வதேச அமைப்பை ஒழுங்கற்றதாகக் கருதும் இயல்புவாதியின் (realist) கண்ணோட்டத்திற்கு முரணானது.


பலதரப்புவாதம்  என்பது, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளிடையே தேசியக் கொள்கைகளைத் தற்காலிக ஏற்பாடுகள் மூலமாகவோ அல்லது முறையான நிறுவனங்கள் மூலமாகவோ ஒருங்கிணைப்பது என்று அறிஞர் ராபர்ட் ஓ. கோஹேன் வரையறுத்தார். மற்றொரு அறிஞரான ஜான் ஜெரார்ட் ரக்கீ, பல நாடுகளுக்கிடையேயான தொடர்புகளுக்கு வழிகாட்டும் பரந்த கொள்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.


நடைமுறையில், பலதரப்புவாதம் என்பது சர்வதேச சட்டம் அல்லது ஐ.நா அமைப்பு போன்ற நிறுவன கட்டமைப்புகளுக்குள் ஒத்துழைப்பைக் குறிக்கிறது. இதன் பொருள், ஐ.நா அல்லது உலக வர்த்தக அமைப்பு போன்ற அமைப்புகள் மூலம் நாடுகள் செயல்படும்போது, அவை உலகளாவிய பிரச்சினைகளுக்குப் பொதுவான தீர்வுகளைக் காணப் பகிரப்பட்ட விதிகளைப் பின்பற்றுகின்றன.


பலதரப்புவாதம் பலவீனமடைந்து வருகிறதா?


பனிப்போர் முடிவுக்கு வந்த பிறகு உலகின் வளர்ந்துவரும் ஒருங்கிணைப்பு, பலதரப்புவாதத்தில் மீண்டும் ஆர்வத்தைத் தூண்டியது. வர்த்தகம், முதலீடு, காலநிலை மாற்றம், மோதல்கள் மற்றும் புலம்பெயர்வு போன்ற உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளைக் கையாள, நாடுகள் பலதரப்பு நிறுவனங்கள் மூலம் சர்வதேச ஒத்துழைப்பை நம்பியிருக்கத் தொடங்கின.


இத்தகைய பிரச்சினைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பும் தீர்வுகளும் தேவைப்படுகின்ற போதிலும், பலதரப்புவாதம் (multilateralism) இப்போது ஒரு முட்டுச்சந்தை அடைந்துவிட்டதுபோல் தெரிகிறது. மாபெரும் நாடுகளுக்கிடையேயான போட்டிகள், உலகமயமாக்கலுக்கு எதிரான போக்கு, மக்கள்திரள் தேசியவாதம் (populist nationalism) போன்றவை உருவாக்கியுள்ள இக்கட்டான நிலைமையிலேயே இது தெளிவாகத் தெரிகிறது.


இந்தியாவைப் போன்ற நாடுகள் ஏன் சர்வதேச நிறுவனங்களில் சீர்திருத்தங்களை வலியுறுத்துகின்றன என்பதை இந்தச் சூழ்நிலை எடுத்துக்காட்டுகிறது. அதே சமயம், காலநிலை மாற்றம், கடன் நிலைத்தன்மை மற்றும் நியாயமான எரிசக்தி மாற்றங்கள் குறித்த G20 மாநாட்டு அறிவிப்பு, உலகத் தலைவர்கள் இன்னும் பலதரப்புவாதத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.


பலதரப்புவாதம் என்பது இருதரப்புவாதம் மற்றும் ஒருதரப்புவாதத்திலிருந்து வேறுபடுகிறது. இருதரப்புவாதம் என்பது இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பைக் குறிக்கிறது, அதே சமயம் ஒருதரப்புவாதம் என்பது ஒரு நாடு தனது சொந்த நலன்களைப் பாதுகாக்கத் தனியாகச் செயல்படுவதைக் குறிக்கிறது. உதாரணமாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இருதரப்பு வரிகள் ஒருதரப்புவாதத்தைப் பிரதிபலிக்கின்றன.

original link:

 What is Multilateralism?


Share:

கலாச்சார அடிமைத்தனமா அல்லது சமத்துவக் குடியுரிமையா? மெக்காலேயின் தாராளவாத ஏகாதிபத்தியம். -சுகதா ஸ்ரீனிவாசராஜு

 மெக்காலேயின் கல்வி குறித்த குறிப்பு நிச்சயமாக வரலாற்றை மாற்றியது. ஆனால், அது இந்தியாவை அழிக்கவில்லை அல்லது அதன் கலாச்சாரத்தை அழிக்கவில்லை. மாறாக, மெக்காலே திட்டமிட்டபடி, ஆங்கிலம் ஒரு புதிய இந்திய வர்க்கத்தை உருவாக்கியது.


19-ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் சட்டமன்ற உறுப்பினர் தாமஸ் பாபிங்டன் மெக்காலே குறித்து பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஆறாவது ராம்நாத் கோயங்கா விரிவுரையின்போது தெரிவித்த கருத்துக்கள் பலவிதமான விமர்சனங்களைத் தூண்டியுள்ளன.


மோடி, இந்தியாவில் ஆங்கிலக் கல்விக்கு ஊக்கமளித்த 1835-ஆம் ஆண்டின் மெக்காலேவின் கல்வி அறிக்கையானது ("Macaulay's 1835 Minute on Education") ஒரு கலாச்சார "அடிமைத்தனத்தின்" மனநிலையை உருவாக்கியதாகக் கூறினார். மேலும், அது இந்தியாவின் கலாச்சார வேர்களிலிருந்து இந்தியாவைத் துண்டித்து, ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதன் மூலம் அதன் தன்னம்பிக்கையைச் சேதப்படுத்தியது என்றும் அவர் மேலும் கூறினார்.


பிரதமர் நரேந்திரா மோடி அவர்களின் கருத்துக்கள் பலரை வியக்க வைத்தன. குறிப்பாக, இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சி, திறமையான பணியாளர்கள் மற்றும் உலகளாவிய எழுச்சி ஆகியவை பெரும்பாலும் ஆங்கிலத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், 19-ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு ஆங்கிலத்துடன் ஏற்பட்ட தற்செயலான தொடர்பு அதன் முன்னேற்றத்திற்கு உதவியது என்று பலர் நம்புகின்றனர்.


ஆனால், மோடி அவர்கள் தனது அரசு ஆங்கில மொழிக்கு எதிரானதல்ல என்றும் மாறாக இந்திய மொழிகளுக்கு வலுவாக ஆதரவளிக்கிறது என்பதையும் தெளிவுபடுத்தினார். ஜப்பான், தென் கொரியா, மற்றும் சீனா ஆகிய நாடுகள் மேற்கத்திய நடைமுறைகளை ஏற்றுக்கொண்டாலும், தங்கள் தாய்மொழிகளைக் கைவிடாத நாடுகளை  உதாரணமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது இந்தியாவின் வரலாறு வேறுபட்டிருந்தால் அதன் வளர்ச்சி வேறுபட்டு இருக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆனால், கடந்தகாலம் மாற்றமுடியாத ஒன்று என்பதால், இது ஒரு "என்னவாக இருந்திருக்கும்" என்ற கேள்வியாகவே உள்ளது. இத்தகைய கற்பனையான கேள்விகள் உண்மையான நிகழ்வுகளைவிட அரசியல் மற்றும் தேசியவாதத்தை அடிக்கடி வடிவமைக்கின்றன.


மேலும், ஜப்பான், தென் கொரியா மற்றும் சீனாவின் வரலாறுகள் இந்தியாவின் வரலாற்றிலிருந்து மிகவும் வேறுபட்டவை என்றும் குறிப்பிட்டார். அவற்றின் மொழி மற்றும் கலாச்சாரக் கொள்கைகள் பெரிய வெற்றியையும் தீவிரமான பிரச்சினைகளையும் கொண்டுள்ளன. எனவே, அவற்றை இந்தியாவிற்கு ஒரு சரியான முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்


இந்தியாவில் ஆங்கிலம் குறித்த விவாதங்கள் ஒருபோதும் எளிமையாக இருந்ததில்லை, அது சுதந்திரப் போராட்டத்தின் போதும் சரி, சுதந்திரத்திற்குப் பின்னரும் சரி. ஜனநாயகம், தாராளமயம் மற்றும் நவீன தேசம் பற்றிய கருத்துக்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தின் மூலமாகவே வந்தன, பின்னர் அவை பிராந்திய மொழிகளுடன் கலந்து, நாடு முழுவதும் ஒரு கலாச்சார மறுமலர்ச்சியைத் தூண்டியதாகத் தெரிவிக்கின்றனர்.


மிக முக்கியமாக, இந்தியா போன்ற அதிகபட்ச பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில், குறிப்பாக துணைத் தேசியவாதங்கள் அல்லது சாதி மோதல்கள் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் விடுத்தபோது, ​​ஆங்கில மொழியானது பதட்டங்களைத் தணிக்க உதவியுள்ளது. பல ஆண்டுகளாக, கூட்டாட்சி தத்துவம் ஆங்கிலத்தை நம்பியுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்தியா போன்ற மொழியியல் ரீதியாக சிக்கலான ஒரு நாட்டில் ஆங்கிலம் ஒரு நிலைப்படுத்தும் மொழியாகக் கருதப்படுகிறது.


தென் இந்தியா “இந்தி ஆதிக்கத்தை” எதிர்த்தபோதெல்லாம், ஆங்கில மொழியானது ஜனநாயகத்தை சமநிலைப்படுத்தும் ஒரு கருவியாகச் செயல்பட்டு, மிகவும் வேறுபட்ட கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளுக்கு இடையே தொடர்பை சாத்தியமாக்கியது. ஒடுக்கப்பட்டவர்கள், குறிப்பாக தலித்துகள், ஆங்கிலத்தை சாதிப் பாகுபாட்டில் இருந்து தப்பிக்கும் ஒரு வழியாகப் பார்த்தனர். காங்கிரஸின் தலைவர்கள் மேற்கத்திய உடைகளை எரித்தபோதுகூட, அவற்றை அணியத் தேர்ந்தெடுத்து அம்பேத்கர் இதனைப் பிரபலமாக வலியுறுத்தினார். பிராந்திய மொழிகள் வளமானவைதான், ஆனால் தலித்துகளைப் பொறுத்தவரை, அவற்றில் சாதி அடையாளங்களும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன — இந்த அம்சம் ஆங்கிலத்தில் இல்லை என்றும் கூறப்படுகிறது. 


மெக்காலேயின் காலத்திலும்கூட, ஆங்கில மொழியை இந்தியாவிற்குள் கொண்டு வருவது ஒரு சுலபமான தெரிவாக இருக்கவில்லை. அதை இந்தியர்கள் எதிர்க்கவில்லை என்றாலும் கிழக்கத்தியவாதிகளான பிரிட்டிஷ் அறிஞர்களுக்கும், மக்காலே மற்றும் கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங்க் போன்ற ஆங்கில ஆதரவாளர்களுக்கும் இடையில்தான் மோதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு குழுக்களுமே காலனி ஆதிக்கத்தை ஆதரித்தன. ஆனால், இந்தியர்களை அணுகுவது மற்றும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவது எப்படி என்பதில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தது என்றும் தெரிவிக்கின்றனர்


மெக்காலேயின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜரீர் மசானி குறிப்பிடுகையில், தத்துவஞானி ஜான் ஸ்டூவர்ட் மில், கிழக்கிந்திய கம்பெனியின் தலைவர்களால் ஆதரிக்கப்பட்டு (1835-ஆம் ஆண்டில் இந்தியா இன்னும் பிரிட்டிஷ் ஆளுகையின்கீழ் வரவில்லை), புதிய ஆங்கிலக் கொள்கையை விமர்சித்து ஏகாதிபத்திய அரசாங்கத்திற்கு எழுதினார். இந்தியர்கள் ஆங்கிலத்தை தங்கள் மதத்திற்கு ஒரு அச்சுறுத்தலாகக் கருதக்கூடும் என்று மில் எச்சரித்தார். மேலும், ஆங்கிலத்தைத் தழுவிய இந்தியர்கள் அரசாங்க வேலைகளைப் பெறுவதற்குத் தேவையான அளவு மட்டுமே கற்றுக்கொள்வார்கள், ஆழமான அறிவிற்காக அல்ல என்றும் அவர் வாதிட்டார்.


மக்கள் தங்கள் தாய்மொழிகளில் சிறப்பாகக் கற்கிறார்கள் என்று அவர் வாதிட்டார். இந்திய மொழிகள், சமஸ்கிருதம் மற்றும் அரபு மொழிகளிலிருந்து சொற்களைப் பயன்படுத்தி வளர வேண்டும் என்றார். எனவே, அவருடைய கூற்றுப்படி, சாதாரண இந்தியர்களிடையே அறிவைப் பரப்புவதற்கு கிழக்கத்தியவாதிகளே, மேற்கத்தியவாதிகளைவிட மிகவும் பொருத்தமானவர்கள் என்றும் குறிப்பிட்டார்.  மேலும், சொந்தமாக ஆங்கிலம் கற்க வசதி உள்ளவர்களுக்கு அடிப்படை ஆங்கிலம் கற்பிப்பதற்காக பொதுப்பணம் செலவிடப்படக் கூடாது என்றும் அவர் கூறினார். இதை மில்லின் கருத்து என்று மசானி விளக்கினார். ஆனால், இந்தியர்களிடையே ஆங்கிலம் கற்க ஏற்கனவே ஒரு வலுவான விருப்பம் உள்ளது என்று மெக்காலே அதற்குப் பதிலளித்தார்.


மெக்காலேயின் குறிப்பின் வரலாற்றையும் அது எவ்வாறு கொள்கையானது என்பதையும் பார்க்கும்போது, மெக்காலே இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே, 1834-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் லார்ட் பென்டிங்க் ஏற்கனவே ஆங்கிலக் கல்வியை சமூக சீர்திருத்தத்துடன் இணைத்திருந்தார் என்பது தெளிவாகிறது. அவர் ராஜா ராம்மோகன் ராய் போன்ற சீர்திருத்தவாதிகளுடன் நெருக்கமாகவும் இருந்தார்.


தொடக்கத்தில், இந்தியாவில் ஆங்கிலக் கல்வி என்பது கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கான ஒரு கருவியாகக் கருதப்பட்டது. ஆனால், மெக்காலேவின் கைகளில், அது ஒருவிதமான “தாராளவாத ஏகாதிபத்தியமாக” மாறியது. ஒரு விக் கட்சி (Whig party) அரசியல்வாதியான மெக்காலே, ஆங்கிலக் கல்வி ஒரு சமத்துவ நோக்கத்திற்கு சேவை செய்ய முடியும் என்று நம்பினார். மசானி குறிப்பிட்டதாவது, ரோமானிய குடிமக்கள் ஒருகாலத்தில் தங்கள் ஆட்சியாளர்களுடன் சமமானவர்களாக இருந்தது போல, இந்தியர்களும் இறுதியில் ஆங்கிலேயருக்குச் சமமானவர்களாக மாற வேண்டும் என்று மெக்காலே விரும்பினார். அவருக்கு கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதில் ஆர்வம் இல்லை என்றும் மாறாக அவரது நோக்கம் அதிக மதச்சார்பற்ற, கலாச்சார மற்றும் அரசியல் செல்வாக்கு செலுத்துவதாக மட்டுமே இருந்தது என்றும் கூறப்படுகிறது.


மெக்காலே இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே, வங்காள மறுமலர்ச்சி (Bengali renaissance) ஏற்கனவே தொடங்கிவிட்டது. பிரம்ம சமாஜம் (Brahmo Samaj) ஐரோப்பிய அறிவொளி சிந்தனைகளை உபநிடதங்களுடன் (Upanishads) இணைக்க முயன்றது. கிழக்கு மற்றும் மேற்கு சிந்தனைகளை இணைக்கும் ஒரு கலாச்சார இயக்கம் இருந்தது. கல்கத்தாவில் இருந்த இந்து கல்லூரியில் (Hindu College) (1817) ஏற்கனவே ஆங்கிலம், அறிவியல் மற்றும் ஐரோப்பிய இலக்கியங்கள் கற்பிக்கப்பட்டது. புதிய சமஸ்கிருதக் கல்லூரி அறிவை முன்னேற்றுவதற்குப் பதிலாக மக்களை அறியாமையிலேயே வைத்திருக்கும் என்று ராஜா ராம் மோகன் ராய் அதனைக் கடுமையாக எதிர்த்தார் என்றும் கூறுகின்றனர்


மெக்காலே, கல்கத்தாவுக்கு வருவதற்கு முன்பே, மெட்ராஸ் மற்றும் மைசூரில் ஓய்வுபெற்ற அரசர்களுடனான சந்திப்புகள், கல்வியைப் பற்றிய அவரது கருத்துக்களை வடிவமைத்தன. மெட்ராஸ் நவாப், ஒரு முறையான கல்வி பெற்றிருந்தால், கர்நாடகத்தை மேம்படுத்துவதில் அவர் ஒரு சிறந்த சொத்தாக இருந்திருக்க முடியும் என்று நவாப் குறித்து எழுதினார். மைசூர் உடையார் அரசனைப் பொறுத்தவரை, கல்வி இல்லாமல் ஒருவருக்கு அதிகாரத்தைக் கொடுத்து, பின்னர் தோல்வியடைந்ததற்காக அவர்களைத் தண்டிப்பது கொடுமையானது மற்றும் முட்டாள்தனமானது என்று அவர் கூறினார். எதிர்காலத்தில் அத்தகைய தவறுகளைத் தடுக்க அவர் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. 


இந்த அனுபவங்களிலிருந்தும் கருத்துக்களிலிருந்தும் மெக்காலேயின் குறிப்பு (Macaulay’s Minute) வந்தது, இது மறுக்கமுடியாமல் வரலாற்றை மாற்றியது. அது இந்தியாவை அழிக்கவோ அதன் கலாச்சாரத்தை அழிக்கவோ இல்லை. ஆங்கிலம் இன்றும் இருப்பது போலவே, பெரும்பாலும் ஒரு உயர் வர்க்கத்தினரின் மொழியாகவே நீடித்தது. மெக்காலே நோக்கம் கொண்டபடி, அது ஆங்கிலக் கல்வி கற்ற இந்தியர்களின் ஒரு புதிய வர்க்கத்தை உருவாக்கியது.


ஸ்ரீனிவாசராஜு, சமீபத்திய நூலான "The Conscience Network: A Chronicle of Resistance to a Dictatorship" -ன் ஆசிரியர் ஆவார்.


original link:

Cultural slavery or equal citizens? The liberal imperialism of Macaulay


Share:

மசாலா பத்திரங்கள் (Masala Bonds) மற்றும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் (FEMA) என்பது என்ன? -குஷ்பூ குமாரி

தற்போதைய நிகழ்வு :


கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் (Kerala Infrastructure Investment Fund Board (KIIFB)) வெளியிட்ட மசாலாப் பத்திரம் தொடர்பான அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் (Foreign Exchange Management Act (FEMA)) மீறல்கள் தொடர்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் முன்னாள் IAS அதிகாரி டாக்டர் கே.எம். ஆபிரகாம் ஆகியோருக்கு அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate) ஒரு காரணம் கூற நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


2019-ம் ஆண்டு CPI(M) அரசாங்கம் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான நிதி திரட்ட மசாலாப் பத்திரத்தை வெளியிட்டபோது, ​​முதல்வர் விஜயன் கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தின் (KIIFB) தலைவராகவும், ஐசக் அதன் துணைத் தலைவராகவும் இருந்தார். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதைவிட அதிகமான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி திரட்டும் மாநில நிறுவனமான கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தின் (KIIFB) தலைமை நிர்வாக அதிகாரியாக ஆபிரகாம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய அம்சங்கள்:


1. ஒரு பத்திரம் என்பது பணத்தை கடன் வாங்கப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். இது ஒரு அரசாங்கத்தால் அல்லது ஒரு நிறுவனத்தால் வழங்கப்படலாம். இதன் நோக்கம் நிதி திரட்டுவதாகும். அரசாங்கப் பத்திரங்கள் இந்தியாவில் G-secs என்றும், அமெரிக்காவில் Treasuries என்றும், UK-ல் Gilts என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தப் பத்திரங்கள் ஒரு இறையாண்மை உத்தரவாதத்தைக் கொண்டுள்ளன. இந்த உத்தரவாதத்தின் காரணமாக, அவை மிகவும் பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.


2. மசாலா பத்திரங்கள் என்பவை இந்திய நிறுவனங்கள் பணம் திரட்டுவதற்காக வெளிநாட்டு வாங்குநர்களுக்கு வெளியிடும் ரூபாய் மதிப்பிலான பத்திரங்களாகும். இந்தப் பத்திரத்தின் விலை இந்திய ரூபாயில் குறிப்பிடப்படுகிறது. உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான சர்வதேச நிதிக் கழகம் (International Finance Corporation - IFC) இவற்றை இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் “மசாலா” (உண்மையான பொருள்: மசாலாக்களின் கலவை) என்று பெயரிட்டது.


3. முன்னதாக, வெளிநாட்டிலிருந்து பணம் திரட்டுவதற்கு, இந்திய நிறுவனங்கள் வெளிப்புற வணிகக் கடன்கள் (ECBs) போன்ற வழிகளை நம்பியிருந்தன. இந்த ஏற்பாடுகளில் உள்ள சவால்கள் என்னவென்றால், இந்திய நிறுவனம் அல்லது வெளிநாட்டுப் பத்திர வழங்கலை வழங்குபவர் நாணய ஏற்ற இறக்கங்களின் அபாயத்தை எதிர்கொள்கிறார். உதாரணமாக, பொதுவாக ஐந்து ஆண்டுகளின் இறுதியில், பத்திரத்தின் காலாவதி காலத்தில் ரூபாய் மதிப்பு பலவீனமடைவது, மீட்பு அல்லது திருப்பிச் செலுத்தும் செலவுகளை கணிசமாக அதிகரிக்கக்கூடும்.


4. பத்திரங்களை ரூபாய் மதிப்பில் விலை நிர்ணயம் செய்வதன் மூலமோ அல்லது வெளியிடுவதன் மூலமோ, வெளியீட்டாளர் இந்த ஆபத்தைத் தவிர்க்கிறார். பின்னர் ஆபத்து முதலீட்டாளருக்கு மாறுகிறது. மசாலா பத்திர வெளியீட்டில், முதலீட்டாளர்கள் INR அசலுடன் பொருந்தக்கூடிய USD தொகையை செலுத்துகிறார்கள். பத்திரங்களை வெளியிடுவதற்கும் சேவை செய்வதற்கும் ஒவ்வொரு பரிவர்த்தனையின் தேதியிலும் சந்தை மாற்று விகிதத்தைப் பயன்படுத்தி இந்தத் தொகை கணக்கிடப்படுகிறது.


5. 2017-ம் ஆண்டில், மசாலா பத்திரங்கள் குறித்து ரிசர்வ் வங்கி ஒரு உத்தரவை வெளியிட்டது. ஆண்டுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் (INR-ல்) வரையிலான பத்திரங்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதிர்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும் என்று அது கூறியது. 50 மில்லியனுக்கும் அதிகமான பத்திரங்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதிர்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும்.


6. உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக 2014-ம் ஆண்டில் முதல் மசாலா பத்திரத்தை சர்வதேச நிதிக் கழகத்தால் வெளியிடப்பட்டது. 2019-ம் ஆண்டில், மேம்பாட்டு நிதியைத் திரட்ட மசாலா பத்திரங்களுக்கான சந்தையைப் பயன்படுத்திய முதல்மாநிலமாக கேரளா ஆனது. உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக நிறுவப்பட்ட அரசு நிறுவனமான கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் (KIIFB), 2019-ம் ஆண்டில் லண்டன் பங்குச் சந்தை (London Stock Exchange (LSE)) மற்றும் சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (Singapore Exchange Ltd) ஆகிய இரண்டிலும் பட்டியலிடப்பட்ட ரூ.2,150 கோடி மதிப்புள்ள மசாலாப் பத்திரங்களை வெளியிட்டது.


7. 2022-ம் ஆண்டில், கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் (KIIFB) லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மசாலாப் பத்திரங்கள் மூலம் ரூ.2,150 கோடி நிதி திரட்டியது தொடர்பாக அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) மீறல்கள் தொடர்பான வழக்கை அமலாக்க இயக்குநரகம் (ED) பதிவு செய்தது. அந்த விசாரணையின் தொடர்ச்சியாக இந்த அறிவிப்புகள் உள்ளன.


8. மசாலாப் பத்திர நிதியானது எட்டுப் பகுதிகளில் 339 திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாக ஐசக் கூறினார். இதில், பல்வேறு திட்டங்களின் நிலம் கையகப்படுத்தல் பகுதிகளுக்கு ரூ.466 கோடி செலவிடப்பட்டது. அமலாக்க இயக்குநரகம் (ED) இதை நில கொள்முதல் என்று விளக்கியுள்ளது. ஊக வணிகத்தைத் தடுக்க, நிலம் வாங்குவதற்கு வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்துவதை அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) கட்டுப்படுத்துகிறது.


வெளிப்புற வணிகக் கடன்கள் (External Commercial Borrowings (ECB))


9. இந்திய ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, “வெளிப்புற வணிகக் கடன்கள் (ECB) என்பது வங்கிக் கடன்கள், வாங்குபவர்களின் கடன், விநியோகர்களின் கடன், பத்திரப்படுத்தப்பட்ட கருவிகள் (எ.கா. மிதக்கும் விகிதக் குறிப்புகள் மற்றும் நிலையான விகிதப் பத்திரங்கள், மாற்ற முடியாதவை, விருப்பப்படி மாற்றத்தக்கவை அல்லது பகுதியளவு மாற்றத்தக்க முன்னுரிமைப் பங்குகள்) போன்ற வடிவங்களில் வணிகக் கடன்களைக் குறிக்கிறது.


10. வெளிநாட்டு நாணயத்தில் வெளிப்படுத்தப்படும் ஒரு இந்திய நிறுவனத்தால் வழங்கப்படும் பத்திரங்களான வெளிநாட்டு நாணய மாற்றத்தக்க பத்திரங்களுக்கு (Foreign Currency Convertible Bonds (FCCB)) வெளிப்புற வணிகக் கடன்கள் (ECB) கொள்கை பொருந்தும். மேலும், இவற்றுக்கான அசல் மற்றும் வட்டி வெளிநாட்டு நாணயத்தில் செலுத்தப்படும். அவை அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) விதிகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.


அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA)


1. தாராளமயமாக்கலுக்குப் பிந்தைய இந்தியாவில் மாறிவரும் பொருளாதார நிலைமைகளுடன், 1973-ம் ஆண்டின் அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தின் (Foreign Exchange Regulation Act (FERA)) மாற்றாக 1999-ல் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) வந்தது. இது வெளிப்புற வர்த்தகம் மற்றும் பணப்பரிமாற்றங்களை அதிகரிப்பதையும், இந்தியாவில் அந்நிய செலாவணி சந்தையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


2. அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் (FERA) சட்டம் இந்தியாவில் வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறை நிலவிய ஒரு காலகட்டத்திற்காக வடிவமைக்கப்பட்டது; நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே அந்நிய செலாவணி பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் அந்நிய செலாவணியைச் சேமித்து வைப்பதே இதன் நோக்கமாக இருந்தது — இது சட்டத்தின் முகப்புரையிலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.


3. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ், குற்றங்கள் அல்லது மீறல்கள் சிவில் (குற்றவியல் அல்ல) குற்றமாக மாற்றப்பட்டன. மேலும், சுற்றுலா, கல்வி போன்றவற்றிற்காக வெளிநாடு செல்வது போன்ற நடப்புக் கணக்கின் ஒரு பகுதியாக இருக்கும் பரிவர்த்தனைகளை உரிமையாக மாறியது.  அதேநேரத்தில், மூலதனக் கணக்கில் கட்டுப்பாடுகளை விதித்தது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) எந்தவொரு மீறல்களையும் விசாரிக்க அமலாக்க இயக்குநரகத்தின் இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் அதிகாரம் பெற்றுள்ளனர்.


original link:

 What are Masala Bonds and FEMA?


Share:

கர்நாடகாவின் புதிய வெறுப்புப் பேச்சு சட்டமசோதா (New Hate Speech Bill) பற்றியும் இந்தியா முழுவதும் இந்தப் பிரச்சினை எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகிறது என்பது குறித்தும் -வினீத் பல்லா

 வெறுக்கத்தக்க பேச்சைக் (hate speech) குறிவைத்து ஒரு மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் கர்நாடகா ஆகும். இது இந்தியா நீண்டகாலமாக சட்டமன்ற இடைவெளியைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. "வெறுக்கத்தக்க பேச்சு" (hate speech) என்ற சொல் பொது விவாதங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இது இந்தியாவின் குற்றவியல் சட்டங்களில் முறையாக வரையறுக்கப்படவில்லை.


வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ள, கர்நாடக வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்கள் (தடுப்பு) மசோதா-2025 (Karnataka Hate Speech and Hate Crimes (Prevention) Bill), குற்றவாளிகளுக்கு இரண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முன்மொழிகிறது மற்றும் இது அமைப்புகளுக்கான கூட்டுப் பொறுப்பு என்ற கருத்தையும் அறிமுகப்படுத்துகிறது.


"தற்போதுள்ள எந்தச் சட்டமும் வெறுப்புப் பேச்சை வெளிப்படையாகக் கையாள்வதில்லை" (no existing law deals explicitly with hate speech) என்பதால் இந்தச் சட்டம் அவசியம் என்று கர்நாடக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் கூறினார். இது இந்தியாவின் சட்டக் கட்டமைப்பில் நீண்டகால இடைவெளியை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. "வெறுக்கத்தக்க பேச்சு" என்ற சொல் பொது விவாதங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இது இந்தியாவின் குற்றவியல் சட்டங்களில் இது முறையாக வரையறுக்கப்படவில்லை.


வெறுப்புப் பேச்சுக்கான தற்போதைய சட்டக் கட்டமைப்பு


தற்போது குறிப்பிட்ட சட்டம் இல்லாத நிலையில், இந்திய சட்ட அமலாக்க நிறுவனங்கள் (Indian law enforcement agencies) வெறுப்புப் பேச்சு தொடர்பான வழக்குகளைக் கையாள பாரதிய நியாய சன்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita) பல விதிகளைப் பயன்படுத்துகின்றன. இந்தப் பிரிவுகள் முக்கியமாக பொது ஒழுங்கைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவை வெறுப்புப் பேச்சை ஒரு தனி குற்றமாகக் கருதுவதில்லை.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153A-ன் மாற்றாக பிரிவு 196 ஆனது பொதுவாகப் பயன்படுத்தப்படும் விதியாகும். இது "மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்தல்" ஆகியவற்றைத் தண்டிக்கும்.


இருப்பினும், கைதுகளுக்கும் தண்டனைகளுக்கும் இடையிலான இடைவெளியை தரவு காட்டுகிறது. கைதுகள் அடிக்கடி நிகழ்கின்றன. ஆனால் தண்டனைகள் மிகக் குறைவு. முந்தைய அறிக்கைகளிலிருந்து தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் தரவுகளின்படி, 2020-ஆம் ஆண்டில் பிரிவு 153A-க்கான தண்டனை விகிதம் 20.2% மட்டுமே பதிவாகியுள்ளது.


வெறுப்புப் பேச்சைக் கையாள்வதற்கு, பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பெரும்பாலும் பயன்படுத்தப்படும் மற்றொரு விதி பிரிவு 299 ஆகும். இது "எந்தவொரு வகுப்பினரின் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் அவர்களின் மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கில் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்களை" தண்டிக்கும். இது இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 295A-ஐப் போன்றது.


மேலும், பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவு 353, அரசு அல்லது ஒரு சமூகத்திற்கு எதிராக குற்றங்களைச் செய்ய ஒருவரைத் தூண்டக்கூடிய அறிக்கைகள் அல்லது தவறான தகவல்களை பரப்பும் அல்லது பொது ஒழுங்கை சீர்குலைக்கும் போன்ற அறிக்கைகள் இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கும்.


இந்தக் குற்றங்கள் ஒவ்வொன்றும் அறியத்தக்கவை. இதன் பொருள் காவல்துறையினர் பிடியாணை (warrant) இல்லாமல் ஒருவரைக் கைது செய்யலாம். குற்றங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும்.


தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (Information Technology Act) பிரிவு 66A பெரும்பாலும் இணையவழி வெறுப்புப் பேச்சுக்கு பயன்படுத்தப்பட்டது. உச்சநீதிமன்றம் 2015-ல் அரசியலமைப்பிற்கு முரணானது என்று கூறி அதை ரத்து செய்தது.


உச்ச நீதிமன்றத்தின் தலையீடு


கடந்த சில ஆண்டுகளாக, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஒரு முன்முயற்சியுடன், மாறிவரும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.


அக்டோபர் 2022-ல், நீதிபதிகள் கே.எம். ஜோசப் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, "நாட்டில் வெறுப்பு நிறைந்த சூழல் நிலவுகிறது" என்று கூறியது. மேலும், இந்த வெறுப்புப் பேச்சு விவகாரங்களில் தாங்களாகவே நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் தலைமை காவல்துறை அதிகாரிகளுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது. காவல்துறை முறையான புகார்களுக்காகக் காத்திருக்கக் கூடாது என்றும் அவர்கள் கூறினர். எந்தவொரு தாமதமும் அவமதிப்பாகக் கருதப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்தது. ஏப்ரல் 2023-ல், இந்த உத்தரவு அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.


இருப்பினும், இந்த உத்தரவுகளை நடைமுறைக்குக் கொண்டுவருவது கடினமாக உள்ளது. ஆகஸ்ட் 2023-ல், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, வெறுப்புப் பேச்சை வரையறுப்பது சிக்கலானது என்று ஒரு விசாரணையின்போது கூறியது. ஆனால், அதைச் சமாளிப்பதில் உள்ள உண்மையான சிக்கல் சட்டம் மற்றும் நீதித்துறை தீர்ப்புகளை செயல்படுத்துவதிலும், அமல்படுத்துவதிலும் உள்ளது என்று ஒப்புக்கொண்டது.


இந்த ஆண்டு நவம்பர் 25 அன்று, நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய மற்றொரு அமர்வு, உச்ச நீதிமன்றம் "வெறுப்புப் பேச்சு தொடர்பான ஒவ்வொரு சம்பவத்தையும் கண்காணிக்க விரும்பவில்லை" என்று தீர்ப்பளித்தது. 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தெஹ்சீன் பூனவல்லா தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைக் குறிப்பிட்டு, காவல் நிலையங்களும் உயர் நீதிமன்றங்களும் இதுபோன்ற வழக்குகளைக் கையாளத் தகுதியானவை என்று நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது. இது கும்பல் வன்முறை மற்றும் கும்பல் படுகொலைகளைத் தடுக்க நோடல் அதிகாரிகளை (nodal officers) நியமிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது.


'வெறுக்கத்தக்க பேச்சு' (hate speech) என்பதை வரையறுக்க முயற்சிகள்


மார்ச் 2017-ல் அதன் 267வது அறிக்கையில், இந்திய சட்ட ஆணையம் வெறுப்பைத் தூண்டுவதையும், வன்முறையைத் தூண்டுவதையும் குறிப்பாக குற்றமாக்க இந்திய தண்டனைச் சட்டத்தில் (IPC) உள்ள பிரிவுகள் 153C மற்றும் 505A சேர்க்க பரிந்துரைத்தது.


2022-ம் ஆண்டில், "வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்கள் (தடுப்பு) மசோதா" (The Hate Speech and Hate Crimes (Prevention) Bill) என்ற ஒரு தனிநபர் மசோதாவை பாரத் ராஷ்டிர சமிதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர். சுரேஷ் ரெட்டி மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா வெறுப்புப் பேச்சை "ஒரு நபர் அல்லது குழுவிற்கு எதிரான பாகுபாடு, வெறுப்பு, விரோதம் அல்லது வன்முறையைத் தூண்டும், நியாயப்படுத்தும், ஊக்குவிக்கும் அல்லது பரப்பும்" எந்தவொரு வெளிப்பாடாகவும் வெறுப்புப் பேச்சை வரையறுக்க இது நோக்கமாகக் கொண்டது.


"வெறுப்பு குற்றம்" (hate crime) என்பதை பாதிக்கப்பட்டவரின் உண்மையான அல்லது பண்புநிலையின், மதம், சாதி, பாலின அடையாளம் அல்லது பாலியல் நோக்குநிலை உள்ளிட்டவற்றுக்கு எதிரான பாரபட்சத்தால் தூண்டப்பட்ட குற்றமாக வரையறுக்கவும் அது முன்மொழிந்தது.


இந்த குறிப்பிட்ட விதிகளுக்கு ஆதரவாக இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவுகள் 153A மற்றும் 295A ஆகியவற்றை நீக்க இது முன்மொழிந்தது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.


கர்நாடக மசோதா முன்மொழிவது என்ன?


வெறுக்கத்தக்க பேச்சை குறிவைத்து, குறிப்பாக ஒரு மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் கர்நாடகா ஆகும். இது முன்மொழியப்பட்ட சட்டமானது சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் 2022 தனிநபர் உறுப்பினர் மசோதாவில் காணப்படும் சில கருத்துக்களை பிரதிபலிப்பதாகத் தெரிகிறது.


கர்நாடக அமைச்சரவையின் கூற்றுப்படி, புதிய மசோதா வெறுப்புப் பேச்சை மதம், இனம், சாதி, பாலினம், பாலியல் நோக்குநிலை, பிறந்த இடம் அல்லது மாற்றுத்திறனாளி ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நபர் அல்லது குழுவிற்கு எதிராக காயம் அல்லது ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் வெளிப்பாடாக வரையறுக்கிறது. இந்த மசோதாவில் "பாலியல் நோக்குநிலை" (sexual orientation) மற்றும் "பாலினம்" ஆகியவற்றைச் சேர்ப்பது, பொதுவாக இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் இப்போது பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) கீழ் பாதுகாக்கப்பட்ட வகைகளுக்கு அப்பால் பாதுகாக்கப்பட்ட வகைகளின் விரிவாக்கத்தைக் குறிக்கிறது.


இந்த மசோதா "கூட்டுப் பொறுப்பு" (collective liability) என்ற சிறப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது. வெறுப்புப் பேச்சு ஒரு அமைப்புடன் இணைக்கப்பட்டால், அந்த அமைப்பிற்குள் பொறுப்பான பதவிகளில் உள்ள நபர்கள் குற்றவாளிகளாகக் கருதப்படலாம். இணையத்தில் வெறுக்கத்தக்க உள்ளடக்கத்தைத் தடுக்க அல்லது அகற்ற இந்த மசோதா மாநிலத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.


original link:

All about Karnataka’s new Hate Speech Bill, how the issue is regulated across India


Share: