டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 80-ல் இருந்து 90-ஆக மாறிய பயணம் : வர்த்தகம், அந்நிய நேரடி முதலீடு, மற்றும் ரிசர்வ் வங்கியின் பங்கு குறித்து… -சித்தார்த் உபாசனி

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 80-ஐக் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது மீண்டும் மற்றொரு முக்கிய அளவை எட்டியுள்ளது.


அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இந்த வாரம் 90-ஐ தொட்டது பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், இந்த மாற்றத்தின் பின்னணியில் உள்ள காரணிகள் நீண்ட காலமாக உருவாகி வருகின்றன. உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் வர்த்தக நிச்சயமற்ற தன்மையுடன், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அந்நிய செலாவணி சந்தையில் பெருமளவில் தலையிட்டது. இப்போது அந்தத் தலையீட்டைக் குறைத்ததால் ரூபாய்  மதிப்பு வேகமாகக் குறைந்தது என்கின்றனர்


உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்ட விநியோகச் சங்கிலித் தடங்கல்கள் காரணமாக, கடந்த ஜூலை மாதம் 2022-ஆம் ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு முதன்முதலில் 80-ஐத் தாண்டிய பிறகு, இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து பலவீனமடைந்து. மூன்றரை ஆண்டுகளில் 90-ஐ எட்டியுள்ளது.  இதே காலகட்டத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ((Current Account Deficit (CAD)) 2022 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இருந்த $31 பில்லியனில் இருந்து பெரிதும் குறைந்தது; சில காலாண்டுகளில் உபரியாகவும் (Surplus) மாறியது. ஆனாலும் ரூபாயின் மதிப்பீடு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே இருக்கிறது.

இந்தியா நாட்டின் நடப்புக் கணக்கு இருப்பு முக்கியமாக அதன் சரக்குகள் வர்த்தகப் பற்றாக்குறையால் (goods trade deficit) தீர்மானிக்கப்படுகிறது — இது இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்குச் செலுத்தும் தொகைக்கும், ஏற்றுமதியிலிருந்து ஈட்டும் வருவாய்க்கும் இடையேயான வித்தியாசமாகும். வரைபடம் காட்டுவதுபோல, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை சரக்குகள் வர்த்தகப் பற்றாக்குறையை மிக நெருக்கமாகப் பின்பற்றுகிறது. இவற்றுக்கு இடையேயான வித்தியாசம், இந்தியாவின் சேவைகளில் உள்ள உபரி (surplus in services) மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வீட்டிற்கு அனுப்பும் பணத்திலிருந்து (remittances) வருகிறது. ஆனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை மற்றும் வர்த்தக முன்னேற்றங்கள் ரூபாயின் தற்போதைய பலவீனத்திற்குப் பின்னால் இருக்காது என்று இருப்பினும், பேங்க் ஆஃப் அமெரிக்கா (Bank of America (BofA)) உலகளாவிய ஆராய்ச்சி அமைப்பு இந்தியா மற்றும் ஆசியான் பொருளாதார ஆய்வின் தலைவரான ராகுல் பஜோரியா, இந்தக் குறைபாடுகள் ரூபாயின் சமீபத்திய பலவீனத்திற்கு முக்கியக் காரணமாக இருக்காது என்று கூறுகிறார்.


பஜோரியா, கடந்த புதன்கிழமை அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் குறிப்பிட்டதாவது, இந்தியா தற்போது மூலதனத்தின் வெளிப்பாடு காரணமாக ஏற்பட்ட பலவீனத்தை முக்கியமாகச் சந்தித்து வருகிறது என்றும் இதற்குப் பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகள், இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் முடிவடையாமல் இருப்பது மற்றும் இது போன்ற காரணிகள் முக்கியக் காரணங்கள் என்றும் அவர் கூறினார்.


மூலதனப் பாய்ச்சல் உண்மையில் ஒரு சிக்கல்தான் : அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் (Foreign Portfolio Investors (FPIs)) 2025-ஆம் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து சுமார் 18 பில்லியன் டாலர்களை வெளியே எடுத்துள்ளனர். பங்கு அல்லாத அந்நிய நேரடி முதலீடுகளின் வரவு நேர்மறையாக இருந்தாலும், அவை அதில் பாதியளவு மட்டுமே உள்ளன என்றும் கூறப்படுகிறது. 



தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் இந்த வாரம் கூறியது போல, அந்நிய நேரடி முதலீட்டு (Foreign Direct Investment (FDI)) நிலைமை நிறைய மாறிவிட்டது.


வளர்ந்த நாடுகளில் அதிக வட்டி விகிதங்கள் இந்தியா போன்ற வளரும் சந்தைகளிலிருந்து முதலீட்டாளர்களை ஈர்க்கின்றன. மேலும், உலகளவில் உள்ளூர் உற்பத்தியை அதிகமாக்க வேண்டும் என்ற உந்துதலும் அந்நிய நேரடி முதலீட்டைக் குறைத்துள்ளது. அதே சமயம், விநியோகச் சங்கிலிகள் அதிகமாக உள்ளூர்மயமாக்கப்படுவதால், இந்திய நிறுவனங்களே இப்போது வெளிநாடுகளில் அதிக முதலீடு செய்கின்றன. ஏனெனில், வெளிநாடுகளில் பொருள்களை விற்க ஏற்றுமதி மட்டும் போதாது; அந்தச் சந்தையிலேயே உற்பத்தித் தளம் வேண்டும் என்கிற நிலை வந்துவிட்டது.



இந்த விளக்கப்படம் காட்டுவது போல, இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் முந்தைய வெளிநாட்டு முதலீடுகளைத் திரும்பப் பெறுதல் ஆகியவை 2023 முதல் வேகமாக உயர்ந்து, 2025-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 60 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளன. இது 2024-ஆம் ஆண்டின் 80 பில்லியன் டாலர்களை எட்டுவதற்கான பாதையில் உள்ளது, இதன் விளைவாக நிகர வெளிநாட்டு நேரடி முதலீடு உள்வருகை (net FDI inflow) கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலருக்கும் குறைவாக உள்ளது.


வெளிநாட்டவர்களின் பணத்தை மீண்டும் எடுத்துச் செல்வதையும் (foreign repatriations) மற்றும் இந்தியர்களின் வெளிநாட்டு முதலீடுகளையும் (Indian overseas investments) கழித்த பின்னரே நிகர அந்நிய நேரடி முதலீடு (Net FDI) கணக்கிடப்படுகிறது.


இந்த அனைத்து காரணிகளும் ரூபாயின் மதிப்பை குறைக்க அழுத்தம் கொடுக்கின்றன. இந்த வீழ்ச்சி மிகவும் வேகமாக இருப்பதாக ரிசர்வ் வங்கி (RBI) கருதினால், அது அந்நியச் செலாவணியை விற்று அதாவது அதன் விநியோகத்தை அதிகரித்து ரூபாயை வாங்குவதன் (தேவையை உயர்த்துவதன்) மூலம் பரிவர்த்தனை வீதத்தை நிலையாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. 2024-25 நிதியாண்டில், குறிப்பாக டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரான தேர்தலுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கி சுமார் 400 பில்லியன் டாலர் வரை விற்றுவிட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.


இருப்பினும், 2025-26 நிதியாண்டில் ரிசர்வ் வங்கியின் தலையீடு பெரிதும் குறைந்துவிட்டது. சஞ்சய் மல்ஹோத்ரா ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு இது தெளிவாகத் தெரிகிறது. மேலும், நிதியாண்டின் முதல்பாதியில் மொத்த அடிப்படையில் வெறும் 44 பில்லியன் டாலராகவே உள்ளது. இது ரூபாயின் மதிப்பு இழப்பை ரிசர்வ் வங்கி அதிக அளவில் பொறுத்துக்கொள்ளத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுகிறது என்று IDFC First வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் கவுரா சென் குப்தா கூறுகிறார். இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் 2026-ஆம் ஆண்டுக்குள் வந்தாலும், ரூபாயின் மதிப்பு செப்டம்பர் மாதம் 2026-ஆம் ஆண்டுக்குள் ஒரு டாலருக்கு 91 ரூபாய் வரை உயரும் என்று கவுரா சென் குப்தா எதிர்பார்க்கிறார்.

மத்திய வங்கியின் தலையீடு வெளிநாட்டு நாணயத்தை நேரடியாக விற்பனை செய்வதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அது, முன்னோக்குச் சந்தையில் (forwards market) டாலர்களை விற்பனை செய்வதன் மூலமும் ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர். இன்று விற்பதால் ஏற்படும் அதே விளைவை இது பரிவர்த்தனை விகிதத்தில் (exchange rate) ஏற்படுத்தும், ஆனால் அதன் தீர்வு ஒரு பிந்தைய, முன்னரே தீர்மானிக்கப்பட்ட தேதியில் நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது. இது மிகவும் பயனுள்ளது, ஏனெனில் இப்போதே டாலர்களை விற்பது ரூபாய் விநியோகத்தைக் குறைத்து வட்டி விகிதங்களை உயர்த்தும், இது ரிசர்வ் வங்கியின் தற்போதைய வட்டிவிகிதக் குறைப்பிற்கு முரணாக இருக்கும். முன்னோக்கு விற்பனைகள் (Forward sales) தற்போதைய ரூபாய் விநியோகத்தை பாதிக்காததால் இந்தச்  சிக்கலைத் தவிர்க்கின்றன.

"முன்னோக்குச் சந்தை" ("Forward market") என்பது எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு பொருளை அல்லது நிதிக் கருவியை வாங்க அல்லது விற்க முன்கூட்டியே விலை நிர்ணயம் செய்யப்படும் ஒரு முறைசாரா பங்குச் சந்தைக்கு வெளியே நடைபெறும் வர்த்தக (over-the-counter) சந்தையாகும்.




அக்டோபர் மாத இறுதியில், ரிசர்வ் வங்கியின் (RBI) நிகர முன்னோக்கு நிலை (net forward position) 60 பில்லியன் டாலருக்கும் அதிகமாக எதிர்மறையாக இருந்தது. இந்த டாலர்கள் அடுத்த ஒரு மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் ரிசர்வ் வங்கியால் விற்கப்பட வேண்டும். இந்த முன்னோக்கு விற்பனைகளை ஈடுசெய்வதற்காக, நவம்பர் மாத இறுதியில் ரிசர்வ் வங்கியின் வெளிநாட்டு செலாவணி இருப்பில் (forex reserves) இருந்த 688 பில்லியன் டாலரில் இருந்து இந்த எதிர்மறைத் தொகையைக் கழிக்கலாம். 64 பில்லியன் டாலர் நிகர ஃபார்வர்ட் நிலையை நீக்கியபிறகு, உண்மையான அந்நியச் செலாவணி கையிருப்பு தோராயமாக 600 பில்லியன் டாலராக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

original link:

Rupee’s journey from 80 per dollar to 90 in 5 charts: on the role of trade, FDI, and RBI



Share: