வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மறுபரிசீலனை செய்தல் -நமன் மிஸ்ரா, பாலக் ஜெயின்

புத்தொழில் முகாம்கள் (Start-up camps) சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்க முடியும்.


இந்தியா தனது பொருளாதாரம் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சியில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. இது வேகமாக வளர்ந்துவரும் ஒரு பெரிய பொருளாதாரமாக இருந்தாலும், பல இளைஞர்கள் வேலை தேடுவதில் சிரமப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், ஏறக்குறைய 12 மில்லியன் இந்தியர்கள் தொழிலாளர் சந்தையில் நுழைகின்றனர். சராசரி வயது சுமார் 28 ஆண்டுகள். இருப்பினும், இந்த நாடு ஒரு மக்கள்தொகை சார்ந்த சாதகமான நிலையைக் கொண்டுள்ளது. ஆனால் முறையான நிறுவன கட்டமைப்புகள் இல்லாத நிலையில், இது முதலீட்டு வளமாக இல்லாமல் ஒரு சுமையாக மாறக்கூடும்.


மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வலுவாகத் தோன்றினாலும், நகர்ப்புறங்களில் இளைஞர்களிடையே வேலையின்மை அதிகமாகவே உள்ளது. இது திறமை இல்லாததால் அல்ல. தற்போதுள்ள நிறுவனங்கள் தற்போதைய பொருளாதாரத்திற்குப் பொருந்தாததே இதற்குக் காரணம். வேலைவாய்ப்பு அலுவலகங்கள் உருவாக்கப்பட்டபோது, ​​வேலைவாய்ப்புகள் நேர்கோட்டுத் தன்மையுடன் இருந்தன, மேலும் நிறுவனங்கள் உள்ளூரிலேயே ஆட்களைப் பணியமர்த்தின. இன்று, பொருளாதாரம் மிகவும் சிதறியதாகவும், இணையம் சார்ந்ததாகவும், சிறு வணிகங்களால் இயக்கப்படுவதாகவும் உள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவிற்குப் பிறகு, உலகில் மூன்றாவது பெரிய எண்ணிக்கையாக, இந்தியாவில் 100,000-க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் (startups) உள்ளன. இருப்பினும், இவற்றில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை பெங்களூரு, டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம் (NCR), மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற ஒரு சில பெருநகரங்களில் குவிந்துள்ளன. இருப்பினும், திறமையானவர்கள் இந்த நகரங்களுக்கு அப்பாலும் பரவலாக உள்ளனர். இளைஞர்களுக்குத் திறமை குறைவில்லை, மாறாக வெளிப்பாடு, தொடர்புகள் மற்றும் நிறுவன ஆதரவு ஆகியவையே தேவைப்படுகின்றன.


புத்தொழில் முகாம்கள் (Start-up camps)


இந்தத் தகவல் பற்றாக்குறை மற்றும் புவியியல் ரீதியான புறக்கணிப்பை புத்தொழில் முகாம்கள் மூலம் தீர்க்க முடியும். இந்த முகாம்கள் ஒருமுறை நடக்கும் ஹேக்கத்தான்கள் (hackathons) அல்லது ஊக்கமளிக்கும் பூட்கேம்ப்களைப் (motivational bootcamps) போல இருக்கக்கூடாது. மாறாக, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் முன்பு செயல்பட்டதைப் போலவே, அவை தொழில்முனைவோர் கற்றலுக்கான தொடர்ச்சியான அல்லது கள அடிப்படையிலான நிறுவனங்களாக இருக்க வேண்டும். இந்த முகாம்கள் மாணவர்கள், இளம் தொழில் வல்லுநர்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை—குறிப்பாக 2-ம் மற்றும் 3-ம் நிலை நகரங்களில்—தொழில்முனைவோர் வாய்ப்புகளை நோக்கி வழிநடத்தும். அவை வளங்கள், சந்தைத் தொடர்புகள் மற்றும் ஒழுங்குமுறை ஆதரவு குறித்த தகவல்களை வழங்கும். புத்தொழில் நிறுவனங்கள் சட்டம், தளவாடங்கள், சந்தைப்படுத்தல், வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி ஆதரவு மூலம் உள்ளூர் வேலைகளை உருவாக்குகின்றன. மையப்படுத்தப்பட்ட தொழில்துறை மானியங்களுடன் ஒப்பிடும்போது, ​​புத்தொழில் நிறுவன முகாம்கள் குறைந்த செலவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் ஏற்கனவே புத்தொழில் இந்தியா (Startup India), திறன்மிகு இந்தியா (Skill India), மின்னணு இந்தியா (Digital India) போன்ற கொள்கைகளின் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. தொழில்முனைவோர் கண்டுபிடிப்புக்கான பரவலாக்கப்பட்ட இயற்கை மற்றும் சமூக இடங்களே இங்கு இல்லாததுதான் குறையாகும். இஸ்ரேல், தென் கொரியா மற்றும் வியட்நாம் போன்ற புதுமைப் பாதையில் முன்னேறிய நாடுகள், உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகளில் பெருமளவில் முதலீடு செய்கின்றன. இந்தியா இதை இன்னும் பரந்த அளவில் செய்ய வேண்டும்.


தகுதிச் சான்றிதழ்கள் மட்டும் இந்தியாவின் மக்கள்தொகை நன்மையை வேலைவாய்ப்புகளாக மாற்ற உதவாது. தொழில்முனைவு என்பது இந்திய சமூகத்தின் ஒரு இயல்பான பகுதியாகும். அது வளர முறையான நிறுவன ஆதரவு தேவை. உதாரணமாக, இந்தூர், கோயம்புத்தூர், புவனேஸ்வர், குவஹாத்தி மற்றும் ஜோத்பூர் ஆகியவை வேளாண் தொழில்நுட்பம், காலநிலை தொழில்நுட்பம், சுகாதாரம், தளவாடங்கள் மற்றும் பெருநகரங்களில் முறையாக கவனிக்கப்படாத உள்ளூர் மின்னணு சேவைகளில் பிராந்திய-குறிப்பிட்ட கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். உள்ளூர் தலைநகரங்களின் தேவைகளின் அடிப்படையில் புத்தொழில் நிறுவன முகாம்களை வடிவமைக்கும் திறனை மாநிலங்கள் கொண்டுள்ளன. ஆனால், அதேநேரத்தில் பிற தேசிய மற்றும் உலகளாவிய புத்தொழில் நிறுவன சமூகங்களுடன் ஒருங்கிணைக்கப்படுகின்றன. காலப்போக்கில், இந்த முகாம்கள் ஏற்றுமதி சார்ந்த புத்தொழில் நிறுவனங்களை உருவாக்கும். இது உயர் மதிப்பு சேவைகள் மற்றும் புதுமையால் உந்தப்படும் வளர்ச்சியில் இந்தியாவின் போட்டித்தன்மையை அதிகரிக்கும்.


இந்தியா வேலைவாய்ப்பு அலுவலகங்களை நிறுத்துவது அவசியமில்லை. மக்களை வேலைகளில் அமர்த்துவதிலிருந்து மட்டும் கவனம் செலுத்துவதை மாற்றி, புதிய வாய்ப்புகளை ஆராய்வதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், அமைப்புகள் வரிசை அடிப்படையிலான முறைகளிலிருந்து, சூழல் அமைப்பு அடிப்படையிலான முறைகளுக்கு மாற வேண்டும். புத்தொழில் முகாம்கள் புதிய சிந்தனை முறையை வெளிப்படுத்துகின்றன. இந்த மாற்றம் ஒரு பொருளாதாரச் சீர்திருத்தம் மட்டுமல்ல, ஒரு சமூகத் தேவையும்கூட. தொழில்முனைவோர் கண்டுபிடிப்பை நிறுவனமயமாக்குவதற்காக வேலைவாய்ப்பு பரிமாற்றங்களை நிறுவனமயமாக்குவதில் இந்தியா அளித்த அதே தீவிரத்தை ஏற்றுக்கொண்டால், அது மக்கள்தொகை அழுத்தத்தை உற்பத்தி ஆற்றலாக மாற்ற முடியும். இப்போது, ​​இந்தியாவால் வேலைகளை உருவாக்க முடியுமா என்பது சவால் அல்ல. கோடிக்கணக்கான மக்கள் தங்களுக்குத் தாங்களே வேலைகளை உருவாக்கிக்கொள்ள அனுமதிக்கும் சூழல் அமைப்புகளை இந்தியாவால் உருவாக்க முடியுமா என்பது பற்றியது.


மிஸ்ரா முனைவர் பட்ட ஆராய்ச்சியாளராகவும், ஜெயின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பென்னட் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகவும் உள்ளார்.       

 Original Article : Rethinking job creation -Naman Mishra, Palakh Jain

Share:

இந்தியாவுக்கான மின்சாரத்தின் முதன்மை ஆதாரம் என்ன? -ரோஷ்னி யாதவ், குஷ்பு குமாரி

 முக்கிய அம்சங்கள் :


நிலக்கரியில் இயங்கும் மின் நிலையங்கள் 2025-ம் ஆண்டில் மொத்தம் 1,283 பில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்தன. இது முந்தைய ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட 1,322 பில்லியன் யூனிட்களைவிட 3% குறைவாகும். 2024-ம் ஆண்டை விட ஒட்டுமொத்த மின்சார உற்பத்தி சுமார் 1% அதிகமாக இருந்தபோதிலும் இந்தச் சரிவு ஏற்பட்டது.


இருப்பினும், நிலக்கரி மின்சார உற்பத்தியின் ஒட்டுமொத்த போக்கு கடந்த சில ஆண்டுகளில் மாறவில்லை. நிலக்கரியிலிருந்து உற்பத்தி ஆண்டுதோறும் முழுமையான எண்ணிக்கையில் அதிகரித்து வந்தாலும், வளர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே வந்தது. 2023-ல் 15%-ஆக இருந்த நிலக்கரி மின்சார உற்பத்தி, 2024-ல் 5% அதிகரித்துள்ளது என்று ஆய்வு காட்டுகிறது.


நிலக்கரியிலிருந்து உண்மையான உற்பத்தி 2022-ம் ஆண்டிலும் சரிவைக் சந்தித்துள்ளது. ஆனால், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தொழில்துறை செயல்பாடுகளில் ஏற்பட்ட மந்தநிலைக்கு இது காரணமாக இருக்கலாம்.


புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி அதிகரிப்பைத் தவிர, ஒப்பீட்டளவில் மிதமான கோடை காலம் மற்றும் பிற காரணங்களால் மின் தேவை வளர்ச்சியில் ஏற்பட்ட குறைவு ஆகியவையும் 2025-ம் ஆண்டில் நிலக்கரி மின் உற்பத்தியில் சரிவுக்கு பங்களித்ததாக ஆய்வு தெரிவித்துள்ளது.


புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து மின்சார உற்பத்தி 22% அதிகரித்துள்ளது என்று அந்த ஆய்வு காட்டியது. 2024-ல் 221 பில்லியன் யூனிட்டுகளாக இருந்த உற்பத்தி, 2025-ல் 270 பில்லியன் யூனிட்டுகளாக உயர்ந்தது. அதேநேரத்தில், பெரிய நீர்மின் நிலையங்களிலிருந்து உற்பத்தி 15% அதிகரித்துள்ளது (157-க்கு பதிலாக 180 பில்லியன் யூனிட்கள்), என்று ஆய்வு காட்டுகிறது.


தூய்மையான எரிசக்தி நிறுவப்பட்ட திறனில் விரைவான விரிவாக்கத்தைக் கருத்தில் கொண்டு (2025-ம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 41 ஜிகாவாட் (GW) புதிய புதுப்பிக்கத்தக்க திறன் சேர்க்கப்பட்டது), 2030 காலகட்டத்திற்கான நிலக்கரி திறன் சேர்த்தல்களுக்கான திட்டங்களை இந்தியா திருத்த வேண்டியிருக்கும் என்று அது கூறியது.


உலகிலேயே பசுமை இல்ல வாயுக்களை அதிகமாக வெளியேற்றும் மூன்றாவது பெரிய நாடு இந்தியா ஆகும். இந்த உமிழ்வுகளில் மின்சாரத் துறை சுமார் 40% பங்களிக்கிறது.


நிலக்கரி மின்உற்பத்தியில் சரிவு சீனாவிலும் ஏற்பட்டுள்ளது. கார்பன் ப்ரீஃப் அமைப்புக்காக ஆற்றல் மற்றும் தூய்மையான காற்று ஆராய்ச்சி மையம் (CREA) நடத்திய ஆராய்ச்சியில், 2025-ம் ஆண்டில் சீனாவில் நிலக்கரி அடிப்படையிலான மின்சார உற்பத்தி முந்தைய ஆண்டைவிட 1.6% குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது. சீனாவிலும் கடந்த 50 ஆண்டுகளில் நிலக்கரி அடிப்படையிலான மின்சார உற்பத்தியில் இதுவே முதல் வருடாந்திர சரிவு என்று ஆய்வு தெரிவித்துள்ளது.


உலகின் மிகப்பெரிய பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் நாடு சீனா ஆகும். கடந்த ஆண்டு அக்டோபரில், சீனா தனது உமிழ்வைக் கட்டுப்படுத்தத் தொடங்குவதாகவும், 2035-ம் ஆண்டுக்குள் குறிப்பிடப்படாத உச்சபட்ச நிலையிலிருந்து உமிழ்வுகளை 7-10% குறைப்பதற்கான இலக்கை நிர்ணயிப்பதாகவும் அறிவித்தது.

Original Article : What is India’s main source of electricity? -Roshni Yadav , Khushboo Kumari

Share:

பாரிஸ் ஒப்பந்தத்தின் 6-வது பிரிவு இந்தியாவிற்கு ஏன் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்கிறது? -அபர்ணா ஷர்மா, கோபால் கே. சாரங்கி

பிரிவு 6-ன் கீழ் இந்தியாவின் முதல் படி என்பது ஒரு தொழில்நுட்பச் சாதனையைவிட முக்கியமானது. இது மேம்பட்ட தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நிதி மற்றும் வலுவான சர்வதேச கூட்டாண்மைகளைப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பாகும்.

  

காலநிலை நிதியுதவியின் விநியோகத்தையும் செயல்திறனையும் வலுப்படுத்தும் நோக்கில், பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6-ன் கீழ் உள்ள கார்பன் சந்தைகள் 29-வது காலநிலை மாநாடு மாநாட்டில் முழுமையாகச் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன. பிரிவு 6-ன் கீழ் செயலாக்க கூட்டாண்மையின்படி, 58 தரப்பினரிடையே சரத்து 6.2-ன் கீழ் 89 ஒத்துழைப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது இருதரப்பு மற்றும் பலதரப்பு கார்பன் சந்தை ஒத்துழைப்புகளின் வளர்ந்துவரும் வேகத்தை பிரதிபலிக்கிறது. 29வது காலநிலை மாநாட்டில் பாரிஸ் ஒப்பந்தத்தின் கடன் வழங்கும் பொறிமுறையை (பிரிவு 6.4) ஏற்றுக்கொண்டது, தூய்மையான மேம்பாட்டுப் வழிமுறையிலிருந்து மாறுவதில் ஒரு முக்கிய சாதனையை காட்டுகிறது. இந்த நடவடிக்கை, பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் ஒரு மிகவும் வெளிப்படையான மற்றும் உலகளவில் சீரமைக்கப்பட்ட கடன் வழங்கும் கட்டமைப்புக்கு வழிவகுத்துள்ளது.


பல வருட எதிர்பார்ப்பு மற்றும் கவனமான பரிசீலனைக்குப் பிறகு, ஆகஸ்ட் 2025-ல், இந்தியா கூட்டு வரவு வைப்பு பொறிமுறையில் (Joint Crediting Mechanism (JCM)) கையெழுத்திடுவதன் மூலம் கார்பன் சந்தைகளின் ஒரு புதிய காலகட்டத்திற்குள் நுழைந்தது. இது பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6.2-ஐ திறம்பட செயல்பாட்டிற்குக் கொண்டு வந்ததுடன், சர்வதேச காலநிலை ஒத்துழைப்பில் ஒரு புதிய அத்தியாயத்திற்கும் வழிவகுத்தது.


பிரிவு 6-ன் சாத்தியக்கூறுகள்


A6-ன் அமைப்பில் இந்தியாவின் பங்கேற்பு இந்தியாவிற்கு ஏன் மிக முக்கியமானதாக இருக்கிறது?


A6-ன் கீழ் அமையும் கூட்டாண்மைகள் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டுவரவும், ஆராய்ச்சியை ஆதரிக்கவும், சர்வதேச உறவுகளை வலுப்படுத்தவும், காலநிலை நிதியுதவியைப் பெற்றுத்தரவும் முடியும். இது இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கும், அதே நேரத்தில் அதன் தட்பவெப்பநிலை இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கும் உதவும். இது வேகமாக வளர்ந்துவரும் ஒரு நாட்டிற்கு மிகவும் முக்கியமானது.


முக்கியமாக, பிரிவு 6 சந்தை வழிமுறைகளின் (6.2 மற்றும் 6.4 ஆகிய இரண்டுமே) சாத்தியக்கூறுகள், சர்வதேச அளவில் பரிமாற்றப்படும் தணிப்பு விளைவுகள் (Internationally transferred mitigation outcomes) என அழைக்கப்படும் கார்பன் வரவுகளைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் காலநிலை நிதியை உருவாக்குவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. மாறாக, கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்தும் உலகில், இந்த அமைப்பைப் பயன்படுத்தி குறைந்த கார்பன் கொண்ட தொழில்துறை மற்றும் தொழில்நுட்பத்தை விரைவுபடுத்துவதுடன், வலுவான வர்த்தக உறவுகளை உருவாக்குவதே இதன்  நன்மை ஆகும்.


பாரிஸ் ஒப்பந்தத்தின் விதிமுறைப் புத்தகம், A6 பிரிவிற்கான கட்டமைப்பை வகுத்துரைக்கிறது. இது நாடுகளை ஒன்றிணைந்து செயல்பட அனுமதிக்கிறது. இதன் மூலம், உமிழ்வுக் குறைப்புகளை இருமுறை கணக்கிடுவதைத் தவிர்ப்பதற்காக, தெளிவான கண்காணிப்புடன் அவற்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள முடியும். ஜப்பானுடன் இந்தியா ஏற்படுத்தியுள்ள புதிய JCM கூட்டாண்மை இதற்கு ஒரு ஆரம்பகால உதாரணமாகும்.


பிரிவு 6.2 மற்றும் 6.4 ஆகிய இரண்டையும் செயல்படுத்தும் விதமாக, இந்திய அரசாங்கம் வளர்ச்சி மற்றும் காலநிலை இலக்குகள் இரண்டையும் சமநிலையில் வைத்து, தகுதியான 13 செயல்பாடுகளின் முதல் தொகுப்பை ஏற்கனவே ராஜதந்திரரீதியாக அடையாளம் கண்டுள்ளது. இவை வளர்ந்துவரும், உயர்நிலைத் தொழில்நுட்பங்களாகும். அவை நாட்டின் உமிழ்வுப் போக்கை அடிப்படையாக மாற்றியமைத்து, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிப் பாதையை விரைவுபடுத்துவதற்கு கணிசமாகப் பங்களிக்க முடியும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, நாட்டின் அனைத்துத் துறைகளிலும் அதிக கவனம் பெறும் துறைகளில் கடன் புள்ளிகளை உருவாக்க முடியும். இவற்றில் சேமிப்பு வசதியுடன் கூடிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சூரிய வெப்ப மின் நிலையங்கள் மற்றும் கடல்சார் காற்று மின்சாரம்; பசுமை ஹைட்ரஜன் மற்றும் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு; எரிபொருள் செல்கள் போன்ற வளர்ந்துவரும் போக்குவரத்துத் தீர்வுகள்; உயர்நிலை ஆற்றல்-திறன் தொழில்நுட்பங்கள் மற்றும் நிலையான விமான எரிபொருள் ஆகியவை அடங்கும்.


இந்தியாவின் தற்போதைய செயல்பாடுகளின் பட்டியல், நீண்டகால நிலையான வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் கவனமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார உற்பத்திக்கு இந்தியா தொடர்ந்து நிலக்கரியைச் சார்ந்துள்ள நிலையில், கடல்சார் காற்று மின்சாரம், பெரிய அளவிலான ஆற்றல் சேமிப்பு மற்றும் கடல் ஆற்றல் போன்ற வளர்ந்துவரும் தீர்வுகள் அதன் ஆற்றல் கலவையின் பல்வகைப்படுத்தலை விரைவுபடுத்த முடியும். பசுமை ஹைட்ரஜன், குறிப்பாக எஃகு உற்பத்தி போன்ற தொழில்துறைப் பயன்பாடுகளில், முக்கியத் துறைகளில் உமிழ்வுச் செறிவைக் கணிசமாகக் குறைப்பதற்கு ஒரு வழியை வழங்குகிறது. சிமென்ட் போன்ற தொழில்களில், கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு ஆகியவை உமிழ்வுகளைக் கணிசமாகக் குறைக்க முடியும். இந்தத் தொழில்நுட்பங்கள் ஒவ்வொன்றும் தேசிய முன்னுரிமைகளுக்கு முக்கிய காரணிகளாக இருப்பதுடன், குறைந்த கார்பன் பொருளாதாரத்திற்கான அடித்தளத்தையும் வலுப்படுத்துகின்றன.


நோக்கத்திலிருந்து செயலை நோக்கி நகர்தல்


இருப்பினும், இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள, இந்தியா இப்போது நோக்கத்திலிருந்து செயல்முறைக்கு நகர வேண்டும். முக்கிய கொள்கை முன்னுரிமைகள் சில தனித்துத் தெரிகின்றன. முதலாவதாக, உள்நாட்டுக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். இந்தியா பிரிவு A6-க்காக ஒரு நியமிக்கப்பட்ட தேசிய அதிகார அமைப்பை நியமித்துள்ளது. ஆனால், இதுவரை செயல்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகளின் நோக்கத்தை அது விரிவாகக் குறிப்பிடவில்லை. இது, அங்கீகாரக் கடிதங்களை வழங்குவதற்கான விதிகளை வகுப்பது மற்றும் கார்பன் வர்த்தகத்திற்காக ஒரு நிலையான சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை நிறுவுவது போன்றவற்றை முக்கியமானதாக்குகிறது.


இரண்டாவதாக, திட்டங்களுக்கான அனுமதிகளை நெறிப்படுத்த வேண்டும். பரந்த வழிகாட்டுதல்களை வழங்கவும், நிலைமையைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யவும் அமைச்சரவை மட்டத்தில் ஒரு வழிகாட்டுதல் குழுவை உருவாக்கலாம். ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் மீதான கவுன்சில் (Council on Energy, Environment and Water (CEEW)) ஆராய்ச்சியின்படி, இந்தியாவில் வேளாண்மை, வனவியல் மற்றும் பிற நிலப் பயன்பாட்டுத் திட்டங்களுக்கான தன்னார்வ கார்பன் திட்டங்களைப் பதிவு செய்ய 1,600 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால், ஆசியாவின் மற்ற பகுதிகளில் இது 400 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளது. நிலம் மற்றும் பல பங்குதாரர்கள் பெரும்பாலும் சம்பந்தப்பட்டிருக்கும் A6 திட்டங்களுக்கு, ஒற்றைச் சாளர அனுமதி அமைப்பு முக்கியமானதாகிறது.


மூன்றாவதாக, கார்பன் அகற்றும் சந்தையை உருவாக்கி அவற்றை வலுப்படுத்த வேண்டும். கார்பன் அகற்றுதலுக்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருகிறது. பிரிவு 6, பயோசார் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாறைச் சிதைவு போன்ற செயல்பாடுகளுக்கு இந்தியாவில் ஒரு சந்தையை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம், இந்தியா உயர்தர கார்பன் அகற்றும் வரவுகளின் வழங்குநராக மாறும்.


நான்காவதாக, தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். வளரும் நாடுகள் முழுவதும் பகிரப்பட்ட அமைப்புகள், அறிவுசார் வலையமைப்புகள் மற்றும் நிதி மாதிரிகளை உருவாக்குவதில் இந்தியா தலைமை தாங்க முடியும்.


A6 திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் படி ஒரு தொழில்நுட்பச் சாதனையை விட மேலானது. இது மேம்பட்ட தொழில்நுட்பம், சுற்றுச்சூழலுக்கு உகந்த நிதி மற்றும் வலுவான உலகளாவிய கூட்டாண்மைகளைப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது.


   Original Article : Why Article 6 of Paris Agreement is a powerful tool for India -Aparna Sharma, Gopal K. Sarangi

Share:

குடியுரிமையைத் தீர்மானிப்பதற்கான அடுத்தகட்ட வழிமுறை -காத்யாயினி சாமராஜ்

  ஒரு வாக்காளர்களின் குடியுரிமையை கடந்தகால ஆவணங்களைக் கொண்டு நிரூபிக்க திருப்திகரமான வழிமுறைகள் இல்லாததால், நாட்டின் உண்மையான குடிமகன் எவரும் வாக்காளர் பட்டியலிலிருந்தோ அல்லது குடியுரிமையிலிருந்தோ விடுபடாமல் இருப்பதை உறுதிசெய்ய, வருங்காலத்திற்கான ஒரு திட்டத்தை அல்லது நடைமுறையை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்தகின்றனர். 


தன்னார்வ அமைப்புகள் மட்டுமல்லாமல், அரசு அதிகாரிகளுமே இப்போது வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத் (Special Intensive Revision (SIR)) திட்டத்தை பகிரங்கமாக எதிர்த்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில், வாக்காளர் படிவங்களில் உள்ள தவறுகள் காரணமாக உதவி தேர்தல் பதிவு அதிகாரி (Assistant Electoral Registration Officer (AERO)) ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் கூறுகையில், ஒரு பொறுப்புள்ள குடிமகளாக, இந்தத் தவறுகள் எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகின்றன. மக்களுக்கோ அல்லது நாட்டிற்கோ துரோகம் செய்துவிட்டதாக நான் உணராமல் இருக்கவே, தனது பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்துள்ளார். 


சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (Right to Information (RTI)), வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த கோப்பு குறித்து தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர், "இந்த முடிவு ஆணையத்தால் எடுக்கப்படவில்லை" என்று தெரிவித்தார். நாடுதழுவிய அளவில் செயல்படுத்தப்படும் இந்த சிறப்புத் தீவிர திருத்த திட்டம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ பதிவும் இல்லை என்பதையே இது காட்டுவதாக திருமதி. பரத்வாஜ் கூறுகிறார். அப்படியானால், எந்த அடிப்படையில் தேர்தல் ஆணையம் இதனைத் தொடங்கியது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 


சிறப்புத் தீவிர திருத்த நடைமுறையானது ஒரு 'வேடிக்கையான நாடகம்' என்று 'தி இந்து' (The Hindu) நாளிதழ் விமர்சித்துள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் (EC) மதிப்பைக் குறைப்பதோடு, ஜனநாயகத்தின் அடித்தளத்தையே சிதைப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த முறையை நிறுத்தவும், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் குடியுரிமையை முடிவு செய்யும் ஒட்டுமொத்த முறையையும் சீரமைக்க ஒரு பெரிய மக்கள் இயக்கம் தேவைப்படுவதாகக் கூறுகின்றனர்.


வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த முறையில் கடுமையான குறைபாடுகள் உள்ளன. பீகாரின் இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகள், வாக்காளர் தகுதியை நிரூபிக்க பழைய ஆவணங்களைக் கோருதல், மோசமான பதிவு நடைமுறைகள் மற்றும் குடியுரிமையை வரையறுப்பதற்கான நியாயமற்ற விதிகள் ஆகியவை இந்த அமைப்பை முழுமையாகச் சீரமைக்க வேண்டியதன் அவசியத்தைக் காட்டுவதாகத் தெரிவிக்கின்றனர்.


சிறப்புத் தீவிர திருத்த பணிகளின் முக்கிய நோக்கம் சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிவது என்றால், அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்கின்றனர். 2001-ஆம் ஆண்டில், எல்லை மேலாண்மைக்கான பணிக்குழு (Task Force on Border Management) 1.5 கோடி சட்டவிரோத குடியேறிகள் இருப்பதாக மதிப்பிட்டது. 2004-ஆம் ஆண்டில், அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கம் இந்தியாவில் 1.2 கோடி சட்டவிரோத வங்கதேச குடியேறிகள் இருப்பதாகக் கூறியது. 1.2 முதல் 1.5 கோடி வரை இருந்தாலும், இந்தியாவின் 140 கோடி மக்கள் தொகையில் அவர்கள் வெறும் 1% மட்டுமே என்றும் கூறப்படுகிறது. யூதர்கள், திபெத்தியர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் என அண்டை நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இந்தியா நீண்டகாலமாக புகலிடமாக இருந்து வருகிறது. இது குடியேறிய மக்களை ஏற்றுக்கொண்டு தன் நாட்டில் சேர்த்துக் கொள்ளும் இந்தியாவின் நீண்டகால வரலாற்றுப் பண்பை காட்டுவதாகத் தெரிவிக்கின்றனர். 


அந்த 1 சதவீத மக்கள் நாட்டிற்கு உள்ளே நுழைந்தபோதே அவர்களை அரசால் அடையாளம் காண முடியவில்லை என்றால், இப்போது அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பது உண்மையான குடிமக்களின் உரிமைகளைப் பறிப்பதாக அமையக்கூடாது என்றும் எச்சரிக்கின்றனர். 'குற்றவாளி தப்பித்தாலும் பரவாயில்லை, ஆனால் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படக்கூடாது' என்ற நீதிக் கோட்பாடே குடியுரிமை தொடர்பான முடிவுகளில் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தபோதிலும், 1951 ஐநா அகதிகள் உடன்படிக்கையிலோ அல்லது அதன் 1967 நெறிமுறையிலோ  இந்தியா இன்னும் கையெழுத்திடவில்லை. எனவே, இந்தியாவின் மனிதாபிமானப் பாரம்பரியம் மற்றும் அகதிகள் உரிமைகள் மீதான மரியாதையின் அடிப்படையில், அந்த 1 சதவீதத்தினரை குடிமக்களாக ஏற்றுக்கொள்வதே சரியானதாக இருக்கும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. 


கடினமான தடைகள்


1986 மற்றும் 2004-ஆம் ஆண்டின் குடியுரிமை திருத்தச் சட்டங்கள் (Citizenship Amendment Acts (CAA)), சிறப்புத் தீவிர திருத்த முறைக்கு அடிப்படையாக அமைகின்றன. தகுதியுள்ள குடிமக்கள் தங்களின் குடியுரிமையை நிரூபிப்பதை இந்தச் சட்டங்கள் மிகவும் கடினமாக்குகின்றன. ஏனெனில், பெரும்பாலான மக்களிடம் இல்லாத பழைய ஆவணங்களை இந்தச் சட்டங்கள் கோருகின்றன. இந்தத் திருத்தங்கள் சில முக்கியமான கேள்விகளையும் எழுப்புகின்றன. 'அப்னிலா' (ApniLaw) இணையதளத்தில் உள்ள ஒரு கட்டுரை 1987, 2004 மற்றும் 2019-ஆம் ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டங்கள் குறித்து இவ்வாறு கேட்கிறது: 'குடியுரிமை என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டுமா அல்லது சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டுமா? மக்கள்தொகை மாற்றம் குறித்த அச்சத்தைவிட மனிதாபிமான ரீதியிலான கவலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் சமத்துவத்தையும், நடைமுறை அரசியல் அழுத்தங்களையும் இந்தியா எவ்வாறு சமநிலைப்படுத்தப் போகிறது?'" என்பன போன்ற கேள்விகளை எழுப்புகின்றன.


இந்தச் சூழ்நிலைக்கு ஒரு தீர்வு தேவை. தற்போதைய முறையில் உள்ள குறைபாடுகளும் பிரச்சினைகளும், சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் மக்களை (சட்ட விரோத குடியேறிகள்) 'ஊடுருவல்காரர்கள்' என்று முத்திரை குத்த பயன்படுத்தப்படும் பாரபட்சமான விதிகளை நீக்குவதற்கு, குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தைக் காட்டுகின்றன. 1987-ஆம் ஆண்டிற்கு முன் பிறந்த குடிமக்களுக்கும், அதற்குப் பின் பிறந்தவர்களுக்கும் இடையே உள்ள நியாயமற்ற வேறுபாடுகள், 1987 மற்றும் 2004-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டங்களைத் திருத்துவதன் மூலம் சரிசெய்யப்பட வேண்டும். இந்த விதிகள் பாரபட்சமானவை என்றும், சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14-க்கு (Article 14) எதிரானது என்றும் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்படலாம் என்கின்றனர்

வாக்காளர்களின் குடியுரிமையை வாக்குப்பதிவிற்குப் பிறகு உறுதிப்படுத்த தற்போது நம்பகமான வழிமுறைகள் இல்லை. இதனால், பல லட்சக்கணக்கான மக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து புறக்கணிக்கப்படுகிறார்கள். அனைவருக்கும் வாக்குரிமை என்ற கொள்கையின்படி, உண்மையான குடிமக்கள் யாரும் விடுபடாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதற்காக, 2026-ஆம் ஆண்டில் குடியுரிமைச் சட்டத்தில் ஒரு புதிய திருத்தத்தைக் கொண்டு வரலாம். இதன் மூலம், சட்டப்படி 'அந்நியர்' அல்லது 'குடிமகன் அல்லாதவர்' என்று அறிவிக்கப்பட்டவர்களைத் தவிர, இந்தியாவில் தற்போது வசிப்பவர்கள் அல்லது கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக வசிப்பவர்கள் அனைவருக்கும் இயல்பான முறையில் குடியுரிமை வழங்க பரிசீலிக்கப்படலாம் என்கின்றனர். 


மேற்கண்ட நடவடிக்கைகள் உண்மையான குடிமக்களின் உரிமை பறிப்புக்கான வாய்ப்புகளை குறைந்தபட்சமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்தியாவின் பழமையான மனிதாபிமான பாரம்பரியம் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 


எழுத்தாளர், CIVIC-பெங்களூரின் நிர்வாக அறங்காவலராகவும், ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (Association for Democratic Reforms (ADR)) கர்நாடக மாநில ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

 Original Article : The way forward for determining citizenship -Kathyayini Chamaraj

Share:

அலைபேசிகளின் மூலக் குறியீட்டை (Source Code) அணுக அரசாங்கம் முயற்சி செய்கிறதா? -அரூன் டீப்

 நிறுவனங்களிடமிருந்து மூலக் குறியீட்டுத் தரவை அரசாங்கம் கோருவதில் உள்ள சிக்கல் என்ன? மூலக்குறியீடு என்றால் என்ன, நிறுவனங்கள் ஏன் அதற்கான அணுகலை வழங்க விரும்பவில்லை? குறியீட்டை (Code) ஆய்வு செய்ய அனுமதிப்பது, பாதுகாப்பு மீறல்கள் மற்றும் இணைய தாக்குதல்களின் அபாயத்தை அதிகரிக்குமா? இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?


ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனத்தின் தகவல்படி, திறன்பேசி தயாரிப்பாளர்கள் தங்கள் மூலக் குறியீடு (Source Code) ஆய்வுக்காக மூன்றாவது தரப்பு சோதனை நிறுவனங்களுடன் பகிர வேண்டும் என்ற புதிய விதிகளை இந்திய அரசு பரிசீலித்து வருகிறது. மேலும், பயனர்களுக்குப் பெரிய அளவிலான மென்பொருள் மேம்படுத்தல்களை (Software updates) வெளியிடுவதற்கு முன்பு, நிறுவனங்கள் அது குறித்து அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், ஒன்றிய அரசு இந்தத் தகவல்களை மறுத்துள்ளது. தாங்கள் மூலக் குறியீடு தகவல்களை கேட்கவில்லை என்றும், இது தொடர்பான விவாதங்கள் தவறாகச் சித்தரிக்கப்படுவதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மூலக் குறியீடு என்றால் என்ன?


மூலக் குறியீடு (Source code) என்பது ஒரு மென்பொருள் இயங்குவதற்குத் தேவையான கட்டளைகள் மற்றும் டிஜிட்டல் தகவல்களின் தொகுப்பாகும். ஆண்ட்ராய்டு போன்களுக்கான சில குறியீடுகள் ஆரம்பத்திலிருந்தே எல்லாருக்கும் கிடைக்கும் வகையில் (Open source) இருந்தாலும், போன் தயாரிக்கும் நிறுவனங்கள் அதில் பல மாற்றங்களையும் புதிய வசதிகளையும் சேர்க்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும் தாங்கள் செய்த அந்தத் தொழில்நுட்ப மாற்றங்களை மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கும். இந்தக் குறியீடுகள் வணிகரீதியான காரணங்களுக்காக மட்டுமல்லாமல், பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் ரகசியமாக வைக்கப்படுகின்றன. ஒரு மென்பொருள் உள்ளுக்குள் எப்படி வேலை செய்கிறது என்பதைத் தாக்குதல் நடத்துபவர்கள் முழுமையாகத் தெரிந்துகொண்டால், அதில் உள்ள பலவீனங்களைக் கண்டுபிடித்துத் திருட முயல்வார்கள் என்றும் இது தகவல்கள் திருடப்படுவதற்கும் பிற இணைய தாக்குதல்களுக்கும் வழிவகுக்கும் என்று தெரிவிக்கின்றனர்.


இப்படிப்பட்ட கோரிக்கை ஏன் சர்ச்சைக்குரியது?


ஒரு நிறுவனம் தனது ரகசிய மென்பொருள் குறியீட்டை (Source Code) வெளிநபர்களுடன் பகிர்ந்து கொள்வது என்பது மிகவும் அரிதான ஒன்று. பாதுகாப்புத் துறை போன்ற மிக முக்கியமான துறைகளில் மட்டுமே, அதுவும் ஒரு சில நாடுகளில் மட்டுமே இது நடக்கும். உதாரணமாக, ஆப்பிள் நிறுவனம் சீன அரசாங்கத்தின் சட்டப்பூர்வ கோரிக்கைகளுக்கு ஏற்ப, அங்குள்ள பயனர்களின் தரவுகளை எளிதாக அணுக அனுமதி அளித்துள்ளதே தவிர, தனது மென்பொருள் ரகசிய குறியீட்டை இதுவரை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை.


அரசாங்கம் விமர்சனங்களைச் சந்தித்த உடனேயே இந்த அறிக்கைகள் வெளியாகியுள்ளன. சில வாரங்களுக்கு முன்பு, 'சஞ்சார் சாதி' (Sanchar Saathi) என்ற ஸ்பேம்-புகார் செயலியை (spam-reporting app) ஸ்மார்ட்போன்களில் முன்கூட்டியே நிறுவுமாறு (pre-install) ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு தொலைத்தொடர்பு துறை (Department of Telecommunications (DoT)) உத்தரவிட்டது. இதற்கு அரசியல் ரீதியாகவும் பொதுமக்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தச் செயலி தங்களைக் கண்காணிக்க  பயன்படுத்தப்படலாம் என்றும், அல்லது முடக்குநர்களால் (Hackers) பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் பலர் அஞ்சினர். மேலும், இது போன்ற கோரிக்கைகளை உலகளாவிய திறன்பேசி நிறுவனங்கள் பொதுவாக ஏற்றுக்கொள்வதில்லை.


நிறுவனங்கள் தங்களது மென்பொருள் குறியீட்டை (Source Code) வெளிப்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது இன்னும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில், இது தங்களின் முழுமையான தொழில்நுட்ப ரகசியங்களை

ஒரு வெளி நபரிடம் ஒப்படைக்க அவர்களை வற்புறுத்துவது போல் அமையும் என்கின்றனர். இணைய தாக்குதல் நடத்துபவர்கள், பொதுவாக ஒரு கணினி அமைப்பில் வெளியில் இருந்து பார்க்கும்போதே தெரியக்கூடிய பலவீனங்களைத்தான் பயன்படுத்துவார்கள். அப்படி இருக்கும்போது, உள்முகக் குறியீடுகளுக்கே (Internal Code) அவர்களுக்கு அனுமதி கிடைத்தால், அந்தப் பலவீனங்களைக் கண்டறிவது அவர்களுக்கு இன்னும் எளிதாகிவிடும். குறிப்பாக, அந்தப் மென்பொருள் இயங்கும்விதம் குறித்த விரிவான தகவல்கள் அந்தக் குறியீட்டில் இருந்தால், ஆபத்து இன்னும் அதிகமாகும்.  இதன் காரணமாகத்தான், ஆண்ட்ராய்டு (Android) போன்ற திறந்தநிலை மென்பொருட்களை (Open-source) அடிப்படையாகக் கொண்ட மொபைல் இயங்குதளங்கள்கூட, அவற்றின் செயல்பாடுகள் குறித்த அனைத்து விவரங்களையும் பொதுவெளியில் வெளியிடுவதில்லை என்று கூறப்படுகிறது.


இந்திய அரசு, மென்பொருளின் குறியீடுகளை பொதுவெளியில் பகிரவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறதா?


2023-ஆம் ஆண்டில், தொலைத்தொடர்புத் துறையின்கீழ் (DoT) இயங்கும் தேசிய தகவல் தொடர்பு பாதுகாப்பு மையம் (National Centre for Communication Security (NCSS)), நுகர்வோர் சாதனங்களுக்கான 'இந்தியத் தொலைத்தொடர்பு பாதுகாப்பு உறுதித் தேவை' (Indian Telecom Security Assurance Requirement (ITSAR)) என்ற ஆவணத்தை இறுதி செய்தது. இந்த 'இந்தியத் தொலைத்தொடர்பு பாதுகாப்பு உறுதித் தேவை' (Indian Telecom Security Assurance Requirement (ITSAR)) என்பது தொழில்நுட்பத் தரநிலைகளைக் குறிக்கும். இந்தியாவில் தொலைத்தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான 'தொலைத்தொடர்பு உபகரணங்களின் கட்டாய சோதனை மற்றும் சான்றிதழ்' (Mandatory Testing and Certification of Telecommunication Equipment (MTCTE)) முறையின்கீழ் இந்தத் தரநிலைகள் பயன்படுத்தப்படுகின்றன.


இந்திய தந்தி (திருத்தப்பட்ட) விதிகள், 2017-ன்கீழ் தொலைத்தொடர்பு சாதனங்களுக்கான கட்டாய சோதனை மற்றும் சான்றிதழ் (MTCTE) முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், தொலைத்தொடர்பு சட்டம் 2023 நிறைவேற்றப்பட்டபிறகு, ஸ்மார்ட்போன்களுக்கு இந்த தொலைத்தொடர்பு சாதனங்களுக்கான கட்டாய சோதனை மற்றும் சான்றிதழ் சோதனையிலிருந்து விலக்கு அளிக்க தொலைத்தொடர்புத் துறையும் (DoT), மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் (Ministry of Electronics and Information Technology (MeitY)) முடிவு செய்துள்ளன. ஏனெனில், ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே இந்திய தர நிர்ணய அமைப்பால் சான்றளிக்கப்படுகின்றன. பொறுப்பு மாற்றம்: இது தொடர்பான பொறுப்பு தற்போது தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், தொலைத்தொடர்புத் துறை நிறுத்திய இடத்திலிருந்து ஆலோசனைகள் தொடர்வதாகவும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அரசு திறந்த மனதுடன் இருப்பதாகவும், நாடு மற்றும் நுகர்வோரின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) கூறியுள்ளது. ஸ்மார்ட்போன் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய செல்லுலார் மற்றும் மின்னணுவியல் சங்கம் (India Cellular and Electronics Association (ICEA)), இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒரு பெரிய விஷயம் அல்ல என்றும் கூறியுள்ளது.


இணைய உரிமைகளுக்காகச் செயல்படும் இணைய சுதந்திர அறக்கட்டளை (Internet Freedom Foundation (IFF)) என்ற அமைப்பு இந்தக் கருத்தை ஏற்கவில்லை. அரசின் கூட்டங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறவில்லை என்றும், இந்தியத் தொலைத்தொடர்பு பாதுகாப்பு உறுதித் தேவை (ITSAR) ஆவணங்கள் இன்னும் பொதுவெளியில் (இணையத்தில்) கிடைக்கின்றன என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


இந்த முன்மொழிவுகள் எதுவும் இல்லை என்று அரசாங்கம் கூறினால், அது தொடர்பான ஆவணங்கள் இன்னும் ஏன் அதன் இணையதளத்தில் உள்ளன என்பதை விளக்க வேண்டும் மற்றும் அந்த ஆலோசனைக் கூட்டங்களின் குறிப்புகளையும் வெளியிட வேண்டும் என்று இணைய சுதந்திர அறக்கட்டளை (IFF) அமைப்பானது தெரிவித்துள்ளது. 


பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் மூடிய அறைக்குள் நடத்தப்படும் ஆலோசனைகளோடு மட்டும் இந்த விவகாரம் நின்றுவிடக் கூடாது என்று இணைய சுதந்திர அறக்கட்டளை (Internet Freedom Foundation) கூறியுள்ளது. இறுதி விதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை என்றால், அரசு உடனடியாக இந்தியத் தொலைத்தொடர்பு பாதுகாப்பு உறுதித் தேவை (Indian Telecom Security Assurance

Requirement (ITSAR) வரைவு அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்றும், வெளிப்படையான பொது ஆலோசனைகள் மூலம் இதில் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. 

Original Article : Is the government seeking phones’ source code? -Aroon Deep

Share:

இந்தியாவின் சிறு நகரங்கள் அதிக அளவில் நகரமயமாக்கப்படுகின்றனவா? -திகேந்தர் சிங் பன்வார்

நாட்டின் பெருநகரங்களில் காணப்படும் நெரிசலுக்கு சிறு நகரங்கள் ஒரு தீர்வாக அமையுமா? 


இந்தியா நகரங்களைப் பற்றி பேசும்போது பெரும்பாலும் மிகப்பெரிய நகரங்களை மட்டுமே கவனத்தில் கொள்கிறது. ஆனால், உண்மையில் ஒரு முக்கியமான மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது: இந்தியாவில் உள்ள ~9,000 நகரங்களில், வெறும் 500 நகரங்கள் மட்டும்தான் பெரிய நகரங்கள், மீதி அனைத்தும் 1 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை உள்ள சிறிய நகரங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சிறிய நகரங்கள் தற்போது வேகமாக வளர்ந்து வருகின்றன. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் விளைவு மட்டுமல்ல, அதில் உள்ள பிரச்சினைகளும் தற்போது தெரிய ஆரம்பித்திருக்கின்றன.


சிறு நகரங்கள் எவ்வாறு பெருகியுள்ளன?


1970-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டுகள் வரை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெரிய நகரங்களை மட்டுமே சார்ந்து இருந்தது. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பின்னாளில் பெங்களூரு, ஹைதராபாத் போன்ற மெட்ரோ நகரங்கள் தொழிற்சாலைகள், அரசு முதலீடு, வேலைவாய்ப்பு எல்லாவற்றுக்கும் மையமாக மாறின. ஆனால், இன்று இந்த பெரிய நகரங்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. நில விலை மிக அதிகமாக (உற்பத்தித் திறனோடு தொடர்பில்லாமல்) உயர்ந்துவிட்டது. சாலை, மின்சாரம், தண்ணீர் போன்ற வசதிகள் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சாதாரண தொழிலாளர்களால் வாழ முடியாத அளவுக்கு அன்றாட வாழ்க்கைச் செலவும் வீட்டு வாடகையும் உயர்ந்துவிட்டன. அதாவது — முன்பு வளர்ச்சிக்கு உதவிய அதே பெரு நகரங்கள் இப்போது அதிகப்படியான சுமையை தாங்க முடியாமல் திணறுவதாகக் கூறப்படுகின்றன.


இப்போது சிறிய நகரங்கள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்துள்ளன. இந்த மாற்றம் இந்தியா முழுவதும் தெரிகிறது. சட்டெனப்பள்ளி, தம்தரி, பாராபங்கி, ஹாசன், போங்கைகாவ், உனா போன்ற சிறு நகரங்கள், தளவாடம், வேளாண் பொருட்கள் செயலாக்கம், கிடங்கு, கட்டுமானம், சேவைகள் மற்றும் நுகர்வு மையங்களாக மாறிவருகின்றன. பெருநகரங்களில் இருந்து வெளியேறும் தொழிலாளர்களையும், வேளாண் தொழில்களில் எதிர்காலம் இல்லை என்று நினைக்கும் கிராமத்து இளைஞர்களையும் இந்த சிறு நகரங்கள் ஈர்த்து வருகின்றன.

இவை நகரமயமாக்கலுக்கு வெளியில் இல்லை — அதன் ஒரு பகுதிதான். மலிவான நிலம், நெகிழ்வான தொழிலாளர் முறை, தளர்வான சட்ட விதிகள் மற்றும் குறைவான அரசியல் கவனம் ஆகியவை காரணமாக, பெரிய முதலீட்டு அழுத்தத்துக்கு நடுவே இந்த சிறு நகரங்கள் வேகமாக வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.


சிறு நகரங்கள் ஒரு சிறந்த மாற்று வழிதானா?


அவை சுதந்திரம் அல்லது முன்னேற்றத்திற்கான உண்மையான வாக்குறுதிகள் எதையும் வழங்கவில்லை. இப்போது நடப்பது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அல்ல; மாறாக கிராமப்புற வறுமை நகரங்களுக்கு இடம் பெயர்வதுதான் நடக்கிறது. பெரும்பாலான வேலைகள் முறைசாராத் தொழில்களாகவே உள்ளன. ஒப்பந்தம் இல்லாத கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டிலிருந்தே குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் பெண்கள் மற்றும் பாதுகாப்பு இல்லாத ஆன்லைன்/டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் வேலைகள் போன்ற தற்காலிக வேலைகளில் சிக்கியுள்ள இளைஞர்கள் என இந்த நிலை நீடிக்கிறது. மத்தியப் பிரதேசத்தின் ஷாஹ்டோல் (Shahdol) மற்றும் கர்நாடகாவின் ராய்ச்சூர் (Raichur) போன்ற நகரங்களில் புதிய அதிகார அமைப்புகள் உருவாகி வருகின்றன: ரியல் எஸ்டேட் முகவர்கள், உள்ளூர் ஒப்பந்ததாரர்கள், நுண்கடன் வழங்குபவர்கள் மற்றும் அரசியல் இடைத்தரகர்கள் இப்போது நிலத்தையும் உழைப்பையும் கட்டுப்படுத்துகிறார்கள். இது கொள்கை தோல்வியை மிகத்தெளிவாகக் காட்டுகிறது.

இந்தியாவின் முக்கிய நகர்ப்புறத் திட்டங்கள் இன்னும் பெரிய நகரங்களையே மையமாகக் கொண்டுள்ளன. விரிவுபடுத்தப்பட்ட அடல் நகரங்களை புதுப்பித்து மேம்படுத்தும் திட்டம்கூட (Atal Mission for Rejuvenation and Urban Transformation (AMRUT)), பெரும்பாலான சிறுநகரங்களை முக்கியமான அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு முதலீடுகளிலிருந்து ஒதுக்கியே வைத்திருக்கிறது. குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மைத் திட்டங்கள் பெரிய நகரங்களுக்காக உருவாக்கப்படுகின்றன. ஆனால், சிறு நகரங்களோ முறையற்ற திட்டங்களையும், தற்காலிக தீர்வுகளையுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக, தண்ணீர் லாரிகளின் பயன்பாடு அதிகரித்து, நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது ஒரு மிகப்பெரிய பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. சிறு நகர நகராட்சிகளில் போதிய நிதியோ அல்லது பணியாட்களோ இல்லை என்பதும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. திட்டமிடுதல் பணிகள் உள்ளூர் சூழலைப் புரிந்து கொள்ளாத ஆலோசகர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன, மேலும் பொதுமக்களின் பங்களிப்பு வெறும் பெயரளவு கூட்டங்களோடு முடிந்துவிடுகிறது என்றும் தெரிவிக்கின்றனர். 


அடுத்து என்ன?


முதலில், சிறிய நகரங்களை இந்தியாவின் எதிர்கால நகர வளர்ச்சியின் முக்கிய சக்தியாக அரசு அங்கீகரிக்க வேண்டும். இரண்டாவது, பெரிய நகரங்களைப் போலவே திட்டமிடாமல், வீடு - வேலை - போக்குவரத்து - சுற்றுச்சூழல் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து சிறிய நகரங்களுக்கு ஏற்றவாறு திட்டங்களை உருவாக்க வேண்டும். மூன்றாவது, சிறிய நகரங்களுக்கு வலுவான உள்ளாட்சி அமைப்புகள், தெளிவான மற்றும் வெளிப்படையான நிதிநிலை, தொழிலாளர் சங்கங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், கூட்டுறவுகளுக்கு போதுமான அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இறுதியாக, டிஜிட்டல் தளங்கள் & பொருளாதார அமைப்புகள் போன்றவை உருவாக்கப்பட வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், பணம்/மதிப்பு உள்ளூரிலேயே தங்குவதற்கு இடவசதி ஏற்பாடுகளுக்கு உதவவும், தரவு பயன்பாட்டில் பொறுப்புணர்வை உறுதிப்படுத்தவும் மூலதனம் முறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.


இந்திய நகரங்கள் நாட்டின் நகர்ப்புற வளர்ச்சிக்கு மிக முக்கியமானவையாகும். அவை சமத்துவமின்மையை அதிகரிக்கின்றனவா அல்லது ஜனநாயக மாற்றத்திற்கான இடங்களாக மாறுகின்றனவா என்பது அரசியல் விருப்பத்தைப் பொறுத்தே அமையும் என்று கூறப்படுகிறது.


திகேந்தர் சிங் பன்வார், கேரள நகர்ப்புற ஆணையத்தின் உறுப்பினர் ஆவார்.

   Original Article : Are India’s small towns being increasingly urbanised? -Tikender Singh Panwar

Share:

மேற்கு வங்கத்தில் இரண்டு நிபா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. -ரோஷ்னி யாதவ்

  மேற்கு வங்கத்தில் சமீபத்தில் பதிவான நிபா வைரஸ் பாதிப்புகள், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் இந்த அபாயகரமான நோய்மீது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன. நிபா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எவ்வாறு பரவுகிறது? இதன் அறிகுறிகள் மற்றும் கண்டறியும் முறைகள் என்ன? மேலும், இதற்கு ஏதேனும் குறிப்பிட்ட சிகிச்சை உள்ளதா?


தற்போதைய செய்தி:

மேற்கு வங்கத்தில் இரண்டு நிபா வைரஸ் பாதிப்பு வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களும் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவப் பணியாளர்கள் என்றும், அவர்கள் இருவரும் மருத்துவமனையில் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்பட்டதாக அரசு கூறியுள்ளது. நிபா வைரஸ் நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க மாநில அரசுக்கு உதவுவதற்காக, ஒரு தேசிய கூட்டு நோய்ப் பரவல் தடுப்புக் குழு (National Joint Outbreak Response team) மேற்கு வங்கத்திற்கு அனுப்பப்படுவதாக ஒன்றிய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சூழலில், இந்த நிபா வைரஸ் குறித்து அறிந்துகொள்வது மிகவும் முக்கியமாதாகிறது.

முக்கிய அம்சங்கள்:


1. நிபா என்பது வௌவால்கள், பன்றிகள், நாய்கள் மற்றும் குதிரைகள் போன்ற விலங்குகளை முக்கியமாகப் பாதிக்கும் ஒரு வைரஸ் தொற்றாகும். இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுவதால், நோய்வாய்ப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களுக்குத் தொற்று ஏற்படலாம். மேலும், இது கடுமையான நோயை ஏற்படுத்தக்கூடும்.


2. நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதன் மூலமாகவோ அல்லது வைரஸ் பரவியுள்ள பழங்கள், மரங்கள் அல்லது பேரீச்சம்பழச் சாறு மற்றும் பதநீரை அருந்துவதன் மூலமாகவோ மனிதர்களுக்குப் பரவக்கூடும். இது வீடுகளிலோ அல்லது மருத்துவமனைகளிலோ நெருங்கிய தொடர்பு மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடும். மேலும், நிபா நோயால் இறந்தவர்களின் உடல்களைக் கையாளும்போதும் இது பரவலாம்.


3. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு (Disease Control and Prevention (CDC)) அமைப்பின்படி, காய்ச்சல், தலைவலி, இருமல், தொண்டை வலி, சுவாசப் பிரச்சனைகள் மற்றும் வாந்தி ஆகியவை இதன் அறிகுறிகளாகும். கடுமையான சூழல்களில், இது குழப்பம், அதீத தூக்கக் கலக்கம், வலிப்புத்தாக்கங்கள், மூளை வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும். மேலும், கோமா அல்லது மரணத்திற்கும் வழிவகுக்கலாம்.

4. நிகழ்நேர பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (real-time polymerase chain reaction (RT-PCR)) பரிசோதனையானது, மூக்கு அல்லது தொண்டைச் சளி மாதிரிகள், மூளைத் தண்டுவட திரவம் (cerebrospinal fluid (CSF)), சிறுநீர் மற்றும் இரத்த மாதிரிகள் மூலம் நிபா வைரஸை உறுதிப்படுத்த முடியும். நோய்த்தொற்றின் பிந்தைய நிலைகளில் அல்லது குணமடைந்த பிறகு, மருத்துவர்கள் நொதி-இணைக்கப்பட்ட நோயெதிர்ப்பு உறிஞ்சும் மதிப்பீடு (enzyme-linked immunosorbent assay (ELISA)) பரிசோதனை மூலம் இரத்தத்தில் உள்ள சில ஆன்டிபாடிகளைப் பரிசோதித்து நோயைக் கண்டறியலாம்.


5. இதற்கு வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் இல்லை. அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிக தண்ணீர் குடிப்பது, ஓய்வெடுப்பது, குமட்டல் அல்லது வாந்தியை கட்டுப்படுத்த மருந்துகளைப் பயன்படுத்துவது, சுவாசிப்பதற்கு இன்ஹேலர்கள் மற்றும் துகள் தெளிப்பான்களைப் (nebulisers) பயன்படுத்துவது மற்றும் தீவிரமான சமயங்களில் வலிப்புத் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துவது ஆகியவை தற்போதுள்ள சிகிச்சை முறைகளாகும்.


6. இந்தியாவில் நிபா நோய்த் தொற்றுகள் அரிதாகவே ஏற்படுகின்றன. கேரளாவில் பாதிப்புகள் சில காலங்களுக்கு முன்னர் பதிவாகியுள்ளன. அதே சமயம் மேற்கு வங்கத்தில் கடைசியாக 2001-ஆம் ஆண்டு சிலிகுரியில் நிபா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டது.


7. குறிப்பாக, நிபா வைரஸின் முதல் மனிதத் தொற்றுகள் 1998-ஆம் ஆண்டில் மலேசியாவிலும், 1999-ஆம் ஆண்டில் சிங்கப்பூரிலும் ஏற்பட்டன. இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட நபர், எந்த மலேசிய கிராமத்தில் இந்த நோயால் இறந்துபோனாரோ, அந்த கிராமத்தின் பெயரிலிருந்தே இந்த வைரஸ் தனது பெயரைப் பெறுகிறது.


‘ஒரே ஆரோக்கிய (One-health approach) அணுகுமுறை என்றால் என்ன?

1. உலக சுகாதார அமைப்பின் வலைத்தளத்தின்படி, ஒரே ஆரோக்கியம் என்பது மக்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்தை நிலையான சமநிலைப்படுத்தி மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஒன்றிணைக்கும் அணுகுமுறையாகும்.


2. மனிதர்களின் ஆரோக்கியம், வீடு மற்றும் காட்டு விலங்குகள், தாவரங்கள் மற்றும் பரந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆகியவை ஒன்றோடொன்று நெருக்கமாக தொடர்புடையவை என்பதை உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்கிறது.


3. சுகாதாரம், உணவு, நீர், எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை துறை சார்ந்த கவலைகளைக் கொண்ட பரந்த தலைப்புகளாக இருந்தாலும், துறைகள் மற்றும் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், தொற்று நோய்களின் உருவாக்கம், நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற சுகாதார சவால்களை எதிர்கொள்ளவும், நமது சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியம் மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்தவும் இது முக்கிய இடத்தை வகிக்கிறது.


4. மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலை ஒன்றிணைப்பதன் மூலம், ஒரே ஆரோக்கிய அணுகுமுறை (One Health) என்பது நோய்களைத் தடுப்பது, கண்டறிவது, அவற்றுக்குத் தயாராவது மற்றும் நிர்வகிப்பது என ஒவ்வொரு கட்டத்திலும் நோய்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், உலகை ஆரோக்கியமானதாகவும் பாதுகாப்பானதாகவும் வைத்திருக்கச் செய்கிறது.


5. இந்த அணுகுமுறையை சமூக, தேசிய, பிராந்திய மற்றும் உலகளாவிய மட்டங்களில் பயன்படுத்தலாம். இது பகிரப்பட்ட மற்றும் திறமையான நிர்வாகம், தகவல் தொடர்பு, ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பைச் சார்ந்துள்ளது. ஒரே ஆரோக்கிய அணுகுமுறையை பயன்படுத்துவது, மக்கள் அதன் நன்மைகள், அபாயங்கள் மற்றும் வாய்ப்புகளைப் புரிந்துகொள்ளவும், ஆரோக்கியத்திற்கான நியாயமான மற்றும் முழுமையான தீர்வுகளைக் கண்டறியவும் உதவுகிறது.


Original Article : Two cases of Nipah virus detected in West Bengal. -Roshni Yadav

Share:

இமாச்சலப் பிரதேசத்தின் முதல் துணை மலை நகரத் திட்டத்தை மக்கள் ஏன் எதிர்க்கின்றனர்? -சௌரப் பராஷர்

பத்தாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஜாதியா தேவி நகரத் திட்டம் (Jathiya Devi township), நிதிப் பற்றாக்குறை காரணமாக தொடந்து தாமதங்களைச் சந்தித்துள்ளது. மத்திய அரசின் நிதியுதயை இன்னும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், மாநில வளங்களைப் பயன்படுத்தி முதல் கட்டப் பணிகள் இப்போது தொடங்கப்படுகிறது.


சிம்லா நகரத்திலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஜாதியா தேவி, இமாச்சலப் பிரதேச வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் (Himachal Pradesh Housing and Urban Development Authority (HIMUDA)) செயல்படுத்தப்பட உள்ள ஒரு லட்சிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2014-ம் ஆண்டு மத்திய அரசின் ஒப்புதலுடன் மாநில அரசால் உருவாக்கப்பட்டது. ஜாதியா தேவி பஞ்சாயத்து பவன் உட்பட, இப்பகுதி முழுவதும் சமர்பிக்கப்படவுள்ள அறிவிப்புகள், முன்மொழியப்பட்ட சமூக தாக்க மதிப்பீடு (Social Impact Assessment (SIA)) ஆய்வு தொடர்பாக டிசம்பர் 29-ம் தேதிக்குள் ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு குடியிருப்பாளர்களை அழைத்தன.


2014-ம் ஆண்டு முதன்முதலில் திட்டமிடப்பட்ட இந்தத் திட்டம், இப்போது பல கிராமங்களில் பரவலான எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. குடியிருப்பாளர்கள் இடம்பெயர்வு, வாழ்வாதார இழப்பு மற்றும் போதுமான இழப்பீடு கிடைக்காது என்ற அச்சத்தில் உள்ளனர். ஜனவரி 10-ம் தேதி, நகரமைப்புக்காக கையகப்படுத்தப்படுவதற்கு அடையாளம் காணப்பட்ட 11 வருவாய் கிராமங்களில் குறைந்தது எட்டு வருவாய் கிராமங்களைக் கொண்ட பாகி கிராம பஞ்சாயத்து, தங்கள் நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்காத ஒரு தீர்மானத்தை எதிர்ப்பின்றி நிறைவேற்றியது.


ஜாதியா தேவி நகரத் திட்டம் (Jathiya Devi Township Project)


ஜாதியா தேவி என்பது பாகி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒரு இடம். இந்தப் பகுதியில் ஒரு பழமையான ஜாதியா தேவி கோயில் இருந்ததால் இந்தப் பெயர் வந்தது. சிம்லா மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், புதிய பொருளாதார மையங்களை உருவாக்கவும், நிலையான, பேரிடரைத் தாங்கும் நகர்ப்புற வளர்ச்சியை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்ட துணை மலை நகரமாக இந்த முன்மொழியப்பட்ட நகரம் கருதப்படுகிறது.


மாநில நெடுஞ்சாலை-16 (State Highway (SH)) மற்றும் தேசிய நெடுஞ்சாலை-5 (National Highway (NH)) இல் உத்திரீதியாக அமைந்துள்ள இந்த நகரத்திட்டம் (township), சிம்லா விமான நிலையத்திலிருந்து ஜுப்பர்ஹட்டியில் 3–4 கி.மீ தொலைவிலும், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நிலையம் (ISBT) சிம்லாவிலிருந்து சுமார் 20–22 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த நிலப்பரப்பு கடல் மட்டத்திலிருந்து 1,300 முதல் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதில் முகடுகள், பள்ளத்தாக்குகள் மற்றும் பருவகால நீரோடைகளும் உள்ளன.


நவம்பர் 2025-ல் நடைபெற்ற சமூகத் தாக்க மதிப்பீட்டு (SIA) ஆய்வின்படி, நகரத்திட்டம் சுமார் 249 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டிருக்கும். இதில், 35 ஹெக்டேர் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலமாக இருக்கும். முன்மொழியப்பட்ட நிலப் பயன்பாட்டுத் திட்டத்தில் பல மண்டலங்கள் அடங்கும். இதில், குடியிருப்புப் பகுதிகள் 55.16 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டிருக்கும். இவை உயர் வருமானக் குழுக்கள் (high-income groups (HIG)), நடுத்தர வருமானக் குழுக்கள் (middle-income groups (MIG)), குறைந்த வருமானக் குழுக்கள் (low-income groups (LIG)) மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (economically weaker sections (EWS)) இந்த திட்டத்தின் மூலம் வீடுகளை வழங்கும். வணிகப் பகுதிகள் 13.36 ஹெக்டேர் பரப்பளவில் அமையும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத தொழில்துறை மண்டலங்கள் 15.7 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டிருக்கும். பொழுதுபோக்கு மற்றும் பசுமை மண்டலங்கள் 16.42 ஹெக்டேர் பரப்பளவில் விரிவடையும். நதி மேம்பாட்டுப் பகுதிகள் 16.56 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டிருக்கும். முன்மொழியப்பட்ட அகலப்படுத்தப்பட்ட சாலைகள் (13.78 ஹெக்டேர்), பயன்பாட்டு சேவைகள், திறன்மிகு போக்குவரத்து அமைப்புகள், ஹெலிபேட் இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் திட்டமிடல் பகுதி ஆகியவை நகரத்திட்டத்தின் பிற அம்சங்களாகும். நகரத்திட்டத்தின் கட்டம்- 1, உயர் வருமானக் குழுக்கள் (HIG), நடுத்தர வருமானக் குழுக்கள் (MIG), குறைந்த வருமானக் குழுக்கள் (LIG) ​​மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் (EWS) வகைகளில் 895 குடியிருப்பு அலகுகளையும், 84.22 ஹெக்டேருக்கு மேல் வணிக மற்றும் தொழில்துறை கூறுகளையும் முன்மொழிகிறது. அதேநேரத்தில், பசுமை மற்றும் நதி மேம்பாட்டு மண்டலங்கள் மேலும் 33 ஹெக்டேர்களை உள்ளடக்கும்.


Bigha :  பிகா என்பது நிலப்பரப்பை அளவிடுவதற்கான ஒரு பாரம்பரிய, தரப்படுத்தப்படாத அலகு ஆகும். இது இந்தியா, நேபாளம் மற்றும் வங்காளதேசத்தின் விவசாயப் பகுதிகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.


கையகப்படுத்துவதற்கு அடையாளம் காணப்பட்ட கிராமங்கள்


சமூகத் தாக்க மதிப்பீட்டு (SIA) அறிக்கை, எட்டு கிராமங்களில் 249 ஹெக்டேர் (தோராயமாக 2,959 பிகாக்கள்) சாத்தியமான கையகப்படுத்துதலுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட இந்த கிராமங்கள்: சானன் (568 பிகாக்கள்), பந்தி (109 பிகாக்கள்), ஆஞ்சி (396 பிகாக்கள்), சில்லி பாகி (699 பிகாக்கள்), மஜோலா (78 பிகாக்கள்), சில்ரு (214 பிகாக்கள்), தனோகரி (270 பிகாக்கள்), மற்றும் கியாராகி (303 பிகாக்கள்) கொண்டுள்ளது.


இந்த கிராமங்கள் அனைத்தும் சிம்லாவின் கிராமப்புறங்களில் அமைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பாகி கிராம பஞ்சாயத்தின்கீழ் வருகின்றன. கூடுதலாக, அண்டை நாடான சோலன் மாவட்டத்தின் மம்லிக் தாலுகாவில் உள்ள மஞ்சியாரி கிராமமும் (சுமார் 441 பிகாக்கள்) அடையாளம் காணப்பட்டுள்ளது. சமூகத் தாக்க மதிப்பீட்டு (SIA) அறிக்கையின்படி, 386 வீடுகள் நேரடியாக பாதிக்கப்படும், 158 வீடுகள் வாழ்வாதார சீர்குலைவை எதிர்கொள்ளும். மறைமுக பாதிப்புகளில் பொதுவான சொத்து வளங்கள் (common property resources(CPR)) மற்றும் பகிரப்பட்ட நில பயன்பாட்டு அமைப்புகளுக்கான அணுகலை இழப்பது இதில் அடங்கும்.


போராட்டம்


முன்மொழியப்பட்ட கையகப்படுத்தல் வளமான விவசாய நிலங்கள், மூதாதையர் வீடுகள் மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான சமூக மற்றும் மத கட்டமைப்புகளை அச்சுறுத்துவதாக குடியிருப்பாளர்கள் வாதிடுகின்றனர். "விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் உட்பட முழு கிராமங்களும் கையகப்படுத்தப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்று அப்பகுதி மக்கள் கூறினர். இது பல தலைமுறையாக இங்கு வசித்துவரும் மக்களை இடம்பெயர்த்து புதியவர்களுக்கு வீடுகளை கட்ட அரசாங்கம் விரும்புகிறது," என்று டிசம்பர் 29 பொது விசாரணையின் போது திட்டத்தை எதிர்த்த நீரஜ் தாக்கூர் கூறினார்.


"ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற 418 வீடுகளில் உள்ள 120 குடும்பங்களில் 1/4 பங்கு பெரும்பான்மை தேவை என்றாலும், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் 280 பேர் இந்தத் தீர்மானத்தில் கையெழுத்திட்டனர்" என்று கிராமப் பஞ்சாயத்து பாகியின் தலைவர் நரேஷ் குமார் தாக்கூர் கூறினார்.


"மிக நீண்டகாலத்திற்கு முன்பு, மலை நகரமைப்புக்காக இமாச்சலப் பிரதேச வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (HIMUDA) 250-க்கும் மேற்பட்ட பிகாக்களை கையகப்படுத்தியது. இதுவரை, கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் ஒரு செங்கல் கூட வைக்கப்படவில்லை. அந்த நிலம் வளமற்றதாக இருந்தது என்று அவர் கூறினார். ஆனால் இந்த முறை, அரசாங்கம் வளமான விவசாய நிலங்களைக் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது குடியிருப்பாளர்களின் வீடுகளைக் கையகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது" என்றும் அவர் கூறினார்.


இழப்பீடு தொடர்பான கவலைகள்


நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்தில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமைச் சட்டம்-2013 இன் பிரிவு 5 மற்றும் பிரிவு 8 இன் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புகள், சமூகத் தாக்க மதிப்பீட்டு (SIA) ஆய்வின்படி கையகப்படுத்தல் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கோரியது. இமாச்சலப் பிரதேச வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (HIMUDA) மற்றும் வருவாய் அதிகாரிகளின் கூற்றுப்படி, தற்போதைய நில விலைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள ஆட்சியர் நிர்ணயித்த விலைகளின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

கிராம மக்கள் நிலம் கையகப்படுத்துவதைப் புறக்கணிக்க முடிவு செய்திருந்தாலும், என்ன இழப்பீடு வழங்கப்படும் என்பதை முதலில் அறியாமலேயே அவ்வாறு செய்தனர். இந்தக் கிராமங்களில் உள்ள நிலம் கூட்டாகச் சொந்தமானது என்று பல கிராம மக்கள் நம்புகிறார்கள். தனிப்பட்ட உரிமையாளர்களுக்கு இழப்பீடாக மிகக் குறைந்த பணமே கிடைக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.


"எனது சகோதரர்களும் நானும் கூட்டாக 12 பிகாக்களை வைத்திருக்கிறோம். நிலத்தை மகன்கள் மற்றும் பேரன்களுக்கு இடையே பிரிவினைக்குப் பிறகு, ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும்? விவசாயம்தான் தங்களின் முக்கிய வாழ்வாதாரம் என்றும் அவர் மேலும் கூறினார். அரசாங்கம் முன்னேறுவதற்கு முன்பு இழப்பீட்டை தெளிவுபடுத்த வேண்டும்," என்று கிராமவாசிகளில் ஒருவரான 84 வயதான ஹிரா சிங் தாக்கூர் கூறினார்.


சமூகத் தாக்க மதிப்பீட்டு (SIA) அறிக்கை


சமூகத் தாக்க மதிப்பீட்டின் (SIA) அத்தியாயம் 3, நிலம் கையகப்படுத்துதல் ஏழு கோயில்கள், ஐந்து பள்ளிகள், சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கடைகள், நீர் கால்வாய்கள் மற்றும் பிற பௌதீக கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்பு வீடுகள் உள்ளிட்ட கட்டப்பட்ட சொத்துக்களை இடமாற்றம் செய்வதற்கும் அகற்றுவதற்கும் வழிவகுக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறது.


இருப்பினும், இந்த அறிக்கை குறிப்பிடத்தக்க நன்மைகளை முன்னிறுத்துகிறது. இந்த நகரத்திட்டம் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் மற்றும் பொருளாதார இயக்கத்தை உருவாக்கும், கல்வி, சுகாதாரம் மற்றும் சந்தைகளுக்கான அணுகலை மேம்படுத்தும், கிராமப்புறங்களை முக்கிய பொருளாதார வழித்தடங்களில் ஒருங்கிணைக்கும், சமூக மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் உள்ளூர் தொழில்முனைவை ஊக்குவிக்கும் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, குறைக்கப்பட்ட எரிபொருள் நுகர்வு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொழுதுபோக்கு இடங்களை உருவாக்குவது குறித்தும் இது குறிப்பிடுகிறது.


ஹிமுடாவின் பார்வை


இமாச்சலப் பிரதேச வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (HIMUDA) தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான சுரேந்தர் குமார் வஷிஷ்ட், எந்த நிலமும் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்படாது என்று கூறி, அச்சங்களைத் தணிக்க முயன்றுள்ளார். "உள்ளூர் மக்களின் விருப்பத்திற்கு எதிராக நாங்கள் எந்த நிலத்தையும் கையகப்படுத்தப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார். டிசம்பர் 29 அன்று விசாரணை ஒரு நீண்ட செயல்முறையின் முதல்படி மட்டுமே என்பதை அவர் தெளிவுபடுத்தினார். ஏற்கனவே சுமார் 262 பிகா நிலம் கையிருப்பில் இருப்பதாக அவர் கூறினார். குடியிருப்புவாசிகளை இடம்பெயரச் செய்யாமல் விரிவாக்கம் செய்யவே அந்த அமைப்பு விரும்புவதாகவும் அவர் மேலும் கூறினார். குடியிருப்பு வீடுகள் கையகப்படுத்துதலில் இருந்து விலக்கப்படும் என்றும், சமையலறை தோட்டக்கலை மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன என்றும் அவர் கூறினார். "வளமான நிலம் மற்றும் வீடுகளை விலக்கி வைக்க ஒரு சமரசமான வழி ஆராயப்பட்டு வருவதாக அவர் கூறினார். அந்த எட்டு கிராமங்களின் நிலம் மிகவும் வளமானதாக இல்லை என்றும் தலைமை நிர்வாக அதிகாரி மேலும் கூறினார்.


அடுத்து என்ன?


பத்தாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஜாதியா தேவி நகரத்திட்டம், நிதி நெருக்கடி காரணமாக தொடர்ந்து தாமதங்களைச் சந்தித்து வருகிறது. இதற்கான முதல்கட்டப் பணிகள் இப்போது மாநில வளங்களைப் பயன்படுத்தி தொடங்கப்படுகிறது. மத்திய அரசின் நிதி இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் அதன் தற்போதைய வடிவத்தில் தொடருமா என்பது உள்ளூர் மக்களின் எதிர்ப்பு, இழப்பீடு குறித்த கவலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை அதிகாரிகள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. இப்போதைக்கு, இமாச்சலப் பிரதேசத்தின் முதல் திட்டமிடப்பட்ட மலைக் குடியிருப்புத் திட்டத்தின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. திட்டமிடப்பட்ட நகர்ப்புற வளர்ச்சியின் வாக்குறுதிக்கும், இந்த மலைகளைத் தங்கள் வீடாகக் கருதும் மக்களின் வலுவான அச்சங்களுக்கும் இடையில் அது சிக்கியுள்ளது.


 Original Article : Why Himachal’s first satellite mountain township is being opposed by residents?. -Saurabh Parashar

Share: