ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும், மக்கள்தொகை மாற்றங்களுக்கு ஏற்ப தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை அவ்வப்போது மாற்றியமைக்க வேண்டும். இந்தியாவில் இச்செயல்முறை 'தொகுதி மறுவரையறை' (Delimitation) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சாதாரண அரசியலமைப்பு சார்ந்த நடைமுறை போலத் தோன்றினாலும், 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு எதிர்பார்க்கப்படும் அடுத்த தொகுதி மறுவரையறை என்பது, சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் ஏற்படும் மிக முக்கியமான மாற்றமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மக்களவை (Lok Sabha) இடங்கள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பதை மாற்றி அமைப்பதோடு, நீதி, கூட்டாட்சி தத்துவம் மற்றும் பிராந்திய சமநிலை போன்ற கருத்துக்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும் தொகுதிகளை மறுவரையறை (Delimitation) செய்ய வேண்டும். இருப்பினும், இந்த விதி கடந்த 50 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, 1976-ஆம் ஆண்டிலிருந்து மாநிலங்களுக்கான மக்களவை (Lok Sabha) தொகுதிகளின் எண்ணிக்கை 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இன்னும் வரையறுக்கப்பட்டுள்ளது. 2001-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட 84-வது அரசியலமைப்புத் திருத்தம், இந்த தடையை 2026-ஆம் ஆண்டிற்குப் பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரை நீட்டித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கட்டுப்பாடுகள் (தொகுதி மறுவரையறைத் தடை) 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் முடிவுக்கு வரும். தற்போது, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் என்பது இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகையான 147 கோடி எண்ணிக்கையின் அடிப்படையில் இல்லாமல், 1971-ஆம் ஆண்டு இருந்த 54.8 கோடி மக்கள் தொகையின் அடிப்படையிலேயே இன்னும் நீடிக்கிறது.
தொகுதி மறுவரையறை (Delimitation) என்பது மிகவும் நிதானமாக நடைபெறும் ஒரு செயல்முறை. இதற்கு முன்னால் அமைக்கப்பட்ட நான்கு மறுவரையறை ஆணையங்களும் தங்களது பணிகளை முடிக்க 3 முதல் 5.5 ஆண்டுகள் வரை எடுத்துக்கொண்டன. கடைசியாக அமைக்கப்பட்ட ஆணையம் (2002-08), மாநிலங்களுக்குள் உள்ள தொகுதிகளின் எல்லைகளை மட்டுமே மாற்றியமைத்தது; ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்ட மொத்த இடங்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. 1976-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக, மாநிலங்களுக்கிடையேயான தொகுதி எண்ணிக்கையை மாற்றியமைத்தல், அனைத்துத் தொகுதிகளையும் மறுசீரமைப்பு செய்தல், மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் அவர்களுக்கான தனித் தொகுதிகளை உருவாக்குதல் போன்ற மாற்றங்களைச் அடுத்து வரும் ஆணையம் செய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. ஒருவேளை 2027-ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் 2028-ஆம் ஆண்டில் வெளியானால்கூட, தொகுதி மறுவரையறைப் பணிகளை 2031-32-ஆம் ஆண்டுக்குள் முடிப்பது கடினம். இதன் விளைவாக, எதிர்பாராத மாற்றங்கள் ஏதும் நிகழாத வரை, மகளிர் இடஒதுக்கீடு என்பது 2034-ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு முன்னதாக அமலுக்கு வர வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.
எண்களைக் கையாளுவதில் உள்ள குழப்பங்கள்
1970-ஆம் ஆண்டு காலக்கட்டதில், அனைத்து மாநிலங்களிலும் பிறப்பு விகிதம் (fertility rates) ஒரே மாதிரியாகவே இருந்தது. ஆனால், இன்று அவை பெருமளவு வேறுபடுகின்றன. கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றில் முதலீடு செய்ததன் மூலம் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் தங்களது பிறப்பு விகிதத்தை மாற்று நிலைக்கும் (replacement levels) கீழ் குறைத்துள்ளன. இதற்கு நேர்மாறாக, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற வட மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி அதிகமாகவே உள்ளது. நாடாளுமன்ற தொகுதிகள் என்பவை (அரசியல் பிரதிநிதித்துவம்) மக்கள்தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைந்தால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தங்கள் செல்வாக்கை இழக்கும்; அதே சமயம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாத மாநிலங்கள் அதிக செல்வாக்கைப் பெறும் என்றும் எச்சரிக்கின்றனர்.
இந்த எண்ணிக்கைகள் உண்மையை மிகத்தெளிவாக உணர்த்துகின்றன. தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் (Delimitation projections), மக்களவை இடங்களின் எண்ணிக்கை 888-ஆக அதிகரிக்கக்கூடும். மக்கள் தொகையின் அடிப்படையில் மட்டுமே இடங்கள் ஒதுக்கப்பட்டால், உத்தரப் பிரதேச மாநிலத்தின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 80-லிருந்து 151-ஆகவும், பீகார் மாநிலத்தின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 40-லிருந்து 82-ஆகவும் உயரும் என்றும் கூறப்படுகிறது. இந்த இரு மாநிலங்கள் மட்டுமே மக்களவையின் மொத்த இடங்களில் 26 சதவீதத்திற்கும் மேலான பங்கைக் கொண்டிருக்கும் என்கின்றனர். அதேசமயம், தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கையானது 39-லிருந்து 53-ஆகவும், கேரளாவில் 20-லிருந்து 23-ஆகவும் மட்டுமே உயரும் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர். இம்மாநிலங்களின் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், மக்களவையின் மொத்த இடங்களில் இந்த மாநிலங்களின் பங்கு குறையும் என்கின்றனர். அதாவது, தமிழ்நாட்டின் பங்கு 7.2 சதவீதத்திலிருந்து 6.0 சதவீதமாகவும், கேரளாவின் பங்கு 3.7 சதவீதத்திலிருந்து 2.6 சதவீதமாகவும் குறையும் என்றும் இதற்குக் காரணம், வட மாநிலங்கள் மிக அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளைப் பெறுவது என்றும் கூறப்படுகிறது. இது, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை முறையாகப் பின்பற்றிய மாநிலங்கள் ஏன் வரையறுக்கப்பட வேண்டும்? என்ற ஒரு தார்மீகக் கேள்வியை எழுப்புகிறது. பல ஆண்டு காலமாக இந்தியா மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை ஊக்குவித்தது. ஆனால், இப்போது அதில் வெற்றி பெற்ற மாநிலங்கள் தங்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளன. 1976 மற்றும் 2001-ஆம் ஆண்டுகளில் தொகுதி மறுவரையறையை நிறுத்தி வைத்ததற்கான காரணங்கள் இப்போதைய சூழலுக்கும் பொருந்தும் என்று வாதிடுகின்றனர்.
2025-ஆம் ஆண்டில், தென்னிந்திய மாநிலங்கள் தங்கள் தொகுதிகளை இழக்க நேரிடாது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இருப்பினும், வடஇந்திய மாநிலங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான புதிய தொகுதிகள் கிடைத்தால், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காது என்றும் தொகுதி மறுவரையறையைத் தள்ளி வைத்தால் மட்டுமே இதைத் தவிர்க்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர். ஆனால், அவ்வாறு நிறுத்தி வைக்கும்பட்சத்தில் அது சட்டரீதியான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.
இந்த எண்கள் ஆழமான ஒரு பிரச்சினையைச் சுட்டிக்காட்டுகின்றன. மக்களவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்போது, தென்னிந்திய மாநிலங்களின் தற்போதைய இடங்கள் குறையாமல் அப்படியே இருந்தாலும்கூட, அவற்றின் செல்வாக்கு குறையவே செய்யும் என்கின்றனர். நாடாளுமன்றம் என்பது 'சதவீத' அடிப்படையில் அல்லாமல், 'மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையின்' அடிப்படையிலேயே செயல்படுகிறது. உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே சேர்ந்து ஒட்டுமொத்த மக்களவை தொகுதிகளில் கால் பங்கிற்கும் மேல் (25% மேல்) பெற்றுவிட்டால், மற்ற மாநிலங்களின் அரசியல் அதிகாரம் தானாகவே பலவீனமடையும் அபாயம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர். 'இடங்கள் குறைக்கப்படாது' என்ற வாக்குறுதி தொழில்நுட்பரீதியாகக் காப்பாற்றப்பட்டாலும், மற்ற மாநிலங்களின் செல்வாக்கானது நாடாளுமன்றத்தில் வலுவிழக்கும் சூழல் ஏற்படும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆராய்ந்து பார்க்க வேண்டிய விஷயங்கள்
விவாதிக்க வேண்டிய ஆறு முக்கிய விஷயங்கள் உள்ளன.
முதலாவதாக, தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகும் மாற்றாமல் அப்படியே தொடர வேண்டும். மேலும், மாநிலங்களுக்கு இடையே பிறப்பு விகிதம் (Fertility rates) சமமாகும் வரை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதைத் தள்ளிப்போட வேண்டும். இது தற்போதைய நிலையைத் தக்கவைக்கும் என்றாலும், மக்கள்தொகை வேகமாக அதிகரிக்கும் மாநிலங்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை மறுப்பதாக அமையும் என்றும் கூறுகின்றனர். மேலும், பல ஆண்டுகளுக்கு முந்தைய தரவுகளின் அடிப்படையில் சமமற்ற அரசியல் பிரதிநிதித்துவம் வழங்குவது 'சமமான வாக்குரிமை' என்ற கொள்கையை பலவீனப்படுத்துவதால், இது அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவின்கீழ் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும் என்கின்றனர்.
இரண்டாவதாக, மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543-லிருந்து சுமார் 750 அல்லது 888 இடங்களாக உயர்த்த வேண்டும். இதன் மூலம் எந்த மாநிலமும் தனது தொகுதிகளை இழக்காது என்றும் சில மாநிலங்களுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். இருப்பினும், தொகுதிகள் மக்கள் தொகையின் அடிப்படையிலேயே ஒதுக்கப்படும் என்பதால், மக்கள்தொகை அதிகம் உள்ள மாநிலங்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் என்றும் இதனால் தென்னிந்திய மாநிலங்களின் சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்காது என்றும் கூறுகின்றனர்.
மூன்றாவதாக, தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதற்கு ஒரு முக்கியத்துவ அடிப்படையிலான சூத்திரத்தை (weighted formula) அறிமுகப்படுத்த வேண்டும். உதாரணமாக: 80% இடங்களை மக்கள் தொகையின் அடிப்படையிலும், 20% இடங்களை கல்வி அறிவு, சுகாதாரம் அல்லது நீண்டகால பிறப்பு விகித கட்டுப்பாடு போன்ற வளர்ச்சி குறிகாட்டிகளின் (development indicators) அடிப்படையிலும் ஒதுக்கலாம் என்றும் வலியுறுத்துகின்றனர். இது நிதி ஆணையம் (Finance Commission) மாநிலங்களுக்கு வரி வருவாயைப் பகிர்ந்து அளிக்கும் முறையைப் போன்றதாகும். இம்முறை வெறும் மக்கள்தொகையை மட்டும் கணக்கில் கொள்ளாமல், சிறந்த நிர்வாகத்திற்கும் வெகுமதி அளிப்பதாக அமையும் என்று கூறுகின்றனர். தேவைப்பட்டால், இந்த விகிதத்தை 70:30 என்ற விகித அளவிற்கும் மாற்றியமைக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.
நான்காவதாக, மாநிலங்களவையை ஒரு உண்மையான கூட்டாட்சி அவையாக வலுப்படுத்த வேண்டும். முன்னதாக, ஒரு உறுப்பினர் எந்த மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறாரோ, அதே மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. இது அந்த மாநிலத்திற்கும் உறுப்பினருக்கும் இடையிலான பிணைப்பை உறுதி செய்தது. ஆனால், இந்த விதி நீக்கப்பட்டதால், அந்தப் பிணைப்பு தற்போது பலவீனமடைந்துள்ளது; எனவே, இந்த விதியை மீண்டும் கொண்டு வர வேண்டும். தற்போது, மாநிலங்களவை இடங்கள் பெரும்பாலும் மக்கள் தொகையின் அடிப்படையிலேயே ஒதுக்கப்படுகின்றன. இது கூட்டாட்சி முறையில் அந்த அவையின் பங்கைக் கட்டுப்படுத்துகிறது. இதற்கு மாற்றாக, அமெரிக்காவில் இருப்பதுபோல அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கலாம். இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டிற்கு மூன்று நிலைகளைக் கொண்ட ஒரு முறையைப் பின்பற்றலாம், அவை, பெரிய மாநிலங்களுக்கு தலா 15 இடங்கள், நடுத்தர மாநிலங்களுக்கு தலா 10 இடங்கள், சிறிய மாநிலங்களுக்கு தலா 5 இடங்கள் என்று வரையறுக்க வேண்டும் என்கின்றனர். இந்த முறையின் மூலம், ஒவ்வொரு நிலைக்குள்ளும் இருக்கும் மாநிலங்கள் மக்கள் தொகையைப் பொருட்படுத்தாமல் சமமான பிரதிநிதித்துவத்தைப் பெற வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இது போன்ற நடவடிக்கைகள் மட்டுமே இந்தியக் கூட்டாட்சி அமைப்பின் சமநிலையை வலுப்படுத்தும் என்கின்றனர்.
ஐந்தாவதாக, உத்தரப்பிரதேச மாநிலத்தின் அதீத செல்வாக்கைக் குறைக்க, அதனை மூன்று அல்லது நான்கு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். ஏற்கனவே 2000-ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்திலிருந்து 'உத்தரகண்ட்' மாநிலம் பிரிக்கப்பட்டது. மேலும், பந்தேல்கண்ட் (Bundelkhand) மற்றும் பூர்வாஞ்சல் (Purvanchal) ஆகிய தனி மாநிலக் கோரிக்கைகள் பல ஆண்டு காலமாக இருந்து வருகின்றன. அம்மாநிலத்திற்கு வழங்கப்படவுள்ள 151 தொகுதிகளை நான்கு மாநிலங்களாகப் பிரித்தால் (ஒவ்வொன்றிற்கும் சுமார் 38 தொகுதிகள்), எந்தவொரு தனி மாநிலமும் ஆதிக்கம் செலுத்த முடியாது. இது நிர்வாகத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், கூட்டாட்சி தத்துவத்தையும் வலுப்படுத்தும் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆறாவதாக, தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை இரண்டு தேர்தல் சுழற்சிகளாகப் பிரித்து, படிப்படியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்கின்றனர். அதாவது, மாற்றியமைக்கப்பட்ட தொகுதிகளில் பாதியை 2034-ஆம் ஆண்டிலும், மீதமுள்ளவற்றை 2039-ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். இது மாநிலங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் மாற்றத்திற்குத் தயாராகத் தேவையான கால அவகாசத்தை வழங்கும். அரசியலமைப்புச் சட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில், அரசியல்ரீதியான பாதிப்புகளைக் குறைக்க வழிவகுக்கும் என்கின்றனர்.
கவனமாகக் கையாள வேண்டியதன் அவசியம்
தொகுதி மறுவரையறையானது கூட்டணிக் கட்சிகளின் அரசியலில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கின்றனர். வெறும் இரண்டு மாநிலங்கள் மட்டும் மக்களவையின் நான்கில் ஒரு பங்கு (1/4) தொகுதிகளைக் கொண்டிருந்தால், அரசாங்கம் அமையும் முறையே முழுவதுமாக மாறிவிடும். நாடாளுமன்றத்தில் அதிகாரச் சமநிலையைப் பேணுவதில் முக்கியப் பங்காற்றிய மாநிலக் கட்சிகள், அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் தங்களுடைய செல்வாக்கை இழக்க நேரிடும் என்கின்றனர். தற்போது, அரசியல் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதா அல்லது அரசியலமைப்புச் சட்டத்தின் நீதியை உறுதிப்படுத்துவதா என்கிறற கடினமான சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
திட்டமிடல்களைப் போலவே அந்தச் செயல்பாடும் மிக முக்கியமானது. தொகுதி மறுவரையறை ஆணையத்தில் (Delimitation Commission), மக்கள்தொகை ஆய்வாளர்கள், அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் மற்றும் கூட்டாட்சி தத்துவ அறிஞர்களுடன் மாநிலங்களின் முறையான பிரதிநிதித்துவமும் இடம்பெற வேண்டும். வெளிப்படைத்தன்மை, பொதுமக்களுடனான பரந்த அளவிலான ஆலோசனைகள் மற்றும் வலுவான கண்காணிப்பு ஆகியவை மிகவும் அவசியமானவை.
அடுத்த தொகுதி மறுவரையறையானது, மாநிலங்களுக்குள் உள்ள தொகுதிகளின் எல்லைகளையும் மாற்றியமைக்கும். இது புவியியல் அமைப்பு, நிர்வாக வசதி மற்றும் SC/ST பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அமையும். பட்டியல் சாதியினர் (Scheduled Castes (SC)) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes (ST)) பிரிவினருக்கான ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை மக்கள்தொகையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டாலும், எந்த குறிப்பிட்ட தொகுதியை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பது தேர்தல் ஆணையத்தின் முடிவைப் பொறுத்தது என்றும் இது தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே, பட்டியல் பழங்குடியினர் (ST) தொகுதிகளைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுத்தப்படும் அதே தெளிவான முறையை, பட்டியல் சாதியினர் (SC) தொகுதிகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.
தொகுதி மறுவரையறை என்பது ஒரு முக்கியமான தேசியப்பணியாகும். இது அரசியல் அதிகாரத்தை மறுபங்கீடு செய்வதுடன், பல ஆண்டுகால கூட்டணி அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை கவனமாகச் செயல்படுத்தினால், அது தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தி அரசியல் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும். ஆனால், இது தவறான முறையில் செயல்படுத்தப்பட்டால், மாநிலங்களுக்கிடையேயான நம்பிக்கையின்மையையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் பலவீனப்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியானது இந்தியாவின் மக்கள்தொகையை அளவிட மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், தொகுதி மறுவரையறை (Delimitation) என்பது இந்தியாவின் ஜனநாயகத்தை அளவிடும் காரணியாகக் கருதப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் வெளியான பிறகு, மாநிலங்களின் நிலைப்பாடுகள் பிடிவாதமாக மாறும் மற்றும் ஒருமித்த கருத்துக்கள் சிதைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இதுவே சரியான தருணமாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் தொகுதி மறுவரையறை முறை நடைமுறைக்கு சாத்தியமானதா?
இந்த நடவடிக்கை வெளிப்படைத்தன்மை, புரிதல் மற்றும் பொதுவான நீதி உணர்வுடன் மேற்கொள்ளப்பட்டால், அது கூட்டாட்சி மற்றும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் என்கின்றனர். ஆனால், இது வெறும் அரசியல்ரீதியான பலன்களுக்காக மட்டுமே வழிநடத்தப்பட்டால், அது இந்தியக் குடியரசின் தார்மீக அடித்தளத்தையே மாற்றிவிடக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது.
எஸ். ஒய். குரைஷி, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் ஆவார். An Undocumented Wonder: The Making of the Great Indian Election என்ற புத்தகத்தின் ஆசிரியராவார்.