இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் அதிகப்படியான பெண்களின் பணிப்பங்களிப்பு அவசியம். - கே. சந்திரசேகர், நரேன் பிரசாத்

பெண்களின் பணித்திறனை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு, அரசாங்கம் பராமரிப்புப் பொருளாதாரத்தில் முதலீடு செய்ய வேண்டும்.


உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலிலும் வலுவான வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொண்டு, இந்தியப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க மீள்திறனை வெளிப்படுத்தியுள்ளது.


சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund (IMF)) உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையின்படி (ஏப்ரல் 2026), இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2026-27-ஆம் நிதியாண்டில் 6.5 விழுக்காடு வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின்கீழ் (Ministry of Statistics and Programme Implementation (MoS&PI)) இயங்கும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (National Statistical Office (NSO)) தரவுகளும், இந்தியப் பொருளாதாரம் 2021 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளுக்கு இடையே 8.56 விழுக்காடு கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தை (Compound Annual Growth Rate (CAGR)) பதிவு செய்துள்ளதைக் காட்டுகின்றன. இது கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய வலுவான மீட்சியையும், தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி வேகத்தையும் பிரதிபலிக்கிறது.


இந்த ஒட்டுமொத்தப் பொருளாதாரக் குறியீடுகள் (Macroeconomic indicators) ஊக்கமளிப்பதாக இருந்தாலும், ஒரு முக்கியமான கேள்வி எழுப்பப்படுகிறது. இந்தப் பொருளாதார வளர்ச்சி என்பது தகுந்த வேலைவாய்ப்புகளாக மாறுகிறதா? தங்களுக்குத் தேவையான தரமான வேலைகளைப் பெறுவதில் தொடர்ந்து தடைகளை எதிர்கொண்டு வரும் பெண்கள் மற்றும் படித்த இளைஞர்களுக்கு இந்தச் சிக்கல் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.



2025-ஆம் ஆண்டின் காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) அறிக்கை, ஊக்கமளிக்கும் அறிகுறிகளையும், அதேநேரத்தில் இன்னும் செய்யவேண்டிய முக்கியமான வேலைகள் இருக்கின்றன என்ற நினைவூட்டலையும் எவ்வித சந்தேகமுமின்றி தெளிவாகக் காட்டுகிறது.


பெண்களின் பணிப்பங்களிப்பு


பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Labour Force Participation Rate (LFPR)) 2022-ஆம் ஆண்டில் இருந்த 25.4 விழுக்காட்டில் இருந்து 2025-ஆம் ஆண்டில் 30.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அதேபோல், தொழிலாளர் மக்கள்தொகை விகிதமும் (Worker Population Ratio (WPR)) 2022-ஆம் ஆண்டில் இருந்த 24.6 விழுக்காட்டில் இருந்து 2025-ஆம் ஆண்டில் 29.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது. முன்னெப்போதையும்விட இப்போது அதிக எண்ணிக்கையிலான பெண்கள் வேலை செய்கிறார்கள் அல்லது தீவிரமாக வேலை தேடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.


இந்த முன்னேற்றம் இருந்தபோதிலும், நகர்ப்புறங்களை (22.2 விழுக்காடு) ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் பெண்களின் பங்கேற்பு (34.6 விழுக்காடு) மிக அதிகமாக உள்ளது. இது வேலைவாய்ப்புச் சந்தையில் நகர்ப்புறப் பெண்களின் பங்கு இன்னும் குறைவாகவே இருப்பதைக் காட்டுகிறது. இளைஞர்கள் இடையே இந்த நிலைமை இன்னும் கவலைக்குரியதாக உள்ளது. நகர்ப்புறங்களில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் பெண்களின் வேலையின்மை விகிதம் 18.9 விழுக்காடாக உள்ளது. இது நகர்ப்புற ஆண்களின் வேலையின்மை விகிதமான 11.8 விழுக்காட்டைவிட மிக அதிகமாகும்.


இந்தியாவின் கிராமப்புறங்களில், பணியில் ஈடுபட்டுள்ள பெண்களில் சுமார் 70.7 விழுக்காட்டினர் சுயதொழில் செய்பவர்களாக உள்ளனர். வெறும் 9.3 விழுக்காட்டினர் மட்டுமே வழக்கமான நிலையான ஊதியம் பெறும் வேலைகளில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வேளாண்மை, குடும்பத் தொழில்கள் அல்லது வீட்டில் இருந்தபடியே செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.



சுயதொழில் என்பது வாழ்வாதாரத்திற்கான ஒரு முக்கிய ஆதாரமாக இருந்தாலும், இது பெரும்பாலும் குறைந்த உற்பத்தித் திறன், நிலையற்ற வருமானம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் குறைவாக உள்ள வேலைகளுடனேயே தொடர்புடையதாக இருக்கிறது. எனவே, பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் அதிகமாக இருப்பதாலேயே, அவர்களுக்கு நல்ல தரமான வேலைகள் கிடைக்கின்றன என்றும் முடிவு செய்துவிட முடியாது.


கல்வித்துறையில், குறிப்பாக பெண் குழந்தைகள் மற்றும் இளம் பெண்களின் கல்வியில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. மேல்நிலைக் கல்வி அளவில் (Higher secondary level), பெண்களின் ஒட்டுமொத்த சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio (GER)) 2020-21-ஆம் ஆண்டில் 54.6 விழுக்காடாக இருந்தது, இது 2024-25-ஆம் ஆண்டில் 60.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது ஆண்களின் சேர்க்கை விகிதத்தைவிட (56.2 விழுக்காடு) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பு முடித்த பிறகு ஒரு மாணவனைவிட ஒரு மாணவி மேல்நிலைக் கல்விக்குத் தொடர்வதற்கான வாய்ப்பு புள்ளிவிவரப்படி தற்போது அதிகமாக உள்ளது.


அதேபோல், உயர்கல்வியில் பெண்களின் மொத்தச் சேர்க்கை விகிதம் (FGER), 2020-21-ஆம் ஆண்டில் 27.9 விழுக்காடாக இருந்ததில் இருந்து, 2022-23-ஆம் ஆண்டில் 30.2 விழுக்காடாகத் தற்காலிகமாக உயர்ந்துள்ளது.


முன்பைவிட இப்போது அதிகமான மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்து படித்து வருகிறார்கள் என்பதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால், இப்போதுள்ள முக்கிய சிக்கல் என்னவென்றால், இந்த கல்வி அவர்களுக்குச் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதை உறுதி செய்வதுதான். பெண்களின் கல்வித் தரம் உயர்ந்து வந்தபோதிலும், நகர்ப்புறங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களின் பங்களிப்பு இன்னும் குறைவாகவே உள்ளது. மேலும், இளம்பெண்களிடையே வேலைவாய்ப்பின்மையும் இன்னும் அதிகமாகவே நீடிக்கிறது. இது கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையே உள்ள இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருவதையே காட்டுகிறது.



இந்தச் சவாலை முன்கூட்டியே உணர்ந்த ஒன்றிய அரசு, தங்களின் காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பு (PLFS) அறிக்கை வெளியாவதற்கு முன்பாகவே, 2026-27 ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் நிதி ஆயோக்கின்கீழ் (NITI Aayog) 'கல்வி முதல் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் வரை' (Education-to-Employment-and-Enterprise (EEE)) என்ற குழுவை அமைப்பதாக அறிவித்தது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளை வலுப்படுத்தவும், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் எதிர்கால வேலைவாய்ப்புகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி ஆராயவும் இந்தக் குழு தனது முதல் கூட்டத்தை மே மாதம் 22-ஆம் தேதி நடத்தியது.


இந்த முயற்சி, கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை அனைவருக்கும் விரிவுபடுத்துவது என்பது முதல்படி மட்டுமே என்பதைக் காட்டுகிறது. கல்வியின் உண்மையான பலன் என்பது மக்கள் வருமானம் ஈட்டக்கூடிய நல்ல வேலைகளில் சேருவதற்கு உதவுவதிலும், அதேநேரத்தில் பெண்களின் திறமைகள் தற்போதைய வேலைவாய்ப்புச் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்வதிலும்தான் உள்ளது.


பெண்களின் பங்கேற்பை ஊக்குவித்தல்


கல்வித் தகுதிக்கும் வேலைவாய்ப்பில் பங்கேற்பதற்கும் இடையே உள்ள இடைவெளியை, குறிப்பாகப் பெண்களின் விஷயத்தில், வேலைவாய்ப்புகள் மட்டுமே முழுமையாக விளக்கிவிட முடியாது. அதிகளவிலான பெண்கள் கல்வி கற்று வந்தபோதிலும், வேலைவாய்ப்பில் அவர்களின் பங்கேற்பு இன்னும் குறைவாகவே உள்ளது. குடும்ப பராமரிப்புப் பொறுப்புகள், நெகிழ்வான வேலை நேர வசதி இல்லாமை, பாதுகாப்புப் பயங்கள் மற்றும் போக்குவரத்துச் சிக்கல்கள் போன்ற பிற காரணிகளும் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு ஒரு தடையாக இருக்கலாம்.


ஊதியமில்லாத வீட்டுப் பராமரிப்புப் பணிகளே இதற்கான ஒரு முக்கியக் காரணமாகும். ஏனெனில், இது பெண்கள் வேலைவாய்ப்புச் சந்தையில் நுழைவதையும், தொடர்ந்து நீடிப்பதையும் மற்றும் வளர்ச்சியடைவதையும் பாதிக்கிறது. உலகம் முழுவதும், குடும்பங்களைப் பராமரிக்கும் பெரும்பாலான பொறுப்புகளைப் பெண்களே தொடர்ந்து சுமந்து வருகின்றனர்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organization (ILO)) கூற்றுப்படி, உலகெங்கிலும் ஊதியமில்லாத அனைத்துப் பராமரிப்புப் பணிகளில் நான்கில் மூன்று பங்குக்கும் அதிகமான (75%-க்கும் மேல்) வேலைகளைப் பெண்களே செய்கிறார்கள். மேலும், இந்த ஊதியமில்லாத பராமரிப்புப் பொறுப்புகளின் காரணமாகவே உலகம் முழுவதும் சுமார் 70.8 கோடிப் பெண்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கின்றனர். இந்தப் பிரச்சனை தற்போது இந்தியாவின் நகர்ப்புறங்களிலும் மிக முக்கியமான ஒன்றாக உருவெடுத்து வருகிறது.


2024-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ‘நேரப் பயன்பாட்டு ஆய்வின்படி (Time Use Survey 2024), பெண்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 289 நிமிடங்களை ஊதியமில்லாத வீட்டு வேலைகளுக்காகவும், 137 நிமிடங்களை குடும்ப உறுப்பினர்களைப் பராமரிப்பதற்காவும் செலவிடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது. இன்று பல குடும்பங்கள் தங்களது கூட்டுக்குடும்பங்களை விட்டுப் பிரிந்து, தனிக்குடித்தனமாக வாழ்கின்றன. இதன் விளைவாக, வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள், குறிப்பாகத் தாய்மார்கள், குழந்தைகளையும் பெரியவர்களையும் பராமரிக்கும் சுமையைத் தங்களின் தோள்களிலேயே சுமக்க வேண்டியுள்ளது. இந்த ஊதியமில்லாத பராமரிப்புப் பணிகளைப் பெண்களே முக்கியமாகச் செய்யும் வரை, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தித் திறனில் ஏற்படும் முன்னேற்றம் என்பது சமமற்றதாகவும், நிலையற்றதாகவுமே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


சுவீடன், டென்மார்க் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் குழந்தைப் பராமரிப்பு மற்றும் முதியோர் பராமரிப்புச் சேவைகளை உள்ளடக்கிய பராமரிப்புப் பொருளாதாரத்தில் (Care economy) முதலீடு செய்வதன் மூலம் இந்தச் சிக்கலை எதிர்கொள்கின்றன.


இந்தியாவின் மக்கள்தொகையும் நிதிநிலையும் இந்த நாடுகளிலிருந்து வேறுபட்டதாக இருந்தாலும், மலிவான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய பராமரிப்புச் சேவைகள், பெண்கள் வேலைக்குச் செல்வதை அதிகரிக்க உதவும் என்பதை இந்த நாடுகளின் நடவடிக்கைகள் காட்டுகின்றன.




பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்ல, அந்த வேலைவாய்ப்புகளைப் பெண்கள் தடையின்றிப் பெறுவதை உறுதி செய்வதும் ஒரு சவாலாக உள்ளது. பெண்கள் பெற்றுள்ள கல்வி வளர்ச்சியை நாட்டின் பொருளாதார வளர்ச்சியாக மாற்ற வேண்டுமானால், பராமரிப்புப் பொருளாதாரத்தில் முதலீடு செய்வது இந்தியா செய்யக்கூடிய மிகச்சிறந்த முதலீடுகளில் ஒன்றாக இருக்கும் என்கின்றனர்.


அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி


இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் மிகவும் வலுவாக உள்ளது. இருப்பினும், இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சியானது பொருளாதாரம் எவ்வளவு வேகமாக வளர்கிறது என்பதை மட்டும் பொறுத்தது அல்ல. மாறாக, வாய்ப்புகள் அனைவருக்கும் எவ்வளவு நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பதையும் பொறுத்தே அமையும். பொருளாதார வளர்ச்சி, முதலீடுகள் மற்றும் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் ஆகியவை நாட்டிற்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன. ஆனால், கல்வித்துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை உற்பத்தித் திறன் கொண்ட வேலைவாய்ப்புகளாக மாற்றுவதும், நாட்டின் தொழிலாளர் சக்தியில் அதிகமான பெண்கள் முழுமையாகப் பங்கேற்க உதவுவதும் தற்போதைய மிக முக்கிய முன்னுரிமைகளாகும்.


பராமரிப்புப் பொருளாதாரத்தில் (Care economy) முதலீடு செய்வது என்பது வெறும் சமூக நலத்திட்டம் மட்டுமல்ல. அது மனிதவளத்தை மேம்படுத்தவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் மற்றும் இந்தியாவின் இலக்கான அனைவரையும் உள்ளடக்கிய, பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் கூடிய ஒரு சிறந்த பொருளாதார உத்தி ஆகும்.


சந்திரசேகர், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தில் (MoS&PI) இணை இயக்குநராகப் பணியாற்றுகிறார்; பிரசாத், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) ஆராய்ச்சி மற்றும் புள்ளியியல் துறையில் கல்வி மற்றும் பயிற்சிக்கான தலைவராக உள்ளார்.


Original Link: India’s growth story needs more women at work.


Share:

சீனாவுடனான அணுகுமுறையில் இந்தியா தளர்வு காட்டுவது, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கையாகும்.

உள்நாட்டு உற்பத்திச் சூழலமைப்பை வலுப்படுத்த வேண்டும். அத்துடன், மதிப்புக்கூட்டலை அதிகரிக்கவும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளவும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். இதற்கு ஒரு கவனமான மற்றும் சீரான அணுகுமுறை தேவைப்படுகிறது.


2019-ஆம் ஆண்டில், 15 ஆசிய-பசிபிக் நாடுகளை உள்ளடக்கிய வர்த்தக ஒப்பந்தமான பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டாண்மையில் (Regional Comprehensive Economic Partnership (RCEP)) சேர வேண்டாம் என இந்தியா முடிவு செய்தது. சில மாதங்களுக்குப் பிறகு, 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், மத்திய அரசு பத்திரிக்கை அறிக்கை 3 மூலம் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையைத் திருத்தியது. அதன்படி, இந்தியாவுடன் தரை எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் முதலீடுகளுக்கு அரசாங்க ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டது. இந்த இரண்டு முடிவுகளும், ஓரளவிற்கு, சீனா மீதான கவலைகளால் ஏற்ப்பட்டன. ஆனால், சீனா உடனான உறவில் அன்று முதல் நிலவும் தெளிவற்றத்தன்மை நிலவி வந்த சூழலிலும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள்   வலுப்பெற்றுள்ளன. 2025-26-ஆம் ஆண்டுகளில் சீனாவிலிருந்து இறக்குமதி $131 பில்லியன்த் தொட்டது. மேலும், இந்தியாவின் எண்ணெய் அல்லாத பொருட்களின் வர்த்தகப் பற்றாக்குறையில் ஏறக்குறைய பாதிக்கு அந்நாடு தற்போது காரணமாக உள்ளது. இருப்பினும், சீனாவிலிருந்து வரும் அந்நிய நேரடி முதலீடு மிகக் குறைவாகவே உள்ளது. 2000-ஆம் ஆண்டு முதல், இந்தியாவிற்கான முதலீட்டு வரவு வெறும் $2.5 பில்லியன் ஆக மட்டுமே உள்ளது. நாட்டில் மின்னணு சாதனங்கள் மற்றும் திறனபேசிகளை உற்பத்தி செய்வதற்காக, டிக்சன் டெக்னாலஜிஸ் மற்றும் விவோ மொபைல் நிறுவனங்களுக்கு இடையேயான ஒரு கூட்டு முயற்சிக்கு அரசாங்கம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இது ஒரு சரியான திசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.


கடந்த சில ஆண்டுகளில், பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து விலகி தங்கள் முதலீடுகளைப் பன்முகப்படுத்த ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன. இருப்பினும், இந்த 'சீனா+1' உத்தியால் இந்தியா முக்கிய பயனாளியாக இல்லை. வியட்நாம் போன்ற நாடுகள் அதிகப் பயனடைந்துள்ளன. சீனாவிலிருந்து வர்த்தகத்தைத் திசைதிருப்புவதன் மூலம் பயனடைய, 2023-24-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இரண்டு தேர்வுகளை முன்வைத்தது: அவை ஒன்று, அதன் விநியோகச் சங்கிலிகளுடன் ஆழமாக ஒருங்கிணைவது அல்லது சீனாவிலிருந்து அதிக அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிப்பதாகும். இந்த ஆய்வறிக்கை பின்னர் தேர்வை நோக்கியே சாய்ந்தது. இந்தச் சிந்தனைக்கு ஏற்ப, அதிக முதலீட்டு வரவுகளை எளிதாக்கும் வகையில், இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளிலிருந்து வரும் முதலீடுகளுக்கான அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மாற்றங்களுக்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. டிக்சன் டெக்னாலஜிஸ் மற்றும் விவோ மொபைல் இடையேயான கூட்டு முயற்சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதும், மின்கலன்கள், மற்றும் திரைத் தொகுப்புகள் (display assemblies) உள்ளிட்டவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் 85 வகையான பொருட்களுக்கான சுங்கவரி விலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.


சீனா உலகளாவிய உற்பத்தி விநியோகச் சங்கிலியுடன் (Global Manufacturing Supply Chain) முக்கிய இடத்தில் உள்ளது  இந்த உண்மையை புறக்கணிக்கமுடியாது. மேலும், சீனா அந்நிய நேரடி முதலீட்டின் முக்கிய ஆதார நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் வளர்ச்சி மாநாடு (United Nations Conference on Trade and Development (UNCTAD)) வெளியிட்டுள்ள உலக முதலீட்டு அறிக்கையின்படி, சீனாவின் வெளிநாட்டு முதலீடுகள் தற்போது அதிக இலக்கு நோக்கியதாக மாறியுள்ளன. குறிப்பாக புதிய தொழிற்சாலைத் திட்டங்கள், உற்பத்தித் துறை, எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் முக்கிய மூலப்பொருட்கள் போன்ற துறைகளில், குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளிலும், தெற்கு–தெற்கு முதலீட்டு வழித்தடங்களிலும் அதிக கவனம் செலுத்தப்படுகின்றன. இந்தியாவுக்கு தேசிய பாதுகாப்பு மற்றும் ராஜதந்திரரீதியாக நியாயமான கவலைகள் இருந்தாலும், அதே நேரத்தில் பொருளாதாரத் தேவைகளும் உள்ளன. எனவே, பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன் போன்ற இரண்டிற்கும் இடையே சமநிலையான அணுகுமுறையைப் பின்பற்றுவது முக்கியமான நடவடிக்கையாகும். உள்நாட்டு உற்பத்திச் சூழலமைப்பை வலுப்படுத்த வேண்டும். அதனுடன், மதிப்புக்கூட்டலை அதிகரிக்கவும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளவும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். இதை செய்ய  ஒரு கவனமான மற்றும் சீரான அணுகுமுறை தேவைப்படுகிறது.


Original Link: India’s easing up on China is the right move at the right time.

Share:

மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்படும் நிலச்சரிவுகளுக்கு மத்தியில், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை மறுபரிசீலனை செய்தல். - அமிதாப் சின்ஹா

வயநாடு போன்ற நிலச்சரிவு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில், நிலச்சரிவுகளை நிச்சயமாக முன்னரே கணிக்க முடியும். ஆபத்தான பகுதிகளிலிருந்து மக்களை தகுந்த நேரத்தில் வெளியேற்றுவதற்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பையும் உருவாக்க முடியும். இதுபோன்ற கணிப்பு மாதிரிகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


`மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள், இதுபோன்ற நிகழ்வுகளுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பின் முக்கியத்துவம் குறித்த விவாதங்களை மீண்டும் அதிக்கரிக்க செய்துள்ளன.


எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்குதல் (Creating warning systems)


வயநாடு போன்ற, நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதிகளில், நிலச்சரிவுகளைக் கணிக்க முடியும்.  வயநாடு 2024-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அபாயப் பகுதிகளில் இருந்து சரியான நேரத்தில் மக்களை வெளியேற்றுவதற்காக, முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புகளை உருவாக்கலாம். இதுபோன்ற அமைப்புகள் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் திறம்படச் செயல்படுகின்றன. சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த இரண்டு வெற்றிகரமான சம்பவங்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். அந்த நாட்டில் 2023 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில், பேரிடர் நிகழ்வதற்குச் சில நாட்களுக்கு முன்பாகவே ஆபத்தான பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.


நிலச்சரிவுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளின்  எடுத்துக்காட்டுகள் இந்தியாவிலும் நிகழ்ந்துள்ளன. 2024-ஆம் ஆண்டு வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவு நிலச்சரிவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, கேரளாவின் தெற்கே அமைந்துள்ள மூணாறு மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக பல்வேறு நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இருப்பினும், அந்தச் சம்பவங்களில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதற்குக் காரணங்களில் ஒன்று, அமிர்தா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, இடுக்கி மாவட்டத்தின் சில பகுதிகளில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தி வந்த நிலச்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, இடுக்கி மாவட்ட நிர்வாகம் மக்களை முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியதே ஆகும்.


மனிஷா வினோதினி ரமேஷ் தலைமையிலான இந்த ஆராய்ச்சிக் குழு, சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுடன் இணைந்து இதுபோன்ற முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்கி வரும் பல்வேறு குழுக்களில் ஒன்றாக உள்ளது.


பல்வேறு மாதிரிகள்


தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி, இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 13% 0.42 மில்லியன் சதுர கி.மீ.. நிலச்சரிவு அபாயத்திற்கு உட்பட்ட பகுதியாகக் கருதப்படுகிறது. இமயமலைப் பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இந்த அபாயம் மிக அதிகமாக உள்ளது.


சமீபத்தில், மண்டி இந்திய தொழில்நுட்ப கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டெரிக்ஸ் பிரைஸ் சுக்லாவும் அவரது குழுவினரும், தங்களுக்கென சொந்தமான நிலச்சரிவு முன் எச்சரிக்கை அமைப்பை வெளியிட்டுள்ளனர். இது இமயமலைப் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளைக் கொண்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது. கடந்த இமயமலைப்பகுதியில், நிகழ்ந்த  80  நிலச்சரிவுகளை அடிப்படையாக கொண்டு அவர்களின் மாதிரிகள் சரிபார்க்கப்பட்டன.


அமிர்தா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தும் முறைகளிலிருந்து மாறுபட்ட ஒரு வழிமுறையை சுக்லா பூகம்பங்களைக் கணிக்கப் பயன்படுத்தி வருகிறார். அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம்,  அதிக ஆபத்து உள்ள பகுதிகளில், சாய்வு அளவிகள் (Tilt Meters), அழுத்த அளவீட்டுக் கருவிகள்  (Pressure Gauges), அதிர்வுகள் மற்றும் நிலத்தின் அசைவுகளை அளவிடும் முடுக்க அளவிகள் (Accelerometers) போன்ற பல்வேறு கருவிகளைக் கொண்ட உணரிகள் வலையமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த உணரிகள் பதிவு செய்யும் அளவுகள், முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை மீறினால், உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்படும். அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று கூறினார்.


அறிவியல்ரீதியாக, இது மிகவும் உறுதியான ஒரு முறையாகும். மேலும், மக்களை வெளியேற்றுவதைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதற்கு இது போதுமான கால அவகாசத்தை வழங்குகிறது. மற்ற நாடுகளிலும், இந்த முறையில்தான் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புகள் செயல்படுகின்றன. இதில் உள்ள ஒரே ஒரு வரம்பு, கருவிகள் நிறுவப்பட்டுள்ள சரிவைப் பற்றிய தகவல்கள் மட்டுமே கிடைக்கும். அருகிலுள்ள சரிவைப் பற்றி எதுவும் கிடைக்காது. நிலச்சரிவுகள் என்பவை மிகவும் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டுமே நிகழும் நிகழ்வுகளாகும் என்று சுக்லா கூறினார்.


இமயமலைப் பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்காணிக்க, சுக்லா நிகழ்தகவு முன்னறிவிப்பு முறையைப் பயன்படுத்தி வருகிறார். அவரது குழு, கடந்தகால நிகழ்வுகளின் செயற்கைக்கோள் அடிப்படையிலான தரவுத்தளத்தைப் பயன்படுத்தி, இமயமலைப்பகுதியில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களை வரைபடமாக்கியுள்ளது.


மழைப்பொழிவு மிகவும் பொதுவான காரணிகளில் ஒன்றாக இருப்பதால், இந்த இடங்களில் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை மாதிரியாகக் காட்ட, இந்தக் குழு மிகவும் குறிப்பிட்ட பகுதி சார்ந்த மழைப்பொழிவு முன்னறிவிப்புகளைப் பயன்படுத்துகிறது. மண்ணின்த்தன்மைகள், பாறையின் உறுதித்தன்மை, சரிவின் அளவு மற்றும் மக்கள் அடர்த்தி போன்ற பல்வேறு காரணிகளும் இந்த மாதிரியில் இடம்பெற்று இருக்க வேண்டும். எந்த ஒரு தேதியிலும், ஒவ்வொரு இடத்திற்கும் மழைப்பொழிவிலிருந்து பெறப்பட்ட அளவுருக்களின் 7-10 அடுக்குகள் உள்ளன என்று அவர் கூறினார். இது, நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் பகுதிகளை அடையாளம் காண உதவுகிறது.


"ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான மழை முன்னறிவிப்பு, அந்தத் தேதியிலோ அல்லது அதற்கு ஒரு நாள் முன்னரோ மட்டுமே கிடைக்கும். எனவே, எங்கள் முறை நீண்டகாலத்திற்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்க முடியாது. இந்திய வானிலை ஆய்வுத்துறை தயாரித்து வரும் உயர்-தெளிவுத்திறன் (High-resolution) கொண்ட மழை முன்னறிவிப்புகள் கிடைத்தவுடன், நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளை பல நாட்களுக்கு முன்பே கணிக்க முடியும். இருப்பினும், எங்களுடைய முறை, மலைத்தொடர் முழுவதும் உள்ள அதிக நிலச்சரிவு அபாயம் அதிகமான இடங்களைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது. குறிப்பாக, தொலைதூரப் பகுதிகளிலும் உள்ள அபாயகரமான இடங்களைக் கூட அடையாளம் காண உதவுகிறது என்று சுக்லா கூறினார்.


தேவையான வளங்களும் உரிய முயற்சிகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டால், நிலச்சரிவுகளுக்கான மிகவும் விரிவான மற்றும் திறன் மிக்க முன்எச்சரிக்கை அமைப்பை இரண்டு ஆண்டுகளுக்குள் உருவாக்க முடியும். நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில், அடிக்கடி நிலச்சரிவு நிகழும் மற்றும் மனித உயிர்களுக்கும் சொத்துகளுக்கும் மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடிய அதிக ஆபத்து மிக்க பகுதிகளை முதலில் அடையாளம் காணவேண்டும். ஆனால், அந்தப் பணி இன்னும் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. அது முடிந்தவுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் உணரிகள் (Sensors) பொருத்தும் பணியை மேற்கொள்ளலாம்’ என்று அவர் கூறினார்.


"இமயமலைப்பகுதியில், வடமேற்குப் பகுதி மிகவும் பாதிக்கப்படக்கூடிய சில இடங்களைக் கொண்டுள்ளது. உத்தரகாண்டில் உள்ள டெஹ்ரி கார்வால், உத்தர்காஷி மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி, சிம்லா ஆகிய பகுதிகளுக்கு அருகிலுள்ள இடங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவையாகவும், அதிக மக்கள்தொகையைக் கொண்டவையாகவும் உள்ளன. ஐஸ்வாலைச் சுற்றியுள்ள மிசோரம் மற்றும் மணிப்பூரின் பல பகுதிகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியாகவும் உள்ளன. நிலச்சரிவு அபாயம் அதிகம் உள்ள பகுதியாக  கருதப்படும் சிக்கிம்,  ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்புக்குள்ளாகும் மாநிலமாக உள்ளது. இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, சிக்கிமில் சாலைப் போக்குவரத்து வலையமைப்பு மிகவும் விரிவாக இல்லாததாகும். இதனால் மலைகளை அதிகமாக வெட்டும் பணிகளும், இயற்கை நிலப்பரப்பில் ஏற்படும் பாதிப்புகளும் குறைகின்றன. அதன் விளைவாக, மலைச்சரிவுகள் அதிக நிலைத்தன்மையுடன் காணப்படுகின்றன என்று ஷுக்லா கூறினார்.


Original Link: Amid Western Ghats landslides, revisiting need for developing early warning systems.

Share:

‘ஆபரேஷன் ஹார்ட்பால்’ (Operation Hardball) மற்றும் இன்டர்போல் (Interpol) அறிவிப்புகள் என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

FBI தலைமையிலான 'ஆபரேஷன் ஹார்ட்பால்' (Operation Hardball) நடவடிக்கையின் கீழ், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் படுகொலைக்கு உத்தரவிட்டதாக பிஷ்னோய் (Bishnoi) கும்பல் தலைவர் மீது குற்றம் சாட்டியுள்ளதுடன், ரவுடி கோல்டி பிராரைக் (Goldy Brar) கைது செய்ய வழிவகுக்கும் தகவல்களுக்கு 50,000 டாலர் வெகுமதியையும் அறிவித்துள்ளது.



FBI -  Federal Bureau of Investigation :  புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் - இது அமெரிக்க அரசின் நீதித்துறையின் கீழ் செயல்படும் ஒரு முதன்மைக் குற்றப் புலனாய்வு மற்றும் உளவு அமைப்பாகும். இது நாட்டின் பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு, மற்றும் கூட்டாட்சி சட்டங்களை மீறும் குற்றங்களை விசாரிப்பது இதன் முக்கியப் பணியாகும். 


தற்போதைய நிகழ்வு :


ஆபரேஷன் ஹார்ட்பால் (Operation Hardball) நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன், அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் இந்தியாவில் உள்ள பல மத்திய புலனாய்வு முகமைகளுடன் பல்வேறு கூட்டங்களை நடத்தினர். இக்கூட்டங்களின்போது, லாரன்ஸ் பிஷ்னோய், கோல்டி பிரார், ரோஹித் கோதாரா, ஜக்கு பகவான்பூரியா மற்றும் அவர்களது கூட்டாளிகள் போன்ற ரவுடிகள் குறித்த தகவல்களை அவர்கள் பகிர்ந்து சரிபார்த்ததாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள் :



1. “ஆபரேஷன் ஹார்ட்பால்” (Operation Hardball) என அழைக்கப்படும், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவின் சட்ட அமலாக்கத் துறையினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் விளைவாக, மூன்று இந்தியக் குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய 24 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள், மீது தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்று அமெரிக்க நீதித்துறை (Department of Justice (DoJ)) தெரிவித்துள்ளது.


2. “இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சட்ட அமலாக்கத் துறையினர் சுமார் 1,000 கிலோகிராம் கொக்கைன், 1 கிலோகிராம் ஹெராயின், 40,000 டாலர் ரொக்கம் மற்றும் ஒரு டஜன் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்துள்ளனர். சாக்ரமெண்டோ (Sacramento) பகுதியில் மொத்தம் 23 தேடுதல் ஆணைகளும் (search warrants), லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) பகுதியில் 11 ஆணைகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன” என்று நீதித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


3. காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கும் இந்திய அரசாங்க உளவாளிகளுக்கும் இடையே ஒரு "சாத்தியமான தொடர்பு" (potential link) இருப்பதாக அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி, இந்தியா-கனடா இடையிலான இருதரப்பு உறவுகளை முடக்கிய கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 'ஆபரேஷன் ஹார்ட்பால்' நடவடிக்கைக்கு முன்னதாக, ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது உதவியாளர் கோல்டி பிரார் ஆகியோர் இந்தக் கொலைக்கு உத்தரவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.


4. நீதிமன்ற ஆவணங்களில் “HSN” எனக் குறிப்பிடப்பட்டுள்ள 45 வயதான நிஜ்ஜாரைக் கொலை செய்ய லாரன்ஸ் பிஷ்னோய் உத்தரவிட்டதாக அமெரிக்கக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய் சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சதிந்தர் சிங் என்ற கோல்டி பிராரைக் கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களுக்கு FBI 50,000 டாலர் வெகுமதியை அறிவித்துள்ளதுடன், லாரன்ஸ் பிஷ்னோயைத் தங்கள் நாட்டிற்குக் கொண்டுவர (நாடு கடத்தக் கோரி) அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது.



இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான குற்றவாளி ஒப்படைப்பு விதிகளை எது நிர்வகிக்கிறது?, மற்றும் அதற்கான செயல்முறை என்ன?

      1997-ம் ஆண்டின் இருதரப்பு ஒப்படைப்பு ஒப்பந்தமும் (Extradition Treaty), இந்தியாவின் 1962-ம் ஆண்டு ஒப்படைப்புச் சட்டமும் (India’s Extradition Act) இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான குற்றவாளி ஒப்படைப்புச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மையக்கருத்தாக இரட்டைக் குற்றத்தன்மை (dual criminality) என்ற கோட்பாடு உள்ளது. அதாவது, ஒரு குற்றத்திற்கு இரு நாடுகளிலும் ஓராண்டுக்கும் மேலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால், அது ஒப்படைக்கப்படக்கூடிய குற்றமாகும்.

         பொதுவாக, ஒரு ஒப்படைப்பு கோரிக்கை அமெரிக்க நீதித் துறையால் தயாரிக்கப்படும். மேலும், இது அமெரிக்க வெளியுறவுத் துறையால் இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு (MEA) அனுப்பப்படும். வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் சிபிஐ போன்ற முகமைகளுடன் கலந்தாலோசித்து, இந்தக் கோரிக்கை ஒப்பந்தம் மற்றும் ஒப்படைப்புச் சட்டத்திற்கு இணங்குகிறதா என்பதை அவர்கள் சரிபார்க்கிறார்கள்.

            கோரிக்கை பரிசீலனைக்குத் தகுதியானது என மத்திய அரசு முடிவு செய்தால், அது ஒரு இந்திய நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும். அந்த நீதிமன்றம், ஒப்பந்தத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதையும், குற்றம் இந்தியாவில் நடந்திருந்தால் அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் சிறைத்தண்டனையை நியாயப்படுத்துமா என்பதையும் நீதிமன்றம் சரிபார்க்கிறது.

      நீதிமன்றம் திருப்தியடைந்தால், குற்றம் சாட்டப்பட்டவரை ஒப்படைக்கத் தகுதியானவர் எனச் சான்றளித்து, தனது முடிவுகளை மத்திய அரசுக்கு அனுப்புகிறது. இருப்பினும், நாடு கடத்தி ஒப்படைப்பது குறித்த இறுதி முடிவு மத்திய அரசிடமே உள்ளது. இது, ஒப்புதல் அளிப்பதற்கு முன், அரசு சில நிபந்தனைகளை விதிக்கலாம் அல்லது இராஜதந்திரரீதியிலான உத்தரவாதங்களைக் கோரலாம். அரசு தனது உத்தரவை வெளியிட்ட பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் அதை உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் எதிர்த்து வழக்குத் தொடர முடியும் என்பதால், ஒப்படைப்பு நடவடிக்கைகள் இயல்பாகவே நீண்டதாக அமைகின்றன.


5. பிரான்சின் லியோனில் உள்ள இன்டர்போல் (Interpol) பொதுச் செயலகத்தால் கோல்டி பிராருக்கு (Goldy Brar) எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் (Red Corner Notice) வெளியிடப்பட்டது. இந்தியாவில், அவருக்கு எதிராக டிசம்பர் 12, 2022 அன்று ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணையும், ஜூன் 15, 2022 அன்று தேடப்படும் அறிவிப்பு (Look Out Circular(LOC)) பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act (UAPA)) நான்காவது அட்டவணையில் கோல்டி பிராரை (Goldy Brar) ஒரு பயங்கரவாதியாகச் சேர்த்தது.


6.'எக்ஸ்பிரஸ் ஒப்பினியன்' கருத்துப்படி, "ஆபரேஷன் ஹார்ட்பால், கனடாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இந்திய வம்சாவளியினரை குறிவைக்கும் குற்றக் கும்பல்களின் எல்லை கடந்த செயல்பாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு, பிரிவினைவாதக் குழுக்கள் தங்கள் செயல்திட்டங்களுக்கு நிதியளிக்கவும் அவற்றை நிலைநிறுத்தவும் உதவியதுடன், போதைப்பொருள், பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் ஈடுபடும் கும்பல்களை எதிர்கொள்ள பாதுகாப்பு அமைப்புகளை நிர்பந்தித்தது."

இன்டர்போல் அறிவிப்புகள் (Notices) என்றால் என்ன?




1. 1923-ல் நிறுவப்பட்ட இன்டர்போல், அல்லது சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பு, 196 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். இது அனைத்து உறுப்பு நாடுகளின் காவல் படைகளும் தங்கள் நடவடிக்கைகளைச் சிறப்பாக ஒருங்கிணைக்க உதவுகிறது.

2. குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் குறித்த தரவுகளைப் பகிரவும் அணுகவும் உறுப்பு நாடுகளுக்கு இன்டர்போல் (Interpol) வழிவகை செய்கிறது. மேலும், பலதரப்பட்ட தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு ஆதரவையும் வழங்குகிறது. உறுப்பு நாடுகளின் கோரிக்கையின் பேரில், குற்றம் தொடர்பான முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காக, அந்நாட்டுக் காவல்துறையினருக்கு ஒத்துழைப்புக்கான அறிவிப்புகளையோ அல்லது எச்சரிக்கைகளையோ இன்டர்போல் வெளியிடுகிறது.


3. சுவாரஸ்யமாக, இத்தகைய அறிவிப்புகளை ஐக்கிய நாடுகள் சபை (United Nations), சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயங்கள் (International Criminal Tribunals) மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court) ஆகியவை தங்கள் அதிகார வரம்பிற்குள் குற்றங்களைச் செய்ததற்காகத் தேடப்படும் நபர்களைக் கண்டறியவும் பயன்படுத்தலாம்.


இன்டர்போல் அறிவிப்புகள் :


⇨சிவப்பு அறிவிப்பு (Red Notice) : ஒரு நபரை நாடு கடத்தும் நோக்கத்துடன், அவரைத் தேடவோ அல்லது கைது செய்யவோ நீதித்துறை அதிகார வரம்பு அல்லது சர்வதேச தீர்ப்பாயம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இது வெளியிடப்படுகிறது.


பசுமை அறிவிப்பு (Green Notice)) : ஒருவர் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டால், அவரது குற்றச் செயல்கள் குறித்து எச்சரிப்பது.


நீல அறிவிப்பு (Blue Notice) : ஒரு குற்றவியல் விசாரணையில் தொடர்புடைய நபரின் இருப்பிடத்தைக் கண்டறிதல், அடையாளம் காணுதல் அல்லது அவரைப் பற்றிய தகவல்களைப் பெறுதல்.


மஞ்சள் அறிவிப்பு (Yellow Notice) : காணாமல் போன ஒருவரைக் கண்டறியவோ அல்லது தன்னைத்தானே அடையாளம் கண்டுகொள்ள முடியாத ஒருவரை அடையாளம் காணவோ இது வெளியிடப்படுகிறது.


கருப்பு அறிவிப்பு (Black Notice) : அடையாளம் காணப்படாத உடல்கள் குறித்த தகவல்களைப் பெற இது வெளியிடப்படுகிறது.


ஆரஞ்சு அறிவிப்பு (Orange Notice) : மக்கள் அல்லது உடைமைகளுக்கு உடனடி அச்சுறுத்தல் மற்றும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு நிகழ்வு, நபர், பொருள் அல்லது செயல்முறை குறித்து எச்சரிக்க இது வெளியிடப்படுகிறது.


ஊதா நிற அறிவிப்பு (Purple Notice) : குற்றவாளிகள் பயன்படுத்தும் குற்றச் செயல்முறைகள் (modus operandi), நடைமுறைகள், பொருள்கள், சாதனங்கள் அல்லது மறைவிடங்கள் குறித்த தகவல்களை வழங்க இது வெளியிடப்படுகிறது.


இன்டர்போல் ஐ.நா. பாதுகாப்பு சபையின் சிறப்பு அறிவிப்பு (Interpol UNSC Special Notice) : ஒரு தனிநபர் அல்லது அமைப்பு ஐக்கியநாடுகள் சபையின் தடைகளுக்கு உட்பட்டது என்பதை இன்டர்போல் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க இது வெளியிடப்படுகிறது.

ஐந்து கண்கள் கூட்டணி (Five Eyes Alliance)  

1. ஜூலை 8 அன்று, கனடா குடிமகனும் சீக்கியப் பிரிவினைவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 2023-ல் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவிற்குத் தொடர்பு இல்லை என்று கனடா திட்டவட்டமாகத் தெரிவித்தது. இந்தச் சம்பவம் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான தூதரக உறவுகளைச் சீர்குலைத்திருந்தது.


2. இந்திய உளவாளிகளுக்கும், நிஜ்ஜாரின் கொலைக்கும் இடையே ஒரு “சாத்தியமான தொடர்பு” இருப்பதாகக் கூறப்படும் நம்பகமான குற்றச்சாட்டுகளைப் பாதுகாப்பு அமைப்புகள் விசாரித்து வருவதாக முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதற்கு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில், கனடாவிற்கான அமெரிக்கத் தூதர் டேவிட் கோஹன், “ஐந்து கண்கள் கூட்டாளிகளிடையே (Five Eyes Alliance)  பகிரப்பட்ட உளவுத் தகவல்களே” கனடா இந்தக் கூற்றை முன்வைக்க உதவியது என்று கூறியிருந்தார்.


3. “ஐந்து கண்கள்” என்பது அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் உளவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு கூட்டணியைக் குறிக்கிறது. இது கண்காணிப்பு மற்றும் சிக்னல் உளவுத் தகவல்கள் ஆகிய இரண்டையும் பயன்படுத்துகிறது.


4. கனடா அரசாங்கத்தின் இணையதளத்தின்படி, “உலகின் மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட பலதரப்பு ஏற்பாடுகளில் ஒன்றான இதில், இந்தக் கூட்டணி நாடுகள் தங்களுக்குள் பரந்த அளவிலான உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றன. ஐந்து கண்கள் ஒப்பந்தம் (Five Eyes agreement) மற்ற ஏற்பாடுகளிலிருந்து தனித்து நிற்கிறது. ஏனெனில், இதில் ஈடுபட்டுள்ள தரப்பினர், சட்டத்தின் ஆட்சி மற்றும் வலுவான மனித உரிமைகளால் நிர்வகிக்கப்படும் பல்வேறுபட்ட சமூகங்களாகவும், ஒரு பொதுவான மொழியால் பிணைக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். இந்தப் பொதுவான அம்சங்கள், கூட்டாளிகள் தகவல்களைத் திறம்படப் பகிர்ந்து கொள்ளவும், தங்களின் பொதுவான தேசிய நலன்களைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.”


5. நாடுகள் பெரும்பாலும் உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் ஒன்றோடொன்று இணைந்து செயல்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில், சீனாவின் எழுச்சியைச் சமநிலைப்படுத்துவது போன்ற பொதுவான நலன்கள், ஐந்து கண்கள் (Five Eyes) நாடுகளிடையே ஒரு நெருக்கமான கூட்டணிக்கு வழிவகுத்துள்ளன. பல பத்தாண்டுகால நாடுகளின் நீடித்த உறவின் மூலம் கட்டமைக்கப்பட்ட பொதுவான மொழி மற்றும் பரஸ்பர நம்பிக்கையே அவற்றின் நெருக்கத்திற்குக் காரணம் என்று சிலர் கூறுகின்றனர்.


Original Link: What is Operation ‘Hardball’ and what are Interpol Notices?


Share:

கல்வி இன்னும் மாற்றத்தை ஏற்படுத்துவது திருமணத்தில்தான், குடும்ப அளவிலல்ல. -கரண் பப்பர், ரவுனக் மைத்ரா

பெரும்பாலான இந்திய மாநிலங்கள் கருவுறுதல் மாற்றத்தை (Fertility transition) ஏற்கனவே நிறைவு செய்துவிட்டதால், பெண்களின் கல்வித் தரம் இன்னும் எவ்வளவு உயர்ந்தாலும், பிறப்பு விகிதம் (Fertility rate) மேலும் குறைவதற்கு இனி பெரிய அளவில் வாய்ப்பில்லை. இருப்பினும், கல்வி என்பது இன்னும் மிக முக்கியமான ஒன்றாகவே தொடர்கிறது. ஏனெனில், அது பெண்களின் திருமண வயதைத் தள்ளிப்போட உதவுகிறது. இந்தியாவில் இப்போதும் குழந்தைத் திருமணங்கள் ஒரு பிரச்சனையாக நீடிப்பதால், இது மிக முக்கியமான மாற்றமாகும்.


குழந்தைத் திருமணங்களைக் குறைக்கவும், அதிகப்படியான பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தவும் இந்தியா இரண்டு முக்கியக் கொள்கை அணுகுமுறைகள் மூலம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதலாவது அணுகுமுறை, பெண்கல்வியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' (Sarva Shiksha Abhiyan (2001)) போன்ற திட்டங்கள் அனைவருக்கும் தொடக்கக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.  அதேநேரத்தில் 'கல்வி உரிமைச் சட்டம்' (Right to Education Act (2009)) 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கல்வியை ஒரு அடிப்படை உரிமையாக்கியது. 'மதிய உணவுத் திட்டம்' (Mid-Day Meal Scheme) சத்துணவு வழங்குவதன்மூலம் குழந்தைகள் பள்ளிக்கு வருவதை ஊக்குவித்தது. அதன் பிறகு வந்த 'பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' (Beti Bachao Beti Padhao), 'செல்வமகள் சேமிப்புத் திட்டம்' (Sukanya Samriddhi Yojana) மற்றும் மேற்குவங்கத்தின் 'கன்யாஸ்ரீ பிரகல்பா' (Kanyashree Prakalpa) போன்ற திட்டங்கள் பெண்கல்வியை மேலும் ஊக்குவித்து, பெண்களின் திருமண வயதைத் தள்ளிப்போட உதவின.


இரண்டாவது அணுகுமுறை நேரடியாகக் குடும்ப அளவு மற்றும் திருமணத்தை இலக்காகக் கொண்டது. இந்தியா 1952-ஆம் ஆண்டில் உலகிலேயே முதன்முறையாகத் தேசியக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியது. குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம், 2006-ன்படி பெண்களுக்கான குறைந்தபட்ச சட்டப்பூர்வ திருமண வயது 18-ஆக நிர்ணயிக்கப்பட்டது, மேலும், 2021-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஒரு முன்மொழிவு இதனை 21-வயதாக உயர்த்த முயன்றது.


இந்த இரண்டு அணுகுமுறைகளுமே கல்வி, திருமணம் மற்றும் குடும்ப அளவு ஆகியவை ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை என்ற கருத்தின் அடிப்படையில்தான் அமைந்துள்ளன. உயர்கல்வியானது பெண்களின் திருமணத்தை தாமதப்படுத்துகிறது, கருவுறுதல் விகிதத்தைக் (Fertility) குறைக்கிறது மற்றும் பெண்களின் அதிகாரமளித்தலை (Women's empowerment) மேம்படுத்துகிறது. அதேநேரத்தில், சிறிய குடும்பங்கள் இருப்பதால் பெற்றோர்களால் தங்களின் ஒவ்வொரு குழந்தையின் கல்வியிலும் அதிக முதலீடு செய்யமுடிகிறது. தேசியக் குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (National Family Health Survey (NFHS-6): 2023-24) மற்றும் தேசியக் குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பு-5 (NFHS-5: 2019-21) ஆகியவற்றின் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம், சமீபத்திய மாநில அளவிலான தரவுகளைக் கொண்டு இந்தத் தொடர்பை விரிவாக ஆராய முடிகிறது.


பள்ளிக்கல்வியில் வளர்ச்சி


மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளிலும் பெண்களின் கல்வி தொடர்ந்து முன்னேற்றம் கண்டுள்ளது. 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாகப் பள்ளிப்படிப்பை முடித்த பெண்களின் விகிதம், 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 33-ல் அதிகரித்துள்ளது. இந்த 35-ல் 27 பகுதிகளில் எதிர்பார்த்தபடியே ஒரு தொடர்பு காணப்பட்டது. அதாவது, பெண்களின் கல்விநிலை அதிகமாக இருக்கும்போது, அவர்களின் சிறுவயது திருமண விகிதம் குறைவாக இருந்தது. அனைத்து மாநிலங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பெண்களின் கல்வி வளர்ச்சிக்கும் சிறுவயது திருமணத்திற்கும் இடையேயான தொடர்பு -0.40-ஆக இருந்தது. இது புள்ளிவிவரப்படி ஒரு வலுவான தொடர்பை (p = 0.018) காட்டுகிறது. பொதுவாக, எந்தெந்த மாநிலங்களில் பெண் பிள்ளைகள் நீண்டகாலம் பள்ளியில் படித்து வந்தார்களோ, அந்த மாநிலங்களில் சிறுவயது திருமணங்கள் மிக வேகமாக குறைந்தன.


மாநில அளவில் குழந்தை திருமணங்கள் குறைந்து வருவது, தேசிய அளவிலான போக்கோடு ஒத்துப்போகிறது. இந்தியா முழுவதும், 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்துகொண்ட பெண்களின் பங்கு, இரண்டு கட்ட ஆய்வுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 23.3 விழுக்காட்டில் இருந்து 20.1 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இதில் மிகப்பெரிய வீழ்ச்சி தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ (10 சதவீதப் புள்ளிகள்) மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் (7.4 சதவீதப் புள்ளிகள்) காணப்பட்டது. குழந்தை திருமண விகிதம் அதிகமாக உள்ள அசாம், பீகார் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களும் தலா 6 சதவீதப் புள்ளிகளுக்கும் மேலாக வீழ்ச்சி அடைந்துள்ளன. இருப்பினும், சில மாநிலங்களில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாகாலாந்து மாநிலம் மிக அதிகப்படியான உயர்வை (4.6 சதவீதப் புள்ளிகள்) பதிவு செய்துள்ளது. அதேநேரத்தில் இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் சிறிய அளவிலான உயர்வு காணப்பட்டது.


பள்ளிப்படிப்பு மற்றும் கருவுறுதல் விகிதத்திற்கு இடையேயான தொடர்பு 


கல்வி அறிவிற்கும் குழந்தைப் பிறப்பு வீதத்திற்கும் இடையே ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. அதாவது, கல்வி அறிவு அதிகரிக்கும்போது பொதுவாகக் குழந்தைப் பிறப்பு விகிதம் குறையும் என்றே நம்பப்படுகிறது. ஆனால், அண்மை தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்புகளான தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு-5 மற்றும் தேசியக் குடும்பநலக் கணக்கெடுப்பு-6 ஆகியவற்றின் தரவுகள் முற்றிலும் வேறுபட்ட ஒரு போக்கைக் காட்டுகின்றன. கல்வி அறிவில் ஏற்படும் மாற்றங்களுக்கும், மொத்த கருவுறுதல் விகிதத்திற்கும் இடையேயான தொடர்பு மிகவும் பலவீனமாகவும், புள்ளிவிவரரீதியாகக் குறிப்பிடத்தக்க அளவு இல்லாமலும் இருப்பதை இந்தத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன (இதன் தொடர்பு குணகம் = -0.10, p = 0.57). கல்வி அறிவில் 8 அல்லது 9 விழுக்காடு வரை கணிசமான வளர்ச்சியைப் பெற்றுள்ள மாநிலங்கள், கல்வி அறிவில் மிகக் குறைந்த மாற்றத்தைக் கண்டுள்ள மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், அதற்கேற்ப தங்கள் குழந்தைப் பிறப்பு விகிதத்தில் தொடர்ச்சியான குறைவைக் காட்டவில்லை. இந்தியாவில் உள்ள 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், வெறும் 12 மாநிலங்கள் மட்டுமே கல்வி அறிவு அதிகரித்த அதேநேரத்தில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்திருக்கும் என்கிற வழக்கமான போக்கைக் காட்டுகின்றன.


இதற்கு என்ன காரணம்? இந்தியாவில் பிறப்பு விகிதம் குறைவதற்கான கருவுறுதல் மாறுதல் பருவம் ஏறக்குறைய அதன் இறுதிநிலையை எட்டிவிட்டதே இந்தக் குழந்தை பிறப்பு விகிதத்தில் பெரிய மாற்றம் இல்லாததற்குக் காரணமாகும். ஒரு பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையின் தேசியச் சராசரி 2.0-ஆக உள்ளது. இது மக்கள்தொகையை நிலையாக வைத்திருப்பதற்கான மாற்று நிலை அளவான 2.1-ஐவிடக் குறைவு ஆகும். மாதிரிப்  பதிவு முறை (Sample Registration System) அறிக்கையின்படி, இந்தியாவின் தேசிய மொத்த பிறப்பு விகிதம் 1.9-ஆகக் குறைந்துள்ளது. தற்போது 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே இந்த 2.1 என்ற மாற்று நிலை அளவிற்கு மேல் உள்ளன. இந்தப் பட்டியலில் பீகார் (2.7) முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மேகாலயா மற்றும் லட்சத்தீவு (இவை ஒவ்வொன்றும் 2.2) ஆகிய பகுதிகள் உள்ளன. மற்ற அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்த மாற்று நிலை வரம்பிற்குள்ளோ அல்லது அதற்குக் கீழோதான் உள்ளன. குறிப்பாகக் கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த பிறப்பு விகிதம் 1.6 முதல் 1.8 என்ற மிகக் குறைந்த அளவில் பதிவாகியுள்ளது.




பெரும்பாலான மாநிலங்கள் தங்களின் கருவுறுதல் மாற்றத்தை (Fertility transition) நிறைவு செய்துவிட்டதால், கல்வித் தகுதி உயர்வதன் மூலம் ஏற்படும் குறைவு உட்பட, இனிவரும் காலங்களில் பிறப்பு விகிதம் மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. இருப்பினும், பெண்களின் கல்விக்கும் கருவுறுதலுக்கும் இடையிலான தொடர்பு இன்னும் நீடிக்கவே செய்கிறது. பத்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாகப் பள்ளிப் படிப்பை முடித்த பெண்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட மாநிலங்களில், ஒட்டுமொத்த பிறப்பு விகிதம் (Total fertility rate) தொடர்ந்து குறைவாகவே இருப்பதை சமீபத்தியத் தரவுகள் காட்டுகின்றன. இந்தத் தொடர்பு பல்வேறு மாநிலங்களுக்கு இடையே தெளிவாகத் தெரிந்தாலும், சமீபகாலமாகப் படிப்படியாக ஏற்பட்டு வரும் மாற்றங்களில் இது பெரிய அளவில் பிரதிபலிக்கவில்லை.


ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்தியாவின் கருவுறுதல் நிலை மாற்றம் ஏறக்குறைய நிறைவடையும் நிலையை எட்டிவிட்டது. நாட்டின் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 30 பகுதிகள், மக்கள்தொகை மாற்றீடு கருவுறுதல் அளவை (Replacement fertility level) அடைந்துவிட்டன அல்லது அதற்குக் கீழே குறைந்துவிட்டன. இதன் விளைவாக, நாடு முழுவதும் மாநிலங்களுக்கு இடையே கருவுறுதல் விகிதத்தில் பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை. பெண்கள் திருமணப் பருவத்தை எட்டுவதைத் தள்ளிப்போடுவதன் மூலம், கல்வி இப்போதும் ஒரு முக்கியப் பங்காற்றி வருகிறது. இருப்பினும், சமீபத்திய தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு (NFHS) தரவுகளின்படி, இளம்பெண்களில் ஐந்தில் ஒருவர் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்துகொள்ளும் குழந்தை திருமண முறை இன்னும் பரவலாகவே காணப்படுகிறது.


தற்போதைய முக்கியக் கவலை என்னவென்றால், பெண்கள் எந்த வயதில் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்பதுதான். பள்ளிப் படிப்பைத் தொடரும் ஒவ்வொரு கூடுதல் ஆண்டும் அவர்களின் திருமணத்தைத் தள்ளிப்போடுகிறது.  இது பெண்கள் திருமண வாழ்க்கைக்குள் நுழைவதற்கு முன்பு அவர்களின் கல்வி, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கான கூடுதல் நேரத்தை வழங்குகிறது. இந்த உலக மக்கள்தொகை தினத்தில் (World Population Day), பெண்கள் திருமணத்திற்கு முன்பு செலவிடும் இந்த ஆண்டுகள் ஒரு முக்கியமான குறியீடாக மாறியுள்ளன. இப்போது கவனம் அனைத்தும் பெண்கள் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையில் இருந்து மாறி, திருமணத்திற்கு முன்பு அவர்கள் தங்களின் இலக்குகளை அடைவதற்கு அவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் கிடைக்கின்றன என்ற முக்கியத்துவத்திற்கு பெண்களின் கவனம் மாறியுள்ளது.


(ஆதாரங்கள்: தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு-5 (NFHS-5, 2019-21) மற்றும் தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு-6 (NFHS-6, 2023-24) தகவல் குறிப்புகள், இந்திய அரசாங்கம். மாதிரிப் பதிவு முறை (2024) நாட்டின் மொத்த பிறப்பு விகிதத்தை (TFR) 1.9-ஆகக் குறிப்பிடுகிறது; மாதிரிப் பதிவு முறை (SRS) மற்றும் தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு (NFHS) ஆகிய அமைப்புகள் தங்களின் கணக்கெடுப்பு முறைகள் மற்றும் குறிப்புக் காலங்களில் மாறுபடுவதால், அவை தனித்தனிச் சார்பற்ற ஆதாரங்களாக இங்கே வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த ஒப்பீடுகளும் மாநில அளவிலான எளிய தொடர்புகளின் (Simple associations, n = 35) அடிப்படையிலானவை, இவை காரண-விளைவு மதிப்பீடுகள் அல்ல. மணிப்பூர் மாநிலத்தில் தேசியக் குடும்பநலக் கணக்கெடுப்பு-6 நடத்தப்படாததால், அது இந்த ஆய்வில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.)


Original Link: Where education still moves the needle: marriage, not family size.

Share:

இந்தியாவுக்குச் சேவை உற்பத்தி குறியீடு (Index of Services Production) ஏன் தேவைப்படுகிறது? - சந்தோஷ் வி. பெருமாள்

முக்கியமாக, காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் மற்றும் மறைமுகக் குறியீடுகளை மட்டுமே பெரிதும் சார்ந்திருக்கும் தற்போதைய கட்டமைப்பின் குறைபாடுகளைக் களைவதற்காக, சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் (Goods and Services Tax (GST)) பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் வெளிச்செல்லும் விநியோகத் தரவுகளைப் பயன்படுத்தித் தொகுக்கப்பட்ட சேவைகள் குறியீட்டை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) இறுதி செய்துள்ளது. ஆனால், எதிர்காலத்தில் இது டிஜிட்டல் தரவுகளையும் பயன்படுத்திக்கொள்ளும் சாத்தியமும் உள்ளது.


மாறிகளின் (variables) உள்ளார்ந்த பன்முகத்தன்மை மற்றும் பரந்து விரிந்த முறைசாராத் துறையின் பகுதியளவு அல்லது குறைவான உள்ளடக்கம் காரணமாக தரவுத் தரம் குறித்த கவலைகள் நிலவி வரும் நிலையில், சான்றுகள் அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், முறைசார்ந்த (formal) சேவைத் துறையின் செயல்பாட்டை அளவிடுவதற்கான இந்த 'அடிக்கடி புதுப்பிக்கப்படும் தரவுத் தொகுப்பை' (high-frequency dataset) வெளியிட இந்தியா முழுமையாகத் தயாராகி வருகிறது.


ஜப்பான், தென் கொரியா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் வரிசையில் இணைந்து, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI), சேவைகள் உற்பத்தி குறியீட்டை (Index of Services Production (ISP)) அறிமுகப்படுத்த உள்ளது. இது, பொருளாதாரத்தின் ஆதிக்க சக்தியாகவும், மொத்த மதிப்பு கூட்டலில் (GVA) சுமார் 55% பங்களிப்பதாகவும் உள்ள சேவைகள் துறையின் வளர்ச்சியில் ஏற்படும் குறுகியகால மாற்றங்களை அளவிடுவதற்கான ஒரு புதிய பேரியல் குறிகாட்டியாக இருக்கும்.


தொழில்துறை உற்பத்திக் குறியீடு (Index of Industrial Production) நீண்டகாலமாக உற்பத்தித் துறை, சுரங்கத் தொழில் மற்றும் மின்சாரத் துறைக்கான ஒரு குறிகாட்டியாகச் செயல்பட்டு வந்தபோதிலும், நிதியாண்டு 2025-ல் 7.2%-ஆக இருந்து நிதியாண்டு 26-ல் 9.1%-ஆக வளர்ச்சிகண்ட சேவைத் துறைக்கு, ஒப்பிடத்தக்க குறியீடு எதுவும் இல்லை.


சேவைகளின் புலனாகாத தன்மை, விரைவான தொழில்நுட்ப மாற்றம், மாறிவரும் வணிக மாதிரிகள் மற்றும் சிதறிய தரவுகள் ஆகியவற்றின் காரணமாக, சேவை உற்பத்தியை அளவிடுவது என்பது ஒரு சவாலான பணியாகவும், தொழில்துறை உற்பத்தியை அளவிடுவதைவிட சிக்கலானதாகவும் உள்ளது.


வேலைவாய்ப்பு (employment), மொத்த விற்பனை வரவு (turnover), பரிவர்த்தனை அளவுகள் (transaction volumes), பயணிகள் கிலோமீட்டர்கள் அல்லது சந்தாதாரர் எண்ணிக்கை போன்ற பதிலீடுகள், குறிப்பாகக் கட்டமைப்பு மாற்றக் காலங்களில், அடிப்படை உற்பத்தியின் இறுதியில் சேர்க்கப்பட்டாலும், அவை அதனைத் துல்லியமாகப் பிரதிபலிக்காமல் போகலாம்.


முக்கியமாக, காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் மற்றும் மறைமுகக் குறியீடுகளை மட்டுமே பெரிதும் சார்ந்திருக்கும் தற்போதைய கட்டமைப்பின் குறைபாடுகளைக் களைவதற்காக, சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் வெளிச்செல்லும் விநியோகத் தரவுகளைப் பயன்படுத்தித் தொகுக்கப்பட்ட சேவைகள் குறியீட்டை MoSPI இறுதி செய்துள்ளது. ஆனால், எதிர்காலத்தில் இது டிஜிட்டல் தரவுகளையும் பயன்படுத்திக்கொள்ளும் சாத்தியம் உள்ளது.


சரக்கு மற்றும் சேவை வரியின் தரவுத்தளம் புள்ளிவிவர நோக்கங்களைவிட முதன்மையாக வரிவிதிப்புக்காகவே உருவாக்கப்பட்டுள்ளதால், அது தேசிய கணக்குகளின் கருத்தியல் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யாமல் போகலாம். எனவே, இந்தப் புதிய குறியீடானது, சேவைத் துறைக்கான துல்லியமான மதிப்பீடுகளை வழங்குவதற்காக நிர்வாக மற்றும் கணக்கெடுப்புத் தரவுகளை ஒருங்கிணைத்து, காலந்தவறாமையை மேம்படுத்தி, அறிக்கையிடும் சுமையைக் குறைக்கும்.


இருப்பினும், முறைசாரா நிறுவனங்களின் முழுமையற்ற உள்ளடக்கமும், பல சேவைத் தொழில்களுக்கான வரையறுக்கப்பட்ட விலை குறைப்பான்களும், உண்மையான வெளியீடு மற்றும் உற்பத்தித்திறன் மதிப்பீட்டைச் சிக்கலாக்குவதுடன், உண்மையான மொத்த மதிப்புக் கூட்டுறவின் (GVA) துல்லியத்தையும் பாதிக்கின்றன.


சேவை உற்பத்தியின் உண்மையான அளவில் ஏற்பட்ட அதிகரிப்பால் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா அல்லது விலை உயர்வால் ஏற்பட்டுள்ளதா என்பதை 'விலைமாற்றக் காரணிகள்' (deflators) காட்டுகின்றன.


மொத்த மதிப்புக்கூட்டு வரிக்கு (GVA) துறைசார் பங்களிப்பு 56.4% என்ற வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது (2026 நிதியாண்டிற்கான முதல் முன்கூட்டிய மதிப்பீடுகள்). இது நவீன, வர்த்தகம் செய்யக்கூடிய மற்றும் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் சேவைகளின் அதிகரித்துவரும் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


வழக்கமான பணவீக்க அளவீடுகள் (deflators), விலை மாற்றங்களைச் சேவைகளின் தர மேம்பாட்டிலிருந்து பிரித்தறிவதில் சிரமப்படுவதால், விற்பனை அளவு மதிப்பீடுகளில் சார்புத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது.


புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) சேவைகள் உற்பத்தியாளர் விலைக் குறியீடு (Producer Price Index (PPI)) இன்னும் சோதனை அடிப்படையிலேயே உள்ளது. மேலும், வங்கி, பத்திரப் பரிவர்த்தனைகள், காப்பீடு, ஓய்வூதிய நிதி மேலாண்மை, இரயில்வே, விமானப் பயணிகள் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் ஆகிய ஏழு துறைகளுக்கு இன்னும் முக்கியத்துவம் ஒதுக்கப்படவில்லை. ஏனெனில், அவை இன்னும் முழுமையான சேவைத் துறையை உள்ளடக்கவில்லை.




சேவைகளுக்கான தரம்-சரிசெய்யப்பட்ட விலைக் குறியீடுகளை (quality-adjusted price indices) உருவாக்குவது என்பது, உலகெங்கிலும் உள்ள புள்ளிவிவர அமைப்புகள் கருத்தியல் மற்றும் நடைமுறைச் சிக்கல்களைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் ஒரு துறையாகவே உள்ளது.


ஜிஎஸ்டி தரவுகள் தவிர, பெருநிறுவனங்களின் தாக்கல் விவரங்கள் மற்றும் மின்னணுப் பரிவர்த்தனைகள் போன்ற டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையும் இணைய சேவை வழங்குநருக்கு உள்ளது.


2017-ல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்தியாவின் ஜிஎஸ்டி பதிவு எண்ணிக்கைகள் சீராக வளர்ந்து, அறிமுகப்படுத்தப்பட்டபோது 66.5 லட்சமாக இருந்த எண்ணிக்கை தற்போது 1.65 கோடியாக உயர்ந்துள்ளது.


ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மூலம் பரிவர்த்தனைகளுக்கு 57% பங்களித்து, 38%-ஆக உள்ள நேரடி பணப் பரிவர்த்தனைகளைவிட அதிகமாகும்.


அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு, பணவீக்கப் பகுப்பாய்வு மற்றும் வேலைவாய்ப்புக் கணிப்புகளை வலுப்படுத்த முற்படுவதால், மொத்த மதிப்புக்கூட்டலில் 50%-க்கும் மேல் பங்களிக்கும் மிகப்பெரிய முறைசாராத் துறை இந்தக் குறியீட்டிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, முக்கியமான தரவு இடைவெளிகள் நீடிக்கக்கூடும்.


1991-ம் ஆண்டின் பொருளாதாரத் தாராளமயமாக்கல் சேவைத் துறையின் வளர்ச்சியைத் தீவிரப்படுத்தியதால், அதிக வளர்ச்சி மற்றும் குறைந்த செயல்திறன் கொண்ட துணைத் துறைகளைக் கண்டறிய மேலும் மேம்பட்ட கருவிகள் தேவைப்படுகின்றன.


சேவைகள் துறையின் வளர்ச்சியை அளவிடுவதற்கும், அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுத்து வளர்ச்சிப் பாதையை வழிநடத்துவதற்கும் இந்தியாவிற்கு ஒரு குறுகிய-காலக் குறியீடு (short-term indicator) தேவை என்று அரசாங்கம் தெரிவிக்கையில், கொள்கை வகுப்பாளர்கள் பல்வேறு தரவுத் தொகுப்புகளைச் சமநிலைப்படுத்த முயற்சிக்கும் நிலையில், தற்போது பதில்களைவிடக் கேள்விகளே அதிகமாகத் தோன்றுகின்றன.

விரிவான அல்லது வகைப்படுத்தப்பட்ட தரவுகள் (disaggregated data) கிடைத்தால், இந்தக் குறியீடானது மாநில அளவிலான கொள்கை உருவாக்கத்திற்கு ஆதரவளித்து, சேவைத் துறைகள் வளர்ச்சியில் உள்ள பிராந்திய வேறுபாடுகளைக் கண்டறிய உதவுவதோடு, இலக்கு சார்ந்த உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளையும் செயல்படுத்த வழிவகுக்கும்.


சேவை உற்பத்தி குறியீடு (ISP) என்பது ஒரு முக்கியமான நிறுவன சீர்திருத்தத்தைக் குறிக்கிறது. இருப்பினும், இதன் பயன் இறுதியில் வழிமுறையின் உறுதித்தன்மை, நிர்வாகத் தரவுகளின் தரம், சேவைத் துறையின் முறைசாரா மற்றும் டிஜிட்டல் பிரிவுகளை உள்ளடக்கும் அதன் திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட சேவைத் துறை விலைக் குறியீடுகள் மூலம் பதிலீட்டுக் குறியீடுகளைச் (proxy indicators) சார்ந்திருப்பதைக் குறைத்தல் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும்.


சர்வதேச அனுபவம்


தரவுகளின் கிடைக்கும் தன்மை, நிறுவனத் திறன் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து, நாடுகள் தங்களின் சேவைத் துறைகள் குறியீடுகளை மேம்படுத்துவதில் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கையாண்டுள்ளன.


பல பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Organisation for Economic Cooperation and Development (OECD)) நாடுகள், தங்களின் சேவைத் துறைகளில் உள்ள குறுகிய காலப் பொருளாதார நிகழ்வுகள் குறித்த மிகவும் துல்லியமான கண்ணோட்டத்தைப் பெறுவதற்கு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. சில நாடுகள் சேவைகளுக்கான மேலும் விரிவான புள்ளிவிவரங்களை உருவாக்கி, ஏற்கனவே உள்ள தரவுத் தொடர்களின் தரத்தையும் மேம்படுத்தியுள்ளன.


ஆசியாவிலேயே, ஜப்பான் மிகவும் முதிர்ச்சியான மற்றும் நிலையான சேவைசெயல்பாட்டுக் குறியீடுகளில் ஒன்றைக் கொண்டுள்ளது. இது விலைகளுக்குப் பதிலாக சேவைச் செயல்பாட்டின் அளவை அளவிடுகிறது மற்றும் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் (Ministry of Economy, Trade and Industry (METI)) மாதந்தோறும் தொகுக்கப்படுகிறது. சீனா, தேசிய புள்ளியியல் பணியகத்தால் தொகுக்கப்பட்ட ஒரு விரிவான மாதாந்திர உற்பத்திக் குறியீடு மற்றும் நிர்வாகத் தரவுகளின் பரந்த பயன்பாடு மூலம் தனது சேவைத் துறைகள் புள்ளிவிவரங்களின் நிலையை விரைவாக மேம்படுத்தியது. தென்கொரியா, KOSTAT-ஆல் தொகுக்கப்பட்ட தொழில்துறை உற்பத்திப் புள்ளிவிவரங்கள் மற்றும் பேரியல் பொருளாதாரப் பகுப்பாய்வுடன் சேவைத் துறைக் குறியீடுகளை நெருக்கமாக ஒருங்கிணைத்தது மற்றும் சிங்கப்பூர், ஒரு ஒற்றைக் கூட்டு குறியீட்டிற்குப் பதிலாக, மிகவும் நுணுக்கமான, டிஜிட்டல் முறையில் இயக்கப்படும் சேவைப் புள்ளிவிவரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.


சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உற்பத்தி அடிப்படையிலான சேவைக் குறியீடுகளைக் கொண்டுள்ளன. இந்தியாவின் முன்மொழியப்பட்ட சேவை உற்பத்தி குறியீடு (ISP) இதே போன்ற அணுகுமுறையைப் பின்பற்றுகிறது.


ஐரோப்பிய வணிகப் புள்ளிவிவர ஒழுங்குமுறையின்கீழ், சேவைகள் உற்பத்தி குறியீட்டின் மாதாந்திர வெளியீட்டை யூரோஸ்டாட் (Eurostat) ஒருங்கிணைக்கிறது.


அமெரிக்காவில், பல்வேறு அதிகாரப்பூர்வ குறியீடுகளின் தொகுப்பைப் பயன்படுத்தி சேவைத் துறை கண்காணிக்கப்படுகிறது. இந்தக் குறியீடுகள் அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியகம் (U.S. Census Bureau), பொருளாதாரப் பகுப்பாய்வுப் பணியகம் (Bureau of Economic Analysis), தொழிலாளர் புள்ளிவிவரப் பணியகம் (Bureau of Labor Statistics) மற்றும் ஃபெடரல் ரிசர்வ் அமைப்பு (Federal Reserve System) ஆகியவற்றால் உருவாக்கப்படுகின்றன.


முன்னேற்றத்திற்கான வழிமுறைகள்


இந்தியா பல்வேறு நிர்வாகத் தரவு மூலங்களை ஒருங்கிணைப்பதும், புள்ளிவிவர அமைப்புகள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் நிதி அதிகார அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதும், தரவின் தரத்தையும் காலந்தவறாமையையும் மேம்படுத்துவதோடு, இந்தியாவின் பேரியல் பொருளாதாரப் புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மையையும், கொள்கை உருவாக்கத்திற்கு இப்புள்ளிவிவரங்களை மிகவும் பயனுள்ளவையாக மாற்றவும் இது உதவும்.


ஒருங்கிணைந்த சீர்திருத்தங்களை முன்னெடுத்து, 2047-ம் ஆண்டுக்குள் சேவைத் துறை ஏற்றுமதியில் உலகளாவிய பங்கில் 10%-ஐ அடைவதற்காக, 2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின்கீழ் சேவைத் துறைக்கு வலுவான கொள்கை ஆதரவு வழங்கப்பட்டுள்ள நிலையில், இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.


Original Link: Why does India need an Index of Services Production?  

Share: