நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் நிலவும் நிலையற்ற வாழ்வாதாரச் சூழல் -அமர்ஜீத் சின்ஹா, ​​ஷகுன் சூர்யம்

நகர்ப்புற சமூக உள்கட்டமைப்புகள் மேம்பட்டிருந்தாலும், அவை மக்களுக்குச் சரியாகச் சென்றடைவதில்லை என்பதை களஆய்வுகள் காட்டுகின்றன. நிர்வாகத்தில் குடிமக்கள் ஈடுபடுத்தப்படாததே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.


சமீபத்தில் இரண்டு கல்வி நிறுவனங்களில் 'அதிகாரப் பகிர்வு, வளர்ச்சி மற்றும் ஜனநாயகம்' (Devolution, Development and Democracy) என்ற பாடத்தை நடத்தியபோது, சமூகத்தின் கடைசிப் புள்ளியில் உள்ள நிர்வாகம் மற்றும் மனித மேம்பாட்டு சவால்கள் குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. வகுப்பறை விவாதங்களுக்குப் பிறகு, நகர்ப்புற நிர்வாகத்தின் உண்மையான நிலையை நேரில் கண்டறிய மாணவர்கள் களஆய்வுக்கு அனுப்பப்பட்டனர். பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சுகாதார மையங்கள், நகராட்சி அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், கழிவுகளிலிருந்து செல்வம் உருவாக்கும் திட்டங்கள் (Waste-to-wealth initiatives) மற்றும் நகர்ப்புற குடிசைப் பகுதிகள் ஆகியவற்றிற்கு சென்றனர். இந்த ஆய்வுகள் சமகால நகர்ப்புற இந்தியாவின் ஒரு முக்கியமான முரண்பாட்டை வெளிப்படுத்தின: உள்கட்டமைப்பு வசதிகள் விரிவடைந்திருந்தாலும், அவற்றின் பலன்கள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை.


மாணவர்கள் ஒரு பெரிய நகர்ப்புற குடிசைப் பகுதிக்கும், அதேபோல பெரிய தொழில்துறை செயல்பாடுகளுடன் வேகமாக நகரமயமாகி வரும் ஒரு மாவட்டத்திற்கும் நேரில் சென்றனர். நகர்ப்புறத்தின் கடைக்கோடி மக்கள் வாழும் பகுதி எதிர்கொள்ளும் சவாலானது பலவீனமான நிறுவனக் கட்டமைப்பு, பொறுப்புக்கூறலில் தெளிவின்மை மற்றும் அர்த்தமுள்ள சமூகப் பங்களிப்பு இல்லாமை ஆகியவற்றின் ஒட்டுமொத்தக் கலவையாகும்.

குடிநீர் விநியோகம் இல்லாத பின்தங்கிய குடியிருப்புகளுக்கு தண்ணீர் லாரிகள் வந்து சேருகின்றன. ஆனால், அவை வரும் நேரம் நிலையாக இல்லாததாலும், முன்கூட்டியே அறிவிக்கப்படாததாலும், பெண்கள் இப்போதும் பெரிய கொள்கலன்களுடன் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. இது அவர்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதோடு, கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கிறது.


பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் முன்பைவிட மேம்பட்டிருந்தாலும், அவற்றைப் பராமரிப்பது இன்னும் ஒரு பெரிய சவாலாகவே உள்ளது. அசுத்தமான கழிப்பறைகள், சரியாகப் பராமரிக்கப்படாத குடிநீர் அமைப்புகள், பயிற்றுநர்கள் இல்லாத மேடு பள்ளமான விளையாட்டு மைதானங்கள் மற்றும் தூய்மையற்ற வகுப்பறைகள் ஆகியவை வெறும் நிதிப் பற்றாக்குறையையும் தாண்டிய பிற சிக்கல்களைச் சுட்டிக்காட்டுகின்றன. இவை, உள்ளூர் சமூகத்தின் பங்களிப்பு மற்றும் நிபந்தனையற்ற நிதியுதவிகள் மூலம் பள்ளிகளின் பொறுப்புக்கூறலை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. பல குடும்பங்கள் போதுமான வசதிகள் இல்லாத வீடுகளில் வசிப்பதால், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் பள்ளி நேரத்திற்குப் பிறகும் பிள்ளைகள் தங்கிப் படிப்பதற்கான ஒரு சமூகக் கற்றல் மையங்களாகச் செயல்பட வேண்டும்.


பல ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கிறார்கள், ஆனால் கற்பித்தல் அல்லாத இதரப் பணிகள் அவர்களது கற்பித்தல் மற்றும் மாணவர்களின் கற்றல் செயல்முறைகளுக்குப் பெரும் தடையாக இருக்கின்றன. அதேநேரத்தில், சில இடங்களில் ஆசிரியர்களின் பொறுப்புக்கூறல் பலவீனமாக உள்ளது. இதனால், பள்ளி முதல்வர்களுக்கு போதிய அதிகாரம் இருப்பதில்லை. அங்கன்வாடிகள் ஒரு முக்கியமான சேவையை வழங்கினாலும், அவை மிகக் குறைந்த நேரமே செயல்படுவதால், முழுநேரக் குழந்தை பராமரிப்பு மையங்களாகச் செயல்படுவதற்கு ஏற்றவையாக இல்லை.






கழிவுகளைச் செல்வமாக மாற்றும் பொது-தனியார் கூட்டுத் திட்டங்கள் தற்போது சிறிய நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன. இருப்பினும், இத்திட்டங்களில் முதலீடு செய்யும் தனியார் பங்களிப்பு நிறுவனங்களுக்கும் லாபம் கிடைக்குமா என்ற நிச்சயமற்றத் தன்மை இருப்பதால், இந்தத் திட்டங்களின் நீண்டகால நிலைத்தன்மை இன்னும் சிக்கலானதாகவே உள்ளது.


வசதிகள் குறைந்த வீடுகள், போதிய சுகாதாரமின்மை மற்றும் நம்பகமற்ற குடிநீர் விநியோகம் கொண்ட குடிசைப் பகுதிகளில், மருத்துவர், மருந்துகள் மற்றும் பரிசோதனை வசதிகளுடன் கூடிய ஒரு பொது மருத்துவமனை அருகிலேயே இருப்பது மிக அத்தியாவசியமான தேவையாகும். இது இல்லாத பட்சத்தில், சிறிய அளவிலான நோய்களுக்குக்கூட அப்பகுதி மக்கள் நீண்டதூரம் பயணம் செய்து மூன்றாம் நிலை மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


அதிகப்படியான புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்ட நகர்ப்புறங்கள், வேலை சார்ந்த உடல்நல அபாயங்கள், மோசமான வாழ்வாதாரச் சூழல் மற்றும் எளிதில் பரவக்கூடிய நோய்களின் அதிகப்படியான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. ஒரு நாள் கூலியை இழந்துவிடுவோம் என்ற பயத்தினால் பல தொழிலாளர்கள் தங்களுக்கான சிகிச்சையைத் தள்ளிப்போடுகிறார்கள், இது அவர்களின் உடல்நலப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்குகிறது. இந்த நிலைமை, ஆரம்ப சுகாதாரத் துறையில் ஒரு புதிய அணுகுமுறையின் தேவையை உணர்த்துகிறது. பொது சுகாதாரம் என்பது, மக்களுடன் இணைந்த கூட்டு நிர்வாகத்தின் மூலம் நகராட்சி நிர்வாகத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாற வேண்டும்.


நிறுவனரீதியிலான இடைவெளிகளை நிரப்புதல் 


களஆய்வுகள் உள்ளூர் சமூகங்களின் வியக்கத்தக்க மீள்திறனையும் அவர்களது ஆர்வத்தையும் காட்டின. உள்ளூர் மக்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்து, திட்டமிடுதல் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் அவர்களையும் இணைத்துக்கொண்டு, நிபந்தனைகளற்ற தாராள நிதி உதவியும் அளித்தால், கடைக்கோடி மக்களுக்கான பல சவால்களை மிக எளிதாகத் தீர்க்க முடியும் என்பது தெளிவாகப் புரிந்தது. இந்த மக்களுக்குத் துணையாக, அவர்களுடன் நெருங்கிப் பணியாற்றும் நிபுணர்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் இருக்கும்போது, இந்தச் செயல்முறை இன்னும் வலுவடையும்.


கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பெண்களின் கூட்டமைப்புகள், இந்த ஆய்வுகளின்போது காணப்பட்ட மிகவும் ஊக்கமளிக்கும் உதாரணங்களில் ஒன்றாகும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் (Self-Help Group (SHGs)), பெண்கள் பணத்தைச் சேமிக்கவும், கடன்களைப் பெறவும், நெருக்கடியான காலங்களில் ஆதரவைப் பெறவும் பெரிதும் உதவியுள்ளன. மேலும், இந்த அமைப்புகள் பெண்கள் இடையே பரஸ்பர நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் சூழலை உருவாக்கியுள்ளன. இதுமட்டுமின்றி, சுய-உதவிக்குழுக்களில் பங்கேற்பது பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தியுள்ளது.


இருப்பினும், சமுதாயத்தில் உள்ள ஆணாதிக்கத்தின் கட்டுப்பாடுகள் இப்போதும் வெளிப்படையாகத் தெரிகின்றன. பெண்களின் முன்னேற்றம், நிதி சுதந்திரம் ஆகியவை இன்றும் பல வீடுகளில் உள்ள ஆண்களின் அனுமதியைச் சார்ந்தே இருப்பதால், அது சுய-உதவிக்குழுக்களின் முழுமையான வளர்ச்சித் திறனைத் தடுக்கிறது. பல பெண்கள் கூட்டங்களில் கலந்துகொள்ளவும், வங்கிகளுக்குச் செல்லவும் அல்லது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடவும் தங்களது கணவர்களின் அனுமதி தேவை என்று கூறினர். இது, முடிவெடுக்கும் விஷயத்தில் அவர்களுக்கான அதிகாரம் இன்னும் முழுமையான சுதந்திரமாக மாறவில்லை, மாறாக சில நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.


சேவைகளை வழங்குவதில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதற்கான பல உதாரணங்களை மாணவர்கள் கவனித்தனர். இது ஒரு வரவேற்கத்தக்க வளர்ச்சி என்றாலும், சமூக அளவில் மக்களுக்குப் போதிய வழிகாட்டுதலும் ஆரம்பக்கட்ட உதவியும் இல்லாதபோது, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஒரு சவாலாக மாறுகிறது என்பதை இந்த நேரடிப் புலம்சார் களஆய்வுகள் உணர்த்தின. அதாவது, தொழில்நுட்பத்தை இலக்கை அடைவதற்கான ஒரு கருவியாகப் பார்க்காமல், அதுவே இறுதி இலக்கு என்று நினைக்கும்போது, அனைவரையும் உள்ளடக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தாலும்கூட, சில மக்கள் திட்டங்களில் இருந்து விடுபட்டுப்போகும் ஆபத்து ஏற்படுகிறது. இந்தச் சவாலுக்குத் தீர்வுகாண வேண்டுமானால், மக்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் கூட்டாட்சிமுறை மூலமாகச் சமூகத்தோடு இன்னும் ஆழமான பிணைப்பை உருவாக்குவது அவசியமாகும்.


பொறுப்புக்கூறல் பற்றாக்குறை


இந்தச் செயல்பாட்டு முறைகள் மிகவும் விரிவான ஒரு நிறுவனப் பிரச்சினையைச் சுட்டிக்காட்டுகின்றன: அதாவது, நகர நிர்வாக அமைப்புகள் செயல்பாட்டில் இருந்தாலும், அவை பொதுச் சேவைகளை அதிகம் சார்ந்து வாழும் விளிம்புநிலை சமூக மக்களிடமிருந்து மிகவும் விலகியே இருக்கின்றன.


நகர்ப்புற நிர்வாகம் கட்டமைக்கப்பட்டுள்ள முறையில்தான் பெரிய சாவல்கள் உள்ளன. வார்டு அளவில் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், விளிம்புநிலை சமூகங்கள் அதிகம் வசிக்கும் குடிசைப் பகுதிகளில் இருந்து மிகவும் விலகியே இருக்கிறார்கள். மேலும், வார்டுகளின் பரப்பளவும் மிக அதிகமாக இருப்பதால், அங்கு பொதுமக்கள் நேரடியாகவும் அர்த்தமுள்ள வகையிலும் நிர்வாகத்தில் பங்கேற்பது கடினமாக உள்ளது. அரசாங்கத்திற்கும் இந்த குடிசைப்பகுதி வாழ் மக்களுக்கும் இடையே உள்ள இந்த இடைவெளி, திட்டங்களைச் சரியாகக் கண்காணிப்பதைக் குறைப்பதோடு, பொதுமக்களின் நம்பிக்கையையும் குறைக்கிறது. சிறந்த நிர்வாகத்திற்குப் குடிசைப்பகுதி அளவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே, நகர்ப்புறப் பொதுச் சேவைகளை அந்தந்தப் பகுதி மக்களே நேரடியாக நிர்வகிக்கும் வகையில் இந்த நிர்வாக முறையை மாற்றி அமைக்க வேண்டும்.


களஆய்வுகள் காட்டியுள்ளபடி, குடிமக்களிடையே இதற்கான விருப்பம் இல்லாதது பிரச்னையல்ல. மாறாக, உள்ளூர் சமூகங்களைச் சமமான பங்காளராக நடத்தும் ஒரு சிறந்த ஆட்சி அமைப்பை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள தோல்வியே இதற்குக் காரணமாகும்.



ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, நகர்ப்புறக் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களின் பாதுகாப்பற்ற வாழ்க்கைச் சூழலைக் களஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. எனவே, குடிசைப்பகுதி எனப்படும் உள்ளூர் குடியிருப்புகளை மையமாகக் கொண்ட ஒரு புதிய கூட்டாட்சி மாதிரி உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதில், தேவைக்கேற்பப் பயன்படுத்தக்கூடிய உள்ளூர் நிதி, அந்தச் சமூக மக்களுக்கான தொழில்முறை ஆதரவு மற்றும் பெண்களுக்கான கூடுதல் உரிமை மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் ஆகியவை உள்ளடங்கியிருக்க வேண்டும்.


குடிமக்கள் இந்த மாற்றத்திற்குத் தயாராகவே இருக்கிறார்கள். அரசாங்கம் தனது பங்கை மறுவரையறை செய்து, இந்த மாற்றத்தை ஏற்கத் தயாராக இருக்கிறதா என்பதுதான் தற்போதைய கேள்வியாகும்.


சின்ஹா மற்றும் சூர்யம் ஆகியோர் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான மையத்தில் பணிபுரிகின்றனர். இங்கு கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் என்றாலும், மாணவர்களின் பங்களிப்பையும் கருத்துக்களையும் அவர்கள் அங்கீகரிக்கிறார்கள்.


Original Link: The precarity of living in urban slums.

Share:

இந்தியாவிடம் இப்போது ஆராய்ச்சித் துறையில் ஒரு பெரிய முன்னேற்றத்திற்கான நிதியும் திறமையும் நல்வாய்ப்பும் உள்ளன. -சிவ்குமார் கல்யாணராமன் மற்றும் வி ஆனந்த நாகேஸ்வரன்


அத்தியாவசியத் தேவைகளுக்கு மற்றவர்களைச் சார்ந்திருப்பதில் உள்ள ஆபத்துகளை ஹார்முஸ் (Hormuz) விவகாரம் நமக்குக் காட்டிக்கொடுத்தது. தொழில்நுட்பத் துறையில் உண்மையான சவால்களைத் தாங்கி நிற்கும் திறன், நீண்டகால முக்கியத்துவத்தையும் பெற வேண்டுமென்றால், நாட்டின் உள்நாட்டுத் திறன்களை அடிமட்டத்திலிருந்து வலுவாகக் கட்டமைப்பதன் மூலம் மட்டுமே அது சாத்தியமாகும்.


இந்த ஆண்டின் வசந்த காலத்தில், மூன்று மாதங்களாக இந்தியப் பொருளாதாரத்தைப் பாதித்த மிக முக்கியமான காரணியாக இருந்தது, எண்ணெய் கப்பல்களுக்கும் ஹார்முஸ் நீரிணைக்கும் (Strait of Hormuz) இடையே இருந்த தூரம்தான். மார்ச் மாதத்தில் இந்த நீரிணை மூடப்பட்டபோது, தனக்குத் தேவையான பெரும்பாலான எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியா, ஒரு மிகப்பெரிய விநியோகத் தடையை எதிர்கொண்டது. இதனால் எண்ணெய் ஏற்றி வந்த கப்பல்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட வேண்டியிருந்தது. இது ரஷ்ய கச்சா எண்ணெயின் பயணக் காலத்தை நீட்டித்து, அதன் விலையையும் மிகவும் அதிகமாக்கியது. இது ஒரு முக்கியமான பாடம் என்றாலும், இதோடு எல்லாம் முடிந்துவிடவில்லை. எண்ணெய் விநியோகத்தை எப்போதாவது ஒரு வழியில் மாற்றி அமைத்துவிட முடியும். ஆனால், முக்கியமான தொழில்நுட்பங்களில் சுயசார்பு அடைய இலக்கு நிர்ணயித்துள்ள ஒரு நாட்டிற்கு, மாற்றுவழியைத் தேர்ந்தெடுக்கும் அத்தகைய நெகிழ்வுத்தன்மை இருக்காது.


இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், விநியோகத் தொடர்கள் வெறும் பலவீனமானவை என்பது மட்டுமல்ல, அவை தற்போதைய காலகட்டத்தில் ஒரு நாட்டின் கொள்கைகளைச் செயல்படுத்தும் கருவிகளாகவே மாறிவிட்டன. ஒரு பொருளை ஏற்றுமதி செய்வதற்கான உரிமம் என்பது பிற நாட்டை வழிக்குக் கொண்டுவரும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. விநியோகப் பாதையில் ஏற்படும் ஒரு தடை அல்லது நெருக்கடி ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வருடம் சுதந்திரமாக வர்த்தகம் செய்யப்பட்ட ஒரு தொழில்நுட்பம், அடுத்த வருடமே மற்றவர்களுக்குக் கிடைக்காமல் மறுக்கப்படும் ஒரு பொருளாக மாறிவிடுகிறது. சீனா தனது மொத்த உற்பத்தியில் 2.43 விழுக்காட்டை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகச் செலவிடுகிறது. இதில் முக்கால்வாசிப் பணத்தை அதன் சொந்த நிறுவனங்களே நிதியுதவியாக வழங்குகின்றன. இந்தச் செலவினத்தின் பின்னணியில் அதற்கு ஒரே ஒரு லட்சியம் மட்டும்தான் உள்ளது: மற்றவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில்நுட்பங்களைச் சார்ந்து வாழ்வதை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் தன்கட்டுப்பாட்டில் உள்ள தொழில்நுட்பங்களை உலகம் சார்ந்திருக்கும்படிச் செய்வதே ஆகும்.


இந்தியா தன்னைத்தானே மதிப்பீடு செய்து கொண்டுள்ளதால், தனது பலங்கள் மற்றும் பலவீனங்களை நன்றாகவே அறிந்துள்ளது. 2023-ஆம் ஆண்டில், இந்தியா தனது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.64 விழுக்காட்டை மட்டுமே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிக்காகச் செலவிட்டது. ஆனால், உலகளாவிய சராசரியோ இதைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருந்தது. மேலும், சீனா, தென்கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தச் செலவினத்தில் 75 விழுக்காடு அல்லது அதற்கும் அதிகமாகத் தனியார் நிறுவனங்களிடமிருந்து வரும் நிலையில், இந்தியாவில் இந்தச் செலவில் சுமார் 40 விழுக்காடு மட்டுமே தனியார் நிறுவனங்களிடமிருந்து வந்தது. இருப்பினும், இந்தச் சூழ்நிலையை மேம்படுத்துவதற்காக முதன்முறையாக அரசாங்கம் இப்போது தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


2024-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (Anusandhan National Research Foundation (ANRF)) என்பது பிரதமரின் தலைமையில் இயங்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது பல்கலைக்கழகங்கள், தொழில்துறைகள், புத்தொழில் நிறுவனங்கள், கொடையாளர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களை ஒன்றிணைக்கிறது. நிதிசார்ந்த அபாயங்களைக் குறைப்பதன் மூலம், ஆராய்ச்சித் துறையில் அதிக முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அமைப்பின் 'ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு' நிதியின்கீழ், தனியார்துறை ஆராய்ச்சிகளுக்கு நீண்டகால நிதியுதவியாக ஆறு ஆண்டுகளில் 1 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும், அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதன்மைப் பிரிவு, அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக ஐந்து ஆண்டுகளில் மேலும் 50,000 கோடி ரூபாயை முதலீடு செய்யும். தனியார் முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்: ஒரு நிறுவனம் வணிகரீதியாக மாறுவதற்கு முந்தைய ஆராய்ச்சிகளில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் (ANRF) இணைந்து முதலீடு செய்யும் ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும், அந்த ஆராய்ச்சியை முழுமையான வணிகப் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் விரிவுபடுத்தவும் மேலும் 5 முதல் 10 ரூபாய் வரை முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்திற்கும் சமூகத்திற்கும் இடையிலான இந்தக் கூட்டுமுயற்சி, உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், அரசாங்கத்தின் கொள்கைகளையும் கொள்முதல் முறைகளையும் தனது ஆராய்ச்சி இலக்குகளுக்கு ஏற்ப மாற்றுவதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளையும் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) ஆதரிக்கிறது.


ஒரு நிறுவனம் பல்வேறு வழிகளில் இந்த அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்ற முடியும். அந்த அறக்கட்டளையின் முதன்மை முதலீட்டுடன் இணைந்து, இரண்டாம் நிலை நிதி மேலாண்மை அமைப்பில் ஒரு வரையறுக்கப்பட்ட பங்காளராக சேரலாம் அல்லது தகுதிவாய்ந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனமாக நேரடியாக இதில் பங்கேற்கலாம் அல்லது இந்தியாவில் ஏற்கனவே செயல்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்களுடன் கூட்டு முயற்சியில் ஈடுபடலாம். அறிவியல் துறையைப் பொறுத்தவரை, அது ஒரு தேசியப் பணியில் இணைந்து செயல்படலாம்; அல்லது அறக்கட்டளையுடன் இணைந்து நிதி வழங்குவதற்காகப் போட்டிக்கு முந்தைய சவால் ஒன்றை முன்மொழியலாம்; நிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியை 'அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) கண்டுபிடிப்பு நிதி' மூலமாகச் செலுத்தலாம்; அல்லது ஒரு பெரிய முதலீட்டைச் செய்வதற்கு முன்பாக, ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கான செலவைப் பகிர்ந்து கொள்ளலாம். இந்த அறக்கட்டளையில் இணைவதற்கு இத்தனை விருப்பங்கள் இருப்பதற்கு ஒரே ஒரு முக்கியக் காரணம்தான் உள்ளது: இணைய விரும்பும் எந்தவொரு நிறுவனமும், தொடக்கக் கட்டுப்பாடுகள் மற்றும் கட்டணங்கள் அதிகமாக இருக்கின்றன என்ற காரணத்திற்காக விலகியிருக்கக்கூடாது என்பதுதான். 


ஆனால், இந்த அறக்கட்டளை என்ன வழங்குகிறது என்பதில் இருந்து, ஒட்டுமொத்தத் தொழிற்துறை என்ன செய்ய வேண்டும் என்பதை நோக்கி நமது கவனம் மாற வேண்டும். ஏனெனில், அறக்கட்டளை என்பது ஒரு தூண்டுகோல் மட்டுமே; அது நிறுவனங்களுக்கு மாற்றாகவோ அல்லது ஒரு ஊன்றுகோலாகவோ இருக்க முடியாது. இது நிறுவனங்களின் அபாயங்களைக் குறைக்கலாமே தவிர, அவர்களுக்கான வேலையை அதுவே செய்துவிட முடியாது. எனவே, தொழிற்துறை மூன்று முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலாவதாக, நிறுவனங்கள் பொது நிதியுதவியுடன் இணைந்து தங்களது சொந்த மூலதனத்தையும் முதலீடு செய்ய வேண்டும். இரண்டாவதாக, பிற நாடுகளை அல்லது நிறுவனங்களை நம்பியிருப்பது ஆபத்தானதாக இருக்கும் மற்றும் உள்நாட்டுத் திறன் மிகவும் அவசியமாகத் தேவைப்படும் உத்திசார் தொழில்நுட்பங்களில் அவர்கள் தீவிரமாக முதலீடு செய்ய வேண்டும் அதை தவிர்த்து, தங்களுக்குப் பாதுகாப்பான சந்தைகளில் இருந்து கிடைக்கும் சிறிய லாபங்களில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடாது. மூன்றாவதாக, மற்றும் மிக முக்கியமாக, குறுகியகால காலாண்டு முடிவுகளை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், நீண்டகால ஆராய்ச்சிகளை ஆதரிக்கும் வலுவான உள்நாட்டு அமைப்புகளை உருவாக்க வேண்டும். அதாவது, அர்ப்பணிக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுகள், பெருநிறுவனங்களின் கூட்டு நிதி மற்றும் திட்டமிடல் குழுக்கள் போன்றவற்றை உருவாக்க வேண்டும்.


இந்தியத் தொழில்துறை இதற்கு முன்பும் இதுபோன்ற சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. 1990-களின் நடுப்பகுதியில் உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organisation (WTO)) அறிவுசார் சொத்துரிமை விதிகளை இந்தியா ஏற்றுக்கொண்டு, மருந்துத் துறையில் 'பொருட்களுக்கான காப்புரிமைகளை' (Product patents) அங்கீகரிக்கச் சம்மதித்தபோது, உள்நாட்டு மருந்து நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களின் வரவால் பாதிக்கப்படும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஏனெனில், அதற்கு முன்பு வரை இந்திய நிறுவனங்கள் பிற நாடுகளில் உருவாக்கப்பட்ட மருந்துகளின் தயாரிப்பு முறையை ஆராய்ந்து, அவற்றை மறுஉருவாக்கம் செய்யும் முறையையே நம்பியிருந்தன. ஆனால், அவர்கள் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இந்திய நிறுவனங்கள் சந்தையை விட்டு வெளியேறுவதற்குப் பதிலாக, வேதியியல் செயல்முறைகளில் தங்களது நிபுணத்துவத்தை மேம்படுத்திக் கொண்டன. உலகின் மிகக் கடுமையான தரக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு இணங்கச் செயல்பட்டு, உலகம் முழுவதும் மலிவு விலையிலான மருந்துகளை வழங்கும் முக்கிய விநியோகஸ்தர்களாக மாறின. இன்று இந்திய தொழிற்துறை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால் மிகவும் பரந்தது, ஆனால் அதன் மூலம் நாம் கற்கும் பாடம் ஒன்றுதான்: வெற்றி என்பது நமது திறன்களை வளர்த்துக் கொள்வதில்தான் இருக்கிறதே தவிர, சவால்களைக் கண்டு பின்வாங்குவதில் இல்லை.


முன்னர் வளர்ச்சி அடைந்த நாடுகளைவிட இந்தியா இன்னும் அதிவேகமாக வளர்ச்சி பெறமுடியும். அதற்குப் பல சாதகமான அம்சங்கள் ஏற்கனவே இந்தியாவில் உள்ளன: தற்போது நமக்குக் கிடைத்து, எப்போதும் நிலைத்திருக்காத மக்கள்தொகை ஈவுத்தொகை (Demographic dividend), உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital public infrastructure), ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிதி மற்றும் திட்ட அமைப்புகள், மற்றும் ஒரு குறிப்பிட்ட நாட்டை மட்டுமே உலக நாடுகள் தங்களின் தேவைகளுக்குச் சார்ந்திருப்பதைத் தவிர்த்து அதற்கு மாற்றாக விளங்கும் நாடுகளுக்கு ஆதரவாக இருக்கும் தற்போதைய உலகளாவிய சூழல் ஆகியவை ஆகும். இந்த பலங்கள் இந்தியா மற்ற நாடுகளுக்கு இணையாக வளர்வதோடு மட்டுமல்லாமல், அறிவுசார் சொத்துக்களை வெறும் பயனாளராகப் பயன்படுத்துபவராக மட்டும் இல்லாமல், அதை உருவாக்குபவராக மாறுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும். இருப்பினும், இந்த வாய்ப்பு நமக்கு எப்போதும் கிடைத்துக் கொண்டிருக்காது, மேலும் அரசாங்கம் மட்டுமே இதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. சமீபத்தில் ஏற்பட்ட ஹார்முஸ் (Hormuz) நெருக்கடியானது, நமது அத்தியாவசியத் தேவைகளுக்கு மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதில் உள்ள ஆபத்துகளை இந்தியாவிற்கு உணர்த்தியுள்ளது. இந்தியா தனது சொந்தத் திறன்களை ஆரம்பத்திலிருந்தே கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே தொழில்நுட்பரீதியாகத் தற்சார்பு அடையவும், சவால்களை எதிர்கொள்ளும் வலிமையைப் பெறவும், இறுதியில் உலகிற்குத் தவிர்க்க முடியாத ஒரு நாடாகவும் மாற முடியும். இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது, ஆராய்ச்சி ஆய்வகங்களும் தயாராக உள்ளன, நிதியும் கிடைக்கிறது; இனி இந்த முயற்சியை முழுமையாக முடிப்பதற்குத் தொழில்துறையினர் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.


சிவ்குமார் கல்யாணராமன் மற்றும் வி ஆனந்த நாகேஸ்வரன், அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ANRF) தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இந்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் ஆவர்.


Original Link: India now has the funds, the talent and the opening for a research leap.

Share:

பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை தொடங்கியது. இந்தத் திருவிழாவை தனித்துவமானதாக மாற்றுவது எது? -குஷ்பூ குமாரி

பூரி நகரில் புகழ்பெற்ற வருடாந்திர ஜெகந்நாதர் ரத யாத்திரை தொடங்கியுள்ளது. இந்தத் திருவிழா ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது?


ஒடிசாவின் பூரி நகரில் உள்ள ஜெகந்நாதர் ரத யாத்திரை ஜூலை மாதம் 16-ஆம் தேதி தொடங்கியது. இந்த ரத யாத்திரையின்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியதால், கூட்ட நெரிசல் காரணமாக குறைந்தது இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர், மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த ஜெகந்நாதரின் ரத யாத்திரை விழாவின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மையைக் கண்காணிப்பதற்காக, மாநில அரசு சுமார் 12,000 போலீசாரையும், 19 இந்தியக் காவல் பணி மூத்த அதிகாரிகளையும், 100-க்கும் மேற்பட்ட மூத்த நிர்வாக அதிகாரிகளையும் பணியில் ஈடுபடுத்தியிருந்தது.


முக்கிய அம்சங்கள்:


1. இந்து புராணங்களின்படி, ஜெகந்நாதர் தனது மூத்த சகோதரர் பலபத்திரர் மற்றும் சகோதரி சுபத்ரா தேவி ஆகியோருடன் இணைந்து, 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்திலிருந்து குந்திச்சா ஆலயத்திற்கு (Gundicha Temple) ஒன்பது நாட்கள் நீடிக்கும் வருடாந்திரப் பயணத்தை மேற்கொள்கிறார். குந்திச்சா ஆலயம் இவர்களின் அத்தையின் வீடு என்றும், சில மரபுகளின்படி இவர்கள் பிறந்த இடம் என்றும் நம்பப்படுகிறது. இந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பகுடா யாத்திரை (Bahuda Yatra) வரை இந்தத் தெய்வங்கள் அங்கேயே தங்கியிருப்பார்கள்.

2. பஹண்டி சடங்கிற்குப் (தெய்வங்களின் ஊர்வலம்) பிறகு, தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்ட மூன்று பெரிய தேர்களில் எழுந்தருளச் செய்யப்பட்டு, சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குந்திச்சா கோயிலுக்கு (Gundicha Temple) கொண்டு செல்லப்படுகிறார்கள். பூரி நகரின் புகழ்பெற்ற 'பெரிய வீதி' (Bada Danda) வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தத் தேர்களை வடம்பிடித்து இழுக்கிறார்கள்.


3. ஸ்ரீ பலபத்ரருக்கான 'தாலத்வஜ ரதம்' (Taladhwaja Rath), தேவி சுபத்ராவுக்கான 'தர்பதலன் ரதம்' (Darpadalan Rath) மற்றும் ஸ்ரீ ஜெகந்நாதருக்கான 'நந்திகோஷ ரதம்' (Nandighosa Rath) ஆகியவைதான் அந்த மூன்று தேர்களாகும். ஒவ்வொரு தேருக்கும் தனக்கெனத் தனித்துவமான வண்ணம், அளவு, சக்கரங்கள், மரக் குதிரைகள், காவல் தெய்வங்கள் மற்றும் தேரோட்டிகள் உள்ளனர். இந்தத் தேர்கள், அப்பகுதியில் உள்ள காடுகளில் உள்ளூர் அளவில் கிடைக்கக்கூடிய மரங்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக, பாசி (Phasi), பௌன்ரா (Bhaunra) மற்றும் அஸனா (Asana) ஆகிய மரவகைகள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.


4. சேரா பன்ஹாரா சடங்கு: ரத யாத்திரை தொடங்குவதற்கு முன்பாக, பூரி நகரின் முன்னாள் அரச குடும்பத்தின் தலைவர் தங்கத் துடைப்பத்தைப் பயன்படுத்தி ரதங்களின் தளங்களைப் பெருக்கிச் சுத்தம் செய்யும் 'சேரா பன்ஹாரா' என்ற சடங்கைச் செய்வார். இந்தச் சடங்கு உழைப்பின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதோடு, இறைவனின் பார்வையில் எந்த ஒரு வேலையும் உயர்ந்ததோ அல்லது தாழ்ந்ததோ இல்லை என்பதை உணர்த்துகிறது.


1970-ஆம் ஆண்டில் தனது 17-ஆவது வயதிலேயே அரியணை ஏறிய பூரி அரசர் கஜபதி திவ்யசிங்க தேவ், 1971-ஆம் ஆண்டிலிருந்து 'சேரா பன்ஹாரா' (Chhera Panhara) என்ற புனித சடங்கைத் தொடர்ந்து செய்து வருகிறார்.


5. பஹுடா யாத்திரை: தெய்வங்கள் தங்களின் திரும்பும் பயணத்தின் போது (இது 'பஹுடா யாத்திரை' என்று அழைக்கப்படுகிறது) அவர்களது அத்தையின் கோவிலில் அரிசி, தேங்காய், பருப்பு மற்றும் வெல்லம் கொண்டு தயாரிக்கப்படும் 'போடா பிதா' (Poda Pitha) என்ற ஒரு சிறப்பு அடை பிரசாதமாக வழங்கப்படுகிறது. தேர்கள் சிம்ம வாயில் பகுதியை அடைந்ததும், கோவில் பணியாளர்கள் சிறப்பு வழிபாட்டுச் சடங்குகளைச் செய்கிறார்கள்.

6. சுனா பேஷா: பஹுடா யாத்திரை முடிந்த மறுநாள், சிம்ம வாயிலுக்கு (Lion's Gate) முன்பாக நிற்கும் தேர்களிலேயே வீற்றிருக்கும் கடவுளர்களுக்கு கிரீடங்கள், தங்கக் கைகள் மற்றும் தங்கக் கால்கள் உள்ளிட்ட தங்க நகைகள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது. இந்தச் சடங்கு 'சுனா பேஷா' என்று அழைக்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரையின் இறுதி நிகழ்வுகளில் ஒன்றாகும்.


7. நீலாத்ரி பிஜே: ஆனி-ஆடி மாதத்தின் 12-வது நாளில் கொண்டாடப்படும் நீலாத்ரி பிஜே நிகழ்வின்போது, கடவுளர்கள் மீண்டும் தங்களது முதன்மை ஆலயத்திற்குத் திரும்புகின்றனர். இது ரத யாத்திரையின் நிறைவைக் குறிக்கிறது. அண்ணன், தம்பி, தங்கை ஆகிய மூன்று கடவுளர்களும் 'பஹண்டி' (Pahandi) எனப்படும் பாரம்பரிய ஊர்வலத்தின் மூலம் மீண்டும் கருவறைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள்.


8. இந்தச் சடங்கின் ஒரு பகுதியாக, குந்திச்சா கோவிலுக்குத் தன்னையும் தேரில் அழைத்துச் செல்லாததால் கோபமடைந்துள்ள லட்சுமி தேவியின் கோபத்தைத் தணிப்பதற்காக, ஜெகந்நாதப் பெருமான் சார்பாகப் பக்தர்கள் லட்சுமி தேவிக்கு 'ரசகுல்லா' வழங்கி வழிபடுகிறார்கள். சமீபத்திய ஆண்டுகளில், ஒடிசா மாநிலம் இந்த நிலாத்ரி பிஜே நாளை 'ரசகுல்லா தினமாகவும்' கொண்டாடி வருகிறது.


12-ஆம் நூற்றாண்டு ஜெகந்நாதர்  கோயில்


1. கோயில் இணையதளத் தகவல்களின்படி, பூரி  நகரின் உள்ள ஜெகந்நாதர் கோயில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் கிழக்கு கங்கா வம்சத்தைச் சேர்ந்த மன்னன் அனந்தவர்மன் சோடகங்க தேவனால் கட்டப்பட்டது. கி.பி. 1230-ல் மூன்றாம் அனங்கபீம தேவனின் ஆட்சிக் காலத்தில் இக்கோயில் முழுமையாகக் கட்டப்பட்டு, தெய்வங்களின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.





2. இக்கோயில் நான்கு முக்கியப் பகுதிகளைக் கொண்டுள்ளது: அவை தியுல் (Deul), கர்ப்பகிரஹம் (Garbhagriha), ஜெக்மோகனா (Jagmohana) மற்றும் போக மந்திர் (Bhog mandir) ஆகியவையாகும். இக்கோபுரத்தின் உச்சியில் 'நீலச்சக்கரம்' (Nilachakra) உள்ளது, இது மகாவிஷ்ணுவுக்குரிய எட்டு ஆரங்களைக் கொண்ட ஒரு சக்கரமாகும்.


3. கோவிலின் வெளிச்சுவர்கள் தெய்வீக மற்றும் தேவதைகள் உருவங்களின் செதுக்கல்களாலும், மலர் மற்றும் வடிவியல் வடிவங்களாலும் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதற்கு நான்கு திசைகளிலும் நான்கு நுழைவாயில்கள் உள்ளன: சிங்ஹ த்வார் (கிழக்கு), வியாக்ர த்வார் (மேற்கு), ஹஸ்தி த்வார் (வடக்கு) மற்றும் அஸ்வ த்வார் (தெற்கு). இந்த கோவில் நகரா (Nagara) கட்டிடக்கலை பாணியின் பிராந்திய வடிவமான கலிங்க (Kalinga) கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.


4. ஒடிசா மாநில அரசின் கூற்றுப்படி, இந்தக் கோயில் சிமெண்ட் அல்லது சாந்து எதுவும் பயன்படுத்தப்படாமல், கோண்டலைட் (Khondalite) பாறைகளைக் கொண்டு மட்டுமே கட்டப்பட்டுள்ளது. கல் பாளங்களை ஒன்றாக இணைத்துப் பிடிப்பதற்காக இரும்பு ஊசிகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், காலப்போக்கில், இந்த இரும்பு ஊசிகள் துருப்பிடித்ததால் கோயிலின் ஒட்டுமொத்தக் கட்டமைப்புக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது.


5. சூரியவம்ச வம்சத்தைச் சேர்ந்த மன்னர் பிரதாப்ருத்ர தேவின் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1504-1532), இந்தக் கோயில் சுண்ணாம்புப் பூச்சுகளால் மூடப்பட்டது. அதன் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட இரும்புப் பிடிப்பான்கள் மற்றும் ஊசிகள் துருப்பிடிப்பதன் காரணமாக ஏற்படும் கூடுதல் சேதங்களிலிருந்து கோயிலைப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


ஜெகந்நாதர் கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைவதற்கு அனுமதி இல்லை என்றும் நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே, உலகத்தின் அதிபதியாகக் கருதப்படும் ஜெகந்நாதர், ரத யாத்திரையின்போது தனது பக்தர்கள் அனைவரையும் நேரில் சந்திப்பதற்காகக் கருவறையை விட்டு வெளியே வருகிறார்.


6. பழங்குடியின, பௌத்த (Buddhist), சமண (Jain) மற்றும் வைணவ (Vaishnav) மரபுகளின் கலப்பினால்தான் ஜெகந்நாதர் வழிபாடு உருவானதாகப் பல அறிஞர்கள் நம்புகின்றனர். கோயில் ஆய்வாளர் டாக்டர் ஹரிஹர் கனுங்கோவின் கூற்றுப்படி, இந்தத் தெய்வம் முதலில் ஒரு "சபர தேவதா" (பழங்குடியினக் கடவுள்) ஆக இருந்தது. பின்னர் பௌத்தர்களால் இந்தத் தெய்வத்திற்கு 'ஜெகந்நாதர்' அல்லது 'பிரபஞ்சத்தின் அதிபதி' என்று பெயரிடப்பட்டது.


7. கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் பூரி நகரில் ஜெகந்நாதர் ஆலயம் நிறுவப்பட்டது என்றும், பௌத்த மதம் வீழ்ச்சியடைந்தபிறகு அது பிராமணர்களின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது என்றும் கனுங்கோ வாதிடுகிறார். சாதி மற்றும் மத அடிப்படையிலான கட்டுப்பாடுகள் 16-ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் தொடங்கின என்று கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, ஜெகந்நாதர் முதலில் ஒரு இந்து அல்லாத, பிராமண மரபு சாராத ஒரு வழிபாட்டுத் தெய்வமாக இருந்தார்.  எனவே, இந்தத் தலம் அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் திறக்கப்பட வேண்டும் என்று அவர் கருதுகிறார்.


8. வரலாற்றாசிரியர்களான பெனிமாதவ பதி, ஆன்சார்லாட் எஷ்மேன் மற்றும் ஹெர்மன் குல்கே ஆகியோர் ஜெகந்நாதர் படிப்படியாக இந்து மத வழிபாட்டு மரபின் ஒரு பகுதியாக மாறினார் என்ற கருத்தை ஆதரித்துள்ளனர். ஒடியா மொழிக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதில் முக்கியப் பங்காற்றிய ஐந்து பஞ்சசகாக்களில் (Panchasakha) ஒருவரான நீலகண்ட தாஸ், ஜெகந்நாதர் வழிபாடு சமண மதத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என்று நம்பினார்.


நாகர கட்டடக்கலை பாணி


1. இந்தியக் கோயில் கட்டடக்கலை முறையானது ஒட்டுமொத்தமாக இரண்டு முதன்மையான மரபுகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை 'நாகரம்' (Nāgara) எனப்படும் வடஇந்தியக் கட்டடக்கலை மரபு மற்றும் 'திராவிடம்' (Draviḍa) எனப்படும் தென்னிந்தியக் கட்டடக்கலை மரபு ஆகும். இவை புவியியல்ரீதியாக வடக்கு, தெற்கு என வரையறுக்கப்பட்டிருந்தாலும், அந்தந்தப் பகுதிகளுக்கு மட்டுமே உரியவை என்று சுருக்கிவிட முடியாது.


2. இந்த இரண்டு மரபுகள் தவிர, இந்தியக் கலை நூல்கள் 'வேசரம்' (Vesara) அல்லது கலப்புப் பாணி எனப்படும் மூன்றாவது வகையான கட்டடக்கலை மரபையும் குறிப்பிடுகின்றன. இந்த வார்த்தையின் மூலப்பொருளை ஆராய்ந்த கடந்தகால அறிஞர்கள், இந்த வகைப்பாடானது வட மற்றும் தென்இந்தியக் கலை மரபுகளின் கலவையாகும் என்றும், புவியியல்ரீதியாக இதற்குப் பொருத்தமான தக்காண (Deccan) பகுதியோடு தொடர்புடையது என்றும் கருதினர்.


3. கோயிலின் கருவறையைத் தாங்கி நிற்கும் நகரம் மற்றும் திராவிடக் கோயில்களின் பல்லடுக்குக் கோபுரங்கள், ‘Aedicules’ எனப்படும் சிறிய கோயில் வடிவங்களின் வரிசைகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறிய வடிவங்கள் கோபுரத்தின் வெளிப்புறத்தை அழகூட்டுவதற்காக, அளவைக் குறைத்தல், மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல், பிளத்தல், ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்குதல் மற்றும் சுருக்குதல் ஆகியவற்றின் மூலம் உருமாற்றப்பட்டு நேர்த்தியாக அமைக்கப்படுகின்றன.


4. ஒவ்வொரு கட்டடக்கலை மரபும் வெவ்வேறு வகையான சிறிய வடிவங்களைப் பயன்படுத்துகின்றன. உதாரணமாக, நகரப் பாணி கோபுர அமைப்பில் 'ஆமலகம்' (நகரப் பாணி சிகரத்தின் உச்சியில் இருக்கும் நெல்லிக்காய் வடிவ வட்டக் கல்), 'கவாக்ஷம்' (மாட்டுக்கண் போன்ற வடிவம் அல்லது குதிரை லாட வடிவ வளைவு) மற்றும் தூண்களின் மேல் அமையும் 'பாலபஞ்சரம்' (கூண்டு வடிவச் சிறிய அமைப்பு) ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், திராவிட பாணி விமானத்தில் 'கூடம்' (குவிமாட வடிவம்), 'சாலா' (வண்டி வளைவு கூரை வடிவம்) மற்றும் 'பாலபஞ்சரம்' ஆகியவை இடம்பெற்றுள்ளன.


5. கலிங்கக் கட்டடக்கலை பாணி என்பது நாகரக் கட்டடக்கலை பாணியின் ஒரு துணைப் பிரிவாகும். இந்தப் பாணியில் கட்டப்பட்ட கோயில்களை உள்ளூர் சிற்பிகள் 'தியுல்' (Deul) என்று அழைத்தனர் (இந்த வார்த்தை 'தேவாலயம்' என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானதாகும்).


'தியுல்' (Deul) அல்லது கோவில்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:



(அ) ரேகா-தியுல் (Rekha-deul): இவ்வகை கோவில்களில் 'சிகரம்' அல்லது கோபுரம் நேராக மேல்நோக்கி அமைந்திருக்கும். இங்கு 'ரேகா' என்றால் நேராக என்று பொருளாகும். புவனேசுவரில் உள்ள லிங்கராஜர் கோவில் ரேகா-தியுல் வகை கட்டிடக்கலைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.


(ஆ) பிதா-தியுல் (Pidha-deul): இதன் சிகரம் படிப்படியாக அளவு குறைந்து கொண்டே செல்லும் அடுக்குகளைக் கொண்ட தட்டையான தளங்களாக அமைந்திருக்கும். ஒடிசா மொழியில் 'பிதா' என்றால் அமர்வதற்குப் பயன்படுத்தப்படும் தட்டையான மரப்பலகை என்று பொருளாகும். இது 'ஜகமோகனா' என்றும் அழைக்கப்படுகிறது, இது உண்மையில் கருவறைக்கு முன்னால் கட்டப்பட்ட ஒரு மண்டபமாகும். கோனார்க் சூரிய கோவில் உள்ள கூட்ட அரங்கம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.


(இ) காகரா-தியுல் (Khakhara-deul): இதன் சிகரத்தின் மேற்பகுதி ஒரு பூசணிக்காய் வடிவ கூரையைப் போலக் காட்சியளிக்கும். 'காகரா' என்ற சொல் 'காகரு' (அதாவது பூசணிக்காய் அல்லது சுரைக்காய் போன்ற காய் வகை) என்ற சொல்லிலிருந்து உருவானதாகும். சக்தி வழிபாட்டிற்குரிய பெண் தெய்வங்களின் கோவில்கள் பொதுவாக இவ்வடிவத்தில் கட்டப்படுகின்றன.


Original Link: Puri Jagannath Rath Yatra begins. What makes this festival unique?

Share:

இந்தியாவில் முதல்முறையாக இரவு நேர வனச் சுற்றுலா திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது: குக்ரைல் திட்டம் வழங்கப்போகும் வசதிகள் யாவை? - மௌல்ஸ்ரீ சேத்

லக்னோவில் ரூ. 1,510 கோடி மதிப்பிலான 'குக்ரைல் நைட் வனச் சுற்றுலா' (Kukrail Night Safari) திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத்திட்டத்திற்கு ஏன் நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டன என்பதையும், பார்வையாளர்கள் எதை எதிர்பார்க்கலாம் என்பதையும் குறித்து இங்கே.


உத்தரப் பிரதேச அரசின் மிகப்பெரிய திட்டமான குக்ரைல் இரவு நேர வனச் சுற்றுலா மற்றும் பகல் நேர உயிரியல் பூங்கா திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் முதல் இரவு நேர வனச் சுற்றுலா  அமைப்பதற்கான இறுதி தடையும் நீங்கியுள்ளது.


இந்தத் திட்டம், லக்னோ நகரின் புறநகரில் அமைந்துள்ள சுற்றுச்சூழல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த 2,027 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட குக்ரைல் காப்புக்  வனப்பகுதியில் அமைக்கப்பட உள்ளதால், பல ஆண்டுகளாக ஆய்வு மற்றும் பரிசீலனை செய்யப்பட்டது. இந்த வனப்பகுதி, 1975-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நீண்ட மூக்குடைய முதலை (gharial) வகையின் இந்தியாவின் முதல் பாதுகாப்பு மையத்தின் தாயகமாகவும்  இருந்து வருகிறது.


இந்தத் திட்டம் எதைப் பற்றியது?


ரூ.1,510 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், குக்ரைல் காப்புக் காட்டில் உள்ள 855 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும். இது இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்:


-முதற்கட்டம்: இரவு வனச் சுற்றுலா மற்றும் சூழல் சுற்றுலா மண்டலம்


-இரண்டாம் கட்டம்: பகல்நேர விலங்குக்காட்சி சாலை


திட்டத்தின்படி, இந்த இரவு வனச் சுற்றுலாவில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வனவிலங்கு நிலப்பரப்புகளால் ஈர்க்கப்பட்ட கருப்பொருள் சார்ந்த மண்டலங்கள் (theme-based zones), இரவு நேரப்பாதைகள், இயற்கையான விலங்கு வாழ்விடங்கள் மற்றும் வனப் பாதைகள் இடம்பெறும்.


பார்வையாளர்கள் மின்கலத்தால் இயங்கும் வாகனங்களில் பயணம் செய்வார்கள். திட்டத்திற்கான பாதை தற்போது வடிவமைக்கப்பட்டு வருகிறது.


இந்தத்திட்டம் வனவிலங்கு பாதுகாப்பு, ஆராய்ச்சி, கல்வி மற்றும் சுற்றுலா போன்றவற்றை ஒருங்கிணைக்கும் என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.


இந்த முதன்மைத் திட்டத்தில், பாதுகாப்பு இனப்பெருக்க வசதிகள், வனவிலங்கு விளக்க மற்றும் கல்வி மையங்கள், சிற்றுண்டிச்சாலைகள், ஒரு 7-D திரையரங்கம் மற்றும் ஒரு கலையரங்கமும் இடம்பெற்றிருக்கும்


பார்வையாளர்கள் எதைக் காண்பார்கள்?


வழக்கமான மிருகக்காட்சிசாலைகளைப் போல் இல்லாமல், இந்த இரவு வனச் சுற்றுலா, இயற்கையான நிலவொளியைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு விளக்கு அமைப்பைப் பயன்படுத்தி, இரவு நேர விலங்குகளை அவற்றின் சுறுசுறுப்பான நேரங்களில் பார்வையாளர்கள் காண அனுமதிக்கும்.


இதுவே இரவு வனச் சுற்றுலாவின் தனித்துவமான அம்சமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முன்மொழியப்பட்ட சிறப்பு விளக்கு அமைப்பு நில ஒளியைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்படும். விலங்குகளுக்கு இடையூறு செய்யாமலோ அல்லது பாதிப்பை ஏற்படுத்தாமலோ, பார்வையாளர்கள் வனவிலங்குகளைத் தெளிவாகக் காண அனுமதிப்பதே இதன் நோக்கமாகும் என்று ஓர் அதிகாரி விளக்கினார்.


இந்தத் திட்டத்தின் முன்மொழிவில், ஆசிய சிங்கங்கள், வங்கப் புலிகள், சிறுத்தைகள், கழுதைப்புலிகள், பறக்கும் அணில்கள் மற்றும் முதலைகள் உள்ளிட்ட பல இனங்களுக்கு இயற்கையான வாழ்விடங்களை உருவாக்குவதும் அடங்கும்.


இந்த விலங்குகளின் வாழிடங்கள் இயற்கையான சூழல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும். இதில் புல்வெளிகள், சதுப்புநிலங்கள், பாறை அமைப்புகள் மற்றும் உள்ளூர் தாவரங்கள் ஆகியவை சேர்க்கப்பட்டு, பார்வையாளர்களுக்கு இயற்கையுடன் இணைந்த அனுபவம் வழங்கப்படும்.


இந்த வசதி, வார நாட்களில் 4,000 பார்வையாளர்களையும், வார இறுதி நாட்கள் அல்லது விடுமுறை நாட்களில்  8,000 பார்வையாளர்களையும் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அனுமதி பெறுவதற்கு ஏன் நான்கு ஆண்டுகள் காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது?


இந்தத் திட்டம் முதலில் ஜூலை 2022-ல் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களால் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதமே உத்தரப் பிரதேச அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற்றது. இருப்பினும், இது 'குக்ரைல்'  பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் முன்மொழியப்பட்டதால், பல்வேறு ஒழுங்குமுறை மற்றும் நீதித்துறை சார்ந்த அனுமதிகளைப் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது.





2023-ல், மாநில வனவிலங்கு வாரியம் மற்றும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் (Central Zoo Authority (CZA)) ஆகியவற்றின் ஒப்புதல்களை இந்தத்திட்ட முன்மொழிவு பெற்றது. வன நிலம் மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடம் ஆகியவற்றை கொண்டதாக இந்தத்திட்டம் இருந்ததால், வனத்துறை, வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த அனுமதிகளும் இந்தத்திட்டதிற்குத் தேவைப்பட்டன.


இத்திட்டம் பின்னர் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட 'மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவால் (Central Empowered Committee (CEC)) ஆய்வு செய்யப்பட்டது. அந்தக்குழு கள ஆய்வுகளை மேற்கொண்டு, திட்ட வடிவமைப்பில் மாற்றங்களைச் செய்யுமாறு பரிந்துரை செய்தது.


பல சுற்று விசாரணைகளுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் இந்த வாரம் இறுதியாக இந்தத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.


லக்னோவின் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட பசுமைப் பகுதிகளில் ஒன்றான இந்த பாதுகக்கப்பட்ட காட்டின் (reserve forest) சுற்றுச்சூழல் முக்கியத்துவம் காரணமாகவே இது நீண்டகாலமாக கவனமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 1950-களில் ஒரு தோட்டக் வனப்பகுதியாக உருவாக்கப்பட்ட இந்த வனப்பகுதி, கோமதி ஆற்றின் துணை ஆறான 'குக்ரைல்' (Kukrail) நீரோடையின் பெயரால் அழைக்கப்படுகிறது. மேலும், இது ஒரு முக்கியமான நகர்ப்புறக் வனப்பகுதியாகவும் இருந்து வருகிறது. குக்ரைல் நீரோடையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


அழிவின் விளிம்பில் உள்ள நீண்ட மூக்குடைய முதலை (gharial) எனப்படும் ஒரு வகையான முதலை இனத்தைக் காப்பதற்காக 1975-ல் நிறுவப்பட்ட குக்ரைல் கரியல் மறுவாழ்வு மையம் (Kukrail Gharial Rehabilitation Centre (KGRC)) இந்தக் வனப்பகுதியில் தான் அமைந்துள்ளது.


அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த 50 ஆண்டுகளில் இந்த மையம் இந்தியாவின் மிகச் சிறந்த ஊர்வன உயிரின பாதுகாப்பு மையங்களில் (reptile conservation facilities) ஒன்றாக வளர்ந்துள்ளது. இங்கு நீண்ட மூக்குடைய முதலை இனங்கள் (Gharials) இனப்பெருக்கம் செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நதிகளில் மீண்டும் விடப்படுகின்றன. மேலும், இந்த மையத்தில் ஆராய்ச்சி ஆய்வகங்கள், கால்நடை மருத்துவ வசதிகள் மற்றும் மூக்குடைய முதலை மற்றும் ஆமைகளுக்கான மீட்பு இருப்பிடங்களும் (rescue enclosures) அமைக்கப்பட்டுள்ளன.


அரசின் கூற்றுப்படி, இரவு நேர வனச் சுற்றுலா திட்டம் (Night Safari Project),  ஒரு சுற்றுலா தலமாக மட்டும் செயல்படாது. இது ஒரு வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையமாகவும் செயல்படும். இதன் மூலம் வனவிலங்கு பாதுகாப்பு, இனப்பெருக்க திட்டங்கள், இரவு நேர விலங்குகளின் நடமாட்டம் குறித்த ஆராய்ச்சி மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Original Link: India’s first night safari gets SC nod: What the Kukrail project will offer.

Share:

வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு (BIMSTEC) என்பது என்ன, அதன் 30-வது ஆண்டு நிறைவடையும் நிலையில் அது ஏன் கவனம் பெற்றுள்ளது?

BIMSTEC என்பது வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஆகும். இந்த அமைப்பு, மாறிவரும் புவிசார் அரசியல்  மற்றும் பாதுகாப்புச் சவால்கள் நிறைந்த சூழலில், தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியா நாடுகளுக்கு இடையேயான பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


அடுத்த ஆண்டு வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு தனது 30-வது ஆண்டு நிறைவை கொண்டாட உள்ள நிலையில், இந்த அமைப்பு பயங்கரவாதம், சைபர் குற்றங்கள், கடல் பாதுகாப்பு போன்ற புதிய பாதுகாப்புச் சவால்களை குறைத்து உறுப்பு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறது.


வியாழக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், 7 உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்புத் தலைவர்கள், கடல்சார்ந்த சட்ட அமலாக்கம் மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்தனர். இது பிராந்தியப் பாதுகாப்பின்மீது அந்த அமைப்பு செலுத்திவரும் வளர்ந்து வரும் கவனத்தை எடுத்துக்காட்டுகிறது.


வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு (Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC))  என்றால் என்ன?


வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு என்பது வங்காள விரிகுடா பிராந்தியத்தில் உள்ள நாடுகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பாகும். இது தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றுக்கு இடையே ஒரு பாலமாகச் செயல்பட  முயற்சி செய்து வருகிறது.


1997-ஆம் ஆண்டில் வங்கதேசம், இந்தியா, இலங்கை மற்றும் தாய்லாந்து பொருளாதார ஒத்துழைப்பு (Bangladesh, India, Sri Lanka and Thailand Economic Cooperation (BIST-EC)) என முதலில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, மியான்மர் இணைந்த பிறகு BIMST-EC ஆகவும், 2004-ஆம் ஆண்டில் நேபாளம் மற்றும் பூட்டானுடன் இணைந்து வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பாக (BIMSTEC) ஆகவும்  மாறியது.


2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் யூரியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பிராந்திய ஆதரவைத் திரட்டுவதற்கான இந்தியாவின் புதிய முயற்சி மற்றும் அதே ஆண்டு நவம்பரில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு (South Asian Association for Regional Cooperation (SAARC)) உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கும் முடிவும் எடுக்கப்பட்டது. அதுவரை, BIMSTEC அமைப்பு செயல்பாடு குறைந்த அமைப்பாகவே இருந்தது. கோவாவில் நடைபெற்ற BRICS உச்சிமாநாட்டோடு இணைந்து, பிம்ஸ்டெக் தலைவர்களுடன் இந்தியா ஒரு கலந்துரையாடல் உச்சிமாநாட்டை நடத்தியது.


BRICS  அமைப்பு என்றால் என்ன?


BRICS என்பது B – பிரேசில்; R – ரஷ்யா; I – இந்தியா; C – சீனா; S – தென்னாப்பிரிக்கா போன்ற முக்கிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். இது முதலில்  பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா (BRIC) என்று இருந்தது. 2010-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா இணைந்த பிறகு அது (BRICS) என்று மாறியது.


வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு (BIMSTEC) ஏன் உருவாக்கப்பட்டது?


தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு (South Asian Association for Regional Cooperation (SAARC)) செயலிழந்துவிட்டதால், தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் BIMSTEC ஒரு பொதுவான தளத்தை வழங்குகிறது.


தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்காக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (Association of Southeast Asian Nations (ASEAN)) முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால், இந்தியா–பாகிஸ்தான் இடையேயான சிக்கலான உறவில் முன்னேற்றம் இல்லாததால், தெற்காசியாவின் பிற நாடுகளுக்கு பிராந்திய ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. நிலத்தால் சூழப்பட்டுள்ள நேபாளம் மற்றும் பூடான் போன்ற நாடுகளும், வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு (BIMSTEC) நாடுகளுடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்வதன் மூலம் வங்காள விரிகுடா கடல் வழிப் போக்குவரத்து மற்றும் வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 7 உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து, உலகின் மக்கள் தொகையில் 22% ஆன ஏறத்தாழ 1.7 பில்லியன் மக்களைக் கொண்டுள்ளன. மேலும், அவற்றின் ஒருங்கிணைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி $5 டிரில்லியன்களாகும்.


சீனாவின் அச்சுறுத்தல் மற்றொரு முக்கிய காரணியாகும். கடந்த 10- ஆண்டுகளில், பூட்டான் மற்றும் இந்தியாவைத் தவிர அனைத்து BIMSTEC நாடுகளிலும், 'பட்டை மற்றும் சாலை முன்னெடுப்பு' (Belt and Road Initiative (BRI)) திட்டத்தின்மூலம் உள்கட்டமைப்பிற்கு நிதியளிப்பதிலும் அவற்றை உருவாக்குவதிலும் சீனா ஒரு மிகப்பெரிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.






இந்தியாவைப் பொறுத்தவரை, BIMSTEC அமைப்பானது, சீனாவிற்கு ஒரு மாற்றாக பிராந்திய இணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு தளத்தை வழங்குவதோடு, தென்சீனக் கடலில் சீனாவின் நடத்தைக்கு மாறாக, வங்காள விரிகுடாவைத் திறந்த மற்றும் அமைதியான ஒன்றாக எடுத்துக்காட்டுகிறது.


ஆனால், இதிலும் சில சவால்கள் உள்ளன. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் சர்வதேச விவகாரங்களுக்கான பங்களிப்பு ஆசிரியரான சி. ராஜா மோகன், வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையேயான தொடர்ச்சியான பிரச்சினைகளையும், ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து இந்தியா–வங்கதேசத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். மியான்மரில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போர் காரணமாக, தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவை இணைக்கும் நிலப் பாலமாக செயல்படும் அந்நாட்டின் திறனும் குறைந்துள்ளது. BIMSTEC அமைப்பு உடனடியாக  முன்னேற்றங்களை காணாமல் இருக்கலாம் என்றாலும், “ஒருபோதும் உண்மையில் முன்னேறாத SAARC அமைப்பைப் போல அல்லாமல், BIMSTEC மெதுவாக இருந்தாலும் அதிகமான ஒத்துழைப்பை நோக்கி நகரும் ஒரு படகு போன்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


கூட்டத்தின் முடிவு என்னவாக இருந்தது?


பயங்கரவாதம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், இணையவழி, கடல்சார்ந்த மற்றும் எரிசக்தி பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிரான ஒத்துழைப்பை மேம்படுத்த 7 நாடுகளும் ஒப்புக்கொண்டன. மேலும், கடல்சார் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணத்திற்கான வழிகாட்டுதல்களையும், கடலில் உள்ள கடல்சார் சட்ட அமலாக்க முகமைகளுக்கு இடையேயான தொடர்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அங்கீகரித்தன.


வங்காள விரிகுடாவில் உறுப்பு நாடுகளின் கடல்சார் முகமைகளுக்கு இடையேயான தொடர்புகளின்போது, ​​கூட்டுப் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளைத் வேகப்படுத்துவதையும், முன்கணிப்புத் தன்மையையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதையும் இந்தக் கடல்சார் நடவடிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.


நமது நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், தற்போதைய புவிசார் அரசியல் சூழல், பல்வேறு மோதல்கள், விநியோகச் சங்கிலி பாதிப்புகள் மற்றும் உருவாகிவரும் தொழில்நுட்ப அச்சுறுத்தல்கள் ஆகியவை, நாடுகளுக்கிடையே நெருக்கமான பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை  பற்றி வலியுறுத்தி வருவதாக  கூறினார்.


Original Link: What is BIMSTEC, and why is it in focus ahead of its 30th anniversary?

Share:

இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கான சலுகைகளை மறுப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. -ஹரிப்ரியா வெங்கடகிருஷ்ணன்

இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கான அங்கீகாரத்தை மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பு, அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான கவலைகளையும் சட்ட முரண்பாடுகளையும் எழுப்பியுள்ளது.


மதமாற்றம் மற்றும் இடஒதுக்கீடு - இந்த இரண்டு கருத்துகளையும் சுற்றியுள்ள சட்ட கொள்கைகள் (jurisprudence) மிகவும் விரிவானதும் சிக்கலானதும் ஆகும். ஆனால், இரண்டும் ஒன்றோடொன்று இணையும் இடத்தில் உருவாகும் சட்ட மற்றும் அரசியலமைப்புச் சிக்கல்கள், நிலைமையை சிக்கலானதாகவும், தெளிவற்றதாகவும், கவலையளிப்பதாகவும் மாற்றுகின்றன.


இந்த விவாதத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள முக்கிய அம்சம், நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் அமர்வு வழங்கிய 'சமீர் அகமது vs மாவட்ட ஆட்சியர்' (Sameer Ahamed v. The District Collector) வழக்கின் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பாகும். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. தமிழ்நாடு அரசு 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணை  அரசியலமைப்புக்கு முரணானது என்று அமர்வு தீர்ப்பளித்து அரசாணையை ரத்து செய்தது. அந்த அரசாணையின்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பை (Backward Classes) சேர்ந்தவர்கள் அல்லது பிற சமூகங்களைச் சேர்ந்தவர்கள், அரசால் அறிவிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களின் ஏழு உட்பிரிவுகளில் (sects) ஏதேனும் ஒன்றிற்கு மதம் மாறினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சமூகச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று குறிபிடப்பட்டிருந்தது. இறுதியில், இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர் "இஸ்லாமியாராகவே" கருதப்படுவார் என்றும், 'பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்' என்ற அங்கீகாரத்தை பெற முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இந்த வழக்கின் முக்கிய முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதற்கு முன், இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுபவர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக நடைமுறையில் உள்ள சட்ட நடவடிக்கைகளை தெரிந்து கொள்வது முக்கியம். தற்போது நீண்டகாலமாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளஅரசியலமைப்பு (பட்டியல் சாதிகள்) ஆணை, 1950 (Constitution (Scheduled Castes) Order)-ன் படி, இந்துமதம், சீக்கியம் அல்லது புத்தமதம் ஆகியவற்றைத் தவிர வேறு எந்த மதத்தையும் பின்பற்றும் நபரும் பட்டியல் சாதியினராகக் (Scheduled Caste) கருதப்பட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பெரும்பாலான நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, இந்து மதத்தைச் சேர்ந்த பட்டியல் சாதியினர் வேறு மதத்திற்கு மாறினால், இந்த ஆணையின் காரணமாக அவர்கள் பட்டியல் சாதி என்ற அங்கீகாரத்தை இழக்கின்றனர். இருப்பினும், இந்த பொதுவான சட்ட நிலைப்பாட்டிற்கு சில விதிவிலக்குகள் உள்ளன. மேலும், இந்த விதி அரசியலமைப்புச் சோதனையைத் தாங்காது என்பதே கட்டுரையாளரின் கருத்தாகும். ஆனால், தற்போதைய வழக்கைப் பொறுத்தவரை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Backward Classes) உட்பட மற்ற எந்த இடஒதுக்கீட்டு சமூகங்களுக்கும், மதமாற்றம் செய்தால் அவர்களின் இடஒதுக்கீட்டு அங்கீகாரத்தை நீக்கும் வகையில் இதற்கு அரசியலமைப்பு விதியோ அல்லது தனிச்சட்டமோ இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 




ஏற்கனவே வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணாக 


சமீர் அகமது வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முன்வைத்த வாதங்கள் இரண்டு அம்சங்களை கொண்டுள்ளது: ஒரு பிற்படுத்தப்பட்ட இந்து மற்றொரு மதத்திற்கு மாறும்போது, ​​அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அங்கீகாரத்தை இழந்துவிடுவார் என்று வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின் முன்னுதாரணங்கள் உள்ளன. இரண்டாவதாக, அரசாணை நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக இருப்பதால், அது சட்டரீதியாக செல்லுபடியாகாது என்று நீதிமன்றம் கருதியது. இருப்பினும், இந்த இரண்டு காரணங்களுமே சட்டரீதியாக குறைபாடுகளைக் கொண்டவையாகும்.


வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன என்பதை நிரூபிப்பதற்காக, அமர்வு நீதிமன்ற அமர்வு 1951-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஜி. மைக்கேல் vs எஸ். வெங்கடேஸ்வரன் வழக்குத் தீர்ப்பையும், 2024-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய சி. செல்வராணி vs சிறப்பு செயலாளர் வழக்குத் தீர்ப்பையும் நீதிமன்றம் மேற்கோள் காட்டியது. ஆனால், இந்த இரண்டு வழக்குகளும் பட்டியல் சாதியினரை (Scheduled Castes) சேர்ந்த மதமாற்றம் செய்தவர்களைப் பற்றியதாகும். அவர்களுக்கே அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள்) ஆணை, 1950 பொருந்துகிறது. தற்போதைய வழக்கு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (Backward Classes) சேர்ந்த மதமாற்றம் செய்தவர்களைப் பற்றியது என்பதால், அந்தத் தீர்ப்புகள் இந்தவழக்கிற்கு நேரடியாகப் பொருந்தாது.


மேலும், அமர்வு 2022-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் U. அக்பர் அலி vs  தமிழ்நாடு மாநிலம்  வழக்கின் தீர்ப்பை அதிகமாக நம்பியுள்ளது. இந்தத் தீர்ப்பை, தற்போதைய அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கியிருந்தார். அதில், இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வேறு எந்த மதத்திற்கும் மாறினாலும், அவர் தனது பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்க்கான அங்கீகாரத்தை இழந்து விடுவார் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த அக்பர் அலி தீர்ப்பே ஏற்கனவே வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணானதாகும். ஏனெனில், இதற்கு முன்பு குறைந்தது இரண்டு முறை, சென்னை உயர்நீதிமன்றம் இந்து மதத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) வேறு மதத்திற்கு மாறினாலும், அவர்கள் தங்களின் பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்க்கான அங்கீகாரத்தை இழக்க மாட்டார்கள் என்று தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் முக்கிய தீர்ப்புகள்: 2011-ஆம் ஆண்டு எம். ராஜா முகமது vs  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  (M. Raja Mohammed vs Tamil Nadu Public Service Commission)  மற்றும் 2014-ஆம் ஆண்டு எம்.யு. ஆரிஃபா எதிர் அரசாங்கச் செயலாளர் (M.U. Aariffaa v. Secretary to the Government) வழக்குகளின் தீர்ப்புகளாகும்.  


M.ராஜா முகமது வழக்கில் நீதிமன்றம், “ஒருவர் மதம் மாறியிருப்பதை அவருக்குப் எதிரானதாகக் கருத முடியாது” என்றுக் குறிப்பிட்டது. ஏனெனில்,  ஒருவர் விருப்பத்திற்கேற்ப மதம் மாறும் உரிமை என்பது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25 வழங்கும் மதச்சுதந்திரத்தின் கீழ் வருகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் வேறு மதத்திற்கு மாறியுள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கான இடஒதுக்கீட்டு சலுகைகளை மறுப்பது, அரசியலமைப்பின் பிரிவு 25 வழங்கும் இந்த அடிப்படை உரிமையை மறைமுகமாக மீறுவதாகும். U. அக்பர் அலி வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு, நீதிமன்றத் தீர்ப்பின் விளைவுகளை மீறும் வகையிலேயே தமிழ்நாடு அரசு இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது என்றும், நீதிமன்ற தீர்ப்புகளை அரசாணை மூலம் மீறுவது சட்டப்படி அனுமதிக்கப்படாதது என்றும் அந்த அரசாணை அரசியலமைப்புக்கு முரணானது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலே கூறியபடி U. அக்பர் அலி தீர்ப்பே ஏற்கனவே வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகளுடன் ஒத்துப் போகவில்லை. ஏற்கனவே உள்ள நீதிமன்ற தீர்ப்புகளுக்கு U. அக்பர் அலி வழக்கின் தீர்ப்பு முரணாக இருப்பதால், அதனை அடிப்படையாகக் கொண்டு கூறப்பட்ட இந்த காரணமும் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கட்டுரையாளர் கூறுகிறார்.

தன்னிச்சையானதும் முரண்பாடுகளும்


மேலும், பல்வேறு இடஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களை (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC), சீர்மரபினர் (Denotified Communities (DNC)), பட்டியல் சாதியினர் (SC)) ஒரே பிற்படுத்தப்பட்ட இஸ்லாம் (Backward Class Muslim) பிரிவின்கீழ் கொண்டு வந்திருப்பதால், இந்த அரசாணை தன்னிச்சையானது (arbitrary) என்று நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், நீதிமன்றத்தின் இந்தக் காரணமே இன்னும் அதிகமான விளைவை ஏற்படுத்துகிறது. ஏனெனில், மதம் மாறுவதற்கு முன்பு சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர் என்றும், இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெறத் தகுதியுடையவர் என்றும் அங்கீகரிக்கப்பட்ட ஒருவர், மதம் மாறிய உடனேயே அனைத்து சலுகைகளையும் முற்றிலும் இழக்க வேண்டும் என்ற நிலையை இது உருவாக்குகிறது. இதுவே உண்மையில் வெளிப்படையான தன்னிச்சையான அணுகுமுறையாகும்.


மேலும், இந்த அரசாணை எந்த ஆதாரமும் இல்லாமல் வெளியிடப்படவில்லை. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மற்றும் மண்டல ஆணையம் ஆகியவற்றின் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் இது வெளியிடப்பட்டது. அந்த அறிக்கைகள், ஒருவர் ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாறினாலும், அவரது சமூக மற்றும் பொருளாதார நிலை மாறிவிடாது என்று தெளிவாகக் கூறுகின்றன. எனவே, இந்த அரசாணை அரசியலமைப்புக்கு ஏற்றதாக உருவாக்கப்பட்ட சட்டரீதியான ஒரு நடைமுறையை வகுத்துள்ளது என்று ஆசிரியர் வாதிடுகிறார்.


இறுதியாக, நீதிமன்றம், இஸ்லாமில் சமூகப்படிநிலைகள் உள்ளன என்று கூறுவது “நேர்மையற்றது” என்றும், சில இஸ்லாம் உட்பிரிவுகளை பிற்படுத்தப்பட்டவை என்றும் மற்றவற்றை முன்னேறியவை என்றும் வகைப்படுத்துவது குர்ஆனின் போதனைகளுக்கு முரணானது என்றும் கூறுகிறது. ஆனால், அதே பத்தியின் அடுத்த வாக்கியத்திலேயே, “வரலாற்றுக் காரணங்களால் இஸ்லாமிய சமுதாயமும் பல்வேறு சமூகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன” என்றும், “அவை இந்து மதத்தின் சாதி அமைப்பைப் பற்றியும் கூறலாம்” என்றும் நீதிமன்றம் ஒப்புக்கொள்கிறது. அதன்பின், “இந்து மதத்தில் சாதி பிறப்பால் தீர்மானிக்கப்படுவது போலவே, ராவுத்தர், மரக்காயர் அல்லது தக்காணி இஸ்லாம் என்ற அடையாளமும் பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறது” என்றும் நீதிமன்றம் கூறுகிறது. இது போன்ற முரணான கருத்துக்கள் அனைத்தும் ஒரே பத்தியில் இடம்பெற்றுள்ளதால், அந்தப் பகுதி ஒழுங்கற்றதாகவும் முரண்பாடுகளை கொண்டதாகவும் தோன்றுகிறது.


ஆழமான கவலைக்குரிய விளைவுகள்


எனவே, இந்தத் தீர்ப்பும், அதில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டக் காரணங்களும் மிகவும் கவலைக்குரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன. குறிப்பாக, பெரும்பான்மைவாத (majoritarian) அரசியல் போக்குகள் அதிகரித்து வரும் தற்போதைய அரசியல் சூழலில், இதன் தாக்கம் மேலும் கவலை அளிக்கிறது.

மத நம்பிக்கையும் வழிபாடும் ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட விவகாரமாகும். இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25, ஒவ்வொரு குடிமகனுக்கும்  அவர் விரும்பும் மதத்தை சுதந்திரமாக ஏற்கவும் (profess), கடைப்பிடிக்கவும் (practice), பரப்பவும் (propagate) உரிமைகளை வழங்குகிறது. அரசியலமைப்பு அனுமதிக்கும் வரம்புகளைத் தவிர, இந்த உரிமைக்கு விதிக்கப்படும் எந்தக் கட்டுப்பாடும் ஆரம்பத்திலேயே தடுக்கப்பட வேண்டும்.


ஆனால், பட்டியல் சாதியினரின் (SC) மதமாற்றம் தொடர்பான விவகாரத்தில் இந்தப் பிரச்சினை ஏற்கனவே உருவாகியுள்ளது. காரணம், பட்டியல் சாதி ஆணை, 1950-ஐ எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.


இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது சரியான நடவடிக்கையாகும். மேலும், இது போன்ற சட்டக் காரணங்கள் எதிர்காலத்தில் நீதிமன்ற முன்னுதாரணமாக (precedent) மாறி, ஏற்கனவே உள்ள சிக்கலான சட்டத்தை  மேலும் குழப்பமானதாக மாற்றுவதற்கு முன்னர், உச்சநீதிமன்றம் விரைவாக தலையிட்டு இந்த விவகாரத்தில் தெளிவான தீர்ப்பை வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.


 ஆசிரியர் ஒரு வழக்கறிஞர்.


Original Link: Denying Backward Classes benefits to converts to Islam is unconstitutional.

Share:

இந்தியாவின் போட்டித்தன்மை நம்பிக்கையை சோதனைக்கு உட்படுத்தும் ஒரு வர்த்தக ஒப்பந்தம் - வி. அனந்த நாகேஸ்வரன்

போட்டிக்குத் தயாராக உள்ள நாடுகளுக்கு வர்த்தக ஒப்பந்தங்கள் பலனளிக்கின்றன


ஒரு வர்த்தக ஒப்பந்தம் பொதுவாக ஒரு நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவுவதால் ஊக்குவிக்கப்படுகிறது. ஆனால், அந்த ஒப்பந்தம் ஒரு நாட்டை எத்தகைய பொருட்களை இறக்குமதி செய்யக் கட்டாயப்படுத்துகிறது என்பதில்தான் அதன் உண்மையான மற்றும் ஆழமான மதிப்பு பெரும்பாலும் அடங்கியுள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்த இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (Comprehensive Economic and Trade Agreement (CETA)), முதல் அம்சத்தில் (ஏற்றுமதி ஊக்குவிப்பு) ஒரு சிறந்த ஒப்பந்தமாக அமைந்துள்ளது. இரண்டாவது அம்சத்திலும் (இறக்குமதி சார்ந்த கடமைகள்) இது மிகச் சிறந்ததாக நிரூபிக்கப்படலாம்.


இதன் முதல் பலன்கள் 


உடனடி பலன்கள் ஏற்றுமதியிலிருந்து கிடைக்கிறது. ஏனெனில், உடனடி ஆதாயங்களும் மிக முக்கியமான பலன்களும் அங்கேயே உள்ளன. ஜூலை 15 முதல், இந்தியாவின் ஏறக்குறைய அனைத்து ஏற்றுமதிப் பொருட்களும், அதாவது மதிப்பின் அடிப்படையில் சுமார் 99% எந்தவித சுங்க வரியும் இன்றி ஐக்கிய இராச்சியத்திற்குள் நுழையவுள்ளன. பூஜ்ஜிய நிலைக்குக் குறைக்கப்பட்ட வரிகள், ஊடகங்களில் அதிகம் பேசப்படும் பொருட்களுக்கானவை அல்ல. மாறாக, இந்தியாவின் தொழிலாளர்களுக்கு முக்கியமான பொருட்களுக்கானவை. இப்பொருட்களில், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள், தோல் மற்றும் காலணிகள், கடல்சார் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பொறியியல் பொருட்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் ஆகியவை இதில் அடங்கும். இவை அதிக மனிதவளத் தேவை (labour-intensive) கொண்ட துறைகள் ஆகும். உற்பத்தி சார்ந்த மற்றும் முறைசார்ந்த வேலைவாய்ப்புகளுக்குள் இந்தியா யாரை ஈர்க்க வேண்டுமோ, அந்தத் தொழிலாளர்களை இத்துறைகள் பெருமளவில் பணியமர்த்துகின்றன. தமிழ்நாட்டின் திருப்பூரில் உள்ள ஒரு ஆடை உற்பத்தி நிறுவனமோ அல்லது உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள காலணி உற்பத்தி மையமோ மிகக் குறைந்த லாப வரம்பிலேயே போட்டியிடுகின்றன. பிரிட்டிஷ் எல்லையில் விதிக்கப்படும் 12% அல்லது 16% சுங்க வரிதான், ஒரு வர்த்தக ஆர்டரைப் பெறுவதற்கும் அதை இழப்பதற்கும் இடையிலான முக்கிய காரணியாக அமைகிறது.


இதுவரை, இந்த விஷயத்தில் இந்தியா ஒரு பின்னடைவைச் சந்தித்து வந்தது. வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் ஏற்கனவே தங்கள் ஆடை ஏற்றுமதியை வரி இல்லாமல் இங்கிலாந்துக்கு அனுப்பிவந்த நிலையில், இந்தியாவின் ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்பட்டு வந்தது. இந்த இடைவெளி இப்போது நீக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் இந்த அம்சம் குறிப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில், இது நேரடியாக வேலைவாய்ப்புடன் தொடர்புடையது. இறுதியில், வர்த்தகக் கொள்கை என்பது வேலைவாய்ப்புகளைச் சார்ந்ததே ஆகும்.


வேறுபட்ட தன்மையிலான மற்றொரு ஆதாயத்தையும் குறிப்பிட வேண்டும். இந்தியா உலகின் மிகப்பெரிய 'ஜெனரிக்' (generic) மருந்து விநியோகராக உள்ளது. அதேவேளையில் இங்கிலாந்து ஆண்டுக்கு சுமார் 30 பில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துகளை வாங்குகிறது. சுங்க வரி நீக்கப்படுவதால், இந்திய ஜெனரிக் மருந்துகள் விலையின் அடிப்படையில் போட்டியிட முடிகிறது. இது மனிதவளம் சார்ந்த கதை அல்ல, மாறாக இது 'அளவிலான உற்பத்தி மற்றும் சந்தை ஆதிக்கம்' (scale) சார்ந்த அளவீடாகும். அதாவது, இது, நன்கு நிலைபெற்ற இந்திய மருந்துத் தொழில் துறை தனது மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றில் சமமான நிலையில் போட்டியிட உதவுகிறது.


இந்த ஒப்பந்தத்தின் மற்றொரு அம்சமும் குறிப்பிடத்தக்கது. இது நீண்டகாலமாக இருந்து வந்த ஒரு நியாயமற்ற நிலையைச் சரிசெய்கிறது. முன்பெல்லாம், சில ஆண்டுகளுக்குப் பணி நிமித்தமாகப் பிரிட்டனுக்குச் செல்லும் இந்திய வல்லுநர்கள், அந்நாட்டின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்திலும் பங்களிப்புச் செய்ய வேண்டியிருந்தது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அந்தப் பணத்தை அவர்களால் திரும்பப் பெறவே முடிவதில்லை. அதே வேளையில், அவர்கள் இந்தியாவின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்திலும் தொடர்ந்து பங்களிப்புச் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. வர்த்தக ஒப்பந்தத்துடன் இணைந்து நடைமுறைக்கு வரும் 'இரட்டைப் பங்களிப்பு உடன்படிக்கை' (Double Contribution Convention), இத்தகைய ஊழியர்களையும் அவர்களது நிறுவனங்களையும் ஐந்து ஆண்டுகள் வரை இந்த ’இரட்டைப் பங்களிப்பு' செய்வதிலிருந்து விடுவிக்கிறது. இதன்மூலம் 75,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் சுமார் 900 நிறுவனங்களும் ஆண்டுக்கு சுமார் 600 மில்லியன் டாலர் வரை சேமிக்க முடியும். இது வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியும் இந்தியர்களுக்குத் திரும்பக் கிடைக்கும் பணமாகும். அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சுமூகமான உறவில் நீண்டகாலமாக அதிருப்தியை ஏற்படுத்தி வந்த ஒரு உண்மையான குறைபாட்டையும் இது நீக்குகிறது.


சந்தைகளைத் திறத்தல் மற்றும் தரத்தை உயர்த்துதல்


இனி இறக்குமதிகள் குறித்தும், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதி சிலருக்கு ஏன் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது குறித்தும் பார்ப்போம். இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் கார்கள் மீதான இறக்குமதி வரியை சுமார் 110%-லிருந்து 10%-ஆகக் குறைக்கவும், ஸ்காட்ச் விஸ்கி (Scotch whisky) மீதான இறக்குமதி வரியைக் குறைக்கவும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த வரி படிப்படியாக 150%-லிருந்து 40%-ஆகக் குறைக்கப்படும். இந்த வரிக்குறைப்புகள் அனைத்தும் ஒரே நேரத்தில் நடைமுறைக்கு வராது. அவை பல ஆண்டுகளில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். மேலும், இவை இறக்குமதி ஒதுக்கீடுகளுக்கும் (import quotas) உட்பட்டதாக இருக்கும். மேலும் இந்தியாவின் சொந்தப் பயணிகள் வாகனத் துறை தனது போட்டித்தன்மையை மேம்படுத்திக்கொள்ளத் தேவையான கால அவகாசத்தைப் பெறும் வகையிலும் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொன்னால், இவை மிகவும் கவனமான நடவடிக்கைகளே. ஆனால் அவை சரியான திசையைச் சுட்டிக்காட்டுகின்றன. அந்தத் திசையே மிக முக்கியமானது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் (protectionism) முடிவில்லாமல் தொடரும்போது என்ன நடக்கும் என்பதை இங்கே குறிப்பிடுவது அவசியம். அது வலுவான தொழில்துறைகளை உருவாக்குவதில்லை. மாறாக, பலவீனமானவற்றையே தக்கவைக்கிறது. ஒரு சிறந்த தயாரிப்பை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லாத ஒரு துறை, ஒருபோதும் சிறந்த தயாரிப்பை உருவாக்க முற்படுவதில்லை. இந்தியாவின் சொந்த அனுபவமே இதை இரு வகையிலும் நிரூபிக்கிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறிய மற்றும் நடுத்தர ரக வாகனத் துறையில் இந்திய கார் தயாரிப்பாளர்கள் போட்டியிட வேண்டியிருந்தபோது, ​​அவர்கள் உண்மையிலேயே சிறந்தவர்களாக மாறினர். அதேசமயம், மிக உயர்ந்த பாதுகாப்புச் சுவர்களுக்குப் பின்னால் அவர்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களில், தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படவில்லை. குறைந்த வரிவிதிப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரிட்டிஷ் கார்களை அனுமதிப்பது யாரையும் நிலைகுலையச் செய்யாது. அது மிகவும் பயனுள்ள ஒன்றைச் செய்யும். அதாவது, வரிவிதிப்பு விகிதப் பட்டியலை அல்ல, மாறாக வாடிக்கையாளரையே திருப்திப்படுத்த வேண்டும் என்பதை அது இந்திய உற்பத்தியாளர்களுக்கு நினைவூட்டும். போட்டியை எதிர்கொள்வது என்பது வர்த்தக நாடுகளுக்காக மட்டும் செய்யப்படும் ஒரு சலுகை அல்ல. அது இந்தியர்களாகிய நாம் நமக்கே செய்துகொள்ளும் ஒரு நன்மையாகும். தனது செயல்பாட்டுத் தரத்தை உயர்த்தத் தூண்டப்படும் ஒரு உள்நாட்டுத் துறை, காலப்போக்கில் குறிப்பிடத்தக்க பொருளாதார நன்மைகளை அளிக்கிறது.

 

திறந்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்


இறுதியில், வர்த்தக ஒப்பந்தங்கள் என்பவை மாற்றங்களுக்கு உட்பட்ட செயல்முறை ஏற்பாடுகள் தானே தவிர, நிரந்தரமான நினைவுச் சின்னங்கள் அல்ல. அவை பலனளிக்கத் தொடர்ச்சியான முயற்சிகள் தேவைப்படுகின்றன. ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதும், அதைச் செயல்படுத்தி வெற்றிபெறச் செய்வதும் இருவேறு பணிகள் இதில் இரண்டாவது பணியே மிகவும் கடினமானதும் நீண்ட காலத்தைக் கோருவதும் ஆகும். இன்று வாக்குறுதி அளிக்கப்படும் பலன்கள் உண்மையாக வேண்டுமானால், இந்தியாவின் ஏற்றுமதியாளர்கள் தயாராக இருக்க வேண்டும், நடைமுறைகள் வெளிப்படையானவையாக இருக்க வேண்டும். மேலும், வர்த்தக ஒப்பந்தங்கள் உருவாக்கும் வாய்ப்புகள் குறித்து தொழில் நிறுவனங்களுக்குத் தெளிவான தகவல்களும் விழிப்புணர்வும் இருக்க வேண்டும். இந்தியாவில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் விகிதத்தை மேம்படுத்துவதற்குப் பெரும் வாய்ப்புகள் உள்ளன. அரசும் முன்னணித் தொழில் அமைப்புகளும் சிறு தொழில் மற்றும் நிறுவனங்களின் சங்கங்களுடன் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் இணைந்து செயல்பட வேண்டும்.


இந்த பத்தாண்டு காலத்தின் இறுதிக்குள், சுமார் 56 பில்லியன் டாலராக உள்ள தங்கள் வர்த்தக அளவை இருமடங்காக உயர்த்த இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தற்போது திட்டமிட்டுள்ளன. இந்த இலக்கை அவை எட்டுமா என்பது, கடந்த ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களைச் சார்ந்திருப்பதைவிட, இந்தியா அந்த ஒப்பந்தத்தை எத்தகைய நம்பிக்கையுடன் பயன்படுத்துகிறது என்பதையே அதிகம் சார்ந்திருக்கும். இறுதியில், இது போன்ற ஒரு ஒப்பந்தம் ஒரு நாட்டிடம் எதிர்பார்ப்பது இதுதான்: உலகச் சந்தைகளில் அந்த நாடு திறம்படப் போட்டியிட வேண்டும் என்பதே அது. எந்தவொரு அரசாங்கத்தாலும் கூற முடியாத அளவுக்குச் சுருக்கமாகவும் ஆழமாகவும் திருவள்ளுவர் இதைக் கூறியுள்ளார். தளராத உறுதியுடன் தொடர்ந்து முயற்சி செய்பவர்களின் உழைப்புக்கு முன்னால், 'விதி' கூட வழிவிட்டு விலகிச் செல்லும் என்று அவர் எழுதியுள்ளார். 'திறந்திருக்கும் ஒரு கதவு' என்பது அத்தகைய உறுதியான நம்பிக்கையைச் சோதித்துப் பார்க்கும் ஒரு வாய்ப்பாகும். அந்தச் சோதனையை இந்தியா மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டும்.


வி. அனந்த நாகேஸ்வரன் இந்திய அரசின் 18-வது தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆவார்.


Original Link: A trade deal that tests India’s competitive confidence 

Share: