பெண்களின் பணித்திறனை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு, அரசாங்கம் பராமரிப்புப் பொருளாதாரத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலிலும் வலுவான வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொண்டு, இந்தியப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க மீள்திறனை வெளிப்படுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund (IMF)) உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையின்படி (ஏப்ரல் 2026), இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2026-27-ஆம் நிதியாண்டில் 6.5 விழுக்காடு வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின்கீழ் (Ministry of Statistics and Programme Implementation (MoS&PI)) இயங்கும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (National Statistical Office (NSO)) தரவுகளும், இந்தியப் பொருளாதாரம் 2021 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளுக்கு இடையே 8.56 விழுக்காடு கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தை (Compound Annual Growth Rate (CAGR)) பதிவு செய்துள்ளதைக் காட்டுகின்றன. இது கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய வலுவான மீட்சியையும், தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி வேகத்தையும் பிரதிபலிக்கிறது.
இந்த ஒட்டுமொத்தப் பொருளாதாரக் குறியீடுகள் (Macroeconomic indicators) ஊக்கமளிப்பதாக இருந்தாலும், ஒரு முக்கியமான கேள்வி எழுப்பப்படுகிறது. இந்தப் பொருளாதார வளர்ச்சி என்பது தகுந்த வேலைவாய்ப்புகளாக மாறுகிறதா? தங்களுக்குத் தேவையான தரமான வேலைகளைப் பெறுவதில் தொடர்ந்து தடைகளை எதிர்கொண்டு வரும் பெண்கள் மற்றும் படித்த இளைஞர்களுக்கு இந்தச் சிக்கல் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
2025-ஆம் ஆண்டின் காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) அறிக்கை, ஊக்கமளிக்கும் அறிகுறிகளையும், அதேநேரத்தில் இன்னும் செய்யவேண்டிய முக்கியமான வேலைகள் இருக்கின்றன என்ற நினைவூட்டலையும் எவ்வித சந்தேகமுமின்றி தெளிவாகக் காட்டுகிறது.
பெண்களின் பணிப்பங்களிப்பு
பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Labour Force Participation Rate (LFPR)) 2022-ஆம் ஆண்டில் இருந்த 25.4 விழுக்காட்டில் இருந்து 2025-ஆம் ஆண்டில் 30.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அதேபோல், தொழிலாளர் மக்கள்தொகை விகிதமும் (Worker Population Ratio (WPR)) 2022-ஆம் ஆண்டில் இருந்த 24.6 விழுக்காட்டில் இருந்து 2025-ஆம் ஆண்டில் 29.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது. முன்னெப்போதையும்விட இப்போது அதிக எண்ணிக்கையிலான பெண்கள் வேலை செய்கிறார்கள் அல்லது தீவிரமாக வேலை தேடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
இந்த முன்னேற்றம் இருந்தபோதிலும், நகர்ப்புறங்களை (22.2 விழுக்காடு) ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் பெண்களின் பங்கேற்பு (34.6 விழுக்காடு) மிக அதிகமாக உள்ளது. இது வேலைவாய்ப்புச் சந்தையில் நகர்ப்புறப் பெண்களின் பங்கு இன்னும் குறைவாகவே இருப்பதைக் காட்டுகிறது. இளைஞர்கள் இடையே இந்த நிலைமை இன்னும் கவலைக்குரியதாக உள்ளது. நகர்ப்புறங்களில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் பெண்களின் வேலையின்மை விகிதம் 18.9 விழுக்காடாக உள்ளது. இது நகர்ப்புற ஆண்களின் வேலையின்மை விகிதமான 11.8 விழுக்காட்டைவிட மிக அதிகமாகும்.
இந்தியாவின் கிராமப்புறங்களில், பணியில் ஈடுபட்டுள்ள பெண்களில் சுமார் 70.7 விழுக்காட்டினர் சுயதொழில் செய்பவர்களாக உள்ளனர். வெறும் 9.3 விழுக்காட்டினர் மட்டுமே வழக்கமான நிலையான ஊதியம் பெறும் வேலைகளில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வேளாண்மை, குடும்பத் தொழில்கள் அல்லது வீட்டில் இருந்தபடியே செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சுயதொழில் என்பது வாழ்வாதாரத்திற்கான ஒரு முக்கிய ஆதாரமாக இருந்தாலும், இது பெரும்பாலும் குறைந்த உற்பத்தித் திறன், நிலையற்ற வருமானம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் குறைவாக உள்ள வேலைகளுடனேயே தொடர்புடையதாக இருக்கிறது. எனவே, பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் அதிகமாக இருப்பதாலேயே, அவர்களுக்கு நல்ல தரமான வேலைகள் கிடைக்கின்றன என்றும் முடிவு செய்துவிட முடியாது.
கல்வித்துறையில், குறிப்பாக பெண் குழந்தைகள் மற்றும் இளம் பெண்களின் கல்வியில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. மேல்நிலைக் கல்வி அளவில் (Higher secondary level), பெண்களின் ஒட்டுமொத்த சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio (GER)) 2020-21-ஆம் ஆண்டில் 54.6 விழுக்காடாக இருந்தது, இது 2024-25-ஆம் ஆண்டில் 60.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது ஆண்களின் சேர்க்கை விகிதத்தைவிட (56.2 விழுக்காடு) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பு முடித்த பிறகு ஒரு மாணவனைவிட ஒரு மாணவி மேல்நிலைக் கல்விக்குத் தொடர்வதற்கான வாய்ப்பு புள்ளிவிவரப்படி தற்போது அதிகமாக உள்ளது.
அதேபோல், உயர்கல்வியில் பெண்களின் மொத்தச் சேர்க்கை விகிதம் (FGER), 2020-21-ஆம் ஆண்டில் 27.9 விழுக்காடாக இருந்ததில் இருந்து, 2022-23-ஆம் ஆண்டில் 30.2 விழுக்காடாகத் தற்காலிகமாக உயர்ந்துள்ளது.
முன்பைவிட இப்போது அதிகமான மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்து படித்து வருகிறார்கள் என்பதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால், இப்போதுள்ள முக்கிய சிக்கல் என்னவென்றால், இந்த கல்வி அவர்களுக்குச் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதை உறுதி செய்வதுதான். பெண்களின் கல்வித் தரம் உயர்ந்து வந்தபோதிலும், நகர்ப்புறங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களின் பங்களிப்பு இன்னும் குறைவாகவே உள்ளது. மேலும், இளம்பெண்களிடையே வேலைவாய்ப்பின்மையும் இன்னும் அதிகமாகவே நீடிக்கிறது. இது கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையே உள்ள இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருவதையே காட்டுகிறது.
இந்தச் சவாலை முன்கூட்டியே உணர்ந்த ஒன்றிய அரசு, தங்களின் காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பு (PLFS) அறிக்கை வெளியாவதற்கு முன்பாகவே, 2026-27 ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் நிதி ஆயோக்கின்கீழ் (NITI Aayog) 'கல்வி முதல் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் வரை' (Education-to-Employment-and-Enterprise (EEE)) என்ற குழுவை அமைப்பதாக அறிவித்தது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளை வலுப்படுத்தவும், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் எதிர்கால வேலைவாய்ப்புகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி ஆராயவும் இந்தக் குழு தனது முதல் கூட்டத்தை மே மாதம் 22-ஆம் தேதி நடத்தியது.
இந்த முயற்சி, கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை அனைவருக்கும் விரிவுபடுத்துவது என்பது முதல்படி மட்டுமே என்பதைக் காட்டுகிறது. கல்வியின் உண்மையான பலன் என்பது மக்கள் வருமானம் ஈட்டக்கூடிய நல்ல வேலைகளில் சேருவதற்கு உதவுவதிலும், அதேநேரத்தில் பெண்களின் திறமைகள் தற்போதைய வேலைவாய்ப்புச் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்வதிலும்தான் உள்ளது.
பெண்களின் பங்கேற்பை ஊக்குவித்தல்
கல்வித் தகுதிக்கும் வேலைவாய்ப்பில் பங்கேற்பதற்கும் இடையே உள்ள இடைவெளியை, குறிப்பாகப் பெண்களின் விஷயத்தில், வேலைவாய்ப்புகள் மட்டுமே முழுமையாக விளக்கிவிட முடியாது. அதிகளவிலான பெண்கள் கல்வி கற்று வந்தபோதிலும், வேலைவாய்ப்பில் அவர்களின் பங்கேற்பு இன்னும் குறைவாகவே உள்ளது. குடும்ப பராமரிப்புப் பொறுப்புகள், நெகிழ்வான வேலை நேர வசதி இல்லாமை, பாதுகாப்புப் பயங்கள் மற்றும் போக்குவரத்துச் சிக்கல்கள் போன்ற பிற காரணிகளும் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு ஒரு தடையாக இருக்கலாம்.
ஊதியமில்லாத வீட்டுப் பராமரிப்புப் பணிகளே இதற்கான ஒரு முக்கியக் காரணமாகும். ஏனெனில், இது பெண்கள் வேலைவாய்ப்புச் சந்தையில் நுழைவதையும், தொடர்ந்து நீடிப்பதையும் மற்றும் வளர்ச்சியடைவதையும் பாதிக்கிறது. உலகம் முழுவதும், குடும்பங்களைப் பராமரிக்கும் பெரும்பாலான பொறுப்புகளைப் பெண்களே தொடர்ந்து சுமந்து வருகின்றனர்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organization (ILO)) கூற்றுப்படி, உலகெங்கிலும் ஊதியமில்லாத அனைத்துப் பராமரிப்புப் பணிகளில் நான்கில் மூன்று பங்குக்கும் அதிகமான (75%-க்கும் மேல்) வேலைகளைப் பெண்களே செய்கிறார்கள். மேலும், இந்த ஊதியமில்லாத பராமரிப்புப் பொறுப்புகளின் காரணமாகவே உலகம் முழுவதும் சுமார் 70.8 கோடிப் பெண்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கின்றனர். இந்தப் பிரச்சனை தற்போது இந்தியாவின் நகர்ப்புறங்களிலும் மிக முக்கியமான ஒன்றாக உருவெடுத்து வருகிறது.
2024-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ‘நேரப் பயன்பாட்டு ஆய்வின்படி (Time Use Survey 2024), பெண்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 289 நிமிடங்களை ஊதியமில்லாத வீட்டு வேலைகளுக்காகவும், 137 நிமிடங்களை குடும்ப உறுப்பினர்களைப் பராமரிப்பதற்காவும் செலவிடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது. இன்று பல குடும்பங்கள் தங்களது கூட்டுக்குடும்பங்களை விட்டுப் பிரிந்து, தனிக்குடித்தனமாக வாழ்கின்றன. இதன் விளைவாக, வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள், குறிப்பாகத் தாய்மார்கள், குழந்தைகளையும் பெரியவர்களையும் பராமரிக்கும் சுமையைத் தங்களின் தோள்களிலேயே சுமக்க வேண்டியுள்ளது. இந்த ஊதியமில்லாத பராமரிப்புப் பணிகளைப் பெண்களே முக்கியமாகச் செய்யும் வரை, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தித் திறனில் ஏற்படும் முன்னேற்றம் என்பது சமமற்றதாகவும், நிலையற்றதாகவுமே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சுவீடன், டென்மார்க் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் குழந்தைப் பராமரிப்பு மற்றும் முதியோர் பராமரிப்புச் சேவைகளை உள்ளடக்கிய பராமரிப்புப் பொருளாதாரத்தில் (Care economy) முதலீடு செய்வதன் மூலம் இந்தச் சிக்கலை எதிர்கொள்கின்றன.
இந்தியாவின் மக்கள்தொகையும் நிதிநிலையும் இந்த நாடுகளிலிருந்து வேறுபட்டதாக இருந்தாலும், மலிவான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய பராமரிப்புச் சேவைகள், பெண்கள் வேலைக்குச் செல்வதை அதிகரிக்க உதவும் என்பதை இந்த நாடுகளின் நடவடிக்கைகள் காட்டுகின்றன.
பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்ல, அந்த வேலைவாய்ப்புகளைப் பெண்கள் தடையின்றிப் பெறுவதை உறுதி செய்வதும் ஒரு சவாலாக உள்ளது. பெண்கள் பெற்றுள்ள கல்வி வளர்ச்சியை நாட்டின் பொருளாதார வளர்ச்சியாக மாற்ற வேண்டுமானால், பராமரிப்புப் பொருளாதாரத்தில் முதலீடு செய்வது இந்தியா செய்யக்கூடிய மிகச்சிறந்த முதலீடுகளில் ஒன்றாக இருக்கும் என்கின்றனர்.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி
இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் மிகவும் வலுவாக உள்ளது. இருப்பினும், இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சியானது பொருளாதாரம் எவ்வளவு வேகமாக வளர்கிறது என்பதை மட்டும் பொறுத்தது அல்ல. மாறாக, வாய்ப்புகள் அனைவருக்கும் எவ்வளவு நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பதையும் பொறுத்தே அமையும். பொருளாதார வளர்ச்சி, முதலீடுகள் மற்றும் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் ஆகியவை நாட்டிற்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன. ஆனால், கல்வித்துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை உற்பத்தித் திறன் கொண்ட வேலைவாய்ப்புகளாக மாற்றுவதும், நாட்டின் தொழிலாளர் சக்தியில் அதிகமான பெண்கள் முழுமையாகப் பங்கேற்க உதவுவதும் தற்போதைய மிக முக்கிய முன்னுரிமைகளாகும்.
பராமரிப்புப் பொருளாதாரத்தில் (Care economy) முதலீடு செய்வது என்பது வெறும் சமூக நலத்திட்டம் மட்டுமல்ல. அது மனிதவளத்தை மேம்படுத்தவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் மற்றும் இந்தியாவின் இலக்கான அனைவரையும் உள்ளடக்கிய, பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் கூடிய ஒரு சிறந்த பொருளாதார உத்தி ஆகும்.
சந்திரசேகர், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தில் (MoS&PI) இணை இயக்குநராகப் பணியாற்றுகிறார்; பிரசாத், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) ஆராய்ச்சி மற்றும் புள்ளியியல் துறையில் கல்வி மற்றும் பயிற்சிக்கான தலைவராக உள்ளார்.
Original Link: India’s growth story needs more women at work.