உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்து, அரசியலமைப்பு அமர்வுகள் திறம்பட செயல்பட உதவுமா? -சாஹில் ஹுசைன் சௌத்ரி

 உச்சநீதிமன்றத்தில் நான்கு கூடுதல் நீதிபதி பணியிடங்களை உருவாக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த எண்ணிக்கை உயர்வு, தலைமை நீதிபதி தவறாமல் அரசியல்சாசன அமர்வுகளை அமைக்க உதவும் என்று அரசு தெரிவிக்கிறது. இருப்பினும், இதுபோன்ற பெரிய அளவிலான நீதிபதிகள் கொண்ட அமர்வுகள் ஏன் நீதிமன்றத்தின் அன்றாடப் பணிகளுக்கு கூடுதல் அழுத்தத்தைத் தருகின்றன, மேலும் நான்கு கூடுதல் நீதிபதிகளால் உண்மையில் என்ன மாற்றத்தைக் கொண்டுவர முடியும்?


கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி, புதன்கிழமையன்று உச்சநீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதாவை, (Supreme Court (Number of Judges) Amendment Bill, 2026) நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இந்திய தலைமை நீதிபதி உட்பட உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38-ஆக உயர்த்துவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்த அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கையின் அதிகரிப்பு, மே மாதம் 16-ஆம் தேதி முதல் அவசரச்சட்டம் மூலமாக ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அந்த அவசரச் சட்டத்திற்குப் பதிலாகத்தான் இந்த புதிய பண மசோதா (Money Bill) கொண்டுவரப்பட உள்ளது.


உச்சநீதிமன்றம் உரிமையியல் மற்றும் குற்றவியல் மேல்முறையீடுகள், சிறப்பு விடுப்பு மனுக்கள், நீதிப்பேராணை மனுக்கள் மற்றும் பிற வழக்கமான வழக்குகளின் மிகப்பெரிய தினசரிப் பட்டியலைக் கையாண்டு வருகிறது. அதேவேளையில், அரசியலமைப்பின் விளக்கம் தொடர்பான முக்கியமான விவகாரங்களுக்கும் தீர்ப்பளிக்கிறது. இதன் காரணமாக பெருமளவிலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தச் சட்டமசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் குறித்த குறிப்பில் (Statement of Objects and Reasons) இந்தக் கருத்தே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இதற்கான காரணம் தகுந்த முறையில் விளக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் பணியிடங்கள் மூலம், சட்டரீதியான முக்கிய கேள்விகள் அடங்கிய வழக்குகளை விசாரிப்பதற்கு, இந்திய தலைமை நீதிபதி வழக்கமான முறையில் "தேவையான நாட்கள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுகளை" உருவாக்க முடியும். எனவே, இன்னும் நான்கு நீதிபதிகள் கூடுதல் நியமனம் செய்யப்படுவது பயனுள்ளதாக இருக்குமா?


அரசியலமைப்பு அமர்வுகள் வழக்கமான வழக்கு விசாரணைகளை ஏன் பாதிக்கின்றன?


உச்சநீதிமன்றத்தின் அன்றாடப் பணிகளில் பெரும்பாலானவை, ஒரேநேரத்தில் அமர்ந்து விசாரணை நடத்தும் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகளைக் கொண்ட பல அமர்வுகளாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. அதேவேளையில், ஓர் அரசியல் சாசன அமர்வுக்கு குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் இருக்க வேண்டியது அவசியமாகும்.


அரசியலமைப்பின் பிரிவு 145(3)-ன்படி, அரசியலமைப்பிற்கு விளக்கம் அளிப்பது தொடர்பான “முக்கியமான சட்டக் கேள்வி” அடங்கிய வழக்குகளைத் தீர்மானிக்கக் குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் இருக்க வேண்டும். அதேபோல, பிரிவு 143-ன்கீழ் குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்திடம் கேட்கும் ஆலோசனையைப் நீதிமன்றம் பரிசீலிக்கும்போதும், இதேபோன்று குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வே அதை விசாரிக்க முடியும்.


மேலும், ஓர் அரசியல் சாசனப் பிரிவு குறிப்பிடப்படும் அனைத்து வழக்குகளையும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. இதில் உள்ள முக்கியக் காரணி என்னவென்றால், அந்த வழக்கில் "சட்டத்தின் கணிசமான கேள்வி" (Substantial Question of Law) அடங்கியுள்ளதா என்பது மட்டுமே ஆகும்.


"Substantial question of law" என்பது ஒரு வழக்கில் இருதரப்பினரின் உரிமைகளை நேரடியாகவும் முக்கியமாகவும் பாதிக்கக்கூடிய, தெளிவற்ற அல்லது விவாதிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான சட்டப் பகுதியைக் குறிக்கிறது.


கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வு (ஏழு, ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வு) தேவைப்படுவதற்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம். அதாவது, முந்தைய தீர்ப்புகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தீர்ப்புகளை மீண்டும் மறுபரிசீலனை செய்வதற்கும், அல்லது அதிகாரப்பூர்வமான முடிவு தேவைப்படும் கேள்விகளுக்குத் தெளிவான தீர்ப்பு வழங்குவதற்கும் இந்த அமர்வு தேவைப்படலாம்.


இதிலுள்ள சிக்கல் என்னவென்றால், அரசியல்சாசன அமர்வுக்கோ அல்லது அதைவிடப் பெரிய அமர்வுகளுக்கோ நியமிக்கப்படும் நீதிபதிகள், நீதிமன்றத்தின் அன்றாட வழக்கமான வழக்குகளை விசாரிக்கும் அதே நீதிபதிகளின் பட்டியலிலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.


ஐந்து நீதிபதிகள் ஒன்றாக அமர்ந்து ஒரு அரசியல் சாசன விவகாரத்தை விசாரிக்கும்போது, நீதிமன்றத்தின் அன்றாடப் பணிகளில் பெரும்பகுதியைச் செய்யும் சிறிய நீதிபதிகள் குழுக்களில் அவர்களால் பங்கேற்க முடிவதில்லை. ஏழு அல்லது ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டால், இருக்கும் நீதிபதிகளின் தேவையும் சுமையும் இன்னும் அதிகமாகும்.

ஒரு பெரிய நீதிபதிகள் அமர்வின் பணி என்பது வெறும் வழக்கின் விசாரணையோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. நீதிபதிகள் வழக்குப் பதிவேடுகளையும், தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதங்களையும் கவனமாகப் படிக்க வேண்டும்; அமர்வில் உள்ள மற்ற நீதிபதிகளுடன் ஆலோசிக்க வேண்டும். மேலும், தீர்ப்புகளைத் தயாரிக்க வேண்டும். இந்தத் தீர்ப்புகளில், முதன்மைத் தீர்ப்பை ஆதரிக்கும் தனிப்பட்ட கருத்துகளோ அல்லது மாறுபட்ட கருத்துகளோ இடம்பெறலாம்.


அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை vs தற்போதைய பணி எண்ணிக்கை


உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, 1950-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மூல அரசியலமைப்புச் சட்டம் ஒரு தலைமை நீதிபதி மற்றும் ஏழு பிற நீதிபதிகளைக் கொண்ட ஒரு உச்சநீதிமன்றத்தையே அமைத்தது. மேலும், இந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் உயர்த்திக் கொள்ளும் அதிகாரத்தை நாடாளுமன்றத்தின் முடிவிற்கே விட்டுவிட்டது.


ஆரம்ப ஆண்டுகளில், உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் ஒன்றாக அமர்ந்துதான் அவர்கள் முன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்து வந்தனர். ஆனால், பணிச்சுமை கணிசமாக அதிகரித்ததைக் கருத்தில்கொண்டு, நாடாளுமன்றம் நீதிபதிகளின் எண்ணிக்கையைத் படிப்படியாக உயர்த்தியது. அதன்படி 1950-ஆம் ஆண்டில் 8-ஆக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை, 1956-ஆம் ஆண்டில் 11-ஆகவும், 1960-ஆம் ஆண்டில் 14-ஆகவும், 1978-ஆம் ஆண்டில் 18-ஆகவும், 1986-ஆம் ஆண்டில் 26-ஆகவும், 2009-ஆம் ஆண்டில் 31-ஆகவும், இறுதியாக 2019-ஆம் ஆண்டில் 34-ஆகவும் அதிகரிக்கப்பட்டது.


2026-ஆம் ஆண்டின் இந்த மசோதா, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தப் பரிந்துரைக்கிறது. இந்த எண்ணிக்கை உயர்வு, அவசரச் சட்டம் மூலம் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. இந்த 38 இடங்களும் நிரப்பப்பட்டால், வழக்குகளை ஒதுக்கும் முதன்மைப் பொறுப்பில் உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, ஐந்து, ஏழு அல்லது ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுகளை அமைக்கும்போது தேர்வு செய்ய கூடுதல் நீதிபதிகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதனால், அன்றாட வழக்கமான வழக்குகளை விசாரிக்கும் சிறிய அமர்வுகளுக்கும் போதுமான நீதிபதிகள் கிடைப்பார்கள். மேலும், பெரிய அமர்வுகள் தங்களின் வழக்கு விசாரணைகளை மற்ற வழக்குகளுக்கு இடையே இடைவெளிவிட்டு நடத்தாமல், அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து நடத்துவதும் எளிதாகும்.


ஆனால், அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையும் தற்போது பணியில் இருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கையும் வேறாக உள்ளது. ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி நிலவரப்படி, உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தலைமை நீதிபதி மற்றும் 34 பிற நீதிபதிகள் என மொத்தம் 35 நீதிபதிகள் பணியில் இருப்பதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையான 38-ல் 3 காலியிடங்கள் உள்ளன.


எனவே, இந்த நீதிபதிகள் எண்ணிக்கை உயர்வின் முழுமையான பலன், முதலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதிலும், நீதிமன்றம் அதன் முழுப் பணித்திறனுடன் இயங்குவதிலும்தான் உள்ளது. அதன்பிறகு, பெரிய அமர்வு விசாரணை தேவைப்படும் வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் வழக்குப் பட்டியலின் மூலம் அவற்றிற்கு ஒதுக்கப்படும் விசாரணை நேரம் ஆகியவற்றைச் சார்ந்தே அதன் பயன் அமையும் என்றும் கூறப்படுகிறது. 


ஒரு தனி அரசியலமைப்புப் பிரிவு?


1984-ஆம் ஆண்டு, இந்தியச் சட்ட ஆணையம் தனது 95-வது அறிக்கையில் உச்சநீதிமன்றத்திற்கு ஒரு கட்டமைப்புப் பிரிவை உருவாக்குவது குறித்த  ஆலோசனையை முன்மொழிந்தது. 


தற்போது, குறிப்பிட்ட சில வழக்குகளை விசாரிப்பதற்காக உச்சநீதிமன்றத்திற்குள்ளேயே அரசியல் சாசன அமர்வு அமைக்கப்படுகிறது. ஆனால், அரசியலமைப்புப் பிரிவு அமைக்கப்பட்டால், அது நீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சார்ந்த பணிகளையும், பொதுவான மேல்முறையீட்டுப் பணிகளையும் நிரந்தரமாகத் தனித்தனியாகப் பிரிப்பதாக அமையும்.


சட்ட ஆணையம் 1988-ஆம் ஆண்டின் தனது 125-வது அறிக்கையில் இந்தக் கருத்தை மீண்டும் வலியுறுத்தியது. தொடர்ந்து 2009-ஆம் ஆண்டில் வெளியிட்ட 229-வது அறிக்கையில், டெல்லியில் அரசியலமைப்பு அமர்வு செயல்படும் அதேவேளையில், உயர்நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்க மண்டல அளவிலான மேல்முறையீட்டு அமர்வுகளை (Cassation Benches) அமைக்கப் பரிந்துரைத்தது.


கூடுதல் நீதிபதிகளை நியமிப்பது நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைக்க உதவுமா?


மசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்களுக்கான அறிக்கையின்படி (Statement of Objects and Reasons), ஜனவரி  மாதம் 1-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி உச்சநீதிமன்றத்தில் 92,101 வழக்குகள் நிலுவையில் இருந்தன. 2025-ஆம் ஆண்டில், 75,410 புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன மற்றும் 65,615 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.


கூடுதல் நீதிபதிகளை நியமிப்பது, நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்கும் அமர்வுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடும். ஆனால், நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறைவதற்கும் நேரடித் தொடர்பு எதுவுமில்லை என்றும் கூறப்படுகிறது.


2009-ஆம் ஆண்டில் வரலாற்றுத் தரவுகளை ஆய்வுசெய்த சட்ட ஆணையம், உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கையை முன்பே உயர்த்தியதால் மட்டும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறைந்துவிடவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியது. மேலும், நீதிபதிகளின் எண்ணிக்கையை மட்டுமே வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கான ஒரே காரணியாகக் கருதக்கூடாது என்றும் சட்ட ஆணையம் எச்சரித்தது. நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் அதன் வகைகள், ஒத்திவைப்புகள், வழக்கு மேலாண்மை முறைகள் மற்றும் சிக்கலான வழக்குகளுக்குத் தேவைப்படும் நேரம் ஆகியவை வழக்குகள் முடித்து வைக்கப்படுவதைப் பாதிக்கும் மற்ற சில காரணிகளாகும்.


அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, அரசியலமைப்பு சார்ந்த வழக்குகள் மற்றும் சாதாரண வழக்குகள் ஆகியவற்றிற்கு இடையே இருக்கும் முரண்பட்ட தேவைகளைச் சமாளிக்க நீதிமன்றத்திற்கு கூடுதல் வாய்ப்பை அளிக்கிறது. இருப்பினும், இது தொடர்ந்து அரசியலமைப்பு அமர்வு விசாரணைகளுக்கு வழிவகுக்குமா அல்லது நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுமா என்பது காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறதா, அதிகளவில் நீதிபதிகள் பணியில் இருப்பது தொடர்ந்து பராமரிக்கப்படுகிறதா மற்றும் உருவாகும் இந்த நீதித்துறை திறன் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்கின்றனர்.


சாஹில் ஹுசைன் சௌத்ரி, ஓர் வழக்கறிஞரும் அரசியலமைப்புச் சட்ட ஆய்வாளரும் ஆவார்.


Original articles: Can more Supreme Court judges ease case backlog, free up Constitution Benches? -Sahil Hussain Choudhury

Share:

இந்திய ரிசர்வ் வங்கி நெகிழிப் பணத்தாள்களை அறிமுகப்படுத்துகிறது : 'நெகிழிப் பணத்தாள்கள்’ என்றால் என்ன, அவை ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன? -ரோஷ்னி யாதவ்

 


இந்தியாவில் நெகிழிப் பணத்தாள்களை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி (RBI) ஏன் திட்டமிடுகிறது? இந்த நெகிழிப் பணத்தாள்களின் நன்மைகள் என்னென்ன? எந்தெந்த நாடுகள் ஏற்கனவே இவற்றைப் பயன்படுத்துகின்றன, மேலும் இந்த மாற்றத்தை மேற்கொள்ளும்போது இந்தியா எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் என்ன? 


ஏன் செய்திகளில் இடம்பெற்றது?


2027–28-ஆம் நிதியாண்டின் தொடக்கத்தில் நெகிழிப் பணத்தாள்களை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. ஆரம்பத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் ஆகிய குறைந்த மதிப்புடைய நெகிழிப் பணத்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தச் சூழலில், நெகிழிப் பணத்தாள்களை அறிமுகப்படுத்துவதன் நோக்கம் மற்றும் நன்மைகள் குறித்து அறிந்துகொள்வோம்:


முக்கிய அம்சங்கள்:


1. நெகிழிப் பணத்தாள்கள் இரண்டு முக்கிய நோக்கங்களுக்காகப் பயன்படுகின்றன. முதலாவதாக, அவை பணத்தாள்களின் நீண்டகாலப் பயன்பாட்டை அதிகரிக்கின்றன. குறிப்பாக, கைமாறிக்கொண்டே இருக்கும் குறைந்த மதிப்பிலான பணத்தாள்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நெகிழிப் பணத்தாள்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், சாதாரண காகித பணத்தாள்களைவிட இதன் உழைக்கும் தன்மை சுமார் 2 முதல் 4 மடங்கு அதிகம் என்று மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.


2. இரண்டாவது நோக்கம், நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ரிசர்வ் வங்கியின் திறனை அதிகரிப்பதாகும். இந்தப் புதிய நெகிழிப் பணத்தாள்களைப் புழக்கத்திற்கு விடுவதற்கு முன்பாக, அவற்றின் நீடித்து உழைக்கும் திறன் மற்றும் இந்தியச் சூழலுக்கு ஏற்றதாக இருக்குமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். 


3. இந்தத் திட்டம் தொடக்கத்தில் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளில் அதிக கவனம் செலுத்தும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், இந்த நோட்டுகள் மக்களிடையே அடிக்கடி கைமாறுவதால் மிக விரைவாகச் சேதமடைகின்றன.


4. ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் நெகிழிப் பணத்தாள்களின் சோதனையில், 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான தாள்கள் தலா 100 கோடி எண்ணிக்கையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன் மொத்த மதிப்பு 3,000 கோடி ரூபாயாகும். இதற்காக, ரிசர்வ் வங்கியின்கீழ் இயங்கும் 'Bharatiya Reserve Bank Note Mudran Private Limited' நிறுவனம், 3.4 கோடி நெகிழித் தாள்களைக் (polymer sheets) கொள்முதல் செய்வதற்காகக் கடந்த மாதம் சர்வதேச அளவிலான ஒப்பந்தப்புள்ளியைக் கோரியுள்ளது.


நெகிழிப் பணத்தாள்கள் எந்தெந்த நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன?


5. 1988-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நெகிழிப் பணத்தாள்கள் (Polymer Banknotes), தற்போது 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், இவை சாதாரண காகிதப் பணத்தாள்களைவிட பயன்பாட்டுக்கு ஏற்றவை என்றும் பரவலாகக் கருதப்படுகிறது.




6. வளர்ந்த நாடுகளில், இங்கிலாந்து, கனடா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் நெகிழிப் பணத்தாள்களைப் பயன்படுத்துகின்றன. தாய்லாந்து, வியட்நாம், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் நெகிழிப் பணத்தாள்களைப் பயன்படுத்துகின்றன. இருப்பினும், நெகிழிப் பணத்தாள்களுடன், காகிதப் பணத்தாள்களும் பயன்படுத்தப்படுகின்றன.


நெகிழிப் பணத்தாள்களைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?


7. காகிதப் பணத்தாள்களைவிட நெகிழிப் பணத்தாள்களின் மிகப்பெரிய நன்மையே அவை மிக நீண்டகாலம் உழைக்கக்கூடியவை என்பதுதான். பணத்தின் மதிப்பை பொறுத்து, காகிதப் பணத்தாள்களைவிட நெகிழிப் பணத்தாள்கள் இரண்டு முதல் ஆறு மடங்கு வரை அதிக காலம் பயன்பாட்டில் இருக்கும். சிறிய மதிப்புடைய பணத்தாள்களை அடிக்கடி பயன்படுத்தப்படுவதால் அவை விரைவில் சேதமடைகின்றன. எனவே, நெகிழிப் பணத்தாள்களின் நீண்டகாலப் பயன்பாடே பெரும்பாலான நன்மைகளுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது.


8. முதலாவதாக, நெகிழிப் பணத்தாள்கள் நீண்டகாலம் உழைப்பதால், காலப்போக்கில் குறைந்த எண்ணிக்கையிலான பணத்தாள்களைத் தயாரித்தால் போதுமானது. இரண்டாவதாக, ஒரு நெகிழிப் பணத்தாளைத் தயாரிப்பதற்கான செலவு காகிதப் பணத்தாளைத் தயாரிப்பதற்கான செலவைவிட அதிகமாக இருந்தாலும், குறைந்த எண்ணிக்கையில் தயாரிப்பது அதன் உற்பத்தி, விநியோகம் மற்றும் பழைய தாள்களை அழித்தல் ஆகியவற்றுக்கான ஒட்டுமொத்தச் செலவுகளைக் குறைக்கிறது. மேலும், இத்தகைய செலவுகளைக் குறைப்பது சுற்றுச்சூழலுக்கும் பெரும் நன்மையை அளிக்கிறது.


9. கடந்த ஆகஸ்ட் மாதம் 2013-ஆம் ஆண்டில், பருத்தியால் செய்யப்பட்ட மற்றும் நெகிழிப் பணத்தாள்களின் முழு ஆயுட்கால கார்பன் பாதிப்பு (carbon footprint) குறித்து ஆய்வு செய்ய ‘The Energy and Resources Institute’ (TERI) அமைப்பைக் கேட்டுக்கொண்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்த 'ஆயுட்கால தாக்க மதிப்பீட்டு' (Life Cycle Impact Assessment) ஆய்வின் முடிவில், பருத்தித் தாள்களுக்குப் பதிலாக நெகிழித் தாள்களைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் நன்மைகளைத் தரும் என்று கண்டறியப்பட்டுள்ளது.


10. இந்திய ரிசர்வ் வங்கி, நெகிழிப் பணத்தாள்கள் மற்றும் அவற்றின் உற்பத்தி கழிவுகளை மறுசுழற்சி செய்து உரம் தயாரிக்கும் தொட்டிகள், குழாய் இணைப்பு உபகரணங்கள், மற்றும் பிற வீட்டு உபயோக மற்றும் தொழில்முறைப் பொருட்களாக மாற்ற முடியும் என்று கூறியுள்ளது. நெகிழி என்பது புதுப்பிக்க முடியாத ஒரு இயற்கை வளத்திலிருந்து தயாரிக்கப்பட்டாலும், அதை மீண்டும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தக்கூடிய தன்மை கொண்டிருப்பதால், அதனை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வெவ்வேறு வடிவங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியும் என்கின்றனர்.


11. இதில் பாதுகாப்பு சார்ந்த நன்மைகளும் உள்ளன. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளில் பாதிக்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு பணத்தாள்கள் தயாரிப்பதற்கான தாள்களை விநியோகிக்கும் 'De La Rue' என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் கூற்றுப்படி, பெரும்பாலான போலி நோட்டுகள் காகிதத்தாலேயே தயாரிக்கப்படுவதால், நெகிழித் தாள்கள் (polymer) அதிகப் பாதுகாப்பானவை ஆகும். எனவே, நெகிழிப் பணத்தாள்களைப் பயன்படுத்தும் நாடுகளில் போலி பணத்தாள்களின் புழக்கம் குறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.


ஆனால், இதில் உள்ள சிக்கல் என்ன?




12. நெகிழிப் பணத்தாள்களால் பல நன்மைகள் இருந்தாலும், ஒரு முக்கிய கவலை நீடிக்கவே செய்கிறது: இந்த பணத்தாள்களை அச்சிடத் தேவையான சிறப்பு நெகிழித் தாள்களை (special sheets) இந்தியா வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.


13. இலங்கையின் ஒப்பந்தப்புள்ளி நிபந்தனையில், ஏலதாரர்கள் பாகிஸ்தான் அல்லது சீனாவில் செய்யும் செயல்பாடுகள் இந்தியச் செயல்பாடுகளிலிருந்து முறையாகத் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் (suitably firewalled) என்றும், அந்த நாடுகளிலிருந்து எந்தவொரு மூலப்பொருட்களும் பெறப்படக் கூடாது என்றும், அந்நாடுகளில் பணிபுரிந்த, வசித்த அல்லது பூர்வீகத்தைக் கொண்ட ஊழியர்கள் எவரும் இந்தியத் திட்டத்தில் ஈடுபடக் கூடாது என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் அதிகாரப்பூர்வப் பணத்தை அச்சடிப்பதற்கு ஒரு வெளிநாட்டு நிறுவனத்தைச் சார்ந்திருப்பது, மேலும் பாதுகாப்புக் குறைபாட்டையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.


14. எனவே, நெகிழிப் பணத்தாள்களின் பயன்பாட்டிற்கு மாறுவதற்கான நடவடிக்கைகள், இரண்டு காரணங்களுக்காகப் படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டும், அவை: முதலாவதாக, தற்போதைய பணப்புழக்க அமைப்பில் ஏற்கனவே பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது; இரண்டாவதாக, நெகிழிப் பணத்தாள்களுக்கு மாறுவதற்கு மேலும் கூடுதல் முதலீடு தேவைப்படும்.


சட்டமுறைச் செலாவணி என்றால் என்ன? 


1. சட்டமுறைச் செலாவணி என்பது ஒரு கடனைத் திரும்பச் செலுத்த அல்லது ஒரு நிதிப் பொறுப்பை நிறைவு செய்யச் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நாணயம் அல்லது பணத்தாளைக் குறிக்கிறது.


2. 2011-ஆம் ஆண்டின் நாணயச் சட்டத்தின் (Coinage Act, 2011) பிரிவு 6-ன்கீழ் இந்திய அரசால் வெளியிடப்படும் நாணயங்கள், கட்டணங்கள் மற்றும் பரிவர்த்தனைகளுக்குச் செல்லும் செல்லுபடியாகும் செலாவணியாகக் (Legal Tender) கருதப்படுகின்றன. இருப்பினும், அந்த நாணயம் சேதமடைந்ததாகவோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட வரம்பைவிட அதிகளவில் எடை குறைந்ததாகவோ இருக்கக்கூடாது.

3. ஒரு ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புடைய நாணயங்களை ஒரு பரிவர்த்தனையில் அதிகபட்சமாக 1,000 ரூபாய் வரை மட்டுமே செல்லுபடியாகும் பணமாக செலுத்த முடியும். அதேபோல, 50 பைசா நாணயத்தை அதிகபட்சமாக 10 ரூபாய் வரை மட்டுமே செலுத்த பயன்படுத்த முடியும். இந்த வரம்புகளுக்கு அதிகமாக செலுத்தப்படும் நாணயங்களை ஏற்றுக்கொள்ளுமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. இருப்பினும், ஒருவர் தனது சொந்த விருப்பத்தின்பேரில் இந்த வரம்புகளுக்கு மேலாகவும் நாணயங்களை ஏற்றுக்கொள்ளலாம்.


4. இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ஒவ்வொரு பணத்தாளும், புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்பட்டதைத் தவிர, இந்தியா முழுவதும் செல்லுபடியாகும் சட்டப்பூர்வப் பணமாகும். அந்தத் தாளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை வரை அதை எந்தவொரு பணப்பரிவர்த்தனைக்கும் பயன்படுத்தலாம். மேலும், 1934-ஆம் ஆண்டின் ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் பிரிவு 26(2)-க்கு உட்பட்டு, இதற்கான முழு உத்தரவாதத்தையும் ஒன்றிய அரசு வழங்குகிறது. இதுதவிர, இந்திய அரசால் நேரடியாக வெளியிடப்படும் 1 ரூபாய் நோட்டுகளும் சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும் பணமாகும்.


5. இந்தியாவில் தற்போது 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் ஆகிய மதிப்புகளில் பணத்தாள்கள் வெளியிடப்படுகின்றன. இவை இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுவதால், இவை வங்கிப் பணத்தாள்கள் (Bank notes) என்று அழைக்கப்படுகின்றன.


6. 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் பணத்தாள்களின் ஆயுட்காலத்தோடு ஒப்பிடும்போது, அவற்றை அச்சடிப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஆகும் செலவு மிகவும் அதிகமாக இருந்ததால், அவை நிறுத்தப்பட்டு நாணயங்களாக மாற்றப்பட்டுள்ளன. இருப்பினும், முன்பு அச்சிடப்பட்ட பழைய 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் இருக்கலாம்; மேலும் அவை சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும்.


ரூபாய் தாள்களும் நாணயங்களும் எங்கு தயாரிக்கப்படுகின்றன?


7. பணத்தாள்கள் நான்கு அச்சகங்களில் அச்சிடப்படுகின்றன. அவற்றில் இரண்டு அச்சகங்கள் இந்திய அரசின்கீழ் இயங்கும் ‘Security Printing and Minting Corporation of India Limited’ (SPMCIL) நிறுவனத்தின் மூலமாகவும், மற்ற இரண்டு அச்சகங்கள் ரிசர்வ் வங்கியின் துணையமைப்பான ‘Bharatiya Reserve Bank Note Mudran Private Limited’ (BRBNMPL) மூலமாகவும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.


8. ‘Security Printing and Minting Corporation of India Limited’ நிறுவனத்தின் பணத்தாள் அச்சகங்கள் நாசிக் (மேற்கு இந்தியா) மற்றும் தேவாஸ் (மத்திய இந்தியா) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. ‘Bharatiya Reserve Bank Note Mudran Private Limited’ நிறுவனத்தின் இரண்டு அச்சகங்கள் மைசூர் (தெற்கு இந்தியா) மற்றும் சல்பானி (கிழக்கு இந்தியா) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.


9. ‘Security Printing and Minting Corporation of India Limited’ நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு நாணய அச்சகங்களில் நாணயங்கள் அச்சிடப்படுகின்றன. அந்த அச்சகங்கள் மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் நொய்டா ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 38-வது பிரிவின்படி, இந்த நாணயங்கள் இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக மட்டுமே புழக்கத்திற்கு வெளியிடப்படுகின்றன.


Original articles: RBI to introduce Polymer banknotes: What are ‘Plastic’ notes and why do they matter? -Roshni Yadav

Share:

யுரேனியம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து… -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


இந்தத் துறையில் சுரங்க மேம்பாடு மற்றும் செயல்பாட்டு முகமையின் (Mine Development and Operation Agency (MDO)) எந்தவொரு பங்கேற்பும் அணுசக்தித் துறையின் (Department of Atomic Energy (DAE)) கடுமையான மேற்பார்வையின் கீழ் இருக்க வேண்டும் என்றும் அந்தக்குழு பரிந்துரைத்தது.

 சுரங்க மேம்பாடு மற்றும் செயல்பாட்டு முகமை என்பது சுரங்க உரிமையாளரால் பொதுவாக அரசு அல்லது பொதுத்துறை நிறுவனம் மூலம்  நியமிக்கப்படும் ஒரு ஒப்பந்ததாரர் ஆகும். இந்த முகமை உரிமையாளரின் சார்பாக சுரங்கத்தை மேம்படுத்தி, இயக்கி, சுரங்கப் பணிகளை மேற்கொள்கிறார்.


 2047-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் குடிமை அணுமின் உற்பத்தித் திறனை தற்போதைய 8.7 ஜிகாவாட்-மின்சாரம் (GWe) அளவிலிருந்து 100 GWe-ஆக உயர்த்த நாடு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்தப் பரிந்துரை வந்துள்ளது.


இந்தியாவின் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் இயற்கையான யுரேனியத்தைப் பயன்படுத்துகின்றன. இவற்றிற்கான எரிபொருள் தேவைகள், அரசுக்குச் சொந்தமான 'யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்' (Uranium Corporation of India Ltd (UCIL)) சுரங்கங்களிலிருந்து கிடைக்கும் உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி ஆகியவற்றின் கலவை மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன.


தாராபூர் அணுமின் நிலையம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகிய இரண்டு இலகு நீர் அணு உலை (light water reactor (LWR)) வகைகளில் பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் முழுவதுமாக இறக்குமதி செய்யப்படுகிறது.


  நாட்டில் யுரேனியம் தாதுவை வெட்டி எடுத்துச் சுத்திகரிக்கும் அதிகாரத்தை மட்டுமே கொண்ட யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஜார்க்கண்ட் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பல நிலத்தடி மற்றும் திறந்தவெளிச் சுரங்கங்களையும் சுத்திகரிப்பு ஆலைகளையும் இயக்குகிறது. மேலும், அரசுக்குச் சொந்தமான இந்திய அணுசக்தி கழகத்தால் (Nuclear Power Corporation of India Limited (NPCIL)) இயக்கும் உலைகளுக்கான எரிபொருள் தயாரிப்பிற்காக, யுரேனியம் செறிவூட்டப்பட்ட கலவையை 'தேசிய எரிபொருள் வளாகம்' (National Fuel Complex (NFC)) நிறுவனத்திற்கு அனுப்புகிறது.




இந்தியா தற்போது கஜகஸ்தான், ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்வதாகவும், உஸ்பெகிஸ்தானுடனான நீண்டகால விநியோக (long-term supply contract) ஒப்பந்தம் 2026-ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும் என்றும் நாடாளுமன்றக் குழு குறிப்பிட்டது.


2026-ஆம் ஆண்டிற்குப் பிறகும் உஸ்பெகிஸ்தானிலிருந்து நீண்டகால யுரேனியம் விநியோகத்தைப் பெறுவதற்கான அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களை  அந்தக்குழு கோரியது.


 விநியோகத்தை பல்வகைப்படுத்தவும், விநியோகத்தடைகள் மற்றும் சந்தை அபாயங்களைக் குறைக்கவும், வெளிநாடுகளில் உள்ள யுரேனியம் சொத்துகளில் பங்குகளை வாங்குவதற்காக முன்மொழியப்பட்ட 'யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்'-தேசிய அனல் மின் கழகத்தின் கூட்டு முயற்சியை விரைவுபடுத்தவும் அந்தக்குழு பரிந்துரைத்தது.


'யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்'-தேசிய அனல் மின் கழகத்தின் கூட்டு முயற்சி முயற்சி தொடர்பான காலக்கெடு, எதிர்கால எரிபொருள் கொள்முதல் திட்டங்கள் மற்றும் அணுசக்தித் துறையின் மேற்பார்வையின்கீழ் உள்நாட்டு யுரேனியம் சுரங்கப் பணிகளில் சுரங்க மேம்பாடு மற்றும் செயல்பாட்டு முகமையின் பங்கேற்பிற்கான முன்மொழியப்பட்ட கட்டமைப்பு ஆகியவை குறித்து விரிவான அறிக்கையை அணுசக்தித்துறையிடமிருந்து அந்தக்குழு கோரியது.


— யுரேனியம் கனிமங்களுக்கான சுரங்கக் குத்தகை காலத்தை, தற்போதுள்ள குத்தகை பரப்பளவில் 10% வரை ஒரு முறை நீட்டிக்க அனுமதிக்கும் வகையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை (Mines and Minerals (Development and Regulation) Act (MMDR) சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அணுசக்தித் துறை அந்தக்குழுவிடம் தெரிவித்தது.


புதிதாகக் கண்டறியப்பட்ட அல்லது தாதுப்படிவுகளின் ஆழமான பகுதிகள், தற்போதுள்ள குத்தகை எல்லைகளை தாண்டி நீண்டு காணப்படும் சூழல்களைக் கையாள்வதே இந்த மாற்றத்திற்கான நோக்கமாகும். தற்போதைய நடைமுறையின்படி, இத்தகைய விரிவாக்கங்களுக்கு தனித்தனி குத்தகைகள் மற்றும் அனுமதிகள் பெற வேண்டியுள்ளது. இது திட்டங்களின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சாத்தியக்கூறுகளை (techno-economic viability) பாதிக்கக்கூடும். குறிப்பாக, 600 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் அமைந்துள்ள கனிமப்படிவங்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.


உங்களுக்குத் தெரியுமா?


யுரேனியம் என்பது இயற்கையாகக் காணப்படும் ஒரு கதிரியக்கத் (radioactive element) தனிமமாகும். இயற்கையாக யுரேனியத்தில்  மூன்று ஐசோடோப்புகள் உள்ளன: அவை யுரேனியம்-234 (U-234), யுரேனியம்-235 (U-235) மற்றும் யுரேனியம்-238 (U-238) ஆகும். இவற்றில் U-235 அணுக்களின் பிளவு (fission) மூலம் அணுசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.  இருந்த போதிலும், இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியத்தில்  U-235 ஐசோடோப்பு 0.72 சதவீதம் மட்டுமே உள்ளது. பெரும்பாலான அணு உலைகளுக்கும் அவற்றின் எரிபொருள்களுக்கும்  ஐசோடோப்  அதிக அளவு தேவைப்படுகிறது.


Original articles: about uranium and its significance. -Roshni Yadav

Share:

மும்பையின் நெரிசலைக் குறைக்க நவி மும்பை தவறிவிட்டது : 'மூன்றாவது மும்பை' (Third Mumbai) அதைச் செய்ய முடியுமா? - சபா விரானி

 'மூன்றாவது மும்பை' (Third Mumbai) அல்லது கர்னாலா-சாய் சிர்னர் புதிய நகரம் (Karnala-Sai Chirner (KSC) New Town) என்பது ராய்காட் மாவட்டத்தில் உள்ள 124 கிராமங்களை உள்ளடக்கிய 323.44 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமையவுள்ளது. இப்பகுதி அடல் சேது (Atal Setu) மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் (Navi Mumbai International Airport (NMIA)) முக்கிய மண்டலத்திற்குள் (influence zone) அமைந்துள்ளது.


1975-ல் மும்பை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம் (Mumbai Metropolitan Region Development Authority (MMRDA)) உருவாக்கப்பட்டபோது, ​​பரந்த மும்பை பெருநகரப் பகுதிக்கான (Mumbai Metropolitan Region (MMR)) திட்டமிடலை வழிநடத்தும் பொறுப்பு இந்த ஆணையத்திற்கு வழங்கப்பட்டது. இன்று இப்பகுதி 9 மாநகராட்சிகள், 9 நகராட்சிகள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியதாக விரிவடைந்துள்ளது. ஆனால், பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் (MMRDA) தற்போதைய நிலையை அடைய பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. பல ஆண்டுகளாகச் சிறிய அளவிலான திட்டங்களைச் செயல்படுத்தி வந்த நிலையில், இப்போது ஒரு முழு நகரத்தையே திட்டமிடும் மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது. ராய்காட் மாவட்டத்தின் உரன், பென் மற்றும் பன்வெல் தாலுகாக்களில் உள்ள 124 கிராமங்களை உள்ளடக்கிய 323.44 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான 'மூன்றாவது மும்பை' (Third Mumbai) அல்லது கர்னாலா-சாய் சிர்னர் புதிய நகரத்திற்கான (Karnala-Sai Chirner (KSC) New Town) பணிகளை சூழலை ஏற்படுத்தியுள்ளது.


அடல் சேது மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் (NMIA) பிரபல முக்கிய மண்டலத்தில் அமைந்திருப்பதால், இப்பகுதிக்காகப் பல லட்சியத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் மூலம் தயாரிக்கப்படும் முதன்மைத் திட்டம் (masterplan) முதல் டாவோஸ் (Davos) மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான முதலீடுகளும் இதில் அடங்கும்.

இந்த யோசனை எப்படி உருவானது?, தற்போதைய மேம்பாட்டுப் பணிகள் எந்த நிலையில் உள்ளன? மற்றும் இதன் சாத்தியக்கூறுகள் குறித்து நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்? என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.


'மூன்றாவது மும்பை' (Third Mumbai) குறித்த யோசனை


தெற்கு மும்பையையும், நவி மும்பையையும் இணைக்கும் 21.8 கி.மீ நீளமுள்ள கடல் பாலமான 'அடல் சேது' (Atal Setu), 2024-ன் தொடக்கத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படவிருந்த சமயத்தில், 'மூன்றாவது மும்பை' (Third Mumbai) குறித்த யோசனையின் வடிவம் பெறத் தொடங்கியது. இந்தப் பாலமும் (அடல் சேது), நவி மும்பை சர்வதேச விமான நிலையமும் (Navi Mumbai International Airport (NMIA)) ராய்காட் பகுதியின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று கருதப்பட்டது. பொது உள்கட்டமைப்பு வசதிகளால் உருவாகும் நிலத்தின் மதிப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், ரூ. 17,000 கோடி மதிப்பிலான இத்திட்டத்தை பொருளாதாரரீதியாகச் சாத்தியமாக்குவதற்கும், இத்தகைய உள்கட்டமைப்பால் ஈர்க்கப்படவுள்ள வளர்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் திட்டமிடுவதற்கும் 'மூன்றாவது மும்பை' (Third Mumbai) ஒரு கருவியாக அமையும் என்று கருதப்பட்டது.


மார்ச் 2024-ல், மகாராஷ்டிராவின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, கர்னாலா-சாய் சிர்னர் புதிய நகரத்தின் (Karnala-Sai Chirner (KSC) New Town) வரைவுத் திட்டங்கள் குறித்த ஆலோசனைகளையும் கருத்துக் கணிப்புகளையும் பொதுமக்களிடமிருந்து கோரியது. இதனைத் தொடர்ந்து, இப்பகுதியை முழுமையாகப் புதிதாக உருவாக்கும் பொறுப்புடன், பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் (MMRDA) அமைப்பை 'புதிய நகர மேம்பாட்டு ஆணையம்' (New Town Development Authority (NTDA)) என நியமித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2013-ல் அறிவிக்கப்பட்ட 'நவி மும்பை விமான நிலையத் தாக்கம் கொண்ட அறிவிக்கப்பட்ட பகுதி' (Navi Mumbai Airport Influence Notified Area(NAINA)) மற்றும் 'கோப்டா புதிய நகர அறிவிக்கப்பட்ட பகுதி' (Khopta New Town Notified Area) ஆகியவற்றின் சில பகுதிகள் இந்த புதிய நகரத் திட்டத்தில் இணைக்கப்பட்டன.




தற்போதைய நிலை


இக்கருத்தாக்கத்தை ஒரு திட்டமாகவும், பின்னர் அத்திட்டத்தை நிஜமாகவும் மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


முதலாவதாக, நிலப் பயன்பாட்டுத் திட்டம் (land use plan) உருவாக்கப்படுகிறது. இது அப்பகுதியில் தற்போது என்னென்ன உள்ளன என்பதை விவரிக்கும் ஒரு விரிவான வரைபடமாகும். இப்பகுதியின் பெரும்பகுதி கிராமங்கள், காடுகள் மற்றும் பசுமைப் பகுதிகளாக இருப்பதால், அவை அப்படியே தக்கவைக்கப்படும். இதனால், மேம்பாட்டிற்கு உகந்த நிலப்பரப்பு சுமார் 104 சதுர கிலோமீட்டராகக் குறைகிறது. அடுத்ததாக, விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன. மேலும், ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளைக்கு (உரான் அருகே உள்ள நவா ஷேவாவில் அமைந்துள்ளது) அருகாமையில் இருப்பதால் அங்கு பல கிடங்குகள் (warehouses) உள்ளன. கொள்கைரீதியான முடிவு எடுக்கப்படும் வரை இவை இப்போதைக்கு மாற்றப்படமாட்டாது.


நிலம் கையகப்படுத்தும் செயல்முறை (land acquisition process) மார்ச் 2026-ல் தொடங்கப்பட்டு, அதற்கான இழப்பீட்டு வழிமுறைகள் வகுக்கப்பட்டன. கிராம மக்கள் இழப்பீடு பெறுவதற்குப் பல விருப்பத் தேர்வுகள் உள்ளன. மேம்படுத்தப்பட்ட நிலத்தில் 22.5% பங்கு, பணமாக இழப்பீடு பெறலாம் அல்லது 'மாற்றத்தக்க மேம்பாட்டு உரிமைகள்' (Transferable Development Rights (TDR)) அல்லது 'தளப் பரப்பு குறியீடு' (Floor Space Index (FSI)) வடிவில் இழப்பீடு பெறுதல் ஆகியவை இதில் அடங்கும். தளப் பரப்பு குறியீடு (FSI) வடிவிலான இழப்பீடு அதே நிலத்தில் கூடுதல் கட்டிட உரிமைகளை நேரடியாக வழங்குகிறது. அதே சமயம், மாற்றத்தக்க மேம்பாட்டு உரிமைகள் (TDR) என்பது சான்றிதழ் மூலம் FSI உரிமைகளை (credits) வழங்குகிறது. இதனை வேறொரு நிலத்தில் பயன்படுத்தலாம் அல்லது திறந்த சந்தையில் விற்கலாம்.


ஏப்ரல் மாதத்தில், நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான தங்கள் கருத்துக்களை அல்லது கருத்துகணிப்புகளைச் சமர்ப்பிக்குமாறு விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களை அழைப்பதன் மூலம் பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம் (MMRDA) முதற்கட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியது. இத்திட்டத்தை "நில அபகரிப்பு" (land grab) என்று கூறி பல கிராமங்கள் எதிர்ப்பதால், இந்தச் செயல்முறை மந்தமாகவே உள்ளது.


நிலப் பயன்பாட்டுத் திட்டத்தின் (land use plan) இறுதிப் பணிகளில் கள ஆய்வு (அதாவது "ground truthing" எனப்படும் நிலத்தின் தற்போதைய நிலையை நேரில் சரிபார்த்தல்) அடங்கியுள்ளதால், எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்களால் இத்திட்டம் தாமதமடைந்துள்ளது. இருப்பினும், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நிலப் பயன்பாட்டுத் திட்டம் (land use plan) தயாராகிவிடும் என்றும், அதைத் தொடர்ந்து திட்டமிடல் பணிகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேம்படுத்தப்படக்கூடிய பகுதிகளுக்கான பிரம்மாண்டமான திட்டத்தை உருவாக்க, பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம் (MMRDA) சிங்கப்பூரைச் சேர்ந்த நகர்ப்புற மேம்பாட்டு ஆலோசனை நிறுவனமான 'சுர்பானா ஜூரோங்' (Surbana Jurong) நிறுவனத்தை நியமித்துள்ளது. இந்நிறுவனம் 'மூன்றாவது மும்பை'யின் (Third Mumbai) வரைபடத் திட்டத்தை (layout) வடிவமைப்பதோடு, போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் திட்டமிடும். இப்பணிகள் தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் நிறைவடையும்.




இப்பகுதிக்கான தொலைநோக்கு பார்வை


கடந்த காலங்களில், நவி மும்பை போன்ற திட்டமிடப்பட்ட மையங்கள் மூலம் மும்பையின் நெரிசலைக் குறைக்க அரசாங்கமும் நகரத் திட்டமிடுபவர்களும் முயன்றனர். விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தும் நோக்கில் 'நைனா-(நவி மும்பை விமான நிலையத் தாக்கம் கொண்ட அறிவிக்கப்பட்ட பகுதி)' (Navi Mumbai Airport Influence Notified Area(NAINA)) திட்டமும் உருவாக்கப்பட்டது.


நவி மும்பையில் தற்போது கணிசமான மக்கள் வசித்து வந்தாலும், அது உருவான விதம் குறித்து நகர்ப்புறத் திட்டமிடுபவர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். 1970-களின் முற்பகுதியில் ஷிரிஷ் படேல் மற்றும் சார்லஸ் கொரியா போன்ற நகர்ப்புறத் திட்டமிடல் நிபுணர்களால் நவி மும்பைக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. போக்குவரத்து மையங்களுக்கு அருகில் அதிக தளப் பரப்பு குறியீடு (FSI) மற்றும் தொலைதூரப் பகுதிகளில் குறைந்த தளப் பரப்பு குறியீடு (FSI) கொண்ட ஒரு கட்டமைக்கப்பட்ட நகரத்தை அவர்கள் கற்பனை செய்திருந்தனர். இருப்பினும், இந்தத் திட்டம் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை. நவி மும்பை தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பல ஆண்டுகள் தேவைப்பட்டன. சமீபத்திய ஆண்டுகளில்தான் அங்கு குடியிருப்பு விற்பனையும், விலையும் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.


"நவி மும்பைக்கான திட்டமிடல் ஆர்வத்தில், 'விரைவுப் பொதுப் போக்குவரத்து' (mass rapid transport) என்ற மிக முக்கியமான அம்சம் விடுபட்டுவிட்டது," என்று ரியல் எஸ்டேட் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான 'நைட் ஃபிராங்க்'கைச் (Knight Frank) சேர்ந்த குலாம் ஜியா கூறினார். "இன்று அங்கு மக்கள் வசித்தாலும், அவர்களில் பெரும்பாலோர் வேலைக்காக மும்பை நகருக்குச் செல்ல உள்ளூர் இரயில்களையே நம்பியுள்ளனர். ஏனெனில், நவி மும்பையில் வேலைவாய்ப்புகள் போதுமான அளவு அதிகரிக்கவில்லை."


1990-களில்தான் உள்ளூர் இரயில் கட்டமைப்பு நவி மும்பை வரை நீட்டிக்கப்பட்டது. ஜியாவின் கூற்றுப்படி, இதுவும் போதுமானதாக இல்லை. "மக்கள் தினமும் நீண்டதூரப் பயணத்தை வசதியாக மேற்கொள்ள, மணிக்கு சுமார் 200 கி.மீ வேகத்தில் செல்லும் விரைவுப் பொதுப் போக்குவரத்து அமைப்பு தேவை," என்று அவர் கூறினார். 'அடல் சேது' (Atal Setu) பாலமும் பல ஆண்டுகள் தாமதமாகவே வந்துள்ளது. மேலும், அதைப் பயன்படுத்தும் வசதி ஒரு சிலருக்கு மட்டுமே உள்ளது.


ஒரு துணை நகரம் (satellite city) வெற்றிகரமாகச் செயல்பட வேண்டுமானால், அங்கு வசிக்கும் மக்களுக்கு முதன்மை நகரத்துடனான (mainland) இணைந்திருப்பார்கள் என்பதை உணரும்போதுதான் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று ஜியா கூறினார். மக்கள் தொடர்ந்து மும்பையில் வேலை செய்யவும் குடும்பத்துடன் வசிக்கவும் செய்வார்கள். ஆனால், சிறந்த வாழ்க்கை முறை மற்றும் குறைந்த வாடகை காரணமாக மக்கள் தொலைதூரப் பகுதிகளில் குடியேற விரும்பினால், அவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்க விரைவான பொதுப் போக்குவரத்து வசதி அவசியம். இன்றும் கூட, பன்வேல் (Panvel) பகுதிக்கு செல்லும் உள்ளூர் இரயில்கள் குறைவான எண்ணிக்கையிலேயே இயக்கப்படுகின்றன. மேலும், பயண நேரமும் அதிகமாக உள்ளது. மக்கள் அங்கு குடியேறத் தொடங்கினால், அலுவலகங்களும் அப்பகுதியைத் தங்கள் செயல்பாடுகளுக்குப் பரிசீலிக்கத் தொடங்கும். மறுபுறம், 'நைனா' (NAINA) திட்டப்பகுதி இப்போதுதான் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது. இத்திட்டத்திற்கான மாநில அரசுக்குச் சொந்தமான திட்டமிடல் அமைப்பான 'சிட்கோ-நகரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக் கழகம்' (City and Industrial Development Corporation(CIDCO)), நகரின் ஒரு பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சாலைப் பணிகளைத் தொடங்க சமீபத்தில் ரூ.8,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளியை (tender) கோரியுள்ளது.


முதலீட்டாளர்களின் மனநிலை


'மூன்றாவது மும்பையில்’ (Third Mumbai) வீடு வாங்க ஆர்வமுள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களை ஈர்க்கும் முயற்சியில் ஆரம்பக்கட்ட முதலீட்டாளர்கள் ஏற்கனவே இறங்கிவிட்டனர். தற்போதைய நிலையில், சிறந்த விலைக்குப் பேரம் பேசும் நம்பிக்கையில், முதலீட்டாளர்கள் நில உரிமையாளர்களுடன் நேரடியாகவே பரிவர்த்தனை செய்ய வேண்டியுள்ளது. ஒருமுறை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம் (MMRDA) நிலத்தைக் கையகப்படுத்திய பிறகு, முதலீட்டாளர்கள் தங்கள் உரிமைகோரல்களை முன்வைக்க பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தை (MMRDA) அணுகுவார்கள்.


ஜியா (Zia) கூறுகையில், "அடிப்படை வசதிகள் மற்றும் சிறந்த பொதுப் போக்குவரத்து வசதிகளை உறுதி செய்வதற்கான முன்னெடுப்புகளை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம் (MMRDA) மேற்கொண்டால், இப்பகுதி இயல்பாகவே வளர்ச்சியடையும்," என்று குறிப்பிட்டார். மும்பைக்கும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கும் (NMIA) இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. மேலும், முன்மொழியப்பட்ட மும்பை-ஹைதராபாத் அதிவேக ரயில் பாதையில் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை (NMIA) ஒரு நிறுத்தமாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.


பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணைய (MMRDA) அதிகாரிகள் கூறுகையில், "நாங்கள் இப்போது 'மூன்றாவது மும்பை' பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், ஒரு நகரத்தை உருவாக்குவது என்பது நீண்டகாலத் திட்டமாகும். அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் உடனடி பலன்கள் ஏதும் கிடைக்காது. ஆனால், அதற்குப் பிறகு, அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக அமைக்கப்பட்டதும், அதற்கான பலன்கள் பெருமளவில் கிடைக்கத் தொடங்கும்," என்று தெரிவித்தனர்.


Original articles: Navi Mumbai couldn’t decongest Mumbai. Can Third Mumbai do so? -Sabah Virani

Share:

தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியலமைப்புத் திருத்தம் எதுவும் இல்லையென்றால் என்ன நடக்கும்? -வர்கீஸ் கே ஜார்ஜ்

 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புத்தரவுகள் வெளியிடப்பட்ட பிறகு, அரசியலமைப்பின் 81 மற்றும் 82-வது பிரிவுகளில் திருத்தம் செய்யப்படாவிட்டால், அந்தப்பிரிவுகளில் உள்ள தற்போதைய விதிகளின் அடிப்படையில் புதிய தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்களவைத்தொகுதிகள் மாநிலங்களுக்கு மறு அளவீடு  செய்யப்படும்.


தற்போதைய செய்தி: மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்யும் நடவடிக்கையைத் புதிதாகத் தொடங்க பாரதிய ஜனதா கட்சி ஆர்வமாக உள்ளது. இதற்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற அந்த  கட்சி முயற்சித்து வருகிறது. 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தத்திருத்த மசோதாவைக்கொண்டுவந்தபோதிலும், அதை நிறைவேற்ற முடியவில்லை. மத்திய அரசு தனது துல்லியமான முன்மொழிவுகளை இதுவரை வெளியிடவில்லை. முந்தைய கூட்டத்தொடரில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் முன்வைத்த முன்மொழிவுகள் பின்வருமாறு:


1) மக்களவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையை அதிகபட்சமாக 850 ஆக அதிகரித்தல்; 2) 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடு முழுவதும் தொகுதிகளைப் புதிதாக மறுவரையறை செய்து, இந்த இடங்களை மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்தளித்தல் மற்றும் 3) மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கு ஒதுக்குதல்


தற்போதைய அரசியலமைப்பு விதிகளின்படி, 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் வெளியிடப்பட்ட பின்னரே புதிய தொகுதி மறுவரையறைக்கான பணிகளை மேற்கொள்ள முடியும். அதனுடன் சேர்த்து பெண்களுக்கான இடஒதுக்கீட்டையும் நடைமுறைப்படுத்த முடியும்.


தொகுதி வரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்தம் எதுவும் செய்யப்படாவிட்டால் என்ன நடக்கும்?


புதிய தொகுதி வரையறை நடைபெறுவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் தேவையில்லை. 2027-ஆம் ஆண்டு  மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தரவுகள் வெளியிடப்பட்ட உடனேயே புதிய தொகுதி வரையறை தொடங்கும். அடுத்த தொகுதி மறுவரையறைக்கான விதிமுறைகள் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள  81 மற்றும் 82-வது பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன. தொகுதி மறுவரையறை தொடர்பான தற்போதைய அரசியலமைப்பு விதிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டிய சூழலில் மட்டுமே, அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்படும்.


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 81 மற்றும் 82-வது பிரிவுகளின்படி, 2026-ஆம் ஆண்டிற்குப்பிறகு நடக்கும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகள் வெளியிடப்பட்டதும் இரண்டு நிகழ்வுகள் கட்டாயமாக நடைபெறும்.


முதலாவது, நடத்தப்பட்ட மக்கள் தொகைக்கணக்கெடுப்பில் பதிவாகும் மக்கள் தொகையின் அடிப்படையில், தற்போதைய மக்களவை உறுப்பினர் இடங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே மறுபங்கீடு செய்வதாகும்.   அது 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பாக இருக்கும். இரண்டாவது, ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் தனித்தனி மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதாகும்.


அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் செய்யப்படாவிட்டால், 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் தரவுகள் வெளியிடப்பட்ட பின்னரே தொகுதி மறுவரையறைப் பணி தொடங்கப்பட வேண்டும்.


2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் புதிய தொகுதி மறுவரையறைப் பணிகளை, 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே நிறைவு செய்ய முடியுமா?


நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம். கடந்த காலங்களில், தொகுதி மறுவரையறை பணிகள் பல ஆண்டுகள் நீடித்தன. 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப்பிறகு, உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி குல்தீப் சிங் தலைமையில், 2002-ஆம் ஆண்டு ஜூலை 12-அன்று கடைசியாக தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையத்தின் பரிந்துரைகள் 2008-ஆம் ஆண்டில்  நடைமுறைக்கு வந்தன. அதனைத் தொடர்ந்து, புதிதாக வரையறுக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் 2009-ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன.


கடைசியாக மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையின்போது, ​​ மாநிலங்களுக்கான தனி இடங்கள் மறுபகிர்வு செய்யப்படவில்லை. மாறாக, ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் இருந்த தொகுதிகளின் எல்லைகள் மட்டுமே மாற்றியமைக்கப்பட்டன. மாநிலங்களுக்கிடையிலான மக்களவை இடங்கள் கடைசியாக 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் 1973-ல் மறுபகிர்வு (reallocated) செய்யப்பட்டன. அந்த விகிதாச்சாரம் இன்றும் தொடர்கிறது.


2027-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், தரவு சேகரிப்புப் பணிகள் முழுமையாக மின்னணுமயமாக்கப்பட்டுள்ளன. கோட்பாட்டளவில், மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுப் பகுப்பாய்வு மற்றும் தொகுதி மறுவரையறை செயல்முறை போன்றவை முன்பைவிட விரைவாக நடைபெற வாய்ப்புள்ளது. 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இந்தப் பணிகள் நிறைவடையாவிட்டால், பணிகள் அடுத்த மக்களவை மற்றும் அடுத்த அரசாங்கத்தின் பதவிக்காலத்திலும் தொடரக்கூடும்.


கடைசி தொகுதி மறுவரையறை ஆணையம் ஏ. பி. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்டது. பணிகள், 2004-ஆம் ஆண்டு மக்களவைத்தேர்தல் இடையில் நடைபெற்ற நிலையில், மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் முதல் பதவிக்காலத்தில் நிறைவடைந்தன. அடுத்த தொகுதி மறுவரையறை ஆணையத்தின் விவகாரத்திலும் இதே நிலை ஏற்படலாம்.


அரசியலமைப்புத் திருத்தம் இல்லாத பட்சத்தில், அடுத்த தொகுதி மறுவரையறை ஆணையத்தின் அதிகாரம் என்னவாக இருக்கும்?




பிரிவுகள் 81 மற்றும் 82-ன் தற்போதுள்ள விதிகளின்கீழ் ஒரு புதிய தொகுதி மறுவரையறை தொடங்கப்பட்டால், பின்வரும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.


தற்போது, ​​மாநிலங்களுக்கிடையேயான 543 மக்களவைத் தொகுதிகளின் பங்கீடு, 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த அடிப்படை அளவுகோல் 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகையிலிருந்து, 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பதிவாகும் மக்கள்தொகைக்கு மாற்றப்படும்போது, தொகுதிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.


பொதுவாகப் பார்த்தால், தென் மாநிலங்கள்  தங்களிடம் உள்ள தொகுதிகளை இழக்கக்கூடும். அதேவேளையில், இந்தி பேசும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கூடுதல் தொகுதிகளைப் பெறக்கூடும். மக்களவையின் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 550 வரை அதிகரிக்கக்கூடும். நாடு முழுவதும் உள்ள மக்களவைத் தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.


எனவே, எந்தவொரு அரசியலமைப்பு திருத்தமும் இல்லாத பட்சத்தில், பின்வரும் படிநிலைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது: முதலாவதாக, மாநிலங்களுக்கு இடையே மக்களவை இடங்களை மறுஒதுக்கீடு செய்தல்; இரண்டாவதாக, மாநிலங்களுக்குள் தொகுதிகளை மறுவரையறை (delimitation) செய்தல் மற்றும் மூன்றாவதாக, பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துதல், இவை அனைத்தும் 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்போடு இணைக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு மாநிலத்திற்குமான இட ஒதுக்கீடு எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது?


இந்தியாவை ஒரு பெரிய கூட்டுக் குடும்பமாகவும், மாநிலங்களை அந்தக் கூட்டுக் குடும்பத்தின் அங்கங்களாக உள்ள தனித்தனி குடும்ப அலகுகளாகவும் கற்பனை செய்து பாருங்கள். அந்தக் கூட்டுக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு ஏக்கர் நிலம் சொந்தம் என்று வைத்துக்கொள்வோம். ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஐந்து ஏக்கர், ஏழு உறுப்பினர்களைக்கொண்ட மற்றொரு குடும்பத்திற்கு ஏழு ஏக்கர்களையும் என அந்தந்தக் குடும்பங்கள் நிலத்தைப் பெற்றன. ஒவ்வொரு குடும்பமும் தனது பங்கை அதன் உறுப்பினர்களிடையே பிரித்துக் கொண்டது. அந்த நிலையில், அனைவருக்கும் ஏறக்குறைய சமமான பங்கு கிடைத்தது. அரசியல்ரீதியாக, ஒவ்வொரு வாக்கும் ஏறக்குறைய சமமான மதிப்பைக் கொண்டிருந்தது. ஆனால், காலம் கடந்தது. சில குடும்பங்கள் மற்ற குடும்பங்களைவிட மிக வேகமாக வளர்ந்தன. பெரிய குடும்பங்களில், அதே நிலத்தை அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதே சமயம், சிறிய குடும்பங்களில் குறைவான நபர்களே அந்த நிலத்தைப் பகிர்ந்துகொண்டனர். இதன் விளைவாக, ஒவ்வொரு நபருக்கும் கிடைத்த நிலப் பங்கீட்டின் அளவில் வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கின.


இந்தியாவில் வாக்குகள் மற்றும் பிரதிநிதித்துவம் தொடர்பான விவகாரத்தில் ஒரு வகையில் இதுதான் நிகழ்ந்துள்ளது. 1967-ஆம் ஆண்டில், பெரும்பாலான முக்கிய மாநிலங்களில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 4 முதல் 5 லட்சம் வாக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆனால் இன்று, கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 14 லட்சம் வாக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அதேவேளையில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இந்த எண்ணிக்கை 19 லட்சமாக உள்ளது.


மக்கள்தொகையைக் கட்டுக்குள் கொண்டுவந்து நிலைப்படுத்திய மாநிலங்களைத் தண்டித்துவிடக் கூடாது என்ற நோக்கத்துடன், 1976 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் அனைத்துக்கட்சிகளும் எடுத்த திட்டமிட்ட முடிவின் விளைவே இந்த வேறுபாடாகும். அரசியலமைப்புச் சட்டம் இது போன்ற நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கிறது. மக்களவைத் தொகுதிகளின் அளவு, ஒரு தொகுதிக்கு 18 லட்சம் வாக்காளர்கள் என்ற தேசிய சராசரியை அடிப்படையாகக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. 81-வது பிரிவு, மாநிலங்களுக்கு இடையே "முடிந்தவரை" (so far as practicable), ஒரு தேசிய சராசரியின் அடிப்படையில் (national average) இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது.


இத்தகைய நெகிழ்வுத்தன்மை, ஒன்றுக்கொன்று முரண்படக்கூடிய இரண்டு கோட்பாடுகளுக்கு இடையே சமநிலையைப் பாதுகாக்க உதவுகிறது: அவை கூட்டாட்சி அல்லது மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் மக்களாட்சி அல்லது 'ஒரு வாக்கு, ஒரு மதிப்பு' என்ற கொள்கையாகும்.


மேலும் அதுதான், தொகுதி மறுவரையறை குறித்த தற்போதைய விவாதம் தீர்க்க வேண்டிய முக்கிய முரண்பாடாகும்.


'அரசியல் ஆதாயத்திற்கான தொகுதி எல்லை மறுவரையறை' (Gerrymandering) என்றால் என்ன, அது தேர்தல் முடிவுகளை எவ்வாறு பாதிக்கக்கூடும்?


'ஒரு நபர், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு' என்ற ஜனநாயகக் கொள்கையைப் பற்றிப் பேசும்போது, ​​ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் ஏறக்குறைய சமமான எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இருக்க வேண்டும் என்பது முதல் தேவையாகும். ஆனால், வாக்காளர்களின் எண்ணிக்கை சமமாக இருப்பது மட்டுமே ஒவ்வொரு வாக்கிற்கும் சமமான மதிப்பை உறுதி செய்துவிடாது. ஏன்? ஏனெனில், தொகுதிகளில் சமமான எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இருந்தாலும், அந்த வாக்காளர்கள் தொகுக்கப்படும் விதம் தேர்தல் முடிவுகளைப் அதிக அளவில் பாதிக்கக்கூடும்.


ஒரு எளிய உதாரணத்தைக் கருத்தில் கொள்வோம் படம் 2-ன் மூலம் தெரிந்து கொள்வோம். மொத்தம் 50 வாக்காளர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இதில் 'கட்சி A'-க்கு 20 ஆதரவாளர்களும், 'கட்சி B'-க்கு 30 ஆதரவாளர்களும் உள்ளனர். தலா 10 வாக்காளர்களைக் கொண்ட ஐந்து தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் ஒரு பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.


முதல் நிலையில், ஐந்து தொகுதிகளிலும் வாக்காளர்கள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுகிறார்கள். இதன் முடிவு, ஒட்டுமொத்த வாக்குப் பங்கைப் பொதுவானதாகக் காட்டுகிறது. கட்சி A மற்றும் கட்சி B ஆகியவை தங்களுக்கு உள்ள ஆதரவின் விகிதத்திற்கு ஏற்றவாறு தொகுதிகளில் வெற்றி பெறுகின்றன.


இரண்டாவது சூழ்நிலையில், கட்சி A-வின் வாக்காளர்கள் பல்வேறு தொகுதிகளில் பரவலாகவும், குறைந்த எண்ணிக்கையிலும் பிரிக்கப்படுகிறார்கள். இது சிதறடித்தல் (Cracking) எனப்படுகிறது. கட்சி A-க்கு மொத்த வாக்காளர்களில் 40% ஆதரவு இருந்தாலும், ஒரு தொகுதியைக்கூட வெல்லத் தேவையான அளவுக்கு ஆதரவு கிடைக்காமல் போகலாம். இதனால், 40% வாக்காளர்களுக்கு எந்தவிதப் பிரதிநிதித்துவமும் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படலாம்.


மூன்றாவது சூழ்நிலையில், 'கட்சி B'-யின் வாக்காளர்கள் ஒரு சில தொகுதிகளில்  அதிக அளவில் குவிந்துள்ளனர். இது 'குவித்தல் (packing) என்று அழைக்கப்படுகிறது. 'கட்சி B' அத்தொகுதிகளில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், அதன் வாக்குகள் வீணடிக்கப்படுகின்றன. இதனால், ஒட்டுமொத்த ஆதரவாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும் 'கட்சி A'-யால் அதிக இடங்களைக் கைப்பற்ற முடிகிறது.


தொகுதி எல்லைகள் வரையறுக்கப்படும் விதம், ஜனநாயகப்பிரதிநிதித்துவத்தையும் (democratic representation) தேர்தல் முடிவுகளையும் ஆழமாகத் தீர்மானிக்கக்கூடியாதகும்.


Original articles: What happens if there is no Constitutional Amendment on Delimitation? -Varghese K  George

Share:

பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பழங்குடியினருக்கான (ST) பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர் (Creamy Layer) முறைக்கு ஒன்றிய அரசு காட்டும் எதிர்ப்பில் என்னென்ன அடங்கியுள்ளன? -அபினய் லக்ஷ்மன்

 இந்திரா சாவ்னி வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடமிருந்து (OBC) 'கிரீமி லேயர்' (creamy layer - பொருளாதாரரீதியாக முன்னேறிய பிரிவு) பிரிவினரைத் தனியாகப் பிரிப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை இந்திய அரசு வெளியிட்டது. இதன் விளைவாக, உட்பிரிவு (sub-categorisation) குறித்த கருத்தாக்கமும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) வகைப்பாட்டையும் தாண்டி விரிவடைந்தது.


தற்போதைய நிகழ்வு :


பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) ஆகிய இடஒதுக்கீடு பிரிவுகளிலிருந்தும் (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) உள்ளது போல) 'பொருளாதாரத்தில் முன்னேறிய' பிரிவினரை விலக்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை எதிர்த்து, ஒன்றிய அரசு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. அதாவது, இடஒதுக்கீடு பிரிவுகளுக்குள் இத்தகைய விலக்கு முறையை அமல்படுத்தும் கோட்பாடு பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) வகைப்பாடுகளுக்குப் பொருந்தாது என்று அது கூறியது.


இதற்கு என்ன காரணம்?


உச்சநீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ள மனுக்கள், பெரும்பாலும் ஆகஸ்ட் 2024-ல் உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு முக்கியத் தீர்ப்புக்குப் (தவிந்தர் சிங் தீர்ப்பு) பிறகே தாக்கல் செய்யப்பட்டன. அந்தத் தீர்ப்பு, பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) என வகைப்படுத்தப்பட்ட சமூகங்களின் "பன்முகத்தன்மையையும்" (heterogeneity), மேலும் அரசியலமைப்புப் பட்டியல்களில் உள்ள சமூகங்களிடையே நிலவும் படிநிலை அடிப்படையிலான பின்தங்கிய நிலையையும் அங்கீகரித்தது. அவ்வாறு செய்தபோது, ​​அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தொடர்ந்து பட்டியல்களில் ஒப்பீட்டளவில் குறைவான அளவில் பின்தங்கிய நிலை கொண்ட சமூகங்களால், ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன்கள் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, தற்போதுள்ள பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் பட்டியல்களுக்குள் துணைப் பிரிவுகளை உருவாக்க மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கியது.


இருப்பினும், இந்தத் தீர்ப்பில், ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர். கவாய், தாம் எழுதிய கருத்தில், படிநிலை சமத்துவமின்மை மற்றும் பொதுக் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இடஒதுக்கீட்டின் பலன்களிலிருந்து சில பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் சமூகங்கள் தொடர்ந்து ஓரங்கட்டப்படும் பிரச்சனையானது, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திரா சாஹ்னி தீர்ப்பில் (1992) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக (OBC) அறிமுகப்படுத்தப்பட்டதைப் போல, இந்தப் பட்டியல்களுக்குள்ளும் "பொருளாதாரத்தில் முன்னேறிய " பிரிவினரை விலக்கும் ஒரு கருத்தை அறிமுகப்படுத்துவதை அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலிக்கத் தொடங்க வேண்டும் என்பதை அவசியமாக்குகிறது என்று குறிப்பிட்டார்.


இந்தக் குறிப்பிட்ட கருத்துகணிப்பு, நாடு முழுவதும் உள்ள பல பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சங்கங்களிடமிருந்து எதிர்ப்புகளைத் தெரிவித்தன. மேலும், ஒன்றிய அரசும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டிற்கு 'பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர்' என்ற கருத்தை அறிமுகப்படுத்துவதற்கு எதிராக உடனடியாக ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுத்தன. ஆனால் இது, பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் இட ஒதுக்கீட்டிற்கும் இந்தக் கருத்தாக்கத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என்று உத்தரவு கோரும் மனுக்களுக்கு உதவியது. இது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பத் தூண்டியது. மேலும், 2024-ம் ஆண்டின் தேவிந்தர் சிங் தீர்ப்புக்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஒன்றிய அரசிடம் கோரியதுடன், துணைப் பிரிவுகளாகப் பிரிப்பதையும் 'பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினரின் விலக்கலையும் மீண்டும் ஒருமுறை ஒன்றோடொன்று பிணைத்தது.


அந்தத் தீர்ப்பைச் சுற்றியுள்ள சூழல் என்ன?


பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் 'பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர்' விலக்கை அறிமுகப்படுத்துவதற்கு எதிராக ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ள இந்த நிலை, நாட்டில் உள்ள கணிசமான மாணவர்கள் (பெரும்பாலும் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள்), ஆளும் பாஜக அமைப்புக்கு ஆதரவாக இருந்து வருபவர்கள், 'இட ஒதுக்கீடு ஒழிப்பு இயக்கம்' (Reservation Hatao Andolan (RHA)) என்ற இயக்கத்தை ஏற்பாடு செய்துவரும் வேளையில் இந்த நிகழ்வு வந்துள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தில், 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'யால் தூண்டப்பட்ட நாடு தழுவிய மாணவர் இயக்கம், முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுக்கு வழிவகுத்த உடனேயே, இந்த இயக்கம் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் உருவானது. இந்த 'இட ஒதுக்கீடு ஒழிப்பு இயக்கம்' (RHA) பக்கம் சமூக ஊடகத் தளத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளதுடன், தற்போது அஜித் பார்தி, அனுராதா த்வாரி மற்றும் நேஹா தாஸ் போன்ற இட ஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கத்தின் முக்கிய நபர்களால் வழிநடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் மூவரும் பொதுப் பிரிவு மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதுடன், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறப்பட்டதை அடுத்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) 2026 சமூக சமத்துவ விதிகளுக்கு எதிரான போராட்டங்களைத் திரட்டி வலுப்படுத்தவும் உதவியுள்ளனர். அனைத்து சமூக-பொருளாதார சாதி இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளையும் ஒழித்து, "வருமான அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை" மட்டும் தக்கவைக்க வேண்டும் என்பதே 'இட ஒதுக்கீடு ஒழிப்பு இயக்கத்தின்' (RHA) முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.


தரப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை, உள்-வகைப்பாடு (sub-categorisation) மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறிய  ஆகியவை எதைக் குறிக்கின்றன?


1990-ம் ஆண்டு வரை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (Other Backward Classes (OBC)) தேசிய வகைப்பாடு நடைமுறைக்கு வராத போதிலும், அரசியலமைப்பின் 16(4) பிரிவின் அடிப்படையில் மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட, அப்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் சாதிகளிடையே நிலவிய படிநிலை சமத்துவமின்மைப் பிரச்சனையை நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகள் பல ஆண்டுகளாக அங்கீகரித்து வந்தன. 1979-ல் மண்டல் ஆணையம் (Mandal Commission) அமைக்கப்படுவதற்கு முன்பே ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் பல மாநிலங்களில் பொது வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டு அட்டவணைகள், மாநிலங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தங்களின் மொத்த ஒதுக்கீட்டுப் பங்கை, குறிப்பிட்ட சமூகக் குழுக்களுக்குச் சிறிய பங்குகளாகப் பிரித்து, ஓரளவிற்குச் சமமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்தன என்பதைக் காட்டுகின்றன. இதுவே உள்-வகைப்பாடு (sub-categorisation) என்ற கருத்தாகும்.


1992-ல், பிரதமர் வி.பி. சிங் தலைமையிலான அரசு நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் நடவடிக்கையை உறுதி செய்தபோது, ​​உச்சநீதிமன்றம் "பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர்" என்ற கருத்தாக்கத்திற்கு வழிவகுத்தது. இந்திரா சாஹ்னி வழக்கில், இந்த இட ஒதுக்கீட்டின் பலன் தேவைப்படுபவர்கள் மட்டுமே அதைப் பெறுவதை உறுதிசெய்ய இத்தகைய யோசனை அவசியம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இதன் விளைவாக, பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட அளவிலான சமூக மற்றும் பொருளாதார சலுகைகளைப் பெற்றிருந்த பெற்றோர்களையும் குடும்பங்களையும் கொண்ட சில வகை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அதாவது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே உள்ள பொருளாதாரத்தில் முன்னேறிய, இந்த ஒதுக்கீட்டிற்குத் தகுதி பெறுவதிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


ஆகவே, உள்-வகைப்பாடு என்பதன் நோக்கம், ஒரு பிரிவிற்குள் இருக்கும் வெவ்வேறு குழுக்கள், குறிப்பாக அவர்கள் அனைவரும் சமமாகப் பின்தங்கியவர்களாக இல்லாதபோது, இட ஒதுக்கீட்டிற்கான நியாயமான அணுகலைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, அப்பிரிவிற்கு ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டின் அளவைப் பிரிப்பதாகும். அதே சமயம், "பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர்" விலக்கு என்ற கருத்தின் நோக்கம், ஒரு குறிப்பிட்ட பிரிவிற்குள் இருக்கும், தங்கள் சமூகங்கள் பொதுவாக இன்னும் எதிர்கொள்ளக்கூடிய பாகுபாடு அல்லது பின்தங்கிய நிலையின் சில விளைவுகளிலிருந்து தப்பித்திருக்கக்கூடிய தனிநபர்களை அடையாளம் கண்டு, அவர்களை இட ஒதுக்கீட்டைப் பெறுவதிலிருந்து முற்றிலுமாக விலக்குவதாகும்.


இந்திரா சாஹ்னி தீர்ப்புக்குப் பிறகு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடமிருந்து (OBCs) ‘பொருளாதாரத்தில் முன்னேறிய ‘பிரிவினரை (creamy layer) பிரித்தெடுப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை இந்திய அரசு வகுத்தது (அரசியலமைப்பு, இராணுவம் அல்லது அரசாங்கத்தில் உயர் பதவிகளில் உள்ள பெற்றோர்களைக் கொண்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் குறைந்தபட்ச வருமானம்/செல்வ வரம்பைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இதற்கான தகுதிகளாக இருந்தனர்). மேலும், உள்-வகைப்பாடுகளாகப் பிரிக்கும் எண்ணம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வகைப்பாட்டையும் தாண்டி பட்டியல் சாதியினர் போன்ற பிரிவுகளுக்கும் பரவியது. இது நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பல பத்தாண்டுகாலப் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இதன் உச்சகட்டமாக, ஆகஸ்ட் 1, 2024 அன்று தேவிந்தர் சிங் தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பு, மாநில அரசுகள் பட்டியல்களுக்குள் உள் பிரிவுகளாகப் பிரிக்க அனுமதித்தது. பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் பட்டியல்களில் சேர்ப்பதும் நீக்குவதும் நாடாளுமன்றத்தின் பிரத்யேக அதிகார வரம்பில் இருந்தாலும், பட்டியல்களில் சமூகங்களைச் சேர்ப்பது அல்லது நீக்குவதிலிருந்து இது வேறுபட்டது என்பதால், நிர்வாக அமைப்புகள் (மாநில அரசுகள் உட்பட) இந்தப் பட்டியல்களுக்குள் உள்-பிரிவுகளாகப் பிரிக்கும் அதிகாரத்திற்கு உட்பட்டவை என்று நீதிமன்றம் முக்கியமாகத் தீர்ப்பளித்தது.


உள்-வகைப்பாடு (sub-categorisation) மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினரை விலக்குதல் ஆகிய இரண்டு வழிமுறைகளும், ஒரு குறிப்பிட்ட பிரிவிற்குள் இருக்கும் ஒப்பீட்டளவில் பின்தங்கிய சமூகங்கள் அல்லது தனிநபர்களை, அதே பிரிவில் உள்ள ஒப்பீட்டளவில் முன்னேறிய சமூகங்கள் அல்லது தனிநபர்கள் வெளியேற்றுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், உள்-வகைப்பாடு ஒரு பிரிவிற்குள் உள்ள குழுக்களுக்குக் கிடைக்கக்கூடிய ஒதுக்கீடுகளை முடிந்தவரை சமமாகப் பகிர்ந்தளிக்கும் அதே வேளையில், கிரிமிலேயரை விலக்குதல் என்ற வழிமுறையானது சில தனிநபர்களை ஒதுக்கீடுகளிலிருந்து முற்றிலுமாக விலக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


பொருளாதாரத்தில் முன்னேறிய  கொள்கை எங்கு பொருந்தும் மற்றும் எங்கே உள்-வகைப்பாடு செய்யப்படுகிறது?


'பொருளாதாரத்தில் முன்னேறிய ' விலக்குகள் என்ற கருத்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) மட்டுமே பொருந்தும் என்று அரசாங்கம் கூறிவந்தாலும், 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான (Economically Weaker Sections (EWS)) இட ஒதுக்கீடும் தொழில்நுட்பரீதியாக இதே போன்ற ஒரு கருத்தை உள்ளடக்கியுள்ளது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. பொருளாதாரரீதியாக பின்தங்கிய பிரிவினர் (EWS) இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கான ஒரு நிபந்தனையாக, ஒரு தனிநபர் பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST) அல்லது ஓபிசிக்களுக்கான எந்தவொரு சலுகைகளையும் பெற்றிருக்கக் கூடாது என்பது தேவைப்பட்டாலும், ஓபிசிக்களைப் போலவே, ஒரு குறிப்பிட்ட குடும்ப வருமானம் மற்றும் சொத்து வரம்பைக் கொண்ட தனிநபர்கள் வெளிப்படையாக விலக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், பொருளாதாரரீதியாக பின்தங்கிய பிரிவினர் (EWS) விஷயத்தில் வருமானம்/சொத்தைக் கணக்கிடும் முறை வேறுபட்டது.


இருப்பினும், உள்-வகைப்பாடு (sub-categorisation) எனும் வழிமுறையானது, பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஒன்றிய அரசை விட மாநில அரசுகளாலேயே இது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தெலங்கானா, ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநில அரசுகள் பட்டியல் சாதியினர் பிரிவைச் சிறிய குழுக்களாகப் பிரித்த வரலாற்றைக் கொண்டுள்ளன. மிசோரம் போன்ற மாநிலங்களில் பழங்குடியினர் ஒதுக்கீடும் உள்-வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



இருப்பினும், தேசிய அளவில் ஒன்றிய அரசு உள்-வகைப்பாடுகளாகப் பிரித்தலுக்கு உள்ள ஒரே விவாதத்திற்குரிய உதாரணம், ஏகலவ்யா மாதிரி உறைவிடப் பள்ளி சேர்க்கைக்கான பழங்குடியினர் (ST) பிரிவு ஒதுக்கீடுகளில்தான் உள்ளது. இதில், பழங்குடியினரிடையே குறிப்பாக நலிவடைந்த பழங்குடியினரின் (Particularly Vulnerable Tribal Groups (PVTGs)) குறைந்தபட்ச பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக, பழங்குடியினர் ஒதுக்கீடு பிரிக்கப்பட்டுள்ளது.


ஒன்றிய அரசின் நிலைப்பாடுகளும் அதற்கான காரணங்களும் என்ன?


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசுகள், பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஆகியோருக்காக தேசிய அளவில் உள்-வகைப்பாடு முறையைப் பயன்படுத்துவதற்கான தங்கள் திட்டங்களை இதுவரை பகிரங்கமாக விளக்கவில்லை என்றாலும், பட்டியல் சாதியினர்/பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் 'பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர்' என்ற கருத்தை அறிமுகப்படுத்துவதற்கு அவை காட்டும் எதிர்ப்பானது, இது சில சமூகங்களையோ அல்லது தனிநபர்களையோ இட ஒதுக்கீட்டின் பலன்களிலிருந்து முற்றிலுமாக விலக்குவதை அவசியமாக்கும் என்ற சிந்தனையின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. அரசியலமைப்பின்படி, இந்த அதிகாரம் நாடாளுமன்றத்திடம் மட்டுமே உள்ளது என்று சமூக நீதி அமைச்சகம் வாதிட்டுள்ளது. மேலும், இதுவரையிலான நீதித்துறை முன்னுதாரணங்கள் பட்டியல் சாதியினர்/பழங்குடியினருக்கு 'பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர்’ விலக்கைக் கோரவோ அல்லது பரிந்துரைக்கவோ இல்லை என்றும் அது வாதிட்டுள்ளது.


உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகளில் ஒன்றிய அரசு இத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும், எதிர்காலத்தில் இத்தகைய நடவடிக்கையை பரிசீலிப்பதற்கான ஒரு சாத்தியமான வழிமுறையையும் ஒன்றிய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.  இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் இத்தகைய மாற்றங்கள், "ஒதுக்கப்பட்ட பிரிவினரின் சமூக-பொருளாதாரத் தரவுகள் உட்பட, ஒரு முழுமையான ஆய்வு மற்றும் வலுவான அனுபவப்பூர்வமான ஆய்வுக்குப் பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று அது கூறியிருந்தாலும், அதற்கு உத்தரவிடுவது நீதித்துறையின் அதிகார வரம்பிற்குள் இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.


சுவாரஸ்யமாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, 'பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர்' விலக்குகள் என்ற வழிமுறை எந்தெந்த வகைப்பாடுகளுக்குப் பொருந்தும் என்பதில் தெளிவாக இருந்தபோதிலும், உள்-வகைப்பாடு முறையைச் செயல்படுத்துவதில் அது தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. தனது முதல் பதவிக்காலத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) உள்-வகைப்பாட்டை தேசிய அளவில் அமல்படுத்துவதில் அரசு ஆர்வம் காட்டியது. 2015-ல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் (National Commission for Backward Classes) இதை பரிந்துரைத்தது. மேலும், இந்தப் பணிக்காக ஒன்றிய அரசு 2017-ல் ஓய்வுபெற்ற நீதிபதி ஜி. ரோகிணி ஆணையத்தை அமைத்தது. சமர்ப்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும், அந்த அறிக்கை இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை.


இதேபோல், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக உச்சநீதிமன்றத்திலும், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் பட்டியல் சாதியினரை உட்பிரிவுகளாகப் பிரிக்கும் பிரச்சினை முக்கியத்துவம் பெறும் நிலையிலும், ​​மடிகா (Madiga) சமூகத்தினரின் குறைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பதை ஆராய, ஒன்றிய அரசு அமைச்சரவைச் செயலாளர் தலைமையில் ஒரு உள்ளகக் குழுவை அமைத்தது. ஆனால், தேவிந்தர் சிங் தீர்ப்பு கொள்கைரீதியாக இந்த முயற்சிக்கு வழிவகுத்ததால், ஒன்றிய அரசு இது குறித்து மௌனம் காத்து வருகிறது.


Original articles: What does the Centre’s opposition to creamy layer for SC/STs entail? -Abhinay Lakshman

Share: