உச்சநீதிமன்றம், அமிலம் உட்கொண்டதிலிருந்து பிழைத்தவர்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்டவர்களாக ஏன் அங்கீகரித்தது? - அமால் ஷேக்

 அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஷாஹீன் மாலிக் தாக்கல் செய்த மனுவின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அமிலத் தாக்குதலுக்கு உள்ளாகி, ஆனால் வெளியில் தெரியும்படியான காயங்கள் இல்லாத காரணத்தால் அரசின் உதவிகள் கிடைக்காமல் விடுபட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.


திங்கள்கிழமையன்று (மே 4) உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதன்படி, அமிலத் தாக்குதலுக்கு உள்ளாகி, அமிலத்தை கட்டாயமாக உட்கொள்ள நேரிட்டதால் உட்புறக் காயங்கள் அடைந்தவர்கள் (வெளியே தழும்புகள் தெரியாவிட்டாலும்), 2016-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்கீழ் (Rights of Persons with Disabilities Act (RPwD Act)) 'அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களாகவே' கருதப்படுவார்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.


தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தத் தெளிவுரை சட்டம் அமலுக்கு வந்த நாளிலிருந்து முன்தேதியிட்டு செயல்படும் என்று கூறியதுடன், அமிலத் தாக்குதலுக்கான தற்போதுள்ள தண்டனைகள் குற்றங்களைத் தடுக்கும் வகையில் போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அரசுக்குத் தெரிவித்தனர். குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் பொறுப்பை குற்றம்சாட்டப்பட்டவர் மீதே சுமத்தவும், இத்தகைய வழக்குகளில் அமிலம் விற்பனை செய்பவர்களையும் இணை குற்றவாளிகளாகச் சேர்க்கவும் நீதிமன்றம் பரிந்துரைத்தது.


ஷாஹீன் மாலிக் என்ற அமிலத் தாக்குதலில் இருந்து மீண்டவர் தொடர்ந்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சட்டத்தில் உள்ள ஒரு குறைபாட்டினால் ஒரு குறிப்பிட்ட வகை பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் உதவிகள் கிடைக்காமல் போவதை அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

சட்டத்தில் உள்ள இடைவெளி


மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், அமிலத் தாக்குதலில் இருந்து தப்பியவர்களை குறிப்பிட்ட இயலாமைகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. ஆனால், அது நிர்ணயித்த வரையறை குறுகியதாக இருந்தது.  சட்டத்தின் அட்டவணை 2(zc)-ன் கீழ், "அமிலத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்" என்பவர் "அமிலம் அல்லது அது போன்ற அரிக்கும் தன்மையுள்ள பொருளை வீசித் தாக்கும் வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர் ஆவார். அமிலம் வலுக்கட்டாயமாக உட்கொள்ளப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் இந்த வரையறைக்குள் வரவில்லை.


நீதிமன்றம் ஒரு முக்கியமான சிக்கலைச் சுட்டிக்காட்டியுள்ளது. "உடல் உருக்குலைவு" என்ற சொல், உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமே குறிப்பதாகத் தோன்றுகிறது. இதனால், அமிலத்தை உட்கொள்வதால் ஏற்படும் உள் உறுப்பு காயங்கள் அல்லது தழும்புகள் இந்த வரையறைக்குள் வராமல் போகும் அபாயம் உள்ளது.


அத்தகைய நிகழ்வுகளில் ஏற்படும் காயங்களும் அதே அளவு கடுமையானவை ஆகும். அமிலம் உட்கொள்ளப்படும்போது, அது வாய், தொண்டை, உணவுக்குழாய் மற்றும் வயிற்றுப் பகுதியைப் பாதிக்கிறது. இது நிரந்தரமானது. "இந்த அரிக்கும் தன்மை கொண்ட பொருள், கடுமையான தீக்காயங்களையும், உள் உறுப்புகளுக்கு, குறிப்பாக செரிமான மண்டலத்திற்கு, பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும், தொடர்ச்சியான இரைப்பைக் குடல் மருத்துவப் பராமரிப்பின் தேவை உட்பட, வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் மருத்துவச் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. வாய்வழியாக அமிலத்தை உட்கொண்டவர்கள், சாப்பிடுவதிலும், விழுங்குவதிலும், செரிமானத்திலும் சிரமம் போன்ற நீண்டகாலப் பிரச்சனைகளை  எதிர்கொள்ளக்கூடும் என மாலிக்கின் மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்த இடைவெளியை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?


மாற்றுத்திறனாளிகள் சட்டத்தின் வரம்பிற்குள் வராமல் போவதால் ஏற்படும் விளைவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்தச் சட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் என்பது நிதி உதவி, மறுவாழ்வுத் திட்டங்கள், மருத்துவ ஆதரவு போன்றவற்றுக்கான ஒரு நுழைவுச்சீட்டு ஆகும்.  அது இல்லையென்றால், பாதிக்கப்பட்ட ஒருவரால் இந்தத் திட்டங்கள் எதையுமே அணுக முடியாது. இந்த மனுவானது இதை ஒரு “குறைவான வகைப்பாடு” (under-classification) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஒரு சட்டம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை ஆதரிக்க முயலும்போது, அதே போன்ற பாதிப்புகளைக் கொண்ட ஒரு துணைப் பிரிவினரை தன்னிச்சையாகப் புறக்கணிப்பதாகும்.


தாக்குதலுக்கு உள்ளான இந்த இரண்டு குழுக்களுக்கும் இடையே உள்ள ஒரே வேறுபாடு, தாக்குதல் நடத்தப்பட்ட விதம் மட்டுமே என்று அந்த மனு வாதிட்டது. அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் தன்மையிலோ அல்லது அளவிலோ எந்த மாற்றமும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியது.


மனு எதை கேள்விக்குள்ளாக்குகிறது


இந்த வழக்கின் மையப்புள்ளி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு-14 (Article 14) ஆகும். இந்தச் சட்டம், தாக்குதலின் விளைவைக் கவனிக்காமல், தாக்குதல் நடத்தப்பட்ட முறையை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களைப் பிரிப்பது "தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற வகைப்பாடு" என்று மனுவில் வாதிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதரவளிப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம் எனும் போது, இத்தகைய வேறுபாடு அந்த நோக்கத்தோடு எந்த ஒரு தர்க்கரீதியான தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.




சட்டத்தின் கவனம் மாற்றுத்திறனாளின் மீதே உள்ளது. அதன் காரணம் அல்லது அது எவ்வாறு ஏற்படுத்தப்பட்டது என்பதன் மீது அல்ல என்று அந்த மனு கூறுகிறது. மேலும், அமிலம் வீசப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களும், கட்டாயப்படுத்தி அமிலம் உட்கொள்ள வைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களும் அமில வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரே பிரிவினரே என்று வாதிடப்படுகிறது.


இந்த சட்ட விடுபடலானது "குறைவான வகைப்பாட்டிற்கு ஒரு சிறந்த உதாரணம்" என்று மனு விவரிக்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட பிரிவினரை ஆதரிக்க வேண்டிய சட்டம், அதே நிலையில் இருக்கும் ஒரு துணைப் பிரிவினரை தன்னிச்சையாகப் புறக்கணிப்பதாக உள்ளது.


மேலும், குற்றவியல் சட்டத்திற்கும் (Criminal Law) நலத்திட்டச் சட்டத்திற்கும் (Welfare Law) இடையே உள்ள முரண்பாட்டையும் இந்த மனு சுட்டிக்காட்டுகிறது. பாரதிய நியாய சன்ஹிதா, 2024 (Bharatiya Nyaya Sanhita BNS))  பிரிவு 124-ன்படி, அமிலம் வீசுவதும், உட்கொள்ள வைப்பதும் ஒரே மாதிரியான குற்றங்களாகவே கருதப்படுகின்றன, அவற்றுக்கு ஒரே மாதிரியான தண்டனைகளே வழங்கப்படுகின்றன. அமிலத் தாக்குதல் எந்த முறையில் நடத்தப்பட்டாலும் அதன் பாதிப்பு, நோக்கம் மற்றும் சமூக ஆபத்து ஆகியவை ஒன்றுதான் என்று வாதிடும் இந்த மனு, குற்றவியல் சட்டம் வேண்டுமென்றே நிராகரித்த ஒரு பாகுபாட்டை, ஒரு நலத்திட்டச் சட்டம் மட்டும் கடைபிடிப்பது சட்டப்பூர்வமாகப் பொருத்தமற்றது மற்றும் தன்னிச்சையானது என்று கூறுகிறது.


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு தொடர்பான வாதம், பாதிக்கப்பட்டவர்களைப் புறக்கணிப்பதால் ஏற்படும் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டது. அமிலம் குடிக்க வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள், சட்டரீதியான வரையறைக்குள் வராததால், அவர்களால் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழைப் பெற முடிவதில்லை. இதன் காரணமாக, அரசின் இழப்பீடு, மறுவாழ்வுத் திட்டங்கள் மற்றும் மருத்துவ உதவிகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. சட்டப்பூர்வ அங்கீகாரம் இவ்வாறு மறுக்கப்படுவது, கண்ணியத்துடன் வாழ்வதற்கான ஒருவரின் உரிமையைப் பறிப்பதாகும் என்று அந்த மனு வாதிடுகிறது.


இதுபோன்ற கடுமையான உள்காயங்களால் அவதிப்படும் ஒருவருக்கு, மருத்துவப் பராமரிப்பும் ஆதரவும் கிடைப்பது என்பது தர்மம் செய்யும் விஷயமல்ல. மாறாக அது ஒரு கண்ணியமான வாழ்வின் அடிப்படைக் கூறாகும் என்று மனு  குறிப்பிடுகிறது.


அமிலம் உட்கொள்வதால் ஏற்படும் காயங்கள் பெரும்பாலும் உள் உறுப்புகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. தற்போதுள்ள, மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பீட்டு வழிகாட்டுதல்கள், பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியும் உருக்குலைவு மற்றும் இயக்கக் குறைபாடு ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவதால், உள் உறுப்புக் காயங்கள் அங்கீகரிக்கப்படாமல் விடப்படுகின்றன என்றும் மனு  வாதிடுகிறது.


இதைத் தீர்ப்பதற்காக, நீதிமன்றம் சட்டத்தை “நோக்க அடிப்படையிலான விளக்கத்தின்” மூலம் அணுக வேண்டும் என்று மனு வலியுறுத்தியது. அதாவது, ஒரு சட்டத்தை அதன் வார்த்தை மாறாத நேரடிப் பொருளில் மட்டும் பார்க்காமல், அந்தச் சட்டம் எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தின் அடிப்படையில் விளக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் (RPwD Act) என்பது ஒரு சமூக நலச் சட்டமாகும். எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்வு கிடைக்கவும், அநீதியைத் தடுக்கவும் நீதிமன்றங்கள் இந்தச் சட்டத்தை தாராளமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் விளக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. குறிப்பாக, சட்டத்தில் உள்ள “அமிலம் வீசுதல் மூலம் நிகழ்த்தப்படும் தாக்குதல்” என்ற சொற்றொடரை “அமிலம் பயன்படுத்துவதன் மூலம் நிகழ்த்தப்படும் அனைத்து வகையான தாக்குதல்கள்” என விரிவாகப் பொருள் கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் அமிலத் தாக்குதல் தொடர்பான அனைத்து பாதிப்புகளையும் சட்டப் பாதுகாப்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.


விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகள்


சட்டத்தின்கீழ் வரையறைகளின் வரம்பை விரிவுபடுத்துவது ஒருபுறம் இருக்க, அமில வீச்சு வழக்குகளில் நடக்கும் மந்தமான விசாரணைகளை "அமைப்பிற்கே ஒரு கேலிக்கூத்து" என்று கடந்த டிசம்பர் மாதம் நீதிமன்றம் குறிப்பிட்டது. அப்போதிருந்து இந்தத் தாமதப் பிரச்சினையைத் தீர்க்க நீதிமன்றம் முயன்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அனைத்து உயர்நீதிமன்றங்களின் தலைமைப் பதிவாளர்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.


வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொடூரமான அமிலத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று கூறிய தலைமை நீதிபதி, “தண்டனை இன்னும் கடுமையாக இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?” என்றும் கேள்வி எழுப்பினார்.


மேலும், 2013-ஆம் ஆண்டிலிருந்து அமில வீச்சு வழக்குகளின் எண்ணிக்கை "அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்திருப்பதை" நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டியது. இது ஒரு தீவிரமான கவனத்திற்குரிய விஷயம் என்பதையும் சுட்டிக்காட்டியது.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இணக்க உறுதிமொழிப் பத்திரங்கள், மாநிலங்கள் முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளின் அளவை தெளிவாக காட்டின. இதில் சில அதிகார வரம்புகள் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 198 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 160 வழக்குகளும், குஜராத்தில் 114 வழக்குகளும் உள்ளன. பீகாரில் 68 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மற்ற மாநிலங்களில், மகாராஷ்டிராவில் 58 வழக்குகளும், அசாமில் 27 வழக்குகளும் பதிவாகியுள்ளன. ஜார்க்கண்டில் 26 வழக்குகளும், ஒடிசாவில் கீழமை நீதிமன்றங்களில் 23 வழக்குகளும், உயர்நீதிமன்றத்தில் 8 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, டெல்லி கீழமை நீதிமன்றங்களில் 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உத்தரகாண்டில் மூன்று வழக்குகளும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் தலா ஐந்து வழக்குகளும் நிலுவையில் உள்ளன.


Original article : Why Supreme Court recognised acid ingestion survivors as victims under RPwD Act. -Amaal Sheikh

Share:

மகாத்மா ஜோதிராவ் பூலே அவர்களின் ஒப்பற்ற பங்களிப்பை நாம் ஏன் மறக்கக் கூடாது? – இர்பானுல்லா ஃபாரூக்கி

 இந்த ஆண்டு ஜோதிராவ் பூலேவின் 200-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் தொடக்க ஆண்டாக அமைவதால், இந்தியாவில் சமூக மாற்றத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்புகள் குறித்து நாம் மேலும் அறிந்துகொள்வோம். அத்துடன், அவரது கொள்கைகளின்படி வாழவும் கற்றுக்கொள்வோம்.


அவமானகரமான மற்றும் மனிதாபிமானமற்ற ஒரு அனுபவத்தை, தலைமுறைகளை ஊக்குவிக்கும் ஒரு தேடலுக்கான முன்னுரையாக மாற்றுபவர்கள் மிகச் சிலரே. பிராமணர் சமுகத்தை சாராத நபர் என்பதால் வாரணாசியில் உணவு மறுக்கப்பட்ட பெரியார் ஈ.வெ. ராமசாமியையும்; 'தீண்டத்தகாதவர்' என்பதால் தனது பள்ளி வளாகத்தில் தண்ணீர்க் குழாயைத் தொட அனுமதிக்கப்படாத பி.ஆர். அம்பேத்கரையும்; வெள்ளையர் அல்லாதவர் என்பதால் தென்னாப்பிரிக்காவில் முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட மகாத்மா காந்தியையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.


இந்த அனுபவங்களை ஒன்றுக்கொன்று சமமாகக் கருதுவது பொருத்தமாக இல்லாவிட்டாலும், அவற்றை ஒன்றாக இணைக்கும் முக்கிய அம்சம், இந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை ஒரு முக்கியத் தீர்மானமாகவும், மாற்றத்தை உண்டாக்கும் செயலாகவும் மாற்றிக்கொண்டார்கள்.

மகாத்மா ஜோதிராவ் பூலே அவர்களின் வாழ்க்கை இன்னொரு சிறந்த உதாரணமாகும். 21 வயதில், ஒரு பிராமண நண்பரின் திருமண விழாவில் அழைக்கப்பட்டிருந்தாலும், அவர் சூத்திர சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவமதிக்கப்பட்டார். ஆனால், அந்த அவமானம் ஒரு 'மகாத்மாவை' உருவாக்கும் பணியை இன்னும் வேகப்படுத்தும் என்று அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.


இந்த ஆண்டு பூலேவின் 200-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வேளையில், இந்த சமூக சீர்திருத்தவாதி, கல்வியாளர், சாதியத்தின் தீவிர விமர்சகர் மற்றும் பெண்கள் கல்வியின் முன்னோடியான அவரது வாழ்க்கையையும் பணிகளையும் மீண்டும் நினைவு கூர்வோம்.


ஆரம்பகால வாழ்க்கை மற்றும் சமூக ஒழுங்கிற்கு எதிரான எதிர்ப்பு


ஜோதிராவ் கோவிந்தராவ் பூலே, 1827-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி, மகாராஷ்டிராவின் சதாராவில், 'மாலி' (தோட்டக்காரர்) சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். முதலில் 'கோர்ஹே' என்று அழைக்கப்பட்ட  இந்தக் குடும்பம்,  ஆண் உறுப்பினர்கள் பூ வியாபாரிகளான பிறகு 'பூலே' என்று அறியப்பட்டது. இந்தக் குடும்பத்தின் முன்னோர்கள் பிரதம மந்திரிகளுக்குச் (Peshwa) சேவை செய்தனர். அவர்கள் இந்தக் குடும்பத்தினருக்கு ஒரு பெரிய நிலத்தையும் ஒரு தோட்டத்தையும் பரிசாக வழங்கினர்.


சமூகத்தில் பிராமணர்கள் அனுபவித்து வந்த கட்டமைப்பு ரீதியான சலுகைகளை, பூலே மிக விரைவிலேயே புரிந்து கொண்டார். அவர்கள் முக்கிய நிர்வாகப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தினர், வரிச் சலுகைகளை அனுபவித்தனர், சலுகை பெற்ற வாழ்க்கையை வாழ்ந்தனர். மேலும், சட்டத்தின்கீழ்  மென்மையான அணுகுமுறையைப் பெற்றனர்.


இந்த ஆதிக்கம் ஆழமாக நிறுவனமயமாக்கப்பட்டிருந்தது என்று பூலே உறுதியாக நம்பினார். அதிக சமஸ்கிருதமயமாக்கப்பட்ட "ஜோதிராவ்" (Jyotirao) என்ற பெயருக்குப் பதிலாக, "ஜோடிராவ்" (Jotirao) என்ற பெயரை அவர் விரும்பியது கூட, பிராமண ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு எதிர்ப்பைக் காட்டுகிறது.


சமூக அடையாளங்களின் குறுக்கீடு குறித்த கவனத்தை அவர் எவ்வாறு ஈர்த்தார்?


சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்கள் அன்றாடம் அனுபவித்த அநீதியான மற்றும் மனிதாபிமானமற்ற வாழ்க்கைச் சூழலைக் கண்டு ஜோதிராவ் பூலே மிகுந்த வேதனை அடைந்தார். இத்தகைய அநீதிகள் சமூகத்தில் இயல்பான ஒன்றாகக் கருதப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், சாதியக் கட்டமைப்பைக் கொண்ட சமூகத்தில் பெண்கள் (குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள்) அடிமைப்படுத்தப்படுவதைத் தடுக்க மிகவும் தீவிரமான மற்றும் வலுவான தலையீடு அவசியம் என்பதை உணர்ந்தார்.


தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த சிறுமிகளும் பெண்களும் எவ்வாறு   ஒதுக்கப்பட்டனர் என்பதை பூலே மீண்டும் மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டினார். இதன் மூலம், பெண்ணிய ஆய்வாளர் கிம்பர்லி கிரென்ஷா ‘Intersectionality’ (பல அடுக்கு ஒடுக்குமுறைகள் ஒன்றிணைதல்) என்ற கருத்தாக்கத்தை உருவாக்குவதற்கு சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பே, அந்த நுட்பமான சமூகப் பிரச்சனையை மக்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.


`அதே நேரத்தில், பண்டிதா ரமாபாயின் பரவலாக மேற்கோள் காட்டப்பட்ட 'The High-Caste Hindu Woman’ (1887) என்ற நூல், இந்து சமூக அமைப்பின் தார்மீக அடித்தளங்களை உலுக்குவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, உயர்சாதிப் பெண்கள் எதிர்கொண்ட கட்டுப்பாடுகளையும் உரிமையற்ற நிலைகளையும் பூலே துணிச்சலுடன் எதிர்த்துக் கேள்வி எழுப்பினார்.


சீர்திருத்தவாதத் தலையீடுகள் 


19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி, இந்தியாவில் சமூகச் சீர்திருத்தங்களுக்கான ஒரு காலகட்டமாகப் போற்றப்படுகிறது. ராஜா ராம்மோகன் ராய், கேசப் சந்திர சென், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் போன்ற முக்கியத் தலைவர்கள், சதி, குழந்தை திருமணம், பலதார மணம் மற்றும் விதவை மறுமணத்திற்கான கட்டுப்பாடுகள் போன்ற நடைமுறைகளுக்கு எதிராகக் குறிப்பிடத்தக்க போராட்டங்களை முன்னெடுத்தனர். 'பாரம்பரியம்' மற்றும் மதம் என்ற பெயரில் சட்டபூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றிருந்த இத்தகைய அடக்குமுறை மற்றும் மனிதாபிமானமற்ற நடைமுறைகளைக் கேள்விக்குட்படுத்துவதில்  அவர்கள் முக்கிய பங்காற்றினார்.


வங்கத்தில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த அதே வேளையில், அதற்குச் சற்றும் குறைவில்லாத ஒரு சீர்திருத்த அலை பம்பாய் மாகாணத்திலும் வீசியது. ஜோதிராவ் பூலே தனது காலத்தின் சமூகக் கட்டமைப்பு மற்றும் கலாச்சார அமைப்புகளைப் புரிந்துகொள்ள முயன்றபோது, விதவை மறுமணம் மற்றும் பெண் கல்வி தொடர்பான சீர்திருத்த நடவடிக்கைகள் ஏற்கனவே அங்கு செயல்பாட்டில் இருந்தன.

ஆனால், இந்தச் சீர்திருத்த இயக்கங்கள் பெரும்பாலும் உயர்சாதி ஆண்களால் வழிநடத்தப்பட்டதால்,  தினசரி சமூக வாழ்வில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை என்று பூலே கருதினார். அவரது பார்வையில், அவர்கள் நீதி மற்றும் சமத்துவம் பற்றிப் பேசினாலும், அநீதிக்கும் பாகுபாட்டிற்கும் உள்ளாக்கப்படுவது என்றால் என்ன என்பதை அனுபவப்பூர்வமாக அவர்கள் உணரவில்லை. எனவே, பூலே சமூகக் கட்டமைப்பின் வேரிலேயே மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினார். அதற்காக அவர் தனக்கென ஒரு தனிப்பாதையை உருவாக்கிக் கொண்டார்.


பெண்களின் கல்விக்கான ஆதரவுப் பிரச்சாரம்


பழமைவாத மற்றும் மரபுசார்ந்த இந்து பாரம்பரியவாதிகளின் கோட்டையாக விளங்கிய புனேவில், 1848-ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களுக்காக பூலே ஒரு பள்ளியைத் தொடங்கியபோது, ​​அவருடைய சீர்திருத்தப் பயணம் தொடங்கியது. அவருடைய மனைவி சாவித்திரிபாய் பூலே, ஒரு தோழராக அவருடன் இணைந்து பணியாற்றினார். இந்த முயற்சிக்குச் சமூகத்திடமிருந்து எதிர்ப்பு எழுந்தது. ஆனால், பூலேவின் தந்தை தங்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்வார் என்பதை அந்தத் தம்பதியினர் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.


நிதி நெருக்கடி காரணமாக முதல் பள்ளி சிறிது காலம் மூடப்பட்டபோதிலும், பூலே 1851-ஆம் ஆண்டு முதல் 1859-ஆம் ஆண்டு வரை பெண்களுக்காக  மூன்று பள்ளிகளை நிறுவினார். காலப்போக்கில் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.


அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த பல சீர்திருத்தவாதிகளைப் போலல்லாமல், பெண்கள் கல்வி கற்பதன் மூலம் அவர்கள் சிறந்த துணையாகவோ, அதிக விழிப்புணர்வுள்ள தாயாகவோ அல்லது திறமையான நிர்வாகியாகவோ மாறுவார்கள் என்ற காரணத்திற்காகப் பூலே பெண் கல்வியை ஆதரிக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை, கல்வியின்  முக்கிய நோக்கம் விழிப்புணர்வையும், பகுத்தறியும் சிந்தனைத் தெளிவையும் உருவாக்குவதே ஆகும்.



பூலேவின் பள்ளிகளில் ஒன்றில் பயின்ற மாணவியான முக்தாபாய் சால்வேயின் படைப்புகளில் இந்தப் பார்வை தெளிவாகப் பிரதிபலிக்கிறது. தனது பள்ளிப் படிப்பின் ஒரு பகுதியாக அவர் எழுதிய 'மங் மகாராச்சியா துக்கவிசாய்' (மங் மற்றும் மகர் சமூகத்தினரின் துயரங்கள் குறித்து) என்ற கட்டுரை, ஒரு  முக்கிய பெண்ணிய விமர்சனப் படைப்பாக அமைந்தது.


கல்வியானது மேல்தட்டு மக்களிடமிருந்து மெல்ல கீழ்நோக்கிப் பரவும் என்ற 19-ஆம் நூற்றாண்டின் பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, பூலே சமூகத்தின் விளிம்புநிலை மக்களை நேரடியாகச் சென்றடைந்தார். அக்டோபர் மாதம் 1882-ஆம் ஆண்டில் ஹண்டர் ஆணையத்தின்முன் (Hunter Commission) ஆஜரானபோது, ​​படித்த உயர்சாதியினர் தாழ்த்தப்பட்ட சாதியினரிடையே கல்வியைப் பரப்புவார்கள் என்ற பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அனுமானத்தை அவர் கேள்விக்குள்ளாக்கினார். தாழ்த்தப்பட்ட சாதிக் குழுக்களுக்குக் கல்வி கற்பிக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்று பூலே  வாதிட்டார்.


கல்வியைத் தாண்டியும், மகாத்மா ஜோதிராவ் பூலே அவர்கள் விதவை மறுமணத்தை ஆதரித்தார் மற்றும் பலதாரத் திருமணத்திற்கு எதிராக இருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவரது தீர்க்கதரிசனமான சிந்தனைக்குச் சான்றாக விதவைகளுக்கான கருக்கலைப்பு எதிர்ப்பு மையங்களை (Anti-abortion centres) அமைத்தார். பூலேயும் அவரது பணியாளர்களும் விதவைகள் பாதுகாப்பாகப் பிரசவிப்பதற்கும், அவர்களின் குழந்தைகளைப் பராமரிப்பதற்கும் பாதுகாப்பான இடங்களை வழங்கினர்.


முக்கியமான படைப்புகள்


கல்வி மற்றும் சமூக நீதித் துறையில் சிறந்த பணிகளைச் செய்ததோடு மட்டுமல்லாமல், ஜோதிராவ் பூலே பொதுமக்களுக்கான அறிவுசார் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார். அவரது எழுத்துக்கள் கீழ்சாதியினர் சுரண்டப்படுவதை மிக விரிவாக எடுத்துரைத்தன. 'திருதிய ரத்னா' (1855), 'குலாம்கிரி' (1873), 'ஷேத்கர்யாச்சா அசூத்' (1883) மற்றும் 'சர்வஜனிக் சத்ய தர்ம புஸ்தக்' (அவர் மறைவுக்குப் பின் 1891-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது) ஆகியவை அவரது முக்கியமான படைப்புகளாகும். பூலே, ஒரு சிறந்த கவிஞராகவும் திகழ்ந்தார். அவரது கவிதைகள் பல்வேறு வகையான ஒடுக்குமுறைகள் குறித்துக் கருத்து தெரிவிக்கும் விதமாக அமைந்திருந்தன.


பூலேயின் மிகவும் புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றான ‘குலாம்கிரி’, பிராமண ஆதிக்கத்தின் மீது ஒரு கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறது. உரையாடல் வடிவில் எழுதப்பட்ட இந்தநூல், பிராமணர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளின் ஒழுக்கமற்ற அடித்தளங்களைச் சுட்டிக்காட்டுகிறது. சமூகத்தில் நிலவும் படிநிலை அமைப்பானது, சமத்துவமின்மையை நிலைநிறுத்துவதற்கும், 'தூய்மையற்ற சாதிகள்' என்று கருதப்படுபவர்களை ஒரு கண்ணியமற்ற மற்றும் சமூக ரீதியாக மதிப்பற்ற நிலைக்குத் தள்ளுவதற்கும், மத மற்றும் சமூக நெறிமுறைகள் மூலம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்று பூலே வாதிடுகிறார்.


'குலாம்கிரி' நூலை வெளியிட்ட பிறகு, பூலே தனது சக ஊழியர்களைக் கூட்டி சத்யசோதக் சமாஜத்தை (Satyashodhak Samaj - உண்மை தேடுவோர் சங்கம்) உருவாக்கினார். சூத்திரர்களையும் தீண்டத்தகாதவர்களையும் சுரண்டல் நிறைந்த சாதிப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிப்பதே அந்த அமைப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது. அனைவரும் ஒரே கடவுளின் பிள்ளைகளாகக் கருதப்பட வேண்டும் என்றும், அந்தக் கடவுளை எந்தவிதமான இடைத்தரகரும் இன்றி வழிபட வேண்டும் என்றும் இந்த அமைப்பு வலியுறுத்தியது.


பூலேயின் தொலைநோக்குப் பார்வையின் நிலைத்து நிற்கும் மரபு


பூலேவின் மரபைக் கருத்தில் கொள்ளும்போது, ​​அவரது  முக்கியத்துவத்தை வார்த்தைகளால் விவரிப்பது கடினம் என்கின்றனர். பல சீர்திருத்தவாதிகளைப்  போலல்லாமல், பூலே தாம் போதித்த நெறிகளைத் தாமே வாழ்ந்து காட்டினார். புகழ்பெற்ற சீர்திருத்தவாதிகளில் ஒருவர், தனது தந்தையின் மனம் புண்படும் என்பதால், தனது விதவைச் சகோதரிக்கு மறுமணம் செய்துவைக்க இயலவில்லை என்று குறிப்பிட்டபோது, ​​பூலே அவரிடம், "அப்படியென்றால், சீர்திருத்தவாதி என்று உன்னை நீயே கூறிக் கொள்ளாதே" என்று கூறியதாக, தர்க்கதீர்த்த லட்சுமணசாஸ்திரி ஜோஷி எழுதிய புலேவின் வாழ்க்கை வரலாற்றில் இந்தச் சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது.


புலேவின் வாழ்க்கை மற்றும் படைப்புகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியது என்னவென்றால், உயர்ந்த தார்மீகக் கொள்கைகளின்படி வாழும் ஒரு வாழ்க்கையின் நிகரற்ற ஆற்றலைத்தான். இந்த ஆண்டு அவரது 200-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிப்பதால், இந்தியாவில் சமூக மாற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம், மேலும் அவருடைய கொள்கைகளின்படி வாழக் கற்றுக்கொள்வோம்.


Original article : Why we must not forget the peerless legacy of Mahatma Jyotirao Phule. -Irfanullah Farooqi

Share:

சாலைக் குழிகளைப் பழுதுபார்க்க மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ள தொழில்நுட்பங்கள் எவை? -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி?


இந்தியச் சாலைகளில் குழிகள் (Potholes) எப்போதும் ஒரு பிரச்சினையாகவே இருந்து வருகின்றன. இவை போக்குவரத்து வேகத்தைக் குறைப்பதோடு, பயணங்களைச் சிரமமானவையாக மாற்றுகின்றன. இவை கடுமையான விபத்துகளுக்கு  முக்கிய காரணியாக அமைகின்றன. மழைக்காலத்தில், இந்த குழிகள் தண்ணீர் நிரம்பிய குளங்களாக மாறி, இன்னும்   அபாயகரமானகதாக மாறுகின்றன. இந்தப்பிரச்சினையை சரி செய்யும் வகையில், டெல்லி மாநகராட்சி (Municipal Corporation of Delhi (MCD)) இந்த ஆண்டு, அறிவியல் பூர்வமான மற்றும் மிகவும் பயனுள்ள ஒரு தீர்வைத் தேடி வருகிறது.


முக்கிய அம்சங்கள்:


1. சாலைகளில் உள்ள குழிகளைச் சீரமைப்பதற்காக, மூன்று தொழில்நுட்பங்களை டெல்லி மாநகராட்சி பரிசீலித்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சாலைகளின் பராமரிப்பு, கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு ஆகிய துறைகளில் நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாக இருந்து வரும், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒன்றிய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (Council of Scientific and Industrial Research-Central Road Research Institute (CSIR-CRRI)), இந்தத்தொழில்நுட்பங்களுக்கான காப்புரிமையைப் பெற்றுள்ளது.

2. சாலை சீரமைப்பில் இரண்டு அடிப்படைப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன: அவை, ஒரு சாலைக்கு கட்டமைப்பை வழங்கும் நொறுக்கப்பட்ட கல்லான ஜல்லிக்கற்கள் மற்றும் கலவையை கொண்டு உறுதியாக இருக்கும் தார் போன்ற பிணைப்புப் பொருள் ஆகும். சாலைக்கு மீண்டும் புதிய தளம் அமைக்கும்போது, பழைய சாலையின் பாகங்களை எந்த அளவிற்கு மீண்டும் பயன்படுத்த முடியும், புதிய பொருட்களை எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான கேள்வியாகும்.


தொடர்ந்து வரும் மேற்கு ஆசிய நெருக்கடியானது, சாலை கட்டுமானத்திற்கான தார் (Bitumen) கிடைப்பதையும் பாதித்துள்ளது. தார் (Bitumen) கச்சா எண்ணெயிலிருந்து பெறப்படுவதோடு, ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள தடையால், பெட்ரோலியம் சார்ந்த பொருட்களின் இறக்குமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2024-25-ஆம் ஆண்டு நிதியாண்டில் இந்தியா தனது உள்நாட்டுப் பயன்பாட்டிற்காக 33.79 சதவீத தாரை (Bitumen) இறக்குமதி செய்துள்ளது.


3. தற்போது பரிசீலனையில் உள்ள தொழில்நுட்பங்கள்: 'Ecofix' ஆகும். இது குழிகளைச் சீரமைக்கப் பயன்படும், எஃகு கசடை (steel slag) அடிப்படையாகக் கொண்ட, பயன்படுத்தத் தயாரான ஒரு கலவையாகும்.  பழைய தார் சாலையை புதுப்பிக்கும் பொருள் ‘Rejupave’ என்பது  சாலைகளில் அடர்த்தியான மேல் பகுதிகள் அமைப்பதற்கும், சாலைகளைப் புதுப்பிப்பதற்கும் பயன்படும் ஒரு பொருளாகும் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட கலவை சீல் மேற்பரப்பு (Modified Mix Seal Surfacing (MSS)) இது சாலைப் பொருட்களைச் சூடுபடுத்த வேண்டிய தேவையைக் குறைக்கும் ஒரு 'குளிர்க் கலவை' (cold-mix) சாலையை அமைக்கும் தொழில்நுட்பமாகும்.


4. பசுமை சாலைப் பழுதுபார்ப்பு தொழில்நுட்பம்: ‘Ecofix’ என்பது, சாலையின் சேதமடைந்த பகுதியில் வைத்து, ஒரு சிறிய அதிர்வுக்கருவி அல்லது கையால் தட்டும் கருவி மூலம் இறுக்கக்கூடிய, பயன்படுத்தத் தயாராக உள்ள ஒரு பொருளாகும். சீரமைக்கப்பட்ட சாலையின் மேற்பரப்பு  10 நிமிடங்களில் போக்குவரத்திற்குத் தயாராகிவிடும்.


இது பதப்படுத்தப்பட்ட எஃகு கசடுகளிலிருந்து (Steel slag) தயாரிக்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்தும்போது சாலைக் குழிகளில் உள்ள நீரை வெளியேற்ற வேண்டிய அவசியமில்லை. மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட்ட குழி சீரமைப்பு தொழில்நுட்பத்தின்படி, பழுதுபார்ப்பது என்பது சாலை சீரமைப்பில் பதப்படுத்தப்பட்ட உலோகவியல் கழிவுகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு வழியாகும். இது கற்கள் மற்றும் மண் போன்ற இயற்கை வளங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது.


5. பழைய தார் சாலையை புதுப்பிக்கும் பொருள் (Rejupave Rejuvenator): அடர்த்தியான தரைவிரிப்பு என்பது, ஏற்கனவே உள்ள சாலையின் மேற்பரப்பின் மீது போடப்படும் ஒரு தார் சாலையின் மேற்பரப்பு அடுக்கு ஆகும். இது சாலையின் பயணத் தரத்தை (riding surface) மேம்படுத்தவும், மேல் அடுக்கை புதுப்பிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, ஒரு சாலை பழுதடைந்து அல்லது மேற்பரப்பில் சிதைவு ஏற்பட்டிருக்கும்போது, ஆனால் முழுமையாகப் புதிதாகத் தோண்டி எடுக்க வேண்டிய அவசியம் இல்லாத போது இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.


மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தின் (CRRI) கூற்றுப்படி, இந்த அடர்த்தியான தரைவிரிப்பு கலவையில் மிகக் குறைந்த அளவு (0.5% முதல் 1% வரை) 'Rejupave Rejuvenator' எனும் பொருளைச் சேர்ப்பதன் மூலம், பழைய சாலையில் உள்ள ஜல்லிக் கற்கள் (Aggregate) மற்றும் தார் (Binder) ஆகியவற்றை மீண்டும் பயன்படுத்தும் திறனை தற்போதைய 25%-லிருந்து சுமார் 60-70% வரை அதிகரிக்க முடியும்.


6. மாற்றியமைக்கப்பட்ட கலவை சீல் மேற்பரப்பு (Modified Mix Seal Surfacing (MSS)): மாற்றியமைக்கப்பட்ட கலவை சீல் மேற்பரப்பு (Modified Mix Seal Surfacing (MSS)) அல்லது MSS+ என்பது அடர்த்தியான தரைவிரிப்பு வேலைகளுக்கான ஒரு குளிர்-கலவை முறையாகும். வழக்கமான சாலைப் பணிகளை செய்வதற்க்கு முன்பு தார் மற்றும் ஜல்லிக்கற்களைச் சூடுபடுத்திப் பயன்படுத்த வேண்டும். ஆனால், இந்த மாற்றியமைக்கப்பட்ட கலவை சீல் மேற்பரப்பு (MSS+) முறையில், தார் மற்றும் ஜல்லிக்கற்களைச் சாதாரண அறை வெப்பநிலையிலேயே (Ambient temperature) பயன்படுத்த முடியும்.


வழக்கமான முறைகள் 150-160°C வெப்பநிலையில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், மேம்படுத்தப்பட்ட முறைகளுக்கு 120-125°C மட்டுமே தேவைப்படுகிறது. இது பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை பெருமளவு குறைக்க உதவுகிறது.


சாலை விபத்து மரணங்களுக்கு வழிவகுக்கும் குழிகள்


1. பிப்ரவரி மாதத்தில் மக்களவையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (Ministry of Road Transport and Highways (MoRTH)) சமர்ப்பித்த தரவுகளின்படி, 2020-ஆம் ஆண்டிலிருந்து சாலைக் குழிகள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் 53 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன.



2. 2020-ஆம் ஆண்டில் சாலைக் குழிகள் தொடர்பான சாலை விபத்துகளில் மொத்தம் 1,555-பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டில் 2,385-ஆக அதிகரித்தது. அதாவது, இந்தியாவில் தினசரி சராசரியாக ஆறுக்கும் மேற்பட்டோர் சாலைக் குழிகளால் ஏற்படும் விபத்துகளால்  உயிரிழக்கின்றனர்.


3. மாநில வாரியான தரவுகளின் பகுப்பாய்வின்படி, சாலைக் குழிகளால் ஏற்பட்ட தேசிய அளவிலான மொத்த மரணங்களில் பாதிக்கும் மேற்பட்டவை உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டுமே நிகழ்ந்துள்ளன.  மாநிலம் நாட்டிலேயே தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைப் பதிவு செய்து வருகிறது. 2020-ஆம் ஆண்டில் 759-ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை, 2024-ஆம் ஆண்டில் 1,369-ஆக உயர்ந்துள்ளது.


4. மத்தியப் பிரதேசத்தில் 2020-ஆம் ஆண்டில் 96-ஆக இருந்த உயிரிழப்புகள், 2024-ஆம் ஆண்டில் 277-ஆகக் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. இதைத் தொடர்ந்து பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் அசாம் மாநிலங்கள் உள்ளன. இந்த முதல் ஐந்து மாநிலங்கள் இணைந்து, சாலைக் குழிகளால் ஏற்படும் மொத்த சாலை விபத்து உயிரிழப்புகளில் 82%-க்கும் அதிகமானவற்றைக் கொண்டுள்ளன.


5. ஆண்டுதோறும் ஏற்படும் சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், இந்தியா உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாகச் சீனா (இந்தியாவின் மொத்த எண்ணிக்கையில் 36%) மற்றும் அமெரிக்கா (25%) ஆகியவை இடம்பெற்றுள்ளன. உலகின் 2-வது மிகப்பெரிய சாலைப் கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளது.  63.45 லட்சம் கிலோமீட்டர் நீள சாலைகள் கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இதில் 1.46 லட்சம் கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளும், 1.80 லட்சம் கிலோமீட்டர் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளன.


உயிரி-தார் சாலை (Bio-bitumen technology) தொழில்நுட்பம்


1. ஒன்றிய அரசின் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம், நீடித்த நெகிழ்வுத்தன்மை கொண்ட சாலைகள் அமைப்பதற்காக, நெல் வைக்கோலை ((parali)) வெப்பச் சிதைவு முறையில் உயிரி-தார் சாலை தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. ஜனவரி மாதம் 2026-ஆம் ஆண்டில் நடைபெற்ற தொழில்நுட்பப் பரிமாற்ற நிகழ்வின்போது, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், “வெப்பச் சிதைவு மூலம் ஒன்றிய பண்ணைக் கழிவுகளிலிருந்து சாலைகள் வரை” என்ற இந்த வெற்றிகரமான தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து, இந்தியா “தூய்மையான, பசுமையான நெடுஞ்சாலைகள்”  யுகத்தில் நுழைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.


2. இந்தியா ஆண்டுதோறும் தார் (bitumen) இறக்குமதிக்காக சுமார் ₹25,000 கோடி அந்நியச் செலாவணியைச் செலவிடுகிறது. தற்போதைய உலகளாவிய (மேற்கு ஆசிய) நெருக்கடிகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் சிக்கல்கள் இந்தத் துறையை நேரடியாகப் பாதிக்கின்றன.


3. இந்தியாவில் ஆண்டுதோறும் 600 மில்லியன் டன்களுக்கும் அதிகமான வேளாண் கழிவுகள் உருவாகின்றன. இந்த உயிரிப்பொருளின் கணிசமான பகுதி, குறிப்பாக நெல் வைக்கோல், பொருளாதார ரீதியாக தேவையான பயன்பாட்டு வழிகள் இல்லாததால் திறந்தவெளிகளில் எரிக்கப்படுகிறது. இதனால் கடுமையான காற்று மாசுபாடு, பசுமை இல்ல வாயு வெளியேற்றம், மண் ஊட்டச்சத்து இழப்பு மற்றும் பொது சுகாதார பாதிப்புகள் ற்படுகின்றன.


4. உயிரி-தார் சாலை (Bio-bitumen technology) தொழில்நுட்பம்  இந்தப் பிரச்சினைக்கு ஒரு ஒருங்கிணைந்த தீர்வை வழங்குகிறது. இது தார் (Bitumen) இறக்குமதி சார்ந்திருப்பைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், வைக்கோல் எரிப்புப் பிரச்சினையையும் தணிக்கிறது. நிலையான, மீள்திறன் கொண்ட மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சாலைக் கட்டமைப்பை உருவாக்க இந்தத் தொழில்நுட்பம் மிகவும் அவசியமானதாகும்.


5. மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் இந்தியப் பெட்ரோலிய நிறுவனம் இணைந்து (Indian Institute of Petroleum (IIP)), நெல் வைக்கோலை வெப்பச் சிதைவு செய்வதன் மூலம் உயிரி-தார் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதன் விளைவாகக் கிடைக்கும் உயிரி-எண்ணெய், வேதியியல் அலகு செயல்பாடுகள் மூலம் மேம்படுத்தப்பட்டு, வழக்கமான தார் சாலைக்குப் பகுதி மாற்றாகவோ அல்லது அதன் தரத்தை மேம்படுத்தும் காரணியாகவோ சாலைப் பணிகளில் பயன்படுத்தப்படுகிறது.


அவை, நெல் வைக்கோல் → வெப்பச் சிதைவு → உயிரி எண்ணெய் → உயிரிப் பிணைப்புப் பொருள் → நெகிழ்வுத் தன்மை கொண்ட நடைபாதைகள் ஆகும்.


6. இந்த உயிரி-தார் சாலை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை-6-ல் (ஜோராபாத்-ஷில்லாங் விரைவுச்சாலை) ஒரு சோதனைச் சாலை வெற்றிகரமாக அமைக்கப்பட்டது. இது போக்குவரத்து நெரிசலின் போதும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


Original article : What are the pothole repair technologies developed by CSIR-CRRI? -Khushboo Kumari

Share:

மோதல்களுக்கு நடுவில் இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு. -தீபான்ஷு மோகன்

 இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் 85%-க்கும் அதிகமாக இறக்குமதி செய்யும் நிலையில், புவிசார் அரசியல் சார்ந்த தாக்கங்கள் இந்தியாவின் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதல் வெளிப்படுத்தியுள்ளது. மாறாக, பலதரப்பட்ட எரிசக்தி சந்தையில், இந்தியாவின் பலம் முழுமையான சுயசார்பில் இல்லை, மாறாக பல்வேறு மாற்று வாய்ப்புகளைப் பெற்றிருப்பதில்தான் உள்ளது.


மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள், உலகளாவிய அரசியல் அதிர்வுகள் எவ்வளவு வேகமாக இந்தியாவின் உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச எரிசக்தி முகமையின் தலைவர் குறிப்பிட்டதாவது, தற்போதைய புவிசார் பொருளாதார நெருக்கடியானது 1973, 1979 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒருங்கிணைந்த பாதிப்புகளைவிடவும் கடுமையானது என்று விவரித்துள்ளார்.


மோதலின்போது, சுமார் 120 டாலர் என்ற உச்சத்தைத் தொட்ட பிறகு, பிரென்ட் கச்சா எண்ணெயின் (Brent crude oil) விலை ஒரு பீப்பாய்க்கு (barrel) 109.03 டாலராக உயர்ந்தது. இது உள்நாட்டு அளவில், எரிசக்தி விநியோகச் சங்கிலிகளில் காணப்பட்ட இடையூறுகளின் தாக்கத்தால், இந்தியாவின் பொருளாதாரம் 2026-ஆம் நிதியாண்டில் 7.4%-ஆக இருந்த வளர்ச்சியிலிருந்து 2027-ஆம் நிதியாண்டில் 6.5%-ஆகக் குறையும் என்றும், பணவீக்கம் 2.3%-லிருந்து 4.4%-ஆக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


எரிசக்திப் பாதுகாப்பை இனி மிகக் குறைந்த விலையில் எரிபொருளை வாங்குவது என்று மட்டும் வரையறுக்க முடியாது. அது இப்போது விநியோகத் தடைகளைத் தாங்கும் திறன், எரிபொருள் ஆதாரங்களைப் பன்முகப்படுத்துதல் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார நிலைத்தன்மையைப் பாதுகாப்பது ஆகியவற்றையே சார்ந்துள்ளது.



பழைய எரிசக்தி சந்தை முறையின் வீழ்ச்சி


ரஷ்யா-உக்ரைன் போர், ஏற்கனவே நிலவி வந்த எரிசக்தி சந்தை முறைக்கு விடுக்கப்பட்ட முதல் முக்கிய எச்சரிக்கையாக அமைந்தது. அது, எரிசக்தி மூலத்தை மட்டுமே அளவுக்கு அதிகமாகச் சார்ந்திருப்பதில் உள்ள ஆபத்துகளை அந்தப் போர் வெளிச்சம் போட்டுக் காட்டியது.


ஐரோப்பா ஒரு காலத்தில், தனது எரிவாயு இறக்குமதியில் 45% ரஷ்யாவைச் சார்ந்திருந்தது. 2025-ஆம் ஆண்டளவில், அது 12%-ஆகக் குறைந்தது. ஐரோப்பா இதற்குப் பதிலளிக்கும் விதமாக, வெறும் செயல்திறன் மேம்பாட்டில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. மாறாக, எதிர்கால அபாயங்களிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தியது. 2021 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடுகளின் எரிவாயு நுகர்வு 20% குறைந்தது. அதேநேரத்தில், எரிவாயு மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (liquified natural gas (LNG)) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த இறக்குமதி 18 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.


2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் சராசரி திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) முனையங்களின் பயன்பாடு 52%-ஆக மட்டுமே இருந்தபோதிலும், ஐரோப்பா உபரித் திறனைப் பாதுகாப்பிற்கான விலையாக ஏற்றுக்கொண்டது.


உக்ரைன் போர், குழாய் வழி எரிவாயு விநியோகத்தைச் சார்ந்து இருப்பதில் உள்ள சிக்கலை வெளிப்படுத்தியது என்றால், மேற்கு ஆசியப் போர் கடல் வழிப் போக்குவரத்தைச் சார்ந்து இருப்பதில் உள்ள சிக்கல்களை நிரூபித்தது.


உலகின் கச்சா எண்ணெயில் சுமார் 25% கொண்டு செல்லப்படும் வழித்தடமாக ஹார்முஸ் ஜலசந்தி, உலகளாவிய சந்தைகளில் விலையின் மீதான தாக்கங்களை விரைவாகப் பரப்பும் ஒரு மிக முக்கியமான நெருக்கடி நிலையாக மீண்டும் உருவெடுத்துள்ளது.




மற்ற நாடுகள் வெவ்வேறு வழிகளில் தங்களை மாற்றியமைத்துக் கொண்டுள்ளன


சீனா, ஒப்பந்தங்கள் மூலம் ஆண்டுக்குச் சுமார் 25 மில்லியன் மெட்ரிக் டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) உறுதி செய்துள்ளது. தென் கொரியா ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியே உள்ள கடல்வழிப் பாதைகள் வழியாகக் கொண்டுவரக்கூடிய 273 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயைப் பாதுகாத்து வைத்துள்ளது. அதேவேளையில், ஜப்பான் 254 நாட்களுக்கான நுகர்வுத் தேவையாக 470 மில்லியன் பீப்பாய்களை இருப்பு வைத்துள்ளது.


கூடுதல் உற்பத்தித் திறன் காரணமாக, வளைகுடாப் பகுதி ஏற்றுமதியாளர்கள் விலையை நிர்ணயிக்கும் திறனில் பெரும்பகுதியை மீண்டும் பெற்றுள்ளனர். சர்வதேச எரிசக்தி முகமை (International Energy Agency (IEA)), 2026-ஆம் ஆண்டில் உலகளாவிய எண்ணெய் தேவை சராசரியாக ஒரு நாளைக்கு 80 கிலோபீல் (kb/d) சுருங்கும் என்று கணித்துள்ளது. இதில், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) நாடுகளுக்கு ஒரு நாளைக்கு 236 கிலோபீல் (kb/d) மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒரு நாளைக்கு 254 கிலோபீல் (kb/d) குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) அல்லாத நாடுகளின் தேவை ஒரு நாளைக்கு 152 கிலோபீல் (kb/d) அதிகரிக்கும். இத்தகைய மந்தமான சந்தை சூழலில், இந்தியாவின் எண்ணெய் தேவை வளர்ச்சி என்பது சந்தைப் போட்டியில் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.





 



இந்தியா தனது செயல்பாட்டுச் சுதந்திரத்தை விரிவுபடுத்த எவ்வாறு வியூகம் வகுத்தது?


இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிகளில் ஏற்படும் இடையூறுகளுக்கான சாத்தியமான அச்சுறுத்தல் உண்மையானது மற்றும் உடனடியானது. ஏனெனில், இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் 85%-க்கும் மேலானவற்றை இறக்குமதி செய்கிறது. மேலும், அதன் இறக்குமதிகளில் ஏறக்குறைய 45% 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) வழியாகவே செல்கிறது.


பல ஆண்டுகளாக, இந்தியா, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயையே பெரிதும் சார்ந்திருந்துள்ளது. இருப்பினும், எண்ணெய் இறக்குமதி செய்யும் பல முக்கிய நாடுகளைவிட, தொடர்ச்சியாக ஏற்பட்ட தாக்கங்களை இந்தியா சிறப்பாகவே சமாளித்துள்ளது. இந்தியா தற்போது உலகின் மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோர் நாடாகத் திகழ்கிறது.


பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பின் (OPEC) கணிப்பின்படி, இந்தியாவின் எண்ணெய் நுகர்வு 2025-ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 5.74 மில்லியன் பீப்பாய்களாகவும் (mb/d) மற்றும் 2026-ஆம் ஆண்டில் 5.99 mb/d ஆகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், சீனாவின் கச்சா எண்ணெய் தேவை ஒரு நாளைக்கு 80 kb-ஆக இருக்கும் நிலையில், இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை ஒரு நாளைக்கு சுமார் 130 கிலோபீல் (kb) அதிகரிக்கும் என்று சர்வதேச எரிசக்தி முகமை (IEA) கணித்துள்ளது.


சீனாவின் எண்ணெய் தேவை குறைந்து வரும் சூழலில், உலக அளவில் எண்ணெய் பயன்பாடு அதிகரித்து வரும் ஒரு சில முக்கியமான நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.


2022-ஆம் ஆண்டிற்கு முன்பு, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யா வெறும் 2% மட்டுமே வழங்கியது. இருப்பினும், 2024-25-ஆம் நிதியாண்டில், சுமார் 36%-ஆக உயர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் விநியோகஸ்தராக ரஷ்யா மாறியுள்ளது. வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட இடையூறுகள் தீவிரமடைந்த நிலையில், ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கான எண்ணெய் வரத்து மேலும் அதிகரித்தது.

தற்போது, ​​இந்தியாவின் இறக்குமதிப் பட்டியலில் ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் அடங்கியுள்ளன. அதே வேளையில், புவியியல் ரீதியாகப் பல நாடுகளிலிருந்தும் இந்தியா தனது தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது. சிதறிக்கிடக்கும் இன்றைய எரிசக்தி சந்தையில், இந்தியாவின் பலம் என்பது தன்னிறைவு நிலைய அடைவதில் மட்டும் இல்லை. மாறாக, பல்வேறு நாடுகளிடமிருந்து எரிசக்தித் தேவையைப் பெறுவதற்கான மாற்று வாய்ப்புகளை உருவாக்கி வைத்திருப்பதிலேயே உள்ளது.


உத்தி ரீதியிலான ஆதாயங்கள் மற்றும் கட்டமைப்பு ரீதியிலான அபாயங்கள்


இந்தியா அடுத்தடுத்த தாக்கங்களை நன்கு சமாளித்துள்ளது. முதலாவதாக, கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா சார்ந்திருப்பது மிக அதிகமாக உள்ளது. 2024-25-ஆம் நிதியாண்டில் இது 89.4%-ஐ எட்டியது. இந்தக் காலகட்டத்தில், இந்தியா உள்நாட்டில் 28.7 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை மட்டுமே உற்பத்தி செய்தது. இதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலைகள், சரக்குக் கட்டணங்கள் மற்றும் நாணய மாற்று விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து கவலையளிப்பதாக உள்ளன.


இரண்டாவதாக, புவியியல் அமைப்பு இன்னும் வியூகங்களைக் கட்டுப்படுத்துகிறது. 2026-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பதற்றங்கள் காரணமாக வளைகுடா கடல் வழித்தடங்களில் சரக்கு போக்குவரத்து கணிசமாகக் குறைந்தது. மேலும், 'ஆபரேஷன் சங்கல்ப்' (Operation Sankalp) நடவடிக்கையின்கீழ், 97,000 மெட்ரிக் டன் மொத்த சரக்கை ஏற்றிச் சென்ற இந்திய எரிவாயு கப்பல்களுக்குக் கடற்படைப் பாதுகாப்பு தேவைப்பட்டது. எரிசக்தி ஆதாரங்களைப் பன்முகப்படுத்தினாலும், கடல்வழியில் உள்ள குறுகிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளை கடந்து செல்வதைத் தவிர்க்க முடியாது.


மூன்றாவதாக, எரிசக்தி மாற்றம் புதிய பாதிப்புகளை உருவாக்குகிறது. சூரிய ஆற்றல், மின்கலங்கள், மின்சார வாகனங்கள் (EV) மற்றும் சேமிப்புத் துறைகளில் இந்தியாவின் விரிவாக்கம் காலப்போக்கில் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்கக்கூடும். இருப்பினும், எதிர்காலத்தில் லித்தியம், கோபால்ட், நிக்கல், தாமிரம் மற்றும் அரியவகை கனிமங்கள் மீதான இந்தியாவின் சார்புநிலை அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னோக்கிச் செல்லும் வழி


முக்கிய கனிமங்களுக்கான இந்தியாவின் சார்புநிலையானது, மற்ற நாடுகளில், குறிப்பாக சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய அரியவகை கனிம உற்பத்தியில் 91%-க்கும் அதிகமான கட்டுப்பாட்டை சீனா கொண்டுள்ளது. ஆனால், இந்தியா 2035-ஆம் ஆண்டிற்குத் தேவைப்படும் மின்கலன் தரத்திலான கனிமங்களில் 5%-க்கும் குறைவாகவே உள்நாட்டில் சுத்திகரிப்பு செய்கிறது. கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களை இந்தியா திறம்படக் கையாண்டாலும், இத்தகைய தற்காலிக நெகிழ்வுத்தன்மை நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பைத் தந்துவிடாது என்றும் எச்சரிக்கப்படுகிறது.


அடுத்த கட்டமாக, இந்தியா தனது நீண்டகால உத்திமுறை சார்ந்த எண்ணெய் இருப்புக்களை அதிகரிப்பது போக்குவரத்தில் எண்ணெய் சார்ந்த பயன்பாட்டைக் குறைப்பது, கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் முக்கிய கனிமங்களின் விநியோகச் சங்கிலிகளுக்குப் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். உண்மையான கேள்வியானது, இனி நெருக்கடிகளின்போது இந்தியாவால் விநியோகஸ்தர்களை மாற்ற முடியுமா என்பதல்ல. மாறாக, அத்தகைய நெருக்கடிகள் ஏற்படும் போது அதனால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளை நம்மால் குறைக்க முடியுமா என்பதே முக்கியமான கேள்வியாகும்.


தீபான்ஷு மோகன், ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் டீன் ஆவார். அவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் (LSE) அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸில் வருகைப் பேராசிரியராகவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வருகைதரும் கல்விசார் ஆய்வாளராகவும் உள்ளார். 


ஸ்ரீசோனியா சுப்ரமணியம் இந்தக் கட்டுரைக்கு பங்களித்துள்ளார். ஸ்ரீசோனியா மற்றும் அதிதி லாசரஸ் இருவரும் ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் புதிய பொருளாதார ஆய்வுகளுக்கான மையத்தில் (CNES) ஆராய்ச்சி ஆய்வாளர்களாக உள்ளனர்.


Original article : India’s energy security amid conflicts. -Deepanshu Mohan

Share:

கல்வி நிறுவனங்களில் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குதல் மற்றும் ஜனநாயகத்தின் இருப்பை பலவீனப்படுத்துதல். -சி. பி. ராஜேந்திரன்

 கல்வித்துறையில் நிலவும் கருத்துச் சுதந்திரக் கட்டுப்பாடு, மாறுபட்ட கருத்துகளுக்கான இடமின்மை ஆகியவை இந்தியாவில் ஜனநாயகத்தின் கடுமையான வீழ்ச்சியை உணர்த்துகின்றன.


‘Varieties of Democracy (V-Dem)’ நிறுவனத்தின் 2026-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியா இன்னும் ஒரு "தேர்தல் சர்வாதிகாரம்" (electoral autocracy) என வகைப்படுத்தப்பட்டு, உலகளாவிய தரவரிசையில் கீழ்பாதியிலேயே உள்ளது. ஜனநாயக சுதந்திரங்களில், குறிப்பாக கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் குடிமைச் சமூகம் ஆகியவற்றில் தொடர்ச்சியான சரிவு ஏற்பட்டு வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இது இந்தியாவை "மிக மோசமான சர்வாதிகார நாடுகளின்" (worst autocratizers) பட்டியலில் இடம்பெறச் செய்கிறது. இது, பொறுப்புணர்வு மற்றும் பன்முகத்தன்மைக்கு ஆதரவாக இருக்கும் அரசு நிறுவனங்கள் மற்றும் நெறிமுறைகள் படிப்படியாகச் சிதைக்கப்பட்டு வருவதைக் குறிப்பதால், இந்தியாவின் மீதான அதிகரித்து வரும் சர்வதேச ஆய்வுகளுக்கும் வழிவகுத்துள்ளது.


‘Scholars at Risk’ வெளியிட்டுள்ள ‘Free to Think 2024’ அறிக்கை, இந்தியாவை "முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்ட" கல்விச் சுதந்திரம் கொண்ட நாடாக வகைப்படுத்துகிறது. அதிகரித்து வரும் அரசியல் தலையீடு மற்றும் கல்வி நிறுவனங்கள் மீதான அழுத்தம் ஆகியவற்றால் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, பாடத்திட்ட மாற்றங்கள், வரையறுக்கப்பட்ட கல்விசார் ஆய்வுகள் மற்றும் அறிவுசார் மாற்றுக்கருத்துகளுக்கான கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் மூலம் உயர்கல்விக்குள் ஒரு இந்து தேசியவாத செயல்திட்டத்தை திட்டமிட்டுத் திணிக்கப்படுவதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.



இந்த வகைப்பாடானது தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு அல்ல. இது, ‘V-Dem’ முதல் ‘Freedom House’ வரையிலான உலகளாவிய குறியீடுகளால் ஆவணப்படுத்தப்பட்ட, ஜனநாயக வீழ்ச்சியின் ஒரு பெரிய வடிவத்துடன் பொருந்துகிறது. ஒரு காலத்தில் விமர்சன ரீதியான சிந்தனைகளுக்கும் பன்முகத்தன்மை கொண்ட விவாதங்களுக்கும்  களங்களாகப் போற்றப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு, இதன் மூலம் தெரியவரும் செய்தி சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாக உள்ளது. இது கற்பிப்பதற்கும், கற்பதற்கும், கேள்வி எழுப்புவதற்குமான சுதந்திரத்திற்கும் இனி எந்தவித உத்தரவாதமும் இல்லை என்பதாகும்.


குறைந்துவரும் கல்விச் சுதந்திரம், ஜனநாயகத்தையே எவ்வாறு பலவீனப்படுத்துகிறது என்பது பற்றி அதிகம் விவாதிக்கப்படுவதில்லை. ஒரு ஆரோக்கியமான மற்றும் செயல்படும் ஜனநாயகம் என்பது தேர்தல்கள், வாக்குரிமைகள் மற்றும் சட்டங்களைவிட அதிகமானவற்றைச் சார்ந்துள்ளது. அதற்கு ஒரு வலுவான சமூக அமைப்பு, சான்றுகள் அடிப்படையிலான தகவல்களுக்கான தடையற்ற அணுகல் மற்றும் உண்மையான பொது விவாதத்திற்கான களம் ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கிறது. ஆனால், தற்போதைய சூழலில், குறிப்பாக கல்வித்துறையில் இத்தகைய அம்சங்கள் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.


இந்தச் சுதந்திரங்கள், கல்வித்துறையில் மிகவும் வெளிப்படையாக, நேரடி அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. ஆய்வையும் விவாதத்தையும் வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், நிதி நெருக்கடிகள் (funding cuts), அரசின் ஒழுங்குமுறை அழுத்தங்கள் மற்றும் அதிகரித்து வரும் சுய-தணிக்கை ஆகியவற்றை எதிர்கொண்டு, அவற்றின் தன்னாட்சியைப் பலவீனப்படுத்துகிறது. வளர்ச்சியடைந்த இந்தியாவின் கல்வி நிறுவன மசோதாவானது (Viksit Bharat Shiksha Adhishthan Bill), கல்வி சுதந்திரத்தை விட அதிகாரத்தை மையப்படுத்துவதற்கும் இணக்கமான போக்கிற்குமே முன்னுரிமை அளிக்கிறது. இது மேலும் குறையும்போது, ​​விமர்சன ரீதியாகச் சிந்திக்கும் ஆற்றலும் பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் சமூகத்தின் திறனும் குறைகின்றன.




கவலையளிக்கும் ஒரு போக்கு


‘The Wire’ இதழின் அறிக்கைப்படி, 2014 முதல் 2026-ஆம் ஆண்டுக்கு இடையில் தங்களின் கருத்துக்கள் அல்லது அரசியல் நிலைப்பாடுகளுக்காக 62 கல்வியாளர்கள் தண்டனை நடவடிக்கைகளை எதிர்கொண்டனர். பேராசிரியர்களை "அரசு ஊழியர்கள்" என வரையறுக்கும் சேவை விதிகளைப் பயன்படுத்தி, வளாகங்களில் கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது. ‘Nature’ இதழில் (ஏப்ரல் 2024), யாமினி ஐயர், தொடர்ச்சியான சீர்குலைந்த நிகழ்வுகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கைதுகள், மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களுக்கான நுழைவு அனுமதி தடைகள் ஆகியவற்றை ஆவணப்படுத்துதல் போன்ற தொடர்ச்சியான இடையூறுகளை 'இந்திய கல்வி சுதந்திர அமைப்பு' (India Academic Freedom Network) ஆவணப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


1960-களின் தொடக்கத்தில் இந்தியக் குடியுரிமை பெற்று, இந்தியாவில் பணிபுரிந்தபோது அரசாங்கத்தை வெளிப்படையாக விமர்சித்த பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜே.பி.எஸ். ஹால்டேனுடனான வேறுபாடு வியக்கத்தக்கது. கல்வித்துறையில் இன்று மாற்றுக்கருத்துகளுக்கான இடம் எவ்வளவு சுருங்கிவிட்டது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. 2024-26-ஆம் ஆண்டு வரையிலான தரவுகள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்களை இலக்காகக் கொண்டு, கல்விச் சுதந்திரத்தின் மீது ஒரு பரந்த தாக்குதல் நடத்தப்படுவதைக் காட்டுகின்றன. அரசியல் அழுத்தம், நிறுவனத் தோல்விகள் மற்றும் சமூகப் பாகுபாடுகளால் தூண்டப்படும் இந்தப் போக்குகள், சில தலைப்புகள் வரம்பு மீறியவையாகக் கருதப்படுகின்றன. சில குரல்கள் ஆபத்தானவை என்றும், அறிவுத் தேடலானது அரசியல் நலன்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் உணர்த்துகின்றன.


ஒரு சீரான மற்றும் கவலையளிக்கும் போக்கு வெளிப்படுகிறது. குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதாக நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறது. மேற்பார்வை மற்றும் நீதியை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட உள்ளகப் புகார்க் குழுக்கள் (Internal complaints committees), உண்மையான பொறுப்புணர்வைவிட வழக்கமான இணக்கத்திற்காகவே அதிகம் இயங்குகின்றன என்றும், அவை "அலங்காரமானவை" (ornamental) என்றும் விமர்சகர்களால் விவரிக்கப்படுகின்றன. மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட அமைப்புகளே, மௌனம் அல்லது செயலற்ற தன்மையால் குற்றங்களுக்குத் துணை போகும்போது, ​​அந்த அச்சமூட்டும் விளைவு மேலும் வலுவாகிறது. நம்பிக்கை சிதைகிறது, அச்சம் வேரூன்றுகிறது. மேலும் அதிகாரம் மட்டுமே பாதுகாக்கப்படும், அந்த அதிகாரத்தை எதிர்க்கும் குரல்களுக்குப் புகலிடம் கிடைக்காது என்ற தெளிவான செய்தி தெளிவாகிறது. சுதந்திரமான தேடலை ஊக்குவிக்க வேண்டிய அந்தச் சுவர்களுக்குள்ளேயே குரல் கொடுப்பவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல் போகிறது.


கவலையளிக்கும் ஒரு சிதைவு


இந்த நடவடிக்கைகள், தலைவர்களைக் கேள்வி கேட்டுப் பொறுப்பேற்கச் செய்யும் பொதுச் சமூகம் மற்றும் கல்வி நிறுவனங்களின் திறனைக் குறைக்கின்றன.  இது இந்திய ஜனநாயகத்திற்கு அவசியமான அறிவுத்துறையின் அடிப்படையையே சிதைக்கிறது. வன்முறை தண்டிக்கப்படாமல் போகும்போதும், சாதி மற்றும் மதப் பாகுபாடுகள் எதிர்க்கப்படுவதற்குப் பதிலாகப் பின்பற்றப்படும்போதும், பாலியல் குற்றவாளிகள் பாதுகாக்கப்படும்போதும், மாறுபட்ட கருத்து குற்றமாக்கப்படும்போதும், சொல்லப்படும் செய்தி சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாகிறது. அறிவைத் தேடுவது அதிகாரத்தில் இருப்பவர்களை சீர்குலைக்கக் கூடாது.


சர்வதேச குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் (International Covenant on Civil and Political Rights (ICCPR)) முதல் விருப்ப ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பதில், அரசியல் உரிமைகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு பிரதிபலிக்கிறது. 1979-ஆம் ஆண்டு முதல் சர்வதேச குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையில் (ICCPR) ஓர் உறுப்பினராக இருந்தபோதிலும், அது ஐ.நா.வின் புகார் அளிக்கும் வழிமுறையை ஏற்கவில்லை. இதன் பொருள், உரிமை மீறல்களுக்காக உள்நாட்டு சட்டரீதியான தீர்வுகளைப் பயன்படுத்திய பிறகு, சர்வதேச அளவில் முறையிட்டுத் தீர்வு காண முடியாது என்பதாகும்.


இந்த முரண்பாடு வியக்கத்தக்கது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், அதன் 14, 19 மற்றும் 21 ஆகிய அரசியலமைப்பு விதிகள் மூலம், சர்வதேச குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையில் (ICCPR) உள்ள அதே உரிமைகளில் பலவற்றிற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்திய உச்சநீதிமன்றம், அடிப்படை உரிமைகளை விளக்குவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் சர்வதேச மனித உரிமைகள் நெறிமுறைகளை அடிக்கடி பயன்படுத்தியுள்ளது. அத்தகைய ஒரு வழிமுறை, உள்நாட்டு நீதிமன்றங்கள் நீதியை வழங்கத் தவறும் போது, இந்தியக் குடிமக்கள் அந்த நீதிமன்றங்களுக்கு அப்பால் நீதியை நாட வழிவகுக்கும். இந்த வசதி இருந்தால், குறிப்பாக அதிகப்படியான மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளும் விளிம்புநிலை மக்கள், உள்நாட்டு நீதிமன்றங்கள் கைவிடும்போது சர்வதேச அளவில் நீதியைப் பெற முடியும்.


ஜனவரி 7, 2026 அன்று 'The Leaflet' இதழில் வெளியான, ரவி நாயரின் “உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் வழக்கு: சாத்தியக்கூறுகளுக்குள் ஒரு சர்வதேசப் பிரச்சாரம்” (The Umar Khalid and Sharjeel Imam case: An international campaign within the realm of possibility) என்ற தலைப்பிலான ஆழ்ந்த கட்டுரையில் இந்தப் பிரச்சினை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இளம் கல்வி அறிஞர்களான உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம், கடந்த ஐந்து ஆண்டுகளாக விசாரணைக் கைதிகளாகச் சிறையில் இருந்து வருகின்றனர். ஜனவரி மாதம் 6-ஆம் தேதியன்று, உச்சநீதிமன்றம் அவர்களின் பிணை (Bail) மனுவை நிராகரித்ததுடன், ஓராண்டுக்கு பிணை கோரி விண்ணப்பிக்கவும் தடை விதித்தது. இது பல சட்ட வல்லுநர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


இர்பான் மெஹ்ராஜ் போன்ற பத்திரிகையாளர்களும், தற்போது விடுதலையாகியுள்ள சோனம் வாங்சுக் போன்ற மனிதநேயவாதிகளும், ஜாமீன் பெறுவதற்குக் கூட நீண்ட சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர். அதேநேரத்தில், கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சில முக்கிய ஆன்மீகத் தலைவர்கள் தொடர்ந்து பரோலையோ அல்லது கடும் நிபந்தனைகளுக்குட்பட்ட பிணையிலோ விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாடு மிகத் தெளிவாகப் புலப்படுகிறது. ஒருபுறம், நீதி, கண்ணியம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான குரல் ஓர் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. மறுபுறம், கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்தச் சமச்சீரற்ற தன்மையில்தான், யாருடைய சுதந்திரங்கள் பாதுகாக்கப்படுகின்றன, யாருடை சுதந்திரம் அமைதியாகக் கைவிடப்படுகின்றன என்ற கவலையளிக்கும் உண்மை இந்தச் சமமற்ற நிலையில்தான் அடங்கியுள்ளது.




ஒருமைப்படுத்துவதன் விளைவு 


தன்னைத்தானே ‘ஜனநாயகத்தின் தாய்’ (Mother of Democracy) என்று பிரகடனப்படுத்திக் கொள்பவர், சிந்தனைச் சுதந்திரத்திற்குப் பதிலாக சிந்தனையில் ஒரே மாதிரியான தன்மையை ஏன் விரும்புகிறார்? மரபுசார் சிந்தனைகளுக்கு சவால் விடுத்து, புதிய கருத்துக்களை உருவாக்க உழைப்பவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்கள் எப்போதுமே புகலிடமாக இருந்து வருகின்றன.


இது பல்கலைக்கழக வாழ்க்கையில் உள்ள ஒரு குறை அல்ல. இது அதன் இன்றியமையாத அம்சங்களில் ஒன்றாகும். பெரும்பான்மையினரின் கருத்தைக் கேள்விக்குட்படுத்துவதாக இருந்தாலும் கூட, இத்தகைய விவாதங்கள் தான் ஜனநாயகத்தைப் புதுப்பிக்கின்றன.


வரலாறு பல கடுமையான எச்சரிக்கைகளை அளிக்கிறது. சர்வாதிகாரம் என்பது எப்போதும் வியத்தகு நிகழ்வுகளுடன் திடீரென வருவதில்லை. பெரும்பாலும், அது ஜனநாயகங்களுக்கு உள்ளிருந்தே மெதுவாகவும், அமைதியாகவும், இறுதியில் அது யாரை மௌனமாக்கப் போகிறதோ அவர்களின் சம்மதத்துடனும் வெளிப்படுகிறது. சர்வாதிகாரம் என்பது அமைப்பில் ஏற்படும் திடீர் மாற்றத்தினால் உருவாவதில்லை. மாறாக, அது பொதுமக்களை மெதுவாகப் பழக்கப்படுத்துவதன் மூலம் உருவாகிறது. இது, செயற்கையாகப் பாதிக்கப்பட்ட நிலையை உருவாக்குதல், அச்சத்தைப் பரப்புதல், மற்றும் ஒரு காலத்தில் வலுவாகவும் நிரந்தரமாகவும் தோன்றிய ஜனநாயக நெறிமுறைகளைப் படிப்படியாக பலவீனப்படுத்துதல் ஆகியவற்றின் மூலமே நிகழ்கிறது. இந்தச் செயல்பாட்டில், குடிமக்களும் நிறுவனங்களும் தங்களது சொந்த சுதந்திரத்தையே சிதைப்பதற்குத் துணையாக மாறிவிடுகிறார்கள் மேலும், அகற்றப்படும் உரிமைகளும் பாதுகாப்புகளும், உண்மையில் தாங்கள் எப்போதுமே இயல்பாகக் கருதிய ஜனநாயகத்தின் அடித்தளங்களாக இருந்தன என்பதை அவர்கள் உணருவதே இல்லை.





கல்விச் சுதந்திரக் குறியீட்டில் (Academic Freedom Index) ஆவணப்படுத்தப்பட்டுள்ள வீழ்ச்சி என்பது ஒரு கருத்தியல் அளவுகோல் அல்ல. அது இந்திய ஜனநாயகத்தின் ஆரோக்கியத்தையே அளவிடும் ஒரு அளவுகோலாகும். அறிஞர்கள், சமூகச்  செயற்பாட்டாளர்கள் மற்றும் மாணவர்கள் மௌனமாக்கப்படும்போதும், மாற்றுக்கருத்துகள் குற்றமாக்கப்படும்போதும், கல்வி நிறுவனங்கள் அரசியல் நலன்களால் ஆக்கிரமிக்கப்படும் போதும், ஜனநாயகப் பொறுப்புணர்வு நிலைத்திருக்கும் அடித்தளமானது, ஒவ்வொரு கல்லாக, ஒவ்வொரு வழக்காக, ஒவ்வொரு மௌனத்தின் வழியாகவும் அது சிதைக்கப்படுகிறது.


புள்ளிவிவரங்கள் ஒரு நிலவரத்தைக் குறிப்பிடுகின்றன. இருப்பினும், உண்மையான நிலவரமானது நமது கல்வி வளாகங்களில் உருவாகி வருகிறது. இங்கு, ஒரு காலத்தில் தேடல் மிகுந்த கேள்விகளை  எழுப்பிய குரல்கள் இப்போது மெல்லிய ஓசைகளாகச் சுருங்கிவிட்டன. நமது நீதிமன்றங்களில், நீதியானது அதிகாரத்தால் மேலும் மேலும் பாதிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் பேசத் துணிந்தவர்களின் மௌனத்திலும் அந்த உண்மை வெளிப்படுகிறது. அந்த மௌனம் நாளுக்கு நாள் சமூகத்தில் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் அரசு இயந்திரம் அதிகப்படியான நடைமுறைகள், தண்டனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் கொண்டதாக மாறிவருகிறது.


நிறுவனங்கள் இந்தப் பாதையில் தொடர்ந்து செல்லுமா அல்லது தங்களின் உண்மையான நோக்கத்தை மீட்டெடுக்குமா என்பதே முக்கியக் கேள்வியாக உள்ளது. சமூகத்தைப் பொறுத்தவரை, விமர்சன சிந்தனைக்கு இடமளிக்கும், அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தும் மற்றும் நீதி, நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளில் இளைஞர்கள் அர்த்தமுள்ள வகையில் ஈடுபட உதவும் தளங்களை நாம் பாதுகாப்போமா என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.


சி.பி. ராஜேந்திரன் ஒரு புவியியலாளர் மற்றும் அறிவியல், அரசியல், சுற்றுச்சூழல், மற்றும் கல்வி குறித்த ஒரு தொடர்பாளர் ஆவார்.


Original article : Silencing academia, weakening democratic space. -C. P. Rajendran

Share:

இணைப்பை ஏற்படுத்துதல் : இந்தியாவின் சூரியஒளி மின்உற்பத்தி மற்றும் மின்கலச் சேமிப்பு குறித்து . . .

 சூரிய மின்சக்தி உற்பத்திக்கு ஏற்ப மின்கலச் சேமிப்புத் திறனும் அதிகரிக்கப்பட வேண்டும்.


ஏப்ரல்  மாதம் 25-ஆம் தேதியன்று, இந்தியாவின் மின்சாரத் தேவை 256.1 ஜிகாவாட் என்ற புதிய சாதனை அளவை எட்டியது. இதில், சூரியஒளி மின்உற்பத்தி நிலையங்கள் (Solar plants) பிற்பகல் நேரத்தில் தேவைப்பட்ட மின்சாரத் தேவையில் 21.5 சதவீதத்தை பூர்த்தி செய்தன. இது ஒரு வரலாறு காணாத உயர்வாகக் கருதப்படுகிறது. மேலும், சூரியஒளி கிடைக்கும் நேரங்களில், இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள சூரியஒளி மின்உற்பத்தி அளவானது கணிசமான பங்களிப்பை வழங்க முடியும் என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது. இது ஒரு சாதனை என்றாலும், முழு நாளின் கணக்கைப் பார்க்கும்போது நிலைமை சற்று சவாலாகவே உள்ளது. ஒரு நாள் முழுவதற்குமான கணக்கீட்டில், சூரியஒளியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சார அளவின் பங்களிப்பு வெறும் 10.8% மட்டுமே ஆகும். அதிலும் சூரிய மறைவிற்குப் பிறகு மாலைநேரத் தேவையில் சூரியஒளியில் இருந்து பெறப்படும்  மின்சார உற்பத்தியானது வெறும் 0.1% மட்டுமே மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் நிறுவப்பட்ட மின்உற்பத்தித் திறனில் சூரியஒளியில் இருந்து பெறப்படும் மின்சார உற்பத்தி அளவின் பங்கு, 2022-ஆம் ஆண்டில் சுமார் 15%-ஆக இருந்தது. அது 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஏறக்குறைய 28%-ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், 2022-ஆம் ஆண்டில் இந்தியாவின் உச்சபட்ச மின்தேவை நிலவிய நாளில், சூரியஒளியில் இருந்து பெறப்படும் மின்சார உற்பத்தியானது சுமார் 5.6% மட்டுமே இருந்தது. இது ஏப்ரல் மாதத்தில் 10.8%-ஆக மட்டுமே அதிகரித்தது. சூரிய மின் தகடுகளோ (solar panels), நிலமோ அல்லது அரசாங்கத்தின் லட்சிய இலக்கோ முதன்மையான பிரச்சனை அல்ல என்றும் சூரியஒளி மின்உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் பெருமளவு மின்சாரத்தைச் சேமித்து, தேவைப்படும்போது பயன்படுத்தக்கூடிய 'மின்கலச் சேமிப்பு அமைப்புகளின்' (battery storage systems) பற்றாக்குறையே இதில் உள்ள முதன்மை தடையாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. உண்மையில், மின்கலச் சேமிப்பு வசதிகள் மிகவும் குறைவாக இருப்பதால், அதிக அளவு சூரியஒளியின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சில மாநிலங்கள், குறிப்பிட்ட நேரங்களில் மின் விநியோகத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றன. இந்தியாவின் மின்சாரக் கட்டமைப்பில் (power grid) ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2025-ஆம் ஆண்டில், மே மாதத்தின் பிற்பகுதிக்கும் டிசம்பர் மாதத்திற்கும் இடையில் இந்தியா 2.3 டெராவாட் (TWh) சூரியஒளியில் இருந்து பெறப்படும் மின்சார உற்பத்தி அளவைக் குறைக்க வேண்டியிருந்தது. இது சராசரி மாதாந்திர சூரியஆற்றல் மின்சார உற்பத்தியில் 18%-க்குச் சமமாகும். இதில் அக்டோபர் மாதத்தில் மட்டும் 0.9 டெராவாட் (TWh) அளவிலான ஆற்றல் வீணடிக்கப்பட்டது. மின்சாரம் பயன்படுத்தப்படாவிட்டாலும், அதைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அரசு நஷ்டஈடு வழங்க வேண்டியுள்ளதால், இது பொதுமக்களின் வரிப்பணத்திற்கே சுமையாக முடிகிறது. இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள முன்னறிவிப்பு, இப்பிரச்சனையின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை இயல்பைவிடக் குறைவாகவே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுத்துறை கணித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் இத்தகைய எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அதிக வெப்பமும் வறட்சியும் நிறைந்த கோடைக்காலம், பகல்நேர மின்சாரத் தேவையை அதிகரிக்கும்  என்றும் இத்தகைய இக்கட்டான சூழலில், சூரியஆற்றல் மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்த மின்கலச் சேமிப்பு திறன் வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகிறது.


மின்கலன் சேமிப்பு தொடர்பான பொருளாதார நிலவரம் மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு மெகாவாட்டிற்கு மாதத்திற்கு சுமார் ₹2.21 லட்சமாக இருந்த, இரண்டு மணிநேர மின்கலச் சேமிப்புக்கான கட்டணம், அந்த ஆண்டின் இறுதிக்குள் ₹1.48 லட்சமாகக் குறைந்துள்ளன. ஆனால், இத்திட்டங்களைச் செயல்படுத்துவதில்தான் சவால் உள்ளது. 2025-ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் 0.7 ஜிகாவாட் (GW) மின்கலச் சேமிப்பு அமைப்பு மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. மேலும், டிசம்பர் மாதம் 2026-ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 2 ஜிகாவாட் (GW) மின்கலச் சேமிப்பு அமைப்பானது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இப்போது திட்டங்களுக்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதில் கவனம் செலுத்துவதைக் குறைத்து, திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, புதிய சூரியசக்தி ஏலங்களின்போது அத்துடனேயே மின்கலச் சேமிப்பு நிலையத்தையும் அமைப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். மேலும், குறைந்த கட்டணத்தில் ஒப்பந்தம் எடுக்கப்பட்ட திட்டங்கள் எதிர்கொள்ளும் நிதிநெருக்கடிகளுக்குத் தீர்வு காண வேண்டும். ஏனெனில், சேமிப்பு வசதி இல்லாத சூரிய மின்சக்தி என்பது முழுமையாக எந்தவிதப் பலனையும் அளிக்காது என்பதையும் சுட்டிகாட்டுகின்றனர் .


Original article : ​Building bridges: On India’s solar generation, battery storage.

Share: