சட்ட அமைப்பின் நிறுவனமயமாக்கப்பட்ட மந்தநிலை -சஷி தரூர்

ஒரு சாதாரண மனிதருக்கு, சட்டரீதியான செயல்முறை என்பது, தீர்வுக்கான தெளிவான எல்லையின்றி நேரமும், பணமும் காணாமல் போகும் ஒரு கருந்துளை போலத் தோன்றுகிறது.


நமது சட்ட அமைப்பின் சிக்கலான பாதைகளில் பல ஆண்டுகளாகப் பயணித்து வரும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு, நீதிமன்றம் என்பது பெரும்பாலும் நம்பிக்கை குறைந்துவரும் ஓர் இடமாகவே உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து, வழக்குப் பட்டியல்களில் வெளிப்படையான வேகத்துடன் முன்னேறும்போது, சராசரி குடிமகனோ, தலைமுறைகள் வரை நீடிக்கக்கூடிய ஒத்திவைப்புகள் மற்றும் நடைமுறைத் தடைகளின் சுழற்சியில் சிக்கிக்கொள்கிறார். "நீதி தாமதமானால், அது மறுக்கப்பட்டதற்குச் சமம்" என்ற சொற்றொடர் இனி வெறும் எச்சரிக்கை அல்ல, மாறாக அதுவே ஒரு வழக்கமான செயல்பாட்டு நடைமுறையாகிவிட்ட ஒரு நிலையை நாம் அடைந்துவிட்டோம்.


இப்போது, ​​கவனம் மாறவேண்டும். அது, தீர்ப்பை வழங்கும் நீதிபதியிடமிருந்து கவனத்தை விலக்கி, குற்றவாளிக் கூண்டில் நிற்கும் மக்கள் பக்கம் திருப்ப வேண்டிய நேரம் இது. இந்தியாவில் நீதித்துறை சீர்திருத்தத்தின் அவசரம் என்பது வழக்கறிஞர்களுக்கான ஒரு தொழில்முறை அக்கறையோ அல்லது கல்வியாளர்களுக்கான ஒரு கோட்பாட்டுப் பயிற்சியோ அல்ல, இது ஒரு அடிப்படை மனித உரிமையின் நெருக்கடியாகும். இது அரசு தனது நியாய வாக்குறுதியை எவ்வாறு நிறைவேற்றுகிறது என்பதை முழுமையாக மறுபரிசீலனை செய்யக் கோருகிறது.


வேதனை தரும் காத்திருப்பு


சாதாரண மக்களின் முக்கியப் புகார், நிலுவையில் உள்ள வழக்குகளின் பெரும் சுமையாகும். இந்தச் சுமைதாங்க முடியாததாகவும், கடினமானதாகவும் இருக்கிறது. தற்போது ஐந்து கோடிக்கும் அதிகமான வழக்குகள் நமது நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இதன் காரணமாக, இந்த அமைப்பு தனக்குத்தானே எதிராகச் செயல்படுகிறது. ஒரு சாமானிய மனிதனுக்கு, சட்ட செயல்முறை என்பது, தீர்வுக்கான தெளிவான எல்லையின்றி நேரமும் பணமும் காணாமல் போகும் ஒரு கருந்துளை போலத் தோன்றுகிறது. இந்த நிலுவை, சட்டத்தை மீறுபவர்களுக்குத் தைரியமூட்டுகிறது மற்றும் சட்டத்தை மதிப்பவர்களைச் சோர்வடையச் செய்கிறது. ஒரு நிலத்தகராறு தீர்க்கப்பட 20 ஆண்டுகள் ஆகும் போது, சொத்தின் மதிப்பைவிட சட்டக் கட்டணங்களுக்காக அதிகமாகச் செலவழித்த வெற்றியாளர், அந்த வெற்றியை பெரும்பாலும் வெற்று வெற்றியாகவே காண்கிறார்.


இந்திய சட்ட அமைப்பின் நிறுவனமயமாக்கப்பட்ட மந்தநிலை, நீதிக்கான தேடலை ஒரு சகிப்புத்தன்மைச் சோதனையாக மாற்றியுள்ளது. இது "செயல்முறையே தண்டனை" என்ற கடுமையான கருத்துக்கு வழிவகுக்கிறது. பல தேவையற்ற நடைமுறைத் தடைகளும், அடிக்கடி மற்றும் பெரும்பாலும் அர்த்தமற்ற முறையில் வழக்குகளை ஒத்திவைக்கும் கலாச்சாரமும், ஒரு தீர்ப்பு எட்டப்படுவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பே, குற்றம் சாட்டப்பட்டவர்களின் கண்ணியம், வாழ்வாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை திறம்படப் பறித்து, வழக்குகளைப் பல பத்தாண்டுகளுக்குத் தேக்கநிலையில் வைத்திருக்கும் ஒரு நிலையை உருவாக்குகின்றன. இந்த அமைப்புரீதியான தோல்வியானது, கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தனிநபர்கள் இறுதியில் விடுவிக்கப்பட்டு, இழப்பீடு ஏதுமின்றி தங்கள் வாழ்க்கை சிதைந்து, வாழ்வின் பொன்னான ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கக்கூடும்.


சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (Unlawful Activities (Prevention) Act (UAPA)) போன்ற கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள், விசாரணையின்றியும் பிணை கிடைப்பதற்கான வாய்ப்பின்றியும் நெரிசல் மிகுந்த சிறைகளில் சிக்கித் தவிப்பது குறிப்பாக மனசாட்சியற்ற செயலாகும். ஏனெனில், மேலோட்டமான ஆதாரங்களின் அளவுகோல், சிறைவாசத்தை விதிவிலக்காக அல்லாமல் விதியாகவே ஆக்கிவிடுகிறது. சுதந்திரம் குறித்த அரசியலமைப்பு வாக்குறுதியை நிலைநிறுத்த, நீதித்துறை விரைவாகத் தெளிவான, கட்டாய வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். அந்த வழிகாட்டுதல்கள், அரசு ஒரு அர்த்தமுள்ள விசாரணையைத் தொடங்க வேண்டும் அல்லது குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பிணை வழங்கவேண்டும் என்ற உறுதியான காலக்கெடு ஒருவேளை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் நிர்ணயிக்க வேண்டும்.


இந்த மாற்றத்திற்கு 21-ம் நூற்றாண்டை முழுமையாகத் தழுவுவது அவசியமாகிறது. நீண்டகாலமாக, நமது நீதிமன்றங்கள் காலனித்துவ காலத்தில் உறைந்து போனது போல இயங்கி வருகின்றன. மலை போன்ற காகிதக் கோப்புகளையும், விசாரணைக்கான புதிய தேதியைக் கேட்பதற்காகவே நூற்றுக்கணக்கான மைல்கள் பயணிக்க வேண்டிய வழக்காடுகளின் நேரடி வருகையையும் அவை சார்ந்திருந்தன. நாம் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தும், பொருட்களை வாங்கும், மற்றும் தொடர்பு கொள்ளும் முறைகளை மாற்றியமைத்துள்ள டிஜிட்டல் புரட்சி, இப்போது நீதித்துறையையும் வெல்ல வேண்டும். செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு சார்ந்த வழக்கு மேலாண்மை ஆகியவை ஆடம்பரப் பொருட்கள் அல்ல, மாறாக தேங்கிக் கிடக்கும் வழக்குகளைக் கலைப்பதற்கு அவசியமான கருவிகளாகும். வழக்கமான நிர்வாகத் தாக்கல் பணிகளை செயற்கை நுண்ணறிவு கையாள்வது, தாமதங்களைக் கண்டறிவது, மற்றும் சட்ட ஆராய்ச்சியில்கூட உதவுவது போன்ற ஒரு அமைப்பை கற்பனை செய்து பாருங்கள். இது, நீதிபதிகள் தங்கள் மன ஆற்றலை வழக்கின் மிக முக்கியமான பகுதிகளில் முழுமையாகச் செலுத்த வழிவகுக்கும்.



அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய தன்மைக்கான தேவை


இருப்பினும், ஒரு விரைவு நீதிமன்றம் என்பது தீர்வின் ஒரு பகுதி மட்டுமே. மேலும் நமக்கு அனைவரையும் உள்ளடக்கிய ஒரு நீதிமன்றமும் தேவைப்படுகிறது. சட்டத்தின் மீதான குடிமக்களின் நம்பிக்கை, அதை விளக்கும் நபர்களில் தங்களைப் பிரதிபலிப்பதாக அவர்கள் காண்கிறார்களா என்பதோடு வலுவாகப் பிணைக்கப்பட்டுள்ளது. நீதித்துறை ஒரு குறுகிய மனப்பான்மை கொண்ட “பழைய சிறுவர்களின் கூடாரம்” (old boys’ club) என்று நீண்டகாலமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அங்கு, பெண்களுக்கும் விளிம்புநிலை சமூகங்களுக்கும் உள்ள கண்ணுக்குத் தெரியாத தடையானது அப்படியே நீடிக்கிறது. மேலும், பல நீதிபதிகள் முந்தைய தலைமுறை நீதிபதிகளின் உறவினர்களாகவே உள்ளனர். உண்மையான சீர்திருத்தம் என்பது, இந்தத் தடைகளை உடைத்து, நீதித்துறையானது இந்தியாவின் பரந்த மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை உறுதி செய்வதாகும். இது அடையாள அரசியல் பற்றியது அல்ல, இது நீதித்துறையின் தரம் பற்றியது. ஒரு பன்முக மக்கள்தொகையின் வாழ்வியல் யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளும் ஒரு நீதித்துறையால், நுணுக்கமான மற்றும் அனுதாபமான தீர்ப்புகளை வழங்க முடியும். ஒரு பெண்ணோ அல்லது வரலாற்றுரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரோ தீர்ப்பு வழங்க அமரும்போது, அவர் சட்டத்தை வளப்படுத்தும் ஒரு கண்ணோட்டத்தைக் கொண்டு வருகிறார். மேலும், அது இந்திய சமூகத்தின் நுணுக்கங்களுக்கு ஏற்ப சட்டத்தை மேலும் பதிலளிக்கக்கூடியதாக மாற்றுகிறது.


நீதிமன்றத்தின் அமைப்புக்கு அப்பால், செலவு செய்ய முடியாத தன்மை என்ற பெரும் சிக்கலும் உள்ளது. அதன் தற்போதைய வடிவத்தில், நீதி என்பது ஒரு ஆடம்பரப் பொருளாக உள்ளது. திறமையான வழக்கறிஞரை நியமிப்பதற்கான செலவும், நீண்டகால வழக்குகளின் இதர செலவுகளும், மக்களின் கணிசமான பகுதியினரை திறம்பட விலக்கிவிடுகின்றன. இந்தியா தனது சட்ட உதவி அமைப்பை முழுமையாக சீர்திருத்தி, பணக்காரர்களுக்குக் கிடைக்கும் பிரதிநிதித்துவத்திற்கு இணையான தரத்தை ஏழைகளுக்கும் வழங்கும் ஒரு உயர்தர நிறுவனமாக அதை மாற்ற வேண்டும். அரசால் உணவையும் கல்வியையும் வழங்க முடியுமானால், ஒரு குடிமகன் தனது வாழ்வையும் சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகளையும் அது வழங்க வேண்டும்.


மேலும், நமது உச்சநீதிமன்றங்கள் புவியியல்ரீதியாக மையப்படுத்தப்பட்டிருப்பது கடந்த காலத்தின் ஒரு எச்சமாகவே உள்ளது. தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு மனுதாரர் இறுதி மேல்முறையீட்டிற்காக தலைநகருக்குப் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு தேவையற்ற சுமையாகும். பிராந்திய அமர்வுகள் அல்லது உச்சநீதிமன்றத்திற்கான மேலும் வலுவான காணொளிக் காட்சி விசாரணை முறை, மிக உயர்ந்த மட்டத்திலான நீதியை ஒரு தொலைதூரக் கனவாக இல்லாமல் உள்ளூர் யதார்த்தமாக மாற்றுவதில் பெரும்பங்கு வகிக்கும்.


இந்த நடைமுறை மாற்றங்களுக்கு அடிப்படை சீர்திருத்தத்தின் நம்பிக்கை உள்ளது. அரசியலமைப்பு நெறிமுறைகளையும் நீதித்துறை சுதந்திரத்தையும் பாதுகாத்தல், மக்களுக்கு அச்சமற்ற நடுவராகச் செயல்படும், அதிகாரத்தில் இருப்பவர்களைத் தயக்கமின்றிப் பொறுப்பேற்கச் செய்யும் ஒரு நீதித்துறை தேவை. இந்தச் சுதந்திரமே ஒரு செயல்படும் ஜனநாயகத்தின் அடித்தளமாகும். இருப்பினும், சுதந்திரத்தைப் பொறுப்புணர்வு பற்றாக்குறையுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. முக்கிய வழக்குகளை நேரலையில் ஒளிபரப்புதல் மற்றும் நீதித்துறை நியமனங்களுக்கான தெளிவான அளவுகோல்கள் போன்றவற்றின் மூலம் இந்தச் செயல்முறையைத் திறப்பதன் மூலம், நீதிமன்றம் மக்களுடன் தனக்கிருக்கும் 'சமூக ஒப்பந்தத்தை' மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.


ஒரு அமைப்புரீதியான முழுமையான சீரமைப்பு


நாடு, நீதித்துறை சீர்திருத்தத்தை சிறிய, படிப்படியான மாற்றங்களின் தொடராகக் கருதுவதை நிறுத்தி, அதை ஒரு தேசிய அவசரநிலையாகக் கருதத் தொடங்க வேண்டும். தற்போதைய நிலைமை, ஒவ்வொரு நாளும் சட்டத்தின் ஆட்சியை சுரண்டிக்கொண்டிருக்கும் ஒரு மெதுவான பேரழிவாகும். மக்கள் பிரம்மாண்டமான பேச்சுகளையோ அல்லது சடங்குரீதியான வாக்குறுதிகளையோ எதிர்பார்க்கவில்லை, அவர்கள் செயல்படக்கூடிய, வேகமான மற்றும் நியாயமான ஒரு அமைப்பையே எதிர்பார்க்கிறார்கள். ஒவ்வொரு சட்டரீதியான கருத்து வேறுபாட்டையும் ஒரு மரணப் போராட்டமாகக் கருதும் பகைமை மனப்பான்மை கொண்ட கலாச்சாரத்திலிருந்து விலகி, தீர்வு காணும் கலாச்சாரத்தை நோக்கி நாம் நகர வேண்டும். சட்டப் புத்தகத்தில் தேர்ச்சி பெறுவது போலவே கணினித் திரையிலும் தேர்ச்சி பெற்ற நீதிபதிகளும், கட்டணத்தை நீட்டிப்பதைவிட ஒரு வழக்கை முடித்து வைப்பதை மதிக்கும் ஒரு சட்டத் தொழிலும் நமக்குத் தேவை.


‘வளர்ந்த இந்தியா’ 2047-ஐ நோக்கி நாம் நகரும்போது, ஒரு தேசமாக நமது வெற்றியின் அளவுகோல் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்லது நமது தொழில்நுட்பத் திறமை மட்டுமல்ல, நமது நீதிமன்றங்களில் நீதியை நாடும் நபரை நாம் எவ்வாறு நடத்துகிறோம் என்பதுதான். நாம் சீர்திருத்தம் செய்யத் தவறினால், சட்டம் என்பது பலவீனர்களுக்கான கேடயமாக இல்லாமல், வலிமை வாய்ந்தவர்களின் கருவியாக மட்டுமே பார்க்கப்படும் ஒரு எதிர்காலத்தை நாம் எதிர்கொள்ள நேரிடும்.


ஆனால் நாம் வெற்றி பெற்றால், நீதியின் தராசு இறுதியாக சமநிலைப்படுத்தப்படும் ஒரு அமைப்பை நம்மால் உருவாக்க முடியும். அதன்மூலம், ஒரே நாளில் கிடைத்திருக்க வேண்டிய ஒரு உண்மைக்காக, எந்தவொரு இந்தியரும் மீண்டும் ஒருபோதும் வாழ்நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்பதை உறுதிசெய்யலாம். விவாதிப்பதற்கான காலம் கடந்துவிட்டது, குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு மாற்றத்திற்கான நேரம் இதுவே.


சசி தரூர், திருவனந்தபுரம் (மக்களவை) தொகுதியின் நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (காங்கிரஸ்) ஆவார். இவர், சமீபத்தில் வெளியான ‘இந்து மதத்தை மறுவரையறை செய்த ஞானி: ஸ்ரீ நாராயண குருவின் வாழ்க்கை, பாடங்கள் மற்றும் மரபு’ உட்பட 28 புத்தகங்களை எழுதிய, விருது பெற்ற எழுத்தாளர் மற்றும் நாடாளுமன்ற வெளியுறவுக் குழுவின் தலைவர் ஆவார்.


Oiginal link:

The institutionalised sluggishness of the legal system 


Share:

இந்தியாவின் கிராமப்புற மாதிரிகளானவை வளர்ச்சி சார்ந்த இராஜதந்திரத்தை வடிவமைக்கின்றன. - வேதா வைத்தியநாதன்

 சமீப ஆண்டுகளில், ஆப்பிரிக்க அரசாங்கங்கள் பலவும், இந்திய சுய உதவிக் குழு (Self-Help Group (SHG)) அடிப்படையிலான வாழ்வாதாரக் கட்டமைப்பை ஆராயத் தொடங்கியுள்ளன.


2011-ம் ஆண்டில், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இந்தியா 'தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம்' (National Rural Livelihood Mission (NRLM)) என்ற திட்டத்தைத் தொடங்கியபோது, ​​ஒரு லட்சிய நோக்கத்துடன் அதை முன்னெடுத்தது. அதாவது, கிராமப்புறக் குடும்பங்கள் சுயதொழில், நிதிசார் உள்ளடக்கம் மற்றும் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதன் மூலம், வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகளையும் நிலையான வாழ்வாதாரங்களையும் பெறுவதற்கு உதவுவதன் வாயிலாக, பன்முகத்தன்மை கொண்ட வறுமையை ஒழிப்பதே இதன் நோக்கமாகும்.


தற்போது, 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இத்திட்டத்தின் தீவிரம், நிலைத்தன்மை மற்றும் விளைவுகள் ஆகியவை, இதைத் தொடக்கத்தில் முன்னெடுத்தவர்களின் எதிர்பார்ப்புகளையும் விடவும் வெகுவாக வளர்ந்துள்ளது. சுயஉதவிக்குழுக்களில் (SHGs) உறுப்பினர்களாக உள்ள 2 கோடிக்கும் அதிகமான பெண்கள், தலா ₹1,00,000-க்கும் அதிகமான வருமானத்தை ஈட்டி வருகின்றனர். மேலும், 60 சதவீதத்திற்கும் அதிகமான உள்ளாட்சி அமைப்புகளில் பெண் வங்கித் தொடர்பாளர்கள் (banking correspondents) சேவையாற்றி வருகின்றனர். அதுமட்டுமின்றி, 5 கோடிக்கும் அதிகமான பெண்கள் வங்கிக் கடன்களைப் பெற்றுள்ளனர். இது 2018-ம் ஆண்டிலிருந்து பெண் தொழிலாளர் பங்கேற்பை கணிசமாக உயர்த்தியுள்ளது.


குறிப்பிடத்தக்க வகையில், தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் (NRLM) திட்டமானது இந்தியாவின் எல்லைகளைக் கடந்து, 'உலகளாவிய தெற்கு' (Global South) நாடுகளிலும், குறிப்பாக ஆப்பிரிக்காவிலும் கிராமப்புற வாழ்வாதார முயற்சிகளுக்கு வழிகாட்டியாக வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சி சார்ந்த இராஜதந்திரத்தை இது நுட்பமான முறையில் வடிவமைத்து வருகிறது.


இந்தியாவின் அமைதியான மாற்றம்


தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் (NRLM) சாதனைகளின் தீவிரம் பிரமிக்க வைப்பதாக உள்ளது. 2025-ம் ஆண்டின் நடுப்பகுதி நிலவரப்படி, இத்திட்டம் 742 மாவட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறதுடன், 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்களைச் சென்றடைந்துள்ளது, 90 லட்சத்திற்கும் அதிகமான சுயஉதவிக்குழுக்களை ஒருங்கிணைத்துள்ளது, ₹51,368 கோடி அளவிலான மூலதன உதவியை வழங்கியுள்ளது. மேலும், ₹12 லட்சம் கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இத்தகைய விரிவாக்கம், இத்திட்டத்தின் வீச்சிலும் சரி, பெண்களை மையமாகக் கொண்ட அதன் அணுகுமுறையிலும் சரி, இதுவரையில்லாத ஒரு விரிவான வளர்ச்சியை இது எட்டியுள்ளது. 2026-27-ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ₹19,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம், இத்திட்டத்தின் வளர்ச்சிப் பாதை மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, கிராமப்புற வறுமை ஒழிப்புக்கான இந்தியாவின் முதன்மைத் திட்டமாக தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் (NRLM) மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தை (NRLM) மற்ற திட்டங்களிலிருந்து தனித்துக்காட்டுவது அதன் பரந்து விரிந்த செயல்பாடுகள் மட்டுமல்ல, அது உருவாக்கியுள்ள சூழலமைப்பும் (ecosystem) ஒரு முக்கிய காரணம் ஆகும். இது கிராமம், தொகுப்பு மற்றும் வட்டார அளவுகளில் ஒருங்கிணைந்த சமூக நிறுவனங்களை இது உருவாக்கியுள்ளது. கடைக்கோடி மக்களுக்குச் சேவைகளை நேரடியாகக் கொண்டு சேர்க்கும் சமூக அடிப்படையிலான பணியாளர் குழுக்களை இது அமைத்துள்ளது. மேலும், கிராமப்புறப் பெண்களை முறைசார்ந்த நிதி அமைப்புகளுடன் முழுமையாக இணைத்துள்ளது. சமூக ஒருங்கிணைப்பு, நிறுவனக் கட்டமைப்பு, கடன் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளுக்கான அணுகல் ஆகியவற்றை ஒன்றிணைத்து, உலகளாவிய வளர்ச்சி நடைமுறைகளில் இத்திட்டத்தை ஒரு தனித்துவமான மற்றும் நீடித்த முன்னெடுப்பாக மாற்றியுள்ளது.




எல்லைகளுக்கு அப்பால்


வளர்ச்சித் துறையில் ஏற்படும் புதுமைகள், உள்ளூர் அரசியல் பொருளாதாரம், சமூகக் கட்டமைப்புகள் மற்றும் அரசின் திறன்களால் வடிவமைக்கப்படுவதால், அவை அரிதாகவே எல்லைகளை எளிதில் கடந்து செல்கின்றன. இருப்பினும், தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் (NRLM) வடிவமைப்பு வழக்கத்திற்கு மாறாக எளிதில் எடுத்துச் செல்லக்கூடியதாகத் தோன்றுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், பெருகிவரும் எண்ணிக்கையிலான ஆப்பிரிக்க அரசாங்கங்கள், இந்திய சுய உதவிக் குழு அடிப்படையிலான வாழ்வாதாரக் கட்டமைப்பை ஆராயத் தொடங்கியுள்ளன. எத்தியோப்பியா, தான்சானியா, மலாவி, கென்யா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் குழுக்கள் இந்தியாவிற்கு விரிவான ஆய்வுப் பயணங்களை மேற்கொண்டுள்ளன. அவை தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் (NRLM) விளைவுகளை மட்டுமல்லாமல், அது செயல்படுவதற்கான செயல்பாட்டு வழிமுறைகளையும் ஆய்வு செய்தன. இந்தியா எவ்வாறு சுய உதவிக் குழுக்களைப் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வரை விரிவுபடுத்தியது, வங்கிகளுடனான கடன் இணைப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டன, சமூகங்கள் எவ்வாறு கூட்டமைப்புகளாகத் திரட்டப்பட்டன, பயிற்சி பெற்ற பணியாளர்கள் எவ்வாறு பெருமளவில் பணியமர்த்தப்பட்டனர் மற்றும் பொறுப்புணர்வும் நிதி ஒழுக்கமும் இந்த அமைப்பில் எவ்வாறு நிலைநிறுத்தப்பட்டன என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் முயன்றனர். இந்த ஆர்வத்தின் எழுச்சி, உலகளாவிய தெற்கு நாடுகள் வளர்ச்சி சிந்தனையில் ஒரு பரந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த நாடுகள் இனி மேற்கத்திய மாதிரிகளை மட்டும் சார்ந்திருக்கவில்லை. மாறாக, அவை ஒன்றுக்கொன்று கற்றுக்கொள்கின்றன. அவை தங்களின் சொந்தச் சூழல்களுக்கும் உள்ளூர் யதார்த்தங்களுக்கும் பொருந்தக்கூடிய தீர்வுகளில் கவனம் செலுத்துகின்றன.


ஆப்பிரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல காரணங்களுக்காக தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தால் (NRLM) ஈர்க்கப்படுகிறார்கள். முதலாவதாக, பெண்களின் கூட்டு அதிகாரமளித்தல் (women’s collective empowerment) மீதான அதன் கவனம், ஆப்பிரிக்கா முழுவதும் பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை வலுப்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளுடன் வலுவாக ஒத்துப்போகிறது. ஒன்றுதிரட்டப்பட்ட சேமிப்புகள், பல கற்றல் மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான கடன் ஒழுக்கம் ஆகியவற்றின்மீது கட்டமைக்கப்பட்ட சுய உதவிக் குழு மாதிரியானது, பெண்களின் அமைப்புகளை வலுப்படுத்த ஒரு கட்டமைக்கப்பட்ட அதே சமயம் தளர்வான வழியை வழங்குகிறது. இரண்டாவதாக, தேசிய கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் (NRLM) கட்டமைப்பு செலவு குறைந்ததாகும், இது பெரும் மூலதன முதலீட்டைச் சார்ந்திருக்காமல், சமூகம் சார்ந்த செயல்முறைகள் மற்றும் பணியாளர் அமைப்புகளை நம்பியுள்ளது. இது, வளப் பற்றாக்குறை உள்ள அரசாங்கங்கள்கூட இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த அனுமதிக்கிறது. மூன்றாவதாக, வாழ்வாதாரப் பன்முகப்படுத்தலும் குறுந்தொழில் உருவாக்கமும் மிக முக்கியமானதாக இருக்கும் ஆப்பிரிக்கா முழுவதிலும் உள்ள பெரிய முறைசாரா பொருளாதாரங்களின் யதார்த்தங்களுடன் இந்த மாதிரி நன்கு ஒத்துப்போகிறது. இறுதியாக, இந்த மாதிரி வெறும் ஒரு திட்டமாக இல்லாமல், ஒரு நிறுவனத்தை உருவாக்கும் அணுகுமுறையாக இருப்பதால் இந்த நாடுகளை ஈர்க்கிறது. இது உள்ளூர் நிர்வாகத்தை வலுப்படுத்துகிறது, பொறுப்புடைமையை மேம்படுத்துகிறது மற்றும் நீண்டகால சமூகத் திறனை உருவாக்குகிறது.


இந்தியாவின் வளர்ந்துவரும் வளர்ச்சி ராஜதந்திரம்


இந்தியாவின் வளர்ச்சி ஒத்துழைப்பு, வரலாற்றுரீதியாக திறன் மேம்பாடு, சலுகை நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் (NRLM) பரவலானது ஒரு தெளிவான பரிணாம வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்தியா இப்போது தனது சொந்த வளர்ச்சி அனுபவத்தில் வேரூன்றிய சமூகத் துறை நிறுவனங்களை ஏற்றுமதி செய்கிறது. இத்தகைய நிறுவன மாதிரிகள், அதிகார அமைப்புகள், செயல்படுத்தும் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு இடையே நீடித்த இணைப்புகளை உருவாக்கி, சர்வதேச ஈடுபாட்டிற்கு ஒரு தனித்துவமான வழியை வழங்குகின்றன. டிஜிட்டல் ஆளுகை, வேளாண்மை மற்றும் நிதிக் கட்டமைப்பு ஒத்துழைப்பில் செல்வாக்கு செலுத்துகின்றன. வளங்களை மட்டும் பகிராமல், அறிவையும் நிறுவன நடைமுறைகளையும் பரப்புவதன் மூலம் இந்தியாவின் உள்நாட்டுப் புத்தாக்கங்கள் எவ்வாறு தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை வடிவமைக்கின்றன என்பதை தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் (NRLM) ஒரு உதாரணத்தை விளக்குகிறது. இந்த உத்வேகத்தை மேலும் வலுப்படுத்த, மாநில வாழ்வாதாரத் திட்டங்கள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் ஆப்பிரிக்க அரசாங்கங்களை இணைக்கும் ஒரு பிரத்யேக கிராமப்புற வாழ்வாதார அறிவுப் பரிமாற்றத் தளம் மூலம், இந்தியா தனது கிராமப்புற வாழ்வாதார அறிவைப் பகிர்வதை நிறுவனமயமாக்கலாம். இது விரிவாக்கப்பட்ட பயிற்சி, நீண்டகால ஆய்வு உதவித்தொகைகள், களப்பயணங்கள் மற்றும் கூட்டு முன்னோடித் திட்டங்கள் ஆகியவை சுய உதவிக் குழு அடிப்படையிலான முயற்சிகளை உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க உதவும்.


தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் (NRLM) என்பது இனி இந்தியாவின் கிராமப்புற மாற்றத்திற்கான கதை மட்டுமல்ல. ஆப்பிரிக்க நாடுகளிடமிருந்து அதிகரித்துவரும் ஆர்வம், இந்தியா தனது எல்லைகளுக்கு அப்பால் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் தீர்வுகளை உருவாக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், இந்தியா உலகளாவிய வளர்ச்சிக்கான ஒரு புதிய முன்மாதிரியை வடிவமைக்கிறது.


வேதா வைத்தியநாதன், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தின் ஆய்வாளர்.


Original link:


Share:

மேற்குவங்க சிறப்புத் தீவிர திருத்த விவகாரம்: வாக்களிக்கும் உரிமை, தேர்தலில் போட்டியிடும் உரிமையை எவ்வாறு பாதிக்கிறது? -அமால் ஷேக்

வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்படுவது குறித்த பெரிய சர்ச்சைக்குள், ஒரு சிறிய பிரச்சனையும் உள்ளது. பொதுவெளியில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து, வேட்புமனுவும் தாக்கல் செய்த ஒரு வேட்பாளரின் பெயரே வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டால், அவருடைய நிலை என்னவாகும்?


திங்கள்கிழமை ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், மேற்குவங்கத்தில் மேற்கொள்ளபட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த  (Special Intensive Revision (SIR)) நடவடிக்கைக்குப் பிறகு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 34 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதன் விளைவாக, இது தொடர்பான மேல்முறையீடுகள் இன்னும் தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ளதால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இந்த மனுதாரர்களால் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.


ஜனநாயக நாட்டில் வாக்களிக்கும் உரிமை என்பது "தேசியப்பற்று மற்றும் தேசபக்தியின் மிகப்பெரிய வெளிப்பாடு" என்று நீதிமன்றம் விவரித்துள்ளது.


தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும்போது இந்த மனுதாரர்களை வாக்களிக்க அனுமதித்தால், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கும் மற்றவர்களும் இதே போன்ற சலுகையை கேட்க வழிவகுக்கும் என்று கூறியது. தலைமை நீதிபதி கேள்வி எழுப்புகையில், சலுகை அடிப்படையில் வாக்களிக்க அனுமதித்தால் வாக்களிப்பதன் நோக்கமே சிதைந்துவிடும் என்றும் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டவர்களின் வாக்களிக்கும் உரிமைக்கும் நீதிமன்றம் தடைவிதிக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டார்.


வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்படுவது குறித்த பெரிய சர்ச்சைக்குள், ஒரு சிறிய பிரச்சனையும் உள்ளது. பொதுவெளியில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து, வேட்புமனுவும் தாக்கல் செய்த ஒரு வேட்பாளரின் பெயரே வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டால், அவருடைய நிலை என்னவாகும்?


கடந்த வாரம், ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி, தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் தனது பெயரை மீண்டும் சேர்க்கக் கோரி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வேட்பாளர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இந்த நிகழ்வு ஒரு இக்கட்டான சூழ்நிலையைத் தெளிவுபடுத்துகிறது. இந்த மனு மிகத் தாமதமாக முன்வைக்கப்பட்டது என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India (ECI)) வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.


வாக்களிக்கும் உரிமை மற்றும் தேர்தலில் போட்டியிடும் உரிமை


வாக்களிக்கும் உரிமைக்கும், தேர்தலில் போட்டியிடும் உரிமைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நீதிமன்றங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி ராம் சந்திர சௌத்ரி vs ரூப் நகர் துக்த் உத்பாதக் சககாரி சமிதி லிமிடெட் (Ram Chandra Choudhary vs Roop Nagar Dugdh Utpadak Sahakari Samiti Ltd) என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதில், இந்த இரண்டு உரிமைகளுமே குடிமக்களின் அடிப்படை உரிமைகள் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.


வாக்களிக்கும் உரிமை என்பது ஒரு உறுப்பினர் சட்டத்தின்படி தனது வாக்கைச் செலுத்த அனுமதிப்பதாகும்; ஆனால், தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது அதிலிருந்து வேறுபட்ட ஒரு கூடுதல் உரிமையாகும். இந்தப் போட்டியிடும் உரிமைக்குத் தகுதிகள், தகுதி அளவுகோல்கள் மற்றும் தகுதியிழப்புகள் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தேர்தல் உரிமைகளை இந்தத் தீர்ப்பு தெளிவாக விளக்குகிறது. 


தகுதி என்பது தேர்தல் நடைமுறையில் ஒரு நபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான அடிப்படைத் தேவையாகும். ஒருவருக்குத் தேவையான தகுதிகள் இல்லையென்றால், அது தண்டனையோ அல்லது அவமானமோ கிடையாது; அந்த நபர் தேவையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்வரை தேர்தலில் போட்டியிடும் உரிமையை வெறும் காலதாமதம் மட்டுமே செய்கிறது என்று  தகுதி மற்றும் தகுதியின்மை ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டை நீதிமன்றம் விளக்கியுள்ளது.


கூட்டுறவு சங்கத் தேர்தல்களின்போதும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. இது வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கையின்போது மேற்கொள்ளப்பட்ட பெயர் நீக்கங்களால் பாதிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கும் பொருந்தும். ஒருவரது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவது என்பது சட்டப்பூர்வமான தகுதியிழப்பு கிடையாது என்றாலும், அதன் பிறகு அவர்கள் வாக்காளர்களாகக் கருதப்படமாட்டார்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால், அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி (Representation of the People Act), ஒரு வேட்பாளர் தான் போட்டியிட விரும்பும் அதே தொகுதியில் வாக்காளராக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அந்த மாநிலத்தின் ஏதேனும் ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத் தொகுதியில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.


இது ஒன்றும் புதிய கருத்து அல்ல என்றும் ஜோதி பாசு vs தேபி கோஷல் (1982) (Jyoti Basu v. Debi Ghosal (1982)) என்ற வழக்கில், தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது முற்றிலும் சட்டத்தின் அடிப்படையில் அமைந்தது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர், கே. கிருஷ்ணமூர்த்தி vs இந்திய ஒன்றியம் (2010) (K. Krishna Murthy v. Union of India (2010) என்ற வழக்கிலும், அரசியலில் பங்கேற்கும் உரிமைகள் வரம்பற்றவை அல்ல; அவை சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுபவை என்பதை நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது.


இருப்பினும், இதில் ஒரு புதிய விஷயம் என்னவென்றால், ஒரு மிகப்பெரிய நிர்வாக நடைமுறையின் மூலமாகப் பல வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இது சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்குத் தெரியாமலேயே நடந்துள்ளது.


இரண்டு வழக்குகள்


தமிழ்நாட்டைச் சேர்ந்த மனுதாரரான சி. கீதா, 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதியன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்து, அதற்கான வைப்புத் தொகையையும் செலுத்தினார். ஒரு சுயேச்சை வேட்பாளராகத் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த வேளையில், வாக்காளர் பட்டியலிலிருந்து தனது பெயர் நீக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் விசாரித்தபோது, சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணிகளை மேற்கொண்ட அதிகாரிகள், அருகிலுள்ள வீடுகளுக்குச் சென்றும், அவருடைய வீட்டை மட்டும் கவனிக்காமல் விட்டுச் சென்றதும் தெரியவந்தது.


இது ஒரு சாதாரண எழுத்துப் பிழை அல்ல என்றும் மாறாக, திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயல் என்றும் அவர் தனது மனுவில் குறிபிட்டார். அவர் பெயர் விடுபட்ட சூழல் இந்த வாதத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது. ஆனால், இந்தப் புகார் மிகவும் தாமதமாக எழுப்பப்பட்டுள்ளதாகவும் வேட்புமனு தாக்கல் முடிந்துவிட்டதாலும், வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டதாலும், வாக்குப்பதிவு தினத்திற்கு முன்னதாக அவரது பெயரைச் சேர்க்க வழி ஏதுமில்லை என்றும் தேர்தல் ஆணையம் (ECI) நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.


தேர்தல் சட்டத்தின்படி, இந்த நிலையில் ஒரு பெயரினை துணைப் பட்டியலில் (Supplementary list) மட்டுமே சேர்க்க முடியும். அவ்வாறு சேர்ப்பதற்கு, ஒரு மேல்முறையீட்டு தீர்ப்பாயம்  அந்த நபரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அவரது பெயரை பட்டியலில் சேர்க்குமாறு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.


இந்த வழக்கைப் பொறுத்தவரை, உச்சநீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) கருத்தை ஏற்றுக்கொண்டு, ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி அவருடைய மனுவைத் தள்ளுபடி செய்தது.


1960-ஆம் ஆண்டின் தேர்தல் பதிவு விதிகளின் (Registration of Electoral Rules, 1960), விதி 23(5)-ன்படி, ஒரு வாக்காளரின் மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டால், தேர்தல் பதிவு அதிகாரி உடனடியாக வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்க வேண்டும். இருப்பினும், இந்த விதி தீர்ப்பாயம் அந்த மேல்முறையீட்டின்மீது இறுதி முடிவை எடுத்திருந்தால் மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.


உதாரணமாக, மேற்குவங்கத்தின் ஃபக்கா (Fakka) தொகுதிக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக மோதாப் ஷேக் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.


பல்வேறு ஆவணங்களில் அவருடைய பெயர் வெவ்வேறு விதமாக இருந்ததால், வாக்காளர் பட்டியலிலிருந்து அவருடைய பெயர் நீக்கப்பட்டது. மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அவருடைய ஆதார் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் குடும்ப அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்த்து, அவை அனைத்தும் ஒரே நபருக்குச் சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்தியது. பின்னர், அன்றைய தினம் இரவு 8 மணிக்குள் அவருடைய பெயரைத் துணைப் பட்டியலில் சேர்க்குமாறு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், அவருடைய மேல்முறையீடு வெற்றியடைந்தது என்கின்றனர்.


கடந்த திங்கட்கிழமை நடந்த நீதிமன்ற நடவடிக்கைகள், ஏன் ஒரு பொதுவான தீர்வை வழங்குவதில் நீதிமன்றங்கள் சிரமப்படுகின்றன என்பதைக் காட்டுகின்றன. வாக்காளர் பதிவு விதிகள் (Registration of Electors Rules), விதிகள் 19 மற்றும் 20-ன்கீழ் உள்ள வழக்கமான நடைமுறையிலிருந்து மேல்முறையீட்டுச் செயல்முறை வேறுபட்டுள்ளது. பொதுவாக, இந்த விதிகளின்படி ஒருவருடைய பெயரைப் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு முன்னால், அவர்களுக்கு அதுகுறித்த முன்னறிவிப்பை  வழங்கி, அவர்களின் விளக்கத்தைக் கேட்க வாய்ப்பளிக்க வேண்டும் என்கின்றனர்.


மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும்போது, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஒரு பெயரைத் தற்காலிகமாக மீண்டும் சேர்க்க 'விதி 23(3)' அனுமதிக்காது என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், நீக்கப்பட்ட ஒரு வாக்காளர் அல்லது வேட்பாளர் மீது நீதிமன்றம் அனுதாபம் கொண்டாலும், தேர்தல் நடைமுறை நடந்துகொண்டிருக்கும்போது அவரது பெயரை அவ்வளவு எளிதாக மீண்டும் பட்டியலில் சேர்த்துவிட முடியாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.



Original link:

West Bengal SIR row: How the right to vote affects the right to contest.


Share:

இந்திய வரலாற்றில் 5 முக்கிய ஏப்ரல் மாத நிகழ்வுகள் -குஷ்பூ குமாரி

தற்போதைய செய்தி


இந்திய வரலாற்றை வடிவமைத்த பல வரலாற்று நிகழ்வுகள் ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்துள்ளன. பீம்ராவ் அம்பேத்கரின் பிறப்பு முதல் ஜாலியன்வாலா பாக் படுகொலை வரை, இந்த மாதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைக் கொண்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


  1. தண்டி யாத்திரை


மார்ச் 12 அன்று சபர்மதி ஆசிரமத்திலிருந்து தொடங்கிய தண்டி யாத்திரை, ஏப்ரல் 5, 1930 அன்று நிறைவடைந்தது. 24 நாட்கள் நீடித்த இந்த யாத்திரை, ஆங்கிலேயரின் உப்பு ஏகபோகத்திற்கு எதிரான ஒரு வரி எதிர்ப்புப் பிரச்சாரமாக அமைந்தது. ஏப்ரல் 6 அன்று உப்புச் சட்டத்தை மீறியதன் மூலம் இந்த யாத்திரை முழுமையாகத் தொடங்கியது.


காந்தியின் அகிம்சை அல்லது சத்தியாகிரகக் கொள்கையின் அடிப்படையில் அமைந்த இந்தப் பேரணி, சட்ட ஒத்துழையாமை இயக்கத்திற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

1882-ஆம் ஆண்டின் உப்புச் சட்டம், உப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆங்கிலேயர்களுக்கு ஏகபோக உரிமையை வழங்கியது. இந்தியாவின் கடற்கரைப் பகுதிகளில் உப்பு அதிகமாகக் கிடைத்தபோதிலும், இந்தியர்கள் அதை  ஆங்கிலேயர்களிடமிருந்து வாங்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்குவதற்கு ஏதேனும் ஒரு பொருள் இருக்குமானால், அது உப்புதான் என்று காந்தி முடிவு செய்தார்.


காந்தி ஏப்ரல் 5 அன்று தண்டி சென்றடைந்தார். ஏப்ரல் 6 அதிகாலையில், அவர் மற்ற யாத்திரிகர்களுடன் இணைந்து கடலை நோக்கிச் சென்றார். அங்கு ஒரு சிறிய குழியில் கிடந்த இயற்கையான உப்புக்கட்டிகளை அவர் கையில் எடுத்தார். இந்தச்செயல் ஒரு குறியீட்டுச் செயலாக அமைந்தபோதிலும், பத்திரிகைகளால் மிக விரிவாகப் பேசப்பட்டது. மேலும், இந்தியாவின் பிற பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு பிற சட்டமறுப்புப் போராட்டங்களுக்கும் இந்த யாத்திரையே தொடக்கமாகவும் அமைந்தது.


உதாரணமாக, வங்கத்தில், சதீஷ் சந்திர தாஸ்குப்தா தலைமையிலான தன்னார்வலர்கள், உப்பு தயாரிப்பதற்காக சோதேபூர் ஆசிரமத்திலிருந்து மஹிஸ்பதன் கிராமத்திற்கு நடந்து சென்றனர். பம்பாயில் கே.எஃப். நாரிமன் மற்றொரு குழுவினரை ஹாஜி அலி முனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் அருகிலுள்ள ஒரு பூங்காவில் உப்பு தயாரித்தனர். ரயத்வாடி பகுதிகளில், வாடகை செலுத்தாததுடன், கிராமக் காவல்துறை எதிர்ப்பு (anti-chowkidari) வரியும் பின்பற்றப்பட்டது.


வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் (North-West Frontier Province (NWFP)), 'எல்லைப்புற காந்தி' (Frontier Gandhi) எனப் பிரபலமாக அறியப்பட்ட கான் அப்துல் கஃபார் கான், வன்முறையற்ற தன்னார்வலர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். இந்தக் குழு இறைவனுக்காக சேவைசெய்யும் சிவப்பு சட்டையணிந்த தன்னார்வலர்கள் (Red Shirts) குழு என்று அழைக்கப்பட்டது. மேலும், அவர்கள் இந்த இயக்கத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


  1. மகாத்மா ஜோதிராவ் பூலே


இந்திய அரசு, மகாத்மா ஜோதிபா பூலே அவர்களின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஏப்ரல் 2026 முதல் ஏப்ரல் 2027 வரை ஒரு ஆண்டு காலத்திற்கு கொண்டாட்டங்களை நடத்தி வருகிறது.


ஃபுலே 1827-ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி பிறந்தார். அவர் தோட்டக்காரர்கள் மற்றும் காய்கறி உழவர்களான மாலி சாதியைச் சேர்ந்தவர். அவருக்கு 1888-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி மகாராஷ்டிர சமூக ஆர்வலர் விதல்ராவ் கிருஷ்ணாஜி வந்தேகர் என்பவரால் மகாத்மா பட்டம் வழங்கப்பட்டது.


மகாராஷ்டிராவில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு சமமான சமூக மற்றும் பொருளாதார நலன்களைப் பெற்றுத் தரும் நோக்கில், பூலே தனது மனைவி சாவித்ரிபாய் பூலே மற்றும் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து உண்மை தேடுவோர் சங்கம் (Satyashodhak Samaj) என்ற அமைப்பை உருவாக்கினார்.



ஃபுலே 1873-ஆம் ஆண்டு “குலாம்கிரி” (Gulamgiri) என்ற நூலை எழுதினார். இதில் இந்தியாவில் ‘தீண்டத்தகாதவர்கள்’ எதிர்கொள்ளும் அவல நிலையை விளக்கியுள்ளார். சாதி எதிர்ப்பு இயக்கங்களின் சொற்களில் ‘தலித்’ (‘தீண்டத்தகாதோர்’ அல்லது ‘தனித்து துண்டிக்கப்பட்ட மக்கள்’) எனும் சொல்லை அவர் பயன்படுத்தியதுடன், ஆரியப் படையெடுப்புக் கோட்பாடு குறித்த தனது சொந்த விளக்கத்தையும் பரப்பினார்.


ஃபுலேவின் பிற முக்கியமான படைப்புகள்: “ஷேத்கார்யாச்சா அஸூத்” (1883), “சர்வஜனீக் சத்யதர்ம புஸ்தக்” மற்றும் “பிரம்னாஞ்சே கசாப்” ஆகியவையாகும்.


3. ஜாலியன்வாலா பாக் படுகொலை


பல வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, ஜாலியன்வாலா படுகொலையானது, இந்தியா தனது ஆங்கிலேய ஆட்சியாளர்களுடன் கொண்டிருந்த உறவில் ஒரு திருப்புமுனையாகவும், அதன் விளைவாக இந்தியாவின் சுதந்திரப் போராட்டப் வரலாற்றில் ஒரு முக்கியத் தருணமாகவும் அமைந்தது.


1919-ஆம் ஆண்டு, ஏப்ரல் 13 அன்று, பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர், அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் திரண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு தனது படைகளுக்கு உத்தரவிட்டார். சுதந்திரத்திற்காகப் போராடிய இரண்டு தலைவர்களான சத்ய பால் மற்றும் சைஃபுதீன் கிட்ச்லேவ் ஆகியோரின் சிறைவாசம் மற்றும் ரௌலட் சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகவும், அது குறித்து விவாதிப்பதற்காகவும் அந்தக் கூட்டம் நடைபெற்றது.


ரௌலட் சட்டம் (Rowlatt Act


ஆங்கிலேய எதிர்ப்புச் சதித்திட்டங்கள் அதிகரித்ததற்குப் பதிலளிக்கும் விதமாக, ஆங்கிலேய அரசாங்கம் 1919-ஆம் ஆண்டின் 'அராஜக மற்றும் புரட்சிகரக் குற்றங்கள் சட்டத்தை' (Anarchical and Revolutionary Crimes Act) இயற்றியது. இது பொதுவாக 'ரௌலட் சட்டம்' என்றழைக்கப்படுகிறது. சர் சிட்னி ரௌலட் தலைமையில் அமைக்கப்பட்ட 'அரசத்துரோகக் குழுவின்' (Sedition Committee) பரிந்துரைகளின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட இந்தச்சட்டம், மக்கள் அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதையும், இந்தியர்கள்மீது கூடுதல் ஆதிக்கத்தைச் செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.


இந்தச் சட்டம், தீவிரவாதம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே, எந்த இந்திய குடிமகனையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை கைது செய்து சிறையில் வைக்க ஆங்கிலேய அரசுக்கு அதிகாரம் வழங்கியது. இந்தச் சட்டம்  இந்திய முழுவதும் பரவலான எதிர்ப்பை சந்தித்தது.


நோபல் பரிசு பெற்றவரும் உலகப் பிரமுகருமான ரவீந்திரநாத் தாகூர், தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக தனக்கு வழங்கப்பட்ட 'நைட்' (knighthood) பட்டத்தைத் திருப்பிக் கொடுத்தார். வைசராய் Chelmsford அவர்களை நோக்கி ரவீந்திரநாத் தாகூர், “என் நாட்டு மக்களில், தங்களது பெயரற்ற தன்மை காரணமாக மனிதர்களுக்கு உகந்ததல்லாத அவமானத்தை அனுபவிக்கும் நிலையில் உள்ளவர்களுடன், அனைத்துச் சிறப்புப் பட்டங்களும் நீக்கப்பட்ட நிலையில், நானும் நின்று கொள்ள விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டார்.


சில மாதங்களுக்குள் மகாத்மா காந்தி, இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் அகில இந்திய இயக்கமான ஒத்துழையாமை இயக்கமான கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினார். அந்த ஆண்டு அக்டோபரில் வெளியான ஒரு தலையங்கத்தில் அவர், “எனது நாட்டு மக்களின் சுதந்திரத்தை மதிக்காத எந்த அரசும் மரியாதைக்குரியது அல்ல” என்று ஒரு ‘A Punjab Victim”, Young India, 1919’  கட்டுரையில் குறிப்பிட்டார்.

4. அம்பேத்கர் ஜெயந்தி


பி. ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 அன்று அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 1891-ல் மகர் சாதியில் பிறந்த அம்பேத்கர், தன் வாழ்நாள் முழுவதும் கடுமையான சாதிப் பாகுபாட்டை (caste discrimination) அனுபவித்தார்.


டாக்டர் அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதும் இந்தியாவில் பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காகப் போராடி, சமூகப் பாகுபாட்டை ஒழித்து, அதன் மூலம் இந்தியாவின் அனைத்து  மக்களுக்கும் சட்டத்தின்முன் அனைவரும் சமம் (Equality Day) என்ற கோட்பாட்டை நிலைநாட்டியதால், இந்த நாள் சமத்துவ தினம் என்றும் அழைக்கப்படுகிறது.


1927-ஆம் ஆண்டின் மகத் சத்தியாகிரகம், அம்பேத்கர் தலைமையில் தலித்துகள் நடத்திய முதல் பெரிய கூட்டுப் போராட்டமாகும். இது தலித் இயக்கத்தின் “அடித்தள நிகழ்வாக” (foundational event) கருதப்படுகிறது. சாதி அமைப்பை நிராகரித்து, தங்களின் மனித உரிமைகளை நிலைநாட்டும் உறுதியை அந்தச் சமூகம் கூட்டாக வெளிப்படுத்தியது இதுவே முதல் முறையாகும்.


அம்பேத்கர், அதிகாரமளித்தல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான ஒரு வழியாகக் கல்வியை முன்னிறுத்தினார். மேலும், விளிம்புநிலை சமூகத்தினரிடையே கல்வியைப் பரப்புவதற்காக 1923-ல் பகிஷ்கிரித் ஹிதகர்னி சபாவை (Bahishkrit Hitkarini Sabha) நிறுவினார்.


சாதி அமைப்பை விமர்சித்து, அதை முழுமையாக ஒழிக்க அழைப்பு விடுத்த 'சாதி ஒழிப்பு' (Annihilation of Caste) என்ற நூல், சமூக சமத்துவம் குறித்த அம்பேத்கரின் மிகவும் செல்வாக்கு மிக்க நூல்களில் ஒன்றாகும். அவருடைய மற்ற படைப்புகளில், ‘The Untouchables’ (தீண்டத்தகாதவர்கள்), ‘Who Were the Shudras’ (சூத்திரர்கள் யார்), ‘States and Minorities’ (அரசுகளும் சிறுபான்மையினரும்) மற்றும் ‘Buddha and His Dhamma’ (புத்தரும் அவரது தம்மமும்) ஆகியவை அடங்கும்.


மேலும், ‘Administration and Finance of the East India Company’ (கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகமும் நிதியும்), ‘The Evolution of Provincial Finance in British India’ (ஆங்கிலேய இந்தியாவில் மாகாண நிதியியலின் பரிணாம வளர்ச்சி) மற்றும் ‘The Problem of the Rupee: Its Origin and Its Solution’ (ரூபாயின் பிரச்சினை: அதன் தோற்றமும் தீர்வும்) போன்ற பொருளாதார நூல்களையும்  எழுதியுள்ளார்.


5. பானிபட் முதல் போர்


ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட், இந்திய வரலாற்றில் மூன்று முக்கியப் போர்கள் நடந்த இடமாகும். முதல் பானிபட் போர், 1526-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி, டெல்லி சுல்தான் இப்ராஹிம் லோதிக்கும் தைமூரியப் படைத்தளபதி ஜஹீருதீன் பாபருக்கும் இடையே நடைபெற்றது.

இது, பானிபட்டின் முதல் ஆட்சியாளரான பாபருக்குப் பிறகு இந்தியாவில் முகலாயப் பேரரசுக்கு அடித்தளமாக இருந்ததுடன், லோடி வம்சத்தின் தலைமையிலான டெல்லி சுல்தானியத்தின் ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டுவந்தது.

லோதி தோட்டம் (Lodhi Garden)


1936-ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி, சையத் மற்றும் லோதி வம்சப் பிரபுக்கள் பல நூற்றாண்டுகளாகப் புதைக்கப்பட்டிருந்த பண்டைய டெல்லியின் ஒரு பகுதி, லேடி வில்லிங்டன் பூங்கா (Lady Willingdon Park) என்ற பெயரில் முறைப்படி பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, இது லோதி தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.


தலைநகரின் மையப்பகுதியில் 80 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தோட்டம், முகமது ஷாவின் கல்லறை, படா கும்பாத், ஷிஷ் கும்பாத் மற்றும் சிக்கந்தர் ஷாவின் கல்லறை ஆகிய நான்கு இடைக்கால நினைவுச்சின்னங்களையும், அத்துடன் ஒரு மூங்கில் தோப்பு, ஒரு போன்சாய் பூங்கா, மூன்று குளங்கள் மற்றும் 210 இனங்களைச் சேர்ந்த 5,400-க்கும் மேற்பட்ட மரங்களையும் கொண்டுள்ளது.


NCERT, இந்தப் போரில் துப்பாக்கி மண் (gunpowder), வெளிப்புற துப்பாக்கி பீரங்கிகள் (field artillery) மற்றும் தீக்குச்சித் துப்பாக்கி (matchlock) துப்பாக்கிகள் போன்றவை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. இவை சமீபத்தில் இந்தியப் போர்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டவை ஆகும்.

1556-ஆம் ஆண்டில் நடந்த இரண்டாம் பானிபட் போரில், ஹேமு ‘விக்ரமாதித்ய’ (Vikramaditya’) மன்னரிடமிருந்து வந்த அச்சுறுத்தலை அக்பர் முறியடித்தபோது, ​​முகலாய ஆட்சி வலுப்பெற்றது.


மூன்றாம் பானிபட் போர் 1761-ல் மராத்தா படைகளுக்கும், படையெடுத்து வந்த ஆப்கானிய தளபதி அகமது ஷா அப்தாலியின் படைகளுக்கும் இடையே நடைபெற்றது.  இந்தப்போரில் மராத்தாக்கள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்களின் 40,000 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே, சமயம் அப்தாலியின் படையில் 20,000 பேர் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.


லோதி தோட்டம்: 90-ஆண்டுகளுக்குப் பிறகு, சுதந்திரம் பெற்றதிலிருந்து லோதி தோட்டம் என்று அழைக்கப்படும் இந்தத் தோட்டம், அமைதியான காலை நடைப்பயிற்சி மேற்கொள்ள விரும்புவோருக்கு ஒரு புகலிடமாக மாறியுள்ளது.  



மகாவீர் – ஜைன மதத் தத்துவம் (Mahavir – Jainism philosophy)


1. மார்ச் மாதத்தின் கடைசி நாளில் (மார்ச் 30-31, 2026), ஜைன மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான, பகவான் மகாவீரரின் பிறப்பைக் குறிக்கும் ‘மகாவீர் ஜெயந்தி’ அல்லது ‘மகாவீர ஜன்ம கல்யாணக்’ கொண்டாடப்பட்டது. வர்தமானர் (Vardhamana) என்றும் அழைக்கப்படும் பகவான் மகாவீரர், ஜைன மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை நிறுவினார். அவை இன்றும் மில்லியன் கணக்கான பின்பற்றுபவர்களுக்கு வழிகாட்டி வருகின்றன.


2. பகவான் மகாவீரர், கி.மு. 599-ல் பீகாரில் உள்ள குண்டலகிராமத்தில், மன்னர் சித்தார்த்தருக்கும் ராணி திரிசாலைக்கும் மகனாகப் பிறந்தார். அவரது தாயாரான திரிசாலை, லிச்சாவித் தலைவரான சேதகரின் சகோதரி ஆவார். அவர் தனது 30-வது வயதில் அரச பதவியைத் துறந்து, அனைத்து விதமான உலக வாழக்கை முறைகளிலிருந்தும் விலகி 12 ஆண்டுகள் துறவ வாழக்கையைக் கழித்தார்.


3. மகாவீரர், பிற்காலத்தில் ஜைன மதத்தின் அடிப்படைக் கொள்கைகளாக மாறிய தனது அகிம்சை (non-violence), சத்யம் (truth), அஸ்தேயம் (non-stealing), பிரம்மச்சரியம் (chastity), மற்றும் அபரிகிரகம் (non-attachment) ஆகிய தத்துவங்களைப் போதிப்பதற்காக, 30 ஆண்டுகள் இந்தியா முழுவதும் பயணம் செய்தார்.


4. ஜைன மதத்தின் உண்மையின் பன்முகத் தன்மை (anekantavada)  மற்றும் சார்பியல் உண்மை கோட்பாடு (syadavada) ஆகியவை, உண்மை என்பது சிக்கலானதும் பல அம்சங்களைக் கொண்டதுமாக இருப்பதால், அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்று வலியுறுத்துகின்றன. இருக்கும் அனைத்திற்கும் மூன்று அம்சங்கள் உள்ளன. அவை பொருள் (dravya), குணம் (guna) மற்றும் காலம் (paryaya) ஆகும்.

5. ஜைன மதத்தின் மூன்று முக்கிய கேட்பாடுகள்: முக்தியின் பாதை, என்பது சரியான நம்பிக்கை ((samyag-darshana)), சரியான அறிவு ((samyag-jnana)) மற்றும் சரியான நடத்தை (samyag-charitra) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.


Original link:

5 crucial April events in Indian history

Share:

அணுசக்தித் துறையில் இந்தியாவின் முக்கிய சாதனை

கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த பல முன்னேற்றங்களில், இந்தியா இறுதியாகத் தனது அணுசக்தித் துறையை விரைவாக விரிவுபடுத்துவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதை உணர்த்தும் செய்திகளில் கல்பாக்கத்திலிருந்து வரும் செய்தியும் ஒன்றாகும்.


தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள முன்மாதிரி வேகப் பெருக்க அணு உலையானது (Fast Breeder Reactor), அணுக்கரு இணைதிறனை அடைந்திருப்பது, இந்தியாவின் அணுசக்திப் பயன்பாட்டில் ஒரு தலைமுறை மாற்றத்தைக் குறிக்கும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு மைல்கல்லாகும். இது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தை நிறுவியவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான தொடக்கத்தையும் குறிக்கிறது. இந்தியாவின் அணுசக்தித் துறையின் முதுகெலும்பாக விளங்கும் அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகளுடன் (Pressurised Heavy Water Reactors) ஒப்பிடுகையில், வேகப் பெருக்க அணு உலைகளை (Fast Breeder Reactor) வடிவமைப்பதும், உருவாக்குவதும், இயக்குவதும் நம்பமுடியாத அளவிற்கு மிகவும் சவாலானவையாக உள்ளது. ஆனால், இந்தத் தொழில்நுட்பச் சாதனையைவிட, இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் தொடக்கமானது, வரும் பத்தாண்டுகளில் நாட்டின் எரிசக்தி சுதந்திரத்தையும் இராஜதந்திரத் தன்னாட்சியையும் உறுதிசெய்வதில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது.


நீண்ட காலமாக சந்தேகத்துடனும், ஒரு பாதுகாப்பு அபாயமாகவும் பார்க்கப்பட்ட அணுசக்தியானது, தற்போது தூய்மையான மற்றும் ஏராளமாகக் கிடைக்கும் எரிசக்தியின் ஒரு முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், படிப்படியாக அகற்றவும் நிர்பந்திக்கப்படும் உலகில், அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இது இன்றியமையாததாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, இது இன்னும் மிக முக்கியமானதாகும். ஏனெனில், வெளிப்புறத் தக்கங்களுக்கு நாட்டை எளிதில் பாதிக்கக்கூடியதாக மாற்றும் எரிசக்தி இறக்குமதியைச் சார்ந்திருப்பதை இது விடுவிக்கவோ அல்லது குறைந்தபட்சம் கணிசமாகக் குறைக்கவோ முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவின் அணுசக்தித் துறையும் மற்ற நாடுகளைச் சார்ந்துள்ளது. ஏனெனில், அதன் முக்கிய எரிபொருளான யுரேனியம் நாட்டில் போதுமான அளவில் கிடைப்பதில்லை. ஹோமி பாபா மற்றும் அவரது தலைமுறை இந்திய அணு விஞ்ஞானிகள், மூன்று கட்டப் பாதையை வகுத்தவர்கள் ஆவர். அதன் மூன்றாவது கட்டம், இந்தியாவில் ஏராளமாகக் காணப்படும் தோரியத்தை முக்கிய எரிபொருளாகப் பயன்படுத்துவதாகும்.


இந்த மூன்று கட்டப் பாதையில் பயணிப்பது ஒருபோதும் எளிதாக இருக்கப்போவதில்லை. முதல் சோதனை வேகப் பெருக்க உலை (fast breeder reactor) 2000-களின் முற்பகுதியில்தான் கட்ட முடிந்தது. இந்தப் பயணத்தின்போது பலமுறை, இந்தியா தனது கவனத்தை இழந்துவிட்டது போல் தோன்றியது. கல்பாக்கத்தில் அணு உலையின் நிலைப்புத்தன்மை எட்டப்படுவது, இந்த மாற்றத்தை மீண்டும் வேகப்படுத்தும் என நம்பப்படுகிறது. இந்தியா தனது அணுசக்தித் துறையை விரைவாக விரிவுபடுத்துவதற்காக இறுதியாகத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதை கல்பாக்கத்திலிருந்து வரும் செய்திகள் உணர்த்துகின்றன. அணுசக்தி இயக்கத்தை அமைத்தல், சாந்தி (SHANTI) சட்டத்தை இயற்றுதல், சிறிய மட்டு அணு உலைகளின் (Small Modular Reactors (SMR)) வளர்ச்சியை முன்னெடுத்தல் மற்றும் அணுசக்தித் துறையைத் தனியார் பங்கேற்பிற்காகத் திறந்துவிடுதல் ஆகிய பல நடவடிக்கைகள், இந்தப் பாதையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மிக முக்கியமான நடவடிக்கைகளாகும்.


Original link:

On nuclear energy, an Indian milestone.


Share:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், FASTag-களுடன் இணைக்கப்பட்டுள்ள வாகனப் பதிவு எண்களைச் சரிபார்த்து வருவதன் காரணம் - தீரஜ் மிஸ்ரா

இந்த மாற்றம் பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்து (Multi-Lane Free Flow (MLFF)) எனப்படும்  சுங்க கட்டண வசூல் முறையை முன்னேற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக  இருந்து வருகிறது. இந்த முறையில், வாகனங்கள் சுங்க  சாவடிகளில் நிற்காமல், வேகமாக செல்ல அனுமதிக்கப்படுகிறது. 


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highway Authority of India (NHAI)), தான் வழங்கிய FASTag-களுடன் துல்லியமான வாகனப் பதிவு எண்கள் (Vehicle Registration Numbers (VRNs)) அல்லது வாகனப் பலகை எண்களை உடனடியாகச் சரிபார்க்குமாறு, FASTag-களை வழங்கும் அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


ஃபாஸ்டேக் வருடிகளால் (Scanner) கண்டறியப்பட்ட வாகனப் பதிவு எண்கள், வாகன உரிமத் தகடுகளில் காட்டப்படும் எண்ணுடன் பொருந்தவில்லை என்ற பல புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறான அல்லது செல்லாத வாகனப் பதிவு எண்களுடன் இணைக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட FASTag-குகளைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு வங்கிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) உத்தரவிட்டுள்ளது.


சுங்கச்சாவடிகளில் நிற்காமலோ அல்லது வேகம் குறைக்காமலோ, வாகனங்கள் அதிக வேகத்தில் சுங்க சாவடிகளைக் கடந்து செல்ல அனுமதிக்கும் ஒரு மேம்பட்ட வசதியான, பலவழி தடையற்ற போக்குவரத்து (MLFF) சுங்கக் கட்டண முறைக்கான முன்னெடுப்பின்  ஒரு பகுதியில் இருந்து வருகிறது. பலவழி தடையற்ற போக்குவரத்து சுங்கக் கட்டண முறைக்கு FASTag உடனான துல்லியமான வாகன வழித்தட (VRN) வரைபடம் மிகவும்  முக்கியமானது.


பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்தின் (Multi-Lane Free Flow (MLFF)) நன்மைகள் என்னென்ன?


தற்போதைய மின்னணு சுங்கக் கட்டண முறையின்கீழ், பயனர் கட்டணத்தைச் செலுத்துவதற்காக வாகனங்கள் சுங்கச் சாவடியில் நிற்க வேண்டும். ஏதேனும், முரண்பாடு ஏற்பட்டால், சுங்கச் சாவடி ஊழியர் விவரங்களைச் சரிபார்த்த பின்னரே, வாகனங்கள் கடந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றன. ஒரு பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்து அமைப்பானது, பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு இந்த செயல்முறையை சீராக மாற்றும். குறிப்பாக, அதிக நெரிசல் உள்ள சாலைகள் அல்லது நெடுஞ்சாலைகளில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இருப்பினும், பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்து அல்லது தடையற்ற சுங்கக் கட்டண அமைப்பில் தடுப்புத் ஏதும் இல்லை. உயர் செயல்திறன் கொண்ட ரேடியோ அதிர்வெண் அடையாளக் கருவிகள் மற்றும் தானியங்கி வாகனப் பதிவு எண் அங்கீகாரக் கேமராக்கள் FASTag மற்றும் துல்லியமான வாகனப் பதிவு எண்களைப் சரி பார்த்த பிறகு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தச்  முரயில் மனிதத் தலையீடு இல்லாத நிலையில், FASTag உடன் இணைக்கப்பட்ட துல்லியமான வாகனப் பதிவு எண்ணில் ஏற்படும் பொருத்தமின்மையால் பயணிகள் கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்ல நேரிடலாம்.


பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்து (Multi-Lane Free Flow (MLFF)) கட்டமைப்பின் கீழ், பயனர் கட்டணத்தைச் செலுத்தாத வாகனங்களுக்கு மின்னணு அறிவிப்புகளை அனுப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகள், துல்லியமான மற்றும் சரிபார்க்கப்பட்ட வாகன அடையாளத் தரவுகளை அதிகம் சார்ந்துள்ளன. 


FASTag வழங்கும் முறையானது வாகன (தேசிய வாகனப் பதிவகம்) தரவுத்தளத்துடன் ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட FASTagக-களில், இதுபோன்ற எண்ணிக்கையிலான பொருத்தமின்மைகள் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில், சரிபார்ப்பு வழிமுறைகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தன. பெரும்பாலும்  எழுத்து சார்ந்த செயல்முறைகளையே சார்ந்திருந்தன. இது வாகன அடையாளப் பதிவுகளில் முரண்பாடுகளுக்கு வழிவகுத்தது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority (NHAI)) கூறியது.

பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்து  தொடர்பாக வேறு என்ன நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன?


பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்து அமைப்பு முழுமையாகச் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் (NHAI) சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமும் (Ministry of Road Transport and Highways (MoRTH)), குறிப்பாகப் பயனர் கட்டணம் தொடர்பான முறைகேடுகளைத் தடுப்பதற்காகத் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.


கடந்த மாதம், சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை (MoRTH) புதிய தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளை வெளியிட்டது. இந்த விதிகளின்படி, சுங்க கட்டணம் செலுத்தப்படாமல் இருந்தால், பயணிகள் அந்த சுங்கச் சாவடிக்கு ஏற்ப இரண்டு மடங்கு கட்டண தொகையை செலுத்த வேண்டும். ஆனால், 72 மணி நேரத்திற்குள் கட்டணம் செலுத்தப்பட்டால், அசல் கட்டணமே வசூலிக்கப்படும்.


இங்கும், வாகன விவரங்கள், வாகனம் சென்ற தேதி மற்றும் இடம், செலுத்த வேண்டிய சுங்க கட்டணம் ஆகியவற்றுடன் கூடிய ஒரு மின்னணு அறிவிப்பு (e-notice) வெளியிடப்படும். இந்த மின்னணு அறிவிப்பால் அதிருப்தியடையும் வாகன உரிமையாளர் அல்லது ஓட்டுநர், 72 மணிநேரத்திற்குள் அதனை எதிர்த்து முறையிடக்கூடிய ஒரு குறைதீர்க்கும் வழிமுறையையும் இந்தவிதிகள் வழங்குகின்றன. அவ்வாறு செய்யப்பட்ட முறையீட்டை, சுங்கக் கட்டண வசூல் முகமை ஐந்து நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்படவிட்டால், செலுத்தப்படாத சுங்கக் கட்டணத்திற்கான கோரிக்கை காலாவதியாகிவிடும்.


இந்தியாவில் பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்து (MLFF) எப்போது, ​​எங்கு செயல்பாட்டுக்கு வரும்?


தடையற்ற சுங்கக் கட்டண முறையைச் செயல்படுத்துவதற்காக, 16 சுங்கச்சாவடிகளுக்கான ஒப்பந்தத்தை சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது. சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் நிற்பதைத் தவிர்ப்பதன் மூலம் நெரிசலைக் குறைப்பது, பயண நேரத்தைக் குறைப்பது, எரிபொருள் சிக்கனத்தையும் சுங்க வருவாயை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகவும்.


இந்த சுங்கச்சாவடிகள் ஹரியானாவில் NH-44-ல் உள்ள கரௌண்டா, குஜராத்தில் NH-48-ல் உள்ள சோரியாசி மற்றும் போரியாச்; ராஜஸ்தானில் NH-48-ல் உள்ள தௌலத்புரா, மனோகர்புரா மற்றும் ஷாஜஹான்பூர்; டெல்லியில் UER-II-ல் உள்ள முண்டகா; தமிழ்நாட்டில் NH-48-ல் உள்ள நேமிலி மற்றும் செனசமுத்திரம் மற்றும் NH-45-ல் உள்ள பரனூர்; ஆந்திரப் பிரதேசத்தில் NH-44-ல் உள்ள கசேபள்ளி, அமகத்தாடு மற்றும் மரூர், மகாராஷ்டிராவில் NH-50-ல் உள்ள சாலக்வாடி மற்றும் ஹிவர்காவ்ன் பாவ்ஸா, மற்றும் ஹரியானாவில் NH-19-ல் உள்ள படர்பூர் ஃபரிதாபாத் ஆகியவை ஆகும். மேலும், இந்தியாவில் பல வழித்தடத் தடையற்ற  போக்குவரத்து முறையை செயல்படுத்துவதற்காக கூடுதலாக 36 கட்டணச் சாவடிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.


குஜராத்தில் உள்ள சோரியாசி  சுங்கச் சாவடி, இந்தியாவின் முதல் தடையற்ற சுங்கச் சாவடியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


சாலைப் போக்குவரத்து அமைச்சகம், 2025-26 நிதியாண்டில் (டிசம்பர் 2025 வரை), தேசிய நெடுஞ்சாலைக் கட்டணச் சாவடிகளில் FASTag-கள் மூலம் தினசரி சராசரி வசூல் சுமார் ரூ. 186 கோடியாகவும், தினசரி சராசரி மின்னணு சுங்கக் கட்டணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 1.05 கோடியாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

 Original link:

NHAI is verifying vehicle registration numbers linked with FASTags. Here is why


Share: