சர்வதேச கடல் பகுதிகளை நிர்வகிக்கும் விதிகள் யாவை? -எம். கல்யாணராமன்

ஈரான் நாடு சட்டப்பூர்வமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் போக்குவரத்தைத் தடுக்க முடியுமா? அதேபோல், அமெரிக்கா அந்த ஜலசந்தியை முற்றுகையிடுவது சட்டப்படி செல்லுமா? கடலில் செல்லும் கப்பல்களை இடைமறித்து நிறுத்துவதற்கான விதிகள் என்னென்ன? இதுபோன்ற பதற்றமான சூழல்களில் எந்த சர்வதேச அமைப்பு தலையிடுகிறது, அதன் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும்? மேலும், அடுத்தகட்டமாக என்ன நடக்கக்கூடும்?


ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ஈரான் தனது கடல் எல்லைக்குள் மூன்று கப்பல்களைத் தாக்கியதோடு, இரண்டு கப்பல்களை சிறைபிடித்துள்ளது. முன்னதாக, இலங்கை மற்றும் இந்தோனேசியாவிற்கு இடைப்பட்ட சர்வதேச கடல் பகுதியில், ஈரானுடன் தொடர்புடைய ஒரு பெரிய கச்சா எண்ணெய் கப்பல் உட்பட இரண்டு கப்பல்களை அமெரிக்கப் படைகள் கைப்பற்றின. அதற்குப் பதிலடியாகவே ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.


போர் பதற்றம் அதிகரித்தபோது ஹார்முஸ் ஜலசந்தியில் நிலைமை எப்படி இருந்தது?


கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி போர் தொடங்கிய ஒரே நாளுக்குள், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களின் போக்குவரத்து ஒரு நாளைக்கு சுமார் 100 கப்பல்கள் என்பதிலிருந்து வெறும் ஒரு சில கப்பல்களாகக் குறைந்தது. அதன் பிறகு, ஈரான் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியது; அதன்படி புவிசார் அரசியல் காரணிகள் மற்றும் ஒரு கப்பலுக்கு சுமார் ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமான சுங்கக் கட்டணம் செலுத்துவதன் அடிப்படையில் மட்டுமே கப்பல்கள் அனுமதிக்கப்பட்டன. இந்தச் சூழலில் இந்தியா கணிசமான பலனைப் பெற்றது.  ஏனெனில், சுமார் 10 இந்தியக் கொடி ஏந்திய கப்பல்களையும், இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றிச் சென்ற பல வெளிநாட்டு கப்பல்களையும் கடந்து செல்ல ஈரான் அனுமதித்தது.


சர்வதேச சட்டத்தின்படி, வணிகக் கப்பல்களுக்கான "சுதந்திரமான பயண உரிமையை" (Right to free navigation) மட்டுமே பயன்படுத்தியதாகவும், இதற்காக தாங்கள் எந்தவிதமான சுங்கக் கட்டணமும் செலுத்தவில்லை என்றும் இந்திய அரசாங்கம் தெரிவித்தது. அதே வேளையில், ஈரானைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கப்பல்களும், ஈரானுடன் தொடர்புடைய பிற கப்பல்களும் அந்த ஜலசந்தி பகுதி வழியாகத் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தன.


அமெரிக்கா என்ன செய்தது?


அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின்போது, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான விவகாரத்தை முன்வைத்தது. அங்கு கப்பல்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும், தனது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அங்குக் கடந்து செல்லும் கப்பல்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கவும் தங்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என்று ஈரான் கோரிக்கை விடுத்தது.


ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதியன்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானியக் கப்பல்களை முற்றுகையிடப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இது நேரடியான கடற்படை முற்றுகை அல்ல, மாறாக எச்சரிக்கைகள் போன்ற நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்துவதாகும். ஈரானியக் கப்பல்கள் சுதந்திரமாக இயங்குவதைத் தடுத்து, அதுவரை தடையின்றிச் சென்று கொண்டிருந்த ஈரானியக் கப்பல்களைத் தடுப்பதுமே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. இந்த நடவடிக்கையால் ஏராளமான ஈரானியக் கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஏப்ரல் 19-20 ஆகிய தேதிகளில், 60,000 டன்னுக்கும் அதிகமான கொள்ளளவு கொண்ட தூஸ்கா (Touska) என்ற ஈரானிய சரக்குக் கப்பலை அமெரிக்கா தடுத்து நிறுத்தி, அதன் இயக்கத்தைச் செயலிழக்கச் செய்து, அதனுள் ஏறிச் சோதனையிட்டது. அந்த கப்பலில் ராணுவத் தேவைக்குப் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக அமெரிக்கா சந்தேகித்ததே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.


அதே காலகட்டத்தில், இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடைப்பட்ட சர்வதேச கடல் பகுதியில், 20 லட்சம் பேரல்கள் கொள்ளளவு கொண்ட 'டிபானி' (Tifani) என்ற மிகப்பெரிய எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் தடுத்து நிறுத்தின. இந்தக் கப்பல் ஈரானின் எண்ணெய் வர்த்தகத்தின் ஒரு பகுதி என்று அமெரிக்கா தெரிவித்தது. தற்போது இந்த இரண்டு கப்பல்களும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஈரானின் வருமானத்தைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கைகள் பார்க்கப்படுகின்றன.


இதற்கு ஈரான் எப்படி எதிர்வினையாற்றியது?


ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி, அந்த ஜலசந்தி முழுமையாகத் திறந்திருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். இருப்பினும், ஈரானியக் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்ததால், ஏப்ரல் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில், இந்தியாவிற்குச் சென்று கொண்டிருந்த இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் மற்றும் வெளிநாட்டுக் கப்பல்கள் என ஏராளமான கப்பல்கள் அந்த ஜலசந்தியைக் கடக்க முடியாமல் காத்திருந்தன.


ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புக் கடற்படை (Islamic Revolutionary Guard Corps Navy), இந்தியக் கொடி ஏந்திய சன்மார் ஹெரால்டு (Sanmar Herald) மற்றும் ஜாக் அர்னவ் (Jag Arnav) ஆகிய இரண்டு கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அவற்றை மீண்டும் திரும்பிச் செல்லுமாறு உத்தரவிட்டது. ஒரு கப்பலைத் தவிர, மற்ற அனைத்து கப்பல்களும் பாரசீக வளைகுடாவுக்கே (Persian Gulf) திரும்பின. இந்தச் சம்பவத்திற்காக ஈரானிய தூதரிடம், இந்தியா தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது.


ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி, ஜலசந்தி பகுதியை விட்டு வெளியேற முயன்ற 'பிரான்செஸ்கா' (Francesca) மற்றும் 'எபமினோண்டாஸ்' (Epaminondas) ஆகிய இரண்டு சரக்குக் கப்பல்களை ஈரான் சிறைபிடித்ததோடு, மூன்றாவது கப்பல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தியது. ஈரானியத் துறைமுகங்களுக்கு அமெரிக்கா விதித்த தடைக்கும், ஈரானியக் கப்பல்கள் பிடிபட்டதற்கும் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. முறையான அனுமதியின்றி இயங்கியதாலும், கப்பல் வழிகாட்டும் அமைப்புகளில் மாற்றங்களைச் செய்ததாலும், இந்த இரண்டு கப்பல்களும் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததாக ஈரான் தெரிவித்தது. தற்போது இந்த இரண்டு கப்பல்களும் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளன.


இந்திய மாலுமிகளைக் கொண்ட 'யுபோரியா' (Euphoria) என்ற மூன்றாவது கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது. ஆனால், அந்தக் கப்பல் தற்போது ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், அமெரிக்கா விதித்துள்ள தடையை நீக்கும் வரை, இந்த கடல்வழிப் பாதை போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்படாது என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.


இத்தகைய குறுக்கீடுகளின் சட்டப்பூர்வ நிலைப்பாடு என்ன?


ஜலசந்திகள் (Straits) பெரும்பாலும் போர்களின்போது மோதல்கள் நிகழும் இடங்களாகவோ அல்லது ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகவோ பயன்படுத்தப்பட்டுள்ளன. 20-ஆம் நூற்றாண்டில், துருக்கி, எகிப்து மற்றும் அகாபா வளைகுடாவில் உள்ள திரான் தீவு (Tiran Island) ஆகிய பகுதிகளுக்கு அருகிலுள்ள பல இயற்கை ஜலசந்திகளுக்கான உரிமைகளையும் பொறுப்புகளையும் வரையறுக்கப் பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.


உலகின் பெருங்கடல்களுக்குத் தெளிவான சட்ட அமைப்பை உருவாக்க, ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட ஒப்பந்தம் (United Nations Convention on the Law of the Sea (UNCLOS)) சுமார் 20 ஆண்டுகாலப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்டு, 1994-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. கடல்கள் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானவை என்றும், அவற்றை ஒருங்கிணைந்துதான் நிர்வகிக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இது வணிகக் கப்பல்கள் தடையின்றிப் பயணிக்கும் உரிமையை ஆதரிக்கிறது. சில விதிவிலக்குகளைத் தவிர, மற்ற அனைத்து நேரங்களிலும் கப்பல் போக்குவரத்து சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது. மேலும், சர்வதேச கடல் பரப்பு எந்தவொரு குறிப்பிட்ட நாட்டின் கட்டுப்பாட்டிலும் இருக்கக் கூடாது என்பதும் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை விதியாகக் கூறப்படுகிறது.


அமெரிக்கா தனது கொள்கைகளோடு முரண்படும் நாடுகளுக்குப் பொருளாதாரரீதியாக அழுத்தம் கொடுப்பதற்காக, அந்த நாடுகளின் அரசு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மீது தடைகளை விதிக்கிறது. இத்தகைய தடைகள் அந்த நாடுகள் பணத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதுடன், வர்த்தகம் செய்வதையும் கடினமாக்குகின்றன. இருப்பினும், இந்தத் தடைகள் அமெரிக்காவின் உள்நாட்டுச் சட்டங்களின் அடிப்படையிலேயே விதிக்கப்படுகின்றன.  இவை சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதலோடு விதிக்கப்படுபவை அல்ல. இது தவிர, வெனிசுலா மற்றும் கியூபா நாடுகளுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் கப்பல்களையும் அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளது.


பொதுவாக, சர்வதேச சட்டங்கள் அனைத்து நாடுகளின் வணிகக் கப்பல்களும் சர்வதேச கடற்பரப்பில் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கின்றன. இருப்பினும், சில விதிவிலக்கான சூழ்நிலைகளில் இக்கப்பல்களைத் தடுக்கமுடியும்: ஒரு நாட்டின் கடல் எல்லைக்குள் குற்றங்களில் ஈடுபட்டுவிட்டுத் தப்பிச் செல்லும் கப்பல்களைத் துரத்துவது, ஐநா பாதுகாப்புச் சபையின் (UN Security Council) ஒப்புதல் பெற்ற நடவடிக்கைகள், எந்த நாட்டு அடையாளமும் இல்லாத கப்பல்கள் அல்லது ஒரு கப்பல் எந்த நாட்டிற்குச் சொந்தமானதோ அந்த நாடு அனுமதி அளிக்கும்போது அத்துமீறும் கப்பல்களைத் தடுத்து நிறுத்துவது போன்றவை இதில் அடங்கும். அமெரிக்கா சில சமயங்களில் இத்தகைய காரணங்களைப் பயன்படுத்திப் பிற நாட்டு கப்பல்களைத் தடுத்துள்ளது.


சர்வதேச கடற்பரப்பிற்கு வெளியே உள்ள எல்லைக் கடல் போன்ற பகுதிகளில், போர்க்கப்பல்கள் உட்பட அனைத்துக் கப்பல்களுக்கும் "பாதிப்பில்லாத பயண உரிமை" (Innocent Passage) உண்டு. அதாவது, அந்தந்த நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வரை, மற்ற நாட்டு கப்பல்கள் அந்த கடல் பகுதி வழியாகக் கடந்து செல்ல உரிமை உண்டு என்கின்றனர்.



ஹார்முஸ் ஜலசந்தி பகுதியின் மீது ஈரானுக்கு ஏதேனும் உரிமைகள் உள்ளதா?


இந்த கடல்வழிப் பாதை ஒரு சர்வதேச வழித்தடமாகும். இருப்பினும், இதன் மிகக் குறுகிய பகுதியில் ஈரானின் கடல் எல்லைகளும் ஓமானின் கடல் எல்லைகளும் ஒன்றாக அமைந்திருப்பதால், அங்கு சர்வதேச கடல் பகுதியோ அல்லது பிரத்யேக பொருளாதார மண்டலமோ (Exclusive economic zone) கிடையாது. ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்ட உடன்படிக்கையின்படி (United Nations Convention on the Law of the Sea), அங்கு முழுமையான தடையற்ற கப்பல் பயண உரிமைகளுக்குப் பதிலாக, கடந்து செல்லும் உரிமை (Transit) என்ற விதிமுறை மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.


ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்ட ஒப்பந்தத்தின்படி (UNCLOS), ஒரு நாட்டின் கடல் பகுதி வழியாக வெளிநாட்டு கப்பல்கள் எந்தவித இடையூறுமின்றி சுதந்திரமாக கடந்து செல்ல அனுமதி உண்டு. இந்த விதியின்படி, ஈரான் தனது கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்தை கட்டுப்படுத்தவோ அல்லது கடந்து செல்லும் வணிகக் கப்பல்களுக்கு அனுமதி மறுக்கவோ முடியாது. இருப்பினும், இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன: கப்பல்கள் ஓரிடத்தில் நிற்காமல் தொடர்ச்சியாக பயணம் செய்ய வேண்டும்; ஈரான் சமீபத்தில் அறிவித்துள்ள குறிப்பிட்ட கடல் பாதைகளையே பின்பற்ற வேண்டும்; அந்தப் பகுதியை கடந்து செல்வதற்காக மட்டுமே பயணம் அமைய வேண்டும்; மேலும், ஈரான் அல்லது ஓமன் நாடுகளின் சட்டங்களுக்குப் புறம்பான பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யக் கூடாது.


அடுத்து என்ன நடக்கக்கூடும்?


இந்த விவகாரத்தைத் தீர்க்க உதவக்கூடிய ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, சர்வதேச கடல்சார் அமைப்பு (International Maritime Organization (IMO)) ஆகும். இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய தாங்கள் ஈரானுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதேவேளையில், அங்குள்ள கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு ஒரு திட்டத்தையும் முன்மொழிந்துள்ளது. மேலும், கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிப்பதையும் அனுமதிச் சீட்டு கட்டாயமாக்கப்படுவதையும் இந்த அமைப்பு எதிர்க்கிறது. வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்காகவும், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க முயற்சிப்பதற்கும் ஈரானைக் கடுமையாகக் கண்டித்து இந்த அமைப்பின் குழுவானது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஆனால், அதேசமயம் அமெரிக்காவின் நடவடிக்கைகள் அல்லது அதன் முற்றுகை குறித்து இந்த அமைப்பு எந்த விமர்சனத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Original link:

What rules govern international waters? 



Share:

PMJJBY: அமைதியான முறையில் ஒரு சமூகப் பாதுகாப்புப் புரட்சி. -ஆர் துரைசாமி

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY)) என்பது ஒரு வருட கால ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். 18 முதல் 50 வயதுக்குட்பட்ட வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இது 2 லட்சம் வரையிலான ஆயுள் பாதுகாப்புக் காப்பீட்டை வழங்குகிறது.



வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகள் ஒரு நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையைக் குறிக்கும் முக்கிய அடையாளங்களாகும். சேமிப்பு கணக்கு வைத்திருப்பது, குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (Economically Weaker Sections (EWS)) பெரும் தன்னம்பிக்கையை அளிக்கிறது. காப்பீடு அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. இந்தியா தனது நிதி உள்ளடக்கிய திட்டத்தை தீவிரமாகத் தொடங்கியபோது, முறையான பொருளாதாரக் கட்டமைப்பிற்கு வெளியே இருந்த கோடிக்கணக்கான குடிமக்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தின் இரண்டு முக்கியத் தூண்களாக இவை மாறின.


2015-ஆம் ஆண்டில் இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டபோது, இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே ஏதேனும் ஒரு வகையான காப்பீட்டுப் பாதுகாப்பு இருந்தது. இந்த இடைவெளிக்குக் காரணம் மக்களுக்குக் காப்பீடு மீது விருப்பம் இல்லாதது அல்ல. மாறாக, ஏழை எளிய மக்களையும் சென்றடையக்கூடிய வகையிலும், அவர்களுக்குப் பரிச்சயமான வழிகளிலும், குறைந்த செலவில் கிடைக்கக்கூடிய காப்பீட்டுத் திட்டங்கள் அப்போது இல்லாததே முக்கியக் காரணமாக இருந்தது.


இந்திய அரசின் நிதிசார் பாதுகாப்புத் திட்டங்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியாவின் அனைவருக்குமான நிதிச் சேவைப் பயணம் 2014-ஆம் ஆண்டு பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நோக்கம், குறிப்பாக கிராமப்புற ஏழைகள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் வங்கிக் கணக்கு வசதியை உறுதி செய்வதாகும். இந்த வங்கிக் கணக்கே மற்ற திட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த அடித்தளத்தின் மீது நிதி பாதுகாப்பை உருவாக்கும் வகையில், 2015-ஆம் ஆண்டு மே மாதம் 9-ஆம் தேதி பிரதமர் மூன்று முக்கியத் திட்டங்களை ஒன்றாகத் தொடங்கினார். ஆயுள் காப்பீட்டிற்காக பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana), விபத்து மற்றும் ஊனத்திற்கான காப்பீட்டிற்காக பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana), மற்றும் முறைசாராத் தொழிலாளர்களின் ஓய்வூதியப் பாதுகாப்பிற்காக அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana) ஆகிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் வெவ்வேறு விதமான அபாயங்களைக் கையாளும் இந்த மூன்று திட்டங்களும் இணைந்து 'ஜன சுரக்ஷா மும்மை' (Jan Suraksha trinity) என்று அழைக்கப்படுகின்றன.


பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்பது 18 முதல் 50 வயது வரை உள்ள வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்காக வழங்கப்படக்கூடிய ஓர் ஓராண்டு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். ஏதேனும் ஒரு காரணத்தினால் சந்தாதாரர் உயிரிழக்க நேரிட்டால், அது இயற்கையான மரணமாக இருந்தாலும் அல்லது விபத்தினால் ஏற்பட்ட மரணமாக இருந்தாலும், அவரது குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. இதற்கு முன் அவருக்கு இருந்த உடல்நலக் குறைபாடுகள் ஒரு தடையாக இருக்காது. இத்திட்டத்தில் சேர, கணக்கு வைத்திருப்பவர் ஒரு சம்மதப் படிவத்தை (Consent form) மட்டும் சமர்ப்பித்தால் போதுமானது. இதற்கு எந்தவித மருத்துவப் பரிசோதனையும் தேவையில்லை. மேலும், சந்தாதாரரின் அடையாளம், வயது மற்றும் வங்கி விவரங்கள் ஏற்கனவே வங்கிக் கணக்கில் உள்ளதால், இதற்காகத் தனியாக KYC (Know Your Customer) ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.


இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் அதன் குறைந்த செலவாகும். இதற்கான ஆண்டு பிரீமியம் (Yearly Premium) ₹436 மட்டுமே, அதாவது ஒரு நாளைக்கு சுமார் 1.20 ரூபாய் மட்டுமே செலவாகும். இதற்கு ஈடாக, பாலிசி காலத்திற்குள் சந்தாதாரர் எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டால், அவருடைய குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் ஈட்டும் ஒரு தினசரி கூலித் தொழிலாளிக்கு, இந்த 2 லட்சம் ரூபாய் என்பது ஒரு மிகப்பெரிய நிதி உதவியாகும். இந்தப் பணம் ஒரு குழந்தையின் சில ஆண்டு கால கல்விச் செலவிற்கோ, ஒரு சிறிய விவசாயக் கடனை அடைப்பதற்கோ அல்லது கணவரை இழந்த ஒரு பெண் உடனடியாக வறுமையில் வாடாமல் தன் வாழ்க்கையை மேலாண்மை செய்வதற்கோ பெரிதும் உதவும்.


இந்தத் திட்டத்தில் பாலிசி ஆண்டின் இடையில் சேருபவர்களுக்கு, அவர்கள் சேரும் மாதத்தைப் பொறுத்து பிரீமியம் தொகை (Pro-rata basis) கணக்கிடப்படுகிறது. இதன்படி, ஜூன், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் சேருபவர்கள் முழுத் தொகையான 436 ரூபாயை செலுத்த வேண்டும். செப்டம்பர், அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் இணைந்தால் 342 ரூபாய் செலுத்தினால் போதுமானது. அதேபோல், டிசம்பர், ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் சேருபவர்களுக்கு 228 ரூபாயும், மார்ச், ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சேருபவர்களுக்கு 114 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் புதிய சந்தாதாரர்கள் இத்திட்டத்தில் இணைவதை ஊக்குவிக்கவும், தாமதமாகச் சேருபவர்கள் கூடுதல் சுமையை உணராமல் இருக்கவும் இந்த முறையானது பின்பற்றப்படுகிறது.


இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான நிபந்தனை உள்ளது. நீங்கள் திட்டத்தில் சேர்ந்த முதல் 30 நாட்கள் ஒரு 'காத்திருப்பு காலமாக' (Waiting Period) கருதப்படுகிறது. இந்த ஆரம்ப 30 நாட்களில், விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும்; மற்ற காரணங்களால் ஏற்படும் உயிரிழப்புகளுக்குக் காப்பீடு கிடைக்காது. இந்த விதிமுறை புதிதாக இணைபவர்களுக்கும், இடையில் சந்தா செலுத்தாமல் விட்டுவிட்டு மீண்டும் இணைபவர்களுக்கும் பொருந்தும். இருப்பினும், விபத்தினால் ஏற்படும் மரணங்களுக்குத் திட்டத்தில் சேர்ந்த முதல் நாளிலிருந்தே முழுமையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது.


குறைந்த வருமானம் கொண்ட சந்தாதாரர்கள் சந்தா தொகையைச் செலுத்த மறந்துவிடுவதே அவர்களின் காப்பீடு இடையில் நின்றுபோவதற்கு மிக முக்கியமான காரணமாகும். இதைத் தவிர்ப்பதற்காகவே இந்தத் தானியங்கி புதுப்பித்தல் முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி அன்று சந்தாதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து 436 ரூபாய் தானாகவே எடுத்துக்கொள்ளப்படும். வங்கிக் கணக்கில் போதிய இருப்புத் தொகை இருந்தால் மட்டும் போதும், சந்தாதாரர் இதற்காகத் தனியாக எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. இதன் மூலம் காப்பீடு எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். இத்திட்டத்தில் 50-வயது வரை மட்டுமே புதிய உறுப்பினராகச் சேர முடியும் என்றாலும், ஏற்கெனவே இணைந்து தொடர்ந்து புதுப்பித்து வருபவர்கள் 55 வயது வரை இந்தக் காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.


பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தில் இணையும் ஒவ்வொரு வங்கியும் ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின்கீழ், வங்கி ஒரு மாஸ்டர் பாலிசியை வைத்திருக்கும், அதன் மூலமே அந்த வங்கியில் பதிவு செய்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் காப்பீடு வழங்கப்படும். வாடிக்கையாளரின் விவரங்கள் மற்றும் அவர்கள் செலுத்தும் சந்தாத் தொகையின் அடிப்படையில் இந்தக் காப்பீடு அமையும். இழப்பீடு பெறும் முறையும் வங்கியின் மூலமாகவே நடைபெறுகிறது. ஒருவேளை காப்பீடு செய்தவர் இறந்துவிட்டால், அவருடைய வாரிசுதாரர் (Nominee) முறையான படிவம் மற்றும் தேவையான ஆவணங்களை சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி அந்த விவரங்களைச் சரிபார்த்து காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும். ஆவணங்கள் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, 2 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை நேரடியாக வாரிசுதாரரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.


இதுவரை, இந்தத் திட்டத்தின்கீழ் 27.43 கோடி மக்கள் இணைந்துள்ளனர். இதில் உயிரிழந்த சந்தாதாரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 8.8 லட்சம் இழப்பீட்டுக் கோரிக்கைகள் மூலம் மொத்தம் 17,600 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்றுள்ள காப்பீட்டு நிறுவனங்களின் தகவல்படி, இதன் இழப்பீட்டுக் கோரிக்கைகள் தீர்வு விகிதம் (Claim settlement ratio) 99.95 சதவீதமாக உள்ளது. இதன் பொருள் என்னவென்றால், ஒரு குடும்பத்தினர் வங்கிக்குச் சென்று இறப்புச் சான்றிதழ் மற்றும் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் போது, ஏறக்குறைய அனைத்து சூழல்களிலும் அவர்களுக்குரிய பணம் முறையாகக் கிடைத்துவிடுகிறது என்பதாகும்.


இந்த அமைப்பில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation of India (LIC)) மிக முக்கியப் பங்காற்றுகிறது. கூட்டாண்மை வங்கிகளின் மூலமாக பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தை வழங்கும் பதிமூன்று ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமும் (LIC) ஒன்றாகும். இந்தியா முழுவதும் 808 வங்கிகளுடன் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் நேரடித் தொடர்பில் உள்ளது. ஜூன் மாதம் 2025-ஆம் ஆண்டு முதல் மே மாதம் 2026-ஆம் ஆண்டு வரையிலான தற்போதைய பாலிசி ஆண்டில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் இணைக்கப்பட்ட வங்கிகள் மூலம் 3.61 கோடி வங்கிச் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர். இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மொத்தம் 21.49 கோடி சந்தாதாரர்களைப் பதிவு செய்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சுமார் 9,414 கோடி ரூபாய் மதிப்பிலான 4.70 லட்சம் இழப்பீட்டுத் தொகைகளை வழங்கியுள்ளது. இந்தத் தரவுகளுக்குப் பின்னால், கடினமான காலகட்டத்தில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் உதவியைப் பெற்ற பல தனிப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது.


கொரோனா பெருந்தொற்றுக்காலம் (Covid-19), இந்தத் திட்டத்தின் அவசியத்தையும் அதேநேரத்தில் இதில் காணப்படும் பலவீனங்களையும் ஒருசேர நமக்கு உணர்த்தியது. உயிரிழப்புகள் மற்றும் காப்பீடு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்ததால், காப்பீடு கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்தது; இக்கட்டான சூழலில் இருந்த குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டம் ஒரு மிகச்சிறந்த நிதி உதவியாக அமைந்தது. இருப்பினும், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு இன்னும் முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை என்பதையும் இந்தப் பெருந்தொற்று சுட்டிக்காட்டியது. குறிப்பாக, தங்கள் குடும்பத்தில் இறந்தவருக்கு இப்படி ஒரு காப்பீடு இருந்தது அல்லது அதற்கான காப்பீட்டுத் தொகை ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டது என்பது பல குடும்பங்களுக்குத் தெரியாமலேயே இருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு எனத் தனியாகக் காகித வடிவிலான கொள்கை ஆவணங்கள் வழங்கப்படுவதில்லை என்பது ஒரு முக்கியக் காரணமாகும். மேலும், வங்கிக் கணக்கில் வாரிசுதாரர் (Nominee) பெயர் இணைக்கப்படாவிட்டால், காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு அந்தக் குடும்பத்தினர் நீண்ட சட்டப் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, கிராமப்புறங்களில் இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வங்கிகள், வணிகத் தொடர்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.



பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்பது 2047-ஆம் ஆண்டிற்குள் "அனைவருக்கும் காப்பீடு" என்ற அரசாங்கத்தின் இலக்கை அடைவதற்கான ஒரு முக்கிய அங்கமாகும். இதற்காக, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) வங்கிகளுடனான தனது கூட்டமைப்பை விரிவுபடுத்தி, இந்தத் திட்டத்தை அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு புதிய பதிவும் ஒரு குடும்பத்திற்கு முறையான நிதி பாதுகாப்பை வழங்குகிறது. எதிர்பாராத விதமாக ஒரு குடும்பத்தில் இழப்பு ஏற்படும்போது, எந்தவித தாமதமும் அல்லது சட்டச் சிக்கலும் இன்றி அந்தத் தொகை வாரிசுதாரரைச் சென்றடையும் போதுதான், இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டதற்கான உண்மையான நோக்கம் முழுமையடைகிறது.


ஆர் துரைசாமி, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின்  தலைவர் ஆவார்.


Original Link: PMJJBY: The silent social security revolution.


Share:

புதிய மிசோ திருமணச் சட்டம் எவ்வாறு ஆண்களை பாதுகாத்து, பெண்களை புறக்கணிக்கிறது? -அமால் ஷேக்

மிசோ திருமண, விவாகரத்து மற்றும் சொத்துரிமைச் சட்டம் 2014-ல் (Mizo Marriage, Divorce and Inheritance of Property Act, 2014) மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் அரசியலமைப்புச் செல்லுபடியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மிசோ பெண்களுக்கு இதுவரை சட்டரீதியாக வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு உரிமைகளை இந்த புதிய மாற்றங்கள் பறிப்பதாகவும், அதே நேரத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதே போன்ற பாதுகாப்பு உரிமைகள் அப்படியே நீடிப்பதாகவும் அந்த மனுவில் வாதிடப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சட்டத்திருத்தம் பெண்களுக்குப் பாரபட்சமாக இருப்பதாகவும், அவர்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


இந்தச் சட்டத்திருத்தங்கள், பல்வேறு சமூகங்களுக்கு இடையேயான திருமணங்கள், பழங்குடியின அடையாளங்கள் மற்றும் விவாகரத்திற்குப் பிந்தைய சொத்துரிமை ஆகியவற்றைக் கையாளும் சட்ட நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவருவதாக மனுதாரர்கள் வாதிடுகின்றனர். இந்த மாற்றங்கள் மிசோ சமூகத்திற்கு வெளியே திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்குப் பாதகமான சூழலை உருவாக்குவதாகக் கூறுகின்றனர். இந்தச் சட்டம் மற்றும் இது தொடர்பான வழக்கு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 


மூலச் சட்டம் என்ன கூறியது மற்றும் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டது


2014-ஆம் ஆண்டு சட்டம் முதலில் "ஏதேனும் ஒரு மிசோ பழங்குடியினத்தைச் சேர்ந்த எந்தவொரு நபருக்கும்" மற்றும் "ஆண் உறுப்பினர் மிசோ பழங்குடியைச் சேர்ந்தவராக இருக்கும் திருமணங்களுக்கும்" பொருந்தும் வகையில் அமைந்தது. இதில் உள்ள இரண்டாவது விதி சமூகங்களுக்கு இடையிலான திருமணங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஏனெனில், ஒரு மிசோ பெண் தனது பழங்குடிக்கு வெளியே ஒருவரைத் திருமணம் செய்துகொண்டாலும், அவர் தொடர்ந்து இந்தச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படுவார். ஏனெனில், இந்தச் சட்டத்தின் பலனைப் பெற தம்பதியர் இருவருமே மிசோ பழங்குடியினராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதே இதன் காரணமாகும்.


2026-ஆம் ஆண்டு திருத்தமானது பிரிவு-2-ஐ மாற்றியமைத்துள்ளது. அதன்படி, திருமணமான இருவருமே மிசோ பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலோ அல்லது அதில் உள்ள ஆண் மட்டும் ஏதேனும் ஒரு மிசோ பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலோ, இந்தச் சட்டம் அத்தகைய அனைத்து திருமணங்களுக்கும் பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன் பொருள் என்னவென்றால், ஒரு மிசோ இனத்தைச் சேர்ந்த ஆண், அந்த இனத்தைச் சேராத (non-Mizo) பெண்ணைத் திருமணம் செய்துகொண்டாலும், அவர் தொடர்ந்து அந்தச் சட்டத்தின் பாதுகாப்பைப் பெறுவார். ஏனெனில், அவர் அந்தத் திருமண உறவில் ஆண் உறுப்பினராகக் கருதப்படுகிறார். ஆனால், ஒரு மிசோ இனப் பெண், அந்த இனத்தைச் சேராத ஒருவரைத் திருமணம் செய்துகொண்டால், அவர் அந்தச் சட்டத்தின் சலுகைகளிலிருந்து நீக்கப்படுவார். அவர் தனது இனத்திற்கு வெளியே திருமணம் செய்துகொண்டபிறகு, அவருடைய பழங்குடியின அடையாளத்திற்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் ரத்தாகிவிடுகிறது.


இந்தச் சட்டத்தின்கீழ் "மிசோ" (Mizo) என்று கருதப்படுபவர் யார் என்பதை வரையறுக்கும் பிரிவு 3(m), தற்போது மேலும் சுருக்கப்பட்டுள்ளது.


முன்பு, இந்த வரையறையில் "பிறப்பால் மிசோ இனத்தைச் சேர்ந்தவர்கள், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் சமூகம் அல்லது மக்கள் குழுக்களால் மிசோக்களாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நபர்கள்" ஆகியோர் உள்ளடக்கப்பட்டிருந்தனர். ஆனால், தற்போது "சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுதல்" என்ற அந்தப் பிரிவு முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. அதாவது, இனிமேல் ஒருவரை சமூகம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவர் மிசோ இனத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படமாட்டார் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.


புதிய வரையறையின்படி, "பிறப்பால் மிசோ இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது தந்தை ஏதேனும் ஒரு மிசோ பழங்குடியைச் சேர்ந்தவராக இருப்பவர்கள்" மட்டுமே இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சட்டப்பூர்வமாகத் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் இந்த அங்கீகாரம் உண்டு. திருத்தப்பட்ட இந்தச் சட்டம் இப்போது ஒருவருடைய அடையாளத்தைத் தந்தையின் வம்சாவளியை வைத்தே அங்கீகரிக்கிறது. இதன் விளைவாக, ஒருவருக்குத் தாய் மிசோ இனத்தைச் சேர்ந்தவராகவும், தந்தை மிசோ அல்லாத வேறு இனத்தைச் சேர்ந்தவராகவும் இருந்தால், அவருக்கு இந்தத் தகுதி கிடைக்காத வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சொத்து தொடர்பான விதிகள்


விவாகரத்து தொடர்பான சட்டப்பிரிவுகளில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் குறிப்பாகப் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன.




மிசோ பழங்குடியினரின் பாரம்பரிய சட்டத்தின்படி (Mizo Customary Law), 'சும்சுவா' (Sumchhuah) என்பது ஒரு குறிப்பிட்ட வகை விவாகரத்து முறையாகும். இந்த முறையின்கீழ், ஒரு பெண் தனது கணவரைப் பிரிந்துசெல்ல விரும்பினால், திருமணத்தின்போது கொடுக்கப்பட்ட திருமணத் தொகையை (Dowry) மீண்டும் கணவரிடமே திருப்பி அளித்துவிட்டு விவாகரத்து செய்துகொள்ளலாம். இது குறித்துத் தெளிவான விளக்கங்களை அந்தச் சட்டத்தின் பிரிவு-25 (Section 25) விரிவாக எடுத்துரைக்கிறது.


மூலச் சட்டத்தின்படி, 'சும்சுவா' (sumchhuah) முறை மூலம் ஒரு பெண் விவாகரத்து பெற்று வெளியேறும்போது, தனது தனிப்பட்ட உடமைகளைத் தவிர, தம்பதியினர் கூட்டாகச் சேர்த்த சொத்துக்களில் அவருக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. இருப்பினும், கணவனின் குடும்ப வன்முறை, கொடுமை, தொடர்ச்சியான கள்ளத்தொடர்பு, மனநலம் பாதிப்பு அல்லது முறையான மருத்துவக் காரணங்கள் இன்றி தாம்பத்திய உரிமைகளை மறுத்தல் போன்ற காரணங்களால் ஒரு பெண் வீட்டைவிட்டு வெளியேறினால், அதில் விதிவிலக்குகள் அளிக்கப்பட்டன. இத்தகைய சூழல்களில், திருமணத்திற்குப் பிறகு ஈட்டப்பட்ட சொத்தில் அந்தப் பெண்ணுக்குரிய பங்கினை வழங்க மறுக்க முடியாது என்று கூறப்படுகிறது.


இந்தச் சட்டத்திருத்தம் முந்தைய விதிவிலக்குகளை அப்படியே தக்கவைத்துக் கொண்டது, அதேவேளையில் ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு தம்பதியரால் ஈட்டப்பட்ட சொத்தில் 50% வரை பங்கினைப் பெற முடியும் என்ற புதிய அம்சத்தைச் சேர்த்துள்ளது. மேலும், சொத்துரிமை தொடர்பான தெளிவுக்காக, 'சம்சுவா' (sumchhuah) என்ற வார்த்தையை விளக்கிய அந்த பழைய விளக்கக் குறிப்பை இந்தத் திருத்தம் நீக்கியுள்ளது.


சட்டத்திலிருந்து இந்த விளக்கம் நீக்கப்படுவதால், அதன் பொருள் இனி ஒரு தெளிவான சட்டவரையறையைச் சார்ந்திருக்காமல், அது எவ்வாறு புரிந்து கொள்ளப்படுகிறது என்பதையே சார்ந்திருக்கும் என்கின்றனர்.


பிரிவு-26 என்பது கணவனால் தொடங்கப்படும் ஒரு வகை விவாகரத்தான 'மக்' (mak) என்பதைப் பற்றிக் கூறுகிறது. மூலச் சட்டத்தின்படி, ஒரு கணவர் தனது மனைவியை 'மக்' முறை மூலம் விவாகரத்து செய்தால் — மனைவியின் கள்ளத்தொடர்பு அல்லது திருமண உரிமைகளை மறுத்தல் ஆகிய காரணங்களைத் தவிர்த்து — அந்தப் பெண்ணிற்குத் திருமணத்திற்குப் பிறகு ஈட்டப்பட்ட சொத்தில் பங்கு உண்டு. மேலும், அவருடைய தனிப்பட்ட சொத்துக்களில் எவ்வித மாற்றமும் இருக்காது, அவை அவருக்கே சொந்தமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


இந்தச் சட்டத்திருத்தம் பெண்களுக்கான இறுதிப் பாதுகாப்பையும் நீக்கிவிட்டது. இனிமேல், ஒரு விவாகரத்தின்போது, பெண்ணின் தனிப்பட்ட சொத்துக்களுக்குப் பாதுகாப்பு இருக்கும் என்பதற்கு இந்தச் சட்டம் எந்த உத்தரவாதமும் அளிக்காது. மேலும், அதற்குப் பதிலாக மாற்றுப் பாதுகாப்பு வழிமுறைகள் எவையும் இதில் சேர்க்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.


Original Link: How a new Mizo marriage law protects men, but keeps women out


Share:

ஏன் முப்படைகளின் தலைமைத் தளபதி நியமன நடைமுறை தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்? -சி. உதய பாஸ்கர்

ஜூன் மாதம் 2022-ஆம் ஆண்டில், இந்திய அரசு தனது சேவை விதிகளில் சில மாற்றங்களைச் செய்தது. இதன் மூலம், 62 வயதிற்கு உட்பட்ட, பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல்கள் (Lt Generals)  மற்றும் அதற்கு இணையான பதவியில் உள்ள அதிகாரிகள் - முப்படைகளின் தலைமை தளபதியாக (Chief of Defence Staff (CDS)) நியமிக்கப்பட தகுதியுடையவர்கள் என்ற சட்டபூர்வமான அடிப்படையை உருவாக்கியது. இருப்பினும், இந்த நடவடிக்கை இந்தியாவின் மதிப்புமிக்க மற்றும் நீண்டகால இராணுவ மரபுகளில் ஒரு அசாதாரண மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் (Lieutenant General) என்.எஸ்.ராஜா சுப்ரமணி, இந்தியாவின் அடுத்த முப்படைகளின் தலைமை தளபதியாக (CDS) மற்றும் இராணுவ விவகாரங்கள் துறையின் (Department of Military Affairs (DMA)) செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மே மாதம் 31-ஆம் தேதி முதல் தனது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார். மறைந்த ஜெனரல் பிபின் ராவத் மற்றும் செப்டம்பர் மாதம் 2022-ஆம் ஆண்டில் பதவியேற்ற ஜெனரல் அனில் சவுகான் ஆகியோருக்குப் பிறகு, இந்தியாவின் மூன்றாவது முப்படைகளின் தலைமை தளபதியாக இவர் இருப்பார். ஜெனரல் அனில் சவுகானின் மூன்று ஆண்டு காலப் பதவி மே மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


டிசம்பர் மாதம் 2019-ஆம் ஆண்டில், மோடி அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின்போது முப்படைத் தலைமைத் தளபதி (CDS) பதவி உருவாக்கப்பட்டது. அப்போதைய ராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், தனது ராணுவத் தளபதி பதவிக்காலம் முடிந்த பிறகு, ஜனவரி மாதம் 2020-ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் முப்படைத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார். இருப்பினும், டிசம்பர் மாதம் 2021-ஆம் ஆண்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் ராவத் காலமானார். இதனால் ஆயுதப்படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், போர் கட்டளைகளை உருவாக்குதல் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களில் சுயசார்பை அதிகரித்தல் போன்ற அவர் திட்டமிட்டிருந்த பல சீர்திருத்தங்கள் முழுமையடையாமல் நின்றன. தற்போதைய 2026-ஆம் ஆண்டிலும்கூட, இந்தச் சீர்திருத்தங்கள் இன்னும் முற்றுப்பெறவில்லை. தெளிவற்ற காரணங்களால், ஒன்றிய அரசு சுமார் ஒரு வருடத்திற்கு புதிய முப்படைத் தலைமைத் தளபதியை நியமிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, செப்டம்பர் மாதம் 2022-ஆம் ஆண்டின் இறுதியில்தான் இரண்டாவது முப்படைத் தலைமைத் தளபதி நியமிக்கப்பட்டார்.


மோடி அரசாங்கம் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் (மூன்று நட்சத்திர தகுதிநிலை கொண்ட அதிகாரி) அனில் சௌஹானைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு ஜெனரல் (நான்கு நட்சத்திர தகுதிநிலை) பதவி உயர்வு அளித்ததால், இந்த நியமனம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


இது ஒரு அசாதாரண நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. ஜூன் மாதம் 2022-ஆம் ஆண்டில், முப்படைத் தலைமைத் தளபதி (CDS) பதவிக்கு, 62 வயதிற்குட்பட்ட பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல்கள் (Lieutenant Generals) மற்றும் அதற்கு இணையான அதிகாரிகளை நியமிக்க அனுமதிக்கும் வகையில் அரசாங்கம் சேவை விதிகளை மாற்றியது. இருப்பினும், இந்த முடிவு இந்தியாவின் நீண்டகால இராணுவ மரபுகளை மாற்றியமைப்பதாக அமைந்தது.


இராணுவத்தில் உயர் பதவிகளுக்கு பதவி உயர்வு பெறுவது என்பது மிகவும் புனிதமான மற்றும் கௌரவமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இருப்பினும், ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை மீண்டும் பணியில் அமர்த்தி அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது ஒரு வழக்கத்திற்கு மாறான முன்னுதாரணமாக அமைந்தது. ஓய்வு பெற்ற அதிகாரியை முப்படைத் தலைமைத் தளபதியாக (CDS) நியமிப்பதற்காக சேவை விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், பொதுவாக இராணுவ விதிகள் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளிப்பதையோ அல்லது அவர்களை மீண்டும் நேரடிப் பணியில் சேர்ப்பதையோ அனுமதிக்கும் விதிகள் இல்லை. 



அந்த வகையில், ஜெனரல் (General) சௌஹான் அவர்கள் முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருந்தாலும், அது ஒரு புதிய முன்மாதிரியை உருவாக்கியது. தற்போது லெப்டினன்ட் ஜெனரல் (Lt Gen) சுப்ரமணி அவர்களை அடுத்த முப்படைத் தலைமைத் தளபதியாக (CDS) அரசாங்கம் விரைவாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், அதே பழைய முறை இப்போதும் பின்பற்றப்படுவது தெளிவாகத் தெரிகிறது: அதாவது, ஓய்வுபெற்ற மூன்று நட்சத்திர தகுதிநிலை கொண்ட அதிகாரியைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு நான்கு நட்சத்திர தகுதிநிலை வழங்கிப் பதவி உயர்வு அளிக்கும் நடைமுறை மீண்டும் தொடர்கிறது.


தற்போது பணியில் இருக்கும் மூன்று அல்லது நான்கு நட்சத்திர தகுதிநிலை கொண்ட அதிகாரிகளில், முப்படைத் தலைமைத் தளபதி (CDS) பதவிக்கு பொருத்தமான ஒருவரை அரசாங்கத்தால் கண்டறிய முடியவில்லை என்பதையே இந்த நடைமுறை உணர்த்துகிறது. இதன்காரணமாகவே, ஓய்வுபெற்ற மூன்று நட்சத்திர அதிகாரிகளையும் இந்தப் பதவிக்கு பரிசீலிக்க அரசாங்கம் தனது தேடலை விரிவுபடுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. 


லெப்டினன்ட் ஜெனரல் சுப்ரமணி அவர்கள் மிகவும் திறமைமிக்க ஒரு அதிகாரி ஆவார். அவர் ராணுவத் தளபதி மற்றும் ராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவர் உள்ளிட்ட, ஒரு மூன்று நட்சத்திர தகுதிநிலை கொண்ட ராணுவ அதிகாரிக்கு கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த பதவிகளை வகித்தவர். இவரைப் போன்றே இதே அளவிலான அனுபவங்களைக் கொண்ட பல ஓய்வுபெற்ற அதிகாரிகளையும்கூட, முப்படைத் தலைமைப்  தளபதி (CDS) பதவிக்கு பரிசீலனை செய்திருக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.


இருப்பினும், சுப்ரமணி அவர்களுக்குச் சாதகமாக அமைந்த ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், செப்டம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டு முதல் தேசிய பாதுகாப்புக் குழு செயலகத்தில் (National Security Council Secretariat (NSCS)) அவர் வகித்து வரும் இராணுவ ஆலோசகர் பொறுப்பாகும். இது ஜெனரல் அனில் சௌஹானின் தொழில்முறைப் பயணத்தோடு நெருக்கமாக ஒத்துப்போகிறது.  அவரும் செப்டம்பர் மாதம் 2022-ஆம் ஆண்டில் முப்படைத் தலைமைத் தளபதியாக (CDS) பொறுப்பேற்பதற்கு முன்பு, அக்டோபர் மாதம் 2021-ஆம் ஆண்டு முதல் தேசிய பாதுகாப்புக் குழு செயலகத்தில் (NSCS) பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, முதல் முடிவு என்னவென்றால், தேசிய பாதுகாப்புக் குழு செயலகத்தில் (NSCS) நியமிக்கப்படுவது, முப்படைத் தலைமைத் தளபதியாக (CDS) பதவி உயர்வு பெருவதற்கான ஒரு வழியாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ஓய்வு பெற்ற உயர்மட்ட ராணுவ அதிகாரிகள், குறிப்பாக இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்களிடையே, அரசாங்கம் ஒரு விரிவான தேர்வு முறையை மேற்கொள்கிறது.


மோடி அரசாங்கம் இராணுவப் படைத் தலைவர்களை நியமிப்பதில் பணி மூப்பு (seniority) முறையையே தொடர்ந்து பின்பற்றி வருகிறது. ஆனால், முப்படைத் தலைமைத் தளபதி பதவியைத் தேர்ந்தெடுக்கும்போது தகுதி அல்லது திறமை (merit) என்பதை அடிப்படையாகக் கொள்கிறது என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இருப்பினும், இந்தத் தகுதி எவ்வாறு மதிப்பிடப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: இவ்வளவு முக்கியமான பதவிக்கு ஒருவரைத் தேர்ந்தெடுக்க என்ன அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன? இந்தப் பதவி நாட்டின் இராணுவப் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தகுதி எவ்வாறு அளவிடப்படுகிறது மற்றும் ஓய்வு பெற்ற எந்த அதிகாரிகள் குழுவிலிருந்து வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?


தற்போதைய ஆதாரங்களின்படி, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் மட்டுமே முப்படைத் தலைமைத் தளபதி (CDS) பதவிக்கு பரிசீலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. முப்படைகளில் இராணுவம் மிகப்பெரியது என்பதால், அந்தப் பதவிக்கு அதுவே மிகவும் பொருத்தமானது என்ற பாதுகாப்பு அமைச்சகத்தின் நீண்டகால நம்பிக்கையை இந்த நியமன நடைமுறை காட்டுகிறது.


தற்போதைய பிராந்தியப் போர்கள், நவீனகால மோதல்கள் பல பரிமாணங்களைக் கொண்டவை என்பதையும், மிக உயரிய இராணுவ நிலைகளில் பல்வேறு அனுபவங்களும் நிபுணத்துவமும் தேவை என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன. ஒரு நாட்டின் நலனுக்காக எல்லை தாண்டிய இராணுவத் திறனை மேம்படுத்துவதும் பயன்படுத்துவதும் தற்போது வல்லரசு நாடுகளுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. முப்படைத் தலைமைத் தளபதி (CDS) பதவிக்கான தேர்வை ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்குள் மட்டுமே கட்டுப்படுத்துவது, கடற்படை (Navy) மற்றும் விமானப்படையைச் (Air Force) சேர்ந்த சமமான திறன் கொண்ட அதிகாரிகளைப் புறக்கணிப்பதாக அமையலாம் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். 

தற்போது பணியில் இருக்கும் மூன்று நட்சத்திர தகுதிநிலை கொண்ட அதிகாரிகளில் (Three-star officers) ஒருவரைப் படைத்தலைவராகத் தேர்ந்தெடுப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் உரிமையாகும்; இது ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்பும் ஆகும். இருப்பினும், ஓய்வு பெற்ற ஒருவரை முதலில் தேர்ந்தெடுத்து, அவரைப் முப்படைத் தலைமைத் தளபதி (CDS) பதவிக்குத் தயார் செய்து, பிறகு அவருக்கு நான்கு நட்சத்திர தகுதிநிலை வழங்கி பதவி உயர்வு அளிக்கும் தற்போதைய நடைமுறை (இதற்கு முறையான விதிகள் எதுவும் இல்லாதபோதும்), தேவையற்ற அரசியல் தலையீட்டைக் கொண்டுவருகிறது. மேலும், இது தவிர்க்கப்பட வேண்டிய ஒரு நடவடிக்கையாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.


அரசாங்கம் தற்போது பணியில் இருக்கும் எந்தவொரு மூன்று அல்லது நான்கு நட்சத்திர தகுதிநிலை கொண்ட அதிகாரியையும், முப்படைத் தலைமைத் தளபதி (CDS) பதவிக்கு தகுதியானவராகக் கருதாதது ராணுவ அதிகாரிகளுக்கு வழக்கத்திற்கு மாறான ஒன்றாகவும், ஏமாற்றமளிப்பதாகவும் இருக்கிறது. மேலும், புதிய முப்படைத் தலைமைத் தளபதிக்கு முன்னால் பல கடினமான சவால்கள் காத்திருக்கின்றன. இந்த சவாலான பொறுப்பை ஏற்கும் அவருக்கு அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜெனரல் சுப்ரமணி அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.


சி. உதய பாஸ்கர், புது டெல்லியில் உள்ள கொள்கை ஆய்வுகளுக்கான சங்கத்தின் (SPS) இயக்குநராக உள்ளார்.




Original Link: Why the CDS appointment procedure demands scrutiny.


Share:

பாதுகாப்புத் துறையில் இந்தியா ஏன் உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கிறது? - பிரியா குமாரி சுக்லா

மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கவனித்து வருகிறது. இந்தச் சூழலில், இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளைப் பயன்படுத்துவது மிகவும் அவசியம் என்று இந்திய ராணுவம் கருதுகிறது. குறிப்பாக, ராணுவம் சார்ந்த முக்கியமான பிரிவுகளில் அந்நியத் தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


• இந்தியாவிற்கென பிரத்யேக செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளை உருவாக்கியுள்ள ‘SarvamAI’ மற்றும் ‘BharatGen’ போன்ற இந்திய நிறுவனங்களுடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தற்போது ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவின் தற்போதைய பாதுகாப்பு அமைப்புகளுடன் எவ்வாறு ஒருங்கிணைக்கலாம் என்பது குறித்தே இந்த பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் ராணுவக் கட்டமைப்பில் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் பங்களிப்பை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




• ‘Palantir Technologies’ போன்ற ஒரு மென்பொருளை, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உருவாக்குவதே எங்களது நோக்கம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ள மற்றொரு அதிகாரி கூறுகையில், தற்போது இந்தியா செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் பின்தங்கியிருந்தாலும், நமக்கென சொந்தமான ஒரு அடிப்படை செயற்கை நுண்ணறிவு மாதிரியில் முதலீடு செய்வது வியூகரீதியாக மிக அவசியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


• ஈரான் மற்றும் உக்ரைன் மோதல்களில், பாதுகாப்புப் படைகள் செயல்பாட்டு முடிவுகளை எடுக்க செயற்கை நுண்ணறிவை பயனுள்ள முறையில் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, தாக்குதல் நடவடிக்கைகளுக்கும் ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதை இந்த நிகழ்வுகள் இந்தியாவிற்கு உணர்த்தியுள்ளன. அமெரிக்காவில், 'Palantir Technologies' போன்ற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் ஈரான் மீதான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டன. மேலும், டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் மீது சைபர் தாக்குதல்களை நடத்தவும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.


• உதாரணமாக, சீனா தனது இராணுவ நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவை மிக வேகமாக ஒருங்கிணைத்து வருகிறது. இது அந்நாட்டின் மக்கள் விடுதலை இராணுவம் (People’s Liberation Army (PLA)) முன்னெடுத்துள்ள 'நுண்ணறிவுப் போர்முறை' (Intelligentised Warfare) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. 


• சீன ராணுவத் திட்டமிடுபவர்கள், போர்க்களத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கும், தானாகவே இயங்கும் ட்ரோன் கூட்டங்களை (drone swarms) வழிநடத்துவதற்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். கண்காணிப்பு, இலக்குகளைக் கண்டறிதல் மற்றும் போர்க்களத் தரவுகளை சில நொடிகளில் ஆய்வுசெய்து கட்டளைகளைப் பிறப்பிக்கும் முறைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானது. சீன ராணுவத்தின் சமீபத்திய ஆயுதக் கொள்முதல் ஆவணங்களை ஆய்வு செய்ததில், அவர்கள் உளவு பார்ப்பது மற்றும் போரைத் திட்டமிடும் முறைகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கபட்டதாகத் தெரியவந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தின் பலத்தைக் குறைத்து, மின்னல் வேகத்தில் தாக்குதல்களை நடத்த சீனா திட்டமிடுகிறது. மேலும், "wolf pack" எனப்படும் தானாக இயங்கும் ரோபோடிக் போர் அமைப்புகளையும், அதிநவீன ட்ரோன் தளங்களையும் சீனா காட்சிப்படுத்தியுள்ளது.


• இருப்பினும், இந்தியா போர்க்காலத் தேவைகளுக்காக தற்போதுள்ள செயற்கை நுண்ணறிவு தீர்வுகளையே சார்ந்திருக்க வேண்டுமா என்கிற முக்கியமான கேள்வி எழுகிறது. அதேவேளையில், நாட்டின் பாதுகாப்பு போன்ற வியூகரீதியிலான முக்கியத் துறைகளுக்கு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களே சிறந்தது என அரசாங்கமும் ராணுவமும் கருதுகின்றன.


உங்களுக்குத் தெரியுமா?


• ராணுவத்தில் உளவுத் தகவல் ஒருங்கிணைப்பு (Intelligence Fusion) என்பது சிக்னல்கள், புகைப்படங்கள் மற்றும் மனித உளவுத் தகவல்கள் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து தரவுகளைச் சேகரித்து, அவற்றை ஆய்வு செய்து ஒருங்கிணைப்பதைக் குறிக்கிறது. இதன் மூலம் எதிரிகளின் அச்சுறுத்தல்கள் குறித்த துல்லியமான தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். தற்போது இந்தத் தொழில்நுட்பம் உளவுத் தகவல் ஒருங்கிணைப்பு அமைப்பாக (Intelligence Fusion Systems) வளர்ச்சி பெற்றுள்ளது. இவை செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (Machine Learning) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தரவுகளை மிக வேகமாகப் பகுப்பாய்வு செய்கின்றன. இதன் விளைவாக, தகவல்களைச் சேகரிப்பதற்கும், அதற்கேற்ப முடிவுகளை எடுப்பதற்கும் இடைப்பட்ட நேரம் பெருமளவு குறைக்கப்படுகிறது.


• இதற்கு ஒரு முக்கியக் காரணம், செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவதற்கு ஆகும் மிகப்பெரிய செலவாகும். ‘OpenAI’ மற்றும் ‘Anthropic’ போன்ற நிறுவனங்களால் உருவாக்கப்படும் பொதுவான பயன்பாட்டிற்கான பெரிய மொழி மாதிரிகளுக்கு (Large Language Models) அதிக முதலீடு தேவைப்படுகிறது. கணினி செயல்பாடுகளுக்கு மட்டுமே ஏறக்குறைய 200 மில்லியன் டாலர் (சுமார் ₹1,650 கோடி) செலவாகும். இது தவிர, தரவுகளைப் பயிற்சி அளிப்பதற்கும் மற்றும் அவற்றை வகைப்படுத்துவதற்கும் ஆகும் செலவுகளைச் சேர்த்தால், மொத்தத் தொகை சுமார் 500 மில்லியன் டாலர் முதல் 600 மில்லியன் டாலர் (சுமார் ₹4,100 கோடி முதல் ₹5,000 கோடி) வரை உயரக்கூடும் என்று கணக்கிடப்படுகிறது.


• குறிப்பிட்ட நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட சிறியரக மாதிரிகளை உருவாக்குவது ஒப்பீட்டளவில் செலவு குறைந்ததாக இருக்கலாம். மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்குக் கிடைக்கும் அளவிலான கணினித் திறன் இந்திய நிறுவனங்களுக்குக் கிடைப்பதில் சவால்கள் இருக்கலாம். இருப்பினும், இந்தத் தடையை நீக்க இந்திய அரசு இந்தியா செயற்கை நுண்ணறிவு திட்டத்தின்கீழ் (IndiaAI Mission), மானிய விலையில் கிராபிக்ஸ் செயலாக்க அலகுகளை (Graphics Processing Units (GPUs)) வழங்கி வருகிறது.


• அமெரிக்க அரசின் உயர்மட்ட அதிகாரிகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்ட சில கருத்துக்கள் இந்தியாவை அதிருப்தி அடையச் செய்துள்ளன. இந்தியா உள்ளிட்ட தனது நட்பு நாடுகள், தங்களுடைய செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை அமெரிக்க தொழில்நுட்பக் கட்டமைப்பைக் கொண்டே உருவாக்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 



Original Link: Why India is pushing for indigenous AI systems in the defence sector?

Share:

கேரள முதல்வர் குறித்து காங்கிரஸ் இன்னும் முடிவெடுக்கவில்லை : அரசியலமைப்பின்படி இதற்கு எவ்வளவு காலம் ஆகலாம்?

ஒரு மாநிலத்தில் தேர்தல் முடிவடைந்த பிறகு, எவ்வளவு விரைவாகப் புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்? அந்த காலக்கெடு மீறப்பட்டால் என்ன நடக்கும்? என்பது குறித்து கீழே குறிப்பிட்டுள்ளது.


சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற நான்கு மாநிலங்களில், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் புதிய முதலமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர். மேற்கு வங்கத்தில், பாஜகவைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் சி. ஜோசப் விஜய் ஆகியோர் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளனர். அசாம் மாநிலத்தில், பாஜக தலைவர் ஹிமந்த பிஸ்வ சர்மா பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், மேலும் அவர் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கேரளாவில், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி இன்னும் இறுதி செய்யவில்லை. இந்த நிச்சயமற்ற நிலை இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கக்கூடும்?


ஒரு மாநிலத்தில் தேர்தல் முடிவடைந்த பிறகு, எவ்வளவு விரைவாகப் புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்? அந்த காலக்கெடு மீறப்பட்டால் என்ன நடக்கும்? 


புதிய மாநிலச் சட்டமன்றத்தின் உருவாக்கம்


கேரளாவின் அடுத்த முதலமைச்சரைத் தீர்மானிக்க, காங்கிரஸிற்கு இன்னும் சுமார் 10 நாட்கள் அவகாசம் உள்ளது. இதற்குக் காரணம், தற்போதுள்ள சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 23-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அரசியலமைப்பின் 172-வது பிரிவின்படி, "ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்றமும், முன்கூட்டியே கலைக்கப்படாவிட்டால், அதன் முதல் கூட்டம் நடைபெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்படும், அதற்கு மேல் நீடிக்காது. அந்த ஐந்து ஆண்டு கால அவகாசம் முடிவடைவதே அச்சட்டமன்றம் கலைக்கப்பட்டதாகக் கருதப்படும்."


தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, கேரளாவின் ஐந்தாண்டுப் பதவிக்காலம் மே 23, 2026 அன்று நிறைவடைந்த நிலையில், தற்போதைய சட்டமன்றம் மே 24, 2021 அன்று அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கும், தற்போதுள்ள சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கும் இடைப்பட்ட காலத்தில், வெற்றிபெற்ற கட்சி அல்லது கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமையைக் கோருகிறது. மேலும், அவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் அதனை அழைக்கிறார். சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கும், பொதுவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் மூத்தவரான ஒரு தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்படுகிறார்.


தொங்கு சட்டசபை (Hung Assembly) இருக்கும் பட்சத்தில், அரசாங்கத்தை அமைக்க யாரை அழைப்பது என்பதைத் தீர்மானிப்பதில் ஆளுநருக்கு ஒரு பெரிய பங்கு உண்டு. இருப்பினும், வெற்றி பெற்ற வேட்பாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோரின் ஆதரவு தங்களுக்கு உள்ளது என்பதை அந்தக் கட்சி அல்லது கூட்டணி இறுதியில் நிரூபிக்க வேண்டும்.


பல்வேறு காரணங்களால் அரசாங்கத்தை அமைக்க முடியாத கடுமையான சூழ்நிலையில், சட்டப்பிரிவின் 356-வது பிரிவின் கீழ் மாநிலம் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்படுகிறது. இந்தச் சூழ்நிலை குறித்து, சட்டப்பிரிவின் 172-வது பிரிவு குறிப்பிடுவதாவது, ஓர் அவசரநிலைப் பிரகடனம் அமலில் இருக்கும்போது, பாராளுமன்றம் சட்டத்தின் மூலம் குறிப்பிட்ட அந்தக் காலக்கட்டத்தை, ஒரு நேரத்தில் ஓராண்டுக்கு மிகாமலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்தப் பிரகடனம் அமலில் இருந்து நீங்கியபிறகு ஆறுமாத காலத்திற்கு மேல் நீட்டிக்காமலும் இருக்கலாம்.


முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் ஒரு கட்சியால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியுமா? இது மிகவும் கடினமான ஒன்றாகும். ஏனெனில், அரசியலமைப்பின் 164-வது சட்டப்பிரிவு, “முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்படுவார், மற்ற அமைச்சர்கள் முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள். மேலும், அமைச்சர்கள் ஆளுநரின் விருப்பப்படி பதவியில் இருப்பார்கள்” என்று கூறுகிறது. எனவே, முதலமைச்சர் பதவியேற்கும் வரை, மற்ற அமைச்சர்களை நியமிக்க முடியாது. இருப்பினும், ஒரு அரசியல் கட்சி பிற்காலத்தில் தனது முதலமைச்சரை மாற்றிக்கொள்ள முடிவெடுக்கலாம்.


கேரளாவில் முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதில் ஏற்படும் தாமதத்திற்குக் காரணம் என்ன?


இந்தப் போட்டியில், மூன்று பேர் முன்னணியில் உள்ளனர். இவர்களில், வி.டி. சதீசன் பொதுமக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றவர். கே.சி. வேணுகோபால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடையே (எம்.எல்.ஏ-க்கள்) செல்வாக்கு பெற்றவர். ரமேஷ் சென்னித்தலா கேரள மாநில காங்கிரஸ் கட்சியில் மிகவும் மூத்த தலைவராகத் திகழ்கிறார்.

வேணுகோபால் தான் இறுதித் தேர்வாக அமைந்தால், மற்றொரு சிறிய சிக்கல் எழும். ஏனெனில், அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் (MLA) அல்ல.


சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்க முடியுமா?


ஆம். அரசியலமைப்பின் 164(4)-வது பிரிவின்படி, சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ஒரு தலைவர் கூட அமைச்சராகப் பொறுப்பேற்க முடியும். சட்டமன்றம் மற்றும் சட்ட மேலவை ஆகிய இரண்டும் உள்ள மாநிலங்களில், சட்ட மேலவை உறுப்பினராக (MLC) இல்லாத ஒருவர்கூட அமைச்சராகலாம். இருப்பினும், அப்பொறுப்பை ஏற்றவர் ஆறு மாதங்களுக்குள் இவ்விரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராகிவிட வேண்டும்.


1971-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதியன்று, உச்சநீதிமன்றம் அரசியலமைப்பின் 164(4)-வது பிரிவை அடிப்படையாகக் கொண்டு ஒரு தீர்ப்பை வழங்கியது. அதன்படி, சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்ட மேலவை உறுப்பினராகவோ இல்லாத ஒருவரை முதலமைச்சராக நியமிக்க முடியும் என்றும், அரசியலமைப்பின் 164(4)-வது பிரிவு முதலமைச்சர்களுக்கும் பொருந்தும் என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


Original Link: Congress yet to decide Kerala CM: How long can it take under the Constitution.


Share:

பெண்களின் அரசியல் விலக்கை ஒரு தொழில்நுட்பச் சிக்கலாகவே இந்தியா தொடர்ந்து கருத முடியாது -ஸ்வேதா பன்சால்


ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெண்கள் நாடாளுமன்றத்தின் கலாச்சாரத்தையும், கட்சிகளின் முன்னுரிமைகளையும், வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளையும் மாற்ற முடியும். காலப்போக்கில், அது சாத்தியங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும்.


நாரி சக்தி வந்தன் அதினியம் (Nari Shakti Vandan Adhiniyam) மற்றும் அதனுடன் தற்போது தொடர்புடைய புதிய சட்ட நகர்வுகள், நீண்டகாலமாகத் தள்ளிப்போடப்பட்டு வந்த ஒரு கேள்விக்கு விடையளிக்க இந்தியாவை வலியுறுத்துகின்றன. நாட்டின் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் அவைகளில், அமரும் தகுதி யாருக்கு உண்டு?


இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சிக்கலானதாகத் தோன்றினாலும், கொள்கையளவில் இதன் அடிப்படை மிகவும் எளிமையானதே. மக்களவையிலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் உள்ள மொத்த இடங்களுள் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதே இதன் நோக்கமாகும். இது, ஆண் ஆதிக்கத்தை இயல்பானதாகவும், தவிர்க்க முடியாததாகவும், பல சமயங்களில் 'தகுதி' என்பதிலிருந்து சற்றும் மாறுபடாத ஒன்றாகவும் கருதி வந்த ஒரு அரசியல் அமைப்பில் மேற்கொள்ளப்படும் ஒரு கட்டமைப்புரீதியான மாற்றமே இதுவாகும்.


இந்திய நாடாளுமன்றம் நீண்டகாலமாகவே பெரும்பான்மையாக ஆண்களைக் கொண்டதாகவே இருந்து வருகிறது. மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் பெண்கள், இருந்தபோதிலும், மக்களவையில் அவர்களின் பிரதிநிதித்துவம் சுமார் 14 சதவீதமாகவே இருந்து வருகிறது. பல மாநிலங்களில், அவர்களின் பிரதிநிதித்துவம் இதைவிடவும் குறைவாக உள்ளது.


பல ஆண்டுகளாக, பெண்களுக்கான இட ஒதுக்கீடு தேசிய விவாதத்தில் அவ்வப்போது இடம்பெற்று வந்தது. வெவ்வேறு அரசாங்கங்கள் இதற்கான  மசோதாக்களை அறிமுகப்படுத்தி, பொதுவெளியில் இந்த யோசனையை ஆதரித்தன. இருப்பினும், அதன் அமலாக்கத்தை அவை தாமதப்படுத்தின. இந்த மசோதாக்களுக்கான எதிர்ப்புகள் பெரும்பாலும் அப்படியேதான் இருந்து வருகின்றன. சுழற்சி முறையில் ஒதுக்கப்பட்ட இடங்கள், பதவியில் இருக்கும் பிரதிநிதிகளுக்கு இடையூறு விளைவிக்கும் என்பது ஒரு வாதம். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற குழுக்களுக்கான துணை ஒதுக்கீடுகள் அரசியல் கணக்கீடுகளை மாற்றிவிடும் என்பது மற்றொரு வாதம். அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அல்லது தொகுதி மறுவரையறை வரை அமலாக்கத்தைக் காத்திருக்க வைக்க வேண்டும் என்றும் சிலர் வாதிடுகின்றனர். இந்த விவாதங்கள் தொடர்ந்தாலும், தொழிலாளர், வன்முறை, சுகாதாரம், நிலம், நலன் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து முடிவெடுக்கும் நிறுவனங்களிலிருந்து பெண்கள் பெருமளவில் விலக்கப்பட்டே உள்ளனர்.


அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா-2026 (Constitution (131st Amendment) Bill) இன்னும் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவில்லை. இது முக்கியமானது, ஏனெனில் அது அளிக்கப்பட்ட வாக்குறுதி முழுமையடையவில்லை என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட முயற்சி, இந்தப் பிரச்சினையை மீண்டும் அவசரத்துடன் கொண்டு வந்துள்ளது. பெரும் ஜனநாயக சமநிலையின்மையைச் சரிசெய்வதற்கு முன், இந்தியா உகந்த சூழ்நிலைகளுக்காகக் காத்திருக்க வேண்டுமா? என்ற ஒரு முக்கியக் கேள்வியை இது எழுப்புகிறது.





இதற்கான, பதில் தெளிவாக இல்லை என்பதே.


தொகுதி மறுவரையறை மற்றும் கூட்டாட்சி சமநிலை குறித்த கவலைகள் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டியவை. அவை கற்பனையானவை அல்ல. தொகுதிகளை மறுவரையறை செய்வது பிராந்தியங்களுக்கு இடையேயான பதட்டங்களை அதிகரிக்கக்கூடும். இந்த அபாயங்கள் கவனமாகக் கையாளப்பட வேண்டுமே தவிர, காலவரையற்ற தாமதத்திற்கான முறையற்ற காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படக்கூடாது. 140 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு நாடு, பெண்களின் அரசியல் புறக்கணிப்பை ஒரு தொழில்நுட்பப் பிரச்சினையாகத் தொடர்ந்து கருத முடியாது. தொகுதி மறுவரையறைக்கு சில விலைகளை உருவாக்கலாம். ஆனால் ஒத்திவைப்பிற்கும் விலைகள் உண்டு. இந்தியா ஏற்கனவே பல தலைமுறைகளாக அதற்கான விலையைக் கொடுத்துவிட்டது.


தேவை உடனடியானது. நெருக்கடிகள் பெண்கள் மீது எவ்வளவு சமமற்ற முறையில் பாதிக்கின்றன என்பதை இந்தப் போக்கு வெளிப்படுத்தியது. பெண்கள் விகிதாசாரத்திற்கு அதிகமாக வேலைகளை இழந்தனர், அதிக ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டனர். அதேநேரத்தில், வீடுகளுக்குள் வன்முறை அதிகரித்தது. காலநிலை அழுத்தம், விவசாய நெருக்கடி, கல்வி இடைவெளிகள், பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, இடம்பெயர்வு மற்றும் முறைசாரா தொழிலாளர் இயக்கம் ஆகிய அனைத்திற்கும், ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த சட்டமன்றங்கள் பலமுறை சுருக்கிய அல்லது புறக்கணித்த கண்ணோட்டங்கள் தேவைப்படுகின்றன.


பஞ்சாயத்துகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் இந்தியாவிற்கு ஏற்கனவே அனுபவம் உண்டு. 1990-களிலிருந்து, பஞ்சாயத்துகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களும், பல மாநிலங்களில் கிட்டத்தட்ட பாதி இடங்களும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பெண் கிராமத் தலைவர்கள் (Women sarpanchs) பெரும்பாலும் நீர், சுகாதாரம், பள்ளிகள், ஊட்டச்சத்து, சாலைகள் மற்றும் உள்ளூர் பொறுப்புணர்வு  ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்துள்ளனர். இருப்பினும், அவர்களின் பதவிநிலை எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடவில்லை. இதில் போலி அரசியல் (Proxy politics), சாதிப் படிநிலைகள் மற்றும் ஆணாதிக்கக் கட்டுப்பாடு ஆகியவை இன்னும் தொடர்கின்றன. ஆனால், பெண்கள் கணிசமான எண்ணிக்கையில் அமைப்புகளுக்குள் நுழையும்போது, செயல்திட்டம் மாறுகிறது என்பதை அனுபவம் காட்டுகிறது.


இந்த பதவிநிலையை நாடாளுமன்றம் வரை விரிவுபடுத்துவது இந்தியாவைத் தானாகவே மாற்றிவிடாது. இருப்பினும், அது நாடாளுமன்றம் காணும் மற்றும் கேட்கும் பிரச்சினைகள் மற்றும் கண்ணோட்டங்களின் வரம்பை விரிவுபடுத்தும்.


ஒதுக்கீட்டின் சாத்தியக்கூறுகளையும், அதன் வரம்புகளையும் சர்வதேச அனுபவங்கள் காட்டுகின்றன. 1994 இனப்படுகொலைக்குப் பிறகு, ருவாண்டா (Rwanda) அரசியலமைப்பு ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தி பெண்களின் பிரதிநிதித்துவத்தை வியத்தகு முறையில் அதிகரித்தது. பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் நில உரிமைகள் தொடர்பான சட்டங்களை முன்னெடுத்துச் செல்ல உதவினர். இருப்பினும், எண்ணிக்கை எல்லாத் தடைகளையும் அகற்றவில்லை. கட்சிக் கட்டுப்பாடு, உயரடுக்கு வலைப்பின்னல்கள் மற்றும் அனைத்துப் பெண்களும், குறிப்பாக மிகவும் விளிம்புநிலையில் உள்ளவர்கள், அர்த்தமுள்ள அதிகாரத்தைப் பெறுகிறார்களா என்பது குறித்த கேள்விகள் நீடித்தன.


ஸ்வீடன், நார்வே மற்றும் பிற நோர்டிக் நாடுகள் (Nordic Countries), பெண்களின் பிரதிநிதித்துவத்தை உயர்மட்டங்களுக்கு உயர்த்துவதற்காக, தன்னார்வக் கட்சி நடவடிக்கைகள் மற்றும் கலாச்சார மாற்றங்களைப் பயன்படுத்தின. அவற்றின் நாடாளுமன்றங்கள் மகப்பேறு விடுப்பு, வேலை-வாழ்க்கைச் சமநிலை மற்றும் சமத்துவம் தொடர்பான கொள்கைகளை வடிவமைக்க உதவின. இருப்பினும், இந்த நாடுகள்கூட பாலினப் பாகுபாடுள்ள அரசியல் கலாச்சாரங்கள், துன்புறுத்தல், முறைசாரா புறக்கணிப்பு அல்லது உண்மையான முடிவெடுக்கும் அதிகாரம் வெளிப்படையாகத் தெரியாத இடங்களுக்கு மாற்றப்படுவது போன்றவற்றிலிருந்து தப்பவில்லை.


நியூசிலாந்தும் ஜெர்மனியும் இதேபோன்ற ஒரு போக்கைக் காட்டுகின்றன. அனைவரையும் உள்ளடக்கும் போக்கு அரசியலை மாற்றியது. ஆனால், அது பாரபட்சம், வேலை-வாழ்க்கை முரண்பாடுகள் அல்லது சமமற்ற தலைமைத்துவத்தை முடிவுக்குக் கொண்டுவரவில்லை. பிரதிநிதித்துவத்திற்கான தகுதியைக் குறைக்கவில்லை. அது தகுதி குறித்த புரிதலை விரிவுபடுத்தியது. ஆனால், பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமே ஏற்கனவே இருந்த சமத்துவமின்மையை குறைக்கவில்லை.


இந்தச் சிக்கலான தன்மையிலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இடஒதுக்கீடு என்பது எல்லாப் பிரச்சனைகளுக்குமான தீர்வு அல்ல. வலுவான கட்சிக்குள்ளான ஜனநாயகம், நியாயமான வேட்பாளர் தேர்வு, தேர்தல் நிதி சீர்திருத்தம் மற்றும் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் ஏழை சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு உண்மையான வாய்ப்புகள் ஆகியவற்றால் அவை ஆதரிக்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகள் பெண்களை ஆண் உறவினர்களுக்கான பதிலீடுகளாகவோ அல்லது பலவீனமான தொகுதிகளில் மட்டும் பெண் வேட்பாளர்களை நிறுத்தவும் கூடாது.


இந்த மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள 15 ஆண்டு காலவரையறை விதியும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது பொருத்தமானதே. எந்தவொரு பெரிய ஜனநாயக சீர்திருத்தமும், அது எதைச் சாதிக்கிறது, யாரை உள்ளடக்கியுள்ளது மற்றும் அரசியல் நடைமுறையை எவ்வாறு மாற்றுகிறது என்பதைக் கொண்டே மதிப்பிடப்பட வேண்டும். இருப்பினும், குறைபாடுகள் சீர்திருத்தத்தை நிராகரிப்பதற்கான காரணம் அல்ல. மாறாக, அவை அதனை கவனமாக வடிவமைத்துக் கண்காணிப்பதற்கான ஒரு காரணமாகும்.


கணிசமான எண்ணிக்கையிலான பெண்களால் நாடாளுமன்றத்தின் கலாச்சாரத்தையும், கட்சிகளின் முன்னுரிமைகளையும், வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளையும் மாற்ற முடியும். ஆரம்பத்தில் அவர்களின் குரல்கள் எப்போதும் தெளிவாகக் கேட்கப்படாமல் போகலாம். சில பெண்கள் கட்சி நிலைப்பாடுகள், குடும்ப வலைப்பின்னல்கள் அல்லது நிறுவனப் பழக்கவழக்கங்களால் கட்டுப்படுத்தப்படலாம். ஆனால், அவர்களின் பதவிநிலை இன்னும் முக்கியமானது. காலப்போக்கில், அது சாத்தியமானவற்றின் எல்லைகளை மாற்றியமைக்கக் கூடியது.




தொகுதி மறுவரையறை, கூட்டாட்சி சமநிலை, துணை ஒதுக்கீடுகள், சுழற்சி முறை மற்றும் அமலாக்கம் ஆகியவற்றை நாடு கவனமாக விவாதிக்க வேண்டும். அதேநேரத்தில், பல பத்தாண்டுகளாக உரைகள், வாக்குறுதிகள் மற்றும் நடைமுறைத் தயக்கங்கள் வழியாகப் பெண்கள் காத்திருந்திருக்கிறார்கள் என்பதையும் அது அங்கீகரிக்க வேண்டும். குடியரசின் சமமான இணை-உருவாக்காளர்களாக (equal co-authors) அவர்கள் சட்டமன்றங்களில் நுழையவேண்டிய நேரம் இது. இந்தியாவைப் போன்ற ஒரு நாடாளுமன்றம் ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தாது. அது ஜனநாயகத்தை மேலும் நேர்மையானதாக மாற்றும்.


கட்டுரையாளர் ஒரு இந்திய வெளியுறவு சேவை (IFS) அதிகாரி.


Original Link: India cannot keep treating women’s political exclusion as a technical inconvenience

Share:

அரசுப் பள்ளிகளைவிட முன்னுரிமை பெறும் தனியார் பள்ளிகள்; குறைந்துவரும் மாணவர் சேர்க்கை மற்றும் இடைநிற்றல் விகிதங்கள்: இந்தியாவின் பள்ளிக் கல்வி முறையின் நிலை என்ன? -அபினய ஹரிகோவிந்த்


2014-15 முதல் 2024-25-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டம் குறித்து நிதி ஆயோக் மேற்கொண்ட ஓர் ஆய்வு, பரந்த அளவிலான போக்குகள் மற்றும்  சவால்களை தாண்டி, பள்ளிப் படிப்புச் சுழற்சியிலேயே இடைநிலைக் கல்வியை “மிகவும் பலவீனமான இணைப்பு” (most fragile link) என்று அடையாளப்படுத்தியுள்ளது. இது குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை இங்கே:


கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் பள்ளிக் கல்வி எப்படி இருந்துள்ளது? தனியார் கல்வியை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் மற்றும் 8 ஆம் வகுப்புக்கு மேல் மாணவர்களைத் தக்கவைப்பதில் அதிகரித்து வரும் சவால்கள் என, இந்த மாதம் வெளியிடப்பட்ட இந்தியப் பள்ளிக் கல்வி அமைப்பு குறித்த நிதி ஆயோக்கின் பகுப்பாய்வு, அதன் போக்குகளையும் சவால்களையும் சுட்டிக்காட்டுகிறது.


கல்வி அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வித் தகவல் அமைப்பு (Unified District Information System for Education (UDISE)), தேசிய சாதனை கணக்கெடுப்பு மற்றும் 2017 முதல் 2024 வரை கற்றல் விளைவுகளை அளவிட ஒன்றிய அரசு பயன்படுத்திய பராக் ராஷ்ட்ரிய சர்வேக்ஷன் மற்றும் பிரதம் என்ற தன்னார்வ அமைப்பின் வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கை ஆகியவற்றில் உள்ள தற்போதைய தரவுகளைப் பயன்படுத்தி, 2014-15 முதல் 2024-25 வரையிலான பத்தாண்டு காலத்திற்க்கான  பள்ளிக் கல்வியின் நிலையைப் பற்றிய ஒரு பகுப்பாய்வை நிதி ஆயோக் வழங்கியுள்ளது.





பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் ஒட்டுமொத்த போக்கு எவ்வாறு இருந்துள்ளது?


ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், கடந்த பத்தாண்டுகளில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை  8% குறைந்துள்ளது. 2014-15 ஆம் ஆண்டில் 26.95 கோடியாக இருந்த எண்ணிக்கை, 2024-25-ஆம் ஆண்டில் 24.69 கோடியாகச் சரிந்துள்ளது. இந்தச் சரிவுக்கு மூன்று காரணங்களை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது:  அவை, "மக்கள்தொகையியல் மாற்றங்கள் குறிப்பாகக் குறைந்துவரும் பிறப்பு விகிதங்கள் காரணமாகப் பள்ளி செல்லும் வயதுடைய மக்கள் தொகை அளவு குறைவது, பள்ளிகளை ஒருங்கிணைக்கும் அல்லது இணைக்கும் நடவடிக்கைகளின் விளைவுகள் மற்றும் உயர்கல்வி நிலைகளில் மாணவர்களைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதில் உள்ள சவால்களாகும்.


தனியார் பள்ளிக் கல்வியின் மீதான தேவை அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டும் இந்த பகுப்பாய்வு, 2014-15-ஆம் ஆண்டில் பள்ளிகளில் சேர்ந்த மொத்த மாணவர்களில்  54.3% பேர் அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர் என்றும், இந்த விகிதம் 2024-25-ஆம் ஆண்டில் 49.25%-ஆகக் குறைந்துள்ளது என்றும் குறிப்பிடுகிறது. இதற்கு மாறாக, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 31.7% என்பதிலிருந்து 38.8%-ஆக உயர்ந்துள்ளது. மற்ற மாணவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகள் அல்லது பிற   பள்ளிகளில் பயில்கின்றனர்.


மாணவர் சேர்க்கைப் போக்குகளில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது: இந்த ஆய்வின்படி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 2005-ஆம் ஆண்டில் 71%-ஆக இருந்த நிலையில், 2024-25-ஆம் ஆண்டில் அது 49.24%-ஆகக் சரிந்துள்ளது.


கடந்த பத்தாண்டுகளில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை ஏன் குறைந்துள்ளது?


2014-15 ஆம் ஆண்டில் 11.07 லட்சமாக இருந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை, 2024-25-ஆம் ஆண்டில் 10.13 லட்சமாகச் சரிந்துள்ளது. எண்ணிக்கை 8% குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 2.88 லட்சத்திலிருந்து 3.39 லட்சமாக உயர்ந்து, 18% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு, "பள்ளிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் சீரமைத்தல்" (consolidation and rationalization measures) தொடர்பான நடவடிக்கைகளின் தாக்கமே காரணம் என்று இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. கடந்த சில ஆண்டுகளாகப் பல மாநிலங்களில், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகளை ஒன்றிணைக்கும் வகையில் பள்ளி இணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது போன்ற நடவடிக்கைகள் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அரசியல் விவாதத்தை அதிகரிக்க செய்துள்ளன.


2017-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிதி ஆயோக் திட்டமானது, ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்த பள்ளிகளை ஒன்றிணைத்து மறுசீரமைத்தது. அதன் பின்னர், வளங்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் பள்ளி வளாகங்களை (School Complexes) அமைக்குமாறு 2020-ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரை செய்தது.


கல்விச் சுழற்சியில் மிகவும் ‘பலவீனமான இணைப்புகள்’ யாவை?


இடைநிலைக் கல்வியை ஒரு முக்கிய இடைவெளியாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது: தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலைகளில் 90%-க்கும் அதிகமாக உள்ள மொத்த சேர்க்கை விகிதம் (gross enrollment ratio (GER)), இடைநிலைக் கல்வியில் 78.7%-ஆக உள்ளது. இது, ஒரு குறிப்பிட்ட கல்வி மட்டத்திலுள்ள மொத்த சேர்க்கையை, அந்த அளவிற்கான அதிகாரப்பூர்வ வயதுக் குழு மக்கள்தொகையின் சதவீதமாகக் குறிப்பிடுவதாகும். மேல்நிலைக் கல்வி நிலையில், மொத்த சேர்க்கை விகிதம் குறைந்து 58.4% ஆகிறது. மேலும், பள்ளியில் சேரும் ஒவ்வொரு 10 குழந்தைகளிலும் ஏறக்குறைய நான்கு பேர் மேல்நிலைக் கல்வி வரை படிப்பைத் தொடர்வதில்லை என்றும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.


பள்ளிக்கல்விச் சுழற்சியில் இடைநிலைக் கல்வியை “மிகவும் பலவீனமான இணைப்பு” என நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது. இதில், “பொருளாதாரக் கட்டுப்பாடுகள், சமூகக் காரணிகள் மற்றும் பலவீனமான நிறுவன ஆதரவு ஆகியவை ஒன்றிணைந்து மாணவர்களின் பங்கேற்பைக் கட்டுப்படுத்துகின்றன. கடந்த பத்தாண்டுகளில் இடைநிலைக் கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதம் (GER) 75.68%-இலிருந்து 78.7%-ஆக சிறிய அளவில்  மட்டுமே அதிகரித்துள்ளது.


கல்வி உரிமைச் சட்டமானது, 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உறுதி செய்கிறது என்றும், 8-ஆம் வகுப்பிற்குப் பிறகு கல்வியைத் தொடர்வதற்கான நிதிச்சுமை குடும்பங்களின் மீதே விழுவதால், குறைந்த வருமானம் கொண்ட மற்றும் விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளியிலிருந்து பாதியிலேயே விலகும் நிலை ஏற்படுகிறது என்றும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.


குழந்தைகள் உயர்நிலைப் பள்ளிக்கு முன்னேறுவதைத் தடுக்கும் மற்றொரு காரணியாக இது அமையலாம். மிகச் சில பள்ளிகளே மொத்தம் உள்ள 14.71 லட்சம் பள்ளிகளில் 5% மட்டுமே, 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தொடர்ச்சியான கல்வியை வழங்குகின்றன. 7 லட்சத்திற்கும் அதிகமான தொடக்கப் பள்ளிகள் இருந்தாலும், இடைநிலைப் பள்ளி அளவில் இந்தப் எண்ணிக்கை 1.42 லட்சமாகத் குறைகிறது. 7 லட்சத்திற்கும் அதிகமான தொடக்கப் பள்ளிகள் (Primary Schools) உள்ள நிலையில், மேல்நிலை/இரண்டாம் நிலைப் பள்ளிகளின் (Secondary Schools) எண்ணிக்கைக் குறைந்து 1.42 லட்சம் என்ற அளவில் உள்ளது.


பள்ளிகளுக்கு இடையில் நிலைமாற்றம் செய்வதற்கான எந்தவொரு முறையான இணைப்பும் இல்லாத இந்தத் நிலை, உள்ளூர் வசதிகளைப் பொறுத்து மாணவர்கள் முக்கியக் கட்டங்களில் பள்ளிகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மாணவர்கள் பள்ளியில் தொடர்ந்து கல்வி கற்கும் விகிதம் குறைகிறது. மேலும், உயர் கல்வி நிலைகளுக்கு முன்னேறும் வாய்ப்பும் கட்டுப்படுகிறது  என்று  பகுப்பாய்வு குறிப்பிடுகிறது.


கடந்த பத்தாண்டுகளில் இடைநிற்றல் விகிதங்கள் எவ்வாறு மாறியுள்ளன?


தொடக்கக் கல்வி மட்டத்தில் இடைநிற்றல் விகிதம், 2014-15-ல் 4%-ஆக இருந்ததிலிருந்து 2024-25-ல் 0.3%-ஆகக் குறைந்து, பூஜ்ஜிய நிலைக்கு வந்துள்ளது. உயர் தொடக்க நிலையிலிருந்து இடைநிற்றல் அளவுகள் கவலைக்குரியதாக மாறுகின்றன. உயர் தொடக்க நிலையில், 2024-25-ல் இந்த எண்ணிக்கை 3.5%-ஆக இருந்தது. இது 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 3.77%-க்கு நெருக்கமாக உள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் இடைநிலைக் கல்வி இடைநிற்றல் விகிதம் 17.86%-லிருந்து 11.5%-ஆகக் குறைந்துள்ளது. கல்வியின் இந்த நிலையில் இந்த  விகிதம் அதிகமாக உள்ளது.


பலவீனமான அடிப்படைக் கற்றல், சிறுமிகளுக்கான சமூக அழுத்தங்கள் மற்றும் நிதி நெருக்கடிகள் உள்ளிட்ட தடைகளைச் சுட்டிக்காட்டி, வருகைப்பதிவு, கற்றல் நிலைகள் மற்றும் சமூக-பொருளாதார பாதிப்புகளின் குறிகாட்டிகளைப் பயன்படுத்தி, "ஆபத்தில் உள்ள" மாணவர்களைக் கண்டறிவதற்காக ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வித் தகவல் அமைப்பு (Unified District Information System for Education (UDISE)) பள்ளிப் பதிவேடுகளில் ஒரு "ஆரம்பகால எச்சரிக்கை முறை” (Early Warning System) முறையை" அறிமுகப்படுத்த வேண்டும் என ஆய்வு பரிந்துரைக்கிறது.


2024-25-ஆம் ஆண்டில், 5-ஆம் வகுப்பிலிருந்து 6-ஆம் வகுப்புக்கும், 8-ஆம் வகுப்பிலிருந்து 9-ஆம் வகுப்புக்கும் மற்றும் 10-ஆம் வகுப்பிலிருந்து 11-ஆம் வகுப்புக்கும் இடையிலான மாறுதல் நிலைகளில், மாறுதல் விகிதம் (ஒரு கல்வி நிலையிலிருந்து மற்றொரு கல்வி நிலைக்கு முன்னேறும் மாணவர்களின் விகிதம்) சிறுவர்களைவிட சிறுமிகளிடையே அதிகமாக இருந்தது. எடுத்துக்காட்டாக, இடைநிலையிலிருந்து மேல்நிலைக்கான மாற்ற விகிதம், சிறுவர்களிடையே 72.4 சதவீதமாக இருந்த நிலையில், சிறுமிகளிடையே 77.9 சதவீதமாக இருந்தது.






Share: