இந்தியாவின் நீதிமன்ற அமைப்பில், காலனித்துவ காலத்துக் கட்டடக்கலை ஒரு மறைமுகத் தடையாக இருக்கிறதா? -சித்தார்த் ராவ் எர்ரபெல்லி

மகாராஷ்டிரா, அசாம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் புதிய உயர்நீதிமன்ற வளாகங்களைக் கட்டத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியா ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நீதிமன்றங்களை இடநெருக்கடி மிகுந்த 'நீதித்துறை வளாகங்களின் நெரிசல்நிலையை (Judicial slumisation) தொடர்வதா அல்லது செயல்திறனை மேம்படுத்தும் வகையில் அவற்றை வடிவமைப்பதா?.


அசாம், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் புதிய உயர் நீதிமன்ற வளாகங்களைக் கட்டுவதற்கான திட்டம், வேகமாக மாறிவரும் இந்தியாவிற்கு ஏற்ப நீதிமன்றங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்ய ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. மேலும், நீதிமன்றக் கட்டிடங்களைச் சிறந்த முறையில் வடிவமைப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமைகிறது. இதன் மூலம் வழக்குத் தாமதங்களைக் குறைக்கவும், நீதித்துறை மீதான மக்களின் பார்வையை மேம்படுத்தவும் முடியும் என்கின்றனர்.

இந்தியாவின் நீதிமன்றக் கட்டிடங்கள், அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு தெளிவான அதிகாரப் படிநிலையைக் காட்டும் வகையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்டன. இன்றைய காலக்கட்டத்தைவிட மிகக் குறைவான வழக்குகளே இருந்த காலத்தில் இந்த நீதிமன்றங்கள் கட்டப்பட்டன. உதாரணமாக, 1960-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வெறும் 14 நீதிபதிகளும், 2,656 நிலுவையில் உள்ள வழக்குகளும் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று, 34 நீதிபதிகளும் சுமார் 86,000 நிலுவை வழக்குகளும் உள்ளன. அதேபோல், உயர்நீதிமன்றங்களில் ஒட்டுமொத்தமாக 63 லட்சம் வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் 4.6 கோடிக்கும் அதிகமான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.


இந்த அதிகப்படியான வழக்குகளைக் கையாளுவதற்காக, நீதிமன்றங்கள் எந்தவொரு முறையான திட்டமிடலும் இன்றி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. அறிஞர் பாட்ரிசியா பிராங்கோ இதனை "'நீதித்துறை வளாகங்களின் நெரிசல்நிலை" என்று அழைக்கிறார். இத்தகைய விரிவாக்கத்தால் நீதிமன்றங்கள் நெரிசல் மிகுந்த இடங்களாக மாறுகின்றன. அங்கு வழக்கறிஞர்களும் பார்வையாளர்களும் நீதிமன்ற அறைகளை அடைய நீண்ட, கூட்ட நெரிசலான தாழ்வாரங்கள் வழியாக முண்டியடித்துச் செல்ல வேண்டியுள்ளது. உள்ளே, குறைபாடான ஒலி அமைப்பு காரணமாக நீதிபதிகள் பேசுவதைக் கேட்பது கடினமாக உள்ளது, மேலும் மக்கள் நெரிசலான அறைகளில் சத்தமாகப் பேச வேண்டிய சூழல் நிலவுகிறது. ஒரு நீதிமன்ற வளாகம் சரியான திட்டமிடலுடன் வடிவமைக்கப்பட்டால், அது மக்களுக்கு ஒரு வரவேற்புணர்வையும், தங்கள் தரப்பு நியாயங்கள் கேட்கப்படுகின்றன என்ற நம்பிக்கையையும் தரும் என்றும் இது நீதித்துறை மீதான மக்களின் நம்பகத்தன்மையை மேம்படுத்த உதவும் என்றும் கூறப்படுகிறது.


நீதிமன்றத்தின் கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டால், அது நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் என நீதித்துறையோடு தொடர்புடைய அனைவருக்கும் ஒரு சாதகமான சூழலை உருவாக்கும் என்கின்றனர். இது வழக்குகளை விரைவாக முடிப்பதற்கும் உறுதுணையாக இருக்கும். இந்திய நீதிமன்றங்கள் 'Docket system' என்ற முறையில் இயங்குகின்றன. அதாவது, வழக்குகள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பதில், வரிசை எண்களின் அடிப்படையில் அழைக்கப்படுகின்றன. வழக்கறிஞர்களுக்கு ஒரேநாளில் வெவ்வேறு நீதிமன்றங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கலாம். விசாரணை நேரம் ஒன்றுடன் ஒன்று மாறுபடும்போது, அவர்களால் ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு விரைவாகச் செல்ல முடிவதில்லை. இதனால் நீதிபதிகளின் வேலை பாதிக்கப்பட்டு, சில நேரங்களில் ஒரு வழக்கு பல நாட்களுக்குத் தள்ளிப்போக நேரிடுகிறது. இதன் காரணமாகவே, இளம்வழக்கறிஞர்கள் முதலில் 'Pass-over' (வழக்கைச் சற்று தள்ளிவைக்கக் கோருதல்) கேட்பதற்கும், தங்கள் மூத்த வழக்கறிஞர்கள் மற்ற நீதிமன்றங்களில் வாதாடும்போது அவர்களுக்குப் பதிலாக 'Proxy' (பதிலாள்) முறையில் ஆஜராவதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். ஒரு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதன் மூலம் இந்தச் சிரமங்களைத் தவிர்க்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.


நீதிமன்ற வளாகங்களில் உள்ள தடைகள் நெரிசலான வாகன நிறுத்தத்தில் இருந்தே தொடங்குகின்றன, இது உள்ளே நுழைவதற்கே காலதாமதத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகும் வகையில் அங்குள்ள வசதிகள் பெரும்பாலும் அமைந்திருப்பதில்லை. இடப்பற்றாக்குறையினால் சில முரண்பாடுகளும் ஏற்படுகின்றன. உதாரணமாக, மகப்பேறு நலச் சட்டம் 1961-ன்கீழ் (Maternity Benefit Act, 1961) உயர்நீதிமன்றங்கள் உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றன. ஆனால், அதே சட்டம் வலியுறுத்தும் குழந்தைகள் காப்பகங்கள் பல நீதிமன்ற வளாகங்களில் இல்லை என்பதையும் சுட்டிக்கட்டுகின்றனர்.


1930-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 'நியூ டீல்' (New Deal) திட்டத்திற்குப் பிறகு அமெரிக்கா தனது நீதிமன்றக் கட்டிடங்களை மீண்டும் கட்டியபோதும், 1980-ஆம் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியின் போது ஜப்பான் டோக்கியோ மாவட்ட நீதிமன்றத்தை மறுசீரமைப்பு செய்தபோதும், நீதிமன்ற அறைகளுக்காக குறிபிட்ட வடிவமைப்பு வழிகாட்டுதல்களை உருவாக்கின. இந்தியாவும் வெறும் நீதிபதிகளின் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொள்ளாமல், அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என அனைவரையும் கருத்தில் கொண்டு, காலனித்துவ கால நீதிமன்ற கட்டிட பாணியைத் தாண்டி நீதிமன்ற வளாகங்களை மறுவடிவமைப்பு செய்ய நிபுணர்களைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.


உள்ளூர் சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள தென்னாப்பிரிக்காவின் அரசியலமைப்பு நீதிமன்றம், ஆஸ்திரேலியாவின் உயர்நீதிமன்றம் மற்றும் வடமேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள குனுனுர்ரா நீதிமன்றம் (Kununurra courthouse) ஆகியவற்றை இந்தியா முன்மாதிரியாகக் கொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.


தேசிய வழக்கு மேலாண்மை அமைப்பு (National Case Management System (NCMS)) 2024-ன்படி, நீதிமன்றங்களுக்கு வருபவர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், நீதிமன்ற வளர்ச்சித் திட்டமிடலுக்கான துணைக் குழு, மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களுக்கான மாதிரித் திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. உயர்நீதிமன்றங்களை மறுசீரமைப்பதையும், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்களை உருவாக்குவதையும் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.


அதிகப்படியான பணிச்சுமையால் பாதிக்கபட்டுள்ள உயர்நீதிமன்றங்களைச் சீரமைக்க பல மாநிலங்கள் முன்வரும் நிலையில், இதற்கான சரியான வழிகாட்டுதல்கள் இல்லையென்றால், அந்த நீதிமன்றக் கட்டிடங்கள் தவறான வடிவமைப்பில் கட்டப்பட வாய்ப்புள்ளது. இது ஏற்கனவே உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பதிலாக, புதிய சிக்கல்களையே உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.


சித்தார்த் ராவ் எர்ரபெல்லி, அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் கௌரவ ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் நீதிமன்றங்களின் கட்டிட அமைப்புக்கும், நீதித்துறையின் செயல்பாட்டுத் திறனுக்கும் இடையிலானத் தொடர்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார்.


Original Link: Is colonial architecture the hidden bottleneck in India’s legal system?


Share:

இந்திய தடகள வீரர்களின் விளம்பர ஒப்பந்தங்கள் குறித்த 'பாதுகாப்பு' நோக்கமுள்ள சுற்றறிக்கை ஏன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது? -அமால் ஷேக்

தடகள வீரர்கள் எந்தவொரு விளம்பர ஒப்பந்தம் அல்லது மூன்றாம் தரப்பினருடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாக, இந்திய தடகள கூட்டமைப்பிடம் (Athletics Federation of India (AFI)) முன் அனுமதி பெற வேண்டும் என்று இந்த ஆணை உத்தரவிடுகிறது.


இந்த மாத தொடக்கத்தில், இந்திய தடகள கூட்டமைப்பு (AFI) தனது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அனைத்து தடகள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் வணிக நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. தற்காலிகச் செயலாளர் ஜி. ஸ்ரீநிவாஸ் பட்நாயக் வெளியிட்டுள்ள இந்த உத்தரவின்படி, தடகள வீரர்கள் எந்தவொரு விளம்பர ஒப்பந்தம் அல்லது மூன்றாவது தரப்பினருடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாக, இந்திய தடகள கூட்டமைப்பிடம் இருந்து முன் அனுமதி பெறுவது அவசியம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது


தடகள வீரர் இந்த அனுமதியைப் பெற்றுவிட்டார் என்பதை விளம்பர ஒப்பந்ததாரர்கள், இந்திய தடகள கூட்டமைப்பிற்கு (AFI) தெரிவிக்க வேண்டும். அதன்பிறகு, அந்த கோரிக்கையை கூட்டமைப்பு மூன்று நாட்களுக்குள் உறுதிப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.


தடகள வீரர்களும் பயிற்சியாளர்களும் அடிக்கடி தங்களது விளம்பர ஒப்பந்ததாரர்களை மாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய இந்திய தடகள கூட்டமைப்பு (AFI), இந்த விதிமுறை சம்பந்தப்பட்ட அனைவரையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது என்று கூறியுள்ளது. மேலும், இந்த நடவடிக்கை தடகள வீரர்கள் மற்றும் விளம்பர ஒப்பந்ததாரர்கள் ஆகிய இருதரப்பினரின் நலன்களையும் உறுதி செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.



'X' தளத்தில் எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த இந்திய தடகள கூட்டமைப்பு (AFI), இந்தச் சுற்றறிக்கை "வீரர்களுக்கு முதலிடம்" அளிப்பதற்கும் மற்றும் "ஒப்பந்தங்களில் தெளிவை" உறுதி செய்வதற்கும் கொண்டு வரப்பட்டது என்று கூறியுள்ளது. மேலும், விளையாட்டு வீரர்களுக்கு எதிர்காலத்தில் சட்டரீதியான சிக்கல்கள் ஏற்படமால் பாதுகாப்பதற்காக, ஒப்பந்தங்களைச் சட்டவல்லுநர்கள் குழு ஆய்வு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சை குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


இதற்கு முந்தைய நடைமுறை என்ன?


இந்திய வீரர்களைப் பொறுத்தவரை, விளம்பர ஒப்பந்தங்கள் பெரும்பாலும் தனிப்பட்ட முறையிலேயே கையாளப்பட்டு வருகின்றன. கௌரவ் சக்சேனா விளக்கியது போல, வீரர்கள் பொதுவாகத் தாங்களாகவே அல்லது முகவர்கள் மூலமாக விளம்பர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். போட்டிகளின்போது தேசிய சீருடைகளை அணிவது அல்லது விளையாட்டு கூட்டமைப்பின் விளம்பர ஒப்பந்ததாரர்களுடன் மோதல் போக்கு இல்லாதவாறு பார்த்துக்கொள்வது போன்ற மிகக்குறைவான கட்டுப்பாடுகள் மட்டுமே அவர்களுக்கு இருந்தன. ஒட்டுமொத்தமாக, தங்கள் விளம்பர ஒப்பந்தம் சார்ந்த முடிவுகளை எடுப்பதில் வீரர்களுக்கே முழு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

தற்போது நடைமுறையில் உள்ள ஒரு சில கட்டுப்பாடுகள் மிகக் குறைவானவை என்றும் அவை இந்திய தடகள கூட்டமைப்பால் (AFI) விதிக்கப்பட்டவை அல்ல என்றும் கூறப்படுகிறது. சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்கான ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதன்படி, ஒலிம்பிக் போன்ற முக்கியப் போட்டிகள் நடக்கும் காலங்களில் வீரர்கள் தனிப்பட்ட விளம்பர ஒப்பந்தங்களில் ஈடுபட அனுமதி இல்லை. மேலும், அதிகாரப்பூர்வ விளம்பர ஒப்பந்தங்களைப் பாதுகாப்பதற்காக, போட்டிகள் தொடங்குவதற்குச் சில நாட்களுக்கு முன்னிருந்தே இது போன்ற விளம்பரக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.



விளையாட்டுத்துறை வழக்கறிஞர் அபினவ் ஸ்ரீவஸ்தவா இது குறித்துக் கூறுகையில், அதிகபட்சமாக, ஒரு போட்டியில் பங்கேற்பதற்கான ஒப்பந்தங்கள், போட்டிகள் நடக்கும் காலக்கட்டத்தில் மட்டும் தனிப்பட்ட விளம்பர ஒப்பந்ததாரர்கள் தங்களது உரிமைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கலாம். இருப்பினும், தனிப்பட்ட விளம்பர ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு இந்திய தடகள கூட்டமைப்பின் (AFI) அனுமதி கண்டிப்பாகத் தேவை என்று கூறும் விரிவான விதிகள் எதுவும் தற்போது இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.


இந்தச் சுற்றறிக்கை முந்தைய நடைமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. இது விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் பங்கேற்கும் காலத்தை மட்டும் கட்டுப்படுத்தாமல், அவர்களின் அன்றாட வணிகச் செயல்பாடுகள் வரை கட்டுப்பாட்டை விரிவுபடுத்துகிறது. இதனால் வீரர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் அந்தந்த விளையாட்டு கூட்டமைப்பின் ஒப்புதல் பெறுவது அவசியமாகிறது. முன்பு தற்காலிகக் கட்டுப்பாடாக இருந்த ஒரு விஷயம், இப்போது நிரந்தரக் கண்காணிப்பாக மாற்றப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கை விளையாட்டு வீரர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டது என்று இந்திய தடகள கூட்டமைப்பு (AFI) கூறுகிறது. விளையாட்டு வீரர்கள் அடிக்கடி தங்கள் விளம்பரம் ஒப்பந்தகளை மாற்றுவதாலும், தங்களுக்குச் சாதகமற்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவதாக சாக்ஸேனா குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இது விளையாட்டு வீரர்களைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாகவே முன்வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த நடைமுறை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பாக வீரர்கள், அவர்களது முகவர்கள் அல்லது பிரதிநிதிகளுடன் முன்கூட்டியே ஆலோசனை நடத்தியதற்கான எந்தவொரு பொது ஆதாரமும் இல்லை என்றும், இந்தச் சுற்றறிக்கை ஒருதலைப்பட்சமாக வெளியிடப்பட்டதாகத் தெரிவதாகவும் கூறினார்.


இந்திய தடகள கூட்டமைப்பின் அதிகாரமும் அதன் வரம்புகளும்


இந்தச் சுற்றறிக்கை மீதான விமர்சனம் ஒரு முக்கியமான சட்டக் கேள்வியை முன்வைக்கிறது. ஒரு விளையாட்டு கூட்டமைப்பால் தனியார் ஒப்பந்தங்களைக் கட்டுப்படுத்த முடியுமா?. இந்தச் சுற்றறிக்கைக்கு எந்தவிதமான சட்டப்பூர்வமான அல்லது விதிமுறை சார்ந்த ஆதரவும் இல்லை என்றும் இதற்கு சட்டரீதியான அடிப்படை எதுவும் கிடையாது என்றும் வழக்கறிஞர் ஷிவம் சிங் தெரிவித்துள்ளார்.


இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ ஆதரவு இல்லாதது மிக முக்கியமானது. ஏனென்றால், இந்திய தடகள கூட்டமைப்பு (AFI) ஒரு சட்டரீதியான ஒழுங்குமுறை அமைப்பு அல்ல என்றும் உலக தடகள அமைப்பால் (World Athletics) இந்தியாவின் தேசிய கூட்டமைப்பாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதன் மூலம் மட்டுமே இதற்கு அதிகாரம் கிடைக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதற்குமேல் இதற்கு அதிகாரங்கள் இல்லை என்றும் கூறிய சிங், இது விளையாட்டை நிர்வகிக்கும் ஒரு தனியார் அமைப்புதானே தவிர, தடகள வீரர்களின் ஒப்பந்தங்களை கட்டுப்படுத்தும் அமைப்பு அல்ல என்றும் விளக்கினார்.


இந்தக் கருத்துகளைச் சட்டரீதியாக எதிர்த்தால், இந்த வழக்கின் முடிவு ஒரு முக்கியமான வேறுபாட்டைப் பொறுத்தே அமையும் என்கின்றனர். இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872-ன் பிரிவு-27 (Section 27 of the Indian Contract Act, 1872), சட்டபூர்வமான வர்த்தகத்தைத் தடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் ஒப்பந்தங்கள் செல்லாது என்று கூறுகிறது. இந்திய தடகள கூட்டமைப்பு (AFI) வெளியிட்டுள்ள இந்தச் சுற்றறிக்கை, தடகள வீரர்களும் விளம்பர ஒப்பந்ததாரர்களும் தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தும் சுதந்திரத்தில் தலையிடுகிறது என்றும், இது வர்த்தகத்தைத் தடுக்கும் ஒரு செயல் என்றும் சிங் வாதிடுகிறார்.


இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19(1)(g), நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தான் விரும்பும் எந்தவொரு தொழிலைச் செய்யவும் அல்லது வணிகம் மற்றும் வியாபாரத்தை மேற்கொள்ளவும் உரிமையை வழங்குகிறது. இருப்பினும், பிரிவு 19(2)-ன்படி, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அண்டை நாடுகளுடனான நட்புறவு மற்றும் பொது அமைதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அல்லது குற்றங்களைத் தடுக்க, இந்த உரிமையின்மீது சில "நியாயமான கட்டுப்பாடுகளை" விதிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளதாகக் கூறப்படுகிறது.


நிபுணர்களின் கருத்துப்படி, இந்திய தடகள கூட்டமைப்பு (AFI) கொண்டு வந்துள்ள இந்த சுற்றறிக்கையை சட்டரீதியாக நியாயப்படுத்துவது கடினமாக இருக்கலாம். ஒரு தடகள வீரர் விளம்பர ஒப்பந்தங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் எந்தவொரு கட்டுப்பாடும் நியாயமானதாகவும், சரியான அளவிலும் இருக்க வேண்டும். ஆனால், அனைத்தையும் ஒட்டுமொத்தமாகத் தடைசெய்யும் இந்த விதிமுறை, அந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிடும் என்று கருதப்படுகிறது.


விளையாட்டு வீரர்கள் தங்களுடைய தனிப்பட்ட அடையாளத்தையும் உருவத்தையும் பயன்படுத்துவது, தங்கள் விளையாட்டின் மூலம் வாழ்வாதாரத்தைப் பெறுவதற்கான அவர்களின் உரிமையாகும் என்று ஸ்ரீவஸ்தவா விளக்குகிறார். ஒவ்வொரு முறையும் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டாயம் இந்த அடிப்படை உரிமையோடு முரண்படுகிறது. மேலும், ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் இந்தியத் தடகள கூட்டமைப்பின் (AFI) ஒப்புதல் தேவைப்படும்போது, விளம்பரதாரர்கள் நீண்டகால முதலீடு செய்யத் தயங்கலாம் என்றும் இது வீரர்கள் ஒரு வலுவான வர்த்தகக் குறியீட்டை (Brand ) உருவாக்குவதைக் கட்டுப்படுத்துகிறது.


விளையாட்டு கூட்டமைப்புகள் பொதுப்பணி அமைப்புகளாகவே நீதிமன்றங்களால் கருதப்படுகின்றன. எனவே, அவற்றின் முடிவுகள் தன்னிச்சையானவையா அல்லது அதிகார வரம்பை மீறியவையா என்பதை அறிய, அவை அரசியலமைப்பு சட்டக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.





இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?


இந்த விதியின் உடனடித் தாக்கங்கள் ஒருவருக்கொருவர் மாறுபடலாம், ஆனால் ஒட்டுமொத்தக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஏற்கனவே புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரை, இந்த ஒப்புதல் நடைமுறைகளால் ஒப்பந்தப் பேச்சுகள் சற்று தாமதமாகலாம் என்றும் தெரிவிக்கின்றனர். ஆனால், விளிம்பு நிலையில் இருக்கும் அல்லது வாய்ப்புக்காகப் போராடும் வீரர்களுக்கு, ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகுமா இல்லையா என்பதையே இந்த விதிதான் தீர்மானிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.


கோட்பாட்டளவில், இது ஆரம்பக்கட்ட வணிக ரீதியான ஆதரவைக் குறைக்கக்கூடும் என்று சக்சேனா கூறினார். சிறிய விளம்பர ஒப்பந்தங்களை நம்பியிருக்கும் வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களைக் குறிப்பிட்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வளர்ந்துவரும் தடகள வீரர்கள் இந்த விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியக்கூடும் அல்லது இந்திய தடகள கூட்டமைப்பை (AFI) எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை வீரர்கள் முன்வராவிட்டாலும், அவர்களுக்குப் பின்னால் இருக்கும் வசதிப்படைத்த விளம்பர ஒப்பந்ததாரர்கள் இதை எதிர்த்து வழக்கு தொடர வாய்ப்புள்ளதாகவும் சிங் தெரிவித்துள்ளார்.


இதன் முக்கிய விமர்சனம் என்னவென்றால், முறையான கட்டுப்பாடுகள் இல்லாத வெற்று ஆதிக்கம் தான் என்கின்றனர். ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டதுபோல, மோதல்களைக் கையாள அல்லது வழிகாட்ட ஒரு வரையறுக்கப்பட்ட அமைப்பை உருவாக்குவது நியாயமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், எல்லாவற்றிற்கும் முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும் என்ற பொதுவான நடைமுறை, அதிகாரச் சமநிலையை முற்றிலுமாக மாற்றிவிடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.



Original Link: Why a ‘protective’ circular on Indian athletes’ sponsorship agreements has attracted scrutiny.


Share:

சுற்றுச்சூழல் தணிக்கைகளை முன்னின்று நடத்தும் தேசிய உற்பத்தித் திறன் குழு: EADA என்றால் என்ன? அது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? - ரோஷ்னி யாதவ்

தேசிய உற்பத்தித் திறன் குழு (National Productivity Council (NPC)) ஒரு சுற்றுச்சூழல் தணிக்கை முகமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? இதன் பணி மற்றும் செயல்பாடுகள் என்ன ?


தற்போதைய செய்தி :


தேசிய உற்பத்தித் திறன் குழு (NPC), 2025-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தணிக்கை விதிகளின் கீழ், சுற்றுச்சூழல் தணிக்கைக்காக நியமிக்கப்பட்ட முகமையாகச் செயல்படுவதற்காக, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்துடன் (Ministry of Environment, Forest and Climate Change (MoEF&CC)) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. எனவே, தேசிய உற்பத்தித் திறன் குழு பற்றி விரிவாக அறிந்துகொள்வதும், சுற்றுச்சூழல் தணிக்கைக்கான நியமிக்கப்பட்ட முகமையாக (Designated Agency for Environmental Audit (EADA)) அதன் செயல்பாடுகள் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதும் முக்கியமானதாகிறது.



முக்கிய அம்சங்கள்:


1. 1958-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தேசிய உற்பத்தித் திறன் குழு, இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.


2. தேசிய உற்பத்தித் திறன் குழு (NPC) என்பது டோக்கியோவைத் தலைமையிடமாகக் கொண்ட ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (Asian Productivity Organisation (APO)) ஒரு துணை அமைப்பகும். இந்த அமைபு இந்திய அரசாங்கம் நிறுவன உறுப்பினராக உள்ள ஒரு அரசு அமைப்பாகும்.


3. உற்பத்தித்திறன் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதுடன், தேசிய உற்பத்தித் திறன் குழுவானது அரசு மற்றும் பொது, தனியார் துறை நிறுவனங்களுக்குத் தொழிற்பொறியியல், வேளாண் வணிகம், பொருளாதார சேவைகள், தர மேலாண்மை, மனிதவள மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்ப மேலாண்மை, ஆற்றல் மேலாண்மை, சுற்றுச்சூழல் மேலாண்மை போன்ற துறைகளில் ஆலோசனை மற்றும் பயிற்சி சேவைகளை வழங்கி வருகிறது.


சுற்றுச்சூழல் தணிக்கைக்காக நியமிக்கப்பட்ட முகமையாக தேசிய உற்பத்தித் திறன் குழு


1. தேசிய உற்பத்தித் திறன் குழு மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம், தகுதியான  அளவுகோல்களை உருவாக்குதல், சான்றிதழுக்கான தேர்வுகளை நடத்துதல், தணிக்கையாளர்களைப் பதிவு செய்தல், அவர்களின் செயல்திறனைக் கண்காணித்தல் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட சுற்றுச்சூழல் தணிக்கைக் கட்டமைப்பின் ஒட்டுமொத்த நிர்வாகப் பொறுப்பை தேசிய உற்பத்தித் திறன் குழுவிடம் ஒப்படைக்கிறது.


2. சுற்றுச்சூழல் தணிக்கைக் கட்டமைப்பு என்பது, 1986-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம்; 1974-ஆம் ஆண்டின் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம்; 1981-ஆம் ஆண்டின் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம்; வனப் பாதுகாப்புச் சட்டம்; 1972-ஆம் ஆண்டின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம்; மற்றும் அவற்றின்கீழ் இடம்பெற்றிருக்கும் விதிகள் உள்ளிட்ட முக்கிய சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு  ஏற்ப  வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய கருவியாகும்.


3. மேலும், தகுதிவாய்ந்த அதிகாரிகளால் வழங்கப்படும் சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance (EC)), நிறுவுவதற்கான ஒப்புதல் (Consent to Establish (CTE)) மற்றும் செயல்படுவதற்கான அனுமதி (Consent to Operate (CTO)) போன்ற கட்டுப்பாட்டு அனுமதிகளைப் பெறுவதிலும் விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கும் இது உதவும்.


நிறுவுவதற்கான அனுமதி (CTE) மற்றும் செயல்படுவதற்கான அனுமதி  (CTO)


நீர் மற்றும் காற்றுச் சட்டங்களின்கீழ், நிறுவுவதற்கான அனுமதி மற்றும் செயல்படுவதற்கான அனுமதி ஆகியவை கட்டாயமான சுற்றுச்சூழல் அனுமதிகள் ஆகும். ஒரு புதிய திட்டத்தை அமைப்பதற்கு அல்லது ஏற்கனவே உள்ள திட்டத்தில் மாற்றங்களை செயல்படுத்துவதற்கு முன்பு, செயல்படுவதற்கான அனுமதி (CTE) தேவைப்படுகிறது. செயல்படுவதற்கான அனுமதி ஆனது கட்டுமானம் மற்றும் நிறுவல் பணிகள் நிறைவடைந்த பின்னரும், உற்பத்தி தொடங்குவதற்கு முன்னரும் பெறப்படுகிறது.


4. இந்த முயற்சி சுற்றுச்சூழல் விதிமுறை பின்பற்றுதலை வலுப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை (transparency) அதிகரிக்கவும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான சுற்றுச்சூழல் தணிக்கை நடைமுறைகளை உருவாக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


5. சுற்றுச்சூழல் தணிக்கைக்கான நியமிக்கப்பட்ட முகமை (Designated Agency for Environmental Audit (EADA)) என்ற வகையில், தேசிய உற்பத்தித் திறன் குழு (NPC)) ஆனது சான்றளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தணிக்கையாளர்கள் (CEA) மற்றும் பதிவுசெய்யப்பட்ட சுற்றுச்சூழல் தணிக்கையாளர்கள் (Registered Environmental Auditors (REA)) ஆகியோரின் சான்றளிப்பு, பதிவு மற்றும் சுற்றுச்சூழல் தணிக்கை செயல்முறைகளுக்கான டிஜிட்டல் அமைப்புகளின் மேம்பாடு மற்றும் மேலாண்மை உள்ளிட்ட முக்கியப் பணிகளை மேற்கொள்ளும்.


6. பயிற்சித் திட்டங்கள், பயிற்சிப் பட்டறைகள் (workshops), விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் திறன் மேம்பாட்டை (capacity building) ஏற்படுத்தி, தணிக்கை முறையை சிறப்பாக செயல்படுத்த உதவும்.


7. சுற்றுச்சூழல் தணிக்கைக்கான நியமிக்கப்பட்ட முகமையின் பணிகள் மற்றும் பொறுப்புகளில் பின்வருவன அடங்கும்: அவை,


சான்றளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தணிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச தகுதி  அளவுகோளை நிர்ணயித்தல்;


பரிசீலனை வழிமுறைகளை உருவாக்குதல்,


  சுற்றுச்சூழல் தணிக்கையாளர்களுக்குச் சான்றளித்தல்,




பதிவுசெய்யப்பட்ட சுற்றுச்சூழல் தணிக்கையாளர்களின் செயல்திறனைக் கண்காணித்து, தேவையான வழிகாட்டுதல்களை வழங்குதல்,


திறன் மேம்பாட்டிற்கு உதவுதல்,


தணிக்கையாளர்களின் பணிகளை  நிர்வகித்தல் மற்றும்


சான்றளிக்கப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்பட்ட அனைத்து சுற்றுச்சூழல் தணிக்கையாளர்களின், பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய இணையவழிப் பதிவேட்டைப் பராமரித்தல் ஆகும்.


8. புதுடெல்லியில் உள்ள தலைமையகத்துடன் இணைந்து, இந்தியா முழுவதும் 13 அலுவலகங்களின் மூலம் செயல்படும் தேசிய உற்பத்தித் திறன் குழு, 2025-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தணிக்கை விதிகளுக்கு (Environment Audit Rules, 2025)  ஏற்ப  சுற்றுச்சூழல் தணிக்கைக்கான நியமிக்கப்பட்ட முகமையாக (Designated Agency for Environmental Audit (EADA)) ஆகச் செயல்படும்.


நீர் தணிக்கை (Water Audit)

நீர் தணிக்கை (Water Audit) என்பது ஒரு நிறுவனம் பயன்படுத்தும் நீரின் பயன்பாட்டை ஆய்வு செய்வதாகும். இது, நீர் வளாகத்திற்குள் வரும் இடத்திலிருந்து கழிவுநீர் வெளியேறும் வரை அனைத்து பயன்பாடுகளையும் முழுமையாக பரிசோதிக்கிறது. இந்த ஆய்வின் மூலம் பயன்படுத்தப்படும் நீரின் அளவு, வீணாகும் நீர், அதில் ஏற்படும் கசிவுகள், அதிகமான பயன்பாடு போன்றவை கண்டறியப்படுகின்றன. மேலும், நீர் பயன்பாட்டை எங்கு எவ்வாறு குறைக்கலாம் என்பதையும் இது அடையாளம் காண உதவுகிறது.


இந்திய தர ஆணையம்


1. இந்தியத் தர ஆணையம் (Quality Council of India (QCI)) என்பது, 1860-ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் (Societies Registration Act) சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற சங்கமாக 1996-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.


2. இது அங்கீகாரம் மற்றும் தர மேம்பாட்டிற்கான இந்தியாவின் தேசிய அமைப்பாகும். இது பல்வேறு துறைகளில் நம்பிக்கை, நம்பகத்தன்மை மற்றும் தரநிலைகளை வலுப்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் மற்றும் இந்தியாவின் உலகளாவிய போட்டித்திறனை அதிகரிக்கும் அமைப்புகளை உருவாக்க உதவகிறது.


3. இந்திய தர ஆணையம், இந்திய அரசாங்கத்திற்கும் இந்தியாவின் முன்னணி தொழில் சங்கங்களுக்கும் இடையேயான ஒரு  முக்கிய  பொது-தனியார் கூட்டாண்மை மூலம், ஒரு தன்னாட்சி பெற்ற, இலாப நோக்கற்ற அமைப்பாகச் செயல்படுகிறது.


4. அரசாங்கம், உயர்மட்டத் தொழில் சங்கங்கள், தர நிபுணத்துவ அமைப்புகள், உற்பத்தித் துறை  மற்றும் சேவைத் துறை சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 38 உறுப்பினர்களைக் கொண்ட மன்றத்தால் அனைத்து இராஜதந்திர முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. இதற்குத் தலைவர் தலைமை தாங்குகிறார்.


5. குறிப்பாக, இந்திய தர ஆணையம், அமைச்சகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிலைத்தன்மை சான்றிதழ் திட்டத்தின்கீழ் உள்ள குறைபாடற்ற விளைவு பூஜ்ஜியம் (Zero Defect Zero Effectn (ZED)) சான்றிதழ் திட்டம் போன்ற முன்னெடுப்புகள் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தேவையான ஆதரவை  வழங்குகிறது.


Original Link: National Productivity Council to lead environmental audits: What is EADA and why it matters.

Share:

நீதிபதிகளின் பதவி நீக்கம் தொடர்பான அரசியலமைப்பு விதிகள் யாவை? - குஷ்பூ குமாரி

முக்கிய அம்சங்கள்:


 குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் வாயிலாக, நீதிபதி வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் — 'நீதிபதிகள் விசாரணைச் (Judges Inquiry Act) சட்டம், 1968'-ன் கீழ் மக்களவை அமைத்திருந்த விசாரணைக் குழுவின் விசாரணையும் முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம், ஒரு அரசியலமைப்பு நீதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடிய, நாட்டின் முதலாவது பதவி நீக்க நடவடிக்கை தவிர்க்கப்பட்டுள்ளது.


பதவியை ராஜினாமா செய்யும் ஒரு நீதிபதி, வழக்கமான பணி ஓய்வுபெறும் நீதிபதிக்குக் கிடைக்கும் அதே ஓய்வூதியப் பலன்களைப் பெறத் தகுதியுடையவர் ஆவார். நீதிபதி வர்மா 2031-ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெறவிருந்தார்.

நீதிபதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள், இதுவரை முன்னுதாரணமற்ற ஒரு புதிய பாதையை நோக்கி நகர்கின்றன. ஒரு பதவி நீக்கத் தீர்மானத்தைத் தவிர்ப்பதற்கான ஒரு நடவடிக்கையாகவே நீதிபதியின் ராஜினாமா அமைந்துள்ளது என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஒரு நீதிபதி தனது பதவியை ராஜினாமா செய்யத் தீர்மானிப்பது இது முதல் முறையல்ல. 2011-ஆம் ஆண்டில், சிக்கிம் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.டி.தினகரன், தனக்கு எதிரான புகார்களை விசாரித்த மூன்று பேர் கொண்ட குழுவின் மீது தனக்கு "நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கை இல்லை" என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.


இருப்பினும், பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்படும் அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தாலும், அரசாங்கம் பிற சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஆனால், அதற்கு நீதித்துறையின் ஒப்புதல் தேவைப்படலாம். ஒரு நீதிபதி பதவியில் இருந்த காலத்தில் செய்த செயல்கள் தொடர்பான குற்றத்தை எந்த நீதிமன்றமும் விசாரிக்க முன்வர வேண்டுமெனில், தலைமை நீதிபதி வழக்குத் தொடர அனுமதி (sanction) வழங்க வேண்டும்.


உங்களுக்குத் தெரியுமா?


உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறை, இந்திய அரசியலமைப்பின் 124(4)-வது பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே விதிமுறைகளே உயர்நீதிமன்ற நீதிபதிக்கும் பொருந்தும் என்று அரசியலமைப்பின் 218-வது பிரிவு கூறுகிறது. ஒரு நீதிபதியை நாடாளுமன்றத்தின்  மூலமாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனில், அரசியலமைப்பின் 124(4)-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட நடைமுறையின்படி, "நிரூபிக்கப்பட்ட முறைகேடு" (proved misbehaviour) மற்றும் "திறமையின்மை" (incapacity) ஆகிய இரண்டு காரணங்களின் அடிப்படையில் மட்டுமே   செய்ய முடியும்.


உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தில் பணியில் உள்ள ஒரு   நீதிபதியை, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் "அவைக்கு வருகை தந்து வாக்களித்தவர்களில்" குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அந்தப் பதவிநீக்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும்போது, அந்தப்பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறார். பதவி நீக்கத்திற்கு ஆதரவாகப் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை, இரண்டு அவைகளின் "மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில்" 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும். நாடாளுமன்றம் இது போன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வதற்கான ஆணையை குடியரசுத் தலைவர் பிறப்பிப்பார்.



Original Link: What are the constitutional provisions related to the impeachment of the judges?

Share:

தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் ஒரு வியூகம். -பி சிதம்பரம்

அரசின் நோக்கம் நேர்மையானதோ அல்லது உண்மையானதோ கிடையாது என்றும் மக்களவையில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, பாரதிய ஜனதா கட்சி (BJP) பெண்கள் இடஒதுக்கீடு விவகாரத்தை தேர்தல் நேரத்தில் மக்களிடம் கொண்டு செல்லும் என்றும் இந்த மசோதாவை பாஜக நிறைவேற்றினால், பெண்களுக்கான இடஒதுக்கீடு இடங்களின் எண்ணிக்கை 182-லிருந்து 272-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு பெருமிதத்துடன் உரிமை கோரும். 


நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நிதிநிலை கூட்டத்தொடரின் நிதி சார்ந்த பணிகளை முடித்த பிறகு, ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி, 2026 -ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்டன. அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருந்ததால், மக்களவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்குத் திரும்பிப் பிரச்சாரம் செய்ய ஒரு வாரம் மட்டுமே அவகாசம் இருந்தது. எனவே, அவையை ஒத்திவைக்க இதுவே சரியான நேரமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கல் மார்ச் மாதம் 30-ஆம் தேதியன்று தொடங்கிவிட்டதாலும், ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதியன்று வாக்குப்பதிவு (மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 29) நடைபெறவிருந்ததாலும், மக்களவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்குச் செல்ல ஆர்வமாக இருந்தனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஏப்ரல்மாத இறுதி வரை அவசரமாகக் கையாள வேண்டிய பணிகள் ஏதுமில்லை என்றே பரவலாகக் கருதப்பட்டது.


சிறப்புத் தீவிர திருத்தப் பணியால் ஏற்பட்ட  இடையூறு


அவசரமான காரியம் என்று எதுவுமே இல்லை. நடந்து கொண்டிருக்கும் தேர்தல்களை மேலும் எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் சுமுகமாக முடிப்பதே ஒரே பணியாகும். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்  (Special Intensive Revision (SIR)) என்பது தற்செயலாக நடந்த விபத்து அல்ல, அது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயலாகும். கோடிக்கணக்கான குடிமக்களின் வாக்குரிமையைப் பறிப்பதே இதன் நோக்கம் என்றம் விமர்சிக்கப்படுகிறது.


ஒரு சில பொறுப்பற்ற அரசியல் பேச்சுகளைத் தவிர, தேர்தல் செயல்முறை சீராகவே நடந்து கொண்டிருந்தது. மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளபடும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கை தொடர்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த சசிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையால் பாதிப்புள்ள மாநிலங்களில், சராசரியாக 10% மக்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, தங்கள் வாக்குரிமையை இழந்துள்ளனர் என்ற தகவலை எவருமே நீதிமன்றத்திற்கு தெரிவிக்காதது வருத்தத்திற்குறியது. இத்தகைய பாதிப்புக்குள்ளான மாநிலங்கள் கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை ஆகும்.


இது யாருடைய திட்டம்?


பாஜக (BJP) தலைமையிலான மேலிடத் தலைவர்கள், தமிழ்நாடு (234 இடங்கள்) மற்றும் மேற்குவங்கம் (294 இடங்கள்) போன்ற பெரிய மாநிலங்களின் தேர்தலுக்கு முன்னதாக ஏதேனும் ஒரு சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்று நினைத்ததாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரிடம், 106-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவது குறித்து மல்லிகார்ஜுன கார்கேவிடம் பேசுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்தச் சட்டத்திருத்தம் செப்டம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டிலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், கடந்த 30 மாதங்களாக இதைச் செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டிய ஒன்றிய அரசு, இப்போது திடீரென இதில் வேகம் காட்டுகிறது. இது தொடர்பாக அமைச்சருக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடிதப் பரிமாற்றங்கள் நடந்தன. ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதிக்குப் பிறகு இது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தலாம் என்று கார்கே பரிந்துரைத்தார். ஆனால், மார்ச் மாதம் 26-ஆம் தேதியிட்ட தனது கடிதத்தில் அமைச்சர், "இவ்வளவு தாமதம் ஏற்பட்டால் அது மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதைத் தள்ளிப்போடும், மேலும், 2029-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பாக இதைச் செயல்படுத்துவதைப் பாதிக்கும்" என்று கூறினார். ஆனால், ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதிக்கும் ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதிக்கும் இடையிலான மிகச்சிறிய இடைவெளி பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால், அமைச்சரின் இந்த வாதத்தில் அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை.


பெண்கள் இடஒதுக்கீட்டை இவ்வளவு அவசரமாகச் செயல்படுத்த வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) திடீரென எப்போது ஆர்வம் வந்தது? நிச்சயமாக, செப்டம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோது அந்த ஆர்வம் இல்லை. ஏனெனில், 2029-ஆம் ஆண்டுக்கு முன்பாக இதனைச் செயல்படுத்தவே முடியாத வகையில்தான் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்து, அதன் தரவுகள் வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பின்னரே இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்று சட்டப்பிரிவு-334A தெளிவாகக் குறிப்பிடுகிறது.


இந்த மசோதாவில் "பிறகு" (after) என்ற வார்த்தை ஏன் மூன்று முறை பயன்படுத்தப்பட்டது, அதற்கான காரணம் என்ன? இந்தக் கேள்வி ஏற்கனவே எழுப்பப்பட்டது (செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதி, 2023-ஆம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான "Reservation when? After, after, after (இடஒதுக்கீடு எப்போது? பிறகு, பிறகு, பிறகு)" என்ற கட்டுரையில்). இந்தச் சட்டம் எப்படி, எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்று கேள்விகள் கேட்கப்பட்ட போதிலும், அரசாங்கம் அதற்குப் பதிலளிக்கவில்லை. அரசியலமைப்பின் 334A (Article 334A) பிரிவில் கூறப்பட்டுள்ள நடைமுறைகள் மற்றும் கடந்தகால மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு எடுத்துக்கொண்ட கால அவகாசத்தை (சுமார் ஆறு ஆண்டுகள்) வைத்துப் பார்க்கும்போது, 106-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் (106th Amendment Bill) மிகவும் மெதுவாகச் செயல்படுத்தும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.


வெற்றி அல்லது தோல்வி


திடீரென்று, ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தைக் கூட்ட அரசு அவசரம் காட்டுகிறது. மக்களவை இடங்களை 543-லிருந்து 816-ஆக உயர்த்தவும், அதில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும் ஒரு மசோதாவைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரும் இந்தத் திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இத்தகைய மாற்றத்தைச் செய்ய அரசியல் சாசனத் திருத்த மசோதா கட்டாயம் தேவைப்படும் என்கின்றனர். இதற்கு 'சிறப்புப் பெரும்பான்மை' அவசியம் ஆகும். அதாவது, ஒவ்வொரு அவையின் மொத்த உறுப்பினர்களில் பாதிக்கு மேலானோரும், அவைக்கு வந்து வாக்களிப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். பா.ஜ.க (BJP) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு மக்களவையில் இந்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை, இருப்பினும் அரசாங்கம் இந்த அபாயகரமான முயற்சியை மேற்கொள்வதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர். 


ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 39-எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 28-உறுப்பினர்களும் அவைக்கு வரமாட்டார்கள் என்று அரசு நம்புகிறது. அரசாங்கத்தின் இந்த எண்ணம் சந்தேகத்திற்குரியதாகத் தெரிகிறது. மக்களவையில் இந்த விவகாரத்தில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, பாஜக தேர்தல் நேரத்தில் இதனை மக்களிடம் கொண்டு செல்லும் என்றும் ஒருவேளை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை 182-லிருந்து 272-ஆக உயர்த்திய பெருமையை ஒன்றிய பாஜக அரசு எடுத்துக் கொள்ளும் என்றும் ஒருவேளை மசோதா தோல்வியடைந்தால், அதற்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம் என்று பழி சுமத்தும் என்றும் தெரிவிக்கின்றனர்.


பாஜக அரசு மக்களவையின் உறுப்பினர் எண்ணிக்கையை 816-ஆக அதிகரிப்பதால் ஏற்படும் விளைவுகளை அலட்சியம் செய்கிறது. இந்த மாற்றம் சபையை நிர்வகிப்பதில் சிரமங்களை உருவாக்கலாம். உறுப்பினர்கள் பேசுவதற்கு மிகக் குறைந்த நேரமே கிடைக்கும் என்றும்  மிக முக்கியமாக, அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கும், மக்கள்தொகையைச் சரியாகக் கட்டுப்படுத்தி நிலைநிறுத்தியுள்ள தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையிலான வாக்கு வலிமை இடைவெளி கணிசமாக அதிகரிக்கும். இது பாஜகவின் வழக்கமான 'பிரித்தாளும் சூழ்ச்சி' தந்திரத்தையே பிரதிபலிக்கிறது. 


இந்தக் கருத்து விவாதத்திற்குரியது என்றாலும், இது கொண்டு வரப்பட்ட நேரம் மிகவும் மோசமானதாகும். 


Original Link: An election-eve gambit.


Share:

இந்தியாவில் வயதான பெண்ககளை, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கண்ணியத்துடன் அரவணைத்தல். -ரம்ஜும் சாட்டர்ஜி

இந்தியாவில் வயதான பெண்கள் ஏழைகளாக இருந்து, அவர்களின் தேவைகள் புறக்கணிக்கப்பட்டால், இந்தியா ஒரு உண்மையான வளர்ச்சி பெற்ற நாடாக மாற முடியாது. நீண்ட ஆயுள் என்பது வெறும் பெயரளவில் நீண்ட காலம் வாழ்வதைக் குறிக்கக்கூடாது. அது நல்ல ஆரோக்கியம், தன்னாட்சி மற்றும் கண்ணியம் ஆகியவை இன்றியமையாத கூறுகளாகக் கொண்ட ஒரு சிறந்த வாழ்க்கையாக வெளிப்பட வேண்டும்.


இந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை 2050-ம் ஆண்டில் 319 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், 2046-ம் ஆண்டில் குழந்தைகளை விட முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதாகும். அதேசமயம், இந்தியாவில் முதுமையில் பெண்களின் ஆதிக்கம் தெளிவாக அதிகரித்து வருகிறது. ஆண்களைவிட பெண்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர். இதன் விளைவாக முதியோர்களிடையே 1,000 ஆண்களுக்கு 1,065 பெண்கள் என்ற பாலின விகிதம் உள்ளது. ஆனால் வருந்தத்தக்க வகையில், நீண்ட ஆயுள் என்பது நல்ல ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் குறிக்கும் என்று சொல்ல முடியாது. பல வயதான பெண்களுக்கு, குறிப்பாக விளிம்புநிலை மக்களில் பெரும்பகுதியினர் கிராமப்புற மற்றும் பொருளாதாரரீதியாக பின்தங்கிய சமூகங்களில் உள்ளவர்களுக்கு, நீண்ட ஆயுள் என்பது நீடித்த பாதிப்புக்குள்ளாகும் தன்மை, தனிமை மற்றும் பிறரைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறிக்கலாம்.


நமது சமூகத்தின் வயதான பெண் குடிமக்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள். பெண்கள் மேம்பாடு குறித்த உரையாடல்களில் பெரும்பாலானவை இளைய தலைமுறையினரை மையமாகக் கொண்டிருக்கும் வேளையில், நமது சமூகங்களைச் சேர்ந்த வயதான பெண்கள், குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் உள்ளவர்கள், கவனிக்கப்படாமலும் புறக்கணிக்கப்பட்டும் வருகின்றனர்.


பாதுகாப்பற்ற வேலை


இந்தியாவில் ஒரு வயதான பெண்ணின் கதை முதுமையில் தொடங்குவதில்லை. அவர் அந்த வயதை அடைவதற்கு முந்தைய பத்தாண்டுகளிலேயே அது தொடங்குகிறது. அவர் தன் வாழ்நாள் முழுவதையும் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளைச் செய்வதிலும், வீடுகளைக் கட்டுவதிலும், குழந்தைகளை வளர்ப்பதிலும், எதிர்கால பணியாளர் வர்க்கத்தை வளர்ப்பதிலுமே செலவிடுகிறார். இருப்பினும், அவர் வயதாகும் நிலையை அடையும்போது, ​​அவருக்கு ஆதரவாக எதுவுமே இருப்பதில்லை. சுமார், 75% வயதான பெண்களிடம் சேமிப்பு என்பதே இல்லை. மேலும், 66% பேரிடம் முற்றிலும் எந்தச் சொத்தும் இல்லை. இந்த நிலை தற்செயலானது அல்ல. இது வாழ்நாள் முழுவதும் ஊதியம் பெறாத மற்றும் அங்கீகரிக்கப்படாத வேலையின் விளைவாகும்.


இந்தப் பொருளாதாரச் சரிவு அவரை (வயதான பெண்களை)  ஆதரவற்றவராக ஆக்குவது மட்டுமல்லாமல், அவரைச் சக்தியற்றவராகவும் ஆக்குகிறது. இதில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான வயதான பெண்கள், தங்களின் மிக அடிப்படையான வாழ்வாதாரத் தேவைகளுக்காக மற்றவர்களை (குடும்ப உறுப்பினர்கள் உட்பட) சார்ந்திருக்கிறார்கள். 86% முதியவர்கள் குடும்பப் பராமரிப்பைச் சார்ந்திருப்பதால், வயது மற்றும் பாலினம் ஆகிய இரண்டின் காரணமாகவும் வயதான பெண்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் மற்றவர்களைப் பராமரிப்பதிலேயே செலவிடுகிறார்கள். ஆனால் இறுதியில் பதிலுக்கு ஏதாவது ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.



முதியவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல் ஒரு முக்கியக் கவலையாகவே உள்ளது. பல தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில், மருத்துவ வசதிகள் குறைவாகவும், பெரும்பாலும் வெகு தொலைவிலும் இருப்பதால், முதியவர்கள் வழக்கமான சிகிச்சையைப் பெறுவது கடினமாகிறது. வயதான பெண்களுக்கு, நிதி மற்றும் நடமாடுவதில் சிக்கல்கள் காரணமாக நிலைமை இன்னும் கடினமாக உள்ளது. மேலும், மருத்துவப் பரிசோதனைகளுக்குச் செல்லும்போது, அவர்கள் பெரும்பாலும் தங்களோடு வருவதற்கு இளைய குடும்ப உறுப்பினரைச் சார்ந்திருக்கிறார்கள். நடமாடும் சுகாதாரத் திட்டங்கள், அடிப்படை மருத்துவ சேவைகளை நேரடியாக சமூகங்களுக்குக் கொண்டு செல்வதன் மூலம், இந்த இடைவெளியை ஓரளவிற்குக் குறைக்க உதவியுள்ளன. ஆனால், இந்த இடைவெளியை முழுமையாக நிவர்த்திசெய்ய, இன்னும் மிக அதிகமான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.


நீதியின் மூலம் கண்ணியம்


மூத்த குடிமக்களான பெண்களுக்கு உண்மையான அதிகாரமளித்தலுக்குக் கட்டமைப்புச் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. முதியவர்களுக்கு நம்பகமான ஓய்வூதிய ஆதரவு இன்றியமையாதது. குறிப்பாகப் பெண்களுக்கு இது மிகவும் பொருந்தும். இவர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியங்கள் வலுவானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்வது, அவர்களுக்கு ஓரளவிற்கு நிதிப் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் அளிக்கும்.


ஆனால், நிதிப் பாதுகாப்பு மட்டுமே இந்தப் பெரிய பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இந்தியாவில் பராமரிப்புப் பணிகள் இன்னும் பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாமலும், மதிப்பளிக்கப்படாமலும் இருக்கின்றன. பராமரிப்புப் பொருளாதாரம் (care economy) குறித்த விவாதங்கள் நடைபெறும் போது, ​​பராமரிப்பு பொதுவாகக் குழந்தை பராமரிப்பு மற்றும் ஆரம்பகால வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. நாட்டின் வயதான மக்கள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையிலும், முதியவர்களின் தேவைகளுக்கு மிகக் குறைவான கவனமே அளிக்கப்படுகிறது. பராமரிப்பாளர்களாக அவர்களின் பங்கு அங்கீகரிக்கப்பட்டாலும், அவர்கள் பராமரிப்பைப் பெறுபவர்களாக மாறவேண்டிய தேவை அடிக்கடி புறக்கணிக்கப்படுகிறது. மேலும், வயதான பெண்களுக்குப் பராமரிப்புத் தேவைப்படத் தொடங்கும் போது, அமைப்புகள் பொதுவாக மெதுவாகவே பதிலளிக்கின்றன. நாம் கேட்கவேண்டிய கேள்வி எளிமையானது. இந்த ஏற்றத்தாழ்வு நியாயமானதா?


வயதான பெண்களுக்கு நீதியை உறுதிசெய்வது என்பது, இந்த இரண்டு யதார்த்தங்களையும் அங்கீகரிக்கும் அமைப்புகளை உருவாக்குவதாகும். கண்ணியத்தை மீட்டெடுப்பதில் நிதிப் பாதுகாப்பும், வாழ்வாதார வாய்ப்புகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. முதியோர் சுய உதவிக் குழுக்கள், ஒருவேளை இவ்விரண்டையும் ஊக்குவிப்பதற்கான ஒரு வழியாகும். அவற்றின் மூலம், உறுப்பினர்கள் சிறு கடன்களைப் பெறலாம், சிறிய சேமிப்புகளை உருவாக்கலாம், மேலும் தேவைப்படும்போது ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கலாம். இல்லையெனில் தனிமைப்படுத்தப்பட்டதாக உணரக்கூடிய பெண்கள், கூட்டுச் செயல்பாட்டின் மூலம் வலிமையைக் கண்டறிந்து, தங்கள் நிதி வாழ்க்கையின்மீது ஓரளவு கட்டுப்பாட்டை மீண்டும் பெறத் தொடங்கலாம். சரியான ஆதரவுடன், இந்த மாதிரியானது மேம்பட்டு இன்னும் பலரைச் சென்றடைய முடியும்.

பாதிக்கப்படக்கூடிய வயதான பெண்களை மனதில் கொண்டு, சுகாதாரத் தேவைகளும், பராமரிப்பு நடைமுறைகளும் வடிவமைக்கப்பட்டு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டும். புதுமையான சமூக அடிப்படையிலான நோய்த்தணிப்புப் பராமரிப்புத் திட்டங்கள், நாள்பட்ட நோய்களுடன் வாழும் முதியவர்களுக்கு அத்தியாவசியமான மருத்துவ, உணர்ச்சி மற்றும் சமூக ஆதரவை வழங்குவதோடு, அவர்களின் பராமரிப்பாளர்கள் இந்தக் கடினமான சூழலைக் கடந்து செல்லவும் உதவுகின்றன. இதன்மூலம், முதியவர்கள் தங்களுக்குப் பழக்கமான சூழலிலேயே கருணையான கவனிப்பைப் பெறுவதை உறுதிசெய்கின்றன.


இந்தப் பாதையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், கண்ணியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வில் முதுமையைக் கையாள்வதற்கு ஒரு முழுமையான அணுகுமுறையை உருவாக்க முடியும்.


இது ஏன் முக்கியம்?


இந்தியாவின் வயதான பெண்கள் வறுமையில் வாடி, அவர்களின் தேவைகள் புறக்கணிக்கப்பட்டால், இந்தியா ஒருபோதும் உண்மையான வளர்ச்சி பெற்ற நாடாக ஆகாது. நீண்ட ஆயுள் என்பது வெறும் பெயரளவில் நீண்ட காலம் வாழ்வதைக் குறிக்கக்கூடாது. அது நல்ல ஆரோக்கியம், தன்னாட்சி மற்றும் கண்ணியம் ஆகியவை இன்றியமையாத கூறுகளாகக் கொண்ட ஒரு சிறந்த வாழ்க்கையாக வெளிப்பட வேண்டும். அரசாங்கத்தின் முன்னெடுப்புகள், மூத்த குடிமக்களை ஒரு சக்திவாய்ந்த மக்கள்தொகைப் பிரிவாக அடையாளம் காணத் தொடங்கியுள்ளன. இது, நடமாடுவதற்கான உதவிகள், சுகாதாரத் தொழில்நுட்பம் மற்றும் அவர்களுக்கென நேரடியாக வடிவமைக்கப்பட்ட சேவைகள் உள்ளிட்டவற்றை உருவாக்க சந்தையை ஊக்குவிக்கிறது.


அரசாங்கம் சமீபத்தில் 1.5 லட்சம் முதியோர் பராமரிப்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்க உறுதியளித்துள்ளது. இந்த நடவடிக்கை, அதிகரித்துவரும் வயதான மக்களின் நீண்டகாலத் தேவைகளை அங்கீகரிக்கிறது. நிதி ஆதரவு இல்லாத முதியோர்களுக்காக, முறைப்படுத்தப்பட்ட பராமரிப்புக் கட்டமைப்புகள் மற்றும் வலுப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டங்களைக் கொண்டு நமது நாடு மேலும் முன்னேறுவது இன்றியமையாதது.

தொலைநோக்குத் திட்டம்


நமது நிகழ்காலத்தை உருவாக்க உதவிய பெண்கள், அதன் விளிம்பு நிலையில் வாழ்வதைவிட மிக மேலானதற்குத் தகுதியானவர்கள் ஆவர். உண்மையாக அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பாதை, ஒரு தெளிவான உறுதிமொழியுடன் தொடங்க வேண்டும். பராமரிப்பின் பொருளாதார மதிப்பை அங்கீகரிப்பது, அதை அதிகம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு வழங்குவது மற்றும் பதிலுக்கு அவர்களைப் பாதுகாக்கப் போதுமான வலுவான அமைப்புகளை உருவாக்குவது ஆகும்.


ரம்ஜும் சாட்டர்ஜி, ஹெல்ப்ஏஜ் இந்தியாவின் துணைத் தலைவர் ஆவார்.



Original Link: Embracing older women in India: with security, healthcare and dignity.


Share:

உயிரி எரிபொருள் அடுப்புகள், சமையல் எரிவாயுக்கு (LPG) ஒரு தூய்மையான, மலிவான மாற்றாக உள்ளதா? -அங்கித் மாத்தூர்

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) நெருக்கடியின் போது, ​​விறகின் மீள் பயன்பாட்டை, ஒரு நிலையான தேர்வாக நவீன சமையல் அடுப்புகளால் (modern cookstoves) மாற்ற முடியுமா?


தற்போது வரை நடந்த நிகழ்வு :


எல்பிஜி நெருக்கடியின் காரணமாக, பல பகுதிகளில் குறிப்பாக கிராமப்புறங்கள் மீண்டும் விறகுப் பயன்பாட்டிற்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளன. விறகுப் பயன்பாடு பொதுவாக பெண்களுக்கு அதிக உடல் உழைப்பை அதிகரிப்பதாகவும், அதேநேரத்தில் மாசுபாடு மற்றும் சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்துவதாகவும் கருதப்படுகிறது.

இன்றைய விறகு அடுப்புகள் குறைந்த அளவு சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவையாகவும், மனித பயன்பாட்டிற்குத் தீங்கற்றவையாகவும் உள்ளனவா?


மேம்படுத்தப்பட்ட சமையல் அடுப்புகள் (improved cookstoves (ICS)) என்று பொதுவாக அழைக்கப்படும் நவீன உயிரிஎரிபொருள் அடுப்புகள், பாரம்பரிய சமையல் முறைகளிலிருந்து ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கின்றன. பழைய காலத்து மண் அடுப்புகளைப் போலல்லாமல், இவை எரிபொருள் பயன்பாட்டை மூன்றில் இரண்டு பங்கு வரை குறைப்பதோடு, புகையையும் பெருமளவில் குறைக்கின்றன.


பாரம்பரிய அடுப்புகள், மோசமான காற்றோட்டத்தின் காரணமாகத் தங்களின் பெரும்பாலான வெப்பத்தை வீணாக்குவதோடு, வெறும் 10% செயல்திறனையே கொண்டுள்ளன. இதற்கு மாறாக, நவீன அடுப்புகள் 38% முதல் 45% வரையிலான வெப்ப செயல்திறன் நிலைகளை எட்டுகின்றன. இரண்டாம் நிலை காற்றோட்டம் போன்ற தொழில்நுட்பங்கள், கரி மற்றும் தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் புகையாக மாறுவதற்கு முன்பே அவற்றைப் பிடிக்க உதவுகின்றன.


பெருமளவில் விறகு கொண்டு சமைப்பதை எவ்வாறு நீடித்த நிலைத்தன்மை கொண்டதாக மாற்றுவது?


பொறுப்புடன் செய்தால், விறகைப் பயன்படுத்தி சமைப்பது நீடித்த நிலைத்தன்மை கொண்டதாக இருக்க முடியும். விறகு ஒரு புதுப்பிக்கத்தக்க வளம். இருப்பினும், எடுக்கப்படும் விறகின் அளவு, மீண்டும் வளரும் விறகின் அளவைத் தாண்டாதபோது மட்டுமே இது உண்மையாகும். மேம்படுத்தப்பட்ட சமையல் அடுப்புகள் எரிபொருளை மிகவும் திறமையாக எரிப்பதால், ஒரு வேளை உணவிற்குத் தேவைப்படும் விறகின் அளவை அவற்றால் குறைக்க முடியும்.


நவீன சமையல் அடுப்புகள், மரத்தூள் அல்லது விவசாயக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் உருண்டைகள் மற்றும் கட்டிகள் உள்ளிட்ட மாற்று உயிரி எரிபொருட்களிலும் இயங்க முடியும். இது எரிபொருள் ஆதாரத்தை விரிவுபடுத்துவதோடு, பதப்படுத்தப்படாத விறகின் மீதான அழுத்தத்தையும் ஓரளவு குறைக்கிறது.


பெரிய அளவில் பயன்பாட்டை அடைவதற்கு நிதியுதவி மிக முக்கியமானது. மேம்படுத்தப்பட்ட சமையல் அடுப்புகளால் ஏற்படும் மாசு சேமிப்புகளைக் கண்காணித்து, அவற்றை கார்பன் வரவுகளாக மாற்றுவதன் மூலம், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அடுப்புகளை மேலும் மலிவு விலையில் கிடைக்கச் செய்யும் ஒரு நிதி ஆதாரத்தை உருவாக்க முடியும்.


உபகரணங்களின் விலை மற்றும் எரிபொருள் செலவுகள் பற்றி என்ன?


வெவ்வேறு வகையான அடுப்புகளுக்கு ஆரம்பகட்ட செலவுகள் வேறுபடுகின்றன. வீட்டு உபயோக மாதிரிகளின் விலை ₹2,000-க்கும் குறைவாகத் தொடங்குகின்றன. அதேசமயம், வணிக அமைப்புகளின் விலை, உற்பத்தியாளர் மற்றும் வாங்கும் வழிமுறையைப் (நேரடியாக, இணையவழி வர்த்தகம் மூலமாக, அல்லது விநியோகர்கள் வழியாக) பொறுத்து ₹20,000-ஐத் தாண்டக்கூடும். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு, குறுநிதி, பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்டங்கள் (CSR) மற்றும் கார்பன் நிதி ஆகியவற்றை உள்ளடக்கிய நிதிக் கூட்டாண்மைகள் மூலம் ஆரம்பகட்ட செலவுகளை நிர்வகிப்பதை எளிதாக்க முடியும்.


முக்கியமாக தொடர்ச்சியான இயக்கச் செலவாக எரிபொருள் உள்ளது. மேலும், நவீன சமையல் அடுப்புகளின் உயர் வெப்பத் திறன் எரிபொருள் தேவைகளைக் கணிசமாகக் குறைக்கும். இன்றைய அடுப்புகள் விறகுப் பயன்பாட்டை 50%-க்கும் மேலாகக் குறைத்துள்ளன.


எல்பிஜியுடன் ஒப்பிடும்போது விறகு மிகவும் செலவு குறைந்ததாகும். குறிப்பாக, முக்கிய நகரங்களில் வணிக எல்பிஜி விலை ஒரு கிலோவுக்கு ₹100-ஐத் தாண்டியுள்ள இந்த விலை, தற்போதைய விநியோகப் பற்றாக்குறையின்போது இது மிகவும் பொருந்தும். பல்வேறு வகையான விறகுகளுக்குக் கிடைக்கும் பரந்த விலை வரம்பிலிருந்து, ஒரு கிலோவின் தோராயமான சராசரி விலை சுமார் ₹10 ஆக இருக்கும் என்று கணிக்க முடியும் (விறகுகளைச் சும்மா சேகரிப்பதற்குப் பதிலாக வாங்கினால்). மேம்படுத்தப்பட்ட சமையல் அடுப்பில், 4 கிலோ விறகும் 1 கிலோ வணிக எல்பிஜிக்குச் சமமான சமையல் ஆற்றலைத் தருகிறது என்பதைக் கருத்தில் கொண்டால், விறகு மூலம் 60%-க்கும் அதிகமான செலவு சேமிப்பை வழங்க முடியும்.


பரவலான பயன்பாட்டிற்கு எவ்வகையான விநியோகச் சங்கிலி தேவைப்படும்? இதற்கு மிகப்பெரிய முதலீடு தேவைப்படுமா?


உயிரி எரிபொருள் சமையல் அடுப்புகளைப் பெரிய அளவில் பயன்படுத்துவதற்கு, எரிபொருள் விநியோகச் சங்கிலிகளில் மிகப்பெரிய முதலீடு தேவைப்படாது. விறகு, பயிர்க் கழிவுகள் மற்றும் சாண வறட்டிகள் போன்ற முதன்மை எரிபொருட்கள் கிராமப்புற மற்றும் பகுதி நகர்ப்புறங்களில் ஏற்கனவே பரவலாகக் கிடைப்பதால், விலையுயர்ந்த, மையப்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பிற்கான தேவை குறைவாகவே உள்ளது.


மாசுபடுத்தும் சமையல் எரிபொருளைப் பயன்படுத்துபவர்களுக்கு அறிவாற்றல் குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கலாம் என கர்நாடகாவில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


எனவே, உற்பத்தியை அதிகரிப்பது என்பது விநியோக வலையமைப்புகளை வலுப்படுத்துவதையே முக்கியமாகக் கொண்டுள்ளது. இதற்கு சிறந்த தளவாட மேலாண்மை, இறுதிநிலை விநியோகம் மற்றும் உள்ளூர் கூட்டாண்மைகளை மேம்படுத்துவதில்தான் முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல் முக்கியமாக, இந்த அடுப்புகள் அன்றாட வாழ்வின் ஒரு நிரந்தர அங்கமாகத் தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்ய, பயனர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய ஆதரவை வழங்குவதும் அவசியமாகும்.


கட்டுரையாளர் கிரீன்வே கிராமீன் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.


Original Link: Are biomass stoves a cleaner, cheaper alternative to LPG? 


Share: