மகாராஷ்டிர மழை: இந்த ஜூலை மாதத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏன் வழக்கத்திற்கு மாறாகக் கடுமையான மழை பெய்தது? -அஞ்சலி மாரார்

 மழைக்காலத்திலும் மற்றும் ஆண்டு முழுவதுமே மழைப்பொழிவு கணிசமாக அதிகரித்துவரும் ஒரு சில இந்திய மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்றாகும். மேற்குக் கடற்கரையில் உள்ள கொங்கன் (Konkan) பிராந்தியத்தில் மிகக் கடுமையான மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.


ஜூலை மாதம் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில், லோனாவாலா (Lonavala), மகாபலேஷ்வர் (Mahabaleshwar), தாம்ஹினி (Tamhini), பீரா (Bhira) மற்றும் மகாராஷ்டிராவின் சஹ்யாத்ரி மலைத்தொடர்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள பல இடங்களில் மூன்று                 24 மணி நேரத்திற்குள் 600 மில்லி மீட்டருக்கும் (600 mm) அதிகமான வழக்கத்திற்கு மாறான, கடுமையான மழை பெய்தது. இதனால் நிலச்சரிவுகள், மண் சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.


மும்பை மற்றும் புனே நகரங்களுக்கு இடையே ஒரு முக்கியமான பொருளாதாரரீதியாக மிக முக்கியமான இணைப்பாக விளங்கும் லோனாவாலாவின் (Lonavala) சில பகுதிகள் தற்காலிகமாக முடங்கின. இப்பகுதிகளில் பெரும்பாலானவை அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருப்பதோடு, புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாகவும் விளங்குகின்றன. மேலும், இப்பகுதிகள் கிருஷ்ணா மற்றும் பீமா நதிப் படுகைகளின் நீர் பிடிப்புப் பகுதிகளாகச் செயல்படுவதால், பிராந்தியத்தின் நீர் ஆதாரங்களுக்கும் இவை மிகவும் முக்கியமானவை ஆகும். இந்த நதிப் படுகைகளில் இருபதுக்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. இவை மேற்கு மகாராஷ்டிராவின் கீழ்நிலை பகுதிகளுக்குத் தேவையான தண்ணீரை வழங்குகின்றன.



அப்படியானால், இவ்வளவு தீவிர மழைக்கு என்ன காரணம்? 


48 மணி நேரத்தில் 1000 மி.மீ-க்கு மேல் மழை


இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)), 24 மணி நேரக் கால அளவில் 204 mm முதல் 244.5 mm வரையிலான மழையை மிகவும் பலத்த மழை (Extremely heavy rain) என்றும், 244.5 mm-க்கு மேல் பெய்யும் மழையை அசாதாரணமான அதீத மழை (Exceptionally high rain) என்றும் வகைப்படுத்துகிறது. இந்த அதீத மழையானது, அந்த வானிலை மையத்தில் இதற்கு முன்பு பதிவான மிக அதிகபட்ச மழையின் அளவை நெருங்குவதாக இருக்கும்.


ஜூலை மாதம் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரையிலான தேதிகளில், மகாராஷ்டிராவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள சில இடங்களில் இத்தகைய அசாதாரணமான அதீத மழை பதிவாகியுள்ளது. லோனாவாலா (Lonavala), பீரா (Bhira) மற்றும் மஹாபலேஷ்வர் (Mahabaleshwar) ஆகிய இடங்கள் இதற்கு முன்பு இருந்த அனைத்து மழைப் பதிவுகளையும் முறியடித்து, வரலாறு காணாத மழைப்பொழிவைப் பெற்றுள்ளன. இந்த 48 மணி நேரத்தில், வழக்கமான அளவைவிட சுமார் 60 முதல் 160 விழுக்காடு வரை கூடுதல் மழை பெய்துள்ளது: லோனாவாலா (1290 mm, +161%), பீரா (1121 mm, +73%), தம்ஹினி (1110 mm, +125%), ஷிர்கான் (960 mm, +58%) மற்றும் மஹாபலேஷ்வர் (916 mm, +100%).


பருவமழையைத் தீவிரமான நிலைக்குக் கொண்டு சென்ற பல சாதகமான வானிலை சூழல்களே இத்தகைய பெருமழைக்குக் காரணம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம், மத்திய இந்தியப் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி, பின்னர் அது ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களை நோக்கி நகர்ந்தது. இது வங்காள விரிகுடாவில் இருந்து ஈரப்பதம் நிறைந்த காற்றை ஈர்த்தது.


மேலும், பருவமழைக் காலத்தில் பொதுவாகக் காணப்படும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியான 'பருவமழைத் தொட்டி' (Monsoonal trough) அமைந்திருந்த இடமும், மேற்கு கடற்கரைக்கு இணையாக நீண்டிருந்த மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியும் ஒன்றாகச் சேர்ந்து, மேற்கு மகாராஷ்டிராவில் இத்தகைய கனமழை பெய்வதற்குக் காரணமாக அமைந்தன.


புவியியல் அமைப்புடன் தொடர்புடைய பிராந்திய மழைப்பொழிவு


புவியியல் அமைவிடம் மற்றும் நில அமைப்பு — அதாவது மலைகள் மற்றும் மலைப்பகுதிகளின் உயரம், வடிவம் மற்றும் அவை அமைந்துள்ள விதம் — அதன் வானிலையை, முக்கியமாகத் தென்மேற்குப் பருவமழைக்கால மழையளவை வலுவாகத் தீர்மானிக்கிறது.


அரபிக்கடலில் வானிலைச் சூழல் தீவிரமாகவும் சாதகமாகவும் இருக்கும்போது, புனே, ராய்காட், சதாரா மற்றும் சஹ்யாத்ரி மலைத்தொடர்களுக்கு உட்பட்ட மலைப்பகுதி கிராமங்களில் மிகக் கடுமையான மழை பெய்யும். இந்தப் பகுதிகள் பொதுவாக ஆண்டுக்கு 100 சென்டிமீட்டருக்கும் (100 cm) அதிகமான மழையைப் பெறுகின்றன. இதில் கடலோர மாவட்டங்களான தானே, ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் ஆகியவற்றுடன், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள புனே, சதாரா மற்றும் கோலாப்பூரின் மேற்கு மலைப்பகுதிகளும் அடங்கும்.


புவியியல்ரீதியாக, காற்றின் திசையை நோக்கியுள்ள பகுதி (Windward side), காற்றிற்கு மறைவாக உள்ள பகுதியைவிட (Leeward side) மிக அதிகமான மழையைப் பெறுகிறது. புனேவில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட 1981-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மத்திய மகாராஷ்டிராவின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு இடையே ஜூலை மாத மழையளவில் காணப்படும் இந்த மிகப்பெரிய வேறுபாட்டிற்கு மலைகளின் தாக்கமே முக்கியக் காரணமாகும். இந்த மலைகளின் தாக்கம், மழை மறைவுப் பிரதேசத்தின் குறிப்பிட்ட தூரம் வரை மழையளவைக் கட்டுப்படுத்துகிறது.

இந்தியாவில் மழைப்பொழிவு கணிசமாக அதிகரித்துவரும் ஒரு சில மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்றாகும். கொங்கன் (Konkan) பிராந்தியத்தில் கடுமையான மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பால்கர் (Palghar) மாவட்டத்தில் பருவமழைக் காலத்திலும் சரி, ஒட்டுமொத்த ஆண்டின் பிற நாட்களிலும் சரி மழைப்பொழிவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகப் பதிவாகியுள்ளது. ‘Observed Monsoon Rainfall Variability and Changes during Recent 30 Years (1989–2018)’ என்ற அறிக்கையின்படி, மகாராஷ்டிராவில் தென்மேற்குப் பருவமழைக் காலத்தின்போது தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் தொடர் கனமழை நிகழ்வுகளும் அடிக்கடி ஏற்பட்டுள்ளன. 


வரலாற்றுப் பதிவுகள்


மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் மிகவும் அதிக மழையைப் பெறக்கூடிய மாதங்களான ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், குறிப்பாக இந்த இடங்கள் பலவற்றில் மிகக் கடுமையான கனமழை என்பது வழக்கமான ஒன்றுதான்.


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மழைப்பொழிவுப் பதிவுகளின்படி (1941-1990), லோனாவாலா (Lonavala) பகுதி தன் வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக 1990-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23-ஆம் தேதி ஒரே நாளில் 578 மில்லிமீட்டர் மழையைப் பதிவு செய்துள்ளது. அதே காலகட்டத்தில், மஹாபலேஷ்வர் (Mahabaleshwar) பகுதி 1896-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20-ஆம் தேதி ஒருநாள் அதிகபட்ச மழைப்பொழிவாக 458 மில்லிமீட்டரையும், ராய்காட் மாவட்டத்தில் உள்ள பீரா (Bhira) பகுதி 1989-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24-ஆம் தேதி 713 மில்லிமீட்டரையும் பதிவு செய்துள்ளன.


தாம்ஹினியில் (Tamhini) வழக்கமான வானிலை ஆய்வு மையக் கண்காணிப்புகள் இல்லாததால், பிற ஆதாரங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, அங்கு பதிவான மிக அதிகமான 24 மணி நேர மழையளவு 695 மில்லிமீட்டர் என்றும், மிக அதிகமான 3 நாள் மழையளவு 1055 மில்லிமீட்டர் (1975-2013 காலகட்டத்தில்) என்றும் கூறப்படுகிறது. இந்திய வெப்பமண்டல வானிலையியல் நிறுவனத்தின் (Indian Institute of Tropical Meteorology (IITM)) ஆராய்ச்சியாளர்கள் தாம்ஹினியில் இந்தக் காலகட்டத்தில் பெய்த மழையை ஆய்வு செய்தனர். இந்த இடம் மேற்குத் தொடர்ச்சி மலையின் மழை மறைவுப் பகுதியில் (Leeward side) அமைந்திருந்தபோதிலும், அங்கு பெய்யும் மழையானது மழைப்பொழிவுப் பகுதியில் (Windward side) உள்ள பல இடங்களைவிட அதிகமாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இந்த ஆய்வின்படி, தாம்ஹினி (Tamhini) பகுதியின் மழையளவு தீபகற்ப இந்தியாவின் (Peninsular region) வடபகுதியில் முதலாவது இடத்திலும், ஒட்டுமொத்த இந்திய அளவில் 5-வது இடத்திலும் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.


மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஜூலை மாதத்தில்  தாம்ஹினி பகுதியின் சராசரி மழையளவு 2658 மில்லிமீட்டர் (mm) ஆகும். இது உலகின் மிக அதிக மழை பெய்யும் இடங்களில் ஒன்றாகக் கருதப்படும் சிரபுஞ்சியின் (Cherrapunji) ஜூலை மாத மழையளவுக்கு (2876 மி.மீ) மிக நெருக்கமாக உள்ளது. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலையின் நீளமான இப்பகுதியில் ஜூலை மாதத்தில் மிக அதிக சராசரி மழை பெய்யக்கூடிய இதுபோன்ற இடங்கள் இன்னும் பல உள்ளன: அவை, ஷிர்கான் (1953 மி.மீ), அம்பாவானே (2113 மி.மீ) மற்றும் தாவ்டி (2219 மி.மீ) ஆகியவை ஆகும்.


Original article : Maharashtra rain: Why the Western Ghats received historically high rainfall this July. -Anjali Marar

Share:

இந்திரா முனை: வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கலங்கரை விளக்கத்தைப் பாதுகாக்கவும், ஒரு சுற்றுலா மையமாக மேம்படுத்தவும் ஒன்றிய அரசு ஏன் விரும்புகிறது? -நிகில் கனேகர்

 அந்தப் பகுதியில் உள்ள கலங்கரை விளக்கத்தைச் சுற்றியுள்ள சுற்றுலா உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்த முன்மொழியப்பட்ட பணி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய கடலோரப் பகுதிகளில் அமைந்திருப்பதால், இதற்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டியது அவசியமாகும்.


மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள இந்திரா முனை (Indira Point) மற்றும் அங்குள்ள புகழ்பெற்ற கலங்கரை விளக்கத்தில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள முன்மொழிந்துள்ளது. ஸ்ரீ விஜய புரத்தில் (முன்னர் போர்ட் பிளேர் (Port Blair) என்று அழைக்கப்பட்டது) உள்ள கலங்கரை விளக்கங்கள் மற்றும் கலங்கரை விளக்கக் கப்பல்களுக்கான இயக்குநரகம் மூலமாக, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குக் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதியைக் கோரி ஒன்றிய அரசு விண்ணப்பித்துள்ளது.


இந்திரா முனை என்றால் என்ன?


இந்தியாவின் தெற்கே அமைந்துள்ள கடைசி எல்லை இந்திரா முனை (Indira Point) ஆகும். இது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் யூனியன் பிரதேசத்தில் உள்ள கிரேட் நிக்கோபார் தீவில் அமைந்துள்ளது. இது கடல்சார் போக்குவரத்தில் ஒரு முக்கியமான அடையாளமாகும். மேலும், இது கலாத்தியா வளைகுடாவிற்குத் (Galathea Bay) தெற்கே அமைந்துள்ளது. இந்த வளைகுடாவில்தான் கிரேட் நிக்கோபார் தீவு பெருந்திட்டத்தின்கீழ் ஒரு சர்வதேச சரக்கு மாற்று முனையம் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.


இந்திரா முனை கலங்கரை விளக்கம் சிங்கப்பூர்-கொழும்பு சர்வதேசக் கடல்சார் கப்பல் போக்குவரத்துப் பாதையில் உள்ள ஒரு முக்கியமான அடையாளமாகும். இது கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய உதவுகிறது. மேலும், முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சரக்கு மாற்று முனையம் கட்டி முடிக்கப்படும்போது, கலாத்தியா வளைகுடாவை நோக்கிவரும் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்திற்கும் உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக, இந்திரா முனை பகுதியானது பிக்மேலியன் முனை (Pygmalion Point) என்று அழைக்கப்பட்டது. கலங்கரை விளக்கங்கள் மற்றும் கலங்கரை விளக்கக் கப்பல்களுக்கான இயக்குநரகத்தின் கூற்றுப்படி, 1985-ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக இதற்கு இந்திரா முனை என்று மறுபெயரிடப்பட்டது. ஏப்ரல் மாதம் 1972-ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்த இந்த கலங்கரை விளக்கம் 35 மீட்டர் உயரமுடையது; இது வார்ப்பிரும்பினால் (Cast iron) செய்யப்பட்டு, சிவப்பு மற்றும் வெள்ளை நிற வளையங்கள் தீட்டப்பட்டு வடிமைக்கப்பட்டுள்ளது.




பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு முன்மொழிவு


துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகம், கலங்கரை விளக்கங்கள் மற்றும் கலங்கரை விளக்கக் கப்பல்களுக்கான பொது இயக்குநரகம் மூலமாக, முதலில் இந்த கலங்கரை விளக்கத்தைப் பழுதுபார்க்கவும், அதன் பின்னர் அதைச் சுற்றியுள்ள சுற்றுலா உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.


இந்தக் கலங்கரை விளக்கம், அதைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் அதற்கு அருகில் உள்ள கட்டமைப்புகளை வலுப்படுத்துவதை ஒன்றிய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இது தொடர்பாகப் பல மேம்பாட்டுத் திட்டங்களையும் அரசு முன்மொழிந்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், கிரேட் நிக்கோபார் தீவிற்குச் சென்று, கலாத்தியா விரிகுடாவில் (Galathea Bay) முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச கொள்கலன் மாற்று முனையத்தின் (International Container Transshipment Port (ICTP)) இடத்தை ஆய்வு செய்தார். அவர் இந்திரா முனை பகுதிக்கும் நேரில் சென்று பார்வையிட்டு, தகுந்த சுற்றுலா வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளுடன் அதை ஒரு சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராயுமாறு யூனியன் பிரதேசம் மற்றும் ஒன்றிய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


பின்னர், இந்தத் திட்டத்திற்கு கடல்சார் பயணக் கருவிகளுக்கான மத்திய ஆலோசனைக் குழு (Central Advisory Committee of Aids to Navigation) ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (Environmental Impact Assessment (EIA)) அறிக்கையின்படி, கடல்சார் பாதுகாப்புக்காகக் கலங்கரை விளக்கத்தைப் பாதுகாப்பதும், இப்பகுதியின் வளமான பாரம்பரியத்தைக் காப்பதும், வருங்கால தலைமுறையினருக்காக அதன் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைப் பாதுகாப்பதுமே இந்த ஒப்புதலின் முக்கிய நோக்கங்களாகும்.





இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (IIT Madras) தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கையின்படி, கட்டுமானப் பணிகளில் கலங்கரை விளக்கத்தின் அடித்தளத்தைப் பழுதுபார்த்து வலுப்படுத்துதல், அனைத்துக் காலநிலைகளுக்கும் ஏற்ற அணுகுசாலை அமைத்தல், கோபுரத்தைச் சுற்றியுள்ள கடற்கரையைப் பாதுகாக்க அலைதாங்கிகள் (Breakwaters) கட்டுதல் மற்றும் மின் உற்பத்தி நிலையம், ஆய்வு மற்றும் பணியாளர் குடியிருப்புகள், சுற்றுச்சுவர் மற்றும் உள்வழிகளைப் பழுதுபார்த்தல் ஆகியவை அடங்கும்.


மேலும், சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களும் முன்மொழியப்பட்டுள்ளன. இவற்றில் சூழல்-சுற்றுலா (Eco-tourism) வசதிகள், மாநாட்டு மையம், உணவகம், காட்சி கோபுரம் (Viewing tower), மிதிவண்டிப் பாதைகள், சர்வதேசத் தரத்திலான அருங்காட்சியகம் மற்றும் ஒரு நினைவுச் சின்னக் கட்டடம் ஆகியவை அடங்கும்.


கடலோரப் பாதுகாப்பு மற்றும் அனுமதிகள்


முன்மொழியப்பட்டுள்ள இந்த மேம்பாட்டுப் பணிகள், தீவு கடலோர ஒழுங்குமுறை மண்டல (Island Coastal Regulation Zone (ICRZ)) அறிவிப்பு 2019-ன்கீழ் பாதுகாக்கப்படும் எளிதில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடிய கடலோரப் பகுதிகளில் வருகின்றன. எனவே, இதற்கு அந்த யூனியன் பிரதேசத்தின் கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமிருந்து முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.


2019-ஆம் ஆண்டின் அறிவிப்பாணையானது, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டம் முழுவதும் உள்ள கடற்கரைப் பகுதிகள், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடங்கள் மற்றும் மீனவர்கள் மற்றும் இதர கடலோரச் சமூகங்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு ஒழுங்குமுறைக் கட்டமைப்பை வழங்குகிறது.


கடலோர மண்டல வரைபடங்கள் மற்றும் திட்ட முன்மொழிவின்படி, இந்த விவரிக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மிகவும் உணர்திறன் வாய்ந்த தீவு கடலோர மண்டலத்தின் மிக முக்கியமான முதல் பகுதிகளிலும் (ICRZ-IA), மேலும் சில பணிகள் தீவு கடலோர மண்டலத்தின் மிக முக்கியமான நான்காம் (ICRZ-IVA) பகுதிகளிலும் அமைகின்றன. இதில் தீவு கடலோர மண்டலத்தின் மிக முக்கியமான முதல் பகுதி (ICRZ-IA) என்பது சுற்றுச்சூழல்ரீதியாக மிகவும் முக்கியமான பகுதிகளாகும். இதில் அலையாத்திக் காடுகள், பவளப்பாறைகள், மணல் குன்றுகள், சேற்று நிலங்கள், தேசியப் பூங்காக்கள், கடல்சார் பூங்காக்கள், அரசால் அறிவிக்கப்பட்ட காடுகள், உப்பள சதுப்பு நிலங்கள் மற்றும் ஆமைகள் முட்டையிடும் இடங்கள் ஆகியவை அடங்கும். மற்றொரு பகுதியான தீவு கடலோர மண்டலத்தின் மிக முக்கியமான நான்காம் பகுதி (ICRZ-IVA) என்பது, கடலின் குறைந்த அலை மட்டக் கோட்டிலிருந்து கடல் நோக்கி 12 கடல் மைல்கள் வரையிலான நீர்ப்பரப்பு மற்றும் கடல் தரை பகுதிகளை உள்ளடக்கியதாகும்.


பாதுகாப்புப் பணிகள் ஏன் தேவைப்படுகின்றன?


காலப்போக்கில் ஏற்பட்ட வானிலை மாற்றங்களால் இந்த கலங்கரை விளக்கம் சேதமடைந்துள்ளது. இதனுடைய உள்கட்டமைப்புச் சிக்கல்கள், டிசம்பர் மாதம் 2004-ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை உள்ளிட்ட பேரழிவோடும் தொடர்புடையவை ஆகும். இந்த இயற்கை பேரிடர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைப் பெரிதும் பாதித்தது. இதனால் சில இடங்களில் நிலப்பகுதி மேலெழும்பியது, சில இடங்களில் நிலம் உள்வாங்கியது.


இந்த பேரிடரின்போது, இந்திரா முனை (Indira Point) பகுதியின் நிலப்பரப்பு நிரந்தரமாகவே கீழே மூழ்கியது. நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை ஏற்படுவதற்கு முன்பு, இந்த கலங்கரை விளக்கம் அமைந்திருந்த இடம் சராசரி கடல் மட்டத்திலிருந்து 3.5 மீட்டர் உயரத்தில் இருந்தது. நிலம் உள்வாங்கி, கடல் நீர் நிலப்பகுதிக்குள் புகுந்த பிறகு, இந்த கலங்கரை விளக்கத்தின் ஒரு பகுதி தண்ணீரில் மூழ்கியது. மேலும், அதற்கு அருகில் இருந்த குடியிருப்புகளும் அழிந்து போயின. நிக்கோபார் தீவுகள் சுமார் 2.04 மீட்டர் கீழே மூழ்கியதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். இதனால் கலங்கரை விளக்கத்தின் அடிப்பகுதியும் கடல்நீருக்குள் மூழ்கின.


இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (IIT Madras) நடத்திய ஆய்வின்படி, 2004-ஆம் ஆண்டு முதல் இந்த புவியியல் மற்றும் கடற்கரை மாற்றங்களால் கலங்கரை விளக்கத்தின் அடித்தளம் தொடர்ந்து கடல்நீரிலும், அதிக அலைகளின்போது பலத்த அலைகளின் தாக்குதலுக்கும் ஆளாகி வருகிறது. இந்த கலங்கரை விளக்கம் தற்போது 3.86 டிகிரி சாய்ந்துள்ளது, ஆனால் இது அதன் உள்கட்டமைப்பு நிலைத்தன்மைக்கோ அல்லது பாதுகாப்பிற்கோ எந்தவொரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்று கருதப்படுகிறது.


மேலும், கடற்கரை அரிப்பு, அலைகளின் வேகம் மற்றும் கடற்கரையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, இந்த கலங்கரை விளக்கமும் அதைச் சுற்றியுள்ள அமைப்புகளும் பலவீனமடைந்துள்ளன என்றும், இதனால் அஸ்திவாரத்தை வலுப்படுத்தும் பணிகள் அவசியமாகின்றன என்றும் ஸ்ரீ விஜய புரத்தில் உள்ள கலங்கரை விளக்கங்கள் மற்றும் கலங்கரை விளக்கக் கப்பல்களுக்கான இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


Original article : Indira Point: Why Centre wants to protect landmark lighthouse and develop tourism hub. -Nikhil Ghanekar

Share:

6-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பில் பொது சுகாதார அளவீடுகள் விடுபட்டிருப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள் யாவை? -ரித்விகா பட்கிரி

 6-வது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு (National Family Health Survey (NFHS), ரத்த சோகை, சுகாதாரம் மற்றும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் தூய்மையான எரிபொருள் உள்ளிட்டவை தொடர்பான குறியீடுகளை நீக்கியுள்ளது. இந்தக்குறியீடுகள் நீக்கப்படுவது, இந்தியாவில் பொது சுகாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியின் நிலையை மதிப்பிடும் திறனை எவ்வாறு பாதிக்கக்கூடும்?


உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இரத்தசோகை (anaemia) நோயாளிகளைக் கொண்ட நாடாக இந்தியா தொடர்ந்து இருந்து வருகிறது. வரையறையின்படி, இரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டால் ஏற்படும் ஒரு மருத்துவ நிலையே இரத்தசோகை ஆகும். இது குழந்தைகள் மற்றும் பெண்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களை விகிதாசாரமின்றி பாதிக்கிறது. சத்தான உணவு இல்லாததால் ஏற்படும் இரும்புச்சத்து குறைபாடே இரத்தசோகைக்கு பொதுவான காரணமாக கூறப்படுகிறது.


இருப்பினும், 6-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு, இரத்தசோகை, சுகாதாரம் மற்றும் தூய்மையான சமையல் எரிபொருள் தொடர்பான குறியீடுகளை நீக்கியுள்ளது. முந்தைய NFHS தரவுத்தொகுப்புகளில் இடம்பெற்றிருந்த மொத்தம் 43 முக்கியக் குறியீடுகள் 6-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பில்  நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட குறியீடுகளில், இரத்தசோகை மதிப்பீடுகள், குழந்தைகளின் இறப்பு விகிதம், பிறப்பின்போது ஏற்படும் பாலின விகிதம், சுகாதாரம் மற்றும் சமையலுக்குச் தூய்மையான எரிபொருள் கிடைப்பது போன்ற சுகாதாரம் மற்றும் சுகாதார வசதி சார்ந்த அளவீடுகள் இடம் பெற்று இருக்கும்.


கொள்கை வகுப்பவர்களுக்கு நம்பகமான தரவுகள் முக்கியமானவை என்பதால், இந்தக் குறிகாட்டிகளைத் தவிர்ப்பது இந்தியாவில் பொது சுகாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டின் நிலையை மதிப்பிடும் திறனை எவ்வாறு கட்டுப்படுத்தக்கூடும்? இந்தக் கேள்விக்குள் ஆழமாகச் செல்வதற்கு முன், தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு (NFHS) குறித்து ஒரு சுருக்கமான கண்ணோட்டத்தைப் பார்ப்போம்.


தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு (NFHS) தரவுத்தொகுப்புகளின் முக்கியத்துவம்


தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு அல்லது NFHS, கருவுறுதல், குடும்பக் கட்டுப்பாடு, தாய் மற்றும் குழந்தை நலன், இனப்பெருக்க நலம், ஊட்டச்சத்து, இரத்தசோகை போன்றவை குறித்த தகவல்களை வழங்குகிறது. NFHS கணக்கெடுப்புகளின் வரலாறு, இந்தியாவின் சமூகநலத் துறை வளர்ச்சி குறித்த விவாதங்களின் நீண்ட பாரம்பரியத்தைப் காட்டுகிறது.


1992-ஆம் ஆண்டில் முதன்முதலில் தொடங்கப்பட்ட தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு (NFHS), அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு முகமை (United States Agency for International Development (USAID)) தனது மக்கள்தொகை மற்றும் சுகாதாரக் கணக்கெடுப்பு (Demographic and Health Survey (DHS)) திட்டத்தின்கீழ் செயல்படுத்தும் உலகளாவிய கணக்கெடுப்புத் தொடரின் ஒரு பகுதியாகும்.


1992-93 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முதல் சுற்று (NFHS-1), சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் மேற்பார்வையின்கீழ் நடத்தப்பட்டது. அந்த அமைச்சகத்தின்கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனமான இந்திய மக்கள்தொகை ஆய்வுக் கழகம் (Indian Institute of Population Studies (IIPS)), இந்தக் கணக்கெடுப்பிற்கான ஒருங்கிணைப்பு முகமையாகச் செயல்பட்டது.


தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு தேசிய மற்றும் மாநில அளவிலான கருவுறுதல் விகிதம் (fertility), குடும்ப அளவு குறித்த விருப்பங்கள் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் பற்றிய தரவுகளை உருவாக்கியது. இந்தத் தரவுத்தளத்தின் நோக்கம், குடும்ப நலத் திட்டங்கள் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டு கொள்கைகளின் செயல்திறனை ஆராய்ச்சியாளர்களும் கொள்கை வடிவமைப்பாளர்களும் மதிப்பிட உதவுவது ஆகும்.



1998-99-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட 2-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு, இனப்பெருக்க ஆரோக்கியம், பெண்களின் தனிஉரிமை, குடும்ப வன்முறை, பெண்களின் ஊட்டச்சத்து, இரத்தசோகை மற்றும் உப்பு அயோடின் கலத்தல் உள்ளிட்ட சில புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட தலைப்புகளைச் சேர்த்தது. முக்கியமாக முதல் கட்டத்திற்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து இரண்டாம் கட்டத்தைத் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பொக்ரான் சோதனைகள் அதனைத் தாமதப்படுத்தின.


Pokhran சோதனைகள் என்றால் என்ன?

பொக்ரான் அணு சோதனைகள் (Pokhran Tests) என்பது, இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் போக்ரான் பகுதியில் மேற்கொண்ட அணு ஆயுதச் சோதனைகளை பற்றி குறிப்பதாகும்.


2005-06-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட 3-வது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு, இதே போன்ற சிக்கல்களைத் தொடர்ந்ததுடன், குடும்பக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள் மற்றும் உடல்நலம் குறித்த ஆண்களுக்கான கேள்விகளை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், குடும்ப வன்முறையை (Domestic Violence) அளவிடுவதற்காக 3-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்ட அணுகுமுறை, 2-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்ட முறையுடன் ஒப்பிடும்போது அளவில் வேறுபட்டதோடு விரிவானதாகவும் இருந்தது.


அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட 2015-16-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 4-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு, 2019-21-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 5-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு மற்றும் 2023-24-21-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 6-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு போன்ற ஆய்வுகளும் அதே மரபைப் பின்பற்றியுள்ளன. பல ஆண்டுகளாக, தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு தரவுகள் கருவுறுதல் போக்குகள், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் தாய்-சேய் நலம் ஆகியவை குறித்த முக்கிய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன.



“கருவுறுதல் நெருக்கடி” (fertility crisis) குறித்த விவாதங்களுக்கு மாறுதல்


இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் கருவுறுதல் குறித்த விவாதங்கள் இப்போது "கருவுறுதல் நெருக்கடி" (fertility crisis) என்ற திசையை நோக்கி நகர்ந்துள்ளன. உலகம் முழுவதும் கருவுறுதல் விகிதங்கள் (Fertility rates) குறைந்துள்ளன. 6-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு தரவுகளின்படி, இந்தியாவின் மொத்தக் கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate (TFR)), ஒரு பெண் தனது வாழ்நாளில் பெறும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை 2.0 என்ற அளவில் நிலைபெற்றுள்ளது. இது மக்கள் தொகையைச் சமநிலையில் தக்கவைக்கத் தேவையான 2.1 என்ற அளவைவிடக் குறைவானதாகும். ஒரு தலைமுறையை அடுத்த தலைமுறை சரியாக அழைத்து செல்ல தேவைப்படும் எண்ணிக்கையே 'சமநிலைத் தக்கவைப்புக்கான  (replacement level TFR) எண்ணிக்கை ஆகும்.


இந்தியாவின் நகர்ப்புறங்களில் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 1.6 ஆகவும், கிராமப்புறங்களில் 2.1 ஆகவும் உள்ளது. இருப்பினும், இதில்  மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடுகள் காணப்படுகின்றன. பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மொத்த கருவுறுதல் விகிதம் முறையே  2.7 மற்றும் 2.2 ஆகவும், அதே சமயம் அசாம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் இது முறையே 1.6 மற்றும் 1.8 ஆகவும் உள்ளது.


மேலும், இளமைபருவ கருவுறுதல் (Adolescent Fertility) இன்னும் ஒரு முக்கியமான கவலைக்குரிய பிரச்சினையாகவே உள்ளது. 6-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு தரவுகளின்படி, 15–19 வயதுடைய பெண்களில் 6.7% பேர் கணக்கெடுப்பு நடைபெற்ற நேரத்தில் ஏற்கனவே தாய்மார்களாக இருந்தனர் அல்லது கர்ப்பமாக இருந்தனர். இது 5-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பில் பதிவான 6.8%-லிருந்து மிகச் சிறிய அளவிலான குறைவாகும். இருப்பினும், 5-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பை போல் இல்லாமல், 6-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு தரவுத் தாளில் 15-19 வயதுடைய பெண்களுக்கான பதின்பருவ கருவுறுதல் விகிதம் குறித்த நேரடித் தகவல்கள் இடம்பெறவில்லை.




'கருவுறுதல் சார்ந்த நெருக்கடி' (fertility crisis) என்பது கட்டாயம் பிறப்பு விகிதக் குறைவு பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை என்று அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மாறாக, மக்கள் தாங்கள் விரும்பும் எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெறுவதற்கோ அல்லது தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்கோ இடையூறாக உள்ள தடைகள் இதில் அடங்கும். கருக்கலைப்புக்கான உரிமை உள்ளிட்ட பெண்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க உரிமைகள் தொடர்ந்து ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக இருந்துவரும் அதே வேளையில், கருவுறுதல் குறித்த விவாதங்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, குறைந்து வரும் ஊதியங்கள் மற்றும் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான செலவின் அதிகரிப்பு போன்ற சிக்கல்களும் முக்கியக் காரணிகளாக கருதப்படுகின்றன.


குழந்தை மற்றும் மகப்பேறு ஆரோக்கியம்


6-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு தகவல் அறிக்கை, குழந்தை மற்றும் தாய் நலன் குறித்த முக்கிய தகவல்களையும் வழங்கியுள்ளது. நாள்பட்ட அல்லது தொடர்ச்சியான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் விளைவாக, தங்கள் வயதுக்கு ஏற்ற உயரமின்றி இருக்கும் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் விகிதம், 2019-21-ஆம் ஆண்டுகளில் 35.5%-ஆக இருந்து தற்போது 29.3%-ஆகக் குறைந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. மேலும், குறைந்த எடையுடன் உள்ள குழந்தைகளின் விகிதம் 32.1 சதவீதத்திலிருந்து 31.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.


இருப்பினும், மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடுகள் நிலவுகின்றன. நகர்ப்புற இந்தியாவை (23.9%) விட கிராமப்புற இந்தியாவில் (30.9%) வளர்ச்சி குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பீகார் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில், இந்த விகிதங்கள் முறையே 35.6% மற்றும் 35%-ஆக அதிகமாகவே உள்ளன.


6-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு தரவுகளின்படி, அதே காலகட்டத்தில் மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்கள் 88.6%-லிருந்து 90.6%-ஆக அதிகரித்துள்ளன. அதேபோல், 12 முதல் 23 மாத வயதுடைய குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் விகிதம் (immunisation) 83.8%-லிருந்து 87.1%-ஆக உயர்ந்துள்ளது.


இந்தப் புள்ளிவிவரங்கள் முன்னேற்றத்தைக் காட்டினாலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை குறித்து கவலைகள் எழுந்துள்ளன. 4-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பில் 58.6% ஆகப் பதிவான நிலையில், 5-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பில், ஐந்து வயதுக்குட்பட்ட இந்தியக் குழந்தைகளில் 67% பேர் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களைப் பொறுத்தவரை, 5-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பில் இந்த விகிதம் 57%-ஆக இருந்தது.


மேலும், இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் ரத்த சோகையால் (anaemic) பாதிக்கப்பட்டிருந்தனர். இதற்கு முன்னர் ரத்தசோகை தொடர்பான 7 குறியீடுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், சில நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வில் அவை அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன. 6 முதல் 59 மாத வயதுடைய குழந்தைகள், 15 முதல் 49 வயதுடைய கர்ப்பிணி மற்றும் கர்ப்பிணி அல்லாத பெண்கள், 15 முதல் 49 வயதுடைய அனைத்துப் பெண்கள், 15 முதல் 19 வயதுடைய இளம் பெண்கள், 15 முதல் 49 வயதுடைய ஆண்கள் மற்றும் 15 முதல் 19 வயதுடைய இளம் ஆண்கள் ஆகியோரிடையே இரத்த சோகையின் பரவல் குறித்த குறியீடுகள் அவற்றில் இடம்பெற்றுள்ளன.


இரத்தசோகையின் தொடர்ச்சி மற்றும் அரசாங்கத்தின் பதில்


முன்பே குறிப்பிட்டதுபோல, உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ரத்தசோகை பாதிப்புக்குள்ளான மக்களைக் கொண்ட நாடாக இந்தியா தொடர்ந்து இருந்துவருகிறது. இரத்தசோகை தொடர்ந்து நிலவுவதற்குப் பல்வேறு சமூக-பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எடுத்துக்காட்டாக, ஊட்டச்சத்து மற்றும் இரத்தசோகை பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண எண்ணற்ற கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன அவற்றுள் சில:







1. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவைகள் (Integrated Child Development Services (ICDS)) 1975-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.


2.  மதிய உணவுத் திட்டம் (Mid-Day Meal Scheme) தொடங்கப்பட்டது.


3. 2018-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதமரின் முழுமையான ஊட்டச்சத்துக்கான விரிவான திட்டம் (Prime Minister’s Overarching Scheme for Holistic Nourishment (POSHAN)) தொடங்கப்பட்டது


4. இரத்தசோகை இல்லாத இந்தியா (Anaemia Mukt Bharat programme) திட்டம் 2018-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.


இது போன்ற முயற்சிகள் நடைபெற்ற போதிலும், இந்தியாவில் நலிவடைந்த குழுக்களிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்கிறது. சுகாதாரம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான பொதுச் செலவினக் குறைப்பு இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மேலும், மதிய உணவுத் திட்டத்தில் இறைச்சி மற்றும் முட்டை போன்ற உணவுப் பொருட்களைச் சேர்ப்பது குறித்த சமீபத்திய விவாதங்கள், சத்தான உணவுப் பொருட்களின் நுகர்வு குறைவதையே குறிக்கின்றன. மேலும், குடும்பங்களுக்குள் நிலவும் பாலின அடிப்படையிலான படிநிலைகளும் சத்து அதிகமாக கொண்ட உணவுப் பொருட்கள் சமமற்ற முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதற்கும் நுகரப்படுவதற்கும் காரணமாக அமைந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதிக்கின்றன.


இந்த முயற்சிகளுடன், இரத்தசோகையை எதிர்கொள்ள இரும்புச்சத்து போன்ற தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட நுண் ஊட்டச்சத்துக்களைக் கொண்டு அரிசியைச் செறிவூட்டும் முறையையும் அரசு அதிகமாக நம்பியிருந்தது. இருப்பினும், நுகர்வோர் விவகாரங்கள், 2026-ஆம் ஆண்டில் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் பிப்ரவரி மாதம் இந்தத்திட்டத்தை நிறுத்தியது. அரிசியில் இரும்புச்சத்தைச் சேர்ப்பது அறிவியல் பூர்வமற்றது, பயனற்றது மற்றும் வீணானது என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர். பல பாரம்பரிய அரிசி வகைகள் அதிக சத்துக்களையும் இரும்புச்சத்தையும் கொண்டவை. எனவே, இந்தியாவின் ஊட்டச்சத்து சார்ந்த சவால்களை எதிர்கொள்ள ஒரு பரந்த கொள்கை அணுகுமுறை தற்போது  தேவைப்படுகிறது.

தூய்மையான சமையல் எரிபொருளைப் பெறுதலின் சமூக-பொருளாதாரப் பரிமாணங்கள்


மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் மற்றும் தூய்மையான சமையல் எரிபொருள் ஆகியவற்றை வீட்டு அளவில் பெறுவது தொடர்பான குறியீடுகள் சமீபத்திய தரவுத் தொகுப்பிலிருந்து விடுபட்டுள்ளன. 5-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு தரவுகளின்படி, இந்தியாவில் 58.6% குடும்பங்களே சமையலுக்கு தூய்மையான எரிபொருளைப் பயன்படுத்தின. இதில், கிராமப்புறங்களில் இந்த விகிதம் 43.2% மட்டுமே இருந்தது. நன்கு படித்த மற்றும் இளைய வயதுடைய குடும்பத் தலைவர்களைக் கொண்ட, சிறிய குடும்ப அளவு மற்றும் அதிகச் செல்வ வளம் கொண்ட நகர்ப்புறக் குடும்பங்கள் தூய்மையான சமையல் எரிபொருளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


சமையல் எரிபொருள் பயன்பாட்டிலும் சாதி மற்றும் பொருளாதாரரீதியிலான வேறுபாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, சமூக மற்றும் பொருளாதாரரீதியாக பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குடும்பங்கள், தரமற்ற அல்லது முறைசாரா சமையல் எரிபொருட்களைப் பயன்படுத்தும் அபாயத்திற்கு அதிகமாக உள்ளன. தூய்மையற்ற சமையல் எரிபொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவது, சுவாசக் கோளாறுகள் மற்றும் இதய நோய்கள் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏறபடுத்துகிறது. இந்தப்பிரச்சினைகளால் பெண்கள் அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். ஏனெனில், அவர்கள் சமையலில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana (PMUY)) போன்ற திட்டங்கள்   செயல்படுத்தப்பட்டுள்ளன


சுகாதாரத்தைப் பொறுத்தவரை, 5-வது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு தரவுகளின்படி, மக்கள்தொகையில் 70% மட்டுமே மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதியைப் பயன்படுத்தும் வீடுகளில் வசிக்கின்றனர். ஆனால், இந்தக் குறிக்காட்டி  6-வது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பில் தவிர்க்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட குடிநீர் ஆதாரம் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள்தொகையின் விகிதம் 95.9%-இலிருந்து 96.5%-ஆக அதிகரித்துள்ள போதிலும், சுகாதாரம் குறித்த விடுபட்ட தரவுகள் முக்கிய குறைபாடாக உள்ளது.


விடுபட்ட தரவுகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை


அதே நேரத்தில், சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் எச்சரிக்கையுடன் அணுகுவது முக்கியமான நடவடிக்கையாகும். உதாரணமாக, கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருப்பதும் அல்லது அவற்றை அணுகும் வசதி இருப்பதும், அவை உண்மையில் பயன்படுத்தப்படுகின்றன என்று பொருள்படாது என்று சான்றுகள் கூறுகின்றன. அரசாங்கத் திட்டங்களின்கீழ் கட்டப்பட்ட பல கழிப்பறைகள் பாதிப்படைகின்றன அல்லது புதுப்பிக்கப்படாமல் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன. மேலும், ஒரு குடும்பத்தின் கல்வி, தொழில் மற்றும் வயது ஆகியவை கழிப்பறைகளின் பயன்பாட்டில் முக்கியப்பங்கு வகிக்கக்கூடும் என்பதையும் ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.


சுருக்கமாக, இரத்தசோகை, சுகாதாரம் மற்றும் தூய்மையான சமையல் எரிபொருள் குறித்த முக்கியக் குறிகாட்டிகள் விடுபட்டிருப்பது, இந்தியாவில் பொது சுகாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டின் நிலையை மதிப்பிடும் நமது நாட்டின் திறனைக் கட்டுப்படுத்துகிறது. கொள்கை வகுப்பவர்களுக்கு நம்பகமான தரவுகள் மிகவும் முக்கியமானவை. உதாரணமாக, இரத்தசோகையின் பாலின மற்றும் சமூகத் தன்மை காரணமாக, அதைக் மேம்படுத்தும் திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் இந்தக்காலத்தில், பிரிக்கப்பட்ட சாதி-வகுப்புத் தரவுகள் கொள்கை வகுப்பவர்களுக்குச் சிறந்த தகவல்களை வழங்கும். சுகாதார வசதி மற்றும் சமையல் எரிபொருள் தொடர்பான விவாகரங்களிலும் இது போன்ற ஒரு நடைமுறையை பொருந்தும்.


Original article : What are the potential implications of missing public health metrics in NFHS-6? -Ritwika Patgiri

Share:

டெல்லியின் பழமையான மலைமுகடு (Ridge) சீரமைக்கப்பட்டு வருகிறது — அது ஏன் முக்கியமானது? -குஷ்பூ குமாரி

 டெல்லியின் மலைமுகடு (Ridge) வனப்பகுதியை மீட்டெடுப்பதற்காக '70 லட்சம் மரங்கள் நடும் திட்டம்' (Mission 70 Lakh Plantation) என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. எந்தெந்தப் பகுதிகள் மலைமுகடு (Ridge) என வகைப்படுத்தப்பட்டுள்ளன?, மேலும் அங்கு எவ்வகையான தாவரங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன?


தற்போதைய நிகழ்வு :


தலைநகர் டெல்லியில், 70 லட்சம் மரங்களை நடும் மாபெரும் இயக்கத்தையும், நானக்புரா மலைமுகடு (Nanakpura Ridge) பகுதியை மீட்டெடுப்பதற்குமான ஒரு பிரம்மாண்டமான பிரச்சாரத்தையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், மத்திய அரசின் ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ (Ek Ped Maa Ke Naam) என்ற முன்முயற்சியின் கீழ் 2024-ம் ஆண்டில் ‘70 லட்சம் மரங்கள் நடும் திட்டம்’ (Mission 70 Lakh Plantation) தலைநகரில் செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், டெல்லி மலைமுகடு (Ridge) புத்துயிர் அளிக்கும் பிரச்சாரத்தின் (Delhi Ridge Rejuvenation Campaign) தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், மத்திய மலைமுகடு (Central Ridge) மற்றும் நானக்புரா மலைமுகட்டில் (Nanakpura Ridge) உள்துறை அமைச்சர் மரக்கன்றுகளை நட்டார்.


முக்கிய அம்சங்கள் :


1. பசுமையான மலைமுகடு பகுதியின் பல்லுயிர் பெருக்கம், மண், நீர் மற்றும் டெல்லியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், அடுத்த நான்கு ஆண்டுகளில் 6,300 ஹெக்டேர் பரப்பளவை வனப்பகுதியாக மேம்படுத்தவும், அதற்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கவும் மத்திய அரசும், டெல்லி அரசும் தீர்மானித்துள்ளன.


2. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களின் பங்களிப்பை (Jan Bhagidari) ஊக்குவிக்கும் வகையில், இந்த மாபெரும் மரநடுதல் திட்டத்தில் 20.01 லட்சம் மரங்கள், 37.07 லட்சம் புதர்ச்செடிகள் மற்றும் 92,960 மூங்கில் கன்றுகள் நடப்படுவதுடன், பள்ளிகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் (Resident Welfare Associations (RWA)), நிறுவனங்கள் மற்றும் குடிமக்களுக்கு 12.04 லட்சம் கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


3. டெல்லி அரசின் 'டெல்லி மலைமுகடு ஓர் அறிமுகம்' (An Introduction to the Delhi Ridge) என்ற ஆவணத்தின்படி, “முகடு (Ridge) என்பது ஒரு குறிப்பிட்ட தூரம் வரை நீண்டுள்ள, தொடர்ச்சியான உயர்ந்த நிலப்பகுதியாகும் (மலைத்தொடர் போன்ற அமைப்பு). டெல்லி மலைமுகடு என்பது, குஜராத்திலிருந்து ராஜஸ்தான் வழியாக ஹரியானா-டெல்லி வரை நீண்டுள்ள ‘ஆரவல்லி மலைத்தொடர்கள்’ எனப்படும் இந்தியாவின் பழைமையான மற்றும் தொன்மையான மலைத்தொடர்களின் வடக்கு நோக்கிய நீட்சியாகும்.”


4. 2001-ம் ஆண்டின் டெல்லி மாபெரும் திட்டம் (Master Plan of Delhi), டெல்லி மலை முகட்டினை அடையாளம் கண்டு நான்கு மண்டலங்களாகப் பிரித்தது. அவை,  வடக்கு, மத்திய, தென் மத்திய மற்றும் தெற்கு ஆகியவை ஆகும். டெல்லி தேசிய தலைநகரப் பகுதி (NCT of Delhi) அரசின் வனத்துறையால் வழங்கப்பட்டபடி, இந்த மலைமுகட்டின் வெவ்வேறு பகுதிகளின் நிலைகள் பின்வருமாறு குறிப்பிட்ட்டுள்ளது. அவை,


(i) வடக்கு மலைமுகடு (Northern Ridge) : இது டெல்லி பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைந்துள்ள வடக்கு மலைமுகடு, 87 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.


(ii) மத்திய மலைமுகடு (Central Ridge) : மத்திய மலைமுகடு 864 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.


(iii) தென்-மத்திய மலைமுகடு (South-Central Ridge) : சஞ்சய் வனம் (Sanjay Van) உட்பட 626 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட தென்-மத்திய மலைமுகடு, மெஹ்ரௌலி (Mehrauli) பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது.


(iv) தெற்கு மலைமுகடு (Southern Ridge) : தெற்கு மலைமுகடு சுமார் 6200 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.


5. டெல்லி மலைமுகடு (Delhi Ridge) என்பது நகரின் பழமையான ஆரவல்லி மலைத்தொடரின் இறுதிப் பகுதியாகவும், சூழலியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மண்டலமாகவும் விளங்குகிறது. இது தலைநகர் டெல்லிக்கு ஒரு பசுமை நுரையீரலாகவும் (green lung), பாலைவனமாதல் மற்றும் மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களுக்கு எதிரான ஒரு இயற்கை அரணாகவும் செயல்படுகிறது.


6. கடந்த மே மாதம், தலைநகர் டெல்லியின் மிக முக்கியமான சூழலியல் மண்டலங்களில் ஒன்றான மத்திய மலைமுகடு சுமார் 670 ஹெக்டேர் பரப்பளவை டெல்லி அரசு “பாதுகாக்கப்பட்ட காடாக” (Reserved Forest) அறிவித்தது. மேலும், அங்கு சிறப்பு வனங்களை (காடுகளை) உருவாக்கி, “உள்ளூர்” மர வகைகளை நடுவதற்கான திட்டங்களையும் அதிகாரிகள் வகுத்துள்ளனர்.


பொது முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு காடு அல்லது தரிசு நிலத்தையும் பாதுகாக்கப்பட்ட காடுகளாக அறிவிக்கும் அதிகாரம் மாநில அரசின் கைகளில் உள்ளது. பாதுகாக்கப்பட்ட காடுகளில், உரிய அனுமதி பெறப்படாவிட்டால் அனைத்து நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.


1927-ம் ஆண்டு இந்திய வனச் சட்டத்தின் (Indian Forest Act) 4-ம் பிரிவின் கீழ், ஒரு பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க மாநில அரசால் ஒரு தொடக்க அறிவிப்பாக (preliminary notification) வெளியிடப்படுகிறது. மேலும், அனைத்து உரிமைகளையும் ஏற்றுக்கொள்வதன் மூலமோ அல்லது நிராகரிப்பதன் மூலமோ அனைத்து உரிமைகளையும் தீர்த்து வைப்பதற்காக ஒரு வனத் தீர்வு அதிகாரி (Forest Settlement Officer(FSO)) நியமிக்கப்படுகிறார். அச்சட்டத்தின் 20-ம் பிரிவின் கீழ், அந்த நிலப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவித்து மாநில அரசால் இறுதி அறிவிப்பு வழங்கப்படுகிறது.


7. இருப்பினும், மத்திய மலைமுகடு (Central Ridge) ஏற்கனவே ஒரு பாதுகாக்கப்பட்ட வனமாகவே இருந்தது. இது 1927-ம் ஆண்டின் இந்திய வனச் சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ் 1994-ல் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளைப் போலவே, ஒரு 'தொடக்க' அறிவிப்பைத் தொடர்ந்து உரிமைகள் குறித்த ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும். அதன் பிறகு, 1927-ம் ஆண்டின் இந்திய வனச் சட்டத்தின் பிரிவு 20-இன் கீழ் வெளியிடப்படும் ஒரு 'இரண்டாவது' அறிவிப்பு இந்த நிலைக்கு இறுதி தீர்வாக அமைகிறது.


8. 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியிருந்தாலும், இந்த இரண்டாவது அறிவிப்பு, நடைபெற வேண்டிய ஒரு செயல்முறையை நிறைவு செய்கிறது. ஒரு பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி அறிவிப்பு, அப்பகுதியை ஒழுங்குபடுத்துவதற்கும், ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதற்கும், வன நிலங்களைச் சேதப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் வனத்துறைக்கு ஒரு உறுதியான அடித்தளத்தை வழங்குகிறது.


9. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிக்கப்பட்ட மலைமுகடு பகுதிகளில், பொருத்தமான காலி நிலம் கிடைக்கும் இடங்களில் எல்லாம், அந்தந்தப் பகுதிக்கே உரிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மர வகைகள் நடப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. இதில், முன்மொழியப்பட்ட மர வகைகளில் வேம்பு, அரசமரம், சீஷம், நாவல், புளி மற்றும் மாமரம் ஆகியவை அடங்கும்.



10. இது தவிர, மேற்கு வனப் பிரிவின் கீழ் உள்ள மத்திய மலைமுகட்டில் தீர்த்தங்கர வனம், ரிது வனம், ராசி வனம் மற்றும் பஞ்சவடி வனம் ஆகிய சிறப்பு வனங்களை மேம்படுத்தவும் வனத்துறை திட்டமிட்டுள்ளது, இதனைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்த்துள்ளனர்.


மத்திய மலைமுகடு பகுதியில் நடப்பட்ட மர வகைகள் குறித்த பகுப்பாய்வு


1. மத்திய மலைமுகடு பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வன ஆய்வு நிலைகள் தொடர்பாக, டெல்லி வனப் பகுதி மற்றும் வனவிலங்குத் துறையின் மரநடுதல் பதிவேடுகளை 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆய்வு செய்ததில், நடப்பட்ட குறைந்தபட்சம் 22 மர வகைகளில், ஏழு மட்டுமே மலைமுகடு பகுதியின் தனித்துவமான வகைகள் என்பது தெரியவந்துள்ளது.



2. டெல்லி மலைத்தொடர், ஆங்காங்கே மரங்கள் மற்றும் முள் புதர்கள் காணப்படும் ஒரு வெப்பமண்டல வறண்ட முள் காடு ஆகும். இங்குள்ள பூர்வீகத் தாவரங்கள், வளர்ச்சி குன்றிய நிலை, முள் போன்ற பாகங்கள், மெழுகு பூசப்பட்ட, சதைப்பற்றுள்ள மற்றும் மென்மயிர் நிறைந்த இலைகள் போன்ற வறட்சிக்காலத் தகவமைப்புகளைக் கொண்டுள்ளன.


3. மண்ணின் தன்மை சிறப்பாகவும், போதுமான ஈரப்பதம் மற்றும் மட்கிய சத்து (humus) கொண்டதாகவும் உள்ள பகுதிகளில், தாக் (Butea monosperma), கனியார் (Bauhinia purpurea), பிலு (Salvadora persica) போன்ற அகன்ற இலை மர வகைகளும் நன்கு செழித்து வளரும். பொதுவாக 'காட்டின் சுடர்' (flame of the forest) என்று அழைக்கப்படும் உள்ளூர் தாக் அல்லது பலாஸ், மண்ணின் களிமண் தன்மைக்கான ஒரு குறியீடாகத் திகழ்கிறது.


4. நடப்படும் ஒன்பது தாவர இனங்கள், மூன்று அயல்நாட்டு வகைகள் உட்பட, மலைமுகடு சூழல் மண்டலத்திற்குப் பொருத்தமற்றவையாகக் கருதப்படுகின்றன. அவற்றில் ஆறு, மலைமுகடு பகுதியில் இயற்கையாகக் காணப்படாத உள்ளூர் மர வகைகள் ஆகும். ஆனால், தொடர்ச்சியான நீர்ப்பாசனம் மற்றும் ஊட்டச்சத்து வழங்கப்பட்டால் மட்டுமே அவை ஓரளவே தகவமைத்துக் கொள்ளக்கூடியவை எனக் கருதப்படுகின்றன.


5. 2021 மற்றும் 2025-க்கு இடையில் 'மத்திய மலைமுகடு' (Central Ridge) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மரக்கன்றுகள் நடும் இயக்கங்களின் இனப் பட்டியல்களில், தாக் (Butea monosperma), கைர் (Acacia senegal), ஹோலோப்டெலியா இன்டெக்ரிஃபோலியா (Holoptelea integrifolia) மற்றும் காசியா ஃபிஸ்டுலா (Cassia fistula) போன்ற, மலைமுகடு பகுதிக்கு ஏற்ற ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பூர்வீகத் தாவரங்கள் அடங்கியுள்ளன. இந்த மர வகைகள் இயற்கையாகவே வறண்ட இலையுதிர் சூழல்களுக்குத் தகவமைத்துக் கொண்டவை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஆரவல்லி-மலைமுகடு தாவரக் கூட்டமைப்பின் ஒரு பகுதியாகவும் விளங்குகின்றன.


6. நடப்பட்ட அயல்நாட்டு மர வகைகளில், சாசேஜ் மரம் (கிகேலியா ஆப்ரிகானா-Kigelia africana), ஜகரண்டா (ஜகரண்டா மிமோசிஃபோலியா-Jacaranda mimosifolia) மற்றும் காட்டு ஜலேபி (பித்தசெல்லோபியம் டல்ஸ்-Pithecellobium dulce) ஆகியவை அடங்கும். கடம்பா (நியோலமார்க்கியா கடம்பா-Neolamarckia cadamba), கச்னார் (பௌஹினியா வரியேகாட்டா-Bauhinia variegata) மற்றும் பக்கைன் (மெலியா அசெடராக்-Melia azedarach) போன்ற மற்றவை மலைமுகடு சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு இயல்பானவை அல்ல. மேலும், இவ்வகை மரங்கள் நன்றாக வளர்வதற்கு வழக்கமாக அதிக ஈரப்பதம் தேவைப்படுகிறது.


7. மூன்றாவது பிரிவில், மலைமுகடு சுற்றுச்சூழல் அமைப்பில் இயற்கையாக அங்கம் வகிக்காத இந்தியப் பூர்வீக இனங்களான ஆலமரம் (Ficus benghalensis), அரசமரம் (Ficus religiosa), செமல் (Bombax ceiba) மற்றும் வில்வம் (Aegle marmelos) ஆகியவை அடங்கும். இம்மரங்கள் பல்வேறு சூழல்களில் வளரக்கூடியவை என்றாலும், இவை இயற்கையாகவே 'மலைமுகடு' சூழலமைப்பைச் சாராத, வேறு வகையான காடுகளைச் சேர்ந்தவையாகும்.


8. இதற்கிடையில், வன மற்றும் வனவிலங்குத் துறை (Forest and Wildlife Department), ஜூன் 22 அன்று வெளியிட்ட ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையில், தெற்கு மலைமுகட்டில் (Southern Ridge) சூழலியல் மறுசீரமைப்புக் கொள்கைகளைப் பின்பற்றி ஒரு பெரிய அளவிலான மரக்கன்று நடும் திட்டம் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளது.

 

ஆக்கிரமிப்பு மர வகைகள் (Invasive species)

டெல்லி அரசாங்கத்திற்காக வன ஆராய்ச்சி நிறுவனம் (Forest Research Institute (FRI)) சமீபத்தில் வெளியிட்ட பத்தாண்டு கால செயல் திட்டத்தில் (2026-27 முதல் 2036-27 வரை), மத்திய மலைமுகட்டின் சில பகுதிகளில் ஆக்கிரமிப்பு மர வகைகள் (Invasive species) 44.13% சார்பு ஆதிக்கத்தைக் கொண்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ப்ரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா (Prosopis Juliflora) மற்றும் லான்டானா கேமரா (Lantana Camara) ஆகியவை இந்த மலைமுகட்டில் காணப்படும் முக்கிய ஆக்கிரமிப்பு இனங்களாகும்.


ஒரு ஆக்கிரமிப்பு மர வகைகள் (Invasive species) என்பது வேகமாகப் பரவி, சூழல் மண்டலங்களைச் சீர்குலைத்து, பூர்வீகத் தாவரங்களை இடம்பெயரச் செய்வதன் மூலம் சுற்றுச்சூழல், பொருளாதாரம் அல்லது உடல்நலம் சார்ந்த பாதிப்புகளை விளைவிக்கும் ஒரு அயல்நாட்டு மர வகையாகும்.



டெல்லி வனத்துறை பதிவுகளின்படி, உள்ளூரில் விலாயதி கிக்கர் (Vilayati Kikar) என்று அழைக்கப்படும் மெக்சிகன் மெஸ்கிட் இனமான புரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா (Prosopis Juliflora), காலனித்துவ காடு வளர்ப்பின்போது அறிமுகப்படுத்தப்பட்டு, அந்த மலைத்தொடரில் பரந்த ஒற்றைப்பயிர் சாகுபடியை உருவாக்கியுள்ளது.


அமெரிக்காவின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட லான்டானா கேமரா (Lantana camara), தற்போது இந்தியா முழுவதும் பரவலாக வளர்கிறது. அதன் வண்ணமயமான பூக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இது, காடுகள், விளைநிலங்கள் மற்றும் தரிசு நிலங்கள் முழுவதும் பரவியுள்ளது. இது உள்ளூர் தாவரங்களுடன் போட்டியிடுவதோடு, பல்லுயிர் பெருக்கத்தையும் பாதிக்கிறது.


மலைமுகட்டைப் பாதுகாப்பதற்கான முன்னெடுப்புகள் :


1. 1980-களின் நடுப்பகுதியில் ஓரிரு அரசு சாரா அமைப்புகளால் இந்த மலைமுகட்டைப் பாதுகாப்பதற்கான தீவிர முயற்சிகள் தொடங்கப்பட்டன. பாதுகாப்பை வலுப்படுத்த, டெல்லி மலைமுகட்டின் மேலாண்மை முறையைப் பரிந்துரைப்பதற்காக, லவ்ராஜ் குமார் (Lovraj Kumar) தலைமையில் ஒரு குழுவை டெல்லி அரசு நியமித்தது.


2. மேலும், மலைமுகடு பகுதியை 'பாதுகாக்கப்பட்ட காடுகளாக' (Reserved Forests) அறிவிக்கும் செயல்முறையைத் தொடங்குமாறு டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எம்.சி. மேத்தா vs இந்திய ஒன்றியம் மற்றும் பிறர் (M.C. Mehta vs Union of India and Others) வழக்கில், 1995-ம் ஆண்டில் டெல்லி மலைமுகட்டைப் பாதுகாப்பதற்காக ஒரு மலைமுகடு மேலாண்மை வாரியத்தை (Ridge Management Board) அமைக்குமாறு உச்சநீதிமன்றம் டெல்லி அரசை வலியுறுத்தியது.


3. எம்.சி. மேத்தா வழக்கின் வழிகாட்டுதல்கள், 1995 அக்டோபர் 6-ம் தேதி தலைமைச் செயலாளரின் தலைமையில் மலைமுகடு மேலாண்மை வாரியம் (Ridge Management Board) அமைக்க வழிவகுத்தன. இந்த வாரியத்தில் தலைவர் உட்பட 8 உறுப்பினர்கள் கொண்டிருந்தனர்.

4. மலைமுகடு மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துவதற்காக மட்டுமல்லாமல், மலைமுகட்டைப் பாதுகாப்பதற்காகவும், தானாக முன்வந்து தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டது.


உருவவியல் மலைமுகடு (Morphological Ridge) என்றால் என்ன?


1. உருவவியல் மலைமுகடு (Morphological Ridge) என்பது புவியியல்ரீதியாக நீட்டிக்கப்பட்ட ஒரு மலைமுகடுப் பகுதியாகும். இது அதிகாரப்பூர்வமாக வன நிலமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் வழங்கப்பட்ட பல உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்கீழ் பாதுகாப்பைப் பெற்றுள்ளது.


2. இது, அங்கீகரிக்கப்பட்ட மலைமுகடுப் பகுதியைப் போன்றே, உருவவியல் மலைமுகடு பகுதியும் பாறை நிறைந்த நிலப்பரப்பையும் தாவரங்களையும் கொண்டுள்ளது. இந்த நிலவடிவ மலைமுகட்டின் எல்லையானது, இந்தியப் புவியியல் ஆய்வுத் துறையின்கீழ் மேற்கொள்ளப்பட்ட, 2006-ம் ஆண்டின் டெல்லி நில அதிர்வு மண்டல வரைபடத்தை அடிப்படையாகக் கொண்ட டெல்லி வனத்துறை வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டது.


3. இப்பகுதி, அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட மலைமுகட்டின் அதே இயற்பியல் மற்றும் சூழலியல் அம்சங்களைக் கொண்டுள்ளது. அதாவது, பாறை நிறைந்த ஆரவல்லி மலை வெளிப்பாடுகள், ஆழமற்ற மண் அடுக்குகள் மற்றும் வறண்ட முள் வனத் தாவரங்களைக் கொண்டுள்ளது. இந்த நிலம் வருவாய்ப் பதிவேடுகளில் பெரும்பாலும் “பயிரிட முடியாத பாறைக் குன்று” (gair mumkin pahad) என்று பதிவு செய்யப்படுகிறது.


4. உருவவியல் மலைமுகடுப் பகுதியானது, சிதறிய மரங்கள், முட்புதர்கள் மற்றும் வறட்சியைத் தாங்கும் தாவர இனங்களைக் கொண்ட வெப்பமண்டல வறண்ட முள் காடுகளை முதன்மையாகக் கொண்டுள்ளது. இங்குள்ள பூர்வீக இனங்கள் பொதுவாக வளர்ச்சி குன்றியவையாகக் காணப்படுகின்றன. உதாரணமாக, டெல்லியைப் பூர்வீகமாகக் கொண்ட பிஸ்தேந்து (bistendu) மற்றும் அகன்ற இலைகள் கொண்ட தாக் (dhak) ஆகிய இரண்டும் இத்தகைய பகுதிகளில் சாதாரணமாகக் காணப்படுகின்றன.

5. மலைமுகடு மற்றும் உருவவியல் மலைமுகடு ஆகியவற்றில் வடக்கிலிருந்து தெற்காகச் செல்லும்போது, ​​மண் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தாவரங்கள் மாறுபடுகின்றன. தெற்கு மலைமுகடு வறண்டதாகவும், கரடுமுரடானதாகவும், மெல்லிய மண் மற்றும் வெளிப்பட்ட பாறைகளைக் கொண்டதாகவும் உள்ளது. அதேசமயம், மத்திய மற்றும் வடக்கு மலைமுகடுகளில் சற்றே அதிக நீரைத் தக்கவைக்கும் தன்மையுள்ள மண்ணும், அடர்த்தியான தாவரங்களும் காணப்படுகின்றன.


Original article : Delhi’s ancient ridge is being restored— here’s why it matters. -Khushboo Kumari

Share:

சட்லஜ் (Satluj) திரைப்படம் குறித்த சர்ச்சையின் பின்னணியில் உள்ள சட்டரீதியான கேள்விகள் குறித்து ... -ரிஸ்மி லியா எம்.

 ஒரு திரைப்படத்தை நீக்குமாறு ஓடிடி தளத்திற்கு (OTT platform) அரசாங்கம் சட்டப்பூர்வமாக உத்தரவிட முடியுமா? அதற்கான என்னென்ன சட்டப் பாதுகாப்புகள் உள்ளன? இந்தத் தடை உத்தரவை இரகசியமாக வைத்திருக்க முடியுமா? அதற்கான சட்டரீதியான தீர்வுகள் என்ன?


தற்போது வரையிலான நிலவரம் குறித்து : சட்லஜ் (Satluj) திரைப்படத்தை வெளியிட்ட உடனேயே ZEE5 தனது ஓடிடி தளத்திலிருந்து (OTT platform) சேவைகளை நீக்கியுள்ளது. அரசாங்கம்தான் இந்த நீக்கத்திற்கு உத்தரவிட்டது என திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூறியுள்ள நிலையில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு குழு, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69A பிரிவின்கீழ் அப்படத்தை ஆய்வுசெய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதிகாரப்பூர்வ தடை உத்தரவு எதுவும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.


ZEE5 தளத்திலிருந்து சட்லஜ் திரைப்படம் ஏன் நீக்கப்பட்டது? இதுவரை நமக்குத் தெரிந்த தகவல்கள் என்ன?


ஹனி ட்ரெஹான் இயக்கி, தில்ஜித் தோசாஞ்ச் நடித்த 'சட்லஜ்' திரைப்படம், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்துடனான (Central Board of Film Certification (CBFC)) கருத்து வேறுபாடு காரணமாக பல வருட தாமதங்களுக்குப் பிறகு, ஜூலை 3 அன்று ZEE5-ல் வெளியானது. இருப்பினும், வெளியான இரண்டு நாட்களுக்குள்ளேயே, இந்தத் தளம் தனது இந்தியத் தளத்திலிருந்து இப்படத்தை நீக்கியது. அதே வேளையில், 'ZEE5 Global' மூலம் சர்வதேச அளவில் இப்படத்தை ஒளிபரப்புவதைத் தொடர்ந்து மேற்கொண்டது.


“தற்போதைய நிகழ்வுகள்” காரணமாக திரைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக ZEE5 பதிலளித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில், அந்த ஸ்ட்ரீமிங் தளம் குறிப்பிட்டதாவது, “தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை ‘சட்லஜ்’ திரைப்படம் இந்தியாவில் கிடைக்காது. உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, கூடிய விரைவில் இப்படத்தை எங்கள் பார்வையாளர்களுக்கு மீண்டும் கொண்டுவர, பொருத்தமான அனைத்து வழிகளையும் ஆராய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.”


பல வருட சர்ச்சைகளுக்குப் பிறகு இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியானது. முதலில் இந்தியாவில் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இப்படம், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடம் (CBFC) தடைகளைச் சந்தித்தது. தகவல்களின்படி, படத்திற்குச் சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு, இந்த வாரியம் மொத்தம் 127 காட்சிகளை நீக்கப் பரிந்துரைத்தது. இந்தத் தாமதங்கள் இறுதியில் தயாரிப்பாளர்களைப் பல வெளியீட்டுத் திட்டங்களை ஒத்திவைக்க நிர்பந்தித்தன. இதனால், இப்படம் திரையரங்குகளில் வெளியாகவே இல்லை.



பஞ்சாபில் கிளர்ச்சி நிலவிய காலகட்டத்தை மையமாகக் கொண்டு, செயற்பாட்டாளர் ஜஸ்வந்த் சிங் கல்ராவின் வாழ்க்கையாக இந்தப் படம் அமைக்கப்பட்டுள்ளது. 1980கள் மற்றும் 1990களில் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளின் போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் கட்டாயக் காணாமல் போதல்கள், சட்டவிரோதக் காவலில் வைப்பு மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் (extrajudicial killings) குறித்த குற்றச்சாட்டுகளை இது ஆராய்கிறது.


ஒரு திரைப்படத்தை நீக்குமாறு ஓடிடி தளத்திற்கு அரசாங்கம் சட்டப்பூர்வமாக உத்தரவிட முடியுமா?


திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களைப் போலல்லாமல், ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியிடப்படும் உள்ளடக்கத்திற்கு, 1952-ம் ஆண்டின் திரைப்படச் சட்டத்தின் (Cinematograph Act) கீழ் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடம் (CBFC) இருந்து முன்-சான்றிதழ் பெறத் தேவையில்லை. மாறாக, ஓடிடி தளங்கள் 2021-ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப (இடைத்தரகர் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள்) விதிகளின் (Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules) கீழ் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.


இருப்பினும், தகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000-ன் பிரிவு 69A, இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, இந்தியாவின் தற்காப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவுகள் மற்றும் பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் செயல்கள், அல்லது தண்டனைக்குரிய குற்றம் நிகழ்வதைத் தடுப்பது உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட காரணங்களுக்காக இணைய உள்ளடக்கத்தைத் தடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இருப்பினும், எந்தவொரு உள்ளடக்கத்தையும் தடுப்பதற்கு முன் அரசு சட்டப்பூர்வ நடைமுறைகளையும் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.





இணைய உள்ளடக்கத்தைத் தடுப்பதற்குமுன் என்ன சட்டப்பூர்வ பாதுகாப்பு வழிமுறைகள் பொருந்தும்?


வழக்கறிஞரும் இணைய சுதந்திர அறக்கட்டளையின் (Internet Freedom Foundation) நிறுவனருமான அபர் குப்தாவின் கூற்றுப்படி, சட்லஜ் திரைபடத்திற்கு எதிரான நடவடிக்கை, தகவல் தொழில்நுட்ப விதிகள்-2021 உடன் சேர்த்துப் பரிந்துரைக்கப்படும் பிரிவு 69A-இன் கீழ் தொடங்கப்பட்டிருந்தால், அரசாங்கம் சில "செயல்முறைகள் மற்றும் பாதுகாப்புகளை" பின்பற்ற வேண்டும். பிரிவு 69A(1)-ன்கீழ் உள்ள சட்டப்பூர்வ காரணங்களில் ஒன்றாக உள்ளடக்கம் எவ்வாறு அமைகிறது என்பதை விளக்கும் காரணங்களுடன் கூடிய எழுத்துப்பூர்வ உத்தரவு, வெளியீட்டாளர் தனது தரப்பை எடுத்துரைக்க ஒரு வாய்ப்பு மற்றும் நியமிக்கப்பட்ட குழுவின் மறுஆய்வு ஆகியவை இதில் அடங்கும் என்று குப்தா விளக்குகிறார்.


ஷ்ரேயா சிங்ஹால் vs இந்திய ஒன்றியம்-2015 (Shreya Singhal vs Union of India) வழக்கில், பதிவு செய்யப்பட்ட காரணங்கள் மற்றும் விசாரணைக்கான வாய்ப்பு உள்ளிட்ட இந்த நடைமுறைப் பாதுகாப்புகள் சட்டக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருந்ததால், உச்சநீதிமன்றம் பிரிவு 69A-ஐ உறுதி செய்தது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். தகவல் தொழில்நுட்ப விதிகள்-2021-ன் சில பிரிவுகளின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை டெல்லி உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது என்றும், அரசாங்கம் இந்தப் பிரிவுகளை இன்னும் பயன்படுத்தும் முறைக்கு எதிராகக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிடுகிறார்.


தடை உத்தரவுகள் (blocking orders) இரகசியமாக வைக்கப்பட முடியுமா?


ஒரு உள்ளடக்கத்தை நீக்குவதற்கான உத்தரவுக்கான காரணங்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமா என்பது முக்கிய கேள்விகளில் ஒன்றாகும். தடை விதிகளின் (Blocking Rules) 16-வது விதியானது, இரகசியத்தன்மைக்கான ஒரு பிரிவைக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்துகூட தடை உத்தரவுகளை மறைத்து வைக்க, அரசாங்கம் இந்தப் பிரிவை அதிகளவில் நம்பியுள்ளது. இரகசியமாக வைக்கப்படும் ஒரு முடக்குதல் உத்தரவை நீதிமன்றத்தில் அர்த்தமுள்ள வகையில் சவால் செய்ய முடியாது என்பதால், ஸ்ரேயா சிங்கால் வழக்கில் உச்சநீதிமன்றம் 69A பிரிவை உறுதிசெய்த அடிப்படையை இது பலவீனப்படுத்துகிறது.


தனுல் தாக்கூர் vs இந்திய ஒன்றியம்-2022 (Tanul Thakur vs Union of India) வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை குப்தா சுட்டிக்காட்டுகிறார். அந்த வழக்கில், ஒரு கேலிச்சித்திர இணையதளத்தை உருவாக்கியவருக்கு எதிராக இரகசியத்தன்மை குறித்து வாதிட முடியாது என்பதை அங்கீகரித்து, முடக்குதல் உத்தரவு மற்றும் தீர்ப்புக்குப் பிந்தைய விசாரணை ஆகியவற்றை அந்த இணையதளத்தை உருவாக்கியவருக்கு வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


தடை உத்தரவுக்கான அணுகல் இல்லாமல், திரைப்படத் தயாரிப்பாளர்களால் அந்த முடிவை திறம்பட எதிர்த்து வழக்குத் தொடர முடியாது. மேலும், கே.எஸ். புட்டசாமி vs இந்திய ஒன்றியம்-2017 (K.S. Puttaswamy vs Union of India) மற்றும் அனுராதா பாசின் vs இந்திய ஒன்றியம்-2020 (Anuradha Bhasin vs Union of India) போன்ற தீர்ப்புகளில் வகுக்கப்பட்டுள்ள அரசியலமைப்புரீதியான விகிதாசாரச் சோதனையை இந்தத் தடை பூர்த்தி செய்கிறதா என்பதை மதிப்பிடுவதற்கு நீதிமன்றங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருப்பதில்லை.


இந்த வழக்கு, ஓடிடி தளங்களின் ஒழுங்குமுறையில் ஒரு பரந்த மாற்றத்தைக் குறிக்கிறதா?


நடைமுறையில், இணையவழியில் திரைப்படங்கள் வெளியான பிறகு அவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக நிர்வாகம் தனது தடுப்பு அதிகாரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. திரைப்படச் சட்டத்தின்கீழ் முன்-சான்றிதழ் பெறுவதிலிருந்து, பிரிவு 69A மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகள் மூலமான வெளியீட்டிற்குப் பிந்தைய நிர்வாகக் கட்டுப்பாட்டிற்கு ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஓடிடி தளங்கள் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (CBFC) சான்றிதழின் வரம்பிற்குள் வராததால், இந்த நிர்வாகத் தடுப்பு அதிகாரங்கள், திரைப்படச் சான்றிதழுடன் தொடர்புடைய வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டரீதியான பாதுகாப்புகள் இல்லாத ஒரு இணை தணிக்கை அமைப்பாகச் செயல்படும் அபாயத்தைக் கொண்டுள்ளன.


குப்தா குறிபிடுவதாவது, “நிர்வாகம், தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-இன் பிரிவு 69A மற்றும் பகுதி III-ஐ, சட்டப்பூர்வ தரநிலைகள், பொது விசாரணைகள் அல்லது மேல்முறையீட்டுத் தீர்வுகள் இல்லாத ஒரு மாற்றுத் தணிக்கை வாரியமாக மறுபயன்பாடு செய்துள்ளது.”


திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு என்னென்ன சட்டரீதியான தீர்வுகள் உள்ளன?


ஒரு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால், திரைப்படத் தயாரிப்பாளர்கள் அரசியலமைப்பின் 226-வது பிரிவின்கீழ் ஒரு நீதிப்பேராணை மனுவின் மூலம் உயர்நீதிமன்றத்தில் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம். அந்த உத்தரவு, அரசியலமைப்பின் 69A பிரிவுக்கு முரணானது என்றும், பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் எந்தவொரு தொழிலையும் செய்வதற்கான அல்லது எந்தவொரு தொழில், வர்த்தகம் அல்லது வணிகத்தை மேற்கொள்வதற்கான உரிமையை வழங்கும் அரசியலமைப்பின் 19(1)(a) மற்றும் 19(1)(g) பிரிவுகளை மீறுவதாகவும் கூறி சவால் விடுக்கலாம்.


குப்தாவின் கூற்றுப்படி, ஸ்ரேயா சிங்கால் வழக்கானது, உள்ளடக்கத்தைத் தடுக்கும் உத்தரவுகளுக்கு எதிராக நீதிமன்ற மறுஆய்வு கோரும் உரிமையை வெளிப்படையாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், தயாரிப்பாளர்கள் அந்தத் தடை உத்தரவின் விவரங்களை வெளிப்படுத்தக் கோருவதுடன், துறைகளுக்கு இடையிலான குழுவின் (Inter-Departmental Committee) விசாரணைகளில் தங்கள் ஆட்சேபனையைப் பதிவு செய்தவாறு பங்கேற்க வேண்டும் என்றும், தகவல் தொழில்நுட்ப விதிகளின்கீழ் வழங்கப்பட்டுள்ள மறுஆய்வு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.


Original article : Legal questions behind the row over Satluj movie. -Rizmi Lia M.

Share: