மகாராஷ்டிரா, அசாம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் புதிய உயர்நீதிமன்ற வளாகங்களைக் கட்டத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியா ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நீதிமன்றங்களை இடநெருக்கடி மிகுந்த 'நீதித்துறை வளாகங்களின் நெரிசல்நிலையை (Judicial slumisation) தொடர்வதா அல்லது செயல்திறனை மேம்படுத்தும் வகையில் அவற்றை வடிவமைப்பதா?.
அசாம், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் புதிய உயர் நீதிமன்ற வளாகங்களைக் கட்டுவதற்கான திட்டம், வேகமாக மாறிவரும் இந்தியாவிற்கு ஏற்ப நீதிமன்றங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்ய ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. மேலும், நீதிமன்றக் கட்டிடங்களைச் சிறந்த முறையில் வடிவமைப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமைகிறது. இதன் மூலம் வழக்குத் தாமதங்களைக் குறைக்கவும், நீதித்துறை மீதான மக்களின் பார்வையை மேம்படுத்தவும் முடியும் என்கின்றனர்.
இந்தியாவின் நீதிமன்றக் கட்டிடங்கள், அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு தெளிவான அதிகாரப் படிநிலையைக் காட்டும் வகையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்டன. இன்றைய காலக்கட்டத்தைவிட மிகக் குறைவான வழக்குகளே இருந்த காலத்தில் இந்த நீதிமன்றங்கள் கட்டப்பட்டன. உதாரணமாக, 1960-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வெறும் 14 நீதிபதிகளும், 2,656 நிலுவையில் உள்ள வழக்குகளும் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று, 34 நீதிபதிகளும் சுமார் 86,000 நிலுவை வழக்குகளும் உள்ளன. அதேபோல், உயர்நீதிமன்றங்களில் ஒட்டுமொத்தமாக 63 லட்சம் வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் 4.6 கோடிக்கும் அதிகமான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இந்த அதிகப்படியான வழக்குகளைக் கையாளுவதற்காக, நீதிமன்றங்கள் எந்தவொரு முறையான திட்டமிடலும் இன்றி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. அறிஞர் பாட்ரிசியா பிராங்கோ இதனை "'நீதித்துறை வளாகங்களின் நெரிசல்நிலை" என்று அழைக்கிறார். இத்தகைய விரிவாக்கத்தால் நீதிமன்றங்கள் நெரிசல் மிகுந்த இடங்களாக மாறுகின்றன. அங்கு வழக்கறிஞர்களும் பார்வையாளர்களும் நீதிமன்ற அறைகளை அடைய நீண்ட, கூட்ட நெரிசலான தாழ்வாரங்கள் வழியாக முண்டியடித்துச் செல்ல வேண்டியுள்ளது. உள்ளே, குறைபாடான ஒலி அமைப்பு காரணமாக நீதிபதிகள் பேசுவதைக் கேட்பது கடினமாக உள்ளது, மேலும் மக்கள் நெரிசலான அறைகளில் சத்தமாகப் பேச வேண்டிய சூழல் நிலவுகிறது. ஒரு நீதிமன்ற வளாகம் சரியான திட்டமிடலுடன் வடிவமைக்கப்பட்டால், அது மக்களுக்கு ஒரு வரவேற்புணர்வையும், தங்கள் தரப்பு நியாயங்கள் கேட்கப்படுகின்றன என்ற நம்பிக்கையையும் தரும் என்றும் இது நீதித்துறை மீதான மக்களின் நம்பகத்தன்மையை மேம்படுத்த உதவும் என்றும் கூறப்படுகிறது.
நீதிமன்றத்தின் கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டால், அது நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் என நீதித்துறையோடு தொடர்புடைய அனைவருக்கும் ஒரு சாதகமான சூழலை உருவாக்கும் என்கின்றனர். இது வழக்குகளை விரைவாக முடிப்பதற்கும் உறுதுணையாக இருக்கும். இந்திய நீதிமன்றங்கள் 'Docket system' என்ற முறையில் இயங்குகின்றன. அதாவது, வழக்குகள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பதில், வரிசை எண்களின் அடிப்படையில் அழைக்கப்படுகின்றன. வழக்கறிஞர்களுக்கு ஒரேநாளில் வெவ்வேறு நீதிமன்றங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கலாம். விசாரணை நேரம் ஒன்றுடன் ஒன்று மாறுபடும்போது, அவர்களால் ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு விரைவாகச் செல்ல முடிவதில்லை. இதனால் நீதிபதிகளின் வேலை பாதிக்கப்பட்டு, சில நேரங்களில் ஒரு வழக்கு பல நாட்களுக்குத் தள்ளிப்போக நேரிடுகிறது. இதன் காரணமாகவே, இளம்வழக்கறிஞர்கள் முதலில் 'Pass-over' (வழக்கைச் சற்று தள்ளிவைக்கக் கோருதல்) கேட்பதற்கும், தங்கள் மூத்த வழக்கறிஞர்கள் மற்ற நீதிமன்றங்களில் வாதாடும்போது அவர்களுக்குப் பதிலாக 'Proxy' (பதிலாள்) முறையில் ஆஜராவதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். ஒரு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதன் மூலம் இந்தச் சிரமங்களைத் தவிர்க்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்ற வளாகங்களில் உள்ள தடைகள் நெரிசலான வாகன நிறுத்தத்தில் இருந்தே தொடங்குகின்றன, இது உள்ளே நுழைவதற்கே காலதாமதத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகும் வகையில் அங்குள்ள வசதிகள் பெரும்பாலும் அமைந்திருப்பதில்லை. இடப்பற்றாக்குறையினால் சில முரண்பாடுகளும் ஏற்படுகின்றன. உதாரணமாக, மகப்பேறு நலச் சட்டம் 1961-ன்கீழ் (Maternity Benefit Act, 1961) உயர்நீதிமன்றங்கள் உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றன. ஆனால், அதே சட்டம் வலியுறுத்தும் குழந்தைகள் காப்பகங்கள் பல நீதிமன்ற வளாகங்களில் இல்லை என்பதையும் சுட்டிக்கட்டுகின்றனர்.
1930-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 'நியூ டீல்' (New Deal) திட்டத்திற்குப் பிறகு அமெரிக்கா தனது நீதிமன்றக் கட்டிடங்களை மீண்டும் கட்டியபோதும், 1980-ஆம் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியின் போது ஜப்பான் டோக்கியோ மாவட்ட நீதிமன்றத்தை மறுசீரமைப்பு செய்தபோதும், நீதிமன்ற அறைகளுக்காக குறிபிட்ட வடிவமைப்பு வழிகாட்டுதல்களை உருவாக்கின. இந்தியாவும் வெறும் நீதிபதிகளின் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொள்ளாமல், அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என அனைவரையும் கருத்தில் கொண்டு, காலனித்துவ கால நீதிமன்ற கட்டிட பாணியைத் தாண்டி நீதிமன்ற வளாகங்களை மறுவடிவமைப்பு செய்ய நிபுணர்களைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
உள்ளூர் சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள தென்னாப்பிரிக்காவின் அரசியலமைப்பு நீதிமன்றம், ஆஸ்திரேலியாவின் உயர்நீதிமன்றம் மற்றும் வடமேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள குனுனுர்ரா நீதிமன்றம் (Kununurra courthouse) ஆகியவற்றை இந்தியா முன்மாதிரியாகக் கொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.
தேசிய வழக்கு மேலாண்மை அமைப்பு (National Case Management System (NCMS)) 2024-ன்படி, நீதிமன்றங்களுக்கு வருபவர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், நீதிமன்ற வளர்ச்சித் திட்டமிடலுக்கான துணைக் குழு, மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களுக்கான மாதிரித் திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. உயர்நீதிமன்றங்களை மறுசீரமைப்பதையும், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்களை உருவாக்குவதையும் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
அதிகப்படியான பணிச்சுமையால் பாதிக்கபட்டுள்ள உயர்நீதிமன்றங்களைச் சீரமைக்க பல மாநிலங்கள் முன்வரும் நிலையில், இதற்கான சரியான வழிகாட்டுதல்கள் இல்லையென்றால், அந்த நீதிமன்றக் கட்டிடங்கள் தவறான வடிவமைப்பில் கட்டப்பட வாய்ப்புள்ளது. இது ஏற்கனவே உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பதிலாக, புதிய சிக்கல்களையே உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.
சித்தார்த் ராவ் எர்ரபெல்லி, அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் கௌரவ ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் நீதிமன்றங்களின் கட்டிட அமைப்புக்கும், நீதித்துறையின் செயல்பாட்டுத் திறனுக்கும் இடையிலானத் தொடர்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
Original Link: Is colonial architecture the hidden bottleneck in India’s legal system?