காவல்துறை செயல்பாடு மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக மாற்றியமைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள். -அஜய் சிங்ஹால்

 ஆங்கிலேயர் ஆட்சிக்காலச் சட்டங்கள் தொடங்கி, தற்போதைய நவீன தொழில்நுட்பம் சார்ந்த சீர்திருத்தங்கள் வரை, இந்த மாற்றங்கள் அனைத்தும் குற்ற விசாரணை, ஆதார மேலாண்மை மற்றும் பொதுமக்கள் நீதித்துறையை அணுகும் விதம் ஆகியவற்றை முற்றிலுமாக மாற்றி அமைத்து வருகின்றன.


150 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு, ஒரு ஜனநாயக நாட்டிற்காக அல்லாமல், நாட்டைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சி செய்வதற்காக ஆங்கிலேயர் காலத்தில் (Colonial laws) உருவாக்கப்பட்ட சட்டங்களின் அடிப்படையிலேயே இயங்கி வந்தது. இந்தியத் தண்டனைச் சட்டம் (Indian Penal Code (1860)), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Code of Criminal Procedure (1898)) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் (Indian Evidence Act (1872)) ஆகியவை சுதந்திரத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடைமுறையில் இருந்தன. இருப்பினும், காலப்போக்கில் குற்றங்களின் தன்மை மாறிவிட்டது. பாரம்பரியமான குற்றங்களில் இருந்து தற்போது  இணைய மோசடி, திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் டிஜிட்டல் ஏமாற்று வேலைகள் என குற்றங்கள் உருமாறியுள்ளன.


ஜூலை மாதம் 1-ஆம் தேதி, 2024-ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் காலத்துச் சட்டங்களுக்குப் பதிலாக பாரதீய நியாய சன்ஹிதா (Bharatiya Nyay Sanhita (BNS)), இந்திய தண்டனைச் சட்டம்), பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா ((Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)), குற்றவியல் நடைமுறைச் சட்டம்), மற்றும் பாரதிய சக்ஷ்ய ஆதினியம் (Bharatiya Sakshya Adhiniyam (BSA)), இந்திய சாட்சியச் சட்டம்) ஆகிய புதிய சட்டங்களைக் கொண்டுவர இந்தியா ஒரு முக்கிய முடிவை எடுத்தது. இது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய குற்றவியல் சட்ட சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது.





ஹரியானா மாநிலக் காவல் துறைத் தலைவராக (DGP), இந்த மிகப்பெரிய மாற்றத்தை ஒரு நிர்வாகியாக மட்டுமல்லாமல், களத்தில் எனது குழுவினருடன் நேரடியாகப் பணியாற்றிய ஒருவனாகவும் நான் பார்த்திருக்கிறேன். புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஹரியானா மாநிலம் தற்போது முன்னணியில் உள்ளது. மேலும், இந்த மாற்றத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் நான் நேரில் கண்டேன். நாங்கள் எங்களது புலனாய்வு அதிகாரிகளுக்கு மறுபயிற்சி அளித்தோம், பணி நடைமுறைகளை மாற்றினோம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டோம். இந்த மாற்றம் சவாலானதாக இருந்தது, ஆனால் இந்தச் சீர்திருத்தம் மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது. உதாரணத்திற்கு, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு-420 என்பது பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவு-318-ஆக மாறியது. அதேபோல் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு-302 என்பது பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவு-101-ஆக மாறியது. முறையான கல்வியும் பயிற்சியும் குறைவாகப் பெற்ற பல புலனாய்வு அதிகாரிகள், பல ஆண்டுகளாக தாங்கள் பின்பற்றி வந்த நடைமுறைகளை மறந்து, புதிய சட்ட விதிகளை மிக விரைவாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.


இந்த மாற்றத்தின் அளவை முழுமையாகப் புரிந்துகொள்ள, முதலில் இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் நீண்டகாலமாக இருந்துவரும் சவால்களையும், புதிய சட்டங்கள் அவற்றை எவ்வாறு தீர்க்க முயல்கின்றன என்பதையும் பார்ப்பது அவசியமாகும்.


முடிவற்ற காலதாமதங்களுக்குப் பதிலாக, பொறுப்புக்கூறலை நடைமுறைப்படுத்துதல்


இந்தியாவின் மிக முக்கியமான குற்றவியல் நீதித்துறைப் பிரச்சினை, வழக்குகள் முடிவடைவதில் ஏற்படும் தாமதம் ஆகும். தற்போது, 5.58 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. ஆனால், இவற்றை விசாரிப்பதற்காக வெறும் 21,285 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இதன் விளைவாக, நீதித்துறை தொடர்பான நடவடிக்கைகள் தாமதம் ஆகின்றன. இது பொதுமக்களுக்கு நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கையைக் குறைக்கிறது. புகழ்பெற்ற இந்தித் திரைப்பட வசனமான "Tarikh pe Tarikh" (வாய்தாவுக்கு மேல் வாய்தா) என்பது வெறும் சினிமா மிகைப்படுத்தல் அல்ல, அந்த வசனம் உண்மைநிலையை அப்படியே பிரதிபலிக்கிறது.


பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டம், சட்டப்பூர்வமாகக் கட்டாயப்படுத்தக்கூடிய காலக்கெடுவை நிர்ணயிப்பதன் மூலம் வழக்குகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்க முயல்கிறது. இதன்படி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை விசாரணை அதிகாரிகள் இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். மேலும், இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த பிறகு, நீதிபதிகள் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் தீர்ப்பை வழங்க வேண்டும். இந்தச் சட்டம் தேவையில்லாத வழக்கு ஒத்திவைப்புகளையும் கட்டுப்படுத்துகிறது. ஒருவேளை, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவைத் தாண்டியும் விசாரணை தாமதமானால், குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சட்டப்பூர்வமாகத் தானாகவே பிணை (Statutory bail) பெற தகுதி கிடைத்துவிடும் என்றும் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.


வழக்கு விவரம் சார்ந்த காலக்கெடுவை துல்லியமாகப் பின்பற்றுவதற்குத் தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது. மின்னணு ஆதாரங்களை நிர்வகிக்கும் அமைப்பான 'e-Sakshya' போன்ற டிஜிட்டல் ஆதாரத் தளங்கள், குற்றக் காட்சிப் பதிவுகளை அவை பதிவு செய்யப்பட்ட நேரம் மற்றும் புவியியல் இருப்பிடம் ஆகிய விவரங்களுடன் உருவாக்குகின்றன. இது ஆதாரங்களின் நம்பகத்தன்மையையும் உண்மைத்தன்மையையும் பாதுகாக்கிறது, வழக்கைச் சரியாகக் கண்காணிக்க உதவுகிறது மற்றும் நீதித்துறை அமைப்பானது குறிப்பிட்ட காலத்திற்குள் பொறுப்புடன் செயல்படுவதை உறுதி செய்கிறது.


விசாரணைக் கைதிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்குத் தீர்வு காணுதல்


குற்றம் நிரூபிக்கப்படாமலேயே பல ஆண்டுகளைச் சிறையில் கழிப்பதை ஒருமுறை கற்பனை செய்து பாருங்கள். இதுதான் இந்தியாவின் ஒட்டுமொத்த கைதிகளில் ஏறக்குறைய 76% பேரின் உண்மை நிலைமையாகும். இவர்கள் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருக்கும் 'விசாரணைக் கைதிகள்' ஆவர். இந்தியாவின் புதிய சட்டக் கட்டமைப்பு, காலக்கெடுவுக்குள் விசாரணையை முடிப்பதற்கான வழிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது. குறிப்பிட்ட அந்த காலக்கெடுவிற்குள் விசாரணை முடிக்கப்படாவிட்டால், கைதிகளுக்கு 'இயல்புநிலை பிணை' (Default bail) வழங்கப்படலாம். இப்போது காவல் நீட்டிப்பு விசாரணைகளுக்கு (Remand hearings) பொதுவாக காணொளி காட்சிமுறை பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஒரு குற்றத்திற்குரிய அதிகபட்ச தண்டனைக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை விசாரணைக் கைதி ஏற்கனவே சிறையில் கழித்திருந்தால், அவரை விடுதலை செய்வது குறித்தும் நீதிமன்றங்கள் பரிசீலிக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் ஒரு மனிதனின் சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதுகாப்பதுடன், நீதிமன்றத் தாமதங்களால் அந்த உரிமை பறிபோகாமல் இருப்பதையும் உறுதி செய்கின்றன.


சாட்சி வாக்குமூலத்திலிருந்து அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் வரை 


நீதிமன்றத்தில் நீங்கள் அளிக்கும் சாட்சியமும், உங்களது நினைவாற்றலும் அல்லது பாதுகாப்பும் ஒரு வழக்கின் இறுதித் தீர்ப்பையே மாற்றிவிடக்கூடும் என்பதை உணர்ந்து, நீங்கள் நீதிமன்றக் கூண்டில் சாட்சியம் அளிப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். முன்பு, நீதிமன்றங்கள் வாய்மொழி சாட்சியங்களை மட்டுமே பெருமளவில் நம்பியிருந்தன. இதனால், சாட்சிகள் மிரட்டப்படும்போதோ அல்லது அவர்கள் தங்களது சாட்சியத்தை மாற்றிப் பிறழ்சாட்சியாக (Hostile witness) மாறும்போதோ, வழக்குகள் பலவீனமடையும் சூழல் இருந்தது.


புதிய சட்டங்கள் தடய அறிவியல் (Forensic) மற்றும் மின்னணு (Electronic) ஆதாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. கடுமையான குற்றங்களுக்குத் தடயவியல் விசாரணை இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஆதாரங்கள் இப்போது நீதிமன்றங்களில் இன்னும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. விசாரணையில் அறிவியல்பூர்வமான முறைகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், சாட்சிகளின் மனித நினைவாற்றலை மட்டுமே நம்பியிருக்கும் நிலை குறைந்து, ஒட்டுமொத்த ஆதாரங்களும் மிகவும் வலுவடைகின்றன.


ஹரியானாவில், நடமாடும் தடய அறிவியல் குழுக்கள் நேரடியாகக் குற்றப் பின்னணி நடக்கும் இடங்களுக்கேச் சென்றடைகின்றன. குற்றக் களம் (Scene of Crime (SOC)) சார்ந்த நிபுணர்கள், யாருடைய தலையீடும் இன்றித் தனிச்சையாகச் சான்றுகளைச் சேகரிக்கின்றனர். கைரேகைகள், DNA மரபணுச் சோதனை, டிஜிட்டல் தடயங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் அழிந்து போவதற்கு முன்பாகவே அவை பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. இது ஆதாரங்களின் நம்பகத்தன்மையை மேலும் வலுவாக்குவதோடு, நீதிமன்றத்தில் உண்மையை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளையும் அதிகப்படுத்துகிறது.

21-ஆம் நூற்றாண்டின் குற்றங்களை அடையாளம் காணுதல்


ஆங்கிலேயர் காலத்து சட்டங்கள், தற்கால இணையவழிக் குற்றங்கள், திட்டமிடப்பட்ட குற்ற அமைப்புகள், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைகள் அல்லது கும்பல் படுகொலைகள் போன்றவற்றை எதிர்பார்த்து உருவாக்கப்பட்டவை அல்ல. பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டம் இந்த நவீனகால குற்றங்களை நேரடியாகக் கையாள்கிறது. மேலும், இது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பையும் பலப்படுத்துகிறது. கட்டாயமாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தல் மற்றும் தன்னிச்சையான கைதுகளுக்கு எதிரான பாதுகாப்பு போன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளால் கொண்டுவரப்பட்ட முக்கியமான பாதுகாப்பு நடைமுறைகள் இப்போது இந்தச் சட்டத்திலேயே எழுதப்பட்டுள்ளன. இதனால், குடிமக்கள் நீதிமன்றத் தீர்ப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல், இத்தகைய உரிமைகளைச் சட்டப்படியே நேரடியாகப் பெற முடிகிறது.


முதல் தகவல் அறிக்கையிலிருந்தே எளிதாக நீதி கிடைக்கச் செய்தல்


பலர் எந்தக் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது என்று தெரியாத குழப்பத்தினால், தங்களுக்கு நடந்த குற்றங்களைப் புகாரளிக்காமல் தவிர்த்து வந்தனர். பல ஆண்டுகளாக, எல்லை வரம்புகள் தொடர்பாகக் காவல் நிலையங்களுக்கு இடையே நிலவி வந்த எல்லைத் தகராறுகள், மக்கள் தங்களுக்குரிய நீதியைத் தேடிச் செல்வதையே முடக்கி வைத்திருந்தன.


'Zero FIR' முறை என்பது, ஒரு குற்றம் எங்கு நடந்திருந்தாலும் சரி, அதைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் எந்தவொரு காவல் நிலையத்திலும் புகார் அளிக்க அனுமதிக்கிறது. 'மின்னணு முதல் தகவல் அறிக்கை' (e-FIR) முறை மூலம் மக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமலேயே இணையதளம் வழியாகப் புகார்களைப் பதிவு செய்ய முடியும். சாட்சிகளுக்கான பாதுகாப்பு, காணொளி காட்சி மூலம் சாட்சியம் அளிப்பது மற்றும் சாட்சிகளின் அடையாளத்தை ரகசியமாகப் பாதுகாப்பது போன்ற புதிய வசதிகள், மக்கள் அச்சமின்றி நீதி வழங்கும் செயல்பாட்டில் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பங்கேற்பதை உறுதி செய்கின்றன.



சிறிய தவறுகளைப் பெரிய குற்றமாகக் கருதாமல் சட்டத்தை மாற்றுவதும் (Decriminalisation) இந்தச் சீர்திருத்தங்களுக்குப் பெரிதும் துணையாக நிற்கிறது. சிறிய அளவிலான குற்றங்களுக்கு 'சமூக சேவை' (Community service) செய்வதைத் தண்டனையாக வழங்குவது, ஏற்கனவே கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகளின் சுமையைக் குறைக்கிறது. மேலும், சிறிய தவறுகளைச் செய்தவர்கள்மீது வாழ்நாள் முழுக்க 'குற்றவாளி' என்ற முத்திரை குத்தப்படுவதையும் இந்த முறை தடுக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் ஒன்றிணைந்து, மனிதநேயமிக்க மற்றும் நவீனகாலத்திற்கு ஏற்ற ஒரு நீதித்துறையை உருவாக்க உதவுகின்றன.


ஹரியானா மாநிலம் எவ்வாறு முதலிடத்தை பிடித்தது


சட்ட சீர்திருத்தங்கள் என்பது அவை மிகச் சரியாக நடைமுறைப்படுத்தப்படும்போது மட்டுமே அர்த்தமுள்ளதாக மாறுகின்றன. ஹரியானா மாநிலம் கடந்த ஜூன் மாதம் 21-ஆம் தேதி நிலவரப்படி 94.42 புள்ளிகளைப் பெற்று, புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நாட்டின் முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளது. இந்தச் சாதனை ஏதோ பெயரளவில் மட்டும் நடந்துவிடவில்லை. இது, தொடர்ந்து ஊழியர்களின் திறனை மேம்படுத்துவதிலும் உள்கட்டமைப்பை உருவாக்குவதிலும் முதலீடு செய்ததன் விளைவாகும்.


இந்தத் தரவரிசையானது நான்கு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் வழங்கப்படுகிறது: அவை நிர்வாகச் சீர்திருத்தங்கள், செயல்பாட்டுத் திறன், தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் குற்றவியல் நீதி அமைப்புடன் (Interoperable Criminal Justice System (ICJS)) ஒருங்கிணைப்பு ஆகியவை ஆகும். தற்போது ஒவ்வொரு விசாரணை அதிகாரியும் இந்தப் புதிய அமைப்பின்கீழ் பணிபுரிவதோடு, இதற்கான சிறப்பு செயலியையும் (Investigating Officer Mobile Application (I.O. Mobile Application)) பயன்படுத்தி வருகின்றனர். நடமாடும் தடய அறிவியல் பிரிவுகள் (Mobile forensic units), பலப்படுத்தப்பட்ட சாட்சிகள் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் கருவிகள் ஆகியவை இப்போது களத்தில் இருக்கும் விசாரணை அதிகாரிகளுக்கு நேரடியாக உதவி புரிகின்றன.



இந்த மேம்பாடுகள் காவல் துறையின் பணிகளைத் தாண்டி பல நன்மைகளைத் தருகின்றன. மின்னணு நீதிமன்ற அழைப்பாணை (Electronic summons), டிஜிட்டல் வழக்கு மேலாண்மை மற்றும் காணொளி காட்சி மூலம் விசாரணை (Video conferencing) ஆகியவை நேரம், பணம் மற்றும் மனித உழைப்பை மிச்சப்படுத்துகின்றன. இவை காகிதப் பயன்பாட்டையும் பயணங்களையும் குறைக்கும் அதேவேளையில், செயல் திறன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துகின்றன.


ஹரியானா மாநிலத்தின் மின்னணு அபராதச் சீட்டு (e-Challan) முறை, வெறும் நான்கு மாதங்களில் கார்பன்-டை-ஆக்சைடு (CO2) உமிழ்வை 8,165 கிலோ வரை குறைத்துள்ளது. மேலும், மின்னணு நீதிமன்ற அழைப்பாணை (e-summons) மற்றும் காணொளி வாயிலாக விசாரணைகள் மூலம் ஆறு முதல் ஏழு மாதங்களுக்குள் 26 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைக் கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதிலும், காகித ஆவணங்களைக் கையாளுவதிலும் வீணான நேரம் இப்போது மிச்சப்படுத்தப்பட்டு, அந்த நேரம் குற்ற விசாரணை மற்றும் ரோந்துப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.


இதில் தொடர்புடைய ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது


அறிவியல் பூர்வமான முறைகளும், ஆதாரங்களின் அடிப்படையிலான விசாரணைகளும் இப்போது மிகவும் வலுவடைந்துள்ளன. காவல்துறையைப் பொறுத்தவரை, இந்த மாற்றம் என்பது ஒரு சாதாரண நிர்வாக சீர்திருத்தம் மட்டுமல்ல. அது அவர்களின் நெறிமுறை சார்ந்த கடமையுமாகும். மொபைல் தடயவியல் பிரிவுகளைப் (Mobile forensic units) பயன்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்களின் ஆதாரங்கள் மிக முக்கியமானவை என்கிற நம்பிக்கையை அளிக்கிறது. நீதிமன்ற அழைப்பாணைகளை மின்னணு முறையில் (e-summons) அனுப்புவது சாட்சிகளின் நேரத்தை மதிக்கிறது. மேலும், DNA மரபணுச் சோதனை, குரல் மாதிரிகள், சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயவியல் அறிக்கைகளின் ஆதரவோடு மின்னணு குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்வது, காவல்துறை தங்களின் வசதியைவிட உண்மைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை நீதிமன்றங்களுக்குக் காட்டுகிறது.


புதிய குற்றவியல் சட்டங்கள் இதற்கான தேவையான வழிமுறைகளையும் கருவிகளையும் வழங்கியுள்ளன. இருப்பினும், இந்தச் சட்டங்கள் வெற்றிபெற வேண்டுமானால், இதில் தொடர்புடைய ஒவ்வொரு தரப்பினரும், அதாவது காவல்துறை, அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், தடய அறிவியல் ஆய்வகங்கள், நீதித்துறை, அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் என அனைவரும், முழு அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.


மக்களின் நம்பிக்கையைப் பெற்ற, அதேநேரத்தில் நீதியை வழங்குவதில் வேகமும் நியாயமும் சம அளவில் சீராக இருக்கக்கூடிய ஒரு நீதித்துறையை உருவாக்குவதே இறுதி இலக்காகும். நமக்குத் தேவை விரைவான வழக்கு விசாரணைகள் மட்டுமல்ல, அவை நம் நாட்டின் கண்ணியத்தையும் நிலைநிறுத்துவதாக இருக்க வேண்டும். பொதுமக்கள் எந்தவொரு பயமும் இல்லாமல், முழு நம்பிக்கையோடு நீதிமன்றத்தை நாடி நீதிபெறும் நிலை உருவாக வேண்டும்.


அஜய் சிங்ஹால், ஹரியானா மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குநர் ஆவார்.


Original article : New criminal laws overhauling policing and public trust. -Ajay Singhal

Share:

உள்கட்டமைப்பு மற்றும் சாலைகள் அமைப்பதற்காக நிலங்களை ஒருங்கிணைத்தல். -டி.கே. ராமச்சந்திரன்

 நிலத்தின் ஒரு பகுதியை நில உரிமையாளரிடமே ஒப்படைப்பதன் மூலம், அவர்களை அந்த வளர்ச்சித் திட்டத்தில் ஒரு பங்களிப்பாளராக மாற்றுதல்.


போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வாகனப் போக்குவரத்தை எளிதாக்கவும் பெரிய நகரங்களுக்கு விரைவில் புறவழிச்சாலைகள் (Bypasses) அல்லது வெளிவட்டச் சாலைகள் (Ring roads) அமைக்கப்படும் என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன. இது வரவேற்கத்தக்க ஒரு நடவடிக்கை என்றாலும், இதற்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்துவது ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இந்த நிலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிட்டால், மிகச் சிறந்த முறையில் திட்டமிடப்பட்ட திட்டங்கள் கூடத் தோல்வியில் முடியக்கூடும். இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கான சில சாத்தியமான தீர்வுகள் பின்வருமாறு:


நெடுஞ்சாலைகளுக்கு இருபுறமும் உள்ள பகுதிகள் குறிப்பிடத்தக்கப் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், எளிதான போக்குவரத்து வசதி மற்றும் நிலத்தின் மதிப்பு அதிகரிப்பு போன்ற நன்மைகள் பெரும்பாலும் நெடுஞ்சாலையை ஒட்டியே அமைந்துள்ள இடங்களுக்கு மட்டுமே கிடைக்கின்றனவே தவிர, உட்புறக் கிராமங்களுக்கோ அல்லது பகுதிகளுக்கோ சென்றடைவது அரிதாகவே உள்ளது. நெடுஞ்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகள் முறையான திட்டமிடல் இல்லாமலும், பெரும்பாலான நிலங்கள் தனிநபர்களுக்குச் சொந்தமானதாகவும் இருப்பதால், சிறிய உணவகங்கள் மற்றும் கடைகள் போன்ற வசதிகள் எவ்வித திட்டமிடலும் இன்றி உருவாகிவிடுகின்றன. இது தேவையற்ற போக்குவரத்து நெரிசலையும் தடங்கல்களையும் ஏற்படுத்துகிறது. பல்வேறு இடங்களை விரைவாக இணைப்பதும், பயண நேரத்தைக் குறைப்பதுமே ஒரு நெடுஞ்சாலையின் முதன்மை நோக்கமாகும், ஆனால் இத்தகைய திட்டமிடப்படாத வளர்ச்சிகள் அந்த நோக்கத்தையே வீணடிக்கின்றன. மேலும், நெடுஞ்சாலைகளை ஒட்டி உருவாகும் இத்தகைய நகரமயமாக்கல், குப்பைகள் குவிவதற்கும் அடிப்படைப் பொதுநல வசதிகள் தட்டுப்பாடு அடைவதற்கும் வழிவகுத்து பல்வேறு பிரச்சனைகளை உருவாக்குகிறது.

நெடுஞ்சாலை மேம்பாட்டின் ஒரு பகுதியாக, அதைச் சுற்றியுள்ள நிலப்பகுதிக்கான திட்டமிடலையும் சேர்த்துக் கொண்டால் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும். இருப்பினும், இதற்கு இன்னும் கூடுதல் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டியிருக்கும். நில உரிமையாளர்கள் பெரும்பாலும் இத்தகைய திட்டமிடல் செயல்முறைகளுக்கு ஒத்துழைப்பதில்லை மற்றும் வழக்கமாக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், இது ஒரு மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது.


நிலப்பற்றாக்குறை என்பது சாலைத் திட்டங்களுக்கு மட்டுமின்றி, அனைத்துக் கட்டமைப்புத் திட்டங்களுக்கும் ஒரு பெரிய கவலையாக மாறிவருகிறது.                  தொழிலாளர் மற்றும் வங்கித் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களைப் போல, இதற்கும் அவசரமான கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் தேவைப்படும் ஒரு பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது. திருத்தப்பட்ட நிலக் கையகப்படுத்துதல் சட்டங்கள், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றக் கொள்கைகள் (நிலத்தை அரசிடம் கொடுக்கும் மக்களுக்கு மாற்று இடம், நஷ்டஈடு மற்றும் வாழ்வாதாரம் அமைத்துத் தரும் அரசின் கொள்கை) மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான சிறப்புச் சட்டங்கள் ஆகியவை நிலத்தை கையகப்படுத்தும் செயல்முறையை எளிதாகவும் வேகமாகவும் மாற்றியுள்ளன. இருப்பினும், நிலக் கையகப்படுத்துதலுக்கு எதிரான போக்கு தொடர்ந்து நீடிப்பதால், திட்டங்கள் காலதாமதம் ஆவதோடு அவற்றின் செலவுகளும் கணிசமாக அதிகரித்து வருகின்றன.


எனவே, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சாலை ஓரங்களைத் திட்டமிடுதல் தொடர்பான சிக்கல்களை எவ்வாறு தீர்க்கலாம் என்பதை ஆராயவேண்டிய அவசரத் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.


நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான போராட்டங்கள்


சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் சில நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக, குறிப்பாகப் புதிய வழித்தடப் புறவழிச் சாலைகள் அமைப்பதற்காக நிலம் தேவைப்பட்டது. இருப்பினும், நில உரிமையாளர்களிடமிருந்து வந்த எதிர்ப்புகளும் போராட்டங்களும் ஒரு பெரிய சவாலாக மாறின. சாலைகளுக்குப் பக்கத்தில் இருக்கும் நிலங்களின் மதிப்பு பன்மடங்கு உயரும் என்பது அனைவருக்கும் தெரிந்தே இருந்தது. மக்கள் சாலைத் திட்டங்களை ஆதரித்தார்கள். ஆனால், தங்களுடைய சொந்தக் கிராமமோ அல்லது நிலமோ பாதிக்கப்படாத வரை மட்டுமே அந்த ஆதரவு இருந்தது.


சாலை எங்கு அமைய வேண்டும் என்ற திட்டவரைவை இறுதி செய்வதற்கு நீண்டகாலம் எடுத்தது. ஏனெனில், முன்மொழியப்பட்ட ஒவ்வொரு சாலை வழித்தடத்திற்கும் எதிர்ப்புகள் கிளம்பின. ஒவ்வொரு தரப்பினரும் தங்களது சொந்த நிலத்தையோ அல்லது கிராமத்தையோ சாலை பாதிக்காதவாறு அதன் வழித்தடத்தை மாற்றியமைக்க விரும்பினர். இந்த கோரிக்கைகள் பெரும்பாலும் அரசியல் செல்வாக்கிற்கு உட்பட்டதாக மாறியதால், சாலை வழித்தடத்தில் பலமுறை மாற்றங்கள் செய்ய வேண்டியதாயிற்று. இதன் விளைவாக, பல திட்டங்களைத் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும், சில இடங்களில் சட்ட-ஒழுங்கு பிரச்சினைகளும்கூட ஏற்பட்டன.


நில உரிமையாளர்கள், நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு மூன்று முக்கிய இழப்புகளே காரணமாக இருக்கின்றன. முதலாவதாக, அவர்கள் தங்களது நிலத்தை இழக்கிறார்கள், இதுவே பெரும்பாலும் அவர்களின் ஒரே உற்பத்தி மற்றும் வருமானம் ஈட்டும் சொத்தாக இருக்கிறது. இரண்டாவதாக, அவர்களுக்கு மிகக் குறைந்த இழப்பீடே கிடைக்கிறது. ஏனெனில், இழப்பீட்டுத் தொகையானது சந்தை விலைக்கு பதிலாக, அரசாங்கத்தின் வழிகாட்டி மதிப்பின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது. மூன்றாவதாக, மிக முக்கியமாக, அவர்கள் தங்களது நிலத்தைக் குறைந்த விலைக்குக் கொடுக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். ஆனால், அதே நேரத்தில் அதே பகுதியில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள் வருவதால், அவர்களுக்கு அருகில் இருக்கும் மற்ற நில உரிமையாளர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு கடுமையாக உயர்கிறது.                        நில உரிமையாளர்களின் இந்த கவலை முற்றிலும் நியாயமானது என்பதால், அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலான ஒரு தீர்வு தேவைப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில்தான், சாலைத் திட்டங்களுக்காக 'நில ஒருங்கிணைப்புத் திட்டம்' (Land pooling scheme) முன்மொழியப்பட்டு அறிவிக்கப்பட்டது.





இந்தத் திட்டம், நகர திட்டமிடல் மற்றும் தொழில்முறைத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படும் 'நிலம் ஒருங்கிணைப்பு' (Land pooling) முறையைப் போலவே பரவலாக அமைந்திருந்தது. இந்தத் திட்டத்தின்படி, சாலை ஓரங்களில் உள்ள நிலத்தின் ஒரு பகுதி அதன் உரிமையாளர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்.    நெடுஞ்சாலைக்காக வழக்கத்தைவிட சற்று அகலமான நிலப்பகுதி கையகப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் சாலை அமைத்தது போக மீதமுள்ள நிலத்தை, நிலத்தை இழந்தவர்களிடமே திரும்ப ஒப்படைக்க முடியும். நிலம் கையகப்படுத்தப்படவிருந்த சேலத்தைச் சேர்ந்த சில வேளாண் தொழிலாளர்களிடம் இந்த யோசனையைப் பற்றி விவாதித்தபோது, அவர்கள் அதை மிகவும் உற்சாகத்தோடு வரவேற்றனர்.


ஒரு பொதுவான கொள்கையை உருவாக்குவதற்குச் சற்று கூடுதல் காலஅவகாசம் தேவைப்பட்டது. ஏனெனில், இதில் வீட்டுவசதி வாரியம், தொழில்துறை மற்றும் வருவாய்த்துறை உட்பட பல அரசுத் துறைகள் சம்பந்தப்பட்டிருந்தன. தற்போது இதற்குத் தேவையான சட்டங்கள், விதிகள் மற்றும் அரசாணை அறிவிப்புகளில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு, திட்ட அமலாக்கமும் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நாட்டின் பல மாநிலங்கள் பல்வேறு வகையான 'நில ஒருங்கிணைப்புத் திட்டங்களை' அறிமுகப்படுத்தியுள்ளன. ஆந்திரப் பிரதேசத்தில், 'அமராவதி நகரியத் திட்டத்திற்காக' (Amaravati Township project) செயல்படுத்தப்பட்ட நில ஒருங்கிணைப்பு முறையானது, நிலம் தேவைப்படும் மற்ற அனைத்து திட்டங்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக உள்ளது. இத்திட்டத்தில் தொடக்கத்தில் சில சவால்கள் இருந்தபோதிலும், அவை அனைத்தும் தற்போது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


நன்மைகள்


இத்தகைய நில ஒருங்கிணைப்பு முறையின் நன்மைகள் மிகவும் தெளிவானவை:


(i) நில உரிமையாளர் தனது நிலத்தின் ஒரு பகுதியை இழந்தாலும், அவருக்குத் திரும்பக் கிடைக்கும் நிலத்தின் மதிப்பு அவர் முன்பு வைத்திருந்த மேம்படுத்தப்படாத நிலத்தின் மதிப்பைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும்.


(ii) அண்டைப்பகுதியில் உள்ள அனைவரும் சமமாகவே நிலத்தை இழக்கிறார்கள் அல்லது பெறுகிறார்கள் என்பதால், எந்தவொரு தனிப்பட்ட நில உரிமையாளரும் இதில் முழுமையான நஷ்டத்தையோ அல்லது ஆதாயத்தையோ அடைவதில்லை; இதனால் ஒருவருக்கொருவர் பொறாமைப்பட்டுத் திட்டத்தைக் கெடுக்கும் சூழல் உருவாகாது.


(iii) ஒரு குறிப்பிட்ட நீளத்திற்கு மட்டும் திட்டமிடாமல், ஒட்டுமொத்தப் பகுதிக்குமே மிகச் சிறந்த திட்டமிடல் சாத்தியமாகிறது. இதன் மூலம் குடிநீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியத் தேவைகள், திறந்தவெளிப் பகுதிகள் மற்றும் அதற்குத் தேவையான இதர உள்கட்டமைப்பு வசதிகளை முறையான முறையில் அமைத்திட முடியும்.


(iv) சிலரின் விருப்பத்திற்கு ஏற்ப சாலைகளின் வழித்தடங்களையும், சாலைக் கட்டமைப்புகளையும் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது.


(v) நீதிமன்ற வழக்குகளால் ஏற்படும் தேவையற்ற கால தாமதங்கள் தவிர்க்கப்படுகின்றன.


(vi) நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு ஆகும் செலவுகளை, அந்தத் திட்டத்தால் பயனடைந்த நிலங்களின் மீது விதிக்கப்படும் 'மேம்பாட்டுக் கட்டணங்கள்' மூலமாக அரசாங்கம் ஈடுகட்ட முடியும்.


(vii) திட்டமிடப்பட்ட சாலை வசதிகளுடன் கூடிய நிலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முறையான சாலைக் கட்டமைப்புகளை அமைப்பதன் மூலம், நிலங்களின் விலை மிக அதிகமாக உயராமல் சீராக இருக்கும்.


(viii) ஆங்காங்கே இருக்கும் சிறு சிறு அரசு நிலங்களை ஒன்றிணைத்து, பெரிய நிலப்பரப்புகளாக மாற்ற முடியும்.


நில உரிமையாளர்கள் நாட்டின் வளர்ச்சிச் செயல்பாட்டில் வெறும் நிலத்தைக் கொடுப்பவர்களாக இல்லாமல், அதில் தங்களின் பங்களிப்பையும் வழங்க வேண்டும்.


சிறந்த சாலை இணைப்பு வசதிகளால் தங்களின் நில மதிப்பு உயரும் என்கிற நன்மைகளை மக்கள் புரிந்துகொண்டால், சாலைகள் அமைப்பதற்காக அவர்கள் தங்களின் நிலங்களை தாங்களாகவே முன்வந்து தானமாக வழங்கக்கூடும்.


நில உரிமையாளர்களுக்குப் இழப்பீடு மட்டும் வழங்குவதற்குப் பதிலாக, அரசாங்கம் கூட்டுமுயற்சிகளை ஊக்குவிக்கலாம். மேலும், சாலைத் திட்டங்களுக்காகப் போட்டித்தன்மை வாய்ந்த திட்ட முன்மொழிவுகளை வரவேற்கலாம். இது பொது அதிகார அமைப்புகளும் உள்கட்டமைப்புத் துறைகளும் இணைந்து நிலங்களை மேம்படுத்துவதைப் போன்றதாகும்.


டி.கே. ராமச்சந்திரன், சமீபகாலம் வரை இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் செயலாளராகவும், அதற்கு முன்பாகத் தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறையின் முதன்மைச் செயலாளராகவும் இருந்தவர் ஆவார்.


Original article : Land pooling for infrastructure and roads. -TK Ramachandran

Share:

நலிவடைந்துவரும் புலிகள் காப்பகங்களை மீட்டெடுப்பதில் அரசு ஏன் கவனம் செலுத்த விரும்புகிறது?. -நிகில் கனேகர்

 இந்தியாவின் புலிகள் எண்ணிக்கை 3,682-ஐ எட்டியுள்ள நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் பாதுகாப்பை சமநிலைப்படுத்தும் வகையில் 25 முன்னுரிமை காப்பகங்களை வாழிட மீட்பு, இரை உயிரினங்கள் மீட்டெடுப்பு மற்றும் இலக்கு வைக்கப்பட்ட மறு அறிமுகங்களுக்காக அடையாளம் கண்டுள்ளது.


கடந்த வாரம், சுற்றுச்சூழல் அமைச்சகமும் இராஜஸ்தான் வனத்துறையும் இணைந்து, அல்வாரில் உள்ள சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் (Sariska Tiger Reserve) புலிகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதன் 18-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடின. ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள இந்தப் புலிகள் காப்பகம், இதற்கு முன்னர் தனது அனைத்துப் புலிகளையும் இழந்திருந்தது.


இது புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்த ஒரு எதிர்வினையைத் தூண்டியது மட்டுமல்லாமல், புலிப் பாதுகாப்பு, அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கிடும் முறைகள் மற்றும் மேலாண்மை நடைமுறைகள் ஆகியவற்றில் நாடுதழுவிய முழுமையான சீரமைப்பையும் ஏற்படுத்தியது.


இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, மத்திய அரசு இரண்டு புதிய மதிப்பீட்டு அறிக்கைகளை வெளியிட்டது. முதலாவது, வரும் ஆண்டுகளில் புலிகளை நிர்வகிப்பதற்கான ஒரு செயல்திட்டமாகும். இரண்டாவது, நாட்டில் மேற்கொள்ளப்பட்ட 12 புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் முயற்சிகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை விவரிக்கிறது. புலிகளின் எண்ணிக்கையை வெறுமனே கணக்கிடுவதைத் தாண்டி, குறைந்த புலிகளைக் கொண்ட தேசியப் பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று இந்த மதிப்பீடுகள் வலியுறுத்துகின்றன.

புலிகளின் எண்ணிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மோசமான வாழ்விடங்கள் மற்றும் குறைந்த அளவு இரையை மட்டுமே கொண்ட பூங்காக்களையும் மத்திய அரசு இதில் சேர்த்துள்ளது. இத்தகைய பூங்காக்களை மேம்படுத்துவது, அதிகபட்ச புலிகளைத் தாங்கும் திறனை எட்டிய காப்பகங்களிலிருந்து, புதிய மற்றும் சிறந்த வசதிகள் கொண்ட வாழ்விடங்களுக்குப் புலிகள் பரவிச் செல்ல உதவும் என்று அது கூறியுள்ளது.


புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், அவை குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே குவிந்துள்ளன.


இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்துள்ளது. 2006-ல் 1,411-ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022-ல் 3,682-ஆக உயர்ந்துள்ளது. இப்புலிகள் சுமார் 85,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட 58 புலிகள் காப்பகங்களில் பரவியுள்ளன. இருப்பினும், இந்த எண்கள் முழுமையான நிலவரத்தை வெளிப்படுத்தவில்லை.


மொத்தமுள்ள 58 புலிகள் காப்பகங்களில், வெறும் 10 முதல் 12 காப்பகங்களிலேயே மொத்த புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 36 சதவீதத்தைக் கொண்டுள்ளது. முக்கியமாக, மூன்றுக்கும் குறைவான புலிகளைக் கொண்ட 12 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இவற்றில் கவல்(Kawal), கம்லாங் (Kamlang) மற்றும் டம்பா (Dampa) ஆகிய மூன்று காப்பகங்களில் புலிகளே இல்லை. புலிகளின் அடர்த்தி அதிகரிக்கும்போது, ​​அவை இடையகப் பகுதிகள் (buffer areas), பிராந்தியப் பிரிவுகள் மற்றும் கலப்புப் பயன்பாட்டு நிலங்களுக்கு இடம்பெயர்கின்றன.


இருப்பினும், புலிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள பூங்காக்களில், காடுகள் வளமாக இருக்கலாம். ஆனால், இங்கு புலிகளுக்கான இரையின் அளவு மிகக் குறைவாகவே உள்ளது. இந்த இரண்டு சூழ்நிலைகளுமே உகந்தவையாக இல்லை.





அதிக புலிகள் உள்ள காப்பகங்களில், அவை வன விளிம்பு நிலைகளுக்கோ அல்லது விவசாய நிலங்களுக்கோ பரவுவது, மனிதர்களுடன் அவற்றுக்கு மோதலை ஏற்படுத்துவதோடு, அந்த விளிம்பு நிலைகளில் உள்ள கால்நடைகளை அவை சார்ந்திருப்பதையும் அதிகரிக்கிறது. மேலும், இது இரயில் பாதைகள், சாலைகள் மற்றும் கால்வாய்களைக் கடக்கும்போது இறக்கும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.


புலிகளின் எண்ணிக்கையில் காணப்படும் இந்தச் சீரற்ற பரவல், அவற்றின் நீண்டகாலப் பாதுகாப்பிற்கு ஒரு சவாலாக அமைகிறது. மூல எண்ணிக்கைகள் (Source populations) என்பவை, வாழ்விடத் தரம் சிறப்பாகவும், இரைகள் தாராளமாகவும், புலிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ள இடங்களாகும். சிங்க் பகுதிகள் (Sink populations) என்பவை, இனப்பெருக்கம் செய்யும் புலிகள் இல்லாத அல்லது ஆரோக்கியமான காடுகளுடன் தொடர்பு இல்லாத இடங்களாகும். மூலப் பகுதிகள் மற்றும் சிங்க் பகுதிகளுக்கு இடையிலான இந்த வேறுபாடானது, பாதுகாப்பில் ஒரு முக்கிய சவாலை உருவாக்குகிறது.


மத்திய அரசின் சமீபத்திய மதிப்பீடு, கார்பெட் (Corbett), பந்திப்பூர் (Bandipur) மற்றும் கசிரங்கா (Kaziranga) போன்ற 13 புலிகள் காப்பகங்களில் ‘மூல எண்ணிக்கைகள்’ (Source populations) ஒருங்கிணைக்க அழைப்பு விடுக்கிறது. மேலும், ஐந்துக்கும் குறைவான புலிகள் எஞ்சியிருக்கும் இடங்களில் அவற்றை மீண்டும் அறிமுகப்படுத்துவது உட்பட, குறைந்தபட்சம் 25 புலிகள் காப்பகங்களில் முன்னுரிமை அடிப்படையிலான தலையீடுகள் தேவை என்பதையும் அது பரிந்துரைத்துள்ளது.


'புலிகளைப் பெற்றுக்கொள்ளும் இடங்களை' (recipient sites) அடையாளம் காணுதல் மற்றும் அது ஏன் தேவைப்படுகிறது?


புலிகளின் எண்ணிக்கை வளர்ச்சி ஆண்டுக்கு ஆறு சதவீதம் என்ற அளவில் சீராக இருந்து வருகிறது. இருப்பினும், இந்த சீரற்ற வளர்ச்சியின் காரணமாக, அதிக அடர்த்தி கொண்ட பிராந்தியங்கள், காடுகளுக்கு வெளியே பரவும் புலிகளை நிர்வகித்தல், மனித-வனவிலங்கு மோதல் மற்றும் வேட்டையாடுதல் போன்ற சவால்களை எதிர்கொள்கின்றன. அதே வேளையில், பரந்த காடுகள் புலிகள் இல்லாமலே காணப்படுகின்றன.


வனப்பகுதிகள் துண்டாக்கப்படுவதால், புலிகள் நீண்டதூரம் இடம்பெயர்வதற்கு பாதிப்படைகிறது. மேலும், நெருக்கடிப் பகுதிகளில் இரையின் இருப்பு குறைவாக இருப்பதால், புலிகள் இப்பகுதிகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றன. மற்றும் மனித நடவடிக்கைகளும் புலிகளின் வாழ்விடங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. புலிகள் காப்பகங்கள், பிராந்தியக் காடுகள், கலப்புப் பயன்பாட்டுப் பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய, நன்கு இணைக்கப்பட்ட வன நிலப்பரப்பானது, ஒரு பெருங்கூட்டத்தை நிறுவுவதற்கும், மரபணுப் பரிமாற்றத்திற்கு உதவுவதற்கும், நீண்டகாலத்தில் அழிவின் அபாயத்தைக் குறைப்பதற்கும் முக்கியமானது.


புலி இனங்களின் நீண்டகால மீட்சியானது, இரையின் மிகுதி, வாழ்விடத்தின் தரம் மற்றும் மிக முக்கியமாக, புலிகளே அங்கு குடியேறுதல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டைச் சார்ந்துள்ளது என்று அரசாங்க மதிப்பீடு குறிப்பிடுகிறது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையமும் (National Tiger Conservation Authority), இந்திய வனவிலங்கு நிறுவனமும் (Wildlife Institute of India), 58 காப்பகங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள வாழ்விடம், இரை மற்றும் புலி இனங்களின் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு மதிப்பீட்டுக் கட்டமைப்பை அல்லது குறியீட்டை உருவாக்கியுள்ளன.


இவற்றில் மோசமான வாழ்விடம், குறைந்த இரையின் இருப்பு மற்றும் பிற வன நிலப்பரப்புகளுடன் பலவீனமான இணைப்பு போன்ற அவை எதிர்கொண்ட தடைகளை இது கணக்கில் கொள்கிறது. இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், இரையின் இருப்பு, வாழ்விடத்தின் தரம் அல்லது புலிகளின் இருப்பு ஆகியவற்றில் குறைந்தபட்சம் ஒன்று நெருக்கடியில் உள்ள 25 புலிகள் காப்பகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


மத்திய இந்திய மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில்தான், முன்னுரிமைத் தலையீடுகளுக்காக அடையாளம் காணப்பட்ட மிக அதிக எண்ணிக்கையிலான புலிகள் காப்பகங்கள் அமைந்துள்ளன.




புலிகளின் எண்ணிக்கையை மீட்டெடுப்பதும், பிற பிராந்தியங்களிலிருந்து புலிகளின் எண்ணிக்கை பரவுவதற்கு உதவுவதுமே இதன் முக்கிய நோக்கமாகும். இதற்கு மாறாக, வடகிழக்கு மலைப்பகுதிகளும் பிரம்மபுத்திரா வெள்ளச் சமவெளிகளும் பரந்த வன வாழ்விடங்களைக் கொண்டுள்ளன. இரையை மீட்டெடுத்தல், பாதுகாப்பு மற்றும் நிலப்பரப்பு இணைப்பு ஆகியவை மேம்படுத்தப்பட்டால், அங்கு புலிகளின் எண்ணிக்கையை மீட்டெடுப்பதற்கான நல்ல சாத்தியக்கூறுகள் உள்ளன என்று அது குறிப்பிட்டது.


கடந்தகால மீள் அறிமுகத்திலிருந்து கிடைத்த பாடங்கள்


ரஷ்யாவில் இதற்கு முந்தைய முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில்,  சரிஸ்கா மீள் அறிமுகத் திட்டமானது (Sariska reintroduction programme), உலகில் மேற்கொள்ளப்பட்ட முதல் வெற்றிகரமான அறிவியல் பூர்வமான புலி மீள் அறிமுகமாகக் கருதப்படுகிறது.


2000-களின் மத்தியில் தொடங்கி இறுதிப் பகுதி வரை தனது அனைத்துப் புலிகளையும் இழந்திருந்த பன்னா (Panna) பகுதியிலும், சரிஸ்கா (Sariska) பெற்ற வெற்றி மீண்டும் பெறப்பட்டது. 2009-ல் பன்னாவில் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இது போன்ற பத்து இடமாற்ற நடவடிக்கைகள் கலவையான வெற்றியுடனும் சில முழுமையான தோல்விகளுடனும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


உள்ளூர் சமூகத்தினரின் நிராகரிப்பால், ஒடிசாவின் சட்கோசியாவில் (Satkosia) புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் தோல்வியடைந்ததை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், இத்திட்டம் கால்நடைகளை வேட்டையாடும் வடிவத்தில் ஆரம்பகட்ட பின்னடைவுகளைச் சந்தித்தது, இது உள்ளூர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 2018-ல் கன்ஹாவிலிருந்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் புலி சட்கோசியாவிற்கு கொண்டுவரப்பட்டன. இருப்பினும், அந்த ஆண் புலி பின்னர் ஒரு பொறியில் சிக்கி உயிரிழந்தது.




குறைந்த இனப்பெருக்க வெற்றி காரணமாக, ராஜஸ்தானின் முகுந்தரா மலைகள் காப்பகத்தில் (Mukundara Hills Reserve) புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் பணி மெதுவாகவும் மந்தமாகவும் முன்னேறி வருவதாக மத்திய அரசின் மதிப்பீடு குறிப்பிட்டது. வாழ்விடம், இரைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகள் ஆகியவற்றின் கடுமையான அறிவியல் மதிப்பீட்டின் அடிப்படையில், மீண்டும் அறிமுகப்படுத்துவது கண்டிப்பாக ஒரு கடைசி முயற்சியாகவே இருக்க வேண்டும் என்று மதிப்பீடு கூறியது.


Original article : Why the government wants to focus on restoring struggling tiger reserves?. -Nikhil Ghanekar

Share:

பாறைச் செதுக்கல்கள் (Petroglyphs) என்றால் என்ன?, அவை ஏன் கவனம் பெற்றுள்ளன? -குஷ்பூ குமாரி

 கொங்கண் பகுதியில் உள்ள 107 கிராமங்களில் காணப்படும் ஆயிரக்கணக்கான வரலாற்றுக்கு முந்தைய பாறைச் செதுக்கல்களை (Petroglyphs) ஆய்வு செய்வதற்காக மகாராஷ்டிர அரசு ₹15 கோடியை ஒதுக்கியுள்ளது. ஆனால், பாறைச் செதுக்கல்கள் (Petroglyphs) என்றால் என்ன?, வரலாற்றுக்கு முந்தைய மனித சமூகங்களைப் புரிந்துகொள்ள அவை எவ்வாறு உதவுகின்றன?


தற்போதைய நிகழ்வு என்ன? 


கொங்கன் பகுதி முழுவதும் பரவியுள்ள ஆயிரக்கணக்கான வரலாற்றுக்கு முந்தைய பாறைச் செதுக்கல்களின் தோற்றம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை அறிவியல் பூர்வமாகப் பகுப்பாய்வு செய்யவும், வகைப்படுத்தவும், விளக்கமளிக்கவும் மகாராஷ்டிர அரசு செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதன் மூலம், தொழில்நுட்பத்தைத் தொல்லியலுடன் இணைக்கிறது. இந்த நடவடிக்கை, இந்தப் பண்டைய தளங்களுக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தரநிலையைப் பெறுவதற்கான இந்தியாவின் முயற்சியை கணிசமாக வலுப்படுத்தக்கூடும்.




முக்கிய அம்சங்கள் :


1. பாறைச் செதுக்கல்கள் (Petroglyphs) என்பவை, மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதியான இரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் உள்ள செம்மண் பீடபூமிப் பகுதிகளில் காணப்படும் விலங்கு உருவங்கள் அல்லது மனித உருவங்களின் கல் சிற்பங்கள் ஆகும். இந்தச் சிற்பங்களில் முக்கியமாக ஆமைகள், யானைகள், மயில் மற்றும் காண்டாமிருகம் உள்ளிட்ட உருவங்கள் அடங்கியுள்ளன. 2017 மற்றும் 2023-க்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான பயணங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சிகளின் போது இவை கண்டறியப்பட்டன.


புவிக்குறி ஓவியங்கள் (geoglyphs) என்றால் என்ன?


1. புவிக்குறி ஓவியங்கள் (geoglyphs) என்பவை செம்மண் பீடபூமிகளின் மேற்பரப்பில் உருவாக்கப்பட்ட ஒரு வகையான வரலாற்றுக்கு முந்தைய பாறைக்கலையாகும். பாறையின் மேற்பரப்பின் ஒரு பகுதியை வெட்டுதல், குத்துதல், செதுக்குதல் அல்லது தேய்த்தல் போன்றவற்றின் மூலம் அவை உருவாக்கப்படுகின்றன. யுனெஸ்கோ பட்டியலில் "கொங்கன் புவிக்குறி ஓவியங்கள்" (Konkan geoglyphs) குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும், மற்ற இடங்களில், பாறைச்செதுக்கல் (petroglyph) என்ற சொல்லும் (அதாவது, "பாறைச் சின்னம்/எழுத்து") பயன்படுத்தப்படுகிறது. யுனெஸ்கோ பட்டியலின்படி, பாறைச்செதுக்கல்களும் புவிக்குறி ஓவியங்களும் (geoglyphs) ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. ஏனெனில், இரண்டுக்குமே பாறையின் மேற்பரப்பில் பகுதிகளை அகற்றும் அல்லது ஒரு சின்னத்தைப் பொறிக்கும் திறன்கள் தேவைப்படுகின்றன.


2. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தச் சிற்பங்களின் தோற்றம் கி.மு. 20,000 முதல் கி.மு. 10,000 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தது. மேலும், கி.மு. 7,000 முதல் கி.மு. 5,000 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த ஆரம்பக்காலத்தைக் கொண்ட ஹரப்பா நாகரிகத்தைவிட இது பழமையானவை என்பதை உணர்த்துகிறது. இந்தச் சிற்பங்கள் சராசரியாக 50 சதுர மீட்டர் நீளமும் 20 சதுர மீட்டர் அகலமும் கொண்டவை.



3. 2025-ம் ஆண்டில், இந்தக் கட்டமைப்புகள் இந்தியாவில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் தற்காலிகப் பட்டியலில் (Tentative List) சேர்க்கப்பட்டன. இருப்பினும், இவை இன்னும் நிரந்தர உலகப் பாரம்பரிய தரநிலைப் பெறவில்லை. இந்தப் பாறைச் செதுக்கல்களின் எண்ணிம மதிப்பீடு மற்றும் ஆவணப்படுத்தலை (digital assessment and documentation) மேற்கொள்வதற்காக, மாநில அரசு தற்போது ஐஐடி-மெட்ராஸின் தொழில்நுட்பப் புத்தாக்க மையமான 'ஐஐடி பிரவர்தக்' (IIT Pravartak)-ஐ நியமித்துள்ளது.


ஒரு தளம் முதலில் இந்திய அரசால் பராமரிக்கப்பட்டு யுனெஸ்கோவிற்குச் சமர்ப்பிக்கப்படும் இந்தியாவின் தற்காலிகப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். ஒரு தளத்தை முறையாகப் பரிந்துரைக்கப்படுவதற்கு முன்பு, அது தற்காலிகப் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பது யுனெஸ்கோவின் நிபந்தனையாகும்.


4. மகாராஷ்டிர அரசின் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்கள் இயக்குநரகத்தின் இயக்குநர் தேஜஸ் கார்கே, கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களில் குதிரை அல்லது காளையைச் சித்தரிக்கும் எதுவும் இல்லை என்று கூறினார்.



5. “குதிரை உருவங்கள் இல்லாதது, இந்தச் சிற்பங்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதையும், காளைகள் இல்லாதது அவை விவசாயத்திற்கு முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதையும் உறுதிப்படுத்தியது. எனவே, இந்தச் சிற்பங்களின் தோற்றம் இடைக்கற்காலம் (Mesolithic Era) அல்லது நடுக்கற்காலத்தைச் (Middle Stone Age) சேர்ந்தது என்பது எங்களுக்குத் தெளிவாகியது,” என்று கார்கே மேலும் கூறினார்.


இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றுக்கு முந்தைய ஓவியங்கள் மற்றும் கலை வடிவங்களில் காளைகளும் குதிரைகளும் சாதாரணமாகக் காணப்படுகின்றன. இங்கு கி.மு. 1500 முதல் 1000-க்கு இடைப்பட்ட காலத்தில் குதிரைகள் வந்தன. அதேசமயம், கி.மு. 9000-ஆம் ஆண்டு காலகட்டத்தில் விவசாயம் அறிமுகப்படுத்தப்பட்டது.


6. தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய IITM பிரவர்தக் (IITM Pravartak) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சங்கர் ராமன், பாறைச் செதுக்கல்களின் உயர் தெளிவுத்திறன் கொண்ட வான்வழிப் புகைப்படங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ஒரு அமைப்பைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்யப்படும் என்றும், அதன் மூலம் விடுபட்ட கோடுகள் மற்றும் சிதைந்த பகுதிகளை சீரமைக்கும் அதே வேளையில், அவற்றிலுள்ள வடிவங்கள் அடையாளம் காணப்படும் என்றும் தெரிவித்தார்.


7. பின்னர், நிபுணர்கள் அந்தச் சிறு உருவங்களை மிக நுணுக்கமாக ஆய்வு செய்து, மெசபடோமிய நாகரிகம் அல்லது அந்தக் காலகட்டத்தில் இருந்த வேறு எந்த நாகரிகத்தைச் சேர்ந்தவை போன்ற, உலகம் முழுவதும் காணப்படும் மற்ற பாறைச் செதுக்கல்களுடன் உள்ள ஒற்றுமையை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். இந்தச் செதுக்கல்களைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட கருவிகளும், வரையப்பட்ட ஒவ்வொரு உருவத்தின் பின்னணியில் உள்ள காரணமும் கண்டறியப்படும்.


உங்களுக்குத் தெரியுமா?


இந்தியாவின் முதல் பாறைச் செதுக்கல் பாதுகாப்புப் பூங்கா (Petroglyph Conservation Park) லே (Leh) பகுதியில் உள்ள சிந்து காட்-இல் (Sindhu Ghat) திறக்கப்படவுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவால் இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுப்பாடற்ற சுற்றுலா, விரைவான உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் விழிப்புணர்வின்மை ஆகியவற்றால் பெருகிவரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பல நூற்றாண்டுகள் பழமையான பாறைச் செதுக்கல்களுக்கு (petroglyphs) ஒரு பிரத்யேக பாதுகாப்பு இடமாகச் செயல்படுவதே இந்தப் பாறைச் செதுக்கல் பூங்காவின் நோக்கமாகும்.


வரலாற்றுக்காலப் பகுப்பாய்வு மற்றும் பெயரிடல்


1. மனித வரலாற்றின் மிகத் தொடக்கக் கட்டத்தைப் பற்றிய ஆய்வு, வரலாற்றுக்கு முந்தைய காலம் (Prehistory) என்று அழைக்கப்படுகிறது. இது, எழுத்து முறைகள் தோன்றுவதற்கு முன்பு மனித சமூகங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைப் பற்றி விவரிக்கிறது. இந்தக் காலக்கட்டத்தைத் தொடர்ந்து வருவது வரலாற்று தொடக்கக் காலம் (Proto-history) ஆகும். வரலாற்று தொடக்கக் காலம் (Proto-history) என்பது வரலாற்றுக்கு முந்தைய காலத்திற்கும் வரலாற்றுக்கும் இடைப்பட்ட காலமாகும். இது, எழுத்து முறையை வளர்த்துக் கொள்ளாத, ஆனால் சமகாலக் குழுவின் எழுத்துப்பூர்வப் பதிவுகளில் குறிப்பிடப்பட்ட மக்களைக் குறிக்கிறது.


2. தொழில்நுட்பரீதியாக, மனித ‘வரலாறு’ எழுத்தின் வருகையுடன் தொடங்கியது. அதற்கு முந்தைய அனைத்தும் ‘வரலாற்றுக்கு முந்தைய காலம்’ (prehistory) ஆகும். இது முதன்மையாக தொல்பொருள் சான்றுகளை (கடந்த காலத்தின் பௌதீக எச்சங்கள்) கொண்டு ஆய்வு செய்யப்படுகிறது. இருப்பினும், இனவரைவியல் ஆய்வும் (மனித கலாச்சாரங்கள், சமூகங்கள் பற்றிய ஆய்வு) முக்கியமான நுண்ணறிவுகளை வழங்க முடியும்.


3. 19-ம் நூற்றாண்டில், டேனிஷ் தொல்பொருள் ஆய்வாளர் கிறிஸ்டியன் யுர்கென்சன் தாம்சன் (Christian Jürgensen Thomsen), மனிதகுலத்தின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை கற்காலம் (Stone Age), பின்னர் வெண்கலக் காலம் (Bronze Age), இறுதியாக இரும்புக் காலம் (Iron Age) என அறிவியல் பூர்வமான முறையில் முதன்முதலாகக் காலப்பிரிவு செய்தார். நமது இனத்தின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட யுர்கென்சனின் இந்தக் காலவரிசை, பல்வேறு கலாச்சாரங்களின் அனுபவங்களைப் பிரதிபலிக்கும் வகையில் குறிப்பிடத்தக்க திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தாலும், அன்று முதல் ஒரு கோட்பாடாக உயர்ந்துள்ளது.


4. சுமார் 3.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (mya), இன்றைய எத்தியோப்பியாவில் ஹோமினிட்கள் (hominids) முதன்முதலில் கற்கருவிகளை பயன்படுத்தியபோது கற்காலம் தொடங்கியது. சுமார் 6,000-4,000 BP (தற்காலத்திற்கு முன்பு) வரை நீடித்த இந்தக் காலகட்டம், மனித வரலாற்றின் 99%-ஐ உள்ளடக்கியுள்ளது. இது மேலும் மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை, பழைய கற்காலம் (Palaeolithic), இடைக்கற்காலம் (Mesolithic) மற்றும் புதிய கற்காலம் (Neolithic) ஆகும்.


5. சில இடங்களில் சுமார் 11,650 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீடித்த பழங்கற்காலம், பழமையான கற்கருவிகளின் பயன்பாடு மற்றும் வேட்டையாடி-உணவு சேகரிக்கும் வாழ்க்கைமுறை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இடைக்கற்காலம் என்பது பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட ஒரு மாறுதல் காலமாகும். மேற்கு ஆசியாவில் சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் தொடங்கிய புதிய கற்காலம், நிலையான விவசாயத்தின் வளர்ச்சி மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.


அறிவியல் ஆய்விற்காக அனுப்பப்பட்ட ராகிஹர்கி தொல்பொருட்கள்


1. ஹரப்பா நாகரிகம், எகிப்து மற்றும் மெசபடோமியாவுடன் சேர்ந்து, உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. செம்பு அடிப்படையிலான உலோகக் கலவைகளால் செய்யப்பட்ட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், இது ஒரு வெண்கலக் கால நாகரிகமாக அடையாளம் காணப்படுகிறது.


2. சமீபத்தில், ஹரியானாவின் ராகிகர்ஹி என்ற ஹரப்பன் தளத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு எச்சங்கள், அறிவியல் ஆய்வுக்காக, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையால் (Archaeological Survey of India (ASI)), மத்திய கலாச்சார அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு தேசிய ஆராய்ச்சி நிறுவனமான இந்திய மானுடவியல் ஆய்வுத் துறையிடம் (Anthropological Survey of India (AnSI)) முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.


3. தொல்-மானுடவியல் (palaeoanthropological) ஆராய்ச்சி (மனிதப் பரிணாம வளர்ச்சியின் பல்துறை ஆய்வு), மூலக்கூறு உயிரியல் மற்றும் டி.என்.ஏ ஆய்வுகள் ஆகியவற்றின் அணுகுமுறைகளைப் பயன்படுத்தி மனித எச்சங்கள் அதிகளவில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நுட்பங்கள், பண்டைய மக்கள் எப்படி இருந்திருக்கலாம் என்பதை ஆராயவும், மூதாதையர் மற்றும் இடம்பெயர்வு முறைகளைக் கண்டறியவும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியுள்ளன.


4. ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் அமைந்துள்ள ராகிகர்ஹி, சுமார் 550 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து, இந்தியாவின் மிகப்பெரிய ஹரப்பன் தளங்களில் ஒன்றாகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தளம் முற்கால ஹரப்பன் காலகட்டம் (சுமார் கி.மு. 3300-2600) முதல் முதிர்ந்த ஹரப்பன் காலகட்டம் (சுமார் கி.மு. 2600-1900) வரை மக்கள் வசிப்பிடமாக இருந்தது.


5. அவ்விடத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள், களிமண் செங்கல் கோட்டைகள், தெருக்கள் மற்றும் வடிகால்கள் உள்ளிட்ட திட்டமிடப்பட்ட நகர்ப்புறக் குடியிருப்புக்கான சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளன. மேலும், மட்பாண்டங்கள், சுடுமண் சிலைகள் மற்றும் பொறிக்கப்படாத முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், இவ்விடம் நன்கு வளர்ந்த கைவினை மரபு கொண்டிருப்பதையும் பறைசாற்றுகிறது.


Original article : What are petroglyphs and why are they in the news? -Khushboo Kumari

Share:

மாநில அரசுகளுக்கான நிதி நெருக்கடி -ஜெயன் ஜோஸ் தாமஸ்

 மாநில அரசுகளின் செலவினங்கள் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற சமூகத் துறைகளிலும், வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம் போன்ற பொருளாதாரத் துறைகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன. கேரளாவில், இது போன்ற செலவினங்கள் 1960-களிலிருந்து சமூக முன்னேற்றத்தை மேம்பத்தியுள்ளன. செலவினங்களுக்கும் வருவாய்க்கும் இடையிலான இடைவெளி பொதுவாகச் சந்தைக் கடன்கள் (market borrowings) மூலம் ஈடுசெய்யப்படுகிறது.

கேரளாவும் தமிழ்நாடும் இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதாரரீதியாக முன்னேறிய முக்கிய மாநிலங்களாகும். இருப்பினும், மாற்ற இந்திய மாநிலங்களைப் போலவே, இந்த இரு அரசாங்கங்களின் நிதிநிலையும் நெருக்கடியில் உள்ளது. இரு மாநில அரசாங்கங்களும் சமீபத்தில் வெளியிட்ட வெள்ளை அறிக்கைகள், அவற்றின் நிலுவையில் உள்ள கடன் கவலையளிப்பதாக விவரித்துள்ளன. மாநில அரசாங்கக் கடன் என்பது பெரும்பாலும் நிதி மேலாண்மைக் குறைபாட்டின் விளைவாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் இது மாநில அரசுகளின் வளர்ச்சி இலட்சியங்களுக்கும் (Development Aspirations), அவற்றின் குறைந்த நிதித் திறனுக்கும்  அவற்றின் வரையறுக்கப்பட்ட நிதி வசதிக்கும் இடையிலான முரண்பாட்டைப் வெளிக்காட்டலாம்.


நிதி நெருக்கடி


அரசாங்கத்தின் செலவினங்கள் அதன் வரி மற்றும் பிற வருவாய்களைவிட அதிகமாகும்போது பற்றாக்குறைகள் ஏற்படுகின்றன. இதனால் பல ஆண்டுகளாகக் கடன்கள் அதிகமாகி வருகின்றன. இந்தியாவில், வரிகளை உயர்த்தும் அதிகாரம் பெரும்பாலும் ஒன்றிய அரசிடம் இருந்தாலும், ஒட்டுமொத்த அரசாங்கச் செலவினங்களில் முக்கியப்பங்கு மாநில அரசுகளால் ஏற்கப்படுகிறது. மாநில அரசின் செலவினங்களில் பெரும்பகுதி, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற சமூகத் துறைகளிலும், வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம் போன்ற பொருளாதாரத் துறைகளிலும் செலவிடப்படுகிறது. இவை அனைத்தும் மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கேரளாவில், 1960-களிலிருந்து சமூகநலத் துறைகளில் மாநில அரசு அதிக அளவில் செலவினம் செய்வது, சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் பொது நடவடிக்கையின் ஒரு முக்கியப் பகுதியாக இருந்து வருகிறது. அனைத்து இந்திய மாநிலங்களின் சராசரியுடன் ஒப்பிடும்போது, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் இந்தச் செலவினம் முறையே 30% மற்றும் 20% அதிகமாக இருந்தது. இதற்கு மாறாக, பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் இந்தச் செலவினம் முறையே 35% மற்றும் 40% குறைவாக இருந்தது. இந்தத் தகவல்கள், 2020–2023-ஆம் ஆண்டு காலகட்டத்திற்கான ரிசர்வ் வங்கியின் மாநில நிதியியல்: வரவு-செலவுத் திட்டங்கள் குறித்த ஓர் ஆய்வு (State Finances: A Study of Budgets) என்ற ஆய்வு அறிக்கையின் பகுப்பாய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டவை.


மாநிலங்கள் தங்களின் செலவினங்களை, முக்கியமாக மாநில சரக்கு மற்றும் சேவை வரி (State Goods and Services Tax (SGST)) மற்றும் விற்பனை வரி ஆகியவற்றை உள்ளடக்கிய தங்களின் சொந்த வருவாய்கள் மூலமாகவும்,  ஒன்றிய அரசிடமிருந்து பெறும் நிதிப் பரிமாற்றங்கள், மானியங்கள் மற்றும் கடன்கள் மூலமாகவும் ஈடுசெய்கின்றன. மாநிலங்களின் சொந்த வருவாயில் முக்கியமானவை மாநில சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் விற்பனை வரி ஆகும். கேரளா, தனது சொந்த வரிவருவாயை திரட்டுவதில் சாதனை பெற்றுள்ளது. தனிநபர் அடிப்படையில் (Per Capita) கணக்கிடும்போது, கேரளாவின் சொந்த வரி வருவாய், இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் சராசரியைவிட 1.5 மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால், 2023–24 ஆம் ஆண்டில், ஒன்றிய அரசின் வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிப் பங்கீட்டில் (Tax Devolution) கேரளாவுக்குக் கிடைத்த பங்கு 1.92% மட்டுமே. இது, அதே ஆண்டில் இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் கேரளாவின் 2.6% மக்கள்தொகைப் பங்கைவிடக் குறைவாக இருந்தது.











வரவுகளைவிட செலவினங்கள் அதிகமாக இருப்பது, மாநிலங்கள் சந்தைக் கடன்கள் மூலம் ஈடுசெய்யப்பட்டுள்ளது. அதற்கு மாநிலங்கள் வட்டி செலுத்துகின்றன என்பது விளக்கப்படங்கள் 1 மற்றும் 2 மூலம் தெரிய வந்துள்ளது.


தனக்குக் கிடைத்துள்ள குறைந்த அளவிலான நிதி வளங்களில், கேரளா மாநிலம் எதிர்கால உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில் 10% மட்டுமே மூலதனச் செலவினமாக (Capital Expenditure) ஒதுக்க முடிந்துள்ளது. மீதமுள்ள பெரும்பகுதி வருவாய்ச் செலவினங்களாக (Revenue Expenditure) அல்லது தினசரி நிர்வாகச் செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டது. மாநிலத்தின் மொத்த வரவு செலவு அறிக்கை செலவினத்தில் ஐந்தில் ஒரு பங்கு 20% அரசு ஊழியர்களின் ஊதியங்களுக்காக செலவிடப்பட்டது. இதில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் காவல்துறைப் பணியாளர்கள் ஆவர். ஓய்வூதியச் செலவினம் மொத்த வரவு செலவு அறிக்கைசெலவினத்தில் 15.3%-ஆக இருந்தது. அதேபோல், சந்தையில் பெறப்பட்ட கடன்களுக்கான வட்டிச் செலுத்துதல் மொத்த வரவு செலவு அறிக்கை செலவினத்தில் 16.5%-ஆக இருந்தது என்று விளக்கப்படம் 2 மூலம் தெரிய வந்துள்ளது.


கேரளா எதிர்கொள்ளும் முதலீட்டு சவால்


இது போன்ற காரணிகளால் கேரளா ஒரு நிதிநெருக்கடிக்கு இடையே சிக்கியுள்ளது. ஓய்வூதியங்களைக் குறைத்தல் மற்றும் பணியாளர்களைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் வருவாய் செலவினங்களைக் குறைத்து கூடுதல் நிதிச் சூழலை உருவாக்க முயன்றால், சமூகநலத் துறையில் மாநிலம் வைதுள்ள முக்கிய பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதே வேளையில், நவீன மற்றும் அறிவுசார்ந்த பொருளாதாரத் துறைகளில் தனது முழுத் திறனையும் வெளிப்படுத்த வேண்டுமானால், உள்கட்டமைப்பு, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி, பொதுப் போக்குவரத்து ஆகிய துறைகளில் மாநில அரசின் நேரடித் தலையீட்டின் மூலம் வரும் முதலீடுகள் கேரளா மாநிலத்திற்குத் தேவைப்படுகின்றன. படித்த இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்க மாநில அரசால் செய்யமுடியாத காரணத்தினால், அவர்கள் பெருமளவில் கேரளாவைவிட்டு வெளியேறி வருகின்றனர்.


கேரளாவில், அரசின் பலவீனமான நிதித் திறன், ஆடம்பரமாகக் கட்டப்பட்ட வீடுகள், விலை அதிகமாக உள்ள  கார்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான தங்கக் கடைகள் அதிகமாக உள்ளன. இந்த முரண்பாடு சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.


2023-ஆம் ஆண்டில், கேரளாவில் அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக வங்கிகளின் (Scheduled Commercial Banks) கடன்-வைப்பு விகிதம் 66% மட்டுமே இருந்தது. இது தேசிய சராசரியான 76%-ஐ விடக் குறைவாகும். அதேசமயம், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்த விகிதம் 100%-ஐத் தாண்டியுள்ளது. வங்கிக் கடனைவிட வங்கி வைப்புத்தொகை அதிகமாக இருப்பது, கேரளாவில் பயன்படுத்தப்படாத சேமிப்பின் அளவைக் காட்டும் ஒரு குறிகாட்டியாகும். 2016 மற்றும் 2026-க்கு இடையில், கேரளா தனது உபரி சேமிப்பின் ஒரு பகுதியையாவது முதலீட்டில் செலுத்தியிருந்தால், மாநில அரசின் மூலதனச் செலவினம் குறைந்தபட்சம் இரு மடங்காக உயர்ந்திருக்க முடியும் என்று விளக்கப்படங்கள் 3 மற்றும் 4 தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன.

சீனாவின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான கடன் வாங்கும் வாய்ப்பு


சீனாவில், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்த பெரிய முதலீடுகளின் முக்கியப்பகுதி மாகாணங்கள் மற்றும் கீழ்மட்ட உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முதலீடுகளுக்கு நிதியளிக்க, உள்ளாட்சி அமைப்புகள் சீன வங்கிகளிடம் உள்ள அதிக உள்நாட்டு சேமிப்பு நிதியைப் பயன்படுத்தி அதிக அளவில் கடன் பெறுகின்றன. அதே சமயம், அவற்றின் முயற்சிகள் மத்திய அரசின் திட்டமிடல் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன. சீனாவின் உள்ளாட்சி அமைப்புகள், மத்திய அரசின் நிதிப் பரிமாற்றங்களுக்குத் துணையாக, உள்ளாட்சிப் பத்திரங்களை (local government bonds (LGBs)) விற்பனை செய்தல், நில விற்பனை மற்றும் உள்ளாட்சி நிதி வழங்கும் வழிமுறைகள் (local government financing vehicles (LGFVs)) வழியாக வரவு செலவுத் திட்டத்தை தாண்டி கடன் பெறுதல் ஆகியவற்றின் மூலம் நிதி ஆதாரங்களைத் திரட்டுகின்றன.


இந்தியாவில், மாநில அரசுகள் கடன் வாங்குவதற்கு வரம்புகள் விதிக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், அவற்றின் கடன் செலவும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது. மாநில அரசுகள், சந்தையில் கடன் வாங்குவதற்காக வெளியிடும் மாநில வளர்ச்சிக் கடன்கள் (State Development Loans (SDLs)) எனப்படும் பத்திரங்களுக்கு 6.5% முதல் 7.5% வரை வட்டி செலுத்துகின்றன. இது, ஒன்றிய அரசு கடன் வாங்கும் வட்டி விகிதத்தைவிட 0.25 முதல் 0.75 சதவிகிதப் புள்ளிகள் அதிகமாகவும், சீன உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் வங்கி அமைப்பிலிருந்து கடன் வாங்குவதற்கான செலவை 2% விட கணிசமாக அதிக செலவுடையதாகவும் உள்ளது.


அதிக வட்டிச் சுமையானது, மாநில அரசுகளின் கடன் பிடியை மேலும் இறுக்குகிறது.


இந்தியாவில் வெளியிடப்படும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பத்திரங்கள் (Government Bonds) பெரும்பாலும் வணிக வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட உள்நாட்டு நிதி நிறுவனங்களால் வாங்கப்படுகின்றன. இந்த நிறுவனங்கள், அரசாங்கத்தின் நிதிநிலையை ஆதரிப்பதற்காக, பொதுமக்களிடமிருந்து தாங்கள் திரட்டும் சேமிப்புகளைப் பயன்படுத்துகின்றன. உண்மையில், அரசாங்கம் செலுத்த வேண்டிய கடன் என்பது அதன் சொந்த மக்களுக்குச் செலுத்தவேண்டிய கடனாகும். நலத்திட்டங்களையும் வாய்ப்புகளையும் விரிவுபடுத்தும் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிக்க கடன் பெறும் அரசு, அளவுக்கு மீறி சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் அரசைவிட, சமூக நலனுக்கான மிக உயர்ந்த நோக்கத்திற்குச் சேவை செய்கிறது.


ஒரு குடும்பம் தங்கள் குழந்தையை தொலைதூரத்தில் உள்ள கல்வி நிலையத்தில் படிக்க அனுப்புவதற்காக தங்களின் வாழ்நாள் சேமிப்பை முழுமையாகச் செலவிட வேண்டிய நிலையைவிட, தங்கள் மாவட்டத்திலேயே ஒரு பொதுப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக அந்தச் சேமிப்பு பயன்படுத்தப்படுவதை அதிகம் விரும்பும்.


மாநில அரசுகள் நன்கு திட்டமிடப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக, உள்நாட்டு சேமிப்புகளை எளிதாகவும் குறைந்த செலவிலும் அணுகக்கூடிய நிதி சார்ந்த கட்டமைப்புகள் நமக்குத் தேவைப்படுகின்றன.


ஜயன் ஜோஸ் தாமஸ், தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology) பொருளியல் பேராசிரியராகவும், ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நிறுவனத்தில் வருகைதரு ஆய்வாளராகவும் உள்ளார்.


Original article : The fiscal tightrope for State governments. -Jayan Jose Thomas

Share:

இந்தியாவின் ‘இஸ்ரேல் சார்ந்த போக்கு’ (Israel habit) மேற்கு ஆசிய யதார்த்தங்களை எதிர்கொள்கிறது. -வினய் கவுரா

 மாறிவரும் மேற்கு ஆசியாவானது, இந்தியாவிடமிருந்து உத்திரீதியாக கற்பனைத்திறன், நெகிழ்வுத்தன்மை மற்றும் இராஜதந்திரச் சமநிலையைக் கோருகிறது.


நாட்டின் தலைவர்கள் வெளியுறவுக் கொள்கை முடிவுகளை எடுக்கும்போது, ஒவ்வொரு முடிவையும் தனித்தனியாகப் பார்க்கும்போது நியாயமானதாகத் தோன்றலாம். இருப்பினும், இந்த முடிவுகள் ஒன்றிணைக்கப்படும்போது, அவற்றின் ஒட்டுமொத்தத் தாக்கமும், முதல் கண்ணோட்டத்திலிருந்து மிகவும் மாறுபட்டதாக இருக்கக்கூடும். ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியன், முன்னாள் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைத்தது போல, இஸ்ரேலுடனான இந்தியாவின் வலுவான உறவுமுறையும் ஒருவேளை அந்த வகையில்தான் அமையக்கூடும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. ஒரு காலத்தில் இந்தியாவிற்கும் டெல் அவிவிற்கும் (இஸ்ரேல்) இடையே பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டமைப்பாக இருந்த ஒன்று, தீவிரமான உத்திசார்ந்த ஆலோசனையின் விளைவாக உருவானதை விட, ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது போல் தெரிகிறது. இருப்பினும், ஒரு சிறந்த கொள்கைப் பழக்கத்தின் உத்வேகத்தால் வழிநடத்த முடியாது. ஏனெனில், பழக்கமும் இராஜதந்திரமும் பெரும்பாலும் வெவ்வேறு திசைகளில் இட்டுச் செல்கின்றன.

மறுவடிவமைக்கப்பட்ட ஒரு பிராந்தியம்


முதலாவதாக, இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான கூட்டமைப்பால் கிடைத்த நன்மைகளை ஒப்புக்கொள்வது அவசியம். இஸ்ரேலிடமிருந்து இந்தியா கணிசமான இராணுவத் தொழில்நுட்பத்தையும் செயல்முறை அறிவையும் பெற்றுள்ளது. அத்துடன், இந்தத் திறன்கள் விரிவான கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட உளவுத் தகவல்களைச் சேகரிப்பதில் உள்ள நிபுணத்துவத்தையும் பெற்றுள்ளது. இருப்பினும், மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், இந்த உறவு இன்று இந்தியாவிற்கு என்ன வழங்குகிறது என்பது மட்டுமல்ல, காலப்போக்கில் அது எவற்றையெல்லாம் தடுத்து நிறுத்துகிறது என்பதுதான். அதன் அடிப்படையில் பார்க்கும்போது, ​​தற்போதைய நிலைமை அவ்வளவு ஊக்கமளிப்பதாக இல்லை.


மேற்கு ஆசியா, பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தீவிரமான புவிசார் அரசியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது. மேலும், இந்த மாற்றங்களின் நிலை மற்றும் தன்மை முந்தைய காலக்கட்டங்களைவிட மாறுபட்டதாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளாக, ஈரான் ஒரு பலவீனமான, பொருளாதாரத் தடைகளால் முடக்கப்பட்டிருப்பதாக கருதப்பட்டுள்ளது என்றும், அதன் செல்வாக்கைக் குறைத்து, இலக்குகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் கருதியே இப்பிராந்தியத்தின் அரசியல் கணக்கீடுகள் அமைந்திருந்தன. அந்தக் கருத்து இப்போது சோதிக்கப்பட்டு, அது தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஈரானிய இலக்குகள் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள், இந்த பெரும் இழப்புகளை ஏற்படுத்திய நடவடிக்கையின் தொடக்கத்தில் டெல் அவிவ் எதிர்பார்த்திருந்த இராஜதந்திரரீதியிலான அமைதியை ஏற்படுத்தவில்லை. ஈரான் பதிலடியாக ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதுடன், மிக முக்கியமாக, ஹோர்முஸ் நீரிணையின் (Strait of Hormuz) மீதான எந்தவொரு முற்றுகையையும் விமானம் தாங்கி கப்பல் படைகளை (carrier groups) நிலைநிறுத்துவதன் மூலமோ அல்லது வெறும் வார்த்தை ஜாலங்கள் மூலமோ எளிதாக முறியடிக்க முடியாது என்பதை அது நிரூபித்தது. மீண்டும் ஒருமுறை, எரிசக்தியின் புவியியல் என்பது நிர்ப்பந்தத்தின் புவியியலாக மாறியுள்ளது. இறுதி ஒப்பந்தத்தின் விதிமுறைகள், ஈரான் முறியடிக்கப்படவில்லை என்பதை மறைமுகமாக உறுதிப்படுத்துகின்றன.


அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் என்பது இந்தியாவிற்கு ஒரு தொலைதூர புவிசார் அரசியல் போட்டி அல்ல என்பதை கடந்த மூன்று மாதங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. அது இந்தியாவின் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பெரும்பாலான எண்ணெய் இறக்குமதிகள், வளைகுடாவில் ஏற்படும் எந்தவொரு நீடித்த மோதலாலும் பாதிக்கப்படக்கூடிய பாதைகள் வழியாகவே செல்கின்றன. ஹார்முஸ் நீரிணை எப்போதெல்லாம் ஒரு பதட்டமான பகுதியாக மாறுகிறதோ, அதன் விளைவுகள் இந்தியக் குடும்பங்களில் நேரடியாக உணரப்படுகின்றன. இங்குதான் இராஜதந்திரச் சூழல் மிகவும் சிக்கலானதாக மாறுகிறது. ஏனெனில், ஒவ்வொரு ராஜதந்திரத் முடிவும் பொருளாதார விளைவுகளைக் கொண்டுள்ளது. எனவே, இராஜதந்திரரீதியாக நெகிழ்வுத்தன்மையுடன் செயல்பட வேண்டுமானால், வசதியான மற்றும் நிலையான கூட்டணிகளை மட்டுமே சார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.


பல உத்திசார் ஆய்வாளர்கள், இஸ்ரேல் மீதான வாஷிங்டனின் கொள்கை நிலையானது மற்றும் மாறாதது என்றும், அதுவே அனைத்து பிராந்தியக் கொள்கைகளும், சுழலும் ஒரு மாறிலி என்றும் நீண்டகாலமாக நம்பி வந்தனர். அந்த கருத்து இப்போது திருத்தப்பட வேண்டும். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடிக்கடி விமர்சிப்பதில் இந்த வேறுபாடுகள் பிரதிபலிக்கின்றன. வாஷிங்டனுக்கும், டெல் அவிவிற்கும் இடையிலான பகிரங்கமான கருத்து வேறுபாடுகள் வெறும் இராஜதந்திரச் சச்சரவுகள் அல்ல. அதிபர் டிரம்பின் நன்கு அறியப்பட்ட விசித்திரமான குணங்கள் இருந்தபோதிலும், அவை உண்மையானவையாகவே தோன்றுகின்றன. ஏனெனில், மேற்கு ஆசியாவில் வாஷிங்டனின் உத்திசார் கணக்கீடுகள் எதிர்பார்த்ததைவிட வேகமாக மாறியுள்ளன.


பதற்றத்தைத் தணிக்கவும், மோதலிலிருந்து வெளியேறவும் அமெரிக்காவுக்கு அவசரத் தேவை உள்ளது. ஆனால், பதற்றத்தை அதிகரிப்பதையே தனது அரசியல் இருப்புக்குக் காரணமாகக் கொண்ட நெதன்யாகுவோ, தனது உச்சபட்ச இலக்குகளை அடையாமல் பதற்றத்தைத் தணிப்பதில் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை. ஆதரவாளரும் வாடிக்கையாளரும் முரண்படும்போதும், ஒரு காலத்தில் வெற்று காசோலையாக இருந்த ஒன்று புழக்கத்திற்கு வரத் தொடங்கும்போதும் இந்த உரசல் தெளிவாகத் தெரிகிறது.

ஈரானைப் புறக்கணிக்க முடியாது


இவ்வாறு, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தங்களின் ஒருங்கிணைந்த தாக்குதலைத் தொடங்குவதற்கு (பிப்ரவரி 28, 2026) சற்று முன்பு, பிரதமர் மோடி டெல் அவிவிற்கு மேற்கொண்ட எதிர்பாராத பயணத்தில் (பிப்ரவரி 25-26, 2026) பிரதிபலித்த, இஸ்ரேலை நோக்கிய ஒரு நகர்வு குறித்த கருத்து, அது இன்னும் வெளிப்படையாகக் கூறப்படும்போது அதிக ஆபத்தானதாக மாறக்கூடும். ஏனெனில், இஸ்ரேலோ அல்லது வேறு எந்த மூன்றாம் தரப்பினராலோ கட்டுப்படுத்த முடியாத ஒரு பிராந்திய மறுசீரமைப்பின் தவறான பக்கத்தில் இந்தியாவை நிறுத்தக்கூடும். அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் கலந்துகொள்ளாதது ஆச்சரியமளிக்காத நிலையில், இந்தியாவின் பிரதிநிதிகளின் தேர்வே ஒரு திட்டமிட்ட குறியீடாகும். கிளர்ச்சியின் எதிர்ப்பு நடவடிக்கையால் மேற்கொள்ளப்பட்ட ஒரு இராணுவப் படைவீரரும் அறிஞருமான, பீகார் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் சையத் அதா ஹஸ்னைனுடன் (ஓய்வுபெற்றவர்) வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டாவை இணைப்பது, அரசியல்ரீதியான உறுதியளிப்பின் ஒரு அளவிடப்பட்ட நிலைப்பாடாகப் பார்க்கப்படலாம். அதே நேரத்தில் இது இந்தியாவின் மதப் பன்மைத்துவத்தையும் நுட்பமாகப் பிரதிபலிக்கிறது.


வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இந்தப் போரின் முக்கிய பாடங்களை இந்தியா புரிந்துகொண்டுள்ளது என்பதை இந்த முடிவு காட்டுகிறது. இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஏவுகணைப் பரிமாற்றங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தெஹ்ரானின் நிர்ப்பந்தத் திறனை, டெல் அவிவின் வெளித்தோற்றத்தால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது என்பதை இன்னும் வெளிப்படையாகச் சொல்ல அது தயாராக இல்லை. இந்தத் தேர்வு, பிராந்தியத்தில் ஒரு பெரும் சக்தியாகத் தான் நீடிப்பதை நிரூபித்துள்ள ஈரானுக்கு, ஒரு முக்கியமான இராஜதந்திரரீதியான நம்பிக்கையூட்டும் செய்தியை அளிக்கிறது.


மேலும், ஈரான் என்பது ஈராக், லெபனான், சிரியா மற்றும் யேமன் முழுவதும் வலுவாக வேரூன்றிய அரசியல் மற்றும் சித்தாந்த வலைப்பின்னல்களைக் கொண்ட ஒரு நாகரிக அரசு என்பதோடு, வழக்கமான இராணுவத் தடுப்பாற்றலை மீறிச் செல்லக்கூடிய பொருளாதார அழுத்தத்தை உருவாக்கும் நிரூபிக்கப்பட்ட திறனையும் கொண்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தண்டனைக்குரிய தாக்குதல்களை எதிர்கொண்டபிறகும், அதிபர் டிரம்புக்குப் போர்நிறுத்த நிபந்தனைகளை விதிக்கக்கூடிய ஒரு நாட்டைச் சாதாரணமாகக் குறைத்து மதிப்பிட முடியாது. மேலும், ஈரானில் தனது இராஜதந்திர மற்றும் பொருளாதாரத் தடத்தை விரிவுபடுத்த சீனா தயாராக இருப்பதாகத் தெரிகிறது. இது, இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவதை அவசியமாக்குகிறது. இஸ்ரேலுடன் அதிக அளவில் கைகோர்ப்பது, தெஹ்ரானை சீனா-பாகிஸ்தான் இராஜதந்திரக் கூட்டணியை நோக்கி மேலும் தள்ளக்கூடும்.


இந்தியாவின் பொருளாதாரத் திட்டமிடலில், முழுமையாகப் பயன்படுத்தப்படாமலும் குறைத்து மதிப்பிடப்பட்டும் வரும் ஒரு நிலையாக ஐரோப்பா குறித்த விஷயமும் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத வகையிலும், வேகத்திலும், காசா மற்றும் லெபனானில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஐரோப்பாவின் அரசியல் களம் திரும்பியுள்ளது என்பதை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்.


உணர்ச்சிபூர்வமான அணுகுமுறையைவிட, தேர்தல் கணக்குகளே இங்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும், தேர்தல் கணக்குகளே பெரும்பாலும் வர்த்தகக் கொள்கையையும், இறுதியில் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் போக்கையும் வடிவமைக்கின்றன. வெறும் ஒரு பரந்த சந்தையாகக் கருதப்படாமல், ஒரு பொறுப்பான சர்வதேச சக்தியாகக் காணப்பட வேண்டும் என்ற இந்தியாவின் தகுதியை தேடும் விருப்பமும், இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவது உள்ளிட்ட ஐரோப்பாவில் அதன் பொருளாதார லட்சியங்களும், இந்தியா எதிர்பார்ப்பதைவிட அதன் மேற்கு ஆசியக் கொள்கையின் பின்னணியில் இன்னும் கடுமையான ஆய்வுக்கு உள்ளாகக்கூடும்.


தற்போதைய தருணத்தில் அசாதாரணமான விஷயம் என்னவென்றால், இந்தியா உத்தி ரீதியாகவும், சுதந்திரமாகவும், தீர்க்கமாகவும் செயல்படுவதைத் தவிர வேறு வழியில்லை. பல அரபு வளைகுடா நாடுகளுடன் நல்லுறவைப் பேணி வருவதால் அதற்குச் சாதகமான நிலை உள்ளது. அந்த நாடுகளிலிருந்துதான் மில்லியன் கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பணம் அனுப்புகின்றனர். சவூதி அரேபியா மீண்டும் ராவல்பிண்டிக்கு (பாகிஸ்தான்) இணங்கிப் போவதற்கான இராஜதந்திரக் காரணங்களைக் கண்டறிந்திருக்கலாம் என்றாலும், ஐக்கிய அரபு அமீரகத்துடனான இந்தியாவின் உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது.


மாறிவரும் பிராந்தியச் சூழல்களால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், புது தில்லிக்கும் (இந்தியா), தெஹ்ரானுக்கும் (ஈரான்) இடையிலான வரலாற்றுத் தொடர்புகள் முற்றிலுமாகத் துண்டிக்கப்படவில்லை. இன்னும் அடிப்படையாக, இந்தியாவின் பரந்த நிலப்பரப்பும் அதன் புவிசார் இராஜதந்திரப் பண்புகளும் இணைந்து, உருவாகிவரும் எந்தவொரு பிராந்திய ஒழுங்கிலும் அதனை ஒரு தவிர்க்க முடியாத கூட்டணியாக மாற்றுகிறது. தெளிவாக வரையறுக்கப்பட்ட தேசிய இலக்குகளை அடைவதற்காக, தனது செல்வாக்கைத் திறம்படப் பயன்படுத்துவதற்கான அரசியல் உறுதிப்பாடே இந்தியாவுக்கு இப்போது தேவைப்படுகிறது.


இருமுனைத் தேர்வுகளுக்கு அப்பால்


இந்தியாவுக்குத் துணிச்சலான மற்றும் லட்சியம் கொண்ட இராஜதந்திர பார்வை தேவை. ஆனால், அதன் பொருள் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்பதல்ல; ஏனெனில் அது மிகவும் எளிமையானதாகிவிடும். மேலும், வரலாறு அத்தகைய எளிமைப்படுத்தல்களுக்கு அரிதாகவே வெகுமதி அளிக்கிறது. மற்றவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டணிகளைப் பின்பற்றி, அவற்றுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் ஒரு தகவமைப்பு சார்ந்த, கூட்டணி உந்துதல் வெளியுறவுக் கொள்கைக்கும், தனது சொந்த வியூகச் சூழலை வடிவமைக்க முற்படும் ஒரு கட்டமைப்பு சார்ந்த வெளியுறவுக் கொள்கைக்கும் இடையிலான வேறுபாடு இதில்தான் அடங்கியுள்ளது.


தன்னை ‘விஸ்வபந்து’ (உலகின் நண்பன்) என்று கூறிக்கொள்ளும் ஒரு நாட்டைப் பொறுத்தவரை, உலகம் இந்தியாவின் வார்த்தைகளையும் செயல்களையும் உற்று நோக்கும் இதுபோன்ற தருணங்களில், அத்தகைய கூற்றின் நம்பகத்தன்மை சோதிக்கப்படும் என்பதை அங்கீகரிப்பது அவசியம். வரவிருக்கும் பன்முனைப் பத்தாண்டுகளில் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க இராஜதந்திரச் சொத்து என்பது, உலகலாவியத் தெற்கின் பாதுகாவலனாக அதன் உண்மையான குரலே ஆகும். உலகலாவியத் தெற்கு பெருமளவில் பாலஸ்தீனியர்களுடன் அனுதாபம் கொள்ளும் ஒரு மோதலில், இஸ்ரேலுடன் வெளிப்படையாக அணிசேர்வது, அந்த விலைமதிப்பற்ற மூலதனத்தை ஆபத்தில் ஆழ்த்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. டெல் அவிவ் (இஸ்ரேல்) வழங்கும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் மறுக்கமுடியாத அளவிற்கு மதிப்புமிக்கவை. ஆனால், மேற்கு ஆசியாவை மறுவடிவமைத்துள்ள ஒரு மோதலில் அணிசேர்ந்ததாகத் தோன்றுவதற்கான இராஜதந்திர விலையும் சற்றும் குறைவான உண்மையானதல்ல.


வினய் கௌரா, ராஜஸ்தானில் உள்ள சர்தார் படேல் காவல்துறை, பாதுகாப்பு மற்றும் குற்றவியல் நீதிப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் துறையில் உதவிப் பேராசிரியராகவும், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தில் வெளிநாட்டு ஆய்வாளராகவும் உள்ளார்.


Original article : India’s ‘Israel habit’ meets West Asian realities. -Vinay Kaura

Share: