எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் கவலைகளுக்கு இடையே சமநிலையைப் பேணுதல் -அதிதி நாயர்

நிலக்கரி வாயுவாக்கும் திட்டம் (Coal gasification scheme) இந்தியாவின் இறக்குமதிப் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது. ஆனால், இது நிர்வகிக்கப்பட வேண்டிய மிகப்பெரிய கார்பன் வெளியேற்றத்திற்கு வழிவகுக்கும்.


2026-ம் ஆண்டு மே மாதத்தில், மேற்கு ஆசிய நெருக்கடி உருவாகி வந்த வேளையில், இந்திய மத்திய அமைச்சரவை, மேற்பரப்பு நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்களுக்காக ₹375 பில்லியன் மதிப்பிலான ஊக்கத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்த நடவடிக்கை, இந்தியாவின் பரந்த உள்நாட்டு நிலக்கரி இருப்பை இராஜதந்திரரீதியில் தொழில்துறை மூலப்பொருட்களாக மாற்றுவதற்கும், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சியில், நிலக்கரி வாயுவாக்கலை ஒரு முக்கிய கொள்கைக் கருவியாக ஆக்குகிறது.


முதன்மையாக எரிசக்தி வெளியிடுவதற்காக நிலக்கரி எரிக்கப்படும் வழக்கமான நிலக்கரி எரிப்பு முறையைப் போலல்லாமல், நிலக்கரி வாயுவாக்கம் முறையில், அதிக வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் கட்டுப்படுத்தப்பட்ட ஆக்சிஜன் மற்றும் நீராவியைப் பயன்படுத்தி நிலக்கரியானது செயற்கை வாயுவாக (syngas) மாற்றப்படுகிறது. இந்த செயற்கை வாயுவை, ஒருங்கிணைந்த வாயுவாக்கல் இணைந்த சுழற்சி ஆலைகள் (integrated gasification combined cycle (IGCC)) மூலம் அம்மோனியா, யூரியா, மெத்தனால், செயற்கை இயற்கை எரிவாயு, ஹைட்ரஜன், திரவ எரிபொருள்கள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை உற்பத்தி செய்யப் பயன்படுத்தலாம்.


இந்தியா சுமார் 400 பில்லியன் டன் நிலக்கரி வளங்களையும், 47 பில்லியன் டன் பழுப்பு நிலக்கரி இருப்புகளையும் கொண்டுள்ளது. இதன் மூலம், உலக அளவில் நிலக்கரி வளங்களைக் கொண்டுள்ள முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. அதே சமயம், பல முக்கிய மூலக்கூறுகளுக்கு இந்தியா இறக்குமதியை பெருமளவில் சார்ந்துள்ளது. 2025 நிதியாண்டின்படி, அம்மோனியா முழுவதுமாக இறக்குமதி செய்யப்பட்டது. மெத்தனால் இறக்குமதி உள்நாட்டுத் தேவைகளில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தையும், இயற்கை எரிவாயு இறக்குமதி மொத்த நுகர்வில் சுமார் பாதியளவையும், யூரியா இறக்குமதி உள்நாட்டு தேவையில் ஐந்தில் ஒரு பங்கையும் பூர்த்தி செய்கிறது.





செயற்கை எரிவாயுவை அம்மோனியா, யூரியா, மெத்தனால் மற்றும் செயற்கை இயற்கை எரிவாயுவாக மாற்ற முடியும் என்பதால், நிலக்கரி வாயுவாக்கம் இப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கான ஒரு உள்நாட்டு மாற்றாக அமைகிறது. இது இறக்குமதியின் ஒரு பகுதியை ஈடுசெய்யக்கூடும். மேலும், உலகளாவிய விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் விநியோகத் தடைகளால் இந்தியா எதிர்கொள்ளும் பாதிப்புகளையும் இது குறைக்க உதவும்.


திட்டத்தின் விரிவாக்கம்


ஜனவரி 2024-ல் தொடங்கப்பட்ட, சுமார் 25 திட்டங்களை இலக்காகக் கொண்டிருந்த ₹85 பில்லியன் மதிப்பிலான நிலக்கரி வாயுவாக்கல் திட்டத்தைவிட, இந்தப் புதிய திட்டம் நான்கு மடங்கு அதிகமாகும். இது 2030-க்குள் சுமார் 75 மில்லியன் டன் நிலக்கரியை வாயுவாக்குவதை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், ஆலை மற்றும் இயந்திரங்களின் செலவில் 20 சதவீதம் வரையிலான ஊக்கத்தொகையை, மைல்கல் (இலக்கு) சார்ந்த தவணைகளில் வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு 30 ஆண்டுகள் வரை மூலப்பொருள் பாதுகாப்பை நீட்டிக்கும் நிலக்கரி இணைப்பு சீர்திருத்தங்களாலும் இது ஆதரிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் சுமார் ₹2.5 முதல் 3.0 டிரில்லியன் முதலீடுகளை ஈர்க்கும் என்றும், கிட்டத்தட்ட 50,000 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பதோடு, ஒருங்கிணைந்த உள்நாட்டு நிலக்கரி-இரசாயனங்கள் சூழலமைப்பை உருவாக்கும் அரசாங்கத்தின் நோக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


இந்தியாவைப் பொறுத்தவரை, நிலக்கரி வாயுவாக்கத்தின் (coal gasification) முக்கியத்துவம் எரிசக்தி பாதுகாப்பைத் தாண்டி விரிவானது. குறிப்பாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாடு அதிகரித்து வருவதால், மின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் நிலக்கரியின் பங்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில், உரங்கள், இரசாயனங்கள் மற்றும் செயற்கை எரிபொருட்களுக்கான ஒரு தொழில்துறை மூலப்பொருளாக உள்நாட்டு நிலக்கரியைப் பயன்படுத்த நிலக்கரி வாயுவாக்கல் ஒரு வழியை வழங்குகிறது.



இருப்பினும், விநியோகச் சங்கிலிப் பாதுகாப்பில் ஏற்படும் இந்த முன்னேற்றத்திற்கு ஒரு விலையும் கொடுக்க வேண்டியுள்ளது. யூரியா, அம்மோனியா, அம்மோனியம் நைட்ரேட் போன்ற உரங்களையும், மெத்தனால் மற்றும் டைமெத்தில் ஈதர் (Dimethyl Ether (DME)) போன்ற எரிபொருட்களையும் உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய, இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரியிலிருந்து பெறப்படும் செயற்கை எரிவாயு ஆகிய இரண்டும் பயன்படுத்தப்படுகின்றன.


உமிழ்வு குறித்த கவலைகள்


இருப்பினும், நிலக்கரியிலிருந்து ஹைட்ரஜனை உற்பத்தி செய்வது, இயற்கை எரிவாயுவிலிருந்து உற்பத்தி செய்வதை விட ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிக கார்பன்-டை-ஆக்சைடை(CO₂) உருவாக்குகிறது. இந்தியாவின் விநியோகர்களிடையே இயற்கை எரிவாயு உற்பத்தி முறையே இங்கு பிரதானமாக உள்ளது. எல்.என்.ஜி, யூரியா, அம்மோனியா மற்றும் மெத்தனால் ஆகியவற்றின் இறக்குமதிகளை, நிலக்கரியிலிருந்து செயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் வழிமுறையின் மூலம் மாற்றுவது, ஆண்டுதோறும் சுமார் 14-15 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிகளுக்கு மாற்றாக அமையக்கூடும். ஆனால், இத்தகைய மாற்றம், தற்போதைய இறக்குமதி அடிப்படையிலான விநியோகச் சங்கிலியின் கீழ் சுமார் 47-52 மில்லியன் டன்களாக உள்ள CO₂ வெளியேற்றத்தை, ஆண்டுக்கு 106 முதல் 111 மில்லியன் டன்களாக அதிகரிக்கக்கூடும். இது, கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான இந்தியாவின் திட்டங்களுக்கு முரணாக அமையும்.

எனவே, இத்திட்டம் இந்தியாவின் எரிசக்தி மற்றும் மூலப்பொருள் (feedstock) பாதுகாப்பை வலுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தாலும், அதன் நீண்டகால நிலைத்தன்மை, அதனுடன் தொடர்புடைய கார்பன் உமிழ்வை இந்தியா எவ்வாறு திறம்படக் கையாள்கிறது என்பதைப் பொறுத்தே அமையும். இதன் விளைவாக, இந்தியாவின் நிலக்கரி வாயுவாக்கல் இலக்குகளுக்கு கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (Carbon Capture, Utilisation and Storage (CCUS)) இன்றியமையாததாக இருக்கும். நிலக்கரியிலிருந்து செயற்கை வாயுவாக மாற்றும் வழிமுறையின் மூலம் உள்நாட்டு உற்பத்தியானது, வெளியேற்றப்படும் புகையின் அளவை அதிகரிக்கக்கூடும் என்பதால், அதன் சுற்றுச்சூழல் பாதிப்பைச் சமன்செய்ய, இந்தியா ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 55 முதல் 60 மில்லியன் டன் CO₂-ஐப் பிடித்துப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.


இந்தியாவின் கார்பன் பிடிப்பு மற்றும் மறுசுழற்சி (CCUS) கட்டமைப்பு ஆரம்ப நிலையிலேயே இருப்பதால், இது ஒரு பெரும் சவாலாக உள்ளது. தற்போது மூன்று கார்பன் பிடிப்புத் திட்டங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. மேலும், ஆறு திட்டங்கள் கட்டுமான நிலையில் உள்ளன. இது, திறனை விரைவாக விரிவாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.


எனவே, நிலக்கரி வாயுவாக்கம் (coal gasification) என்பது ஒரு வாய்ப்பாகவும் அதே சமயம் ஒரு சவாலாகவும் உள்ளது. இது இந்தியாவின் பரந்த உள்நாட்டு நிலக்கரி இருப்புகளை மதிப்புமிக்க தொழில்துறை மூலப்பொருட்களாக மாற்றுவதற்கும், இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் ஒரு பாதையை வழங்குகிறது. ஆனால் அதன் வெற்றியானது, அது எத்தகைய இறக்குமதிகளுக்கு மாற்றாக அமைகிறது என்பதை மட்டுமல்லாமல், இந்த மாற்றத்துடன் வரும் சுற்றுச்சூழல் சவாலை அது எவ்வளவு திறம்பட எதிர்கொள்கிறது என்பதையும் பொறுத்தே இறுதியில் மதிப்பிடப்படும்.


கட்டுரையாளர், ஐசிஆர்ஏ-வின் தலைமைப் பொருளாதார நிபுணர் மற்றும் ஆராய்ச்சி, மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவராகவும் உள்ளார்.                          


Original Link: Balancing energy security, environmental concerns.

Share:

மேற்கூரை சூரியமின் சக்தி உற்பத்தியில் சாதனை அளவிலான வளர்ச்சி இருந்தபோதிலும், கேரளா ஏன் இன்னும் மின்விநியோகப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது? - ஷாஜு பிலிப்

வீடுகளின் மேற்கூரைகளில் அதிக அளவில் சூரியஒளி மின்தகடுகள் அமைப்பது மின்சார விநியோகத்தை மேம்படுத்த வேண்டுமல்லவா? ஆனால், இதற்கான விடை நாம் நினைப்பது போல் அவ்வளவு எளிதானது அல்ல. கேரளாவின் தற்போதைய மின்சாரப் பயன்பாட்டு முறைகள், அம்மாநிலத்தின் சாதனை அளவிலான சூரியமின் உற்பத்தியால் கிடைக்கக்கூடிய நன்மைகளை எவ்வாறு குறைக்கின்றன என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம்.



பிரதமரின் சூர்ய கர் யோஜனா (PM Surya Ghar Muft Bijli Yojana) திட்டத்தின்கீழ், வீடுகளின் கூரைகளில் சூரியஒளி மின்தகடுகளைப் பொருத்துவதில் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகக் கேரளா திகழ்கிறது.


பிரதமரின் சூர்ய கர் திட்டம் (PM Surya Ghar Scheme): வீடுகளின் மேற்கூரையில் சூரியஒளி மின்தகடுகள் அமைத்து இலவச / குறைந்த செலவில் மின்சாரம் பெற ஒன்றிய அரசு வழங்கும் மானியத் திட்டம். 


இந்தத் திட்டம் நாடு முழுவதும் கலவையான வரவேற்பைப் பெற்றுள்ள போதிலும், கேரள மாநிலம் இதை மிகுந்த ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளது. மேற்கூரை சூரியமின் உற்பத்தியில், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களைவிட உற்பத்தி அளவில், கேரளா தேசிய அளவில் நான்காவது இடத்தில் உள்ளது.


இருப்பினும், இந்த வெற்றி கேரளாவின் அதிகரித்துவரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதில் ஒரு புதிய சவாலையும் உருவாக்கியுள்ளது. முதன்முதலில் இது முரண்பாடாகத் தோன்றலாம்—அதிகப்படியான மேற்கூரை சூரியஒளி மின் உற்பத்தி அமைப்புகள் மின் விநியோகத்தை மேம்படுத்தத்தானே செய்ய வேண்டும்?


ஆனால், இதற்கான பதில் அவ்வளவு எளிதானது அல்ல. கேரளா மின்சாரத்தைப் பயன்படுத்தும் முறை, அந்மாநிலத்தின் சாதனை அளவிலான சூரியஒளி மின் உற்பத்தியின் பலன்களைக் கட்டுப்படுத்துவதாக உள்ளது.


கேரளாவின் சூரிய மின்சக்தி வெற்றிப் பயணம்


மாநில அரசின் சமீபத்திய தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டு மே மாத முடிவில் கேரளாவின் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி திறன் 2,508 மெகாவாட்டாக (MW) உயர்ந்துள்ளது. இதில் பெரும் பகுதியை வகிப்பது வீடுகளின் மேற்கூரைகளில் பொருத்தப்படும் சூரியஒளி மின்தகடுகள் ஆகும். இவை, மட்டுமே 2,036 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.



பிரதமரின் சூர்ய கர் (PM Surya Ghar) திட்டத்தின்கீழ், கேரளாவில் 2.96 லட்சம் சூரிய மின்சக்தி கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு, 3,03,531 குடும்பங்கள் இதனால் பயன்பெற்று வருகின்றன. இந்த ஒரு திட்டத்தின் மூலம் மட்டுமே 1,150 மெகாவாட் சூரிய மின்சக்தி திறன் கூடுதலாகக் கிடைத்துள்ளது.


இதனுடன் ஒப்பிடுகையில், பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் 22,383 சூரியஒளி மின் அமைப்புகள் மூலம் 33,843 குடும்பங்கள் மட்டுமே பயனடைந்துள்ளன. அங்கு நிறுவப்பட்டுள்ள மொத்த மின்திறன் 91 மெகாவாட் ஆகும்.


ஒட்டுமொத்தமாக, கேரளாவின் அனைத்து வகையான ஆற்றல் மூலங்களில் இருந்தும் கிடைக்கக்கூடிய மொத்த மின் உற்பத்தியில் சூரியஒளி மின்சாரம் மட்டுமே 50 விழுக்காட்டிற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது. இது தேசிய சராசரியைவிட மிக அதிகம் ஆகும். இந்திய அளவில் உள்ள மொத்த மின்திறனான 532 ஜிகாவாட்டில் (GW), சூரியஒளி மின்சாரம் 150 ஜிகாவாட் என்கிற அளவில் மட்டுமே பங்களிக்கிறது.

அப்படியானால் இதிலுள்ள பிரச்சனை என்ன?


தொழில்துறையில் நன்கு வளர்ச்சியடைந்த பல மாநிலங்களில், மின்சாரத்தின் பயன்பாடு பகல் நேரத்திலேயே மிக அதிகமாக இருக்கும். ஆனால், கேரளாவில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலான நேரத்திலேயே மின்சாரத் தேவை அதிகரிக்கிறது. ஏனெனில், அங்குள்ள மின்சாரத் தேவையில் 75 சதவீதம் வீடுகளுக்கே தேவைப்படுகிறது. மேலும், தொழிற்துறை மற்றும் வணிகரீதியான மின்சாரப் பயன்பாட்டின் அளவு மொத்தப் பயன்பாட்டில் சுமார் 20 சதவீதம் மட்டுமே ஆகும்.


இது ஒரு பெரிய முரண்பாட்டை உருவாக்குகிறது: பகல் நேரத்தில் சூரியஒளி மின்சாரம் தாராளமாகக் கிடைக்கிறது, ஆனால் மின்சாரத்திற்கான தேவயோ சூரிய ஆற்றல் உற்பத்தி செய்யப்படாத இரவு நேரத்தில்தான் மிக அதிகமாக உள்ளது.


இந்தப் பிரச்சினை கேரள மாநிலத்தில் மட்டும் அல்ல. இந்தியா முழுவதிலும் உள்ள மின்சாரக் கட்டமைப்புகளும் இரவு நேரத்தில்தான் மிகக் கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்கிறது. இருப்பினும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், இரவு நேரத்தில் குறைவான மின்சாரத் தேவை இருந்தபோதிலும், போதிய மின் விநியோகம் இல்லாததே இதற்கு முதன்மை காரணமாகும். ஆனால், கேரளாவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை வேறுபட்டதாகும், அங்கு இரவு நேரத்தில்தான் மின்சாரத் தேவை அதிகரிக்கின்றன.


இதன் விளைவாக, பகலில் உற்பத்தி செய்யப்படும் சூரியஒளி மின்சாரத்தில் பெரும்பகுதி உடனுக்குடன் பயன்படுத்தப்படுவதில்லை.


கேரள மாநில மின்சார வாரியத்தின் (Kerala State Electricity Board (KSEB)) தரவுகளின்படி, மேற்கூரை சூரியஒளி மின்தகடுகளை அமைத்துள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள்—அதாவது 'உற்பத்தியாள நுகர்வோர்கள்' (Prosumers)—தாங்கள் பகலில் உற்பத்தி செய்யும் சூரியஒளி மின்சாரத்தில் 36 சதவீதம் மட்டுமே பயன்படுத்துகின்றன/ர். மீதமுள்ள 64 சதவீதம் மின்சாரம் மாநிலத்தின் முதன்மை மின் தொகுப்பிற்குப் அனுப்பப்படுகிறது. பிறகு இரவு நேரத்தில், இந்த உற்பத்தி நுகர்வோர்கள் தாங்கள் மின் தொகுப்பிற்கு அனுப்பிய மின்சாரத்தில் சுமார் 45 சதவீத அளவை மீண்டும் திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள்.

உற்பத்தியாள நுகர்வோர் (Prosumer) என்பது, சொந்தப் பயன்பாட்டிற்காகத் தங்களது வீட்டுக் கூரையில் சூரியஒளி மின்உற்பத்தித் தகடுகளை அமைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதுடன், தங்களுக்கு மிஞ்சிய கூடுதல் மின்சாரத்தை மாநில மின் தொகுப்பிற்கு வழங்கும் வீடுகள் அல்லது வணிக நிறுவனங்களே உற்பத்தி நுகர்வோர் (Prosumer) என்று அழைக்கப்படுகின்றன.


உற்பத்தியாள நுகர்வோர் (Producer + Consumer = Prosumer): நுகர்வோரே உற்பத்தியாளராக மாறுவது. அதாவது மின்சாரத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளராக மட்டுமே இருக்காமல், அதை அவரே சொந்தமாக உற்பத்தியும் செய்யும் வாடிக்கையாளர் ஆவார்.


இது மின் விநியோகக் கட்டமைப்பை எவ்வாறு பாதிக்கிறது?


பகல் நேரத்தில், வீட்டின் கூரைகளில் நிறுவப்பட்டுள்ள சூரியஒளி மின்தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் குறைந்த மின்னழுத்த விநியோகக் கட்டமைப்பில் செலுத்தப்பகிறது. மின்சாரத்திற்கான தேவை குறைவாக இருக்கும் நேரத்தில், சூரியமின் சக்தி அதிகமாக விநியோகிக்கப்படும்போது கட்டமைப்பின் மின்னழுத்தம் உயர்கிறது. இதனால் மின் சாதனங்கள் மற்றும் மின்மாற்றிகள் சேதமடைவதற்கான அபாயம் அதிகரிக்கிறது.


பொதுவாக 3 கிலோவாட் (kW) திறன் கொண்ட ஒரு மேற்கூரைச் சூரியமின் சக்தி அமைப்பு ஒரு நாளைக்கு சுமார் 12 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.  ஆனால், ஒரு வீடு சராசரியாக 6 யூனிட் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தக்கூடும். உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள, நுகர்வோரே உற்பத்தியாளராகவும் இருக்கும் 'உற்பத்தி நுகர்வோர்கள்' (Prosumers) தங்கள் மின்சாரப் பயன்பாட்டை மாலை மற்றும் இரவு நேரங்களுக்கு மாற்றுகின்றனர். இது மின் தேவை உச்சத்தில் இருக்கும் நேரங்களில் மின்சாரத்திற்கான தேவையை மேலும் அதிகரிக்கிறது.



மேற்கூரை சூரியஒளி மின்தகடுகள் கட்டமைப்பு பரவலான பிறகு, கேரளாவில் மின்சாரத்தில் இயங்கும் சமையல் அடுப்புகளின் (Induction cookers) விற்பனை அதிகரித்ததை இதற்கு ஒரு நல்ல உதாரணமாகக் கூறலாம்.


இதன் காரணமாக, தேசிய மின்சாரச் சந்தையில் இரவில் மின் விநியோகம் குறைவாக இருக்கும் போது, அதிகரித்து வரும் நுகர்வோரின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகக் கேரளா மின்வாரியம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


கேரளாவின் மின்சார உற்பத்தி கலவை 


கேரளா பாரம்பரியமாக நீர்மின்சாரத்தையே (Hydroelectric power) பெருமளவில் நம்பியிருக்கிறது. இருப்பினும், சமீபத்திய தரவுகளின்படி, அம்மாநிலத்தின் தினசரி மின்சாரத் தேவையில் 83 சதவீதம் இப்போது தேசியச் சந்தையில் இருந்து பெறப்படும் மின்சாரக் கொள்முதல் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. கடந்த மாதம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின்படி, கேரளாவின் சராசரி தினசரி மின்சாரப் பயன்பாடு 88.45 மில்லியன் யூனிட்டுகளாக உள்ளது.


இதில், கேரளா நீர், காற்று மற்றும் சூரியசக்தி மூலமாகத் தினசரி 15 மில்லியன் யூனிட் மின்சாரத்தை மட்டுமே சொந்தமாக உற்பத்தி செய்கிறது. மீதமுள்ள 73.41 மில்லியன் யூனிட்கள் தேசிய மின்சாரச் சந்தையிலிருந்து போட்டி விலையில் வாங்கப்படுகின்றன. மின்சாரப் பயன்பாடு அதிகரிக்கும் நேரங்களில் இதன் விலை யூனிட்டுக்கு 10 ரூபாய் வரை உயரக்கூடும் என்கின்றனர்.


கடந்த பத்து ஆண்டுகளில், கேரளா தனது நீர்மின் உற்பத்தித் திறனில் வெறும் 150 மெகாவாட் (MW) அளவை மட்டுமே அதிகரித்துள்ளது. அதேவேளையில், அதன் சூரிய மின்உற்பத்தித் திறன்  2,400 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.


முன்னோக்கிச் செல்லும் பாதை 



நாட்டின் பிற பகுதிகள் எதிர்கொள்ளும் அதே சிக்கலைத்தான் கேரள மாநிலமும் எதிர்கொள்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் (Renewable energy) பயன்பாடு அதிகரிக்கும் போது, மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நேரத்திற்கும் மின்சாரப் பயன்பாடு அதிகரிக்கும் நேரத்திற்கும் இடையிலான இடைவெளியும் அதிகரிக்கிறது. இதற்குத் தீர்வாக அமைவது மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் 'ஆற்றல் சேமிப்பு' (Energy storage) முறைதான் என்று 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் ஏற்கனவே செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


இதற்காகக் கேரள மாநில மின்சார வாரியம் (KSEB), பகல் நேரத்தில் உற்பத்தியாகும் சூரிய மின்சாரத்தை மீண்டும் மின் விநியோகக் கட்டமைப்பிற்கு அனுப்பாமல், அதனைச் சேமித்து வைக்க 'மின்கலன் ஆற்றல் சேமிப்பு அமைப்பை' (Battery Energy Storage System (BESS)) நிறுவத் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு சேமிக்கப்படும் மின்சாரத்தை, இரவில் மின்சாரத் தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


மாநில மின்சார வாரியங்களில் இத்தகைய புதிய அணுகுமுறையை முதன்முதலில் ஏற்றுக்கொண்ட நிறுவனங்களில் கேரளா மாநில மின்சார வாரியமும் (KSEB) ஒன்றாகும். இதன் முதல் 'மின்கலன் ஆற்றல் சேமிப்பு அமைப்பு' (BESS) திட்டம், 125 மெகாவாட் (MW) சேமிப்புத் திறனுடன், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மைலாட்டி (Mylatti) பகுதியில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது செயல்பாட்டைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அடுத்தடுத்த கட்டங்களில் கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் மலப்புறத்தில் உள்ள அரீக்கோடு (Areekode) ஆகிய இடங்களில் வெவ்வேறு சேமிப்புத் திறன்களுடன் கூடிய, பல மின்கலன் ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) திட்டங்கள் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், 3 கிலோவாட்டுக்கு (kW) மேல் திறன் கொண்ட அனைத்து சூரியஒளி மின் உற்பத்தி நிலையங்களுக்கும் மின்கலன் சேமிப்பு அமைப்புகளைக் கட்டாயமாக்க வேண்டும் என்று மின்கலன் ஆற்றல் சேமிப்பு அமைப்பு முன்மொழிந்துள்ளது. ஆனால், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இந்த முன்மொழிவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.


Original Link: Kerala is seeing record rooftop solar adoption. So why is it still facing power supply issues?

Share:

'விமானத்தில் பிறக்கும் குழந்தைகள்', தேசப் பிரிவினை: குடியுரிமை குறித்து அரசியல் நிர்ணய சபை எவ்வாறு விவாதித்தது? -ஜதின் ஆனந்த்

அரசியலமைப்பு நிர்ணய சபையில் குடியுரிமை பற்றிய விவாதம் நடந்தபோது, மதம், பிறப்பு மற்றும் நாட்டின் பிரிவினை தொடர்பான பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதேவேளையில், மதச்சார்பற்ற மற்றும் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்ட குடியுரிமைக் கோட்பாடும் முன்வைக்கப்பட்டு, இறுதியாக அதுவே அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுகுறித்து தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:


1949-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்திய அரசியலமைப்பு வரைவின் குடியுரிமை தொடர்பான விதிகள் குறித்து அரசியலமைப்பு நிர்ணய சபையில் விவாதிக்கப்பட்டபோது, அரசியலமைப்பு வரைவின் பிரிவு-5 தான் வரைவுக் குழுவிற்கு "மற்ற அனைத்து விதிகளையும்விட அதிக தலைவலியைக் கொடுத்தது" என்று பி.ஆர்.அம்பேத்கர் கூறினார். இந்த விதியின்மீது சுமார் 140 திருத்தங்கள் முன்மொழியப்பட்டதால், அவை ஒரு "அடர்ந்த காட்டைப் போல சிக்கலாக உள்ளன" என்று ராஜேந்திர பிரசாத் விவரித்தார்.


இறுதியில் அம்பேத்கரின் வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், இந்த விவாதம் இந்தியக் குடியுரிமையின் உண்மையான அர்த்தம் குறித்து உறுப்பினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தியது. சில உறுப்பினர்கள் குடியுரிமையானது மதத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று விரும்பினர். வேறு சிலரோ பிறந்த இடத்திற்குப் பதிலாக ஒருவரது வம்சாவளியின் (Ancestry) அடிப்படையிலேயே குடியுரிமை தீர்மானிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்தியப் பிரிவினையால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சிலர் வலியுறுத்தினர். அதேநேரத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹிணி குமார் சௌத்ரி, அந்த மாநிலத்திற்குள் மக்கள் இடம்பெயர்வதைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வாதிட்டார். இறுதியில், இந்த பல்வேறுபட்ட மற்றும் முரண்பட்ட கருத்துக்களில் ஒரே ஒரு அணுகுமுறையை மட்டுமே நமது அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டது.



குடியுரிமை தானாக வழங்கப்படக்கூடாது, அது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்’


மத்திய மாகாணங்கள் மற்றும் பேரார் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய பஞ்சாப் ராவ் ஷாம்ராவ் தேஷ்முக், குடியுரிமை பற்றிய சட்டப்பிரிவை "முழு அரசியலமைப்பிலேயே மிகக் துரதிர்ஷ்டவசமான பிரிவு" என்று வர்ணித்தார். அம்பேத்கர் முன்மொழிந்த இந்த வரைவு இலக்கணம், இந்தியக் குடியுரிமையை உலகிலேயே மிக மலிவான ஒன்றாக மாற்றிவிடும் என்று அவர் வாதிட்டார்.


மேலும், "இந்தியாவுக்கு மனிதர்களின் குணாதிசயங்களைப் பற்றியோ அல்லது நாட்டின் நலன்களைப் பற்றியோ கவலைப்படாமல், இன்னும் கூடுதல் மனிதர்கள் தேவைப்படும் ஒரு சிறிய நாடாக இருந்திருந்தால், இத்தகைய கொள்கையை என்னால் புரிந்து கொள்ள முடிந்திருக்கும். ஆனால், இந்தியாவிலோ ஏற்கனவே மிக அதிக மக்கள்தொகை உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்தியக் குடியுரிமையைப் பெறுவதை நாம் ஏன் இந்த அளவிற்கு எளிதாக்குகிறோம்?" என்று கேள்வி எழுப்பினார்.


குடியுரிமை பெறுவதை மேலும் கடினமானதாக மாற்ற வேண்டும் என்று தேஷ்முக் வாதிட்டார். இந்தியப் பெற்றோருக்குப் பிறந்தவர்கள் அல்லது சட்டப்படி இயல்பான குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார். மேலும், வேறு எந்த நாட்டின் குடியுரிமையையும் பெறாத "இந்துக்கள் அல்லது சீக்கியர்கள்" இந்தியக் குடியுரிமை பெறத் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினார். ஏனெனில், அவர்கள் தஞ்சமடைய வேறு எந்த நாடும் இல்லை என்பதையும் அவர் குறிபிட்டார்.


இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் வசிப்பது மட்டுமே ஒருவருக்குத் தானாகவே குடியுரிமையைப் பெற்றுத் தந்துவிடக்கூடாது என்றும் அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். அதற்குப் பதிலாக, சட்டப்பூர்வமாக இயல்பான குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே இந்தியக் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.


பிறப்பிடமா அல்லது பெற்றோர் வழி உறவா?


இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், அக்குழந்தைக்கு பெற்றோரின் குடியுரிமையோடு எந்தத் தொடர்பும் இல்லாவிட்டாலும்கூட, இந்தியக் குடியுரிமை வழங்குவதை தேஷ்முக் எதிர்த்தார். இதற்கு உதாரணமாக, வெளிநாட்டுத் தம்பதி பயணிக்கும் விமானம் மும்பையில் சில மணிநேரங்கள் மட்டும் நிற்பதாக வைத்துக்கொள்வோம், அப்படியிருக்கும் போது, அந்தப் பெண் அங்கு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தால், பெற்றோரின் குடியுரிமையைப் பொருட்படுத்தாமல் அக்குழந்தை தானாகவே இந்தியக் குடிமகனாகிவிடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.


மேற்குவங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய நசீருதீன் அகமது இந்தக்  கருத்தை ஏற்றுக்கொண்டார். குடியுரிமை என்பது வெறும் பிறந்த இடத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படாமல், பெற்றோரின் குடியுரிமையை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இது மிகவும் சிக்கலான ஒரு விவகாரம் என்பதால், இதனை இவ்வளவு எளிமையான முறையில் தீர்மானித்திருக்கக் கூடாது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும், இதுபோன்ற குழந்தையை இந்தியாவின் குடிமகன் என்றும், அந்தக் குழந்தையின் தாயின் நாட்டின் குடிமகன் என்றும், தந்தையின் நாட்டின் குடிமகன் என்றும் ஒரே நேரத்தில் உரிமைகோர முடியும்; இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அகமது தெரிவித்தார்.


இந்தியாவில் பிறந்த காரணத்திற்காக இந்தியா அந்தக் குழந்தைக்குக் குடியுரிமை கோரும் என்றும், அதேவேளையில் தாயின் நாடு மற்றும் தந்தையின் நாடு ஆகிய இரண்டும் தங்களது தேசியக் குடியுரிமையின் அடிப்படையில் அந்தக் குழந்தைக்குக் குடியுரிமை கோரக்கூடும் என்றும் கூறினார். இதன் விளைவாக, அந்தக் குழந்தையின் குடியுரிமைக்காக இந்த மூன்று நாடுகளுமே ஒன்றோடொன்று போட்டியிடும் நிலை ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார்.


ஜனவரி மாதம் 26-ஆம் தேதி 1950-ஆம் ஆண்டுக்குப் பிறகான அரசியலமைப்புச் சட்ட இடைவெளி 


பெரும்பாலான விமர்சகர்களைப் போல அல்லாமல், ஐக்கிய மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜஸ்பத் ராய் கபூர், கொள்கை சார்ந்த கேள்விக்கு பதிலாக நடைமுறை சார்ந்த ஒரு கவலையை எழுப்பினார். இந்திய அரசியலமைப்புச் சட்டம், 26-ஆம் தேதி ஜனவரி மாதம் 1950-ஆம் ஆண்டு வரையிலான குடியுரிமையை மட்டுமே வரையறுத்துள்ளது என்றும்; அந்தத் தேதிக்குப் பிறகு பிறப்பவர்கள் எவ்வாறு குடியுரிமையைப் பெறுவார்கள் என்பதை விளக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.


எனவே, 26-ஆம் தேதி ஜனவரி மாதம் 1950-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் இந்தியப் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளையும் இதில் சேர்ப்பதற்காக, அரசியலமைப்பின் பிரிவு 5-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.


“இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குத் தனது விசுவாசத்தை மாற்றிக்கொண்ட” எவருக்கும் குடியுரிமை வழங்குவதையும் கபூர் எதிர்த்தார். அத்தகைய இடம்பெயர்வு "முழுமையான மற்றும் உறுதியான ஒன்றாகும்" என்றும், அது இந்தியக் குடியுரிமைக்கான அவர்களின் உரிமையை இல்லாமல் செய்துவிடும் என்றும் அவர் வாதிட்டார்.

பிரிவினை அகதிகளுக்கும் பரந்த அளவிலான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்


கிழக்கு பஞ்சாப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திய பூபிந்தர் சிங் மான், இந்தியப் பிரிவினையால் இடம்பெயர்ந்த அகதிகளைப் பாதுகாப்பதில் அரசியலமைப்பு வரைவு போதுமானதாக இல்லை என்று வாதிட்டார். மேலும், அரசியலமைப்பின் இந்த அணுகுமுறையை "ஒரு பலவீனமான வகை மதச்சார்பின்மை… மற்றும் நியாயமற்ற ஒருதலைப்பட்சமான செயல்" என்றும் அவர் விமர்சித்தார்.


பாகிஸ்தானில் நடந்த மதக்கலவரங்களில் இருந்து தப்பித்து ஓடிவந்து, இந்திய அரசியலமைப்பு அமலுக்கு வந்தபோது இந்தியாவில் இருந்த மக்களுக்கு, அவர்கள் எவ்விதப் பதிவும் செய்யாமலோ அல்லது 6 மாதங்கள் இந்தியாவில் வசித்ததாக நிரூபிக்காமலோ, தானாகவே குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.


1948-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19-ஆம் தேதியை, எல்லை நிர்ணய நாளாக மாற்றியமைத்ததையும் பூபிந்தர் சிங் மான் கேள்வி எழுப்பினார். "துரதிர்ஷ்டவசமான இந்த அகதிகள் இந்தக் குறிப்பிட்ட தேதியை முன்னரே கணித்திருக்க முடியாது; அப்படித் தெரிந்திருந்தால், அவர்கள் பாகிஸ்தானின் கத்தியால் தங்களை முன்னதாகவே காயப்படுத்திக் கொள்ள அனுமதித்திருப்பார்கள்... ஜூலை மாதம் 19-ஆம் தேதி, 1948-ஆம் ஆண்டுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய எல்லைகளை மூடுவது மிகவும் கொடூரமான செயல்” என்றும் அவர் வாதிட்டார்.


குடியுரிமை என்பது ஒரு மதச்சார்பற்ற, பிராந்திய ஒப்பந்தமாகும்


பிரிவினைக்குப் பிறகு பல மாதங்கள் நடத்தப்பட்ட தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகே இந்த வரைவு சட்டமுன்வரைவு உருவாக்கப்பட்டது என்று கூறி பிரதமர் ஜவஹர்லால் நேரு இதற்கு ஆதரவாகப் பேசினார். எந்தவொரு குடியுரிமைச் சட்டமும், நீதியை நிலைநாட்டும் அதேவேளையில் ஏற்படக்கூடிய அனைத்துச் சூழ்நிலைகளையும் முழுமையாக உள்ளடக்கிவிட முடியாது என்று வாதிட்டார். பிரிவினைப் பிரச்சனை மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் நிலை ஆகிய இரண்டையும் கையாள வேண்டியிருந்ததால், "அரசியலமைப்பின் மற்ற எந்தப் பகுதியையும்விட இந்தக் குடியுரிமை விதிகளுக்குத்தான் அதிக யோசனையும் தீவிரப் பரிசீலனையும் வழங்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.


இது "திருப்திப்படுத்தும் அரசியல்" என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்த நேரு, குடியுரிமை என்பது மதம் அல்லது அரசியல் லாபங்களின் அடிப்படையில் அமையாமல், நீதி மற்றும் நியாயத்தின் அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டும் என்றார்.


"திருப்திப்படுத்தும் அரசியல் பற்றிப் பேசும் மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதிக்கும் சமத்துவத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத சில விதிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களா?... ஒவ்வொரு தனிநபருக்கும் அல்லது குழுவிற்கும் நீதி என்று எதனைக் கருதுகிறதோ, அதிலிருந்து இந்த அரசாங்கம் ஒரு முடி இழையளவு கூட விலகிச் செல்லாது." என்றும் நேரு தெரிவித்தார். 


அம்பேத்கரின் கருத்தை ஆதரித்து, மதராஸ் மாகாணத்தைச் சேர்ந்த அல்லாடி கிருஷ்ணசுவாமி அய்யர், இந்தியாவின் குடியுரிமை விதிகள் அமெரிக்க நாட்டின் குடியுரிமை விதிகளைவிட ஏற்கனவே மிகவும் கடுமையானவையாகவே உள்ளன என்று வாதிட்டார். இந்தியாவில் பிறந்தார் என்ற ஒரே காரணம் மட்டும் போதுமானது அல்ல; ஒருவர் இந்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.


மேலும், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 5A-ஐ ஆதரித்துப் பேசிய அவர், அது எந்தவொரு மத சமூகத்திற்கும் இடையே பாகுபாடு காட்டவில்லை என்றும், மாறாக, அது பிரிவினையின்போது நிலவிய சூழல்களைக் கையாளவே செய்யப்பட்டது என்றும், மத அடிப்படையில் குடியுரிமையை வழங்கவில்லை என்றும் விளக்கினார். அகதிகள் இந்தியாவையே தங்களது நிரந்தர நாடாக மாற்றிக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அரசு அவர்களைக் குடியேற அனுமதித்ததால், அவர்களுக்குக் குடியுரிமையை மறுப்பது "மிகப்பெரிய அநீதியாக" அமையும் என்றும் வாதிட்டார்.



முன்மொழியப்பட்ட அனைத்துத் திருத்தங்களையும் ஒவ்வொன்றாக நிராகரித்து, அரசியலமைப்பு நிர்ணய சபையானது அம்பேத்கரின் வரைவை ஏற்றுக்கொண்டது. இதன் மூலம், அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த காலத்தில், அது ஒரு மதச்சார்பற்ற மற்றும் நிலப்பரப்பு சார்ந்த குடியுரிமைக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டது. அதேவேளையில், குடியுரிமைக்கான நிரந்தரச் சட்டத்தைப் பின்னர் நாடாளுமன்றமே உருவாக்கிக்கொள்ளலாம் என்றும் அனுமதித்தது.


Original Link: Babies born in planes’, Partition: How Constituent Assembly debated citizenship.

Share:

நாடாளுமன்றத்தை நோக்கி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) பேரணி : இந்தியாவில் பொதுப் போராட்டத்திற்கு ஏன் காவல்துறை அனுமதி தேவைப்படுகிறது?

அரசியலமைப்பின் 19-வது பிரிவின்கீழ் இந்தியக் குடிமக்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளிலிருந்து போராட்டம் நடத்தும் உரிமை வந்தாலும், அது நிபந்தனையற்றது அல்ல. மேலும், நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.


இந்தியாவின் ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி, திங்கட்கிழமை, ஜூலை 20 அன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்தவிருக்கும் பேரணிக்கு முன்னதாக, ஜந்தர் மந்தரில் தங்களது போராட்டத்தைத் தொடர சிஜேபி அனுமதி பெறவில்லை என்றும், பேரணி நடத்துவதற்கு ஒப்புதலுக்காக விண்ணப்பிக்கவும் இல்லை என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.


மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பதவி நீக்கம் செய்யக் கோரி வரும் சிஜேபி அமைப்பு, ஜூன் 20 முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது. திட்டமிட்டபடி திங்கட்கிழமை பேரணி நடைபெறும் என சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.


போராட்டம் நடத்தும் உரிமையை நிர்வகிக்கும் சட்டங்கள் குறித்தும், இந்தியாவில் ஒரு பொதுப் போராட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு ஏன் காவல்துறை அனுமதி தேவைப்படுகிறது என்பது குறித்தும் கீழே குறிப்பிட்டுள்ளது.


போராடுவதற்கான உரிமை


இந்தியக் குடிமக்களுக்கு, போராட்டம் நடத்தும் உரிமை என்பது இந்திய அரசியலமைப்பின் 19-வது பிரிவின்கீழ் இந்தியக் குடிமக்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளிலிருந்து உருவாகிறது. பிரிவு 19(1)(a)-ன் கீழ் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் பிரிவு 19(1)(b)-ன் படி ஆயுதங்கள் இன்றி பொது இடத்தில் அமைதியாகக் கூடுவதற்கான உரிமை குறித்து குறிப்பிடுகின்றன.


ஆனால், இது ஒரு நிபந்தனையற்ற உரிமை அல்ல; இது சில கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டது. எனவே, அவ்வாறு செய்யும்போது அதிகாரிகளிடமிருந்து தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்று, பொது அமைதி பாதுக்காக்கப்படுவதை உறுதி செய்தால், ஒருவர் தனது போராட்ட உரிமையை அமைதியான முறையில் பயன்படுத்தலாம்.


விதி சட்டக் கொள்கை மையத்தில் (Vidhi Centre for Legal Policy) உருவாக்கப்பட்ட, சட்டத் தகவல்களுக்கான திறந்த அணுகல் டிஜிட்டல் ஆதாரமான Nyaaya.org வழங்கிய, “பல ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தின்முன் கொண்டுவரப்பட்ட பல வழக்குகள், போராட்டம் நடத்தும் உரிமை ஜனநாயகத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், இந்த உரிமை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, அரசு அதிகாரிகளும் குடிமக்களும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களையும் அவை வகுத்துள்ளன,” என்று “சட்டப்பூர்வமான போராட்டத்திற்கான வழிகாட்டி” (Guide to Lawful Protesting) என்ற தலைப்பிலான டிசம்பர் 2020-ல் வெளியிடப்பட்ட குறிப்பு கூறுகிறது.


காவல்துறை அனுமதிக்குத் தேவையான ஆவணங்கள்



அரசியலமைப்பின் மாநிலப் பட்டியலில் 'சட்டம் மற்றும் ஒழுங்கு' (Law and order) ஒரு பொருளாக இருப்பதால், ஒவ்வொரு மாநிலமும் தனது எல்லைக்குள் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கத் தனக்கென தனிப்பட்ட சட்டங்களையும் விதிகளையும் இயற்றிக்கொள்ள முடியும். எனவே, போராட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கான அனுமதிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான விதிகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன.


இதுபோன்ற எந்தவொரு போராட்டம் அல்லது பொதுக் கூட்டத்திற்கும், ஏற்பாடு செய்பவர்கள் அது நடைபெறும் அதிகார வரம்பிற்குட்பட்ட காவல் நிலையத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழை (No Objection Certificate (NOC)) பெற வேண்டும். அத்தகைய போராட்டம் ஒன்றுக்கு மேற்பட்ட காவல் நிலையங்களின் அதிகார வரம்பை உள்ளடக்கியிருந்தால், காவல் ஆணையர் அலுவலகமோ (Commissionerate Office)அல்லது காவல் துணை ஆணையர் (Deputy Commissioner of Police (DCP)) அலுவலகமோ தடையில்லாச் சான்றிதழை வழங்க வேண்டும்.


போராட்டத்திற்கான தடையில்லாச் சான்றிதழ் (NOC) அல்லது ஏதேனும் குறிப்பிட்ட அனுமதிகளுக்கான விண்ணப்பத்தில், ஏற்பாட்டாளர்களின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண் போன்ற விவரங்கள் இருக்க வேண்டும். தேவைப்படும் மற்ற விவரங்களில், குறிப்பிட்ட போராட்டத்திற்கான காரணங்கள், அதன் கால அளவு, அதில் பங்கேற்கும் நபர்களின் தோராயமான எண்ணிக்கை மற்றும் கூட்டம் கூடும் இடம் ஆகியவை அடங்கும். பேரணியாக இருந்தால், செல்லும் பாதை வழங்கப்பட வேண்டும். மேலும், ஒலிபெருக்கிகள், கூடாரங்கள் மற்றும் பந்தல்கள் போன்ற உபகரணங்களின் பயன்பாடும் குறிப்பிடப்பட வேண்டும்.


சம்பந்தப்பட்ட காவல் துறையிடம் குறிப்பிட்ட படிவம் எதுவும் இல்லையென்றால், தடையில்லாச் சான்றிதழுக்கான (NOC) விண்ணப்பத்தை, மேலே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுடன் ஒரு எளிய கடித வடிவில் சமர்ப்பிக்கலாம். அதனை, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் உயர் அதிகாரிக்கோ அல்லது துணை ஆணையர் (DCP) அலுவலகத்திற்கோ முகவரியிட வேண்டும். விண்ணப்பதாரரின் அடையாளச் சான்று, விண்ணப்பதாரரின் இருப்பிடச் சான்று, விண்ணப்பதாரரின் புகைப்படம் மற்றும் காவல் துறையினரால் கோரப்படும் வேறு ஏதேனும் தொடர்புடைய ஆவணங்கள் அதனுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். போராட்டத்தில் பங்கேற்பவர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் மற்றும் பிற வசதிகள், அத்துடன் கூட்டத்தில் கலந்துகொள்ளும் காவல் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பதற்கான விவரங்கள் குறித்தும் காவல் துறையினர் கூடுதல் தகவல்களைக் கோரலாம். சில சமயங்களில், விண்ணப்பதாரர் மற்றும்/அல்லது பிற அமைப்பாளர்களை இந்த விவரங்களை ஒரு உறுதிமொழிப் பத்திர (affidavit) வடிவில் சமர்ப்பிக்குமாறு காவல்துறை கேட்கக்கூடும்.


காவல்துறையால் அனுமதியை மறுக்க முடியுமா?


ஆம். போராட்டத்திற்கான உரிமை என்பது நிபந்தனையற்ற உரிமை அல்ல என்பதால், காவல்துறை அதற்கான அனுமதியை மறுக்கலாம். இது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. இதற்குக் காரணம், போராட்டத்திற்காகக் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களின் நலன்களையும், பொது அமைதியைப் பராமரிப்பதன் அவசியம் ஆகியவற்றையும் காவல்துறை கருத்தில் கொள்ள வேண்டும்.


போராட்டமானது இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவுகள், பொது அமைதி, கண்ணியம் அல்லது ஒழுக்கநெறி ஆகியவற்றின் நலன்களைப் பாதிக்கக்கூடும் என்று அதிகாரிகள் கருதினால், அனுமதி மறுக்கப்படலாம். அத்தகைய கோரிக்கையை மறுப்பதற்கான பிற காரணங்கள் நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு அல்லது ஒரு குற்றச் செயலுக்குத் தூண்டுதல் ஆகியவையாக இருக்கலாம்.


பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (முன்னர் 1973-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144) பிரிவு 163-ன் கீழ், ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிப்பதன் மூலம், நடைபெற்றுக்கொண்டிருக்கும் அமைதியான போராட்டத்திற்கான அனுமதியைக் கூட ரத்து செய்ய முடியும்.


கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலோ அல்லது அனுமதி திரும்பப் பெறப்பட்டாலோ, காவல்துறை அல்லது மாநில அதிகாரிகள் (மாவட்ட நீதிபதி போன்றோர்), அச்சுறுத்தலின் துல்லியமான தன்மை, போராட்டத்தால் ஏற்படக்கூடிய அபாயங்கள் மற்றும் நடைபெற்று வரும் போராட்டத்திற்குத் தடை உத்தரவுகளை விதிப்பதற்கான காரணங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, திட்டவட்டமான தெளிவான காரணங்களை வழங்க வேண்டும்.


Original Link: CJP march to Parliament: Why police nod is needed for a public protest in India.

Share:

ரிசர்வ் வங்கியின் புதிய குறிப்பிடப்பட்ட நிதி அல்லாத சொத்துகள் மற்றும் நிதிச் சொத்துகளின் பத்திரமயமாக்கல் மற்றும் மறுசீரமைப்பு மற்றும் பிணைய உரிமை அமலாக்கச் சட்டம் குறித்து… -குஷ்பூ குமாரி

கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் சொத்துக்களை நிர்வகிக்க,  ரிசர்வ் வங்கி  குறிப்பிட்ட நிதி அல்லாத சொத்துகள் (Specified Non-Financial Assets (SNFAs)) என்ற கருத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நிதி அல்லாத சொத்துகள் என்றால் என்ன? ஒரு கடன் எப்போது செயல்பாடற்ற சொத்தாக (Non-Performing Asset (NPA)) மாறுகிறது? மேலும், வாராக்கடன்களை வங்கிகள் மீட்க நிதிச் சொத்துகளின் பத்திரமயமாக்கல் மற்றும் மறுசீரமைப்பு மற்றும் பிணைய உரிமை அமலாக்கச்  (SARFAESI)) சட்டம் எவ்வாறு உதவுகிறது?


தற்போதைய செய்தி


கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் சொத்துக்களை நிர்வகிக்க, ரிசர்வ் வங்கி "குறிப்பிட்ட நிதி அல்லாத சொத்துக்கள்" (SNFA) என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சொத்துக்கள் நிதிச் சொத்துகளின் பத்திரமயமாக்கல் மற்றும் மறுசீரமைப்பு மற்றும் பிணைய உரிமை அமலாக்கச்  (SARFAESI)) சட்ட விதிகளின்படி பொது ஏலம் மூலம் விற்கப்பட வேண்டும். அந்தச் சொத்துகளை முதலில் கடன் பெற்றவருக்கோ அல்லது அவருடன் தொடர்புடைய தரப்பினருக்கோ மீண்டும் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது


முக்கிய அம்சங்கள்:


1. குறிப்பிட்ட நிதி அல்லாத சொத்துக்கள் (Specified Non-Financial Assets (SNFAs)) என்பவை, கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறும் போது வங்கிகள் கையகப்படுத்தும் அசையாச் சொத்துக்களைக் குறிக்கின்றன. நிலுவையில் உள்ள கடனைத் தீர்ப்பதற்காக வங்கிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இதுபோன்ற சொத்துக்களில் குடியிருப்பு கட்டிடங்கள், வணிகச் சொத்துக்கள், தொழிற்சாலை நிலம் அல்லது பிற அசையாச் சொத்துக்கள் அடங்கும்.

2. கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய கடனாளிகளிடமிருந்து பெறப்பட்ட நிதி அல்லாத சொத்துக்களை வங்கிகள் எவ்வாறு கையகப்படுத்த வேண்டும், மதிப்பிட வேண்டும், நிர்வகிக்க வேண்டும் மற்றும் அகற்ற வேண்டும் என்பதற்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவதற்காக,  ரிசர்வ் வங்கி 2026-ஆம் ஆண்டின் 3-வது திருத்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.


3. புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒரு கடனாளியின் கடன் அதிகாரப்பூர்வமாக செயல்பாடற்ற சொத்தாக (non-performing asset (NPA)) வகைப்படுத்தப்பட்ட பின்னரே வங்கிகள் ஒரு குறிப்பிட்ட நிதி அல்லாத சொத்தைக் கையகப்படுத்த முடியும். இந்தச் சொத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை, வங்கிக்கு வர வேண்டிய நிலுவைக் கடன் தொகையை முழுவதுமாகவோ அல்லது ஒரு பகுதியளவுகவோ திரும்பப் பெறும் வகையில் இருக்க வேண்டும்.




4. இந்தத் திருத்தத்தின்படி, குறிப்பிட்ட நிதி அல்லாத சொத்துக்களை (SNFA) கையகப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான ஒரு விரிவான  கொள்கையை வகுக்க வேண்டும். அந்தக் கொள்கையானது, தகுதி அளவுகோல்கள், ஒப்புதல் நடைமுறைகள் மற்றும் சொத்தைக் கையகப்படுத்துவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்டெடுப்பு முயற்சிகளைக் குறிப்பிட வேண்டும்.

5. திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளின் கீழ், கைப்பற்றப்பட்ட சொத்துகள் பின்னர், குறிப்பிடப்பட்ட நிதி அல்லாத சொத்து என்ற வகைப்பாட்டில் இருந்து நீக்கப்பட்டாலும், அவற்றை முதலில் கடன் பெற்றவருக்கோ அல்லது அவருடன் தொடர்புடைய தரப்பினருக்கோ மீண்டும் விற்பனை செய்வது வங்கிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.


6. குறிப்பிடப்பட்ட நிதி அல்லாத சொத்துகள் (SNFAs) இனி மொத்த வாராக்கடன்கள், நிகர வாராக்கடன்கள் அல்லது நெருக்கடிக்குள்ளான சொத்துக்களின் ஒரு பகுதியாகக் கணக்கிடப்படாது. அதற்குப் பதிலாக, வங்கிகளின் இருப்புநிலை அறிக்கைகளில், “கோரிக்கைகளைத் தீர்ப்பதற்காகப் பெறப்பட்ட வங்கி அல்லாத சொத்துகள்” (Non-banking assets acquired in satisfaction of claims) என்ற பிரிவின்கீழ் இவை தனியாகக் காட்டப்படும்.


ஒரு கடன் எப்போது செயல்பாடற்ற சொத்தாக (non-performing asset (NPA)) மாறுகிறது?


1. வங்கிகளால் வழங்கப்படும் அனைத்து முன்பணங்களும் "சொத்துக்கள்"  (assets) என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில், அவை வட்டி அல்லது தவணைகள் மூலம் வங்கிக்கு வருமானத்தை ஈட்டித் தருகின்றன. இருப்பினும், செலுத்த வேண்டிய தேதிக்குப் பிறகும் வட்டி அல்லது தவணை செலுத்தப்படாமல் இருந்தால், அது ஒரு கடன் வாராக்கடனாக மாறுகிறது. மேலும், 90 நாட்களுக்கும் மேலாக செலுத்தப்படாமல் இருந்தால், அது செயல்பாடற்ற சொத்தாக (NPA) மாறிவிடுகிறது.


2. ஜூலை 2014-ல் வெளியான ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையின்படி, 90 நாட்களுக்கும் மேலாக வட்டி மற்றும்/அல்லது அசல் தவணை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள அனைத்து முன்பணங்களும் “செயல்பாடற்ற சொத்து” (non-performing asset) என்று வகைப்படுத்தப்படும்.





3. ஒரு கடன் கணக்கு செயல்படாத சொத்தாக மாறுவதற்கு முன்பே, அந்தக் கணக்கில் ஏற்படும் ஆரம்பகட்ட நிதி அழுத்தத்தை (Incipient Stress) வங்கிகள் கண்டறிய வேண்டும். இதற்காக, சிறப்பு கவனக் கணக்குகள் (Special Mention Accounts (SMA)) எனப்படும் ஒரு துணைச் சொத்து வகை (Sub-Asset Category) உருவாக்கப்பட்டுள்ளது. கடன் செலுத்துவதில் சிக்கல் அல்லது முறைகேடு ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடன், அந்தக் கடன் கணக்கு சிறப்பு கவனக்கணக்குகள் பிரிவில் சேர்க்கப்படுகிறது.


சிறப்பு கவனக் (Special Mention Accounts (SMA)) கணக்குகளில் மூன்று வகைகள் உள்ளன:


• சிறப்பு கவனக் கணக்குகள்-0: என்பது அசல் அல்லது வட்டித் தொகையைச் செலுத்துவதில் 30 நாட்களுக்கு மேல் காலதாமதம் ஏற்படாத நிலையிலும், கணக்கில் ஆரம்பக்கட்ட நிதி நெருக்கடிக்கான அறிகுறிகள் தென்படும்போது உருவாகும் கணக்குகளாகும்.


• சிறப்பு கவனக் கணக்குகள்-1: என்பது அசல் அல்லது வட்டி செலுத்துதல் 31 முதல் 60 நாட்களுக்குள் தாமதமானால் உருவாகும் கணக்குகளாகும்.


• சிறப்பு கவனக் கணக்குகள்-2: அசல் அல்லது வட்டி செலுத்துதல் 61 முதல் 90 நாட்களுக்குள் தாமதமானால் உருவாகும் கணக்குகளாகும்.


4. ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி, வங்கிகள் தங்களின் வாராக்கடன்களைப் பின்வரும் பரந்த குழுக்களாக வகைப்படுத்த வேண்டும்:


(i) தரம் குறைந்த நிலையில் இருக்கும் சொத்துக்கள்: ஒரு சொத்து 12 மாதங்கள் அல்லது அதற்குக் குறைவான காலம் செயல்படாத சொத்தாக இருந்தால், அது தரம் குறைந்த நிலையில் இருக்கும் சொத்து (Sub-standard Assets) என வகைப்படுத்தப்படும்.

 


(ii) சந்தேகத்திற்குரிய சொத்துக்கள் (Doubtful Assets): ஒரு சொத்து 12 மாதங்களுக்கு மேல் செயல்படாத சொத்தாக நீடித்தால், அது சந்தேகத்திற்குரிய சொத்து என வகைப்படுத்தப்படும்.


(iii) நட்டச் சொத்துக்கள் (Loss Assets): வசூலிக்க முடியாத மற்றும் மதிப்பு குறைந்த சொத்து, ஆனால் வங்கி அதை முழுமையாக கணக்கில் இருந்து நீக்காத நிலை, நட்டச் சொத்துக்கள் (Loss Asset) எனப்படும்.


நிதிச் சொத்துகளின் பத்திரமயமாக்கல் மற்றும் மறுசீரமைப்பு மற்றும் பிணைய உரிமை அமலாக்கம் (Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest (Sarfaesi))) என்றால் என்பது என்ன?


1. கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய கடனாளிகளிடமிருந்து நிதி நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக, 2002-ஆம் ஆண்டின் நிதிச் சொத்துக்களைப் பத்திரமாக்குதல் மற்றும் மறுகட்டமைத்தல் மற்றும் பிணையப் பற்றுரிமையை அமல்படுத்துதல் (Sarfaesi) சட்டம்  அறிமுகபடுத்தப்பட்டது. இந்தப் புதிய சட்டத்தை முன்மொழிவதற்காக, மத்திய அரசு நரசிம்மம்  மற்றும் அந்தியருஜினா குழு போன்ற குழுக்களை அமைத்தது.


நரசிம்மம் குழு  மற்றும் அந்தியாருஜினா குழுக்கள் எது போன்ற பரிந்துரைகளை செய்தன ?


நரசிம்மம் குழு :


மத்திய அரசு 1991-ஆம் ஆண்டு முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் எம். நரசிம்மம் தலைமையில் குழுவை அமைத்தது. சொத்து மறுசீரமைப்பு நிதியை உருவாக்குதல், வங்கிகளின் மூலதன விகிதத்தை (Capital Adequacy Ratio) அதிகரித்தல், வங்கிகளை அதிக போட்டித்தன்மை கொண்டதாக மாற்றம் செய்யவேண்டும் என்ற பரிந்துரைகளை வழங்கியது.


அந்தியாருஜினா குழு:


அந்தியாருஜினா குழு என்பது 1998-ஆம் ஆண்டு  மத்திய அரசாங்கத்தால் வங்கி சட்டங்களைச் சீரமைக்க அமைக்கப்பட்ட ஒரு நிபுணர் குழுவாகும். இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் 'டி.ஆர். அந்தியாருஜினா'  இதன் தலைவராக இருந்தார். இந்தக் குழுவின் பரிந்துரைகள் நிதிச் சொத்துகளின் பத்திரமயமாக்கல் மற்றும் மறுசீரமைப்பு மற்றும் பிணைய உரிமை அமலாக்கச்  (SARFAESI)) சட்ட உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தன.




2. இந்தச் சட்டத்தின்கீழ், வங்கிகள் தங்களின் வாராக்கடன்களை வசூலிப்பதற்காக, கடனுக்கு ஈடாக அடமானம் வைக்கப்பட்டுள்ள சொத்துகளை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம். மேலும், நீதிமன்ற தலையீடு இல்லாமல், அந்தச் சொத்துகளை நிர்வகிக்கவோ அல்லது விற்பனை செய்து நிலுவைத் தொகையை (Dues) மீட்டெடுக்கவோ முடியும். இந்தச் சட்டம் நாடு முழுவதும் பொருந்தும்.  மேலும், கடன் வழங்குநருக்குப் பிணையமாக (security) அளிக்கப்பட்ட அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் அனைத்தும் இந்தச் சட்டத்தின்கீழ்  இடம்பெற்றிருக்கும்.


3. 2002-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு, வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் தங்களது வாராக்கடன்களை மீட்டெடுக்க நீண்ட சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டிய சூழல் இருந்தது. திருப்பிச் செலுத்தப்படாத கடன்களை ஈடுசெய்யும் வகையில் பிணையச் சொத்துகளின் மீதான உரிமையைப் பெற, கடன் வழங்குநர்கள் உரிமையியல் நீதிமன்றங்களையோ அல்லது அதற்கென அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்களையோ நாட வேண்டிய சூழல் இருந்தது. இதனால் கடன் வசூல் தாமதமானதுடன், கடன் வழங்குநர்களின் 'செயல்பாடற்ற சொத்துகளின்' (non-performing assets) பட்டியலும் அதிகரித்தது.


4. ஒரு கடன் வாங்கியவர் ஆறு மாதங்களுக்கு மேல் கடன் தொகையை செலுத்தத் தவறினால், SARFAESI சட்டம் நடைமுறைக்கு வரும். அப்போது, ​​கடன் வழங்குபவர், 60 நாட்களுக்குள் நிலுவைத் தொகையைச் செலுத்துமாறு கடனாளிக்கு ஓர் அறிவிப்பை அனுப்பலாம். அவ்வாறு செய்யத் தவறினால், அந்த நிதி நிறுவனத்திற்கு பிணையமாக வைக்கப்பட்ட சொத்துகளை (Secured Assets) கைப்பற்றி, அவற்றை விற்பனை செய்யவோ, மாற்றம் செய்யவோ அல்லது நிர்வகிக்கவும் உரிமை கொண்டுள்ளது.


5. இதற்கிடையில், கடன்கட்ட தவறியவர், கடன் வழங்குபவரிடமிருந்து அறிவிப்பு பெற்ற 30 நாட்களுக்குள், இந்தச்சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள மேல்முறையீட்டு அமைப்பை (Appellate Authority) அணுகலாம். மேலும், 2020-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கூட்டுறவு வங்கிகளும் (SARFAESI) சட்டத்தைப் பயன்படுத்தலாம்.


Original Link: What is the RBI’s new Specified Non-Financial Assets (SNFAs) and SARFAESI Act?

Share:

இந்தியா-ஆஸ்திரேலியா யுரேனிய ஒப்பந்தம் : இந்தியாவின் அணுசக்தி லட்சியங்களுக்கு உள்நாட்டு இருப்பு ஏன் போதுமானதாக இல்லை? -பிரத்யுஷ் தீப்

2047-ம் ஆண்டுக்குள் அணுமின் உற்பத்தித் திறனை 100 ஜிகாவாட்-மின்சாரம் (GWe) அளவிற்கு விரிவுபடுத்தும் நோக்கில், இந்தியா ஆஸ்திரேலியா முதல் கஜகஸ்தான் வரையிலான நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வதன் மூலம் இந்தியா யுரேனியத்தைப் பெற்று வருகிறது.


இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியா தனது சிவில் அணுசக்தித் திட்டத்திற்கான ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதில் ஒரு முக்கியப் படியாக, ஆஸ்திரேலியாவுடன் ஒரு நீண்டகால யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்தியா-ஆஸ்திரேலியா சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் (India-Australia Civil Nuclear Cooperation Agreement) கையெழுத்திடப்பட்டு சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


வழங்கப்படவுள்ள யுரேனியம் ஆக்சைடு அல்லது யெல்லோகேக்கின் (yellowcake) அளவு மற்றும் ஒப்பந்தத்தின் கால அளவு வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் கனடா மற்றும் கஜகஸ்தானுடன் கையெழுத்திடப்பட்ட இதேபோன்ற நீண்டகால யுரேனியம் விநியோக ஒப்பந்தங்களைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது, இந்தியா தனது திட்டமிடப்பட்ட அணுமின் உற்பத்தி விரிவாக்கத்திற்காக எரிபொருள் விநியோகத்தைப் பன்முகப்படுத்தவும், பாதுகாக்கவும் மேற்கொள்ளும் முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


2047-ம் ஆண்டுக்குள் தனது சிவில் அணுசக்தித் திறனை 100 ஜிகாவாட்-மின்சாரமாக (GWe) விரிவுபடுத்தும் லட்சிய இலக்கை இந்தியா பின்பற்றி வரும் வேளையிலும், கடந்த ஆண்டு கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருந்த சிவில் அணுசக்தித் துறையை அதிக தனியார் பங்கேற்புக்குத் திறந்துவிட்ட நிலையிலும் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் பொதுவாகக் காணப்படும் ஒரு தனிமமான யுரேனியம், அணுசக்தி எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு பல செயலாக்க நிலைகளைக் கடக்க வேண்டும். சுரங்கத் தொழில் மற்றும் அரைத்தல் (mining and milling), உருமாற்றம் (conversion), செறிவூட்டல் (enrichment-தேவைப்படும் இடங்களில்), மற்றும் எரிபொருள் தயாரிப்பு (fuel fabrication) ஆகியவை இவற்றில் அடங்கும்.


இந்தியாவின் அணுமின் உலைகளுக்குத் தேவையான யுரேனியம் தற்போது எங்கிருந்து கிடைக்கிறது? நாட்டின் வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதில் உள்நாட்டு யுரேனியம் இருப்புக்களின் பங்கு என்ன?


இந்தியாவுக்கு கூடுதல் யுரேனியம் தேவை


இயற்கை யுரேனியத்தில் இயங்கும் நாட்டின் உள்நாட்டு அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகளுக்கான (Pressurised Heavy Water Reactors (PHWR)) எரிபொருள் தேவைகள், அரசுக்குச் சொந்தமான யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Uranium Corporation of India Ltd (UCIL)) சுரங்கங்களின் உற்பத்தி மற்றும் இறக்குமதி ஆகியவற்றின் கலவையின் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன. தாராபூர் அணுமின் நிலையம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகிய இரண்டு இலகுநீர் அணு உலை (Light Water Reactors (LWRs)) வகைகளில் பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் முழுவதுமாக இறக்குமதி செய்யப்படுகிறது.


ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஜார்க்கண்ட், மேகாலயா, இராஜஸ்தான், கர்நாடகா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ள 47 யுரேனியம் படிவங்களில், உள்நாட்டு யுரேனியம் ஆக்சைடு இருப்பு தற்போது சுமார் 4.3 லட்சம் டன்களாக உள்ளது. நாட்டில் யுரேனியம் தாதுவை அகழ்ந்தெடுத்துப் பதப்படுத்தும் பொறுப்பை யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL) கொண்டுள்ளது. மேலும், இது ஜார்க்கண்டில் உள்ள ஜடுகூடா மற்றும் துராம்டிஹ், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தும்மலப்பள்ளி ஆகிய இடங்களில் முக்கியச் சுரங்கங்களை இயக்குகிறது.


இருப்பினும், நாட்டின் மொத்த 8.7 ஜிகாவாட் அணுசக்தித் திறனில், 2.4 ஜிகாவாட் திறனுக்கான யுரேனியம் தேவை மட்டுமே தற்போது உள்நாட்டு மூலங்களிலிருந்து பூர்த்தி செய்யப்படுகிறது என்றும், மீதமுள்ளவை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன என்றும், 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனை எட்டுவதற்கான செயல்திட்டத்தை தயாரிப்பதற்காக மின்சார அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஒரு குழு, ஜூன் 2025-ல் குறிப்பிட்டது.


"எனவே, 2047-ம் ஆண்டில் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறன் என்ற இலக்கை அடைய, இந்தியா தனது யுரேனியம் விநியோகத்தை அதிகரிப்பதோடு, அதற்கு இணையான பதப்படுத்தும் மற்றும் உற்பத்தித் திறன்களையும் கொண்டிருக்க வேண்டும்," என்று அது கூறியது. 2047-ம் ஆண்டில், நாட்டிற்கு ஆண்டுதோறும் கூடுதலாக 8,029 டன் இயற்கை யுரேனியமும், 1,045 டன் செறிவூட்டப்பட்ட யுரேனியமும் தேவைப்படும் என்று அக்குழு மதிப்பிட்டுள்ளது.


அணுசக்தி விநியோகர்கள் குழு (Nuclear Suppliers Group (NSG)) விலக்கு, உலகளாவிய யுரேனியம் கூட்டாண்மைகளை விரிவுபடுத்துகிறது



2008-ம் ஆண்டில், அணுசக்தி விநியோகர்கள் குழு (NSG) அந்நாட்டிற்கு ஒரு 'முழுமையான' விலக்கை வழங்கியபோது, ​​அதன் சிவில் அணுசக்தி உலைகளுக்காக யுரேனியத்தை இறக்குமதி செய்யும் நாட்டின் திறனை இந்தியா பெற்றது. இதன்மூலம், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (Nuclear Non-Proliferation Treaty (NPT)) கையெழுத்திடாத நாடுகளில், இத்தகைய வர்த்தகச் சலுகைகளை அனுபவிக்கும் ஒரே நாடாக இந்தியா திகழ்கிறது.


சர்வதேச அணுசக்தி முகமையின் (International Atomic Energy Agency (IAEA)) பாதுகாப்புகளின் கீழ் இயங்கும் அணு உலைகளுக்காக, 2008-09 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில், இந்தியா மொத்தம் 18,842.60 மெட்ரிக் டன் (mt) யுரேனியத்தை யுரேனியம் தாதுச் செறிவூட்டி (uranium ore concentrate), இயற்கையான யுரேனியம்-டை-ஆக்சைடு துகள்கள் (pellets) மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம்-டை-ஆக்சைடு துகள்கள் வடிவில் இறக்குமதி செய்துள்ளது என்று அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.


அரசுத் தரவுகளின்படி, 2024-25-ஆம் ஆண்டில், அணுமின் நிலையங்கள் 56,631.48 மில்லியன் யூனிட் (mu) மின்சாரத்தை உற்பத்தி செய்தன. அதில் 39,180 மில்லியன் யூனிட் (mu) இறக்குமதி செய்யப்பட்ட யுரேனியத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டது. 2025-2033 காலகட்டத்தில், செயல்பாட்டில் உள்ள மற்றும் முன்மொழியப்பட்ட பாதுகாக்கப்பட்ட அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகளை (safeguarded Pressurised Heavy Water Reactors (PHWR)) இறக்குமதி செய்யப்படும் இயற்கை யுரேனியத்தின் மதிப்பிடப்பட்ட தேவை சுமார் 9,000 மெட்ரிக் டன் யுரேனியம் (mtu) ஆகும்.


இந்தியா தற்போது ரஷ்யா மற்றும் உஸ்பெகிஸ்தானிலிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்கிறது. மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்ட 2.6 பில்லியன் டாலர் மதிப்பிலான விநியோக ஒப்பந்தத்தின்கீழ், கனடா சுரங்க நிறுவனமான கேமெகோ நிறுவனங்களிடமிருந்து (Cameco Corp.) வரும் சரக்குகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய யுரேனியம் உற்பத்தியாளரான கஸாடோம்பிராம்(Kazatomprom), இந்தியாவிற்கு கணிசமான அளவு யுரேனியத்தை விற்க பிப்ரவரியில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, கஜகஸ்தானும் இந்தியாவின் மிக முக்கியமான யுரேனியம் வழங்குநர்களில் ஒன்றாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020-21-ஆம் ஆண்டு வரை கேமெகோ மற்றும் கஸாடோம்பிராம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்தியாவின் முக்கிய யுரேனியம் விநியோகர்களாகத் திகழ்ந்தன.


வர்த்தகத் தரவுகளின்படி, இந்த நாடுகளைத் தவிர, 2025-26-ஆம் ஆண்டில் பிரான்ஸ் இந்தியாவிற்கு யுரேனியம் தாதுக்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தையும் வழங்கியது. அதேநேரத்தில், 2024-25-ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து இதேபோன்ற இறக்குமதிகள் பெறப்பட்டன.


இந்தியா இறக்குமதியைச் சார்ந்திருப்பதற்கான காரணம் : அதிக செலவுகள், குறைந்த தரத்திலான யுரேனியம் தாது ஆகும்.

இந்தியா தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் யுரேனியத்தைச் சார்ந்திருப்பதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று பொருளாதாரம் ஆகும்.


மின்சார அமைச்சகக் குழுவின்படி, உள்நாட்டில் யுரேனியத்தை அகழ்ந்தெடுத்து யுரேனியத் தாதுச் செறிவூட்டப்பட்ட பொருளாக (uranium ore concentrate) மாற்றுவதற்கு, சர்வதேச சந்தைகளில் இருந்து அதைப் பெறுவதைவிட மூன்று முதல் நான்கு மடங்கு அதிக செலவாகிறது. இந்தியாவில் காணப்படும் யுரேனியத் தாதுவின் தரம் குறைவாக இருப்பதே இந்த அதிக செலவுக்கு முக்கியக் காரணமாகும். இருப்பினும், அணுசக்தியை நோக்கிய தற்போதைய உலகளாவிய நகர்வு, வரும் ஆண்டுகளில் சர்வதேச அளவில் யுரேனியத்தின் விலையை உயர்த்தக்கூடும்.


மேலும், சிறந்த தரத்திலான தாதுவைக் கொண்ட சுரங்கங்களைக் கண்டறியும் சாத்தியம் அல்லது கொடுக்கப்பட்ட தரமான தாதுவுடன் புதிய பிரித்தெடுப்பு தொழில்நுட்பம் உருவாவதால், உள்நாட்டு யுரேனியம் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படலாம். இது செலவு மிக்கதாக இருந்தாலும், ஓரளவிற்கு எரிசக்தி பாதுகாப்பைப் பெற உதவும். இதை எளிதாக்குவதற்காக, விரிவாக்கத்தை எளிதாக்கும் வகையில் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL) நிறுவனத்தில் கூடுதல் பங்கு மூலதனத்தை அரசு செலுத்த பரிசீலிக்கலாம்,” என்று அக்குழு பரிந்துரைத்திருந்தது.


Original Link: India-Australia uranium deal: Why domestic reserves are not enough to fuel India’s nuclear ambitions.

Share:

பஞ்சாயத்துத் தேர்தல்களுக்கு ’இரு குழந்தைகள்’ விதிமுறையை உச்சநீதிமன்றம் ஏன் கேள்விக்குள்ளாக்கியது? -அமால் ஷேக்

பஞ்சாயத்துத் தேர்தல்களுக்கான இரு குழந்தைகள் விதிமுறை குறித்த விவாதத்தை உச்சநீதிமன்றத்தின் கருத்துகள் மீண்டும் கிளப்பியுள்ளன. இது தொடர்பான சட்டம், முந்தைய நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் மக்கள்தொகைச் சூழலியல் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டவர்களைப் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்யும் சட்டங்கள், அவற்றின் உண்மையான நோக்கத்தைத் தொடர்ந்து நிறைவேற்றுகின்றனவா என்று உச்சநீதிமன்றம் ஜூலை 14 அன்று கேள்வி எழுப்பியது.


நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அரதே ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, இந்தியாவின் கருவுறுதல் விகிதத்தைச் (declining fertility rate) சுட்டிக்காட்டி, மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காகவே இக்கொள்கை முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும் இன்று, பல மாநிலங்கள் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதாகவும், தற்போதைய சூழலில் இக்கொள்கை தொடர வேண்டுமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், ஜாவேத் vs ஹரியானா மாநிலம் (Javed vs State of Haryana) வழக்கை மேற்கோள் காட்டி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியிருக்கலாம் என்றும் அது குறிப்பிட்டது.


நீதிமன்றம், வழக்கறிஞர் ருக்மினி போப்டே என்பவரை நீதிமன்றத்திற்கு உதவும் வழக்கறிஞராக (friend of the court) நியமித்து, மற்ற மாநிலங்களில் இதேபோன்ற இரு குழந்தைகள் தகுதி விதிமுறைகள் நடைமுறையில் உள்ளனவா என்பதைச் சரிபார்க்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டது. மேலும், மனுதாரரின் வழக்கறிஞரான பதிவு வழக்கறிஞர் (Advocate-on-Record) பிரதீக் பாம்பார்டேவிடம், இது தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அந்த அமர்வு உத்தரவிட்டது.


வழக்கின் உண்மை விவரங்கள்


2023-ம் ஆண்டில், மகாராஷ்டிராவின் புல்டானா மாவட்டத்தில் உள்ள ககோடா கிராமப் பஞ்சாயத்தைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர், சர்பஞ்ச் (தலைவர்) மங்களா பீம்ராவ் இங்கிளே என்பவருக்கு மூன்றாவது குழந்தை இருப்பதாகப் புகார்தாரர் குற்றம் சாட்டினார். புகார்தாரர், பிறப்புச் சான்றிதழ் மற்றும் பள்ளிப் பதிவேடுகளை ஆதாரமாகக் காட்டி, ஓராண்டுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட இங்க்ளே (Ingle) தனது வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்ததாகக் கூறினார்.


தனக்கு மூன்றாவது குழந்தை இருப்பதை இங்க்ளே மறுத்தார். ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ், அண்டை மாவட்டமான அகோலா மாவட்டத்தில் உள்ள ஹிவர்கேட் கிராமப் பஞ்சாயத்தால் வழங்கப்பட்டது என்றும், தான் புல்டானா மாவட்டத்தில் உள்ள ககோடாவைச் சேர்ந்தவர் என்றும் அவர் கூறினார். மேலும், ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அதே பெயர் கொண்டிருப்பதாலேயே அந்தக் குழந்தை தனக்குரியது என்று ஆகிவிடாது என்று வாதிட்டு, ஆவணங்களைச் சமர்ப்பித்த அதிகாரிகளைக் குறுக்கு விசாரணை செய்யக் கோரி அவர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். இருப்பினும், அவரது மனு நிராகரிக்கப்பட்டது.


அக்டோபர் 2024-ல், மகாராஷ்டிரா கிராம பஞ்சாயத்துகள் சட்டம்-1959-ன் (Maharashtra Village Panchayats Act) பிரிவு 14(1) (j-1)-ன் கீழ் இங்கிள் தகுதியிழப்புக்கு உள்ளானார் என்று கூடுதல் மாவட்ட ஆட்சியர் அறிவித்து, அவரைப் பதவியிலிருந்து நீக்கினார். இந்த முடிவை எதிர்த்து, கூடுதல் ஆணையரிடம் அவர் செய்த மேல்முறையீடு ஏப்ரல் 2025-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.




மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு, தனது ஆகஸ்ட் 2025 உத்தரவில், அவரது மனுவைத் தள்ளுபடி செய்து, கூடுதல் மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆணையரின் முடிவுகளை நீதிமன்றம் உறுதி செய்தது. அவரது, மூன்று குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்கள், இங்க்ளே தகுதியிழப்புக்கு உள்ளானார் என்ற முடிவை ஆதரிப்பதாக நீதிமன்றம் கூறியது.


சட்டம் என்ன சொல்கிறது?


மகாராஷ்டிரா கிராம பஞ்சாயத்துகள் சட்டம்-1959-ன் பிரிவு 14(1)(j-1), ஒரு நபருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர் பஞ்சாயத்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதையோ அல்லது தொடர்ந்து பதவியில் இருப்பதையோ தடை செய்கிறது.


இருப்பினும் இந்தச் சட்டப்பிரிவு, திருத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு பிறந்த குழந்தைகளுக்கும், திருத்தம் தொடங்கிய ஒரு வருடத்திற்குள் ஒரே பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் விலக்கு அளிக்கிறது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்தபோது ஏற்கனவே கர்ப்பங்கள் (pregnancies) இருந்ததையும் இது கணக்கில் கொள்கிறது.


திருத்தத்திற்குப் பிறகு, மகாராஷ்டிராவில் இரண்டுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் உள்ள எவரும் பஞ்சாயத்து பதவியில் நீடிக்க முடியாது. ஹரியானா, ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள், குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையின் ஒரு பகுதியாகத் தங்கள் உள்ளாட்சிச் சட்டங்களில் இதேபோன்ற விதிகளைக் கொண்டுள்ளன.


உச்சநீதிமன்ற முன்மாதிரி


ஜாவேத் vs ஹரியானா மாநிலம்-2003 (Javed vs State of Haryana) என்ற வழக்கில், இரண்டு குழந்தைகள் தொடர்பான தகுதி நீக்கச் சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மையை உச்சநீதிமன்றம் முதன்முதலில் ஆய்வு செய்தது. இந்த வழக்கு, 1994-ம் ஆண்டின் ஹரியானா பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் (Haryana Panchayati Raj Act) பிரிவு 175(1)(q) தொடர்பானதாகும். இப்பிரிவு, இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஒருவரை சர்பஞ்ச் (பஞ்சாயத்துத் தலைவர்), பஞ்ச் (பஞ்சாயத்து உறுப்பினர்), அல்லது பஞ்சாயத்து சமிதி (ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்) அல்லது ஜிலா பரிஷத்தின் உறுப்பினர் (மாவட்டப் பஞ்சாயத்து உறுப்பினர்) பதவியை வகிக்கத் தகுதியற்றவராக்கியது.


நீதிபதி ஆர்.சி.லஹோதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த விதிமுறையை உறுதி செய்தது.


தேர்தலில் போட்டியிடும் உரிமையை இச்சட்டம் கட்டுப்படுத்துகிறது என்ற வாதத்தின்மீது, நீதிமன்றம் ஒரு முக்கியக் கருத்தை முன்வைத்தது. அவை, ஜனநாயகத்திற்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவசியமானதாக இருந்தாலும், அது அடிப்படை உரிமையோ அல்லது பொதுச் சட்டத்தின் (common law) கீழான உரிமையோ அல்ல. இந்த உரிமை, முற்றிலும் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு உரிமை (statutory right) என்று நீதிமன்றம் கூறியது. இத்தகைய உரிமையை உருவாக்கும் ஒரு சட்டப்பேரவையே அதற்கான நிபந்தனைகளையும் தகுதிநீக்க விதிகளையும் வகுக்க முடியும்.


சட்டம் தன்னிச்சையானது (arbitrary) என்பது குறித்து, “இரண்டுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைக் கொண்ட நபர்கள், இரண்டுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இல்லாத நபர்களிடமிருந்து தெளிவாக வேறுபடுத்தப்படக்கூடியவர்கள்” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வகைப்பாட்டுடன் தொடர்புடைய குடும்ப நலன் அல்லது குடும்பக் கட்டுப்பாடுத் திட்டங்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டதாகவும், தகுதியிழப்பானது “ஒரு ஊக்கமின்மையை உருவாக்குவதன் மூலம் அந்த நோக்கத்தை அடைவதை” நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் அது கூறியது.


அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின்கீழ் முன்வைக்கப்பட்ட சவாலைப் பொறுத்தவரை, பொதுப் பதவியில் நீடிக்கும் அதே வேளையில் குழந்தைகளைப் பெறுவதற்கான கட்டுப்பாடற்ற உரிமையும் தனிநபர் சுதந்திர உரிமையில் அடங்கும் என்ற வாதத்தை அந்த அமர்வு நிராகரித்தது. மேலும், அரசியலமைப்புப் பிரிவு 21 இன் பொருள் எவ்வளவு பரந்த அளவில் விளக்கிக் கூறப்பட்டாலும், அப்பிரிவு உத்தரவாதம் அளிக்கும் வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திர உரிமையை இச்சட்டம் மீறுகிறது என்று வாதிடுவது பயனற்றது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

நீதிமன்றம் தனது தீர்ப்பின் முக்கியப் பகுதியில் இவ்வாறு குறிப்பிட்டதாவது, "ஒருவர் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றிருக்க விரும்பினால், தற்போதைய சட்டத்தின்கீழ் அவ்வாறு செய்ய அவருக்கு உரிமை உண்டு. இருப்பினும், அதற்காக அவர் ஒரு சிறிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். அது, பஞ்சாயத்தில் ஒரு பதவியை வகிக்கும் தகுதியை இழப்பதாகும்” என்று கூறியது. இந்தத் தகுதியிழப்பு, “மக்களின் சமூக-பொருளாதார நலன் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு என்ற பாராட்டத்தக்க நோக்கத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், தேசிய மக்கள்தொகைக் கொள்கைக்கு இணக்கமானதாகவும் உள்ளது” என்று தீர்ப்பளித்து, ஹரியானா விதிமுறையை உறுதி செய்தது.


கருவுறுதல் விகிதம் குறைவது ஏன் முக்கியமானது?


உச்சநீதிமன்றத்தின் கருத்துகணிப்புகள் இந்தியாவில் நிகழும் ஒரு பரந்த மக்கள்தொகை மாற்றத்தைப் பிரதிபலிக்கின்றன. அரசாங்க ஆய்வுகளின்படி, நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate (TFR)), அதாவது ஒரு பெண் தனது வாழ்நாளில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை 2.1 என்ற மாற்று நிலைக்குக் (replacement level) கீழே குறைந்துள்ளது. இதன் விளைவாக, ஒரு காலத்தில் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்திய பல மாநிலங்கள், தற்போது வயதான மக்கள்தொகை மற்றும் குறைந்துவரும் மக்கள்தொகை வளர்ச்சி ஆகியவற்றுடன் போராடி வருகின்றன.


சில மாநிலங்கள் ஏற்கனவே பெரிய குடும்பங்களை ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளன. ஜூன் மாதம், ஆந்திரப் பிரதேசத்தின் மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) சுமார் 1.5 ஆகக் குறைந்து, மாற்று அளவைவிட மிகவும் குறைவான நடவடிக்கையைத் தொடர்ந்து, இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு ரொக்க ஊக்கத்தொகையை அறிவித்தது. சமீபத்திய ஆண்டுகளில் மொத்த கருவுறுதல் விகிதம் சுமார் 1.1 ஆக இருந்துவரும் சிக்கிம் மாநிலமும், குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காக நிதி ஊக்கத்தொகைகளையும் குழந்தை பராமரிப்பு ஆதரவையும் அறிமுகப்படுத்தியுள்ளது.




இந்த சரிவானது, உயர்ந்து வரும் கல்வி நிலைகள், மேம்பட்ட சுகாதாரப் பராமரிப்பு, நகரமயமாக்கல் மற்றும் குறிப்பாகப் பெண்களிடையே மாறிவரும் சமூக, பொருளாதாரத் தேர்வுகள் ஆகியவற்றுடன் பரவலாகத் தொடர்புபடுத்தப்படுகிறது. பெரிய குடும்பங்களைத் தடுப்பதற்காக இயற்றப்பட்ட சட்டங்கள், அவற்றின் அசல் நோக்கத்தைத் தொடர்ந்து நிறைவேற்றுகின்றனவா என்பது குறித்த உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு, மாறிவரும் மக்கள்தொகைச் சூழலே அடிப்படையாக அமைந்தது.


Original Link: Why the Supreme Court questioned the two-child rule for panchayat elections?.

Share: