நீதிமன்றங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கான வரைவு விதிமுறைகள் (2026) கூறுவது என்ன? -பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள் :


இந்த வரைவு விதிமுறைகள் தானாகவோ அல்லது அனைத்து நீதிமன்றங்களிலும் ஒரே சீராகவோ நடைமுறைக்கு வராது. மேலும், இவை இந்தியத் தலைமை நீதிபதி அறிவிக்கும் தேதியில் இருந்து உச்சநீதிமன்றத்தில் நடைமுறைக்கு வரும். உயர்நீதிமன்றங்கள் மற்றும் அவற்றின் அதிகார வரம்பிற்குட்பட்ட நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களுக்கு, அந்தந்த உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் தனித்தனியாக அறிவிக்கும் தேதிகளில் இவை அமலுக்கு வரும். வெவ்வேறு விதிகள் வெவ்வேறு தேதிகளில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படலாம். அதாவது, நீதிமன்றங்களின் தேவைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் படிப்படியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


நீதி கிடைப்பதை உறுதி செய்தல், தாமதங்களைக் குறைத்தல் அல்லது நிர்வாகத் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றைத் தெளிவாக நிரூபிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை நீதிமன்றங்கள் "தீவிரமாகத் தேட வேண்டும்" என்று இந்த வரைவு விதிமுறைகள் முன்மொழிகின்றன.


வழக்கு மேலாண்மை, தட்டச்சு செய்தல், மொழிபெயர்ப்பு, சட்ட ஆராய்ச்சி, ஆவணங்களைச் சுருக்குதல், குறைபாடுகள் உள்ளவர்களுக்கான அணுகல் வசதிகள் மற்றும் நீதிமன்ற நிர்வாகம் உள்ளிட்ட பலதரப்பட்ட நிர்வாக மற்றும் உதவிப் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வெளிப்படையாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவை அனைத்திற்கும் உச்சநீதிமன்றத்தின் முதன்மை அமைப்பு (Apex Body) அல்லது அந்தந்த உயர் நீதிமன்றம்/தீர்ப்பாயத்தின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயன்பாடு தொடர்பான குழுவிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற வேண்டும். அதோடு, நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகளின் கண்காணிப்பு மற்றும் சரிபார்ப்புக்குப் பிறகே இது அனுமதிக்கப்படும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.


கணினி வழிமுறை (Algorithm) அடிப்படையிலான கணினி முடிவுகளின் மூலமாகவோ அல்லது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கிய தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டோ எந்தவொரு நீதித்துறைத் தீர்ப்பும் வழங்கப்படக் கூடாது என்பதில் இந்த வரைவு ஒழுங்குமுறைகள் திட்டவட்டமாக உள்ளன. அனைத்து வகையான தீர்ப்புகளிலும் மனிதர்களாகிய நீதிபதிகளின் அதிகாரமே இறுதியானது. எனவே, ஒரு வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கும் செயல்பாட்டில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும், அது வெறும் ஆலோசனையாக மட்டுமே இருக்கும்; மற்றும் அது ஒரு நீதிபதியின் சுயாதீனமான ஆய்வுக்கு உட்பட்டது.


உங்களுக்குத் தெரியுமா? 


உச்சநீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட 'நீதிமன்றங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டிற்கான விதிமுறைகள், 2026'-ன் முதற்கட்ட வரைவு, நீதிமன்றச் செயல்முறைகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு எப்போதும் "மனிதத் தீர்ப்பு மற்றும் நீதித்துறை அதிகாரத்திற்கு முழுமையாகக் கட்டுப்பட்டதாகவே இருக்கும்" என்பதை வலியுறுத்துகிறது.


நீதித்துறை முடிவுகளைத் தீர்மானிக்க செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதற்கு முழுமையான தடை; வழக்குத் தரப்பினர் மற்றும் சாட்சிகளை முன்கூட்டியே கணிக்கும் அல்லது அவர்களின் விவரங்களை வகைப்படுத்தும் (profiling) செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கருவிகள் மீதான கட்டுப்பாடுகள்; மற்றும் நீதிமன்றச் செயல்முறைகளில் வெளிப்படுத்தப்படாத அல்லது விளக்க முடியாத செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளுக்குத் தடை இவை அனைத்தும் நீதிமன்றங்களில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து உச்சநீதிமன்றத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) குழு முன்மொழிந்துள்ள வரைவு விதிமுறைகளில் அடங்கும். 

உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ். நரசிம்மா தலைமையிலான இந்தக் குழுவில், நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா, ராஜா விஜயராகவன் வி, அனுப் சித்காரா மற்றும் சூரஜ் கோவிந்தராஜ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழு, தனது பரிந்துரைகளின் வரைவை இறுதி செய்வதற்கு முன்னதாக, அதுகுறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் கோரியுள்ளது. இந்த ஆலோசனைகளை ஜூன் மாதம் 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


இந்த வரைவு அறிக்கையின்படி, நீதிமன்ற நடைமுறைகளில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள், "நீதி மற்றும் சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பாகுபாட்டைத் தவிர்க்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு, செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட வேண்டும்". மேலும், "இனம், மதம், சாதி, பாலினம், மாற்றுத்திறன், மொழி, பொருளாதார நிலை அல்லது அரசியலமைப்பு அல்லது நடைமுறையில் உள்ள சட்டங்களால் தடைசெய்யப்பட்ட வேறு ஏதேனும் காரணங்களின் அடிப்படையில் சார்புநிலையை உருவாக்கும், அதிகரிக்கும் அல்லது அறிமுகப்படுத்தும் எந்தவொரு செயற்கை நுண்ணறிவு அமைப்பும் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்படக்கூடாது" என்றும் குறிப்பிடுகிறது. அத்துடன், பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், விளிம்புநிலை மற்றும் சிறுபான்மைச் சமூகத்தினர், மற்றும் பொருளாதாரரீதியாகவும் சமூகரீதியாகவும் பின்தங்கிய பின்னணியைக் கொண்டவர்கள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Original Link: What exactly the draft of Regulations for Use of Artificial Intelligence (AI) in Courts, 2026 says?

Share:

வாக்காளர்கள் பதிவு விதிகள் (1960) என்பது என்ன? - பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள் :


தேர்தல் ஆணையத்தின் ‘ECINET’ இணையதளம், புதிய வாக்காளர் பதிவு, ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்தல், மற்றும் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்களை நீக்குதல் ஆகியவற்றிற்கான படிவங்களைச் சமர்ப்பிக்க பயனர்களை அனுமதிக்கிறது.


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (1950) (Representation of the People Act) மற்றும் வாக்காளர் பதிவு விதிகளின்கீழ் (1960) (Registration of Electors Rules) வாக்காளர் சேர்க்கைக்கான 'படிவம் 6'-ஐ (Form 6) இணையவழியாகச் சமர்ப்பிக்கும்போது, ​​அதில் ஒரு புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி 'உறுதிமொழிப் படிவம்' (declaration form) என்று அழைக்கப்படுகிறது. இதில் விண்ணப்பதாரர்கள் தங்கள் பெற்றோர் முந்தைய 'சிறப்புத் தீவிர திருத்த' (SIR) நடவடிக்கையில் இடம்பெற்றிருந்தனரா என்பது குறித்து பதிலளிக்க வேண்டும்.


ஆம் எனில், முந்தைய சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கையின்போது தங்கள் தந்தை அல்லது தாயின் பெயர் எந்தச் சட்டமன்றத் தொகுதி எண், வாக்குச்சாவடி எண் (பகுதி எண் அல்லது 'part number' என அறியப்படுவது) மற்றும் வரிசை எண் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டிருந்தது என்ற விவரங்களை அவர்கள் வழங்க வேண்டும்.


கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல், தேர்தல் ஆணையம் 10 மாநிலங்கள் மற்றும் மூன்று ஒன்றியப் பிரதேசங்களில் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கையை நிறைவு செய்துள்ளது. மீதமுள்ள மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களைப் பொறுத்தவரை, முந்தைய 'தீவிரத் திருத்த' (intensive revision) நடவடிக்கை என்பது 2000-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட பணியையே குறிக்கிறது.


தற்போது மற்ற 19 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் இப்பணி நடைபெற்று வருகிறது. அதேவேளையில், இமாச்சலப் பிரதேசம், லடாக் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகியவற்றுக்கான சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை.


அசாம் மாநிலத்தைப் பொறுத்தவரை, அங்கு 'தேசியக் குடிமக்கள் பதிவேடு' (National Register of Citizens (NRC)) தொடர்பான பணிகள் நிறைவடையும் வரை சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. பீகார் தவிர, சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணிகள் நிறைவடைந்த அல்லது நடைபெற்று வரும் அனைத்து மாநிலங்களிலும், 'படிவம் 6'-ஐ இணையவழியில் சமர்ப்பிக்கும்போது, ​​ஏற்கனவே உள்ள பகுதிகளுக்கு இடையே சேர்க்கப்பட்டுள்ள பெற்றோர்கள் குறித்த புதிய 'உறுதிமொழிப் படிவத்தை' விண்ணப்பதாரர் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பதாரரின் பெற்றோர் முந்தைய சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணியில் இடம்பெறவில்லை என்றால், அந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, தங்கள் பெற்றோரின் பெயர்கள் மற்றும் (கிடைக்குமெனில்) வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (Electors Photo Identity Card (EPIC)) எண்களை வழங்க வேண்டும்.


உங்களுக்குத் தெரியுமா? 


அரசியலமைப்பின் 326-வது பிரிவு, ஒரு குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதியில் வழக்கமாக வசிக்கும் அனைத்து வயது வந்த குடிமக்களுக்கும் வாக்காளராகப் பதிவு செய்வதற்கான உரிமையை அளிக்கிறது. சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் ஒழிய, இந்த உரிமை அவர்களுக்குப் பொருந்தும்.


'மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (1950)', தேர்தல்களை நடத்துவது மற்றும் வாக்காளர்களைப் பதிவு செய்வது தொடர்பான விதிகளை உருவாக்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் சட்டத்தின் பிரிவு-28, "விதிமுறைகளை வகுப்பதற்கான அதிகாரம்" குறித்துக் குறிப்பிடுவதாவது, "இச்சட்டத்தின் நோக்கங்களைச் செயல்படுத்த, தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்த பிறகு, ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிக்கை வெளியிடுவதன் மூலம் விதிமுறைகளை வகுக்கலாம்." மேலும், இச்சட்டத்தின்கீழ் வகுக்கப்படும் ஒவ்வொரு விதிமுறையும், "அவை உருவாக்கப்பட்ட பிறகு கூடிய விரைவில் நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்" என்றும் குறிப்பிடுகிறது.


'படிவம் 6' (Form 6) என்பது இச்சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 'வாக்காளர் பதிவு விதிகளின் (1960)' (Registration of Electors Rules) ஒரு பகுதியாகும். எனவே, இப்படிவத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட வேண்டுமானால், அதற்குச் சட்ட மற்றும் நீதித்துறையின் மூலம் சட்டத் திருத்தமும் அரசிதழ் அறிவிக்கையும் தேவைப்படும்.


புதிய விண்ணப்பதாரர்கள், குறிப்பாக சமீபத்தில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், தங்களது அல்லது தங்கள் பெற்றோரின் விவரங்களை முந்தைய சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கையுடன் தொடர்புபடுத்திக் காட்ட வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இம்மாற்றம் குறித்துத் தேர்தல் ஆணையம் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதால், விவரங்களை வழங்க இயலாதவர்கள் கூடுதல் ஆய்வுக்கு அல்லது தீவிரச் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படுவார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதுவரை ஆண்டுதோறும் செய்யப்பட்டு வந்த வழக்கமான வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்குப் பதிலாக, இந்தச் சிறப்புத் தகுதி அறிவிப்புப் படிவம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இதுவரை ஆண்டுதோறும் செய்யப்பட்டு வந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்குப் பதிலாக, தற்போது வாக்காளர் பட்டியல் முற்றிலும் புதிதாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது.                    


Original Link: What is Registration of Electors Rules, 1960?

Share:

மறைமுக கட்டமைப்புகள் (Dark Patterns) என்றால் என்ன?, அவை ஏன் கண்காணிக்கப்படுகின்றன? -ரோஷ்னி யாதவ்

நீங்கள் இணையத்தில் வாங்கும் பொருட்கள் உண்மையிலேயே உங்களது சொந்த விருப்பப்படிதான் வாங்கப்படுகிறதா? இணையவழி நுகர்வோர் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் பொதுப் பட்டியலில் உள்ள நிறுவனங்களில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானவை, நுகர்வோரைத் தூண்டுவதற்காக 'மறைமுக கட்டமைப்புகள்' (Dark patterns) என்ற உத்திகளைப் பயன்படுத்துவதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த மறைமுக கட்டமைப்புகள் என்றால் என்ன? மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமும் (CCPA), இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி முகமையும் (IRDAI) இதற்கு எதிராக என்னென்ன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன? 


தற்போதைய நிகழ்வு என்ன?


பல ஆண்டுகளாக ஒழுங்குமுறை ஆய்வுகளுக்கு உட்பட்டிருந்த போதிலும், இணையவழி தளங்களால் பயன்படுத்தப்படும் மறைமுக கட்ட்மைப்புகள் (dark patterns) இந்திய வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தவறாக வழிநடத்தி, சரியான தேர்வுகளை மேற்கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கின்றன. இருப்பினும், ஒரு புதிய ஆய்வு ஒரு துணிச்சலான பரிந்துரையை முன்வைக்கிறது. இந்தியாவில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களும், பட்டியலிடத் திட்டமிடும் நிறுவனங்களும் தங்களின் டிஜிட்டல் நுகர்வோர் பயணத்திலும் பரிவர்த்தனைகளிலும் மறைமுக கட்டமைப்புகளைப் (dark patterns) பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


முக்கிய அம்சங்கள் :


1. ‘LocalCircles’ வெளியிட்டுள்ள ஆய்வின்படி, இணையவழி நுகர்வோர் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட பொதுப் பங்கு நிறுவனங்கள் பல்வேறு மறைமுக கட்டமைப்புகளால் (dark patterns) பாதிக்கப்பட்டுள்ளன. நுகர்வோரின் இணையவழித் தேர்வு, பரிவர்த்தனை, மற்றும் பொருட்களைத் திருப்பியளித்தல் அல்லது பணத்தைத் திரும்பப் பெறுதல் ஆகிய பயணங்களின்போது இந்த மறைமுக முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.


2. மறைமுக கட்டமைப்புகள் (dark patterns) அல்லது ஏமாற்றும் கட்டமைப்புகள் (deceptive patterns) என்பவை, பயனர்களை அழுத்தம் கொடுப்பதன் மூலமோ அல்லது தவறாக வழிநடத்துவதன் மூலமோ, அவர்கள் வழக்கமாகச் செய்யாத தேர்வுகளைச் செய்யவோ அல்லது தரவைப் பகிரவோ அவர்களைக் கையாளுவதற்காக இணையதளங்களில் மறைக்கப்பட்டிருக்கும் நடைமுறைகள் மற்றும் வேண்டுமென்றே பயன்படுத்தப்படும் வழிமுறைகளையும் குறிக்கின்றன.


3. இணையதளங்களில் விற்கப்படும் பொருட்களைப் பார்ப்பதற்கு முன்பாகவே பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைத் தருமாறு கட்டாயப்படுத்துவது, சந்தாக்களை ரத்து செய்வதை வேண்டுமென்றே கடினமாக்குவது மற்றும் தங்களின் பொருட்களை வற்புறுத்தி விற்பனை செய்வதற்காகத் தொடர்ந்து தேவையில்லாத அழைப்புகளை (Spam calling) மேற்கொள்வது ஆகியவை தீய நோக்கங்களுக்கான சில எடுத்துக்காட்டுகளாகும்.


மறைமுக கட்டமைப்புகள் (dark patterns) என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்வோம்: உங்கள் திரையில் அடிக்கடி தோன்றும் ஒரு எரிச்சலூட்டும் விளம்பரத்தை நினைத்துப் பாருங்கள். அதை மறைக்கச் செய்யும் பெருக்கல் குறி 'X' மிகச் சிறியதாக இருப்பதால், அதை உங்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை. அதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், அந்தச் சிறிய 'X' குறியை நீங்கள் அழுத்த முயலும்போது, சில நேரங்களில் தவறுதலாக விளம்பரத்தையே அழுத்திவிடுகிறீர்கள்.


4. இந்த ஏமாற்று உத்திகள் முக்கியமாக சந்தாக்களைப் புதுப்பித்தல், கட்டாயமாக ரத்து செய்ய வைக்கும் நடைமுறைகள், தவறான விலை விவரங்கள், பயனரின் சம்மதத்தைப் பெறும் வழிமுறைகள், தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள், விளையாட்டைப் போன்ற ஈடுபாடுகள் மற்றும் நுகர்வோர் முடிவுகளை மாற்றியமைக்கும் நடத்தை சார்ந்த தூண்டுதல்கள் ஆகியவற்றின் மூலமாக, மக்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட கணினித் திரையின் வடிவமைப்பு முறைகளையே நம்பியிருக்கின்றன.


5. மறைமுக கட்டமைப்புகள் (dark patterns) என்ற சொல், 2010-ஆம் ஆண்டில் லண்டனைச் சேர்ந்த பயனர் அனுபவ (UX) வடிவமைப்பாளரான (user experience (UX) designer) ஹாரி பிரிக்னல் என்பவரால் உருவாக்கப்பட்டது.


மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 


நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 (The Consumer Protection Act, 2019) பிரிவு 10(1)-ன்கீழ் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (Central Consumer Protection Authority (CCPA)) அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டம், பழைய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-க்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டது. மேலும், நுகர்வோரின் கவலைகளுக்குத் தீர்வு காண்பதில் அதன் வரம்பை இன்னும் விரிவுபடுத்த இந்தச் சட்டம் முயல்கிறது. இது 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. நுகர்வோர் மற்றும் பொதுமக்களின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், தவறான மற்றும் ஏமாற்றக்கூடிய விளம்பரங்களைக் கடுமையாகக் கட்டுப்படுத்துவதன் மூலம் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.




மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தால் (CCPA) குறிப்பிடப்பட்ட மறைமுக கட்டமைப்புகள் 


6. குறிப்பாக, டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி, 2023-ஆம் ஆண்டு, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA), மறைமுக கட்டமைப்புகளின் (Dark Patterns) தடுப்பு மற்றும் ஒழுங்குமுறைக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இதில் 13 வகையான மறைமுக கட்டமைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.


(i) போலியான அவசரம் (False urgency) : நுகர்வோரை ஒரு பொருளை வாங்க வைக்க அல்லது ஒரு செயலைச் செய்ய வைக்க, ஒருவித அவசரத்தையோ அல்லது பற்றாக்குறையையோ செயற்கையாக உருவாக்குவது. பயனர் முடிவுகளை மாற்றுவதற்காக ஒரு தயாரிப்பு அல்லது சேவைக்கு போலியான வரவேற்பு இருப்பது போல் காட்டுவது அல்லது ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு உண்மையில் இருப்பதைவிட மிகக் குறைந்த அளவே இருப்பதாகக் கூறுவது இதில் அடங்கும்.

(ii) கூடைக்குள் இரகசியமாகச் சேர்த்தல் (Basket sneaking) : பயனரின் அனுமதியின்றி, ஷாப்பிங் கூடையில் கூடுதல் பொருட்கள் அல்லது சேவைகளைச் சேர்ப்பதற்கு மறைமுக கட்டமைப்புகள் (Dark patterns) பயன்படுத்தப்படுகின்றன.


(iiii) இணங்க வைப்பதற்கான அவமானப்படுத்தல் (Confirm shaming): நுகர்வோரை ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை அல்லது கண்ணோட்டத்திற்கு இணங்கச் செய்ய குற்ற உணர்வைப் பயன்படுத்துதல்; அவ்வாறு செய்யாதபோது அவர்களை விமர்சிப்பது அல்லது தாக்குவது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாகும்..


(iv) கட்டாய நடவடிக்கை (Forced action) : உள்ளடக்கத்தை அணுகுவதற்கு ஒரு சேவையில் பதிவு செய்வது போன்ற, நுகர்வோர் செய்ய விரும்பாத ஒரு செயலைச் செய்ய அவர்களைத் தூண்டுதல்.


(v) இடைவிடாத தொந்தரவு (Nagging) : பயனர் தெளிவாக அனுமதி அளிக்காதபட்சத்தில், அவரிடம் இருந்து ஏதேனும் வணிக ரீதியான லாபத்தைப் பெறுவதற்காகவோ அல்லது ஒரு பரிவர்த்தனையைச் செய்ய வைப்பதற்காகவோ, கோரிக்கைகள், தகவல்கள், தேர்வுகள் அல்லது குறுக்கீடுகள் மூலம் மீண்டும் மீண்டும் தொடர்ந்து தொந்தரவு செய்து பயனரின் எரிச்சலூட்டுவது ஆகும்.


(vi) சந்தா தொடர்பான சிக்கல்கள் (Subscription traps) : ஒரு சேவையில் பதிவு செய்வது எளிது, ஆனால் அதிலிருந்து விலகுவது அல்லது ரத்து செய்வது கடினம். ரத்து செய்வதற்கான விருப்பத்தேர்வு மறைக்கப்பட்டிருத்தல் அல்லது பல படிநிலைகளைக் கொண்டிருத்தல், இலவச சந்தாவைப் பெறுவதற்காக, பணம் செலுத்தும் விவரங்களையோ அல்லது தானியங்கி பணப்பரிவர்த்தனைக்கான அங்கீகாரத்தையோ வழங்குமாறு பயனரைக் கட்டாயப்படுத்துவது அல்லது சந்தாவை ரத்து செய்வது தொடர்பான வழிமுறைகளைத் தெளிவற்றதாகவும், மறைமுகமாகவும், குழப்பமானதாகவும், சிரமமானதாகவும் ஆக்குவது.


(vii) கவர்ச்சி மற்றும் ஏமாற்றுதல் (Bait & switch) : ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு அல்லது சேவையை விளம்பரப்படுத்திவிட்டு, அதற்குப் பதிலாக வேறொன்றை (பெரும்பாலும் குறைந்த தரத்தில் உள்ளதை) வழங்குதல்.


(viii) மோசடி தீம்பொருள்கள் (Rogue Malwares) : பயனர்களின் கணினியில் வைரஸ் இருப்பதாக அவர்களை நம்பவைத்து ஏமாற்றுவதற்காக, ரான்சம்வேர் (Ransomware) அல்லது ஸ்கேர்வேர் (Scareware) போன்ற தீம்பொருள்களைப் பயன்படுத்துவது; மேலும், அவர்களின் கணினியில் உண்மையில் ஒரு வைரஸை நிறுவும் ஒரு போலி 'வைரைஸ் நீக்கும் மென்பொருளுக்காக' அவர்களைப் பணம் செலுத்த வைப்பதே இதன் நோக்கமாகும்.


(ix) போலி விளம்பரங்கள் (Disguised ads) : செய்திக் கட்டுரைகள் அல்லது பயனர்கள் உருவாக்கிய உள்ளடக்கங்களைப் போல, சாதாரணப் பகுதி போன்றே தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட விளம்பரங்கள்.


(x) இடைமுகத் தலையீடு (Interface interference) : ஒரு பயனர் விரும்பியபடி ஒரு செயலைச் செய்வதிலிருந்து அவரைத் திசைதிருப்புவதற்காக, சில குறிப்பிட்ட தகவல்களை முன்னிலைப்படுத்தியும், மற்ற தொடர்புடைய தகவல்களை மறைத்தும் பயனர் இடைமுகத்தைக் கையாளுதல்.


(xi) படிப்படியான விலை வெளிப்பாடு (Drip pricing) : இது ஒரு ‘மறைமுக கட்டமைப்பு’ (dark pattern) ஆகும். இதில் விலையின் கூறுகள் ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தப்படாமல், பயனர் அனுபவத்தின் போது மறைமுகமாக வெளிப்படுத்தப்படுதல், அல்லது வாங்குதலை உறுதிப்படுத்திய பிறகு விலை தெரியவருதல், அல்லது பயன்பாட்டைத் தொடர கூடுதல் கட்டணம் (in-app purchase) தேவை என்பதைத் தெளிவாகக் குறிப்பிடாமல் ஒரு தயாரிப்பு அல்லது சேவை இலவசம் என்று விளம்பரப்படுத்துதல் போன்றவை அடங்கும்.


(xii) தந்திரமான கேள்விகள் (Trick Question) : ஒரு பயனரை அவர் விரும்பிய செயலைச் செய்வதிலிருந்து திசைதிருப்புவதற்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட பதிலையோ செயலையோ எடுக்கத் தூண்டுவதற்காகவோ, குழப்பமான சொற்கள், இரட்டை எதிர்மறைகள் அல்லது அதுபோன்ற பிற தந்திரங்கள் போன்ற குழப்பமான அல்லது தெளிவற்ற மொழியை வேண்டுமென்றே பயன்படுத்துதல்.


(xiii) சாஸ் கட்டண முறை (SaaS billing) : ஒரு சேவையாக மென்பொருள் (Software as a Service (SaaS)) வணிக மாதிரியில், தொடர்ச் சந்தாக்களின் சுழற்சியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, பயனர்களுக்குத் தெரியாமல் அவர்களின் கணக்கிலிருந்து தொடர்ந்து பணம் வசூலிப்பது.


மறைமுக கட்டமைப்புகளைக் கட்டுப்படுத்த, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) எடுத்துள்ள நடவடிக்கை


1. காப்பீட்டுத் துறையில் உள்ள மறைமுக கட்டமைப்புகளைக் கட்டுப்படுத்தி, நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்கும் நோக்கில், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) தற்போது பல டிஜிட்டல் காப்பீட்டுச் சந்தைகளில் உள்ள “மறைமுக கட்டமைப்புகள்” தொடர்பான விதிமுறைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.


2. இந்த ஒழுங்குமுறை ஆணையம், காப்பீட்டுத் துறை முழுவதும் உள்ள மறைமுகப் போக்குகளை 9 மாத காலத்திற்குக் கண்காணிப்பதற்காக, இந்தியப் பொதுத் தணிக்கையாளர்கள் நிறுவனம் என்ற சட்டப்பூர்வ அமைப்புடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஏப்ரல் மாதம், காப்பீட்டு நிறுவனங்கள் மறைமுக கட்டமைப்புகள் குறித்து சுயமதிப்பீடு செய்து, தங்களது கருத்துக்களைச் சமர்ப்பிக்குமாறு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Original Link: What are dark patterns and why are they under scrutiny?

Share:

நான்கு புதிய அமர்வுகள் மூலமாக, நீண்டநாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை உச்சநீதிமன்றம் எவ்வாறு விரைந்து முடிக்கத் திட்டமிட்டுள்ளது? -வினீத் பல்லா

தலைமை நீதிபதி சூர்ய காந்த், அதிகரித்து வரும் நீதித்துறைப் பணிச்சுமையைக் குறைக்க முடிவெடுத்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் தனது மிகப் பழமையான நிலுவையில் உள்ள உரிமையியல் (civil) மற்றும் குற்றவியல் (criminal) வழக்குகளை பிரத்யேகமாக விசாரிப்பதற்காக நான்கு சிறப்பு அமர்வுகளை அமைத்துள்ளது. 


உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலுவை வழக்குகளைக் கையாள்வதற்காக, இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மிக நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை மட்டுமே விசாரிப்பதற்கென நான்கு பிரத்யேக அமர்வுகளை உருவாக்கியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் இருக்கும் வழக்குகளைத் தீர்த்து வைப்பதை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட முறையான முயற்சி இதுவாகும்.


புதிய பணி ஒதுக்கீடு பட்டியல் மற்றும் சிறப்பு அமர்வுகள்


புதிய பணிஒதுக்கீடு அறிவிப்பின்படி, நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா மற்றும் எஸ்.வி.என். பட்டி ஆகியோர் தலைமையில், தலா இரண்டு நீதிபதிகளைக் கொண்ட இரண்டு அமர்வு நீதிபதிகள், மிகவும் பழமையான உரிமையியல் வழக்குகளில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்.

நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் உஜ்ஜல் புயான் தலைமையிலான மற்ற இரண்டு அமர்வு நீதிபதிகள், மிகப் பழமையான குற்றவியல் வழக்குகளை மட்டுமே விசாரிப்பதற்காக ஒதுக்கப்படுவார்கள்.


இந்தச் சிறப்பு அமர்வுகள், செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய “இதர வழக்குகள் அல்லாத நாட்களில்” செயல்படும். உச்சநீதிமன்றத்தின் வழக்கில், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகள் புதிய மனுக்கள் தாக்கல் செய்வதற்கும், ஆரம்பகட்ட விசாரணைகளுக்கும் ஒதுக்கப்பட்ட “இதர நாட்கள்” ஆகும். வாரத்தின் நடுப்பகுதி, விரிவான மற்றும் நீண்ட வாதங்கள் தேவைப்படும் “வழக்கமான விவகாரங்களுக்காக”  ஒதுக்கப்பட்டுள்ளது.


இந்த நான்கு அமர்வுகளையும் வழக்கமான இதர வழக்குகளின் விசாரணைச் சுமையில் இருந்து விடுவிப்பதன் மூலம், நீதிமன்றத்தால் மிக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு எந்தவித இடையூறும் இன்றி தங்களின் முழு நீதித்துறை கவனத்தையும் செலுத்த முடியும்.


நிலுவையில் உள்ள வழக்குகளின் அளவு


தேசிய நீதித்துறை தரவுக் கட்டமைப்பின் (National Judicial Data Grid) தரவுகள், இந்த அமர்வுகள் தீர்க்க வேண்டிய நிலுவை வழக்குகளின் அளவு எவ்வளவு பெரியது என்பது பற்றிய ஒரு பார்வையை வழங்குகின்றன. உச்சநீதிமன்றத்தில் தற்போது 96,045 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை உரிமையியல் (civil cases) வழக்குகளாகும். இவற்றின் எண்ணிக்கை 74,244 வழக்குகளாக உள்ளன. மீதமுள்ள 21,801 வழக்குகள் குற்றவியல் (criminal cases) வழக்குகளாகும்.


நிலுவையில் உள்ள இந்த வழக்குகளில், 24 உரிமையியல் வழக்குகளும் இரண்டு குற்றவியல் வழக்குகளும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இவற்றில் மிகப் பழமையான உரிமையியல் வழக்கு 1986-ஆம் ஆண்டிலிருந்தும், மிகப் பழமையான குற்றவியல் வழக்கு 1991-ஆம் ஆண்டிலிருந்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன.


1996-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மேலும் 525 உரிமையியல் வழக்குகளும் ஏழு குற்றவியல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, அன்று முதல் நிலுவையில் உள்ளன. பழைய நிலுவை வழக்குகளில் பெரும்பகுதி 10 முதல் 20 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை ஆகும். இந்தப் பிரிவில் 7,993 உரிமையியல் வழக்குகளும் 1,585 குற்றவியல் வழக்குகளும் அடங்கும்.


வழக்குகள் நிலுவை தொடர்பான முரண்பாடு


தொடர்ந்து அதிகரித்து வரும் நிலுவை வழக்குகள், ஒரு 'செயல்திறன் முரண்பாட்டை' (Productivity paradox) காட்டுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், உச்சநீதிமன்றம் வழக்குகளைத் தீர்த்து வைக்கும் வீதத்தை உண்மையில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நீதிமன்றங்கள் குறைந்த அளவே இயங்கிய கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு, அதன் செயல்பாடுகள் கணிசமாக வேகம் பெற்று, இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைத் தீர்த்து வைத்துள்ளது. இருப்பினும், நீதிமன்றத்தில் மொத்தமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.


இதற்கான முக்கிய காரணம், ஏற்கனவே உள்ள வழக்குகள் தீர்க்கப்படுவதைவிட புதிய வழக்குகள் வேகமாகத் தாக்கல் செய்யப்படுவதுதான். மின்னணு முறையில் வழக்கு தாக்கல் செய்தல் (e-filing) மற்றும் காணொளி வாயிலாக விசாரணை நடத்துதல் (virtual hearings) ஆகியவற்றின் மூலம் நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு நீதிமன்றம் எளிதில் அணுகக்கூடியதாக மாறியுள்ளதால், வழக்குகள் பெறப்படுவது பன்மடங்கு அதிகரித்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் மட்டுமே, இதுவரை இல்லாத அளவுக்கு மொத்தம் 75,402 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


நிலுவையில் உள்ள வழக்குகளைக் கையாள்வதற்கு பல்வேறு தலைமை நீதிபதிகள் மேற்கொண்ட முயற்சிகள்


கடந்த சில ஆண்டுகளாக, வெவ்வேறு தலைமை நீதிபதிகள், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளனர். முன்னாள் தலைமை நீதிபதி யு. யு. லலித், 2022-ஆம் ஆண்டில் தனது குறுகிய பதவிக்காலத்தில், பழைய வழக்குகள் புதிதாகத் தாக்கல் செய்யப்படும் வழக்குகளால் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, புதிய வழக்குகளுக்கும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்கமான விசாரணைகளுக்கும் தனித்தனி நேரங்களை ஒதுக்கும் ஒரு பட்டியலிடும் முறையை அறிமுகப்படுத்தினார்.


அவருக்குப் பின் பொறுப்பேற்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், நீதிமன்றத்தின் செயல்பாட்டை மேம்படுத்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார். அவரது பதவிக்காலத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளின் வகைப்பாட்டைத் தானியங்கி முறையில் வகைப்படுத்தவும் (project automated), ஒரே மாதிரியான சட்டச் சிக்கல்களைக் கொண்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்கும் வகையில் அவற்றை ஒன்றிணைக்கவும் நீதிமன்றம் எஸ்.சி.-ஜுடிகேர் (SC-JUDICARE) திட்டத்தைத் தொடங்கியது. மேலும், மரண தண்டனை தொடர்பான வழக்குகள் போன்ற குறிப்பிட்ட பிரிவுகளுக்காக அவர் சிறப்பு அமர்வுகளை அமைத்ததுடன், வழக்குகளைத் தீர்ப்பதற்காக ஒரு சிறப்பு லோக் அதாலத் வாரம் (Special Lok Adalat week) அமைப்பையும் ஏற்பாடு செய்தார்.







SC-JUDICARE (Streamlining Justice through Efficient Case Management) என்பது இந்திய உச்சநீதிமன்றத்தால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்க, ஒரே மாதிரியான சட்டச் சிக்கல்களைக் கொண்ட நிலுவையில் உள்ள வழக்குகளை வகைப்படுத்தி, அவற்றை நிர்வகிக்கும் செயல்முறையை இத்திட்டம் தானியங்கி முறையில் வகைப்படுத்துகிறது.


அவரைத் தொடர்ந்து, முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, தனது கவனத்தை "மனு ஏற்பு விவகாரங்கள்" (Admission matters) நோக்கித் திருப்பினார். இவை விரிவான வாதங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பே நீதிமன்ற நடைமுறைகளை முடக்கிவிடும் புதிய வழக்குகள் ஆகும். நிலுவையில்  உள்ள வழக்குகளை முடிப்பதற்காக, அவர் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பழைய வழக்கமான வழக்குகள் (Regular matters) பட்டியலிடப்படுவதைத் தற்காலிகமாக நிறுத்தினார்.


மேலும், குறுகிய காலத்தவை, பலனளிக்காதவை மற்றும் பழைய வழக்குகளை அடையாளம் காணும் பணியை நீதிமன்றத்தின் ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் மையத்திடம் (Centre for Research and Planning) ஒப்படைத்து, அத்தகைய ஆயிரக்கணக்கான வழக்குகளை வெற்றிகரமாக நீக்கினார். இருப்பினும், அதைத் தொடர்ந்த முன்னாள் தலைமை நீதிபதி பி. ஆர். கவாயின் பதவிக்காலத்தில், நீதிமன்ற அமர்வு முழுத்திறனுடன் செயல்பட்டபோதிலும், புதிய வழக்குகள் பெருமளவில் தாக்கல் செய்யப்பட்டதால், நிலுவையில் உள்ள மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 90,000-என்ற அளவைத் தாண்டியது.


2025-ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் பதவியேற்றபோது, ​​நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதும், நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்ப்பதற்கு ஒரு ஒருங்கிணைந்த தேசியக் கொள்கையை வகுப்பதும் தனது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும் என்று தலைமை நீதிபதி காந்த் கூறியிருந்தார். வாரத்தில் மூன்று நாட்களுக்கு, மிகவும் பழமையான உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்காக நான்கு குறிப்பிட்ட அமர்வுகளை ஒதுக்குவதன் மூலம், தற்போதைய தலைமை நீதிபதி நீதிமன்றத்தின் கவனத்தை மீண்டும் பழைய வழக்குகளை நோக்கித் திருப்பியுள்ளார்.


Original Link: With 4 new benches, how the Supreme Court plans to clear its oldest pending cases.

Share:

இது வெறும் கடவுச்சீட்டு பற்றியது அல்ல; குடிமக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அந்நியர்களாக மாற்றப்படுகிறார்கள். -ஜான் பிரிட்டாஸ் மற்றும் அனீஷ் பாபு

தேர்தல் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுவது, அது தொடர்பான சட்டப்பூர்வ மேல்முறையீடு பரிசீலனையில் இருக்கும்போதுகூட, கடவுச்சீட்டு (Passport) புதுப்பித்தலை மறுப்பதற்குப் போதுமான காரணமாக மாறினால், தேர்தல் நடவடிக்கையானது கடவுச்சீட்டுச் சட்டத்தில் (Passports Act) ஒருபோதும் கருதப்படாத விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்குகிறது.


ஒரு நாடு தனது சொந்த குடிமக்களில் ஒருவரையே தனக்கு அந்நியமாக்கும்போது, அதை ஏதோ போரினால் செய்வதில்லை; மாறாக, பேனாவின் ஒரு சாதாரண மையெழுத்தின் மூலமாகவே மிகவும் அமைதியாகச் செய்துவிடுகிறது. 'The Telegraph' நாளிதழின் முன்னாள் ஆசிரியரான ஆர். ராஜகோபால், தனது வாழ்நாள் முழுவதையும் இந்தியாவின் வரலாற்றிற்குச் சாட்சியாகக் கழித்தபோதிலும், ஒரு வழக்கமான திருத்தத்தின்போது மேற்குவங்க தேர்தல் பட்டியலில் இருந்து அவரது பெயர் திடீரென மறைந்ததைக் கண்டார். இது அவரது வாக்குரிமையைப் பறித்ததோடு, அவரது கடவுச்சீட்டு புதுப்பிப்பதையும் முடக்கியது.


அவருக்குக் கடவுச்சீட்டு மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட பெரும் சர்ச்சை, மற்றும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான அடிப்படை உரிமையை உறுதிப்படுத்திய மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி மாதவ் ஜம்தாரின் கருத்துக்கள் ஆகியவை ஒரு நம்பிக்கையை அளித்துள்ளன. ஜனநாயகப் பாதுகாப்பு வழிமுறைகள் சரியாகப் பயன்படுத்தப்படும்போது, அவை இன்னும் அரசாங்க நிர்வாகத்தின் தன்னிச்சையான அதிகார மீறல்களைத் தடுத்து நிறுத்த முடியும் என்பதை இந்தச் சிறிய வெற்றிகள் நமக்கு நினைவூட்டுகின்றன.


இருப்பினும், ஒரு முக்கியமான எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கிறது.



ஒவ்வொரு ஜனநாயக நாடும் தனது வாக்காளர் பட்டியல்களைத் மறுசீரமைப்பு செய்ய வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு இறையாண்மை கொண்ட நாடும், கடவுச்சீட்டுகளை வழங்குவதற்குமுன் மக்களின் அடையாளம் மற்றும் தகுதிகளைச் சரிபார்க்க வேண்டும். இதில், ஒவ்வொரு சட்டத்திற்கும் அதற்கே உரிய சட்டவரையறையும், ஒவ்வொரு அதிகார அமைப்புக்கும் அதன் சொந்த அதிகார வரம்பும் உண்டு. மேலும், ஒவ்வொரு நிர்வாக நடைமுறைக்கும் அதன் சொந்த சட்டரீதியான விளைவுகள் உண்டு. இக்கோட்பாடுகளில் எந்தவிதமான சர்ச்சையும் இல்லை.


ஆனால், ஒரு குறிப்பிட்ட சட்டத்தின்கீழ் எடுக்கப்படும் நடவடிக்கையின் விளைவு, மற்றொரு முற்றிலும் மாறுபட்ட சட்ட எல்லைக்குள் ஊடுருவி, நாடாளுமன்றம் ஒருபோதும் நினைத்துப் பார்த்திராத மற்றும் அந்தச் சட்டம் அங்கீகரிக்காத சில தடைகளையும் தகுதியிழப்புகளையும் உருவாக்கத் தொடங்குவதுதான் மிகப் பெரிய சிக்கல் ஆகும். இந்திய நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் அரசியலமைப்புச் சார்ந்த கேள்வி இதுதான்.


பொதுமக்களிடையேயான விவாதம் முற்றிலும் தவறான ஒரு கேள்வியின் மீதே கவனம் செலுத்தி வருகிறது. இந்தியக் கடவுச்சீட்டு என்பது ஒருவரது "குடியுரிமைக்கான சான்றா" இல்லையா என்பதைப் பற்றி விவாதிக்கவே பல பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன. கடவுச்சீட்டு என்பது குடியுரிமைக்கான இறுதியான சான்று அல்ல என்றே வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், அது உண்மையான பிரச்சினை அல்ல.


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் (Representation of the People Act) நடத்தப்படும் ஒரு தேர்தல் நடவடிக்கையினால் ஏற்படும் விளைவுகள், கடவுச்சீட்டு நிர்வாகத்தில் தலையிடுவதன் மூலம் கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பதே உண்மையான கேள்வியாகும்.


நவீன அரசியலமைப்பு ஜனநாயக நாடுகள், மக்களின் சுதந்திரத்தைப் பெரிய சட்ட மாற்றங்கள் மூலமாக நேரடியாக ஒருபோதும் குறைப்பதில்லை. அரசியலமைப்புச் சட்டம் வேண்டுமென்றேதான் அரசாங்கத்தின் அதிகாரங்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து வைத்துள்ளது. அந்த அதிகாரப் பகிர்வு என்பது ஏதோ நிர்வாகத் திறமையின்மை அல்ல. மாறாக, அது மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் மிகச் சிறந்த காரணிகளில் ஒன்றாகும்.

கடவுச்சீட்டு ஆணையம், கடவுச்சீட்டுச் சட்டத்தை (Passports Act) நிர்வகிக்கிறது. தேர்தல் ஆணையம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை நிர்வகிக்கிறது. குடியுரிமை, குடியுரிமைச் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. வருமான வரி அதிகார அமைப்புகள், நிதிச் சட்டங்களை நிர்வகிக்கின்றன. தொழில்முறை ஒழுங்குபடுத்துபவர்கள், உரிமம் வழங்கும் சட்டங்களை நிர்வகிக்கின்றனர். ஒவ்வொரு அதிகார அமைப்பும் வரையறுக்கப்பட்ட சட்ட எல்லைகளுக்குள் செயல்படுகிறது. இந்தச் சட்டப்பூர்வ அதிகார அமைப்புகளின் சுதந்திரம் தற்செயலாக அமைந்ததல்ல. சட்டத்தின் ஆட்சி (rule of law) என்பது, நீதித்துறை மறுஆய்வைப் போலவே, இத்தகைய நிறுவனரீதியான பிரிவினையையும் சார்ந்துள்ளது. கவனமாக வரையப்பட்ட இந்த எல்லைகள் சீர்குலையத் தொடங்கும்போதுதான் சிக்கல் எழுகிறது.


சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) என்பது வாக்காளர் பட்டியலின் துல்லியத்தன்மையை மேம்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு தேர்தல் சார்ந்த நடவடிக்கையாகும். இந்தச் கொள்கையை ஒருவர் ஆதரிப்பதோ அல்லது எதிர்ப்பதோ முற்றிலும் மாறுபட்ட அரசியல் விவாதத்திற்குரியது.


அரசியலமைப்புச் சட்டத்தின்படி, வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது ஒரே ஒரு நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுகிறது: அது ஒருவர் வாக்களிக்கத் தகுதியானவரா என்பதைத் தீர்மானிப்பதாகும். இது கடவுச்சீட்டு, உரிமங்கள், நலத்திட்ட உதவிகள் அல்லது பிற உரிமைகளை முறைப்படுத்துவதற்கான ஒரு மாற்று அமைப்பாக மாறுவதற்காக ஒருபோதும் உருவாக்கப்படவில்லை.


தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த ஓராண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின்கீழ் (SIR) 12 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள வாக்காளர் பட்டியலிலிருந்து 5.8 கோடிக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், நாட்டின் பிற பகுதிகளிலும் இத்தகைய திருத்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேற்குவங்கத்தில் மட்டும், சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையைத் தொடர்ந்து ஏறக்குறைய 91 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால், இது பெரிய அளவிலான சட்டப் போராட்டங்களுக்கும் பொது விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளது.


வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணி (SIR) சரியாக நடத்தப்பட்டதா, அல்லது தனிநபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது நியாயமானதுதானா என்ற கேள்விகள் தேர்தல் சட்டத்திற்கும், தேவைப்பட்டால் அரசியலமைப்பு நீதிமன்றத் தீர்ப்புக்கும் உட்பட்டவை ஆகும். ஆனால், இங்கு நாம் பேசும் அரசியலமைப்புரீதியான கவலை வேறு ஒரு புள்ளியில் இருந்து தொடங்குகிறது: ஒரு தேர்தல் நடவடிக்கையின் விளைவுகள், நாடாளுமன்றம் முற்றிலும் மாறுபட்ட சட்டக் கட்டமைப்புகளை வகுத்துள்ள மற்ற சட்டத் துறைகளுக்குள் தலையிடத் தொடங்கும்போதுதான் இந்தச் சிக்கல் எழுகிறது.


வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவது கடவுச்சீட்டைப் (passport) புதுப்பிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று வைத்துக்கொள்வோம். நாளடைவில், இது தொழில்முறை உரிமங்களைப் புதுப்பிப்பதையோ அல்லது பெறுவதையோ பாதிக்கலாம். மறுநாள், அது கல்வி உதவித்தொகை, அரசு வேலைவாய்ப்பு, வங்கித்துறை, வரிவிதிப்பு, கல்வி, நலத்திட்ட உரிமைகள் அல்லது உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் (writ) மனு தாக்கல் செய்யும் உரிமையைக் கூட பாதிக்கலாம். இது நாடாளுமன்றம் அத்தகைய சட்டங்களை இயற்றியதால் நடக்கவில்லை; மாறாக, ஒரு நிர்வாக அமைப்பு தான் நிர்வகிக்கும் சட்டத்தைத் தனித்துப் பயன்படுத்தாமல், மற்றொரு நிர்வாக அமைப்பின் முடிவுகளை அப்படியே நம்பிச் செயல்படத் தொடங்குவதால் நடக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இவை ஒரு முறையான குடியுரிமை விசாரணை வழங்கும் தண்டனைகளைவிட மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.


நடைமுறையில் குடிமகன் அல்லாதவராகக் கருதப்படும் ஒரு நபர் கூட, அனைவருக்கும் கிடைக்கக்கூடிய சட்டப் பிரிவு 14 (சமத்துவ உரிமை) மற்றும் 21 (உயிர் வாழ்வதற்கும் தனிநபர் சுதந்திரத்திற்குமான உரிமை) போன்ற அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 32-ன்கீழ் உச்சநீதிமன்றத்தை அணுக முடியும். இருப்பினும், நமது அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19-ன்கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள சுதந்திரங்கள் மற்றும் சில அரசியலமைப்புப் பாதுகாப்புகள் உள்ளிட்ட பல முக்கியமான அடிப்படை உரிமைகளை, குடிமக்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக வழங்கியுள்ளது.

குடியுரிமைச் சட்டத்தின்கீழ் முறையான சட்டபூர்வ விசாரணை அல்லது சட்ட அங்கீகாரம் ஏதுமின்றி, ஒருவரின் குடியுரிமை குறித்த அரசு அதிகாரிகளின் யூகங்கள் ஒரு சட்டத் துறையிலிருந்து மற்றொரு சட்டத்துறைக்குப் பரவத் தொடங்கினால், அதன் நடைமுறை விளைவு என்பது ஒருவருக்குப் கடவுச்சீட்டு அல்லது வாக்குரிமையை மறுப்பதோடு மட்டும் நின்றுவிடாது. அது, அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக வழங்கியுள்ள உரிமைகளைக் கோரி நிலைநாட்டுவதற்கான திறனைப் படிப்படியாகப் பறித்துவிடும். இதனால்தான், ஒரு சட்டத்தின்கீழ் எடுக்கப்படும் நிர்வாக முடிவுகளின் விளைவுகளை மற்றொரு சட்டத்திற்கு மாற்றுவதை, வெறும் அரசு அதிகாரத்துவத்தின் வசதிக்காகச் செய்யப்படும் விஷயமாகக் கடந்து போய்விடமுடியாது.


நிர்வாகச் சட்டம் இத்தகைய நடைமுறையை எப்போதும் எதிர்த்து வந்துள்ளது. அதன் அடிப்படைத் தத்துவம் எளிமையானது. ஒவ்வொரு சட்டப்பூர்வ அதிகார அமைப்பும், நாடாளுமன்றத்தால் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தையும் விருப்பத்தையும் ஒவ்வொரு சட்டபூர்வ அதிகார அமைப்பும் தனித்தே பயன்படுத்த வேண்டும். கடவுச்சீட்டு வழங்கும் அதிகாரி, தனது சொந்த முடிவெடுக்கும் அதிகாரத்தை ஒரு தேர்தல் பதிவு அதிகாரியிடம் ஒப்படைத்துவிடக்கூடாது. இது வெறும் சட்டத்தை விளக்கும் விஷயம் மட்டுமல்ல; இது ஒரு அரசியலமைப்பு சார்ந்த கடமையாகும்.


மேனகா காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, தனிநபர் சுதந்திரத்தின் மீதான எந்தவொரு கட்டுப்பாடும் நியாயத்தன்மை, பகுத்தறிவு மற்றும் முறையான சட்ட நடைமுறை ஆகிய தரநிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதன் மூலம் கடவுச்சீட்டு (passport) நிர்வாக முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தத் தீர்ப்பின் நீடித்த பங்களிப்பு கடவுச்சீட்டுகளுக்கானது என்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அது நிர்வாக அதிகாரங்களின் செயல்பாட்டையே அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாக மாற்றியது. அரசு அதிகாரிகள் இனி இயந்திரத்தனமாகச் செயல்பட முடியாது; அவர்கள் தங்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தைத் தனித்து நின்று, சிந்தித்துச் செயல்படுத்த வேண்டும்.



சட்டரீதியான மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போதுகூட, வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்டதைக் காரணம் காட்டி கடவுச்சீட்டைப் (passport) புதுப்பிக்க மறுப்பது நிகழ்ந்தால், ஒரு தேர்தல் நடவடிக்கையானது கடவுச்சீட்டுச் சட்டத்தில் (Passports Act) ஒருபோதும் கருதப்படாத விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்குகிறது. அப்போது, ​​இந்தப் பிரச்சினை ஒரு கடவுச்சீட்டு அல்லது ஒரு தனிநபரைப் பற்றியதாக இல்லாமல், அரசியலமைப்புச் சட்ட வழிமுறை குறித்த ஒரு கேள்வியாக மாறுகிறது. நாடாளுமன்றத்தின் கவனமாக வடிவமைக்கப்பட்ட சட்டமியற்றும் பிரிவுகள், நிர்வாகத்தின் வசதிக்கு அடிபணிய வேண்டுமா? சுதந்திரமான சட்டப்பூர்வ அதிகார அமைப்புகள், தங்களின் சுதந்திரமான சட்டரீதியான முடிவெடுக்கும் திறனைப் படிப்படியாக நிறுத்த வேண்டுமா? இவை தொழில்நுட்பக் கேள்விகள் அல்ல. இவை அரசியலமைப்புச் சார்ந்த நிர்வாகத்தின் அடிப்படைக்கே ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது.


இந்திய அரசியலமைப்பு முறையின் மிகப்பெரிய பலம், அது வழங்கும் உரிமைகளில் மட்டுமே இல்லை; மாறாக அது அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்கும் முறையில்தான் உள்ளது. ஒவ்வொரு அதிகார அமைப்பும் தனக்கென வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள்ளேயே செயல்படுகிறது. பொது அதிகாரத்தைப் பயன்படுத்தி எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும், எந்தச் சட்டத்தின் மூலம் தனக்கு அங்கீகாரம் கிடைத்ததோ அந்தச் சட்டத்திற்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டதாகும். இந்த உன்னதமான கட்டமைப்புதான் தற்போது அமைதியான முறையில் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.


எனவே, இங்கு ஆபத்து என்பது ஒரு பத்திரிகையாளருக்குத் தற்காலிகமாகப் கடவுச்சீட்டு கிடைக்காமல் போவது மட்டுமல்ல. இது 'உரிமை இழப்புகளின் தொடர் விளைவு' (Cascade of civil disabilities) எனப்படும் ஒரு புதிய ஆபத்தான போக்கு உருவாவதைக் காட்டுகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட நிர்வாகத் துறையின் நடவடிக்கை அல்லது முடிவு, பிற சட்டத் துறைகளுக்கும் பரவி, இறுதியில் ஒரு குறிப்பிட்ட அதிகாரி எடுக்கும் முடிவு, நாடாளுமன்றம் தனித்தனியாக ஒழுங்குபடுத்த வேண்டும் என்று திட்டமிட்டு உருவாக்கிய பலதரப்பட்ட சட்ட உரிமைகளையும் பாதிக்கத் தொடங்குகிறது.



அதனால்தான், தற்போது எழுந்துள்ள இந்த சர்ச்சை, இதில் தொடர்புடைய உடனடி உண்மைகளையும் கடந்து மிக விரிவான கவனத்திற்கு உட்படுகிறது.


இது அடிப்படையில் கடவுச்சீட்டு தொடர்பான பிரச்சனை மட்டுமல்ல. மாறாக, ஒவ்வொரு பொது அதிகார அமைப்பும் தான் நிர்வகிக்கும் சட்டத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும்; தனிமனித சுதந்திரத்தின் மீது விதிக்கப்படும் எந்தவொரு கட்டுப்பாடும் சட்டப்பூர்வ அங்கீகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும்; மற்றும் ஒவ்வொரு குடிமகனும் தன் உரிமைகளைச் சட்டத்தின் மூலமாகவே தீர்மானிக்கப்பட தகுதியானவர், வேறு எங்கோ எடுக்கப்பட்ட நிர்வாக முடிவுகளின் எதிர்பாராத பக்கவிளைவுகளால் அல்ல, என்ற இந்த அரசியலமைப்பு ஒழுக்கத்தைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.


பிரிட்டாஸ் என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM) கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார், மற்றும் பாபு ஒரு ஆராய்ச்சி உதவியாளர் ஆவார்.


Original Link: It’s not just about a passport. Citizens are being turned into strangers in their own land.

Share:

சாலைப் பாதுகாப்பைத் தீர்மானிக்க வேண்டியது நாடாளுமன்றமே தவிர, விதி அல்ல. - சுபம் குமார்

சாலை விபத்தினால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க முடியும் என்ற நிலையில், விபத்துகள் தொடர்வதற்கு இடமளிக்கும் நிர்வாக அமைப்பை சரியாக கண்காணிக்காமல் இருப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் தோல்வியாகும்.


இந்தியாவில் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு நபர், தடுக்கக்கூடிய சாலை விபத்து ஒன்றில் உயிரிழக்கிறார். 2024-ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்த மரணங்களை இரண்டு அரசு அமைப்புகள் கணக்கெடுத்தபோது, அவை மூன்று வெவ்வேறு எண்ணிக்கையிலான தரவுகளைக் காட்டியுள்ளன.


சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் 1.77 லட்சம் மரணங்கள் நிகழ்ந்ததாகத் தெரிவித்தது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau (NCRB)) "விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள்" அறிக்கை, விபத்து மரணங்கள் குறித்த காவல்துறை பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்ட தரவுகளின்படி 1.75 லட்சம் சாலை விபத்து மரணங்களைப் பதிவு செய்தது. அதே, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் "Crime in India"  அறிக்கை, சாலை விபத்து தொடர்பான கவனக்குறைவால் ஏற்படும் மரணங்களைப் பதிவு செய்கிறது. சாலை விபத்துகளில் 1.81 லட்சம் பேர் உயிரிழந்ததாகக் காட்டுகிறது. இரண்டு அரசு முகமைகள், மூன்று விதமான கணக்கீட்டு முறைகள், அவற்றுக்கு இடையே சுமார் 6,000 உயிர்கள் விடுபட்டதற்கான தெளிவற்ற முரண்பாடு நிலவுகிறது.


இந்த இடைவெளி வெறும் தரவு சார்ந்த பிரச்சனை அல்ல. உலகளாவிய வாகனங்களின் எண்ணிக்கையில் மிகச் சிறிய பங்கையே இந்தியா கொண்டிருந்தாலும் மற்ற  நாடுகளைவிட அதிக அளவிலான சாலை விபத்து மரணங்களை இந்தியா பதிவு செய்கிறது. 2014-ஆம் ஆண்டு எஸ். ராஜசேகரன் vs  இந்திய அரசு வழக்கில் (S. Rajaseekaran vs Union of India (2014)), உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்சனைக்கான முழுமையான காரணத்தை பதிவு செய்தது. சாலைப் பாதுகாப்பின் நான்கு முக்கிய அம்சங்களாக (4 Es) நீதிமன்றம் குறிப்பிட்டவற்றை நான்கு பணிக்குழுக்கள் ஆய்வு செய்தன: அவை பொறியியல் (Engineering), அமலாக்கம் (Enforcement), கல்வி (Education) மற்றும் அவசரக்கால சிகிச்சை (Emergency care) போன்றவையாகும். இந்த நான்கு துறைகளின் ஆய்வுகளும் அதிர்ச்சியூட்டும் முடிவுகளையே அளித்தன. நெடுஞ்சாலைப் பராமரிப்பிற்குத் தேவைப்படும் நிதியில் 35 முதல் 40 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டது. அவசர ஊர்தி இல்லாத சூழல், கடுமையான காயத்திற்கான சிகிச்சை மையங்கள் (trauma centres) இல்லாத சூழல் மற்றும் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு விரைவாகக் கொண்டு செல்வதற்குப் பதிலாக காவல் நிலையங்களுக்கு இடையே அதிகார வரம்பு குறித்த வாக்குவாதங்கள் நடப்பது போன்றவற்றால், காப்பாற்றப்படக்கூடிய நிலையில் இருந்த நோயாளிகள் உயிரிழந்தனர். சட்டங்கள் காகித அளவில் இருந்தனவே தவிர, அவை அரிதாகவேச் செயல்படுத்தப்பட்டன.


உச்சநீதிமன்றத்தின் தலையீட்டிற்கு அரசியலமைப்புச் சட்டரீதியான வலிமையை அளித்தது. அதற்கு முன்பே அது ஏற்றுக்கொண்ட ஒரு அடிப்படை உண்மையாகும். சாலை விபத்துகள் தற்செயலாக நிகழும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் அல்ல. ஒவ்வொரு விபத்திற்கும் அதன் காரணத்தை ஆராய்ந்தால், அது மனிதத் தவறின் விளைவாகவே இருப்பதால், அவற்றைத் தடுக்க முடியும். “விதி” (fate) என்று ஏற்றுக்கொண்டு அமைதியாக இருப்பது மனித வாழ்க்கையின் ஏற்றுக்கொள்ளப்பட்ட தத்துவம் அல்ல என்று நீதிமன்றம் கூறியது. இந்தப் புரிதல்தான் சாலைப் பாதுகாப்பை இந்திய அரசியலமைப்பின் 21-வது  பிரிவில் உயிர் வாழும் உரிமை உள்ள அடிப்படை உரிமையுடன் இணைக்கிறது. இந்த மரணங்களைத் தடுக்க முடியும் என்ற நிலையில், அவை தொடர அனுமதிக்கும் நிர்வாக அமைப்பை சகித்துக்கொள்வது அரசியலமைப்புச் சட்டத்தின் தோல்வியே ஆகும்.


இந்தப் பிரச்சினை நீடிப்பதற்கான ஒரு முக்கிய காரணம் அரசியலமைப்புச் சட்டத்திலேயே உள்ளது. சாலைகள், காவல்துறை, பொது சுகாதாரம் மற்றும் வாகன ஒழுங்குமுறை ஆகியவை மத்தியப் பட்டியல் (Union List), மாநிலப் பட்டியல் (State List), மற்றும் பொதுப் பட்டியல் (Concurrent List) ஆகியவற்றுக்கிடையே பிரிக்கப்பட்டுள்ளதால், விபத்துகளைத் தடுக்கும் முழுப்பொறுப்பு எந்த ஒரு அமைப்பிடமும் இல்லை. ஒரு தேசிய நெடுஞ்சாலையில் நிகழும் விபத்து ஒரே நேரத்தில் குறைந்தது 7 அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது. ஆனால், விபத்தைத் தடுக்கும் தெளிவான பொறுப்பை அந்தப் பிரிவுகளில் எதுவும் வழங்கவில்லை. தேசிய நெடுஞ்சாலைகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலும், மாநிலச் சாலைகள் மற்றும் காவல்துறை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. மோட்டார் வாகனங்கள் பொதுப் பட்டியலில் உள்ளன; பொது சுகாதாரம் என்பது மாநில அரசின்கீழ் வரும் ஒரு விஷயமாகும். இந்த அதிகார வரம்புப் பிரிவினையே இத்தகைய தோல்விகளுக்குக் காரணமாகும். இந்த முரண்பட்ட கட்டமைப்புக்கு தீர்வாகப் பல்வேறு ஆணையங்கள், ஆலோசனைக் குழுக்கள் மற்றும் முன்மொழியப்பட்ட வாரியங்கள் மட்டுமே தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன.


இதற்கான சீர்திருத்தப் பாதை அரசியலமைப்புச் சட்டத்தின் வழியில்தான் உள்ளது, அதற்கான முன்னுதாரணமும் நமக்கு ஏற்கெனவே இருக்கிறது.


மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியல் ஆகியவற்றில் பிரிக்கப்பட்டிருந்த வரி வசூல் முறை செயல்பட முடியாத நிலையை எட்டியபோது, நாடாளுமன்றம் மற்றொரு ஆலோசனைக் குழுவை உருவாக்கவில்லை. அதற்குப் பதிலாக, 101-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி, சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Service Tax (GST)) குழுவை உருவாக்கியது. இதேபோல், சாலைப் பாதுகாப்பு தொடர்பான அதிகாரங்களும் மூன்று பட்டியல்களில்  பிரிந்துக் கிடக்கின்றன. எனவே, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து சாலை வடிவமைப்பு, வாகனத் தகுதிச்சான்று, அவசர மருத்துவ சேவை மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான தரவுப் பதிவு ஆகியவற்றுக்கான பொதுத் தரநிலைகளை வகுக்கும் “சாலைப் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு” (Road Safety Coordination Council) உருவாக்கப்பட வேண்டும். அது இந்தப் பிரச்சினைக்கு தேவையான தீர்வை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


அரசியலமைப்பின் 7-வது அட்டவணையை திருத்தி, சாலைகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான விவகாரங்களை நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகார வரம்பிற்குள் கொண்டு வருவது, இந்தச் சீர்திருத்தத்தின் அடித்தளத்தை மேம்படுத்தும். இதன் மூலம், எந்த ஆலோசனைக் குழுவாலும் நிரப்ப முடியாத அரசியலமைப்புச் சட்ட இடைவெளிகள் நீக்கப்படும். அதற்கு அடுத்த கட்டமாக, மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழுக்களை (District Road Safety Committees) சட்டத்தின் மூலம் கட்டாயமாக உருவாக்கி, அவற்றிற்கு தெளிவான அதிகாரங்களையும், அவற்றைச் செயல்படுத்தத்தவறும் மாநிலங்களுக்கு உண்மையான பொறுப்புணர்வு மற்றும் தண்டனைகளையும் நாடாளுமன்றம் உறுதி செய்ய வேண்டும்.


நீண்டகாலமாக பலருக்கு பாதிப்பை ஏற்படுத்திய ஒரு நிர்வாக அமைப்பு தோல்வியடைந்தபோது, நாடாளுமன்றம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், நிர்வாக மற்றும் சட்டம் இயற்றும் அமைப்புகள் சாலைப் பாதுகாப்பில் நிலையான பொறுப்புடைமையை உருவாக்கத் தவறியதால், நீதிமன்றங்கள் இதில் பலமுறை தலையிட்டுள்ளது. ஆனால், நீதிமன்றங்களின் அத்தகைய தலையீடு ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே பலன் தரும் என்கின்றனர்.


கட்டுரையாளர் ஒரு அரசியலமைப்புச் சட்ட வழக்கறிஞர் ஆவார். மேலும், இவர் 'Crashfree India' அமைப்பில் கொள்கை ஆதரவு மற்றும் பிரச்சாரக் குழுவிற்கு தலைமைப் பொறுப்பு வகிக்கிறார்.


 Original Link: Parliament, not fate, must shape road safety.


Share:

எத்தனால் என்பது என்ன? உயிரி எரிபொருட்களின் பல்வேறு தலைமுறைகள் யாவை? - குஷ்பூ குமாரி

முக்கிய அம்சங்கள்:


— தூய பெட்ரோல் மற்றும் பல்வேறு அளவுகளில் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் ஆகியவற்றில் தங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நுகர்வோருக்கு வழங்கப்படாதது குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு வகையான அடிப்படை எரிபொருள்களை வழங்குவது, எரிபொருள் சில்லறை விற்பனை வலையமைப்பில் செலவுகளை அதிகரிக்கும் மற்றும் செயல்பாட்டுத் திறனைக் குறைக்கும் என்றும்; அதோடு, எரிபொருளைக் கொண்டு சேர்ப்பதில் பெரும் சிக்கலை (Enormous logistical challenge) உருவாக்கும் என்றும் அரசு கூறியுள்ளது.


— மேலும், 20% எத்தனால் கலப்பு இலக்கை அடைவதற்குப் பெருமளவிலான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே பல்வேறு காரணங்களால் மீண்டும் குறைந்த அளவிலான எத்தனால் கலப்பிற்குத் திரும்புவது புத்திசாலித்தனமாக இருக்காது என்றும் அரசு வாதிட்டுள்ளது. இந்தியா கடந்த ஆண்டே பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் இலக்கை அடைந்துவிட்டது; தற்போது நாடு முழுவதும் விற்கப்படும் நிலையான பெட்ரோல் வகையாக E20 (Ethanol 20%) எரிபொருள்தான் உள்ளது.


— இருப்பினும், E20 எரிபொருள் பயன்பாடு குறித்து பொதுமக்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. குறிப்பாக, அதிக எத்தனால் கலவைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படாத பழைய வாகனங்களில் எரிபொருள் சிக்கனம் குறைதல் மற்றும் இயந்திர பாகங்கள் தேய்மானம் அடைதல் போன்ற புகார்கள் எழுந்துள்ளன.


— பழைய வாகனங்களில் எரிபொருள் சிக்கனம் குறைவது மிகக் குறைவாகவே இருக்கும் என்றும், அதற்குப் பதிலாக அதிக ஆக்டேன் அளவு (Higher octane rating), சிறந்த அதிர்வுத் தடுப்புத் திறன் (Superior anti-knock), வேகமான எரிபொருள் பயன்பாடு (Faster combustion), சிறந்த  இயந்திரத் திறன் (Better pickup), சீரான வேகம் (Smoother acceleration) மற்றும் இயந்திர செயல்பாடு போன்ற கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறி, பொதுமக்களின் இத்தகைய அச்சங்களைப் போக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது.


— இருப்பினும், எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, பெட்ரோலில் அதிக அளவு எத்தனால் கலப்பதை அரசாங்கம் தாமதப்படுத்தக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. செவ்வாயன்று, E25 எரிபொருளுக்கு மாறும் முன்மொழியப்பட்ட திட்டத்தை அரசாங்கம் தள்ளிப்போட வாய்ப்புள்ளது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.


— கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சகம் வெளியிட்ட விளக்கக் குறிப்பில், எத்தனால்-பெட்ரோல் கலப்புத் திட்டம் 20 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது என்றும், அமெரிக்கா மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் இது பயன்பாட்டில் இருப்பதால் எத்தனாலை ஒரு தகுதியான எரிபொருளாக யாரும் கேள்வி எழுப்பவில்லை என்றும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.


— அமைச்சகத்தின் கூற்றுப்படி, E20 ரப்பர் பாகங்கள், எரிபொருள் குழாய்கள் அல்லது இயந்திரங்களைச் சேதப்படுத்தியிருந்தால், வாகன உரிமையாளர்களிடமிருந்து வந்த லட்சக்கணக்கான உத்தரவாதக் கோரிக்கைகள்,   பாக செயலிழப்புகள் மற்றும் நாடு முழுவதும் புகார்கள் அதிக அளவில் வந்திருக்கும். ஆனால், அப்படி எதுவும் உண்மையில் நடக்கவில்லை.


— எத்தனால் விநியோகச் சங்கிலியானது மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட ஒரு எரிபொருள் விநியோக அமைப்பாகும் என்றும், எத்தனால் மற்றும் கலப்பு பெட்ரோல் ஆகியவை இந்தியத் தர நிர்ணய அமைப்பின்  கடுமையான விதிகளுக்கு உட்பட்டவை என்றும் அரசு உறுதியளித்துள்ளது. மேலும், வடிகட்டு ஆலை (distillery) முதல் சேமிப்புக் கிடங்கு (depot) மற்றும் விற்பனை நிலையம் வரை ஒவ்வொரு கட்டத்திலும் இவை தரச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன என்றும் கூறியுள்ளது.



grains, ethanol,


உங்களுக்குத் தெரியுமா?


— எத்தனால், அல்லது எத்தில் ஆல்கஹால், பல பயன்பாடுகளைக் கொண்ட ஒரு திரவமாகும். 95% தூய்மையுடன், இது சுத்திகரிக்கப்பட்ட எத்தில் ஆல்கஹால் (Rectified Spirit) என்று அழைக்கப்படுகிறது மற்றும் மதுபானங்களில் போதை தரும் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. 99%-க்கும் அதிகமான தூய்மையுடன், எத்தனால் பெட்ரோலுடன் கலப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.


— எத்தனால் என்பது ஒரு பொதுவான வகை 'உயிரி எரிபொருள்' (Biofuel) ஆகும். இது தாவரங்கள், வேளாண் கழிவுகள், விலங்குப் பொருட்கள், வீட்டு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் போன்ற 'உயிரிப் பொருட்களில்' (Biomass) இருந்து பெறப்படும் ஒரு புதுப்பிக்கத்தக்க எரிபொருளாகும். இந்த உயிரி எரிபொருட்கள் வழக்கமான புதைபடிவ எரிபொருட்களைவிட (Fossil fuels) கணிசமான அளவு தூய்மையானவை; இருப்பினும், இவை தயாரிக்கப்படும் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி முறைகளைப் பொறுத்து இவற்றின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் தாக்கம் மாறுபடலாம்.


— இந்த மூலங்களிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படும்போது, ​​அது 'பயோ-எத்தனால்' (எத்தனாலின் ஒரு வகை) என்று அழைக்கப்படுகிறது. கரும்பு, பீட்ரூட் சாறு, சோளம், அரிசி அல்லது பிற தானியங்களிலிருந்து பயோ-எத்தனாலை எளிதாகத் தயாரிக்கலாம். இந்த வகையான எரிபொருட்கள் 'முதல் தலைமுறை உயிரி எரிபொருட்கள்' (first-generation biofuels) என்று அழைக்கப்படுகின்றன. 


உயிரி எரிபொருட்களுக்கான தேசியக் கொள்கையின்படி, பல்வேறு தலைமுறை உயிரி எரிபொருட்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன:


(i) முதல் தலைமுறை (1G): இது சர்க்கரை ஆலைக் கழிவிலிருந்து (Molasses) உயிரி-எத்தனால் (Bio-ethanol) மற்றும் உண்ணத் தகாத எண்ணெய் வித்துக்களிலிருந்து (Non-edible oilseeds) உயிரி-டீசல் (Bio-diesel) ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது.


(ii) இரண்டாம் தலைமுறை (2G) நகராட்சி திடக்கழிவுகளிலிருந்து எத்தனாலை உற்பத்தி செய்ய முடியும்.


(iii) மூன்றாம் தலைமுறை (3G) உயிரிக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் அழுத்தப்பட்ட எரிவாயு (Bio-CNG) போன்ற எரிபொருட்கள் உற்பத்தி செய்ய முடியும்.


Original Link: What is Ethanol? What are the different generations of biofuels?

Share:

நாட்டின் இறப்புப் பதிவுகளை இந்தியா எவ்வாறு கணக்கிடுகிறது? -சி. அரவிந்தா, ஓம் பிரகாஷ் பெரா

இந்தியா அனைவரையும் உள்ளடக்கிய பதிவு முறையை நோக்கி நகரும் நிலையில், இனி  பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை மட்டும் பார்க்காமல், இன்னும் போதிய அளவில் பதிவுகள் செய்யப்படாமல் விடுபட்டிருக்கக்கூடிய மக்கள் பிரிவினரைக் கண்டறிந்து அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.


2026-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி, இந்திய அரசு 2024-ஆம் ஆண்டிற்கான குடிமைப் பதிவு அமைப்பு (Civil Registration System (CRS)) அறிக்கையை வெளியிட்டது. இது, நாட்டில் பிறப்புகள், இறப்புகள் மற்றும் கருவில் இறந்த குழந்தை பிறப்புகள் (Stillbirths) ஆகியவற்றைப் பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அளவிடுவதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாகும். குடிமைப் பதிவு (Civil Registration) என்பது பிறப்பு, இறப்பு போன்ற, முக்கிய வாழ்க்கை நிகழ்வுகளை தொடர்ந்து, நிரந்தரமாக மற்றும் கட்டாயமாகப் பதிவு செய்யும் ஒரு முக்கிய செயல்முறையாகும். ஐக்கிய நாடுகள் (United Nations (UN)) வகுத்துள்ள கட்டமைப்பில் பிறப்புகள், இறப்புகள், கருவில் இறந்த பிறப்புகள் (Foetal deaths), திருமணங்கள், விவாகரத்துகள் மற்றும் தத்தெடுப்புகள் ஆகியவை இடம்பெறுகின்றன. ஆனால், இந்தியாவின் சட்டக் கட்டமைப்பு இதைவிடக் குறுகியதாக உள்ளது. 1969-ஆம் ஆண்டின் பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவுச் சட்டம் (Registration of Births and Deaths Act) பிறப்புகள், இறப்புகள் மற்றும் இறந்த குழந்தை  பிறப்புகளை (Stillbirths) மட்டுமே உள்ளடக்கியுள்ளது. அதேநேரத்தில், திருமணங்கள் மற்றும் விவாகரத்துகள் தனித்தனி சட்டங்களின்கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.


பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம் (Registration of Births and Deaths Act)


இந்தியாவின் குடிமக்கள் பதிவு முறையானது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட 1886-ஆம் ஆண்டின் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சட்டத்தில் இருந்து உருவானது. இருப்பினும், 1969-ஆம் ஆண்டின் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சட்டம் ((Registration of Births and Deaths (RBD Act)), பிறப்பு மற்றும் இறப்புகளைக் கட்டாயமாகப் பதிவு செய்வதற்கான ஒரு சீரான தேசியக் கட்டமைப்பு கொண்டுவரப்படும் வரை இந்த முறை ஒழுங்கற்றதாகவே இருந்தது. இந்தச் சட்டம் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் உள்ளூர் பதிவாளர்களையும் தலைமைப் பதிவாளர்களையும் நியமித்ததுடன், ஆண்டுதோறும் புள்ளிவிவர அறிக்கைகளை வெளியிடுவதையும் கட்டாயமாக்கியது. இது 1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்துடனும் (Citizenship Act) இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் அங்குள்ள இந்தியக் குடிமக்களின் பிறப்பு மற்றும் இறப்புகளைப் பதிவு செய்கின்றன.


2023-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தம்,  பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான சீர்திருத்தமாகும். இந்தத் திருத்தத்தின் மூலம் டிஜிட்டல் பதிவு முறை, மின்னணு பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், தேசிய மற்றும் மாநில அளவிலான தரவுத்தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ், தற்போது பல்வேறு அரசு சேவைகளுக்காக பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்திற்கான ஒரே அதிகாரப்பூர்வச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும், இந்தத் திருத்தம் தாமதமான பதிவுகளை எளிதாக்கியுள்ளது, ஆதரவற்ற மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் உரிமைகளைப் பலப்படுத்தியுள்ளது, மருத்துவமனைகள் இறப்பிற்கான காரணத்தைக் குறிப்பிடும் சான்றிதழ்களை வழங்குவதைக் கட்டாயமாக்கியுள்ளது, மற்றும் பேரிடர்கள் அல்லது தொற்றுநோய் காலங்களில் சிறப்புத் துணைப் பதிவாளர்களை நியமிக்கவும் வழிவகை செய்துள்ளது.


2024-ஆம் ஆண்டின் தரவுகள் எதை காட்டுகிறது?


2024-ஆம் ஆண்டிற்கான குடிமைப் பதிவு அமைப்பு (CRS) அறிக்கையின்படி, 2.54 கோடி  பிறப்புகளும், 89.4 லட்சம் இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிறப்புப் பதிவு முழுமையாக 99.1% என்றும், இறப்புப் பதிவு முழுமை 99.4% என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கைகள், அனைவரின் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவை (Universal Civil Registration) உறுதி செய்யும் இலக்கை நோக்கி இந்தியா முன்னேற்றம் அடைந்திருப்பதை காட்டுகிறது. இருப்பினும், இந்த சதவீதங்களை சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும். இவை பதிவு செய்யப்படாமல் விடுபட்ட நிகழ்வுகளின் நேரடி எண்ணிக்கை அல்ல. மாறாக, பதிவுசெய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளை மாதிரிப் பதிவு அமைப்பு (Sample Registration System (SRS)) மூலம் கணிக்கப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பெறப்பட்ட தோராயமான மதிப்பீடுகள் ஆகும். எனவே, 99.4% இறப்புப் பதிவு என்பது, நாட்டில் நிகழ்ந்த ஒவ்வொரு இறப்பும் தனித்தனியாக சரிபார்க்கப்பட்டது என்று அர்த்தமல்ல; மாறாக, மக்கள்தொகையியல் மதிப்பீடுகளின்படி எதிர்பார்க்கப்பட்ட இறப்பு எண்ணிக்கையோடு, பதிவு செய்யப்பட்ட இறப்பு எண்ணிக்கை மிக நெருக்கமாக பொருந்துகிறது என்பதையே குறிக்கிறது.


பதிவு விகிதம் பின்வருமாறு கணக்கிடப்படுகிறது: பதிவுசெய்யப்பட்ட இறப்புகள் / கணக்கிடப்பட்ட இறப்புகள்) * 100.


பாலினம், புவியியல்ரீதியான இடைவெளிகள்


இறப்புப் பதிவில் தொடர்ந்து நிலவும் பாலின வேறுபாடு ஒரு முக்கிய கண்டுபிடிப்பாகும். 2024-ஆம் ஆண்டில், பதிவுசெய்யப்பட்ட இறப்புகளில் 60.4% ஆண்கள் மற்றும் 39.6% பெண்கள் ஆவர். இந்த வேறுபாட்டின் ஒரு பகுதி, வயது அமைப்பு, தொழில் சார்ந்த அபாயங்கள் மற்றும் நோய்ப் பரவல் முறைகள் போன்ற உயிரியல், மக்கள்தொகை மற்றும் நோய்ப்பரவல் காரணிகளை காட்டுவதிலும், இது ஒரு முக்கியமான  கேள்வியையும் எழுப்புகிறது. வயதான பெண்கள், விதவைகள், வீட்டில் இறக்கும் பெண்கள் மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் இறப்புகள், ஆண்களின் இறப்புகளைப் போலவே  முழுமையாக பதிவு செய்யப்படுகின்றனவா? வயது மற்றும் பாலினம் சார்ந்த பகுப்பாய்வுகள் இல்லாமல், இதற்கான பதில் தெளிவற்றதாகவே உள்ளது. இந்தியா அனைவரின் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவை (Universal Registration) முழுமையாக எட்டும் நிலையை நோக்கி முன்னேறி வரும் நிலையில், இனி மொத்தப் பதிவு மீது முழுமையாக கவனம் செலுத்தாமல், இன்னும் போதுமான அளவில் பதிவாகாமல் இருக்கும் மக்கள்குழுக்களை அடையாளம் கண்டு அவர்கள்மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒரு இறப்புச் சான்றிதழ் என்பது வெறும் சட்ட ஆவணம் மட்டுமல்ல. அது சுகாதார புள்ளிவிவரங்கள், நிதிஒதுக்கீடு மற்றும் கொள்கை முடிவுகளை வடிவமைக்கும் ஒரு முக்கிய பொது சுகாதாரப் பதிவேடும் ஆகும்.


இந்த அறிக்கை, நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையேயான ஒரு முக்கியமான இடைவெளியையும் காட்டுகிறது. பதிவு அலகுகளில் 96.6% கிராமப்புறங்களில் அமைந்திருந்தாலும், 57.1% பிறப்புகள் நகர்ப்புறங்களில் பதிவு செய்யப்படுகின்றன. பிரசவங்கள் பெரும்பாலும் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளிலேயே நடப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம். இதற்கு நேர்மாறாக, பதிவாகும் இறப்புகளில் 57.2% கிராமப்புறங்களில்தான் நிகழ்கின்றன. கிராமப்புற மக்கள் பிரசவம் மற்றும் சிறப்புச் சிகிச்சைகளுக்காக நகர்ப்புற மருத்துவமனைகளை நாடுவதையும், அதேநேரத்தில் அவர்களின் இறுதி நாட்கள் மற்றும் இறப்புகள் பெரும்பாலும் தங்களது சொந்த கிராமங்களிலேயே நிகழ்வதையும் இந்தப் பதிவு காட்டுகிறது. எனவே, சமத்துவமான ஒரு பதிவு முறையை உருவாக்க, உள்ளூர் சமூகம் சார்ந்த பதிவுகளை வலுப்படுத்துவதும், கிராமப்புறங்களில் இதற்கான எளிதான அணுகலை மேம்படுத்துவதும் இன்றியமையாததாகும்.


இதற்கிடையில், பாங்காக்கில் (Bangkok) கூடிய ஆசிய பசிபிக் நாடுகள், தங்கள் பகுதியில் நிகழும் ஒவ்வொரு பிறப்பையும் இறப்பையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற உறுதிப்பாட்டை ஏற்றுள்ளன.


இறப்பிற்கான காரணம் 


இறப்பைப் பதிவு செய்வது முதல்படி மட்டுமே. ஆனால், அந்த நபர் ஏன் இறந்தார் என்பதை அறிந்துகொள்வதே பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுகிறது. இந்தியா இறப்புப் பதிவில் முக்கிய முன்னேற்றம் அடைந்திருந்தாலும், இறப்பு கண்காணிப்பு (Mortality Surveillance) இன்னும் இறப்பிற்கான காரணத்தை மருத்துவ ரீதியாகச் சான்றளிக்கும் முறை (Medical Certification of Cause of Death (MCCD)) எவ்வளவு முழுமையாகவும் தரமாகவும் செயல்படுகிறது என்பதையே சார்ந்துள்ளது.


2024-ஆம் ஆண்டிற்கான குடிமைப் பதிவு அமைப்பு (Civil Registration System (CRS)) அறிக்கையின்படி, பதிவுசெய்யப்பட்ட இறப்புகளில் 24.8% மட்டுமே மருத்துவமனைகளில் நிகழ்ந்துள்ளன. இதனால், இறப்பிற்கான காரணங்களைத் துல்லியமாகச் சான்றளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அதன் விளைவாக, இதய மற்றும் இரத்தநாள நோய்கள், புற்றுநோய்கள், காசநோய், காயங்கள், மகப்பேறு இறப்புகள், வெப்பம் தொடர்பான நோய்கள் மற்றும் புதிதாகத் தோன்றும் தொற்றுநோய்கள் போன்றவற்றின் உண்மையான பாதிப்புகளைக் கண்டறியும் நாட்டின் திறனை இது பலவீனப்படுத்துகிறது. எனவே, அதிக அளவில் இறப்புப் பதிவு செய்யப்படுவதை, உயர்தரமான இறப்புத் தரவுகள் கிடைப்பதாகத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது.


குடிமைப் பதிவு மற்றும் முக்கிய புள்ளிவிவர அமைப்பை (Civil Registration and Vital Statistics System (CRVS)) வலுப்படுத்துவதற்கான அடுத்த கட்டமானது, மருத்துவரீதியாகச் சான்றளிக்கும் முறையின் வரம்பை விரிவுபடுத்துதல், மருத்துவர்களின் சான்றளிப்பு மற்றும் குறியீட்டு முறையை (coding) மேம்படுத்துதல் மற்றும் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு இறப்பும் கொள்கை மற்றும் திட்டமிடலுக்கான நம்பகமான இறப்புத் தரவுகளுக்குப் முக்கியத்துவம் அளிப்பதை  உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.


இறந்து பிறக்கும் குழந்தைகளின் பதிவு


இறந்து பிறக்கும் குழந்தைகளின் பதிவை மேற்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். 2023-ஆம் ஆண்டில் 1,01,000-ஆக இருந்த பதிவுசெய்யப்பட்ட இறந்து பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டில் 81,000-ஆகக் குறைந்துள்ளதாக 2024-ஆம் ஆண்டு குடிமைப் பதிவு அமைப்பின் (Civil Registration System (CRS)) அறிக்கை தெரிவிக்கிறது. இதில் 69% பதிவுகள் நகர்ப்புறங்களில் நிகழ்ந்துள்ளன. இந்த எண்ணிக்கை குறைவு மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் வெளிக்காட்டுகின்றன. இது கிராமப்புறங்களில் இன்னும் தொடரும் குறைவான பதிவு முறையையோ அல்லது முறையற்ற தகவல் அறிக்கை முறையையோ கூடக் காட்டலாம். ஒவ்வொரு கர்ப்ப இழப்பையும் முறையாக ஆவணப்படுத்துவதற்கும், பிரசவக் காலக் கண்காணிப்பை மேம்படுத்துவதற்கும், இறந்து பிறக்கும் குழந்தைகளின் பதிவு முறையை வலுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.


சீர்திருத்தம் தேவைப்படும் இடங்கள்


2024-ஆம் ஆண்டில், 140 நாடுகளில் உள்ள 216 இந்தியத் தூதரகங்களில் 180 தூதரகங்கள் மட்டுமே வெளிநாடுகளில் உள்ள இந்தியக் குடிமக்களின் 66,413 பிறப்புகள் மற்றும் 11,384 இறப்புகள் குறித்த தகவல்களைப் பதிவு செய்துள்ளன. இருப்பினும், அனைத்துத் தூதரகங்களும் இந்தத் தகவல்களைச் சமர்ப்பிக்கவில்லை. வெளிநாடுகளில் நிகழும் பிறப்புகளைப் பின்னர் இந்தியாவில் பதிவு செய்ய முடிந்தாலும், வெளிநாடுகளில் நிகழும் இந்தியக் குடிமக்களின் இறப்புகளைத் தற்போது பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (Registration of Births and Deaths Act) சட்டத்தின்கீழ் பதிவு செய்ய முடியாது. இது சட்டக் கட்டமைப்பில் ஒரு முக்கிய இடைவெளியை உருவாக்குகிறது.


இதைவிட ஆழமான பிரச்சினை நிறுவனங்களுக்கிடையேயான பொறுப்புப் பிரிவு ஆகும். 17 மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்களில், தலைமைப் பதிவாளர் சுகாதாரத் துறையைச் சேர்ந்தவராக உள்ளார். 10 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில்,  திட்டமிடல், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறைகளிடம் உள்ளது. கேரளா இதனை உள்ளாட்சித் துறையின்கீழ் வைத்துள்ளது. புதுச்சேரி உள்ளாட்சி நிர்வாகத் துறையைப் பயன்படுத்துகிறது. மாவட்ட அளவில், மாநிலத்தைப் பொறுத்து மாவட்டப் பதிவாளர் என்பவர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதி, தலைமை மருத்துவ அதிகாரி, குடிமை அறுவை சிகிச்சை நிபுணர், மாவட்டப் புள்ளிவிவர அதிகாரி அல்லது திட்டமிடல் அதிகாரியாக இருக்கலாம். இது போன்ற பன்முகத்தன்மைக்கு வரலாற்று ரீதியான காரணங்கள் இருக்கலாம். ஆனால், எதிர்காலத்திற்கு ஒரு சீரான தன்மை தேவைப்படுகிறது. பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு என்பது நலத்திட்டங்கள், அடையாள அமைப்புகள், மக்கள்தொகைக் கணிப்புகள், பொது சுகாதாரத் திட்டமிடல் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்புடைய நிர்வாகப் பணிகள் ஆகிய அனைத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.



நாடாளுமன்றம், பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு செயல்முறையை எளிமைப்படுத்தி, ஒருங்கிணைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமைப் பதிவு அமைப்பு (CRS) என்பது தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்படும் தரவுத் தொகுப்பாகும்.  அதன் அறிக்கைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படக்கூடாது. 2024-ஆம் ஆண்டிற்கான குடிமைப் பதிவு அமைப்பு அறிக்கை, சம்பவங்கள் பதிவான காலத்திலிருந்து 18 மாதங்களுக்குப் பிறகே பொதுமக்களுக்கு காட்டப்பட்டது. நவீன டிஜிட்டல் பதிவுமுறை, ஆண்டுதோறும் அறிக்கைகளை விரைவாக வெளியிடுதல், மாநில வாரியான தரவுகளை துல்லியமாகவும் சரியாகவும் வழங்குதல், மாவட்ட அளவில் ஒரே மாதிரியான பொறுப்பு அமைப்பை உருவாக்குதல், இறப்பிற்கான காரணங்களை மருத்துவ ரீதியாகச் சான்றளிக்கும் முறையை வலுப்படுத்துதல் ஆகிய இலக்குகளை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.


மக்கள் பிறப்பதையும் இறப்பதையும் பதிவு செய்வதில் இந்தியா இப்போது சிறப்பாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. ஆனால், அடுத்த கட்டப் பணி இன்னும் கடினமானது: யார் இறந்தார்கள், எங்கு இறந்தார்கள், ஏன் இறந்தார்கள் என்பதை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் கண்டறிவதுதான் அது. இதுதான் ஒரு வெறும் சான்றிதழ் வழங்கும் முறைக்கும், உண்மையான இறப்பு கண்காணிப்பு முறைக்கும் (Mortality surveillance system) உள்ள வேறுபாடாகும்.


டாக்டர் சி. அரவிந்தா அவர்கள் ஒரு கல்வியாளர் மற்றும் பொது சுகாதார மருத்துவர் ஆவார். டாக்டர் ஓம் பிரகாஷ் பேரா அவர்கள் ஒரு மருத்துவ மருத்துவரும், உலகளாவிய சுகாதாரம் மற்றும் பொதுக் கொள்கை நிபுணரும் ஆவார்.


Original Link: How India counts its dead.

Share: