12 குறைமின்கடத்தி ஆலைகளுக்கு ஒப்புதல் : இந்தியாவின் சிப் தயாரிப்பு திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன? -சௌம்யரேந்திர பாரிக்

 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய குறைமின்கடத்தித் திட்டம் 1.0 (India Semiconductor Mission 1.0 (ISM 1.0)), சிப் (சில்லு) தயாரிப்பு, பேக்கேஜிங், வடிவமைப்பு மற்றும் திரை உற்பத்தி (Display production) உள்ளிட்ட முழுமையான குறைமின்கடத்தி உற்பத்திச் சூழலை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சியாகத் திட்டமிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டு நிதிநிலைத் திட்டத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய குறைமின்கடத்தித் திட்டம் 2.0 (ISM 2.0) திட்டத்தை அறிவித்தார். இந்த இரண்டாம் கட்டத் திட்டம், இந்தியா குறைமின்கடத்தி உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்களை உற்பத்தி செய்யவும், முழுமையான இந்திய சிப் (சில்லு) அறிவுசார் சொத்துரிமையை (Chip Intellectual Property) உருவாக்கவும் மற்றும் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


கடந்த செவ்வாய்க்கிழமை (மே 5), இந்திய அமைச்சரவை நாட்டில் இரண்டு புதிய குறைமின்கடத்தி (Semiconductor) தொழிற்சாலைகளைத் தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதில் இந்தியாவின் முதல் திரை உற்பத்திப் பிரிவாகக் (Display fabrication unit) கருதப்படும் ஒரு பிரிவும் அடங்கும்; இது இந்தியாவின் சிப் (Chip - சில்லு) தயாரிப்பு இலக்குகளுக்கு ஒரு முக்கிய உந்துதலை வழங்கும். இதன் மூலம், இந்தியா குறைமின்கடத்தித்  திட்டத்தின் (ISM) முதல் கட்டத்தின்கீழ் அரசு இப்போது மொத்தம் 12 சிப் ஆலைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. உள்ளூர் திறன்பேசி உதிரிபாகங்கள் ஒருங்கிணைப்பை வெற்றிகரமாக விரிவுபடுத்திய பிறகு, இந்தியாவில் குறைமின்கடத்தி உற்பத்தியைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டு 76,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தியா, குறைமின்கடத்தி (Semiconductor) உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் துறையில் தடம்பதிப்பது, உலகளாவிய சிப் விநியோகச் சங்கிலியின் ஒரு அங்கமாக மாறுவதற்கும், மின்னணுத் துறையில் உள்நாட்டு மதிப்புக் கூட்டலை அதிகரிப்பதற்கும் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய உத்திசார் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. ரொட்டி வாட்டும் இயந்திரங்கள் (Toasters) முதல் போர் விமானங்கள் (Fighter jets) வரை அனைத்துப் பொருட்களையும் இயக்கும் ஆற்றல் கொண்ட இந்தச் சிப்கள், சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ள புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக மிகவும் முக்கியமான ஒரு தொழில்நுட்ப வளமாக உருவெடுத்துள்ளன.


இந்திய குறைமின்கடத்தித் திட்டத்தின்கீழ் 1.0 (ISM 1.0), சுமார் 1.64 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மொத்த முதலீட்டு உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்திய குறைமின்கடத்தித் திட்டத்தை 2.0 (ISM 2.0) அறிவித்தார். இந்தத் திட்டம் குறைமின்கடத்தி உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்களின் உற்பத்தியை ஆதரிப்பதையும், முழுமையான இந்திய சிப் அறிவுசார் சொத்துரிமையை (Chip Intellectual Property) உருவாக்குவதையும், மற்றும் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்தியாவின் சிப் தயாரிப்பு ஆலைகளுக்கான  திட்டவரைவு


இந்தியாவின் குறைமின்கடத்தித் திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட 12 சிப் உற்பத்தி ஆலைகள் குஜராத், அசாம், ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு முழு அளவிலான வணிக ரீதியான குறைமின்கடத்தி உற்பத்தி ஆலை மற்றும் பல சிப் பொருத்துதல் மற்றும் சோதனை செய்யும் அமைப்புகள் ஆகியவை அடங்கும்.


டாடா எலக்ட்ரானிக்ஸ் குறைமின்கடத்தி உற்பத்தி ஆலை (Tata Electronics Semiconductor Foundry (Gujarat): டாடா நிறுவனம் தைவானின் ‘Powerchip Semiconductor Manufacturing Corporation’ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முதல் வணிகரீதியான சிப் தயாரிப்பு ஆலையை குஜராத்தின் தோலேராவில் அமைக்கிறது. சுமார் 91,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்த ஆலைக்கு ‘Powerchip Semiconductor Manufacturing Corporation’ தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறது. இங்கு 28nm (நானோமீட்டர்) முதல் 110nm வரையிலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாதம் 50,000 தட்டுகள் (Wafers) உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மைக்ரான் தொழில்நுட்பம் (குஜராத்): ஒன்றிய அரசு உதிரிபாகங்கள் பொருத்துதல் மற்றும் சோதனை ஆலைகளுக்கான ஊக்கத்தொகையை 30%-லிருந்து 50%-ஆக உயர்த்திய பிறகு, 2023-ஆம் ஆண்டில் இந்திய குறைமின்கடத்தித் திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட முதல் திட்டம் இதுவாகும். அமெரிக்காவைச் சேர்ந்த இந்நிறுவனம் உலக அளவில் நினைவக சிப்களைத் (Memory chips) தயாரிக்கும் முன்னணி நிறுவனமாகும். இதன் வருகை இந்தியாவின் குறைமின்கடத்தி உற்பத்தி இலக்கிற்கு கிடைத்த மிகப்பெரிய உந்துதலாகக் கருதப்படுகிறது. இந்த ஆலையில் கடந்த பிப்ரவரி மாதம் வணிகரீதியிலான உற்பத்தி தொடங்கியதாகக் கூறப்படுகிறது.


டாடா எலக்ட்ரானிக்ஸ் குறைமின்கடத்தி ஒருங்கிணைப்பு ஆலை (அசாம்): ‘Tata Electronics’ நிறுவனம் அசாம் மாநிலத்தின் மோரிகான் மாவட்டத்தில் உள்ள ஜாகிரோட் பகுதியில், 27,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் ஒரு குறைமின்கடத்தி பொருத்துதல் மற்றும் சோதனை ஆலையை உருவாக்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வாகனத் துறை, மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு போன்ற துறைகளுக்காக தினமும் 4.8 கோடி சிப்கள் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


HCL-Foxconn (உத்தரப் பிரதேசம்): ‘HCL’ மற்றும் ‘Foxconn’ நிறுவனங்களின் கூட்டு முயற்சியில், உத்தரப் பிரதேசத்தின் ஜேவார் (Jewar) பகுதியில் 3,700 கோடி ரூபாய் மதிப்பிலான குறைமின்கடத்தி பொருத்துதல் மற்றும் சோதனை ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலையின் செயல்பாடுகள் 2028-ஆம் ஆண்டிற்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த ஆலையில், கணினி, திறன்பேசி திரைகளில் படங்கள் தெரிவதைக் கட்டுப்படுத்தும் சிறிய சிப்கள் (Display driver chips) தயாரிக்கப்பட உள்ளன. மேலும், இங்கு மாதம் ஒன்றுக்கு 20,000 சிலிக்கான் தட்டுகள் (Wafers) உற்பத்தி செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.


கெய்ன்ஸ் செமிகான் (குஜராத்): குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலை, சுமார் 3,300 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்ட ஒரு குறைமின்கடத்தி பொருத்துதல் மற்றும் பரிசோதனை ஆலை ஆகும். இதனைப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2026-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 31-ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த ஆலை ஒரு நாளைக்கு 60 லட்சம் சிப்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இங்கு முக்கியமாக மின்சார வாகனங்கள் (Electric Vehicles) மற்றும் தொழில்முறை பயன்பாட்டிற்கான 'மின் தொகுதிகள்' (Power modules) தயாரிக்கப்படுகின்றன. இதன் வணிகரீதியான செயல்பாடுகள் மார்ச் மாதத்திலேயே தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


CG Semi (குஜராத்): முருகுப்பா குழுமத்தைச் சேர்ந்த ‘CG Power’ நிறுவனம், குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் ஒரு குறைமின்கடத்தி பொருத்துதல் மற்றும் சோதனை ஆலையை நிறுவி வருகிறது. இந்தத் திட்டம் ‘Renesas Electronics’ மற்றும் ‘Stars Microelectronics’ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, 7,600 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது.


SiCSem (ஒடிசா): ‘SiCSem Pvt Ltd’ நிறுவனம் 2,066 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தை நிறுவுகிறது. இந்த ஆலை சிலிக்கான் கார்பைடு (Silicon Carbide) சார்ந்த டையோட்கள் (Diodes) மற்றும் மாஸ்பெட்கள் (Metal-Oxide-Semiconductor Field-Effect Transistor (MOSFETs)) ஆகியவற்றை உற்பத்தி செய்யவுள்ளது.


Metal-Oxide-Semiconductor Field-Effect Transistor (MOSFET) என்பது மின்சாரத்தை மிக உயர்ந்த வேகத்தில் இயக்கவும், நிறுத்தவும் பயன்படும் ஒரு மின்னணு விசை (switch) ஆகும். இது மின்னோட்டத்தை "புலம்" (Electric Field) மூலம் கட்டுப்படுத்துகிறது.


3D Glass Solutions (ஒடிசா): இது இந்தியாவின் முதல் மேம்படுத்தப்பட்ட 3D சிப் பேக்கேஜிங் பிரிவாகும். இந்தத் திட்டம் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ‘3D Glass Solutions Inc’ நிறுவனத்தால், அதன் முழு உரிமையுடைய இந்திய துணை நிறுவனமான ‘Heterogeneous Integration Packaging Solutions Pvt Ltd’ மூலம் அமைக்கப்படுகிறது. இதற்கு ‘Intel’ உள்ளிட்ட பிற நிறுவனங்கள் நிதி உதவி வழங்குகின்றன.


Advanced System in Package Technologies (ஆந்திரப் பிரதேசம்): இந்த நிறுவனம் தென்கொரியாவின் ‘APACT Co. Ltd’ நிறுவனத்துடன் இணைந்து, ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு குறைமின்கடத்தி உற்பத்தி ஆலையை நிறுவவுள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 9.6 கோடி யூனிட்டுகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Continental Device (பஞ்சாப்): இந்த நிறுவனம் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள தனது குறைமின்கடத்தி உற்பத்தி ஆலையை விரிவுபடுத்த உள்ளது. இந்த புதிய ஆலையில் சிலிக்கான் (Silicon) மற்றும் சிலிக்கான் கார்பைடு (Silicon Carbide) ஆகிய இரண்டையும் பயன்படுத்தி, MOSFETs, IGBTs, Schottky Bypass Diodes மற்றும் transistors (மின்மாற்றிகள்) போன்ற உயர்-சக்தி குறைமின்கடத்தி சாதனங்கள் உற்பத்தி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


MOSFET (Metal-Oxide-Semiconductor Field-Effect Transistor): மின்னணு சமிக்ஞைகளை மாற்றவும் பெருக்கவும் பயன்படும் ஒரு வகை மின்மாற்றி.


IGBT (Insulated-Gate Bipolar Transistor): அதிக செயல்திறன் மற்றும் வேகமான விசைத் திறன் கொண்ட ஒரு அரைக்கடத்தி சாதனம்.


Schottky Bypass Diodes: சோலார் பேனல்கள் மற்றும் மின்சுற்றுகளில் மின்சாரம் தவறான திசையில் பாய்வதைத் தடுக்கப் பயன்படும் ஒரு வகை மின்னணு கருவி.


Silicon Carbide (SiC): இது சாதாரண சிலிக்கானைவிட அதிக வெப்பம் மற்றும் மின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய ஒரு மேம்பட்ட பொருள்.


Crystal Matrix Ltd. (குஜராத்): செவ்வாய்க்கிழமை அன்று, காலியம் நைட்ரைடு (Gallium Nitride (GaN)) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி Mini/Micro-LED திரைத் தொகுப்புகளைத் தயாரிப்பதற்கான 3,068 கோடி ரூபாய் மதிப்பிலான குறைமின்கடத்தி புனையமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்தவுடன், இது இந்தியாவின் திரை உதிரிபாகங்களை இணைக்கும் வசதி கொண்ட முதல் ஆலையாக மாறும் என்கின்றனர். இதுவரை, இந்தத் தொழில்முறை முக்கியமாக ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளில் மட்டுமே குவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Suchi Semicon (குஜராத்): இந்த நிறுவனம் குஜராத் மாநிலம் சூரத் நகரில், 868 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு ஒருங்கிணைந்த குறைமின்கடத்தி தொகுப்பு மற்றும் சோதனை ஆலையை அமைக்க உள்ளது. இந்த மையத்தில் தனிப்பட்ட குறைமின்கடத்தி கூறுகள் (Discrete Semiconductors) உற்பத்தி செய்யப்பட உள்ளன.


அடுத்த கட்ட நடவடிக்கை: இந்திய குறைமின்கடத்தித் திட்டம் 2.0


இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஏற்கனவே வெளியிட்ட செய்தியின்படி, இந்திய அரசாங்கம் தனது அடுத்தகட்டத் திட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக சுமார் 11 பில்லியன் டாலர் (ஏறத்தாழ 92,000 கோடி ரூபாய்) மதிப்பிலான புதிய திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படலாம். இருப்பினும், மாற்றியமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மாற வாய்ப்புள்ளது. குறைமின்கடத்தித் திட்டத்தின் முதற்கட்டமான இந்திய குறைமின்கடத்தித் திட்டத்தின் (ISM 1.0) முக்கியமாக சிப் தயாரிக்கும் உள்கட்டமைப்பை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்தியது. ஆனால், அதன் அடுத்தகட்டமான இந்திய குறைமின்கடத்தித் திட்டம் 2.0 (India Semiconductor Mission 2.0), சிப் தயாரிப்பிற்குத் தேவையான வாயுக்கள், ரசாயனங்கள் மற்றும் இயந்திர தளவாடங்கள், அதனுடன் தொடர்புடைய துணைத் தொழில்களுக்கு அதிக ஆதரவை வழங்க வாய்ப்புள்ளது.


இந்திய குறைமின்கடத்தித் திட்டத்தின்கீழ் 2.0, சிப் பொருத்துதல் மற்றும் சோதனை செய்யும் ஆலைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50% மூலதனச் செலவு மானியத்தை அரசாங்கம் குறைக்க வாய்ப்புள்ளது. அதே சமயம், புதிய திட்டமானது இத்தகைய ஆலைகளுக்குத் தேவையான இயந்திர தளவாடங்கள் மற்றும் வாயுக்கள், ரசாயனங்கள், மூலப்பொருட்கள் போன்ற பிற சுற்றுச்சூழல் தேவைகளுக்கும் ஆதரவை வழங்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.




இந்தியாவின் குறைமின்கடத்தித் திட்டமானது, சிப் வடிவமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக்கூடும் என்றும் நிறுவனங்கள் சந்தையிலிருந்து திரட்டும் மூலதனத்தின் அளவைப் பொறுத்து, அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை அரசாங்கம் இந்த முறையில் நிர்ணயிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


Original article :  12 semiconductor plants approved: Where India’s chip manufacturing mission stands, what’s next. -Soumyarendra Barik

Share:

நீதிமன்றத் தலையீடு, அத்தியாவசிய மத நடைமுறைகள் கோட்பாட்டை எவ்வாறு வடிவமைக்கிறது? - திலீப் பி சந்திரன்

 சபரிமலை மறுஆய்வு வழக்கின் பின்னணியில், சிக்கலான அரசியலமைப்பு கேள்விகள் விவாதிக்கப்படுகின்றன. அத்தியாவசிய மத நடைமுறைகள் கோட்பாடு (Essential Religious Practices (ERP)) என்ன சொல்கிறது? இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25(1)-ன்கீழ் 'அறநெறி'  என்பதன் வரம்பு என்ன? 


சபரிமலை வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் இன்று (மே 6) பன்னிரண்டாவது நாளாகத் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், பல முக்கியமான கேள்விகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதில் அத்தியாவசிய மத நடைமுறைகள் கோட்பாடு  (ERP), மத விவகாரங்களைத் தீர்மானிப்பதில் நீதிமன்றத்தின் பங்கு மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25(1)-ன்கீழ் 'நெறிமுறை' என்பதன் அர்த்தம் போன்ற முக்கிய அம்சங்கள் ஆலோசிக்கப்படுகின்றன.


சபரிமலை கோயில் உட்பட வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாகுபாடு குறித்தும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திரத்தின் எல்லை குறித்தும் இந்த வழக்கு விவரிக்கிறது.


செவ்வாய்க்கிழமை (மே 5) நடைபெற்ற விசாரணையின் போது, சில குறிப்பிட்ட சாதியினரை ஒதுக்கி வைப்பதற்கு மத நடைமுறைகளை ஒரு காரணமாகக் கூற முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. "இது மதம் அல்ல, மதரீதியான நடைமுறையும் கிடையாது" என்று இந்த வழக்கை விசாரிக்கும் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வின் உறுப்பினரான நீதியரசர் பி.வி. நாகரத்னா கூறினார். இதனைத் தொடர்ந்து, அத்தியாவசிய மத நடைமுறைகள் கோட்பாடு (ERP) இந்த நடைமுறை குறித்து குறிப்பிடுவது என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.


அத்தியாவசிய மத நடைமுறைகள்


ஷிரூர் மடம் வழக்கில் (Commissioner, Hindu Religious Endowments, Madras vs Sri Lakshmindra Thirtha Swamiar of Shirur Mutt), முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட அத்தியாவசிய மத நடைமுறைகள் கோட்பாடு (ERP), இந்திய அரசியலமைப்பின் 25 மற்றும் 26-வது பிரிவுகளின்கீழ் எந்தெந்த மதச் செயல்பாடுகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கப் பயன்படும் ஒரு நீதித்துறை அளவுகோலாகக் கருதப்படுகிறது.


பொதுவாக, அத்தியாவசிய மத நடைமுறைகள் (ERP) என்பது ஒரு மதம் எதன் அடிப்படையில் அமைந்துள்ளதோ, அந்த முக்கிய நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் குறிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25(2)(a)-இல் "மத நடைமுறை" என்ற சொல் இடம் பெற்றிருந்தாலும், "அத்தியாவசியமான" (Essential) என்ற சொல் குறிப்பிடப்படவில்லை. இந்திய அரசியலமைப்பு 'அத்தியாவசியம்' என்ற சொல்லைப் பயன்படுத்தவும் இல்லை, அதற்கான விளக்கத்தையும் அளிக்கவில்லை.


மதராஸ் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் vs ஷிரூர் மடத்தின் ஸ்ரீ லக்ஷ்மிந்திர தீர்த்த சுவாமியார் (Commissioner, Hindu Religious Endowments, Madras v Sri Lakshmindra Thirtha Swamiar of Shirur Mutt) வழக்கின் தீர்ப்பில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 26-பி-ன்கீழ், ஒரு மதப்பிரிவு அல்லது அமைப்பு தனது மதத்தின் 'அத்தியாவசியமான' பகுதி எது என்பதைத் தீர்மானிக்க "முழுமையான தன்னாட்சி" அதிகாரத்தைக் கொண்டுள்ளது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.


இருப்பினும், ஸ்ரீ வெங்கடரமண தேவரு vs மைசூர் மாநிலம் (Sri Venkataramana Devaru vs State of Mysore) வழக்கில், நீதிமன்றம் மத அமைப்புகளுக்கான "முழுமையான தன்னாட்சி" என்ற கருத்திலிருந்து விலகிச் சென்றது. அத்துடன், ஒரு மதத்தின் "அத்தியாவசியமான" நடைமுறை எது என்பதைத் தீர்மானிப்பதில் நீதிமன்றத்திற்கும் பங்கு உண்டு என்பதைத் தெளிபடுத்தியுள்ளது.


மதத்தின் அத்தியாவசிய நடைமுறைகள் மற்றும் அதன் அடிப்படைத் தன்மை


அஜ்மீர் தர்கா குழு vs சையத் ஹுசைன் அலி (Durgah Committee, Ajmer v Syed Hussain Ali) வழக்கின் தீர்ப்பில், இந்திய உச்சநீதிமன்றம் உண்மையான மத நடைமுறைகளையும், மூடநம்பிக்கைகளையும் பிரித்தறிய முயற்சித்தது. ஒரு மதத்தின் அடிப்படை சாராம்சம் அல்லாத, காலப்போக்கில் சேர்ந்த மூடநம்பிக்கைகள் அல்லது புறம்பான சேர்க்கைகள் ஆகிய நடைமுறைகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாப்பு வழங்கப்படாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


சர்தார் சையத்னா தாஹர் சைஃபுதீன் சாஹேப் vs பம்பாய் மாநில அரசு (Sardar Syedna Taher Saiffuddin Saheb vs State of Bombay) வழக்கின் தீர்ப்பில், ஒரு மதத்தின் அத்தியாவசிய மத நடைமுறைகள் அந்த மதத்தின் புனித நூல்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு-25 என்பது ஒரு மதத்தையே முழுமையாக அழிக்கும் வகையில் "சீர்திருத்தம்" செய்ய சட்டமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


காவல்துறை ஆணையர் vs ஆச்சார்யா ஜெகதீஸ்வரானந்த அவதூதா (Commissioner of Police vs Acharya Jagadisharananda Avadhuta) வழக்கிலும் இதேபோல, ஒரு மதத்தின் அத்தியாவசிய மத நடைமுறைகளை (ERP) தீர்மானிக்க உச்சநீதிமன்றம் ஒரு சோதனையை அறிமுகப்படுத்தியது. அதாவது, ஒரு குறிப்பிட்ட நடைமுறை அல்லது சடங்கு இல்லாத பட்சத்தில், அந்த மதத்தின் அடிப்படைத் தன்மையே மாறிவிடுமா என்று கேள்வி எழுப்புவதன் மூலம் அந்த நடைமுறையின் முக்கியத்துவத்தை இந்தச் சோதனையின் மூலம் நீதிமன்றம் தீர்மானிக்கிறது.


முக்கியத்துவம் வாய்ந்த ஷயாரா பானு (Shayara Bano) வழக்கின் தீர்ப்பில், இந்த அத்தியாவசிய நடைமுறை சோதனையைப் பயன்படுத்தி, 'முத்தலாக்' (Triple Talaq) என்பது இஸ்லாமிய மதத்தின் ஒரு அத்தியாவசியமான நடைமுறை அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏனெனில், இந்த நடைமுறை இல்லாவிட்டாலும் இஸ்லாம் மதத்தின் அடிப்படைத் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.


நீதிமன்றம் ஒரு மதக்கோட்பாட்டு நடுவராகச் செயல்பட முடியுமா?


நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அத்தியாவசிய மத நடைமுறைகள்  கோட்பாடானது, ஒரு மதத்திற்கு எவை மிகவும் அவசியமான மற்றும் பிரிக்க முடியாத சடங்குகள், நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் என்று நிரூபிக்கப்படுகிறதோ, அவை மட்டுமே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 25 மற்றும் 26-ன்கீழ் பாதுகாப்பு பெறுகின்றன என்பதை விளக்குகிறது. அதேவேளையில், மதச்சார்பற்ற நடவடிக்கைகள், சமூக சீர்திருத்தம் மற்றும் சமூகநலன் சார்ந்த விஷயங்களில் அரசு தலையிடுவதற்கு அரசியலமைப்பின் பிரிவு 25(2) அனுமதி அளிக்கிறது.


இருப்பினும், ஒரு மதத்தின் அத்தியாவசியமான நடைமுறைகள் மற்றும் அத்தியாவசியமற்ற நடைமுறைகள், மதச்சார்பற்ற மற்றும் மதரீதியான செயல்பாடுகள், மற்றும் உண்மையான நம்பிக்கை மற்றும் மூடநம்பிக்கை ஆகியவற்றிற்கு இடையிலான எல்லையைத் தீர்மானிப்பதில் நீதித்துறையின் பங்கு விவாதத்திற்குரியதாகவே உள்ளது. மேலும், நீதிமன்றங்கள் மதக் கோட்பாடுகளைத் தீர்மானிக்கும் நீதிபதிகளாகச் செயல்பட முடியுமா என்ற கேள்வி சபரிமலை மறுஆய்வு வழக்கிலும் ஆராயப்பட்டு வருகிறது.


இந்த விசாரணையின்போது, ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிடுகையில், ஒரு மத நடைமுறையை வெறும் 'மூடநம்பிக்கை' என்று ஒரு மதச்சார்பற்ற நீதிமன்றத்தால் தீர்மானிக்க முடியாது; ஏனெனில் அத்தகைய ஆன்மீக விஷயங்களை ஆராய்வதற்கான கல்விசார் புலமை நீதிமன்றத்திற்கு இல்லை, என்று குறிப்பிட்டார். மேலும், நாகாலாந்து மாநில மக்களுக்கு மதரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயம், எனக்கு முற்றிலும் மூடநம்பிக்கையாகத் தோன்றலாம் என்றும் கூறினார்.


எனவே, மத விவகாரங்களில் நீதிமன்றங்கள் எந்த அளவிற்குத் தலையிட முடியும் என்பதுதான் இங்கு முதன்மையான கேள்வியாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25-(2)-ன் வாசகங்களின் அடிப்படையில், ஒரு நடைமுறை மதச்சார்ந்ததா அல்லது அது ஒரு மூடநம்பிக்கையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு உள்ளது என்று வாதிடப்படுகிறது.


மேலும், ஒரு நடைமுறை மதச்சார்புடையது என்று அங்கீகரிக்கப்பட்டால், பொது அமைதி, அறநெறி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே அரசு அதில் தலையிட முடியும். இதன்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25-1, பாதுகாக்கப்பட்ட மத நடைமுறைகளுக்கும்கூட சில குறிப்பிட்ட வரம்புகளை விதிக்கிறது.


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25-பி) -ன்கீழ் 'ஒழுக்கநெறியின் எல்லை'


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25(1) என்பது, ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது மனசாட்சிப்படி செயல்படவும், தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றவும், அதன்படி நடக்கவும் மற்றும் அதனைப் பரப்பவும் உரிமை உண்டு என்று கூறுகிறது. இருப்பினும், இந்த உரிமையானது பொது அமைதி, அறநெறி மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றுக்கு உட்பட்டதாகும். மதரீதியான செயல்பாடுகளையும், மதம் சாராத இதர செயல்பாடுகளையும் தெளிவுபடுத்திப் பிரிப்பதற்காகவே அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் இந்தத் தடையை இணைத்துள்ளனர்.


அரசியலமைப்புச் சபையின் வரைவு சட்டப்பிரிவு-19 (இதுவே பின்னர் சட்டப்பிரிவு-25 ஆக மாறியது) குறித்த அரசியல் நிர்ணய சபை விவாதங்களின் போது இது தெளிவாகத் தெரிந்தது. டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி, 1948-ஆம் ஆண்டு, கே. சந்தானம் கூறியதாவது, முன்பெல்லாம், இந்த நாட்டில் மதம் என்ற பெயரில் செய்யப்படும் எதற்கும், கட்டுப்பாடற்ற முறையில் கடைப்பிடிக்கவும் மற்றும் பரப்பவும் உரிமை இருப்பதாக நம்பப்பட்டது. ஆனால், புதிய அரசியலமைப்பில், இந்த உரிமையானது பொது அமைதி, அறநெறி மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றிற்கு உட்பட்டு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


இந்தக் கட்டுப்பாடுகளின் உண்மையான அர்த்தமானது இந்திய மக்களின் சமூக மற்றும் ஒழுக்கநெறி சார்ந்த மனசாட்சியின் வளர்ச்சிக்கு ஏற்ப காலப்போக்கில் விரிவடையும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்தார்.


பொது அமைதி மற்றும் சுகாதாரத்திற்கு மாறாக, ஒழுக்கநெறி என்ற கருத்துரு இயங்குத்தன்மை கொண்டது, எனவே பெரும்பாலும் அகநிலை விளக்கங்களுக்கு ஆட்படக்கூடியது. பிரிவு 25(1)-இல் உள்ள ஒழுக்கநெறி என்ற சொல், அரசியலமைப்பு ஒழுக்கநெறிக்கு ஒத்ததாகப் பொருத்தமாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர்.


இருப்பினும், பொது அமைதி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றைப் போலல்லாமல், அறநெறி என்பது ஒரு நெகிழ்வான கருத்தாகும்.  இது நபருக்கு நபர் மாறுபடக்கூடியது அல்லது வெவ்வேறு நபர்களால் வெவ்வேறு விதமாக விளக்கப்படக்கூடியது. எனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25-(1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள 'அறநெறி' என்ற சொல்லை, 'அரசியலமைப்பு அறநெறி' என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.


மத சுதந்திரத்தின் எல்லைகள்


எனவே, மத விவகாரங்களில் நீதிமன்றம் ஒரு முடிவெடுக்கும் அதிகார அமைப்பாக செயல்படுகிறதோ என்ற விமர்சனங்கள் இருந்தபோதிலும், அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பைக்கோரும் மத நடைமுறைகள் உண்மையானவைதானா என்பதைத் தீர்மானிப்பதில் நீதித்துறை தலையீடு முக்கியப் பங்கு வகித்துள்ளது.


இருப்பினும், அறநெறி, அத்தியாவசிய மத நடைமுறைகள் (ERP) மற்றும் மதப்பிரிவு போன்ற கருத்துக்கள் ஒவ்வொருவரின் பார்வைக்கும் மாறுபடக்கூடியவை மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்டவை ஆகும். எனவே, இவை பெரும்பாலும் ஒவ்வொரு வழக்கின் சூழலுக்கும் ஏற்ப புரிந்துகொள்ளப்பட வேண்டும். இந்திய மக்களின் சமூக மற்றும் தார்மீக விழுமியங்கள் காலப்போக்கில் மாறும்போது, இந்தக் கருத்துகளின் அர்த்தமும் விளக்கமும் அதற்கேற்ப பரிணாம வளர்ச்சியடையும் என்று அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் எதிர்பார்த்தனர்.


இந்த அணுகுமுறை, மாறிவரும் சமூக விழுமியங்களுக்கு ஏற்ப அரசியலமைப்புச் சட்ட விளக்கங்கள் அமைந்திருப்பதை உறுதிசெய்ய உதவுகிறது. அதேநேரத்தில், மத சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பின் பிற முக்கிய கடப்பாடுகளுக்கு இடையே ஒரு சரியான சமநிலையை ஏற்படுத்தவும் முயல்கிறது.


(திலீப் பி. சந்திரன், கேரளா மாநிலம் சாலக்குடியில் உள்ள பனம்பிள்ளி நினைவு அரசு கல்லூரியின் அரசியல் அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.)


Original article :  How judicial intervention shapes the doctrine of Essential Religious Practices. -Dileep P Chandran

Share:

பருத்தி உற்பத்தித்திறனுக்கான திட்டம் என்பது என்ன? -குஷ்பூ குமாரி

 ஒன்றிய அரசு தனது '5F' தொலைநோக்குத் திட்டத்துடன் இணைந்த, பருத்தி உற்பத்தித்திறனுக்கான ஐந்தாண்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத்திட்டம் எத்தகைய அம்சங்களைக் கொண்டுள்ளது? பருத்தி எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது? 'கஸ்தூரி பருத்தி பாரத்' (Kasturi Cotton Bharat) என்பது என்ன?


தற்போதைய  செய்தி :


ஒன்றிய அரசு, ஐந்து ஆண்டுகளுக்கான (2026-27 முதல் 2030-31 வரை) பருத்தி உற்பத்தித்திறன் திட்டத்திற்காக ரூ. 5,659.22 கோடியை செவ்வாய்க்கிழமை  ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம் 2025-26-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. உழவர்களுக்கு "சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை" வழங்குவதையும், இந்திய ஜவுளித் தொழிலுக்கு "தரமான பருத்தியின் சீரான விநியோகத்தை உறுதி செய்வதையும்" இந்தத் திட்டம்  நோக்கமாகக் கொண்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. ஜவுளித் துறைக்கான அரசின் 5F தொலைநோக்குப் பார்வைக்கு (பண்ணையிலிருந்து இழை, தொழிற்சாலையிலிருந்து ஆடை, ஆடையிலிருந்து வெளிநாடு) ஏற்ப, இந்தத் திட்டம் உழவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும், இந்தியாவின் பாரம்பரிய ஜவுளித் துறைக்குப் புத்துயிர் அளிப்பதற்காகத் தரமான பருத்தியின் சீரான விநியோகத்தை உறுதி செய்யவும் உதவும்.


2. இந்தத் திட்டம் பின்வருவனவற்றில் கவனம் செலுத்துகிறது: அவை,


(i) அதிக மகசூல் தரும், பருவநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடிய மற்றும் பூச்சி எதிர்ப்புத் திறன் கொண்ட விதைகளை உருவாக்குதல்,


(ii) அதிக அடர்த்தி நடவு முறை (High Density Planting System (HDPS)), நெருக்கமான இடைவெளி (Closer Spacing (CS)), ஒருங்கிணைந்த பருத்தி மேலாண்மை போன்ற பருத்தி உற்பத்தி தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் மற்றும் மிக நீண்ட இழை (Extra Long Staple (ELS)) பருத்தியை ஊக்குவித்தல்,


(iii) சிறந்த பதப்படுத்தும் நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது உட்பட, பருத்தியை பிரித்தல் மற்றும் பதப்படுத்தும் தொழிற்சாலைகளின் நவீனமயமாக்கலை ஊக்குவித்தல்,


(iv) நம்பகமான தர மதிப்பீடு மற்றும் உலகளாவிய ஒப்பீட்டை உறுதி செய்வதற்கான நவீன, தரப்படுத்தப்பட்ட மற்றும் அங்கீகாரம் பெற்ற பருத்தி சோதனை உள்கட்டமைப்பு.


(v) கஸ்தூரி காட்டன் பாரத் (Kasturi Cotton Bharat initiative) முன்முயற்சியின் கீழ் பருத்தியை உலகளவில் நம்பகமான பொருளாக நிலைநிறுத்துவதற்காக, அதற்கு வர்த்தக முத்திரை இடுதல் மற்றும் அதிக மதிப்பை உருவாக்குதல் போன்றவையாகும்.

கஸ்தூரி பருத்தி பாரத்


இந்தியப் பருத்தியின் மதிப்பை மேம்படுத்துவதற்காக, கஸ்தூரி பருத்தி பாரத் திட்டமானது, அதன் மூலத்தைக் கண்டறியும் தன்மை, சான்றளிப்பு மற்றும் வர்த்தகக்குறியாக்கம் ஆகிய மூன்று தூண்களில் கவனம் செலுத்துகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகள் இரண்டிலும் ‘கஸ்தூரி பருத்தி பாரத்திட்டத்தை’ ஒரு உயர்தரமான, போட்டி விலையிலான பொருளாக நிலைநிறுத்துவதன் மூலம், இந்தியப் பருத்தியின் உலகளாவிய கண்ணோட்டத்தையும் மதிப்பையும் மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். கஸ்தூரி பருத்தி பாரத் என்பது, பதப்படுத்தப்பட்ட பிறகு கிடைக்கும் பஞ்சுப் பருத்திக் கட்டுகளுக்கான ஒரு சான்றளிப்பு மற்றும் வர்த்தகக்குறியாக்க முன்னெடுப்பாகும்,


(vi) பருத்தி நிலையங்களை டிஜிட்டல் மயமாக்குதல், வெளிப்படையான விலை நிர்ணயம், நேரடி சந்தை அணுகல் ஆகியவற்றைச் சாத்தியமாக்குதல் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க மின்-தளங்களை இணைத்தல்,


(vii) வளத்திறனை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கும், தொழில்துறைக்குக் கூடுதல் மதிப்பு நீரோட்டங்களை உருவாக்குவதற்கும் பருத்திக் கழிவு மறுசுழற்சியில் கவனம் செலுத்துவதன் மூலம் வட்டப் பொருளாதாரத்தை (circular economy) ஊக்குவித்தல்,


(viii) பருத்திக்குத் உதவியாக ஆளி, ராமி, சிசல், மில்க்வீட், மூங்கில் மற்றும் வாழை போன்ற இயற்கை நார்களைச் சேர்ப்பதன் மூலம் இந்தியாவின் நார் வளத்தைப் பன்முகப்படுத்துவதும், மாறிவரும் உலகளாவிய தேவைப் போக்குகளுக்கு ஏற்ப இந்தியாவின் ஜவுளித் துறையை சீரமைப்பதும் ஆகும்.


3. 2031-ஆம் ஆண்டிற்குள், ஒரு ஹெக்டேருக்கு 440 கிலோவாக உள்ள பருத்தி இழை உற்பத்தித்திறனை 755 கிலோவாக உயர்த்துவதன் மூலம், 498 லட்சம் பருத்தி பேல்களை (ஒவ்வொன்றும் 170 கிலோ பருத்தி இழை கொண்டது) உற்பத்தி செய்வதை இந்தத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்தது.




4. வேளாண்மை அமைச்சகத்தின்படி, 2025-26-ஆம் ஆண்டில் இந்தியாவின் பருத்தி உற்பத்தி 290.91 லட்சம் பேல்களாக இருந்தது. இதில் மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் நாட்டின் முதல் ஐந்து உற்பத்தியாளர்களாக  விளங்கின.


பருத்தி உற்பத்தி மற்றும் பருத்தித்துறை எதிர்கொள்ளும் சவால்கள்


1. பகுதியாளவு வறட்சித் தாவரமான பருத்தி, வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலச் சூழல்களில் பயிரிடப்படுகிறது. வயல் நிலைமைகளின் கீழ், சிறந்த முளைப்புத்திறனுக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ் ஆகும்.


பருத்தி உற்பத்தித்திறனுக்கான இயக்கம் — இந்தியாவின் வெண்மை தங்கம் பற்றிய விளக்கம் இங்கே:


வேளாண்மை — அரசுத் திட்டம்


பருத்தி விளைச்சலுக்கு  ஏற்ற  சூழல் முதல் ₹5,659 கோடி மதிப்பிலான அரசுத் திட்டம் வரை இந்தியாவில் பருத்தி குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.


2. தாவரங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற வெப்பநிலை 21 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை ஆகும்.  இது 43 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையைத் தாங்கக்கூடியது என்றாலும், 21 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்பநிலை இதன் வளர்ச்சியைப் பாதிக்கிறது.


3. பருத்தி காய்க்கும்  காலத்தில், பகல் நேரத்தில் மிதமான வெப்பதோடும், இரவு நேரத்தில் குளிர்ச்சியாகவும், அன்றாட வெப்பநிலையில் பெரிய மாறுபாடுகள்  இருப்பதும் நல்ல காய்கள் (bolls) மற்றும் இழை (fibre) வளர்ச்சிக்கு ஏற்றதாக அமையும்.


4. பருத்தி சாகுபடிக்கு, நீர் நன்கு வடியக்கூடிய பல்வேறு வகையான மண் வகைகள் ஏற்றவையாகும். இது மண்ணின் உவர்ப்புத்தன்மையை ஓரளவிற்குத் தாங்கக்கூடியது. ஆனால், நீர் தேங்குவதற்கு மிகவும் உணர்திறன் கொண்டது. வட மாநிலங்களில் சிறந்த வசதி கொண்ட வண்டல் மண், மத்திய மாநிலங்களில் கருப்பு களிமண், மற்றும் தென் மாநிலங்களில் கருப்பு மண் மற்றும் கலப்பு கருப்பு-சிவப்பு மண் ஆகியவை  உற்பத்தியிக்கு ஏற்றவையாகும்.


5. ஜவுளி அமைச்சகத்தின்படி, இந்தியாவில் பருத்தி அதிகம் விளையும் 9 முக்கிய மாநிலங்கள் உள்ளன. இவை 3 மாறுபட்ட வேளாண்-சூழலியல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:


(i) வடக்கு மண்டலம் – பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களகும்.


(ii) மத்திய மண்டலம் - குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களகும்.


(iii) தெற்கு மண்டலம் – தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களகும்.


6. ஜவுளி அமைச்சகத்தின்படி, ஜி. ஆர்போரியம் மற்றும் ஜி. ஹெர்பேசியம் (ஆசியப் பருத்தி), ஜி. பார்படென்சி (எகிப்தியப் பருத்தி) மற்றும் ஜி. ஹிர்சுட்டம் (அமெரிக்க மேட்டுநிலப் பருத்தி) ஆகிய நான்கு வகையான பருத்தி இனங்களையும் பயிரிடும் ஒரே நாடு இந்தியா மட்டுமே.


7. ஒரு காலத்தில் “வெள்ளை தங்கம்” (white gold) என்று போற்றப்பட்ட, இந்தியாவின் ஜவுளிப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான பருத்தி, பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. பயிரிடப்படும் பரப்பளவு குறைதல், சீரற்ற மழைப்பொழிவு மற்றும் கடுமையான வெப்பநிலை போன்ற காரணங்களால் பருத்தி உற்பத்தி குறைந்து வருகிறது.


8. பருத்தி, பூச்சிகள் மற்றும் நோய்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடியது. இளஞ்சிவப்பு காய்ப்புழு மற்றும் வெள்ளை ஈ போன்ற முக்கியப் பூச்சிகளின் தொடர்ச்சியான தாக்குதலும், பருத்தி இலைச்சுருள் வைரஸ், காய் அழுகல், புகையிலைக் கீற்று வைரஸ் மற்றும் புதிதாகத் தோன்றும் பிற இரண்டாம் நிலை பூச்சிகளின் பாதிப்பும் உழவர்களுக்கு அதிக  சிரமத்தை ஏற்படுத்துகின்றன.


9. பருத்தி விலையில் ஏற்படும் அதிக ஏற்ற இறக்கம், போதுமான சந்தை உள்கட்டமைப்பு இல்லாத நிலை மற்றும் பருத்தி ஏற்றுமதி ஆகியவை உழவர்கள் எதிர்கொள்ளும் மற்ற சவால்களாகும். மேலும், பருத்தி சாகுபடிப் பரப்பில் ஏறக்குறைய 65 சதவீதம், மத்திய மற்றும் தென்னிந்திய மாநிலங்களில், மழையை நம்பியே உள்ளது.


10. பருத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பிடி பருத்தி உற்பத்தியை அனுமதிப்பது முதல் குறைந்தபட்ச ஆதரவு விலையை (Minimum Support Price (MSP)) வழங்குவது வரை, அரசாங்கம் பருத்தி உற்பத்தியாளர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ், விவசாயிகளிடமிருந்து பருத்தியை எந்த விதமான தடையுமின்றி கொள்முதல் செய்வதை எளிதாக்கும் வகையில், 'Kapas Kisan App'  செயலி ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.


பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை


1. பருத்தி உழவர்களால் வழங்கப்படும் பருத்தியை கொள்முதல் செய்வதற்காக, விதைப்பருத்தியின் (kapas) விலை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு  கீழே குறையும் பட்சத்தில், குறைந்தபட்ச ஆதரவு விலை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள, இந்தியப் பருத்திக் கழகம் (Cotton Corporation of India Limited (CCI)) இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளது.


2. சந்தை விலை ஒரு குறிப்பிட்ட விலைக்குக் கீழே குறையும் பட்சத்தில், அரசாங்கம் உழவர்களிடமிருந்து அந்தப் பயிரைக் கொள்முதல் செய்ய வேண்டிய விலையே குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) ஆகும். குறைந்தபட்ச ஆதரவு விலைகள் சந்தை விலைகளுக்கு ஒரு அடிப்படையை வழங்குவதோடு, உழவர்கள் தங்களின் சாகுபடிச் செலவுகளையும் மற்றும் சிறிதளவு லாபத்தையும் மீட்டெடுக்கும் வகையில், ஒரு குறிப்பிட்ட "குறைந்தபட்ச" ஊதியத்தைப் பெறுவதையும் உறுதி செய்கின்றன.


3. வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் (Commission for Agricultural Costs and Prices (CACP)) பரிந்துரைகளின் பேரில், ஒன்றிய அரசால் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் (MSPs) அறிவிக்கப்படுகின்றன. வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையம் என்பது வேளாண்மை மற்றும் உழவர்கள் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு அலுவலகமாகும். இது ஒரு ஆலோசனைக் குழுவாகும். இதன் பரிந்துரைகள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துவதில்லை.


4. வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையமனது, 22 கட்டாயப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையையும் (MSP), கரும்புக்கு நியாயமான மற்றும் இலாபகரமான விலையையும் (fair and remunerative price (FRP)) பரிந்துரைக்கிறது.




குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் வரும் பயிர்கள்: 


14 காரீஃப் பயிர்கள்: நெல், ஜோவர், பஜ்ரா, சோளம், ராகி, துர் (அர்ஹர்), மூங், உரட், நிலக்கடலை, சோயாபீன், சூரியகாந்தி, எள், நைஜர்சீட் மற்றும் பருத்தியாகும்.


 6 ராபி பயிர்கள்: கோதுமை, பார்லி, கொண்டைக்கடலை, மசூர் (பருப்பு), ரேப்சீடு மற்றும் கடுகு, மற்றும் குங்குமப்பூவாகும்.


2 வணிகப் பயிர்கள்: சணல் மற்றும் கொப்பரையாகும்.


Original article :  What is Mission for Cotton Productivity? -Khushboo Kumari

Share:

கர்நாடகாவின் புதிய கிக் தொழிலாளர் குறைதீர் அமைப்பு (new gig worker grievance system) என்பது என்ன? - ஷில்பா எலிசபெத்

 தற்போதைய நிகழ்வு :


சர்வதேசத் தொழிலாளர் தினமான (International Workers’ Day) மே 1, 2026 அன்று, கர்நாடக அரசு மாநிலத்தில் உள்ள இணையத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட 'கிக்' தொழிலாளர்களுக்காக (platform-based gig workers), ஒரு பிரத்யேகக் குறைதீர்க்கும் அமைப்பைத் தொடங்குவதாக அறிவித்தது. இந்தியாவில் கிக் தொழிலாளர்களுக்காக அரசு ஆதரவுடன் செயல்படும் முதலாவது குறைதீர்க்கும் அமைப்பு இதுவே என்று அரசு கூறப்படுவதன் மூலம், அரசுத் திட்டங்கள் தொடர்பான குடிமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான மாநிலத்தின் மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளமான ஒருங்கிணைந்த பொதுக் குறைதீர் அமைப்பு (Integrated Public Grievance Redressal System (IPGRS)) மூலம் தொழிலாளர்கள் அதிகாரப்பூர்வமாகப் புகார்களைப் பதிவு செய்ய அனுமதிக்கிறது.


இவ்வமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?


இணையத்தளச் சார்ந்த கிக் தொழிலாளர்கள் இனி ஒருங்கிணைந்த பொதுக் குறைதீர் அமைப்பு (IPGRS) வாயிலாகத் தங்கள் குறைகளை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யலாம். இதில் ஊதியம், பணிச்சூழல் மற்றும் இணையத்தளச் சார்ந்த சேவைகளில் எழும் சர்ச்சைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான புகார்களை இதில் பதிவு செய்ய இயலும்.


கர்நாடக இணையத்தளம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன்) சட்டத்தின் (Karnataka Platform-Based Gig Workers (Social Security and Welfare) Act) கீழ், ஒவ்வொரு ஒருங்கிணைப்புத் தளமும் ஒரு 'உள் முரண்பாடு குறைதீர்க்கும் குழுவை' (Internal Dispute Resolution Committee (IDRC)) அமைக்க வேண்டும். ஒருங்கிணைந்த பொதுக் குறைதீர்ப்பு அமைப்பில் (IPGRS) பதிவு செய்யப்படும் குறைகள், அந்தந்தத் தளத்தின் உள்-முரண்பாடு குறைதீர்க்கும் குழுவுக்குத் (IDRC) தானாகவே அனுப்பப்படும். இந்தத் தளம் புகாரைப் பெற்றவுடன், உள்-முரண்பாடு தீர்க்கும் குழு (IDRC) 15 வேலை நாட்களுக்குள் தீர்வு காண முயற்சிக்கும் என்றும், இறுதி உத்தரவைப் பிறப்பிக்க 45 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி முடிவால் பாதிக்கப்பட்ட எந்தவொரு தரப்பினரும், 30 நாட்களுக்குள் இவ்விஷயத்தை கர்நாடக கிக் தொழிலாளர்கள் நல வாரியத்திடம் (Karnataka Gig Workers Welfare Board) மேல்முறையீடு செய்யலாம்.


ஒரு கிக் தொழிலாளர் எத்தகைய குறைகளை எழுப்பலாம்?


கிக் தொழிலாளர்களின் கணக்குகள் இடைநீக்கம் செய்யப்படுதல், முடக்கப்படுதல் அல்லது செயலிழக்கச் செய்யப்படுதல், தளத்திலிருந்து நீக்கப்படுதல், ஊதியம் குறைக்கப்படுதல் அல்லது நிறுத்திவைக்கப்படுதல், நியாயமற்ற அபராதங்கள், பாகுபாடு காட்டுதல், பாதுகாப்பற்ற பணிச்சூழல்கள் அல்லது சட்டத்தின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட உரிமைகள் மீறப்படுதல் ஆகியவை தொடர்பான புகார்களை எழுப்பலாம்.


இச்சட்டம் எத்தகைய இடைவெளியை நிரப்புகிறது?


பல தளங்களில் உள்-முரண்பாடு குறைதீர்க்கும் வழிமுறைகள் இருந்தாலும், இந்த அமைப்புகள் ஒரு முறையான முரண்பாடான தீர்வு கட்டமைப்பிற்கு வெளியேதான் செயல்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, தற்காலிகப் பணியாளர்கள் தங்கள் குறைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்று அடிக்கடி தெரிவித்துள்ளனர். இந்த தளங்கள் பெரும்பாலும் தொழிலாளர்களின் துயரங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதாகப் பலர் புகார் கூறியுள்ளனர்.


கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை, இச்செயல்முறைக்குக் கூடுதல் கட்டமைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதையும், முறைசார் பொருளாதாரத்திற்கு வெளியே உள்ள இந்தத் தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமான தீர்வு கிடைப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கிக் தொழிலாளர்கள் இப்போது இந்த இணையதளம் மூலம் அதிகாரப்பூர்வமாகத் தங்கள் குறைகளைப் பதிவு செய்யலாம். பின்னர், அவை அந்தந்தத் தளத்தின் உள்-முரண்பாடு குறைதீர்க்கும் குழுவுக்கு (IDRC) அனுப்பப்படும். அரசு ஒரு மைய ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு, இச்செயல்முறை முழுவதையும் கண்காணிக்கும்.


இதற்காகத் தளங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளனவா?


கர்நாடக அரசு அதிகாரிகளின் கூற்றுப்படி, 'நம்ம யாத்ரி' (Namma Yatri) மற்றும் 'யூலு' (Yulu) போன்ற தளங்கள் தங்களின் உள்-முரண்பாடு குறைதீர்க்கும் குழு (IDRC) தொடர்புடைய விவரங்களை அரசு இணையதளத்துடன் ஒருங்கிணைத்துள்ளன. அதேநேரத்தில், அமேசான் (Amazon) உள்ளிட்ட மற்ற தளங்கள் இந்தச் செயல்முறையை மேற்கொள்ளும் பணியில் இன்னும் ஈடுபட்டுள்ளன.


இந்த நடைமுறை இப்போது ஏன் அமல்படுத்தப்படுகிறது?


கர்நாடக இயங்குதளம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன்) சட்டம்-2025 (Karnataka Platform-Based Gig Workers (Social Security and Welfare) Act), அதிகாரப்பூர்வமாகச் செப்டம்பர் 2025-ல் அறிவிக்கப்பட்டது.


மார்ச் 2026-ல், கிக் தொழிலாளர்களுக்கான இச்சட்டத்தை இயற்றுவதற்கான விதிகளை அறிவித்த முதல் இந்திய மாநிலமாக கர்நாடகா ஆனது. மாநிலத்தில் உள்ள கிக் தொழிலாளர்களுக்கான குறைதீர்க்கும் வழிமுறை, இந்தச் சட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக அமைகிறது. இது, கிக் தொழிலாளர்களின் தன்னிச்சையான பணிநீக்கங்கள் அல்லது கணக்கு முடக்கங்களைத் தடுப்பதோடு, அவர்களின் கவலைகளையும் நிவர்த்தி செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்தச் சட்டம் தொடர்பான மற்ற முக்கிய முன்னேற்றங்கள் என்னென்ன?


கிக் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக, 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம், கர்நாடக இணையத்தளம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல மேம்பாட்டு வாரியம் (Karnataka Platform-Based Gig Workers Welfare Development Board) அமைக்கப்பட்டது.



நிறுவனங்கள் மற்றும் அவற்றின் கிக் தொழிலாளர்கள் ஆகிய இருவரின் பெயர், வயது, தொலைபேசி எண், ஆதார் எண், யுஏஎன் (UAN) மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட விவரங்களை வாரியத்திடம் சமர்ப்பிக்குமாறு அரசு தளங்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தரவுகள் வாரியத்தின் இணையதளத்தில் இணைக்கப்படும்.


அரசின் கூற்றுப்படி, இதுவரை மாநிலத்தில் உள்ள சுமார் 12 தளங்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், மாநிலத்தில் உள்ள சுமார் 12 லட்சம் செயலில் உள்ள கிக் தொழிலாளர்களின் விவரங்களைப் பகிர்ந்துள்ளனர்.


இருப்பினும், பல பணியாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்களுடன் தொடர்புடையவர்கள் என்பதால், இந்த எண்ணிக்கையில் ஒன்றுடன் ஒன்று பொருந்தும் தன்மைகள் இருக்கலாம். ஒவ்வொரு பணியாளருக்கும் அரசாங்கம் தனித்துவமான அடையாள எண்களை வழங்கியவுடன், இந்தப் பிரச்சினை சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இணையத்தளம் சார்ந்த கிக் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு நலன்களை வழங்குவதற்காக, ஒருங்கிணைப்பாளர்கள் தளங்களில் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனையிலிருந்தும் 1% வசூலிக்கப்படும் என்று பிப்ரவரி மாதம் அரசாங்கம் அறிவித்தது.


நல உதவிக் கட்டணத்திற்கு உச்சவரம்பு ஏதேனும் உள்ளதா?


ஆம். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் விதிக்கப்படும் உச்சவரம்பு, வெவ்வேறு சேவைகளுக்கு மாறுபடுகிறது.


ஸ்விக்கி (Swiggy), ஸொமேட்டோ (Zomato), பிளிங்கிட் (Blinkit), ஜெப்டோ (Zepto) மற்றும் பிக்பாஸ்கெட் (BigBasket) போன்ற உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் விநியோக சேவைகளுக்கு, உச்சவரம்பு ₹0.5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராபிடோ (Rapido), நம்ம யாத்ரி (Namma Yatri) மற்றும் ஊபர் (Uber) போன்ற சவாரி முன்பதிவு சேவைகளுக்கு, இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு முறையே ₹0.5, ₹0.75 மற்றும் ₹1 உச்சவரம்பாக உள்ளது. போர்ட்டர் (Porter) போன்ற தளவாட சேவைகள், இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், இலகுரக வர்த்தக வாகனங்கள் மற்றும் கனரக வர்த்தக வாகனங்களுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு முறையே ₹0.5, ₹0.75, ₹1 மற்றும் ₹1.5 செலுத்த வேண்டும். மின்-சந்தை சேவைகளுக்கு (e-marketplace services), இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வர்த்தக வாகனங்களுக்கு முறையே ₹0.5, ₹0.75 மற்றும் ₹1 உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அர்பன் கம்பெனி (Urban Company) போன்ற தொழில்முறைச் சேவை வழங்குநர்களுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ₹1.5 என்ற மிக உயர்ந்த உச்சவரம்பு உள்ளது.


ஏப்ரல் மாதம் தொடங்கும் காலாண்டிலிருந்து இக்கட்டணம் அமலுக்கு வந்திருந்தாலும், அது அடுத்த காலாண்டின் தொடக்கமான ஜூலை 5-ம் தேதியிலிருந்து வசூலிக்கப்படும்.


இந்த நலத்திட்டக் கட்டணம் எதற்காகப் பயன்படுத்தப்படும்?


மாநிலத்தில் உள்ள இணையதளம் சார்ந்த கிக் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக, இந்த நலத்திட்டக் கட்டணம் 'கர்நாடக இணையத்தள-சார்ந்த கிக் தொழிலாளர்கள் நிதியத்திற்கு' (Karnataka Platform-Based Gig Workers’ Fund) செல்லும்.


அரசு அதிகாரிகளின் கூற்றுப்படி, கிக் தொழிலாளர்கள் பணிபுரியும் தளத்தைப் பொறுத்து அவர்களுக்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மேலும், அவை அடுத்த வாரியக் கூட்டத்தில் விவாதத்திற்காக முன்வைக்கப்படும். தற்போது பரிசீலனையில் உள்ள திட்டங்களில், கிக் பணியின் தன்மையைப் பொறுத்து ஆயுள் காப்பீடு, விபத்து உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, மருத்துவ உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை மற்றும் முதியோர் பாதுகாப்பு ஆகியவை அடங்கும்.


Original article :  What is Karnataka’s new gig worker grievance system? - Shilpa Elizabeth

Share:

இந்தியாவின் சுகாதார அமைப்பிலுள்ள, கட்டமைப்பு பற்றாக்குறைகளை சரிசெய்தல். - டாக்டர் கே.ஆர். ஆண்டனி

 மருத்துவக் கல்விக்கும் (medical education), பொதுச் சேவைக்கும் (public service) இடையே அதிக ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது.


மார்ச் 11, 2026 அன்று, சுகாதாரத் துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல், 43 புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், 2025-26 கல்வியாண்டிற்காக 11,682 எம்பிபிஎஸ் இடங்களும், 8,967 முதுகலைப் பட்ட மருத்துவ இடங்களும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


ஆனால், பொது சுகாதார அமைப்பில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறை என்ற இந்தியாவின் பிரச்சனைக்கு இது தீர்வாக அமையுமா? புதிதாக நியமிக்கப்படும் 8,967 முதுகலை மருத்துவர்களில், எத்தனை பேர் உண்மையில் 'வளர்ச்சிக்கு உகந்த மாவட்டங்கள்' (Aspirational Districts) அல்லது போதிய மருத்துவச் சேவை இல்லாத பின்தங்கிய பகுதிகளில் பணியாற்ற முன்வருவார்கள்? புதிதாக அனுமதிக்கப்பட்ட 43 மருத்துவக் கல்லூரிகளில், 8 மட்டுமே மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும், 8 தொழிலாளர் மாநில காப்பீட்டு (Employees’ State Insurance (ESI)) துறையின் கீழ் இயங்குகின்றன. மீதமுள்ள 27 கல்லூரிகள் தனியார் துறையைச் சார்ந்தவை. தனியார் மருத்துவக் கல்லூரிகள், அதிக அளவிலான நன்கொடைக் கட்டணம் (Capitation fees) வசூலித்த பிறகு, தங்கள் பயிற்சி மாணவர்களை அரசுப் பணியில் அமர்த்த வேண்டிய கட்டாயமில்லை. அவ்வாறு செய்யுமாறு அவர்களை வற்புறுத்தவும் முடியாது. அதே வேளையில், பொது சுகாதார நிறுவனங்களில் உள்ள சிறப்பு மருத்துவர் பணியிடங்களில் நிலவும் காலியிடங்களை நிரப்புவதன் மூலம், அந்நிறுவனங்கள் முழுமையான பயனைப் பெறுவதை உறுதி செய்வதற்கான, தெளிவாக வரையறுக்கப்பட்ட கொள்கையோ அல்லது முறையான விதிமுறைகளோ தற்போது இல்லை.


மூலதனச் செலவினம் (capital expenditure) மற்றும் உள்கட்டமைப்பில் மட்டும் முதலீடு செய்வதால், மலைப்பாங்கான, பழங்குடியினர் மற்றும் பிற தொலைதூர, போதிய மருத்துவ வசதி இல்லாத பகுதிகளில் சுகாதார சேவைகளில் விரும்பிய மேம்பாட்டைத் தானாகவே கொண்டுவந்துவிடாது. மொத்தமுள்ள 18 அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்களில் (All India Institutes of Medical Sciences(AIIMS)), 11 நிறுவனங்களில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணியிடங்களில் சுமார் 40% காலியிடங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளன. போதுமான ஆசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் இல்லாமல், மருத்துவச் சிறப்பு நிபுணர்களுக்குப் பயனுள்ள வகையில் பயிற்சி அளிப்பது கடினமாகிறது.


கடுமையான காலிப்பணியிட விகிதம்


'இந்தியாவின் சுகாதார இயக்கவியல் 2022-23' (The Health Dynamics of India) அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள 757 மாவட்டங்களில் பரவியுள்ள 5,491 கிராமப்புற சமூக சுகாதார மையங்களில் (Community Health Centres (CHC)) காலிப்பணியிட விகிதம் 79.9% ஆக உள்ளது. இங்கு தேவைப்படும் 21,964 சிறப்பு மருத்துவர்களுக்கு எதிராக, 4,413 பேர் மட்டுமே உள்ளனர். 731 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 72,627 முதுகலை மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்ட போதிலும், 2014-ம் ஆண்டு முதல் சமூக சுகாதார மையங்களில் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை சுமார் 17,500 ஆகவே நீடித்து வருகிறது.



புதிதாகப் பட்டம் பெற்ற சிறப்பு மருத்துவர்கள், பல இடங்களில் முறையான உபகரணங்கள் பற்றாக்குறை, முறையான பணியாளர் குடியிருப்புகள், அவர்களின் பிள்ளைகளுக்கான நல்ல பள்ளிகள் மற்றும் போதுமான சக மருத்துவர்களின் ஆதரவு உள்ளிட்ட போதிய வசதிகள் இல்லாத காரணத்தால், தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் பணியாற்ற பெரும்பாலும் தயக்கம் காட்டுகின்றனர். சமூக சுகாதார மையங்களில் (Community Health Centres (CHC)) சிறந்த மருத்துவர்கள் கிடைத்தால், கிராமப்புற மற்றும் பழங்குடியினப் பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகள் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளுக்கோ அல்லது மருத்துவக் கல்லூரிகளுக்கோ நீண்டதூரம் பயணிக்க வேண்டிய தேவை இருக்காது.


ஒரு சமூக சுகாதார மையம் (CHC) சுமார் 1.6 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான மக்கள்தொகைக்கு முதல் பரிந்துரையாகச் செயல்படுகிறது. மேலும், அதில் பொது மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர், மகப்பேறு மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் மயக்க மருந்து நிபுணர் ஆகிய ஐந்து சிறப்பு மருத்துவர்களுடன் 30 படுக்கைகள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பல ஆண்டுகளாகத் தொடரும் சிறப்பு மருத்துவர்களின் தொடர்ச்சியான பற்றாக்குறைப் பிரச்சனையால், பெரும்பாலான சமூக சுகாதார மையங்கள் முடங்கிக் கிடக்கின்றன.


இருப்பினும், இந்த மையங்கள் பலவும் வெறும் ஆரம்ப சுகாதார மையங்களைப் போலவே செயல்பட்டாலும், மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் நிதியைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில், மாநில அரசுகள் தொடர்ந்து கூடுதல் சமூக சுகாதார மையங்களை (CHCs) தொடர்ந்து கட்டி வருகின்றன. நாடு முழுவதும் உள்ள 785 மாவட்டங்களில் மொத்தம் 5,491 சமூக சுகாதார மையங்கள் உள்ளன. இதன் பொருள், ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக ஏழு சுகாதார மையங்களானவை, நடைமுறைக்கு உகந்த ஒரு செயல்முறை அல்ல. தற்போதைய நிலையில், 4,413 சிறப்பு மருத்துவர்கள் மட்டுமே உள்ள நிலையில், 882 சமூக சுகாதார மையங்களை மட்டுமே முழுமையாகச் செயல்படுத்த முடியும். இதனால், சிறப்பு சிகிச்சைக்கான மாவட்ட மருத்துவமனையுடன் சேர்த்து, ஒரு மாவட்டத்திற்குச் செயல்படும் ஒரே ஒரு சமூக சுகாதார மையம் மட்டுமே எஞ்சுகிறது.




குறைபாடுள்ள நிதிநிலைத் திட்ட ஒதுக்கீட்டு அணுகுமுறை


மத்திய அரசின் சுகாதாரத் துறைக்கான நிதிநிலை ஒதுக்கீடு (Budget), பெரும்பாலும் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்துகிறது. ஆனால் மருந்துகள், நோய் கண்டறிதல், ஆம்புலன்ஸ் சேவைகள், அவசர சிகிச்சை அல்லது தற்காலிகப் பணியாளர்களின் சம்பளம் ஆகியவற்றுக்கு அதற்கேற்ற நிதி ஒதுக்கீடுகள் இல்லை. மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்றால், வெறும் கட்டிடக் கட்டுமானத்தில் மூலதனத்தை முதலீடு செய்துவிட்டு, மீதமுள்ளவற்றை மாநில நிதிநிலை அறிக்கைகள் நிர்வகிக்க விட்டுவிடுவதை விடுத்து, செயல்பாட்டு விளைவுகளுக்கு அது முன்னுரிமை அளிக்க வேண்டும்.


அப்படியென்றால், நம்மிடம் ஏற்கனவே உள்ள வளங்களைக் கொண்டு நாம் எவ்வாறு சிறப்பாகச் செயல்பட முடியும்? உண்மையான செயல்பாட்டுத் தேவைக்காகச் செய்யப்படுவதைவிட, பெரும்பாலும் மக்கள் செல்வாக்கு அரசியல் ஆதாயத்திற்கே பயன்படும் புதிய சமூக சுகாதார மையங்கள் (CHCs) குறித்த அதீதமான அறிவிப்புகளுக்கு நாம் கட்டுப்பாடு இடவேண்டும்.


சத்தீஸ்கரில் ஊரக மருத்துவத் திட்டத்தின்கீழ் (Rural Medical Corps Scheme) மேற்கொள்ளப்பட்டது போல, வரையறுக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமூக சுகாதார நிலையங்களையும் இயல்பான, கடினமான மற்றும் மிகவும் கடினமான பகுதிகள் என வகைப்படுத்த வேண்டும். நீண்டகாலத்திற்குத் தொடர்ந்து அதிக காலிப்பணியிடங்களைக் கொண்ட பகுதிகள் மிகவும் கடினமான பகுதிகளாகும். ஊக்கத்தொகைகளில் கூடுதல் ஈடுசெய்யும் நிதிப்படிகள், முதுகலைப் பட்டப் படிப்புகளுக்கான இடங்களில் முன்னுரிமை, பணியாளர் குடியிருப்புகள் மற்றும் குழந்தைகளுக்கான தரமான பள்ளி வசதிகள் உள்ளிட்ட சிறப்பு ஊக்கத்தொகைகளை அறிமுகப்படுத்த வேண்டும்.


மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள்


இனிமேல், அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து முதுகலை இட ஒதுக்கீடுகளும், சமூக சுகாதார மையங்கள் (CHCs) அல்லது மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களுடன் இணைக்கப்பட வேண்டும். ஒரு சமூக சுகாதார மையத்தில் உள்ள சிறப்பு மருத்துவ நிபுணர் காலிப்பணியிடத்தை நிரப்ப விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு, அதற்கேற்ற சிறப்புப் பிரிவில் ஓர் இடம் ஒதுக்கப்பட வேண்டும். மேலும், அவர்கள் தங்கள் பயிற்சியை நிறைவு செய்தவுடன் அவர்கள் உடனடியாக அங்கு பணியமர்த்தப்படுவார்கள் என்ற உறுதியும் அளிக்கப்பட வேண்டும்.


இதற்கு மாறாக, மருத்துவராக விரும்பும் நபர்கள் முதலில் நியமிக்கப்பட்ட அரசு மருத்துவமனையில் சேவையாற்றுவதற்கான உறுதிமொழியை வழங்க வேண்டும். தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் கூடுதல் ஊக்கத்தொகைகளுடன், சிரமமான பகுதிகளில் உள்ள சமூக சுகாதார மையங்களில் (CHCs) 10 ஆண்டு கால சேவைப் பிணைப்பிற்கு உறுதியளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம். சிறப்பு மருத்துவர்களை நியமிப்பதில் நாம் "அனைவரும் அல்லது யாருமில்லை" (all or none) என்ற கொள்கையைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். அதாவது, ஐந்து சிறப்பு மருத்துவர்களும் ஒரு சமூக சுகாதார மையத்தில் நியமிக்கப்பட வேண்டும் அல்லது யாருமே நியமிக்கப்படக்கூடாது. இதன் மூலம், அவர்களை பகுதி பகுதியாகப் பணியமர்த்துவதன் மூலமோ அல்லது வெவ்வேறு மையங்களில் மிகவும் பரவலாக நிரப்புவதன் மூலம் சேவைகளை நீர்த்துப்போவதைத் தவிர்க்க வேண்டும்.


ஒவ்வொரு மாவட்டத்திற்கு இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் இருக்கக்கூடிய அத்தகைய சமூக சுகாதார மையங்களில், பணியாளர் குடியிருப்புகளின் அவசரக் கட்டுமானமும், அறுவை சிகிச்சை அரங்குகள், மகப்பேறு அறைகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் 24 மணிநேர அவசர சிகிச்சைப் பிரிவுகளைப் புதுப்பிப்பதும் மேற்கொள்ளப்பட வேண்டும். தொலைதூர மற்றும் மருத்துவ வசதி தேவைப்படும் பகுதிகளில் பணியாற்ற முன்வரும் செவிலியர்களுக்கும், இதேபோன்ற பணி வாய்ப்புகளையும் முதுகலை பயிற்சிகளையும் வழங்கலாம்.


துணை மாவட்ட அல்லது நகர அளவில் போதுமான எண்ணிக்கையிலான சிறப்பு மருத்துவர்கள் ஒரு குழுவாக நியமிக்கப்படும்போது, ​​அரசு மருத்துவமனைகளின் நற்பெயர் பொதுமக்களிடையே மேம்படுகிறது. பணிச்சுமை சிறப்பாகப் பகிர்ந்தளிக்கப்படுவதோடு, உகந்த முறையில் பகிர்ந்தளிக்கப்படுவது பணியில் உள்ள மருத்துவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான தகவல் தொடர்பும் மேம்படுகிறது. இதன் விளைவாக, நோயாளிகளின் திருப்தியை அதிகரிப்பதோடு, பொதுமக்களுக்கும் மருத்துவர்களுக்கும் மற்ற சுகாதாரப் பணியாளர்களுக்கும் இடையிலான மோதல்களையும் குறைக்கிறது.


ஏழை எளிய மக்களுக்கும், சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள மக்களுக்குப் பராமரிப்பின் ஒரே ஆதாரமாக விளங்கும் பொது சுகாதார அமைப்பில் உள்ள காலிப்பணியிடங்களை உரியமுறையில் நிரப்பாமல், 731 மருத்துவக் கல்லூரிகளிலிருந்து கிட்டத்தட்ட 70,000 சிறப்பு மருத்துவர்கள் பட்டம் பெறுவதை நம்மால் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.


கே. ஆர். ஆண்டனி, பொது சுகாதார அமைப்பு மற்றும் கொள்கை உருவாக்க ஆலோசகர் ஆவார்.


Original article : Fixing structural deficits in India’s health system. -Dr. K.R.Antony

Share:

தேர்தலில் தோல்வியடைந்த பிறகு முதலமைச்சர் பதவி விலக மறுத்தால் என்ன நடக்கும்? -ஆராத்ரிகா பௌமிக்

 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிடம் திரிணாமூல் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்யப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். ஒரு ஆளுநரால் முதலமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய முடியுமா? சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிந்தவுடன் என்ன நடக்கும்? தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்குத் தொடர எது போன்ற சட்ட விதிகள் உள்ளன?


மேற்கு வங்கத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாஜக-விடம் தோல்வியடைந்த  அடுத்தநாள், அந்தக்கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி  முதலமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என்று அறிவித்தார். இந்தத்தேர்தல் தீர்ப்பானது மக்களின் முடிவைவிட, ஒரு "சதித் திட்டத்தின்" விளைவே என்று அவர் குற்றம் சாட்டினார். செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி , இந்தத்தேர்தல்கள் நியாயமான முறையில் நடத்தப்படவில்லை என்று கூறினார். மேலும், வாக்குச்சாவடிகளை "வன்முறையாகக் கைப்பற்றவும்" தேர்தல் முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றவும் பாஜக மத்தியப் படைகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார். இந்தத்தேர்தல் முடிவுகளைத் தங்கள் கட்சி சட்டரீதியாக எதிர்த்துப் போராடும் என்றும், தங்கள் அரசியல் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர்   தெரிவித்தார்.


ஒரு ஆளுநரால் முதலமைச்சரைப் பதவியிலிருந்து நீக்க முடியுமா?


அரசியலமைப்பின் 164(1) பிரிவின்படி, முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்படுவார். மற்ற அமைச்சர்கள் முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள். மேலும், அமைச்சர்கள் ஆளுநரின் விருப்பப்படி பதவியில் இருப்பார்கள். எனவே, இந்த விதியை படிக்கும்போது, ​​ஒரு முதலமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், அத்தகைய ஒரு விதி, ஆளுநரின் தன்னிச்சையான விருப்புரிமைப் பயன்பாட்டிற்கு வழிவகுக்கக்கூடும் என்று அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்கள் எச்சரித்திருந்தனர்.


அரசியலமைப்புச் சபை உறுப்பினர் முகமது இஸ்மாயில் கான், அப்போதைய அரசியலமைப்பு வரைவின் 144-வது பிரிவில் ஒரு திருத்தத்தை முன்மொழிந்தார். அதில், “விருப்பத்தின் பேரில்” (during the pleasure) என்ற பயன்படுத்துவதற்குப் பதிலாக “மாநில சட்டமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரை” என்ற சொற்களைப் பயன்படுத்த அவர் பரிந்துரைத்தார். அரசியலமைப்புத் திட்டமானது ஆளுநரைக் குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாகக் கருதியதால், அமைச்சரவையானது ஆளுநரின் விருப்பத்தின் பேரில் அல்லாமல், சட்டமன்றத்தின் நம்பிக்கையை பெற்றிருக்கும் வரை மட்டுமே பதவியில் இருக்கும் என்பதை அரசியலமைப்பில் வெளிப்படையாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.


இந்தக் கருத்திற்கு பதிலளிக்கும் விதமாக, அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், அமைச்சரவையானது பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரை மட்டுமே பதவியில் நீடிக்கும் என்று உறுதிப்படுத்தினார். நாடாளுமன்ற அரசாங்க முறையை வகுக்கும் எந்தவொரு அரசியலமைப்பிலும், அந்தப் பாணியிலோ அல்லது அந்த வார்த்தைகளிலோ இது வெளிப்படையாகக் கூறப்படாததே, நாங்கள் அதை இங்கே வெளிப்படையாகக் குறிப்பிடாததற்குக் முக்கிய காரணம் என்று அம்பேத்கர் விளக்கினார்.

பல ஆண்டுகளாக, ஆளுநரின் அதிகாரங்கள் முதன்மையாக அமைச்சரவையின் "உதவி மற்றும் ஆலோசனையிலிருந்து" (aid and advice) உருவாகின்றன என்று உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளது. 2022-ஆம் ஆண்டு ஏ.ஜி. பேரறிவாளன் vs காவல் கண்காணிப்பாளர் (A.G. Perarivalan v. State Through Superintendent of Police)  வழக்கில், "ஆளுநர்" என்பவர் "மாநில அரசைக் குறிக்கும் ஒரு சுருக்கமான சொல் மட்டுமே" என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது. ஆளுநரை “முறையான தலைவராகவும், நிர்வாக அதிகாரத்தின் ஒரே நபகராகவும்” அங்கீகரித்த அதே வேளையில், அந்தப்பதவியானது பொதுவாக மாநில அமைச்சரவையின் உதவியும் ஆலோசனையும் மூலம் கட்டுப்படுத்தப்படும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


நம்பிக்கை வாக்கெடுப்பு  எப்போது தேவைப்படுகிறது?


சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடையும் தருவாயில், ஒரு ஆளுநர் முதலமைச்சரைப் பதவி விலகுமாறு கேட்டு, அந்தப்பதவிக்கு மற்றொரு நபரை அழைத்தால், அங்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இது, நிர்வாகம் சட்டமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதா என்பதைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு அரசியலமைப்பு வழிமுறையாகும். இந்த நடைமுறையின் கீழ், முதலமைச்சர் அவையில் பெரும்பான்மை ஆதரவை, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோரின் ஆதரவை அவையில் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறும்பட்சத்தில், முதலமைச்சர் பதவி விலக வேண்டிய சூழல் ஏற்படும்.


எந்த ஒரு கட்சியாலோ அல்லது கூட்டணியாலோ ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்க முடியாவிட்டால், இறுதி முயற்சியாக சட்டப்பிரிவின் 356-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம்.


சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிந்த பிறகு என்ன நடக்கும்?


அரசியலமைப்பின் 172-வது பிரிவு, ஒரு மாநில சட்டமன்றத்தின் கால அளவைக் பற்றி விளக்குகிறது. அதன்படி, “முன்னதாகக் கலைக்கப்படாவிட்டால்”, ஒரு சட்டமன்றம் “அதன் முதல் கூட்டத்திற்கு நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே தொடரும். அதற்கு மேல் நீடிக்காது.  மேலும், அந்த ஐந்து ஆண்டு காலம் முடிவடைவது சட்டமன்றம் கலைக்கப்பட்டதாகக் கருதப்படும்” என்று குறிப்பிடுகிறது.


தேர்தல் ஆணையத்தின்படி, தற்போதைய மேற்கு வங்க சட்டமன்றம் 2021 மே 8 அன்று தனது பதவிக்காலத்தைத் தொடங்கி, மே 7 அன்று முடிவடைய உள்ளது. அதைத் தொடர்ந்து, ஆளுநர் ஒரு புதிய சட்டமன்றத்தை அமைப்பதற்கான நடைமுறையைத் தொடங்க வேண்டும். பின்னர், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்று, ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்படும்.


அடுத்து என்ன நடக்கும்?


முன்னாள் மக்களவை பொதுச்செயலாளர் பி.டி.டி. ஆச்சாரி கருத்துப்படி, மாநில சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தொடர்ந்து முறைப்படி பதவி விலகுவது என்பது ஒரு மரபு சார்ந்த விஷயமாகும். பானர்ஜி பதவி விலகாவிட்டாலும், அதனால் எந்தவொரு குறிப்பிடத்தக்க மாற்றமும் ஏற்படப்போவதில்லை. தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 7-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அது கலைக்கப்படுவதால், அவர் தானாகவே முதலமைச்சர் பதவியில் இருந்து விலக நேரிடும் என்று அவர் கூறினார்.


இருப்பினும், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குள் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 100, ஒரு தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளரின் வெற்றியை சவாலுக்கு உட்படுத்தி, அதைச் செல்லாததாக அறிவிக்கக் கோருவதற்கான காரணங்களை  பட்டியலிடுகிறது. இந்தக்காரணங்களில், வேட்பாளரால் மேற்கொள்ளப்படும் ஊழல் நடைமுறைகள் மற்றும் தேர்தல் அதிகாரியால் சட்டரீதியான விதிமுறைகள் பின்பற்றப்படாத நிலை உள்ளிட்ட பிற காரணங்களும் அடங்கும்.


மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத்  திருத்தத்தின் (Special Intensive Revision (SIR)) போது, ​​வாக்காளர்கள் தன்னிச்சையாக நீக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உட்பட, தேர்தல் செயல்முறையின் நேர்மைக்கே சவால் விடப்படும் பட்சத்தில், ஒரு நீதி  பேராணை மனு தாக்கல் செய்யப்படலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். ஒரு தேர்தலில் வாக்காளர்களைப் அதிக அளவில்  நீக்குவது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். எனவே, அதை ஒரு நீதி பேராணை மனு மூலம் சவால் செய்யலாம் என்று அவர் கூறினார்.


Original article :  What happens if a Chief Minister refuses to relinquish office after electoral defeat? -Aaratrika Bhaumik

Share: