இந்தியாவின் பிரம்மாண்டமான அணுசக்தி கனவுகளுக்குப் பின்னால் உள்ள 'சிறிய மட்டு அணு உலைகள்' (Small Modular Reactors) யாவை? - ரோஷ்னி யாதவ்

சிறிய மட்டு அணு உலைகள் இந்தியாவின் எரிசக்தி கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாக உருவெடுத்து வருகின்றன. ஆனால், வழக்கமான அணு உலைகளிலிருந்து சிறிய மட்டு அணு உலைகளை வேறுபடுத்துவது எது? சாந்தி சட்டம் ஏன் ஒரு திருப்புமுனை (game-changer) என்று அழைக்கப்படுகிறது? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே உள்ளன.


தற்போதைய  செய்தி :


பாரம்பரிய அணு உலைகளுக்குப் பாதுகாப்பான மாற்றாகச் சிறிய மட்டு அணு உலைகள் (SMRs) முன்னிறுத்தப்பட்டு வரும் சூழலிலும், பெரிய அணு உலைகளுக்குப் பொருந்தும் அதே கடுமையான பாதுகாப்பு மற்றும் உரிமம் பெறுதல் விதிமுறைகளையே இதற்கும் அந்த நாட்டின் முதன்மை அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்று 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. அணுசக்தித் துறையில் தனியார்துறை பங்கேற்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட 'இந்தியாவை மாற்றியமைப்பதற்கான அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாடு' (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India (SHANTI)) சட்டம், 2025-ன் கீழ் இதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த நிலைப்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


இந்தச் சூழலில், சிறிய மட்டு அணு உலைகள் மற்றும் சாந்தி சட்டம் பற்றி விரிவாக  தெரிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. இந்தியாவின் அணுசக்தித் திட்டம் இதுவரை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'அழுத்தப்பட்ட கனநீர் உலைகளை' (pressurised heavy water reactors (PHWRs)) அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இவை கனநீரை குளிர்விப்பானாகவும் நியூட்ரான் வேகத்தைக் குறைப்பையாகவும் (moderator), இயற்கை யுரேனியத்தை எரிபொருளாகவும் பயன்படுத்துகின்றன. நாட்டின் அணுசக்தி விரிவாக்கத் திட்டங்களில் அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் தொடர்ந்து முக்கியப் பங்காற்றினாலும், தொழில்துறையில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதில் (decarbonisation) உதவக்கூடிய ஒரு நம்பிக்கைக்குரிய தொழில்நுட்பமாக  சிறிய மட்டு அணு உலைகள் பார்க்கப்படுகின்றன.


2. இந்திய அரசு சிறிய மட்டு அணு உலைகள் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. இவற்றை அவ்வப்போது 'பாரத் சிறிய மட்டு அணு உலைகள்' என்றும் அழைக்கிறது. இந்தத்துறையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ₹20,000 கோடி மதிப்பிலான ஒரு சிறப்புத் திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது.

3. தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்கான தனது உறுதிப்பாட்டை நிறைவேற்றும் ஒரு வழியாகவும், தொழில்நுட்பம் சார்ந்த வெளியுறவுக் கொள்கை முன்மொழிவாக சிறு அணு உலைகளை இணைத்து அவற்றை முன்வைப்பதன் மூலமாகவும், இந்தியா இந்த சிறு அணு உலைத் துறையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்க இந்தியா முயற்சித்து வருகிறது.


4. சிறிய மட்டு அணு உலைகள் என்பவை அடிப்படையில், ஓர் அலகுக்கு 30MWe முதல் 300 மெகாவாட் மின்சாரம் வரையிலான மின் உற்பத்தித் திறன் கொண்ட மேம்பட்ட சிறிய அணு உலைகள் ஆகும். தற்போது இந்தியாவிலும் மற்ற இடங்களிலும் நிறுவப்பட்டுள்ள வழக்கமான அணு உலைகள், 500 மெகாவாட் அல்லது அதற்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளன.


5. சிறிய மட்டு அணு உலைகள் எளிமையான மற்றும் தொகுதி அளவு வடிவமைப்பைக் கொண்டுள்ளன. இதனால், அவற்றின் கூறுகளை நேரடியாக தளத்தில் கட்டுவதற்குப் பதிலாக தொழிற்சாலைகளில் தயாரித்து பின்னர் ஒன்றுசேர்க்க முடியும். இதன் மூலம் கட்டுமானச் செலவு குறைவதுடன், தேவைக்கேற்ப நெகிழ்வான முறையில் நிறுவவும் முடிவதால், கடந்த சில ஆண்டுகளில் இவை மிகவும்  முக்கியமான  மாற்றாகக் கருதப்படுகின்றன.


6. எஃகு, அலுமினியம் மற்றும் சிமெண்ட் போன்ற அதிக ஆற்றல் தேவைப்படும் துறைகளில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு, சிறிய மட்டு அணு  உலைகள் ஒரு நம்பிக்கைக்குரிய தேர்வாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், அவை 24 மணி நேரமும் அதிக அளவில், குறைந்த கார்பன் கொண்ட மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் பெற்றுள்ளன.


7. பல்வேறு வகையான சிறிய மட்டு அணு உலைகள் உருவாக்கப்பட்டு வந்தாலும், தற்போது நான்கு முக்கிய வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அணுப் பிளவு வினையின் அதீத வெப்பத்தைச் சமாளிக்க, லேசான நீர், அதிகமான  வெப்பநிலை கொண்ட வாயு, திரவ உலோகம் மற்றும் உருகிய உப்பு ஆகிய வெவ்வேறு குளிரூட்டிகளைப் பயன்படுத்துகின்றன.


8. இருப்பினும், இவற்றில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுவது இலகு நீர் அணு உலைகள் (Light Water Reactors) ஆகும். இவை ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் கட்டப்பட்டு வரும் பாரம்பரிய அணுமின் நிலையங்களைப் போலவே நீரால் குளிர்விக்கப்படுகின்றன. இதனால், மற்ற வகைகளைவிட இலகு நீர் சிறிய மட்டு அணு உலைகளை வடிவமைப்பது மிகவும் எளிதாக உள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


வளர்ந்த இந்தியா அணுசக்தித் திட்டத்தின்கீழ், 2047-ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது.


சாந்தி சட்டம் (SHANTI Act) என்றால் என்ன?


1. ஷாந்தி சட்டம், டிசம்பர் 21, 2025 அன்று ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றது, அணு மின் நிலையத்தை அமைப்பதற்கு அல்லது அணு ஆற்றலின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் அகற்றல் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தனியார் துறையின் பங்கேற்பை, மத்திய அரசின் உரிமத்தின் கீழும், நாட்டின் அணு ஒழுங்குமுறை அமைப்பான அணு ஆற்றல் ஒழுங்குமுறை வாரியத்தின் பாதுகாப்பு அங்கீகாரத்தின் கீழும் திறம்பட அனுமதிக்கிறது.


2. சாந்தி சட்டம் என்பது உலகளாவிய அணுசக்தி வர்த்தகத்தின் நெறிமுறைகளுக்கு ஏற்ப ஒரு முயற்சியாகும். இது 1962-ஆம் ஆண்டின் அணுசக்திச் (Atomic Energy Act) சட்டம் மற்றும் 2010-ஆம் ஆண்டின் அணுசக்தி சேதத்திற்கான குடிமைப் பொறுப்புச் (Civil Liability for Nuclear Damage Act) சட்டம் ஆகியவற்றை ஒரே சட்டமாக செயல்படுகிறது.


3. புதிய சட்டத்தின்படி, பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களை அமைக்கவும், அணு எரிபொருள், தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் கனிமங்களின் போக்குவரத்து, சேமிப்பு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படுகின்றன. இதுவரை, இந்த நடவடிக்கைகள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தன.



இந்தியாவின் மூன்றுகட்ட அணுசக்தித் திட்டம் என்பது என்ன?


1. இந்தியாவின் அணுசக்திப் பயணம், சுதந்திரத்திற்குப் பிறகு 1948-ல் அணுசக்தி ஆணையம் (Atomic Energy Commission) அமைக்கப்பட்டதுடன் தொடங்கியது. 1956-ல், மும்பை டிராம்பேயில் உள்ள (Bhabha Atomic Research Centre (BARC)) ஆசியாவின் முதல் ஆராய்ச்சி அணு உலை Apsara செயல்பாட்டுக்கு வந்தது.


2. 1969-ஆம் ஆண்டு, மகாராஷ்டிராவின் தாராப்பூரில் இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்டது. ஜப்பானுக்கு அடுத்தபடியாக அணுமின் நிலையத்தை நிறுவிய இரண்டாவது ஆசிய நாடு இந்தியா ஆகும். சீனாவை விட பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியா அணுசக்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முன்னேற்றம் கண்டது. 1950 மற்றும் 1960-களில் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் இந்தியா வலுவான அணு ஆராய்ச்சி தொடர்பான அடித்தளத்தை உருவாக்கியது.


3. எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அணுசக்தித் துறையின் மூன்று கட்டத் திட்டத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு இந்தியா, இந்திய அணுசக்தித் திட்டத்தின் தந்தையான டாக்டர் ஹோமி ஜே. பாபா மற்றும் 'வேகப் பெருக்கி அணு  உலைகளின்' (Fast Breeder Reactor (FBR)) முக்கியத்துவத்தை உணர்ந்த டாக்டர் விக்ரம் சாராபாய் ஆகியோருக்குக் கடமைப்பட்டுள்ளது. ஏனெனில்,  இது  போன்ற அணு உலைகள், வளமான ஐசோடோப்புகளை (fertile isotopes) பிளவுபடக்கூடிய பொருளாக (fissile material) பயனுள்ள வகையில் மாற்றுவதன் மூலம்,  இந்த வேகப் பெருக்கி உலைகள் பயன்படுத்தும் அணு எரிபொருளைவிட அதிக அளவு அணு எரிபொருளை உருவாக்குகின்றன. அவை அதிக எரிபொருள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.


மூன்று கட்ட அணுசக்தி திட்டம்


→ நிலை 1: அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகள் (Pressurised Heavy Water Reactors (PHWRs)), மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயற்கை யுரேனியம் அடிப்படையிலான எரிபொருட்களைப் பயன்படுத்துகின்றன. அதே நேரத்தில், பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசுழற்சி செய்வதன் மூலம் பிரித்தெடுக்கக்கூடிய பிளவுபடும் புளூட்டோனியத்தையும் (Pu239) உற்பத்தி செய்கின்றன. இது கனநீரை (deuterium oxide) குளிர்விப்பானாகவும் குறைப்படுத்தியாகவும் பயன்படுத்துகிறது. இறக்குமதி செய்யப்பட்ட இலகுநீர் அணு உலைகளின் (Light Water Reactors (LWRs)) கட்டுமானத்தின் மூலம் இந்தத் திட்டம்  வலுப்படுத்தப்பட்டுள்ளது.


→ நிலை 2:  கல்பாக்கத்தில் உள்ளதைப் போன்ற வேகப் பெருக்கி அணு உலைகளை (Fast Breeder Reactors - FBRs) புளூட்டோனியம் அடிப்படையிலான எரிபொருளைப் பயன்படுத்தி அமைப்பது இதில் அடங்கும். இத்தகைய உலைகள் அணுசக்தி உற்பத்தித் திறனை அதிகரிப்பதோடு, வளமான தோரியத்தை (Thorium) பிளவுறும் தன்மை கொண்ட யுரேனியம்-233 (U-233) ஆக மாற்றும் திறனையும் கொண்டுள்ளன. புளூட்டோனியம் இருப்பைத் திறமையாகப் பயன்படுத்துவதற்கு, பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசுழற்சி செய்வது முக்கியமானதாகும்..


→ நிலை 3: மூன்றாவது கட்டம் ThU233 சுழற்சியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். நீண்ட கால எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மேம்பட்ட வெப்ப நியூட்ரான் உலைகள் (advanced thermal reactors) மற்றும் அதிவேக உற்பத்தி உலைகளை (fast breeder reactors) உள்ளடக்கிய மின் உற்பத்தித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு, இரண்டாம் கட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் U233-ஐப் பயன்படுத்தலாம். இதற்காக 'மேம்பட்ட கனநீர் உலை' (Advanced Heavy Water Reactor (AHWR)) முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது, உருகிய உப்பை பயன்படுத்தும் அணு உலைகளின் (Molten Salt Reactors) பயன்பாடும் ஒரு மாற்று வாய்ப்பாகக் கருதப்படுகிறது.


கல்பாக்கம் வேக இனப்பெருக்க அணு உலை நிலைமாறு நிலையை அடைந்தது


1. தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட வேகப் பெருக்கி அணு உலை (Fast Breeder Reactor (FBR)) முக்கிய  நிலையை அடைந்தது.


2. நிலைமாறுநிலையை அடைதல் அல்லது நிலைமாறுநிலையை எட்டுதல் என்பது, அணு பிளவு (Nuclear Fission) வினை தானாகவே தொடர்ந்து நடைபெறும் நிலையை குறிக்கிறது. இந்த தன்னிறைவு பெற்ற அணுப் பிளவு வினை, பின்னர் 500 மெகாவாட் மின்சார திறன் கொண்ட வேகப் பெருக்கி அணு உலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய வழிவகுக்கும்.



3. முழு அளவிலான மின் உற்பத்தியைத் தொடங்குவதற்கு முந்தைய ஒரு முக்கிய சாதனை என்ற நிலையை அடைவதாகும். இந்நிலை, அணு உலைக்கருவானது வடிவமைக்கப்பட்டபடியே செயல்படுவதையும், தொடர்ச்சியான வினைகளை நிலைநிறுத்துவதற்குத் தேவையான எண்ணிக்கையிலான நியூட்ரான்களை அணுக்கருப் பிளவு நிகழ்வுகள் (fission event) வெளியிடுவதையும் உறுதிப்படுத்துகிறது. இது இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் மிக முக்கியமான இரண்டாவது கட்டமாகும்.



Share:

மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஏன் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளன? - ரோஷ்னி யாதவ்

13 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா ஏன் இறுதியாக மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது? மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை உலகின் மிக முக்கியமான பல்லுயிர் வளம் கொண்ட  பகுதிகளில் (biodiversity hotspots) ஒன்றாக மாற்றுவது எது? இது குறித்த முழுமையான தகவல்கள் இங்கே உள்ளன.

தற்போதைய செய்தி :


மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 'சுற்றுச்சூழல்ரீதியாக உணர்திறன் மிக்க பகுதிகளை' (Ecologically Sensitive Areas (ESA)) வரையறுப்பதற்கான முதல் வரைவு அறிவிப்பை வெளியிடப்பட்டு 12 ஆண்டுகளான  பிறகும், ஒன்றிய அரசு இறுதியாக அதனை இறுதி செய்து வெளியிட தயாராகியுள்ளது; குறைந்தது, கருத்து வேறுபாடுகள் அல்லது சர்ச்சைக்குரிய விவகாரங்கள் ஓரளவுக்குத் தீர்க்கப்பட்டுள்ள மூன்று மாநிலங்களிலாவது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்று 'The Indian Express' செய்தி வெளியிட்டுள்ளது.


இந்தச் சூழலில், மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் அதன் முக்கியத்துவத்தையும் பற்றி தெரிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. கஸ்தூரிரங்கன் தலைமையிலான உயர்மட்டப் பணிக்குழுவின் 2013-ஆம் ஆண்டு பரிந்துரைகளின் அடிப்படையில், 6  மாநிலங்களில் 56,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பு, உணர்திறன் மிக்கப்  பகுதியாக (ESA) வரையறுக்கப்பட முன்மொழியப்பட்டுள்ளது.


2. புதிய சுரங்க மற்றும் கல் குவாரித் திட்டங்கள், அனல் மின் நிலையங்களை அமைத்தல், அதிக மாசுபாட்டை ஏற்படுத்தும் 'சிவப்பு பிரிவுப் பட்டியலில்' உள்ள (red-category) தொழிற்சாலைகளை இயக்குதல் மற்றும் 20,000 சதுர மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட புதிய கட்டிடங்கள் மற்றும் கட்டுமானத் திட்டங்கள் அல்லது அவற்றின் விரிவாக்கத் திட்டங்கள் போன்ற பணிகளுக்கு முழுமையான தடை அல்லது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.


3. ஒன்றிய அரசின் அசல் வரைவு அறிவிக்கை 2014-ல் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் அது ஐந்து முறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், மாநில அரசுகளின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதிகளாக (Ecologically Sensitive Areas (ESAs)) அறிவிக்கப்பட வேண்டிய பகுதிகள் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடுகள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை.  தற்போது வரை கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. கேரளா, தனது மாநிலத்தில் சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதியாக அறிவிக்கப்படவுள்ள பரப்பளவை மேலும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. அதேவேளையில், கர்நாடகா இந்த ஒட்டுமொத்த நடவடிக்கை பற்றிய கேள்வியை தொடர்ந்து எழுப்பி  வருகிறது.


சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதி  (Ecologically Sensitive Areas (ESAs)) என்றால் என்ன?


சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதி (ESA) என்பது சுரங்கத் தொழில், நீர்மின் திட்டங்கள் போன்ற நடவடிக்கைகளின் எதிர்மறையான தாக்கத்தைக் குறைப்பதற்காக, பாதுகாக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றி வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு வளையங்கள் ஆகும்.


4. எல்லைகளை நிர்ணயிக்க வேண்டிய பகுதிகள் குறித்து குஜராத், கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஆறாவதாக உள்ள தமிழ்நாட்டிற்கு, இந்தச் சிக்கலில் பெரிய அளவிலான மாறுபட்ட கருத்துகள் எதுவும் இல்லை.


5. கேரளா மற்றும் கர்நாடகாவுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள அல்லது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள மாநிலங்களில் சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகளை அறிவிக்க ஒன்றிய அரசு தயாராகி வருவதாகத் தெரிய வருகிறது. இதற்கு முன்னர், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதிக்களுக்கான வரைவு அறிவிப்புகளை ஒன்றிய அரசு வெளியிட்ட முயற்சிகளிலிருந்து இது மாறுபட்டதாக உள்ளது.


6. இறுதி அறிவிப்பு வெளியிடப்பட்டால், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 (Environment Protection Act, 1986)-ன் கீழ் மேற்கு தொடர்ச்சி மலைகளின் பல்லுயிர் வளம் மிக்க மற்றும் மிகவும் நுட்பமான பகுதிகளுக்கு வலுவான சட்டப் பாதுகாப்பு கிடைக்கும். மேலும், அந்தப் பகுதிகளின் சுற்றுச்சூழலை பாதிக்கும் புதிய சுரங்கத் திட்டங்கள், அதிக மாசு ஏற்படுத்தும் தொழில்கள், அதிக வெப்பம் கொண்ட மின் நிலையங்கள் போன்ற செயல்பாடுகளுக்கு தடை  விதிக்கப்படும்.


மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சூழலியல் முக்கியத்துவம் என்ன?


1. உலகில் உள்ள 36 பல்லுயிர்ச் சூழல் மண்டல மையங்களில் (biodiversity hotspots) இந்தியாவில் அமைந்துள்ள நான்கு மையங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும். மற்ற மூன்று மையங்கள் இமயமலை, இந்தோ-பர்மா மற்றும் சுண்டாலாந்து பகுதி போன்றவையாகும்.


2. இமயமலையைவிட மேற்குத் தொடர்ச்சி மலை பழமையான, 1,600 கி.மீ. நீளமுள்ள மலைத்தொடராகும். 2018-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (UNESCO) உலகின் 8 உயிரியல் பன்முகத்தன்மை மையங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.


3. Sahyadri hills என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைகள், அளவற்ற சூழலியல் மற்றும் பல்லுயிர்ப் பெருக்க மதிப்பைக் கொண்டுள்ளன. இதனால், அவை இந்தியாவிற்கும் உலகிற்கும் மிகவும் முக்கியமான இயற்கை வளங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்தப்பகுதி, அதன் தனித்துவமான பல்லுயிர்ப் பெருக்கம், பகுதிகளுக்கே உரிய உயிரினங்கள் மற்றும் முக்கியமான சூழலியல், காலநிலை செயல்முறைகளைப் பாதுகாப்பதில் அதன் பங்கு போன்றவற்றின் காரணமாக  சிறந்த உலகளாவிய மதிப்பைக் கொண்டுள்ளது.


4. இது இந்தியத் தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையோரமான குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்கள் வழியாகப் பரவியுள்ளது.


5. சுற்றுச்சூழல் ரீதியாக, மேற்கு தொடர்ச்சி மலைகள் தென்னிந்தியாவின் காலநிலையை ஒழுங்குபடுத்தும் முக்கிய இயற்கை அமைப்பாக விளங்குகின்றன. தென்மேற்கு பருவமழைக்கு தடுப்பு சுவாராகச் செயல்பட்டு, அதிக மழைப்பொழிவு ஏற்படுவதை உறுதி செய்கின்றன. இதன் விளைவாக அடர்ந்த காடுகளும், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கும் பல நதிகளும் உருவாகின்றன.


6. இந்த மலைத்தொடர் வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள், புல்வெளிகள், சாதிக்காய் (Myristica) சதுப்புநிலங்கள் மற்றும் தனித்துவமான 'சோலா' காடுகள் உள்ளிட்ட பல்வேறு சூழலமைப்புகளின் தாயகமாகத் திகழ்கிறது. இது போன்ற சூழலமைப்புகள் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு வாழ்விடமாக உள்ளன. இவற்றில் உள்ள பல்வேறு இனங்கள் உலகின் வேறு எந்தப் பகுதிகளிலும் காணப்படாத தனித்துவமான  இனங்களாகும்.


7. சிங்கவால் குரங்கு, நீலகிரி வரையாடு மற்றும் புலி போன்ற அழிவின் விளிம்பில் உள்ள பல்வேறு உயிரினங்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலைகள் வாழ்விடமாக உள்ளன.


8. கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, மண்டோவி, பெரியாறு மற்றும் சராவதி போன்ற மேற்கு நோக்கிப் பாயும் பல ஆறுகளின் பிறப்பிடமாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் திகழ்கின்றன. இதனால் இது 'தீபகற்ப இந்தியாவின் நீர்க்களஞ்சியம்' (water tower) என்று அழைக்கப்படுகிறது.


மேற்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்பான குழுக்கள் (Committees on the Western Ghats)


1. மேற்குத் தொடர்ச்சி மலையில் சூழலியல்ரீதியாக உணர்திறன் மிக்க பகுதிகளை (ESA) வரையறுப்பதற்கான முயற்சிகள், 2010-ல் மாதவ் காட்கில் குழு அமைக்கப்பட்டதோடு தொடங்கின. இந்தியாவின் மிகச்சிறந்த சூழலியலாளர்களில் ஒருவரான காட்கில், 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அன்று குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்தார். அதில், மேற்குத் தொடர்ச்சி மலையின் மொத்தப் பரப்பளவான 1,29,037 சதுர கிலோமீட்டர் பகுதியையும் சூழலியல்ரீதியாக உணர்திறன் மிக்க பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும், அந்தப்பகுதிகளின் சூழலியல்த்தன்மைக்கு ஏற்ப பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.


2. இதனால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு இந்த அறிக்கையை 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், முன்னாள் இஸ்ரோ  தலைவர் கே. கஸ்தூரிரங்கன் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியது.


3. கள ஆய்வுப் பணிகளுக்குப் பிறகு, 60,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை மட்டும் சூழலியல் ரீதியாக உணர்திறன் மிக்க பகுதியாக அறிவிக்கலாம் என்று கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைத்தது. குடியிருப்புகள், வேளாண்மை மற்றும் தோட்டப்பயிர்கள் அதிகம் நிறைந்த 'கலாச்சார நிலப்பரப்புகளுக்கு' (cultural landscapes) மாறாக, மலைத்தொடர் முழுவதும்  1,500 கி.மீ. தூரத்திற்குத் தொடர்ந்து பரவியுள்ள தாவரங்கள் மற்றும் காடுகளைக் கொண்ட 'இயற்கை நிலப்பரப்புகளை' (natural landscapes) அடிப்படையாகக் கொண்டே இந்தப் பரிந்துரை செய்யப்பட்டது.



Original Link: Why are the Western Ghats back in headlines?


Share:

புவிசார் குறியீடு (GI) என்பது என்ன? -ரோஷ்னி யாதவ்

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரான்ஸ் (France) மற்றும் ஸ்லோவாக்கியா (Slovakia) ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களின்போது, அங்குள்ள உலகத் தலைவர்களுக்கு வழங்கிய பரிசுகளின் பட்டியலில் பல்வேறு வகையான இந்தியக் கலைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரியப் பொருட்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றில், கலம்காரி மகாபாரத ஓவியம், போச்சம்பள்ளி பட்டுத் துண்டு, லாகடாங் மஞ்சள் மற்றும் தெகுவா (Thekua - ஒருவகை இனிப்புப் பலகாரம்) ஆகியவை இடம்பெற்றிருந்தன.


முக்கிய அம்சங்கள்:


— பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒரு 'கலம்காரி மகாபாரத ஓவியத்தை' பரிசாக வழங்கினார். ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த கைவினைப் பூர்வமான கலம்காரி ஓவியம், இந்தியாவின் செழுமையான கலைப் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. இதைச் செய்து முடிக்க ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஆனதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.       மேலும், இந்த ஓவியம் பாரம்பரிய பேனா-வரைதல் (Pen-drawing) நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்றும், இது மகாபாரதத்தின் காட்சிகளை சித்தரிக்கிறது என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


— அதிபர் மேக்ரானின் மனைவிக்கு, போச்சம்பள்ளி பட்டுத் துண்டை மோடி பரிசளித்தார். போச்சம்பள்ளி பட்டுத் துண்டு என்பது தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு கைத்தறி துணியாகும், இது பாரம்பரிய 'இகாத்' (Ikat) சாயம் பூசும் நுட்பத்தைப் பயன்படுத்தி நெய்யப்பட்டது. அதன் சிக்கலான வடிவியல் மற்றும் மலர் வடிவங்கள், நேர்த்தியான கைவினைத்திறன் மற்றும் அழகான வடிவமைப்பிற்குப் பெயர் பெற்ற இந்தத் துண்டு, இந்தியாவின் செழுமையான ஆடைப் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


— ஸ்லோவாக்கியா நாட்டுப் பிரதமர் ராபர்ட் ஃபிகோவிற்கு பிரதமர் மோடி காஷ்மீரி பட்டு கம்பளம் ஒன்றை பரிசளித்தார், இது காஷ்மீரின் மதிப்புமிக்க மற்றும் புகழ்பெற்ற கைமுடிச்சு (Hand-knotted) கைவினைப் பொருளாகும்.


— பிராடிஸ்லாவாவில் (Bratislava) ஸ்லோவாக்கியா அதிபர் பீட்டர் பெல்லெக்ரினியைச் சந்தித்தபோது, மோடி அவருக்கு பித்தளையிலான 'டோக்ரா மான்' பொம்மைத் தொகுப்பை பரிசாக வழங்கினார். இது இந்தியாவின் பழமையான டோக்ரா உலோக வார்ப்பு (Metal-casting) பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒரு கைவினைப் பொருளாகும். சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடி கைவினைஞர்களால் பல நூற்றாண்டுகளாக இந்த கலை வடிவம் பின்பற்றப்பட்டு வருகிறது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


— ராஜஸ்தானின் பிரதாப்கர் (Pratapgarh) பகுதியின் பாரம்பரிய நகை கைவினைத்திறனைப் பறைசாற்றும் வகையில், கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட சட்டைக் கைகளில் பொருத்தப்படும் பிரத்யேக பொத்தான்கள் (Thewa motif cufflinks) என்ற நகைப் பரிசையும் பிரதமர் வழங்கினார்.                     வண்ணக் கண்ணாடிகளின் மீது மிக நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட தங்கத் தகடுகளை உருக்கி இணைத்து, இயற்கையையும் பல்வேறு குறியீடுகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்த நேர்த்தியான மற்றும் அழகான வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.


— 'சரஹ சம்ஹிதா' (Charak Samhita), 'சுஸ்ருத சம்ஹிதா' (Susruta Samhita) ஆகிய ஆயுர்வேத நூல்களின் பிரதிகளையும் மற்றும் 'தேகுவா' (Thekua) இனிப்பையும் ஸ்லோவாக்கியா நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் ரிச்சர்ட் ராஷ் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார்.


— 'சரஹ சம்ஹிதா' நூல் இந்தியாவின் செழுமையான அறிவியல் மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் அதேவேளையில், பீகார் மாநிலத்தின் பாரம்பரிய இனிப்பு பலகாரமான 'தேகுவா', இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியம், பண்டிகைக் கொண்டாட்டம் மற்றும் பிராந்திய சமையல் கலையை உலகிற்குப் பறைசாற்றுகிறது.


— ஆயுர்வேதத்தில், அஸ்வகந்தா (அமுக்கராங்கிழங்கு) என்பது உடலுக்குத் தெம்பையும், மனத்தெளிவையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் தரும் ஒரு 'ரசாயன மூலிகையாக' மதிக்கப்படுகிறது. முக்கியமாக இதன் வேர்களில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மூலிகை, மன அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குணங்களுக்காக இன்று நவீன அறிவியலால் பரவலாக ஆய்வு செய்யப்படுகிறது. இதில் ராஜஸ்தானின் 'நாகௌரி அஸ்வகந்தா' (Nagauri Ashwagandha) உள்ளூர் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல்,    பாரம்பரிய ஆயுர்வேத அறிவை நவீன அறிவியல் ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய ஆரோக்கியப் போக்குகளுடன் எவ்வாறு இணைப்பது என்பதற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.


— ஜி7 மாநாட்டின்போது, பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் 'நாகௌரி அஸ்வகந்தா', மேகாலயாவின் 'லகடாங் மஞ்சள்', ஜம்மு காஷ்மீரின் செனாப் பள்ளத்தாக்கில் தயாரிக்கப்படும் 'ராம்பன் தேன்' மற்றும் வாரணாசியின் புகழ்பெற்ற 'பனாரசி பட்டுத் துண்டுகளையும்' உலகத் தலைவர்களுக்குப் பரிசாக வழங்கினார்.


உங்களுக்குத் தெரியுமா?


— உலக வர்த்தக அமைப்பில் (World Trade Organization (WTO)) ஒரு உறுப்பினராக இருக்கும் இந்தியா, 'பொருட்களுக்கான புவிசார் குறியீடு (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தை, 1999' (Geographical Indications Act, 1999) இயற்றியது. இச்சட்டம் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி , 2003-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.


— புவிசார் குறியீடு (Geographical Indication (GI)) என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு வழங்கப்படும் ஒரு தனித்துவமான அங்கீகார அடையாளமாகும். அந்தப் பொருளின் தரம், சிறப்பு குணங்கள் அல்லது அதன் புகழ் ஆகியவை அது விளையும் அல்லது தயாரிக்கப்படும் குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்தே இருக்கும் என்பதால் இந்த அங்கீகாரம் தரப்படுகிறது. இக்குறியீடு அந்தப் பொருளின் தனித்தன்மையையும், அது உண்மையானது என்பதையும் உறுதிப்படுத்துகிறது. மேலும், இது வாடிக்கையாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நம்பிக்கையை வளர்க்கவும் உதவுகிறது.


— ஒரு பொருளுக்கு இக்குறியீடு கிடைத்துவிட்டால், வேறு எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ அதே பெயரில் அதுபோன்ற போலிப் பொருட்களை விற்க முடியாது. இந்த அங்கீகாரம் 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்.                                   அதன் பிறகு இதனை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். புவிசார் குறியீடு பதிவின் மூலம் அந்தப் பொருளுக்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பு கிடைக்கிறது, மற்றவர்கள் அனுமதியின்றி அதைப் பயன்படுத்துவது தடுக்கப்படுகிறது மற்றும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும் ஊக்குவிக்கப்படுகிறது.


— இந்தியாவில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் 'தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை' (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) புவிசார் குறியீடுகளை (GI Tags) வழங்குகிறது. டார்ஜிலிங் தேநீர்தான் (Darjeeling Tea) புவிசார் குறியீட்டைப் பெற்ற முதல் இந்தியத் தயாரிப்பு ஆகும்.


— 1999-ஆம் ஆண்டின் 'பொருட்களின் புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம்', கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிப் பொருட்களுக்குப் புவிசார் குறியீடு (GI) வழங்குவதற்கான பதிவை வழங்குகிறது. இச்சட்டத்தின்                 பிரிவு 2(f)-ன்கீழ் கைவினை மற்றும் கைத்தறிப் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இப்பிரிவின்படி, "பொருட்கள்" என்பது ஏதேனும் ஒரு சாகுபடி செய்யப்பட்ட பொருள், இயற்கை அல்லது உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அல்லது கைவினை, கைத்தறி அல்லது கைத்தொழில் சார்ந்த பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களைக் குறிக்கும்.



Original Link: What is the Geographical Indication (GI)?


Share:

PM-WANI திட்டம் என்பது என்ன? -ரோஷ்னி யாதவ்

'பாரத்நெட்' (BharatNet) என்ற அரசாங்கத்தின் பிரம்மாண்ட கிராமப்புற இணைய சேவை (Broadband) இணைப்புத் திட்டத்தின்கீழ், மார்ச் மாதம் 2026-ஆம் ஆண்டுக்குள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட இணைப்புகளில் பாதியைவிடக் குறைவான எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்தச் சேவையைத் தீவிரமாகப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் புதிய வாடிக்கையாளர்களின் சேர்க்கையும் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்துள்ளது. 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (Right to Information Act (RTI Act)) பெற்ற தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.


முக்கிய அம்சங்கள்:

— இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, 'பாரத்நெட்' (BharatNet) திட்டத்தின்கீழ் நிர்ணயிக்கப்பட்ட 18 லட்சம்  என்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு, மொத்தம் 13.23 லட்சம் (துல்லியமாக 13,22,842) நிலையான இணைய இணைப்புகள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இருப்பினும், இவற்றில்                     சுமார் 8.01 லட்சம் இணைப்புகள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) தரவுகள் தெரிவிக்கின்றன.

— அரசு அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தத் திட்டம் பல அளவுகோல்களில் பின்னடைவைச் சந்தித்து வந்தது. குறிப்பாகச் செயல்பாட்டில் உள்ள இணைப்புகள், பயன்பாட்டில் இருக்கும் இணைய இணைப்பு பகிர்வுகள் (Wi-Fi hotspots), கடைசி எல்லை வரையிலான இணைப்பு வசதி, நிதி கசிவுகள் மற்றும் குழப்பமான கட்டண முறைகள் போன்றவற்றில் பல சிக்கல்கள் இருந்தன.

— உலகிலேயே மிகப்பெரிய கிராமப்புற ஒளியிழை கேபிள் தொழில்நுட்ப  (Fiber optic) வலைப்பின்னலாகக் கருதப்படும் 'பாரத்நெட்' (BharatNet), ஒன்றிய அரசின் மிக முக்கியமான கிராமப்புற அதிவேக இணைய சேவைத் திட்டமாகும். இத்திட்டம், அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் அதிவேக இணைய வசதியை வழங்குவதன் மூலம், டிஜிட்டல் உலகிற்கும் கிராமங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கவும், தொலைதூரக் கிராமப்புற மக்களை டிஜிட்டல் பொதுச் சேவைகள், கல்வி, மருத்துவம் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளுடன் இணைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

— கிராமப்புறங்களுக்கு அதிகத் திறன் கொண்ட, தடையற்ற நிலையான கேபிள் வழி இணைய சேவையை வழங்குவதற்குப் 'பாரத்நெட்' (BharatNet) திட்டம் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். இது இணையப் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து, அதிக அளவிலான தரவுப் பயன்பாடு, கிராமப்புற மின்-ஆளுகை (e-governance) மற்றும் தடையற்ற டிஜிட்டல் மருத்துவச் சேவைகளுக்குத் தேவையான ஒரு வலுவான டிஜிட்டல் அடித்தளமாக செயல்பட முடியும். மொபைல் இணையம் (Mobile internet) என்பது பொதுவாக இதுபோன்ற அதிகத் தரவு தேவைப்படும் பயன்பாடுகளுக்கு முழுமையாகப் பொருத்தமானதாக இருப்பதில்லை.

UPSC Key: International Yoga Day, Bharat Net and India-Bangladesh Border Tensions

— தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் முந்தைய மார்ச் மாத 2025-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, ஜனவரி மாதம் 2025-ஆம் ஆண்டு வரை 'பாரத்நெட்' (BharatNet) திட்டத்தின்கீழ் 12.24 லட்சம் நிலையான இணைய இணைப்புகள் வழங்கப்பட்டிருந்தன.                    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் பெற்ற புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அதற்கு அடுத்த 14 மாதங்களில் (மார்ச் 2026 வரை) வெறும் 98,842 புதிய இணைப்புகள் மட்டுமே கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன (இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 13.23 லட்சமாக உயர்ந்துள்ளது) என்பது தெரியவருகிறது. அதாவது, ஒரு மாதத்திற்குச் சராசரியாக 7,000-க்கும் அதிகமான புதிய இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த இணையச் சேவையைப் பொதுமக்கள் எந்தளவுக்குத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள் என்ற விஷயத்தில்தான், இந்த மாபெரும் திட்டத்தின் நோக்கம் மேலும் பின்னடைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

— அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இருந்தபோதிலும்,      இந்த இணைய இணைப்பின் பயன்பாடு எதிர்பார்த்த அளவைவிட மிகக் குறைவாகவே உள்ளது என்று நாடாளுமன்றக் குழு குறிப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இத்திட்டத்திற்கான நிதி சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, 2024-25-ஆம் நிதியாண்டில் இத்திட்டத்திற்காக மாற்றியமைக்கப்பட்ட நிதி மதிப்பீடு 6,500 கோடி ரூபாயாக இருந்தது, ஆனால் அதில் வெறும் 48% அதாவது 3,145 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

— தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் பெறப்பட்ட தரவுகள், கடந்த மூன்று ஆண்டுகளில் பாரத்நெட் (BharatNet) திட்டத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதைக் காட்டுகின்றன. இது இந்த பிரம்மாண்டமான இணைய இணைப்புத் திட்டத்திற்கு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது.

— பொதுவெளியில் கிடைக்கப்பெற்ற அரசாங்கத்தின் தரவுகளின்படி, பாரத்நெட் திட்டத்தின்கீழ் 1.04 லட்சம் பொது இணைய இணைப்பு பகிர்வு அமைப்புகள் (Wi-Fi) நிறுவப்பட்டன. ஆனால் இதில் செப்டம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டு நிலவரப்படி வெறும் 0.7% அதாவது 766 மட்டுமே செயல்பாட்டில் இருந்தன. இந்த இணைய இணைப்பு பகிர்வுச் சேவைதான், இணைய இணைப்புத் திட்டத்தின் பயனை அடித்தட்டு மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கான மிக முக்கிய வழியாகும்.

— இந்தியாவில் உள்ள 2.5 லட்சம் கிராம ஊராட்சிகளுக்கும் ஒளியிழை கேபிள்கள் மூலம் அதிவேக இணைய வசதியைக் கொண்டு செல்வதற்காக,                     கடந்த 2011-ஆம் ஆண்டு தேசிய ஒளியிழை கேபிள் வலையமைப்புத் (National Optical Fibre Network (NOFN)) திட்டம் தொடங்கப்பட்டது; இத்திட்டமே பின்னாளில் 'பாரத்நெட்' திட்டமாக மாற்றமடைந்தது.

— இந்தத் திட்டத்தை நிர்வகிப்பதற்காக, 2012-ஆம் ஆண்டில் ‘Bharat Broadband Network Limited’ (BBNL) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. மேலும், இத்திட்டம் தொடக்கத்தில் 2014-ஆம் ஆண்டிற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டது.                         ஆனால் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக, இது 2015-ஆம் ஆண்டில் 'பாரத்நெட்' (BharatNet) என்ற பெயரில் மறுவடிவம் பெற்றது. இதன் முதற்கட்ட திட்ட இலக்குகள் 2017-ஆம் ஆண்டில்தான் முடிக்கப்பட்டன. அதேபோல மாற்றி அமைக்கப்பட்ட காலக்கெடுவுக்குப் பிறகும் இரண்டாம் கட்ட பணிகளில் மேலும் தாமதம் ஏற்பட்டது. பின்னர், ஜூன் மாதம் 2021-ஆம் ஆண்டில், இத்திட்டம் மூன்றாம் கட்டத்தின்கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டு, மேம்படுத்தப்பட்ட வலையமைப்புகள் மற்றும் கிராமங்களின் கடைசி வீடு வரையிலும் இணைய இணைப்புகள் மூலமாக                  2025-ஆம் ஆண்டிற்குள் 6.5 லட்சம் கிராமங்களுக்கு இணைய வசதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து, பாரத்நெட் திட்டப்பணிகளை விரைவுபடுத்துவதற்காக, ‘Bharat Broadband Network Limited’ (BBNL) நிறுவனத்தை ‘Bharat Sanchar Nigam Limited’ (BSNL) நிறுவனத்துடன் இணைப்பதற்கு 2022-ஆம் ஆண்டில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

— ஓராண்டுக்குப் பிறகு 2023-ஆம் ஆண்டில், அரசாங்கம் 1.39 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்தைத் தொடங்கியது. இந்த மேம்படுத்தப்பட்ட திட்டம், ஐந்து ஆண்டு காலத்தில் இந்தியாவில் உள்ள கிராமப்புற வீடுகள், நிறுவனங்கள் மற்றும் வணிக அமைப்புகளுக்கு 1.5 கோடி நிலையான இணைய இணைப்புகளை வழங்க உறுதியளிக்கிறது.


— பிரதமர்-வாணி (Prime Minister’s Wi-Fi Access Network Interface (PM-WANI)) திட்டத்தின்கீழ் பொது இணையப் பகிர்வு சேவை அமைப்புகளை அதிகரிப்பது குறித்து, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India (TRAI)) சமீபத்தில் வெளியிட்ட கலந்தாய்வு அறிக்கையில்,                                        நாட்டில் இத்தகைய சேவையை வழங்குவதற்கு பாரத்நெட் (BharatNet) திட்டத்தின்கீழ் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. இருப்பினும், இந்த அறிக்கைக்கான பதிலில், சில பங்குதாரர்கள் பாரத்நெட் திட்டத்தின் இறுதிப் பயனரைச் சென்றடைவதில் உள்ள சவால் உள்ளிட்ட சிக்கல்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.


Original Link: What is the PM-WANI scheme?


Share:

அரசியலமைப்பு வழங்கும் சகோதரத்துவத்திற்கான உறுதிமொழி முன்னெப்போதையும் விட முக்கியமானது - எஸ். ஒய். குரேஷி

சுதந்திரம் (Liberty) மற்றும் சமத்துவம் (equality) ஆகியவை நீதிமன்றங்களால் நிலைநாட்டப்படக்கூடியவை மற்றும் சட்டப்படி அமல்படுத்தப்படக்கூடியவை ஆகும். ஆனால், சகோதரத்துவம் (Fraternity) என்பது ஒரு மாறுபட்ட வகையைச் சார்ந்தது. சுதந்திரம் (Liberty) மற்றும் சமத்துவம் (equality) ஆகியவை குடிமக்களின் அடிப்படை உரிமைகளாக இருந்தால், சகோதரத்துவம் என்பது நாட்டின் அடிப்படை உரிமையாகும்.


அரசியலமைப்பின் முகப்புரையில் இடம்பெற்றுள்ள நீதி (justice), சுதந்திரம் (Liberty) மற்றும் சமத்துவம் (equality) மற்றும் சகோதரத்துவம் (Fraternity) ஆகியவற்றை ஒவ்வொரு பள்ளி மாணவனாலும் ஒப்புவிக்க முடியும். இதில் முதல் மூன்று அம்சங்களும் நீதிமன்றங்கள், அரசியல் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் விவாதங்களை உருவாக்கியுள்ளன. ஆனால் நான்காவதாக உள்ள சகோதரத்துவம் மிகக் குறைந்த அளவிலேயே கவனத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், அரசியலமைப்பு நெறிமுறைகள் அனைத்திலும் சகோதரத்துவம் மிக முக்கியமானதாக இருக்கலாம். ஏனெனில், சட்டத்தின் மூலம் மட்டுமே உருவாக்க முடியாத ஒரே மதிப்பு இந்த சகோதரத்துவம்தான்.


இந்த அலட்சியம் ஆச்சரியமளிக்கிறது. ஏனெனில், அரசியலமைப்பு சகோதரத்துவத்தை ஒரு இரண்டாம் பட்ச விஷயமாகக் கருதவில்லை. நீதி, சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றுடன் ஒரே வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள இது, அவற்றுக்கு இணையான அரசியலமைப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இதனைத் திட்டமிட்டே அங்கு இடம்பெறச் செய்தனர். கடந்த 75 ஆண்டுகளாக நாம் ஏன் இதனைப் பெருமளவில் புறக்கணித்து வந்துள்ளோம் என்பதும், அந்தப் புறக்கணிப்பு நமக்கு எத்தகைய இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதுமே இப்போதுள்ள கேள்வியாக உள்ளது.



இதற்கான விடை, அரசியலமைப்பு நிர்ணயசபையின் (Constituent Assembly) விவாதங்களின்போது தெளிவாகக் குறிப்பிடப்பட்ட, ஆனால் காலப்போக்கில் அரசியலமைப்பு சார்ந்த விவாதங்களிலிருந்து மறைந்துபோன ஒரு வேறுபாட்டிலிருந்து தொடங்குகிறது. சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகியவை குடிமகனுக்கும் அரசுக்கும் இடையிலான உறவை வரையறுக்கின்றன. சகோதரத்துவம் என்பது குடிமக்களுக்கு இடையிலான உறவை வரையறுக்கிறது. அந்த வேறுபாடே மிக முக்கியமானதாக அமைகிறது. அரசு சுதந்திரத்தையோ அல்லது சமத்துவத்தையோ மீறினால், நீதிமன்றங்கள் தலையிட முடியும். ஆனால், குடிமக்கள் ஒருவரையொருவர் சக குடிமக்களாகக் கருதாத நிலை ஏற்படும்போது என்ன தீர்வு உள்ளது? கருத்து வேறுபாடுகள் விரோதமாகவும், மாறுபட்ட தன்மைகள் சந்தேகமாகவும் மாறும்போது, ​​சகோதரத்துவம் மறையத் தொடங்குகிறது. பி. ஆர். அம்பேத்கர் இதனை மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தார். 1949 நவம்பர் 25 அன்று அரசியலமைப்பு நிர்ணய சபையில் ஆற்றிய தனது இறுதி உரையில் அவர் இவ்வாறு எச்சரித்தார். இதில், "சகோதரத்துவம் இல்லாவிட்டால், சமத்துவமும் சுதந்திரமும் வெறும் ஆழமற்ற வண்ணப்பூச்சுப் பூசப்பட்ட மேலோட்டமான தன்மையையே கொண்டிருக்கும்" (Without fraternity, equality and liberty will be no deeper than coats of paint) என்று குறிப்பிட்டிருந்தார். இந்தியச் சமூகத்தைப் பற்றிய அவரது வெளிப்படையான மதிப்பீட்டிலிருந்தே அந்த எச்சரிக்கை உருவானது. "ஆயிரக்கணக்கான சாதிப் பிரிவுகளாகப் பிளவுபட்ட மக்கள் எவ்வாறு ஒரு நாடாக இருக்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார். 'தேசிய உணர்வு' என்பது இயல்பாகக் கிடைப்பதல்ல, அது ஒரு சாதனை ஆகும். சகோதரத்துவம் என்பது அதற்கான நிபந்தனையாகவும் அதே சமயம் அதற்கான சான்றாகவும் அமைகிறது என்பதை அவர் நமக்கு நினைவூட்டினார். அரசியலமைப்பின் சகோதரத்துவம் சார்ந்த அக்கறை முகப்புரையுடன் முடிந்துவிடவில்லை. பிரிவு 51A(e)-ன் படி, மதம், மொழி மற்றும் பிராந்திய வேறுபாடுகளைக் கடந்து நல்லிணக்கத்தையும் பொதுவான சகோதரத்துவ உணர்வையும் வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமையாகும்.


எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும், அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்த கவலைகள் இன்னும் குறையவில்லை. தொழில்நுட்பரீதியாக நாம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இணைந்திருந்தாலும், சமூகரீதியாக நாம் முன்னெப்போதையும்விட அதிகமாகப் பிளவுபட்டுள்ளோம். பொது விவாதங்கள் உரத்ததாகவும், கடுமையாகவும், மேலும் விரோதப் போக்குடனும் மாறியுள்ளன. அதே நேரத்தில், பரஸ்பர புரிதல் பலவீனமடைந்துள்ளது. அரசியல், மதம் அல்லது இணையம் என எதுவாக இருந்தாலும், வெறுப்புணர்வு சார்ந்த உரையாடல்களால் ஏற்படும் மிகப்பெரிய தீங்கு, அது மற்றவர்களைப் புண்படுத்துவது மட்டுமல்ல. ஜனநாயக அமைப்புகள் புண்படுத்தும் கருத்துக்களைத் தாண்டி நிலைத்திருக்கக்கூடியவை. ஆனால், நம்பிக்கையின் சிதைவுதான் இதில் உள்ள ஆழமான தீங்காகும்.


நம்பிக்கை என்பது ஒரு செயல்படும் சமூகத்தின் கண்ணுக்குப் புலப்படாத உள்கட்டமைப்பு ஆகும். அந்நியர்கள் ஒருவருக்கொருவர் நல்லெண்ணத்துடன் பழக முடியும் என்ற நம்பிக்கையின் அனுமானமாகப்ப் பார்க்கப்படுகிறது. அந்த அனுமானம் சிதைந்துவிடும்போது, ​​எந்தச் சட்டத்தாலும் அதை முழுமையாக மீட்டெடுக்க முடியாது. பொருளாதாரம் நம்பிக்கையைச் சார்ந்திருப்பதுடன், ஜனநாயகமும் நம்பிக்கையைச் சார்ந்தே இருக்கிறது.


சுதந்திரம் (Liberty) மற்றும் சமத்துவம் (equality) ஆகியவற்றை நீதிமன்றத்தின் மூலம் நிலைநாட்டப்படக்கூடிய மற்றும் சட்டப்படி அமல்படுத்தப்படக்கூடிய உரிமைகளாகும். ஆனால், சகோதரத்துவம் என்பது ஒரு மாறுபட்ட வகையைச் சார்ந்தது. சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகியவை குடிமக்களின் அடிப்படை உரிமைகளாக இருந்தால், சகோதரத்துவம் என்பது நாட்டின் அடிப்படை உரிமையாகும். எந்தவொரு நீதிமன்றத்தாலும் பரஸ்பர மரியாதையை உருவாக்க முடியாது, எந்தவொரு சட்டத்தாலும் பொதுவான பிணைப்பு உணர்வை ஏற்படுத்த முடியாது, எந்தவொரு அரசுத் திட்டத்தாலும் நம்பிக்கையைச் சட்டத்தின் மூலம் உருவாக்க முடியாது. இருப்பினும், சகோதரத்துவம் என்பது சட்டம், அரசு மற்றும் நீதிமன்றங்களின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்றும், இதில் அவை வெறும் செயலற்ற பார்வையாளர்களாக மட்டுமே இருக்கின்றன என்றும் முடிவு செய்வது தவறாகும்.


சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்காகவே அரசியலமைப்புச் சட்டமும் குற்றவியல் சட்டங்களும் வலுவான கட்டமைப்பைக் கொண்டுள்ளன. சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதை உறுதியளிப்பது பிரிவு 14 ஆகும். பாகுபாட்டிலிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதோடு, நம்பிக்கை மற்றும் வழிபாட்டுச் சுதந்திரத்தையும் பிரிவுகள் 15 மற்றும் 25 உறுதி செய்கின்றன. நல்லிணக்கத்தையும் பொதுவான சகோதரத்துவத்தையும் மேம்படுத்துவதற்கான கடமையை பிரிவு 51A(e) விதிக்கிறது. குற்றவியல் சட்டங்கள் இதைத் தாண்டி மேலும் பல நடவடிக்கைகளை எடுக்கின்றன. குடிமை அமைதியைப் பேணவும், வகுப்புவாதப் பகையைத் தடுக்கவும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவுகள் 153A, 153B, 295A மற்றும் 505 ஆகியவை இயற்றப்பட்டுள்ளன. அத்துடன் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதற்கான விதிகளும் இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.


இந்தச் சட்ட ஏற்பாடுகள் சகோதரத்துவத்தை உருவாக்காமல் இருக்கலாம்; ஆனால், அது திட்டமிட்டு அழிக்கப்படுவதைத் தடுப்பதற்காகவே இவை உள்ளன. எனவே, சட்டப்பூர்வமான பாதுகாப்புகள் இல்லாதது இங்குள்ள சவால் அல்ல. மாறாக, அவை சீராக அமல்படுத்தப்படாததே உண்மையான சவாலாகும். மக்கள் ஒருவருக்கொருவர் பாசம் கொள்ளுமாறு நீதிமன்றங்களால் கட்டாயப்படுத்த முடியாது. இருப்பினும், வெறுப்புணர்வு, மிரட்டல் மற்றும் சமமான குடியுரிமை மீதான தாக்குதல்கள் ஆகியவற்றிற்கு எதிராக நீதிமன்றங்களால் நடவடிக்கை எடுக்க முடியும். சட்டத்தால் சகோதரத்துவத்தை உருவாக்க முடியாது, ஆனால் சகோதரத்துவம் அழிக்கப்படுவதைத் தடுக்கவும் வேண்டும்.


சகோதரத்துவத்தைப் புறக்கணித்த கடந்த 75 ஆண்டுகளில் என்ன விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்று கேட்பது அவசியமானது. அரசின் சொந்தத் தரவுகள் நமக்கு என்ன சொல்கின்றன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைக் கைவிட்டு வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 9 லட்சத்தை எட்டியுள்ளது. வெளியேறுபவர்களில் பலர் வெற்றிகரமான தொழில்முனைவோர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் ஆவர். அவர்களின் முடிவுகளுக்குப் பல காரணிகள் இருந்தாலும், இந்த நிகழ்வின் அளவு ஒரு நியாயமான கேள்வியை எழுப்புகிறது. இத்தகைய முடிவுகளில் சமூகச் சூழலும் குடிமை நம்பிக்கையும் எத்தகைய பங்கை வகிக்கின்றன?


நீண்டகால சமூக மோதல்கள், செய்திகளில் அவை இடம்பெறுவது நின்ற பிறகும்கூட, பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்துகின்றன என்பதை வரலாறு காட்டுகிறது. இந்தியா இதை ஏற்கனவே அனுபவித்துள்ளது. 1980-களின் மத்தியில், நாட்டின் மிக உயர்ந்த தனிநபர் வருமானம் கொண்ட மிகவும் செழிப்பான மாநிலமாக பஞ்சாப் திகழ்ந்தது. ஆனால், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஒரு பத்தாண்டுகால தீவிரவாதமும் வகுப்புவாத மோதல்களும் அங்குள்ள முதலீட்டுச் சூழலைச் சீர்குலைத்தன. தனிநபர் வருமான வரிசையில் பஞ்சாப் முதலிடத்திலிருந்து பின்தங்கியது. 2014-15 மற்றும் 2022-23 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், 21 முக்கிய மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியில் அது 18-வது இடத்தைப் பிடித்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு பொருளாதாரரீதியானது மட்டுமல்ல, நச்சுத்தன்மை வாய்ந்த சூழல் சீராக பல தலைமுறைகள் தேவைப்படும்.


இதில் உள்ள முரண்பாட்டைப் புறக்கணிப்பது கடினம். இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாகவும், 2047-க்குள் முழுமையாக வளர்ந்த நாடாகவும் (விக்சித் பாரத்) மாற வேண்டும் என்று நாம் பேசுகிறோம். இருப்பினும், இத்தகைய லட்சியங்களைப் பலவீனப்படுத்தும் வகையிலான பதற்றமான சூழல் மற்றும் அவ்வப்போது தொடர்ந்து நிகழும் சட்டவிரோதச் செயல்கள் குறித்து பொது நிறுவனங்கள் போதுமான அக்கறை காட்டாத நிலையே பெரும்பாலும் காணப்படுகிறது. கும்பல் வன்முறை, குறிவைத்து மேற்கொள்ளப்படும் இடிப்பு நடவடிக்கைகள் மற்றும் மதரீதியான பகைமை உணர்வு இயல்பானதாக மாற்றப்படுவது ஆகியவை வெறும் சட்டம்-ஒழுங்குச் சிக்கல்கள் மட்டுமல்ல, அவை சகோதரத்துவ உணர்வின் தோல்விகளாக உள்ளது. இத்தகைய செயல்களுக்குத் தண்டனை வழங்கப்படாதபோது, ​​அது சிறுபான்மையினருக்கு மட்டுமல்லாமல், தங்கள் எதிர்காலத்தைத் திட்டமிடும் ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும், முதலீட்டாளருக்கும் மற்றும் குடும்பத்திற்கும் ஒரு குறியீடாகப் பார்க்கப்படுகிறது.


பிளவுபடுத்துதல், அதைப் பயன்படுத்துபவர்களுக்குத் தேர்தல் ஆதாயங்களைக் கொண்டு வந்திருக்கலாம். இருப்பினும், ஒரு தேசம் குறுகியகால அரசியல் ஆதாயங்களுக்காகத் தனது பிளவுகளை ஆழப்படுத்திக்கொண்டே இருந்துவிட்டு, பொருளாதார விளைவுகளைத் தவிர்க்க முடியும் என்று எதிர்பார்க்க முடியாது.


சகோதரத்துவம் என்பது முகவுரையில் எழுதப்பட்டு, தேசிய நிகழ்வுகளில் மேற்கோள் காட்டப்படும் ஒரு இலட்சியம் மட்டுமல்ல. அது சுதந்திரமும் சமத்துவமும் நிலைத்திருக்க அனுமதிக்கும் சமூக மூச்சு ஆகும். சகோதரத்துவம் இல்லாமல், எந்தவொரு பொருளாதாரமும், அதன் இலக்குகள் எவ்வளவு லட்சியமானதாக இருந்தாலும், உண்மையாகச் செழிக்க முடியாது. சகோதரத்துவம் இல்லாவிட்டால், சுதந்திரமும் சமத்துவமும் வெறும் வர்ணப் பூச்சுகளைப் போல மேலோட்டமானதாகவே இருக்கும் என்று அம்பேத்கர் எச்சரித்தார். நூற்றாண்டு காலமாக, அந்த வர்ணம் உரிந்து வருவதை நாம் பெரிதாகக் கவனிக்கவில்லை. ஆனால் இப்போது அதில் ஏற்பட்டுள்ள விரிசல்களை நாம் காணத் தொடங்கியுள்ளோம்.


அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் அந்த நான்கு நெறிமுறைகளையும் (நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்) ஒன்றாக இணைத்ததற்கு ஒரு காரணம் இருந்தது. நாமும் அவ்வாறே செயல்பட வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம்.


குரேஷி, இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 'ஆவணப்படுத்தப்படாத ஓர் அற்புதம்: மாபெரும் இந்தியத் தேர்தலின் உருவாக்கம்' என்ற நூலின் ஆசிரியர் ஆவார்.


Original Link: Former CEC S Y Quraishi writes: Constitution’s promise of fraternity matters more than ever

Share:

இந்தியாவில் துரித உணவுகளுக்கான, தடையற்ற விளம்பரங்களை முடிவுக்குக் கொண்டு வருதல் -அருண் குப்தா

அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் (ultra-processed food (UPF)) மற்றும் கொழுப்பு, சர்க்கரை, சோடியம் அதிகம் உள்ள (high in fat, sugar, and sodium (HFSS)) உணவுகளின் விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவது ஒரு பொது சுகாதாரத்திற்கு அவசியமான ஒன்றாகும்.


கொழுப்பு, சர்க்கரை, சோடியம் அதிகம் உள்ள (HFSS) உணவுகளின் விளம்பரங்களைக் கட்டுப்படுத்த, இந்திய அரசு சட்டங்களில் திருத்தம் செய்யத் திட்டமிட்டிருந்தாலும், அத்தகைய தயாரிப்புகள் தொடர்ந்து பரவலாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. இந்த உணவுகள் மிகவும் சுவையாகவும், சில சமயங்களில் அடிமையாக்கும் தன்மையுடனும் வடிவமைக்கப்பட்ட, தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் தொடர்புடைய உடல்நலப் பாதிப்புகளுக்கான சான்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவற்றின் விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவது, குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு அவை சென்றடைவதைக் கட்டுப்படுத்துவது இனி தவிர்க்க முடியாததாக இருக்கலாம்.


அரசியல் தொடர்பான ஒரு யூடியூப் (YouTube) காணொளியைப் பார்த்தாலோ, இன்ஸ்டாகிராம் ரீல்ஸை (Instagram Reels) ஸ்க்ரோல் செய்தாலோ அல்லது செய்தித்தாள் படித்தாலோ, நூடுல்ஸ், சிப்ஸ், பிஸ்கட், காலை உணவுக்கான தானிய உணவுகள் (cereals), சாக்லேட், இனிப்பு கலந்த பானங்கள் அல்லது பிற அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுப் (UPF) பொருட்களின் விளம்பரங்களை நீங்கள் காண நேரிடலாம். சமீபத்தில், இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு 'பொட்டலமிட ப்பட்ட' (baked) சிப்ஸ் பிராண்டிற்கான யூடியூப் விளம்பரம் ஒன்று வெளியானது. அந்த விளம்பரம், நுகர்வோரை ஈர்க்கும் வகையில், பொருளின் சீஸ் மற்றும் தக்காளி சுவைகளையும் அதன் "மொறுமொறுப்பையும்" (crunchiness) வலியுறுத்தியது. ஆனால், அந்தப் பொருள் மால்டோடெக்ஸ்ட்ரின் (maltodextrin), போன்றவை இயற்கையை ஒத்த சுவையூட்டிகள், சுவையூட்டும் பொருட்கள், உப்புக்கு மாற்றான பொட்டாசியம் குளோரைடு (KCl), அமிலத்தன்மையைச் சீராக்கும் பொருட்கள் (627, 631) மற்றும் குழம்பாக்கி - (emulsifier) (322) போன்ற மூலப்பொருட்களைக் கொண்ட ஒரு அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவு (UPF) தயாரிப்பு என்பதை அது வெளிப்படுத்தவில்லை. 'பொட்டலமிட ப்பட்டது' (baked) போன்ற குறிப்பிட்ட அம்சங்களை முன்னிலைப்படுத்திய அதே வேளையில், அதிக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளடக்கம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் இருப்பது போன்ற முக்கியமான உடல்நலம் சார்ந்த தகவல்களை அந்த விளம்பரம் மறைத்துவிட்டது. இத்தகைய சந்தைப்படுத்தல் நடைமுறைகள், இந்தத் தயாரிப்புகளுடன் தொடர்புடைய ஊட்டச்சத்து அபாயங்களை மறைத்து, ஆரோக்கியமானது என்ற தவறான எண்ணத்தை உருவாக்கக்கூடும்.


வாசகர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை நினைவுகூர முடிந்தாலும், ஊடகங்களில் வேறு சில உதாரணங்களும் உள்ளன. ஒரு பெண் திரைப்படப் பிரபலம், அதிக சர்க்கரை கொண்ட தயாரிப்பாக இருந்தபோதிலும், தனது மகனுக்கு பல தானியங்கள் கொண்ட, "மைதா இல்லாத சாக்லேட் தானியத்தை" (no-maida choco cereal) பரிந்துரைப்பதைக் காணலாம். நடிகர் குடும்பம் ஒன்று '12-தானியங்கள்' கொண்ட காலை உணவுத் தானியத்தை விளம்பரப்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு பிரபலமான திரைப்பட நடிகர் ஒரு பிஸ்கட்டை “ஒரு நல்ல தேர்வு” என்று அங்கீகரிக்கிறார். இருப்பினும், இந்தப் பொருட்களில் பெரும்பாலானவை சர்க்கரை, கொழுப்பு மற்றும்/அல்லது உப்பு அதிகமாகக் கொண்டிருப்பதால், இதுபோன்ற அங்கீகாரங்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் செய்திகள் குறித்து கேள்விகள் எழுகின்றன. இத்தகைய தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்கள் ஆரோக்கியம் குறித்த தவறான கண்ணோட்டத்தை உருவாக்குவதோடு, நுகர்வோரையும், குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரையும், சரியான தகவல்களின் அடிப்படையில் முடிவெடுக்கும் உரிமையைப் பறிக்கின்றன.


கட்டமைப்புகளை மறுஆய்வு செய்தல்


தற்போதுள்ள சட்டக் கட்டமைப்புகள் பொது நலனுக்குப் போதுமான அளவு சேவை செய்கின்றனவா என்பதை மறுஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை கொள்கை வகுப்பாளர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதும் இந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கமாகும். ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களின் விளம்பரங்களைத் திறம்பட ஒழுங்குபடுத்துவதற்குத் தெளிவான சட்ட விதிகள் தேவைப்படலாம்.


விளம்பரமானது, அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளை (UPFs) உட்கொள்வதற்கும் விளம்பரங்களுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. மேலும், இத்தகைய உணவுப் பழக்கம் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் அதிகரிப்பதோடு வலுவான தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இவ்வகை விளம்பரங்களில் பெரும்பாலும் குழந்தை நட்சத்திரங்கள் பயன்படுத்தப்படுவதோடு, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இருவரையும் கவரும் வகையிலான உணர்வுப்பூர்வமான செய்திகள் இடம்பெறுகின்றன; இது அத்தகைய தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்ற விருப்பத்தை உருவாக்குகிறது. 2024-ம் ஆண்டில், மூன்று பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் விளம்பரத்திற்காக 13.2 பில்லியன் டாலர் செலவிட்டன என்ற உண்மை, உணவுப் பொருள் விளம்பரங்களின் அளவையும் சக்தியையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. விளம்பரம் தேவையை வெறுமனே பிரதிபலிப்பதில்லை. அது தேவையை உருவாக்க உதவுகிறது. இந்தியாவில் மட்டும், ஒரு மாதத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான துரித உணவு (junk food) விளம்பரங்களுக்கு சுமார் ₹170 கோடி செலவிடப்பட்டுள்ளது.


போதைப்பழக்க அறிவியலில் கண்டறியப்பட்ட வழிமுறைகளைப் போன்றே, அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளை (UPFs) அதிகப்படியான நுகர்வை ஊக்குவிக்கக்கூடும் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் (UPFs) தொடர்புடைய உடல்நலக் கேடுகள், அவற்றின் தொழில்துறை வடிவமைப்பு மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், உணவுத் தொழில் இந்த உண்மையை மக்களுக்குத் தெரிவிக்கத் தவறுகிறது. சமீபத்தில், சான் பிரான்சிஸ்கோ நகரம் 10 முக்கிய அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகள் (UPFs) உற்பத்தியாளர்களுக்கு எதிராக ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது. இந்த நிறுவனங்கள் தங்கள் சந்தைப்படுத்தல் மூலம் குழந்தைகளைக் குறிவைத்ததாக அந்த வழக்கு குற்றம் சாட்டியது. மேலும், அவை மிகவும் கவர்ச்சிகரமான தயாரிப்பு விதிமுறைகளை உருவாக்கி, உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற உடல்நல அபாயங்களை போதுமான அளவு வெளிப்படுத்தத் தவறியதாகவும் அது குற்றம் சாட்டியது. மற்ற தீர்வுகளுடன், இந்த வழக்கு மேலும் ஏமாற்றும் சந்தைப்படுத்தல் நடைமுறைகளைத் தடுக்கவும், கடந்தகால தவறான விளம்பரங்களின் விளைவுகளைச் சரிசெய்ய சட்டத்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தியது.

ஒரு கொள்கை இடைவெளி


இந்திய அரசின் பொதுவான தொற்றா நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தேசிய பல்துறை செயல் திட்டம் 2017-2022 (National Multisectoral Action Plan (NMAP)), கொழுப்பு, சர்க்கரை, சோடியம் அதிகம் உள்ள (HFSS) கொண்ட உணவுகளின் விளம்பரங்களுக்குத் தடை/கட்டுப்பாடுகளை விதிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. பல முன்-பொட்டலமிடப்பட்ட உணவுகள் அதிக அளவில் பதப்படுத்தப்பட்டவை. அவற்றில் நிறங்கள் (colours), சுவைகள் (flavours), குழம்பாக்கிகள் (emulsifiers) மற்றும் இனிப்பூட்டிகள் (sweeteners) போன்ற சேர்க்கைகள் உள்ளன. மேலும், அவை பெரும்பாலும் கொழுப்பு, சர்க்கரை, சோடியம் அதிகம் உள்ள (HFSS) வகையைச் சேர்ந்தவை. இந்தப் பிரச்சினை கொள்கைரீதியான கவனத்தைப் பெற்றுள்ளது. பிப்ரவரி 2026-ல், பொட்டலமிடப்பட்ட உணவுகளுக்கான எச்சரிக்கை லேபிள்கள் குறித்த ஒரு பொதுநல மனுவிற்குப் பதிலளித்த இந்திய உச்சநீதிமன்றம், சுகாதார உரிமையைப் பாதுகாக்க பொட்டலம் செய்யப்பட்ட பொருட்களின் முன்புறத்தில் அடையாளமிடுவது அவசியம் என்று குறிப்பிட்டது. 2025-26-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் குறித்த கவலைகளை எடுத்துரைத்தது. பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொட்டலமிடப்பட்ட பொருட்களின் முன்புற எச்சரிக்கை லேபிள்கள், விளம்பரக் கட்டுப்பாடுகள் மற்றும் அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் (UPFs) வரி விதிப்பு உள்ளிட்ட வலுவான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 2024-ல், தவறான விளம்பரங்கள் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதை ஊக்குவிக்கக்கூடும் என்றும், அது கடுமையான உடல்நலப் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. தற்போதுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம் என்ற அங்கீகாரம் அதிகரித்து வருவதை இந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.


'தி லான்செட் சீரிஸ் ஆன் யுபிஎஃப்ஸ் அண்ட் ஹியூமன் ஹெல்த்' (The Lancet Series on UPFs and Human Health), நவம்பர் 2025-ல் மூன்று ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டது. அவை, பொட்டலமிடப்படாத உணவுப் பொருட்களை உட்கொள்வதற்கும், மோசமான உணவுத் தரம், உண்மையான உணவுகளுக்குப் பதிலாகப் புதிய உணவுகள் ஒதுக்கப்படுதல், மற்றும் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், வகை-2 நீரிழிவு நோய் மற்றும் பிற தொற்றா நோய்களின் அதிக ஆபத்து ஆகியவற்றுக்கும் உள்ள தொடர்பை அறிவியல் சான்றுகளுடன் முன்வைத்தன. உலகளாவிய மற்றும் இந்தியத் தரவுகள், அதிகரித்துவரும் அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவு (UPFs) நுகர்வு, உடல் பருமன் விகிதங்கள் உயர்வதுடன் ஒத்துப்போகிறது என்பதைக் காட்டுகின்றன. அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவு (UPFs) நுகர்வைக் குறைப்பதற்கான கொள்கைகளை உணவுச் சூழல்களில் வகுக்க வேண்டும் என்று 'தி லான்செட்' இதழ் வலுவாக வாதிட்டதுடன், கூடுதல் சான்றுகளுக்காகக் காத்திருக்காமல், கொள்கை வகுப்பாளர்கள் இப்போதே செயல்பட வேண்டும் என்று பல வல்லுநர்கள் நம்புகிறார்கள்.


உணவுச் சூழலில் சீர்திருத்தம் தேவை


இந்தியாவில் உள்ள குழந்தைகளும் இளம் பருவத்தினரும் தொலைக்காட்சி, டிஜிட்டல் தளங்கள், சமூக ஊடகங்கள், விளையாட்டு ஒளிபரப்புகள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்கள் மூலம் அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவு (UPFs) மற்றும் கொழுப்பு, சர்க்கரை, சோடியம் அதிகம் உள்ள (HFSS) உணவுகளுக்கான விளம்பரங்களுக்குத் தினமும் ஆளாகின்றனர். இந்தத் தொடர்ச்சியான மற்றும் நுட்பமான சந்தைப்படுத்தல், வணிக அடையாள  நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கும் வாழ்நாள் நுகர்வுப் பழக்கங்களை வடிவமைப்பதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுத் (UPFs) தொழில்துறையின் நோக்கம் தெளிவாக உள்ளது. இலாபத்திற்காக உண்மையான சமையல் அல்லது கலாச்சார உணவுகளைப் பின்னுக்குத் தள்ளுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குழந்தைகள் அல்லது இளைஞர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை, பள்ளிகள், பணியிடங்கள், திரையரங்குகள், பிற பொது இடங்கள் அல்லது வீட்டில்கூட அவர்கள் விரும்பத் தூண்டப்படும் உணவுகளிலிருந்து பிரிக்க முடியாது.


ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களின் தீவிரமான சந்தைப்படுத்தலால் நிறைந்திருக்கும் ஒரு சூழலில், ஊட்டச்சத்துக் கல்வி மற்றும் நடத்தை மாற்றத் திட்டங்கள் மட்டும் வெற்றிபெற முடியாது என்று 'தி லான்செட் சீரிஸ்' நிபுணர்கள் வாதிடுகின்றனர்.


இந்தச் சூழல் ஒரு முக்கியமான அரசியலமைப்புத் தத்துவத்தை வலியுறுத்துகிறது. பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள சூழலிலும், மக்கள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும்போதும், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதும், ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களின் சந்தைப்படுத்தலைக் கட்டுப்படுத்துவதும் அரசின் கடமையாகும். இத்தகைய விளம்பரங்களைக் கட்டுப்படுத்த இந்தியா 2017-ல் உறுதியளித்தது. ஆனால், இந்த இலக்கு இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இப்பிரச்சினையின் தீவிரத்தைக் கருத்தில் கொள்ளும்போது, ​​சந்தை சக்திகளோ அல்லது நிறுவனங்களின் சுய-கட்டுப்பாடோ இதற்குப் போதுமானதாக இருக்காது. எனவே, 2017-ல் திட்டமிடப்பட்டவாறு, விளம்பரச் சட்டங்களில் திருத்தம் செய்வதன் மூலம், அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவு (UPFs) மற்றும் கொழுப்பு, சர்க்கரை, சோடியம் அதிகம் உள்ள (HFSS) விளம்பரம் மற்றும் ஊக்குவிப்பு ஆகியவற்றின் மீது இந்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது அவசியமாகும்.


பள்ளிகளை, அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவு (UPFs) மற்றும் கொழுப்பு, சர்க்கரை, சோடியம் அதிகம் உள்ள (HFSS) உணவுகள் மற்றும் தவறான ஊட்டச்சத்துத் தகவல்கள் இல்லாத பாதுகாப்பான இடங்களாக மாற்ற விரும்பினால், பள்ளிக்கு வெளியே குழந்தைகளின் உணவுத் தேர்வுகளை வடிவமைக்கும் வணிகச் சூழலைப் புறக்கணிப்பது முரணானதாக அமையும். பள்ளிச் சூழலுக்கும் வெறும் அறிவுறுத்தல்கள் மட்டும் போதாது, பிரேசில் சமீபத்தில் மேற்கொண்டது போல தெளிவான கொள்கை வழிகாட்டுதல் தேவை. அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவு (UPFs) விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் மீது வலுவான கட்டுப்பாடுகள் தேவை என்று பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey) வலியுறுத்தியுள்ளது. சிலி முதல் மெக்ஸிகோ வரையிலான சர்வதேச அனுபவங்கள், தன்னார்வ சுய-கட்டுப்பாடு பெரும்பாலும் பயனற்றதாக இருப்பதையும், அதேசமயம் சட்டப்பூர்வமான கட்டாய நடவடிக்கைகள் அதிக பலனளிப்பதையும் காட்டுகின்றன. குழந்தைகளின் உணவுத் தேர்வுகளில் விளம்பரங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதால், பரந்த அளவிலான 'ஆரோக்கியத்திற்கான உரிமை'யின் ஒரு பகுதியாக விளம்பரங்கள் மீது வலுவான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.




ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களின் விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவதை, தொழில்துறைக்கு எதிரானதாகவோ அல்லது லாபத்திற்கு எதிரானதாகவோ பார்க்க வேண்டியதில்லை. உண்மையில், இது விளம்பரங்களுக்கான நிறுவனங்களின் செலவைக் குறைக்கக்கூடும். அத்துடன், குறைந்த அளவே பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் ஆரோக்கியமான உள்ளூர் சந்தைகளை நோக்கித் தங்கள் வளங்களை மாற்றியமைக்க நிறுவனங்களை ஊக்குவிக்கக்கூடும். இத்தகைய மாற்றம், எதிர்காலத்தில் நிலையான மற்றும் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட உணவு முறைகளை உருவாக்க உதவும்.


அருண் குப்தா ஒரு குழந்தைகள் நல மருத்துவர் ஆவார். இவர் 'நியூட்ரிஷன் அட்வகேசி இன் பப்ளிக் இன்ட்ரஸ்ட்' (NAPi) அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும், லான்செட் (Lancet) தொடர் வெளியீட்டின் இணை ஆசிரியராகவும் உள்ளார்.

Original Link: End the free rein of junk food advertising in India 


Share:

டிஎன்ஏ சான்றுகள் மற்றும் உரிமைகள் குறித்து . . .

 தந்தைவழி உறவை உறுதி செய்வதற்கான டிஎன்ஏ பரிசோதனை (DNA Test), இறுதி முயற்சியாக அனுமதிக்கப்பட்டாலும், அது மற்ற உரிமைகளை மீறக்கூடாது.


குழந்தைகள் 'சட்டவிரோதப் பிறப்பு' (illegitimate) என்ற களங்கத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக, முந்தைய இந்திய சாட்சியச் சட்டம்-1872 (Indian Evidence Act) மற்றும் பாரதிய சக்ஷ்ய அதினியம்-2023 (Bharatiya Sakshya Adhiniyam) ஆகியவை, தந்தைவழி உறவை உறுதிப்படுத்த விரும்பும் நபர் மீது இந்தப் பொறுப்பு  சுமத்தப்படுவதற்குப் பதிலாக, அதனை மறுக்கும் தரப்பினரின் மீது நிரூபிப்பதற்கான பொறுப்பைச் (burden of proof) சுமத்துகின்றன. இந்திய உச்சநீதிமன்றம், இது தொடர்பாக டிஎன்ஏ சான்றுகளால் எழும் சவால்களை முதன்முதலில் கௌதம் குண்டு-1993 (Goutam Kundu) வழக்கில் பரிசீலித்தது. அதில், டிஎன்ஏ பரிசோதனைகளை ஒரு வழக்கமான நடைமுறையாக உத்தரவிட முடியாது என்றும், வலுவான முகாந்திர வழக்கு நிரூபிக்கப்பட்டுள்ளதா என்பதை நீதிமன்றங்கள் முதலில் மதிப்பிட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. ஸ்ரீ பனார்சி தாஸ்-2005 (Shri Banarsi Dass) வழக்கில் இந்த நிலைப்பாட்டை அது மீண்டும் வலியுறுத்தியது. இவ்விரு வழக்குகளும் தடயவியல் ஆர்வத்தின் மீதான எந்தவொரு நாட்டத்தையும்விட, சட்டப்பூர்வத் தன்மைக்கான பாதுகாப்பை வலுப்படுத்தின. பின்னர், மூத்த அரசியல்வாதியான என்.டி. திவாரி தனது தந்தை என்று ரோஹித் சேகர் தொடுத்த வழக்கில், திவாரி தனது தனியுரிமை மீறப்படுவதாக வலியுறுத்திய போதிலும், டெல்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அந்தப் பரிசோதனைக்கு உத்தரவிட்டன. நந்தலால் வாசுதேவ் பட்விக்-2014 வழக்கில், நம்பகமான அறிவியல் சான்றுகள் ஒன்று சட்டரீதியான அனுமானத்திற்கு (legal presumption) முரணாக அமையும்போது, ​​நீதியின் நலனை முன்னிறுத்தினால் அறிவியல் சாட்சியமே மேலோங்கும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீபன்விதா ராய்-2014 வழக்கில், பரிசோதனையை மறுப்பது பாதகமான முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை அது ஏற்றுக்கொண்டது. இந்த இரண்டு உத்தரவுகளும் உண்மையான தேவையின் அடிப்படையிலான டிஎன்ஏ பரிசோதனைகளின் சட்டப்பூர்வத் தன்மையையும் உறுதிப்படுத்தின.




பின்னர், கே.எஸ். புட்டஸ்வாமி-2017 வழக்கில், மரபணுத் தரவுகளின் தனியுரிமை உட்பட தனியுரிமைக்கான உரிமையை, அரசியலமைப்பின் பிரிவு 21-ன் கீழ் ஒரு அடிப்படை உரிமையாக உச்சநீதிமன்றம் அங்கீகரித்தது. இது, தந்தைவழி உறவு தொடர்பான முந்தைய தீர்ப்புகளில் கருத்தில் கொள்ளத் தேவையில்லாத ஒரு புதிய கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியது. இதில், நீதிமன்றம் பின்வரும் மூன்று அம்சங்களைக் கொண்ட ஒரு மூன்று-நிலை பரிசோதனையை (threefold test) வகுத்தது. அவை,


  •  சட்டப்பூர்வத்தன்மை, (legality),  நியாயமான நோக்கங்கள் (legitimate aims) மற்றும்  விகிதாச்சாரம் (proportionality).


இந்த பரிசோதனை, அபர்ணா அஜிங்க்யா ஃபிரோடியா-2023 வழக்கில் பயன்படுத்தப்பட்டது. அந்த வழக்கில், டிஎன்ஏ பரிசோதனைகள் அவசியமாகவும் விகிதாச்சாரத்திற்கு உட்பட்டதாகவும் இருக்கும்போது மட்டுமே உத்தரவிடப்பட வேண்டும் என்றும், மற்ற ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு சர்ச்சையைத் தீர்க்க முடிந்தால் அவ்வாறு செய்யக்கூடாது என்றும் குறிப்பிட்டது. இவான் ரத்தினம்-2025 வழக்கில், தனியுரிமையும் அறிவும் முழுமையானவை அல்ல என்றும், நீதித்துறையானது களங்கம் மற்றும் அவசியம் ஆகியவற்றுக்கு இடையேயும் சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. 'CP vs AP (2026)' வழக்கின் தீர்ப்பானது, தந்தை யார் என்பது குறித்த சர்ச்சையை ஏற்கனவே உள்ள ஆவணங்களைக் கொண்டு தீர்க்க முடியாது என்றும், அதற்கு அறிவியல்பூர்வமான உறுதிப்படுத்தல் தேவை என்றும் கருதி, டிஎன்ஏ பரிசோதனைக்கு விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது. இதன் மூலம் அத்தீர்ப்பு மேற்கூறிய அனைத்து வாதங்களையும் ஒருங்கிணைத்தது. எனவே, 'புட்டாஸ்வாமி' (Puttaswamy) தீர்ப்புக்குப் பிந்தைய காலகட்டத்தில், அரசியலமைப்புச் சட்டமானது தனிநபரின் உடல் சார்ந்த தன்னாட்சியைப் (bodily autonomy) பாதுகாப்பதோடு, கட்டாய மரபணுத் தகவல் வெளிப்பாட்டையும் கட்டுப்படுத்துகிறது. இருப்பினும், தந்தை யார் என்பது குறித்த விவகாரமே நேரடியாகச் சர்ச்சைக்குரியதாக இருக்கும்போதும், அந்தச் சிக்கலைத் தீர்க்க வேறு எந்தச் சான்றுகளும் இல்லாதபோதும், மற்றும் அப்பரிசோதனை நீதியை நிலைநாட்ட உதவும்போதும் நீதிமன்றங்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிட முடியும். ஆக, டிஎன்ஏ பரிசோதனையை ஒரு 'இறுதித் தேர்வாக' (last resort) அமைப்பதன் மூலம், அறிவியல் பிழையற்றதாக இருக்கலாம் என்றாலும், ஒரு நபரின் உரிமைகளை மதிக்கும்போது மட்டுமே உண்மையை அறியும் முயற்சியானது நியாயமானதாக அமையும் என்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும்.


Original Link: ​Just truths: On DNA evidence and rights


Share:

தேசியத் தேர்வுகள் முகமையில் (NTA) காணப்படும் பொறுப்புணர்வின் குறைபாடு - ராகுல் வர்மா

தேசியத் தேர்வுகள் முகமை (National Testing Agency (NTA)) நாடாளுமன்றச் சட்டத்தின் மூலமாக அல்லாமல், 1860-ம் ஆண்டின் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (Societies Registration Act) கீழ் ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பாக 2017-ல் உருவாக்கப்பட்டது. இதன் பொருள், அது தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு எதிராக வரையறுக்கப்பட்ட பொறுப்புணர்வு தொடர்பான விதிமுறைகள் ஏதுமின்றி செயல்படுகிறது என்பதாகும்.


முந்தைய தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 21 அன்று 22.8 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் மீண்டும் நீட்-யூஜி (NEET-UG) தேர்வை எழுதினர். இதற்கு அளிக்கப்பட்ட எதிர்வினைகள் இரண்டு வழிகளில் அமைந்தன. முதலாவது சட்டரீதியான நடவடிக்கை (prosecutorial response) ஆகும். இதன்படி, 'பொதுத் தேர்வுகள் (முறையற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம்-2024'-இன் (Public Examinations (Prevention of Unfair Means) Act) கீழ் இவ்வழக்கு மத்திய புலனாய்வுத் துறையிடம் (Central Bureau of Investigation(CBI)) ஒப்படைக்கப்பட்டது. இரண்டாவது நிர்வாக ரீதியான நடவடிக்கை (administrative response) ஆகும். இதன்படி, நேற்று மறுதேர்வு நடத்தப்பட்டது மற்றும் தேர்வுக்கான கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது. இருப்பினும், சமரசம் செய்யப்பட்ட (பாதிக்கப்பட்ட) ஒரு வினாத்தாள் எப்படி நாடுதழுவிய அளவில் மருத்துவப் படிப்புச் சேர்க்கையைப் பாதிக்க முடியும் என்பது குறித்தோ, அல்லது அரசின் சொந்த நிறுவனரீதியான தோல்விகளுக்கான விளைவுகளை அரசு எவ்வாறு அணுகுகிறது என்பதை அந்த அமைப்புமுறை சார்ந்த தேர்வு எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பது குறித்தோ இந்த நடவடிக்கைகள் எதுவும் விவாதிக்கவில்லை.





தேசியத் தேர்வுகள் முகமையின் (NTA) பொறுப்பு


தேசியத் தேர்வுகள் முகமை (NTA) நாடாளுமன்றச் சட்டத்தின் மூலமாக அல்லாமல், 1860-ம் ஆண்டின் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்கீழ் ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பாக 2017-ல் உருவாக்கப்பட்டது. இதன் பொருள், அது தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு எதிராக வரையறுக்கப்பட்ட பொறுப்புணர்வு விதிமுறைகள் ஏதுமின்றி செயல்படுகிறது என்பதாகும். தேசியத் தேர்வுகள் முகமை (NTA), நீட்-யூஜி (NEET-UG) தேர்வை ரத்து செய்தபோது, ​​விண்ணப்பதாரர்களுக்கான அதன் அதிகாரப்பூர்வ கடமை என்பது பதிவுகளை அடுத்த கட்டத்திற்கு மாற்றுவது மற்றும் தேர்வுக்கான கட்டணத்தைத் (பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ₹1,700) திருப்பி அளிப்பது ஆகியவற்றுடன் மட்டுமே நின்றுவிட்டது. அந்த குறுகிய எல்லைக்கு அப்பால் உள்ள தோல்வியின் நிறுவனரீதியான விளைவுகள் அல்லது இழப்புகள் கணக்கில் கொள்ளப்படவில்லை.


நீட்-யூஜி (NEET-UG) தேர்வின் வடிவமைப்பு அந்தப் பொறுப்புணர்வு இடைவெளியை நேரடியாக அதிகரிக்கிறது. இத்தேர்வு நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரே கட்டமாக, ஒரே வினாத்தாளைக் கொண்டு நடத்தப்படுகிறது. மேலும், இதன் மதிப்பெண் நாட்டின் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்க்கைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அந்தத் தேர்வு கட்டமைப்பு பாதிக்கப்படும்போது, ​​அரசிடம் ஒரே ஒரு வழிமுறை மட்டுமே உள்ளது. அது தேர்வை ரத்து செய்துவிட்டு புதிய அமர்வை நடத்துவதுதான். ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் விதிமீறல் அல்லது பாதிப்பு, ஒட்டுமொத்த தேர்வையும் பாதிக்காமல் ஒரு குறிப்பிட்ட அளவிலான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துவதை உறுதிசெய்யும் வகையிலான மாற்று ஏற்பாடுகள் (fallback mechanisms) இதில் இல்லை. மேலும், விண்ணப்பித்தல், தேர்வு எழுதுதல் மற்றும் முடிவுகள் வெளியாதல் ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளி ஒரு நீண்ட நிர்வாகச் சுழற்சியாக மாறியுள்ளது. ஒவ்வொரு இடையூறும் அந்தச் சுழற்சியை மேலும் நீட்டிக்கிறது. அதேவேளையில், நிச்சயமற்ற தன்மையை விண்ணப்பதாரர்கள் மீது சுமத்துகிறது. ஒரே ஒரு வருடாந்திரத் தேர்வை மையமாகக் கொண்ட ஒரு அமைப்பில், ஒரு சிறிய முன்னேற்றம்கூட ஒரு முழு சேர்க்கை ஆண்டையும் மாற்றிவிடக்கூடும்.


அக்டோபர் 2025-க்கான தேசிய மருத்துவ ஆணையத்தின் (National Medical Commission’s (NMC)) இட ஒதுக்கீட்டு விவரங்களின்படி, 22 லட்சத்திற்கும் அதிகமான தேர்வர்களுக்கு சுமார் 1.26 லட்சம் MBBS இடங்களே உள்ளன. இந்த விகிதமானது, சேர்க்கைக்கான எந்த உத்தரவாதமும் இல்லாமல் ஏற்கனவே வளங்களைச் செலவழித்து, கணிசமான எண்ணிக்கையிலான தேர்வர்கள் எப்போதும் தங்களின் இரண்டாவது அல்லது மூன்றாவது முயற்சியில் இருப்பதை அமைப்புரீதியாக உறுதி செய்கிறது. அத்தகைய தேர்வர்களுக்கு, தேர்வு ரத்து செய்யப்படுவதால் ₹1,700 விண்ணப்பக் கட்டணம் மட்டுமே திரும்பக் கிடைக்கிறது. ஆனால், தேர்வுக்கான தயாரிப்பு ஆண்டில் பயிற்சி வகுப்புகள் மற்றும் தங்குமிடத்திற்காக அவர்கள் பல லட்சம் ரூபாயைச் செலவிட்டிருக்கலாம். திரும்பப் பெறப்படும் தொகைக்கும் உண்மையான செலவுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. நீட் தேர்வுத் தயாரிப்பிற்காகக் குடும்பங்கள் எவ்வளவு செலவிடுகின்றன என்பதைக் கண்காணிக்கும் அரசு ஆய்வு எதுவும் இல்லாததால், இச்சுமையை அரசு ஒருபோதும் முறையாகக் கணக்கிட்டதில்லை. ஆண்டு கல்வி நிலை அறிக்கை-2024 (ASER) அறிக்கை, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடையே நிலவும் தொடர்ச்சியான கற்றல் இடைவெளிகளை ஆவணப்படுத்துகிறது. இதன் பொருள், குறைந்த கல்வி மற்றும் நிதி வளங்களுடன் போட்டியில் நுழைந்த விண்ணப்பதாரர்களே, ரத்து செய்யப்பட்ட ஒரு சுழற்சியை உள்வாங்கிக்கொண்டு மீண்டும் தொடங்குவதற்கு மிகக் குறைந்த திறனைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதாகும்.


பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) சட்டம்-2024 (Public Examinations (Prevention of Unfair Means) Act), தேர்வு வினாத்தாள் கசிவில் ஈடுபடும் திட்டமிட்ட கும்பல்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிப்பதற்கான வழிமுறைகளை வழங்குகிறது. இருப்பினும், தேர்வு ரத்து செய்யப்படும்போது தேர்வர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான எந்தவொரு ஏற்பாட்டையும் இச்சட்டம் கொண்டிருக்கவில்லை. இது மறுதேர்வு எழுதுவதற்கான தானியங்கி உரிமையையும் உறுதிப்படுத்தவில்லை. மேலும், தேர்வு நடத்தும் அமைப்புக்கான எந்தவொரு பொறுப்புத் தரத்தையும் அறிமுகப்படுத்தவில்லை. தேர்வர்கள் எதிர்கொண்ட ஒரு பேரழிவுக்கு, சட்டமன்றம் முற்றிலும் வழக்குத் தொடரும் ஒரு கருவியைக் கொண்டு பதிலளித்தது. இதன் மூலம், விதிகளைப் பின்பற்றியவர்கள் மீது சுமத்தப்பட்ட கட்டமைப்புரீதியான விளைவுகளைச் சட்டத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டவையாகவே இருக்கின்றன.


நீட் தேர்வை கணினி அடிப்படையிலான தேர்வுக்கு (Computer-Based Testing (CBT)) மாற்றும் முன்மொழியப்பட்ட திட்டம், இந்தக் கட்டமைப்புச் சிக்கலைத் தீர்க்கவில்லை. ஏனெனில், ஜூன் 2024-இல், யுஜிசி-நெட் (UGC-NET) தேர்வின் வினாத்தாள் டார்க்நெட்டில் (darknet) தோன்றிய பிறகு அது ரத்து செய்யப்பட்டது. யுஜிசி-நெட் (UGC-NET) ஏற்கனவே அதே முகமையால் நிர்வகிக்கப்பட்ட ஒரு கணினி அடிப்படையிலான தேர்வாகவே இருந்தது. இந்தக் கசிவு அச்சிடப்பட்ட தாள்களில் இருந்து ஏற்படவில்லை. மாறாக, ஒரு விதிமீறலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட பரவலாக்கப்பட்ட கட்டமைப்பு இல்லாத ஒற்றை அமர்விலிருந்து ஏற்பட்டது. இதன் பொருள் என்னவென்றால், நீட் முறையை கணினி அடிப்படையிலான தேர்வுக்கு (CBT) மாற்றுவது, தோல்வியின் ஒற்றை நிலையை மாற்றாமல், விநியோக வழிமுறையை மட்டுமே மாற்றுகிறது.


அடுத்தகட்ட நடவடிக்கைகள்


அரசியலமைப்புப் பிரிவு 14, சட்டத்தின்முன் அனைவருக்கும் சமமான பாதுகாப்பை உறுதி செய்கிறது மற்றும் தன்னிச்சையான வடிவமைப்பையும் விகிதாசாரமற்ற விளைவுகளையும் கொண்ட அரசின் நடவடிக்கைகளைத் தடை செய்கிறது. அதே நேரத்தில், வழிகாட்டு நெறிமுறைகளின் பிரிவு 41 மற்றும் 46, கல்வியில் சம வாய்ப்பை உறுதி செய்வதற்கும், பின்தங்கிய பிரிவினரை கட்டமைப்பு ரீதியாக பாதுகாப்பதற்கும் அரசுக்கு ஒரு நேர்மறையான கடமையை விதிக்கின்றன. அனைத்து தேர்வர்களையும் முறையாக ஒரே மாதிரியாகக் கருதி, ஆனால் நிறுவனத் தோல்வியின் அனைத்துச் செலவுகளையும் அவற்றைச் சுமக்க மிகக் குறைந்த தகுதியுடையவர்கள் மீது சுமத்தும் ஒரு தேசிய நுழைவுத் தேர்வு கட்டமைப்பு, அந்த விதிகள் தடுக்க விரும்பும் ஒரு வகையான வடிவமைப்பாகும்.


மூன்று திருத்தங்கள் நேரடியாகப் பின்பற்றப்பட வேண்டும். முதலாவதாக, தேசிய நுழைவுத் தேர்வு முகமைக்கு (NTA) சட்டப்பூர்வமான அடிப்படை வழங்கப்பட வேண்டும். அதனுடன் தேர்வர்களுக்கான குறியிடப்பட்ட கடமைகளும், நிறுவனத் தோல்விக்கான அமல்படுத்தக்கூடிய விளைவுகளும் இருக்க வேண்டும். இரண்டாவதாக, நிறுவனத் தோல்வியின் விளைவாகத் தேர்வு ரத்து செய்யப்படும்போது, தேர்வுக் கட்டண வருவாயிலிருந்து நிதியளிக்கப்படும் ஒரு கட்டாய இழப்பீட்டு முறை தானாகவே செயல்படுத்தப்பட வேண்டும். மூன்றாவதாக, ஒவ்வொரு ஆண்டும் பல கட்டங்களாகத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். இது இடர்களைப் பல்வேறு தேர்வு அமர்வுகளுக்கு இடையே பகிர்ந்தளிக்க உதவும். இதன் மூலம், சமரசம் செய்யப்பட்ட ஒரு தேர்வு, தேர்வர்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவரின் வாய்ப்புகளையும் தகர்த்துவிடாது.


தற்போதைய நிலையில், இந்த மறுதேர்வு நிர்வாகரீதியாக இந்த அத்தியாயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆனால், சமரசம் செய்யப்பட்ட ஒரே ஒரு வினாத்தாள் 22 லட்சம் தேர்வர்களை மீண்டும் முதலில் இருந்து தொடங்க நிர்பந்திக்க முடியும் என்பதால், வினாத்தாளைக் கசியவிட்டது யார் என்பது மட்டுமல்ல பிரச்சினை, மாறாக அவர்கள் அவ்வாறு செய்தபோது, தேர்வு ஏன் இவ்வளவு முழுமையாகச் சீர்குலையும் வகையில் வடிவமைக்கப்பட்டது என்பதுதான் பிரச்சினை.


ராகுல் வர்மா ஒரு சமூகவியலாளர் மற்றும் சுதந்திரமான ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் இந்தியாவில் கல்வி, தொழிலாளர் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வு குறித்த தலைப்புகளில் எழுதி வருகிறார்.


Original Link:  The lack of accountability within the NTA


Share: