500 ஆண்டுகால முகலாய ஆட்சி : பாபர் எவ்வாறு இந்துஸ்தானைக் கைப்பற்றினார் என்பதை ஓர் நிபுணர் விளக்குகிறார். -சையத் அலி நதீம் ரேசவி

உள்ளூர் ஆதரவு கிட்டத்தட்ட இல்லாத நிலையிலும், மிகுந்த விரோதப் போக்கைக் கொண்ட முஸ்லிம் மக்களை எதிர்கொண்ட நிலையிலும், இந்தியாவிற்கு முற்றிலும் புதியதல்லாத ஒரு தொழில்நுட்பத்தைக் கையாண்ட நிலையிலும் பாபர் வெற்றி பெற்றார். அப்படியென்றால், அவர் எப்படி வெற்றி பெற்றார்?


சரியாக 500 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் (ஏப்ரல் 21), பானிபட் சமவெளியில் (தற்போதைய ஹரியானா) 12,000 வீரர்களைக் கொண்ட ஒரு சிறிய, தனித்து இயங்கிய படை, இப்ராஹிம் லோடியின் மாபெரும் படைகளைத் தோற்கடித்தது. இந்த வெற்றியாளரான ஜாஹிர்-உத்-தின் முகமது பாபர், முகலாயப் பேரரசின் நிறுவனராகப் பெரிதும் போற்றப்படுகிறார்.


இருப்பினும், இந்த நிகழ்வை நினைவுகூரும்போது, கற்பனாவாதக் கருத்துக்களை ஒதுக்கிவிட்டு, ஒரு முக்கிய வரலாற்றுப் புதிரை எதிர்கொள்வது இன்றியமையாதது. ஏறக்குறைய உள்ளூர் ஆதரவே இல்லாமல், மிகுந்த பகைமை கொண்ட முஸ்லிம் மக்களை எதிர்கொண்டு, இந்தியாவிற்கு முற்றிலும் புதியதல்லாத ஒரு தொழில்நுட்பத்தைக் கையாண்டபோதிலும் பாபர் வெற்றி பெற்றார். அப்படியென்றால், அவர் எப்படி வென்றார்? அதற்கான விடை, வெறும் படைபலத்தில் மட்டும் இல்லை. அந்தப் படைபலத்தை அவர் எத்துணை புதுமையான மற்றும் பயனுள்ள முறையில் பயன்படுத்தினார் என்பதில்தான் அது அடங்கியுள்ளது. மேலும், அவரது வலுவான உத்தியிலும் அது அமைந்துள்ளது. ஒவ்வொரு பலவீனத்தையும் அவர் ஒரு உத்திசார் நன்மையாக மாற்றிக்கொண்டார்.


ஒரு விரோதமான நிலம்


இந்திய முஸ்லிம் மக்கள் பாபரை ஒரு சக மதத்தினராக வரவேற்றனர் என்று கூறும் ரஷ்புரூக் வில்லியம்ஸ் போன்றோரின் பழைய கூற்றுகளுக்கு மாறாக, வரலாற்றுச் சான்றுகள் இதற்கு நேர்மாறாகக் காட்டுகின்றன. அது ஒரு வலுவான நிராகரிப்பைக் காட்டுகிறது. புகழ்பெற்ற சூஃபியான அப்துல் குத்தூஸ் கங்கோஹியும் அவரது வட்டத்தினரும் பாபரைக் கண்டு ஆழ்ந்த அச்சம் கொண்டிருந்தனர் என்பதை லத்தாயிஃப்-இ குதூசி (Lataif-i Quddusi) வெளிப்படுத்துகிறது. கர்னாலின் அஷ்ரஃப்கள் தங்கள் வீடுகளைக் கைவிட்டு, லோடிப் படையின் பின்னால் தஞ்சம் புகுந்தனர்.


பானிபட் போருக்குப் (1526) பிறகு, அப்துல் குத்தூஸ் சிறைப்பிடிக்கப்பட்டு, குதிரையின் பின்னால் கொடூரமாக இழுத்துச் செல்லப்பட்டு டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டார். பாபரின் படைகள் ஒரு தர்காவைத் தாக்கி, ஒரு நூலகத்தை எரித்ததாகக் கூறப்படுகிறது. 1526-க்கு முன்பிருந்தே குறைந்தது இரண்டு நூற்றாண்டுகளாக, முகலாயர்கள் இந்துஸ்தானத்தில் பண்பற்ற, காட்டுமிராண்டித்தனமான வெளியாட்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதனால், பாபர் இந்துக்களிடமிருந்து மட்டுமல்லாமல், தான் ஆள விரும்பிய அதே முஸ்லிம் சமூகத்திடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டார்.


இதனுடன் அவரது படைபலத்தின் எண்ணிக்கைப் பலவீனம் நிலைமையை இன்னும் கடினமாக்கியது. அவரது மொத்தப் படையில் சுமார் 10,000 முதல் 12,000 வீரர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் அனுபவம் வாய்ந்த பிரபுக்கள் 125 பேர் மட்டுமே இருந்தனர். பகைமை கொண்ட மக்களால் சூழப்பட்ட இத்தகைய ஒரு படை, சில வாரங்களுக்குள்ளேயே நசுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, பாபர் வியக்கத்தக்க வகையில் குறுகியகாலத்தில் பீகார் வரையிலான நிலப்பரப்பைக் கட்டுப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


துப்பாக்கிகள் பற்றிய கட்டுக்கதை


அவரது வெற்றிக்கு துஃபாங் (தீப்பொறித் துப்பாக்கிகள்) மற்றும் பீரங்கிகளே முக்கியக் காரணங்கள் என்று பலர் நம்புகிறார்கள். இந்தக் கருத்து கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், அது முழுமையாகச் சரியானதல்ல. ஆனால், பாபர் இந்தியாவிற்கு வெடிமருந்து ஆயுதங்களை அறிமுகப்படுத்தினார் என்ற கட்டுக்கதையை பேராசிரியர் இக்திதார் ஆலம் கானின் நுணுக்கமான ஆராய்ச்சி தகர்க்கிறது. போர்த்துகீசிய எழுத்தாளரான டுவார்டே பார்போசா (1515-18), குஜராத்திலும் பாமனி இராச்சியத்திலும் ஆர்க்பஸ் (15-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் ஒட்டோமான் பேரரசிலும் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை நீண்ட துப்பாக்கி) ஏந்திய காலாட்படையைக் கண்டார். போர்த்துகீசிய வல்லுநர்கள் தக்காண பீரங்கிப்படை தங்களுடையதைவிட மேலானது என்று கண்டறிந்ததாக ஃபாரியா டி சௌசா (சுமார் 1506) பதிவு செய்துள்ளார்.


சிக்கந்தர் லோடியின் ஆட்சிக்காலத்தைச் (1498-1516) சேர்ந்த ஆரண்யக் பர்வானின் சித்திரங்கள் நிறைந்த கையெழுத்துப் பிரதி ஒன்று, கோட்டைச் சுவர்களில் பீரங்கிகள் இருந்ததைத் தெளிவாகச் சித்தரிக்கிறது. மாசிர்-இ மஹ்மூத்ஷாஹி, கமான்-இ ராத் (தண்டர்போல்ட் வில்) வட்டமான கல் பந்துகளைச் சுடுவதாக விவரிக்கிறது. இது 15-ம் நூற்றாண்டு மால்வாவில் இருந்த பழமையான பீரங்கிகளுக்கான தெளிவான குறிப்பாகும்.


அப்படியானால், பாபர் புதிதாக எதை அறிமுகப்படுத்தினார்? அவர் மூன்று முக்கியமான மாற்றங்களைச் செய்தார். முதலாவதாக, அவர் திறந்தவெளிப் போர்களில் கைத்துப்பாக்கிகளை (ஆர்க்யூபஸ்கள்) கொண்டு வந்தார். 1526-க்கு முன்பு, இந்தியப் படைகள் முற்றுகைகளுக்காகவோ அல்லது நிலையான கடலோரப் பீரங்கிகளாகவோ பீரங்கிகளைப் பயன்படுத்தின. இரண்டாவதாக, அவரது கைத்துப்பாக்கி ஏந்திய காலாட்படை யானையின் மீது அமர்ந்து போரிடாமல், நடந்தே போரிட்டது. இது துப்பாக்கியின் துல்லியத்திலும் சுடும் வேகத்திலும் ஒரு முக்கியமான முன்னேற்றமாக அமைந்தது. மூன்றாவதாக, மற்றும் மிக முக்கியமாக, ஆரம்பகால பீரங்கிப் படையின் நிரந்தர பலவீனமாக இருந்த குதிரைப்படைத் தாக்குதல்களிலிருந்து தனது பீரங்கி வீரர்களைப் பாதுகாக்கும் ஒரு தற்காப்பு-தாக்குதல் வியூகத்தை அவர் வகுத்தார்.


பானிபட்டில், பாபர் பதப்படுத்தப்படாத தோலால் கட்டப்பட்ட சாதாரண வண்டிகளை நிறுத்தி, ஒரு நகரும் தடுப்பரணை உருவாக்கினார். ஒவ்வொரு வண்டி அணிக்கும் இடையில், 100 வீரர்கள் ஒற்றை வரிசையில் கடந்து செல்ல போதுமான அகலமான இடைவெளிகளை அவர் விட்டிருந்தார். வண்டிகளுக்குப் பின்னால், தனிப்பட்ட துப்பாக்கி வீரர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக அவர் துரா (கவசக் கேடயங்கள்) வைத்தார். ஒரு பக்கத்தில் கனமான வெண்கலப் பீரங்கிகளும் (ஃபரங்கி), மறுபக்கத்தில் இலகுரக பீரங்கிகளும் (ஸர்ப்-வா-ஸான்) நின்றன. இவற்றுக்குப் பின்னால், அவர் தனது பக்கவாட்டுப் இராணுவப் படைகளையும் (மைமானா மற்றும் மைசரா) மற்றும் மைய இருப்பு படையையும் அணிவகுத்தார். பாபர் தானே அதன் மையத்தில் இருந்தார். இருப்பு இராணுவப் படையின் பக்கவாட்டுகளில் "திரும்பும் குழுக்கள்" இருந்தன. இவை எதிரியிடமிருந்து விலகிச் சென்று, பின்னர் அவர்களின் பக்கவாட்டுகளில் பாய்ந்து தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட பிரிவுகளாகும்.


இந்த அமைப்பு துலுக்மா அணிவகுப்பு என்று அழைக்கப்பட்டது. இது 1514-ல் சல்திரானில் சஃபாவிட்களைத் தோற்கடித்த ஒட்டோமான்களிடமிருந்து ("ரம் நகரின் காஜிகள்-ghazis of Rum") பெறப்பட்டது. பாபர் இதை முதன்முதலில் 1507-ல் கந்தஹாரில் பயன்படுத்தினார். பானிபட்டில், அவர் தனது முகாமின் மூன்று பக்கங்களை நங்கூரமிட்டார். அவற்றில் இரண்டு அகழிகளுடனும், ஒன்று பானிபட் நகரை ஒட்டியும் அமைந்திருந்தது.


வண்டி மற்றும் பீரங்கிப் படையணிக்குள் நேருக்கு நேர் பாய்ந்து தாக்குவதே இப்ராஹிம் லோடிக்கு எஞ்சியிருந்த ஒரே வழி. இளம் வயதினரும் அனுபவமற்றவருமான இப்ராஹிம், தனது பிரம்மாண்டமான படையை அடர்த்தியான, நகர முடியாத ஒரு பெரும் திரளாகச் சுருக்கினார். அவர்கள் நெருங்கிய தூரத்தை அடைந்தபோது, ​​பாபரின் பீரங்கிகளும் தீப்பொறித் துப்பாக்கிகளும் அவர்களைப் படுகொலை செய்தன. அவர்களால் முன்னேறவோ பின்வாங்கவோ முடியவில்லை.


நாகரிகங்களின் மோதல் அல்ல


இருப்பினும், எந்தவொரு துல்லியமான வரலாற்று நினைவுகூரலும், பிரபலமான மறுவிளக்கங்களில் பெரும்பாலும் வேண்டுமென்றே மறைக்கப்படும் இரண்டு உண்மைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். முதலாவதாக, பாபர் மதவெறியின் காரணமாக இந்தியா மீது படையெடுக்கவில்லை. இப்ராஹிம் லோடியின் கொடுங்கோன்மைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்துகொண்டிருந்த பஞ்சாப் ஆளுநரான தௌலத் கான் லோடி மற்றும் மற்றொரு லோடி பிரபுவான ஆலம் கான் ஆகியோரின் அழைப்பின் பேரிலேயே அவர் வந்தார். இது டெல்லி சுல்தானியத்தின் ஆளும் வர்க்கத்திற்குள் நடந்த ஒரு வம்சப் போராட்டமாகும். தௌலத் கான், கூட்டணியின் அடையாளமாகத் தன் மகனைக்கூட பாபரின் அரசவைக்கு அனுப்பினார். இப்ராஹிம் ஒரு நீதியான ஆட்சியாளராக இருந்திருந்தால், அவருடைய சொந்தப் பிரபுக்கள் ஒரு வெளிநாட்டுப் படையெடுப்பாளரை அழைத்திருக்க மாட்டார்கள். பானிபட் போர் ஒரு அரசியல் சதியே தவிர, நாகரிகங்களின் மோதல் அல்ல.


இரண்டாவதாக, இது ஒருபோதும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மோதலாக இருந்ததில்லை. பானிபட்டில், பாபரின் படையில் மத்திய ஆசியாவைச் சேர்ந்த முஸ்லிம் வீரர்கள் இருந்ததைப் போலவே, இப்ராஹிம் லோடியின் படையிலும் சுல்தானியத்திற்குச் சேவை செய்த இந்து ராஜபுத்திரத் தலைவர்கள் இருந்தனர்.


இன்னும் குறிப்பாக, பாபர் மேவாரின் ராணா சங்காவை எதிர்கொண்ட கான்வா போரில் (1527), ராணாவின் கூட்டணியில் முக்கிய முஸ்லிம் தலைவர்கள் இடம்பெற்றிருந்தனர். மேவாட்டின் முஸ்லிம் ஆட்சியாளரான ஹசன் கான் மேவதி, ராணா சங்காவுடன் சேர்ந்து போரிட்டு உயிர்நீத்தார். இப்ராஹிமின் சகோதரரான மஹ்மூத் லோடியும், பாபருக்கு எதிரான ராஜபுத்திரக் கூட்டமைப்பில் இணைந்தார். பல முஸ்லிம் வீரர்கள் ராணாவின் கொடியின் கீழ் பணியாற்றினர். இதற்கு மாறாக, பாபரின் சொந்தப் படைகளில் இந்து கூட்டாளிகளும் இருந்தனர். இந்தப் பிரிவினைகள் மத அடையாளத்தால் அல்ல, அரசியல் விசுவாசத்தால் வரையறுக்கப்பட்டன.


பானிபட் அல்லது கான் போர்களை "முஸ்லிம் படையெடுப்பாளருக்கும் இந்து மன்னனுக்கும் இடையிலான போர்" என்ற கண்ணோட்டத்தில் சித்தரிப்பது ஒரு நவீனகாலப் பொருத்தமின்மையாகும். இது மதவாத வரலாற்றாசிரியர்களால் அடிக்கடி ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. 16-ம் நூற்றாண்டு, 21-ம் நூற்றாண்டின் அடையாள அரசியலின் அடிப்படையில் இயங்கவில்லை. பாபரின் சொந்த நினைவுக் குறிப்புகளான பாபர்நாமா, அவரது படையெடுப்பை இறைமறுப்பாளர்களுக்கு எதிரான ஒரு ஜிஹாத் என்று ஒருபோதும் விவரிக்கவில்லை. அவர் ஃபெர்கானாவிலிருந்து தப்பி ஓடிய ஒரு இளவரசர். அவர் ஒரு புதிய ராஜ்ஜியத்திற்காக ஏங்கிய அவர், தௌலத் கான் லோடி தனக்கு அளித்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார்.





நிலப்பரப்பின் மீதான நுட்பத்தின் வெற்றி


பானிபட்டில் பாபரின் வெற்றி என்பது, ஒரு பின்தங்கிய சுல்தானை வென்ற ஒரு நாகரிகப் படையெடுப்பாளரின் வெற்றியோ, மற்றொரு மதத்தை வென்ற இஸ்லாத்தின் வெற்றியோ, அல்லது ஒரு பூர்வீகக் குடிமகனை வென்ற ஒரு வெளிநாட்டவரின் வெற்றியோ அல்ல. இராணுவப் புரட்சி என்பது புதிய கருவிகளைச் சொந்தமாக்கிக் கொள்வது அல்ல, மாறாக அவற்றின் பயன்பாட்டை மறுபரிசீலனை செய்வதே என்பதைப் புரிந்துகொண்ட, நம்பிக்கையிழந்த, எண்ணிக்கையில் குறைந்த ஒரு வெளியாளின் வெற்றியாகும். தன்னை வெறுத்த ஒரு மக்கள் கூட்டத்தையும், தன்னைவிட்டுத் தப்பி ஓடிய ஒரு முஸ்லிம் மேட்டுக்குடியினரையும், துப்பாக்கிகள் ஏற்கெனவே அறியப்பட்டிருந்த ஒரு தொழில்நுட்பச் சூழலையும் அவர் எதிர்கொண்டார். ஆயினும், இரண்டே ஆண்டுகளில், அவர் பீகார் வரையிலான வட இந்தியாவைக் கைப்பற்றினார்.


முதல் பானிபட் போரானது, அரசியல் தனிமையை வென்ற இராஜதந்திர மேதைமையின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக நினைவுகூரப்பட வேண்டும். மேலும், அதைவிட முக்கியமாக, இது ஒரு மதப் போராக அல்லாமல், போட்டியிட்ட உயர்குடிப் பிரிவுகளுக்கு இடையேயான ஒரு அரசியல் மோதலாகவும் நினைவுகூரப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்த முகலாயப் பேரரசு, உருவ வழிபாட்டு எதிர்ப்பால் அல்ல, மாறாக சமயக் கலப்பு, நிர்வாகம் மற்றும் பண்பாட்டு மலர்ச்சியால் வரையறுக்கப்பட்டது. அதுவே நினைவுகூரத் தகுந்த உண்மையான ஆண்டுவிழாவாகும்.


நூலாசிரியர், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் இடைக்கால இந்திய வரலாற்றைக் கற்பிக்கிறார்.




Original Link: 500 years of Mughals: An Expert Explains how Babur came to conquer Hindustan.


Share:

குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்வதற்காக, போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை வலுப்படுத்த குஜராத் காவல்துறையின் புதிய செயற்கை நுண்ணறிவு கருவி எவ்வாறு உதவுகிறது?. -பிரெண்டன் தாபி



NARIT-AI :  Narcotics Analysis & RAG-based Investigation Tool -  போதைப்பொருள் பகுப்பாய்வு மற்றும் RAG அடிப்படையிலான விசாரணை கருவி.


சிக்கலான போதைப்பொருள் வழக்குகளைக் கையாள்வதில் சட்ட அமலாக்க முகமைகளுக்கு (law enforcement agencies) நேரடிப் பகுப்பாய்வு ஆதரவை வழங்குவதற்காக, நாரிட்-ஏஐ (NARIT-AI) சட்ட விதிகள், வழக்குச் சட்டங்கள் மற்றும் புலனாய்வு நடைமுறைகளை ஒருங்கிணைக்கும்.


கடந்த ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின்படி, 2020-ம் ஆண்டு முதல் குஜராத்தில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் சராசரியாக மூன்றில் ஒரு பங்கு வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது, ​​தண்டனையை உறுதி செய்வதற்காக, போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் (Narcotics Drugs and Psychotropic Substances (NDPS)) கீழ் கடுமையான வழக்குகளைப் பதிவு செய்ய காவல்துறைக்கு உதவும் வகையில், குஜராத் காவல்துறை செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஒரு கருவியை உருவாக்கியுள்ளது.


இந்த மாதத் தொடக்கத்தில், குஜராத் அரசு போதைப்பொருள் பகுப்பாய்வு மற்றும் மீட்டெடுப்பு-மேம்படுத்தப்பட்ட உருவாக்கம் (RAG) அடிப்படையிலான விசாரணைக் கருவியை (NARIT-AI) அறிவித்தது. போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டக் (NDPS) கட்டமைப்பின் கீழ் சிக்கலான போதைப்பொருள் வழக்குகளைக் கையாள்வதில் சட்ட அமலாக்க முகமைகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தக் கருவி, சட்ட விதிகள், வழக்குச் சட்டங்கள் மற்றும் விசாரணை நடைமுறைகளை ஒருங்கிணைத்து, புலனாய்வு அதிகாரிகளுக்கு (IO) நேரடிப் பகுப்பாய்வு ஆதரவை வழங்கும்.


இந்தக் கருவியின் உருவாக்கத்திற்கு என்ன வழிவகுத்தது? மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் அதிக குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தர இது காவல்துறைக்கு எவ்வாறு உதவும்? தெரிந்துகொள்ள வேண்டியவை:


செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்பு


நாரிட்-ஏஐ (NARIT-AI), மீட்டெடுப்பு-மேம்படுத்தப்பட்ட உருவாக்கம் (RAG) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. மீட்டெடுப்பு-மேம்படுத்தப்பட்ட உருவாக்கம் (RAG) என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு தொடர்பான கட்டமைப்பாகும். இது, பதில்களை உருவாக்குவதற்கு முன்பு நம்பகமான அறிவுத் தளங்களைக் குறிப்பிடுவதன் மூலம் ஒரு பெரிய மொழி மாதிரியின் (LLM) துல்லியத்தை மேம்படுத்துகிறது. இந்த விஷயத்தில், அந்த நம்பகமான அறிவுத் தளங்கள் என்பவை இந்தியாவில் உள்ள போதைப்பொருள் வழக்குகள் தொடர்பான சட்டங்கள், சுற்றறிக்கைகள், வழக்குகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளைப் பயன்படுத்துகிறது.


2026 ஜனவரி முதல், இதன் மேம்பாட்டுப் பணிகள் மூன்று மாதங்களில் நிறைவடைந்தன. நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் இந்தியாவின் உச்சநீதிமன்றம், பல்வேறு உயர்நீதிமன்றங்களின் முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில், புலனாய்வு அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய சரியான நடைமுறைகள் மற்றும் அதற்கான தொடர்புடைய விவரங்களைப் பெறுவதற்காக, குஜராத் முழுவதிலும் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சாகுபடிப் பயிர்களில் போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் பயிரிடுதல் தொடர்பான பறிமுதல் நிகழ்வுகளின் உண்மையான வழக்குகள், மீதான கள சோதனைகளுக்குக் கடைசி மாதம் செலவிடப்பட்டது.


நாரிட்-ஏஐ (NARIT-AI) கருவியானது, வதோதராவில் உள்ள அரசு ரயில்வே காவல்துறையில் (மேற்கு இரயில்வே) தற்போது பணியாற்றும் காவல் கண்காணிப்பாளரான (SP) அபய் சோனியால் உருவாக்கப்பட்டது. குஜராத் காவல்துறை, அமெரிக்காவின் சியாட்டிலை தலைமையிடமாகக் கொண்டதாகக் கூறப்படும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிர்வாகப் பயிற்சி புத்தொழில் நிறுவனமான கிராடியான்டே கிரியேட்டிவ் சர்வீசஸ் உடன் இணைந்து இந்தக் கருவியை உருவாக்கியது. இருப்பினும், இந்நிறுவனம் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குவதாகவும், அதன் சேவையகங்கள் இந்தியாவில் அமைந்துள்ளதாகவும் அபய் சோனி கூறினார்.


அபய் சோனியின் கூற்றுப்படி, “போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் (NDPS) சட்டத்தின் கீழ் நடைபெறும் எந்தவொரு விசாரணையிலும் மிக முக்கியமான விஷயம் ‘செயல்முறைக்கே முன்னுரிமை’ (primacy of procedure) அளிப்பதாகும். உங்களிடம் வலுவான அல்லது மறுக்க முடியாத சான்றுகள் இருந்தாலும், ஒரே ஒரு படியில்கூட, எங்கேனும் ஒரு குறைபாடு ஏற்பட்டால், சந்தேகத்தின் பலன் குற்றம் சாட்டப்பட்டவருக்கே அளிக்கப்படுகிறது. சட்டப்படி தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டிய பல வழக்குகளில், மக்கள் எளிதாகப் பிணை பெறுவதையும், குற்றமற்றவர் என விடுவிக்கப்படுவதையும்கூட கண்டிருக்கிறோம்.”


ஒவ்வொரு மாவட்டத்திலும், பெரும்பாலும் போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்ட (NDPS) வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற சிறப்புச் செயல்பாட்டுக் குழுக்களுடன் (special operations groups) இணைக்கப்பட்ட, ஆவணப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட காவல்துறை ஊழியர்களான “எழுத்தர்களின்” எண்ணிக்கை குறைவாக இருந்ததால், தாமதங்களும் பெருகிவரும் வழக்குகளும் அதிகரிக்கத் தொடங்கின. இவை சரிசெய்யப்பட வேண்டிய தெளிவான நிர்வாகக் குறைபாடுகளாக இருந்தன.


காவல்துறையில் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்துவது என்பது குறித்து 2025 டிசம்பரில்தான் கலந்துகொண்ட ஒரு அமர்வால் உத்வேகம் பெற்றதாக சோனி 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்'ஸிடம் கூறினார். அங்கு, டெக்சாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், கல்வித்துறையில் மீட்டெடுப்பு-மேம்படுத்தப்பட்ட உருவாக்கத்தின் (RAG) நடைமுறைப் பயன்பாடு குறித்த ஒரு செயல்முறையின் ஆய்வை முன்வைத்தார். அந்தப் பேராசிரியர், ஒரு ஆசிரியர் தணிக்கையைக் காட்டினார் என்றும், அதில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களைப் பற்றி அளித்த கருத்துகள் மீட்டெடுப்பு-மேம்படுத்தப்பட்ட உருவாக்க (RAG) அமைப்பில் உள்ளீடு செய்யப்பட்டு, ஒவ்வொரு ஆசிரியர் குறித்த தொகுக்கப்பட்ட அறிக்கை பெறப்பட்டது என்றும், அதன் அடிப்படையில் நிர்வாக முடிவுகள் எடுக்கப்பட்டன என்றும் சோனி கூறினார்.


இது எப்படி வேலை செய்கிறது?


பெரும்பாலான செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் இணையம் முழுவதும் அலசி ஆராயும் மற்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் போலல்லாமல், மீட்டெடுப்பு-மேம்படுத்தப்பட்ட உருவாக்கம் (RAG) ஆனது, கொடுக்கப்பட்ட வினாவிற்குத் தொடர்புடைய தீர்வுகளை உருவாக்குவதற்காக, தனக்கு அளிக்கப்படும் தரவுகளின் ஒரு குறிப்பிட்ட தரவுத்தளத்தை மட்டுமே தேடுகிறது. நாரிட்-ஏஐ (NARIT-AI) உருவாக்குநர்கள், போதை மருந்துகளை நிர்வகிக்கும் சட்டங்கள் மற்றும் பல்வேறு தீர்ப்புகள் குறித்த தரவுகளைக் கொண்டு இதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த பதில்களைப் பெறுவதற்காக, குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்டு ஒரு முதல் தகவல் அறிக்கையை இதில் எளிமையாகப் பதிவேற்ற முடியும் என்றும் கூறுகின்றனர்.


"நாங்கள் இந்த கட்டுப்படுத்தப்பட்ட தரவு நூலகத்தைப் பயன்படுத்தி, ஒரு மூடிய சூழலில் இந்த மாதிரியைப் பயிற்றுவித்துள்ளோம்," என்று சோனி கூறினார். "நாரிட்-ஏஐ (NARIT-AI) இந்தியச் சூழலில் தற்போதைய, திருத்தப்பட்ட சட்டங்களையும் நடைமுறைகளையும் மட்டுமே கருத்தில் கொள்வது ஒருபுறம் இருக்க, அது கற்பனைகளையும் நீக்குகிறது. அதாவது, அது தானாகவே மேற்கோள்களை உருவாக்குவதில்லை. மாறாக, தனக்குப் பயிற்சி அளிக்கப்பட்ட தூய உண்மைகளின் அடிப்படையில் மட்டுமே பதில்களை உருவாக்குகிறது," என்று அவர் மேலும் கூறினார்.


குறிப்பாக, சட்டச் சூழலில் பயன்படுத்தப்பட்டபோது, ​​மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பிற கல்விசார் கட்டுரைகளுக்குப் போலியான அல்லது இல்லாத மேற்கோள்களை உருவாக்கியது மட்டுமல்லாமல், ஒருபோதும் வழங்கப்படாத தீர்ப்புகளையும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் உருவாக்கிய நிகழ்வுகள் உள்ளன. மார்ச் மாதம் நடத்தப்பட்ட களச் சோதனைகளின்போது, ​​அந்த மூடிய அமைப்பு அதன் தரவுத்தளத்தில் உள்ள நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் மற்றும் தீர்ப்புகளுடன் இறுதி முடிவுகள் ஒத்துப்போவதை உறுதி செய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த அமைப்பைச் சோதித்துப் பார்ப்பதற்காக அவர்கள் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தையும் அணுகியுள்ளனர்.


நாரிட்-ஏஐ (NARIT-AI), அமலாக்கத் தரத்திலான இரட்டை அடுக்கு குறியாக்கம் (enforcement-grade double-layer encryption) மற்றும் சாண்ட்பாக்ஸ் அணுகுமுறையைப் (sandbox approach) பயன்படுத்துகிறது. மேலும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளின்படியும் இது சரிபார்க்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்த சமீபத்திய குஜராத் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து, இந்தச் செயலியானது குஜராத் காவல்துறைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு தனியார் செயற்கை நுண்ணறிவு அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் பொதுமக்களுக்கு அணுக முடியாததாக உள்ளது.


இந்தக் கருவி ஒரு நிலையான அமைப்பு அல்ல. சட்டங்கள் திருத்தப்படும்போதோ அல்லது பழைய சுற்றறிக்கைகளுக்குப் பதிலாக புதியவை வெளியிடப்படும்போதோ, தரவுத்தளமும் புதுப்பிக்கப்பட்டு, சமீபத்திய ஆவணங்களைப் படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படும்.


இந்த அமைப்பு பயன்படுத்த எளிதானது என்றும், ஒரு முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவேற்றி, மூன்று முறை கிளிக் செய்தால் மட்டும் போதும். குறிப்பிட்ட வழக்கின் தன்மைக்கேற்ப உருவாக்கப்படும் அறிவுறுத்தலின் பேரில் பதிலைப் பெறலாம் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உருவாக்கத்தில் உள்ள இந்தத் தயாரிப்பின் விவரங்கள், பதிவேற்றப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் புலனாய்வு அதிகாரி (IO) தேவையான வெளியீட்டின் அளவைத் தேர்ந்தெடுக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன.


வலுவான ஆதாரங்கள் உள்ள வழக்குகளில்கூட, வழிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படாத காரணத்தால் ஏற்படும் நடைமுறைத் தவறுகள், ஒருவரை விடுதலை செய்ய வழிவகுக்கும் என்பதை நேரடியாகக் கவனித்த சோனி, போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்ட (NDPS) வழக்குகளில் புலனாய்வு அதிகாரிகளுக்கு உதவும் ஒரு மூடிய அமைப்பு கருவியானது, விசாரணைகளை நடைமுறைகளுக்கு இணக்கமாக மாற்றுவதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், நீதிமன்றங்களில் எதிர் தரப்பு வழக்கறிஞர்களால் பயன்படுத்தப்படக்கூடிய வழக்கின் மீதான பலவீனங்களையும் அவர்களுக்கு சுட்டிக் காட்ட உதவும் என்று கூறினார். இது, அரசு வழக்கறிஞர் தலையிடுவதற்கு முன்பே, நாரிட்-ஏஐ (NARIT-AI) ஐ ஒரு சட்ட உதவியாளராகவும் செயல்பட வைத்தது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, நாரிட்-ஏஐ (NARIT-AI) அமைப்பானது, போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம் (NDPS), மூன்று குற்றவியல் சட்டங்கள் மற்றும் முந்தைய தீர்ப்புகளை மேற்கோள் காட்டுவதோடு மட்டுமல்லாமல், ஒரு “விசாரணைத் திட்டம்”, அதனை நிறைவு செய்வதற்கான ஒரு “காலக்கெடு”, செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை, ஒரு “ஆதார சரிபார்ப்புப் பட்டியல்”, ஒரு வரைவு “குற்றப்பத்திரிகை”, சாத்தியமான “வழக்குத் தரப்பின் பலவீனங்கள்” மற்றும் “எதிர் தரப்பு மறுப்புகள்”, அத்துடன் ஒரு “நீதிமன்றச் சுருக்கம்” ஆகியவற்றையும் வழங்க இயலும்.


ஒரு குறிப்பிட்ட முதல் தகவல் அறிக்கைக்கு (FIR) தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து விருப்பங்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரி காண முடியும் என்று சோனி தெரிவித்தார். இதன் மூலம் கிடைக்கும் முடிவு, அந்த குறிப்பிட்ட வழக்குக்கு மட்டுமே உரியதாக இருக்கும். வழக்குகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதால், ஒரு அதிகாரி எதிர்கொள்ளக்கூடிய ஒவ்வொரு வகை வழக்கும், ஏதேனும் ஒரு சமயத்தில் ஏற்கனவே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கக்கூடும். அதனால்தான் இது சாத்தியமாகிறது.”


குஜராத் காவல்துறைக்கும் கிராடியான்டே நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, நாரிட்-ஏஐ (NARIT-AI) அறிமுகப்படுத்தப்படும். அதே எண்ணிக்கையிலான பிராந்தியங்களில் உள்ள சுமார் ஐந்து குழுக்களுக்கு இந்த அமைப்பைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்றும், சுற்றியுள்ள அதிகார வரம்புகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் தங்கள் கேள்விகளை அங்கு அனுப்பி முடிவுகளைப் பெறலாம் என்றும் அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தனர்.


நிறுவனரீதியான குறைபாடுகள்


கடந்த மாதம் குஜராத் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, 2023-24 நிதியாண்டுக்கான இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (CAG) அறிக்கை, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை சேமிக்க முறையான சேமிப்பு வசதிகளை ஏற்படுத்தாதற்காகவும், போதைப்பொருள் தடுப்புச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படி போதைப்பொருட்களை விரைவாக அப்புறப்படுத்தாததற்காகவும் மாநில உள்துறையைக் கடுமையாகச் சாடியுள்ளது. ஒரு குறிப்பிட்ட வழக்கில், 114 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா எலிகளால் அழிக்கப்பட்டதாக குஜராத் காவல்துறை தலைமை கணக்குத் தணிக்கையாளரிடம் தெரிவித்த ஒரு வழக்கத்தை மேற்கோள் காட்டி, இந்தக் குறைபாடுகள் "பல நிலைகளில் பலவீனமான நிறுவனக் கட்டுப்பாடுகளையும் மேற்பார்வைக் கண்காணிப்பின்மையையும் எடுத்துக்காட்டுகின்றன" என்று அந்தத் தணிக்கை அறிக்கை குறிப்பிட்டது.


மேலும், கடந்த ஜூலை மாதம் மக்களவையில் நட்சத்திரக் குறியிடப்பட்ட கேள்விக்கு (starred question) அளித்த பதிலில், 2020 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின்கீழ் (NDPS), பதிவான வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் தண்டனை விகிதம் குறித்த விவரங்களை மத்திய அரசு வழங்கியது. குஜராத்தில், 2020-ல் 308 வழக்குகள் பதிவாகியிருந்தன. மேலும், தண்டனை விகிதம் 44.4%-ஆக இருந்தது. 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில், வழக்குகளின் எண்ணிக்கை முறையே 461 மற்றும் 508-ஆக இருந்த நிலையில், தண்டனை விகிதங்கள் முறையே 33.3% மற்றும் 25%-ஆக இருந்தன.



Original Link: How Gujarat Police’s new AI tool aims to make drug-related cases stronger to ensure convictions?.


Share:

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) நிலை என்ன? -குஷ்பூ குமாரி

முக்கிய அம்சங்கள் :


சமீபத்திய உலகப் பொருளாதார கண்ணோட்டத்தின் (World Economic Outlook (WEO)) படி, 2026-ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பு, சுமார் $4.15 டிரில்லியனாக (2025-ல் $3.92 டிரில்லியனாக இருந்தது) இருக்கும். அதேநேரத்தில், 2026-ம் ஆண்டில் இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $4.27 டிரில்லியனாக (2025-ல் $4 டிரில்லியனாக இருந்தது) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மாறாக, ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025-ல் $4.48 டிரில்லியனிலிருந்து 2026-ல் $4.38 டிரில்லியனாகக் குறையும்.


2022 செப்டம்பரில், இந்தியா இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி 5-வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்தபோது, ​​இந்தியாவின் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் வரலாற்றுப் பின்னணியின் காரணமாக, அந்தத் தருணம் ஒரு தனித்துவமான உணர்வுபூர்வமான முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தது.


கடந்த ஆண்டு மே மாதம், இந்தியா ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளதாக நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் அறிவித்தார். ஆனால், மூன்றாவது பெரிய நாடாக உருவெடுப்பதற்குப் பதிலாக, இந்தியா தற்போது ஆறாவது இடத்திற்குச் சரிந்துள்ளது.


சர்வதேச நாணய நிதியம் (IMF) அமெரிக்க டாலர் மதிப்பில் நாடுகளின் தரவரிசையைக் கணக்கிடும்போது, ​​அது இரண்டு தரவுகளைப் பயன்படுத்துகிறது. ஒன்று, ஒரு நாட்டின் உள்ளூர் நாணய மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் இரண்டு, டாலருடனான அதன் மாற்று விகிதத்தைப் பயன்படுத்துகிறது. இந்த இரண்டு அம்சங்களிலும், கடந்த பன்னிரண்டு மாதங்களில் இந்தியா குறிப்பிடத்தக்க பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது.


முதலாவதாக, இந்தியா பிப்ரவரி மாத இறுதியில் ஒரு புதிய அடிப்படையுடன் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பீடுகளைப் புதுப்பித்தது. இந்தப் புதிய மதிப்பீடுகள், முந்தைய மதிப்பீடுகள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பொருளாரத்தில் மிகைமதிப்பீடு செய்திருந்ததை வெளிப்படுத்தின. ரூபாய் மதிப்பில், 2025-26-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.357 டிரில்லியன் (அல்லது ஒரு லட்சம் கோடி) என்பதிலிருந்து ரூ.345 டிரில்லியனாகக் குறைக்கப்பட்டது.


இரண்டாவதாக, ரூபாய்-டாலர் பரிமாற்ற விகிதம் மாறியது. கடந்த ஓராண்டில் இந்திய ரூபாய், அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது தனது மதிப்பை வேகமாக மதிப்பிழந்துள்ளது. இதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், பிரிட்டிஷ் பவுண்ட் மற்றும் ஜப்பானிய யென் போன்ற பிற நாணயங்களுக்கு எதிராக டாலரே மற்ற முக்கிய நாணயங்களுக்கு எதிராகப் பலவீனமடைந்திருக்கும் வேளையில், இந்த பரிமாற்ற விகித வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது.


உதாரணமாக, 2025-ம் ஆண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), முந்தைய மதிப்பீடுகளின்படி $4.1 டிரில்லியனாக இருந்த நிலையில், புதிய மதிப்பீடுகள் அந்த அளவை $3.9 டிரில்லியனாகக் குறைத்துள்ளன. இந்த வீழ்ச்சியே ஜப்பான் இந்தியாவை முந்திச் செல்ல வழிவகுத்தது. மேலும், 2022-ல் இருந்ததை விட ($4.45 டிரில்லியன்) 2026-ல் ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ($4.38 டிரில்லியன்) குறைவாக இருந்தபோதிலும் இது நிகழ்ந்துள்ளது.


அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகளின்படி, 2026-ல் பின்னடைவு ஏற்பட்டபோதிலும், இந்தியா 2027-ல் நான்காவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை மீண்டும் பிடிக்கும். இருப்பினும், ஜெர்மனியை முந்தி மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறுவது 2031-ல் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா? 


பிப்ரவரி மாதத்தில், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI), 2011-12 ஆம் ஆண்டிலிருந்து 2022-23 ஆம் ஆண்டிற்கு அடிப்படை ஆண்டை (base year) மாற்றி, புதிய தேசிய வருமானக் கணக்குகளை வெளியிட்டது. கடைசியாக மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தொடர் 2015-ம் ஆண்டின் தொடக்கத்தில் திருத்தப்பட்டது.


மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது ஆண்டு பொருளாதார வளர்ச்சியை அல்லது ஒரு பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த அளவை மதிப்பிடுவதற்கான முக்கிய அளவீடு ஆகும். மேலும், 'அடிப்படை ஆண்டு' என்பது கணக்கீடுகளுக்கான தொடக்கப் புள்ளியாகச் செயல்படும் ஆண்டைக் குறிக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்திக் கணக்கீட்டிற்கான அடிப்படை ஆண்டு தற்போது 2022-23 ஆகும்.


வேறுவிதமாகக் கூறினால், 2022-23-ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஒரு “அடிப்படை ஆண்டாக” பயன்படுத்தப்படுகிறது. அதன் மீதுதான் அடுத்தடுத்த ஆண்டுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. இது போன்ற திருத்தம் 8-வது முறையாகச் செய்யப்படுகிறது.


ஒரு முக்கிய நடவடிக்கையாக, புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தொடரானது, ஒற்றைப் பணவீக்கக்-காரணி முறையை (single-deflator method) முற்றிலுமாகப் பயன்படுத்தாமல், அதற்குப் பதிலாக இரட்டைப் பணவிறக்க (double-deflation) முறையைப் பயன்படுத்துகிறது. இதன் பொருள், அது உள்ளீடுகள் மற்றும் வெளியீடுகள் இரண்டையும் அவற்றின் சொந்த பணவீக்க விகிதங்களைப் பயன்படுத்தித் தனித்தனியாகச் சரிசெய்கிறது. மேலும், பணவீக்கக் காரணிகளும் மிக நுணுக்கமான நிலையில் பயன்படுத்தப்படுகின்றன. இது உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை மிகவும் துல்லியமாக அளவிட வழிவகுக்கிறது.









Original Link: What is the status of India’s GDP?


Share:

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், அகவிலைப்படி (DA), அகவிலை நிவாரணம் (DR) ஆகியவை உரிமை, சலுகை அல்ல என்று ஏன் தீர்ப்பளித்தது? -மன்ராஜ் கிரேவால் ஷர்மா

நிலுவையில் உள்ள அகவிலைப்படி (Dearness Allowance (DA)) மற்றும் அகவிலை நிவாரண (Dearness Relief (DR)) தவணைகளை வழங்குவதில் மாநில அரசு தாமதம் செய்ததையும், ஓய்வூதியதாரர்களின் வயதின் அடிப்படையில் நிலுவைத் தொகையைப் பிரித்து வழங்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தையும் மனுதாரர்கள் எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருந்தனர்.


பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய 90 பக்கத் தீர்ப்பு, பஞ்சாபில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் உரிமைகளை வலுப்படுத்தியுள்ளது. அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவை விருப்பத்தின் பேரில் வழங்கப்படும் சலுகைகள் அல்ல, மாறாக அவை செயல்ப்படுத்தக்கூடிய உரிமைகள் என்றும், சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கட்டமைப்புகளின் ஒரு பகுதியாகவும், பணவீக்கத்துடன் இணைக்கப்பட்டவை என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஏப்ரல் 8 அன்று வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில், நீதிபதி ஹர்பிரீத் சிங் பிரார், பஞ்சாப் மாநில மின்சாரக் கழகம் லிமிடெட் மற்றும் லூதியானா மாநகராட்சி ஆகியவற்றின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தாக்கல் செய்த மூன்று நிதிப் பேராணை  மனுக்களைத் தள்ளுபடி செய்தார். நிலுவையில் உள்ள அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) தவணைகளை வழங்குவதில் மாநில அரசு காட்டிய தாமதத்தையும், ஓய்வூதியதாரர்களின் வயதின் அடிப்படையில் நிலுவைத் தொகையைப் பிரித்து வழங்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தையும் மனுதாரர்கள் எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருந்தனர்.


இந்தத் தீர்ப்பு, அரசு சீராகச் செயல்பட வேண்டும், ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தக் கூடாது என்றும் அனைத்து ஊழியர்களையும் ஓய்வூதியதாரர்களையும் சமமாக நடத்தப்பட  வேண்டும் என்பதை வலியுறுத்தி, நிர்வாகம் குறித்த ஒரு பரந்த செய்தியையும் அனுப்புகிறது.


இந்த சர்ச்சை எதைப் பற்றியது?


6-வது பஞ்சாப் ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பஞ்சாப் அரசு செயல்படுத்தியதை மையமாகக் கொண்டு இந்த வழக்கு அமைந்தது. 2021-ல் மாநில அரசு இந்தப் பரிந்துரைகளை முறையாக ஏற்றுக்கொண்டு, அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) விஷயத்தில் “ஒன்றிய அரசின் முறையைப்" பின்பற்ற ஒப்புக்கொண்ட போதிலும், பல தவணைகள் செலுத்தப்படாமல் இருந்தன அல்லது தாமதமாகின.


2025-ல், நிலுவைத் தொகையைப் படிப்படியாக வழங்குவதற்காக, ஓய்வூதியதாரர்களை வயது அடிப்படையிலான பிரிவுகளாகப் பிரித்து, அரசு ஒரு "அலுவல்முறைக் கலைப்பு திட்டத்தை" (liquidation plan) அறிமுகப்படுத்தியது. மூத்த ஓய்வூதியதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் இளைய ஓய்வூதியதாரர்கள் நீண்டகாலம், சில சமயங்களில் பல ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.


அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் கொடுப்பனவுகளில் ஏற்பட்ட தாமதமும், வயது அடிப்படையிலான சமத்துவத்திற்கான அரசியலமைப்பு உத்தரவாதங்களை மீறுவதாக மனுதாரர்கள் வாதிட்டனர்.


கொள்கை சார்ந்த விஷயங்களில் நீதிமன்றம் என்ன தீர்ப்பை வழங்கியது?


அகவிலைப்படி (DA), அகவிலை நிவாரணம் (DR) மீதான தீர்ப்புகள் கொள்கைக்குள்  வருவதால், அவை நீதித்துறை ஆய்வுக்கு அப்பாற்பட்டவை என்ற அரசின்வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. கொள்கை முடிவுகள் தன்னிச்சையாகவோ அல்லது அரசியலமைப்பின் 14, 16 மற்றும் 21 ஆகிய பிரிவுகளின் கீழ் உள்ள அடிப்படை உரிமைகளை மீறும்போதோ நீதிமன்றங்கள் தலையிடலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


செயலற்ற தன்மையையோ அல்லது சமமற்ற நடத்தையையோ நியாயப்படுத்த, அரசாங்கம் "கொள்கையை" ஒரு காரணமாக பயன்படுத்த முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு  கோடிட்டுக் காட்டியது.


மாநிலம்  ஒன்றிய  அரசின் வழிமுறைக்குக் கட்டுப்பட்டதா?


ஆம். பஞ்சாப், ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, ஒன்றிய அரசின் வழிமுறையை பின்பற்ற தேர்ந்தெடுத்தவுடன், அதை முழுமையாகச் செயல்படுத்த சட்டப்பூர்வமாகக் கடமைப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இதில் அகவிலைப்படியின் விகிதம், கணக்கீட்டிற்குப் பயன்படுத்தப்படும் சூத்திரம் மற்றும் திருத்தங்களின் நேரம் ஆகியவற்றை ஒப்பிடுவதும் அடங்கும். எந்தவொரு பகுதியளவு அல்லது தாமதமான செயலாக்கமும், ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டமைப்பிலிருந்து விலகுவதற்குச் சமம் என்று நீதிமன்றம் கூறியது.


ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், அதன் பலன்கள் உரிமையாகவே கிடைக்கும், அவற்றை பாகுபடுத்திப் பயன்படுத்த முடியாது என்ற உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.


நிதி நெருக்கடிகள் தாமதத்தை நியாயப்படுத்த முடியுமா?


இதற்கு நீதிமன்றம் எதிர்மறையாகப் பதிலளித்தது. அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம்த் தொகையை (DR) மறுப்பதற்கோ அல்லது காலதாமதப்படுத்துவதற்கோ நிதி நெருக்கடியை ஒரு பொதுவான காரணமாகப் பயன்படுத்த முடியாது என்று நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.


அகவிலைப்படியை (DA) பணவீக்கத்தை ஈடுசெய்வதற்கான ஒரு வழிமுறை என்று விவரித்த நீதிமன்றம், அதை நிறுத்தி வைப்பது ஒரு அரசின் கடமைகளைச் சீர்குலைக்கும் என்று கூறியது. மேலும், பஞ்சாபின் நிதி நிர்வாகத்தை விமர்சித்த முந்தைய தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டியை நீதிமன்றம், இது போன்ற வாதங்களை நிராகரித்தது.


"அலுவல்முறைக் கலைப்பு" (liquidation plan) திட்டத்திற்கு என்ன ஆனது?


பிப்ரவரி 18, 2025 தேதியிட்ட ஓய்வூதியத் திட்டத்தை அரசியலமைப்புக்கு முரணானது எனக் கூறி நீதிமன்றம் ரத்து செய்தது.


அனைத்து ஓய்வூதியதாரர்களும் ஒரே சீரான பிரிவினர் என்றும், தவணை முறையில் பணம் வழங்குவதற்காக அவர்களை வயது வாரியாகப் பிரிப்பது தன்னிச்சையானது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பணவீக்கம் அனைத்து ஓய்வூதியதாரர்களையும் சமமாகப் பாதிக்கிறது என்றும், செயற்கையான பிரிவுகளை உருவாக்குவது அரசியலமைப்பின் 14-வது பிரிவின் கீழ் உள்ள சமத்துவ உரிமையை மீறுகிறது (right to equality) என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.


ஏற்கனவே தங்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகைக்காக இளம் ஓய்வூதியதாரர்களைப் பல ஆண்டுகள் காத்திருக்க வைப்பதாகவும் இந்தத்திட்டம் விமர்சிக்கப்பட்டது.


ஊழியர்களிடையே உள்ள  சமத்துவம் என்றால்  என்ன?


மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து (Consolidated Fund) பெறும் அனைத்து ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.


அகில இந்திய சேவை அதிகாரிகள் போன்ற உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரண (DR) பலன்களை வழங்கி, மற்றவர்களுக்கு அதை மறுக்கவோ அல்லது தாமதப்படுத்தவோ அரசால் முடியாது என்று நீதிமன்றம் கூறியது. அதுபோன்ற எந்தவொரு பாகுபாடும் பகுத்தறிவு அடிப்படையற்றது மற்றும் அரசியலமைப்புரீதியாக அனுமதிக்க முடியாதது என்று நீதிமன்றம் கூறியது.




இந்தத் தீர்ப்பு மனுதாரர்களைத் தாண்டி மற்றவர்களுக்கும் பொருந்துமா?


ஆம். ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்தத் தீர்ப்பு "தனிநபர் மீதான நடவடிக்கை" (in rem) அடிப்படையில் பொருந்தும் என்று நீதிமன்றம் கூறியது. இது நீதிமன்றத்தை அணுகியவர்களுக்கு மட்டுமல்லாமல், அதேநிலையில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும்.


இது மாநிலம் முழுவதும் மிகப் பெரிய குழுவினருக்கு இந்த உயர்வு பயனளிப்பதை உறுதி செய்கிறது.


நீதிமன்றம் என்ன வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது?


நீதிமன்றம் ஒரு தெளிவான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. நிலுவையில் உள்ள அனைத்து அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலைநிவாரணத் (DR) தவணைகளையும் ஜூன் 30, 2026-க்குள் ஒன்றிய அரசின் விகிதாச்சாரப்படி வழங்குமாறு மாநில அரசு மற்றும் அதன் கழகங்களுக்கு உத்தரவிட்டது.


மேலும், 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் முறையிலேயே அனைத்து ஓய்வூதிய நிலுவைத் தொகைகளும் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன் மூலம், படிப்படியாக (staggered system) வழங்கப்பட்ட முறை நடைமுறையில் நீக்கப்பட்டுள்ளது.


இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதிசெய்து, ஜூலை 2, 2026-க்குள் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு தலைமைச் செயலாளர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.


Original Link: Why the Punjab and Haryana High Court ruled that DA, DR are a right, not a favour?.


Share:

இந்தியாவின் முதல் 3D சிப் பேக்கேஜிங் ஆலை — தொழில்நுட்பம் மற்றும் குறைமின்கடத்திகள். -ரோஷ்னி யாதவ்

இந்தியாவின் முதல் 3D சிப் பேக்கேஜிங் ஆலை ஒடிசாவில் தொடங்கப்பட்டது. ஆலை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? 3D கண்ணாடி குறைமின்கடத்தி தொழில்நுட்பம் என்றால் என்ன மற்றும் குறைமின்கடத்திகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை? 


தற்போதைய செய்தி :


இந்தியாவின் வளர்ந்துவரும் குறைமின்கடத்தித்துறையின் இலக்குகளுக்கு  ஊக்கமளிக்கும் வகையில், ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி மற்றும்  ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் புவனேஸ்வரில் இந்தியாவின் முதல் மேம்பட்ட 3D சிப் பொதியிடும் ஆலைக்கு அடிக்கல் நாட்டினர். இந்தச் சூழலில், 3D கண்ணாடி குறைமின்கடத்தித் தொழில்நுட்பத்தைப் பற்றி அறிந்துகொள்வோம்.


 ஏறத்தாழ அனைத்து மின்னணுச் சாதனங்களிலும் பயன்படும் குறைமின்கடத்திகள் (Semiconductors) தற்போது ‘புதிய எண்ணெய்’ (New Oil) போல முக்கியத்துவம் பெற்று வருவதாலும், அவற்றின் உற்பத்தி மற்றும் விநியோக வலைப்பின் ஒரு பங்கைத் தமதாக்கிக்கொள்ளும் நாடுகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு வருவதாலும், குறைமின்கடத்திகள் குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் அறிந்துகொள்வது முக்கியமானதாகும்.


முக்கிய அம்சங்கள்:


1. இந்தத்திட்டமானது, அமெரிக்காவைச் சேர்ந்த 3D Glass Solutions Inc நிறுவனத்தால்,   இந்தியத் துணை நிறுவனமான Heterogeneous Integration Packaging Solutions Pvt Ltd மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு Intel உள்ளிட்ட நிறுவனங்கள் நிதியுதவி அளிக்கின்றன. Intel நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி லிப்-பு டான் இந்த விழாவில் காணொளி வாயிலாகக் கலந்துகொண்டார்.


2. கடந்த ஆண்டு இந்திய குறைமின்கடத்தி இயக்கத்தின் (India Semiconductor Mission (ISM)) கீழ் ரூ.1,934 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் பெற்ற இந்த ஆலை, ஆண்டுக்கு 70,000 கண்ணாடி பேனல்களையும், 5 கோடி ஒருங்கிணைக்கப்பட்ட அலகுகளையும் உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று முதலமைச்சர் மோகன் சரண் மாஜி கூறினார். மாநிலத்தில் இந்திய குறைமின்கடத்தி இயக்கத்தின் கீழ் ஒப்புதல் பெற்ற இரண்டு ஆலைகளில் இதுவும் ஒன்றாகும் என்றும்,  13,000 மேம்பட்ட 3DHI தொகுதிகளையும் பெற்றுள்ளது என்றும் மாஜி குறிப்பிட்டார்.


குறைமின்கடத்திக்கான இந்திய-அமெரிக்க கூட்டாண்மை


2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 9 அன்று, குறைமின்கடத்தி விநியோகச் சங்கிலி வாய்ப்புகளை ஆராய்வதற்காக இந்தியாவுடன் ஒரு "புதிய கூட்டாண்மையை" அமெரிக்கா அறிவித்தது. இதில், இந்தியாவின் தற்போதைய குறைமின்கடத்திச் சூழலமைப்பு, ஒழுங்குமுறைக் கட்டமைப்பு, பணியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்புத் தேவைகள் ஆகியவற்றின் "விரிவான மதிப்பீடு" அடங்கும்.


முப்பரிமாண கண்ணாடி குறைமின்கடத்தி தொழில்நுட்பம் (glass semiconductor technology) என்றால் என்ன?


1. 3D கண்ணாடி குறைமின்கடத்தி தொழில்நுட்பம் என்பது, மின் கூறுகளின் உயர் செயல்திறன் கொண்ட முப்பரிமாண ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக, முக்கியத்துவம் வாய்ந்த கண்ணாடித் தளங்களைப் பயன்படுத்தும் ஒரு மேம்பட்ட சிப் செயல்முறையாகும்.


2. பாரம்பரிய சிலிக்கானைப் போல் இல்லாமல், கண்ணாடியானது மேம்பட்ட ரேடியோ அதிர்வெண் செயல்திறன், குறைந்த மின் இழப்பு மற்றும் செயலற்ற கூறு ஒருங்கிணைப்பிற்கான மேம்பட்ட வெப்ப நிலைத்தன்மை ஆகியவற்றை வழங்குகிறது. புவனேஸ்வரில் உள்ள ஆலை இந்த சிப்களை ஒருங்கிணைத்து பொதிப்படுத்தும் (package).



குறைமின்கடத்திகள் என்றால் என்ன, அதன்  முக்கியத்துவம் என்ன?


1. தற்கால குறைமின்கடத்திகளில் பெரும்பாலானவை ஒருங்கிணைந்த சுற்றுகள் (Integrated Circuits) ஆகும். இவை குறைமின்கடத்தி 'சிப்கள்' என்றும் என்றும் அழைக்கப்படுகின்றன. அடிப்படையில் இவை டிரான்சிஸ்டர்கள், டையோடுகள், மின்தேக்கிகள், மின்தடையங்கள் மற்றும் அவற்றுக்கிடையேயான எண்ணற்ற இணைப்புகளைக் கொண்ட மிகச்சிறிய மின்னணு சுற்றுகளின் தொகுப்பாகும். இவை சிலிக்கான் தகட்டின் மீது அடுக்கப்பட்டிருக்கும்.


2. குறைமின்கடத்திகள், கடத்திகளுக்கும் மின்காப்பான்களுக்கும் இடையில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. தாமிரம் போன்ற கடத்திகள் மின்சாரத்தை எளிதாக கடத்த அனுமதிக்கின்றன. கண்ணாடி போன்ற மின்காப்பான்கள் அதைத் தடுக்கின்றன. ஆனால், குறைமின்கடத்திகள் கட்டுப்படுத்தப்பட்ட கடத்தும்திறனை வெளிப்படுத்துகின்றன.


3. குறைமின்கடத்திகள் அவற்றின் இயல்பு நிலையில் மின்சாரத்தை பலவீனமாகக் கடத்துகின்றன. அவற்றுடன் சில குறிப்பிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டு, ஒரு மின்புலம் (electric field) செலுத்தப்படும்போது, ​​மின்னோட்டம் பாயத் தொடங்கலாம். எடுத்துக்காட்டாக, சிலிக்கான் மற்றும் ஜெர்மானியம் போன்ற குறைமின்கடத்திப் பொருட்களுடன் பாஸ்பரஸைச் சேர்ப்பது, எதிர் மின்னோட்டம் பாய்வதற்கு வழிவகுக்கிறது.


4. குறைமின்கடத்திகள் மின்னணு சாதனங்களின் முக்கிய அங்கமாகும். இவை தகவல் தொடர்பு, கணினி, சுகாதாரம், இராணுவம், போக்குவரத்து, தூய்மையான ஆற்றல் போன்ற துறைகளின் முன்னேற்றத்திற்கு உதவுகின்றன. தரவுகளைச் செயலாக்கவும், சேமிக்கவும், அனுப்பவும் மின்னணு சாதனங்களுக்குத் தேவையான  முக்கியச் செயல்பாடுகளை வழங்கும் இவை, வடிவமைப்பதற்கும் தயாரிப்பதற்கும் மிகவும் சிக்கலான தயாரிப்புகளாகும்.


விக்ரம் 3201 என்றால் என்ன?


1. ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், செப்டம்பர் 2 அன்று நடைபெற்ற செமிகான் இந்தியா 2025 நிகழ்ச்சியில், இந்தியாவின் முதல் முழுமையான உள்நாட்டு நுண்செயலியுடன் ஒரு வகை குறைமின்கடத்தி சில்லுவை (chip) பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்.


2. விக்ரம் 3201 என்று அழைக்கப்படும் இந்த சில்லு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Space Research Organisation (ISRO)) குறைமின்கடத்தி ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் குறைமின்கடத்தி இயக்கம்


1. இந்திய குறைமின்கடத்தி இயக்கம்: இந்தியாவின்  குறைமின்கடத்தி இயக்கம் 2021-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது உள்நாட்டு குறைமின்கடத்தித் தொழில்துறையை மேம்படுத்துவதற்காக இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட ஒரு  இராஜதந்திர  முன்னெடுப்பாகும்.


உள்நாட்டில் குறைமின்கடத்தி வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதும், புத்தாக்கம், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.


இந்திய குறைமின்கடத்தி இயக்கம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology (MeitY)) மற்றும் பிற தொடர்புடைய அரசு அமைப்புகளின் வழிகாட்டுதலின்கீழ் செயல்படுகிறது.


2. செமிகான் இந்தியா (Semicon India Programme) திட்டம்: குறைமின்கடத்திகள், காட்சித் திரை உற்பத்தி மற்றும் வடிவமைப்புச் சூழலமைப்புகளில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக, அரசாங்கம் 'செமிகான் இந்தியா' திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த திட்டம் நாட்டில் குறைமின்கடத்தி மற்றும் காட்சித் திரை உற்பத்திச் சூழலமைப்பை மேம்படுத்த உதவும்.


செமிகான் இந்தியா திட்டத்தின்கீழ் பின்வரும் நான்கு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன: 


(i) இந்தியாவில் குறைமின்கடத்தி உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கான திருத்தப்பட்ட திட்டம்.


(ii) இந்தியாவில் காட்சி ஆலைகளை (Display Fabs) அமைப்பதற்கான திருத்தப்பட்ட திட்டம்.


(iii) இந்தியாவில் கூட்டு குறைமின்கடத்திகள் / சிலிக்கான் ஒளியியல் / உணரி உற்பத்தி ஆலை மற்றும் குறைமின்கடத்தி ஒருங்கிணைப்பு, சோதனை, குறியிடல் மற்றும் பொதியிடல் (Assembly, Testing, Marking and Packaging (ATMP)) / வெளி ஒப்பந்த குறைமின்கடத்தி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை (Outsourced Semiconductor Assembly and Test (OSAT)) வசதிகளை அமைப்பதற்கான திருத்தப்பட்ட திட்டம் 


(iv) செமிகான் இந்தியா எதிர்கால வடிவமைப்பு: வடிவமைப்பு சார்ந்த ஊக்கத்தொகை (Design Linked Incentive (DLI)) திட்டமாகும்.

 Original Link: India’s First 3D Chip Packaging Plant — Technology and Semiconductors .


Share:

இந்தியாவின் சமையல் எரிவாயு (LPG) விநியோக மாதிரியில் உள்ள குறைபாடு. -ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா

இந்தியாவின் சமையல் எரிவாயு (Liquefied Petroleum Gas (LPG)) பயன்பாடு பெரும்பாலும் வீட்டு உபயோகத்தைச் சார்ந்தே இருக்கிறது. இது இறக்குமதியின் மீதான நமது நாட்டின் சார்புநிலையை மேலும் அதிகரிக்கிறது.


இந்தியாவின் சமையல் எரிவாயு (LPG) பிரச்சினை என்பது ஒரு தற்காலிகத் தட்டுப்பாடு அல்ல. இது உற்பத்திக்கும் தேவைக்கும் இடையே அதிகரித்து வரும் மிகப்பெரிய இடைவெளியால் உருவாகிறது. கடந்த ஆண்டு, இந்தியா சுமார் 33.15 மில்லியன் டன் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தியது, ஆனால் இதில் சுமார் 40% தேவையை மட்டுமே உள்நாட்டு உற்பத்தியால் பூர்த்தி செய்ய முடிந்தது. மீதமுள்ள 60% தேவைக்காக இறக்குமதி செய்யப்பட்டது. இதன்படி, மொத்தத் தேவையானது உள்நாட்டு உற்பத்தியைப் போல சுமார் 2.5 மடங்காகும், மேலும் இறக்குமதி செய்யப்படுவது உள்நாட்டு உற்பத்தியைப் போல 1.5 மடங்காகும். இது இந்தியா உற்பத்தி செய்யும் அளவிற்கும், அதன் வீட்டு உபயோகத் தேவைகளுக்குத் தேவைப்படும் அளவிற்கும் இடையே உள்ள ஒரு பெரிய இடைவெளியைக் காட்டுகிறது.


இது மிக முக்கியமான விஷயமாகும், ஏனெனில் இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) பெரும்பாலும் வீடுகளிலேயே பயன்படுத்தப்படுகிறது, வணிகரீதியான பயன்பாடு 10%-க்கும் குறைவாகவே உள்ளது. எனவே, இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவில் பெரும்பகுதி நேரடியாக வீடுகளுக்கே செல்கிறது; தொழில்துறைகளைப் போல நுகர்வைக் குறைக்கவோ அல்லது மாற்று எரிபொருளுக்கு மாறவோ வீடுகளால் முடியாது. இது இந்தியாவின் சமையல் எரிவாயு சார்புநிலையை ஒரு சாதாரண இறக்குமதி சிக்கலைவிட தீவிரமானதாக மாற்றுகிறது. தொழில்துறையினரால் பயன்பாட்டைக் குறைக்க முடியும், ஆனால் சாதாரண மக்களால் வீட்டு உபயோகத்தில் அதைச்  செய்ய முடியாது.


இனி இது நம்பகமான வழித்தடம் அல்ல


இந்த நெருக்கடி தற்போதைய சிக்கலை மிகத் தெளிவாகக் காட்டியுள்ளது. இந்தியாவின் சமையல் எரிவாயு (LPG) இறக்குமதியில் சுமார் 90% ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகவே வருகிறது. வீட்டு உபயோக எரிபொருள் பாதுகாப்பிற்கு இனி இந்த ஒரு பாதையை மட்டுமே எப்போதும் நம்பியிருக்க முடியாது என்பதை இந்தியா இப்போது உணர வேண்டும். தற்போதைய பதற்றங்கள் குறைந்தாலும் கூட, முன்பு இருந்தது போல தடையற்ற மற்றும் சீரான விநியோகம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவ்வளவு எளிதில் மீண்டும் வராது. இனிவரும் காலங்களில், நீண்டகாலத் திட்டங்களை வகுக்கும்போது இந்த வழித்தடத்தில் உள்ள ஆபத்துகளும் ஒரு முக்கிய காரணியாகக் கருதப்படும்.


இருப்பினும், இறக்குமதியை மட்டும் வைத்து முழுமையான நிலையைத் தெரிந்துகொள்ள முடியாது. இந்தியாவைவிட ஜப்பான் அதிக அளவில் LPG எரிவாயுவை இறக்குமதி செய்கிறது. சீனா மற்றும் தென் கொரியாவும் பெருமளவில் இறக்குமதி செய்கின்றன. ஒரு நாடு எவ்வளவு இறக்குமதி செய்கிறது என்பது மட்டுமே முக்கியமல்ல; மாறாக, அந்த எரிபொருள் எங்கே பயன்படுத்தப்படுகிறது, வீடுகளுக்கு மாற்று வழிகள் என்னென்ன உள்ளன மற்றும் அந்த நாட்டில் எவ்வளவு சேமிப்பு வசதி உள்ளது என்பதுதான் மிகவும் முக்கியமானது.





ஜப்பானிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்


இந்த அட்டவணை, வெறும் சதவீதக் கணக்குகள் மட்டுமே உண்மையான நிலவரத்தைக் காட்டாது என்பதை விளக்குகிறது. இந்தியாவைவிட ஜப்பான் LPG எரிவாயு இறக்குமதியை அதிகம் நம்பியிருப்பது போலத் தோன்றினாலும், அங்குள்ள வீடுகள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை. ஏனெனில், சுமார் 40% குடும்பங்கள் மட்டுமே சமையல் எரிவாயுவைப் பயன்படுத்துகின்றன. அங்கு வீட்டுத் தேவைகளுக்கான எரிசக்தியில் சுமார் 55% மின்சாரத்திலிருந்தே கிடைக்கிறது, மேலும் 'City Gas' வசதியும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, ஜப்பான் சுமார் 108.3 நாட்களுக்குத் தேவையான சமையல் எரிவாயுவை இருப்பு வைத்திருக்கிறது. எனவே, அதிக அளவில் இறக்குமதி செய்தாலும், மாற்று வழிகள் மற்றும் சேமிப்பு வசதிகள் மூலம் ஜப்பான் தனது பாதிப்பு அபாயத்தைக் குறைத்துக் கொள்கிறது.


சீனாவும் தென்கொரியாவும் இந்த விஷயத்தில் வேறுபடுகின்றன. சீனாவில், LPG எரிவாயு பெரும்பாலும் பெட்ரோலிய வேதிப் பொருட்களின் தொழிற்சாலைகளிலேயே (Petrochemical industry) பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தென்கொரியாவில் உள்ள வீடுகள் தங்களின் தேவைகளுக்கு இயற்கை எரிவாயு (Natural gas) மற்றும் மின்சாரத்தையே அதிகம் சார்ந்துள்ளன.


இந்தியா இறக்குமதி செய்யும் சமையல் எரிவாயு (LPG) பெரும்பாலும் வீடுகளில் பயன்படுத்தப்படுவதால், இந்தியா இந்த விஷயத்தில் அதிக பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ளது. இந்தியா சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்கிறது என்பது மட்டும் இங்குப் பிரச்சனை இல்லை. ஏனெனில், பல நாடுகளும் இதை இறக்குமதி செய்கின்றன. ஆனால், அது சமையலுக்குப் பயன்படுத்தப்படுவதால், அதை உடனடியாகத் தவிர்க்கவோ அல்லது வேறு எரிபொருளுக்கு மாற்றவோ முடியாது என்பதே உண்மையான சிக்கல் ஆகும்.


இந்தியாவின் எரிவாயு (LPG) சேமிப்பு நிலை குறித்து கூடுதல் தெளிவு தேவைப்படுகிறது. பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (Petroleum Planning and Analysis Cell (PPAC)) அறிக்கையின்படி, இறக்குமதி முனையங்கள், சிலிண்டர் நிரப்பும் நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள் ஆகியவற்றில் சுமார் 15 நாட்களுக்குத் தேவையான எரிவாயு இருப்பு உள்ளது. இருப்பினும், அவசர காலத்திற்காக நிலத்தடியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உண்மையான இருப்பு  வெறும் 1,40,000 டன்கள் மட்டுமே உள்ளன. இதில் விசாகப்பட்டினத்தில் 60 ஆயிரம் மெட்ரிக் டன்களும் (60 TMT), மங்களூருவில் 80 ஆயிரம் மெட்ரிக் டன்களும் (80 TMT) உள்ளன. இது ஒட்டுமொத்த நாட்டின் ஒரு நாள் தேவைக்கும் சற்று அதிகமானது (சுமார் 1.5 நாட்கள்) மட்டுமே ஆகும். அதாவது, தற்போதைய தேவைக்கான விநியோகம் ஓரளவு இருந்தாலும், இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய நாட்டிற்கு நீண்டகாலப் பாதுகாப்பிற்கான அவசரக்கால இருப்பு என்பது இன்னும் மிகக்குறைவாகவே உள்ளது.


மேலும் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இந்தியா LPG எரிவாயுவை ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த நிலையில் உள்ள உலக சந்தையில் இருந்து வாங்கவில்லை. ஏற்றுமதிக்குக் கிடைக்கக்கூடிய எரிவாயுவின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. அந்த அளவையும் ஏற்கனவே சில ஆசிய நாடுகள் பெரும்பாலும் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


உண்மையைச் சொல்லப்போனால், ஆசியாவின் நான்கு நாடுகள் மட்டுமே உலகின் ஏற்றுமதி செய்யக்கூடிய LPG எரிவாயுவில் பாதியைக் காட்டிலும் சற்று அதிகமாகப் பயன்படுத்துகின்றன. மீதமுள்ள கையிருப்பும் தாராளமாகக் கிடைப்பதில்லை, ஏனெனில் அது ஏற்கனவே பெட்ரோலிய வேதிப் பொருட்களின் உற்பத்தி, சமையல், வெப்பமூட்டுதல் மற்றும் வாகன எரிபொருள் போன்ற தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து கிடைக்கும் எரிபொருள் விநியோகத்தில் நீண்டகாலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால், உலகளாவிய சந்தையில் அதன் தட்டுப்பாடு மிக வேகமாக அதிகரிக்கும் என்கின்றனர்.


இந்தியா செய்ய வேண்டியது என்ன?


இந்தியா தனக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை எப்படிக் குறைக்க முடியும்?


முதலாவதாக, சமையல் எரிவாயுவை (LPG) ஒரே பொதுவான கையிருப்பில் இருந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தற்போதைய தட்டுப்பாட்டினபோது, புரோப்பேன் (Propane) மற்றும் பியூட்டேன் (Butane) ஆகியவற்றை பெட்ரோலிய வேதிப் பொருட்கள் உற்பத்தி அல்லது எரிபொருள் கலப்பிற்கு பயன்படுத்தாமல், முக்கியமாக சமையல் எரிவாயுவிற்காக மட்டுமே பயன்படுத்துமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்தியா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை தொடர வேண்டும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சமையல் எரிவாயு மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் கிடைக்கும் புரோப்பேன்/பியூட்டேன் ஆகியவற்றை முதலில் வீடுகளின் தேவைக்காக ஒதுக்கீடு செய்யவேண்டும். தொழிற்சாலைகள் தங்களுக்குத் தேவையான எரிவாயுவை தாங்களே இறக்குமதி செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம், வீட்டு உபயோகத் தேவைகளுக்கும் தொழிற்சாலைத் தேவைகளுக்கும் ஒரே கையிருப்பில் இருந்து மேலாண்மை செய்ய வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்படாது.


இரண்டாவதாக, இந்தியா தனது சமையல் எரிவாயு (LPG) இருப்பை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். முதற்கட்டமாக, வீடுகளுக்கு இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குத் தேவையான சமையல் எரிவாயுவைச் சேமித்து வைப்பது சரியாக இருக்கும். தற்போதைய தேவையின் அடிப்படையில் பார்த்தால், 14 நாட்களுக்கு சுமார் 13 லட்சம் டன்களும், 21 நாட்களுக்கு சுமார் 19 லட்சம் டன்களும் இருப்பு தேவைப்படும். இது இந்தியாவின் தற்போதைய சேமிப்புத் திறனைவிட மிக அதிகம் என்றாலும், எதிர்பாராத நெருக்கடிகளைச் சமாளிக்கத் தேவையான குறைந்தபட்ச அளவாக இருக்கும் என்கின்றனர்.


மூன்றாவதாக, இந்தியா நகர்ப்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார அடுப்புகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஒரு நீண்டகாலப் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். இது ஒரு குறுகிய கால முயற்சியாக இல்லாமல் தொடர்ச்சியான ஒன்றாக இருக்க வேண்டும். நம்பகமான மின்சார வசதி, சரியான மின் இணைப்புகள் மற்றும் மின்சார அடுப்புகளை (Induction stoves) பயன்படுத்த வாய்ப்புள்ள வீடுகள், சமையல் எரிவாயு (LPG) பயன்பாட்டிலிருந்து மின்சார அடுப்பு பயன்பாட்டிற்கு மாற ஊக்குவிக்கப்பட வேண்டும். இதற்காக, வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுக்கும் "Give it up 2.0" என்ற புதிய முயற்சியை அறிமுகப்படுத்த வேண்டும்.


இதன் நோக்கம் மிகவும் எளிமையானது: சமையல் எரிபொருளுக்காக LPG சிலிண்டர்களை மட்டுமே நம்பியிருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே ஆகும். மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள பகுதிகளில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயு (Piped Natural Gas (PNG)) திட்டத்தை விரிவுபடுத்த முடியும் என்கின்றனர். ஆனால், மின்சார பயன்பாடு மூலமான சமையல் முறை என்பது இன்னும் பரவலான தீர்வை வழங்குகிறது.


உள்நாட்டு உற்பத்தியைவிடத் தேவை அதிகமாக இருப்பது, இறக்குமதிக்கு ஒரே ஒரு வழித்தடத்தை மட்டுமே அதிகம் சார்ந்திருப்பது மற்றும் வீட்டு உபயோகத் தேவைகளுக்காக மட்டுமே LPG எரிவாயுவை அதிகளவில் பயன்படுத்தப்படுவது ஆகிய அடிப்படைச் சமநிலையின்மையை மாற்றாதவரை, இந்தியாவின் எரிவாயுத் தட்டுப்பாடு நீடிக்கவே செய்யும். இதற்குத் தீர்வு என்பது வெறும் எரிவாயுவை மட்டும் அதிக அளவில் வாங்குவது அல்ல; மாறாக, உள்நாட்டு உற்பத்தியில் வீட்டு உபயோகத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல், பெட்ரோலிய வேதிப் பொருட்கள் பயன்பாட்டைப் பிரித்தல், சேமிப்பு வசதிகளை அதிகரித்தல் மற்றும் சமையலுக்கு LPG எரிவாயுவை மட்டுமே சார்ந்திருப்பதை படிப்படியாகக் குறைத்தல் போன்ற கொள்கைரீதியான மாற்றங்களே அவசியமாகிறது.


இந்தியாவின் சமையல் எரிவாயு (LPG) தொடர்பான பிரச்சனை என்பது ஒரு தற்காலிகத் தட்டுப்பாடு அல்ல. இது நாட்டின் உற்பத்தி அளவுக்கும், மக்களின் அன்றாட வீட்டு உபயோகத் தேவைக்கும் இடையே நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு சமநிலையின்மையாகும். அதனால்தான், இந்த விநியோக முறையில் ஒரு முறையான மாற்றத்தைக் கொண்டு வராதவரை, சீரற்ற நிலையில் இருக்கும் சமையல் எரிவாயுவின் தேவை நாட்டின் ஒரு நிரந்தரப் பலவீனமாகவே தொடரும் என்கின்றனர்.


ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா, ‘Indian Oil Corporation Ltd’ நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், ஒரு சிறந்த எரிசக்தி வியூக நிபுணரும் ஆவார்.


Original Link: The strategic vulnerability in India’s LPG supply model.


Share:

அணுமின் நிலையங்களை இயக்குவது என்பது ஒரு 'வாழ்நாள் கடமை' ஆகும் என்பது நிபுணர்கள் கூற்று. -ஜேக்கப் கோஷி

இந்தியாவை உருமாற்றுவதற்கான நிலையான பயன்பாடு மற்றும் அணுசக்தி மேம்பாட்டுச் சட்டம் (சாந்தி சட்டம், 2025), இந்தியாவின் அணுசக்தி உற்பத்தித் திறனை தற்போதுள்ள 8.7 ஜிகாவாட்டிலிருந்து (gigawatts (GW)), 2047-ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட்டாக (GW) அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்தச் சட்டத்தின் மூலம் அணுசக்தித் துறையில் தனியார் நிறுவனங்களை இந்தியா அனுமதிக்கும் நிலையில், அணுசக்திக்கு நீண்டகால அர்ப்பணிப்பும், வலுவான நிதித் திட்டமிடலும் அவசியம் என்று முன்னாள் ஒழுங்குமுறை அதிகாரிகளும் நிபுணர்களும் கூறுகின்றனர். கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குதல், அணுக்கழிவுகளைக் கையாளுதல் மற்றும் அணுமின் நிலையங்களை பாதுகாப்பான முறையில் மூடுதல் போன்ற முக்கியமான பணிகளைச் செய்ய நிதி மேலாண்மை அவசியமாகிறது. 


இந்தியாவின் அணுசக்தித் துறையில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India (SHANTI)) சாந்தி சட்டம் 2025-ஐப் பற்றி அரசாங்கம் மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. இதன்படி, இந்தியாவின் அணுசக்தி உற்பத்தித் திறனை தற்போதுள்ள 8.7 ஜிகாவாட்டிலிருந்து (GW), 2047-ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட்டாக (GW) உயர்த்துவதே இதன் நோக்கமாகும். கடந்த ஐம்பது ஆண்டுகால நடைமுறை போலல்லாமல், தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களை இயக்க அனுமதிப்பதன் மூலமும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமும் இந்த இலக்கை அடைய அரசு திட்டமிட்டுள்ளது.


சாந்தி மசோதா எதை மாற்றுகிறது? 


2026-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதியன்று, இந்திய அணுசக்தி ஆணையத்தின் (Atomic Energy Commission (AEC)) உறுப்பினர் ரவி குரோவர் பேசுகையில், "சாந்தி சட்டம்" (SHANTI Act) பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள மின் உற்பத்தி நிலைய இயக்குநர்களின் கடமைகளையும் பொறுப்புகளையும் தெளிவாக வரையறுக்கிறது என்று குறிப்பிட்டார். பாதுகாப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றிற்கான முதன்மைப் பொறுப்பு உரிமம் வைத்திருப்பவரிடமே உள்ளது என்றும், இத்துறைக்கு புதிதாக வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைச் 'பிரிவு 10' (Section 10) தெளிவாக விளக்குகிறது என்றும் கூறினார். மேலும், விதிமுறைகளில் எந்தவித முறைகேடுகளுக்கும் இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஒரு ரேடியோ ஐசோடோப்பின் அரை ஆயுட்காலம் (Half-life of a radioisotope) போன்ற அறிவியல் உண்மைகளை ஒருபோதும் மாற்ற முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.


இந்திய அணுசக்தித் துறையில் புதிதாகப் பங்கேற்க இருக்கும் தனியார் நிறுவனங்களின் சார்பாகப் பேசிய ‘Tata Consulting Engineers Ltd’ நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜன் ராகவன், முதலீட்டு முடிவுகள் நான்கு முக்கிய முன்னுரிமைகளின் அடிப்படையில் அமைகின்றன என்று கூறினார்: அவை முறையே பொருத்தமான இடத்தை தேர்வு செய்தல், கட்டுப்படியாகக்கூடிய தொழில்நுட்பம், அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் மின்கட்டண நடைமுறைத்தன்மை ஆகியவையாகும். சாதாரண அனல்மின் நிலையங்களைப் போலல்லாமல், அணுசக்தி திட்டங்களுக்கு நிலம் மற்றும் நீர் வசதி மட்டுமே போதாது, இன்னும் சில குறிப்பிட்ட தகுதி நெறிமுறைகள் தேவைப்படுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும், பல தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் இதற்கான இடங்களைக் கண்டறிந்து, அதற்கான அனுமதிகளைப் பெற முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.


சாந்தி சட்டத்திற்கு எதிரான ஒரு வழக்கு


இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 700 மெகாவாட் (MW) திறன் கொண்ட அழுத்தப்பட்ட கனநீர் உலைகளையே (Pressurised Heavy-Water Reactor (PHWR)), அடுத்த 10 முதல் 12 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் செயல்படுத்த இந்திய அணுசக்தி கழகம் (Nuclear Power Corporation of India Limited (NPCIL)) திட்டமிட்டுள்ளதாக ராகவன் தெரிவித்தார். இதுவே தற்போதைய சூழலில் மிகவும் பொருத்தமான தேர்வாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 220 மெகாவாட் திறன் கொண்ட உலைகள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டவை என்றாலும், அவை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே இறுதி செய்யப்பட்டவை என்றும் குறிபிட்டுள்ளார். தற்போதைய பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை தரநிலைகளுக்கு ஏற்ப அவற்றை மேம்படுத்த பெரும் மாற்றங்கள் தேவைப்படும். வெளிநாட்டு அணு உலைகள் மிகவும் விலை உயர்ந்தவை என்றும், இந்தியச் சூழலுக்கு ஏற்ப வடிவமைப்பை உறுதிப்படுத்த கட்டுமானத்திற்கு முன்பே சுமார் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை காலம் தேவைப்படும் என்றும் எச்சரித்தார். மின்சாரம் என்பது உற்பத்தி மற்றும் உலோகத் தொழில்களுக்கு ஒரு முக்கிய செலவு என்பதால், நிலம் மற்றும் இதர உற்பத்திச் செலவுகளை உள்ளடக்கிய மின்சாரக் கட்டணம் மிக முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார். இந்திய அணுசக்தி கழகத்தின் (NPCIL) தற்போதைய மின்சாரக் கட்டணங்கள் நிலக்கரி மின்சாரத்திற்கு இணையானதாகவும், சில சமயங்களில் அதைவிடக் குறைவாகவும் இருப்பதால், சரியான தொழில்நுட்பத்தைத் தேர்வு செய்தால் அணுமின் சக்தி வணிகரீதியாக லாபகரமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் (Atomic Energy Regulatory Board (AERB)) முன்னாள் தலைவர் டி.கே. சுக்லா, இந்த புதிய சட்டத்தைப் பற்றிய தனது கருத்தை விளக்கினார். முன்னதாக, அனைத்து அமைப்புகளும் அணுசக்தி துறையின்கீழ் (Department of Atomic Energy (DAE)) இருந்தபோது, விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு மேற்பார்வை ஆகியவை மறைமுகமாகவே இருந்தன. ஆனால், இப்போது கொண்டுவரப்பட்டுள்ள சாந்தி சட்டம் (SHANTI Act), விதிமுறை கட்டுப்பாட்டையும் பாதுகாப்பு மேற்பார்வையையும் தனித்தனியாகப் பிரித்து, ஒரு தெளிவான மற்றும் ஒருங்கிணைந்த சட்டக் கட்டமைப்பை வழங்குகிறது. மேலும், இத்துறையில் தனியார் நிறுவனங்கள் நுழைவதால், முன்பு சாதாரணமாகக் கருதப்பட்ட பிரச்சனைகள் இனி வரும் காலங்களில் தீவிரமானதாக மாறக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.


சுக்லா அவர்கள் ஒரு முக்கியமான கருத்தை வலியுறுத்தினார்: அணுசக்தி செயல்பாடுகளுக்கு நீண்டகால அர்ப்பணிப்பு தேவை. புதிய சட்டத்தின்படி (Atomic Energy Act), உரிமம் பெற்றவர்கள் அந்த அணுமின் நிலையம் இயங்கும் காலம் முழுவதும் அதன் வடிவமைப்பு சார்ந்த தொழில்நுட்ப ஆதரவைத் தொடர்ந்து வழங்க வேண்டும். மற்ற மின் உற்பத்தி நிலையங்களைவிட அணுமின் நிலையங்கள் நீண்டகாலம் செயல்படுவதால் இது மிகவும் அவசியமானது. மேலும், தற்போதைய பாதுகாப்புத் தரங்களைப் பூர்த்தி செய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த, ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை பாதுகாப்பு மதிப்பாய்வை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


முழுமையான வடிவமைப்பு அறிவும் திறனும் இல்லாமல், பாதுகாப்பு மேம்பாடுகளை எவ்வாறு சரியாகச் செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஒரு அமைப்பில் செய்யப்படும் மாற்றங்கள் மற்ற அமைப்புகளை மோசமாகப் பாதிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டினார். தொழில்நுட்பம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டாலும் அல்லது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும், ஒரு ஆலையின் வாழ்நாள் முழுவதும் அதன் அசல் வடிவமைப்பின் தன்மையை சிதைக்காமல் பராமரிப்பது அவசியம் என்று வலியுறுத்தினார். குறிப்பாக, தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டு அணு உலைகளை இறக்குமதி செய்யும்போது, நீண்டகாலத்திற்குத் தேவையான வடிவமைப்பு ஆதரவை உறுதிசெய்ய வேண்டும் என்றும் எச்சரித்தார்.


அணுசக்தித் துறை விரிவடைய வேண்டுமானால், பொதுமக்களின் நம்பிக்கை மிக அவசியமாகிறது. அதற்கு வலுவான உற்பத்தித் திறனும், பாதுகாப்புச் செயல்பாடுகளும் முக்கியப் பங்காற்றுகின்றன என்றும் சுக்லா கூறினார். மேலும், தற்போதைய சட்டத்தின்படி பாதுகாப்பிற்கான பொறுப்பு முக்கியமாக உரிமம் பெற்றவரிடமே உள்ளது என்றும் உண்மைகளை மறைக்காமல் அல்லது திருத்தாமல் நேர்மையாக அறிக்கை அளிப்பதன் மூலம், சிறிய பிரச்சினைகள்கூட ஃபுகுஷிமா (ஜப்பானில் 2011-ஆம் ஆண்டில் ஏற்பட்ட அணு உலை விபத்து) போன்ற பெரிய பேரழிவுகளாக மாறாமல் தடுக்க உதவும் என்றும் குறிப்பிட்டார்.


தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் (Department of Industrial Policy and Promotion (DIPP)) முன்னாள் செயலாளர் அஜய் சங்கர், அணுசக்தி பொறியியலில் இந்தியா ஏற்கனவே உலகளவில் முன்னணியில் இருப்பதாகவும், ஆனால், இந்தியா அதை அங்கீகரிக்கவில்லை என்றும் கூறினார். 2002-ஆம் ஆண்டில் அமெரிக்க தூதரக அதிகாரியுடன் நடந்த உரையாடலை நினைவு கூர்ந்த அவர், இந்தியா உலகின் மிக மலிவான அணுமின் நிலையங்களை உருவாக்குவதாகக் குறிப்பிட்டார். இந்தியாவில் ஒரு கிலோவாட்டிற்கு (kW) சுமார் 1,000 முதல் 1,200 டாலர் வரை செலவாகும் நிலையில், பிரான்சில் இது 1,800 டாலராக உள்ளது. கடந்த 30 முதல் 40 ஆண்டுகளாக புதிய அணுமின் நிலையங்களே கட்டப்படாத அமெரிக்காவில் இதன் செலவு இன்னும் அதிகமாக உள்ளது.


சிறிய ரக அணு உலைகளை (Small Modular Reactors (SMRs)) ஒரு "கானல் நீர்" என்று சங்கர் அவர்கள் கடுமையாக விமர்சித்தார். உலகில் 58 வகையான வடிவமைப்புகள் இருந்தாலும், அவை இதுவரை எங்கும் கட்டப்படவில்லை என்றும், அவற்றின் செலவுகள் எவ்வளவு என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும் கூறினார். சோதிக்கப்படாத மேலைநாட்டு சிறியரக அணுஉலை தொழில்நுட்பங்களுக்கு இந்தியா ஒரு சோதனை தளமாக மாறிவிடக்கூடாது என்று எச்சரித்தார். இதற்குப் பதிலாக, 1970-களில் பிரான்ஸ் நாடு செய்தது போல, இந்தியாவின் 700 மெகாவாட் (MW) அணுசக்தித் திட்டத்தையே விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். மேலும், 25 முதல் 30 ஆண்டுகளுக்கு நிலையான வட்டி விகிதத்தில் அரசாங்கத்தின் உத்தரவாதத்துடன் கூடிய நீண்டகாலக் கடன்களைப் பெற வேண்டும் என்றும், 100 ஜிகாவாட் (GW) இலக்கை அடையத் தேவையான இடங்களை முன்னரே கண்டறிய பொது நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


Original Link: Operating nuclear plants is ‘lifetime commitment’: Experts.


Share: