நாம் பொருளாதாரச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்த வேண்டும். ஆனால் அவநம்பிக்கை உதவாது. -வி அனந்த நாகேஸ்வரன்

பொருளாதாரச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதே சுர்ஜித் பல்லாவின் உண்மையான கவலைகளுக்கு சரியான பதில் ஆகும். அதைவிடுத்து, அந்தச் சீர்திருத்தங்களின் தேவையை மறுப்பதோ அல்லது பிரச்சினையைத் தெளிவுபடுத்துவதற்குப் பதிலாக அதைக் குழப்பும் வகையிலான ஆய்வுகளை முன்வைப்பதோ சரியானதாக இருக்காது.


சுர்ஜித் பல்லா, இந்தியாவின் மிகச் சுதந்திரமான பொருளாதாரக் குரல்களில் ஒருவர் ஆவார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகும் அவருடைய கட்டுரைகளை, உள்கட்டமைப்பு செலவினங்கள் மற்றும் வளர்ந்து வரும் துறைகள் பற்றிய வழக்கமான அதிகாரப்பூர்வ அரசுப் பதில்களைக் கூறி சாதாரணமாகப் புறந்தள்ளிவிட முடியாது. அவர் கடினமான கேள்விகளை எழுப்புகிறார், அத்தகைய கேள்விகளுக்கு தீவிரமான பதில்கள் வழங்கப்பட வேண்டும். இருப்பினும், அவருடைய இந்தக் கட்டுரை (“The BJP is winning the election, but it’s losing the economy”, May 20), உண்மையான கொள்கைக் கவலைகளைக் கண்டறிவதற்கு முன்பாக மிகக் கவனமாக ஆராயப்பட வேண்டிய பல பகுப்பாய்வுக் குழப்பங்களைக் கொண்டுள்ளது.


மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒரு வாதத்தில் இருந்தே தொடங்குவோம்: துருக்கியுடன் இணைந்து இந்தியாவும் "Fragile Two" (பலவீனமான இரண்டு நாடுகள்) என்ற பட்டியலில் சேரும் அபாயத்தில் இருப்பதாக அந்த வாதம் கூறுகிறது. உண்மையில், "Fragile Five" (பலவீனமான ஐந்து நாடுகள்) என்ற மூலச் சொல் 2013-ஆம் ஆண்டில் ‘Morgan Stanley’ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இது அதிக நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (Current Account Deficit (CAD)), நிதி நிலையின்மை மற்றும் அமெரிக்க மத்திய வங்கியின் (US Federal Reserve) கொள்கை மாற்றங்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இன்றைய இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பு இந்த எல்லாத் துறைகளிலும் 2013-ஆம் ஆண்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது: இந்தியாவின் பணவியல் கொள்கை இப்போது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. அதன் நிதிஒருங்கிணைப்புப் பாதை நம்பகமானதாக உள்ளது, மேலும் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு உலகிலேயே மிகப்பெரியவற்றுள் ஒன்றாக உள்ளது. நீண்டகாலமாக நிலவி வரும் எதிர்மறையான உண்மையான வட்டி விகிதங்கள் மற்றும் பணவியல் கொள்கையில் அரசியல் தலையீடுகளால் ஏற்பட்டுள்ள துருக்கியின் பொருளாதாரப் பிரச்சினைகள் முற்றிலும் வேறுபட்டவை. 


உலகளாவிய நிதிநெருக்கடிக்குப் பின் உலகளாவிய மூலதனச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றத்தை இந்தக் கட்டுரை புறக்கணிக்கிறது.  அதுதான் பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை அதிகரிப்பது (Quantitative Easing) மற்றும் பூஜ்ஜியத்திற்கு நெருக்கமான வட்டி விகிதங்களின் முடிவு. 2022-ஆம் ஆண்டிற்கு முன்பு, பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்ட தளர்வான பணவியல் கொள்கையானது உலகளவில் அபாயக் கட்டங்களை செயற்கையாகக் குறைத்ததுடன், அதிக லாபத்தைத் தேடி வளர்ந்துவரும் சந்தைகளுக்குள் பெரும் மூலதனத்தை அதிகரித்தது. இதன் காரணமாக, 2021-ஆம் ஆண்டில் உலகளாவிய அந்நிய நேரடி முதலீடு (Foreign Direct Direct Investment (FDI)) முந்தைய ஆண்டைவிட 64% அதிகரித்து 1.58 டிரில்லியன் டாலராக உயர்ந்ததாக ஐக்கிய நாடுகள் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாடு (United Nations Conference on Trade and Development (UNCTAD)) தெரிவித்தது. ஆனால், இதைத் தொடர்ந்து ஒரு பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. புதிய திட்டங்களில் முதலீடு செய்தல் (Greenfield Investments), சர்வதேச திட்ட நிதி ஒப்பந்தங்கள் மற்றும் எல்லை கடந்த நிறுவன இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல்கள் உள்ளிட்ட புதிய முதலீட்டுத் திட்டங்கள் 2022-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குப் பிறகு குறையத் தொடங்கின. அமெரிக்கா, யூரோ மண்டலம் மற்றும் பல ஆண்டுகளில் முதல்முறையாக ஜப்பானிலும் வட்டி விகிதங்கள் கடுமையாக உயர்ந்ததால் நிதி நிலைமைகள் மோசமடைந்து, திட்டங்களுக்கான நிதி மதிப்புகள் 30%-க்கும் மேல் சரிந்தன. ஐக்கிய நாடுகள் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாட்டின் (UNCTAD) 'உலக முதலீட்டு அறிக்கை 2025', உலகளாவிய அந்நிய நேரடி முதலீடு (FDI) தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வீழ்ச்சியடைந்துள்ளதை உறுதிப்படுத்துகிறது. இத்தகைய உலகளாவிய சூழலில், வளர்ந்துவரும் அனைத்துச் சந்தைகளுமே நாணய மதிப்பு மற்றும் மூலதன ஓட்டத்தில் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளன. எனவே, கடந்த நாற்பது ஆண்டுகளில் உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய மாற்றத்தை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, இந்தியாவின் முதலீட்டுப் போக்கிற்கு உள்நாட்டுக் கொள்கைகளின் தோல்விகள்தான் முக்கியக் காரணம் என்று கூறுவது, உலகளாவிய சூழலின் தாக்கத்தை நாட்டின் சொந்த நடவடிக்கைகளின் தவறு என்று தவறாகப் புரிந்துகொள்வதாகும்.


இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதைவிட, இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் (Bilateral Investment Treaty (BIT)) குறித்த நடைமுறை ஆதாரங்கள் மிகக் குறைவான நம்பகத்தன்மையைக் கொண்டவையாகவே இருக்கின்றன. 2015-ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட ஒப்பந்தம்தான் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) மாற்றங்களுக்கு முழுமையான காரணம் என்பதுபோல பல்லா (Bhalla) முன்வைக்கிறார். ஆனால், கல்வித்துறை ஆராய்ச்சிகள் இதில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்துகின்றன. ஹால்வர்ட்-ட்ரைமியர் (2003) மற்றும் டோபின் மற்றும் ரோஸ்-அக்கர்மேன் (2005) ஆகியோரின் ஆரம்பகால ஆய்வுகள், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களால் (BIT) அந்நிய நேரடி முதலீட்டு (FDI) உள்வருகையில் எந்தவொரு தாக்கமும் ஏற்படவில்லை என்பதைக் கண்டறிந்தன. அதற்குப் பிந்தைய ஆய்வுகள் சாதகமான விளைவுகளைக் கண்டறிந்தாலும், அவை வலுவான உள்நாட்டு நிறுவனங்களின் (அரசு அமைப்புகள் மற்றும் சட்டங்களின்) ஆதரவு இருக்கும்போது மட்டுமே சாத்தியமாகின. இத்தகைய சூழ்நிலைகளில், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் (BIT) பலவீனமான உள்நாட்டு அமைப்புகளுக்கு மாற்றாகச் செயல்படாமல், ஏற்கனவே இருக்கும் வலுவான அமைப்புகளை மேலும் பலப்படுத்தும் ஒரு முறையாக மட்டுமே செயல்படுகின்றன. மிக முக்கியமாக, 'Indian Economic Review' இதழில் சிங், ஸ்ரீதி மற்றும் ஊர்த்வரேஷே (2022) ஆகியோரால் வெளியிடப்பட்ட இந்தியாவைப் பற்றிய ஒரு ஆய்வு, தனித்தனியாக ஒரு சில இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களில் (BIT) கையெழுத்திடுவது மட்டும் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) உள்வருகையைப் பாதிக்காது என்பதைக் கண்டறிந்துள்ளது. மாறாக, ஒட்டுமொத்தமாக ஒரு நாடு எத்தனை ஒப்பந்தங்களைச் செய்துள்ளது என்பதுதான் முக்கியம். ஏனெனில், அது முதலீட்டாளர்களின் பாதுகாப்பிற்கான ஒரு விரிவான கட்டமைப்பைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது. இந்தக் கட்டுரையானது இந்த முக்கியக் கண்டுபிடிப்பைப் புறக்கணிப்பதால், ஒரே ஒரு காரணத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அது தரும் விளக்கம் குறைவான நம்பகத்தன்மை கொண்டதாக மாறுகிறது. உள்நாட்டு அரசு நிறுவனங்கள், கணிக்கக்கூடிய ஒழுங்குமுறை விதிகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவை ஒப்பந்தத்தின் வடிவமைப்புக்கு இணையானவை ஆகும். அதாவது, நாட்டின் பொருளாதாரச் சீர்திருத்தப் பணிகள் என்பது வெறும் ஒரு சட்ட ஆவணத்தைத் திருத்துவதோடு நின்றுவிடாமல், மிக விரிவானதாக இருக்க வேண்டும்.

அந்நிய நேரடி முதலீட்டு (FDI) தரவுகளும் இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படத்தைக் காட்டுகின்றன. 2026-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலத்தில், ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீட்டு (FDI) உள்வருகை 88.29 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 18 சதவீத உயர்வாகும்.  மேலும், முழு நிதியாண்டிலும் இது 90 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சமீபத்திய ஆண்டுகளின் வழக்கமான 70-80 பில்லியன் டாலர் எல்லையைவிட மிக அதிகமாகும். கடந்த 2024-ஆம் ஆண்டில், புதிய திட்டங்களைத் தொடங்குவதாக அறிவித்ததில் இந்தியா உலகளவில் நான்காவது இடத்தைப் பிடித்தது, மேலும் உலகளாவிய அந்நிய நேரடி முதலீட்டில் (FDI) இந்தியாவின் பங்கு கடந்த பத்தாண்டுகளில் ஏறக்குறைய இருமடங்காக அதிகரித்துள்ளது. உற்பத்தித் துறையிலான அந்நிய நேரடி முதலீட்டையும் (FDI) 2025-ஆம் நிதியாண்டில் 18 சதவீதம் வளர்ந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் முதலீட்டாளர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறுவதைக் காட்டவில்லை. நிகர அந்நிய நேரடி முதலீடு (Net FDI) குறைவாக இருப்பதற்கு முக்கியக் காரணம், முதலீட்டாளர்கள் தங்கள் லாபத்தை தாய்நாட்டிற்குத் திருப்புவது (Profit repatriation) அதிகரித்துள்ளதாலும், இந்திய நிறுவனங்கள் சர்வதேச அளவில் விரிவடைவதற்காக வெளிநாடுகளில் செய்யும் முதலீடுகள் அதிகரித்துள்ளதாலும்தான். இது பெருநிறுவனங்களின் வளர்ச்சியின் அறிகுறியே தவிர, பொருளாதாரப் பலவீனம் அல்ல. இந்தக் கட்டுரை எந்தவொரு தெளிவும் இல்லாமல் ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடு (FDI) மற்றும் நிகர அந்நிய நேரடி முதலீடு (FDI) ஆகிய இரண்டையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்வதால், அதன் வாதம் பெருமளவில் பலவீனமடைகிறது.


பொருளாதார வளர்ச்சி தரவரிசை குறித்த வாதங்களை இன்னும் உன்னிப்பாக ஆராய வேண்டும். அமெரிக்க டாலர் மதிப்பின் அடிப்படையிலான தலா மொத்த உள்நாட்டு உற்பத்தி (Per capita GDP) வளர்ச்சியில் இந்தியாவிற்கு 16-வது இடத்தை வழங்குவது — அதாவது பங்களாதேஷ் (8.3 சதவீதம்) மற்றும் எத்தியோப்பியா (7.2 சதவீதம்) ஆகிய நாடுகளுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாகக் காட்டுவது,  இத்தகைய முடிவுகளுக்கு முழுமையாகத் துணை நிற்காத ஒரு அளவீட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக அமைகிறது. டாலர் அடிப்படையிலான தலா வருமான வளர்ச்சி என்பது, ஒரு நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி மற்றும் அந்நியச் செலாவணி மாற்று விகித மதிப்பு நகர்வுகள் ஆகிய இரண்டையுமே சார்ந்துள்ளது. பங்களாதேஷ் அல்லது எத்தியோப்பியா போன்ற நாடுகளின் நாணய மதிப்பு உயர்வது அல்லது வீழ்ச்சியடைவது என்பது அந்தந்த நாடுகளின் பணவியல் மற்றும் வர்த்தகச் சூழலைப் பிரதிபலிக்கிறதே தவிர, இந்தியாவின் பொருளாதார நிர்வாகத்தை மதிப்பிடுவதற்கான சரியான அளவுகோல் கிடையாது. ஆனால், மக்களின் உண்மையான வாழ்க்கைத்தர மேம்பாட்டை மிகச் சரியாகப் பிரதிபலிக்கும் வாங்கும் திறன் சமநிலை (Purchasing Power Parity) அடிப்படையில் பார்த்தால், பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் செயல்பாடு முற்றிலும் மாறுபட்டதாகவும், மிகச் சிறந்ததாகவும் காணப்படுகிறது.


நாம் அனைவரும் அங்கீகரிக்க வேண்டிய, சில முக்கிய விஷயங்கள் என்னவென்றால், முதலீட்டுச் சூழலைத் தொடர்ந்து மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்பதை பல்லா அவர்கள் சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.  தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளின் (Quality Control Orders (QCOs)) எண்ணிக்கை அதிகரித்து வருவது, சில நேரங்களில் தரத்தை உறுதி செய்வதைத் தாண்டி உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்கும் ஒரு பாதுகாப்புவாதமாக (Protectionist) மாறிவிடுகிறது. மேலும், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களுக்கான (BIT) கட்டமைப்பு திருத்தப்பணிகள் இன்னும் முழுமையடையாமல் உள்ளன. அரசாங்கமும் இந்தக் கவலைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் சமீபத்திய நிதிநிலைத் திட்டங்கள், தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்குதல், எளிதாக வணிகம் செய்தல், மற்றும் ஒழுங்குமுறை கணிப்புத்தன்மையை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்துள்ளன. உண்மையான சவால் என்னவென்றால், சீர்திருத்தங்கள் அரசாங்கத்தின் இலக்குகளுக்கு நிகரான வேகத்தில் பயணிக்க வேண்டும் என்பதுதான். அது ஒரு நியாயமான எதிர்பார்ப்பு ஆகும். இருப்பினும், இது கட்டுரையின் தலைப்பு உணர்த்தும் பரந்த முடிவுக்கு இணையானது அல்ல.


இதன் பொருள் 2026-27-ஆம் நிதியாண்டிற்கான நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கண்ணோட்டம் எவ்வித சவால்களும் இல்லாதது என்பது அல்ல. பொருளாதார விவகாரங்கள் துறை (Department of Economic Affairs (DEA)) வெளியிடும் மாதாந்திர பொருளாதார ஆய்வுகள் இந்தக் கவலைகளைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன. 2026-27-ஆம் நிதியாண்டில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (CAD) ஆகியவை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கத்திற்கான அபாயங்களும் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே சவாலாக இருக்கும் விநியோகச் சூழ்நிலைக்கு இடையில், வழக்கத்தைவிடக் குறைவான பருவமழை வேளாண் துறைக்குக் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய சூழ்நிலைகளில், நம்பகமான வரி விதிப்புக் கொள்கைகள், கணிக்கக்கூடிய ஒழுங்குமுறைகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான தடைகளைக் குறைப்பதன் மூலம் நிலையான, நீண்டகால முதலீடுகளை ஈர்ப்பதும் முக்கியமானதாகிறது. தற்போதைய இந்தச் சிக்கல்கள் ஏற்கனவே அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன.


தேர்தல்கள் ஆட்சி அதிகாரத்தை வழங்கலாம், ஆனால் சிறந்த கொள்கைகளால் மட்டுமே நாட்டை வளப்படுத்த முடியும். இந்த இரண்டு கூற்றுகளும் உண்மையானவை, அரசாங்கமும் இவற்றை ஏற்றுக் கொள்கிறது. பல்லா  அவர்களின் நியாயமான கவலைகளுக்குச் சரியான தீர்வு, சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதே ஆகும். சீர்திருத்தங்களின் தேவையை மறுப்பதன் மூலம் அல்ல, மாறாகப் பிரச்சினையைத் தெளிவுபடுத்துவதற்குப் பதிலாக அதனைக் குழப்பும் ஒரு பகுப்பாய்வுக் கட்டமைப்பை நிராகரிப்பதன் மூலமே இது சாத்தியமாகும் என்கின்றனர்.


வி அனந்த நாகேஸ்வரன், இந்திய அரசாங்கத்தின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் ஆவார்.

Original link:

We need to speed up economic reform, but pessimism doesn’t help.


Share:

செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு டிஜிட்டல் வடிவ 'கிழக்கிந்திய நிறுவனம்'. இதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள இந்தியா சாதுரியமான மாற்று வழிமுறைகளை (Jugaad) பயன்படுத்த வேண்டும். -நிஷாந்த் சஹ்தேவ்

உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) மாதிரிகள் "கணிப்பு நடுவர் வணிகம்" (Predictive Arbitrage) மூலம் 150 பில்லியன் டாலர்களை உறிஞ்சி வரும் வேளையில், இந்தியா 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான வழி அதன் பன்முகத்தன்மை மற்றும் ஒழுங்கற்றத் தன்மையையே பலமாக மாற்றுவதில்தான் உள்ளது. மேலும், கணினி வழிமுறை (Algorithm) சார்ந்த புதிய வடிவிலான ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு வகையான மனித மூளை மற்றும் சிந்தனைகளைத் தரவுகள் மூலம் கட்டுப்படுத்துவதற்கு எதிரான அகிம்சைப் போராட்டத்தை (Neural Satyagraha) இந்தியா கடைப்பிடிக்க வேண்டும்.


ஜேம்ஸ் சி. ஸ்காட் என்பவர் 1998-ஆம் ஆண்டில் எழுதிய ‘Seeing Like a State’ என்ற தனது புத்தகத்தில், எந்தவொரு பெரிய அதிகார அமைப்பும் செய்யும் முதல் வேலை, தனது மக்களைப் பற்றிய விவரங்களை எளிதில் படிக்கக்கூடியதாக, அதாவது புரிந்துகொள்ளவும் கண்காணிக்கவும் எளிதானதாக மாற்றுவதுதான் என்று வாதிடுகிறார். முற்கால நவீன அரசாங்கங்களுக்கு இது, மக்களுக்குப் குடும்பப் பெயர்களை (Surnames) உருவாக்குவது, எடைகள் மற்றும் அளவீடுகளைத் தரப்படுத்துவது, மற்றும் வரைபடங்களை வரைவது போன்றவற்றை அர்த்தப்படுத்தியது. மனித வாழ்க்கையின் சிக்கலான மற்றும் குழப்பமான யதார்த்தத்தை காகிதத்தில் படிக்கக்கூடிய ஒன்றாக மாற்றுவதன் மூலம், அரசாங்கங்களால் மக்களுக்கு வரிவிதிக்கவும், இராணுவத்தில் சேர்க்கவும், அவர்களை எளிதாகக் கட்டுப்படுத்தவும் முடிந்தது. இவ்வாறு மக்களைப் பற்றி எளிதில் துல்லியமாகப் புரிந்துகொள்வதுதான், அவர்களைத் தங்கள் விருப்பப்படி கையாளுவதற்கான முதல் படியாகும் என்று ஸ்காட் கூறினார்.

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, கிழக்கிந்திய நிறுவனம் (East India Company) இந்தியாவை வெறும் ஆயுதங்களை மட்டுமே கொண்டு கைப்பற்றவில்லை. அதற்காக அவர்கள் ஆவணங்களையும் தரவுகளையும் பயன்படுத்தினர். இந்தியாவின் நிலப்பரப்பை வரைபடமாக்குவதிலும், பயிர்களைப் பதிவு செய்வதிலும், சமூக அமைப்புகளைப் பற்றி ஆராய்வதிலும் அவர்கள் பல ஆண்டுகளைச் செலவிட்டனர். இறுதியாக, இந்தியாவின் ஒட்டுமொத்தப் பன்முகத்தன்மையும் லண்டன் அலுவலகங்களுக்குப் புரியும் வகையிலான எளிய தகவல்களாக மாற்றப்பட்டது. இந்தியாவை அவர்கள் முழுமையாக புரிந்துகொண்ட உடனே, இந்தியா அவர்களின் அடிமை நாடாக மாற்றப்பட்டது.


இன்று, அதே கிழக்கிந்திய நிறுவனத்தின் ஒரு டிஜிட்டல் பதிப்பு உருவாகி வருகிறது, ஆனால் இந்த முறை ஆவணங்கள் கணினி குறியீடுகளால் (Computer code) எழுதப்படுகின்றன. தற்போதைய 2026-ஆம் ஆண்டில், உலகப் பொருளாதாரம் ஒரு சக்திவாய்ந்த கருத்தை முன்னிறுத்துகிறது: அதுதான் முழுமையான வெளிப்படைத்தன்மை. ஒரு நாடு அதிகப்படியான தரவுகள், டிஜிட்டல் அமைப்புகள் மற்றும் குடிமக்களின் விவரப்பட்டியல்கள் மூலம் எவ்வளவுக்கெவ்வளவு தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் மாறுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அது வெற்றியடையும் என்று நாடுகளுக்குக் கூறப்படுகிறது. இந்தியா இந்தத் திட்டத்தை மிகத் தீவிரமாக ஏற்றுக்கொண்டுள்ளது. தனது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure) மூலமாக, உலகின் மிக வேகமான மற்றும் வெளிப்படையான தரவு அமைப்புகளில் ஒன்றை இந்தியா உருவாக்கியுள்ளது.


ஆனால், சிலிக்கான் வேலி (Silicon Valley) மற்றும் உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் (World Economic Forum Annual Meeting) உள்ள பலர் ஒப்புக்கொள்ள மறுக்கும் ஒரு கசப்பான உண்மை இங்குள்ளது: இந்த செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்தில், வெளிப்படைத்தன்மை என்பது இனி முன்னேற்றத்திற்கான வழி அல்ல என்றும் மாறாக, அது சுரண்டலுக்கான ஒரு கருவியாக மாறக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஒரு நாடு முற்றிலும் தெளிவாகப் புரிந்துகொள்ளக் கூடியதாக மாறும்போது, அது முற்றிலும் கணிக்கக்கூடியதாகவும் மாறுகிறது. 2026-ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார சூழலில், நீங்கள் எளிதாகக் கணிக்கக்கூடிய ஒருவராக இருந்தால், நீங்கள் ஏற்கனவே மற்றவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டீர்கள் என்றுதான் பொருள் என்கின்றனர்.

கணினி வழிமுறைகளின் முன்னிலை வர்த்தகக் காலம்.


இப்போது நாம் "முன்கூட்டியே கணித்து லாபம் ஈட்டும் புதிய முறை" (Predictive Arbitrage) என்ற ஒரு புதிய போக்கின் எழுச்சியைப் பார்த்து வருகிறோம். நமது தொழில் தொடங்குவதை எளிதாக்குதல் (Ease of Doing Business) தரவரிசைகளை கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில், வெளிநாட்டு பெரும் முதலீட்டு நிறுவனங்களும் (Hedge funds) தொழில்நுட்ப நிறுவனங்களும் வைத்துள்ள "Correlation engines" எனப்படும் மாபெரும் செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள், இந்தியாவைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் இந்தியாவின் நகர்வுகளைக் கணிக்கவும் இந்திய நாட்டின் சொந்தத் தரவுகளையே பயன்படுத்தி வருகின்றன.


ஏப்ரல் மாதம் 2026-ஆம் ஆண்டின் உலகளாவிய தரவு ஓட்ட அறிக்கையின்படி (Global Data Flow Report), வெளிநாட்டு நிறுவனங்களின் இத்தகைய முன்கூட்டியே கணிக்கும் மாதிரிகளால் இந்தியப் பொருளாதாரம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 150 பில்லியன் டாலர் (ஏறத்தாழ 12.5 லட்சம் கோடி ரூபாய்) இழப்பைச் சந்திப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது வெறும் 'பெருந்தரவு' (Big data) பற்றியது மட்டுமல்ல. இது ஒரு வகையான "கணினி நிரல் வழி ஆதிக்கம் அல்லது டிஜிட்டல் ஆக்கிரமிப்பு" (Algorithmic colonialism) ஆகும். ஒவ்வொரு பணப் பரிவர்த்தனையையும் (UPI), தளவாடப் போக்குவரத்தின் (Logistics) ஒவ்வொரு நகர்வையும் மற்றும் சிறிய நகரங்களில் உள்ள திறன்பேசிகளில் தேடப்படும் ஒவ்வொரு அவசரத் தேடலையும் பகுப்பாய்வு செய்வதன் மூலம், இந்த செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளால் இப்போது உள்நாட்டு கொள்கை வகுப்பாளர்களைவிடவும் இந்தியச் சந்தையின் மாற்றங்களை மிகச் சிறப்பாகக் கணிக்க முடிகிறது.


இதன் உண்மையான அர்த்தம் என்னவென்று யோசித்துப் பாருங்கள். மகாராஷ்டிராவில் லாரிகள் புறப்படுவதற்கு முன்பாகவே அங்குள்ள உள்ளூர் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் சிக்கல்களை இந்த அமைப்புகளால் கண்டறிய முடியும். கான்பூரில் உள்ள ஒரு குறிப்பிட்ட இளைஞர் குழு, விலை உயர்வுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுவார்கள் என்பதை அவர்களின் முதல் சமூக ஊடகப் பதிவு வெளிவருவதற்கு முன்பே இவைகளால் கணிக்க முடியும். நம்முடைய அடுத்தடுத்த நகர்வுகளை மிகத் துல்லியமாகக் கணிப்பதன் மூலம், உலகளாவிய முதலீட்டாளர்கள் நமது பொருளாதாரத்திற்கு முன்னதாகவே செயல்பட்டு, அந்த வர்த்தக மதிப்பு இந்தியாவை வந்தடைவதற்கு முன்பே லாபத்தைச் சுருட்டிவிடுகின்றனர். உங்களை மற்றவர்களால் துல்லியமாகக் கணிக்க முடியும்போது, நீங்கள் உங்களுக்கான பேச்சுவார்த்தை நடத்தும் திறனை இழக்கிறீர்கள். எதிர்பாார்ப்பு எல்லைகளை அடுத்த தரப்பின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) ஏற்கனவே லட்சக்கணக்கான முறை கணினி வழியே சோதித்துப் பார்த்திருக்கும்போது, சாதகமான வர்த்தக ஒப்பந்தங்களைப் பெறுவதோ அல்லது நமது நாட்டின் பண மதிப்பை பாதுகாப்பதோ கடினமாகிவிடுகிறது.


மனித மூளை மற்றும் சிந்தனைகளைத் தரவுகள் மூலம் கட்டுப்படுத்துவதற்கு எதிரான அகிம்சைப் போராட்டம் எனும் கோட்பாடு


இந்தியா வரும் 2047-ஆம் ஆண்டிற்குள் 30 டிரில்லியன் டாலர் (சுமார் ₹2,500 லட்சம் கோடி) பொருளாதார இலக்கை அடைய வேண்டுமானால், அது மற்ற நாடுகளால் எளிதில் கணிக்கக்கூடிய ஒரு அடிபணிந்த நாடாகத் தொடர முடியாது. அதற்குப் பதிலாக, தற்போதைய இந்த அறிவாற்றல் யுகத்திற்கு ஏற்ப மனித மூளை மற்றும் சிந்தனைகளைத் தரவுகள் மூலம் கட்டுப்படுத்துவதற்கு எதிரான அகிம்சைப் போராட்டம் (Neural Satyagraha) எனப்படும் ஒரு துணிச்சலான புதிய தற்காப்பு அணுகுமுறையை இந்தியா கையாள்வது அவசியமாகும்.


1920-களில், மகாத்மா காந்தி அவர்கள் சுரண்டல் நிறைந்த ஒரு சட்ட அமைப்புக்கு ஒத்துழைக்க மறுப்பதற்காக 'சத்யாகிரகம்' (உண்மைக்கான போராட்டம்) என்ற முறையை அறிமுகப்படுத்தினார். இப்போது 2026-ஆம் ஆண்டில், நம்மைச் சுரண்டும் மற்றும் நம் எண்ணங்களைக் கணிக்கும் டிஜிட்டல் அமைப்புகளுக்கு ஒத்துழைக்க மறுக்கும் ஒரு மனித மூளை மற்றும் சிந்தனைகளைத் தரவுகள் மூலம் கட்டுப்படுத்துவதற்கு எதிரான அகிம்சைப் போராட்டம் நமக்குத் தேவைப்படுகிறது. இது தரவுகளை மறைப்பதோ அல்லது டிஜிட்டல் உலகத்திலிருந்து விலகி ஓடுவதோ அல்ல. மாறாக, செயற்கையாகத் திட்டமிட்டு ஒரு வியூகரீதியான பகுத்தறிவற்றத் தன்மையை, அதாவது கணிக்க முடியாத செயல்பாடுகளை உருவாக்குவதாகும்.



தொடர் கண்காணிப்பு நிறைந்த இந்த நவீன யுகத்தில், நமது வலுவான பொருளாதாரப் பாதுகாப்பு என்பது கண்டிப்பான ஒழுங்குமுறையில் இல்லை. மாறாக, கணிக்க முடியாத தன்மையில்தான் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதையே இந்தியா காலம் காலமாக 'சாதுரியமான மாற்று வழிமுறை' (Jugaad) என்று அழைத்து வருகிறது. இந்தியாவின் இத்தகைய வளைந்து கொடுக்கும் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்பச் செயல்படும் முறையை மேலை நாடுகள் பலமுறை விமர்சித்துள்ளன. ஆனால், இந்த செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்தில், 'சாதுரியமான மாற்று வழிமுறைகள்' என்பது இனி ஒரு பலவீனம் அல்ல; அதுவே நமது மிகப்பெரிய பலம் ஆகும். ஒரு குறிப்பிட்ட நேர்க்கோட்டுப் பாதையில், மேற்கத்திய பாணியில் பயிற்சி அளிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளால் இதை எளிதில் நகலெடுக்க முடியாது. ஏனெனில், இது எந்தவொரு நிலையான தர்க்க முறையையும் பின்பற்றுவதில்லை. நமது இறையாண்மையைப் பாதுகாக்க, நாம் "கணினி வழிமுறைகளால் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய" நிலையிலிருந்து "கணினி வழிமுறைகளால் கணிக்க முடியாத" நிலைக்கு மாற வேண்டும்.


உத்திசார் திட்டவரைவு: தேசிய அளவிலான தரவுக் குழப்பங்களை ஏற்படுத்துதல் 


21ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நாடு எவ்வாறு மனித மூளை மற்றும் சிந்தனைகளைத் தரவுகள் மூலம் கட்டுப்படுத்துவதற்கு எதிரான அகிம்சைப் போராட்டத்தை  (Neural Satyagraha) கடைப்பிடிக்க முடியும்? அதற்குத் தேசிய தொழில்நுட்பக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றம் தேவை. அதாவது, அனைத்துத் தரவுகளையும் துல்லியமாகத் திரட்டும் "முழுமையான செயல்திறன்" என்ற இலக்கிலிருந்து மாறி, பிற நாடுகள் எளிதில் கணிக்க முடியாத "உத்திசார் சிக்கல்தன்மை" என்ற இலக்கை நோக்கி நாம் நகர வேண்டும்.


முதலாவதாக, ஒரு 'தேசிய இரைச்சல் நெறிமுறை' (National Noise Protocol) உருவாக்கப்பட வேண்டும். இந்தியா தனது சொந்த செயற்கை நுண்ணறிவுத் தொகுப்புகளைப் — அதாவது, இந்திய செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தின்கீழ் (IndiaAI Mission) உள்ள 60,000 அதிவேகக் கணினிச் செயலிகள் (GPUs) மற்றும் 2025ஆம் ஆண்டின் சாந்தி சட்டம் (SHANTI Act) மூலம் வழங்கப்படும் மின்சார மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவை — குடிமக்களின் நடத்தையை ஆராய்வதற்கு மட்டுமல்லாமல், அவர்களைப் பாதுகாப்பதற்கும் பயன்படுத்த வேண்டும். உலகளாவிய தரவு அமைப்புகளில், செயற்கையான ஆனால் நம்பகத்தன்மை வாய்ந்த, தர்க்கமற்ற செயல்பாடுகளை வேண்டுமென்றே "குழப்பமான தரவுகளாக" (Noise) இந்தியா சேர்க்க வேண்டும். இது உள்நாட்டுச் சந்தைகளின் உண்மையான நிலையை வெளிநாட்டினருக்குக் காட்டாமல் மறைக்கும். உலகப் பொருளாதாரத்தில் இந்திய நுகர்வோரை மட்டும் எவராலும் கணிக்க முடியாத ஒரு காரணியாக மாற்றுவதே இதனுடைய நோக்கமாகும்.


இரண்டாவதாக, இந்தியா 'தரவுக் குழப்பத்தை ஒரு சேவையாக' (Obfuscation as a service) வழங்க வேண்டும். நாட்டின் டிஜிட்டல் அமைப்புகளில் "தனிநபர் உரிமையைப் பாதுகாக்கும் இரைச்சல் நெறிமுறை" சேர்க்கப்பட வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியச் சந்தைத் தரவுகளைப் பெறும்போது, அவர்களுக்குச் சாதாரண வணிக நோக்கங்களுக்குப் பயன்படும் பொதுவான தகவல்கள் மட்டுமே கிடைக்க வேண்டும். ஆனால், இந்திய நுகர்வோரின் அடுத்தகட்டச் செயல்பாடுகளை முன்கூட்டியே கணித்து அவர்களைச் சுரண்டுவதற்கு அந்தத் தரவுகள் பயன்படாதவாறு இருக்க வேண்டும்.


மூன்றாவதாக, வர்த்தகத்தில் 'தரவுகளின் சீரற்ற தன்மையைக் கணக்கிடும் முறையை' (Entropy Standard) இந்தியா அறிமுகப்படுத்த வேண்டும். எதிர்கால வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில், "பரஸ்பர ரகசியம் காத்தல்" என்ற கொள்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும். ஒரு தரவின் மதிப்பு, அது எவ்வளவு பெரிய அளவில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்தது அல்ல; மாறாக, வெளிநாட்டினருக்கு அதன் பயன்பாடு எவ்வளவு விரைவாகப் பயனற்றுப் போகிறது என்பதைப் பொறுத்தே அதன் மதிப்பு தீர்மானிக்கப்பட வேண்டும்.


பயனுள்ள மோதலின் முரண்பாடு 


ஒரு சந்தையானது எவ்வளவு திறம்பட மற்றும் வேகமாகக் செயல்படுகிறதோ, அவ்வளவு சிறப்பாக அதன் பொருளாதாரம் வளரும் என்று பொதுவான பொருளாதாரக் கோட்பாடு கூறுகிறது. ஆனால், இந்தத் திறனின் நன்மைகள் அந்தச் சந்தையில் உள்ள மக்களுக்கே சென்றடையும் என்ற ஊகத்தின் அடிப்படையிலேயே இந்தக் கோட்பாடு உருவாக்கப்பட்டது. ஆனால் 2026-ஆம் ஆண்டில், இந்தியாவின் டிஜிட்டல் சந்தையின் அதிவேகத் திறன் மற்றும் துல்லியம், போபாலில் உள்ள ஒரு சிறு வணிகருக்குப் பலன் தராமல், வெளிநாடுகளுக்குத்தான் அதிக லாபத்தைத் தருகிறது.


இந்தச் சூழலில், நாம் ‘Neural Satyagraha’ என்ற அகிம்சைப் போராட்ட முறையைக் கையாள்வதன் மூலம், "உற்பத்தித்திறன் சார்ந்த தடங்கல்களை" மீண்டும் கொண்டுவர முடியும். 2026-ஆம் ஆண்டு முதலாம் காலாண்டின் ‘NASSCOM-Zinnov’ அறிக்கை ஒரு சுவாரஸ்யமான போக்கைக் காட்டுகிறது. பெங்களூரு போன்ற அதிநவீன, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பெருநகரங்களில் ஆரம்பக்கட்ட வேலைகளுக்கான ஊதியம் தேக்கமடைந்துள்ள அதேவேளையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் வேலைகளுக்கான தேவை 28 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு என்ன காரணம்? உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளால் இந்த குறைந்த செயல்திறன் கொண்ட உள்ளூர் சந்தைகளைப் புரிந்துகொள்வது கடினம். ஏனெனில், இந்தச் சந்தைகளை இயக்க உள்ளூர் அறிவும், மக்களின் உள்ளுணர்வைப் புரிந்துகொள்ளும் அறிவும் தேவைப்படுகின்றன.


இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளில் ஓரளவுக்கு எதிர்பாராத சில மாற்றங்களை வைத்திருப்பதன் மூலம், உலகளாவிய மூலதனத்தை இந்தியாவில் நீண்டகாலம் நிலைத்திருக்கச் செய்யமுடியும். அதோடு, உலக முதலீட்டாளர்கள் நம்முடன் இன்னும் ஆழமான வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், நமது பொருளாதாரத்தை ஒரு அதிவேக சூதாட்ட இயந்திரம் (Slot machine) போலத் தற்காலிக லாபத்திற்காகப் பயன்படுத்திவிட்டு உடனே வெளியேறும் இடமாகப் பார்ப்பதைத் தடுக்கவும் உதவும் என்கின்றனர்.


வாக்குச்சீட்டுகளுக்கு அப்பால்: பிரதிநிதிகளின் குழு


மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கான 2026 தொகுதி மறுவரையறை மசோதா குறித்து அரசியல் கட்சிகள் தொடர்ந்து விவாதித்து வருகின்றன. ஆனால், அவர்கள் 20-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பழமையான போரையே இன்னும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு (AI) ஆதிக்கம் செலுத்தும் இந்த யுகத்தில், வெறும் மக்கள்தொகையை மட்டும் கணக்கிடுவது இனி போதுமானதாக இருக்காது. ஒரு பிராந்தியத்தின் உண்மையான பலம் என்பது அதன் படைப்பாற்றல் மற்றும் அறிவுசார் திறனில்தான் உள்ளது.

ஒரு மாவட்டத்தின் முக்கியத்துவம் என்பது அங்கு எவ்வளவு மக்கள் வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்து அமையக்கூடாது. மாறாக, புதிய மற்றும் எதிர்பாராத கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அதன் திறனைப் பொறுத்தே அமைய வேண்டும். நமக்கு ஒரு புதிய கூட்டாட்சி முறை தேவைப்படுகிறது. அதை நாம் "பிரதிநிதிகளின் குழு" (Council of Nodes) எனலாம். இதில், கணினி வழிமுறைகளின் சுரண்டல்களின் (Algorithmic Exploitation) பிடியில் இருந்து குடிமக்களைப் பாதுகாக்கும் மாநிலங்களுக்கு உரிய வெகுமதிகள் வழங்கப்பட வேண்டும். இந்தியாவின் நூற்றாண்டு சுதந்திர ஆண்டான 2047-ஆம் ஆண்டுக்குள், ஒரு நாட்டின் இறையாண்மை என்பது மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்டிருப்பதில் இல்லை. மாறாக, கணிக்க முடியாத தனித்துவமான திறமைகளைக் கொண்டிருப்பதில்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


இனி ஆங்கிலம் தெரிந்திருப்பதால் மட்டுமே பெரிய பலன் கிடைத்துவிடாது. தர்க்கரீதியாகச் சிந்திக்கும் திறன் இப்போது அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கத் தொடங்கிவிட்டது. இனிமேல் எது முக்கியமாக இருக்கும் என்றால், அது "நுட்பமான அறிவுத்திறன்" தான். இந்தியா 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான பயணம் என்பது, இந்த நுட்பமான அறிவுத்திறன் சார்ந்த பொருளாதாரமாக மாறுவதில்தான் உள்ளது. அதாவது, நிலையான தர்க்க முறைகளைப் பின்பற்றாத சிக்கலானப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணும் வலிமை கொண்ட நாடாக இந்தியா மாற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.


2026-ஆம் ஆண்டில் இந்தியா எதிர்கொள்ளும் உண்மையான சுதந்திரப் போராட்டம் என்பது ஏதோ ஒரு வெளிநாட்டு ராணுவத்திற்கு எதிராவோ அல்லது மாற்று அரசியல் கொள்கைக்கு எதிராவோ நடப்பது அல்ல. அது இந்தியாவைப் பற்றிய துல்லியமான கணிப்புகளுக்கு எதிராக நடப்பதாகும். இந்த புதிய சுதந்திரப் போராட்டத்தை இந்தியா மனித மூளை மற்றும் சிந்தனைகளைத் தரவுகள் மூலம் கட்டுப்படுத்துவதற்கு எதிரான அகிம்சைப் போராட்டம் (Neural Satyagraha) எனலாம். அதாவது, ஒரு வெளிப்புறக் கணினி அமைப்பால் நம்மை வகைப்படுத்தப்படுவதற்கும், அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் நாம் அடங்குவதற்கும் மறுப்பதே இந்த அகிம்சைப் போராட்டம் ஆகும்.


நிஷாந்த் சஹ்தேவ், அமெரிக்காவில் உள்ள சாப்பல் ஹில்லில் அமைந்துள்ள ‘University of North Carolina’ பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஒரு இயற்பியலாளர் ஆவார்.

Original link:

AI is a digital East India Company. India needs to use ‘juggad’ to protect itself.


Share:

சாலைப் புழுதி (road dust) ஏன் டெல்லியின் மிகப்பெரிய மாசு அச்சுறுத்தலாக மாறி வருகிறது? -சோபியா மேத்யூ

புகை மற்றும் வாகனப் புகையைத் தவிர, நகரத்தில் உள்ள மற்றொரு முக்கிய மாசுபடுத்தி, கண்முன்னே மறைந்திருக்கும் நச்சுத் தூசியாகும். பொதுவான தீர்வுகள் குறைந்த அளவிலான நிவாரணத்தையே அளிக்கின்றன.


இந்த தூசு நீண்டகாலம் காற்றில் தங்கிவிடுகிறது. மக்கள் இதைத் தங்கள் நுரையீரலுக்குள் ஆழமாக சுவாசிக்கிறார்கள். மேலும் இது இரத்த ஓட்டத்திலும் நுழையக்கூடும். இது நோய்களை உண்டாக்கக்கூடிய, நுரையீரலைச் சேதப்படுத்தக்கூடிய மற்றும் குறிப்பாகக் குழந்தைகளிடையே புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய நச்சு உலோகங்களையும் கொண்டுள்ளது.


இந்த சாலைப் புழுதி, டெல்லியின் மாசுபடுத்திகளின் முக்கிய வில்லன் ஆகும். ஒவ்வொரு நாளும் தங்கள் உயிருக்கு அமைதியாக ஆபத்தை விளைவிக்கிறது.


காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தால் (Commission for Air Quality Management (CAQM)) அமைக்கப்பட்ட உயர்மட்ட நிபுணர்கள் குழுவின் ஜனவரி 2026 அறிக்கை, சாலைப் புழுதியை டெல்லியின் ஒரு முக்கிய மாசு மூலமாக அடையாளம் கண்டுள்ளது. ஏனெனில் அது "ஒரு முதன்மை உமிழ்வாகவும், ஒரு நீடித்த மூலமாகவும்" செயல்படுகிறது. சாலைகள் மற்றும் சாலையோரங்களில் இருந்து காற்றில் பரவும் தூசி, வாகனங்களின் இயக்கம், உலர்ந்த மண் மற்றும் சாலைத் தேய்மானம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக சாலைப் புழுதியை அந்தக் குழு பரந்த அளவில் வரையறுத்தது. மோசமான சாலை மேற்பரப்புகள், பள்ளங்கள், உடைந்த விளிம்புகள், செப்பனிடப்படாத சாலைப் பகுதிகள், சாலையில் சக்கர தேய்மானம் மற்றும் கட்டுமானம் மற்றும் இடிப்பு (construction and demolition (C&D)) பொருட்களைக் கொண்டு செல்லும்போது விழும் குப்பைகள் ஆகிய அனைத்தும் புழுதியின் அளவு அதிகரிப்புக்குப் பங்களிக்கின்றன என்று அந்த அறிக்கை கூறியது.



சாலைப் புழுதியைக் கட்டுப்படுத்துவதை கடினமாக்கும் செயல்முறையையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. சாலை மேற்பரப்புகளில் படியும் தூசியானது, குறிப்பாக வறண்ட காலங்களில், வாகனங்களின் இயக்கத்தால் மீண்டும் காற்றில் கலக்கப்படுகிறது. இதனால், தூசியை உருவாக்கும் செயல்பாடுகள் எதுவும் இல்லாதபோதும், மாசுபாட்டின் அளவு அதிகமாகவே இருக்கிறது.


ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் மன்றத்தின் (Council on Energy, Environment and Water Programme) தூய்மையான காற்றுத் திட்டத் தலைவரான முகமது ரஃபியுதீன் கூறுகையில், “அறிவியல்ரீதியாக, கட்டுமானம் மற்றும் இடிப்புத் தூசியுடன் ஒப்பிடும்போது சாலைப் புழுதி  முற்றிலும் வேறுபட்டது. சாலைப் புழுதியானது ஒரு நேரியல் மூலமாகும் (வரிசையாக பரவியிருக்கும்). ஆனால் ஒரு கட்டுமானத் தளத்தில், உருவாகும் தூசி ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து வருகிறது.” இதன் பொருள், சாலைப் பாதை முழுவதும் சாலைப் புழுதிக்குத் தொடர்ச்சியான சுத்தம் செய்தலும் மேற்பரப்பு மேலாண்மையும் தேவை என்பதாகும். அதேசமயம் கட்டுமானத் தூசியானது தள அளவிலான கட்டுப்பாடு மற்றும் அமலாக்கம் மூலம் கட்டுப்படுத்த முடியும்.


அது ஏன் தொடர்கிறது?


கடந்த ஆண்டு காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தால் (CAQM) அமைக்கப்பட்ட சாலைப் புழுதிக் குழு, சாலை ஓரங்கள் மற்றும் நடுப்பகுதிகளில் தொடர்ச்சியாகப் படியும் தூசி, பொருத்தமற்ற சாலை உள்கட்டமைப்பு வடிவமைப்பு, மோசமான பராமரிப்பு மற்றும் போதுமான தூசி மேலாண்மையின்மை நடைமுறைகள் ஆகியவற்றால் தூசி மீண்டும் காற்றில் கலப்பதாகத் தெரிவித்துள்ளது.


தார் போடப்படாத சாலை நடுப்பகுதிகளிலிருந்து வரும் தூசி அடிக்கடி சாலைகளில் வீசப்படுவதாகக் குழு குறிப்பிட்டது. நீர்ப்பாசன முறைகள் இப்பிரச்சனையை மேலும் மோசமாக்கக்கூடும். ஏனெனில், சாலையின் நடுப்பகுதி மற்றும் நடைபாதைகளில் உள்ள செடிகளுக்கு நீர் பாய்ச்சப் பயன்படுத்தப்படும் தடிமனான குழாய்கள் பெரும்பாலும் மண்ணைச் சாலைகளில் கொட்டுகின்றன. அது பின்னர் காய்ந்து தூசியின் அளவை அதிகரிக்கிறது. ஆக்கிரமிப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத வாகன நிறுத்தம் ஆகியவையும், தூய்மைப் பணியைத் தடுக்கும் மற்றும் தூசி குவிய அனுமதிக்கும் செயல்பாட்டுத் தடைகளாகச் சுட்டிக்காட்டப்பட்டன.


உள்ளூர் சாலைகள் மற்றும் துணைச் சாலைகள் வழக்கமான பராமரிப்பு அட்டவணைகளிலிருந்து பெரும்பாலும் விலக்கப்படுகின்றன என்று அந்த அறிக்கை கூறியது. "சாலைகளில் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்ட பின்னரே பெரும்பாலும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நீண்டகால தூசு வெளியேற்றம் ஏற்படுகிறது," என்றும் அது குறிப்பிட்டது.


CSIR-தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) மற்றும் CSIR-மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (CRRI) இணைந்து நடத்திய ஒரு தனி கூட்டு ஆய்வு, பிப்ரவரி 7, 2025 அன்று காற்றுத் தர மேலாண்மை ஆணையத்திற்கு (CAQM) சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வில், "சாலைத் தடுப்புகளின் ஓரங்களில் தொடர்ச்சியாக தூசு படிதல், மோசமான சாலை வடிவமைப்பு அல்லது அதன் நிலை மற்றும் பராமரிப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட தூசு மேலாண்மை நடைமுறைகள் ஆகியவற்றால் சாலைப் புழுதி மீண்டும் காற்றில் கலக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தலைநகரில் உள்ள சில சாலைப் பகுதிகளில், சாலையிலிருந்து 10 மீட்டர் தூரம் வரை PM-10 வெளியேற்றம் 1700 µg/m³ வரை "அதிர்ச்சியளிக்கும் வகையில் மிக உயர்ந்த அளவில்" பதிவாகியுள்ளதாகவும் அந்த ஆய்வு குறிப்பிட்டது. இதற்கு மாறாக, PM10 துகள்களுக்கான அனுமதிக்கப்பட்ட வரம்பு, 24 மணி நேர அடிப்படையில் 100 µg/m³ ஆகவும், ஆண்டு சராசரியாக 60 µg/m³ ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


சாலைப் புழுதி யை மதிப்பிடும்போது மூன்று கூறுகளை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என 'ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் மன்றத்தின்' (Council on Energy, Environment and Water) திட்ட இணைப்பாளர் அர்பன் பத்ரா கூறினார். இது தூசியின் மூலங்கள், காற்றினால் பரவும் தூசியின் பங்கு மற்றும் மனிதனால் உருவாக்கப்படும் தூசியின் பங்கு (கட்டுமானம் தொடர்பானவை உட்பட), மற்றும் மீண்டும் காற்றில் கலப்பதற்காக சாலை மேற்பரப்புகளில் கிடைக்கும் தளர்வான துகள்களின் அளவு போன்றவற்றை குறிப்பிட்டார்.



வாகனப் புகை வெளியேற்றம் குறையும்போது, ​​சாலைப் புழுதியின் முக்கியத்துவம் ஒப்பீட்டளவில் அதிகரித்து வருவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT) டெல்லி ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான, 2023-ம் ஆண்டு பல நகரங்களில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், தூய்மையான எரிபொருட்களால் வாகனப் புகை வெளியேற்றம் குறைந்தாலும், "மீண்டும் காற்றில் கலக்கக்கூடிய சாலைப் புழுதி , டயர் தேய்மானம் மற்றும் பிரேக் தேய்மானம்" போன்ற புகை அல்லாத மூலங்கள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.


ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் கட்டுமானப் பணிகள், கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் புழுதிப் புயல்கள் ஆகியவற்றால் டெல்லியில் வண்டல் மண் அதிகமாகக் காணப்படுகிறது என்று அந்த ஆய்வு காட்டியுள்ளது. 32 நகரங்களில், வண்டல் மண்ணின் அளவு ஒரு சதுர மீட்டருக்கு 0.2 கிராம் முதல் 111.2 கிராம் வரை இருந்தது. இதில் டெல்லியின் சராசரி அளவு ஒரு சதுர மீட்டருக்கு 14.47 கிராம் ஆகும்.


ஆரவல்லி மலைத்தொடரின் சிதைவு, டெல்லியைச் சுற்றியுள்ள இயற்கையான தூசித் தடுப்பை பலவீனப்படுத்தியுள்ளது என்றும், இதனால் காற்றினால் அடித்து வரப்படும் தூசி அதிகளவில் நகருக்குள் நுழைய அனுமதிக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டினர். நாடு முழுவதும், சாலைப் புழுதியால் ஏற்படும் பாதிப்பானது ஆண்டுதோறும் 10,207-க்கும் மேற்பட்ட இறப்புகளுடன் தொடர்புடையது என்று அந்த ஆய்வு தெரிவித்தது.


டெல்லி என்ன செய்கிறது?


இயந்திர சாலைத் துடைப்பு இயந்திரங்கள் (Mechanical Road Sweeping Machines (MRSM)) மூலம் தூசியை அகற்றுவதுடன், டெல்லி மாநகராட்சி (Municipal Corporation of Delhi (MCD)), அந்த இயந்திரங்கள் நுழைய முடியாத பகுதிகளைத் துடைப்பதற்காக மொத்தம் 57,000 துப்புரவுப் பணியாளர்களைப் பணியில் ஈடுபடுத்துகிறது.


ஆனால், இயந்திரமயமாக்கப்பட்ட சாலைத் துடைப்புப் பணிகள் அடிக்கடி செய்யப்படுவது மட்டுமல்லாமல், மேலும் அறிவியல்பூர்வமானதாக மாறவேண்டும் என்று NEERI-CRRI அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. "அறிவியல் ஆய்வின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட வகையான சாலைகளில் இயந்திரச் சாலைத் துடைப்பான்களை இயக்குவதற்கான ஒரு நிலையான இயக்க நடைமுறையை (standard operating procedure (SOP)) தயாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது," என்று கூட்டு நிறுவனம் அறிக்கையில் கூறியது. சாலைத் துடைப்பு இயந்திரப் பயன்பாட்டின் அதிர்வெண் மற்றும் செயல்திறன், மற்றும் பயன்பாட்டின் போதும் அதற்குப் பின்னரும் கிளறப்படும் தூசியின் துகள் அளவுப் பகுப்பாய்வு ஆகியவை ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் கூறியது.


மற்ற நடவடிக்கைகளில் நீர் தெளிப்பான்கள், நகரும் புகை தடுப்புத் துப்பாக்கிகள் (anti-smog guns (ASG)) மற்றும் சாலைகள் மற்றும் பள்ளங்களைச் சீரமைத்தல் ஆகியவை அடங்கும். உதாரணமாக, டெல்லி மாநகராட்சியில் (MCD) சாலைகளில் மொத்தம் 167 நீர் தெளிப்பான்களும் 63 நகரும் புகை தடுப்புத் துப்பாக்கிகளும் (ASG) நிறுவப்பட்டுள்ளன. மேலும், கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகளுக்கான பதப்படுத்தும் வசதிகள், எஞ்சிய சாம்பலுக்கான சுகாதார நில நிரப்பு வசதிகள் மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளைச் சுத்திகரிப்பதற்கான கழிவிலிருந்து ஆற்றல் உற்பத்தி செய்யும் ஆலைகளும் உள்ளன.


எதைச் சரிசெய்ய முடியும்? — எதைச் சரிசெய்ய முடியாது?


டெல்லியின் இயற்கைச் சூழல் அந்நகரத்திற்குப் பாதகமாக உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். சாலைகளின் நிலை மேம்பட்டாலும், "எப்போதும் சிறிதளவு தூசி இருக்கத்தான் செய்யும்" என்றும், அதைத் தீவிரமாக அகற்றி நிர்வகிக்க வேண்டியுள்ளது என்றும் ரஃபியுதீன் கூறினார். வறண்ட கோடைக்காலங்கள், அடிக்கடி ஏற்படும் புழுதிப் புயல்கள், தளர்வான வண்டல் மண் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த மழைப்பொழிவு ஆகியவற்றால் நகரத்தில் தூசிக்கான இயற்கையான அடிப்படை நிலை இருப்பதே இதற்குக் காரணம்.


பொதுவாகப் பயன்படுத்தப்படும் சில தணிப்பு நடவடிக்கைகள் குறைந்த அளவிலான பலன்களையே அளிக்கின்றன. புகைமூட்டத் தடுப்பு நடவடிக்கைகளின் செயல்திறன் குறித்து 2017-ல் ஒரு முன்னோடியான ஆய்வை வழிநடத்தியவரும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்று ஆய்வகத்தின் முன்னாள் தலைவருமான தீபங்கர் சாஹா, தூசியைக் கட்டுப்படுத்துவதில் அத்தகைய நடவடிக்கைகள் பயனற்றவை என்று கூறினார்.

"தண்ணீர் தெளிப்பான்களையோ அல்லது நீர்த் தெளிப்பான்களையோ சார்ந்திருக்கக் கூடாது. அவை தூசியை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு நகர்த்துகின்றன. துகள்கள் அடியில் தங்கி, மேற்பரப்பு காய்ந்தவுடன், தூசி மீண்டும் காற்றில் கலக்கிறது. இது ஈரப்பதமாதலுக்கும் வழிவகுக்கிறது," என்று அவர் கூறினார்.


காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தால் (CAQM) நியமிக்கப்பட்ட சாலைப் புழுதிக் குழு, தனது 2025 அறிக்கையில், புகைமூட்டத் தடுப்புக் கருவிகள் "அதிக முன்னுரிமை உள்ள சூழ்நிலைகளில் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளது. மேலும், அவசரகாலங்களில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்தப் பரிந்துரைப்பதோடு, "சாலைகளில் தூசியைக் கட்டுப்படுத்துவதில் அவை குறைந்த முன்னுரிமை கொண்டவை" என்றும் விவரித்துள்ளது.


அதற்குப் பதிலாக, சாலை அமைத்தல், சாலையின் வழித்தடங்களில் பசுமையாக்குதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு நடைமுறைகளை ஒருங்கிணைக்கும் ஒரு தரப்படுத்தப்பட்ட கட்டமைப்பிற்கு அக்குழு அழைப்பு விடுத்ததுடன், தீர்வுகள் வெறும் துடைப்பதை மட்டும் தாண்டியதாக இருக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாகக் கூறியது.


பசுமையாக்குதல் குறித்து, தாவரங்கள் காற்றில் பரவும் தூசியைத் தடுத்து, தார் போடப்படாத பகுதிகளில் இருந்து அது மீண்டும் காற்றில் கலப்பதைத் தடுப்பதன் மூலம் உதவுகின்றன என்று அந்த அறிக்கை கூறியது. அகன்ற கிளைகளையும், சொரசொரப்பான அல்லது பெரிய இலைகளையும் கொண்ட, தூசியை சிறப்பாகத் தக்கவைக்கும் வறட்சியைத் தாங்கக்கூடிய தாவர வகைகளைச் சாலையோரம் நடுமாறு அது பரிந்துரைத்தது. மேலும், காற்று வீசும் காலங்களில் மண் சரிந்து விழுவதைக் குறைப்பதற்காக, மண் மட்டத்திற்கும் நடைபாதைக் கற்களின் மேல் பகுதிக்கும் இடையே 8-12 அங்குல இடைவெளி விடுவது போன்ற நடைமுறை வடிவமைப்பு நடவடிக்கைகளையும் அது பரிந்துரைத்தது.


2025-ம் ஆண்டின் CSIR-NEERI கூட்டு ஆய்வும் இதையே எதிரொலித்தது. ஏனெனில், அது முக்கிய சாலைப் பகுதிகளில், குறிப்பாக ஓரங்களிலும் நடுப்பகுதிகளிலும், மோசமான பராமரிப்பு மற்றும் கண்ணுக்குத் தெரியும் தூசி படிதலை இந்த ஆய்வுச் சுட்டிக்காட்டியது. மேம்படுத்தப்பட்ட சாலை வடிவமைப்பு, தாவரத் தடைகள், கழிவுநீரிலிருந்து சொட்டு நீர்ப்பாசனம் மூலம் மெட்ரோ உள்கட்டமைப்பைச் சுற்றிப் பசுமையாக்குதல், மற்றும் தளர்வான மண்ணை நிலைப்படுத்தி தூசி வடிகட்டிகளாகச் செயல்படக்கூடிய மும்முனை மரக்கன்று நடும் முறை ஆகியவற்றை அது வலியுறுத்தியது.


நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?


சாலைப் புழுதியானது PM-2.5 மற்றும் PM-10 ஆகியவற்றின் ஒரு முக்கிய ஆதாரமாகும். இந்த நுண்ணிய துகள்கள் நுரையீரலின் ஆழம் வரை ஊடுருவி, இரத்த ஓட்டத்தில் நுழையக்கூடியவை. இந்தத் துகள்களை உள்ளிழுப்பதால் நுரையீரல் எரிச்சல் மற்றும் அழற்சி ஏற்படலாம். மேலும், ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் போன்ற ஏற்கனவே உள்ள நோய்களை இது மோசமாக்கி, பெரும்பாலும் தொடர்ச்சியான இருமல் மற்றும் மூச்சிரைப்புக்கு வழிவகுக்கிறது. PM-2.5 உடன் நீண்டகாலத் தொடர்பு, குறிப்பாக நாள்பட்ட இதயம் அல்லது நுரையீரல் நோய் உள்ளவர்களிடையே இறப்புடன் சேர்த்து, குழந்தைகளில் நுரையீரல் வளர்ச்சி மற்றும் செயல்பாடு குறைவதுடனும் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

Original link:

Why road dust is emerging as Delhi’s biggest pollution threat?.


Share:

உச்சநீதிமன்ற உத்தரவானது, இந்திய இரயில்வேயின் நிதி நெருக்கடியை எவ்வாறு மேலும் மோசமாக்கக்கூடும்? -தீரஜ் மிஸ்ரா

 உச்சநீதிமன்ற உத்தரவானது, இந்திய இரயில்வேயின் நிதி நெருக்கடியை எவ்வாறு மேலும் மோசமாக்கக்கூடும்?

-தீரஜ் மிஸ்ரா


இந்தியாவில் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தும் ஒரே நிறுவனம் இரயில்வே ஆகும். உச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவு ஒன்று, அதன் மின்சாரச் செலவுகளைக் கடுமையாக அதிகரித்து, வருவாயைப் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சுமார் ஒரு பத்தாண்டு காலமாக, இந்திய ரயில்வே ஒரு மின்சார விநியோக நிறுவனம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இது குறைந்த செலவில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய அதற்கு வழிவகுக்கிறது.


இருப்பினும், சமீபத்திய உச்சநீதிமன்ற உத்தரவு ஒன்று, இந்த “உரிமம் பெற்றதாகக் கருதப்படும்” தகுதியை ரத்து செய்துள்ளது. இது, ஏற்கனவே வருவாய் நெருக்கடியில் இருக்கும் தேசியப் போக்குவரத்து நிறுவனத்திற்குப் பெரும் கவலைகளை எழுப்பியுள்ளது.


இரயில்வே துறையானது, நாட்டின் மின்சாரத்தைப் பயன்படுத்தும் ஒற்றைப் பெரிய அமைப்பாகும். அது தனது இரயில் தண்டவாள வலையமைப்பை வேகமாக மின்மயமாக்கி வருவதால், மின்சாரத்தை முக்கியமாகத் தனது என்ஜின்களை இயக்கவே பயன்படுத்துகிறது. 2024-25-ஆம் ஆண்டில் இரயில்களை இயக்குவதற்காக அது ரூ. 32,378 கோடியைச் செலவிட்டது.


ஆனால், உச்சநீதிமன்றத் தீர்ப்பு இந்த இழுவை எரிசக்திச் செலவுகளை (traction energy costs) 30%-க்கும் மேல் உயர்த்தக்கூடும் என இரயில்வே வாரியம் மே 15-ம் தேதி எழுதிய கடிதத்தில் எச்சரித்துள்ளது.


ஏப்ரல் மாதத்தில் சாதாரண இயக்கச் செலவுகள் (ordinary working expenses (OWE)) 11.6% மற்றும் ஓய்வூதியச் செலவுகள் 9.1% அதிகரித்ததைத் தொடர்ந்து இதுவும் நிகழ்கிறது. இதற்கிடையில், இரயில்வேயின் வருவாயில் 65% பங்களிக்கும் சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகள் 5% சரிந்துள்ளன.


இவை அனைத்தும் சேர்ந்து, பல ஆண்டுகளாக அழுத்தத்தில் இருந்துவரும் இரயில்வேயின் இயக்க விகிதத்தைப் (அதாவது, ஒவ்வொரு ரூபாயையும் ஈட்டுவதற்கு அது செலவிடும் தொகை) பாதிக்கக்கூடும். குறைந்த இயக்க விகிதம் சிறந்த நிதி நிலையைக் குறிக்கிறது. இரயில்வேயின் இயக்க விகிதம் பொதுவாக 98%-க்கு மேல் இருந்து வருகிறது. அதாவது, 100 ரூபாய் ஈட்டுவதற்கு அது 98 ரூபாய்க்கு மேல் செலவிடுகிறது.


இரயில்வேக்கு தகுதி ஏன் வழங்கப்பட்டது?, அது ஏன் சவாலுக்கு உள்ளானது? மேலும் இந்தத் தீர்ப்பு அதன் நிதி நிலைக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பது குறித்து ஒரு ஆழமான பார்வை.


முதலில், கருதப்படும் உரிமதாரர் (deemed licensee) என்றால் என்ன?


கருதப்பட்ட விநியோக உரிமதாரர் (deemed distribution licensee) என்பது அடிப்படையில் ஒரு வகையான மின் விநியோக நிறுவனம் (டிஸ்காம்) ஆகும். அது மின்சாரத்தைத் தனது சொந்தப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தாமல், அதை விநியோகித்து வழங்குவதற்கான ஒரு அமைப்பை இயக்குகிறது.


ஒரு நுகர்வோர் இரண்டு வழிகளில் மின்சாரத்தை வாங்கலாம். ஒரு வழி, தங்கள் பகுதியில் செயல்படும் விநியோக உரிமதாரரிடமிருந்து வாங்குவது. இரண்டாவது வழி, "திறந்த அணுகல்" (open access) மூலமாக வாங்குவது.


நுகர்வோர் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்தால், அவர்கள் ‘குறுக்கு மானியக் கூடுதல் கட்டணம்’ (cross-subsidy surcharge) மற்றும் ‘கூடுதல் கட்டணம்’ (additional surcharge) என இரண்டு கூடுதல் கட்டணங்களைச் செலுத்த வேண்டும். விவசாயிகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் போன்ற பிரிவினருக்கு வழங்கப்படும் மானியக் கட்டணங்களுக்காக, இந்தக் கட்டணங்கள் விநியோக நிறுவனங்களுக்கு ஈடுசெய்கின்றன.


இரயில்வே நிர்வாகம், ஒரு சாதாரண நுகர்வோரைப் போலவே இரண்டாவது வழிமுறையின் மூலம், இரண்டு கூடுதல் கட்டணங்களையும் செலுத்தி மின்சாரத்தைக் கொள்முதல் செய்து வந்தது.


ஆனால், இரயில் என்ஜின்கள், சிக்னல் அமைப்புகள் மற்றும் ரயில் நிலைய வசதிகளுக்காக ஒரு பெரிய மின் விநியோக வலையமைப்பைத் தானே இயக்கி வருவதால், ஒரு கருதப்பட்ட விநியோக உரிமதாரராகத் தகுதிபெறுவதாக அது வாதிட்டது. இந்தத் தகுதி, இரண்டு கூடுதல் கட்டணங்களையும் செலுத்தாமல், தடையற்ற அணுகல் மூலம் மின்சாரத்தைப் பெற அதற்கு அனுமதி அளித்தது.


மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (Central Electricity Regulatory Commission (CERC)) உத்தரவைத் தொடர்ந்து, இது நவம்பர் 2015-ல் இந்தப் பெயரில் செயல்படத் தொடங்கியது.


அப்படியென்றால், இரயில்வே ஏன் அந்த தகுதியை நாடியது?


ஆரம்பத்தில், ரயில்வே நிர்வாகம் டீசல் என்ஜின்களையே பெருமளவில் சார்ந்திருந்ததால், இந்த 'கருதப்பட்ட உரிமம்' தகுதிக்கு அது அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை. அக்காலகட்டத்தில், நாட்டின் மிகப்பெரிய டீசல் எரிபொருள் நுகர்வோராக ரயில்வே நிர்வாகமே திகழ்ந்தது. 2016-17-ஆம் ஆண்டில், ரயில்களை இயக்குவதற்கு அது கிட்டத்தட்ட 287 கோடி லிட்டர் எரிபொருளைப் பயன்படுத்தியது. 2017-ம் ஆண்டில், மொத்த அகல ரயில் பாதை வலையமைப்பில் சுமார் 40% (சுமார் 70,000 வழித்தட கிலோமீட்டர்கள்) மட்டுமே மின்மயமாக்கப்பட்டது.


ஆனால், இதே காலகட்டத்தில் ரயில்வேயும் அதிக மின்மயமாக்கலுக்காக அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது.


2019 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மின்மயமாக்கலின் வேகம் அதிகரித்தது. சராசரியாக ஒவ்வொரு நாளும் 15 வழித்தட கிலோமீட்டருக்கும் அதிகமான சாலைகள் மின்மயமாக்கப்பட்டன.


2024-25-ஆம் ஆண்டிற்குள், 2016-17-ஆம் ஆண்டிலிருந்து ரயில்வேயின் டீசல் பயன்பாடு 62% குறைந்துள்ளது. தற்போது, ​​நாட்டின் 99.6% ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.



இந்தப் புதிய உந்துதலின் ஒரு பகுதியாக, 2015-ம் ஆண்டில், அங்கீகரிக்கப்பட்ட உரிமதாரராக இரயில்வேக்கு தடையற்ற அணுகலை எளிதாக்கும் வகையில், அனைத்து மாநில மின் பரிமாற்ற நிறுவனங்களுக்கும் மற்றும் மாநில மின்சுமை அனுப்பும் மையங்களுக்கும் வழிகாட்டுதல்களை வழங்குமாறு மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் (CERC) கோரப்பட்டது.


இருப்பினும், பல விநியோக நிறுவனங்களும் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களும் (State Electricity Regulatory Commissions (SERC)) இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தன. எட்டு மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களில் ஐந்து, இரயில்வே ஒரு அனுமான கருதப்படும் உரிமதாரராகத் தகுதி பெறவில்லை என்று தீர்ப்பளித்தன.


2024 பிப்ரவரி 12 அன்று, மின்சாரத்திற்கான மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், ரயில்வேயானது அனுமான உரிமதாரராகத் தகுதி பெறவில்லை என்றும், மற்ற நுகர்வோரைப் போலவே குறுக்கு மானியக் கூடுதல் கட்டணம் மற்றும் இதர கூடுதல் கட்டணங்களைச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பளித்தது.


இந்த உத்தரவைத்தான் உச்சநீதிமன்றம் மே 8 அன்று உறுதி செய்தது. இரயில்வே தனது சொந்தப் பயன்பாட்டிற்கு மட்டுமே மின்சாரத்தை வாங்குகிறது என்றும், தனது சொந்த வாடிக்கையாளர்களைத் தவிர வேறு யாருக்கும் மின்சாரம் வழங்குவதில்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இந்தக் கூடுதல் கட்டணங்கள் ரயில்வேயின் நிதிநிலையை எவ்வாறு பாதிக்கக்கூடும்?


இந்த இரண்டு கூடுதல் கட்டணங்களும் ரயில்வேயின் மின்சார நுகர்வுச் செலவுகளை அதிகரித்து, இறுதியில் அதன் நிகர வருவாயையும் (மொத்த வருவாய் - செலவினங்கள்) அதிகரிக்கும்.


2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் இரயில்வேயின் நிகர வருவாய் குறைவாகவே இருந்தது. 2024-25 ஆம் ஆண்டிற்கு இது ரூ. 2,660 கோடியாக இருந்தது. ஆனால் 2025-26 ஆம் ஆண்டிற்கு ரூ. 1,957 கோடியாகக் குறைக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டான 2026-27-க்கு, இது ரூ. 3,000 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் இது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முந்தைய நிலையாகும்.


சலுகை விலையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் சேவை துறையிலிருந்து கிடைக்கும் குறைவான வருமானமும், சரக்கு போக்குவரத்தையே சார்ந்திருப்பதும் இரயில்வேயின் நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.


2027 நிதியாண்டில், மொத்த வருவாய் ரூ. 3.02 லட்சம் கோடியாகவும், மொத்த செலவினம் ரூ. 2.99 லட்சம் கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருவாயில், பயணிகள் வருவாய் ரூ. 87,300 கோடியாகவும், சரக்கு வருவாய் ரூ. 1.89 லட்சம் கோடியாகவும் கணிக்கப்பட்டுள்ளது.


இவற்றுடன் ஒப்பிடுகையில், பயணிகள் வருவாய் 2024-25-ல் ரூ. 75,368 கோடியாகவும், 2025-26-ல் சுமார் ரூ. 80,000 கோடியாகவும் இருந்தது. சரக்கு வருவாய் 2024-25-ல் ரூ. 1.71 லட்சம் கோடியாகவும், 2025-26-ல் ரூ. 1.77 லட்சம் கோடியாகவும் இருந்தது.


உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து மின்சாரக் கட்டணங்கள் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், இரயில்வேயின் 'செயல்பாட்டு விகிதம்' (Operating Ratio) மற்றும் ஒட்டுமொத்த நிதி நிலைமை ஆகியவற்றின்மீது கூடுதல் அழுத்தம் ஏற்படக்கூடும்.



Original link:

Indian Railways’ finances are under strain. Here is how a Supreme Court order could worsen it.

Share:

சாந்தி சட்டத்தின் (SHANTI Act) அணுசக்திப் பொறுப்பு வரம்புகள் ஏன் உச்சநீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன? -அமால் ஷேக்

 சாந்தி சட்டத்தில் (SHANTI Act) சேர்க்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள், வெளிநாட்டு அணு உலை உற்பத்தியாளர்களும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் அரசாங்கங்களும் பத்தாண்டு காலமாக அளித்து வந்த அழுத்தத்தின் விளைவாகும்.


இந்தியாவின் புதிய அணுசக்திச் சட்டத்திற்கு எதிராக, விசாரித்து வரும் ஒரு அரசியலமைப்புச் சவாலை, உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (மே 19) அன்று “மிகவும் நுட்பமான சட்டமன்றக் கொள்கைப் பிரச்சினை” (very sensitive legislative policy issue) என்று விவரித்தது.


தலைமை நீதிபதி சூர்ய காந்த், ஜாய்மால்யா பாக்சி மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, அணு விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவது குறித்து நீதிமன்றத்தின் அதிகாரத்தை ஒரு சட்டப்பூர்வ உச்சவரம்பு கட்டுப்படுத்த முடியுமா என்பதைத் தெளிவுபடுத்துவதாக மனுதாரர்களுக்கு உறுதியளித்தது.


அரசியலமைப்பை மீறி, “இந்தியாவை மாற்றுவதற்கான அணுசக்தியை நிலையாகப் பயன்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் (சாந்தி) சட்டம் (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India (SHANTI) Act), தனியார் துறை மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் அணுமின் நிலையங்களை இயக்க அனுமதிப்பதோடு, இந்த நிறுவனங்களின் பொறுப்பை மிகக் குறைந்த அளவில் நிர்ணயிக்கிறது மற்றும் விநியோகர்களுக்கு எந்தப் பொறுப்பிலிருந்தும் விலக்கு அளித்துள்ளது” என்பதால், இந்த விதிகள் அரசியலமைப்பை மீறுவதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.


அரசாங்கம் தான் விரும்பும் எந்தக் கொள்கையையும் உருவாக்கலாம். ஆனால், கொள்கையின் பெயரில் குடிமக்களின் சட்டப்பிரிவு 21 உரிமைகளை அது தியாகம் செய்ய முடியாது, என்று மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், நீதிபதிகள் அமர்விடம் கூறினார்.


அணுசக்திப் பொறுப்பு எவ்வாறு செயல்படுகிறது? மற்றும் அது எவ்வாறு மாறியது?


சாந்தி சட்டத்திற்கு (SHANTI Act) முன்பு, இந்தியாவின் அணுசக்திப் பொறுப்புக் கட்டமைப்பு-2010 ஆம் ஆண்டின் அணுசக்திச் சேதத்திற்கான குடிமைப் பொறுப்புச் சட்டத்தை (Civil Liability for Nuclear Damage Act) அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்தச் சட்டம், தவறு யார் செய்தவர் என்ற அடிப்படையில் ஒரு முறையை நிறுவியது. அணுசக்தி விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அலட்சியத்தை நிரூபிக்கத் தேவையில்லை, சேதத்தை மட்டும் நிரூபித்தால் போதுமானது.


இந்தச் சட்டத்தின்படி, அணுமின் நிலையத்தை இயக்குபவர் பொறுப்பாவார். மேலும், பெரிய அணு உலைகளுக்கு, ஒவ்வொரு இயக்குபவருக்குமான பொறுப்பு உச்சவரம்பு ரூ. 1,500 கோடியாகவும், அதனுடன் "முந்நூறு மில்லியன் சிறப்பு வரைதல் உரிமங்களுக்கு நிகரான ரூபாய் அல்லது மத்திய அரசு அறிவிப்பின் மூலம் குறிப்பிடும் அத்தகைய அதிகத் தொகையும்" அடங்கும்.


2010-ம் ஆண்டு சட்டத்தில் பிரிவு 17(b)-ம் சேர்க்கப்பட்டிருந்தது. இது, உற்பத்தியாளர் குறைபாடுள்ள உபகரணங்களை வழங்கியதன் அடிப்படையில் விபத்து ஏற்பட்டால், இழப்பீடு வழங்கிய நிறுவனம் அந்தத் தொகையை விநியோகர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற வகையில், விநியோகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் உரிமையை நிறுவனர்களுக்கு வழங்கியது. மேலும், இந்த விதிமுறையானது "வெளிப்படையான அல்லது மறைமுகமான குறைபாடுகள் கொண்ட உபகரணங்கள் அல்லது பொருட்களின் வழங்கல் அல்லது தரம் குறைந்த சேவைகளையும்" உள்ளடக்கியது.


உற்பத்தியாளர்கள் தாங்கள் உருவாக்கிய தயாரிப்புகளுக்கு சட்டப்பூர்வமாகப் பொறுப்பேற்கச் செய்த வழிமுறை இதுவாகும்.


சாந்தி சட்டம்-2010 ஆம் ஆண்டின் சட்டத்தை ரத்து செய்தது. பிரிவு 11-ன் கீழ், அணுசக்தி சேதத்திற்கு அதை செயல்படுத்துபவர் பொறுப்பாவார். ஆனால் பிரிவு 13 ஆனது, இரண்டாவது அட்டவணையுடன் சேர்த்துப் பார்க்கும்போது, ​​அந்தப் பொறுப்பை அணு உலையின் அளவைப் பொறுத்துப் பிரிக்கிறது.


எரிபொருள் சுழற்சி வசதிகள் மற்றும் அணு உலைப் பொருள் போக்குவரத்தை ஆகியவையை உள்ளடக்கிய, 150 மெகாவாட் வரையிலான வெப்ப ஆற்றல் கொண்ட ஒரு அணு உலைக்கு, நிறுவனரின் அதிகபட்சப் பொறுப்பு ரூ.100 கோடியாகும். 150 மெகாவாட்டிற்கும் 750 மெகாவாட்டிற்கும் இடைப்பட்ட அணு உலைகளுக்கு ரூ.300 கோடி விதிக்கப்படுகிறது. 3,600 மெகாவாட்டிற்கும் அதிகமான மிகப்பெரிய அணு உலைகளுக்கு மட்டுமே அதிகபட்சமான ரூ.3,000 கோடி விதிக்கப்படுகிறது. நிறுவனரின் பொறுப்புப் பங்கு தீர்ந்துவிட்டால், மொத்த சிறப்பு வரைதல் உரிமைகள் (Special Drawing Rights (SDR)) உச்சவரம்பு வரையிலான மீதமுள்ள தொகையை மத்திய அரசு ஏற்க வேண்டும் எனப் பிரிவு 14-ன் படி தீர்மானிக்கப்படுகிறது. அதற்கு மேல், யாருக்கும் எதிராக எந்தக் கோரிக்கையும் வைக்க முடியாது.


விநியோகர்களுக்கு எதிரான தீர்வு நடவடிக்கைகளை நிர்வகிக்கும் பிரிவு 16, அந்த உரிமையை இரண்டு சூழ்நிலைகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்துகிறது. ஒன்று, ஒரு ஒப்பந்தத்தில் எழுதப்பட்டிருக்கும்போது, ​​அல்லது "அணுசக்தி சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன்" செயல்பட்ட ஒருவரால் அந்தச் சம்பவம் ஏற்பட்டிருக்கும்போது.


புதிய கட்டமைப்பின்கீழ், வடிவமைப்பு குறைபாடுகள், உற்பத்தி சார்ந்த தோல்விகள் மற்றும் தரம் குறைந்த பாகங்கள் ஆகியவை மட்டும் விநியோகர்களுக்கு தானாகவே பொறுப்புடைமையாக்குவதில்லை. ஒரு விநியோகர் ஏதேனும் பொறுப்பை எதிர்கொள்கிறாரா என்பது, கொள்முதல் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை முழுமையாகச் சார்ந்துள்ளது. இதில் பழைய பிரிவு 17(b) நீக்கப்பட்டுள்ளது.




தனியார் நிறுவனங்களுக்கும் விநியோகர்களுக்கும் ஏன் பாதுகாப்பு வழங்கப்பட்டது?


சாந்தி சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள், வெளிநாட்டு அணு உலை உற்பத்தியாளர்களும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் அரசாங்கங்களும் பத்தாண்டு காலமாக அளித்து வந்த அழுத்தத்தின் விளைவாகும்.


இந்திய-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தின்போது 2010-ம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட வேளையில், அமெரிக்க மற்றும் பிரெஞ்சு அணு உலை நிறுவனங்கள், பிரிவு 17(b)-ன்கீழ் உள்ள தீர்வு காணும் உரிமை இந்தியாவை ஒரு ஈடுபாடற்ற சந்தையாக ஆக்குகிறது என்று வாதிட்டன. இந்திய சந்தையில் நுழைவதற்கு முன்பு, விநியோகர்களின் பொறுப்புக்கு வரம்பு விதிக்கப்பட வேண்டும் அல்லது முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். இந்த அழுத்தம் இருந்தபோதிலும், அந்த விதிமுறை 2010-ஆம் ஆண்டு சட்டத்தில் நீடித்தது. இருப்பினும், சாந்தி சட்டம் பின்னர் இந்த சிக்கலை விநியோகர்களுக்கு சாதகமாக தீர்த்து வைத்தது.


சாந்தியின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் அறிக்கையில், அரசாங்கம் இதை ஒரு பொருளாதாரத் தேவையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியா 2047-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனை அடையும் இலக்கை நிர்ணயித்துள்ளது. அதை அடைவதற்காக, தனியார் மற்றும் வெளிநாட்டுப் பங்களிப்பு தவிர்க்க முடியாதது என்றும், அந்த மூலதனத்தைக் கொண்டுவர ஒரு "நடைமுறைக்கு உகந்த குடிமைப் பொறுப்பு" (pragmatic civil liability) கட்டமைப்பு தேவை என்றும் அரசாங்கம் தீர்மானித்தது. இந்தப் பொறுப்புக் கட்டமைப்பு, நிறுவனர்களுக்கான வரம்புகள், விநியோகர்களுக்குச் சட்டப்பூர்வமான பொறுப்பு ஏதுமில்லை மற்றும் எஞ்சிய பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்வது ஆகியவை அந்தப் பங்களிப்பிற்கான விலையாகும்.


அரசியலமைப்பு சவால்

இந்த மனு, அரசியலமைப்பின் 14, 19 மற்றும் 21 ஆகிய பிரிவுகளின்கீழ் சாந்தி சட்டத்தை எதிர்த்து சவால் விடுகிறது. மேலும், அச்சட்டத்தின் பொறுப்புக் கட்டமைப்பு, உச்சநீதிமன்றம் ஏற்கனவே விட்டுக்கொடுக்க முடியாதவை என அறிவித்த உரிமைகளை மீறுவதாக உள்ளது என்றும் வாதிடுகிறது.

மேலும், சட்டப்பிரிவு 21 தொடர்பான வாதம் இரண்டு வழிகளில் அமைகிறது. முதலாவது, 1987-ம் ஆண்டு ஸ்ரீராம் ஓலியம் கேஸ் வழக்கில் (Shriram Oleum Gas case) வகுக்கப்பட்ட முழுப் பொறுப்புக் கோட்பாடு ஆகும். அந்தத் தீர்ப்பின்படி, அபாயகரமான அல்லது இயல்பாகவே ஆபத்தான ஒரு செயலில் ஈடுபடும் நிறுவனம், "தவறு, அலட்சியம் அல்லது உரிய கவனம் செலுத்தாத நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அதிலிருந்து எழும் அனைத்து சேதங்களையும் ஈடுசெய்ய முழுப் பொறுப்புடையது" என்று கூறப்பட்டது.


சாந்தி சட்டமானது “பொறுப்புகளுக்கு மாயையான உச்சவரம்புகளை விதிக்கிறது. சில சூழ்நிலைகளில் நிறுவனர்களின் பொறுப்பிலிருந்து விலக்கு அளிக்கிறது மற்றும் விநியோகரின் பொறுப்பிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கிறது” என்றும், நீதிமன்றம் ஒரு அரசியலமைப்பு கடமை என அறிவித்ததை நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் குறைக்க முடியாது என்றும் அந்த மனு வாதிடுகிறது.


இரண்டாவது, சட்டப்பிரிவு-21-ன் கீழ் உள்ள 'மாசுபடுத்துபவரே செலவை ஏற்க வேண்டும்' என்ற கொள்கை தொடர்பானது. இக்கொள்கையை, இந்திய சுற்றுச்சூழல்-சட்ட நடவடிக்கை மன்றம்-1996 (Indian Council for Enviro-Legal Action) மூலம் நீதிமன்றம் வாழ்வதற்கான உரிமையுடன் இணைத்தது. இக்கொள்கையின்படி, பாதிப்பை ஏற்படுத்தியவரே அதற்கான செலவை ஏற்கவேண்டும். சாந்தி சட்டத்தின் கீழ், ஒரு நிறுவனத்தின் பொறுப்பு முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டவுடன், மீதமுள்ள செலவை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. அதன் பிறகு அந்தச் செலவு வரி செலுத்துவோர் மீது சுமத்தப்படுகிறது. இந்த மனு, இதை "தனியார் அல்லது வணிக இலாபத்தை நோக்கமாகக் கொண்ட அணுசக்தி நடவடிக்கையின் நிதிச் சுமையை பொதுமக்கள்மீது மாற்றுவது" என்று விவரிக்கிறது. மேலும் அந்தப் பரிமாற்றத்திற்கு நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்ற முடியாது என்றும் வாதிடுகிறது.


பிரிவு 14-இன் மீதான இந்த சவால், இரண்டாவது அட்டவணையின் கட்டமைப்பைக் குறிவைக்கிறது. இந்த அட்டவணை, அணு உலையின் அளவைப் பொறுத்து நிறுவனரின் பொறுப்பைப் பிரித்து, சிறிய அணு உலைகளுக்கு ரூ. 100 கோடி வரை குறைந்தபட்ச உச்சவரம்புகளை நிர்ணயிக்கிறது. இந்த உச்சவரம்புகள், ஒரு அணுசக்தி விபத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பின் அளவோடு எந்தவிதமான பகுத்தறிவு ரீதியான தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்று அந்த மனு வாதிடுகிறது. அபாயகரமான நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையில் தன்னிச்சையாக விதிக்கப்படும் உச்சவரம்புகள், பிரிவு 14-இன் கீழ் உள்ள நியாயத்தன்மை சோதனையில் தோல்வியடைகின்றன என்றும் அந்த மனு வாதிடுகிறது.


பிரிவு 19(1)(a)-ன் சவால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மீறி, அணுசக்தி தகவல்களை கட்டுப்படுத்தப்பட்டதாக வகைப்படுத்தவும், எந்த வடிவத்திலும் அதன் வெளியீட்டைத் தடை செய்யவும் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் பிரிவு 39-ஐ இலக்காகக் கொண்டுள்ளது.


தகவல் பெறும் உரிமை என்பது அரசியலமைப்பின் 19(1)(a) பிரிவிலிருந்து பெறப்படும் ஒரு அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கக்கூடிய விபத்துகளை ஏற்படுத்தும் வசதிகள் பற்றிய தகவல்களை அடக்குவதற்கான ஒரு முழுமையான அதிகாரம் அரசியலமைப்புச் சட்ட ஆய்வில் நிலைத்து நிற்க முடியாது என்று இந்த மனு வாதிடுகிறது. குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்கள் அர்த்தமுள்ள எந்தவொரு இழப்பீட்டுக் கோரிக்கையையும் முன்வைப்பதற்கு அந்தத் தகவல்களை அணுகுவதே முன்நிபந்தனையாகும்.


விசாரணையின்போது, ​​ஒரு தனியார் நிறுவனத்தின் பொறுப்பு வரம்பை நிர்ணயிப்பது என அரசு தனது கொள்கையின் ஒரு பகுதியாக முடிவெடுக்கும்போது, ​​அரசின் அந்த அகநிலை சார்ந்த கொள்கை முடிவை கேள்விக்குள்ளாக்குவதற்கு நீதிமன்றம் இல்லை என்று நீதிபதி பாக்ஜி குறிப்பிட்டார்.


இந்தியத் தலைமை நீதிபதி, நீதிமன்றத்தின் கவலையை இன்னும் குறுகிய கண்ணோட்டத்தில் முன்வைத்தார். அதாவது, பொறுப்பு வரம்புகள் இருக்க வேண்டுமா என்பது இங்குள்ள பிரச்சினையல்ல, மாறாக, இழப்பீடு வழங்குவதற்கான நீதிமன்றத்தின் அதிகாரத்தை அவற்றால் கட்டுப்படுத்த முடியுமா என்பதே இங்குள்ள உண்மையான பிரச்சினையாகும்.


இச்சட்டத்தின்கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள மொத்த இழப்பீட்டு வரம்பு (அணுசக்தி நிலையத்தை இயக்குபவர் மற்றும் அரசு ஆகிய இருவரின் பொறுப்புகளையும் சேர்த்து), ₹4,000 கோடிக்கும் குறைவாகவே உள்ளது என்று மூத்த வழக்கறிஞர் பூஷன் சுட்டிக்காட்டினார். நீதிமன்றம் இதைவிட அதிகமாக வழங்கினால், அதைச் செலுத்துவதற்கு சட்டத்தில் எந்த வழிமுறையும் இல்லை.


பாதிக்கப்பட்டவர்கள் உண்மையில் என்ன கோரலாம்?


சாந்தி சட்டத்தின்கீழ், அணுசக்தி விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழப்பு அல்லது தனிப்பட்ட காயம், சொத்து சேதம், அரசாங்கம் அறிவித்தால் ஏற்படும் பொருளாதார இழப்பு, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு செலவுகள் மற்றும் விபத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளின் செலவுகள் ஆகியவற்றுக்கு இழப்பீடு கோரலாம். கோரிக்கைகள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உரிமைகோரல் ஆணையரிடம் அல்லது பரந்த அளவிலான சேதங்கள் ஏற்பட்டால் அணுசக்தி சேத உரிமைகோரல் ஆணையத்திடம் (Nuclear Damage Claims Commission) தாக்கல் செய்யப்படுகின்றன. உரிமையியல் நீதிமன்றங்களுக்கு இதில் அதிகார வரம்பு இல்லை.


இந்த இழப்பீட்டு உரிமை நடைமுறையில் உண்மையில் எவ்வளவு மதிப்புடையது என்பதை நிதி வரம்புகள் தீர்மானிக்கின்றன. நிறுவனரின் பொறுப்பு, சிறிய அணு உலைகளுக்கு ரூ. 100 கோடியிலிருந்து மிகப்பெரிய அணு உலைகளுக்கு ரூ. 3,000 கோடி வரை உள்ளது. அதற்கு மேல் உள்ள தொகையை, மொத்தமாக சுமார் ரூ. 3,900 கோடி வரை அரசாங்கம் ஈடுசெய்கிறது. இந்த மனு, அந்தத் தொகையை வரலாற்றுப் பதிவுகளுடன் ஒப்பிடுகிறது. அதாவது, 1980-ம் ஆண்டு டாலர் மதிப்பில் மூன்று மைல் தீவின் (Three Mile Island disaster) கட்டுமானச் செலவு 970 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலும்; செர்னோபில்லின் செலவு 235 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 700 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலும்; ஃபுகுஷிமாவின் செலவு தோராயமாக 440 முதல் 445 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலும் இருந்தது. சாந்தி சட்டத்தின் வரம்பு "ஏறக்குறைய ஆயிரம் மடங்கு" குறைவாக இருப்பதாக அந்த மனு குறிப்பிடுகிறது.


கோரிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கான கால வரம்புகள் மற்றொரு பிரச்சினையாகும். பிரிவு-67 இன்படி, சம்பவம் நடந்த தேதியிலிருந்து, “சொத்து சேதம் ஏற்பட்டால் பத்து ஆண்டுகளுக்கும்”, “தனிநபருக்கு தனிப்பட்ட காயம் ஏற்பட்டால் இருபது ஆண்டுகளுக்கும்” இழப்பீடு கோரும் உரிமை காலாவதியாகிறது.


கதிர்வீச்சு தொடர்பான நோய்கள் புற்றுநோய்கள், மரபணு பாதிப்புகள் மற்றும் பிறவிக் குறைபாடுகள், கதிர்வீச்சுக்கு ஆளான பல பத்தாண்டுகளுக்குப் பிறகு தோன்றக்கூடும். மேலும், அந்தக் காலக்கட்டத்திற்குள் அவற்றைக் கண்டறிய முடியாமல் போகலாம்.


2010-ம் ஆண்டு சட்டத்தின் 35-ம் பிரிவு, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிப்பேராணை அதிகார வரம்பை இறுதி முயற்சியாக வெளிப்படையாகப் பாதுகாத்தது. சாந்தி சட்டத்தின் 81-ம் பிரிவு உரிமையியல் நீதிமன்றங்களைத் தடை செய்கிறது மற்றும் 39-ம் பிரிவு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மீறி, அணுசக்தித் தகவல்களைக் கட்டுப்படுத்தப்பட்டவையாக வகைப்படுத்தவும், அவற்றை எந்த வடிவத்திலும் வெளியிடுவதைத் தடை செய்யவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. இதனால், என்ன தவறு நடந்தது என்பதை நிலைநாட்டத் தேவையான பதிவுகளை அணுக முடியாமல் பாதிக்கப்பட்டவர்கள் தவிக்கின்றனர்.


"இழப்பீட்டை நிர்ணயிக்கும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை சட்டரீதியான இழப்பீட்டு உச்சவரம்புகள் கட்டுப்படுத்தாது" என்ற தலைமை நீதிபதியின் உறுதிமொழியில்தான் தற்போதைக்கு இந்த விவகாரம் நிலை கொண்டுள்ளது. அந்த அதிகாரம் எவ்வாறு, யாருக்கு எதிராக, மற்றும் எந்த வழிமுறையின் மூலம் பயன்படுத்தப்படும் என்பதைத்தான் நீதிமன்றம் ஜூலை மாதம் முடிவு செய்ய வேண்டும்.


Original link:

Why SHANTI Act’s nuclear liability limits are under Supreme Court scrutiny?.



Share: