டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப, வரி ஏய்ப்பு சோதனைகளில் மாற்றங்களைக் கொண்டு வருதல். -தனேசா பூரி

 வரி வசூலை உறுதிப்படுத்துவது அரசின் முக்கியமான மற்றும் சட்டபூர்வமான கடமையாகும். இருப்பினும், அதற்காகப் பயன்படுத்தப்படும் வழிமுறைகள், மக்களின் தனிநபர் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையிலும், நியாயமான அளவிலும் இருக்க வேண்டும்.


விஸ்வபிரசாத் ஆல்வா vs இந்திய ஒன்றியம் (2026) (Vishwaprasad Alva vs Union of India (2026)) என்ற வழக்கில், வருமான வரி விவகாரங்களைத் தாண்டி, குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களுக்குள் அரசாங்கம் எந்த அளவிற்கு சட்டப்பூர்வமாக நுழைய முடியும் என்ற அரசியலமைப்புரீதியான கேள்வியை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்கிறது. முன்னதாக, வருமான வரிச் சட்டத்தின் 132-வது பிரிவு அதிகாரிகளுக்கு ஒருவரது இடத்திற்குள் நுழைந்து கணக்கில் காட்டப்படாத சொத்துகளைக் கைப்பற்ற மட்டுமே அதிகாரம் அளித்தது. ஆனால், தற்போது இது கைப்பேசிகள், கிளவுட் கணக்குகள் (cloud accounts) மற்றும் தகவல் தொடர்பு பதிவுகள் உள்ளிட்ட "கணினி அமைப்புகள் மற்றும் டிஜிட்டல் தளங்கள்" வரை இந்த வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பீரோக்கள் மற்றும் காகித ஆவணங்களைச் சோதனையிட உருவாக்கப்பட்ட இந்த முறை, தற்போது வரி தொடர்பான விஷயங்களைத் தாண்டி ஒருவரின் ஒட்டுமொத்தத் தனிப்பட்ட தகவல்களையும் கொண்டுள்ள டிஜிட்டல் சாதனங்களை அணுக முயல்வது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


நேரடி முறையிலிருந்து டிஜிட்டல் முறை வரை


நீதிபதி கே.எஸ். புட்டசாமி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், ஒரு நபரின் தனிப்பட்ட தகவல்களின் ரகசியத்தன்மை (Informational Privacy) என்பது மனித கண்ணியத்தின் ஒரு அங்கம் என்பதைச் சுட்டிக்காட்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் சாதனங்கள் என்பவை சாதாரணப் பழைய கணக்குப் புத்தகங்களைப் போன்றவை அல்ல என்றும் ஒரு கைப்பேசியில் வரி விவகாரங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஒருவரின் பல ஆண்டுகால மருத்துவ மற்றும் தொழில்முறை ரகசியங்கள் சேமிக்கப்பட்டிருக்கும். எனவே, இத்தகைய சாதனங்களை எந்தக் கட்டுப்பாடும் இன்றி ஆய்வு செய்ய அனுமதிப்பது, வரி ஏய்ப்பைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு குறிப்பிட்ட தேடலாக இல்லாமல், தனிமனித உரிமைகளில் தேவையற்ற மற்றும் எல்லை மீறிய தலையீடாக மாறிவிடுகிறது. வருமான வரிச் சட்டம் பிரிவு 132-ன்கீழ் "சந்தேகத்திற்குரிய வலுவான காரணம்" இருக்க வேண்டும் என்ற விதிமுறை வரி ஏய்ப்பைத் தடுக்கும் நடவடிக்கையாக  முன்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், தற்போது அது முழுமையான டிஜிட்டல் தரவுகளையும் அணுக அனுமதிப்பது தனிமனித சுதந்திரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், இதற்கான அதிகாரம் நிர்வாக அமைப்பிடமே இருப்பதாலும், அதற்கான காரணங்கள் ரகசியமாக வைக்கப்படுவதாலும், சட்டப்பிரிவு 14 மற்றும் 21-ன்கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மறுஆய்வு செய்வது கடினமாகிறது. எனவே, 1974-ஆம் ஆண்டு பூரன் மால் (Pooran Mal) வழக்கில் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்ட சட்டப்பூர்வ அங்கீகாரத்தை, புட்டசாமி தீர்ப்பின் பின்னணியில் மீண்டும் பரிசீலிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


ஒன்றிய அரசு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 132-ஐ (Section 132) வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட அதிகாரம் என்று கூறி நியாயப்படுத்துகிறது. இப்பிரிவின்கீழ் சோதனை நடத்துவதற்கான அனுமதி, மூத்த அதிகாரிகளிடம் உள்ள நம்பகமான தகவல்கள் மற்றும் அவர்கள் பதிவு செய்த "நம்பத்தகுந்த காரணங்களின்" அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. லால்ஜிபாய் மண்டாலியா (2022) (Laljibhai Mandalia vs Principal Commissioner of Income Tax (2022))  வழக்கில் உறுதிப்படுத்தப்பட்டதற்கேற்ப, சோதனையிடுவதற்குத் தேவையான ஆதாரங்கள் உள்ளனவா என்பதை மட்டுமே நீதிமன்றங்கள் ஆய்வு செய்கின்றன. தொழில்நுட்ப மாற்றங்கள் இந்தச் சட்ட அமைப்பை மாற்றாது என்று அரசு தரப்பு தெரிவித்தாலும், சம்மன் அனுப்புவதற்கு முன்னரே டிஜிட்டல் ஆதாரங்கள் அழிக்கப்படவோ அல்லது மறைக்கப்படவோ வாய்ப்புள்ளதால், பிரிவு (b)-ன்கீழ் நடத்தப்படும் முன்கூட்டிய சோதனைகள் இப்போதும் அவசியமானவை எனக் கருதுகிறது. எனவே, வரிச் சட்டங்களை அமல்படுத்த இத்தகைய விரிவான சோதனைகள் தேவை என்பதற்கு பூரன் மால் (Pooran Mal) வழக்கு இப்போதும் ஒரு வலுவான முன்னுதாரணமாக உள்ளதாக அரசு தரப்பில் வாதிடப்படுகிறது.



விகிதாச்சாரப் பாதுகாப்பு முறைகள்


நீதிமன்ற அமர்வின் தொடக்கக்காலக் கருத்துகளின்படி, இந்த விவாதம் சோதனையிடும் அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி அல்ல என்றும் மாறாக டிஜிட்டல் தளங்களில் அந்த அதிகாரங்கள் அரசியலமைப்புச் சட்டப்படி எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றியதே ஆகும். முன்கூட்டியே அறிவிப்பு வழங்கினால் மின்னணு சாதனங்கள் அழிக்கப்படக்கூடும் என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அதேநேரத்தில், (b) மற்றும் (c) சட்டப்பிரிவுகளின்கீழ் மேற்கொள்ளப்படும் முன்நோக்குச் சோதனைகளுக்கு (Anticipatory searches) கூடுதல் திருப்திகரமான காரணங்களும், கடுமையான ஆய்வும் தேவை என்றும் கூறியுள்ளது. எனவே, ஒரு நபரின் வாழ்நாள் முழுவதுமான தகவல்களைக் கொண்டுள்ள மின்னணு சாதனங்களை முறைப்படுத்த, வெறும் காகித ஆவணங்களுக்காக உருவாக்கப்பட்ட விதிகள் போதுமானதாக இருக்குமா என்பதுதான் தற்போதைய முக்கியக் கேள்வியாக உள்ளது.


தனி நபர் பயன்படுத்தும் ஒரு சிறிய டிஜிட்டல் சாதனம், ஒரு நபரின் பல ஆண்டுக்கால செயல்பாடுகள், அவரது முந்தைய தரவுகள் மற்றும் மூன்றாம் தரப்பினருடனான தொடர்புகள் என அனைத்தையும் முழுமையாகச் சேமித்து வைக்கும் திறன் கொண்டது. இதன் காரணமாகவே, இத்தகைய டிஜிட்டல் தகவல்களை அரசு அணுகும்போது எழும் அரசியலமைப்புச் சட்ட ரீதியான சிக்கல்கள், தனியுரிமை மீறல்கள் போன்றன சாதாரண சோதனைகளைவிடப் பல மடங்கு அதிகமாக உள்ளன. அரசின் வருவாய் அமலாக்கப் பணிகள் முக்கியமானவை என்றாலும், அவை தனிமனிதச் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையில் ஒரு சமநிலையான முறையைப் பின்பற்ற வேண்டும். விசாரணை அதிகாரங்கள் டிஜிட்டல் தளங்களுக்கு விரிவடையும்போது, அதற்கேற்ப குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டப்பூர்வப் பாதுகாப்புகளும்  வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. 


அரசியலமைப்புரீதியாக டிஜிட்டல் தேடுதல் அதிகாரங்கள் செல்லுபடியாக வேண்டுமெனில், அவை தனிநபர் தனியுரிமை கொள்கைகளின் அடிப்படையில் தெளிவான வரம்புகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர். அதன்படி, ஒரு முறையான டிஜிட்டல் வரித் தேடுதல் கீழ்க்கண்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்கின்றனர். முதலாவதாக, இது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டதாக இருக்க வேண்டும். அதாவது வரி விவகாரம் தொடர்பான விசாரணைக்குத் தேவையான டிஜிட்டல் கணக்குகள், சாதனங்கள் அல்லது தரவுகளை மட்டுமே குறிவைக்க வேண்டுமே தவிர, தொடர்பில்லாத தனிப்பட்ட தகவல்களை சேகரிக்ககூடாது. இரண்டாவதாக, இது அவசியத் தேவையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதாவது குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் இதர சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தோல்வியடையும் பட்சத்தில் மட்டுமே டிஜிட்டல் சாதனங்களில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மூன்றாவதாக, இதற்கு காலம் மற்றும் பொருள் சார்ந்த வரம்புகள் இருக்க வேண்டும், இதன் மூலம் விசாரணைக்குத் தொடர்புடைய காலக்கட்டம் மற்றும் விவகாரங்கள் சார்ந்த தரவுகள் மட்டுமே ஆய்வு செய்யப்படுவதை உறுதிசெய்ய முடியும் என்கின்றனர். நான்காவதாக, சட்டப்பூர்வ பாதுகாப்பு பெற்ற தகவல்களையோ அல்லது தொடர்பில்லாத மூன்றாம் தரப்புத் தகவல்களையோ பிரித்தறிய முறையான பாதுகாப்பு வழிமுறைகள் இருக்க வேண்டும். இறுதியாக, இந்தத் தேடுதல் நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் செயல்முறைகளும்  முறையாகப் பதிவு செய்யப்பட்டு, அதிகார துஷ்பிரயோகத்தைத் தவிர்க்கும் வகையில் ஆய்வுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.


இத்தகைய அளவுகோல்கள் சட்ட அமலாக்கத்தைத் தடுத்து நிறுத்தவில்லை; மாறாக, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தும் போது அது அரசியலமைப்பின் விகிதாச்சாரக் கோட்பாட்டிற்கு உட்பட்டு இருப்பதை மட்டுமே உறுதி செய்கின்றன.


அரசியலமைப்புரீதியிலான சமநிலை


இந்த வழக்கானது ஒரு மிகச்சிறந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முன்னிறுத்துகிறது. இதில் பாரம்பரியமான சட்ட அதிகாரங்கள், நவீன தொழில்நுட்ப முறைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும். நீதிமன்றம் இந்தச் சட்டத்தை அங்கீகரிக்கும் அதேவேளையில், டிஜிட்டல் பாதுகாப்பு நெறிமுறைகளைச் சேர்க்கலாம் அல்லது அதிகாரப்பூர்வ அனுமதிகளில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கோரலாம் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இருப்பினும், ஒரு சாதாரண நேரடிச் சோதனையைவிட, டிஜிட்டல் வழி சோதனைகள் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் ஆழமாக ஊடுருவக்கூடியவை என்பதை நீதிமன்றத்தால் புறக்கணிக்க முடியாது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.


விஸ்வபிரசாத் ஆல்வா (Vishwaprasad Alva) வழக்கானது இந்தியாவின் நிதித்துறை சட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான அரசியலமைப்புத் தருணத்தைப் பதிவு செய்கிறது. அதாவது, வரி சோதனைகள் நேரடி இடங்களிலிருந்து டிஜிட்டல் தளங்களுக்கு மாறியிருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. தற்போதைய சட்டக் கொள்கைகள் இந்த மாற்றத்திற்கு போதுமானதா அல்லது வரி வசூலுக்கும் தனிமனித சுதந்திரத்திற்கும் இடையிலான சமநிலையைப் பேணுவதற்கு அவை இன்னும் பரிணாம வளர்ச்சியடைய வேண்டுமா என்பது, தகவல் யுகத்தில் அரசு அதிகாரத்தின் எதிர்கால கட்டமைப்பைத் தீர்மானிக்கும் என்கின்றனர். இறுதியில், வரி ஏய்ப்பைக் கண்டறியும் திறனில் மட்டும் நிதித்துறையின் அதிகாரம் அடங்கியிருக்கவில்லை என்றும் ஒரு குடிமகனின் டிஜிட்டல் வாழ்க்கைக்குள் நுழையும்போது அந்தத் துறை காட்டும் கட்டுப்பாட்டில்தான் அதன் உண்மையான நேர்மை மற்றும் அங்கீகாரம் அடங்கியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.


தனேசா பூரி, ஜிண்டால் குளோபல் சட்டப் பள்ளியில் வரிவிதிப்புச் சட்டத் துறையின் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.


Original article :Rethinking tax searches for the digital age -Tanessa Puri

Share: